சுந்தர காண்டம் 31 to 40
அத்தியாயம் 31 (369) ராம வ்ருத்த ஸம்ஸ்ரய: (ராம கதையைக் கேட்கச் செய்தல்)
இவ்வாறு தீர்மானித்து, வைதேஹியின் காதில் படும்படி, மெதுவாக, மதுரமாக, ராம கதையை சொல்ல ஆரம்பித்தான், ஹனுமான். த3சரத2ன் என்று ஒரு ராஜா. ரதங்களும், யானைகளும், குதிரைகளும் கணக்கில்லாமல் அவரிடம் இருந்தன. நல்ல சீலமும், நேர்மையும் உடையவன். அதனால் மகத்தான கீர்த்தியையும், புகழ் வாய்ந்த பெருமைகளும் அவனை நாடி வந்தன. அரச வம்சத்தினரில் ராஜரிஷிகள் என்று சொல்லப் பட்டவர்களிலும் இவன் ஸ்ரேஷ்டன் எனலாம். அரசர்களிலும் ராஜ ரிஷிகள் என்று இருந்த ஒரு சிலரில் இவன் குண ஸ்ரேஷ்டன். ரிஷிகளுக்கு சமமானவன். சக்ரவர்த்தி குலத்தில் பிறந்தவன். இந்திரனுக்கு சமமான பலம் உடையவன். அஹிம்சையில் நம்பிக்கையும், தாராள குணமும், சத்ய ப்ராக்ரமனாகவும் இருந்தான். இக்ஷ்வாகு வம்சத்தில் இவன் குறிப்பிடத் தக்கவன். நல்ல செல்வமும், செல்வாக்கும் உடையவன். இவனிடம் செல்வம், லக்ஷ்மி வளர்ந்தாள். அரசர்க்குரிய லக்ஷணங்கள் நிரம்பப் பெற்றவன். ராஜ்ய லக்ஷ்மி இவனை ஆச்ரயித்து இருந்தது. ரிஷபம் போல பார்த்திபர்களுள் தனித்து விளங்கினான். நான்கு திக்குகளிலும் இவன் பெருமை பேசப் பட்டது. மற்றவர்களுக்கும் சுகத்தை அளிப்பவன், தானும் சுகமாகவே வாழ்ந்தான். இவனுடைய மூத்த மகன் தாரா நாயகனான சந்திரனுக்கு சமமான முகத்தையுடையவன். ராமன் என்று பெயர் கொண்டவன். வில்லேந்திய வீரர்களுள் முதன்மையானவன். தன் நடத்தையையும் காப்பாற்றிக் கொண்டு, தன்னைச் சார்ந்தவர்களையும் ரக்ஷிக்கும் குணம் உள்ளவன். ஜீவ லோகத்துக்கே இவன் ரக்ஷகனாக இருப்பவன். தர்மத்தை காப்பதில் விரதம் எடுத்துக் கொண்டவன் போல செயல் படுபவன். பரந்தப: நல்ல தவ வலிமையுடையவன். முதியவரான தந்தையின் சொல்லைக் காக்க, தன் மனைவியுடனும், சகோதரனுடனும் காட்டுக்கு வந்தான் (தந்தையால் அனுப்ப பட்டான்). வனத்தில் வசிக்கும் சமயம் பல ராக்ஷஸர்களை வதம் செய்தான். இஷ்டம் போல உருவம் எடுக்க வல்ல மாயாவிகள், பலர் ஜனஸ்தானத்தில் இருந்தனர். ஜனஸ்தானத்தில் சூரர்களான கர தூஷணர்கள் இவனால் வீழ்த்தப் பட்டு இறந்த செய்தியை அறிந்த ராவணன், ராமன் மனைவி ஜானகியை கவர திட்டமிட்டான். மிருக ரூபத்தில் ராமனை வஞ்சித்து விட்டான். அந்த மாய மிருகத்தை தொடர்ந்து அவன் அதை பிடிக்கச் சென்ற சமயம், தனித்து இருந்த ஜானகியை அபகரித்து விட்டான். மாசற்ற தன் மனைவியைத் தேடி அலைந்து கொண்டிருந்த ராமன், வனத்தில் சுக்ரீவன் என்ற வானரத்துடன் நட்பு கொண்டான். இதன் பின் வீரனான ராமன் வாலியை வதம் செய்து, கபி (வானர) ராஜ்யத்தை சுக்ரீவனுக்கு கொடுத்தான். சுக்ரீவன் ஏராளமான வானரங்களைத் திரட்டி எல்லா திக்குகளிலும் அந்த தேவியைத் தேட அனுப்பினான். ஆயிரக் கணக்கான வானர வீரர்கள் இவ்வாறு கிளம்பினர். அதில், நான் சம்பாதி சொன்னதை வைத்து, நூறு யோஜனை தூரம் நீண்ட சாகரத்தைத் தாண்டி வேகமாக, இந்த தேவியைத் தேடி வந்தேன். விசாலாக்ஷியான தேவியை, ராகவன் வர்ணித்தபடியே, அதே ரூபம், அதே வர்ணம், லக்ஷ்மீகரமான தோற்றம், நான் கண்டு கொண்டேன். இது வரை சொல்லி வானர வீரன் நிறுத்திக் கொண்டான். இதைக்கேட்டு, ஜானகி ஆச்சர்யம் அடைந்தாள். சுருண்ட முடியை, நீளமான கூந்தலை கிளையிலிருந்து விடுவித்துக் கொண்டு, சிம்சுபா வ்ருக்ஷத்தின் மேல் நோக்கினாள். கபி வாக்யம்- வானரம் சொன்ன சொற்கள் இன்னமும் காதுகளில் எதிரொலிக்க, நாலா திசைகளிலும் பார்வையை செலுத்தி யார் என்று தேடினாள். சர்வாத்மாவும் ராமனையே நினைத்திருக்க, பெரும் மகிழ்ச்சியடைந்தாள். யார் சொன்னது என்று தெரிந்து கொள்ள, மேலும், கீழும், பக்கவாட்டிலும் பார்த்தவள், உதயகால சூரியனைப் போல, மரத்தின் கிளைகளில் அமர்ந்து இருந்த வாயு புத்திரனைக் கண்டாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ராம வ்ருத்த ஸம்ஸ்ரயோ என்ற முப்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 32 (370) சீதா விதர்க்க: (சீதை ஆலோசித்தல் )
கிளைகளுக்கிடையில் தன்னை மறைத்துக் கொண்டு அமர்ந்திருந்த வானரத்தைக் கண்டு சீதையின் உற்சாகம் சற்று வடிந்தது. அர்ஜுன (இளம் சிவப்பு) வஸ்திரம் அணிந்து, மின்னலைப் போல பளீரென்று தெரிந்த உருவம் மஞ்சள் நிறக் கண்களுடன் வினோதமாகப் பட்டது. ஆனால் பிரியமாக பேசுவதைக் கேட்டதால் வானரத்திடம் ஒரு ஈ.ர்ப்பும் தோன்றியது. சிவந்த அசோக புஷ்பம் மலர்ந்தது போல, புடமிட்ட தங்கம் போல கண்களை கவரும் வர்ணம். பெரும் ஆச்சர்யத்துடன் மைதிலி யோசிக்க ஆரம்பித்தாள். ஆஹா, இது என்ன வானரம்? இதன் ரூபம் பயங்கரமாக இருக்கிறது. வானரம் தானா? காலையில் வானரத்தைக் காண்பது நல்லதல்ல என்ற எண்ணம் அவளைத் தயங்கச் செய்தது. இந்த எண்ணம் சற்று முன் தோன்றிய மகிழ்ச்சியை அடக்கி விட, பயம் மேலிட அழ ஆரம்பித்தாள். ராம, ராம என்று வேதனையோடு அரற்றினாள். லக்ஷ்மணா என்றும் அழைத்தாள். அடங்கிய குரலில் சத்தம் வெளி வராமல் விசும்பினாள். ஆனால், பணிவாக அமர்ந்திருந்த வானரத்தை திரும்பவும் ஏறிட்டபொழுது, இது ஸ்வப்னமோ, கனவோ என்று நினைத்தாள். சீதையின் இப்படி மாறி மாறி வெளிப்பட்ட உணர்ச்சிகளால் வேதனையால் நொந்து போனது போல வானரத்தின் முக பாவம் தோன்றியது. (தன்னை நம்பவில்லையே என்று வருந்துவது போல அவளுக்குத் தோன்றியது). பிங்கா3தி4பதேரமாத்யம்- வானர ராஜனின் மந்திரி. பு3த்3தி4மதாம் வரிஷ்டம்- புத்திமான்களில் சிறந்தவன் (இந்த வார்த்தைகள் முதன்முதலில் ஹனுமனைக் கண்ட சமயம் லக்ஷ்மணனிடம் ராமர் சொன்னது). வாதாத்மஜம்- வாயு புத்திரனை திரும்பவும் ஏறிட்டாள். வானரம் தான் என்று உறுதியாகத் தெரிகிறது. ஆனால் மன சமாதானம் ஏற்படவில்லை. வெகு நேரம் இப்படி யோசித்தபின், சுய நினைவுக்கு வந்தவள் போல கண்கள் அகல, நான் கனவு காண்பதே இல்லையே. கனவில் (சாகா2 மிருகம்- மரக் கிளைகளில் தாவும், வாழும் விலங்குகள், வானரம், கரடி முதலியவை) சாகா2 மிருகத்தைக் காண்பது நல்லதல்ல என்று சொல்வார்கள். இன்று இதை விடியற்காலையில் காண்கிறேனே. என் ராமனுக்கு மங்களம் உண்டாகட்டும். எனக்கு கனவு கூட எதிரியாக அல்லவா ஆகி விட்டது. எனக்கு தூக்கமே வருவதில்லையே, சோகமும், துக்கமும் தான் மனதில் நிறைந்து தூக்கம் வரவொட்டாமல் செய்கின்றனவே. தூங்கினால் தானே. கனவு காண. சந்திரன் போன்ற முகம் உடைய என் நாதனை பிரிந்த பின், சுகம் என்பதே என் வாழ்க்கையில் இல்லாமல் போய் விட்டது. ராம, ராம என்று விடாமல் சொல்லிக் கொண்டு மனதாலும், ராமனையே சார்ந்து இருப்பதால், எதைப் பார்த்தாலும் ராமனாக காண்கிறேன். காதில் விழுவதெல்லாம் ராம கதையாக இருக்கிறது போலும். இது என் மன பிரமைதான். அப்படித்தான் இருக்க வேண்டும். என் ஊகம் சரியானது தான். ஆனால், என்ன காரணம்? மனோ ரதம், மன ப்ரமை என்றால் உருவம் இருக்காதே. இதோ என் எதிரில் உருவத்துடன் இருந்து சொல்வது தெளிவாகத் தெரிகிறதே. வாசஸ்பதே, நமஸ்காரம். வஜ்ரமுடைய இந்திரனே, நமஸ்காரம். ஸ்வயம்புவே, ப்ரும்மாவே நமஸ்காரம். இந்த காட்டில் வாழும் விலங்கு, என் முன் இப்பொழுது சொன்ன வார்த்தைகள் சத்யமாக இருக்கட்டும். வேறு விதமாக ஆகாமல் காப்பாற்றுங்கள்
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான மத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் சீதா விதர்க்கோ: என்ற முப்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 33 (371) ஹனுமத் ஜானகி ஸ்ம்வாதோ3பக்ரம: (ஹனுமானும், ஜானகியும் சம்பாஷிக்க ஆரம்பித்தல்)
இதன் பின் ஹனுமான் மரத்திலிருந்தபடியே கீழ் நோக்கி வினயத்துடன், தலை மேல் கை கூப்பி அஞ்சலி செய்தவனாக, சீதையைப் பார்த்து மதுரமான சொற்களால் பேச்சுக் கொடுத்தான். அவள் அருகில் மெள்ளச் சென்றான். பத்3மபலாசாக்ஷி, பத்ம தளம் போன்ற கண்களையுடையவளே, யார் நீ? கசங்கிய பட்டாடை உடுத்தி, மரத்தின் அடியில் நிற்கிறாய்? ஆனாலும் நீ மாசற்ற உயர்ந்த குல பெண் என்பது தோற்றத்தில் தெரிகிறது. ஏன் உன் கண்களில் நீர் பெருகுகிறது? புண்ட4ரீகம், பலாசம் இவைகளின் இடையிலிருந்து நீர் வடிவது போல வடிகிறது. சுரர்கள், அசுரர்கள், நாக3 க3ந்த4ர்வர்கள், ராக்ஷஸர்கள், யக்ஷ கின்னரர்கள், இவர்க ளில் நீ யார் ? சோபனே, இவர்களுள் நீ யார் ? ருத்3ர, மருத் க3ணங்களைச் சேர்ந்தவளா? வசுக்களின் குலத்தைச் சேர்ந்தவளா? வராரோஹே, நீ தேவ குலத்தைச் சேர்ந்தவள் என்று எனக்குப் படுகிறது. சந்திரனுடன் கோபித்து கீழே இறங்கி வந்து விட்ட ரோஹிணி நக்ஷத்திரமா? ஜ்யோதிஷம் அறிந்தவர்களூள் ஸ்ரேஷ்டா- சிறந்தவள், இந்த ரோஹிணி. எல்லா குணங்களும் நிரம்பிய உத்தமமான நக்ஷத்திரம். உன் கண்களின் பிரகாசம் தனித்து தெரிகிறது. நீ யார் கல்யாணி? கோபத்தாலோ, மோகத்தாலோ, ப4ர்த்தாவான வசிஷ்டரை விட்டு விலகி வந்த அருந்த3தி4யோ? இருக்க முடியாது. யார் உன் தந்தை? யார் உன் புத்திரன்? யார் உன் சகோதரன்? சுமத்4யமே, உன் கணவன் யார்? உன் கணவன் எங்கே? ஏன் அவனை நினைத்து வருந்துகிறாய்? உன் அழுகையைக் கொண்டும், பெருமூச்சு விடுவதிலிருந்தும், தரையில் கால் படுவதாலும், நீ தேவலோகத்தைச் சேர்ந்தவள் அல்ல என்று ஊகிக்கிறேன். ராஜ குலத்து லக்ஷணங்கள் தெரிவதாலும், உன் தோற்றத்தாலும், ஏதோ பூமியை ஆளும் அரசனின் மகள், அரசனின் பட்ட மகிஷி என்று ஊகிக்கிறேன். ராவணன், ஜனஸ்தானத்திலிருந்து பலவந்தமாக தூக்கி வந்தவள் நீ தான் என்றால், நீ சீதை தான்- உனக்கு மங்களம் உண்டாகட்டும். நான் கேட்பதற்கு பதில் சொல். உன் தீனமான நிலையும், மனிதர்களில் அரிதான ரூபமும், தவ வேஷமும், நீ நிச்சயம் ராம மகிஷி தான் என்று எனக்குச் சொல்கின்றன. இவ்வாறு ஹனுமான் சொல்லவும், ராம நாமம் கேட்டே சீதை மகிழ்ந்தாள். மரத்தில் இருந்த வானரத்தைப் பார்த்து உலகில் ராஜ சிம்மமாக இருந்த அரசர்களை அறிந்தவன் இவன் என்று தெரிந்து உற்சாகம் அடைந்தாள். நான் தசரத ராஜாவின் மருமகள். சத்ரு சைன்யத்தை கலக்கக் கூடிய வீரன் என் மாமனார். புத்திசாலியான ராமனின் மனைவி. ராகவனின் வீட்டில் கிட்டத்தட்ட பன்னிரண்டு வருஷ காலம் எல்லா செல்வ சம்பத்தும், போகமும் நிறைந்த இடத்தில், மனித உலகின் இயல்பான சுக வாழ்க்கை வாழ்ந்தேன். பதின் மூன்றாவது வருஷம் இக்ஷ்வாகு நந்தனனை ராஜ்யத்தில் அபிஷேகம் செய்விப்பதாக, உபாத்யாயர்களுடன் சேர்ந்து என் மாமனார் தீர்மானித்தார். ராகவனுக்கு முடி சூட ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கும் பொழுது, கைகேயி என்ற என் இளைய மாமியார், அரசனிடம் சொன்னாள். நான் சாப்பிட மாட்டேன், பானம் எதுவும் கூட குடிக்க மாட்டேன், ராமனுக்கு முடி சூட்டுவது தான் என் வாழ்க்கையின் முடிவாக இருக்கும். ராஜ சத்தமா, எனக்கு நீங்கள் ஒருமுறை நல்ல எண்ணத்துடன் கொடுத்த வாக்கு சத்யமானால், ராமன் வனம் செல்லட்டும். அந்த அரசனும் தான் கொடுத்த வரத்தை நினைவில் கொண்டாலும், க்ரூரமான இந்த செயலை செய்யச் சொல்லும் அவள் பேச்சைக் கேட்டு திடுக்கிட்டார். மனதில் சற்றும் ஈ.வு, இரக்கமோ, அன்போ இல்லாமல் எழுந்த இந்த வேண்டுகோள், அவரை வேதனைக்குள்ளாக்கியது. ஆயினும், திடமான கொள்கைகள் உடையவர், வயதும் முதிர்ந்த நிலையில் தட்ட முடியாமல் தன் வாக்கை காப்பாற்றத் துணிந்து விட்டார். புகழ் வாய்ந்த தன் மூத்த மகனை அழுது கொண்டே, ராஜ்யத்தை யாசித்தார். தனக்கு முடி சூட்டுவதை விட, தந்தை தன் சொல்லைக் காக்க வேண்டியது மேலானது என்று எண்ணி, வாய் வார்த்தைகளாலும் பிரதிக்ஞை செய்து, அவருக்கு உறுதி அளித்தான், ராமன். தானம் செய்ய வேண்டும், நிறைய கொடுக்க வேண்டும், எதையும் பிரதி உபகாரமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது. அப்ரியமான, வார்த்தைகளை எந்த நிலையிலும் சொல்லக் கூடாது. உயிரே போனாலும் சரி இது தான் ராமனுடைய கொள்கை. அந்த க்ஷணமே உத்தரீயங்களை கழற்றி, உயர்ந்த ஆபரணங்களைத் துறந்து, தபஸ்வியாகி விட்டான். மனதால் அனைத்தையும் துறந்து விட்டான். என்னை தன் தாயாரிடம் ஒப்படைத்தான். நானோ, அவனுக்கு முன்னாலேயே கிளம்பி விட்டேன். வனம் செல்ல நான் முடிவு செய்தாயிற்று. ராமன் இல்லாமல் ஸ்வர்கமே ஆனாலும் எனக்கு இருக்கப் பிடிக்கவில்லை. எனக்கும் முன்பாக சௌமித்ரி, தமையனுடன் செல்ல மரவுரிகளை அணிந்து தயாராக வந்து விட்டான். நாங்கள் மூவரும் எங்கள் அரசனின் கட்டளையை மிக்க மரியாதையுடன் சிரமேற்கொண்டு, அடர்ந்த காட்டினுள், முன் கண்டறியாத வனத்தினுள் நுழைந்தோம். தண்டகாரண்யத்தில் வசிக்கும் பொழுது அந்த மகானின் மனைவியாக இருந்தும் ராக்ஷஸ ராஜன், ராவணனால் அபகரிக்கப் பட்டேன். இரண்டு மாத காலம் தான் அவன் நான் உயிருடன் வாழ அனுமதி தந்திருக்கிறான். இந்த இரண்டு மாதங்களுக்குப் பின் என் உயிர் பிரிந்து விடும் என்பது நிச்சயம்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ஹனூமத் ஜானகி ஸ்ம்வாதோ3 என்ற முப்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 34 (372) ராவண சங்கா நிவாரணம் (ராவணனோ என்ற ஐயத்தைப் போக்குதல்)
இதைக் கேட்டு ஹனுமான் மனக்லேசம் அடைந்தான். அவள் துயரை நீக்கும் விதமாக பேச ஆரம்பித்தான். தேவி, நான் ராமனிடமிருந்து செய்தி கொண்டு வந்துள்ள தூதன். உங்களைக் கண்டு கொண்ட பின் மற்ற காரியங்கள் இனி எளிதே. சுலபமாக நடக்கும். வைதேஹி, ராமர் குசலமாக இருக்கிறார். உங்களையும் குசலம் விசாரித்தார். எந்த ராமன் ப்ராம்மம் அஸ்திரம்- ப்ரும்மாஸ்திரத்தை பிரயோகிக்கத் தெரிந்தவனோ, வேதங்களில் அறிஞனோ, வேத வித்துக்களுக்குள் முதல் ஸ்தானத்தில் நிற்பவனோ, அந்த தாசரதி ராமர் உங்களை குசலம் விசாரித்தார். சகோதரன் லக்ஷ்மணனும் தன் தலையால் வணங்கி தங்களை குசலம் விசாரித்தான். உங்கள் கணவரின் பிரிய சகோதரன், எப்பொழுதும் இணை பிரியாமல் இருப்பவர், எனவும், நர சிம்மம் போன்ற அவ்விருவரின் நலனை அறிந்து அவள் மகிழ்ச்சி அடைந்தாள். உள்ளத்தின் மகிழ்ச்சி உடலிலேயே தெரிவது போல முகம் மலர, ஹனுமானிடம் சொன்னாள். உலகில் ஒரு பாடல் உண்டு. வருஷங்கள் பல ஆனாலும், ஜீவித்திருப்பவனைத் தான் நன்மைகள் சென்றடையும் என்பதாக. லௌகீகமான இந்த கீதம் உண்மையே, இப்பொழுது இருவரும் ஒருவரிடம் ஒருவர் நம்பிக்கையோடு சம்பாஷனையைத் தொடர்ந்தனர். சற்றே நம்பிக்கை வர, ஹனுமான் சீதையின் அருகில் செல்ல மேலும் ஒரு அடி வைத்தான். அருகில் ஹனுமான் வர வர, அவனை ராவணனாகவே எண்ணி சீதை சந்தேகத்துடன் அலறினாள். அஹோ, என்ன கஷ்டம். ரூபத்தை மாற்றிக் கொண்டு வந்து நிற்கும் ராவணனே இவனோ, என்னை மேலும் வருத்தவே வந்து நிற்கிறானோ, என்றபடி, கிளையைப் பற்றியிருந்த கைகளை விட்டு, தரையில் அமர்ந்து விட்டாள். இப்படி பயத்துடன் நடுங்கும் அவளைப் பார்த்து ஹனுமானும் செயலற்று பரிதாபமாக பார்த்துக் கொண்டே நின்றான். ஜனகாத்மஜாவை நெருங்கி வணங்கினான். அவளோ ஏறிட்டும் பார்க்கவில்லை. பயத்தால் நடுங்கியவள் நிமிர்ந்த பொழுது கை கூப்பி வணங்கியபடி நிற்பவனைக் கண்டாள். தன்னை சமா ளித்துக் கொண்டு, நெடு மூச்சு வாங்க, மாயா ரூபத்தை எடுத்துக் கொண்டு வந்துள்ள மாயாவி ராவணனாக இருந்தால், இது உனக்கு அழகா? தன் ரூபத்தை விட்டு பரிவ்ராஜகனாக (பிக்ஷை வாங்குபவன்) வந்து ஜனஸ்தானத்தில் நான் பார்த்தேனே. அதே ராவணன் தான் நீ. நிசாசரனே, உபவாசம் இருந்து இளைத்து களைத்து கிடக்கும் என்னை மேலும் வருத்தாதே. நானே நொந்து போய் இருக்கிறேன். மேலும் கஷ்டம் தராதே. ஆனால் நான் நினைப்பது போல இவன் மாயாவியோ, ஏமாற்றுபவனோ அல்ல. இவனைக் கண்டதிலிருந்து என் மனதில் இவன் பால் அன்பே பெருகுகிறது. வானரமே, நீ நிஜமாகவே ராமனிடத்திலிருந்து செய்தி கொண்டு வந்துள்ள தூதனானால், உனக்கு நன்மை உண்டாகட்டும். திரும்பவும் கேட்கிறேன். ராமகதை எனக்கு மிகவும் பிரியமானது. ராமனுடைய குணங்களைச் சொல்லு. என் பிரியமான ராமனைப் பற்றி மேலும் நீ அறிந்ததைச் சொல்லு என்றாள். சௌம்யனே, என் மனம் அதைக் கேட்டு, நதிக்கரை வெள்ளத்தால் அரித்துக் கொண்டு வரும் கரைகளைப் போல உருகுகிறது என்றாள். ஆஹா, கனவு தான் என்ன சுகமான அனுபவம். இந்த சுகானுபவம் கூட என்னை விட்டு விலகி விட்டதே. ராகவன் தான் உன்னை அனுப்பியதாகச் சொன்னாய். கனவானாலும் கூட நான் ராம லக்ஷ்மணர்களைக் காணவே விழைகிறேன். வீரனான ராகவனை, லக்ஷ்மணனும் உடன் இருக்க காண்பேனா? அப்படி கனவில் ராம லக்ஷ்மணர்களைக் கண்டால் கூட நான் நிம்மதியடைவேன். அது கூட எனக்கு சத்ருவாக அல்லவா ஆகி விட்டது. இது கனவல்ல. கனவில் வானரத்தைக் கண்டால் மனதில் நிறைவு தோன்றாது. ஆனால் என் மனம் அமைதியை கண்டுள்ளது. இது என் மனதில் தோன்றிய மோகமோ அல்லது வாயு கோளாறோ. உன்மாதத்தில்- பித்து பிடித்த நிலையில்- தோன்றும் கானல் நீரா? இல்லை. இது பித்து இல்லை. பித்து பிடித்தவன் என்றால் நினைவுகள் தொடர்ந்து சரியாக தோன்றாது. நான் நல்ல நினைவுடன் இருக்கிறேன். என்னை நான் உணர்கிறேன். இதோ இந்த காட்டில் வாழும் விலங்கினமான வானரத்தையும் நன்றாக பார்த்து புரிந்து கொள்கிறேன். இப்படி நன்மை, தீமைகளை அலசி ஆராய்ந்து பார்த்த பின்பும், ராக்ஷஸர்கள் தங்கள் விருப்பம் போல ரூபம் எடுக்க வல்லவர்கள் என்ற எண்ணம் மனதில் வேரூன்றி இருந்ததால் வாஸ்தவமான விலங்கை கூட ராவணனாகவே கண்டாள். பதில் பேசாமல் இருந்தாள். அவள் மனதில் ஓடும் எண்ணங்களை படித்தவன் போல ஹனுமானும் உடனே பதில் சொன்னான். அவள் கேட்க விரும்பும் கதைகளையே திரும்பவும் மதுரமாக சொன்னான். இதனால் அவள் முகம் மலர்ந்தது. ஆதித்யனைப் போல தேஜஸ் உடையவன். உலகை கவர்ந்திழுக்கும் சசி, சந்திரன் போன்று குளுமையான முக காந்தி உடையவன். எல்லா உலகுக்கும் ராஜா. வைஸ்ரவனன் போல, தேவன். விக்ரமம் நிறைந்தவன். விஷ்ணு போன்று மகா கீர்த்தி உடையவன். சத்ய வாதி. மதுரமாக பேசுபவன். வாசஸ்பதியான ப்ரும்ம தேவன் போல வாக்கு வன்மையுடையவன். நல்ல ரூபம் உள்ளவன். கட்டான உடலமைப்பு உடையவன். பாக்யசாலி, கந்தர்ப்பன், சாக்ஷாத் மன்மதனே வந்தது போல அழகன். கோபம் கொள்ள வேண்டிய இடத்தில் கோபம் கொள்வான். அப்படி கோபம் வந்து அடித்தாலும் நன்றாக அடிப்பவன். மகா ரதிகள் என்பவர்களுக்குள் ஸ்ரேஷ்டன். எந்த மகானின் புஜங்களை ஆஸ்ரயித்து அவன் புஜ நிழலில் அண்டி வாழ்கிறார்களோ, அவர்களை கண்டிப்பாக காப்பான். மிருக ரூபம் எடுத்து வந்து ராகவனை வெகு தூரம் ஏமாற்றி அழைத்துச் சென்ற பின், சூன்யமான ஜனஸ்தான ஆசிரமத்திலிருந்து தங்களை அபகரித்து வந்தானே, ராவணன், அதன் விளைவை அவன் சீக்கிரமே அனுபவிக்கப் போகிறான், பாருங்கள். ராமன் கையால் அந்த ராக்ஷஸன் வதைப் பட போகும் நாள் அதிக தூரத்தில் இல்லை. ராமனது பாணம் அவனது கோபத்தை பிரதி பலிப்பது போல ஜ்வலித்துக் கொண்டு வந்து விழும். அந்த ராமனால் அனுப்பப் பட்ட தூதன் நான். உங்களைக் கண்டு செய்தி சொல் என்றதால் வந்தேன். தங்கள் பிரிவால் வாடுபவர் தங்கள் நலம் விசாரித்தார். மகா தேஜஸ்வியான லக்ஷ்மணனும் சுமித்ரானந்த வர்தனன், சௌமித்ரியும் தங்களை வணங்கி நலம் விசாரித்தான். ராமனுடைய சகா2, சுக்ரீவன் என்ற பெயருடைய வானர ராஜா, அவனும் உங்களை நலம் விசாரித்தான். ராமன் உங்களை எப்பொழுதும் நினைக்கிறான். சுக்ரீவனுடனும், லக்ஷ்மணனுடனும் இருந்தாலும் உள்ளத்தில் தாங்களே நிறைந்திருக்கிறீர்கள், தேவி. நல்ல வேளையாக, இந்த ராக்ஷஸிகளின் மத்தியிலும், உயிரை காத்துக் கொண்டு ஜீவித்திருக்கிறீர்கள். வைதேஹி, ராம, லக்ஷ்மணர்களைக் காணத்தான் போகிறீர்கள். கோடிக் கணக்கான வானர வீரர்களுடன் வரும் சுக்ரீவனையும் காண்பீர்கள். நான் இந்த ஆற்றல் மிகுந்த சுக்ரீவனுடைய மந்திரி. ஹனுமான் என்ற பெயர் கொண்டவன். வானர இனத்தவன். பெரும் கடலைத் தாவி குதித்து கடந்து வந்து இந்த லங்கா நகரத்தினுள் நுழைந்தேன். துராத்மாவான ராவணன் தலையில் கால் வைப்பது போல இந்த நகரத்தில் அடியெடுத்து வைத்து வந்தேன். என் சக்தியனைத்தையும் ஒன்று கூட்டி, தங்களைத் தேடி, தங்களைக் காணவே வந்தேன். தேவி, தாங்கள் நினைப்பது போல நான் ராவணன் அல்ல. இந்த சந்தேகத்தை விடுங்கள். என் வார்த்தைகளில் நம்பிக்கை கொள்ளுங்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ராவண சங்கா நிவாரணம்: என்ற முப்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 35 (374) விஸ்வாஸோத்பாதனம் (நம்பிக்கை வளரச் செய்தல்)
வானர வீரனின் வாயிலாக ராம கதையைக் கேட்டு, வைதேஹி சற்றே சாந்தமாக, மதுரமாக பதில் சொன்னாள். எப்படி நீ ராமனை சந்தித்தாய்? லக்ஷ்மணனை எப்படி அறிவாய்? வானரர்களுக்கும் நரர்களுக்கும் இடையில் நட்பு எப்படி சாத்தியமாயிற்று ? ராமனுடைய லக்ஷணங்கள் என்ன என்ன? லக்ஷ்மணன் எப்படி இருப்பான்? அதைத் திரும்பவும் சொல்லு. திரும்பவும் என் மனதில் சந்தேகம் வராமல் இருக்கும் படி சொல். அவனுடைய ஸம்ஸ்தானம், ரூபம் எப்படிப் பட்டது. கால்கள் எப்படி இருக்கும்? கைகள் எப்படி இருக்கும்? லக்ஷ்மணன் உடல் அமைப்பு எப்படி இருக்கும்? இதையும் விவரமாக சொல். இதைக் கேட்டு ஹனுமான் ராமனை உள்ளபடி விவரமாக வர்ணிக்க ஆரம்பித்தான். ஜானகி தெரிந்து கொண்டே என்னை ஆழம் பார்க்கிறாள். சொல்கிறேன். கமல பத்ராக்ஷி, உங்கள் கணவனின், லக்ஷ்மணனின் அங்க லக்ஷணங்ளை விவரமாகச் சொல்கிறேன். கேளுங்கள். ராமர், கமல பத்ராக்ஷன். ஜீவ ஜந்துக்கள் அனைத்திலும் மனோகரமானவர். ரூபமும், தாக்ஷிண்யமும் உடையவன். நல்ல குடியில் பிறந்தவன். ஜனகாத்மஜே, ஜனகன் மகளே, கேள். தேஜஸால் ஆதித்யனுக்கு இணையானவர். பொறுமையில் பூமிக்கு சமமானவர். புத்தியில் ப்ருஹஸ்பதி, புகழில் வாஸவனுடன் ஒப்பிடத் தகுந்தவர். ஜீவ லோகத்தையே ரக்ஷிப்பவர், தன் பந்து ஜனங்கள், உற்றார், என்றால் மேலும் கவனமாக ரக்ஷிப்பவர். தன் நடத்தையில் மிக கவனமாக இருப்பவர். தர்மத்தைக் காப்பதில் மகா விரதம் உடையவர். நல்ல தபஸ்வி. பாமினி, ராமன் இந்த உலகத்தில் நான்கு வர்ணத்தாரையும் ரக்ஷிக்க வந்தவர். மரியாதா புருஷோத்தமன் என்று அழைக்கப்படுபவர். பண்பு மிக்கவர். உலகின் கர்த்தாவும் காரயிதாவும் அவரே- செய்பவனும், செய்விப்பவனும் அவனே. நல்லவர்கள் பூஜிக்கத் தகுந்தவன். (நல்லவர்களால் பூஜிக்கப் படுவது சிறப்பு). தனுர் வேதத்தில், வேதத்தில், வேதத்தின் அங்கங்களில், நல்ல நம்பிக்கையும், ஈ.டுபாடும் உள்ளவர். நீண்ட புஜங்களும், பரந்த மார்பும் உடையவர். அழகிய சங்கு போன்ற கழுத்தும், சுபமான முகமும் உடையவர். அழகிய தாமிர வர்ணம் உடையவர் என்று தேவி, ராமனைப் பற்றி ஜனங்கள் அறிந்துள்ளார்கள். துந்துபி போன்று நல்ல குரலுடையவர். அழகிய வர்ணம் உடையவர். பிரதாபம் உடையவர். இவன் உடலின் அங்கங்கள் சமமாக அளந்து செதுக்கி வைத்தது போல இருக்கும். ஸ்யாமள வர்ணத்தினன். மூன்று ஸ்திரமாக, மூன்று நீளமாக, மூன்று சமமாக, மூன்றில் உயர்ந்தவன். மூன்று தாமிர நிறத்திலும், மூன்று மென்மையாக, மூன்றில் கோடு, மடிப்புகளை உடையவன். மூன்று அவனதமாக- கீழ் நோக்கி இருக்கும். நான்கு தெளிவாகத் தெரிய, மூன்று முனைப்புடையவன். நான்கு கலைகளும், நான்கு எழுத்துக்களும், நான்கு முழம் (1 1/2 அடி-ஒரு முழம்) நான்கு சமமாகவும் உள்ளவன். பதினான்கு சமமான இரட்டைகள், நான்கு பற்கள், நான்கு கதிகள், உயர்ந்த உதடு (ஹனு-தாடை), மூக்கு இவையும், ஐந்து வெண்மையாகவும், எட்டு வம்சவான். பத்து பத்மங்கள், பத்து பெரியவை, மூன்று வியாபித்தவை, இரண்டு வெண் நிறமானவை, ஆறு உன்னதமானவை, ஒன்பது சரீரம், மூன்று பரவி இருக்கும், ராகவனுக்கு. சத்ய தர்ம பராக்ரமவானான ஸ்ரீமான். சங்க்ரஹம்-தன் ஆயுதங்களை சுருக்குவதிலும், அனுக்ரஹம் செய்வதிலும் வல்லவர். தேச கால பாகுபாடுகளை நன்கு அறிந்தவர். ஸர்வ லோகமும் விரும்பும் வண்ணம் பேசக் கூடியவர். அவன் சகோதரன், இளைய தாயார் மகன், சௌமித்ரி, தோல்வி என்பதே அறியாதவன். அனுராகம், ரூபம், குணம் இவற்றில் ராமன் போலவே தான். இருவருமே நர சார்தூலர்கள்., மனிதருள் சார்தூலம்-சிறுத்தை போன்று பலசாலிகள். உங்களைக் காண்பதில் ஆவலாக இருக்கிறார்கள். பூமி முழுவதையும் அலசித் தேடுகிறார்கள். அப்படித் தேடி வந்த சமயம் எங்களுடன் சந்திப்பும், அதன் பின் நட்பும் உருவாயிற்று. உங்களையே தேடி வசுந்தரா என்ற இந்த பூமியில் அலைந்து திரிந்தார்கள். எங்கள் தலைவன் சுக்ரீவன், தமையனால் துரத்தப் பட்டு ஒளிந்து வாழ்ந்து கொண்டிருந்த ருஸ்யமூக மலையை வந்தடைந்தார்கள். மரங்கள் அடர்ந்த இடத்தில், அந்த ருஸ்யுமூக மலையில் தமையனிடம் பயந்து ஒளிந்து கொண்டிருந்தான், சுக்ரீவன். மற்றபடி பிரிய த3ரிசனன் தான், நட்புடன் பழகுபவனே. நாங்கள் சுக்ரீவனுடன் ஓடி வந்தோம். தமையனால் அடித்து துரத்தப் பட்ட பொழுது எங்களில் சிலர் சுக்ரீவனின் பக்கம் நியாயம் இருப்பதை உணர்ந்து அவனுடன் வந்தோம். அந்த சமயம், இவ்விருவரும் மரவுரி தரித்தவர்களாய், கையில் வில்லேந்தியவர்களாய், ருஸ்யமூக மலையின் ரம்யமான சாரலில் வந்து நின்றார்கள். இந்த இரு வீரர்களையும் அவர்கள் வேஷ பூஷணங்களையும் கண்டு பயந்த எங்கள் அரசன், மலை உச்சியிலிருந்து அலறி அடித்துக் கொண்டு கீழே இறங்கி வந்தான். பயம் அவனை ஆட்டுவித்தது. அதனால் தான் இருந்த இடத்திலேயே மறைந்து நின்றவன், அவர்களுடன் பேசி விசாரிக்க என்னையே அனுப்பினான். சுக்ரீவன் சொல்படி நான் அவர்களை நெருங்கி கை கூப்பி அஞ்சலி செய்தபடி நின்றேன். அவ்விருவரும் புருஷ வ்யாக்ரர்களாக ரூப, லக்ஷணங்கள் நிறைந்தவர்களாக இருப்பதைக் கண்டேன். நான் வந்த காரியத்தைச் சொன்னவுடன், என்னிடம் ப்ரியமாக பேசினார்கள். என் முதுகில் அவர்களை ஏற்றிக் கொண்டு சுக்ரீவன் இருந்த இடம் அழைத்துவந்தேன். சுக்ரீவனிடம் இவர்கள் யார் என்ன என்பதை நான் விசாரித்து அறிந்தபடி விவரித்தேன். இருவரும் பரஸ்பரம் பேசி சீக்கிரமே நண்பர்களானார்கள். நரேஸ்வரனும், கபீஸ்வரனும் தங்கள் பழைய கதைகளைப் பேசி, ஒருவரிடம் ஒருவர் அனுதாபமும், அன்பும் கொண்டவர்களாயினர். லக்ஷ்மணாக்ரஜன், ராமன், சுக்ரீவனை சமாதானம் செய்தான். ஸ்த்ரீ காரணமாக, தமையனான வாலியினால், தன் சக்தி முழுவதையும் பிரயோகித்து விரட்டப் பட்டவன். அவன் கஷ்டம் ஒன்றுமேயில்லை என்பது போல லக்ஷ்மணன் ராமனுக்கு நேர்ந்த கஷ்டத்தையும், வேதனையையும் எடுத்துச் சொன்னான். சுக்ரீவன் இதைக் கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தான். சந்திரனைக் கிரஹம் பிடித்தது போல முகம் வெளிறி, சப்தமின்றி நின்றான். இதன் பின் தங்கள் உடலில் அணிந்திருந்த நகைகளை, ராவணன் அபகரித்துக் கொண்டு போன பொழுது, பூமியில் வீசியெறிந்தீர்களே அதை அனைத்தையும் ராமனிடம் காட்ட சுக்ரீவன் கொண்டு வந்தான். உங்களை, ராவணன் எங்கு அழைத்துச் சென்றான் என்பது தெரியவில்லை. நான் தான் அவைகளை சேகரித்து வைத்திருந்தேன். ராவணன் கவனம் வேறு இடத்தில் இருந்த பொழுது தாங்கள் வீசியெறிந்த ஆபரணங்கள் கல கலவென்று சத்தமிட்டுக் கொண்டு பூமியில் விழுந்தன. இந்த நகைகளைக் கண்டதும், தேவனான (தலைவனான) ராமன் மனம் வாடியது. முகத்திலேயே தெரிந்தது. உள்ளுக்குள் குமைந்து கொண்டிருந்த வேதனை ஜ்வாலையோடு வெளியில் தாமிர வர்ணமாக தெரிவது போல தோன்றியது. சற்று நேரம் எதுவும் பேசாமல் இருந்த ராமனை நாங்கள் உற்சாகமான பேச்சு வார்த்தைகளால் சமாதானப் படுத்தி சுய நிலைக்கு கொண்டு வந்தோம். ராமன் இவைகளை லக்ஷ்மணனுக்கும் காட்டி பலவாறாக பேசிக் கொண்டிருந்த பின், சுக்ரீவனிடமே திருப்பிக் கொடுத்து விட்டார். தேவி, தங்களைக் காணாமல் அவர் மிகவும் தவிக்கிறார். மலையில் காட்டுத்தீ வளர்ந்து பெரும் தீயாக வெகு நாளாக அணையாமல் இருந்தால், மலை தவிப்பது போல தவிக்கிறார். தங்கள் காரணமாக தூக்கம் இன்மையும், சோகமும், வேதனையும், கவலையும் அவரை அலைக்கழிக்கின்றன. நெருப்பு குண்டத்தில் அமர்ந்திருப்பது போல உணர்கிறார். பெரும் பூகம்பம், அசையாத மலைகளையும் அசைத்து விடுவதைப் போல, இந்த பிரிவு, அவரை வாட்டுகிறது. ராஜகுமாரி, தங்களைக் காணாத கண்களுக்கு கானனங்களோ, அழகிய நதிக் கரைகளோ, மலைச் சாரல்களோ எதுவுமே கவனத்தை ஈ.ர்ப்பதாக இல்லை. அந்த ராகவன் சீக்கிரமே உங்களை அடைவார். மனுஜ சார்தூலன், உற்றார் உறவினரோடு சேர்த்து ராவணனை தோல்வியுறச் செய்து விடுவார். ராமனும், சுக்ரீவனும் தலைமை தாங்கி படைகளை நடத்திச் செல்லும் பொழுது ராவண வதம் நிச்சயம். வாலியை வதம் செய்யவும், தாங்கள் இருக்கும் இடம் தேடிக் கண்டு பிடிக்கவும் தான் நேரம் கடந்து விட்டது. சுக்ரீவன் தன் கதையைச் சொல்லி நட்பும் கொண்ட பின், குமாரர்கள் இருவரும் அவனுடன் கிஷ்கிந்தை சென்றனர். வாலியை யுத்தம் செய்து வதம் செய்தனர். வேகமாக வாலியை சண்டையில் தோற்கடித்து, எல்லா வானர, கரடிகளூக்கும் அரசனாக சுக்ரீவனை நியமனம் செய்து, முடி சூட்டி வைத்தனர். தேவி, ராமனுக்கும் சுக்ரீவனுக்கும் இடையே இவ்வகையில் தான் நட்பு மலர்ந்தது. நான் ஹனுமான். அவர்கள் அனுப்பி தூதனாக இங்கு வந்திருக்கிறேன் தன் ராஜ்யம் கைக்கு வந்தபின், சுக்ரீவ ராஜா, எல்லா வானரங்களையும் அழைத்தான். பத்து திக்குகளிலும் தேட, மகா பலசாலிகள் தலைமையில் வீரர்களை அனுப்பினான். வானர ராஜன் வழி சொல்லி அனுப்பியபடி அவர்களும் திக்குகளில் தேடச் சென்றனர். நாங்களும் அதே போல, என்னுடன் இன்னும் பல வானரங்கள் அங்கதன் என்ற வாலி புத்திரனின் தலைமையில் தென் திசை நோக்கிச் சென்றோம். வழி தவறி தடுமாறியபொழுது, என்ன செய்வது என்று தெரியாமல், பல இரவுகள் கடந்தன. எங்களுக்கு சுக்ரீவன் கொடுத்த கால கெடுவும் தாண்டியாயிற்று. வந்த காரியமும் நிறைவேறவில்லை. சுக்ரீவ ராஜாவிடம் பயம். கடுமையாக தண்டிப்பான் என்பதால். அதனால், உயிரை விடத் துணிந்தோம். வனத்தில் பள்ளம், மேடுகள், அடர்ந்த காடுகள், மலையின் சாரல்கள் எல்லா இடங்களிலும் தேடி அலைந்து, அலுத்து, தேவியை காண்பது இயலாத காரியமாக பட, உயிரை விடத் துணிந்தோம். ஒரு மலை அடிவாரத்தில், உயிரை விடத் துணிந்து ப்ராயோபவேசம் செய்யத் தயாராக அங்கதனும் மற்றவர்களும் இருந்த பொழுது, அங்கதன் வருத்தத்தோடு தேவி, தாங்கள் காணாமல் போனது, வாலி வதம், நாங்கள் உயிரை விடப் போவது, ஜடாயுவின் மரணம் என்று வரிசையாக பல நிகழ்ச்சிகளையும் குறிப்பிட்டு பலவாறாக பேசிக் கொண்டிருந்தோம். எஜமானனின் கட்டளையை (ப்ராயோபவேசம்) நிறைவேற்ற உடன் பாடுமில்லை. வேறு வழியுமில்லை என்ற நிலையில் செய்வதறியாது திகைத்த எங்களுக்கு வழி காட்டவே வந்தது போல, கழுகரசன் சம்பாதி தென்பட்டான். ஜடாயுவின் சகோதரன் சம்பாதி என்று அவர் சொல்லி தெரிந்து கொண்டோம். சகோதரன் இறந்தான் என்ற செய்தி கேட்டு கொதித்தெழுந்தான். என் சகோதரனை யார் கொன்றது? ஏன்? எங்கே? எப்படி யார் கொன்றார்கள்? என்று கேட்க, அங்கதன் விவரமாக சொன்னான். ஜனஸ்தானத்தில் ஜடாயுவின் மரணம், உங்களை கவர்ந்து சென்ற ராவணனைத் தடுக்க ஜடாயு யுத்தம் செய்ததும், வீர மரணம் அடைந்ததையும் கேட்டபின், அருணனின் குமாரனான சம்பாதி மிகவும் மன வருத்தம் அடைந்தான். தன் பங்குக்கு ஒரு உதவி செய்தான். இங்கு ராவண க்ருஹத்தில் தாங்கள் சிறை வைக்கப் பட்டுள்ளதை, தன் கூர்மையான கண்களால் கண்டு சொன்னான். இதைக் கேட்டு அங்கதன் தலைமையில் நாங்கள் அனைவரும் புறப்பட்டோம். விந்த்ய மலையிலிருந்து கிளம்பி, இறங்கி சாகரத்தை நோக்கிச் சென்றோம். இப்பொழுது தேவி இருக்கும் இடம் தெரிந்து விட்டது. நேரில் காண்போம் என்று உற்சாகத்துடன் வானரங்கள் சந்தோஷமாக சமுத்திர கரை வந்து சேர்ந்தோம். கடலைக் கண்டு தயங்கி நின்று விட்டோம். இவர்கள் பயத்தை போக்கி நான் நூறு யோஜனை தூரம் கடலைத் தாவி குதித்து தாண்டி வந்து, லங்கையில் நுழைந்து விட்டேன். இரவில் லங்கையில் நன்றாக சுற்றிப் பார்த்து தேடி விட்டேன். எங்கும் ராக்ஷஸ வீரர்கள் காவல் நிற்கிறார்கள். ராவண ராஜாவையும் கண்டு விட்டேன். தங்களையும் கண்டு கொண்டேன். தேவி, நான் ராம தூதன் தான். இப்படி தங்களைக் காணவே, பல முயற்சிகள் செய்து வந்து நிற்கும் என்னை சுக்ரீவன் மந்திரி, பவனாத்மஜன் என்று தெரிந்து கொள்ளுங்கள். தங்களுடைய காகுத்ஸன் குசலமாக இருக்கிறார். அனைத்து வில்லாளிகளிலும் சிறந்த வீரனான தாசரதி ராமன் நலமாக இருக்கிறார். அவனை குருவாக ஏற்று பணிவிடை செய்து வரும் லக்ஷ்மணனும் நலமே. நாங்கள் எல்லோருமே தங்கள் நலத்தை விரும்பும் பந்துக்களே. நான் ஒருவன் தான் சுக்ரீவன் கட்டளைப் படி கடலைத் தாண்டி வந்தேன். தென் திசை நோக்கி வந்த வானர வீரர்கள், திசை தடுமாறி தவித்த பொழுதும், தேவியைக் காண வேண்டும் என்ற ஒரே எண்ணத்தோடு தேவி உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்று தெரிந்து கொண்டு வரும்படி ராமனின் கட்டளை, இந்த செய்தியைச் சொல்லி அவர்கள் தாபத்தை போக்குவேன். கண்டேன் சீதையை என்று தெரிவித்து அவர்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக ஆவேன். தேவி, நல்ல வேளையாக நான் கடலைக் கடந்து வந்தது வீண் போகவில்லை. முதலில் கண்டவன் நான் என்பதால் நான் பெரும் புகழும் அடைவேன். ராகவனும் சீக்கிரமே வந்து உங்களுடன் சேர்ந்து விடுவான். அது இப்பொழுது நிச்சயமாகி விட்டது. உற்றார் உறவினர், நண்பர்களுடன் ராவணனை அழித்து யுத்தத்தில் வெற்றி பெற்று வருவான். மால்யவான் என்று ஒரு உத்தமமான மலை. அங்கிருந்து கேஸரி என்ற வானர வீரன் கோகர்ண க்ஷேத்திரம் அடைந்தான். தேவ ரிஷிகளின் கட்டளைப் படி என் தகப்பனாரான அந்த கேஸரி, சாகரத்தின் கரையில் சம்பசாதனன் என்பவனை ஜயித்து வானரங்களின் க்ஷேத்திரமாக செய்தார். அந்த வானர ராஜனின் மகன் நான். வாயுவினால் உண்டாக்கப் பட்டேன். என் செயலால் ஹனுமான் என்று உலகில் க்2யாதி பெற்றேன். என்னிடம் நம்பிக்கை தோன்றச் செய்ய என் தந்தையின் பெருமைகளைச் சொன்னேன். சீக்கிரமே ராகவன் இங்கு வந்து தங்களை அழைத்துச் செல்வான். தேவி, இதோ வந்து விடுவார் என்று பலவாறாக பேசி சீதையின் மனதில் நம்பிக்கை வளரச் செய்தான், ஹனுமான். மேலும் பல சாதகமான அடையாளங்களையும் கண்டு, அவன் ராம தூதன் தான் என்று சீதை நம்பிக்கை கொண்டாள். ஜானகி பெரும் மகிழ்ச்சியும் அடைந்தாள். அவள் கண்களிலிருந்து ஆனந்த ஜலம் பெருகியது. சிவப்பும், வெளுப்பும் கலந்த கண்கள், விசாலாக்ஷியின் கண்கள். ராகுவின் பிடியிலிருந்து விடுபட்ட, சந்திரன் போல கஷ்டம் நீங்கி பிரகாசித்தது. கபியான ஹனுமான் நம்மைச் சார்ந்தவனே என்பதில் சந்தேகம் விலகி, நம்பிக்கை வளர்ந்தது. மேலும் ஹனுமான் தேவி, சமாதானம் அடைவாய். என்னை உற்றானாக நினைத்து என்ன செய்ய வேண்டும் என்று உத்திரவிடுங்கள் என்றான். சம்பசாதனன் என்ற அசுரனை அழித்தபின், மகரிஷி சொன்னதன் பேரில், வாயுவின் பிரபாவத்தால் தோன்றிய வானரமான நான், அந்த வாயுவுக்கு சமமான பலமும் வேகமும் உடையவன். ஹனுமான், நான் என்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் விஸ்வாசோத்பாதனம் என்ற முப்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 36 (375) அங்கு3லீயக ப்ரதா3னம் (அடையாள மோதிரத்தைத் தருதல்)
மாருதாத்மஜனான ஹனுமான் மேலும் சீதையின் மனதில் நம்பிக்கை வளரும் விதமாக, பேசலானான். மஹா பா4கே3 (பாக்யமுடையவளே) நான் வானரன். ராமனுடைய தூதன். ராம நாமம் பொறிக்கப் பட்டுள்ள இந்த மோதிரத்தை பாருங்கள். மகாத்மாவான ராமன் கொடுத்தான். என்னிடம் நம்பிக்கை ஏற்பட, தானாக என் கையில் தந்தான். ப4த்3ரம் தே- உனக்கு மங்களம் உண்டாகட்டும். உன் கஷ்டங்களுக்கு விடிவு காலம் வந்தாயிற்று. சமாதானம் அடைவாய் என்றான். அதை தன் கையில் எடுத்து உற்றுப் பார்த்த ஜானகி, தன் கணவனையே அடைந்து விட்டது போல மகிழ்ந்தாள்.
தன் கணவனின் கைகளில் அலங்காரமாக இருந்த மோதிரம் தான் அது என்று உணர்ந்து அவளுடைய அழகிய முகம் சிவந்தும் வெளுத்ததுமான கண்கள் மகிழ்ச்சியில் மலர்ந்தன. ராகுவிடமிருந்து விடுபட்ட சந்திரன் போலாயிற்று. இதன் பின் சற்றே வெட்கத்துடன் இளம் பெண் போல கணவனையே பற்றி நினைத்து, அவன் அனுப்பிய அடையாளத்தை கொண்டு வந்து தந்த வானரத்தை பாராட்டினாள். வானரோத்தமா, நீ நல்ல ஆற்றல் உடையவனே. சமர்த்தன், அறிவாளி.. அதனால் தான் இந்த ராக்ஷஸர்களின் இருப்பிடத்தில் கால் வைத்திருக்கிறாய். மகரங்கள் நிரம்பிய சாகரம் நூறு யோஜனை தூரம் பரவியது. அதை கோ3ஷ்பதீ3க்ருத:- பசு மாட்டின் குளம்புகளுக்கு இடையில் உள்ள தூரம் போல எளிதாக கடந்து விட்டாய். சிறந்த உன் ஆற்றல் சிலாகிக்கத் தகுந்ததே. வானரர்ஷபா4, நீ சாமான்யமான வானரன் அல்ல. உனக்கு பயம் என்பதே இல்லை. ராவணனிடத்தில் தயக்கமோ, நடுக்கமோ இல்லை. பதட்டப் படாமல் காரியம் செய்திருக்கிறாய். என்னுடன் பேச நீ தகுதி உள்ளவனே. ராமன் பார்த்து ஒருவரை என்னிடம் அனுப்பியிருக்கிறான் என்றால் தகுதியுடையவனைத் தான் அனுப்புவான். பரீக்ஷை செய்யாமல் ராகவன் ஒருவரை தூது போக அனுப்ப மாட்டான். அதுவும் என்னிடம் வந்து பேசவும், இந்த ராக்ஷஸர்களுக்கிடையில் சமா ளித்துக் கொண்டு செல்ல சாமர்த்தியமும் உள்ளவனைத் தான் ராமன் தேர்ந்தெடுத்திருக்கிறான். நல்ல வேளை, அந்த ராமன் குசலமாக இருக்கிறான். தர்மாத்மா. சத்யமே உருவானவன். சுமித்ரானந்த வர்த4னனான லக்ஷ்மணனும் நல்ல தேஜஸ்வி. ராகவன் குசலமாக இருந்தால், சாகரத்தை ஒட்டியாணமாக (மேகலையாக) கொண்ட பூமியில், யுகா3ந்தாக்3னி போல ஏன் பொங்கி எழவில்லை? கோபத்தில் ஏன் தகிக்கவில்லை. இருவரும் சக்தி வாய்ந்தவர்கள். சுரர்களையும் அடக்கி விடும் வலிமை உள்ளவர்கள். ஏன் இன்னமும் வரவில்லை. என் துக்கங்களுக்குத் தான் முடிவே இல்லையா. என் ராமன் மிகவும் வாட்டமுறாமல் தைரியமாக இருக்கிறானா? மேற்கொண்டு செய்ய வேண்டிய காரியங்களில் கவனமாக செய்து கொண்டிருக்கிறானா? தன் காரியங்களில்,(மோகம்) கவனக் குறைவின்றி சரியாக செய்கிறானா? தளர்வின்றி, மனதாலும், உடலாலும் புருஷ கார்யம் எனும் நித்ய, நைமித்திக காரியங்களைத் தொடர்ந்து செய்கிறானா? ராஜகுமாரன், த்ரிவிதம், த்விவிதம், உபாயம் எனும் முறைகளை மறக்காமல் அனுஷ்டிக்கிறானா? எப்பொழுதும் வெற்றி பெறவே விழைபவன், அவன் நண்பர்கள் எப்படி இருக்கிறார்கள்? இவனை நாடி மித்திரர்கள் வருகிறார்களா? பரஸ்பரம் நட்பை பலப்படுத்திக் கொள்ள விழைகிறார்களா? இவனுடைய மித்திரர்கள் கல்யாண மித்திரர்களாக, நலம் விரும்பிகளாக இருக்கிறார்களா? தேவ காரியங்களை விடாமல் செய்கிறானா? தன் முயற்சியும், தெய்வ பலமும் இணைந்தால் தான் நன்மை உண்டாகும் என்பதை அறிந்தவனே. என்னை பிரிந்ததால் என்னிடம் அன்பு குறையாமல் இருக்கிறானா? இந்த கஷ்டத்திலிருந்து ராகவன் என்னை விடுவிப்பானா? சௌக்யமாகவே வளர்ந்தவன், சுகமாகவே வளர்க்கப் பட்டவன். அதற்கு தகுதியும் உடையவனே. துக்கம் என்பதே அறியாமல் வளர்ந்தவன், இந்த மகத்தான துக்கத்தை தாங்கிக் கொள்கிறானா? கௌசல்யை, சுமித்ரை இவர்களிடமிருந்தும் பரதனிடமிருந்தும் குசல சமாசாரங்கள் வருகின்றனவா? என் காரணமாக ராகவன், சுய கௌரவம் மிக்கவன், தன்னை நொந்து கொள்ளாமல் என்னைத் தேடி காப்பாற்றும் முயற்சியில் இருக்கிறானா? அல்லது வேறு விதமாக எண்ணுகிறானா? பரதன், எனக்காக அக்ஷௌஹிணி சேனைகளை அனுப்புவானா? ப்4ராத்ரு வத்ஸலன். சகோதர வாத்ஸயம் மிக்கவன், மந்திரிகள், ஒற்றர்களுடன் த்வஜங்களுடைய ரதங்களில் படை வீரர்களை அனுப்பி வைப்பானா? வானராதிபன் சுக்ரீவன் வருவானா? வானர வீரர்கள், நகங்களும், பற்களுமே ஆயுதமாக வருவார்களா? லக்ஷ்மணன் சூரன். சுமித்ரானந்தனன், அவன் ஒருவனே போதுமே. அஸ்திர சஸ்திரங்களை அறிந்தவன், ராக்ஷஸர்களை ஒழித்து விட முடியாதா? ராமன் கோபம் கொண்டு தன் பாணங்களால் ராவணனை, உற்றார் சுற்றாரோடு வதம் செய்து அழிப்பதை சீக்கிரம் காணத் தான் போகிறேன். ராமன் முகம் ஹேம சமானமானது. பத்மம் போன்ற மனம். ஜலம் இன்றி குளம் வற்றிய நிலையில், அதிலுள்ள பத்மம் சூரிய ஒளியில் வாடுவது போல என் பிரிவால் வாடாமல் இருக்கிறானா? தர்மம் என்ற பெயரில் ராஜ்யத்தை த்யாகம் செய்த பொழுதும், கால் நடையாக என்னை வனத்துக்கு அழைத்து வந்த பொழுதும் எவனுக்கு மனதில் பயமோ, சோகமோ, கவலையோ தோன்றவில்லையோ, அவன் தற்சமயம் மனதில் தைரியத்தை வளர்த்துக் கொன்டிருக்கிறானா? அவனுக்கு தாயோ, தந்தையோ, வேறு யாரோ, எனக்கு சமமாகவோ, என்னை விட அதிகமாகவோ, ஸ்னேகமாகவும் பிரியமாகவும் இருந்ததில்லையே. அதனால் தூதனே, நான் உயிர் வாழ விரும்புகிறேன். என் பிரிய ராமனுடைய மேன்மையை , அவன் வெற்றி பெறுவதை கேட்க விரும்புகிறேன். இவ்வாறு பொருள் பொருந்திய வார்த்தைகளை மதுரமாக ஹனுமானிடம் சொல்லி விட்டு, மேலும் ராமன் விஷயமாக ஹனுமான் சொல்வதைக் கேட்க ஆவலுடன் நிறுத்தினாள். சீதையின் வார்த்தைகளைக் கேட்டு ஹனுமான், சிரஸில் கை கூப்பி அஞ்சலி செய்தபடி மேலும் விவரித்தான். ராமன், நான் இங்கு வந்து சேர்ந்து விட்டதை இன்னமும் அறியான். அதனால் தான் புரந்தரன் சசியை தேடிச் சென்று அழைத்து வந்தது போல உன்னை அழைத்துச் செல்ல வரவில்லை. நான் போய் சொன்னவுடன் வந்து விடுவான். வானரங்களும், கரடிகளும் நிறைந்த பெரும் படையைத் திரட்டிக் கொண்டு ஆயத்தமாக வருவான். வருணாலயம் எனும் கடலைத் தன் பாணங்களால் அசையாது நிற்கச் செய்து விட்டு, லங்காபுரியை நோக்கி வருவான். சாகரத்தைக் கடப்பது சுலபமான காரியமும் அல்ல. இந்த லங்கா நகரில் சாந்தமான ராக்ஷஸர்கள் மட்டுமே இருக்கும்படி செய்து விடுவான். தேவர்கள், அசுரர்கள் கூடி வழியில் ராகவனைத் தடுத்தால் அவர்களையும் வதம் செய்து விடுவான். தங்களைக் காணாத வேதனைதான் அவனை வாட்டுகிறது. சிங்கம் தாக்கிய பெரிய யானை போல, தன் வேதனையை வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருக்கிறான். மலய மலை, விந்த்4ய மலை, மேரு மலைகள், மந்த3ர மலை, து3ர்த4ர மலை இவைகளின்மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். கிழங்குகள், பழங்கள் போன்ற எங்கள் உணவின் பேரில் ஆணை. பிம்போஷ்டமும் குண்டலமும் அழகூட்டும் ராம வதனத்தை சீக்கிரமே காணத்தான் போகிறாய். தேவ லோகத்து நாக ப்ருஷ்டத்தின் மேல் தேவராஜன் வீற்றிருப்பது போல ப்ரஸ்ரவன மலையில் அமர்ந்து இருக்கும் ராமனைக் காண்பாய். ராகவன், மாமிசம் சாப்பிடுவதில்லை. மது அருந்துவதில்லை. காடுகளில் சுலபமாக கிடைக்கும் உணவு வகைகள் தான் ஆகாரம். தன்னை கடிக்கும் கொசு, பூச்சிகள், புழுக்கள் இவற்றைக் கூட தன் சரீரத்திலிருந்து அகற்றுவதில்லை. மனம் உன் நினைவில் மூழ்கி இருப்பதால், தியானத்தில் அதிக நேரம் செலவழிக்கிறான். எப்பொழுதும், வேதனையை தன்னுள் அடக்கிக் கொண்டு வளைய வருகிறான். தூங்குவதேயில்லை. தூங்கினாலும் சீதா என்று மதுரமாக அழைத்தபடி எழுந்திருக்கிறான். காம வசமாகி ஹா ப்ரியே, என்று சில சமயம் சொல்வான். அழகிய பொருட்களை, பழமோ, பூவோ, கண்டால் தங்கள் நினைவு தான் வரும். ராஜ குமாரன், திடமான உறுதி படைத்த மனத்தினன் தான். ஆனாலும் சில சமயம் வாய் விட்டு சீதே என்று அரற்றி விடுவான். தங்களை எப்படியும் கண்டு பிடிக்கவே பெரு முயற்சி செய்து வருகிறான். இதைக் கேட்டு ராமனை பற்றியது என்றதால் மன அமைதியும், அவன் வருந்துகிறான் என்பதால் சோகமும் ஒரே சமயத்தில் அனுபவித்தாள். சரத் கால இரவில், மீதியிருக்கும் மேகங்களின் இடையில் சந்திரன் போல ஆனாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் அங்கு3லீயக ப்ரதா3னம் என்ற முப்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 37 (376) சீதா ப்ரத்யானனௌசித்யம் (சீதையை திரும்ப அழைத்துச் செல்வது உசிதமல்ல)
சீதை ஹனுமானிடம் தர்மார்த்தங்களைச் சொன்னாள். ஹனுமன், அம்ருத மயமான (ராம) கதையை விஷத்தில் தோய்த்தது போல சொல்லி விட்டாய். என் ராமன் என்னையே நினைத்து உருகுகிறான் என்பது எனக்கு மகிழ்ச்சியையும் பெருமையும் தந்தால், அவன் வேதனைப் படுகிறான் என்பது எனக்கும் வேதனையளிப்பதாக இருக்கிறது. செல்வ செழிப்பிலோ, விபத்து வரும் சமயங்களிலோ, பயப்படும்படியான கஷ்டங்களிலோ, கயிற்றைக் கட்டி இழுத்துச் செல்வதைப் போல க்ருதாந்தன் என்ற விதி மனிதனை ஆட்டிப் படைக்கிறது. ப்ளவகோ3த்தமா, தாவிக் குதித்து ஓடும் வானரங்களில் சிறந்தவனே, விதியை யாராலும் வெல்ல முடியாது. சௌமித்ரியை, ராமனை, என்னை இந்த விதி எப்படி ஆட்டி வைக்கிறது பார். இந்த வேதனை எப்பொழுது முடியும்? இந்த சோக சாகரத்தை கடந்து ராமன், எப்பொழுது மீண்டு வருவான். சாகரத்தில் செல்லும் சமயம் படகு உடைந்து, நீரில் மூழ்கியவன் நீந்திக் கொண்டே கரை சேருவது எவ்வளவு கடினம், அது போன்ற நிலையில் இருக்கிறான். ராக்ஷஸர்களை வதம் செய்து, லங்கையை அடியோடு நாசம் செய்து விட்டு என்னை எப்பொழுது காண்பான்? ப்ளவங்கமா, அவனிடம் என் சார்பாக வேகமாக செயல் படு என்று சொல். இந்த வருஷம் முடியும் வரை தான் என் ஆயுள். பத்தாவது மாதம் நடந்து கொண்டிருக்கிறது. இரண்டு மாதம் தான் மீதி. ராவணன் விதித்துள்ள சமயம், கெடு முடிந்து விடும். இரக்கம் என்பதே இல்லாதவன், சகோதரன் விபீ4ஷணன் வெகுவாக மன்றாடிச் சொன்னான் என்னை விட்டு விடும்படி. அவன் ஏற்றுக் கொள்ளவில்லை. என்னை திருப்பித் தருவது என்பதே ராவணனுக்கு ஏற்க முடியாத விஷயமாக இருக்கிறது. காலம் முடிந்த நிலையில், ஜீவனை ம்ருத்யு தேடத் துவங்கும் முன் கணக்கிட்டுப் பார்க்கும் என்பார்கள். அது போல ராவணனின் நாட்கள் எண்ணப் படத் துவங்கி விட்டன போலும். அல்லது ம்ருத்யு ராவணனின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறது போலும். அனலா என்ற விபீஷணனின் மூத்த மகள், அவள் தாயார் அனுப்பி என்னிடம் வந்தாள். அவள் சொல்லித் தான் இந்த விஷயம் எனக்குத் தெரியும். ஹரி ஸ்ரேஷ்டா, எனக்கு புது உற்சாகம் தோன்றுகிறது. நான் நிச்சயம் என் பதியை அடைவேன். என் அந்தராத்மா மிகவும் சுத்தமானது. அதில் பல குணங்கள் உள்ளன. ராகவனிடத்தில் உற்சாகம். பௌருஷம், ஆற்றல் , இரக்கம் என்று பல குணங்கள் உள்ளன. வானரா, விக்ரமும், பிரபாவமும் அவனுக்கு உண்டு. ஜனஸ்தானத்தில் பதினான்கு ஆயிரம் ராக்ஷஸர்களை ஒருவனாக போரிட்டு மாய்த்தவன். எதிரி என்று அவன் எதிரில் நிற்பவன் எவன் தான் சிரமப் படாமல் இருப்பான். இந்த சங்கடமான நாட்களில் அவனை நீங்கள் முழுவதுமாக புரிந்து கொண்டிருக்க முடியாது. எனக்குத் தெரியும். புலோமஜா என்ற சசி இந்திரனை அறிந்திருந்தது போல, உள்ளும் புறமும் நான் அறிவேன். மகா கபேஸ்ரீ வானரமே, ராமன் திவாகரன் போன்றவன். சர ஜாலங்களே, அம்புகளே அவனது தீக்ஷ்ணமான கிரணங்கள். சூரன். குறைவில்லாத ஜலம் போல் தோன்றும் சத்ருக்கள் எனும் குளத்தை தன் பாணங்களால் வற்றச் செய்து விடுவான் என்று இவ்வாறாக, ராமனை எண்ணி தனக்குள் பேசிக் கொள்வது போல ஹனுமானிடம் ஜானகி சொல்லிக் கொண்டே போக, அவள் கண்களில் பெருகும் கண்ணீரையும் கண்டு ஹனுமான் அவளுக்கு ஆறுதலாக சொன்னான். தேவி, நான் போய் கண்டேன், சீதையை என்று விவரங்களைச் சொல்ல வேண்டியது தான் தாமதம். ராமன் படை திரட்டிக் கொண்டு புறப்பட்டு விடுவான். அல்லது வரானனே, இன்றே உன்னை நான் விடுவிக்கிறேன். என் முதுகில் ஏற்றிக் கொண்டு உன் வேதனை எனும் இந்த கடலையும் கடந்து விடுகிறேன். லங்கையை ராவணனோடு சேர்த்து, அடியோடு தூக்கக் கூடிய சக்தி எனக்கு இருக்கிறது. மைதிலி, இன்றே ப்ரஸ்ரவன மலையில் இருக்கும் ராமனிடம் உன்னைக் கொண்டு சேர்த்து விடுவேன், அனலன், நெருப்பு, ஹோமத் தீயில் இட்ட ஹவிஸை, இந்திரனுக்கு கொண்டு சேர்ப்பது போல உன்னை ராமனிடம் சேர்ப்பித்து விடுகிறேன். இன்றே ராமனை, லக்ஷ்மணனுடன் சேர்த்து காண்பாய். விஷ்ணுவை தைத்ய வதம் ஆன பின், (லக்ஷ்மி தேவி) கண்டது போல காண்பாய். மகா பலசாலியான ராமன், உன்னைக் காண துடித்துக் கொண்டு ஆசிரம வாழ்க்கையை மேற் கொண்டு ப்ரஸ்ரவன மலையில் இருக்கிறான். நாக ராஜன், (யானைத் தலைவன்) மலையரசன் தலையில்- மலையுச்சியில் இருப்பது போல அமர்ந்திருப்பவனைக் காண்பாய். யோசிக்காதே. சோபனே, என் முதுகில் ஏறிக் கொள். பெரும் சமுத்திரத்தை ஆகாய மார்கமாக கடந்து செல்வோம். உன்னை அழைத்துக் கொண்டு நான் புறப்பட்டுச் செல்லும் பொழுது லங்கா வாசிகள் யாரும் பின் தொடர்ந்து வரவும் முடியாது. என்னைத் தடுக்கவும். யாருக்கும் சக்தியில்லை. நான் எப்படி இங்கு வந்து சேர்ந்தேனோ, அதே போல உங்களை அழைத்துக் கொண்டு யாரும் அறியாமல் திரும்பியும் சென்று விடுவேன் என்று இவ்வாறு ஹனுமான் உற்சாகமாக சொல்லிக் கொண்டே போகவும், மகிழ்ச்சியும் ஆச்சர்யமும் பொங்க பதில் சொன்னாள். ஹனுமன், வெகு தூரம் அத்வானமான இடத்தில் என்னையும் தாங்கி தூக்கிக் கொண்டு போவதாக சொல்கிறாய். எப்படி முடியும்? இதிலேயே உன் கபித்வம் வானர இயல்பு தெரிகிறது. அல்ப சரீரம் உடைய நீ என்னை எப்படித் தூக்குவாய்? மானவேந்திரனான என் பர்த்தாவின் அருகில் கொண்டு சேர்ப்பதாக சொல்கிறாய். சீதை சொன்னதைக் கேட்டு வானர வீரன் திகைத்தான். இதுவரை கண்டோ, கேட்டோ அறியாத அவமானம். லக்ஷ்மீவானான ஹனுமான் யோசித்தான். இவள் என் சக்தியையோ, செயல் திறமையையோ, பிரபாவம் எதுவும் அறியாள். அதனால் வைதேஹி, பார். என் ரூபத்தைப் பார். நான் விரும்பியபடி வளரவும், குறுகவும் என்னால் முடியும். இதோ பார் என்று சொல்லி தன் பெரிய உருவத்தை வைதேஹி காண வளர்ந்தான். அந்த மரத்திலிருந்து கீழே இறங்கி வளர ஆரம்பித்தான். சீதைக்கு நம்பிக்கை ஏற்பட, வளர்ந்தான். மேரு, மந்தர மலைகள் போல எரியும் நெருப்பின் ஜ்வாலை போல சீதையின் எதிரில் நின்றான். ஹரி- வானரம் மலை அளவு பெரியவனாக, தாம்ர வர்ண முகத்தினனாக, மகா பலசாலியாக, வஜ்ர த்ம்ஷ்டிரனாக- வஜ்ரம் போன்ற பல்லும், பீமனாக- மிகப் பெரிய உருவமுமாக, கண்ணால் காணவே பயம் தரும் படி, நின்று வைதேஹியிடம் சொன்னான். பர்வதங்கள், வனங்கள் உட்பட, தோரணங்கள் கட்டப் பட்ட இதன் மாட மாளிகைகள், அசையாது இந்த லங்கை முழுவதையும், இதன் நாதனோடும் அல்லது நாதன் இன்றியும் தூக்கிச் செல்ல என்னால் முடியும். அதனால் இப்பொழுது நம்பி என்னுடன் கிளம்புவாயாக. ராகவனையும், லக்ஷ்மணனையும் துக்கம் தீர்ந்து நிம்மதியடையச் செய்யலாம். எதிரில் மலை போல நின்றவனைப் பார்த்து ஜனகன் மகள், பத்ம பத்ரம் போன்ற கண்கள் அகல, மாருதனுடைய மகனான ஹனுமனைப் பார்த்து உன் ஆற்றல், பலம் இவற்றை அறிந்து கொண்டேன், மகா கபேஸ்ரீ. பெரும் வானரமே, சாக்ஷாத் வாயு பகவான் போலவே உன் வேகமும் கதியும் என்றும் தெரிந்து கொண்டேன். சாமான்யமான எவன் தான் இந்த பூமி வரை வளர முடியும்? அளவிட முடியாத ஆழமான கடலைக் கடந்து இக்கரை வந்துள்ளாய். உனக்கு என்னை அழைத்துச் செல்ல சக்தி இருக்கிறது. மகாத்மாவான ராமனின் கார்ய சித்3தி4 வெகு சீக்கிரமே ஆக வேண்டும் தான். ஆனால், குற்றமற்றவனே (அனகா) நான் உன்னுடன் வர முடியாது. வாயு வேகத்தில் நீ செல்வாய். அந்த வேகமே எனக்கு மயக்கம் வரவழைக்கும். சாகரத்தின் மேல், உயர உயர பறக்கும் சமயம், ஆகாயத்தில் இருந்து வேகம் தாங்காமல் நான் விழுந்தாலும் விழுவேன். உன் முதுகிலிருந்து கிழே சாகரத்தைப் பார்த்தால் எனக்கு பயத்தில் தலைசுற்றலாம். அதனாலும் விழ ஏதுவுண்டு. திமிங்கிலமும் மற்ற மீன் வகைகளும் நிரம்பிய கடலில் விழுந்தால் என்ன செய்வேன்? அந்த நீர் வாழ் பிராணிகளுக்கு விருந்தாக ஆவேன். நீ சத்ரு வினாசனன் தான். ஆனாலும் உன்னுடன் நான் பயணம் செய்ய முடியாது. உன்னுடன் வந்தாலும் களத்ரம் என்ற சந்தேகம் வரத்தான் செய்யும். ராக்ஷஸர்கள் யாரோ என்னை தூக்கிச் செல்கிறார்கள் என்று தெரிந்தால் போதும், துரத்துவார்கள். ராவணனே கட்டளையிட்டு கூட்டம் கூட்டமாக அனுப்புவான். சூலமும், உத்3க3ரமும் ஏந்தி வரும் அந்த சூரர்கள் வீரர்கள் சூழ்ந்து கொண்டு உன்னுடன் சேர்த்து என்னையும் பார்த்தால் விடுவார்களா? உனக்கு பாரமாக நான். ஆயுதங்களுடன் ராக்ஷஸர்கள், நியாயுதபாணியாக நீ அவர்களை எவ்வளவு நேரம் தாக்குப் பிடிக்க முடியும்? என்னையும் காப்பாற்ற வேண்டும். அவர்கள் என்னைக் கண்டு கொண்டால் பயங்கரமான அவர்கள் தோற்றத்தைக் கண்டே நான் சாகரத்தில் விழுந்து விடுவேன். கபி சத்தமா, ஆற்றல் மிகுந்த வானரமே, அவர்கள் கூட்டமாக வந்தால், எப்படியாவது உன்னை தோற்கடித்து விடுவார்கள். அல்லது நீ மும்முரமாக அவர்களுடன் போர் புரியும் பொழுது நான் சமாளிக்க முடியாமல் விழுந்தாலும் விழுவேன். கீழே விழுந்த என்னை திரும்பவும் சிறை பிடித்து லங்கைக்கே கொண்டு செல்வார்கள். அல்லது பலவந்தமாக என்னை பிடுங்கிக் கொண்டு உன்னைத் தனியாக விட்டுச் சென்றாலும் செல்லலாம். யுத்தம் என்று வந்தால் வெற்றி, தோல்வி நிச்சயம் அல்லவே. நான் இந்த ராக்ஷஸர்களின் தாக்குதலை தாங்காமல் வீழ்ந்து விட்டால். உன் பிரயத்தினங்கள் பயனின்றி போகுமே. ஹரி ஸ்ரேஷ்டனேஸ்ரீ நீ ஒருவனே போதும், எல்லா ராக்ஷஸர்களையும் வதம் செய்து விடுவாய். ஆனால் உன் கையால் ராக்ஷஸர்கள் அனைவரும் வீழ்ந்து விட்டால், ராமனுக்கு என்ன பெருமை? ராகவன் பெருமை குறையும். அல்லது ராக்ஷஸர்கள் உன்னைப் பிடித்து சிறை வைத்து விட்டால், ராகவர்கள் விஷயம் தெரியாமல் தவிப்பார்கள். ஹரி ராஜனும், போனவன் வரவில்லையே என்று கவலைப் படுவான். எனக்காக நீ எடுத்துக் கொண்டுள்ள பெரு முயற்சிகள் வீணாகும். நீ ராகவனுடன் சேர்ந்து செயல் படுவதில் பல நன்மைகள் விளையக் கூடும். என்னுடைய ஜீவிதம் நிச்சயமாகும். ராகவர்களுடைய, அவர்கள் சகோதரர்களுடைய (பரத, சத்ருக்னர்களுடைய), உன் ராஜ குலத்தினரின், ஜீவிதமும் பிழைத்திருக்கும். என் காரணமாக, ஏற்கனவே நிராசையுடன் இளைத்து இருப்பவர்கள், கூடியுள்ள ஹரி கணங்கள், ருக்ஷ கணங்கள் இவற்றுடன் கூடவே மடிந்து போவார்கள். வானர, மகா பா3ஹோ, என் பர்த்தாவிடம் எனக்கு உள்ள பக்தியை முன்னிட்டு, பிற புருஷனுடைய சரீரத்தை தொட மாட்டேன். ராவணன் பலவந்தமாக தூக்கியபொழுது அவன் சரீரத்தை தொடும்படி நேர்ந்தது என்றால், அது என் வசத்தில் இல்லை. என் நாதனும் அருகில் இல்லை. எனக்கும் தன்னைக் காத்துக் கொள்ளும் சக்தியில்லை. ராமன் இங்கு வந்து, உற்றார் உறவினரோடு ராவணனை வதம் செய்து என்னை இங்கிருந்து அழைத்துச் செல்வானேயானால், அது அவனுக்கு பெருமை சேர்க்கும். பலர் யுத்தத்தில் வீரர்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன், கண்டும் இருக்கிறேன். ஆனால், அவர்கள் பராக்ரமம் ராமனுக்கு சமமாக ஆக முடியாது. தேவ கந்தர்வர்களோ, புஜங்க ராக்ஷஸர்களோ. யாரானாலும் யுத்தத்தில் ராமனுக்கு சமமான விக்ரமும், அதே பலமும் கொண்ட லக்ஷ்மணனும் அருகில் இருக்கும் பொழுது யார் தான் போரிடத் துணிவார்கள். நெருப்பு கொழுந்து விட்டெரியும் பொழுது, காற்றும் சகாயமாக வீசினால், அதன் ஜ்வாலையின் உஷ்ணத்தை யார் தான் பொறுக்க முடியும்? லக்ஷ்மணனுடன் கூடிய ராகவன், மதம் பிடித்த திக்கஜம் நிற்பது போல நிற்பான். யார் எதிரில் வரத் துணிவார்கள்? வானரனே, யுக முடிவில் சூரியன் தன் கிரணங்களே கூரிய பாணங்களாக தாங்கி வருவது போல நிற்பவனை யாரால் எதிர்க்க முடியும் ? அதனால், ஹரி ஸ்ரேஷ்ட, லக்ஷ்மணனுடன் என் பதியை படை பலங்களோடு சீக்கிரமாக இங்கு அழைத்து வா. ராமனை எண்ணி வெகு காலமாக நான் வாடியது போதும். என் நாதனை நேரில் கண்டு நான் மகிழும்படி செய்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் சீதா ப்ரத்யானனௌசித்யம் என்ற முப்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 38 (377) வாயஸ வ்ருத்தாந்தக் கத2னம் (காகத்தின் கதையைச் சொல்லுதல்)
ஹனுமான் சீதையின் உசிதமான பதிலால் சமாதானம் அடைந்தான். பதில் சொன்னான். தேவி, தங்கள் தகுதிக்கேற்ப பேசினீர்கள். சுப4 த3ர்சனே, ஸ்த்ரீ சுபாவத்துக்கு ஏற்ப, சாத்4வி எனும் பதிவிரதா ஸ்த்ரீகளின் குணமும், உங்கள் விசேஷ குணமான வினயமும் இந்த பதிலில் வெளிப் பட்டது. ஸ்த்ரீ என்பதால் சாகரத்தைக் கடந்து செல்வது சிரமமான காரியமே. தங்களையும் சுமந்து கொண்டு நூறு யோஜனை தூரம் நீண்ட சமுத்திரத்தை தாண்டுவது ஆபத்து என்று சொன்னீர்கள். மற்றொரு காரணம் சொன்னீர்களே, ராமனையன்றி மற்றொரு புருஷனைத் தொட மாட்டேன் என்பதாக, ஜானகி இது உங்களால் தான் சொல்ல முடியும். தேவி, அந்த மகானின் பத்னி என்ற நிலை உங்களுக்குத் தான் பொருத்தமாகும். வேறு யார் உங்களைத் தவிர இப்படி பேசுவார்கள். காகுத்ஸன் ஒன்று விடாமல் எல்லா விவரங்களையும் சொல்லச் சொல்லிக் கேட்பான். நீங்கள் என்ன செய்தீர்கள், என்ன சொன்னீர்கள், நமது இந்த சந்திப்பில், நான் கண்டது அனைத்தையும், கேட்டதையும் வரிசையாக சொல்லச் சொல்வான். பல காரணங்களை முன்னிட்டும், ராமனுக்கு பிரியமானதை சீக்கிரம் செய்ய வேண்டும் என்ற ஆவலாலும் நான் இப்படி ஒரு யோஜனை சொன்னேன். லங்கையில் நுழைவது கடினம், சமுத்திரத்தை தாண்டுவது கடினம், என் சாமர்த்தியத்தில் எனக்குள்ள நம்பிக்கை இவைகளை வைத்து நான் யோஜனை சொன்னேன். இன்றே தங்களை அழைத்துச் சென்று ராகவனிடம் சமர்ப்பிக்க விரும்பினேன். என் குருவான சுக்ரீவனிடம் உள்ள ஸ்னேகத்தாலும், பக்தியாலும், எல்லோரும் மெச்சும்படி செய்ய விரும்பினேன். தேவி, என்னுடன் புறப்பட்டு வர சம்மதம் இல்லையெனில், ஏதாவது ஒரு அடையாளம் கொடுங்கள். ராகவன் புரிந்து கொள்ளும்படி ஏதாவது சொல்லுங்கள். ஜானகி மெதுவாக, குரல் தழ தழக்க சொல்ல ஆரம்பித்தாள். இது ஒரு நல்ல அடையாளம், இதைச் சொல். சித்ரகூட மலையில் வட கிழக்கு பகுதியில், முன்பு ஒரு சமயம், தபஸ்விகள் நிறைந்த ஆசிரம பகுதியில், பழங்களும், காய் கிழங்குகளும் சேகரித்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தோம். சித்தர்கள் நிறைந்த தேசம். மந்தா3கினி நதிக்கு அதிக தூரம் இல்லை. உபவனம் அடர்ந்து வளர்ந்திருந்தது. புஷ்பங்கள் பலவிதமாக மலர்ந்து காணப் பட்டது. நீரில் அலைந்து விளையாடிக் களைத்து ஓரிடத்தில் அமர்ந்தோம். உன் மடியில் தலை வைத்து நான் படுத்தேன். அப்பொழுது ஒரு காகம் என்னை கொத்தி துன்புறுத்தியது. ஒரு கல்லை எடுத்து (ஓட்டாஞ்சில்) துரத்தினேன். கலங்காமல் அந்த காகம் என்னையே உறுத்துப் பார்த்தபடி நகராமல் இருந்தது. ப3லி போ4ஜனன் எனும் பெயர் கொண்ட காகங்கள் மாமிச பக்ஷிணிகள். நான் உதட்டை சுழித்து கோபத்துடன் அதை விரட்டினேன். ஓடி ஓடி அதை விரட்ட முனைந்த பொழுது என் ஆடை தான் விலகியது. நீ பார்த்து சிரித்தாய். ஏற்கனவே கோபம், நீ பார்த்து சிரித்ததால் வெட்கமும் சேர்ந்து கொண்டது. திரும்பவும் அந்த காகம் என்னை கொத்தவும், உன்னிடம் வந்து சொன்னேன். களைப்புடன் உன் முதுகில் சாய்ந்து அமர்ந்தேன். என் கோபத்தை ரசித்து சிரித்தாய். என்னை சமாதானம் செய்தாய். கண்ணீரால் ஈ.ரமான முகத்தைத் துடைத்துக் கொண்டு நான் நிற்பதைக் கண்டு மேலும் மகிழ்ச்சியுடன் என் கோபத்தை ரசித்து சீண்டினாய். சமாதானம் செய்தாய். இந்த சம்பவத்திற்குப் பிறகு, உன் மடியில் நான் உறங்கினேன். சற்று நேரம் சென்ற பின், நான் விழிக்க, என் மடியில் ராகவன் படுத்தான். திடுமென அந்த காகம் அங்கு வந்தது. வேகமாக வந்து திரும்பவும் என்னைக் கொத்தியது. தூங்கி விழித்தவள், என்ன என்று திரும்பி பார்க்கும் முன், என் ஸ்தனங்களின் மத்தியில் ரத்தம் வரும் படி கொத்தி விட்டு பறந்தது. திரும்ப வந்து கொத்தவும் பெருகிய ரத்தம் ராகவன் மேல் படவும், உடனே எழுந்து விட்டான். அப்பொழுது தான் அந்த காகம் பலவந்தமாக என்னைத் துன்புறுத்துகிறது, வேண்டுமென்றே செய்யும் விஷமம் என்று தெரிந்து கொண்டான். பயங்கரமாக கோபம் கொண்டான். ஆலகால விஷம் போல அந்த கோபம் பெருகிறது. யாரது? ஐந்து முகம் கொண்ட விஷ நாகத்துடன் விளையாடுவது? யார் உங்களை இப்படி ரத்தம் வர அடித்தது என்று கேட்டுக் கொண்டே எழுந்தவன் கண்களில் காகம் பட்டது. இப்பவும் அது தன் நகங்களில் ரத்தக் கறையுடன் என்னையே உறுத்து பார்த்தபடி நின்றது. இந்திரனின் புத்ரனாம். வாயுவுக்கு சமமான வேகத்துடன் பறக்கக் கூடியது. இதை என்ன செய்வது? உடனே ராமன் விரிப்பில் இருந்த ஒரு புல்லை, தர்பத்தை எடுத்து, ப்ரும்மாஸ்திர மந்திரம் சொல்லி அதை காகத்தின் மேல் பிரயோகித்தான். அந்த புல், ப்ரும்மாஸ்திர தகுதியை பெற்றவுடன் அக்னி போல ஜ்வலித்தது. ஆகாயத்தில் காகத்தைத் துரத்திக் கொண்டு சென்றது. காகம் பல இடங்களுக்குச் சென்று தப்ப முயன்றது. தன்னைக் காப்பாற்ற யாராவது இருக்கிறார்களா என்று மூவுலகிலும் தேடிச் சென்றது. தந்தையான இந்திரன் கை விட்டு விட்டான். எல்லா தேவர்க ளிடமும் அடைக்கலம் வேண்டியது. மகரிஷிகளிடம் சென்றது. யாருமே அடைக்கலம் தர தயாராக இல்லை. சுற்றி சுற்றித் திரிந்து திரும்பவும் ராமன் காலடியிலேயே வந்து விழுந்தது. வதம் செய்யப் பட வேண்டிய துஷ்ட ஜந்து. ஆயினும் காலடியில் வந்து விழுந்ததால் காகுத்ஸன் அதையும் அன்புடன் பரிபாலித்தான். தன் தவற்றை உணர்ந்து வருந்திய காகத்திடம் கேட்டான். இந்த ப்ரும்மாஸ்திரம் வீணாகாது. என்னசெய்வது? நீயே சொல், எனவும், என் வலது கண்ணை எடுத்துக் கொள்ளுங்கள் என்றது. ராகவனும், அந்த அஸ்திரத்திற்கு இலக்காக காகத்தின் வலது கண்ணை அழித்து விட்டு, உயிருடன் விட்டு விட்டான். ராமனை வணங்கி, தசரத ராஜாவுக்கும் வணக்கம் சொல்லி வீரனான ராமனிடம் மன்னிப்பு பெற்று தன் இருப்பிடம் சென்றது. என் காரணமாக ஒரு காகத்திடம் ப்ரும்மாஸ்திரத்தை பிரயோகித்தீர்கள். இப்பொழுது ஏன் காலம் தாழ்த்துகிறீர்கள். மஹீபதே, என்னை உங்களிடம் இருந்து பிரித்த இந்த ராவணனிடம் ஏன் தாமதம் செய்கிறீர்கள்? மகா உற்சாகத்தை வரவழைத்துக் கொள்ளுங்கள். என்னிடம் கருணை காட்டுங்கள். நரர்ஷபா, தங்களை நாதனாக கொண்டவள் நான். அனாதை போல தவிக்கிறேனே. கருணை தான் மிகப் பெரிய தர்மம். இதை நான் தாங்கள் சொல்லித் தான் தெரிந்து கொண்டிருக்கிறேன். மகா பலசாலியாக, மகா வீர்யவானாக, மகா உத்ஸாகம் மிகுந்தவனாகத் தான் நான் அறிந்திருக்கிறேன். எல்லையில்லாத, குறைவில்லாத, யாராலும் வற்றச் செய்ய முடியாத சமுத்திரம் போன்ற காம்பீர்யம் உடையவன். அந்த சமுத்திரத்தை எல்லையாக கொண்ட பூமியின் நாயகன். இந்திரனுக்கு சமமானவன். பலவான் என்று இவ்வளவு இருந்தும் இந்த ராக்ஷஸார்களிடத்தில் உங்கள் அஸ்திரங்களை ஏன் பிரயோகம் செய்யாமல் இருக்கிறீர்கள். நாக3ர்களா, கந்தர்வர்களா, அசுரர்களா, மருத் கணங்களா, ராமனுடன் நேரில் போர் முணையில் நிற்க தகுதியுடையவர்கள் அல்ல. திரும்ப அஸ்திரங்களை பிரயோகிக்க யாருக்குமே சக்தியில்லை. இப்படிப் பட்ட வீரனின் மனதில் என் பொருட்டு சிறிதளவாவது கவலை இருக்குமானால், ஏன் கூர்மையான ஆயுதங்களால் இந்த ராக்ஷஸ கூட்டம் இன்னமும் அழிக்கப் படாமல் இருக்கிறது. லக்ஷ்மணன் தான் பரந்தப: தபஸ்வி, சகோதரன் அனுமதி பெற்று வந்து என்னை காப்பாற்றக் கூடாதா? வாயுவும், அக்னியும் போல தேஜஸ் உடையவர்கள் இருவரும் புருஷ வ்யாக்4ரர்கள். சுரர்களாலும் எதிர்த்து வெற்றி பெற முடியாதவர்கள். ஏன் என்னை அலட்சியம் செய்கிறார்கள். நான் செய்த ஏதோ ஒரு தீவினை தான் மிகப் பெரிதாக வளர்ந்து நிற்கிறது. சந்தேகமேயில்லை. அதனால் பெரும் தவப்பயன் உடையவர்கள் இருவரும், சமர்த்தர்களாக இருந்தும் என்னை காப்பாற்ற ஏனோ வந்து சேரவில்லை. வைதேஹி இவ்வாறு வேதனையும், சுய பச்சாதாபமும் மேலிட சொன்னதைக் கேட்டு, ஹனுமான் பதில் சொன்னான். என் மேல் ஆணை, தேவி, உங்கள் வேதனையை ராமன் அறிவான். ராமன் தன் வேதனையைக் காட்டிக் கொண்டால் லக்ஷ்மணனும் மனம் வாடுவான். எப்படியோ தங்களைக் கண்டு கொண்டேன். தேவி, இனி எதற்கும் கவலைப் பட வேண்டாம். இந்த க்ஷணத்தில் துக்கத்தின் முடிவைக் காண்பீர்கள். ராஜ குமாரர்கள் இருவரும் மகா பலசாலிகள். புருஷ வ்யாக்4ரர்கள். உங்களைக் காணவே துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதோ வந்து லங்கையை பஸ்மமாகச் செய்து, வீரனான ராவணனை வதம் செய்து விட்டு, விசாலாக்ஷி, ராவணன் பந்துக்கள் மற்றும் அவனை ஆதரிக்கும் அனைவரையும் இல்லாமல் செய்து விட்டு, இதோ உங்களைத் தன்னுடன் தன் ஊருக்கு அழைத்துச் செல்லத்தான் போகிறான். தேவ லோக பெண்மணி போல இருந்த சீதை இதைக் கேட்டு ஆறுதல் அடைந்தவளாக மேலும் சொன்னாள். கௌசல்யா எந்த வீரனான புத்திரனை, லோக பர்த்தாவாக பெற்றாளோ. அவனை என் சார்பில் நலம் விசாரி. தலை தாழ்த்தி வணங்கியதாக சொல். விலை உயர்ந்த ரத்ன மாலைகளையும், பிரியமான பெண் ரத்னங்களையும், உலகிலேயே துர்லபமான ஐஸ்வர்யத்தையும், விசாலமான ராஜ்யத்தில் வாசத்தையும், விட்டு, தாய் தந்தையரை வணங்கி மரியாதையுடன் கௌரவித்து ராமனுடன் வனத்துக்கு வந்தவன், எவனைப் பெற்றதால் சுமித்ரா சுப்ரஜா- நல்ல மகனைப் பெற்ற பெருமையை அடைந்தாளோ, உத்தமமான சுகங்களைத் தியாகம் செய்து விட்டு, சகோதரன் தமையனுக்கு அனுசரணையாக காகுத்ஸனை வனத்திலும் பணிவிடை செய்து கொண்டு பின் தொடர்ந்து வந்தவன், சிம்மம் போன்ற தோள்களும், நீண்ட கைகளும் மனஸ்வினியான- மானஸ்தனான குணமும், (சுய கௌரவம் மிக்கவன்) காணவும் பிரியமானவன், ராமனிடம் தந்தையாக பாவித்து நடந்து கொள்பவன், என்னிடம் தாயைக் கண்டவன் என்னை ராவணன் அபகரித்துச் சென்றதை அந்த சமயம் அறிந்திருக்கவில்லை, அந்த லக்ஷ்மணன் முதியோருக்கு உபசாரம் செய்து பணிவிடை செய்பவன், லக்ஷ்மீவான், நல்ல சக்தி, ஆற்றல் உடையவன், அதிகமாக பேச மாட்டான், ராஜ புத்திரன், அனைவருக்கும் பிரியமானவன், ஸ்ரேஷ்டன், என் மாமனார் போன்றவன், என்னை விட இந்த சகோதரன் தான் ராமனுக்கு அதிக பிரியமானவன், எந்த பொறுப்பை எங்கு எப்படி கொடுத்தாலும் நிர்வகிக்க கூடியவன், எவனைக் கண்டு ராமன் தன் தந்தை உலகிலிருந்து மறைந்ததைக் கூட உணரவில்லையோ, அந்த லக்ஷ்மணனிடம் என் சார்பாக நலம் விசாரி. நான் சொன்னதாகச் சொல். ராமனுக்கு லக்ஷ்மணன் எப்பொழுதும் மிகவும் பிரியமானவன். ம்ருதுவான சுபாவம் கொண்டவன். எப்பொழுதும் சுத்தமாக, ஒழுங்காக காரியங்களைச் செய்பவன். தாக்ஷண்யம் மிக்கவன். ஹரி சத்தமா, நீ இந்த காரியத்தில் பிரமாணம், உன்னிடம் முழு பொறுப்பையும் ஒப்படைக்கிறேன். இந்த வேதனை தீர்ந்து நான் பழையபடி ஆக, என்ன செய்வாயோ, முழு மூச்சுடன் செய். உன் முயற்சியால் ராமன் என்னைக் கண்டு, என்னிடம் அக்கறை கொள்ளட்டும். செயல் பட ஆரம்பிக்கட்டும். இதை திரும்ப திரும்ப என் நாதனிடம் சொல். தசரதாத்மஜா, ஒரு மாதம் நான் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருப்பேன். அதற்கு மேல் தாக்கு பிடிக்க முடியாது. என் மேல் சத்தியமாக சொல்கிறேன். பாதாளத்திலிருந்து கௌசிகியை மீட்டது போல, என்னை சிறை வைத்திருக்கும் ராவணனனிடமிருந்து மீட்க வா என்று சொல்லி, தன் வஸ்திரத்தில் முடிந்து வைத்திருந்த திவ்யமான சூடாமணியை ராகவனிடம் கொடு என்று சொல்லி ஹனுமானிடம் கொடுத்தாள். அத்புதமான அந்த மணி ரத்னத்தை வாங்கி தன் விரலில் போட்டுக் கொண்டான், ஹனுமான். மணியை வாங்கிக் கொண்டு தேவியை நமஸ்கரித்து விடை பெற்றுக் கொண்டு பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து அருகில் நின்றபடி, தன் மனதில் வந்த காரியம் நிறைவேறிய மகிழ்ச்சியுடன் மனதால் ராமனிடம் சென்று விட்டான். ஹனுமனின் உடல்தான் அங்கு நின்றது. அந்த விசேஷமான சூடாமணியை கவனமாக பாதுகாத்து வைத்திருந்து சீதை தன்னிடம் கொடுத்ததை, வாங்கிக் கொண்டவன், பெரிய மலையில் புயல் அடித்து ஓய்ந்தது போல மன நிம்மதியுடன் திரும்பச் செல்வதை பற்றி யோசிக்கலானான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான மத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் வாயஸ வ்ருத்தாந்தக் கத2னம் என்ற முப்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 39 (378) ஹனுமத் சந்தேச: (ஹனுமானிடம் செய்தி சொல்லி அனுப்புதல்)
சூடாமணியைக் கொடுத்து சீதை ஹனுமானிடம் சொன்னாள். இந்த மணி ஒரு நல்ல அடையாளம். ராமன் இதை உடனே புரிந்து கொள்வான். இதைக் கண்டதும் ராமன் மூவரையும் நினைப்பான். தன் தாய், நான், தந்தை தசரதன் – எங்கள் மூமூவர் நினைவும் வரும். ஹரிசத்தமா, மேலும் என்ன சொன்னால் உடனே கிளம்பி உற்சாகத்துடன் போரிட வருவானோ, அது போல சொல். நீ தான் இந்த காரியத்தை செய்து முடிக்கக் கூடியவன். அதனால் என்ன செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்பதை நீயே தீர்மானித்துக் கொள். அப்படியே ஆகட்டும் என்று சொல்லி ஹனுமானும், அவளை தலை தாழ்த்தி வணங்கி, புறப்பட ஆயத்த மானான். வானரன், மாருதாத்மஜன், கிளம்பி விட்டதையறிந்து குரல் தழ தழக்க சீதா மேலும் சில வார்த்தைகளைச் சொன்னாள். ஹனுமன், ராம லக்ஷ்மணர்களை, இருவரையும் சேர்த்து குசலம் விசாரித்ததாகச் சொல். சுக்ரீவனையும் மற்ற மந்திரிகளையும்., முதியவர்களான வானரங்களையும் யாவரையும் விசாரித்ததாகச் சொல். நலம் விசாரிக்கும் முறைப் படி விசாரி. என்னை இந்த துன்பத்திலிருந்து எப்படி விடுவிக்க முடியுமோ, அதை சீக்கிரம் செய்யச் சொல். நான் உயிருடன் இருப்பதை ராமன் எப்படிச் சொன்னால், கௌரவமாக, தன்னுடையவளாக நினைப்பானோ, மதிப்பும் மரியாதையும் தருவானோ, அந்த விதமாக கவனமாக சொல். கீர்த்திமான், தன் மனைவியை பிறர் தவறாக பேசினால் பொறுக்க மாட்டான். உன் (சரியான) சொல்லால் தர்மம் கிடைக்கப் பெறுவாய் (வாசா தர்மம் அவாப்னுஹி). உன் சொல்லைக் கேட்டு அவர்களின் சக்தியும் உற்சாகமும் பெருக வேண்டும். தாசரதிகள் இருவரும் என்னை மீட்க தாமதம் செய்யாமல் கிளம்பும்படி பேசு. என் அடையாளங்களையும், உன் சொல்லையும் கேட்டு ராகவன், முறைபடி செய்ய வேண்டியதை தன் பராக்ரமம் வெளிப்பட செய்ய முனைவான். சீதையின் கவலையை புரிந்து கொண்ட ஹனுமான், தலைக்கு மேல் கைகளை கூப்பி அஞ்சலி செய்தவனாக, ஜனக நந்தினி, வெகு விரைவில் காகுத்ஸன் வருவான். ஹரி, ருக்ஷ சைன்யங்களோடு வந்து விடுவான். யுத்தம் பெரிதாக நடக்கும். வெற்றி பெற்று உன் துயரைத் துடைப்பான். சந்தேகமேயில்லை. மனிதர்களில், அமரர்களில், அசுரர்களில், ராமனுக்கு இணையான வீரனை நான் கண்டதில்லை. அவன் பிரயோகிக்கும் பாணங்கள் கீழே விழும் பொழுது அதை தாங்கும் சக்தி யாருக்குமே இருக்காது. எதிரில் நின்று போரிடுவது எப்படி சாத்தியமாகும். சூரியனோ, பர்ஜன்யன் என்ற வருணனோ, வைவஸ்வதனான யமனோ, யுத்தத்தில் ராமனை எதிர்த்து போரிட முடியாது. அதுவும், உங்கள் விஷயமாக ராமன் கவனமாக போரிடும் சமயம், நிச்சயம் முடியாது. அவன் தான் சாகரத்தை எல்லையாகக் கொண்ட பரந்த இந்த பூமியை ஆளத் தகுந்தவன். ராகவனின் வெற்றிக்கு நீங்களே தான் காரணமாக ஆவீர்கள் என்று சத்யமான இந்த விஷயங்களை நல்ல முறையில் சொன்னான். இதைக் கேட்டு ஜானகி ஆறுதல் அடைந்தாள். கிளம்பத் தயாராக நின்ற ஹனுமனை பார்த்து, தன் கணவன் அனுப்பி வந்தவன் என்ற பாசம் வெளிப்பட, முடிந்தால் இன்று ஒரு நாள் இருந்து விட்டுப் போ என்றாள். எங்காவது மறைந்து இருந்து விட்டு நாளை கிளம்பலாமே என்றாள். உன்னைக் கண்டதால் என் மனம் லேசாகியது. ஆறுதலாக இருக்கும். நீ கிளம்பி போய் திரும்பி வரும் வரை நான் உயிருடன் இருப்பேனா? உன்னைக் காணாமலும் இனி எனக்கு வருத்தமாகவே இருக்கும். கடந்த பல நாட்களாக நம்மைச் சேர்ந்தவர்கள் யாரையும் காணாத துக்கம் அதிகமாகும். உனக்கு உதவி செய்ய மற்ற வானரங்கள் சாகரத்தை எப்படி கடக்கப் போகிறார்கள். அந்த வானர, கரடி சைன்யங்கள், ராஜ குமாரர்கள் எல்லோரும் இந்த கடலைக் கடந்து வந்தாக வேண்டும். உலகிலேயே உங்கள் மூவருக்குத் தான் அந்த சக்தி உண்டு என்று நினைக்கிறேன். உனக்கு, உன் தந்தை வாயு. வைனதேயனுக்கு. அதனால் இந்த காரியத்தை எப்படி செய்து முடிப்பாய். உனக்குத் தான் தெரியும். இதை செய்து முடிக்கும் ஆற்றலும் உனக்குத் தான் உண்டு. உன் பலம் வளரட்டும். புகழும் ஏராளமாக பெருகட்டும். படை பலத்தோடு வந்து யுத்தம் செய்து ஜெயித்து விஜயனாக, வெற்றி வீரனாக ராகவன் என்னை தன் ஊருக்கு அழைத்துச செல்வானேயானால் அது தான் அவனுக்கு பெருமை சேர்க்கும். தன் அம்புகளால் லங்கையை ஒரு கலக்கு கலக்கி, எதிரிகளின் படையையும் நாசம் செய்யக் கூடியவன், காகுத்ஸன். என்னை அழைத்துச் செல்வானேயானால் அது தான் அவன் தகுதிக்கும் பெருமைக்கும் ஏற்ற செயலாகும். அதனால் போரில் சூரனான அவன் விக்ரமம் முழுவதுமாக வெளிப்பட, அனுரூபமாக என்ன செய்ய வேண்டுமோ, அது போல செய்வாய் என்றாள். காரணத்துடன், பொருள் பொதிந்த இந்த செய்தியையும் ஹனுமான் தன் மனதில் குறித்துக் கொண்டான். தேவி, வானரங்கள் கரடிகள் தலைவனான சுக்ரீவனும் நல்ல பராக்ரமம் உடையவனே. அவனுக்கு நல்ல செல்வாக்கும், படை பலமும் உண்டு. தங்களை மீட்பதில் உறுதியாக இருக்கிறான். கோடிக்கணக்கான வானர வீரர்களுடன், சீக்கிரமே வந்து சேருவான். ராக்ஷஸர்களை ஒரு கை பார்த்து விடுவான். அவன் முக குறிப்பறிந்து செயல்படும் வீரர்கள் அவன் வசம் உள்ளனர். இவர்கள் மேலும் கீழும் குறுக்குமாக செல்லக் கூடியவர்கள். நல்ல தேஜஸ் உடையவர்கள். எவ்வளவு பெரிய காரியம் ஆனாலும் தயங்க மாட்டார்கள். இவர்களில் பலர் சாகரத்தையும் சேர்த்து, பூமி முழுவதும் பிரதக்ஷிணம் செய்து வந்திருக்கிறார்கள். வாயு மார்கத்தில் சஞ்சரிக்க வல்லமை உடையவர்கள். எனக்கு சமமாகவோ, என்னை விட அதிக பலசாலியாகவோ தான் வானர வீரர்கள் சுக்ரீவனின் சைன்யத்தில் உள்ளனர். என்னை விட பலம் குறைந்தவர்கள் அவனிடம் இல்லை. நானே வந்து சேர்ந்து விட்டேன். மற்றவர்கள் வருவதற்கு என்ன? மிகுந்த பலசாலிகளை தூது அனுப்ப மாட்டார்கள். மற்றவர்களைத் தான் அனுப்புவார்கள். அதனால் வருந்தாதே. இந்த வேதனைகள் சீக்கிரமே தீரும். ஒரு தாவல் தாவி, ஹரி சைன்ய வீரர்கள், லங்கையை வந்தடைவார்கள். என் முதுகில் ஏற்றிக் கொண்டு சந்திர, சூரியர்களைத் தூக்கி வருவது போல ராஜ குமாரர்களை அழைத்து வந்து விடுவேன். அவர்கள் கூர்மையான பாணங்களால் லங்கா நகரத்தையே நிரப்பப் போகிறார்கள். ராகவன், ரகு நந்தனன், அவனது படை பலத்தோடு வந்து, ராவணனை அழித்து விடுவான். உங்களை அழைத்துக் கொண்டு தன் ஊருக்குச் செல்வான். அதனால் சமாதானம் அடைவாய். உனக்கு மங்களம் உண்டாகட்டும். காலத்தை எதிர் நோக்கி இரு. ராமனைக் காணும் நாள் அதிக தூரத்தில் இல்லை. கொழுந்து விட்டெரியும் நெருப்பு போல தேஜஸ் வாய்ந்தவன், ராக்ஷஸனை அழித்து விட, நீ ராமனுடன் சேரப் போகிறாய். சசாங்கனுடன் ரோஹிணி இணைந்தது போல. ராகவன் ராவணனை உற்றார், உறவினரோடு சேர்த்து வதம் செய்யத் தான் போகிறான் என்று நம்பு. அதனால் நான் கிளம்புகிறேன். விடை கொடுங்கள் என்றவன், திரும்பவும் ஏதோ நினைவு வந்தவன் போல ஆறுதல் சொல்ல ஆரம்பித்தான். தேவி, ராமன் க்ருதாத்மா. சத்ருக்களை வேரோடு அழிப்பவன். சீக்கிரமே அவனை சந்திப்பாய். கையில் வில்லேந்தி லக்ஷ்மணன் வாசலில் நிற்கக் காண்பாய். சிம்மம் போலவும், சார்தூலம் போலவும், பலம் கொண்ட வானர வீரர்கள் தங்கள் நகமும் பற்களுமே ஆயுதங்களாக வந்து நிற்பார்கள். ஒவ்வொருவரும் கைலாச மலையோ எனும்படி வளர்ந்த வானரங்கள், லங்கையின் மலைச் சாரல்களில் த்வம்சம் செய்வதை சீக்கிரமே காண்பாய். இவர்களின் கூச்சல் காதைப் பிளக்கப் போகிறது. ராமனும், வெகுவாக மனக் க்லேசம் அனுபவித்து விட்டான். இனி ஓய மாட்டான். இனி எந்த விதமான துக்கமும் வாட்டக் கூடாது. இந்திரனும் சசியும் போல, ராமனுடன் , ஸநாதனாக- நாதனுடன் சேர்ந்து விளங்கப் போகிறீர்கள். ராமனை விட உயர்ந்தவர் என்று வேறு யார் இருக்கிறார்கள். சௌமித்ரிக்கு சமமான வீரன் வேறு யார் உண்டு? அக்னியும், மாருதனும் போல இருவரும் உங்களைக் காக்க முனைந்துள்ள பொழுது இங்கு அதிக நாள் வாட வேண்டியிருக்காது. தேவி, ராக்ஷஸ கணங்களுக்கு இடையில் இந்த தேசத்தில் சீக்கிரமே உங்கள் நாதனின் வருகையை எதிர் பார்த்து காத்திருங்கள். நான் போய் சொல்ல வேண்டியது தான் தாமதம் என்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ஹனுமத் சந்தேஸ: என்ற முப்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 40 (379) ஹனுமத் ப்ரேஷணம் (ஹனுமானை வழியனுப்புதல்)
ஹனுமானின் ஆறுதலான வார்த்தைகளால் சீதை சமாதானம் அடைந்தாள். அவனைப் பார்த்து வானர, உன்னைக் கண்டு மகிழ்ச்சியடைந்தேன். பிரியமாகப் பேசுகிறாய். பாதி வளர்ந்த பயிர் மழையைக் கண்டது போல குதூகலம் என் மனதில் தோன்றுகிறது. (பாதி வளர்ந்த பயிருடன் வசுந்தரா- பூமி) ( உன் செயலால், சொல்லால்,) எந்த விதமாக, அந்த புருஷவ்யாக்ரன், என் கணவனை காமத்துடன் அணைப்பேனோ அது போல செய்வாய். தயை செய். ஹரிக3ணோத்தமா, அபிஞானம்-அடையாளம், அதைக் கொடு. காகத்தின் ஒரு கண்ணை பிளந்ததைச் சொல். மன:சிலா என்ற பாறையில், திலகத்தை என் கன்னத்தில் இட்டு விட்டாய். என் திலகம் கலைந்த பொழுது நீ செய்த இதை நீ நினைவு கொள். வீர்யவானான நீ, உன் சீதையை மற்றவன் கவர்ந்து போக எப்படி வாளாவிருக்கிறாய். மகேந்திர, வருணனுக்கு ஒப்பான நீ, உன் மனைவி ராக்ஷஸிகள் மத்தியில் கஷ்டப் பட, பேசாமல் இருக்கலாமா? இந்த சூடாமணியை நான் கவனமாக ரக்ஷித்து வைத்திருக்கிறேன். இதைக் கண்டு, உன்னையே நேரில் கண்டது போல என் வேதனையை மறந்து வந்தேன். இதைக் கொடுத்தனுப்புகிறேன். நீரில் தோன்றிய மணி இது. அதிக நாள் நான் உயிருடன் இருக்க மாட்டேன். இருக்க விருப்பமும் இல்லை. இவர்கள் பேச்சும், நடத்தையும் பொறுக்கவே முடியவில்லை. இந்த கோரமான ராக்ஷஸிகளையும் உன் பொருட்டு நான் பொறுத்துக் கொள்கிறேன். ஒரு மாதம் தான் உயிருடன் இருப்பேன். அதன் பின் என் உயிர் இந்த உடலில் தரிப்பது சந்தேகமே. இந்த ராக்ஷஸ ராஜனும் கோரமானவன். அவன் பார்வையும் எனக்கு கஷ்டமே தருகிறது. அத்துடன் நீயும் வருந்துகிறாய் என்பது, உயிர் வாழ்வதில் எனக்கு உள்ள ஆசையைக் குறைக்கிறது. என்றாள். உடனே ஹனுமான், தேவி, தாங்கள் படும் கஷ்டங்களை ராமன் அறியான். அவன் தன் வேதனையை வெளிக் காட்டிக் கொண்டால், லக்ஷ்மணனும் அதே போல வேதனைப் படுவான். எப்படியோ தங்களைக் கண்டுகொண்டேன். இனி நல்ல காலம் தான். கவலைப் பட இது நேரம் அல்ல. இந்த முஹுர்த்தத்தில் தங்கள் கஷ்டங்களின் முடிவைக் காண்பீர்கள். பாமினி, ராஜ புத்திரர்கள் இருவரும், புருஷ வ்யாக்ரர்கள். அரிந்தம:- எதிரிகளைத் தாங்க முடியாமல் கதற அடிப்பவர்கள். தங்களைக் காண துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இதோ வந்து லங்கையை பஸ்மமாக ஆக்கப் போகிறார்கள். ராவணனையே யுத்தம் செய்து வதம் செய்து தங்களை அழைத்துக் கொண்டு தன் ஊர் செல்வார்கள். எதை கண்டால் ராமன் உடனே புரிந்து கொள்வானோ அது போல அடையாளம் இன்னும் இருந்தால் கொடுங்கள். ராமனுக்கு மேலும் ப்ரீதியை வளர்க்கும் படி ஏதாவது தாருங்கள் எனவும், அவள், ஏகொடுத்து விட்டேனே, அந்த சூடாமணிதான். இது என் கேச பூஷணம். ஹனுமன், உன் சொல்லே போதும். நம்பிக்கை அளிக்க என்றாள். அவளை வணங்கி விட்டு கிளம்பிய ஹனுமான், தாவி குதித்து தயாரானவனிடம் திரும்பவும் வைதேஹி குரல் தழ தழக்க, ஹனுமன், சிம்மம் போன்ற வீரர்களான ராம லக்ஷ்மணர்கள், சுக்ரீவனையும், அவன் மந்திரி வர்கங்களையும் எல்லோரையும் நலம் விசாரித்ததாகச் சொல். அந்த மகா பாஹு ராமன் என்னை உள்ளபடி உணர்ந்து இந்த துக்க சாகரத்திலிருந்து மீட்கும்படி நீ அவனிடம் பேசு. என் தீவிரமான வேதனையையும், இந்த ராக்ஷஸிக ளின் மிரட்டல்களையும் ராமனுக்குச் சொல்லு. உன் பிரயாணம் சௌகர்யமாக இருக்கட்டும். இவ்வாறு ராஜ புத்திரி வழியனுப்பி வைக்க, தன் மனதில் நிம்மதியும், நிறைவும் கூட, ஹனுமான் மனதால் வடக்கு நோக்கிச் சென்றான். செல்லும் வழியை மனதினுள் திட்டமிட்டுக் கொண்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ஹனுமத் ப்ரேஷணம் என்ற நாற்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)