பொருளடக்கத்திற்கு தாவுக

சுந்தர காண்டம் 41 to 50

பிப்ரவரி 22, 2014

அத்தியாயம் 41 (380) ப்ரமத3 வன பஞ்ஜனம் (ப்ரமதா வனத்தை அழித்தல்)

 

சீதையின் வாழ்த்துக்களுடன், ஹனுமான் அந்த இடத்தை விட்டு அகன்றான். சற்றுத் தள்ளி வந்து நின்றபடி, அடுத்து தான் செய்ய வேண்டியதைப் பற்றி யோசிக்கலானான்.  கரு விழியாளான இந்த தேவியைக் கண்டு கொண்டேன்.  இனி மீதி காரியங்கள் மிகச் சுலபமே. முதல் மூன்று உபாயங்களை விட்டு நான்காவது உபாயம் தான் இங்கு செல்லுபடியாகும்.  ராக்ஷஸர்களிடம் சமாதானம் பயன் தராது.  செல்வத்தில் மூழ்கியிருப்பவர்கள்- இங்கு தானமும் பயன் படாது.  தங்கள் பலத்தில் கர்வம் கொண்டவர்கள்.  இவர்களிடம் நம்மால் பேதம் செய்ய முடியாது.  இங்கு என்னுடைய பராக்ரமம் தான் பயன் தரும்.  இந்த செயலில் என் பராக்ரமத்தைத் தவிர வேறு எதுவும் பலன் தராது.  பல யுத்தங்களைக் கண்டு சிறந்த வீரர்களான ராக்ஷஸர்கள், இவர்களிடம் ம்ருதுவாக பேசுவதோ, செய்வதோ எடுபடாது.  ஒரு காரியத்தைச் செய்யச் சொல்லி நியமித்தவுடன், அதைச் சார்ந்த பல காரியங்களையும் முடித்துக் கொண்டு வருபவன் தான் சிறந்த நிர்வாகி.  அப்படிச் செய்யும் பொழுது, தான் ஏற்றுக் கொண்ட காரியமும் பாதிக்கப் படாமல் செய்பவன் தான் புத்திசாலி.  ஒரே ஒருவன் சாதகனாக இருந்தால் மட்டும் போதாது.  மிகச் சிறிய இந்த செயலையும், இதன் பலாபலன்களையும் நன்றாக அறிந்து செயல் படுபவன் எவனோ,  அவன் தான் பொருளாதாரத்தை நிர்வகிக்க ஏற்றவன்.  இங்கேயே இருந்து நான் செய்ய வேண்டியதை தீர்மானித்துக் கொள்கிறேன். நேராக சுக்ரீவன் முதலியோர் தங்கியிருக்கும் இடம் போகட்டுமா? அல்லது எதிரியின் போர் புரியும் திறமையை ஒரு நோட்டம் விடுவது போல, அவர்கள் தராதரத்தை தெரிந்து கொண்டு போவது தான் சரி.  என் எஜமானனின் கட்டளையை சரிவர நிறைவேற்றியவனாக ஆவேன்.  எப்படி இன்று ராக்ஷஸர்களுடன் போரிட வாய்ப்பு கிடைக்கும்.? தானாக வருமா? அத்துடன், என் திறமையையும் நல்ல முறையில் காட்ட வேண்டும்.  அதனால் பத்து தலை ராவணன் என் மேல் மதிப்பு வைத்து, நாளை வரும் யுத்தத்திலும் என்னை வீரனாக பாவிப்பான். அதனால் நானாக சண்டைக்கிழுத்து பத்து தலை ராவணனையும், அவன் சகாக்களையும் வரவழைத்து, அவர்களுடன் மோதி, அவர்களின் உடல் பலம், உள்ளத்தில் ஓடும் எண்ணங்கள், உள்ளக்கிடக்கை, உத்தேசங்கள் இவற்றையும் தெரிந்து கொள்வதில் தான் சாமர்த்யம் இருக்கிறது.  அதன் பின், இங்கிருந்து புறப்படுவோம்.  இது அந்த கொடியவனுடைய உத்தமமான நந்தவனம். கண்களைக் கவரும் அழகிய உபவனம்.  பலவிதமான மரங்கள் கொடிகள் நேர்த்தியாக வளர்க்கப்பட்டுள்ளன.  இதை நாசம் செய்கிறேன்.  உலர்ந்து கிடக்கும் மரக்கட்டையை நெருப்பு எரித்து அழிப்பது போல அழிக்கிறேன். இந்த வனம் தாக்கப் பட்டால் ராக்ஷஸாதிபன் கோபம் கொள்வான்.  த்ரிசூல, சால, இரும்பு பட்டைகள், இவைகளை ஆயுதமாக கொண்டு ராக்ஷஸர்கள் என்னைத் தடுக்க வந்தால், பெரும் யுத்தம் சம்பவிக்கும் என்று தோன்றுகிறது.  என் சக்தியை முழுவதுமாக காட்டி, என்னை அவர்கள் சமாளிக்க முடியாதபடி செய்வேன்.  அவர்கள் அனைவருடனும் கடுமையாக போராடுவேன்.  ராவணன் அனுப்பும் சேனா வீரர்களை வதம் செய்து விட்டு கபீஸ்வரன் இருப்பிடத்திற்கு சுகமாக திரும்பிப் போவேன். இதன் பின் தன் எண்ணத்தை செயல் படுத்த மாருதாத்மஜன், மாருதன் போலவே வேகமும், பலமும் கொண்டு வளர்ந்து பயங்கர உருவத்தினனாக நின்றான்.  அவன் கால்களுக்கு இடையிலிருந்து வெளிப்பட்ட காற்றின் வேகத்திலேயே, பல மரங்கள் விழுந்து நாசமாயின.  தவிர, ஹனுமான், பெண்களாலேயே ரக்ஷிக்கப் பட்டு, பெண்களுக்காகவே இருந்த அந்த ப்ரமதா வனத்தில், மரக் கிளைகளை உடைத்து எறிந்தான்.  மதம் கொண்டு பாடும் பறவைகள் நிறைய இருந்தன. இவைகள் அங்கு இருந்த பல மரங்களிலும்    கொடிகளிலும் தங்கள் கூடுகளைக் கட்டிக் கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்தன.  ஹனுமனால் அந்த மரங்கள் மிதித்து துவைக்கப் பட்டன, நீர் நிலைகள் கலக்கப் பட்டன.  மலை பாறைகள் பொடியாகி சிதறியது.  சற்று முன் அழகிய வனமாக இருந்தது,   அலங்கோலமாகியது.  மரங்கள் விழுந்ததால் மரத்தின் உச்சியில் இருந்த பறவைகள் பயந்து அலறின.   நீர் நிலைகள் கலக்கப் பட்டதால், அதில் வாழ்ந்த நீர் வாழ் ஜந்துக்கள் தங்கள் இடம் பெயர்ந்து மேலும் கீழுமாக அலைந்து தவித்தன.  இளம் சிவப்பு நிற துளிர்கள் துண்டிக்கப் பட்டு கீழே விழுந்தன.  மரங்களும் கொடிகளும் சிதைந்து கிடக்க, ஏதோ பெரும் காட்டுத் தீ வந்து தாக்கியது போல அந்த வனம் மிகச் சிறிய கால அளவிலேயே மிகப் பெரும் சேதம் அடைந்தது.   ஆடைகள் குலைந்து, தத்தளிக்கும் பெண்கள் போல கொடிகள் தங்கள் ஆதரவை, பற்றிக் கொண்ட மரக் கிளைகள் முறிந்து விழுந்ததால், தவித்தன.  லதா க்ருஹமும், சித்ர க்ருஹமும், நாசமானதில், பெரும் பாம்புகள், விஷமுடைய பாம்புகள், இவையும் அழகிய, சிலாக்ருஹங்கள், தாக்கப் பட்டதில் பல சிலைகள் நாசமாக, அந்த பெரிய நந்தவனம், சற்று நேரத்தில் பரிதாபமாக காட்சியளித்தது.  அரசனின் அந்த வனத்தை வேண்டிய அளவு சேதமாக்கிய பின்,  ஹனுமான், அரசரின் நிம்மதியை போதுமான அளவு போக்கிய திருப்தியுடன் மேலும் சென்றான்.  பலரும் வருவார்கள், அவர்களுடன் போரிட வசதியாக, தோரணம் கட்டப் பட்டிருந்த ஒரு மாளிகையின் பல காவலர்களை பார்த்துக் கொண்டே வந்து நின்றான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ப்ரமதா3 வன பஞ்சனம் என்ற நாற்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 42 (381) கிங்கர நிஷூதனம் (கிங்கரர்களை தாக்குதல்)

 

திடுமென பக்ஷிகளின் ஓலமும், மரங்கள் சட சடவெனெ முறியும் சத்தமும் கேட்க,  லங்கா வாசிகள் திடுக்கிட்டு எழுந்தனர்.  மிருகங்கள் பயந்து அலறின.  இங்கும் அங்குமாக ஓடின.  ராக்ஷஸர்களும் பல பயங்கர நிமித்தங்களைக் கண்டனர்.  இரவு முடியும் நேரம்.  இதோ விடியப் போகிறது என்ற காலை நேரம்.  ராக்ஷஸிகள் விழித்துக் கொண்டனர்.  வனம் அலங்கோலமாக, பலவிதமாக கிளைகள் உடைந்து சிதறி கிடப்பதையும், பயங்கரமான பெரிய உருவத்துடன் கபி (வானரம்) நிற்பதையும் கண்டனர்.  அவர்களைப் பார்த்து மகத்தான ஆற்றலும், பலமும் பொருந்திய ஹனுமான், அவர்களை மேலும் பயந்து அலறச் செய்தபடி, தன் உருவத்தை பெரிதாக்கிக் கொண்டான்.  பெரியமலை ஒன்று எதிரில் வந்து நிற்பது போன்ற அந்த ப்ரும்மாண்டமான உருவத்தைக் கண்டு ராக்ஷஸிகள் திகைத்தனர்.  அவர்கள் வானர உருவத்தை வைத்து ஜனகாத்மஜாவை விசாரித்தனர்.  யார் இவன்? யாருடைய ஆள்? எங்கிருந்து வந்திருக்கிறான்? எதற்காக வந்திருக்கிறான்? எப்படி நீ இவனுடன் பேச்சுக் கொடுத்தாய்? எங்களிடம் சொல், விசாலாக்ஷி. பயப்படாதே.  உன்னுடன் இவன் என்ன பேசினான்? சாத்வியான சீதா, பதில் சொன்னாள்.  ராக்ஷஸர்கள் தான் பெரிய உருவம் உடையவர்கள்.  அவர்கள் யார், என்ன செய்கிறார்கள் என்பது எனக்கு என்ன தெரியும்.  பாம்பின் கால் பாம்பறியும்.  நீங்கள் தான் அதிக சாமர்த்தியம் உடையவர்கள்.  நானும் இந்த உருவத்தைப் பார்த்து பயந்து போய் இருக்கிறேன்.  இதுவும் ஒரு ராக்ஷஸன் என்றே நினைக்கிறேன், உங்களைப் போலவே உருவத்தை மாற்றிக் கொள்ள வல்ல ராக்ஷஸனே.  வைதேஹி சொன்னதைக் கேட்டு, ராக்ஷஸிகள் நாலா புறமும் ஓடினர்.  சிலர் ஸ்தம்பித்து நின்றனர்.  சிலர் ராவணனிடம் சொல்ல வெளியே சென்றனர்.  ராவணனிடம் போய் ராக்ஷஸிகள், விரூபமாக ஒரு வானரம் வந்துள்ளதை விவரிக்கலானார்கள். ராஜன், அசோக வனத்தின் மத்தியில் மிகப் பெரிய உருவம் உடைய ஒரு வானரம் சீதையுடன் பேசி முடித்து விட்டு நிற்கிறது. பெரிய உருவம் மட்டுமல்ல. ப்ராக்ரமமும் உடையது போல தெரிகிறது.  நாங்கள் பல விதமாக கேட்டும், மான் விழியாளான சீதை யார் அந்த வானரம் என்பதை சொல்ல மறுக்கிறாள்.  வாஸவனுடைய தூதனோ, வைஸ்ரவனுடைய தூதனோ, ராமன் தான் சீதையைத் தேட அனுப்பியிருக்கிறானோ, அத்புதமான ரூபம். அந்த வானரம், உங்களுடைய மனோகரமான ப்ரமதா வனத்தை நாசமாக்கி விட்டது.  பலவிதமான மிருகங்களும் கூட்டம் கூட்டமாக ஓடுகின்றன.  ஏதோ உத்தேசத்தோடு ஜானகி எங்கு அமர்ந்திருக்கிறாளோ அந்த மரத்தை, இடத்தை மட்டும் எதுவும் செய்யவில்லை.  ஜானகியை காப்பாற்றவா, சிரமமா  தெரியவில்லை. ஆனால், அதற்கு என்ன சிரமம்.  அவளைக் காக்கத் தான் அந்த இடத்தில் எதுவும் செய்யாமல் விட்டிருக்கிறான்.  சிம்சுபா விருக்ஷம், துளிர்களுடன், அழகான புஷ்பங்களுடன் மலர்ந்து காட்சியளிக்கிறது.  அது மட்டும் அப்படியே இருக்கிறது. உக்ர ரூபமுடைய அந்த வானரத்துக்கு உக்ரமான தண்டனை அளிக்க வேண்டும்.  சீதையுடன் பேசிய வனத்தைக் கூட அழித்து விட்டான்.  ராக்ஷஸ ராஜனே, தங்கள் மனதை கவர்ந்தவள் சீதை.  அவளுடன் பேச்சுக் கொடுத்தவன் உயிருடன் மீளக் கூடாது.  ராக்ஷஸிகள் விவரித்ததைக் கேட்ட ராக்ஷஸேந்திரன், ஹோமம் செய்த அக்னி போல குபீரென்று கோபம் பொங்க நின்றான்.  கண்கள் சிவக்க, விளக்கின் திரியிலிருந்து தீப்பொறிகள் தானாக கீழே விழுவதைப் போல கோபாக்னி கண்களிலிருந்து தானாக தெறித்து விழுந்தது.  தனக்கு சமமான வீரர்களை, பலசாலியான கிங்கரனை அழைத்தான்.  கிங்கரன் என்ற அந்த ராக்ஷஸ வீரனை ஹனுமனை அடக்க அனுப்பி வைத்தான்.  அதே போல் சாகஸம் மிகுந்த கிங்கரனின் வேலையாட்கள், ஆயிரம் பேரை, சூரர்களாக பொறுக்கி எடுத்து உடன் அனுப்பினான்.  கூடம், உத்கரம் என்ற ஆயுதங்களுடன் ஆயத்தமாக அவர்கள் வந்து சேர்ந்தனர்.  பெரும் வயிறு படைத்த மகோதரன், நீண்ட பற்கள் (மகா தம்ஷ்டிரா:) கோரம் ரூபம் கொண்ட மகா பலசாலிகள், யுத்தம் செய்யும் உத்தேசத்துடன் ஹனுமானை உயிருடன் பிடிக்க எண்ணி அருகில் வந்தார்கள்.  தோரண வாயிலில் இருந்த வானரத்தைக் கண்டு, அவன் மேல் படையெடுத்தனர்.  தானாக நெருப்பில் விழும் விட்டில் பூச்சிகளைப் போல ஆனார்கள்.  பல விதமான விசித்ரமான க3தை3கள், பரிக4ங்கள், பொன் வேலைப்பாடமைந்த ஆயுதங்கள் இவற்றைக் கொண்டு ஹனுமானை அடித்தனர்.  ஆதித்யன் போன்ற சரங்களாலும் அடித்தனர். முத்33ரங்கள், பட்டசங்கள், சூலங்கள், ப்ராஸ, தோமரங்கள், இவற்றைக் கொண்டு ஹனுமானை தடுத்து நிறுத்தி, முன்னேறினர்.  பர்வதம் போன்று வளர்ந்து நின்ற மான், ஹனுமானும் தன் வால் பூமியைத் தொட நின்று கொண்டு, பெரும் கோஷம் செய்தான்.  லங்கையில், தன் சப்தமே எதிரொலிக்கும்படி பெருங்குரலில், தோள் தட்டியபடி, அறை கூவல் விட்டான். அந்த சப்தத்தில் பறந்து கொண்டிருந்த பறவைகள் கீழே விழுந்தன. ஜயதி ராஜா சுக்ரீவ:- சுக்ரீவ அரசனுக்கு வெற்றி.  ராகவனால் பாலிக்கப் பட்ட சுக்ரீவனுக்கு ஜெயம் உண்டாகட்டும்.  கோஸலேந்திரன் தாஸன் நான்.  தெளிவான சிந்தனையும் செயலும் உடைய ராமனின் தாஸன் நான். ஹனுமான் என்ற பெயருடைய வாயு புத்திரன்.  சத்ரு சைன்யத்தை வேரோடு அழிப்பேன்.  ராவணன் போல பலம் கொண்ட ஆயிரம் ராக்ஷஸர்களை நான் போரில் எதிர் கொள்வேன்.  என் கையில் பாறைகளே ஆயுதங்களாகும்.  மரக்கிளைகளைக் கொண்டு அடிப்பேன். ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் இவைதான் என்னிடம் உள்ளவை. லங்கையை தாக்கி, மைதிலியை வணங்கி என் காரியம் நிறைவேறிய திருப்தியோடு திரும்பிச் செல்வேன்.  ராக்ஷஸர்கள் நீங்கள் அனைவரும் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டு நிற்கையிலேயே, இவைகளைச் செய்வேன்.  இப்படி உரத்த குரலில் முழக்கமிடும் ஹனுமானின் முன் வந்த ராக்ஷஸர்கள் பயத்தால் திகைத்து நின்றனர்.  சந்தியா கால மேகம் போல ஓங்கி வளர்ந்து நின்ற ஹனுமானை கண் கொட்டாமல் பார்த்தனர்.  தங்கள் எஜமானனின் கட்டளையை நினைவு படுத்திக்  கொண்டு, பலவிதமான ஆயுதங்கள் கொண்டு தாக்கலாயினர்.  நாலாபுறமும் இப்படி ராக்ஷஸர்கள் சூழ்ந்து நிற்கவும், ஹனுமான் இரும்பு கட்டையை, தோரண வாயிலில் முகப்பில் இருந்ததை, கையில் எடுத்துக் கொண்டான். (தாழ்ப்பாள் போல தடுப்புக்கு உபயோகிக்கும் கட்டை)  அதைக் கொண்டு நிசாசரர்களை அடிக்க ஆரம்பித்தான்.  வினதா சுதன் (கருடன்) பன்னகம் எனும் நாகத்தை கவ்விக் கொண்டு நிற்பதைப் போல அந்த பரிகத்தை கையில் வைத்துக் கொண்டு நின்றான்.  அந்த உயரத்தில் நடமாடியபடி தன்னை தாக்க வந்தவர்களை வீழ்த்தினான்.  கிங்கர வீரர்களும் சளைக்கவிலை. அவர்களும் போர் புரிய ஆவலுடையவர்கள். கிங்கர வீரர்களை அடித்து தள்ளி விட்டு திரும்ப தோரண வாயிலில் வந்து அமர்ந்தான். ஒரு சில கிங்கர வீரர்கள், பயத்தால் அவனுடன் மோதுவதைத் தவிர்த்து, ராவணனனிடம் விவரம் சொல்லச் சென்றார்கள்.  ராக்ஷஸர்க  ளின் பெரும் படையில் பெரும்பாலோர் பின் வாங்கி விட்டனர்.  பலர் காயம் அடைந்தனர் என்று கேள்விப் பட்டு, தோல்வியே அறியாத ராவணன், ப்ரஹஸ்த புத்திரனை அனுப்பினான்.  பராக்ரமத்தில் தனக்கு நிகர் இல்லாதவன், நேர் நின்று யுத்தம் புரிய கடினமானவன் இந்த ப்ரஹஸ்த புத்திரன். 

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் கிங்கர நிஷூதனம் என்ற நாற்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 43 (382) சைத்ய ப்ராஸாத3 தா3ஹ: (சைத்ய ப்ரஸாதம் என்ற மாளிகையை எரித்தல்)

 

கிங்கரர்களை அடித்து வீழ்த்திய பின், ஹனுமான் சற்று யோசிக்கலானான். வனத்தை அழித்தாகி விட்டது.  சைத்ய ப்ராஸாதம், இன்னமும்  முழுமையாக நிற்கிறது.  இதையும் சேதப் படுத்துகிறேன். இப்படி மனதில் தீர்மானித்துக் கொண்டு, தாவி குதித்து மடத்தின் மேல் ஏறினான்.  உயர்ந்த அந்த கட்டிடத்தின் மேல்  ஏறினான்.  அந்த உயரமான மண்டபத்தின் மேல், உதய சூரியன் போல நின்ற ஹனுமான் அதை கால்களால் மிதித்து சேதப் படுத்தி விட்டு உரக்க கோஷம் இட்டான்.  அந்த கோஷம் லங்கா நகரம் முழுவதும் எதிரொலித்தது.  காதை பிளக்கும்  அவனது தோள் தட்டி  கூவிய கூவலில்,  அந்த ஒலியின் வேகம் தாங்காமல்,  மண்டபத்தை காவல் காத்து நின்ற வீரர்களே கீழே விழுந்தனர்.  பறவைகள் பறந்து கொண்டிருந்த நிலையில் இந்த ஓசையைக் கேட்டு, நடுங்கி விழுந்தன.  அஸ்திரங்களை அறிந்த ராமனுக்கு ஜயம். மகா பலசாலியான லக்ஷ்மணனுக்கு ஜயம். சுக்ரீவ ராஜாவுக்கு ஜயம்.  ராகவனால் பாலிக்கப் பட்ட சுக்ரீவனுக்கு வெற்றி உண்டாகட்டும்.  நான் கோஸலேந்திரனான ராமனின் தூதன், ராமதாஸன். சொல்லும், செயலும் தெளிவாக உள்ள ராமனின் தாஸன். மாருதாத்மஜனான ஹனுமான்.  சத்ரு சைன்யங்களை அடியோடு அழிப்பவன்.  ஆயிரக் கணக்கான ராவணர்கள் எனக்கு எதிரில் நிற்க முடியாது.  பாறைகளூம், மரக் கிளைகளுமே என் ஆயுதம்.  இவற்றை வைத்துக் கொண்டே நான் பகைவர்களை வீழ்த்துவேன்.  லங்கையை நாசம் செய்வேன்.  மைதிலியை வணங்கி விட்டு வந்த காரியம் நிறைவேறியவனாக நான் திரும்பிச் செல்வேன்.  உங்கள் கண் முன்னாலேயே இதோ நான் செய்து காட்டுவேன்.  என்று இவ்வாறு பெரும் குரலில் கோஷமிட்டதைக் கேட்டு அந்த சைத்ய ப்ராஸாதம் என்ற அந்த மண்டபத்தைச் சுற்றி இருந்த காவல் வீரர்கள் நூறு பேர் ஓடி வந்தார்கள். பல விதமான அஸ்திரங்கள், ப்ராஸங்கள் வாட்கள், பரஸ்வதம் என்ற ஆயுதம் இவற்றுடன் பெரிய உருவத்தினர், மாருதியைச் சுற்றி வளைத்துக் கொண்டனர்.  க3தை4 முதலிய மற்ற ஆயுதங்களையும் கொண்டு மாருதியை தாக்கலாயினர். பாணங்களும் ஆதித்யனுக்கு சமமாக வந்து விழுந்தன. கங்கை நதியில் நடு நடுவே தோன்றும் சுழிகள் போல ஆயுதங்கள் ஹனுமனை வளைத்துக் கொண்டன. வானர வீரனை மறைத்து பாணங்களும் ஆயுதங்களும் அவன் மேல் விழுந்தன. இதன் பின் வாதாத்மஜன் தன் உடலை பெருக்கிக் கொள்ள முனைந்தான்.  பீம ரூபம், பயங்கரமான பெரிய உருவமாக வெளி வந்தான்.  பாணங்களும் ஆயுதங்களும் கீழே விழுந்தன.  அந்த மண்டபத்தின் பெரிய ஸ்தம்பத்தை உடைத்துக் கொண்டு ஹனுமான் வெளி வந்தான்.  பொன்னாலான அந்த தூணையே கையில் சுழற்றி நூறு விதமாக அடித்தான்.  இதில் அக்னி தோன்றி, அந்த மண்டபத்தையே எரிக்கலாயிற்று.  வானர வீரன், திடுமென தான் நிற்கும் மண்டபமே எரிவதைக் கண்டு, நூற்றுக் கணக்காக சூழ்ந்து நின்ற ராக்ஷஸ வீரர்களை அடித்து தள்ளிக் கொண்டு அந்தரிக்ஷத்தில் நின்றபடி அவர்களைப் பார்த்து எக்காளமிட்டுச் சொன்னான். என்னைப் போலவே பல ஆயிரம் பேர்கள் இந்த வேலையில் அனுப்பப் பட்டிருக்கிறார்கள்.  சுக்ரீவனின் வசம் உள்ள பலசாலிகளான வானரர்கள், பூமி முழுவதும் அலசி தேடும் முயற்சியில் அலைகிறார்கள். சிலர் பத்து யானை பலம் கொண்டவர்கள்.  சிலர் பத்து மடங்கு அதை விட பலம் உடையவர்கள்.  சிலர் ஆயிரம் யானை பலம், அதற்கு சமமான விக்ரமமும் உடையவர்கள்.  சிலர் வாயுவுக்கு சமமான வேகமும் பலமும் கொண்டவர்கள்.  சிலர் அமானுஷ்யமான பலம் கொண்டவர்கள்.  தங்கள் பற்களும், நகமுமே ஆயுதமாக இவர்கள் சுக்ரீவ ராஜாவைச் சுற்றி நிற்கின்றனர்.  கோடிக் கணக்காக, அதற்கும் மேலாக, பத்து கோடி,  இருபது கோடி வானர வீரர்கள் வருவார்கள்.  இந்த லங்கையும் இருக்க போவதில்லை, நீங்களும் இருக்கப் போவதில்லை.  உங்கள் அரசன் ராவணனும் இருக்கப் போவதில்லை.  அப்படி ஒரு வைரம், இக்ஷ்வாகு நந்தனன் ராவணனிடம் கொண்டிருக்கிறான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் சைத்ய ப்ராஸாத3 தா3ஹோ என்ற நாற்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

 

 

 

அத்தியாயம் 44 (383) ஜம்பு3 மாலி வத4: (ஜம்பு மாலியின் வதம்)

 

ப்ரஹஸ்த புத்திரனான ஜம்பு மாலியும் நல்ல வீரன். ராக்ஷஸேந்திரனின்   கட்டளைப்படி கையில் வில்லேந்தி புறப்பட்டான். பெரிய பற்களை உடையவன்.  சிவந்த ஆடையணிந்து, மாலைகளையும் அணிந்து, அழகிய குண்டலங்கள் இவற்றுடன் புறப்பட்டான்.  அகன்ற கண்களும், சண்டன், சமர துர்ஜயன்- போரில்  எளிதில் தோல்வி அடையாதவன் என்றும் புகழ் பெற்றவன்.  இந்திரனுடைய வில்லுக்கு சமமான தன் வில்லையும், சக்தி வாய்ந்த அம்புகளையும் எடுத்துக் கொண்டான்.  அவைகளை வேகமாக சுழற்றிக் கொண்டு வஜ்ரம், அசனி போல சக்தியுடைய ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு வந்தான். வில்லின் நாணை நிமிண்டி ஓசையெழுப்பி, தானும் தோள் தட்டியபடி போருக்கு அழைத்தான்.  அந்த அறை கூவல் நாலா திசைகளிலும் கேட்டது.  கோவேறு கழுதைகள் பூட்டிய ரதத்தில் வந்த அவனை வாயு புத்திரன் கூர்ந்து கவனித்தான்.  தானும் அதே போல பெருங்குரலில் ஓங்கி உரத்து கோஷம் இட்டான்.  தோரணக் கட்டையில் அமர்ந்திருந்தவனைப் பார்த்து ராக்ஷஸன், பல விதமாக சரங்களை அடுத்தடுத்து பிரயோகித்து காயம் அடையச் செய்தான்.  முகத்தில் அர்த்த சந்திரன், தலையில் ஒன்று, கர்ணி என்ற ஆயுதத்தால் புஜங்களில் காயம் அடையச் செய்தான்.  பத்து நாராசங்களால் கபீஸ்வரனை அடித்து காயப் படுத்தினான்.  சரங்களால் அடிபட்டு முகம் தாம்ர வர்ணமாக ஹனுமான் சரத் காலத்தில் மலர்ந்த தாமரை, பாஸ்கரனின் கிரணங்களால் அடி பட்டது போல காணப்பட்டான்.  ஆகாயத்தில் மகா பத்மம், சந்தன அபிஷேகம் செய்விக்கப் பட்டது போல இருந்தான்.  ராக்ஷஸனின் பா3ணம் மேலே பட்டதால் அதிக கோபம் கொண்டான்.  அருகில் இருந்த மிகப் பெரிய பாறையை கையில் எடுத்துக் கொண்டான்.  அதை வேகமாக எடுத்து வீசினான்.  அதை தன் மேல் படாதவாறு பத்து சரங்களால் தடுத்து விட்டான்.  தன் இலக்கு பயன் அளிக்காததைக் கண்டு ஹனுமான் ஒரு பெரிய சால மரக் கிளையை எடுத்து சுழற்றினான்.  சுழலும் அந்த மரக் கிளையை நோக்கி ஜம்புமாலி பல பாணங்களை பிரயோகித்தான். சால மரம் நான்காக சிதறியது.  ஐந்து பாணங்கள் புஜத்திலும், தலையில் ஒன்றும் பத்து ஸ்தனங்களிலும், ஹனுமான் உடலிலும் பட்டன.  உடல் முழுவதும் சரங்கள் கோத்து நிற்க, ஹனுமான் திரும்பவும் பழைய பரிக4த்தையே எடுத்துக் கொண்டு சுழற்றி வீசினான்.  மகா வேகத்துடன் வீசப் பட்ட அந்த இரும்பு கட்டை ஜம்பு மாலியின் அகன்ற மார்பில் விழுந்தது.  அந்த வேகத்தில் அவன் தலை எங்கே? புஜங்கள் எங்கே? முழங்கால்கள் எங்கு போயின? கையிலிருந்த தனுஷ் என்னவாயிற்று? ரதம் எங்கே? குதிரைகள் , அம்புகள், மற்ற ஆயுதங்கள் எங்கே போயின? எதுவுமே தெரியவில்லை.  அந்த வேகத்தில் ஜம்பு3மாலி சிதறி சுக்கு நூறானான்.  பூமியில் விழுந்தவை அவனது பூஷணங்களும், துண்டு துண்டான உடல் பாகங்களுமே. ஜம்பு3மாலியும் மாண்டான்.  மகா பலசாலிகள் என்று பெயர் பெற்ற கிங்கரர்களும் மாண்டனர்.  என்ற செய்தி கேட்டு ராவணனனின் கோபம் பன் மடங்காயிற்று.  ஆத்திரம் அடங்கவில்லை.  அந்த ஆத்திரம் கண்களை மறைக்க, ப்ரஹஸ்த புத்திரன் மாண்ட செய்தியைக் கேட்ட பின்னும், அமாத்ய புத்திரர்களை அனுப்பத் துணிந்தான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ஜம்பு3 மாலி வதம் என்ற நாற்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 45 (384) அமாத்ய புத்ர வத4: (மந்திரி புத்திரர்கள் வதம்)

 

மந்திரிகளின் புத்திரர்கள், ராக்ஷஸேந்திரனின் கட்டளைப் படி, அந்த பவனத்திலிருந்து வெளியேறினர்.  ஏழு பேர் ஏழு கிரணங்கள் போல தேஜஸுடன் கிளம்பினர்.  தங்கத்தால் இழைத்துச் செய்யப் பட்ட கொடிகள், கொடிக் கம்புகள், இவற்றுடன் மேகம் இடி இடிப்பது போல கர்ஜித்துக் கொண்டு, குதிரைகள் பூட்டிய மகா ரதங்களில் சென்றனர். அவர்களுடைய வில், புடமிட்ட தங்கத்தால் அலங்காரமாக வேலைப் பாடுகள் செய்யப் பட்டு பள பளத்தது. நீருண்ட மேகம் போல களிப்புடன் புஜங்களைத் தட்டி ஆரவாரித்துக் கொண்டு கிளம்பினர்.        இவர்களின் தாய்மார்கள், கிங்கரர்கள் இறந்த செய்தியை அறிந்து இருந்ததால், வேதனையில் மூழ்கினார்கள்.  அவர்களின் நெருங்கிய பந்துக்களும், நண்பர்களும் கூட கவலைப் பட்டனர்.  இந்த அமாத்ய புத்திரர்கள் தங்கள் ஆபரணங்களை  போட்டி போட்டுக் கொண்டு அணிந்து கொண்டு, தோரண வாயிலில் அமர்ந்திருந்த ஹனுமானை வந்தடைந்தனர்.  ரதத்தின் ஓசையும் சேர, பல பாணங்களை இடை விடாது வர்ஷித்தனர்.  மழையை பொழியும் மேகங்களைப் போலவே, அந்த அமாத்ய குமாரர்கள் விளங்கினர்.  அந்த சர மழையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட ஹனுமான், மலையின் சிகரம், மேகம் சூழ நிற்பது போல நின்றான்.  வேகமாக செல்லக் கூடிய ஹனுமான், அந்த பாண மழையிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு ரத வேகத்தையும் அனுமானம் செய்து கொண்டு, ஆகாயத்தில் தாவி ஏறினான்.  இந்த வில் வீரர்களிடம் சற்று நேரம் விளையாடியபடி, பொழுதைக் கழித்தவன், மாருதனான தேவன் ஆகாயத்தில் மேகக் கூட்டங்களோடு விளையாடுவது போல விளையாடினான்.  அந்த பெரும் படையை பயமுறுத்துவது போல ஹனுமான் பெரும் குரலில் கோஷமிட்டு வேகமாக சஞ்சரித்தான்.  கைத் தலத்தால் சிலரை அடித்தான். கால்களால் சிலரை உதைத்தான்.  முஷ்டியால் சிலரை அறைந்தான்.  சிலரை நகத்தால் கீறி துன்புறுத்தினான்.  உடலோடு உரசி, மார்போடு மார்பாக, சிலரை முட்டித் தள்  ளினான்.  தன் கால் துடைகளால் சிலரை முட்டினான்.  அவனின் உரத்த கூச்சலைக் கேட்டே பலர் விழுந்தனர். சிலர், இப்படி அடி படாமல் தப்பி ஓடினால் போதும் என்று ஓடினர். யானைகள் பரிதாபமாக அலறின.  குதிரைகள் தரையில் விழுந்தன.  த்வஜ ஸ்தம்பங்கள், உடைந்து விழுந்து குடைகளும், சாமரங்களும் இரைந்து கிடந்தன.  ரதம் உடைந்த துண்டுகளும்,  சிதறிக் கிடந்தன.  பெருகும் ரத்தத்துடன் வழியில் பல ராக்ஷஸர்கள் கிடந்தனர்.  இவர்களின் பரிதாபமான அழுகைக் குரல் லங்கையில் நிறைந்தது.  இவ்வாறு தன்னைத் தாக்க வந்த பெரும் வீரர்களான ராக்ஷஸர்களை அடித்து வீழ்த்தி விட்டு அதே தோரண வாயிலில் அமர்ந்தான், வாயு சுதன்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் அமாத்யபுத்ர வதோ என்ற நாற்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 46 (385) சேனாபதி பஞ்சக வத4: (சேனாபதியை வதைத்தல்)

 

மந்திரி குமாரர்கள் மாண்ட செய்தி ராவணனுக்கு எட்டியது. சற்று யோசித்து விரூபாக்ஷ, யூபாக்ஷ, துர்த4ரன், ப்ரக4ஸன், பா4ஸ கர்ணன் என்று ஐந்து முக்யமான படைதலைவர்களை அழைத்து, சேனாதிபதிகளே, நீங்கள் செல்லுங்கள். குதிரைகள் பூட்டிய ரதங்கள், யானைப் படை, இவற்றுடன் சென்று அந்த வானரத்தை (கபியை)  அடக்குங்கள் என்றான்.  நியாயம் அறிந்தவர்கள், அஸ்திர சஸ்திரங்களையும் அறிந்தவர்கள், இவர்கள்.  ஹனுமானை பிடிக்க இவர்களும் சற்று கவலையுடன் ஆவலாகவே இருந்தனர். எந்த விதமாக செயல் பட்டால் காரியம் நிறைவேறுமோ, அந்த விதமாக யோசித்து வனாலயம் (அசோகவனம்) சென்று தேச காலங்களை அனுசரித்து காரியத்தை முடித்துக் கொண்டு வாருங்கள். இந்த கபி (வானரம்) சாமான்யமான வானரம் அல்ல என்று நினைக்கிறேன். அதன் செயல்கள் அப்படி இருக்கின்றன.  எப்படியும் அந்த பூதாகாரமான வானரத்தை ஏராளமாக பலம் கொண்ட ஜந்துவை பிடித்து தான் ஆக வேண்டும்.  இந்திரன் தான் நம்மை அழிக்க தவ வலிமையால் ஸ்ருஷ்டி செய்திருக்கிறானோ. நாகர்கள், யக்ஷ, கந்தர்வர்கள், தேவ, அசுர, மகரிஷிகள் இவர்களை, உங்கள் உதவியுடன் நான் போர் தொடுத்து மடியச் செய்திருக்கிறேன்.  அவர்கள் நமக்கு ஏதாவது இடையூறு செய்யவே விழைவார்கள்.  அதனால் யோசிக்கவே வேண்டாம்.  எப்படியாவது, அமுக்கி பிடித்து உயிருடன் பிடித்து விடுங்கள்.  சாதாரண கபி தானே என்று நீங்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்.  இதற்கு முன்னும் நான் பலசாலிகளான வானர வீரர்களைக் கண்டிருக்கிறேன்.  வாலி, சுக்3ரீவன், ஜாம்ப3வான் இவர்களை அறிவேன்.  இவர்களும் மகா பலசாலிகளே.  நீலன், சேனாபதி, த்3விவிதன் போன்ற வானர வீரர்களை அறிவேன்.  ஆனால் இவர்களுக்கு இவ்வளவு வேகமும், ஆற்றலும் கிடையாது.  இது போல புத்தியோ, பலமோ, உற்சாகமோ, ரூபமோ கிடையாது.  ஏதோ ஒரு பெரிய ஜீவன், வானர ரூபத்தில் இங்கு வந்திருக்கிறது.  தேவையானால் மிகுந்த பிரயாசையுடன் இதை அடக்குங்கள்.  நிச்சயம் மூவுலகும், இந்திரனோ, தேவர்கள், அசுரர்களோ, மனிதர்களோ, உங்கள் எதிரில் நின்று போரிட சக்தியற்றவர்களே.  ஆனாலும் தற்சமயம் நிலைமையை அனுசரித்து, நமக்கு ஜெயம் வேண்டும் என்பதால், நயமாக யோசித்து செயல் படுங்கள். எப்படியும் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.  போரில் வெற்றி என்பது சஞ்சலமானதே.  நல்ல தேஜஸும் செயல் வீரர்களுமான அவர்கள், தங்கள் எஜமானனின் கட்டளையை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள்.  அக்னியின் ஜ்வாலை போன்ற வேகத்துடன் எழுந்து கொண்டார்கள்.  ரதங்களிலும், மதம் கொண்ட யானைகள் படையும், வேகமாக செல்லும் குதிரைகளிலும், பலவித சஸ்திரங்களாலும், பலவிதமாக பயிற்சி செய்து தயாராக இருந்த படை வீரர்களுடன் சென்று மகா கபியான ஹனுமானைக் கண்டனர்.  கிரணங்களுடன் கூடிய சூரியன் உதிக்கத் தயாராக இருப்பது போல தன் தேஜஸே ஒளிக் கிரணங்களாக தன்னை சூழ்ந்திருக்க, தோரண வாயிலில் அமர்ந்தவனை, மகா உத்சாகத்துடன், யுத்தம் செய்யத் தயாராக பலமும், வேகமும் கூடியிருக்க, நல்ல மதியும், பெரிய உருவமும், அகன்ற புஜங்களுமாக இருக்கக் கண்டனர்.  அவனைக் கண்டதுமே, வந்தவர்கள் எல்லா திக்குகளிலும், நின்று கொண்டனர்.  தங்கள் தங்கள் ஆயுதங்களை கையில் எடுத்துக் கொண்டு மெதுவாக முன்னேறினர்.  து3ர்த4ரன் வீசிய அம்புகள் வானரத்தின் தலையில் விழுந்தன.  ஐந்து இரும்பாலான,  கூர்மையான ஆயுதங்கள் ஏக காலத்தில் வந்து விழுந்தன.  வலி தாங்க முடியாமல் அலறிக் கொண்டு வானரன் எகிறி குதித்தான்.  அந்த அலறல் பத்து திக்குகளிலும் எதிரொலித்தது.  இதன் பின் து3ர்த4ரன் ரதத்தில் இருந்தபடி தயாராக இருந்த வில், அம்புகளுடன், ஹனுமானின் பேரில் நூற்றுக் கணக்கான அம்புகளை வர்ஷிக்க ஆரம்பித்தான்.  ஆகாயத்தில் நின்றபடி அவை தன் பேல் படாதவாறு ஹனுமான் தடுத்து நிறுத்தி, மழைக் கால முடிவில் மேகத்தை காற்று தடுத்து நிறுத்துவது போல நிறுத்தினாலும், அம்புகள் மேலே பட்டதால் வலியால் துடித்தான்.  தன் உருவத்தை மேலும் வளர்த்திக் கொண்டு கோஷம் இட்டான்.  வெகு தூரத்திலிருந்து தாவி துர்தரனுடைய ரதத்திலேயே குதித்தான்.  மின்னல் கூட்டமாக மலையுச்சியில் இறங்கியது போல இருந்தது.  எட்டு குதிரைகள் பூட்டிய அந்த ரதத்தை கால்களால் மிதித்து துவைத்து, அச்சு முறிந்து ரதம் உடைந்து விழ, துர்தரனும் உயிரின்றி  பூமியில் விழுந்தான்.  கீழே விழுந்தவனை, விரூபாக்ஷ, யூபாக்ஷர்கள், கண்டனர்.  இதனால் உண்டான ரோஷத்துடன், தாங்க முடியாத பலத்தை காட்டியபடி சண்டைக்கு வந்தனர். அவர்கள் இருவரையுமே அலாக்காக தூக்கியபடி ஆகாயத்தில் எகிறி நின்று, அந்த நிலையிலும் கையில் இருந்த முத்கரத்தால் இருவரும் தன் மார்பில் அடித்ததையும் பொருட்படுத்தாமல், திரும்ப வேகமாக அடித்தபடி, பூமியில் தானும் விழுந்தான்.  பின், ஒரு சால விருக்ஷத்தை எடுத்து இருவரையும் விடாமல் அடித்துக் கொன்றான். மூவரும் இறந்து பட்டதை அறிந்து ப்ரகஸன், வானரத்தை நெருங்கி வந்தான்.  பாஸ கர்ணனும் சூலத்தை எடுத்துக் கொண்டு அருகில் வந்தான்.  தனியாக இருந்த வானர வீரனை கூர்மையான நுனியுடைய பட்டஸம் என்ற ஆயுதத்தால் ப்ரகஸன் குத்தினான்.  மறு பக்கம் பாஸ கர்ணனும் சூலத்தால் அடித்தான், இரு பக்கமும் குத்தியதால் ரத்தம் பெருகலாயிற்று.  மயிர்க் கால்கள் நனைந்து விட்டது.  பால சூரியன் போல, மலையின் சிகரம் ஒன்றை பிடுங்கி கையில் எடுத்துக் கொண்டு, அதில் இருந்த மிருகங்கள், மரங்கள் உட்பட, ஓங்கி இருவரையும் அடித்தான்.  ஐந்து சேனாபதிகளும் மாண்டனர். அவர்களுடன் வந்த படை வீரர்களையும் விட்டு வைக்கவில்லை.  அதையும் ஒருவர் மீதியில்லாமல் அழித்தான். குதிரைகளோடு குதிரை படை வீரர்கள், யானைகளுடன் யானைப் படை வீரர்கள், படை வீரர்களோடு படை வீரர்கள் ரதங்களோடு அதில் இருந்தவர்கள் என்று அந்த கபி நாசம் செய்தான்.  ஸஹஸ்ராக்ஷன் அசுரர்களை நாசம் செய்தது போல வழியை அடைத்துக் கொண்டு ராக்ஷஸர்களின் உடல்களூம், யானை குதிரைகளும், உடைந்த ரதங்களுமாக ரண பூமி பயங்கரமாக காட்சிய  ளித்தது.  தன்னை தாக்க வந்தவர்களை அடித்து விரட்டி விட்டு, அந்த வானர வீரன், திரும்பவும் தோரண வாயிலில் சென்று அமர்ந்து கொண்டான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர எண்டத்தில் சேனாபதி பஞ்சக வதோ4 என்ற நாற்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 47 (386) அக்ஷ குமார வத4: (அக்ஷ குமாரனை வதம் செய்தல்)

 

ஐந்து சேனாபதிகளையும் ஹனுமான், உடன் வந்த வீரர்களுடன், வாகனங்களுடன் சேர்த்து அழித்து விட்டான் என்ற செய்தி ராவணனுக்கு தெரிவிக்கப் பட்டது.  அதே  சமயம் தானும் யுத்த களம் போகும் ஆவலுடன் அக்ஷ குமாரன் எதிரில் வந்தான்.  அவனைக் கண்டதும் ராவணன் மனதில் அவனையே அனுப்பும் எண்ணம் வந்தது.  அக்ஷகுமாரனும் தந்தையின் கண்களில் இந்த குறிப்பை படித்து விட்டவன் போல குதித்து எழுந்தான்.  ப்ராம்மணர்கள் அக்னியில் ஹவிஸை போட்டவுடன் அக்னி ஜ்வாலை பொங்கி எழுவது போல எழுந்தான். அழகிய ரதம் ஏற்பாடாயிற்று.  இளம் சூரியன் போலவும், புடமிட்ட தங்கம் போலவும் இருந்த அந்த ரதத்தில் ஏறி வானர வீரன் இருக்கும் இடத்தை நோக்கிச் செலுத்தினான்.  பலகாலம் தவம் செய்து தானே சுயமாக சம்பாதித்து சேர்த்தது, ரத்னங்கள் இழைத்து பொன்னால் செய்யப்பட்ட த்வஜ ஸ்தம்பமும், கொடியும் உடையதுமான மனோ வேகத்தில் செல்லக் கூடிய எட்டு குதிரைகள் பூட்டியதும், சுராசுரர்களும் பெருமை கொள்ளும்படியானதும், தனியாகவே செல்லக் கூடியதும், ரவிக்கு (சூரியனுக்கு) இணையான பிரகாசமும், ஆகாயத்தில் செல்லும் சிறப்புடையதுமான, கச்சிதமாக அமைக்கப் பட்டிருந்ததும், தூணம், அஷ்டாசி இவைகள் வசதியான இடத்தில் பொருத்தப் பட்டதும், நேர்த்தியாக வைக்கப்பட்டிருந்த சக்திகளும், தோமரங்களூம், (ஆயுதங்கள்),   நிறைவான பொருட்கள் பொருத்தமான இடங்களில் அமைந்திருக்க, பொன் வர்ணத்தில் சந்திர சூரியர்கள் பிரகாசத்தை தந்தது போலவும், திவாகரன் போலவும் இருந்த ரதத்தில் ஏறி, அமரர்களுக்கு இணையான விக்ரமத்துடன் குமாரன் கிளம்பினான்.  குதிரை, யானை, மகா ரதம் இவைகளின்  ஒளியால் ஆகாயத்தையும், மலைகள் நிறைந்த பூமியையும் அதிரச் செய்த படி வந்தான்.  உடன் வந்த படை வீரர்களும் அதிக பக்ஷ ஆயுதபாணிகளாக வர, தோரண வாயிலில் அமர்ந்திருந்த கபியை (ஹனுமானை) சந்தித்தான்.  சமர்த்தனான ஹனுமானை யுக முடிவில் காலாக்னி போல, ப்ரஜைகளின் எண்ணிக்கை குறையவே வந்திருக்கிறானோ, என்பது போல ஆச்சர்யத்துடன் நோக்கினான்.  அமர்ந்த நிலையில் கண்டதிலேயே பர பரப்பு அடைந்தான்.  கௌரவமாக, அவனும் வீரனே என்று ஏற்றுக் கொண்டது போல இருந்தது குமாரனின் முக பாவம்.  ராவணன் மகன் இதுவரை ஒற்றர்கள் மூலம் கேட்டது உண்மையாக இருக்கக் கண்டான்.  ஹனுமானை ஒற்றர்கள் நல்ல வீரன், பராக்ரமம் உடையவன் என்று கணித்திருந்தனர்.  தற்சமயம் நேருக்கு நேர் நிற்கையில், தங்கள் இருவருடைய பலம், வேகம் இவற்றை மனதினுள் ஒப்பிட்டுக் கொண்டான், அக்ஷ குமாரன்.  தானும், தன் உருவத்தை அதிகரித்துக் கொண்டான், கூடவே பலமும் அதிகமாயிற்று.  யுக முடிவில் சூரியன் போல நின்றான்.  யுத்தம் செய்வதில் விருப்பம் உள்ளவனேயானாலும், தன்னை அடக்கிக் கொண்டு, தீர்மானமாக திட்டமிட்டுக் கொண்டு, ஹனுமானை யுத்தம் செய்ய அழைக்கும் விதமாக மூன்று கூர்மையான பாணங்களை தொடுத்து விட்டான்.  ஹனுமானும் அவனை கூர்ந்து கவனித்தான்.  கர்வம் முகத்தில் தெரிந்தது. சிரமப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டிருக்கிறான்.  சத்ருவை அடக்கியே ஆக வேண்டும் என்ற உறுதி தெரிந்தது.  கையில் வில்லும், வில்லின் நாணில் பூட்டிய அம்புமாக தயாராக நின்ற அக்ஷ குமாரன், திடமான மனதுடன், குண்டலங்கள் அசைய, பொன்னும் மணிகளும் ஆபரணங்களும் பளிச்சிட,  ஹனுமானைத் தாக்க முன்னேறினான்.  அவ்விருவருக்கும் இடையில் நடந்த போர் அத்புதமாக இருந்தது.  சுராசுரர்களும் பர பரப்புடன் கவனிக்கலாயினர்.  பூமி ஸ்தம்பித்து நின்றது.  சூரியன் தகிக்கவில்லை. வாயு சஞ்சரிக்கவில்லை.  மலைகள் அசைந்து நடுங்குவது போல இருந்தன.  கபியும், அக்ஷ குமாரனும் போரிட்ட சமயம் ஆகாயமே எதிரொலித்தது.  சமுத்திரம் அடங்கி அமைதியாக இருந்தது.  விஷம் கொண்ட பற்களையுடைய நாகம் போன்ற அம்புகள், கூர்மையாக இலை வடிவத்தில் அமைந்தவை, பொன் வேலைப்பாடமைந்த ஆயுதங்கள், இப்படி மூன்று சரங்களை கபியின் தலையில் படுவது போல அடித்தான்.  மூன்றும் சம காலத்தில் தாக்கியதால், ரத்தம் பெருக, வேதனையுடன் கண்களில் பட்டதால் வேதனை அதிகமாக,  சிவந்த நிறமும், அப்பொழுது தான் உதித்த சூரியனின் நிறத்தில் ஹனுமான் காணப்பட்டான்.  சுக்ரீவனின் மந்திரியான ஹனுமான், ராவண ராஜாவின் மகனான அக்ஷ குமாரனை போரில்  நேருக்கு நேர் சந்தித்து, அவனுக்கு சமமான எதிரியாக தன்னை நிரூபித்துக் கொண்டான்.  ஒளிக் கிரணங்களுடன் மந்தர மலையில் இறங்கி விட்ட சூரியன் போல, தன் சிவந்த கண்களாலேயே குமாரனான அக்ஷனை அவன் படை பலம், வாகனம் இவற்றோடு, எரித்து விடுபவன் போல பார்த்தான்.  குமாரனோ, யுத்தத்தில் ராக்ஷஸ மேகம் வர்ஷிப்பது போல தன் விசித்ரமான வில் அம்புகளுடன் சர மழை பொழிந்தான்.  உயர்ந்த மலையின் மேல் மேகம் நீரை பொழிவது போல அவை ஹனுமானின் மேல் விழுந்தன.  பா3லன், குழந்தைத் தனமாக தன் வீர்யத்தில் கர்வம் கொண்டு, நிமிர்ந்து நிற்கிறான்.  வரவழைத்துக் கொண்ட கோபத்துடன் ரத்தச் சிவப்பான கண்களுடன் யானை, புல் மூடிய பெரிய கிணற்றில் காலை வைப்பது போல, ஹனுமானுடன் மோத வந்திருக்கிறான். ஹனுமானும் இதை தெரிந்து கொண்டவனாக, ரண சண்டனாக போர் புரிய ஆவலுடன் வந்து நின்றபவனை ஊன்றி கவனித்து தன்னம்பிக்கையுடன் கோஷமிட்டான். அவன் பாணங்கள் மேலே வந்து விழுந்த பொழுதும் எதுவும் பதில் கொடுக்காமல், தான் வாயால் கோஷமிட்டுக் கொண்டு, இடி இடிப்பது போல எக்காளமிட்ட படி இருந்தான். தன் புஜங்களையும், கால்களையும் அகல பரப்பியபடி பயமுறுத்தும் தோற்றத்துடன் ஆகாயத்தில் எம்பி குதித்து, கீழ் நோக்கி அக்ஷ குமாரனைப் பார்த்து இளம் வயதில் துடிப்பாக இருந்த வாலிபனை மதிப்புடன் பார்த்து தனக்குள் யோசிக்கலானான்.  வானில் நின்ற வானரத்தை ரதத்தில் இருந்தபடி நோக்கிய ராக்ஷஸ குமாரன் மலை மேல் மேகம் பொழிவது போல சரமாரியாக பொழிந்தான்.  வாயு மார்கத்தில் நின்ற ஹனுமான் அவை தன் மேல் படாதபடி விலக்கியபடி குமாரனிடம் தோன்றிய பச்சாதாபத்தால், பதிலடி கொடுக்க தாமதித்தான்.       புஜங்களில் அம்பு தைத்த இடத்திலிருந்து ரத்தம் பெருகியது.  இளம் சூரியன் போல பிரகாசமாக இருக்கிறான் இந்த சிறுவன்.  அரிய செயலைச் செய்கிறான். இவனை அழிக்கவும் என் மனம் ஒப்பவில்லை. மா வீரன் இவன், மகாத்மா. தன்னடக்கமும், பொறுமையும், யுத்த அறிவும் உள்ளவன்.  நிச்சயம் இவன் தன் செயல் திறனாலேயே நாக, யக்ஷர்கள், முனிவர்கள் இவர்களின் நன் மதிப்பை பெற்று விளங்குவான்.  உத்சாகமும், தன் பலத்தில் நம்பிக்கையும் மேலிட இவன் எனக்கு நேர் போர் புரிய வந்து நிற்கிறான்.  இவன் மன உறுதி பாராட்டப் பட வேண்டியதே. சுராசுரர்களும் இவனிடம் நடுங்க வேண்டும்.  இவனை அலட்சியம் செய்யவும் முடியாது.  மேன் மேலும் ஆர்வத்துடன் முன்னேறுகிறான்.  இவனை கொல்ல மனம் வரவில்லைதான்.  ஆனால் வளர்ந்து வரும் அக்னியை அலட்சியம் செய்வது ஆபத்தில் முடியும்.  இவ்வாறு யோசித்து வதம் செய்வது என்ற முடிவுக்கு வந்தான்.  வாயு மார்கத்தில் இருந்தபடியே ரதத்தில் எட்டு குதிரைகளையும், குறி வைத்தான்.  அவை உயர் ஜாதி குதிரைகள்.  பாரத்தை சுமந்து கொண்டே வெகு வேகமாக செல்லக் கூடியவை.  நெருங்கி ஒன்றுக்கொன்று அனுசரணையாக சென்றன.  அந்த குதிரைகளை தன் கைத் தலத்தாலேயே அடித்து வீழ்த்தினான்.  ரதம் அச்சு முறிந்து விழ,  ரதத்துடன் அக்ஷ குமாரனும் பூமியில் விழுந்தான்.  துள்ளிக் குதித்து ரதத்திலிருந்து வெளி வந்து கையில் வாளுடன் அக்ஷகுமாரன் போரைத் தொடர்ந்தான்.  யோகம் அறிந்தவன்.  ரிஷி, உக்ரமான வீர்யம் உடையவன், அக்ஷ குமாரன்.  தன் தேகத்தை துறந்து சூக்ஷ்ம சரீரத்துடன் வாயு மார்கத்தில் நின்று மாயா யுத்தம் செய்யலானான்.  அவனை ஆகாயத்தில் தேடி வாயு சுதன், கருடனும் சித்தர்களும் சஞ்சரிக்கும் ஆகாய வழியில் கண்டு பிடித்து, கால்களை பிடித்து இழுத்து, திடமாக ஆயிரம் துகள்களாக சிதறும்படி வீசினான்.  பறவைகளின் அரசனான கருடன் பெரும் நாகத்தை கவ்விக் கொண்டு பறப்பது போல,  தன் தந்தையின் வேகத்தையும் வாங்கிக் கொண்டு விட்டவன் போன்ற வேகத்துடன் வாதாத்மஜன் பூமியில் ஓங்கி வீசினான்.  கை கால்கள் முறிந்து இடுப்பிலும் கழுத்திலும் நல்ல அடிபட்டு, ரத்தம் பெருக, எலும்புகள் துருத்திக் கொண்டு நிற்க, மூட்டுகள் கிழிந்து தசைகள் தொங்க, பூமியில் விழுந்தவுடன் மாண்டான்.  ராக்ஷஸ குமாரனின் நிலையைக் கண்ட மற்ற ராக்ஷஸர்கள் அலறினர். மகரிஷிகளும்,  யக்ஷ, பன்னக, இந்திராதி தேவர்களும், ஆச்சர்யத்துடன் வானர வீரனை நோக்கினர்.  அக்ஷ குமாரனை வீழ்த்தி விட்டு ஹனுமான் திரும்பவும் தன் தோரண வாயிலில் வந்தமர்ந்தான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் அக்ஷ குமார வதோ4 என்ற நாற்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 48 (387) இந்திரஜித3பி4யோக: (இந்திரஜித் தாக்குதலை தொடருதல்)

 

இதன் பின் ராக்ஷஸேந்திரன், அக்ஷ குமாரனையும் ஹனுமான் வதம் செய்து விட்டான் என்று அறிந்து வேதனை அடைந்தான்.  மனதை சமாதானம் செய்து கொண்டு இந்திரஜித்தை அழைத்தான். மகனே, நீ அஸ்திர சஸ்திரங்களை அறிந்தவன். சாமர்த்யசாலி. ஆற்றல் மிகுந்தவன். சுராசுரர்களுக்கும்  உன்னைக் கண்டால் பயம். தேவர்களிடமும், இந்திரனிடமும் போர் செய்து பழக்கம் உடையவன்.  பிதாமகரை  ஆராதித்து அஸ்திரங்கள் சேகரித்து வைத்துக் கொண்டவன்.  உன் அஸ்திர பலத்தை தெரிந்து கொண்டுள்ள, அசுரர்களும், மருத் கணங்களும் யுத்தத்தில்  உன்னை  எதிர்க்க சக்தியற்று தயங்கினார்கள். மூவுலகிலும் உன்னுடன் போரிட வந்து அடிபட்டு, தோற்று ஓடியவர்களே ஏராளம்.  புஜ வீர்யமும், தவ வலிமையும் உன்னிடம் சேர்ந்து இருக்கிறது.  இவை  உன்னை காக்கின்றன.  புத்திசாலியான நீ தேச காலங்களை அறிந்தவன்.  அறிவால் சாதிக்க வேண்டியவைகளை, உன் அறிவால் சாதித்திருக்கிறாய்.  உன்னால் முடியாதது என்று எதுவுமே இல்லை என்பதை நான் அறிவேன். மூவுலகிலும் இப்படி ஒரு போர் வீரன் இருந்ததேயில்லை எனும் படி உன் அஸ்த்ர பலமும், உடல் பலமும் யாவருக்கும் தெரிந்ததே.  எனக்கு சமமான தவமும், பலமும், ப்ராக்ரமமும் அஸ்த்ர பலமும் உன்னிடம் உள்ளன.  உன்னை  யுத்தத்துக்கு அனுப்பினால் எனக்கு எந்த விதமான கவலையோ, சிந்தனையோ இருந்ததில்லை.  இப்பொழுது பார். கிங்கரர்களை அழித்து விட்டான்.  ஜம்புமாலி ராக்ஷஸனும் மாண்டான். வீரர்களான அமாத்ய புத்திரர்களும் மடிந்தனர்.  பெரும் படையும் சேதமாயிற்று.  குதிரைகள், யானைகள், ரதங்கள் இவற்றுடன் சென்ற உன் சகோதரன் அக்ஷனும் தோல்வியைத் தழுவினான் கொல்லப் பட்டான்.  அவர்கள் அனைவருக்கும் இல்லாத சக்தி உன்னிடம் இருக்கிறது.  உனக்கு விவரம் தெரிந்திருக்கும்.  இந்த கபி சாமான்யமான வானரம் அல்ல.  இதுவரை கண்டதிலிருந்து அது மதியுடையது, மகத்தான பலம், பராக்ரமம் உடையது, ப்ரபாவம் உடையது என்று தெரிந்து விட்டது.  உன்னையும் காத்துக் கொண்டு, படையுடன் சென்று பலத்தாலும், புத்தியாலும் இந்த வானரத்தை வெல்வாய். அருகில் சென்று யார், என்ன, என்ன பலம், பின் பலம் என்ன என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்றபடி செயல்படுவாய். (வரிஷ்ட-தஹக்ஷெ றஸெத)  வீரனே, சேனையின் எண்ணிக்கை பற்றி கவலை வேண்டாம்.  இந்த மாருதனும் சாமான்யமானவன் அல்ல.  அக்னிகல்ப:- அக்னி போன்றவன் (அணைக்காது விட்டால் வளர்ந்து பெருகும் தன்மை) அதனால் கவனமாக இரு.  நன்றாக யோசித்து செய்ய வேண்டிய செயல்களை முறைப் படுத்தி வகைப் படுத்திக்கொள்.  உன் செயல்களிலேயே கவனமாக இரு. திவ்யமான அஸ்திரங்களையும், த4னுஷையும் நினைவில் வைத்துக் கொள். கிளம்பி போ.  குறைவில்லாத, அழிவில்லாத உன் காரியத்தை ஆரம்பி.   உன்னை அனுப்புவதில் எனக்கு சம்மதம் இல்லைதான்.  இது தான் ராஜதர்மம், க்ஷத்திரிய தர்மம் என்று எனக்குப் படுகிறது.  யுத்தம் என்று வந்தால் பலவிதமான சஸ்திரங்களையும், விசேஷமாக அறிந்திருக்க வேண்டும்.  எதிரிகளை ஒடுக்க வல்லவனே, ரணத்தில் விஜயம் தான் நமது லட்சியம்.  இந்த லட்சியத்தை அடைய உயர்ந்த அஸ்திரங்களையும், ஆயுதங்களையும், அறிவையும் சேர்த்து பயன் படுத்த வேண்டும்.  இவ்வாறு தந்தை சொன்னதைக் கேட்டு ப்ரதக்ஷிணம் செய்து,  தந்தையை நமஸ்கரித்து அப்படியே செய்வதாக உறுதியளித்து கிளம்பினான்.  (தக்ஷ சுத ப்ரபாவ:-?) தானே யோசித்து, என்ன செய்வது என்று தீர்மானித்துக் கொண்டான்.  குறைவில்லாத ஆற்றல் உடையவன் இந்திரஜித். இதன் பின் பந்துக்களும், இஷ்ட ஜனங்களும் வந்து வாழ்த்தினர்.  பெரும் ஸங்க்ராமத்தை (பெரும் போரை) எதிர் நோக்கி கிளம்பினான்.  மான், பத்ம,  பலாசம்-இவை போன்ற கண்களையுடையவன்.  ராக்ஷஸாதிபதியின் மகன், பருவ காலத்தில் சமுத்திரம் பொங்கி எழுவது போல, தன் படை வீரர்களுடன் ஆரவாரித்துக் கொண்டு கிளம்பினான்.  பக்ஷிராஜன்(கருடன்), அனிலன்-வாயு, இவற்றுக்கு சமமான வேகத்துடன் சீறிப் பாயும் நான்கு விஷப் பாம்புகள் இணைக்கப் பட்டிருந்த ரதத்தில், இந்திரன் போலவே ஏறினான். அந்த ரதி (ரதத்தை உடையவன்), வில்லாளிகளுள் சிறந்தவன்.  சஸ்திரம் அறிந்தவன்.  அஸ்திரத்தை பிரயோகிக்க தெரிந்தவர்களுள் ஸ்ரேஷ்டன்.   ரதத்தில் ஏறி வேகமாக ஹனுமான் இருக்கும் இடம் சென்றான்.  அந்த ரதத்தின் ஒலி, வில்லின் நாண் எழுப்பிய ஒலி, அம்புகளின் சத்தம் இவைகளைக் கேட்டு மேலும் மனம் மகிழ்ந்தான்.  ரண பண்டிதனான இந்திரஜித், பெரிய வில்லை எடுத்து, அம்புகளை பொறுத்தி. ஹனுமானை குறி வைத்தபடி வேகமாகச் சென்றான்.  போர் புரியும் ஆவலுடன் முன்னேறிச் சென்ற இந்திரஜித்தைக் கண்டு திசைகள் கறுத்தன.  விரைந்து சென்றவனின் கைகளில் அம்பும் வில்லும் லாகவமாக இருப்பதைக் கண்டவர் அதிசயித்தனர்.  ரௌத்ரமான மிருகங்களும் வீறிட்டு அலறின.  நாகர்களும், யக்ஷர்களும் வந்து சேர்ந்தனர்.  மகரிஷிகள், சக்ரத்தில் சஞ்சரிக்கும் சித்தர்கள், ஆகாயத்தில் பக்ஷிகளோடு தாங்களும் நின்று ஆரவாரம் புரிந்தனர்.  ரதத்தில் வெகு வேகமாக வரும் இந்திரஜித்தைக் கண்டு வானர வீரன் ஹனுமான் எதிர்த்து போர் புரிய தயாராக நின்று போர் முழக்கம் செய்தான்.  இந்திரஜித் சித்ர வேலைபாடுகள் கொண்ட தன் வில்லை வளைத்து, விரோதத்துடன் ஹனுமானை நோக்கினான். இடி இடிப்பது போன்ற ஒலி கேட்டது. இந்திரஜித்தின் நாணின் ஒலியே தான் அது.  இருவரும் அதி வேகமும், மகா பலமும் கொண்டவர்கள்.  ரண வித்தை அறிந்தவர்கள்.  கபியும், ராக்ஷஸ ராஜனின் புத்திரனும், பிறவியிலேயே வைரிகளான இந்திரனும் அசுரர்களும் போன்று ஒருவரையொருவர் க்ரோதத்துடன் பார்த்துக் கொண்டனர்.  போரில் தனக்கு சமமாக நின்ற வில்லாளியை, மகாரதியான மா வீரனை, எதிர்கொள்ள ஹனுமான் தன் உருவத்தை வளர்த்துக் கொண்டான்.  ப்ரும்ம மார்கத்தில் சஞ்சரிக்கலானான்.  இந்திரஜித் பிரயோகித்த அம்புகள் வேகமாக வந்து தாக்கும் பொழுது தடுத்து நிறுத்தினான்.  இந்திரஜித் சளைக்காமல் கூர்மையான அம்புகளையும், இலை வடிவத்தில் அமைந்த ஆயுதங்களையும் வஜ்ரம் விழுவது போல வேகமாக ஹனுமான் பேரில் விழச் செய்தான்.  இந்திரஜித்தின் ரத கோஷம் ம்ருதங்க, பே4ரி, படஹம் இவைகள் வாசித்து எழுந்த நாதம், அடுத்தடுத்து இழுத்து அம்புகளை தொடுக்கும்பொழுது எழும் ஓசை இவைகளைக் கேட்டு மேலும் ஆகாயத்தில் குதித்தான், ஹனுமான்.  மேல் நோக்கி அம்புகள் வந்து விழும் இடைவெளியில் தான் வேக வேகமாக இருப்பிடத்தை மாற்றிக் கொண்டான்.  இதனால் அவனை குறி பார்த்து எய்வது கடினமாயிற்று. ஒரு சமயம் எதிரில் வந்து நிற்பான்.  கைகளை விரித்து ஹனுமான் திரும்பவும் மறைவான்.  இருவரும் நல்ல வேகமும், ரண பூமியில் போரிட பயிற்சியும் பெற்றவர்கள்.  எல்லோரும் ரசிக்கும்படியாக, உத்தமமான யுத்தம் செய்தனர்.  ஹனுமானின் உள் எண்ணத்தை ராக்ஷஸன் அறிந்து கொள்ள முயலவில்லை.  அதே போல மாருதிக்கும் இந்திரஜித்தின் உத்தேசம் என்ன என்பது தெரியவில்லை.  இருவரும் தேவர்களுக்கு சமமான பராக்ரமம் உடையவர்கள்.  ஒருவருக்கொருவர் சளைக்காமல் போரைத் தொடர்ந்தனர்.  தன் அம்புகள் வீண் ஆவதைக் கண்டு சமாதி4, சம்யோக3, சம்ஹிதம் (சமாதி-யோகத்தில் உயர் நிலை, தன்னடக்கம் முதலியவை) இவைகளை உடைய இந்திரஜித் யோசித்தான்.  தன் போக்கை மாற்றிக் கொண்டான்.  ஹரி வீரனை வதம் செய்யாமல், உயிருடன் பிடிக்க தீர்மானித்தான்.  உடனே ப்ரும்மாஸ்திரம் நினைவுக்கு வர, அதை த்யானித்து தன் வில்லில் தொடுத்த அம்பின் மூலம் வானரத்தின் மேல் பிரயோகித்தான்.  இவனை கொல்ல முடியாது என்பதை உணர்ந்து இந்திரஜித், மாருதாத்மஜனை அஸ்திரத்தால் கட்டி விட்டான்.  இப்படி ராக்ஷஸனால் கட்டப் பட்ட வானர வீரன் செயலிழந்து விழுந்தான்.  தான் கட்டப் பட்டிருப்பது மிகவும் சக்தி வாய்ந்த ப்ருமாஸ்திரத்தால்  என்பதை வானர வீரன் உணர்ந்து கொண்டான்.   ப்ரபு4வான ப்ரும்மாவின் ப்ரபாவம் கொண்ட ப்ரும்மாஸ்திரத்தின் மகிமையால் கட்டுண்டான்.  அதே சமயம் தனக்கு அவருடைய அனுக்ரஹம் இருப்பதும் நினவுக்கு வந்தது.  இந்திரஜித் ஸ்வாயம்புவ மந்திரத்தை உச்சரிக்கும் பொழுதே, ஹனுமான் தனக்கு அவருடைய வர தானம் இருப்பதை மனதில் நினைத்துக் கொண்டு விட்டான்.  லோக குருவின் ப்ரபாவத்தால் நான் சீக்கிரமே விடுபடுவேன்.  மற்றவர்களைப் போல் நான் இந்த அஸ்திரத்தால் அதிக கஷ்டம் அனுபவிக்கவும் மாட்டேன்.  ஆயினும் ஸ்வயம்புவான ப்ரும்மாவுக்கு மதிப்பு கொடுத்து தான் ஆக வேண்டும்.   அதனால் இந்த அஸ்திரத்தை எதிர்த்து எதுவும் செய்ய மாட்டேன் என்று தீர்மானம் செய்து கொண்டான்.   தன்மேல் பிரயோகம் செய்யப் பட்ட ப்ரும்மாஸ்திரத்தை மரியாதையுடன் ஏற்றுக் கொண்டு மூர்ச்சையாகி விழுந்தான்.  இப்படி கட்டுண்ட போதிலும் எனக்கு பயம் எதுவும் இல்லை. பிதாமகரும், இந்திரனும் என்னை காப்பாற்ற இருக்கிறார்கள்.  அனில-வாயு பகவான் சதா என்னைக் காக்கத் தயாராக இருக்கிறான்.  இந்த ராக்ஷஸர்கள் என்னைக் கட்டி இழுத்துக் கொண்டு போவதிலும் ஒரு நன்மை இருக்கிறது.  ராக்ஷஸ ராஜனை சந்திக்கவும் அவனுடன் பேசவும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.  அதனால் இவர்கள் இஷ்டம் போல் இழுத்துச் செல்ல அனுமதிக்கிறேன் என்று மனதுள் தீர்மானித்துக் கொண்டு, செயலிலும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.  கட்டுண்டபடியே கிடந்தான்.  அவர்கள் தைரியம் வந்து பயம் காட்டிய போதிலும், அதட்டி மிரட்டிய போதிலும், பதில் சத்தம் கொடுப்பதோடு நிறுத்திக் கொண்டான்.  செயலற்று நிற்கிறான் என்று நினைத்து ராக்ஷஸர்கள் மரத்தின் நார்களைக் கொண்டும், சணல் கயிற்றாலும் கட்டினர்.  விரும்பி ஏற்றுக் கொண்ட பந்தனம், அந்த எதிரிகளின் அவமதிப்புகள், இதன் முடிவு ராக்ஷஸேந்திரனைக் காண்பதாக இருக்கும் என்பதால் பொறுத்துக் கொண்டான்.  இப்படி கயிற்றாலும், நாராலும் கட்டப் பட்டவுடன் சூக்ஷ்மமான அஸ்திர பந்தனம் விடுபட்டு விட்டதை உணர்ந்தான்.  அஸ்திரத்தால் கட்டப் பட்டிருக்கும் பொழுது இதர பொருட்களால் கட்டுதல் கூடாது.  இதனால் சூக்ஷ்மமான அஸ்திரம் மறைந்து விடும்.  இப்படி மரத்தின் நாராலும், கயிறுகளாலும் கட்டப் பட்டிருந்த ஹனுமானை இந்திர ஜித் பார்த்தான். அடடா இவ்வளவு பெரிய காரியம்.  விஷயம் தெரியாமல் இந்த ராக்ஷஸர்கள் அர்த்தமில்லாமல் போகச் செய்து விட்டார்களே.  மந்திர கதி தெரியாமல் இப்படி செய்து விட்டார்களே. மற்றொன்று எய்தாலும் உடனே பலனளிக்காது இடைப் பட்ட நேரத்தில் நம் கதி அதோ கதி தான்.  நல்ல வேளையாக ஹனுமான் தான் விடு பட்டதை தெரிந்து கொள்ளவில்லை. இந்த கட்டுக்குள் இருந்து கொண்டு ராக்ஷஸர்கள் இழுத்த இழுப்புக்கு போய்க் கொண்டிருக்கிறான்.  கட்டைகளாலும், முஷ்டிகளாலும் இவர்கள் அடிப்பதைத் தாங்கிக் கொண்டிருக்கிறான் என்று எண்ணினான்.  மற்ற ராக்ஷஸர்கள் ஹனுமானை இழுத்துக் கொண்டு அரசனிடம் வந்தனர்.  தன் மந்திரி வர்கங்களுடன் அமர்ந்திருந்த அரசனிடம் ஹநுமானைச் சுட்டிக்காட்டி மகா பலசாலி இவன் என்றான்.  மற்ற ராக்ஷஸர்களும் மதம் பிடித்த யானையை இழுத்து வருவது போல பெருமையுடன் அரசன் முன் ஒப்படைத்தனர்.  அந்த ராக்ஷஸர்களிடையில், யார் இவன்? யாருடைய தூதன்? எப்படி வந்தான்? என்ன காரியமாக வந்திருக்கிறான்? இவன் தொழில் என்ன? என்பது பற்றி பல வதந்திகள் பரவி, பல கதைகள் எழுந்தன.  கொல்லுங்கள், எரித்து விடுங்கள், சாப்பிடுங்கள் என்று சிலர் கூச்சல் போட்டனர்.  எல்லா ராக்ஷஸர்களுமே கோபத்துடன் தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.  பெரிய ராஜ வீதியை கடந்து ராக்ஷஸாதிபனின் வீடு வரை வந்து சேரும் வரை ஊரின் அழகை, செல்வ செழிப்பை, விலையுயர்ந்த ரத்னங்கள் அலங்காரமாக அமைக்கப்பட்டிருந்ததையும், உயர்ந்த வாழ்க்கைத் தரத்தையும், ராக்ஷஸ ராஜனின் ராஜ்யத்தில் ஹனுமான் கவனித்தான்.  ராவணனும் கபி சத்தமம்- வானரங்களுள் சிறந்த வானரத்தைக் கண்டான்.  ராக்ஷஸர்கள் இப்படியும் அப்படியுமாக இழுத்துக் கொண்டு வந்திருந்தாலும் வீரன் என்பது தெரிந்தது.  ஹனுமானும் ராக்ஷஸ ராஜனைக் கண்டான்.  தேஜஸும் பலமும் ஒருங்கிணைந்து தகிக்கும் சூரியனைப் போல காட்சி தந்தவனைக் கண்டான். ஆத்திரத்துடன் கண்களைச் சுழற்றி, தன் சபையில் அமர்ந்திருந்த மந்திரிகள், மற்றும் பிரமுகர்களுக்கு கட்டளையிட்டான்.  அவர்களும் முறைப் படி வானர வீரனை விசாரித்தனர்.  எதற்காக வந்தான்? யார் அனுப்பி வந்தான்? என்ன காரியம்? இதன் பின்னணி என்ன? என்ற கேள்விகளுக்கு ஹனுமான் பதிலளித்தான். நான் வானர ராஜனான சுக்ரீவனின் தூதன் என்று ஹனுமான் தெரிவித்தான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் இந்திரஜித3பி4யோகோ என்ற நாற்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 49 (388) ராவண பிரபா4வ த3ரிசனம் (ராவணனை நேரில் காணல்)

 

ஹனுமான் ஆச்சர்யத்துடன் ராவணனைக் கவனித்தான்.  தன் மந்திரிகளைக் கொண்டு விசாரிக்கச் செய்தது ராஜ தோரணையைக் காட்டியது.  மிக உயர்ந்த சிம்மாசனம். அதில் அமர்ந்திருந்ததே கம்பீரமாக பயத்தையும், மரியாதையையும் பார்ப்பவர் மனதில் தோற்றுவிக்கும் விதமாக இருந்தது.  தலையில் கிரீடம், அதில் முத்துக்கள் வரிசையாக கட்டப் பட்டிருந்தது, மிகப் பிரகாசமாக இருந்தது.  வஜ்ரத்தையும் (வஜ்ர அடியையும்) தாங்கிய புஜங்கள்.  மணிகளாலும், பொன் ஆபரணங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தன.  மனதால் கற்பனை செய்து உருவாக்கியதைப் போன்ற விசித்ரமான ஆபரணங்கள்.  கண்கள் சிவந்து பயங்கரமாக காட்சியளித்தன.  பளீரென்று கூர்மையான  நீண்ட பற்கள்.  பத்து தலைகள் இவற்றுடன் பல விதமான விஷப் பாம்புகள் வளைய வரும் மலையைப் போல காட்சி தந்தவனைக் கண்டான்.  கரு நீல நிற மலை போன்றவன்.  மார்பில் ஹாரம், பூர்ண சந்திரன் இடையில் வந்த சமயம் கரு மேகம் இருப்பது போல இருந்தது.  கேயூரங்கள் அணிந்த புஜங்கள் சந்தனம் பூசப் பெற்றிருந்தன.  ஐந்து தலை நாகங்கள் போல, அங்க3தம் என்ற ஆபரணம் மிகப் பெரிய அளவில் இருந்தது.  ஸ்படிகத்தால் ஆன அழகிய வேலைப் பாடமைந்த தரை. அதில் அழகிய விலையுயர்ந்த விரிப்புகள் விரிக்கப் பட்டிருந்தன.  அதிலும் உயர்ந்த ஆசனம் ஒன்றில் வீற்றிருந்தான் அரசன்.  பெண்கள் அலங்காரமாக வளைய வந்தனர்.  கைகளில் சத்ர சாமரங்களையும், மற்ற பொருட்களையும் ஏந்திய படி வந்தனர்.  மகா சக்திமான் என்று பெயர் பெற்ற ப்ரஹஸ்தன், துர்தரன், மகா பார்ஸ்வன், என்ற மந்திரிகள், நிகும்பன் முதலானோர் சபையை அலங்கரித்தனர்.  நான்கு ராக்ஷஸ வீரர்கள் தங்கள் பலத்தில் நம்பிக்கை முகத்தில் தெரிய அருகில் அமர்ந்திருந்தனர்.  உலகை நாலாபுறமும் சாகரம் சூழ்ந்திருப்பதை ஒத்திருந்தது.  தேவ ராஜனை தேவர்கள் நாலாபுறமும் நெருங்கி அமர்ந்திருப்பதைப் போல நல்ல அறிஞர்கள் நிறைந்த சபையாக இருந்தது.  ராவணனின் ராஜ தர்பார், நல்ல தேஜஸ்வி என்று ஹனுமான் ராவணனைப் பற்றி நினைத்துக் கொண்டான்.  மேரு சிகரத்தில் மேகம் அமர்ந்திருப்பதைப் போல ராவணன் தன் வராசனத்தில் அமர்ந்திருப்பதாக நினைத்தான்.  மற்ற ராக்ஷஸர்கள் துன்புறுத்துவதை இன்னமும் நிறுத்தவில்லை.  ராவணனைக் கண்ட பிரமிப்பில் ஹனுமான் அதைக் கண்டு கொள்ளவில்லை.  மனதினுள் அந்த ரூபத்தை எடை போட்டான்.  அஹோ ரூபம், அஹோ தைர்யம், அஹோ சத்வம், (ஆற்றல்) அஹோ த்யுதி:, பிரகாசம், செல்வ செழிப்பு, அஹோ ராக்ஷஸ ராஜன், எல்லா லக்ஷணங்களும் பொருந்தியவனாக, ராஜ கம்பீரம் தெரிய இருக்கிறானே. அதர்மம் பலமாக இவன் செயல்களில் குறுக்கிடாமல் இருந்திருந்தால், இந்த ராக்ஷஸேஸ்வரன், தேவ லோகத்தையும் ஆளத் தகுதியுடையவனே.  சக்ரன்- இந்திரனையும் இவன் காக்கக் கூடியவன்.  கொடியவன் தாக்ஷிண்யம் இல்லாதவன்.  இரக்கம் என்று ஒன்று இல்லாத அரக்கன் என்பதாலேயே அமரர்களும், தானவர்களும் கூட நடுங்குகின்றனர்.  இவன் கோபம் கொண்டால் உலகையே ஒரே சமுத்திரமாக ஆக்க வல்லவன். இவ்வாறாக ராவணனின் ராஜ சபையைக் கண்டு அதிசயித்து மனதினுள் அவனைப் பாராட்டினான், ஹனுமான்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ராவண பிரபா4வ தரிசனம் என்ற நாற்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

அத்தியாயம் 50 (389) ப்ரஹஸ்த ப்ரச்ன: (ப்ரஹஸ்தன் விசாரித்தல்)

 

உலகையே தன் அதிகாரத்தால் ஆட்டி படைத்து வந்த ராவண ராஜன்,  தன் எதிரில் பழுப்பு நிற கண்களுடன் நின்ற வானரத்தைப் பார்த்து கலங்கினான்.  சந்தேகமும் சிந்தனையும் அவனை ஆட்கொண்டன.  இது யாராக இருக்கும்? பகவான் நந்திகேஸ்வரர் சாக்ஷாத்தாக வந்திருக்கிறாரா? நான் கைலாஸ மலையைத் தூக்க முயற்சித்த பொழுது என்னை சபித்தாரே.  அவர் தானோ? வானர மூர்த்தி தான் அவரோ? அல்லது பா3ணாசுரனோ? என்று மனதில் நினைத்த படி ப்ரஹஸ்தனை அழைத்து, அந்த வானரத்தை விசாரனை செய்ய உத்தரவிட்டான்.  அந்த நேரத்துக்கு ஏற்ற, பொருள் பொதிந்த அரசியல் செயல்.  துராத்மா இவன். இவனை விசாரியுங்கள். எங்கிருந்து வந்தான்? என்ன காரணமாக வந்திருக்கிறான்?  வனத்தை அழிப்பதில் இவனுக்கு என்ன லாபம்? ராக்ஷஸிகளை ஏன் பயமுறுத்தினான்? என் நகரம். யாராலும் நுழைய முடியாது என்று பெயர் பெற்றது.  இதில் ஏன் நுழைந்தான்? எப்படி? ராக்ஷஸ வீரர்களுடன் ஏன் போர் தொடுத்தான்? கேளுங்கள் எனவும், ராக்ஷஸனின் மந்திரி ப்ரஹஸ்தன் ஹனுமானைப் பார்த்து கபியே,-வானரமே, பயப்படாதே. சமாதானமாக, ஆஸ்வாசப்படுத்திக் கொள்.  உனக்கு நன்மை உண்டாகட்டும்.  நீ இந்திரன் அனுப்பி ராவணன் இருப்பிடம் வந்திருந்தாலும், அஞ்சாதே. சொல்.  வானரமே, உனக்கு எதுவும் கெடுதல் நேராது.  விடுபடுவாய். வைஸ்ரவனன அனுப்பி வந்திருக்கிறாயா? யமன், வருணன் அனுப்பி வந்திருந்தாலும், சொல். அழகிய வானர ரூபம் எடுத்துக் கொண்டு எங்கள் நகரத்தினுள் பிரவேசித்திருக்கிறாய்.  விஜயம்-வெற்றி பெற விரும்பி விஷ்ணுவே அனுப்பியிருந்தாலும், சொல்.  உன் ரூபம் மட்டும் தான் வானரம். உன் தேஜஸ் வானரமாகத் தெரியவில்லை.   உண்மையைச் சொன்னால் விடுபடுவாய்.  பொய் சொல்லாதே.  பொய் சொன்னால் உயிருடன் மீள முடியாது.  நினைவில் வைத்துக் கொள்.  அல்லது என்ன காரணமாக ராவண ராஜாவின் மாளிகையில் நுழைந்தாய்? இதைக் கேட்டு ஹனுமான் பதில் சொன்னான். நான் இந்திரனுடைய தூதனும் அல்ல, யமன், வருணன் முதலானோர் அனுப்பியும் வரவில்லை. த4னத3ன் (குபேரன்) கூட எனக்கு பழக்கமுமில்லை, நட்பும் இல்லை.  விஷ்ணுவும் என்னை தூதனாக அனுப்பவில்லை. என் ஜாதியே இது தான். வானரம் தான் பிறவியிலேயே.  ராக்ஷஸ ராஜனைக் காணவே வந்தேன்.  ஒரு வாய்ப்பு கிடைக்க, ராக்ஷஸ ராஜனின் வனத்தை உடைத்து அழித்தேன்.   உடனே பலசாலிகளான ராக்ஷஸர்கள் வந்து என்னுடன் போர் புரிந்தனர்.  என் தேகத்தைக் காத்துக் கொள்ள பதிலடி கொடுத்தேன்.  அஸ்திர பாசங்களால் என்னை கட்ட முடியாது.  தேவாசுரர்கள் கூட என்னை கட்ட முடியாது.  பிதாமகரே, ப்ரும்மாவே எனக்கு அப்படி ஒரு வரம் கொடுத்திருக்கிறார்.  ராஜாவைக் காணவே, நான் ப்ரும்மாஸ்திரத்திற்கு கட்டுப் பட்டு அடங்கி உடன் வந்தேன். ராக்ஷஸர்கள் என்னை கயிற்றால் கட்டி துன்புறுத்திய பொழுதே, நான் அஸ்திர பந்தத்திலிருந்து விடுபட்டு விட்டேன்.  ஏதோ ஒரு ராஜ காரியமாக தங்கள் ராஜ சபைக்கு வந்துள்ளேன்.  ராகவனுடைய தூதன் நான்.  ப்ரபோ, நான் சொல்வதைக் கேளுங்கள். உங்கள் நன்மைக்காக கேளுங்கள்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ப்ரஹஸ்த ப்ரஸ்ன: என்ற ஐம்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக