சுந்தர காண்டம் 51 to 59
அத்தியாயம் 51 (390) ஹனுமது3பதேச: (ஹனுமானின் அறிவுரை)
ஆற்றல் மிகுந்த ஹனுமான், தன் ஆற்றல் வெளிப்பட, கவனமாக பொருள் பொதிந்த சொற்களால் ராவணனைப் பார்த்து தன் பேச்சைத் தொடர்ந்தான். தசானனா, நான் சுக்ரீவன் கட்டளைப் படி இங்கு வந்தேன். ராக்ஷஸேந்திரா, உன் சகோதரன் வானர ராஜன் சுக்ரீவன், உங்களை குசலம் விசாரித்தான். சுக்ரீவனுடைய, உன் சகோதரனின் சந்தேசம்- செய்தியைக் கேள். மகாத்மாவான சுக்ரீவனுடைய அறிவுரை, தர்மம் அர்த்தம் நிறைந்தது. இந்த உலகிலும், பரலோகத்திலும் உனக்கு பயன் தரக்கூடிய செய்தியைக் கேள். ராஜா தசரதன் என்று, ரத, குஞ்சர, வாஜிமாந்- குதிரைகள், யானைகள் பூட்டிய ரதங்கள் உடையவர். ஒரு தந்தையைப் போல, பந்துவைப் போல நினைத்து, தன் பிரஜைகளைப் பாலித்து வந்தான். தேவலோகத்து இந்திரன் போல பூவுலகில் மேன்மை பெற்று விளங்கினான். அவனுடைய மூத்த மகன், அரசனுக்கு பிரியமான புத்திரன், தந்தை சொல்லை மந்திரமாக மதிப்பவன், தன் தந்தையின் கட்டளைப் படி ராஜ்யத்தை துறந்து, தண்டகாவனம் வந்தான். லக்ஷ்மணன் என்ற சகோதரனுடனும், சீதை என்ற மனையாளுடனும் வந்தான். அவன் தான் ராமன் என்ற பெயருடைய மகா தேஜஸ்வி. தர்ம வழியில் செல்பவன். அவனுடைய மனைவி வனத்தில் காணாமல் போனாள். பதியையே சார்ந்து இருப்பவள் ஆனதால், பதியைத் தொடர்ந்து வனம் வந்தாள். உத்தமமான ஜனக ராஜவுடைய மகள், விதேஹ தேசத்து அரசனான ஜனகன் தான் அவள் தந்தை. சகோதரனுடன் அவளைத் தேடிக் கொண்டே ருஸ்ய மூகம் வந்து சேர்ந்தான் ராமன். சுக்ரீவனுடன் நட்பு கொண்டான். சுக்ரீவன் ராமனுக்கு உறுதி அளித்தான். சீதையைக் கண்டு பிடிக்க உதவுவதாக வாக்களித்தான். சுக்ரீவனுக்கும் ராமர், வானர ராஜ்யத்தை மீட்டுத் தருவதாக வாக்கு அளித்தார். அதனால் யுத்தம் செய்து வாலியை கொன்று விட்டு, சுக்ரீவன் ராஜாவாக நியமிக்கப் பட்டான். உனக்கு வாலியைத் தெரியும். அந்த வீரனை ராமர் ஒரே ஒரு அம்பினால் தாக்கி மாய்த்து விட்டார். தற்சமயம் சுக்ரீவன், சீதையைத் தேடுவதில் முனைந்திருக்கிறான். சத்ய சங்கரன், சொன்ன சொல்லை நிறைவேற்ற விழைகிறான். எல்லா திக்குகளிலும், பலம் கொண்ட வானர வீரர்களைத் தேட அனுப்பியிருக்கிறான். ஆயிரக் கணக்கான, நூற்றுக் கணக்கான வானர வீரர்கள், நியமிக்கப் பட்டுள்ளனர். எல்லா திசைகளிலும், பாதாளத்திலும், ஆகாயத்திலும், மேலுலகத்திலும் கூட தேட அனுப்பட்டுள்ளனர். சிலர் வைனதேயனுக்கு சமமான தேஜஸ்விகள். எந்த திக்கிலும், தடையின்றி பிரயாணம் செய்யக் கூடிய ஹரி வீரர்கள், வேகமாக செல்லக் கூடியவர்கள். நான் ஹனுமான் என்ற பெயருடைய மாருத புத்திரன். சீதையின் பொருட்டு, நூறு யோஜனை தூரம் நீண்ட, கடக்க முடியாத சமுத்திரத்தைக் கடந்து வந்தேன். அவளைத் தேடியே இங்கு வந்தேன். சுற்றி அலைந்து நான் ஜனகாத்மஜாவைக் கண்டு கொண்டேன். அதனால், தாங்கள், தர்மார்த்தங்களை அறிந்தவர். தவம் செய்து வலிமையைக் கூட்டிக் கொண்டவர். மகா ப்ராக்ஞர்- பெரும் அறிஞர். அதனால் தாங்கள் பர தாரா- மாற்றான் மனைவியை இது போல வற்புறுத்தி, காவல் வைத்திருப்பது என்ன நியாயம்? உங்கள் பெருமைக்கு உகந்தது அல்ல. தங்களைப் போன்ற புத்திசாலிகள், இது போன்ற வேரோடு நாசம் செய்யக் கூடிய, ஆபத்து மிகுந்த, அதர்மமான விஷயங்க ளில் ஈ.டுபடுவதில்லையே. ராம கோபமே வழிகாட்டி முன் செல்வது போல, லக்ஷ்மணனின் பாணங்கள் தொடர்ந்து வரும். இந்த பாணங்களை யார் தான் எதிர் கொள்ள முடியும்? தேவாசுரர்க ளில் கூட அப்படி ஒரு வீரன், தீரன் யார் இருக்கிறார்கள்? ராகவனுக்கு துன்பம் இழைத்து விட்டு யாரானாலும், ராஜேந்திரா, மூவுலகிலும் எங்கிருந்தாலும் சுகமாக இருக்க முடியாது. அதனால் முக்காலத்திலும் நன்மை தரக் கூடியதும், தர்ம, அர்த்தங்கள் நிறைந்ததுமான சுக்ரீவனின் அறிவுரையைக் கேள். நரேந்திரனான ராகவனிடம் அவர் மனைவி ஜானகியை திருப்பிக் கொடுத்து விடு. நான் இந்த தேவியைக் கண்டு கொண்டேன். மிகவும் துர்லபமான கடினமான காரியம் இது தான். இனி மேற் கொண்டு செய்ய வேண்டியது ராகவனின் பொறுப்பு. சோகத்தில் மூழ்கி வாடிக் கிடக்கும் சீதையை நான் தெரிந்து கொண்டு விட்டேன். உனக்குத் தெரியாது. நீ கவர்ந்து கொண்டு வந்தது வெறும் மானிடப் பெண்ணல்ல. ஐந்து தலை நாகம் என்று தெரிந்து கொள். இவளை நீ தேவர்கள், அமரர்கள், துணையுடன் முயன்றால் கூட மாற்ற முடியாது. நல்ல தேக வாகு, ஆரோக்யம் உடையவன் கூட, விஷம் நிரம்பிய அன்னத்தை உண்டு உயிர் வாழ முடியாதது போல. நீ சீதையைக் கவர்ந்து வந்ததும் உன் அழிவுக்கே காரணமாக ஆகும். இந்த சக்தியும் ப்ரபாவமும் உனக்கு தவம் செய்து கிடைக்கப் பெற்றவை. தர்ம வழியில் சென்று நீ இவற்றைப் பெற்றாய். இதை வீணாக்குவது நியாயமா? ஆத்ம ப்ரணம்- உங்களையே பணயம் வைத்து இந்த அதர்ம காரியத்தில் இறங்கி இருக்கிறாய். எந்த உன் உயிரை, வாழ்வை யாராலும் வதம் செய்ய முடியாது என்று நம்பிக்கையோடு இறுமாந்திருக்கிறாயோ, எந்த உங்களை தேவர்களாலும் எதுவும் செய்ய முடியாது என்று வரம் பெற்றிருக்கிறாயோ, அதிலும் நீ கவலைப் படும்படியான ஒரு இடை வெளி, இருக்கிறது. இந்த சுக்ரீவன் தேவனல்ல. அசுரனும் அல்ல. ராக்ஷஸனும் அல்ல. தானவனோ, கந்தர்வனோ, யக்ஷனோ, பன்னகனோ அல்ல. அதனால் ராஜன், இவனிடமிருந்து உன் உயிரை எப்படி காப்பாற்றிக் கொள்ளப் போகிறாய்? இதுவும் நீ அறிந்ததே. தர்மத்தை அழிக்கக் கூடியதும், அதர்மத்தின் முடிவும் சேர்ந்து செய்த செயல், அதன் பலனும் அதற்கேற்பத் தானே இருக்க முடியும். தர்மம் தான் அதர்மத்தை வென்று வெளி வரச் செய்யக் கூடியது. தர்ம காரியத்தின் பலனை நீ அனுபவித்துக் கொண்டிருக்கிறாய். ராஜன், அதில் சந்தேகமேயில்லை. அதர்மத்தின் பலன் என்ன என்பதையும் சீக்கிரமே காணப் போகிறாய். ஜனஸ்தான வதம் பற்றி தெரிந்து கொண்ட பின், வாலி வதம் ஆனதை தெரிந்து கொண்ட பின், ராம சுக்ரீவர்கள் நட்பு கொண்டதையும் தெரிந்து கொண்ட பின், யோசித்து பார். எந்த வழியில் சென்றால் தனக்கு நன்மை என்பதை தெரிந்து கொள். நான் ஒருவனே போதுமே. குதிரை யானைப் படைகளுடன் ரதங்களில் வரும் போர் வீரர்களை நாசம் செய்து லங்கையை அழிக்க எனக்கு சக்தி இருக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால், ராமன், ஹரி, ருக்ஷ (வானரங்கள்-) கூட்டத்தின் முன்னால் ப்ரதிக்ஞை செய்திருக்கிறான். தனக்கு நண்பர்கள் அல்லாத சத்ருக்களை, சீதையை தூக்கிச் சென்றவர்களை, தான் அழிப்பதாக சபதம் செய்திருக்கிறான். சாக்ஷாத் புரந்தரனேயானாலும், ராமருக்கு விரும்பத் தகாத ஒரு செயலை செய்து விட்டு, சுகமாக இருக்க முடியாது. அதிலும், உன் போன்றோரை ஏன் விட்டு வைக்கிறான்? எந்த ஸ்த்ரீயை சீதை என்று நினைக்கிறாயோ, எவள் உன் வசம் சிறை வைக்கப் பட்டு கிடக்கிறாளோ, அவளை சாதாரணமாக நினைக்காதே. கால ராத்ரி அவள். லங்கையை முழுவதுமாக அழிக்க வல்லவள். சீதை என்ற உருவில் வந்துள்ள கால பாசத்திலிருந்து மீளும் வழியைப் பார். தானாக தோளில் ஏறி அமர்ந்து கொள்ளும் கால பாசம், இதை உன்னால் தாங்க முடியுமா? என்று யோசித்து பார். சீதையின் தேஜஸால் தகிக்கப் பட்ட, ராம கோபத்தால் பீடிக்கப் பட்ட இந்த நகரமே அதன் மாட மாளிகைகள், கூட கோபுரங்களோடு சீக்கிரமே எரியப் போகிறது, பார். உன்னைச் சார்ந்தவர்கள், மந்திரிகள், நண்பர்கள், தாயாதிகள், சகோதரர்கள், உன் சந்ததியினர், உன் நலம் விரும்பும் உற்றார், சுற்றத்தார், மனைவிகள், போகங்கள், இந்த லங்கா நகரம் அனைத்தும் அழிய காரணமாக இருக்காதே. ராக்ஷஸ ராஜேந்திரா, நான் சொல்வது சத்யம். இதைக் கேள். நான் ராம தாஸன், தூதன். மேலும் ஜாதியால் வானரம். ராமனை நீ முழுவதுமாக தெரிந்து கொள்ளவில்லை. உலகம் முழுவதையும் , அதிலுள்ள ஜீவன்கள், சரா சரங்களோடு, நசுக்கி நாசம் செய்யவும் அவனால் முடியும். பின், அதை, அதே போல ஸ்ருஷ்டி செய்யவும் அவனால் முடியும். தேவாசுரர்கள், நரேந்திரர்கள், யக்ஷ, ராக்ஷஸ கணங்கள், வித்யா தரர்கள், இவர்கள் எல்லோரிலும், கந்தர்வர்கள், நாகர்கள், சித்தர்கள், கின்னரர்கள், பறவைகள் மற்றும் எல்லா உயிருள்ள பிராணிகளிடத்தும், எக்காலத்திலும், எங்கும் நிறைந்து இவனைப் போல வேறொருவர் கிடையாது. விஷ்ணுவுக்கு சமமான பராக்ரமம் உடைய ராமனுடன் எதிர்த்து போரிட முயலுபவன், சர்வ லோகேஸ்வரனான ராமனுக்கு விரோதமாக, அவனுக்கு துன்பம் விளைவிக்க நினைப்பவன், ராஜ சிம்மமான ராமனை விரோதித்துக் கொண்டால் நீ உயிருடன் இருப்பதே கடினம், துர்லபமாகி விடும். தேவர்களும், தைத்யர்களும், நிசாசரேந்திர, கந்தர்வ, நாக, யக்ஷர்கள், லோக த்ரய நாயகனான ராமனுக்கு எதிரில் நின்று போரிட சக்தியற்றவர்களே. ப்ரும்மா, ஸ்வயம்பூ, சதுரானன என்று பெயர் பெற்றவரான ப்ரும்மாவோ, த்ரிநேத்திரன், த்ரிபுராந்தகன் என்ற ருத்ரனோ, சுர நாயகன், மகேந்திரன் என்று புகழ் பெற்ற இந்திரனோ, போரில் ராமனுக்கு எதிரில் நின்று தோற்பவனை, அதாவது ராமனால் வதம் செய்யப் பட இருக்கும் ஜீவனை காக்கத் திறமையற்றவர்களே. தனக்கு நிகர் இல்லாதவன், என்றும் தீனமாக பணிந்தறியாதவன், கௌரவத்தோடு நிமிர்ந்து நின்றே பழகியவன், என்று இப்படி அந்த வானரம் பேசியதைக் கேட்டு தனக்கு பிடிக்காத, அனிஷ்டமான சொற்களால் சினந்தவனாக, தசானனன், ஆத்திரத்துடன் கண்களை இடுக்கிக் கொண்டு அந்த மகா கபியை வதம் செய்ய உத்தரவிட்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ஹனுமது3பதேச: என்ற ஐம்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 52 (391) தூத வத4 நிவாரணம் (தூது வந்தவனை வதம் செய்யக் கூடாது என்று தடுத்தல்)
அந்த வானரம் தைரியமாக, தெளிவாக சொன்ன அறிவுரைகள் ராவணனுக்கு ஏற்கவில்லை. ஆத்திரத்துடன் வதம் செய்ய உத்திரவு இட்டு விட்டான். ராவணன் யோசியாமல் உத்தரவிட்டதை அவன் சகோதரன் விபீஷணன் அனுமதிக்கவில்லை. தூதனாக வந்தவன் தான் சொல்ல வந்த செய்தியைச் சொன்னான். இதில் அவன் தவறு எதுவுமில்லை. இந்த உண்மையையும், ராவணன் அந்த சமயத்தில் இட்ட கட்டளையையும், மறுத்து செய்ய வேண்டியதையும் மனதில் நினைத்து பார்த்துக் கொண்டான் விபீஷணன். மிகவும் கவனமாக வார்த்தைகளை யோசித்து, தவறு எதுவும் நேர்ந்து விடாமல், கவனமாக தமையனின் எதிரில் நின்று ராஜ தர்மத்தை நினைவூட்டினான். ராக்ஷஸேந்திரா, க்ஷமஸ்வ. பொறு. தயவு செய்து நான் சொல்வதைக் கேள். பூமியை ஆளும் சக்ரவர்த்திகள், தூதனாக வந்தவனை வதம் செய்வதில்லை. இது ராஜ தர்ம விருத்தமானது, ராஜ தர்மத்துக்கு ஒவ்வாதது. சாதாரண உலக வழக்கிலும் நிந்திக்கப் பெறுவது. வீரனே, உன் தகுதிக்கு ஏற்றதுமல்ல. சாதாரண வானரம், இதைக் கொல்வதில் உனக்கு என்ன பெருமை இருக்கிறது. நீ தர்மம் அறிந்தவன். க்ருதக்ஞன்- செய் நன்றி மறவாதவன். ராஜ தர்மத்தை நன்றாக உணர்ந்தவன். உலகில் மற்றவர்களுக்கு நீயே முன்னோடியாக இருக்கும் தகுதி பெற்றவன். உன் போன்றவர்கள் கூட ஆத்திரத்தில் அறிவிழந்து செயல் படுவார்களேயானால், சாஸ்திரங்களை முறையாக கற்றுத் தேறுதல் எந்த அளவு பயனளிக்கும் என்பது கேள்விக் குறியாகும். வெறும் சிரமம் மட்டும் தானா, கல்வி, கேள்வி அறிவுகள்? கற்றலும் கேட்டலும் பயனற்றவையா? அதனால் சத்ருக்களை அடக்கும் சக்தி வாய்ந்த ராக்ஷஸனே, பொறு. சற்று கவனமாக கேள். நீ யுத்தம் என்று வந்தால் எளிதில் வெல்ல முடியாத பலசாலிதான். சந்தேகமே இல்லை. தற்சமயம் செய்ய வேண்டியது என்ன என்பதை யோசித்து செய். தூதனுக்கு தண்டனை கொடு. ராக்ஷஸேஸ்வரன் ராவணன் விபீஷணன் சொன்னதைக் கேட்டான். விபீஷணா, பாபம் செய்தவனிடம், நாமும் பாபத்தையே செய்வதால் பெரிய அனர்த்தம் எதுவுமில்லை. அதனால், இந்த வானரத்தை வதம் செய்கிறேன். இவன் செய்ததும் பெரிய அக்கிரமம். இப்படி ராவணன் அதர்மமாகப் பேசியதைக் கேட்டு, விபீஷணன் மேலும் சொன்னான் கோபத்தில், தன் நிலை மறந்து பண்பில்லாமல் பேசுபவனை திருத்தியாக வேண்டும். லங்கேஸ்வரா, ப்ரசீத3, தயவு செய். யுத்த தர்மத்தை நினைத்து பார். தூதர்களைக் கொல்லக் கூடாது என்று தான் பெரியவர்கள், அறிஞர்கள் சொல்லியிருக்கிறார்கள். சந்தேகமில்லாமல் இவன் சத்ரு பக்ஷத்தவன். இவன் செய்ததும் நியாயமல்ல. ஆனாலும் தூதனுக்கு பலவிதமாக தண்டனைகள் விதிப்பதுண்டு. வதம் செய்வதில்லை. உடலில் அங்கங்களை சிதைக்கலாம். சாட்டையால் அடிக்கலாம். தலை கேசத்தை மழிக்கலாம். அதே போல அடையாளத்தை அழிக்கலாம். இவையெல்லாம் தூதனுக்கு தரக் கூடிய தண்டனைகள். இவை தவிர, வதம் செய்வது என்பது நாங்கள் கேட்டதில்லை. உன்னைப் போன்றவர்கள், எந்த விதமான தூண்டுதலிலும் கோபத்தை வெளிக் காட்ட மாட்டார்கள். தனக்குள் அடக்கிக் கொண்டு செய்ய வேண்டியதை கவனமாக செய்ய வேண்டும். கோபத்தின் வழியே போவது உன் போன்ற ஆற்றல் மிகுந்த வீரர்களுக்கு அழகல்ல. எல்லா சுராசுரர்களிலும் உத்தமமான சக்தி படைத்தவன். தர்மத்தை விவாதிப்பதிலும் லௌகீகத்தை கடை பிடிப்பதிலும், சாஸ்திரங்களை அலசி ஆராய்வதிலும், சாஸ்திரங்களில் சொல்லப் பட்டுள்ள நன்மைகளை ஏற்றுக் கொள்வதிலும், உனக்கு சமமாக யாரும் இல்லை. சூரனும், வீரனுமான உன்னால் ராக்ஷஸ குலமே பெருமை அடைந்திருக்கிறது. அடிக்கடி போரில் மற்ற சிற்றரசர்களை வென்று வெற்றிக் கொடி நாட்டி இருக்கிறோம். யாரிடமும் தோல்வியறியாத வீரன், அமர சத்ரு, உன்னிடம் தவறாக நடந்து கொண்ட பலர், அதன் பலனை அனுபவித்திருக்கிறார்கள். அப்படியிருக்க, இந்த கபியை வதம் செய்வதில் எதுவும் பெருமை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. எவர்கள் இந்த வானரத்தை தூதாக அனுப்பியிருக்கிறார்களோ, அவர்களை கொல்வாய், தண்டனை அவர்களுக்கு கொடு. அவர்களோடு விரோதம் பாராட்டுவதும் நியாயம். சாதுவோ, இல்லையோ, யாரோ மற்றவர்களால் அனுப்பப்பட்டவன். நல்லதோ, பொல்லாதோ, மற்றவர்களுக்காக, அவர்கள் சொன்ன சொல்லை திருப்பி சொல்லியிருக்கிறான். தூதனின் வேலை அது. அதனாலேயே தூதனை கொல்வது கூடாது. தவிர, இவனைக் கொன்று விட்டால், மற்றொருவன் இவனைப் போலவே சக்தி வாய்ந்தவன், ஆகாய மார்கமாக வரக் கூடியவன் இருப்பானா என்பது சந்தேகமே. இங்கு வேறு யார் வரப் போகிறார்கள். அதனால் பரபுரஞ்ஜய, இந்த வானரத்தை வதம் செய்ய வேண்டாம். இந்திரன் உள்ளிட்ட தேவர்களிடம் உங்கள் பலத்தைக் காட்டலாம். இளைய சகோதரன் கூற்றில் நியாயம் இருப்பதை ராக்ஷஸ ராஜன் ஏற்றுக் கொண்டான். அந்த சொல்லின் நியாயத்தை உணர்ந்து, கோபத்தை தன்னுள் அடக்கிக் கொண்டு இயல்பான குரலில் விபீஷணனோடு பேசலானான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் தூத வத4 நிவாரணம்: என்ற ஐம்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 53 (392) பாவக சைத்யம் (நெருப்பு குளுமையாதல்)
ராவணன் சமயோசிதமாக பேசத் தெரிந்தவன். விபீஷணனுக்கு மறு மொழி சொன்னான். விபீஷணா, நீ சொல்வதும் சரியே. தூதனை வதம் செய்வது நிந்திக்கத் தக்கதே. வதம் செய்யாமல். இவனுக்கு வேறு ஏதாவது தண்டனை கொடுக்கலாம். கபிகளுக்கு வால் மிகவும் இஷ்டமானது. வால் தானே வானரங்களுக்கு பூஷணம். அதனால் அந்த வாலை தகித்து விடுங்கள். சீக்கிரம். வால் எரிந்த வானரமாகத் திரும்பிச் செல்லட்டும். அதன் பின் தன் பிரதானமான அங்கம் இழந்து வருந்தும் இவனே மற்றவர்களுக்கு பாடமாக இருப்பான். உற்றார், சுற்றார், பந்து மித்திரர்கள் பார்த்து சிரிக்கட்டும். ராக்ஷஸேந்திரன் மேலும் ஆணையிட்டான். இந்த வானரத்தின் வாலில் தீ வைத்து ஊர்வலமாக அழைத்துச் செல்லுங்கள் என்றான். இதைக் கேட்டு ராக்ஷஸர்கள், கிழிந்து போன பழைய துணிகள், உலர்ந்த பருத்தி துணைகளைக் கொண்டு வாலில் கட்டினர். இப்படி கட்டியபொழுது வானரன் தன் வாலை மேலும் நீளமாக ஆக்கிக் கொண்டான். காய்ந்து போன மரக் கட்டைகளில் பட்டதால் வளரும் ஹுதாஸனனை போல, வளர்ந்தான், ஹனுமான். எண்ணெய் விட்டு நனைத்து, பின் நெருப்பை வைத்தனர். எரியும் வாலுடன் ராக்ஷஸர்கள் அவனை கீழே தள்ளினர். இதனால் ஆத்திரம் அடைந்த ஹனுமானையும் எரியும் வாலையும் கண்டு ராக்ஷஸர்கள், ஸ்த்ரீகள், பா3ல, வ்ருத்3த4ர்கள் எல்லோருமே மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
மேலும் மேலும் பலர் வந்து அங்கு கூட்டம் கூடியது. இப்பொழுது என்ன செய்யலாம் என்று ஹனுமான் யோசித்து, கட்டப் பட்டிருந்த போதிலும், இந்த ராக்ஷஸர்களை என்னால் கொல்ல முடியும். என் எஜமானனின் கட்டளைப் படி நான் வந்து, என் கடமையை செய்யும் சமயம், இவர்கள் என்னைக் கட்டி வைத்து, வாலில் தீ வைத்து வேடிக்கை பார்க்கிறார்கள். வேறு வழியில்லை. நானும் என் ஆற்றலைக் காட்டுகிறேன். இந்த ராக்ஷஸர்கள் அனைவருக்கும் நான் ஒருவன் போதும். ஆயினும், ராமனுக்கு பிரியமானதை செய்ய நான் பொறுமையை கடை பிடிக்கிறேன். திரும்பவும் லங்கையைச் சுற்றி வர வேண்டியது தான். இரவில் நன்றாக பார்க்க முடியவில்லை. மறு முறை லங்கையை நன்றாக அதன் கோட்டை கொத்தளங்களோடு பார்க்கிறேன். கட்டுக்குள் இருக்கும் என்னை, வாலை எரித்தது போதாது என்று இந்த ராக்ஷஸர்கள் மேலும் துன்புறுத்தக் கூடும். அதனாலும் நான் ஓரிடத்தில் இல்லாமல் சுற்றுவது தான் தப்பிக்கும் வழியாகும். ஹனுமானை சுற்றி நின்று கொண்டு ராக்ஷஸர்கள் குதூகலமாக கிளம்பினர். சங்கம், பே4ரி, முதலிய வாத்ய கோஷங்களுடன், கோஷம் இட்டுக் கொண்டு, ஊரைச் சுற்றி அழைத்துச் சென்றனர். ராக்ஷஸர்கள் அழைத்துச் செல்கிறார்கள் என்று ஹனுமான் சுகமாக, போகும் இடங்களை ரசித்துக் கொண்டே சென்றான். விசித்ரமான விமானங்களைக் கண்டான். பூமியின் பல இடங்க ளில் வளைவாக இருந்ததை, அழகாக கட்டப் பட்டிருந்த நாற்சந்திகள், அகலமான வீதிகள், வரிசையாக வீடுகள், அழகிய மாட மாளிகைகள், ரதம் ஓடும் வீதிகள், இதற்கு இடையில் சிறிய ரத வீதிகள், வீடுகள் அதே போல ஒன்றுக்குள் ஒன்றாகவும், தனித் தனியாகவும், மேகம் போன்று பெரிய வீடுகள், நான்கு வீதிகள் கூடும் இடங்களிலும், ராஜ மார்கத்திலும் அதே போல பல இடங்களைக் கண்டான். ஒற்றன் இவன் என்று ராக்ஷஸர்கள் உரத்த குரலில் அறிவித்துக் கொண்டே சென்றனர். ஸ்த்ரீ, பால, வ்ருத்தர்களும், குதூகலமாக உடன் சென்றனர். அந்த ஹனுமானை எரியும் வாலுடன் கண்டவர்கள், வாலின் நுனியில் கொழுந்து விட்டெரியும் அக்னி ஜ்வாலையைக் கண்டனர். ராக்ஷஸிகளில் சிலர் இதை தேவியிடம் தெரிவித்தனர். தேவிக்கு இதனால் மன வருத்தம் ஏற்படும் என்று வேண்டுமென்றே தெரிவித்தார்கள். சீதே, உன்னுடன் பேசிக் கொண்டிருந்தானே, தாம்ர முகத்துடன் ஒரு கபி, அவன் வாலில் தீ வைத்து எரியச் செய்து, இதோ ஊர்வலமாக அழைத்துச் செல்கிறார்கள்.
இந்த கொடிய செய்தியைக் கேட்டு சீதை பதறினாள். வேதனையால் முகம் வாடியது. அக்னியை உபாசித்தாள். மகா கபியின் க்ஷேமத்திற்காக மனம் உருகி வேண்டினாள். ஹவ்ய வாஹனன் என்று பெயர் பெற்ற அக்னியிடம் பிரார்த்தனை செய்தாள். அக்னி தேவனே, என்னிடத்தில் பதிவிரதா தர்மத்தை அனுஷ்டித்து, நன்னடத்தை சிறிதேனும் இருக்குமானால், ஹனுமானிடம் குளிர்ந்து இரு. ஏக பத்னியாக நான் இருப்பது உண்மையானால், அக்னி தேவனே, அனுமானிடம் குளிர்ச்சியாக இரு. என் பதியான ராமனுக்கு சிறிதளவாவது என்னிடம் தயை இருக்குமானால், ஹனுமானிடம் குளிர்ச்சியாக இரு. என் பாக்யம் ஏதாவது மீதி இருக்குமானால், அனுமானிடம் குளிர்ச்சியாக இரு. நான் நன்னடத்தை உள்ளவள் தான், அவனுடன் திரும்பவும் கூடி வாழவே ஆசைப் படுகிறேன் என்பதை தர்மாத்மாவான (ராமன்) உணருவானேயானால், அனுமானிடம் குளிர்ச்சியாக இரு. ஆர்ய: சுக்ரீவன் என்னை இந்த சிறையிலிருந்து மீட்பது சாத்யமானால், ஹனுமானிடம் குளிர்ச்சியாக இரு. சத்ய சங்கரன் சுக்ரீவன் என்று அறிந்தேன். அவன் இந்த துக்கம் என்ற சாகரத்திலிருந்து என்னை மீட்பது உண்டானால், ஹனுமானிடம் குளிர்ச்சியாக இரு. அச்சமயம், ப்ரதக்ஷிணமாக தன் நாக்குகளுடன் அக்னி வலம் வந்து நன்மை தான் நடக்கும் என்று சொல்வது போல அவள் முன் தோன்றியது. ஹனுமானின் ஜனகனான வாயுவும், வாலின் நுனியில் இருந்த அக்னியுடன் சேர்ந்து நன்மை செய்யும் விதமாக காலை நேர இளம் காற்று குளுமையாக வீசுவது போல வீசினான். லாங்கூலம்- வால், எரிவது போல தோற்றம் தெரிகிறது, சுடவில்லையே என்று வானரன் யோசித்தான். மகா ஜ்வாலை தெரிகிறது. எனக்கு வெந்த ரணம் ஏற்படவில்லையே. குளிர் காலத்தில் தோன்றும் நடுக்கம் தான் என் வாலின் நுனியில் தெரிகிறது. ஆனால், இது நான் சாகரத்தைக் கடக்க தாவி குதித்து வந்த சமயம் அறிந்து அனுபவித்தது தான். ராம ப்ரபாவத்தால் ஆச்சர்யம், மலை ஒன்று சாகரத்திலிருந்து எழுந்து வந்து உபசரித்தது. மைனாக மலைக்கும், சமுத்திர ராஜனுக்கும் ராமன் விஷயமாக இவ்வளவு பர பரப்பு இருக்குமானால், அக்னி ஏன் செய்யாது. சீதையின் கருணையாலும், ராமனின் தேஜஸாலும், அக்னி என்னைச் சுடவில்லை. என் தந்தையின் சகா. அதுவும் ஒரு காரணம். திரும்பவும் யோசித்தான். வேகமாக தாவிக் குதித்து வானத்தில் நின்றபடி, ஜய கோஷம் செய்தான். சைலத்தின் சிகரம் போல இருந்த நகரத்தின் கோட்டை வாயிலில் நின்று கொண்டான். தன்னையும் அந்த கோட்டைக்கு இணையாக வளர்த்துக் கொண்டான். திடுமென சிறு உருவம் எடுத்து, கட்டுகளைத் தெறித்து விழச் செய்தான். தான் விடுபட்டவுடன், திரும்பவும் பர்வதம் போல ஆனான். கருப்பு, இரும்பாலான பரிகம், (குறுக்கு கட்டை) அதை கையில் எடுத்துக் கொண்டான். கோட்டையில் காவலுக்கு இருந்த காவலர்களை அடிக்க ஆரம்பித்தான். அவர்களை அடித்து, ரண சண்டனாக, லங்கையை திரும்பவும் பார்த்தான். வாலின் நுனியில் எரியும் அக்னியின் ஜ்வாலைகளுடன், ஆதித்யன் தன் கிரணங்களோடு பிரகாசிப்பது போல பிரகாசித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் பாவக சைத்யம் என்ற ஐம்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 54 (393) லங்கா தா3ஹ: (லங்கை எரிதல்)
தன் மனோரதம் பூர்த்தியான திருப்தியுடன் லங்கையைப் பார்த்த ஹனுமான், குதூகலம் மேலும் பெருக, அடுத்த காரியத்தைப் பற்றி சிந்தித்தான். தற்சமயம் நான் செய்ய வேண்டியது என்ன? மீதி இருப்பது எது? இந்த ராக்ஷஸர்களை திரும்பவும் சற்று வாட்டி எடுக்கும்படி என்ன செய்யலாம்? வனத்தை அழித்தாயிற்று. நிறைய ராக்ஷஸர்களை வதம் செய்தாகி விட்டது. மீதி இருப்பது இந்த கோட்டையை அழிப்பது தான். படை பலத்தில் ஒரு பகுதியை அழித்தாயிற்று. இந்த கோட்டையை தகர்த்து விட்டால், பெரும் பகுதி காரியம் ஆனது போலத் தான். மிகச் சுலபமாக என் சக்தியை உபயோகித்து இந்த செயலைச் செய்து விட்டால், பின்னால் மிகவும் உபயோகமாகும். என் வாலின் நுனியில் எரிந்து கொண்டிருக்கும் ஹவ்ய வாகனனை, இதற்குத் தகுந்த ஆகாராதிகள் கொடுத்து உபசரிப்பது நியாயமே. அது இந்த உத்தமமான க்ருஹங்களாக, வீடுகளாக இருக்கட்டுமே. உடனே, மின்னலுடன் கூடிய மேகம் போல, வீட்டுக்கு வீடு, உத்யான வனங்களிலிருந்து மற்றொரு உத்யான வனம் என்று சஞ்சரித்தான். சற்றும் பயமின்றி மாளிகைகளின் மேல் நடந்தான். ப்ரஹஸ்தனுடைய மாளிகையில் இறங்கி அங்கு அக்னியை விழச்செய்து விட்டு, மற்றொரு மாளிகைக்கு தாவி குதித்து ஏறினான். மகா பார்ஸ்வன் வீடு. காலானல- ப்ரளய கால அக்னி ஜ்வாலை போல அங்கும் தீயை வைத்து விட்டு, வஜ்ரதம்ஷ்டிரன் வீட்டில் இறங்கினான். சுகன் வீடு, சாரணன் வீடு, முதலியோர்களின் வீட்டில் இறங்கினான். அங்கும் தன் வாலின் தீயைத் தட்டி விட்டான். இந்திரஜித் வீடு வந்தது. அதையும் இதே போல அக்னியில் மூழ்கச் செய்தான். ஜம்புமாலி, சுமாலி இவர்கள் வீடுகளும் தீக்கு இரையாகின. ரஸ்மி கேதுவின் ப4வனம், சூர்ய சத்ருவின் ப4வனம், ஹ்ரஸ்வ கர்ணனின், தம்ஷ்டிரனின் ரோமசன், யுத்தோன்மத்தன், மத்தன், த்வஜக்ரீவன், என்ற ராக்ஷஸன், கோரமான வித்யுத்ஜிஹ்வன், (நாக்கு மின்னலைப் போல உள்ளவன்), ஹஸ்தி முகன், கராளன், விசாலன், சோணிதாக்ஷன்,- இவர்கள் வீடுகள், அடுத்து கும்பகர்ணன் மாளிகை, மகராக்ஷன் வீடு, யக்ஞ சத்ருவின் ப4வனம், ப்ரும்ம சத்ருவின் ப4வனம், நராந்தகனுடைய, கும்ப, நிகும்பர்களின் ப4வனம், விபீஷண க்ருஹத்தை மட்டும் விட்டு வைத்தவனாக, மற்ற எல்லா க்ருஹங்களிலும் தன் வாலின் நெருப்பை உதிர்த்தான். வரிசையாக வீடுகளை தீக்கு இரையாக்கி, செல்வந்தர்களான அவர்களின் செல்வ செழிப்பையும் தீக்கு இரையாக்கினான். எல்லா வீடுகளையும் கடந்து வந்து, ராவணன் இருந்த மாளிகையை அடைந்தான், சர்வ மங்களமும் சோபித்த அந்த மையமான மாளிகையில், ரத்னங்களும், உயர்ந்த தங்கத்தால் இழைக்கப் பட்ட வேலைப் பாடுகளுடன் கூடிய அரண்மனையிலும் தன் வாலின் தீயை உதிர்த்து விட்டு எரியச் செய்தான். மேரு மலை போன்ற அந்த மா ளிகையிலும் அக்னி ஜ்வாலை விட்டெரியலாயிற்று. யுக முடிவில் இடி இடிப்பது போல வானர வீரன் உரக்க கோஷமிட்டான். வாயுவின் உதவியால் வெகு வேகமாக, காலக்னி போல ஹுதாஸனன் (ஹோமம் செய்வதை உண்பவன்)- அக்னி வளர்ந்தது. வாலிலிருந்து உதிர்ந்த அக்னியை, வாயு தேவன் மேலும் வளர உதவி செய்து வீடுகளில் பரவச் செய்தான். அக்னி தேவன் மேலும் வளர்ந்தான். காஞ்சன மயமான வலைகளுடன் கூடிய சாளரங்கள், ரத்னங்கள் பதிக்கப் பட்ட பெரிய விமானங்கள், உடைந்து பூமியில் விழுந்தன. புண்யம் தீர்ந்தவுடன் ஆகாயத்திலிருந்து விழும் சித்தர்கள் போல விழுந்தன. ராக்ஷஸர்கள் இங்கும் அங்குமாக ஓடும் சத்தம் பெரும் அளவில் கேட்டது. தங்கள் வீடுகளைக் காப்பாற்றிக் கொள்ள அலறும் அலறல் கேட்டது. ஹா, இந்த வானர ரூபத்தில் வந்தது அக்னி தேவனே தானோ? என்ற பேச்சுக் குரல் கேட்டது. கையில் குழந்தைகளுடன் ஹா என்று வீரிட்டு அலறியபடி பெண்கள் ஓடினர். தலை கேசம் அவிழ்ந்து புரள, வீடுகளிலிருந்து வெளியேறினர். சௌதாமினிகள், வானத்திலிருந்து விழுவது போல வீடுகளிலிருந்து வெளிவர, அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்க ளின் ஒளி,, விசித்ரமான கலவையாக, வைர, வைமூடுரிய, வஜ்ர, முத்து, வெள்ளி இவைகள் ப்ரதானமாகத் தெரியக் கண்டான். அக்னியின் பசிக்கு அளவேது? எவ்வளவு கட்டைகளும், புல்லும் இருந்தாலும் திருப்தியடைவதில்லை. ஹனுமானும் இந்த விளையாட்டில் இன்னமும் திருப்தியடையவில்லை. அக்னியின் ஜ்வாலை சில இடங்களில் சிம்சுபம் போல காணப்பட்டது. சில இடங்களில் சால்மலி போல, சில இடங்களில் குங்கும சிவப்பாக காணப்பட்டது. ருத்ரன், த்ரிபுரத்தை எரித்தது போல, ஹனுமான் என்ற வானரத்தால் லங்காநகரம் எரிக்கப் பட்டது. இதன்பின் லங்கா நகரத்தின் மலை மேல் நின்றபடி, வளையல் போல வாலில் சுற்றப் பட்டிருந்த துணிகளான தீ பந்தத்தை வீசியெறிந்தான். யுக முடிவோ, அக்னியும் வாயுவும் சேர்ந்து உலகையே அழிக்க வந்து விட்டார்களா, என்று தோன்றியது. சற்றும் புகையின்றி, வீடுக ளிலிருந்து ப்ரகாசம் மட்டுமே தெரிய, ராக்ஷஸர்க ளின் சரீரத்திலும் அக்னி பொறிகள் சமர்பிக்கப் பட்டிருந்ததைப் போல இருந்தது. கோடி ஆதித்யர்கள் ஒன்றாக எழுந்து வந்தது போலவும், லங்கா நகரம் முழுவதையும் அடைத்துக் கொண்டு நிற்பது போலவும், பலவிதமான சப்தங்கள், கற்கள் விழுவது போல உலகையே உடைப்பது போல, ஆரவாரம் செய்து கொண்டு, அக்னி வளர்ந்து பரவியது. ஆகாயத்தில் இதன் பிரதி பிம்பம் நீலோத்பலம் போல காணப் பட்டது. ஜனங்கள், வஜ்ராயுதத்துடன் இந்திரனோ? முப்பது கோடி தேவர்களின் தலைவன் தானோ? சந்திரனோ, எதுவானாலும் இந்த வானரம், காலனே உருவெடுத்து வந்தவன் தான். ப்ரும்மாவின் கோபம் தான் வானர ரூபம் எடுத்து வந்து விட்டதோ, சர்வ பிதாமகர், எல்லா ஜீவ ராசிகளையும் ஸ்ருஷ்டி செய்பவர், சதுரானனன், கோபம் கொண்டாரோ? அல்லது வைஷ்ணவமான சக்தி தான் கபி ரூபம் எடுத்து வந்ததோ? ராக்ஷஸர்களை அழிக்க, நல்ல தேஜஸுடன் வந்து நிற்கிறதோ, அனந்தன், அவ்யக்தன், அசிந்த்யன், என்ற ஒன்று (பர ப்ரும்மம் தான்) தன் மாயையால், தற்சமயம் வானர ரூபத்தில் வந்துள்ளதோ, இப்படி பல விதமாக பேசிக் கொண்டார்கள். கூடிக் கூடி, தங்களுக்குள் அங்கலாய்த்தனர். பிராணிகள் கூட்டம், வீடுகள், மரங்கள், எல்லாமாகச் சேர்ந்து திடுமென எரிந்து சாம்பலானதைக் கண்டும் எதுவும் செய்ய இலயாமையால் தவித்தனர். அஸ்வங்கள், யானைகள், ராக்ஷஸர்கள், பக்ஷி கூட்டங்கள், மிருகங்கள், மரங்கள் எல்லாமாக, எந்த வித பாகு பாடும் இன்றி அக்னிக்கு இரையாக, இதனால் எழுந்த ஓலம் மிகவும் அதிகமாக இருந்தது. ஹா தாத, ஹா புத்ரக, காந்த, மித்ர, ஹா என் புண்யமான போகமயமான வாழ்க்கையே, என்ன ஆனாய்? என்று ராக்ஷஸர்களின் அழுகுரல் லங்கையை நிறைத்தது. சாபத்தால் பீடிக்கப் பட்டது போல லங்கா நகரம் அக்னியில் வாயில் விழுந்தவள், தன் வீரர்களும், போர் வீரர்களும், மடிவதைக் கண்டவள், ஹனுமானின் கோபம் என்ற பலம் தன்னைக் கட்டி வதைப்பது போல உணர்ந்தாள். ஸ்வயம்பு கோபத்தால் தகிக்கப் பட்டது போல பூமியைக் கண்டான், ஹனுமான். சிறந்த மரங்கள் இருந்த வனத்தை உடைத்து பல ராக்ஷஸர்களை போரில் அழித்து, சிறந்த வீடுகள் இருந்த ஊரையும் எரித்து, பவனாத்மஜனான கபி ஹனுமான் கிளம்பினான். த்ரிகூட மலையின் சிகரத்தில், நின்றபடி, வாலில் பிரகாசமாக தெரிந்த அக்னியின் ஜ்வாலையுடன் கிரணங்களுடன் ப்ரகாசிக்கும் ஆதித்யன் போல ப்ரகாசித்தான். ராக்ஷஸர்களை பெருமளவில் அடித்து வீழ்த்தி, நிறைந்த மரங்களுடன் இருந்த வனத்தை சின்னா பின்னமாக்கி, ராக்ஷஸ வீடுகளில் அக்னியை வைத்து எரிய விட்டு, தன் மனதால் ராமனை சென்றடைந்தான். தேவ கணங்கள் வந்து அந்த மாருதனை துதித்தனர். வானர வீர முக்யன், மகா பலவான், மாருத துல்ய வேகன், மகா மதி, வாயு சுதன் என்று தோத்திரம் செய்தனர். மகா கபியின் சாதனைகளாக, யுத்தம், செய்து ராக்ஷஸர்களை அழித்ததை, வனத்தை அழித்ததை, லங்கா புரியை எரித்ததை சொன்னார்கள். எரியும் லங்கா நகரை ஆச்சர்யத்துடன் பார்த்தனர். வானர ஸ்ரேஷ்டனான மகா கபியைக் கண்டு, காலாக்னியோ என்று உயிரினங்கள் பயந்தன. எல்லா தேவர்களும் முனி புங்கவர்களும், கந்தர்வ, வித்யாதர, கின்னரர்களும் எல்லா உயிரினங்களும், சொல்ல முடியாத மகிழ்ச்சியும் அடைந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் லங்கா தா3ஹோ என்ற ஐம்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 55 (394) ஹனுமத் விப்4ரம: (ஹனுமானின் பதட்டம்)
வால் நுனியில் இருந்த அக்னியை லங்கை முழுவதும் பரவச் செய்து விட்டு, வானர வீரன், சமுத்திர ஜலத்தில் தன் வாலை நனைத்து. அக்னியை அனைத்தான். எரிந்து கொண்டிருந்த லங்கையை நோக்கியவன், ராக்ஷஸர்கள் அலறுவதை கேட்டுக்கொண்டிருந்தவன், திடுமென ஒரு சந்தேகம் தோன்ற பயந்தான். தன்னைத் தானே நொந்து கொண்டான். ஆஹா, லங்கையை எரித்து நான் என்ன காரியம் செய்து விட்டேன். கோபத்தை, தன் புத்தியால் அடக்கும் புருஷ ஸ்ரேஷ்டர்கள் த$ன்யர்கள். அக்னி ஜ்வாலையை நீர் விட்டு அனைப்பது போல இவர்கள் தங்களிடம் எழும் கோபத்தை அடக்கி விடுவார்கள். ஆத்திரத்தில் சுய புத்தியை இழந்தவன் என்னதான் செய்ய மாட்டான்? குருவை கூட அடிப்பான். ஆத்திரம் கொண்டவன் கடும் சொற்களால் நல்லவர்களையும் வீணாக பழி சுமத்தி வருத்துவான். சொல்லக் கூடியது, சொல்லக் கூடாதது என்ற பாகு பாடு அவனுக்குத் தெரியாமல் போய் விடும். செய்யக் கூடாது என்பது ஆத்திரம் கொண்ட சமயம் புத்தியில் உறைக்காது. சொல்லக் கூடாது என்றும் எதுவும் இருப்பதில்லை. எவன் தன்னுள் எழும் கோபத்தை பொறுமையோடு அடக்கிக் கொள்கிறானோ, நல்ல பாம்பு தன் சட்டையை உரிப்பது போல உதறி விட்டுப் போகிறானோ, அவன் தான் புருஷ சத்தமன். திக், என் புத்தி, துர்புத்தி வெட்கம் அறியாதது. பாபத்தை செய்ய துணிந்து விட்டது. இந்த லங்கையை அக்னிக்கு இரையாக்கி, நான் என் எஜமானரின் காரியத்தையே கெடுத்து விட்டேனே. சிறிதளவே மீதியிருந்த காரியம். இதில் ஆத்திரத்தில் நான் வேரையே அழித்து விட்டேன். எரியும் லங்கையில் ஜானகியும் அழிந்து போய் இருப்பாள். எதுவுமே மீதியில்லை போலத் தெரிகிறது. லங்காபுரம் முழுவதும் சாம்பலாகி கிடக்கிறது. நான் செய்த இந்த அவசரக் காரியம், இதே போல ஜானகியையும் அழித்து விட்டிருந்தால், நான் இங்கேயே உயிரை விடுவேன். நானும் இந்த அக்னியில் விழுந்து விடவா, அல்லது இதை விட பெரிய வடவா முக அக்னி தேவையா? என் உடலை இந்த கடல் வாழ் ஜந்துக்களுக்கு இரையாக்கி விடுவது நல்லது. திரும்பிப் போய் நான் சுக்ரீவன் முகத்தில் எப்படி விழிப்பேன்? அந்த ராஜ குமாரர்களை எப்படிக் காண்பேன்? வந்த வேலையை விபரீதமாக கெடுத்து விட்ட நான் உயிருடன் திரும்பி போய்த் தான் என்ன பயன்? என் ஆத்திரத்தால், மூவுலகிலும் என் வானர இயல்பை பிரகடனப் படுத்தி விட்டேன். ஹா, என்ன ராஜஸமான குணம்? திக், என்னுள் எழுந்த ராஜஸ பாவத்தின் பாதிப்பால் (பழி வாங்கும் எண்ணம், போர் புரிதல், தண்டனை கொடுத்தல்- இவை ராஜஸ குணம்) நான் சீதையை ரக்ஷிக்கத் தவறி விட்டேனே. இந்த அக்னி தேவியையும் தாக்கியிருந்தால், உயிர் பிரிந்திருந்தால், அந்த ராஜகுமாரர்களும் உயிர் தரித்து இருக்க மாட்டார்கள். அவர்கள் நாசம் அடைந்தால், சுக்ரீவனும் உயிரை விடுவான். உற்றார் உறவினரோடு அழிவான். இது போல இவர்கள் மாண்டதைக் கேட்டால் பரதனும் இருக்க மாட்டான். அவன் சகோதர பாசம் மிகுந்தவன். தர்மாத்மா அவன். அவனும் சத்ருக்னனும் எப்படி உயிருடன் இருப்பார்கள். இக்ஷ்வாகு வம்சமே அழியும். பிரஜைகளும் இதே வேதனையில் வாடுவார்கள். நான் தான் அதிர்ஷ்டக் கட்டை. என் ஆத்திரத்தால் அறிவிழந்து செய்த செயலால் இப்படி அழிவுக்கு காரணமானேன். இப்படி எண்ணி வருந்திய சமயம் சில நற் சகுனங்கள் தோன்றின. முன்னமே இந்த சகுனங்கள் நன்மையை குறித்தன. நன்மையை உண்டாக்கியதும் நினைவுக்கு வந்தது. உடன் ஹனுமானின் சிந்தனையும் திசை திரும்பியது. அந்த அழகிய உடல் அமைப்பு கொண்ட ராஜ குமாரி, தன் தேஜஸால் தன்னை காத்துக் கொண்டிருப்பாள். அவளை இந்த அக்னி ஒன்றும் செய்திருக்காது. அக்னி அக்னியை என்ன செய்யும்? அந்த தர்மாத்மாவின் பா4ர்யையை, தன் நன்னடத்தையையே தனக்கு காவலாக கொண்டுள்ளவளை, அக்னி தொடக் கூட முடியாது. பரதன் முதலான மூவருக்கும் தேவதையாக இருப்பவள், ராமனுடைய மனதுக்கு இனியவளான காந்தா, அவள் எப்படி அழிவாள்? இந்த தகன காரியத்தில் பிரபுவான அக்னி தேவன் என்னையே சுட வில்லையே. எப்படி தேவியைத் தாக்கியிருப்பான்? இருக்காது. திரும்பவும் யோசித்த ஹனுமான், சமுத்திர ஜலத்தில் நடுவில் எழுந்த ஹிரண்ய நாபன் என்ற மைனாக மலை எனக்கு உதவ முன் வந்ததே, அதுவே தேவியின் தவ வலிமையாலும், மனதாலும் மாற்றானை தொடாத பதிவிரதா தர்மத்தாலும் தான் சாத்யமாகியிருக்க வேண்டும். அந்த தேவியே அக்னியை எரித்தாலும் எரிக்கலாமேயன்றி அவளை அக்னி எதுவும் செய்யாது என்பது நிச்சயம். இப்படி சிந்தனை மனதில் ஓடிக் கொண்டிருக்கும் பொழுதே வானில் சிலர் பேசிக் கொண்டு போவது கேட்டது. அடடா, ஹனுமான் செய்தது மிக அரிய செயல். அக்னியை ராக்ஷஸர்கள் நகரில் வீசி அவர்களை ஓட ஓட விரட்டி விட்டான். ஜனக் கூட்டம், ஸ்த்ரீ, பால , வ்ருத்தர்கள், மலையடிவாரத்தில் அழுது கொண்டு நிற்கிறார்கள். மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் எரிந்து விழச் செய்தவன், ஜானகியை மட்டும் காத்து விட்டான். ஜானகி எதுவும் ஆகாமல் தப்பியது நம் புண்ணியமே. அம்ருத தாரை போல இந்த சொற்கள், ஹனுமானின் காதில் விழுந்தன. மனதில் உற்சாகமும், மகிழ்ச்சியும் உண்டாயிற்று. ரிஷி கணங்கள், தங்களுக்குள் பேசிக் கொண்டதை கேட்டதாலும், மற்ற நிமித்தங்களாலும் ஜானகி பத்ரமாக இருப்பதை தெரிந்து கொண்டவன் திரும்பவும் அவளைப் பார்த்து விடை பெற்றுச் செல்லத் தீர்மானித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ஹனுமத் விப்4ரமோ என்ற ஐம்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 56 (395) பிரதி பிரயாண உத்பாதனம் (திரும்பிச் செல்ல குதித்துக் கொண்டு செல்லுதல்)
இதன் பின் சிம்சுபா மரத்தடியில் இருந்த தேவியை வந்து பார்த்து வணங்கி, நல்ல வேளை, அதிர்ஷ்ட வசமாக திரும்பவும் தங்களை நலமாக காண்கிறேன் தேவி, என்றான். தன் கணவனிடம் கொண்ட அன்பால் அவனைத் திரும்பத் திரும்ப பார்த்தாள், ஜானகி. ஹனுமானை பெயர் சொல்லி அழைத்து, ஹனுமன், நீ தான் இந்த மகத்தான செயலை செய்து முடிக்க வல்லவன். உன் பலமும், புகழும் வளரட்டும். தன் அம்புகளால் லங்கையை நிரப்பி, தன் சக்தியை நிரூபித்து விட்டு, ராமன் அழைத்துச் சென்றால், நான் மனம் மகிழ்வேன். அது தான் அவன் குலப் பெருமைக்கு ஏற்றது. அதனால் என்ன செய்தால், சொன்னால், அவன் வீறு கொண்டு எழுவானோ, போர் முனையில் தன் ஆற்றலைக் காட்டத் தயாராக ஆவானோ, அது போல சொல். ராகவனைத் தட்டி எழுப்பி, உற்சாகப் படுத்தும் செயலைச் செய். ஹனுமான் இச்சொல்லின் உட்பொருளை உணர்ந்து கொண்டான். சீதையின் எதிர்பார்ப்பையும் (ராமனே வந்து தன்னை மீட்கும் செயலை செய்ய விரும்புகிறாள் என்பதை) புரிந்து கொண்டான். அவ்விதமே செய்வதாக பதில் உரைத்தான். தேவி, சீக்கிரமே அவ்விருவரும் வந்து விடுவார்கள். இந்த நகரை ஜயித்து உன் வேதனையைத் தீர்ப்பார்கள். இப்படி சமாதானம் செய்து விட்டு ஹனுமான் தான் கிளம்ப ஆயத்தமாக கிரியின் மேல் ஆறி நின்றான். உயர்ந்து நின்ற சிகரம், பத்மங்கள் நிறைந்த குளங்கள், நீலமாகத் தெரிந்த வனத்தின் தாவரங்கள், நடுவில் உத்தரீயம் அணிந்தது போல மலைசாரலில் படர்ந்த திவாகரனின் கிரணங்கள் ஆதரவாக வருடிக் கொடுத்தன. தா4துப் பொருட்கள் கண் சிமிட்டுவது போல வெளியில் தெறித்தன. மேகங்கள் ஒன்றையொன்று முட்டி, தங்கள் இடியோசையால் பாடிக் காட்டுவது போல முழங்கியது. நெடிது வளர்ந்து காற்றில் ஆடிய தேவதாரு மரங்கள், தங்கள் கைகளை ஆட்டி விடை கொடுத்தன. வேகமாக ஓடி கீழே விழும் அருவிகளின் ஓசை ரம்யமாக செவிகளை நிரப்பியது. அந்த இடமே க3ந்த4ர்வ கானம் இசைப்பது போல இன்னிசையால் நிறைந்தது. சரத் கால மரங்கள் காற்றில் அசைந்து அந்த இசைக்கு உடன் பாடுவது போல ஒலியெழுப்பின. மூங்கில் காடுகளில் மரங்களில் நுழைந்து வெளிப் புகும் காற்று வேணு கானமாக, பறவைகளின் இரைச்சல் இதற்கு இசைய பக்க வாத்யம் வாசித்தன. ஆலகால விஷம் வெளிப்பட, கோபத்துடன் பெருமூச்சு விடும் நாகங்கள் கம்பீரமாக த்யானம் செய்வது போல அந்த குகைகளின் தோற்றம் தெரிய, அந்த மலைச் சிகரம், வானத்தை தொட முயலுவது போல உயர்ந்து நின்றது. பலவிதமான குகைகள், கண்ணுக்கு தெரிந்தும் தெரியாமலும் அந்த மலைச் சாரலில் இருந்தன. சால, தால, அஸ்வ கர்ண. வம்சம் போன்ற முதிர்ந்த மரங்கள் அதிக அளவில் காணப்பட்டன. பூத்துக் குலுங்கும் மலர்களுடன் பலவிதமான கொடிகள் அலங்காரமாக தெரிந்தன. பலவிதமான மிருகங்கள் வளைய வந்தன. அடுக்கி வைத்தது போன்ற பாறைகளின் இடையில் தாதுப் பொருட்கள் விழுந்து வர்ண மயமாகக் காணப்பட்டது. இடையிடையே ஓடும் அருவி நீர், பெருகுவதும் வடிவதுமாக ரம்யமாக இருந்தது. இங்கும் மகரிஷிகள், யக்ஷ, கந்தர்வ, கின்னர, உரக வர்கத்தினர் இருந்தனர். மலைகளின் குகைகளில் சிங்கம் முதலியவை வசித்தன. வ்யாக்ரம் என்ற புலிகள் கூட்டம் கூட்டமாகத் திரிந்தன. பழங்களும், காய் கறிகளும் மிகவும் ருசியுடன் இருந்தன. அந்த பர்வதத்தின் மேல் ஹனுமான் ஏறினான். மனதுள் உற்சாகம் பிரவகித்தது. ராமனைக் காணப் போகிறோம் என்ற ஆவல் மேலிட மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. கால் பட்டு உடைந்த மலை பாறைகள் உருண்டு விழும் சத்தமும் சேர்ந்து கொண்டது. மலையின் உச்சியில் ஏறிய பின் ஹனுமான் வளர ஆரம்பித்தான். கடலின் தென் கரையிலிருந்து வடக்கு கரை சேர, உப்பு நீர் கொண்ட கடலை வேண்டிக் கொண்டான். மீன்களும், நீர் பாம்புகளும், ஏராளமாக இருந்த சமுத்திரத்தை மலை மேலிருந்து கூர்ந்து நோக்கினான். மாருதனுடைய மகன், மாருதன் ஆகாயத்தில் இயல்பாக சஞ்சரிப்பது போல, தானும் சஞ்சரிக்கலானான். வடக்கு நோக்கிச் செல்ல மலையை உதைத்துக் கொண்டு கிளம்பினான். மரங்கள் விழ, நடுங்கும் சாகரமும், ஜீவன்கள் பயந்து ரஸாதலம் செல்வது போல விரைய, சற்று முன் பூத்துக் குலுங்கிய மரங்கள், சக்ராயுதத்தால் அடிபட்டது போல சாய்ந்தன. குகைகளில் அமைதியாக இருந்த சிங்கங்கள், இந்த நடுக்கத்தால் பாதிக்கப் பட்டவைகளாக, கர்ஜனை செய்தன. ஆகாயத்தை ஊடுருவிக் கொண்டு போவது போல அந்த கர்ஜனைகள் சென்று, திக்குகளில் பரவின. அந்த மலையின் ஒரு புறத்தில் நடமாடிக் கொண்டிருந்த வித்யாதரர்கள், செய்வதறியாது ஓடினர். ஆடை அணிகலன்களை சரி செய்து கொள்ளும் வரை கூட பொறுமையின்றி ஓடினர். தலையில் அடிபட்டது போல, நீண்ட நாக்குகளுடன் கூடிய விஷப் பாம்புகள், சீறிப் பாய்ந்தன. இந்த மலைக்குத் தான் ஏதோ ஆபத்து என்று எண்ணி கின்னரர்களும், கந்தர்வர்களும் யக்ஷ, வித்யாதர்களும், மலையைத் துறந்து ஆகாயத்தில் நின்றனர். அந்த மலையே தன்னைக் காத்துக் கொள்ள, தன்னை ஆச்ரயித்திருந்த மரங்களுடனும், மிருக, மற்ற ஜீவ ராசிகளுடனும் ரஸாதலம் சென்று விடுவது போல கீழ் நோக்கி அழுந்தியது. பத்து யோஜனை தூரம் விஸ்தாரமும், முப்பது யோஜனை தூரம் உயரமும் கொண்ட மலை பூமியோடு பூமியாய் ஆனது. ஹனுமான் சமுத்திரத்தைத் தாண்டுவதே கவனமாக எழும்பிக் குதித்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ப்ரதிப்ரயாணாயோத்பதனம் என்ற ஐம்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 57 (396) ஹனுமத் ப்ரத்யாக3மனம் (ஹனுமான் தென் கரை திரும்பி வருதல்)
ஆகாயத்தில் மலர்ந்த குமுதம் போல சந்திரன் பிரகாசமாகத் தெரிந்தான். சுபமான அர்க்க, காரண்டவ, போன்ற வெண் நிற புஷ்பங்கள், திவ்யமான சரவண நக்ஷத்திரங்களாகத் தெரிந்தன. மேகங்கள், மாலைகளாக திரண்டு வந்தன. ஆகாயமா, நதிக் கரையா? புனர்வசு நக்ஷத்திரமா, மகா மீனமாகவும், சிவந்த அங்கங்களுடன் மகாக்ரஹமும் (அங்காரகன்), ஐராவதம் என்ற யாணை மணல் திட்டு போலவும் தெரிய, ஸ்வாதி (நக்ஷத்திரம்) ஹம்ஸம் போல மிதந்து வர, காற்றில் அலையும் அலைகள் போல சந்திரனின் கிரணங்கள் குளுமையை வாரி இறைக்க, புஜங்க, யக்ஷ, கந்தர்வர்கள், மலர்ந்து கிடக்கும் கமலமும், உத்பலமும் போலத் தெரிய, காற்றுடன் போட்டி போடுவது போல விரைந்து சென்ற ஹனுமான், விரைந்து செல்லும் பெரிய படகு போல சற்றும் களைப்போ, தயக்கமோ இன்றி ஆகாயமான சமுத்திரத்தைக் கடந்து சென்றான். வானத்தைத் தொட்டு விடுவது போல, தாரகைகளின் நாயகனான சந்திரனை நோக்கியபடி, அந்த தாரா கணங்களுடன் சேர்த்து சந்திரனையும் கைகளால் பற்றி விடுபவன் போல, சூரியனின் பாதையான வான மார்கத்தில் விரைந்தான். ஸ்ரீமானான, மாருதாத்மஜன், என்று போற்றப் படும் ஹனுமான், மேகக் கூட்டங்களை பிளந்து கொண்டு பறந்தான். வானம் சில இடங்களில் வெண்மையும், இளம் சிவப்பாகவும், நீலமும், மஞ்சளும், பச்சையும், சிவப்பும், சிவப்பும் பசும் நிறமும் கலந்த கலவையாக தெரிந்தது. எல்லையில்லா அண்டவெளியில் ஹனுமான் சஞ்சரித்தான். மேலும் கீழுமாக ஏறி இறங்கி, தெரிந்தும் தெரியாமலும், சந்திரன் மேகத்தில் மறைவதும், வெளி வருவதுமாக இருப்பது போல இருந்தான். மேகங்களுடன் தெரிந்த வானம் வெண் துகிலுடுத்தியது போல, சந்திரனின் ஒளி பரவிக்கிடந்த வானத்தில் ஒற்றையாக சஞ்சரித்தான். திரும்ப திரும்ப துள்ளி குதித்து, மேககூட்டங்களோடு கூடவே, அதை பிளந்து கொண்டு செல்வது போல, அலைந்தான். ஓங்கிய குரலில் எக்காளமிட்டான். தன் பெயரைச் சொல்லி கோஷமிட்டபடி, ராக்ஷஸ பிரமுகர்களை கொன்று தள்ளியதையும், சொல்லிக் கொண்டான். லங்கையை ஒரு கலக்கு கலக்கி, ராவணன் திகைக்க அவன் படை பலத்தை நொறுக்கித் தள்ளி பெரும் சேதம் விளைவித்து, வைதேஹியை வணங்கி கிளம்பியவன், பாதி சமுத்திரம் கடந்து விட்டான். பர்வத ராஜனான சுனாபனை (மைனாக மலை) கையால் தட்டிக் கொடுத்து வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல வேகமாகச் சென்றான். மகேந்திர மலையை வந்தடைந்தவுடன் உரத்த குரலில் ஜய கோஷம் செய்தான். பத்து திக்குகளிலும் அது எதிரொலித்தது. மேகத்தின் இடியோசை போல ஹனுமானின் கோஷம், நாலா திக்குகளிலும் பரவியது. தன் நண்பர்களைக் காணும் ஆவலுடன் வாலை வேகமாக ஆட்டியபடி, சுபர்ணன் என்ற கருடனின் பாதையில் வந்தான். சூரிய மண்டலத்துடன் ஆகாயத்தையே ஆட்டம் காண வைத்த ஜய கோஷம், முன்னதாகவே அங்கு கூடியிருந்த வாயுசுதனின் நண்பர்கள், ஆவலை தூண்டியது. சமுத்திரத்தின் வட கரையில் மேகங்கள் திரண்டு இடி இடிப்பது போன்ற கோஷத்தைக் கேட்டு, ஹனுமான் தான் என்று தீர்மானித்தனர். அவன் கால்களின் உராய்வினால், வெளிப்பட்ட காற்றின் ஓசை அதை ஆமோதித்தது. வனவாசிகளான அந்த வானரங்கள் இதைக் கேட்டு, முகம் மலர விரைந்து அருகில் வந்தனர். ஜாம்பவான் மிகவும் மகிழ்ச்சியுடன் எல்லா வீரர்களையும் அழைத்து, நிச்சயம் இந்த ஹனுமான் தான் சென்ற காரியத்தை முடித்துக் கொண்டு வந்திருக்கிறான். அதனால் தான் ஜய கோஷம் இவ்வளவு உரத்து, உறுதியாக செய்கிறான். போன காரியம் ஜயம் ஆகாமல் இப்படி உரத்து கோஷமிட மாட்டான். வெகு தூரத்திலிருந்தே, கைகளும் கால்களும் உராயும் ஓசையும், வேகமாக வருவதும், ஜய கோஷமும் வானரங்களை மகிழ்ச்சிக் கடலில் மூழ்கச் செய்தது. இங்கும் அங்குமாக அலைவதும், ஓடுவதும், ஆரவாரிப்பதுமாக இருந்தன. மரத்திற்கு மரம், பாறைக்கு பாறைத் தாவி, விளையாடினர். ஹனுமானைக் காண மகா ஆவலுடன் துடித்தனர். புஷ்பங்கள் நிறைந்த கிளைகளை பறித்துக் கொண்டு, கிடைத்த இடத்தில் அமர்ந்த படி ஹனுமானை எதிர் நோக்கி காத்திருந்தனர். மலைக் குகைகளில் நுழைந்து புறப்படும் காற்றுச் சத்தம் கர்ஜனையாக கேட்பது போல ஹனுமானின் கர்ஜனை கேட்டது. வானத்திலிருந்து இறங்கி வரும் மேகம் போல பெரிய உருவத்துடன் இறங்கிய ஹனுமானைக் கண்டதும், வானரங்கள் கூப்பிய கரங்களுடன் விரைந்து அருகில் சென்றன. மகேந்திர மலையின் உச்சியில் குதித்து இறங்கினான், ஹனுமான். ஏராளமான மரங்கள் நிறைந்த அந்த மலையும் மகிழ்ந்து வரவேற்பது போலக் காணப்பட்டது. அந்த மலையின் அருவியில் இறக்கைகளை இழந்த மலைகள் முன் ஒரு சமயம் விழுந்தது போல ஹனுமான் இறங்கினான். வானரங்கள் தங்கள் மன மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது போல ஹனுமானைச் சுற்றி அமர்ந்தன. முகம் மலர, காய்களும், பழங்களும், மற்றும் கிடைத்த பொருளை அன்பளிப்பாக கைகளில் வைத்துக் கொண்டு அருகில் சூழ்ந்து அமர்ந்தன. நலமாக திரும்பி வந்து விட்ட ஹனுமானே அவர்களின் மன நிறைவுக்கு போதுமாக இருந்தது. உபசரித்தனர். ஹனுமான் ஜாம்பவான் முதலிய பெரியவர்களை, வயதில் மூத்தோரை, குமாரனான அங்கதனை வணங்கி நலம் விசாரித்தான். அவர்களும் ஹனுமானிடம் நலம் விசாரித்த பின், (த்ருஷ்டா சீதா) கண்டேன் சீதையை என்று பதிலுரைத்தான். சுருக்கமாக தன் அனுபவங்களை விவரித்தான். வாலி புத்திரனை கைப் பற்றி அருகில் அமர்த்திக் கொண்டு தானும் அமர்ந்தான். மகேந்திர மலையில் ரமணீயமான அந்த சாரலில், தன்னம்பிக்கையுடன் ஹனுமான் அந்த வானரங்களிடம் அசோக வனத்தின் மத்தியில், ஜனகாத்மஜாவைக் கண்டேன். ஒற்றைப் பின்னலுடன், தரையில் அமர்ந்து, ராமனைக் காணும் ஆவலுடன் உபவாசம் இருப்பதால் களைத்து, இளைத்து, ஜடிலமாக, மலினமாக இருப்பவளைக் கண்டேன். கண்டேன் என்ற வார்த்தை அம்ருத தாரையாக காதில் விழ, வானரங்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தன. சில கிளு கிளுவென சத்தமிட்டன. சில ஆடின, சில பாடின, சில கர்ஜித்தன. ஒருவர் கர்ஜிக்க, பதில் கர்ஜனை செய்தன. சில வாலைத் தூக்கி ஆடின. நீண்ட வால்களை ஒன்றோடொன்று வளைத்து தூக்கி நிறுத்தி தங்கள் மகிழ்ச்சியைக் கொண்டாடின. மற்றும் சில ஹனுமானை தூக்கிக் கொண்டு கூத்தாடின. ஒரே ஒரு வார்த்தை கண்டேன் என்று சொன்னதோடு சரி. வானரங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்தி கொண்டாட அனுமதித்த பின், அங்கதன் மேலும் விசாரித்தான். வானரா, ஆற்றலிலும், வீரத்திலும், உனக்கு இணை வேறு யாரும் இல்லை. சமுத்திரத்தைக் கடந்து சென்று மீண்டு வந்ததிலிருந்தே அது தெரிகிறது. எங்கள் அனைவருக்கும் உயிர் கொடுத்தவன் நீ ஒருவனே தான். வானரோத்தமா, உன் தயவால், ராமனை நாம் தலை நிமிர்ந்து நின்று சந்திக்க முடியும். ராகவ காரியத்தைச் செய்தவர்களாக சித்தார்த்தர்களாக செல்வோம். அஹோ, எஜமானனிடம் உனக்கு உள்ள பக்தி போற்றத் தகுந்தது. உன் வீர்யம் போற்றத் தகுந்தது. கலங்காமல் நினைத்த செயலை செய்து முடிக்கும் உறுதி போற்றத் தகுந்தது. நல்ல காலம், தேவியைக் கண்டாய். அதுவே நமது பாக்யம். ராமபத்னியான அவளும் கவலை நீங்கி மகிழ்ந்திருப்பாள். அதிர்ஷ்டவசமாக ராமனும், அவளைப் பிரிந்த துக்கத்தை மறப்பான். அங்கதனையும், ஹனுமானையும், ஜாம்பவானையும் சுற்றி நின்ற வானரங்கள் ஆனந்தமாக பெரும் பாறைகளைக் கொண்டு வந்து போட்டு அமர்ந்து கொண்டு விஸ்தாரமாக ஹனுமான் சமுத்திர லங்க4ணம் செய்ததை கேட்கத் தயாராயின. லங்கையைக் கண்டதும், சீதையைக் கண்டு கொண்டதும், ராவணனைப் பற்றியும், விவரங்கள் அறிந்து கொள்ள ஹனுமானின் முகத்தையே நோக்கியபடி அமர்ந்தன. அங்கதனும், தேவ லோகத்தில் தேவர்கள் சூழ இந்திரன் வருவது போல வந்து அமர்ந்தான். அங்கதம் என்ற ஆபரணத்தை புஜத்தில் அணிந்த அங்கதன், கீர்த்தி வாய்ந்த ஹனுமான் தன் அரிய செயலை விவரிக்க அமர்ந்ததைக் கண்டு மகேந்திர மலையும் தன் முகத்தை உயர்த்தி வெற்றி பெற்ற பாவனைத் தெரிய ஜயலக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கப் பெற்றதாக ஆயிற்று.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ஹனுமத் ப்ரத்யாக3மனம் என்ற ஐம்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 58 (397) ஹனுமத் விருத்தானுகத2னம் (ஹனுமான் விவரித்தல்)
குதூகலமாக மலையின் உச்சியில் கூடியிருந்த வானரர்களுடன் அமர்ந்திருந்த ஜாம்பவான் அன்புடன் விசாரித்தார். என்ன நடந்தது, எப்படி நடந்தது என்று விவரமாகச் சொல். தேவியை எப்படிக் கண்டாய்? அவள் நிலை எப்படி இருக்கிறது? க்ரூர கர்மாவான தசானனன் அவளை எப்படி நடத்துகிறான்? மகா கபே, இவையனைத்தையும் ஒன்று விடாமல் எங்களூக்குச் சொல். எங்கே தேடினாய்? தேவியைக் காண என்னவெல்லாம் சிரமப் பட்டாய் என்றும் சொல், என்றான். கண்ட பின் அவள் என்ன சொன்னாள், இதையெல்லாம் தெரிந்துகொண்டு நாம் மேற் கொண்டு செய்ய வேண்டியது பற்றி யோசிப்போம், என்றான். நாம் எல்லோருமாக ராமனிடம் போய் எந்த விதமாக பேச வேண்டும், என்ன சொல்ல வேண்டும், எதைச் சொல்லாமல் விட வேண்டும் என்பதையும் தீர்மானிப்போம். ஜாம்பவான் அன்புடன் இவ்வாறு கேட்டதும், ஹனுமான் உடல் புல்லரிக்க, பேசலானான். உங்களுக்கு எதிரில் நான் மகேந்திர மலையிலிருந்து புறப்பட்டு வான வெளியை அடைந்தேன். கடலின் தென் கரையைத் தொட்டு விட என் மனதை ஒருமைப் படுத்திக்கொண்டு, வேகமாக போகும் பொழுதே ஏதோ விக்னம் போல எதிரில் முளைத்தது. அழகிய பொன் மயமான மலையின் சிகரம். என் வழியை மறித்துக்கொண்டு நின்ற மலையின் சிகரம். வழி மறித்துக் கொண்டு இடையூறு செய்வதாகத் தான் எண்ணினேன். உடனே அருகில் சென்று அந்த மலையை பிளந்து விட வேண்டும் என்று நினைத்தேன். என் வாலை சுழற்றி மலையை அடித்தேன். அதன் ஒரு சிகரம் சூரியன் போல பிரகாசித்துக் கொண்டு ஆயிரம் சுக்கல்களாகச் சிதறியது. என் எண்ணத்தை புரிந்து கொண்ட அந்த மலையரசன் புத்ரா என்று மதுரமாக அழைத்தான். என்னை உன் தந்தை வழி உறவினன் என்று தெரிந்து கொள். நான் உன் தந்தையான மாதரிஸ்வனனின்(வாயு) உறவினன். என் பெயர் மைனாகம். இந்த பெரும் கடலில் வசிக்கிறேன். பர்வதங்கள் முன்பு இறக்கைகள் உடையனவாக இருந்தன. இஷ்டம் போல உலகைச் சுற்றி வந்தன. கிடைத்ததை உடைத்து நொறுக்கித் தள்ளிக் கொண்டு பூமியில் இறங்கின. இவை இப்படி செய்வதை கேள்விப்பட்டு, பாக சாஸனான இந்திரன் வஜ்ரத்தால் இவைகளின் இறக்கைகளை வெட்டித் தள்ளினான். உன் தந்தை தான் என்னை காப்பாற்றினார். மாருதன் தான் என்னை இந்த சமுத்திரத்தில் கொண்டு தள்ளினான். ராமனுக்கும் நான் ஒரு உதவி செய்தாக வேண்டும். ராமன் தர்மம் அறிந்தவர்களில் ஸ்ரேஷ்டன். மகேந்திரனுக்கு சமமான விக்ரமம் உடையவன். இப்படி மைனாகம் சொல்லவும், நான் அவன் எதற்கு வந்தான் என்பதையும் புரிந்து கொண்டு விட்டேன். இதற்குள் மனித உருவம் எடுத்துக் கொண்டு மலை மேல் நின்ற மைனாகமும், சமுத்திர ராஜனும் என்னை வாழ்த்தி அனுப்ப, வேகம் எடுத்து திரும்பவும் ஆகாய மார்கத்தில் நுழைந்தேன்.
சற்று நேரம் எந்த விதமான தடங்கலும் இன்றி, வாயு மார்கத்தில் சஞ்சரித்தேன். அச்சமயம் சுரஸா என்ற நாக மாதாவைக் கண்டேன். சமுத்திர மத்தியிலிருந்து அந்த தேவி, என்னிடம் சொன்னாள். ஹரி சத்தமா, தேவர்கள் உன்னை எனக்கு உணவாக அனுப்பி இருக்கிறார்கள். அதனால் உன்னை சாப்பிடப் போகிறேன். வெகு காலமாக உன்னை எனக்காக என்றே விட்டு வைத்திருக்கிறார்கள். என்றாள். இதைக் கேட்டு இது என்ன சோதனை, என்று குழப்பத்துடன் கை கூப்பி வணங்கி அவளிடம் விவரமாகச் சொன்னேன். ராமன் என்று தசரத ராஜாவின் மகன். தண்டகா வனம் வந்தான். லக்ஷ்மணன் என்ற சகோதரனுடனும், சீதை என்ற மனைவியுடனும் வசிக்கும் பொழுது, ராவணன் அவன் மனைவியை அபகரித்துச் சென்றான். அவளிடம், ராமனின் கட்டளைப் படி நான் தூதனாகச் செல்கிறேன். ராமனுக்கு சகாயம் செய். சற்று பொறு, சீதையைக் கண்டு கொண்டு ராமனையும் பார்த்து விவரம் சொல்லி விட்டு, உன் வாயில் வந்து விழுகிறேன். இது சத்யம். நான் பிரதிக்ஞை செய்கிறேன். நான் இவ்வாறு சொல்லவும் அவள் பதில் சொன்னாள். எனக்கு ஒரு வரம் இருக்கிறது. என்னைத் தாண்டி யாரும் செல்ல முடியாது. சொல்லிக் கொண்டே அவள் பத்து யோஜனை தூரம் தன் வாயைப் பிளந்தாள். நானும் க்ஷண நேரத்தில் அதே அளவு வளர்ந்தேன். அவளோ அந்த என் பெரிய உருவத்தையும் விழுங்கும் அளவு தன் வாயை பிளந்தாள். உடனே நான் என் உருவை மிகச் சிறியதாக ஆக்கிக் கொண்டு, அங்குஷ்ட, கட்டைவிரல் அளவு ஆகி அவள் வாயினுள் புகுந்து வெளி வந்து விட்டேன். சுரஸாவும் தன் பழைய உருவை எடுத்துக் கொண்டு என்னை வாழ்த்தினாள். ஹரி ஸ்ரேஷ்ட, சௌக்யமாக போய் வா. உன் காரியம் சித்3தி4யாகட்டும். வைதேஹியை அழைத்து வந்து ராமனுடன் சேர்த்து வை. சுகமாக இரு. வானரமே, நான் உன் செயலால் மகிழ்ந்தேன். கவலையில்லாமல் போய் வா என்று வாழ்த்தினாள். இதை பார்த்து எல்லோரும் சாது சாது என்று புகழ்ந்தனர். கருடன் போல நான் அந்தரிக்ஷத்தில் மிதந்தேன். யாரோ என் நிழலை பிடித்து இழுப்பது போல இருந்தது. நாலா திக்குகளிலும் திரும்பி யாராக இருக்கும், க3க3ன மார்கத்தில் என்னைத் தடுப்பது யார்? உருவம் எதுவும் தெரியவில்லை. உபத்ரவம் மட்டும் செய்வது யார்? கீழ் நோக்கி என் பார்வை சென்றது. அந்த சமயம் மிகப் பெரிய பயங்கரமான ஒரு உருவம், நீர் மட்டத்தில் என் கண்களில் பட்டது. பெருங்குரலில் சிரித்தபடியே அவள் சற்றும் பரபரப்போ, பயமோ இன்றி, நின்று கொண்டு, பெரிய உருவம் கொண்டவனே, எங்கு போகிறாய்? என் பசிக்கு நீ உணவாக இருப்பாய். என்னைத் தாண்டி போக முயலுகிறாய். அது சுலபமல்ல. தெரியுமா. வெகு காலமாக ஆகாரமின்றி தவிக்கிறேன். என்னை மீறி எப்படி போவாய்? வாயைப் பிளந்து கொண்டு என்னை சாப்பிட வந்தாள். என்னை விழுங்கும்படி வாயும் பெரிதாகிக் கொண்டே வந்தது. நானும் என் உருவத்தை பெரிதாக்கிக் கொண்டேன். அவள் விடுவதாக இல்லை. மேலும் வளர்ந்தாள். நான் திடுமென என் உருவத்தை பெரிதாக்கிக் கொண்டேன். அவள் விடுவதாக இல்லை. மேலும் வளர்ந்தாள். நான் திடுமென என் உருவைக் குறுக்கிக் கொண்டு அவள் வாயில் நுழைந்து ஹ்ருதயத்தை, மர்ம ஸ்தானத்தை பிடுங்கி எறிந்து விட்டு, வான வெளியில் திரும்பவும் சென்றேன். கை கால்களை பரத்திக் கொண்டு அவள் உயிரற்ற உடல் கடலில் விழுந்தது. மேலும் சற்று தூரம் சென்ற பின், மரங்கள் அடர்ந்த தக்ஷிணக் கரையில் லங்கா நகரம் இருப்பதைக் கண்டேன். ராக்ஷஸர்கள் யாரும் கண்டு விடாதபடி, சூரியன் அஸ்தமனம் ஆனபின் லங்கா நகரில் நுழைந்தேன். ஒரே இருட்டு. நான் யாருமறியாமல் நுழைய வேண்டும் என்று கவனமாகச் சென்று கொண்டிருந்த பொழுதே, அட்டகாசமாக ஒரு பெண் என்னைத் தடுத்தாள். அவளை முஷ்டியால் அடித்து தோற்கடித்து விட்டு கிளம்பினேன். செக்கச் சிவந்த கேசம் தலையில் பள பளத்தது. ப்ரதோஷ காலத்தில் நான் உள்ளே நுழைந்தேன். நான் லங்கா புரி, இதன் காவல் தேவதை. என்னை ஜெயித்து விட்டாய். அதனால் இந்த லங்கா நகரின் ராக்ஷஸர்கள் அனைவரையும் ஜெயித்தவன் ஆனாய் என்றாள். இரவு முழுவதும் ஜனகாத்மஜாவைத் தேடித் தேடி அலைந்தேன். எங்குமே அவளைக் காணாமல அலைந்தேன். ராவண க்ருஹமென்பது தெரிந்தது. சீதையைக் காண முடியவில்லை. மிகவும் வருத்தமாக இருந்தது. ப்ரகாரத்தில் திரும்பவும் சுற்றிய சமயம், மரங்கள் அடர்ந்த அசோக வனம் தென்பட்டது. அதன் நடுவில் சிம்சுபா மரம். அருகில் கதலி- வாழைத் தோட்டம். சிம்சுபா மரத்தின் அருகில் வரவர்ணினீம்- நல்ல நிறமுடைய சீதையைக் கண்டேன். கமல பத்ரம் போன்ற கண்கள், ஸ்யாமா. உபவாசத்தால் இளைத்த உடல். புழுதி படிந்த கேசமும், ஒற்றை வஸ்திரமுமாக, சோகம் வாட்டி எடுக்க, தீனமான உடலும் உள்ளமுமாக, பர்த்தாவான ராமனின் நலனே த்யானமாக, இருந்தவளைக் கண்டேன். ராக்ஷஸிகள் பலர் சூழ்ந்து கொண்டு அதட்டி மிரட்டியபடி இருந்தனர். க்ரூரமாக, விரூபமாக இருந்த ராக்ஷஸிகளைக் காணவே பயங்கரமாக இருந்தது. ஒற்றைகுழல் தொங்க, முகம் வேதனையால் வாட, கணவனின் நினைவிலேயே காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தாள் போலும். பூமியில் படுத்து உறங்கியவளை, நிறம் வெளுத்து, பனியில் அடிபட்ட தாமரை மலராக, ராவணனை ஒரு பொருட்டாக மதிக்காமல், அவனை தவிர்க்க தன் உயிரை மாய்த்துக் கொள்ள துணிந்து விட்டவளைக் கண்டேன். எப்படியோ அந்த மான் விழியாளை நான் கண்டு கொண்டேன். ராமபத்னி என்ற அந்த புகழ் வாய்ந்த ஸ்த்ரீயைக் கண்டு கொண்ட பின், அதே சிம்சுபா விருக்ஷத்தின் மேல் நான் அமர்ந்து கொண்டேன்.
திடுமென, நூபுரங்களும், மேகலைகளும் உராயும் சத்தம் கல கலவென கேட்டது. ராவணன் க்ருஹத்தில் கேட்டதை விட கம்பீரமாக கேட்டது. நான் என்னை மறைத்துக் கொண்டு ஒரு பக்ஷி போல உடலை குறுக்கி, இலை தழைகளால் என் உடலை மூடிக் கொண்டேன். ராவணன் மனைவிமாரும், ராவணனும் சீதா இருந்த இடம் வந்து சேர்ந்தனர். ரக்ஷோ கண தலைவனான ராவணனைப் பார்த்து, தன் கைகளால் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் பூமியில் அமர்ந்திருந்தாள். அங்கும் இங்கும் பயத்துடன் கண்களை ஓட விட்டவள், யாரும் உதவிக்கு வரத் தயாராக இல்லை என்பதையறிந்து உடல் குலுங்க இருந்தவளைப் பார்த்து ராவணன் பேசினான். தலை குப்புற விழுந்தவன் போல என்னை பார். என்னை உயர்வாக நினைத்துப் பார். கர்வத்தால் என்னை நிமிர்ந்து பார்க்கக் கூட மறுக்கிறாய். ஆனால், உனக்கு இரண்டு மாத அவகாசம் தருகிறேன். அதன் பின்னும் நீ என்னை அங்கீகரிக்க மறுத்தால், உன் ரத்தத்தைக் குடிப்பேன். துராத்மாவான ராவணன் பேசியதைக் கேட்டு, ராக்ஷஸாதமா, நான் ராமனின் பா4ர்யை. ஒப்பில்லாத தேஜஸ் உடைய ராகவனின் பத்னி. இக்ஷ்வாகு குல நாதனான தசரத ராஜாவின் மருமகள். என்னைப் பார்த்து இப்படி சொல்லத் தகாத வார்த்தைகளை சொல்கிறாய். அப்படியும் உன் நாக்கு அறுந்து விழவில்லையே. என்ன வீர்யம் உன் வீர்யம்? என் கணவன் அருகில் இல்லாத பொழுது அபகரித்துக் கொண்டு வந்தாய். பாவி, என் கணவன் மகான். அவன் கண்ணில் படக் கூடாது என்று ஒளிந்து கொண்டு வந்தவன் நீ. ராமனுக்கு இணையாக மாட்டாய். அவனுக்கு தாஸனாக இருக்கக் கூட நீ தகுதியுடையவன் அல்ல. ராகவன் சத்யவாதி. அவனை யாராலும் வெல்ல முடியாது என்பது மட்டுமல்ல, ரணத்தில் எதிர் நிற்பவனே அவனை சிலாகிக்கும் படியான ஆற்றல் உடையவன். ஜானகி, தசானனைப் பார்த்து இவ்வளவு கடுமையாக பேசவும், ராவணனுக்கு கோபம் மூண்டது. சிதையில் மூட்டிய நெருப்பு திகு திகுவென எரிந்து பரவுவது போல, ராவணனின் அந்த கோபம் வளர்ந்தது. தன் வலது கை முஷ்டியை உயர்த்தி பிடித்து, கண்களை உருட்டியபடி, சீதையைக் கொல்ல முன்னேறினான். உடன் வந்த ஸ்த்ரீகள், ஹா, ஹா வென்று அலறினர். அவர்கள் மத்தியிலிருந்து மண்டோதரி என்பவள், வந்து தடுத்தாள். (முன்பு தான்யமாலினி என்றதும், இப்பொழுது மண்டோதரி என்பதும், இருவருமே தடுத்தனர் என்பது கருத்து). மதுரமாக பேசி, மதனனின் வசத்தில் இருந்தவனை இச்செயலைச் செய்ய விடாமல் தடுத்து அழைத்துச் சென்றனர். சீதையுடன் உங்களுக்கு என்ன வேலை? மகேந்திரனுக்கு சமமான விக்ரமம் உடைய தாங்கள், யக்ஷ, கன்னிகள், தேவ கந்தர்வ கன்னிகள் இவர்களுடன் ரமித்துக் கொண்டிருங்கள். சீதையுடன் ஏன் இந்த விவாதம்? என்று பலவாறாக நயமாகச் சொல்லி அந்த இடத்தை விட்டு அழைத்துச் சென்றாள். தன்னைச் சார்ந்த பெண்களுடன் ராவணன், மாளிகைக்கு திரும்பச் சென்றவுடன், அங்கிருந்த ராக்ஷஸிகள், சீதையை அதட்டி மிரட்ட ஆரம்பித்தனர். அவர்கள் பேசியது எதையும் ஜானகி ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை. சீதையை முடிந்தவரை பயமுறுத்தியும், நயமாக வேண்டியும் அவள், எதுவும் மசிந்து கொடுக்காததால் ராக்ஷஸிகள் ராவணனிடம் தெரியப்படுத்தினர். இதன் பின் அனைவரும் களைத்து தூக்கத்தில் ஆழ்ந்தனர். இவர்கள் தூங்கியபின், நிச்சப்தமான இரவின் பின் பகுதியில் சீதை மிகவும் வேதனையோடு அழுவதைப் பார்த்து, அவர்கள் நடுவில் இருந்து த்ரிஜடா என்பவள் எழுந்து வந்தாள். உங்களையே தின்று கொள்ளுங்கள், சீதை உங்கள் கையால் நாசமாக வேண்டியவள் அல்ல, என்று மிரட்டினாள். இவள் யார் என்று அறியாமல் வாய்க்கு வந்ததை பேசுகிறீர்கள். ஜனகன் மகள் இவள். தசரத ராஜாவின் மருமகள். நான் இன்று ஒரு கனவு கண்டேன். மகா பயங்கரமானது. ரோமங்கள் குத்திட்டு நிற்க நான் நடுங்கினேன். ராக்ஷஸர்கள் நாசமடைவது போலவும், இவள் கணவன் வெற்றி பெற்றது போலவும், இவளை பயமுறுத்தியது போதும். ராகவனிடத்திலிருந்து நம்மைக் காப்பாற்ற இவள் தான் வரப் போகிறாள். வைதேஹியை நாம் வேண்டிக் கொள்வோம். அது தான் சரி என்று நான் நினைக்கிறேன். யாரைப் பற்றி இப்படி ஸ்வப்னத்தில் காண்கிறோமோ, அவர்கள் துக்கத்திலிருந்து விடுபட்டவர்களாக, சுகத்தையடைவர். இதைக் கேட்டு சீதை த்ரிஜடையைப் பார்த்து நீங்கள் சொன்னது பலித்தால், நான் உங்களை சரணடைகிறேன் என்றாள். சீதையின் இந்த வருந்தத்தக்க நிலையைப் பார்த்து நான் யோசித்தேன். மனம் குழப்பத்தில் ஆழ்ந்தது. ஜானகியுடன் எப்படி சம்பாஷனையை ஆரம்பிப்பது என்று யோசித்தேன். இக்ஷ்வாகு வம்சக் கதை தான் கை கொடுத்தது. ராஜரிஷி கணங்கள் பூஜித்த ராம கதையைக் கேட்டு கண்கள் குளமாக கண்ணீர் பெருக்கியபடி, வைதேஹி என்னிடம் பேசினாள். யார் நீ? எப்படி இங்கு வந்து சேர்ந்தாய்? வானர புங்க3, எப்படி நீ ராமனை சந்தித்தாய்? ராமனிடம் எப்படி நட்பு கொண்டாய்? எல்லாமே விவரமாகச் சொல் என்றாள். நானும் பதில் சொன்னேன். தேவி, உன் பர்த்தாவான ராமனின் சகா, நல்ல பலசாலி, பீம விக்ரமன் சுக்ரீவன் என்ற வானர அரசன். நான் அவனுடைய வேலைக்காரன். என் பெயர் ஹனுமான். எஜமானனின் கட்டளைப் படி இங்கு வந்தவன். உன் கணவனால் அனுப்பப் பட்டேன். தானாகவே, புருஷ வ்யாக்ரனான ராமன் இந்த அங்குலீயத்தை, தங்களிடம் அடையாளமாக காட்டச் சொல்லி என்னிடம் கொடுத்திருக்கிறார். தேவி, இதைப் பாருங்கள், எனக்கு என்ன கட்டளை? நான் என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள். என்றேன். ராம லக்ஷ்மணர்களிடம் உங்களை அழைத்து செல்லட்டுமா, பதில் சொல்லுங்கள் எனவும், ஜனக நந்தினி சொன்னாள். ராவணனை அடக்கி விட்டு ராமன் என்னை அழைத்துச் செல்லட்டும். என்றாள். நான் அவளை வணங்கி விட்டு மாசற்ற அந்த தேவியிடம், ராகவன் அறிந்து கொள்ளக் கூடிய ஒரு அடையாளம் தரச் சொல்லிக் கேட்டேன். உடனே சீதை, இதை எடுத்துக் கொள் என்று சொல்லி இந்த மணியை கொடுத்தாள். இதை கண்டால், இதை கொண்டு வந்த உன்னிடம் ராமனின் நம்பிக்கை அதிகமாகும். அத்புதமான அந்த சிரோ மணியையும் கொடுத்தவள், வாய் வார்த்தையாகவும் ஒரு செய்தி சொன்னாள். அவளை வணங்கி, பிரதக்ஷிணம் செய்து விடை பெற்fற சமயம் திரும்பவும் நினைவு வந்தவள் போல, ஹனுமன், ராகவனிடம் என் நிலையை எடுத்துச் சொல். கேட்டவுடனேயே அவ்விருவரும் வேகமாக வீறு கொண்டு எழுந்து போருக்கு வரும்படி சொல். சுக்ரீவன் மற்றும் உடன் இருக்கும் அனைவரிடமும் சொல். அப்படி உடனே செயல் படாவிட்டால், இதோ இரண்டு மாதம் ஓடி விடும். அனாதை போல நான் உயிரை விட நேரிடும் என்றாள். கருணையும் வேதனையும் தோய்ந்த இந்த வார்த்தைகள் என் மனதில் கோபத்தை வளர்த்தன. மேற் கொண்டு என்ன செய்வது என்று யோசித்தேன். என் சரீரத்தை பர்வதாகாரமாக ஆக்கிக் கொண்டேன். யுத்தம் செய்யும் ஆவலுடன் அந்த வனத்தை நாசமாக்க ஆரம்பித்தேன். அடர்ந்த வனத்தில் இருந்த மிருகங்களும், பக்ஷிகளும் மிரண்டு இங்கும் அங்குமாக ஓடின. கோர ரூபம் கொண்ட ராக்ஷஸிகள், என்னைக் கண்டு, ராவணனிடம் விஷயம் தெரிவிக்க ஓடினர். துராத்மாவான ஒரு வானரம் வந்து தங்கள் வனத்தை அழிக்கிறது. ராஜன், தங்கள் வீர்யம் அவனுக்குத் தெரியாது போலும். சீக்கிரம் அந்த துஷ்டனுக்கு வதம்- மரண தண்டனை கொடுங்கள். இல்லாவிடில் வனம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும்- என்றனர். இதைக் கேட்டு ராக்ஷஸேந்திரன் பெரும் படையை அனுப்பினான். கிங்கரர்கள் என்ற ராக்ஷஸர்கள், ராவணன் நினைத்ததை செய்து முடிக்கக் கூடியவர்கள், சூலமும் உத்3கரமும் தூக்கிக் கொண்டு ஆயிரக் கணக்காக வந்து சேர்ந்தனர். நான் அந்த வனத்தில் கிடைத்த ஒரு பரிக4ம் (குறுக்கு கட்டை)யை வைத்துக் கொண்டு அவர்களை அடித்தேன். அந்த யுத்தத்தில் மிஞ்சிய சில ராக்ஷஸர்கள் ஓடி ராவணனிடம் சைன்யம் அழிந்ததை தெரிவித்தார்கள். திடுமென எனக்கு சைத்யப்ராஸாதம் என்ற அருகில் இருந்த மண்டபத்தில் மேல் கவனம் சென்றது. நூறு ஸ்தம்பங்கள் கொண்ட அதையும், அதிலிருந்த காவலாளிகளையும் அடித்து நொறுக்கினேன். இது லங்கைக்கு பெருமை சேர்க்கும் அழகிய மண்டபம். இதன் பின் ப்ரஹஸ்த புத்திரன் ஜம்புமாலி வந்தான். ராவணன் அனுப்பி, பல ராக்ஷஸர்களுடன் வந்து சேர்ந்தான். ரண கோவிதனான அவனையும், பயங்கரமான என் கட்டையைக் கொண்டு அடித்தேன். இதைக் கேள்விப் பட்டு ராக்ஷஸேந்திரன் மந்திரி புத்திரர்களை அனுப்பினான். படையுடன் இவர்களும், தங்கள் பலத்தைக் காட்ட வந்தனர். என் கையில் இருந்த பரிக4த்தால், இவர்களையும் அடித்து வீழ்த்தினேன். மந்திரி புத்திரர்களும் மடிந்ததைக் கேட்டு ராவணன் சேனாபதிகள் ஐவரை அனுப்பி வைத்தான். இவர்களையும் சைன்யத்துடன் யம லோகம் அனுப்பிவைத்தேன். இதன் பின் தசக்ரீவன் புத்ரனான அக்ஷனை அனுப்பினான். பல ராக்ஷஸர்கள் உடன் வந்தனர். மந்தோதரி குமாரனான அவனை ஆகாயத்தில் நின்று, மாயா யுத்தம் செய்ய முயன்ற பொழுது, கால்களை பிடித்து இழுத்து தரையில் ஓங்கி அடித்து விட்டேன். கூட வந்த சைன்யம் இதைக் கண்டு பயந்து அலறிக் கொண்டு ஓடி விட்டன. இதன் பின் மற்றொரு குமாரனான இந்திரஜித் என்பவனை அனுப்பினான். இவனும் யுத்த கலை அறிந்தவன். இவனையும் ராவணன் சைன்யத்துடன் அனுப்பி வைத்தான். இவன் வந்தவுடன் என் பலத்தை எடை போட்டான். சைன்யம் அழிந்ததையும் வைத்து, எளிதில் என்னை மாய்க்க முடியாது என்று புரிந்து கொண்டவனாக ப்ரும்மாஸ்திர பிரயோகம் செய்தான். என்னை அஸ்திரத்தால் கட்டியதை அறியாமல் மற்ற ராக்ஷஸ வீரர்கள், மகிழ்ச்சியுடன் என்னை கயிற்றாலும் கட்டினர். ராவணனிடம் இழுத்துக் கொண்டு சென்றனர். ராவணனைக் கண்டு அவனுடன் பேச்சு கொடுத்தேன். எதற்கு வந்தாய்? ராக்ஷஸர்களை ஏன் வதம் செய்தாய்? என்று கேட்டான். எல்லாமே சீதை காரணமாகத்தான் என்று சொல்லி விட்டேன். தங்களைக் காண தங்கள் ப4வனம் வந்தேன். விபோ4 (செல்வந்தனே) மாருதனுடைய சொந்த மகன், ஹனுமான் என்று என் பெயர். ராம தூதன். சுக்ரீவனின் மந்திரி. ராமன் தான் என்னை இங்கு செய்தி சொல்ல அனுப்பினான். மகா தேஜஸ்வியான சுக்ரீவன் குசலம் விசாரித்தான், தர்மார்த்த காமம் அறிந்தவன். ஹிதமாக உங்களிடம் செய்தி சொல்லச் சொன்னான். மரங்களடர்ந்த ருஸ்ய மூக மலையில் வசிக்கும் சமயம், ரண விக்ரமனான ராமனுடன் அவனுக்கு நட்பு உண்டாயிற்று. ராமன் என் மனைவியை தேடிக் கண்டு பிடிக்க உதவி செய் எனவும், சுக்ரீவனும் வாலி வதம் செய்யச் சொல்லி வேண்டினான். சீதையைக் கண்டு பிடிக்க சற்று அவகாசம் கொடு என்று சுக்ரீவன் கேட்டுக் கொண்டான். இருவருமாக அக்னி சாக்ஷியாக சங்கல்பம் செய்து கொண்டனர். இதன் பின் சுக்ரீவன் எல்லா வானர சைன்யத்துக்கும் தலைவனாக மகா ராஜாவாக ஆக்கி விட்டான். என்ன ஆனாலும் ராம காரியத்தை நாம் செய்து தந்தேயாக வேண்டும், என்று சுக்ரீவன் தீவிரமாக இருக்கிறான். அதனால் எங்களை இங்கு அனுப்பினான். சீதையைக் கண்டு பிடித்து ராகவனிடம் தர வேண்டும் என்பது தான் எங்களுக்கு தரப்பட்ட வேலை. வானரங்களின் பலம் யாருக்குத் தெரியும்? அதை தங்களுக்கு சிறிதளவாவது காட்டவே வனத்தை நாசம் செய்து ராக்ஷஸர்களை அடித்தேன். எங்களுக்கு கட்டளையிட்டு அனுப்பினால், தேவர்களிடம் கூட போர் புரிவோம் இதையெல்லாம் தங்களிடம் தெரிவிக்கச் சொன்னான் எங்கள் ராஜா சுக்ரீவன் என்றேன். என்னை கண்களாலேயே எரித்து விடுபவன் போல பார்த்த ராவணன் இவனை வதம் செய்யுங்கள் என்று ஆணையிட்டு விட்டான். துராத்மா ராவணனுக்கு என் சக்தி என்ன என்பது தெரிந்திருக்கவில்லை. இதன் பின் விபீ4ஷணன் என்ற ராவணன் தம்பி, நல்ல புத்திசாலி. ராக்ஷஸேந்திரா, இது ராஜதர்மம் அல்ல, தூதனை வதம் செய்வது கேட்டதும் இல்லை, நியாயமும் இல்லை. ஹிதமாக பேசி அவனிடம் விஷயம் தெரிந்து கொள்ள வேண்டும். கடும் அபராதம் செய்தவனாக இருந்தால் கூட, தூதனிடம் விரூபம் செய்து திருப்பி அனுப்புவதைக் கண்டிருக்கிறோம். வதம் செய்வதில்லை. விபீஷணன் சொன்னதைக் கேட்டு, அந்த வீரர்களிடம் ராவணன் இந்த வானரத்தின் வாலில் நெருப்பை வைத்து பொசுக்குங்கள் என்றான். உடனே என் வாலில் நெருப்பு வைக்கப் பட்டது. கயிறும் சணலும் கொண்டு கட்டி பழைய பருத்தி துணிகளைக் கொண்டும் சுற்றி, ராக்ஷஸர்கள் குதூகலமாக கட்டைகளை அடுக்கி நெருப்பை வைத்தனர். ராக்ஷஸர்கள் சூழ்ந்து கொண்டு, பல விதமாக கட்டி துன்புறுத்திய போதிலும், தீ வைத்த போதும் எனக்கு சிறிதும் உடல் வருத்தம் தோன்றவில்லை. நானும் பகலில் ஊரைச் சுற்றி பார்க்கத் தயாரானேன். ராக்ஷஸர்கள் கட்டுண்ட என்னை, தீயும் வைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். என் பெயரை சொல்லி பெரிதாக கோஷம் இட்டுக் கொண்டு நடந்தனர். திடுமென நான் என் உருவத்தை சிறிதாக்கிக் கொண்டு அந்த கட்டிலிருந்து விடுபட்டேன். பழையபடி இரும்பு கட்டையை எடுத்துக் கொண்டு அவர்களை அடித்தேன். வேகமாகத் தாவிக் குதித்து நகர வாயிலை அடைந்தேன். என் வாலைச் சுழற்றி, அந்த நகரத்தின் மாட மாளிகைகளில், அதில் இருந்த தீயை உதறியபடியே வந்தேன். திடுமென, யுக முடிவில் காலாக்னி தோன்றுவது போல ஊர் முழுவதும் பற்றி எரிந்தது. ஜனங்கள் அலறினர். ஊர் முழுவதும் எரிந்து விட்டதே, ஜானகி என்ன ஆகியிருப்பாள் என்ற கவலை தோன்றியது, தவிர ராமனுடைய முக்யமான காரியமும் வீணாகி விட்டதே என்று என் மனம் வருந்தியது. சொல்லொணா சோகம் அழுத்தியது. அச்சமயம் சாரணர்கள், ஆகாய வீதியில் தங்களுக்குள் பேசிக் கொண்டு செல்வது காதில் விழுந்தது. ஆச்சர்யத்துடன் நல்ல வேளையாக ஜானகி இந்த நெருப்பால் பாதிக்கப் படவில்லை. ஆச்சர்யம் என்றனர். இதைக் கேட்டு நிமித்தங்களைக் கொண்டும் ஜானகி இந்த நெருப்பில் ஒருவிதமான பாதிப்பும் இன்றி தப்பினாள் என்று அறிந்து நிம்மதியடைந்தேன். எனக்குள் யோசித்தேன். வாலில் தீ மூண்டெழுந்த பொழுதே நான் எதுவும் உணரவில்லை. நெருப்பு என்னை சுடவில்லை. காற்று சுகமாக, வாசனையுடன் வீசியது. எனக்கு ஆறுதல் சொல்வது போல இருந்தது. இது போன்ற பல நிமித்தங்களாலும், மகரிஷிகளும் சித்தர்களும், தங்களுக்குள் பேசிக் கொண்டு செல்வதைக் கேட்டதாலும் மன நிம்மதியடைந்தேன். திரும்பவும் வைதேஹியைக் கண்டு விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன். அங்கு இருந்த மலையின் உச்சியில் ஏறி நின்று, திரும்பி வர ஆயத்தமானேன். உங்கள் அனைவரையும் கண்டு விஷயம் சொல்ல பர பரத்தது இதன் பின் பவன, சந்த்ரார்க, சித்த கந்தர்வர்கள் சஞ்சரிக்கும் மார்கங்களில். திரும்பி வந்து, இதோ உங்களைக் காண்கிறேன். ராகவனுடைய ப்ரபாவம், உங்கள் அனைவருடைய வாழ்த்துக்கள், சுக்ரீவனின் கட்டளை, காரிய சித்திக்காக இவ்வளவும் நான் செய்தேன். நடந்தது நடந்தபடி சொல்லி விட்டேன். இனி செய்ய வேண்டியது என்ன, எப்படி என்று நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் ஹனுமத் வ்ருத்தானுகத2னம் என்ற ஐம்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 59 (398) அனந்தர கார்ய ப்ரரோசனம் (மேற்கொண்டு செய்வதைப் பற்றி விவாதித்தல்)
ஹனுமான் இவ்வளவும் சொல்லி முடித்த பின், திருப்தியுடன் சொல்லிக் கொண்டான். ராகவனுக்காக செய்த இந்த முயற்சி வெற்றியடைந்தது. சுக்ரீவனின் கவலையும் தீர்ந்தது. சீதையின் சீலம் தான் இந்த வெற்றிக்கு காரணம். என் மனமும் நிறைவுற்றது. தவ வலிமையால் உலகையே வெல்லலாம் அல்லது கோபம் கொண்டு உலகையே தகிக்கலாம். இந்த ராவண ராஜா, எல்லா விதத்திலும் அளவுக்கு மீறி வளர்ந்து விட்டான். அவன் தவ வலிமைதான் அவனை சீதையின் உடலைத் தொட்டு தூக்கிய பொழுது அவன் நாசமடையாமல் காத்தது. கையினால் தொட்டு அக்னி நாசம் செய்யாமல் இருக்குமா? அக்னியே செய்ய முடியாது திகைத்தாலும், ஜனகாத்மஜா கோபம் கொண்டால் தகித்து விடுவாள் என்பது நிச்சயம். ஜாம்பவான் முதலிய பெரியவர்களை வணங்கி அனுமதி கேட்டு, இது வரை நடந்ததை உங்களிடம் சொல்லி விட்டேன். நியாயமாக, நாம் வைதேஹியுடன் தான் ராமனைக் காண செல்ல வேண்டும். நான் ஒருவனே போதும். ராக்ஷஸ கூட்டத்தோடு லங்கா நகரை அழிக்க. லங்கா வாசிகளை அழித்து மகா பலசாலிகளாக இருந்தால் என்ன? ராவணனையும் நாசம் செய்து விடுவேன். உங்களைப் போன்ற வீரர்கள் உடன் இருக்கும் பொழுது இதில் என்ன கஷ்டம். நீங்கள் செயல் வீரர்கள். சாகஸங்கள் பலவும் செய்து வெற்றிக் கொடி நாட்டும் ஆர்வம் உடையவர்கள். நான் ஒருவனே, ராவணனை குடும்பத்துடன், புத்ர, சகோதர்களுடன், நாடு நகரத்துடன் சேர்த்து அழிப்பேன். ப்ரும்மாஸ்திரம், ஐந்திரம், ரௌத்3ரம், வாயவ்யம், வாருணம், இவை இந்திரனை ஜயிக்க பயன் பட்டிருக்குமானால், கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் கூட இந்த அஸ்திரங்களை நான் சின்னா பின்னமாக்குவேன். ராக்ஷஸர்களை அடித்து நொறுக்குவேன். உங்கள் அனுமதியுடன் யுத்தம் செய்வேன். வெற்றி வாகை சூடி வருவேன். இடை விடாது நான் பாறைகளை மழையாக பொழிந்தால் தேவர்களே நிற்க முடியாது. இந்த நிசாசரர்கள் எம்மாத்திரம்? சாக3ரம் தன் கரையை மீறி வந்தாலும் வரலாம், மந்தர மலை ஆடினாலும் ஆடலாம், ராக்ஷஸர்கள், ஒரு ஜாம்பவானுக்கு ஈ.டு கொடுக்க முடியாது. இந்த வாலி சுதன் அங்கதன் மட்டும் என்ன? சளைத்தவனா? ராக்ஷஸர்களை அவர்கள் முன்னோர்களையும் சேர்த்து நாசம் செய்து விடுவான். பனஸனும் நீலனும் சேர்ந்தால், மந்தர மலையையே தூள் தூளாக்கி விடுவார்கள். ராக்ஷஸ சைன்யம் எந்த மூலை? தேவாசுரர்களிலும், க3ந்த4ர்வ, உரக3, பக்ஷிகளிலும் மைந்த3னுக்கு எதிரில் நின்று போர் புரிய யாருக்கு சக்தி, தைரியம் உண்டு? இந்த இரு அஸ்வினி குமாரர்கள் புத்திரர்களும் அப்படியே. எதிரிகள் இவர்களைக் கண்ட மாத்திரத்தில் ஓடி ஒளிவார்கள். இவ்விருவரும் அமுதம் அருந்தியவர்கள். நம் சைன்யத்தில் முக்கியமானவர்கள். அஸ்வினி குமாரர்கள் வேண்டிக் கொண்ட படி, பிதாமகரான ப்ரும்மா, யாராலும் வதம் செய்ய முடியாத தன்மையும், ஒப்பில்லாத உவமை சொல்ல முடியாத ஆற்றலையும் இவர்களுக்குத் தந்தார். இந்த வரத்தால் கர்வம் கொண்டு பெரும் சைன்யத்தை நாசம் செய்து, தேவர்களின் அம்ருதத்தை இவ்விருவரும் குடித்து விட்டனர். இவ்விருவரும் சேர்ந்து குதிரைகள் படை, யானைப் படைகளும், லங்கையை நாசம் செய்ய சமர்த்தர்களே. மற்ற வானரர்கள் இருக்கட்டும். நானே லங்கையில் தீ வைத்து நாசம் செய்து விட்டு வந்தேன். ராஜ மார்கம் முழுவதும் சுற்றி வந்து என் பெயரைச் சொல்லி கோஷமிட்டேன். அதி பலவானான ராமனுக்கு ஜெயம், ராகவன் காப்பாற்றி பாதுகாத்து வரும் எங்கள் அரசன் சுக்ரீவனுக்கு ஜெயம், நான் பவன சம்பவன், ஹனுமான். கோஸல ராஜனுடைய தாஸன் என்று வீதிக்கு வீதி உரத்து கூவி என்னைப் பறை சாற்றிக் கொண்டேன். துராத்மாவான ராவணன் க்ருஹத்தில், அசோக வனத்தின் மத்தியில் சிம்சுபா வ்ருக்ஷத்தின் அடியில், வேதனையோடு உடல் இளைத்து, மேகங்கள் மறைத்த சந்திரலேகா போல பிரபையின்றி, ஒளியின்றி, ராவணனை சற்றும் மதியாமல், பதி விரதையாக, ஜானகியைக் கண்டேன். சர்வாத்மாவும் ராமனிடமே என்று இருக்கிறாள். அவனிடம் அளவில்லா அன்பும், பற்றும் உடையவள். புரந்தரனான இந்திரனிடத்தில் பௌலோமி இருப்பது போல ராகவனிடத்தில் சீதை, ஒரே நினைவாக இருக்கிறாள். புழுதி படிந்த கேசமும், ஒற்றை வஸ்திரமுமாக தன் கணவனின் நலத்திலேயே கவனமாக, வேதனையால் வருந்துபவளாக, ராக்ஷஸிகளின் மத்தியில் திரும்பத் திரும்ப பயமுறுத்தப்பட்டு, நடுங்கிக் கொண்டிருக்கக் கண்டேன். ப்ரமதாவனம், (முற்றிலும் பெண்களே உள்ள இடம்) என்ற அந்த அசோக வனத்தில், ஒற்றைக் குழலுடன், கணவன் நினைவே துணையாக, பூமியில் படுத்துறங்குகிறாள். இதனால் பனியில் அடிபட்ட தாமரை மலர் போல நிறம் இழந்து காணப் படுகிறாள். ராவணனிடம் உள்ள வெறுப்பில், தன்னை மாய்த்துக் கொள்ளவும் துணிந்து விட்டாள். எப்படியோ அந்த மான் விழியாளுக்கு என்னிடம் நம்பிக்கை வரச் செய்தேன். அவளுடன் சம்பாஷித்து, நடந்த விவரங்களையும் சொன்னேன். ராம, சுக்ரீவ சக்யம் பற்றி கேட்டு மகிழ்ந்தாள். சமுதாசாரத்தில் பற்றுள்ளவள். பர்த்தாவிடம் எல்லையற்ற அன்பும், பக்தியும் உடையவள். அந்த மகாத்மாவான தேவி, தானே ஏன் தசானனான ராவணனை வதம் செய்யவில்லை தெரியுமா? ராவண வதம் ராமனைக் கொண்டே நடைபெற வேண்டும் என்று விரும்புகிறாள். நிமித்தமாக இருப்பது ராமனே தான் (நிமித்த மாத்ரம் ராமஸ்து, வதே4 தஸ்ய ப4விஷ்யதி). சுபாவமாகவே கொடி போன்ற மெலிந்த சரீரம். மேலும் சோகத்தால் இளைத்திருக்கிறாள். ப்ரதமையில் ஆரம்பித்த கல்வி போல வளராமல் இருக்கிறாள். மெலிந்து இருந்தாலும் தன்னைக் காத்துக் கொண்டு, சோக சாகரத்திலேயே மூழ்கி இருக்கிறாள். நாம் என்ன செய்யலாம் என்பதை இப்பொழுது தீர்மானிப்போம்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில் அனந்தர கார்ய ப்ரரோசனம் என்ற ஐம்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)