பொருளடக்கத்திற்கு தாவுக

அத்யாயம் – 11

பிப்ரவரி 24, 2014

 

 

 

த்யானம் – இளம் சூரியன் போன்ற பிரகாசமுடையவள், இந்துவை கிரீடத்தில் வைத்திருப்பவள்,  உயர்ந்த ஸ்தனங்களும், மூன்று கண்களும் உடையவள், இளம் முறுவலுடன் கூடினவள், வரத3, அங்குச, பாச, அபீதி (அபய) கரங்களுடன், உள்ள புவனேஸ்வரியை வணங்குகிறேன்.

ரிஷி சொன்னார் – தேவியால் அந்த மகா அசுரன் வதம் செய்யப்பட்ட பிறகு, இந்திரனும் மற்ற தேவர்களும், அக்னியின் தலைமையில் அவள் இருக்குமிடம் சென்றனர். காத்யாயினி என்று சொல்லி அவளை வணங்கி துதி செய்தனர். மகிழ்ச்சி தாண்டவமாடும் முகத்துடன், நம்பிக்கையுடன் மலர் தூவி துதித்தனர்.

3.  தேவி !  தயை செய்.  (உன்னை) பணிந்தவர்களின் துயர் தீர்ப்பவளே ! தயை செய். மூவுலகிலும், அகில ஜனங்களுக்கும் தாயானவள், விஸ்வேஸ்வரி! தயை செய். காப்பாற்று. சராசரம் அடங்கிய இந்த உலகுக்கு தேவி ! நீயே ஈஸ்வரி.

4. நீ ஒருவளே, இந்த உலகுக்கு ஆதாரமானவள். பூ (மி) ஸ்வரூபமாக இருப்பவள், நீராக இருப்பவளும் நீ,  உன்னாலேயே இந்த உலகம் முழுவதும் தண்ணீர் என்ற தத்வம் நிறைந்தது. எந்த விதத்திலும், உன்னை எதிர்த்தோ மீறியோ செல்ல முடியாத வீரம் உள்ளவள் நீயே.

5. நீ தான் வைஷ்ணவி என்ற சக்தி.  அனந்த வீர்யமுடையவள் நீ. நீயே பரமா மாயை. உலகின் பீஜமாக இருப்பவள். உன் மாயையால் இந்த உலகம் முழுவதும் மோகிக்கப் பட்டது. பூமியில் நீ தான் ப்ரஸன்னமாகி (மகிழ்ந்து) முக்தியை அளிக்க வல்லவள்.

6. எல்லாவிதமான வித்யைகளும், உன் பல விதமான ரூபங்களே. உலகில் உள்ள பெண்கள் அனைவரும் உன் ஸ்வரூபமே. உன் ஒருவளால், அம்பா, இந்த உலகமே நிறைந்தது. உயர்ந்த வாக்குகளால் துதிக்கத் தகுந்தவள் நீ. உன்னை துதி செய்ய ஸ்தோத்திரம் என்று எதைச் சொல்வோம்.

7. எல்லா ஜீவன்களiலும் நிறைந்தவள் நீ. சுவர்கத்தை, முக்தியை தரக் கூடியவள் நீ. உன்னை துதிக்க வந்தோம் என்றால், உயர்ந்த சொல் வளம் வேண்டுமே, உயர்ந்த சொற்கள் எவை என்று எப்படித் தெரிந்து கொள்வோம்.  (அதையும் நீயே தான் அருள வேண்டும் தேவி)

8. எல்லோர் உள்ளத்திலும் புத்தி ரூபமாக இருப்பவள் நீயே. சுவர்கத்தைக் காட்டிலும் உயர்ந்த ஸ்தானத்தை தருபவளே, நாராயணீ!  உனக்கு நமஸ்காரம்.

9. ஒரு கலையின் காஷ்டா (ஒரு கால அளவு) மிகச் சிறிய அளவில் உன் கடாக்ஷம் பெற்றாலே பரிணாமத்தின் பலனைத் தருபவள் நீ. உலகமே அழிந்தாலும் சக்தியாக மீதி இருப்பவளான நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

10. சர்வ மங்களங்களுக்கும் மங்களமானவளே, சிவே! எல்லா விதமான தேவைகளையும் தருபவளே, (அர்த்தம் – பொருள், பொருளை வேண்டுவோருக்கு அதே போல அருளுபவள்) உலகுக்கு சரணமாக இருப்பவளே !  த்ரயம்பகே!, கௌரி! நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

11. ஸ்ருஷ்டி, ஸ்திதி, விநாசம், என்ற மூன்று நிலையிலும் சக்தியாக இருப்பவளே !, சனாதனீ !, நிரந்தரமானவள் நீயே. நல்ல குணங்கள் உன்னை ஆச்ரயித்து பெருமை பெறுகின்றன. நீயே குணங்கள் நிரம்பியவள்.

12. சரணம் என்று வந்த தீனர்களiன் துயர் துடைக்க முனைந்து நிற்பவளே !. அனைவரின் கஷ்டங்களைத் தீர்ப்பவளே. தேவி, நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

13. ப்ரம்மாணீ என்ற ரூபத்தை தரித்தவளே ! ஹம்சம் பூட்டிய விமானத்தில் செல்பவளே. வெண் பட்டுடுத்தியவளே, நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

14. மாகேஸ்வரி ஸ்வரூபமாக உள்ளவளே ! த்ரிசூலம், சந்த்ரஹாரம் என்ற ஆயுதங்களைத் தரித்தவளே !, பெரும் ரிஷப வாகனத்தில் செல்பவளே !, நாராயணீ உனக்கு நமஸ்காரம்.

15. கௌமாரியாக ரூபம் ஏற்றவளே !, மாசற்றவளே ! மயில், கோழி, இவை சூழ, வந்தவளே, நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

16. வைஷ்ணவி ரூபமாக விளங்கியவளே ! சங்க2ம், சக்ரம், க3தா, சார்ங்க4ம் என்ற பரமாயுதங்களை ஏந்தியவளே!  தயை செய், நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

17. வராஹ ரூபமான சிவே! , உக்ரமான மகா சக்ரத்தைக் கொண்டு, பூமியை தன் பற்களால் விடுவித்தவளே ! , நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

18. உக்ரமான ந்ருசிங்க ரூபம் ஏற்று, தைத்யர்களை கொல்ல முயற்சி செய்தவளே ! மூவுலகையும் காக்க சக்தியுடையவளே, நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

20. சிவ தூதி என்ற ஸ்வரூபத்தில் மகா அசுர படைகளை அழித்தவளே ! கோரமான ரூபம் உடையவளே ! யுத்தத்தில், எதிரிகளை பெரிதும் வாட்டக் கூடியவளே, நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

21. பற்களுடன், கராளமான (அழகில்லாத, கறுத்த) முகத்தையுடையவள். தலைகளால் (கபாலங்களால்) ஆன மாலை அணிந்தவளே. சாமுண்டே ! முண்டனை வதைத்தவளே, நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

22. லக்ஷ்மி, லஜ்ஜா, மகா வித்யா, ஸ்ரத்தை, புஷ்டி, ஸ்வதா4, த்4ருவா, மகா ராத்ரி, மகா வித்யா, – இவை உன்னை வர்ணிக்கும் பெயர்களே. அப்படிப் பட்ட நாராயணீ உனக்கு நமஸ்காரம். 

23. மேதா4 என்ற புத்தி விலாசம் உள்ள சரஸ்வதியே! வரம் தருபவளே !

பூ4தி, பா3ப்4ரவி, தாமஸீ என்ற பெயர்களுடன் விளங்குபவளே, தயை செய். நீயே நாராயணீ ! உனக்கு நமஸ்காரம்.

24. ஸர்வ ஸ்வரூபமும் நீயே. சர்வத்துக்கும் ஈச, தலைமை தாங்குபவளும் நீயே. சர்வ சக்தியும் ஒன்றாக இணைந்தவள், பயங்களிலிருந்து எங்களை காப்பாற்று, துர்கே, தேவி, உனக்கு நமஸ்காரம்.

25. இதோ சௌம்யமாக இருக்கும் உன் வதனம், மூன்று கண்களுடன் அலங்காரமாக தெரிகின்றது. எல்லா வித துன்பங்களிலிருந்தும் எங்களை காப்பாற்றும் காத்யாயனீ, உனக்கு நமஸ்காரம்.

26. அதி உக்ரமான (அக்னி) ஜ்வாலை போல காட்சி தரும், அசுரர்களை நாசம் செய்த உன் த்ரிசூலம் எங்களை காக்கட்டும். பத்ரகாளி! உனக்கு நமஸ்காரம்.

27. தைத்யர்களுடைய தேஜஸை அழிக்க, தன் ஒலி – நாதத்தாலேயே உலகத்தை வியாபித்து நின்ற உன் கண்டா மணிகள், உன் குழந்தைகள் போன்ற எங்களை பயங்களிலிருந்து காப்பாற்றட்டும்.

28. அசுர, சுர என்று இரு பக்க வீரர்களும் அடிபட்டு சிந்திய ரத்தம் சேறாக, உன் கையில் பிரகாசமாக விளங்கும் வாள் எங்களுக்கு ஜயத்தை தரட்டும். சண்டிகே உன்னை நாங்கள் வணங்குகிறோம்.

29. எல்லா விதமான ரோகங்களையும் தீர்த்து வைப்பாய். நீ மகிழ்ந்து இருந்தால், அதாவது நீ விரும்பினால் விரும்பிய வரம் அனைத்தும் தருவாய். உன்னை ஆஸ்ரயித்த – அண்டிய நரர் – மனிதர்களுக்கு விபத்து என்பதே கிடையாது. அது தவிர, உன்னை அண்டியவர்கள், தாங்களே மற்றவர்களுக்கு அபயம் தரும் தன்மையையும் அடைந்து விடுகிறார்கள்.

30. இதோ, இப்பொழுது செய்தாயே, யுத்த பூமியில் வதம் என்று, பல விதமான ரூபங்களை ஏற்று, தர்மத்திற்கு விரோதிகளான மகா அசுரர்களை அழித்து,  அந்த ரூபமே, அம்பிகே, அது போல வேறு யாரால் செய்ய முடியும்.

31. வித்தைகளiல், சாஸ்திரங்களiல், விவேக தீபங்களாக விளங்கும் ஆதி வாக்யங்களiல்,  வேதங்களiல், உன்னையன்றி வேறு யார், மமத்வ- நான் எனது என்ற,  அதி அந்தகாரமான இருட்டிலும் நடமாடுவார்கள்,  இந்த உலகம் முழுவதிலும் சஞ்சரிப்பார்கள்.

32. ராக்ஷஸர்கள், கொடிய விஷம் உள்ள நாகங்கள் எங்கு உள்ளனவோ, எங்கு எதிரிகள், அசுர பலங்கள், காட்டுத் தீ போல பரவுகிறதோ, நடுக்கடலில் விபத்து என்றாலோ, அங்கெல்லாம் நீ கண்டிப்பாக எங்களை காக்க வந்து விடுவாய்.

33. விஸ்வேஸ்வரி நீ,  உலகை பரிபாலிப்பாய். விஸ்வாத்மிகா – உலகத்தினுள் உறைந்த அந்தர்யாமியாக உள்ளவள் நீ – உலகை தாங்குகிறாய் என்பதால், உலகம் முழுவதும் வணங்கத் தக்கவள், சரணம் வேண்டி வந்தவர்களுக்கு உடனே அடைக்கலம் தரக்கூடியவள் நீ ஒருவளே, எனவே உன்னை பக்தியுடன் வணங்கி நிற்கிறோம்.

34. தேவி! , தயை செய். எதிரிகளை கண்டு பயப்படும் எங்களை காப்பாற்று. இன்று செய்தது போல உடனுக்குடன் அசுர வதம் செய்து விடு. உலகம் முழுவதும் பயம் என்பதே இல்லாமல் செய். உலகம் முழுவதும் சாந்தமாகட்டும்.  

35. வணங்கியவர்களுக்கு தயை செய். தேவி ! , உலகில் துன்பத்தை துடைப்பவள் நீயே. மூவுலகிலும் வசிப்பவர்கள் வணங்கத் தக்கவளே, அவர்களுக்கு என்றும் வரம் தருபவளாக இரு.

தேவி சொன்னாள். – வரம் தருபவள் தானே நான்.  தேவ கணங்களே, மனதில் என்ன விரும்புகிறீர்களோ, அந்த வரத்தைக் கேளுங்கள். தருகிறேன். உலகுக்கு நன்மை தரக் கூடிய வரங்களே கேளுங்கள்.

தேவர்கள் சொன்னார்கள். – (38)

இப்பொழுது செய்தாயே அது போல எப்பொழுதும் எங்கள் எதிரிகளை அழித்து உபகாரம் செய். மூவுலகம் போற்றும் அகிலநாயகி நீ, எல்லா வித கஷ்டங்களையும் அடக்க கூடியது உன் கருணையே.

தேவி சொன்னாள். – 28 வது யுகத்தில் வைவஸ்வத மந்தரம்வரும் பொழுதும் சும்பனும் நிசும்பனும் மற்றும் பல மகா அசுரர்கள் தோன்றுவார்கள். நந்த கோப க்ருஹத்தில் யசோதா வயிற்றில் பிறந்தவளாக அவர்களை நாசம் செய்வேன். விந்த்ய மலையில் வசிப்பேன். திரும்பவும் அதி ரௌத்ரமான ரூபத்துடன் பூமியில் தோன்றி வைப்ரசித்த என்ற தைத்யர்களை அழிப்பேன்.

அவர்கள் மிக உக்ரமானவர்களாக இருப்பார்கள். மகா அசுரர்களான வைப்ரசித்தர்களை விழுங்கி, என் பற்கள் சிவந்து விடும். ரக்த தந்திகா என்று போற்றுவார்கள்.

திரும்பவும் நூறு ஆண்டுகளில் மழை இன்றி, நீர் இன்றி தவிக்கும் பொழுது, முனிவர்கள் துதிப்பார்கள்.  பூமியில் அயோனிஜாவாக தோன்றுவேன். அப்பொழுது 100 கண்களோடு முனிவர்களுக்கு அருள் புரிவேன். அதனால் மனிதர்கள் என்னை சதாக்ஷி என்று அழைப்பார்கள். (சதாக்ஷன் என்பது இந்திரன் பெயர், மழை பொழிவது இந்திரன் செயல்). அப்பொழுது உலகம் முழுவதும் என் உடலில் தோன்றும் விளை பொருட்களால் நிரப்புவேன். பிராணனைத் தரும் அந்த காய்கறிகளால், விளை பொருட்களால் மகிழ்ந்து தேவர்கள் துதிப்பார்கள். சாகம்பரி என்று புகழ் பெறுவேன்.  அதன் பின் துர்கம் என்ற மகா அசுரனை வதைப்பேன். துர்கா தேவி என்று பெரும் புகழ் பெறுவேன். அதுவே என் பெயராகும். திரும்பவும் ஹிமாசலத்தில் பயங்கரமான ரூபம் எடுத்துக் கொண்டு  முனிவர்களை காப்பாற்ற, ராக்ஷஸர்களை விழுங்குவேனா, அப்பொழுது அவர்கள் எல்லோருமாக தலை குனிந்து, வணங்கி துதி செய்வார்கள். பீமா தேவி என்று எனக்கு பெயர் வந்து சேரும். அருணன் என்பவன் பெரும் உபத்ரவம் செய்வான். அவனை நான் வண்டு ரூபம் எடுத்து கணக்கில்லாத தேனீக்களாக மாறி மகா அசுரனான அவனை உலக நன்மைக்காக வதம் செய்வேன். அந்த சமயம் உலகத்தார் என்னை ப்ராமரி என்று போற்றுவர். இப்படி யார், எப்பொழுது தானவர்களால் துன்பப் படுகிறார்களோ, அந்த அந்த சமயம் அவதரித்து எதிரிகளை அழிப்பதை செய்வேன்.

  

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக