பொருளடக்கத்திற்கு தாவுக

தேவி மாஹாத்ம்யம்- ரஹஸ்ய த்ரயம், க்ஷமா ப்ரார்த்தனா

பிப்ரவரி 24, 2014

 

 தேவி மாஹாத்ம்யம்- ரஹஸ்ய த்ரயம்  

 

1) ப்ராதானிக ரஹஸ்யம்

 

அரசன் சொன்னான்-

பகவன்- பெரியவரே – இது வரை சண்டிகையின் அவதார விஷயங்களை விவரமாக தாங்கள் சொல்லி தெரிந்து கொண்டோம்.  நாங்கள் ஆராதிக்க தகுந்த வகையில் தெளிவாக உள்ளது எது –  அவதார வரிசைகளில் தேவியின் எந்த ரூபத்தை நாங்கள் பூஜிக்க வேண்டும் என்பதை தாங்கள் உறுதியாக சொல்ல வேண்டும். அதன் விதி முறைகளையும் தெரிந்து கொள்ள ஆவலுடன் வணக்கத்துடன் கேட்கிறேன்

ரிஷி பதிலளித்தார்.  இது பரம ரஹஸ்யம்- வெளியாருக்கு சொல்லக்கூடாது – என்பது எங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டளை. ஆயினும் நீ என் பக்தன். பக்தியுடன்  ஆவலுடன் கேட்பதாலும் சொல்கிறேன்.  உனக்கு சொல்லத் தடையில்லை.

பரமேஸ்வரியான மஹாலக்ஷ்மியே அனைவருக்கும் ஆத்யா- அதாவது முதல் தெய்வம்.  மூன்று குணங்களையுடையவள். உலகை வியாபித்து – உலகெங்கும் நிறைந்திருப்பவள்.  புலன் அறிவுக்கு எட்டியும் எட்டாமலும் இருப்பவள்.  ஜீவ ராசிகள் அனைத்துக்கும் தாயாக இருப்பவள்.  கைகளில் கதை, கேடம், பானபாத்ரம் இவைகளை வைத்திருப்பவள். தலையில் லிங்கம், நாகம், இவைகளும் இருக்கும்.  புடமிட்ட தங்கம் போன்ற உடல் நிறமும், அதே போன்று புடமிட்ட தங்க ஆபரணங்களுடனும் பிரகாசமுடன் காட்சி தருவாள். அது வரை சூன்யமாக இருந்த உலகை தன் ஒளியால் நிரம்பச் செய்து விட்டாள். சூன்யமாக கிடந்த உலகை உயிர்ப்பிக்க தானும் தாமஸமான உருவையே எடுத்துக் கொண்டாள். கருமையான உடல் நிறமும், கோரைப் பற்களும், பெரிய கண்களும், சிற்றிடையுமாக தோன்றினாள். நான்கு கைகள். அவைகளில் கட்கம், பாத்திரம், கேட்டை – என்பவைகள் அலங்கரித்தன.  மிகச்சிறந்த பெண்மணியாக, மஹாலக்ஷ்மியிடம் சென்று வணங்கி – எனக்கு ஒரு பெயரும், செயலும் தரவேண்டும் என வினவினாள். மஹாலக்ஷ்மியும், அவ்வாறே தருவதாகச்சொல்லி அனுக்ரஹித்தாள்.

உனக்கு பெயரும், நீ செய்ய வேண்டிய செயல்களையும் சொல்கிறேன் என சொல்லி வரிசையாகச் சொன்னாள்.

மஹா மாயா, மஹா காளி, மஹாமாரீ, க்ஷுதா, த்ரூஷா,  நித்ரா, த்ருஷ்ணா, ஏகவீரா, காலராத்ரி, துரத்யயா – இவைகளே உன் பெயர்கள். உன் செயல்களையும்  விவரிக்கின்றன. இவை உன் செயல்கள் என்று அறிந்து கொண்டு உன்னை வழிபடுபவன் நல்ல கதியை அடைவான் என்பதில் சந்தேகமே இல்லை. இவ்வாறு அவளிடம் சொல்லிவிட்டு, மஹாலக்ஷ்மி மற்றொரு உருவம் எடுத்துக் கொண்டாள். சத்வமாக, அதி சுத்தமான வெண்மை நிறமும் சந்திரனைப் போன்ற ஒளி சிந்தும் தண்மையான

உருவம். கைகளில் அக்ஷ மாலை, அங்குசம், வீணை, புஸ்தகம் இவைகளுடன், ஒப்பில்லாத அழகிய பெண்ணாகத் தோன்றினாள். அவளுக்கும், தேவி, பெயர்களையும், செய்ய வேண்டிய செயல்களையும் விவரித்தாள்.

மஹா வித்யா, மஹா வாணீ, பாரதீ, வாக், சரஸ்வதி, ஆர்யா, ப்ரஹ்மி, காமதேனு, வேத கர்பா, அறிவுக்கு அதிபதி. – இவையே.

அதன் பின் மஹா காளியையும், மஹா சரஸ்வதியையும் பார்த்து, மஹா லக்ஷ்மி சொன்னாள்- நீங்கள் இருவருமாக உங்கள் தேவைக்கேற்ப  தம்பதிகளாக ஸ்ருஷ்டி செய்து கொள்ளுங்கள் என்றவள், பின் யோசித்து, தானே ஸ்ருஷ்டி செய்யத்துவங்கினாள். இருவரை, அழகானவர்களாக, ஹிர்ண்யகர்ப எனும் பெயருடன், கமலாஸனத்தில், ஆணும் பெண்ணுமாக தோன்றச்செய்தாள். அதில் ஆணாக இருந்தவரை ப்ரும்மன், விதி, விரிஞ்சி, தாதா என்றும், அந்த பெண்ணுக்கு ஸ்ரீ, பத்மா, கமலா, மாதா என்றும் பெயர்கள் சூட்டினாள். 

 

இதற்கிடையில், மஹா காளி, பாரதி என்ற இருவர். இவர்களுடன் தோன்றிய ஆணுக்கு பெயர்கள் வருமாறு- நீல கண்டன், ரக்தபாஹூ, வெண் நிறத்தான், சந்த்ரசேகரன் என்றும், ருத்ரன், சங்கரன், ஸ்தாணு, கபர்தி, த்ரிலோசனன் என்றும் பெயர்கள். அடுத்து, பாஷா, அக்ஷரா, ஸ்வரா, காமதேனு, என்றழைக்கப் படும் சரஸ்வதி

கௌரி என்ற பெண்ணையும், க்ருஷ்ணம் என்ற ஆணையும் தோற்றுவித்தாள். அவர்களுடைய பெயர்கள், விஷ்ணு, க்ருஷ்ணன், ஹ்ருஷீகேசன், வாசுதேவன், ஜனார்தனன் என்றும், உமா, கௌரி, சதீ, சண்டி, சுந்தரி, சுபக, சிவா, என்ற இப்பெண்களும் உடனேயே சரீரம் உடையவர்களாக ஆனார்கள். ( புரம்-தேஹம், தேஹீ- சரீரம் உடையவன் என்பது போலவே புரம் என்ற உடலையுடையவன் புருஷன்) இவர்களை சாரதாரண மனிதக் கண்களால் காண இயலாது.

மஹாலக்ஷ்மி, இதன் பின் ப்ரும்மாவுக்கு பத்னியாக, த்ரயீ, ருத்ரனுக்கு வரம் தரும் குணமுடையவளாக கௌரீ, வாசுதேவனுக்கு ஸ்ரீ, என்றும் அளித்தாள்.

த்ரயீ (ஸ்வரா என்றும் பெயர்) என்பவளுடன் விரிஞ்சி ஒரு பூ கோளத்தை உண்டாக்கினார். வீர்யவானான ருத்ரன், அதை கௌரியுடன் கூடி பிளந்தார். அந்த அண்டம்- கோளத்தின் மத்தியிலிருந்து தான், அரசனே, பிரதானமான செயல்கள் தோன்றின. மஹாபூதங்கள் – ஆகாசம், வாயு, அக்னி, நீர், மண் – இவை தோன்றின. அசையும், அசையாப் பொருட்கள் மற்றும் ஜீவன்கள் தோன்றின. கேசவன் லக்ஷ்மியுடன் அவைகளை பாதுகாத்து, வளரச் செய்தான். கௌரியுடன் மஹேஸ்வரன் அதை திரும்பவும் மஹா சம்ஹாரம் செய்தான். இவ்வாறாக உயிர்கள் தோன்றவும் மறையவும், பின் தோன்றுவதுமாக சுழன்று வரும் சக்கரத்தை அனைத்தும் தானாகவே இருந்து நடத்தி வருகிறாள் தேவியான மஹாலக்ஷ்மி. மஹாராஜா, அவளுக்கு தனியான ரூபமோ, பெயரோ கிடையாது. வெவ்வேறு பெயர்கள் குறிப்பவை அவளையே தான் என்பதை அறிவாய்.

                                                             ************

2) வைக்ருதிக ரஹஸ்யம்.- 

ரிஷி சொன்னார்- ஓம். சத்வ, ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்களுடையவள் தேவி. அவளே சர்வா, சண்டிகா, துர்கா, பத்ரா, பகவதி, ஆவாள்.

ஹரியின் யோக நித்ராவாக இருக்கும் பொழுது, தமோ குணம் நிறைந்த மஹா காளியாவாள். இவளை மது கைடப அசுரர்களை வதம்  செய்யும் பொருட்டு, ப்ரும்மா

எழுப்பினார். அவளும் மாயையாக வந்தாள். பத்து வாய், பத்து புஜங்கள், பத்து கால், கைகள், முப்பது விசாலமான கண்கள், பற்கள் என்று பயங்கரமாக இருந்தாலும், மஹாலக்ஷ்மியால் உருவாக்கப் பட்டவளாதலால் தனித் தன்மையுடையவளாக கவர்ச்சியாகவே இருந்தாள். கைகளில், வாள், பாணம், கதை, சூலம், சக்கரம், சங்கம், புசுண்டி என்ற ஆயுதம், இவைகளையும், பரிகம், கார்முகம், சிர்ஷம் என்பவைகளையும்  வைத்திருந்தாள். இவளே வைஷ்ணவி மாயா. மஹாகாளியே இவள். எளிதில் இவளை நெருங்க முடியாது. வணங்கி ஆராதனை செய்யும் பக்தர்களுக்கு வசப்படுவாள்.

அனைத்து தேவ சரீரங்களிலும் இருந்து, தோன்றிய மஹாலக்ஷ்மி, மஹிஷமர்தினி என்ற பெயர் பெற்றவள். வெண்ணிறமும், அதை விட வெண்மையான ஸ்தனங்களும், கருமையான புஜங்களும், சிவந்த மத்ய பாகமும், பாதங்களும், கருமையான முழங்கால்களும், அழகிய பின் பாகமும், சித்ர விசித்ர ஆபரணங்களுமாக, வாசனைப் பொருட்கள் நிறைந்த அங்க ராகங்களுமாக, காந்தி, உடலமைப்பு, இவைகளால் மங்களகரமாக , விளங்குபவளுமாக, பதினெட்டு புஜங்களும், சில சமயம், ஆயிரம் கைகளுடையவளுமாக, சதியான இவளை பூஜிப்பவர் சொல்வர். இவள் கைகளிலுள்ள ஆயுதங்கள் – அக்ஷ மாலா, கமலம், பாணம், அசி என்ற வாள், குலிசம், கதை, சக்கிரம், த்ரிசூலம், பரசு, சங்கம், கண்டா- மணி, பாசக்கயிறு, சக்தி, தண்டம், சர்ம, சாபம், பான பாத்ரம், கமண்டலு, இந்த ஆயுதங்களுடன் கமலத்தில் அமர்ந்தவளான மஹா லக்ஷ்மி, அனைத்து தேவர்களும் ஒன்றாக விளங்கும் மகா சக்தி ஆவாள். இந்த விதமாக பூஜிப்பவர்கள், இவ்வுலகிலும், பரலோகத்திலும் ப்ரபுவாக, அரசனாக ஆள்வான்.

அதே போல, சத்வ குணம் நிறைந்த கௌரியின் உடலில் இருந்து வெளிப்பட்டவளே சாக்ஷாத் சரஸ்வதி என்பவளாவாள். அவளே சும்பாசுரனை அழித்தவள். அதன் பொருட்டு எட்டு புஜங்களையும், பாண முஸலங்களையும், சூல, சக்கரங்களையும், சங்கையும், கண்டா என்ற மணி இவை தவிர லாங்கலம், கார்முகம் என்பவைகளையும் தரித்தவள். பக்தியுடன் இவளை நன்றாக பூஜை செய்பவர்களுக்கு சர்வஞத்வம் – அனைத்தையும் அறியும் சக்தி என்பதைத் தருவாள். இவளே நிசும்ப மதினி- நிசும்பனை சம்ஹாரம் செய்தவள். அரசனே, இவைகள் தான் அம்பிகையின் ரூபங்கள். இவர்களை உபாசிக்கும் விவரங்களையும் சொல்கிறேன் கேள்.  பூமியை ஆளும் அரசனே. ஜகன்மாதாவின் பல விதமான உபாசனை முறைகளையும் தெரிந்து கொள்,

மஹாலக்ஷ்மியை பூஜை செய்யும் பொழுது, மஹா காளி, மஹா சர/ஸ்வதி – இவர்களை முறையே, தெற்கு, வடக்கு திசைகளில் பூஜிக்க வேண்டும். பின் பாகத்தில் இரட்டையர்களான மூவரும் இருக்க வேண்டும். ப்ரும்மா, ஸ்வரா என்பவளுடன் மத்தியிலும், ருத்ரன் கௌரியுடன் தென் பாகத்திலும், இடப் பக்கத்தில், லக்ஷ்மி தேவியுடன் ஹ்ருஷீகேசனையும், முன் பாகத்தில் மூன்று தேவதைகளையும், பதினெட்டு கைகளையுடைய ரூபம் மத்தியிலும், அவளது இடப்பக்கத்தில் பத்து முகங்களையுடையவள் என்ற பொருளில் தசானனா என்பவளையும், தென் பாகத்தில் எட்டு கைகளையுடைய லக்ஷ்மியை மஹதி என்றும் பூஜிக்க வேண்டும்.

பதினெட்டு கைகளையுடைய தேவியாக பூஜிக்க நினைத்தால் , நராதிபனே, இந்த தசானனா, தென் பாகத்திலும் எட்டு கைகளையுடையவளாக வடக்கிலும் வைக்க வேண்டும்.

இடர்கள் தீர, கால ம்ருத்யு இவர்களையும் பூஜை செய்ய வேண்டும். எட்டு கைகளையுடையவளாக, சும்பாசுரனை வதைத்தவள், அவளுடைய ஒன்பது சக்திகளையும் பூஜிக்க வேண்டும். அத்துடன் ருத்ர, மற்றும் வினாயகரையும் பூஜிக்க வேண்/டும். நமோ தேவ்யா என்ற மந்திரத்தால் மஹா லக்ஷ்மியை அர்ச்சிக்க வேண்டும். மூன்று அவதாரங்களை அர்ச்சிக்கும் மந்திரங்கள், துதிகளைச் சொல்ல வேண்டும். மஹிஷ மர்தினி – எட்டு கைகளுடையவள். மஹா லக்ஷ்மியே, மஹா காளி, மஹா சரஸ்வதி என்றும் அழைக்கப் படுவர். சர்வ லோக மஹேஸ்வரி, புண்ய பாபங்களை நிர்வஹிப்பவள்.  மஹிஷனை வதைத்தவள் என்று, ஜகத்ப்ரபுவே பூஜித்தார். சண்டிகா பகவதீ என்ற இவளே, பக்த வத்ஸலா. அர்க்யம் முதலானவைகளும், அலங்காரங்களும், கந்த புஷ்பங்கள், அக்ஷதைகள், தூப தீபங்கள், பல விதமான நைவேத்யங்கள், ப்ரணாம, ஆசமனியங்கள், சுகந்தமான சந்தனம், கர்பூரம் சேர்த்த தாம்பூலங்கள், இவைகளை பக்தி பாவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும். இடது பாகத்தில், தேவியின் எதிரில் மகா அசுரனின் சிதைந்த தலையை வைக்க வேண்டும், இவனும் தேவியின் கரத்தால் வெட்டுண்டதால் சாயுஜ்யம் என்ற பதத்தை அதைந்தான் அன்றோ. தென் பாகத்தில் தேவியின் முன் தர்மமே உருவான சிங்கம் விளங்கும். இது தேவியின் வாகனம்.

இதன் பின் மனம் ஒன்றி தேவியை துதிக்க வேண்டும். கைகூப்பி வணங்கியபடி, இந்த சரிதங்களை சொல்லி துதிக்க வேண்டும். மத்யம சரிதம் என்ற ஒரு அத்யாயம் மட்டுமாக துதிக்கலாம். மற்ற பகுதிகளை தனியாக சொல்வதில்லை. பாதி சரித்திரத்தில் நிறுத்தக் கூடாது. அது பாதி ஜபம் – என்பதால். பிரதக்ஷிண நமஸ்காரங்கள், தலியில் அஞ்சலி செய்பவனாக ஜகன் மாதாவிடம் அபராத க்ஷமா என்பதை செய்ய வேண்டும். முடிந்தால் பிரதி ஸ்லோகத்திற்கும் பாயசம் வைவேத்யம் செய்யலாம்.

எள், நெய், சுத்தமா ஹவிஷ் முதலியவையும் நைவேத்யம் செய்யலாம். ஸ்தோத்ர மந்திரங்களால் அர்ச்சிக்க வேண்டும்.  பின் நாம பஜனைகள், ஆத்ம நிவேதனம் என்ற பாவனையுடன் தன்னையே சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு மனம் ஒன்றி தேவியை பூஜிப்பவன், சகல விதமான போக்யங்களை இக லோகத்தில் அனுபவித்து பின் தேவியின் சாயுஜ்யம் என்ற பதவியை அடைந்து விடுகிறான். பக்த வத்ஸலாவான இந்த தேவியை பூஜிக்கத் தெரியாதவன், தெரிந்தும் செய்யாதவன், புண்யங்கள் அழிய, தேவியினாலேயே வதைக்கப் படுவான். பூபால, அதனால், பூஜை செய். சர்வ லோக மஹேஸ்வரி இவள். உசிதமான விதத்தில் பூஜை செய். சுகத்தை அடைவாய்.

                                                                     **************

 

3) மூர்த்தி ரஹஸ்யம் –

ரிஷி சொன்னார்-

ஓம். தேவி நந்தனுக்கு மகளாக நந்த என்ற பெயருடன் பிறப்பாள். அவளை துதித்து, பூஜை செய்து வந்தால் மூவுலகும் உன் வசமாக காண்பாய். உத்தமமான பொன் நிறத்தினளாக, அதே போல பொன் நிற ஆடையுடன், பொன் ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளாக பிரகாசமாகத் தெரிவாள். நான்கு கைகளிலும், கமலம், அங்குசம், பாசம், தாமரை மலர் வைத்திருப்பாள். அவளே, ஸ்ரீ, இந்திரா, கமலா, லக்ஷ்மி என்ற பெயர்களுடன், பொன் மயமான தாமரை மலர் வடிவினாளான ஆசனத்தில் வீற்றிருப்பாள். மாசற்ற அரசனே, இவளைப் பற்றி நான் முன்பே சொல்லியிருக்கிறேன். ரக்த தந்திகா என்ற பெயருடன் அவள் கோலத்தை வர்ணிக்கிறேன் கேள், அது உன் பயத்தை போக்கும். ரக்தாம்பரா- சிவப்பு ஆடை தரித்தவள், தானும் சிவந்த நிறத்தினள், அவள் ஆபரணங்களும் சிவந்தவையே. அதே நிற ஆயுதங்கள், அவள் கண்களும் சிவந்து, கேசம் கூட சிவந்து பயங்கரமான தோற்றமளிக்கும். விரல்களில் நகங்களும் சிவந்து, பற்களும், சிவந்து காணப்படும். இந்த தேவியை ஒரு பெண் தன் பதியைத் தொடர்ந்து போவது போல, பக்தியுடன் பின் பற்றி, தொழ வேண்டும். இவள் பூமியைப் போல விசாலமான உருவமும் உடையவள். இரு சுமேரு மலைகளும் அச்சமயம் இவள் ஸ்தனங்களாகும். மனோஹரமாக பெருத்துக் கணப்படும் ஸ்தனங்கள், எல்லா ஆனந்தங்களையும் உள்ளடக்கிய கடல். பக்தர்களுக்கு அனைத்து

விருப்பங்களையும் பூர்த்தி செய்ய வல்லவை இவை. கட்கம், பாத்ரம், முஸலம், லாங்கலம் என்ற ஆயுதங்கள், நான்கு கைகளிலும் தரித்திருப்பாள்.  ரக்த சாமுண்டா என்றும் யோகேஸ்வரி என்றும் அழைப்பர். தாவர, ஜங்கம  – அசையும், அசையா பொருட்களைக் கொண்ட இந்த உலகம் அவள் ஆளுமைக்கு உட்பட்டது. அவளே வியாபித்து இருப்பாள். இவளை பூஜிப்பவன் சராசரங்களையும் அடைவான். ரக்த தந்தி என்ற கோலத்தில் தேவியை உணர்ந்து பூஜிப்பவன்,  அன்பான மனைவி கணவனுக்கு பணிவிடை செய்வது போல செய்பவன், ஒரு நிலையில் அவள் தனக்கு அனுக்ரஹம் செய்வதையும் உணர்வான்.

துர்கா என்று புகழ் பெற்ற கோலத்திலும் அவளுக்கு பல பெயர்கள். சாகம்பரி, நீல வர்ணா, நீலோத்பலம் போன்ற கண்களுடையவள்- நீலோத்பல விலோசனா, என்பவை. கம்பீரமான உடல் அமைப்பு உடையவளாக வர்ணிக்கப் படுகிறாள். நாபியைச் சுற்றி த்ரிவலீ, உயர்ந்த ஸ்தனங்கள், முஷ்டியும், கூர்மையான சிலீ முகம் என்ற ஆயுதமும், கமலமும் வைத்திருப்பாள். கமலாசத்தில் அவளை தியானிக்க  வேண்டும். புஷ்பம், துளிர்கள், வேர், பழ வகைகள், காய் வகைகள், ருசியான ரசம் நிறைந்த பயிர் பச்சைகள், பசியையும், தாகத்தையும் பயத்தையும் நீக்கக் கூடியவைகளை – இவைகளை இவள் சரீரத்தில் உற்பத்தி ஆவதைக் காணலாம். பள பள வென்ற கார்முகம் என்ற ஆயுதம் தரித்த அவள் பரமேஸ்வரி என்று போற்றப் படுகிறாள். மற்றும் சாகம்பரி, சதாக்ஷி, என்றும் இவள் பெயர்கள்.

அவளே பார்வதியாகவும் துதிக்கப் படுவாள். விசோகா – சோகம் என்பது அண்ட முடியாதவள், துஷ்ட தமனி – துஷ்டர்களை அடக்குபவள், வினைப் பயனால் வரும் பயங்களையும் தீர்த்து வைப்பவள் என்ற பொருளில், சமனீ துரிதாபதாம் என்று வணங்கப்படுகிறாள். உமா, கௌரி, சதீ, சண்டீ, காலிகா என்பது இவளுக்கு பெயர்கள். சாகம்பரியாக இவளைக் கண்டு துதி செய்து, வணங்கி. ஜபம், தியானம் முதலியவைகளையும் குறைவற செய்பவன், அக்ஷயமான அன்னம், பானம், அம்ருத மயமான பழங்கள், இவைகளை சீக்கிரமே அடைவான். காலராத்ரி என்ற பெயருடன் விளங்குபவளை, துதித்தால் விரும்பியதை பெறலாம். அவள் தோற்றம் பயங்கரமானது. நீல வர்ணமும், கோரை பற்களுமாக இருந்தாலும், அருள் பாலிப்பவளே. விசாலமான கண்கள், பெருத்த ஸ்தனங்கள், சந்த்ர ஹாசம், டமரு, அரக்கனின் தலை, பாத்ரம் இவைகள் இவள் கைகளில் விளங்கும். ஏகவீரா என்றும் சொல்வர். அதே போல மஹா மாரீ என்பவளும் கண்களை கூச செய்யும் ஒளி மயமான சூழலில் இருப்பாள். இவளுடைய மற்றொரு பெயர், ப்ராமரீ. இவள் ஆடை அலங்காரங்கள் விசித்ரமாக இருக்கும். கையில் ப்ரமரம்-வண்டு வைத்திருப்பாள்.

இவ்வாறாக தேவியின் பல ரூபங்களையும் விவரித்துச் சொல்லி விட்டேன். ஜகன் மாதாவான தேவி விரும்பியதை தருவதில் காமதேனுவுக்கு ஒப்பானவள். இது ரஹஸ்யமாக சொல்லப் படுகிறது. நீ யாரிடமும் விவரிக்க வேண்டாம். விரும்பிய பலனைத் தரவல்ல, தேவியை உன் மனதில் நினைத்து மனம் ஒன்றி தியானம் செய். அதுவே செயல் அதுவே பலன் என்பதாக நினைத்து அனவரதமும் ஜபம் செய். ஏழு ஜன்மங்களில் செய்த பாவங்களும் தொலைந்து, போகக் காண்பாய். ப்ரும்ம ஹத்தி பாபம் கூட தேவியின் ஸ்மரணத்தால் அழியும். பாராயணம் செய்வதால் பல கஷ்டங்களிலிருந்தும் விடுபடுவார்கள். மிக மிக அரிய ரஹஸ்யம் என்ற இந்த தேவியின் தியான யோக முறைகளை உனக்கு தெளிவாக சொல்லியிருக்கிறேன். ஆகவே, முழு முயற்சியுடன் ஈடுபாட்டுடன் இவைகளை செய்து பலனடைவாய்.

(அதனால் எல்லோரும் மதிக்கத் தகுந்தவனாக ஆவாய். தேவியே எல்லா ரூபங்களுமாவாள். உலகமே தேவி மயமாகும். அதனால் விஸ்வரூமான தேவியை, பரமேவரியை வணங்குகிறேன்.

இத்துடன் மூர்த்தி ரகஸ்யம் சம்பூர்ணமாகிறது.

 க்ஷமா ப்ரார்த்தனா –

பரமேஸ்வரி, நாள் தோறும் பல அபராதங்கள் செய்தாலும், உன் தாஸன் என்று என்னை மன்னிக்க வேன்டுகிறேன். எனக்கு ஆவாஹனமோ, விசர்ஜனமோ, (பூஜையை ஆரம்பித்து செய்வதோ, முடிப்பது போன்ற விவரங்கள் ) அறிந்தும் அறியாமலும் செய்வதை ஏற்றுக் கொள். மந்திரத்தில்., செயலில், பக்தியில் குறைவிருந்தாலும், சுரேஸ்வரி, நீ, என் பூஜையை பரிபூர்ணமாக செய். நூற்றுக் கணக்கான அபராதங்கள் செய்தாலும் ஜகதம்பா என்று உச்சரித்து பெறும் ப்லனை ப்ரும்மா முதலானவர்கள் கூட பெற மாட்டார்கள் என்று கேட்டிருக்கிறேன். ஜகதம்பிகே, உன்னையே சரணம் என்று அடைந்து விட்டேன். உன் விருப்பப்படி என்னை ஆட்கொள். பரமேஸ்வரி, நான் தவறாக செய்தாலும் அதற்கு காரணம், என் அறியாமை, மறதி, ப்ரமை, இவையே. அதனாலேயே நான் செய்வது குறைவாகவோ, அதிகமாகவோ ஆகிறது. ஆகவே இவைகளை பொருட்படுத்தாமல் என்னை மன்னித்து ஏற்றுக் கொள். தயை செய். பரமேஸ்வரி, நீயே ஜகன்மாதா, காமேஸ்வரி, சச்சிதானந்த விக்ரஹா. மிக ரகஸ்யமான இந்த ஜபத்தை நான் செய்கிறேன். , உன் அருளால் எனக்கு சித்தி கிடைக்க வேண்டும். தேவி அருள் செய்.

ஸ்ரீ துர்கார்ப்பணமஸ்து.

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக