ஸ்ரீமத் ராமாயணம் அயோத்யா காண்டம் 41 -60
அத்தியாயம் 41 (118) நகர சம்க்ஷோப: (நகரத்தாரின் மனக் குமுறல்)
புருஷ வ்யாக்ரன் என்று புகழ் பெற்ற தசரத ராஜா திரும்பி வந்ததும், அந்த:புரத்து ஸ்த்ரீகள் இன்னும் தொடர்ந்து புலம்பலானார்கள். எங்களுக்கெல்லாம் நாதனாக இருந்தவன் எங்கே போகிறான். திட்டினால் கூட கோபித்துக் கொள்ள மாட்டான். கோபம் வரக் கூடிய சந்தர்பங்களைத் தவிர்த்து கோபித்துக் கொண்டவர்களையும் இனிமையாகப் பேசி சமாதானம் செய்து, துக்கமோ சுகமோ ஒரே போல இருப்பவன் எங்கு, ஏன் சென்றான்? கௌசல்யா தான் அவனைப் பெற்றவள். இருந்தும் அவளிடம் பிரியமாக இருப்பது போலவே நம்மையும் தாயாக மதித்தான். கைகேயியின் வற்புறுத்தலுக்கு இணங்கி ராஜா வனத்துக்கு கடத்தி விட்டான். நம் ஜனங்களை பாதுகாத்து ரக்ஷித்தவன் கிளம்பி விட்டான். ஐயோ, இந்த அரசனுக்கு புத்தி இல்லை. தர்மமே உருவான, எல்லோருக்கும் பிரியமான சத்யவ்ரதனான ராமனை வனத்தில் வசிக்கச் சொல்லி அனுப்பி விட்டான். இவ்வாறு அங்கு இருந்த ராணிகள், கன்றை இழந்த தாய்ப் பசுவைப் போல அழுதனர். துக்கம் தாங்காமல் அரற்றினர். அந்த:புரத்து இந்த அலறல், காதில் விழவும் ஏற்கனவே புத்ர சோகத்தால் தவித்துக் கொண்டு இருந்தவன் இன்னும் அதிக வேதனையடைந்தான். அக்னி ஹோத்ரிகள் தங்கள் அக்னியில் ஹோமம் செய்யவில்லை. வீடுகளில் சமையலே நடக்கவில்லை. ஒரு வேலையும் செய்ய ஓடாமல் பிரஜைகள் நிற்க, சூரியன் மட்டும் நில்லாமல் அஸ்தம் அடைந்தான். யானைகள் உணவுக்காக கொடுக்கப் பட்ட கவளங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. பசுக்கள் கன்றுகளுக்கு ஊட்டவில்லை. முதன் முதலில் பிறந்த மகனைக் கண்டு தாய் ஆனந்தம் அடையவில்லை. த்ரிசங்குவும், லோஹிதாங்க3னும், பி3ருஹஸ்பதியும், பு3த$னும் பயங்கரமான க்ரஹங்கள் எல்லாம் சந்திரனை அடைந்து நின்று விட்டன. நக்ஷத்திரங்கள் தங்கள் ஒளியை இழந்தன. க்ரஹங்கள் தங்கள் பிரகாசத்தை இழந்தன. விசாகா2: (கிளையில்லாத) புகையுடனும் ஆகாயத்தில் தெரிந்தன. வாயுவின் வேகத்தால் ஆகாயத்தில் தூக்கியெறியப்பட்ட சமுத்திரம், மேகங்களை அடியோடு மறைத்து விட்டது. ராமன் வனம் செல்ல புறப்பட்டபொழுது, நகரம் இவ்வாறு தவித்து தத்தளித்தது. திசைகள் கவலையுற்றன. எங்கும் இருள் சூழ்ந்தது போல இருந்தது. க்ரஹமோ, நக்ஷத்திரமோ, வேறு எதுவும் பிரகாசிக்கவில்லை. அகஸ்மாத்தாக எதிர்ப்
பட்டவர்களிடம் ஜனங்கள் தீனமாக ஏதோ ஒப்புக்கு பேசி விட்டு நகர்ந்தனர். ஆகாரத்திலோ, விளையாட்டிலோ யாருக்கும் மனம் ஒன்றவில்லை. சோகத்தால் வாடிய முகத்துடன், பெருமூச்சு விடுபவர்களாக, அயோத்யா நகர் ஜனங்கள் தசரத ராஜாவை குறை கூறினர். ராஜ மார்கத்தில் ஜனங்கள் யாருமே சந்தோஷமாக இல்லை. கண்களில் நீர் திரையிட்டிருக்க, அவரவர் தன் துக்கத்தில் மூழ்கியவராக நடமாடினர். குளிர்ந்த காற்றும் வீசவில்லை. சந்திரனைப் பார்த்தால் சௌம்யமாகத் தெரியவில்லை. சூரியனின் வெப்பமும் சுடவில்லை. எல்லாமே குழப்பமாக இருந்தது. சிறு குழந்தைகள் தாயிடம் எதுவும் வேண்டும் என்று கேட்கவில்லை. அதே போல மனைவியும் கணவனிடம் எதுவும் வேண்டவில்லை. சகோதரர்கள் தங்களுக்குள் எதுவும் கேட்டுப் பெற்றுக் கொள்ளவில்லை. எல்லோருடைய மனதிலும், ராமனின் நினைவே மேலோங்கியிருந்தது. ராமனுடைய நெருங்கிய நண்பர்கள், எதிலும் மனம் செல்லாமல் படுக்கையும் கொள்ளாமல் தவித்தனர். மகாத்மாவான ராமன் இல்லாத அயோத்தி, இந்திரன் மலைகளுடன் சேர்த்து பூமியை அசைத்த பொழுது நாகங்களும், யுத்தம் செய்யும் வீரர்களும் குதிரைகளும் ஒன்றாக பயந்து சோகம் மேலிட, அலறியது போல இருந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் நகர சம்க்ஷோப4: என்ற நாற்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 42 (119) தசரதாக்ரந்த: (தசரதன் அழுகை)
புழுதிப் படலம் மறையும் வரை அரசன் தன் கண்களை அகற்றவில்லை. அத்யந்த தார்மிகனான புத்திரனை அந்த புழுதிப் படலத்தினுள் கண்டு கொண்டானோ? அது வளர்ந்து கொண்டே சென்று மறைந்தது. புழுதியும் தெரியாமல் போனவுடன் அரசன் துக்கம் தாங்காமல் பூமியில் விழுந்தான். அவன் வலது கையைத் தாங்கி கௌசல்யை பிடித்துக் கொள்ளவும், இடது கையை கைகேயி பற்றிக் கொண்டாள். அவளைப் பார்த்து, நயமாகவே, நன்றாகப் பார்த்து தன் இந்திரியங்கள் பலமிழந்த நிலையிலும் தசரத ராஜா கைகேயி, என் அங்கங்களைத் தொடாதே. பாபம் செய்யத் துணிந்த உன்னை நான் கண்ணால் கூட காண விரும்பவில்லை. நீ எனக்கு மனைவியுமல்ல, உறவினளும் அல்ல. உன்னை அண்டி வசிப்பவர்கள் எல்லோருமே எனக்கு உற்றாரும் அல்ல. நானும் அவர்களுக்கு பந்து அல்ல. அர்த்தம் என்ற பொருளே, செல்வமே பெரிதென்று நினைத்த உன்னை நான் தியாகம் செய்கிறேன். நீ தான் தர்மத்தையே விட்டவளாயிற்றே. திருமண காலத்தில் அக்னி சாக்ஷியாக எந்த கையைப் பற்றினேனோ, இந்த உலகிலும், பரலோகத்திலும் கூட அதை விட்டேன். பரதன் அரசை அடைந்து மகிழ்ச்சியடையட்டும். அவனும் எனக்கு பிதா என்ற முறையில் எந்த கடனும் செய்ய வேண்டாம். அவன் செய்தாலும் என்னை வந்தடையாமல் போகட்டும். திடுமென நடந்த நிகழ்ச்சிகளின் பலனாக உடல் இளைத்து கிடந்த கௌசல்யா, உடல் பூரா புழுதி மண்டியிருந்த அரசனைத் தூக்கி நிறுத்தி, பேச்சை திசை திருப்பினாள். காம வசப்பட்டு ஒரு ப்ராம்மணனைக் கொன்று விட்டு, அக்னியில் கை வத்தவன் போல தவித்துக் கொண்டு, தபஸ்வியாக செல்லும் புத்திரனை நினைத்து நினைத்து வருந்திய அரசன், ரதம் போன வழியை திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டு, தன் சுய நிலையை அடையவே இல்லை. க்ரஹணத்தால் பீடிக்கப் பட்ட சூரியனைப் போல தன் தேஜஸை இழந்தான். பிரியமான புத்திரனை திரும்ப திரும்ப நினைத்து கண்ணீர் பெருக்கினான். அவன் நகரத்தின் எல்லைக்குப் போய் விட்டான் என்று அறிந்ததும் புலம்பினான். என் மகனை ஏற்றிச் சென்ற ரதம் போன பாதை தெரிகிறது. என் மகனைக் காணவில்லையே. சுகமான உயர்ந்த படுக்கையில் படுத்து சந்தன வாசனை கம கமக்க, தகுதி வாய்ந்த ஸ்த்ரீகள் விசிறி விட, உத்தமமான என் மகன் தூங்குவான். அவன் இன்று எங்கேயோ மரத்தின் அடியில் கட்டையையோ, கல்லையோ தலைக்கு வைத்துக் கொண்டு தூங்கப் போகிறான். புழுதி படிந்த உடலுடன் ஒரு வசதியுமில்லாத பரதேசியைப் போல விழித்தெழுவான். ப்ரஸ்ரவண மலையில் பெண் யானைகளின் இடையில் ரிஷபம் போல நிற்கும் இவனை, லோக நாதனான ராமன் அனாதையாக சுற்றுவதை காட்டு ஜனங்கள் காண்பார்கள். ஜனகனுடைய செல்ல மகள் சீதை முள் நிறைந்த வழியில் நடந்து களைத்து போயிருப்பாள். வனம் என்றால் என்ன என்று தெரியாத வரை சரி. இப்பொழுது ப்ரத்யக்ஷமாகப் பார்த்து பயந்து போய் இருப்பாள். பயங்கரமாக நாய்கள் குரைப்பதைக் கேட்டு நடுங்குவாள். கைகேயி, நன்றாக இரு. இஷ்டப்பட்டதை கேட்டு வாங்கிக் கொண்டு, விதவையாக ராஜ்யத்தை அனுபவி. நான் உயிருடன் இருப்பேன் என்று எண்ணாதே. அந்த ராமன் இல்லாமல் எனக்கு உயிருடன் இருக்கவே பிடிக்கவே இல்லை. புலம்பியவாறே அரசன் நகருக்குள் வந்தான். நாற் சந்திகள் சூன்யமாக கிடந்தன. கடை வீதிகள் மூடப்பட்டிருந்தன. ராஜ வீதி அமைதியாக கிடந்தது. எங்கும் துக்கத்தின் சாயலே வீசியது. ராமனையே நினைத்தபடி நடந்து வந்து தன் வீட்டுக்குள் நுழைந்தது மேகத்தில் சூரியன் மறைந்தது போல இருந்தது. ராம, லக்ஷ்மண, சீதை இல்லாத வீடு, நுழையவே பிடிக்கவில்லை. தழ தழத்தக் குரலில், மிகவும் பரிதாபமாக ராம மாதாவின் அறைக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள். வேறு எந்த இடத்திலும் எனக்கு ஆறுதல் கிடைக்காது. என்றான். இதைக் கேட்டு காவற்காரர்கள், அரசனை கௌசல்யையின் அறையில் கொண்டு விட்டனர். கௌசல்யையின் அறையில் கட்டிலின் மேல் அமர்ந்தும் கூட மனம் வாடியது. சந்திரன் இல்லாத ஆகாயம் போல இரண்டு புதல்வர்களும், மருமகளும் இல்லாத வீடு அரசனுக்கு வேதனையளித்தது. கைகளை உயரத் தூக்கி ஓவென்று கதறி அழுதார். ஹா ராமா, என்னைக் கொன்று விடு. எவர்கள், ஆரோக்யமாக வாழ்ந்து, ராமன் திரும்பி வருவதைக் காண கொடுத்து வைத்திருக்கிறார்களோ, அவர்களே பாக்யசாலிகள். ராத்திரி நேரம் தனக்கு கால ராத்திரியே என்று எண்ணினான். நள்ளிரவில் கௌசல்யையைப் பார்த்து, ராமனைத் தொடர்ந்து சென்ற என் கண்கள் இன்னும் திரும்பவில்லை. கௌசல்யே, உன்னை பார்க்க முடியவில்லை. சாதுவே, என்னைக் கொஞ்சம் கையினால் தொட்டு பாரேன். ராமனையே நினைத்து மிகவும் பரிதவித்துக் கொண்டிருந்த கௌசல்யை, அருகில் வந்தமர்ந்தவள், இது வரை அடக்கி வைத்திருந்த தன் துக்கத்தை தாள மாட்டாமல் கதறினாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் தசரதாக்ராந்தோ என்ற நாற்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 43 (120) கௌசல்யா பரிதேவனம் (கௌசல்யா வருந்துதல்)
படுக்கையில் துவண்டு கிடந்த மகாராஜாவைப் பார்த்து கௌசல்யா புத்ர சோகத்தால் வருந்தியவளாக அரசனிடம் சொன்னாள். சர்ப்பம் தன் விஷத்தைக் கக்கி விட்டு, நிச்சிந்தையாகத் திரிவது போல, கைகேயி ராமனிடத்தில் விஷத்தைக் கக்கி விட்டு, அவனை காட்டுக்கும் அனுப்பி விட்டு, தன் காரியம் ஆன திருப்தியோடு வளைய வருவாள். என்னை இன்னும் அதிகமாக பயமுறுத்தி விரட்டப் போகிறாள். வீட்டுக்குள் நுழைந்து விட்ட பாம்பு பயமுறுத்துவது போல. இந்த நகரத்தில் ராமன் நடந்து சென்று பிக்ஷை எடுத்து வாழ வேண்டும். வேண்டிய வரங்களைத் தானே தரக் கூடிய சக்தியுடையவன் என் மகன். க3ஜ ராஜன் போல நடப்பவன். வில்லேந்தி கம்பீரமான ஆக்ருதியோடு, இப்பொழுது சகோதரனுடனும், மனைவியுடனும் காட்டில் வசிக்கப் போகிறான். கைகேயி சொன்னதைக் கேட்டு அவனைக் காட்டுக்கு அனுப்பி விட்டீர்கள். இதுவரை கண்டறியாத வனப் பிரதேசம், என்னவெல்லாம் கஷ்டங்கள் இருக்குமோ. எப்படித்தான் நாட்களை கழிக்கப் போகிறார்களோ. ஆடை ஆபரணங்களை களைந்து விட்டு அனுபவிக்க வேண்டிய காலத்தில் மரவுரி உடுத்தி காட்டுக்கு விரட்டி விட்டீர்கள். நன்றாக சாப்பிட்டு பழக்கமானவர்கள், காட்டில் கிடைக்கும் பழங்களையும், தழைகளையும் சாப்பிடப் போகிறார்கள். திரும்பவும் மனைவி சகோதரர்களுடன் ராமனைக் காணக் கூட எனக்கு ஆயுள் இருக்கப்போகிறதோ, இல்லையோ. துக்கம் தான் என்னை அரித்து எடுக்கிறதே. தூங்கி எழுவதற்கு முன் வருவதாகச் சொன்னான். இரண்டு வீரன்களும் பிரதிக்ஞை முடிந்து திரும்பி வரும் பொழுது, இந்த ஊர் ஜனங்கள், எவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள். புகழ் வாய்ந்த மகிழ்ச்சி நிறைந்த ஜனங்களுடன், ஏற்றிய கொடிகள் பறக்க, திரும்பி வந்த ராஜகுமாரர்களைப் பார்த்து, பர்வ காலத்தில் சமுத்திரம் போல ஆரவாரிக்கப் போகிறது. மாடு மேய்ப்பவர்கள் திரும்பி வரும் பொழுது களைத்துப் போன தன் பத்னியை, ரிஷபத்தில் ஏற்றி ஓட்டி வருவது போல சீதையை ரதத்தின் முன்னால் வைத்து ஓட்டி வருவான். ராஜ மார்கத்தில் கூட்டமாக நின்று ஜனங்கள் பொரிகளை இரைத்து வரவேற்கப் போகிறார்கள். சுபமான குண்டலங்களைத் தரித்து அவர்கள் வரும்பொழுது கன்யா ஸ்த்ரீகளும், ப்ராம்மணர்களும், பழம் முதலியவைகளை கையில் வைத்துக் கொண்டு வரவேற்பார்கள். முன்னூறு ஆண்டு காலமாக சீராட்டி வளர்த்தது போல இருக்கிறது. முன் ஜன்மத்தில் கன்றுக்கு பாலூட்ட நினைக்கும் தாய் ஜீவன்களின் ஸ்தனங்களை, கொடுமையாக அடித்து வதைத்தேனோ, இப்பொழுது அனுபவிக்கிறேன். சிங்கம் வந்து கன்றை அடித்து பிரித்துக் கொண்ட பின், தாய்ப் பசு வாடுவது போல வாடுகிறேன். கைகேயி பலாத்காரமாக என் மகனை என்னிடமிருந்து பிரித்து விட்டாளே. நல்ல குணவானும், சாஸ்திரங்களை அறிந்தவனுமான என் ஒரே மகன் இல்லாமல் நான் உயிருடன் இருக்கவே விரும்பவில்லை. எனக்கு சக்தியில்லை. பலசாலியான நெடிதுயர்ந்து வளர்ந்த என் மகன் அருகில் இல்லாமல் நான் வாழ்ந்து தான் என்ன செய்யப் போகிறேன். என் சரீரத்தில் எழும் துக்கத்தின் காரணமாக அக்னி ஜ்வாலை, சூரியன் தன் கிரணங்களால் பூமியைத் தகிப்பது போல தகிக்கிறது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் கௌசல்யா பரி தே3வனம் என்ற நாற்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 44 (121) சுமித்ராஸ்வாசனம் (சுமித்திரை சமாதானம் செய்தல்)
உத்தமமான ஸ்த்ரீயான கௌசல்யை அழுவதைப் பார்த்து தர்மத்தில் சிறந்த அறிவுள்ளவளான சுமித்திரை சமாதானம் செய்தாள். ஆர்யே, உன் மகன் புருஷோத்தமன். நல்ல குணங்கள் உடையவன். நீ இப்படி பரிதவித்து அழுவதால் என்ன பயன்? தந்தை சொல்லைக் கேட்டு ராஜ்யத்தைத் துறந்து வனம் போய் இருக்கிறான். தந்தையின் சத்யவாதி என்ற பெயர் நிலைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக தானே ஏற்றுக் கொண்டு வனம் சென்றான். எப்பொழுதும், அவன் எங்கு இருந்தாலும், சீலத்தில் சிறந்த அறிஞர்கள் சூழ்ந்து கொண்டு தான் இருப்பார்கள். அதனால் அவன் உத்தமமான வழியில் தன் காலத்தை செலவழித்துக் கொண்டு, அதாவது பயன் தரும்படியான வாழ்க்கையை எங்கு இருந்தாலும் வாழ்ந்து கொண்டிருப்பான். தவிர, லக்ஷ்மணன் உடன் இருக்கிறான். மாசற்ற நற்குணங்களுக்கு இருப்பிடம் அவன். ராமனுடன் சேர்ந்து வாழ்வதில் அவனுக்கும் தான் லாபம். அரண்ய வாசத்தில் என்ன துக்கம் என்று அறிந்தே ஜானகி உடன் சென்றிருக்கிறாள். பிரபுவான தசரத மகாராஜா, கீர்த்தி என்னும் கொடியை, உலகம் முழுவதும் பரப்பி வைத்திருக்கும் பொழுது, தர்மம் சத்யம் இவற்றை செல்வமாக கிடைக்கப் பெற்ற ராமன் எதைத் தான் சாதிக்க மாட்டான். ராமனுடைய வீர்யத்தையும், நன்னடத்தையும் கண்டு சூரியனும் அவனை தகிக்க மாட்டான். எப்பவுமே சுகமாக, சரியான சீதோஷ்ன நிலையில், காற்றும் அவன் மேல் மென்மையாக வீசுவான். இரவில் தூங்கும் பொழுது, சந்திரன் தன் குளுமையான கிரணங்களால், மெதுவாக தொட்டு பரிசுத்தமான ராமனை, தந்தை பாதுகாப்பது போல பாதுகாப்பான். திமித்வஜசுதன் என்ற ராக்ஷஸனை (திமி- திமிங்கிலம் இதை கொடியில் உடைய இந்திரன், அவனுக்கு உதவி செய்ய தசரதர் சென்ற பொழுது தான் கைகேயி உதவி செய்ததும், அரசனை காப்பாற்றி, வரம் பெற்றதும்) யுத்தத்தில் வென்றான், என்று தெரிந்தவுடன் ப்ரும்மா தானே வந்து ரணத்தில் திவ்யாஸ்திரங்களை கொடுத்தாரோ, அந்த வீர புருஷனின் மகன் ராமன். புருஷவ்யாக்4ர, மனிதருள் வ்யாக்4ரம்-புலி போன்ற பலசாலி. தன் புஜ பலத்தில் அசாத்திய நம்பிக்கையுடையவன். காடானாலும், தன் வீட்டில் இருப்பது போலவே நிச்சிந்தையாக இருப்பான். எவனுடைய அம்பு போகும் திசையில் சத்ருக்கள் மடிந்து விழுவார்களோ, அந்த வீரனுடைய அதிகாரத்தில் பூமி ஏன் நிலைத்து நிற்காது. எந்த லக்ஷ்மி, சௌர்யம், கல்யாண குணங்கள் இவை ராமனிடத்தில் இருக்கின்றனவோ, இதே காரணமாக வனவாசத்திலிருந்து திரும்பி வந்து ராமன் ராஜ்யத்தை அடைந்தே தீருவான். இவன் சூரியனுக்கும் சூரியனாக இருப்பான். பிரபுக்களுக்கு பிரபு. லக்ஷ்மியின் லக்ஷ்மித்வம் இவனே. கீர்த்தியின் முதன்மையாக நிற்பவன். பொறுமைக்கே பொறுமை சொல்லித்தருபவன் ஆவான். தேவதைகளுக்கும் இவன் தேவன் ஆவான். ஜீவன்களுக்குள் உத்தமமானவன். இவனுக்கு வனம் என்ன? நகரம் என்ன? எதையும் அவன் கஷ்டமாக நினைக்க மாட்டான். இந்த வீரன், பூ4 தேவியையும், வைதேஹியையும், லக்ஷ்மியையும் சேர்த்து அடைவான். இம்மூவருடனும் சேர்ந்து ராஜ்யாபிஷேகம் செய்து கொள்வான். அயோத்யா ஜனங்கள், துக்கத்தினால் உண்டான கண்ணீர் பெருக விட்டு, நகரை விட்டு வெளியேறிச் செல்லும் எந்த ராமனைப் பார்த்து சோகத்தால் பீடிக்கப் பட்டவர்களாக எல்லோருமாக சீதையைப் போலவே, பின் தொடர்ந்து சென்றனரோ, அந்த தோல்வியையே அறியாத வீரனுக்கு லக்ஷ்மி தேவியை அடைவது என்ன கஷ்டம். வில்லைத் தாங்குவதில் ஸ்ரேஷ்டனான லக்ஷ்மணன், பாணங்களும், வாள், அஸ்திரங்கள் இவற்றை ஏந்தி, ராமனுக்கு முன்னால் செல்லும் பொழுது ராமனால் சாதிக்க முடியாதது என்று என்ன இருக்க முடியும்? வன வாசம் முடிந்து திரும்பி வந்த ராமனை இதோ கண்டதாகவே நினைத்துக் கொள். இந்த மோகமும், சோகமும் எதற்கு? இதை விடுங்கள் தேவி. நான் சொல்வது சாத்யமே. சந்த்ரோதயம் போல, எதிரில் வந்து உங்கள் கால்களில் விழுந்து வணங்கும் மகனை இதோ காண்பீர்கள். திரும்பி வந்து முடி சூட்டிக் கொண்டவனாக மகத்தான ராஜ்ய ஸ்ரீயை ஏற்றுக் கொண்டு இந்த கண்களால் காணும் பொழுதும் கண்ணீர் விடுவீர்கள். ஆனால் அது ஆனந்த மிகுதியால் வரும் கண்ணீராக இருக்கும். ராமனிடத்தில் சிறிதளவு கூட சோகமோ, துக்கமோ தென்படவில்லை. சீக்கிரமே, சீதையுடனும், லக்ஷ்மணனுடனும், உங்கள் மகனைக் காண்பீர்கள். மேலும், தேவீ, நீங்கள், இங்குள்ள மற்ற அனைத்து ஜன சமூகத்தையும் சமாதானப் படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள். இந்த சமயம் இது போல மனதை தளர விடலாமா? ராகவனை மகனாகப் பெற்றவள், இது போல சிந்தனை வயப் படுவது பொருத்தமாக இல்லையே. ராமனைத் தவிர வேறு ஒருவரை, இவ்வாறு நியாயமாகச் செல்பவனைக் காண்பது அரிது. தன் சுற்றார், நண்பர்களுடன் கூட வந்து நமஸ்கரிக்கும் மகனைக் கண்டு, ஆனந்த கண்ணீர் விடும் நாள் அதிக தூரத்தில் இல்லை. மழைப் பொழியும் மேகத்தின் இடையில் மின்னல் தோன்றுவது போல, உங்கள் மகன் நல்ல கொடையாளி.. அயோத்யா திரும்பி வந்த உடனேயே, தன் மிருதுவான கைகளால் உங்கள் பாதங்களை ஸ்பர்சிப்பான் என்பது நிச்சயம். வணங்கி நமஸ்காரம் செய்யும் மகனை, நண்பர்கள் கூட்டத்தோடு வரும் சூரனை, மேகங்கள் மலைகளின் மேல் நீர் பொழிவது போல உன் ஆனந்த கண்ணீரால் ப்ரோக்ஷிப்பாய். (ப்ரோக்ஷணம்-நீர் தெளித்தல்). இது போல பல சமாதான வார்த்தைகளால் சமாதானப் படுத்தி, ராமனுடைய தாயாரிடம் பேசி சுமித்ரா நிறுத்தினாள். நரதேவனான தசரத பத்னியும், லக்ஷ்மணன் தாயுமான சுமித்ரை சொன்னதைக் கேட்டு ராம மாதாவின் துக்கம் அவளை விட்டு நீங்கியது, மிகக் குறைவான நீரைக் கொண்ட மேகம் சரத் காலத்தில் காணாமல் போவது போல.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சுமித்ராஸ்வாசனம் என்ற நாற்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 45 பௌர யாசனம் (ஊர் ஜனங்களின் வேண்டு கோள்.)
சத்ய பராக்ரமனான ராமனை பின் தொடர்ந்து சென்ற ஜனங்கள், வன வாசம் செல்லும் அவனிடம் மிகவும் ஈ.டுபாடு கொண்டிருந்தவர்கள். சுஹ்ருத் தர்மம்- திரும்பி வர வேண்டும் என்று விரும்பும் சுற்றத்தாரோ, உற்றாரோ, அவர்களை வெகு தூரம் சென்று வழியனுப்பக் கூடாது, என்று தசரத ராஜா சொன்னதையும் மீறி, பலமாக திரும்பி செல்ல வேண்டியதையும் கேட்காமல், ரதத்தை தொடர்ந்து வந்து விட்டிருந்தனர். அயோத்தியில் இருந்த புருஷர்களுக்கு இவன் பூர்ண சந்திரன் போன்றவன். தன் பிரஜைகள் திரும்பத் திரும்ப வேண்டிக் கொண்ட பொழுதும், தன் தந்தையின் வாக்கை காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் ராமன் வனம் செல்வதை மேற் கொண்டு விட்டான். சினேகம் நிறைந்த விழிகளால் அவர்களைப் பார்த்து, தன் சொந்த பிரஜைகளைப் (குழந்தைகளை) பார்ப்பது போல மிக அன்புடன் சொன்னான். -அயோத்யா நகர் ஜனங்களே, என்னிடம் நீங்கள் காட்டும் இந்த அன்பை பரதனிடமும் காட்டுங்கள். இந்த செயலில் தான் நீங்கள் என் விருப்பத்தை நிறைவேற்றியவர்கள் ஆவீர்கள். பரதனும் என்னைப் போலவே கல்யாண சாரித்திரம்- நன்னடத்தை, உள்ளவன். அவன் ஆட்சியில் முடி சூட்டப் பெற்று, உங்கள் விருப்பங்களை கட்டாயமாக பூர்த்தி செய்வான். வயதில் பாலனானாலும், ஞானத்தால் முதியவன். ம்ருதுவாக அதே சமயம் வீர்யம் என்ற எதிர் மறை குணங்கள் உடையவன். உங்கள் பயங்களை போக்கி, உங்களுக்கு அனுகூலமான ஆட்சியை நடத்துவான். அவன் ராஜ குமாரர்களுக்கான யோக்யதாம்சம் நிரம்பியவன். தேர்ந்து எடுக்கப் பட்டவன். தவிர எனக்கு பெரியோர்களின் கட்டளையை நிறைவேற்றும் பொறுப்பும் உள்ளது. என் விருப்பம் என்ன என்றால், நான் வன வாசம் போனதால், மகாராஜா சிரமப் படாமல் வருந்தாமல் பார்த்துக் கொள்ளுங்கள். – தாசரதியான ராமன் இவ்வாறு தர்மத்தை உபதேசம் செய்யச் செய்ய பிரஜைகள் அவனையே தங்கள் அரசனாக வேண்டினர். லக்ஷ்மணனும் ராமனுமாக, தீனமாக மன்றாடும் பிரஜைகளை தடுத்து நிறுத்தவே முயன்றனர். கண்களை கண்ணீர் மறைக்க உடன் தொடரும் இந்த ஜனங்களை என்ன செய்ய? ஞானத்தாலும், வயதிலும் மும்மடங்கு மூத்த ப்ராம்மணர்கள் கூட, வயோதிகத்தால் நடுங்கும் தலையுடன், தூரத்திலிருந்தே குதிரைகளைப் பார்த்து உயர் ஜாதி குதிரைகளே, திரும்பி வாருங்கள். போக வேண்டாம். உங்கள் எஜமானனுக்கு நன்மையைச் செய்யுங்கள். ஜீவன்கள் காதுகள் உடையவையே. முக்கியமாக குதிரைகளுக்கு கேட்கும் சக்தி மிகச் சிறந்தது. உங்களுக்கு நிச்சயம் எங்கள் முறையீடு கேட்கும். தயவு செய்து திரும்பி வாருங்கள். அவன் சுத்த வீரன். தர்மாத்மா. த்ருட விரதன். நல் வழியில் செல்பவன். அவனை ஊருக்குள் அழைத்து வருவது தான் உங்கள் வேலை. ஊருக்குள்ளிருந்து செல்வத்தை வெளி யேற்றிக் கொண்டு செல்வது சரியல்ல. இவ்வாறு வருந்தி புலம்பும் வயோதிகர்களான ப்ராம்மணர்களின் குரலைக் கேட்டு ராமன் வேகமாக ரதத்தை விட்டு இறங்கினான். சீதையுடன், லஷ்மணனுடனும் அந்த ப்ராம்மணர்களின் அருகில் சென்றான். அவர்களுடன் சரி சமமாக நடந்தே செல்ல ஆரம்பித்தான். மரியாதை கருதி அவன் அவர்களுடன் நடந்து வருகிறான் என்பதை புரிந்து கொண்ட ப்ராம்மணர்கள் திகைத்தனர். மிகவும் வேதனையுடன் ராமனைப் பார்த்து சொன்னார்கள் எஎங்களுடைய ப்ராம்மண்யம் எனும் ப்ரும்ம ஸ்வரூபம் உன்னை அனுசரித்து வருகிறது. எங்கள் தோள்களில் ஏற்றிக் கொண்டு நீ போகும் இடம் எல்லாம், அக்னியேயானாலும் தொடர்ந்து அக்னிக்குள் விழுவோம். வாஜபேய யாகங்கள் செய்து பழக்கமான எங்கள் சிஷ்யர்களைப் பார். ஜலம் வற்றியவுடன் மேகத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டே நடக்கும் ஜீவன்கள் போல இவர்களும் எங்களைத் தொடர்ந்து வருகிறார்கள். குடை கிடைக்காமல் போன உனக்கு வெய்யிலில் வருந்தும் பொழுது, இந்த சிஷ்ய கூட்டங்களாலேயே உனக்கு நிழல் தரும் குடைகளை அமைத்துத் தருவோம். இந்த சிஷ்யர்கள் வாஜபேய யாகம் செய்ய பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். இளம் ப்ரும்மசாரிகள். எங்கள் புத்தி எப்பொழுதும் வேத மந்திரங்களையே மனனம் செய்து கொண்டிருக்கும். உன் காரணமாக அந்த புத்தி வனவாசத்தை பின் தொடருவதாக ஆனது. எங்கள் உள்ளத்திலேயே வேதம் நிலைத்து நிற்கிறது. அதுவே எங்களுக்கு மிகச் சிறந்த தனம். வீடுகளில் மனைவிகள் பாதுகாப்பாக வசிக்கிறார்கள். எங்கள் புத்தி மந்திர பாராயணங்களால் பதப்பட்டு போய் இருந்தும், உன்னிடத்தில் நிலைத்து நிற்கிறது. ஒரு விஷயம் எங்களுக்கு புரியவில்லை. தர்மத்தையே நினைத்து, தர்மத்தையே செய்து வரும் உன்னிடத்தில் அதர்மமாக ஒரு காரியம் நடந்தேறுமானால், தர்மத்தை பின் தொடர்ந்து போய் நாங்கள் சாதிக்கப் போவது என்ன? அதனால் நாங்கள் யாசிக்கிறோம், திரும்பி வா. வெண்மையான ஹம்சம் போல நரைத்த தலையுடன், ஆசார நியமங்களை கடை பிடித்து சுபமான வாழ்கை நடத்தியவர்கள், பூமியில் விழுந்து வணங்கியதால் புழுதி மண்டிய சரீரத்தோடு பல யாகங்கள் செய்தவர்கள், இங்கு கூடியிருக்கும் ப்ராம்மணர்கள். அந்த யாகங்களின் பூர்த்தி நீ திரும்பி வந்து தான் செய்தாக வேண்டும். உலகில் உயிர்கள் அசையும், அசையாத பொருட்களும் பக்தியை செய்கின்றன. யாசிக்கும் இந்த பக்தர்களிடம் நீயும் உன் பக்தியைக் காட்டு. உன்னைத் தொடர்ந்து வேகமாக நடக்க சக்தியற்றவர்களான மரங்கள், அடி வேரிலிருந்து வளைந்து காற்று வேகத்தில் உன்னைத் தொடுவது போல ஆடுகின்றன. ஓ வென்று அழுவது போல ஓசை கேட்கவில்லை? மரங்களில் அமர்ந்திருக்கும் பக்ஷிகள், அசையாமல், ஓரு வேலையும் ஓடாமல், ஆகாரம் கூட இன்றி உன்னைத் திரும்பி வர யாசிக்கின்றன. இவ்வாறு புலம்பிக் கொண்டே வரும் ப்ராம்மணர்கள், திரும்பி வரச் சொல்லி வற்புறுத்திக் கொண்டே வரவும், தமசா நதி ராகவனை தடுத்து நிறுத்துவது போல முன்னால் வழி மறித்தது. சுமந்திரர் களைத்துப் போன குதிரைகளை ரதத்திலிருந்து விடுவித்து, தண்ணீர் குடிக்க வைத்து, தமஸா நதிக் கரையில் மேய விட்டார்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பௌர யாசனம் என்ற நாற்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 46 (123) பௌர மோஹனம் (ஊர் ஜனங்களின் கவனத்தை திசை திருப்புதல்)
ரம்யமான தமசா நதிக் கரையில் ராகவன், சௌமித்திரியிடம் சொன்னார். இப்போதைக்கு ஒரு இரவு முன்னால் நாம் வனம் புறப்பட்டு வந்தோம், வன வாசம் செய்வோம் என்று சொல்லிக் கொண்டு வந்தோம். அதை நினைத்து நீ மனதை வாட்டிக் கொள்ளாதே. சூன்யமான இந்த காட்டைப் பார். எதிரில் அழுவது போல தெரிகிறது. மிருகங்களும் பக்ஷிகளும் ஒளிந்து கொண்டு இருக்கின்றனவா, தெரியவில்லை. நம் தந்தையின் ராஜதானி அயோத்யா. அயோத்யா நகர் ஆண் பெண்கள் சகலரும், நாம் விட்டு வந்ததை எண்ணி வருந்துகின்றனர். ஜனங்கள், தசரத ராஜாவிடம் அவருடைய குணங்களால் ஈ.ர்க்கப் பட்டு மிகவும் அன்பு செலுத்தி வந்தனர். உன்னையும், என்னையும் சத்ருக்ன பரதர்களையும் அவ்வாறே எண்ணினர். தந்தையை நினைத்து கவலையாக இருக்கிறது. அம்மாவும் என்ன செய்வாளோ என்று இருக்கிறது. அழுது அழுது கண் தெரியாமல் போய் விடக் கூடாது. பரதன் நல்லவன். அவன் வந்து விட்டால் நம் பெற்றோரை தர்மார்த்த காமம் நிறைந்த நல்ல வார்த்தைகளைச் சொல்லி சமாதானப் படுத்துவான். பரதனுடைய நேர்மையை நினைத்தால் நம் தாய் தந்தையரைப் பற்றி கவலைப் பட வேண்டாம். அவன் பார்த்துக் கொள்வான். என்னை பின் தொடர்ந்து நீ வந்து விட்டாய். வைதேஹியை பாதுகாப்பாக வைக்க இடம் தேட வேண்டும். இன்று இரவு வெறும் தண்ணீர் மட்டும் குடித்து, பொழுதைக் கழிப்போம். வனத்தில் கிடைக்கும் பொருட்கள் நிறைய இருக்கின்றன. இருந்தாலும் வேண்டாம் என்று சௌமித்திரியிடம் சொல்லி விட்டு, சுமந்திரனிடம், உன் குதிரைகளை அவிழ்த்து விட்டு ஒய்வு எடுத்துக் கொள் என்று சொன்னார். சூரியன் அஸ்தமித்தவுடன் சுமந்திரரும் குதிரைகளை ஆஸ்வாசப் படுத்தி, அவைகளுக்கு உணவு கொடுத்து கட்டி வைத்து விட்டுத் திரும்பினார். சந்த்யா கால ஜபங்களை முடித்துக் கொண்டு, இரவு தூங்க படுக்கையை லக்ஷ்மணனுடன் சுமந்திரரும் சேர்ந்து தயார் செய்யலானார்கள். மரத்தின் இலைகளைக் கொண்டு தமசா நதிக் கரையில் அமைத்த அந்த படுக்கையில், ராமர் , சௌமித்திரியுடன், மனைவியுடனும் அமர்ந்தார். ராமரும் சீதையும் தூங்கிய பின் சௌமித்திரி விழித்திருந்து, சுமந்திரனுடன் அவர்களைப் பற்றியே பேசிக் கொண்டு இரவைக் கழித்தான். பொழுது விடிந்தது. ராமர் அந்த இரவை நதிக் கரையில் (கோகுல) பசுக்கள் நிறைந்து இருந்த தமஸா நதியின் அருகில் இருந்து வந்த சப்தங்களால் தூக்கம் கலைந்து எழுந்தார். சாதாரண ஊர் ஜனங்கள் போலவே இயற்கையின் மடியில் வசித்தார். தம் வீடுகளில் சௌக்யமாக இருக்க வேண்டிய இவர்கள், நமக்காக, நம் கஷ்டத்தை தங்களுடையதாக எண்ணி இங்கு மரத்தடிகளில் தூங்குகிறார்கள். பார். இவர்கள் நம்மை திருப்பி அழைத்துச் செல்வதில் தீவிரமாக இருக்கிறார்கள். உயிரை விட்டாலும் விடுவார்கள். இந்த முடிவை மாற்றிக் கொள்ளப் போவதில்லை. இவர்கள் தூங்கும் பொழுதே நாம் மெதுவாக எழுந்து சென்று விடுவோம். மேலும் இந்த இஷ்வாகு நகர் வாசிகள், அதிக நேரம் தூங்கவும் மாட்டார்கள். நாம் ராஜ குமாரர்களாக இருந்து கொண்டு ஊர் ஜனங்கள் நம் பொருட்டு கஷ்டங்களை அனுபவிக்க விடக் கூடாது. நம் கஷ்டம் நம்மோடு. இவர்களையும் வருத்தக் கூடாது. நியாயமான இந்த வார்த்தைகளைக் கேட்டு லக்ஷ்மணன், எனக்கும் அப்படித் தான் படுகிறது. சீக்கிரம் ரதத்தில் ஏறிக் கொள்வோம். சுமந்திரனைப் பார்த்து ராமர், ரதத்தை தயார் செய் என்று சொல்ல, சீக்கிரம் அரண்யத்தின் உட்பகுதிக்குச் செல்வோம். அது தான் சரி என்றார். சுமந்திரரும் உடனே கயிறுகளை எடுத்து, குதிரைகளை ரதத்தில் பூட்டி, இதோ தயாராகி விட்டது, சீதை லக்ஷ்மணன் கூட ஏறிக் கொள்ளுங்கள் என்று சொல்லவும், ராகவனும் வேகமாக ஏறி பெருகி ஓடும் தமஸா நதியைக் கடந்து சென்றார். நதியைக் கடந்து, கொடும் பிராணிகளுக்கும் அபயம் தரும் அடர்ந்த காட்டுப் பாதையை அடைந்தார்கள். தடங்கல் இல்லாத மங்களகரமான வழியாக அது இருந்தது. ஊர் ஜனங்களை திசை திருப்புவதற்காக அவர் சுமந்திரனிடம் சொன்னார் சாரதே, கிழக்கு முகமாக சற்று தூரம் ரதத்தை ஓட்டு. ஒரு முஹுர்த்த நேரம் வேகமாக ஓட்டி விட்டு திரும்பிவா. ஊர் ஜனங்கள் என்னைக் காணாதவாறு செய் என்றார். சாரதியும் அவ்வாறே செய்தார். திரும்பி வந்து ராமனையும், மற்ற இருவரையும் ஏற்றிக் கொண்டு ரதம் புறப்பட்டது. ரகுவம்சத்தை விளங்கச் செய்ய வந்த இருவரையும், சீதையுடன் தபோவன மார்கமாக செல்லும் விதமாக சாரதி குதிரைகளை கடிவாளத்தை இழுத்து வழி நடத்தினார். தானே மகாரதியான ராமன், சாரதி அழைத்துச செல்ல வனம் சென்றான். யாத்திரை மங்களகரமாக இருக்கும் பொருட்டு, ரதம் கிழக்கு முகமாக முதலில் சென்றது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பௌர மோகனம் என்ற நாற்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 47 (124) பௌர நிர்வ்ருத்தி (ஊர் ஜனங்கள் திரும்புதல்)
பொழுது விடிந்தது. ராகவனைக் காணாமல் ஊர் ஜனங்கள் மனம் வாடினர். கண்க ளி ல் நீர் வடிய, துக்கத்துடன் எதிரே தென் பட்டவர்களை ராகவனோ என்ற ஆவலுடனேயே நோக்கினர். ராகவனைக் காணவில்லை. அதனால் பெரிதும் துக்கம் அடைந்தனர். அந்த புத்திமானான ராமன் இல்லாமல் முகம் வாடி, தீனர்களாக பரிதாபமாக தங்களுக்குள் பேசிக் கொண்டனர். என்ன தூக்கம் தூங்கினோம். புத்தியை மழுங்க செய்யும் தூக்கத்தால் இன்று ராமனைக் காணாமல் தவிக்கிறோம். அகன்ற தோளும், நீண்ட கைகளும் உடைய ராமனை இனி எப்பொழுது காண்போம்? அவனும் தான் எப்படி பக்த ஜனங்களான நம்மை நடுவில் விட்டு விட்டு வனம் சென்றான். தன் வயிற்றில் பிறந்த பிள்ளைகளை தந்தை பரிபாலிப்பதைப் போல நம்மைக் காத்து வந்தவன். ரகு குல ஸ்ரேஷ்டன். நம்மை விட்டு எப்படி கானகம் போனான். இங்கேயே நாம் உயிரை விடுவோம். கூண்டோடு கைலாசமாக எல்லோரும் உயிர் விடுவோம். ராமனை விட்டு நாம் என்ன சுகம் கிடைக்கப் போகிறது என்று உயிர் வாழ வேண்டும்? இங்கு நிறைய பெரிய பெரிய உலர்ந்த கட்டைகள் கிடக்கின்றன. இவைகளைக் கொண்டு சிதை அமைத்து எல்லோருமாக உயிர் விடுவோம். நகரில், ஸ்த்ரீ பால, வ்ருத்தர்கள், அனைவரும் நம்மை எதிர் பார்த்து இருப்பார்கள். ராகவன் இல்லாமல் நாம் போய் நின்று என்ன சொல்வோம். ராகவனை நழுவ விட்டு விட்டோம் என்று சொல்வோமா? ஏற்கனவே நொந்து போய் இருக்கும் ஜனங்கள் இன்னும் அதிகமாக தவிப்பார்கள். வெற்றி வீரனான ராகவனும் நாமும் கிளம்பினோம். அவனை விட்டு தனியாக போய் நாம் அந்த நகர் ஜனங்களை எப்படி எதிர் கொள்வோம். கையைத் தூக்கி இவ்வாறு வருந்தியபடி, தங்களுக்குள் பேசிக் கொண்டு, கன்றைப் பிரிந்த தாய்ப் பசுவைப் போல மிகவும் வருத்தமடைந்தனர். சற்று தூரம் ரதத்தின் அடிச் சுவடுகளை பின்பற்றி நடந்தவர்கள், சுவடுகள் காணாமல் போகவும் திகைத்து திரும்பி வந்தனர். இது என்ன? இப்பொழுது என்ன செய்வோம்? தெய்வமே நமக்கு ப்ரதிகூலமாக இருக்கும்பொழுது, நாம் என்ன செய்ய முடியும் என்று வருந்தியவர்களாக, போன வழியிலேயே திரும்பி வந்து அயோத்தியை அடைந்தார்கள். ஊர் ஜனங்கள் அதே நிலையில் மனம் வாடிய நிலையிலேயே, கண்ணீர் பெருக நின்றிருந்தனர். வந்தவர்கள் தங்கள் அனுபவங்களை இவர்களுடன் பகிர்ந்து கொண்டு, அயோத்யா நகரமே சோபையிழந்து காணப் பட்டது. நீர் பாம்பை நீர் நிலையிலிருந்து ஓடிக் கொண்டிருக்கும் பொழுது கருடன் பிடித்துக் கொண்டு போனது போல இருந்தது. ஆகாசம் சந்திரன் இல்லாமல் சோபையில்லாமல் இருப்பது போலவும், சமுத்திரம் நீர் வற்றினால் போலவும், ஆனந்தம் இல்லாத அயோத்தி நகரத்தைக் கண்டனர். பெரும் செல்வம் படைத்த பெரிய மாளிகைகளுக்குள் நுழைந்தவர்கள், தன் பந்துக்கள், மற்றவர்கள் என்று கூட இனம் பிரித்து அறியாதவாறு அங்கு துக்கம் சூழ்ந்திருந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பௌர நிர்வ்ருத்தி என்ற நாற்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 48(125) பௌராங்கனா விலாப: (ஊர் பெண்களின் புலம்பல்)
அடி பட்டது போல துடித்துக் கொண்டு, திரும்பி வந்த ஊர் ஜனங்கள், ஊருக்குள் வந்து மற்ற ஜனங்களுடன் தங்கள், மனத்தாங்கலை சொல்லி, துக்கத்தை பகிர்ந்து கொண்டனர். வந்தவர்களும் சரி, இங்கு இருந்தவர்களும் சரி, கண்கள் குளமாக உடல் சக்தியனைத்தும் வடிந்து விட்ட நிலையில் இருந்தனர். தங்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று மனைவி குழந்தைகளுடன் இதே நினைவாக, கண்ணீர் பெருக்கியபடி இருந்தனர். வியாபாரிகள் கடை விரிக்கவில்லை. சந்தோஷமோ மகிழ்ச்சியோ எங்கும் காணப் படவில்லை. கடை வீதிகள் வெறிச்சோடிக் கிடந்தன. வீடுகளில் பலவிதமாக சமையல் செய்யப் படவில்லை. நஷ்டம் வந்ததால் வருத்தமோ, மிகுந்த பண வரவைக் கண்டு ஆனந்தமோ அடையவில்லை. முதல் மகனைப் பெற்ற தாய்கூட அளவுக்கு அதிகமாக மகிழவில்லை. வீடு தோறும், திரும்பி வந்த கணவனைப் பார்த்து, அழுது கொண்டே வீட்டு ஸ்த்ரீகள் இடைவிடாது நிந்தனை செய்து கொண்டிருந்தனர். வீட்டில் அவர்களுக்கு என்ன வேலை? மனைவி மக்களோடு என்ன வைத்திருக்கிறது? சுகங்களும் எதற்காக? ராகவனைக் காணாதவரை இவையெல்லாம் பயனற்றவையே. அவன் ஒருவன் தான் உலகிலேயே சத்புருஷன். எவன் சீதையுடன் வனம் கிளம்பிய ராமனை பின் தொடர்ந்தானோ, அந்த லக்ஷ்மணன் ஒருவன் தான் உலகிலேயே சத்புருஷன். வனத்தில் ராமனுக்கு பணிவிடைகள் புரிந்து கொண்டு செல்கிறான். நீர் நிலைகள் புண்யம் செய்தவை. பத்மங்கள் மலர்ந்து கிடக்கும் குளங்கள் புண்யம் செய்தவை. இவைகளில் ராமன் முதலானோர் இறங்கி சுத்தமான அந்த நீரில் குளித்தும், மூழ்கியும் தங்கள் களைப்பை போக்கிக் கொள்வர். காட்டில் உள்ள அடர்ந்த மரங்கள் ராகவனுக்கு சோபையளிக்கும். சிகரங்களை உடைய மலைகளும்,அதில் பெருகும் அருவிகளும், அது காடாக இருந்தாலும், மலைச் சிகரமோ, எங்கு ராமன் போகிறானோ, அவனை பிரியமான அதிதியாக வரவேற்று உபசரிப்பர். ப்4ரமரங்கள் (வண்டுகள்) சுற்றி வர, பூக்கள் நிறைந்த மரங்கள், ஏராளமாக பூக்கள் பூத்துக் குலுங்க, மகரந்தங்களின் வாசனை இதமாக வீச, ராமனுக்கு அழகிய காட்சியை காணக் கொடுக்கும். ராமன் வந்திருக்கிறான் என்று பருவம் இல்லாத காலத்தும் பழங்கள் பழுத்தும், பூக்கள் மலர்ந்தும் உள்ள மரங்களுடன் மலைகள் பரவசத்துடன் உபசாரமாக காட்சி தரும். அவைகளிலிருந்து வெளிப்படும் அருவிகளில், ராகவனின் உபயோகத்துக்கான நிர்மலமான நீர் அருவியாக வடியும். இந்த நீர் வடியும் அருவிகளும் பலவிதமாக அமைந்து கண்களுக்கு விருந்தாக அமையும். பல விதமான மரங்கள் மலைச் சரிவுகளில் ராமனுக்கு நிழல் கொடுத்து மனதை ரமிக்கச் செய்யும். ராமன் இருக்கும் இடத்தில் பயம் இல்லை. அவமானம் இல்லை. அவன் இயல்பாகவே சூரன். தசரதபுத்திரன். வெகு தூரத்தில் இருந்து கொண்டு அவனை பின் தொடருவோம். இது போன்ற மகாத்மாவான தலைவரின் பாதசுவடுகளை பின் பற்றி நடப்பதே சுகம் தரும். அவர் தான் நமக்கு நாதன். நம் ஜனங்களுக்கு அவன் தான் கதி. அவனே புகலிடம். நாங்கள் சீதைக்கு பணிவிடைகள் செய்கிறோம். நீங்கள் ராகவனுக்குச் செய்யுங்கள். இவ்விதம் ஊர்ப் பெண்கள் தங்கள் கணவன்மாரிடம் பேசினர். காடானால் என்ன? உங்களை ராமன் யோக க்ஷேமம் விசாரிப்பான். பெண்களை சீதா தேவி பார்த்துக் கொள்வாள். யார் தான் இங்கு மனம் இன்றி, அழகின்றி, துக்கம் தொண்டையை அடைக்க வளைய வரும் மக்களுடன் இருக்க விரும்புவர். கைகேயி வசம் ராஜ்யம் சென்றடைந்தால் நாம் உயிர் வாழ்ந்து தான் என்ன பயன்? மக்கட் செல்வத்தால், பணத்தால் என்ன பயன்? குலத்தைக் கெடுக்க வந்த கோடாலியாக, கைகேயி ஐஸ்வர்யம் ஒன்றே குறியாக கணவனையும் புத்திரனையும் தியாகம் செய்து விட்டாள். மற்ற யாரை அவள் விட்டு வைப்பாள்? அவள் ராஜ்யத்தில் நாம் ஏவல் செய்யும் வேலையாட்களாக வாழ மாட்டோம். அவளையும் அவள் குழந்தைகளையும் சேர்த்து சபிப்போம். கருனையின்றி எவள் தசரத அரசனின் மகனை நாட்டை விட்டுத் துரத்தினாளோ, யார் தான் அவளைச் சார்ந்து சுகம் காண முடியும். அதர்மமே உருவானவள், துஷ்டை. இங்கு நாயகனில்லாமல் எல்லாமே உபத்ரவம் அடையப் போகின்றன. ஒரு கைகேயி காரணமாக பெரிய அனர்த்தம் வர இருக்கிறது. ராமனை அனுப்பி விட்டு அரசன் உயிர் தரிக்க மாட்டான். தசரதர் இறந்தால் ஒரே அழுகை தான் மிஞ்சும். புண்யங்கள் அழிய, நல்ல கதியடையாமல் விஷத்தைக் குடித்து, தசரதனை பின் தொடர்ந்து செல்லுங்கள். போன இடம் தெரியாமல் அழிவீர்கள். (அஸ்ருதிம் வாபி க3ச்ச2த2). சேனையில் பசுக்களை (குதிரை, யானை முதலியவைகளை) சேர்த்து விடுவதைப் போல நாம் பரதனுடைய ராஜ்யத்தில் சேர்க்கப் பட்டோம். பூர்ண சந்திரன் போன்ற ராமன், சியாமள வர்ணன், எதிரிகளை அழிக்கும் வல்லமை வாய்ந்தவன். சத்ருக்கள் அவன் எதிரில் வரவே அஞ்சுவர். ஆஜானுபாஹுவாக நெடிதுயர்ந்தவன், லக்ஷ்மணனுக்கு முன் பிறந்தவன். தானே முன்னின்று பேசுபவன். மதுரமாக பேசுபவன். சத்யவாதி. மகா பலம் உடையவன். இருந்தும் சௌம்யமாக காட்சி தருபவன். உலகம் முழுவதும் சந்திரனை விரும்புவது போல விரும்பப் படுபவன். மதம் பிடித்த யானையின் நடையுடையவன். புருஷ சார்தூல என்று அழைக்கப்படுபவன். மகா ரதி. அவன் நடந்து செல்வதால் மகாரண்யங்கள் சோபை பெறும். நகரத்து ஸ்த்ரீகள் இவ்வாறு புலம்பி வருந்தினர். இப்படி அழுகையும், புலம்பலும், பயமுமாக பகல் கழிந்தது. சூரியனும் மறைந்தான். இரவு வந்தது. எங்கும் விளக்கு ஏற்றப் படாமலும், அத்3யயனம், நல் கதை பேசுதல் எதுவும் இன்றி, இருட்டு மூடியது போல ஆயிற்று அந்த நகரம். கடை வீதிகள் அமைதியாயின. மகிழ்ச்சி ஆரவாரம் எதுவுமின்றி, ஆகாயம் கூட நக்ஷத்திரம் இல்லாமலிருப்பது போல தோன்றியது. தங்கள் குழந்தைகளோ, சகோதரர்களோ நாடு கடத்தப் பட்டால் வருத்தம் அடைவது போலவே துக்கத்தை அனுபவித்த ஸ்த்ரீகள், தங்கள் மக்களை விட ராகவனின் பிரிவை அதிகமாக உணர்ந்தனர். தண்ணீர் வற்றி ஆரவாரம் இன்றி இருக்கும் சமுத்திரம் போல அன்று அயோத்யா நகரம், பாட்டு, ஆட்டம்,உற்சவம் எதுவுமின்றி, கடை வீதிகள் மூடிக் கிடக்க, மகிழ்ச்சியின்றி இருந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் பௌராங்கனா விலாபோ என்ற நாற்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 49 (126) ஜனபதாக்ரோச: (ஊர் ஜனங்களின் புலம்பல்)
ராமரும் மீதி இருந்த இரவு நேரத்தில், தந்தை சொல்லை நினைத்தபடி, அரண்யத்தின் உள்ளே செல்லலானான். நடந்து போய்க் கொண்டு இருக்கையிலேயே பொழுதும் விடிந்தது. சந்த்யா ஜபங்களை முடித்துக் கொண்டு, ஸ்னானம் செய்தார். எல்லை கரையில் இருந்த கிராமங்களை, பூத்துக் குலுங்கிய மரங்கள் நிறைந்த தோட்டங்களைப் பார்த்தபடி மெதுவாக நடந்து சென்றனர். தசரத அரசனை –திக்- கஷ்டம், இந்த தசரதன் காம வசமாகி விட்டான். பொல்லாத கைகேயி, பாபி, பாபத்தையே செய்யத் துணிந்தவள். கொடுமையானவள். மரியாதையை தொலைத்து விட்டு, கொடும் காரியத்தில் பிரவேசித்திருக்கிறாள். தார்மிகனான புத்திரனை வேறு யாராயினும் இப்படி நாட்டை விட்டுத் துரத்துவார்களா? வனம் புகுந்த ராமனை, அன்பும் கருனையும் உடைய பத்னி சீதையும் தொடர்ந்து போய் இருக்கிறாள். சுகமாகவே இருந்து பழகியவள். எப்படித்தான், இந்த காட்டின் துக்கங்களை சகித்துக் கொள்ளப் போகிறாளோ. ஐயோ, இந்த தசரத ராஜா, தன் மகனிடம் மிகவும் பிரியம் உள்ளவன் போல இருந்தானே, இப்படி அநியாயம் செய்து விட்டானே. ராமனைத் தியாகம் செய்ய எப்படித் துணிந்தான். மாசற்ற அரசிளங்குமரன், பிரஜைகளுக்கு பிரியமானவன், இவ்வாறு கிராமத்து ஜனங்கள் பேசிக் கொள்வதைக் கேட்டபடியே கோசல ராஜ்யத்தைக் கடந்து நடந்து சென்றனர். அச்சமயம் வேதவஹி என்ற சுபமான சிறு ஆறு எதிர்ப் படவும், அதைக் கடந்து அக்கரையில் அகஸ்தியர் வசிக்கும் இடம் உள்ள திசையில் நடந்தனர். நிறைய தூரம் நடந்த பின் சீதவஹா என்ற நதியைக் கடந்து கோமதி நதிக் கரையை அடைந்தனர். நீர் வெள்ளமாக ஓட அந்த நதி சமுத்திரமோ என்று சொல்லும் படி இருந்தது. வேகமாக செல்லும் குதிரைகளில் ஏறி அதையும் கடந்து சென்ற ராகவன் மயில்களும், ஹம்ஸங்களும் கூக்குரல் இடும் ஸ்யந்திகா என்ற நதியையும் கடந்தார். இந்த பிரதேசம் முன்னொரு சமயம் மனு தானாக தசரதனுக்கு கொடுத்த இடம். விசாலமாக பரந்து, பல சிறு ராஜ்யங்கள் சூழ இருந்த பிரதேசத்தை வைதேஹிக்கு காட்டினார் ராமர். சாரதியே, என்று சுமந்திரனை அழைத்து சுபாவமாகவே கம்பீரமான குரலை உடைய ராமர், அவரிடம் மனம் விட்டு பேசினார். எஎப்பொழுது திரும்பி வந்து நாம் சரயூ நதிக் கரையில் பழையபடி தாய் தந்தையோடு, நந்தவனங்களில் பூத்து குலுங்கும் பூப் படுகைகளில் விளையாடி, மகிழ்ந்திருக்கப் போகிறோமோ. சரயூ வனத்தில் வேட்டையாட பெரியதாக ஒன்றும் இல்லாவிட்டாலும், செல்வந்தர்களின் பொழுது போக்கு அது தான். அந்த இடத்தில் ராஜ ரிஷிகள் நிறைய இருப்பார்கள். வசதி மிக்க ஜனங்கள் அந்தந்த காலங்களில் இந்த இடத்தில் கூடி உல்லாசமாக பொழுதைக் கழிப்பர். இது போல பேசிக் கொண்டே அந்த அத்வானமான இடத்தை கடந்து சென்றனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ஜனபதாக்ரோச: என்ற நாற்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 50 (127) குஹ சங்கமம் (குகனை சந்தித்தல்)
விசாலமான கிராமப் புறங்களைக் கடந்து, ராமர், அயோத்தியை நோக்கி கை கூப்பியவாறு, வணங்கியபடி வேண்டினார். காகுத்ஸனால் பாலிக்கப் பட்ட அயோத்தியே, உன்னிடம் விடைபெறுகிறேன். எந்த தெய்வங்கள் உன்னிடம் வசிக்கின்றனவோ, உன்னை பாதுகாத்து வருகின்றனவோ, அவைகளை நான் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமையை பூர்த்தி செய்து விட்டு வந்து பார்க்கிறேன். வனவாசம் முடிந்து திரும்பி வந்து தாய் தந்தையரோடு வந்து வணங்குகிறேன். பின் அந்த ஜனபத ஜனங்களைப் பார்த்து கை உயர்த்தி, கண்கள் சிவந்து கலங்க, அந்த ஜனங்களை, அவர்களும் கண் கலங்க நிற்பதைக் கண்டு உணர்ச்சி மேலிட, வாழ்த்தி விடை பெற்றுக் கொண்டார். என்னிடத்தில் பரிவும் தயையும் காட்டினீர்கள். என் பொருட்டு நிறைய துக்கம் அனுபவித்து விட்டீர்கள். உங்கள் வேலைகளை கவனிக்கத் திரும்பிச் செல்லுங்கள். என்றார். அவர்களும் மகாத்மாவான ராமனை பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து விட்டு கிளம்பியவர்கள், காலெழும்பாமல் ஆங்காங்கு நின்றனர். இவ்வாறு திரும்பிச் செல்ல மனமின்றி நிற்கும் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே திடுமென மறைந்தார், இரவு வந்ததும் சூரியன் காணாமல் போவது போல. பிறகு, தான்யமும் தனமும் நிறைந்த தானம் செய்யும் குணமுள்ள பலரைக் கொண்ட சுபமான, பயம் சற்றும் இல்லாத, சைத்யங்களும், அழகிய மாளிகைகளும் சூழ்ந்த, உத்யான வனங்களும், மாமரக் காடுகளும், நீர் நிலைகளும் நிறைந்த, கோசல தேசத்தை ரதத்திலேயே கடந்து சென்றனர். இங்கு வசித்த ஜனங்கள் திருப்தியுடன் புஷ்டியாக காணப் பட்டனர். கோகுலங்களும், கோபியர்களும் வாழ்ந்த இடங்களையும் கடந்து சென்றனர். சக்ரவர்த்தியால் பாலிக்கப் பட்ட கோசல தேசத்தில் ப்ரும்ம கோஷம் நிறைந்திருந்ததையும் கவனித்து கேட்டபடி கடந்தனர். மத்தியில் பரந்து விரிந்த ரம்யமான உத்யானங்கள் சுற்றிலும் இருக்க, சக்ரவர்த்திகளால் அனுபவிக்கத் தகுந்த ராஜ்யத்தை, திடமான கொள்கையுடையவர்களிலும் சிறந்தவனான ராமர் கடந்து சென்றார். பின் திவ்யமான கங்கையைக் கண்டனர். த்ரிபதகா என்று அழைக்கப் படும், சிவ ஜலமான, புண்யமான ரிஷி கணங்கள் வசித்து வரும் இடமான கங்கைக் கரையை அடைந்தனர். அருகிலேயே ஆசிரமங்கள் தெரிய, மகான்களால் அலங்கரிக்கப் பட்டதும், சமயங்களில் அப்ஸர ஸ்த்ரீகள் வந்து மகிழ்ச்சியுடன் விளையாடி மகிழும், சுத்தமான ஜலத்தையுடையதும், தேவ, தானவ, கின்னரர்களும், அவர்களுடன் நாக கந்தர்வ பத்னிகளும் வந்து வணங்கும் பெருமை பெற்றதும், இதனாலேயே தனி அழகு பெற்றதும், அவ்வப்பொழுது நன்மையை செய்யும் தேவர்கள் நூற்றுக் கணக்காக வந்து நீரில் மூழ்கி விளையாடவும், தேவ உத்யானங்களுக்கு இணையான நூற்றுக்கணக்கான உத்யான வனங்களும் பூந்தோட்டங்களும் கரைகளில் விரிந்து பரந்து கிடப்பதுமான கங்கை கரையை அடைந்தனர். இந்த தேவர்களுக்காக ஆகாயத்திலும் பிரவஹிக்கும் கங்கையில் பிரஸித்தி பெற்ற தெய்வத் தாமரைகள் மலர்ந்திருக்க, ஜலம் அடித்து அட்டஹாஸமாக ஆரவாரம் செய்ய, நிர்மலமான நுரை பொங்கி சிரிப்பது போல இருக்க, சில இடங்களில் நேராக விழும் நீர், மற்றும் சில இடங்களில் சுழித்துக் கொண்டு ஓடும், சில இடங்களில் நின்று கம்பீரமாகத் தெரியும், மற்றும் சில இடங்களில் வேகமாக ஓடும் ஜலம், சில இடங்களில் கம்பீரமான நாதம் கேட்கும், சில இடங்களில் அதுவே காதைத் துளைக்கும் பைரவ நாதமாக கேட்கும். இந்த ஜலத்தில் தேவர்கள் கூட்டமாக வந்து நிற்பர். நிர்மலமான உத்பல புஷ்பங்கள் மேலும் அழகூட்டும். சில இடங்களில் சிவந்த மண்ணும், சில இடங்களில் அமைதியான மணலும் தெரிந்தது. ஹம்ஸங்களும், சாரஸங்களும் கூக்குரலிட, சக்ர வாகங்கள் கத்தி மேலும் அதிக சோபையூட்ட, எப்பொழுதும் மதம் பிடித்த பறவைக் கூட்டங்கள் கோஷமிட்டு
உள்ளிருந்தே சப்தம் வருவது போலத் தோன்றியது. சில இடங்களில் கரையில் வளர்ந்த மரங்கள் மாலயணிவித்தது போல இருக்க, சில இடங்களில் மலர்ந்த உத்பலங்கள் காடாக மண்டிக் கிடக்க, சில இடங்களில் தாமரை அதே போல பரவிக் கிடக்க, மற்றும் சில இடங்களில் குமுத மலர்கள், அதன் தண்டுகளும் மலரோடு அலங்காரமாகத் தெரிந்தது. பல விதமான புஷ்பங்களின் மகரந்த தூள்கள் புகையாக மூடி இருக்க, கங்கையின் மேற் பரப்பு மதாலஸமாக காட்சி தந்தது. (மதுவின் மயக்கத்தில் இருப்பது போல இருந்தது.) குப்பை கூளங்கள் எதுவுமின்றி, நிர்மலமான ஸ்படிக மணி போல காட்சி தந்தது. கரைகளில் திக்கஜங்களும், காட்டு யானைகளும், மதம் பிடித்த சிறந்த ஜாதி யானைகள் தேவராஜனின் பட்டத்து யானைகள் பிளிறும் குரல் எதிரொலித்தது. மிகவும் கவனமாக அணிந்து கொண்ட உத்தமமான ஆடை ஆபரணங்களையுடைய பெண் போல, பழங்களும், புஷ்பங்களும், இளம் தளிர்களையும் உடைய மரங்களும் புதர்களும் இருந்தன. பறவைகளும், சிம்சுமாரங்களும், முதலைகளும், பாம்புகளும் வாழும் இடமாக கொண்டதும், விஷ்ணு பாதத்தில் இருந்து வெளிப்பட்டு, தெய்வாம்சம் கொண்ட ஜலம், பாபத்தை நீக்கக் கூடியதும் அந்த சங்கரனுடைய ஜடைகளில் இருந்து விழுந்தவளும், சகரனுடைய தேஜஸால் பூமிக்கு கொண்டு வரப் பட்டவளுமான, சமுத்திரனின் மகிஷியான கங்கையை, ஸாரஸங்களும், க்ரௌஞ்சங்களும் இடை விடாது நாதம் செய்ய விளங்கிய சிரிங்கி பேர புரம் என்ற ஊருக்கு மகாபாஹுவான ராமர் வந்து சேர்ந்தார்.
மகாரதியான ராமர், நீர் சிறு சுழல் சுழலாக வட்டமிடும் அழகைக் கண்டு, சுமந்திரனிடம் சொன்னார். இன்று இங்கேயே வசிப்போம். சாரதியே, இங்கு அருகிலேயே பெரிய இங்குதீ மரம், பூக்களும், தளிர்களும் நிறைந்ததாக இருக்கிறது. இங்கேயே இருப்போம். மதிப்புக்குரிய சுபமான ஜலம் உடைய கங்கை இந்த இடத்தில் பிரவகிக்கிறாள்.
நதிகளில் சிறந்த இந்த கங்கையைக் கண்டு மகிழ்வோம். தே4வ, தா3னவ, க3ந்த4ர்வ, ம்ருக3, பக்ஷிகள், பாம்புகள், இவைகள் கூட்டமாக ஒன்று சேரும் இடம் இது. லக்ஷ்மணனும், சுமந்திரனும் அப்படியே ஆகட்டும் என்று சொல்லி, குதிரைகள் மேல் அமர்ந்தவாறு அந்த இங்கு3தீ3 மரத்தை அடைந்தனர். ராமர் அந்த இடத்தில் மனைவியுடன் ரதத்திலிருந்து இறங்கினார். அந்த அழகான மரத்தடியில் நிற்கவும், சுமந்திரரும் இறங்கி குதிரைகளை அவிழ்த்து விட்டு, வினயமாக வணங்கியபடி ராமனிடம் வந்து சேர்ந்தார். அந்த இடத்தில் ஆத்மார்த்தமான ஒரு நண்பன் கு3கன் என்ற பெயருடையவன், வேட ஜாதியினன், மிக பலமுடையவன். ஸ்தபதி என்று புகழ் பெற்றவன், ராமர் வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன், முதிர்ந்த ஞானிகளான மந்திரிகள், சுற்றத்தார், மற்றும் பலருடன், புருஷவ்யாக்4ரனான ராமனைக் காண வந்து சேர்ந்தான். வெகு தூரத்திலிருந்தே, வேட ராஜன் வருகிறான் என்று தெரிந்து கொண்டு, சௌமித்திரியுடன் ராமர் அவனை எதிர்கொண்டு சந்தித்தார். அவனும் ராமனைத் தழுவிக் கொண்டு, குசலம் விசாரித்தான். எப்படி அயோத்தியோ, அதே போல இந்த இடமும் உன்னுடையதே. நான் என்ன செய்ய வேண்டும் சொல், என்றான். இது போல பிரியமான அதிதி யாருக்கு கிடைக்கும். பிறகு பலவிதமான ருசியான அன்னம் முதலிய பதார்த்தங்களைக் கொண்டு வந்து அர்க்யம் அளித்து உபசாரம் செய்தான். உன் வரவு நல் வரவாகுக என்று ஸ்வாகதம் சொல்லி, இந்த பூமி பூராவும் உன்னுடையதே. நாங்கள் உனக்கு ஏவல் செய்து வாழும் பிரஜைகள். நீ கட்டளையிடு. நீ தான் தலைவன். எங்களை ஆட்சி செய்வாய். பழம், போஜ்யம், குடிக்க பானங்கள், லேஹ்யங்கள் என்று நான்கு விதமான ஆகார வகைகளும் கொண்டு வந்துள்ளோம். விசேஷமான படுக்கைகளும், உன் குதிரைகளுக்கு உணவும், வந்து விட்டன, என்று அடுக்கிக்கொண்டே போகும் குகனைப் பார்த்து ராமர் சொன்னார் – உன் உபசாரம் மிகவும் சிறந்தது. நல்ல முறையில் எங்களை வரவேற்று உபசரித்து, மகிழ்ச்சியாகச் செய்தாய். நடந்து வந்து, உன் அன்பை தெரிவித்ததையும் பாராட்டுகிறோம். தோள்களை ஆரத் தழுவிக் கொண்டு, ராமன் மிகவும் அன்புடன் சொன்னான். அதிர்ஷ்ட வசமாக உன்னைக் கண்டோம் குகனே. ஆரோக்யமாக, சுற்றத்தார் சூழ உன்னை காண மிக்க மகிழ்ச்சியடைகிறேன். உன் ராஜ்யத்திலும், நண்பர்களிடமும் செல்வ நிலை நலமாக உள்ளதா? நீ கொண்டு வந்துள்ள இந்த பொருட்களை, அன்புடன் கொண்டு வந்திருக்கிறாய். இருந்தும் திருப்பித் தருகிறேன். நான் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. புல், மரவுரி, இவற்றை அணிந்து பழங்கள், மூலங்களைத் தின்று காலம் கழிக்க வந்தவன் நான் என்று அறிந்து கொள். காட்டில் திரியும் தபஸ்வியாக, தர்ம மார்கத்தில் ஈ.டுபட்டவனாக நான் என் காலத்தை கழிக்க வந்துள்ளேன். குதிரைகளுக்கு உணவு தான் நான் வேண்டுவது. மற்ற எதுவும் வேண்டாம். இதனாலேயே என்னை நன்றாக உபசரித்ததாகக் கொள்வேன். இந்த குதிரைகள் தசரத ராஜாவுக்கு பிரியமானவை. இவைகளுக்கு உபசாரம் செய்தாலே, நான் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவேன். குதிரைகளுக்கு உணவும் குடி நீரும் கொடுக்கச் சொல்லி குகன் தன்னுடன் வந்த ஆட்களுக்கு உத்தரவிட்டான். பின், மரவுரி ஆடைகளை அணிந்து, மேற்கு நோக்கி சந்த்யா ஜபங்களை முடித்துக் கொண்டு, லக்ஷ்மணன் தானே கொண்டு வந்த ஆகாரத்தை உட்கொண்டு, அங்கேயே படுத்த ராமனின் கால்களை நீரால் அலம்பி, லக்ஷ்மணன் பணிவிடை செய்தான். பின் மனைவியுடன் ராமரை அந்த இடத்தில் இருக்க விட்டு, தான் அகன்றான்.
சுமந்திரனும், லக்ஷ்மணனும், குகனும் சம்பாஷிக்கலானார்கள். வில்லையேந்தி இரவு விழித்திருந்து காவல் காத்தனர். தசரதன் மகனாக பிறந்து, கஷ்டம் என்பதே அறியாமல் வளர்ந்து, சுகத்தில் திளத்த ராஜகுமாரனாக புகழ் வாய்ந்த ராமன் இவ்வாறு மரத்தடியில் உறங்க, இரவும் கழிந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் குஹ சங்கமம் என்ற ஐம்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 51(128) குஹ லக்ஷ்மண ஜாக3ரணம்
(குகனும், லக்ஷ்மணனும் உறக்கமின்றி காவல் இருத்தல்)
சற்றும் கர்வமின்றி, ராகவனான லக்ஷ்மணன், இவ்வாறு இரவு பூராவும் விழித்திருந்து காவல் இருப்பதைக் கண்டு குகனுக்கு வருத்தம் தோன்றியது. மகனே, இதோ பார். இதுவும் சுகமாக இருக்க, உனக்கென்று தயார் செய்யப் பட்ட படுக்கை. இதில் படுத்துக் கொள். நீயும் ராஜ குமாரனே. இங்குள்ள மற்ற ஜனங்கள் இது போன்றே வாழ்க்கைக்குப் பழகியவர்கள். நீயும் மற்ற அரச குமாரர்களைப் போலவே சுகமாக வாழ்ந்தவன். நாங்கள் இரவு பூராவும் காவல் இருக்கிறோம். காகுத்ஸனான ராமனைவிட எனக்கு பிரியமானவர்கள் வேறு எவரும் இல்லை. சத்யமாக சொல்கிறேன். இவனுடைய தயவால் உலகம் முழுவதும், பெரும் புகழும் தர்மமும் பெருமளவில் அர்த்த காமங்களும் நிறையப் போகின்றன என்று நினைக்கிறேன். நான், பிரியமான சகாவான ராமனை, சீதையுடன் என் தாயாதிகள், சுற்றத்தார் சூழ கையில் வில்லேந்தி ரக்ஷிக்கிறேன். இந்த காட்டில் அலைந்து திரிந்து, நான் அறியாத இடமோ, பொருளோ இங்கு கிடையாது. சதுரங்க சேனை வந்தால் கூட நாங்கள் எதிர்த்து நின்று வெற்றி பெறுவோம். இதைக் கேட்டு லக்ஷ்மணன் சொன்னான். உன்னால் பாதுகாக்கப்படும் பொழுது நாங்கள் ஏன் பயப் படுகிறோம். இங்கு நிலவும் தர்மத்தைக் காணும்பொழுது உன் ப ளிங்கு போன்ற குணமும் தெரிகிறது. என் மனதை வாட்டும் சங்கடம், தசரத ராஜாவின் மகன், மனைவியுடன் தரையில் படுத்துறங்குகிறான், என்று நேரில் காணும் பொழுது எனக்கு உறக்கம் வரவில்லை. எனக்கு, உயிரோ, சுகங்களோ எதுவுமே கிடைத்து என்ன பயன்? யுத்தம் என்று வந்தால் தேவர்களோ, அசுரர்களோ, எல்லோரும் சேர்ந்தால் கூட ராமனை அசைக்க முடியாது. அவனைப் பார். புல் படுக்கையில் பத்னியோடு. பலவிதமான கஷ்டங்களை அனுபவித்து, மந்த்ர ஜபங்கள் செய்து, தசரதனுக்கு பிறந்தவன். எல்லா சுப லக்ஷணங்களும் பொருந்தியவன். இவனைப் பிரிந்து தசரத ராஜா அதிக நாள் ஜீவித்து இருக்க மாட்டார். இந்த பூமி சீக்கிரமே நாயகன் இன்றி அரசர் இன்றி ஆகப் போகிறது. ராஜ பவனம், ஆரவாரம் அடங்கி அமைதியாக இருக்கப் போகிறது. இந்த இரவே எனக்கு சந்தேகமாக இருக்கிறது. கௌசல்யாவும், ராஜாவும், என் தாயாரும் உயிருடன் இருக்கிறார்களோ, இல்லையோ. என் தாய் ஒரு வேளை சத்ருக்னனைக் காணும் ஆவலில் உயிருடன் இருப்பாள். வீரனான மகனைப் பெற்ற கௌசல்யா என்ன செய்கிறாளோ. சுற்றிலும் உள்ளோர் எப்பொழுதும் அவளிடம் அன்புடனும், பாசத்துடனும் இருப்பர். ஜனங்களுக்கு பிரியமாகவே நடந்து கொள்வாள். அரச குலத்தின் இந்த துக்கத்தால் அயோத்யா புரியும் வாடும். மூத்த மகனை, கண் படைத்த பயனாக பிறந்தவனை துறந்து அரசன் தன் உயிரை தரித்து இருப்பானா என்பதே சந்தேகம். அரசன் மரித்தால், கௌசல்யையும் இறப்பாள். பிறகு என் தாயும் அவர்களைத் தொடர்ந்து மறைவாள். தன் மனோரதம் நிறைவேறாத குறையோடு, மகனான ராமன் கையில் ராஜ்யத்தை ஒப்படைக்காமலே என் தந்தை ராஜா தசரதன் இறக்கப் போகிறார். இந்த சமயத்தில் அவர் அருகில் இருப்பவர்கள் பாக்கியசாலிகள். இறுதிக் கடன்களை யார் செய்கிறார்களோ? என் தந்தை அயோத்தியின் வீதிகளில் மகிழ்ச்சியாக உலாவுவார். நான்கு மூலையாக அழகாக கட்டப் பட்ட, நல்ல முறையில் பிரிக்கப் பட்ட ராஜ வீதி. அழகிய மாளிகைகள் உள்ளது. பலவிதமான க3ணிகா ஸ்த்ரீகள் நிறைந்தது. ரதங்களும். குதிரை யானைகள் அடிக்கடி நடமாடும், எப்பொழுதும் வாத்ய கோஷம் நிறைந்திருக்கும். ஜனங்கள் எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும், ஆரோக்யமாகவும் எல்லா விதமான கல்யாணங்களும் நிரம்பியவர்களாக தென்படுவார்கள். ஓய்வாக இருக்க உத்யான வனங்கள் நிறைய உண்டு. ஆங்காங்கு சமாஜ உத்ஸவங்கள், கோலாகலமாக நடைபெறும்.. இந்த வீதிகளில் சுகமாக என் தந்தை உலவி வருவார். நாங்கள் வனம் வந்த பிறகு தந்தையின் நிலை என்ன ஆயிற்றோ. உயிருடனிருக்கிறாரா? அதுவே தெரியவில்லை. இந்த வனவாசம் முடிந்து திரும்பி வந்து அவரைக் காண்போமா? சத்ய பிரதிக்ஞையை முடித்து இந்த அயோத்யாவில் நுழைவோமா? இது போல மனம் வருந்தி அந்த ராஜகுமாரன் லக்ஷ்மணன் நின்று கொண்டே பேசிக் கொண்டிருந்த பொழுதே இரவும் கழிந்தது. இவ்வாறு மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசிய லக்ஷ்மணனைப் பார்த்து, நண்பனான குகன் ஜுரம் வந்து அவஸ்தைப் படும் யானையைப் போல் தானும் வருத்தம் அடைந்தான்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் குஹ லக்ஷ்மண ஜாகரணம் என்ற ஐம்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 52 (129) கங்கா தரணம் (கங்கையை கடத்தல்)
இரவு மறைந்து, பொழுது விடிந்ததும், ராமர், சுப லக்ஷணனான லக்ஷ்மணனிடம் சொன்னார். சூரியன் உதயமாகி விட்டது. ஓர் இரவு கழிந்தது. இதோ பார், கரும் நிற குயில் கூவுகிறது. மற்ற பறவைகள் கூக்குரலும் கேட்க ஆரம்பித்து விட்டது. சமுத்திரத்தை நோக்கி பாய்ந்தோடும் இந்த கங்கையை கடந்து செல்வோம். ராமர் சொன்னதைக் கேட்டு, லக்ஷ்மணன் சுமந்திரனிடமும் குகனிடமும் விடை பெற்றுக் கொண்டு தயாராக கிளம்பி நின்றான். குகனும் தன் மந்திரி ஜனங்களை அழைத்து படகுகளைத் தயார் செய்யச் சொன்னான். த்ருடமான படகுகளை, குகனுடைய மந்திரிகள் தயார் செய்து விட்டு வந்து அவனிடம் சொன்னார்கள். படகுகள் வந்து சேர்ந்ததும், குகன் ராமனை கை கூப்பி வணங்கி, இதோ படகுகள் வந்து விட்டன. இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று பணிந்து நின்றான். நீயே அமரன் வழித் தோன்றலோ எனும் சிறப்பு பெற்றவன். சாக3ரத்தை நோக்கி பயணம் செய்யும் இந்த கங்கை நதியைக் கடக்க இதோ படகு. இதில் ஏறிக் கொள். என்றான். ரொம்ப நல்லது என்று நன்றி சொல்லி, சீக்கிரம் ஏற்றி விடு என்றார். வில்லேந்திய இருவரும் வாட்களையும் மற்றவைகளையும் கட்டி வைத்துக் கொண்டு, மற்ற ஜனங்களைப் போலவே, படகில் மூவருமாக சென்றனர். இவ்வாறு பயணம் கிளம்பிய ராமனைப் பார்த்து சாரதியான சுமந்திரன் நான் என்ன செய்ய? என்று வினவினான். தாசரதி (தசரதன் மகன்), சுமந்திரனை வலது கையால் பிடித்துக் கொண்டு, சுமந்திரா, சீக்கிரமாக ராஜா தசரதரிடம் செல். தயங்காமல் போய் வா என்றான். இது வரை எனக்கு செய்தது போதும். நீ திரும்பிச் செல். நாங்கள் நடந்தே வனத்துக்குள் போவோம் என்றான். தனக்கும் விடை கொடுத்து விட்டான் என்று சாரதிக்கு துக்கம் பொங்கியது. சுமந்திரன் இக்ஷ்வாகு வம்சத்தில் வந்த அந்த வீரனிடம் சொன்னான் உலகிலேயே இது போல எந்த மனிதனுக்கும், இப்படி ஒரு நிலை வந்திருக்காது. ஒன்றும் அறியாத பட்டிக் காட்டான் போல, சகோதரனுடனும், மனைவியுடனும் வனத்தில் வசிக்க கிளம்பி விட்டாய். எதிலுமே பயனில்லை என்று எண்ணுகிறேன். ப்ரும்மசர்யம் அனுஷ்டித்து வருவதாலோ, தானே முயன்று கல்வி கற்பதாலோ, பலன் இல்லை. மிருதுவான குணம் இருந்தும், நேர்மையாக இருந்தும், உனக்கு இப்படி ஒரு கஷ்டம் வந்ததே. மூன்று உலகையும் ஜயிக்கும் சக்தி படைத்த நீ, இந்த வனத்தில் இருந்தும், வைதேஹியுடனும், சகோதரனுடனும் நல்ல கதியே அடைவாய். நீயும் என்னை கை விட்ட நிலையில் எங்கள் பாடு தான் கஷ்டம். பாபியான கைகேயியின் கைப் பாவையாக ஆவோம். துக்கம் தான் அனுபவிக்கப் போகிறோம். இவ்வாறு சொல்லிக் கொண்டே சுமந்திரன் தனக்கு நிகரில்லாத சாரதியான சுமந்திரன், நகர்ந்து செல்லும் படகை பார்த்தவாறு நின்றுகொண்டு இருந்தவர், அது சற்று தூரம் சென்றதும் வாய் விட்டே அழுதார். அதைக் கண்டு ராமர் திரும்பத் திரும்ப சொன்னார். சுமந்திரா, இக்ஷ்வாகு குலத்தோருக்கு உன்னைப் போல வேறொரு நண்பன் இருந்ததில்லை. ராஜா தசரதன் என்னை நினைத்து வருந்தாமல் இருக்கும் படி பார்த்துக் கொள். ஏற்கனவே வயதானவர். அதிலும் இப்பொழுது இந்த துக்கத்தினால் அடிபட்டு போய் இருக்கிறார். காம வசத்தில் இருப்பவர். அதனால் விசேஷமாக சொல்கிறேன் கேள். கைகேயியை திருப்தி படுத்த அவர் என்ன சொன்னாலும் யோசிக்காமல் செய். பெரிய சக்ரவர்த்திகள் ராஜ்ய பாலனம் செய்வது இப்படித்தான். இதனால் இவர்கள் செயல்களை மனதில் போட்டுக் கொண்டு வருந்தாதே. அவருக்கு சந்தேகம் தோன்றாத படியும், மனம் வருந்தாதபடியும், என்ன செய்ய வேண்டுமோ அதை செய். அவரும் இந்திரியங்களை வென்றவரே. பெரியவர். வயது முதிர்ந்தவர். துக்கத்தை கண்டறியாதவர். அவரிடம் நான் சொன்னதாகச் சொல்லு. என் வணக்கத்தை தெரிவித்த பின், நானோ, லக்ஷ்மணனோ, மைதிலியோ அயோத்தியை விட்டு வந்தோமே என்று வருந்தவில்லை, வனத்தில் வசிக்கிறோமே என்றும் எங்களுக்கு மன வருத்தம் இல்லை. பதினான்கு வருஷ விரதம் முடிந்து திரும்பி வரும் பொழுது எங்கள் மூவரையும் நீங்கள் காணத்தான் போகிறீர்கள். விரைவில் இந்த வன வாசத்தை முடித்துக் கொண்டு திரும்பி வருவோம் என்று தாய்மார்களிடம் சொல் சுமந்திரா. மற்ற தேவிகளுடனும், கைகேயியிடமும் திரும்பத் திரும்பச் சொல். தேவி கௌசல்யாவிடம் தேக ஆரோக்யம் விசாரி. பாதங்களில் விழுந்து வணங்கியதாகச் சொல். சீதையுடையதும், என்னுடையதும், லக்ஷ்மணனுடையதுமான பாதாபி வந்தனங்கள் அவருக்கு உரித்தாகுக. மகாராஜாவிடம் பரதனை சீக்கிரம் அழைத்து வரச் சொல். அவன் வந்தவுடன் அரச பதவியில் நியமிக்கட்டும். பரதனை ஆரத் தழுவி அவனது முடி சூட்டு விழாவில் நீங்கள் எல்லோரும் மும்முரமாக ஆகி விட்டால் எங்களைப் பிரிந்த துக்கம் தெரியாது. சுமந்திரரே, மகாராஜாவிடம் இருப்பது போலவே, பரதனிடம் கைங்கர்யம் செய்து வாருங்கள். அதே போல தாயார்களிடம் நடந்து கொள்வீர்களாக. எப்படி கைகேயியிடம், நடந்து கொள்வீர்களோ, அதேபோல் சுமித்திரை, என் தாயாரிடமும் நடந்து கொள். தந்தை தான் விரும்பியபடி முடி சூட்டு விழாவைக் கண்டு நிச்சயம் சுகமாக இருப்பார் இவ்வாறு ராமன் சொல்லி முடித்தவுடன் சுமந்திரர் பதில் சொன்னார். இதை நான் உபசாரமாக சொல்லவில்லை. ஸ்னேகத்தினால், மறைக்காமல் சொல்கிறேரன். உன்னிடம் பக்தி கொண்டவன் என்ற முறையில் என் வார்த்தையை பொறுத்துக் கொள். உன்னை விட்டு எப்படி நான் அந்த நகரம் செல்வேன். உன்னைப் பிரிந்து, தங்கள் புத்திரர்களைப் பிரிந்தது போல தவித்த ஜனங்கள், நீ ரதத்தில் இருந்து நான் ஓட்டி வந்த போதே ஆவேசமானார்கள். நீயும் இல்லாமல் நான் ரதத்தை ஓட்டிச் செல்லும் பொழுது, கட்டுக் கடங்காமல் ஆவேசம் அடைவார்கள். சூன்யமான ரதத்தை பார்த்து ஊரே வாடும். தன்னுடைய சைன்யம் முழுவதும் யுத்தத்தில் மடிய, சாரதி மட்டும் மிஞ்சியது போல நீ தூரத்தில் இருந்தாலும் மனதால் எதிரில் நிற்பது போல நினைத்து வரும் பிரஜைகள், இன்று உங்களால் ஆகாரம் இல்லாமல் செய்யப் பட்டார்கள். நீ புறப்பட்டு வரும் பொழுதே உன் பிரிவை எண்ணிப் பார்க்கக் கூட முடியாத ஜனங்கள் வியாகுலம் அடைந்ததை ப்ரத்யக்ஷமாக கண்டாய். அப்பொழுது எழுந்த ஓலம் ஒன்றுமேயில்லை என்பது போல, இப்பொழுது என்னைக் கண்டதும் ஓலமிடப் போகிறார்கள். தேவியிடம் நான், உன் மகனை மாமன் வீட்டில் கொண்டு விட்டு வந்தேன் என்றா சொல்வேன்? கவலைப் படாதே என்று சொல்வேனா? அசத்யமானாலும் இது போல ஒரு வார்த்தையை சொல்ல மாட்டேன். சத்யம், என்று எப்படி பிரியமில்லாத வார்த்தையை சொல்வேன். உன் பந்து ஜனங்களை ஏற்றிக் கொண்டு ஓடிய இந்த குதிரைகள், அந்த ரதத்தில் நீ இல்லாமல் எப்படி இருக்கப் போகின்றன. அதனால் உன்னை விட்டு அயோத்தி போக என்னால் முடியாது. நானும் உன்னுடன் வனத்தினுள் வர அனுமதி கொடு. இவ்வளவு வேண்டியும் எனக்கு அனுமதி கிடைக்காவிடில் இந்த ரதத்துடனேயே அக்னியில் விழுவேன். உன்னால் தியாகம் செய்யப் பட்ட பின் எனக்கு வேறு வழி இல்லை. உனக்கு வன வாசத்தில் ஏற்படும் இடைஞ்சல்களை நான் சமாளிப்பேன். உன்னால் நான் ரதத்தில் பிரயாணம் செய்யும் சுகத்தை அனுபவித்தேன். இப்பொழுது உன் கூடவே வனம் வர ஆசைப் படுகிறேன். நீயும் பிரியத்துடன் சம்மதிப்பாய் என்று நம்புகிறேன். தயை செய். வன வாசத்தையும் உன்னுடனேயே அனுபவிக்கிறேன். இதோ இந்த குதிரைகளும், உனக்கு பணிவிடை செய்யுமானால், மிக நல்ல கதியை அடையும். என் தலையால் நான் உங்கள் மூவருக்கும் பணிவிடை செய்வேன். அயோத்தி என்ன? தேவ லோகமானாலும் நான் விட்டு விட்டு வரத் தயார். அந்த அயோத்தியில் நீ இல்லாமல் திரும்ப நுழைவது என்பதே இயலாது. மகேந்திரனுடைய ராஜதானி அவனுடைய துர் நடத்தையால் மோசமான நிலையை அடைந்தது போல ஆகி விட்டது அயோத்யா. என்னுடைய மனோரதம் பூர்த்தியானதும், இதே ரதத்தில் உன்னை வைத்து ஊருக்குள் அழைத்துச் செல்வேன். உன்னுடன் கூட இருக்கும்பொழுது பதினான்கு வருஷங்கள் க்ஷணமாக பறந்து விடும். அல்லது நூறு எண்ணுவதற்குள் முடிந்து விடும். நீ அடியார்களி டம் வாத்ஸல்யம் கொண்டவன். உன் முன்னால் நிற்கும் பக்தனை, தாஸனை, தனக்குரிய இடத்தில் இருந்து வேண்டும் என்னை கைவிடலாகாது.
இவ்வாறு யாசிக்கும் சுமந்திரரைப் பார்த்து ராமர் எசுமந்திராஸ்ரீ நீ என்னிடம் வைத்துள்ள யஜமான விஸ்வாசத்தையும் பக்தியையும் நான் அறிவேன். ஆயினும் என்ன காரணத்திற்காக உன்னை கட்டாயமாக ஊருக்கு அனுப்புகிறேன் என்பதையும் கேள். நீ திரும்பி ஊருக்குள் வந்ததைக் கண்டால் தான் என் சிற்றன்னையான கைகேயி ராமன் வனம் சென்று விட்டான் என்று நம்புவாள். அரசன் பொய் சொல்லவில்லை என்று தார்மிகனான என் தந்தையைப் பற்றி அவதூறு சொல்லாமல் இருப்பாள். மகிழ்ச்சியடைவாள். என் முதல் விருப்பம், என் சிற்றன்னை, பரதனால் பாலிக்கப் படும் இந்த விசாலமன ராஜ்யத்தை அனுபவிக்கட்டும். எனக்கும் அரசனுக்கு நன்மை செய்பவனாக நீ ஊருக்குத் திரும்பி போ. உனக்கு நான் சொல்லிய சந்தேசங்களை (செய்திகளை) அப்படி அப்படியே சொல்லு. இவ்வாறு திரும்பத் திரும்ப சுமந்திரனை சமாதானப் படுத்தி அனுப்பிவிட்டு ராமர் குகனிடம் சொன்னார். குகனே, இன்னமும் இந்த இடத்தில் நான் வசிப்பது நல்லதல்ல. ஜனங்கள் வந்து போகும் இந்த இடத்தை விட்டு ஆஸ்ரமம் அமைத்து வாழ வேண்டும். அதற்கான ஏற்பாடுகளையும் செய்வோம். நான் தபஸ்வி ஜனங்கள் போல நியமங்களை ஏற்று, தந்தையின் நன்மைக்காகவும், சீதையின், லக்ஷ்மணனின் நன்மைக்காகவும், ஜடை தரித்துக் கொண்டு கிளம்புகிறேன். ந்யக்ரோத மரத்தின் (ஆல மரம்) பாலைக் கொண்டு வா. அந்த மரத்தின் பாலை குகன் அரச குமரனுக்காக கொண்டு வந்து கொடுத்தான். லக்ஷ்மணனும் தானுமாக, அந்த மரத்தின் பாலைக் கொண்டு ஜடைகளை முடிந்து கொண்டனர். நீண்ட கைகளையுடைய வீரர்களான அவ்விருவரும், தலை முடியை ஜடையாக்கிக் கொண்டு காட்டில் வாழும் முனி வேஷம் தரித்தனர். இருவரும் ரிஷிகள் போலவே சோபையுடன் விளங்கினர். வைகா2னஸம் எனும் தபஸ்வி நிலையை ஏற்றுக் கொண்ட சகோதரர்கள், விரதங்களைச் செய்தனர். உதவி செய்த குகனிடம் ராமர் சொன்னர் உன் படை பலத்திலும், பொக்கிஷத்திலும், கோட்டையிலும், ஊருக்குள்ளும், சற்றும் குறையாத கவனத்துடன் இரு குகா. ராஜ்யத்தைக் காப்பது என்பது சுலபமல்ல. விழிப்புடன் இரு என்றார்.
அவனையும் வழியனுப்பி விட்டு, வேகமாக கங்கையைக் கடக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் லக்ஷ்மணனை துரிதப் படுத்தினார். லக்ஷ்மணா, படகில் ஏறு. சீதையையும் ஏற்றி விடு. மனஸ்வினியான அவளை கை கொடுத்து ஏற்றி விடு. அவ்வாறே லக்ஷ்மணன், சீதைக்கு கை கொடுத்து முதலில் ஏற்றி விட்டு பின்னால் தானும் ஏறிக் கொண்டான். பின்னால் தானும் ஏறிக் கொண்டபின் வேடர் குல அரசனான குகன் தன் பந்துக்களை துரிதப் படுத்தினான். படகில் ஏறிய ராமர், ப்ரும்ம முறையிலும், க்ஷத்திரிய முறையிலும் தங்கள் நன்மைக்காக ஜபம் செய்தார். நதியில் முறைப்படி ஆசமனீயம் செய்து, சீதையுடன் வணங்கினார். லக்ஷ்மணனும் வணங்கினான். சுமந்திரனிடம் விடை பெற்றுக் கொண்டு, சேனையோடு நின்றிருந்த குகனிடமும் விடை பெற்றுக் கொண்ட பின் அமர்ந்த ராமர், படகுகளை ஓட்ட ஆரம்பித்தார். படகு நகர்ந்து சிவனுடைய ஜடா முடியினால் தடுக்கப் பட்ட மகா வேகத்தையுடைய கங்கையில் வேகமாக சென்றது. மத்தியில் வந்ததும், பா4கீரதியைப் பார்த்து வைதே3ஹி கை கூப்பி வணங்கியவாறு சொன்னாள் இதோ இவர் தசரத புத்திரன். மகாராஜாவின் கட்டளையை நிறைவேற்றி விட்டு, உன் அருளால் பதினான்கு வருஷங்கள் காட்டில் வசித்து, சகோதரனுடனும் என்னுடனும் திரும்பி வருவார். அப்பொழுது தேவி, க்ஷேமமாக திரும்பி வந்து உனக்கு பூஜை செய்கிறேன். நீயே த்ரிபத2கா3 என்று பெயர் பெற்றவள். எல்லாவிதமான இஷ்டங்களும் பூர்த்தியானவளாக ப்ரும்ம லோகத்திலும் இருப்பாய். சமுத்திர ராஜனின் மனைவியாக உலகிலும் காணப் படுகிறாய். அந்த உன்னை வணங்குகிறேன். போற்றுகிறேன். மங்களமாக திரும்பி வந்து அரசும் கைக்கு வந்த நிலையில், நூறாயிரம் பசுக்களையும், வஸ்திரங்களையும், அன்னம் முதலியவைகளையும் உனக்கு நன்மையுண்டாக வேண்டும் என்று வேண்டி, ப்ராம்மணர்களுக்கு கொடுக்கிறேன். நூற்றுக் கணக்கான குடங்கள் நிறைய மதுவும், மாமிசம் சேர்த்த அன்னத்துடனும் உனக்கு படைக்கிறேன். திரும்ப ஊருக்குள் வந்தால் நான் எப்பாடு பட்டாயினும் இந்த விரதத்தை பூர்த்தி செய்கிறேன். உன் கரையில் வசிக்கும் தேவதைகள், அவர்கள் அனைவரையும் வணங்குகிறேன். மற்ற தீர்த்தங்களையும், ஆலயங்களையும், வணங்குகிறேன். இந்த மகா பாஹுவான என் கணவர், திரும்பவும் சகோதரனுடனும் என்னுடனும் கூட, மாசற்ற இந்த நகரத்தினுள் நுழையும் படி பாவனமான கங்கையே, அருள் செய். இவ்வாறு கங்கையுடன் சம்பாஷித்தபடி சீதையுடன் தென்கரையை அடைந்தனர்.
கரையை அடைந்ததும், படகை விட்டு இறங்கி நின்றனர். லக்ஷ்மணனைப் பார்த்து ராமர், ஜனங்கள் மத்தியிலோ, நிர்ஜனமான இடமோ, எப்பொழுதும் காப்பாற்றத் தயாராக இரு லக்ஷ்மணா. நீ முன்னால் போ. சீதை உன் பின்னால் வரட்டும். நான் பின்னால் தொடர்ந்து வருகிறேன். உன்னையும் சீதையையும் பாதுகாத்தபடி வருகிறேன். நாம் ஒருவரையொருவர் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். எந்த வேலையையும் ஒத்திப் போடலாகாது. இன்று வனவாசம் என்றால் என்ன, என்ன கஷ்டம் என்பதை சீதையும் தெரிந்து கொள்வாள். ஜன சமூகத்தை விட்டு விலகி வந்து, க்ஷேத்திரங்களோ வீடுகளோ இன்றி, மேடும் பள்ளமுமாக வனத்தை இன்று நேரில் காணப் போகிறாள். ராமர் சொன்னதைக் கேட்டு, லக்ஷ்மணன் முன்னால் சென்றான். பின்னால் சீதை, அதன் பின் ராகவன். கங்கையைக் கடந்து அக்கரை சேர்ந்து விட்ட ராமனைப் பார்த்து, சுமந்திரன் நெடுந்தூரம் கண்ணுக்கு எட்டியவரை பார்த்து விட்டு, திரும்பிச் செல்லும் வழியில் புறப்பட்டான். கண்களை கண்ணீர் மறைத்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் கங்கா தரணம் என்ற ஐம்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 53 (130) ராம சம்க்ஷோப4: (ராமனின் மன வருத்தம்)
ஒரு மரத்தடியை அடைந்து சாயங்கால சந்த்யா வந்தனம் முதலியவற்றை செய்த பின், லக்ஷ்மணனிடம் இன்று முதல் நகரத்துக்கு வெளியே போகிறோம். சுமந்திரனும் விட்டு போய் விட்டானே என்று கவலைப் படாதே. இன்றிலிருந்து இரவுகள், விழித்திருந்து கவனமாக இருக்க வேண்டியவை ஆகும். சீதையின் யோக க்ஷேமம் நம் இருவர் பொறுப்பாகிறது. இந்த இரவை இப்படியே ஏனோ, தானோவென்று கழித்து விடுவோம். லக்ஷ்மணா, நாமே சம்பாதித்து, கிடைத்ததை தரையில் விரித்து படுப்போம். மிக உயர்ந்த படுக்கைகளுக்கு உரியவனான ராமன் தரையில் அமர்ந்து லக்ஷ்மணனிடம் மனம் விட்டுப் பேசலானான்.
இன்று மகாராஜா தூங்க சிரமப் படுவார். கைகேயி மட்டும் தன் எண்ணம் நிறைவேறிய திருப்தியில் சந்தோஷமாக இருப்பாள். பரதன் வந்து விட்டால், ராஜ்யத்திற்காக திரும்பவும் அரசனைத் துளைத்தெடுக்காமலிருக்க வேண்டும். அரசர் கைகேயியிடம் தன் காமத்தால் வசமாக அகப்பட்டுக் கொண்டு விட்டார். என்ன செய்வார்? வயதும் ஆகி விட்டது. நாம் இல்லாததால் சகாயம் செய்வோரும் இல்லாமல் அனாதையாகி விட்டார். இந்த கஷ்டத்தையும் பார்த்து அரசனின் மனம் சஞ்சலித்ததையும் பார்க்க, காமம் தான், அர்த்த, தர்மத்தை விட பலமுள்ளது, சிறந்தது என்று தோன்றுகிறது. இல்லாவிடில் யார் தான் அசடாக இருந்தாலும், பெண் வார்த்தையைக் கேட்டு பிள்ளையைத் துறப்பான். அதுவும் நியமம் தவறாமல் விதி முறைகளை அனுசரித்து வரும் என்னை நம் தந்தை விரட்டியது போல வேறு யார் தான் செய்வார்கள்? கைகேயி புத்திரன் பரதன் தான் மனைவியுடன் சந்தோஷமாக கோசல ராஜ்யத்தில் சக்ரவர்த்தி போல வாழ்ந்து அனுபவிக்கப் போகிறான். முழு ராஜ்ய சுகத்திற்கும் அவன் ஒருவனே தகுதி பெற்றவனாவான். தந்தையும் வயதான காரணத்தால் இயற்கை எய்தி விட்டால், நானும் வனத்தில் சுற்றிக் கொண்டு இருந்தால், பரதன் ஒருவனே ராஜ்ய பரிபாலனம் செய்வான். அர்த்தத்தையும், தர்மத்தையும் விட்டு காமத்தையே பின் பற்றுபவர்கள் இந்த தசரத ராஜா போலத்தான் ஆபத்துக்கு உள்ளாவார்கள். பரதனுக்கு ராஜ்யம் கிடைக்கவும், தசரதராஜாவின் முடிவுக்கும், என்னை நாடு கடத்தவுமே கைகேயி வந்து சேர்ந்தாள். இன்னமும் இந்த கைகேயி என் மேல் உள்ள மனஸ்தாபத்தால், தாயாரான கௌசல்யையும், சுமித்ராவையும் படுத்தாமல் இருக்க வேண்டும். என் காரணமாக சுமித்ரா தேவி துக்கம் அடையக் கூடாது. அதனால் லக்ஷ்மணா, நீ நாளைக்கே அயோத்தி போ. நான் ஒருவன் சீதையுடன் தண்டகா வனம் போகிறேன். கௌசல்யை அனாதையாக திண்டாடாமல் நீ சகாயமாக இரு. குறுகிய புத்தியுள்ளவள் கைகேயி. துவேஷத்தால் ஏதாவது அநியாயம் செய்தாலும் செய்வாள். பரதனிடம் என் தாயாரை விட்டு வைக்க வேண்டும். ஏதோ ஒரு ஜன்மத்தில், என் தாய், பெற்றவளிடமிருந்து குழந்தைகளைப் பிரித்திருக்கிறாள். அதனால் தான் லக்ஷ்மணா, இந்த ஜன்மத்தில் இப்படி ஒரு துக்கம் அவளுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. நான் பிறந்து அவளுக்கு ஒரு பயனும் இல்லை. மேலும் துக்கத்தை வளர்ப்பவனாகவே ஆனேன். எந்த பெண்ணும் என்னைப் போல ஒரு மகனைப் பெற வேண்டாம். லக்ஷ்மணா, பார். நான் என் தாயாருக்கு எவ்வளவு கஷ்டம் கொடுக்கிறேன். சாரிகா என்ற பறவை கதை தெரியுமா? கிளியே, எதிரி பாதத்தைக் கடி (எதிரியான பூனையின் பாதத்தை) என்று சொல்லுமாம். நானாக ஒரு உதவியும் செய்யவில்லை. அவளே கவலைப் பட்டு வருத்தத்தில் ஆழ்ந்திருக்கிறாள். ஒரு புத்திரன் இருந்தும் இல்லாதவளாக இருக்கிறாள். என்னால் அவளுக்கு என்ன பயன்? அதிர்ஷ்டமில்லை. நினைத்தால் நான் ஒருவனே, என் கோபத்தால் அயோத்தியோ, முழு உலகமோ, போரில் ஜயித்துக் காட்டுவேன். ஆனால் வீர்யத்தை காரணமில்லாமல் காட்டக் கூடாது அல்லவா? அதனால் தயங்குகிறேன் அது அதர்மம் என்பதால். லக்ஷ்மணா, அதனால் தான் நான் என் தலையில் முடி சூட்டிக் கொள்ளவில்லை. இதுபோல பல விஷயங்கள் பேசி வருந்தி கண்ணீர் விட்ட பின், இரவின் பின் பகுதியில், பேசாமல் இருந்தான். தன் மன வருத்தத்தை வெளி யிட்டு முடித்த ராமனை, ஜ்வாலை அடங்கிய நெருப்பு போலவும், வேகம் அடங்கிய சமுத்திரம் போலவும், இருந்தவனை லக்ஷ்மணன் சமாதானப் படுத்தினான். இரவில் சந்திரன் இல்லாத ஆகாயம் போல நீ புறப்பட்டு வந்ததால், அயோத்தியா மாநகரம் ஒளியிழந்து நிற்கிறது. பெரியவனான நீ வருந்துவதால் என்னையும், சீதையையும் வருத்தத்தில் ஆழ்த்துகிறாய். நானோ, சீதையோ, நீயின்றி ஒரு நிமிஷமும் உயிரோடு இருக்க மாட்டோம். நீரிலிருந்து எடுத்த மீன்கள் போல ஆவோம். தந்தையையோ, சத்ருக்னனையோ, தாயார் சுமித்திரையையோ, பார்க்க நான் ஆசைப் படவில்லை. சுவர்கம் கிடைத்தாலும் வேண்டாம். எக்காரணம் கொண்டும், உன்னைப் பிரிவதைதான் நான் விரும்ப மாட்டேன். என்றான். பிறகு ந்யக்ரோத மரத்தினடியில், முடிந்தவரை படுக்கையை வசதியாக தயார் செய்து கொண்டனர். அன்று இரவு அவர்கள் மனத்தில், வருத்தமோ, பயமோ தோன்றவில்லை. மலைக் குகைகளில் சிங்கக் குட்டிகள் நிச்சிந்தையாகத் தூங்குவது போல தூங்கினர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ராம சம்க்ஷோபோ4 என்ற ஐம்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 54 பரத்3வாஜாஸ்ரம க3மனம் (பரத்வாஜரின் ஆஸ்ரமத்தை அடைதல்)
அந்த பெரிய மரத்தடியில் இரவைக் கழித்து, விடிந்தவுடன் அவர்கள் புறப்பட்டனர். எந்த இடத்தில் பாகீரதியை, யமுனை எதிர்கொண்டு கலக்கிறதோ, அந்த இடத்தை நோக்கிச் சென்றனர். மிகப் பெரும் வனத்தைக் கடந்து சென்றனர். பலவிதமான பூமி பாகங்களையும், மனோ ரஞ்சகமான இடங்களையும், முன் கண்டறியாத பல இடங்களையும் பார்த்துக் கொண்டு நடந்தனர். புஷ்பங்களும், பழங்களும் நிறைந்திருந்த மரங்கள் பலவிதமாகத் தெரிந்த ஒரு இடத்தில் அன்று பொழுது சாயும் வேளையில் வந்து சேர்ந்தனர். பிரயாகைக்கு அருகில் வந்து விட்டோம் லக்ஷ்மணா,
அதோ பார். புகை தெரிகிறது. பகவானுடைய இருப்பிடத்திற்கு அருகில் வந்து விட்டோம். நிச்சயம் கங்கா யமுனை சங்கமிக்கும் இடம் இது தான்.
நதி ஜலம் ஒன்றின் மேல் ஒன்று மோதும் ஓசை கேட்கிறது பார். இது தான் ப4ரத்3வாஜ முனிவரின் ஆஸ்ரமாக இருக்க வேண்டும். பலவித மரங்கள் தெரிகின்றன. வில்லேந்தியபடி இருவரும் சூரியன் மலை வாயில் விழும் நேரத்தில் கங்கா யமுனையின் சங்கம க்ஷேத்திரத்தில் இருந்த முனிவரின் இருப்பிடத்தை அடைந்தனர். இவர்களைக் கண்டு பயந்து மிருகங்களும், பக்ஷிகளும், பரத்வாஜரை சென்றடைந்தன. முனியைக் காண வேண்டி மூவரும் சற்று தூரத்திலேயே நின்றனர். சிஷ்ய கணங்கள் சூழ இருந்த முனிவரின் ஆஸ்ரமத்தில் நுழைந்து, தபஸ்வியை, தவப் பலனாக கிடைத்த ஞானக் கண் உடையவரும், தனிமையில் இருந்து தன் விரதங்களை செய்தவருமான முனிவரை, அக்னி ஹோத்ரம் செய்து முடித்து விட்ட நிலையில், கண்ட மாத்திரத்தில் கை கூப்பி வணங்கி, ராமர் லக்ஷ்மணனுடனும், சீதையுடனும் சேர்ந்து வணங்கினார். தாங்கள் யார் என்பதையும் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டார்.
பகவன், நாங்கள் இருவரும் தசரத ராஜாவின் குமாரர்கள். இவள் என் மனைவி வைதேஹி.. ஜனகர் மகள். நற்குணங்கள் நிறைந்தவள். என்னைத் தொடர்ந்து சற்றும் முகம் கோணாமல் காட்டுக்கு வசிக்க வந்திருக்கிறாள். என் தந்தை என்னை நாடு கடத்தி விட்டார். இவன் லக்ஷ்மணன். என் பிரியமான சகோதரன். இவனும் என்னைத் தொடர்ந்து வனம் வந்து விட்டான். பகவன், தந்தையின் கட்டளைப்படி தபோவனங்களில் வசிக்கப் போகிறோம். பத்ரம், மூலம், பழம் இவற்றை ஆகாரமாகக் கொண்டு தர்மத்தையே அனுஷ்டிக்கப் போகிறோம். புத்திசாலியான அரச குமாரன் சொன்னதைக் கேட்டு, பரத்வாஜ முனிவர் அவர்களை வரவேற்று, ஜலம் அர்க்யம் முதலியவைகளைக் கொடுத்து உபசரித்தார். காட்டு, மூல, பழங்களைக் கொண்டு தயாரிக்கப் பட்ட பலவிதமான அன்னம், ரசம் முதலிய பதார்த்தங்களைக் கொடுத்து சாப்பிடச் செய்து, வசிக்க ஏற்ற இடமும் அமைத்துக் கொடுத்தார். முனி குமாரர்களுக்கு சமமாக, மிருகங்களும், பக்ஷிகளும் வளைய வந்த அந்த இடத்தில் ராமர் வந்திருப்பதை அனைவருக்கும் தெரிவித்து ஸ்வாகதம் சொல்லியபடி, முனிவர் சொன்னார். வெகு நாளைக்குப் பின் உன்னை பார்க்கிறேன் காகுத்ஸா, உன்னை நாடு கடத்திய செய்தியும் கேள்விப் பட்டேன். இந்த இடத்தில் மகா நதிகள் கூடுகின்றன. இந்த சங்கமத்தில் இந்த இடம் புண்யமாகவும், ரமணீயமாகவும் இருக்கும். இந்த இடத்தில் நீங்கள் சௌக்யமாக இருங்கள். ராகவன் பதில் சொன்னார். ப4கவன், இந்த இடம் நகரத்துக்கு அருகில் உள்ளது. ஊர் ஜனங்கள் எங்களைப் பார்க்க வந்து விடுவார்கள். வைதேஹியைக் காணவும் வந்து கொண்டே இருப்பர். அதனால் இங்கு வசிக்க நான் விரும்பவில்லை. தனிமையான இடத்தில் எங்களுக்கு ஒரு ஆஸ்ரமம் தேடிக் கொடுங்கள் ஸ்வாமி. ஜனகன் மகளான வைதேஹி சுகமாக இருக்கும்படி இருந்தால் போதும். பொருள் பொதிந்த இந்த பதிலைக் கேட்டு பரத்வாஜர் சொல்வார் இங்கிருந்து இருபது மைல் தூரத்தில் ஒரு மலையடிவாரம் உள்ளது. அங்கு வசிப்பாய். அங்கும் பல மகரிஷிகள் இருக்கிறார்கள். புண்யமான இடம். எப்பொழுதும் பார்க்க அழகாக இருக்கும். பசு போல வாலுடைய (கோலாங்கூலம்) வானரங்கள், கரடிகள் வசிக்கின்றன. சித்ர கூடம் என்ற பெயர் உடையது. கந்த மாதன மலைக் கருகில் உள்ளது. எவர் ஒருவர் இந்த சித்ர கூடத்தின் அழகைக் காண்கிறார்களோ, அவர்கள் அதன் பின் பாபத்தை செய்யக் கூட நினைக்க மாட்டார்கள். எப்பொழுதும் அவர்கள் மனதில் நல்லது தான் தோன்றும். பல நூறு சரத் காலங்கள் வசித்த ரிஷிகள் அங்கு சஞ்சரித்து, கபால சிரஸHடன் (வெண்மையாக ஆனத் தலையுடையவர்களாக) தேவ லோகம் சென்றுள்ளனர். இந்த இடம் தான் நீ சுகமாக வசிக்க ஏற்றது. அல்லது இந்த வன வாசத்தை என்னுடன் இங்கேயே கூட கழிக்கலாம். என்றார். பரத்வாஜர், பிரியமாக அதிதியாக வந்த ராமரை வேண்டியதை கவனித்து உபசரித்து, மனைவியுடனும், சகோதரனுடனும் மன மகிழ்ச்சியோடு உபசரித்தார். தர்மம் அறிந்த மகரிஷியான அவருடன் பல கதைகள் பேசியபடி, அன்று இரவு கழிந்தது. சீதையுடன் மூவரான அவர்கள், களைப்பு நீங்க, அந்த இரவை சுகமாக கழித்தனர். விடிந்ததும், ஜ்வலிக்கும் அக்னி போல இருந்த முனிவரிடம் சென்றனர். பகவன், சத்ய சீலரே, உங்கள் ஆஸ்ரமத்தில் இரவு சுகமாக இருந்தோம். விடை கொடுங்கள். போய் வருகிறோம். என்றனர். அவரும், மூல, பழங்கள் நிறைந்த சித்ர கூடம் போ. அந்த இடத்தில் வசிப்பது உனக்கு சௌகர்யமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பலவிதமான மரங்கள் நிறைந்தது, கின்னர, உரகம் நிறைந்தது. மயூரங்கள் கத்தி அழகூட்டும். யானைகள் வசிக்கும் இடம். போய் வாருங்கள். சித்ர கூடம் புகழ் வாய்ந்த மலைச் சாரல்கள் உடையது. அழகாக இருப்பதோடு, புண்யமான இடம். தேவையான பழம் முதலிய ஆகாராதிகள் கிடைக்கும் இடம். அங்கு யானைக் கூட்டமும், மான் கூட்டமும் இணைந்து செல்லும். அவைகளை கண்டு மகிழ்வாய் ராகவா. நதிகளும் அருவிகளும் நிறைந்து இருக்குமிடத்தில் சீதையுடன் நடந்து சென்று, உன் மனம் மகிழ்ச்சியடையும். கணக்கிலடங்காத கோயஷ்டிக (ஒரு பக்ஷி) கோகிலங்கள் நிறைந்து, ஆரவாரமாக நாதம் செய்ய, மங்களகரமான அந்த பிரதேசத்தில், மான்கள் துள்ளியாட, மதம் பிடித்த யானைகள் உலவ, மிக ரம்யமாக இருக்கும். இந்த இடத்தில் உன் ஆஸ்ரமத்தை அமைத்துக் கொண்டு வாழ்வாய்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் ப4ரத்3வாஜாஸ்ரம க3மனம் என்ற ஐம்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 55 (132) யமுனா தரணம் (யமுனையைக் கடத்தல்)
முனிவரை வணங்கி ராஜ குமாரர்கள் விடை பெற்றனர். முனிவர் அவர்களுக்கு ஸ்வஸ்த்யயனம் (மங்களா சாஸனம்) செய்தார். தந்தை மங்களா சாஸனம் செய்வது போல செய்தார். பிறகு ராமனைப் பார்த்து கங்கா, யமுனை சங்கமமாகும் இடத்தைக் கடந்த பின், காலிந்தீ3 என்ற நதியைக் காண்பீர்கள். இது மேற்கு நோக்கிச் செல்லும் நதி. வேகமாக சுழித்துக் கொண்டு ஓடும். காளிந்தீ நதி புராணமான புண்ய தீர்த்தம். அதன் பின் படகை எடுத்துக் கொண்டு அம்சுமதி என்ற நதியை கடந்து செல்லுங்கள். அங்கு உள்ள பசுமை நிறைந்த ந்யக்4ரோத மரத்தை அடைந்து, சுற்றிலும் பசுமையான மரங்கள் அடர்ந்து இருட்டாக இருக்கும் அந்த இடத்தில், சித்தர்கள் வசிக்கிறார்கள். சீதை அவர்களை வணங்கி ஆசி பெறட்டும். அந்த மரத்தடியை அடைந்து அங்கேயே வசித்தாலும் வசிக்கலாம். அல்லது மேற்கொண்டு சென்றாலும் சரி. இன்னொரு க்ரோச தூரம் (2 மைல்) சென்றால் அடர்ந்த , இருண்ட கானகத்தைக் காண்பீர்கள். யமுனை நதிக் கரையில், மூங்கில் காடுகளும், ப3தரி மரங்களும் சல்லகி எனும் மரங்களும் நிறைந்த மிகவும் ரம்யமான வழியாகும். இந்த வழியில் தான் நான் பலமுறை சித்ரகூடம் போய் இருக்கிறேன். வழியும் ரம்யமாக இருப்பதோடு, நேர்வழி. காட்டுத் தீ இல்லாமல் வசதியான வழி. இவ்வாறு வழி சொல்லி அனுப்பி விட்டு மகரிஷி திரும்பிச் சென்றார். இம்மூவரும் முனிவரை வணங்கி விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டனர். முனிவர் சென்றபின், ராமர் லக்ஷ்மணனிடம் சொன்னார். நமது பாக்கியம் தான் லக்ஷ்மணா, முனிவர் நம்மிடம் இவ்வளவு அன்புடன் இருக்கிறார். தங்களுக்குள் பேசிக் கொண்டு, சீதை முன் செல்ல காளிந்தீ நதிக் கரையை அடைந்தனர். சுழித்துக் கொண்டு ஓடி வரும் நதி வேகத்தைக் கண்டு, அதை கடப்பதைப் பற்றிய கவலை தோன்றியது. கட்டைகளை எடுத்து, இருவருமாக ஒரு படகை தயாரித்தனர். சிறிய மூங்கில் துண்டுகளையும், உசீரம் (வாசனையுள்ள ஒரு வேர்) என்ற நாணல் வகை புல்லையும் கொண்டு பெரிய படகாக கட்ட ஆரம்பித்தனர். வேதஸ என்ற மரக் கிளைகளையும், நாவல் மரக் கிளைகளையும் கொண்டு வந்து, வீரனான லக்ஷ்மணன் வெட்டி சீதை உட்கார வசதியாக ஆசனம் அமைத்துக் கொடுத்தான். லக்ஷ்மி தேவி போல விளங்கிய தன் மனைவியைப் பார்த்து ராமர், சற்றே வெட்கத்துடன் தயங்கியவளை கை லாகு கொடுத்து தூக்கி ஏற்றிவிட்டார். வைதேஹியின் அருகில் வஸ்திரங்களையும், பூஷணங்களையும் வைக்க மரத்தில் குடைந்து பெட்டி போல செய்தார் ராமர். முதலில் சீதையை ஏற்றி படகை பிடித்துக் கொண்டு பின் இருவரும் மகிழ்ச்சியுடன் ஏறி அமர்ந்தனர். பாதி நதியைக் கடந்த நிலையில், சீதை காளிந்தீ நதியை வணங்கினாள். ஸ்வஸ்தி தேவி, உன்னை கடந்து செல்கிறேன். பதியைத் தொடர்ந்து வந்த என்னை காப்பாற்று. உன்னை பூஜிக்கிறேன். நூற்றுக் கணக்கான குடம் மது வகைகளும் நூறாயிரம் பசுக்களும் அளிக்கிறேன். ராமர் திரும்பி வந்து இக்ஷ்வாகு தலை நகரான அயோத்தி ராஜ்ய பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன் என் வேண்டுதலை நிறைவேற்றுவேன். இவ்வாறு கை கூப்பி காளிந்தீ நதியை வேண்டினாள். நதியின் தென் கரையை வந்தடைந்தனர். பிறகு அலை அடித்துக் கொண்டு ஓடும் அம்சுமதி நதியையும் கடந்து சென்றனர். கரையில் இருந்த பலவகை மரங்களை பயன் படுத்தி யமுனை நதியைக் கடந்தனர்.
படகை விட்டு விட்டு யமுனை கரையோரமாக நடந்து கறுத்து அடர்ந்திருந்த ந்யக்4ரோத மரத்தடியை அடைந்தனர். அந்த மரத்தினிடம் வைதேஹி மகா வ்ருக்ஷமே, உனக்கு நமஸ்காரம். பதிவிரதையான என்னை கரை சேர்ப்பாயாக (காப்பாற்றுவாயாக). என் மாமனார் வயதானவர். நீண்ட நாள் வாழட்டும். என் கணவரும் இளைய சகோதரரும், பரதன் முதலானோரும் நீண்ட ஆயுசோடு விளங்கட்டும். என் மாமியார் கௌசல்யையையும், சுமித்திரையையும் திரும்பக் காண வேண்டும். இவ்வாறு வேண்டி, அந்த மரத்தை பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்தாள். இதன்பின் சீதையை நிமிர்ந்து பார்த்த ராமர், லக்ஷ்மணனிடம், இவளை அழைத்துக் கொண்டு நீ முன்னால் போ, நான் பின்னால் கையில் ஆயுதங்களை ஏந்தி பாதுகாப்பாக வருகிறேன். என்று சொன்னார். எந்த எந்த புஷ்பங்களையோ, பழங்களையோ பார்த்து வைதேஹி கேட்டால், அவளுக்கு பறித்துக் கொடு. அவள் மனம் மகிழும் படி கூடவே சென்று, வேண்டியதை தேடிக் கொடு என்றார். நடந்து போகும் அவ்விருவரின் மத்தியில், ஜனகர் மகள் சென்றாள். பெரிய யானைகளுக்கிடையில் செல்லும் குட்டி யானை போல நடந்தாள். ஒவ்வொரு மரத்தையும், புதரையும், பூக்கள் மண்டிய செடிகளையும் இது வரை காணாத ஒவ்வொன்றையும் பற்றி ராமனிடம் கேட்டுத் தெரிந்து கொண்டவாறு நடந்தாள். பல அழகிய பூக்களை மரங்களிலிருந்து பறித்துக் கொண்டு வந்து லக்ஷ்மணன் அவளுக்கு கொடுத்தான். நதியைக் கண்டு ஜனக ராஜாவின் மகள் குதூஹலம் அடைந்தாள். மணல் பல வர்ணங்களில் தெரிய, கறுத்தும், ஹம்ச, ஸாரஸ பக்ஷிகள் நிறைந்ததுமான அந்த நதியைக் கண்டு மகிழ்ந்தாள். ஒரு க்ரோச மாத்திரத்தில் இவ்வாறு நடந்து ராமரும், லக்ஷ்மணரும் யமுனா வனத்தில் மாமிசம் நிறைந்த மிருகங்களை வேட்டையாடிக் கொண்டு வந்தனர். அந்த சுபமான வனத்தில் பக்ஷிகளின் இரைச்சலோடும், வானரங்களும், யானைகளும் நடமாடும் இடத்தில் நடந்தபடி, வனத்தின் மையமான இடத்தை அடைந்து தாங்கள் வசிக்க ஏற்பாடுகளை செய்ய முனைந்தனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் யமுனாதரணம் என்ற ஐம்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 56(133) சித்ர கூட நிவாஸ: (சித்ர கூடத்தில் வசித்தல்)
அன்று இரவு கழிந்ததும், இன்னும் தூங்கிக் கொண்டிருந்த லக்ஷ்மணனை ரகுநந்தனன், மெதுவாக எழுப்பினான். சௌமித்ரே, காட்டு பக்ஷிகள் கூக்குரலிடுவதைக் கேள். நாம் கிளம்ப நேரம் ஆகி விட்டது. புறப்படுவோம். தூங்கிக் கொண்டிருந்த லக்ஷ்மணன், ராமர் எழுப்பியவுடன் தூக்கத்தையும் (சோம்பலையும்), களைப்பையும், உதறித் தள்ளி, எழுந்து மூவருமாக நதி ஜலத்தைத் தொட்டு, முனிவர் சொன்னபடியே, சித்ர கூடத்தை நோக்கி செல்லலாயினர். சௌமித்திரியுடனும், சீதையுடனும் நடந்து சென்ற ராமர், சீதையைப் பார்த்துச் சொன்னார். வைதேஹி, இந்த மரங்களின் நுனியில் பூக்கள் செக்கச் சிவக்க பூத்து நிறைந்திருப்பதை பார்த்தால் கொழுந்து விட்டெரியும் அக்னி ஜ்வாலை போல இல்லை. கிம்சுகம் என்ற இந்த மரம் தன் புஷ்பங்களால் பனி மறையும் நேரத்தில் கொத்து கொத்தாக பூத்து, இலை தெரியாமல் மூடிக் கிடக்கும். ப4ல்லாதகான் என்ற மரம் இது. இதோ பார் வில்வ மரம். இதில் வானரங்கள் குடியிருக்கின்றன. எல்லா மரங்களுமே பழ மரங்களுமாகவும், புஷ்பங்களின் பாரத்தால் வணங்கியபடியும் தெரிகின்றன. நாம் கட்டாயம் உணவுக்கு பஞ்சமில்லாமல் உயிர் வாழ முடியும். த்3ரோண அளவு (கிட்டத்தட்ட 2 படி அளவைக் குறிக்கும் சொல்) தேனீக்கள் கூடு கட்டியிருப்பதைப் பார். லக்ஷ்மணா, பார். தேனீக்கள் ஒவ்வொரு மரத்திலும் கூடு கட்டி தேனை சேகரித்துக் கொண்டிருக்கின்றன. நத்யூஹம் என்ற பறவை இங்கு கத்துகிறதா, அதற்கு பதில் சொல்வது போல மயில் அகவும் சத்தம் கேட்கிறது. இந்த வனப் பிரதேசம் மிகவும் ரமணீயமாக இருக்கிறது. சித்ர கூட மலை அருகில் வந்து விட்டோம். இங்கும் மரங்கள் பூத்துக் குலுங்குகின்றன. யானைக் கூட்டம் வரிசை வரிசையாக செல்கின்றன. பக்ஷிகள் இரைச்சலும் சேர்ந்து கேட்கிறது. உயர்ந்த சிகரத்தையுடைய மலை. இது தான் சித்ர கூடமாக இருக்க வேண்டும். இதன் பின் அவர்கள் மேலும் நடந்து பூமி சம தளமாக இருந்த இடத்தை தேர்ந்தெடுத்து, இங்கேயே வசிப்போம் என்று தீர்மானித்தனர். அருகில் நீர் நிலையில் நல்ல ஜலமும், நிறைய பழங்கள் உடைய மரங்களும், கிழங்குகளும் கிடைக்கும் படியான அழகிய இடத்தைக் கண்டு கொண்டனர். இந்த மலையின் உச்சியில் முனிவர்கள் வசிக்கிறார்கள். இங்கேயே நாம் நமது இருப்பிடத்தை தயார் செய்து கொண்டு திருப்தியாக வாழ்வோம். இவ்வாறு பேசிக் கொண்டே, மூவரும் சுற்றி சுற்றி வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தை அடைந்தனர். இவர்களைக் கண்டு முனிவர் ஆச்சர்யமும், மகிழ்ச்சியும் அடைய அவரை மூவரும் வணங்கினர். தங்களைப் பற்றி அறிமுகப் படுத்திக் கொண்டனர். தர்மம் அறிந்த முனிவரும் ஸ்வாகதம் சொல்லி, உட்காருங்கள் என்று உபசரித்து, அதிதி சத்காரம் செய்தார்.
பின் ராமன், லக்ஷ்மணனைப் பார்த்து த்ருடமான கட்டைகளை உயர்ந்த ரக மரத் துண்டுகளை கொண்டு வா. இங்கு நாம் வசிக்க வீடு கட்டுவோம். இந்த இடம் எனக்கு பிடித்திருக்கிறது என்றார். இதைக் கேட்டு லக்ஷ்மணனும் காட்டுக்குள் சென்று பலவித மரங்களைக் கொண்டு வந்து பர்ண சாலையை கட்டத் துவங்கினான். ஒரே நோக்கோடு, ஈ.டுபட்டு கஷ்டமான இந்த வேலையையும் சளைக்காமல் செய்வதைப் பார்த்து வியந்தார். பணிவிடை செய்வதில் ஏகாக்ர சித்தம் உடையவனாகவும், செய்யும் நேர்த்தியையும் பார்த்து பாராட்டினார். பின், லக்ஷ்மணா, மானின் மாமிசத்தைக் கொண்டு வா. யாக சாலை வைத்து யக்ஞம் செய்வோம். வாஸ்து சமனம் என்ற பூஜையையும் செய்வோம். நீண்ட நாள் ஆரோக்யமாக வாழ விரும்புபவர்கள், இதை செய்ய வேண்டும். சாஸ்திர முறைப் படி என்ன செய்ய வேண்டுமோ, செய்வோம். முதலில் ஒரு மானை வேட்டையாடி வா என்று சொல்லியனுப்பினார். எதிரிகளை க்ஷண நேரத்தில் தோற்கடிக்கும் வல்லமை வாய்ந்த லக்ஷ்மணன், ராமரின் கட்டளைப் படி மானை வேட்டையாடி வந்தான். இதை வேகவை. யாக சாலையில் இதைக் கொண்டு யாகம் செய்வோம். சீக்கிரம் லக்ஷ்மணா, சௌம்யமான முஹுர்த்தம் இது. இன்று நாளும் த்4ருவம் எனப்படும். லக்ஷ்மணன் க்ருஷ்ண மிருகத்தை அடித்து மேத்4யம் என்பதைக் கொண்டு நெருப்பில் கொழுந்து விட்டெரியும் பொழுது போட்டான். நன்றாக வெந்தபின், பக்குவமான பின் ராமரிடம் சொன்னான். இதோ கரும் நிற மான். நன்றாக வேக வைக்கப் பட்டது. இதைக்கொண்டு உன் யாகத்தை செய். எனவும், ராமர் குளித்து விட்டு ஜபங்களை நன்கு அறிந்தவரானாதலால், நியமங்களோடு ஜபம் செய்து, யாகத்துக்குண்டான எல்லா மந்திரங்களையும் சுருக்கமாக வரிசையாக சொல்லி, தேவ கணங்களை திருப்தி செய்து, பூஜை செய்து, தங்கள் பவனத்திற்குள் நுழைந்தார்கள். இதனால் அவருக்கு மிக்க மன நிறைவும், திருப்தியும் ஆனந்தமும் உண்டாயிற்று. வைவஸ்வத தேவ பலி, ருத்ரனுக்கான பலி, வைஷ்ணவ பலி இவற்றையும் செய்து, வாஸ்து சம் சமனீயம் என்றவைகளையும், பல மங்களங்களையும் செய்து வைத்தார். ஜபங்களை முறைப் படி செய்து, நதி ஜலத்தில் நீராடி, பாப சம்சமனம் என்ற காரியத்தையும், பலியையும், சிறந்த முறையில் செய்தார். வேதி (யாக) ஸ்தல விதானங்களை நான்கு புறமும் தூண்களுடன் கூடிய பூஜையறை முதலியவற்றை ஆஸ்ரமத்திற்கு அனுரூபமாக இருக்கும் படி அமைத்துக் கொண்டார். இருவருமாக காட்டில் கிடைத்த மாலைகள், பழ வகைகள், கிழங்கு வகைகள், பக்வமான மாமிசம், ஜலம், இவற்றைக் கொண்டு, ஜபங்கள் செய்து, வேதத்தில் சொல்லியபடி சமித் குசங்கள் தர்ப்பங்கள், இவற்றைக் கொண்டு ஐந்து பூதங்களையும் அதி தேவதைகளையும் தர்ப்பித்து விட்டு (திருப்தி செய்து விட்டு) சீதையுடன் உள்ளே நுழைந்தனர். மங்களமான முறையில், புது மனை புகும் விழாவைச் செய்தனர். அந்த வீடு சரியான இடத்தில் அதிக காற்று அடிக்காமல் மரத்தின் நிழலில் மறைந்து அழகாக விளங்கியது. நல்ல முறையில் கட்டப் பட்ட அந்த வீட்டில் எல்லோரும் ஒன்றாக வசிக்க நுழைந்தார்கள். தர்மம் நிறைந்த இந்திரன் சபையில் தேவ கணங்கள் நுழைவது போல. பலவிதமான பக்ஷிகளும், மிருகங்களும் நிறைந்த அந்த இடத்தில், விசித்திரமான இலைகளையுடைய ஸ்தபக என்ற மர வகை நிறைந்து காணப்பட்டது. உத்தமமான அந்த காட்டில் யானைகளும், மான்களும் சுதந்திரமாக ஓசையெழுப்பிக் கொண்டிருந்தன. ஜிதேந்திரர்களான ராஜ குமாரர்கள் மன நிறைவோடு வசிக்கலாயினர். அழகிய சித்ர கூட மலையில் ஏறி, சுத்தமான தீர்த்தம் உள்ள மால்யவதி நதியில் இறங்கியும், ராமர் மன மகிழ்ச்சி அடைந்தார். நகரத்தை விட்டு வந்த வேதனையும் அவர் மனதிலிருந்து அகன்றது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சித்ரகூட நிவாசோ என்ற ஐம்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 57(134) சுமந்த்ரோபாவர்த்தனம் (சுமந்திரர் திரும்பி வருதல்)
ராமர் கிளம்பிச் சென்ற பின் வெகு நேரம் வரை குகன் சுமந்திரருடன் பேசிக் கொண்டிருந்தான். அங்கிருந்தபடியே எதிர்க்கரையில் ராம, லக்ஷ்மண, சீதை மூவரும் பரத்வாஜ ஆசிரமத்தை அடைந்ததையும், பிரயாகை சென்றதையும், சித்ர கூட மலையடிவாரம் சென்றதையும் அறிந்து கொண்டனர். பின் குதிரைகளை ரதத்தில் பூட்டிக் கொண்டு சுமந்திரர் விடை பெற்றார். மனம் கனக்க, அயோத்தி நோக்கி பிரயாணமானார். வாசனை மிகுந்த பூக்களையுடைய நந்த வனங்களையும், நதிகளையும் குளங்களையும் கடந்து, சீக்கிரமாக கிராமங்களையும், நகரங்களையும் கண்டு சாயங்கால வேளையில் மறு நாள் சாரதி அயோத்தி வந்து சேர்ந்தார். ஊர் மகிழ்ச்சியின்றி காணப் பட்டது. சூன்யமாக, அமைதியாக இருந்த ஊரைக் கண்டு, சுமந்திரர் யோசித்தார். இது என்ன? ராமரை பிரிந்த துக்கம் என்ற அக்னி இந்த ஊர், யானைகள், குதிரைகள், ஜனங்கள், ஊர் தலைவர்கள், எல்லோரையும் ஒட்டு மொத்தமாக தகித்து சாம்பலாக்கி விட்டதா? சீக்கிரமாக ஓடக் கூடிய குதிரைகளைத் தட்டி வேகமாக ஓட்டிக் கொண்டு நகர வாசலில் நுழைந்தார். சுமந்திரனைக் கண்டதும், நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான ஜனங்கள் ஓடி வந்து எங்கே ராமன்? என்று ஆவலுடன் கேட்டனர். கங்கா கரையில், தார்மிகனான ராமனிடம் விடை பெற்றுக் கொண்டு நான் திரும்பி வந்து விட்டேன், என்று சுமந்திரர் சொன்னதும், நதியைக் கடந்து போய் விட்டார்களா? -ஹா திக்- என்று ஜனங்கள் வருந்தினர். கூட்டம் கூட்டமாக நின்ற ஜனங்கள், திரும்பத் திரும்ப சுமந்திரர் சொன்ன செய்திகளை ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டும், இனி எப்பொழுது ராமரை பார்க்கப் போகிறோம் என்று ஏக்கத்துடனும், வருத்தத்துடனும் பேசிக் கொண்டனர். தா3ன யக்ஞமோ, விவாகமோ, சமாஜ உத்ஸவமோ, இப்போதைக்கு ராமனைக் காண மாட்டோம் என்றனர். இவர்களுக்கு எது உகந்தது, எது பிரியமானது, எது நன்மை தரக் கூடியது என்று பார்த்து பார்த்து ராமன் தந்தையைப் போல நகரத்தை பாலித்து வந்தான்.
ஜன்னல்களிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஸ்த்ரீகளும், கடை வீதிகளில் நடமாடிக் கொண்டிருந்த பெண்களும் ராமனது பிரிவை தங்கள் தீனமான குரல்களில் வெளிப் படுத்தினார்கள். முகத்தை மூடியபடி, சுமந்திரர் அந்த ராஜ மார்கத்தில் ரதத்தை செலுத்திக் கொண்டு, தசரத ராஜா இருந்த வீட்டிற்கே சென்றார். ரதத்திலிருந்து வேகமாக இறங்கி, அரசனது மாளிகையில் பிரவேசித்து, பிரமுகர்கள் நிறைந்த ஏழு அறைகளைக் கடந்து உள்ளே சென்றார். அவர் வந்ததை, உப்பரிகைகளிலும், விமானங்களிலும்
மாளிகைகளிலும் இருந்து பார்த்த அரச குல ஸ்த்ரீகள், ஹா, ஹா என்று அலறினர். ஒருவரையொருவர் நீர் நிறைந்த விழிகளால் ஏறிட்டுப் பார்த்துக் கொண்டனர். ரகசியமாக, அடங்கிய குரலில் பேசிக்கொண்டனர். ராமனோடு கிளம்பிச் சென்றவன், ராமன் இல்லாமல் திரும்பி வந்திருக்கிறான். இந்த சாரதி, கதறும் கௌசல்யைக்கு என்ன சமாதானம் சொல்லப் போகிறான் என்றனர். பாவம், கௌசல்யை. எப்படித்தான் உயிர் தரித்து இருக்கிறாளோ, அரசனின் அந்த:புரத்தைச் சேர்ந்த அந்த பெண்களின் வார்த்தையில் உண்மை இருக்கிறது என்று எண்ணியபடி சுமந்திரர் இன்னும் உள்ளே சென்றார். எட்டாவது அறையில் பரிதாபமாக, புத்ர சோகத்தால் இளைத்து, வெளுத்த உடலுடையவனாக ராஜா தசரதனைக் கண்டான். அருகில் சென்று அரசனை வணங்கி, ராமர் சொன்னதை அப்படியே சொன்னார். வாய் திறவாது அவர் சொல்லி முடிக்கும் வரை கேட்ட அரசன், மனம் கலங்க, மூர்ச்சையாகி பூமியில் விழுந்தார். சுமந்திரர் உதவியுடன் கௌசல்யா, அரசரை தூக்கி நிறுத்தி கஷ்டமான காரியத்தை செய்து விட்டு வந்திருக்கிறான் இந்த சாரதி, இவனுடன் பேசாமல் ஏன் இருக்கிறீர்கள் என்று அரசனைக் கடிந்து கொண்டாள். வன வாசத்திலிருந்து வந்திருக்கிறான். இப்பொழுது இப்படி நயமில்லாமல் நடந்து கொண்டு அவமதிக்கிறீர்கள். ராகவா எழுந்திருங்கள். உங்களுக்கு நன்மையுண்டாகட்டும். சோகத்தில் சகாயம் செய்வது உலக வழக்கம் தானே. (அல்லது நீங்கள் இப்படிசோகத்தில் மூழ்கி கிடந்தால் பரிஜனங்கள் என்ன ஆவார்கள் என்பது திலகர் உரை). யாரைக் கண்டு பயந்து சாரதியிடம் பேசாமல் இருக்கிறீர்களோ, அந்த கைகேயி இங்கு இல்லை. நிம்மதியாக பேசலாம் என்று சொல்லி கௌசல்யா, தன் வருத்தம் அழுத்த தரையிலமர்ந்தாள். கௌசல்யை அழுவதையும், அவள் பதியின் நிலைமையையும் பார்த்து அருகிலிருந்த மற்ற ஸ்த்ரீகளும் அழலாயினர். வயதானவர், சிறுவர், என்றோ, பெண்களோ, ஆண்களோ எல்லோரும் அந்த சமயம் ஒரே விதமான மன நிலையில் இருந்தனர். திரும்பவும் அயோத்யாவில் அழும் குரல் ஓலமாக எழுந்தது.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் சுமந்திரோபாவர்த்தனம் என்ற ஐம்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 58 (135) ராம சந்தேசாக்யானம் (ராமனது செய்தியை விவரித்தல்)
மோகத்திலிருந்து விடுபட்டு அரசன் இழந்த நினவை திரும்பப் பெற்றான். சாரதியை அழைத்து நடந்த விவரங்களைக் சொல்லப் பணித்தான். கை கூப்பி வணங்கி நின்ற சாரதி, துக்கமும், சோகமும் ஒன்று சேர, ராமனையே நினத்து வாடும் முதியவரை, நவக்ரஹங்கள் அப்பொழுது தான் பிடித்தது போல தவிக்கும் அரசரை, உடல் நலம் சரியில்லாத யானை பெருமூச்சு விடுவதைப் போல இருந்தவரை, புழுதி படிந்த உடலுடன் கண்களில் நீர் மல்க நிற்கும் அரசரைப் பார்த்தான். அரசர் வினவினார். மரத்தடியை அடைந்த ராமன் என்ன சொன்னான்? சாரதியே | எப்பொழும் சுகமாக வாழ்ந்தவன், என்ன செய்தான்? சயனம் எப்படி இருந்தது? உருத்தாமல் இருந்ததா? பூமி பாலன் மகன், அனாதையாக தரையில் படுத்தானா? எவன் வெளியே கிளம்பினால், ரத, கஜ ரக பதாதி என்று நால் வகை சேனைகளும் பின் தொடருமோ, அவன் நிர்ஜனமான வனத்தில் எப்படி இருக்கிறான்.? க்ருஷ்ண சர்ப்பங்கள் மண்டி கிடக்கும். யானைகளும், மிருகங்களும் வசிக்கும் இடத்தில் என் குமாரர்கள் எப்படி வைதேஹியுடன் வசிக்க முடியும் ? சுகுமாரியான சீதா தபஸ்வி. அவளுடன் என் குமாரர்கள் ரதத்திலிருந்து இறங்கி காலால் நடந்து சென்றார்களா? நீ பாக்யசாலி சுமந்திரா| என் குழந்தைகளை கண்டாய். அஸ்வினி தேவதைகள் கோவிலுக்குள் நுழைவதைப் போல என் குழந்தைகள் காட்டிற்குள் செல்வதைக் கண்ணால் காணும் பேறு பெற்றாய். ராமன் என்ன சொன்னான்? லக்ஷ்மணன் என்ன சொன்னான்? மைதிலி என்ன சொன்னாள்? சாரதி| என் மகன் உட்கார்ந்தது, படுத்தது, சாப்பிட்டது என்ன என்று விவரமாக சொல்லு. இதைக் கேட்டே நான் உயிர் வாழப் போகிறேன். யயாதி, சாதுக்களிடம் இருந்தது போல. அரசன் இவ்வளவு கேட்ட பின், சாரதி சொல்ல ஆரம்பித்தார், மகாராஜா| தர்மத்தையே பின் பற்றும் ராமன், கை கூப்பி, தங்கள் பாதங்களில் விழுந்து வணங்கியதாக சொல்லச் சொன்னார். தந்தைக்கு எல்லாம் தெரியும், இருந்தாலும் சாரதி, என் வார்த்தைகளாக சொல்லு. திரும்ப திரும்ப பாதங்களில் தலை பட வணங்கியதாக சொல்லு. அந்த:புரத்தில் அனைவரிடமும் நான் நலம் விசாரித்ததாக சொல்லு. என் தாய் கௌசல்யைக்கு வணக்கம். குசலம் விசாரித்ததாக சொல்லு. அவளைக் கவலைப் படாதே என்று சொல். எப்பொழுதும் தர்ம சிந்தனையுடன் அக்னி பூஜை செய்து வருபவளாகவே இரு, தேவி. அரசனிடம் அதே ஈடுபாட்டுடன் இரு. மற்ற தாயார்களிடம் (அரசனின் மற்ற
மனைவிகளிடம்) அபிமானமோ, மானமோ வைத்துக் கொள்ளாதே. கைகேயியிடமும் ராஜாவிடம் கனிவாக இருக்கும்படி பார்த்துக் கொள். குமாரனான பரதனிடம், அரசன் என்ற எண்ணத்துடன் இரு. அரசன் என்று வந்தவுடன், அர்த்த ஜ்யேஷ்டா, பணம் படைத்தவன் என்ற தர்மம் தான் செல்லுபடியாகும். அது தான் ராஜ தர்மம். பரதனிடம் குசலம் விசாரி. நானும் விசாரித்ததாக சொல்லு. எல்லோரிடமும் பேசி பழகிக் கொண்டு இரு. இக்ஷ்வாகு குல நந்தனனான என் தந்தையிடம் சொல். யௌவராஜ்யத்தில் நியமிக்கப் பட்டவனிடத்தில், ராஜ்ய பதவியில் இருப்பவனிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமோ அது போல அனுசரித்து நடந்து கொள்ளச் சொல். ராஜாவுக்கு வயது முதிர்ந்து விட்டது. அவரை அதிகமாக வருத்தம் அடைய செய்யாதீர்கள். குமாரனுடய ராஜ்யத்தில் நீங்கள் வசியுங்கள். அவன் கட்டளையை நிறவேறச் செய்யுங்கள். இதைச் சொல்லும் பொழுது ராமன் கண்களில் நீர் பெருகி ஓடியது. சுமந்திரா| என் தாயை உன் தாயாக எண்ணி கவனமாக பார்த்துக் கொள் என்றான். தாமரை மலர்ப் போன்ற கண்களில் நீர் மறைக்க ராமன் இந்த வார்த்தையைச் சொன்னான். லக்ஷ்மணனுக்கு மகா கோபம். நெடு மூச்சு விட்டுக் கொண்டு கேட்டான். எந்த அபராதத்திற்காக அரச குமாரனை நாடு கடத்தினீர்கள்? மகாராஜா, கைகேயியின் கட்டளையை சிரமேற்கொண்டு, செய்யத் தகாததைச் செய்து விட்டீர்கள். அதன் பலனை நாங்கள் அனுபவிக்கிறோம். லோபம் காரணமாக இருந்ததா? வரதானம் நிமித்தமாக வந்ததா? எதுவானாலும் மிகவும் கொடுமை. இஷ்டம் போல் தன் வரையில் எதுவானாலும் செய்திருக்கலாம். ராமனை தியாகம் செய்வதில், ஒரு காரணமும் தென் படவில்ல. யோசிக்காமல் செய்த காரியம். புத்தி லாகவத்தால் விபரீதமாக ஆரம்பிக்கப் பட்டது. ராகவனை வெளியேற்றிய உங்களுக்கு பல கஷ்டங்கள் உண்டாக்கப் போகிறது. நான் மகா ராஜாவிடம் தந்தை ஸ்தானத்தையே விட்டு விட்டேன். எனக்கு சகோதரனும், பந்துவும், தலைவனும் தந்தையும், ராமனே. உலக முழுவம் விரும்பும் ஒருவனை, உலகத்தாரே நேசிக்கும் ஒருவனை தியாகம் செய்து விட்டு, இப்படி ஒரு காரியம் செய்து விட்டு, உலகத்தை என்ன செய்து பரிபாலிக்கப் போகிறீர்கள்? எப்படி ஜனங்களை மனம் குளிரச் செய்வீர்கள்? பிரஜைகளுக்கு பிடித்தமான ராமனை தார்மிகனானவனை தியாகம் செய்து விட்டு, உலகத்தையே எதிர்த்துக் கொண்டு எப்படி அரசனாக ராஜ்ய பாலனம் செய்யப் போகிறீர்கள்? ஜானகி எதுவும் சொல்லத் தெரியாமல், ஆச்சர்யமும், வினோதமுமாக நின்றாள். இது வரை கஷ்டம் என்றால் என்ன என்று அறியாதவள். மற்ற இருவரும் ஆவேசமாக பேசி, கண்களில் நீர் பெருக நிற்பதை மாறி மாறி பார்த்துக் கொண்டு நின்றாள். எதுவும் சொல்லவில்லை. நான் கிளம்பியவுடன், அவளும், என்னைப் பிரியும் வருத்தம் தெரிய, கண்களில் நீர் பெருக நின்றாள். ராமர் தான் லக்ஷ்மணனை அணைத்துக் கொண்டு துக்கம் தாளாமல் அழுதார். சீதை அவர்களையும், கிளம்பிய என் ரதத்தையும் பார்த்தபடி இருந்தாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில், ராம சந்தேசாக்2யானம் என்ற ஐம்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 59 (136) தசரத விலாப: (தசரதனின் புலம்பல்)
இவ்வாறு சாரதியான சுமந்திரன் சொல்லி நிறுத்தவும், இன்னமும் சொல்லு என்று ராஜா தூண்டினார். மீதியையும் சொல் எனவும், சுமந்திரன் திரும்பவும் விஸ்தாரமாக ராமர் சொல்லியனுப்பிய செய்தியை சொல்லலானார். மரவுரி, வல்கலை அணிந்து ஜடா முடிகளை செய்து கொண்டு, கங்கையைக் கடந்து அவர்கள் பிரயாகை நோக்கிச் சென்றனர். லக்ஷ்மணன் முன்னால் சென்றான். நடுவில் சீதை. இவர்களை பாதுகாத்துக் கொண்டு ராமன் கடைசியில் சென்றான். இவர்கள் இவ்வாறு செல்வதைப் பார்த்த பின் செய்வதறியாது நான் திரும்பி விட்டேன். என் குதிரைகளை திருப்பினால், அவைகளும் வர முரண்டு பிடித்தன. ராஜ குமாரர்களை விட்டு வருவது அந்த குதிரைகளுக்கு கூட தாங்கமுடியவில்லை. நான் இருந்த இடத்தில் இருந்தே ராஜ குமாரர்களுக்கு வணக்கம் செலுத்தி விட்டு, இதயம் பாறையாக கனக்க, ரதத்தை ஓட்டிக் கொண்டு திரும்பி வந்தேன். குகனுடன் சில நாட்கள் அங்கேயே இருந்தேன். ஒரு வேளை ராமன் குரல் கொடுப்பானோ என்ற நப்பாசையுடன் காத்திருந்தேன். ராமனுடைய கஷ்டத்தைக் கண்டு மரங்கள் கூட வாடி விட்டன. மொட்டுகளும், மலர்களும் வாடி வதங்கி போய் விட்டன. நதிகளில் நீர் கொதிக்கிறது. சிறிய குளங்களோ, நீர் நிலைகளோ, இதே நிலை தான். சுருங்கிய இலைகளையுடைய பலாசமரங்கள் வனத்தில் தென்படுகின்றன. ஊர்வன ஊர்ந்து செல்வதில்லை. யானைகள் அதிர நடப்பதில்லை. ராமனது சோகத்தில் பங்கு கொள்வது போல வனம் நிச்சப்தமாக ஆகி விட்டது. புஷ்கரங்களில் இலைகள் மிதந்தன. நதிகளில் நீர் கலங்கலாக இருந்தது. பத்மங்களில் சேறு தெளித்திருந்தது. மீன்களும், பறவைகளும் ஓய்ந்து கிடந்தன. ஜலத்தில் பூக்கும் பூக்களும், மலர்களும், தரையில் முளைத்து பூத்தவையும், ஒளி யின்றி, வாசனை குறைவாக இருந்தன. முன் போல பழங்களும் இல்லை. உத்யான வனங்கள் இன்று சூன்யமாகத் தெரிகின்றன. பறவைகளும் மறைந்து இருக்கின்றன. ஓய்வு எடுக்க என்று உள்ள தோட்டங்களிலும் நந்த
வனங்களிலும் எதிலுமே உற்சாகத்தைக் காணவில்லை அரசே. அயோத்தி மா நகருள் நுழைந்த என்னை யாருமே வாழ்த்துக் கூறி வரவேற்கவில்லை. ஜனங்கள் ராமரைக் காணாமல் திரும்ப திரும்ப பெருமூச்சு விடுகின்றனர். ராமன் இன்றி அரச ரதம் திரும்பி வந்ததைப் பார்த்து, ராஜ மார்கத்தில் வந்த ஜனங்கள் ஏமாற்றமடைந்து கண்ணீர் பெருகும் முகத்தை திருப்பிக் கொண்டனர். வீட்டு மாடியிலிருந்தும், உப்பரிகையிலிருந்தும், மாளிகைகளிலிருந்தும் பார்த்த ஜனங்கள், பெண்கள் ராமனைக் காண விரும்பியவர்களாக ஹா ஹா என்று அலறிய சத்தம் கேட்டது தங்கள் பெரிய கண்கள் நீரில் மிதக்க, ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். இந்த வருந்தி புலம்பும், ஜனங்களில் யார் மித்ரன், யார் மித்ரனல்லாதவன் என்று பாகு படுத்தி தெரிந்து கொள்ளவும் முடியவில்லை. எல்லோரும் ஒரே போல கவலையும், உதாசீனமும் கொண்டவர்களாக இருந்தனர். கௌசல்யா புத்ரனை பிரிந்து வாடுவதைப் போலவே, பூரா அயோத்யா நகரமும் மகிழ்ச்சியின்றி இருப்பது போல எனக்குத் தெரிகிறது.
சாரதியின் இந்த வார்த்தைகளைக் கேட்டு தசரத ராஜா தீனமாக தழ தழக்கும் குரலில் சொன்னார் கைகேயியின் பாப புத்தியில் மாட்டிக் கொண்டு, நான் மந்த்ர குசலர்களான பெரியவர்களையும் கலந்து ஆலோசிக்கவில்லை. நண்பர்களையும் கேட்கவில்லை. மந்திரிகளிடம் அபிப்பிராயம் கேட்கவில்லை. சாஸ்திரங்களை ஒப்பிட்டு பார்க்கவும் இல்லை. அவசரமாக, பெண்ணின் காரணமாக மோகத்தில் மூழ்கி எடுத்த முடிவு. இந்த பெரும் துன்பம் அனுபவிக்க வேண்டும் என்பது விதி என்று தான் சொல்ல வேண்டும். யதேச்சையாக இந்த குலத்தை நாசம் செய்யவே வந்து சேர்ந்தது. என் சுக்ருத பயன் ஏதாவது கொஞ்சம் இருக்குமானால், என்னை ராமனிடம் கொண்டு சேர். என் காலம் முடியும் நேரம் வந்து விட்டது. எந்த விதத்திலாவது என் கட்டளைகள் திருப்பப் படட்டும். (கைகேயியே மனம் மாறி என்றும் தோன்றுகிறது). ராமன் இன்றி முஹுர்த்தம் கூட வாழ என்னால் முடியாது. அல்லது, ராமன் வெகு தூரம் போய் இருப்பான். என்னை ரதத்தில் ஏற்றிக் கொண்டு போய் அவனிடம் காட்டு. அழகிய பல் வரிசையை உடையவன், சிறந்த வில்லாளி, லக்ஷ்மணனுக்கு முன் பிறந்தவன் எங்கே போனான்? அவனை சீதையுடன் கூட பார்க்க உயிருடன் இருப்பேனா?. சிவந்த கண்களுடையவன், மகா பாஹு, மணி குண்டலங்களால் அலங்கரிக்கப் பட்டவன், அந்த ராமனை கண்ணால் காணாது போனால், நான் நிச்சயம் யமனுடைய அடியைத் தான் அடைவேன். ஐயோ, இதை விட வேறு என்ன கஷ்டம் வேண்டும்? இக்ஷ்வாகு நந்தனனைக் காணாமல் துடிக்கிறேனே. என் ராகவனைக் காண மாட்டேனா? ஹா ராமா, ஹே ராமானுஜா, (லக்ஷ்மணன்), ஹே வைதேஹி, நீ தபஸ்வினி, நான் அனாதையாக இறந்து கொண்டிருப்பதை நீங்கள் மூவரும் அறிய மாட்டீர்கள். தன் துக்கத்தில் ஆழ்ந்து போன ராஜா, சோக சாகரத்தில் மூழ்கியவராக, கரை ஏற முடியாமல் தவித்தான். கௌசல்யே, நான் சமுத்திரத்தில் மூழ்கி கொண்டிருக்கிறேன். அது எப்படிப்பட்ட சமுத்திரம் தெரியுமா? ராம சோகம் என்பதே மகா வேகம். சீதையை பிரிந்த துக்கம் தான் எல்லைகள். என் சுவாஸம் தான் வீசும் சுழல் காற்று. என் கண்ணீர் தான் கடலில் நுரையாக பெருகி வரும். கைகளை நான் தூக்கிப் போடுவது தான் பெரும் மீன் கூட்டங்கள், என் கதறல் சமுத்திர கர்ஜனைக்கு இணையானது. என் விரிந்த தலை முடி தான் பாசி. கைகேயி தான் வடவாக்னி. என் கண்ணீர் தான் வெள்ளம். கூனி வாக்யம் தான் பெரிய முதலை, அந்த கொடியவளின் ராமனைக் கடத்தும் யோசனை தான் அலைகள், கஷ்டகாலமே, நான் இந்த சமுத்திரத்தில் மூழ்கி கிடக்கிறேன், ராகவன் இல்லாமல் கஷ்டப் பட்டு ஜீவிக்கிறேன். இந்த சோக சாகரத்தை தாண்ட முடியவில்லை. இது கொஞ்சம் கூட நன்றாக இல்லை. ராகவனை, லக்ஷ்மணனை காணாமல் இருப்பது, என்று ராஜா புலம்பி படுக்கையில் வீழ்ந்தார். உடனே மூர்ச்சையானார். ராம மாதா அவரது புலம்பலையும், உடல் நிலையையும் கண்டு பயந்தாள்.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் தசரத விலாபோ என்ற ஐம்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)
அத்தியாயம் 60(137) கௌசல்யா சமாஸ்வாசனம்.
(கௌசல்யையை சமாதானம் செய்தல்)
நடுங்கும் குரலில் கௌசல்யா, சாரதியிடம் வேண்டினாள். சாரதி, என்னையும் ராமன் இருக்கும் இடத்துக்கு அழைத்துக் கொண்டு போ. அவர்களை விட்டு இருப்பது என்னால் முடியவில்லை. ரதத்தை திருப்பு. தண்டகாவனம் போகலாம். அவர்களைப் பின் தொடர்ந்து செல்கிறேன். அல்லது யமனடி சேருகிறேன். கண்கள் நிரம்பி, தொண்டை அடைக்கப் பேசினாள். அவளை சமாதானப் படுத்த சாரதி சொன்னார். தாயே, இந்த மோகம் பரபரப்பு, சோகம் இவைகளை விடுங்கள். இவைகள் உங்கள் துக்கத்தை அதிகப் படுத்தும். இந்த தாபத்தை துறந்து ராமன் காட்டில் வசிக்கிறான். லக்ஷ்மணனும் அவன் அடியை பின்பற்றி, பணி செய்பவனாக, பரலோகத்தையும் ஜயிப்பான். ஜிதேந்திரியன். ஜனங்கள் இல்லாத காட்டிலும் சீதை, வீட்டில் இருப்பது போலவே கவலையின்றி இருக்கிறாள். பயப்படவும் இல்லை. ராமனிடம் வைத்த மனம் நிறைந்த நம்பிக்கையோடு வளைய வருகிறாள். இவளிடத்தில் தீனமாக வருந்தும் சாயல் கூட இல்லை. வன வாசம் செய்ய அவள் ஏற்றவளே என்று கூட நான் நினைத்தேன். நகரத்தில் உபவனம் சென்றால் எப்படி அனுபவித்து ரசிப்பாளோ, அதேபோல ஜன நடமாட்டம் அற்ற காட்டிலும் ரசித்து மகிழ்கிறாள். பால சந்திரன் போன்ற முகம் உடைய பாலா, சிறு குழந்தை போல ரசிக்கிறாள். வனத்தில் வேறு யாரும் இல்லாததால், ராமனையே சார்ந்து இருக்கிறாள். அவனிடம் வைத்த இதயம் இவளுடையது. அவனைச் சார்ந்தது தான் வாழ்க்கை. ராமன் இல்லாத அயோத்யா கூட அவளுக்கு வனமாகத் தெரியும். வழியில் கிராமங்களையும், நகரங்களையும் பார்த்து விசாரித்தாள். நதிகளின் கதியை பார்த்து வியந்தாள். பலவிதமான மரங்களைப் பார்த்து ராமனையோ, லக்ஷ்மணனையோ கேட்டு அது என்ன என்று தெரிந்து கொள்வாள். அயோத்தியிலிருந்து இரண்டு மைல் தூரத்தில், வனத்தில் ஏதோ விளையாட வந்தது போல இருந்தாள். அவளைப் பற்றி இவைகளைத்தான் எனக்கு நினைவு வருகிறது. பட்டென்று ஒரு வார்த்தை சொன்னாள். தெளிவாக சொல்ல வரவில்லை. எதோ பரபரப்பாக சொன்னதை நினைவு படுத்திக் கொள்ள முடியாமல் சாரதி, தேவியிடம் மதுரமாக சொன்னான். சந்திர கிரணம் போன்ற அவள் முகம், வழி நடையாலோ, காற்றினாலோ, சம்ப்ரமம் பரபரப்பாகவோ, வெயிலில் அலைந்ததாலோ சற்றும் மாறவே இல்லை. பூர்ண சந்திரனுக்கு சமமான தயாளுவான வைதேஹியின் முகம் வாடியோ, சுருங்கி அழகு குன்றியோ தென்படவே இல்லை. கால்களில் அலக்த எனும் சென்னிற திரவத்தால் அலங்கரித்துக் கொள்பவள், அது இல்லாத நிலையிலும், அவள் பாதங்கள் தாமரை மலருக்கு சமமான பிரபையுடன் விளங்கியது. நூபுரங்களை கழட்டியதால் சுலபமானது போல, விளையாட்டாக தானே விளையாடுகிறாள். ராமனிடத்தில் வைத்த அன்பினால், ஆபரணங்களை கழட்டி வைத்தது தான். யானையையோ, சிங்கத்தையோ, புலியையோ பார்த்து ராமனது
தோளில் சாய்ந்தபடி பயமின்றி எதிர் நோக்கி நிற்கிறாள். அவளைப் பற்றி நீங்களோ மகாராஜாவோ கவலைப் பட வேண்டியதில்லை. இது சாஸ்வதமாக வரும் சரித்திரம், உலக வழக்கு. அவர்கள், மகரிஷிகள் வழியில் நன்கு ஊன்றியவர்களாக, சோகத்தை விட்டு மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தினராய், காட்டில் கிடைக்கும் பழம் முதலியவற்றை ஆகாரமாக கொண்டு, வனத்தில் பிடிப்புடன், தந்தையின் சுபமான பிரதிக்ஞையை நிறை வேற்றிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வளவு சொல்லிக் கேட்டும் கௌசல்யை, ராகவா என்றும், மகனே என்றும், பிரியமானவனே என்றும் அரற்றுவதை நிறுத்த முடியவில்லை.
(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், அயோத்யா காண்டத்தில் கௌசல்யா சமாஸ்வாஸனம் என்ற அறுபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)