பொருளடக்கத்திற்கு தாவுக

ஸ்ரீமத் ராமாயணம் பால காண்டம் 56 to 77

பிப்ரவரி 25, 2014

அத்தியாயம் 56ப்ரும்ம தேஜோ பலம்(ப்ரும்ம தேஜஸின் பலம்)

 

வசிஷ்டர் இவ்வாறு சொல்லவும்,மகா பலசாலியான விஸ்வாமித்திரர் ஆக்னேய அஸ்திரத்தைப் போட்டு, நில், நில் என்று கூவினார். மற்றொரு கால தண்டம் போன்ற தன் ப்ரும்ம தண்டத்தை உயர்த்தி, பகவான் வசிஷ்டர் கோபத்துடன் சொன்னார் -க்ஷத்திர பந்தோ,(இது ஒரு நிந்திக்கும் சொல்) இதோ நிற்கிறேன், உன்னிடம் உள்ள சக்தியைக் காட்டு. உன் கர்வத்தையும், சஸ்திரத்தையும் ஒன்றாக அடக்குகிறேன், கா3தி4 பிள்ளையே, உன் க்ஷத்திரிய பலம் எங்கே,என் ப்ரும்ம பலம் எங்கே, க்ஷத்திரிய குலத்துக்கே களங்கமாக வந்தவனே, இதோ என் ப்ரும்ம பலத்தின் சக்தியைப் பார் என்று சொல்லி,விஸ்வாமித்திரர் போட்ட ஆக்னேயாஸ்திரத்துக்கு மாற்றாக நீரில் அக்னி அனைவது போல, வேறொரு அஸ்திரத்தால் அடக்கினார். வாருணம், ரௌத்ரம், ஐந்திரம், பாசுபதம், ஐஷீகம் போன்ற அஸ்திரங்களை சர மாரியாக விட்டார். விஸ்வாமித்திரர் மானவம், மோஹனம், காந்தர்வம், ஸ்வாபனம் என்றும் ஜ்ரும்பனம், மாதனம் என்றும் சதாபன விலாபனம் போன்றவை, சோஷணம், தாரணம், வஜ்ரமஸ்திரம், எதிர்க்க முடியாத ப்ரும்ம பாசம், கால பாசம், வாருண பாசம் போன்றவை, பைனாகாஸ்திரம், சுஷ்கார்த்ரே, அசனீ என்ற இரட்டைகள், தாண்டாஸ்திரம், பைசாசம், க்ரௌஞ்சமாஸ்திரம், தவிர, தர்ம சக்கரம், கால சக்கரம், விஷ்ணு சக்கரம் போன்றவை, வாயவ்யம், மதனம், ஹயசிரஸ் என்ற அஸ்திரம், சக்தி த்வயம் என்ற அஸ்திரம், கங்காலம், முஸலம் போன்றவை, வைத்யாதரம், மகாஸ்த்ரம், காலாஸ்த்ரம், மேலும் தாருணம், த்ரிசூலமஸ்திரம், கோரம், காபாலம் மேலும் கங்கணம், இது போன்ற அஸ்திரங்களை, வரிசையாக எல்லா அஸ்திரங்களையுமே பிரயோகித்தார்.ரகு நந்தனா, எதோ அதிசயம் போல, தன் தண்டத்தில் இத்தனையையும் வசிஷ்டர் க்ரஹித்துக் கொண்டு விட்டார். இவை எல்லாம் சாந்தமான பின், கா3தி4 நந்தனான விஸ்வாமித்திரர் ப்ரும்மாஸ்திரத்தை பிரயோகம் செய்தார்.

அந்த அஸ்திரத்தை விட்டதையறிந்து தேவர்கள், அக்னி முதலானோர், தேவ ரிஷிகள் எல்லோருமே பர பரப்படைந்து என்ன நடக்குமோ என்று பயந்தார்கள். மூன்று உலகுமே ஸ்தம்பித்து நின்றது. ப்ரும்மாஸ்திரம் மகா கோரமானது என்றாலும், அதையும் தன் தண்டத்தில் தாங்கி நின்றார் வசிஷ்டர். ப்ரும்மாவின் அந்த அஸ்திரத்தை தன் ப்ரும்ம தேஜசால் வெற்றி கொண்டார். ப்ரும்மாஸ்திரத்தைக் கிரஹித்துக் கொண்டவுடன், வசிஷ்டருடைய ரூபம், மூவுலகையும் மயக்கும் ரௌத்ரமான, மிக பயங்கரமான ரூபமாக ஆயிற்று. வசிஷ்டருடைய மகானான சரீரத்தில், ரோம ரோமங்களிலிருந்து , மரீசி-ஒளிக் கற்றைகள், நெருப்புத் துணுக்குகள் விழுவது போல விழுந்தன. வசிஷ்டர் கையிலிருந்த ப்ரும்ம தண்டம் ஒளி வீசியது. காலாக்னி புகையின்றி வந்தது போலவும், மற்றொரு யம தண்டம் போலவும் அது விளங்கியது. முனி ஜனங்கள், வசிஷ்டரைத் தோத்திரம் செய்தனர். உன்னுடைய இந்த பலம் எதிர்க்க முடியாதது. உன் தேஜஸால் இதைத் தாங்குவாயாக. ப்ரும்மன், உன்னால் விஸ்வாமித்திரர் அடக்கப் பட்டார். மகா பலசாலியான அவரே ஒடுங்கியபின், தயை செய்து சாந்தமாகுங்கள். ஜபம் செய்பவர்களுள் உத்தமமானவரே, உலகின் கஷ்டம் நீங்கட்டும். தயை செய்யுங்கள் என்று முனி கணங்கள் பிரார்த்திக்க, சாந்தம் அடைந்தார். விஸ்வாமித்திரரும், தன் கர்வம் அடங்கி, பெரு மூச்சு விட்டவாறு, தி4க் பலம், க்ஷத்திரிய பலம் அர்த்தமற்றது. ப்ரும்ம தேஜோ பலமே பலம், ப்ரும்ம தேஜஸுடன் கூடிய சக்தியே சக்தி. ஒரே ஒரு ப்ரும்ம தண்டம்  மூலம் என்னுடைய ஆயிரக்கணக்கான அஸ்திரங்களை தடுத்து நிறுத்தி விட்டார். இதையறிந்து நான் மனம், வாக்கு, காயம் இவற்றால், ப்ரஸன்னமாக தவம் செய்யப் போகிறேன். மகா தவம் செய்வேன். எவ்வளவு தவம் செய்தால் ப்ரும்மத்வம் கிடைக்குமோ, அதுவரை தவம் செய்வேன்- என்றார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், ப்ரும்ம தேஜோ பலம் என்ற ஐம்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 57 திரிசங்கு யாஜன பிரார்த்தனை (திரிசங்குவின் வேண்டுகோள்)

 

தான் தோல்வியடைந்ததை நினைத்துநினைத்து மனம் கொந்தளிக்க, திரும்பத் திரும்ப பெருமூச்சு விட்டபடி, தோல்வியைத் தாங்க முடியாமல், அதனாலேயே வைரத்தை, பகையை வளர்த்துக் கொண்டு, விஸ்வாமித்திரர் தென் திசை சென்று மனைவியுடன் பயங்கரமாகத் தவம் செய்தார்.ராகவா, தீவிரமான தவத்தில் ஈ.டு பட்டார்.பழம், கிழங்கு வகைகளை மட்டுமே ஆகாரமாகக் கொண்டு, சாந்தமாக தவமே குறியாக நடமாடிக் கொண்டிருந்தார்.அவருக்கு சத்ய தர்ம பராயணர்களாக புத்திரர்கள் பிறந்தனர்.ஹவிஷ்யந்தன், மதுஷ்யந்தன், த்ருட நேத்ரன், மகாரத: என்று பெயரிட்டார்.ஆயிர வருஷ முடிவில் ப்ரும்மா அவர் எதிரில் தோன்றி இனிமையாக, தபோதனரான விஸ்வாமித்திரரிடம் சொன்னர். – ராஜரிஷியே, குசிகாத்மஜா, உலகங்கள் உன்னால், தவத்தின் பயனாக ஜயிக்கப் பட்டன.இந்த தவப் பயனாக உன்னை ராஜரிஷியாக அங்கீகரிக்கிறோம். இவ்வாறு சொல்லி, மற்ற தேவதைகளோடு மறைந்தார்.உலகுக்கெல்லாம் ஈஸ்வரனான, ப்ரும்மா,ப்ரும்ம லோகம் என்றும் த்ரிவிஷ்டபம் என்றும் அழைக்கப் படும் தன் இருப்பிடத்தைச் சென்றடைந்தார்.அவர் மறைந்ததும், வெட்கத்தில் தலை குனிந்தவராக, துக்க மிகுதியால், கோபத்துடன், விஸ்வாமித்திரர் தனக்குள் சொல்லிக் கொண்டார்.இவ்வளவு தவம் செய்த பின்னும், என்னை ராஜரிஷி என்று அழைக்கிறார்களாம்.தேவர்களும், ரிஷி கணங்கள், எல்லோருமாக வந்து இதை சொல்லி விட்டு போகிறார்கள்.இது என் தவத்திற்கு உரிய பயனே இல்லை என்றே எண்ணுகிறேன்.தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டு, திரும்பவும் தவம் செய்ய முனைந்தார்.மிகவும் தன்மானம் கொண்டவரான அவர், தவம் செய்தார்.இதே சமயத்தில், சத்யவாதியும், மனக் கட்டுப் பாடு உடையவனுமான, இக்ஷ்வாகு குல அரசனான த்ரிசங்கு என்பவன், தான் ஒரு யாகம் செய்வேன் என்று ஆரம்பித்தான்.இந்த யாக முடிவில், நான் சரீரத்துடன் தேவலோகம் செல்வேன் என்று தீர்மானித்து, வசிஷ்டரைக் கூப்பிட்டு, தன் எண்ணத்தைச் சொன்னான்.அது முடியாது என்று வசிஷ்டர் , மறுத்து விடவும், ஊர் திரும்பும்சமயம் தெற்கு நோக்கி வந்தான்.வசிஷ்டருடைய பிள்ளைகள் வெகு காலமாகத் தவம் செய்யும் இடத்திற்கு வந்து சேர்ந்தான்.மனதில் இதே எண்ணத்தோடு அவர்களை அணுகி விசாரித்தான்.வசிஷ்ட புத்திரர்கள் நூறு பேர்.அனைவரும் கடுமையானத் தவம், விரத, நியமங்கள் செய்து மகா தேஜஸ்வியாக இருந்தனர். தானே அந்த குரு புத்திரர்கள் இருக்கும் இடம் வந்து, வெட்கத்தினால் தலை வணங்கியவனாக, கை கூப்பியபடி, எல்லோரும் ஒன்றாக இருந்த சமயம் தன் ஆசையை  வெளி யிட்டான். நான் உங்களை சரண் அடைகிறேன்.நீங்கள் எனக்கு அபயம் அளிக்க வேண்டும்.வசிஷ்டர் என் ஆசையை பூர்த்தி செய்ய முடியாது என்று திருப்பி அனுப்பி விட்டார்.உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்.ஒரு பெரிய யாகம் செய்ய விரும்புகிறேன்.அதற்கு அனுமதி கொடுங்கள். குரு புத்திரர்களான உங்கள் அனைவரையும் காலில் விழுந்து வணங்கி வேண்டிக் கொள்கிறேன்.நீங்கள் தவத்தில் ஈ.டுபட்டுள்ள ப்ராம்மணர்கள். அதனால் இதில் தவறில்லை. என் இஷ்டம் பூர்த்தியாகும் விதத்தில் நீங்கள் யாகத்தை நடத்துங்கள்.இந்த சரீரத்தோடு நான் தேவலோகம் செல்ல வேண்டும்.வசிஷ்டர் மறுத்து திருப்பி அனுப்பிய பிறகு எனக்கு வேறு யார் கதி, அதனால் தான் குருபுத்திரர்களான உங்களை வந்து வேண்டுகிறேன்.வேறு யாரிடம் போவேன். இக்ஷ்வாகு குலத்திற்கு, குருவான புரோஹிதர்கள் தான் எல்லாம்.அவர்கள் தான் அரசர்களை கஷ்டங்களிலிருந்து கரையேற்றுகிறார்கள்.வழி வழியாக நடந்து வருவது இது. நான் உங்களிடம் சொல்லி விட்டேன், இதன் பின் உங்கள் இஷ்டம் என்று சொல்லி நிறுத்தினான் த்ரிசங்கு.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில்,திரிசங்கு யாஜன ப்ரார்த்தனா என்ற ஐம்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 58 த்ரிசங்கு சாபம் (திரிசங்கு பெற்ற சாபம்)

 

வசிஷ்டர் மறுத்ததினால் ஏற்பட்ட கோபம்  வெளிப்படையாகத் தெரிய, அரசனான திரிசங்கு சொன்னதைக் கேட்டு குரு புத்திரர்கள் நூறு பேரும், அரசனிடம் -உங்கள் குரு சத்யவாதி.அவரே திருப்பி அனுப்பிய பிறகு வேறு மார்கத்தை நாடி நீங்கள் வருவது என்ன நியாயம்? இக்ஷ்வாகு அரசர்களுக்கு புரோஹிதர்களான குருவே எல்லாம் என்று சொன்னீர்கள்.அவருடைய வார்த்தையை மீறுவது தகாது. அவர் சொல்லை மீறி நாங்கள் தான் என்ன செய்ய முடியும். ஒரே வார்த்தையில் அசக்யம், முடியாது என்று வசிஷ்டர் சொல்லிவிட்டார்.அதனால் இந்த யாகத்தை முடித்துக் கொடு என்று நீங்கள் எங்களிடம் கேட்பது குழந்தைத் தனமானது. நரஸ்ரேஷ்ட, திரும்ப ஊர்போய் சேருங்கள்.என்று சொல்லி விட்டனர்.யாகம் செய்வதில், மூன்று உலகுக்கும் குருவாகஇருந்து செய்ய அவர் ஒருவரே சக்தராவார் (சக்தி உடையவராவார்). அதனால் அரசனே, அவரை மீறி அவமதிப்பது போல ஒரு காரியம் செய்யலாமா? அதை நாங்கள் எப்படி செய்ய முடியும்? கோபத்தை  வெளிக் காட்டாமல் ஆனால், கோபத்துடன் கண்கள் சிவக்க அவர்கள் சொன்ன வார்த்தைகள், அரசன் செவியில் ஏறவில்லை.ராஜா திரும்பவும் சொன்னார்.என் குருதான் என்னை திருப்பி அனுப்பி விட்டார் என்றால், குரு புத்திரர்களும் என் வேண்டுகோளை மறுக்கிறார்கள்.தபோதனர்களே, சுகமாக இருங்கள்.  நான் வேறு யாரிடமாவது செல்கிறேன் என்று கிளம்பினார்.  இந்த வார்த்தைகள், ரிஷி குமாரர்களை வெகுண்டெழச் செய்தது. சண்டாளனாக ஆவாய் என்று சபித்துவிட்டு தங்கள் ஆஸ்ரமத்திற்குள் சென்று விட்டனர்.இரவு பொழுது கழிந்ததும் அரசன் சண்டாளனாக, நீல வஸ்த்ர தாரியாக, தானும் நீலமாக, பார்க்கவே பயப்படும்படி, தலயில் கேசம் அவிழ்ந்து தொங்க, இரும்பு ஆபரணங்களை தரித்தவனாக, அதற்கு உகந்த மாலை, அனுலேபம் (வாசனை திரவியங்கள் கொண்டு பூசிக் கொள்வது), உடையவனாக ஆனான். அவனைக் கண்ட மந்திரிகள், சண்டாளன் என்று அவனை விட்டு விலகினர்.ஊர் ஜனங்கள், இதுவரைத் தொடர்ந்து வந்தவர்கள், பயந்து ஓடினர்.மிகுந்த தன்மானம் கொண்டவனான அரசன், தனியாகவே சென்றான்.இரவும், பகலும், மனம் வேதனையில் வெந்து கொண்டிருக்க, தபோதனரான விஸ்வாமித்திரரை வந்து அடைந்தான்.சண்டாள உருவத்தில், உபயோகமற்றவனாக ஆகிவிட்ட, அரசனைப் பார்த்து, விச்வாமித்திரர் கருணையுடன் விசாரித்தார்.ராமா, உனக்கு மங்களம் உண்டாகட்டும்.சண்டாளனாக, கண்ணால் காணச் சகிக்காமல் பயங்கரமாக இருந்த திரிசங்கு ராஜாவிடம் பின் வருமாறு சொன்னார் -ராஜ புத்திரனே, நீயே பலசாலி.இருந்தும் இங்கு வந்த காரணம் என்னவோ? அயோத்யாதி பதியான வீரனே, எப்படி சண்டாளத் தன்மையை அடைந்தாய்? இதைக் கேட்டு அரசன், முதலில் தன் குருவினாலும், பின்னர் குருபுத்திரர்களாலும் அவமதிக்கப் பட்டதையும், திருப்பி அனுப்பப் பட்டதையும் சொன்னான்.நான் விரும்பியதை அடையவும் இல்லை. அதற்கு முன் இப்படி விபரீதம் நிகழ்ந்து விட்டது.சரீரத்துடன் தேவலோகம் செல்ல வேண்டும் என்ற ஆசையுடன் யாகம் செய்ய ஆரம்பித்தேன்.நூறு யாகம் செய்தேன்.அதன் பலனும் எனக்கு கிடைக்கவில்லை.நான் பொய் சொன்னதில்லை.சொல்லவும் மாட்டேன்.மிக கஷ்டமான நாட்களிலும் இந்த விரதத்தை நான் கடை பிடித்து வந்திருக்கிறேன்.இது சத்யம் முனி புங்கவரே, என் க்ஷத்திரிய தர்மத்தின் பேரில் ஆணையிட்டுச் சொல்கிறேன்.பல விதமாக யாகங்கள் செய்தேன்.ப்ரஜைகளை தர்மத்தின் வழியில் பாலித்து வந்தேன்.குரு ஜனங்களை நன்னடத்தையால் மகிழ்வித்தேன்.தர்ம வழியில் சென்று வந்த என் யாகத்தைக் கெடுக்க முயலும் குரு ஜனங்கள், என் வேண்டுகோளை புறக்கணித்து விட்டனர்.இப்போது தைவம் (விதி) தான் பெரியது என்று நினைக்கிறேன்.பௌருஷம- மனித முயற்சியும், ஈ.டுபாடும் உபயோகமற்றவை.விதி தான் எல்லாவற்றையும் நடத்திச் செல்கிறது.நான் மிகவும் நொந்து போய் இருக்கிறேன்.யாராவது உதவி செய்ய மாட்டார்களா என்று ஏங்கி போய் இருக்கிறேன்.எனக்கு ஏதாவது செய்ய முடியுமானால் செய்யுங்கள்.உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்.வேறு வழியும் இல்லை.வேறு யாரையும் அண்டவும் மாட்டேன்.எனக்கு சரணம் அளிப்பவர்கள் வேறு யார்.-

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில்,த்ரிசங்கு சாபம் என்ற ஐம்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 59 வாசிஷ்ட சாபம் (வசிஷ்டரின் பிள்ளைகளை சபித்தல்)

 

இவ்வாறு வருத்தத்தோடு புலம்பும் அரசனைப் பார்த்து குசிகாத்மஜரான, விஸ்வாமித்திரர் மதுரமாக பேசலானார். சண்டாள உருவம் அடைந்திருந்த அரசனிடம் -இக்ஷ்வாகு வம்சத்து அரசனே, தர்மத்தில் ஈடுபாடு கொண்ட உன்னை நான் அறிவேன். உனக்கு ஸ்வாகதம்.உன் வரவு நல் வரவாகுக.உனக்கு அபயம் அளிக்கிறேன்.பயப் படாதே. நான் மகரிஷிகளை வரவழைக்கிறேன்.புண்ய கர்மாவான யாகத்தில் உதவி செய்யும் மற்றவர்களையும் அழைக்கிறேன்.யாகத்தைச் செய்வோம்.குரு சாபத்தினால் நீ அடைந்த இந்த உருவத்துடனேயே தேவலோகம் செல்வாய்.நீ கௌசிகனை வந்து சரணடைந்து விட்டாய்.உனக்கு ஸ்வர்கம் கிடைத்து விட்டதாகவே எண்ணுகிறேன்.இவ்வாறு சொல்லி தன் புத்திரர்களை அழைத்து, மகா புத்தி சாலிகளான அவர்களை யாக ஏற்பாடுகளைச் செய்யச் சொன்னார்.எல்லா சிஷ்யர்களையும் அழைத்தும், குழந்தைகளே, எல்லா ரிஷி முனிவர்களையும் நான் அழைத்ததாகச் சொல்லி அழைத்து வாருங்கள் என்று சொல்லியனுப்பினார்.சிஷ்யர்கள், நன்பர்கள்,ரித்விக்குகள், படித்த ஜனங்கள், இவர்களை அழைத்து வாருங்கள். யாராவது என் வார்த்தைக்கு எதிராக சொன்னாலோ, என்னிடம் வந்து சொல்லுங்கள்.அவர்களும் அவருடைய கட்டளையை ஏற்று பல திக்குகளிலும் சென்றனர்.பல இடங்களிலிருந்தும் ப்ராம்மணர்கள் வந்து சேர்ந்தார்கள்.அந்த சிஷ்யர்களும் திரும்பி வந்து யார் என்ன சொன்னார்கள் என்பதை முனிவரிடம் சொன்னார்கள்.வசிஷ்டரின் பிள்ளை மகோதயன், மற்றும் நூறு பிள்ளகள் தவிர, மற்ற இடங்களிலிருந்து ப்ராம்மணர்கள் வந்தனர்.இந்த வசிஷ்டரின் பிள்ளைகள் சொன்னதைக் கேளுங்கள் என்று ஒருவன் சொன்னான்.-ஒரு க்ஷத்திரியன் யாகம் செய்கிறான், சண்டாளனுக்காக.சுரர்களூம், ரிஷிகளும் எப்படி சபைக்கு வந்து ஹவிஸ் (யாகத்தில் தேவர்களுக்கு என்று தரப்படும் பாகம்) ஏற்றுக் கொள்வார்கள்.இந்த ப்ராம்மணர்களும் தான், மகாத்மாக்கள், சண்டாளன் யஜமானாக இருந்து அளிக்கும் போஜனத்தை எப்படிச் சாப்பிடுவார்கள்.எப்படி ஸ்வர்கம் போவார்கள்? கண் சிவக்க இவ்வாறுநிஷ்டூரமாக பேசினார்கள்.முனி சார்தூலா, வசிஷ்ட புத்திரர்கள், எல்லோரும் சேர்ந்து கேலியாக பேசினார்கள் என்று சொல்லவும், விஸ்வாமித்திரர் கடும் கோபம் கொண்டார். ரோஷத்துடன், குற்றமற்றஎன்னை தூஷிக்க இவர்கள் யார்? நான் உக்ரமான தவம் செய்வது இவர்களுக்குத் தெரியாதா? துஷ்டர்கள் பஸ்மமாகப் போவார்கள்.சந்தேகமேயில்லை. இன்று அவர்களை கால பாசம் இழுக்கிறது.எல்லோருமாக, அவர்கள் இதுவரை செய்த தவம் அழிந்தவர்களாக, எழுனூறு ஜன்மங்கள் இருக்கட்டும்.தயையே இல்லாத நாய் மாமிசம் சாப்பிடுவர்களாக, அழகில்லாத வடிவம் உடையவர்களாக, நடமாடட்டும்.துர்புத்தி மகோதயன், (வசிஷ்டர் பிள்ளை), தேவையின்றி என்னை தூஷித்தான்.இவன் உலகில் எல்லோராலும் மட்டமாக நினக்கப்படும் நிஷாதன் வேடனாக பிறக்கட்டும்.உயிர்களை பறிப்பதிலேயே குறியாக, சிறிதளவும் மனதில் தயை என்பது இல்லாதவனாக, வெகு காலம் என் கோபத்தின் பலனாக கஷ்டம் அனுபவிப்பான்.மகா முனியான விஸ்வாமித்திரர், ரிஷிகளின் மத்தியில், இவ்வாறு கூறி நிறுத்தினார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், வாசிஷ்ட சாபம் என்ற ஐம்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 60 த்ரிசங்கு ஸ்வர்கம் (திரிசங்கு சுவர்கம்)

 

மகோதயன் உள்ளிட்ட வசிஷ்ட புத்திரர்களை, தவப் பயனை இழக்கச் செய்து விட்டு, விஸ்வாமித்திரர் ரிஷிகள் மத்தியில் இவ்வாறு சொன்னார் இதோ இருக்கும் இக்ஷ்வாகு தாயாதி, திரிசங்கு என்று பெயர் பெற்றவன், என்னை சரணம் என்று வந்தடைந்துள்ளவன், தன் சரீரத்துடன் ஸ்வர்கம் போக விரும்புகிறான்.இவன் விருப்பம் நிறைவேறும் விதமாக யாகம் செய்வோம்.சரீரத்துடன் இவன் ஸ்வர்கம் போக, எப்படி யாகம் செய்ய வேண்டுமோ, அந்த ரீதியில் என்னுடன் கூட யாகம் செய்யுங்கள்.மகரிஷிகள், தங்களுக்குள் கூடிப் பேசினார்கள். இந்த முனிவர் மிகவும் கோபம் கொண்டவர்.இவர் சொன்னபடியே செய்வோம்.அக்னி போன்ற இந்த முனிவர் கோபம் வந்தால் நம்மையும் சபித்து விடுவார்.சுந்தேகமேயில்லை அதனால் நாம் யாக காரியத்தில் ஒத்துழைப்போம்.விஸ்வாமித்திரருடைய தேஜஸ் பலத்தால், இந்த இக்ஷ்வாகு தாயாதி, சரீரத்துடன் ஸ்வர்கம் போக முடியுமானால் போகட்டும்.எல்லோரும் தயாராகுங்கள்.அவரவர் வேலையை ஒழுங்காக செய்யுங்கள்.யாஜகனாக, தலமை தாங்குபவராக, யக்ஞத்தில் விஸ்வாமித்திரர் அமர்ந்தார்.வரிசைக் கிரமப்படி, ரித்விக்குகள், மந்திரங்களை அறிந்து தேர்ந்தவர்கள், மற்ற காரியங்கள் அனைத்தும் செய்தனர்.எப்படி செய்ய வேண்டுமோ, எப்படி விதிக்கப் பட்டுள்ளதோ, முறைப்படி செய்தனர்.நாட்கள் கடந்தன.மகா தபஸ்வியான விஸ்வாமித்திரர், தேவதைகள் எல்லோரையும் ஆவாஹனம் செய்து, தங்கள் பங்கைப் பெற அழைத்தார்.ஆவாஹனம் செய்து அழைத்தபொழுது, தேவதைகள் யாருமே வரவில்லை. (யாகத்தில் ஹவிஸ் என்ற பாகத்தை தேவதைகள் பெற்றுச் செல்வார்கள்) இதனால் கோபமடைந்த விஸ்வாமித்திரர் ஸ்ருவம் என்ற யாக கரண்டியை கையில் எடுத்துக் கொண்டு, கோபத்துடன் திரிசங்குவிடம் சொன்னார். நரஸ்ரேஷ்டனே, இப்போது பார். தவம் செய்து நான் சேர்த்து வைத்த தவப் பலனைக்கொண்டு உன்னை சரீரத்துடன் ஸ்வர்கம் அனுப்புகிறேன்.சரீரத்துடன் ஸ்வர்கம் போவது கடினம். ஆனாலும் உன்னை நான் அனுப்புகிறேன்.நானே, தவம் செய்து சேர்த்துக் கொண்டது ஏதேனும் ஒரு துளியும் இருந்தால், ராஜன், அந்த பலத்தில் நீ ஸ்வர்கம் போவாயாக விஸ்வாமித்திரர் இப்படி சொல்லி முடிக்கும் முன், அரசன் மற்ற முனிவர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, தன் சரீரத்தோடு தேவலோகம் செல்லலானான்.தேவலோகம் சென்றடைந்தவனைப் பார்த்து பாக சாஸனான இந்திரன், மற்ற தேவர்கள் கூட்டம் புடை சூழ வந்துஏ த்ரிசங்கோ,  திரும்பிப் போ.இது நீ இருக்கத் தகுந்த இடமல்ல.குரு சாபம் அடைந்தவனே, திரும்ப பூமியில் விழு, தலை கீழாக என்று சொல்ல த்ரிசங்கு தலைகீழாக பூமியை நோக்கி விழுந்தான். விஸ்வாமித்திரரைப் பார்த்து தபோத4னா, காப்பாற்றுங்கள், என்று பலமாக கத்திக் கொண்டே விழும் அவனைப் பார்த்து, அக்னியின் ஜ்வாலை போன்ற கோபத்துடன், கௌசிக முனிவர், திஷ்ட, திஷ்ட, நில், நில் என்று உத்தரவிட்டார்.ரிஷிகள் கூட்டத்தில், மற்றொரு பிரஜாபதி (ப்ரும்மா) போன்று நின்று கொண்டு, தெற்கு திசையில் இருக்கும் சப்த ரிஷிகள், மற்றவர்கள், நக்ஷத்திரக் கூட்டம் இவைகளை வேறு தனியாகவே ஸ்ருஷ்டி செய்யவே ஆரம்பித்து விட்டார்.தென் திசையில் நின்று கொண்டு முனிகள் நடுவில், தன் தவப் பலம் தெரிய, நக்ஷத்திர வம்சங்களை சிருஷ்டித்து,- அன்யம் இந்தி3ரம் கரிஷ்யாமி, அத2வா லோகோ வா சந்து அனிந்த்3ரகம்- மற்றொரு இந்திரனை ஸ்ருஷ்டிக்கிறேன், அல்லது, உலகமே இந்திரன் இல்லாமல் இருக்கட்டும், -தேவர்களையும் கோபத்தில் சிருஷ்டி செய்ய ஆரம்பித்து விட்டார்.இதன் பிறகு மிகவும் பர பரப்படைந்த தேவர்களும், அசுரர்களும், ரிஷி கணங்களும் விஸ்வாமித்திர முனிவரை சமாதானப் படுத்தும் வகையில், பேச முற்பட்டார்கள். மகானுபாவா, இந்த அரசன் குரு சாபத்தால் பீடிக்கப் பட்டவன்.சரீரத்துடன் தேவ லோகம் செல்ல அருகதையற்றவன்.தேவர்களின் இந்த பதிலைக் கேட்டு, முனி புங்கவர் (சிறந்த முனிவர்), எல்லா தேவதைகளையும் பார்த்து உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும். சரீரத்துடன் அனுப்புவதாக இவனுக்கு வாக்கு கொடுத்தவன் நான்.இப்பொழுது அதை மீற மாட்டேன்.நான் ஸ்ருஷ்டி செய்த நக்ஷத்திரங்கள், மற்றவை சேர்ந்த இது புதிய ஸ்வர்கமாகவே, திரிசங்குவிற்கு இருக்கும். உலகம் உள்ளிவும், இவையும் நிலைத்து நிற்கும்.நான் ஸ்ருஷ்டி செய்த சப்தரிஷி மண்டலம் முதலியவற்றை நீங்களும் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ளுங்கள்.அவர்களும் பதில் சொன்னார்கள் எஅப்படியே இருக்கட்டும். முனிஸ்ரேஷ்டரே, உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும்.நீங்கள் ஸ்ருஷ்டி செய்த இவை ஆகாயத்தில் சூரியனுடைய பாதைக்கு  வெளிப் புறமாக அதே போல ஜ்வலித்துக் கொண்டு, தலை கீழாக இப்பொழுது உள்ளது போலவே, அந்த உலகில் தேவர்களுக்கு சமமாக இருக்கட்டும்.இந்த அரசனையும் இந்த ஜோதி மண்டலம் தொடர்ந்து செல்லும்.இந்த அரசன் நீடூழி வாழ்வான்.இவன் விருப்பம் நிறைவேறியது.ஸ்வர்கம் அடைந்து, இணையில்லாத புகழும் அடைவான்.தேவர்கள் விஸ்வாமித்திரரைத் தோத்திரம் செய்து, ரிஷிகள் மத்தியில் சரி என்று சொல்லவும், யாகத்தை முடித்து ரிஷி கணங்களும் அவரவர் இருப்பிடம் சென்றனர்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நான்கு ஆயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில் த்ரிசங்கு ஸ்வர்கம் என்ற அறுபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)

 

 

 

அத்தியாயம் 61 சுன:சேபவிக்ரய: (சுன:சேபன் என்பவனை விற்றல்)

 

இவ்வாறு கிளம்பிய ரிஷிகளைப் பார்த்து விஸ்வாமித்திரர், இந்த தென் திசை வந்து நமக்கு தவத்தில் மிகப் பெரிய விக்னம் ஏற்பட்டு விட்டது.வேறு இடம் சென்று நம் தவத்தை தொடருவோம் என்று சொன்னார். விசாலமான மேற்கு திசையில் புஷ்கர க்ஷேத்திரம் செல்வோம். மகாத்மாக்களே, அது ஒரு தபோவனம் ஆனதால் இடையூறு இன்றி தவம் செய்வோம். இவ்வாறு சொல்லி மகா முனி, மற்றவர்களோடு புஷ்கரக்ஷேத்திரம், சென்று, பழம், கிழங்கு வகைகளை மட்டும் உண்பவராக, மிகக் கடுமையாகத் தவம் செய்யலானார். இந்த சமயத்தில் தான், அயோத்தியை ஆண்ட அரசன் அம்பரீஷன் என்பவன் யாகம் செய்ய ஆரம்பித்தான். இவன் யாகம் செய்யும் போது, இந்திரன் யாக பசுவை அபகரித்துச் சென்றான். யாக பசு தொலைந்தவுடன் ப்ராம்மணர்கள் அம்பரீஷனிடம் வந்து, உன் தவறான நியமத்தால் தான் யாக பசு தொலைந்தது.சரியாக ராஜ்ய பாலனம் செய்து காப்பாற்றத் தெரியாத அரசனை, அவன் தோஷங்களே அழிக்கும். பிராயச்சித்தமாக ஒரு மனிதனையோ, பசுவையோ கொண்டு வா. அரசனே, சீக்கிரமாக ஒரு பசுவைக் கொண்டு வா, நாம் யாகத்தைத் தொடருவோம், உபாத்யாயர்கள் சொன்னதைக் கேட்டு அரசன், அனேக பசுக்களிடையில் தன் யாகப் பசுவைத் தேடலானான். பல தேசங்களையும், ஜனபதங்களையும், நகரங்கள், வனங்கள், ஆசிரமங்கள், புண்யமான இடங்கள் என்று தேடிக்கொண்டே போனவன், புத்திரனுடனும், மனைவியுடனும் மலைக் குகையில் வசித்து வந்த ருசீகன் என்ற முனிவரைக் கண்டான். தவத்தின் வலிமையால், பிரகாசமாக இருந்த அவரை வணங்கி, ராஜரிஷியான அம்பரீஷன் விசாரித்தான். குசலம் விசாரித்த பின், அவரிடம், என் யாக பசுவைக்காணவில்லை. பல இடங்களிலும் தேடி பார்த்து விட்டேன். நூறாயிரம் பசுக்களை ஏற்றுக் கொண்டு, உங்கள் பிள்ளையை எனக்கு விற்பதானால், ரிஷியே, என் யாக பசுவிற்கு பதிலாக உபயோகித்துக் கொள்வேன். பார்கவரே, உங்கள் பிள்ளைகளில் ஒருவரை விலைக்கு கொடுப்பதானால் கொடுங்கள்.இதைக் கேட்டு ருசீகரும் யோசித்து, என் மூத்த மகனை நான் தர மாட்டேன் எனவும் தாயார், கடைசி மகனை நான் தர மாட்டேன் என்றாள். சிறியவனான சுனகன், எனக்கு பிரியமானவன்.சாதாரணமாக மூத்த பிள்ளைகள் தந்தையிடம் அதிக பாசத்துடன் இருப்பார்கள். தாயாருக்கு கனிஷ்டனிடம் தான் அதிக பாசம். இவர்கள் இருவரும் இவ்வாறு பேசுவதை கேட்டு ராஜா யோசித்துக் கொண்டு நிற்கையிலேயே, மத்யமனான சுன:சேபன், தானே முன் வந்து சொன்னான். ராஜன், தந்தை மூத்தவனை விற்க மறுத்தார். தாயார் சின்னவனை, அதனால் என்னை விற்றாகி விட்டது என்று நினைக்கிறேன். என்னை அழைத்துச் செல்லுங்கள், என்று கிளம்பி விட்டான். இந்த அரசன், ப்ரும்ம வாதியான அந்த முனிவருக்கு, இந்த சம்பாஷனைக்குப் பின், கோடிக் கணக்கான தங்க வெள்ளி நாணயங்களையும், ரத்னங்களையும் நூறாயிரம் பசுக்களையும் கொடுத்து, சுன:சேபனை வாங்கிக் கொண்டான். மிகவும் மகிழ்ச்சியோடு திரும்பிச் சென்றான். அவனை அவசரமாக ரதத்தில் ஏற்றி, வேகமாக சென்றார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், சுன:சேப விக்ரயோ என்ற அறுபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 62 அம்ப3ரீஷ யக்ஞம் (அம்பரீஷனின் யாகம்)

 

சுன:சேபனை பெற்ற அந்த அரசன், புஷ்கரத்தில் மத்யான்ன நேரம் சற்று ஓய்வு எடுக்கத் தங்கினார். அவர் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போதுசுன:சேபன், புஷ்கரத்திரத்தில் இருந்த விச்வாமித்திரரைக் கண்டான்.ரிஷிகளுடன் தவம் செய்யும் மாமனைக் கண்டு மிகவும் வருத்தத்துடன் முகம் வாடி, தீனனாக, தாகத்துடனும், சிரமத்தாலும், முனிவரின் மடியில் வீழ்ந்து கதறினான். எனக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை. பந்துக்களோ தாயாதிகளோ யாருமே இல்லை. முனி புங்கவரே, சௌம்யமானவரே, தர்மம் அறிந்தவரே, என்னைக் காப்பாற்றுங்கள். காப்பாற்றக் கூடியவர் நீங்கள் ஒருவர் தான். நீங்கள் தான் என் நிலையை உள்ளபடி உணரக் கூடியவர். ராஜாவும் க்ருத க்ருத்யனாக, அவர் காரியம் நிறைவேறியவராக செல்ல வேண்டும். நானும் தீர்காயுளோடு இருக்க வேண்டும்.உத்தமமான தவம் செய்து ஸ்வர்க லோகம் அடைய வேண்டும். அனாதையான எனக்கு நீங்கள் தான் நாதனாக இருக்க வேண்டும்.நிறைந்த மனதோடு என்னை ஏற்றுக் கொள்ளுங்கள். குற்றம் செய்த மகனை தந்தை காப்பாற்றுவது போல, தர்மாத்மாவே, என்னை காப்பாற்றுங்கள்., என்று கெஞ்சினான். அதைக் கேட்டு, விஸ்வாமித்திரர் பலவிதமாக அவனை சமாதானப் படுத்தி தன் புத்திரர்களை அழைத்து சொன்னார்.சுபத்தை விரும்பும் ஜனங்கள் புத்திரர்களை பெறுவது எதற்காக? இகத்திலும் பரத்திலும் ஹிதத்தை விரும்பித்தான் புத்திரர்களை பெறுகிறார்கள். நீங்கள் எனக்கு உங்கள் கடமையை செய்யும் காலம் வந்து விட்டது. இந்த முனிகுமாரன் என்னைசரணடைந்துள்ளான். இவன் உயிருடன் இருக்கும்படி செய்யுங்கள். புத்திரர்களே, எல்லோரும் நல்ல காரியம் செய்பவர்கள், தர்மத்தில் பாராயணம் உள்ளவர்கள், நீங்கள் எல்லோருமே பசுவாக அரசனின் யாகத்தில் அக்னிக்குத் திருப்தியாக ஆகுங்கள்.சுன:சேபனுக்கு அடைக்கலம் கொடுத்ததும் காப்பாற்றப் பட வேண்டும், யாகமும் குறைவறநிறைவேற வேண்டும். தேவர்கள் யாகத்தில் பெற வேண்டியதைப் பெறுவார்கள். எனது பிரதிக்ஞையும் சத்யமாகும். முனியின் வார்த்தையைக் கேட்டு மதுஷ்யந்தன் முதலான புத்திரர்கள், அபிமானத்தோடு சிரித்து, அவமதிப்பது போல – தன் புத்திரர்களை அழித்து ஏன் மற்றவன் மகனைக் காப்பாற்ற முயலுகிறீர்கள்? இது தேவையற்றது என்றுநினைக்கிறோம். சாப்பாட்டில் நாய் மாமிசம் போல என்றனர்.- புத்திரர்கள் இவ்வாறு எதிர்த்து பேசவும், முனி புங்கவர் கோபத்துடன், கண்கள் சிவக்க சொல்லலானார். -என் புத்திரர்களாக இருந்து நீங்கள் பேசுவது சரியல்ல. தர்மமும் அல்ல. தர்மத்தாலும் கண்டிக்கப் பட வேண்டியதே. என் வார்த்தையை மீறி, கொடியசொற்களைப் பேசிய புத்திரர்களே, நீங்களும் வசிஷ்டர் பிள்ளைகளைப் போலவே நாய் மாமிசம் தின்னும் ஜாதியினராக, ஆயிரம் வருஷம் முடிய பூமியில் இருங்கள்- என்று சபித்து விட்டார். புத்திரர்களுக்கு சாபம் கொடுத்துவிட்டு, முனிவர் சுன:சேபனிடம் சொன்னார். அவனுக்கு நோய் நொடி அண்டாமல் இருக்க    ரக்ஷையைக் கட்டி விட்டு, பவித்ரமான பாசத்தால் சிவந்த புஷ்பங்களால் ஆன மாலையால் கட்டி, வைஷ்ணவம் என்ற யாகஸ்தம்பத்தை அடைந்து – நான் சொல்லித் தரும் வார்த்தைகளால் அக்னியை வேண்டிக் கொள். இதோ, இந்த இரண்டு பாடல்களையும் விடாமல் பாடுவாயாக. அம்பரீஷ யாகத்தில், இந்த பாடல்களை மனமுருக பாடு. வெற்றியடைவாய்- என்று வாழ்த்தினார். தன்னை சமாளித்துக் கொண்டு, அந்த இரண்டு பாடல்களையும்கிரஹித்துக் கொண்டு வேகமாகச் சென்று அம்பரீஷ ராஜாவிடம் -ராஜசிங்கம் போன்றவனே, சீக்கிரம் சபைக்குச் செல்வோம். உன் தீ3க்ஷையை ஏற்றுக்கொள்.-  மகிழ்ச்சியுடன் ரிஷி புத்திரன் இவ்வாறு சொன்னதைக் கேட்டு, அரசனும் வேகமாக யாக சாலையை அடைந்தான். பவித்ரமாக அலங்கரித்து, சபையின் அனுமதியோடு, பசுவை, சிவந்த வஸ்திரங்களால் அலங்கரித்து யூபஸ்தம்பத்தில் கட்டினான். யூபஸ்தம்பத்தில் கட்டப் பட்ட சுன:சேபன், சுரர்களை, முனி சொல்லிக் கொடுத்த ஸ்தோத்திரங்களால் துதி செய்தான். இந்திரனையும், இந்திரன் தம்பியையும், வரிசைப் படி தொடர்ந்து துதி செய்ய, இதனால் சந்தோஷமடைந்த ஸஹஸ்ராக்ஷன் எனும் இந்திரன், ரஹஸ்யமாக செய்யப்பட்ட இந்த துதியினால் திருப்தியடைந்து, சுன:சேபனுக்கு தீர்காயுளை வரமாக அளித்தான். அந்த அரசனும் யாகத்தை முடித்தான். இந்திரனுடைய பிரசாதத்தால், பல மடங்கு அதிக நல்ல பலனையும் பெற்றான். விஸ்வாமித்திரர் திரும்பவும் தவம் செய்ய ஆரம்பித்தார். பத்தாயிரம் ஆண்டுகள் புஷ்கரத்தில் இருந்து தவம் செய்தார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், அம்பரீஷ யக்ஞம் என்ற அறுபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 63 மேனகா நிர்வாச: (மேனகையை  வெளி யேற்றுதல்)

 

ஆயுரம் வருஷ முடிவில், விரதம் முடிந்து ஸ்னானம் செய்த மகா முனியை எல்லா தேவர்களும் வந்து தவத்தின் பலனை தர விரும்பி வந்து சேர்ந்தார்கள். ப்ரும்மா மிகவும் மகிழ்ச்சியோடு ரிஷியாகிறாய். இன்று முதல்உன் தவத்தின் மூலம் நீ ரிஷி என்ற நிலையை சுயமாக பெற்றவனாகிறாய். இவ்வாறு சொல்லி தேவர்களின் தலைவன் திரும்பிச் சென்று விட்டார். விச்வாமித்திர மகா முனிவர் திரும்பவும் தவம் செய்யலானார். மிகச் சிறந்த அழகியான அப்சரஸ் ஸ்த்ரீ மேனகா என்பவள், சில காலத்திற்கு பின் அங்கு வந்து சேர்ந்தாள். புஷ்கரத்திரத்தில் ஸ்னானம் செய்ய வந்தாள். அவளைப் பார்த்த மகா தேஜஸ்வியான முனிவர், மேகத்தில் மின்னல் போல, ரூபத்தில் சொல்ல முடியாத அழகு வாய்ந்தவளான அவளைக் கண்டு, மயங்கி அவளிடம் சொன்னார். -அப்ஸர ஸ்த்ரீயே, உன் வரவு நல் வரவாகுக. நீயும் இங்கேயே வசிப்பாயாக.காமனால் பீடிக்கப்பட்ட என்னை ஏற்றுக் கொள்வாய்.- என்று வேண்ட அவளும் சம்மதித்து, அங்கேயே இருந்தாள். பத்து வருஷங்கள் அவள் அந்த ஆஸ்ரமத்தில் வசிக்க, விச்வாமித்திரர் சௌக்யமாக இருந்தார். காலம் கடந்ததும் ஒரு சமயம் விச்வாமித்திரர் விழித்துக் கொண்டு, வெட்கமும் வேதனையும் அடைந்தார்.கோபமும் சிந்தனையும் அவர் மனதை அலைக்கழித்தன. இது அனைத்தும் தேவர்களின் வேலையே. தவத்தைக் கலைக்கும் முயற்சியே. ஓர் இரவு போல பத்து வருஷங்கள் ஓடி விட்டன. காமம், மோஹம் இவை வியாபித்து தவத்திற்கு இடையூறு செய்து விட்டன.பச்சாதாபத்தால் மனம் வருந்தி, பெருமூச்சு விட்டபடி, கை கூப்பியபடி நடுங்கும் அப்ஸரசை பார்த்து, மதுரமான வார்த்தைகளால் அவளை சமாதானப் படுத்தி அனுப்பிவிட்டு,குசிக புத்திரர், உத்திர திசையில் மலையடிவாரம் சென்றார். நிஷ்டையில் மனம் ஒன்றி, தவம் செய்யும் எண்ணத்துடன், கௌசீகி நதிக் கரையை அடைந்து, பயங்கரமாக தவம் செய்தார். ஆயிரம் வருஷங்கள் கடும் தவம் செய்யும் அவரைக் கண்டு தேவர்கள் பயந்தனர். எல்லா ரிஷிகளையும் அழைத்து சேர்ந்து கூட்டமாக வந்து, -இவர் மகரிஷி எனும் தகுதியை அடையட்டும், குசிகாத்மஜர் இதுவரை செய்த தவம் மிகச் சிறந்ததே- என்று ப்ரும்மாவிடம் சொல்ல, சர்வலோக பிதாமகரான அவர் தபோதனனான விச்வாமித்திரரைப் பார்த்து மதுரமாக சொன்னார். -மகரிஷியே, ஸ்வாகதம். குழந்தாய், உன் உக்ரமான தவத்தால் மகிழ்ந்து மகத்வம், ரிஷி முக்யத்வம் தருகிறேன் விரதங்களின் சிறந்த விரதமுடையவனே- என்று சொல்ல, ப்ரும்மாவின் இந்த வார்த்தைகளால் வருத்தமும் அடையவில்லை, சந்தோஷமாகவும் இல்லை. அஞ்சலி செய்து வணங்கி ப்ரும்மாவிடம் சொன்னார். -ஈ.டு இணையில்லாத ப்ரும்மரிஷி சப்தம், என் தவத்தின் பலனாக பெற, நான் இந்திரியங்களை வென்றவனாக, அருகதை உள்ளவனா, இல்லையா? இதற்கு, ப்ரும்மா பதில் சொன்னார்.-இதுவரை நீ செய்தது சரி. நீ இன்னும் ஜிதேந்திரியன் ஆகவில்லை. முயற்சி செய்என்று சொல்லி மறைந்து விட்டார்.தேவேசன் சென்ற பிறகு, முனிவர் கைகளை உயரத் தூக்கி, பிடிமானம் இல்லாதவராக, வாயுவையே ஆகாரமாகக் கொண்டு, தவம் செய்யலானார். நல்ல வெய்யில் காலத்தில் பஞ்சாக்னி நடுவிலும், மழைக்காலத்தில் வெட்ட வெளி யிலும், குளிர் நாளில் நீரில் நின்று கொண்டும், இரவு பகல் எனப் பாராது,ஆயிரம் வருஷம் கோரமான தவம் செய்தார். இவ்வாறு இவர் தவம் செய்யும் போது, வாசவனுக்கும், மற்ற தேவர்களுக்கும், மிகவும் கவலையும், பயமும் உண்டாயிற்று. ரம்பை என்ற அப்ஸரசை அழைத்து தன் நன்மைக்காக குசிகாத்மஜரின் தவத்தைக் கலைக்க வேண்டினான்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், மேனகா நிர்வாசோ என்ற அறுபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 64 ரம்பா சாபம் (ரம்பையின் சாபம்)

 

இது தேவ கார்யம் ரம்பையே, நீ கண்டிப்பாக செய்துதான் ஆக வேண்டும். காம, மோஹம் இவற்றால் குசிக புத்திரரை மயக்கி, தவத்தை கலைக்க வேண்டும். சஹஸ்ராக்ஷன் இவ்வாறு சொல்லவும், வெட்கம் அடைந்த ரம்பா, அஞ்சலியுடன் இந்திரனை வேண்டினாள். இந்த மகா முனிவரான விச்வாமித்திரர் பயங்கரமானவர். என்னிடத்தில் கோபத்தைக் காட்டுவார். சந்தேகமேயில்லை. அதுதான் என் பயம். தேவராஜனே தயை செய். இவ்வாறு பயந்து நடுங்கும் ரம்பையைப் பார்த்து இந்திரன் -பயப்படாதே, ரம்பா, உனக்கு மங்களம் உண்டாகட்டும். என் கட்டளைப் படி செய். உன் அருகில் இனிமையாக கூவும் கோகிலமாக, உள்ளம் கொள்ளை கொள்ளும்படி கூவிக் கொண்டு மாதவ மரத்தில் உன் அருகிலேயே கந்தர்ப்பன் கூட நானும் இருப்பேன். நீ மிக அழகாகஅலங்கரித்துக் கொண்டு தவம் செய்யும் அந்த முனிவரின் தவத்தைக் கலைப்பாய்எனவும், அவளும் புன்னகையுடன், விச்வாமித்திரரை அணுகி அவரை மயக்க முயன்றாள். கோகிலத்தின் இனிமையான ஸ்வரத்தை கேட்டு, மிக மனம் மகிழ்ந்த முனிவர் அவளையும் பார்த்தார். அந்த சப்தமும், அதிசயமான கீதமும், எதிரில் ரம்பையையும் பார்த்து சந்தேகம் கொண்டார். இது இந்திரன் வேலையே என்று ஊகித்து, ரம்பையை கோபத்துடன் சபித்து விட்டார். எஎன்னை மயக்க என்று வந்தாயா பெண்ணே, காம, க்ரோதத்தை ஜயிக்க வேண்டும் என்றே நான் தவம் மேற் கொண்டுள்ளேன். ஆயிரம் வருஷம் கல்லாக கிடப்பாய். நல்ல தேஜசும், தவ வலிமையும் உள்ள பிராம்மணர்கள் உனக்கு சாப விமோசனம் தருவார்கள். – இவ்வாறு சொல்லி முடித்த முனிவர் க்ரோதத்தை அடக்க முடியாத தன்னிடமே வருத்தம் கொண்டார்.ரம்பா கல்லானாள். மகரிஷியின் வார்த்தையைக் கேட்டு கந்தர்ப்பனும் வெளியே வந்தான். ராமா, என்னதான் தவம் செய்தாலும், கோபத்தை அடக்காத வரையில் முனிவருக்கு சாந்தி ஏற்படவில்லை. தன் தவத்தைக் கலைத்த கோபம், அடக்க மாட்டாமல் எழுந்தாலும், – இனி கோபம் கொள்ள மாட்டேன், எதுவுமே சொல்ல மாட்டேன் என்று பிரதிக்ஞை செய்தார். அல்லது ஸ்வாசமே விட மாட்டேன். நூறு வருஷங்கள், என் இந்திரியங்களை ஜயித்து, என்னையே வற்றச் செய்து கொள்கிறேன். எதுவரை நான் ப்ரும்ம ரிஷி என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறேனோ, அதுவரை, மூச்சு விடாமல், ஆகாரம்இல்லாமல், நின்று கொண்டு சாஸ்வதமாக இருப்பேன். இது போல் நான் தவம் செய்யும் போது என் சரீரம் வாடாது. என்று ஆயிரம் வருஷங்கள் தவம் செய்வதாக தீக்ஷை எடுத்துக் கொண்டு உலகில் இதுவரைகேட்டிராத பிரதிக்ஞை செய்தார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், ரம்பா சாபம் என்ற அறுபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 65 பிரும்ம ரிஷித்வ ப்ராப்தி (ப்ரும்ம ரிஷி பதவி பெறுதல்)

 

இந்த ஹைமவதியான வட திசையையும் விட்டு கிழக்கில் சென்று, தன் கடினமான தவத்தைத் தொடர்ந்தார்.உத்தமமான மௌன விரதம் ஏற்றுக் கொண்டு, ஆயிரம் வருஷங்கள் மிக கடினமான தவத்தைச் செய்தார். ஆயிர வருஷ முடிவில் கட்டையாக ஆகிவிட்ட முனிவர், பல விதமான இடையூறுகளையும் சந்தித்து, பக்குவப்பட்டு, கோபமும் அவரிடத்திலிருந்து விலகியது.  அழிவில்லாத, தவத்தை செய்வதாக தீர்மானித்து விரதம் முடிந்த நிலையில், ஆயிரம் வருஷம் முழுவதும் ஆன நிலையில் அன்னத்தை சாப்பிட ஆரம்பித்தார். அப்பொழுது இந்திரன் பிராம்மணனாக வந்து அந்த அன்னத்தை யாசித்தான்.அவனுக்கு உடனேயே அன்னத்தை கொடுத்து விட்டு, அன்னம் மீதியில்லாமல் தீர்ந்து போயிருக்க, சாப்பிடாமலேயே மௌன விரதம் காரணமாக அந்த பிராம்மணனிடமும் எதுவும் பேசாமலே இருந்து விட்டார். மூச்சை நிறுத்தி தவம் செய்தவாறு ஆயிரம் வருஷங்களாக உள்ளடக்கிய மூச்சு, புகையாக அவர் தலையிலிருந்து

வெளிப்படலாயிற்று.மூன்று உலகமும் இதனால் பரபரப்படைந்து வெப்பம் தாங்க முடியாதபடி தகிக்க ஆரம்பித்தது. அப்பொழுது தேவர்கள், கந்தர்வர்கள், பன்னக, அசுர, ராக்ஷஸர்கள், அந்த தேஜஸால் மோஹம் அடைந்து, தங்கள் பலம் குன்றி, பிதாமகரை வந்து அடைந்தார்கள். பல காரணங்களால், தேவனே,, விச்வாமித்திர மகாமுனி, நாங்கள் ஆசை காட்டியும்,கோபத்தைக் கிளப்பி விட்டும், பாதிக்கப் படாமல், தவத்தில் இடைவிடாது வளர்ந்து வருகிறார். இவரிடத்தில் மிகசூக்ஷ்மமான குற்றம் கூட தென்படவில்லை. இவர் விரும்பியதை தராவிட்டால், இவர் தவத்தாலேயே சராசரமும் அழிந்துவிடும். இப்பொழுதே திசைகள் ஒளி மங்கித் தெரிகின்றன. சமுத்திரம் வற்றிக் கொண்டு வருகிறது. மலைகள் சிதறும் நிலைக்கு வந்து விட்டன. பூமி நடுங்குகிறது. வாயு மிகவும் கவலையுடன் சஞ்சரிக்கிறது. ப்ரும்மன், ஜனங்கள் நாஸ்திகர்களாக ஆகி விடுவார்கள்.மூவுலகும் வருந்தியதாக, செய்வதறியாது மூடமாக ஆகலாம். பாஸ்கரன், இவருடைய தேஜஸுக்கு எதிரில், ஒளியற்றவனாகத் தெரிகிறான். மகாமுனி, நாசம் செய்துவிடுகிறேன் என்று ஆரம்பிக்கு முன், சாக்ஷாத் அக்னியாகத் தெரியும் இந்த முனிவர் திலகத்தை, காலாக்னி வந்து மூவுலகையும் சூழ்ந்து தகிக்கும் முன், தேவராஜ்யம் செய்கிறேன் என்று கிளம்பும் முன், இவருக்கு இவர் வேண்டியதைக் கொடுத்து விடுங்கள். இதன் பிறகு, பிதாமகரின் பின்னால் அனைத்து தேவர்களும் விச்வாமித்திர முனிவர் இருக்கும் இடம் சென்றனர்.முனிவரைப் பார்த்து மதுரமாக ப்ரும்ம ரிஷியே, ஸ்வாகதம்- என்று ஆரம்பித்தார். தங்கள் தவத்தால் மகிழ்ந்தோம். கௌசிகரே, உக்ரமான தவத்தால், ப்ரும்மத்வம் என்ற தன்மையை அடைந்துள்ளீர்கள். உங்களுக்கு தீர்கமான ஆயுசையும் தருகிறேன். மருத்கணங்களுக்கு சமமாக இருப்பீர்கள். நல்ல நிலைமை அடைவீர்கள். மங்களம் உண்டாகட்டும் என்று சொல்லி பிதாமகர் விடை கொடுத்து அனுப்பினார். பிதாமகர் இவ்வாறு சொல்லவும், எல்லா தேவர்களும் நின்றிருக்க, அவரை வணங்கி, விச்வாமித்திரர் ப்ரும்மன், ப்ராம்மணத்வம் எனக்கு கிடைத்து விட்டது என்றால், தீர்கமான ஆயுளும் அடைந்தபின், ஓங்காரமும், வஷட்காரமும், வேதங்களும், என்னை வந்து அடையட்டும். க்ஷத்திரிய தர்மத்தில் ஸ்ரேஷ்டனான, ப்ரும்ம வேதம் அறிந்தவர்களிலும் முதல்வரான வசிஷ்டர் சொல்லட்டும். இது தான் என் மிகப் பெரிய விருப்பம்- இதை நிறைவேற்றி விட்டு தேவர்கள் செல்லுங்கள் என்றார். உடனே தேவர்கள் வசிஷ்டரிடம் சென்று விஷயத்தைச் சொல்லி வேண்டிக் கொள்ள, அவரும் வந்து நட்புடன்,நீ ப்ரும்ம ரிஷியே தான் எனவும், சந்தேகமேயில்லை,நீங்கள் ப்ரும்ம ரிஷியே தான், எல்லா சம்பத்துக்களும் உங்களைத் தேடி வரும் என்று தேவர்களும் சொல்லி, விடை பெற்றுச் சென்றனர்.தர்மாத்வான விச்வாமித்திரரும், ப்ரும்ம ரிஷி ஸ்தானத்தைப் பெற்று, வசிஷ்டரை வணங்கி மரியாதைகள் செய்து தன் காரியம் ஆன திருப்தியுடன் உலகெல்லாம் சுற்றி வந்தார். ராமா, இவ்வாறுதான் இவர் ப்ரும்ம ரிஷியானார். இவர் தவமே உருவானவர். தர்ம சிந்தனையோடு வீர்யமும் உள்ளவர். இவ்வாறு சொல்லி அந்த ப்ராம்மண ஸ்ரேஷ்டர் நிறுத்தினார். இதுவரை ராம லக்ஷ்மணர்களோடு சதானந்தர் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த ஜனகரும், ஆச்சர்யத்துடன் விச்வாமித்திரரைப் பார்த்து -தன்யனானேன். அனுக்ரஹம் கிடைக்கப் பெற்றேன். இந்த காகுத்ஸர்களையும் அழைத்துக் கொண்டு என் யாகத்திற்கு வந்தது என் பாக்கியம்.உங்கள் தரிசனமே பாவனம். உங்களைப் பார்த்து பல நல்ல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். விஸ்தாரமாக உங்கள் கதையை இன்று தான் கேட்டேன். ராமனுடன் கூட எனக்கும் அந்த பாக்கியம் கிடைத்தது. சபையினரும் கேட்டனர்.உங்கள் தவம் அளவிட முடியாதது. அது போலவே உங்கள் சக்தியும் அளவிட முடியாதது. உங்கள் குணங்களும் அளவிட முடியாதவைகளே.குசிகாத்மஜரே, ஆச்சர்யமான இந்த கதையைக் கேட்டு இன்னமும் கேட்க ஆசைப் படுகிறேன். இதில் இன்னமும் திருப்தி ஏற்படவில்லை. காரியம் ஆகவேண்டியது நிறைய இருக்கிறது. சூரிய மண்டலம் மறையத் தொடங்கி விட்டது. நாளை காலை மறுபடியும் சந்திப்போம். தவஸ்ரேஷ்டரே, தாங்களாக வந்து என்னை அனுக்ரஹித்துள்ளீர்கள். அனுமதி தாருங்கள்.- இவ்வாறு புகழ்ந்து சொன்ன ஜனகரை, முனிவர் அனுமதி தந்து வழி அனுப்பினார். மிதிலாதிபதியான வைதேஹரும், முனிவரை தன் பந்துக்கள், உபாத்யாயர்களோடு பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து விடை பெற்றனர். ராம, லக்ஷ்மணர்களுடன், விச்வாமித்திரரும் யாக சாலையை வந்தடைந்தார். அங்கு இருந்த மகரிஷிகள் வணங்கி வரவேற்று மரியாதைகள் செய்தனர்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், ப்ரும்ம ரிஷித்வ ப்ராப்தி என்ற அறுபத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 66 த4னு:ப்ரசங்க: (வில்லைப் பற்றிய விவரம்)

 

மறு நாள் விடிந்தவுடன், நிர்மலமான அந்த காலை நேரத்தில் மகாராஜா ஜனகர், தன் வேலைகளை முடித்துக் கொண்டு, ராக4வர்களுடன் விஸ்வாமித்திரரை அழைத்துச் செல்ல வந்தார். ரிஷிகளையும், முனிவரையும் சாஸ்திர விதிமுறைப் படி உபசரித்து, ஸ்வாகதம் சொல்லி, முனிவரின் பதிலை எதிர்பார்த்து நின்றனர்.ஆணையிடுங்கள், நானும் தங்கள் ஆணைக்குட்பட்டவனே என்று ஜனகர் பணிவாகச் சொல்ல, விஸ்வாமித்திர மகாமுனிவர், -அரசனே, இந்த குழந்தைகள் தசரதருடைய புத்திரர்கள். உலக புகழ் பெற்றவர்கள். உங்களிடம் உள்ள வில்லை பார்க்க விரும்புகிறார்கள். இவர்களுக்கு வில்லை காட்டுங்கள். அது தான் அவர்களுடைய விருப்பம். வில்லை பார்த்து விட்டு சௌகர்யம் போல் திரும்பி விடுவார்கள்- என்றார். இதைக் கேட்டு ஜனக ராஜா சொன்னார். -இந்த தனுஷ், அதாவது வில் ஏன் இங்கு இருக்கிறது தெரியுமா? நிமி வம்சத்தில் ஆறாவது மகாராஜா தேவராதன் என்று ஒரு அரசன் இருந்தார்.இந்த வில் தேவ தேவனான மகாதேவனுடைய வில். இந்த தேவராத அரசனிடம் பாதுகாத்து வைக்கும்படி கொடுக்கப் பட்டது. தக்ஷ யக்ஞத்தில் இந்த வில்லை எடுத்துக் கொண்டு ருத்ரன், தேவர்களை பார்த்து கோபத்துடன், என்னுடைய பங்கை இந்த யாகத்தில் எனக்குத் தராமல் மற்ற தேவர்கள் வாங்கிக் கொண்டார்கள். அந்த தேவர்களை இந்த வில்லினால் அழிப்பேன் என்று ஆரம்பித்தார். அவர் கோபத்தின் முன் செய்வதறியாது திகைத்த தேவர்கள், பலவிதமாக தோத்திரங்கள் செய்து அவரை மகிழ்வித்தனர். இதனால் கோபம் குறைந்து சாந்தமடைந்த ருத்ர தேவன், அவர்களுக்கு வரங்கள் கொடுத்தார். இது அந்த ருத்ரனுடைய வில். எங்கள் முன்னோர்களிடம் -ந்யாசமாக- பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்தது. பிறகு ஒரு சமயம் நான் பூமியை உழும் பொழுது கலப்பையிலிருந்து பூமியிலிருந்து உண்டானாள் சீதை என்று பெயர் பெற்ற என் மகள்.பூமியை சமன் செய்யும் பொழுது தோன்றியவளை என் மகளாக வளர்த்து வந்திருக்கிறேன். தானாக தோன்றிய இந்த பெண் மகவை, -வீர்ய சுல்கா- வெற்றி பெறுபவருக்கு பரிசாக நான் அறிவித்து விட்டேன்.பூமியிலிருந்து தோன்றி என் மகளாக வளர்ந்து வரும் இந்த கன்னியை பலரும் மணம் செய்து கொள்ள விரும்பி வந்தனர்.எல்லோரும் பூமியை ஆளும் அரசர்கள், மகா ராஜாக்கள்.இவள் வீர்யத்தால் ஜயித்து பெற வேண்டியவள் என்று சொல்லி யாருக்குமே தர நான் சம்மதிக்கவில்லை. எல்லா அரசர்களும் மிதிலை வந்தார்கள். தங்கள் பலத்தைக் காட்டும் விதமாக, வில்லை பார்க்க விரும்பினார்கள். ஈஸ்வரனுடைய இந்த வில் கொண்டு வரப்பட்டது. இந்த வில்லை பிடிக்கவோ, தூக்கவோ கூட யாராலும் முடியவில்லை. தாங்கள் பெரிய வீரர்கள் என்று மார் தட்டிக் கொண்டு வந்தவர்கள், தங்கள் வீர்யம் மிகவும் அல்பமே என்று உணர்ந்து திரும்பினார்கள். தபோதனரே, மேலும் கேளுங்கள். மிகவும் கோபம் கொண்ட அரசர்கள், மிதிலையை ஆக்ரமித்தனர். ஒரு வருஷ காலம் இந்த நிலை நீடித்தது. ராஜ்யம் எங்கும் பெருத்த நஷ்டம் ஏப்பட்டது. அதனால் நான் மிகவும் வருந்தினேன். தேவர்களைக்குறித்து தவம் செய்து அவர்கள் தயவை வேண்டினேன். சதுரங்க சேனையை அந்த தேவர்கள் அனுப்பி வைத்தனர்.இதனால் முற்றுகையிட்டிருந்த அரசர்களை வென்று, அவர்களும் மூலைக்கு ஒருவராக ஓடி மறைந்தனர்.வீரர்கள் என்று நம்பிக் கொண்டு வந்தவர்கள், தங்கள் உண்மை பலம் தெரிந்து மந்திரிகளுடன் ஓட்டமெடுத்தனர். வீணாக பாபம் செய்ய முனைந்தவர்கள் ஆனார்கள். இது தான் இந்த உத்தமமான வில்லின் கதை. ராம, லக்ஷ்மணர்களுக்கும் அதைக் காட்டுகிறேன். தபோதனரே, இந்த வில்லை ராமன் எடுத்து நாணை ஏற்றுவான் எனில், என் அயோனிஜாவான மகள் சீதையை தசரத புத்திரனான ராமனுக்கு கொடுக்கிறேன்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், த4னு: ப்ரசங்க: என்ற அறுபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

 

 

அத்தியாயம் 67 த4னுர்பங்க: (வில்லை உடைத்தல்)

 

ஜனகருடைய வார்த்தையைக் கேட்டு விஸ்வாமித்திரர், ராமருக்கு தனுஷைக் காட்டு என்றார். அந்த அரசன் ஜனகனும் மந்திரிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். அந்த வில்லைமுன்னால் கொண்டு வந்து வைத்து விட்டு நகர்ந்து சென்றனர். மிகவும் கஷ்டப்பட்டு, எட்டு சக்கரம் கொண்ட வண்டியில், பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தனுஷை, இரும்பு பெட்டியுடன் அரசனின் முன்னால் கொண்டு வந்து வைத்தனர். இதன் காரணமாக, நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான அரசர்கள் முயற்சி செய்து தோற்றிருக்கின்றனர். தேவர்களுக்கு சமமான ஜனக ராஜாவிடம், மந்திரிகள் –ராஜேந்திரா, இந்த தனுஷ் மிகவும் விசேஷமானது. இந்த மிதிலையை ஆண்டு வந்த அரசர்களால் பூஜிக்கப்பட்டு வந்துள்ளது. இதைக் காட்ட விரும்பினால் காட்டு- என்றனர். இதன் பின் ஜனகர் அஞ்சலி செய்து விஸ்வாமித்திர முனிவரிடம், ராம லக்ஷ்மணர்களைப் பார்த்தவாறுசொன்னார். –ப்ரும்மன், இதோ இந்த வில் ஜனக வம்சத்தினரால், மரியாதையாக பூஜை வழிபாடுகள் செய்து பாதுகாக்கப் பட்டு வந்துள்ளது, இதுவரை பல அரசர்கள், இதை தூக்கிக்கட்ட முயன்று முடியாமல் விட்டிருக்கிறார்கள். இதை தேவர்கள் கூட்டமோ, அசுரர்களோ, ராக்ஷஸர்களோ, கந்தர்வ, யக்ஷ ப்ரவரர்களோ, கின்னர மகோரகர்கள் எனப்படும் நாக வம்சத்தினரோ, யாருமே இதை எடுத்து நாண் பூட்டுவதில் சமர்த்தர்களாக இல்லை. மனிதன் எம்மாத்திரம்? இதை தூக்காவோ, தூக்கி நிறுத்தி, நாணை கட்டவோ எப்படி முடியும்? இந்த விசேஷமானவில்லை கொண்டு வந்து விட்டோம். முனி புங்கவரே, ராஜ குமாரர்களுக்கு காட்டுங்கள். விஸ்வாமித்திரர் ஜனகர் சொல்லி முடிக்கும் வரை கேட்டுக் கொண்டு இருந்து விட்டு, -வத்ஸ, ராமா, தனு:பஸ்யகுழந்தாய், ராமா வில்லைப் பார்- என்றார். ப்ரும்மரிஷி சொன்னபடி, ராமர் வில் இருக்கும் இடம் வந்து, பெட்டியைத் திறந்து வில்லைப் பார்த்து சொன்னார். –ப்ரும்மன், இந்த புனிதமான வில்லை நான் கையினால் தொடட்டுமா? இதை தூக்கி, நாணைப் பூட்டவும் முயற்சி செய்கிறேன்- என்றார். அப்படியே செய் என்று முனிவரும், அரசனும் சம காலத்தில் சொன்னார்கள். முனி வசனத்தை ஏற்று, விளையாட்டாக, வில்லின் நடுவில் பிடித்து, நூற்றுக் கணக்கான அரசர்கள், மற்றும் பலர் பார்த்துக் கொண்டுஇருக்க, ரகுநந்தனன் விளையாட்டாக வில்லைத் தூக்கி நிறுத்தினார். நிறுத்தி வைக்கப்பட்ட வில்லில் நாணை பூட்ட முனைந்தார். நாணை இழுக்கவும் அந்த வில் நடுவில் முறிந்தது. மகானான அந்த நரஸ்ரேஷ்டன் கையில் இருந்து வில் முறிந்த சத்தம் மிகப் பெரியதாக கேட்டது. அந்த பெரும் ஓசையில் பூமி நடுங்கியது. மிகப் பெரிய பர்வதம் பிளந்ததோ,என்று இருந்தது. இந்த சத்தத்தினால் மூர்ச்சித்து விழுந்தவர் பலர்.முனிவரரான விஸ்வாமித்திரரையும், ஜனக ராஜாவையும், இரண்டு ராஜ குமாரர்களையும் தவிர மற்றவர் அனைவரும் மயங்கினர். ஜனங்கள் சுய நினைவு திரும்பியதும், கவலை நீங்கிய அரசன் முனி புங்கவரிடம் சொன்னார். –பகவானே, ராமனுடைய வீரத்தை நான் கண்டு கொண்டேன். தசரதரின் மகனின், ஒப்பற்ற, மனதால் கூட எண்ணிப் பார்க்க முடியாத இந்த சிறுவனின் வீரம், நான் சற்றும் எதிர் பாராதது. தசரதன் மகனான இந்த ராமனை கணவனாக அடைந்து, என் மகள் சீதா, ஜனக வம்சத்திற்கே, மிகப் பெரிய புகழையும், பெருமையையும் தரப் போகிறாள். என் ப்ரதிக்ஞையும் சத்யமாயிற்று. -வீர்ய சுல்கா- (வீரத்திற்கு பரிசு) வெற்றி பெற்றவனுக்கே என் மகள் என்று நான் வைத்திருந்த பணயம்வென்றது.என் உயிருக்கும் மேலாக நான் அன்பு வைத்துள்ள சீதையை, என் மகளை ராமனுக்குத் தருகிறேன். ப்ரும்மன், அனுமதி தாருங்கள். மந்திரிகள் சீக்கிரம் கிளம்பிச் செல்லட்டும். அயோத்தி நோக்கி ரதங்களில் செல்லட்டும். கௌசிகரே, உங்களுக்கு மங்களம். ராஜாவை தகுதியான வார்த்தைகளைச் சொல்லி, மந்திரிகள் என் ஊருக்குஅழைத்து வரட்டும். ராமன் தன் வீர்யத்தால் வெற்றி கொண்ட கன்னியை தருகிறேன் என்ற கதையை விவரமாக சொல்லுங்கள். அரசனிடம், முனிவரின் பாதுகாப்பில், அரச குமாரர்கள் நலமாக இருப்பதை தெரிவியுங்கள். சீக்கிரம், வேகமாக ஓடும் வாகனங்களில் அரசரை அழைத்து வாருங்கள். கௌசிகர் அவ்வாறே செய்ய சம்மதிக்க, மந்திரிகளை அழைத்து, நடந்ததைச் சொல்லி, அரசரை அழைத்து வர, ஜனகர் தேர்ந்தெடுத்த மந்திரிகளிடம் விவரமாக சொல்லி அனுப்பினான்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், தனுர் பங்கோ என்ற அறுபத்தி ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 68 தசரதாஹ்வானம் (தசரதரை அழைத்தல்)

 

ஜனகரின் உத்தரவை ஏற்று, மந்திரிகளும், தூதர்களுமாக இரவு யாத்திரை செய்து அயோத்யா நகரை அடைந்தனர்.ராஜ பவனம் என்று வாயில் காப்போனிடம் பின் வருமாறு சொன்னார்கள். -நாங்கள் ஜனக மகாராஜாவின் தூதர்கள். சீக்கிரம் சென்று உங்கள் அரசனிடம் தெரிவியுங்கள்.- என்றனர். துவாரபாலகர்கள் வந்து அரசனிடம் தெரிவித்ததும், அரசன் உடனே அனுப்பு என்று சொல்ல, துவாரபாலகர்கள் வந்து அவர்களை அவசரமாக உள்ளே அழைத்துச் சென்றனர். தசரத ராஜாவைக் கண்ட தூதர்கள், தேவ ராஜா போன்ற காந்தியுடன் இருந்த முதியவரான அரசனைக் கை கூப்பி வணங்கியவர்களாக, ராஜாவைப் பார்த்து, மதுரமாக சொல்ல ஆரம்பித்தனர். -மிதிலா தேசத்து அரசனான ஜனகன் உங்களை குசலம் விசாரித்தார். அக்னி ஹோத்ரிகள், உபாத்யாய, புரோஹிதர்கள் எல்லோரையும் குசலம் விசாரித்தார். நலம் அறிய விரும்புகிறார். திரும்பத் திரும்ப மிகவும் ஸ்னேகமாக, மதுரமான வார்த்தைகளால், ஜனக ராஜா தங்கள் நலத்தை, ஊர் ஜனங்கள் நலத்தை, மற்றும் அனைவரும் நலமா என்றும் விசாரித்த பின், இந்த செய்தியை சொல்லச் சொன்னார். -என் மகளான சீதையை முன்பு, வீர்ய சுல்கா வெற்றி பெற்றவனுக்கே பரிசு என்ற விதமாக பிரதிக்ஞை செய்திருந்தேன். பல அரசர்கள், மிகவும் கர்வத்தோடு வந்து முயன்று தோற்றுப் போனார்கள். ராஜன், விச்வாமித்திர முனிவருடன் யதேச்சையாக வந்த தங்கள் குமாரனால் என் மகள் ஜயிக்கப்பட்டாள். ராமனால், தெய்வீகமான என் வில், நடுவில் முறிக்கப்பட்டது. யாகத்தின் முடிவில் ஜனக் கூட்டத்தின் முன், ராமனுடைய இந்த பராக்ரமம் தெரிய வந்தது.நான் பிரதிக்ஞை செய்திருந்தபடி, என் மகளைத் தந்தே ஆகவேண்டும். நான் என் பிரதிக்ஞையை நிறைவேற்ற விரும்புகிறேன். தாங்கள் அனுமதிக்க வேண்டும். புரோஹிதர்கள், உபாத்யாயர்கள், மற்றும் அனைவரையும் அழைத்துக் கொண்டு, சீக்கிரம் வாருங்கள். அரசனே, உங்களுக்கு மங்களம் உண்டாகட்டும். ராகவர்கள், ராம லக்ஷ்மணர்களைக் காண வாருங்கள். நான் செய்த மிகப் பெரிய இந்த பிரதிக்ஞையை நீங்கள் வந்து நிறைவேற்றித் தர வேண்டும். தங்கள் புத்திரரின் வீர்யத்தால் ஜயிக்கப்பட்ட, என் மகளைப் பார்த்து, நீங்களும் ப்ரீதியை அடைவீர்கள். இவ்வாறு பணிவாக, விதேக ராஜாவான ஜனகர் சொல்லச் சொன்னார். விச்வாமித்திரர் அனுமதி அளித்து விட்டார்,சதானந்தரும் அங்கு இருக்கிறார என்று சொல்லி நிறுத்தினர். இதைக் கேட்டு அரசன் மிகவும் மகிழ்ந்து, வசிஷ்டரையும், வாமதேவரையும், மற்ற மந்திரிகளையும் அழைத்து, விஷயத்தைச் சொன்னான் கௌசல்யை மகன், குசிக புத்திரரின் பாதுகாப்பில், சகோதரனான லக்ஷ்மணனுடன் விதே33 தேசத்தில் வசிக்கிறான். ஜனகன் அவனுடைய வீர்யத்தைக் கண்டு மகிழ்ந்து, மகளை ராக4வனுக்கு கொடுக்க விரும்புகிறார். உங்களுக்கு, ஜனகருடைய இந்த விருப்பம் சம்மதமானால், சீக்கிரமாக புறப்படுவோம். கால தாமதம் வேண்டாம். மந்திரிகளும் சம்மதிக்க, மகரிஷிகளையும் கலந்து ஆலோசித்து, நாளை யாத்திரை என்று தீர்மானித்து, ஜனகரின் மந்திரிகளிடம்சொன்னார். அவர்களும் தசரத ராஜாவின் விருந்தினர்களாக, மிகவும் கௌரவிக்கப் பட்டு, இரவு சுகமாக இருந்தனர்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், தசரதா2ஹ்வானம் என்ற அறுபத்து எட்டாவதுஅத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 69தசரத2 ஜனக சமாகம: (தசரதரும், ஜனகரும் சந்தித்தல்)

 

பொழுது புலர்ந்ததும், உபாத்யாயர்களும், பந்துக்களும் சூழ, தசரத ராஜா சுமந்திரரை வரவழைத்து மகிழ்ச்சியுடன், -இன்று த4னாதி4காரிகள், ஏராளமாக தனம், பொருள் எடுத்துக் கொண்டு முன்னால் செல்லட்டும்.விஷயம் அறிந்தவர்களாக, எல்லா விதமான ரத்னங்களையும் எடுத்துக் கொள்ளட்டும்.நால் வித படையும், சீக்கிரமாக தயார் ஆகட்டும். நான் ஆணையிடும் நேரத்துக்குள், உத்தமமான இரண்டு வாகனங்கள் தயாராகட்டும். வசிஷ்டர், வாமதே3வர், ஜாபா3லி, காஸ்யபர், மார்க்கண்டேயர், சுதீர்காயு, ரிஷி காத்யாயனர், இந்த பிராம்மணோத்தமர்கள் முன்னால் செல்லட்டும். என் ரதத்தை தயார் செய். இந்த தூதர்கள் அவசரப் படுத்துகிறார்கள். கால தாமதம் வேண்டாம்- என்றார். அரசரின் கட்டளைப் படி, நால் வகை சேனைகளும் தயாராயின. ரிஷிகளுடன் அரசன் செல்லும் வாகனத்தை பின் தொடர்ந்து சென்றது. நான்கு நாட்கள் பிரயாணம் செய்து, மிதி2லையை அடைந்தனர். ஜனக ராஜா வந்து மரியாதையுடன் வரவேற்றார். வயது முதிர்ந்த தசரத ராஜாவைக் கண்டு, ஜனகர் மிக மகிழ்ந்தார்.நரஸ்ரேஷ்டிரரான ஜனகர், அதே போல் நர ஸ்ரேஷ்டிரரான தசரதரிடம் -ஸ்வாகதம். உங்கள் வரவு நல்வரவாகுக. நல்ல படியாக வந்து சேர்ந்தீர்கள். உங்கள் புத்திரர்களைக் கண்டு மகிழ்வீர்கள். அவர்கள் வீர்யத்தால் ஜயித்த என் மகளையும் கண்டு மகிழ்ச்சியடைவீர்கள். வசிஷ்டர் வந்திருக்கிறார்.பகவானான வசிஷ்டர் வந்தது என் பாக்கியம். தேவர்கள் சூழ இந்திரன் வருவது போல, ப்ரம்மணோத்தமர்களோடு வந்திருக்கிறீர்கள். என் கஷ்டங்கள் விலகின. என் குலமும்பெருமை அடைந்தது. அதிர்ஷ்டவசமாகமகா வீரர்களான ராகவர்களுடன் சம்பந்தம் செய்து கொள்ளப் போகிறேன். இது என் பாக்கியமே. நரேந்திரனே, நாளைக் காலையில் இதை நடத்தித் தர வேண்டும் யாக முடிவில் விவாகம் செய்வது ரிஷிகள் சம்மதித்து நடப்பது வழக்கம் தான்.ரிஷிகள் மத்தியில் ஜனகர் இவ்வாறு சொல்லவும்,பொருள் பட பேசுவதில் வல்லவனான தசரத ராஜா பதில் சொன்னார். -ப்ரதிக்3ரஹோ தா3த்ரு வசே – கொடுப்பவன் கொடுத்தால் தான் வாங்கிக் கொள்பவன் வாங்கிக் கொள்ள முடியும். இதில் கொடுப்பவன் சௌகர்யம் தான் முக்கியம். நீங்கள் சொல்வது படியே செய்வோம். தர்மம் அறிந்தவனும், புகழ் வாய்ந்தவனுமான தசரத ராஜா சொன்னதைக் கேட்டு ஜனக ராஜா ஆச்சர்யம் அடைந்தார். பிறகு எல்லா முனி ஜனங்களும், ஒருவருக்கொருவர் சந்தித்து, அந்த இரவு பூராவும் மகிழ்ச்சியுடன் கழித்தனர். ராமரும், லக்ஷ்மணரும், விச்வாமித்திரரைத் தொடர்ந்து வந்து, தந்தையான தசரதனை வணங்கி நின்றனர். ஜனகரும், யாக காரியங்களையும், தன் புத்திரிகள் விவாக விஷயமாக செய்ய வேண்டிய காரியங்களையும் செய்தவாறு இரவைக் கழித்தார். தசரத ராஜா தன் புத்திரர்களைக் கண்டு மகிழ்ந்து ஜனகரின் உபசாரத்தை ஏற்று மகிழ்ந்து இரவை நிம்மதியாக கழித்தார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், தசரத ஜனக சமாகமோ என்ற அறுபத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

அத்தியாயம் 70 கன்யா வரணம் (பெண் கேட்டல்)

 

விடிந்தது.ஜனகர் மகரிஷிகளுடன் கூடி செய்ய வேண்டிய பல காரியங்களைச் செய்து முடித்து விட்டு சதானந்தரிடம் வந்தார். –சதானந்தரே, என் இளைய சகோதரன் தார்மிகன் என்று பெயர் பெற்றவன், குசத்வஜன், ஊரில் இருக்கிறான், இந்த சுபமான நகரம், வார்ய பலகம் வரை பரவியுள்ளது. இக்ஷுமதி என்ற நதியும், புஷ்பக விமானம் போன்றதுமான சான்காசி என்ற ஊரில் இருக்கும் என் சகோதரனைக் காண விரும்புகிறேன். யாக ரக்ஷகனாக அவன் இருப்பான். என்னுடன் கூட இந்த யாகத்தை வெற்றி கரமாக முடிக்கும் சமயம் அவனும் இருந்தால் அதிக சந்தோஷமாக இருக்கும்.சதானந்தரிடம் அரசர் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே சிலர் அங்கு வந்தனர். ஜனக ராஜா அவர்களுக்கு உத்தரவுகள் கொடுத்து அனுப்பினார். அவர்களும் அரசரின் ஆணையை ஏற்று வேகமாகச் சென்றார்கள். சான்காசி சென்று, குசத்வஜனைக் கண்டு, அரசரின் விருப்பத்தை தெரிவிக்கவும், அவரும் உடனே புறப்பட்டு வந்தார். ஜனகரையும், சதானந்தரையும் சந்தித்து, அவர்களை வணங்கி விட்டு, அரசனுக்கு என்று இருந்த ஆசனத்தில் அமர்ந்தார். அதன் பின் மந்திரிகளை நியமித்து இக்ஷ்வாகு ராஜாவையும், குமாரர்களையும் அழைத்து வர பணித்தார்.அவர்களுக்கு உபசாரங்களை குறைவறச்செய்து அழைத்து வரச் சொல்லி அனுப்பினார். அவர்களும் தசரத ராஜா தங்கியிருந்த இடம் சென்று, ரகு நந்தனனைக் கண்டு தலை வணங்கி அயோத்யாதி4பதே, விதே3ஹ ராஜாவான மிதி2லாதிபன் தங்களைக் காண விரும்புகிறார். வீரனே, உபாத்யாயர்கள், புரோஹிதர்கள் கூட தாங்கள் வர வேண்டும் என, தசரத ராஜாவும், ரிஷி கணங்கள், பந்துக்கள் கூட, ஜனகர் இருக்கும் இடம் வந்து சேர்ந்தார்.விதேஹ ராஜாவைப் பார்த்து, தசரதர் –அரசனே, உங்களுக்குத் தெரிந்திருக்கும். இக்ஷ்வாகு குலத்தில், எப்பொழுதும் ரிஷியான வசிஷ்டர் தான் பேசுவார். அவர் சொல் தான் எங்களுக்குப் பிராமாணம். விஸ்வாமித்திரர் அனுமதியோடு, மற்ற மகரிஷிகளும் அருகில் இருக்க, இந்த வசிஷ்டர் முறையாக உங்களுடன் பேசுவார் என்று சொல்லி நிறுத்தினார்.

 

உடனே வசிஷ்டர் பேச ஆரம்பித்தார். ஜனகரும், அவர் புரோஹிதரும், மற்றவர்களும் கேட்கலானார்கள்.சாஸ்வதமான ப்ரும்மா, நித்யன், அழிவற்றவன், என்றும் அழியாத சக்தியுடையவர் என்றும் புகழப்படுபவர்,அவருடைய பிள்ளை மரீசி. மரீசியின் பிள்ளை கஸ்யபர். கஸ்யபர் பிள்ளை விவஸ்வான்.வைவஸ்வதன் என்று சொல்லப் படும் மனு அவருடைய பிள்ளை. மனு பிரஜாபதி.மனுவின் பிள்ளை இக்ஷ்வாகு. இந்த இக்ஷ்வாகு தான் அயோத்தியின் முதல் அரசன்.இக்ஷ்வாகுவின் பிள்ளை ஸ்ரீமான் குக்ஷி என்பவன்.குக்ஷிக்கு விகுக்ஷி என்று ஒரு பிள்ளை. விகுக்ஷியின் பிள்ளை மகா பிரதாபியான பா3ணன் என்பவன்.பா3ணன் பிள்ளை அனரண்யன் என்பவன்.நல்ல பிராதாபம் உடைய அனரண்யனின் மகன் ப்ருது2.ப்ருதுவின் பிள்ளை த்ரிசங்கு. த்ரிசங்குவின் பிள்ளை து3ந்து3மாரோ என்று புகழ் பெற்றவன். துந்துமாரனிடம் யுவனாஸ்வன் பிறந்தான். யுவனாஸ்வனின் மகன் மாந்தா3தா என்ற அரசன்.மாந்தா3தாவின் மகன் சுசந்தி4. சுசந்திக்கு இரண்டு பிள்ளைகள். த்3ருவ சந்தி4, ப்ரஸேனஜித் என்ற இருவர். த்ருவசந்தியின் மகன் தான் யஸஸ்வியான ப4ரதன்.பரதன் அசிதன் என்ற மகனைப் பெற்றான். இவனை எதிர்த்து பல அரசர்கள் சண்டையிட்டனர்.ஹைஹயா, தாள ஜங்கர்கள், சூரர்கள், சசிபிந்தவர்கள், என்ற பலரும் யுத்தம் செய்ய வந்தனர். இவர்களுடன் யுத்தம் செய்து தோற்று,ராஜ்யத்திலிருந்து விரட்டப் பட்டான். ஹிமாசலம் சென்று ப்4ருகுப்ரஸ்ரவனம் என்ற இடத்தில் வசித்தான். அல்ப பலம் கொண்ட இந்த அரசன் சீக்கிரமே காலம் சென்றான். இவருடையை இரு பத்னிகளும் கர்பவதிகளாக இருந்ததாக கேள்வி. இதில் ஒருவள் மற்றவளுக்கு க3ரம் என்ற விஷத்தைக் கொடுத்து கர்பத்தைக் கலைக்க முயன்றாள். அந்த சமயம், மலையடிவாரத்தில் பா4ர்கவ ஸ்யவனன் என்ற பெயருடைய முனிவர், இமய மலையை தன் வாசஸ்தலமாக கொண்டு வசித்து வந்தார். இருவரில் ஒருவள் காளிந்தீ என்றபெயருடையவளும், பத்ம பத்ரம் போன்ற கண்களுடையவளுமான,(விஷம் கொடுக்கப் பட்ட) இந்த பத்னி இவரை வணங்கி, தனக்கு பிறக்கப் போவது மகனாக இருக்க வேண்டும் என்னு வேண்டினாள்.அவளை ஆசிர்வதித்து ரிஷி -உன் வயிற்றில், சுபுத்திரனாக, மகா பலசாலியாக, மகா வீரனாக, தேஜஸ்வியாக சீக்கிரமே பிள்ளை பிறப்பான் – என்றார்.விஷத்துடனே பிறப்பான். க3ரம் என்ற விஷத்துடன் பிறப்பதால் சக3ரன் எனப்படுவான். என்று முனிவர் சொல்லவும், அந்த பெண் இறந்த தன் பதியை நினைத்த படியே புத்திரனைப் பெற்றெடுத்தாள்.சகரன் என்ற அந்த அரசனுக்கு, அசமஞ்சன் என்ற பிள்ளையும், அவனுக்கு அம்சுமான் என்ற பிள்ளையும், அவனுக்கு திலீபனும், திலீபனுக்கு ப4கீரதனும், பகீரதனிடத்தில் காகுத்ஸனும் பிறந்தனர். காகுத்ஸனுக்கு ரகு4 பிள்ளையாக பிறந்தான். ரகுவுக்கு, தேஜஸ்வியான கல்மாஷபாதோ3என்ற மகனும், அவனுக்கு சங்க2ணன், சங்கணனுக்கு சுத3ர்சனன், சுதர்சனனுக்கு அக்னி வர்ணன், அவனுக்கு சீக்4ரகன் என்று பிள்ளை. சீக்ரனுக்கு மருவும், மருவுக்கு சுஸ்ருகன், சுஸ்ருகனுக்கு, அம்ப3ரீஷன் என்று மகன். அம்பரீஷன் பிள்ளை நகுஷன், நகுஷனுக்கு யயாதி. யயாதிக்கு நபா4கன். நாபாகனுக்கு அஜன். அஜனின் பிள்ளை தசரதன்.இந்த தசரத குமாரர்கள் தான் ராம, லக்ஷ்மணர்கள்.ஆதியிலிருந்தே உயர்ந்த குலத்தில்,பரம தார்மீகர்களான இக்ஷ்வாகு குலத்தில் பிறந்து வளர்ந்த இந்த ராம லக்ஷ்மணர்கள், சத்யவாதிகள். வீரர்கள். இவர்களுக்கு உங்கள் பெண்களை வேண்டுகிறோம். அரசனே| சத்3ருசமான (சமமான) பையன்களுக்கு அதே போல உள்ள உன்பெண்களைத் தருவாய் என்று சொல்லி நிறுத்தினார்.

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல்தொகுப்பில், பால காண்டத்தில், கன்யா வரணம் என்ற எழுபதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.) ( ஸ்லோகம்- 46)

 

அத்தியாயம் 71 கன்யாதான ப்ரதிஸ்ரவ: (கன்யாவை தர சம்மதித்தல்)

 

இவ்வாறு வசிஷ்டர் சொல்லி முடிக்கவும்,ஜனகர் கை கூப்பி அஞ்சலி செய்தவராக எங்கள் குலத்தைப் பற்றியும் நாங்கள் சொல்வதைக் கேளுங்கள் என்று ஆரம்பித்தார். இவ்வாறு கன்யா தானம் செய்யும்போது, குலத்தைப் பற்றி முழுவதுமாக சொல்ல வேண்டியது முறை.மகா முனிவரே கேளுங்கள். தன் செயலால் மூவுலகிலும் பிரஸித்தி பெற்ற ஒரு அரசன் இருந்தான். நிமி என்ற பெயருடையவன். தர்மாத்மா. நல்லவர்கள், விஷயம் அறிந்தவர்கள் மத்தியிலும், சத்வன், நல்ல குணக்குன்று என பெயர் பெற்றவன். அவனுக்கு மிதி2 என்று ஒரு மகன். ஜனகன் மிதி புத்திரன். முதல் ஜனக ராஜா, அவனுக்குஉதா3வசு என்று ஒரு பிள்ளை. உதாவசுவுக்கு தே3வராதன் என்ற மகா பலசாலியான பிள்ளை. ராஜரிஷியாக இருந்த தேவராதனுக்கு, ப்ருஹத்3ரதன் என்று மகன். இவனுக்கு மகா சூரனான மகாவீரன் என்ற பலசாலியான மகன். மகாவீரனுக்கு த்ருதிமான், த்ருதிமானுக்கு சுத்4ருதி. சுத்ருதிக்கு த்3ருஷ்ட கேது, த்ருஷ்டகேது என்ற ராஜரிஷிக்கு ஹர்யஸ்வன் என்ற மகன். ஹர்யஸ்வனுடைய பிள்ளை மரு. மருவின் பிள்ளை ப்ரதீந்தகன். இவனுக்கு கீர்த்திரதன் என்று மகன். தே3வமீடன் என்று கீர்த்திரதன் பிள்ளை.தேவமீடனுக்கு, விபு3தன், விபுதனுக்கு மஹீத்ரகன், மஹீத்ரகனுக்கு கீர்த்திராதன், கீர்திராதனுக்கு, மகாரோமா என்பவன் பிறந்தான். இவனுக்கு பிறகு வந்த ஸ்வர்ணரோமன், ராஜரிஷியாக இருந்தான். இவனுக்கு ஹ்ரஸ்வரோமன் பிறந்தான். தர்மம் அறிந்த இவனுக்கு இரண்டு பிள்ளைகள். நான் மூத்தவன். இளையவனான என் தம்பி குசத்4வஜன். நல்ல வீரன். மூத்தவனான எனக்கு ராஜ்யத்தில் அபிஷேகம் செய்து வைத்து விட்டு, குசத்வஜனை என் பொறுப்பில் விட்டு, என் தந்தை வனம் சென்றார். வயதாகி என் தந்தை காலம் ஆனதும், என் தம்பியை அன்புடன் வளர்த்து வந்தேன்.ஸான்காசி என்னும் இடத்திலிருந்து வந்த வீர்யமுள்ள சுத4ன்வா என்ற அரசன் மிதிலையை ஆக்ரமித்து, சைவமான வில்லையும், என் மகளான சீதையையும் தனக்குத் தர வேண்டினான். நான் மறுத்ததால் சண்டை மூண்டது. என்னை நேருக்கு நேர் எதிர்த்து நின்ற சுதன்வாவை நான் அழித்தேன். அவனை அழித்துவிட்டு, சாங்காசி என்ற அந்த இடத்திற்கு, என் தம்பியை அரசனாக நியமித்தேன். மிக்க மகிழ்ச்சியுடன் எங்கள் இரண்டு குமாரிகளையும் தருகிறோம். சீதையை ராமனுக்கும், ஊர்மிளையை லக்ஷ்மணனுக்கும் தருகிறோம். வீர்ய சுல்காவான என் சீதை, தேவ ஸ்த்ரீகளுக்கு சமமானவள். அவளையும் இளையவளான ஊர்மிளையும் சந்தேகமில்லாமல் தருகிறேன். ஒரு தடவைக்கு மூன்று தடவையாக தருவதாகச் சொன்னார். ராம லக்ஷ்மணர்களுக்கு கோதானம் செய்து வையுங்கள். பித்ரு கார்யங்களையும், உங்களுக்கு மங்களம், விவாக காரியங்களையும் செய்வீர்கள். இன்று மகா நக்ஷத்திரம். மூன்றாவது நாள் பால்குனி உத்திரா நக்ஷத்திரம். அன்று விவாகம் நடக்கட்டும். இந்த தானம் ராம, லக்ஷ்மணர்களுக்கு சுகோதயமாக, சுபமான ஆரம்பமாக இருக்கட்டும். ஏ என்றார்.

 

இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், கன்யாதான ப்ரத்ஸ்ரவோ என்ற எழுபத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்) (ஸ்லோகம்-24)

 

அத்தியாயம் 72கோ3தா3ன மங்களம் (கோ3தா3ன மங்களம்-காப்பு கட்டுதல்)

 

ஜனகர்சொல்லி நிறுத்திய பின், விஸ்வாமித்திரரும், வசிஷ்டரும்சேர்ந்தாற் போல சொன்னார்கள். இக்ஷ்வாகு குலமும், விதேஹ குலமும் மிகவும் பெருமை வாய்ந்தது . இரண்டுமே சிறந்த குலங்கள். இவை இரண்டிற்கும் இணையாக வேறு எதுவும் இல்லை. இப்போது சம்பந்தம் செய்து கொள்வதால், தர்மம், ரூபம், செல்வம் சமமாக உள்ள குலங்களின் பெருமை மேலும் ஓங்கும். ராம, லக்ஷ்மணர்களுக்கு, சீதா, ஊர்மிளையை திருமணம் செய்து கொள்வது மிக விசேஷம். நரஸ்ரேஷ்டிரரே, நான் சொல்ல வந்தது என்னவெனில், கவனமாக கேளுங்கள். இளையவனான இந்த குசத்வஜனுக்கு இரண்டு பெண் குழந்தைகள். இருவரும் நல்ல அழகுடையவர்கள். தர்மாத்மாவான இந்த ராஜனின் குமாரிகளை ராஜன், மற்ற இரு ராஜ குமாரர்களுக்கு நாங்கள் வரிக்கிறோம். குமாரன் ப4ரதனுக்கும், சத்ருக்4னனுக்கும் இந்த இரண்டு குமாரிகளையும் தாருங்கள். தசரத2 ராஜனின் இந்த குமாரர்களும் ரூபம், யௌவனம் நிரம்பியவர்கள்.லோகபாலகர்களுக்கு சமமான பராக்ரமமும், தேவர்களுக்கு சமமான ப்ராக்ரமமும் உடையவர்கள். இந்த இருவர் சம்பந்தமும் நிச்சயமாகட்டும்.இக்ஷ்வாகு வம்சம் ஈடு இணையில்லாததாக ஆகட்டும். விஸ்வாமித்திரர் இவ்வாறு சொல்லவும், வசிஷ்டரும் அதை ஆமோதித்தார். ஜனகர் மிக்க மகிழ்ச்சியோடு அஞ்சலி செய்தவாறு சொன்னார் என் குலம் பாக்கியம் செய்தது. நீங்களாகவே வந்து இந்த சம்பந்தத்தையும் கட்டளையிடுவது போல சொல்கிறீர்கள். அப்படியே ஆகட்டும். உங்களுக்கு மங்களம். குசத்வஜனுடைய இந்த இரண்டு குழந்தைகளும், பரத, சத்ருக்னர்களுக்கு பத்னிகளாக ஆகட்டும். ஒரே நாளில் நான்கு ராஜ குமாரிகளையும், நான்கு ராஜ குமாரர்களும் பாணிக்ரஹணம் செய்து கொள்ளட்டும். மகாமுனிவரே, பால்குனி மாதத்து உத்தரா நக்ஷத்திரத்தில், அறிஞர்கள் விவாகம் செய்வதை உயர்வாக சொல்லிஇருக்கிறார்கள். அன்று ப4கன் ப்ரஜாபதியாக இருக்கிறான். இவ்வாறு சொல்லி இரண்டு முனிவர்களையும் பார்த்து ஜனக ராஜா எனக்கு மிகவும் அனுக்ரஹம் செய்துள்ளீர்கள். இன்று முதல் நானும் தங்கள் சிஷ்யனே. இந்த உயர்ந்த ஆசனங்களில் அமருங்கள். தசரத ராஜாவுக்கு இந்த ஊரும், எனக்கு அயோத்தியும் இனி ஒன்றே. உங்கள் ப்ரபுத்துவத்திற்கு சந்தேகமேயில்லை. நீங்கள் இங்கும் உங்கள் அதிகாரத்தைச் செலுத்தலாம். – ஜனகர் சொல்லி நிறுத்தியதும், தசரதர், அவர்கள் இருவரையும் பார்த்து, மிதிலா தேசத்து சகோதரர்களே, நீங்கள் இருவருமே, நல்ல குணவான்கள். ரிஷிகளும், எங்களுடன் வந்த அரச சமூகமும் நன்றாக உபசரிக்கப் பட்டனர். ஸ்வஸ்தி உண்டாகட்டும். நான் என் இருப்பிடம் செல்கிறேன். செய்ய வேண்டியசிரார்த காரியங்களைச் செய்கிறேன், என்று சொல்லி எழுந்தார். அரசரிடம் விடை பெற்றுக்கொண்டு, முனிவர்கள் இருவரும் உடன் வர வேகமாக சென்றார். தன் இருப்பிடம் சென்று சிரார்தம் செய்து, விடியற்காலையில் சீக்கிரம் எழுந்து கோதான மங்களம் செய்வித்தார். நராதிபனான தசரதன், ஒவ்வொரு ப்ராம்மணனுக்கும்நூறாயிரம் பசுக்களைக் கொடுத்தார். ஒவ்வொருவருக்கும், தன் புத்திரர்களை உத்தேசித்து, தானங்கள் கொடுத்தார். சுவர்ண சிருங்கம் (கொம்பு) உடையவை, நிறைந்த கன்றுகளுடன் கூடிய பசுக்கள், ஏராளமாக பால் கறக்கக் கூடியவைகளாக நான்கு முறை நூறாயிரம் பசுக்களைத் தானமாக கொடுத்தார். மேலும் பல செல்வங்கள், ப்ராம்மணர் கூட்டத்திற்கு, தன் புத்திரர்களின் நலனை உத்தேசித்து கொடுத்தார் இந்த கோதான மங்களம் செய்து முடித்து, சௌம்யமாக ப்ரஜாபதி போல வீற்றிருந்தான்.

 

இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், கோதானமங்களம் என்ற எழுபத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்) (ஸ்லோகம்-25)

 

அத்தியாயம் 73 தசரத2 புத்ரோத்3வாஹ: (தசரதரின் புத்திரர்களின் விவாகம்)

 

கோதானம் செய்த அன்றே, யுதா4ஜித் வந்து சேர்ந்தான். இவன் கேகய ராஜ குமாரன். ப4ரதனுடைய தாய் மாமன்.குசலம் விசாரித்த பின், யுதா4ஜித்கேகயாதிபதியான ராஜா, ஸ்னேகத்துடன் தங்களை நலம் விசாரித்தார். அங்கு எல்லோரும் நலமே. தன் பெண்ணின் குமாரர்களைக் காண விரும்புகிறார் அரசர். அதன் பொருட்டு அயோத்தி வந்தேன். அயோத்தியில், தங்கள் புத்திரர்களின் விவாகத்தின் காரணமாக, நீங்கள் இங்கு வந்திருப்பது தெரிந்தது. அதனால் வேகமாக இங்கு வந்தேன்எனவும்,பிரியமான அதிதிதானே வந்து சேர்ந்ததில் மிகவும் மகிழ்ந்த தசரத ராஜா, மிகச் சிறப்பாக உபசாரங்கள் செய்து வரவேற்றான்.அன்று இரவு புத்திரர்களோடு இருந்துவிட்டு, விடியற்காலை எழுந்து, செய்ய வேண்டிய காரியங்களைக் கவனிக்கலானார். ரிஷிகளைத் தொடர்ந்து யக்ஞ வாடம் வந்து சேர்ந்தார்.

 

சரியான முஹுர்த்தத்தில், சுபமான சமயத்தில், எல்லா வித ஆபரண, அலங்காரங்களையும் தரித்த சகோதரர்களுடன் தானும் கௌதுக மங்களம் செய்து கொண்டவராக, மகரிஷிகள் உடன் வர, வசிஷ்டரைத் தொடர்ந்து ராமர் தந்தையான தசரதர் இருக்கும் இடம் வந்து சேர்ந்தார். வசிஷ்டர் முன் சென்று ஜனக ராஜாவிடம் தசரத ராஜா கௌதுக மங்களங்கள் செய்து புத்திரர்களை அழைத்துக் கொண்டு, நீங்கள் தானம் செய்வதை எதிர் நோக்கி நிற்கிறார் என்று சொல்லி, தானம் செய்பவரும், வாங்குபவரும் எல்லா விதத்திலும்செல்வம் முதலிய சுகங்கள் நிரம்பப் பெற்றவர்களாக விளங்குகிறார்கள். உன் தர்ம விதிப்படி விவாகம் செய்வாய் என்று அனுமதி அளிக்க, ஜனகர் பதில் சொன்னார். யார் என்னை தடுக்கிறார்கள்? யாருடைய கட்டளையை எதிர் பார்க்க வேண்டும்? தன் வீட்டில் என்ன விசாரம்? இது எப்படி என் ராஜ்யமோ அப்படியே தங்களுடையதும் ஆகும். என் குமாரிகளும், கௌதுக மங்களம் செய்யப்பட்டவர்களாக, வேதி மூலம் வந்து சேர்ந்து விட்டார்கள். உங்களைத்தான் எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம். எதற்காக கால தாமதம் செய்ய வேண்டும்? நிர்விக்4னமாக மேற்கொண்டு ஆக வேண்டியதைக் கவனிப்போம். என்று ஜனகர் சொல்லவும், ரிஷி கணங்கள் கூட தன் புத்திரர்களையும்உள்ளே அழைத்துச் சென்றார். பிறகு விதேக ராஜா வசிஷ்டரிடம் சொன்னார். லோக ராமனான ராமனின் விவாக காரியங்களை நீங்கள் ஏற்றுக்கொண்டு நடத்துங்கள், எனவும், அப்படியே ஆகட்டும் என்று வசிஷ்டரும், விச்வாமித்திரரையும், சதானந்தரையும் உடன் அழைத்துக் கொண்டு வேதியை கந்த புஷ்பங்களால் அலங்கரித்து, நீர்முதலியவைகளை கொண்டு முறைப்படி வேதியை தயார் செய்து, சுவர்ணபாலிகைகளும், துவாரம் உள்ள கும்பம்,முளை கட்டிய பயிர்களுடனும், முளை வந்த பயிர்கள் உள்ள பாத்திரங்கள், தூ4ப பாத்திரங்கள் தூ4பத்துடனும், சங்க பாத்திரம்,அர்க்யம் நிரம்பிய பாத்திரத்தில் கரண்டிகள், பொரி நிரம்பிய பாத்திரங்கள்,நன்றாக தயாரிக்கப்பட்ட அக்ஷதைகள், இவைகளுடன் தர்ப்பங்களை சமமாக பரப்பி மந்திரங்கள் சொல்லி, வேதியில் அக்னியை வளர்த்து, முறைப்படி அக்னியில் ஹோமம் செய்தார், வசிஷ்ட மகா முனிவர். பிறகு எல்லாவிதமான ஆபரணங்களையும் அணிவித்து, சர்வாலங்கார பூஷிதையாக சீதையை அழைத்து வந்து, ராகவனான ராமனுக்கு எதிரில், அக்னிக்கு முன்னால் நிறுத்தி, ஜனக ராஜா சொன்னார். இயம் சீதா மம சுதா, சஹத4ர்ம சரீ தவ – இந்த சீதை , என் மகள், உன் சகதர்மிணியாக இருப்பாள். உனக்கு மங்களம் உண்டாகட்டும். இவளை ஏற்றுக் கொள். இவள் கைகளை உன் கைகளால் பற்றிக் கொள் என்று சொல்லி, பதிவிரதையாக, நல்ல அதிர்ஷ்டம் நிரம்பியவளாக, எப்போதும் உன் நிழல் போல உன்னையே அனுசரித்து வாழ்வாள் என்று சொல்லி, மந்திரம் சொல்லி பவித்திரமான ஜலத்தை விட்டார். சாது, சாது என்று தேவர்களும், ரிஷிகளும் அந்த சமயம் சொன்னார்கள். தேவ துந்துபி கோஷமும் முழங்க, பூ மாரி பொழிந்தது. இவ்வாறு மந்திர ஜலம் விட்டு, சீதையை கொடுத்துவிட்டு, ஜனக ராஜா மிகவும் மகிழ்ச்சியுடன், லக்ஷ்மணா வா, உனக்கு மங்களம். ஊர்மிளாவை ஏற்றுக் கொள். கைகளைப் பிடித்துக் கொள். தாமதம் செய்யாதே என்றார்.பிறகு பரதனைப் பார்த்து பரதா, மாண்டவியின் கைகளை பற்றுவாயாக, என்றுசொல்லி, மாண்டவி என்ற ராஜ குமாரியை அவனுக்கு கொடுத்து, சத்ருக்னனை அழைத்து ஜனகேச்வரரான ராஜா சொல்வார், ஸ்ருதகீர்த்தி என்ற இவள் கைகளைப் பற்றி ஏற்றுக் கொள். சத்ருக்னா, என்று சொல்லி அவன் கையில் கொடுத்தார். இவ்வாறு நீங்கள் எல்லோரும் சௌக்யமாக, எல்லோரும் நல்ல சரித்திரமும், விரதமும் உடையவர்களாக, காகுத்ஸர்களே, பத்னிகளுடன் நீடுழி வாழ வேண்டும் என்று ஆசிர்வதித்தார். கால தாமதம் செய்ய வேண்டாம் என்று ஜனகர் சொல்ல, எல்லோரும் அவரவர் பத்னிகளை கைபற்றி, அக்னியை வலம் வந்து, வேதியையும் அரசனையும் பிரதக்ஷிணம் செய்து, ரிஷிகளையும்மனைவிகளுடன் வணங்கி, சாஸ்திரத்தில் சொல்லியுள்ளபடி, நியமம், மற்ற நியதிகளுடன் விவாகம் செய்து கொண்டனர். அந்தரிக்ஷத்தில் இருந்து, இந்த காகுத்ஸ குமாரர்கள் லலிதமான குமாரிகளை (மென்மையான) பாணிக்ரஹணம் செய்து கொண்ட சமயம், புஷ்ப மாரி பொழிந்தது. திவ்யமான துந்துபி வாத்யமும், கீதங்கள், வாத்ய ஸ்வரங்களுடன் கூட அப்சர ஸ்திரீகள் நடனமாடினர். கந்தர்வர்களும், கலம் என்ற பாட்டை பாடினர். ரகு முக்யர்களான குமாரர்களின் விவாகத்தில் அவர்கள் அத்புதமாக பாடினர். இவ்வாறுஎங்கும்கோலாகலமாகநிறைந்து இருக்கும் பொழுது, மங்கள வாத்யங்கள் முழங்க, மூன்று விதமான அக்னியை வலம் வந்து, புது மனைவிகளுடன்,ஔபகார்யம் என்ற ஹோமத்தை பத்னிகளுடன் செய்தனர். அரசனும் பந்துக்களுடனும், ரிஷிகளுடனும் கலந்து கொண்டான்.

 

(இது வரை, வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான, ஸ்ரீமத் ராமாயணத்தின், இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், தசரத புத்ரோத்வாஹ: என்ற எழுபத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.) (ஸ்லோகம்-41)

 

அத்தியாயம் 74ஜாமத3க்னி அபி4யோஹ: (ஜமதக்னி மகன் வந்து எதிர்த்தல்)

 

அன்று இரவு தங்கியிருந்து விட்டு விஸ்வாமித்திர முனிவர் இரண்டு அரசர்களிடமும் விடை பெற்றுக் கொண்டு வடக்கு திசை நோக்கிச் சென்றார். குமாரர்களை நன்கு ஆசிர்வாதம் செய்து விட்டு விஸ்வாமித்திரர் சென்றபின், தசரத ராஜா மிதிலாதிபதியான விதேஹரிடம் விடை பெற்றுக் கொண்டு தங்கள் ஊர் திரும்பிச் செல்ல கிளம்பினார். அவரைஉடன் வந்து வழியனுப்பஜனகர் வந்தார். கன்யா தனம் என்றுநிறைய கொடுத்தார். நூறாயிரம் பசுக்களை, மற்றும் பலவற்றை, கம்பளங்களையும், புது பட்டு வஸ்திரங்களையும், யானை, குதிரை, ரத, பதாதி இவைகளை நல்ல அலங்காரத்துடன் கொடுத்தார். உத்தமமான தாசிகளை உடன் அனுப்பினார். சுவர்ணம், தங்கம், முத்து, பவளம் என்று கன்யா தனமும் கொடுத்து அரசரை வழியனுப்பிவிட்டு, மிதிலை அரசன் தன் வீடு திரும்பினார். சேனை வீரர்கள் நாலாபுறமும் புடை சூழ, மந்திரிகளும் ரிஷிகளும் உடன் வர, குமாரர்களுடன் கிளம்பினார் அயோத்யா அரசன். கிளம்பிச் செல்லும் அந்த அரசரை பக்ஷிகள் கோரமாக சத்தமிட்டுக் கொண்டு ஏதோ எச்சரித்தன. மிருகங்கள் பூமியில் பிரதக்ஷிணமாக ஓடிச் சென்றன.இவைகளைப் பார்த்து, ராஜ சார்தூலனான தசரதன்,வசிஷ்டரை கேட்டார். பக்ஷிகள்இனிமையின்றி கோரமாக கத்துகின்றன.பூமியில் மிருகங்களும் பிரதக்ஷிணமாக சுற்றுகின்றன. இது என்ன அபசகுனம்? என் மனம் வருந்துகிறதே. தசரத ராஜாவின் இந்த கவலையை நீக்கும் விதமாக வசிஷ்டர் பதில் சொன்னார் -அரசனே, கேள். இதன் பலன், ஏதோ ஒரு விபரீதம் வருகிறது என்று பக்ஷிகள் சொல்லுகின்றன. அந்த ஆபத்து நீங்கி விடும் பயப்படாதே என்று மிருகங்கள் சொல்லுகின்றன.  இவ்வாறு பேசிக் கொண்டிருக்கும் போதே, பலமாக காற்று வீசியது. பூமியை நடுங்க வைத்துக் கொண்டு, மரங்களை கீழே தள்ளிக் கொண்டும், சூரியனை புகையில் மறைத்தவாறு, திசை எதுவென்றே தெரியாதபடி ஒரே தூசியினால் அந்த இடம் என்ன, ஏது, எதனுடைய பலம் என்று எதுவுமேதெரியாமல் அமர்க்களமாக ஆயிற்று. வசிஷ்டரும், மற்ற ரிஷிகளும், அரசனும், அரசகுமாரர்களும் தவிர மற்றசேதனங்கள் நினைவிழந்தன போலாயிற்று.அந்த சேனை தூசியினால் மறைக்கப் பட்டு, அந்தகாரம் சூழ்ந்தது. ஜடா மண்டலங்களை தரித்தபடி, பயங்கரமான வடிவுடன், ஜாமதக்னியான பா4ர்கவர், (க்ஷத்திரிய) ராஜ, ராஜாக்களை அழிப்பவர். அசைக்க முடியாத கைலாச மலை போலவும், தாங்க முடியாத காலாக்னி போலவும், தன் தேஜஸினால், கொழுந்து விட்டெரியும் நெருப்பு போல, கண்ணால் பார்க்க முடியாதபடி, சாதாரண ஜனங்களின் கண்ணுக்கு புலப்படாதவராக, தோளில்பரசுவைத் தாங்கியவராக, மின்னல் கூட்டம் போன்ற வில்லையும் அம்பையும் தாங்கிக் கொண்டு, திரிபுரத்தை அழிக்கச் சென்றபரமசிவன் போன்ற தோற்றத்துடன், வந்த அவரைப் பார்த்து வசிஷ்டர் முதலானோர் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். தந்தையைக் கொன்றதால் கோபம் கொண்டு க்ஷத்திரியர்களை அழித்து வந்த இந்த பார்கவர்,கோபம் தணிந்து, தன் ஜ்வரம் தணிந்தவரானார். மறுபடியும்க்ஷத்திரியர்களை நிர்மூலம் செய்ய விரும்புகின்றாரா என்ன?இவ்வாறு சொன்னாலும் அர்க்யம் எடுத்துக் கொண்டு பார்கவரின் முன்னால் சென்று, ராம, ராம என்று மதுரமாக அழைத்தார்கள் ரிஷிகள் கொடுத்ததாலும், அவர்கள் உபசாரத்தை அங்கீகரிக்க வேண்டியும், அர்க்யத்தை ஏற்றுக் கொண்டாலும், தசரத ராமனைப் பார்த்து கடுமையாக பேச ஆரம்பித்தார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், ஜாமதக்3னி அபி4யாயோ என்ற எழுபத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்) (ஸ்லோகம்-25)

 

அத்தியாயம் 75 வைஷ்ணவ த4னு: ப்ரசம்ச: (வைஷ்ணவ வில்லின் பெருமை)

 

தாசரதியான ராமா,, உன் வீர்யத்தைப் பற்றி நிறைய கேள்விப் பட்டிருக்கிறோம். வில்லை உடைத்ததாக முழு விவரமும் என் செவிக்கு வந்து சேர்ந்தது. வில்லை உடைத்தது அத்புதமே.என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. மற்றொரு சுபமான வில்லையும் எடுத்துக் கொண்டு உன்னை பார்க்க வந்தேன். இதைப் பார். பயங்கரமானது.ஜாமதக்னியான என் வில்.இதில் நாணைப் பூட்டு. உன் பலத்தை எனக்குக் காட்டு. இந்த வில்லில் நீ நாண் பூட்டுவதைக் கண்டு நான் உன் பலத்தை எடை போடுவேன். அதன் பின் த்வந்த யுத்தம் செய்வோம். எனக்கு வீரர்களைப் பிடிக்கும். அதனால் உன் வீர்யத்தைக் கண்டு சிலாகிக்கிறேன். அவருடைய இந்த வார்த்தைகளைக் கேட்டு தசரத ராஜா நடுங்கிவிட்டார். முகம் வாடி, தீனமாக, கை கூப்பியவாறு வேண்டினார். க்ஷத்திரியர்களை கோபித்து எதிர்த்து வந்த நீங்கள் சாந்தம் ஆனீர்கள். தற்சமயம், உத்தமமான பிராம்மணராக, புகழோடு விளங்குகிறீர்கள். என் குழந்தைகள் பா3லர்கள். இவர்களுக்கு அபயம் அளியுங்கள். பார்கவ குலத்தில் பிறந்தவர், தங்களுடைய அத்யயனம், விரதம் இவற்றில் ஈடுபாட்டுடன், உலகத்திலிருந்து ஒதுங்கி இருப்பவர்கள். சஹஸ்ராக்ஷனுக்கு பிரதிக்ஞை செய்ததால், ஆயுதத்தை கை விட்டீர்கள். இதன் பின் தர்மத்தில் சிந்தனையோடு, காஸ்யபருக்கு பூமியைக் கொடுத்து விட்டு, மகேந்திர மலையில் வாசம் செய்து வருகிறீர்கள். மகாமுனியே, என் சர்வ நாசத்திற்கு என்று வந்தீர்களா? ஒரு ராமனை நீங்கள் அழித்தால் நாங்கள் யாருமே உயிருடன் இருக்க மாட்டோம். இவ்வாறுதசரதர் புலம்புவதைக் கேட்டு, ப்ரதாபம் மிக்கவரான ஜாமதக்னி, அவரை ஒரேயடியாக புறக்கணித்து விட்டு, ராமனிடமே பேச்சுக் கொடுத்தார். இவை இரண்டு வில். திவ்யமானவை. உலகப் புகழ் பெற்றவை. அழுத்தமாகவும், பலமுள்ளதாகவும் செய்யப் பட்ட சிறந்த வில் இவை. தேவர்கள் கார்யத்திற்காக விஸ்வகர்மாவினால் செய்யப்பட்டது. ஒன்று த்ரயம்ப3கனுக்கு, யுத்தம் செய்ய சென்றபோது, திரிபுரத்தை அழித்த சமயம், கொடுத்தார்கள். அதை நீ உடைத்தாய். சுரர்கள் சேர்ந்து, மற்றொன்றை விஷ்ணுவிற்கு கொடுத்தார்கள். இது வைஷ்ணவ வில். ரௌத்ர தனுஷ், இதற்கு சமமானதே. அதனால் தேவதைகள் எல்லோருமாக பிதாமகரைக் கேட்டார்கள். சிதிக் கண்டனான சிவ பெருமானுக்கும், விஷ்ணுவுக்கும் இடையில் பலம் யாருக்கு அதிகம் என்று தெரிந்து கொள்ள விரும்புவதாக சொன்னார்கள். இவர்களூடைய அபிப்பிராயத்தை அறிந்து கொண்ட பிதாமகர், இவர்கள் இடையில் விரோதத்தைக் கிளப்பி விட்டார். இதன் காரனமாக பயங்கரமான யுத்தம் நடந்தது. இப்போது நினைத்தாலும் மயிர் கூச்செரிகிறது. பரஸ்பரம் வெற்றி பெற வேண்டும் என்று விஷ்ணுவும், சிதிகண்டரும்மோதிக் கொண்டனர். அப்பொழுது, உயர்ந்த பராக்ரமம் உடைய சைவமான வில், கொட்டாவி விடுவது போல சத்தம் செய்தது. அந்த ஹும் காரத்தால்,முக்கண்ணன் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றார். தேவர்கள் ஓடி வந்தனர். ரிஷிகளும், சாரணர்களும் இருவரையும் சாந்தமடைய வேண்டினர். விஷ்ணு பராக்ரமத்தால், சைவ வில் சத்தம் செய்தது என்றதால், தேவர்கள் விஷ்ணுவை பெரியவராக மதித்தனர். ருத்ரன் கோபம் கொண்டு அந்த வில்லை விதேஹ ராஜாவான தேவ ரதன் என்ற ராஜரிஷியிடம் கொடுத்து விட்டார்.அம்புகள் எல்லாவற்றையும் சேர்த்தே கொடுத்தார். ராமா, இது வைஷ்ணவ வில். எதிரிகளை அடியோடு அழிக்கக் கூடியது. பார்கவரான ரிசீகரிடம் கொடுத்து விஷ்ணு பாதுகாப்பாக வைத்திருக்கச் சொன்னார். தன் மகனான, என் தந்தையிடம், அவருடைய அபரிமிதமான பராக்ரமத்தைப் பார்த்து, ரிசீகர் இதை அவரிடம் கொடுத்தார். என் தந்தை ஜமதக்னி, சஸ்திரங்களைத் துறந்து தவத்தில் ஈடுபட்டு விட்ட சமயம், புத்தியில்லாமல், கார்தவிர்யார்ஜுனன், அவரைக் கொன்று விட்டான். கடுமையான, நம்ப முடியாத இந்த செயலால் என் தந்தை இறந்தது எனக்கு தாங்க முடியாத கோபத்தை உண்டாக்கியது. பல தடவை, க்ஷத்திரியர்களை அடியோடு அழித்து விடுவதாக கிளம்பினேன். பல க்ஷத்திரியர்களை அழித்து, நிலத்தை காஸ்யபருக்கு கொடுத்து விட்டேன், யாக முடிவில் தக்ஷிணையாக. இதன் பின் மகேந்திர மலைக்குச் சென்று தவம் செய்து வருகிறேன். இந்த வைஷ்ணவ வில் என் முன்னோர்களுடையது. க்ஷத்திரியனுடைய தர்மத்தைக் காப்பாற்றும் விதமாக இதை பிடித்துக் கொள். உத்தமமான இந்த தனுசை ஏற்று, இதில் அம்பை பூட்டு. இந்த வில் எதிரியை அழிக்ககூடியது, இதை வளைத்து நாண் ஏற்ற முடியுமானால் செய்து காட்டு. அதன் பின் நாம் இருவரும் த்வந்த யுத்தம் செய்வோம் என்றார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், வைஷ்ணவ தனு:ப்ரசம்ச: என்ற எழுபத்துஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்) (ஸ்லோகம்-28)

 

அத்தியாயம் 76ஜாமத3க்3ன்ய ப்ரத்ஷ்டம்ப4: (ஜமதக்னி புத்திரரை அடக்குதல் )

 

ஜாமதக்னியின் அந்த வார்த்தைகளைக் கேட்டு, தாசரதியான ராமன், பா4ர்கவரே, நீங்கள் தங்கள் தந்தையின் பொருட்டு செய்த இந்த செயல்களை நானும் கேள்விப் பட்டிருக்கிறேன்.என் பலத்தை குறைவாக எடை போட வேண்டாம். இதோ என் பராக்ரமத்தை காட்டுகிறேன், பாருங்கள் என்று சொல்லி, ராமன் பார்கவரின் (ஸராஸனம்) வில்லை வாங்கி, அதில் அம்பையும் பூட்டி சுலபமாக வில்லை நிமிர்த்தி அதை பிரயோகிக்க சித்தமாக வைத்துக் கொண்டார். ஜாமதக்னியைப் பார்த்து கோபத்துடன்,ப்ராம்மணர் என்பதால் என் மதிப்புக்கு உரியவர். விச்வாமித்திரர் சொன்னதன் பேரிலும் உம்மை மதிக்கிறேன்.உங்கள் உயிரை பறிக்கும் அம்பை இப்பொழுது நான் பிரயோகிக்கப் போவதில்லை. நீங்கள் விரும்பினால் தவத்தால், தவ பலத்தால் சம்பாதித்த உங்கள் பாத கதியை, ஈடு இணையில்லாத லோகங்களை அழிக்கிறேன். இந்த விஷ்ணுவின் திவ்யமான சரம் (அம்பு) எதிரியை அழிக்க கூடியது. வீணாகாது. தன் வீர்யத்தால் பலத்தையும், கர்வத்தையும் அடக்கக்கூடிய இந்த அம்புக்கு, இலக்கு வேண்டும். இவ்வாறு சொல்லி, வில்லைத் தாங்கியபடி நிற்கும், தசரத ராமனைக் காண ரிஷி கணங்களுடன், ப்ரும்மாவும் மற்ற தேவர்களும் வந்து சேர்ந்தனர். கந்தர்வர்களும், அப்சர, சித்த, சாரணர்களும், யக்ஷ, ராக்ஷஸ, நாகர்களும், அத்புதமான இந்த காட்சியைக் காணக் கூடி விட்டனர்.வில்லை கையில் ஏந்தி, இலக்கு நோக்கி ராமர் காத்திருக்கும் பொழுது, உலகமே ஜடமாகி விட்டது. வீர்யம் இழந்தவராக ஜாமதக்னி, தசரத ராமரைப் பார்த்தார். களையிழந்தவராக, ஜாமதக்னி, கமல பத்ராக்ஷனான ராமரிடம், மெதுவாக, மிக மெதுவாக சொன்னார். காஸ்யபருக்கு நான் நிலத்தை கொடுத்த பொழுது, அந்த நிலத்தில் நான் வசிக்க கூடாது என்று காஸ்யபர் கேட்டுக் கொண்டார். அதனால் நான் குரு வசனத்தை ஏற்று, இரவில் பூமியில் தங்குவதில்லை. காஸ்யபருக்கு என்று இந்த பூமியை பிரதிக்ஞை செய்து கொடுத்த பின், இந்த கதியை நீ அடிக்க அனுமதிக்க முடியாது. ராமா, மனோ வேகத்தில் நான் மகேந்திர மலை போய் சேருவேன். இணையில்லாத லோகங்கள் என் தவ வலிமையால் ஜயிக்கப் பட்டன. அவைகளின் மேல் உன் அம்பை விடு தாமதம் வேண்டாம். நான் உன்னை அறிவேன். உன் கை ஸ்பர்சத்தால், இந்த வில் பாவனம் அடைந்தது. இதோ தேவர்கள் கூட்டம் பார்த்துக் கொண்டு நிற்கிறது. ஈடு இணையில்லாத உன் செயலைக் கண்டு பிரமித்து, யுத்தத்தில் எதிர்க்க முடியாத உன் பலத்தை அறிந்து வியப்புடன் நிற்கின்றனர். இதனால் எனக்கு ஒரு தலை குனிவும் இல்லை. த்ரிலோக நாதனான உன்னால் நான் தோற்கடிக்கப்பட்டேன். இந்த சிறந்த அம்பை, விடு. நல்ல விரதங்கள் உடையவனே, நீ அம்பை விட்டவுடன் நான் மகேந்திர மலை செல்கிறேன். ஜாமதக்னி சொன்னபடியே, ராமர் வில்லை இழுத்து அம்பை விட்டார். அது தான் சம்பாதித்து சேர்த்து வைத்த தவ லோகத்தை அழித்ததை பார்த்த பின் ஜாமதக்னி மகேந்திர மலை சென்றார். நால் திசைகளில் இருந்தும் தேவர்கள் ராமரை புகழ்ந்தனர்.

 

தாசரதியான ராமரை, ஜாமத்க்னியான ராமர் புகழ்ந்து, பிரதக்ஷிணம் செய்து தன் வழி சென்றார்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், ஜாமத3க்3ன்ய ப்ரதிஷ்டம்ப4: என்ற எழுபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்) (ஸ்லோகம்-24)

 

அத்தியாயம் 77 அயோத்யா பிரவேசம்(அயோத்தியில் பிரவேசித்தல்)

 

ஜாமதக்னி ராமர் சாந்தமடைந்து சென்றபின், தாசரதியான ராமர், வில்லை வருணனிடம் கொடுத்து, அம்புகளையும் கொடுத்து, வசிஷ்டரையும் மற்ற முனிவர்களையும் வணங்கி, தந்தை நிலை குலைந்து கிடப்பதைக் கண்டு அவரிடம் சென்றார். ஜாமதக்னி ராமர் போய் வெகு நேரமாயிற்று. நால் வகை சேனைகளும் கிளம்புங்கள். அயோத்யா செல்வோம்.தசரதர், மகன் சொன்னதைக் கேட்டு மனம்  தெளிந்தவராக, அவனை ஆலிங்கனம் செய்து,தோளில் தாங்கி,உச்சிமுகர்ந்து,(பரசு) ராமர் போய்விட்டார் என்று அறிந்து சந்தோஷமடைந்து,தன் மகனான ராமர் திரும்ப வந்து பிறந்ததாகவே எண்ணினார். (பிழைத்தது புனர்ஜன்மம் என்பதாக). சேனையை ஊர் நோக்கி செல்ல பணித்து விட்டு, சீக்கிரமே ஊர் வந்து சேர்ந்தனர். கொடிகளும் தோரணங்களும் அழகாக அலங்கரிக்க, மங்கல வாத்யங்கள் முழங்க, நீர்   தெளித்து சுத்தமான ராஜ வீதியில், அழகாக பூக்களை இறைத்து வாசனை மிகுந்ததாய், ராஜ பிரவேசத்திற்கு உகந்ததாய், ஊர் ஜனங்கள் சுகமாக, மங்கள வாத்யங்களை வாசித்துக் கொண்டு நிறைந்திருக்கும் தன் நகரத்தில் அரசன் பிரவேசித்தான். எதிர் கொண்டழைக்க வந்த ஜனங்கள், தாங்களும் நன்கு அலங்கரித்துக் கொண்டு, பிராம்மணர்களும், மற்றவர்களும் புடை சூழ,புத்திரர்களுடனும், அவர்கள் பத்தினிகளுடனும், புகழ் வாய்ந்த தன் க்ருஹத்தில் , தனக்கு பிடித்தமானதும், இமயமலை போன்று உயர்ந்ததுமான வீட்டில் நுழைந்தான். மிகவும் சந்தோஷமாக, தன் வீட்டில் இருந்த அரசன், கௌசல்யா, சுமித்ரா, கைகேயி முதலியவர்கள் மருமகள்கள் நால்வரையும் வரவேற்க, மற்ற ராஜ மகிஷிகள், லக்ஷ்மிகரமான சீதையையும், புகழ் வாய்ந்த ஊர்மிளையையும், குசத்வஜ புத்திரிகள் இருவரையும் வரவேற்று அழைத்துச் சென்றனர். நல்ல பட்டாடையுடுத்தி சுபமான சம்பாஷனைகளாலும், அரண்மனை சோபை பெற்று விளங்கியது. தேவதைகள் இருந்த பூஜையறையில் பூஜை செய்தனர். வணங்க வேண்டியவர்களை வணங்கி, எல்லா ராஜ குமாரிகளும், குபே3ர பவனம் போன்ற தங்கள் தங்கள் மாளிகைக்கு வந்து, பிராம்மணோத்தமர்களை, பசு, தன, தான்யங்களால் திருப்தி செய்து, இரவில் கணவன்மார்களோடு சுகமாக இருந்தனர். குமாரர்களும் மகாத்மாக்களாக, தங்கள் ஒப்புவமையில்லாத வீர்யத்தால் புவியில் புகழ் பெற்றவர்களாக, பத்னிகளுடன் மகிழ்ச்சியாக இருந்தனர். அஸ்த்ர, சஸ்த்ரங்கள் அறிந்தவர்களாக, நிறைந்த செல்வத்துடன், நண்பர்களும், உறவினரும் சூழ, தந்தைக்கு பணிவிடை செய்து கொண்டு சந்தோஷமாக இருந்தனர். அவ்வப்போது, நீதியை அறிந்த பெரியவர்களை அழைத்து, மரியாதையுடன் உபசரித்து மகிழ்வித்துக் கொண்டும் இருந்தனர். சில காலம் சென்றதும், அரசன், கைகேயி புத்திரனான பரதனிடம் சொன்னான். இதோ கேகய ராஜ குமாரன், உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறான். உன் மாமனான யுதாஜித் காத்திருக்கிறான். அவனுடன் போய் வா, எனவும், பரதன், சத்ருக்னனுடன் கிளம்பத் தயார் ஆனான். தாயார்களை வணங்கி, ராமனிடமும், மற்றவர்களிடமும் விடை பெற்றுக் கொண்டு இருவரும் யுதாஜித்துடன் சென்றனர். யுதாஜித்,இருவருடனும் ஊர் போய் சேர்ந்தான். அவன் தந்தை, பரதனின் பாட்டனார், மிகவும் மகிழ்ந்தார். பரதன் சென்றதும், ராமனும், லக்ஷ்மணனும் தேவர்களின் ஒருவனோ எனும்படியான தசரதனை உபசரித்து, மரியாதையுடன் இருந்து வந்தனர். அவர் உத்தரவுப்படி ஊர்க் காரியங்களையும், ஏற்றுச் செய்தனர். ராமன் ஊராருக்கு பிரியமானதையும், ஹிதமானதையும் செய்து வந்தான். தாயார்களுக்கு அவர்களுக்குத் தேவையான பணிவிடைகளைச் செய்து வந்தான். குருவுக்கு வேண்டியதை காலம் அறிந்து செய்தனர். தசரதன் கவலையின்றிநிம்மதியாக இருந்தான்.ராமருடைய சீலத்தால், ஊரில் வசித்த ஜனங்கள், ராமனை சத்ய பராக்ரமன், என்று புகழ்ந்தனர். ஸ்வயம்பூ போன்று குணவானாக இருந்தான். ராமன் சீதையுடன் கூட பல ருதுக்கள் சந்தோஷமாக கழித்தான். மனம் ஒன்றி மனஸ்வினியான அவளும், தன்னை அவனுக்கே சமர்ப்பித்தாள். தந்தையர் செய்து வைத்த திருமணம், என்பதாலேயே சீதை ராமனுக்கு அதிக பிரியமானவள் ஆனாள். குணம், அன்பு, ரூப குணங்கள் இவற்றால், அன்பும் வளர்ந்தது. அவளுக்கு, கணவன் இரு மடங்கு மனதில் வளர்ந்தான். மனதில் புதைந்து கிடக்கும் பாசத்தையும் வார்த்தைகளால்  வெளி யிட்டாள்.விசேஷமாக ஜனகாத்மஜா, ஜனகர் மகள் என்பதால் மைதிலி பிடித்தமானவள் ஆனாள் என்றால், சாக்ஷாத் லக்ஷ்மி தேவி போன்ற உடல் அழகிலும், தேவதைகளுக்கு சமமானவள் என்பதாலும் உள்ளம் கவர்ந்தவளாக ஆனாள். ராஜரிஷி போன்ற ராமன், அந்த அழகிற் சிறந்த பெண்ணான, உத்தமமான ராஜகன்னிகையுடன் சேர்ந்து மிகவும் சோபையுடன் விளங்கினான். அமரேச்வரரான விஷ்ணு ப்ரபு, லக்ஷ்மி தேவியுடன் இருந்தது போல இருந்தான்.

 

(இது வரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், பால காண்டத்தில், அயோத்யா பிரவேசோ என்ற எழுபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்) (ஸ்லோகம்-31)

 

ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் பால காண்டம் முற்றும்

 

 

 

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக