ஸ்ரீமத் ராமாயணம் யுத்த காண்டம் 26 – 40
அத்தியாயம் 26 (433) கபி ப3லாவேக்ஷணம் (வானர படை பலத்தை, (ராவணன்) தானும் காணுதல்)
சாரணனின் அறிவுரை பத்யமானது, நன்மை பயக்க கூடியது. தெளிவாக நிதர்சனமான உண்மையை ப்ரதிபலிப்பதாக இருந்தது. இதைக் கேட்டு ராவணன் பதில் சொன்னான். தேவ, கந்தர்வ, தானவர்கள் எல்லோருமாக சேர்ந்து வந்து என்னுடன் யுத்தம் செய்ய வந்தாலும் கூட நான் பயப்பட மாட்டேன். மூன்று உலகும் என்னை எதிர்த்து நின்றாலும் நான் பயந்து சீதையைத் திருப்பி தர மாட்டேன். சௌம்யனே, நீ மிகவும் பயந்து போயிருக்கிறாய். அந்த வானரங்கள் உன்னை நன்றாக அடித்து துன்புறுத்தியிருக்கின்றன. அதனால் தான் இன்றே சீதையை திருப்பிக் கொடுத்து விடு என்றும், அது தான் நல்லது என்றும் சொல்கிறாய். யார் தான், எந்த சக்களத்தி மகன் தான் என்னை யுத்தத்தில் ஜெயிக்கிறான் பார்க்கலாம் என்று கோபமாக சொல்லி விட்டு ராவணன் தன் மாளிகையின் உச்சிக்கு ஏறினான். தங்க நிறமும், வெண்மையும் கலந்து பூசப் பெற்று, நாலா புறமும் தாள மரங்கள் சூழ இருந்த, அழகிய மாளிகையின் மேல் மாடி வரை ஏறிச் சென்றான். இரண்டு ஒற்றர்களும் உடன் ஏறினர். அங்கிருந்து ராமர் தங்கியிருக்கும் இடத்தையும், வானர வீரர்களுடைய அணி வகுப்பையும் காண விரும்பி மேலே ஏறிய ராவணன் ஆத்திரத்தில் தன்னை மறந்திருந்தான். சமுத்திரத்தையும், மலைகளையும், வனங்களையும் பார்த்தபடி, வானரங்கள் ஆக்ரமித்திருந்த இடத்தை நோக்கினான். பூமியே கண்ணுக்குத் தெரியாதவாறு, கூட்டமாக இருந்த வானரங்களைக் கண்டான். அந்த பகுதியே இந்த வானரங்களால் நிறைந்து காணப்பட்டது. எல்லையில்லாமல் பரந்து கிடந்த கணக்கற்ற வானர வீரர்களின் பெரும் படையைப் பார்த்து ராக்ஷஸ ராஜா சாரணனை வினவினான். இந்த கூட்டத்தில் யார் யார் நல்ல சூரர்கள். நல்ல பலசாலிகள். உற்சாகத்துடன் முன்னால் நின்று போரிடக் கூடியவர்கள் யாவர்? யார் சொல்லி சுக்ரீவன் கேட்பான்? யார் யார் படைத் தலைவர்கள்? இவர்கள் தங்களுக்குள் என்ன பேசிக் கொள்கிறார்கள்? விவரமாகச் சொல்லு. சாரணன் சொல்ல ஆரம்பித்தான். யார் யார் முக்கியமானவர்கள் என்று வரிசைக்கிரமமாகச் சொன்னான். இதோ, பாருங்கள், லங்கையை நோக்கியபடி ஆட்டம் போட்டுக் கொண்டு நிற்கிறானே ஒரு சேனாபதி, இவனுடைய சேனையில் நூறாயிரம் வீரர்கள் இருக்கிறார்கள். இவன் தன் பெரும் குரலில் கோஷம் இட்டாலே, லங்கா நகரம் நடுங்கும், தோரணங்கள் ஆட, ப்ராகாரங்கள் அதிரும். மலைகளும் வனங்களும் கூட கிடு கிடுக்கும். வானர வீரர்களின் தலைவனான சுக்ரீவனின் படையில் நடு நாயகமாக நிற்பவன் நீலன். கைகளைக் கட்டிக் கொண்டு நடந்து வருகிறானே, திடுமென நினைத்துக் கொண்டாற்போல் லங்கையை பார்த்து கத்துகிறானே, அவன் தான் அங்கதன். வாலை சுழற்றித் தரையில் அடிக்கிறான், அந்த ஓசையே இப்படி பயங்கரமாக கேட்கிறது. பெரிய உருவமும், பத்மத்தின் மகரந்தம் போன்ற வண்ணமும், இவனை எங்கிருந்தாலும் காட்டிக் கொடுக்கும். உற்சாகமாக தன் துடைகளைத் தட்டி தன் பெயரைச் சொல்லி, போருக்கு அழைக்கிறான், பாருங்கள். சுக்ரீவன் இவனைத்தான் யுவராஜாவாக நியமித்திருக்கிறான். வாலி புத்திரன் இவன். தந்தைக்கு சமமான பலம் உடையவன். சுக்ரீவனுக்கு பிரியமானவன். இந்திரனுக்கு வருணன் உதவியாக உடன் செல்வது போல, ராகவனுக்கு உதவி செய்ய வந்திருக்கிறான். இதோ இருக்கிறானே, இவன் தான் ஜனகாத்மஜாவை கண்டு கொண்டு பேசி விட்டுப் போய் இருக்கிறான். வேகம் மிகுந்த ஹனுமான். இவனும் ராகவனுடைய நலனில் அக்கறையுடையவன். பல வானர வீரர்கள் கொண்ட படையை முன்னின்று நடத்திச் செல்பவன். நம்மை நோக்கித் தான் முன்னேறி வருகிறான். புதுமையான, யாராலும் அடக்க முடியாத பராக்ரமம் கொண்ட வாலி புத்திரன் அருகில் அவனைப் போலவே, இருக்கிறானே, இவன் தான் சேதுவைக் கட்டி முடித்த நலன். உடலை முறுக்கிக் கொண்டு ஹுங்காரம் செய்தபடி, மகிழ்ச்சி கூக்குரல் இட்டுக் கொண்டு, எழுந்திருப்பதும், அமர்வதுமாக, நிலை கொள்ளாமல் தவிக்கிறார்களே, இந்த வானர வீரர்கள், இவர்களின் கோபமும் அளவிடமுடியாதே. எதற்கும் அடங்கவும் மாட்டார்கள். சண்டர்கள், சண்ட பராக்ரமம் உடையவர்கள். எட்டு நூறாயிரம், பத்து கோடி, நூறு, நூறு கோடி என்று படை வீரர்கள் இவனைத் தொடர்ந்து வருவார்கள். சாதாரணமாக சந்தன மரக் காடுகளில் தென்படுபவர்கள், இவர்களும் தனித் தனியாக தாங்கள் புதுமையாக ஏதாவது செய்து லங்கை போரில் தங்களை வெளிபடுத்திக் கொள்ள ஆவலுடன் வந்து கொண்டிருக்கிறார்கள். வெள்ளி வெளுத்த நிறமும், சபலமான சுபாவமும், இவன் பராக்ரமமும், புத்தியும் மூவுலகிலும் பிரஸித்தம். அடிக்கடி இவனிடம் ஓடி வந்து சந்தேகங்களை நிவிருத்தி செய்து கொண்டு போகிறானே, இவன் முன்பு கோமதி தீரத்தில் வசித்தவன். படை வீரர்களை ஒழுங்காக நிறுத்தி வைத்து ஏற்பாடுகளை செய்யும் சமயம் கூட, ஏதோ சொல்லி அவர்களை மகிழ்ச்சியடைய செய்தபடி இருக்கிறான். ரம்யமான பர்ய என்ற பர்வத வாசி. சங்கோசனன் என்ற மலைத்தொடரில் ஒரு மலை பர்ய. அங்கு ராஜ்யத்தை ஆண்டு வருகிறான். குமுதீ என்ற சேனைத் தலைவன் இவன். இவனிடம் நூறாயிரம், ஆயிரம் வீரர்கள் உண்டு. இவன் நிர்வகிக்கும் படையில் வீரர்கள் இளைஞர்கள், நல்ல உழைப்பாளிகள், வீரர்கள். இவர்களுடைய வால், நீண்டு, தாம்ர வர்ணத்தில், மஞ்சள் நிறமாக, கருத்த, வெண்மையான என்று பல வர்ணங்களில் இருக்கும். கோரமாக சண்டையிடக் கூடியவர்கள். யுத்தம் செய்ய ஆவலுடன் இவர்களும் தயாராக இருக்கிறார்கள். துடிப்புடன், புதுமையாக என்ன செய்யலாம், லங்கையை வீழ்த்த தாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்று துடிக்கிறார்கள். இதோ பாருங்கள், உருவத்தில் நீண்டு சிங்கம் போன்ற அமைப்பும், கேஸரி வர்ணமும், லங்கையை கண்களாலேயே எரித்து விடுபவன் போல பார்த்துக் கொண்டு நிற்கிறானே, அவன் விந்த்யமலைத் தொடரில் க்ருஷ்ணகிரி என்ற அழகிய இடம் அங்கு வசித்து வரும் தலைவனான ரம்போ4 என்ற வானரம். இவனிடமும், நூறு, நூறாயிரம், முன்னூறாயிரம் என்று படை வீரர்கள் இருக்கிறார்கள். இவர்களும் சூரர்கள். சண்ட ப்ரசண்டமாக, முழு மூச்சுடன் போரில் இறங்கக் கூடியவர்கள். தங்கள் தலைவனை நாலா புறமும் சூழ்ந்து கொண்டு உற்சாகமாக வருகிறார்கள், பாருங்கள். மற்றவர்களைப் போலவே இவர்கள் இலக்கும் நம் லங்கையே. இதைத் தாக்க வந்திருக்கிறார்கள். இதோ ஒரு வானரத் தலைவன், அடிக்கடி காதுகளை நிமிர்த்தி, ஹுங்காரம் செய்தபடி இருக்கிறானே, இவனுக்கு ம்ருத்யுவிடமே பயம் இல்லை. அதனால் யுத்தத்தைக் கண்டு அலறி ஓடுபவனும் இல்லை. இன்னொருவன், குறுக்காக பார்த்துக் கொண்டு, ரோஷத்துடன் உடல் நடுங்க, தன் வாலைத் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டு நிற்கிறானே, இவனும் பயம் என்பதே அறியாதவன். வேகமாக செல்லக் கூடியவன். அழகிய சால்வேய மலையில் இருப்பவன். சரப4ன் என்ற பெயருடையவன். இவனுடைய வீரர்கள் விஹாரா என்று அழைக்கப் படுகிறார்கள். ராஜன், இவனிடமும் நூறாயிரம், நாற்பதாயிரம் படை வீரர்கள் உள்ளனர். இவர்கள், ஆகாயத்தை மேகம் மறைப்பது போல, பூமியை மறைத்துக் கொண்டு நிற்கிறார்கள். வானர வீரர்களின் மத்தியில் தேவர்களிடையில் இந்திரன் போல நிற்கிறான். இவன் குரலும் பேரீ வாத்யம் முழங்குவது போல கேட்கிறதே. சாகாமிருகம் (கிளைகளில் வசிப்பவர்கள்) என்று பெயர் பெற்ற இந்த வானர வீரர்களில், யுத்தம் என்று ஆவலுடன் கூடியிருக்கும் சேனையின் நடுவில் தலைவனாக உள்ளவன் பாரியாத்ரம் என்ற மலை வாசி. இவனுடன் யுத்தம் செய்வது யாருக்குமே கஷ்டம்தான். இவன் தான் பனஸன் என்ற வானரத் தலைவன். இவனுடனும், நூறாயிரம், தவிர ஐம்பதாயிரம் வீரர்கள் வருகிறார்கள். இந்த சேனைத் தலைவர்களுக்கும் பொதுவான தலைவன் ஒருவன் இருக்கிறான். தனித் தனியாக உள்ள சேனையை பராமரிக்கும் இந்த சிறிய தலைவர்கள், இவர்களுக்கு மேலதிகாரியான இந்த வீரனிடம் தங்கள் நிலையைப் பற்றி விவரமாகச் சொல்கிறார்கள். சமுத்திரக் கரையில் மற்றொரு பாஸ்கரன் போல நின்று கொண்டு கட்டளை பிறப்பித்துக் கொண்டிருக்கிறானே, அவன்தான் வினதன் என்ற சேனைத்தலைவன். நதிகளுக்குள் உத்தமமான நதியான பர்ணாசா என்ற நதியின் ஜலத்தைக் குடித்து வளர்ந்தார்கள். நூறாயிரம் வீரர்கள் இவனுடன் வருகிறார்கள். தங்களை யுத்தத்திற்கு அழைத்துக் கொண்டிருக்கிறானே, அவன் க்ரோத4னன் என்ற படைத் தலைவன். இந்த படை வீரர்கள் தனித் தனியாகவும் நல்ல பலசாலிகள். ஒன்று சேர்ந்து ஒற்றுமையாக அணி வகுத்து நிற்கிறார்கள். மஞ்சள் நிறத்துடன், நம்மை நெருங்கி வருகிறானே, கோபத்துடன் மற்ற வீரர்களை ஒதுக்கித் தள்ளி விட்டு வருகிறானே, அவன்தான் கவயன் என்பவன். இவனிடமும் நூறாயிரம் வீரர்கள் இருப்பார்கள் என்று நம்பலாம். எழுபது பிரிவுகள்,அதனுள் வீரர்கள் என்று அமைத்திருக்கிறார்கள். இந்த படைத் தலைவர்கள் ஒவ்வொருவரும், தாங்கள் தான் லங்கையை நாசம் செய்ய வேண்டும் என்பது போல உறுதியான நோக்கத்தோடு, போருக்குத் தயாராக நிற்கிறார்கள். இவர்களும் விரும்பிய வண்ணம் தங்கள் உருவத்தை மாற்றிக் கொள்ளக் கூடியவர்கள், பலசாலிகள். வசதிக்காக, தனித் தனியாக பிரித்து நிற்க வைக்கப் பட்டிருந்தாலும், ஒரே குறிக்கோளோடு போரிடத் தயாராக நிற்கிறார்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் கபி ப3லாவேக்ஷணம் என்ற இருபத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 27 (434) ஹராதி வானர பராக்ரமாக்யானம்(ஹரன் முதலிய வானரங்களின் பராக்ரமம் பற்றி வர்ணனை)
ராஜன் மற்றவர்களையும் பற்றிச் சொல்கிறேன், கேளுங்கள் என்று சாரணன், வானர படைத்தலைவர்களைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்த ராவணனிடம் தொடர்ந்தான். இவர்கள் உயிரைத் த்ருணமாக மதித்து போரிட வந்துள்ளார்கள். ராகவனுக்காக உயிரையும் கொடுக்க சித்தமாக வந்திருக்கிறார்கள். தாம்ர வர்ணமோ, பொன் நிறமோ, நீண்ட வால் தான் இவர்களுக்கு அடையாளம். கபில (நாவல்), சிவந்த வர்ணத்தினரும் உண்டு. பயங்கரமான செயல் பாடுடையவர்கள். சேர்ந்து இருக்கும் பொழுது சூரியனுடைய கிரணங்கள் போல விளங்குவார்கள். பூமியில் ஹரனென்ற இந்த படைத்தலைவனோடு, நூற்றுக் கணக்கான, ஆயிரக் கணக்கான வீரர்கள். மரத்துக்கு மரம் தாவி சீக்கிரமே லங்கையை அடைந்து விடத் துடிக்கிறார்கள். இன்னும் பலரையும் வரவழைத்துக் கொள்ள ஏற்பாடு செய்து விட்டுத் தான் வருகிறான். இவனே ராவணனான உங்களை ஜயிக்க கனவு காண்கிறான். இவர்கள் ஹரிராஜனான சுக்ரீவனின் கிங்கரர்கள். நீலனைப் போன்ற பலரும் எதிரில் நிற்கிறார்கள். கடல் கடந்து வந்துள்ள ஏராளமான போர் வீரர்கள், உற்சாகத்துடன், போரில் மடியவும் தயாராக, வந்து நிற்கிறார்கள். கருத்த மேகம் போன்று உருவமும், சத்ய பராக்ரமமும் உடையவர்கள். இதுவரை மலைகளிலும், நதிகளின் கரையிலும் இருந்து லங்கையை நோக்கி வரும் இந்த கரடி கூட்டம் மிகவும் பயங்கரமானது. வேகமாக முன்னேறி வரும் இந்த படையும் தூ4ம்ரன் என்ற படைத் தலைவனின் தலைமையில் வருகிறது. தூம்ரன் என்பவன் பயங்கரமான கண்களும், கொடூரமான தோற்றமும் உடையவனாக இருக்கிறான். நர்மதை நீரைக் குடித்து வளர்ந்தவர்கள், தாங்களே நீருண்ட மேகம் போல காட்சி தருகிறார்கள். ருக்ஷவந்தம் என்ற சிறந்த மலையில் வாசம் செய்தவர்கள். இந்த தூம்ரனுடைய இளைய சகோதரன், மலை போல பெருத்த சரீரத்துடன் சகோதரனுக்கு சமமான சரீரமும், அதை விட அதிகமான பராக்ரமமும் உடையவன். இதோ ஜாம்பவான். அமைதியாக இருப்பது போலத் தெரிகிறது. குரு சேவை செய்து நிறைய கற்றவர். கோபத்துடன் அடித்தால் தாங்க முடியாது. இந்திரனுக்கு நிறைய உதவிகள் செய்தவர். தேவாசுர யுத்தங்களில் நிறைய உதவி செய்து, பல வரங்களையும் பெற்றவர். இந்த வீரர்கள் மலை உச்சி வரை சுலபமாக ஏறி, பெரிய பெரிய மேகம் போன்ற கற்களை அனாயாசமாகத் தூக்கி வீசுவார்கள். இவர்களுக்கு மரண பயம் சிறிதும் இல்லை. கவலையும் இல்லை. ராக்ஷஸர்களுக்கு சமமானவர்கள். பிசாசங்கள் போல தந்திரம் மிக்கவர்கள். இவர்களுடைய சைன்யமும் நிறைய நடமாடுகின்றன. அக்னி போன்ற தேஜஸ் உடையவர்கள். இப்பொழுதே தாண்டி குதிக்க தயாரான நிலையில் நிற்பது போலத் தெரிகிறது. வானர வீரர்கள் நெருங்கி நின்று பேசிக் கொண்டிருக்கிறார்களே, அவன் தான் த3ம்பன் என்ற சேனாபதி. இவன் ஒரு சமயம் பலாத்காரமாக இந்திரனை இழுத்துக் கொண்டு வந்தவன். நின்றால், மலையில் பாதி இருக்கிறான், க்ரதன்- அகத்தனன் என்று பெயர் பெற்றவன். ஒரே எட்டில் மலையுச்சியை அடைந்து விடுவான். நாலு கால் பிராணிகளிடம் இவனைப் போல உருவம் வேறு யாருக்கும் இல்லை. இவன் சன்னாதனன் என்ற வானரங்களின் பிதாமகர். தோல்வியே அறியாதவன். இவனுடைய பலமும், போரில் இந்திரனுக்கு சமமானதே. கந்தர்வ கன்னியிடம் பிறந்தவன். க்ருஷ்ண வர்த்மா என்பவரின் மகன். தேவாசுர யுத்தத்தில், தேவர்கள் சகாயத்திற்காக சென்றவன். ஜம்பூ த்வீபத்தில், உங்கள் சகோதரன் வைஸ்ரவனன் வந்தால் தங்கும் இடம். பர்வதங்களின் அரசன் என்று புகழ் பெற்ற மலை, கின்னரர்கள் வசிக்கும் இடம், நடந்து போக, விளையாட சுகமான இடம், அந்த மலை இவனுடைய இருப்பிடம். (திரு வேங்கட மலை) இவனும், கோடி, ஸஹஸ்ரம் என்று படை வீரர்களோடு வந்து நிற்கிறான். லங்கையை வீழ்த்துவது தன் படை வீரர்களாக இருக்க வேண்டும் என்பது இவனது விருப்பம். இதோ இருப்பவன், ப்ரமாதீ என்ற வானரப் படைத் தலைவன். கங்கை கரையில் யானைக் கூட்டத்தையே கலங்க அடிக்க கூடியவன். முன்பு ஒரு சமயம், யானைகளுக்கும், வானரங்களுக்கும் இடையில் தோன்றிய விரோதத்தை இவன் மறக்கவே இல்லை. குகைகளில் வசித்துக் கொண்டு இவன் தலைமையில் வானரர்கள் யானைகளையும் அவை வசிக்கும் மலைகளையும், மரங்களையும் தாக்கி சண்டை இடுவர். ஹைமவதீ என்ற நதிகளில் முக்கியமாகச் சொல்லப் படுவதுண்டு. வானர சேனைத் தலவர்களுள் இவனும் ஒரு முக்கியமான ஸ்தானம் வகிப்பவன். உசீர பீஜம் என்ற பெரிய மலை. மந்தர மலை போன்று இருக்கும். அதில் வசிக்கிறான். உலகில் தேவலோகத்து இந்திரன் வந்தது போல பெருமை வாய்ந்த அரசனாக விளங்குகிறான். இவனையும் நூறாயிரம், ஆயிரம் வீரர்கள் பின் பற்றுகிறார்கள். எல்லோருமே வீர்யமும், விக்ரமும் அதனால் உண்டாகும் கர்வமும் மிகுந்தவர்கள். இவனையும் வெல்வது கடினமே. புழுதி மண்டலம் மேகம் போல மறைக்க கூட்டமாக வரும் கோ3லாங்கூலம் என்ற இனத்தினர். வெளுத்த முகமும், நல்ல வேகமும் உடைய இவர்கள் தலைவன் க3வாக்ஷன். இவர்களும் லங்கையை நாலாபுறமும் சூழ்ந்து கொண்டு முன்னேறி வருகிறார்கள். லங்கையை தங்கள் பலத்தால் ஜயிக்க வேண்டும் என்று வேகமாக வருகிறார்கள். அதனால் தான் புழுதி மண்டலம் வானளாவ எழுகிறது. இவர்கள் வசிக்கும் இடத்திலும், எப்பொழுதும், மரங்கள் பழங்களும், பூக்களும் நிறைந்து வண்டுகள் மொய்க்க காணப்படும். சூரியனுக்கு இணையான வர்ணமுடைய அனுபர்யா என்ற மலை. இந்த மலையின் விசேஷம் அங்குள்ள மிருகங்களும், பக்ஷிகளும் கூட பள பளவென்ற வண்ணத்துடன் காட்சி தருவார்கள். முனிவர்கள், ரிஷிகள் இந்த இடத்தை விடவே மாட்டார்கள். எல்லா விதமான பழ மரங்களும் இருப்பதால், மாற்றி-மாற்றி ஏதோ ஒரு வித பழம் கிடைத்துக் கொண்டேயிருக்கும். இங்கு கிடைக்கும் தேனும் மிகவும் உயர்ந்தது. இங்கு வசிக்கும் வானரப் படைத் தலவன் தான் கேஸரி என்று புகழ் பெற்ற வீரன். ஆயிரக் கணக்கான மலைகளில் ஆறு காஞ்சன பர்வதம் எனப்படும். அவைகளுக்கு இடையில், ராக்ஷஸர்களுக்கிடையில் நீ உயர்ந்து நிற்பது போல, மலைகளுள் இந்த மலையும் விசேஷ ஸ்தானம் பெற்றது. இங்குள்ளவர், கபில வர்ணத்தினர், வெண்மையானவர், தாம்ர வர்ணத்தினர், தேன் போன்று இளம் பசுமை நிறத்தினர், என்று வானரங்கள் வசிக்கிறார்கள். இவர்கள் நீண்ட நகமும், உறுதியான பற்களும் உடையவர்கள். புலிகள் போல எதிர் கொள்ள முடியாத பலசாலிகள். எல்லோருமே அக்னி போன்று ஜ்வலிக்கக் கூடியவர்கள். போர் முனையில், ஆல கால விஷம் போன்றவர்கள். அடர்ந்த வால் இவர்களுடைய தனித் தன்மை. மதம் பிடித்த யானை போல நடமாடுபவர்கள். பெரிய பெரிய மலை கல் பெயர்ந்து நடப்பது போல நடப்பார்கள். குரலும் இடி முழக்கம் போல இருக்கும். உருண்ட, பழுப்பும் சிவப்பும் கலந்த வர்ண கண்களுடையவர்கள். பயங்கரமான நடையும், குரலும், கொண்டவர்கள். லங்கையை மிதித்து நாசமாக்குவது போல பூமி அதிர நடந்து வருகின்றனர். இதோ நிற்பவன், எப்பொழுதும் ஆதித்யனை உபாசிப்பவன். வெற்றியை விரும்பும் ஜயார்தீ. சதபலி என்று உலகில் பெயர் பெற்றவன். இவனுக்கும் அதே எண்ணம் தான். தன் படைகள் தான் லங்கையை முன்னின்று தாக்கி வெற்றி பெற வேண்டும் என்பதே. தங்கள் பலத்தில் நம்பிக்கையுள்ளவர்கள். ராமனுக்கு பிரியமானதைச் செய்யத் துடிக்கிறார்கள். ராம விரோதியிடம் தயை காட்ட மாட்டார்கள். கஜன், கவாக்ஷன், கவயன், அனலன், நீலன் இவர்கள் ஒவ்வொருவரும், தங்கள் பின்னால் கோடிக் கணக்கான போர் வீரர்களுடன் வந்திருக்கிறார்கள். விந்த்ய மலையிலும், மற்ற இடத்திலும் இன்னும் கணக்கில்லாத வானரங்கள் நம் எண்ணிக்கைக்கு அடங்காத பலர் இருக்கிறார்கள். மகாராஜா, எல்லோருமே மிக உயர்ந்த ப்ரபாவம் உடையவர்கள். மகா சைலம் போன்ற சரீரமும், சாமர்த்யமும் உடையவர்கள். நீண்டு பரவி இருக்கும் இந்த பூமியை க்ஷண நேரத்தில் நாசமாக்கும் சக்தி படைத்தவர்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ஹராதி வானர பராக்ரமம் என்ற இருபத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 28 (435) மைந்தா3தி பராக்ராமாக்2யானம்(மைந்தன் முதலானவர்களின் வலிமை பற்றிய வர்ணனை)
ராவணன் கேட்டதன் பேரில், சாரணன் தனக்குத் தெரிந்த வரை சொல்லி முடித்தவுடன், சுகன் சொல்ல ஆரம்பித்தான். ராஜன், இதோ இங்கு நிற்பவர்களைப் பாருங்கள். மதம் பிடித்த யானை போலவும், கங்கை கரையில் உள்ள ந்யக்ரோத மரம் போலவும், சால மரம் போலவும், பெருத்த சரீரத்தையுடைய இவர்கள் நாம் நெருங்கக் கூட முடியாத பலசாலிகள். தைத்ய தானவர்களுக்கு இணையான பராக்ரமம் உடையவர்கள். இது போல ஆயிரம் கோடி, ஒன்பது, ஐந்து கோடி, சங்க (ஒரு அளவு) ஆயிரம், ப்ருந்த சதம் என்னும் அளவையும் மீறி விடும் வண்ணம் கணக்கில்லாமல் இருக்கிறார்கள். இவர்கள் சுக்ரீவனின் மந்திரிகள். எப்பொழுதும் கிஷ்கிந்தையில் வசித்தவர்கள். இவர்கள் தேவ கந்தர்வர்களிடம் பிறந்தவர்கள். விரும்பிய வண்ணம் தங்கள் உருவை மாற்றிக் கொள்ள வல்லவர்கள். இதோ இரு இளம் வீரர்கள் நிற்பதைப் பாருங்கள். இவ்விருவரும் மைந்த3ன், த்3விவித3ன் என்று பெயர் பெற்றவர்கள். இவர்களுக்கு சமமாக உலகத்தில் வேறு யாருமே இல்லை. இவர்கள் இருவரும் ப்ரும்மாவால் அனுமதி அளிக்கப் பட்டு அமுதத்தைப் பருகியவர்கள். இவர்களும், மற்றவர்களைப் போலவே, தங்கள் படை பலத்தால் லங்கையை பிடித்து விட வேண்டும் என்று விரும்புகிறார்கள். மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள். காட்டு யானை போல நிற்கிறானே, எவன் கோபம் கொண்டால் சமுத்திரத்தைக் கூட வற்றச் செய்து விடுவானோ, அவன் தான் லங்கையை கண்டு சொன்னவன். வைதேஹியை கண்டு கொண்டு சென்றவன். முன்னால் நாம் இவனை சந்தித்து இருக்கிறோம். திரும்ப வந்திருக்கிறான். கேஸரியின் மூத்த மகன், வாதாத்மஜன் என்று பெயர் பெற்றவன். ஹனுமான் என்றும் அழைப்பார்கள். சமுத்திரத்தை தாண்டி குதித்து வந்தவன். இவனும் விரும்பிய வண்ணம் ரூபத்தை எடுத்துக் கொள்ள வல்லவனே. வானர ஸ்ரேஷ்டன். பலமும், ரூபமும் இணைந்து எதிர்க்க முடியாத, தடுக்க முடியாத வேகமும், கதியும் உடையவன். குழந்தையாக இருந்த பொழுதே உதிக்கும் சூரியனைப் பார்த்து, தாகத்துடன் அதை பிடிக்க எண்ணி, மூன்று யோஜனை தூரம் ஆகாயத்தில் தாவி குதித்து, ஆதித்யனை பிடித்து வருவேன் அதன் பின் என்னை பசி வாட்டாது என்று மனதால் நினைத்தபடி, கிளம்பி விட்டான். தன் பலத்தில் கர்வம், தன்னம்பிக்கை இவற்றுடன் மேலேறி சென்றான். தேவ, கந்தர்வ தானவர்கள் கூட ஆதித்யன் அருகில் செல்ல முடியாது என்பதை அந்த இளம் வயதில் அறிந்திருக்கவில்லை. ஆதித்யனின் தேஜஸால். நெருங்க முடியாமல் உதயன கிரியில் விழுந்து விட்டான். கீழே விழுந்த பொழுது கல்லில் பட்டு கன்னம் ஒரு பக்கமாக நசுங்கி விட்டது, அதிலிருந்து இவன், நீண்ட கன்னங்களை உடையவன் என்ற பொருளில் இந்த வானரன் ஹனுமான் ஆனான். இந்த ஹரி, வானரம், ஆகமங்களை அறிந்தவன், சத்யமாக என்னால், இவனுடைய பலமோ, ரூபமோ, ப்ரபாவமோ வர்ணித்துச் சொல்ல முடியாது. இவனுடைய குறிக்கோளும் தான் ஒருவனாக, லங்கா நகரை முறியடிக்க வேண்டும் என்பதே. இவனால் தான் லங்கா ஜாஜ்வல்யமாக நெருப்பின் ஜ்வாலையால் கொழுந்து விட்டு எரியக் கண்டோம். தாங்களும் மறந்திருக்க முடியாது. இவனது வேலைதான் அது. இவனுக்கு அருகில், ஸ்யாமள வண்ணனாக, பத்மம் போன்ற கண்களுடன், பார்த்தாலே சூரன் என்று தெரியும் வண்ணம் நிற்கிறானே, அவன் தான் இக்ஷ்வாகு வம்சத்தின் அதி ரதன், உலகில் இவன் பெருமையைப் பற்றி அறியாதவர் இல்லை. தர்மத்தை விட்டு அணுவும் பிறளாதவன், தர்மமே இவனை அண்டியிருப்பது போல இருப்பவன். உலகில் இவன் பௌருஷத்தை அறியாதவர் இல்லை. ப்ரும்மாஸ்திரம் முதல் அஸ்த்ர சாஸ்திரத்தோடு, வேதங்களையும் கற்றவன். அறிந்து கொள்ள வேண்டியது அனைத்தையும் நன்றாகவே அறிந்தவன். தன் பாணங்களாலேயே ஆகாயத்தை துண்டாடக் கூடியவன். மலைகளை பிளந்து விடுவான். ம்ருத்யுவுக்கு சமமான கோபமும், இந்திரனுக்கு சமமான பராக்ரமமும் உடையவன். இவன் மனைவியைத் தான் நீ ஜனஸ்தானத்திலிருந்து அபகரித்துக் கொண்டு வந்தாய். இந்த ராமன் தான் உன்னுடன் போர் புரிய முன்னேறி வருகிறான். இவனுடைய வலது பகுதியில், சுத்தமான சொக்கத் தங்கம் போன்ற நிறமுடையவன், விசாலமான மார்பும், தாம்ர வர்ண கண்களுமாக, கருத்த தூக்கி முடியப் பட்ட கேசமுமாக, இவன் தான் லக்ஷ்மணன் என்ற ராம சகோதரன். ராமன் உயிர் தான் வெளியே நடமாடுகிறதோ எனும்படி உற்ற தோழனான, சகோதரன். ராமனுக்கு மிகவும் பிரியமானவன். உயிருக்கு உயிரானவன். நயத்திலும், யுத்தத்திலும், தேர்ச்சி பெற்றான். சர்வ சாஸ்திர விசாரதன். அடங்கிய கோபம் உடையவன். இவனையும் எதிர்த்து போரிடுவது இயலாத காரியம். எப்பொழுதும் வெற்றியையே கண்டவன். நல்ல புத்திசாலி. பலசாலி. ராமனது வலது கை போன்றவன். ராமனுக்காக உயிரையும் கொடுப்பான். இவனும் தான் ஒருவனாக லங்கையை ஜயிக்க நினைக்கிறான். இந்த ராமனின் இடது புறத்தில் நிற்கிறானே, நமது ராக்ஷஸ கூட்டத்தினரால் ஒதுக்கித் தள்ளப் பட்ட ராஜா விபீஷணன், ராஜ ராஜாவான, ஸ்ரீமானான ராமனால் லங்கை நாயகனாக அபிஷேகம் செய்து வைக்கப் பெற்றிருக்கிறான். இந்த விபீஷணனும் தற்சமயம் எதிரிகளின் படையோடு நம்முடன் மோத வருகிறான். சாதாரண மலை குன்றுகளுக்கு இடையில் சிகரம் போல உயர்ந்து தெரிகிறானே, அனைத்து சாகா மிருகங்கள் (கிளைக்குத் கிளை தாவும் வானர இனம்) இனத்தவரின் அரசன். மலைகளுக்கு இடையில் மலையரசனான ஹிமவான் போல நிமிர்ந்து நிற்கிறான். உற்றார், உறவினரின் அன்புக்கு பாத்திரமானவன் ஆதலால் அவர்கள் வாழ்த்துகின்றனர். இதனால் தேஜஸும், புகழும், புத்தியும் ஞானமும் கிடைக்கப் பெற்றவனாக சிறந்த அரசன் என்று பெயர் பெற்றிருக்கிறான். கிஷ்கிந்தையை பாலனம் செய்கிறான். கிஷ்கிந்தையின் குகைகளுக்குள், விஸ்தீர்ணத்தில் ஆகாயத்துக்கு இணையாக, வனங்கள் நிறைந்து, எளிதில் நுழைய முடியாத பாதுகாவலுடன் இருக்கும் தன் அரண்மனையில் பிரதான சேனைத் தலைவர்களுடன் வசிக்கிறான். இவனுடைய கழுத்தில் தங்கத்தாலான மாலை சோபையுடன் விளங்குகிறது, பாருங்கள். சத புஷ்கரா என்ற இந்த மாலையில் லக்ஷ்மீ வாசம் செய்கிறாள். தேவர்களுக்கும், மனுஷ்யர்களுக்கும், மதிப்புக்குரிய மாலை. இந்த மாலையையும், தாராவையும் (வாலி மனைவி), வானர ராஜ்யத்தையும், வாலியை வதம் செய்த பின், ராமர் தான் இவனுக்கு கொடுத்தார். நூறு, நூறாயிரம் கோடி எனப்படும். நூறு கோடியை சங்கம் என்று விஷயம் அறிந்தவர்கள் சொல்வார்கள். நூறு சங்கத்தின் ஆயிரம் பங்கு, மகா சங்கம் எனப்படும். இந்த மகா சங்கத்தின் ஆயிரம் மடங்கு ப்ருந்தம் என்று சொல்வோம். நூறு ப்ருந்த ஆயிரங்கள் மகா ப்ருந்தம் எனப்படும். இந்த மகா ப்ருந்த ஆயிரங்கள் ஒரு நூறு இருந்தால் பத்மம் எனப்படும். இதே போல நூறு பத்மங்கள் மகா பத்மம் எனப்படும். இதை ஆயிரத்தால் பெருக்க, மகா பத்மம் வரும். மகா பத்ம ஆயிரங்கள் ஒரு நூறு சேர்ந்தால், கர்வம் எனப்படும். இதை ஆயிரத்தால் பெருக்க, மகா கர்வம் வரும். மகா கர்வத்தின் ஆயிரங்கள் சமுத்திரம் எனப்படும். நூறாயிரம் சமுத்திரம் அமோகம் எனப்படும். நூறாயிரம் அமோகம், மகா மோகம் எனப்படும். இப்படி, ஆயிரம் கோடி, நூறு சங்கம், ஆயிரம் மகா சங்கம், அதே போல நூறு பத்மங்கள், மகா பத்மாங்கள் ஆயிரம், கர்வ நூறும், நூறு சமுத்திரம், மகா மோகம் எனும் எண்ணிக்கையும் அதே போல நூறாக, இவன் கோடி மகௌகம், சமுத்திரம் போன்ற வீரர்களோடு, விபீஷணன் மந்திரிகளுடன் உடன் வர, சுக்ரீவன் வானரேந்திரன் நம் பேரில் படையெடுத்து வருகிறான். தானும் நல்ல பலசாலி, உடன் வருபவர்களும் பலசாலிகளே. இந்த வாஹிணி (பெரிய படை)யைப் பார். எதோ கிரஹம் எரிந்து கொண்டு இருப்பது போல தெரிகிறது. அதனால் பெரு முயற்சி செய்து யுத்த ஏற்பாடுகளைச் செய். எதிரிகளிடம் தோல்வி அடையக்கூடாது.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் மைந்தா3தி பராக்ரமாக்2யானம் என்ற இருபத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 29 (436) சார்தூ3லாதி சார ப்ரேஷணம் (சார்தூலன் முதலான ஒற்றர்களை அனுப்புதல்)
சுகன் விவரித்தபடி, வானர சேனை அணி வகுத்து நிற்பதையும், லக்ஷ்மணன், ராமனது வலது கரமாக இயங்குவதையும், ராமனின் சகோதரனுக்கு அருகில், தன்னைச் சார்ந்த விபீஷணன் நிற்பதையும், வானர ராஜனான சுக்ரீவன், பீம விக்ரமனாக, பலசாலியாக நிற்பதையும், க3ஜன், க3வாக்ஷன், க3வயன், மைந்த3ன், த்3விவித3ன், இவர்களையும், அங்க3த3ன், வஜ்ரஹஸ்தன் எனும் இந்திரனின் மகனின் மகன், பலசாலி என்று பார்த்த மாத்திரத்தில் தெரியும் படி நிற்பதையும், வீரனான ஹனுமானையும், ஜயிக்க முடியாத ஜாம்பவானையும், சுஷேணன், குமுதன், நீலன், நலன் என்ற அளவில்லாத பராக்ரமம் உடைய வீரர்களையும் பார்த்து மனம் வாடினான். கோபம் மேலோங்கியது. இதுவரை சொல்லி வந்த சுக, சாரணர்களை திட்ட ஆரம்பித்தான். தலை குனிந்து நின்ற அவ்விருவரையும் பார்த்து கடுமையாக பேசலானான். ஆத்திரத்தில் வாய் குழறியது. அளவில்லா பதட்டம் அவனை ஆக்ரமித்தது. ராவணன் கடுமையாக அவர்களைச் சாடினான். அரசனை அண்டி வாழும் மந்திரிகளுக்கு இது அழகல்ல. அரசனுக்கு பிடிக்காததை அவன் எதிரிலேயே சொல்வது என்ன சாமர்த்யம்? நிக்ரஹம், ப்ரக்ரஹம் என்ற ராஜ நீதிகளை அறிந்தவர்கள் பேசும் பேச்சா இது? நம் எதிரிகளை, போர் செய்து நம்மை அழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு முன்னேறி வரும் சத்ருக்களை இருவரும் இப்படி மாறி மாறி தோத்திரம் செய்கிறீர்களே. குரு, ஆசார்யர்கள், முதியவர்கள் என்று உங்களை நான் உபசரித்து வணங்கி வந்தது வீணாயிற்று. ஊழியம் செய்பவர்கள், ராஜ நீதியில் எப்படி இருக்க வேண்டும் என்று அறிந்தவர்கள் தானே நீங்கள். தெரிந்தோ அல்லது வேண்டுமென்றே தெரியாதது போல நடித்துக் கொண்டோ, நீங்கள் என் எதிரிகளின் புகழ் பாடுகிறீர்கள். அறிவு வெறும் மூட்டை, பாரம் மட்டும் தானா? இது போன்ற மூர்க்கர்களான மந்திரிகளுடன் நான் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பதே, பெரிது. அதுவே அதிர்ஷ்டம் தான், என்னிடம் இவ்வளவு கொடுமையான செய்திகளைச் சொல்ல உங்களுக்கு பயம் விட்டுப் போய் விட்டதா? உயிர் மேல் ஆசையே இல்லாமல் போய் விட்டதா? அரசனாக நான் பதவியில் இருக்கும் பொழுதே, உங்களுக்கு இப்படி பேச தைரியம் வந்தது, ஆச்சர்யம் தான். நெருப்பைத் தொட்டு விட்டு, மரங்கள் வனத்தில் நிம்மதியாக இருக்க முடியுமா? ராஜத்ரோகத்துக்கு ஆளான அபராதிகள், மீண்டு வருவது நடக்கக் கூடியதா? இதோ உங்கள் இருவரையும் இப்பொழுதே கொல்வேன். சத்ரு பக்ஷத்தை உயர்வாக விமரிசிக்கிறீர்கள். முன் நீங்கள் செய்த உபகாரங்களை நினைத்து, என் கோபத்தை அடக்கிக் கொள்கிறேன், நான் உங்களிடம் கடுமையாக நடந்து கொள்ளுமுன் இங்கிருந்து போய் விடுங்கள். என் கண் முன் நிற்காதீர்கள். உங்களை கொல்லாமல் விடுகிறேன். நீங்கள் செய்துள்ள நன்மைகளை நினைத்து, உங்களை உயிருடன் விடுகிறேன். என்னிடம் சற்றும் அன்பு இல்லாமல், செய் நன்றி கொன்றவர்களை நான் ஒரு போதும் உயிருடன் விட்டதில்லை. ராவணன் இவ்வாறு சொல்லவும், வெட்கத்துடன் தலை குனிந்தபடி, ராவணனுக்கு ஜய கோஷம் செய்து ஆசிர்வதித்து விட்டு இருவரும் வெளியேறினர். தசக்ரீவன், இதன் பின் தன் அருகில் இருந்த மகோதரனைப் பார்த்து நல்ல சாமர்த்யமுள்ள ஒற்றர்களை ஏற்பாடு செய், என்றான். மகோதரனும் உடனே தகுந்த ஒற்றர்களைத் தேடி அழைத்து வந்தான். நான்கு ஒற்றர்கள் வேகமாக வந்து ஜய, ஜய என்று சொல்லி அரசனின் கட்டளைக்கு காத்திருந்தனர். ராக்ஷஸாதிபன், ராவணன் அவர்களை சோதித்து பார்த்து, இவர்கள் தன்னிடம் பக்தி கொண்டவர்களே, சூரர்கள் தான், இளகிய மனம் இல்லாதவர்கள் என்று உறுதி செய்து கொண்டான். உடனே போங்கள். ராமனுடைய நடவடிக்கைகளைக் கண் காணியுங்கள். என்ன காரணத்தினால், இவனுடன் சேர்ந்து கொண்டவர்கள் இவனிடம் அன்புடன் இணைந்து இருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இதில் ஏதாவது இடைவெளி, கருத்து வேறுபாடு இருக்கிறதா என்று கவனித்துப் பாருங்கள். எப்படி தூங்குகிறான், விழித்திருக்கிறான், வேறு என்ன வேலை செய்கிறான், இவைகளை முழுதும் அறிந்து கொண்டு வந்து சொல்லுங்கள். ஒற்றர்கள் திறமையாக கொண்டு வந்து தரும் சிறு செய்திகளும், எதிரிகளின் வீழ்ச்சிக்கு வழி வகுத்து அரசர்கள் வெற்றி அடைவார்கள். இதில் அதிக கஷ்டம் கூட இல்லை. வசுதாதிபன், புத்திசாலியாக இருந்தால், மிக சுலபமாக எதிரியை தனக்கு அதிக நஷ்டமின்றி வீழ்த்தலாம் என்றான். ஒற்றர்களும் மகிழ்ச்சியுடன் அப்படியே செய்கிறோம் என்று சொல்லி விடை பெற்றனர். சார்தூலனை முன்னால் நிறுத்தி மற்றவர்களும் பிரதக்ஷிணம் செய்து வணங்கினர். இதன் பின் அவர்கள் லக்ஷ்மணனும், ராமனும் தங்கியிருந்த இடம் சென்றனர். சுக்ரீவ விபீஷணர்களையும் மறைந்திருந்து கண்டு கொண்டனர். பெரிய சேனையைக் கண்டதும், பயத்தால் வெல வெலத்துப் போனார்கள். அதற்கேற்ப, தர்மாத்மாவான விபீஷணன் அவர்களைக் கண்டு கொண்டான். சார்தூலனை, இதோ ஒரு ராக்ஷஸன் என்று வானரங்கள் பிடித்துக் கொண்டு போய் ராமனிடம் நிறுத்தின. கருணையுடன் ராமர் அவர்களை விடுவித்து விட்டார். மூச்சைக் கையில் பிடித்துக் கொண்டு என்பதைப் போல, வேகமாக மேல் மூச்சு வாங்க, லங்கை வந்து சேர்ந்தனர். இதன் பின், தசக்ரீவன் முன்னிலையில் இதே தொழிலாக செய்து வந்த ராக்ஷஸர்கள் தான் எனினும், சுஷேண மலையின் அருகில் வந்து இறங்கியிருக்கும் ராமனது படை பலத்தை விவரமாகச் சொன்னார்கள்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சார்தூ3லாதி சார ப்ரேக்ஷணம் என்ற இருபத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 30 (437) வானர ப3ல சங்க்யானம் (வானர படையை எண்ணிச் சொல்லுதல்)
ஒற்றர்கள், ராவணனிடம் வந்து, சுஷேண மலையில் வந்து இறங்கியிருக்கும் ராமனின் படை பலத்தைப் பற்றி புள்ளி விவரங்களைச் சொல்ல ஆரம்பித்தனர். அவர்கள் வாயிலாக, போர் தொடுக்கத் தயாராக ராமன் வந்திருப்பதை ஊர்ஜிதம் செய்து கொண்ட ராவணன், கவலையும் பதட்டமும் அடைந்தான். முகம் வெளிறி இருந்த சார்தூலனைப் பார்த்து யார் கையிலாவது அகப்பட்டுக் கொண்டாயா? தீனனாக இருக்கிறாயே? சத்ருக்கள் கோபத்துடன் உன்னை தண்டித்து விட்டார்களா? என்று கேட்டான். ஒற்றனாக போய் வந்த சார்தூலன் என்ற ராக்ஷஸன், ராக்ஷஸ சார்தூலனான ராவணனைப் பார்த்து பதில் சொன்னான். நாங்கள் எதுவுமே செய்ய முடியவில்லை, ராவணா, ராகவன் தான் எங்களைக் காப்பாற்றி விட்டான். அவர்கள் படை பலத்தையும், வீரத்தையும் கண்ணால் கண்டது தான். எதுவுமே பேச முடியவில்லை. விசாரிப்பது எங்கே? வாய் திறந்து ஏதாவது கேட்க முடிந்தால் தானே. எல்லா வழிகளும் மிகுந்த பாதுகாவலுடன் அமைத்திருக்கிறார்கள். உள்ளே நுழைந்தவுடன் நான் வெளி ஆள் என்பது தெரிந்து விட்டது. உடனே பிடித்து விட்டார்கள். முழங்கால்களாலும், முஷ்டியாலும், புறங்கையாலும், பற்களாலும் நையப் புடைத்து விட்டார்கள். இழுத்துக் கொண்டு போய் ராகவன் முன்னால் நிறுத்தினார்கள். உடல் பூரா ரத்தம். செய்வதறியாது உடல் முழுவதும் வலியோடு நின்றேன். வானரர்களிடம் செம்மையாக அடிபட்டு, கை கூப்பி யாசிக்கும் நிலையில் ராமனிடம் போய் நின்றேன். என்னைக் கண்டவுடனே, எதுவும் விசாரிக்க கூட ராமன் அனுமதிக்கவில்லை. வேண்டாம், வேண்டாம் என்று தடுத்து விட்டான். இந்த பெரிய சமுத்திரத்தை, மலைக் கற்களைக் கொண்டு நிரப்பி, லங்கையின் வாசலில், கையில் ஆயுதத்தோடு நிற்கிறான், ராமன். கருட வ்யூஹம் அமைத்து வானர வீரர்களை, பயிற்சியளித்து அவர்களுடன் லங்கையை நோக்கியே வந்து கொண்டிருக்கிறான். என்னை விடுவித்த பின் நான் வேகமாக வந்து விட்டேன். லங்கையின் உள்ளே அவர்கள் நுழையும் முன் ஏதாவது செய். சீதையைக் கொடுத்து சமாதானம் செய்து கொள். அல்லது யுத்தம் செய்ய ஏற்பாடுகளைத் துரிதமாகச் செய். தன் மனதில் சற்று யோசித்து விட்டு ராக்ஷஸாதிபன், சார்தூலனுக்கு பதில் சொன்னான். தேவ, கந்தர்வ, தானவர்கள் எல்லோருமாக வந்து முற்றுகையிட்டு என்னை எதிர்த்தாலும், யுத்தம் தான் செய்வேன். சீதையை ஒரு பொழுதும் தர மாட்டேன். ஸர்வ லோகமும் என்னை பயமுறுத்தினாலும் சரிஏ ராவணன் திரும்பவும் சார்தூலனைப் பார்த்து நீ பார்த்தவரை, யார் யார் சூரர்கள்? பலசாலிகள்? ஏதாவது தெரிந்ததா? உன் ஊகம் என்ன? என்று வினவினான். வானரர்கள் எப்படிப் பட்டவர்கள்? அவர்கள் சக்தி, ப்ரபாவம் என்ன? யாருடைய பிள்ளைகள்? பேரன்கள்? விவரமாகச் சொல்லு எனவும், சார்தூலன், பதில் சொன்னான். சார்தூலனும், ராவணனுடைய உத்தமமான போர் வீரர்களுள் ஒருவன், ராவணன் அனுப்பி ஒற்றனாகச் சென்றவன். சொல்ல ஆரம்பித்தான். ருக்ஷ ரஜஸ் என்பவனின் மகன் கத்3க3த3ன் என்பவன். யுத்தத்தில் எதிர் கொள்ள முடியாத பலசாலியாக இருந்தான், அவன் மகன் ஜாம்பவான் என்று புகழ் பெற்றவன். அவன் இருக்கிறான். இந்த கத்கதனுடைய மற்றொரு பிள்ளை சதக்ரது எனும் இந்திரனுடைய குரு புத்திரன். ஒருவனாக ஒருமுறை ராக்ஷஸர்களை ஆட்டி வைத்தான். சுஷேணன் என்று பெயருடைய ஒருவன், தர்மத்தின் பிள்ளை. நல்ல வீர்யவான். சௌம்யமாக காணும் சோமனுடைய (சந்திரன் உடைய) மகன் ததி4முகன், என்ற வானரம். தங்கள் வேகத்தை பரீக்ஷை செய்து பார்த்துக் கொண்டிருந்த இருவர், சுமுகன், துர்முகன் என்று இருவர், ம்ருத்யுவே வானர ரூபத்தில் ப்ரும்மா ஸ்ருஷ்டி செய்து வைத்தது போல இருக்கிறார்கள். ஹுத வாஹனன் எனும் அக்னியின் மகன் நீலன் என்பவன் தான் சேனாபதி. வாயு புத்திரன் தான் ஹனுமான். இவன் புகழை நாம் கேட்டிருக்கிறோம்.
இந்திரனின் பேரன் அங்கதன் என்பான், இளைஞன். மைந்தன், த்விவிதன் என்ற இருவரும் அஸ்வினியின் புத்திரர்கள். இவர்களும் பலசாலிகளே. ஐந்து பேர், காலாந்தகன் போன்று வைவஸ்வதன் புத்திரர்கள்- கஜன், கவாக்ஷன், கவயன், சரபன், கந்த மாதனன் என்பவர்கள். பத்து கோடி வானர வீரர்கள், யுத்தம் செய்யும் ஆவலுடன் ஸ்ரீமான்களான தேவர்களின் புத்திரர்கள். மற்றவர்களைப் பற்றிச் சொல்லத் தெரியவில்லை. இந்த தசரத குமாரன் இருக்கிறானே, சிங்கம் போல கர்ஜிக்கிறான். இளம் ரத்தம். தூஷணனை அடித்தானே, கரனையும் வதம் செய்து, த்ரிசிரஸையும் வதம் செய்தானே. இந்த ராமனுக்கு மூவுலகிலும் ஈடு இணையே கிடையாது. விராதனை வதம் செய்தவன். கபந்தனை எதிர்த்து அவனுக்கு அந்தகனாக நின்றான். இந்த பூவுலகில் ராம குணங்களை முழுவதுமாகச் சொல்ல யாரால் தான் முடியும்? ஜனஸ்தானத்தில் அவனுக்கு எதிரில் சென்ற அனைத்து ராக்ஷஸர்களும் அழிந்தார்கள். லக்ஷ்மணனும் தர்மாத்மா. யானைகள் கூட்டத்தின் இடையில் ரிஷபம் போல தனித்து நிற்கிறான். இவனுடைய பாணம் செல்லும் வழியில் நின்றால், வாஸவன் கூட பிழைக்க மாட்டான். பாஸ்கரனின் வம்சத்தில் உதித்த குமாரர்கள், ஸ்வேதன், ஜ்யோதிர்முகன் என்ற இருவர். வருணனின் மகன் ஹேம கூடன் என்ற வானரம். விஸ்வ கர்மாவின் மகன் நலன். இந்த வானரங்கள் குதித்து ஓடும் இயல்புடையவை, இதில் நலன் போன்ற வீரர்களும் உண்டு. வசு புத்திரன், இவனும் நல்ல பராக்ரமம் உடையவனே. சுது3ர்தரன் என்பவன் ஒருவன். இதற்கிடையில் ராக்ஷஸர்கள் மத்தியிலும் சிறந்த வீரனாக இருந்த விபீஷணன், தங்கள் சகோதரன் அவனும் அங்கு இருக்கிறான். ராமனுடைய நன்மைக்காக பாடு படுவதாக உறுதி செய்து கொண்டு இவர்கள் லங்கையை முற்றுகை இட்டிருக்கிறார்கள். எனக்கு தெரிந்தவரை விவரமாகச் சொன்னேன். சுஷேண மலையில் வந்து இறங்கியிருக்கிறார்கள். மேற்கொண்டு செய்ய வேண்டியதை நீயே தீர்மானித்துக் கொள். என்று நிறுத்தினான், சார்தூலன்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் வானர ப3ல சங்க்2யானம் என்ற முப்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 31 (438) வித்யுத் ஜிஹ்வ மாயா ப்ரயோக: (வித்ய்த் ஜிஹ்வன் என்பவனின் மாயை)
ஒற்றர்கள் மூலம் நடப்பைத் தெரிந்து கொண்ட பின், ராவணன், மந்திரிகளை சீக்கிரமாக அழைத்து வர உத்தரவிட்டான். எல்லோரும் தயாராக வாருங்கள். மந்த்ராலோசனை செய்து, மேற்கொண்டு செய்ய வேண்டியதை தீர்மானிக்க வேண்டும். தாமதம் செய்யாமல் எல்லோரும் உடனே வந்து சேருங்கள் என்று செய்தி சொல்லி அனுப்பினான். ராவணனின் உத்தரவைக் கேட்டவுடனேயே எல்லோரும் வேகமாக வந்து சேர்ந்தார்கள். கூடியிருந்த மந்திரிகளுடன் ராவணன் ஆலோசனை நடத்தினான். எதிர் நோக்கி இருக்கும் பிரச்னையைப் பற்றி விவாதித்தான். ஒற்றர்கள் மூலம் கேள்விப் பட்ட விஷயம்- ராமன் படையுடன் சுஷேண மலையில் வந்து இறங்கியிருக்கிறான். மகா பலசாலியான அவனை யுத்தத்தில் எதிர் கொள்ள தயாராக வேண்டும்- இந்த விஷயங்களைப் பற்றி பேசி, மந்திரிகளை அனுப்பி விட்டு, ராவணன் தன் மாளிகை சென்றான். வித்யுத் ஜிஹ்வன் என்ற ராக்ஷஸனை கூப்பிட்டு அனுப்பினான். மாயாவியான அவனை மைதிலி இருக்கும் இடம் ராவணன் தானே அழைத்துச் சென்றான். ஜனகன் மகளை சற்றுக் குழப்பு, என்று உத்தரவிட்டான். கையில் பெரிய வில்லுடன், ராமனைப் போன்ற ஒரு தலையை மற்றொரு கையில் வைத்தபடி, என்னருகில் வந்து நில். வித்யுத் ஜிஹ்வன் என்ற அந்த ராக்ஷஸனும் சம்மதித்து அவ்வாறே மாயையால் செய்து காட்டினான். சீதையைக் காணும் ஆவலுடன் குபேரனின் சகோதரனான ராவணன் அசோக வனத்திற்குச் சென்றான். அவள் பிறப்புக்கும் தகுதிக்கும், சற்றும் பொருந்தாத தீனமான நிலையில் இருக்கக் கண்டான். பூமியில் அமர்ந்து, தலை குனிந்து துக்கத்தில் மூழ்கியவளாக, அந்த அசோக வனத்தில் கொண்டு வந்து வைக்கப் பட்ட நிலையிலும், தன் கணவனை இடைவிடாது த்யானம் செய்து கொண்டிருந்தவளைக் கண்டான். கோரமான ராக்ஷஸிகள் நாலா புறமும் காவல் நின்றனர். அவளை நெருங்கி, கர்வமும், மகிழ்ச்சியுமாகச் சொன்னான். நான் இவ்வளவு சமாதானமாகச் சொல்லியும் யாரை நினைத்து உருகுகிறாயோ, க2ரனை அழித்த அந்த உன் கணவன் ராமன் யுத்தத்தில் கொல்லப் பட்டான். உன் நம்பிக்கை வேரோடு சின்னாபின்னமாகி விட்டது. உன் கர்வம் அடக்கப் பட்டது. சீதே, இப்பொழுது இந்த கஷ்டம் தாங்க மாட்டாமல் என் மனைவியாகப் போகிறாய். இந்த பிடிவாதத்தை விடு. உயிர் போன பின் அவனை நினைத்து என்ன செய்ய போகிறாய் ? என் பத்னிகளுக்கு மகிஷியாக, என் பட்டத்து ராணியாக இரு. தன்னை மிகவும் அறிவுடையவளாக நினைத்துக் கொண்டிருக்கும் அறிவிலியே, மூடத்தனமாக எதையோ நம்பிக்கொண்டிருக்கிறாயே, அது பொய்த்து விட்டது. சீதே, இதைக் கேள். உன் கணவனின் வதம் பற்றிச் சொல்கிறேன், கேள். வ்ருத்திரனைக் கொன்றது போல கொன்று விட்டேன். என்னைக் கொல்ல ராமன் சமுத்திரத்தைக் கடந்து வந்தான் அல்லவா. வானர ராஜன் அழைத்து வந்து பெரும் படையுடன், சமுத்திரத்தின் வட கரையில் முகாமிட்டு இருந்தானே, அந்த பெரும் படையுடன், இன்று திவாகரன் அஸ்தமனம் ஆகுமுன் தானும் அழிவைத் தேடிக் கொள்வான். நேற்று பாதி இரவில் வந்து இறங்கிய படைகளைப் பற்றி இன்று காலை தெரிந்து கொண்ட நான், முதலில் ஒற்றார்களை அனுப்பி நன்றாகத் தூங்குவதைத் தெரிந்து கொண்டேன். ப்ரஹஸ்தன் மூலமாக பெரும் படையை அனுப்பி, ராமனும், லக்ஷ்மணனும் சேர்ந்து இருக்கும் இடம் சென்று அவன் பலத்தை அழித்தேன். பட்டஸங்களையும், பரிகங்களையும், சக்ரங்கள், தண்டங்கள். வாட்கள், மகா ஆயஸம் என்ற இரும்பு ஆயுதங்கள், பாணங்கள் ஏராளமாக சூலங்கள், பள பளவென பிரகாசிக்கும் கூடம், உத்கரம் என்ற ஆயுதம், யஷ்டிகள், தோமரங்கள் சக்திகள், சக்ரங்கள், முஸலங்கள் இவைகளை எடுத்துக் கொண்டு ராக்ஷஸர்கள் வானரங்கள் பேரில் மாற்றி மாற்றி பிரயோகித்தார்கள். தூங்கும் ராமனை, ப்ரஹஸ்தன் பலமாக ஒரு அடி கொடுத்து கைகளை கட்டி, தலையை கொய்து கொண்டு வந்தான். யதேச்சையாக விழித்துக் கொண்ட விபீஷணனை கைது செய்து கொண்டு வந்து விட்டான். மற்ற வானரங்களையும் லக்ஷ்மணனையும் துரத்தி அடித்து விட்டான். மூலைக் கொன்றாக அவர்கள் ஓடி விட்டனர். சுக்ரீவன், க்3ரீவம் (கழுத்து) துண்டிக்கப் பட்ட நிலையில், தூங்குகிறான். ஹனுமான் அவனுடைய விசேஷமான கன்னத்திலேயே அடிபட்டு மாண்டான். ஜாம்பவானை ஜானுவிலேயே (முழங்கால்) அடித்து விட்டான். அந்த அடி தாங்காமல் அவனும் மாண்டான். பெரிய மலையை ரம்பம் கொண்டு அறுத்து தள்ளுவது போல, மைந்த த்விவிதர்களை அடி மரத்தில் அடிப்பது போல அடித்து தள்ளி விட்டான். பனஸன், பனஸம் (பலாப் பழம்) போல இந்த இருவரையும் தொடர்ந்து சென்று விட்டான். ததி4 முகன், ஏராளமான நாராசம் எனும் ஆயுதங்கள் தாக்கப் பட்டு அழிந்தான். குமுத3ன், நல்ல தேஜஸ்வி, அம்புகளால் குரலே எழும்பாதபடி செய்யப் பட்டு விட்டான். ராக்ஷஸர்கள் அம்பு மாரி பொழிந்து அங்கதனை வீழ்த்தி விட்டார்கள். நாலாபுறமும் வானரங்கள் ரத்தம் கக்கிக் கொண்டு பரிதாபமாக விழுவதை பார்த்துக் கொண்டே அங்கதன் உயிரை விட்டான். மீதியுள்ள வானரங்கள் (ஹரிகள்) என் ரதத்தில் பூட்டப் பட்டிருந்த யானைகள் காலில் மிதி பட்டனர். குதிரைகள் கீழே தள்ளி பலரை எழுந்திருக்க முடியாமல் செய்து விட்டது. இப்படி அடிபட்டவர்களை பார்த்து பலர் பயந்து ஓடியே போய் விட்டனர். ராக்ஷஸர்கள் பின் தொடர்ந்து ஓடி, பெரிய யானைகளை சிங்கங்கள் துரத்துவது போல துரத்தி அடித்து விட்டார்கள். சிலர் கடலில் மூழ்கினர். சிலர் ஆகாயத்தில் வீசியெறியப் பட்டனர். கரடிகள், மரங்களில் ஏறி வானரங்களைப் போலவே ஆனார்கள். கடற்கரையிலும், மலையிலும், வனங்களிலும், பிங்கள எனப்படும் வானரங்கள், விரூபாக்ஷன் போன்ற ராக்ஷஸர்கள் கணக்கில்லாமல் கொல்லப் பட்டனர். இவ்வாறு தான் உன் கணவன், தன் சைன்யத்தோடு என் படை வீரர்களால் அடிக்கப் பட்டு மாண்டான். ரத்தம் கொட்டி ஏராளமாக, புழுதி படிந்து கிடந்த இந்த தலையை கொண்டு வந்தேன் என்று சொன்ன ராக்ஷஸன், சீதையுடன் இதைக் கேட்டுக் கொண்டிருந்த ராக்ஷஸிகளைப் பார்த்து, வித்3யுத்ஜிஹ்வனை அழைத்து வா என்று கட்டளையிட்டான். கொடியவனான அந்த ராக்ஷஸன், மேலும் சொன்னான் அவன் தான் யுத்த களத்திலிருந்து ராமனின் தலையைத் தானாக கொண்டு வந்தவன் இதன் பின் வித்3யுத்ஜிஹ்வன் வில்லையும் அம்பையும் துண்டிக்கப் பட்ட தலையயும், ராவணனுக்கு எதிரில் பிரமாணமாக, சாட்சியாக வைத்து விட்டு நின்றான். ராவணன் அவனைப் பார்த்து விசாரித்தான் வித்யுத்ஜிஹ்வா, மஹா ஜிஹ்வா (வித்யுத்ஜிஹ்வந்- மின்னல் போன்ற நாக்குடையவன், மஹா ஜிஹ்வா-நீளமான நாக்குடையவன்) சீதையின் எதிரில் வை. தாசரதியின் தலையை சீக்கிரம் அவள் பார்க்கட்டும். பாவம், வருத்தத்தால் இளைத்துக் கிடக்கிறாள். தன் கணவன் ஐந்தாவது நிலையை அடைந்த காட்சியை கண் குளிரக் காணட்டும். இதைக் கேட்ட அந்த ராக்ஷஸன் தலையை சீதை முன்னால் வைத்தான். ராவணனும் வில்லை அவள் முன் வைத்து பார், மூவுலகிலும் புகழ் பெற்ற ராமனின் கோதண்டம். அம்புகளுடன் கூட ப்ரஹஸ்தன் கொண்டு வந்தான். அந்த ராமனை இரவில் தூங்கும் பொழுது கொன்று விட்டு, இவைகளை கவர்ந்து கொண்டு வந்து விட்டான். இனியாவது என் வசம் ஆவாய் என்று ராவணன் வித்யுத்ஜிஹ்வனின் உதவியால் துண்டிக்கப் பட்ட தலையைக் காட்டி, விதேஹ ராஜ குமாரியான சீதையை அழ விட்டான்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் வித்3யுத்ஜிஹ்வ மாயா பிரயோகோ என்ற முப்பத்து ஒன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 32 (439) சீதா விலாப: (சீதை வருந்தி புலம்புதல்)
சீதை, துண்டிக்கப்பட்ட அந்த தலையையும், உத்தமமான ராமனது வில்லையும் பார்த்து, ஹனுமான் சொல்லியிருந்த சுக்ரீவ சக்யம் முதலியவைகளை மனதில் நினைத்துக் கொண்டவளாக, கண்களிலும், முக சாயலிலும் தன் கணவனை ஒத்திருந்த அந்த தலையைப் பார்த்தாள். கேசத்தையும், தான் கொடுத்த சூடாமணி அந்த தலையில் சூடப் பெற்றிருப்பதையும் பார்த்தாள். எல்லா அடையாளங்களும் பொருந்த,(ராமனின் தலைதான் என்று) அடையாளம் கண்டு கொண்டவளாக பெரும் துக்கத்தை அடைந்தாள். திடுமென கைகேயியை நினைத்து அவளை தூஷிக்க ஆரம்பித்தாள். ஸகாமா பவ கைகேயீ – கைகேயீ நீ விரும்பியது இதோ நடந்து விட்டதே, சந்தோஷமாக இரு, இதோ குல நந்தனனாக அவதரித்தவன் கொல்லப் பட்டான். உன் விருப்பம் நிறைவேறியது. நீ செய்த கலகத்தால், இந்த குலமே அடியோடு அழிந்தது. கைகேயி, என் கணவன் ராமனால் உனக்கு என்ன தீங்கு நேர்ந்தது. எதற்காக அவனை மரவுரியைக் கொடுத்து வீட்டை விட்டுத் துரத்தினாய்? இவ்வாறு புலம்பி உடல் நடுங்க, சாய்க்கப்பட்ட வாழை மரம் போல கீழே பூமியில் விழுந்தாள். ஒரு முஹுர்த்த நேரத்தில் சமாளித்துக் கொண்டு, தன்னினைவு பெற்றவளாக, அந்த தலையை அணைத்துக் கொண்டு உச்சி முகர்ந்தாள். ஹா, ஹதாஸ்மி, மகா பாக்யசாலி என்று போற்றப்படுபவனே, வீரனுக்கான கதியை அடைந்து விட்டாயா? என்னை இங்கு தனியாக தவிக்க விட்டு விட்டாயே, கணவனை இழந்தவளாக வேறு நான் துன்பம் அனுபவிக்க செய்து விட்டாயே. பெண்கள், கணவனுக்கு முன்னால் மரணம் அடைவது தான் நல்லது என்று சொல்வார்களே. எனக்கு முன்னால், உயிரற்றவனாக ஆகி விட்டாயே, நன்னடத்தை மிக்கவனே, நான் என்ன செய்வேன்? ஏற்கனவே பெரும் துக்கத்தில், சோக சாகரத்தில் மூழ்கி கிடக்கிறேன், உன்னை பற்றுக் கோடாக எண்ணி யிருந்தேனே. உன்னை நம்பித் தான் நான் உயிர் தரித்து இருக்கிறேன். என்னை காப்பாற்ற வருவாய் என்று நான் எதிர் பார்த்திருக்க இது என்ன, நீயே வீழ்ந்து விட்டாயா? உன்னை புத்திரனாகப் பெற்ற என் மாமியார் கௌசல்யை, இதை எப்படித் தாங்குவாள். கன்றை இழந்த தாய் பசு போல, மகனை இழந்து கதறப் போகிறாள். ஜோதிடம் அறிந்த நிபுணர்கள், நீ நீண்ட நாள் வாழ்வாய், உனக்கு தீர்கமான ஆயுள் என்றெல்லாம் சொன்னார்களே. அவர்கள் வார்த்தை பொய்யாகுமா. இப்படி அல்பாயுளில் மறைந்து விட்டாயே. ராமா, இது எப்படி நடக்க முடியும்? சொன்னவர்கள் மகா அறிஞர்கள். அறிவாளிகளின் கணிப்பும் கூட நம் விதிப்படி மாறுமா என்ன? காலத்தின் கோலம் இது தானோ? நயம், சாஸ்திரம் இவற்றை அறிந்தவன் நீ. என்னைக் காணாமலேயே ம்ருத்யுவை அடைந்து விட்டாய். யாருக்கு என்ன சங்கடமானாலும், அதிலிருந்து தப்ப உபாயம் சொல்பவன், மற்றவர்களின் இடர்களைத் தவிர்ப்பதிலும் குசலமானவன், நீ. கால ராத்திரி தான் ரௌத்ரமானவன், கருணை இல்லாதவன், என்னை மறைத்து, உன்னை ஆரத் தழுவி, என்னிடமிருந்து பிரித்துச் சென்று விட்டானோ. கமல லோசனா, தவம் செய்து வாடி இருக்கும் என்னை நிமிர்ந்து பார்க்காமலேயே பூமியில் கிடக்கிறாயே, என்னை விட பிரியமான பூதேவியை ஆலிங்கனம் செய்து கிடப்பதில் அவ்வளவு ஆனந்தமா? க3ந்த4 மால்யம் என்ற வாசனை நிறைந்த புஷ்பங்களால் நான் தவறாது பூஜித்து வந்தேனே, இதோ இந்த வில், பொன் நகைகளால் அலங்கரிக்கப் பட்ட இந்த வில் என்னை விட உனக்கு அதிக பிரியமானதாகி விட்டதா? ஸ்வர்கம் போய், தந்தை தசரதன், என் மாமனார், மற்றும் பெரியவர்கள் பலரையும் காண்பாய். ஆகாயத்தில் நக்ஷத்திரமாக ஆகி, ராஜ ரிஷி வம்சமான உன் குலம், மகா புண்யமானது, அதை மகோன்னதமாக ஆக்குவாய். என்னை ஏன் திரும்பி பார்க்கவில்லை. ராஜன், என்னுடன் ஏன் பேச மறுக்கிறீர்கள். இளம் வயதில், அதே இளம் வயது மனைவியாக நான் உங்களை வந்து சேர்ந்து, கூடவே ஸஹ த4ர்மசாரிணீ என்று தொடர்ந்து வந்தேனே, பாணிக்3ரஹணம் செய்யும் காலத்து சொன்ன மந்திரங்களையே நினைவு வைத்துக் கொண்டு, கூடவே வருவேன் என்று வந்தேனே. அதை நினைத்துப் பார், காகுத்ஸா,. என்னையும் இந்த துன்பத்திலிருந்து விடுவித்து உன்னுடன் அழைத்துக் கொள். என்னை விட்டு நீ தனியே எப்படி போகலாம். இந்த உலகை விட்டு மேலுலகம் செல்பவன், என்னை மட்டும் இங்கேயே வருந்தி புலம்ப விட்டுச் செல்வது எப்படி சரியாகும். மங்களமான வஸ்துக்களை உடலில் தரித்தவன், என்னால் ஆலிங்கனம் செய்யப் பட்ட இந்த உடல், காகமும் கழுகுகளும் தின்று தீர்க்கப் போகின்றனவா? அக்னி ஹோத்ரம் முதலிய யக்ஞங்களைச் செய்தவன், யாகத்தில் நிறைந்த தக்ஷிணைகள் கொடுத்து திருப்தி செய்தவன், உனக்கு அக்னி ஸம்ஸ்காரம் செய்ய கொடுத்து வைக்கவில்லையே? நாடு கடத்தப் பெற்று, முடிவில் திரும்பி தனியாக வரும் லக்ஷ்மணனைப் பார்த்து, கௌசல்யா, மூன்று பேரில் ஒருவனாக வருகிறாயே என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்து எடுக்கப் போகிறாள். அப்படி கேட்கும் பொழுது அவன் என்ன பதில் சொல்வான்? உன்னுடன் நட்பு கொண்ட சுக்ரீவன் படை பலத்துடன், இரவு தூங்கும் பொழுது ராக்ஷஸர்கள் வதம் செய்து விட்டார்கள் என்று சொல்வானா? தூங்கும் பொழுது வதம் செய்யப் பட்ட உன்னையும், ராக்ஷஸ க்ருஹத்தில் இருக்கும் என்னையும் நினைத்து, அவன் ஹ்ருதயம் பிளந்து போகும் படி வேதனைப் படுவான். அதிக நாள் உயிருடன் இருக்க மாட்டான். ராகவா, என் காரணமாக, அதிர்ஷ்டக் கட்டையான என்னால், ராஜ குமாரன், ராமன் சமுத்திரத்தைக் கடந்து வந்தும், ஒன்றுமில்லாதவன் போல மடிந்து போக நேரிட்டது. தசரத குலத்தில் வாழ்க்கைப் பட்டவள் நான். என்னை குலத்தை கெடுக்க வந்தவள் என்று அறியாமல் மருமகளாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள். ஆர்ய புத்திரனான ராமனுக்கு மனைவியாக வந்து அவனுக்கு ம்ருத்யுவைத் தான் என்னால் தர முடிந்திருக்கிறது. ஏதோ தானம் கொடுக்கப்படுவதை நான் தடுத்து இருக்கிறேன், போலும். அந்த பாபம் தான் என்னை வாட்டுகிறது. அதிதியாக யார் வந்தாலும், அள்ளி அள்ளிக் கொடுத்த குடும்பத்தில் வந்து சேர்ந்த நான், இப்படி அல்லல் படுவானேன். ராவணா, ஒரு காரியம் செய். என்னையும் வெட்டி இந்த ராமன் உடல் மேலேயே போட்டு விடு. பதி பத்னிகளை சேர்த்து வைத்த புண்ணியம் உனக்கு கிடைக்கட்டும். என்னையும் வெட்டி, என் தலையோடு தலை, உடலோடு உடலாக ராமனுடன் சேர்த்து வை. ராவணா, நானும் என் பதியுடன் செல்வேன். இவ்வாறு திரும்பத் திரும்ப, துண்டிக்கப் பட்ட ராமனது தலையையும், அவன் வில்லையும் பார்த்த வண்ணம் அழுது அரற்றினாள். இவ்வாறு அழுது புலம்பும் சீதையைப் பார்த்தபடி நின்றிருந்த ராவணனிடம் ஒரு சேவகன் அருகில் வந்து, கை கூப்பி வணங்கியபடி, ஆர்ய புத்ர, விஜயஸ்வ என்றவன், வணங்கி அபி வாதனம் செய்து, சேனாபதி ப்ரஹஸ்தன் தங்களைக் காண வந்திருக்கிறார். ப்ரபோ, ஏதோ ராஜ கார்யம் பற்றி பேச வேண்டுமாம். மந்திரிகள் அனவரையும் கூட்டி வைத்துக் கொண்டு தங்கள் வரவுக்காக காத்திருக்கிறார், விஷயம் சொல்ல என்னை அனுப்பினார், என்றான். பொறுப்பு மிக்க இந்த காரியத்தில், தயவு செய்து தாங்கள் பொறுமையுடன் தரிசனம் தர வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொண்டார். இதைக் கேட்டு தசக்ரீவன் அவசரமாக, அசோக வனத்தை விட்டு, மந்திரிகளை சந்திக்கச் சென்றான். சபைக்குச் சென்று தன் செயலை பெருமையாக சொல்லிக் கொண்டான். அதன் பின், ராமனைப் பற்றி தான் தெரிந்து கொண்டதை, அவனது பராக்ரமம், பிரபாவம் இவற்றை அவர்களுக்குச் சொன்னான். இதனிடையில், சீதையின் எதிரில் வைக்கப்பட்டிருந்த வில்லும், துண்டிக்கப் பட்ட தலையும், மாயமாக மறைந்தன. ராவணன் அந்த இடத்தை விட்டு அகன்ற பொழுது அவையும் மறைந்து விட்டன. பயங்கரமான வீர தீரர்களான தன் மந்திரி சபையில், ராவணன் இந்த நிகழ்ச்சியைச் சொல்லி சிரித்துக் கொண்டான். மந்திரிகள் இதன் பின், தாங்கள் வந்த காரியத்தை நினைவு படுத்த, அருகில் படை பலத்துடன் வந்து இறங்கியிருக்கும் எதிரியையும், அவர்கள் சக்தியைப் பற்றியும் பேச்சு திசை திரும்பியது. காரணம் எதுவும் சொல்லாமல், பேரீ, முரசம் ஒலிக்க என் சேனையை தயாராக வந்து என்னை சந்திக்கச் செய்யுங்கள் என்று ராவணன் உத்தரவிட்டான். அவன் சொல்லை ஏற்று, அப்படியே என்று சொல்லி மந்திரிகளும் சேனையை தயார் செய்து, யுத்தம் செய்ய விரும்பும் தங்கள் தலைவனான ராவணனின் விருப்பத்தை நிறைவேற்றினர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில சீதா விலாபோ என்ற முப்பத்து இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 33 (440) சரமா சமாஸ்வாஸனம் (சரமா வந்து சமாதானம் செய்தல்)
சீதை மூர்ச்சையடைந்து கிடப்பதைப் பார்த்து சரமா என்ற ராக்ஷஸி, தன் சினேகிதியாகிவிட்ட, பிரிய சகியான சீதையிடம் வந்து சேர்ந்தாள். அருகில் வந்து ம்ருதுவாக பேசும் சரமா, ராக்ஷஸேந்திரன், மாயா பலத்தால் எதையோ காட்டி அழ விட்டதை புரிந்து கொண்டு விட்டாள். சீதைக்கு காவலாக அருகில் இருந்ததில் அவளிடம் நெருங்கிய நட்பு கொண்டு விட்ட சரமா திடுமென அடிபட்டவளைப் போல, நினைவிழந்து கிடப்பவளை கண்டாள். புழுதி படிந்து பூமியில் கிடந்தவள், மிகவும் சிரமப்பட்டு எழுந்து அமர்ந்தவளை அருகில் நெருங்கி விசாரித்தாள். அவளை சமாதானம் செய்ய முனைந்தாள். வைதேஹி, கவலைப் படாதே. மனதை தேற்றிக் கொள். ராவணன் உன்னிடம் சொன்னதையும், நீ பதில் சொன்னதையும் கேட்டேன் (கண்ணால் எதையும் காணவில்லை). பயப்படாதே. சூன்யமான ஆகாயத்தில் உன்னை பயமுறுத்த, ராவணன் எதையோ காட்டியிருக்கிறான். மாயை. விசாலாக்ஷி, சகி நான், அன்புடன் சொல்கிறேன் கேள். உனக்காக நான் உயிரையும் கொடுப்பேன். அவன் பரபரப்புடன் வெளியேறுவதைப் பார்த்தேன். எதற்கு ஓடினான் என்பதையும் தெரிந்து கொண்டேன். மைதிலி, தூங்கும் ராமனை கொல்வது என்பது நடக்கக் கூடிய காரியமா? அதிலிருந்தே இதில் ஏதோ சூது இருக்கிறது என்பது தெரியவில்லை? மரங்களையும் கற்களையும் ஆயுதமாக வைத்துக் கொண்டு போராடும் வானரர்களைத் தான் அவ்வளவு சுலபமாக அழித்து விட முடியுமா? தேவேந்திரன் தேவர்களை ரக்ஷிப்பதைப் போல இந்த வானரங்களை ராமன் ரக்ஷிக்கிறான். இந்த வானர வீரர்கள், ராமனுடைய நிழலில் கவலையற்று இருக்கிறார்கள். நீண்ட புஜமும், அகன்ற மார்பும் உடைய ஸ்ரீமான், ப்ரதாபம் நிறைந்த ராமன், கையில் வில்லேந்தி நின்றால், வில்லின் ஓசையே அவனை தர்மாத்மா என்று உலகுக்கு பறை சாற்றுவது போல ஒலிக்குமே. தன் ஜனங்களையும், பிறர் ஜனங்களையும் வேற்றுமையின்றி பாது காப்பது தான் அவன் குணம். அவன் வீரம் மற்றவர்களைக் காக்கத் தான் பயன் படும். லக்ஷ்மணனுடன் அவன் குசலமாக இருக்கிறான். நீதி முறைகளை நன்கு அறிந்து, தெளிந்தவன். சொல்ல முடியாத, நினைக்கவே முடியாத பலமும், பௌருஷமும் நிறைந்தவன். எதிரி படையை வீழ்த்தக் கூடியவன். ராகவனுக்கு எதுவும் நேரவில்லை. சீதே, கவலையை விடு. ஸ்ரீமானான ராமன், சத்ருக்களை அழிப்பவன், அவன் குசலமாக இருக்கிறான். மாயையறிந்த மாயாவியான இந்த ராவணன், உன்னிடம் தவறாக ஒரு செய்தியை திரித்துச் சொல்லியிருக்கிறான். தற்சமயம் அவன் தான் எல்லா ஜீவராசிகளுக்கும் விரோதியாகி இருக்கிறான். உன் கஷ்டங்கள் விடிந்து விட்டன. நல்ல காலம் பிறந்து விட்டது. கல்யாணமான, மங்களகரமான நிகழ்ச்சிகள் உன் வாழ்வில் நடக்கக் காண்பாய். லக்ஷ்மி உன்னை வந்தடையப் போகிறாள். நான் சொல்வதைக் கேள். உனக்கு நிம்மதி கிடைக்கும். சாகரத்தைக் கடந்து வந்த ராமன், தன் படையுடன், சமுத்திரத்தின் தென் கரையில் வந்து இறங்கி விட்டான். அளவில் அதே சமுத்திரத்திற்கு இணையான தன் வானர வீரர்களுடன் தீர்மானமாக போர் ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருக்கிறான். பார்த்த மாத்திரத்திலேயே, அவன் எண்ணம் கண்டிப்பாக ஈடேறும் என்று தெரிகிறது. லக்ஷ்மணனுடன் காகுத்ஸன், ராவணன் அனுப்பி வைத்த அல்ப வீரர்களை ஒன்றும் செய்யாமல் அனுப்பி விட்டானாம், அவர்கள் வந்து சொல்கிறார்கள், ராவணன் தீர்ந்தான் என்கிறார்கள். இந்த நிலைமையைத் தெரிந்து கொண்டு ராக்ஷஸாதிபன், இதோ தன் மந்திரிகளுடன் மந்த்ராலோசனை செய்கிறான். சரமா என்ற அந்த ராக்ஷஸி இப்படி பேச்சுக் கொடுத்து சீதையை சமாதானப் படுத்திக் கொண்டு இருக்கையிலேயே, பயங்கரமாக பே4ரி முழங்க சைன்யத்தின் ஆரவாரமும் கேட்டது. கையில் தண்டம் வைத்துக் கொண்டு வாசிக்கும் பே4ரி முதலிய வாத்யக்காரர்கள், யுத்த காலத்தை அறிவிக்கும் விதமாக முழங்கியதையும் கேட்டு சரமா, மதுரமாக பேசும் சுபாவம் உள்ள சீதையிடம் சொன்னாள். சீதே, இது பே4ரிகா என்ற வாத்யம். அதை வாசிப்பதால் பெரும் சப்தம் உண்டாகும். கம்பீரமாக, மேகத்தின் இடி முழக்கம் போல கேட்பதைப் பார். மதம் பிடித்த யானையை அடக்கி வைப்பவர்கள் புரிந்து கொள்வார்கள். ரதத்தை ஓட்டுபவர்கள் குதிரைகள் பூட்டி ரதத்தை தயார் செய்வார்கள். குதிரையில் ஏறி யுத்தம் செய்யும் வீரர்கள் மகிழ்வார்கள். ப்ராஸம் என்ற ஆயுதத்தை கையில் ஏந்தி ஆயிரக் கணக்கானவர், யூத்த களத்தில் இறங்கத் தயாராக ஆகின்றனர். ஆங்காங்கு கூடி தரை வீரர்கள் ராஜ மார்கத்தை நிரப்பி விட்டனர். (பதாதி என்ற வாகனம் இன்றி நடந்து செல்லும் போர் வீரர்கள்) இந்த சேனையின் அணி வகுப்பே கண் கொள்ளா காட்சியாக இருக்கிறது. பலமாக சத்தமெழ இவர்கள் கூட்டமாகச் செல்வதைப் பார்க்க, நீர்த்திவலைகள் தெறிக்க, அலைகள் ஓசையிட இருக்கும் சமுத்திரம் போலவே இருக்கின்றது. சுத்தமாக, சஸ்திரங்கள் ஒளி வீச கையில் வைத்துக் கொண்டு, தாங்களும் ப்ரஸன்னமாக இவர்கள் உரைகளையும் மற்ற சாதனங்களையும் வேறு தூக்கிக் கொண்டே செல்கின்றனர். ரதம், குதிரை, யானைகளையும் அலங்கரித்து, யுத்தம் செய்யத் தயாரான ராக்ஷஸர்கள், குதூகலத்துடன் ஆரவாரம் செய்வது தான் பெரும் ஓசையாக கேட்கிறது. பல வர்ணங்களில் ஒளி சிதறச் செய்வதை பார். (பட்டாசுகளாக இருக்கலாம்). வனத்தை எரிக்கும் காட்டுத் தீ போல இருக்கின்றன. மணிகள் அடிப்பதைக் கேள். ரதங்கள் ஓடும் பெரும் ஓசை, குதிரைகள் கணைக்கும் சத்தம், தவிர துர்யம் எனும் வாத்யத்தை இசைப்பதும் சேர்ந்து கேட்கிறது தெரிகிறதா? ராக்ஷஸேந்திரனைப் பின் பற்றும், விஸ்வாசமிக்க படை வீரர்கள், ஆயுதங்களை உயர்த்தி பிடித்தபடி கோஷம் செய்து கொண்டு போகும் சம்ப்ரமம், பரபரப்பும், அதைத் தொடர்ந்து கூச்சலும், மயிர்க் கூச்செரியச் செய்கிறது. ராக்ஷஸர்களுக்கு ஆபத்து என்று தோன்றுகிறது. லக்ஷ்மீ தேவி உன்னை வந்தடைவாள். பிறர் துயர் துடைக்கும் அரும் குணம் உடையவளே, ராமன் கமல பத்ராக்ஷன், கோபத்தை ஜயித்தவன், தைத்யர்களுக்கு வாஸவன் போன்றவன், இந்த போரில் ராவணனை வென்று, அளவில்லா தன் பராக்ரமத்தை நிரூபித்தவனாக, உன் கணவன் உன்னை வந்தடைவான். லக்ஷ்மணன் சகாயத்துடன், உன் கணவன் தன் வீர விளையாட்டை ஆரம்பிக்கப் போகிறான். சத்ருக்களிடம், சத்ருவை அழிக்கும் விஷ்ணுவின் துணையோடு வாஸவன் யுத்தம் செய்தது போல செய்வான். ராமன் இங்கு வந்து சேர்ந்தவுடன், அவனுடன் இணைந்து நீ சந்தோஷமாக இருப்பதை நான் காணத்தான் போகிறேன். உன் மனோ ரதம் பூர்த்தியாகும். சத்ருக்கள் ஒழிந்தபின், ஆனந்த கண்ணீர் பெருக, நீ நிம்மதியாக இருப்பாய். சோபனேஸ்ரீ உன் கணவனை அணைத்து மார்பில் முகம் பதித்து சீக்கிரமே இந்த கொடுமையான கஷ்டங்களை மறந்தவளாக சந்தோஷமாக இருப்பாய். முழங்கால் வரை நீண்டு புரளும் உன் வேணியை, இவ்வளவு மாதங்களாக முடிந்து வைத்திருந்ததை, ராமன் வந்து அவிழ்த்து விடப் போகிறான். பூர்ண சந்திரன் உதித்தது போன்ற அவன் முகத்தைப் பார்த்து சோகத்துடன் இவ்வளவு நாள் விட்ட கண்ணீர் மறந்து போகும். பெண் பாம்பு சட்டையுரிப்பதைப் போல உன் கவலைகளை களைந்து எறிந்து விடுவாய். மைதிலி சீக்கிரமே, இந்த ராவணன் யுத்தத்தில் வீழ்வான். சுகமாக வாழ்ந்து பழகிய பிரியமான மனைவியான உன்னுடன், ராமன், எல்லா சுகங்களும் திரும்பக் கிடைக்கப் பெற்று ராமனும் மன நிறைவோடு சுகமாக இருப்பான். வீரனான அவனுடன் சேர்ந்து நீயும் மகிழ்ச்சியுடன் இருப்பாய். பூமித்தாய் நல்ல மழை பெய்தபின், செழித்து வளரும் பயிர்களுடன் இருப்பதைப் போல மன நிறைவோடு இருப்பாய். வா, இதோ சூர்யோதயம் ஆகிறது பார். ப்ரஜைகளுக்கு உயிர் நாடி இந்த திவாகரனான சூரியன் தான். இவனை வணங்கு. மலையின் நாலா புறமும் சூழ்ந்து கொண்டு, குதிரைகள் முன் செல்வது போல ஒளிக் கதிர்கள் வழி காட்ட, ஒளி மண்டலமாக ஆக்குகிறானே, இந்த சூரியனை வணங்கி வழி படுவோம், வா.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சரமா சமாஸ்வாஸனம் என்ற முப்பத்து மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 34 (441) ராவண நிச்சய கத2னம் (ராவணன் தீர்மானத்தை தெரிந்து கொண்டு வந்து சொல்லுதல்)
சற்று முன் நடந்த நிகழ்ச்சிகளால் தவித்துப் போய் விட்ட சீதை, சரமாவின் வார்த்தைகளைக் கேட்டு சமாதானம் அடைந்தாள். பூமியை மேகம், நீரை வர்ஷித்து மகிழ்விப்பது போல, சரமா சீதையை தன் வார்த்தைகளால் அமைதியடையச் செய்தாள். சகியான சீதைக்கு மன நிம்மதி கிடைக்கும் விதமாக, மேலும் பேச்சுக் கொடுத்தாள். அந்தந்த நேரத்திற்கு இசைவாக பேசும் திறன் உடையவள், சரமா என்பது தெளிவாகத் தெரிந்தது. சீதே, தேவையானால், நீ சொல்லும் செய்தியை ராமனிடம் தெரிவித்து விட்டு, யார் கண்ணிலும் படாமல் திரும்பி வரக் கூட நான் தயார். ஆகாய மார்கமாக, பிடிமானம் இல்லாத வெட்ட வெளியில் நான் சுற்றுவேன். என்னை யாரும், வாயுவோ, கருடனோ கூட கண்டு கொள்ள மாட்டார்கள். இப்படிச் சொல்லும் சரமாவைப் பார்த்து சீதை, மதுரமாக, முன் இருந்த சோகமும் பயமும் விலகியவளாக தெளிவாக பதில் சொன்னாள். சரமா, நீ சமர்த்தா தான் (சாமர்த்யம் உடையவள் தான்), சந்தேகமே இல்லை. ரஸாதலம் கூட போய் நலமாக திரும்பி வருவாய். இருந்தாலும், என் அருகில் இருக்கும் வரை செய்யக் கூடாதது எதையும் செய்து மாட்டிக் கொள்ளாதே. இதில் ஆபத்தும் இருக்கிறது அல்லவா. நிச்சயமாக எனக்கு ஏதாவது செய்து தான் ஆக வேண்டும் என்றால், ராவணன் என்ன செய்கிறான், செய்யப் போகிறான் என்பதை தெரிந்து கொண்டு வந்து சொல்லு. சத்ரு ராவணனான (சத்ருக்களை வருத்துபவன்) இந்த ராவணன் தான் க்ரூரமானவன். மாயை அறிந்தவன். என்னையும் குழப்பி விட்டான். வருணீ எனும் மதுவை குடித்து மயங்கியது போல ஆடுகிறான். எப்பொழுதும் பயமுறுத்துகிறான். அடிக்கடி வந்து ஏதாவது சொல்லி என்னை நடுங்கச் செய்கிறான். இந்த ராக்ஷஸிகளின் நடுவில் என்னை சிறை வைத்திருக்கிறானே. இதனால் எப்பொழுதும் சந்தேகம். கவலை அரிக்க என் மனம் ஒரு நிலையில் இல்லை. எந்த நிமிஷமும் என்ன நேருமோ என்று பயம் வாட்டுகிறது. தூக்கி வாரிப் போடுகிறது. அவன் என்ன செய்ய நினைக்கிறான், நிச்சயமாக நடக்கப் போவது என்ன என்று தெரிந்து கொண்டு வந்து சொன்னால், நான் நன்றியுடையவளாக இருப்பேன். என்னிடம் உனக்கு உள்ள அன்பின் காரணமாக இந்த காரியத்தைச் செய்யச் சொல்கிறேன். சீதை இவ்வாறு சொன்னவுடன், அவள் முகத்தை கைகளில் ஏந்தியபடி, சரமா, ஜானகி, உன் எண்ணம் இது தான் என்றால், இதோ போகிறேன். சத்ருக்களின் திட்டம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு திரும்பி வருகிறேன். என்று சொல்லி விடை பெற்றுக் கொண்டு சரமா, ராக்ஷஸ ராஜனின், ராஜ சபைக்குச் சென்றாள். சபையில் பேசிக் கொண்டதையும், ராவணனின் தீர்மானமான போர் திட்டங்களையும் தெரிந்து கொண்டு, சீக்கிரமே அசோக வனம் திரும்பி வந்தாள். அசோக வனத்தில் சீதையைக் காண விரைந்தாள். தன் ஆசனமான தாமரை மலரிலிருந்து இறங்கி வந்து விட்ட லக்ஷ்மி தேவி போல இருந்த சீதையைக் கண்டு ஒரு நிமிஷம் மலைத்தாள். திரும்பி வந்த சரமாவைப் பார்த்து சீதை மகிழ்ச்சியுடன் ஆலிங்கனம் செய்து வரவேற்று, தன் ஆசனத்தில் அமரச் செய்தாள். வசதியாக இங்கு அமர்ந்து நீ அறிந்து வந்ததைச் சொல், என்றாள். ராவணன் என்ன செய்ய நினைத்திருக்கிறான்? சுபாவமாகவே க்ரூரமான குணம் உடையவன். துராத்மா. சரமாவும் தான் தெரிந்து கொண்டு வந்ததை விவரமாகச் சொன்னாள். ராக்ஷஸேந்திரனின் தாயாரும், மற்ற முதிய மந்திரி வர்கங்களும் உன்னை விடுவிக்கும் படி பலவிதமாகச் சொல்லிப் பார்த்தார்கள். தக்க மரியாதைகளுடன் சீதையைத் திருப்பிக் கொடு. மனித இனத்தின் அரசன் அவன். அவன் மனைவி மைதிலியை அவனிடமே ஒப்புவித்து விடுவது தான் சரியானது. ஜனஸ்தானத்தில அத்புதமாக நடந்த யுத்தத்தை அறிவோம். அதிலிருந்தே நாம் நிதர்சனமான உண்மையை, ராமனது பராக்ரமத்தை புரிந்து கொண்டிருக்க வேண்டும். சமுத்திரத்தைக் கடப்பது என்ற அரிய செயலைச் செய்தவன். நல்ல பலமுள்ளவனாகத் தான் இருப்பான். ஹனுமான் வந்த பொழுது நடந்ததும் ஒரு பாடமாக இருக்க வேண்டும். மனிதனாக பிறந்தவன், இந்த ராக்ஷஸர்களை எதிர்த்து வெற்றி கொள்வது இது வரை நடந்திருக்கிறதா? இந்த ஹனுமான் வந்து செய்து காட்டியுள்ளான், என்று இவ்வாறு வயதில் பெரியவர்கள், மந்திரிகளும், ராவணனின் தாயும் பல முறை எடுத்துச் சொல்லி அறிவுரை செய்தனர். பணத்தில் வெறி கொண்டு சேர்த்து வைப்பவன், அதை எந்த அவசரத்துக்கும் கூட கொடுக்க மனமின்றி, தன்னிடம் வைத்துக் கொள்வது போல, உன்னைத் திருப்பித் தருதல், விடுவித்தல் என்ற உபதேசம் ராவணன் காதில் ஏறவே இல்லை. யுத்தத்தில், உயிர் உள்ள வரை களத்தை விட முடியாதது போல அல்லது கிடைத்த அமிர்தத்தை விட முடியாதது போல, உன்னை விடுவிக்க அவனுக்கு சம்மதமில்லை. மந்திரிகளுடன், சற்றும் கருணையின்றி பேசும் ராவணன் நடத்திய மந்த்ராலோசனையின் முடிவு இது தான். அவனுக்கு ம்ருத்யு நெருங்கி விட்டது. அதன் காரணமாகத் தான் நல்ல உபதேசங்கள் அவனுக்கு உவப்பாக இல்லை. உன்னை விடுவிக்க மறுப்பது கூட பயம் தான் காரணம். யுத்தம் என்று தீர்மானமாக அறிவித்து விட்டான். தன்னைச் சார்ந்த அனைத்து ராக்ஷஸர்களுக்கும் அழிவைத் தேடத் தான் அவன் புத்தி இப்படி போகிறது போலும். ராவணன் படை தான் உன் ராமனின் கூர்மையான பாணங்களால் அழியப் போகிறது. கருவிழியாளே, கவலைப் படாதே, ராமன் உன்னைத் தன்னுடன் அயோத்தி அழைத்துச் செல்வான். இவர்கள் இப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, பேரீ, சங்கம் என்ற வாத்யங்கள் சேர்ந்து குழப்பமாக கேட்டன. பூமி அதிர நடந்து சென்ற வானர சைன்யத்தின் குதூகல கூச்சலும் கேட்டது. லங்கையில் இருந்த ராக்ஷஸ ராஜாவின் சேவகர்கள், இந்த வானர சேனையின் போர் முழக்கத்தைக் கேட்டு தங்கள் தைரியத்தை இழந்து, ஒருவித சோர்வு ஆட்கொள்ள, தவித்தனர். அரசனின் இந்த ஊழியர்கள், அரசனின் குற்றம் காரணமாக நன்மையைக் காணப் போவதில்லை.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவண நிச்சய கத2னம் என்ற முப்பத்து நான்காவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 35 (442) மால்யவது3பதேச: (மால்யவான் முதலானோர் உபதேசித்தல்)
சங்க நாதமும், பேரீ நாதமும் கலந்து முழங்க, ராமன் தன் படையுடன் இதோ முன்னேறி வருகிறான். இந்த சப்தத்தைக் கேட்டு ராவணன் ஒரு முஹுர்த்த நேரம் தன்னுள் யோசித்தான். பின் நிமிர்ந்து மந்திரிகளைப் பார்த்து இது வரை இந்த சபையில் உங்கள் தரப்பு வாதம் கூச்சலாக நிறைந்து இருந்தது. எதிரி சமுத்திரத்தைக் கடந்து வந்து விட்டான், படைபலத்தை சேர்த்துக் கொண்டு வந்து முற்றுகையிட்டிருக்கிறான் என்றெல்லாம் ராமனைப் பற்றிச் சொல்லக் கேட்டேன். சத்ய பராக்ரமர்களான உங்கள் பராக்ரமத்தையும், யுத்தம் செய்யும் சக்தியையும் நான் அறிவேன் என்றான். உலகத்தையே தகிப்பவன், க்ரூரன் என்று பெயர் பெற்ற ராவண ராஜா, தன் மந்திரிகள் அனைவரும் கூடியிருந்த அந்த சபையில் அவர்களையே நிந்திக்கும் விதமாக பேசுவதைக் கேட்டு, மந்திரிகள் தங்களுக்குள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு எதுவும் சொல்லாமல் இருந்தனர். மால்யவான் என்ற ராவணனது தாய் வழி பாட்டனார், எழுந்து நின்றார். அரசனே எந்த அரசன் வித்தை உள்ள இடத்தில் வினயமாக நின்று, நியாயத்தை அனுசரித்து நடக்கிறானோ, அவன் தான் ராஜ்யத்தை ஆளுவான். எதிரிகளை தன் வசப் படுத்திக் கொள்வான். சண்டையிடும் சந்தர்பம் சரியாக இருந்தால் சண்டையிடலாம். காலம் சரியாக இல்லாத பொழுது, சந்தி செய்து கொள்வதிலும் தவறில்லை. இதனால் தன் பக்ஷத்து வீரர்களுக்கு நன்மை செய்தவன் ஆவான். ஐஸ்வர்யத்தையும் பெறுவான். தாழ்ந்து இருப்பவன், சமாதானமாக போரை தவிர்த்து, எதிரிக்கு சமமாக ஆகி விடலாம். இது தான் அரசன் செய்ய வேண்டிய செயலும் ஆகும். சத்ருக்களை அவமதிக்கக் கூடாது. அதாவது அவர்கள் பலத்தைக் குறைவாக மதிப்பிடக் கூடாது. தன்னை விட பலசாலியோடு மோதி வீணாக நாசமாவானேன். அதனால் எனக்குத் தோன்றுவது என்னவென்றால், ராமனுடன் சமாதானமாக போவோம். ராவணா, என்ன காரணத்திற்காக நம் மீது படையெடுத்து வந்திருக்கிறானோ, அந்த சீதையை அவர்களிடம் ஒப்படைத்து விடலாம். தேவ, ரிஷிகள், கந்தர்வர்கள் எல்லோருமாக சேர்ந்து எந்த ராமன் வெற்றியடைய வாழ்த்துகிறார்களோ, அவனிடம் நீ விரோதம் பாராட்டாதே. அவனுடன் சந்தி, சமாதானம் செய்து கொள்வது பற்றி யோசித்துப் பார். பகவான் ப்ரும்மா இரண்டு பக்ஷங்களை ஸ்ருஷ்டி செய்தான். சுரர்கள், அசுரர்கள் என்று. அவர்கள் தர்மத்தையும், அதர்மத்தையும் முறையே ஏற்றுக் கொண்டனர். அமரர்கள் எனப்படும் தேவர்கள் தர்ம பக்ஷத்தில் நின்றனர். மகாத்மாக்கள் என்று புகழப்பட்டனர். அதர்மம் ராக்ஷஸர்களின் பக்ஷம். அசுரர்களின் பக்ஷம். ராவணா, தர்மம் அதர்மத்தை விழுங்கி விடும். அதனால் தான் இந்த யுகம் க்ருத யுகம் ஆயிற்று. அதர்மம் தர்மத்தை விழுங்கும் பொழுது திஷ்ய: என்ற கலி யுகம் வருகிறது. நீ உலகில் சஞ்சரித்து பல மகத்தான தர்மங்களை அழித்தாய். அதர்மத்தை ஏற்றுக் கொண்டாய். நம்மிடம் பலமும் ஏராளமாக இருந்தது. அதனால் நீ அதர்மம் என்ற பாம்பை, விஷயம் அறியாமல் ஊட்டி வளர்த்து விட்டாய். அது இப்பொழுது நம்மை விழுங்கக் காத்திருக்கிறது. சுரர்களின் பக்ஷத்தை அவர்களுடைய குணங்கள், சுர பாவனைகள் (பெருந்தன்மை) வளர்க்கின்றன. ஏதோ சிறிதளவு நன்மை செய்ததைக் கூட நீ இப்பொழுது விஷயங்களில், சிற்றின்பங்களில் ஈடுபட்டு, உன்னையறியாமல் அக்னிக்கு சமமான ரிஷிகளின் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்டு இருக்கிறாய். அவர்களின் ப்ரபாவம் கொழுந்து விட்டு எரியும் நெருப்பின் ஜ்வாலைக்கு சமமானது. தவ வலிமையால், ஆத்ம பலம் நிறைந்தவர்கள், தர்மத்தின் அனுக்ரஹம் வேண்டும் என்பதில் தான் அவர்களுக்கு நாட்டம். இந்த த்விஜாதியினர், இரட்டை பிறப்புடையவர்கள் என்று அழைக்கப் படும் ப்ராம்மணர்கள், சிறந்த யாகங்களைச் செய்கின்றனர். அந்தந்த காலத்திற்கும் தேவைக்கும் ஏற்ப, அக்னியில் ஹோமம் செய்கின்றனர். விதிகளை அறிந்து எதையும் விடாமல் நியமத்தோடு செய்கின்றனர். உயர்ந்த குரலில் வேதத்தை அத்யயனம் செய்கின்றனர். ராக்ஷஸர்களை லட்சியம் செய்யாமல் ப்ரும்ம கோஷங்களை, வேத மந்திரங்களை உரக்கச் சொல்கின்றனர். இவர்கள் திசைகள் தோறும் விரட்டப் பட்டனர். அக்னிக்கு சமமான இந்த ரிஷிகளின் அக்னி ஹோத்ரத்தில் கிளம்பும் புகை ராக்ஷஸர்களின் தேஜஸை மறைத்து நிற்கிறது. பத்து திக்குகளிலும், அந்தந்த தேசங்களில், புண்ய காரியங்களில் த்ருடமான விரத நியமங்களுக்கு கட்டுப் பட்டு, தீவிரமான தவம் செய்யும் இவர்களின் தவ வலிமை ராக்ஷஸர்களைத் தகிக்கிறது. தேவ, தானவ, யக்ஷர்களிடமிருந்து கொல்லப் படாமல் இருக்க நீ வரம் பெற்றிருக்கிறாய். மனிதர்களும், வானரங்களும், கரடிகளும், மகா பலசாலியான கோலாங்கூலங்களும் (கோவேறு கழுதைகள்) இவர்கள் இங்கு வந்து புதிய பலம் பெற்றவர்களாக கர்ஜிக்கின்றன. பலவிதமான பயங்கரமான உத்பாதங்களைப் பார்த்து எல்லா ராக்ஷஸர்களுக்குமே ஆபத்து என்று நான் உணருகிறேன். மேகங்கள் நீருக்கு பதில் நாசகாரமான திரவங்களால் ஆனது போல காண்கின்றன. உஷ்ணமான ரத்தத்தை லங்கையின் மேல் வர்ஷிக்க தயாராக இருப்பது போல காண்கின்றன. வாகனங்களை இழுக்கும் மிருகங்கள் அழுகின்றன. கொடிகள் கீழே விழுந்து, வர்ணம் இழந்து காணப்படுகின்றன. முன் போல ஒளி வீசி பரவவில்லை. கழுதைகளும், கோமயம், காட்டு யானைகள், ஊருக்குள் வந்து கத்துகின்றன. லங்கையில் நுழைந்து கலகம் செய்கின்றன. காலிகா, வெண்மையான பற்களைக் காட்டி எதிரில் நின்று சிரிக்கிறார்கள். வீட்டில் பலி கொடுக்கப் படும் அன்னம் முதலியவற்றை நாய்கள் தின்று தீர்க்கின்றன. பசுக்களிடம், கழுதைகள் தான் பிறக்கின்றன. குள்ள நரிகளிடம் எலிகள் பிறக்கின்றன. பூனைகள் (லக்ஷெஒபாரட-பாநதஹரெ) புலி, சிறுத்தைகளுடன் சேருகின்றன. பன்றிகள் நாய்களுடன் செல்கின்றன. கின்னரர்கள் ராக்ஷஸர்களுடனும், மனிதர்களிடமும் கூடுகின்றனர். வெண்மையாக, வெளிறி, ரத்த சிவப்பான பாதங்களுடனும், பறவைகள் காலனின் தூண்டுதலால் புறாக்கள், ராக்ஷஸர்களின் வினாசத்தை சொல்வது போல பறக்கின்றன. கிளிகள் வீடுகளில் வளர்க்கப் பட்டு வருவது கூட கோர்வையில்லாமல் வீசி, கூசி என்று கத்துகின்றன. கீழே விழுந்து கலகம் செய்வதில் நாட்டமுடையவைகளாக இருக்கின்றன. சூரியனைப் பார்த்து மிருகங்களும் பக்ஷிகளும் ஓலமிடுகின்றன. கருப்பான, காண சகிக்காத ஒரு புருஷனின் தலை வீடுகளில் அடிக்கடி தென்படுகிறது. இதைப்போல இன்னும் பல துர் நிமித்தங்களைக் காண்கிறேன். ராமனை, விஷ்ணுவாக மதிப்போம். மனித சரீரம் எடுத்து வந்துள்ள விஷ்ணுவாக போற்றுவோம். சாதாரண மனிதன் அல்ல ராகவன். த்ருடமான விக்ரமம் உடையவன். சமுத்திரத்தைக் கடந்து வர சேது கட்டினவன். அத்புதமான வேலை செய்தவன். சாதாரண மனிதனாக இருக்க முடியாது. மனிதருள் அரசனாக வந்து அவதரித்துள்ள ராமனிடம் சமாதானம் செய்து கொள். ராவணா, புரிந்து கொண்டு யோசித்து செய். என்றைக்கும் பொருந்தும் படியான வழியைத் தேர்ந்தெடு. இவ்வாறு சொல்லி விட்டு மால்யவான், ராக்ஷஸாதிபதியின் மன ஓட்டத்தை திரும்பவும் பரீக்ஷித்துப் பார்த்து, ராவணன் முகத்தைப் பார்த்து எதுவும் மாறுதல் இல்லாததால் வாய் மூடி மௌனியாக நின்றார். உத்தமமான பௌருஷம் நிறைந்த வீரர்களுள் ஒருவரான மால்யவானும் செயலிழந்து நின்றார்
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் மால்யவது3பதேச: என்ற முப்பத்து ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 36 (443) புரத்3வார ரக்ஷா: (கோட்டை வாசலை ரக்ஷித்தல்)
விதியின் பிடியில் இருந்த ராவணனுக்கு மால்யவானின் உபதேசம் ஏற்காததில் வியப்பில்லை. அவர் ஹிதமாக சொன்னது பிடிக்காமல் புருவங்களை நெரித்து, கண்களை கோபத்துடன் உருட்டியபடி, மால்யவானுக்கு பதில் சொன்னான். எனக்கு நன்மை செய்வதாக நினைத்து எனக்கு எதிராக கடுமையாக பேசுகிறீர்கள். நீங்களும் எதிரியின் பக்ஷம் பேசுகிறீர்கள். என் காதில் இவை ஏறாது. நைந்து போனவன் போல தீனனான ராமன், வேறு வழியின்றி வானரங்களை சரணடைந்திருக்கிறான். சாகா மிருகங்கள் எனப்படும் வானரங்கள், கிளைக்கு கிளை தாவித் திரியும் மிருகங்கள். தந்தையால் வனத்துக்குப் போ என்று விரட்டப் பட்டவனை, என்ன காரணம் கொண்டு இப்படி சிலாகித்து பேசுகிறீர்கள், எப்படி அவனை சாமர்த்யசாலி என்று சொல்கிறீர்கள்? நான் ராக்ஷஸர்களுக்கு ஈஸ்வரன். தேவர்களுக்கும் பயங்கரமானவன். என்னை ஏன் மட்டமாக நினைக்கிறீர்கள். பராக்ரமத்தில் சற்றும் குறையாத, யாராலும் எனக்கு எதிரில் நிற்க முடியாது என்ற நிலையில் இருக்கும் என்னை அவமதித்து, தாழ்வாக பேசுகிறீர்கள். வீரனுக்கு வீரன் தோன்றும் த்வேஷமா? எதிரியிடம் உள்ள பக்ஷபாதமா? என்னிடம் ஏன் கடுமையாக பேசுகிறீர்கள்? வெளி ஆட்கள் தூண்டுதலா? பதவியில் இருப்பவனை, நல்ல செல்வாக்கோடு இருப்பவனை யார் தான் குறை சொல்வார்கள். பண்டிதர். சாஸ்திர ஞானம் உடையவர். தத்துவங்களை உணர்ந்தவர். ஏதோ எதிரிகளின் வேலை தான், உங்களைப் பிடித்து புத்தி மழுங்க செய்திருக்கிறார்கள். வனத்திலிருந்த சீதையைக் கொண்டு வந்தவன் நான். தன் பத்மாஸனத்திலிருந்து இறங்கி வந்த சாக்ஷாத் லக்ஷ்மி தேவியைப் போல இருக்கும் சீதையை நான் ஏன் திருப்பித் தர வேண்டும். ராகவனிடம் எனக்கு என்ன பயம்? கோடிக் கணக்கான வானரங்கள் சூழ நிற்கிறான். சுக்ரீவனும் லக்ஷ்மணனும் தான் துணை. பார்த்துக் கொண்டே இருங்கள். சில நாட்களில் என் கையால் இந்த ராமன் வதை படப் போகிறான். த்வந்த யுத்தத்தில் எனக்கு எதிராக தேவர்கள் கூட நின்று ஜயித்ததில்லை. யுத்தம் என்றால் ராவணன் பயந்து ஓடியதில்லை. எதற்காக இப்பொழுது பயப்பட வேண்டும். யாரிடமும் பணிந்து கை கட்டி நிற்க மாட்டேன். இது என் கூட பிறந்த குணம். ஸ்வபாவத்தை விட முடியாது. எதேச்சையாக, சமுத்திரத்தின் மேல் சேதுவைக் கட்டி விட்டால், ஆச்சர்யப்படும்படி, நீங்கள் பயப்படும்படி இதில் ராமன் என்ன செய்து விட்டான்? உங்களுக்கு சத்யம் செய்து கொடுக்கிறேன், கேளுங்கள். இந்த சேதுவின் மூலம் சமுத்திரத்தைக் கடந்து இங்கு வந்தவன், உயிருடன் திரும்பி போக மாட்டான். அவன் வானர சேனையும் தாங்காது. தன் போக்கில் பிடிவாதமாக பேசிக் கொண்டே போகும் ராவணனைப் பார்த்து வெட்கமடைந்த பெரியவரான, மால்யவான், மேற்f கொண்டு எதுவும் பேசவில்லை. தன் சரீர பலத்தாலும், வீரத்தாலும் உண்டான கர்வம் தலைகேற, அவன் செய்யும் துஷ்டத்தனமான காரியங்களை மனதில் நினைத்தபடி, இவனுடைய பாபமே இவனை அழிக்கப் போகிறது. கூடவே இவன் ஜனங்களான ராக்ஷஸர்களும், ராஜ்யமும் அழியத் தான் போகிறது. வழக்கம் போல, ஜய விஜயீ பவ, போன்ற ஆசிர்வாதங்களைச் சொல்லி ஆசிர்வதித்து விட்டு, மால்யவான் தன் மாளிகை சென்றார்.
இதன் பின் ராவணன், தன் மந்திரிகளுடன் மந்த்ராலோசனை செய்து விட்டு விவரமாக பேசி, லங்கையை முன் கண்டிராதபடி பாதுகாவலை உறுதியாகச் செய்ய முனைந்தான். கிழக்கு திசைக்கு ப்ரஹஸ்தனை நியமித்தான். தென் பகுதிக்கு மகா வீர்யவான்களான, மகா பார்ஸ்வன், மகோதரன் என்ற இருவரும். பல ராக்ஷஸர்களுடன் மகா காயன் மேற்கு வாசலுக்கு காவலாக நியமிக்கப்பட்டான். இந்திரஜித் இங்கு தலைமை தாங்கி நின்றான். வடக்கு திசையில் மகாமாயன் என்பவனை பல ராக்ஷஸர்களுடன் அனுப்பி விட்டு, சுக சாரணர்களையும் அனுப்பி வைத்தான். மந்திரிகளிடம் நானும் இந்த வடக்கு திசையில் இருப்பேன் என்று அறிவித்த ராவணன், விரூபாக்ஷன் என்ற மகா வீர்யமுள்ள ராக்ஷஸ வீரனை மத்தியில் நியமித்தான். இங்கும் பல ராக்ஷஸர்கள், விரூபாக்ஷனுக்கு உதவியாக நியமிக்கப் பட்டனர். இவ்வாறு லங்கையின் பாதுகாவலை கெட்டிபடுத்தி விட்டு தான் ஏதோ சாதித்தது போல மகிழ்ந்தான். காலத்தின் கட்டாயம் தவிர, வேறு என்ன? ஜய ஜய என்ற ஆசிர்வாதங்கள் செய்த மந்திரிகளை அனுப்பி விட்டு, நகர காவலுக்கு வேண்டிய ஏற்பாடுகளையும் செய்து விட்டு ராவணன் தன் அந்த:புரம் வந்து சேர்ந்தான், நிறைந்த செல்வமும், செழிப்பும் உடைய ராவணன்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் புரத்3வார ரக்ஷா: என்ற முப்பத்து ஆறாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 37 (444) ராம குல்ம விபாக: (ராமன் தன் படையை அணிவகுத்து நிறுத்துதல்)
நர, வானர வீரர்களின் தலைவர்களான ராமனும், சுக்3ரீவனும், வாயு சுதனும், ஜாம்ப3வான் என்ற கரடித் தலைவனும், ராக்ஷஸனான விபீ4ஷணனும், வாலி புத்திரனான அங்க3த3னும், சௌமித்ரி, சரப4ன் என்ற வானரம், சுஷேணன் அவன் தாயாதிகள், மைந்த3னும், த்3விவித3னும், க3ஜன், க3வாக்ஷன், க3வயன், நலனும், பனஸனும், கூடி சத்ரு விஷயமாக பேசலானார்கள். இதோ எதிரில் தெரியும் லங்கை, ராவணன் பாலித்து வரும் நகரம். இதை யாருமே நெருங்க முடிந்ததில்லை. சுரர்களோ, உரக, கந்தர்வ, அமரர்கள் யாருமே இங்கு வந்து ஜயித்ததில்லை. இப்பொழுது நாம் நமது காரியம் நிறைவேற என்ன செய்யலாம் என்பதை தீர்மானிப்போம். இந்த இடத்தில் ராக்ஷஸாதிபனான ராவணன் நித்ய வாசம் செய்கிறான். இவ்வாறு இவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் பொழுது, ராவணனின் இளையவனான விபீஷணன் சொன்னான். என் மந்திரிகளோடு, அனலன், சரப4ன், சம்பாதி, ப்ரக4ஸன் நால்வரும் லங்கைக்கு போய் விட்டு இப்பொழுது தான் திரும்பி வந்திருக்கிறார்கள். சகுனி என்ற பறவை ரூபம் எடுத்துக் கொண்டு போய் ராவணனின் படை அணி வகுப்பை தெரிந்து கொண்டு வந்திருக்கிறார்கள். எந்த விதமான பாதுகாவல் ஏற்பாடுகள் என்பதையும் தெரிந்து கொண்டனர். இவர்கள் சொன்னதை வைத்து ராவணன் படை வ்யூஹம் எப்படி இருக்கும் என்று நான் சொல்கிறேன். கேளுங்கள். கிழக்குத் திசையில் ப்ரஹஸ்தன், கோட்டை வாசலை காவல் காத்தபடி நிற்கிறான். தென் திசையில் மகா பார்ஸ்வன், மகோதரன் இருவரும். இந்திரஜித் மேற்கு வாசலில் பொறுப்பை ஏற்று நிற்கிறான். இவனைச் சுற்றி பல ராக்ஷஸர்கள் பட்டஸம், சூலம், வில், உத்3க3ரம் போன்ற ஆயுத பாணிகளாக நிற்கின்றனர். பலவிதமான ஆயுதம் தாங்கிய வீரர்கள் ராவணனது கோட்டை பாதுகாவலுக்கு நிற்கிறார்கள். ஆயிரக் கணக்கான வீரர்கள் நியமிக்கப் பட்டிருக்கின்றனர். வடக்கு வாசலில் ராவணன் தானே முன் நிற்கிறான். விரூபாக்ஷன் இவனுக்கு உதவியாக இருக்கிறான். சூலமும், வாளும், வில்லும் ஏந்திய ராக்ஷஸ வீரர்கள் மத்தியில் இருக்கிறார்கள். இதுவரை ஏற்பாடுகளைப் பார்த்து விட்டு என் மந்திரிகள் வேகமாக திரும்பி வந்து விட்டனர். ஆயிரக் கணக்கான யானைகள், ரதங்கள் பத்தாயிரக் கணக்கில், குதிரைகள் இதைப் போல இரு மடங்கு, கோடிக் கணக்கான ராக்ஷஸர்கள், யுத்தம் என்று வந்தால் உயிரைத் திருணமாக மதித்து போரிடும் வீரர்கள். நல்ல பலசாலிகள். இந்த நிசாசரர்கள் எப்பொழுதும் ராவணனுக்கு பிரியமானவர்களே. ஒவ்வொரு ராக்ஷஸ வீரனுக்கும், பக்க பலமாக, ஆயிரம் ஆயிரம் பேர் நிற்கின்றனர். இவ்வாறு தன் மந்திரிகள் தெரிந்து கொண்டு வந்ததை விபீஷணன் சொன்னான். அந்த ராக்ஷஸ மந்திரிகளையும் ராமனிடம் அழைத்து வந்தான். அவர்களும் தாங்கள் கண்டதை நேரிடையாக ராமனிடம் தெரிவித்தனர். கமலபத்ராக்ஷன் ராமன், கண்கள் விரியக் கேட்டார். விபீஷணன் மேலும் தன் சகோதரனைப் பற்றிய விவரங்களைச் சொன்னான். ராவணன் குபேரனை யுத்தத்தில் ஜயித்ததை விவரித்தான். ஆறாயிரம் ராக்ஷஸ வீரர்கள் ராவணனுக்கு இணையான பலமும், ஆற்றலும், செல்வத்திலும், கௌரவத்திலும், கர்வத்திலும் அவனைப் போலவே இருப்பவர்கள் வருவார்கள். இதைக் கேட்டு அதைரியமோ, கோபமோ கொள்ள வேண்டாம். உனக்கு ரோஷத்தை உண்டாக்கவே இந்த விவரங்களைச் சொல்கிறேன். நீ சமர்த்தன் தான். தேவர்களையும் அடக்கி விடுவாய். சதுரங்க படையுடன், வானரங்களை சரியானபடி வ்யூஹம் அமைத்துக் கொண்டு நடத்திச் செல்லுங்கள். ராவணனை ஒரு கை பார்த்து விடலாம். கலக்கி எடுத்து விடலாம். விபீஷணன் சொன்னதைக் கேட்டு ராமரும், வானர வீரர்களுக்கு பொறுப்புகளை விநியோகித்தார். கிழக்கு வாயிலில் நீலன் தன் படையுடன் ப்ரஹஸ்தனை எதிர்க்கட்டும். அங்கதனும் தன் படையுடன் தென் திசையில் மகா பார்ஸ்வன். மகோதர்களை கலக்கட்டும். பவனாத்மஜன் ஹனுமான், மேற்கு வாயிலில் நுழையட்டும். தைத்ய, தானவ, ரிஷிகளின் சமூகத்தை துன்புறுத்தி வந்த வர தான பலம் தந்த கர்வத்துடன் உலகை ஆட்டிப் படைத்து வருத்திக் கொண்டிருந்த ராவணனை நான் எதிர் கொள்வேன். அவனை வதம் செய்து நிச்சயமாக வெற்றி வாகை சூடத் தான் போகிறோம். லக்ஷ்மணன் என்னுடன் இருப்பான். வடதிசையில் பொறுப்பை நான் ஏற்கிறேன். ராவணனை தன் படை பலத்துடன், வடதிசையில் நாங்கள் மோதுவோம். சுக்ரீவனும் கரடி ராஜனும் விபீஷணனும், நமது படைகளின் மத்தியில் இருக்கட்டும். வானர வீரர்கள், யுத்தம் செய்யும் பொழுது மனித உருவம் எடுத்துக் கொள்ள வேண்டாம். வானரங்கள் தான் நமது சின்னம். தன் ஜனங்கள் என்று அடையாளம் காட்ட போதுமானது. மனிதர்களான எழுவர், நானும், லக்ஷ்மணனும், தன்னோடு சேர்த்து ஐவரான விபீஷணன், முன் நின்று போர் செய்வோம். இவ்வாறு ஏற்பாடுகள் செய்து விட்டு சுஷேண மலையில் ஏறிப் பார்க்கலாம் என்று சொல்லவும், எல்லோருமாக கிளம்பினர். சுஷேண மலைச் சாரல் மிக ரம்யமாக இருப்பதைக் கண்டு ரசித்து விட்டு, இறங்கி வந்து, தன் படை வீரர்களுடன் லங்கையை முற்றுகையிட்டார். பூமியை மறைத்த படி வானரங்கள் படை சென்றது. சத்ருவை வதம் செய்ய வேண்டும் என்று எல்லோரும் மனதினுள் தீர்மானித்துக் கொண்டனர்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராம கு4ல்ம விபா4க3: என்ற முப்பத்து ஏழாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 38 (445) சுவேளாரோஹணம் (சுவேள மலையில் ஏறுதல்)
லக்ஷ்மணனையும், சுக்ரீவனையும், விபீஷணனையும் அழைத்து இந்த சுவேள மலையில் ஏறுவோம். இந்த மலை மிக அழகாக இருக்கிறது. தாதுப் பொருட்கள் நிறைந்தது. இதன் மேல் உச்சி வரை ஏறி இன்று இரவை இங்கேயே கழிப்போம், எனவும், எல்லோருமாக மலையில் ஏற ஆரம்பித்தனர். லங்கையையும் நன்றாக பார்க்க முடியும். எந்த ராவணன் என் உயிருக்குயிரான சீதையை அபகரித்துக் கொண்டு போனானோ, அவன் வசிக்கும் இடம் எப்படி இருக்கிறது என்பதையும் பார்ப்போம். அவன் தர்மம் பற்றி எதுவும் அறியாமல், குலமோ, நடத்தையோ எதுவும் பற்றிக் கவலைப்படாமல், நீசமான ஒரு செயலை செய்து ராக்ஷஸ குலத்தையே தாழ்த்தி விட்டான். என் மனதில் பொங்கி வரும் ஆத்திரம், இந்த ஒரு அதமனான ராவணனின் செயலால், ராக்ஷஸ குலத்தையே அழிக்கப் போகிறது. விதி வசத்தால் ஒருவன் செய்யும் பாப காரியம், நீசமான, தன் சுய நலமே பெரிதாக நினைக்கும் ஒருவனால், அவன் குலமே அழிகிறது. இப்படி பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, ராமனும் சுவேள மலையின் அழகிய சரிவு பிரதேசங்களைக் கடந்து மேலே ஏறினார். பின்னாலேயே லக்ஷ்மணனும் ஓட்டமும் நடையுமாக பின் தொடர்ந்தான். பெரிய வில்லையும், அம்புகளையும் எடுத்துக் கொண்டு, தன் விக்ரமத்தை, ஆற்றலை வெளிப்படுத்த நேரமும், வாய்ப்பும் வந்து விட்டதை எண்ணி மனதில் மகிழ்ச்சியோடு சென்றான். அவனைத் தொடர்ந்து சுக்ரீவன், மந்திரிகளோடு விபீஷணன், ஹனுமான், அங்கதன், நீலன், மைந்த த்விவிதர்கள், பின்னாலேயே சென்றனர். கஜன், கவாக்ஷன், கவயன், சரபன், கந்த மாதனன், பனஸன், குமுதன் இவர்களும், ஹரன், ரம்பன் என்ற சேனைத் தலைவர்கள், ஜாம்பவானும், சுஷேணனும், ரிஷபன் என்ற புத்திமானான வானர வீரன், துர்முகனும்,சத பலியும், இவர்கள் தவிர, வேகமாக நடக்கக் கூடிய பல வானரங்கள், வாயு வேகத்தில் மலையில் ஏறி பழக்கப் பட்ட அந்த வன வாசிகள், ஏறினர். நூற்றுக் கணக்காக ராகவன் ஏறிக் கொண்டிருந்த சுஷேண மலையில் ஏறினர். சீக்கிரமே மலை மேல் ஏறி அதன் உச்சியில் நின்று லங்கையைக் கண்டனர். ஆகாயத்தில் இருப்பது போல உயரத்தில் அமைந்திருந்த அழகிய நகரைக் கண்டனர். பிராகாரங்களும், மாளிகைகளும், அழகாகத் தெரிய, ராக்ஷஸிகள் நிறைந்த லங்கையைக் கண்டனர். ப்ராகாரங்களில் கறுத்த உருவத்துடன் நடமாடிய ராக்ஷஸ வீரர்களைக் கண்டனர். இவர்கள் அணி வகுப்பு மற்றொரு ப்ராகாரம் போல ஒழுங்காக இருந்தது. போர் வெறி கொண்ட ராக்ஷஸர்களின் கோஷம் பல விதமாகக் கேட்டது. ராமரும் மற்றவர்களும் லங்கையை ரசித்து பார்த்துக் கொண்டிருக்கையிலேயே சூரியன் மறைய அஸ்தமன சூரியனின் கிரணங்கள் வானத்தில் கோலம் போட்டது போல வண்ண கலவையாகத் தெரிந்தது. ஸந்த்யா மெதுவாக கரைய வானத்தில் சந்திரனும் உதயமாக, இரவு வந்தது. வானர சேனைத் தலைவனான ராமர், விபீஷணனை கலந்து ஆலோசித்து, லக்ஷ்மணன் கூட அன்று இரவு அந்த மலையுச்சியில் சுகமாகக் கழித்தார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் சுவேளாரோஹணம் என்ற முப்பத்து எட்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 39 (446) லங்கா த3ரிசனம் (லங்கையை தரிசித்தல்)
வானர வீரர்கள், அன்று இரவு அந்த மலை மேல் தங்கி, லங்கையின் வனங்களையும், உப வனங்களையும் கண்டனர். நீளமான, விசாலமான, சமமான பகுதிகளாகப் பிரிக்கப் பட்டு, கண் கொள்ளா காட்சியாக அமைந்திருந்த தோட்டங்களை பார்த்து வானர வீரர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். சம்பக, அசோக, புன்னாக, சால, தால எனும் மரங்கள் நெருக்கமாக அமைந்திருந்தன. தமால வனம் மறைக்க சிறிய குன்றுகள் மாலையணிவித்தது போல ஊரைச் சுற்றி அமைந்திருந்தது. ஹிந்தாள, அர்ஜுன, நீப, சப்தபர்ண மரங்கள் பூத்து குலுங்கின. திலக, கர்ணிகார, பாடல எனும் வகை புஷ்பங்கள் நிறைந்த மரங்கள். மரங்களைச் சுற்றி படர்ந்திருந்த கொடிகளும், புஷ்பங்களின் பாரத்தால் நெகிழ்ந்து தலை வணங்கி இருந்தன. இப்படி திவ்யமான மரங்களும் புஷ்பங்களுமாக இந்திரனுடைய அமராவதி போல லங்கை காட்சியளித்தது. சிவந்த இளம் தளிர்களும் விசித்ரமான குசுமங்களும், பசுமை போர்த்தியிருந்த தரையும், தவிர எங்கும் காணாத பல அழகிய வனத்தில் விளையும் தாவர வகைகளுமாக,வாசனை நிரம்பிய புஷ்பங்களும், பழங்களுமாக அங்கிருந்த மரங்கள், ஆபரணங்களைச் சூடிக் கொண்ட மனிதர்கள் போல, இவைகளைத் தன் மேல் தரித்துக் கொண்டிருந்தது. சைத்ர ரதம் போன்றும், நந்தன வனத்துக்கு சமமாகவும் எல்லா ருதுக்களிலும் ரம்யமாகவே, அந்தந்த பருவத்து மலர்கள், பழங்கள் என்று செழிப்பாக ரம்யமாக விளங்கும் வனத்தில் வண்டுகள் ரீங்காரம் ஓயாது கேட்டது. நத்யூஹ, கோயஷ்டிக, ப3க (கொக்குகள்) ஆடும் மயில்கள், மலையருவிகளின் சப்தத்தோடு இணைந்து வந்த பரப்4ருத் என்ற பறவைகளின் கூச்சலையும் கேட்டனர். எப்பொழுதும் பறவைகள் உல்லாசமாக கூச்சலிட, ப்4ரமரங்கள் சுற்றிக் கொண்டிருக்கும், கோகிலத்தின் இசையும், மண்டிக் கிடந்த மற்ற பறவைகளின், இவை தவிர கூட்டம் கூட்டமாக வந்து போகும் பறவைகளின் கூச்சலும் சேர்ந்து இருந்த அந்த பிரதேசத்தின் ராஜாவான, ப்4ருங்க ராஜாவின் படையான ப்4ரமரங்கள் கோஷ்டி கானம் செய்தன போலும். கோணாலகம் எனும் பறவைகள் சுழன்று சுழன்று பறப்பது கண்களைக் கவர, ஸாரஸ பக்ஷிகளும் கூட்டம் கூட்டமாக இனிமையாக இரைச்சல் போடுவது கேட்டது. வானர வீரர்கள் இதற்கு மேலும் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாமல், ஆரவாரத்துடன் வனத்தினுள் நுழைந்தனர். வானரங்கள் கூட்டமாக உள்ளே நுழைந்த பொழுது வரவேற்பது போல, மலர்களின் மணத்துடன் காற்று சுகமாக வீசுயது. நாசிக்கு இதமாக இருந்தது. ஒரு சிலர் சுக்ரீவனின் அனுமதியைப் பெற்று கொடிகள் பறக்க இருந்த லங்கா நகரின் வீதிகளில் சென்றனர். வழியில், ஆகாயத்தில் பறக்கும் பறவைகளை பயமுறுத்திக் கொண்டும், மிருகங்களையும், சிறு பக்ஷிகளையும் பயந்து அலற வைத்த படி, பூமி அதிர நடந்தனர். உரத்த குரலில் கோஷமிட்டபடி நடந்தனர். இவர்கள் கூட்டமாக நடந்த அதிர்வில் எழுந்த புகை மண்டலம் வானளாவி எழுந்தது. கரடிகள், சிங்கங்கள், வராகங்கள், மகிஷங்கள், யானைகள், மான்கள் இந்த சத்தத்தால் பயந்தன. நாலா திக்குகளிலும் ஓடலாயின. த்ரிகூடத்தின் சிகரம், வானளாவி நின்ற உயர்ந்த மாளிகைகள் திடுமென, புஷ்பங்கள் வாரியிறைக்கப் பட, வெள்ளி முலாம் பூசியது போல ஆயிற்று. நூறு யோஜனை விஸ்தீர்ணம், விமலமாக அழகாக காட்சியளித்தது. மென்மையாகவும், லக்ஷ்மீகரமாகவும் பக்ஷிகள் கூட எட்ட முடியாதபடி உயர்ந்தது, மனதால் கூட எட்டி பிடிக்க முடியாது என்று வர்ணிக்கப் பெற்றது, இந்த மனிதர்கள் தங்கள் கர்மாக்களின் பயனாக எப்படி எட்ட முடியும்? இப்படிப்பட்ட உயர்ந்த இடத்தில் ராவணன் பாலித்து வந்த லங்கா நகரம் நிர்மாணம் செய்யப் பட்டிருந்தது. நூறு யோஜனை தூரம் அகலம், முன்னூறு யோஜனை நீளமும், அந்த நகரம் கோபுரங்களும், மாளிகைகளும், அவைகளில் பொன்னும், மணியும், தேக்கும் இழைத்துச் செய்யப் பட்ட வேலைப்பாடுகளும், வெண் மேகம் போன்ற வண்ணத்துடன் இருந்த அந்த மாளிகைகளும், விமானங்களும், லங்கைக்கு அலங்காரமாக விளங்கின. சூரியனுடைய அடர்ந்த ஒளி வட்டத்தில், மத்யமமான வைஷ்ணவ பத்மம் போல, இந்த ஊரில் ஆயிரக் கணக்கான தூண்களின் நடுவில் மாளிகை கட்டப் பட்டிருந்தது. வானத்தை தொட முயலுவது போலவும், கைலாஸ மலை போலவும், நாற்கால் மண்டபங்கள் ராவணனுடைய ஊரில் அலங்காரங்கள் நிறைய இருந்தன. நூறு ராக்ஷஸர்கள் எப்பொழுதும் காவல் இருந்து பாதுகாக்கப் படும் அந்த ஊரில் மனதைக் கவரும் வண்ணம், காடுகளும், சிறு குன்றுகளும், காட்சி தந்தன. பல விதமான தாதுப் பொருட்கள், உபவனங்கள் நிறைந்தது. பலவிதமான பறவைகள் வட்டமடித்தன. பலவிதமான சிறு மிருகங்கள் வசித்தன. பலவிதமான பூக்கள் குவியலாக காணப் பட்டன. ராக்ஷஸர்களும் கணக்கில்லாமல் வசித்தனர். இப்படி செழிப்பாக, நிறைவாக இருந்த ஊரை, தானும் நிறைவான குணங்களையும், பொருளையும் உடையவனான ராமன், லக்ஷ்மீவான், லக்ஷ்மணன் கூட இருப்பவனான ராமன், கண்டு களித்தான். பெரிய பெரிய வீதிகளுடன் கல கலப்பாக இருக்கும் அந்த நகரை பார்த்து, லக்ஷ்மணனின் தமையன், தேவ லோகத்து நகரமோ, எனும் படி அமைந்திருந்த லங்கையை பார்த்து பெரிதும் வியந்தார். பலவிதமான ரத்னங்கள் நிறைந்த பிராஸாதங்கள் (மாளிகைகள்) மாலையாக அலங்கரிக்க, அந்த நகரத்தின் முக்கியமான இடங்களில் பொருத்தியிருந்த யந்திரங்களையும், தாழ்ப்பாள், பூட்டு இவற்றையும் ராமன் பார்த்து மனதில் குறித்துக் கொண்டார்.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் லங்கா தர்ஸனம் என்ற முப்பத்து ஒன்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)
அத்தியாயம் 40 (447) ராவண சுக்3ரீவ நியுத்3த4ம் (ராவணன் சுக்ரீவனுடன் கை கலத்தல்)
சுஷேண மலையின் உச்சியில் சுக்ரீவனுடனும், மற்ற வானரங்களுடனும் ஏறிச் சென்றிருந்த ராமரும் மற்றவர்களும், அங்கிருந்தபடியே நாலா புறமும் சுற்றிப் பார்த்தனர். முஹுர்த்த நேரம் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். த்ரிகூட மலையின் மேல், விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப் பெற்ற லங்கை, மிகத் தெளிவாக,அழகிய முறையில் உறுதியாக கட்டப் பட்டிருப்பதையும், அதை சுற்றி இருந்த அழகிய தோட்டங்களையும், நீர் நிலைகளையும் பாராட்டியபடி தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். அதே சமயம், தன் மாளிகையின் கோபுரத்தின் மேல் ராக்ஷஸேந்திரனும் வந்து நின்றான். வெண் கொற்றக் குடையும், சாமரமும், உடல் முழுவதும் ரக்த சந்தனம் பூசி, ரத்னாபரணங்களை தரித்தவனாக, கரு மேகம் போன்ற நிறமும், நகைகளால் மறைக்கப் பட்ட ஆடைகளுடன், ஐராவதத்தின் தந்தங்கள் குத்தி புண்ணாகி தழும்பாக தெரிந்த மார்பும், முயல் குட்டியின் ரத்தம் போன்று சிவந்த ஆடையுமாக நின்றவனை, மற்றவர்களுடன் சுக்ரீவனும் கண்டான். சந்த்யா கால சூரியனுடன், மேக ராசிகள் நிறைந்த ஆகாயத்தில் நிற்பது போல நின்றவனை ராமரும் மற்ற வானரங்களும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, சுக்ரீவன் திடுமென குதித்து எழுந்தான். க்ரோத வேகத்துடன், தன் சக்தியும் பலமும் தெரிய மலை உச்சியிலிருந்து மாளிகையின் சிகரத்தை நோக்கி ஆகாய மார்கமாக தாவிச் சென்றான். பயம் சற்றும் இல்லாத மனத்தினனாய், ராவணனுக்கு எதிரில் சற்று நின்று, அவனைக் கூர்ந்து பார்த்து, அலட்சியமாக பேச்சு கொடுத்தான். ராவணா, லோக நாதனான ராமனுடைய சகா, அவன் தாஸன் நான். ராக்ஷஸா, இன்று என் கையால் நீ அரசன் என்று சொல்லிக் கொள்ளும் தகுதியை இழக்கப் போகிறாய் என்று சொல்லிக் கொண்டே, அவன் மேல் தாக்கினான். அவன் தலையில் இருந்த மகுடத்தை வேகமாக பறித்து பூமியில் வீசி எறிந்தான். எங்கிருந்தோ திடுமென முளைத்தது போல எதிரில் வந்து நின்ற சுக்ரீவனைப் பார்த்து ராவணன் ஒரு க்ஷணம் திக்கு முக்காடிப் போனான். சமாளித்துக் கொண்டு சுக்ரீவனைப் பார்த்து ஏய் சுக்ரீவா, ஹீனக்ரீவாஸ்ரீ (கழுத்து இல்லாதவனே) என்று சொல்லியபடி, தன் கைகளால் சுக்ரீவனை பிடித்து கீழே தள்ளி விட்டான். ஒரு பந்தை எடுப்பது போல அவனை எடுத்து பூமியில் வீசினான். இருவரும் வேர்வை வடியும் உடலும், ஆங்காங்கு பட்ட காயங்களுடனும், தங்கள் நற்குடி பிறப்பின் காரணமான பெரும் தன்மையால் அடிக்கும் பொழுதும் தன் எல்லையை மீறாதவர்களாக, சால்மலி, கிம்சுக மரங்கள் இரண்டும் தங்களுக்குள் மோதிக் கொண்டது போல, முஷ்டிகளாலும், புறங்கையாலும், புஜங்களாலும், முன் கையாலும், ராக்ஷஸேந்திரனும், வானர ராஜனும் சண்டை செய்தனர். இருவருமே நல்ல பலசாலிகள். அவர்கள் சண்டையும் அந்த பலத்தைக் காட்டும் வகையில் இருந்தது. குட்டிசண்டை தான் என்றாலும், விட்டுக் கொடுக்க இருவரும் தயாராக இல்லை. கீழே தள்ளி, எடுத்து நிறுத்தி, வணங்கி அடிபடாமல் நகர்ந்து, கால்களின் நின்ற நிலையை விடாமல் சமாளித்துக் கொண்டு இருவரும் கோபுர வாயிலில் நின்றபடி, ஒருவரையொருவர் அடித்து சோர்ந்து போனார்கள். கீழே விழுந்தாலும், பூமியில் படாமல் திரும்ப எழுந்து நின்று, மேல் மூச்சு வாங்க நின்றவர்கள், சமாளித்துக் கொண்டு, கட்டிப் பிடித்து, கைகளை முறுக்கி, கைகளை கோர்த்து இந்த போட்டியைத் தொடர்ந்தனர். சிக்ஷா பலமும், சம்ப்ரமமும் இருவருக்கும் ஒத்த நிலையில் இருந்தது தெளிவாகத் தெரிந்தது. யுத்த மர்மங்களை அறிந்து அதன்படி நியாயமாக த்வந்த யுத்தம் செய்தனர். சார்தூலமும், சிம்மமும் போல மோதிக் கொண்டு இருவருமே கர்வத்துடன், விட்டுக் கொடுக்க தயாராக இல்லாமல், இரண்டு யானைக் குட்டிகள் போல சண்டையிட்டனர். (ஞரஸெதலிநங) மார்பில் அடித்து, துன்புறுத்தி இருவரும் குப்புற தரையில் விழுந்தனர். ஒரே சமயத்தில் விழுந்தனர். திரும்ப எழுந்து ஒருவரையொருவர் வாயால் நிந்தித்துக் கொண்டு, திரும்ப யுத்த மார்கத்தில் குத்து சண்டையை ஆரம்பித்தனர். உடல் பயிற்சியும், முறையாக கற்றுத் தேர்ந்ததிலும் இருவரும் சமமே. எளிதில் ஆயாசமோ, கஷ்டமோ, வாட்டமோ அடையாத உடல் வலிமை மிக்கவர்கள். யானையின் துதிக்கை போல விளங்கிய புஜங்களால் ஒருவரையொருவர் தடுத்தபடி, சிறந்த யானை போன்றவர்கள் இருவரும், வெகு நேரமாக இந்த குத்துச் சண்டையை போட்டுக் கொண்டே மண்டல மார்கத்தில் சஞ்சரித்தனர். ஒருவரையொருவர் நெருங்கி அடிக்க முயலுவதும், இரை தேடும் பூனை போல பதுங்கி இருந்து, வேகமாக தாவி மோதுவதும், (குத்துச் சண்டையின் பரிபாஷைகள்) மண்டனங்களும், சக்ரங்களும், வித விதமான ஸ்தானங்களும், போவதும், வருவதும், கோமூத்ரி எனும் நிலையும், குறுக்காக பாய்வதும், வக்ரமாக போவதும், பரிமோக்ஷம், ப்ராஹாரம், வர்ஜனம், பரிதாவனம் என்றவை தவிர, அபிதிரவனம், ஆபாவம், ஆஸ்தானம்.சவிக்ரஹம், பராவ்ருத்தம், அபாவ்ருத்தம்,அவத்ருதம், அவப்ருதம், உபன்யஸ்தம், அபன்யஸ்தம், என்ற யுத்த மர்கங்களை நன்கு அறிந்தவர்கள், இருவரும் சுற்றிச் சுற்றி வந்து தொடர்ந்து தங்கள் குத்துச் சண்டையை செய்தனர். ராவணனும் வானரேந்திரன் சுக்ரீவனும் இந்த சமயத்தில் திடுமென ராக்ஷஸன் மாயா பலத்தை மேற் கொண்டான். இதை புரிந்து கொண்ட வானராதிபன், ஆகாயத்தில் தாவி குதித்து தன்னைக் காத்துக் கொண்டதோடு வெற்றி பெற்றவனாகவும் ஆனான். ராவணன் இருந்த இடத்திலேயே நின்றபடி சுக்ரீவனைக் காணாமல் திகைத்தான். ராவணன் சுற்றும் முற்றும் தேடிய நேரத்திலேயே, சுக்ரீவன், வெற்றி நடை போட்டுக் கொண்டு ஆகாயமார்கமாக, ராமரும் மற்றவர்களும் நின்ற இடம் வந்து சேர்ந்து விட்டான். சூரியனின் புத்திரன், தன் சாகஸத்தை முடித்துக் கொண்டு திரும்ப ஆகாய மார்கமாகவே வந்து சேர்ந்து ரகு குல ராஜ குமாரனை ஜய கோஷம் செய்து வாழ்த்தியபடி அருகில் வந்து நின்றான். இயல்பாகவே த்வந்த யுத்தம் செய்வதில் மகிழ்ச்சியடையும் வானரங்கள், வெற்றி பெற்ற சுக்ரீவனை வாழ்த்தி, கொண்டாடின.
(இதுவரை வால்மீகி முனிவரின், ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், யுத்த காண்டத்தில் ராவண சுக்3ரீவ நியுத்3த4ம் என்ற நாற்பதாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்.)