பாகவதம்
ஸ்ரீமத் பாகவதம் – பத்தாவது ஸ்கந்தம் – பூர்வார்தம்
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||
அத்யாயம்-1
அரசன் பரீக்ஷித் வினவினான்: தாங்கள் ஸூர்ய, சந்திர வம்சங்களைப் பற்றிச் சொன்னீர்கள். பரம அத்புதமான கதைகள். முனி சத்தம! தர்ம சீலனான யதுவின் வம்சத்தில் தோன்றிய விஷ்ணுவின் வீர செயல்களைப் பற்றிச் சொல்லுங்கள். யது வம்சத்தில் அவதரித்த பகவான் பூத பாவனன். விஸ்வாத்மா அவர் அவதரித்து என்ன செயல்களைச் செய்தார், அவைகளைச் விஸ்தாரமாகச் சொல்லுங்கள்..
ரிஷிகள் பாடும், புவியில் பிறவிக் கடலை கடக்கச் செய்யும் ஔஷதம், கேட்கவே மனோபிராமம், உத்தம ஸ்லோகன், எவருடைய குணங்களை வர்ணிப்பதில் அறிஞர்கள் அலுப்பதேயில்லையோ, அந்த சரித்திரத்தைச் சொல்லுங்கள். என் பாட்டனார்கள், போரில் அமரரான தேவ வ்ரதன் முதலிய அதிரதர்கள், தாண்டமுடியாத பெரும் கடல் போன்ற கௌரவ சேனையை சிறு பசுவின் கன்றின் ஓரடி போல எளிதாக கடந்து வந்தனர்.
துரோணரின் மகன் எய்த அஸ்திரத்தால் என் அங்கங்கள் பாதிக்கப் பட்ட சமயம், குரு, பாண்டவர்கள் வம்சத்து ஒரே சந்தான பீஜம் என்று என்னை தாயின் வேண்டுதலை ஏற்று என்னை அவள் கர்பத்திலேயே காப்பாற்றியவர்.
வித்வன்! மாயா மனுஷ்யன் அவருடைய வீர்யங்களைப் பற்றிச் சொல்லுங்கள். அகில உயிரினங்களின் உள்ளும் வெளியுமாக இருந்து காப்பவனாகவும், காலனாகவும் இருப்பவன். அம்ருதமும் அவன் தந்தால் தான். ம்ருத்யுவும் அவன் சங்கல்பமே.
ரோஹிணியின் மகன் ராமன், சங்கர்ஷணன், தேவகி கர்ப்ப சம்பந்தமும் எப்படி செய்ய முடிந்தது?பகவானான முகுந்தன்! தந்தை வீட்டிலிருந்து வ்ரஜ தேசம் ஏன் போனார்? அங்கு போய் தாயாதிகளுடன் அவர்களுக்கு தலைவனாக இருந்தார். எதற்காக?
வ்ரஜ தேசத்தில் வசித்த சமயம் மது புரியில், கேசவன், கம்சனையும் அவன் சகோதரனையும் வதைத்தார். தாய் வழி உறவினர்கள் ஆனாலும் வதம் செய்வதே உசிதமாக நினத்தவர். மனித தேகத்தை தானே எடுத்துக் கொண்டு, பல ஆண்டுகள், வ்ருஷ்ணிகளுடன், யது புரியில், வசித்த சமயம் பல பத்னிகளும் ப்ரபுவுக்கு வந்து சேர்ந்தனர். முனிவரே! இந்த கதைகளையும், மற்றும் எனக்குத் தெரியாத விஷயங்களையும், ஸ்ரத்தையுடன் கேட்கிறேன், எனக்குச் சொல்லுங்கள். பசி பொறுக்க முடியாமல் நான் தவிக்கவில்லை. சந்த்யா வந்தனம் முதலியவைகளை செய்ய முடியாமல் போனது என்னை வருத்தவில்லை. ஸ்ரீ ஹரியின் கதை என்ற அம்ருதம் தங்கள் வாயால் கேட்பதிலேயே என் மனம் நிறைந்துள்ளது.
சூதர் இதைக் கேட்டு, விஷ்ணுராதன் என்ற பெயரில் அறியப்பட்ட பரீக்ஷித் அரசனைப் பார்த்து பாராட்டினார். மிக்க நன்று, என்றவர், வியாசர் மகனை ஸ்ரீ சுகரை கலி கல்மஷம் போக்கும் ஸ்ரீ க்ருஷ்ண சரித்திரத்தைச் சொல்ல வேண்டினார். அவரும் பாகவத ப்ரதானமான பகவத் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ராஜரிஷியே! உன் புத்தி நல்ல வழியில் செல்கிறது. வாசுதேவனின் சரித்திரத்தைக் கேட்க உன் பிறவி விருப்பம். வாசுதேவனின் கதையைச் சொல்பவர், சொல்லும்படி கேட்பவர், கவனமாக கேட்பவர் என்ற மூன்று விதமானவர்களையும், அவருடைய பாத தீர்த்தம் பாவனமாக்குவது போல புனிதமாக்கி விடுகிறது.
பூமியை ஆளும் தகுதி பெற்றவுடனேயே, தான் என்ற கர்வமும் வந்து சேருகிறது. அது போன்ற பல நூறு சேனைகளுடன், அரசர்களாக இருந்த தைத்யர்களால் பூமி பாரம் தாங்காமல், பூ தேவி, தேவாதி தேவனான ப்ரும்மாவை சரணம் அடைந்தாள். கண்களில் நீர் வழிய, பசு ரூபம் எடுத்துக் கொண்டு தீனமாக கதறியவளாக, அவரிடம் தன் கஷ்டத்தைச் சொன்னாள். ப்ரும்மா அதைக் கேட்டு, மற்ற தேவர்களுடன் அவளையும் அழைத்துக் கொண்டு, முக்கண்ணனும் உடன் வர, அழைத்துக் கொண்டு பாற்கடலின் கரையில் ஸ்வேத த்வீபம் என்ற இடத்தில், இருந்த பகவானைக் காணச் சென்றனர். அவரைக் கண்டவுடன் ஜகன்னாதனை புருஷ சூக்தம் சொல்லி வணங்கினர். வ்ருஷாகபி, -பக்தர்களுக்கு வேண்டியதை வர்ஷிப்பவர் – ( ஜகத்பதி ஆனவர் தைத்யர்களும் ஜகத்துள் அடக்கம் தானே, அவர்களை வதைப்பது ஏன் என்ற கேள்விக்கு தேவ பக்ஷபாதி என்பதால் தைத்யர்களை அடக்குவது அவசியமாகிறது என்று விரிவுரையாளர்)
ஆகாயத்தில் ஒலித்த குரலை, வேதங்கள் கேட்டு, தேவர்களுக்கு சொல்லியது. ஹே! அமரா:! பர புருஷனின் வாக்கை கேளுங்கள். இனியும் தாமதிக்க வேண்டாம். பூமியின் கஷ்டம், போக, உங்கள் அம்சங்களாக பூமியில் பிறவி எடுத்துக் கொள்ளுங்கள். காலம் வரும் சமயம் தன் சக்தியால், ஈஸ்வரேஸ்வரன், தானே பூமியில் பிறக்கும் வரை, காத்திருங்கள். வசுதேவனின் வீட்டில் சாக்ஷாத் பகவான் அவதரிப்பார். அவருக்கு பிரியமானதைச் செய்ய தேவலோக ஸ்த்ரீகளும் பிறக்கட்டும். அவர் பிறக்கும் முன்னே அவருடைய படுக்கையாக விளங்கும் ஆதி சேஷன், சங்கர்ஷணாக -பல ராமர்- வசுதேவர் மகனாக பிறப்பார். உலகை ஆட்டி வைக்கும் அவருடைய மாயா -அவளுக்கும் ப்ரபு தானே ஆணையிட்டு இருக்கிறார். காரியத்தை சாதிக்க உதவும் அவளும் பிறப்பாள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு அவர்களுக்கு கட்டளையிட்டு, ப்ரஜாபதியின் தலைவரான விபுவான பகவான் , பூமியை தன் இனிய வாக்கால் சமாதானம் செய்து விட்டு, தன் இருப்பிடம் சென்றார்.
ஸூரசேனன் என்ற யதுபதி, மதுரா என்ற நகரில் வசித்து வந்தான். மதுரா, சூரசேனா என்ற இரண்டு ராஜ்யங்களையும் பாலித்து வந்தான். அதனால் அனைத்து யாதவர்களுக்கும் அது ராஜதானியாக இருந்தது. மதுரா விசேஷமாக, பகவான் அவதரித்ததால் என்றும் ஸ்ரீ ஹரி அங்கு தங்கி இருக்கிறார். அங்கே இருந்த சௌரி-ஸூரசேனனின் மகன் வசுதேவன் தேவகியை மணந்தார். தன் மனைவியான தேவகியுடன் ரதத்தில் புறப்பட்டார். வசுதேவ- தேவகிக்கு வழி அனுப்ப, நானூறு பாரிபர்ஹம்- யானைகள், பொன்னால் அலங்கரிக்கப் ப்ட்டு, இருநூறு அஸ்வங்கள், ரதங்கள் அறுனூற்றுக்கும் மேல், சுகுமாரிகளான தாசிகள், இரு நூற்றுக்கும் மேல், நன்கு அலங்கரிக்கப்பட்டவர்களாக , தேவகன் பிரியமான தன் மகளுக்கு சீதனமாக கொடுத்தார். மங்களகரமாக சங்கமும் தூரிகளும், முருதங்கங்களும், துந்துபிகளுக்கு சமமாக முழங்கின. ப்ரயாண காலத்தில் வர-வதூக்களுக்கு மங்களம் சொல்லி வாழ்த்தினர். வழியில் ரதத்தின் கயிற்றை பிடித்தபடி சாரதியாக அமர்ந்திருந்த கம்சனை நோக்கி அசரீரி வாக்கு எழுந்தது. ‘அபுத-अबुध! முட்டாளே! இவளுடைய எட்டாவது குழந்தை உன்னைக் கொல்வான்’ என்றது. இதைக் கேட்டு அவன், போஜ வம்சத்தின் குலத்தை அழிக்கவே வந்தவன் போல பாபத்தைச் செய்ய துணிந்த அவன், தன் சகோதரி என்றும் பாராமல் தேவகியை கொல்லத் துணிந்து, வாளை வீசிக் கொண்டு அவள் கேசத்தை பற்றினான். நாகரீகமற்ற வெறுக்கத்தகுந்த இந்த செயலை செய்ய விடாமல், வசுதேவர், கொலை வெறியுடன் நின்றவனையும் சமாதானப் படுத்த முயன்றார்.
வசுதேவர் சொன்னார்: போஜ வம்சத்தின் புகழை வளர்க்க வந்தவன் நீ, ஊரார் போற்றும் சிலாக்யமான குணங்களுடன் சூரனாக அறியப்படுகிறவன், எப்படி உன் தங்கையைக் கொல்ல துணிந்தாய். பெண், விவாக சமயத்தில் என்றும் யோசியாமல் இது என்ன செயல்? வீரனே, பூமியில் பிறந்தவர்களுக்கு ம்ருத்யு கூடவே வரும். இன்றோ, நூறு ஆண்டுகளுக்குப் பிறகோ, ம்ருத்யு தான் உயிரினங்களுக்கு நிரந்தரமானது. அது பஞ்சத்வம்- ஐந்தாவது நிலை ( குழந்தை,பால,யௌவனம்,முதுமை – என்ற நான்கும் ) உடலை உடைய மனிதன் தன் வினைப் பயனுக்கு ஏற்ப தன் மறு பிறவியை, வேறொரு தேகத்தை அடைகிறான். அதில் அவன் செய்யக் கூடியது எதுவும் இல்லை. பழைய உடலை விட்டு புதிய உடலை ஏற்கிறான். ஒரு காலை ஊன்றி, ஒரு காலை முன் வைத்து மனிதன் நடக்கும் பொழுதே அவன் ஆயுளும் உடன் செல்கிறது.
கனவில் காணுவது போன்றது இந்த தேகம், கண்டதும், கேட்டதும் மனதில் உருவம் பதிகிறது. அதாவது இந்த தேகத்தை விடும் முன் அதன் அடுத்த தேகம் தீர்மானமாகி விடுகிறது. தெய்வ சங்கல்பத்தால், எங்கெல்லாம் இந்த பிறவியில் சஞ்சரிக்கிறானோ, மனம் பலவிதமாக சிந்திக்கவும், அறிந்து கொள்ளவும் ஐந்து விதமான போகங்களையும் அனுபவிக்கிறது. முக்குணங்களும் சேர்ந்து மாயையால் உண்டான தேகம் இது. பானையில் நிரம்பிய நீரில் தெரியும் சூரியனின் பிம்பம் காற்றினால் அசைவது போல தோற்றம் கொடுக்கும். வாஸ்தவத்தில் ஸூரியனின் அசைவு அல்ல அது. அது போல ஆசை முதலியவைகளால் மோகம் அடைகிறான். அசரீரி வாக்கு கண்டிப்பாக பலிக்கும். தேவகியை நீ கொன்றாலும் அடுத்த ஜன்மத்தில் அவள் மகனாக பிறப்பவன் உன் மரணத்துக்கு காரணமாக ஆவான். இது தான் ஜன்ம சக்ரம், சுழன்று கொண்டேயிருக்கும். மற்றவர்களுக்கு துரோகம் செய்து தான் தன் சுகத்தை அடைய வேண்டும் என்பதே சரியல்ல. துரோகம் செய்தது ஏதோ விதத்தில் திரும்ப உன்னையே தாக்கும். அதனால், நீ தீன வத்சலனாக உன் சகோதரி, சிறு பெண் என்று இவளைப் பார். எளியவள், உன் மகளுக்கு சமமானவள். கல்யாணி- இந்த சிறுமி, உன்னால் பாதுகாக்கப் பட வேண்டியவள். இவளைக் கொல்லாதே.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இப்படி பொறுமையாக சாம பேதங்களால் அறிவுறுத்திய பின்னும், கம்சன் பயங்கரனாக, தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை, அவனை மாற்றுவது இயலாது என்று அறிந்த ஆனக துந்துபி- வசுதேவரின் பெயர்- நடக்கிறபடி நடக்கட்டும் என்று விட்டு விட்டார். நம்மால் முடிந்தவரை இவனுக்கு புத்தி சொல்லி, மரணத்தை தடுக்கப் பார்த்தோம். இவன் திருந்தாவிடில், தேஹி- தேகத்தையுடைய ஜீவன்- அதன் தவறு இல்லை. இவனிடம் குழந்தைகளை கொடுத்து விடுவோம், இந்த எளிய பெண்ணான தேவகியை காப்பற்றுவோம். எனக்கு குழந்தைகள் பிறக்கலாம், பிறக்காமலும் இருக்கலாம், இந்த கம்சனே ஏதோ காரணத்தால் திருந்தலாம் அல்லது அவனே மரணமடையலாம், எந்த விதத்திலும் பிறக்கப் போகும் குழந்தைகளைத் தருவதில் தோஷமில்லை என்று தீர்மானித்தார். ம்ருத்யுவே அருகில் வந்தும் கூட மார்க்கண்டேயன் முதலானவர்களை விட்டது போல விடலாம். தெய்வ சங்கல்பம். எதிரில் இருப்பது மறையலாம், கண்ணுக்கு புலப்படாமல் இருந்தது திடுமென எதிரில் தோன்றலாம்.
மரத்தில் மறைந்திருக்கும் அக்னி ஏதோ ஒரு நிமித்தம் காரணமாக, அந்த மரத்தையே எரிக்கலாம். அது போல உடலுடனே வரும் ம்ருத்யு எந்த நிமிஷத்தில் எப்படி வெளிப்படும் என்பதை ஊகிக்க முடியாது. இது போல பலவும் நினைத்துப் பார்த்து கம்சனைப் பார்த்து கொடியவன், சற்றும் வெட்கமின்றி தன் கொடூரமான செயலைச் செய்யவே நிற்கிறான் என்று அறிந்து மனதில் கோபம் கொண்டாலும், வெளிக் காட்டிக் கொள்ளாமல், நிதானமாக அவனிடம் சொன்னார்.
வசுதேவர்: சௌம்யனே! உனக்கு இவளிடம் பயமில்லை. அசரீரி சொல்லியது போல இவளுக்கு பிறக்கும் குழந்தைகளை உன்னிடம் ஒப்படைக்கிறேன். அவர்களிடம் தானே உனக்கு பயம். – என்றார்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: கம்சன் அந்த சொல்லின் பொருளை உணர்ந்து ஏற்றுக் கொண்டான். சகோதரியைக் கொல்லாமல் விட்டான். வசுதேவரும் அவனுக்கு நன்றி சொல்லி வீட்டிற்குள் பிரவேசித்தார். காலம் செல்லச் செல்ல தேவகி ஆண்டு தோறும் ஒவ்வொரு மகனாக எட்டு பேரையும், ஒரு பெண் குழந்தையையும் பெற்றாள். முதல் குழந்தை பிறந்தவுடனேயே, வசுதேவர் வாக்குத் தவறாமல் கம்சனிடம் ஒப்படைத்தார். சாதுக்களுக்கு எது தான் தாங்க முடியாத கஷ்டம். வித்வான்களுக்கு எது அவர்களால் அடைய முடியாத தேவை. குணம் இல்லாத கெட்டவர்களுக்கு எது தான் செய்யக் கூடாத செயல். மன உறுதி உள்ளவர்களுக்கு எது தான் விட முடியாதது.
சௌரியின் நியாய உணர்வையும், வாக்குத் தவறாமையும் கம்சனுக்கு மகிழ்ச்சியளித்தன. சிரித்துக் கொண்டே இவ்வாறு சொன்னான். இந்த குழந்தையை எடுத்துச் செல்லுங்கள். இவனிடம் எனக்கு பயமில்லை. உங்கள் இருவருக்கும் பிறக்கும் எட்டாவது குழந்தை தானே என்னைக் கொல்லப் போகிறான் என்றான். சரியென்று சொல்லி வசுதேவர் குழந்தையை எடுத்துக் கொண்டு திரும்பினார். இவனை எவ்வளவு நம்புவது என்ற சந்தேகம் அடி மனதை குடைந்தது.
நந்தன் முதலானவர்கள், அவர்கள் வீட்டுப் பெண்கள் வ்ருஷ்ணி வம்சத்தினர். வசுதேவர் முதலானோர் தேவகி வீட்டுப் பெண்கள், யது குல பெண்கள், அவர்கள் அனைவருமே தேவதா ப்ராயா:- தேவர்களின் அம்சமாக பிறந்தவர்கள். இருவருடைய தாயாதிகளும், நண்பர்களும் கம்சனைச் சார்ந்து இருந்தனர். இதை கம்சனுக்குச் சொன்னவர் நாரதர். ஒரு சமயம் அவர் தன் ப்ரயாணத்தில், கம்சனை சந்தித்த பொழுது, பூமியின் பாரத்தைக் குறைக்க பகவான் அவதரிக்கப் போவதையும், தைத்யர்களை அழித்து தான் அதைச் செய்ய முடியும் என்றும் முன் நடந்த விஷயங்களைச் சொன்னார். முனிவர் நகர்ந்ததும், தேவகி யது வம்சத்தினள், அவள் வயிற்றில் பிறக்கப் போவது சாக்ஷாத் விஷ்ணுவே என்றும், அவராலேயெ தன் வதம் நிகழும் என்றும் ஊகித்தான். எனவே, தேவகியையும், வசுதேவரையும் கட்டிப் போட்டு சிறையில் இட்டு, பிறக்கப் பிறக்க குழந்தைகளைக் கொன்றான். உலகில் லோபியான அரசர்கள் இப்படித்தான் தாயை, தந்தையை, சகோதர்களை, நண்பர்களை, ரத்த வெறி கொண்டு கொல்கிறார்கள். .கம்சனுக்கு நினைவு வந்தது. முன்னொரு சமயம் தான் காலனேமி என்ற அசுரனாக இருந்ததும் பகவான் விஷ்ணுவால் வதம் செய்யப் பட்டதும். இதனால் பித்து பிடித்தவன் போல் யது வம்சத்தினர் அனைவரையுமே விரோதிகளாக க் கண்டான். தந்தை உக்ர சேனனையும் சிறையில் அடைத்தான். அந்த ராஜ்யத்தையும் சேர்த்து தானே ஆள ஆரம்பித்தான். மஹா பலசாலியாக ஆனான்.
(இதுவரை ஸ்ரீமத் பாகவத மஹா புராணத்தில், பெரியவர்களால் தொகுத்து அளிக்கப் பட்ட பத்தாவது ஸ்கந்த பூர்வார்தம் என்ற பகுதியில், ஸ்ரீ க்ருஷ்ண ஜன்மோபக்ரமம் என்ற முதல் அத்யாயம். ஸ்லோகங்கள் – 69)
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||
அத்யாயம்-2
ஸ்ரீ சுகர் சொன்னார்: ப்ரலம்பகன், சாணூரன், த்ருணாவர்தன், மஹாசனன், முஷ்டிக, அரிஷ்ட, த்விவித,பூதனா, கேசி, தேனுக, இவர்கள் மற்றும் அனேக அசுர ராஜ்யபாலகர்கள், பாண, பௌமன் என்பவர்களும் சேர்ந்து, யது குலத்தினரை வதைத்தனர். இப்படி துன்புறுத்தப் பட்டவர்கள் குரு, பாஞ்சால, கேகய நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். சால்வான், விதர்பான், நிஷதான், விதேஹான், கோஸலான் – இந்த ராஜ்யங்களிலிருந்தும் கம்சன் என்ற ஒரு தாயாதியால் பாதிக்கப் பட்டனர். அவனால் , தேவகியின் ஆறு குழந்தைகள் கொல்லப்பட்ட பின், ஏழாவது முறை தேவகி கர்பம் தரித்தாள். ஏழாவது வைஷ்ணவ தாமம் எனப்படும், அனந்தனுடைய – ஆதி சேஷனுடைய அம்சமாக அவள் கர்பத்தில் தோன்றினான். இதனால் அவள் மகிழ்ச்சியும், சோகமும் ஒரு சேர அனுபவித்தாள். விஸ்வாத்மா பகவானும். உலகில் கம்சனால் பயப்படும் தன் இனமான யாதவ ஜனங்களை காக்க யோக மாயையின் உதவியை நாடினார்.
‘தேவி, நீ அங்கு போ. பத்ரே! வ்ரஜ தேசம் கோபாலர்களால் நிறைந்தது. ரோஹிணி வசுதேவனின் மனைவி நந்த கோகுலத்தில் ஒளிந்திருக்கிறாள். மேலும் பலர் கம்சனிடம் பயத்தால் குகைகளில் வசிக்கின்றனர். தேவகியின் கர்பத்தில் சேஷன் என்ற என் அம்சமான தாமம் (தேஜஸ்) உருவாகியிருக்கிறான். அவனை எடுத்து ரோஹிணியின் வயிற்றில் வளரும்படி செய்.
அதன் பின், நானே என் அம்சமாக தேவகியின் மகனாக தோன்றுவேன், நீ அதே சமயம் நந்தபத்னி யசோதையின் மகளாக ஜனிப்பாயாக. உன்னை மனிதர்கள் சர்வகாமவரேஸ்வரி என்று பூஜிப்பார்கள். தூப தீபங்கள், உபசாரங்கள் செய்து சர்வ காம வர ப்ரதா என பூஜிப்பார்கள். உன்னை தேசத்தின் பல பாகங்களிலும் கோவில்கள் கட்டி பலவிதமான பெயர்களுடன் வணங்கி பூஜைகள் செய்வார்கள்.
துர்கா என்றும், பத்ரகாளி, விஜயா, வைஷ்ணவி, குமுதா, சண்டிகா, க்ருஷ்ணா, மாதவி, கன்யகா, மாயா, நாராயணி, சாரதாம்பிகே என்று அவள் பெயர்கள் ப்ரபலமாகும். கர்பத்தை மாற்றி வைத்த காரணத்தால் வசுதேவனின் மகனை சங்கர்ஷணன் என்பர். உலகில் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பவன் என்பதால் ராமன் என்றும் பலசாலியாக விளங்குவான் என்பதால் பலராமன் என்றும் அவர் பெயர் புகழ் பெறும்.
அந்த கட்டளையை ஓம் என்று சொல்லி ஏற்றுக் கொண்டு அதன் படியே செய்தாள். கர்பத்தை ரோஹிணியிடம் வைத்ததை அறியாத ஊர் ஜனங்கள், அஹோ, கர்பம் கலைந்து விட்டதே என்று புலம்பினர். விஸ்வாத்மாவான பகவானும் பக்தர்களுக்கு அபயம் அளிக்கும் வரதன், அம்ச ரூபமாக ஆனக துந்துபியின் மனதில் நிறைந்தார். அதனால் வசுதேவர் ஸுரியன் போன்ற பிரகாசமுடையவராக ஆனார். எதிர்க்க முடியாத பலசாலியாக, பார்த்தவர்கள் மரியாதையுடன் வணங்கும் படியான தோற்றம் கொண்டார். அதன் பின் ஜகன் மங்களமான அச்யுதனுடைய அம்சத்தை ஸூரசுதன்-வசுதேவரிடமிருந்து கர்பம் தரித்த தேவி தேவகி, மனம் மகிழ்ச்சியில் நிறைந்தது, ஆத்ம பூதனான, சர்வாத்மகம் ஸ்ரீ பகவானையே தன் வயிற்றில் தரித்த தேவகி, यथाऽऽनन्दकरं मनस्तः- ஆனந்தமாக உணர்ந்தாள். அந்த தேவகி ஜகன்னிவாஸனுக்கே இடம் கொடுத்தவள், தனிமையில் இருந்தாள். போஜேந்திரனுடைய சிறையில், அக்னி ஜ்வாலையை குடத்தில் அடக்கி வைத்தது போலவும், சரஸ்வதி கடாக்ஷம் பெற்றவன் தன் அறிவை பகிர்ந்து கொள்ள முடியாமல் – தகுந்த மாணவர்கள் கிடைக்காமல்- தவிப்பது போலவும் இருந்தாள்.
அவளை பார்த்த கம்சன் வியந்தான். இவளுக்கு எப்படி இவ்வளவு சோபை வந்தது? பிரகாசமாக தெரிகிறாள். இந்த வீட்டையே ஒளி மிகுந்ததாகச் செய்து விட்டாள். தானே சிரித்துக் கொள்கிறாள். நிச்சயமாக அறிகிறேன். என் ப்ராண ஹரனான ஸ்ரீ ஹரி இவன் கர்பத்தில் வந்து விட்டான். என் ஊர் இவ்வளவு செழிப்பாக இருந்ததே இல்லையே என்று வியந்தான்.
என்ன செய்ய வேண்டும் நான்? என் செல்வம் எதற்கும் உதவாது. என் சகோதரி, பெண், கர்பவதி, இவளைக் கொல்வது பாபம். என் பெயரும் புகழும் வீணாவது தான் மிஞ்சும். கூடவே என் ஆயுளும் முடியும். இப்படி எண்ணி மனம் கொந்தளிக்க செய்வதறியாது பிறக்கும் குழந்தையை எதிர் பார்த்து காத்திருந்தான், ஸ்ரீ ஹரியிடம் விரோதம் வளர்ந்தது பயத்தால். அமரும் பொழுதும், படுத்த பொழுதும், உண்ணும் பொழுதும், சுற்றி நடந்த பொழுதும், ஸ்ரீ ஹரியையே நினைத்திருந்தான். உலகமே ஹ்ருஷீகேசனாக தென்பட்டான். உலகில் ஸ்ரீ ஹரியே எங்கும் நிறைந்திருக்க கண்டான்.
ப்ரும்மா, பவன்-சிவ பெருமான், முனிவர் நாரதர் முதலான ரிஷிகள், தேவர்கள் அவர்களின் பரிவாரங்களோடு வந்து அழகிய வார்த்தைகளால் துதித்தனர்.
सत्यव्रतं सत्यपरं त्रिसत्यं सत्यस्य योनिं निहितं च सत्ये ।
सत्यस्य सत्यमतसत्यनेत्रं सत्यात्मकं त्वां शरणं प्रपन्नाः ॥ २६॥
சத்யமே உருவானவன் நீ இவள் கர்பத்தில் வந்திருக்கிறாய். சன்னிதானமும் நீயே. அனுக்ரஹமும் நீயே. உன் மாயையால் உயிரினங்களை சூழ்ந்து நிற்கிறாய். உன்னைக் காணும் அனைவரும் உன்னை அறிந்தவரில்லை.
பல விதமான ரூபங்களைத் தரித்தவன். ஆத்மா அறியாமை மிகுந்தது. அதன் க்ஷேமத்திற்காக , சராசரத்தின்- அசையும் அசையா பொருட்களின் நன்மைக்காக சரீரத்தை எடுக்கிறாய். சத்தான நல்லவர்களுக்கு சுகத்தைக் கொடுக்கும் உன் அவதாரம், கெடுதலையே நினைத்து கெடுதலையே செய்யும் உயிர்களுக்கு நன்மையாக இருப்பதில்லை.
அம்புஜாக்ஷ! அகில சத்வ தாமம்- உலகில் நன்மை என்று உள்ளது அனைத்திலும் உறைபவன், உன் சமாதி என்ற தன்மையால், ஒருவனின் மனதில் நிறைந்தால், அவன் உன் பாதமே பற்று கோலாக, பவாப்தி என்ற இந்த சம்சாரக் கடலை, சுலபமாக, ஒரு பசுவின் கன்று அதன் குளம்புகளின் இடைவெளி தூரமே என்பது போல கடந்து விடுகிறான்.
பலர் தங்கள் முயற்சியால் சாதனைகள் செய்து பந்தங்களிலிருந்து விடுபட்டவர்கள், தற்சமயம் உன் பதாம்போஜமே படகு, அதன் உதவியால் சுலபமாக செல்கிறார்கள், என்றால் அது தங்கள் அனுக்ரஹமே.
அரவிந்தாக்ஷ! உன்னை மதிக்காமல் தானாக முன்னேற நினைப்பவர்கள், சிரமப்பட்டு ஓரளவு சென்றதும் உன் பாதங்களை வணங்காததால் குப்புற விழுகிறார்கள்.
மாதவ! உன் பக்தர்கள் அதையறிந்து, சற்றும் அசையாத உறுதியுடன், உன் மார்கத்தில் செல்கிறார்கள். அதனால் உன் நட்பும் உன் பாதுகாப்பும் கிடைத்து பயமின்றி சஞ்சரிக்கிறார்கள். இடையூறுகளின் தலை மீது கால் வைத்து நடப்பது போல ப்ரபோ, உன் அருளால் கடக்கிறார்கள்.
பகவானே! நீங்கள் அருகில் இருக்கும் சமயம் சத்வமே விசுத்தமாகிறது- மேலும் சுத்தமாகிறது. உடல் படைத்த அனைவருக்கும் கிடைத்த உடல், வேத கர்மாக்கள், யோகம் , தவம், சமாதி இவைகளைச் செய்ய பயன் படுத்த வசதியாக உன் அருளால் அமைந்தது..
சத்வ குணம் இல்லையெனில், ப்ரும்மாவின் ஸ்ருஷ்டியில் அக்ஞானம், விக்ஞானம் என்ற பேதம் அறிவதும், அறியாமையை நீக்குவதும், தாங்களே. எப்படி அறிவோம் உங்களை? முக்குணங்களின் ப்ரகாசத்தால் ஓரளவு அனுமானிக்கிறோம். எதனால், எப்படி என்ற விவரங்களை தெளிவு படுத்துவது உங்கள் அருளே.
தேவா! உன் பெயர்களோ, ரூபங்களோ, உன் பிறப்பையோ, செயல்களையோ, எவரேனும் சாக்ஷியாக இருந்து விமரிசிக்க வேண்டுமா என்ன? மனதால், வாக்கால், உணர்ந்து அறியவேண்டிய உன்னை, உன் செயல்களில் உன் குணங்களில் தெரிந்து கொள்கிறார்கள்.
காதால் கேட்டும், பாதங்களைப் பற்றியும், மனதால் சிந்தித்தும், உன் பெயர்களை , மங்களமான ரூபங்களை தன் செயல்களின் இடையிலும் அனவரதமும் நினைத்திருப்பவர், மறு பிறவியை அடைவதில்லை.
ஹரே! அதிர்ஷ்ட வசமாக இவளுக்கு- தேவகிக்கு- உங்கள் பாத ஸ்பர்சம் கிடைத்துள்ளது. இதை விட வேறு என்ன வேண்டும்? ஆயுள் முழுவதும் வேண்டி நிற்பவர்களுக்கு கூட கிடைக்காத பாதங்கள். அதிர்ஷ்டவசமாக அழகிய உன் இருப்பால் இவள் மிக்க சோபை கொண்டவளாக இருப்பதைக் காண்கிறோம். பூமியும், தேவ லோகமும் அனுக்ரஹத்தால் நிறைந்து இருப்பதைக் காண்கிறோம்.
ஈசனே! காரணமின்றி இது நடக்க உன் விளையாட்டு என்றே நம்புகிறோம். தோன்றுதல், இருத்தல், மறைவு என்பது கூட எங்கள் அறியாமையால் நினைக்கிறோம். ஏனெனில் நீயே அபயம் அளிப்பவன். உன்னிடத்திலேயே அனைத்தும் ஆஸ்ரயித்து இருக்கின்றன.
மத்ஸ்ய, அஸ்வ, கச்சப, ந்ருசிம்ஹ, வராஹ, ஹம்ஸ,அரசனாக, மற்றும் பல அந்தணர்கள், முற்றும் அறிந்த ஞானிகளிடத்தில் செய்த அவதாரங்கள் – இவைகளால் எங்களை, மற்றும் மூவுலகையும் காக்கிறாய். தற்சமயம் ஈசனே, புவியின் பாரத்தைக் குறைப்பாய். யது வம்சத்தில் வந்த உத்தமனே, உனக்கு நமஸ்காரம்.
தாயே உனக்கு நமஸ்காரம். அதிர்ஷ்ட வசமாக உன் வயிற்றில் பர புருஷனான பகவானே தன் அம்சத்துடன் சாக்ஷாத்தாக வந்துள்ளான். எங்கள் நன்மைக்காக. தாயே போஜபதியிடம் பயப்படவே வேண்டாம். உன் மகன், முக்தி வேண்டுபவர்களுக்கு முக்தி அளிப்பவன். யது வம்சத்துக்கு எதிர் காலமே உன் மகன் தான்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு துதித்து போற்றி வணங்கி, இன்னமும் பிறக்காத குழந்தை ரூபத்தை வணங்கி ப்ரும்ம ஈசானன் முதலானோர் தங்கள் இருப்பிடம் சென்றனர்.
இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தத்தின் இரண்டாவதுஅத்யாயம். ஸ்லோகங்கள்-42
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||
அத்யாயம்-3
ஸ்ரீ சுகர் சொன்னார்: அதன் பின் கால தேவன் நல்ல நேரத்தை கணித்தான், பிறவியற்றவன் பிறக்க தகுந்த நேரம்- ஜன்ம நக்ஷத்திரம், சாந்தமான க்ரஹ தாரகைகளுடன் , திசைகள் ப்ரசன்னமாக, வானம் நிர்மலமாகவும், சந்திரன் உதிக்கும் நேரம், பூமி மங்களங்கள் நிறைந்து, புர, கிராமங்கள், வ்ரஜ தேசம் வளமாகவும், நதிகள் ப்ரசன்னமான நீருடன், குளங்களும், நீரில் பூக்கும் புஷ்பங்கள் மலர்ந்து லக்ஷ்மீகரமாக இருப்பதாகவும், பறவைகளும் வண்டுகளும் ரீங்காரமிட்டு நாதம் நிறைந்த வனங்களில் மரங்களும் பூக்களுடன், வாயு சுக ஸ்பர்சமாக வீசுவதாகவும், புண்யமான கந்தம் ஏந்தியதாகவும் சுத்தமாகவும் வீச, அந்தணர்களுடைய அக்னியும் சாந்தமாக அடங்கி இருந்து கனலாக மட்டும் இருக்க, அசுரர்கள் வெறுக்கும் சாதுக்களும், மனிதர்களும் மனம் ப்ரசன்னமாக மகிழ்ந்து இருந்த சமயம், திடுமென துந்துபிகள் முழங்கின. பிறவியற்ற முழு முதற் கடவுளின் பிறப்பை அறிவிக்கும் சங்கநாதம் எழுந்த து. கின்னர கந்தர்வர்கள் மகிழ்ந்தனர். சித்த சாரணர்கள், வித்யாதரர்கள், நடனமாடினர். அப்சரர்கள் வந்து சேர்ந்து கொண்டனர். தேவர்களும், முனிவர்களும் பூக்களை வர்ஷித்தனர். ஓடைகளும் அருவிகளும் மெள்ள மெள்ள கடலின் ஓசையுடன் சேர்ந்து பாடுவது போல ஒலி எழுப்பின. இரவில் தமஸ்- இருட்டு பரவி இருந்த வேளையில், ஜனார்தனன் பிறக்கும் சமயம் தேவகியிடம், அவளே தேவ ரூபிணியாக இருக்க, ஸ்ரீ விஷ்ணு பகவான், சர்வ ஜீவன்களின் இதயத்திலும் இருப்பவன், ஆவிராசீத்- அவதரித்தார். கிழக்கில் பூர்ண சந்திரன் உதித்தது போல நிறைவாக தெரிந்த சோபையுடன் இருந்தார்.
तमद्भुतं बालकमम्बुजेक्षणं அத்புதமான பாலகன், அம்புஜம் போன்ற கண்ணினன்
चतुर्भुजं शङ्खगदाद्युदायुधम् । நான்கு கைகளும், சங்க கதை முதலிய ஆயுதங்களுடனும்
श्रीवत्सलक्ष्मं गलशोभिकौस्तुभं-ஸ்ரீவத்ஸ மணிஅடையாளமும், கழுத்தில் கௌஸ்துபமும்,
पीताम्बरं सान्द्रपयोदसौभगम् – பாற்கடலில் தோன்றிய அழகிய பீதாம்பரம்
महार्हवैदूर्यकिरीटकुण्डल- விலை மதிப்பற்ற வைதூர்ய கிரீடமும், குண்டலமும்
त्विषा परिष्वक्तसहस्रकुन्तलम् ।-அதன் ஒளியால் தெளிவாகத் தெரிந்த கேசம்
उद्दामकाञ्च्यङ्गदकङ्कणादिभि-பளீரென்ற ஒளிவேச இடுப்பில் காஞ்சி,அங்கத கங்கணங்கள்
र्विरोचमानं वसुदेव ऐक्षत ॥१०॥ இவற்றுடன் பிரகாசமாக தெரிந்தவனை வசுதேவர் கண்டார்.
ஆச்சர்யத்தால் கண்கள் விரிய, தன் மகனை நோக்கிய ஆனகதுந்துபி-வசுதேவர், மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் க்ருஷ்ணாவதாரத்தை உவகையுடன் மெதுவாக தொட்டார். दा द्विजेभ्योऽयुतमाप्लुतो गवाम्?
புராண புருஷன் எனக் கண்டு கொண்ட மகிழ்ந்தார். உணர்ச்சியுடன் துதி செய்தார். வணங்கி கைகூப்பி நின்றவராக தன் உடலின் ப்ரகாசத்தால் அந்த சிறையின் இருட்டறையை ஒளி மிக்கதாக ஆக்கிக் கொண்டு மனதை சமாதானப் படுத்திகொண்டும், பயம் விலகியவராக அந்த சிசுவின் ப்ரபாவத்தை பார்த்து ‘பகவானே! உங்களை அறிவோம். சாக்ஷாத் பரம புருஷன். உலக இயல்புக்கு அப்பாற் பட்டவர். ஆனந்த ஸ்வரூபியான உங்களை அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். அனைவரின் அறிவையும்- மன ஓட்டத்தையும் காணக் கூடியவர் தாங்கள்.
உங்கள் மாயையால், இந்த ப்ரக்ருதி, இயற்கை அல்லது உலக இயல்புகளை முக்குணங்களோடு ஸ்ருஷ்டி செய்து, அதை உயிரூட்ட தானே அதனுள் நுழைந்தது போல வெளியில் காட்டினாலும் வெளியில் இருந்தே ஆட்டி வைக்கும் உங்கள் மாயை.
மாற்றமில்லாத இந்த பாவனைகள். இதையும் தாங்களே பல மாற்றங்களுடன் பலவிதமாக செயல் பட செய்தீர்கள். பலவிதமான வீர செயல்கள், ஆற்றல்கள், தனித்தனியாக பிரகாசிக்கவும், தனித் தனியாக உயிர்களையும் பிறக்கச் செய்கின்றன. அருகில் வந்து, உங்களைத் தொடரும் அணுக்கர்கள் போல. இவ்வாறு தாங்கள் புத்தியினால் அனுமானிக்க மட்டுமே முடிந்த லக்ஷணங்கள், மனதினால் மட்டுமே உணரக் கூடிய குணங்கள், என்ற வகையில் இருந்தாலும் குணங்களால் மட்டுமே தாங்கள் அல்ல. உள்ளும் வெளியும் தாங்கள் வெளிப்படையாகவே காணப் படுகிறீர்கள். சர்வாத்மனாக, அனைத்திலும் உள்ள ஆத்மாவாக இருப்பது தாங்களே. யாராவது உங்களைத் தன் ஆத்மா காணும்படி கண் முன் தெரிகிறார் என்று சொன்னால், அவருடைய கணிப்பு அர்த்தமற்றதே. அவசியமற்ற விவாதம் தவிர, அறிவுடமையும் அல்ல, நன்மை பயப்பதும் இல்லை, மற்ற சுய புத்தியுடையவர்கள் அதை அங்கீகரிப்பதும் இல்லை.
விபோ! தங்களிடமிருந்து தோன்றியதே, இந்த ஜன்மா, ஸ்திதி, லயம் என்று சொல்வார்கள். அவர்களின் அறிவுக்கு எட்டியது அவ்வளவே. தாங்களே ஈஸ்வரன், முக்குணங்களோ, மாறுதல்களோ உங்களுக்கு இல்லை. உங்களை ஆஸ்ரயித்ததால் இந்த குணங்களும் பெரிதாக பேசப்படுகின்றன. சுயமாக அவைகளுக்கு எந்த திறமையும் இல்லை.
தாங்கள் மூவுலகமும் தங்கள் மாயையால் இருக்கச் செய்து, தங்கள் வர்ணம் வெண்மையாக சத்வ குணமாக, ஒரு யுகத்தில், அடுத்த யுகம், சிவந்த – ரஜோ குணம் நிரம்பியது, க்ருஷ்ண வர்ணம் தமஸ் என்ற குணம் அதிகமாக உலக அழிவை செய்யவும் பயன் படுத்துகிறீர்கள்.
விபோ! தாங்களே இந்த உலகை காக்கும் பொருட்டு இந்த என் வீட்டில் அவதரித்துள்ளீர்கள். அகிலேஸ்வர! ராஜா எண்ணற்ற அசுரர்களை கோடி கணக்கான சேனை வீரர்களுடன் ஏவி பெரிய யுத்தம் செய்ய இருக்கிறான். எங்கள் வீட்டில் வந்து பிறந்து இருப்பதை பொறுக்க மாட்டான். சுரேஸ்வரா, தங்களுக்கு முன் பிறந்தோரை கொன்றவன், உங்கள் பிறப்பை அறிந்தவுடனேயே ஆயுதங்களொடு வந்து விடுவான்..
ஸ்ரீ சுகர் சொன்னார்: தேவகி தன் மகனை பார்த்தாள். மஹா புருஷ லக்ஷணங்களோடு, கம்சனிடம் இருந்த பயத்தால், அவனை மறைத்து அணைத்துக் கொண்டாள். ‘சாக்ஷாத் அத்யாத்ம தீபன், ஸ்ரீ விஷ்ணு தான் என்று அறிகிறேன். உங்களை எப்படி கேட்டிருக்கிறேனோ, அவ்யக்தன், அவ்யயன், ஆத்யன், ப்ரும்ம ஜ்யோதி, நிர்குணம், நிர்விகாரம், சத்வமே ப்ரதானமானவன், நிர்விசேஷம், நிரீஹம் என்று அதே போல காண்கிறேன்.
இரு பகுதிகளாக உலகம் தன் முடிவை அடையும் பொழுது, பஞ்ச பூதங்கள் ஒன்றாகி ஆதி இயல்புக்கு சென்றபின், வெளிப்படையாக தெரிந்தவையும், மறைந்திருந்தனவும் கால வேகத்தில் அடித்துச் செல்லப் பட, , தாங்கள் ஒருவரே மீதி, என்பதால் சேஷன் என்ற பெயரில் அழைக்கிறார்கள்.
வெளிப்படையாக தெரியாத உண்மையான பந்தோ! இந்த காலம் இதனுடைய செயலைச் செய்கிறது. இதனால் விஸ்வம்-உலகமே நிமிஷங்களாக வருடங்களாக முடிவில் மிகப் பெரிய தங்களுடைய ஈசானம் என்ற க்ஷேமதாமத்தை அடைகிறது, (உங்களிடம் லயித்து விடுகிறது.)
மனிதர்கள், மரணம், வியாதி என்று பயந்தவர்கள். எவ்வளவு ஓடி மறைந்து கொள்ள நினைத்தாலும், உலகம் முழுவதும் சுற்றி வந்தாலும் பயமின்றி இருப்பது இயலாது. உங்கள் பாத பத்மங்களை சரணடைந்து எதேச்சையாக, இன்று உலகமே கவலையின்றி இருக்கும். ம்ருத்யு அண்ட மாட்டான், விலகிச் சென்று விட்டான், உங்கள் வரவால்.
அப்படிப் பட்ட நீங்கள், கோரமான உக்ரசேன மகனிடமிருந்து எங்களைக் காக்க வேண்டும். பயந்து அடங்கி இருப்பவர்களை மேலும் பயமுறுத்தி சிரிக்கும் குணமுடையவன். த்யான விஷயமான தங்களுடைய இந்த ரூபத்தை, ப்ரத்யக்ஷமாக வந்த பரம புருஷன் என்பதை காட்டும் உருவத்தை, வெறும் மாமிச உடலாக காண்பவர்கள் முன் காட்டாதே, மறைத்துக் கொள்.
மது சூதன, என்னிடம் நீ பிறந்தது அந்த பாபிக்கு தெரியக் கூடாது. கம்சனிடம் நான் பயப்படுகிறேன். விஸ்வாத்மன்! உபசம்ஹர- இந்த உன் தோற்றத்தை மறைத்துக் கொள். அலௌகிகம்- உலகத்தில் இல்லாத உருவம்- சங்கமும், சக்ரமும், கதா, பத்மமும், லக்ஷ்மி தேவியுடன் சதுர் புஜனாக காட்சியளிக்கிறாய். அஹோ! உலகமே உறங்கும் இந்த இரவு வேளையில், பரம் பொருளான, புராணபுருஷன் தாங்கள், என் வயிற்றில் வசித்தது அது உலகத்தின் பாக்யமே.
ஸ்ரீ பகவான் சொன்னார். முன் யுகத்தில் நீங்கள் இருவரும் ப்ருஸ்னியாக, ஸ்வயம்பூ வாக இருந்த சமயம், இவர் சுதபா என்ற ப்ரஜாபதியாக இருந்தார். சிறந்த குணங்களுடன் களங்கமில்லாதவராக இருந்தார். உங்களை ப்ரும்மா ப்ரஜைகளை ஸ்ருஷ்டி செய்யச் சொல்லி கட்டளையிட்டார். நீங்களும் இந்திரியங்களை அடக்கி தவம் செய்தீர்கள். மழையோ, காற்றோ, வெய்யிலோ, பனி வாட்டியதோ, கடும் கோடை காலமோ, இருவரும் பொறுத்தபடி சுவாசம் அடக்கி, ப்ராணாயாமங்கள் செய்து கொண்டு, மன கட்டுப்பாட்டோடு உலர்ந்த இலை, காற்று இவைகளையே ஆகாரமாகக் கொண்டு உப சாந்தமான மனத்துடன் தவம் செய்தீர்கள். என்னிடம் வரங்களைப் பெற எப்பொழுதும் ஆராதனைகள் செய்தபடி இருந்தீர்கள். இப்படி கஷ்டமான தவம் செய்யும் உங்களுக்கு பன்னிரண்டு ஆண்டுகள் சென்றன. அப்பொழுது உங்களிடம் மகிழ்ந்து நான் இதே விதமாக உங்கள் முன் வரத ராஜனாக வந்தேன். நீங்கள் இருவரும் நானே உங்கள் மகனாக வேண்டும் என்று வரம் வேண்டினீர்கள். அதில் ஆச்சர்யம் என்ன? தம்பதி சந்ததி விரும்பி ஆரம்பித்த தவம், எந்த விதமான இக லோக சௌக்யமும் இன்றி தவம் செய்த பின் மோக்ஷமோ, பிறவி வேண்டாம் என்றோ கேட்காமல், என்னையே மகனாக பெற விரும்பி வரம் கேட்டீர்கள். அதுவும் என் மாயையே. அதே போல என்னைப் போன்ற மகனையே பெற்று மகிழ்ந்து இருந்தீர்கள். ப்ருஸ்னிகர்பன் என்ற பெயருடன் உங்கள் மகனாக இருந்தேன். அடுத்த பிறவியில், அதிதி-காஸ்யபராக நீங்களும், உபேந்திரனாக நான் உங்கள் மகனுமாக இருந்தோம். வாமன ரூபத்தால் வாமனன் என்றே அழைத்தனர். இது மூன்றாவது யுகம். அதே போன்ற உடலுடன் உங்கள் மகனாக பிறவி எடுப்பதே உசிதம் என்று உங்கள் மகனாக வந்துள்ளேன். இந்த ரூபத்தைக் காட்டியதே முன் பிறவிகளை உங்களுக்கு நினைவுறுத்தவே. இல்லாவிடில் சாதாரண மனித ஜன்மாவில் என்னைப் பற்றிய ஞானம் வருவதில்லை. நீங்கள் சில சமயம் புத்ரனாக எண்ணி, சில சமயம் ப்ரும்மமாக எண்ணி அன்புடன் இருந்தவர்கள். இந்த பிறவியுடன் என்னை வந்தடையுங்கள், சொல்லிக் கொண்டே இருந்தவர் மேலும் சொல்லலானார்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு சொல்லி விட்டு, சற்று நேரம் பேசாமல் இருந்தவர் மறுபடியும் மனிதக் குழந்தையாக ஆனார்.
அதன் பின் பகவான் தூண்டுதலால், மகனை அந்த பிரசவ அறையிலிருந்து தூக்கிக் கொண்டு, வெளியேற நினைத்த அதே சமயத்தில் யோக மாயா நந்தனுடைய மனைவிக்கு மகளாக பிறந்தாள். யோக மாயா பகவான் பிறந்த விஷயம் அறிந்து கொண்டவளாக துவார பாலகர்கள், ஊர் ஜனங்கள், அனைவரையும் தூங்கச் செய்தாள். வாசலில் போடப் பட்டிருந்த பெரிய தாழ்ப்பாள்கள் இரும்பு ஆணிகள், மற்றும் சங்கிலிகள் தானாக கழண்டு கொண்டன. க்ருஷ்ணனைத் தூக்கிக் கொண்டு வசுதேவர் அருகில் வரவும், ஸுரியன் உதித்தவுடன் இருட்டு மறைவது போல தாங்களாக திறந்து கொண்டன. மழை கொட்டியது. இடி இடித்து எதையும் யாரும் கேட்க முடியாதபடி செய்தது. சேஷன் வாசலில் வந்து நின்றான். மழைநீர் நனைக்காதபடி தன் படத்தை விரித்து குடையாக உடன் வந்தான். இந்திரன் ஏகமாக வர்ஷிக்க, யமனுடைய தங்கை யமுனா, நீர் சுழன்று வீசி அடிக்க கம்பீரமாக அலைகள் நீரை அள்ளி வீசிக் கொண்டும் நுரைகள் காற்றில் அலைய, பயங்கரமாக இருந்தாள். நதியில் நூற்றுக் கணக்கான சுழல்கள். அவள் நதியின் வெள்ளத்தினிடையே வழி விட்டாள். ஒரு சமயம் கடல் ஸ்ரீயின் நாயகன் ஸ்ரீ ராமனுக்கு வழி விட்டது போல.
சௌரி நந்த வ்ரஜம் வந்து சேர்ந்தார். அங்கும் கோபர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். யசோதாவின் இருப்பிடம் கண்டு கொண்டு அங்கு வந்தார். அவள் படுக்கையில் மகனை விட்டு விட்டு அவளுடைய மகளைத் தூக்கிக் கொண்டார். திரும்பி தாங்கள் சிறையிருந்த இடத்துக்கே வந்து சேர்ந்தார். தேவகியின் அருகில் படுக்கையில் விட்டு விட்டு, பழையபடி இரும்பு சங்கிலிகளால் கட்டப் பட்டவராக, அமர்ந்தார். இரும்பு கதவுகளும் மூடிக் கோண்டன.
இங்கு நந்த பத்னி யசோதா கண் விழித்தாள். அத்புதமான சிசுவை அள்ளி அணைத்துக் கொண்டாள். முன் கண்டது பெண் மகவு என்றோ, உடல் அயர்ந்து தான் தூங்கிய பொழுது நடந்ததோ அவள் நினைவில் இல்லை.
(இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில் தசமஸ்கந்தம்- பூர்வார்தம் என்ற பகுதியில் மூன்றாவது அத்யாயம். ஸ்லோகங்கள்-53)
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||
அத்யாயம்- 4
ஸ்ரீ சுகர் சொன்னார்: உள்ளும் வெளியும், ஊர் கதவுகள் முன் இருந்தது போல பூட்டப்பட்டிருந்தன. குழந்தையின் அழுகுரல் கேட்டு காவல் வீர்கள் எழுந்தனர். ஒரு சிலர் ஓடிச் சென்று தேவகி பிரசவித்த விஷயத்தை போஜ ராஜாவிற்கு சொன்னார்கள். அவனோ குழம்பியவனாக கவலையுடன் காணப்பட்டான். வேகமாக படுக்கையிலிருந்து எழுந்து காலனையே எதிரில் காண்பது போன்ற பயத்துடன், விரிந்த கேசமும், தடுமாறும் நடையும், செய்வதறியாத தவிப்புமாக ப்ரசவ அறை வாசலில் வந்து நின்றான். சகோதரனைப் பார்த்து தேவகி, தீனமாக கெஞ்சும் குரலில், பெண் குழந்தை இது, உனக்கு நன்மை உண்டாகட்டும். பெண் குழந்தையை கொல்லாதே என்று வேண்டினாள். இதற்கு முன் பிறந்த ஆண் குழந்தைகளைக் கொன்றதோடு போகட்டும், இதை விடு, ப்ரபோ! கடைசி குழந்தை இதை எனக்காக விட்டு விடு என்றாள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: தன் ஆடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு அப்பொழுது தான் பிறந்த மகளை அழுதவளை லட்சியமே செய்யாமல், அவள் வேண்டுதலை புறந்தள்ளி, கைகளால் குழந்தையை அவளிடமிருந்து வெடுக்கென்று பிடுங்கி எடுத்துக் கொண்டு, அப்பொழுதுதான் பிறந்து கண் கூட விழிக்காத சிசுவை, கால்களை பிடித்து பாறையால் ஆன சிறை சுவற்றில் வீசி அடித்தான். – தன்னலமே பெரிதென்று நினைத்த அந்த சகோதரன். பாசமா, உறவா அனைத்தையும் வேரோடு வீசி எறிவது போல இருந்தது.
அந்த பெண் சிசு, அவன் கையிலிருந்து விடுபட்டவுடனே, வானத்தில் ஏறி நின்றாள். விஷ்ணுவின் சகோதரி. எட்டு புஜங்களிலும் ஆயுதங்களைத் தரித்தவளாக, திவ்யமான மாலைகள், ஆடைகளுடன், ஆலேபங்கள்-வாசனை திரவியங்கள் பூசிக் கொண்டவளாக, ரத்ன ஆபணரங்கள் ஜொலிக்க, வில், சூலம், அம்புகள், உறைக்குள் வாள், சங்க சக்ரம், கதா, பத்மம் இவைகளையும் தரித்தவளாக அதற்குள் அங்கு வந்து கூடி விட்ட சித்த சாரணர்கள், கந்தர்வர்கள், அப்சர கின்னர, உரகர்கள், தங்கள் பலம்-சைன்யத்துடன் அவளைப் போற்றி துதித்தபடி இருக்க, கம்சனிடம் தேவி சொன்னாள்: மந்த புத்தியே! என்னை கொன்று என்ன பயன்? உனக்கு காலனாக வருபவன் எங்கோ பிறந்திருக்கிறான். ஏற்கனவே உனக்கு சத்ருக்கள் உண்டு, அனாவசியமாக அவர்களைக் கொல்லாதே. இப்படி சொல்லிவிட்டு தேவி தேசத்தின் பல பாகங்களிலும் பல பெயர்களுடன் கோவில் கொண்டு தங்கி விட்டாள். மாயா, பகவதி என்று ப்ரசித்தி பெற்றாள்.
இதைக் கேட்டு கம்சன் ஆச்சர்யம் அடைந்தான். தேவகியையும், வசுதேவரையும் விடுவித்து விட்டு வணங்கி தன் செயலுக்கு வருந்துவன் போல அவளைப் பார்த்து ‘அஹோ! பகினீ!- சகோதரியே! மகா பாபி நான், மனிதனைக் கொல்லும் மாகா பாபம், உன் சிசுக்களைக் கொன்றேன். கருணையை இழந்தவன், உறவை எண்ணிப் பார்க்காத துஷ்டன், பாசமோ, நட்போ இல்லாதவன், எனக்கு எப்படி விமோசனம் கிடைக்கும்? எந்த லோகம் போவேன்? ப்ரும்மஹத்தி பீடித்தவன் அழிந்தேன் நான் என்று பெருமூச்சு விட்டபடி, தெய்வங்கள் கூட மனிதனைப் போலவே பொய் சொல்கின்றன. அதை நம்பி என் சகோதரியின் குழந்தைகளை வதைத்தேன்.
நீங்கள் இருவரும் உங்கள் குழந்தைகளை எண்ணி வருந்தாதீர்கள். பிறவி எடுத்த ஜீவன்கள், சதா ஏதோ விதத்தில் தெய்வாதீனத்திலேயே இருக்கின்றன. பூமியில், கிரஹங்கள், பஞ்ச பூதங்கள் தோன்றுவதும், மறைவதுமாக இருக்கின்றன, ஆனால் ஆத்மா அப்படியில்லை. அது அழிவதில்லை, பூ தேவி போல ஸ்திரமாக இருக்கிறது.
எப்படி, எவரால், எந்த விதத்தில் வித்தியாசம், எங்கிருந்து தன் தேகம் மாறுகிறது, தேகம் அடைவதும் அதிலிருந்து விடுபடுவதும்,இவை எல்லாமே- சம்ஸ்ருதி, விதி அல்லது சுழற்சியே. இது பிறளுவதேயில்லை. அதனால் பத்ரே! உன் தனயர்களை நான் வதைத்து விட்டேன் என்று துயரப் படாதே. ஏனெனில் நான் செய்தது என் வசத்தில் இருந்து செய்யவில்லை. தன்னையே உணர்ந்து கொண்டவனானேன். இதோ என்னைக் கொல்வான், ஹதோ ஸ்மி, நான் கொல்கிறவனாக இருக்கிறேன் என்றோ சொல்பவன் அவிவேகி. அறியாதவன், பாத்ய- அடிபடுபவன், பாதகன் அடிப்பவன் இரண்டுமே மெய்யல்ல.
நீங்கள் இருவரும் என்னை மன்னிக்க வேண்டும். சாதுக்கள், தீன வத்சலர்கள் என்று உங்களை அறிகிறேன். என்று கண்ணீர் பெருக்கியபடி, தன் மைத்துனரின் கால்களைப் பற்ரிக் கொண்டு கதறினான். கன்யாவாக தேவி சொன்னதைக் கேட்டதால், அவர்கள் கட்டுகளை நீக்கி சிறையிலிருந்து விடுவித்தான். தேவகிக்கும், வசுதேவருக்கும் தான் திருந்தி விட்டதை காட்டுவது பழையபடி சகோதரி என்ற அன்புடன் பேசினான்,
சகோதரன் வருந்துவதைக் கண்டு தேவகியும் ரோஷத்தை விட்டு இருவரும் சமாதானமானார்கள். ‘ மஹாபாக! இது தான் தேகம் படைத்த மனிதர்கள் விதி. தங்களுக்குள்ளே அடித்துக் கொள்கிறார்கள். யாருக்கு யார் உறவு, யாருக்கு யார் எதிரி என்பதே அறிவதில்லை. தான் பிறர் என்ற பேதம் அறிவை குருடாக்குகிறது. சோகம், ஹர்ஷம், பயம், த்வேஷம், லோப மோகம், மதம் இவைகள் சூழ, தங்களுக்குள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் பொழுது தங்கள் உணர்வுகளை பிரித்து அறியும் திறன் இல்லாதவர்கள் ஆகிறார்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: கம்சன் இவ்வாறு அவர்கள் சமாதானமாகி பதில் சொல்லவும், அவர்களிடம் விடை பெற்று தன் வீடு சென்றான்.
அன்று இரவு முடிந்து பகல் புலர்ந்ததும், தன் மந்திரிகளை அழைத்து மகா மாயா சொன்னதைச் சொன்னான்.
அந்த தைத்யர்கள், தேவர்களிடம் எப்பொழுதும் விரோதம் பாராட்டுபவர்கள், அதிக புத்தியுடையவர்களும் அல்ல, தேவர்கள் சத்ருக்கள் என்றே நினைத்து இருந்தவர்கள் கம்சன் செய்ததை ஏற்கவில்லை. அப்படியானால், போஜேந்த்ரா! இந்த நகரம், கிராமங்கள், வ்ரஜ தேசம் இங்கெல்லாம், இன்னமும் பல் முளைக்காத, பல் முளைத்த சிசுக்களையும் கூட இப்பொழுதே கொன்று விடுவோம். தேவர்கள் யுத்தம் என்றால் பயப்படுபவர்கள். உன்னுடைய வில் சத்தம் கேட்டாலே நடுங்கும் இனத்தவர், எப்பொழுதும் மனம் அலைபாய எப்பொழுது எங்கிருந்து ஆபத்து வருமோ என்று கவலையுடன் இருப்பார்கள். உன் சர-அம்புகளின் வரிசையால் தாக்கப் பட்டால், உடனே தங்கள் ஆயுதங்களைப் போட்டு விட்டு உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடி விடுவார்கள். சிலர் கைகூப்பியபடி தீனர்களாக வேண்டுவர். தலை கேசம் அவிழ்ந்து தொங்கும். இடுப்பு ஆடை முடிச்சவிழ்ந்து நழுவும். சிலர் பயந்து விட்டோம் என்று சொல்வர். உன் அஸ்த்ர சஸ்திரங்களை மறந்திருக்க மாட்டார்கள். க்ஷேம சூரா:- வசதியாக பாதுகாப்பாக தான் இருந்து கொண்டு வீரம் பேசுபவர்கள்- தன்னைத் தானே சூரன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள்- (தேவர்களை இவர்கள் அப்படி சொல்கிறார்கள்,)- புத்தியில்லாமல் வீண் பேச்சு பேசுபவர்கள். தன் நலனே முக்கியம் என்று இருப்பவர்கள், அவர்கள் உன் முன் எம்மாத்திரம். ஹரியோ, சம்புவோ, காட்டில் திரியும் இந்திரனோ, அல்பவீர்யன் ப்ரும்மா, தவம் செய்யத் தான் தெரியும் அவருக்கு- எப்படியோ, சக்களத்தி புத்திரர்கள். பங்காளிகள், அவர்களை அலட்சியமாக நினைக்கக் கூடாது. வேரோடு அழிக்க வேண்டும். உனக்கு அணுக்கமாக உள்ள எங்களை நியமித்து அனுமதி கொடு. எப்படி உடலில் தோன்றும் வியாதி, அலட்சியம் செய்தால், மனிதர்கள் உடலில் அந்த புண் வேரோடி, சிகித்சைக்கு அடங்காதோ, ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டதன் பலன் அது. பெரும் விரோதியை, பலசாலி அது போல கவனிக்காமல் விடுவதில்லை.
இந்த தேவர்களுக்கு மூலமே விஷ்ணுதான். சனாதன தர்மமே அதன் வேர். அதற்கு ப்ரும்மா, பசுக்கள், அந்தணர்கள், தவம் யாகங்கள், தக்ஷிணைகள், அதனால் ராஜன்! அந்தணர்களை, ப்ரும்ம வாதிகளை, தபஸ்விகளை, யக்ஞ சீலர்களை, பசுக்களை கொல்வோம். ஹோம அக்னியில் போடுவோம். ஏனெனில், அந்தணர்கள், பசுக்கள், வேதங்கள், தவம், சத்யம், தம சம எனும் குணங்கள், ஸ்ரத்தா, தயை, திதிக்ஷா- அறிந்து கொள்ளும் ஆசை, -கல்வி- க்ரதுக்கள், இவை ஹரியின் சரீரத்திலிருப்பவை. அவன் தான் எல்லா தேவர்களுக்கும் தலைவன். அனைவரின் இதய குகையிலும் வசிப்பவன். அவனிடமிருந்து தேவர்கள் அனைவரும் தோன்றினார்கள். ஈஸ்வரன், சதுர்முகன், என்று பலர். இது தான் அவர்களை ஒழிக்க சரியான உபாயம். முதலில் ரிஷிகளை அழிப்போம்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: துர்மந்திரிகள் கம்சனுக்கு உபதேசித்தனர். யோசித்த கம்சனும் அதை ஹிதம் என்று எண்ணி ஏற்றுக் கொண்டான். ப்ரும்ம ஹிம்ஸா ஹிதம் என அவனை ஏற்றுக் கொள்ள வைத்தது எது? அவனை சுற்றி வளைத்திருந்த கால பாசம் தான் எனலாம். எனவே ஆணையிட்டான். துன்புறுத்துவதையே தங்கள் விளையாட்டாக எண்ணிய அவன் அடியாட்கள், இஷ்டம் போல் உருவம் எடுக்கக் கூடிய மாயாவிகள், தானவர்கள் இவர்களை சாதுக்களை வதைக்க ஆணையிட்டு விட்டு தன் க்ருஹம் சென்றான்.
மூடர்கள், இயல்பாகவே தமோ குணம் நிரம்பியவர்கள், எப்பொழுதும் அவர்களிடம் த்வேஷம் பாராட்டியே வந்தவர்கள், மும்முரமாக அதைச் செய்தனர். ஆயுள், செல்வம், புகழ், தர்மம், பிரஜைகளின் நல் வாழ்த்துக்கள், மனிதர்களின் ஐஸ்வர்யங்கள் அனைத்துமே அளவுக்கு அதிகமாக ஆனால் விபரீத பலனையே கொடுக்கும்.
இது வரை ஸ்ரீமத் பாகவதத்தின் பத்தாவது ஸ்கந்தத்தின் நாலாவது அத்யாயம். ஸ்லோகங்கள்-46.
||ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||
அத்யாயம் – 5
ஸ்ரீ சுகர் சொன்னார்: நந்தன், மகன் பிறந்த குதூகலத்துடன், வேதங்கள் அறிந்த பெரியவர்கள், மற்றும் அந்தணர்களை அழைத்து. தானும் ஸ்னானம் செய்து நல்ல ஆடைகளை அணிந்து கொண்டு ஜாத கர்மா ஸ்வஸ்த்யயனம் என்ற மங்கள காரியங்களையும், பித்ருக்கள், தேவர்கள் இவர்களுக்கான அர்ச்சனைகளையும் செய்தான். கணக்கில்லாத பசுக்களை கன்றுடன் அலங்கரித்த பின் தானம் செய்தான். எள் சாதம், அம்பரமாக குவித்து இருந்தது. காலத்தில் ஸ்னானங்கள் செய்து, சுத்தமாக சம்ஸ்காரங்களைச் செய்து, தவமும், யக்ஞமும், தானங்கள், மனம் நிறைய திருப்தியாக உண்டு, செல்வங்களையும் பெற்று, ஆத்மார்த்தமாக இருந்த அந்த அறிவுடைய பெரியோர்கள், அந்தணர்கள் மங்களங்கள் சொல்லி வாழ்த்தினர். சூதர்கள் எனும் பாடகர்கள், மாகத, வந்தி – இவர்களும், பாடுபவர்கள், காயகர்கள்-சாஸ்த்ரீயமாக பாடுபவர்கள், பாடினர். துந்துபிகள் முழங்கின. வ்ரஜ தேசம் கோலாஹலமாக இருந்தது. அலங்கரிக்கப் பட்ட வீடுகள் திறந்தே இருந்தன. வாசல்களில் தோரணங்களும், சித்ர வேலைப்பாடுகள் செய்த த்வஜங்கள், கொடிகள், தவிர புஷ்பங்களால், துளிர்களால் மாலைகள் கோத்து கட்டப்பட்டிருந்தன. பசுக்கள், கன்றுகள், அப்பொழுது தான் பிறந்த கன்றுக் குட்டிகள், மஞ்சளும் எண்ணெயும் கலந்து திலகம் இடப்பட்டு, அவைகளுக்கும் பலவிதமான மாலைகள், வஸ்திரங்கள் அணிவிக்கப் பட்டிருந்தன. கோபர்கள் விலையுயர்ந்த வஸ்த்ரங்கள், ஆபரணங்கள், இடுப்பில் கட்டும் கஞ்சுகம், இவைகளால் அலங்கரித்துக் கொண்டு ஊரில் வளைய வந்தனர். அனைவரும் நந்த கோபருக்கு உபாயனம் பரிசுப் பொருள்களை கைகளில் வைத்துக் கொண்டு வந்தனர். கோபிகள் யசோதாவின் சுக பிரசவம் பற்றி அறிந்து மகிழ்ந்தனர். குழந்தையை பார்க்க வந்த பெண்களும் தங்களை நல்ல வஸ்திரங்கள், கண் மை, வாசனை திரவியங்கள் இவற்றால் அலங்கரித்துக் கொண்டு வந்தனர். புது குங்கும வாசனையும், புஷ்பங்களின் வாசனையும் கலந்து வர மலர்ந்த முகங்களே தாமரையாக, யசோதை மைந்தனை காண ஆவலுடன் உடல் குலுங்க வேக வேகமாக நடந்தனர். சாரி சாரியாக யசோதையின் க்ருஹத்துக்கு வந்த கோபி ஸ்த்ரீகள், கழுத்து கொள்ளாமல் மணிகள் நிறைந்த மாலைகள். குண்டலங்கள், அழகிய வஸ்திரங்கள், கேசத்தில் பூக்கள் மாலைகளாக, அவை வழி முழுவதும் பூக்களை இரைத்துக் கொண்டு வர, நந்தனின் வீட்டிற்கு கூட்டம் கூட்டமாக விரைந்து வந்ததே என்றும் காணாத, காணமுடியாத காட்சியாக இருந்தது. चिरं जीव- சிரம் ஜீவ – நீடூழி வாழ்க என்று ஆசிகள் அளித்தனர். அத்துடன் வளர்ந்து அரசனாக ஆவாய் என்ற பாவனையில் எங்களையும் காப்பாய் என்றனர். மஞ்சள் பொடி கலந்த எண்ணெய், தெளித்து தாலாட்டுப் பாட்டுக்கள் பாடினர். சிலர் வாத்யங்கள் வாசித்தனர். விஸ்வேஸ்வரன் க்ருஷ்ணனாக நந்தனுடைய வ்ரஜ தேசம் வந்து பிறந்ததை மஹோத்சவமாக கொண்டாடினர். பரஸ்பரம் மகிழ்ச்சியுடன் ஒருவரையொருவர் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டனர். தயிர், பால், நெய் கலந்த நீரை ஒருவர் மேல் ஒருவர் தெளித்தும், வெண்ணெயை முகத்தில் பூசியும் விளையாடினர். பெருந்தன்மையுடைய நந்தன் அவர்களின் விளையாட்டை ரசித்தபடி, அவர்களுக்கு வஸ்திரங்கள், அலங்கார பொருட்கள், கோதனம், என்று சூதர்களுக்கும், மாகத வந்திகளுக்கும் நிறைய அளித்தான். தாங்கள் கற்ற வித்தையினால் ஜீவிப்பவர்கள் அவர்கள் என்பதால்.
யாருக்கு என்ன தேவை அல்லது விருப்பம் என்பதையறிந்து பரிசு பொருட்கள் கொடுத்தான். பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் ஆராதனைகளுக்காக, தனக்கு மகன் பிறந்த மகிழ்ச்சி இரண்டும் சேர நிறைய தானங்கள் செய்தான். ரோஹிணியும் வந்து இந்த கொண்டாட்டங்களில் கலந்து கொண்டாள். நல்ல வஸ்திரங்களும் , மாலைகள் ஆபரணங்களுடனும் வளைய வந்தாள். அன்றிலிருந்து வ்ரஜ தேசத்தில் அனைத்தும் செழிப்பாக சர்வ சம்ருத்தி – குறைவே இல்லாத செல்வ செழிப்பு – எனும்படி ஆயிற்று. ஸ்ரீ ஹரியின் நிவாசம், எனவே லக்ஷ்மி தேவி அங்கு நிரந்தரமாக விளையாடும் இடமாக விளங்கியது.
கோபர்களை காவலுக்கு நியமித்து விட்டு, நந்தன் கம்சனுக்கு வருடாந்திர கப்பம் கட்ட மதுரா நகரம் சென்றான். திரும்பும் சமயம் வசுதேவர் வந்து பார்த்து வாழ்த்தினார். மிக அன்புடன் அணைத்துக் கொண்டு, தேகத்துக்கு ப்ராணன் வந்தது போல, வீட்டிற்கு அழைத்து உபசரித்து, நலம் விசாரித்து, குழந்தையை ஆசீர்வதித்து விட்டு, ஒரு விஷயம் சொன்னார். சகோதரனே! அதிர்ஷ்டவசமாக, வயதாகியும் குழந்தை இல்லாமல் இருந்த உனக்கு மகன் பிறந்ததைக் கேட்க மிக்க மகிழ்ச்சி. உன் நல் வினைப் பயன் தான் இது. சம்சாரிகளின் ஆசை, இந்த குலத்தில் நாமே மீண்டும் பிறப்போம் என்பது போல சந்ததிகள் வேண்டுகிறார்கள். உனக்கும் அந்த பாக்யம் கிடைத்துள்ளது. துர்லபமான ப்ரிய தர்சனன்- காணவே பிரியமாக இருப்பவன், பிறந்து விட்டான்.
நீங்கள் ஓரிடத்திலேயே நிரந்தரமாக இருப்பதில்லை. நதியில் வெள்ளம் வருவதை, நீரின் ஓட்டத்திலிருந்து முன் கூட்டியே அறிந்து பாதுக்காப்பாக பசுக்களை காப்பவர்கள் நீங்கள். அவைகள் நலமா? அவைகளுக்கு தாராளமாக நீர், புல், தானியங்கள் கிடைக்கின்றனவா ? உன் பிரிய ஜனங்கள், நண்பர்கள் அருகில் இருக்கின்றனரா? சகோதரனே, உன் மகனை என் மகன் போல உணர்கிறேன். அவன் நலமாக வளரட்டும். அனைவரின் அன்புக்கும் பாத்திரமாகி கொஞ்சி குலாவி மகிழ்ந்து இருப்பான். ஏதோ ஒரு கஷ்டம் என்றால் உடன் இருக்கும் உறவினர்களும், நண்பர்களும் உதவுவார்கள்.
நந்தன் சொன்னான்: அஹோ! தேவகியின் குழந்தைகளை கம்சன் வதைத்தான் என்று கேள்விப் பட்டேன். ஒரு பெண் குழந்தை கடைசியில் பிறந்தது அதுவும் தேவலோகம் சென்று விட்டது. எதுவுமே நாம் அறியாத பரம்பொருளின் செயல்கள். அடுத்து என்ன என்பதை அறியாமல் தான் மக்கள் இருக்கிறார்கள். ஆத்ம தத்வம் அறிந்தவர்கள் தான் மோகம் அடைவதில்லை.
வசுதேவர் நந்தனை துரிதப் படுத்தினார். கம்சனுக்கு கப்பத்தைக் கட்டியாயிற்று. எங்களையும் பார்த்தாயிற்று. கிளம்பு. இங்கு அதிக நாட்கள் தங்க வேண்டாம். கோகுலத்தில் உன் தேவை இருக்கும். சீக்கிரம் கிளம்பு என்றார்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இப்படி கோபர்கள் அனைவரையும் சௌரி கிளப்பி, சீக்கிரம் ஊர் போய் சேருங்கள் என்று அனுப்பி வைத்தார். புரியாத வார்த்தைகள், தெளிவாக சொல்லாத செய்திகள், இவைகளுடனே அவர்களை சிந்திக்க வைத்து கோகுலத்துக்குச் செல்ல விடை கொடுத்தார்.
(இது வரை ஸ்ரீமத் பாகவத்தில் பத்தாவது ஸ்கந்தத்தின் ஐந்தாவது அத்யாயம் – ஸ்லோகங்கள்-32
||ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||
அத்யாயம்-6
ஸ்ரீ சுகர் சொன்னார்: வழியில் சௌரியின் வார்த்தைகளை திரும்பத் திரும்ப யோசித்து பார்த்த நந்தன் , அவர் ஏதோ சொல்ல வந்தார், தெளிவான சொற்களில் சொல்லவில்லை, ஏதோ விஷயம் இருக்க வேண்டும். அலட்சியப் படுத்தக் கூடாது என்ற முடிவுக்கு வந்தார். பகவான் ஸ்ரீ ஹரியை தியானித்தார். பகவானே, சரணம் எதுவும் ஆபத்தாக நடந்து விடக் கூடாது என்று வேண்டிக் கொண்டார்.
கம்சன் அனுப்பி வந்த பூதனா என்ற கோரமானவள், குழந்தைகளை கொல்வதே அவள் செயல். சென்ற இடங்களில் எல்லாம் சிறு குழந்தைகளைக் கொன்று விடுவாள், இதே காரியமாக நகரம், க்ராமங்கள் மற்றும் வ்ரஜ தேசங்களில் சுற்றுவாள். தங்கள் நித்ய காரியங்களைத் தவிர அதிக வெளி விஷயங்கள் அறியாத எளிய ஜனங்கள் உள்ள இடத்தில் யாது தானர்கள் என்ற அரக்கர்கள் தங்கள் கை வரிசையை காட்டுவர். பூதனாவோ வானத்திலும் சஞ்சரிக்கக் கூடியவள். ஒரு சமயம் நந்தனுடைய கோகுலம் வந்து சேர்ந்தாள். சாதாரண பெண் போல தன்னை மாற்றிக் கொண்டு சகஜமாக நடமாடினாள். தலையில் மல்லிகைப் பூ, பெரிய ஸ்தனங்களும் மெல்லிய இடையும், நல்ல ஆடைகளுடன், காதுகளில் ஓளி வீசும் ஆபரணம், கேசம் பள பளப்பாக முகத்துக்கு அழகூட்ட மெள்ள சிரித்தபடி, கண்களால் வ்ரஜ பெண்களை வசீகரமாக பார்த்தபடி, தன் பதியைக் காண வந்த லக்ஷ்மி தேவி போல இருந்தாள். எங்கு எந்த குழந்தை இருக்கிறது என்று தேடியபடி வந்தவள், எதேச்சையாக நந்த க்ருஹம் வந்தாள். உள் வரை சென்றவள், பாலனை, தன் நிஜ தேஜசை மறைத்துக் கொண்டு, படுக்கையில் பஸ்மத்தால் மூடப்பட்ட அக்னி போல உறங்கும் குழந்தையைக் கண்டாள். துஷ்டர்களுக்கு அந்தகனான பாலனை, அறியாமல் பாம்பை கயிறு என்றெண்ணி தொட்டுத் தூக்கியவனைப் போல் தூக்கினாள்.
சற்று தூரத்தில் இருந்த தாயார் யசோதை அவளை யாரென்று அறியாமல் யாரது என்று சந்தேகப் பட்டாலும், அவள் அலங்காரங்களை கண்டு நின்றாள். அவள் எதிரிலேயே தானாக குழந்தையைத் தூக்கி மடியிலிருத்தி, அணைத்தபடி தன் பாலை குடிக்கச் செய்தாள். பகவான் அவள் ஸ்தனங்களை இறுக பற்றியபடி, அவளுடையை உயிரையும் சேர்த்து குடித்தார். அவள் விடு விடு, போதும் என்று அலறினாள். மர்ம ப்ரதேசத்தில் வலி தாங்காமல், கண்கள் செருக, புஜங்கள் இற்று விழ, வேர்வை பெருகிய உடல் கீழே விழ, வலி தாங்காது அழுதாள். பெரும் குரலில் அவளின் அலறலில் மலைகளும், பூமியும், ஆடியது. வானமே க்ரஹங்களுடன் ஆட்டம் கண்டது. திசைகள் ஒளியிழந்தன. ஜனங்கள் தடுமாறி விழுந்தனர். பூமியில் வஜ்ராயுதம் விழுந்து விட்டதோ என்று பயந்தனர்.
நிசாசரீ, இவ்வாறு தவித்தவள், பூமியில் விழுந்தாள். கேசம் அவிழ்ந்து தொங்க, கை கால்கள் ஒரு பக்கம் இழுக்க, அந்த கோஷ்டம்- வீட்டின் முற்றம் – முழுவதையும் நிறைத்தபடி, தன் நிஜ ரூபத்தை அடைந்தாள். வஜ்ரத்தால் அடிபட்ட வ்ருத்திரன் போல கிடந்தாள். விழுந்த வேகத்தில் மரங்கள் பொடிப் பொடியாயின. மகத்தான அத்புதமாக இருந்தது. குறுக்காக விழுந்த அவள் தேகம், தண்டம் போன்ற நீண்ட பற்கள், குகை வாசல் போன்ற மூக்கு, மலை சரிவுகள் போன்ற மார்பகம், செக்கச் சிவந்த தலை கேசம், ரௌத்ரமாக ஆழ் கிணறு போன்ற கண்கள், நீர் வற்றிய குளம் போன்ற வயிறு, காணவே பயங்கரமாக இருந்தது. கோபிகளும் கோபர்களும் மிகவும் பயந்தனர். அவள் அலறியதிலேயே காதுகள் அடைத்து, இதயம் நடுங்கி தலை சுற்றியபடி நின்றிருந்தனர். அவள் மடியில் பயமின்றி விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கோபிகள் பயம் விலகாமலே நெருங்கி பற்றித் தூக்கிக் கொண்டனர். ரோஹிணியும் யசோதையும், த்ருஷ்டி கழித்தனர். அனைத்து வ்ரஜ பெண்களும் கோ முத்திரத்தால் குளிப்பாட்டி, பசுவின் காலடி தூசியால் சுற்றிப் போட்டனர். பன்னிரெண்டு ஸ்ரீ ஹரியின் நாமங்களைச் சொல்லிச் சொல்லி அங்கங்களில் காப்பு கட்டினர். கோப ஸ்த்ரீகள், கையில் ஜலத்தை வைத்துக் கொண்டு, பீஜ ந்யாசம் சொல்லி தங்கள் கைகளால் தடவி காப்பு கட்டினர்.
அஜன் உன் பாதங்களை, அணிமான் உன் முழங்கால்களை, துடைகளை அச்யுதன், இடுப்பை அஸ்வமுகன், வயிற்றை கேசவன், இதயத்தை ஈசன், கண்டத்தை விஷ்ணு, புஜங்களை உருக்ரமன், முகத்தை ஈஸ்வரன் தலையை காக்கட்டும். சக்ரீ- சக்ரதரன் முன்னால், கையில் கதையுடன் ஹரி பின்னால், பக்கங்களில் தனுஷும், வாளும், மது ஹா – மதுவை வென்ற பகவான், ஓரங்களில் சங்கமும் உருகா மேல் பக்கம் உபேந்திரன், தார்க்ஷ்யன் என்ற கருடன், பூமியில் ஹலதரன், புருஷன் எதிரில் இந்திரியங்களை ஹ்ருஷீகேசன், ப்ராணனை நாராயணன் காக்கட்டும். ஸ்வேத த்வீப பதி சித்தத்தை, மனதை யோகேஸ்வரன் காக்கட்டும்.
ப்ருஸ்னிகர்பன் புத்தியையை காக்கட்டும், ஆத்மாவை பகவானும், விளையாடுகையில், கோவிந்தனும், தூங்கும் பொழுது மாதவனும் காக்கட்டும். நடந்து செல்கையில் வைகுண்ட வாசியான ஸ்ரீபதி உன்னை காக்கட்டும். சாப்பிடும் சமயம் யக்ஞபுக் காக்கட்டும். க்ரஹங்களுக்கு பயங்கரமானவன் டாகினீ, யாது தானர்களிடமிருந்து காக்கட்டும். கூஷ்மாண்டா குழந்தைகளை படுத்தும் க்ரஹங்களிடமிருந்தும், பூத ப்ரேத பிசாசுகளிடமிருந்தும், யக்ஷ ரக்ஷர்களிடமிருந்து வினாயகன் காக்கட்டும். மேலும் தங்களுக்குத் தெரிந்தபடி வேண்டிக் கொண்டனர். விஷ்ணுவின் பெயரை சொன்னாலே, கனவிலும், குழந்தைகளை வயதானவர்களையும் படுத்தும் க்ரஹங்கள் விலகி விடும் என்றனர்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: குழந்தையிடம் இருந்த பாசத்தால், வர இருந்த பெரும் அபாயத்தால் பயந்து விட்ட தாய்மார்கள் காப்பு கட்டி முடிந்ததும் யசோதா கையிலெடுத்து அணைத்தபடி பாலூட்டினாள். அதே சமயம் நந்தன் முதலானோர் வந்து சேர்ந்தனர். பூதனாவின் மிகப் பெரிய தேகம் விழுந்து கிடப்பதைப் பார்த்து அதிசயித்தனர். இதைத்தான் ஆனக துந்துபி குறிப்பிட்டார் போலும். ரிஷி வாக்கு போலும் யோகேசன் போலும் அவர் முன் கூட்டியே அறிந்து விட்டிருக்கிறார்.
அதன் பின் அந்த பெரிய உடலை அனைவருமாக கோடாலியால் வெட்டி, வெகு தூரத்தில் கட்டைகளை அடுக்கி தஹன கர்மாவைச் செய்தனர். எரியும் சிதையிலிருந்து கிளம்பிய புகை அகரு வாசனையுடன் இருந்தது ராக்ஷஸியானாலும், க்ருஷ்ணனை மடியில் வைத்து பாலூட்டிய செயலுக்காகவே அவள் நல் கதியடைந்தாள். உலகில் குழந்தைகளை கொல்வதே தன் செயலானவள், ராக்ஷசி, அவைகளின் ரத்தமே உணவாக இருந்தவள், கொலை காரி அவள் ஹரியினால் மோக்ஷம் அளிக்கப் பட்டாள் என்றால். தாய்மார்கள் சிரத்தையுடனும் பக்தியுடனும் தங்கள் குழந்தைகளுக்காக வேண்டிக் கொள்வது என்ன தான் தராது. தாய்மார்கள் பால் தரும் பசுக்களைப் போன்றவர்கள். நன்மையே நினைப்பவர்கள். இந்த ராக்ஷஸி பகவானின் ஸ்பர்சத்தாலேயே நல் கதி அடைந்தாள் என்று சிலர். அனவரதமும் க்ருஷ்ணன் அருகில் இருந்து, அவன் க்ஷேமமே கவனமாக இருந்த கோகுலத்து தாய்மார்கள் சந்தேகமில்லாமல் மறு பிறவியின்றி பகவானை அடைவார்கள்.
தூபம் போன்ற சுகந்தமான வாசனையை, அனுபவித்தபடி, எங்கிருந்து இந்த மணம் வருகிறது என்று வியந்த கோபர்கள் வீடு வந்து சேர்ந்தவுடன் அனைத்து கோபிகளும் நடந்ததைச் சொன்னார்கள். பூதனை வந்தது அவள் மரணம், தெய்வாதீனமாக குழந்தை பிழைத்தான் என்றனர். குழந்தையை உச்சி முகர்ந்து அன்புடன் விளையாடி மகிழ்ந்தான். பூதனையின் மோக்ஷம் என்ற இந்த பகுதியை பற்றி கேட்டாலே, குழந்தை க்ருஷ்ணனின் அருளால், கோவிந்தனிடம் ஈடுபாடு கொள்வார்கள்.
இதுவரை ஸ்ரீமத் பாகவத்தில்,பத்தாவது ஸ்கந்தத்தின் ஆறாவது அத்யாயம்.ஸ்லோகங்கள்- 44
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||
அத்யாயம்-7
அரசன் பரீக்ஷித் வினவினான்: பகவான் ஹரீஸ்வரன், எந்தெந்த அவதாரங்களில் இது போன்ற காதுக்கு இனிமையான விளையாட்டுக்களை விளையாடியிருக்கிறார், ப்ரபோ ! எதைக் கேட்டாலே த்ருஷ்ணா முதலிய தவறான எண்ணங்கள் போகுமோ, மனிதர்கள் அதைக் கேட்பதாலேயே சத்வ குணத்தை பெறுகிறார்களோ, ஸ்ரீ ஹரியிடம் பக்தியும், அவரிடம் நட்பும் அதே போல அவரிடம் தோற்பதும் சுவாரசியமானவை. சொல்லலாம் என்றால் சொல்லுங்கள். ஸ்ரீ க்ருஷ்ணருடைய லீலைகளை மேலும் சொல்லுங்கள். எதற்காக மனிதனாக வந்தார். அதுவும் அந்த ஜாதி மக்கள் அரசனால் தாக்கப் பட்டு தவிக்கும் சமயம்.
ஔதனிக – ஒரு விசேஷம். உறவினர்கள், பந்து ஜனங்களை அழைத்து விருந்தளிப்பது. ஒரு சமயம் குழந்தையின் ஜன்ம தினத்தையொட்டி, கோகுலத்து பெண்கள் கூடி, வாத்யங்கள் வாசித்தும் பாடியும், அந்தணர்கள் வேத கோஷமும் ஒலிக்க, தன் மகனுக்கு அபிஷேகம் செய்தாள் யசோதா. நந்தனுடைய பத்னி, பூஜைகள் முடிந்து அந்தணர்கள் ஸ்வஸ்த்யயனம் என்ற ஆசீர்வாதங்களைச் செய்த பின், அவர்களுக்கு உபசாரங்களை குறைவின்றி செய்தாள். வீட்டு வேலைகளை, செய்து முடித்து சுத்தம் செய்தபின் பசுக்களை கவனித்து விட்டு மகனை தூங்கச் செய்தாள். . ஔத்தனிக்க என்ற அந்த விசேஷத்தில் கவனமாக இருந்தவள், வந்தவர்களை கவனிப்பதும், வரவேற்பதுமாக இருந்ததால். வ்ரஜ தேசத்து அனைவரும் குழுமியிருந்தனர். மகன் பசித்து பாலுக்காக அழுததைக்கூட கவனிக்கவில்லை. தன் அழுகையினூடே கால்களை உதைத்தபடி இருந்த சமயம், குழந்தையின் படுக்கையின் அடியில் இருந்த ஒரு சக்கரம், சிசுவின் பாதங்களால் அடிபட்டு நொறுங்கியது. சமைத்த அன்னங்கள் இருந்த பாத்திரங்களும், திரவமான உணவுப் பொருள்களும் சிதறின. சக்கரத்தின் அச்சு முறிந்து குவியலாக கிடந்தன. யசோதா முதலானவர், வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் அதிசயித்தனர். சக்கரம் எப்படி தானாக உடையும்? கவலையுடன் நாலா புறமும் நோக்கினர். அந்த சமயம் அருகிலிருந்த சிறுவர்கள், தீர்மானமாகச் சொன்னார்கள். இந்த பாலகன் அழுது கொண்டே உதைத்தான், அதனால் தான் சக்கரம் உடைந்தது. சந்தேகமேயில்லை என்றனர். சிறுவர்கள் ஏதோ சொல்கிறார்கள் என்று பெரியவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. அபரிமிதமான பலம் உடையவன் அந்த பாலகன் என்பது அவர்களுக்குத் தெரியாதே. குழந்தையை எடுத்துக் கொண்டு சமாதானப்படுத்தி, பாலூட்டி, வந்திருந்த அந்தணர்களைக் கொண்டு மங்கள காப்பு கட்டச் சொல்லி கோபிகளுடன் அவனையும் மடியில் இருத்திக் கொண்டே வேலைகளை கவனித்தாள். கோகுலத்து ஜனங்கள், தங்களுக்குத் தெரிந்தபடி கண் த்ருஷ்டி வாராமல் காக்க ஏதேதோ செய்தனர், அந்தணர்கள் அக்னி வளர்த்தும், அர்ச்சனைகள் செய்தும் அக்ஷதைகளாலும், புல், புஷ்பங்களாலும் பாலகனை ஆசீர்வதித்தனர்.
யாராக இருக்க முடியும்? அசூயை, தம்பம் பொறாமை, ஹிம்சையில் நாட்டம் இவைகள் அந்த எளிய ஜனங்களிடம் எப்பொழுதுமே இருந்ததில்லை. அவர்கள் மனப் பூர்வமாக ஆசிர்வதிப்பது எந்த சமயத்திலும் பலனின்றி போனது இல்லை. கவலையுடன் குழந்தையை தூக்கிக் கொண்டு உத்தமமான த்விஜர்கள்- அந்தணர்களிடம் கொண்டு சென்று பவித்ரமான ஓஷதிகள் கலந்த ஜலத்தால், ஸ்னானம் செய்வித்தனர். மந்திரித்து காப்புகள் செய்தனர். நந்தனும் அவர்களுக்கு நிறைய தக்ஷிணைகள் கொடுத்தும், நிறைய அன்னதானம் செய்தும் அவர்களைக் கொண்டு மங்கள் ஆசீர்வாதங்களைச் சொல்லச் செய்தும், எதை செய்தால் நன்மை என்று தேடித் தேடிச் செய்தான். தன் மகன் நல்ல படியாக வளர வேண்டும் என்பதற்காக, நல்ல பசுக்கள், ஆடைகள், ஆபரணங்கள், தங்க மாலைகள், இவைகளை தானம் செய்தான். அந்தணர்கள், விஷயமறிந்தவர்கள் எது சொன்னாலும் உடனே செய்தான். என்றுமே அவர்கள் ஆசீர்வாதங்கள் பலனின்றி போனதில்லை என்பது வரை நிச்சயம்.
ஒரு சமயம் யசோதா கையில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு படி ஏற சிரமமாக உணர்ந்தாள். கனம் தாங்காமல் குழம்பினாள். இது என்ன சோதனை ஏதோ பாறையை தூக்குவது போல என்று நினைத்தவள் பூமியில் நிறுத்தி விட்டு, உள்ளே சென்றாள். மற்றவர்களை அழைத்து வர நினைத்தாள். அனைவரும் வெளியே சென்றிருந்தனர். கம்சனுடைய அடியாள், த்ருணாவர்த்தன் என்பவன், கம்சனால் அனுப்பப்பட்டு, அங்கு வந்தான், அமர்ந்திருந்த குழந்தையை புழுதியைப் பறக்கடிப்பது போல சுழன்ற காற்றாக அருகில் வந்து அபகரித்தான். கோகுலம் முழுவதும் ஒரே புழுதி படலமாக ஆகியது. அனைவரையும் கண்களில் மண் விழுந்தது போல மணலை வாரியடித்து, பெரும் ஓசையுடன் நால் திசையும் ஒரு முஹூர்த்தம் ஒரே இருட்டாக ஆக்கி என்ன நடக்கிறது என்று அறிய முடியாமல் அவர்களை மலைக்கச் செய்தான். யசோதா ஓடி வந்தாள். தான் வைத்த இடத்தில் மகனைக் காணாமல் தேடக் கிளம்பினாள். யார் என்ன எதிரில் இருப்பது என்ன என்பதைக் கூட அனுமானிக்க முடியாமல் புழுதியும் மண்ணும் பரவிக் கிடந்தது. இப்படி துஷ்டன் போல காற்று மணல் துகள்களை வாரியிறைத்தபடி, வீச, மகனைக் காணவும் முடியாத யசோதா தரையில் விழுந்து பலமாக அழுதாள். கன்றைத் தேடும் பசு போல மிக தீனமாக அலறினாள். அவள் அழு குரலைக் கேட்ட கோபியர் கண்களில் கண்ணீர் தளும்ப, தவித்த படி ஓடி வந்தனர். காற்று நின்ற பின்னும் நந்த சுதனைக் காணாமல் தேடலாயினர்.
த்ருணாவர்த்தன் சாந்தமாகி, க்ருஷ்ணனை அபகரித்துக் கொண்டு வான மார்கத்தில் செல்ல நினைத்தவனால் . கையில் இருந்த குழந்தையின் கனத்தால் நகரவே முடியவில்லை. இது ஏதோ சிறு குழந்தை நான் பலசாலி என்று நினைத்தானோ, கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்த குழந்தையை உதறவும் முடியவில்லை. தானும் அந்த குழந்தையோடு தடாலென்று பூமியில் விழுந்தான். திடுமென அந்தரிக்ஷத்தில் இருந்து விழுந்தவனை கோபர்கள் பார்த்தனர். ருத்ரனுடைய சரங்களால் முன்பு முப்புரம் சிதறி விழுந்தது போல இருந்தது. கோபர்கள் அவன் உடலில் இருந்து தொங்கிக் கொண்டிருந்த குழந்தையை கவனமாக இறக்கி அவன் ஸ்வஸ்தமாக இருப்பதையும் உறுதி செய்து கொண்டு, கொலைக் காரனிடமிருந்து பிழைத்து வந்து விட்டான் என்றும், மரணத்தின் வாயில் வரை சென்று தப்பினான் என்றும் கோபர்கள், கோபிகளும் மகிழ்ந்து, நந்தன் வீடு வரை வந்து அவர்களிடம் கொடுத்தனர். அஹோ! அத்புதம் இது. எப்படி இந்த ராக்ஷஸன் பாலனை தூக்கிக் கொண்டு போனான். நல்ல வேளை திரும்பக் கிடைத்தான். பாபி என்று அந்த ராக்ஷஸனைத் திட்டினர். நாம் செய்யும் நல்ல காரியங்கள், தவம், அதோக்ஷஜ அர்ச்சனம், பூர்தேஷ்ட தத்தம், மற்ற ஜீவன்களிடத்தில் சுமுகமாக அன்பாக இருந்தது இவையனைத்தும் சேர்ந்து தான் இந்த பாலகன் பிழைத்தான். அத்ருஷ்ட வசமாக, தன் பந்துக்களை வருத்தப்படாமல் நிம்மதியடையச் செய்து விட்டான். நடந்த பயங்கரமான செயலால், நந்த கோபர் திரும்பவும் வசுதேவர் எச்சரித்ததை நினைத்தார்.
ஒருசமயம் மகனை மடியில் வைத்துக் கொண்டு பாலூட்டும் போது பரிவுடன் அதன் முகத்தைப் பார்த்தவள் நடுங்கி விட்டாள். மெள்ள சிரித்த முகத்தை பார்த்து கொஞ்சியவள், அவன் கொட்டாவி விட்ட பொழுது வாயினுள், ஆகாயம், மேகங்கள், ஜோதி கணங்கள், – தாரகைகள், ஸூரியனும் சந்திரனும், வஹ்னி, ஸ்வஸன,அம்புதீ-சமுத்திரங்கள், தீவுகள், மலைகள், வனங்கள், அசையும் அசையா பொருட்கள் அனைத்தும், திடுமென விஸ்வம் முழுவதும் அதில் பார்த்தவள், வியர்வை பெருக கண்களை மூடிக் கொண்டாள். நிஜமா என்ற சந்தேகத்துடன்.
(இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தம் பூர்வார்தம் என்பதில் ஏழாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்- 37
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய
அத்யாயம்-8
ஸ்ரீ சுகர் சொன்னார்: கர்கர் என்பவர் யது வம்சத்தினரின் புரோஹிதர். யது வம்சத்தில் மிகுந்த தவமும், ஞானமும் உடையவர். வசுதேவரின் தூண்டுதலால் எதேச்சையாக வருபவர் போல வந்தார். அவரைக் கண்டதும் நந்தன் பகவானே அனுப்பியது போல மகிழ்ந்தான். கை கூப்பி வணங்கியபடி வரவேற்றான். காலில் விழுந்து வணங்கி அதிதி சத்காரங்களைச் செய்தான்.
வசதியாக அவர் அமர்ந்த பின், மெள்ள முனிவரிடம் ப்ரும்மன்! நீங்களே பூர்ணமானவர். உங்களுக்கு நான் என்ன கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று வினவினான். க்ருஹஸ்தர்கள் அதிலும் ராஜ கார்யமாக இருப்பவர்கள் தான் பல விதமாக சஞ்சலம் அடைவார்கள். பகவன்! ஏதாவது முக்யமான காரியமா? தாங்கள் ஜோதிடர்களில் ஸ்ரேஷ்டர். உங்களுக்கு தானாகவே, புலன்களை மீறிய ஞானம் , அதன் மூலம் பல விஷயங்களை அறிந்து கொள்ளும் சக்தி உண்டு. அந்தணர் அதிலும் எங்கள் குரு, ப்ரும்மவாதிகளுள் முதன்மையானவர், இந்த குழந்தைகளுக்கு ஜன்ம கார்மா- ஜாதக கர்மா- பெயரிடுதல் – என்ற ஸம்ஸ்காரங்களை செய்ய வேண்டுகிறேன்.
கர்கர் சொன்னார்: யது குலத்தின் ஆசார்யனாக எனக்கு அந்த கடமை உள்ளது. உலகில் அனைவரும் என்னை அறிவர். உன் குழந்தை தேவகியின் மகனாக இருக்க வேண்டும் என்று சொல்லப் படுகிறது. தேவகியின் எட்டாவது குழந்தை ஸ்த்ரீயாக இருக்க முடியாது என்று கம்சன் பாப புத்தி, நினைக்கிறான். ஆனக துந்துபி உன் சகா. கம்சன் ப்ரசவ அறையில் இருந்த தாதிகளை மிரட்டி கேட்டான். அதனால் என்னேரமும் இங்கும் வரலாம், அவனது சந்தேகத்துக்கு எல்லையே இல்லை.
நந்தன் வினவினான்: இந்த செய்தியைப் பற்றி எனக்கு தெரியாது. இந்த வ்ரஜ தேச ஜனங்களுக்கும் தெரியாது. பொதுவாக அந்தணர்களுக்கான சம்ஸ்காரம் செய்து விடுங்கள். ஸ்வஸ்தி வசனங்கள் சொல்லி எளிமையாக முடித்துக் கொடுங்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: கர்க முனிவரும் சம்மதித்து ரகசியமாக பாலகர்கள் இருவருக்கும் நாம கரணம் என்பதைச் செய்தார்.
கர்கர்: இவன் ரோஹிணி புத்திரன். நல்ல குணம் உடையவன். நட்பும், மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் இவனை ராமன் என்று அழைக்கிறேன். அதிக பலம் உடையவன் ஆனதால் பலன் என்றே யது குலத்தில் அறிவார்கள். அதனால் பலராமன். யது வம்சத்து குழந்தைகளிடமிருந்து மாறுபட்டு இருப்பதால் சங்கர்ஷணன் என்று பெயர் வைக்கிறேன்.
அடுத்தவன் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு வர்ணமாக இருப்பவன், வெண்மை, சிவப்பு, மஞ்சள் என்று மூன்று யுகங்களில் இருந்தவன் தற்சமயம் க்ருஷ்ண- கரும் வர்ணத்தை தேர்ந்தெடுத்திருக்கிறான். முன்பே இவன் வசுதேவனின் மகனோ என்ற சம்சயத்தில் வாசுதேவன் என்று ஸ்ரீமான் வாசுதேவன் , என்று இவனை யாரென்று அறியாதவர்கள் அழைக்கிறார்கள். உன் மகனுக்கு பல நாமங்கள் உள்ளன. பலவிதமான ரூபங்கள். உன் மகனுக்கு அந்தந்த சமயத்தில் குணம் கர்மா இவைகளை வைத்து பெயர் வருகிறது. முழுமையாக அறிந்தவர் எவருமில்லை.
இவனால் கோகுலம் லக்ஷ்மீ கடாக்ஷம் பெறும். கோப கோகுல ரக்ஷகனாக விளங்குவான். இவனால் பலவிதமான நன்மைகளைப் பெறுவீர்கள். எந்த விதமான கஷ்டமோ, துக்கமோ, க்ஷண நேரத்தில் கடந்து வருவீர்கள். வ்ரஜபதே! புராணங்களில் ஒரு கதை- சாதுக்கள் திருடர்களால் சிரமப்பட்டனர். அராஜகம், நல்ல அரசன் இல்லாமை. காப்பவர் யாருமில்லாமல் செய்வதறியாது தவித்த சமயம் இவன் அந்த திருடர்களை எதிர்த்து ஜயித்தான். அதனால் மனிதர்கள் இவனை மிகவும் அன்புடன் போற்றுகின்றனர். தங்கள் தலைவனாக ஏற்றுக் கொண்டனர், அதனால் ஹே நந்தா! இவன் குணங்களில் நாராயணனுக்கு சமமாக இருப்பான். செல்வ செழிப்பிலும் புகழிலும் அதே போல சிறந்து விளங்குவான். இவனை ரகசியமாகவே வைத்திரு. உன் கண் காணிப்பிலேயே இருக்கட்டும். என்று சொல்லி விட்டு கர்கர் புறப்பட்டுச் சென்ற பின் நந்தன் தான் பூர்ணமாக ஆசீர்வதிக்கப் பட்டாதாக மிகவும் மகிழ்ந்தான்.
சில நாட்களிலேயே, ராம கேசவர்கள், இருவரும் கோகுலத்தில் முழங்காலிட்டு கைகளால் தவழ்ந்து செல்லும் பருவத்தையடைந்தனர். அவர்களின் பாத அடையாளங்களைப் பின் பற்றி மற்ற சிறு குழந்தைகள் தவழ்ந்து செல்லும் பொழுது வ்ரஜ தேசத்தின் கூச்சல்களைக் கேட்டு பயந்தவர்கள் போல தாய் மார்களை சரணடைந்தனர். மனதில் ரசித்தாலும், லோகத்தை அனுசரித்து அறியாத பாலகர்களாக பயந்தனர். அந்த தாய்மார்கள் இருவரும் அன்புடன் தூசு படித்த உடலை அப்படியே அணைத்துக் கொண்டு முகத்தை பார்த்து கொஞ்சியபடி, பாலூட்டி, அதன் ஒவ்வொரு செயலையும் ரசித்து, குட்டி பற்கள் முளைத்ததைப் பார்த்து பரவசமாக ஆனார்கள்.
குமார லீலைகளே காண அழகாக இருந்தன. கன்றுகளின் வாலை பிடித்துக் கொண்டு அதன் ஓட்டத்தோடு வீடு முழுக்க ஓடினர். அவர்களும் கூடவே ஓடி, ஒரு அளவுக்கு மேல் போகாமல் கட்டிப் பிடித்து சிரித்து மகிழ்ந்தனர்.
விளையாடிய படி மாடுகளின் அருகில் சென்றால் கொம்புகளால் முட்டிவிடுமோ என்று பயந்தனர். அக்னியின் அருகில் செல்ல விடாமல், பசுக்களின் வாயில் கை விட்டு அதன் பற்களை எண்ணும் போது தவறுதலாக பசுவின் பற்கள் பட்டு விடுமோ என்று அருகில் நிற்பர். ஆங்காங்கு ஜலத்தில், கத்தி போன்ற கூர்மையான பொருட்கள், முட்கள், இவைகளை விளையாட்டு மும்முரத்தில் ஓடும் குழந்தைகளின் கால்களில், உடலில் படாமல் காக்க இருவரும் பின்னாலேயே சென்றபடி இருந்தனர். அதனால் உடல் களைத்தாலும் பொருட்படுத்தவில்லை. மனம் நிறைந்து இருந்தது. சீக்கிரமே, இருவரும் வீட்டுக்கு வெளியிலும் கோகுலத்தில் நேராக நடக்கத் துவங்கினர்.
க்ருஷ்ணனும் ராமனும் அந்த வ்ரஜ பாலகர்களுடன், விளையாடி களித்தனர். இடையில் வரும் வ்ரஜ ஜன பெண்களை வம்புக்கு இழுத்தனர். அவர்களும் வந்து சேர்ந்து கொள்வர். அனைவரும் சந்தோஷமாக வலம் வருவர். குமார சாபலம், அந்த வயதுக்குரிய பேச்சை, செயலை ரசித்தாலும், தாயாரிடம் வந்து சொல்வர்.
எதிர்பாராத நேரத்தில் கன்றுகளை அவிழ்த்து விட்டு எங்களை துரத்த வைக்கிறான். நாங்கள் பயந்து ஓடினால் எல்லோருமாக சிரிக்கிறார்கள். சற்று தூரம் நாங்கள் ஓடிய பின் வந்து கன்றுகளை பிடித்துக் கொள்கிறான்.
தயிர், பால், இவைகளை நாங்கள் இல்லாத சமயம் எடுத்து சாப்பிட்டு விடுகிறான். வெண்ணெயை தானும் உண்டு மற்ற சகாக்களுக்கும் கொடுத்து தீர்ந்து விடுவான். நல்ல வேளை பாண்டத்தை உடைக்காமல் இருந்த படியே வைத்திருப்பான். கை நீட்டி கேட்பான். காலி பாண்டத்தை நாங்கள் திறந்து பார்க்கையில், எதும் இல்லையா என்று கோபித்துக் கொண்டவன் போல போவான்.
கைக்கு எட்டாத பொருட்களை பீடங்களில், உலூகலம்- உரல் போன்றவைகளில் ஏறி எட்டி உறியில் வைத்திருக்கும் பாணையில் துளையிட்டு பால் தயிர், வெண்ணெய் இவைகளை எடுக்கத் தெரிந்து கொண்டு விட்டான். கோபியர்கள் வீட்டு வேலைகளில் கவனமாக இருக்கும் சமயம் உள் அறை இருட்டில் தன் அணிகளின் மணிகளின் ஒளியில் இருப்பான். இது போல குற்றம் சொல்பவர்கள் சொல்வதைக் கேட்டு, தாய் மார்கள் இருவரும் குழந்தையை அழைத்தால், சாதுவாக, கண்களில் பயத்துடன், பெண்களைக் காண்பதைத் தவிர்ப்பவன் போல தாய் மார்களின் பின்னால் நிற்பவனை கண்டிக்க மனமின்றி சிரித்து மழுப்புவர்.
ஒரு சமயம் ராமன் மற்ற கோப சிறுவர்கள் அனைவருமாக விளையாடும் பொழுது, இவன் மண்ணைத் தின்றான் என்று அந்த சிறுவர்கள் தாய் யசோதாவிடம் சொன்னார்கள். அவளும் பயந்து அவன் கையைப் பிடித்து, மண் தின்றால் நல்லதல்லவே , என்று நினைத்து அதட்டும் குரலில் உண்மையா எனக் கேட்டாள். இந்த சிறுவர்கள் மட்டுமல்ல உன் அண்ணனும் சொல்கிறானே, எப்படி மண்ணைத் தின்றாய் என்றாள். பயத்தால் வெளிறிய முகத்துடன் ‘அம்மா நான் மண் திண்ணவில்லை, இவர்கள் எல்லோரும் அறியாமல் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது தான் சத்யம் என்றால் என் வாயில் பார் ‘ என்று சொல்லவும், வாயை திற என்று அவன் தாய் யசோதா சொல்லவும் பகவான் ஸ்ரீ ஹரி, வாயைத் திறந்தான்., அளவிள்ளாத ஐஸ்வர்யங்களை உள்ளடக்கிய தன் சரீரத்தின் பகுதியை, விளையாட்டாக தன் சகோதரன், மற்ற சிறுவர்கள் முன் வாயைத் திறந்து காட்டினான். யசோதா எட்டிப் பார்த்தாள். அதனுள் விஸ்வம் முழுவதும் உலகங்கள் வானம், திசைகள். மலைகளுடன் தீவுகள், சமுத்திரம், பூகோளம், தவிர, வாயு அக்னி இந்து, தாரகம் என்ற இவைகளுடன் வான வெளி, ஜோதி சக்ரம், சூரியன், தண்ணீர், தேஜஸ், எல்லையில்லாமல் பரந்த வானம், தேவலோகமும், வைகாரிக என்பவைகள், ஐம்புலன்களுடன் மனம், மாத்ரா, முக்குணங்கள், இவை அனைத்தும் விசித்ரமாக தெரிந்தன. அத்துடன் நிகழ் கால சிறுவர்களும், விரஜ தேசம், அதிலும் தான், தன் மகன் அனைத்தையும் அந்த திறந்த வாயினுள் கண்டவள், திகைப்பும், கனவா நனவா என்ற சந்தேகமும் அடைந்தாள். இது என்ன மாயை, எனக்குத் தான் புத்தி குழம்பி விட்டதா என்று நினைத்தாள். இவன் என் குழந்தை, பிறவி யோகியா? பலவும் எண்ணி க்ஷண நேரத்துக்குள், மனதில் பல எண்ணங்கள் தோன்றவும், விடுவித்துக் கொண்டு, கண் எதிரில் இருப்பவன் நாம் வணங்கும் சர்வேவரனே தானோ, அப்படியெனில் அவனை வணங்குகிறேன். இந்த என் மகன், என் கணவன், வ்ரஜ தேச தலைவன், இந்த செல்வங்கள், உடனுள்ள கோப, கோபிகள், இந்த பசுக்களே தனம் என இருக்கும் நாங்கள் அனைவருமே மாயையா, என் புத்தி தான் கெட்டு விட்டதா? பகவானே நீயே கதி. இவ்வாறு யோசித்து தன்னை உணர்ந்த அந்த எளிய கோபி ஸ்த்ரீயை, வைஷ்ணவி மாயையால் ஒரு நிமிஷம் ஆட்டி வைத்த பின், புத்ரனாக பாசத்துடன் அவள் திகைப்பை கலைத்தான். தன் நிலை திரும்பிய யசோதா, கண் முன் கண்டதை மறந்து மகனை பாசத்துடன் அணைத்தபடி, முன் போலவே வீட்டினுள் சென்றாள். அவள் பாக்கியம் செய்தவள். வேதங்களும், உபனிஷதங்களும், சாங்க்ய, யோக என்று பலவிதமான சத்வ குணமான மார்கங்களும் போதிக்கும் பரம் பொருள், அவர்கள் ஸ்ரீ ஹரி என்று அவன் மாகாத்ம்யத்தை பாடியும் காண முடியாதவனை வெகு சாமான்யமாக தன் மகனாக அன்பு செலுத்தி கண்டு கொண்ட யசோதாவின் பாக்கியமே பாக்கியம்.
ராஜா பரீக்ஷித் வினவினான்: அந்த சமயம் நந்தன் அங்கு இல்லையா? இவளுக்கு கிடைத்த அரும் பெரும் காட்சி அவனுக்கு கிடைக்கவில்லையா? யசோதை மகா பாகா – பெரும் பாக்கியம் பெற்றவள். அவளிடம் ஸ்ரீ ஹரியே மடியில் தவழ்ந்து, அவள் ஸ்தன்ய பாலைக் குடித்து வளர்ந்தான். தாய் தந்தையரை அவர்கள் ஸ்ரீ க்ருஷ்ணனை மகனாக பெற்ற வைபவத்தை கவிகள் இன்றளவும் பாடுகிறார்கள். உலகில் கெடுதலே இல்லாமல் செய்யக் கூடிய நிகழ்வுகளை மட்டுமின்றி, அந்த குழந்தையின் நன்மையை மட்டுமே நினைத்து வாழ்ந்த நந்தனையும் யசோதாவையும் வாழ்த்துகிறார்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: வசுக்களில் முக்யமானவன் த்ரோணன் என்பவன், தரா धरा- என்ற தன் மனைவியுடன், ப்ரும்மாவிடம் அவர் கட்டளைகளை நிறைவேற்றும் பணிகளைச் செய்பவர்களாக இருந்தனர். ஒரு சமயம் ப்ரும்மா அவர்களிடம் விஸ்வேஸ்வரனான ஸ்ரீ ஹரி பூமியில் அவதரிக்கப் போகிறார். பூமியில் பக்தி மார்கத்தை பரப்ப வேண்டும். தற் சமயம் மிகவும் அமைதியின்றி தவிக்கிறது. நீங்கள் இருவரும் வ்ரஜ தேசத்தில் பிறந்து காத்திருங்கள் என்றார். அவர்களும் அவ்வாறே த்ரோணர் நந்தனாகவும் தரா யசோதையாகவும் பிறந்தனர். பக்தியே தம்பதிகளுக்கு மகளாக பிறந்தது. தம்பதிகளுக்கு கோப கோபிகளிடம் மதிப்பைக் கூட்டியது. ஸ்ரீ க்ருஷ்ணரும், ப்ரும்மாவின் ஆதேசம்- கட்டளையை சத்யமாக்க, வ்ரஜ தேசத்தில் ராமனுடன் வசிக்க வந்தார். அதுவும் அவனுடைய லீலையே.
இதுவரை ஸ்ரீமத் பாகவத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், எட்டாவது அத்யாயம். ஸ்லோகங்கள்-52
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய
அத்யாயம்-9
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஒரு சமயம் வீட்டுப் பணியாளர்கள் வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்ததால், யசோதா தானே தயிரைக் கடைய அமர்ந்தாள். தனக்குதெரிந்த பாடல்களை பாடிக் கொண்டே கடைந்து கொண்டிருந்தாள். நினைவுக்கு வந்ததைப் பாடுவாள். தாலாட்டோ, பக்தி பாடலோ எதுவானாலும்.
நல்ல ஆடை, இடுப்பில் இருந்த ஆபரணங்கள், புத்ரனைத் நினைத்தாலே முலைப் பால் தானே வழியலாயிற்று. பழக்கமில்லாததால், கயிற்றை முன்னும் பின்னுமாக இழுத்து கடைவதே பெரிய காரியமாக இருக்க, முகம் வாடி, மத்து பாத்திரத்திலிருந்து நகருவதை சரி செய்து கொண்டே கடைந்தாள். தனக்கு பசி நேரம் வந்ததும், இன்னமும் கடைந்து கொண்டிருந்த தாயாரின் அருகில் வந்த க்ருஷ்ணன், அவள் கவனத்தை தன் பால் ஈர்க்கும் பொருட்டு, கடைவதைத் தடுக்க மத்தை கைகளால் பிடித்தான். அவனை இழுத்து மடியில் இருத்தி பாலூட்டிக் கொண்டே தயிர் கடைவதைத் தொடர்ந்த யசோதா, அவன் முகத்தைப் பார்த்து பேசிக் கொண்டும் இருந்தாள். திடுமென நினைவு வந்தது பால் அடுப்பில் பொங்கி வழியும் வாசனையும் வந்தது. அவனை விலக்கி விட்டு உள்ளே சென்றாள். முலைப்பால் இன்னமும் வழிந்து கொண்டிருக்க, திருப்தியின்றி அவன் அழுவதையும் பொருட்படுத்தவில்லை. அதில் கோபம் கொண்டு, உதடு துடிக்க, மத்தை எடுத்து தயிர் இருந்த பானையை உடைத்தான். உள்ளூற சிரித்தாலும், பலமாக கண்ணீர் பெருக அழுது கொண்டே அவளிடம் சென்றான். பொங்கிய பாலை கவனித்து இறக்கி விட்டு அடுத்து சுத்தம் செய்வதையும் முடித்துக் கொண்டு வெளியில் வந்தாள். தயிர் பானை உடைந்து பெருகி ஓடிய வெண்ணெயுடன் கூடிய தயிர் பூமியை நனைத்துக் கொண்டிருந்ததைக் கண்டதும் திகைத்தாள். தன் மகனின் வேலை தான் என்று புரிந்து கொண்டவள் அவனைத் தேடினாள். சற்று தூரத்தில், உரல் மேல் அமர்ந்திருந்தவனைக் கண்டாள். அதனுள் வெண்ணெயை வைத்துக் கொண்டு முகத்திலும் முழங்கைகளிலும் வழிய வெண்ணெயை வாயில் திணித்துக் கொண்டிருந்தவனைக் கண்டாள். அவனறியாமல் பின் பக்கமாகச் சென்று கட்டி பிடித்தாள். அவளைக் கண்டதும் மத்தை கீழே போட்டுவிட்டு ஓடிய மகனை துரத்தி பிடித்தாள். பயந்தவன் போல் விழித்த சிறுவனை தொடர்ந்தாள். யோகிகளுக்கு கூட கிடைக்காத பரம் பொருளை, அந்த எளிய இடையர் குலப் பெண் பின் தொடர்ந்து பிடிக்க முயன்றாள். அவன் ஓட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் களைத்து, கேசம் அவிழ்ந்து தொங்க தலையில் சூடியிருந்த மலர்கள் விழ, ஓடி பிடித்து விட்டாள். உடனே தான் செய்த தவறு என்பதை அறிந்திருந்த பாலகன் ஓவென்று அழலானான். பயத்துடன் தாயை நிமிர்ந்து பார்த்தான். கைகளைப் பிடித்து தர தரவெண்று இழுத்தபடி வீடு வரை வந்தவள், கையில் இருந்த கயிற்றால் கட்ட முயன்றாள். வேறு வகையில், அடிக்கவோ, திட்டவோ மனமின்றி, மகன் பயப்படுகிறான் என்று நினத்தாள் போலும், கையிலிருந்த தடியை கீழே விசி விட்டு கயிற்றை எடுத்துக் கொண்டு கட்ட வந்தாள்- எவனுக்கு உள்ளும் வெளியும் ஒன்றே, முன் பின் என்ற வித்யாசமும் இல்லையோ, முழு உலகமும் வ்யாபித்து இருப்பவன் எவனோ, அவனை தன் மகன் என்று மட்டுமே அறிந்தவள், அதோக்ஷஜன் என்றோ, மனித உருவில் வந்த பகவான் ஸ்ரீ ஹரியே என்றும் அறியாதவள், தயிர் பால் நஷ்டமானதை மிகப் பெரிதாக எண்ணும் கோகுலத்து பெண், ஏதோ சாதாரண குழந்தையாக கயிற்றினால் அந்த உரலுடன் சேர்த்து கட்டினாள். அவள் கட்ட கட்ட இரண்டு அங்குலம் கயிற்றின் நீளம் குறைவாகவே இருக்க, மற்றொன்றை சேர்த்து கட்டினாள். அதுவும் போதாமல் போக, மற்றொன்று கொண்டு வந்தாள். அதன் பின்னும் இரண்டு அங்குலம் குறைவாகவே இருந்தது. கொண்டு வந்த கயிறுகள் அனைத்தும் போதாமல் போக, கூடியிருந்த பெண்கள் சிரிக்க தானும் சிரித்தபடி, ஆச்சர்யமும் அடைந்தாள். தன் தாய், வியர்த்து விறுவிறுக்க, சூடியிருந்த மலர் மாலைகள் கலைந்து தொங்க, வருந்துவதைக் கண்டு குழந்தை கண்ணன் தானே கருணையுடன் கட்டுப் பட்டான். அங்க ராஜனே! இந்த சம்பவம் மூலம் கண்ணன் தன்னுடைய சிறந்த குணமான பக்த பராதீனன் என்பதை காட்டியிருக்கிறான். தன் வசமேயிருந்த இச்செயல் தானே ஈஸ்வரனாக இருந்து விளையாடினான்.
இப்படி ஒரு அருகாமையும், ஸ்ரீ ஹரியின் கருணை கடாக்ஷமும், விரிஞ்சிக்கு கிடைத்ததில்லை. பவன் எனும் மகேஸ்வரனுக்கு கிடைத்ததில்லை. மார்பிலேயே உறையும் ஸ்ரீ தேவிக்கு கிடைத்ததில்லை. அப்படிப்பட்ட மிகப் பெரிய அருளை அந்த கோப-இடையர் குல பெண் அடைந்தாள். என்னே அவள் பாக்யம். விமுக்தியைத் தரும் அருட்பார்வை கிடைக்கப் பெற்றாள்.
என்னை அடைவது எளிதல்ல. மனிதர்கள் அதற்கான சாதனைகள் செய்வர். இடையர் குல பெண், அவள் மகனாக வந்த இந்த சமயம், பெரும் ஞானிகளுக்கும், ஆத்மாவை அறிந்த யோகிகளுக்கும், சுலபமாக கிடைக்காத என்னை, உள்ளன்பினால் மட்டுமே உணர்ந்து கொள்வார்கள் என் பக்தர்கள். அவர்களைப் போலவே என் அருளை தாயன்பினால் அடைந்தாள்.
யசோதை வீட்டு வேலைகளைக் கவனிக்க சென்ற பின், ஸ்ரீ க்ருஷ்ணன், இரண்டு அர்ஜுன மரங்களைக் கண்டான். முன்பு அவர்கள் குபேரனின் புதல்வர்களாக இருந்தவர்கள். நாரதரின் சாபத்தால் மரங்களானவர்கள். நல கூபர, மணீக்ரீவன் என்று பெயர் பெற்றவர்கள். செல்வந்தர்கள்.
இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், கோபி ப்ரசாதம் என்ற ஒன்பதாவது அத்யாயம். ஸ்லோகங்கள்-23
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய
அத்யாயம்-10
அரசன் பரீக்ஷித் கேட்டான்: பகவன்! ஏன் அவர்கள் சபிக்கப் பட்டனர். அது பற்றிச் சொல்லுங்கள். அப்படி என்ன தவறு செய்தார்கள், தேவ ரிஷி நாரதர் கோபிக்கும் படி? அந்த கதையைச் சொல்லுங்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: பகவான் ருத்ரனுடைய அனுக்கச் சேவகர்களாக இருந்த தனதன்-குபேரனுடைய புதல்வர்கள் செல்வத்தால் கர்வம் அடைந்தனர். கைலாச உபவனம் மிக அழகானது. மந்தாகினீ நதி மிகவும் ப்ரசித்தமானது. இவர்கள் இருவரும் வருணி என்ற மதுவைக் குடித்து விட்டு, கண்கள் அந்த மதுவினால் சிவந்திருக்க, பெண்கள் கூட்டத்துடன், வனத்தில் சுற்றினர். அந்த காடே பூத்து குலுங்கியது. கங்கையில் இறங்கி அதிலும் அம்போஜம்- தாமரை மலர்கள் பூத்திருந்தன, நீரினுள் யானைகள் போல மதாந்தமாக விளையாடி களித்தனர். கௌரவனே! யதேச்சையாக தேவ ரிஷி நாரதர் அங்கு சென்றார். பெண்கள் அவசரம் அவசரமாக ஆடைகளை அணிந்து கொண்டு விட்டனர். இந்த இருவரும் மட்டும் அலட்சியமாக இருந்தனர். நாரதர் பரிதாபப் பட்டார். தேவ குமார்கள், அதீதமான செல்வத்தால் கர்வம் தலைக்கேற, மதாந்தமாக, மதுவைக் குடித்து புத்தி மழுங்கி இருக்கின்றனர். அவர்களுக்கு அனுக்ரஹம் செய்யவே சாபம் கொடுத்தார். நாரதர் சொன்னார்’ விஷயங்களை அனுபவிக்கும் மனிதர்களின் புத்தியை மழுங்கச் செய்வது நல்ல குடி பிறப்போ, கல்வியோ அல்ல. அளவுக்கு மீறிய தனமே அதிகமாக புத்தியை கெடுத்து, நியதியை மீறி, தவறான செயல்களைச் செய்ய வழி வகுக்கிறது. ரஜோ குணமான காம க்ரோதாதிகளை விட செல்வத்தால் வரும் மதம் கெடுதலை விளவிக்கிறது. எதையெல்லாம் தவிர்க்க வேண்டுமோ, அவைகளை செல்வம் கொண்டு சேர்க்கிறது. மது பானம், கெட்ட சகவாசம், ஸூதாட்டம், விதிகளை மீறல் இவைகளுக்கு தயாராக்குகிறது. , அதனால் தான் தயை யின்றி பசுக்களை கொல்கிறார்கள். இவர்கள் தங்கள் உடல் முதுமை அடையாது, மரணம் சம்பவிக்காது என்று நம்புகிறார்கள். யாராலும் அழிக்க முடியாது என்ற கர்வம் தலைக்கேறுகிறது. தேவ, அன்ன தாத்தா என்று பணியாளர்களும் வறியவர்களும் அழைப்பதை உண்மையாக நம்புகிறார்கள். யார் அன்ன தாதா, எவராயினும் ஒரு நாள், மண்ணில் புதைந்தோ, நெருப்பில் எரிந்தோ அழியும் உடலைத் தான் கொண்டுள்ளனர். மனிதன் தன் தாய், தந்தை என்றோ, ஒருவன் பலசாலி என்றோ, யாகம் செய்தவரோ, மதிப்புக்குரிய இந்த உயிர்களுக்கும் சாதாரண பிராணிகள் நாய் போன்றவைகளுக்கும் அந்திம காலம் ஒன்றே
அறிவில்லாதவன் செல்வ மதத்தால், ஏழைகளை மட்டமாக நினைக்கிறான். தன்னளவு செல்வம் இல்லாதவன் தனக்கு சேவை செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறான். அவனுக்கு முள் குத்தினாலோ, அடி பட்டாலோ, அவனுக்கு வலிக்குமே என்று எண்ணுவதில்லை. தரித்ரனுக்கு தான் என்ற கர்வம் கொள்ள வழியில்லை. ஒரு விதத்தில் இது அவர்களுக்கு தவம் செய்து கிடைக்கும் சமபுத்தியை கொடுத்து விடுகிறது. நித்யம் ஒரு வேளை உணவே கிடைப்பது சிரமமாக இருக்கும் பொழுது மற்ற இந்திரியங்கள் துள்ளுவதில்லை. அதனால் ஜீவ ஹிம்சை செய்வது என்பதும் பெருமளவில் குறைகிறது. சாதுக்கள் மனம் இவர்களை மட்டமாகவோ, தாழ்வாகவோ நினைப்பதில்லை. தனம் உள்ள காரணத்தால் மரக் கட்டை போல பிறர் துன்பம் அறியாமல் அசத்தாக இருப்பவர்கள் இந்த குபேரனின் புத்திரர்கள். இவர்களின் கர்வத்தை அடக்குகிறேன். வாருணி மதுவை குடித்து, மதாந்தமாக அதுவே வாழ்க்கை என்று இருப்பவர்களைத் திருத்த வேண்டும். லோக பாலனின் புத்திரர்கள், இப்படி மதம் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருந்தால், அவர்கள் தண்டனை பெற்றால் தான் சமுகத்தில் மற்றவர்களுக்கும் கடமையுணர்ச்சி வரும். அதனால் இவர்களை மரமாக தாவரமாக இருக்கச் செய்கிறேன். நினைவு இருக்கும். என் அருளால் உள்ளுணர்வு இருக்கும். வாசுதேவனின் சாந்நித்யம்- அருகாமையில் இருந்து சாப விமோசனம் பெற்று பழையபடி சுவர்கம் அடையட்டும். அதற்குள் திருந்தி பகவானிடம் பக்தியும் வந்து விடும்.
இவ்வாறு சாபமிட்டவர் நேராக நாரயணாஸ்ரமம் சென்றார். அவரிடம் சொல்லி அவ்விருவரையும் ஜோடி அர்ஜுன மரங்களாக ஆக்க வேண்டினார். பகவானுக்கு பிரியமான தேவ ரிஷி நாரதர். அவர் சொல்லைக் காக்க வேண்டும் என்று நினைத்து பகவான், ஸ்ரீ ஹரி, இந்த அவதாரத்தில், குழந்தை க்ருஷ்ணனாக, மெள்ள அர்ஜுன மரங்கள் இரட்டையாக வளர்ந்திருந்த இடம் சென்றார். அருகில் சென்று பார்த்தவர் தேவ ரிஷி சொன்னதால் மரங்களாக நிற்கும் இவர்களுக்கு விமோசனம் தர இதுவே சமயம் என்று எண்ணினாரோ, அந்த மரங்களுக்கு இடையில் உரலையும் இழுத்துக் கொண்டு நுழைந்தார். மரங்களுக்கு இடைப்பட்ட குறுகலான இடத்தில் நுழையாத உரலை கீழே தள்ளி குறுக்காக வைத்து இழுத்தார். அந்த பெரிய உரல் அவர் ஆணைக்கு கட்டுபட்டதோ எனும்படி, குறுக்காக விழுந்தது.
மரத்தின் இடுக்கில் நுழைந்து மறுபக்கம் சென்ற தாமோதரன்- இடுப்பில் கயிற்றால் கட்டப் பட்டவன், தாம – கயிறு உதரம்- வயிறு- வலுவாக அந்த உரலை தன் பக்கம் இழுக்க, கால்களால் பற்றிக் கொண்டு கைகளால் பலம் கொண்ட மட்டும் இழுத்தான். தடாலேன்ற சத்தம் அந்த இடத்தையே அதிர வைத்தது. அந்த மரங்கள் பெரிய, கிளைகள், சிறிய துளிர்த்திருந்த நுனிகளோடு, கை கால்களை பரப்பிக் கொண்டு ஏதோ ஒரு அசுரன் விழுந்தது போல விழுந்து கிடந்தது. அந்த லக்ஷ்மீகரமான பாதங்கள் படவும் இரு மரங்களும் உயிர் பெற்றன. இருவரும் சித்தர்கள் , வேதங்கள் அறிந்த ரிஷிகள் போன்றவர்களாக வெளி வந்தனர்.
இருவரும் துதி செய்தனர்: க்ருஷ்ண, க்ருஷ்ண மகாயோகின்! நீயே முதல் முதலான பரம புருஷன். வெளிப்படையாக தெரிந்தும் தெரியாமலும் உள்ள அனைத்தும் உள்ள இந்த உலகமே உன் ரூபம் தான் என்று விஷயம் அறிந்தவர்கள் சொல்வார்கள். நீ ஒருவனே, சர்வ பூதங்களுக்கும், தேக, ஆத்ம இந்திரியங்களுக்கும் ஈஸ்வரன். காலனும் நீயே, அழிவில்லாத ஈஸ்வரன், எங்கும் பரவியுள்ள மகாவிஷ்ணு. மிகப் பெரியதாக ப்ரக்ருதியாகவும் இருப்பாய், ஸூக்ஷ்மமானதும் நீயே. . தலைவனானவனும் நீயே, அனைத்து க்ஷேத்ரங்களுக்கும், அதன் வளர்ச்சி, மாறுதல்களுக்கு காரணமாக இருப்பாய். பிடிக்க கூடியவைகளில் நீ அக்ராஹ்யன்- பிடிக்கவே முடியாதவன். சாதாரண இயல்பான குணங்கள் மட்டும் உள்ளவர்களால், உன்னை எப்படி அறிய முடியும். முன் கூட்டியே இது இப்படித்தான் என்று வரையறுத்து வைத்தவனும் நீயே தானே. அப்படிப்பட்ட உனக்கு நமஸ்காரம். பகவதே வாசுதேவாய வேதஸே- தனக்கு மட்டுமே தெரியும் படி வைத்துக் கொண்டு மற்றவர்கள் அறிய முடியாத மகிமைகள் உள்ள பர ப்ரும்மமே, உனக்கு நமஸ்காரம்.
நீ பல அவதாரங்கள் எடுத்துள்ளாய். உனக்கென்று ஒரு சரீரம் இல்லாதவன் போல, அந்தந்த சரீரத்தின் குண தோஷங்களை ஏற்றுக் கொள்கிறாய். வீர்யமோ, தேக அமைப்போ, பொருத்தமே இல்லாத பல ரூபங்கள். பகவானே! சர்வ லோகத்தின் இருப்பிற்கும், மேன்மை பெறவும், அம்ச பாகமாக அவதாரம் செய்வாய் என்று அறிவோம். தற்சமயம் இந்த அவதாரம். பரம கல்யாணமானவனே நமஸ்காரம். பரம மங்களமானவனே நமஸ்காரம். வாசுதேவாய சாந்தாய, யது பதிக்கு நமஸ்காரம்.
எங்களுக்கு விடை கொடுங்கள். உங்கள் அனுசர கிங்கரர்களாக இருந்தவர்கள் நாங்கள் இருவரும். பகவானின் தர்சனம் ரிஷியின் அனுக்ரஹத்தால் கிடைத்தது. எங்கள் வாக்கு உங்கள் குணங்களைப் பாடவே என்று இருக்கட்டும். காதுகள் உங்கள் கதைகளை கேட்கவே, கைகள் உங்களுக்கு பணிவிடை செய்யவே, மனம் உங்களையே நினைத்து உங்களுடையதாகவே இருக்கட்டும். எங்கள் கண்கள் நல்லவர்களைக் காணவே, எங்கள் சரீரமும் உங்கள் வசமே ஆகட்டும்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: பகவான் சொன்னார். எனக்கு முன்பே தெரியும் தேவ ரிஷி நாரதர் சொன்னார். அவர் கருணை மிக்கவர். மிக அளவுக்கு மீறிய செல்வத்தினால் கர்வம் கொண்டவர்களை நல் வார்த்தை சொல்லியே குணப்படுத்துபவர் அவர். அவருடைய அனுக்ரஹம் தான் நீங்கள் திருந்தியதும். சாதுக்கள், சம சித்தம் உடைய பெரியவர்கள், பகவானை நம்பியவர்கள், இவர்கள் தரிசனத்தால், பந்தம் விடுபடும். இருட்டில் எதையும் காண முடியாத மனிதர்களின் கண்களுக்கு பொருட்களைத் ஸூரிய ஒளி தெளிவாக தெரிய வைப்பது போல. இப்பொழுது நீங்கள் இருவரும் கிளம்புங்கள். நளகூபர, மணிக்ரீவ, பழையபடி என் பரிவாரங்களுடன், என் நினைவோடு, நற்குணம் பெற்றவர்களாக, உங்கள் விருப்பப்படி வேண்டியதை அடைவீர்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு அவ்விருவரும் பகவானின் அனுமதி பெற்று அவரை ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, திரும்பத் திரும்ப வணங்கி, இன்னமும் உரலில் கட்டு பட்டிருந்தவரிடம் விடை பெற்று வட திசை நோக்கிச் சென்றனர்.
இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியின் நாரத சாபம் என்ற பத்தாவது அத்யாயம். ஸ்லோகங்கள்- 43
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய
அத்யாயம்-11
நந்தனும் மற்ற கோபர்களும், இந்த மரங்கள் விழுந்த சத்தத்தைக் கேட்டனர். ஏதோ அசம்பாவிதம் என்று புரிந்து கொண்டவர்களாக அங்கு ஓடி வந்து கூடினர். தரையில் விழுந்து கிடந்த இரட்டை அர்ஜுன மரங்கள் எந்த காரணமும் இன்றி எப்படி விழும் என்று ப்ரமித்தனர். இடையில் இருந்த உரலையும், அதில் கட்டப் பட்டிருந்த பாலகனையும் கண்டனர். இது என்ன ஆச்சர்யம், யார் செய்திருக்க முடியும் என்று பயந்தனர். சிறுவர்கள் அங்கு வந்து இவன் தான் என்று பாலகனான க்ருஷ்ணனைக் காட்டினர். இவன் தான் உரலை கவிழ்த்து குறுக்காக மரத்தினிடையில் கொண்டு சென்றான் என்றனர். பெரியவர்கள் நம்பவில்லை. அது எப்படி இவனால் செய்திருக்க முடியும், பெரிய உரல் பெரியவர்களுக்கே இயலாது என்றனர். சிறுவன் இவன் தள்ளி பெரிய மரங்கள் விழவாவது என்று சந்தேகப் பட்டனர். உரலுடன் கயிற்றால் கட்டப் பட்டிருந்த மகனைப் பார்த்து சிரித்துக் கொண்டே நந்தன் கட்டுகளை அவிழ்த்து அவனைத் தூக்கிக் கொண்டான்.
கோபிகா பெண்களுடன் சில சமயம் சிறுவனாக விளையாடினான். சில சமயம் அவர்களுடன் நடமாடினான்.சில சமயம் அனைவரும் சேர்ந்து பாடினர். சில சமயம் விளையாட்டாக ஒருவரை ஒருவர் முதுகில் சுமந்து செல்வர். கைகளால் தள்ளி தங்கள் பலத்தைக் காட்டும் விதமாக மல்யுத்தம் செய்வர். . கூட்டமாக நின்று மற்ற சிறுவர்களும் சில சமயம் பெரியவர்களும் கூட ரசிப்பர். பாலனாக அவன் செய்தது எதுவானாலும் மற்றவர்களுக்கு பிடித்தமாகவே இருந்தது.
ஒரு சமயம் பழம் வாங்கலையோ என்ற குரல் கேட்டு வெளியில் வந்த அச்யுதன், பழ வியாபாரியைக் கண்டான். தானியத்தைக் கொடுத்து பழங்களை வாங்கிக் கொண்டான். சர்வபலப்ரதன் எல்லா விதமான பலன்களையும் தருபவன் என்று புகழ் பெற்ற மாதவன் சாதாரண பழ வியாபாரியிடம் பழம் வாங்கிக் கொண்டால் அதன் பலன் இல்லாமல் போகுமா. அந்த பெண் வியாபாரி, சின்னம் சிறு கையில் கொண்டு வந்த தான்யத்தை ஏற்றுக் கொண்டு, அவன் கைகளில் பழங்களை நிரப்பினாள். பதிலுக்கு அவள் பழக் கூடையை ரத்னங்களால் நிரப்பி விட்டான்.
அர்ஜுன மரங்கள் விழுந்த சம்பவத்தை சாதாரணமாக எண்ணி ஒதுக்க முடியவில்லை. காரணமின்றி மனதில் சங்கடம் தோன்றவும், யசோதா யமுனை தீரத்தில் விளையாடிக் கொண்டிருந்த ராமனையும் சகாக்களையும் அழைத்துவர ரோஹிணியை அனுப்பினாள். அவள் அழைத்தும் அவர்கள் வராமல் விளையாட்டு மும்முரத்தில் வரவில்லை. சற்று பொறுத்து யசோதா தானே சென்றாள். அனைவருமாக விளையாடிக் கொண்டு இருந்தனர். ராமனையும் க்ருஷ்ணனையும் பலமுறை அழைத்து பார்த்தாள். க்ருஷ்ணா, வா, பசிக்குமே, வா வந்து பாலைக் குடி, ஹே!ராமா, வா, மகனே வா, உன் இளையவனையும் கூட்டிக் கொண்டு வா, வா கண்ணா, குல நந்தனா, வா பரிந்து அழைத்தாள். காலையில் சாப்பிட்டது, பசிக்கும், இருவரும் வாருங்கள். அப்பா உங்களுக்காக எதிர் பார்த்து காத்திருக்கிறார். வ்ரஜாதிபன், அவருக்கு வேறு வேலைகள் இருக்கும், வாருங்கள், பாலகர்களே, உங்களின் வரவை எதிர் பார்த்திருக்கும் வீட்டுப் பெண்கள், பெரியவர்கள் அனைவருக்கும் கவலையாக இருக்கிறது. வந்து அவர்களுக்கு மன அமைதியை கொடுங்கள்.
பையன்களே, உடல் பூரா தூசி. ஆடையெல்லாம் மண் ஒட்டி கிடக்கிறது. வந்து குளித்து சுத்தமாகி, உன் ஜன்ம நக்ஷத்திரம் இன்று,. வா, அந்தணர்களுக்கு பசுக்களை தானம் செய். இதோ பார், உன் விளையாட்டுத் தோழர்கள் அனைவரும் அவரவர் தாய் மார்களுடன் வீட்டிற்கு சென்று குளித்து நல்ல ஆடை அணிந்து அலங்காரம் செய்து கொண்டு தாய் மார் கொடுத்த உணவையும் பக்ஷணங்களையும் சாப்பிடுகிறார்கள். நீங்களும் அதே போல வந்து குளித்து ஆகாரத்தை சாப்பிடுங்கள். அவர்களைப் போலவே ஆடை அலங்காரங்களுடன் வந்து தொடர்ந்து விளையாடலாம். இவ்வாறு பலவிதமாக சொல்லி அவர்களை அழைத்துக் கொண்டு யசோதா வீடு வந்தாள். பாலகர்கள் இருவரையும் கைகளைப் பிடித்து தங்கள் குழந்தைகள் என்ற பாசம் மட்டுமாக அவன் யார் என்றோ பகவான் அசேஷ சேகரன் என்றோ நினைக்கவில்லை.
அந்த குலத்தில் மூத்தவர்கள் இது வரை அமைதியாக இருந்த வ்ரஜ தேசம், இதில் அடுத்தடுத்து வந்த ஆபத்துகள், இவைகளை எண்ணி வ்ரஜ காரியங்களை விவாதிக்க கூடியிருந்த கூட்டத்தில் தங்கள் கவலையைத் தெரிவித்தனர். உப நந்தன் என்ற வயதானவர், பழுத்த அனுபவசாலி, அறிவுடையர், தேச கால அர்த்தம் என்ற விவரங்களையும், உயர்ந்த தத்துவங்களையும் அறிந்தவர் ராம, க்ருஷ்ணரிடம் மிகுந்த அன்புடையவர், பேசினார்.
கோகுலத்தின் நன்மைக்காக நாம் இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும். பலவிதமான ஆபத்துகள் நம் குழந்தைகளை நாசம் செய்யவே வந்தது போல பார்த்து விட்டோம். எப்படியோ தப்பி பிழைத்தோம். அந்த ராக்ஷஸி, பிறந்த சிசுக்களை கொல்வதே அவள் விளையாட்டாம். பகவானுடைய கருணையால் அந்த சக்கரம் குழந்தை மேல் படவில்லை. பயங்கர சுழல் காற்று வீசியதே, தைத்யன் வானத்துக்கே தூக்கிச் சென்று விட்டான். அங்கிருந்து தானும் சேர்ந்து விழுந்தான். கல் மேல் விழுந்த சமயம் நல்ல வேளையாக தேவர்கள், மற்ற தெய்வங்கள் தான் காப்பாற்றின. மரங்கள் எப்படி விழுந்தன. சிறுவன் உரலை இழுந்துக் கொண்டு போய் இடித்ததால் மட்டுமா விழுந்திருக்கும். இதுவும் பகவான் அச்யுதன் அருள் தான். நம் மகன் காப்பாற்றப் பட்டான். இதை விட பெரிய ஆபத்து வருமுன், இந்த இடத்தை விட்டு அனைவருமாக வேறு இடம் செல்வோம். அருகில் வ்ருந்தாவனம் என்ற காடு இருக்கிறது. நம் பசுக்களுக்கு மேய்ச்சல் நிலமும், அடர்ந்த காடும், நம் கோகுலத்து பெண்கள், பெரியவர்கள், சிறுவர்கள் அனைவருக்கும் பிடிக்கும் மலைப் ப்ரதேசம். ஒரு குன்று உள்ளது. மரங்களும், செடி கொடிகளும் நிரம்பி இருக்கும் இடம். இன்றைக்கே கிளம்புவோம். ஏற்பாடுகளைச் செய்யுங்கள். வண்டிகளை தயார் செய்யுங்கள். கோதனங்கள் முன்னால் போகட்டும். நாம் பின் தொடர்வோம், உங்களுக்கு சம்மதமானால் உடனே ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.
இதைக் கேட்டு அனைவரும் ஏக மனதாக சாது சாது என்று சொல்லி தங்கள் தங்கள் குடும்பங்களை, வீட்டு சாமான்களை சேகரித்து வண்டிகளில் ஏற்றுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டனர்.
வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் இவர்களை அவசியமான உபகரணங்களோடு, வண்டிகளில் ஏற்றி விட்டு கோபாலர்கள் கையில் ஆயுதங்கள், கம்புகளுடன் காவலாக உடன் நடந்தனர். முன்னால் பசுக்களும் கன்றுகளும் மற்ற வளர்ப்பு பிராணிகளும் சென்றன. கொம்புள்ளவைகளை அடக்கி நடத்திச் செல்வோரும், புரோஹிதர்களும் சென்றனர். துர்ய கோஷம் – மங்கள வாத்யங்கள் முன்னால் செல்ல வண்டிகள் பின்னால் சென்றன. கோபிகள் பாடிக் கொண்டேவந்தனர். வளமான குரல் உள்ளவர்கள் க்ருஷ்ண லீலையைப் பாடினர். க்ருஷ்ணனும் ராமனும் யசோதா மடியில் அமர்ந்த படி சுவாரஸ்யமான கதைகளை கேட்டனர்.
ப்ருந்தாவனம் வந்தது. அனைவரும் ஊரைச் சுற்றிப் பார்த்தனர். மகிழ்ச்சியுடன் அந்த இடத்தில் வசிக்க தீர்மானித்தனர். எல்ல வசதிகளும் உள்ள இடம் என்றனர். வண்டிகளை பாதி நிலா வடிவில் நிறுத்தி வைத்து விட்டு, வீடுகளைக் கட்ட முனைந்தனர். சிறுவர்கள் உத்சாகமாக பங்கேற்றனர். ப்ருந்தாவனம், கோவர்தனம், யமுனைக் கரை என்று எல்லா இடங்களையும் பார்த்து மிகவும் மகிழ்ந்தனர். ராமனும் க்ருஷ்ணனும் சிறுவர்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். விளையாட்டாக பேசியும், ஒருவருக்கொருவர் கல கலவென்று பேசிக்கொண்டும் ஊரை நிர்மாணிக்க உதவிகள் செய்தனர். சிலர் வாத்யங்களை வாசித்தனர், க்ருஷ்ணன் வேணுவை வாசித்தான். சிலர் நடனமாடினர். கால்களில் கட்டிய கிங்கிணீ மணிகள் சீராக ஓசையிட நடந்தனர். மண்ணில் பசுக்களையும் ருஷபங்களையும் உண்டாக்கினர். சில சமயம் சண்டையிட்டு கட்டிப் புரண்ட சிறுவர்களை மற்றவர்கள் சமாதானப்படுத்தினர். ஒவ்வொன்றும் அவர்களுக்கு புதிதாக வினோதமாகவே இருந்தன. பறக்கும் பூச்சிகளையும், ஓடும் சிறு ஜந்துக்களையும் பின் தொடர்ந்து விளையாடினர்.
ஒரு சமயம் இவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு தைத்யன் ராம க்ருஷ்ணர்களை கண்டு கொண்டான். தானும் ஒரு கன்று ரூபம் எடுத்துக் கொண்டு பசுக்களின் கூட்டத்தின் ஊடே சென்றான். அதையறிந்த க்ருஷ்ணன் பலராமனுக்கு மட்டும் அதைக் காட்டினான். மற்றவர்களுடன், நடந்து கொண்டே அந்த கன்றை பின் கால்களைப் பிடித்து, வாலையும் சேர்த்து கட்டி வீசினான். காராம் பசுக்களின் நடுவில் அது பொத்தென்று விழுந்த சத்தம் கேட்டு, மற்ற சிறுவர்கள் ஓடி வந்து பார்த்து ஆச்சர்யம் அடைந்தனர். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். அதன் பின் எதுவும் நடக்காதது போல பசுக்களையும் கன்றுகளையும் மேய்க்கும் இடையர்களாக வளைய வந்தனர். சர்வ லோக பாலகர்கள் காலையிலிருந்து மாலை வரை பசுக்களை மேய்ப்பதே தொழிலாக சுற்றி வந்து ஊர் ஜனங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தனர்.
ஒவ்வொரு குடும்பத்தின் பசுக்களையும் அந்தந்த வீட்டுச் சிறுவர்கள் பார்த்துக் கொண்டனர். ஒரு நாள் தாகம் என்று அந்த குளத்தில் நீரை பருக இறங்கினர். ஒரு கொக்கு அங்கு மிகப் பெரியதாக நிற்க கண்டனர். மலையின் சிகரம் போல அதன் நீண்ட கழுத்தும், அசாதாரணமான உருவமும் பயத்தை விளைவித்தது. . அது பகன் என்ற மகாசுரன் என்று தெரிந்து கொண்டார்கள். திடுமென வேகமாக வந்து க்ருஷ்ணனை பிடித்துக் கொண்டது. பலராமனும் மற்ற சிறுவர்களும் செய்வதறியாது திகைத்தனர். ப்ராணன் இல்லாத உடல் அவயவங்கள் போல நின்றனர்.
ஜகத்குரு, உலகையே படைத்தவன், கோபால புத்திரனாக வந்தவன் என்பதை அது அறியுமா? நெருப்பைக் கக்கும் வாய், தன் அலகினால் ஸ்ரீ க்ருஷ்ணனை கொத்தியது. அதன் வளைந்த கழுத்தையே, தன் மேல் விழுமுன் பிடித்த க்ருஷ்ணன், கம்ச சகா, என்பதை தெரிந்து கொண்டு சிறுவர்கள் ஆரவாரிக்க அலகையே இரண்டு கைகளாலும் பற்றி கிழித்தான். சுர லோக வாசிகள்- தேவர்கள் இதைக் கண்டனர். மல்லிகை முதலிய பூக்களை இரைத்தனர். துதிகள் செய்யலாயினர். பெரிய தாள வாத்யம்- ஆனகம் என்பதை, சங்கம், இவைகளை வாசித்தனர். அவர்கள் செய்த ஸ்தோத்திரங்களைக் கேட்டு கோபால சிறுவர்கள் விழித்தனர். பல ராமனும் மற்ற சிறுவர்களும் சரியான சமயத்தில் வந்து தங்களை காப்பாற்றியவன் என்று க்ருஷ்ணனிடம் அதிக மதிப்பு கொண்டனர். அன்புடன் க்ருஷ்ணனிடம், சரியான சமயத்தில் நீ வந்ததால் எங்கள் பிராணன் திரும்பி வந்தது என்றனர். அனைவருமாக பேசிக் கொண்டே, பசுக்களுடன் வீடு வந்து சேர்ந்தனர்.
தாய் மார்களிடம் நடந்ததை சொல்லிச் சொல்லி சிறுவர்கள், அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர். கண்களில் நீர் வழிய அவர்கள் குழந்தைகள் உயிர் தப்பியதையே பேசிக் கொண்டிருந்தனர். இந்த சிறுவனுக்கு என்று எவ்வளவு ஆபத்துக்கள், இந்த இடத்திலும் தொடர்ந்து வருகின்றன. ஆனால் அவர்கள் விகாரமாகவும் வரவில்லை. தானாக வந்து அக்னியில் விழும் விட்டில் பூச்சிகள் போல மரிக்கின்றனர்.
ப்ரும்மவித்தான கர்கர் சொன்னாரே, அவர் வாக்கு சத்யமானதே. பகவான் கர்கர் எப்படி வரும் காலத்தை ஊகித்துச் சொன்னாரோ, அதே நடக்கிறது. இவ்வாறு நந்தனும் மற்ற கோபர்களும் பேசிக் கொண்டனர். க்ருஷ்ணனும் பலராமனும் செய்யும் சேஷ்டைகளை பேசி மகிழ்ந்தனர், வேறு எந்த வித உலக வாழ்க்கையின் இடையூறும் அவர்களுக்கு இருக்கவில்லை.
வளர்ந்து கௌமாரம் என்ற பருவத்தை அடைந்தனர். வித விதமான விளையாட்டுகள். குரங்குகள் போல குதிப்பது, என்ற அந்த பருவத்துக்குரிய பொழுது போக்குகளுடன் வ்ரஜ ஜனங்களுடன் இருந்தனர்.
இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பாகத்தில், வத்ஸ, பக வதம் என்ற பதினோராவது அத்யாயம். ஸ்லோகங்கள்-59
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய
அத்யாயம்-12
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஒரு சமயம் வன போஜனம் செய்யும் பொருட்டு, விடியற்காலையில் எழுந்து, ஒத்த வயதினரான நண்பர்கள், மாடு கன்றுகள், ஸ்ரீ ஹரி, க்ருஷ்ணன் அனைவருக்கும் முன்னால் கன்றுகளை ஓட்டிக் கொண்டு என்று கூட்டமாகச் சென்றனர். அவர்களுடன், ஊர் ஜனங்கள் தனித் தனியாகவும் வந்தனர். ஆயிரக்கணக்காக அவர்கள் நன்மையை நாடுபவர்கள் கைகளில் கம்பு, கொம்புகள், வேணு- மூங்கில்கள், வைத்திருந்தனர். ஆயிரம் பேர் கொண்ட குழுக்களாக அமைத்துக் கொண்டு காவல் காக்க உடன் வந்தனர். கன்றுகளை சந்தோஷமாக ஓட்டியபடி வந்தனர். க்ருஷ்ணனுடைய குழுவிலும் பசுக்கள் கன்றுகளுடன் இருக்கும் படி வைத்து, மேய்ச்சல் நிலங்களில் அவைகள் மேயும் போது கண் காணித்தபடி, தாங்களும் தங்கள் தோழர்களுடன் சிறு விளையாட்டுகளில் சந்தோஷமாக நேரத்தை கழித்தனர்.
பழம், இளம் துளிர்கள், பூச்செண்டுகள், இறகுகள், தாதுக்கள், காக்கைப் பொன், குஞ்சா மணி இவைகளைக் கொண்டு தங்கள் தங்க நகைகளுக்கு மேல் அணிந்தனர். கம்பங்களை சுழட்டி சற்றே பெரியவர்கள் போட்டிகளில் ஈடுபட்டனர். அந்த இடங்களில் வசிப்பவர்களூம், தள்ளி இருந்தவர்களும் கூட வந்து கலந்து கொண்டனர். என்ன விளையாடினாலும் க்ருஷ்ணனை பின் தொடர்ந்து அணுக்கமாக இருப்பதிலேயே அனைவரும் ஆர்வம் காட்டினர். நான் நான் முதல் என்று அருகில் சென்று தொடவும் விரும்பினர்.
ஒரு சிலர் வேணுவை வாசித்தனர். சிலர் கூட்டமாக பாடினர். சிலர் தாள வாத்யங்களை, சிலர் கொம்புகளை ஊதினர். கோகிலம்- குயிலைப் போல சிலர் கூவினர். நிழலைக் கண்டால் ஓடிச் சென்று இளைப்பாறுவர். சாதுவான ஹம்சங்கள், கொக்குகள் மேல் அமர்ந்து சென்றனர். மயில்களுடன் நடனமாடினர். குரங்கு குட்டிகளுடன் போட்டியிட்டனர். தவளைகள் போல கத்தி மகிழ்ந்தனர்.
ஒருவர் முதுகில் ஏறி மரத்தில் ஏறி, பழங்களைப் பறித்து கீழே உள்ளவர்களுக்கு வீசினர். சிறு ஓடைகள், நதிகளில் குதித்து நீச்சல் அடித்தனர். ஒருவர் நிழலைப் பார்த்து பின்னால் வருபவர் ஏதோ சொல்லி சிரிப்பர். காடுகளில் எதிரொலி கேட்டு மலைத்தனர். இவ்வாறு ப்ரும்ம சுகம் என்பதற்கு இணையான சுகத்தை பரதேவதையே தாஸ்யனாக வந்த சமயம் அந்த இடையர் குலச் சிறுவர்களும் மற்றவர்களும் அனுபவித்தனர். மாயையால் தன்னை மனித சிறுவனாக காட்டிக் கொண்டு அவர்களுக்கு சமமாக விளாயாடி களிக்க என்ன புண்யம் செய்தனரோ. அளவற்ற புண்யங்கள் நிறைய செய்தவர்கள் அவர்கள்.
அந்த வ்ரஜ குலத்தினரின் அதிர்ஷ்டத்தை – நல் வினைப் பயன்- எப்படி வர்ணிப்பேன். எவருடைய பாத தூளி பல பிறவிகளில் செய்த நல் வினையால் மட்டுமே பெறப் படுமோ, மனதை அடக்கி சாதனைகள் செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்குமோ, யோகிகளுக்கு கூட எளிதில் எட்டாத பரம் பொருள் எதுவோ, அது, கண் முன்னால் தானாக வந்து நிற்கிறான். வாக்கினால் சொல்லப் படுமோ அந்த பாக்கியத்தின் பெருமையை.
அதன் பின் அகன் என்ற ஒரு அசுரன் வந்து சேர்ந்தான். இவர்கள் சுகமாக விளையாடி மகிழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். அம்ருதத்தை பருகிய தேவர்கள் கூட, சில சமயம் தங்கள் ஜீவிதமே கஷ்டத்தில் இருக்கும் சமயம் மனமார வேண்டி காத்திருப்பார்களோ, அந்த பர வாசு தேவனை இந்த அகாசுரனும் கண்டான்.
கம்சனின் அடியாள் அவன். பகி-பூதனா, பகன் என்பவர்களின் உடன் பிறந்தவன். என் உடன் பிறந்த இருவரையும் நாசம் செய்தவன் இவன் தான் என்று க்ருஷ்ணனைப் பார்த்து வெகுண்டான். இன்று நான் இவனை கொல்கிறேன். இவன் மட்டுமல்ல இவன் கூட்டத்தையும் அழிக்கிறேன் என்று மனதினுள் கறுவினான். இந்த வ்ரஜ குலம் இதோ நஷ்டமாகப் போகிறது. என் குலம் ஆனது போல. இவ்வாறு நினத்து மிகப் பெரிய உருவத்துடன், மலை போல எதிரில் நின்றான். அத்புதமான குகை, பெரிய நாகம் வாயை பிளந்து கொண்டு இருப்பதைப் போல வழியில் கிடந்தான். கீழ் உதடுகள் பூமியிலும், மேல் உதடுகள் வானத்திலுமாக , வட திசையில் கூடும் மேகம் போன்றும், ஆழமான பள்ளம் போன்ற உட்பகுதி, மலையின் சிகரம் போன்ற பற்கள், நாக்கு முடிவில்லாத பாதை போல் நீண்டு நீண்டு சென்றது, பயங்கரமான காற்று உள்ளும் புறமும் வீசுவதே மூச்சாக, தாவாக்னி போன்ற உஷ்ணமான கண்கள் – இப்படி ஒரு விசேஷம் இந்த வ்ருந்தாவனத்தில் உண்டு போலும் என்று நினைத்த சிறுவர்கள், அஜகர- விஷமுடைய பாம்பு, அதை எட்டி எட்டி பார்த்தனர். வேடிக்கையாக நினைத்தனர். எனவே மித்ரர்களை அழைத்தனர். இதோ பாருங்கள், ஏதோ ஒரு அதிசய ஜந்து நம் முன்னால் நிற்கிறது. நம்மை பிடித்து விழுங்கவே நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருக்கிறது. இது என்ன என்று ஊகிக்க முடிகிறா பாருங்கள், என்றனர். ஒவ்வொருவரும் தோன்றியதை சொன்னார்கள். கடைசியில் இது ஏதோ குகை போலும் சூரியனின் துண்டு என்றான் ஒருவன், பாதாளம் போல வாய் என்று சொல்லி மலைத்தபடி சுற்றி வந்து எட்டிப் பார்த்து, ஆ மாமிசம் போல ஏதோ கெட்ட நாற்றம் என்று ஒருவன் சொல்ல, உள்ளே போய்த் தான் பார்க்கலாமே என்று ஒருவன் சொல்ல அனைவரும் உள்ளே செல்ல முயன்றனர்.
சர்வ ஜீவன்களிலும் அந்தர்யாமியாக இருக்கும் பகவான் அறியாததா? தன் சுற்றத்தாரை தடுக்க முயன்றார். அதற்குள் அந்த அகாசுரன் சிறுவர்களையும் கன்றுகளையும் ஒட்டு மொத்தமாக தன் வாயினுள் இழுத்துக் கொண்டான். கண் முன்னே அனைத்து சிறுவர்களும், கன்றுகளும் அதனுள் மறைந்ததைக் கண்டவுடன், தன்னைத்தவிர வேறொரு தலைவன் இல்லாத எளிய இடையர் சிறுவர்கள், அனாதைகளாக, தீனர்களாகஅந்த குகைக்குள், தன் கையை விட்டு நழுவி அந்த ம்ருத்யுவின் வாயில் சென்று கொண்டிருந்தவர்களைப் பார்த்து அஹோ கஷ்டம் என்றார். எப்படி இவர்களை காப்பாற்றி, அந்த அரக்கனையும் வதைக்க வேண்டும் என்று யோசித்தவர் போல க்ஷண நேரம் யோசித்தவர் தானும் அவர்களுடன் நுழைந்தார்.
இதைக் கண்டு தேவர்கள் அலறினர். பயந்தனர். அகாசுரனின் பந்துக்கள், கம்சன் அடியாட்கள் மகிழ்ந்தனர். இதைக் கேட்டபடியே, க்ருஷ்ணன் அந்த ஜீவனின் கழுத்தில் தன்னை நிறுத்திக் கொண்டு வேகமாக வளர்ந்தார். அந்த ப்ரும்மாண்ட சரீரத்தின் மூச்சுக் குழல் தடை பட்டது. உள் மூச்சு வெளியே வர முடியாமல் உள்ளேயே நிறைந்தது. படாரென்று தலையை பிளந்து கொண்டு ப்ராணன் வெளியேறியது. அந்த வழியாகவே அனைவரும் வெளி வந்தனர். நடந்ததையறியாமல் கன்றுகளுடன் உயிருடன் அனைவரும் தப்பினர்.
அதன் பின் அதன் தலையிலிருந்து விடுபட்ட ப்ராணனும் ப்ரகாசமாக இருக்கக் கண்டு தேவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். எங்கும் வியாபித்து இருக்கும் பரப்ரும்மே ஜீவனின் உள்ளும் இருப்பதும். பகவான் தானாகவே அந்த அஜகரனின் ப்ராணனும் ஜோதி ஸ்வரூபமாக ஆனதை தெரிவித்தாரோ, க்ருஷ்ணனின் ஸ்பரிசத்தால் தூய்மையாகி, அவனும் பாகவதர்களுள். ஒருவனாக ஆகி விட்டான் போலும் என்று தேவர்கள் சமாதானமானார்கள். மிக்க மகிழ்ச்சியுடன் பூமாரி பொழிந்தனர். அப்சரர்கள் நடனமாடினர். எங்கும் பாடல்களை பாடுபவரும், வாத்யங்கள் இசைப்பவர்களும், துதிகளை சொல்பவர்களும் ஜய ஜய என்று கோஷிப்பவர்களுமாக அந்த அத்புதமான செயலை கொண்டாடினார்கள். இது என்ன கோலாஹலம் என்று மஹேசனும் வெளியில் வந்து நடந்ததையறிந்து ஆச்சர்யம் அடைந்தார்.
அரசனே! அந்த கொடிய அஜகரனுடைய -தோல் வற்றி உலர்ந்து வெகு காலம் வ்ருந்தாவனத்தில் கிடந்தது. சிறுவர்கள் அதை விளையாட பயன்படுத்தினர். குமாரனாக இருந்த க்ருஷ்ணனின் அத்புத செயலைக் கேட்டு சிறுவர்களின் பெற்றோரும் முதியவர்களும் அச்சமும் மகிழ்ச்சியும் ஒரு சேர அனுபவித்தனர். மரணத்தின் வாயில் இருந்து தங்கள் வம்சத்தினரைக் காத்த க்ருஷ்ணனை துதி செய்தனர். சிறுவர்கள் தாங்களே முதியவர்களாக ஆன பின்னும் இந்த வரலாற்றை மறக்காமல் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.
மனிதன் முதல் ப்ரும்மாண்டத்தில் உள்ள சகலரையும் படைத்துக் காக்கும் பராவர, பரமன், வேதஸன் எனும் பகவான், அகனும் அவருடைய பாத ஸ்பர்சத்தால் தூய்மையாகி துர்லபமான நல்கதியை அடைந்தான் என்ற வரலாறு, எப்படி அவனே அறியாமல் அவருடைய அங்க ஸ்பரிசம் கிடைத்தவனுக்கு மனோ மயமான நல்கதியை பகவான் கொடுத்து விட்டார். மாயை விலகி அவனும் நித்யாத்ம சுகம் அடைந்திருப்பான்.
ஸுதர் சொன்னார்: யாதவ தேவதத்தன்- பரீக்ஷித் , விசித்ரமான இந்த வரலாற்றைக் கேட்டபின், ஆவலுடன் வியாசரைப் பார்த்து மேலும் சொல்லும்படி வேண்டினான்.
ப்ரும்மன்! சிறுவர்களாக இருந்தவர்கள், தங்கள் முதுமையிலும் இந்த வரலாற்றை பாடியும் பேசியதும் எப்படி, ?குமாரர்களாக இருந்த சமயம் நடந்தது அவர்கள் முதிய வயதில் நினைவில் வருமா? இதுவும் ஹரியின் மாயையே. மஹா யோகின்! இல்லையெனில் இது சாத்யமேயில்லையே. அதையறிய ஆவலுடன் கேட்கிறேன், சொல்லுங்கள். க்ருஷ்ண கதாம்ருதம் உங்கள் வாயால் கேட்பதே புண்யம். நாங்கள் தன்யதமா: – மிகவும் பாக்யம் செய்தவர்கள்.
சூதர் சொன்னார்: இவ்வாறு அவன் கேட்கவும், வியாச பகவான், அரசனை பாராட்டி, மேலும் தன் மனதில் இருந்த வரலாறுகளை மனதில் தியானித்து சொல்லானார்.
இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தம் முதல் பாகத்தில், பன்னிரெண்டாவது அத்யாயம். ஸ்லோகங்கள்-44
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய
அத்யாயம்-13
ஸ்ரீ சுகர் சொன்னார்: பாகவதோத்தமரே, நல்ல கேள்வி. மேலும் கேட்கவே உத்சாகமாக இருப்பது மகிழ்ச்சி.
எந்த விஷயமானாலும் முழுமையாக அறிந்து கொள்ள விரும்புபவர்கள் கேட்கும் சொல்லின் பொருள், உச்சரிப்பு, உட்பொருள் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். அச்யுதனுடைய கதை ஒவ்வொரு க்ஷணமும் புதுமையானது. பெண் பித்து பிடித்த விடர்கள் புதுப் புது பெண்ணை விரும்புவது போல.
ராஜன்! கேள். நெருங்கிய பிரிய சிஷ்யனுக்கு ரகஸ்யமானாலும் சொல்லத்தான் வேண்டும். இடையர் குல சிறுவர்களை அக என்ற அசுரனிடமிருந்து காத்து, பின் நதிக்கரையின் மணைலில் அமர்ந்துப்
பேசிக் கொண்டிருந்தனர். க்ருஷ்ணன் ஆஹா என்ன அழகான காட்சி இது பாருங்கள், தோழர்களே, மெண்மையான இந்த மணல். இந்த நதியின் மலர்ந்த மலர்களின் வாசனையைத் தேடி வண்டுகள் மொய்க்கின்றன. எதிரொலி கேட்கும் படி அடர்ந்து உயர்ந்த மரங்கள். இங்கு நாம் அமர்ந்து, கையில் கொண்டு வந்த உணவை உண்போம். தோழர்களே, பசியுடன் இருப்பதாக தெரிகிறது. சாப்பிட்டவுடன் இந்த நதியின் நீரைக் குடித்து விட்டு புல் தரையில் காலார நடப்போம். சிறுவர்கள் அவ்வாறே அந்த இடத்தில் அமர்ந்து மூட்டைகளைப் பிரித்து, பகவானுடன் சமமாக அமர்ந்து கண்கள் விரிய மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டெ சாப்பிட ஆரம்பித்தனர். விஸ்வ புருஷன் என்பதை அறியாமல், அவர்கள் செய்த நல்வினைப் பயன், உடன் அமர்ந்து போஜனம் செய்யும் வாய்ப்பு பெற்றிருந்தனர். வட்டமாக அமர்ந்தனர். அனைவருக்கும் க்ருஷ்ணனை பார்த்தபடியே இருக்க ஆசை. ஒரு சிலர் இலைகளை பறித்துக் கொண்டு வந்தனர். பூ, இளம் தளிர், சிறு மொட்டுக்கள், பழங்கள் என்று வழியில் சேகரித்துக் கொண்டு வந்தவை அனைத்தையும் பகிர்ந்து கொண்டனர். ஒருவரையொருவர் பார்க்கும்படி வசதியாக அமர்ந்தனர். தனித் தனியாக தங்கள் வீட்டு உணவு பதார்த்தங்களை திறந்து பகிர்ந்து கொண்டும், சிரித்தும், சிரிக்க வைத்தும், மன நிறைவோடு ஈஸ்வரனோடு உணவை ரசித்தனர்.
தன் வேணுவை இடையில் சொருகிக் கொண்டு, கொம்பாலான தடியை கையிடுக்கில் வைத்தபடி, உள்ளங்கையில் கலவையான அனைத்து உணவுகளின் ஒரு கவளத்தை வைத்தபடி, விரல்களின் இடுக்குகளில் பழத்துண்டோ, ஏதோ ஒரு பண்டமோ வைத்தபடி வேடிக்கையாக அவர்களுடன் வார்த்தையாடி மகிழ்வித்தபடி இருந்த சமயம், பசுக்கள் மேய்ந்து கொண்டே வெகு தூரம் சென்றதை கவனிக்கவில்லை. பசும் புல்லைக் கண்ட பசுக்கள் திடுமென அலறின. க்ருஷ்ணன் அவர்களைப் பார்த்து, நீங்கள் இங்கேயே இருங்கள், நான் போய் அழைத்து வருகிறேன் என்று குரல் வந்த திசையை நோக்கி வேகமாகச் சென்றான்.
மலையின் குகையில் பசுக்களும் கன்றுகளும் இருந்ததைக் கண்டு, இன்னமும் கையில் இருந்த கவளத்துடனேயே சென்றான். இந்த இடைவெளியில், அம்போ ஜன்ம- ப்ரும்மா க்ருஷ்ணனின் மாயையை வெளிப் படுத்தவோ, இந்த பசுக்களையும், அவைகளை பாலித்த சிறுவர்களையும், வேறு இடத்திற்கு கொண்டு சென்று விட்டார். அகாசுரனை வதம் செய்ததை வேடிக்கைப் பார்த்தபடி தங்களுக்குள் விமரிசித்துக் கொண்டே திரும்பிக் கொண்டிருந்த தேவர்கள் இது என்ன என்று ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
அதன் பின் பசுக்களையும் காணவில்லை, திரும்பி பார்த்தால் மணலில் இருந்த இடைச்
சிறுவர்களையும் காணவில்லை எப்படி மாயமாக அனைவரும் மறைந்து விட முடியும் என்று யோசித்தவன், வீடு திரும்பினால் அந்த தாய்மார்களுக்கு என்ன பதில் சொல்வோம், என்ற கவலை வர, அனைத்தும் விதி என்ற ப்ரும்மாவின் வேலை என்பதை புரிந்து கொண்டார். விஸ்வகர்த்தாவான பகவான் தன்னையே அனைத்து சிறுவர்களாகவும், பசுக்களாகவும் ஆக்கிக் கொண்டார்.
எந்த உருவத்தில் எந்த சிறுவன் இருந்தானோ, உடலமைப்பு வஸ்திரம், நடையுடை பாவனைகள் அதே போல இருக்க, எந்த பசு எந்த உருவம் அதன் உடலமைப்பு, கொம்புகள், நிறம் நடைகள். இவற்றுடன் சற்றும் சந்தேகமே வராதபடி அந்தந்த தாய் மார்கள் கூட கண்டுபிடிக்க முடியாத ஒற்றுமையுடன் தானாகி நின்றான். சர்வம் விஷ்ணு மயம் என்பதற்கேற்ப, சர்வ ஸ்வரூபனாகினான். அந்த பசுக்களின் பசு பாலக சிறுவர்களின் அந்தராத்மாவாக இருந்தவன், வெளிப் பார்வைக்கும் அதே போல ஆனான். அந்தந்த வீடுகளுக்கு பசுக்களை ஓட்டிக் கொண்டு அந்தந்த வீட்டுச் சிறுவர்கள் சென்றனர்.
வேணு நாதம் கேட்டு வீட்டுப் பெண்கள் அவர்களை அழைத்துச் செல்ல வந்தனர். தங்கள் குழந்தைகளை அணைத்து, உச்சி முகர்ந்து, கொண்டாடி, வெகு நேரம் காணாததால் ஆவலுடன் அழைத்துச் சென்றனர். பர ப்ரும்மனை தங்கள் மகனாக காணும் பேறு பெற்றவர்கள். தங்கள் குழந்தைகள் என்பதால் நீராட்டி, புது ஆடையுடுத்தி உணவளித்து உபசரித்தனர். பசுக்கள் தங்கள் கொட்டிலில் நுழைந்தும் ஹூங்காரம் செய்தும் தங்கள் வரவைத் தெரியப் படுத்தின. அதனதன் கன்றுகளை நாக்கால் நக்கி தங்கள் அன்பை வெளிப் படுத்தின. வழக்கம் போல கறக்க வந்த வீட்டு பெரியவர்கள் பாலைக் கறந்து சென்றனர்.
இடையர் குலப் பெரியவர்களும் தாய்மார்களும் அதிகப் படியான எந்த வித பாவமும், அனுபவமும் இன்றி வழக்கம் போலவே உணர்ந்தனர். ஹரியின் மாயை- யாரால் அறிய முடியும். இது போலவே ஒரு ஆண்டு நிறைந்தது. அதே வன கோஷ்டி, அதே விளையாட்டுகள், தானே அனைத்துமாக இருந்து ஸ்ரீ க்ருஷ்ணன் விளையாடிய விளையாட்டு இது.
ஒரு நாள் ராமனும் உடன் வர பசுக்களை மேய்க்கச் சென்றனர். தூரத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்கள், கோவர்தன மலையுச்சியில், பசும் புல்லைக் கண்டன. வழி நேராக இல்லை, மேலே செல்வது கடினம் என்பதைக் கூட லட்சியம் செய்யாமல் அந்த பசுக்கள் பசும் புல்லின் அவலுடன், கழுத்தை வளைத்து மேல் நோக்கியபடி, வால் பறக்க, ஹூங்காரமிட்டபடி மலை மேல் வேகமாக ஏறி விட்டன. கன்றுகளுக்கு ஊட்ட வேண்டிய நேரம் வந்ததும் அங்கிருந்து வெகு தூரத்தில் தங்கள் கன்றுகளைக் கண்டு தாய் பசுக்கள் குரல் கொடுத்தன. அந்த அழைப்பைக் கேட்டு இடைக் குலத்து ஜனங்கள், ஏதோ அசம்பாவிதம் என்று அறிந்து ஓடி வந்தனர். அந்த மலை மேல் கஷ்டப் பட்டு ஏறி அங்கு நின்றிருந்த தங்கள் புதல்வர்களையும் பசுக்களையும் கண்டனர். தங்கள் புதல்வர்களையும், பசுக்களையும் கண்ட நிம்மதி ஒரு பக்கம் அந்த செல்ல முடியாத இடம் வரை சென்ற சிறுவர்களின்மேல் கோபமும் வர, அவர்களை வசை பாடிக் கொண்டே, அவர்களை அணைத்தபடி இறங்கினர்.
பார்த்துக் கொண்டிருந்த பலராமன் யோசித்தான். வ்ரஜ குலம் தங்கள் பசுக்களையும் மக்களையும் எப்பொழுதும் பிரியமாக அணைப்பதைக் கண்டவன் தான். ஆனாலும் இன்று ஏதோ வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தான். வாசுதேவன் அகிலாத்மா உடன் வாழும் அவர்கள் நாள் தோறும் புது அனுபவங்களைப் பெறுகிறார்கள் போலும்.
யார் இவன், எங்கிருந்து வந்தான், தேவனா, அசுரனா. மாயா மயமான இவன் செயல்கள் என்னையே ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன. இவ்வாறு எண்ணி தாசார்ஹன், தன் வயதொத்த குமாரர்கள், என்றாலும் தன் திவ்ய த்ருஷ்டியால் அவர்களை வைகுண்ட வாசிகளாக கண்டான். என்ன இது, உன் வேலையா இது. இவர்கள் தேவர்களும் அல்ல, ரிஷிகளும் அல்ல, உன்னைப் போலவே தெரிகிறார்கள், விவரமாகச் சொல்லு என்ன நடந்தது, ஒளிக்காமல் அனைத்தையும் சொல் என்று க்ருஷ்ணனை வினவினான்.
நடந்த விவரங்கள் அனைத்தையும் உள்ளபடி சொல்லிக் கொண்டிருக்கையிலேயே ப்ரும்மா தான் கொண்டு சென்ற இடையர் குல சிறுவர்களையும், பசுக்களையும் திரும்பக் கொண்டு வந்தார். வந்தவன் இங்கு இருந்த சிறுவர்களும் பசுக்களும் வைகுண்ட வாசிகளாகத் தெரிய திகைத்தார். சகலமும் ஸ்ரீ ஹரியே. முன் போலவே விளையாடிக் கொண்டு இயல்பாக இருப்பதைக் கண்டார். இவர்கள் அனைவரும் நான் கொண்டு சென்ற பின் தூங்கியவர்கள், இன்னமும் கண் விழிக்கவில்லை. இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? மற்றவர்களை மாயையால் மோஹிக்கச் செய்து இந்த ஆண்டு முழுவதும் விளையாடியபடி, இவர்கள் வைகுண்ட வாசியான விஷ்ணுவுக்கு சமமாக அருகில் இருந்து வந்திருக்கிறார்கள். இவர்களிடையே எப்படி வித்யாசம் கண்டு பிடிப்பது என்று குழப்பம் அடைந்தவராக, எவன் நிஜ இடையன், எவன் மற்றவன் என்று யோசித்து அறிந்து கொள்ள முடியாமல், பட்டப் பகலில் மின் மினி பூச்சியின் வெளிச்சம் கண்ணுக்கு தெரியாதது போல அவர்களிடையே எந்த மாறுதலைக் கொண்டும் பிரித்து அறிய முடியாமல் திகைத்தார். அவர் குழப்பத்தைத் தீர்ப்பது போல மாயா மயமான இடையர்கள் கரு மேகம் போன்ற சியாமள நிறத்தினராக, , பீதாம்பர தாரிகளாக நான்கு கைகளும், சங்க சக்ர கதா தாரிகளாக, கிரீடமும் குண்டலமும் பிரகாசிக்க, வன மாலையணிந்து, ஸ்ரீவத்ஸமும், அங்கத வளையங்களும், ரத்னங்கள் ஒளி விசும் கங்கணங்களுமாக கால் விரல்களிலிருந்து தலைவரை புத்தம் புது கோமளமான துளசிமாலை, உடல் முழுவதும் புண்யமே உருவானதைப் போல ஒளியுமாக, சந்திரனை பழிக்கும் மென்மையான புன்னகையும், கண்களில் சிறிதே சிவந்த அபாங்க வீக்ஷணமும், -கடைக் கண் பார்வையும்- தன்னைச் சார்ந்தவர்கள் என்பதற்காக ராஜஸ சத்வ குணங்களுடன் தானே ஸ்ருஷ்டி செய்த தோழர்களுடன், தன்னைப் போல இருந்தவர்கள் தனித் தனியாக பெற்றோர்களால் லாலனம்- கொண்டாடி உபசரிக்கப் பட்டு, அணிமா முதலான இருபத்து நாலு ஸ்ருஷ்டி தத்வங்கள், காலம், ஸ்வபாவம். ஸம்ஸ்காரங்கள், என்ற குணங்கள், உப நிஷத்துக்கள் பாடும் உருவத்துடன், ப்ரும்மா புரிந்து கொண்டார். சத்ய ஞான மூர்த்தி, ஆனந்தமே உருவானவன், தன்னைப் போலவே அவர்களையும் ஆக்கி விட்டிருக்கிறான். இவனுடைய ப்ரபாவம் தானே உலகெங்கிலும்.
இப்படி அவர் திகைத்து நிற்கையில், தன் மாயையை விலக்கினார். தூங்கி எழுந்தது போல சிறுவர்கள் கண்களை சிரமப் பட்டு திறப்பது போல பார்த்தனர். எதிரில் பழகிய வ்ருந்தாவனம். அதே மரங்கள், புல் வெளி, அதே மனிதர்கள், சிரித்துக் கொண்டே அதே போல பசியும் தாகமும் தங்கள் சகாவைப் பார்த்து ஏன் இன்னமும் இந்த கவளத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கிறாய் என்று வினவினர்.
ப்ரும்மா, கனமான தண்டம் மேலிருந்து விழுவது போல க்ருஷ்ணனின் பாதங்களில் விழுந்து வணங்கினார். திரும்பத் திரும்ப பாதங்களைப் பற்றி தன் கண்ணீரால் அபிஷேகம் செய்தார். அதன் பின் கண்களை துடைத்துக் கொண்டு துதி செய்தார்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பாகத்தில், பதின் மூன்றாவது அத்யாயம்.)
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய
அத்யாயம்-14
ப்ரும்மா செய்த துதி:
இடையர் குல பெண்ணிண் மகனாக விளங்குபவனே! எங்கள் வணக்கத்துக்குரியவன். வானமே உன் உடல். மின்னலே உன் ஆடை. பூக்களின் இடையில் மலர்ந்து தெரியும் மயிற்பீலி அணிந்தவனே! காட்டுப் பூக்களை மாலையாக அணிந்திருக்கிறாய். உணவு கவளம் உள்ளங்கையில் ஏந்தியபடி, வேணுவை இடையில் செருகி, பசுக்களை மேய்க்க கொம்பினால் ஆன தடியை ஒரு கையில் வைத்தவனாக, இந்த வேடத்திலும் ஸ்ரீ லக்ஷ்மியின் ஸ்ரீ ப்ரகாசம் தெரிய இருப்பவன், ம்ருதுவான பாதங்கள் தேய வ்ரஜ தேசத்தில் நடக்கிறாய்.
தேவனே! உன் விருப்பமே எங்களுக்கு ஆணை. என்னை அனுக்ரஹம் செய்யவே, இந்த அவதாரம், மனிதனாக வந்துள்ளாய். சர்வ பூதங்களும் உயிரினங்களுமானவன் உன்னைத் தவிர வேறு யார் இருக்க முடியும். பகவானே, மனப் பூர்வமாக துதிக்கிறேன். பூமியில் வசிப்பதும், இவர்களுக்கு இணையாக சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வதும் என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. நீயோ ஆத்ம சுகானுபூதன்- தன்னிலேயே லயித்து ஆனந்தமாக இருப்பவன்.
அஜித! யாராலும் தோற்கடிக்க முடியாத பராக்ரமசாலியே! உன்னை ஞானிகள் உபாசித்து வணங்குகிறார்கள். உன் வார்த்தைகளை கேட்டபடி வாழ்கிறார்கள். வேத சாஸ்திரங்கள் சொல்லும் வழியில் நடப்பவர்கள், தங்கள் உடல்,மனம்,வாக்கு இவைகளால் பூரணமாக உன்னை எண்ணி ஆராதிக்கிறார்கள். சில சமயம் இவர்களுடைய மெய்யன்பால் உன்னை ஜயித்தும் விடுகிறார்கள்.
விபோ! நல்வழி, நல் வாக்கு பக்தி. அதை விட அதிகமாக செயல்களை சாதனைகளை நம்பி உடல் வருந்த தவம் செய்கிறார்கள். அதுவும் உன்னை அடையவே. இந்த கஷ்டங்களே அவர்களுக்கு உபதேசமாக ஆகின்றன. ஸ்தூலமான தானியம் உரலில் அடிபட்டு உமி விலகி தானியம் தெரிவது போல எனலாம்.
அச்யுதா! இந்த பூமியில் பல ஞானிகள் உன்னிடமே தங்களை அர்ப்பித்தவர்களாக, தன் வினைப் பயனாக பெற்ற சரீரம் என்று உணர்ந்து, பக்தியே ப்ரதானமாக, உன் கதைகளைக் கேட்டு, சாஸ்வதமான கதியை, பரமகதியை அடைகிறார்கள். அவர்களும், உன் மகிமைகளை முழுவதுமாக அறிந்ததாக நினைப்பதில்லை. நிர்மலமான அந்தராத்ம சுத்தமாக, கர்ம பந்தங்களை அறவே துறந்து, அனுபவங்கள் வாயிலாக ஆராய்ந்து அறிவார்கள், அதைத் தவிர சுலமான வழி எதுவும் இல்லை.
அவர்களாகவே, தாங்கள் உயர்ந்த குணங்கள் என்று நினைப்பதை உன்னிடம் காண்பதாகச் சொல்வார்கள். நீ குணங்களுக்கு அப்பாற்பட்டவன். தங்கள் வினைப் பயன்களை அனுபவிப்பவர்கள் அவர்கள். உன் கருணையை வேண்டுகிறார்கள். உன்னையே சரணம் என்று ஹ்ருதயத்தால், வாக்கால், உடலால் நமஸ்கரிக்கிறார்கள். முக்தி பதம் தருபவன் நீயே என்பதால் அதற்கு அருகதை உள்ளவர்களாக தாங்கள் ஆக வேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோள்.
ஈசனே! இதோ பார். நான் பொதுவான நாகரீகம் கூட இல்லாமல் ஆதி புருஷணான உன்னிடம் தவறாக நடந்து கொண்டு விட்டிருக்கிறேன். உன் மாயை நான் அறியாததா? பராத்மா என்றும் அறிவேன். உன் ஆத்ம வைபவம் என்பதை காணவே, உன் மாயையின் எல்லையை அறியவே செய்ததாக கொள்வாய். அக்னியின் பொறிகள் தனக்கு ஆதாரமான அக்னியை சோதிப்பது போல இந்த செயல். அதனால் க்ஷமஸ்வ. என்னை மன்னித்து விடு. அச்யுதா! என் ராஜஸ குணம். தெரியாதவன் போல், நீ ஏதோ அன்ய ஈஸ்வரன் போல நினத்து, கண் தெரியாதவனை மற்றொரு பிறவிக் குருடன் வழி நடத்திச் செல்வது போல எதையோ எண்ணி இந்த செயலை செய்து விட்டேன். என் தலைவன் நீ, என்னிடம் கருணை காட்டு.
நான் எங்கே, தாமசமான மஹத் அஹங்காரங்கள் ஸூரியன், அக்னி, வாயு, பூமி இவை சூழ்ந்த பூ மண்டலம், ஏழு தீவுகளாக உள்ள பூமி, இதற்குள் அடங்கினவன், நீயோ, இந்த பூமண்டலங்களைத் தாண்டி, ப்ரும்மாண்டத்தையும் உள்ளடக்கியவன் எங்கே. எண்ணற்ற பரமாணு, வாயு, ஆகாயம் இவைகளை உன் ரோமங்களில் வைத்திருப்பவன், உன் மகத்வம்- பேராண்மைக்கு முன் நான் எம்மாத்திரம்?
அதோக்ஷஜா! உன்னிடத்தில் பிறந்தவன் நான், தன் மகன் சிறு கால்களால் உதைப்பதை தாயார் பெருமையாக ஏற்பதில்லையா, அது போல என் செயலை நினைப்பாயாக. குற்றம் தான். உன் வயிற்றில் அஸ்தி, நாஸ்தி- உண்டு இல்லை என்ற வாதங்கள், உன்னிடமிருந்தே பிறப்பவை, உண்மையை நிலை நாட்டவே மேலும் பல உள்ளனவே.
ஈஸ்வரா! ப்ரளய காலத்தில் நீரில் மூழ்கிய ப்ரும்மாண்டத்தை நாராயணனாக உன் வயிற்றில் வைத்திருந்தாய். அதிலிருந்து தோன்றிய தண்டில் நான் தோன்றினேன். அஜன்- பிறவியில்லாதவன், என்று பெயர் பெற்றேன். அது தவறான சொல்லுமல்ல. ஆனால், ஈஸ்வரனே உன்னில் தோன்றியவனே நான். நாராயணத்வம் என்பது அனைத்து உயிரினங்களிலும் ஆத்மாவாக உறைவது. லோகாதீசன், உலக நாயகன், அகில லோகத்துக்கும் சாக்ஷியாக இருப்பவன், நாராயணனின் அங்கமாக, பூமியில் மனிதனாக, நீர் வாழ் இனங்கள், என்று உயிர்கள் உடலுடன் தோன்றின. அதுவும் உன் மாயையே.
நீரில் மூழ்கி இருந்த உன் உருவத்தைக் கண்டவன் நான். சத்தான உலகமே உன் உடல். நான் காணாதது எதுவுமே இல்லை, பகவானே, என் ஹ்ருதயத்தில் படிந்த அந்த உருவத்தை எனக்கு காட்டு. இப்பொழுதே.
இங்கேயே, இந்த அவதாரத்தில், இந்த ப்ரபஞ்சத்தில் உன் ப்ரும்மாண்ட உருவத்தை வெளிப்படையாக காட்டும் அவதாரம் இது. இதே அவதாரத்தில் தாய் வயிற்றில் உருவான கருவாகவும் உன்னைக் காட்டிக் கொள்கிறாய். இது தான் உன் மாயா ப்ரபாவம். எவனுடைய வயிற்றில் உலகம் முழுவதும் கர்பத்தில் இருந்தனவோ, அவனே கர்ப வாசம் செய்தது அதிசயமல்லவா. உன் மாயை அன்றி வேறு என்ன சொல்வோம்.
இன்றே, நீ இல்லாமல் இது போன்ற ஒரு காட்சியை காட்டியிருக்க முடியுமா? நீதான் முதல்வன். அதன் பின் வ்ரஜ சிறுவர்களின் தோழனாக அனைவருமாக வந்தாய். அனைவரும் சதுர்புஜங்கள், அத்துடன் உன் அலங்காரங்கள் அணைத்தும் தரித்தவர்களாக, நான் கண்டேன். அது வரை அமிதமான ப்ரும்மத்வம் என்று காட்டி விட்டாய். அதனால் ப்ரும்மா என்று இருவர் என்பதையும் சொல்லாமல் சொல்லி விட்டாய்.
உன் உயர்ந்த ஸ்தானத்தை அறியாதவர்கள் தான், ஆத்மாவை ஆத்மாவால் விளங்கச் செய்கிறாய் என்று அறிவர். உலகை என்னைக் கொண்டு படைக்கச் செய்தாய். த்ரி நேத்ரனால் இந்த உலகை அழிக்கவும் செய்தாய். தேவர்களில், ரிஷிகளில். மேலும் மனிதர்களில், குறுக்காக நடக்கும் விலங்குகளில், நீர் வாழ் ஜீவன் களில், பிறவியே இல்லாத உன் அவதாரம் நிகழ்ந்தது. துர்மதிகளான சிலரை அடக்க ப்ரபோ! விதாதா என்ற எனக்கு பரமானுக்ரஹம் செய்திருக்கிறாய்.
யாருக்கு முழுவதுமாக உன் மகிமை தெரியும். பகவன்! பராத்மன்! யோகேஸ்வரன் நீ, மூவுலகிலும் யாராக, எப்பொழுது, எந்த இடத்தில், எவ்வளவு முறை, தோன்றி விளையாடியிருக்கிறாய்.
அதனால் இதை ஜகம் முழுவதும் உள்ள அசத் ஸ்வரூபம், கனவு போன்றது, அறிவில்லாத, மனித இயல்பான துக்கத்தின் துக்கம். அனந்தனான உன்னிடம் லயித்தால் தான், நித்ய சுகம் என்பதைக் காண முடியும். உன் உண்மையான ஸ்வரூபத்தை காண முடியும். மற்றவை வெறும் மாயையினால் உண்டான தோற்றமே.
நீ ஒருவன் தான் புராண புருஷன் எனப்படுபவன். சத்யமானவன். உன்னுடைய ஜோதியே
ஆதியும் அந்தமுமாகும். நித்யன், அக்ஷரன், அளவில்லாத சுக ஸ்வரூபன், நிரஞ்ஜனன், (மாசில்லாதவன்) பூர்ணன், மற்றொன்று உனக்கு நிகராக சொல்ல முடியாத முக்தன், சுதந்திரமானவன், அம்ருதன் என்ற பட்டம் உனக்கே தகும்.
இப்படிப்பட்ட உன்னை சகல ஆத்மாவானாலும், உன் தனித் தன்மையையும் நிலை நிறுத்திக் கொள்கிறாய். குரு ஜனங்கள், ஆசாரியர்கள் மூலம் உபனிஷத் என்ற கண்களால் எவர் காண்கிறார்களோ அவர்களே பவம் எனும் இந்த சாகரத்தை தாண்டுகிறார்கள்.
தங்களையே பூர்ணமாக இன்னமும் அறியாதவர்களால் உலகம் நிரம்பியுள்ளது. அவர்கள் தான் கயிற்றினால் கட்டியது போல கட்டுப் படுகிறார்கள்.
அறியாத அக்ஞானி அவர்கள். பவ பந்த மோக்ஷம் என்பதையும் இரட்டைகளான சுக துக்கங்கள் தவிர வேறு எதையும் அறியாமல், உண்மையும் அதே என நம்புபவர்கள். இந்த அறிவற்றவர்களை எப்படி கரையேற்றுவது? உன்னையே, வெளியில் தேடுகிறார்கள். ஆனாலும் தேவ, உன் பதாம்புஜ த்வயம்- உன் பாதங்கள் இரண்டையும், ஓரளவு அருள் இருப்பதால் சிலர் பற்றுகிறார்கள். உன் மகிமையையும், உன் தத்வத்தையும் அறிவார்கள். தானாக எவரும் உணருவது என்பது இயலாது.
அதனால் நாத! எனக்கு உன் பரி பூர்ணமான அருள் கிடைக்க வேண்டும். இந்த ஜன்மத்திலோ, விலங்காக பிறந்து அடுத்த பிறவியிலோ, நான் ஒருவனே என்று ஆனாலும், உலகில் இருந்து உன்னை சேவிப்பேன். அஹோ, இந்த வ்ரஜ தேசத்து சிறுவர்கள் அதி தன்யா:. மிகவும் புண்யம் செய்தவர்கள். இங்குள்ள பெண்கள் அனைவருமே. அவர்கள் பாலூட்டி மகிழ்ந்தனரே. இவர்கள் அனைவருக்கும் நீ அவர்களின் பெற்ற குழந்தையாக, சிறுவர்களாக, மகனாக இருந்திருக்கிறாய். அவர்கள் தாயன்பை பொழிந்திருக்கிறார்கள். எந்த அளவு யாகங்கள் செய்தாலும் அந்த திருப்தி கிடைக்குமா?
அஹோ பாக்யம்! அஹோ பாக்யம்! நந்த கோபனுடைய இந்த தேசம், இந்த தேசத்தில் வசிப்பவர்கள். பரமானந்தமான பூர்ணனை தங்கள் தோழனாக, கிடைக்கப் பெற்றவர்கள். இவர்களுடைய பாக்யம் அச்யுதா! அது ஒரு பக்கம் இருக்க, நாங்களும் ஓரளவு பாக்யம் செய்தவர்களே ஆவோம். பெரும் பாக்யம் செய்தது இந்த அரண்யம். கோகுலமும் இங்கும் உன் பாதங்கள் இங்கு நடந்து நடந்து புண்ய க்ஷேத்ரமாக்கி விட்டன. வேதங்கள் தேடும் உன் பாத தூளிகள், முகுந்தனே தங்கள் ஜிவிதம் என எண்ணி வாழும் புண்யாத்மாக்கள் நிறைந்த பூமி இது.
அச்யுத! இவர்களுடைய கொட்டில்களில் வாழும் பசுக்கள் அறியுமா? உன்னை பகவான் என்றா நினைக்கும். நம்மை காப்பவன் என நினைக்குமா? உன்னையன்றி வேறு எதையும் அறியாத எளிய ஜீவன்கள். த்வேஷத்துடன் வந்த பூதனா கூட அவள் குலத்தோடு சேர்த்து உன்னால் தேவதையாக்கப் பட்டாள். அவள் ப்ராணனை நீ எடுத்தாலும், உனக்காக உயிரை விட்டவள்.
உன்னிடம் பாசம் இல்லாதவர்களுக்கு வீடே சிறை. உன்னை பணியாத வரை மோகம் அவர்களை விட்டு விலகாது. உன் ஜனங்களே ப்ரபஞ்சம். பூமியிலேயே அந்த ப்ரபஞ்சத்தையும், அதைத் தாண்டி நிஷ்ப்ரபஞ்சம் என்பதையும் காண்கிறார்கள். சரணடைந்தவர்களை காப்பதே உன் குணம். அதுவே ஆனந்தம். எனக்கும் அந்த நிலையை அருள்வாய்.
அதிகம் சொல்வானேன்? புரிந்து கொள்பவர் புரிந்து கொள்ளட்டும். ப்ரபோ! என் உள்ளத்திற்கு, என் உடலுக்கு, வாக்குக்கு, உன் வைபவம் தெரிகிறது. எனக்கு விடை கொடுங்கள். க்ருஷ்ணா! நீங்கள் அறியாததும் உண்டா? எங்கும் உங்கள் பார்வை செல்லும். நீங்களே உலகின் நாதன்- தலைவன். இந்த ஜகத் உங்களுக்கே அர்ப்பிக்கப் பட்டது.
ஸ்ரீ க்ருஷ்ணா! வ்ருஷ்ணி குல புஷ்கரம் என்ற குளத்துக்கு உயிர் கொடுப்பவன். பூமி, அருவிகள், பறவைகள், பசுக்கள், இவைகளை வ்ருத்தி செய்பவன். தர்மத்தை உத்தாரணம் செய்ய வந்தவன். பூமியில் துஷ்டர்களை அழித்து நல்லவர்களுக்கு நன்மை உண்டாக செய்வாய். பகவானே! நமஸ்தே.
ஸ்ரீ சுகர்: இவ்வாறு புகழ்ந்து துதி செய்து விட்டு, மும்முறை ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து காலில் விழுந்து வணங்கி, உலகை படைத்தவனான ப்ரும்மா, தன் இருப்பிடம் சென்றார். பகவானும் முன் போலவே மணல் திட்டில் சிறுவர்களுடன் அமர்ந்தார். ஒரு வருடம் ஆன பின்னும் தன் மனதுக்குகந்த தோழர்கள், இதை எதையும் அறியாமல் அரை நிமிடம் சென்றது போல உணர்ந்தார்கள். மாயையால் மோகிக்கச் செய்த செயலால் எதை தான் மறக்க மாட்டார்கள். அவர்கள் பரிவுடன் க்ருஷ்ணனிடம், நீ ஒருவன் தான் இன்னமும் சாப்பிடாமல் கவளத்தை கையில் வைத்திருக்கிறாய். நாங்கள் அனைவரும் உண்டு முடித்து விட்டோமே என்றனர். இங்கு வா என்று ஒவ்வொருவரும் அழைத்தனர்.
அதன் பின் சிரித்த படியே அவர்கள் இடையில் அமர்ந்து அந்த சிறுவர்களுடன் புல்லில் நடந்து அஜகரனின் தோல் கிடப்பதைக் காட்டி விட்டு, வீடு திரும்பினர். பூக்களின் மகரந்தங்கள் உடைகளில், உடலில் அப்பியிருக்க, விசித்ரமான மூங்கில் காட்டில் அலைந்ததால், அதன் இலைகள் ஆடைகளில் தென்பட, சிறுவர்கள் வேணுவின் நாதத்தோடு இணைந்து பாடியபடி எதிர் நோக்கியிருந்த இடையர் குல பெண்களிடையே தங்கள் வீடுகளுக்குச் சென்றனர். இன்று ஒரு மிகப் பெரிய பாம்பு, யசோதா நந்தனால் அடித்து கொல்லப் பட்டது. எங்களை அதன் வாயிலிருந்து காப்பாற்றினான் என்று வ்ரஜ தேசம் முழுவதும் கதையாக பரப்பினர்.
அரசன் கேட்டான்: ப்ரும்மன்! இந்த வ்ரஜ வாசிகளுக்கு க்ருஷ்ணனிடம் இந்த அளவு அன்பும் பாசமும் எப்படி ஏற்பட்டது? அது புதிதாக இல்லையா? முன் பிறந்தவனில்லை, தன் உடன் பிறந்தவர்களிடம் கூட இந்த அளவு ஒட்டுதல் இருப்பதில்லையே.
ஸ்ரீ சுகர் சொன்னார்: அனைத்து ஜீவன்களுக்கும் தன்னை, தன்னைச் சார்ந்தவைகளை பிடிக்கும். தன் தனயன், செல்வம், இவைகளிடம் பற்றுதல் தோன்றுவது இதனால் தான். ராஜேந்த்ரா! இது தான் இயல்பு. தேகம் படைத்தவர்களுக்கு தனது, தான் என்ற ஸ்னேகம் இருப்பதும், தன் மகன், தன் செல்வம் என்ற எண்ணமும் வருகிறது. தேகாத்ம வாதிகளான மனிதர்களுக்கும், ராஜன்! எந்த அளவு தன் தேகம் பிரியமோ, அந்த அளவு வேறு எதுவும் இருப்பதில்லை. ஜீவித்திருக்கும் ஆசை பலமானது. இந்த சுற்றத்தார், தனது செல்வம் வீடு இவைகளும் கூட அதற்கு பின் தான். உலகம், சராசரமும் இந்த தன்னலமான தான் தனது தேகம் என்பதைச் சுற்றியே உள்ளது, இந்த க்ருஷ்ணனை இப்படிப் பார். அகிலாத்மாவுக்கும் அந்தர் யாமியான ஆத்மா. உலக நன்மைக்காக உடல் எடுத்து, அவதரித்து வந்தவன் எனப் பார். உண்மையில் இந்த க்ருஷ்ணன் ஸ்தாஸ்னு என்ற நிரந்தரமானவன். மற்றவைகளை செயல் படுத்துபவன். பகவத் ரூபமே அனைத்தும்.
அனைத்து வஸ்துக்களிலும், பாவம்- உட்பொருளானவன். க்ருஷ்ணனைத் தவிர மற்றொரு வஸ்து என்பதே இல்லை. முராரி அவன். அவன் பதங்களை அண்டியவர்களுக்கு பவாம்புதி என்ற இந்த சம்சாரக் கடலை தாண்டுவது எளிது. புண்யமான புகழ் வாய்த்தவன் அவனே. அவன் பக்தர்களுக்கு எந்த விபத்தும் நேராது.
இவையனைத்தையும் உனக்கு சொல்லி விட்டேன். நீ கேட்டபடியே சொன்னேன். உனக்கு சூழ்நிலையும் அமைந்தது. சிறு வயதில் ஸ்ரீ ஹரி செய்த செயல்களை, சிறுவர்களாக விளையாடி செய்தவை, இவைகளைச் சொல்லி கேட்டாய்.
அகன் என்ற அசுரனை அழித்ததையும், தோழர்களான சிறுவர்களுடன் நடந்து சென்றதையும், புல் வெளியில் அமர்ந்து போஜனம் செய்ததையும், அசையாத மரங்களும், மலைகளும் கூட அவனிடம் பரிவுடன் இருந்ததை பாடிக் கேட்பவர்கள் பெரும் பலன்களைப் பெறுவார்கள். இதே போல குமார வயதில், வ்ரஜ தேசத்தில் வாழ்ந்த சமயமும் அந்த வயதுக்குரிய விளையாட்டுகளையும் , குரங்கு போல தாவுவது போன்ற சாகசங்களையும் செய்து மகிழ்ந்தனர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், முதல் பிரிவில், ப்ரும்மஸ்துதி என்ற பதின் நான்காவது அத்யாயம்)
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய
அத்யாயம்-15
ஸ்ரீ சுகர் சொன்னார்: அதன் பின் குமார வயதில் வ்ரஜ தேசத்தில் அனைவருமாக பசுக்களை மேய்க்கச் சென்றனர். வ்ருந்தாவனத்தில் ஒரு இடம் விடாமல் அலைந்து திரிந்தனர். மாதவன் வேணு என்ற குழலை வாசிக்க தோழர்கள் மெய் மறந்து கேட்டு ஸ்லாகித்தனர். அதுவே அவர்கள் மத்தியில் க்ருஷ்ணனுக்கு ஒரு உயர்ந்த ஸ்தானம் கொடுத்தது போல் ஆயிற்று. பசுக்களை முன்னிட்டுக் கொண்டு பசுமையான இடங்களைத் தேடி போவதான வியாஜத்தால் மலைகள், அடர்ந்த காடுகளின் உட் புறமும் காட்டு மலர்களின் மணத்தை அனுபவித்தபடி சென்றனர். புதர்களில் மண்டிக் கிடக்கும் வண்டுகளின் ரீங்காரம் கூட அவர்களுக்கு மனோஹரமாக இருந்தது. சதபத்ர என்ற மரத்தின் இலைகளே நறுமணம் கொண்டிருந்தன. காற்று அவர்களுக்கு அந்த மணத்தின் மூலம் அதன் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்தது போல் வீசியது. புத்தம் புது துளிர்கள் சிவந்த நிறத்தில் மென்மையாக இருப்பதை ரசித்தனர். சில பழ மரங்கள் பழுத்து தொங்கும் பழங்களுடன் வணங்கி நிற்பதைக் கண்டனர். வானளாவ உயர்ந்த மரங்கள் ஆச்சர்யப் படுத்தின. அவைகளைக் காட்டி பலராமனிடம் க்ருஷ்ணன் சொன்னார்:
ஆஹோ! இவைகளைப் பாருங்கள் தேவர்கள் பூஜிக்கும் மரம் இது. நமது களைப்பை நீக்க என்றே இந்த மரங்களின் தோற்றமோ எனும்படி பூக்களும், பழங்களும் நமக்காக வளைந்து கொடுக்கின்றன. என்னே இந்த மரங்களின் மகத்தான பிறவி. ( பரோபகாராய பலந்தி தரவ: – பரோபகாரத்திற்காகவே மரங்கள் பழுக்கின்றன.)
இந்த காற்றும் எதோ பாடுகிறது. உலகின் தீர்த்தம்- சுத்தமாக்கும் வேலை இதனுடையது. ஆதி புருஷனுடைய புகழை பாடுகின்றன. உங்களைப் போன்ற முனி ஜனங்கள், இந்த வனத்தில் சஞ்சரிக்கும் பொழுதும் தங்கள் வழிபாடுகளை நிறுத்துவதில்லை.
இந்த மயில்களைப் பாருங்கள்- அழகாக ஆடுகின்றன. ஹரிணி-பெண் மான்கள், இடையர் குல இளம் பெண்கள் போல மருண்டு உங்களை நோக்குகின்றன. அவர்களைப் போலவே உங்களிடம் அன்பு கொண்டுள்ளன போலும். கோகிலங்கள் ஏதோ சூக்தங்கள் சொல்வது போல ஒரே குரலில் வீட்டிற்கு வந்த அதிதி (உங்களை) வரவேற்கின்றன. ஆஹா இந்த காட்டு வாசிகளின் இனிய பண்பு, இவைகளைப் பார்த்தே நல்ல குணம் உடையவர்கள் தெரிந்து கொண்டார்களோ. இந்த தேசம் தன்யம்- புண்யம் செய்தது. புல்வெளிகள், சிறு செடிகள், பாதங்கள் நோகாமல் ம்ருதுவாக நடக்க ஏதுவாக இருக்கின்றன. மரங்களில் சுற்றிக் கொண்டிருக்கும் கொடிகள், தங்கள் கரங்களால்,விரல்களால் அதைப் பற்றிக் கொண்டிருப்பது போல இருக்கிறது. நதிகள், மலைகள், பறவைகள், சிறு, பெரிய விலங்குகள், இவைகளும் பார்வையிலேயே தயை எனும் உயர் குணத்தை வெளிப்படுத்துகின்றன. கோகுலத்து ஸ்த்ரீகளின் ம்ருதுவான அணைப்பை நினைவு படுத்துகின்றன.
ஸ்ரீ சுகர் சொன்னார்: வ்ருந்தாவனத்தில் ஸ்ரீ க்ருஷ்ணன் மிகவும் ரசித்து மகிழ்ந்தபடி பசுக்களை மேய்க்க கொண்டு செல்வதும், நதியில் மெண் மணலில் சஞ்சரித்தும், மலைகளில் ஏறி இறங்கியும் தன் வயதொத்த தோழர்களுடன் அனுபவித்தார். சில சமயம் அனைவருமாக பாடுவர். ஒருவர் பாடுவதை மற்றவர் தொடர்ந்து அனுசரித்து பாடுவர். உடன் பாடுவது போல வண்டுகளின் ரீங்காரம் கேட்கும். காட்டு மலர்களை மாலையாகத் தொடுத்து அணிந்து கொள்வர். சங்கர்ஷணன்- பலராமனும் உடன் இருப்பான். கிளிகள் பேசுவதைப் போல பேசியும், அந்த வயதுக்குரிய சுதந்திரங்களும், கல்பனைகளுமாக நாட்கள் சென்றன.
சில சமயம் கல ஹம்ஸங்கள் கூவுவதைக் கேட்டு திருப்பி தாங்களும் அது போல கூவுவர். மயில்கள் ஆடுவது போல ஆடுவர். தான் சிரித்தும் மற்றவர்களை சிரிக்க வைத்தும் உல்லாசமாக இருந்தனர். வெகு தூரம் விலகிச் சென்று விட்ட பசுக்களை பலமாக போட்டி போட்டுக் கொண்டு அழைப்பர். யார் குரல் இடி ஓசை போல இருக்கிறது என்று நிரூபிக்க விரும்புவது போல. எந்த பறவையையும் விடவில்லை. சகோர, க்ரௌஞ்ச, சக்ரவாக, பாரத்வாஜ , மயில்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான குரல், நடை, இவற்றை கவனித்து பார்த்து தாங்களும் அதே போல கூவியும், நடந்தும், ஆடியும் பொழுது போக்கினர். புலி உறுமினாலோ, சிங்கம் கர்ஜித்தாலோ பயந்தது போல நடிப்பர்.
இடையிடையில் தங்கள் கூட்டத்தில் ஒருவன் களைத்தவன் போல இருந்தால் தூக்கிச் செல்வர். பசுக்களை மேய விட்டு, கைகளை கோத்துக் கொண்டு நடனமாடுவர். ஒருவரையொருவர் பரிகாசமோ, பாராட்டோ எதுவுமே ரசிக்கும் படியாகவே இருந்தன. அனைவரும் ஒன்றாகவே இருப்பதை விரும்பினர். விளையாட்டாக மல் யுத்தம் செய்வர். புல் தரையில் படுத்து ஓய்வெடுப்பர். அல்லது மரங்களின் நிழலில் படுத்து தூங்குவர். இருவராக கைகளில் க்ருஷ்ணனையோ, பலராமனையோ தாங்கிச் செல்வர். விசிறிகளால் வீசுவர். அது போன்ற பணிவிடைகள் செய்ய கொடுத்து வைத்தவர்கள். தூய நட்பே ப்ரதானமாக அவர்கள் இருவரையும் விட்டகலாமல் அன்பினால் திக்கு முக்காடச் செய்வர்.
இப்படி தன் ஸ்வரூபத்தை வெளிக் காட்டாமல் இடையர் குல சிறுவனாகவே அவர்களுடன் ஒன்றி கலந்து வாழ்ந்த பகவானின் பாத பல்லவங்கள், ரமா என்ற லக்ஷ்மி தேவி என்றும் பணிவிடைகள் செய்த பாதங்கள், கிடைத்ததால் அந்த கிராமத்து சிறுவர்கள் நட்பினால் தோன்றிய பற்றுதல், பாசம் இவையே ப்ரதானமாக பகவானின் அருகாமையையும் அவரது அருளையும் பெற்றனர்.
ஸ்ரீதாமா என்ற இடையச் சிறுவன், பலராமன், கேசவன் இவர்களுடைய சகா சுபலன், இவர்கள் க்ருஷ்ணனிடம் கேட்டனர். ராம, ராம மஹாபாஹோ, க்ருஷ்ணா! சிறிது தூரத்தில் பெரிய வனம் உள்ளது. அதில் தாள பழங்கள் பழுத்து தொங்குகின்றன. பறிப்பார் இன்றி தரையில் விழுந்து வீணாகின்றன. தேணுகன் என்ற ஒருவன் அதை தன் வசப் படுத்திக் கொண்டு யாரும் அருகில் வராமல் தடுக்கிறான். நீங்கள் துஷ்டர்களை அடக்க சாமர்த்யம் உள்ளவர்கள் தானே. கர- கழுதை ரூபத்தில் பயமுறுத்துகிறான். பலசாலி. தனக்கு சம மான அவன் பரிவாரங்களையும் உடன் வைத்திருக்கிறான். மனிதர்களை விழுங்குகிறான். அதனால் யாருமே அருகில் செல்வதில்லை. பசுக்களோ, பக்ஷிகளோ கூட அந்த இடத்தை தவிர்க்கின்றன. அந்த பழங்களை நாங்கள் ருசித்து பார்த்ததே இல்லை. வாசனையால் அறிவோம். விஷம் உள்ளதோ என் சந்தேகப் படுகிறோம்.
க்ருஷ்ணா! வந்து பார். அந்த வாசனையால் கவரப் பட்டே எப்படியிருக்கும் என்று அறிய ஆவல் கொண்டுள்ளோம். என்னதான் என்று பார்த்து விடலாமே. ராமா, உங்கள் இருவருக்கும் சம்மதமானால் அங்கு போய் பார்க்கலாம் என்றனர். இப்படி வினயமாக அவர்கள் கேட்டுக் கொண்டதும் சிரித்துக் கொண்டெ, பலராமனும் சம்மதித்து அந்த இடையர் குல தோழர்கள் புடை ஸூழ தாள வனம் சென்றனர்.
தன் புஜங்களால் மரத்தை உலுக்கி பழங்களை பலராமன் பூமியில் விழச் செய்தார். யானை தன் துதிக்கையால் ஆட்டியது போல மரம் ஆடியது. சத்தம் கேட்டு கழுதை உருவத்தில் இருந்த அசுரன் வேகமாக வந்தான். அவனுடைய காலடியால் பூமி நடுங்கியது. மரங்கள் ஆடின. பலமாக கோரமான குரலில் கத்திக் கொண்டு அருகில் வந்தான். அருகில் வரவும் பலராமன் அவனை தூக்கிச் சுழற்றி வீசினார். வெகு தூரத்தில் போய் விழுந்த அசுரன் அலறினான். அவனைச் சார்ந்தவர்களும் தாக்க வர பலராமன் ஒவ்வொருவரையும் எதிர்த்து போராடி துரத்தி விட்டான். சிலர் ஓடித் தப்ப முயன்றனர். அவர்களும் வெகு தூரம் ஓடி விழுந்தனர். பெரும் புயல் வீசி ஓய்ந்தது போல இருந்தது. தாள மரங்கள் அந்த புயலில் அலை பாய்ந்து பழங்களை உதிர்த்து விட்டன போல பழங்கள் தரையில் சிதறின.
ஜகதீஸ்வரனுக்கு இது பெரிய காரியமா? அனந்தனான பகவானுக்கு இந்த செயல்கள் இயல்பாக வருவன. எப்படி துணி நெய்பவன், ஊடும் பாவுமாக நூலைக் கொண்டு நெய்கிறானோ அது போல உலகை படைத்தவன் அவனே அல்லவோ. தேணுகனின் உறவினரும் ஸ்ரீ க்ருஷ்ண, ராமனின் பாதங்களில் பணிந்தனர். கண் முன்னே அவர்கள் கூட்டத்தினர் பட்ட பாடு, வேகமாக அந்த இடத்தை விட்டகன்றனர்.
தைத்யர்கள் அகன்றதும் அந்த பூமியே சாந்தமாகி விட்டது. வானத்தில் தெரியும் தாரகைகள் போல தரையில் தாள பழங்கள் கிடந்தன. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். அருகில் வசித்த மனிதர்களும் வந்து பழங்களை எடுத்துச் சென்றனர். இதுவரை அசுரனிடம் பயத்தால் நெருங்காமல் இருந்தவர்கள். பசுக்களும் வந்து மேய்ந்தன. தேணுகன்- பசுவின் ஒரு பெயர், இங்கு அசுரன் ஹதமான பின் பசுக்கள் அருகில் வந்தன.
தோழர்களும், பலராமனும், க்ருஷ்ணனுடன் வ்ரஜ தேசம் வந்து சேர்ந்தனர்.
பசுக்கள் கிளப்பிய புழுதியால் மண்டிய தேகம், தலையில் சூடிய மயில் இறகு, காட்டுப் பூக்களைத் தொடுத்து கட்டிய மாலை, தன் இனிய பார்வை, மற்றும் மென் சிரிப்பினாலேயே அவர்களை கட்டிப் போட்டவராக , வேணுவை வாசித்தபடி முன் சென்றார். அதைத் தொடர்ந்து அவர்கள் பாடியும், ஆடியும் வருவதைக் கண்டு மற்ற இடையர் குல பெண்களும் பெரியவர்களும் அதிசயித்தனர்.
முகுந்தனை கண்களாலேயே பருகுபவர்கள் போல பார்த்தனர். முகுந்தனின் முகமே அவர்கள் தாபத்தை தீர்க்க போதுமானதாக இருந்தது. அவர்களையும் நோக்கி புன்னகையை வீசி விட்டு, தன் இருப்பிடம் சென்றான். அந்த அளவு தங்களை நோக்கி புன்னகையே தங்களுக்கு கிடைத்த வெகுமானமாக எண்ணி, வெட்கத்துடனும், வினயத்துடனும், தொடர்ந்து நோக்கியபடி இருந்தனர்.
யசோதையும், ரோஹிணியும் தங்கள் புத்ர வாத்சல்யத்துடன் அந்தந்த காலங்களில் ஏற்ற ஆசிகளை வழங்கினர். வெகு தூரம் அத்வான காட்டில் அலைந்து விட்டு வந்தவர்கள் களைத்திருப்பர்கள் என்று பரிவுடன் அழைத்துச் சென்று நீராட்டி, புத்தாடைகள், அணிகள் அணிவித்து வாசனை திரவியங்கள் பூசி களைப்பை நீக்கினர். தாய்மார்கள் கொண்டு வந்து கொடுத்த அன்னத்தை ருசித்து சாப்பிட்டனர். அவர்கள் இருவரும் அருகில் அமர்ந்து விசிறியும் உபசரித்தும் விருப்பத்துடன் உண்ண வைத்தனர். பின் உயர்ந்த படுக்கையில் படுத்து உறங்கினர்.
இவ்வாறு பகவான் க்ருஷ்ணன் வ்ருந்தாவனசாரியாக, ஒரு சமயம் பலராமன் இன்றி தான் மட்டுமாக மாடு மேய்க்கும் மற்றவர்களுடன் காலிந்தி நதிக் கரைக்குச் சென்றார். அங்கு பசுக்களும், சிறுவர்களும், பருவ கால வெப்பத்தினால் தாகம் எடுக்க காலிந்தி நதி நீரை குடித்தனர். அது விஷமானது என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை. கரையிலேயே அவர்கள் நீரில் மயங்கி விழுந்தனர். உயிரற்றவர்கள் போல கிடந்தவர்களைப் குளத்தின் ஆழத்திலிருந்து மீட்டுக் கொண்டு வந்து, தன் அம்ருத மயமான பார்வையாலேயே உயிர்ப்பித்தார். யோகேஸ்வரன் க்ருஷ்ணனால் நினைவு கிடைக்கப் பெற்றவர்கள் தங்களையே ஒருவருக்கொருவர் பார்த்து அதிசயித்தனர். தாங்கள் விஷ ஜலத்தை குடித்ததையும் மயங்கி விழுந்ததையும் எண்ணிப் பார்த்தனர். கோவிந்தனின் அனுக்ரஹத்தால் புனர் ஜன்மம் பெற்றோம் என மகிழ்ந்தனர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவத த்தில், பத்தாவது ஸ்கந்தம், முதல் பகுதியில், தேணுக வதம் என்ற பதினைந்தாவது அத்யாயம்.)
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய
அத்யாயம்-16
ஸ்ரீ சுகர் சொன்னார்: சற்று நேரம் காளிந்தி நதியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த க்ருஷ்ணன், அதில் குடியிருந்த கொடிய விஷ நாகம்- அதை வெளிக் கொணர்ந்தார்.
அரசன் வினவினான்: எப்படி, ஜலத்தின் அடியில் ஆழத்தில் கிடந்த சர்ப்பத்தை பகவான் தூக்க முடிந்தது? பல யுக காலமாக அங்கு வசித்து வந்ததாக கேள்வி. அதைப் பற்றிச் சொல்லுங்கள். ப்ரும்மன்! அந்த இடையர் சிறுவர்களைக் காப்பாற்ற அந்த விஷ ஜலத்தில் தானே இறங்கினாரா?
ஸ்ரீ சுகர் சொன்னார்: காளிந்தி நதியின் கரையில் ஒரு குளம் ஏதோ விஷமுடைய அக்னியால் உண்டாகி விட்டது. அதன் மேல் பறவைகள் பறப்பதில்லை. அதன் மேல் பறந்தாலே அந்த விஷத்தின் தாக்குதலால் விழுந்து விடும். காட்டு மிருகங்கள் அதன் அருகில் செல்வதில்லை. அந்த விஷ வாயு மேலே பட்டாலே அவை மடிந்தன. எனவே விலங்குகள் தள்ளியே இருந்தன. வெகு காலமாக வசிக்கும் காட்டு மிருகங்களுக்கு அது தெரிந்திருந்தது. துஷ்டன் யாரானாலும் அடக்கவே எடுத்த அவதாரம் ஆனதால் க்ருஷ்ணன் சண்ட வேகமாக வீசிய விஷ வாயுவை கணித்துக் கொண்டு, அருகில் இருந்த மிகப் பெரிய மரத்தின் உச்சியில் ஏறி நீரினுள் தடாலென்று குதித்தார்.
சர்ப்பஹ்ரதம், சர்ப்பங்கள் இருந்த குளம், புருஷ சாரமான க்ருஷ்ணனின் உடல் பாரத்தால் தாங்க முடியாத அவஸ்தையும் சேர, ரோஷத்துடன் அலை பாய்ந்தன. க்ருஷ்ணனை சுற்றி வளைத்து விஷ கஷாயமாக இருந்த ஜலத்தில் வேகமாக பரவிய அலைகளால் அடித்தன. அனந்த அளவில்லாத பலசாலியான பகவானுக்கு அது ஒரு பொருட்டா? தன் புஜ பலத்தால், யானையின் துதிக்கைப் போல மகா பலத்துடன் அதிலிருந்து விடுவித்துக் கொண்டு நின்றவரை கண்களே காதுகளாக – சக்ஷு:ஸ்ரவா: – சர்ப்பத்தின் பெயர்- பொறுக்க மாட்டாமல் மேன் மேலும் தாக்கின.
ஸ்ரீ க்ருஷ்ணன் தன் சுய ரூபத்தை எடுத்துக் கொண்டார். கண்களுக்கு விருந்தான சுகுமாரனான ரூபம், கனமான குழல் கற்றைகள் ஸ்ரீவத்ஸமும், பீதாம்பரமும், மென் முறுவலுடன் கூடிய வதனம், பயமின்றி அந்த சர்ப்பங்களோடு விளையாடுவது போல ஆடிக் கொண்டிருந்தவரை அவைகள் மார்பிலேயே கொத்தின. குளத்தில் குதித்தவன் வெகு நேரமாக காணவில்லை, எட்டிப் பார்க்க சர்ப்பங்கள் சூழ்ந்திருப்பதைக் கண்ட பிரிய சகாக்கள், மிகவும் வருத்தத்துடன் செய்வதறியாமல் பூமியில் விழுந்து அரற்றினர். துக்கம், பயம், சோகம், எதை செய்தால் சரி என்று தெரியாத கையறு நிலை, பசுக்களும், காளைகளும் கன்றுகளும் கூட ஏதோ அசந்தர்பம், கஷ்டம் என்ற வரை உணர்ந்து அழுவது போல ஓலமிட்டன.
வ்ரஜ தேசத்தில் அபசகுனங்கள் தென் பட்டன. மகா பயங்கரமான நிமித்தங்கள், எதோ பயங்கரமாக விழுந்தது போன்ற தோற்றம், அவர்கள் க்ருஷ்ணனிடமே மனதை செலுத்தியவர்கள், அவரையே ப்ராணனாக மதித்தவர்கள், துக்கமும் சோகமும் பயமும் ஆட்டுவிக்க மேய்ச்சல் நிலத்தை நோக்கி ஓடி வந்தனர். பலராமன் உடன் செல்லவில்லை என்ற செய்தி கவலையை அதிகமாக்கியது. குழந்தைகளிலிருந்து வ்ருத்தர்கள் பெண்கள் அனைவரும், அரசனே! அவர்கள் பசுவே வாழ்வு என்று இருப்பவர்கள் கவலை கொள்வதில் வியப்பென்ன. தாங்களாக காலிந்தி நதியை நோக்கி ஓடி வரலாயினர். விஷயம் அறிந்த பலராமன் தன் தம்பியின் ஆற்றலை அறிந்தவன் ஆனதால் பெரிதாக வருந்தவில்லை. எதுவும் சொல்லாமல் உடன் வந்தான்
காலடிகளைக் கொண்டு தேடிக் கொண்டே வந்தவர்களை, வழியிலேயே சந்தித்த சிறுவர்கள், அருகில் வந்தனர். மற்ற சிறுவர்களும் பசுக்களும் ஓலமிட்டபடி குளத்தை சுற்றியே தவிப்பதைக் கண்டனர். இளம் பெண்கள் க்ருஷ்ணனிடம் மனதைச் செலுத்தி மனதார பிரியமாக இருந்தவர்கள், சர்ப்பங்கள் நிறைந்த குளத்தில் இறங்கி விட்டிருக்கிறான் என்ற செய்தியை தாங்கவே முடியாதவர்களாக தவித்தனர். உலகமே சூன்யமாக இருப்பதாக உணர்ந்தனர். க்ருஷ்ணனின் தாயாரை சமாதானப் படுத்த மூத்த ஸ்த்ரீகள் அவள் அருகிலேயே இருந்தனர். என்ன கெட்ட செய்தி வருமோ என்ற பீதியே எங்கும் நிறைந்திருந்தது. நந்தன் முதலான வ்ரஜ தேச வாசிகள் அனைவரும் தாங்களும் குளத்தில் இறங்க முயற்சித்ததை பலராமன் தடுத்தான்.
க்ருஷ்ணனை உள்ளும் புறமும் அறிந்தவன் ஆதலால் அவன் பயப்படாமல் காத்திருந்தான். இவ்வாறு கோகுல வாசிகள் அனைவரும் திரண்டு நதிக் கரையில் கூடி விட்டதையறித்த பகவான், தனக்காக வந்துள்ள ஸ்த்ரீ ஜனங்கள், குமாரர்கள், பெரியவர்கள் தனக்காக மிகுந்த துக்கத்துடன் இருப்பதையறிந்து தன் மனித தேகத்துடன் அந்த சர்ப்பம் தன் வால் நுனிகளால் கட்டிய தளையை அறுத்துக் கொண்டு மேலே எழுந்து வந்தார். புஜங்கங்கள்-சர்ப்பங்கள், தங்கள் படத்தை விரித்துக் கொண்டு சீறியபடி தொடர்ந்து மேலெழுந்தன. அவைகளில் சீற்றமும், முகத்திலிருந்து வெளிப்பட்ட உஷ்ணமான விஷ வாயுவும், அதற்கிடையில் தெரிந்த ஸ்ரீ ஹரி முகத்தையும் கண்டவர்கள் அலறினர். சர்ப்பங்கள் தங்கள் நாக்குகளால் நக்கின. கண்கள் கோரமான விஷத்தை தெளிக்கும் அக்னி குண்டங்கள் போல இருந்தன. கருடன் பாம்புகளுடன் விளையாடுவது போல பகவானின் கால்கள் அவைகளின் தலை மேல் சரியான சமயத்திற்காக காத்திருப்பது போல க்ருஷ்ணனின் கால்கள் வெளியில் தெரிந்தன.
ஒவ்வொரு தலையிலும் ஒரு முறை தன் கால்களால் அழுத்தியும், அடுத்து தலை தூக்கிய அடுத்த சர்ப்பத்தின் மேல் அழுத்தியும் நடனமாடுவது போல ஸ்ரீ ஹரி வதைக்கவும், அதன் தலையில் இருந்த ரத்னங்கள், உயர் மணிகளின் ப்ரகாசத்தில் ஸ்ரீ ஹரியின் பாதங்கள் சிவந்து தெரிந்தன. தனக்குள் தீர்மானித்துக் கொண்டது போல அந்த பாம்புகளின் சிரஸில் மாற்றி மாறி கால்களை வைத்து நடனமாடியவரைக் காண கந்தர்வ சித்த சாரணர்கள், தேவர்கள், தேவ லோகத்து பெண்களும், அந்த நடனத்துக்கு இசைய ம்ருதங்க பணவ வாத்யங்களை இசைக்க, வந்து கூடினர். பலர் பாடினர். புஷ்பங்களை உபஹாரமாக கொண்டு வந்தனர். திடுமென அந்த இடமே கண் கொள்ளா காட்சியாயிற்று.
சர்ப்பத்தின் எந்த தலை வணங்கவில்லையோ அதன் மேல் ஸ்ரீ ஹரி தன் பாதத்தால் அழுத்தினார். அதுவோ நூற்று ஒரு தலைகள் கொண்டது. அந்தந்த தலைகளின் மேல் பாதத்தை வைத்து ஆடிய சமயம் அதைத் தாங்க முடியாமல் அவை பெரு மூச்சால் தங்கள் சிரமத்தை வெளிப் படுத்தின. விஷ வாயு சிறிது சிறிதாக வெளிப்பட்டு அதன் வீர்யம் குறைய, வாய் களில் இருந்து நிணமும் ரத்தமும் பெருக உயிருக்கு மன்றாடிய மஹா சர்ப்பம் தவித்தது. அதன் கண்களிலிருந்து விஷம் வெளிவந்து தலையில் பரவின. வணங்காத தலை ஸ்ரீஹரியின் காலால் மிதிபட்டு மூச்சு விட திணறியது. வணங்காத சர்ப்பத்தின் தலையை வணங்கச் செய்து நடனமாடிய பகவான் புராண புருஷன் புஷ்பங்களால் அர்ச்சிக்கப் பட்டவன் போல இருந்தான்.
விசித்ரமான அந்த தாண்டவ நடனம். சர்ப்பத்தின் குடை போன்ற படங்கள் ரத்தம் வழிந்து, உடல் வாடியது. அப்பொழுது தான் அந்த சர்ப்பத்திற்கு, சரா சர குருவான புராண புருஷன் ஸ்ரீமன் நாராயண ஸ்மரணம் வரவும் மனதார வேண்டியது. .
உலகையே தன் கர்பத்தில் தாங்கிய பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனின் பாரத்தால் நாலாபுறமும் வதைக்கப்பட்ட சர்ப்ப சரீரம், எந்த நிமிஷமும் விழுந்து விடும் என்ற நிலையில் அதன் பத்னிகள் வந்தனர். மிகுந்த வருத்தத்துடன், தங்கள் கேசம் கலைய பூஷணங்கள் அறுந்து தொங்க வேகமாக வந்தனர். தங்கள் குழந்தைகளை முன் நிறுத்திக் கொண்டு பகவானை பிரார்த்தித்தனர். உடல் பூமியில் பட விழுந்து வணங்கினர். கைகளை கூப்பி அஞ்சலி செய்தபடி அந்த சாதுவான பெண் நாகங்கள், தங்கள் கணவனின் உயிரைக் காக்க பகவானை சரணமடைந்தனர்.
நாகபத்னிகள் சொன்னார்கள்: பகவானே! தவறு செய்தவனுக்கு தண்டம் அளிப்பது நியாயமே. உன் அவதாரமே துஷ்டர்களை அடக்க என்று அறிவோம். எதிரியின் மகன் என்றாலும் அவன் தவற்றை நீக்கி நல்வழி படுத்த வேண்டும் என்பதே உன் கொள்கை. யாரானாலும் உனக்கு சமமே.
இதுவும் உனது அனுக்ரஹமே. தவறு செய்தவன் அதற்கான தண்டனை பெற்று அனுபவிப்பது அவன் நன்மைக்கே. அதன் தவற்றின் பலன்களிலிருந்து விடுபடுகிறான். இந்த தந்தசூகன்- பல்லில் விஷம் கொண்ட இந்த பிறவிகளுக்கு, உன் கோபமும் அனுக்ரஹமே. நாங்கள் இந்த தண்டனையை ஏற்கிறோம். (கால்கள் இல்லாததால் நாகங்கள் பல்லில் விஷத்தை தற்காப்புக்காக பெற்றதாக முன் அத்யாயங்களில் சொல்லப் பட்டுள்ளது)
இவன் முன் காலத்தில் நிறைய தவம் செய்திருக்க வேண்டும். அந்த நல்வினையின் பலன் தான் இன்று உன் கையால் அடக்கப் பட்டான். தர்மமோ, அல்லது தர்ம வழியில் இருப்பவர்களிடம் உள்ள தயையோ, எது செய்தாலும் பொதுவாக ஜீவன்களுக்கு நலம் பயப்பதாகவே அமைகின்றன. அனைத்து உயிரினங்களிலும் இருப்பவன் நீயே. நீ மகிழ்ந்தால் உலகமே மகிழும்.
தேவ! என்ன பாக்யம் செய்ததன் பலனோ, இன்று தங்கள் பாதங்கள் இவன் சிரசில் பட்டு, பாத தூளிகளால் முழுக்காட்டப் பட்டுள்ளான். அதை விரும்பி எவ்வளவு பேர் தவம் செய்கிறார்கள். ஸ்ரீ தேவி கைகளால் வருடிய திவ்ய பாதங்கள், அதில் தங்கள் தலையை வைத்து தன்யனாகவே, ஆகாரத்தைத் துறந்து, தூங்காமல் இருந்து, விரதங்களை அனுசரித்து என்று பாடு படும் யோகிகளுக்கு கூட எளிதில் கிடைக்காத பாதம்.
அவர்கள் வேண்டுவதே இது தான். எங்களுக்கு சுவர்கம் வேண்டாம். சார்வபௌம என்ற சக்ரவர்த்தி என்ற பதவிகள் வேண்டாம். மற்றவர்கள் இடையில் உயர்ந்த பதவி வேண்டாம். யோக சித்தியும் வேண்டாம், பிறவியற்ற மோக்ஷமும் வேண்டாம் என்று அனைத்தையும் துச்சமாக நினைக்கும் மனப் பக்குவம் பெறுகிறார்கள்.
அதனால் நாதனே! க்ரோதம் உடையவனானாலும், இந்த நாக பிறவிகளான எங்கள் தலைவன். சம்சார சக்ரத்தில் சுழலும் எங்கள் தேவைகள் நிறைவேற அனுக்ரஹிக்க வேண்டும். சமஸ்த விபவங்களும் நாங்கள் உன் அருளால் பெற வேண்டும்.
நமஸ்துப்யம் பகவதே புருஷாய மஹாத்மனே| பூதாவாசாய பூதாய பராய பரமாத்மனே||ஞான விக்ஞான நிதயே ப்ரும்மணே அணந்த சக்தயே |அகுணாய அவிகாராய நமஸ்தே ப்ராக்ருதாய ச ||
காலாய கால நாபாய காலாவயவ ஸாக்ஷிணே |விஸ்வாய ததுபத்ரஷ்டே தத்கர்த்ரே விஸ்வ ஹேதவே || விஸ்வத்தை படைத்தவன். அதன் பின் அதன் செயல்களையும் நீயே வழி நடத்துகிறாய். அழிந்தாலும் பின் தோன்றவும் நீயே காரணமாக இருக்கிறாய்.
பிறந்த நிமிடத்திலிருந்து ப்ராணிகளின் புலன்கள் வேலை செய்ய ப்ராணன், மனம், புத்தி இவைகளில் இருந்து இயக்குபவனே! முக்குணங்களும், அபிமானமும் – அஹங்காரம் அல்லது தன்னியல்பு- உன் ஆத்மாவின் அம்சமாக பிறவிகளின் உள்ளிருந்து அனுபவங்கள் அடையச் செய்கிறாய்.
அனந்தனான உனக்கு நமஸ்காரம். சூக்ஷ்மமானவன், வெளிப்பட தெரியாதவன், அனைத்தும் அறிந்தவன், உன் இருப்பை நிரூபிக்க பலவிதமான வாதங்கள் செய்வர். அந்த வாசகமும், அதைச் சொல்லவே சக்தி கொடுப்பவனும் நீயே.
நம:ப்ரமாண மூலாய, கவயே, ஸாஸ்த்ர யோனயே, ப்ரவ்ருத்தாய, நிவ்ருத்தாய, நிகமாய நமோ நம||
நம: க்ருஷ்ணாய ராமாய வசுதேவ சுதாய ச | ப்ரத்யும்னாய அனிருத்தாய சாத்வதாம் பதயே நம: ||
உன் விளையாட்டுகளை யாரால் அறிய முடியும். யாரானாலும் அவர்கள் எடுத்த காரியம், செய்யும் செயல்கள் நிறைவடைய நீயே உதவுகிறாய். ஹ்ருஷீகேசா! நமோ அஸ்து.
பராவர கதியை அறிந்தவன். அர்வாத்யக்ஷன். விஸ்வத்தின் இருப்பும் இல்லாமையும் அதைக் காப்பதுமாக இருக்கும் உனக்கு நமஸ்காரம். ப்ரபோ! எங்களுக்கு ப்ரதி போதனம்- நல்லறிவை தா. நாங்களும் உன் தனயர்களே. மூவுலகிலும் அமைதியான, அமைதியற்ற, மூடர்களாக, என்று பிறவிகள் பல. அதில் அமைதியாக இருப்பவர்களை நீ விரும்புவதும் நியாயமே. நடுநிலையில் இருந்து தர்மத்திற்கு விரோதம் இல்லாமல் காக்கிறாய். எங்கள் தலைவனின் அபராதங்களை மன்னித்து விடு. உன் ப்ரஜைகளில் அவனும் அடக்கம் தானே. சாந்தமானவனே! மூடன்- அறிவற்றவன் என்றாலும் உன் மகன். பகவானே, இவன் ப்ராணன் போனால் இவன் மனைவிகள் நாங்கள், எங்களுக்கு இவனே தெய்வம். அதனால் இவன் ப்ராணனை வேண்டுகிறோம். கிங்கரிகளான எங்களுக்கு அருள் செய். உன் கட்டளைப்படி சிரத்தையுடன் நடந்து, பயமின்றி நாங்கள் வாழ அருள்வாயாக.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இப்படி நாகபத்னிகள் இறைஞ்சி வேண்டிக் கொண்டவுடன் தலை உடைந்து மூர்ச்சித்து கிடந்த நாகராஜனை உயிப்பித்தார். தன் கால்களை விலக்கிக் கொண்டார். காலியனும் திரும்பக் கிடைத்த தன் ப்ராணன், இந்திரியங்கள் இவைகளுடன் மெள்ள உணர்வு பெற்று க்ருஷ்ணனை வணங்கினான்.
பகவானே, எங்களை தாமச குணம் மேலோங்கியவர்களாகப் படைத்தாய். அதனால் துஷ்டர்கள் என்று உலகில் தூற்றப் படுகிறோம். பெரும் கோபமும் எங்கள் குணம். இது பிறவியுடன் வந்தது. அதை கை விட நினத்தாலும் முடியாது. நாதா! உலகில் நல்லதும் தீயதும் இணைந்தே இருக்கும்படி தானே படைத்திருக்கிறாய். நீ ஸ்ருஷ்டி செய்த இந்த உலகில் பல விதமான யோனிகள். பலவிதமான பிறவிகள். ஒவ்வொன்றும் ஒரு விதமான குண விசேஷங்களுடன் உள்ளன. எங்களை நீதான் சர்ப்பமாக ஊர்வன வாக படைத்தாய். எங்கள் தற்காப்புக்காகவே கடும் கோபம் எங்கள் குணமாக அவசியமாயிற்று. அதை விட முடியாது. ஜகதீஸ்வரா! விஸ்வ ஸ்ருஷ்டிக்கே காரணமானவனே! அனுக்ரஹமோ, நிக்ரஹமோ உன் விருப்பம். எது சரியோ அதையே செய்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஒரு விசேஷமான காரியத்தை முன்னிட்டு மனிதனாக அவதரித்திருந்த பகவான், பதில் சொன்னார். உன் குணம் அப்படியே இருக்கும். இந்த இடத்தில் இருக்காதே. உன் குடும்பத்தோடு, மனைவி மக்களோடு சமுத்திரம் செல்வாய். இந்த நதி பசுக்கள் குடிக்கவும், இங்கு வசிக்கும் மனிதர்களுக்கும் தேவையாக உள்ளது. என்னை நினைப்பவர்களை துன்புறுத்தாதே. இந்த ஜலத்தில் மனிதர்கள் தர்ப்பணம் செய்து நீராடும் பொழுது உன்னை நினைத்தால் சர்வ பாபங்களிலிருந்தும் விடுபடுவார்கள். ரமணகம் என்ற தீவு, எந்த கருடனின் பயத்தால் இங்கு அடைக்கலமாக வந்தாயோ, அவன் உன்னை துன்புறுத்தாமல் இருக்கச் செய்கிறேன்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு சொல்லி பகவான், க்ருஷ்ணன் அனுக்ரஹம் செய்யவும், அவரை பூஜித்து, நாக பத்னிகள் தங்களிடம் இருந்த ரத்னங்களை அவருக்கு அளித்தனர். அத்புதமான பூஷணங்களையும் சமர்ப்பித்தனர். உத்பல மாலைகள், வாசனைப் பொருட்கள், இவைகளையும் கொடுத்தார்கள். ஜகன்நாதனை பூஜித்து கருடத்வஜனான அவர் அருள் பெற்று கருடனிடம் பயமும் அகன்றதால் மகிழ்ச்சியுடன் ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து விடை பெற்றனர். காளியன் தன் மனைவி, புதல்வர்கள், மற்றும் உறவினர்களோடு, யமுனை நதியை-காலிந்தி, விட்டு வெளியேறியதும், தண்ணீர் நிர்மலமாக ஆயிற்று.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், முதல் பகுதியில், காளிய மோக்ஷணம் என்ற பதினாராவது அத்யாயம்)
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய
அத்யாயம்-17
அரசன் வினவினான்: நாகங்களின் இருப்பிடமான ரமணகம் என்பதை விட்டு காளியன் ஏன் வந்தான்? சுபர்ணனுக்கும் அவனுக்கும் என்ன தகராறு? அந்த இடத்தை விட்டே ஓடி வரும் அளவு த்வேஷமா?
ஸ்ரீ சுகர் சொன்னார்: வெகு காலமாக நாகங்கள் கருடன் முதலிய பறவைகளுக்கு மாதம் தோறும் உபஹாரம் -அன்பளிப்பு என்று கொடுத்து வந்தனர். தங்களால் இயன்றதை நாகங்கள் அந்தந்த பருவங்களில் தங்களை பாதுகாக்க என்று சுபர்ணனுக்கு கொடுத்தன. மஹாத்மா சுபர்ணனும் நாகங்களின் பாது காப்பை தன் பொறுப்பாக செய்து வந்தான். விஷ வீர்யம் அதிகமாக ஆக காளியன் மதம் கொண்டான். கத்ருவின் மகன் அவன். தெரிந்தே கருடனுக்கு கொடுக்காமல் தானே சாப்பிட்டான். பகவானுக்கு பிரியமான கருடன் அதையறிந்து கோபித்தான். வேகமாக வந்து காளியனைத் தாக்கினான். அதற்கு பதிலடி கொடுக்க தன் எண்ணற்ற தலைகளால் தடுத்து, தன் ஆயுதமான பற்களால் கடித்த காளியன், கண்கள் சிவக்க, நாக்கினால் விஷத்தை பெருக்கினான். தார்க்ஷ்யபுத்ரன், கருடன் அதை எதிர் கொண்டு, மிக வேகமாக தன் இடது இறக்கையால் அடித்தான். பகவானின் வாகனம் என்ற பெருமை தொனிக்க, பொன் நிறத்தில் ப்ரகாசித்த இறக்கைகள்.
சுபர்ணனின் இறக்கைகளால் அடிபட்ட காளியன், நிலை தடுமாறினான். இந்த குளத்தில் தஞ்சம் அடைந்தான். இந்த இடத்திற்கு கருடன் வர மாட்டான் என்பதால் கவலையின்றி இருந்தான். ஒரு சமயம் நீர் வாழ் ஜந்துக்களின் தலைவனான ஒன்றை சௌபரி என்ற முனிவர் தடுத்தும் கேட்காமல் அபஹரித்துச் சென்றான். தனக்கு பசி என்றான். மீன் கூட்டங்கள் திகைத்து பரிதாபமாக தங்கள் தலைவனை கருடன் அபகரித்ததால் வருந்துவதை பார்த்த சௌபரி என்ற முனிவர், அவர்களின் நன்மைக்காக கருடனை அங்கு வர விடாமல் சபித்தார். இங்கு வந்து இந்த மீன்களை துன்புறுத்தினால், உன் உயிர் போகும் என்றார். அதை காளியன் அறிந்திருந்தான். அதனால் தான் இந்த இடத்துக்கு வந்தவன், ஸ்ரீ க்ருஷ்ணனால் அடக்கப் பட்டான்.
க்ருஷ்ணன் அந்த குளத்திலிருந்து வெளியில் வந்ததும், திவ்யமான வாசனை மிகுந்த மாலைகள் அணிந்து, மஹாமணிகள் உடல் முழுவதும் ப்ரகாசிக்க, நல்ல ஆடையும், பொன்னால் வேலைபாடுகள் செய்த மேலாடையுடன் வந்தவனைப் பார்த்து, அனைவரும் அப்பொழுதான் உயிர் வந்தவர்கள் போல ஒரே சமயத்தில் எழுந்தனர். ஆனந்தத்தால் திக்கு முக்காடினர். ஓடி அருகில் வந்தனர். யசோதா, நந்தன், கோபிகள், கோபர்கள், கௌரவ ராஜனே! ஸ்ரீ க்ருஷ்ணனின் அருகில் சூழ்ந்து கொண்டு நீர் நிறைந்த கண்களால் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
பலராமன் அச்யுதனை ஆலிங்கணம் செய்து விஷயம் அறிந்தவனாக சிரித்தான். மரங்கள் கூட சந்தோஷமாக கிளைகளை அசைத்தன. பசுக்கள், ரிஷபங்கள், கன்றுகளுடன் மிக்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. நந்தனை அந்தணர்கள் குடும்பத்துடன் வந்து சந்தித்தனர். குரு ஜனங்களும் வந்து ஆசீர்வதித்தனர். நல்லவேளை, காளியனிடம் இருந்த உன் மகன் பிழைத்து வந்தான் என்றனர். ஸ்ரீ க்ருஷ்ணன் நலமாக வந்ததை ஒட்டி பூஜைகள்செய். தெய்வங்கள் ஆசிர்வாதம் செய்து உன் மகனை காப்பாற்றியிருக்கின்றன . அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் நிலைமையின் கடுமையை உணர்ந்து பிழைத்தான் என்று ஆசுவாசம் அடைந்தனர்.
நந்தன் சந்தோஷமாக பசுக்கள், பொருள் என்று தேவையானவர்களுக்கு தானம் செய்தான்.
யசோதா பிழைத்ததே புனர் ஜன்மம் என்று கண்களில் கண்ணீர் வழிய மகனை அணைத்து மடியில் இருத்திக் கொண்டாள்.
அன்று இரவு, நல்ல பசி, தாகம், பகலில் நடந்தவைகளால் உடல் வருத்தம், இவற்றுடன் யாரும் கவனியாமல் விட்டதால் யமுனை நதிக் கரையில் பசுக்கள் தூங்கி விட்டன. சுசி வனம் என்ற இடத்தில் தாவாக்னி- கோடையில் தோன்றும் நெருப்பு- அந்த வ்ரஜ கூட்டத்தை நாலா புறமும் சூழ்ந்து கொண்டன. இரவு நேரம். அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கையில் பசுக்களை வாட்டின. திடுமென வந்த ஆபத்தால் நடுங்கிய வ்ரஜ தேச வாசிகள், ஸ்ரீ க்ருஷ்ணனை தஞ்சம் அடைந்தனர். இதற்குள் இவன் சாதாரண மனிதன் அல்ல- ஈஸ்வரனின்மாயையே மனித உருவில் வந்துள்ளான். – என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டு விட்டனர்.
க்ருஷ்ணா, க்ருஷ்ணா, ஹே ராமா, பலசாலியே, இதோ பாருங்கள், கோரமான தீ விபத்து. நம் இடையர்களின் சொத்தான பசுக்களை சூழ்ந்துள்ளது என்று அலறினர். ப்ரபோ! மிக் கடுமையான காளிந்தி விஷத்திலிருந்து காப்பாற்றினாய். அதற்குள் அடுத்த விபத்து. நாங்கள் யாரிடம் போவோம். நீங்கள் இங்கு இருப்பதால் பயமின்றி வாழ்கிறோம். இவ்வாறு தன்னைச் சார்ந்தவர்கள், வருந்துவதை கண்ட ஜகதீஸ்வரன், அக்னியை அணைக்க ஓடி வந்தான். அவசரம்- அதனால், தானே அந்த அக்னியை விழுங்கி விட்டான். அவன் அனந்தன், அந்த சக்தி உள்ளவன் தானே.
(இதுவரை ஸ்ரீ மத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தத்தின் முதல் பாகத்தில் தாவாக்னி மோசனம் என்ற பதினேழாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்-25
அத்யாயம்-18
ஸ்ரீசுகர் சொன்னார்: இந்த நிகழ்ச்சிக்குப் பின் உறவினர்களும், ஊர் ஜனங்களும்,நண்பர்களும் சதா ஸ்ரீ க்ருஷ்ணன் அருகிலேயே இருக்கலாயினர். அவர்களும் மகிழ்ந்து பின் தொடர்ந்தனர், ஸ்ரீ க்ருஷ்ணனும் அவர்களுடன் மகிழ்ச்சியுடன் நடந்து விரஜ தேசத்தின் கோகுலத்துக்கு வந்தனர். பசுக்களும் கன்றுகளும் நிறைந்த இடம் அது. தன்னை இடைய சிறுவனாக காட்டிக் கொண்டு, அரிய செயல்களை அனாயாசமாக செய்த ஸ்ரீ க்ருஷ்ணன் அருகில் இருப்பதையே அனைவரும் விரும்பினர்.
வேணிற்காலம் மிக கடுமையாக தகித்தது. உயிரினங்கள் தவித்தன. பலராமனும் க்ருஷ்ணனும் இருக்குமிடம் அவர்கள் குணத்தால் வசந்த காலம் என்று மற்றவர்கள் அவர்களை சூழ்ந்து இருப்பதையே விரும்பினர். குளுமையான, இடங்களைத் தேடிச் சென்றனர். அருவிகள் இருந்த இடத்தில் நீரின் ஓசையே ரமணீயமாக இருக்க, எப்பொழுதும் குளுமையாக இருக்கும்படி இலைகளும் கிளைகளும் நிரம்பிய மரங்கள் நிழல் தர, அவைகளைச் சுற்றி படர்ந்திருந்த கொடிகள், மரங்களையே மறைக்கும் அளவு படர்ந்து பசுமையாகவே காட்சியளிக்க, நதியின், மற்றும் குளங்களின் அலைகள் காற்றுடன் சேர்ந்து மென்மையாக நீரை தெளிக்க, அந்த காற்று வெண் தாமரைகள், செந்நிற பத்மங்கள் உத்பலங்கள் இவைகளின் மகரந்தங்களை கொண்டு வந்து வீசி சிதற அடித்ததால் எங்கும் சுகந்தமான மணம் மகிழ்விக்க, கொட்டிலில் இருந்த பசுக்கள் மற்றும் வளர்ப்பு மிருகங்கள் அனைத்தும் அங்கு சுகமாக பச்சை பசேலென்றிருந்த புல் வெளிகளில் மேய்வதும் அமர்ந்தும் ரசித்தபடி இருந்தன.
அங்கு ஒரு குளம் ஆழமாக இருந்தது. கரைகளைத் தொட்டு தொட்டு விலகும் அலைகளால் மண்கள் அரிக்கப் படுவதும் பின் இயல்பாக தானே மணல் நிறைவதுமாக இயற்கையின் விளையாட்டு அது. ஸூரியனின் தகிக்கும் கிரணங்கள் அங்கு விழுவது இல்லை , விஷத்தைக் கக்கிய ஜீவன்களும் இல்லை, பூமியின் ரஸம், பசுமையான தாவரங்களாகவே பரிணமித்திருந்தன.
பூக்களும் தங்கள் பங்குக்கு அந்த வனத்தை நிறைத்திருந்தன. அதனால், சித்ர ம்ருகங்களும், யானைகளும் அங்கு வந்தன. மயூரங்கள் ஆட, அதற்கு இசைவாக பாடுவது போல ப்ரமரங்கள் ரீங்காரமிட்டன. கோகிலங்கள் இனிமையாக கூவினால், சாரஸங்கள் அதற்கு இணையாக பதில் சொல்வது போல கூவின.
பலராமனும் க்ருஷ்ணனும் மற்றவர்களுடன் அந்த இடத்தில் விளையாட வந்தார். வேணுவின் இசையால், பசுக்களும், கோபிகளும் ஆகர்ஷிக்கப் பட்டனர். அதனால் அந்த இடமே நிரம்பி வழிந்தது. பவழங்கள், இறகுகள், பூச் செண்டுகள், மாலைகள், வாசன மிகுந்த தாதுக்கள் இவைகளைக் கொண்டு அலங்கரித்துக் கொண்டனர். ராம க்ருஷ்ணர்கள் அவர்களுடன் நடனமாடினர், யுத்தம் செய்தனர், பாடினர்.
க்ருஷ்ணன் ஆடும் பொழுது சிலர் பாடுவர், சிலர் வாத்யங்கள் வாசிப்பர், கொம்பு வாத்யங்கள், வேணுவை சிலர், மற்றவர்கள் கை தட்டி பாராட்டுவர்.
இடையர்களாக வந்தது அனைவருமே தேவர்கள் தான். இடையர் குலத்தில் பிறந்து தாங்களும் இடையர்களாக தங்களை காட்டிக் கொண்டு பிறந்தவர்கள். க்ருஷ்ணனும் ராமனும் அவர்களை நட்டுவனார் போல நாட்யம் ஆடச் செய்தனர். சுற்றி சுற்றி வருவதும், குதித்து தாவுவதும், கைகளால் தட்டியும், தோள் தட்டி அறை கூவுவதும், தோன்றியபடி சிரித்தும் விளையாட்டு யுத்தம், என்று விளையாடினர். சிறுவர்கள் இப்பொழுது வளர்ந்து காக பக்ஷம் என்ற முன் குடுமியை வைத்துக் கொண்டிருந்தனர்.
சிலர் ஆடும் சமயம் பாடுபவர்களும், வாத்யங்கள் வாசிப்பவர்களும் தாங்களே சாது சாது என்று சொல்வர். -அடுத்து வருவது நாட்ய முத்திரைகள்: பில்வம், கும்பம், ஆமலகம், முஷ்டி, கண்களை கைகளால் மூடிக் கொள்வது, மிருகம், பறவைகளை அபினயத்தால் காட்டுவது, என்று கிரமமாக நடன, நாட்யங்களை அறிந்து கொண்டனர். பயமின்றி வனத்தில் ஒரு இடம் விடாமல் சுற்றினர். நதி, சிறு குன்று, புதர்கள், அடர்ந்த காடுகள், சிறு குளங்கள், அவர்கள் கால் படாத இடமே இல்லையெனும் படி நடந்தனர்.
அவர்களுக்கிடையில் அதே போல வேஷத்துடன் இடையர் குல சிறுவனாக ப்ரலம்பன் என்ற அசுரன் நுழைந்து கொண்டான். அவர்களை கொல்லும் எண்ணத்துடன் உள் வந்தவனை தெரிந்து கொண்டு விட்ட பகவான், மனதிற்குள் அவனுடைய வதம் எப்படி செய்வது என்பதை தீர்மானித்துக் கொண்டு விட்டார், சர்வ தர்சனன்-அனைத்தையும் காண்பவன் அவன் அல்லவா, அவனிடம் எப்படி மறைக்க முடியும். சகாவாக வந்தவனை வரவேற்று மற்றவர்களை ஒன்று கூட்டி, என்ன விளையாடலாம் என்று கேட்டு தானே இரட்டையர் விளையாட்டு விளையாடலாம் என்றான். இருவர் இருவராக சேர்ந்து கொள்ளுங்கள். பலராமன் ஒரு ஜோடியிலும், க்ருஷ்ணன் மற்றதிலுமாக விளையாட்டின் நியமங்களைச் சொன்னார். வாஹ்ய-வாஹக – ஒருவர் தோளில் மற்றவரை தூக்க வேண்டும். தன் மேல் ஏறியவனை தூக்குபவன் ஜயித்தவன். மற்றவன் தோற்றவனாவான். இந்த விளையாட்டும் நீடித்தது. பசு கன்றுகளையும் மேய்பதும் இடையிடையே கவனித்தபடி பாண்டீரகம் என்ற மரத்தில் அடியில் சென்று அமர்ந்தனர். க்ருஷ்ணன் முன் சென்று ராமன், ஸ்ரீதாமன், வ்ருஷபன் இவர்களுடன் இருந்தான். க்ருஷ்ணன் தான் தோற்றவர் போல ஸ்ரீதாமனை தன் முதுகில் தூக்கினார். வ்ருஷபம் என்பவனை பத்ர சேனன் என்பவன், ப்ரலம்பன் ரோஹிணி மகனான பலராமனை தூக்குவது என்று நிச்சயம் செய்தனர். க்ருஷ்ணனை பலமற்றவன் என் நினைத்து பலராமனை தூக்கிக் கொண்டு ப்ரலம்பன் வேகமாக ஓடினான். அவன் மேல் இருந்த பல ராமன் தன்னுடைய தரணிதர – பூமியை தாங்கும் கௌரவம்- சக்தியை எடுத்துக் கொண்டார். மகாசுரன் அந்த பாரத்தை தூக்கிக் கோண்டு ஓட முடியவில்லை.
அந்த சரீரத்தைப் பார்த்து தானும் தன் அசுர ரூபத்தை எடுத்துக் கொண்டான். நீல மேகம் போல் உடலும், இடையில் மின்னல் வெட்டுவது போல பொன் நகைகளும், நிஜமான ஆகாயம் போலவே இருந்தான். ஆகாயத்தில் சூரிய சந்திரர்கள், மேகங்கள் இருப்பது போலவே இருந்தான். பலபத்ரன் வேகமாக அவன் தலையில் ஒரு அடி அடிக்கவும், வஜ்ரம் போன்ற முஷ்டியால், சுரேந்திரன் கிரியை அடக்கியது போல அடித்தான். உடனே அந்த அடி தாங்காமல் தலை பிளந்து வாயிலிருந்து ரத்தமும் நினமுமாக கொட்ட, தடாலென்று விழுந்தான்.
கோகுலத்து சிறுவர்களும், கோபிகளும் திகைத்தனர். ப்ரலம்பன், பலபத்ரனை தூக்கிச் சென்றது தான் தெரியும். பின் நடந்ததை பலபத்ரன் வந்து சொல்லிக் கேட்டு ஆச்சர்யம் அடைந்தனர். சாது சாது என்றனர். பெரியவர்கள் ஆசீர்வதிக்க, நண்பர்கள் ஆலிங்கணம் செய்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். பாபி ப்ரலம்பன் என்று தேவர்களும் மகிழ்ந்து பூமாரி பெய்தனர். புகழ்ந்து பாடினர்.
(இதுவரை ஸ்ரீமத் பகவதத்தில், பத்தாவது ஸ்கந்தத்தின் முதல் பாகம், அத்யாயம் 18 ), ஸ்லோகங்கள்-32
அத்யாயம்-19
இவர்கள் அனைவரும் மும்முரமாக விளையாடிக் கொண்டு இருக்கையில் பசுக்கள் மேய்ந்து கொண்டெ வெகு தூரம் சென்று விட்டன. பசுமையான புல்லைக் கண்டதும் ஆசையுடன் வேகமாக மேய்ந்தன. ஆடுகள், பசுக்கள், மகிஷங்கள், ஒரு காட்டிலிருந்து மற்றொரு காட்டிற்கு தடுப்பார் இன்றி சென்று கொண்டே இருந்தன. இஷீகாடவீம் என்ற காட்டினுள் நுழைந்தன. திடுமென காட்டுத் தீ பரவவும் அலறின. அந்த சப்தம் கேட்டு இடையர்கள் அப்பொழுது தான் உணர்ந்தனர் பசுக் கூட்டம் வெகு தூரம் சென்று விட்டதை. உடனே தேடக் கிளம்பினர். புல்வெளியில் அவைகளின் குளம்புகளைக் கண்டு பிடித்து,அதே வழியில் சென்றனர். பசுவும் கன்றுகளும், மகிஷங்களுமே அவர்கள் செல்வம். அவைகளைக் காணாமல் களைத்தும் தாக மிகுதியால் வருந்தினாலும் தேடிக் கொண்டே சென்றனர். எங்கிருந்தோ, பகவான் தன் இடி முழக்கம் போன்ற குரலில் தங்களை பெயர் சொல்லி அழைப்பதைக் கேட்டு திகைத்தன. அனைவரும் மகிழ்ச்சியுடன் பதில் குரல் கொடுத்தனர். திடுமென காடுகளில் வரும் வன தூம கேது வந்து சேர்ந்தது. காடுகளின் பசுமையை கெடுத்துக் கொண்டு பெரும் காற்று வீசியது. ஏற்கனவே இருந்த தாவாக்னி, காற்று வீசி அதை மேலும் வளர்த்தது. தீயின் நாக்குகள் ஜங்கம- அசையாத மரங்களின் மேல் நக்குவது போல் அவைகளின் மேல் படர்ந்தன. அதைக் கண்ட கோகுல வாசிகள் அலறினர். பசுக் கூட்டமும் பயந்து ஓலமிட்டன. இது என்ன கஷ்டம்? அனைவரும் பயத்துடன் ஹே க்ருஷ்ணா, ஹே பலபத்ரா என்று அழைத்தும், ஸ்ரீ ஹரியும் அந்த தீயில் அகப்பட்டுக் கோண்டு விட்டாரோ என்று பயமும் சேர திகிலடைந்தனர். சொல்லொணா துயரம் மண்டிய குரலில் வேண்டினர். க்ருஷ்ண க்ருஷ்ணா, மஹாவீர! ஹே ராமா, அமித விக்ரமா! தாவாக்னியால் தவிக்கும் எங்களை காக்க உங்களை சரணடைகிறோம். க்ருஷ்ணா! நாங்கள் உன் பந்துக்கள் இல்லையா? எங்களை இப்படி தவிக்க விடலாமா? எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது. நீதான் சர்வ தர்மக்ஞன்- சகல தர்மங்களையும் அறிந்தவன். எங்களுக்குத் தெரிந்ததெல்லாம், எங்களுக்கு தலைவன் நீ, உன் பொறுப்பில் நாங்கள் கவலையின்றி இருக்கிறோம். எங்களை கை விடாதே என்று அரற்றினர்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: தன் பந்துக்கள், தீனமாக இவ்வாறு வேண்டிக் கொள்வதைப் பார்த்து, பகவான் ஸ்ரீ ஹரி, அவர்களை சமாதானப் படுத்த, கண்களை மூடிக் கொள்ளுங்கள். பயப்பட வேண்டாம். எனவும், அவர்கள் கண்களை மூடிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் கண் மூடி இருந்த க்ஷணத்திலேயே பகவான் யோகாதீசன் ஸ்ரீ க்ருஷ்ணன் கடுமையான தாவாக்னியை விழுங்கி அவர்களை விடுவித்து விட்டார். கண் விழித்தவர்கள் தாங்கள் அதே பாண்டீர மரத்தின் அடியில் இருப்பதை அறிந்தனர். சுற்று முற்றும் பார்த்தவர்கள் தங்கள் பசுக்களும் மற்ற வளர்ப்பு பிராணிகளும் நலமாக இருப்பதைக் கண்டனர்.
ஸ்ரீ க்ருஷ்ணனின் யோக வீர்யம், அவருடைய யோக மாயா, அதன் சக்தி, தாவாக்னியை அணைத்து நமக்கு க்ஷேமத்தை கொடுத்திருக்கிறது என்று மகிழ்ந்தனர். எதுவுமே நடக்காதது போல மாலை அவர்கள் கூட்டமாக கோகுலம் வந்தனர். ஸ்ரீ க்ருஷ்ணன் வேணுவை இசைத்தபடி வர, மற்றவர்கள் உடன் பாட, வீடு வந்து கொட்டில்களில் மாடு கன்றுகளை விட்டு, வீட்டினுள் சென்றனர். கோபிகள் காலையில் போனவர்கள் அவ்வளவு நேரம் ஆன பின்னும் வராததால், கவலையுடன் இருந்தவர்கள் சமாதானமானார்கள். அவர்களை அதுவரை காணாமல் இருந்ததே கோகுலத்து பெண்களுக்கு ஒரு க்ஷணம் யுக சதமாக கழிந்தது என்று பாகவதம்.
(இதுவரை ஸ்ரீ மத் பாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தத்தின் முதல் பகுதியில், பத்தொன்பதாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்-16
அத்யாயம்- 20
ஸ்ரீ சுகர் சொன்னார்: இருவருமாக தங்களை தாவாக்னியிலிருந்து காத்தனர் என்பது அந்த கோகுலத்தில் ப்ரசித்தமான பேசு பொருளாயிற்று. ப்ரலம்ப வதமும் அந்த சிறுவர்களும் சிறுமிகளும் சொல்லிக் கேட்ட வயது முதிர்ந்தவர்கள், ஆச்சர்யம் அடைந்தனர். க்ருஷ்ண, ராமன் இருவருமே தேவ குமாரர்கள் ஏதோ காரணமாக நமது வ்ரஜ தேசம் வந்துள்ளார்கள் என்பதில் சந்தேகமேயில்லை என்றனர்.
அதன் பின் மழைகாலம் ஆரம்பித்தது. அனைத்து உயிரினங்கள், அசையா தாவரங்கள் அனைத்துக்கும் உயிர் ஊட்டுவது போல மழை பொழியலாயிற்று. வானம் இருண்டது இடையில் மின்னல்கள் பளிச்சிட்டன. கரு மேகங்கள் வானம் முழுவதும் பரவின. இடியும், மின்னலும் வான வெளியில் ஒளியை மறைத்து வைத்தன. தெளிவாக தெரியாத பகல் பொழுதுகள், ப்ரும்ம தத்வம் உருவமாக தெரிந்தும் தெரியாமலும் இருப்பது போல.
எட்டு மாதங்களாக பூமியின் நீர் வளம் என்ற செல்வத்தை, தங்கள் கிரணங்களால் நிரம்ப குடித்ததை, ஸூரியனின் கட்டளையால், காலம் வந்ததும், நியாயமாக பூமியிடம் திருப்பி தருவது போல மகா மேகங்கள், சுவாசக் காற்றே, சண்ட மாருதமாகி அலைந்ததால் வியர்வை பெருகி வழிவது போல, தங்கள் கடமையை சரியாகச் செய்தன. கருணையுடன் தவிக்கும் உயிரினங்களுக்கு வேண்டிய அளவு பொழிந்தன. பூமியில் தவத்தால் இளைத்த சரீரம் உடைய தபஸ்விகள் போல தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் மகிழ்ச்சியும், திருப்தியும் அடைவது போல வேணிற் காலத்தில் வெப்பத்தால் வாடிய பூமி நனைந்தாள். இரவுகளில் நக்ஷத்திரங்கள் மின்மினி பூச்சிகள் அளவே ஒளியை கொண்டிருந்தன. க்ரஹங்கள் இருந்த இடம் தெரியவில்லை. அனைத்தும் ஒரே இருட்டு. கலி யுகத்தில் பாகண்டர்கள் வேத விரோதமாக பேசுபவர்களே அதிகமாக இருப்பார்கள் – தாமஸமான குணம், வான வெளியில் இருட்டு.
மேகம் இடிப்பதை தவளைகள் தாங்களும் தங்கள் குரலில் ஒத்து ஊதின. அதுவரை நியமத்தை அனுசரித்து கிரமமாக படித்த மாணவர்கள், பாடம் முடிந்ததும் இரைச்சலாக வகுப்பறையை விட்டு கிளம்புவது போல இருக்குமிடம் தெரியாமல் இருந்த தவளைகள், துள்ளி குதித்து நதிக்கரையின் குட்டைகளில் குதித்தன. அமைதியாக இருப்பதும், குதிப்பதும், .நீரை கலக்குவதே செயலாக ஆயின. சிறு நதிகளில் நீர் பெருகி நிரம்பி வழிந்தன. உத்பத-उथ्पत – தவளைகள் குதிப்பது, சிறு நதிகளில் ப்ரவாகம் தூக்கி அடிப்பது. சுய தொழில் செய்பவர்கள் சில சமயம் நல்ல வருவாயும், மற்றும் சில சமயம் குறைவாகவும் அடைவது போல இந்த க்ஷுத்ர நதிகள், மழை வந்தால் பெருகி ஓடுவதும் மற்ற காலங்களில் வற்றியும் காணப் படும் என்பது உவமை
பசுமையான புல்வெளி இந்தர நீல வர்ணத்திலும், மின்னல் ஒளியில் செந்நிறமாகவும், பளீரென ஆயின.
விவசாயிகள், ஏர் பிடிப்பவர்கள், மகிழ்ந்தனர். தெய்வ செயல் என்பதை அறியாத செல்வந்தர்கள் செல்வம் நிறைய, நன்றாக இருக்கும் காலத்தில் புஷ்டியாகவும், அபிமானத்துடனும் இருப்பவர்கள். செல்வம் குறைந்தால் , வருந்துவதும் போல.
நீரிலும் நிலத்திலும் வாழும் ஜீவன்கள், அனைத்தும் புது நீரில் நனைந்து உடல் பொலிவை பெற்றன. ஸ்ரீ ஹரியை சேவிப்பவர்கள் பெறுவது போல. இங்கு ஹரித- பசுமையான புல் கிடைத்ததால்.
மேலும் மேலும் நதிகள் வந்து சேர்ந்ததால், சிந்து- சமுத்திரத்தின் உடல் விம்மியது, ( அதிகம் உண்டால் வரும் பெருமூச்சு) அதை தன் அலைக் கரங்களால் வெளிப்படுத்தின. சாதனைகள் செய்து வரும் இன்னமும்
பக்குவம் அடையாத யோகிகள், தங்கள் இச்சைகளை கட்டுபடுத்த முடியாத மனதுடன் தடுமாறுவது போல
மலைகளின் மேல் வர்ஷ தாரா கொட்டினாலும் அவை சலனமின்றி இருந்தன. அதோக்ஷஜனை சததம் நினைப்பவர்கள் மன உறுதியுடன் இருப்பது போல. வழிகள் குழப்பமாக ஆயின. செப்பனிடப் படாமல், புல் கண்டபடி முளைத்து பயன் படுத்த முடியாதபடி ஆனது. ஸ்ருதிகளைக் கற்றவன் அப்யாசம்- பயிற்சியை விடாமல் செய்யாத அறிஞர்களின் அறிவு நாளடைவில் பயன் படாமல் போவது போல.
மேகங்கள் லோக பந்துக்கள். மின்னல் போல நிரந்தரமில்லாத க்ஷண நேர நட்புடைய காமினிகள், நல்ல குணமுடைய கணவனிடமும் நிரந்தரமான ஒட்டுதல் இன்றி இருப்பது போல அவை மேகத்துடன் உறவாடின.
வானத்தில் மகேந்திரனின் வில். குணமற்றவனையும் குண சாலிகளாக காட்டியது. அந்த வானவில் தெளிவாக தெரிவது குணம் நிறைந்தவனுக்கும், மறைவது குணத்தை இழந்தவனுக்கும் உவமையாகியது.
தாரகைகளின் தலைவன் சந்திரன் பிரகாசமாக உதயமாகவில்லை. மேகங்களில் மறைந்து கொண்டு விளையாடுவது போல – அஹம் ப்ரும்மாஸ்மி- நானே அதுவும்- என்ற அறிவை பெற்ற சாதகன் தானாக தன்னை ப்ரகடனப் படுத்திக் கொள்ள தேவையில்லாதது போல.
மயில்கள் மேகத்தின் வரவால் மகிழ்ந்தன. பெரிய சிகையை விரித்துக் கொண்டு உத்சவம் போல ஆடிக் களித்தன. அச்யுத பக்தர்களான பாகவதர்கள் வரவால் சம்சாரிகள் மகிழ்வது போல.
மரங்கள் வேண்டிய அளவு மழை ஜலத்தை குடித்தன. தங்கள் பாதங்களால், வேரால் நீரை உறிஞ்சி கிளைகள் இலைகளுக்கு அளிக்கும் மரங்கள் தேவையான பொழுது தேடிச் சென்று பெற முடியாத காரணத்தால் கிடைத்த பொழுதே குடித்தன.
அமைதியான குளங்களில் சாரஸங்கள், உடல் அசைவது தெரியாத படி மிதக்கும். கிராமத்து ஜனங்கள் பொதுவாக சாந்தமாக இருப்பவர்கள், ஏதோ அமைதியின்றி நடந்து விட்ட செயலால் தங்கள் நிம்மதியை இழப்பது போல வேகமாக சுழித்து ஓடும் நீரில் வயல்களில் வரப்புகள் அழிந்தன. பாகண்டிகள் தவறான வாதங்களால் கலி யுகத்தில் வேத மார்கத்தை அழிப்பது போல
மழை மேகங்களை வாயு தள்ளிச் செல்ல , பூவுலகில் அம்ருத்தை வர்ஷித்து விட்ட திருப்தியுடன் ஆசீர்வதித்தன. முழுவதும் பொழிந்து விட்டு நகர்ந்தன. வீடுகளில் வைதீகர்கள் பூஜைகள் முதலியவைகளை முடிக்கும் சமயம் ஆசீர்வதிப்பது போல
அந்த வனம் நல்ல மழையைப் பெற்று, ஜம்பு, கர்ஜூரம் முதலிய பழங்கள் நிரம்பி இருந்தன. மழை நின்றதும் சகாக்களுடன் ஸ்ரீ ஹரியும் வெளியில் வந்தார். தேனுக்கள், மடி நிரம்பி இருந்த காரணத்தால் மெள்ள நடந்தன.பகவான் கூப்பிட்டவுடன் அருகில் வந்தன. காட்டு மிருகங்கள், குதூகலமாக மரங்களிலும் , அருவிகளிலும், மலைக் குகைகளிலும் சுற்றி மகிழ்ந்தன. ஒரு சில மலைக் குகைகளில் மழைநீர் படாமல் உலர்ந்து இருந்தன. பழங்கள், கிழங்குகள் இவற்றை சேகரித்துக் கொண்டு அந்த குகைகளில் பகவான் மற்றவர்களுடன் அமர்ந்தார். கொண்டு வந்த தயிர் சாதத்தை, பலராமனும் உடன் வர அனைவருமாக உண்டனர். பசும் புல்லில் அமர்ந்த பசுக்கள்,கன்றுகள்,ருஷபங்கள் களைத்து இருந்தாலும், திருப்தியாக, கண் மூடி உறங்கின.
அனைத்து உயிரினங்களுக்கும் மழை வர ப்ரசாதமே. எங்கும் சுகமான சூழ்நிலையே காணப்பட்டது. அவரவர் குல வழக்கபடி பகவானை பூஜித்தனர்.
இவ்வாறு ராம கேசவர்கள் அந்த வ்ரஜ தேசத்தில் வசித்தனர். அடுத்து சரத் காலம் ஆரம்பித்தது. மழைநீரால் கலங்கியிருந்த குளங்கள் குட்டைகள், நதிகள் தெளிவாக சுத்தமாக அமைதியாக ஆயின. காற்றும் இதமாக வீசலாயிற்று. நீரில் பூக்கும் மலர்கள் நிறைந்தன. சற்று கலங்கியிருந்த யோக சாதனையாளர்கள், மனது தெளிந்து திரும்ப யோகத்தில் ஈடுபடுவது போல. தன்னிடமிருந்த அனைத்தையும் கொடுத்துவிட்ட மேகங்கள் கடமை முடிந்த திருப்தியுடன் விலகின. ஆசைகள் விலகிய சாந்தமான முனிவர்கள் மனதில் களங்கமின்றி ஆவது போல.
மலைகள் நீரை அருவிகளாக பெருகச் செய்தன. சில இடங்களில் அதுவும் இராது. ஞானிகள் ஞானாம்ருத்தை தன் மனம் போல தந்தாலும் தரலாம், தராமலும் போகலாம் என்பது போல.
நீரின் அளவு குறையும் என்பதை ஆழத்தில் வாழும் நீர்வாழ் ஜந்துக்கள் உணரவேயில்லை. மூடர்களான சம்சாரிகள் அனுதினம் ஆயுள் குறைந்து வருவதை உணராதவர்கள் போல.
ஆழ்கடலில் வாழும் ஜந்துக்கள், தாபம்- வேணிற் காலத்து ஸூரியனின் வெப்பத்தையே அறியாதவர்கள். இந்த சரத் காலத்தை உஷ்ணமாக உணர்ந்தன. ஏழை, அதிலும் செலவழிக்க மணமில்லாத க்ருபணன், குடும்பி, தன்னளவில் புலனடக்கமும் இல்லாதவன் சிறிது கஷ்டம் என்றாலும் திணறுவது போல.
மெள்ள மெள்ள நீர் பெருகி இருந்த இடங்கள் சேறாகின. தரை சுட்டது. யாமங்கள் நீண்டன. நான், எனது என்பவை, தீரர்களாக, ஆத்ம ஞானம் பெற்றவர்களின் சரீரத்தை விட்டு விலகுவது போல.
சரத் காலம் வரவும் சமுத்திரம் அமைதியாகியது. ஆத்ம ஞானம் அடைந்த முனிவர்கள் போல.
மழையில் கரைந்திருந்த வரப்புகளை உழவர்கள் சீர் செய்தனர். காம லோபத்தால் விடுபடும் யோக சாதனைகளை திரும்ப பெற நல் உபதேசங்களைக் கேட்டு சபலங்களுக்கு அணை போடும் யோகிகளைப் போல் – இங்கு வரப்பு, ஞானிகளின் புலடக்கத்துக்கு நல்ல உபதேசங்களை கேட்பது உவமையாக சொல்லப் பட்டிருக்கிறது. பகலில் ஸூரியனின் வெப்பம் அதிகமாக இருக்கும். அதை இரவில் சந்திரனின் குளுமையான ஒளி போக்கி விடும். எப்படியெனில், உதாஹரணம்:
ஸ்ரீ க்ருஷ்ணனின் தூண்டுதலால் உத்தவர்,அக்ரூரர் போன்றவர் கோபிகா ஸ்த்ரீகளுக்கு ஞானோபதேசம் செய்தனர். அதனால் அவர்கள் தங்கள் தேகாபிமானம், அதனால் அனுபவித்த தாபம் இவைகளை விட முடிந்தது.
வானம் மேகம் இன்றி சுத்தமாக இருந்தது. சரத் காலத்தில் நக்ஷத்திரங்கள், தாரகைகள் பிரகாசமாக தெரியும். சப்த ப்ரும்மாவின் அர்த்தம் சத்வமானது. அந்த தரிசனம் பெற்றவர்கள் போல தாரகைகள்.
சந்திரனுக்கு தன் தாரகைகளுடன் அகண்டமான ஆகாயமும் இடமாயிற்று. வானளாவ தன் ப்ரகாசத்தை காட்ட முடிந்தது. உதாஹரணம்: யது பதியான ஸ்ரீ க்ருஷ்ணன் வ்ருஷ்ணி குலத்தவர் சூழ பூமியில் இருப்பது போல.
பூக்களும் சம சீதோஷ்ணத்தால் பகலில் பூக்கும் தாமரை முதலியவைகளும், இரவில் மலரும் குமுதங்களும் பெண்களுக்கு இதமாக இருந்தன. பசுக்களும், பெண்களும், பறவைகளும், விலங்குகளும் பூக்க உதவும் காலம் சரத் காலம். அரசர்களால் பிரஜைகள் நிம்மதியாக இருந்தனர், திருடர்கள் இல்லாமல் இருந்ததால் அரசர்கள் நிம்மதியாக இருப்பது போல. ஊர்கள் உத்ஸவங்கள் நிறைந்து எங்கும் ஜன நடமாட்டமும் கொண்டாட்டமுமாக ஆயிற்று. வயல் வெளிகளில் பயிர்கள் செழித்தன. ஸ்ரீ ஹரி கலைகளில் ஈடுபாடு கொள்வது போல.
வணிகனோ, முனியோ, அரசனோ, தங்கள் அளவில் நன்றாக குளித்து, உடுத்திக் கொண்டு வெளியில் சென்று தங்கள் தொழில்களைச் செய்தும் செல்வம் சேர்த்தனர். மழையினால் தடை பட்டிருந்த சாதனைகளை யோகிகள் சித்தர்கள் சரியான காலம் வந்ததும் செய்வது போல..
இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், ப்ராவ்ருட், சரத் வர்ணனம் என்ற இருபதாவது அத்யாயம். ஸ்லோகங்கள்-49
அத்யாயம்-21
இவ்வாறு சரத் காலம் முடிந்து குளங்களில் தாமரை மலர்கள் மலர்ந்தன. அதன் சிறப்பான மணம் காற்றில் மிதந்து வர, அதை, கோகுலத்தில் அனைவருமாக ரசித்தனர். அந்த வனத்தில் யானைகள் கூட்டம் கூட்டமாக செல்வதும், குளம் குட்டைகளில் இறங்கி நீரை கலக்குவதும், மரங்களும் இலைகளும் பூக்களுமாக கண்ணுக்கு விருந்தாக இருக்க, மதுபதி-ஸ்ரீ க்ருஷ்ணன் வேணுவை வாசித்தபடி, பசுக்களையும் கன்றுகளையும் ஓட்டிக் கொண்டு ஒத்த வயதினர் அனைவரும் தொடர குதூகலமாக சுற்றினார்.
வேணு கானம் கேட்டு வ்ரஜ தேசத்து பெண்கள் மயங்கினர். ஒருவரையொருவர் ரகசியமாக பேசிக் கொள்ளும் பொழுது ஸ்ரீ க்ருஷ்ணனை பற்றியே பேசினர்.
அந்த ஈடுபாட்டில், க்ருஷ்ணன் அதைச் செய்தான், இதை செய்தான் என்று தங்களுக்குள் பேசிக் கொள்ளும் பொழுது தங்கள் மனதில் அவனுடைய எண்ணமே கிளப்பும் காமத்தின் ஆவலை அடக்க முடியாமல் மனம் கலங்குவர்.
சிறந்த நடன கலைஞன் போன்ற உடல் அழகும், மயில் இறகு தலையில் சூடி, காதுகளில் கர்ணிகாரம் என்ற மலர், பொன் நிறமான ஆடை, வைஜயந்தி மாலா, வேணுவின் துவாரங்களில் விளையாடும் விரல்கள் மூலம் வரும் நாதம் அவனுடைய உதடுகளில் இருந்து வருவதாலேயே மதுரமாக இருக்க, வனம் அந்த நாதத்தை எதிரொலிக்க, விருந்தாவனத்து அரண்யமே, அந்த கீதத்தால் புகழ் பெற்றது. என்று கோபிகள் சொன்னார்கள்:
கண்கள் புண்யம் செய்ததால் பெற்ற பலன் என்று தான் சொல்ல வேண்டும். பசுக்களுடன் உடன் செல்லும் இடையர் குலத்தவர், அருகிலேயே இருந்து அனவரதமும் ஸ்ரீ க்ருஷ்ணனை காணும் பாக்யம் பெற்றவர்கள் ஆனார்கள். மேடையில் ப்ரதான கலைஞனை அனுசரித்து ஆடும் மற்றவர்கள் போல இந்த பசுபால- மாடு மேய்க்கும் குலத்தினர் சூழ்ந்து சிலர் பாடவும் மற்றும் சிலர் ஆமோதிப்பவருமாக அந்த ஸூழலையே மனோ ஹரமாக்கி உள்ளனர். மாவிலை, பவளம், இறகுகள், பூங்கொத்துக்கள். தாமரை மலர்கள் இவைகளைக் கொண்டு விசித்ரமான அலங்காரங்கள் செய்து கொண்டவர்களாக அருகிலேயே இருக்கின்றனர்.
இந்த கோபிகள் என்னதான் செய்தார்கள், இந்த அளவு சௌக்யத்தை அடைய? தாமோதரன் வாசிப்பதைக் கேட்கவும், அம்ருதம் போன்ற கீதம் அதை இடை விடாது பருகுகிறார்கள். அவனுடன் இருந்து தாங்களும் மனதார அனுபவிக்கிறார்கள், குணமுள்ளவர்கள், மனம் மகிழ்ந்து, உடல் புல்லரிக்க, கண்களில் தாரை தாரையாக நீர் பெருக்குகிறார்கள்.
வ்ருந்தாவனம், தேவகி சுதன் ஸ்ரீ க்ருஷ்ணனின் பத்ம பாதங்கள் பட, பாக்யம் செய்துள்ளது. லக்ஷ்மீகரமான பாதங்கள் இந்த தேசம் முழுவதும் நடமாடி அனுக்ரஹித்திருக்கின்றன.. கோவிந்தனின் வேணு நாதமும், மயூரங்களின் நடனமும், பார்த்த அசையா ஜீவன்களான மலைகளும், புல் வெளிகளும் இந்த வ்ருந்தாவனத்து அனைத்து சராசரமும் புண்யம் செய்தவை. தேவகியின் மகனால் வ்ருந்தாவனம் புகழ் பெறும்.
நாம் அனைவருமே பாக்யசாலிகள். இந்த புள்ளி மான்கள் தளர்ந்த நடையுடன் நந்த நந்தனின் அருகிலேயே சுற்றுகின்றன. வேணு கானத்தைக் கேட்டு கூடவே க்ருஷ்ண – கருமையான் நிறம்- சாரா: என்ற கூட்டாளிகளையும் அழைத்துக் கொண்டு வந்து ரசிக்கின்றன. தங்கள் கண்களாலேயே பூஜைகள் செய்வது போல அன்பை தெரிவிக்கின்றன.
ஸ்ரீ க்ருஷ்ணனை பெண்கள் எப்பொழுதும் உத்ஸவத்தில் இருப்பது போல ஆடை அலங்காரங்களுடன் இருப்பதை காண்கிறார்கள். வாயில் வைத்து வாசிக்கும் வேணு நாதத்தை கேட்டு மகிழ்கிறார்கள். வானத்தில் விமானத்தில் செல்லும் தேவ ஸ்த்ரீகள், தங்கள் பூ மாலைகள். தலை அலங்காரங்கள் நழுவி விழுவதை கூட அறிவதில்லை. பிரமித்தபடி கானத்தை கேட்கின்றனர்.
பசுக்கள் அந்த கீதம் ஸ்ரீ க்ருஷ்ணன் முகத்திலிருந்து வருகிறது என நம்பி அவன் முகத்தையே நோக்கி தங்கள் காதுகளை விரித்துக் கொண்டு கேட்கின்றன. பாலைக் குடித்துக் கொண்டிருந்த கன்றுகள் தாய் பசு மெய் மறந்து வேணு நாதத்தை கேட்பது புரியாமல் பாதியில் தங்களை விட்டு விலகிச் செல்வதைப் பார்த்து கண்களில் நீருடன் கோவிந்தனை முட்டி தெரிவிக்கின்றன.
அம்மா, முன்னால் இந்த இந்த வனத்தில், முனிவர்கள் இருந்தார்கள். பறவைகள், ஸ்ரீ க்ருஷ்ணனின் கல வேணு கீதம் கேட்பதற்காக இந்த மரத்தில் கிளைகளை நிரப்பிக் கொண்டு அமர்ந்திருந்தனவா? கண்களை மூடி மற்ற எதிலும் கவனமே இல்லதவர்களாக இருந்ததை,
நதிகள் ஸ்ரீ க்ருஷ்ணனின் கீதம் கேட்டவுடன், தங்கள் வேகத்தை குறைத்து சுழன்று திரும்பி மனம் லயித்து இருப்பதை,
பூமி ஆலிங்கணம் செய்வது போல ஸ்ரீ க்ருஷ்ணனின் கால்களில் கமலங்களை கொன்டுவந்து உபகாரமாக சேர்ப்பிப்பதை, கண்டிருக்கிறீர்களா?
நல்ல வெய்யில் நேரம். வ்ரஜ பசுக்கள், பலராமனுடனும் மற்ற இடையர்களுடனும், சஞ்சரித்து கொண்டிருருக்கும் சமயம், வேணு நாதம் கேட்டவுடன், மிக்க அன்புடன், துள்ளி குதித்து, பூக்களை சிதறச் செய்தபடி சூழ்ந்து நின்று அவனுக்கு வெய்யில் தெரியாமல் இருக்க குடை போல காக்கின்றன.
பூர்ணமான மணல் வெளிகள். பசுக்களின் குளம்படிகள் என்பதே குங்குமமாக, பெண்கள் தங்கள் மார்பில் சந்தனம் அணிவது போல, அவர்களை நக்கிப் பார்ப்பது போல அவர்கள் முகம், மார்பகங்கள் மேல் பரவி நிற்கின்றன.
ஆ, இந்த மலைக் குன்று, சின்ன பெண் போல பசுமையை போர்த்திக் கொண்டு, ராம , க்ருஷ்ணர்கள் வருவார்கள், அவர்கள் பாதம் நோகாமல் இருக்க வேண்டுமே என்று நினைப்பவள் போல, உள்ளூற அவர்களின் பாத ஸ்பர்சத்தால் மகிழ்ந்து, அதே காரணமாக பசுக்களின் கூட்டத்தையும், உபசரிக்கிறது. ஆங்காங்கு குடி நீர், மேய்ச்சல் நிலம், ஓய்வெடுக்க குகைகள். பழங்களும் கிழங்குகளும் என்று நிரப்பி வைத்து காத்திருக்கிறது போலும்.
பசுக்கள், இடையர்கள் அழைத்துச் செல்லும் போது எந்த விதமான எதிர்ப்பும் இன்றி, வேணு நாதம் கேட்கிறதா என்று மட்டும் கவனமாக இருப்பது போல, நடந்து செல்லும் ஜீவன்களின் மயிர்க் கூச்சலையும், அசையாத மரங்களில் சுகமாக வீசும் காற்றிலும் தங்கள் பாசத்தை காட்டுவதாக அறிந்து கொள்கின்றன.
கோபிகள் இவ்வாறு தாங்கள் கண்டதையும், கேட்டதையும் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனுடன் இணைத்தே வர்ணித்தும், விளையாட்டு தான் என்றாலும் ஸ்ரீ க்ருஷ்ணனே உள்ளூற வியாபித்து இருப்பதை வெளிப் படுத்தினார்கள்.
இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், வேணு கீதம் என்ற இருபத்தி ஓராவது அத்யாயம். ஸ்லோகங்கள்-20
அத்யாயம்-22
ஸ்ரீ சுகர் சொன்னார்: அடுத்து ஹேமந்த ருது வந்தது. நந்த வ்ரஜத்து இளம் பெண்கள் இந்த பருவத்தின் முதல் மாதத்தில், காத்யாயனி என்ற விரதம் அனுஷ்டிக்க ஆரம்பித்தனர். ஹவிஷ்யம்- பகவானுக்கு நிவேதனம் செய்யப் பட்ட உணவை உண்டு காத்யாயனியை அர்ச்சிக்கும் விரதம் அது. பொழுது புலரும் முன் காளிந்தி நதியில் மூழ்கி குளித்து, அருணனின் முதல் கிரணம் தெரிந்தவுடன் தேவியின் உருவை மணலில் செய்து, வழிபாடுகள் செய்தனர். சந்தணம் பூசி, மாலைகள் அணிவித்து, தூப தீபங்கள் காட்டி, ருசியான உணவை நிவேதனம் செய்து, மற்றும் அனைத்து உபசாரங்களையும் செய்து, பழங்கள், சிறந்த தானியங்கள் இவைகளைக் கொண்டு உபஹாரம் என்பதை செய்து, பின் கண்டவாறு பிரார்த்தித்தனர்.
कात्यायिनि महामाये, महायोगिन्यधीश्वरि- नन्दगोप सुतम् देवि पतिम्मे कुरु ते नम: ||
இந்த மந்திரத்தை ஜபித்தபடி அந்த இளம் பெண்கள் பூஜைகள் செய்தனர். மாதம் முழுவதும் இவ்வாறு விரதமும் பூஜையும் செய்தனர். ஸ்ரீ க்ருஷ்ணனையே தியானித்து,பத்ரகாளி-காத்யாயனியை சிறப்பாக பூஜை செய்தனர். அனைவருக்கும் ஒரே குறிக்கோள் நந்தன் மகன் தங்களுக்கு மணாளனாக வர வேண்டும் என்பதே.,
விடியற்காலை -உஷத் காலத்திலேயே எழுந்திருந்து தங்கள் வயது ஒத்த தோழிகள் தோளில் கை போட்டுக் கொண்டு, பலமாக ஸ்ரீ க்ருஷ்ணனை பாடிக் கொண்டு, நதி நீரில் மூழ்கி மகிழ்ச்சியுடன் நீராடினர்.
பகவான் அவர்கள் அபிப்பிராயத்தை அறிந்தார். யோகேஸ்வரன் அல்லவா. தானும் தன் வயது நண்பர்களுடன் அங்கு வந்து சேர்ந்தார். அவர்கள் வேண்டியது நிறைவேறட்டும் என்று மனதில் நினைத்தபடி வந்தார்.
என்ன தோன்றியதோ, திடுமென அவர்களுடைய வஸ்திரங்கள் கரையில் வைத்திருந்தை எடுத்துக் கொண்டு நீப மரத்தின் மேல் ஏறி, மற்ற பாலகர்கள் சிரிக்க, பரிஹாஸமாக சொன்னார். பெண்களே, இங்கு வந்து உங்கள் வஸ்திரங்களை பார்த்து உங்களுடையதை எடுத்துக் கொள்ளுங்கள். விரதம் செய்து களைத்த உங்களிடம் நான் சத்யமாக சொல்கிறேன். இதில் ஸுது ஒன்றுமில்லை. எந்த நிலையிலும் நான் சத்யமல்லாததை சொல்ல மாட்டேன். பொய் என நினைக்க வேண்டாம். ஒவ்வொருவராக வாருங்கள், உங்கள் ஆடையை எடுத்து உடுத்திக் கொள்ளுங்கள். அனவருமே சுமத்யமா:- இடை சிறுத்தவர்கள், எனவே, பார்த்து.
இது என்ன விபரீதம் என்று நினைத்தாலும், மனதில் இருந்த அன்பு ஒரு புறம் வெட்கம் ஒரு புறம், ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு யாரும் முன் வரவில்லை. கழுத்து வரை குளிர்ந்த நீர். நடுக்கி எடுத்தது. கோவிந்தனின் விளையாட்டு புத்தியும் சீண்டுவதும் தெரிந்தவர்கள். அவனிடமே சொன்னார்கள்;
போ:! இது நியாயமல்ல. நந்தகோபனின் மகன் என்பதால் உன்னுடன் பிரியமாக இருந்து வந்திருக்கிறோம். வ்ரஜ தேசத்தில் ஸ்லாக்யமானவன், மதிப்புகுரியவன் என்று அறிவோம். குளிரில் நடுங்குகிறோம், எங்கள் வஸ்திரங்களைக் கொடு.
சியாம சுந்தர! நாங்கள் உன் தாசிகள். நீ சொல்வதை செய்கிறோம். தர்மம் அறிந்தவனே, எங்கள் ஆடைகளை கொடு. இல்லையெனின் அரசனிடம் சொல்வோம்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: என் தாசிகள் என்றால் நான் சொல்லியபடி செய்யுங்கள். இங்கு வந்து உங்கள் ஆடைகளை சிரித்தபடிவாங்கிச் செல்லுங்கள். வேறு வழியின்றி நதி நீரிலிருந்து அனைவரும் நடு நடுங்கிக்கொண்டு, குளிரில் விரைத்தபடி, தங்கள் கைகளால் உடலை மறைத்துக் கொண்டு அருகில் வந்தனர்.
அவர்களின் எளிமையான சுத்தமான நம்பிக்கையால் மகிழ்ந்து, ஆடைகளை தன் தோளில் வைத்துக் கொண்டுநீங்கள் அனைவரும் விரதம் பூண்டவர்கள். நீரில் வஸ்திரம் இன்றி மூழ்கியது தெய்வ விரோதம். கைகளை கூப்பி தலையில் வைத்துக் கொண்டு வணங்கி பிரார்த்தனை செய்யுங்கள். வந்து வாங்கிக்கொள்ளுங்கள்.
அச்யுதன் இவ்வாறு சொல்லவும், வ்ரஜ தேச இளம் பெண்கள், வஸ்திரம் இன்றி நீரில் மூழ்கி வ்ரதம் செய்வதில் தவறு தான் அதனால் தங்கள் பிரார்த்தனை பலிக்காமல் போய் விடப் போகிறதே என்று அதிகம் பயந்தவர்களாக, ஒரு மாதமாக செய்த விரதம் அந்த பலன் தான் முக்கியம் என நினைத்து அப்படியே வணங்கினர். தேவகி சுதன் அதை பார்த்து கருணையுடன் அவர்கள் ஆடைகளை திருப்பிக் கொடுத்தான்.
இப்படி ஏமாற்றினானே, வெட்கமின்றி நம்மை அவன் விருப்பத்துக்கு ஆட வைத்தானே, விளையாட்டு பொம்மை என்று நினைத்தானா, ஆடைகளை அபகரித்துக் கொண்டு வேடிக்கை பார்த்தான் என்றெல்லாம் கோபம் வந்தாலும், அவனை அருகில் கண்டதால், உள்ளம் பூரித்து மகிழ, அவையனைத்தையும் மறந்தனர்.
தங்கள் ஆடைகளை எடுத்து உடுத்திக் கொண்டு கிளம்பியவர்கள் சுய உணர்வடைந்து, மிகுந்த வெட்கமும், அதை விட அதிக வருத்தமும் அடைந்தனர். கண்களை தாழ்த்தியபடி வீடு திரும்பினர். பகவான் அவர்கள் விரும்பியது தன் பாதங்களை தொட்டு வணங்குவதே, அவர்கள் விரதத்தின் நோக்கம் , அதைத் தானே விரத ஆரம்பத்தில் சங்கல்பம் செய்தார்கள், எளிய சிறுமிகள் என்று நினைவு வர, அவர்களைப் பார்த்துச் சொன்னார்: சாது பெண்களே! உங்கள் விரதம் பூர்த்தியாயிற்று. என்னை அர்ச்சனை செய்து நீங்கள் வேண்டியது சீக்கிரமே நடக்கும். என்னை அண்டியவர்கள் மனதில் காமம் இராது. வறுத்து, இடித்து பக்குவம் செய்யப் பட்ட தானியங்கள் விதையாகாது. நீங்கள் அனைவரும் இளம் வயதினர். எதை உத்தேசித்து இந்த விரதம், இவ்வளவு நியமங்களுடன் செய்தீர்களோ அதை இன்று இரவு அடைவீர்கள். நல்ல எண்ணத்துடன் செய்தது வீணாகாது.
ஸ்ரீ சுகர் சொன்னார்: குமாரிகள், பகவானின் சொல்லைக் கேட்டு தங்கள் விருப்பம் நிறைவேறியதாக கண்டு ஸ்ரீ க்ருஷ்ண பதாம்போஜத்தையே தியானம் செய்தவர்களாக வீடு திரும்பினர்.
மற்ற இடையர் சிறுவர்களுடன் தேவகி மகன் வெகு தூரம் மாடு கன்றுகளை மேய்த்துக் கொண்டு பலராமனுடன் சென்றார். அந்த கடுமையான வெய்யிலில், நிழல் தருவதே தங்கள் தர்மமாக விசிறியால் விசிறுவது போலவும் குடை பிடித்து வெய்யிலின் உக்ரம் தாக்காமல் காப்பது போலவும் அசையாது நிற்கும் மரங்கள். தன் சகாக்களை அழைத்து சொன்னார்: ஹே ஸ்தோக, க்ருஷ்ணா, அம்ச, ஸ்ரீதாமன், சுபலார்ஜுன, விசால வ்ருஷப, தேஜஸ்வின், தேவப்ரஸ்த, வரூதப ( இவைகள் மரங்களின் பெயர்களும் ஆகும்) இவைகளைப் பாருங்கள். மஹா பாகர்கள். இவர்கள் வாழ்வே மற்றவர்களுக்காகத் தான். வறுத்தும் கோடையோ, மழையோ, தாங்கள் சகித்துக் கொண்டு நமக்கு அவை பாதிக்காமல் காக்கின்றன. அஹோ! இவர்கள் பிறவி பயனுள்ளது. அனைத்து உயிரினங்களும் ஜீவிக்க உதவுகின்றன. யார் வந்தாலும் இவை நிழல் கொடுக்க மறுப்பதில்லை. பத்ர, புஷ்ப, பழம், நிழல், வேர்கள், ஆடைகள் தயாரித்துக் கொள்ளவும், விறகாகவும் , வாசனை த்ரவ்யங்களும், எரித்தாலும் பஸ்மம், இதன் நரம்புகள், நார்கள் அனைத்தையும் மற்ற ஜீவன்கள் பயன் படுத்திக் கொள்கின்றன. இது தான் ஜன்ம சாபல்யம் என்பது. பிறவி பெற்றதன் பலன். மனிதர்களும் இப்படித்தான் இருக்க வேண்டும். ப்ராணன், தனம், தன் திறமை அல்லது புத்தி, வாக்கு, சௌக்யங்கள், இவைகளை இப்படி பயன்படுத்த வேண்டும். இப்படி உபயோகமாக இருந்தும் தான் வணங்கி இருக்கும் இந்த தாவரங்கள், அவைகளிடமிருந்த இளம் தளிர்கள், குச்சிகள், பழங்கள், பூக்கள், இலைகள் இவற்றை சேகரித்துக் கொண்டு அந்த மரங்களுக்கிடையில் நடந்து யமுனைக் கரையை அடைந்தனர்.
குளிர்ந்த சீதளமான சுத்தமான ஜலத்தில் பசு கன்றுகளை ஆஸ்வாசப் படுத்தி குடிக்க வைத்து, அவைகள் களைப்பு நீங்கி ஓய்வு எடுக்க விட்டு, மற்றவர்களும் திருப்தியாக அந்த இனிமையான ஜலத்தை குடித்து மகிழ்ந்தனர். அந்த உபவனத்தில் பசுக்களை கட்டின்றி மேய்ந்து செல்ல அனுமதித்தனர். க்ருஷ்ண, ராமனைப் பார்த்து இடைச் சிறுவர்களும் தங்களுக்கும் பசிப்பதைச் சொன்னார்கள்.
இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், கோபீ வஸ்த்ராபஹரணம் என்ற இருபத்திரண்டாவது அத்யாயம். ஸ்லோகங்கள்-38
அத்யாயம்-23
இடைச் சிறுவர்கள் ராம, ராம, நீ மஹா வீர்யன். க்ருஷ்ணா நீயும் துஷ்டர்களை அடக்குபவன். எங்களை தற்சமயம் வருத்துவது பசியே. அதை கொஞ்சம் அடக்குங்களேன் என்றனர்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவர்கள் இப்படி வேடிக்கையாக வேண்டிக் கொண்டதைக் கேட்டு, பகவான் சிரித்துக் கொண்டே, அந்தணர்களின் மனைவிகள், அவர்களும் தன் பக்தர்களே, அவர்களை அனுக்ரஹிக்க வேண்டும் என்று நினைத்தார். இதோ பாருங்கள், தேவர்களை குறித்து யாகம் செய்கிறார்கள். ப்ரும்ம வித்தை அறிந்த அந்தணர்கள். ஆங்கிரசம் என்ற சத்ரம்- யாகத்தைச் செய்கின்றனர். சுவர்கம் வேண்டி இந்த யாகத்தை ஆரம்பித்துள்ளார்கள். அங்கு போங்கள். நம் அனைவருக்குமாக அன்னத்தை யாசித்து பெறுங்கள். பகவான் பெயரைச் சொல்லி என் பெயரையும் சொல்லிக் கேளுங்கள்.
பகவான் சொன்னபடியே, அவர்கள் அங்கு சென்று யாகம் செய்து கொண்டிருந்தவர்களிடம் யாசித்தனர். நாங்கள் இடையர்கள். எங்களுடன் பலரானும், க்ருஷ்ணனும் வந்திருக்கிறார்கள். அவர்கள் சொல்லித் தான் வந்தோம். பசுக்களை மேய்த்துக் கொண்டு வெகு தூரம் வந்து விட்டோம் என்று சொல்லி தரையில் உடல் பட வணங்கி அவர்களிடம் கை கூப்பி வேண்டினர். ஹே பூமி தேவா:! கேளுங்கள். ஸ்ரீ க்ருஷ்ணன். கட்டளைப் படி வந்துள்ளோம் என்பதை அறிக. அவர்களும் பசியுடன் இருக்கின்றனர். அந்தணோத்தமர்களே, அன்னத்தை யாசிக்கிறோம். உங்களுக்கு சம்மதமானால் தாருங்கள். தர்மம் அறிந்தவர்கள் நீங்கள். தீக்ஷை எடுத்துக் கொண்டு, நியமமாக யாகம் செய்கிறீர்கள். பசித்தவர்களுக்கு யாராயினும் உணவை தானம் செய்வது தவறல்ல என்று சொல்லச் சொன்னான்.
இவ்வாறு பகவானே யாசித்தும், கேட்டுக் கொண்டிருந்த போதிலும் கேட்காதவர்கள் போல சிறுவர்கள், நாம் செய்வது எவ்வளவு பெரிய காரியம், எவ்வளவு நியமங்கள் என்று தெரியாமல் பசியினால் யாசிக்கிறார்கள் என்று அலட்சியமாக இருந்தனர். வயதானவர்கள், விவரம் அறிந்தவர்கள் என்று தங்களை நினைத்துக் கொண்டவர்கள். தேசம் காலம் தனித் தனியாக த்ரவ்யங்கள் அதற்கான , மந்த்ர தந்திரங்கள், ருத்விக், அக்னி, தேவதைகள், யஜமான். யாக தர்மம் இவையனைத்தும், அந்த பர ப்ரும்மமே சாக்ஷாத். அதோக்ஷஜனான பகவானை மனித புத்தி, ஞானம் இருந்தும் பயனின்றி, மனிதனுள்ளும் அந்த பரமாத்மாவின் அம்சமே என்பது தெரிந்தும் செயலில் மூழ்கி அதையே தவறு இல்லாமல் செய்வதே பெரிது என்று நினைப்பவர்கள். ஓம் என்று சொல்லி யாகத்தை ஆரம்பித்தவர்கள், இல்லையென்றும் சொல்லாமல் நேரம் கடத்தவும், நிராசையுடன் கோகுல வாசிகளான சிறுவர்கள் ராம, க்ருஷ்ணர்கள் இருந்த இடம் வந்தனர். அதைக் கேட்டு ஜகதீஸ்வரன் பகவான் சிரித்தார். உலக வழக்கை யோசித்து திரும்பவும் அவர்களை திரும்பவும் போய் தீக்ஷிதர்களின் மனைவிமாரை யாசிக்கச் சொன்னான். என் பெயரை சொல்லுங்கள். சங்கர்ஷணன்- பலராமன் வந்திருப்பதாகச் சொல்லுங்கள். அவர்கள் இளகிய மனம் உடையவர்கள். கண்டிப்பாக தருவார்கள். என்னை அறிவார்கள் ஆதலால் தயங்காமல் போய் கேளுங்கள் என்று அனுப்பினான்.
அந்த சிறுவர்கள் திரும்பவும் போய் தீக்ஷிதர்களின் மனைவிகள் இருக்கும் இடத்தை தேடியபடி சென்றார்கள். அங்கு நல்ல ஆடை ஆபரணங்கள் அணிந்து அமர்ந்திருந்தவர்களிடம் தயக்கத்துடன் தாங்கள் வந்த காரியத்தைச் சொன்னார்கள். அந்தணர்களின் மனைவிகளே! வணக்கம். நாங்கள் சொல்வதை தயவு செய்து கேளுங்கள். இதோ சற்று தூரத்தில், ஸ்ரீ க்ருஷ்ணனுடன் மாடு கன்றுகளை மேய்த்துக் கொண்டு உடன் வந்தோம். பசுக்களை மேய்த்தபடி பலராமனுடன் வெகு தூரம் வந்து விட்டோம். அனைவருக்கும் நல்ல பசி. அவர்கள் இருவருக்கும், கூட வந்த எங்களுக்கும் சேர்த்து அன்னத்தை யாசிக்கிறோம். தந்து உதவ வேண்டும்.
அச்யுதன் வந்திருக்கிறான் என்று கேட்டதுமே அவர்கள் பரபரப்புடன் நித்யம் தரிசிக்க விரும்பியிருந்தவர்கள், தானே வந்து நிற்கிறான் என்றதும், நான்கு விதமான உணவு பண்டங்களையும், நிறைய பெரிய பாத்திரங்களில் எடுத்துக் கொண்டு வேக வேகமாக ஓடி வந்தனர். அனைவரும் சமுத்திரத்தை தேடி ஓடி வரும் நதிகள் போல விரைந்து வந்தனர். அவர்களின் பதிகள் தடுத்ததையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தங்கள் சகோதர்கள், புதல்வர்கள், யாகத்தில் ஈடுபட்டிருந்த அனைவரும் சொல்லியும் கேட்காமல், உத்தமஸ்லோகன் என புகழ் பெற்ற பகவானை தரிசிக்கும் ஆவலுடன், வெகு நாட்களாக கேள்விப் பட்டு மனதினுள் காண வேண்டும் அன்ற ஆவலை வளர்த்து கொண்டிருந்ததால், யமுனையின் உபவனம் வந்து சேர்ந்தனர். அசோக மரங்கள் மண்டியிருந்த வனத்தில் கோகுல வாசிகளுடன் நடந்து கொண்டிருந்த, சகோதரனுடன் கூடிய ஸ்ரீ க்ருஷ்ணனைக் கண்டனர். அந்த பெண்கள், நீல மேக ஸ்யாமளனை, பொன் நிற வஸ்திரம் அணிந்து, வன மாலையும், மயில் இறகும் தரித்து, பல விதமான மணம் நிறைந்த தாதுக்கள் பூசி, இளம் துளிர்களும், நடனம் ஆடுபவன் போல மற்றவன் மேல் ஒரு கையும், மற்றொன்றில் தாமரையை சுழற்றியபடி, கர்ணங்களில் உத்பல, அலக, கன்னங்களில் குமிழ் சிரிப்புமாக நின்ற தோற்றத்தைக் கண்டனர்.
பலவிதமாக தாங்கள் கேட்டிருந்த கதைகளால் பிரியமாக ஆனவனை, நினைத்து நினைத்து மனதில் உருவேறியிருந்த அவன் லீலைகளை மனம் கொள்ளாமல் தியானித்து இருந்ததை கண்கள் இமைக்காமல் நேரில் கண்டு பரவசமானார்கள். அவர்கள் மனதினுள் ஊடுருவி, மிக அதிகமான தாபத்தை கிளறியவனாக உணர்ந்தார்கள். ப்ராக்ஞன் என்று அவனை நம்பியவர்கள் பாடுகிறார்கள், நரேந்திரா! தெரியும் அல்லவா?
தங்கள் உள்ளுணர்வால் மட்டுமே அறிந்து அனைத்தையும் உதறி விட்டு வந்தவர்கள். பகவானும் அதைத் தெரிந்து கொண்டு, அகிலத்தையும் காண்பவன், சிரித்துக் கொண்டே சொன்னான்: மகா பாக்யசாலிகளே! உங்கள் வரவு நல் வரவாகுக. அமருங்கள், நாங்கள் என்ன செய்ய வேண்டும்? எங்களைக் காண இவ்வளவு சிரமப்பட்டு வந்துள்ளீர்கள். உங்கள் விருப்பம் நியாயமானதே. ப்ரதி பலனை எதிர் பார்க்காமல் உங்களுக்கு பிரியமானவர்களிடம் அன்பு செலுத்துவது போலவே பக்தியுடன் வந்திருக்கிறீர்கள். உங்களை மணந்தவர்கள் உங்கள் கணவன்மார்கள், தங்கள் ப்ராணன், புத்தி, மனம், தன் மனைவி, தன் மகன் என்ற அன்பு, தங்கள் செல்வம் ஈட்டுவதும் தன் குடும்பத்தினருக்காகவே என்று உங்களுக்கு பிரியமானவர்களாக இருக்கிறார்கள். அது உலக வழக்கு. அதனால் திரும்பி போங்கள். அவர்கள் செய்யும் தேவ யாகத்தில் பங்கு கொள்ளுங்கள். பத்னியுடன் தான் யாகங்களை செய்ய வேண்டும் என்பது த்விஜாதி – இரு முறை பிறப்பவர்கள், உபாகர்மா எனப்படும் பூணல் அணிவிப்பது இரண்டாவது பிறவி- எனப்படும் அந்தணர்கள் யாகம் நீங்களும் பங்கேற்று தான் முடிக்க வேண்டும். குடும்ப வாழ்க்க்கையில் எந்த செயலானாலும் பத்னி இல்லாமல் நிறைவேறாது.
பத்னிகள் சொன்னார்கள்: விபோ! இவ்வளவு கடுமையாக எங்களை நிந்திக்காதே. உண்மையை சொல். வேதம் உன் பாத மூலம். நாங்கள் வந்தது துளசி தளத்தால் அர்ச்சிக்கப்பட்ட பாதங்களில் தலை பட வணங்கும் பேறு பெறுவோம் என்ற ஆசை மட்டுமே, அதற்காக சமஸ்த பந்துக்களையும் விரோதித்துக் கொண்டு வந்துள்ளோம். அரிந்தம! உன் பாதங்களில் விழுந்து வணங்கும் எங்களை புறக்கணித்தால் நாங்கள் திரும்ப அங்கே போய் என்ன சொல்வோம். எங்கள் பதிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், தந்தையோ மகன் களோ ஆதரவு தர மாட்டார்கள், சகோதரர்களொ, உறவினர்களோ, நண்பர்களோ யாரும் அருகில் கூட வர மாட்டார்கள். மற்றவர்களைப் பற்றி என்ன சொல்ல. தெரிந்து கொள்.
பகவான் சொன்னார்: பயப்படாதீர்கள். உங்கள் பதிகள் உங்களை கை விட மாட்டார்கள். தந்தை மாரோ, சகோதரனோ, மகனோ மற்றும் உலகத்தினர் எவருமே என் வசத்தில் இருக்கும் தேவர்களோ எதுவும் சொல்ல மாட்டார்கள். மனிதர்களுக்குள் உறவு, அங்க சங்கத்தால் வருவது, என் மகன் என் சகோதரன் என்ற ப்ரீதி ரத்த சம்பந்தம். குடும்ப வாழ்க்கையில் அவை நடை முறையில் உள்ளவையே. அதனால் மனதில் என்னை வணங்கி வந்தாலே என்னை அடைவீர்கள், சந்தேகமேயில்லை.
( ஸ்ரவணம்- கேள்வி, தர்சனம், தியானம் இவைகளால் என்னை பாடுவது இந்த வழிகளை பின் பற்றுங்கள். அதனால் இப்பொழுது அவர்கள் அருகிலேயே இருங்கள், வீடுகளுக்கு திரும்பிச் செல்லுங்கள் )
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு சொல்லி அவர்களை திருப்பி அனுப்பினார். அவர்களும் யாக சாலைக்கே சென்றனர். அவர் சொன்னபடியே பதிகளோ, சகோதரர்களோ, தந்தையோ அவர்களை விரட்டவில்லை. தாங்கள் செய்ய வேண்டியதை தங்கள் பத்னிகள் செய்தனர் என்று திருப்தியே அடைந்தனர். அதன் பின் அவர்களும் உடன் இருக்க யாக காரியங்களை முடித்தனர். அதில் ஒருவன் மட்டும் மனைவியை ஏற்க மறுத்தான். அவள் குளத்தில் வீழ்ந்து உயிரை மாய்த்துக் கொண்டாள்.
அந்த உணவுகளை ஸ்ரீ க்ருஷ்ணன் மற்ற கோகுல வாசிகளோடு சேர்ந்து அமர்ந்து உண்டார். நால் வகையான அன்னங்கள், கடித்து உண்பது, விழுங்குவது, மெல்ல சுவைப்பது, குடிப்பது என உண்பது நால் வகைக்குள் அடங்கும்.
யாக காரியங்களை நியமம் தவறாமல் முடித்து விட்டு தீக்ஷிதர்கள் தங்கள் மனதில் வருந்தினர். விஸ்வேஸ்வர்கள் வந்து கேட்டும் மறுத்தோமே, கர்ம காண்டத்தின் கடினமான நியமங்கள் தங்களை கட்டிப் போட்டது என்று வருந்தினர். இந்த ஸ்த்ரீகள் பகவானிடத்தில் எந்த பலனும் எதிர்பாராமல் பக்தி செலுத்த முடிந்ததே, உலக இயல்பாக எதையுமே வேண்டாமல், ஆசையின்றி பக்தியே ப்ரதானமாக தர்சனம் செய்து விட்டு வந்தார்கள். நமக்கு அந்த பக்குவம் இல்லையே என்று தங்களைத் தாங்களே நிந்தித்துக் கொண்டனர். நம் பிறவியே திக், வீண். வேதங்கள் அத்யயனம் பண்ணியதும் வீண். விரதம் என்றும், நல்ல குலத்தில் பிறப்பு என்று எண்ணி இருமாந்ததும், பலவிதமாக கற்று அறிவை வளர்த்துக் கொண்டதும் வீண், செயலே முக்கியம் என்று நம்பி அதை தீவிரமாக நியமம் தவறாமல் அனுசரித்ததும் வீண் தானோ. அதோக்ஷஜன் கண் முன்னே வந்தும் அதைக் கண்டு கொள்ளத் தெரியாத மூடர்களா நாம். இதுவும் பகவானின் மாயை தான் என்பது நிச்சயம். யோகிகளையே திசை திருப்பும் மாயை. நாம் குருவாக மனிதர்களுக்கு உபதேசிக்கிறோம், அவர்கள் அறிவை வளர்க்கிறோம், கடைசியில் அனைத்தும் தன்னலம் கருதி தானா? அஹோ! இதோ பாருங்கள், நம் மனைவிகள், ஜகத் குரு ஸ்ரீ க்ருஷ்ணனை கண்டு கொண்டார்கள். எந்த ப்ரதி பலனும் எதிர் பாராமல் இதன் விளைவு ம்ருத்யுவாக கூட இருக்கலாம் என்று தெரிந்தும் வீடு வாசல்களை இழக்க நேரிடலாம் என்று பயமோ, இல்லாமல் சென்றனர். நமக்கு த்விஜாதி என்ற அந்தண ஸம்ஸ்காரங்களோ, குருவிடம் வாசம் செய்து கற்றதோ, தவம் செய்ததும், ஆத்மா, மீமாம்ஸ என்று வாதங்கள் செய்ததும், ஒழுக்கமே பெரிது என்று வாழ்ந்ததோ, பெரிய பெரிய சுப காரியங்களை பொறுப்பேற்று நடத்தியதோ, உதவவில்லையா. சம்ஸ்காரங்கள் பெரிது தான். நாம் மனதார பகவானை நம்பியிருந்தால் ஸ்ரீ க்ருஷ்ணனின் தரிசனம் கிடைத்திருக்கும். எதை பெரிதாக நினைத்தோம், வீடு வாசல்களையா? அஹோ! அவர் நமக்கு நினைவூட்டவே வந்திருக்கிறார். கோகுல வாசிகளோடு வந்து ஆசீர்வதிக்கவே வந்திருக்கிறார். அது தான் சான்றோர், நன்மக்களின் வழி. அதுவன்றி அவருக்கு என்ன அவசியம். பூர்ணகாமன். கைவல்யம் என்ற உயர் பதவியையே தரக் கூடியவர், நம்மிடம் யாசிக்கவா வந்தார்? இது எப்பேற்பட்ட முரண்? இதை ஏன் நாம் உணரவில்லை.
அனைவரையும் தள்ளிவிட்டு ஸ்ரீ லக்ஷ்மி தேவி அவர் பாதங்களை பூஜிக்கிறாள். அதைத்தானே அவள் பெரிதாக யாசித்தாள். ஜகன் மோஹிணி, ஜகன் மாதா அவள் அறியாததா? தேசம், காலம் தனித்தனியாக த்ரவ்யம் அதற்கான மந்திரம், தந்திரம், ருத் விக், அக்னிகள், தேவதா, யஜ மானன் என்ற பொறுப்புகள், யாகம், அதன் தர்மம், அனைத்தும் மட்டுமே நாம் அறிந்தது. சாக்ஷாத் பகவான் இருக்குமிடம் செல்வோம். யது குலத்து வாசிகளோடு ஒருவனாக தன்னை உலகுக்கு அறிவித்துக் கொண்டு இருக்கும் விஸ்வேஸ்வரன், யோக யோகேஸ்வரன், அவனை இப்பொழுதும் நாம் சென்று சேவிக்காவிட்டால், நமது அறியாமைக்கு எல்லையே இல்லை. அஹோ! இதன் மத்தியிலும் நாம் தன்யதமா:- திறந்த பாக்யம் செய்தவர்கள். நமது பத்னிகள். அவர்கள் மனதில் உறைத்ததே. ஸ்ரீ ஹரியிடம் அசையாத பக்தி பாவமே கொண்டவர்கள்.
பகவானே, நமஸ்துப்யம். க்ருஷ்ணாய அகுண்ட மேதஸே- ஞானம் என்பதனைத்துக்கும் இருப்பிடமானவனே. அவரை மாயையால் மறைக்கப்பட்டு புத்தியில்லாமல் அறிந்து கொள்ளாமல் விட்டோம். செயல் மார்கத்தில் ஈடு பட்டவர்களாக இருந்து விட்டோம். அவர் தான் ஆதி புருஷன். தன்னை மறைத்துக் கொண்டு நம் அனைவரிலும் ஆத்மாவாக உறைபவன். பகவானே, உன்னை அறியாமல், செய்த தவறை மன்னித்து எங்களை அனுக்ரஹியுங்கள். இவ்வாறு தங்கள் தவற்றை உணர்ந்து ஸ்ரீ க்ருஷ்ணனை அவமதித்து விட்டோமோ என்ற அறிவு வந்தும், கம்சனிடம் இருந்த பயத்தால் அந்த இடத்தை விட்டு அசையவில்லை.
இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியின், இருபத்து மூன்றாவது அத்யாயம். ஸ்லோகங்கள்- 52
அத்யாயம்- 24
ஸ்ரீ சுகர் சொன்னார்: கோகுலத்தில் வசித்த சமயம் பலராமனும், க்ருஷ்ணனும் ஒரு நாள் அனைவரும் பரபரப்பாக இந்திர யாகம் செய்ய ஏற்பாடுகள் செய்வதைக் கண்டனர். தெரியாதவன் போல பகவான், தந்தையிடம் வணக்கத்துடன் வினவினான். முதிய நந்தபுர வாசிகளும் அங்கு இருந்தனர். ஸ்ரீ க்ருஷ்ணன்’ தந்தையே! எதற்கு இந்த ஏற்பாடுகள்? மிகப் பெரிய உத்சவம் போல யாகம் செய்ய போகிறீர்களா? யாரை உத்தேசித்து, என்ன பலன்? யாரெல்லாம் இதைச் செய்வார்கள்? நானும் உதவட்டுமா? எனக்கும் இதில் பங்கு கொண்டு வேலைகள் செய்ய ஆசையாக இருக்கிறது. சொல்லுங்கள்? ரகசியம் எதுவும் இல்லையே ‘ என்றான்.
தனக்கு ஆப்த நண்பர்களாக இருப்பவர்களிடம் சிலவற்றைச் சொல்லாம். அதுவே உதாசீனமாக நெருக்கமாக இல்லாதவர்களிடம் மறைக்கவும் வேண்டும். அவர்களிடம் கவனமாகவே நடந்து கொள்ள வேண்டும். எதிரிகளிடம் இருப்பது போல. தெரிந்தோ தெரியாமலோ இந்த கோகுல வாசிகள் அனைவரும் ஈடுபாட்டுடன் செய்கிறார்கள். இவர்களுக்கும் அறிந்து செய்யும் வித்வான்களுக்கும் ஒரே பலனா கிடைக்கும்? இது என்ன கார்யம். வைதீகமான செயலா? லௌகீகமானது தான் என்றால் எனக்கும் சொல்லுங்கள்.
நந்தன் பதில் சொன்னார்: நமக்கு மழை மிக அவசியம். மழைக்கு அதிபதி இந்திரன். மேகங்கள் அவன் ஆத்மார்த்தமான பணியாட்கள். அவைகள் தானே மழையை பொழிகின்றன. प्राणिनां जीवनं पय: – உயிரினங்களுக்கு ஜீவனம் தண்ணீர் என்பது தெரியும் அல்லவா. நாம் இந்திரனை மேகங்களுக்கு தலைவன், அந்த நீரால் பொருட்களை தயாரித்து யாகங்களில் பயன்படுத்துகிறோம். யாக மீதியால் உலகத்தார் மூவகையான பலன்களையும் பெறுகிறார்கள். மனிதர்களுக்கு மழை பலன்களைத் தருகிறது. மழையின்றி விவசாயம் நடக்காது என்பதால். பரம்பரையாக வந்த வழக்கம் இந்திரனை பூஜிப்பது , அதை நிறுத்த வேண்டாம்.
வேறு ஏதோ ஆசை, அல்லது லோபம் அல்லது பயம் என்பதால் விடக் கூடாது.
( கம்சனிடம் பயத்தால் யாக காரியங்கள் செய்வதை கூட ரகசியமாக செய்து வந்தனர் )
ஸ்ரீ சுகர் சொன்னார்: இதைக் கேட்டு மற்ற வ்ரஜ வாசிகளும் அமோதித்தனர். இந்திரன் கோபம் கொள்ள விடக் கூடாது என்று அவர்களும் சொல்லவும், கேசவன் தந்தையிடம் சொன்னான்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: தன் வினைப் பயனாக பிறவிகள் தோன்றுகின்றன. அதே வினைப் பயனால் மறைகின்றன. சுகமோ, துக்கமோ, பயம், க்ஷேமம், கர்ம பலனே. நல்வினை செய்தவன் நன்மை அடைகிறான், அப்படி செய்யாதவன் அதன் பலனை அனுபவிக்கிறான். அதுவன்றி, ஏதோ ஒரு ஈஸ்வரன் நன்மைகளைச் செய்வான் என்றாலும் அந்த வினைப் பயனைத்தான் கர்த்தா- செயலை செய்பவன் அடைவான். அதை மீறி புதிதாக பலன் பெறவே முடியாது என்று கர்ம வாதிகள் சொல்வார்கள். இதில் தேவதையின் அதிகாரம் அவ்வளவு தான் என்றால், விசேஷமாக ஜீவன்கள் பெறும் ஆதாயம் என்ன? இந்திரன் என்ன செய்வான்? தான் செய்த நல்வினை, தீ வினைகளாலேயே மனிதனது சுக துக்கங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன என்றால், இதில் இந்திரன் செய்வது என்ன? வினைப் பயனை மாற்ற அதிகாரம் இந்திரனுக்கும் இல்லை. பிறவிகள் இயல்பாக பெறும் அறிவாலும், அனுபவத்தாலும் வாழ்கின்றன. தேவர்களோ, அசுரர்களோ, மனிதர்களோ தங்கள் பிறவியால் பெற்ற குண தோஷங்களைத்தான் அனுபவிக்கிறார்கள் என்றால், இதை மாற்ற இந்திரனுக்கு அதிகாரம் உண்டா? இல்லை.
எந்த உடல் ஒவ்வொரு பிறவிக்கும் கிடைக்கிறது என்பதே வினைப் பலன் என்று கொண்டால் அவரவர் தங்கள் செய்கைக்கான பலனை தானே அடைகிறார்கள், பிற உதவியோ, எதிர்ப்போ இன்றி என்பது சித்தமாகிறது.
தனக்கு அமைந்த அந்த பிறவியில் தான் வாழ்ந்து, அதே பிறவிகளை தன் சந்ததிகளாக பிறப்பித்து மறைகிறது என்பது ஒரு வட்டம். இதில் சத்ரு,மித்ர, உதாசீனன் – வெறும் பரிச்சயம் மட்டுமே, என்று அமைவதும் அதே வினைப் பயனே எனில், தன் வினையே தான் தனக்கு பலன் தரும் ஈஸ்வரன் என்றாகிறது. தன் இயல்பில் வாழ்ந்து, அந்த பிறவியின் இயல்பை அனுசரித்து வாழ்வதே அவனுக்கு தேவ பூஜை. வாழும் விதம் பிறவியிலேயே அமைகிறது. அதை அனுசரிப்பதே நியாயம். தன் தர்மத்தை விட்டு பிறதர்மத்தை ஏற்பது, தன் கணவனை விட்டு பிறரிடம் மக்களைப் பெறுவதற்கு சமம். அந்தணர்கள் அந்தணர்களாக, அரசன் க்ஷத்திரியனாக ரக்ஷிப்பவனாக, வியாபாரத்தால் வைஸ்யன், இவர்களுக்கு சேவை செய்து ஸூத்ரன், தன் வாழ்க்கை முறையாக, வ்ருத்தி- தொழில்.
விவசாயம், வாணிபம், பசு மற்றும் வீட்டு மிருகங்களை வளர்ப்பது செல்வத்தை பெருக்கி பாதுகாப்பது என்று நால்வகை ஜீவனோபாயங்களில் நாம் ஏற்றுக் கொண்டுள்ளது கோ ரக்ஷா- பசு பாலனம். சத்வ,ரஜஸ் தமஸ் என்ற குணங்கள் ஸ்திதி, உத்பத்தி, அந்த்யம் என்பதை நிர்ணயிக்கின்றன. ரஜஸால் உலகம் தோன்றியது. பலவிதமான அசையும் அசையா சராசரமும் அதில் மேகங்களும் அடக்கம். மேகத்தின் தோற்றமும் மழை பொழியவே என அதன் செயல் நிர்ணயமாகி விட்டது. எல்லா இடங்களிலும் நீரை கொண்டு செல்வது அதன் காரியம். ப்ரஜைகள் அதைப் பெற்று பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதில் இந்திரனின் பொறுப்பு என்ன? நமக்கு என்ன இருக்கிறது அப்பா, அதே வனத்தை சார்ந்த வாழ்க்கை. நமக்கென்று நகரங்களோ, ஜனபதமோ-சிற்றூர், கிராமங்களோ, வீடுகளா எதுவும் இல்லை. வனத்தையும், மலையையும் நம்பி வாழ்கிறோம். அதனால் பசுக்களையும், அந்தணர்களையும் வாழ்விக்கும் இந்த மலையை பூஜிப்போம். யாகமும் பூஜையும் இதற்கு செய்வோம். இந்திர யாகம் என்பதற்காக செய்த ஏற்பாடுகளால் இந்த கிரியை பூஜை செய்வோம். வித விதமான பக்ஷணங்கள் செய்யுங்கள். வடைகள், பாயசம், கோதுமையால் தயாரித்த உணவுகள், பச்சை காய்கறிகள், கறந்த பால் வகைகள், தயார் செய்யுங்கள். அக்னியை நன்றாக மூட்டுங்கள். ப்ரும்ம வாதிகளான ப்ராம்மணர்கள் வரட்டும். அவர்களுக்கேற்ற பலவகையான அன்னம் தயார் செய்து கொடுங்கள். பசுக்களும் தக்ஷிணைகளும் கொடுங்கள். மற்றவர்களுக்கும், சண்டாளனலிருந்து, பதிதன் என அனைத்து அவரவர்களுக்கு பிடித்தமான உணவு, கோதுமையோ, பசுக்களோ கொடுத்து, இந்த மலைக்கு நாம் நன்றி தெரிவிக்கும் விதமான யாகங்களைச் செய்வோம். நன்கு அலங்கரித்துக் கொண்டு, வயிராற உண்டு, தங்கள் விருப்பம் போல வாசனை திரவியங்கள் பூசிக் கொண்டு, நல்ல ஆடை அணிந்து, இந்த மலையை ப்ரதக்ஷிணம் செய்வோம். பசுக்கள், அந்தணர்கள் முன் செல்ல, அக்னியை ஏந்தி, சுற்றி வருவோம். அப்பா! இது தான் என் எண்ணம், விருப்பம். உங்களுக்கு சம்மதமானால் இந்த முறையில் நமது நன்றியை தெரிவிப்போம். இது பசுக்கள், அந்தணர்கள் மட்டுமல்ல எனக்கும் செய்யும் மரியாதை.
ஸ்ரீ சுகர் சொன்னார்: காலமே அவனிடத்தில் அடக்கம், காலாத்மா எனப்படுபவன். அவன் ஏதோ காரணத்திற்காக இந்திரனை கோபமூட்ட நினைக்கிறான். அதனால் தான் இப்படிப் பேசுகிறான் என்று நந்தன் முதலானோர் புரிந்து கொண்டு மறுப்பு ஏதுமின்றி ஏற்றுக் கொண்டனர். மதுஸூதனன் சொன்னபடியே ஸ்வஸ்த்யயனம் – செயலை ஆரம்பிக்கும் முன் செய்யும் வாழ்த்து- முதலியவற்றைச் செய்து முன்னர் தயாரித்திருந்த பொருட்களைக் கொண்டே மலைக்கு உபசாரங்களை செய்யலாயினர். செய்ய வேண்டிய பலிகளைச் செய்து, கோதுமையையும், பசுக்களையும், கோதனம் இவைகளுடன் கிரியை ப்ரதக்ஷிணம் செய்தனர்,
மலையின் மேல் ஏறி ஊர் ஜனங்கள், ஸ்த்ரீகள் ஸ்ரீ க்ருஷ்ணனின் சாகஸங்களை பாட்டாக பாடிக் கொண்டே வந்தனர். அந்தணர்கள் அவர்களை அசீர்வதித்தனர். நானே தான் இந்த சைலம்-மலை என்று சொல்லி அவர்கள் அளித்த நிவேதன பொருட்களை ஸ்ரீ க்ருஷ்ணன், தன்னுடைய ப்ரும்மாண்ட ரூபத்துடன் ஏற்றுக் கொண்டான். அவனுக்கு நமஸ்காரம். வ்ரஜ ஜனங்களுடன் அவர்களுல் ஒருவனாக, தன்னை வெளிப்படுத்திக் கொண்டும் மறைத்தும், அஹோ! இந்த மலையைப் பாருங்கள். மலையே தானாக இருந்து எங்கள் அன்பளிப்பை எற்றுக் கொண்ட பகவான் நமக்கு அருள் புரியட்டும். இந்த பகவானை மனிதர்களால் அறிந்து கொள்ள முடியாது. காட்டு ஜீவன்களிடம் இருந்து நம்மை காக்கவும் செய்வான். நமக்காக சில துஷ்ட மிருகங்களை, பாம்புகளைக் கொன்றான். நம் பசு கன்றுகளின் க்ஷேமத்திற்காக வணங்கி வேண்டிக் கொள்கிறோம். இவ்வாறாக, அத்ரிகோத்விஜ மகம்- அத்ரி-மலை, கோ-பசு – அந்தணர் இவர்களுக்கு செய்த யாகம் வாசுதேவனின் அனுக்ரஹத்தால், அவன் தூண்டுதலால் நல்ல படி நடந்தது என்று மகிழ்ந்து இடையர்கள் க்ருஷ்ணனும் உடன் வர தங்கள் வீடுகளுக்குச் சென்றனர்.
இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில் இருபத்து நாலாவது அத்யாயம். ஸ்லோகங்கள்- 38
அத்யாயம்-25
ஸ்ரீ சுகர் சொன்னார்: இந்திரன் நடந்ததை அறிந்தான். தனக்கு கிடைக்க வேண்டிய மரியாதைகளை நிறுத்திய கோகுலத்து வாசிகளை, ஸ்ரீ க்ருஷ்ணனே எல்லாம் என்று இருப்பவர்களை, அவன் சொல்வதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளும் நந்தன் முதலானோர் என்று அனைவரிடமும் கோபம் கொண்டான். சாம்வர்த்தகம் என்ற மேக கூட்டங்களை அனுப்பினான். அழிக்கும் தன்மையுடைய கடுமையான மழை பொழியும் மேகங்கள். மகா கோபத்துடன் அவைகளை அனுப்பும் முன் கட்டளையிட்டான். ‘அஹோ! செல்வம் இருப்பதால் வரும் மதம்-கர்வம். காட்டு வாசிகள் இந்த இடையர்கள், இவர்களுடன் சாதாரண மனிதனாக அவர்களுடன் வாழும் இந்த க்ருஷ்ணனின் பேச்சைக் கேட்டு, இவர்கள் தேவராஜனான என்னை அவமதிக்கிறார்கள். திடமான நியமங்களுடன் செய்யும் யாகங்கள், கர்ம மயமான -வேதத்தில் விதிக்கப் பட்ட செயல்கள்- ஆன்வீக்ஷிகி- விளக்கங்களுடன் கூடிய வித்யா- அதை செய்து சம்சாரக் கடலைத் தாண்டுவார்கள். இவன் வாய் துடுக்கு சிறுவன், அறியாத மூடன், மந்த புத்தி தன்னை பண்டிதனாக நினைத்து இந்த க்ருஷ்ணன் மனிதனாக பிறந்து இடையர்களை எனக்கு எதிராக தூண்டி விட்டிருக்கிறான். லக்ஷ்மீ கடாக்ஷம் கிடைத்த கர்வத்தில் தன்னை மறந்து, க்ருஷ்ணன் இவர்களை தன் வசமாக்கிக் கொண்டிருக்கிறான். அவர்கள் கர்வத்தை அடக்குங்கள். பசுக்களை அழியுங்கள். நானும் ஐராவத யானையின் மேல் ஏறி விரஜ தேசம் வருகிறேன். மருத் கணங்கள், வாயுவின் பல அமைப்புகள், அவர்கள் பலம் மிக அதிகம் , நந்த கோஷ்டம், நந்தனின் நகரம்- அதை அடக்கி ஒடுக்குவோம்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு இந்திரன், கட்டளையிட்டு, எந்த வித கட்டுப் பாடும் இன்றி மேகங்கள், நந்தனின் கோகுல ப்ரதேசத்தை, பலமாக பொழிந்து நிலை குலையச் செய்தன. மின்னல்கள் வழி காட்டின. இடிகள் முழங்கின. தீவிரமாக வாயு வீசி அவர்களுக்கு உதவி செய்தது. கம்பங்கள் போல திடமான மழை சாரல்கள் பூமியை மறைத்தன. வெட்டவெளியில் கட்டப் பட்டிருந்த பசுக்கள் தவித்தன. வீடுகளுக்குள் இருந்த இடையர்களையும் பாதிக்க வேண்டும் என்பது போல, மேலும் கடுமையாக மழை பொழியலாயிற்று. அனைத்து வ்ரஜ வாசிகளும் ஸ்ரீ க்ருஷ்ணனை சரணடைந்தனர்.
க்ருஷ்ண, க்ருஷ்ணா! மஹாபாகோ! கோகுலம் படும் பாட்டை பார். உன்னையே தலைவனாக கொண்ட நாங்கள் செய்வதறியாது தவிக்கிறோம். எங்களை காப்பாற்று. இந்த தேவன் கோபித்து கொண்டிருக்கிறான் போலும். நீ பக்த வத்சலன் அல்லவா? கற்கள் விழுவது போல மழை தாரைகள் வதைக்கின்றன. அசேதனமான தாவரங்களும் வருந்துகின்றன. ஸ்ரீ ஹரி பார்த்து புரிந்து கொண்டார். இது இந்திரன் தன் கோபத்தை காட்டும் வேலை. பருவ காலம் இல்லாத சமயம், கற்களை வீசுவதைப் போல மழையை ஏவி விட்டு, காற்றையும் வீசி அடிக்கச் செய்திருக்கிறான். தனக்கு யாகம் செய்யவில்லை என்பதால் நாசம் செய்ய வந்திருக்கிறான். என் யோக மாயையால் அதற்கு பரிகாரம் செய்கிறேன். தன்னை லோகேசன் என்று நினைத்தானா? அவன் கர்வத்தை அடக்குகிறேன்.
தேவர்கள் சாத்விகர்கள் என்பர். பகவானை அறிந்தவர்கள் தானே. எப்படி இந்த கோபமும் எதிர்ப்பும் காட்ட துணிந்தார்கள் என்றால், தான் தேவர்களில் தலைவன் என்ற கர்வம். அதைத் தலைக்கேற விடக் கூடாது. இந்திரன் தன் பொறுப்பை உணர செய்ய வேண்டும். அதற்காக தண்டிப்பதும் அவசியமே. அதனால் தண்டனையும் அனுக்ரஹமே. பின்னால் உலகில் அவன் பொறுப்பை சரியாக செய்ய வேண்டும் அதனால் அழிக்காமல் தண்டிக்கிறேன். என்னை சரணடைந்த இந்த ஊர் ஜனங்கள். இவர்களையும் காப்பாற்ற நான் உறுதியுடன் இருக்கிறேன். ஒரு கையால் திடுமென, கோவர்தன மலையை சட்டென தூக்கினார். குடை போல அதனடியில் வ்ரஜ வாசிகளை அந்த பாலகன் ஸ்ரீ க்ருஷ்ணன் வரவழைத்தார். அவர்களை நோக்கி’ ஹே அம்மா, அப்பா, வ்ரஜ வாசிகளே, உங்கள் கோதனங்களை அழைத்துக் கொண்டு இந்த மலையடிக்கு வாருங்கள். இங்கு பயமில்லை. என் கையிலிருந்து மலை விழுந்து விடுமோ என்றும் பயப்பட வேண்டாம். காற்று பலமாக வீசுவதைக் கண்டு அஞ்ச வேண்டாம். மழையினால் வருந்த வேண்டாம். அவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். அதன்படியே வ்ரஜ வாசிகள், ஸ்ரீ க்ருஷ்ணனின் சமாதான வார்த்தைகளால் நம்பிக்கையுடன் கிடைத்த நேரத்தில் தங்கள் உற்றார் உறவினர், பாதுகாக்க வேண்டிய செல்வங்கள், அண்டி வாழும் பசு கன்றுகள், அனைத்துடனும் அங்கு வந்து சேர்ந்தனர். பசி தாகம் என்று எதையும் எண்ணாமல், சுகமாக இருக்குமா என்ற சிந்தனையும் இன்றி, அந்த மலையின் அடியில் நின்றனர். கண்ணெதிரில் பாலகன் ஸ்ரீ க்ருஷ்ணன் மலையை தாங்கி பிடித்திருப்பதையே பார்த்தபடி இருந்தனர். ஏழு நாட்கள் ஒரு அடி கூட நகரவில்லை. ஸ்ரீ க்ருஷ்ணனின் யோக மாயையை அறிந்திருந்தும் இந்திரன் மிகவும் அதிசயித்தான். தூண் போல அசையாமல் நின்றான். தன் சங்கல்பம் நிறைவேறாததால் தன் மேகங்களை திருப்பி அழைத்துக் கொண்டான்.
வானம் வெளுத்தது. ஸூரியனின் வெளிச்சமும் ப்ரகாசமாக ஆயிற்று. பயங்கரமான மழை நின்றது என்று அறிந்ததும், கோவர்தன மலையைத் தாங்கி நின்றவன் அவர்களைப் பார்த்துச் சொன்னான். கோகுல வாசிகளே, இனி பயம் இல்லை. கிளம்புங்கள். குழந்தைகள், பெண்கள், கோதனம் அனைத்தையும் பத்திரமாக கொண்டு சேர்த்து விடுங்கள். மழை நின்று விட்டது. அருவிகள், நதிகள் நிரம்பி விட்டன. என்றார். அவர்கள் அனைவரும் வெளியேறும் வரை காத்திருந்து பின், பகவானும் மலையை அதன் இடத்தில் வைத்தார். கோகுல வாசிகளும் மெதுவாக வண்டிகளைக் கொண்டு வந்து சிறு குழந்தைகளையும், முதியவர்களையும் ஏற்றிக் கொண்டு கிளம்பிச் சென்றனர்.
கோகுல வாசிகள் இச்செயலால் மிகவும் மனம் நெகிழ்ந்தனர். பெரியவர்கள் ஆசிகள் சொன்னார்கள். வயது ஒத்தவர்கள் அணைத்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். கோப ஸ்த்ரீகள் தங்கள் வீடுகளில் பூஜைகள் செய்து வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
யசோதாவும், ரோஹிணியும், நந்தனும், பல ராமனும் க்ருஷ்ணனை ஆலிங்கணம் செய்து குரல் தழ தழக்க ஆசீர்வதித்தனர். தேவ கணங்கள், சாதுக்கள், சித்த கந்தர்வர்கள், சாரணர்கள், மிகவும் மகிழ்ச்சியுடன் பூமாரி பெய்தனர். சங்க துந்துபிகள் முழங்கின. கந்தர்வர்களில் தும்புரு முதலான பாடகர்கள் பாடினர். தன்னிடம் மிகவும் ஒட்டுதலுடன் கூட வந்த வ்ரஜ வாசிகளுடன் ஸ்ரீ க்ருஷ்ணன், பலராமனும் உடன் வர கோ சாலைக்குச் சென்றார். கோகுலத்து பெண்கள் தங்கள் அனுபவங்களை பாடலாக பாடினர்.
இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தின் பத்தாவது ஸ்கந்தம்- முதல் பாகத்தில், பதினைந்தாவது அத்யாயம்.
ஸ்லோகங்கள்-33
அத்யாயம்- 26
ஸ்ரீ சுகர் சொன்னார்: கோகுலத்தில் அனைவருக்கும் இதே பேச்சு. ஒருவரையொருவர் சந்தித்தால், ஆச்சர்யத்துடன் ஸ்ரீக்ருஷ்ணனுடன் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்வார்கள். இந்த பாலகன் செய்யும் செயல்களோ அத்புதமாக இருக்கின்றன. இவன் எப்படி இந்த க்ராமத்தில் நமது இடையர்களிடையில் பிறந்தான்? ஏழு வயது பாலகன் இவன். விளையாட்டாக ஒரு கையால் மலையை தூக்கிப் பிடித்தான். யானை குளத்திலிருந்த தாமரை மலரை பறித்து தூக்கி காட்டுவது போல சுலபமாக செய்து விட்டான்.
கண்களை பாதி மூடி பூதனாவின் ஸ்தன பாலை குடிப்பது போல பாவனை செய்தான். அவள் உயிரையும் சேர்த்து குடித்து விட்டான். சின்னஞ்சிறு பாதங்களால் உதைத்து அழுவதைத் தான் கேட்டோம். அந்த சக்கரம் ஒடிந்து விழுந்தது. ஒரு மாலை பொழுதில் காற்றடித்து தூக்கிச் சென்றதே, அந்த தைத்யனின் கழுத்தை இறுகப் பற்றிக் கொண்டு விட்டான். தைத்யன் இவனுடைய கனம் தாங்காமல் விழுந்து உயிரை விட்டான். ஒரு சமயம் அவன் தாயார் உரலில் கட்டினாளே. அதையும் இழுத்துக் கொண்டு அர்ஜுன மரங்களின் நடுவில் சென்று அவைகளை விழச் செய்தான். கொல்லும் எண்ணத்துடன் உடன் கன்றுகளோடு வேஷம் போட்டுக் கொண்டு வந்த தைத்யனை, ஏதோ மரத்தை உலுக்கி பழங்களை விழச் செய்வது போல வதைத்தான். ராஸப தைத்யனை அவன் பந்துக்களோடு பலராமனுடன் சேர்ந்து, அழித்து தாள வனத்தை தைத்யர்கள் இன்றி நமக்கு நிம்மதியாக பயன்படுத்த கொடுத்தான். ப்ரலம்பனை கொன்றான். அந்த சமயம் நம் பசுக்கள் மேய்ந்து கொண்டே சென்று காட்டுத் தீயில் அகப்பட்டு அலறின. அவைகள் நலமாக திரும்பும்படி அந்த தீயை அணைத்தான். குளத்தை ஆக்ரமித்திருந்த விஷ ஜந்து, காளியன் என்ற பாம்பு, யமுனையை கலங்கச் செய்திருந்ததே. அதை விரட்டி நமக்கு நல்ல குடிநீர் கிடைக்கச் செய்தான். இயல்பாக துஷ்டர்களும் இவனிடத்தில் பிரியமாக இருக்கின்றனர். நந்தா! உன் மகன் நம்மிடம் வந்து பிறந்தது நமது புண்ய பலனே.
நந்தன் பதில் சொன்னான்: கோகுல வாசிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள். சிறுவன் இவன். இவனிடம் சந்தேகப் பட வேண்டாம். கர்கர் சொன்னதைச் சொல்கிறேன். மூன்று யுகங்களிலும் இவன் மூன்று வர்ணங்களில் பிறந்தான். முதலில் வெண்மை, சிவப்பு, மஞ்சள் என்ற வர்ணங்கள் தற்சமயம் கருமையை ஏற்றுக் கொண்டிருக்கிறான். அதனால் க்ருஷ்ணன். ஒரு சமயம் வசு தேவருடைய மகனாக பிறந்து ஸ்ரீமான் வாசுதேவன் என்ற பெயருடன் இருந்தான். இவனுக்கு பல பெயர்கள். பல விதமான ரூபங்கள். உன் மகன் குணங்கள், கர்மா அனு ரூபமான செயல்கள் இவைகளை எவரும் அறிய மாட்டார்கள். இவனால் நமக்கு பல நன்மைகள் வரும். எந்த விதமான கஷ்டமானாலும் சுலபமாக கடந்து செல்வீர்கள். இவன் வ்ரஜ பதத்தில் இருந்த சாதுக்கள் திருடர்களால் துன்பம் அடைந்த பொழுது அவர்களைக் காக்க திருடர்களை விரட்டி, அராஜகமான அந்த அரசை மாற்றி திருடர் பயமின்றிச் செய்தான். அதனால் மனிதர்கள் மிகவும் ப்ரியமாக ஆனார்கள். அசுரர்கள் விஷ்ணு பக்ஷத்தினரைக் கண்டு பயப்படுவது போல எதிரி என்று எவனும் இந்த க்ருஷ்ணன் முன்னால் வர மாட்டாரன். இவன் நந்த குமரன். ஆயினும், ஸ்ரீமன் நாராயணனுக்கு சமமான குணங்களை கொண்டவன். ஸ்ரீ, கீர்த்தி, அனுபாவம் இவற்றால் இவன் செயல்கள் ஆச்சர்யமல்ல. கர்கர் இவ்வளவும் சொல்லி விட்டு சென்று விட்டார். அதன் பின் நான் இவனை ஸ்ரீமன் நாரயண அம்சமாகவே கருதுகிறேன்.
இதைகேட்ட கோகுல வாசிகள், ஸ்ரீ க்ருஷ்ணனின் அமானுஷ்யமான சக்தியை கண்டதாலும் கேட்டதாலும் மிக்க மதிப்புடன் ஆமோதித்தனர். இந்த சரித்திரத்தை கேட்பவர்கள் இருக்கும் இடங்களில் தேவன் காலத்தில் வர்ஷிப்பான், யாகங்கள் தடையின்றி நடக்கும், அதீதமான மழையோ, காற்றோ நஷ்டப் படுத்தாமல் இருக்க ஒரு கையால் மலையை தூக்கி கோகுல வாசிகளை காத்த க்ருஷ்ணன் காப்பாற்றுவான்.
இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தின், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், இருபத்தாறாவது அத்யாயம். ஸ்லோகங்கள்- 25
அத்யாயம்: 27
கோவர்தன மலையை தாங்கி ஸ்ரீ க்ருஷ்ணன் கோகுலத்தை காத்த செய்தியால் சுரபி- காமதேனு மகிழ்ந்தாள். இந்திரன் அவளையும் உடன் அழைத்துக் கொண்டு கோகுலம் வந்தான். தன் கிரீடம் அவர் பாதங்களில் பட வணங்கினான். ஸ்ரீ க்ருஷ்ணனை அறிந்திருந்தும் தான் கர்வத்துடன் நடந்து கொண்டதை நினைத்து வெட்கமும் வருத்தமும் தெரிய அவரிடம் வேண்டினான்.
விசுத்தசத்வம்- பகவானே! நீ இருக்கும் இடம் சுத்த சத்வமானது. சாந்தமானது, தவமயம், இங்கு ரஜஸ் தமோ குணங்கள் அருகில் கூட வராது. மாயாமயமான இந்த உலகிலும் உன் செயல்களில் நற்குணங்களே நிறைந்துள்ளன. சர்வக்ஞன்- அனைத்தையும் அறிந்தவன், அக்ஞான சம்பந்தமே இல்லாதவன்.
மனித சரீரத்துடன் வரும் க்ரோதம் லோபம் போன்றவை உனக்கு ஏது? யாரும் உணர முடியாத பரம் பொருள், தர்மத்தைக் காக்க துஷ்டர்களை தண்டிக்க என்று அவதரித்தவன். உன் கையால் தண்டம்- தண்டித்தல் என்பதும் அனுக்ரஹமே. மூவுலகுக்கும் பிதா, குரு, ஜகதீசன், அருகில் நெருங்க முடியாதவன், காலனாக தண்டிப்பவன், என்று அறிவேன். தேவலோக தலைவன் எனும் என் கர்வத்தை அடக்கத் தான் இந்த தண்டனை, விருப்பு வெறுப்பின்றி உலக நன்மைக்காக என்பதை புரிந்து கொண்டேன். துஷ்டர்கள் என்பவர்களும் வேறல்ல, என்போன்ற பொறுப்பில் உள்ளவர்கள், தங்களை ஜகதீசனாக நினைத்துக் கொண்டு, அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்தாலும் சரியான காலத்தில் உன்னிடம் அபயம்- சரணடைவார்கள். இதுவே துஷ்டர்களுக்கும் அனுக்ரஹம் செய்யும் உன் வழி. ஐஸ்வர்ய மதம் என்னை மதியிழக்கச் செய்தது, உன் ப்ரபாவம் அந்த சமயம் மனதில் உறைக்காமல் மறந்து போக தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்து விடு. இது போல மற்றொரு முறை செய்ய மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். மூடன், புத்தியில்லாதவன் என எண்ணி எனக்கு அருள வேண்டுகிறேன்.
தேவனே! அதோக்ஷஜா! இந்த அவதாரம் சம்சாரிகளின் பாரத்தைக் குறைக்க, ஏராளமான படை பலங்களோடு சாமான்ய ஜனங்களை துன்புறுத்தும் அறிவிலிகளை அழிக்கவும், உன் சரணங்களை அண்டியவர்களுக்கு நன்மை செய்யவும் என்பதற்காகவே.
மஹாத்மாவான பரம புருஷன், பகவானே உனக்கு நமஸ்காரம். வாசுதேவாய, க்ருஷ்ணாய, நல்வழியில் செல்லும் சாதகர்களுக்கு தலைவன் என்று வணங்குகிறேன். விருப்பத்துடன் ஏற்றுக் கொண்ட சரீரம் இது. ஏனெனில் விசுத்த- தெளிவான ஞானமே உருவானவன். சர்வஸ்வன், அனைத்திலும் உள்ளிருப்பவன். சர்வ பீஜன், பஞ்ச பூதங்களோடு அனைத்து இயற்கை தத்வங்களுக்கும் காரணமானவன், உனக்கு நமஸ்காரம்.
என் அனாவசிய கோபத்தால், தீவிரமான மழையும், வாயுவை பயன்படுத்தி கோகுலத்து வாசிகளையும் தங்களையும் அலைக்கழித்ததும், யாகத்தை நடக்க விடாமல் செய்ததும், என் அபிமானமே காரணம். ஈசனே! உன்னால் அனுக்ரஹிக்கப் பட்டேன். என் முயற்சி பலனின்றி போனது. குரு, என் ஆத்மாவான ஈஸ்வரன் என்று சரணடைகிறேன்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இந்திரன் தானே வந்து தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்கவும், பகவான் கம்பீரமான தன் குரலில் சிரித்து, பதில் சொன்னார். இந்திரஸ்ரீ- இந்திர பதவி மோகம் கண்களை மறைக்க, யாகத்தை தடுத்தாய். இந்த பதவியை அளித்தவனே நான் என்று நன்றாகத் தெரிந்தும் யாகத்தை நடக்க விடாமல் செய்தாய். என் கையில் தண்டம் வைத்திருப்பதால் தண்டபாணி என்றும் எனக்கு ஒரு பெயர். அதை ஏன் மறந்தாய். நான் நினைத்தால் செல்வத்தை பறித்து பதவியை இழக்கச் செய்வேன், அதுவே அவற்றை ஒருவருக்கு கிடைக்கவும் என் அனுக்ரஹம் தேவை.
சக்ரனே, போய் வா. நலம் உண்டாகட்டும். உனக்கு அளித்த கடமைகளை சரிவரச் செய். உன் அதிகாரங்கள் உன்னிடமே இருக்கும். அதன் பின் சுரபி வந்து வணங்கினாள். பசுக்கள் அவள் சந்ததிகள். ஈஸ்வரனாக பசுக்களை காக்க வந்தவனை துதி செய்தாள். க்ருஷ்ண, க்ருஷ்ண மகா யோகின்! விஸ்வதமன்! விஸ்வ சம்பவ! நீ லோக நாதனாக இருப்பதால் நாங்கள் நலமாக இருக்கிறோம். அச்யுத! முதல் தெய்வம் நீயே. இந்திரன் அல்ல. பசு, அந்தணர், தேவர்கள் சாதுக்கள் அனைவருக்கும் நன்மை செய்பவன். பூ பாரத்தை குறைக்க அவதரித்திருக்கிறாய்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இந்திரன், சுரபியின் பாலால், ஐராவதம் தன் கைகளால் ஆகாய கங்கையை கொண்டு வர, ஸ்ரீ க்ருஷ்ணனை அபிஷேகம் செய்தான். தேவர்களும் ரிஷிகளும், தேவலோக தாய்மார்களும், வந்து அபிஷேகம் செய்தனர். கோவிந்தன் என்ற பெயரும் நிலைத்தது. அங்கு வந்த தும்புரு நாரதர் முதலானோர், கந்தர்வ வித்யாதர, சாரணர்கள், கோவிந்தனின் புகழைப் பாடினர். தேவ பெண்கள் நடனமாடினர். பூமாரி பொழிந்தனர். பசுக்கள் தங்கள் பாலைப் பெருக்கி பூமியை நனைத்தன. நீர் நிலைகள், சிற்றாறுகள், மரங்கள், மற்ற தாவரங்கள் இவைகளும் தங்கள் பங்குக்கு பசுமையான இளம் துளிர்களையும், தேன் முதலியவைகளையும் எதெது அவைகளிடம் சிறப்போ அதைத் தந்தன. மலைகளும் மணிகளைத் தந்தன.
குரு நந்தனா! ஸ்ரீ க்ருஷ்ணனை கோவிந்தனாக அபிஷேகம் செய்ததில் தங்கள் மகிஷ்ச்சியை அசேதனமான தாவரங்கள், மலைகளும், பசுக்கள் கூட்டமும் சேர்ந்து கொண்டதை பார்த்த இயல்பிலேயே க்ரூரமான ஜீவன்களும் வைராக்யத்தை அடைந்தன. இவ்வாறு கோவிந்தனாக அபிஷேகம் செய்து விட்டு இந்திரன் தன் கூட்டத்தாரோடு தேவலோகம் சென்றான்.
இது வரை ஸ்ரீ மத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், இந்திரனின் துதி என்ற இருபத்தேழாவது அத்யாயம். ஸ்லோகங்கள்- 28
அத்யாயம்-28
ஒரு சமயம் ஏகாதசி விரதத்தை முற்றிலும் ஆகாரமின்றி நிறைவு செய்து விட்டு, ஜனார்தனனை பூஜை செய்து, நந்தன் காலிந்தி நதியில் ஸ்னானம் செய்யச் சென்றார். நீரில் மூழ்கி எழுந்த சமயம், அவரை பிடித்து வருணன் என்ற லோகபாலனின் ஆட்கள் தங்கள் தலைவனிடம் கொண்டு வந்தனர். இவர் ஆசுர-அசுரர்களின் சமயத்தில் நீரில் மூழ்கி – இரவில் – நதியில் ஸ்னானம் செய்தார், அது தவறு என்பதால் பிடித்துக் கொண்டு வந்தோம் என்றனர்.
அவரைக் காணாமல் கோகுலவாசிகள், க்ருஷ்ணா, ராமா என்று அலறினர். பகவான் ஓடி வந்தார். வருணனின் ஆட்கள் அபகரித்துக் கொண்டு போனதை அறிந்து, தன் மக்களை ஆசுவாசப் படுத்தி விட்டு வருணனின் இருப்பிடம் சென்றார். அவரே வந்து இருப்பதைக் கேட்டு லோக பாலனான வருணன் தானே வந்து வரவேற்று உபசரித்தான். தங்களைக் கண்டதே மகோத்ஸவம் என மகிழ்ந்தான்.
வருணன் துதி: இன்று என் வாழ்வில் மிக முக்கியமான தினம். என் பிறவிப் பயனைப் பெற்றவன் ஆனேன். அத்வானத்தைக் கடந்து வந்து நீங்கள் வந்தது என் பாக்கியம். உங்கள் பாத தர்சனம் கிடைக்கப் பெற்றேன். நமஸ்துப்யம் பகவதே பரமாத்மனே. இந்த இடத்தில் உங்கள் மாயாமயமான லோக சிருஷ்டி பற்றி யாரும் அறிந்தவரில்லை. கல்பனை கூட செய்தது இல்லை. உங்கள் மகிமை தெரியாமல் மூடர்கள் என் பணியாட்கள் உங்கள் தந்தையை கொண்டு வந்து விட்டனர். மன்னித்து அருள வேண்டும். க்ருஷ்ணா, எனக்கு அனுக்ரஹம் செய்ய வேண்டுகிறேன். உங்களுக்குத் தெரியாததா? கோவிந்தா! உங்கள் தந்தையிடம் அன்புள்ளவர், அவரை அழைத்துச் செல்லுங்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு வருணன் பணிந்து அவர் தந்தையை ஒப்படைத்தவுடன், ஈஸ்வரனுக்கும் ஈஸ்வரனான பகவான் தந்தையை அழைத்து வரவும், நந்தனின் நண்பர்களான கோகுல வாசிகள் மகிழ்ந்தனர்.
நந்தன் தான் கண்ட காட்சியை, லோகபாலனை நேரில் கண்டதை, க்ருஷ்ணனை மதிப்புடன் நடத்தியதை ப்ரமிப்புடன் தன் பந்துக்களுக்கு விவரித்தார். அவர்களும் உத்சாகமாக கேட்டு, ஸ்ரீ க்ருஷ்ணன் ஈஸ்வரனே என்றும், மிக ஸூக்ஷ்மமாக தன் நடவடிக்கைகளை வைத்துக் கொண்டிருக்கிறார் என்றனர். இப்படி எண்ணிய தன் மக்களிடம் தன் சங்கல்பம் நிறைவேறவும், அவர்கள் ப்ரமிப்பை நீக்கவும் அவர்களிடம் சமாதானமாக பேசினார். மகா காருணயம் உடைய பகவான் அவர்களுக்கு தன் லோகத்தைக் காட்டினார். தமஸ் – இருள் அல்லது அறியாமை- அண்ட முடியாத வைகுண்ட லோகம். சத்யம் ஞானம் அனந்தம் என்ற சனாதனமான எந்த ப்ரும்ம ஜோதியை சாதனைகள் செய்து, முனிவர்கள் காண்கிறார்களோ, அந்த ஜோதியை கோகுல வாசிகள் கண்டனர். ப்ரும்ம தேஜஸில் குளத்தில் மூழ்கி எழுந்தவர்கள் போல திணறியவர்களை அவரே கை தூக்கி விட்டார். ஒரு சமயம் அக்ரூரர் கண்ட இடம். ப்ரும்ம லோக தரிசனம் கிடைக்கப் பெற்றனர். அங்கு ஸ்ரீ க்ருஷ்ணனை வேதங்களே துதி செய்து கொண்டிருப்பதை கண்டு பரமானந்தம் அடைந்தனர். ஆச்சர்யத்தால் திக்கு முக்காடினர்.
இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தின் பத்தாவது ஸ்கந்தம், முதல் பாகத்தில், இருபத்தெட்டாவது அத்யாயம். ஸ்லோகங்கள்-17
அத்யாயம்- 29
அன்று இரவு சரத் காலத்தின் விசேஷமான மல்லிகை மலர்கள் மலர்ந்து, மிக அழகாக இருக்கவும் ஸ்ரீ க்ருஷ்ணன் தன் யோக மாயையால் அதை உல்லாசமாக செலவழிக்க திருவுள்ளம் கொண்டார். தாரா நாயகனான சந்திரன், வெகு காலம் பிரிந்திருந்த தன் பிரிய மனைவியை காண உத்சாகமாக, முகம் சிவக்க வருவது போல கிழக்கு திசையில் அருண வர்ணனாக உதித்தான். எங்கும் குமுத மலர்கள், சந்திரனின் ஒளியால் மலரும் மலர்கள் லக்ஷ்மி தேவியின் சோபையை ஏற்றுக் கொண்டாற் போல, அருண வர்ணமாக இருந்த சந்திரனின் கிரணங்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் பாடலானார். மனோகரமான இனிய கீதத்தை விரும்புபவர்கள் அதில் மயங்கினர்.
மன்மதனின் தூண்டுதல் போல ஒலித்த இனிய கீதத்தைக் கேட்டு வ்ரஜ தேசத்து பெண்கள், மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல், தாங்களாகவே வேக வேகமாக அங்கு வந்து சேர்ந்தனர். வெகு காலமாக அவர்கள் மனதில் இருந்த ஈடுபாடும் அன்பும் இழுத்து வந்தது போல. ஒருவர் மற்றொருவரை ஏறெடுத்தும் பாராமல் வந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் காந்தனை எண்ணியபடி காதில் அணிந்த குண்டலங்கள் சப்திக்க வந்தனர். ஏற்கனவே ஸ்ரீ க்ருஷ்ணனிடம் மனதை பறி கொடுத்தவர்கள், அல்லது யோக மாயையால் பகவானே அவர்கள் மனதை தன் வயப் படுத்தி கொண்டதால் என்று உரை.
பால் கறந்து கொண்டிருந்தவர்கள் பாதியில் அப்படியே விட்டு விட்டு ஓடி வந்தனர். கோதுமை அன்னம் தயாரித்துக் கொண்டிருந்தவள், கரண்டியை அப்படியே போட்டு விட்டு வந்து விட்டாள். உணவை பரிமாறிக் கொண்டிருந்தவள், முழுவதும் அவள் குடும்பத்தினர் சாப்பிடும் முன் ஏதோ ஒரு சக்தி பிடித்து இழுத்து வருவது போல வந்து விட்டாள். சிறு குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தவள், கணவனுக்கு ஏதோ பணிவிடை செய்து கொண்டிருந்தவள், தானே பாதி சாப்பிட்டுக் கொண்டிருந்தவள், அந்த உணவின் நினைவே இன்றி கீதத்தினால் ஆகர்ஷிக்கப் பட்டவளாக வந்தாள். ஒரு சிலர் ஸ்ரீ க்ருஷ்ணனைக் காணப் போகிறோம் என்று குதூகலமாக நகைகளை அணிந்து கொள்ள முயன்றவர்கள் கவனமின்றி தாறு மாறாக அணிந்தனர். அழகிய ஆடைகளை அணிந்தவர்களாக கிளம்பியவர்களை சிலரை பதிகள் தடுத்தனர். சிலரை தந்தைமார் தடுத்தனர். ஒரு சிலரை புத்ரர்களே தடுத்தனர். ஆனாலும் கோவிந்தன் அவர்கள் மனதை தன் பால் இழுத்த வேகத்தில் எதையும் பொருட்படுத்தவில்லை. அப்படியும் ஒரு சிலர் அவர்களை மீறி வரமுடியாமல் தங்கள் அறைக்குள், இதே நினைவாக கண்களை மூடி தியானித்தனர்.
தாங்க முடியாத உணர்ச்சி வேகம், தங்களை மறந்த உள்ளுணர்வின் தாக்கம், ஸ்ரீ க்ருஷ்ணனே சகலமும் என்று நம்பியவர்கள், சாதாரண வாழ்க்கையில் இப்படி ஒரு உத்வேகம் என்றுமே இருந்தில்லை, தன் கணவன், தந்தை மகன் என்ற பாசங்கள் அற்று விழ, உலகியலில் தவறு என்ற செயல் என்றோ, எதுவுமே மனதில் உறைக்காத நிலையில், தேகம் என்ற பற்றுதல் அடியோடு விடுபட, ப்ரும்மத்தை அடைய முனைப்புடன் தவம் செய்யும் யோகசாதகன் போல ஒரே எண்ணம் கொண்டவர்கள் ஆனார்கள்.
அரசன் கேட்டான்: அது எப்படி? க்ருஷ்ணனை அறிந்தவர்கள், நல்ல குல பிறப்பும், குடும்ப பற்றுடனும் இருந்தவர்கள் எவ்வாறு திடுமென க்ருஷ்ணன் தங்கள் மணாளன் என்பது போல நினைக்க முடிந்தது? அப்படி தீவிரமாக நினைக்க கூட நல்ல குணவதிகளாக இருந்த பெண்களால் முடியுமா?
ஸ்ரீ சுகர் சொன்னார்: முன்னால் சொன்னேனே, சேதி அரசன், க்ருஷ்ணனை அடியோடு வெறுத்தவன், அவனுக்கு சித்தியை அளித்தவர், அவரிடம் அன்புடன் வேண்டும் இந்த எளிய இடையர் குல பெண்கள் தங்கள் உயிருக்குயிராய் நேசிக்கும் பொழுது மறுப்பாரா? அவ்யயன், அப்ரமேயன் தனக்கான எதுவுமே தேவையில்லாதவன் நல்ல குணமே உருவாக இருப்பவன் பகவான், மனிதர்களை உய்விக்கவே வந்தவன் காமம், க்ரோதம், பயம், ஸ்னேகம், ஒட்டுதல், நட்பு, இவைகளை ஸ்ரீஹரியிடம் பெற முடிந்தவர்கள், தானும் அவனாகவே ஆகிறார்கள். இதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. பகவானின் செயல். யோகேஸ்வர்களுக்கும் யோகேஸ்வரன். எப்படி எது முக்தி அடையும் என்று சொல்ல யாரால் முடியும்? அவர்கள் வேகமாக வந்து சேர்ந்ததைப் பார்த்து பகவான் அவர்கள் அருகில் தானே வந்தார். அவர்களிடம் உள்ளன்புடன் பரிவுடன் பேசினார்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: மாகாபாகா:- பாக்கியம் செய்த பெண்களே, உங்களுக்கு பிரியமாக நான் என்ன செய்ய வேண்டும்? வ்ரஜ தேசத்தில் அனைத்தும் நலம் தானே, வியாதியோ, ஆபத்தோ எதுவும் இல்லையே. எதற்கு வந்தீர்கள், சொல்லுங்கள். என்றார். இருட்டு வேளை, துஷ்ட மிருகங்கள் சஞ்சரிக்கும் நேரம். பெண்கள் இங்கு நிற்பது உசிதமல்ல. திரும்பி போங்கள். அனைவரும் அழகிய உடலும் ஆபரணங்களுடனும் தாய். தந்தை, புத்திரர்கள், சகோதர்கள், தவிர உங்கள் கணவன்மார்கள் துணையின்றி வந்து விட்டீர்கள். அவர்கள் தேடுவார்கள். பந்துக்களை ஆத்திரப் பட செய்யாதீர்கள். வனம் அழகாக பூக்கள் மலர்ந்து இருப்பதை பார்த்து விட்டீர்கள் அல்லவா? கிளம்புங்கள். தாரா நாயகன் ஒளி வீசி அழகுற செய்திருக்கிறான். யமுனை நதியில் காற்று மெள்ள வீசி அலைகளின் சுகமான குளிர்ந்த நீரை அள்ளித் தெறிக்கிறது. மரங்களில் இளம் துளிர்கள் பள பளக்கின்றன. பார்த்து ரசித்து விட்டு கிளம்புங்கள், நேரமாக்க வேண்டாம். ஊரில் கொட்டில்களில் பசுக்களும் கன்றுகளும் தேடும். கணவன்மார்கள் உங்கள் பணிவிடைக்காக காத்திருப்பார்கள்.சிறு குழந்தைகள், கன்றுக் குட்டிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு அழும் குரல் கேட்கிறது. அவர்களுக்கு உங்கள் அருகாமையும் சேவையும் தேவை. போய் பாருங்கள். அல்லது, என்னிடம் கொண்ட நேசத்தால் உங்கள் ஸ்னேகத்தால் ஆட்டுவிக்கப் பட்டு வந்திருந்தால், உங்கள் வரவு நல்வரவாகுக. என்னிடம் அனைத்து ஜந்துக்களும் பிரியமாகவே உள்ளன. அல்லது எனக்கு அனைத்து ஜந்துக்களும் பிரியமானவைகளே.
பெண்களுக்கு கணவனுக்கு பணிவிடை செய்வதே முதல் கடமை. அது தான் பந்துக்களுக்கும் நன்மை. ப்ரஜைகளும் வளர்ந்து திடமாக ஆக உதவும். சீலம் இல்லாதவன், செல்வம் இல்லாதவன், வயதானவன், ஜடம், ரோகி, என்றாலும் பதியை பெண்கள் தியாகம் செய்யக் கூடாது. உலகியலில் அது மகா பாதகம். அது சுவர்கம் தராது. புகழை வளர்க்காது. கடினமானது, பயங்கரமானதும் கூட. அறுவறுக்கத் தக்கது என்பர். குல ஸ்த்ரீகள் நீங்கள் உங்களுக்கு அது ஏற்றதல்ல. என்னை தியானம் செய்து, தரிசனம் செய்தும், என்னைப் பற்றி கேட்டும், அனைவரும் கூடி என்னை நினத்து பாடியும், நீங்கள் பெறும் நன்மைகள் அருகில் இருப்பதால் மட்டுமே அடைய முடியாது. அதனால் திரும்பி உங்கள் வீடுகளுக்கு போங்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு தாங்கள் எதை எண்ணி வந்தோமோ அதற்கு விபரீதமாக கோவிந்தன் பேசவும் மிக்க வருத்தத்துடன் தங்கள் நம்பிக்கை தூள் தூளாக, மிக வேதனையை அடைந்தனர். முகம் வாடி, துயரம் மண்ட, பெரு மூச்சு விட்டபடி, உடல் குறுக, உதடுகள் துடிக்க, கால்களால் பூமியில் கோலம் போட்டவர்களாக, கண்களில் நீர் பெருக, கண்ணின் மை வழிந்து புடவைகளை நனைத்து குங்குமங்களை கரைக்க , மிகவும் துக்கத்துடன் அங்கிருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல், பேசாமல் நின்றனர்.
மற்ற சமயங்களில் அன்புக்கு பாத்திரமானவன், அத்யந்த பிரியமானவன் போல பேசுபவன், க்ருஷ்ணனையே, அனைத்தும் என்பதைத் தவிர மாற்று எண்ணமே இல்லாமல், வந்தவர்கள், கண்களைத் துடைத்துக் கொண்டு, சிரமப் பட்டு ஓரளவு அழுகையை நிறுத்தி, தழ தழத்த குரலில் வேண்டினார்கள்.
விபோ! அப்படி சொல்லாதே. இது போன்ற கடுமையான வார்த்தைகள் உன் வாயிலிருந்து வரலாமா? அனைத்தையும் தியாகம் செய்து விட்டு உன் திருவடிகளே சரணம் என்று வந்துள்ளோம். உன் பக்தர்கள் என்று எங்களைப் பார். எங்களை தியாகம் செய்யாதே. மோக்ஷம் வேண்டி தேவர்கள் எப்படி ஆதி புருஷணை பஜிக்கிறார்களோ, அதே போல நாங்களும் தஞ்சம் என்று வந்து நிற்கிறோம்.
எங்கள் கணவன்மார்கள், நாங்கள் பெற்ற பிள்ளைகள், உடன் இருக்கும் உறவினர்களும், நண்பர்களும், இவர்களுக்கு சேவை செய்வது தான் எங்கள் தர்மம் என்று சொன்னாய். நீ தர்மம் அறிந்தவன் அதனால் அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். அது இருக்கட்டும் நீ உபதேசம் செய்வதில் சமர்த்தன். நீயே சொன்னது தான், உடல் உடைய அனைத்து ஜீவன்களிலும் உள் உறையும் ஆத்மா நானே என்று.
உன்னிடத்தில் ஈடுபாட்டுடன் அறிஞர்கள் தங்கள் ஆத்மாவே என்று எண்ணி பிரியமாக இருக்கிறார்கள். நித்யம் உடன் இருக்கும் கணவன், குழந்தைகளால் என்ன தர முடியும், மேன் மேலும் வேலையும், துன்பமும் தான். அதனால் பரமேஸ்வரா! தயை செய். எங்கள் நம்பிக்கையை உடைக்காதே. உன்னிடத்தில் நேசம் வைத்தோம். அரவிந்த நேத்ரா! பலகாலமாக நாங்கள் திடமான நம்பிக்கையுடன் உன் திருவடியை பணிந்து வந்திருக்கிறோம். .
வீடுகளில் வேலைகளை செய்யும் பொழுதும் உன் நினைவே. எங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவன் நீ. கைகள் தான் வேலைகளைச் செய்யும். பாதங்கள் நடக்கும் பொழுது உன் திருவடிகளை அடைவதே நோக்கமாக நகரும். எப்படி திரும்பிப் போவோம். வ்ரஜ தேசம் இல்லையெனின் வேறு எங்கு போவோம்?
அங்க! எங்களை உன் அதரங்களின் அம்ருதம் நனைக்கட்டும். உன் சிரிப்பும் கடைக் கண் பார்வையும், கல கலவென பாடும் ஓசையும், எங்கள் ஆசை எனும் அக்னியை நனைக்கட்டும். அப்படி இல்லையெனில், எங்கள் நிறைவேறாத ஆசை, அனுபவமே, எங்கள் தேகத்தை பொசுக்கி விடும். அந்த நிலையிலும், ஹே சகே! உன்னையே தியானம் செய்து உன் பத நீழலை அடையவே முயலுவோம்.
ஒருவேளை அம்புஜாக்ஷனே! ரமா வசிக்கும் இடம் உன் பாதங்கள், ஒரு க்ஷணம் கண்டாலே போதும்.
ஸ்ரீ உன் பாதங்களில் பூஜிக்கப் பட்ட துளசியை கண்டு கூட பொறாமை படுவாள். ஆனால் அவளே, உன் அடியார் ஒருவர் மார்பில் மிதித்ததை கூட பாராட்டாமல் அங்கு வசிக்கிறாள். அவள் தங்கள் பக்கம் திரும்பி பார்த்து கடாக்ஷத்தால் அனுக்ரஹிக்க வேண்டி தேவர்கள் கூட்டம் வந்து காத்திருக்கிறது. அது போல நாங்களும் உன் பாத தூளி மேலே படாதா என்று வேண்டி நிற்கிறோம்.
அதனால் எங்கள் மேல் கருணை காட்டு. வ்ரஜ தேச ஜனங்களின் பல கஷ்டங்களை தீர்த்தவன் நீ. அவர்கள் ஓடோடி வந்து உன்னையே தஞ்சம் என்று விழுகிறார்கள். தங்கள் வீடுகளில் மற்ற இருப்பிடங்களில் கூட அவர்களுக்கு நிம்மதி இருப்பதில்லை என்பர். அதுவல்ல காரணம். உன்னை எந்த விதத்திலாவது அருகில் இருந்து காண வேண்டும் என்பதே முக்கியமான நோக்கம். அழகாக நீ சிரிப்பதைக் காண துடிக்கிறார்கள். தங்கள் ஆத்மாவின் பூஷணமாக, ஆபரணம் போன்ற உன் அருகில் இருந்தால் எந்த தாபமும் தெரியாது என்பர். புருஷபூஷணா! எங்களுக்கும் உன் அடியார்களாக இருக்க அனுமதி கொடு.
சுருள் சுருளான உன் கேசங்கள் முகத்தை மறைக்க, குண்டலங்களின் ஒளி கன்னங்களில் பட்டு ப்ரகாசிக்க, சிரிக்கும் பொழுது தெரியும் அதரங்களின் அழகும், அபய கரங்களும், தண்டம் ஏந்திய புஜங்களும், ஸ்ரீ தேவி வசிக்கும் மார்பையும் கண்டு ரசித்தபடி உனக்கு பணி செய்யும் அடியாருக்கும் அடியார்களாக எங்களை ஏற்றுக் கொள்.
நீ வ்ரஜ தேசத்தின் துன்பங்களை நீக்கவே பிறந்தாய் என்பது வெளிப்படை. தேவன் நீ, அதிலும் ஆதி புருஷன், முதலில் தோன்றியவன், தேவலோகத்தை பாதுகாப்பவன், என்று அறிவோம். அதனால் எங்களுக்கும் உன் கைகளாகிய பத்மங்களால் ஆசிர்வதிப்பாய். ஆர்த்தன்- மிகவும் கஷ்ட நிலையில் உள்ளவன் என்றால் ஓடோடி காப்பாற்றும் பந்து நீ. எங்கள் தலை மேல் கை வைத்து எங்கள் தாபத்தை நீக்குவாய்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு அவர்கள் இரைந்து வேண்டிக் கொண்டதைக் கேட்டு பகவான் பலமாக சிரித்து, கோகுல ஸ்த்ரீகளுக்கு அவர்கள் விரும்பியதை அளித்தார்.
அவர்களுடன் சேர்ந்து மிகவும் பெருந்தன்மையுடன், அழகிய கண்களும், மலர்ந்த முகங்களுடனும் இருந்த அவர்களிடம் தானும் தன் ப்ரகாசமான பற்கள் தெரிய சிரித்து பேசியும், தாரகைகளுடன் கூடிய சந்திரன் போல இருந்தார்.
அவர்களுடன் சேர்ந்து பாடினார். இளம் பனியின் காற்று சுகமாக வீச, புல்வெளிகளில், குமுதங்கள் மணத்தை வாரி இறைத்த காற்றை ரசித்தபடி, புஜங்களை அணைத்தும், கண்களால் பேசி அவர்களை மகிழ்வித்தும், வ்ரஜ தேசத்து சுந்தரிகள் விரும்பிய படி , ரதி பதியாக அனுபவித்தார்.
இவ்வாறு பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனின் அருகாமையால் பெற்ற மகத்தான குதூகலத்தால் அந்த பெண்கள், தங்களை மற்ற பெண்களை விட அதிக பாக்கியம் செய்தவர்களாக எண்ணினர். அதையறிந்த பகவான் அந்த க்ஷணமே அந்த இடத்தை விட்டு அகன்றார்.
(இது வரை ஸ்ரீமத் பாகவதத்தின், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில் ராசக்ரீடா வர்ணனம் என்ற இருபத்தொன்பதாவது அத்யாயம். ஸ்லோகங்கள்- 48
அத்யாயம்- 30
பகவான் திடுமென மறைந்ததும் கோகுல ஸ்த்ரீகள் திகைத்தனர். பெண் யானைகள் தங்கள் கூட்டத் தலைவனைக் காணாமல் தவிப்பது போல தவித்தனர். ரமாவல்லபன் தங்களுடன் பேசியதை, உடன் நடந்ததை, அன்புடன் பேசியதை, சிரித்து மனோ ரஞ்சகமாக விளையாடியதை, தங்கள் மனதை பறி கொடுத்த அந்த பெண்கள், என்ன செய்வது என்று தெரியாமல் செயலற்று நின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் அருகில் இருந்த பெண், ஸ்ரீ க்ருஷ்ணனைப் போலவே நடப்பதாகவோ, பேசுவதாகவோ, தோன்ற தாங்களே ஸ்ரீ க்ருஷ்ணமயமாக இருப்பதைக் கண்டனர். ஸ்ரீக்ருஷ்ணனின் ப்ரியா மற்ற அனைவருக்கும் பிரியமானவளே. நடந்து கொண்டே தேடினர். வனத்திலிருந்து வனம் ஸ்ரீ க்ருஷ்ணனை பாடிக் கொண்டே அலைந்தனர். எதிரில் தென்பட்ட மரம் செடி கொடிகள், ஆகாயம் போல அனைத்திலும் உள்ளும் புறமுமாக இருப்பவன் தாவரங்களில்கூட ஒளிந்திருக்கலாம் என்று நினத்தனர் போலும்.
அஸ்வத்த மரமே, நீ கண்டாயா? ப்லக்ஷ, ந்யக்ரோத நீங்கள் பார்த்தீர்களா? எங்கள் இதயத்தை நந்தன் மகன் அபகரித்துக் கொண்டு போய் விட்டான். ஏன் விட்டீர்கள் என்றால், அவன் ப்ரேமையுடன் சிரித்து பேசினான். அதை தவிர அவன் கண்களை ஏரெடுத்து பார்த்தே மயங்கி விட்டோம்.
குரபக, அசோக மலர்களே, நாக புன்னாக சம்பக கொடிகளே, பலராமனை தெரியுமா? அவன் சகோதரன், நாங்கள் ஏதோ பேசி சிரித்தோம், எங்களுக்கு கர்வம் என்று நினைத்தான் போலும்,
துளசி ஒருவேளை உன்னிடம் வந்தானா? கல்யாணி, கோவிந்த சரணங்களில் எப்பொழுதும் இருப்பாயே, உனக்கு அச்யுதன் மிகவும் பிரியமானவன். உன்னைச் சுற்றி இருக்கும் வண்டுகள் போன்றே அவன் கண்களும் இருக்குமே. மாலதி, நீ பார்த்தாயா? மல்லிகே, ஜாதி மலரே, நீங்கள் ஒருவேளை அவன் செல்லும் வழியில் இருந்தீர்களா. கைகளால் எங்களை தொட்டதிலேயே நாங்கள் அவனுடையவர்கள் என எண்ணி விட்டோம்.
மாமரமே, ப்ரியாள, பனஸ, அசன, கோவிதார, ஜம்பூ, அர்க்க,பில்வ, பகுள, ஆம்ர, கதம்ப நீப மரங்களே, யமுனைக் கரையில் இருக்கும் மற்ற மரங்கள், செடி கொடிகளில் யாரேனும் அவனைக் கண்டீர்களா? எங்கள் ஆத்மாவே எங்களிடம் இல்லை. எதிரில் வந்தால் சொல்லுங்கள்.
பூமித் தாயே! என்ன தவம் செய்தாய்? சொல்லு, கேசவனின் பாதங்கள் உன் மேல் நடந்து நடந்து புனிதமாக்கி இருக்கிறான். பசுமையாக உன் வயிற்றில் பிறந்தவர்கள்- தாவரங்கள் மட்டுமல்ல மற்ற ஜீவன்கள் அனைத்தும்- செழிப்பாக இருக்க காண்கிறாய். வராஹ சரீரத்துடன் உன்னை தூக்கி வந்த விசேஷமா? அல்லது அவன் பாத தூளி பட்டதால், தானாக வந்த செல்வமா? பெண் மான்களே, உங்கள் கண்களை அச்யுதனுக்கு கொடுத்து விட்டீர்களா? இந்த காற்றில் அவன் உடலில் பூசியிருந்த வாசனை திரவியங்கள், பூ மாலைகள் இவைகளின் மணத்தை, இன்னமும் எங்கள் நாசிகள் கண்டு கொள்கின்றனவே. ஒரு கையால் அணைத்தபடி பறித்த பத்மங்கள், பலராமனின் தம்பி, அவன் துளசி மாலையில் சிக்கிய வண்டுகள் மயங்குவது போல நாங்கள் மயங்கினோம். மரங்களே நீங்களே சாட்சி. அவன் யாருடனோ இந்த வழியில் சென்றானா?
இந்த கொடிகளைக் கேட்போம். மரங்களைச் சுற்றி தழுவியபடி இருக்கிறீர்களே, நீங்கள் அறியாததா? அந்த மரங்கள் கரங்களால் உங்களை அணைத்தபடி இருக்கின்றன. அதனால் தானா, புளகாங்கிதம் அடைந்து மலர்களாக வெளிப்படுகின்றனவோ? இவ்வாறு உன்மத்தம் பிடித்தவர்கள் போல கோகுல பெண்கள், க்ருஷ்ணனைத் தேடி, அலைந்து காணாமல் தவித்து, பழைய சம்பவங்களை எண்ணி அவைகளால் ஸ்ரீ க்ருஷ்ணனுக்கும் அபாயம் வந்திருக்குமோ என்று பயந்தனர்.
திரும்ப பூதனா வந்து விட்டாளோ? காலால் உதைத்த சகடாசுரன் உயிருடன் வந்து விட்டானோ? தங்களுக்குள்ளேயே ஒருவள் தைத்யனாகவும், க்ருஷ்ண பலராம இருவராலும் வதைக்கப் பட்டதாக நடித்து பார்த்தனர். கன்றுகளாகவும், பகாசுரனாகவும் தங்களுக்குள் அபினயம் செய்து, பார்த்தனர்.
பயப்படாதே என்று சொல்லி மலையை தூக்கி மழையிலிருந்து காத்தவன் என்று ஒவ்வொரு நிகழ்வையும் நினைவில் கொண்டு வந்து பேசித் தீர்த்தனர்.
சற்று நேரம் இவ்வாறு புலம்பியபடி இருந்தவர்கள், ஸ்ரீ க்ருஷ்ணனின் காலடி தடங்களைக் கண்டு கொண்டனர். இது நிச்சயமாக நந்தன் மகனின் காலடி தடங்களே, பாதங்களின் வஜ்ர அங்குச சின்னங்கள் பதிந்திருக்கின்றன.
அதைத் தொடர்ந்து மேலும் நடந்தனர். கூடவே பெண் காலடியையும் கண்டு யாராக இருக்கும் என்று யோசித்தபடியே சற்று வருத்தமும் அடைந்தனர். நம் அனைவரையும் விட்டு யாருடன் போனான். யார் என்று அறிய முடியவில்லை. இவள் ஒருவள் பகவானை தன்னுடன் அழைத்துச் சென்று விட்டாள் போலும். ரகசியமாக அவளுடன் சென்றவள். பகவானின் கால் பட்டு இந்த பூமி புனிதமாயிற்று. ப்ரும்ம, ஈசன், முதல் ரமா தேவி வரை அந்த பாத தூளியை தலையில் தாங்குவர். யாராக இருக்கும்? புல் மறைக்கிறது அவள் காலடி தெரியவில்லியே. தாங்களாகவே கற்பனையாக அந்த பெண்ணும், ஸ்ரீ க்ருஷ்ணனும் இங்கு அமர்ந்த்திருப்பார்கள், பிறகு மேலும் நடந்திருப்பார்கள், பூக்கள் சிதறிக் கிடப்பதை பார்த்து பெரு மூச்சு விட்டனர். அவள் யாரோ, நம் அனைவரையும் விட அதிக பிரியமானவள், இப்படி பேசிக் கொண்டே போனவர்கள் தங்கள் சகி ஒருவள் தனித்து இருப்பதைக் கண்டனர். அழுது கொண்டே அவளும் திடுமென தன்னை விட்டு விட்டு க்ருஷ்ணன் மறைந்து விட்டான் என்றாள். அதைக் கேட்டு சற்று தெளிந்து சந்திரன் ஓளியில் பளபளத்த மணல் மேட்டிலேயே அமர்ந்தனர். அனைவருக்கும் ஒரே எண்ணம், ஒரே விதமான எதிர்பார்ப்பு, திரும்பவும் தாங்கள் அறிந்த க்ருஷ்ண கதைகளையே பாடிக் கொண்டு வந்தாலும் வருவான் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். சற்று பொழுதில் சந்திரன் அஸ்தனமாகி விட்டால் இருள் சூழும் என்பதையோ, வீடு, தங்கள் பொறுப்புகள் எதையும் எண்ணாமல் அமர்ந்திருந்தனர்.
( இது வரை ஸ்ரீ மத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், ராச க்ரீடாயாம் க்ருஷ்ணான்வேஷணம் என்ற முப்பதாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்- 45
அத்யாயம்-31
கோபிகள் பாடினர்:
ஹே, தயித! க்ருஷ்ணா! ஜய ஜய. எங்களுடன் வ்ரஜ குலத்தில் பிறந்தவன். அதனாலேயே ஸ்ரீ தேவி இங்கு நிரந்தரமாக தங்கி விட்டாள். உன்னையே உயிர் மூச்சாக கொண்டவர்கள் உன்னைத் தேடுகின்றனர்.
(मच्चित्ता: मद्गत प्राणा: -மச்சித்தா மத்கத ப்ராணா:- என்றபடி)
என்னை ஏன் தேடுகிறீர்கள் என்று கேட்பாயோ, சரத் காலத்தில் மலர்ந்த தாமரையின் சோபையை கொண்ட உன் கண்கள், எங்கள் ப்ராணனை அபகரித்துக் கொண்டு விட்டன. எங்கள் வேண்டுதலை நிறை வேற்றுவதாக சொன்ன வாக்கை நம்பி வந்தோம். செலவில்லாத தாசிகள். எங்களுக்கு செல்வமோ, மற்ற எதுவும் சுல்கமாக- கூலியாக கேட்கவில்லை. ஆயுதங்களால் செய்வது தான் வதமா? உன் கண்களால் எங்களை மறுத்தாலும் வேறு வழி எங்களுக்கு இல்லையென்பதால் ( வேதாத்யயனம் செய்தோ, யோக சாதனைகளோ அறியாத எளிய இடையர் குல பெண்கள், எங்களுக்கு பக்தி மார்கம் தான் எளியது என்பதால்) அதுவும் வதமே.
பலமுறை எங்களை மரணத்திலிருந்து காப்பாற்றி இருக்கிறாய். விஷ ஜலம் குடித்து சாக இருந்தோம். அந்த காளியனை வதைத்தாய். அகாசுரனிடமிருந்து, காட்டுத் தீயில் வெந்து மடியாமல் காப்பாற்றினாய். இந்திரன் அனுப்பிய மழை, காற்றாக வந்த த்ருணாவர்த்தன், மயன் மகன் ருஷபமாக வந்தான், இவைகளைலிருந்து காத்தாய். அதனால் உலகில் பயமின்றி சஞ்சரித்தோம்.
நீ வெறும் கோபிகா வயிற்றில் பிறந்தவன் அல்ல என்று அறிவோம். அகில உலகையும் உன் அந்தராத்மா அறியும். ஏன் யசோதா மகனாக வந்தாய்? ப்ரும்மா உன்னை வேண்டிக் கொண்டார். உலகை காப்பாற்ற என்று ஹே சகே! சாதுக்களான எங்கள் குலத்தில் வந்தாய்.
எங்களுக்கு அபயம் அளித்தாய். சம்சாரம் என்ற பந்தத்திலிருந்து விடுதலை அளிப்பதாக வாக்கு கொடுத்தாய். வ்ருஷ்ணி குலம் விளங்க அதன் முதன்மையான ப்ரஜையாக வந்தாய். எங்கள் தலையில் கை வைத்து எங்களுக்கு வேண்டியதைக் கொடு. தாமரை மலர் போன்ற உன் கைகளே அதைத் தர வல்லவை. ஸ்ரீ தேவி வசிக்கும் வலது கையை எங்கள் தலையில் வை.
எளிய வ்ரஜ ஜனங்கள். உன்னிடம் அன்பைத் தவிர எதையும் யாசிக்கவும் இல்லை. உன் சிரிப்பில் கபடம் எதுவும் தெரியவில்லை. ஏதோ நாங்கள் கர்வம் கொண்டுவிட்டதாக போக்கு காட்டி எங்களை விட்டு மறைந்தாய். உன் முக பத்மத்தை -ஜலருஹானனம்- எங்களுக்கு காட்டு.
எந்த ஆசையும் இன்றி உனக்காகவே உன்னை வணங்கும் எங்கள் சரீரம். புல்லை மேயும் மாடு கன்றுகளுக்குப் பின்னால் போனாலும் உன் தரிசனம் பாபங்களைப் போக்கும். ஸ்ரீ தேவி வசிக்கும் இடம். ஆதி சேஷன் தாங்கும் பாதங்கள். அந்த பாத பத்மங்களை எங்கள் மார்பிலும் வை. அதனால் என்ன பயன்? எங்கள் மனத்தில் உள்ள காமத்தை போக்கு.
புஷ்கரேக்ஷணா! குளத்தில் பூத்த தாமரை போன்றது உன் கண் பார்வையின் குளுமை, உன் மதுரமான வார்த்தைகள், அதை புரிந்து கொள்ளும் அறிஞர்கள் ரசிக்கிறார்கள். பலவித பொருள் தொனிக்கும் அழகிய சொற்களால் அவர்களை மகிழ்விக்கிறய். நாங்கள் உன் கட்டளையை அதன்படியே செய்யும் பணியாட்கள் அவ்வளவே. அவ்வளவு தான் நாங்கள் அறிந்தது. எங்களை உன் அதர ரஸத்தால் உயிர் கொடுத்து வாழ்வளிப்பாய்-முழுக்காட்டு. (உன் உபதேசங்களையோ, அழகிய வார்த்தைகளையோ புரிந்து கொள்ள முடியாதவர்கள் நாங்கள் என்பதாக)
உன் கதையை கேட்பதே உலகியலில் தவிக்கும் ஜீவன்களுக்கு அம்ருதமாகும். சிறந்த கவிகள் எழுதியும் சொல்லியும் அறிவோம் அது மனதில் கெட்ட எண்ணங்களையே இல்லாமல் ஆக்கிவிடும். கேட்ட மாத்திரத்திலேயே மங்களத்தை தரும், ஸ்ரீமான்களான பெரியவர்கள் சொன்னது. எனவே பூமியில் பலர் அதை ஏற்றுக் கொள்கின்றனர்.
நாங்கள் அறிந்ததோ, வாய் விட்டு நீ சிரிப்பதை, பிரியத்துடன் எங்களைப் பார்ப்பதை, எங்களுடன் நடந்தும், விளையாடியதும் இவைகளை நினத்தலே எங்களுக்கு மங்களம். ரகசியத்தில் நாங்கள் எங்கள் உள்ளத்தில் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்து எங்கள் மனதிலேயே இருத்திக் கொள்கிறோம். அவை எங்கள் மனதை நோக அடிக்கிறது என்று தெரியாமல் மறைந்திருக்கிறாய்.
வ்ரஜ தேசத்திலிருந்து பசுக்களை மேய்க்கும் சாக்கில் மற்றவர்களுடன் நீ கிளம்பி போனால், நாங்கள் உன் பாதத்தைக் கண்டு வியப்போம். நளின சுந்தரம் என்போம். ஆ இந்த மென்மையான பாதம் கல், முள் குத்தி வருந்துமோ என்று கவலைப் படுவோம். எங்கள் மனம் படும்பாடு, காந்தன் இதோ போகிறானே, வழியில் இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் என எங்கள் மனம் அலை பாயும்.
தினம் முடிந்து நீல கேசம் கலைந்து முகம் வாடி இருக்கும். வியர்வை வடியும். அதைக் கண்டு எங்கள் மனதில் அதிகமான மன்மத வேதனையை தருவாய்.
வணங்கி வேண்டியவர்களுக்கு வேண்டியதைத் தருபவன் நீ. பத்மஜன் -ப்ரும்மா உன்னை அர்ச்சிக்கிறான். பூமிக்கு அலங்காரமாக இருப்பவன். கஷ்டம் என்றால் உடனே உன் நினைவு தான் வரவேண்டும். பங்கஜம் போன்ற சரணங்கள். யாராயிருந்தாலும் ஆறுதல் அளிக்கும். ரமணா! அந்த பாத தீக்ஷை எங்களுக்கும் கொடு.
சோகத்தை போக்கும், ஆவலை தூண்டும், உன் வேணு கானம். அதை உன் உதட்டில் வைத்து சதா முத்தமிடுகிறாய் – வாசிக்கிறாய். ராகம்- பாடலின் ராகம், மற்றது ஆசை, இவைகளை மனிதர்கள் உன் கானத்தைக் கேட்டு மறப்பார்கள். அந்த வேணுவின் இடமான அதரங்களின் அனுபவத்தை எங்களுக்கும் கொடு.
ஸ்ரீ முகன் நீ. காடுகளில் அலைகிறாய் என்று தெரிந்தால் எங்களுக்கு ஒரு நிமிடம் யுகமாகத் தெரியும். உன்னைக் காணாத நேரமே வீண் என் நினைப்போம். முகத்தில் வழியும் கூந்தல் குழைகள், உன்னைக் கண்டு கொண்டிருக்கும் சமயங்களில் ப்ரும்மா எதற்கு இமைகளை வைத்தார், நடுவில் கண்களை மறைக்கிறதே என்று வருந்துவோம்.
பதி, மகன், தன் குலத்தினர், சகோதரன், உறவினர் இவைகளை அனைவரையும் ஒதுக்கித் தள்ளி நீயே கதி என்று வந்துள்ளோம். வழி எப்படி தெரிந்தது ? உன் கீதமே வழி காட்டியது. அந்த கீதத்தை கேட்டு மயங்கி எங்களையறியாமலே உன்னிடம் வந்து விட்டோம். இரவு நேரமோ, நாம் பெண்கள் என்ற பயமோ இல்லை. எங்களை தியாகம் செய்யாதே.
சிரிப்புடன் கூடிய முகத்தையும், அன்பு பொங்கும் கண்களால் எங்களை காண்பதையும் நினைக்கும் பொழுதே மனம் நிறைகிறது. இந்த பெண்கள் உன்னை நேரில் கண்டதால் மேலும் மேலும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
நீயும் எங்களுடன் காட்டு வாசிகளான வ்ரஜ வாசிகளுள் ஒருவன். துன்பங்களைத் தீர்ப்பவன், உலகத்துக்கே மங்களமானவன். ஒரு துளி கூட சந்தேகமின்றி எங்களை ஏற்றுக் கொள். உன்னிடமே மனதை பறி கொடுத்தவர்கள் நாங்கள். தன் மக்கள் என்று பார். அவர்களின் மனத்துயரத்தை நீக்குவாய்.
உன் சரணாம்புஜத்தை, வலிக்கப் போகிறதே என்று ம்ருதுவாக பற்றுகிறோம். கரடு முரடான காட்டுப் பகுதியில் அலைபவன், அதனால் வலிக்கவில்லையா? தீர்காயுளுடன் இருக்கவேண்டும் என்று எப்பொழுதும் பிரார்த்திகிறோம்.
( இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தம் முதற்பகுதியில், ராஸக்ரீடாயாம் கோபிகா கீதம் என்ற முப்பத்து ஒன்றாவது அத்யாயம். ) ஸ்லோகங்கள்- 19
அத்யாயம்-32
ஸ்ரீ சுகர் சொன்னார்: இப்படி பாடிக் கொண்டும், புலம்பிக் கொண்டும் இருந்த கோகுல பெண்கள், ஒரு நிலையில் தாங்க மாட்டாமல் பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்தனர். ஸ்ரீ க்ருஷ்ணனைக் காண வேண்டும் என்ற ஆவலால். திடுமென அவர்களிடையே சௌரி- ஸ்ரீ க்ருஷ்ணன், பீதாம்பரமும், மாலைகளும் அணிந்து சாக்ஷாத் மன்மத மன்மதனாக வந்து தோன்றினார். ப்ராணனே திரும்பி வந்தது போல மகிழ்ந்து கண்கள் விரிய நோக்கியபடி ஒரே சமயத்தில் எழுந்து நின்றனர். அனைவரும் தங்கள் மனதுக்குகந்தவன் வந்து விட்டான் என மகிழ்ந்தனர். ஒரு பெண் அஞ்சலி செய்தபடி வந்து அவன் கைகளைப் பற்றினாள். ஒருவள் புஜங்களை தாங்கிக் கொண்டவள் அதன் சந்தன வாசனையை முகர்ந்தாள். கால்களில் விழுந்து ஒருவள் வணங்கினாள். பிரியமாகவும், கோபம் கொண்டது போலவும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தங்கள் அன்பைத் தெரிவித்தனர். கண் கொட்டாமல் பார்த்து ஒருவள் ரசித்தாள், ஒருவள் விழுங்குவது போல என்று எவ்வளவு பார்த்தாலும் அவர்களுக்கு த்ருப்தி வரவில்லை. புளகாங்கிதமாக ஒருவள் யோகிகள் ஆனந்த நிலையை அடைவது போல இருந்தாள். கேசவனை அணு அணுவாக ரசித்து நல்ல ஞானியை அடைந்த சாதாரண ஜனங்கள் தங்கள் தாபம் தீர்ந்து அமைதியடைவது போல ஆனார்கள்.
அவர்கள் சமாதானமடைந்து சுய நினைவு பெற்றதும், பகவானை சுற்றி நின்றனர். சக்தியுடன் கூடிய பரம புருஷன் போல, நடந்து காலிந்தி நதியின் மணல் பகுதியை அடைந்தனர். மல்லிகை மலரும் நேரம் அதனால் அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது. மந்தார புஷ்பங்களும் மலர தேனீக்கள் அதை தேடி வந்தன. சரத் கால சந்திரனின் ஒளியால் எங்கும் தூய்மையும், மங்களமான அமைதியும் நிறைந்தது. யமுனை நதியின் அலைகளின் ஓசை கூட துல்லியமாக கேட்டது. அந்த சூழ்நிலையே மனதுக்கு இதமாக இருந்தது. மனதின் காயங்கள் தீர ஸ்ருதிகள்-வேதங்கள் சொல்லும் மனோரதங்களின் முடிவு என்ற நிலை- பற்றுகள் நீங்கிய உயர் மன நிலையை அவர்கள் அடைந்தனர். தங்கள் உத்தரீயம் என்ற மேல் ஆடைகளால் மணல் மேல் விரிப்புகள் போட்டு அமர்ந்தனர். அவர்களுடன் அமர்ந்த ஸ்ரீ க்ருஷ்ணன் யோகேஸ்வரனான ஈஸ்வரன், ஒவ்வொரு கோகுல பெண்ணின் ஹ்ருதயத்திலும் வாசம் செய்தவன், மூவுலகும் ஒன்றான தன் சரீரத்தை எடுத்துக் கொண்டார்.
மன்மதனின் தூண்டுதலை வெளிபடுத்தும் சிரிப்பும், லீலைகளும் கண்களின், புருவங்களின் அசைவுகளாலும், அந்த பெண்கள் சற்றே கோபத்துடன் சொன்னார்கள்; ஒருவனுக்கு ஒருவள் என்பது தானே நியாயம். எங்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் எப்படி திருப்தி படுத்துவாய் என்ற சந்தேகத்தை கிளப்பினார்கள்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: தன் சுய நலத்துக்காக செய்பவன், தனக்கு மட்டுமே நன்மையை நினைத்து செய்கிறான். உபகாரம் செய்பவனுக்கு ப்ரத்யுகாரம் செய்வது பொது தர்மம். அது உலகியலில் தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது. தனக்கு எந்த உபகாரமும் செய்யாதவன், அவனே கேட்காமலும் செய்வது சாதுக்கள் செய்வது. பெண்களே, நான் அழைக்காமல் தாங்களாக என்னிடம் வந்தவர்கள். அது எந்த உபகாரமும் செய்யாதவனுக்கு உபகாரம் செய்யும் சாதுக்கள் செயல். ப்ரதி உபகாரமே கூட செய்யாமல் விடுபவர்கள் மத்தியில் கேளாமலே உதவி செய்பவன் உத்தமன். ஆத்மாராமன், ஆப்த காமன், அக்ருதக்ஞன், குருத்ரோஹி என்று நால்வகை மனிதர்கள். தன்னை அறிந்து தங்களுக்குளே மூழ்கியவன், தன் விருப்பம் பூர்த்தியாகி வேறு எதையும் விரும்பாதவன், செய் நன்றி மறப்பவன், கடைசியில் குரு த்ரோஹி, பெரும் துரோகி- தனக்கு நன்மை செய்தவர்களுக்கும் துரோகம் செய்பவன். ஸகிகளே, சில சமயம் நான் என் பக்தர்களையும் சோதிப்பேன். அந்த பஜனையோ, பக்த பாவமோ நீடிக்கட்டும் என நினைப்பேன். வறியவன் ஒருவனுக்கு எதேச்சையாக தனம் கிடைத்தால் மகிழ்வான். அதுவே திரும்ப தொலைந்தால் அதைத் தவிர வேறு சிந்தனையே இராது. உணவும், உடுப்பதும் கூட மகிழ்ச்சி தராது, இழந்த செல்வமே அவனை வாட்டும்.
லோக அபவாதம் என்றோ, தன் மக்கள் கை விடுவார்கள் என்றோ பயமின்றி நீங்கள் என்னை தொடர்ந்து வந்துள்ளீர்கள். அதனாலேயே நான் விலகி உங்கள் கண்களிலிருந்து மறைந்தேன். ஆனால் நீங்கள் என்னை கோபிக்கவில்லை. தேடி வந்தீர்கள். உங்கள் உளமார்ந்த அன்பை நான் உணர்கிறேன், அதனால் என் பிரியமானவர்களே, உங்களை கைவிட மாட்டேன். உங்கள் பக்தியை ஏற்கிறேன்.
(இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், முதல் பகுதியில், ராச க்ரீடாயாம் கோபீ சாந்த்வனம் என்ற முப்பத்திரண்டாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்- 22
அத்யாயம்-33
ஸ்ரீ சுகர் சொன்னார்: பகவானின் இதமான வார்த்தைகளைக் கேட்ட கோபியர், விரகம்- நடுவில் அவர் மறைந்ததால் ஏற்பட்ட வருத்தம்- அதை மறந்தனர். அவருடன் உடல் உரச நடந்தவர்கள் பெரும் ஆசிகள் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தனர்.
எதிர்பாராமல் கோவிந்தன் ராஸ க்ரீடா என்பதை ஆரம்பித்தான். ஒரு வித நடனம் – பலர் கூடி கைகளை கோர்த்து ஆடுவது- ஒருவரோடொருவராக கைகளைக் கோர்த்துக் கொண்டு அந்த உத்சவம் ஆரம்பித்தது. கோகுலத்துப் பெண்கள் தங்களுக்கிடையில் ஸ்ரீ க்ருஷ்ணன் இருவரில் ஒருவராக இருப்பதைக் கண்டனர். தோள் மேல் தோள் பட அவர்கள் இணைந்து ஆடலாயினர். ஒவ்வொரு பெண்ணும் ஒரு க்ருஷ்ணனுடன் என்று ஜோடி ஜோடியாக இருந்தனர்.
இதைக் கண்ட தேவர்கள் நூற்றுக் கணக்காக தங்கள் விமானங்களில் மனைவிகளுடன் ஆச்சர்யம் தாங்க மாட்டாமல் வந்து கூடினர். துந்துபிகள் முழங்கின. பூமாரி பொழிந்தது. கந்தர்வ பதிகள் பாடினர். அவர்களின் பெண்களும் உடன் பாடலாயினர். நிர்மலமான ஸ்ரீ க்ருஷ்ணனின் சரித்திரம், புகழ் வாய்ந்தது உடனடியாக அனைவருமாக ஒருமித்து பாடலாயினர்.
கோகுல பெண்கள் உடலில் வளையங்களும் நூபுரங்களும், கை வளையல்களும் வந்து சேர்ந்தன. அதன் நாதமும் பாடலுக்கு இசைவாக ஒலிக்கலாயிற்று.
அவர்கள் இடையில் பகவான் தேவகி மகன் அத்யந்த அழகுடன் விளங்கினான். பொன் நகைகளின் நடுவில் பதித்த மகா மரகதம் போல ஜொலித்தான்.
பாதங்களின் நடைகள், புஜங்களின் அபிநயங்கள், மென்மையான முறுவலுடன் புருவங்களின் அசைவுகள், காதுகளின் குண்டலங்கள் ஆடி, கன்னங்களில் ஒளி வீச, உயர்தர மேலாடைகள், கேசத்தை பலவிதமாக அழகுற கட்டி,அனைவரும் க்ருஷ்ணனின் பிரியமானவர்களாக, தாங்களும் உடன் பாடினர். மேகங்களின் இடையில் மின்னல் போல பள பளத்தனர்.
ஆடிக் கொண்டே பலமான குரல் தெரிய உச்ச ஸ்தாயியில் பாடினர். ரதி ப்ரியர்கள், உரக்க பாடியதில் கழுத்து சிவக்க ஸ்ரீ க்ருஷ்ணன் தங்கள் இடையில் இருப்பதை பெரும் பாக்கியமாக எண்ணி மகிழ்ச்சி தெரிய தங்கள் கீதத்தில் பாடினர்.
ஒருவள் ஸ்ரீ க்ருஷ்ணனின் குரலோடு சமமான ஸ்வரத்தில் பாடினாள். அதை சாது சாது என்று மற்றவர் பாராட்டினர். அதன் காரணமாக அவள் அனைவராலும் மதிக்கப் பட்டாள். ஒருவள் களைத்து கையில் கட்டியிருந்த மல்லிகை மாலை நழுவி விழ, அருகில் இருந்த கதா தாரியான க்ருஷ்ணனின் தோளைப் பற்றிக் கொண்டாள். க்ருஷ்ணனின் உத்பல மலர் மாலைகளிலிருந்து வந்த மணத்தை முகர்ந்தவள், முத்தமிட்டாள்.
ஒருவள் நடன வேகத்தில் விழுந்த தன் குண்டலத்தை கீழே விழாமல் தடுக்கும் விதமாக கழுத்தால் அதை தடுத்தவள், அதன் மணியின் ஒளியில் பள பளத்த அருகில் இருந்த க்ருஷ்ணனின் கன்னத்துடன் தன் கன்னத்தை வைத்து அவன் வாயிலிருந்து வந்த தாம்பூல மணத்தை உணர்ந்தாள்.
நூபுரங்கள், இடையில் இருந்த அணி இவைகளின் இனிய நாதத்தோடு ஒத்துப் போகும்படி நாட்டியமாடியும் பாடியும் வந்தவள், அருகிலிருந்த க்ருஷ்ணனின் கைகளை எடுத்து தன் மார்பில் வைத்துக் கொள்டாள்.
கோகுல பெண்கள், எதிர் பாராமல் கிடைத்த தங்கள் மனதுக்குகந்த மணாளனாக எண்ணிவந்தவன் தங்கள் இடையில் இருப்பதை ரசித்து மகிழ்ந்தனர். நடன அசைவுகளிலேயே அவனை அணைத்தும், கழுத்தில் கைகளை சுற்றி வளைப்பதுமாக மெய் மறந்து ஆடினர்.
நடனம் சற்று வேகம் கொள்ள, காதுகளில் ஸூடியிருந்த உத்பல மலர்கள், காற்றில் அசைந்தாடும் குழல்கள் முன் நெற்றியை மறைக்க, அவைகளையும் மீறி முகத்தின் லக்ஷ்மீ கடாக்ஷம் தெரிய, பகவானுக்கு சமமாக ஆட முயல, அவர்கள் கேசம் ஒருபக்கம் , ஆடைகள் ஒரு பக்கம் கலைந்தன. பாடுபவர்களுக்கு இணையாக வண்டுகளும் ரீங்காரம் செய்தபடி அந்த கோஷ்டியில் சேர்ந்து கொண்டது போல ஆயிற்று.
இவ்வாறு அணைத்தும், கைகளோடு கை கோர்த்தும், கண்களால் அன்பு பொங்க பார்த்தும், மகிழ்ச்சியுடன் பலமாக சிரித்தும், வ்ரஜ சுந்தரிகளுடன் ரமா காந்தன் ரசித்து ஆடினான். சிறு குழந்தை தன் ப்ரதி பிம்பத்தைப் பார்த்து ப்ரமிப்பது போல.
ஸ்ரீக்ருஷ்ணனின் அருகாமையை வேண்டிய பெண்களுக்கு அவர்கள் விரும்பியபடி தன்னை கொடுத்த சமயம் அவர்கள் வேறு எதையுமே நினைக்கவேயில்லை என்பது, நழுவி விழுந்த மாலைகளையோ, மேலாடைகளையோ எடுத்து அணியக் கூட மனம் இல்லாமல் நடனத்தில் பங்கு கொண்டதில் தெரிந்தது.
வானத்தில் வந்து கூடிய தேவ கணங்கள் ஸ்ரீ க்ருஷ்ணனின் இந்த அத்புதமான நடவடிக்கையை பார்த்து நம்ப முடியாமல் திகைத்தனர். தாங்களும் அதே போல ஆடவும் உடன் இருக்கவும் விரும்பினர். சசாங்கன்- சந்திரன் தன் தாரா கணங்களோடு ஆச்சர்யத்துடன் பார்த்தபடி இருந்தான்.
அவர்களால் முடிந்தவரை நடனத்தை ஆடி அவர்கள் களைத்துப் போனதும் தன் கடாக்ஷத்தாலும், அவர்களை கைகளால் மெள்ள தடவிக் கொடுத்தும் களைப்பை நீக்கினான். கோகுல ஸ்த்ரீகள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர். அந்த செயலையும் தங்கள் பாடல்களில் பாடினர்.
அதன் பின் அனைவரும் அருகில் இருந்த குளத்தில் நீராடினர். பெண் யானைகளுடன் யானைகளின் தலைவன் கரையை உடைத்துக் கொண்டு நீராடுவது போல. வானத்திலிருந்து தேவர்கள் வர்ஷித்த பூமாரி அவர்களை மூடியது. அதன் பின் க்ருஷ்ண உபவனத்தில், சமவெளியிலும், நீரிலும் சந்திரனின் ஒளியில் சத்ய காமனான பகவான் தன்னை நம்பி வந்த கோகுல பெண்களுக்கு அவர்களின் விருப்பப்படி தன்னையே அளித்தான். சரத் காலத்தை வர்ணிக்கும் கவிகளுக்கு வர்ணிக்க தகுந்த விஷயமாக காலம் சென்றது.
அரசன் கேட்டான்: அது எப்படி? தர்மத்தை நிலை நிறுத்தவே அவதரிக்கிறேன் என்பவன், அம்சமாக வந்த ஜகதீஸ்வரன், அதர்மத்தை அழிப்பேன் என்று உறுதி பூண்டவன், தர்மத்தின் எல்லைகளை தானே வகுத்தவன், அதை பாலனம் செய்வதும் அவனே, என்று இருக்கும் பொழுத்து பர தாரா- மாற்றான் மனைவி என்று தெரிந்தும் அவர்களுடன் சல்லாபமாக நடந்து கொண்டது என்ன நியாயம்? சுவ்ரத! முனிவரே, நீங்கள் விரதங்களை முறையாக நடத்திக் காட்டியவர், ஆப்த காமன்- தனக்கு பிரியமானவர்களுக்கு வேண்டியவன், யது பதியானவன், செய்த இந்த செயல் சரியா? அருவறுப்பாக நான் உணர்கிறேனே, என் சதேகத்தை தீர்க்க வேண்டும்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: தர்மத்திற்கு முரணானது என்று சொல்கிறாய். அவர்கள் சாகசமாக செய்வதும் முரண் தான். தீயின் நாக்குகள் போன்றவர்கள் தேஜஸ் உடையவர்கள். அதனால் தோஷம் இல்லை. இந்த செயலைச் செய்ய சாதாரண ஜனங்கள் செய்ய ஒரு போதும் மனசால் கூட நினைக்கக் கூடாது. ஸ்ரீ ருத்ரன் பாற்கடல் விஷத்தை அருந்தியதை தானும் அனுசரிப்பேன் என்று ஒருவன் நினைப்பானா? இதுவும் அதற்கு சமமானதே. ஈஸ்வரனின் வாக்கு சத்யம். அதே போல நடந்து கொள்வதும் அவசியம். புத்திமான் தன் மனதுக்கு இசைந்த வாக்கை ஏற்றுக் கொள்வான். குசலமான செயல்களில் சுய நலம் இல்லை. அதனால் விபரீதமாக எதுவும் ஆகாது. அனைத்து உயிரினங்களுக்கும் விலங்குகள், மனிதர்கள், வானத்தில் பறக்கும் பறவைகள், தேவர்கள் நன்மை, தீமைகளை தன் வசத்தில் வைத்திருப்பவன் நினைப்பதை நாம் அறியவா முடியும்?
அவருடைய பத்ம பாத தூளியே போதும் என்று நினைத்தவர்கள், யோக சாதனைகளால் அகில கர்ம பந்தங்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்கள், தங்கள் எண்ணம் போல நடந்து கொள்ளும் முனிவர்கள், இவர்களும் நல்லது, தீயது என்ற பேதம் பார்ப்பதில்லை. அப்படி இருக்க, தன் விருப்பத்தால் ஏற்றுக் கொண்ட மனித உடல், அவனுக்கு பந்தம் ஏது?
கோகுல பெண்கள் அவர்கள் பதிகள், என்று அனைத்து உடல் படைத்த உயிரினங்களின் உள்ளும் சஞ்சரிப்பவன் அவன் தலைமையில் அவன் விளையாடுகிறான். இதில் சாதாரண மனிதன் எப்படி விமர்சிக்க முடியும். அனுக்ரஹம் செய்யவே மனித உடலை எடுத்தவன். அவன் அதே போல விளையாடுகிறான், எதை மனிதர்கள் ரசிப்பார்களோ, அதனால் ஸ்ரீ க்ருஷ்ணனை தூற்ற வேண்டாம். அவன் மாயை. அதில் மயங்கியவர்கள், தன் அருகில் இருப்பவனோ,இருப்பவளோ தன்னுடையவர் என மோகிக்கின்றனர். அந்த ப்ரும்ம ராத்திரி முடிந்தவுடன், வாசுதேவன் அனுமதித்து கோகுல ஸ்த்ரீகள் வீடு திரும்பினர்.
வ்ரஜ குலத்து பெண்களுடன் ஸ்ரீக்ருஷ்ணன் இவ்வாறு விளையாடியதை அசூயை இன்றி, சிரத்தையுடன் கேளுங்கள். அதன் பின் வர்ணித்துச் சொல்லுங்கள். பகவானிடத்தில் முற்றிலும் நம்பிக்கையுடன் ஏற்படும் பக்தி, தங்கள் இஷ்டங்களை பூர்த்தி செய்ய வல்லது. மனதில் அமைதி கிடைக்கச் செய்யும். விரைவில் தீரனாக ஆவான்.
( இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், ராஸ க்ரீடா வர்ணனம் என்ற முப்பத்து மூன்றாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்- 40
அத்யாயம்: 34
ஒரு சமயம் தேவ யாத்திரை என்று கோகுலத்து மக்கள் அனைவரும் சக்கர வண்டிகளில் ஏறிக் கொண்டு அம்பிகா வனம் என்ற இடம் சென்றனர். சரஸ்வதி நதியில் ஸ்னானம் செய்து, விபுவான பசுபதியை வணங்கி, பூஜைகள், அர்ச்சனைகள் செய்து பக்தியுடன் வணங்கினர். அம்பிகையையும் அதே போல பூஜித்தனர். பூஜைகளைச் செய்த அந்தணர்களுக்கு, பசுக்கள், பொன், ஆடைகள், மது, இனிப்பு அன்னம், இவைகளை கொடுத்தனர். சரஸ்வதி நதிக் கரையில் சில காலம் வசித்தனர். விரதங்களை ஏற்று, சரஸ்வதி நதி ஜலத்தை குடித்துக் கொண்டு நந்தன்,சுனந்தன் முதலானோர் இரவைக் கழித்தனர். ஏதோ ஒரு மிகப் பெரிய சர்ப்பம் பசியுடன் உணவைத் தேடி அலைந்து கொண்டு அங்கு வந்தது. தூங்கிக் கொண்டிருந்த நந்தனை பிடித்துக் கொண்டது. அதை உணர்ந்த நந்தன் அலறினான். க்ருஷ்ண, க்ருஷ்ணா, இதோ பார், மிகப் பெரிய சர்ப்பம், என்னை பிடித்துக் கொண்டுள்ளது. என்னை விடுவி, என்றார். அதைக் கேட்டு, மற்ற எல்லா கோபாலர்களும், விழித்துக் கொண்டு பெரிய சர்ப்பத்தைக் கண்டு திகைத்தனர். தீ பந்தங்களால் அதை விரட்ட முயற்சித்தனர். தீயின் நாக்குகளால் சூழப்பட்ட போது கூட அது தன் பிடியை விடவில்லை. பகவான் தானே வந்து தன் பாதங்களால் அதை அழுத்திக் கொண்டு நின்றார், எந்த உயிரானாலும் அவர் அதன் தலைவர் தானே. அவர் பாத ஸ்பரிசம் பட்டதும் அந்த நல்ல பாம்பு, தன் சுய ரூபமான வித்யாதரனாக எதிரில் நின்றது. பொன் நகைகள் மின்ன எதிரில் நின்றவனை பகவான் விசாரித்தார். ‘யர் நீ? அத்புதமான உருவமும் அலங்காரமும், லக்ஷணமாக இருக்கிறாய். இப்படி ஒரு தேகத்தை எப்படி அடைந்தாய்? உன் வசம் இல்லாத உடல், இதில் எப்படி பிறந்தாய்?
சர்ப்பம் பதில் சொல்லிற்று: நான் சுதர்சனன் என்ற வித்யா தரன். செல்வ சம்பத்துடன் விமானத்தில் உலகைச் சுற்றி வந்தேன். அங்கிரஸ் முனிவர்கள் சிலரை அவர்கள் அழகில்லாத உருவை ஏளனம் செய்தேன். என் அழகான உருவத்தில் எனக்கு இருந்த கர்வம். அவர்கள் சாபத்தால் இந்த பிறவியை அடைந்தேன். இப்பொழுது அந்த சாபமும் எனக்கு அனுக்ரஹமே என நினைக்கிறேன். லோக குருவான உங்கள் பாத ஸ்பர்ஸம் கிடைக்கப் பெற்றேன். என் சாபமும் நீங்கியது. அண்டியவர்களுக்கு அபயம் தரும் உன்னால், இந்த சாபத்திலிருந்து விமோசனம் வேண்டுகிறேன். உலக வாழ்வில் கஷ்டங்களை அனுபவித்து விடுபட நினக்கும் அன்பர்களுக்கு நீ மோக்ஷம் அளிப்பவன் அல்லவா?
மஹாபாகோ! சரணம் அடைகிறேன். மஹா யோகியே, மஹா புருஷ, சத்பதி, என்னை அனுமதியுங்கள். உங்களால் தான் முடியும். சர்வ லோக லோகேஸ்வரன் தாங்களே. உங்கள் தரிசனத்தால் ப்ரும்ம தண்ட சாபத்திலிருந்து விடுபட்டேன். உங்களுக்கு உள்ள பல பெயர்களால் சதா தியானித்து அர்ச்சனை செய்பவர்கள் அல்லது பிறர் சொல்லிக் கேட்பவர்கள், உடனடியாக புனிதம் ஆகிறார்கள் அப்படி இருக்க உங்கள் பாதங்கள் என் மேல் பட்டதே நான் செய்த பாக்கியம். இவ்வாறு பிரார்த்தனை செய்து வணங்கி, ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து சுதர்சனன் தேவ லோகம் சென்றான். நந்தனும் நலமானார்.
ஸ்ரீ க்ருஷ்ணனின் இந்த லீலையைக் கேட்டு அனைவரும் ஆச்சர்யப் பட்டனர். நியமங்களை முடித்து திரும்ப வ்ரஜ தேசம் வந்தனர். ராமனும் க்ருஷ்ணனும் ஒரு இரவில் கோகுல பெண்களுடன் வனம் சென்றனர். நளினமாக பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் பொழுதை கழித்தனர். நல்ல ஆடை ஆபரணங்களுடனும் வாசனை பூச்சுகளுடனும் மாலைகளை அணிந்து நிலா வெளிச்சத்தில் அது மறையும் வரை, மல்லிகை மலர்கள் மலர்ந்து, குமுதங்களும் மணம் வீச வந்த சுகமான காற்றை அனுபவித்தபடி சர்வ ஜீவன்களுக்கும் மங்களம் தரும், கேட்டாலே மனம் அமைதியுறும் கீதங்கள், தங்கள் கற்பனையில் தோன்றிய படி பாடினர். ஸ்வரம், லயம் தவறாமல் மூர்ச்சனைகள் என்ற சங்கீத சாஸ்திரங்கள் நழுவாமல் பாடினர். அதில் மயங்கிய கோகுல ஸ்த்ரீகள் தங்களை மறந்தனர். அவர்கள் உணர்வில் மாலைகள் நழுவியதோ, ஆடை நழுவியதோ உறைக்கவேயில்லை. இவர்கள் இப்படி ஆடிப் பாடிக் கொண்டிருந்த சமயம் சங்க சூடன் என்ற தனதனின் அடியாள், வந்து சேர்ந்தான். அவர்களை பார்த்துக் கொண்டிருந்தவன் திடுமென கோகுல பெண்களை அபகரித்துக் கொண்டு ஓடினான். அவர்கள் கிழக்கு திசையிலிருந்து அலறியது கேட்டது. க்ருஷ்ணா, ராமா என்ற குரலைக் கேட்டு பசுவை ஏதோ திருடன் அபகரித்துக் கொண்டு போவது போல ஒலிக்க இருவரும் ஓடினர். பயப்படவேண்டாம் என்று சொல்லியபடி வேகமாக கிடைத்த ஆயுதத்தை எடுத்துக் கொண்டு ஓடி அவர்களை விடுவித்தனர். திருட்டுத் தனமாக அங்கு வந்த அதமன் அகப்பட்டான். கால ம்ருத்யு போல இருந்த அவர்கள் இருவரையும் கண்டதும் பெண்களை விட்டு விட்டு தன் உயிரை காத்துக் கொள்ள ஓடினான். அவன் ஓடும் இடங்களை பின் தொடர்ந்து சென்ற கோவிந்தன்,
பலராமனை பெண்களுக்கு காவலாக வைத்து விட்டு, துரத்திசென்று அவனுடைய தலையில் இருந்த ஸூடாமணி ரத்னத்துடன் முஷ்டியால் ஓங்கி அடித்து, வதைத்தான். சங்கசூடனை வதைத்து அவன் தலையில் அணிந்திருந்த ஒளி மிக்க ரத்னத்தை தன் சகோதரன் பலராமனுக்கு கொடுத்தான். பெண்கள் அனைவரும் அதை அன்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவத்தில் பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், சங்க சூட வதம் என்ற முப்பத்து நான்காவது அத்யாயம். ) ஸ்லோகங்கள் -32
அத்யாயம்- 35
ஸ்ரீ சுகர் சொன்னார்: கோகுல பெண்கள் மனதில் சதா ஸ்ரீ க்ருஷ்ணனின் சிந்தனை தான். வனத்துக்குச் சென்று திரும்பும் வரை பகல் பொழுதுகளில் க்ருஷ்ண லீலைகளையே பாடிக் கழித்தனர்.
கோகுல பெண்கள் இடது கன்னத்தை இடது கைகளால் தாங்கியபடி வேணுவை வாசித்தபடி செல்லும் முகுந்தனை மனதால் பின் தொடர்ந்தனர். வானத்தில் சஞ்சரிக்கும் சித்தர்களின் பெண்கள், இதைப் பார்த்து சற்று வெட்கத்துடனே இப்படி கூட உண்டா என்று அதிசயித்தபடி சென்றனர். பாவம், இந்த பெண்கள், கேளுங்கள் இவர்கள் பாடுவதை, நந்தன் மகன் இந்த எளிய பெண்களின் மனதைச் கவர்ந்து கொண்டு சென்று விட்டான். அவனுடைய வேணு கானமே இவர்கள் இதயத்தை துளைக்கிறது போலும் என்று மற்றவர்களிடம் சொன்னார்கள்.
வ்ருந்தாவனத்து, மாடுகளும், மிருகங்களும், பசுக்களும் , இந்த வேணு நாதத்தைக் கேட்டு மெய் மறந்து நிற்கின்றன. பாதி கடித்த கவளங்கள், காதுகளை நாதம் வரும் திசையில் வைத்து, வரைந்து வைத்த சித்திரம் போல ஆடாது அசையாது நிற்கின்றன, தூங்குவது போல அரைக் கண் மூடியபடி.
மயில் இறகுகள் பூங்கொத்தாக, பலாச தாதுக்கள், இவைகளால் அலங்கரிக்கப் பட்டவைகள், கன்றுகளுடனும், பசுக்கள் மற்ற கோகுல வாசிகளுடனும் முகுந்தனை அழைக்கின்றன.
நதிகள் தங்கள் பாதையை மறந்து குதித்து குதித்து செல்வதைப் பார்க்க, காற்றின் உதவியுடன் ஸ்ரீ க்ருஷ்ணனின் பாத தூளிகளை நனைத்துக் கொண்டு செல்ல விரும்புவது போல இருக்கிறது. நாம் தான் அந்த அளவு புண்யம் செய்யவில்லை போலும். அந்த நதி ஜலம் ப்ரேமையுடன் கைகளால் அளைந்து கொண்டு துள்ளிக் கொண்டு செல்வது போல இருக்கிறதை பாருங்கள்.
ஆதி புருஷனை அவன் அனுசரர்கள்- பின் பற்றுபவர்கள், அசலம் என்ற மலை மேல் செல்லும் வன விலங்குகள், அல்லது மலை வாசிகள், அவன் வேணு கானம் கேட்கும் விதமாகவே செல்கின்றன, செல்கின்றனர். அவன் இருப்பிடத்தை பசுக்கள் அந்த கீதம் மூலமாகவே அறிந்து கொள்கின்றன.
வனத்து மரங்கள், கொடிகள், தங்களுக்குள் ஸ்ரீ விஷ்ணுவை அறிந்து கொண்டதைப் போல முழுவதும் புஷ்பங்களால் மூடியவைகளாக இருக்கின்றன. தன் பாரத்தையே தாங்க முடியாத அளவு பெரிதான தேன் கூடுகள், ப்ரேமையால் மனம் நிறைந்து தேனை வழிய விடுகின்றன போலும்.
கண்ணுக்கு விருந்தாகும் திலகம், வன மாலை, திவ்ய கந்தமுடைய துளசி, மதம் கொண்டவைகள் போல தொடரும் வண்டுகள், தங்களுக்கு இணையாக தாளத்துடன் அந்த கானம் ஒலிப்பதாக நினத்தோ, வேணுவை தொடருகின்றன.
குளங்களில் சாரஸ, ஹம்ஸ பறவைகள், இந்த மனோ ரஞ்சகமான கீதத்தைக் கேட்டு ஹரியின் அருகில் வந்து நிற்கின்றன. ஆஹா! கண் மூடி, மௌனமாக ரசிக்கின்றன.
பலராமனுடன், உல்லாசமாக செல்பவனைக் கண்டு, மலைச் சாரலில் வ்ரஜ தேசத்து வனதேவதைகள், மகிழ்ந்து வேணு நாதத்தால் ஆகர்ஷிக்கப் பட்டு பூ லோகத்துக்கே வந்து நிறைகின்றனர்.
மேகம் அதிகமாக கர்ஜித்து விட்டால், தடையாகுமோ என்று மெள்ள மெள்ள அதிருகிறது. தங்கள் நண்பனான மலையை மெண்மையாக வர்ஷித்து, அவை தங்கள் இலைகளால் நல்ல நிழல் அளிக்கச் செய்கிறது.
வித விதமான பாத தடங்கள், கோகுலத்து இடையர்கள் ஸ்ரீ க்ருஷ்ணனுடன் நடந்து வேணு கீதத்தை ரசித்தபடி செல்கின்றனர். ஹே யசோதா! உன் மகன் வேணுவை வாசிப்பதிலும் நிபுணன். தானே தனக்கு குருவாக கற்றுக் கொண்டு விட்டான். ஸ்வரம் ஜாதி என்ற சங்கீத சாஸ்திரங்களையும் விடவில்லை. பூர்ணமாக கற்று தேர்ந்தவன் போல் பிசகு இல்லாமல் வாசிக்கிறான். மந்தர, மத்யம தார என்ற ஸ்தாயிகளில் வாசிக்கும் பொழுது தலை குனிந்து கேட்கும் அறிஞர்களும் தங்களை மறந்து ரசிக்கிறார்கள். இதுவரை சிறந்த பாடகர்கள் என்று பெயர் பெற்றிருந்த வித்வான்கள் கூட தங்கள் அபிமானம் விலக, வணங்கி இருந்து கேட்கின்றனர்.
உன் மகனின் பாதங்கள் படும் இடங்களில் பாதங்களின் அடியில் உள்ள அடையாளங்கள் தெளிவாக தெரிகின்றன. த்வஜம், வஜ்ரம், நீரஜா- தாமரை மலர், அங்குசம் என்று பலவிதமான சின்னங்கள் தெரிகின்றன. அவைகளின் மேல் நம் காலை வைத்து நடப்போம் என்று எண்ணினால் அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
மணிமாலை எதற்கு அணிந்திருக்கிறான், பசுக்களை தவற விடாமல் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று சோதிக்க மாலையின் மணிகளால் எண்ணிப் பார்ப்பானா? ஏற்கனவே துளசி மாலை இருக்கிறது. அதன் மேல் இந்த மணிமாலையும். வீடுகளில் இருந்தபடியே கை வேலைகளுக்கிடையில் வேணு நாதத்தையே கேட்டுக் கொண்டிருக்கும் பெண்களைப் போலவே வனத்தில் பெண் மான்களும் தொடர்ந்து வந்து அந்த வேணு கீதத்தைக் கேட்டு அசையாமல் நிற்கின்றன.
ஹே யசோதா, மாலையில் திரும்பும் பொழுதும் சோர்வில்லாமல் வனத்தில் கிடைக்கும் மல்லிகை பூக்களைக் கொண்டு மாலைகளை அணிந்து மாடுகள் விடுபடாமல் அவைகளை ஒருங்கிணைத்து ஓட்டி வருகிறான் உன் மகன். சிலர் யசோதையின் மைந்தன் என்பர், சிலர் நந்த சூனு- நந்தன் மகன் என்பர்.
மலையின் இதமான காற்று மலய மாருதம் சுகமாக சந்தண மணத்தை ஏந்தி வரும். குளுமையான அந்த காற்று உடலில் பட்டாலே இதமாக இருக்கும். இந்த மலய மருதம் தென் பகுதியிலிருந்து வரும். உன் மகனின் உடலில் பூசியிருக்கும் சந்தணம் மணம் அதிக குளிர்ச்சியா அல்லது தன் காற்று அதிக குளிர்ச்சியா என்றறிய சந்தணத்தை தொட்டு பார்ப்பது போல இருக்கிறது. அரச சபைகளில் பாடுவதே தொழிலாக இருக்கும் வந்தி என்பவர்களை போல கந்தர்வ வித்யாதரர்கள், பூமாரி பொழிந்தும், வாத்யங்களை வாசித்தபடியும் உடன் வருகிறார்கள்.
தூரத்திலிருந்தே வ்ரஜ வாசிகள், பசுக்களை வாத்சல்யத்தோடு பார்க்கின்றனர். முதியோர்கள் கூட கோவர்தன மலையைத் தாங்கி பிடித்து தங்களை காத்த உன் மகனையும் வாத்சல்யத்தோடு பார்க்கின்றனர். ப்ரும்மா முதலான பெரியவர்களும் வணங்கும் பாதம். மேய்ந்தபின் வரும் பசுக்கள் ஆவலுடன் கொட்டில்களுக்கு திரும்புகின்றன. அவைகளின் கண்களில் மகிழ்ச்சியும், வேகமான நடையில் மிதிபட்டு பூமாலைகள் குளம்புகளில் மாட்டிக் கொள்ளும். தேவகி மைந்தன் நமது நண்பன் என்று சந்திரனும் தன் கிரணங்களுடன் ஒளி விசிக் கொண்டு வந்து சேருவான்.
நாள் முழுவதும் வனத்தில் அலைந்து பதரி- இலந்தை பழம் போல முகம் வாடி வீடு திரும்பி தன் மக்களை காண விழையும் இடையர்கள் கூட்டத்தில் தானும் அதே அளவு ஓய்ந்து போய் இருந்தாலும் கஜ ராஜன் போல உத்சாகமாக மற்றவர்களுடன் சிரித்து பேசியபடி உன் மகன் வ்ரஜ ப்ரதேசத்தில் நுழைந்ததும் தங்கள் மனோரதங்கள் பூர்த்தியானது போல வ்ரஜ தேசத்தினர் மனம் மகிழ்வார்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: அரசனே! அனவரதமும் ஸ்ரீ க்ருஷ்ண தியானமாகவே வ்ரஜ தேசத்து பெண்களும் மற்றவர்களும் தங்கள் வேலைகளினூடே பொழுதைக் கழித்தனர். தன் வரவினாலேயே அவர்கள் தாபத்தை போக்கியவராக ஸ்ரீக்ருஷ்ணர் வருவார்.
(இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில் வ்ருந்தாவன க்ரீடாயாம்கோபிகா யுகள கீதம் என்ற முப்பத்தைந்தாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்-25
பத்தாவது அத்யாயம்- முதல் பகுதி
அத்யாயம் -36
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஒரு நாள் திடுமெனஒரு அசுரன் ரிஷப ரூபத்தில் வந்தான். பசுக்களின் கொட்டில்கள் இருந்த இடத்தில் தன் பெரிய திமில்களுடன், மிகப் பெரிய உருவத்துடன், தன் குளம்புகளால் மிதித்து பூமியை பிளந்து விடுவது போல ஓசை எழுப்பினான். கடுமையான குரலில் குரலெழுப்பி. பாதங்களால் மாறி மாறி தரையை மிதித்து வாளை தூக்கி, குனிந்து கொம்பின் நுனியால் கிடைத்ததை குதறியது. அடிக்கடி சிறுநீர் கழித்தும், கண்கள் குத்திட்டு நிற்க, நிஷ்டூரமாக அங்கிருந்த பசுக்கள் மற்றும் காளைகள் கன்றுகளை பயமுறுத்தியது. சினை கொண்டிருந்த பசுக்கள் அகாலத்தில் கன்றுகளை ஈன்றன. பயத்தால் நடுங்கின. அகாலமாக பூமி அதிர்ந்து, மலை போல ஏதோ தங்கள் மேல் விழுந்து விட்டதாக நினைத்து அலறின.
கோகுலத்து ஆண்களும் பெண்களும் ஓடி வந்தனர். பசுக்கள் பயந்து தாறு மாறாக ஓடின. அனைவரும் க்ருஷ்ண. க்ருஷ்ணா என்று அழைத்தனர். கோவிந்தா வந்து பார் என்றனர். ஓடி வந்தவர், அவர்கள் பயத்தால் நடுங்கி கொண்டிருப்பதைக் கண்டனர். பயப்படாதீர்கள் என்று சொல்லி அவர்களை சமாதானப் படுத்தி விட்டு, விருஷாசுரன்- ரிஷப-காளை ரூபத்தில் வந்த அசுரனை அழைத்தார். அசட்டுத் தனமாக ஏன் இந்த சாது ஜீவன்களை மிரட்டுகிறாய். மந்த புத்தியுடையவன் நீ. உன் பலத்தால் வந்த கர்வம் இது. துராத்மாக்கள் இப்படித்தான், தன் பலத்தில் கர்வம் கொண்டு பலமில்லாதவர்களிடம் தங்கள் வீரத்தைக் காட்டுவார்கள். சொல்லிக் கொண்ட கைகளை பலமாக தட்டியபடி எதிரியாக வந்த ரிஷபத்தை- காளையை அணுகினார். அதுவும் பாய்ந்து முட்ட வந்தது. கொம்பை தாழ்த்திக் கொண்டு மூர்கமாக, இந்திரனின் வஜ்ரம் விழுவது போல எதிர்த்த காளையை நெருங்கி அதன் கொம்புகளை அழுந்த பற்றிக் கொண்டார். பதினெட்டு அடிகள் பின் புறமாக நடந்து, யானை, தன்னை எதிர்க்கும் மற்ற யானையை அடக்குவது போல அடக்கி விட்டார். அதுவோ, உடனே எழுந்து, உடல் க்ரோதத்தால் துடிக்க, பெரு மூச்சு விட்டது. கொம்புகளை விடாமல், அது தன் மேல் வந்து விழுவதையும் தடுத்தபடி, பாதங்களால் இடறி விட்டு பூமியில் விழச் செய்தார். அதன் மேல் நின்று, அதன் கொம்புகளாலேயே குத்தி வதைத்தார். அதுவும் பூமியில் விழுந்தது.
வாயிலிருந்து ரத்தமாக வெளியில் வர, சிறுநீர் கழித்தபடி தலையும் உடலும் தரையில் கிடக்க, உயிரை விட்டது. தேவர்கள் வந்து ஸ்ரீ ஹரியை துதித்து பூமாரி பொழிந்தார்கள்.
இப்படி பெரிய திமில் கொண்ட ரிஷப அசுரனை வதம் செய்தபின் ஸ்ரீக்ருஷ்ணனுடன் மற்றவர்களும் கோகுலத்திற்கு திரும்பினர். இந்த சம்பவத்தை நாரதர் கம்சனிடம் சொன்னார். யசோதை பெற்ற கன்யா, தேவகியின் க்ருஷ்ணன், ராமன் ரோஹிணி புத்ரனாக வளருவது என்ற விஷயங்கள் உன்னிடம் பயந்த வசுதேவனால் தன் மித்ரனான நந்தனிடத்தில் நியாசமாக- பாதுகாப்பாக வைக்கப் பட்டது என்பதையும் சொன்னார். போஜ ராஜன் அதைக் கேட்டு கண்கள் சிவக்க உடல் துடிக்க ஆத்திரப்பட்டான். கூர்மையான வாள்களை கொண்டு வாருங்கள் வசுதேவனை வதைக்க என்றான்.
நாரதர் தடுத்தார். யாரும் அந்த கட்டளையை ஏற்கவில்லை, தங்களுக்கே அதனால் ஆபத்து என்று வாளாவிருந்தனர். நாரதர் அகன்றதும், இரும்பு சங்கிலிகளால் வசுதேவரை மனைவியுடன் சேர்த்து கட்டி, சிறையிலிட்ட பின், கேசினீ என்ற தன் அடியாளை அழைத்தான். ராமன், கேசவன் இருவரையும் கொன்று வா என்று அனுப்பினான். அது போதாது என்று முஷ்டிகன், சாணூரன் என்ற மல்லர்களை அனுப்பினான். சல, தோசல என்ற மல்லர்களும் உடன் சென்றனர். மந்திரிகள், ஹஸ்தி பாதன், முதலானவர்களைக் கூப்பிட்டு, ஹே! கேளுங்கள். இந்த வீரர்கள், சாணூர முஷ்டிகர்கள், நந்தனுடைய வ்ரஜ தேசம் சென்றனர். ஆனக துந்துபி என அழைக்கபடும் நந்தன், அவன் வீட்டில், எந்த குமாரர்களால் எனக்கு ம்ருத்யு என்று கேட்டோமோ, அவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் அனைவரும் உடன் இருந்து இந்த மல்லர்கள் அச்சிறுவர்களை கொல்லும்படி செய்யுங்கள் என்றான். பெரிய அரங்குகள் ஏற்பாடு செய்யுங்கள். ஒருவரோடு ஒருவராக செய்யும் மல் யுத்தம் விமரிசையான ஏற்பாடுகளுடன் நடக்கட்டும். பொது ஜனங்களை அழைத்து கூட்டமாக அனைவரும் பார்க்கும் படி இந்த மல்யுத்தம் நடக்க வேண்டும். மஹாமாத்ர! முதன் மந்திரியே, குவலயா பீடம் என்ற அந்த மதம் பிடித்த யானையை அரங்கத்தின் வாயிலில் நிறுத்துங்கள். அதைக் கொண்டு அந்த சிறுவர்களை மிதிக்கச் செய்யுங்கள்.
தனுர் யாகம் என்ற பெயரில் உத்சவங்கள் ஆரம்பியுங்கள். நியமமாக யாகம் செய்ய என்ன செய்வீர்களோ அனைத்தும் குறைவற செய்யுங்கள். சதுர்தசியன்று பகவான் பூதபதியான பரமேஸ்வரன் பேரில் யாகம் நடப்பதாக காட்டிக் கொள்ள வேண்டும். தேவையான சாமான்களை பலரும் காண சேமித்து வையுங்கள். இப்படி அவர்களுக்கு ஆணையிட்டு விட்டு, தந்திரமாக அக்ரூரரை அழைத்துச் சொன்னான். ஹே! தானபதே! எனக்கு உங்களால் ஒரு வேலை ஆக வேண்டும். என் ஆப்த நண்பனாக அதைச் செய்து கொடுங்கள். உங்களை விட மேலான என் நலம் விரும்பி இருக்க முடியாது. போஜர்களிலும் சரி, வ்ருஷ்ணிகளிலும் சரி, வேறு யாரையும் உங்களை விட தகுதியான நபராக நான் நினைக்கவில்லை. ஆகவே, உங்களை வேண்டிக் கொள்கிறேன். சௌம்ய! காரியம் அவ்வளவு கம்பீரமானது. இந்திரன் பகவான் விஷ்ணுவிடம் சென்று தன் காரியங்களை சாதித்துக் கொள்வான் அல்லவா, அது போல எண்ணிக் கொள்ளுங்கள்.
நந்தனின் வ்ரஜ தேசம் போங்கள். அங்கு ஆனக துந்துபியின் புத்திரர்கள் இருப்பார்கள். அவர்களை உங்கள் ரதத்தில் ஏற்றிக் கொண்டு உடனடியாக திரும்பி வாருங்கள். அவர்கள் தேவகியின் வயிற்றில் பிறந்தவர்கள். எனக்கு ம்ருத்யுவாக இருப்பார்கள் என்று சொல்லப்பட்டது தெரியும் அல்லவா? மற்ற கோகுலத்து பெரியவர்கள், நந்தன் போன்றவர்களுக்கு நிறைய பரிசுகள் கொண்டு செல்லுங்கள்.
இனியும் பொறுக்க முடியாது. நான் ஏற்பாடுகள் செய்து விட்டேன் இருவரையும் காலன் போன்ற யானை காலில் மிதிபட செய்வேன். அதிலிருந்து தப்பினால், மல் யுத்த வீரர்கள் அவர்களை மல் யுத்தம் செய்ய அழைத்து கொல்வார்கள். அவர்கள் இருவரும் மின்னல் போல மல் யுத்தம் செய்பவர்கள். அவர்கள் பலசாலிகள். நிச்சயம் இந்த செயலை செய்து முடிப்பார்கள். அதன் பின் வசுதேவன் அவன் அடியாட்கள், அவனைச் சார்ந்தவர்கள் அனைவரையும் கொல்வேன். வ்ருஷ்ணி, போஜ, தாசார்ஹ என்ற யது குலத்தினர் ஒருவரும் மிஞ்ச விட மாட்டேன். தந்தை உக்ர சேனன், முதியவன், இன்னமும் ராஜ்யத்தை ஆள விரும்புகிறான். அவன் தம்பி தேவகன், மற்றும் யாரெல்லாம் என்னை எதிர்க்கிறார்களோ அனைவரையும் கொல்வேன். மித்ரனே! அதன் பின் இந்த பூமி என்னுடையதே. எந்த வித இடையூறும் இன்றி அரசனாவேன். ஜராசந்தன் என் குரு. த்விவிதன் என் நெருங்கிய சகா. சம்பரன், நரகன், பாணன், இவர்கள் என்னிடம் நட்பு கொண்டவர்கள். அவர்களுடன் நான் தேவ பக்ஷத்திலிருந்து யார் எதிர்த்து வந்தாலும் போரில் வெல்வேன். அகண்டமான ராஜ்யத்தை ஏக போகமாக நான் ஆள்வேன். சகே! இதெல்லாம் நினைவில் கொள்வாயாக. சீக்கிரம் அந்த சிறுவர்களை அழைத்து வா. ராமன், க்ருஷ்ணன் என்ற இருவர். தனுர் யாகம் என்று அழைத்த தாகச் சொல்லுங்கள். யது புரத்தில் செல்வ செழிப்பையும் அழகையும் பார்க்கலாம் என்று சொல்லுங்கள்.
அக்ரூரர் சொன்னார்: ராஜன்! உங்கள் மரணத்துக்கு காரணமானவர்கள் என்று நினைப்பவர்களை ஒழிக்க நினைப்பது நியாயமே. இதில் பலன் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். தெய்வ சங்கல்பம் இருக்க வேண்டும். செயல்களின் பலனை நிர்ணயிப்பது அதுவே. மனிதர்கள் மனக் கோட்டைகள் கட்டலாம். வானளாவ ஆசைகள் இருக்கலாம். தெய்வம் என்ன செய்யும் என்று பேசுபவர்கள் கூட சோகமோ, மகிழ்ச்சியோ அடைய தகுதி உடையவர்களே. அதனால் உங்கள் ஆணைப் படி செய்கிறேன்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு அக்ரூரரை நியமித்து விட்டு, மந்திரிகளையும் கட்டளையிட்டு அனுப்பி விட்டு, கம்சன் தன் மாளிகை சென்றான், அக்ரூரரும் தன் வீட்டிற்குச் சென்றார்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், அக்ரூர சம்ப்ரேஷணம் என்ற முப்பத்து ஆறாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்- 40
அத்யாயம்-37
ஸ்ரீ சுகர் சொன்னார்: கேசி என்பவன் கம்சனால் அனுப்பட்டான். பெரிய குதிரை வடிவம் கொண்டவன் அவன். வாயு வேகத்தில் வந்தான். அவன் குளம்பின் அடியில் பூமி நழுவியது போலிருந்தது. பிடரி மயிர் பின் பக்கமாக கொடி போல வீசியது. ஆகாயமே அந்த வேகத்தால் பயந்து நடுங்கியது. அகில உலகமும் ஆட்டம் கண்டது. விசாலமான கண்களும், முகத்தின் குகை போன்ற உள் புறமும், மிகப் பெரிய கழுத்தும், அதுவே நீல வானம் போல பரந்து இருந்ததோ, கம்சனுக்கு பிரியமானதை செய்வதே குறிக் கோளாக, நந்தனின் வ்ரஜ தேசம் வந்தான். வ்ரஜ தேசத்தை பய முறுத்தியபடி வந்தவனைப் பார்த்து பகவான் இது யார் நம் கோகுலத்தை தாக்குவது என்று வெகுண்டார். தன் முன் ரூபமான ம்ருகேந்திரன்- சிங்க ரூபத்தை எடுத்துக் கொண்டார். தன் எதிரின் நின்ற பகவானை பாதங்களால் முட்டினான் கேசி. சண்ட மாருத வேகத்தில் வந்தவன், எதிர்க்க முடியாது என்ற இறுமாப்புடன் நின்றான். அதோக்ஷஜன் இருகைகளாலும் அதன் தோள்களைப் பற்றி தன் கால்களின் இடையில் வைத்துக் கொண்டு தன் வில் நுனியால் கருடன் பாம்பை தூக்குவது போல தூக்கினார். மயங்கிய நிலையில் இருந்த கேசி கிடைத்த இடைவெளியில் விழித்துக் கொண்டான். பகவானும் அவன் வாயினுள், தன் புஜம் வரை நுழைத்தார், பள்ளத்துக்குள் பாம்பை தள்ளுவது போல இருந்தது. அவன் பற்கள் உடைந்து விழுந்தன. கேசி தன் வாயினுள் நுழைந்த பகவானின் புஜங்களால் பெரிதும் பாதிக்கப் பட்டான். மகாத்மாக்களே ஆனாலும் வியாதிகள் கவனிக்காமல் விட்டால் தீர்வே வழி இல்லாமல் போவது போல. மூச்சுக் காற்று தடைப் பட்டதாலும், பாதங்களை உதைத்துக் கொண்டு தடாலென விழுந்தான். அவன் உடலில் இருந்து தன் புஜங்களை விடுவித்துக் கொண்ட பகவான், அவைகளை உதறி சுத்தம் செய்து கொண்டார். பூமாரி பொழிந்தது.
தேவ ரிஷி வந்து மற்ற பாகவர்களுடன் வந்து க்ருஷ்ணனிடம் ரகசியமாக ஒரு விஷயத்தைச் சொன்னார். க்ருஷ்ணா, நீ ஜகதீஸ்வரன்.யோகேசன். வாசுதேவன், அகில உலகமே உன் இருப்பிடம். ப்ரபோ, நல்லவர்கள் வணங்கும் நீயே தான் அனைத்து உயிரினங்களிலும் ஆத்மாவாக இருக்கிறாய். ஒரே ஜோதி நீயே. ரகசியமானவன், மகா புருஷன், ஈஸ்வரன். நீ தன்னிலேயே லயிக்கும் சர்வ லோகாஸ்ரயன். உன் மாயையால் குணங்களை தோற்றுவித்தாய், பின் சத்ய சங்கல்பனாக ஸ்ருஷ்டி,ஸ்திதி,லயம் என்று நடத்திக் கொண்டிருக்கிறாய். இப்படிப் பட்ட நீ, பூவுலகில் அவதரித்தாய். கர்வம் கொண்ட தைத்யர்களை அடக்கவும், நல்லவர்களை ரக்ஷிக்கவும் என்று வந்தாய். இந்த குதிரை வடிவில் வந்த அசுரனையும் நல்ல வேளையாக வதைத்து விட்டாய். இந்த குதிரை கணைக்கும் சத்தமே தேவலோகத்தை நடுங்க வைத்தது. கம்சன் இன்னமும் சிலரை அனுப்பியிருக்கிறான். சாணூரன், முஷ்டிகன் என்ற மல் யுத்த வீர்கள் தங்கள் அடியாட்களுடன் வருகிறார்கள். நாளை மறுநாள் நீ கம்சனையும் வதம் செய்வாய் என எனக்குத் தோன்றுகிறது.
இன்னும் நீ செய்ய வேண்டியது நிறைய உள்ளது. பூமியிலும், உரக,நரகத்திலும் பாரிஜாத மரத்தை அபகரித்து இந்திரனை தோற்கடித்த, வீர கன்யா ஸ்த்ரீகளை, வீர்ய சுல்கம் என்ற பெயரில் அபகரித்தவனை கொல்லவேண்டும். ந்ருக அரசனுக்கு விமோக்ஷணம் தர வேண்டும். த்வாரகாவில் ஜகத்பதே, ஸ்யமந்தக மணியை பெற வேண்டும் அத்துடன் உன் மனைவியையும் பெறுவாய். குருவான அந்தணனின் இறந்த குழந்தைகளை மீட்டுத் தர வேண்டும். பௌண்ட்ரக வதம், அதன் பின் காசி புரியை முற்றுகையிட்டு வெற்றி கொள்ள வேண்டும், தந்த வக்த்ரன் வதம், சேதி அரசனை பெரும் யாகத்தில் வதைக்க வேண்டும், இன்னும் பல வீர செயல்களைச் செய்வாய் என்று நான் நம்புகிறேன். த்வாரகாவாசியாக உன்னை பலரும் பாடுவதைக் கேட்பேன். அதன் பின் கால ரூபனாக பெரும் எண்ணிக்கையில் யுத்தமும், அதில் பெரும் நாசமும், அர்ஜுன சாரதியாக உன்னைக் காண்கிறேன்.
மிக சுத்தமான ஞான ரூபியாக, வேண்டுபவர்களுக்கு வேண்டியதைக் கொடுப்பவனாக, குண ப்ரவாகமாக உன்னை கண்டு வணங்குகிறேன். பகவானே நீ ஈஸ்வரன், உன் ஆத்ம மாயையால், தனித்வமான கல்பனையால், உன் விளையாட்டு வினோதம் காரணமாக மனித உருவம் எடுத்து வந்துள்ளாய். இந்த வ்ருஷ்ணி தேசம் புண்யம் செய்தது. அதை வணங்குகிறேன்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு யது பதியான ஸ்ரீ க்ருஷ்ணனை பாகவதர்களுல் முக்கியமாக கருதப் படும் நாரதர் வணங்கி அனுமதி பெற்று விடை பெற்றார். பகவானும் கேசி வதம் ஆன பின், எதுவும் காட்டிக் கொள்ளாமல் வழக்கம் போல பசுக்களை மேய்க்கச் சென்றார். மற்ற இடையர் குல தோழர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் உடன் வந்தனர். மலைச் சாரலில் பசுக்கள் மேய்ந்து கொண்டிருக்கும் சமயம் திருடன், காவலன் விளையாட்டில் ஈடுபட்டனர். சிலர் திருடர்களாகவும், மற்றும் சிலர் ஆடுகளாகவும், -மேஷங்களாகவும்- வேடமிட்டுக் கொண்டனர். பயமின்றி விளையாட்டு தொடர்ந்த து.
அந்த சமயம் மய புத்ரன்- மயன் என்ற அசுரன் மகன்- வ்யோமன் என்பவன் கோபாலனாக உருவம் எடுத்துக் கொண்டு மேஷமாக நின்ற சிறுவர்களை தூக்கிச் சென்றான். ஒவ்வொருவராக தூக்கிச் சென்று மலை சாரலில் குகையில் ஒளித்து விட்டு திரும்பி வருவான். இன்னமும் நாலைந்து பேர் தான் பாக்கி என்ற நிலையில் குகை வாசலை அடைத்து விட்டான். இதையறிந்ததும் க்ருஷ்ணன் ஓனாயை சிங்கம் கௌவிப் பிடிப்பது போல பிடித்து, திணறடித்தார். வ்யோமன், தன் மலை போன்ற ரூபத்தை எடுத்துக் கொண்டவன் தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் அந்த பிடியில் வருந்தினான். அவனை அப்படியே பூமியில் விழச் செய்து தேவர்களின் எதிரிலேயே வதைத்தார். பின் தேடிச் சென்று குகையில் அடைபட்டிருந்த தோழர்களை வெளியில் கொண்டு வந்து, எல்லோருமாக கோகுலம் வந்தடைந்தனர். தேவர்கள் துதி செய்தனர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், வ்யோமாசுர வதம் என்ற முப்பத்து ஏழாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்-34
அத்யாயம் -38
ஸ்ரீ சுகர் சொன்னார்: அன்றிரவு மதுராவில் இருந்து விட்டு, விடிந்ததும் அக்ரூரர் ரதத்தில் கோகுலம் வந்தார். போகும் வழியெல்லாம் அவருக்கு பகவானின் கமலம் போன்ற கண்களே மனதில் இருந்தது. மனதில் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் பக்தி உடையவர், யோசித்தார்.
என்ன செய்ய துணிந்து விட்டோம்? இதுவரை நான் செய்த தவம், விரதங்கள், செய்த தான தர்மங்கள் கை கொடுக்குமா? எந்த விதத்திலாவது அச்யுதனை காப்பாற்ற முடியுமா? கேசவனை காப்பாற்ற என்ன செய்யலாம்? எனக்கு அந்த உத்தம ஸ்லோகனுடைய தரிசனம் கிடைப்பதே துர்லபம். உலகியலில் மூழ்கியவனுக்கு ப்ரும்ம தரிசனம் கிடைக்குமா? ப்ரும்ம ஞானம் கிடைத்து பாடுவானா? அது போலத்தான். நானும் இப்பொழுது அதமனே. அச்யுதனை கண்டிப்பாக பார்க்கப் போகிறேன். ஓடும் நதியின் ப்ரவாகத்தில் அடித்துச் செல்லப் பட்டாலும் சில பொருட்கள் கரையேறுவதும் உண்டு. அது போல கால நதியில் நானும் மிதந்து வந்தவன், இதோ கேசவனைக் காணப் போகிறேன். இதுவரை எப்படி இருந்தேனோ இனி எனக்கு அமங்களம் என்பதே இல்லை. என் வருங்காலம் யோகிகளுக்கு தியான விஷயமாக இருக்கும் பகவான் தர்சனம் கிடைக்கப் பெற்று உய்யப் போகிறது.
கம்சன் சொன்னது வேறு காரணத்திற்காக. இருந்தாலும் எனக்கு அது அனுக்ரஹமே. ஸ்ரீ ஹரியிடம் என்னை அனுப்ப அவனுக்குத் தோன்றியதே, அதுவே என் பாக்யம். இருளில் மூழ்கிய உலகை அவன் பாத நகங்களின் ஒளியே ப்ரகாசமாக்கிவிடும். இந்த கோகுலத்தில் அவதரித்தவன் அந்த பகவானே தான்.
ப்ரும்ம வாதிகள் எனும் சாதகர்கள் யாரை அர்ச்சித்தார்களோ, தேவர்களும், ஸ்ரீ லக்ஷ்மி தேவியும் எவரை பூஜிக்கிறார்களோ, முனிகள் இடை விடாது தியானிக்கிறார்களோ, அந்த திவ்ய பாதங்கள், கோகுலத்தில் பசுக்களை மேய்த்துக் கொண்டு பூமியில் நடமாடுகிறது. கோகுல ஸ்த்ரீகள் வணங்கும் பொழுது அவர்கள் குங்குமம் பட்டு அந்த பாதங்கள் சிவந்திருக்கும். கண்டிப்பாக நான் பார்க்கத்தான் போகிறேன். அழகிய கன்னங்களும் எடுப்பான மூக்கும், மென் முறுவலுடன் கூடிய பார்வையும், தாமரை போன்ற கண்களும், முகுந்தனை சுற்றி வரும் மிருகங்கள் கூட ப்ரதக்ஷிணம் செய்து பலனடைகின்றனவே.
இன்று எனக்கு காணக் கிடைக்குமா? ஸ்ரீ விஷ்ணு மனிதனாக எடுத்த அவதாரம். பெரும் பாரத்தை சுமந்து தன் சங்கல்பத்தால் எடுத்து வந்துள்ள அவதாரம். அழகே உருவானவன். அனைவருக்கும் சரணம் தருபவன். என் கண்ணில் பட்டாலே எனக்கு பாக்யம். முழுவதுமாக கண்ணால் காணக் கிடைக்கப் போகிறது. தான் என்ற கர்வம் இல்லாதவன், சத்- குணவானோ, அசத்- குணமற்றவனோ, யாரானாலும், தன் தேஜஸால், அவர்களுடைய குணக் குறைவை நீக்கி விடுவான். அவன் மாயை, அதுவே வலிமை கொண்டது. அதன் சக்தியால் குணமில்லாதவனின் இயல்பை கூட மாற்றி விடுவான், அதாவது அவர்களுடைய மன ஓட்டமே, எண்ணங்களே மாறி, நல்ல எண்ணங்கள் மனதில் நிரம்பும், அதனால் லௌகிகமான வசதிகளைக் கூட பெறுவான்.
எவருடைய சுமங்களமான மறை பொருளுடைய வார்த்தைகளால், குணம், செயல், பிறவி இவைகளால், உலகில் ஜீவன்கள், பிறக்கின்றன, மறைகின்றன பின் திரும்பவும் பிறக்கின்றன. அதை மறுத்து பேசுபவர்கள் நம்பிக்கையின்றி இருப்பவர்கள், உயிரோடு இருந்தாலும் உயிரற்ற பிம்பங்களே. வ்ரஜ தேசத்து பெருமையை கூட்ட இங்கு அவதரித்திருக்கிறான். மிகவும் எளிய சாதுக்களான மக்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையில் பாலம் போல. இந்த வ்ரஜ தேச மக்கள் ஈஸ்வரனாக அறிந்து கொண்டு பாடுகிறார்கள், இதைப் பார்த்து தேவர்களும் அசேஷ மங்களங்களையும் ஆசீர்வதிக்கிறார்கள்.
இன்று கண்டிப்பாக நான் பார்க்கத்தான் போகிறேன். மகான்கள் தங்கள் குருவாகவும், தங்கள் சாதனைகளின் பலனாகவும் எண்ணும் பகவான். மூவுலகையும் வசீகரிக்கும் தன்மையுடையவனை காண்பதே கண் படைத்த பலனாக நினைப்பார்கள். ஸ்ரீ லக்ஷ்மி தேவிக்கு தன்னில் இருப்பிடம் கொடுத்தவன், அவனை உஷத் காலத்தில் விடிந்தும் விடியாமலும் இருக்கும் காலை நேரத்தில் காணும் பாக்யம் பெறுவேன். அதுவே சுதர்சனம்- பகவானைக் காண நல்ல நேரம்.
அதன் பின் ரதத்திலிருந்து இறங்கி, மனதில் ராம, க்ருஷ்ணர்களையும், அவர்களின் சகிகளான கோகுலத்து பெண்களையும் நினைத்து வணங்கியபடி, மற்ற கோகுல வாசிகளையும் மானசீகமாக வணங்கினார். நான் போய் காலில் விழுந்து நமஸ்கரித்தால் ஏற்றுக் கொள்வாரா? தன் கைகளால் தூக்கி ஆசீர்வதிப்பாரா? அவரை சரணடைந்தவர்களை தன் புஜ பராக்ரமத்தால் ரக்ஷிப்பவர் என்னை கை விட மாட்டார். மகா பலி தானம் கொடுத்து மூவுலகுக்கும் இந்திரனாகும் தகுதியை அடைந்தான். கௌசிகனான இந்திரன் அர்க்யம் சமர்ப்பித்து வணங்கி இந்திர பதவியை அடைந்தான். ஆஹா, இந்த பூமி பாக்யம் செய்தது. இங்கு தான் கோகுலத்து பெண்களுடன் இருந்து அவர்கள் சிரமத்தை தன் ஸ்பர்சத்தால் போக்கினான். என்னையும் அவ்வாறு வந்து அணைப்பானா? கம்சனின் தூதன் என்று விலகி நிற்பானா? உலகத்தை அவன் காணும் விதமே வேறு. உள்ளும் புறமும் பார்த்தவுடன் தெரிந்து கொள்வான். எதையும் அவனிடம் மறைக்க முடியாது. அவன் க்ஷேத்ரஞன். சரீரத்தில் உள்ள ஆத்மா அவன் அம்சமே. நம் மன நிலையை கண்டதுமே அறிந்து கொள்ளக் கூடியவன். என்ன தான் வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும் தவறான எண்ணத்துடன் அவனை அணுகவே முடியாது. தோழர்களுக்குள் சிறந்த தோழன். அதோடு எனக்கு தாயாதி. மற்றொரு தெய்வம் எனக்கில்லை என்பதையும் அறிந்தவன். அதனால் என்னை இரு கைகளாலும் அணைத்து வரவேற்பான். அதன் பின் என் ஆத்மாவே பரிசுத்தமாகி விடும். என் வினைப் பயன்கள் அனைத்தும் மறைந்து விடும். அவன் சரீரத்துடன் எனக்கு ஆலிங்கணம் செய்து கொள்ள வாய்ப்பு கிடைக்குமா? கை கூப்பி வணங்கியபடி செல்வேன். என் கைகளைப் பற்றி அக்ரூரா வா என்றழைப்பான். இந்த பிறவி பெற்ற பயனை அடைவேன்.
அவனுக்குத் தான் தன்னைச் சார்ந்தவன் பிறன் என்ற வேறு பாடே கிடையாதே. அவனுக்கு யார் எதிரியாக எதிரில் நிற்க முடியும். யாரையுமே அலட்சியம் செய்பவன் அல்ல. இருந்தாலும் பக்தியுடன் பஜிப்பவர்களை கற்பக மரம் போல காப்பான். அந்த மரம் யார் அதனிடம் வந்து நிற்கிறார்கள் என்று பார்த்தா பலன் தரும்? அவன் முன் பிறந்தவன் உடன் இருப்பானே. அவனையும் வணங்குவேன். மெல்ல நகைத்தபடி அருகில் வருவான். என் கூப்பிய கரங்களை பிடித்து அணைத்து, வீட்டினுள் அழைத்துச் செல்வான். வீட்டிற்கு வந்தவர்களுக்குச் செய்யும் உபசாரங்களைச் செய்வான். கம்சன் தன் பந்துக்களுக்கு என்ன செய்தான் என்று விசாரிப்பான்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு மனதில் ஸ்ரீ க்ருஷ்ணனையே நினைத்தபடி ரதத்தில் சென்றார். கோகுலம் சென்றடையும் சமயம் ஸூரியனும் மலை வாயில் விழுந்தான். கோகுலத்து மண்ணில் அவர்கள் பாதங்கள் நடந்த தடயங்களைக் கண்டார். பசுக்கள் இருக்கும் கொட்டில்கள், பகவானின் பாதங்களின் தாமரை, அங்குசம் போன்ற சின்னங்கள் பதிந்த மணல் வெளியைக் கண்டார். அதை கண்டதுமே மனதில் மகிழ்ச்சி பொங்கியது. பரபரப்புடன், மயிர் கூச்சலெரிய , கண்களில் நீர் பெருக ரதத்தில் இருந்து இறங்கி அதில் கைகளால் அளைந்தார். ஆ, இவை ப்ரபு நடந்து சென்ற இடம் அல்லவா, அவனுடைய பாதம் பட்ட இடம், மனிதனாக எடுத்த பிறவி பெறும் மிகப் பெரிய பாக்யம். எந்த கஷ்டமானாலும் மறந்து போகும். தம்பம், பயம், கவலை எதுவும் இராது. என்ன சொல்ல வந்தோம் என்பதும் மறந்து ஸ்ரீ ஹரியின் பாதம் பட்ட மணலையே வணங்கினார்.
அதே சமயம் மாட்டுக் கொட்டிலில் இருந்து பால் கறக்கச் சென்ற ராம, க்ருஷ்ணர்கள் திரும்பி வந்தனர். ஒருவன் பொன்னிற ஆடையுடன், மற்றவன் நீல நிற ஆடையுடன். சரத் கால மலர்கள் போல மலர்ந்த மனம் கவரும் கண்களுடன், இருவருமே கிசோர, எனும் பருவத்தினர். ஒருவன் மேக சியாமளன், மற்றவன் வெண்ணிறம். லக்ஷ்மீ தேவி வசிக்கும் அழகுடையவர்கள். பெரிய புஜங்களும், சுமுகமான சுந்தர வதனம் உடைய வீரர்கள், யானை போன்ற விக்ரமம் உடையவர்கள். கொடியும், வஜ்ராங்குசம், அம்போஜ-கமல மலர்கள் அவர்கள் பாதங்களில் அடையாளமாக தெரிய, வ்ரஜ தேசமே அதனால் அலங்கரிக்கப் பட்டதாக ஆயிற்று. இருவருமே மகாத்மாக்கள். கண்களின் பார்வையிலேயே கருணையை பொழிபவர்கள்.
உல்லாசமாக விளையாடி, மாலைகள் தரித்து, வன மாலையும், புஷ்பங்களின் மணம் நிறைந்த உடல் வாகையும் உடையவர்கள், ஸ்னானம் செய்து தூய்மையான ஆடைகளுடன் வந்து கொண்டிருந்தனர். இருவருமே ப்ரதான புருஷர்கள். ஆதி புருஷர்கள். உலகம் தோன்றக் காரணமாக இருந்தவர்கள். மூவுலக நாயகர்கள். பூமியை உத்தாரணம் செய்யவே அவதரித்த பலராம, கேசவன் என்ற பெயர்களில் ஸ்ரீ விஷ்ணுவின் அம்சமாக அவதரித்தவர்கள்.
ராஜன்! அவர்கள் வரவினால் திசைகளே ப்ரகாசமாகி விட்டன. அவர்கள் ப்ரகாசம் எப்படி மரகத மலை, வெள்ளியாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப் பட்டால் விளங்குமோ அதே போல இருந்தது.
அக்ரூரர், அன்புடன் அவர்களை நெருங்கி, ஆவலுடன், மனம் கொள்ளாத பர பரப்புடன், அவர்கள் எதிரில் தண்டம் போல விழுந்து நமஸ்கரித்தார். பகவானை தரிசித்து விட்ட ஆனந்தம் கண்களில் நீராக பெருகியது. பேச்சு எழமுடியாமல் குரல் தழ தழத்தது, தான் எதற்காக வந்தோமோ என்பதை சொல்லவும் மறந்தார்.
பகவான் தானே அதை எதிர் பார்த்தவர் போல அருகில் வந்தவுடன், ரதத்தில் ஒரு கையை வைத்தபடி, இறங்கியவரை அணைத்துக் கொண்டார். சங்கர்ஷணனும் அருகில் வந்து அதே போல வணங்கிய அக்ரூரை கையை பிடித்து அழைத்துச் சென்றார். ஸ்வாகதம் சொல்லி வரவேற்று, ஆசனங்கள் கொடுத்து உபசரித்து, பாதங்களில் நீர் விட்டு முறைப்படி அலம்பி, மது பர்க்கம் கொண்டு வந்தார்கள். அதிதி சத்காரங்கள் செய்தனர். அவரை ஓய்வெடுக்கும் படி செய்தனர். பலவிதமான அன்னங்கள், உணவுகளை சிரத்தையுடன் கொண்டு வந்து தந்தனர். நன்றாக உணவருந்தியபின், வாசனை மிக்க தாம்பூலங்கள் கொடுத்தனர். நந்தன் வந்து குசலம் விசாரித்தார். கம்சன் அரசாட்சியில் எப்படி வசிக்கிறார்கள். அவனுக்கு கருணையே கிடையாதே. அவன் கூட்டத்தை சேர்ந்த தாசார்ஹன், சௌபாலா போன்றவர்கள் அவனுக்கு கைகள் போன்றவர்கள். அவர்கள் தானே சகோதரி குழந்தைகளையே கொன்றவர்கள். ரத்த தாகம் உடைய அரக்கர்கள். அவனுடைய ப்ரஜைகள் நலமா? இவ்வாறு அவர்கள் அனைவரும் சகஜமாக பேசி அக்ரூரரின் பயண களைப்பை போக்கினர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில் அக்ரூராகமனம் என்ற முப்பத்தெட்டாவது அத்யாயம். ) ஸ்லோகங்கள் 43
அத்யாயம்- 39
அதன் பின் வசதியாக கட்டிலில் அமர்ந்து, ராமனும் க்ருஷ்ணனும் உபசரிக்க, வரும் வழியில் தன் மனதில் தோன்றிய வினாக்களுக்கு விடை கிடைக்கப் பெற்றார். எது தான் கைக்கு எட்டாமல் போகும், பகவான் ப்ரசன்னமாக இருக்கும் பொழுது? ஸ்ரீ லக்ஷ்மி தேவியே அவனிடம் உறைகிறாள். இருந்தும் பகவானை நம்புபவர்கள் அவரிடம் எதுவும் வேண்டுவதில்லை. மாலை உணவு முடிந்தவுடன் தேவகியின் மைந்தன் வந்து கம்சனைப் பற்றி விசாரித்தான்.
ஸ்ரீ பகவான் சொன்னான்: அண்ணலே, தங்கள் வரவு நல் வரவாகுக. எங்களுக்கு நன்மைகள் வர இருக்கின்றன போலும். நமது பங்காளிகள், பந்துக்கள் எல்லோரும் நலமா? மாமா கம்சன் குலத்துக்கே கெடுதல் செய்பவனாக இருப்பதால் ப்ரஜைகளுக்கும், நம் குலத்தினருக்கும் துன்பம் இழைக்காமல் இருக்கிறானா? அஹோ! நமது பெற்றோர்கள், அதற்கும் முந்தைய தலைமுறையினரும் சேர்ந்து மிகப் பெரிய குடும்பமாக உள்ளோம். பெரியவர்கள் வருந்தும் படியாக பிறந்த சிசுக்கள் மரணமும், அதன் பெற்றோர் சிறையில் கட்டுபட்டு இருப்பதும் அவர்களுக்கு தாங்க முடியாத துக்கமாக இருக்குமே. எங்கள் குலத்தினர் நீங்கள் வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சொல்லுங்கள், வந்த காரணம் என்னவோ?
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு மாதவன் கேட்டதும் அவரும் விவரமாகச் சொன்னார். யது குலத்தினரிடம் கம்சன் விரோதம் பாராட்டுதையும், வசுதேவரை வதம் செய்ய முனைந்ததையும் சொன்னார். அதன் பின் என்னை தூதனாக அனுப்பிய காரணமே நாரதர் வந்த சமயம் அவனிடம் நீங்கள் இருவரும் ஆனக துந்துபியின் மகனாக வளருவதை சொன்னதை கேட்ட பின்னர் தான்.
அக்ரூரர் சொன்னதைக் கேட்டு, ஸ்ரீ க்ருஷ்ணனும், பல ராமனும் பலமாக சிரித்தனர். தந்தை நந்தனிடம் அரசன் சொல்லியனுப்பியதைச் சொன்னார்கள். மற்ற கோகுல வாசிகளிடம், வண்டிகளை கட்டிக் கொண்டு அரசனுக்கு பரிசுப் பொருள்களையும் தயாரித்து எடுத்துக் கொண்டு கிளம்பச் சொன்னார். நாம் அனைவரும் போவோம். மதுரா புரி சென்று அரசனிடம் கப்பம் தர வேண்டியதைக் கொடுப்போம். மதுரா புரியில் ஊரார் கோலாஹலமாக கொண்டாடிக் கொண்டு இருப்பார்கள். இவ்வாறு சொல்லி நந்தகோபர் அவர்கள் அனைவரையும் வரச் சொல்லி உத்தரவிட்டார்.
கோகுல பெண்கள் இதைக் கேட்டு மிகவும் வருந்தினர். அக்ரூரன் ராம க்ருஷ்ணர்களை தன் ஊருக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கும் விஷயம் வேகமாக அனைவருக்கும் தெரிய வர அவர்கள் ஒன்று கூடி புலம்பினர். சிலர் இதயத்தில் பெருகிய தாபம் தெரிய முகம் வாடி நின்றனர். சிலர் தங்கள் ஆடை ஆபரணங்கள் நழுவி விழ, கேசம் கலைந்து தொங்க ஓடி வந்தனர். கை காரியங்களை அப்படி அப்படியே போட்டுவிட்டு வந்து விவரங்களை தெரிந்து கொண்டனர். என்ன இது, இது எப்படி நடக்கலாம், இந்த உலகத்தில் தானா, பர லோகம் சென்று விட்டோமா எனும் அளவு துக்கித்தனர். சௌரியுடன் பேசியதை, தங்களுக்கு அருளியதை நினத்து வாய் திறந்து பேசவும் இயலாமல் மயங்கி விழுந்தனர். கூட நடமாடியது, நகைத்தது, தங்களுடன் சமமாக விளையாடி மகிழ்ந்தது என்று ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டனர். அவர்கள் கோகுலத்தை விட்டுப் போவார்கள் என்பதை மனது ஏற்க மறுத்தது. அனைவரும் ஒரே குரலில் பேச ஆரம்பித்தனர்.
அஹோ! விதாதா! கடவுளே, உனக்கு தயை இல்லையா? எங்களுடன் நட்புடன் இருந்து, அன்புடன் பேசி, சிறு குழந்தையாக இருந்ததிலிருந்து எங்கள் அபிமானத்துக்கு பாத்திரமானவன், எங்களுடன் வளர்ந்தது, கேசம் முன் நெற்றியை மறைக்க, முகத்தில் எப்பொழுதும் மந்த ஹாசத்துடன் இருந்த உங்களிருவரையும் கண்ணால் கண்டாலே எங்கள் துயரம் தீரும். எங்களை விட்டு கண் காணாத தேசம் போக போகிறீர்களா? இது அடுக்குமா? என்றனர்.
அக்ரூரா உன் பெயர் தான் அக்ரூரன். க்ரூரன் நீ. எங்கள் கண்களையே பிடுங்கிக் கொண்டு போவது போல இந்த க்ரூரமான செயலை செய்யத் தான் வந்தாயா? சாது போல நிற்கிறாயே. நாங்கள் மதுரா அரசனை வெறுப்பவர்கள். ஒரேயடியாக இதுவரை நாங்கள் அனுபவித்த சுகம் அனைத்தையும் இல்லாமலாக்கி விட்டாய். நந்தன் மகன் தோழமை ஏதோ வினாடி இருந்து மறைவது அல்ல. எங்கள் அனைவரையும் பார். எப்படி தவிக்கிறோம். வீடுகளை துறந்து, தன் மக்கள், பிள்ளைகள், பதி, உற்றார்கள் அனைவரையும் துறந்து அவனுக்கு பணி செய்யும் அடித் தொண்டர்களாக இருந்தோம். விடிவதே அவனைக் காணத்தான். இரவு வருவதே எங்களுக்கு ஆசீர்வாதம். நகரத்துப் பெண்கள் புண்யம் செய்தவர்கள். எங்கள் கண்ணனை காணப் போகிறார்கள்.
அவர்கள் தேனோழுக பேசுவார்கள். அவனுக்கு இசைவாக நடந்து கொள்வார்கள். அதன் பின் எங்களை நினைத்து கூட பார்க்க மாட்டான். கிராமத்து ஜனங்கள், தங்கள் அன்பை கூட தயங்கி வெட்கத்துடனே காட்டிக் கொள்பவர்கள். அங்கு தாசார்ஹ, போஜ, அந்தக, வ்ருஷ்ணி வம்சத்தினர், மஹோத்ஸவமாக கண் குளிர கண்டிப்பாக பார்த்து மகிழ்வார்கள். ஸ்ரீ ரமணன், நல்ல குணங்களுக்கு இருப்பிடமானவன். வழியில் தேவகி மகனை கண்டவன் கூட பரவசத்துடன் பார்ப்பான்.
இவ்வளவு கருணையில்லாத உனக்கு இந்த பெயர் அக்ரூரன் —அக்ரூரரே! இது மிக கொடிது. கருணையே இல்லையா? எங்களுக்கு பிரியமானவனை அழைத்துச் செல்ல வந்திருக்கிறாயே. எங்களிடம் சமாதானமாக பேசி விடை பெறவோ, நாங்களும் அனுமதி கொடுத்து அனுப்பவோ கூட நேரமில்லாமல் அவசரமாக வெகு தூர அத்வானத்துக்கு அழைத்துச் செல்கிறாய். பெரிய ரதத்தை கொண்டு வந்திருக்கிறாய். எங்கள் உணர்வுகளை சற்றும் மதிக்காமல் அவர்களை ஏற்றிக் கொண்டு செல்லவா வந்தாய். இந்த கோகுல வாசிகள், அவர்கள் தோழர்கள் அவர்களும் கிளம்புகிறார்கள், வண்டி கட்டிக் கொண்டு, தெய்வம் எங்களை சோதிக்கிறது. யாரை நோவோம்? நாங்கள் அனைவரும் சேர்ந்து தடுப்போமா, குல முதியவர்கள் பந்துக்கள் இவர்களும் உடன் செல்ல துணிந்து விட்டார்களே, முகுந்தனை விட்டு க்ஷணம் கூட இருக்க மாட்டோம் என்று இருந்த எங்கள் நிலை என்னாகும்? என்ன சொல்லி என்ன பயன், தெய்வமே எங்களை கை விட்டு விட்டதே, மனமுடைந்து கதறுவது தவிர என்ன செய்வோம்?
இனி எங்கள் வாழ்க்கையில் என்ன சுகம் இருக்கும். எங்களிடம் கொண்ட அனுராகம் தெரிய முகத்தில் சிரிப்புடன் வளைய வருவான். கோஷ்டியாக ராஸ நடனம் செய்தோம். நாட்கள் க்ஷணம் போல சென்றது. அவர்கள் இல்லாமல் இந்த கோகுலம் எப்படி இருக்கும்? மாலை வந்தாலே குதூகலமாக நாங்கள் காத்திருப்போம்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: அந்த எளிய கோகுல பெண்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் அந்த தேசத்தை விட்டு மதுரா புரி போகிறான் என்பதை தாங்க முடியாத வேதனையை அனுபவித்தனர். சிலர் வெட்கத்தை விட்டு அழுதனர். கோவிந்த, தாமோதர, மாதவா என்று அரற்றினர். இரவு முழுவதும் அவர்கள் வருந்தியபடி இருந்தனர். விடிந்தது. ஸூரியன் உதயமானதும், அக்ரூரர் அவர்களை கிளம்ப துரிதப் படுத்தினார். வண்டிகளை தயார் செய்து கொண்டிருந்த கோகுல வாசிகளையும் துரிதப் படுத்தினர். பரிசு பொருட்களை ஏராளமாக எடுத்துக் கொண்டார்கள். குடம் குடமாக பாலும், தயிரும் வெண்ணெயும் என்று பசுவின் பாலால் செய்த பொருட்கள்.
போகும் முன் தங்களிடம் விடை பெற வருவான் என்ற நம்பிக்கையுடன் கோகுல பெண்கள் காத்திருந்தனர். யது குலத்தின் நாயகனாக இருந்த ஸ்ரீ க்ருஷ்ணனும் அவர்களை சமாதானப் படுத்தினான். தூதன் வந்து சொன்னதை மறுக்க முடியாது. இதோ திரும்பி வந்து விடுவேன் என்று அன்புடன் சொன்னான்.
வண்டிகளின் கொடி தங்கள் பார்வையிருந்து மறையும் வரை, அவை கிளப்பிய புழுதி மறையும் வரை அந்த பெண்கள் பதுமைகள் போல அங்கிருந்து பார்த்தபடி இருந்தனர். அதன் பின் நிராசையுடன் வீடு திரும்பினர். தங்களுக்கு ப்ரியமாக இருந்த ஸ்ரீ க்ருஷ்ணனைப் பற்றி பாடியபடி பொழுதை கழித்தனர்.
பகவானும், பலராமன், அக்ரூரருடன் ரதத்தில் வேகமாக காலிந்தீ நதிக் கரையை அடைந்தனர். பளிங்கு போல வெண்மையாக சுத்தமாக இருந்த அந்த நதி நீரை கைகளால் எடுத்து பருகினர். குமாரர்கள் இருவரும் மரத்தடியில் நிறுத்தியிருந்த ரதத்தில் அமர்ந்தனர். அக்ரூரர் மட்டும் அருகில் இருந்த காளிந்தியின் படித்துறையில் ஸ்னானம் செய்யச் சென்றார். ஸ்னான விதிகளை அனுசரித்தபடி, மூழ்கி எழுந்தார். சனாதனமான ப்ரும்ம ஸ்வரூபத்தை நினைத்து ஜபம் செய்தார். அந்த நீரில் அதே ஆனக துந்துபியின் மைந்தர்கள், பலராமனையும், ஸ்ரீ க்ருஷ்ணனையும் ரதத்தில் அமர்ந்து இருப்பதைக் கண்டார். இங்கு இருந்தால், ரதத்தில் இல்லையா? என்ற கேள்வி எழ நிமிர்ந்து பார்த்தார். திரும்பவும் நீரில் மூழ்கினார், அதே காட்சி, இருவரும் நீரினுள்ளும் இருந்தனர். மேலும் கூர்ந்து பார்க்க, சித்த சாரணர்கள் வணங்கி நிற்க, கந்தர்வ, அசுரர்களும், தலை குனிந்து வணங்கியபடி இருக்க, சஹஸ்ர சிரஸம்- ஆயிரம் தலையுடைய ஆதி சேஷன் படுக்கையில், தானும் ஆயிரம் தலைகளுடன், நீல ஆடையும், தாமரைத் தண்டு போல வெண்ணிறமான அதன் படங்கள்- ஸ்ருங்கம்- மலையுச்சி- இங்கு பாம்புகளின் தலைகள்- கைலாஸ மலையை நினைவூட்ட, அதனுள் குண்டலி போன்று உடலை சுருக்கிக் கொண்டு படுத்திருந்த ஆதி சேஷனின் மேல், (அடுத்த 11 ஸ்லோகங்களும் தொடர்ந்து வர்ணனை.)
அதன் மடியில், அடர்ந்த கரு மேகம் போன்ற வண்ணமும், பொன் நிற பட்டாடையும், சதுர்புஜனான பரம புருஷனை, சாந்தமாக, தாமரை இலை போன்ற அகன்ற கண்களும், அழகிய ப்ரசன்னமான முகமும், மென் முறுவலுடன் கண்களால் கடாக்ஷித்துக் கொண்டு, உயர்ந்த புருவங்களும், அழகிய காதுகளும், அழகிய கன்னங்கள், அருண வர்ணமான அதரங்கள், நீண்ட திரண்டு உருண்ட புஜங்கள், சற்றே உயர்ந்து தெரிந்த , மார்பும், அதில் வாசம் செய்த ஸ்ரீ தேவி லக்ஷ்மியும், சங்கு போன்ற கழுத்தும், அடங்கிய நாபி, வரிசையாக அமைந்த வளையங்களும், இளம் தளிர் போன்ற வயிறும், அகன்ற இடுப்பும், அதில் யானையின் தும்பிக்கை போன்ற துடை பகுதிகளும், அழகிய முழங்கால்கள் இரண்டும், மேடிட்டு இருந்த கால் மேல் பகுதிகளும் நகங்கள் அருண நிறத்தில் ஒளி வீசிக் கொண்டிருக்க, விரல்களும் கட்டை விரலும், சேர்ந்த பத்ம பாதங்கள் , மணிகள் பதித்த உயர்ந்த கிரீடம், கடகம், அங்கதம் என்ற ஆபரணங்கள், இடுப்பில் அணிந்த பொன் சூத்ரமும், ப்ரும்ம சூத்ரமும், ஹாரமும் நூபுர குண்டலங்களும், ப்ரகாசித்துக் கொண்டிருந்த பத்மம், சங்கம், சக்ரம், கதைகள் நான்கு கைகளிலும் ப்ரகாசமாகத் தெரிய, ஸ்ரீவத்ஸம் விளங்கும் மார்பும், கௌஸ்துப மணியும் வன மாலையும், சுநந்த, நந்தன் முதலானோர், மற்றும் அணுக்கத் தொண்டர்கள் சூழ்ந்து நிற்க, சனகாதிகள், மற்றும் தேவர்கள், ப்ரும்ம ருத்ரர்கள், ஒன்பது உத்தமமான தேவ ரிஷிகள், ப்ரஹ்லாதன், நாரத,வசுக்கள், உத்தம மான பாகவதர்கள் அனைவரும் துதி செய்த படி இருக்க, ஒவ்வொருவரும் தனித் தனியான பாவனைகள், வார்த்தைகளால் பாடிக் கொண்டிருக்க, ஸ்ரீ, புஷ்டி,வாக்கு-கிரா- காந்தி, கீர்த்தி, துஷ்டி, ஏலா என்ற அஷ்ட லக்ஷ்மிகளும் ஜய, விஜய, அவித்யா, சக்தி, மாயா இவர்களும் சூழ்ந்திருக்க, வைகுண்ட வாசியான ஸ்ரீமான் பகவானே சாக்ஷாத்தாக காட்சி அளிக்க, திக்கு முக்காடியவராக, அதீத மகிழ்ச்சியுடன், பக்தியுடன் உடல் முழுவதும் புல்லரிக்க, உணர்ச்சி மேலிட , கண்கள் செருக, தழ தழத்த குரலில் துதி செய்யலானார். சத்வமே உருவான பகவானை வணங்கி, தலை குனிந்து கைகளை கூப்பியபடி, மெள்ள சமாளித்துக் கொண்டு அழகிய வாக்கினால் துதி செய்தார்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தத்தில், அக்ரூர ப்ரதி ப்ரயாணே என்ற முப்பத்தொன்பதாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்- 58
அத்யாயம்-40
அக்ரூரர் துதி: ஆதி புருஷன் அழிவற்ற நாராயணன் நீயென்று அறிந்து கொண்டேன். உலகம் தோன்றக் காரணமானவன். உலகை படைக்க ப்ரும்மாவை உன் நாபி கமலத்தில் தோன்றச் செய்தவனும் நீயே. அவரால் இந்த உலகம் படைக்கப்பட்டது. உன்னை நமஸ்கரிக்கிறேன்.
நிலம், நீர், அக்னி, வாயு, ஆகாயம் என்றவை, மனம் இந்திரியங்கள், அவைகளின் செயல்பாடு, அறிவு என்பதன் பல விதங்கள், இவைகள் உன் படைப்பான உலகின் பகுதிகளாக ஆயின.
இந்த உன் ஸ்வரூபத்தை யார் அறிவார்? அஜன்-ப்ரும்மா முதலானவர்கள் அனாத்மா எனப் படுகிறார்கள். சுயமான சக்தி அற்றவர்களாக தோன்றினார்கள். படைப்புத் தொழிலைச் செய்ய நியமங்களான குணங்கள் தவிர, குணங்களுக்கும் பரமான உன் ஸ்வரூபத்தை அறிய மாட்டார்கள்.
யோகிகள் மகா புருஷன் என்று வணங்குகிறார்கள். ஈஸ்வரன், மகா புருஷன் தான் ஆத்மா- முதல் ஆத்மாவுடன் கூடியவன், साधि भूतम् சாதி பூதம்- பஞ்ச பூதங்களுடன் , साधिदैवम् சாதி தெய்வம்- தேவர்களுடன் என்று சாதுக்கள் சொல்வர். (साधि-உடன். சாதி தெய்வம்- தெய்வத்துடன்)
த்ரயீ என்ற வேத சாஸ்திரமே நீதான் என்று அறியும் சில அந்தணர்கள் வைதானிகர்கள் எனப்படுவர். அவர்கள் பலவிதமான யாகங்களை செய்வார்கள். பல பெயர்களுடன், அமரர்களைக் குறித்து யாகங்கள் செய்வார்கள்.
ஞானிகள் உன் ஒருவனிடமே தங்களை ஒப்படைத்து, தன் செயல்களின் பலனையும் உனக்கே அர்ப்பித்து சாந்தமாக ஞான ரூபியாக ஞான யாகம் செய்து பூஜிக்கிறார்கள்.
மற்றும் சிலர் தங்களை மேம்படுத்திக் கொண்டு, சாதகர்களாக, நீயே பல மூர்த்திகளாகவும், ஒருவனாக இருப்பவனாகவும் தியானித்து உன்னில் ஐக்யமாவதையே குறிக் கோளாக கொண்டு பூஜிக்கிறார்கள்.
சிவரூபியாக தியானித்து, ஸ்ரீ பரம சிவன் சொன்ன மார்கத்தில், பல ஆசார்யர்கள் சொன்ன விதிகளின் படி, பகவானே! நன்றாக பூஜிக்கிறார்கள்.
அனைவரும் நீ சர்வ தேவ மயனான ஈஸ்வரன் என்பதை அறிவார்கள். மற்ற தேவதைகளிடம் பக்தி உள்ளவர்கள் கூட, அறிவு சார்ந்த மாற்று கொள்கை உடையவர்களுக்கும் இது சம்மதமே.
ப்ரபோ! எப்படி மலையில் உத்பத்தியாகும் நதிகள், மழையினால் பெற்ற ஏராளமான நீரை எடுத்துக் கொண்டு சமுத்திரம் நோக்கி ப்ரவஹிக்கின்றனவோ, அதே போல உன்னையே வந்தடைவார்கள்.
ப்ரக்ருதியின் குணங்கள் சத்வம், ரஜஸ், தமஸ் என்பவை. ப்ரக்ருதி-இயற்கை, உன்னுள் அடக்கம். அதனால் தான் ப்ரும்மா முதல் உயிரினங்கள், தாவரங்கள் வரை ப்ராக்ருதா: எனப் பெயர் பெற்றார்கள். உனக்கு நமஸ்காரம். உன் பார்வையே அலாதி. சர்வாத்மா நீ, சர்வ அறிவு சார்ந்த விஷயங்களுக்கும் சாக்ஷியாக இருப்பவன். குண ப்ரவாஹம் எனப்படுவதும் அறியாமையால் தோன்றுவதே போலும். ஏனெனில் உன் மாயை தான் தேவ, மனிதன், விலங்குகள் என்று ஜீவன்களின் பல விதமான குணமும், செயலுமாக தெரிகிறது.
உன் முகமே அக்னி. மரங்கள் மற்ற தாவரங்கள் கேசம், மேகங்கள், உன் அஸ்தி எனும் எலும்புகள். நகங்கள் மலைகள், உன் கண் சிமிட்டல் இரவும் பகலும், ப்ரஜாபதி உன் ஜனன உறுப்பு, மழை உனது வீர்யம்.
அழிவற்ற ஆத்மா நீயே. பரம புருஷனாக வந்து உன்னிடத்தில் நீயே தோற்றுவித்தாய். இந்த உலகங்கள், லோக பாலர்கள், பலவிதமான ஜீவராசிகள் கலந்து, குழம்பிய நீரில் நீர் வாழ் ஜந்துக்கள் அலை பாயுமோ, அது போலவும், ஆகாயத்தில் சிறு பறவை-பூச்சிகள் வட்டமிடுமோ, அது போலவும், உன் மனதில் தோன்றியபடி படைத்தாய்.
உன் விளையாட்டுக்காக, மனோரஞ்சமாக உருவங்கள், நீயும் எடுத்துக் கொள்கிறாய். அந்த உருவங்களில் ஆகர்ஷிக்கப் பட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் உன் புகழை போற்றி பாடுகிறார்கள்.
காரணமத்ஸ்யன்- காரணத்திற்காக எடுத்துக் கொண்ட மகா மீன ரூபம். ப்ரளய சமுத்திரத்தில் அலைந்தாய்.ஹயசீர்ஷனாக- குதிரை முகனாக வந்தாய். உனக்கு நமஸ்காரம். மது கைடப வதம் செய்த உனக்கு நமஸ்காரம்.
மிகப் பெரிய உடலுடன் மந்தர மலையைத் தாங்கி, பாற்கடலை கடைய உதவினாய். பூமியை ப்ரளயத்தில் மூழ்காமல் தூக்கி கொண்டு வந்த சூகர அவதாரம் செய்தவனான உனக்கு நமஸ்காரம்.
அத்புதமான சிங்க உருவம் – சாது ஜனங்கள் பயப்படும்படியான நரசிங்கனே, நமஸ்காரம். வாமனனாக வந்து மூவுலகையும் அளந்தவனான உனக்கு நமஸ்காரம்.
ப்ருகுகளின் தலைவனே நமஸ்காரம். கர்வம் கொண்ட க்ஷத்திரிய குலத்தை அழிக்க வந்தவனே நமஸ்காரம். ரகு வரனாக வந்து ராவணனை சம்ஹாரம் செய்தவனே நமஸ்காரம். வாசுதேவனே நமஸ்காரம். சங்கர்ஷணனும் நீயே, நமஸ்காரம். ப்ரத்யும்னாய, அனிருத்தாய சாத்வதாம் பதயே நமஸ்காரம்.
புத்தனாக, சுத்தனாக தைத்ய தானவர்களின் மோகத்தை அழித்தவனே, உனக்கு நமஸ்காரம். ம்லேச்சன் போன்ற க்ஷத்திரியர்களை அழிக்க வந்த கல்கியாக உன்னை வணங்குகிறேன்.
பகவன்! உன் மாயையால் இந்த ஜீவ லோகம் மோகத்தில் ஆழ்த்தப் பட்டுள்ளது. நான், என்னுடையது என்று அசட்டுத் தனமாக சுற்றுகிறார்கள். வினைப் பயனை அனுபவிக்கிறோம் என்பது தெரியாமல் மயங்குகிறார்கள்.
நானும் அந்த கூட்டத்தை சேர்ந்தவன் தானே. என் புதல்வர்கள், வீடு, மனைவி மக்கள், ஸ்வ ஜாதியினர், நானே செய்து கொண்ட கட்டுப்பாடுகள், அதற்குள் மாட்டிக் கொண்டவனாக ப்ரமிக்கிறேன். உண்மையாக சொல்கிறேன், விபோ! அது என் அறியாமையே.
உன்னை என் ப்ரியமான பந்து என்று தமோ குணத்தால் சூழப் பட்டு, என் அறிவு மழுங்கி விட்டது போலும். நித்யமில்லாத அல்ப சுக துக்கங்களால், அலைக்கழிக்கப்படுகிறேன். உன்னை நான் அறியவே இல்லை. என் ப்ரியமானவனே!
அறியாத சிறு குழந்தை நீரில் கையால் கலக்கி அதில் தோன்றும் பல அசைவுகளை மகிழ்ச்சியுடன் பார்க்குமோ அது போலவும், தாகமெடுத்தவன் ம்ருக த்ருஷ்ணாம்- கானல் நீரைக் கண்டு ஓடுவது போலவும், நான் கண்டும் காணாதவன் போல உன் உண்மை ஸ்வரூபத்தை அறியவே இல்லை.
கஞ்சன் போல நான், காமத்தாலும், வினைப் பயனாலும் அடிபட்டவனாக, வேடன் பிடித்துக் கொண்டு போகும் மிருகம் போல என்னை காத்துக் கொள்ளவோ, விடுவித்துக் கொள்ளவோ முடியாமல் இங்கும் அங்குமாக திரிகிறேன்.
இது தான் என் நிலை. உன் பாதங்களை சரணடைகிறேன். சாதாரண மக்களுக்கு கிடைக்காத உன் அருள் பாதங்கள். ஈசனே, இதுவும் உன் அனுக்ரஹமே. நல்ல உபாசனைகள் செய்து மகா புருஷர்கள் அடையும் கதியை, அப்ஜனாப! உன் அருளால் அத்தகைய மன நிலை எனக்கு அருள வேண்டும்.
நமோ விக்ஞான மாத்ராய, சர்வ ப்ரத்யய காரணமானவனே, புருஷ, ஈஸ்வர்களில் ப்ரதானமானவனே, ப்ரும்மனே, எல்லையற்ற சக்தியுடையவனே. நமஸ்தே, வாசுதேவாய, சர்வ பூத க்ஷயாய, ஹ்ருஷீகேச நமஸ்துப்யம், ப்ரபன்னம் பாஹி மாம் ப்ரபோ!
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், அக்ரூர ஸ்துதி என்ற நாற்பதாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்- 30
அத்யாயம்- 41
ஸ்ரீ சுகர் சொன்னார்: நீரினுள் ஸ்வரூபத்தைக் காட்டிய பகவான் அவர் போற்றி வணங்கி துதிகள் செய்ததை கேட்டபின், தன் மாயையால் அதை தன்னுள் மறைத்துக் கொண்டார். அரங்கத்தில் நாட்டியம் ஆடியவன் பின் தன் இயல்புக்கு திரும்புவது போல.
அவர் மறைந்ததைக் கண்டு தன் மனதினுள் அதையே எண்ணியபடி மூழ்கி எழுந்தார். வியப்பின் எல்லையில் இருந்தவர், வேகமாக ரதம் இருந்த இடத்தை நோக்கி வந்தார். ஹ்ருஷீகேசன், அவரிடம் இவ்வளவு உத்சாகமாக இருக்கிறீர்களே, அத்புதமாக எதையாவது நீரினுள் கண்டீரா? என்றான். பூமியிலா, ஆகாயத்திலா, நீரிலா? கனவு கண்டவர் போல தெரிகிறீர் என்றான்.
அக்ரூரர் சொன்னார்: அத்புதம் என்று என்னவெல்லாம் உண்டோ, பூமியிலோ, ஆகாயத்திலோ, நீரின் உள்ளோ, விஸ்வாத்மகனான உன் அருகில் இருக்கும் பொழுது, உனக்கு தெரியாத அத்புதமா? ப்ரும்மன், நான் அத்புதமாக எதைக் கண்டேன் என்பதும் அறிந்தவன் தானே நீ.
காந்தினீ மகன், அக்ரூரர், ரதத்தை பூட்டி ராமனையும் க்ருஷ்ணனையும் மாலையில் மதுரா புரிக்கு கொண்டு வந்து சேர்த்தார். வழி முழுவதும் கிராமத்து ஜனங்கள் ஆங்காங்கே கூடி நின்று வசுதேவ சுதனைப் பார்த்த கண்களை திருப்ப முடியால் பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்குள் நந்தன் முதலான கோகுல வாசிகளும் வந்து சேர்ந்தனர். நகரின் வெளியில் நந்த வனத்தில் காத்திருந்தனர். அவர்கள் அருகில் போய் பகவான் அக்ரூரரிடம் கைகளைப் பற்றி, சிரித்துக் கொண்டே, நீங்கள் ரதத்தில் முன்னால் போங்கள். நாங்கள் இருவரும் சற்று ஊர் சுற்றி பார்த்து விட்டு வருகிறோம், என்றான்.
அக்ரூரர் பயந்தார். ப்ரபோ! நீங்கள் இல்லாமல் நான் தனியே நகருக்குள் ப்ரவேசித்து அரசனிடம் என்ன சொல்வேன்? என்னைத் தனியாக அந்த கம்சனிடம் மாட்டி விடாதீர்கள், ப்ரபோ!, பக்த வத்சலன் என்று புகழ் பெற்றவன், என்னை கை விடாதீர்கள், என் வீட்டிற்கு போகலாம், பலராமனுடனும், கோகுல வாசிகள் அனைவருடனும் என் இல்லத்தை அனுக்ரஹிக்க வேண்டும் என்றார். உங்கள் புனிதமான பாதம் பட்டு, அதன் தூசியால் எங்கள் க்ருஹம் நலம் பெறட்டும். வீட்டில் உள்ள மற்ற உறவினர்களும் குடும்பஸ்தர்கள் இருப்பார்கள். உங்கள் வரவால் என் குல முன்னோர்களும் மகிழ்வார்கள். என் நித்ய நியமங்கள், அக்னி காரியங்கள் போன்றவை கூட மேன்மை பெறும்.
மகா பலிக்கு அனுக்ரஹம் செய்த சமயம், பூமி, ஆகாயம், உங்கள் பாதம் பட்டு புனிதமாயின. மகா பலி மகான். அடைய முடியாத ஐஸ்வர்யம் அடைந்தான், உங்கள் பாதம் தன் சிரஸில் தாங்கி. வேறு யாருக்கும் கிடைக்காத பெரும் பாக்கியம், தனிமையில் தவம் செய்யும் முனிவர்களுக்கு கூட கிடைத்ததில்லை. உன் பாதத்தில் மகா பலி பாத்யம் விட்ட நீரை, உன் பாதத்தில் பட்டதனாலேயே புனிதமான நீர் என்று மூவுலகையும் புனிதமாக்கி விட்டது. உன் பாதங்களில் பிறந்த கங்கை, அதை பரம சிவன் தன் தலையில் தாங்கியிருக்கிறார். சகர புத்திரர்கள் அதனால் மூழ்கடிக்கப் பட்டு ஸ்வர்கம் சென்றனர்.
தேவ தேவ! ஜகன்னாதா! புண்ய ஸ்ரவண கீர்த்தனா! உத்தம ஸ்லோகன் என்ற ஸ்ரீமன் நாராயணா! உனக்கு நமஸ்காரம்.
ஸ்ரீ பகவான் பதிலிறுத்தார். கண்டிப்பாக உங்கள் வீட்டிற்கு வருகிறேன். யது வம்ச எதிரியை அழித்து விட்டு பிரியமான நண்பன் உங்கள் வீட்டிற்கு வருவேன்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: பகவான் சொன்னதைக் கேட்டு, அரை மனதோடு, நகரத்தினுள் நுழைந்து கம்சனை சந்தித்தார். அவரிடம் தன் கடமையை செய்து விட்டதாகச் சொல்லி விட்டு வீடு சென்றார்.
அன்று பிற்பகல், பகவான், க்ருஷ்ணனும், பலராமனும் மதுரா நகரை வலம் வந்தனர். சில கோகுல வாசிகளும் ஊரை பார்க்க விரும்பி உடன் வந்தனர். அழகிய மதுரா நகரம். ஸ்படிகம் போன்ற வெண்மையான உயர்ந்த கோபுரங்கள் சூழ, வீடுகளில் தழ்ப்பாள்கள் கூட பொன் நிறத்தில் மின்ன, தோரணங்கள் ஆட, தாம்ர வர்ண கோஷ்டங்கள்,- வீடுகள், வெளிச் சுற்றில் எளிதில் கடக்க முடியாத கோட்டைகள், நன்றாக பராமரிக்கப் பட்ட உத்யான வனங்கள், பொன்னால் ஆன மேல் கோபுரங்களும், விசாலமான சபா மண்டபங்கள், அதன் அருகே மாளிகைகள், மிக நேர்த்தியாக திட்டமிடப் பட்டு கட்டியவை, நவ ரத்னங்களும், வைடூரியம், வைரம், அமலமான நீல மணிகள், பவளங்கள், முத்துக்கள், மாணிக்கம் என பயன் படுத்தி கட்டியவை.
ஜன்னல்களின் வழியே பல வித பறவைகள் இருந்த ஒரு இடம். மயில்கள் ஆட, பாராவத என்ற பறவைகள் கூக்குரலிட அந்த வழியே சென்றவர்களின் மனதை ஆகர்ஷித்தன. பெரிய ரத வீதிகள். பலவிதமான கடைகள், நாற்சந்திகள், கடைகளில் வியாபாரிகள் குவித்து வைத்திருந்த தானியங்கள், பூக்கள் விற்கும் கடைகள், முளைகள், மாலைகள் என செல்வ செழிப்பு முதல் பார்வையிலேயே தெரிந்தது.
வழிய வழிய கும்பங்களில், தயிரும், சந்தனமும், பூக்கள் சுற்றி விளக்குகளும், இலைகளில் வரிசையாக வைத்த தீபங்களும், வாசல்களில் கொடிகள் கட்டி, வாழை மரம் கட்டி, அலங்கரித்து பட்டி என்ற நுழை வாசல் அலங்காரம் செய்திருந்தனர்.
ப்ரமிப்புடன் அந்த ஊரில் சம வயது தோழர்களுடன் நடந்த இருவரும், விரைவில் அந்த ஊர் பெண்களின் பார்வையில் பட்டனர். மாளிகையின் மாடிகளில் நின்று உத்சாகமாக வரவேற்றனர். அவசரம் அவசரமாக தங்களை அலங்கரித்துக் கொண்டு, நல்ல ஆடைகளும் ஆபரணங்களும் அணிந்து வந்தனர். பாதி உண்ட உணவை அப்படியே போட்டு விட்டு வந்தனர். தூங்கிக் கொண்டிருந்தவர்களையும் எழுப்பி அழைத்து வந்தனர். கைக் குழந்தையை அதன் படுக்கையில் விட்டு விட்டு தாய் மார்கள் ஓடி வந்தனர். ஒருவர் சொல்லி மற்றவர் விவரம் அறிந்து அரவிந்த லோசனன், மென் முறுவலுடன் பார்க்கவே அழகாகத் தெரிகிறான், மதம் பிடித்த யானை போல நடக்கிறான் என்று ஊருக்குள் வர்ணனைகள் பரவின.
கேட்டது ஒன்றுமில்லை என்பது போல ஓடி வந்து பார்த்தவர்கள் வைத்த விழி அகலாமல் பார்த்தபடி இருந்தனர். கண்களின் வழியே அம்ருதம் பாய்ந்ததோ என ஆனந்தமாக நின்றனர். அவர்களும் அனந்தன், அரிந்தமன், முதன் முதலான் என பாடினர். மாடியின் மேல் ஏறி பூமாரி பொழிந்தனர். பல ராமனும் கேசவனும் பூர்ண கும்பம், தத்யக்ஷதைகள், பூ மாலைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் இவைகளால் மலர்ந்த முகத்தோடு ஊர் அந்தண ஜனங்களால் வரவேற்கப் பட்டனர்.
அஹோ! கோகுல பெண்கள்! என்ன தவம் செய்தனரோ. இவ்வளவு நாட்களாக அருகில் இருந்து ரசித்து மகிழ்ந்து இருந்திருக்கிறார்கள். இந்த குமாரர்களை காண்பதே மஹோத்ஸவம் என்றனர்.
ஒரு வண்ணான் அவ்வழியே சென்றான். நல்ல உயர்ந்த உடைகள் சுத்தமாக இருந்ததைக் கண்டு தங்களுக்கு அளவான உடைகள் தரும்படி கேட்டனர். எங்களுக்கு கொடுத்தால் நல்ல கதியை அடைவாய், சந்தேகமேயில்லை என்றனர். அவன் அரச சேவகன், பகவான் என்பதையறியாமல், கோபம் கொண்டான். காட்டு வாசிகள், இது போன்ற ஆடைகளா அணிவீர்கள்? அரச உடைகளை யாசிக்க வந்து விட்டீர்கள் என்று விரட்டினான். அறிவிலிகளே, விலகுங்கள் என்று அதட்டினான். உயிருடன் இருக்க வேண்டுமானால் இந்த ஆசையை விடுங்கள், இல்லா விட்டால், ராஜ சேவகர்கள் வந்து கட்டி வைத்து, அடிப்பார்கள், அவர்கள் மிகவும் கர்வத்துடன் நடமாடுகிறார்கள் என்றான். மேலும் மேலும் இவ்வாறு பொருளின்றி பேசுவதைக் கேட்டு, தேவகி மகன் கோபம் கொண்டான். கையால் தட்டியே அவன் தலையை கொய்தார். அதன் பின் அந்த ஆடைகளை உடன் வந்த கோகுல வாசிகள் அனைவரும் அணிந்து கொண்டு உல்லாசமாக கிளம்பினர். தங்களுக்கு பிடித்த ஆடைகளை க்ருஷ்ணனும் ,பல ராமனும் எடுத்துக் கொண்டனர். மீதியை பூமியில் வீசினர்.
அதன் பின் ஒரு வாசனை திரவியங்கள் விற்பவன் எதிர்ப் பட்டான். தானாகவே நல்ல வாசனை திரவியங்களைக் கொடுத்தான். வண்ணான் தந்த ஆடைகளை அணிந்து பல ராமனும், க்ருஷ்ணனும் நாகரீகமாக தெரிந்தனர். அதனால் மகிழ்ந்து ஸ்ரீ க்ருஷ்ணன் சாரூப்யம் என்ற சதா தன் அருகில் இருக்கும் பதவியை கொடுத்தார். இகலோகத்திலும் செல்வமும் பல நன்மைகளையும் பலராமன் கொடுத்தான்.
இளம் யானைகள் போன்று இருவரும் நடந்தனர். சுதாமன் என்ற மாலாகாரன் எதிர்பட்டான். இவர்களைக் கண்டதுமே எழுந்து வணங்கி நின்றான். அவர்களுக்கு ஆசனம் அளித்து, பாத்யம் முதலான உபசாரங்களைச் செய்து, நல்ல மாலைகள், தாம்பூலம், உடலில் பூசிக் கொள்ளும் வாசனை திரவியங்கள் இவைகளை அளித்தான். ப்ரபோ! தங்கள் வரவால் என் குலம் பெருமையடைந்தது. என் பிறவியும் பயனுடையதாயிற்று. என் முன்னோர்கள், நான் வணங்கும் தெய்வங்கள் ரிஷிகள் மகிழ்வார்கள். நீங்கள் இருவரும் உலகம் தோன்றவே காரணமாக இருந்தவர்கள். உலக நன்மைக்காகவும், அது பலகாலம் நீடித்து இருக்கவும் தங்கள் உண்மை ஸ்வரூபத்தின் அம்சமாக அவதரித்துள்ளீர்கள். தோழனோ, மற்றவனோ என்று உங்களுக்கு வேறு பாடு கிடையாது. ஜகதாத்மா நீங்கள். சர்வ ஜீவன்களுக்கும் வணங்கி பூஜிப்பவர்களுக்கு அனுக்ரஹிப்பவர்.
எனவே, ஆணையிடுங்கள். நான் என்ன செய்ய வேண்டும்? உங்களிடம் சேவை செய்வதே புண்ய பலன். இவ்வாறு சொல்லிக் கொண்டே நல்ல மணம் மிகுந்த மலர்களைக் கொண்டு அழகான மாலைகளை கட்டி அவர்களுக்கு அளித்தான். அவைகளை அணிந்து அலங்காரமாக இருந்த இருவரும் அவனுக்கு நல்ல வரங்களைக் கொடுத்தனர். அவனும் அவர்களிடம் திடமான பக்தியுடன், பாகவதர்களிடம் நட்பும், மற்ற உயிரினங்களில் அன்பும் கொண்டான். வரம் அளித்தோடு நில்லாமல் வம்சம் வளரவும், லக்ஷ்மீ கடாக்ஷமும், பலம், ஆயுள், புகழ், மதிப்பு இவைகளையும் ஆசீர்வதித்து நகர்ந்தனர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், முதல் பகுதியில், புர ப்ரவேஸோ என்ற நாற்பத்தி ஒன்றாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்- 52
அத்யாயம்-42
ஸ்ரீ சுகர் சொன்னார்: அதன் பின் ராஜ மார்கத்தில் மாதவன் நடந்து ஒரு வாசனை பொருட்கள் விற்கும் பெண் வ்யாபாரியை கண்டான். கூனல் விழுந்த முதுகுடன், அவள், வருவதைப் பார்த்து, அவள் உடலை சரியாக நிமிர்ந்து நிற்கச் செய்தார். யாரம்மா நீ? உன் இருப்பிடம் எது? எங்களுக்கு நல்ல வாசனை பொடிகளைக் கொடு நன்றாக, நீண்ட காலம் வாழ்வாய், என்றார்.
சைரந்திரி என்ற அந்த பெண் ‘ இதோ தருகிறேன். சுந்தரா! கம்சன் அனுமதி அளித்து இந்த வியாபாரம் செய்கிறேன். என்னை என் கூனலை வைத்து த்ரிவக்ரா என்றே அழைப்பர். என் தயாரிப்புகள் போஜ ராஜாவுக்கு மிகவும் பிடித்தமானவை. உங்கள் இருவரைத் தவிர வேறு எவருக்கும் இவை பொருந்தாது. என்று சொல்லிபடியே அவள் சுகந்தமான வாசனை பூச்சுக்களை அவர்கள் இருவருக்கும் செய்து விட்டாள். அந்த அங்கராகம் எனப்படும் உடலில் பூசிக் கொள்ளும் திரவியங்களால், தங்கள் இயல்பான நிறமே மாறி விட்டதாக சிரித்துக் கொண்டே, மகிழ்ச்சியுடன் அந்த கூனியான த்ரிவக்ரா என்பவளை செல்வம் நிறைந்தவளாக ஆக்க நினைத்து, அவள் உடலை சீராக்கினார். முகுந்தனின் கை பட்ட வேளை அவள் அழகிய பெண்ணாக மாறினாள். அவர்களை தன் வீட்டிற்கு அழைத்தாள். உங்களை பார்த்த பின் விட்டுப் பிரியவே ,மனதில்லை எனவும், அவளைப் பார்த்து, வருகிறேன், வந்த காரியம் முடியட்டும், வேறு வீடும் எங்களுக்கு இந்த ஊரில் இல்லையே என்று சொல்லி விடை பெற்றனர்.
அதன் பின் எதிர்ப் பட்ட வியாபாரிகள் ஒவ்வொருவரும் அவரவர் பொருட்களை தாம்பூலமோ, பூ மாலையோ, எதுவானாலும் அன்புடன் கொண்டு வந்து கொடுத்து, வணங்கிச் சென்றனர். பெண்கள் தங்கள் வீட்டு மாடிகளில் இருந்து இவையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தனர். மற்ற நகர வாசிகளும் தரிசிக்க வந்தனர். அவர்களிடம் தனுர் யாகம் என்று கேள்விப் பட்டோமே, எங்கு நடக்கிறது விசாரித்தனர்.
இந்திர தனுஷ், அத்புதமாக இருந்தது. பல வீரர்கள் அதை கவனமாக பாதுகாத்துக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் தடுத்தும் கேளாமல், ஸ்ரீ க்ருஷ்ணன் அதை தூக்கி எடுத்தார். இடது கையால் லாகவமாக தூக்கி நிறுத்தி, கூடியிருந்தவர்கள் கண் எதிரிலேயே நாணை பூட்டி மத்தியில் உடைத்தார். ஏதோ ஒரு யானை கரும்பை உடைப்பது போல நிமிஷ நேரத்தில் உடைத்து விட்டார். பெரிய வில் உடைந்த சத்தம் வானத்தில் எதிரொலித்தது. திசைகளில் பரவியது. அந்த சத்தம் காதில் விழவுமே கம்சன் பயந்தான்.
காவலர்கள் ஓடி வந்தனர். பிடி, அடி, உதை என்று கத்திக் கொண்டு, கோபத்துடன் வந்தனர். அவர்கள் கையில் அகப்படாமல் இருவரும் உடைந்த வில்லின் பாகங்களை வைத்துக் கொண்டு திருப்பி அடித்தனர். கம்சனின் சேனையே வந்தது போல காவலர்கள் கூட்டம். அனைவரையும் நையப் புடைத்து விட்டு,வேகமாக நடந்து மறைந்தனர். நகர வாசிகள் பார்த்தவர்கள் திகைத்து நிற்க, வந்து விசாரித்தவர்களிடம் மகிழ்ச்சியுடன் நடந்ததை விவரித்தனர். தேஜஸ், சாமர்த்யம் , நல்ல உடல் வாகு என்று பார்த்தவர்கள் வியந்து விமரிசித்தனர். சூரியனும் ஆஸ்தமனம் ஆயிற்று. பலராமனும், க்ருஷ்ணனும் கோகுலவாசிகள் தங்கியிருந்த இடம் சென்றனர்.
கோகுல பெண்கள் கிளம்பும் முன் செய்த நல் வாழ்த்துக்களை நினைத்தனர். அத்துடன் கோகுலத்தில் அவர்களுடன் வாழ்ந்ததும் நினைவு வந்தது. மதுரா நகரிலும், நகரத்தார் வியந்து பேசிக் கொண்டனர். ஸ்ரீ லக்ஷ்மீ தேவியே, மற்ற தேவலோக அழகுகள் அனைத்தையும் இவர்களிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டாளா, என்ன அழகு, என்ன கம்பீர்யம், என்ன வசீகரிக்கும் மென் முறுவல் என்று பேசிக் கொண்டனர். இரவு, இருவரும் பாலுடன் ஆகாரத்தை உண்டு, தூங்கினர்.
கம்சன், ராம, கோவிந்தர்கள் தனுசை உடைத்த செய்தியைக் கேட்திலிருந்து உறக்கம் கொள்ளாமல் தவித்தான். தன் படை வீரர்களும் அடிபட்டு திரும்பியது மேலும் கவலையளித்தது. கோவிந்த, பல ராம வரவினால் தன் ம்ருத்யு வந்து விடுமோ என்ற கவலை மனதை அரிக்க, நெடு நேரம் விழித்திருந்தவன் துர் நிமித்தங்களைக் கண்டான். மனதில் பயம் காரணமாக தூது அனுப்பியதிலிருந்து பலவிதமாக நடந்த விஷயங்களையே அசை போட்டுக் கொண்டிருந்தான். கண்ணாடியில் தன் பிம்பத்தைக் கண்டே பயந்தான். ஜோதிடர்கள் சொல்வது போல இரண்டாவது என்பது இல்லை. தன் நிழலைக் கண்டே பயந்தான். தான் மூச்சு விடும் சத்தமே அவனை தூக்கி வாரிப் போடச் செய்தது. மரங்களை நோக்கினால் அதன் அடி பாகம் தெரியாமல் அந்தரத்தில் நிற்பது போல இருந்தன. கனவிலோ, ப்ரேதங்களும், ஓனாய்கள் ஊளையிடுவதும், திகம்பரனாக தைலம் பூசிக்கொண்டு ஓடுவது போலவும் இருந்தன. மரண பயம் ஆட்டுவித்த காரணத்தால், கவலையே நிறைந்து, தூங்கவே முடியாமல் இரவு முழுவதும் தவித்தபடி இருந்தான். விடிந்ததும், சூரியன் ப்ரகாசமாக தெரிந்தவுடன், மல்ல யுத்தம் என்று அறிவித்தான்.
அரங்கம் அலங்கரிக்கப் பட்டு, மக்கள் கூடி நின்றனர். துர்ய பேரி வாத்யங்கள் முழங்கின. அரங்கத்தில் மாலைகளும் தோரணங்களும், கொடிகளும் கட்டப் பட்டன. ஜனபத, அருகே இருந்த சிற்றூர்கள், நகர வாசிகள், அந்தணர்கள், க்ஷத்திரியர்கள் முதலானோர் அவரவருக்கான ஆசனங்களில் அமர்ந்தனர். அரசனுக்கு கப்பம் கட்டி வந்த அரசர்கள் வந்தனர். அவர்களுக்கான ஆசனங்கள் தயாராயின. கம்சனும் தன் மந்திரிகள் சூழ ரங்க மஞ்சம் வந்து சேர்ந்தான். மண்டலேஸ்வரன், மத்யஸ்தன் என்றவர்களும் மனதினுள் நடுக்கத்துடனே வந்தனர்.
வாத்யங்கள் உச்சஸ்தாயியில் வாசிக்கப் பட, மல்லர்களுக்கான தாளங்கள் முழங்க, மல்லர்கள் நன்றாக அலங்கரித்துக் கொண்டு திமிருடன் உபாத்யாயர்களுடன் ப்ரவேசித்தனர், சாணூரன், முஷ்டிகன், கூடன், சள, அசள என்பவர்களும் வந்தனர். அவர்களுக்கான இடத்தில் வாத்யங்கள் ஒலிக்க பெருமிதத்தோடு அமர்ந்தனர்.
போஜ ராஜனின் அழைப்பிற்கிணங்க நந்த கோபர் முதலானோர், பரிசுப் பொருள்களை சமர்ப்பித்து விட்டு தங்கள் ஆசனங்களில் அமர்ந்தனர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பாகத்தில், மல்ல ரங்கோபவர்ணனம் என்ற நாற்பத்து இரண்டாவது அத்யாயம். ) ஸ்லோகங்கள்-38
அத்யாயம்-43
ஸ்ரீ சுகர் சொன்னார்: பலராமனும் க்ருஷ்ணனும் காலை கடன்களை முடித்துக் கொண்டு, வெளியில் வந்த சமயம் மல்லர்களின் அறை கூவலைக் கேட்டனர். அந்த அரங்கத்தை நோக்கி நடந்தனர். அரங்கத்தின் வாயிலில் பெரிய யானையைக் கண்டனர். குவலயாபீடம் என்ற அந்த யானையை அதன் பாகன் ஏதோ சொல்லி தூண்டி விடுவது தெரிந்தது. சௌரி-க்ருஷ்ணன், பெரும் குரலில், அந்த பாகனைப் பார்த்து அம்பஷ்ட, அம்பஷ்ட, எங்களுக்கு வழி விடு. நகரு, இல்லையெனில் உன் யானையோடு உன்னையும் யம லோகத்துக்கு அனுப்பி விடுவேன் எனவும், அம்பஷ்டன் என்ற அந்த யானைப் பாகன் கோபத்துடன், யானையையும் தூண்டி விட்டு க்ருஷ்ணனை தாக்க வந்தான். அந்த யானையே காலாந்தகன் போல இருந்தது.
கண் மூடி திறப்பதற்குள், அந்த யானையின் மஸ்தகத்தில் ஏறி, கைகளால் பற்றிக் கொண்டு, முஷ்டியால் ஓங்கி அடித்தார். வாலை பிடுங்கி வீசியதில் குவலயாபீடம் வெல வெலத்து வீழ்ந்தது. முன் பக்கம் முகத்தை நோக்கி நின்று அடித்து விழச் செய்தார். பூமியில் வீழ்ந்த பின்னும் எழ முயன்ற யானையை தந்தத்தை பூமியில் குத்தி தன் விக்ரமம் பலிக்காமல் போனதால் கோபம் கொண்ட பாகன் விரட்டினான். கீழே விழுந்த மகா யானையின் மேல் ஏறி நின்று, பாகனையும் வீழ்த்தினார். மிகப் பெரிய தந்தமும் உடலும் கொண்ட யானை கீழே கிடந்ததைப் பார்த்து பரிதாப பட்டு, கோகுல வாசிகள், பலராமன் முதலானோர் அதைச் சுற்றி நின்றனர்.
அனைவருமாக அரங்கத்தில் நுழைந்தனர். க்ருஷ்ணன் கையில் யானையின் தந்தங்களையே பெரிய ஆயுதமாக எடுத்துக் கொண்டார். மல்லர்களுக்கு பெரும் பாறை போலவும், அரசர்களுக்கு மகா ராஜனாகவும், பெண்களுக்கு மன்மதனே உருக் கொண்டவன் போலவும், கோகுல வாசிகளுக்கு தன்னைச் சார்ந்தவன் என்ற அபிமானம் உடையவனும், அறிவில்லாத அரசர்களுக்கு ஆணயிடுபவனாகவும், தன் பெற்றோருக்கு இன்னமும் சிறு பாலகனாகவும், போஜ ராஜனுக்கு ம்ருத்யுவாகவும், வித்வான்களுக்கு விராட் புருஷனாகவும், யோகிகளுக்கு பர தத்வமாகவும், வ்ருஷ்ணி குலத்தவர்க்கு, பர தேவதை என்றும் விளங்கிய பகவான் அரங்கத்தினுள் சகோதரனுடன் நுழைந்தார்.
குவலயாபீடம் அழிந்தது என்று கேட்டது, அவர்களும் தோல்வியே காணாத வீர்கள் என்றும் அறிந்த கம்சன் மனதில் கவலையால் வலியும், மிகப் பெரிய குழப்பமும் சூழ்ந்தது.
இருவரும் பெரும் புஜங்களையுடைய வீரர்கள். விசித்ரமான உடைகள் பள பளக்க அணிந்தவர்கள். ஆபரணங்களும், மலர் மாலைகளும் அணிந்தவர்கள். நாடகத்தில் வரும் நடிகர்கள் போல அட்டகாசமாக வளைய வந்தவர்கள் காண்பவர்களை கவர்ந்தனர். பார்த்த ஜனங்கள், அரங்கத்தில் நின்ற மகா புருஷர்கள், நகரத்து, ராஜ்யத்தின் ப்ரமுகர்கள், மகிழ்ச்சியுடனும் உத்ஸாகமாகவும் அவர்களைப் பார்த்து கண்களாலேயே பருகுபவர்கள் போல பார்த்தபடி இருந்தனர், திரும்பத் திரும்ப பார்த்தும் திருப்தியடையாதவர்கள் போல. நாக்கினால் நக்கி விடுபவர் போல, மூக்கினால் நுகர்ந்து அனுபவிப்பவர்கள் போல, கைகளால் அணைத்துக் கொள்ள விரும்பியவர்கள் போலவும் இருந்தனர்.
தங்களுக்குள் பேசிக் கொண்டனர். நாம் கேள்விப் பட்டதெல்லாம் உண்மையே. அந்த ரூப, குண, மாதுர்யங்கள், ப்ரபலங்கள் பற்றி நினைவில் கொண்டு வந்தனர். வசுதேவன் வீட்டில் சாக்ஷாத் பகவான் நாராயணனே தன் அம்சமாக பிறந்தான் என்பதை அறிந்தவர்கள் அவர்கள். தேவகியிடம் பிறந்தவன் இவனே. கோகுலம் கொண்டு செல்லப் பட்டான். இதுவரை மற்றவர்கள் அறியாமல் வளர்ந்தனர். நந்தன் வீட்டில் அவன் மகனாக வளர்ந்திருக்கிறான்.
பூதனா, சகடாசுரன், காற்றாக வந்த அசுரன், அர்ஜுன மரங்கள், கேசி, தேனுகன் மற்றும் பலரையும் பற்றி கேள்விப் பட்டிருந்தனர். பசுக்களை மேய்த்துக் கொண்டு போனதும், தாவாக்னியிலிருந்து காத்து, காளியனை அடக்கி, சர்ப்பமாக வந்த அசுரனிடம் இருந்து மீட்டு, இந்திரனின் கர்வத்தை அடக்கி கோவர்தன மலையை தூக்கியது, அனைத்தும் அறிந்தவர்கள். கோகுலத்தை மேம்படுத்தியவன். கோபிகள் அனைவரும் அவனிடம் சந்தோஷமாக இருந்தனர், யது வம்சம் இவர்களால் பல சிறப்புகளைப் பெற்றது என்று கேட்டிருந்தனர். செல்வம் நிறைந்தது. புகழும், பெருமையும் அடைந்தது. முன் பிறந்தவனும் கமல லோசனனாக, ப்ரலம்பனை அழித்தான். பகன் போன்றவர்களை அழித்தான்.
இப்படி நடந்த கதைகளை மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். சாணுரன் அவர்களைப் பார்த்து, ஹே! நந்தசூனோ!, ஹே ராம! பலசாலிகளாக இருப்பவர்களை வீரர்கள் என்றும் மதிப்பார்கள். அரசன் அழைத்திருக்கிறான் என்று வந்து விட்டீர்கள். இத்துடன் உங்கள் சுகமான வாழ்க்கை முடிந்தது என்று தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் என்ன மறுக்கவா முடியும்? அரசனுக்கு பிரியமானதைச் செய்வது தான் ப்ரஜைகளின் கடமை. மனம் வாக்கு காயம் இவைகளால் அரசனை மகிழ்விப்பது உங்கள் கடமை, அதைச் செய்யத் தவறினால் தண்டனை என்பது தெரிந்து வேறு வழியின்றி வந்து விட்டீர்கள் போலும். காட்டில் பசுக்களை மேய்ப்பவர்கள் குலத்தினர், மல்ல யுத்தம் பற்றி என்ன அறிவர்? விளையாட்டாக விளையாடுவது போல இல்லை இந்த அரங்கத்தில் மல்யுத்தம். ஆகவே, அரசனுக்கு பிரியமானதை, இந்த அரங்கத்தினர் கண்டு களிக்க, நாம் மல் யுத்தம் செய்வோம். பஞ்ச பூதங்கள் நமக்கு அருளட்டும், சர்வ பூதமயனே அரசன்.
இப்படி பேசியதைக் கேட்ட க்ருஷ்ணன், அந்த சமயத்துக்கு தகுந்த சொற்களால் பதில் இறுத்தான். எங்களுக்கு சம்மதம். நீங்கள் சிறந்த வீரர்கள் என்று பாராட்டினார். போஜ ராஜனுக்கு நாங்களும் ப்ரஜைகளே. காட்டில் வசித்தாலும் அவருக்கு பிரியமானதைச் செய்யவே வந்தோம். அதுவே எங்களுக்கு பெரிய அனுக்ரஹம். சிறுவர்கள் நாங்கள், எங்கள் வயதொத்த, சம பலமுடைய சிறுவர்களிடம், உசிதமான நியமங்களுடனும் தர்மத்தை மீறாமலும் மல் யுத்தம் செய்திருக்கிறோம். இந்த சபையிலும் அதர்மம், மல்யுத்த விதி முறைகளை மீறுவது என்பவை இருக்கக் கூடாது.
சாணூரன் சொன்னான்: நீ பாலனும் அல்ல, கிசோர என்ற குமரனும் அல்ல. பலராமனும் பலசாலிகளுள் சிறந்தவன். லீலையாக குவலயா பீட யானையை அடித்ததிலேயே தெரிந்து கொண்டோம். அந்த யானை ஆயிரம் யானைகளுக்கு சமமான பலமுடையது. அதனால் எங்களுக்கு சமமான வீரர்களோடு மோதுகிறோம் என்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றான்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், முதல் பகுதியில், குவலயாபீட வதம் என்ற நாற்பத்து மூன்றாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்- 43
அத்யாயம்- 44
இவ்வாறு பூர்வ பீடிகைகள் ஆன பின் பகவான் மது சூதனன் சாணூரனை எதிர் கொண்டான். முஷ்டிகணை ரோஹிணி மைந்தன் பலராமன் எதிர் கொண்டான். கைகளால் கைகளை, பாதங்களால் பாதங்களில், சுற்றி வளைத்துக் கொண்டு இரு பக்கமும் வெற்றியே இலக்காக மல் யுத்தம் ஆரம்பமாயிற்று. முழங்கால்களால், முழங்கால்கள், தலைகளோடு தலை, என்று அன்யோன்யம் முட்டிக் கொண்டன. சுற்றி வந்து வீசி அடித்து, கீழே தள்ளி, மேலெழுந்தும் கீழே விழச் செய்தும் மல் யுத்தம் வளர்ந்தது. அதற்கான நியமங்கள், பல பரீக்ஷைகள், என்று யுத்தம் செய்வதை காண வந்திருந்த ஊர் மக்கள் கவலைப் பட்டனர். இது அதர்மம். வஜ்ரம் போன்ற உடல் கொண்ட இந்த வீர்கள் மலை போன்ற சரீரம் உடையார்கள் எங்கே, அதி சுகுமாரமான தேகம் உடைய குமார்கள் இவர்களுடன் போரிடுகிறார்கள். இன்னமும் யௌவனம் அடையாத இளம் பருவத்தினர். தர்ம விரோதமான இந்த செயலின் பலன் சமாஜத்தில் ஏதோ கேடு விளைவிப்பதாக வெளிப்படும். அதர்மமான இந்த இடத்தில் நாமும் இருக்க கூடாது. இது போன்ற சபையில் விஷயம் அறிந்தவர்கள் ப்ரவேசிக்க கூடாது. சபை தோஷம் என்பர்- அதர்மத்தை ஒத்துக் கொள்வது போல என்பர். சில சமயம் பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருந்தாலும் மனிதன் தண்டனை அடைகிறான்.
காண வந்தவர்கள், சிரமத்தினால் பத்மம் போன்ற க்ருஷ்ணனின் முகம் மழையால் அடிபட்டது போல வாடி விட்டது என்று அங்கலாய்த்தனர். பலராமன் முகத்தை பாருங்கள், தாமிர வர்ணமாக ஆகி விட்டது. முஷ்டிகனோடு சிரித்துக் கொண்டு தான் எதிர்க்கிறான். இருந்தாலும் வாட்டம் தெரிகிறது என்றனர்.
வ்ரஜ தேசம் புண்யம் செய்தது. இவர்கள் இருவரும் மனித வேடத்தில் வந்த புராண புருஷர்கள். காட்டுப் பூக்களை தொடுத்து மாலையாக போட்டுக் கொண்டிருக்கின்றனர். பசுக்களை மேய்த்து, வேணுவை வாசித்தும், மலை சரிவுகளில் விளையாட்டாக ஏறி இறங்கி இவர்கள் பாதங்களால் புனிதமாக்கி இருக்கிறார்கள். கோகுல பெண்கள் என்ன தவம் செய்தனரோ? இந்த ரூப லாவண்ய சாரமான இவர்களை கண்களால் பருகுவது போல கண்டிருக்கிறார்கள். கிடைக்க அரிதான இவர்களுடைய அண்மை. ஏகாந்தமாக உடன் இருந்திருக்கிறார்கள், லக்ஷ்மி தேவி வாசம் செய்யும் ஈஸ்வரன் இவன்.
பால் கறக்கும் சமயங்களில், அதை பக்குவப் படுத்தி கடைந்து வெண்ணெய் எடுப்பதும், கொட்டில்களை சுத்தம் செய்வதும், கன்றுகளை சமாதானப் படுத்தி அழைத்துச் செல்வதுமாக இருந்ததை பாடுகிறார்கள். பாடும் குரல் தழ தழக்கிறது. அவ்வளவு அன்பும் ஈடுபாடும் இவர்களிடத்தில். தன்யர்கள், வ்ரஜ குலத்தில் பிறந்த பெண்கள். எளிய பெண்கள், கபடமில்லாத மனதுடன் சேவை செய்து அதே த்யானமாக இருந்து வந்திருக்கின்றனர். காலையில் வ்ரஜ தேசத்திலிருந்து கிளம்பி மாடு கன்றுகளை மேய்த்துக் கொண்டு காடுகளுக்குச் சென்றால் மாலையில் மாடுகள் கத்தும் குரலுடன் (ரம்பா- பசுவின் குரல்) தானும் வேணுவை வாசித்துக் கொண்டு வருவார்கள். வேணு நாதம் கேட்டவுடனேயே அந்த பெண்கள், வழியில் எதிர்கொண்டு அன்புடன் மெல்ல சிரித்துக் கொண்டு களைத்து வருபவர்களிடம் கருணையுடன் பார்த்து பேசி உடன் வருவார்கள். இவ்வாறு அவரவர் கேள்விப்பட்டதை பகிர்ந்து கொண்டு அந்த நகரத்து பெண்கள், மல் யுத்தம் செய்யும் வீரர்களையும் சிறுவர்களையும் பதைப்புடன் பார்த்தபடி இருந்தனர்.
யோகேஸ்வரனான ஸ்ரீ ஹரி, சத்ருவை வதைக்கத்தான் வேண்டும் என்று தீர்மானித்தார். சபையில் இருந்த தாய் மார்கள், தங்கள் மகன் போல நினைத்து, வாத்சல்யத்துடன், கவலை படுவதையும், கனிவாக பேசிக் கொண்டிருந்ததையும், தந்தைமார், அதே போல தங்கள் இன்னமும் உடலும் மனமும் முதிராத சிறு புதல்வர்கள் போல அவர்களை எண்ணி தவிப்புடன், செய்வதறியாது நிலை கொள்ளாமல் நிற்பதையும் பார்த்தார்.
மல் யுத்த விதிகளை சற்றும் மீறாமல் அச்யுதனும், சாணூரனும் தொடர்ந்து யுத்தம் செய்தனர். பலராமனும் முஷ்டிகனும் அதே போல மல் யுத்தம் செய்தனர். இனி கொல்வது என்று தீர்மானித்த பின் சாணூரனால் ஈடு கொடுக்க முடியவில்லை. ஸ்ரீ ஹரியின் ஒவ்வொரு அடிக்கும் உடல் தளர்ந்து களைத்தான். அடிக்கடி வலி தாங்க மாட்டாமல் தவித்தான். சமாளித்துக் கொண்டு கழுகு போன்ற வேகத்துடன், முஷ்டியினால் ஸ்ரீ ஹரியின் மார்பில் குத்தினான். அந்த கைகளையே பிடித்துக் கொண்டு வேகமாக சுழற்றி மேலே வீச, அதே வேகத்தில் பூமியில் விழுந்த சாணூரன், அந்த க்ஷணமே உயிரை விட்டான்.
பலராமன் சிறந்த மல் யுத்த வீரன். முஷ்டிகன் முஷ்டியால் குத்தப் போக அந்த கைகளையே பிடித்து , இடது கையாலேயே பலராமன் சுழற்றி வீசவும், அவனும் மடிந்தான்.
இருவரும் மடிந்தபின், சல, தோசல என்ற வீரர்களும் போரிட்டு மடிந்தனர். அவர்களுடன் வந்த மல் யுத்த வீரர்கள் உயிரை காத்துக் கொள்ள ஓட்டம் பிடித்தனர்.
கோகுலத்து வாசிகள், அனைவரும் வந்து வாழ்த்தினர். ஒத்த வயதினர் கண்களில் நீருடன் அணைத்து வாழ்த்தினர். வாத்யங்களை வாசித்தும், நடனம் ஆடியும் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். வந்திருந்த ஜனங்களும் மகிழ்ந்தனர். கம்சனைத் தவிர இந்த இளைஞர்களின் வெற்றியை ஊர் மக்களும் கொண்டாடினர். அந்தணர்கள் சாது சாது என்றனர். நன்மக்கள் அனைவரும் சாது சாது என்றனர்.
தோற்றவர்களும் ஓடி விட, மல்லர்களை வெற்றி கொண்டதை தெரிவிக்க வாத்யங்கள் முழங்குவதை நிறுத்தச் சொல்லி கம்சன் ஆணையிட்டான். அந்த வசு தேவ குமாரர்களை ஊரை விட்டு விரட்டுங்கள். கோகுலத்திலிருந்து வந்தவர்களின் செல்வத்தை கொள்ளையிடுங்கள். துர்மதி நந்தனை பிடித்துக் கட்டுங்கள் என்று உத்தரவிட்டான். வசுதேவரை உடனே கொல்லுங்கள். என் தந்தை உக்ர சேனன் அவர்கள் பக்ஷபாதி. அவனையும் அவன் உடன் பிறந்தார்களையும் கொல்லுங்கள் என்றான். இப்படி தன் மனதின் ஆற்றாமையால் சொல்லிக் கொண்டே போக, அவனறியாமல் தன் லகிமா என்ற சக்தியால் அவன் படுக்கையின் அருகிலேயே ஸ்ரீ ஹரி வந்து நின்றார். படுக்கையின் மேலேயே ஏற முயன்ற ஸ்ரீ ஹரியை தன் ம்ருத்யு என்றே பார்த்த கம்சன் அவசரமாக எழுந்து தன் உடை வாளை எடுத்தான்.
கையில் வாளுடன் நின்றவனை, நடு வானத்தில் பறக்கும் கழுகு எப்படி வேகமாக வந்து விஷ நாகத்தை தூக்கிக் கொண்டு போகுமோ, அந்த அளவு உக்ர தேஜசுடன், கம்சனை இறுக பிடித்தார். அவன் கிரீடம் அசைந்து விழ, மஞ்சத்திலிருந்து விழச் செய்து அவன்மேல் ஏறி நின்றார். அனைவரும் பார்த்திருக்கையிலேயே, விஸ்வாஸ்ரயனான ஸ்ரீ ஹரி, கம்சனை பூமியில் வீசி, யானையை சிங்கம் தாக்குவது போல, தாக்கினார். ஜனங்கள் ஹா ஹா என்று அலறினர். கண் முன்னால் நடப்பதை நம்ப முடியாமல் திகைத்தபடி நோக்கினர்.
அந்த கம்சனோ, சதா அந்த ஈஸ்வரனையே நினைத்து பயந்தவன், அவனே நினைக்காவிட்டாலும், மனம் முழுவதும் ஹரி ஸ்மரனையே, பேசும் பொழுதும், பருகும் பொழுதும், நடக்கும் பொழுதும், தூங்கும் பொழுதும், மூச்சு விடுவதே ஹரி ஸ்மரனையோடு, இருந்தவன் சக்ராயுதத்துடன் எதிரில் காணக் கிடைக்காத அந்த காட்சியைக் கண்டான்.
அவனுடைய சகோதரி, எட்டு தம்பிகள், கங்கண், ந்யக்ரோத என்பவர்கள், ஓடி வந்தனர். மிகுந்த கோபத்துடன் தங்கள் மூத்தவனின் ஆணையை சிரமேற் கொண்டு வாழ்ந்தவர்கள், பரபரப்புடன் வந்தனர். அவர்களை நெருங்க விடாமல் ரோஹிணி மகன், பலராமன் தன் பரிகத்தாலேயே வதைத்தார். ம்ருகேந்திரன்- சிங்கம், மற்ற மிருகங்களை வதைப்பது போல.
வானத்தில் துந்துபிகள் முழங்கின. ப்ரும்மா முதலானோர், பூ மாரி பொழிந்தனர். பல பெண்கள் பாடினர், ஆடினர்.
கம்சனின் மனைவிமார்கள், மற்றும் அவனைச் சார்ந்தவர்கள் அவனிடம் ஒத்து வாழ்ந்தவர்கள், தலையில் அடித்துக் கொண்டு அழுதனர். அவனுடன் வீர சய்யா என்ற படுக்கையில் படுத்தவர்கள் வருந்தினர். ஹா நாதா! என்றும் பிரியமானவனே என்றும் தர்மக்ஞன் என்று சொல்லி கருணா நாதன்! வத்சலா! என்று அழுதனர். உன்னை வதைத்த பின் எங்களுக்கு யார் கதி? உன் குடும்பத்தோடும் ப்ரஜைகளோடு அழிவோம். இந்த ஊரும் நாதனான உன் பிரிவால் வாடுகிறது பார். எங்களைப் போலவே அவையும் சோபையிழந்து காணப் படுகின்றன. இனி உத்சவங்கள் ஏது? குற்றமற்றவன் நீ, உன்னை ஏன் வதைத்தனர். உன்னைக் கொன்றதால் பஞ்ச பூதங்களுக்கும், ஜீவன்களுக்கும் த்ரோஹம் செய்து விட்டனர். அவர்கள் எப்படி நலமாக வாழ்வார்கள்? இந்த ஸ்ரீ ஹரிதான் சர்வ உயிரினங்களுக்கும் காக்கும் தெய்வம் என்பர். அவன் எப்படி இந்த செயலைச் செய்யலாம் என்றனர்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இப்படி பெண்கள் வருந்துவதைக் கண்ட ஸ்ரீ ஹரி அவர்களை சமாதானப் படுத்தினார். அவர்களை உலகியலில் இறந்தவர்களுக்குச் செய்யும் அபர காரியங்களைச் மறைந்த கம்சனுக்கு செய்யச் சொன்னார்.
தன் தாய் தந்தையரை சிறையிலிருந்து விடுவித்து விட்டு, அவர்களை பாதம் தொட்டு வணங்கினர். தேவகியும், வசுதேவரும் அறிந்ததே, தங்கள் மகன் ஜகதீஸ்வரன் என்று. அவர்களும் புதல்வர்களை அப்படியே நினைத்து பதில் வந்தனம் செய்தனர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், முதல் பகுதியில், கம்ச வதோ என்ற நாற்பத்து நான்காவது அத்யாயம்) ஸ்லோகங்கள்- 51
அத்யாயம்-45
ஸ்ரீ சுகர் சொன்னார்: தாய் தந்தையர் இருவரும் தங்கள் செல்வத்தை திரும்ப பெற்றனர் என்பதையறிந்து புருஷோத்தமன், தன் மாயையால் எடுத்த மல்ல ரூபத்தை விட்டு, ஜனங்களை வசீகரிக்கும் சுய ரூபத்தை அடைந்தான்.
அவர்களை முன் பிறந்தோனான பலராமனுடன் சென்று தரிசித்தான். சத் குணங்களே நிரம்பியவனாக, மிகவும் அன்புடன் வணங்கி, மகிழ்வித்து, அம்மா, அப்பா என்றழைத்தான். அவர்கள், மகனே உங்கள் இருவரையும் சிசுவாக கண்டதோடு சரி. அதன் பின் பால்யம், கிசோர, குமார என்ற நிலைகளைக் கண்டு மகிழும் பாக்கியம் கிடைக்கவேயில்லை. அதற்காக ஒவ்வொரு நாளும் எவ்வளவு தவித்தோம் என்றனர்.
எங்களுக்கு தெய்வம் அந்த மகிழ்ச்சியை அளிக்கவேயில்லை. சாதாரணமாக பெற்றோர் குழந்தைகள் வளரும் சமயம் , கொஞ்சி குலாவி, அனுபவிக்கும் ஆனந்தம் எங்களுக்கு கிடைக்கவில்லை. தனக்கு பிறந்த குழந்தைகள், அவைகளை போஷித்து வளர்ப்பது பெற்றவர்களுக்கு நூறு முறை பிறப்பதற்கு சமம்.
உடல் நலம் , செல்வம் மற்ற வசதிகள் இருந்தும் தன் குழந்தைகளுக்கு சரீரத்தாலும், செல்வத்தாலும் செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டால் அது மிக பெரியத் தவறாகும். வசதியுடையவன், தாய் தந்தையரை, முதியவரை, சாத்வீ – நல்ல குணமுள்ள மனைவியை, மகனை, சிசுவை, குருவை, அந்தணரை, அடைக்கலம் கேட்டு நிற்பவனை, காப்பாற்றாமல் விட்டால் மூச்சு இருந்தாலும் மரணமடைந்தவனாகவே கொள்ள வேண்டும்.
ஆனால் எங்களுக்கு வசதியோ, உடல் நலமோ இல்லாமல் இல்லை. கம்சனிடத்தில் தினம் நடுங்கிக் கொண்டிருந்தோம். இப்பொழுது தான் அந்த பயம் நீங்கியது. எனவே, குழந்தைகளே எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள். எங்கள் பொறுப்பை தட்டிக் கழித்ததாகவோ, அன்பில்லாமல் விரட்டியதாகவோ எண்ண வேண்டாம். எங்கள் கை கட்டப் பட்டிருந்தது. எங்கள் வசத்தில் எதுவும் இல்லை. உங்களுக்கு நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்யவில்லை என்று மனத் தாங்கல் வேண்டாம். என்றனர்.
ஸ்ரீ ஸுகர் சொன்னார்: மாயா மனுஷ்யன், விஸ்வாத்மன், ஸ்ரீ ஹரி என்று அறிந்தோ அறியாமலோ, தாய் தந்தை என்ற பாசத்தால் இவ்வாறு சொல்லி மடியில் இருத்தி அனைத்துக் மகிழ்ந்தனர். கண்ணீர் ஆறாக பெருக, எதுவும் பேச முடியாமல் தொண்டை அடைக்க விசும்பியபடி இருந்தனர். அவர்களை சமாதானப் படுத்தி விட்டு பகவான், தாய் வழி பாட்டனார், உக்ர சேனரை விடுவித்து யது வம்சத்து அரசனாக நியமித்தார். அவர் சொன்னார், ப்ரஜைகளிடமும் சொல். யது வம்சத்தினர் அரசாஸனத்தில் அமரக் கூடாது என்ற யயாதியின் சாபம் உண்டு. அவர்கள் சம்மதிக்காவிட்டால், அரசு பணிகளில் உள்ளவர்கள் எனக்கு அடங்க மாட்டார்கள். வரி வசூலிப்பதை எடுத்துக் கொள்வார்கள். மற்ற சிற்றரசர்கள் என்ன செய்வார்களோ, இதுவரை எல்லா தாயாதிகளும், பங்காளிகளும் கம்சனிடம் பயந்து வாய் மூடி இருந்தனர். யது, வ்ருஷ்ணி, அந்தக, மது, தாஸார்ஹ, குகரா என்று மற்ற குடித் தலைவர்கள் போட்டியிடலாம். பாகம் பிரித்து கொடுத்து, சமாதானம் செய்து. அவர்களை தங்கள் வீடுகளில் வசிக்கச் செய். தாராளமாக தனம் கொடுத்து அவர்கள் வாழ்க்கை வளம் பெறச் செய். இது வரை நகரங்களில் நுழையாமல் வருந்தி ஜீவனம் செய்து வந்திருக்கிறார்கள்.
க்ருஷ்ண, ராமர்கள் அவ்வாறே செய்து அவர்கள் தங்கள் வீடுகளில் குடியேறி, திருப்தியாக, தங்களுக்கு வேண்டியதை கிடைக்கப் பெற்றவர்களாக, அவர்கள் இருவரிடம் மிகவும் அன்யோன்யமாக ஆனார்கள். அவர்களை பார்த்தே மகிழ்ந்தனர். தினமும் மலர்ந்த முகத்துடன், லக்ஷ்மீகரமாக , மென் முறுவலோடு அவர்கள் கண் பார்வை தங்கள் மேல் பட்டாலே பாக்யம் என்று நினைத்தனர். அந்த குலத்து இளைஞர்கள் அனைவரும் க்ருஷ்ண, பல ராம பக்ஷத்தினர் ஆயினர்.
தேவகி சுதனான பகவான், பலராமனும் உடன் வர, நந்தனிடம் சென்றார். அவரை பரிவுடன் அணைத்து ‘தந்தையே, நீங்கள் எங்களை மிகவும் அன்புடன் போஷித்து வளர்த்தீர்கள். பெற்றோரை விட அதிகமாக உங்கள் இருவரிடமும் நாங்கள் பாசத்துடன் வளர்ந்தோம். எவர் தன் மகனை விட அதிகமாக வளர்க்கும் குழந்தையிடம் பாசமாக இருக்கிறாரோ, அவர்கள் தான் ஜனனீ, அவர் தான் தந்தை. சந்தர்ப வசத்தால், தங்களுக்கு பிறந்த குழந்தையை தாங்களே வளர்க்க முடியாமல் பந்துக்களிடம் விட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். தந்தையே! இப்பொழுது வ்ரஜ தேசம் செல்லுங்கள். நாங்கள் பின்னால் வருகிறோம். எங்கள் பிரிய சகாக்களை சந்திக்கவும், தாய்மார்களை காணவும் வருவோம். மற்ற பந்துக்கள் அனைவரிடம் துக்கப்பட வேண்டாம் என்று சொல்லுங்கள்.
இவ்வாறு நந்தனை சமாதானப் படுத்தி அவர்கள் உடன் வந்த கோகுல வாசிகளோடு, அனைவருக்கும் நல்ல ஆடைகள், அலங்கார பொருட்கள் இவைகளை அளித்து அனுப்பி வைத்தார். நந்தனும் பரிவுடன் அணைத்து, கண்களில் நீர் ஆறாக பெருக ஆசீர்வதித்து விட்டு கோகுலம் சென்றார்.
அதன் பின் ஸூரசேனன் அரசனாகி, தன் புதல்வர்களுடன், மந்திரிகளை நியமித்து, புரோஹிதர் என்ற குருவுடன், அந்தணர்களுக்கு தகுந்த பதவிகளையும், தக்ஷிணைகளும் கொடுத்து, நியமங்களுடன் அரசாட்சியை ஆரம்பித்தார். பசுக்கள், மாலைகளால் அலங்கரிக்கப் பட்டு, கன்றுகளுடன், தானம் செய்தார். ஸ்ரீ க்ருஷ்ணன், பலராமன் பிறந்த தினத்தில், அந்த சமயம் செய்யாமல் விட்ட, தானங்களை, அரச குலத்து சம்ஸ்காரங்களை செய்தனர். அவை கம்சனால் அதர்மமாக நிறுத்தப்பட்டிருந்தன.
அதன் பின் முறையாக உபனயனம் செய்வித்தார். கர்கர் என்ற யது குல ஆசார்யரிடம் காயத்ரி மந்த்ரோபதேசம் பெற்றனர். கல்வியும், ஞானமும் பெற குருகுலம் சென்றனர். காசி நகரத்தில், அவந்தி புர வாசியான ஸாந்தீபினீம் என்ற குருகுலத்தில் வசிக்கலாயினர்.
அவர்கள் இருவரும் இயல்பாகவே சிறந்த ஒழுக்கமும், கல்வியை கவனமாக கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் கொண்டவர்கள் ஆனதால், அவர் சொல்வதைக் கேட்டு உடனடியாக க்ரஹித்துக் கொண்டனர். ரிஷிகளிடம் தேவர்கள் கற்பது போல. எனவே, அவரிடம் அந்த அந்தண ஸ்ரேஷ்டர் மகிழ்ச்சியடைந்தார். கற்றதை சுத்தமான பாவத்துடன் திருப்பி சொல்வர். வேத சாஸ்திரங்கள் அனைத்தையும் சாங்கோபாங்கமாக கற்றுக் கொடுத்தார். ரகஸ்யமான தனுர்வேதம், தர்ம நியாயங்கள், அதன் பல பிரிவுகள், அத்துடன் ஆன்வீக்ஷிகீம் என்ற வித்யா (ஆராய்ச்சி) ராஜ நீதி, இதிலும் ஆறு பிரிவுகள், இவையனைத்தையும் அவர் சொன்ன மாத்திரத்தில் மனதில் வாங்கி உருவேற்றிக் கொண்டது போல சகல வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தனர். அறுபத்து நான்கு கலைகளையும் இரவும் பகலுமாக படித்து, கற்ற பின் குருவிடம் ஆசார்ய தக்ஷிணையாக என்ன தருவது என்று வினவினர்.
குரு அவர்களின் இந்த மகிமையை அறிந்தவர், அமானுஷ்யமான சக்தியுடையவர்கள் என்பதையும் எண்ணி, தன் மனைவியுடன் ஆலோசித்து, பெரும் கடலில் மூழ்கி இறந்த தங்கள் பாலகனை மீட்டு வர வேண்டினார். உடனே சம்மதித்து, பெரிய ரதத்தில் ஏறி, வேகமாக சென்றனர். சமுத்திர கரையை அடைந்ததும் ஒரு க்ஷணம் நின்றனர். சமுத்திர ராஜன் அதையறிந்து வந்து வணங்கினான். அவரிடம் ஸ்ரீ க்ருஷ்ணன், எங்கள் குரு புத்திரனை கண்டு பிடித்து தாருங்கள் என்றான். அவன் இந்த சமுத்திரத்தில் பாலகனாக இருந்த பொழுது மூழ்கி அலைகளால் அடித்துச் செல்லப் பட்டானாம்.
சமுத்திரம் சொல்லியது: ஹே க்ருஷ்ணா! நான் அந்த செயலைச் செய்யவில்லை. இந்த சமுத்திரத்தின் ஆழத்தில் ஐந்து அசுரர்கள் சங்க ரூபத்தில் நடமாடுகிறார்கள். அவர்கள் கவர்ந்து கொண்டு போயிருக்கலாம் எனவும், பகவான் ஜலத்தில் குதித்து தேடினார். பாலகன் அகப்படவில்லை. கடல் ஆழத்தில் இருந்து தனக்கு பிடித்த சங்கத்தை எடுத்துக் கொண்டு திரும்பி வந்தார். அதன் பின் சம்யமனீம் என்ற யம புரியை அடைந்தனர். அங்கு சென்றவுடன் ஜனார்தனனாக தன் சங்கத்தை பலமாக ஊதினார். சங்க நாதம் கேட்டு குழப்பத்துடன் யமராஜன் வந்தான். அவனுடைய கடமையே ப்ரஜைகளை கொண்டு செல்வது தானே. நேரில் கண்டவுடன் இருவரையும் உபசாரம் செய்து அழைத்துச் சென்றான். ஹே விஷ்ணோ! லீலை – விளயாட்டாக மனித உருவம் எடுத்து அவதரித்தவர்கள், உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்று பணிவாக வேண்டினான்.
ஸ்ரீ க்ருஷ்ணன் ‘உங்கள் கடமை என்பதால் எங்கள் குரு புத்திரனை இங்கு கொண்டு வந்து விட்டீர்கள். அது சரியே. மகாராஜா! அவனை கொண்டு வந்து கொடுங்கள். என் கட்டளை என்று கொள்ளுங்கள். சரியென்று யம ராஜனும், குரு புத்திரனை கொண்டு வந்து தர, திரும்பி வந்து குருவிடம் ஒப்படைத்து விட்டு, மேலும் எதுவானாலும் கேளுங்கள் என்று பணிவுடன் சொன்னார்கள்.
குரு சொன்னார்: குழந்தைகளே! நன்று செய்தீர்கள். நீங்கள் இருவரும் குருவுக்கு தக்ஷிணையாக மிகப் பெரிய உபகாரம் செய்து விட்டீர்கள். உங்களை மாணாக்கர்களாக பெற்ற குருவிற்கு வேறு தேவைகளும் இருக்குமா என்ன? வீரர்களே! உங்கள் வீடு செல்லுங்கள். உங்களுக்கு நல்ல கீர்த்தியும், இகத்திலும் பரத்திலும் பாவனமாக நன்மைகளே கிடைக்கட்டும். கற்ற வேத வித்தைகளை மறக்காமல் அத்யயனம் செய்யுங்கள். குரு இவ்வாறு அனுமதித்து விடை கொடுத்தவுடன், இருவரும் ரதத்தில் ஏறிக் கொண்டு வேகமாக தங்கள் இருப்பிடம் வந்து சேர்ந்தனர். இருவரையும் கண்டு நகர ஜனங்கள் மகிழ்ந்தனர். வெகு நாட்களாக காணாமல் இருந்தவர்களை கண்டதே, தொலைந்து போன செல்வத்தை திரும்பப் பெற்றது போல மகிழ்ந்தனர்.
( இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், குருபுத்ரானயனம் என்ற நாற்பத்தி ஐந்தாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்- 50
அத்யாயம்-46
ஸ்ரீ சுகர் சொன்னார்: வ்ருஷ்ணி குலத்து முக்ய மந்திரி ஸ்ரீ க்ருஷ்ணனின் அன்யோன்யமான சகா. ப்ருஹஸ்பதியின் சிஷ்யர் அவர். சாக்ஷாத் உத்தவர் என்ற பெயருடையவர், சிறந்த புத்திசாலி. ஸ்ரீ க்ருஷ்ணனிடம் மிகுந்த பக்தியுடையவர்.
பகவான் அவரிடம் தனிமையில் தன் கைகளில் அவர் கையை ஏந்தியபடி ஒரு விஷயம் சொன்னார். உத்தவா! வ்ரஜ தேசம் செல். சௌம்யனே! என் பெற்றோர்களைக் கண்டு அன்புடன் நலம் விசாரி. கூடவே கோகுல பெண்களிடம், அவர்கள் என் பிரிவால் வாடுகிறார்கள், அவர்களுக்கு என் அன்பை தெரிவித்து அவர்களை சமாதானப் படுத்து. அவர்கள் என்னையே மனதில் நினைத்தவர்கள். எனக்கு ப்ராணன் போன்றவர்கள். என் காரணமாக தங்கள் தேகத்தில் பற்றையே விட்டவர்கள். என்னையே பிரியமான வாழ்க்கை துணையாக மனதில் வரித்தவர்கள். அதன் காரணமாக உலகியல் தர்மத்தைக் கூட விட்டு விட்டவர்கள். என் மனதில் அவர்களை நான் என்றும் நினைவில் வைத்திருப்பேன்.
என்னிடத்தில் அவர்கள் வைத்திருக்கும் ப்ரேமை அளவிட முடியாதது. எங்கோ தூரத்தில் வ்ரஜ தேசத்தில் இருந்தாலும் என்னையே நம்பி நினைத்திருக்கிறார்கள். என் பிரிவினால் வாடி, நினைவிழந்து போகிறார்கள். குரல் கமற தவிக்கிறார்கள். எப்படியோ கஷ்டப் பட்டு நான் திரும்பி அவர்களிடம் திரும்பி வருவேன் என்ற நம்பிக்கையுடன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்கிறார்கள். அவர்கள் என் ஆத்மாவே ஆவர்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ராஜன்! இதைக் கேட்டு உத்தவர், தன் தலைவனின் கட்டளையை சிரமேற் கொண்டு ரதத்தில் ஏறி, நந்த கோகுலம் சென்றார். அங்கு சூரியன் மறையும் அஸ்தமன வேளையில் சென்றவர் ரதத்திலிருந்தபடியே பசுக்கள் திரும்பி வரும் சமயம் அவைகள் காலடியால் தூசி பறக்க, வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார்.
தங்கள் தொழுவங்களை அடையாளம் கண்டு கொண்ட பசுக்கள் உரக்க குரல் கொடுத்து மகிழ்ச்சியைத் தெரிவித்தன. காளைகள் ஓடி வந்தன. சிறு கன்றுகள் உடைய தாய் பசுக்கள் மடியின் கனம் தாங்காமல், தங்கள் கன்றுகளைத் தேடின. இங்கும் அங்குமாக அவைகளின் கன்றுகள் தங்கள் தாய்மார்களை கண்டு ஓடி வந்தன. ஒரு பக்கம் பசுக்களை அதன் இடையர்கள் பால் கறக்கும் சத்தமும் கேட்டது. இடையில் வேணு நாதமும் கேட்டது.
கோகுல வாசிகள் ஆண்களும் பெண்களும் பல ராம, க்ருஷ்ணன் இவ்விருவருடைய வீரச் செயல்களை பாடலாக பாடிக் கொண்டிருந்தனர். கோகுலத்து பெண்கள் நன்றாக அலங்கரித்துக் கொண்டு வளைய வந்தனர். ஊருக்குள், அக்னி,ஸுரியன் இவர்களை உபாசிப்பவர்கள் அதன் நியமத்தோடு செய்து கொண்டிருந்தனர். அதிதி, பசுக்கள், அந்தணர்கள், இவர்களுக்கான கவனிப்பும், பித்ருக்களுக்கான பூஜைகளும், தேதைகளை அர்ச்சனை செய்து தூப தீபங்கள் மாலைகள் இவற்றுடன் பூஜை செய்தவர்கள், என்று ஊரில் அனைவரும் சுறு சுறுப்பாக இருந்தது காணவே மனதிற்கு ரம்யமாக இருந்தது. எங்கும் வனங்கள் பூக்களைச் சொரிந்த மரங்கள், பறவைகள், வண்டுகள் நாதம், ஹம்ஸ காரண்டவ பக்ஷிகள் நிரம்பிய தாமரைக் குளங்கள், என்று உத்தவர் ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்தார்.
அவர் வந்திருப்பதையறிந்து நந்தன் வந்து வரவேற்றார். க்ருஷ்ணனுக்கு பிரியமான தோழன், என்பதால் மகிழ்ச்சியுடன் ஆலிங்கணம் செய்து வரவேற்று, வாசுதேவனையே கண்டது போல உபசாரம் செய்தார். பரமான்னம் அதனுடன் மற்ற உணவு வகைகள் என்று உண்ணச் செய்தார். அவர் ஓய்வு எடுத்துக் கொண்டபின் மதுரா நகரின் நிலவரங்களைப் பற்றிக் கேட்டார்.
மஹாபாக, எங்களுடைய சகா, ஸுரனின்மகன் வசுதேவன் குசலமா? தன் புதல்வர்களை அடைந்து சந்தோஷமாக இருக்கிறானா? கம்சன் துன்புறுத்தியதிலிருந்து விடுபட்டான். நலம் விரும்பும் நண்பர்கள், தோழர்களுடன் மகிழ்ந்து இருக்கிறானா? நல்ல வேளை, கம்சன் மறைந்தான். பாபி, அவன் உடன் பிறந்தானும் அதை விட துஷ்டன், தன் தகாத வினைகளாலேயே கெட்டனர். சாதுக்களை, தர்ம சீலர்களாக இருந்த யது குலத்தோரை சதா துன்புறுத்தினான்.
க்ருஷ்ணன் எங்களை நினைக்கிறானா? தாயார் யசோதையை, ரோஹிணியை, தன் தோழர்களை, சகிகளை, கோகுல வாசிகளை, வ்ரஜ தேசத்தை, அவனையே தலைவனாக எண்ணி பின் தொடர்ந்த பசுக்கள், கன்றுகள், வ்ருந்தாவனத்தை, கோவர்தன கிரியை நினைவில் வைத்திருக்கிறானா?
வருவானா? இந்த கோகுல வாசிகளை சற்று பார்த்து விட்டுப் போகலாம் என்று வருவானா? வந்தால் எங்கள் பாக்யம். அந்த அழகிய மென் முறுவலோடு கூடிய முகத்தை காண்போம். கண்களின் கடாக்ஷத்தை பெறுவோம். பலசமயங்களின் அவன் எங்களை காப்பாற்றி இருக்கிறான். காட்டுத்தீயிலிருந்து மீட்டதை, அடை மழை விடாது பெய்தது, கோவர்தன மலையை தாங்கி அதனடியில் கோகுலம் பூராவும் இருந்தோம். காளையாக, சர்ப்பமாக, வந்த அசுர்களிடமிருந்து காத்தான். மரண வாயிலில் நின்றோம். மகாத்மா க்ருஷ்ணன் அவன் தான் எங்களைக் காப்பாற்றினான்.
நாங்கள் நினைக்காத நாளில்லை. அவர்களின் வீர்யத்தைப் பற்றிப் பேசுவோம். விளையாட்டாக வேடிக்கையாக பேசும் பொழுது கூட கடைக் கண் அழகில் மயங்குவோம். அவன் சிரித்தது, பேசியது, இவற்றை நினைத்து நினைத்து நம்ப முடியாமல் திகைக்கிறோம். ஏனெனில் ஒவ்வொன்றும் மிக அரிதான செயல்கள். நதி, மலை, மலை சரிவுகள் இவைகளில் முகுந்தனின் பாதம் படாத இடமே இல்லையெனும் படி சுற்றியிருக்கிறான். அந்த இடங்களை இப்பொழுது நாங்கள் கடக்கும் போது உணர்ச்சி மேலிட அவனாகவே ஆகி விடுகிறோம்.
பலராமனும், க்ருஷ்ணனும் ஏதோ உயர்ந்த தேவ குலத்தவர் என்று எண்ணினோம். இங்கு நம்மிடை வந்து சேர்ந்திருக்கிறார்கள். ஏதோ மிகப் பெரிய தேவ கார்யம், கர்கர் அப்படித்தான் சொன்னார். கம்ச வதம், குவலயா பீடம் என்ற மத யானை, மல்லர்கள் இருவர், அவர்களை ம்ருகேந்திரன் சிங்கம் சாதாரண பசுவை வதைப்பது போல விளையாட்டாக வதைத்து விட்டான். யானை சிறிய குச்சியை உடைப்பது போல தனுர் யாகத்தில் வைத்திருந்த வில்லை முறித்தான். ஒரு கையால் தூக்கி நடுவில் முறித்தான். அதை விட பெரிய செயல், ஏழு நாட்கள் கோவர்தன மலையை கைகளில் தாங்கி நின்றது. எவ்வளவு அரக்கர்கர்கள், அவனைக் கொல்லவே கம்சனால் அனுப்பப் பட்டவர்கள், ப்ரலம்பன், தேனுகன், அரிஷ்ட நேமி, த்ருணாவர்த்தன், பகன் முதலானோர், தேவர்களை, அசுர்களை கூட ஜயித்தவர்கள், அவர்களை விளையாட்டாக முறியடித்தான்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு நினைத்து நினைத்து, க்ருஷ்ணனையே அன்புடன் எண்ணி உளமார பாசத்துடன் வளர்த்தவர், உணர்ச்சியால் தொண்டை அடைக்க, பேச முடியாமல் குரல் தழ தழக்க நிலை கொள்ளாமல் தவித்தார். யசோதா தன் மகனைப் பற்றி அவர் சொன்னதை கேட்டபடி கண்ணீர் பெருக கண்ணனையே நினைத்து முலைப் பால் பெருகி உடையை நனைக்க எதுவும் பேசாமல் கேட்டிருந்தாள்.
நந்தனும் யசோதையும் கண்ணனிடம் கொண்டிருந்த அளவில்லாத பாசத்தைக் கண்டு உத்தவர் அவர்களுக்கு சமாதானமாக ஏதோ சொல்ல முயன்றார். நண்பனே! நீங்கள் இருவரும் உத்தமமானவர்கள். அன்பை பொழிபவர்கள். தன்னலமே இல்லாத தூய அன்பு உங்களுடையது. அகில குருவான ஸ்ரீமன் நாராயணனிடம் இப்படி ஒரு ஈடுபாடு உங்களுக்கு வாய்த்தது உங்கள் பாக்யமே.
பலராமனும் க்ருஷ்ணனும் உலகையே படைத்தவரான புராண புருஷர்கள். பல ராமனும் முகுந்தனும், சகல ஜீவன்களையும், அவர்களின் பலவிதமான குணங்களையும், நடவடிக்கைகளையும் அறிந்தவர்கள். அவர்களிடத்தில் யாரானாலும் ஒரு க்ஷண நேரம் சுத்தமான மனதுடன் ப்ராணன் போகும் சமயம் நினத்தாலும், அவன் வினைப் பயன்கள் தீரும். அவன் மிகச் சிறந்த கதியை அடைவான். ப்ரும்ம மாகவே, ஸுரியனுடைய தேஜஸுடன் விளங்குவான். அவனிடத்தில் நீங்கள் இருவரும், அகிலாத்ம தேஹன் என்று அறிந்தோ அறியாமலோ, ஏதோ காரணமாக மனித உடல் எடுத்து வந்த பரமாத்மாவானவனிடம் தூய்மையான அன்பே கொண்டவர்களாக சகல நல்லெண்ணங்களும் பாவனைகளுமாக வளர்க்கும் பாக்யம் பெற்றவர்கள். இன்னும் என்ன வேண்டும்? உங்கள் சுக்ருதம் – என்ன புண்யம் செய்தீர்களோ.
சீக்கிரமே வருவான். வ்ரஜ தேசத்தைக் காணவும், பிரியமான தாய் தந்தையர்களான உங்களையும், மகிழ்ச்சியில் ஆழ்த்துவான். அவன் நற்குணங்களுக்கு இருப்பிடமானவன். செய் நன்றி மறவாதவன். கம்சனை அரங்கத்திலேயே வதைத்தான். க்ருஷ்ணன் வருவான் கண்டிப்பாக, என்று எங்களுக்கு பெரியவர்கள் சொல்லி இருந்தார்கள்.
மஹாபாஹோ! நீங்கள் இருவரும் வருந்த வேண்டாம். ஸ்ரீ க்ருஷ்ணனை விரைவில் காண்பீர்கள். அருகில் வந்து உங்கள் கவலையைத் தீர்ப்பான். உள்ளும் புறமுமாக அனைத்து உயிரினங்களிலும் உறைபவன், இருட்டில் விளக்கு வெளிச்சம் போல, அவர்களின் இதயத்தில் உறைந்தவன்.
மிக அதிக பிரியமானவன் என்றோ, விரோதி என்றோ அவனுக்கு யாருமே இல்லை. யாரையும் அவன் உத்தமன் என்றோ அதமன் என்றோ பார பக்ஷம் பார்த்ததில்லை. தனக்கு சம மானவன், என்றோ, தகுதியில் தரக் குறைவானவன் என்றோ நினைக்க மாட்டான். அவனுக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை, மனைவி மக்களோ இல்லை. தன்னைச் சார்ந்தவன், மாற்றான் என்றும் யாரும் இல்லை. அவனுக்கு என்று ஒரு உடலோ, பிறவியோ இல்லை. அவன் வினைகளைக் கடந்தவன். நல்லது, பொல்லாது, இரண்டும் கலந்த ஒன்று, என்று புது புது உடல்களில் பிறப்பது எதுவுமே அவனுக்கு இல்லை. பின் ஏன் அவதாரம் செய்கிறான் என்றால், அதுவும் அவனுக்கு விளையாட்டே. நல்லவர்களை காக்கவே பிறவி எடுக்கிறான்.
சத்வ, ரஜஸ், தமஸ் என்ற குணங்களைத் தாண்டிய நிர்குணன். அவைகளைக் கடந்து உலகை படைத்து, காத்து, அழிக்கிறான். அவன் பிறப்பில்லாத அஜன் என்பவன். எப்படி வண்டுகள், பார்வையால், உலகை அறிந்து சுற்றுகிறதோ, அதே போல உடலின் உள் சித்தமாக இருந்து செயலையும், ஆத்மாவாக செய்பவனாகவும் அஹங்காரமாகவும் அவனைச் சொல்வார்கள்.
உங்கள் ஆத்மஜன்- மகன். உங்களுக்கு மட்டுமல்ல, ஸ்ரீ ஹரி, அனைவருக்கும் ஆத்மஜன்- மகனே. ஆத்மாவானவன். தந்தை தாயும், ஈஸ்வரனும் அவனே.
கண்டதும், கேட்டதும், நடந்த, நடக்கின்ற, இனி நடக்கும் செயல்கள், அஸ்னு, சரிஷ்ணு,? – மகத்தானவை, அல்பமானவை, எனப்படும் வஸ்து, அச்யுதன் அல்லாமல் எதுவும் இருக்க முடியாது. ஒரு சொல் கூட இருக்க முடியாது. அவனே சகல பரமாத்மபூதனான தெய்வம்.
இப்படி பேசிக் கொண்டே இரவு நகர்ந்தது. நந்தனும் உத்தவரும் பேசிக் கொண்டிருக்கையிலேயே, கோகுல பெண்கள் எழுந்து, விளக்குகளை ஏற்றி, வீட்டு வாஸ்து (கோலம்) முதலான காரியங்களைச் செய்யத் தொடங்கி விட்டனர். தயிர் கடையும் ஓசையும் எழலாயிற்று. ஒளிரும் தீபங்கள், மணிகளால் அலங்கரிக்கப் பட்ட தீபங்களில் பட்டு ப்ரகாசமாக தெரிந்தன. அந்த விடியலில் பெண்கள் தயிரைக் கடையும் கயிறுகளில் கங்கணங்கள் மாலைகள் உரச, அங்கும் இங்குமாக நடக்கும் போது இடையிலும், கழுத்திலும் அணிந்த நகைகள் அசைய, குண்டலங்களின் ஒளி கன்னங்களை அருண வர்ணமாக காட்ட தீவிரமாக காலை வேளை வேலைகளில் ஈடு பட்டிருந்தனர்.
ஒரு சிலர் அரவிந்த லோசனனை பாடினர். அந்த சப்தம் வானத்தை எட்டியது. தயிர் கடையும் ஓசை அத்துடன் போட்டியிட்டது போல கலந்து கேட்டது. அவை சுற்றுபுறத்தை மங்களமாக்கின.
பகவான் ஸூரியன் உதிக்கையிலேயே, நந்தனுடைய வீட்டு வாசலில் கோகுல வாசிகள் கூடினர். ரதத்தைப் பார்த்து யார் என்று விசாரிக்க வந்தனர். அக்ரூரர் வந்தார், கம்சனுடைய தூதாக. மதுரா புரிக்கு க்ருஷ்ணனை அழைத்து சென்று விட்டார். இவர் எதற்கு வந்திருக்கிறார் ? பெண்கள் ஆவலுடனும், நிராசையுடனும் பேசிக் கொள்வதும் உத்தவர் காதில் விழுந்தது. அவரும் எழுந்து நித்ய காரியங்களை செய்யலானார்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தம், முதல் பகுதியில், நந்த சோகாபநயனம் என்ற நாற்பத்தாறாவது அத்யாய ஸ்லோகங்கள்- 49
அத்யாயம்-47
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஸ்ரீ க்ருஷ்ணனின் நெருங்கிய நண்பன் என்றறிந்து கோகுலத்து பெண்கள் வந்து உத்தவரை வணங்கினர். அவரும் நீண்ட கைகளும், புது மலர் போல மலர்ந்த கண்களும், பீதாம்பரமும், நெருக்கி தொடுத்த பூமாலையும், மென் முறுவலோடு கூடிய தாமரை போன்ற முகமும் அவர்களுக்கு ஸ்ரீ க்ருஷ்ணனையே நினைவூட்டியது. மென்முறுவலோடு அவரை தங்களுக்குள் விமரிசித்தனர். யார் இது? எங்கிருந்து வந்திருக்கிறார்? அச்யுதன் போலவே வேஷ பூஷணங்கள். நம்மைப் போலவே உத்தம ஸ்லோகனான ஸ்ரீ க்ருஷ்ண பக்தன் போலும் என்று சுற்றி சூழ்ந்து நின்றனர். ஸ்னேகத்துடன் வணங்கி, மென்மையான வார்த்தைகளால், அவர் ஆசனத்தில் அமர்ந்த பின் என்ன சந்தேசம், தூது என்று விசாரித்தனர்.
பெரியவரே! யது பதியின் நெருங்கிய சகா என்ற வரை எங்களுக்கு தெரிகிறது. யாரோ அனுப்பி வந்திருப்பதாகச் சொன்னார்கள். தாயாதியா? உங்கள் பெற்றோர்கள் அனுப்பி வந்தீர்களா? ஏதோ நல்ல செய்தியா? அப்படி இல்லையெனில், கோகுலத்தில் அவர் நலமா என்று விசாரிக்க வந்தீர்களா? மனதில் அன்பு கொண்ட உறவினர்கள் எங்கு இருந்தாலும் போய் பார்ப்பது தானே வழக்கம்? முனிவர்களுக்கு கூட அப்படி நெருங்கிய பந்துக்களை விட முடியாதே. பொருள் சம்பந்தமான ஸ்னேகம், செல்வத்தின் வரவும், செலவும், அதன் இருப்பையும் அடிப்படையாக கொண்டு இருக்கும். புருஷர்கள் பெண்களிடம் கொள்ளும் ஸ்னேகம், எது வரை பூக்களை வண்டுகள் நாடுகிறதோ அதே அளவு தான் நிலைக்கும். செல்வமில்லாதவனை கணிகா ஸ்த்ரீகள் தியாகம் செய்வர். ப்ரஜைகள் திறமையற்ற அரசனை தியாகம் செய்வார்கள், கல்வி கற்று தேர்ந்தபின் ஆசார்யர்களை கூட விட்டுப் பிரிவதுண்டு. ருத்விக்குகள் யாகம் முடிந்து தக்ஷிணை பெற்ற பின் அந்த யாகம் செய்தவரை மறக்கலாம். பறவைகள் பழம் இல்லாத மரங்களையும், அதிதியாக வந்தவன் உபசாரம் செய்த குடும்பஸ்தனை மறந்து போவான். காட்டுத் தீ அழித்த வனத்தை விலங்குகள் தானாக விட்டு விலகும். ஜாரபுருஷன் ஏதோ ஒரு பெண்னை அனுபவித்தபின் துறந்து விடுவான். இவ்வாறு கோகுலத்து ஸ்த்ரீகள் ஸ்ரீ க்ருஷ்ணனை மறக்க முடியாத தங்கள் மன நிலையை அவன் தூதனாக வந்த உத்தவரிடம் உலகியல் வழக்கம் அன்னிய ஆடவரிடம் பெண்கள் மனம் திறந்து பேசுவதில்லை என்ற வழக்கத்தையும் மீறி தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்தினர். திரும்ப திரும்ப ஸ்ரீ க்ருஷ்ணனுடன் கழித்த பால்ய கால நினைவுகளை சொல்லியும், பாடியும் சிலர் அழுதும், தயக்கமில்லாமல் உத்தவரிடம் பேசினர்.
வெட்கத்துடன் நேரடியாக பார்க்காமல், ஹே மதுப! எதிரில் பறந்த வண்டை அழைத்து அதனுடன் பேசுவது போல,
வண்டே, நீயும் தான் சொன்ன சொல்லை மறப்பவர்களின் பந்து. எங்கள் சபத்னிகளிடம் போய் விடாதே, அவர்களைத் தொட்டு விடாதே. மது பதி- மதுரா நகர பதியாகி விட்டவன், அந்த நகர பெண்களிடம் சரசமாக விளையாடிக் கொண்டிருப்பான். யது சதசில் என்ன இடையூறு, இங்கு தூது அனுப்பியிருக்கிறான், என்று நீயும் மெனக்கெட்டு இங்கு எங்களிடம் வந்திருக்கிறாய்? அவனும் உன்னைப் போலத்தான். பூவின் மதுவை ஒரு நிமிஷம் உறிஞ்சி ருசி கண்டு விட்டு, அடுத்த பூவிடம் போவாய். எங்களை அப்படித்தான் தியாகம் பண்ணிவிட்டு நகரம் போய் விட்டான். பத்மா, லக்ஷ்மி தேவி எப்படி இன்னமும் அவன் பாதங்களை வணங்கி பரிசாரகம் செய்கிறாள்? அவளும் அந்த உத்தம ஸ்லோகன் பேச்சில் மயங்கியிருப்பாள், பின் அவன் நடத்தையறிந்து மனம் உடைந்து தான் போயிருப்பாள்.
ஆறு கால்கள் உடையவனே! என்ன பாடுகிறாய்? யது குல பதி இங்கு இல்லாத சமயம் அவனைப் பற்றி எங்களிடமே கதை விடுகிறாய்? வெற்றி பெற்று உங்கள் ஊரில் இருக்கிறானே, அங்கு போய் அவனை புகழ்ந்து பாடு. அவர்கள் தான் இப்பொழுது அவனுக்கு பிரியமானவர்கள்.
தேவ லோகத்து பெண்கள், பூமியில் உள்ளவர்கள் இவர்களில் அவனுக்கு யார் தான் அடைய முடியாதவர்கள்? அவனுடைய கபடமும், அழகிய சிரிப்பும், புருவத்தால் காட்டும் எண்ணற்ற ஜாலங்களும், கண்ட பெண்கள் யார் தான் காலடியில் விழத் தயாராக மாட்டார்கள். அவர்களுக்கு முன் நாங்கள் எம்மாத்திரம். உத்தம ஸ்லோகன் என்ற சப்தமே எங்களுக்கு பெரிய விஷயம். க்ருபண பக்ஷே! ?(வண்டு- மிக சிறிய இறக்கை உள்ளது என்று பதார்த்தம்)
முகுந்தனின் தூதன் என்று வந்து விட்டாய். அவனுக்கு தெரியாதா சமாதான வார்த்தைகளைச் சொல்ல. சாமர்த்யமாக மனதை மாற்ற பேசத் தெரிந்தவன். எங்கள் தியாகம் அவனுக்குத் தெரியுமா? பெற்ற பிள்ளைகள், கணவன், மற்ற உறவினர்கள் அனைவரையும் பகைத்துக் கொண்டு அவனை நம்பினோம். சற்றும் மனதில் ஈரம் இன்றி எங்களை விட்டுப் போனவன் என்ன தூது சொல்லி அனுப்பியிருக்கிறான்.
வாலி வதம், ஸூர்பனகாவை விரூபமாக்கியது பலியை வாமனனாக வந்து பலி கடாவாக்கி, மூவுலகையும் அளந்தது, இவைகளை குறிப்பிட்டு போதும் அவன் கதைகள், அவனுடன் எங்கள் நட்பையும் தனக்கு சாதகமாகவே பயன் படுத்திக் கொண்டான் என்றனர். நாங்கள் அவன் சொல்வதை உண்மை என்றே நம்பினோம். ஸ்ரத்தையுடன் கேட்டோம். அவன் கட்டளைகளை சிரமேற் கொண்டோம்.
க்ருஷ்ணனின் வதுக்களாக, கரும் பெண் மான் போல பின் தொடர்ந்தோம். அடிக்கடி அவனை பார்த்துக் கொண்டிருந்தோம், அவன் நகத்தின் ஸ்பர்சம் பட்டாலே, மகிழ்ந்தோம், உப மந்திரியே! வேறு ஏதாவது விஷயம் இருந்தால் சொல்லுங்கள். பிரியமான சகாவே! எங்கள் மனம் கவர்ந்தவன், எங்களைப் பார்க்கவா அனுப்பினான்? ஏ வண்டே! சொல். உன்னை நாங்கள் கௌரவமாகவே நினைக்கிறோம். ஏன் தயங்குகிறாய்? எங்களை அவனிடம் அழைத்து போகவா வந்தாய்? சௌம்ய! அவன் மார்பில் தான் அவன் மனைவி ஸ்ரீ லக்ஷ்மி சதா இருக்கிறாளே. அவளும் அவனிடம் ப்ரேமையுடையவளே.
அது சரி, இதை சொல். மதுரா நகரத்தில் எங்கள் ஆர்யபுத்ரன் எப்படி வசிக்கிறான். இந்த பெற்றோர்களுடன் இருந்ததை நினைக்கிறானா? சௌம்ய, கோகுல வாசிகள் அவனுக்கு பந்துக்கள் என்று நினைக்கிறானா? அவன் பின்னால் ஏவியதை செய்து கொண்டு சென்றோமே, எங்களை எண்ணி பார்க்கிறானா? அவன் சந்தனமும், அகருவும் பூசியதால் வாசனையில் திளைக்கும் புஜங்களை எங்கள் தலை மேல் எப்பொழுதாவது வைப்பானா?
ஸ்ரீ சுகர் சொன்னார்: உத்தவர் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் எதிர் பார்க்கவேயில்லை, இந்த கோகுல பெண்கள் இந்த அளவு ஸ்ரீ க்ருஷ்ணனிடம் ப்ரேமை கொண்டிருப்பர்கள் என்றோ, அதே நினைவாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்பதையும். நேரில் கண்டபின் அவரும் பிரியமாகவே பேசி அவர்களை சமாதானப் படுத்த முனைந்தார்.
உத்தவர்: அஹோ! நீங்கள் மிகுந்த பாக்யம் செய்தவர்கள். உங்கள் ஜன்ம சாபல்யம் – வாழ்க்கையே பூர்ணமாக ஆயிற்று. இனி எதுவுமே தேவையில்லை என்பது போல அனுக்ரஹம் பெற்றுள்ளீர்கள். உலகமே உங்களை பூஜிக்கும். பகவான் வாசுதேவனிடத்தில் மனதை அர்ப்பித்து இந்த அளவு பக்தியுடன் இருக்கிறீர்கள்.
தான, விரதம், தவம் ஹோமம், ஜபம், ஸ்வாத்யாயம், தன்னடக்கம், போன்றவை பல நன்மைகளைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. இவையனைத்தையும் ஸ்ரீ க்ருஷ்ணனிடத்தில் பக்தி சாதித்து விடும். பகவான் உத்தம ஸ்லோகன் என்றால் நீங்கள் அதை விட அதிகம், அனுத்தமர்கள், தன்னலமே இல்லாத பக்தர்கள். இந்த அளவு பக்தி முனிவர்களிடம் கூட துர்லபமானதே. உங்கள் பாக்கியம், பெற்ற பிள்ளைகள், கணவன், தங்கள் உடலில் அபிமானம், தன் மக்கள், வீடு வாசல்கள், அவையனைத்தையும் துச்சமாக நினைத்து நீங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் என்ற பரம புருஷனிடம் சர்வாத்ம பாவம்- அனைத்தும் அவனே என்ற உணர்வை அடைந்துள்ளீர்கள். அதோக்ஷஜனிடம் நீங்கள் காட்டும் பரிவு, அவன் எதிரில் இல்லாத பொழுதும் அதே அளவு பக்தியுடைய நீங்கள் அவன் பிரிவால் வாடுவது என் மனதை தொடுகிறது. இந்த பக்தியைக் கண்டு நான் பெரும் பேறு பெற்றவனானேன். என்ன சொன்னான் என்பதை கேளுங்கள். பிரியமான சந்தேசம்-செய்தி. உங்களுக்கு மன அமைதி தரும். நான் அவன் நெருங்கிய நண்பன். அவனுடைய அணுக்கத் தொண்டன். பத்ரா! மங்களமான பெண்களே! அதனால் தான் இந்த செய்தியை என்னிடம் சொல்லி, அனுப்பி இருக்கிறான். கேளுங்கள்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: உங்கள் பிரிவால் நான் அனுபவிக்கும் இந்த வேதனையை எப்பொழுதுமே அனுபவித்ததில்லை. சர்வாத்மா நான். உலகில் உயிரினங்கள் பஞ்ச பூதங்களான ஆகாயம், வாயு, அக்னி, நீர், நிலம் இவைகளால் பாதிக்கப் படுவது போலவே, நானும் இவைகளுடன் மனம், ப்ராணன், பஞ்ச பூதங்கள், இந்திரியங்கள், குணங்கள் இவைகளால் இப்பொழுது பாதிக்கப் படுகிறேன்.
என் ஆத்மாவிலிருந்தே ஆத்மாக்களை ஸ்ருஷ்டி செய்கிறேன், காக்கிறேன், பின் அழிக்கிறேன். என் மாயையின் பலத்தால், பஞ்ச பூதங்கள் இந்திரிய , குணங்கள் இவைகளின் சேர்க்கையால் செய்கிறேன்..
ஆத்மா ஞானமயமானது. சுத்தமானது. இதில் எதிர் விளைவாக குணமற்றதாக உள்ளவை. சுஷுப்தி என்ற தூக்கம் கலைந்து விழிக்காமல் இருக்கும் நிலை, கனவு, விழிப்பு இவைகளும் என் மாயையால் தான் தோன்றுகின்றன. தூங்கி விழித்தவுடன் கண்டது கனவு என்று எப்படி மறந்து விடுகிறீர்களோ, அதே போல தூங்காமல் விழிந்திருக்கும் பொழுதும் எது உண்மை எது தோற்றம் என்பதை ஞானிகள் உணர்ந்து கொள்கிறார்கள். இது தான் முடிவான அறிதல். யோகிகள், ஞானிகள், இந்த முடிவை உணர்வது தான் சாங்க்யம் எனும் சாஸ்திரம். தியாகம், தவம், தன்னடக்கம், சத்யம், இவை நதிகள் சமுத்திரத்தை அடைவது போல, சாதகர்கள் வழிகள் வேறானாலும் முடிவில் கண்டறிவது இந்த ஞானமே.
உங்களிடமிருந்து நான் வெகு தூரத்தில் வசிக்கிறேன் என்பதும், கண் எதிரில் இல்லை என்றாலும், மனதின் அருகிலேயே இருக்கிறேன். என்னைக் காண என்னை த்யானம் செய்தாலே போதுமானது, நான் மிக அருகிலேயே உங்கள் உள்ளத்தில் உறைகிறேன் என்பதை உணர்வீர்கள். உங்கள் கணவன்மார், வெளியூர் சென்றால், அதே நினைவாக நீங்கள் இருப்பது போலவே, அருகில், கண்ணெதிரில் இருந்தால் தான் நினைவில் நிற்கும் என்பது பெண்களுக்கு தேவையில்லை.
என்னிடத்தில் மனதை முழுமையாகச் செலுத்தி விட்ட பின் மற்ற விஷயங்கள் ஒரு பொருட்டாக நினையாமல், இருக்கும் நீங்கள் சீக்கிரமே என்னை அடைவீர்கள். வ்ரஜ தேசத்தில் நான் உங்களுடன் இரவுகளில் விளையாடி களித்ததும், கிடைக்க முடியாத ராஸ அனுபவமும், கல்யாணிகளே! இதற்கு முன் எனது வீர்யத்தால் கிடைத்ததில்லை.
ஸ்ரீ சுகர் சொன்னார்: வ்ரஜ தேசத்துப் பெண்கள், தங்கள் மனதுக்குகந்தவன் பிரியமானவன் சொன்ன சொல்லை உத்தவர் சொல்லக் கேட்டு, மிகவும் மகிழ்ந்தனர். தூது செய்தியைக் கொண்டு வந்த உத்தவரிடம் நம்பிக்கையுடன் பேசலாயினர்.
கோகுல பெண்கள்: நல்ல வேளை கம்சன் அழிந்தான். யது குலத்தினரை தன் சகோதரனுடன் வறுத்து எடுத்தான். நல்ல காலமாக, தன் ஆப்தர்களுடன், செல்வங்கள் திரும்பப் பெற்று அச்யுதன் நலமாக இருக்கிறான். சௌம்ய! கதாக்ரஜன்- பலராமன் நலமா? அவனும் நகர மாதர்களுடன் சந்தோஷமாக பொழுதை கழிக்கிறானா? வெட்கத்துடன் நாங்கள் அவன் சிரிப்பதை ஏறிட்டுப் பார்ப்போம். வேடிக்கையாக பேசுவதை ரசிப்போம். பெண்களை பேச்சினால் கவரத் தெரிந்தவன் அந்த பெண்களுக்கும் பிரியமானவனாகவே இருப்பான். யார் தான் அவன் பேச்சில் மயங்க மாட்டார்கள்.
சாதோ! எங்களை நினைக்கிறானா? நீங்கள் கிளம்பும்பொழுது எங்கு இருந்தார். நகரத்து பெண்கள் நாகரீகமாக இருப்பார்கள். அவர்கள் நடுவில் எங்களைப் பற்றி என்ன சொல்வான். கிராமத்து எளிய பெண்கள் என்பானா?
எங்களுடன் வ்ருந்தாவனத்தில் மல்லியும், குமுதமும் மணக்க, நிலவும் ரம்யமாக இருக்க செலவழித்த நாட்களை அவன் மறக்காமல் இருக்கிறானா? எங்களுடன் நூபுரங்கள் ஒலிக்க ஆடிய நடனங்கள், கோஷ்டியாக நாங்கள் கதைகள் பேசிக் கொண்டு நடந்தது பற்றி, ஒரு சமயம் இல்லாவிட்டால் ஒரு சமயம் சொல்வானா?
வருவானா? ஆனால் எப்படி வருவான். இப்பொழுது ராஜ்யம் கிடைத்து, எதிரிகளை வென்று, ஏதோ ஒரு ராஜ குமாரியை மணந்து, நண்பர்கள் சூழ இருப்பான். லக்ஷ்மீ கடாக்ஷம் பெற்றவன், அவனுக்கு என்ன குறை, வேண்டியதை வேண்டியபடி கிடைக்கப் பெற்றவன், எங்களைப் போன்ற காட்டு வாசிகளுடன் என்ன செய்வான்? இவ்வளவும் தெரிந்தும் எங்கள் நிராசை இப்படி கேட்க வைக்கிறது. க்ருஷ்ணனை அறிவோம். ஆயினும் ஆசைக்கு அளவு ஏது? நாங்கள் அவனுடன் நிறைய இந்த நதிக் கரைகளில், மலைச் சரிவுகளில், காடுகளில் பசுக்களை மேய்த்துக் கொண்டு போகும் பொழுதும், வேணு கானம் கேட்டும் சங்கர்ஷணன் உடன் வர அலைந்து திரிந்திருக்கிறோம். எனவே, அந்த இடங்களை பார்த்தாலே திரும்பத் திரும்ப அந்த நினைவுகள் எங்களை சூழ்ந்து நிற்கின்றன. மதுரமான குரலில் பேசி எங்கள் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டவன், எப்படி மறப்போம். ஹே நாத! ஹே ரமா நாத! வ்ரஜ ஜனங்களின் துயரை நீக்கியவனே, கோவிந்தா எங்களை காப்பாற்று.
ஸ்ரீ சுகர் சொன்னார்: உத்தவர் மூலம் பகவான் சொல்லி அனுப்பிய சந்தேசம் அவர்களை தன் நிலைக்கு கொண்டு வந்தது. உத்தவரை உபசாரம் செய்தனர். அதோக்ஷஜனின் ஆத்மா போன்றவர் என எண்ணி வணங்கினர். அவரும் சில மாதங்கள் அங்கேயே தங்கி, தன் நித்ய நியமங்களை முடித்துக் கொண்டு அவர்களுக்கு பகவத் கதைகளைச் சொல்லி கோகுலத்தில் பழைய உத்சாகம் வரச் செய்தார். அவர் இருந்தவரை வ்ரஜ தேச வாசிகளுக்கு நேரம் போனதே தெரியவில்லை. க்ருஷ்ணனைப் பற்றியே பேசினார் என்பதால் ஈடுபாட்டுடன் கேட்டனர். பழையபடி மரங்களில் பூக்கள் மலர்ந்தன, நதிகள், வனம், மலை சிகரங்கள், இவை க்ருஷ்ணனையே நினைவுறுத்தியதால், அவற்றுடன் ஸ்னேகமாகவே இருந்தனர்.
அவர்கள் தங்கள் இயல்புக்கு திரும்பும் வரை உத்தவர் அவர்களிடம் வணக்கத்துடன் சொன்னார்.’ கோகுல பெண்களே! இது தான் உலகியல். கோவிந்தன் ஒருவனே அனைத்து உயிர்களிலும் ஊடுறுவி இருக்கிறான். சம்சார பந்தம் நீங்க வேண்டும் என்று பிரார்த்திப்பவர்கள், முனிவர்கள், நாங்கள், அது மட்டுமா, ப்ரும்மா முதல் சகலரும் அனந்தனின் கதையை விரும்பி கேட்பவர்களே.
வனங்களில் வசிக்கும் எளிய வாழ்க்கை முறைகளைக் கொண்ட நீங்கள், பரமாத்மா என்று அறியாமலே ஸ்ரீ க்ருஷ்ணனிடம் ஆழ்ந்த அன்பை வைத்தீர்கள். ஈஸ்வரனை நம்ப வித்வானாக இருக்கத் தேவையில்லை. அவர்களும் நன்மையே பெறுவார்கள். மருந்தை அறியாமல் உண்டாலும், வியாதி தீருவது போல.
இது போல அண்மையும், ப்ரேமையும், ஸ்ரீ லக்ஷ்மி தேவி, தேவ லோகத்து பெண்கள், மற்ற உயர் குல பெண்கள் அனைவரும், ராஸ உத்சவத்தில், தோளோடு தோள் கோர்த்துக் கொண்டு உங்களை அசீர்வதித்தது போல, ஸ்ரீ க்ருஷ்ணனின் அருள் கிடைத்ததை வியந்து பாடுகிறார்கள். என்னே வ்ரஜ வல்லவிகளின் பாக்யம் என்று பேசிக் கொள்கிறார்கள்
கோகுல பெண்களின் கால் தூசியாக ஆக மாட்டோமா, வ்ருந்தாவனத்தில் ஏதோ ஒரு புதராகவோ, கொடியாகவோ, ஏதோ ஒரு தாவரமாகவோ இருக்க மாட்டோமா, வ்ருந்தாவனத்து அசையும் அசையாத அனைத்தும் முகுந்தனின் ஸ்பரிசம் பெற பாக்யம் செய்தவைகளே. இது யாருக்கு கிடைக்கும்? தன் ஜனங்கள், உயர் குலத்து நடைமுறை வழக்கங்கள் அனைத்தையும் ஒன்றுமில்லாத ஒன்றாக ஆக்கி, வேதங்கள் தேடும் பாத மலரை அவர்கள் அடைந்திருக்கிறார்களே.
அஜன் என்ற ப்ரும்மா முதல் அர்ச்சித்த பாதங்கள், தங்கள் விருப்பங்கள் நிறைவேறிய யோகீஸ்வரர்கள், இவர்களும் தங்கள் மனதில் ராஸ கோஷ்டியுடன் கலந்து கொண்டனர். க்ருஷ்ண பதாம்புஜத்தை தங்கள் மார்பில் தாங்கிக் கொள்ள விழைந்தனர். தாபத்தை தீர்த்துக் கொண்டனர்.
நந்தனின் இந்த புண்ய பூமியை வணங்குகிறேன். இந்த தேசத்து பெண்களின் பாத தூளியை சிரமேற் கொள்கிறேன். மூவுலகிலும் ஹரி கதை விளங்கும். இவர்களின் அன்பும் அதை புனிதமாக்கும்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: அதன் பின் அவர்களிடம், நந்தன், யசோதா இவர்களிடமும் அனுமதி பெற்று, கோகுலத்து மற்ற க்ருஷ்ண தோழர்களையும் அழைத்து விடை பெற்றுக் கொண்டு தாசார்ஹரான உத்தவர், ரதத்தில் ஏறினார். அவர் கிளம்பியதையறிந்து அனைவரும் பலவிதமான பரிசுப் பொருட்களை கொண்டு வந்து சில நாட்களிலேயே அன்யோன்யமாகி விட்டவரை, கண்ணீர் பெருக வழியனுப்பினர்.
அவர்களிடம் உத்தவர், ஸ்ரீ க்ருஷ்ணனை ஆஸ்ரயித்தவர்க்கு வேறு மன சிந்தனையோ, செயலோ இராது. புது வார்த்தைகள் பெயர் சொல்லி அழைக்க மட்டுமே, சரீரம் அவனை வணங்க மட்டுமே இருக்கும் என்றார்.
கர்ம மார்கத்தில் தீவிரமாக ஈடு பட்டவர்களும், எதோ ஒரு சமயம் ஈஸ்வரனின் விருப்பத்தால், மங்களமான காரியங்களை செய்தும், தானங்கள் கொடுத்தும் அதுவே எல்லாம் என்று இருப்பவர்களுக்கும் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் அன்பு தானாக வந்து சேரும். அரசனே! இப்படி பரஸ்பரம் பேசிக் கொண்டு க்ருஷ்ண பக்தியே ப்ரதானமாக இருக்க, உத்தவர் மதுரா வந்து சேர்ந்தார். இப்பொழுது ஸ்ரீ க்ருஷ்ணரால் ஆளப் படும் மதுரா நகரம்
க்ருஷ்ணனிடம் வந்து கோகுலத்தில் தான் கண்டதை உணர்ச்சி பொங்க விவரித்தார், வசு தேவருக்கும், பலராமனுக்கும், அரசனுக்கும் பரிசுப் பொருட்களைக் கொடுத்தார்,
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், உத்தவ ப்ரதியானம் என்ற நாற்பத்து ஏழாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்- 69
அத்யாயம்-48
ஸ்ரீ சுகர் சொன்ணார்: பகவான் சைரந்த்ரி என்ற கூனிக்கு அருள் புரிந்து அவளை நேராக்கிய சமயம் அவள் வேண்டினாளே என்பதை நினைவு கூர்ந்து அவள் வீடு சென்றார். அனைத்தையும் காண்பவர், தானே சர்வாத்மாவானவர்.
அவள் வீடு மிக அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. விலையுயர்ந்த பொருட்கள் மனதை கவரும் வண்ணம் வைக்கப் பட்டிருந்தன. முத்துக்கள் ஒளி வீச, கொடிகள் பறக்க, அமரவும், படுக்கவும் ஆசனங்கள் போடப் பட்டிருந்தன. மணம் வீசும் தூபங்களும், ஒளி வீசும் தீபங்களும், வாசனை மிகுந்த பூக்களால் மாலைகள் அலங்கரிக்க, அந்த வீட்டை சற்று தூரத்திலிருந்தே காண முடிந்தது.
அவர் வருவதை பார்த்து சைரந்த்ரி, தன் ஆசனத்திலிருந்து இறங்கி வந்து பர பரப்புடன் வரவேற்றாள். சகிகளிடம் அறிமுகப் படுத்தி, அழகிய ஆசனத்தில் அமரச் செய்தாள். உத்தவர் தரையில் அமர்வதையே விரும்பினார். க்ருஷ்ணன் மட்டும் உள் வரை சென்று வீட்டின் பிற பாகங்களைப் பார்த்தார். சைரந்திரி தன் தொழிலான வாசனை பொருட்களை அவருக்கும் பூசி விட்டு, சுகந்தமான தாம்பூலங்களைக் கொடுத்து உபசரித்தாள். அவளுடைய படுக்கையில் அமர்ந்தவர், அவள் விரும்பியபடி அணைத்து மகிழ்ந்தார். அவளோ, சில நாட்கள் அந்த வீட்டில் தங்கி இருக்கச் சொன்னாள். பிரியவே மனமில்லை, என்றாள். ஆனால், அவள் விரும்பியபடி காம வரம் கொடுத்து, அவளுடன் உறவு கொண்டு விட்டு, உத்தவருடன் தன் இருப்பிடம் சென்றார்.
சாதாரண பெண்மணி, சர்வேஸ்வரனான விஷ்ணு என்பதையறியாமலே, அன்புடன் உபசாரங்கள் செய்தவள். இருந்தும் அவள் விருப்பத்தையும் பூர்த்தி செய்தார் பகவான். அதன் பின் அக்ரூரர் இருப்பிடம் சென்றனர். பலராமனும் உத்தவரும் கூடவே வந்தனர். அவர்களை பார்த்து அக்ரூரர், மனிதருள் மாணிக்கமான அவர்கள் தன் இருப்பிடம் தேடி வந்ததால் மகிழ்ச்சியில் திக்கு முக்காடினார். பந்துக்கள் தான் என்றாலும் இப்பொழுது அரசன். எழுந்து வந்து, அணைத்து வரவேற்றார். க்ருஷ்ணனையும், பல ராமனையும் வணங்கினார். அவர்களும் திரும்பி வணங்கினர். ஆசனங்கள் அளித்து, நியமம் தவறாமல் அதிதி பூஜைகளைச் செய்தார். அவர்கள் பாதங்களில் நீர் விட்டு அதை தலையில் தெளித்துக் கொண்டார். பாதங்களை கைகளால் துடைத்து, வணக்கத்துடன் அவர்களிடம் குசலம் விசாரித்தார்.
நல்லவேளை கம்சன் அழிந்தான். அவன் சகோதரனும் உடன் அழிந்தான். நம் குலம் பிழைத்தது. நீங்கள் இருவரும் வேகமாக செயல்பட்டு இந்த அவசியமான, சிரம சாத்யமான செயலைச் செய்து விட்டீர்கள். நீங்கள் இருவரும் புராண புருஷர்கள். உலகம் தோன்றவே காரணமானவர்கள், ஜகமே நீங்கள் தான், உங்களுக்கு சம மாகவோ, மேலாகவோ எவரும் இல்லை. தானே தோற்றுவித்த உலகில் தன் சக்தியால் நாலாபுறமும் சூழ்ந்து நின்று காப்பது போல காப்பவர்கள். வேதங்கள் தேடும் மெய்ப் பொருள், கண்ணெதிரில் நிற்கிறீர்கள். என்னை படைத்தவரும், உலகில் பலவிதமான உயிரினங்களை படைத்தவரும் தாங்களே என்றும் அதனால் ஆத்மயோனி என்று சொல்லப் படுபவர் நீங்கள் ஒருவரே, ஒவ்வொரு ஜீவனிலும் அதே போல ஆத்மாவாக இருப்பவர். ஸ்ருஷ்டி செய்து, காத்து அதன் பின் மறைத்து உலகின் சுழற்சியை நிலை நிறுத்துகிறீர்கள் என்றும் அறிவேன். முக்குணங்கள் ஞானாத்மாவான தங்களை பாதிப்பதில்லை. இச்செயல்களால் உங்களுக்கு கட்டும் இல்லை அதிலிருந்து விடுபடுதல் என்பதும் இல்லை. உலக நன்மைக்காக வேதங்கள், சாஸ்திரங்கள் உங்களிடமே தோன்றின. நம்பாதவர்கள் பாதிக்கப் படட்டும். என்றுமே சத்வமே உங்கள் குணம்.
ப்ரபோ! தற்சமயம் வசுதேவரின் குலத்தில் தோன்றியுள்ளீர்கள். பூமியின் பாரத்தை குறைப்பதற்காக நூறு அக்ஷௌஹிணி ஜனங்களை வதம் செய்து தேவ எதிரிகளை அழித்து, நம் குலத்தை காப்பாற்றுவதே உங்கள் சங்கல்பம். ஜகத் குரு! நம் குலம் பாவனமடைந்தது. எங்கள் வாழ்வில் நிம்மதியும், சர்வ, தேவ, பித்ரு காரியங்களைச் செய்வோம். உங்கள் பாதங்களில் பட்ட நீரே மூவுலகையும் புனிதமாக்கும் என்பதை அறிவோம். அதோக்ஷஜா! உங்களையன்றி வேறு எவரை சரணடைவோம். பக்த பிரியன், தன்னை நம்பியவர்களுக்கு நன்மையை அளிப்பவன், நட்புடன் எங்களிடம் இருந்து காக்க வேண்டும். ஜனார்த்னா! எங்கள் நல்ல காலம், இங்கு வந்து எங்களை கௌரவித்துள்ளீர்கள். தேவர்களுக்கு கூட கிடைக்காத யோகேஸ்வரன உங்கள் தர்சனம். என் புத்ர பௌத்ராதிகளோடு என் குலத்தை வாழ்த்துங்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: பகவான் இதைக் கேட்டு மெல்ல சிரித்தபடி, அக்ரூரரே, நீங்கள் எங்கள் உறவினர். நாங்கள் உங்களை பாதுகாக்கவும், போஷிக்கவும் கடமைப் பட்டவர்களே. அரசர்கள் உங்களைப் போன்ற திறமைசாலிகளை ஆதரிக்க வேண்டியது அவசியம். தீர்த்தங்களோ, தேவாலய மூர்த்திகளோ, தரும் நன்மைகளை விட சாதுக்களின் தரிசனம் மேலானது. எங்கள் நலம் விரும்பும் நண்பனாக இப்பொழுது கஜாஹ்வயம் என்ற இடத்தில் இருக்கும் பாண்டவர்களை சந்தித்து விவரங்களை அறிந்து கொள்ளுங்கள். தந்தை இறந்த பின் குழந்தைகள் சிறுவர்களோடு, தாயுடன் இருக்கிறார்கள். அரசன் அவர்களை நகரத்துக்குள் அழைத்து வந்து விட்டதாக கேள்வி. தம்பி குழந்தைகள் என்று அரசனோ, அவனைச் சார்ந்தவர்களோ பார பக்ஷத்துடன் இருக்கலாம். அம்பிகா புத்ரன்- த்ருதராஷ்டிரன், தானாக இல்லாவிட்டாலும் அவன் மகன் துஷ்டன். அவன் ஆட்டுவிக்கிறான். கண் தெரியாதவன் என்ன செய்வான்? அங்கு போய் தற்கால நிலவரங்களைத் தெரிந்து கொண்டு வாருங்கள். நல்லதோ, கெடுதலோ, தெரிந்த பின் நம்மால் என்ன செய்ய முடியும் என்று ஆலோசிப்போம். இவ்வாறு அக்ரூரரை ஆணையிட்டு அனுப்பி விட்டு, ஸ்ரீ ஹரி, உத்தவருடனும், சங்கர்ஷணுடனும் தன் பவனம் வந்து சேர்ந்தார்.
(இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், நாற்பத்தெட்டாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்- 36
அத்யாயம்-49
அக்ரூரரும் அஸ்தின புரம் சென்றார். பீஷ்மர், விதுரருடன் இருந்த அரசன் அம்பிகாபுத்ரனைக் கண்டார். பின் குந்தியையும் சந்தித்தார். மகனுடன் இருந்த பால்ஹீகரையும், பாரத்வஜரான த்ரோணர், கௌதமர் க்ருபர், கர்ணன், சுயோதனன், த்ரோண புத்ரன் அஸ்வத்தாமா, பாண்டவர்கள் மற்றும் பலரையும் சந்தித்தார்.
காந்தீனீசுதன் – அக்ரூரர், பந்துக்கள் அனைவரையும் நலம் விசாரித்தார், அவர்களும் மதுராபுரியில் உள்ளவர்களைப் பற்றி விசாரித்து நடந்தவைகளைத் தெரிந்து கொண்டனர். சில மாதங்கள் அரசு விருந்தாளியாக இருந்தார். குணமில்லாத மகனால் அரசனின் சுயமாக செயலாற்ற முடியாத நிலையை புரிந்து கொண்டார். அவர்களும் துர் குணனான ஒருவரின் ஆதிக்கத்தில் இருந்தனர்.
அரசனிடம் ப்ரஜைகள் எதிர்பார்ப்பது தேஜஸ், ஆற்றல், பலம், வீர்யம், அரவணத்துச் செல்லும் குணம் ப்ரஜைகளிடம் அன்பு, இவைகளே. இவை அரசன் த்ருதராஷ்டிரனிடம் இருந்தன. ஆனால் மகன் சுயோதனன் முதலானோர் விஷம் கொடுத்தது போன்ற செயல்களை, குந்தியும், விதுரரும் அவரிடம் சொன்னார்கள். குந்தி, சகோதரனான அக்ரூரரை, கண்களின் கண்ணீர் வழிய, தன் பிறந்த வீட்டினரின் நலன்களை விசாரித்தாள்.
சௌம்யனே! என் சகோதரர்களும், தந்தையும் என்னை நினைக்கிறார்களா? சகோதரிகள், சகோதரனின் புதல்வர்கள், நம் குல பெண்களை மணந்தவர்கள், சகிகள் என்று ஒவ்வொருவராக பெயர் சொல்லி நலம் விசாரித்தாள். என் சகோதர்களுக்குள் க்ருஷ்ணன் என்னிடம் அதிக அன்புடையவன். சர்வ லோக சரண்யனான பகவான் பக்த வத்சலன் என்று அறிகிறேன். பலராமனும் அதே போல விசாலமான கண்களுடையவன், பலசாலி என்னை நினைக்கிறார்களா? நான் அவர்களுக்கு தந்தை வழி உறவினள். அத்தை மகள்.
என் நிலையைப் பார். சக்களத்தி மத்தியில், ஓநாய்களிடம் அகப்பட்ட பெண் மான் போல இருக்கிறேன். தந்தையை இழந்த என் புதல்வர்கள் தான் என்னை சமாதானப் படுத்துகிறார்கள். திடுமென அழ ஆரம்பித்தாள். க்ருஷ்ண, க்ருஷ்ண, கோவிந்தா! மஹா யோகி நீ. விஸ்வாத்மன், விஸ்வமே நீதான். உன்னை சரணடைகிறேன். என்னை காப்பாற்று என்றாள். என் குழந்தைகளோடு நான் தவிக்கிறேன். உன்னைத்தவிர, எனக்கு புகலிடம் வேறு இல்லை. சாதாரண மனிதர்களும், மரண பயத்திலிருந்து விடுபட, இகத்திலும் பரத்திலும் நன்மை பெற உன்னை சரணடைவதையே செய்கிறார்கள்.
நம: க்ருஷ்ணாய சுத்தாய, ப்ரும்மணே, பரமாத்மனே, யோகேஸ்வராய, யோகாய, உன்னையே சரணம் அடைகிறேன்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ராஜன்! உங்களுடைய ப்ரபிதாமஹி, தந்தை வழியில் மூத்தவள், மனம் உடைந்து ஜகதீஸ்வரனான க்ருஷ்ணனை நினைத்து வேண்டினாள். அக்ரூரரும், விதுரரும் அவள் அழுவதைக் கண்டு வருந்தி அனுதாபத்துடன், அழாதே, உன் புதல்வர்களால் நன்மை பெறுவாய் என்று சொல்லி சமாதானப் படுத்தினர்.
அதன் பின் அரசனைச் காணச் சென்றார்.
அக்ரூரர்: விசித்ர வீர்யனின் மகனே! குரு வம்சத்து புகழை வளர்க்க வந்தவன் நீ. பாண்டு போன பின் அவன் குடும்பத்துக்கு ஆதரவு அளித்திருக்கிறாய். தர்ம வழியில் பூமியை ஆண்டு வருகிறாய். ப்ரஜைகள் நல்ல சீலத்துடன் உன் ஆட்சியில் நிம்மதியாக உள்ளனர். உன் உறவினர்களுடன் சமமாக நடந்து கொண்டு நல்ல கீர்த்தியை அடைவாய். தன்னைச் சார்ந்தவர்களை கவனியாமல் விட்டாலும் தவறாகும். அதனால் பாண்டவர்களையும், உன் புதல்வர்களையும் சமமாக நினை. அவர்களுக்கும் தந்தை ஸ்தானத்தில் இருக்கிறாய்.
உலகில் அவரவர் வினைப் பயனை அவரவரே அனுபவிக்கிறார்கள். ஒருவன் சுகப் படுவதும், மற்றவன் சிரமப் படுவதும் அவன் வினையே. தன் சரீரம், தன் மனைவி, புத்திரர்கள், என்று பக்ஷ பாதம் இருந்தாலும் ஒருவனுடைய பிறவி சுக துக்கத்தை யாரும் பகிர்ந்து கொள்ள முடியாது. ஜீவன் தனியாக பிறக்கிறது தனியாகவே மறைகிறது. செல்வத்தை சேர்த்து வைத்தாலும் தொலைந்து போகலாம். நீர் வாழ் ஜந்துக்கள், நிறைய நீரைக் குடித்தே உயிரை விடுவது போல. ராஜன்! இந்த உலகமே கனவு போலத் தான். மாயையே. ஆத்மனா ஆத்மானம்- உள்ளுணர்வால் உன்னையே அறிந்து கொண்டு சாந்தமாக இருப்பாய். ப்ரபோ! தர்ம வழியில் நிற்பாய் – அதில் இடையூறுகள் வந்தாலும் முடிவில் நன்மையே என்றார்.
த்ருதராஷ்டிரன்: தானபதே! நன்றாகச் சொன்னாய். இதை இன்னமும் கேட்கவே விழைகிறேன். அம்ருதம் கிடைத்தவன் அதில் திருப்தியடைவது இல்லை. மேலும் மேலும் பருகவே ஆசைப் படுவது போல. ஆனால், சௌம்யனே, நல்ல உபதேசங்கள் மனதில் நிலைத்து நிற்பதில்லை. தன் புத்திரர்களிடம் அபிமானம் அதைக் கலைத்து விடும். இந்த அறிவு க்ஷண நேரம் ப்ரகாசித்து மறையும் மின்னலைப் போன்றது. ஈஸ்வரனுடைய விதி, இதில் யார் என்ன மாறுதலைச் செய்ய முடியும்? யது குலத்தில் பூ பாரத்தை குறைப்பதற்காக அவதரித்திருக்கிறானே, அவன் மாயை. அதைப் பற்றி விமர்சனம் செய்ய நாம் யார்? அவனே படைத்தான், அவனே அழிக்கிறான். அவனுக்கு நமஸ்காரம். அவன் செயல்கள் நம்மால் புரிந்து கொள்ளவும் முடியாது. சம்சார சக்கரத்தை சுழற்றுபவன். பரமேஸ்வரன், அவனுக்கு நமஸ்காரம்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: யாதவரான அக்ரூரர், அரசனின் மனதை புரிந்து கொண்டார். அனைவரிடமும் விடை பெற்று திரும்ப வந்தார். பலராம, க்ருஷ்ணன் இருவரிடமும் த்ருதராஷ்டிரனின் வணக்கத்தை தெரிவித்தார். பாண்டவர்கள் பற்றியும் சொன்னார், அவர்களுக்காகத் தானே தூதுவனாக சென்றது.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், முதல் பகுதியில், நாற்பத்தொன்பதாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-31