விளையாட்டு
வாஹ்ய வாஹக ன்னு விளையாட்டு, தெரியுமா? அந்த பையன்கள் விழித்தனர். என்னன்னே புரியல்ல, என்ன பாஷை , லத்தீன் கிரீக் மாதிரி. விக்கெட் கீப்பர் என்ன பாஷை, யெல்லோ கார்டு என்ன பாஷை, பெனால்டி கார்னர் என்ன பாஷை, இதையெல்லாம் தெரிஞ்சுக்கலையா, அதைப் போல இதையும் தெரிஞ்சுக்கோங்கோ. நம்ம நாட்டு பாஷைதான் வாஹ்ய ன்னா- தூக்கப் படுவது, வாஹக: தூக்குபவன். . நீங்கல்லாம் ஓடி பிடிச்சு விளையாடறச்ச, ஓடி ஒத்தனைத் தொட்டா அவன் அவுட் என்று சொல்லுவேள். அதையே கொஞ்சம் கூட்டி தோத்தவன் ஜயிச்சவனை தன் முதுகில் தூக்கனும் ஒரு கண்டிஷன் சேத்துண்டா இந்த விளையாட்டு. இது பாகவதத்துல வரது. இரண்டு இரண்டு பேரா ஓடனும். அப்படி ஓடி ஜயிச்சவனை மத்தவன் தூக்கிண்டு போகனும்.
எவ்வளவு தூரம்?
முதலில் மூணு காலடி, அடுத்து ஐந்து, ஏழு ன்னு ஆகும். முதல்ல இரண்டு இரண்டு பேரா சேந்துண்டு ஓடணும். அந்த இருவரில் யார் அதிக தூரம் போறாளோ, அவன் ஜயித்தவன் ஆவான். மற்றவன், பின் தங்கியவன். இவன் மத்தவனை தூக்கிண்டு மூணு அடி நடந்து அவனை விட்டுட்டு, அவுட் ஆவான். இப்ப அந்த வரிசையில், முதலில் ஜயிச்சவா மட்டும் தான் இருப்பா. அவா திரும்பவும் இரண்டு இரண்டு பேரா கூட்டு சேரணும். அடுத்த கோடு ஐந்து காலடியில் இருக்கும். இதே போல தோத்தவன் ஜயித்தவனை அடுத்த கோட்டில் விட்டு விட்டு அவுட் ஆவனா, கடைசியில் இரண்டு பேர் தான் மிஞ்சும். ஏழு, ஒம்பது,பதினொன்று வரை போகலாம். அதன் பின் ஜயித்தவன் ஜயித்து விட்டான், தோற்றவன்
ரன்னர் அப் – அதே தான்.
இந்த விளையாட்டை விளையாடும் பொழுது பலராமன் லேட்டா வந்தான். கடைசி ரவுண்டு போயிண்டு இருந்தது. அப்ப தோத்தவன் ரொம்ப பலசாலி. தூக்கிண்டு ஓடியே போயிட்டான். ரொம்ப நாழி காத்திண்டு இருந்தா. மத்த பசங்க எல்லாம் கவலைப் பட்டா- பாத்தா, பலராமனைத் தூக்கினவன் தூக்க மாட்டாம பொத்துண்னு விழுந்துட்டான். அந்த ஊர்க் காரா எல்லாம் ஓடி வந்தா. அப்பாடி இவன் ஒழிஞ்சான். எங்க ஊர்ல ஒரு பழமும் எங்களுக்கு கிடைக்காம தானே எடுத்துப்பான். விரட்டுவான். இதோ இந்த பழம் ரொம்ப நன்னா இருக்கும். நீங்களும் சாப்பிட்டு பாருங்கோன்னு குழந்தைகளுக்கு கொடுத்தா.
அவர் எங்கள் பள்ளியின் விளையாட்டு டீச்சர். சில சமயம் இப்படி ஏதாவது சொல்வார். அவர் டில்லியில் இருந்த பொழுது பிட்டு ன்னு ஒரு விளையாட்டு, அப்பல்லாம் கார் அதிகம் கிடையாது. வீட்டுக்கு முன்னால் பெரிய புல்வெளி. எல்லா குழந்தைகளும் தட்டையாக உள்ள கற்களை பொறுக்கி ஒன்னு மேல ஒன்னா வச்சு அடுக்குவார்கள். இரண்டு கட்சிகள். ஒரு பந்து. இந்த கல் அடுக்கின் மேல் பந்தை வீசி விழச் செய்து விட்டு அவன் ஓடுவான். அடுத்த கட்சி பையன்கள் அதை மறுபடி அடுக்கி வைக்கனும். அதனால் அந்த பந்தை எடுத்து முடிந்த மட்டும் தள்ளி வீசுவான். கிடைத்த அவகாசத்தில் இந்த கல் அடுக்கு பழைபடி கட்டி விடுவார்கள். கட்டி முடித்த பின் பந்து அடுத்த கட்சிக்கு வரும். இதை தள்ளி நின்று தான் பார்த்திருக்காராம். ஆனால் எல்லோரும் ஓடுவதும், பந்து கையில் கிடைத்தவன் கல் குவியலை எவ்வளவு வேகமாக அடிக்க முடியுமோ அடித்து நிறைய கற்கள் விழுந்தால், அவர்களுக்கு அவகாசம் நிறைய கிடைக்கும். நேரம் போவதே தெரியாது. குறுக்கும் நெடுக்குமாக ஓடி வியர்த்து வடிய விளையாடிக் கொண்டிருப்பார்களாம். அதன் பின் கார் வந்தது. வீட்டு வாசலில் நிறுத்தியிருக்கும், பந்து வீசி தவறுதலாக அதன் மேல் பட்டால் கண்ணாடி உடையும் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக இந்த விளையாட்டு மறைந்தது.
இப்பல்லாம் ஓடி பிடிச்சு விளையாடறதே இல்ல, – ஒரு பையன் வருத்தத்துடன் சொன்னான்.
வீட்டு வாசல்லயே கார், ஸ்கூட்டர் எல்லாம் நிறுத்தி வச்சுடறா. பழைய வீடுகளில். புதுசா கட்டற இடங்களில் இப்பல்லாம் கார் நிறுத்த இடமும் வச்சு கட்டறா. ஆனாலும் பசங்க பழையபடி விளையாடறதில்ல. எல்லார் கையிலும் bat,ball அல்லது முறையா விளையாடற foot ball மாதிரி ஒரு கூட்டம், அவாளுக்குள்ளேயே விளையாடிப்பா. ஒரு பையன் இடை மறித்தான்-அதுவும் இல்லாட்டா கையில் போனை வச்சுண்டு எங்கேயோ, எந்த ஊரிலோ நடக்கிற போட்டி விளையாட்டைப் பார்த்துண்டு இருப்பா.
அப்படித்தான் அமெரிக்கா புட் பால் ன்னு ஒரு விளையாட்டு. முதல் தடவை நான் அமெரிக்கா போன போது ஏன் புட் பால்னு பெயர் -கால் பந்து விளையாட்டு- பந்தை கையிலேயே வைச்சுண்டு ஓடறான்- ஒத்தனை ஒத்தன் தள்றது தான் தெரியறது, என்ன விளையாட்டு? என் பையன் அதுவா, அந்த பந்து ஒரு அடி நீளம் இருக்கு – அதனால் foot -ஒரு அடி நீளம் உள்ள பந்து ன்னான். நானும் நம்பினேன். அதனால் என்ன, விளையாட்டை பாக்க பிடிச்சுது. என்ன கூட்டம், என்ன கூட்டம், ஒவ்வொருவரும் தானே விளையாடுவது போல அதே கவனமா இருப்பதும், நாங்கள் டீவீ தானே பாக்கறோம், அங்க இருப்பவர்கள், குளிரோ, மழையோ கூட லட்சியம் பண்ணாம இருந்து பார்க்கனும்னா எவ்வளவு உயர்வு. ஆயிரம் தலை ஒரே சமயத்தில பார்க்கிறது விசேஷம்னு சொல்லுவா.
என்னன்னு தெரியாம – யாரோ ஒரு பையன் ஓடறவனை – ஓடு ஓடு ன்னு கத்தினேன். என் பையன் வந்து அம்மா, அவன் எதிர் அணி விளையாட்டுக்காரன், நாங்கள் எங்க ஊர் அணி ஜயிக்கணும்னு பாத்துண்டு இருக்கோம் – அதன் பின் விவரமா சொன்னான். எங்களுக்கு யார் ஜயிக்கிறா, தோற்கிறா எனும் கவலை இல்லையே. ஜயிச்சவன் சிரிப்பான், தோத்தவன் முகத்திலேயே தெரியும் – அதனால் என்ன – உலகத்தையே, , வாழ்வையே தள்ளி நின்னு பாருன்னு தானே நம்ம சாஸ்திரங்கள் சொல்றது. சுகமோ துக்கமோ நம்மை பாதிக்காது. பார்த்த வரை அனுபவித்த ஆனந்தம் நிஜம் அதன் பாதிப்பான சுகம் துக்கம் நமக்கு இல்லை.
நுண்ணியதிலும் நுண்ணியது
த்ரஸரேணு – ஸ்ரீமத் பாகவதத்தில் காலத்தின் நுண்ணிய அளவு இமை கொட்டும் நேரம் என்பது போல பரமாணு என்பதை குறிக்க இந்த த்ரஸ ரேணு என்ற பதத்தை சொல்லியிருக்கும். இதை தெளிவு படுத்த பாகவதம் சொல்லும் முறை – ஸூரிய வெளிச்சம் மூடியிருந்த கதவின் சிறு துவாரம் வழியாக வரும் ஸுரிய கிரணங்கள் நேர்க்கோடாகத் தெரியும் – அந்த ஒளிக் கற்றையில் அறையில் இருக்கும் தூசியின் துகள்கள் பறப்பது போலத் தெரியும். அந்த தூசி துகள் ஒன்றின் அளவு -த்ரஸரேணு அல்லது பரமாணு -நுண்ணிய பொருளிலும் நுண்ணியது. தற்கால விக்ஞானிகள் இதை அறியாமலா இருப்பார்கள். இதற்கும் மேல் பல தூரம் சென்று விட்ட விக்ஞானமும், அறிவு ஜீவிகளும் இன்னமும் எட்டாத பல செய்திகளை உலகில் கண்டு பிடித்து விட்டார்கள். இன்னமும் தேடிக் கொண்டு இருக்கிறார்கள். பாகவதம் விவரித்துள்ள பல விஷயங்கள் இன்னமும் பாட திட்டங்களில் சேர்க்கப் படவுமில்லை. அவர்களை கண்டு சொன்ன ரிஷிகள் பெயர்கள் கூட ஏதோ அன்னிய மொழி போல பார்க்கப் படுகிறது என்பது தான் உண்மை நிலை.
சின்ன பையன் – அவனுக்கு ஒரு இயற் பெயர் உண்டு – சுந்தரேசன் – ஆனால் வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லை என்பதோடு, ஒரு கால் மற்றதை விட கால் அங்குலம் குறைவு. அதனால் வேகமாக ஓட முடியாது. அதனால் மற்ற மாணவர்களோடு ஒப்பிடும் பொழுது சிறியவன், அதனால் கூப்பிடு பெயரும் சின்ன பையா என்பது நிலைத்து விட்டது. அதையும் சுருக்கி, உடன் படிக்கும் சிறுவர்கள் எஸ்.பி என்றழைப்பர்.
அவன் அம்மா பாகவதம் கேட்கப் போவாள். ஒரு நாள் ஒரு பெரியவர் தமிழில் பாகவதம் மொழி பெயர்ப்பை கொடுத்திருந்தார். அதிலிருந்து விடாமல் தினமும் படிக்கிறாள். பெரிய புத்தகம். அம்மா, தரையில் அமர்ந்து, குட்டி ஸ்டூலில் பாகவத புத்தகத்துக்கு சந்தன குங்கும பொட்டு வைத்து மரியாதையுடன் வணங்கிய பின், குனிந்து படிப்பதைப் பார்க்க வேடிக்கையாக இருக்கும். தான் படித்ததை அன்றன்று ஒரே ரசிகனான கடைக்குட்டி சின்னப் பையனிடம் சொல்வாள். இன்று கதையில்லை. வேறு ஏதோ பூகோள சம்பந்தமான விஷயங்கள். கடவுள் எப்படி படைத்தார் என்பது போல. இந்த விஷயமும் சொல்லி, கதவைக் சாத்தி வெளிச்சத்தில் தூசித் துகளையும் காட்டினாள். இந்த அளவு குப்பையோடு தான் நாம் இந்த வீட்டில் இருக்கிறோமா. தினமும் பெருக்கி துடைக்கிறாயே என்று கேட்டான் சின்ன பையன்.
ஆனால், அந்த சொல் பிடித்தது. த்ரஸ ரேணு – என்று ஜபித்துக் கொண்டே கை கம்பினால் ஒரு கல்லைத் தட்டியபடி கடைக்குச் சென்று கொண்டிருந்தான். அம்மா தான் அனுப்பினாள். அவள் புடவையை மடித்து iron பண்ணித் தரும் ஒருவர் – அவரிடம் கொடுத்து விட்டு நின்று வாங்கிக் கொண்டு வா என்று சொல்லியிருந்தாள்.
போகும் வழியில் ஒரு பள்ளம். எதற்காகவோ வெட்டி பாதியில் விடப்பட்ட ஆளுயர பள்ளம். அங்கிருந்து கூக்குரல் கேட்டது. எட்டிப் பார்த்தான். ஒரு சிறுவன், ஐந்து வயதிருக்கும் எப்படியோ விழுந்து வெளி வர முடியாமல் அழுது கொண்டிருக்கிறான். என்ன செய்வோம், திடுமென சில நாட்கள் முன் அம்மா சொன்ன கதை நினைவு வந்தது. ஒரு பெண் பாழும் கிணற்றில் விழுந்து விட்டிருந்தாள். அந்த தேசத்து அரசன் குதிரையில் வந்து கொண்டிருந்தவன், பயத்துடன் அலறும் அவள் குரலைக் கேட்டு தன் மேல் ஆடையை பள்ளத்தில் போட்டு, அதை அவள் பிடித்துக் கொள்ள மெள்ள தூக்கி வெளியே கை எட்டியவுடன் தூக்கி வெளிக் கொணர்ந்தான். அதே சாக்காக நீ தான் என்னை கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும் என்று அடம் பிடித்தாள். வேறு வழியின்றி கல்யாணம் பண்ணிக் கொண்டான், கஷ்டப் பட்டான். அம்மா அப்படித்தானே சொன்னாள். கல்யாணம் பண்ணிண்டா கஷ்டம் ன்னா ஏன் பண்ணிக்கிறா. யாராவது வந்து பொண்ணுக்கு கல்யாணம்ன்னு சொன்னா, அம்மாவும் அப்படியா, ரொம்ப சந்தோஷம் ன்னு தானே சொல்லுவா.
சட்டென்று அம்மா புடவையை எடுத்து பள்ளத்தில் வீசினான். பையா, இதை கெட்டியாக பிடிச்சுக்கோ, நான் மேலே இருக்கேன்— யாராவது வந்தால் உதவிக்கு கூப்பிடலாம். சுற்றும் முற்றும் பார்தான். வகுப்பு மாணவர்கள் சிலர் வந்தனர். நானும் விழாமல் இந்த புடவையுடன் சிறுவனை இழுத்து மேலே கொண்டு வரும் வரை என் காலை அழுத்தி யாராவது கெட்டியாக பிடிச்சுக்கோங்கோ. அந்த சிறுவர்களும் உடனே புரிந்து கொண்டு அவன் கால்களை இறுக்கி பிடித்துக் கொண்டனர்.
சின்னப் பையன் மெள்ள மெள்ள புடைவையுடன் அந்த குண்டு சிறுவனை மேல் நோக்கி இழுத்தான் . குண்டு பையன், என்ன கனம், அதே கவனமாக இருந்தும் மனம் தன் போக்கில் யோசித்துக் கொண்டே இருந்தது. அந்த ராஜா ஏன் மாட்டேன்னு சொல்லல்ல. எப்படிச் சொல்வான். என்னைப் போலத் தான் இருந்திருப்பான். அதற்குள் கூட்டம் கூடியது. பெரியவர்கள், அவன் தாத்தா போன்ற ஒருவரும் வந்தார். அழுது விடுவார் போல இருந்தது. நாராயணா, நாராயணா என்று வாய் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தார். இவர் ஏன் நாராயணா என்று சொல்கிறார். யமன் வந்த போது ஒருத்தர் சொன்னாராமே, நாராயணன் என்ற தன் மகனை பெயர் சொல்லி அழைத்தார், அதைக் கேட்டு அந்த கடவுள் நாராயணனின் ஆட்கள் வந்து விட்டார்களாம். எல்லாம் தெரிந்தவர்னு சொல்றா, அனா அவருக்கு. இந்த மனிதன் தன்னைக் கூப்பிடவில்லை, தன் பிள்ளையைக் கூப்பிடுகிறான் ன்னு தெரியாதா?
கீழே பார்த்தான். பள்ளம் இன்னமும் அதிகமாக தெரிந்தது. பாதாளம் போல. காலையில் பாதாளம்ன்னு யார் சொன்னா? யோசித்தான். அன்று காலை .. ஒரு பாட்டு பாதாளம்..இன்னும் என்னவோ – அது சிவன் பாட்டு இல்லையோ, இந்த தாத்தா நாரயணா – நாராயணா ன்னு சொல்லிண்டு இருக்காரே. பாவம்..
கீழே இருந்து சிறுவன் அழுவது கேட்டது. அழாதே, இதோ பார் நிறைய பேர் வந்துட்டோம். சின்னப் பையனுக்கு பெருமையாக இருந்தது. தான் செய்வது மிக வீரச் செயல் – சிறுவனை மீட்ட சின்னப் பையன் – நாளைக்கு டிவி நியூஸ்ல வரும்… அம்மா பாத்து சந்தோஷப் படுவாள். என்னிக்குமே திட்டினது இல்ல – ஆனா மத்த பசங்க எல்லாம், மார்க் நிறைய வாங்கினாலோ, ஸ்போர்ட்ஸ்ல ஜயித்தாலோ அவன் தன் உடற் குறையை நினைத்து ஏம்மா, எனக்கு மட்டும் இப்படி குட்டை உடம்பும், வளைந்த காலும் – மத்தவங்க கேலி பண்ணற மாதிரின்னு அழுதா, யார் சொன்னா? நீ குட்டைன்னு, திடு திடுன்னு வளந்துடுவ பாரு என்பாள்.
இன்னும் கொஞ்சம் தான் – பொதுவாக சொன்னான். என் காலை நன்னா புடுச்சிக்கோங்கோ, இந்த புடவையையும், ஒருத்தர் வாங்கிக்கோங்கோ, நான் அவன் கை எட்டற மாதிரி இருக்கு, குனிஞ்சு கைய பிடிச்சு தூக்கிடறேன், அப்படியே அடி பணிந்து செய்வது போல நாலு கைகள் கால்களை தரையோடு இறுக்கி பிடிக்க, கையைப் பிடித்து கிழே விழுந்த பையனைத் தூக்கி மேல் வரை கொண்டு வந்தவன் தான் பின்னால் விழுந்தான். அந்த சமயம் ஸ்கூட்டரை கீழே போட்டு விட்டு ஓட்டமாக ஓடி வந்த ஒருவர், அவசரமாக அவனை தூக்கிக் கொண்டார். பின்னாலேயே அவர் மனைவி போல ஒருவள் அவளும் ஓடி வந்தாள் – இருவருமாக அந்த குண்டு பையனை கன்னத்தை திருப்பியும், உடம்பு பூரா பாட்டிருக்கா ன்னு கேட்டும் பேசிக் கொண்டே சென்று விட்டனர். காப்பாற்றியவனை ஏன் என்று கூட கேட்கவில்லை.
சின்னப் பையனை விட அவன் சக மாணவர்களுக்கு மிகுந்த ஏமாற்றம். திரும்பி தாங்க்ஸ் கூட சொல்லாமல் போறான் பாரு. நீ இனி எஸ் பி இல்லடா, பீ பீ ன்னு ஒத்தன் சொல்ல, அப்படின்னா பெரிய பையன் – பீபீ ன்ன நன்னா இல்ல நாதஸ்வரம் வாசிக்க ஆரம்பிக்கிற போது முதல்ல சொல்வா – அது வேண்டாம் – பையன்கள் யோசிக்கும் முன் தாத்தா அருகில் வந்தார். அம்மாவும் பறந்தடித்துக் கொண்டு வந்தாள். நேரமாகிறது என்று IRON தொழிலாளி கடைக்கு போய் இருக்கிறாள். விஷயம் தெரிந்து ஓடி வந்திருக்கிறாள். தாத்தா, உங்க பையனா என்றார். ஆமாம் – விக்கலிடையே அம்மா சொன்னாள். யாருமே எதிர்பார்க்கவில்லை – அந்த தாத்தா நெடுஞ்சான் கிடையாக அம்மா காலில் விழுந்தார். தாயே! உன் மகன் சாதாரணமானவன் அல்ல. என் குலத்தையே காத்தவன், பெத்தவள் நீ புண்யம் செய்தவள், எந்த கஷ்டமும் இல்லாமல் சௌபாக்யவதியாக இரு – இந்த ஏழையின் ஆசிகள் இவனும் நன்றாக இருப்பான். குழந்தை உன் உடம்பு தான் சின்னது, புத்தி விசாலமா இருக்கு. பெரிய பெரிய படிப்பெல்லாம் படித்து நன்னா சம்பாதி, அம்மாவை நன்னா வச்சுக்கோ. தாமோதரன் இவன்.
புடவை கிழிந்து விட்டதோ என்று ஆராய்ந்து கொண்டிருந்தவனிடம் அந்த iron தொழிலாளி வந்தார். குடு தம்பி, நான் பாத்துக்கறேன். அவசியமானா சலவை பண்ணிட்டு பொட்டி போடறேன். சமயத்தில உனக்குத் தோணித்தே, இதை வச்சு குழியிருந்து தூக்கலாம்னு.சமத்து பையன் நீ.
போகும் வழியில் தமோதரன்னாரே, அப்படின்னா என்னம்மா? அம்மா சொன்னா, நன்னா தெரியாது, ஆனா தாயை குடல் விளக்கம் செய்த தாமோதரனை- ன்னு பாடுவா, சாமி பேரு தான்- கேட்டிருக்கேன். என்றாள்.
சக மாணவர்கள் ஓடி வந்தனர். கல கல்வென்று சிரித்தபடி டேய் நீ டீ எச் பி டா- தாமோதரன்-சின்ன-பையன், ஓ வென்ற இரைச்சலோடு அவனுடன் நடந்தனர்.
நாரதர் சொன்னார்’ விஷயங்களை அனுபவிக்கும் மனிதர்களின் புத்தியை மழுங்கச் செய்வது நல்ல குடி பிறப்போ, கல்வியோ அல்ல. அளவுக்கு மீறிய தனமே அதிகமாக புத்தியை கெடுத்து, நியதியை மீறி, தவறான செயல்களைச் செய்ய வழி வகுக்கிறது. ரஜோ குணமான காம க்ரோதாதிகளை விட செல்வத்தால் வரும் மதம் கெடுதலை விளவிக்கிறது. எதையெல்லாம் தவிர்க்க வேண்டுமோ, அவைகளை செல்வம் கொண்டு சேர்க்கிறது. மது பானம், கெட்ட சகவாசம், ஸூதாட்டம், விதிகளை மீறல் இவைகளுக்கு தயாராக்குகிறது. , அதனால் தான் தயை யின்றி பசுக்களை கொல்கிறார்கள். இவர்கள் தங்கள் உடல் முதுமை அடையாது, மரணம் சம்பவிக்காது என்று நம்புகிறார்கள். யாராலும் அழிக்க முடியாது என்ற கர்வம் தலைக்கேறுகிறது. தேவ, அன்ன தாத்தா என்று பணியாளர்களும் வறியவர்களும் அழைப்பதை உண்மையாக நம்புகிறார்கள். யார் அன்ன தாதா, எவராயினும் ஒரு நாள், மண்ணில் புதைந்தோ, நெருப்பில் எரிந்தோ அழியும் உடலைத் தான் கொண்டுள்ளனர். மனிதன் தன் தாய், தந்தை என்றோ, ஒருவன் பலசாலி என்றோ, யாகம் செய்தவரோ, மதிப்புக்குரிய இந்த உயிர்களுக்கும் சாதாரண பிராணிகள் நாய் போன்றவைகளுக்கும் அந்திம காலம் ஒன்றே
அறிவில்லாதவன் செல்வ மதத்தால், ஏழைகளை மட்டமாக நினைக்கிறான். தன்னளவு செல்வம் இல்லாதவன் தனக்கு சேவை செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறான். அவனுக்கு முள் குத்தினாலோ, அடி பட்டாலோ, அவனுக்கு வலிக்குமே என்று எண்ணுவதில்லை. தரித்ரனுக்கு தான் என்ற கர்வம் கொள்ள வழியில்லை. ஒரு விதத்தில் இது அவர்களுக்கு தவம் செய்து கிடைக்கும் சமபுத்தியை கொடுத்து விடுகிறது. நித்யம் ஒரு வேளை உணவே கிடைப்பது சிரமமாக இருக்கும் பொழுது மற்ற இந்திரியங்கள் துள்ளுவதில்லை. அதனால் ஜீவ ஹிம்சை செய்வது என்பதும் பெருமளவில் குறைகிறது. சாதுக்கள் மனம் இவர்களை மட்டமாகவோ, தாழ்வாகவோ நினைப்பதில்லை. தனம் உள்ள காரணத்தால் மரக் கட்டை போல பிறர் துன்பம் அறியாமல் அசத்தாக இருப்பவர்கள் இந்த குபேரனின் புத்திரர்கள். இவர்களின் கர்வத்தை அடக்குகிறேன்.
வாருணி மதுவை குடித்து, மதாந்தமாக அதுவே வாழ்க்கை என்று இருப்பவர்களைத் திருத்த வேண்டும். லோக பாலனின் புத்திரர்கள், இப்படி மதம் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருந்தால், அவர்கள் தண்டனை பெற்றால் தான் சமுகத்தில் மற்றவர்களுக்கும் கடமையுணர்ச்சி வரும். அதனால் இவர்களை மரமாக தாவரமாக இருக்கச் செய்கிறேன். நினைவு இருக்கும். என் அருளால் உள்ளுணர்வு இருக்கும். வாசுதேவனின் சாந்நித்யம்- அருகாமையில் இருந்து சாப விமோசனம் பெற்று பழையபடி சுவர்கம் அடையட்டும். அதற்குள் திருந்தி பகவானிடம் பக்தியும் வந்து விடும்.
கதை-4
பல நாட்களுக்கு முன் படித்த தொடர் கதையில் ஒரு பாத்திரம் பாட்ராச்சார் என்பவர். அவருக்கு இனிப்பு பிடிக்கும். ஒரு நாள் வீட்டில் ரவை கேஸரி செய்தாள் அம்மா. அவர் அதை வர்ணித்ததை நாங்கள் யாருமே மறக்கவில்லை. புது நெய் விட்டு ரவையை வறுத்து மாப்பிள்ளைக்காக பண்ணியிருக்கேள். கேஸரி வர்ணப் பொடி கொஞ்சமா போடுங்கோ, ஆஹா, முந்திரி பருப்பு வறுத்த வாசனை என்பார். ஆனால் கொடுத்தால் சாப்பிட மாட்டார். அவர் மனைவி போன பின் இனிப்பு சாப்பிடுவதில்லை என்று விரதம் என்பார். அடிக்கடி வருவார். வந்தால் ஊர்க் கதை தன் கதை என்று ஏதோ பேசுவார். வீட்டில் அனைவருக்கும் அவரைப் பிடிக்கும்.
என் அக்கா மணமான புதிது. இன்னமும் புகுந்த வீடு போகவில்லை. மாப்பிள்ளை வீட்டார் ஏதேதோ காரணம் சொல்லி தாமதித்துக் கொண்டிருந்தனர். நல்ல நாள் பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றனர். 365 நாட்களில் ஒரு நல்ல நாளா கிடைக்காது. என் தம்பி பரவாயில்லக்கா நீ இங்கேயே இருந்துடு என்பான். சீ போடா என்று அம்மா விரட்டுவாள். அவள் கையில் எதோ துணியில் பூவேலை செய்து கொண்டிருந்தாலும் கண்களில் ஜலம் நிரம்பும். எனக்கு புரியாது, எதற்கு இவள் வருத்தப் படுகிறாள். இங்கு நாங்கள் எல்லோரும் பிரியமாகத் தானே இருக்கிறோம். அம்மா என்னை ஏதாவது சிறு வேலைகளைச் செய்யச் சொல்வாள். கடைக்கு ஓடிப் போய் சாமான் வாங்கி வா என்பாள். அவளை எதுவும் சொல்ல மாட்டாள்.
அப்பொழுது தான் இந்த பாட்ராச்சார். மாதிரி ஒரு ஆசாமி வந்தார். அவளிடம் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தார். அதற்குப் பின் அக்காவும் தைரியமாக இருந்தது போல இருந்தது. ஒரு நாள், அவளிடம் வந்து ஏதோ சொல்லி விட்டு, தைரியமா போ. அங்கு உன்னை ஒன்றும் செய்ய முடியாது. நான் கொண்டு விடுவேன். ஆனால் அது மரியாதை இல்லை. உன் அப்பாதான் கொண்டு விடணும் என்றார். அப்பாவையும் சம்மதிக்க வைத்தார். அப்படிக்கென்ன போய் தான் ஆகணுமா என்று என் அந்த வயதில் நான் துள்ளியது நினைவு வருகிறது.
அப்பா எதற்கோ பயந்தவர் போல இருந்தார். அவருக்கே துணை வேண்டும் போல இருந்தது. அம்மா அடுப்படியில் வெந்தாள். சம்புடம் சம்புடமாக பக்ஷணங்கள் தயார் செய்து கொண்டிருந்தாள். நானும் தம்பியும் சண்டைக்கு நின்னோம். எதுக்கும்மா யாரோ சாப்பிட இத்தனை செய்கிறாய். எனக்கு எனக்கு என்று இருவரும் கை நீட்டினோம். என்ன நடந்ததோ தெரியவில்லை. அப்பா மட்டும் திரும்பி வந்தார். அக்கா அழகா கோலம் போடுவாள். ஸ்ரீ ஜயந்தி வந்தால் அவள் போட்ட பாதங்களை ஸ்ரீ க்ருஷ்ணனே வந்தால் கூட மிதிக்காமல் தாண்டி வருவார். எங்கள் பாடப் புத்தகங்கள், நோட்டுகள் எல்லாவற்றிலும் அட்டை போட்டு பெயர் எழுதி தருவாள். வீட்டில் அவள் கை வண்ணம் தெரியாத இடமே இல்லை என்பது போல கை வேலை, சித்திரங்கள் என்று இருக்கும்.
நாட்கள் ஓடின. அவள் புக்ககம் போனாள். ஒரு முறை வரக் கூடாதா, வரவேயில்லை. அம்மா அவளை நினைத்து நினைத்து கண் கலங்குவாள். ஆனால் எங்களுக்குத் தெரியாதது, அந்த பாட்ராச்சார்- அவர் இயற் பெயர் தெரியாது- இதே நிலைத்து விட்டது. அடிக்கடி போய் பார்த்திருக்கிறார்.
ஒரு நாள் அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அவர் போனபொழுது அக்கா வீட்டு வேலையாக இருந்தாள். மாமியாரே பேசினார். யார் என்ன என்று கேட்டு விட்டு நீங்களே சொல்லுங்கோ, வாக்கு தவறலாமா? கையில் பணம் இல்லன்னார், மாமா (அவள் கணவனை அப்படித்தான் சொல்வாள்) கொடுத்தார். கடனாக, ஒரு வருஷத்தில் திருப்பித் தருவதாகச் சொன்னார் அந்த சம்பந்தி. கடன் பத்திரம் கையெழுத்து போட்டு வட்டியுடன் தருவதாக. யாரும் எதிர்பார்க்கவில்லை இந்த சம்பந்தம் அமையும் என்பதை. இது தான் தெய்வச் செயல். எங்க பையன் பாவம், அதனால் சரி வான்னு கூட்டிண்டோம். அதற்கு மேல் அவர் சொன்னது எனக்கு புரியவில்லை. அப்பா எப்படியோ மாட்டிக் கொண்டிருக்கிறார். யாருக்கு யார் கடன் தருவது. அவர்கள் மகனுக்குத் தானே கல்யாணம் – அதற்கு அவர் கடன் கொடுப்பராமா, என்ன நியாயம்? நானும் என் தம்பியும் எங்களுக்குள் பேசிக் கொண்டோம். நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் என்று நான் ஸூளுரைக்க, அவன் நான் வரதட்சினையே வாங்கிக்க மாட்டேன் என்றான். இப்பொழுது நினைத்தால் சிரிப்பு வருகிறது.
சீமந்தம் என்று வீடு அல்லோல கல்லோலப் பட்டது. நாங்கள் இருவரும் கூடிய மட்டும் அந்த குடும்பத்தினரிடம் தள்ளியே இருந்தோம். அக்காவை விட்டு விட்டு அவர்கள் மட்டும் திரும்பிப் போனார்கள்.
வீட்டில் அப்பாவை விட அதிகமாக அக்கா இந்த பாட்ராச்சாரிடம் தான் பேசினாள்.
எப்படி சமாதானம் ஆயிற்று என்பது வெகு நாட்கள் கழித்து தான் எனக்குத் தெரிந்தது. கையில் குழந்தையுடன் அப்பா அவளை அவர்கள் வீட்டில் கொண்டு விட்டார். எல்லோரும் உபசாரம் செய்தனர். அந்த வீட்டில் இவனைத் தவிர இன்னமும் நாலு பையன்கள். அடுத்த பையன் கல்யாணம் என்று பத்திரிகை வந்தது. அம்மா போய் விட்டு வந்து சொன்னாள். இவா தான் எங்கள் முதல் சம்பந்தி என்று எல்லோரிடமும் அறிமுக படுத்தினாளாம். நாங்கள் எங்கள் அக்கா எல்லோரிடமும் நல்ல பெயரை வாங்கி விட்டாள் என்று மகிழ்ந்தோம்.
ஒரு நாள் நானே பாட்ராச்சாரிடம் கேட்டேன். ஏன் மாமா இது என்ன நியாயம், அந்த பையனுக்கு சொல்லத் தெரியாதா, என் மனைவி நான் அழைத்துக் கொண்டு வருவேன் – ன்னு சொல்ல தைரியம் இல்லையா. இவள் தான் ஏன் அங்க போகனும்னு தவித்தா. குழந்தை, உனக்கு உலகம் தெரியும் பொழுது புரியும். அந்த பையன் ஏன் பேசல்ல – அது உங்க அப்பா அவன் தந்தையிடமே செலவுக்கு கடன் வாங்கி இருந்தார். அதை திருப்பிக் கேட்க மாட்டார் என்று உங்க அப்பா நம்பினது தான் தவறு. சென்னையில் இவர் வீடும் அவர்கள் வீட்டுக்கு அருகில் தானாம். அதனால் நான் அந்த பையனிடம், அது தான் உன் அக்கா புருஷனிடம் பேசினேன். அவனுக்கும் அப்பொழுது தான் தெரிந்தது. இது என்ன அசட்டுத் தனம் என்றான். கடன்னு வாங்கினா திருப்பித் தந்து தான் ஆகனும். கல்யாணம் ஆன பின் அந்த சம்பந்தி மனிதன் வேண்டாம் , நமக்குள்ள என்ன என்று சொல்லியிருந்தால் அவர் பெருந்தன்மை. அவரிடம் உங்க அப்பாவும் மனம் விட்டு பேசல்ல. செலவு ஜாஸ்தியாயிடுத்து அப்புறமா முடிந்த பொழுது தரேன்னு சொல்லியிருந்தா கூட போதும். பேச வேண்டிய இடத்தில் பேசித்தான் ஆகனும். அவர் செய்யல்ல, அவசரம் என்று கேட்ட பொழுது அவராக தரேன்னு சொன்ன பொழுதும் எப்படி திருப்பி தருவோம்னு யோசிக்க வேண்டாமா? உன் அம்மாவுக்கு கூடத் தெரியாது அவர் கடனாக வாங்கினது. நாம் ஏன் கடனை திருப்பித் தராம இருக்கனும். அவரிடம் பேசியிருந்தால் விடாப் பிடியாக கொடுத்து தான் ஆகனும்னு சொல்ற மனிதரும் இல்லை. வாயில் வார்த்தை வேணும் குழந்தை, பணிய வேண்டிய இடத்தில் பணிந்து தான் ஆகனும். நானே மணி ஆர்டர்ல அந்த பணத்தை அனுப்பி விட்டேன். உன் அத்திம்பேர், மொத்தமா தர முடியல்லன்னு, மாதா மாதம் எனக்கு கொடுத்து விட்டான். புரிந்ததா?
இப்படியும் மனிதர்கள். இனி இவர் இயற் பெயராலேயே அழைக்கலாம். பார்த்த சாரதி- அக்காவை பொறுத்தவரை அவர் திருவல்லிக்கேணியில் குடி கொண்ட பார்த்தனுக்கு தேர் ஓட்டியவரே.
அம்மா அந்த காலத்திலேயே ஆங்கிலம் அறிந்தவள். கான்வெண்ட் ஸ்கூலில் படித்தவள். எட்டாம் வகுப்பில் நிறுத்தி கல்யாணம் என்று பண்ணி அனுப்பி விட்டார்கள். அவர்கள் பொறுப்பு தீர்ந்ததாம். நானும் என் தம்பியும் அம்மாவிடம் சண்டை போட்டிருக்கிறோம். அதெப்படி தான் பெற்ற பெண்ணையே சுமையாக நினைத்தார்கள். வேறு வீட்டிற்கு அனுப்பி விட்டால் இவர்களுக்கு சுமை குறைந்து விட்டதா? நன்றாக படித்துக் கொண்டிருந்த பெண், படிக்க வைத்திருக்கலாம். நாங்கள் இருந்தது ஒரு வீட்டின் ஒரு பக்கத்து போர்ஷன். வலது இடதாக பிரித்த வீடு. தானும் இருந்து கொண்டு, அருகில் ஒருவருக்கு வாடகைக்கு கொடுத்தால் வரும்படியும், பேச்சுத் துணையும் ஆச்சு என்ற எண்ணத்துடன் பெரிய வீட்டை இரண்டாக பிரித்திருந்த வீட்டுக்கு சொந்தக்காரர், வெளியூர் சென்று விட்டார். எனவே அந்த பக்கத்து பெரிய பகுதிக்கும் ஒருவர் குடி வந்தார். நல்ல வேலையில் உள்ளவர் போலும். அந்த வீட்டு வயதான ஒருவர், அம்மாவோ, யாரோ, தாங்கள் அதிக வாடகை கொடுப்பதால் எங்களை விரட்டலாம் என்று நினைத்தவர் போல இருப்பார். அதனால் நாங்கள் அவர் கண்ணில் படாமல் சுற்றிக் கொண்டே போவோம். நிற்க.
இவர்கள் அனைவரும் எங்கள் சின்ன பகுதி திண்ணையில் கூடுவார்கள். இன்னும் சிலர், எதிர் வீட்டு பெண்மணி, வாயில் வெற்றிலையை மென்று கொண்டே பேசும் ஆச்சி, அவர் வளர்ப்பு நாய் உடன் இருக்கும். அதனால் அவர் வாசல் படிக்கட்டிலேயே அமர்ந்து கொள்வார். நீளக் கயிற்றில் அதை கட்டி ஒரு முனையை பிடித்திருப்பார். அங்கும் இங்குமாக அது ஓடிக் கொண்டிருக்கும். இந்த பாட்டியும் வருவார். தரையில் உட்கார முடியாமல் தன் நாற்காலியை கொண்டு வந்து போட்டுக் கொள்வார். அம்மா இவர்களுக்கு அந்த வார விகடன் பத்திரிகையை படித்துக் காட்டுவாள். ஸ்ரீமதி மைதிலி என்ற தொடர் கதை வந்த காலம். அம்மா படிக்க படிக்க இவர்கள் கார சாரமாக விவாதம் செய்வார்கள். ஒவ்வொரு வாரமும் அந்த கதை தொடரும். நாங்கள் வேடிக்கை பார்ப்போம். அந்த பாட்டி கடன்காரன் என்று கதையில் வரும் ஒரு பாத்திரத்தை திட்டுவார். எதிரில் அந்த மனிதர் ஒரு அடி கொடுத்திருப்பார் போல இருக்கும். யாருக்கோ பரிதாப படுவார்கள். அம்மா படித்து முடிந்தவுடன் கையோடு அந்த கூட்டத்தில் பத்திரிகையை வாங்கியவர் பத்திரமாக எடுத்துக் கொண்டு போய் விடுவார். அதைப் பார்க்க ஆசை இருந்தாலும் எட்டிப் பார்ப்பதோடு சரி. பிற்காலத்தில் வசதி வந்து விகடன் பத்திரிகை வந்தவுடன் அட்டை படத்தை பார்க்க போட்டி போடுவோம். ஏதாவது ஜோக், அல்லது கார்ட்டூன் படம் இருக்கும்- முன் ஜாக்கிரதை முத்தண்ணா, எலி வளை ஆனாலும் தனி வளை போன்ற வாசகங்கள் இன்னமும் எங்கள் வீடுகளில் பேசப் படும் சொற்றொடர்கள்.
இந்த சமயம் தான் அப்பாவின் பெற்றோர் எங்களுடன் வசிக்க வந்தனர். இடம் போதவில்லை என்று சற்றுத் தள்ளி வீடு பார்த்துக் கொண்டு போனோம். குதிரை வண்டியில் சாமான்களை போட்டுக் கொண்டு, நாங்கள் ஆளுக்கு ஒரு துணி மூட்டையை தோளில் போட்டுக் கொண்டு போய் சேர்ந்தோம். அதன் பின் சொந்தமாக வீடு கட்டிக் கொண்டு குடி போனபின் இந்த விகடன் வாசகர்கள் கூட்டத்துடன் தொடர்பே இல்லாமல் ஆயிற்று. அக்கா கல்யாணம் ஆனதும் இங்கு வந்த பின் தான்.
அப்பா எப்பொழுதுமே அதிகம் பேச மாட்டார். இப்பொழுது எப்பொழுதும் கவலை தோய்ந்த முகமாகவே தான் அவரை கண்டிருக்கிறோம். பெரிய குடும்பம், வீடு கட்டி தனி வளைக்கு வந்தாலும் செலவு இழுத்து பறித்தது. தனி வளை பணத்தை விழுங்கியது. இதையெல்லாம் புரிந்து கொள்ள நானும் மணமாகி குடித்தனம் செய்ய வேண்டியிருந்தது. எப்படி சமாளித்தார்கள். இருவரும் அதிக சாமர்த்தியமோ, பேச்சுத் திறமையோ, பண வசதியோ இல்லாதவர்கள். இருந்தும் எங்களுக்கு உணவிலோ, உடையிலோ குறை இருக்கவில்லை. நாள் கிழமைகள் வடை பாயசம் இல்லாமல் சென்றதில்லை. இப்பொழுது இத்தனை வசதிகள், புகை இல்லாத அடுப்புகள், சமையறையை அடைத்துக் கொண்டு அரைக்கவும் கரைக்கவும் என்று இயந்திரங்கள், ஆனால் நாள் கிழமை வடையோ, பாயசமோ தான் மிஸ்ஸிங்க். பண்ணினாலும் சாப்பிட பொறுமையில்லை. பொறுமையிருந்து சாப்பிட்டாலும் மறுநாள் ஏதோ கோளாறு. பதினாறு மணி நேரம் ஃபாஸ்டிங்க்.
திரும்ப அந்த பார்த்த சாரதி மாமாவுக்கு வருவோம். அந்த பகுதியில் நிலத்தை துண்டு துண்டாக பிரித்து வித்தவரிடம் இவர் வேலை செய்தார் என்று நினைவு.
என் தம்பி காலேஜ் செல்லும் சமயம். கடுமையான போட்டி. உள்ளூரில் இருந்த கல்லூரிகளில் மட்டும் தான் விண்ணப்பித்து இருந்தான். நல்ல மதிப்பெண்கள் இருந்தாலும், வெளியூரில் அதாவது மற்ற பெரிய நகரங்களில் இடம் கிடைத்திருக்கும். சற்றுத் தள்ளி இருந்த உள்ளூர் கல்லூரியில் சேர்ந்தான். இந்த கல்லூரிக்கு குறைந்த பட்ச மதிப்பெண்களே போதும். நானும் அந்த கூட்டத்தோடு போய்க் கொண்டிருக்கிறேன் என்று அங்கலாய்ப்பான். பாவமாக இருக்கும். அப்பவும் இந்த பாட்றாசாரியார்- இல்லை பார்த்த சாரதி மாமா வந்தார். என்னவோ அவன் மனதுக்கு உறைக்கச் சொல்லி இருந்தார் போலும். நிறைய படித்தான். லைப்ரரி புத்தகங்கள் வீட்டில் அவன் படித்த இடத்தில் கிடக்கும். அம்மாவும் நானும் திருப்பி தரணும், பொறுப்பில்லாமல் இங்கேயே வைத்திருக்கிறான், என்று எடுத்து அவன் மேசையில் வைப்போம். மூன்று வருட படிப்பு முடிந்ததும் மேற்கொண்டு படிப்பேன் என்று தானே முயன்று பொறியியல் கல்லூரியில் சேர்ந்தான். ஐஏஎஸ் எழுதப் போவதாகச் சொன்னான். வெளி உலகமே தெரியாமல் வளர்ந்த நானும் பள்ளிப் படிப்பை முடித்து விட்டிருந்தேன். உடன் படித்த மாணவிகள் செய்தனர் என்று நானும் அரசாங்க வேலைக்கான தேர்வை எழுதினேன். ஏதோ ஒரு சிறிய அரசு அலுவலக வேலை. ஆனாலும் வேலை கிடைத்து வெளியில் போன முதல் பெண் எங்கள் குடும்பத்தில் நான் தான்.
தம்பி அந்த தேர்வில் பாஸாகி விட்டிருந்தான். அவன் படிக்கும் காலத்தில் தான் முதன் முதலாக வீட்டில் தினசரி பத்திரிகை வந்தது. அதனால் நானும் அம்மாவும் அவன் படித்த பின் படிப்போம். அதில் என் தம்பி பெயரைப் பார்த்து திகைத்தவள், என்ன விவரம் என்று படித்தேன். அந்த ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் முதலாக வந்திருக்கிறான். எங்களுக்கு மகிழ்ச்சியும் திகைப்பும் எங்கே போனான், அவனைத் தேடிக் கொண்டு நான் அவன் நண்பர்கள் வீட்டிற்குச் சென்றேன். அவன் இந்த பார்த்த சாரதி மாமாவின் வீட்டில் இருந்தான். அவருக்கு நெடுஞ்சாண் கிடையாக -சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்து கொண்டிருந்தான். என்னடா, அம்மா தேடறாள் இங்க இருக்க, என்று வியப்புடன் பார்த்தேன். எங்கள் குடும்பத்துக்கு பார்த்த சாரதியாக வந்தவர் தான் அவனுக்கு எதை படிக்க வேண்டும் என்று அறிவுரை சொன்னாராம். அவர் வீட்டில் முதன் முறையாக சென்ற நான், அறை முழுவதும் புத்தக அலமாரிகளைக் கண்டு திகைத்தேன். நாளில் பாதி நேரம் அவன் அங்கு தான் படித்துக் கொண்டு இருந்திருக்கிறான். நீ ஒரு அடி முன்னால் வா, நான் பத்து அடிகள் உன் பக்கம் வருவேன் – எங்கேயோ படித்த ஞாபகம். அவன் தன் முயற்சியால் தான் ஜயித்தான். செய், செயல் தான் பலன் தரும், பின் பலமாக நான் இருப்பேன் என்று அபயம் அளித்த பகவான் தான் இப்பொழுதும் இவர் ரூபமாக வந்து உதவி இருக்கிறார் – நானும் அவரை நமஸ்கரித்தேன். தீர்க சுமங்கலி பவ என்று ஆசீர்வதித்தார். திரும்பவும் கல்யாணம், புக்ககம் தானா எனக்கு, நான் படிக்க மாட்டேனா, எனக்கு ஏன் இவர் இப்படி ஆசிர்வாதம் பண்ணனும் என்று சுள்ளென்று கோபம் வந்தது. இவ்வளவு ஆண்டுகளுக்கு பின் சதாபிஷேகம், இரு பக்கத்து உற்றார் உறவுகளுடன் மாட்டியிருக்கும் அக்கா-அத்திம்பேரின் போட்டோ என்னைப் பார்த்து சிரிக்கிறது – எது தேவை, என்பதை விட எது நன்மை என்று தானே பெரியவர்கள் நினைத்திருக்கிறார்கள்.
ஒரு நாள் சின்ன தம்பி தன் சைக்கிளை இரண்டு துண்டுகளாக தூக்கிக் கொண்டு வந்தான். அவன் உடலிலும் காயம். அப்பாவும் அம்மாவும் சைக்கிளை உடைத்து விட்டானே என்று திட்டினார்கள். அப்பொழுது பக்கத்து வீட்டு செட்டியார் அம்மாள் வந்தாள். ‘முதல்ல புள்ளய உள்ள கூட்டிட்டு போயி அடி பட்டிருக்கா பாரும்மா, சைக்கிள் கிடக்குது’ என்றார். அப்பா உள்ள வா, அந்த நாரதர் வந்து கொண்டிருக்கிறான் என்றார். திரும்பி பார்த்தால் தெருக் கோடியில் இந்த பார்த்தசாரதி மாமா வந்து கொண்டிருந்தார்.எனக்கு புரியவில்லை, பிடிக்கவும் இல்லை. நாரதர் என்ன பண்ணினார் ? நாரதர் கலஹம் செய்வார் என்று பிரசித்தி போலும். இவர் உதவி தானே செய்கிறார். அப்பா அவரிடம் சரியாக பேசுவதில்லை என்று எனக்கு தோன்றியதுண்டு. ஈகோ, தன் குழந்தைகள் அவரிடம் மதிப்புடன் இருக்கிறார்களே என்று. இருக்கலாம். எங்களுக்கு மட்டுமல்ல – அந்த குடியிருப்பில் எல்லோருமே அவரிடம் உதவி பெற்று அவரிடம் மதிப்புடன் தானே இருந்தார்கள்.
எல்லோருமாக வீட்டின் உள்ளே நுழைந்தோம். தெருக் கோடியில் இந்த பார்த்தசாரதி மாமா வந்து கொண்டிருந்தார். சைக்கிள் வாசலிலேயே கிடந்தது. செட்டியாரம்மா அவரிடம் விஷயத்தைச் சொன்னார். அவர் உள்ளே வருவார் என்று நினைத்தேன், வரவில்லை. வேகமாக எங்கோ சென்று விட்டார். சற்று பொறுத்து நான்கு பையன்களை விரட்டிக் கொண்டு வந்தார். அவர்கள் தான் என் தம்பியை அடித்து, சைக்கிளையும் உடைத்திருக்கிறார்கள். இவன் ஏன் அவர்களுடன் போனான். அழுது கொண்டே அந்த பையன்கள் சைக்கிளை எடுத்துக் கொண்டு போனார்கள். இரண்டு நாள் கழித்து ரிப்பேர் பண்ணி திருப்பி கொடுக்க வந்த பொழுது நாங்கள் கேட்டோம் என்ன நடந்தது என்று. இவனும் அந்த கூட்டத்தில் சில நாட்கள் இருந்திருக்கிறான். ஆனால் சில நாட்களில் அவர்கள் செய்யும் அடாவடித்தனம் பிடிக்காமல் விலகி விட்டான். பாதியில் பள்ளியில் இருந்து ஊர் சுற்றப் போவார்களாம். அந்த நாளில் இளம் வயதினருக்கு மறுக்கப் பட்ட பீடி, சிகரெட் என்ற வழக்கங்கள். மட்டமான பேச்சு. இன்னும் என்ன கெட்ட வழக்கங்களோ – தெரியாது. நடுவில் இந்த மாமா ஒரு முறை பார்த்து இவனுக்கு புத்தி சொல்லி விலக்கி விட்டார். நான் யார் தெரியுமா? போலீஸ்ல சொல்லி உள்ள தள்ளி விடுவேன் என்றாராம். அதன் பின் தான் நம்ம பையனுக்கு புத்தி வந்திருக்கிறது. அதன் பின் பள்ளி இறுதி வகுப்பு பரீட்சை வந்தது. பரீட்சையில் இவன் காப்பி அடிக்க விடவில்லை என்று கோபமாம். அது தான் காரணம்.
ஆனால் வெறு யாரோ பள்ளி தலைமை ஆசிரியரிடம் சொல்லி இருக்கின்றனர். இவன் பாடங்கள் எழுதியிருந்த நோட்டை கொடு என் பிடுங்கி இருக்கிறார்கள். கை கலப்பு, ஒருவருக் கொருவர் திட்டு, அடி. பள்ளி தலைமை ஆசிரியரிடம் சொன்னது நான் இல்லை என்றாலும் கேட்காமல் அடித்திருக்கின்றனர். உண்மை காரணம் வேறு ஏதோ, இன்று வரை தெரியாது. பார்த்த சாரதி மாமாவுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அவரைக் காணவே இல்லை. என் தம்பியும் அவர் ‘ யாரிடமும் சொல்லாதே நீயே சமாளி’ என்றாராம்.
ஒரு வாரம் சென்றிருக்கும். அவர் வந்தார். வேறு ஊருக்கு போகிறாராம். சமர்த்தா இரு குழந்தை என்றார் என்னிடம். எங்கிருந்தோ வந்தார், எங்களிடம் பரிவுடன் இருந்தார், எங்கேயோ கிளம்பி போய் விட்டார். யாருக்கு யார்?
2) மதிய நேரம் 11 மணி இருக்கும் —அமைதியாக இருந்த சூழ்நிலை – திடுமென ஒரு குரல் மத்ய ஸ்தாயியில் ஆரம்பித்து உச்சிக்குச் சென்றது ஹே,,காலே! அதே நிலையில் சில நிமிஷங்கள் இடைவெளி விட்டு து மர் ஜா என்று முடிந்தது. எதிர் மாடி வீட்டுப் பெண் தன் தம்பியை கூப்பிடுகிறாள். அவன் பெயர் காலு.
புது டில்லி – முதல் நாள் தான் வந்து இறங்கியிருக்கிறோம். ஒரு அரசு குடியிருப்பில் ஒரு பகுதி – இருவராக பகிர்ந்து கொள்ளுங்கள் என்று அரசே அங்கீகரித்திருந்ததாக சொன்னார்கள். அரசு வேலையில் இருப்பவராக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. ஒரே அறை, ஆனாலும் வசதியாக இருந்தது. நாட்டின் தென் பகுதியிலிருந்து கூட்டம் கூட்டமாக மத்திய அரசின் பரீட்சை எழுதி தேர்ந்தவர்கள் 50 களின் ஆரம்பத்திலிருந்து வந்து அலுவலகங்களில் சேர்ந்திருந்தார்கள். 60 களில் பெரும்பாலோர் தங்கள் ஊர்களுக்குப் போய் மனைவியை அழைத்துக் கொண்டு வந்து விட்டனர். அனைவருக்கும் வீடு இல்லை. வீட்டு வசதி செய்து தருவதாக அரசு அறிவித்திருந்தது. எனவே இந்த ஏற்பாடு. ஏன் எதற்கு என்று கேட்காமலேயே, தில்லி வருகிற மகிழ்ச்சியில் வந்த பல பெண்கள் ஏமாந்து போனார்கள். அது போன்ற குடியிருப்பின் ஒண்டு குடித்தனம் ஆரம்பித்திருந்த எனக்கு, ஓரளவே படித்த ஹிந்தி கை கொடுத்திருந்தது. . து மர் ஜா – என்றால் செத்து ஒழி என்று அல்லவா பொருள், திட்டு வார்த்தை – யார், யாரைத் திட்டுகிறாள். அந்த குடியிருப்பின் சொந்தக்காரரின் மகள் வந்தாள். என் திகைப்பைப் பார்த்து சிரித்து விட்டு, எதிர் மாடி வீட்டுப் பெண் தம்பியை செல்லமாக கண்டிக்கிறாள் என்று விளக்கினாள்.
எங்களுக்கு இடம் கொடுத்த கிஷோரி ஜா – kishori Jha- குடும்பம் பக்ரா நங்கல் அணை கட்டியபொழுது நிலம் கொடுத்தவர்கள். அந்த பகுதியில் பெரும்பாலோர் அவர்களைப் போலவே வந்தவர்கள் தான். சிலருக்கு டில்லி மத்திய அரசில் வேலை, சிலருக்கு கடைகள் என்று கொடுத்திருந்தனர். பஹாடி – என்பவர்கள். மலை ஜாதியினர். அவர்கள் பேசியது முழுக்க ஹிந்தியும் இல்லை பஞ்சாபியும் இல்லை. ஆனால் பல வருஷங்களாக டில்லியில் இருந்ததால், குழந்தைகள் ஹிந்தி பேசினர். அவர்களுக்கும் தில்லி புதிது.
தினமும் குளித்து ஈர உடையுடன் ராம சரித மானஸ் சில பாடல்கள் அதன் பொருளுடன் படித்து விட்டு தான் காலையுணவு சாப்பிடுவார் வீட்டின் தலைவர். மாலை அனைவரும் சேர்ந்து ஆரத்தி பாடலை பாடிக் கொண்டே ஆரத்தி எடுப்பர். என்னையும் அழைப்பார்கள். ஆரத்தி தட்டை கொடுப்பர். அவ்வளவு தான் வழிபாடு. ஆனால் இந்த வழி பாடு தான் தென் கோடியிலிருந்து வந்திருந்த எனக்கும் சற்று தள்ளி வடக்கில் உள்ள ஒரு மாகாணத்திலிருந்து வந்திருந்த அவர்களுக்கும் இடையில் பாலமாக இருந்தது. நான் பாடினாலும் கேட்பார்கள். பெரியவர்கள் இருவரும் பல விரதங்கள் இருப்பர். ஏகாதசி, சிவராத்திரி, ஸ்ரீ ஜயந்தி நாட்களில் இருவரும் நீராகாரம் மட்டுமே.
மெள்ள மெள்ள விவரங்கள் தெரிந்து கொண்டேன். இவர்களுக்கு கிடைத்த கடை கரி மண்டி, அந்த நாட்களில் தில்லியில் இந்த கரி அடுப்பு தான். காலையும் மாலையும் கும்மட்டி அடுப்பில் நிலக் கரியைப் போட்டு அது கனிந்து கனலாகும் வரை வீட்டுக்கு வெளியில் வைத்திருப்பர். மாலை நேரம் வீடுகளில் இருந்து சாரி சாரியாக புகை எழும்பி வானத்தை நிரப்பும். அதிக நேரம் இல்லை, அரை மணிக்குள் அனைத்து வீடுகளிலும் கனிந்த கங்குலுடன் தயாராகி உள்ளே கொண்டு செல்வர். பழைய வீடுகளில் மண் அடுப்பும் புகை போக்கியும் இருக்கும். அதைக் கற்றுக் கொள்ள சில நாட்கள் ஆயின.
கனிந்த பின் மள மளவென்று சமையல் ஆக வேண்டும். கல்லின் அடுக்கு மாறி விட்டால் பொத்தென்று விழுந்து அடுப்புச் சாம்பலில் தீ அணைந்து விடும். சில நாட்களுக்குள் எனக்கு அலுத்து விட்டது. கரி வந்த நாட்களில் அதை நாம் விறகு அடுக்குவது போல ஒரு இடத்தில் போட்டு வைப்பர்கள். அந்த வீடுகளில் அதற்கான பொந்து போன்ற இடம் இருந்தது. அதிலும் அந்த கரிப் பொடியை வீணாக்காமல் உபயோகிப்பார்கள். எனவே நாங்கள் ஸ்டவ் அடுப்புக்கு மாறி விட்டோம். காஸ் வந்த புதிது. ஒரே அறையில் காஸ் அடுப்பை மூட்டலாமா கூடாதா என்று வாக்கு வாதங்கள் நடக்கும்.
மலையில் வசதியாக வாழ்ந்தவர்கள். ஆப்பிள் தோட்டம், பரம்பரையாக வந்த வயல்கள். கோதுமை பயிர் என்று கூட்டுக் குடும்பமாக பத்து பெரியவர்களும் அவர்கள் குழந்தைகளுமாக வாழ்ந்த பெரிய வீடு. வீட்டுப் பெண்கள் உடைகள் தைப்பார்கள். பூ வேலை, குளிர் காலத்துக்கான ஸ்வெட்டர் போன்றவைகளை கை ஓயாமல் பின்னிக் கொண்டிருக்கும். குளிர் கால போர்வைகள் ராஜாய் என்பர். பஞ்சை அடைத்து நடுக்கும் குளிரில் அதனுள் நுழைந்து விட்டால் வெளியே வரவே மனம் வராது. அவர்களிடம் ஸ்வெட்டெர் போட கற்றுக் கொண்டேன். ஓயாமல் பின்னிக் கொண்டே இருப்பார்கள். நேர்த்தியான கை வேலை. பழக்கம். அறிந்து செய்பவர்கள் செய்தால் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம் போன்று இருக்கும். இது அனைத்து கலைகளுக்கும் பொருந்தும். பாடுபவர்களில் ஒரு சிலரே முன்னுக்கு வருகிறார்கள். வரைபவர்கள் அனைவருமா ரவி வர்மா ஆகிறார்கள்?
அரசு உத்யோகம், வீடு அவர்களுக்கு தாற்காலிகமாக அளிக்கப் பட்டிருந்தது, வேலையிலிருந்து ஓய்வு பெறும் வரை இருக்கலாம். தென் கோடியிலிருந்த வந்திருந்த அனேகர் இது போன்ற அறைகளை ஏற்றுக் கொண்டிருந்தனர். பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் வந்தவர்கள், நிறைய இருந்தனர். பலருக்கு வீடுகள் கட்டி கொடுத்திருந்தனர். கடை வீதிகள் refugee market என்றே நிறைய இருந்தன. அந்த வகையில் பார்த்தால் இந்த குடும்பத்தினருக்கு கிடைத்தது அல்பமே. அதனால் உலகம் அறியாத வீட்டு முதிய பெண்கள் நாங்களும் பிரிவினையால் வந்தவர்கள் என்றே எண்ணினர். அதற்கு ஏற்றாற் போல தென் கோடியில் பயங்கர பஞ்சம். விளைச்சல் பாதிக்கப் பட்டு பலர் தலை நகருக்கு வந்திருந்தனர். வீட்டு வேலைகள் செய்யவும், சிறு கடைகள் வைத்தும் கிடைத்த இடத்தில் குடிசைகள் கட்டிக் கொண்டு வாழ்ந்தனர்.
உணவு, உடையிலிருந்து, உடல் அமைப்பில் இருந்து, மொழியிலிருந்து முற்றிலும் வேறு பட்டவர்கள். அனைவரும் நவராத்திரி விரதம் இருப்பார்கள். அந்த வீட்டு அம்மாள், காலையில் அடுப்பு மூட்டியவுடன் முதல் ரொட்டி அடுப்புக்கு, (அக்னிக்கு) இரண்டாவது சில ரொட்டிகள் பசுவுக்கு, அடுத்து அந்தணருக்கு. அதன் பின் தான் வீட்டு அங்கத்தினர்களுக்கு ரொட்டி. அந்தணருக்கு என்று எடுத்து வைத்த ரொட்டியை வாங்கிக் கொள்ள ஒரு மாது பத்து மணி அளவில் வருவாள். என்ன அவசரம் ? மெதுவாக அலுவலகம் போனால் போதும். ஸ்கூல் போனார்களா என்பதே எனக்கு சந்தேகமாக இருந்தது. புஸ்தகங்களுடன் அவர்களைக் கண்டதே இல்லை. ஆங்கிலம் சரளமாக வர மறுத்தது. கணிதம் தகராறு. அதனால் அனேகமாக ஹிந்தியில் சரித்திரம் தான் படித்தார்கள். என்னிடம் ஆங்கிலம் கற்றுக் கொள்ள கடைசி பெண் வந்தாள்.
அவர்கள் மகளின் திருமணம் நான் கண்டதில் முதல் வட நாட்டு திருமணம். கடற்படையில் இருந்த மணமகன் என்பதால், மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தனர். அவர்கள் குடும்பங்களில் திருமண சம்பந்தங்கள் விவசாயம் அல்லது இராணுவ சேவை என்பது தான் அதிகம். இரவு கல்யாணம், காலையில் வீட்டுக்கு வெளியில் இருந்த வெற்றிடத்தில் டென்ட் போட்டு அலங்கரித்து, நாற்காலிகளும் மண மேடையும் தயாராகியது. இராணுவ பாண்டு வாத்தியமும், ஷெணாய் என்ற இந்திய வாத்யமும் மாறி மாறி இசைத்துக் கொண்டிருந்தனர். தென் பகுதியின் நாதஸ்வரத்துக்கு இணையான ஹிந்துஸ்தானி சாஸ்திரீய இசை இந்த ஷெணாய். பிற்காலத்தில் இந்த இசை மழை மண விழாக்களில் மறைந்து ஆட்டம் பாட்டமாக மாறி விட்டது. மாயா பஜார் படம் போல வண்ண விளக்குகள் சரம் சரமாக தொங்கின. குதிரையில் வந்த மணமகன் வரமாலா என்ற மாலை மாற்றுதலுக்குப் பிறகு ( பாதி) திருமணம் முடிந்தது போல அக்கம் பக்கத்தினர் உணவு மண்டபத்திற்கு படையெடுத்தனர். அத்துடன் அவர்களின் பங்களிப்பு முடிந்து விட்டிருந்தது. பரிசுப் பொருட்களை பெற்றோர் கையிலேயே கொடுத்தனர். இந்த வரவேற்பும், விருந்தும் முடிந்தபின் வைதீக காரியங்கள் தொடர்ந்து விடிகாலையில் மணமகளுடன் டோலி என்ற வழியனுப்பும் நடந்து முடிந்தது. முழு திருமணத்தையும் நான் வியப்புடனே கவனித்து உடன் இருந்தேன்.
புது தில்லி – ஸ்டேஷனில் இறங்கிய அந்த பெரியவர், தன் சிறிய கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார். அவர் மகன் அடையாளம் எழுதியிருந்தான். வீட்டைக் கண்டு பிடிக்க. ஏதோ ஒரு பஸ் நம்பர் அதில் ஏறி குறிப்பிட இடத்தில் இறங்கி கடை வாசலில் நில்லுங்கள், நான் வந்து அழைத்து போகிறேன். நிச்சயம் முக்கால் மணி நேரம் ஆகும். போன் வசதிகள் இல்லாத எழுபதுகளில் இது தான் வழி.
சொன்னபடி பஸ் நம்பரைப் பார்த்து ஏறினார், நியூ ராஜேந்திர நகர் என்று சொன்னதும் அவன் டிக்கெட்டை கொடுத்து விட்டு நகர்ந்தான். அவருக்கு கிடைத்த இடத்தில் அமர்ந்து வெளியில் நோக்கினர். மணி 6 கூட ஆகவில்லை இருட்ட ஆரம்பித்து விட்டது. குளிருக்கு அடக்கமான உடையை எடுத்து அணிந்து கொண்டார். பஸ் நிற்கும் இடம் வந்ததும் வெளியில் பார்த்து அந்த நகைக் கடையை அடையாளம் கண்டு கொண்டவர் இறங்கி ஓரமாக நின்றார்.
ஐந்து பத்து நிமிஷங்களுக்கு உள்ளாகவே அலுப்பும், குளிர் தாங்காமல் அமர்ந்தால் தேவலையே என்ற எண்ணமும் உந்த சுற்றும் முற்றும் பார்த்தார். ஒரு வாலிபன் தன் ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு கடைக்குள் போவான் போல இருந்தது. அவனிடம் விலாசம் எழுதியிருந்த சீட்டைக் காட்டி இந்த இடம் எங்கே இருக்கிறது சொல்ல முடியுமா? என்றார். அவனும் உடனே அடுத்து இருந்த நால்வழி சாலையைத் தாண்டினால் இரண்டாவது திருப்பம் என்று சொல்லி விட்டு நகர்ந்தான். போய்த் தான் போர்ப்போமே, நடந்தால் குளிர் குறைந்தது போல இருந்தது. அந்த வழியே நடக்க ஆரம்பித்தார். அந்த ஸ்கூட்டர் நம்பர் அவர் மனதில் ஏதோ சிந்தனையை கிளப்பி விட்டது. அப்பா பிறந்த வருஷம் 1930 – தொடர்ந்து நினைவுகள் அவரைச் சுற்றி வந்தது. போலும். சற்று தூரம் சென்றவர் அடுத்து வீடுகளே தென்படாமல் புதிதாக கட்டிக் கொண்டிருந்த வீடுகளும், காலி மனைகளுமாக இருக்க திரும்பி வந்த வழியே வந்தார். இருள் அதிகமாகி குளிரும் தாங்க முடியவில்லை.
கடை கண்ணாடியின் வழியே அதைப் பார்த்த பைக் பையன், சிரித்துக் கொண்டான். நேர் எதிர் திசையில் கை காட்டி விட்டிருக்கிறான். எதற்கு என்று அவனுக்கே தெரியவில்லை. அல்ப சந்தோஷம். அவர் திண்டாடுவதைப் பார்க்க. உள்ளே சென்றவன் சற்று பொறுத்து வெளியில் வந்தான்.
ஒரு கார் வந்து கடை வாசலில் நின்றது. அதிலிருந்து இறங்கியவர் யாரையோ தேடினார். வாசலில் காவல் இருந்தவனிடம் ஒரு பெரியவர் இங்கு வந்தாரா, எனவும் அவனும் அவர் போன திசையைக் காட்டினான். அவரைக் கண்ட பைக் பையனுக்கு உதறல் எடுத்தது. அவன் படிக்கும் காலேஜில் அவர் சில காலம் கணினி ப்ரொபசராக இருந்தார், பின் வேறு நல்ல வேலை கிடைத்து சேர்ந்து விட்டார் என்பது வரை தெரியும் கார் வாங்கும் அளவு வசதியாக ஆகி விட்டிருக்கிறார். நானும் என் ஓட்டை வண்டியும் – பொறாமையும், கையாலாகாத தன் மேலேயே கோபமாக வந்தது. காரை நிறுத்தி விட்டு அவர் முதியவரை தேடிக் கொண்டு சென்றார். அவரை சந்திக்காமல் வேகமாக சென்று விட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. வெளியில் வந்து ஸ்கூட்டரைக் கிளப்பி கொஞ்ச தூரம் போகும் முன் அது நின்று விட்டது. உதை உதை என்று உதைத்து தன் ஆத்திரத்தை அதனிடம் காட்டினான்.
வேகமாக கடந்து சென்ற காரில் அந்த ப்ரொபசரும், தான் வழி காட்டிய முதியவரும் இருந்ததைப் பார்த்தான். அவரும் தன் வீட்டிற்கு அருகில் தான் போகிறார். முதியவரும் அவனையும் பைக்கையும் பார்த்து ஏதோ சொன்னார். அந்த ப்ரொபசர் எட்டிப் பார்த்தார், எப்படி நினைவு இருக்கும். அவனுக்குத் தெரியுமா அவன் ஸ்கூட்டரின் நம்பர் அவர் மனதில் கிளப்பி விட்ட எண்ணங்களை. தன்னுடைய அப்பா பிறந்த வருஷம் என்று அதை வைத்து கண்டு கொண்டார் என்பதை. .
கல்லூரியில் அவன் சேர்ந்த ஆண்டில் கணிணி என்று ஆவலாக நிறைய பேர் சேர்ந்தனர். ஆனால் அதை கற்பிக்க யாரும் முன் வரவில்லை. அந்த துறையில் படித்தவர்களுக்கு உடனடியாக நல்ல வேலை கிடைத்த காலம். பலர் வெளி நாடு சென்றனர். இன்று எதிர்பட்டவரும் அந்த ஆண்டு கணிணி மேற்படிப்பு முடித்து வேலை தேடிக் கொண்டிருந்தார் என்று நினைவு. அவர் நடை சற்று பெண்கள் நடப்பது போல இருக்கும் அதை வைத்து அந்த வயதில் பொறுப்பில்லாமல் அவரை கிண்டல் செய்திருக்கிறான். சக மாணவர்கள் சிரித்தது மேலும் ஊக்கம் அளிக்க என்னவெல்லாம் செய்தோம் என்று நினைத்து பார்த்தான். அந்த ப்ரொஃபெசர், மூன்றே மாதங்களில் விலகி விட்டார். அடுத்து பல நாட்கள் மற்றொருவர் வரவும் இல்லை வந்தவர் இவரைப் போல் விஷயம் அறிந்தவராகவும் இல்லை. நீ அவரை கிண்டல் பண்ணியதால் தான் அவர் விட்டு விட்டு போய் விட்டார் என்று அன்று சிரித்த மாணவர்களே அவனை குற்றம் சாட்டினர். தனியார் பள்ளி. மிக குறைந்த ஊதியமே கொடுத்திருக்கின்றனர். அவர் ஏன் இருப்பார்? அவனைச் சுற்றி வந்த கூட்டமும் குறைந்தது. அந்த முன்று மாத ஊதியமும் கல்லூரிக்கே அன்பளிப்பாக கொடுத்து விட்டார் என்றனர். யாரைப் போய் பகைத்துக் கொண்டோம் என்று பின்னாட்களில் வருந்தியது அவனுக்குத் தான் தெரியும்.
மேற் படிப்பு படிக்க தேவையான மதிப்பெண்கள் இல்லை. கிடைத்த வேலையில் சேர்ந்தான்.
மன உளைச்சல் தாங்காமல் கவனமில்லாமல் டீவியில் யாரோ பேசிக் கொண்டிருப்பதை கேட்டான். இதுவரை சொன்னது காதில் விழவில்லை. இதுவரை இந்த நிகழ்ச்சிகளை கேட்டதும் இல்லை. பாகவதம் என்ற தலைப்பில் பேசுபவர் சொல்லிக் கொண்டிருந்தார்.
தான் செய்தது தப்பு என்று உணர்ந்தான் அரசன் பரீக்ஷித். காட்டில் வேட்டையாடி அலைந்து களைத்து தாகம் தாங்க முடியாமல் வாட்டியது. அருகில் நீரைத் தேடி சென்றான். ஒரு குடிலில் யாரோ ஒருவர் கண் மூடி தவம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா என்று கேட்டான். அவரோ கண் மூடி தவம் செய்து கொண்டிருந்தவர் பதிலே சொல்லவில்லை. அரசன், போகும் இடங்களில் எல்லாம் உபசாரமாக, மரியாதையாக பேசிக் கேட்டிருக்கிறான். இதென்ன அலட்சியம் என்று கோபம் வந்தது. கீழே மரத்தில் உலர்ந்த இலைகள் விழுந்து குப்பையாக இருந்தது. அதனிடையில் ஒரு பாம்பு செத்து கிடந்தது கண்ணில் பட்டது, ஏன் செய்கிறோம் என்று தெரியாமலே, அதை வில்லின் நுனியால் எடுத்து அவர் கழுத்தில் போட்டான். அதன்பின் வெளியேறி எப்படியோ தன் மாளிகை வந்து சேர்ந்தான். உடல் அசதி அடங்கி தாகமும் தீர்ந்தபின் நினைத்து பார்த்தால், தன் தவறு புரிந்தது. அவர் யாரோ, தவம் செய்கிறார். நான் ஏன் அவர் மேல் கோபம் கொள்ள வேண்டும். என்ன காரியம் செய்து விட்டேன், நானா செய்தேன் என்று தவித்தான்.
அதற்கு மேல் கேட்க பொறுமையில்லை. ஆமாம், என்னைப் போல செய்வதை செய்து விட்டு பின்னால் வருந்துகிறான். விளம்பரம் முடிந்து கதை தொடர்ந்தது. கேட்டான். அந்த ரிஷியின் மகன் இதை அறிந்தவன் மகா கோபம் கொண்டான். என்ன அகங்காரம். என் தந்தையின் மேல் பாம்பை போட்டிருக்கிறான். இது செத்த பாம்பு தான், ஆனால் உன்னை உயிருள்ள பாம்பு கடிக்கட்டும். இன்றிலிருந்து ஏழாவது நாள், உன்னை தக்ஷகன் என்ற பாம்பு கடித்து உயிரிழப்பாய் என்று சொல்லி நீரை கையில் வைத்துக் கொண்டு சாபம் இட்டான். வந்து தந்தையைப் பார்த்த சமயம் அவர் விழித்துக் கொண்டு இது என்ன , இதை யார் என் மேல் போட்டது என்றார். மகன் அழுது கொண்டே சொன்னான். அவன் சாபம் கொடுத்ததாகச் சொன்னதை அந்த பெரியவர் ஏற்கவில்லை. அரசன் தாகத்தால் தவித்து வந்திருக்கிறான். அவன் இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் பொறுப்பானவன். அவனுக்கு சாபம் கொடுத்தது தப்பு என்றார். உடனே அதை அரசனுக்கு தெரிவிக்கச் சொல்லி ஒருவனை அனுப்பினார்.
சுய பச்சாதாபத்தால் தவித்துக் கொண்டிருந்த அரசன் பரீக்ஷித் இந்த சாபத்தை ஏற்கிறேன். எனக்கு வேண்டும் இந்த தண்டனை. ஏழு நாட்கள் அவகாசம் கொடுத்ததே அதிகம் என நினைத்தான்.
மேலும் கேட்க பொறுமையின்றி டீவியை அனைத்து விட்டு யோசனையில் ஆழ்ந்தான்.
படிக்கிற நாட்களில் படிக்காமல் வீணே பொழுதைக் கழித்து விட்டு பரீட்சை சமயம் படிக்க புஸ்தகத்தைத் திறந்தால் எதுவும் புரியவில்லை. கோச்சிங்க கிளாஸ் – போனான். பண வசதி இருந்தது. உயர் தரம் என்று அறிவிக்கப் பட்ட இடத்தில் சேர்ந்தான். அங்கு போனால் யாரும் அவனுடன் பேசக் கூட தயாராக இல்லை. படித்துக் கொண்டோ எழுதிக் கொண்டோ இருந்தவர்கள் அவனை தவிர்ப்பதாகத் தோன்றியது. எப்படியும் பாஸாக வேண்டும் என்று தானும் படிக்க ஆரம்பித்தான். இதிலும் படித்து பாஸாகா விட்டால் என்ன செய்வது என்ற பயம் தோன்றியது. ரகசியமாக ஒரு மாணவன் ஒரு விஷயம் சொன்னான். ஒருவர் இவனைப் போன்ற மாணவர்களுக்காகவே ஆபத் பாந்தவனாக ஒரு உதவி செய்வார். பரீட்சை எழுதும் பொழுதே விடைகளை யாரும் அறியாமல் சொல்லித் தருவார் – பாஸ் மார்க் நிச்சயம் – மீதி நீயும் கொஞ்சம் முயன்றால் நல்ல மார்க் வாங்குவாய்.
கடலில் மூழ்குபவனுக்கு கட்டை கிடைத்து போல அவரை தொடர்புன் கொண்டான். அவரோ கண்ணுக்கு புலனாகாத பரமாத்மா போல இருந்தார். போனில் மட்டும் தான் பேச்சு. ஒரு நாள் தபாலில் ஒரு சிறிய இரண்டு பேனாக்கள் வைக்கும் பெட்டி வந்தது. அது ஒரு கருவி- எழுத்தில் விடை வரும் – சில நொடிகளே நிலைக்கும். அதில் அவனுக்கு புரியாத கணிணி பாட கேள்விகளுக்கு பதில் மட்டும் இருக்கும். அதை இயக்குவது பற்றி போனில் விவரங்கள் சொன்னார். ஒரு முறை தான் அது செயல்படும். கவனமாக கையாண்டு கொள்.
எல்லாம் சரியாகத் தான் இருந்தது. ரிஸல்ட் வந்த பிறகு தான் தெரிந்தது. அதுவும் கை கொடுக்கவில்லை என்பது. எங்கே தவறு. கண்டறியாத அந்த புது ஆசாமி ஏமாற்றி விட்டானா, தான் தான் சரியாக கவனிக்கவில்லையா? மற்ற பையன்கள் அவனளவு குழம்பவும் இல்லை. யாரிடமும் நெருங்கி பழகாமலே இருந்ததால், எவரையும் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் முடியவில்லை. ஒரு வருடம் வீண்.
அடுத்த வருடம் தானே முயன்று படித்து புரிந்தவரை எழுதினான். தலை தப்பியது. பட்டதாரி ஆனான். அது போதுமா? மேலும் கதை கேட்க திரும்பினான். முடிந்து விட்டிருந்தது.
ராகம்
தர்மவதி ராகம். ஆனந்தமாக இருந்தது. கோவிலின் உள்ளே நுழைந்ததும் பெரிய ரசிகர் கூட்டத்தையும் , மேடையில் பக்க வாத்யங்கள் வாசிப்பவர்களுமாக இருக்கும் என் நினைத்து உள்ளே நுழைந்தோம். தப்பாயிற்று. அவர் மட்டுமே. தானே தம்பூராவை மீட்டிக் கோண்டிருந்தார். எதிரில் ஒரு தாளம் அறிவிக்கும் மின்சார கருவி இருந்தது. ப்ரும்மாண்டமான பழைய கோவில். பல நடைகள் கடந்து சுவாமி சன்னிதி வந்து சேர்ந்தோம். ஒரு மூலையில் அவர் மட்டும் அமர்ந்து பாடிக் கொண்டிருந்தார்.
சுற்றுலா என்று கிளம்பினோம். தனியார் பஸ் இருபது பிரயாணிகள் மட்டுமே. நாசிக்கிலிருந்து கிளம்பி தண்டகாரண்யம், ராமாயணத்தில் அறிந்திருந்த சில இடங்கள். சீரடி சாய்பாபா அடுத்து கோதாவரி மேலும் சில நதிகள் உற்பத்தியாகும் மலை உச்சி – இளைய வயதினர் வேகமாக நடந்து மலை மேல் ஏறி விட்டனர். தொட்டில் போல உட்கார வசதியாக ஒன்று. அதில் ஏற்றிக் கொண்டு முன்னும் பின்னுமாக இருவர் ஒரு நபரை என்று தூக்கிக் கொண்டு சிலர் வந்தனர். உயரமான மலை – எங்கள் இருவரையும் பார்த்து பின்னாலேயே வந்தனர். ஏறிக் கொண்டால் தூக்கிக் கொண்டு போய் மலை உச்சியில் விடுவார்களாம். உச்சியில் சில தீர்த்தங்கள், பாண்டவர்கள் தங்கியிருந்த இடம் , கோமுகம் என்ற நதி உற்பத்தியாகும் இடம் பார்த்த பின் திருப்பி கீழே கொண்டு வந்து விடுவார்கள். வேண்டாம் என்றால் கேட்கவில்லை. பின்னாலேயே வந்தனர். பணம் கொடுப்பது பெரிதில்லை. தூக்க செய்வது மனதுக்கு பிடிக்கவில்லை, என்று நாங்கள் மறுத்தோம். அவர்கள் தங்கள் கஷ்டத்தைச் சொன்னார்கள். வாரத்துக்கு ஒருநாள் தான் இவர்கள் பணி. அன்றைக்கு இப்படி யாத்ரிகர்களை கொண்டு விட்டு அழைத்து வருவது தான் அந்த வாரம் முழுவதற்கும் – இருவரையும் இருவர் இருவராக தூக்கிச் செல்வார்கள். பின்னாலேயே சொல்லிக் கொண்டே வந்தனர். ‘அம்மா ஏறிக் கொள்ளுங்கள் நான் கொண்டு விடுகிறேன், அப்பா முன்னால் ஏறிக் கொண்டு விட்டார். ‘ மறுக்கவும் முடியாமல் ஒத்துக் கொண்டோம். விடு விடு என்று அந்த மலை மேல் சுமையையும் தூக்கிக் கொண்டு விரைவில் கொண்டு சேர்த்தனர். மலைமேல் தெளிந்த நீருடன் ஐந்து குளங்கள். நதிகளின் கோமுகம்,- பசுவின் முகம் அதிலிருந்து நீர் வருவது போல ஒரு சிலை – சின்னஞ் சிறு குழாயில் வருவது போல நீர் வந்து கொண்டிருந்தது. அதன் பின் நீர் சென்ற இடமே தெரியவில்லை. அந்த மலையின் பெயர் ப்ரும்ம கிரி. சஹயாத்ரி மலைத் தொடரின் ஒரு பகுதி. மலை பல பெருமைகள் உடையது. மலையின் நடுவில் இருந்து கங்கையாக வெளி வருவாள் என்றனர். தக்ஷிண கங்கா என்றும் இந்த நதிக்கு பெயர். நீளமான நதி பல மாநிலங்களை வளமாக்கிக் கொண்டு கடந்து செல்லும்.
இந்த நதிக் கரை பல பெருமைகள் உடையது. ஸ்ரீ ராமரும், லக்ஷ்மணனும் இந்த கோதாவரி நதிக் கரையில் தங்கியிருந்தனர். மகரிஷி கௌதமர் இதன் கரையில் வசித்தார். இதன் ஐந்து சிகரங்களும் சிவபெருமானின் ஐந்து முகங்களாகவும் அவைகளில் இருந்து கோதாவரியின் உப நதிகள் பாய்ந்து வருவதாகவும் நம்பிக்கை. இந்த விவரங்கள் அந்த சுமை தூக்கிகளான உள்ளூர் வாசிகள் சொன்னது. மலையில் நுழைந்து அருகில் சிறு சிவன் கோவில், சிவ லிங்கம் அருகில் கோதாவரி தாயாரின் சன்னிதி. மற்ற நாட்களில் மனித நடமாட்டமே இல்லை. கிரிப்ரதிக்ஷிணம் செய்யும் யாத்ரீகர்கள் வந்தால் தான் இவர்களுக்கும் வரும்படி. கீழிறங்கி வந்தவுடன், பணத்தை வாங்கிக் கொண்டு அவர்கள் விரைந்து இறங்கி மறைந்து விட்டனர்.
இன்னும் சிறிது தூரமே இறக்கம். இன்னும் சில படிகள் தான். மெதுவாக காலடி வைத்து ஜாக்கிரதையாகத் தான் இறங்கினோம். திடுமென ஒரு படியை விட்டு அடுத்ததில் கால் வைத்து தள்ளாடியதில், அப்பாவின் வலது கணுக்காலில் சுளுக்கு, நடக்கவே முடியவில்லை. மரியாதையாக மற்றவனை தூக்கச் சொல்லாமல் தானே ஏறியிருந்தால் இப்படி ஆகியிருக்காதா, அல்லது மேலே ஏறியபின் இந்த சுளுக்கு வந்தால் எப்படி இறங்கி இருப்போம்,
மற்ற பயணிகள் வேறு ஒரு இடத்துக்கு போய் விட்டிருந்தனர். த்ரயம்பகேஸ்வர் சன்னிதியில் சந்திப்பதாக ஏற்பாடு. மிகவும் சிரமத்துடன் மீதி படிகளைக் கடந்து, கிடைத்த ஒரு வாகனத்தில் கோவில் வந்து சேர்ந்தோம். இங்கு தான் களைப்பையெல்லாம் பறக்கடிக்கும் தர்மவதி ராகத்தை ஒருவர் பாடிக் கொண்டிருந்தார். நாங்கள் இருவர் தான் ரசிகர்கள். மகா ராஷ்டிர மாநிலத்தில் தென்னாட்டு சங்கீதம் – அதுவும் சிறந்த வித்வானாகவும் தெரிந்தார். பாடுபவரும் அந்த ஊரைச் சேர்ந்தவர் போல இல்லை. தென்னாட்டில் இருந்து வந்து குடியேறியவராக இருக்கலாம். முடியும் வரை கேட்டுக் கொண்டிருந்தோம். மற்றவர்களும் வந்து சேர்ந்தனர். எங்களைப் போல மற்றவர்கள் இசையை ரசிக்கவும் இல்லை, அதை ஒரு பொருட்டாகவே நினைக்கவும் இல்லை என்பது சற்று ஏமாற்றமாக இருந்தது. அவரை பாராட்டி விட்டு, விசாரித்தோம். பாட்டு பிடிக்கும். ஆனால் தொழில் அதுவே இல்லை. கிடைத்த நேரத்தில் கேட்டும், பாடியும் தானாக வளர்த்துக் கொண்ட ஞானம் தான். அவரை பொறுத்தவரை சங்கீதம் தானே உணர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறார். மற்றவர் கேட்டால் மகிழ்ச்சி. பொழுது போக்காக நினைக்காமல் நிறைய சாகித்யங்களை கற்றுக் கொண்டதாகச் சொன்னார். இதுவும் யோகம் தான். செய்வன திருந்தச் செய் – என்பது தானே யோகம்.
மேலும் தொடர்ந்தார். பாடனும் போல இருந்தால் இடம், சமயம் பார்க்காமல் வாயில் வந்து விடுகிறது. மற்றவர்களுக்கு பிடிக்கலாம், பிடிக்காவிட்டாலும் பெருந்தன்மையாக பேசாமல் இருக்கலாம். ஆனால் நம் மனசாட்சி உறுத்துகிறதே. நமக்கு பிடிக்காத சப்தம் நம்மால் எவ்வளவு நேரம் பொறுத்துக் கொள்ள முடியும். அது தான் பகவான் சன்னிதியில் பாடினால் நம் மனதுக்கும் திருப்தி,யாருக்கும் இடைஞ்சலும் இல்லை.
நான் சொன்னேன். என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எனக்கும் இந்த வழக்கம் உண்டு. தன் வீட்டில் காலை எழுந்தவுடன் பாடினால் கூட யாருக்கும் தடையாகத் தெரியாது. அதனால் தோன்றும் போது தானாக பால் பொங்குவது போல சர சரவென்று பாடி விடுவேன். எதோ கேட்ட பாட்டு அல்லது எப்படியோ நினைவுக்கு வந்த பழைய பாட்டு, அது மற்றவர்களுக்கு இடைஞ்சல் என்ற எண்ணமே வந்ததில்லை.
அவர் சொன்னார். மனதுள் ஒலி நாடா சுழலுவது போல தெரிந்த ராகங்கள், பாடல்கள் வந்து கொண்டே இருப்பது போல யோசியாமல் , முன் ஏற்பாடு இல்லாமல் நாதம் வெளி வர கொடுத்து வைத்திருக்க வேண்டும். நாத ப்ரும்மம் என்று சும்மாவா சொன்னார்கள். தாள வாத்தியங்கள் வாசிப்பவர்களை கவனித்து பார்த்தால் அவர்கள் விரல்கள் தாளம் போட்ட படியே இருக்கும். வெளி வேலைகள், பொறுப்புகள் இருந்த பொழுது இந்த தடுக்க முடியாத , தவிர்க்க முடியாத வெளிப்பாடு கொஞ்சம் குறைந்திருந்தது. ஏகாந்தமான இடங்களில் தான் மட்டுமே அனுபவிக்க கூடியது இசை மட்டுமே. தானே பேசிக் கொண்டு இருந்தால் எப்படி இருக்கும்? இசையானால் கூட தினசரி காதில் விழுந்தால், உள் உணர்வே ஏற்றுக் கொள்ளாது. வெளி உலக ஓசைகள் விதம் விதமாக தினம் கேட்கிறோமே, நம்மை பாதிக்காத வரை நாம் கேட்டாலும், நினைவில் நிற்பது இல்லை. இன்று நீங்கள் நின்று கேட்டதே இந்த இசைக்கு உங்கள் மன உணர்வுகள் பழகி விட்டிருக்கின்றன என்பதும், இதே அனுபவம் உங்களுக்கும் உள்ளது என்பதால் தானே.
பல நாட்களுக்கும் முன் எங்கள் ஊரில் ஒருவர் நைட் டூட்டி முடிந்து திரும்பும் பொழுது mouth organ- என்ற வாத்யத்தில் அந்த நாளைய சினிமா பாட்டு, அல்லது பாரதியார் பாடல்களை வாசித்துக் கொண்டே சைக்கிள் பின்னால் உட்கார்ந்து கொண்டு போவார். இரவின் நிசப்தத்தில் மிக இனிமையாக இருக்கும். அவருக்கு இறைவன் அருள், கலையை மட்டும் கொடுத்து விட்டு வாழ்வின் கஷ்டங்களுக்கு சமன் செய்து விட்டார் போலும். இல்லாவிடில் மில் தொழிலாளி அந்த அளவு ரசிக்கும் படி வாசிக்க முடியுமா?
*********