ஸ்ரீமத் பாகவதம் – பத்தாவது ஸ்கந்தம் – பூர்வார்தம்
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||
அத்யாயம்-1
அரசன் பரீக்ஷித் வினவினான்: தாங்கள் ஸூர்ய, சந்திர வம்சங்களைப் பற்றிச் சொன்னீர்கள். பரம அத்புதமான கதைகள். முனி சத்தம! தர்ம சீலனான யதுவின் வம்சத்தில் தோன்றிய விஷ்ணுவின் வீர செயல்களைப் பற்றிச் சொல்லுங்கள். யது வம்சத்தில் அவதரித்த பகவான் பூத பாவனன். விஸ்வாத்மா அவர் அவதரித்து என்ன செயல்களைச் செய்தார், அவைகளைச் விஸ்தாரமாகச் சொல்லுங்கள்..
ரிஷிகள் பாடும், புவியில் பிறவிக் கடலை கடக்கச் செய்யும் ஔஷதம், கேட்கவே மனோபிராமம், உத்தம ஸ்லோகன், எவருடைய குணங்களை வர்ணிப்பதில் அறிஞர்கள் அலுப்பதேயில்லையோ, அந்த சரித்திரத்தைச் சொல்லுங்கள். என் பாட்டனார்கள், போரில் அமரரான தேவ வ்ரதன் முதலிய அதிரதர்கள், தாண்டமுடியாத பெரும் கடல் போன்ற கௌரவ சேனையை சிறு பசுவின் கன்றின் ஓரடி போல எளிதாக கடந்து வந்தனர்.
துரோணரின் மகன் எய்த அஸ்திரத்தால் என் அங்கங்கள் பாதிக்கப் பட்ட சமயம், குரு, பாண்டவர்கள் வம்சத்து ஒரே சந்தான பீஜம் என்று என்னை தாயின் வேண்டுதலை ஏற்று என்னை அவள் கர்பத்திலேயே காப்பாற்றியவர்.
வித்வன்! மாயா மனுஷ்யன் அவருடைய வீர்யங்களைப் பற்றிச் சொல்லுங்கள். அகில உயிரினங்களின் உள்ளும் வெளியுமாக இருந்து காப்பவனாகவும், காலனாகவும் இருப்பவன். அம்ருதமும் அவன் தந்தால் தான். ம்ருத்யுவும் அவன் சங்கல்பமே.
ரோஹிணியின் மகன் ராமன், சங்கர்ஷணன், தேவகி கர்ப்ப சம்பந்தமும் எப்படி செய்ய முடிந்தது?பகவானான முகுந்தன்! தந்தை வீட்டிலிருந்து வ்ரஜ தேசம் ஏன் போனார்? அங்கு போய் தாயாதிகளுடன் அவர்களுக்கு தலைவனாக இருந்தார். எதற்காக?
வ்ரஜ தேசத்தில் வசித்த சமயம் மது புரியில், கேசவன், கம்சனையும் அவன் சகோதரனையும் வதைத்தார். தாய் வழி உறவினர்கள் ஆனாலும் வதம் செய்வதே உசிதமாக நினத்தவர். மனித தேகத்தை தானே எடுத்துக் கொண்டு, பல ஆண்டுகள், வ்ருஷ்ணிகளுடன், யது புரியில், வசித்த சமயம் பல பத்னிகளும் ப்ரபுவுக்கு வந்து சேர்ந்தனர். முனிவரே! இந்த கதைகளையும், மற்றும் எனக்குத் தெரியாத விஷயங்களையும், ஸ்ரத்தையுடன் கேட்கிறேன், எனக்குச் சொல்லுங்கள். பசி பொறுக்க முடியாமல் நான் தவிக்கவில்லை. சந்த்யா வந்தனம் முதலியவைகளை செய்ய முடியாமல் போனது என்னை வருத்தவில்லை. ஸ்ரீ ஹரியின் கதை என்ற அம்ருதம் தங்கள் வாயால் கேட்பதிலேயே என் மனம் நிறைந்துள்ளது.
சூதர் இதைக் கேட்டு, விஷ்ணுராதன் என்ற பெயரில் அறியப்பட்ட பரீக்ஷித் அரசனைப் பார்த்து பாராட்டினார். மிக்க நன்று, என்றவர், வியாசர் மகனை ஸ்ரீ சுகரை கலி கல்மஷம் போக்கும் ஸ்ரீ க்ருஷ்ண சரித்திரத்தைச் சொல்ல வேண்டினார். அவரும் பாகவத ப்ரதானமான பகவத் கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ராஜரிஷியே! உன் புத்தி நல்ல வழியில் செல்கிறது. வாசுதேவனின் சரித்திரத்தைக் கேட்க உன் பிறவி விருப்பம். வாசுதேவனின் கதையைச் சொல்பவர், சொல்லும்படி கேட்பவர், கவனமாக கேட்பவர் என்ற மூன்று விதமானவர்களையும், அவருடைய பாத தீர்த்தம் பாவனமாக்குவது போல புனிதமாக்கி விடுகிறது.
பூமியை ஆளும் தகுதி பெற்றவுடனேயே, தான் என்ற கர்வமும் வந்து சேருகிறது. அது போன்ற பல நூறு சேனைகளுடன், அரசர்களாக இருந்த தைத்யர்களால் பூமி பாரம் தாங்காமல், பூ தேவி, தேவாதி தேவனான ப்ரும்மாவை சரணம் அடைந்தாள். கண்களில் நீர் வழிய, பசு ரூபம் எடுத்துக் கொண்டு தீனமாக கதறியவளாக, அவரிடம் தன் கஷ்டத்தைச் சொன்னாள். ப்ரும்மா அதைக் கேட்டு, மற்ற தேவர்களுடன் அவளையும் அழைத்துக் கொண்டு, முக்கண்ணனும் உடன் வர, அழைத்துக் கொண்டு பாற்கடலின் கரையில் ஸ்வேத த்வீபம் என்ற இடத்தில், இருந்த பகவானைக் காணச் சென்றனர். அவரைக் கண்டவுடன் ஜகன்னாதனை புருஷ சூக்தம் சொல்லி வணங்கினர். வ்ருஷாகபி, -பக்தர்களுக்கு வேண்டியதை வர்ஷிப்பவர் – ( ஜகத்பதி ஆனவர் தைத்யர்களும் ஜகத்துள் அடக்கம் தானே, அவர்களை வதைப்பது ஏன் என்ற கேள்விக்கு தேவ பக்ஷபாதி என்பதால் தைத்யர்களை அடக்குவது அவசியமாகிறது என்று விரிவுரையாளர்)
ஆகாயத்தில் ஒலித்த குரலை, வேதங்கள் கேட்டு, தேவர்களுக்கு சொல்லியது. ஹே! அமரா:! பர புருஷனின் வாக்கை கேளுங்கள். இனியும் தாமதிக்க வேண்டாம். பூமியின் கஷ்டம், போக, உங்கள் அம்சங்களாக பூமியில் பிறவி எடுத்துக் கொள்ளுங்கள். காலம் வரும் சமயம் தன் சக்தியால், ஈஸ்வரேஸ்வரன், தானே பூமியில் பிறக்கும் வரை, காத்திருங்கள். வசுதேவனின் வீட்டில் சாக்ஷாத் பகவான் அவதரிப்பார். அவருக்கு பிரியமானதைச் செய்ய தேவலோக ஸ்த்ரீகளும் பிறக்கட்டும். அவர் பிறக்கும் முன்னே அவருடைய படுக்கையாக விளங்கும் ஆதி சேஷன், சங்கர்ஷணாக -பல ராமர்- வசுதேவர் மகனாக பிறப்பார். உலகை ஆட்டி வைக்கும் அவருடைய மாயா -அவளுக்கும் ப்ரபு தானே ஆணையிட்டு இருக்கிறார். காரியத்தை சாதிக்க உதவும் அவளும் பிறப்பாள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு அவர்களுக்கு கட்டளையிட்டு, ப்ரஜாபதியின் தலைவரான விபுவான பகவான் , பூமியை தன் இனிய வாக்கால் சமாதானம் செய்து விட்டு, தன் இருப்பிடம் சென்றார்.
ஸூரசேனன் என்ற யதுபதி, மதுரா என்ற நகரில் வசித்து வந்தான். மதுரா, சூரசேனா என்ற இரண்டு ராஜ்யங்களையும் பாலித்து வந்தான். அதனால் அனைத்து யாதவர்களுக்கும் அது ராஜதானியாக இருந்தது. மதுரா விசேஷமாக, பகவான் அவதரித்ததால் என்றும் ஸ்ரீ ஹரி அங்கு தங்கி இருக்கிறார். அங்கே இருந்த சௌரி-ஸூரசேனனின் மகன் வசுதேவன் தேவகியை மணந்தார். தன் மனைவியான தேவகியுடன் ரதத்தில் புறப்பட்டார். வசுதேவ- தேவகிக்கு வழி அனுப்ப, நானூறு பாரிபர்ஹம்- யானைகள், பொன்னால் அலங்கரிக்கப் ப்ட்டு, இருநூறு அஸ்வங்கள், ரதங்கள் அறுனூற்றுக்கும் மேல், சுகுமாரிகளான தாசிகள், இரு நூற்றுக்கும் மேல், நன்கு அலங்கரிக்கப்பட்டவர்களாக , தேவகன் பிரியமான தன் மகளுக்கு சீதனமாக கொடுத்தார். மங்களகரமாக சங்கமும் தூரிகளும், முருதங்கங்களும், துந்துபிகளுக்கு சமமாக முழங்கின. ப்ரயாண காலத்தில் வர-வதூக்களுக்கு மங்களம் சொல்லி வாழ்த்தினர். வழியில் ரதத்தின் கயிற்றை பிடித்தபடி சாரதியாக அமர்ந்திருந்த கம்சனை நோக்கி அசரீரி வாக்கு எழுந்தது. ‘அபுத-अबुध! முட்டாளே! இவளுடைய எட்டாவது குழந்தை உன்னைக் கொல்வான்’ என்றது. இதைக் கேட்டு அவன், போஜ வம்சத்தின் குலத்தை அழிக்கவே வந்தவன் போல பாபத்தைச் செய்ய துணிந்த அவன், தன் சகோதரி என்றும் பாராமல் தேவகியை கொல்லத் துணிந்து, வாளை வீசிக் கொண்டு அவள் கேசத்தை பற்றினான். நாகரீகமற்ற வெறுக்கத்தகுந்த இந்த செயலை செய்ய விடாமல், வசுதேவர், கொலை வெறியுடன் நின்றவனையும் சமாதானப் படுத்த முயன்றார்.
வசுதேவர் சொன்னார்: போஜ வம்சத்தின் புகழை வளர்க்க வந்தவன் நீ, ஊரார் போற்றும் சிலாக்யமான குணங்களுடன் சூரனாக அறியப்படுகிறவன், எப்படி உன் தங்கையைக் கொல்ல துணிந்தாய். பெண், விவாக சமயத்தில் என்றும் யோசியாமல் இது என்ன செயல்? வீரனே, பூமியில் பிறந்தவர்களுக்கு ம்ருத்யு கூடவே வரும். இன்றோ, நூறு ஆண்டுகளுக்குப் பிறகோ, ம்ருத்யு தான் உயிரினங்களுக்கு நிரந்தரமானது. அது பஞ்சத்வம்- ஐந்தாவது நிலை ( குழந்தை,பால,யௌவனம்,முதுமை – என்ற நான்கும் ) உடலை உடைய மனிதன் தன் வினைப் பயனுக்கு ஏற்ப தன் மறு பிறவியை, வேறொரு தேகத்தை அடைகிறான். அதில் அவன் செய்யக் கூடியது எதுவும் இல்லை. பழைய உடலை விட்டு புதிய உடலை ஏற்கிறான். ஒரு காலை ஊன்றி, ஒரு காலை முன் வைத்து மனிதன் நடக்கும் பொழுதே அவன் ஆயுளும் உடன் செல்கிறது.
கனவில் காணுவது போன்றது இந்த தேகம், கண்டதும், கேட்டதும் மனதில் உருவம் பதிகிறது. அதாவது இந்த தேகத்தை விடும் முன் அதன் அடுத்த தேகம் தீர்மானமாகி விடுகிறது. தெய்வ சங்கல்பத்தால், எங்கெல்லாம் இந்த பிறவியில் சஞ்சரிக்கிறானோ, மனம் பலவிதமாக சிந்திக்கவும், அறிந்து கொள்ளவும் ஐந்து விதமான போகங்களையும் அனுபவிக்கிறது. முக்குணங்களும் சேர்ந்து மாயையால் உண்டான தேகம் இது. பானையில் நிரம்பிய நீரில் தெரியும் சூரியனின் பிம்பம் காற்றினால் அசைவது போல தோற்றம் கொடுக்கும். வாஸ்தவத்தில் ஸூரியனின் அசைவு அல்ல அது. அது போல ஆசை முதலியவைகளால் மோகம் அடைகிறான். அசரீரி வாக்கு கண்டிப்பாக பலிக்கும். தேவகியை நீ கொன்றாலும் அடுத்த ஜன்மத்தில் அவள் மகனாக பிறப்பவன் உன் மரணத்துக்கு காரணமாக ஆவான். இது தான் ஜன்ம சக்ரம், சுழன்று கொண்டேயிருக்கும். மற்றவர்களுக்கு துரோகம் செய்து தான் தன் சுகத்தை அடைய வேண்டும் என்பதே சரியல்ல. துரோகம் செய்தது ஏதோ விதத்தில் திரும்ப உன்னையே தாக்கும். அதனால், நீ தீன வத்சலனாக உன் சகோதரி, சிறு பெண் என்று இவளைப் பார். எளியவள், உன் மகளுக்கு சமமானவள். கல்யாணி- இந்த சிறுமி, உன்னால் பாதுகாக்கப் பட வேண்டியவள். இவளைக் கொல்லாதே.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இப்படி பொறுமையாக சாம பேதங்களால் அறிவுறுத்திய பின்னும், கம்சன் பயங்கரனாக, தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை, அவனை மாற்றுவது இயலாது என்று அறிந்த ஆனக துந்துபி- வசுதேவரின் பெயர்- நடக்கிறபடி நடக்கட்டும் என்று விட்டு விட்டார். நம்மால் முடிந்தவரை இவனுக்கு புத்தி சொல்லி, மரணத்தை தடுக்கப் பார்த்தோம். இவன் திருந்தாவிடில், தேஹி- தேகத்தையுடைய ஜீவன்- அதன் தவறு இல்லை. இவனிடம் குழந்தைகளை கொடுத்து விடுவோம், இந்த எளிய பெண்ணான தேவகியை காப்பற்றுவோம். எனக்கு குழந்தைகள் பிறக்கலாம், பிறக்காமலும் இருக்கலாம், இந்த கம்சனே ஏதோ காரணத்தால் திருந்தலாம் அல்லது அவனே மரணமடையலாம், எந்த விதத்திலும் பிறக்கப் போகும் குழந்தைகளைத் தருவதில் தோஷமில்லை என்று தீர்மானித்தார். ம்ருத்யுவே அருகில் வந்தும் கூட மார்க்கண்டேயன் முதலானவர்களை விட்டது போல விடலாம். தெய்வ சங்கல்பம். எதிரில் இருப்பது மறையலாம், கண்ணுக்கு புலப்படாமல் இருந்தது திடுமென எதிரில் தோன்றலாம்.
மரத்தில் மறைந்திருக்கும் அக்னி ஏதோ ஒரு நிமித்தம் காரணமாக, அந்த மரத்தையே எரிக்கலாம். அது போல உடலுடனே வரும் ம்ருத்யு எந்த நிமிஷத்தில் எப்படி வெளிப்படும் என்பதை ஊகிக்க முடியாது. இது போல பலவும் நினைத்துப் பார்த்து கம்சனைப் பார்த்து கொடியவன், சற்றும் வெட்கமின்றி தன் கொடூரமான செயலைச் செய்யவே நிற்கிறான் என்று அறிந்து மனதில் கோபம் கொண்டாலும், வெளிக் காட்டிக் கொள்ளாமல், நிதானமாக அவனிடம் சொன்னார்.
வசுதேவர்: சௌம்யனே! உனக்கு இவளிடம் பயமில்லை. அசரீரி சொல்லியது போல இவளுக்கு பிறக்கும் குழந்தைகளை உன்னிடம் ஒப்படைக்கிறேன். அவர்களிடம் தானே உனக்கு பயம். – என்றார்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: கம்சன் அந்த சொல்லின் பொருளை உணர்ந்து ஏற்றுக் கொண்டான். சகோதரியைக் கொல்லாமல் விட்டான். வசுதேவரும் அவனுக்கு நன்றி சொல்லி வீட்டிற்குள் பிரவேசித்தார். காலம் செல்லச் செல்ல தேவகி ஆண்டு தோறும் ஒவ்வொரு மகனாக எட்டு பேரையும், ஒரு பெண் குழந்தையையும் பெற்றாள். முதல் குழந்தை பிறந்தவுடனேயே, வசுதேவர் வாக்குத் தவறாமல் கம்சனிடம் ஒப்படைத்தார். சாதுக்களுக்கு எது தான் தாங்க முடியாத கஷ்டம். வித்வான்களுக்கு எது அவர்களால் அடைய முடியாத தேவை. குணம் இல்லாத கெட்டவர்களுக்கு எது தான் செய்யக் கூடாத செயல். மன உறுதி உள்ளவர்களுக்கு எது தான் விட முடியாதது.
சௌரியின் நியாய உணர்வையும், வாக்குத் தவறாமையும் கம்சனுக்கு மகிழ்ச்சியளித்தன. சிரித்துக் கொண்டே இவ்வாறு சொன்னான். இந்த குழந்தையை எடுத்துச் செல்லுங்கள். இவனிடம் எனக்கு பயமில்லை. உங்கள் இருவருக்கும் பிறக்கும் எட்டாவது குழந்தை தானே என்னைக் கொல்லப் போகிறான் என்றான். சரியென்று சொல்லி வசுதேவர் குழந்தையை எடுத்துக் கொண்டு திரும்பினார். இவனை எவ்வளவு நம்புவது என்ற சந்தேகம் அடி மனதை குடைந்தது.
நந்தன் முதலானவர்கள், அவர்கள் வீட்டுப் பெண்கள் வ்ருஷ்ணி வம்சத்தினர். வசுதேவர் முதலானோர் தேவகி வீட்டுப் பெண்கள், யது குல பெண்கள், அவர்கள் அனைவருமே தேவதா ப்ராயா:- தேவர்களின் அம்சமாக பிறந்தவர்கள். இருவருடைய தாயாதிகளும், நண்பர்களும் கம்சனைச் சார்ந்து இருந்தனர். இதை கம்சனுக்குச் சொன்னவர் நாரதர். ஒரு சமயம் அவர் தன் ப்ரயாணத்தில், கம்சனை சந்தித்த பொழுது, பூமியின் பாரத்தைக் குறைக்க பகவான் அவதரிக்கப் போவதையும், தைத்யர்களை அழித்து தான் அதைச் செய்ய முடியும் என்றும் முன் நடந்த விஷயங்களைச் சொன்னார். முனிவர் நகர்ந்ததும், தேவகி யது வம்சத்தினள், அவள் வயிற்றில் பிறக்கப் போவது சாக்ஷாத் விஷ்ணுவே என்றும், அவராலேயெ தன் வதம் நிகழும் என்றும் ஊகித்தான். எனவே, தேவகியையும், வசுதேவரையும் கட்டிப் போட்டு சிறையில் இட்டு, பிறக்கப் பிறக்க குழந்தைகளைக் கொன்றான். உலகில் லோபியான அரசர்கள் இப்படித்தான் தாயை, தந்தையை, சகோதர்களை, நண்பர்களை, ரத்த வெறி கொண்டு கொல்கிறார்கள். .கம்சனுக்கு நினைவு வந்தது. முன்னொரு சமயம் தான் காலனேமி என்ற அசுரனாக இருந்ததும் பகவான் விஷ்ணுவால் வதம் செய்யப் பட்டதும். இதனால் பித்து பிடித்தவன் போல் யது வம்சத்தினர் அனைவரையுமே விரோதிகளாக க் கண்டான். தந்தை உக்ர சேனனையும் சிறையில் அடைத்தான். அந்த ராஜ்யத்தையும் சேர்த்து தானே ஆள ஆரம்பித்தான். மஹா பலசாலியாக ஆனான்.
(இதுவரை ஸ்ரீமத் பாகவத மஹா புராணத்தில், பெரியவர்களால் தொகுத்து அளிக்கப் பட்ட பத்தாவது ஸ்கந்த பூர்வார்தம் என்ற பகுதியில், ஸ்ரீ க்ருஷ்ண ஜன்மோபக்ரமம் என்ற முதல் அத்யாயம். ஸ்லோகங்கள் – 69)
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||
அத்யாயம்-2
ஸ்ரீ சுகர் சொன்னார்: ப்ரலம்பகன், சாணூரன், த்ருணாவர்தன், மஹாசனன், முஷ்டிக, அரிஷ்ட, த்விவித,பூதனா, கேசி, தேனுக, இவர்கள் மற்றும் அனேக அசுர ராஜ்யபாலகர்கள், பாண, பௌமன் என்பவர்களும் சேர்ந்து, யது குலத்தினரை வதைத்தனர். இப்படி துன்புறுத்தப் பட்டவர்கள் குரு, பாஞ்சால, கேகய நாடுகளுக்கு இடம் பெயர்ந்தனர். சால்வான், விதர்பான், நிஷதான், விதேஹான், கோஸலான் – இந்த ராஜ்யங்களிலிருந்தும் கம்சன் என்ற ஒரு தாயாதியால் பாதிக்கப் பட்டனர். அவனால் , தேவகியின் ஆறு குழந்தைகள் கொல்லப்பட்ட பின், ஏழாவது முறை தேவகி கர்பம் தரித்தாள். ஏழாவது வைஷ்ணவ தாமம் எனப்படும், அனந்தனுடைய – ஆதி சேஷனுடைய அம்சமாக அவள் கர்பத்தில் தோன்றினான். இதனால் அவள் மகிழ்ச்சியும், சோகமும் ஒரு சேர அனுபவித்தாள். விஸ்வாத்மா பகவானும். உலகில் கம்சனால் பயப்படும் தன் இனமான யாதவ ஜனங்களை காக்க யோக மாயையின் உதவியை நாடினார்.
‘தேவி, நீ அங்கு போ. பத்ரே! வ்ரஜ தேசம் கோபாலர்களால் நிறைந்தது. ரோஹிணி வசுதேவனின் மனைவி நந்த கோகுலத்தில் ஒளிந்திருக்கிறாள். மேலும் பலர் கம்சனிடம் பயத்தால் குகைகளில் வசிக்கின்றனர். தேவகியின் கர்பத்தில் சேஷன் என்ற என் அம்சமான தாமம் (தேஜஸ்) உருவாகியிருக்கிறான். அவனை எடுத்து ரோஹிணியின் வயிற்றில் வளரும்படி செய்.
அதன் பின், நானே என் அம்சமாக தேவகியின் மகனாக தோன்றுவேன், நீ அதே சமயம் நந்தபத்னி யசோதையின் மகளாக ஜனிப்பாயாக. உன்னை மனிதர்கள் சர்வகாமவரேஸ்வரி என்று பூஜிப்பார்கள். தூப தீபங்கள், உபசாரங்கள் செய்து சர்வ காம வர ப்ரதா என பூஜிப்பார்கள். உன்னை தேசத்தின் பல பாகங்களிலும் கோவில்கள் கட்டி பலவிதமான பெயர்களுடன் வணங்கி பூஜைகள் செய்வார்கள்.
துர்கா என்றும், பத்ரகாளி, விஜயா, வைஷ்ணவி, குமுதா, சண்டிகா, க்ருஷ்ணா, மாதவி, கன்யகா, மாயா, நாராயணி, சாரதாம்பிகே என்று அவள் பெயர்கள் ப்ரபலமாகும். கர்பத்தை மாற்றி வைத்த காரணத்தால் வசுதேவனின் மகனை சங்கர்ஷணன் என்பர். உலகில் மற்றவர்களை சந்தோஷமாக வைத்திருப்பவன் என்பதால் ராமன் என்றும் பலசாலியாக விளங்குவான் என்பதால் பலராமன் என்றும் அவர் பெயர் புகழ் பெறும்.
அந்த கட்டளையை ஓம் என்று சொல்லி ஏற்றுக் கொண்டு அதன் படியே செய்தாள். கர்பத்தை ரோஹிணியிடம் வைத்ததை அறியாத ஊர் ஜனங்கள், அஹோ, கர்பம் கலைந்து விட்டதே என்று புலம்பினர். விஸ்வாத்மாவான பகவானும் பக்தர்களுக்கு அபயம் அளிக்கும் வரதன், அம்ச ரூபமாக ஆனக துந்துபியின் மனதில் நிறைந்தார். அதனால் வசுதேவர் ஸுரியன் போன்ற பிரகாசமுடையவராக ஆனார். எதிர்க்க முடியாத பலசாலியாக, பார்த்தவர்கள் மரியாதையுடன் வணங்கும் படியான தோற்றம் கொண்டார். அதன் பின் ஜகன் மங்களமான அச்யுதனுடைய அம்சத்தை ஸூரசுதன்-வசுதேவரிடமிருந்து கர்பம் தரித்த தேவி தேவகி, மனம் மகிழ்ச்சியில் நிறைந்தது, ஆத்ம பூதனான, சர்வாத்மகம் ஸ்ரீ பகவானையே தன் வயிற்றில் தரித்த தேவகி, यथाऽऽनन्दकरं मनस्तः- ஆனந்தமாக உணர்ந்தாள். அந்த தேவகி ஜகன்னிவாஸனுக்கே இடம் கொடுத்தவள், தனிமையில் இருந்தாள். போஜேந்திரனுடைய சிறையில், அக்னி ஜ்வாலையை குடத்தில் அடக்கி வைத்தது போலவும், சரஸ்வதி கடாக்ஷம் பெற்றவன் தன் அறிவை பகிர்ந்து கொள்ள முடியாமல் – தகுந்த மாணவர்கள் கிடைக்காமல்- தவிப்பது போலவும் இருந்தாள்.
அவளை பார்த்த கம்சன் வியந்தான். இவளுக்கு எப்படி இவ்வளவு சோபை வந்தது? பிரகாசமாக தெரிகிறாள். இந்த வீட்டையே ஒளி மிகுந்ததாகச் செய்து விட்டாள். தானே சிரித்துக் கொள்கிறாள். நிச்சயமாக அறிகிறேன். என் ப்ராண ஹரனான ஸ்ரீ ஹரி இவன் கர்பத்தில் வந்து விட்டான். என் ஊர் இவ்வளவு செழிப்பாக இருந்ததே இல்லையே என்று வியந்தான்.
என்ன செய்ய வேண்டும் நான்? என் செல்வம் எதற்கும் உதவாது. என் சகோதரி, பெண், கர்பவதி, இவளைக் கொல்வது பாபம். என் பெயரும் புகழும் வீணாவது தான் மிஞ்சும். கூடவே என் ஆயுளும் முடியும். இப்படி எண்ணி மனம் கொந்தளிக்க செய்வதறியாது பிறக்கும் குழந்தையை எதிர் பார்த்து காத்திருந்தான், ஸ்ரீ ஹரியிடம் விரோதம் வளர்ந்தது பயத்தால். அமரும் பொழுதும், படுத்த பொழுதும், உண்ணும் பொழுதும், சுற்றி நடந்த பொழுதும், ஸ்ரீ ஹரியையே நினைத்திருந்தான். உலகமே ஹ்ருஷீகேசனாக தென்பட்டான். உலகில் ஸ்ரீ ஹரியே எங்கும் நிறைந்திருக்க கண்டான்.
ப்ரும்மா, பவன்-சிவ பெருமான், முனிவர் நாரதர் முதலான ரிஷிகள், தேவர்கள் அவர்களின் பரிவாரங்களோடு வந்து அழகிய வார்த்தைகளால் துதித்தனர்.
सत्यव्रतं सत्यपरं त्रिसत्यं सत्यस्य योनिं निहितं च सत्ये ।
सत्यस्य सत्यमतसत्यनेत्रं सत्यात्मकं त्वां शरणं प्रपन्नाः ॥ २६॥
சத்யமே உருவானவன் நீ இவள் கர்பத்தில் வந்திருக்கிறாய். சன்னிதானமும் நீயே. அனுக்ரஹமும் நீயே. உன் மாயையால் உயிரினங்களை சூழ்ந்து நிற்கிறாய். உன்னைக் காணும் அனைவரும் உன்னை அறிந்தவரில்லை.
பல விதமான ரூபங்களைத் தரித்தவன். ஆத்மா அறியாமை மிகுந்தது. அதன் க்ஷேமத்திற்காக , சராசரத்தின்- அசையும் அசையா பொருட்களின் நன்மைக்காக சரீரத்தை எடுக்கிறாய். சத்தான நல்லவர்களுக்கு சுகத்தைக் கொடுக்கும் உன் அவதாரம், கெடுதலையே நினைத்து கெடுதலையே செய்யும் உயிர்களுக்கு நன்மையாக இருப்பதில்லை.
அம்புஜாக்ஷ! அகில சத்வ தாமம்- உலகில் நன்மை என்று உள்ளது அனைத்திலும் உறைபவன், உன் சமாதி என்ற தன்மையால், ஒருவனின் மனதில் நிறைந்தால், அவன் உன் பாதமே பற்று கோலாக, பவாப்தி என்ற இந்த சம்சாரக் கடலை, சுலபமாக, ஒரு பசுவின் கன்று அதன் குளம்புகளின் இடைவெளி தூரமே என்பது போல கடந்து விடுகிறான்.
பலர் தங்கள் முயற்சியால் சாதனைகள் செய்து பந்தங்களிலிருந்து விடுபட்டவர்கள், தற்சமயம் உன் பதாம்போஜமே படகு, அதன் உதவியால் சுலபமாக செல்கிறார்கள், என்றால் அது தங்கள் அனுக்ரஹமே.
அரவிந்தாக்ஷ! உன்னை மதிக்காமல் தானாக முன்னேற நினைப்பவர்கள், சிரமப்பட்டு ஓரளவு சென்றதும் உன் பாதங்களை வணங்காததால் குப்புற விழுகிறார்கள்.
மாதவ! உன் பக்தர்கள் அதையறிந்து, சற்றும் அசையாத உறுதியுடன், உன் மார்கத்தில் செல்கிறார்கள். அதனால் உன் நட்பும் உன் பாதுகாப்பும் கிடைத்து பயமின்றி சஞ்சரிக்கிறார்கள். இடையூறுகளின் தலை மீது கால் வைத்து நடப்பது போல ப்ரபோ, உன் அருளால் கடக்கிறார்கள்.
பகவானே! நீங்கள் அருகில் இருக்கும் சமயம் சத்வமே விசுத்தமாகிறது- மேலும் சுத்தமாகிறது. உடல் படைத்த அனைவருக்கும் கிடைத்த உடல், வேத கர்மாக்கள், யோகம் , தவம், சமாதி இவைகளைச் செய்ய பயன் படுத்த வசதியாக உன் அருளால் அமைந்தது..
சத்வ குணம் இல்லையெனில், ப்ரும்மாவின் ஸ்ருஷ்டியில் அக்ஞானம், விக்ஞானம் என்ற பேதம் அறிவதும், அறியாமையை நீக்குவதும், தாங்களே. எப்படி அறிவோம் உங்களை? முக்குணங்களின் ப்ரகாசத்தால் ஓரளவு அனுமானிக்கிறோம். எதனால், எப்படி என்ற விவரங்களை தெளிவு படுத்துவது உங்கள் அருளே.
தேவா! உன் பெயர்களோ, ரூபங்களோ, உன் பிறப்பையோ, செயல்களையோ, எவரேனும் சாக்ஷியாக இருந்து விமரிசிக்க வேண்டுமா என்ன? மனதால், வாக்கால், உணர்ந்து அறியவேண்டிய உன்னை, உன் செயல்களில் உன் குணங்களில் தெரிந்து கொள்கிறார்கள்.
காதால் கேட்டும், பாதங்களைப் பற்றியும், மனதால் சிந்தித்தும், உன் பெயர்களை , மங்களமான ரூபங்களை தன் செயல்களின் இடையிலும் அனவரதமும் நினைத்திருப்பவர், மறு பிறவியை அடைவதில்லை.
ஹரே! அதிர்ஷ்ட வசமாக இவளுக்கு- தேவகிக்கு- உங்கள் பாத ஸ்பர்சம் கிடைத்துள்ளது. இதை விட வேறு என்ன வேண்டும்? ஆயுள் முழுவதும் வேண்டி நிற்பவர்களுக்கு கூட கிடைக்காத பாதங்கள். அதிர்ஷ்டவசமாக அழகிய உன் இருப்பால் இவள் மிக்க சோபை கொண்டவளாக இருப்பதைக் காண்கிறோம். பூமியும், தேவ லோகமும் அனுக்ரஹத்தால் நிறைந்து இருப்பதைக் காண்கிறோம்.
ஈசனே! காரணமின்றி இது நடக்க உன் விளையாட்டு என்றே நம்புகிறோம். தோன்றுதல், இருத்தல், மறைவு என்பது கூட எங்கள் அறியாமையால் நினைக்கிறோம். ஏனெனில் நீயே அபயம் அளிப்பவன். உன்னிடத்திலேயே அனைத்தும் ஆஸ்ரயித்து இருக்கின்றன.
மத்ஸ்ய, அஸ்வ, கச்சப, ந்ருசிம்ஹ, வராஹ, ஹம்ஸ,அரசனாக, மற்றும் பல அந்தணர்கள், முற்றும் அறிந்த ஞானிகளிடத்தில் செய்த அவதாரங்கள் – இவைகளால் எங்களை, மற்றும் மூவுலகையும் காக்கிறாய். தற்சமயம் ஈசனே, புவியின் பாரத்தைக் குறைப்பாய். யது வம்சத்தில் வந்த உத்தமனே, உனக்கு நமஸ்காரம்.
தாயே உனக்கு நமஸ்காரம். அதிர்ஷ்ட வசமாக உன் வயிற்றில் பர புருஷனான பகவானே தன் அம்சத்துடன் சாக்ஷாத்தாக வந்துள்ளான். எங்கள் நன்மைக்காக. தாயே போஜபதியிடம் பயப்படவே வேண்டாம். உன் மகன், முக்தி வேண்டுபவர்களுக்கு முக்தி அளிப்பவன். யது வம்சத்துக்கு எதிர் காலமே உன் மகன் தான்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு துதித்து போற்றி வணங்கி, இன்னமும் பிறக்காத குழந்தை ரூபத்தை வணங்கி ப்ரும்ம ஈசானன் முதலானோர் தங்கள் இருப்பிடம் சென்றனர்.
இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தத்தின் இரண்டாவதுஅத்யாயம். ஸ்லோகங்கள்-42
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||
அத்யாயம்-3
ஸ்ரீ சுகர் சொன்னார்: அதன் பின் கால தேவன் நல்ல நேரத்தை கணித்தான், பிறவியற்றவன் பிறக்க தகுந்த நேரம்- ஜன்ம நக்ஷத்திரம், சாந்தமான க்ரஹ தாரகைகளுடன் , திசைகள் ப்ரசன்னமாக, வானம் நிர்மலமாகவும், சந்திரன் உதிக்கும் நேரம், பூமி மங்களங்கள் நிறைந்து, புர, கிராமங்கள், வ்ரஜ தேசம் வளமாகவும், நதிகள் ப்ரசன்னமான நீருடன், குளங்களும், நீரில் பூக்கும் புஷ்பங்கள் மலர்ந்து லக்ஷ்மீகரமாக இருப்பதாகவும், பறவைகளும் வண்டுகளும் ரீங்காரமிட்டு நாதம் நிறைந்த வனங்களில் மரங்களும் பூக்களுடன், வாயு சுக ஸ்பர்சமாக வீசுவதாகவும், புண்யமான கந்தம் ஏந்தியதாகவும் சுத்தமாகவும் வீச, அந்தணர்களுடைய அக்னியும் சாந்தமாக அடங்கி இருந்து கனலாக மட்டும் இருக்க, அசுரர்கள் வெறுக்கும் சாதுக்களும், மனிதர்களும் மனம் ப்ரசன்னமாக மகிழ்ந்து இருந்த சமயம், திடுமென துந்துபிகள் முழங்கின. பிறவியற்ற முழு முதற் கடவுளின் பிறப்பை அறிவிக்கும் சங்கநாதம் எழுந்த து. கின்னர கந்தர்வர்கள் மகிழ்ந்தனர். சித்த சாரணர்கள், வித்யாதரர்கள், நடனமாடினர். அப்சரர்கள் வந்து சேர்ந்து கொண்டனர். தேவர்களும், முனிவர்களும் பூக்களை வர்ஷித்தனர். ஓடைகளும் அருவிகளும் மெள்ள மெள்ள கடலின் ஓசையுடன் சேர்ந்து பாடுவது போல ஒலி எழுப்பின. இரவில் தமஸ்- இருட்டு பரவி இருந்த வேளையில், ஜனார்தனன் பிறக்கும் சமயம் தேவகியிடம், அவளே தேவ ரூபிணியாக இருக்க, ஸ்ரீ விஷ்ணு பகவான், சர்வ ஜீவன்களின் இதயத்திலும் இருப்பவன், ஆவிராசீத்- அவதரித்தார். கிழக்கில் பூர்ண சந்திரன் உதித்தது போல நிறைவாக தெரிந்த சோபையுடன் இருந்தார்.
तमद्भुतं बालकमम्बुजेक्षणं அத்புதமான பாலகன், அம்புஜம் போன்ற கண்ணினன்
चतुर्भुजं शङ्खगदाद्युदायुधम् । நான்கு கைகளும், சங்க கதை முதலிய ஆயுதங்களுடனும்
श्रीवत्सलक्ष्मं गलशोभिकौस्तुभं-ஸ்ரீவத்ஸ மணிஅடையாளமும், கழுத்தில் கௌஸ்துபமும்,
पीताम्बरं सान्द्रपयोदसौभगम् – பாற்கடலில் தோன்றிய அழகிய பீதாம்பரம்
महार्हवैदूर्यकिरीटकुण्डल- விலை மதிப்பற்ற வைதூர்ய கிரீடமும், குண்டலமும்
त्विषा परिष्वक्तसहस्रकुन्तलम् ।-அதன் ஒளியால் தெளிவாகத் தெரிந்த கேசம்
उद्दामकाञ्च्यङ्गदकङ्कणादिभि-பளீரென்ற ஒளிவேச இடுப்பில் காஞ்சி,அங்கத கங்கணங்கள்
र्विरोचमानं वसुदेव ऐक्षत ॥१०॥ இவற்றுடன் பிரகாசமாக தெரிந்தவனை வசுதேவர் கண்டார்.
ஆச்சர்யத்தால் கண்கள் விரிய, தன் மகனை நோக்கிய ஆனகதுந்துபி-வசுதேவர், மனம் கொள்ளா மகிழ்ச்சியுடன் க்ருஷ்ணாவதாரத்தை உவகையுடன் மெதுவாக தொட்டார். दा द्विजेभ्योऽयुतमाप्लुतो गवाम्?
புராண புருஷன் எனக் கண்டு கொண்ட மகிழ்ந்தார். உணர்ச்சியுடன் துதி செய்தார். வணங்கி கைகூப்பி நின்றவராக தன் உடலின் ப்ரகாசத்தால் அந்த சிறையின் இருட்டறையை ஒளி மிக்கதாக ஆக்கிக் கொண்டு மனதை சமாதானப் படுத்திகொண்டும், பயம் விலகியவராக அந்த சிசுவின் ப்ரபாவத்தை பார்த்து ‘பகவானே! உங்களை அறிவோம். சாக்ஷாத் பரம புருஷன். உலக இயல்புக்கு அப்பாற் பட்டவர். ஆனந்த ஸ்வரூபியான உங்களை அனுபவத்தால் மட்டுமே உணர முடியும். அனைவரின் அறிவையும்- மன ஓட்டத்தையும் காணக் கூடியவர் தாங்கள்.
உங்கள் மாயையால், இந்த ப்ரக்ருதி, இயற்கை அல்லது உலக இயல்புகளை முக்குணங்களோடு ஸ்ருஷ்டி செய்து, அதை உயிரூட்ட தானே அதனுள் நுழைந்தது போல வெளியில் காட்டினாலும் வெளியில் இருந்தே ஆட்டி வைக்கும் உங்கள் மாயை.
மாற்றமில்லாத இந்த பாவனைகள். இதையும் தாங்களே பல மாற்றங்களுடன் பலவிதமாக செயல் பட செய்தீர்கள். பலவிதமான வீர செயல்கள், ஆற்றல்கள், தனித்தனியாக பிரகாசிக்கவும், தனித் தனியாக உயிர்களையும் பிறக்கச் செய்கின்றன. அருகில் வந்து, உங்களைத் தொடரும் அணுக்கர்கள் போல. இவ்வாறு தாங்கள் புத்தியினால் அனுமானிக்க மட்டுமே முடிந்த லக்ஷணங்கள், மனதினால் மட்டுமே உணரக் கூடிய குணங்கள், என்ற வகையில் இருந்தாலும் குணங்களால் மட்டுமே தாங்கள் அல்ல. உள்ளும் வெளியும் தாங்கள் வெளிப்படையாகவே காணப் படுகிறீர்கள். சர்வாத்மனாக, அனைத்திலும் உள்ள ஆத்மாவாக இருப்பது தாங்களே. யாராவது உங்களைத் தன் ஆத்மா காணும்படி கண் முன் தெரிகிறார் என்று சொன்னால், அவருடைய கணிப்பு அர்த்தமற்றதே. அவசியமற்ற விவாதம் தவிர, அறிவுடமையும் அல்ல, நன்மை பயப்பதும் இல்லை, மற்ற சுய புத்தியுடையவர்கள் அதை அங்கீகரிப்பதும் இல்லை.
விபோ! தங்களிடமிருந்து தோன்றியதே, இந்த ஜன்மா, ஸ்திதி, லயம் என்று சொல்வார்கள். அவர்களின் அறிவுக்கு எட்டியது அவ்வளவே. தாங்களே ஈஸ்வரன், முக்குணங்களோ, மாறுதல்களோ உங்களுக்கு இல்லை. உங்களை ஆஸ்ரயித்ததால் இந்த குணங்களும் பெரிதாக பேசப்படுகின்றன. சுயமாக அவைகளுக்கு எந்த திறமையும் இல்லை.
தாங்கள் மூவுலகமும் தங்கள் மாயையால் இருக்கச் செய்து, தங்கள் வர்ணம் வெண்மையாக சத்வ குணமாக, ஒரு யுகத்தில், அடுத்த யுகம், சிவந்த – ரஜோ குணம் நிரம்பியது, க்ருஷ்ண வர்ணம் தமஸ் என்ற குணம் அதிகமாக உலக அழிவை செய்யவும் பயன் படுத்துகிறீர்கள்.
விபோ! தாங்களே இந்த உலகை காக்கும் பொருட்டு இந்த என் வீட்டில் அவதரித்துள்ளீர்கள். அகிலேஸ்வர! ராஜா எண்ணற்ற அசுரர்களை கோடி கணக்கான சேனை வீரர்களுடன் ஏவி பெரிய யுத்தம் செய்ய இருக்கிறான். எங்கள் வீட்டில் வந்து பிறந்து இருப்பதை பொறுக்க மாட்டான். சுரேஸ்வரா, தங்களுக்கு முன் பிறந்தோரை கொன்றவன், உங்கள் பிறப்பை அறிந்தவுடனேயே ஆயுதங்களொடு வந்து விடுவான்..
ஸ்ரீ சுகர் சொன்னார்: தேவகி தன் மகனை பார்த்தாள். மஹா புருஷ லக்ஷணங்களோடு, கம்சனிடம் இருந்த பயத்தால், அவனை மறைத்து அணைத்துக் கொண்டாள். ‘சாக்ஷாத் அத்யாத்ம தீபன், ஸ்ரீ விஷ்ணு தான் என்று அறிகிறேன். உங்களை எப்படி கேட்டிருக்கிறேனோ, அவ்யக்தன், அவ்யயன், ஆத்யன், ப்ரும்ம ஜ்யோதி, நிர்குணம், நிர்விகாரம், சத்வமே ப்ரதானமானவன், நிர்விசேஷம், நிரீஹம் என்று அதே போல காண்கிறேன்.
இரு பகுதிகளாக உலகம் தன் முடிவை அடையும் பொழுது, பஞ்ச பூதங்கள் ஒன்றாகி ஆதி இயல்புக்கு சென்றபின், வெளிப்படையாக தெரிந்தவையும், மறைந்திருந்தனவும் கால வேகத்தில் அடித்துச் செல்லப் பட, , தாங்கள் ஒருவரே மீதி, என்பதால் சேஷன் என்ற பெயரில் அழைக்கிறார்கள்.
வெளிப்படையாக தெரியாத உண்மையான பந்தோ! இந்த காலம் இதனுடைய செயலைச் செய்கிறது. இதனால் விஸ்வம்-உலகமே நிமிஷங்களாக வருடங்களாக முடிவில் மிகப் பெரிய தங்களுடைய ஈசானம் என்ற க்ஷேமதாமத்தை அடைகிறது, (உங்களிடம் லயித்து விடுகிறது.)
மனிதர்கள், மரணம், வியாதி என்று பயந்தவர்கள். எவ்வளவு ஓடி மறைந்து கொள்ள நினைத்தாலும், உலகம் முழுவதும் சுற்றி வந்தாலும் பயமின்றி இருப்பது இயலாது. உங்கள் பாத பத்மங்களை சரணடைந்து எதேச்சையாக, இன்று உலகமே கவலையின்றி இருக்கும். ம்ருத்யு அண்ட மாட்டான், விலகிச் சென்று விட்டான், உங்கள் வரவால்.
அப்படிப் பட்ட நீங்கள், கோரமான உக்ரசேன மகனிடமிருந்து எங்களைக் காக்க வேண்டும். பயந்து அடங்கி இருப்பவர்களை மேலும் பயமுறுத்தி சிரிக்கும் குணமுடையவன். த்யான விஷயமான தங்களுடைய இந்த ரூபத்தை, ப்ரத்யக்ஷமாக வந்த பரம புருஷன் என்பதை காட்டும் உருவத்தை, வெறும் மாமிச உடலாக காண்பவர்கள் முன் காட்டாதே, மறைத்துக் கொள்.
மது சூதன, என்னிடம் நீ பிறந்தது அந்த பாபிக்கு தெரியக் கூடாது. கம்சனிடம் நான் பயப்படுகிறேன். விஸ்வாத்மன்! உபசம்ஹர- இந்த உன் தோற்றத்தை மறைத்துக் கொள். அலௌகிகம்- உலகத்தில் இல்லாத உருவம்- சங்கமும், சக்ரமும், கதா, பத்மமும், லக்ஷ்மி தேவியுடன் சதுர் புஜனாக காட்சியளிக்கிறாய். அஹோ! உலகமே உறங்கும் இந்த இரவு வேளையில், பரம் பொருளான, புராணபுருஷன் தாங்கள், என் வயிற்றில் வசித்தது அது உலகத்தின் பாக்யமே.
ஸ்ரீ பகவான் சொன்னார். முன் யுகத்தில் நீங்கள் இருவரும் ப்ருஸ்னியாக, ஸ்வயம்பூ வாக இருந்த சமயம், இவர் சுதபா என்ற ப்ரஜாபதியாக இருந்தார். சிறந்த குணங்களுடன் களங்கமில்லாதவராக இருந்தார். உங்களை ப்ரும்மா ப்ரஜைகளை ஸ்ருஷ்டி செய்யச் சொல்லி கட்டளையிட்டார். நீங்களும் இந்திரியங்களை அடக்கி தவம் செய்தீர்கள். மழையோ, காற்றோ, வெய்யிலோ, பனி வாட்டியதோ, கடும் கோடை காலமோ, இருவரும் பொறுத்தபடி சுவாசம் அடக்கி, ப்ராணாயாமங்கள் செய்து கொண்டு, மன கட்டுப்பாட்டோடு உலர்ந்த இலை, காற்று இவைகளையே ஆகாரமாகக் கொண்டு உப சாந்தமான மனத்துடன் தவம் செய்தீர்கள். என்னிடம் வரங்களைப் பெற எப்பொழுதும் ஆராதனைகள் செய்தபடி இருந்தீர்கள். இப்படி கஷ்டமான தவம் செய்யும் உங்களுக்கு பன்னிரண்டு ஆண்டுகள் சென்றன. அப்பொழுது உங்களிடம் மகிழ்ந்து நான் இதே விதமாக உங்கள் முன் வரத ராஜனாக வந்தேன். நீங்கள் இருவரும் நானே உங்கள் மகனாக வேண்டும் என்று வரம் வேண்டினீர்கள். அதில் ஆச்சர்யம் என்ன? தம்பதி சந்ததி விரும்பி ஆரம்பித்த தவம், எந்த விதமான இக லோக சௌக்யமும் இன்றி தவம் செய்த பின் மோக்ஷமோ, பிறவி வேண்டாம் என்றோ கேட்காமல், என்னையே மகனாக பெற விரும்பி வரம் கேட்டீர்கள். அதுவும் என் மாயையே. அதே போல என்னைப் போன்ற மகனையே பெற்று மகிழ்ந்து இருந்தீர்கள். ப்ருஸ்னிகர்பன் என்ற பெயருடன் உங்கள் மகனாக இருந்தேன். அடுத்த பிறவியில், அதிதி-காஸ்யபராக நீங்களும், உபேந்திரனாக நான் உங்கள் மகனுமாக இருந்தோம். வாமன ரூபத்தால் வாமனன் என்றே அழைத்தனர். இது மூன்றாவது யுகம். அதே போன்ற உடலுடன் உங்கள் மகனாக பிறவி எடுப்பதே உசிதம் என்று உங்கள் மகனாக வந்துள்ளேன். இந்த ரூபத்தைக் காட்டியதே முன் பிறவிகளை உங்களுக்கு நினைவுறுத்தவே. இல்லாவிடில் சாதாரண மனித ஜன்மாவில் என்னைப் பற்றிய ஞானம் வருவதில்லை. நீங்கள் சில சமயம் புத்ரனாக எண்ணி, சில சமயம் ப்ரும்மமாக எண்ணி அன்புடன் இருந்தவர்கள். இந்த பிறவியுடன் என்னை வந்தடையுங்கள், சொல்லிக் கொண்டே இருந்தவர் மேலும் சொல்லலானார்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு சொல்லி விட்டு, சற்று நேரம் பேசாமல் இருந்தவர் மறுபடியும் மனிதக் குழந்தையாக ஆனார்.
அதன் பின் பகவான் தூண்டுதலால், மகனை அந்த பிரசவ அறையிலிருந்து தூக்கிக் கொண்டு, வெளியேற நினைத்த அதே சமயத்தில் யோக மாயா நந்தனுடைய மனைவிக்கு மகளாக பிறந்தாள். யோக மாயா பகவான் பிறந்த விஷயம் அறிந்து கொண்டவளாக துவார பாலகர்கள், ஊர் ஜனங்கள், அனைவரையும் தூங்கச் செய்தாள். வாசலில் போடப் பட்டிருந்த பெரிய தாழ்ப்பாள்கள் இரும்பு ஆணிகள், மற்றும் சங்கிலிகள் தானாக கழண்டு கொண்டன. க்ருஷ்ணனைத் தூக்கிக் கொண்டு வசுதேவர் அருகில் வரவும், ஸுரியன் உதித்தவுடன் இருட்டு மறைவது போல தாங்களாக திறந்து கொண்டன. மழை கொட்டியது. இடி இடித்து எதையும் யாரும் கேட்க முடியாதபடி செய்தது. சேஷன் வாசலில் வந்து நின்றான். மழைநீர் நனைக்காதபடி தன் படத்தை விரித்து குடையாக உடன் வந்தான். இந்திரன் ஏகமாக வர்ஷிக்க, யமனுடைய தங்கை யமுனா, நீர் சுழன்று வீசி அடிக்க கம்பீரமாக அலைகள் நீரை அள்ளி வீசிக் கொண்டும் நுரைகள் காற்றில் அலைய, பயங்கரமாக இருந்தாள். நதியில் நூற்றுக் கணக்கான சுழல்கள். அவள் நதியின் வெள்ளத்தினிடையே வழி விட்டாள். ஒரு சமயம் கடல் ஸ்ரீயின் நாயகன் ஸ்ரீ ராமனுக்கு வழி விட்டது போல.
சௌரி நந்த வ்ரஜம் வந்து சேர்ந்தார். அங்கும் கோபர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். யசோதாவின் இருப்பிடம் கண்டு கொண்டு அங்கு வந்தார். அவள் படுக்கையில் மகனை விட்டு விட்டு அவளுடைய மகளைத் தூக்கிக் கொண்டார். திரும்பி தாங்கள் சிறையிருந்த இடத்துக்கே வந்து சேர்ந்தார். தேவகியின் அருகில் படுக்கையில் விட்டு விட்டு, பழையபடி இரும்பு சங்கிலிகளால் கட்டப் பட்டவராக, அமர்ந்தார். இரும்பு கதவுகளும் மூடிக் கோண்டன.
இங்கு நந்த பத்னி யசோதா கண் விழித்தாள். அத்புதமான சிசுவை அள்ளி அணைத்துக் கொண்டாள். முன் கண்டது பெண் மகவு என்றோ, உடல் அயர்ந்து தான் தூங்கிய பொழுது நடந்ததோ அவள் நினைவில் இல்லை.
(இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில் தசமஸ்கந்தம்- பூர்வார்தம் என்ற பகுதியில் மூன்றாவது அத்யாயம். ஸ்லோகங்கள்-53)
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||
அத்யாயம்- 4
ஸ்ரீ சுகர் சொன்னார்: உள்ளும் வெளியும், ஊர் கதவுகள் முன் இருந்தது போல பூட்டப்பட்டிருந்தன. குழந்தையின் அழுகுரல் கேட்டு காவல் வீர்கள் எழுந்தனர். ஒரு சிலர் ஓடிச் சென்று தேவகி பிரசவித்த விஷயத்தை போஜ ராஜாவிற்கு சொன்னார்கள். அவனோ குழம்பியவனாக கவலையுடன் காணப்பட்டான். வேகமாக படுக்கையிலிருந்து எழுந்து காலனையே எதிரில் காண்பது போன்ற பயத்துடன், விரிந்த கேசமும், தடுமாறும் நடையும், செய்வதறியாத தவிப்புமாக ப்ரசவ அறை வாசலில் வந்து நின்றான். சகோதரனைப் பார்த்து தேவகி, தீனமாக கெஞ்சும் குரலில், பெண் குழந்தை இது, உனக்கு நன்மை உண்டாகட்டும். பெண் குழந்தையை கொல்லாதே என்று வேண்டினாள். இதற்கு முன் பிறந்த ஆண் குழந்தைகளைக் கொன்றதோடு போகட்டும், இதை விடு, ப்ரபோ! கடைசி குழந்தை இதை எனக்காக விட்டு விடு என்றாள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: தன் ஆடைக்குள் மறைத்து வைத்துக் கொண்டு அப்பொழுது தான் பிறந்த மகளை அழுதவளை லட்சியமே செய்யாமல், அவள் வேண்டுதலை புறந்தள்ளி, கைகளால் குழந்தையை அவளிடமிருந்து வெடுக்கென்று பிடுங்கி எடுத்துக் கொண்டு, அப்பொழுதுதான் பிறந்து கண் கூட விழிக்காத சிசுவை, கால்களை பிடித்து பாறையால் ஆன சிறை சுவற்றில் வீசி அடித்தான். – தன்னலமே பெரிதென்று நினைத்த அந்த சகோதரன். பாசமா, உறவா அனைத்தையும் வேரோடு வீசி எறிவது போல இருந்தது.
அந்த பெண் சிசு, அவன் கையிலிருந்து விடுபட்டவுடனே, வானத்தில் ஏறி நின்றாள். விஷ்ணுவின் சகோதரி. எட்டு புஜங்களிலும் ஆயுதங்களைத் தரித்தவளாக, திவ்யமான மாலைகள், ஆடைகளுடன், ஆலேபங்கள்-வாசனை திரவியங்கள் பூசிக் கொண்டவளாக, ரத்ன ஆபணரங்கள் ஜொலிக்க, வில், சூலம், அம்புகள், உறைக்குள் வாள், சங்க சக்ரம், கதா, பத்மம் இவைகளையும் தரித்தவளாக அதற்குள் அங்கு வந்து கூடி விட்ட சித்த சாரணர்கள், கந்தர்வர்கள், அப்சர கின்னர, உரகர்கள், தங்கள் பலம்-சைன்யத்துடன் அவளைப் போற்றி துதித்தபடி இருக்க, கம்சனிடம் தேவி சொன்னாள்: மந்த புத்தியே! என்னை கொன்று என்ன பயன்? உனக்கு காலனாக வருபவன் எங்கோ பிறந்திருக்கிறான். ஏற்கனவே உனக்கு சத்ருக்கள் உண்டு, அனாவசியமாக அவர்களைக் கொல்லாதே. இப்படி சொல்லிவிட்டு தேவி தேசத்தின் பல பாகங்களிலும் பல பெயர்களுடன் கோவில் கொண்டு தங்கி விட்டாள். மாயா, பகவதி என்று ப்ரசித்தி பெற்றாள்.
இதைக் கேட்டு கம்சன் ஆச்சர்யம் அடைந்தான். தேவகியையும், வசுதேவரையும் விடுவித்து விட்டு வணங்கி தன் செயலுக்கு வருந்துவன் போல அவளைப் பார்த்து ‘அஹோ! பகினீ!- சகோதரியே! மகா பாபி நான், மனிதனைக் கொல்லும் மாகா பாபம், உன் சிசுக்களைக் கொன்றேன். கருணையை இழந்தவன், உறவை எண்ணிப் பார்க்காத துஷ்டன், பாசமோ, நட்போ இல்லாதவன், எனக்கு எப்படி விமோசனம் கிடைக்கும்? எந்த லோகம் போவேன்? ப்ரும்மஹத்தி பீடித்தவன் அழிந்தேன் நான் என்று பெருமூச்சு விட்டபடி, தெய்வங்கள் கூட மனிதனைப் போலவே பொய் சொல்கின்றன. அதை நம்பி என் சகோதரியின் குழந்தைகளை வதைத்தேன்.
நீங்கள் இருவரும் உங்கள் குழந்தைகளை எண்ணி வருந்தாதீர்கள். பிறவி எடுத்த ஜீவன்கள், சதா ஏதோ விதத்தில் தெய்வாதீனத்திலேயே இருக்கின்றன. பூமியில், கிரஹங்கள், பஞ்ச பூதங்கள் தோன்றுவதும், மறைவதுமாக இருக்கின்றன, ஆனால் ஆத்மா அப்படியில்லை. அது அழிவதில்லை, பூ தேவி போல ஸ்திரமாக இருக்கிறது.
எப்படி, எவரால், எந்த விதத்தில் வித்தியாசம், எங்கிருந்து தன் தேகம் மாறுகிறது, தேகம் அடைவதும் அதிலிருந்து விடுபடுவதும்,இவை எல்லாமே- சம்ஸ்ருதி, விதி அல்லது சுழற்சியே. இது பிறளுவதேயில்லை. அதனால் பத்ரே! உன் தனயர்களை நான் வதைத்து விட்டேன் என்று துயரப் படாதே. ஏனெனில் நான் செய்தது என் வசத்தில் இருந்து செய்யவில்லை. தன்னையே உணர்ந்து கொண்டவனானேன். இதோ என்னைக் கொல்வான், ஹதோ ஸ்மி, நான் கொல்கிறவனாக இருக்கிறேன் என்றோ சொல்பவன் அவிவேகி. அறியாதவன், பாத்ய- அடிபடுபவன், பாதகன் அடிப்பவன் இரண்டுமே மெய்யல்ல.
நீங்கள் இருவரும் என்னை மன்னிக்க வேண்டும். சாதுக்கள், தீன வத்சலர்கள் என்று உங்களை அறிகிறேன். என்று கண்ணீர் பெருக்கியபடி, தன் மைத்துனரின் கால்களைப் பற்ரிக் கொண்டு கதறினான். கன்யாவாக தேவி சொன்னதைக் கேட்டதால், அவர்கள் கட்டுகளை நீக்கி சிறையிலிருந்து விடுவித்தான். தேவகிக்கும், வசுதேவருக்கும் தான் திருந்தி விட்டதை காட்டுவது பழையபடி சகோதரி என்ற அன்புடன் பேசினான்,
சகோதரன் வருந்துவதைக் கண்டு தேவகியும் ரோஷத்தை விட்டு இருவரும் சமாதானமானார்கள். ‘ மஹாபாக! இது தான் தேகம் படைத்த மனிதர்கள் விதி. தங்களுக்குள்ளே அடித்துக் கொள்கிறார்கள். யாருக்கு யார் உறவு, யாருக்கு யார் எதிரி என்பதே அறிவதில்லை. தான் பிறர் என்ற பேதம் அறிவை குருடாக்குகிறது. சோகம், ஹர்ஷம், பயம், த்வேஷம், லோப மோகம், மதம் இவைகள் சூழ, தங்களுக்குள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் பொழுது தங்கள் உணர்வுகளை பிரித்து அறியும் திறன் இல்லாதவர்கள் ஆகிறார்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: கம்சன் இவ்வாறு அவர்கள் சமாதானமாகி பதில் சொல்லவும், அவர்களிடம் விடை பெற்று தன் வீடு சென்றான்.
அன்று இரவு முடிந்து பகல் புலர்ந்ததும், தன் மந்திரிகளை அழைத்து மகா மாயா சொன்னதைச் சொன்னான்.
அந்த தைத்யர்கள், தேவர்களிடம் எப்பொழுதும் விரோதம் பாராட்டுபவர்கள், அதிக புத்தியுடையவர்களும் அல்ல, தேவர்கள் சத்ருக்கள் என்றே நினைத்து இருந்தவர்கள் கம்சன் செய்ததை ஏற்கவில்லை. அப்படியானால், போஜேந்த்ரா! இந்த நகரம், கிராமங்கள், வ்ரஜ தேசம் இங்கெல்லாம், இன்னமும் பல் முளைக்காத, பல் முளைத்த சிசுக்களையும் கூட இப்பொழுதே கொன்று விடுவோம். தேவர்கள் யுத்தம் என்றால் பயப்படுபவர்கள். உன்னுடைய வில் சத்தம் கேட்டாலே நடுங்கும் இனத்தவர், எப்பொழுதும் மனம் அலைபாய எப்பொழுது எங்கிருந்து ஆபத்து வருமோ என்று கவலையுடன் இருப்பார்கள். உன் சர-அம்புகளின் வரிசையால் தாக்கப் பட்டால், உடனே தங்கள் ஆயுதங்களைப் போட்டு விட்டு உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடி விடுவார்கள். சிலர் கைகூப்பியபடி தீனர்களாக வேண்டுவர். தலை கேசம் அவிழ்ந்து தொங்கும். இடுப்பு ஆடை முடிச்சவிழ்ந்து நழுவும். சிலர் பயந்து விட்டோம் என்று சொல்வர். உன் அஸ்த்ர சஸ்திரங்களை மறந்திருக்க மாட்டார்கள். க்ஷேம சூரா:- வசதியாக பாதுகாப்பாக தான் இருந்து கொண்டு வீரம் பேசுபவர்கள்- தன்னைத் தானே சூரன் என்று தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள்- (தேவர்களை இவர்கள் அப்படி சொல்கிறார்கள்,)- புத்தியில்லாமல் வீண் பேச்சு பேசுபவர்கள். தன் நலனே முக்கியம் என்று இருப்பவர்கள், அவர்கள் உன் முன் எம்மாத்திரம். ஹரியோ, சம்புவோ, காட்டில் திரியும் இந்திரனோ, அல்பவீர்யன் ப்ரும்மா, தவம் செய்யத் தான் தெரியும் அவருக்கு- எப்படியோ, சக்களத்தி புத்திரர்கள். பங்காளிகள், அவர்களை அலட்சியமாக நினைக்கக் கூடாது. வேரோடு அழிக்க வேண்டும். உனக்கு அணுக்கமாக உள்ள எங்களை நியமித்து அனுமதி கொடு. எப்படி உடலில் தோன்றும் வியாதி, அலட்சியம் செய்தால், மனிதர்கள் உடலில் அந்த புண் வேரோடி, சிகித்சைக்கு அடங்காதோ, ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டதன் பலன் அது. பெரும் விரோதியை, பலசாலி அது போல கவனிக்காமல் விடுவதில்லை.
இந்த தேவர்களுக்கு மூலமே விஷ்ணுதான். சனாதன தர்மமே அதன் வேர். அதற்கு ப்ரும்மா, பசுக்கள், அந்தணர்கள், தவம் யாகங்கள், தக்ஷிணைகள், அதனால் ராஜன்! அந்தணர்களை, ப்ரும்ம வாதிகளை, தபஸ்விகளை, யக்ஞ சீலர்களை, பசுக்களை கொல்வோம். ஹோம அக்னியில் போடுவோம். ஏனெனில், அந்தணர்கள், பசுக்கள், வேதங்கள், தவம், சத்யம், தம சம எனும் குணங்கள், ஸ்ரத்தா, தயை, திதிக்ஷா- அறிந்து கொள்ளும் ஆசை, -கல்வி- க்ரதுக்கள், இவை ஹரியின் சரீரத்திலிருப்பவை. அவன் தான் எல்லா தேவர்களுக்கும் தலைவன். அனைவரின் இதய குகையிலும் வசிப்பவன். அவனிடமிருந்து தேவர்கள் அனைவரும் தோன்றினார்கள். ஈஸ்வரன், சதுர்முகன், என்று பலர். இது தான் அவர்களை ஒழிக்க சரியான உபாயம். முதலில் ரிஷிகளை அழிப்போம்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: துர்மந்திரிகள் கம்சனுக்கு உபதேசித்தனர். யோசித்த கம்சனும் அதை ஹிதம் என்று எண்ணி ஏற்றுக் கொண்டான். ப்ரும்ம ஹிம்ஸா ஹிதம் என அவனை ஏற்றுக் கொள்ள வைத்தது எது? அவனை சுற்றி வளைத்திருந்த கால பாசம் தான் எனலாம். எனவே ஆணையிட்டான். துன்புறுத்துவதையே தங்கள் விளையாட்டாக எண்ணிய அவன் அடியாட்கள், இஷ்டம் போல் உருவம் எடுக்கக் கூடிய மாயாவிகள், தானவர்கள் இவர்களை சாதுக்களை வதைக்க ஆணையிட்டு விட்டு தன் க்ருஹம் சென்றான்.
மூடர்கள், இயல்பாகவே தமோ குணம் நிரம்பியவர்கள், எப்பொழுதும் அவர்களிடம் த்வேஷம் பாராட்டியே வந்தவர்கள், மும்முரமாக அதைச் செய்தனர். ஆயுள், செல்வம், புகழ், தர்மம், பிரஜைகளின் நல் வாழ்த்துக்கள், மனிதர்களின் ஐஸ்வர்யங்கள் அனைத்துமே அளவுக்கு அதிகமாக ஆனால் விபரீத பலனையே கொடுக்கும்.
இது வரை ஸ்ரீமத் பாகவதத்தின் பத்தாவது ஸ்கந்தத்தின் நாலாவது அத்யாயம். ஸ்லோகங்கள்-46.
||ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||
அத்யாயம் – 5
ஸ்ரீ சுகர் சொன்னார்: நந்தன், மகன் பிறந்த குதூகலத்துடன், வேதங்கள் அறிந்த பெரியவர்கள், மற்றும் அந்தணர்களை அழைத்து. தானும் ஸ்னானம் செய்து நல்ல ஆடைகளை அணிந்து கொண்டு ஜாத கர்மா ஸ்வஸ்த்யயனம் என்ற மங்கள காரியங்களையும், பித்ருக்கள், தேவர்கள் இவர்களுக்கான அர்ச்சனைகளையும் செய்தான். கணக்கில்லாத பசுக்களை கன்றுடன் அலங்கரித்த பின் தானம் செய்தான். எள் சாதம், அம்பரமாக குவித்து இருந்தது. காலத்தில் ஸ்னானங்கள் செய்து, சுத்தமாக சம்ஸ்காரங்களைச் செய்து, தவமும், யக்ஞமும், தானங்கள், மனம் நிறைய திருப்தியாக உண்டு, செல்வங்களையும் பெற்று, ஆத்மார்த்தமாக இருந்த அந்த அறிவுடைய பெரியோர்கள், அந்தணர்கள் மங்களங்கள் சொல்லி வாழ்த்தினர். சூதர்கள் எனும் பாடகர்கள், மாகத, வந்தி – இவர்களும், பாடுபவர்கள், காயகர்கள்-சாஸ்த்ரீயமாக பாடுபவர்கள், பாடினர். துந்துபிகள் முழங்கின. வ்ரஜ தேசம் கோலாஹலமாக இருந்தது. அலங்கரிக்கப் பட்ட வீடுகள் திறந்தே இருந்தன. வாசல்களில் தோரணங்களும், சித்ர வேலைப்பாடுகள் செய்த த்வஜங்கள், கொடிகள், தவிர புஷ்பங்களால், துளிர்களால் மாலைகள் கோத்து கட்டப்பட்டிருந்தன. பசுக்கள், கன்றுகள், அப்பொழுது தான் பிறந்த கன்றுக் குட்டிகள், மஞ்சளும் எண்ணெயும் கலந்து திலகம் இடப்பட்டு, அவைகளுக்கும் பலவிதமான மாலைகள், வஸ்திரங்கள் அணிவிக்கப் பட்டிருந்தன. கோபர்கள் விலையுயர்ந்த வஸ்த்ரங்கள், ஆபரணங்கள், இடுப்பில் கட்டும் கஞ்சுகம், இவைகளால் அலங்கரித்துக் கொண்டு ஊரில் வளைய வந்தனர். அனைவரும் நந்த கோபருக்கு உபாயனம் பரிசுப் பொருள்களை கைகளில் வைத்துக் கொண்டு வந்தனர். கோபிகள் யசோதாவின் சுக பிரசவம் பற்றி அறிந்து மகிழ்ந்தனர். குழந்தையை பார்க்க வந்த பெண்களும் தங்களை நல்ல வஸ்திரங்கள், கண் மை, வாசனை திரவியங்கள் இவற்றால் அலங்கரித்துக் கொண்டு வந்தனர். புது குங்கும வாசனையும், புஷ்பங்களின் வாசனையும் கலந்து வர மலர்ந்த முகங்களே தாமரையாக, யசோதை மைந்தனை காண ஆவலுடன் உடல் குலுங்க வேக வேகமாக நடந்தனர். சாரி சாரியாக யசோதையின் க்ருஹத்துக்கு வந்த கோபி ஸ்த்ரீகள், கழுத்து கொள்ளாமல் மணிகள் நிறைந்த மாலைகள். குண்டலங்கள், அழகிய வஸ்திரங்கள், கேசத்தில் பூக்கள் மாலைகளாக, அவை வழி முழுவதும் பூக்களை இரைத்துக் கொண்டு வர, நந்தனின் வீட்டிற்கு கூட்டம் கூட்டமாக விரைந்து வந்ததே என்றும் காணாத, காணமுடியாத காட்சியாக இருந்தது. चिरं जीव- சிரம் ஜீவ – நீடூழி வாழ்க என்று ஆசிகள் அளித்தனர். அத்துடன் வளர்ந்து அரசனாக ஆவாய் என்ற பாவனையில் எங்களையும் காப்பாய் என்றனர். மஞ்சள் பொடி கலந்த எண்ணெய், தெளித்து தாலாட்டுப் பாட்டுக்கள் பாடினர். சிலர் வாத்யங்கள் வாசித்தனர். விஸ்வேஸ்வரன் க்ருஷ்ணனாக நந்தனுடைய வ்ரஜ தேசம் வந்து பிறந்ததை மஹோத்சவமாக கொண்டாடினர். பரஸ்பரம் மகிழ்ச்சியுடன் ஒருவரையொருவர் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டனர். தயிர், பால், நெய் கலந்த நீரை ஒருவர் மேல் ஒருவர் தெளித்தும், வெண்ணெயை முகத்தில் பூசியும் விளையாடினர். பெருந்தன்மையுடைய நந்தன் அவர்களின் விளையாட்டை ரசித்தபடி, அவர்களுக்கு வஸ்திரங்கள், அலங்கார பொருட்கள், கோதனம், என்று சூதர்களுக்கும், மாகத வந்திகளுக்கும் நிறைய அளித்தான். தாங்கள் கற்ற வித்தையினால் ஜீவிப்பவர்கள் அவர்கள் என்பதால்.
யாருக்கு என்ன தேவை அல்லது விருப்பம் என்பதையறிந்து பரிசு பொருட்கள் கொடுத்தான். பகவான் ஸ்ரீ விஷ்ணுவின் ஆராதனைகளுக்காக, தனக்கு மகன் பிறந்த மகிழ்ச்சி இரண்டும் சேர நிறைய தானங்கள் செய்தான். ரோஹிணியும் வந்து இந்த கொண்டாட்டங்களில் கலந்து கொண்டாள். நல்ல வஸ்திரங்களும் , மாலைகள் ஆபரணங்களுடனும் வளைய வந்தாள். அன்றிலிருந்து வ்ரஜ தேசத்தில் அனைத்தும் செழிப்பாக சர்வ சம்ருத்தி – குறைவே இல்லாத செல்வ செழிப்பு – எனும்படி ஆயிற்று. ஸ்ரீ ஹரியின் நிவாசம், எனவே லக்ஷ்மி தேவி அங்கு நிரந்தரமாக விளையாடும் இடமாக விளங்கியது.
கோபர்களை காவலுக்கு நியமித்து விட்டு, நந்தன் கம்சனுக்கு வருடாந்திர கப்பம் கட்ட மதுரா நகரம் சென்றான். திரும்பும் சமயம் வசுதேவர் வந்து பார்த்து வாழ்த்தினார். மிக அன்புடன் அணைத்துக் கொண்டு, தேகத்துக்கு ப்ராணன் வந்தது போல, வீட்டிற்கு அழைத்து உபசரித்து, நலம் விசாரித்து, குழந்தையை ஆசீர்வதித்து விட்டு, ஒரு விஷயம் சொன்னார். சகோதரனே! அதிர்ஷ்டவசமாக, வயதாகியும் குழந்தை இல்லாமல் இருந்த உனக்கு மகன் பிறந்ததைக் கேட்க மிக்க மகிழ்ச்சி. உன் நல் வினைப் பயன் தான் இது. சம்சாரிகளின் ஆசை, இந்த குலத்தில் நாமே மீண்டும் பிறப்போம் என்பது போல சந்ததிகள் வேண்டுகிறார்கள். உனக்கும் அந்த பாக்யம் கிடைத்துள்ளது. துர்லபமான ப்ரிய தர்சனன்- காணவே பிரியமாக இருப்பவன், பிறந்து விட்டான்.
நீங்கள் ஓரிடத்திலேயே நிரந்தரமாக இருப்பதில்லை. நதியில் வெள்ளம் வருவதை, நீரின் ஓட்டத்திலிருந்து முன் கூட்டியே அறிந்து பாதுக்காப்பாக பசுக்களை காப்பவர்கள் நீங்கள். அவைகள் நலமா? அவைகளுக்கு தாராளமாக நீர், புல், தானியங்கள் கிடைக்கின்றனவா ? உன் பிரிய ஜனங்கள், நண்பர்கள் அருகில் இருக்கின்றனரா? சகோதரனே, உன் மகனை என் மகன் போல உணர்கிறேன். அவன் நலமாக வளரட்டும். அனைவரின் அன்புக்கும் பாத்திரமாகி கொஞ்சி குலாவி மகிழ்ந்து இருப்பான். ஏதோ ஒரு கஷ்டம் என்றால் உடன் இருக்கும் உறவினர்களும், நண்பர்களும் உதவுவார்கள்.
நந்தன் சொன்னான்: அஹோ! தேவகியின் குழந்தைகளை கம்சன் வதைத்தான் என்று கேள்விப் பட்டேன். ஒரு பெண் குழந்தை கடைசியில் பிறந்தது அதுவும் தேவலோகம் சென்று விட்டது. எதுவுமே நாம் அறியாத பரம்பொருளின் செயல்கள். அடுத்து என்ன என்பதை அறியாமல் தான் மக்கள் இருக்கிறார்கள். ஆத்ம தத்வம் அறிந்தவர்கள் தான் மோகம் அடைவதில்லை.
வசுதேவர் நந்தனை துரிதப் படுத்தினார். கம்சனுக்கு கப்பத்தைக் கட்டியாயிற்று. எங்களையும் பார்த்தாயிற்று. கிளம்பு. இங்கு அதிக நாட்கள் தங்க வேண்டாம். கோகுலத்தில் உன் தேவை இருக்கும். சீக்கிரம் கிளம்பு என்றார்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இப்படி கோபர்கள் அனைவரையும் சௌரி கிளப்பி, சீக்கிரம் ஊர் போய் சேருங்கள் என்று அனுப்பி வைத்தார். புரியாத வார்த்தைகள், தெளிவாக சொல்லாத செய்திகள், இவைகளுடனே அவர்களை சிந்திக்க வைத்து கோகுலத்துக்குச் செல்ல விடை கொடுத்தார்.
(இது வரை ஸ்ரீமத் பாகவத்தில் பத்தாவது ஸ்கந்தத்தின் ஐந்தாவது அத்யாயம் – ஸ்லோகங்கள்-32
||ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||
அத்யாயம்-6
ஸ்ரீ சுகர் சொன்னார்: வழியில் சௌரியின் வார்த்தைகளை திரும்பத் திரும்ப யோசித்து பார்த்த நந்தன் , அவர் ஏதோ சொல்ல வந்தார், தெளிவான சொற்களில் சொல்லவில்லை, ஏதோ விஷயம் இருக்க வேண்டும். அலட்சியப் படுத்தக் கூடாது என்ற முடிவுக்கு வந்தார். பகவான் ஸ்ரீ ஹரியை தியானித்தார். பகவானே, சரணம் எதுவும் ஆபத்தாக நடந்து விடக் கூடாது என்று வேண்டிக் கொண்டார்.
கம்சன் அனுப்பி வந்த பூதனா என்ற கோரமானவள், குழந்தைகளை கொல்வதே அவள் செயல். சென்ற இடங்களில் எல்லாம் சிறு குழந்தைகளைக் கொன்று விடுவாள், இதே காரியமாக நகரம், க்ராமங்கள் மற்றும் வ்ரஜ தேசங்களில் சுற்றுவாள். தங்கள் நித்ய காரியங்களைத் தவிர அதிக வெளி விஷயங்கள் அறியாத எளிய ஜனங்கள் உள்ள இடத்தில் யாது தானர்கள் என்ற அரக்கர்கள் தங்கள் கை வரிசையை காட்டுவர். பூதனாவோ வானத்திலும் சஞ்சரிக்கக் கூடியவள். ஒரு சமயம் நந்தனுடைய கோகுலம் வந்து சேர்ந்தாள். சாதாரண பெண் போல தன்னை மாற்றிக் கொண்டு சகஜமாக நடமாடினாள். தலையில் மல்லிகைப் பூ, பெரிய ஸ்தனங்களும் மெல்லிய இடையும், நல்ல ஆடைகளுடன், காதுகளில் ஓளி வீசும் ஆபரணம், கேசம் பள பளப்பாக முகத்துக்கு அழகூட்ட மெள்ள சிரித்தபடி, கண்களால் வ்ரஜ பெண்களை வசீகரமாக பார்த்தபடி, தன் பதியைக் காண வந்த லக்ஷ்மி தேவி போல இருந்தாள். எங்கு எந்த குழந்தை இருக்கிறது என்று தேடியபடி வந்தவள், எதேச்சையாக நந்த க்ருஹம் வந்தாள். உள் வரை சென்றவள், பாலனை, தன் நிஜ தேஜசை மறைத்துக் கொண்டு, படுக்கையில் பஸ்மத்தால் மூடப்பட்ட அக்னி போல உறங்கும் குழந்தையைக் கண்டாள். துஷ்டர்களுக்கு அந்தகனான பாலனை, அறியாமல் பாம்பை கயிறு என்றெண்ணி தொட்டுத் தூக்கியவனைப் போல் தூக்கினாள்.
சற்று தூரத்தில் இருந்த தாயார் யசோதை அவளை யாரென்று அறியாமல் யாரது என்று சந்தேகப் பட்டாலும், அவள் அலங்காரங்களை கண்டு நின்றாள். அவள் எதிரிலேயே தானாக குழந்தையைத் தூக்கி மடியிலிருத்தி, அணைத்தபடி தன் பாலை குடிக்கச் செய்தாள். பகவான் அவள் ஸ்தனங்களை இறுக பற்றியபடி, அவளுடையை உயிரையும் சேர்த்து குடித்தார். அவள் விடு விடு, போதும் என்று அலறினாள். மர்ம ப்ரதேசத்தில் வலி தாங்காமல், கண்கள் செருக, புஜங்கள் இற்று விழ, வேர்வை பெருகிய உடல் கீழே விழ, வலி தாங்காது அழுதாள். பெரும் குரலில் அவளின் அலறலில் மலைகளும், பூமியும், ஆடியது. வானமே க்ரஹங்களுடன் ஆட்டம் கண்டது. திசைகள் ஒளியிழந்தன. ஜனங்கள் தடுமாறி விழுந்தனர். பூமியில் வஜ்ராயுதம் விழுந்து விட்டதோ என்று பயந்தனர்.
நிசாசரீ, இவ்வாறு தவித்தவள், பூமியில் விழுந்தாள். கேசம் அவிழ்ந்து தொங்க, கை கால்கள் ஒரு பக்கம் இழுக்க, அந்த கோஷ்டம்- வீட்டின் முற்றம் – முழுவதையும் நிறைத்தபடி, தன் நிஜ ரூபத்தை அடைந்தாள். வஜ்ரத்தால் அடிபட்ட வ்ருத்திரன் போல கிடந்தாள். விழுந்த வேகத்தில் மரங்கள் பொடிப் பொடியாயின. மகத்தான அத்புதமாக இருந்தது. குறுக்காக விழுந்த அவள் தேகம், தண்டம் போன்ற நீண்ட பற்கள், குகை வாசல் போன்ற மூக்கு, மலை சரிவுகள் போன்ற மார்பகம், செக்கச் சிவந்த தலை கேசம், ரௌத்ரமாக ஆழ் கிணறு போன்ற கண்கள், நீர் வற்றிய குளம் போன்ற வயிறு, காணவே பயங்கரமாக இருந்தது. கோபிகளும் கோபர்களும் மிகவும் பயந்தனர். அவள் அலறியதிலேயே காதுகள் அடைத்து, இதயம் நடுங்கி தலை சுற்றியபடி நின்றிருந்தனர். அவள் மடியில் பயமின்றி விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கோபிகள் பயம் விலகாமலே நெருங்கி பற்றித் தூக்கிக் கொண்டனர். ரோஹிணியும் யசோதையும், த்ருஷ்டி கழித்தனர். அனைத்து வ்ரஜ பெண்களும் கோ முத்திரத்தால் குளிப்பாட்டி, பசுவின் காலடி தூசியால் சுற்றிப் போட்டனர். பன்னிரெண்டு ஸ்ரீ ஹரியின் நாமங்களைச் சொல்லிச் சொல்லி அங்கங்களில் காப்பு கட்டினர். கோப ஸ்த்ரீகள், கையில் ஜலத்தை வைத்துக் கொண்டு, பீஜ ந்யாசம் சொல்லி தங்கள் கைகளால் தடவி காப்பு கட்டினர்.
அஜன் உன் பாதங்களை, அணிமான் உன் முழங்கால்களை, துடைகளை அச்யுதன், இடுப்பை அஸ்வமுகன், வயிற்றை கேசவன், இதயத்தை ஈசன், கண்டத்தை விஷ்ணு, புஜங்களை உருக்ரமன், முகத்தை ஈஸ்வரன் தலையை காக்கட்டும். சக்ரீ- சக்ரதரன் முன்னால், கையில் கதையுடன் ஹரி பின்னால், பக்கங்களில் தனுஷும், வாளும், மது ஹா – மதுவை வென்ற பகவான், ஓரங்களில் சங்கமும் உருகா மேல் பக்கம் உபேந்திரன், தார்க்ஷ்யன் என்ற கருடன், பூமியில் ஹலதரன், புருஷன் எதிரில் இந்திரியங்களை ஹ்ருஷீகேசன், ப்ராணனை நாராயணன் காக்கட்டும். ஸ்வேத த்வீப பதி சித்தத்தை, மனதை யோகேஸ்வரன் காக்கட்டும்.
ப்ருஸ்னிகர்பன் புத்தியையை காக்கட்டும், ஆத்மாவை பகவானும், விளையாடுகையில், கோவிந்தனும், தூங்கும் பொழுது மாதவனும் காக்கட்டும். நடந்து செல்கையில் வைகுண்ட வாசியான ஸ்ரீபதி உன்னை காக்கட்டும். சாப்பிடும் சமயம் யக்ஞபுக் காக்கட்டும். க்ரஹங்களுக்கு பயங்கரமானவன் டாகினீ, யாது தானர்களிடமிருந்து காக்கட்டும். கூஷ்மாண்டா குழந்தைகளை படுத்தும் க்ரஹங்களிடமிருந்தும், பூத ப்ரேத பிசாசுகளிடமிருந்தும், யக்ஷ ரக்ஷர்களிடமிருந்து வினாயகன் காக்கட்டும். மேலும் தங்களுக்குத் தெரிந்தபடி வேண்டிக் கொண்டனர். விஷ்ணுவின் பெயரை சொன்னாலே, கனவிலும், குழந்தைகளை வயதானவர்களையும் படுத்தும் க்ரஹங்கள் விலகி விடும் என்றனர்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: குழந்தையிடம் இருந்த பாசத்தால், வர இருந்த பெரும் அபாயத்தால் பயந்து விட்ட தாய்மார்கள் காப்பு கட்டி முடிந்ததும் யசோதா கையிலெடுத்து அணைத்தபடி பாலூட்டினாள். அதே சமயம் நந்தன் முதலானோர் வந்து சேர்ந்தனர். பூதனாவின் மிகப் பெரிய தேகம் விழுந்து கிடப்பதைப் பார்த்து அதிசயித்தனர். இதைத்தான் ஆனக துந்துபி குறிப்பிட்டார் போலும். ரிஷி வாக்கு போலும் யோகேசன் போலும் அவர் முன் கூட்டியே அறிந்து விட்டிருக்கிறார்.
அதன் பின் அந்த பெரிய உடலை அனைவருமாக கோடாலியால் வெட்டி, வெகு தூரத்தில் கட்டைகளை அடுக்கி தஹன கர்மாவைச் செய்தனர். எரியும் சிதையிலிருந்து கிளம்பிய புகை அகரு வாசனையுடன் இருந்தது ராக்ஷஸியானாலும், க்ருஷ்ணனை மடியில் வைத்து பாலூட்டிய செயலுக்காகவே அவள் நல் கதியடைந்தாள். உலகில் குழந்தைகளை கொல்வதே தன் செயலானவள், ராக்ஷசி, அவைகளின் ரத்தமே உணவாக இருந்தவள், கொலை காரி அவள் ஹரியினால் மோக்ஷம் அளிக்கப் பட்டாள் என்றால். தாய்மார்கள் சிரத்தையுடனும் பக்தியுடனும் தங்கள் குழந்தைகளுக்காக வேண்டிக் கொள்வது என்ன தான் தராது. தாய்மார்கள் பால் தரும் பசுக்களைப் போன்றவர்கள். நன்மையே நினைப்பவர்கள். இந்த ராக்ஷஸி பகவானின் ஸ்பர்சத்தாலேயே நல் கதி அடைந்தாள் என்று சிலர். அனவரதமும் க்ருஷ்ணன் அருகில் இருந்து, அவன் க்ஷேமமே கவனமாக இருந்த கோகுலத்து தாய்மார்கள் சந்தேகமில்லாமல் மறு பிறவியின்றி பகவானை அடைவார்கள்.
தூபம் போன்ற சுகந்தமான வாசனையை, அனுபவித்தபடி, எங்கிருந்து இந்த மணம் வருகிறது என்று வியந்த கோபர்கள் வீடு வந்து சேர்ந்தவுடன் அனைத்து கோபிகளும் நடந்ததைச் சொன்னார்கள். பூதனை வந்தது அவள் மரணம், தெய்வாதீனமாக குழந்தை பிழைத்தான் என்றனர். குழந்தையை உச்சி முகர்ந்து அன்புடன் விளையாடி மகிழ்ந்தான். பூதனையின் மோக்ஷம் என்ற இந்த பகுதியை பற்றி கேட்டாலே, குழந்தை க்ருஷ்ணனின் அருளால், கோவிந்தனிடம் ஈடுபாடு கொள்வார்கள்.
இதுவரை ஸ்ரீமத் பாகவத்தில்,பத்தாவது ஸ்கந்தத்தின் ஆறாவது அத்யாயம்.ஸ்லோகங்கள்- 44
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||
அத்யாயம்-7
அரசன் பரீக்ஷித் வினவினான்: பகவான் ஹரீஸ்வரன், எந்தெந்த அவதாரங்களில் இது போன்ற காதுக்கு இனிமையான விளையாட்டுக்களை விளையாடியிருக்கிறார், ப்ரபோ ! எதைக் கேட்டாலே த்ருஷ்ணா முதலிய தவறான எண்ணங்கள் போகுமோ, மனிதர்கள் அதைக் கேட்பதாலேயே சத்வ குணத்தை பெறுகிறார்களோ, ஸ்ரீ ஹரியிடம் பக்தியும், அவரிடம் நட்பும் அதே போல அவரிடம் தோற்பதும் சுவாரசியமானவை. சொல்லலாம் என்றால் சொல்லுங்கள். ஸ்ரீ க்ருஷ்ணருடைய லீலைகளை மேலும் சொல்லுங்கள். எதற்காக மனிதனாக வந்தார். அதுவும் அந்த ஜாதி மக்கள் அரசனால் தாக்கப் பட்டு தவிக்கும் சமயம்.
ஔதனிக – ஒரு விசேஷம். உறவினர்கள், பந்து ஜனங்களை அழைத்து விருந்தளிப்பது. ஒரு சமயம் குழந்தையின் ஜன்ம தினத்தையொட்டி, கோகுலத்து பெண்கள் கூடி, வாத்யங்கள் வாசித்தும் பாடியும், அந்தணர்கள் வேத கோஷமும் ஒலிக்க, தன் மகனுக்கு அபிஷேகம் செய்தாள் யசோதா. நந்தனுடைய பத்னி, பூஜைகள் முடிந்து அந்தணர்கள் ஸ்வஸ்த்யயனம் என்ற ஆசீர்வாதங்களைச் செய்த பின், அவர்களுக்கு உபசாரங்களை குறைவின்றி செய்தாள். வீட்டு வேலைகளை, செய்து முடித்து சுத்தம் செய்தபின் பசுக்களை கவனித்து விட்டு மகனை தூங்கச் செய்தாள். . ஔத்தனிக்க என்ற அந்த விசேஷத்தில் கவனமாக இருந்தவள், வந்தவர்களை கவனிப்பதும், வரவேற்பதுமாக இருந்ததால். வ்ரஜ தேசத்து அனைவரும் குழுமியிருந்தனர். மகன் பசித்து பாலுக்காக அழுததைக்கூட கவனிக்கவில்லை. தன் அழுகையினூடே கால்களை உதைத்தபடி இருந்த சமயம், குழந்தையின் படுக்கையின் அடியில் இருந்த ஒரு சக்கரம், சிசுவின் பாதங்களால் அடிபட்டு நொறுங்கியது. சமைத்த அன்னங்கள் இருந்த பாத்திரங்களும், திரவமான உணவுப் பொருள்களும் சிதறின. சக்கரத்தின் அச்சு முறிந்து குவியலாக கிடந்தன. யசோதா முதலானவர், வந்திருந்த விருந்தினர்கள் அனைவரும் அதிசயித்தனர். சக்கரம் எப்படி தானாக உடையும்? கவலையுடன் நாலா புறமும் நோக்கினர். அந்த சமயம் அருகிலிருந்த சிறுவர்கள், தீர்மானமாகச் சொன்னார்கள். இந்த பாலகன் அழுது கொண்டே உதைத்தான், அதனால் தான் சக்கரம் உடைந்தது. சந்தேகமேயில்லை என்றனர். சிறுவர்கள் ஏதோ சொல்கிறார்கள் என்று பெரியவர்கள் அதை பொருட்படுத்தவில்லை. அபரிமிதமான பலம் உடையவன் அந்த பாலகன் என்பது அவர்களுக்குத் தெரியாதே. குழந்தையை எடுத்துக் கொண்டு சமாதானப்படுத்தி, பாலூட்டி, வந்திருந்த அந்தணர்களைக் கொண்டு மங்கள காப்பு கட்டச் சொல்லி கோபிகளுடன் அவனையும் மடியில் இருத்திக் கொண்டே வேலைகளை கவனித்தாள். கோகுலத்து ஜனங்கள், தங்களுக்குத் தெரிந்தபடி கண் த்ருஷ்டி வாராமல் காக்க ஏதேதோ செய்தனர், அந்தணர்கள் அக்னி வளர்த்தும், அர்ச்சனைகள் செய்தும் அக்ஷதைகளாலும், புல், புஷ்பங்களாலும் பாலகனை ஆசீர்வதித்தனர்.
யாராக இருக்க முடியும்? அசூயை, தம்பம் பொறாமை, ஹிம்சையில் நாட்டம் இவைகள் அந்த எளிய ஜனங்களிடம் எப்பொழுதுமே இருந்ததில்லை. அவர்கள் மனப் பூர்வமாக ஆசிர்வதிப்பது எந்த சமயத்திலும் பலனின்றி போனது இல்லை. கவலையுடன் குழந்தையை தூக்கிக் கொண்டு உத்தமமான த்விஜர்கள்- அந்தணர்களிடம் கொண்டு சென்று பவித்ரமான ஓஷதிகள் கலந்த ஜலத்தால், ஸ்னானம் செய்வித்தனர். மந்திரித்து காப்புகள் செய்தனர். நந்தனும் அவர்களுக்கு நிறைய தக்ஷிணைகள் கொடுத்தும், நிறைய அன்னதானம் செய்தும் அவர்களைக் கொண்டு மங்கள் ஆசீர்வாதங்களைச் சொல்லச் செய்தும், எதை செய்தால் நன்மை என்று தேடித் தேடிச் செய்தான். தன் மகன் நல்ல படியாக வளர வேண்டும் என்பதற்காக, நல்ல பசுக்கள், ஆடைகள், ஆபரணங்கள், தங்க மாலைகள், இவைகளை தானம் செய்தான். அந்தணர்கள், விஷயமறிந்தவர்கள் எது சொன்னாலும் உடனே செய்தான். என்றுமே அவர்கள் ஆசீர்வாதங்கள் பலனின்றி போனதில்லை என்பது வரை நிச்சயம்.
ஒரு சமயம் யசோதா கையில் குழந்தையைத் தூக்கிக் கொண்டு படி ஏற சிரமமாக உணர்ந்தாள். கனம் தாங்காமல் குழம்பினாள். இது என்ன சோதனை ஏதோ பாறையை தூக்குவது போல என்று நினைத்தவள் பூமியில் நிறுத்தி விட்டு, உள்ளே சென்றாள். மற்றவர்களை அழைத்து வர நினைத்தாள். அனைவரும் வெளியே சென்றிருந்தனர். கம்சனுடைய அடியாள், த்ருணாவர்த்தன் என்பவன், கம்சனால் அனுப்பப்பட்டு, அங்கு வந்தான், அமர்ந்திருந்த குழந்தையை புழுதியைப் பறக்கடிப்பது போல சுழன்ற காற்றாக அருகில் வந்து அபகரித்தான். கோகுலம் முழுவதும் ஒரே புழுதி படலமாக ஆகியது. அனைவரையும் கண்களில் மண் விழுந்தது போல மணலை வாரியடித்து, பெரும் ஓசையுடன் நால் திசையும் ஒரு முஹூர்த்தம் ஒரே இருட்டாக ஆக்கி என்ன நடக்கிறது என்று அறிய முடியாமல் அவர்களை மலைக்கச் செய்தான். யசோதா ஓடி வந்தாள். தான் வைத்த இடத்தில் மகனைக் காணாமல் தேடக் கிளம்பினாள். யார் என்ன எதிரில் இருப்பது என்ன என்பதைக் கூட அனுமானிக்க முடியாமல் புழுதியும் மண்ணும் பரவிக் கிடந்தது. இப்படி துஷ்டன் போல காற்று மணல் துகள்களை வாரியிறைத்தபடி, வீச, மகனைக் காணவும் முடியாத யசோதா தரையில் விழுந்து பலமாக அழுதாள். கன்றைத் தேடும் பசு போல மிக தீனமாக அலறினாள். அவள் அழு குரலைக் கேட்ட கோபியர் கண்களில் கண்ணீர் தளும்ப, தவித்த படி ஓடி வந்தனர். காற்று நின்ற பின்னும் நந்த சுதனைக் காணாமல் தேடலாயினர்.
த்ருணாவர்த்தன் சாந்தமாகி, க்ருஷ்ணனை அபகரித்துக் கொண்டு வான மார்கத்தில் செல்ல நினைத்தவனால் . கையில் இருந்த குழந்தையின் கனத்தால் நகரவே முடியவில்லை. இது ஏதோ சிறு குழந்தை நான் பலசாலி என்று நினைத்தானோ, கழுத்தைக் கட்டிக் கொண்டிருந்த குழந்தையை உதறவும் முடியவில்லை. தானும் அந்த குழந்தையோடு தடாலென்று பூமியில் விழுந்தான். திடுமென அந்தரிக்ஷத்தில் இருந்து விழுந்தவனை கோபர்கள் பார்த்தனர். ருத்ரனுடைய சரங்களால் முன்பு முப்புரம் சிதறி விழுந்தது போல இருந்தது. கோபர்கள் அவன் உடலில் இருந்து தொங்கிக் கொண்டிருந்த குழந்தையை கவனமாக இறக்கி அவன் ஸ்வஸ்தமாக இருப்பதையும் உறுதி செய்து கொண்டு, கொலைக் காரனிடமிருந்து பிழைத்து வந்து விட்டான் என்றும், மரணத்தின் வாயில் வரை சென்று தப்பினான் என்றும் கோபர்கள், கோபிகளும் மகிழ்ந்து, நந்தன் வீடு வரை வந்து அவர்களிடம் கொடுத்தனர். அஹோ! அத்புதம் இது. எப்படி இந்த ராக்ஷஸன் பாலனை தூக்கிக் கொண்டு போனான். நல்ல வேளை திரும்பக் கிடைத்தான். பாபி என்று அந்த ராக்ஷஸனைத் திட்டினர். நாம் செய்யும் நல்ல காரியங்கள், தவம், அதோக்ஷஜ அர்ச்சனம், பூர்தேஷ்ட தத்தம், மற்ற ஜீவன்களிடத்தில் சுமுகமாக அன்பாக இருந்தது இவையனைத்தும் சேர்ந்து தான் இந்த பாலகன் பிழைத்தான். அத்ருஷ்ட வசமாக, தன் பந்துக்களை வருத்தப்படாமல் நிம்மதியடையச் செய்து விட்டான். நடந்த பயங்கரமான செயலால், நந்த கோபர் திரும்பவும் வசுதேவர் எச்சரித்ததை நினைத்தார்.
ஒருசமயம் மகனை மடியில் வைத்துக் கொண்டு பாலூட்டும் போது பரிவுடன் அதன் முகத்தைப் பார்த்தவள் நடுங்கி விட்டாள். மெள்ள சிரித்த முகத்தை பார்த்து கொஞ்சியவள், அவன் கொட்டாவி விட்ட பொழுது வாயினுள், ஆகாயம், மேகங்கள், ஜோதி கணங்கள், – தாரகைகள், ஸூரியனும் சந்திரனும், வஹ்னி, ஸ்வஸன,அம்புதீ-சமுத்திரங்கள், தீவுகள், மலைகள், வனங்கள், அசையும் அசையா பொருட்கள் அனைத்தும், திடுமென விஸ்வம் முழுவதும் அதில் பார்த்தவள், வியர்வை பெருக கண்களை மூடிக் கொண்டாள். நிஜமா என்ற சந்தேகத்துடன்.
(இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தம் பூர்வார்தம் என்பதில் ஏழாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்- 37
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய
அத்யாயம்-8
ஸ்ரீ சுகர் சொன்னார்: கர்கர் என்பவர் யது வம்சத்தினரின் புரோஹிதர். யது வம்சத்தில் மிகுந்த தவமும், ஞானமும் உடையவர். வசுதேவரின் தூண்டுதலால் எதேச்சையாக வருபவர் போல வந்தார். அவரைக் கண்டதும் நந்தன் பகவானே அனுப்பியது போல மகிழ்ந்தான். கை கூப்பி வணங்கியபடி வரவேற்றான். காலில் விழுந்து வணங்கி அதிதி சத்காரங்களைச் செய்தான்.
வசதியாக அவர் அமர்ந்த பின், மெள்ள முனிவரிடம் ப்ரும்மன்! நீங்களே பூர்ணமானவர். உங்களுக்கு நான் என்ன கைங்கர்யம் செய்ய வேண்டும் என்று வினவினான். க்ருஹஸ்தர்கள் அதிலும் ராஜ கார்யமாக இருப்பவர்கள் தான் பல விதமாக சஞ்சலம் அடைவார்கள். பகவன்! ஏதாவது முக்யமான காரியமா? தாங்கள் ஜோதிடர்களில் ஸ்ரேஷ்டர். உங்களுக்கு தானாகவே, புலன்களை மீறிய ஞானம் , அதன் மூலம் பல விஷயங்களை அறிந்து கொள்ளும் சக்தி உண்டு. அந்தணர் அதிலும் எங்கள் குரு, ப்ரும்மவாதிகளுள் முதன்மையானவர், இந்த குழந்தைகளுக்கு ஜன்ம கார்மா- ஜாதக கர்மா- பெயரிடுதல் – என்ற ஸம்ஸ்காரங்களை செய்ய வேண்டுகிறேன்.
கர்கர் சொன்னார்: யது குலத்தின் ஆசார்யனாக எனக்கு அந்த கடமை உள்ளது. உலகில் அனைவரும் என்னை அறிவர். உன் குழந்தை தேவகியின் மகனாக இருக்க வேண்டும் என்று சொல்லப் படுகிறது. தேவகியின் எட்டாவது குழந்தை ஸ்த்ரீயாக இருக்க முடியாது என்று கம்சன் பாப புத்தி, நினைக்கிறான். ஆனக துந்துபி உன் சகா. கம்சன் ப்ரசவ அறையில் இருந்த தாதிகளை மிரட்டி கேட்டான். அதனால் என்னேரமும் இங்கும் வரலாம், அவனது சந்தேகத்துக்கு எல்லையே இல்லை.
நந்தன் வினவினான்: இந்த செய்தியைப் பற்றி எனக்கு தெரியாது. இந்த வ்ரஜ தேச ஜனங்களுக்கும் தெரியாது. பொதுவாக அந்தணர்களுக்கான சம்ஸ்காரம் செய்து விடுங்கள். ஸ்வஸ்தி வசனங்கள் சொல்லி எளிமையாக முடித்துக் கொடுங்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: கர்க முனிவரும் சம்மதித்து ரகசியமாக பாலகர்கள் இருவருக்கும் நாம கரணம் என்பதைச் செய்தார்.
கர்கர்: இவன் ரோஹிணி புத்திரன். நல்ல குணம் உடையவன். நட்பும், மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் இவனை ராமன் என்று அழைக்கிறேன். அதிக பலம் உடையவன் ஆனதால் பலன் என்றே யது குலத்தில் அறிவார்கள். அதனால் பலராமன். யது வம்சத்து குழந்தைகளிடமிருந்து மாறுபட்டு இருப்பதால் சங்கர்ஷணன் என்று பெயர் வைக்கிறேன்.
அடுத்தவன் ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு வர்ணமாக இருப்பவன், வெண்மை, சிவப்பு, மஞ்சள் என்று மூன்று யுகங்களில் இருந்தவன் தற்சமயம் க்ருஷ்ண- கரும் வர்ணத்தை தேர்ந்தெடுத்திருக்கிறான். முன்பே இவன் வசுதேவனின் மகனோ என்ற சம்சயத்தில் வாசுதேவன் என்று ஸ்ரீமான் வாசுதேவன் , என்று இவனை யாரென்று அறியாதவர்கள் அழைக்கிறார்கள். உன் மகனுக்கு பல நாமங்கள் உள்ளன. பலவிதமான ரூபங்கள். உன் மகனுக்கு அந்தந்த சமயத்தில் குணம் கர்மா இவைகளை வைத்து பெயர் வருகிறது. முழுமையாக அறிந்தவர் எவருமில்லை.
இவனால் கோகுலம் லக்ஷ்மீ கடாக்ஷம் பெறும். கோப கோகுல ரக்ஷகனாக விளங்குவான். இவனால் பலவிதமான நன்மைகளைப் பெறுவீர்கள். எந்த விதமான கஷ்டமோ, துக்கமோ, க்ஷண நேரத்தில் கடந்து வருவீர்கள். வ்ரஜபதே! புராணங்களில் ஒரு கதை- சாதுக்கள் திருடர்களால் சிரமப்பட்டனர். அராஜகம், நல்ல அரசன் இல்லாமை. காப்பவர் யாருமில்லாமல் செய்வதறியாது தவித்த சமயம் இவன் அந்த திருடர்களை எதிர்த்து ஜயித்தான். அதனால் மனிதர்கள் இவனை மிகவும் அன்புடன் போற்றுகின்றனர். தங்கள் தலைவனாக ஏற்றுக் கொண்டனர், அதனால் ஹே நந்தா! இவன் குணங்களில் நாராயணனுக்கு சமமாக இருப்பான். செல்வ செழிப்பிலும் புகழிலும் அதே போல சிறந்து விளங்குவான். இவனை ரகசியமாகவே வைத்திரு. உன் கண் காணிப்பிலேயே இருக்கட்டும். என்று சொல்லி விட்டு கர்கர் புறப்பட்டுச் சென்ற பின் நந்தன் தான் பூர்ணமாக ஆசீர்வதிக்கப் பட்டாதாக மிகவும் மகிழ்ந்தான்.
சில நாட்களிலேயே, ராம கேசவர்கள், இருவரும் கோகுலத்தில் முழங்காலிட்டு கைகளால் தவழ்ந்து செல்லும் பருவத்தையடைந்தனர். அவர்களின் பாத அடையாளங்களைப் பின் பற்றி மற்ற சிறு குழந்தைகள் தவழ்ந்து செல்லும் பொழுது வ்ரஜ தேசத்தின் கூச்சல்களைக் கேட்டு பயந்தவர்கள் போல தாய் மார்களை சரணடைந்தனர். மனதில் ரசித்தாலும், லோகத்தை அனுசரித்து அறியாத பாலகர்களாக பயந்தனர். அந்த தாய்மார்கள் இருவரும் அன்புடன் தூசு படித்த உடலை அப்படியே அணைத்துக் கொண்டு முகத்தை பார்த்து கொஞ்சியபடி, பாலூட்டி, அதன் ஒவ்வொரு செயலையும் ரசித்து, குட்டி பற்கள் முளைத்ததைப் பார்த்து பரவசமாக ஆனார்கள்.
குமார லீலைகளே காண அழகாக இருந்தன. கன்றுகளின் வாலை பிடித்துக் கொண்டு அதன் ஓட்டத்தோடு வீடு முழுக்க ஓடினர். அவர்களும் கூடவே ஓடி, ஒரு அளவுக்கு மேல் போகாமல் கட்டிப் பிடித்து சிரித்து மகிழ்ந்தனர்.
விளையாடிய படி மாடுகளின் அருகில் சென்றால் கொம்புகளால் முட்டிவிடுமோ என்று பயந்தனர். அக்னியின் அருகில் செல்ல விடாமல், பசுக்களின் வாயில் கை விட்டு அதன் பற்களை எண்ணும் போது தவறுதலாக பசுவின் பற்கள் பட்டு விடுமோ என்று அருகில் நிற்பர். ஆங்காங்கு ஜலத்தில், கத்தி போன்ற கூர்மையான பொருட்கள், முட்கள், இவைகளை விளையாட்டு மும்முரத்தில் ஓடும் குழந்தைகளின் கால்களில், உடலில் படாமல் காக்க இருவரும் பின்னாலேயே சென்றபடி இருந்தனர். அதனால் உடல் களைத்தாலும் பொருட்படுத்தவில்லை. மனம் நிறைந்து இருந்தது. சீக்கிரமே, இருவரும் வீட்டுக்கு வெளியிலும் கோகுலத்தில் நேராக நடக்கத் துவங்கினர்.
க்ருஷ்ணனும் ராமனும் அந்த வ்ரஜ பாலகர்களுடன், விளையாடி களித்தனர். இடையில் வரும் வ்ரஜ ஜன பெண்களை வம்புக்கு இழுத்தனர். அவர்களும் வந்து சேர்ந்து கொள்வர். அனைவரும் சந்தோஷமாக வலம் வருவர். குமார சாபலம், அந்த வயதுக்குரிய பேச்சை, செயலை ரசித்தாலும், தாயாரிடம் வந்து சொல்வர்.
எதிர்பாராத நேரத்தில் கன்றுகளை அவிழ்த்து விட்டு எங்களை துரத்த வைக்கிறான். நாங்கள் பயந்து ஓடினால் எல்லோருமாக சிரிக்கிறார்கள். சற்று தூரம் நாங்கள் ஓடிய பின் வந்து கன்றுகளை பிடித்துக் கொள்கிறான்.
தயிர், பால், இவைகளை நாங்கள் இல்லாத சமயம் எடுத்து சாப்பிட்டு விடுகிறான். வெண்ணெயை தானும் உண்டு மற்ற சகாக்களுக்கும் கொடுத்து தீர்ந்து விடுவான். நல்ல வேளை பாண்டத்தை உடைக்காமல் இருந்த படியே வைத்திருப்பான். கை நீட்டி கேட்பான். காலி பாண்டத்தை நாங்கள் திறந்து பார்க்கையில், எதும் இல்லையா என்று கோபித்துக் கொண்டவன் போல போவான்.
கைக்கு எட்டாத பொருட்களை பீடங்களில், உலூகலம்- உரல் போன்றவைகளில் ஏறி எட்டி உறியில் வைத்திருக்கும் பாணையில் துளையிட்டு பால் தயிர், வெண்ணெய் இவைகளை எடுக்கத் தெரிந்து கொண்டு விட்டான். கோபியர்கள் வீட்டு வேலைகளில் கவனமாக இருக்கும் சமயம் உள் அறை இருட்டில் தன் அணிகளின் மணிகளின் ஒளியில் இருப்பான். இது போல குற்றம் சொல்பவர்கள் சொல்வதைக் கேட்டு, தாய் மார்கள் இருவரும் குழந்தையை அழைத்தால், சாதுவாக, கண்களில் பயத்துடன், பெண்களைக் காண்பதைத் தவிர்ப்பவன் போல தாய் மார்களின் பின்னால் நிற்பவனை கண்டிக்க மனமின்றி சிரித்து மழுப்புவர்.
ஒரு சமயம் ராமன் மற்ற கோப சிறுவர்கள் அனைவருமாக விளையாடும் பொழுது, இவன் மண்ணைத் தின்றான் என்று அந்த சிறுவர்கள் தாய் யசோதாவிடம் சொன்னார்கள். அவளும் பயந்து அவன் கையைப் பிடித்து, மண் தின்றால் நல்லதல்லவே , என்று நினைத்து அதட்டும் குரலில் உண்மையா எனக் கேட்டாள். இந்த சிறுவர்கள் மட்டுமல்ல உன் அண்ணனும் சொல்கிறானே, எப்படி மண்ணைத் தின்றாய் என்றாள். பயத்தால் வெளிறிய முகத்துடன் ‘அம்மா நான் மண் திண்ணவில்லை, இவர்கள் எல்லோரும் அறியாமல் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது தான் சத்யம் என்றால் என் வாயில் பார் ‘ என்று சொல்லவும், வாயை திற என்று அவன் தாய் யசோதா சொல்லவும் பகவான் ஸ்ரீ ஹரி, வாயைத் திறந்தான்., அளவிள்ளாத ஐஸ்வர்யங்களை உள்ளடக்கிய தன் சரீரத்தின் பகுதியை, விளையாட்டாக தன் சகோதரன், மற்ற சிறுவர்கள் முன் வாயைத் திறந்து காட்டினான். யசோதா எட்டிப் பார்த்தாள். அதனுள் விஸ்வம் முழுவதும் உலகங்கள் வானம், திசைகள். மலைகளுடன் தீவுகள், சமுத்திரம், பூகோளம், தவிர, வாயு அக்னி இந்து, தாரகம் என்ற இவைகளுடன் வான வெளி, ஜோதி சக்ரம், சூரியன், தண்ணீர், தேஜஸ், எல்லையில்லாமல் பரந்த வானம், தேவலோகமும், வைகாரிக என்பவைகள், ஐம்புலன்களுடன் மனம், மாத்ரா, முக்குணங்கள், இவை அனைத்தும் விசித்ரமாக தெரிந்தன. அத்துடன் நிகழ் கால சிறுவர்களும், விரஜ தேசம், அதிலும் தான், தன் மகன் அனைத்தையும் அந்த திறந்த வாயினுள் கண்டவள், திகைப்பும், கனவா நனவா என்ற சந்தேகமும் அடைந்தாள். இது என்ன மாயை, எனக்குத் தான் புத்தி குழம்பி விட்டதா என்று நினைத்தாள். இவன் என் குழந்தை, பிறவி யோகியா? பலவும் எண்ணி க்ஷண நேரத்துக்குள், மனதில் பல எண்ணங்கள் தோன்றவும், விடுவித்துக் கொண்டு, கண் எதிரில் இருப்பவன் நாம் வணங்கும் சர்வேவரனே தானோ, அப்படியெனில் அவனை வணங்குகிறேன். இந்த என் மகன், என் கணவன், வ்ரஜ தேச தலைவன், இந்த செல்வங்கள், உடனுள்ள கோப, கோபிகள், இந்த பசுக்களே தனம் என இருக்கும் நாங்கள் அனைவருமே மாயையா, என் புத்தி தான் கெட்டு விட்டதா? பகவானே நீயே கதி. இவ்வாறு யோசித்து தன்னை உணர்ந்த அந்த எளிய கோபி ஸ்த்ரீயை, வைஷ்ணவி மாயையால் ஒரு நிமிஷம் ஆட்டி வைத்த பின், புத்ரனாக பாசத்துடன் அவள் திகைப்பை கலைத்தான். தன் நிலை திரும்பிய யசோதா, கண் முன் கண்டதை மறந்து மகனை பாசத்துடன் அணைத்தபடி, முன் போலவே வீட்டினுள் சென்றாள். அவள் பாக்கியம் செய்தவள். வேதங்களும், உபனிஷதங்களும், சாங்க்ய, யோக என்று பலவிதமான சத்வ குணமான மார்கங்களும் போதிக்கும் பரம் பொருள், அவர்கள் ஸ்ரீ ஹரி என்று அவன் மாகாத்ம்யத்தை பாடியும் காண முடியாதவனை வெகு சாமான்யமாக தன் மகனாக அன்பு செலுத்தி கண்டு கொண்ட யசோதாவின் பாக்கியமே பாக்கியம்.
ராஜா பரீக்ஷித் வினவினான்: அந்த சமயம் நந்தன் அங்கு இல்லையா? இவளுக்கு கிடைத்த அரும் பெரும் காட்சி அவனுக்கு கிடைக்கவில்லையா? யசோதை மகா பாகா – பெரும் பாக்கியம் பெற்றவள். அவளிடம் ஸ்ரீ ஹரியே மடியில் தவழ்ந்து, அவள் ஸ்தன்ய பாலைக் குடித்து வளர்ந்தான். தாய் தந்தையரை அவர்கள் ஸ்ரீ க்ருஷ்ணனை மகனாக பெற்ற வைபவத்தை கவிகள் இன்றளவும் பாடுகிறார்கள். உலகில் கெடுதலே இல்லாமல் செய்யக் கூடிய நிகழ்வுகளை மட்டுமின்றி, அந்த குழந்தையின் நன்மையை மட்டுமே நினைத்து வாழ்ந்த நந்தனையும் யசோதாவையும் வாழ்த்துகிறார்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: வசுக்களில் முக்யமானவன் த்ரோணன் என்பவன், தரா धरा- என்ற தன் மனைவியுடன், ப்ரும்மாவிடம் அவர் கட்டளைகளை நிறைவேற்றும் பணிகளைச் செய்பவர்களாக இருந்தனர். ஒரு சமயம் ப்ரும்மா அவர்களிடம் விஸ்வேஸ்வரனான ஸ்ரீ ஹரி பூமியில் அவதரிக்கப் போகிறார். பூமியில் பக்தி மார்கத்தை பரப்ப வேண்டும். தற் சமயம் மிகவும் அமைதியின்றி தவிக்கிறது. நீங்கள் இருவரும் வ்ரஜ தேசத்தில் பிறந்து காத்திருங்கள் என்றார். அவர்களும் அவ்வாறே த்ரோணர் நந்தனாகவும் தரா யசோதையாகவும் பிறந்தனர். பக்தியே தம்பதிகளுக்கு மகளாக பிறந்தது. தம்பதிகளுக்கு கோப கோபிகளிடம் மதிப்பைக் கூட்டியது. ஸ்ரீ க்ருஷ்ணரும், ப்ரும்மாவின் ஆதேசம்- கட்டளையை சத்யமாக்க, வ்ரஜ தேசத்தில் ராமனுடன் வசிக்க வந்தார். அதுவும் அவனுடைய லீலையே.
இதுவரை ஸ்ரீமத் பாகவத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், எட்டாவது அத்யாயம். ஸ்லோகங்கள்-52
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய
அத்யாயம்-9
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஒரு சமயம் வீட்டுப் பணியாளர்கள் வேறு வேலைகளில் ஈடுபட்டிருந்ததால், யசோதா தானே தயிரைக் கடைய அமர்ந்தாள். தனக்குதெரிந்த பாடல்களை பாடிக் கொண்டே கடைந்து கொண்டிருந்தாள். நினைவுக்கு வந்ததைப் பாடுவாள். தாலாட்டோ, பக்தி பாடலோ எதுவானாலும்.
நல்ல ஆடை, இடுப்பில் இருந்த ஆபரணங்கள், புத்ரனைத் நினைத்தாலே முலைப் பால் தானே வழியலாயிற்று. பழக்கமில்லாததால், கயிற்றை முன்னும் பின்னுமாக இழுத்து கடைவதே பெரிய காரியமாக இருக்க, முகம் வாடி, மத்து பாத்திரத்திலிருந்து நகருவதை சரி செய்து கொண்டே கடைந்தாள். தனக்கு பசி நேரம் வந்ததும், இன்னமும் கடைந்து கொண்டிருந்த தாயாரின் அருகில் வந்த க்ருஷ்ணன், அவள் கவனத்தை தன் பால் ஈர்க்கும் பொருட்டு, கடைவதைத் தடுக்க மத்தை கைகளால் பிடித்தான். அவனை இழுத்து மடியில் இருத்தி பாலூட்டிக் கொண்டே தயிர் கடைவதைத் தொடர்ந்த யசோதா, அவன் முகத்தைப் பார்த்து பேசிக் கொண்டும் இருந்தாள். திடுமென நினைவு வந்தது பால் அடுப்பில் பொங்கி வழியும் வாசனையும் வந்தது. அவனை விலக்கி விட்டு உள்ளே சென்றாள். முலைப்பால் இன்னமும் வழிந்து கொண்டிருக்க, திருப்தியின்றி அவன் அழுவதையும் பொருட்படுத்தவில்லை. அதில் கோபம் கொண்டு, உதடு துடிக்க, மத்தை எடுத்து தயிர் இருந்த பானையை உடைத்தான். உள்ளூற சிரித்தாலும், பலமாக கண்ணீர் பெருக அழுது கொண்டே அவளிடம் சென்றான். பொங்கிய பாலை கவனித்து இறக்கி விட்டு அடுத்து சுத்தம் செய்வதையும் முடித்துக் கொண்டு வெளியில் வந்தாள். தயிர் பானை உடைந்து பெருகி ஓடிய வெண்ணெயுடன் கூடிய தயிர் பூமியை நனைத்துக் கொண்டிருந்ததைக் கண்டதும் திகைத்தாள். தன் மகனின் வேலை தான் என்று புரிந்து கொண்டவள் அவனைத் தேடினாள். சற்று தூரத்தில், உரல் மேல் அமர்ந்திருந்தவனைக் கண்டாள். அதனுள் வெண்ணெயை வைத்துக் கொண்டு முகத்திலும் முழங்கைகளிலும் வழிய வெண்ணெயை வாயில் திணித்துக் கொண்டிருந்தவனைக் கண்டாள். அவனறியாமல் பின் பக்கமாகச் சென்று கட்டி பிடித்தாள். அவளைக் கண்டதும் மத்தை கீழே போட்டுவிட்டு ஓடிய மகனை துரத்தி பிடித்தாள். பயந்தவன் போல் விழித்த சிறுவனை தொடர்ந்தாள். யோகிகளுக்கு கூட கிடைக்காத பரம் பொருளை, அந்த எளிய இடையர் குலப் பெண் பின் தொடர்ந்து பிடிக்க முயன்றாள். அவன் ஓட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் களைத்து, கேசம் அவிழ்ந்து தொங்க தலையில் சூடியிருந்த மலர்கள் விழ, ஓடி பிடித்து விட்டாள். உடனே தான் செய்த தவறு என்பதை அறிந்திருந்த பாலகன் ஓவென்று அழலானான். பயத்துடன் தாயை நிமிர்ந்து பார்த்தான். கைகளைப் பிடித்து தர தரவெண்று இழுத்தபடி வீடு வரை வந்தவள், கையில் இருந்த கயிற்றால் கட்ட முயன்றாள். வேறு வகையில், அடிக்கவோ, திட்டவோ மனமின்றி, மகன் பயப்படுகிறான் என்று நினத்தாள் போலும், கையிலிருந்த தடியை கீழே விசி விட்டு கயிற்றை எடுத்துக் கொண்டு கட்ட வந்தாள்- எவனுக்கு உள்ளும் வெளியும் ஒன்றே, முன் பின் என்ற வித்யாசமும் இல்லையோ, முழு உலகமும் வ்யாபித்து இருப்பவன் எவனோ, அவனை தன் மகன் என்று மட்டுமே அறிந்தவள், அதோக்ஷஜன் என்றோ, மனித உருவில் வந்த பகவான் ஸ்ரீ ஹரியே என்றும் அறியாதவள், தயிர் பால் நஷ்டமானதை மிகப் பெரிதாக எண்ணும் கோகுலத்து பெண், ஏதோ சாதாரண குழந்தையாக கயிற்றினால் அந்த உரலுடன் சேர்த்து கட்டினாள். அவள் கட்ட கட்ட இரண்டு அங்குலம் கயிற்றின் நீளம் குறைவாகவே இருக்க, மற்றொன்றை சேர்த்து கட்டினாள். அதுவும் போதாமல் போக, மற்றொன்று கொண்டு வந்தாள். அதன் பின்னும் இரண்டு அங்குலம் குறைவாகவே இருந்தது. கொண்டு வந்த கயிறுகள் அனைத்தும் போதாமல் போக, கூடியிருந்த பெண்கள் சிரிக்க தானும் சிரித்தபடி, ஆச்சர்யமும் அடைந்தாள். தன் தாய், வியர்த்து விறுவிறுக்க, சூடியிருந்த மலர் மாலைகள் கலைந்து தொங்க, வருந்துவதைக் கண்டு குழந்தை கண்ணன் தானே கருணையுடன் கட்டுப் பட்டான். அங்க ராஜனே! இந்த சம்பவம் மூலம் கண்ணன் தன்னுடைய சிறந்த குணமான பக்த பராதீனன் என்பதை காட்டியிருக்கிறான். தன் வசமேயிருந்த இச்செயல் தானே ஈஸ்வரனாக இருந்து விளையாடினான்.
இப்படி ஒரு அருகாமையும், ஸ்ரீ ஹரியின் கருணை கடாக்ஷமும், விரிஞ்சிக்கு கிடைத்ததில்லை. பவன் எனும் மகேஸ்வரனுக்கு கிடைத்ததில்லை. மார்பிலேயே உறையும் ஸ்ரீ தேவிக்கு கிடைத்ததில்லை. அப்படிப்பட்ட மிகப் பெரிய அருளை அந்த கோப-இடையர் குல பெண் அடைந்தாள். என்னே அவள் பாக்யம். விமுக்தியைத் தரும் அருட்பார்வை கிடைக்கப் பெற்றாள்.
என்னை அடைவது எளிதல்ல. மனிதர்கள் அதற்கான சாதனைகள் செய்வர். இடையர் குல பெண், அவள் மகனாக வந்த இந்த சமயம், பெரும் ஞானிகளுக்கும், ஆத்மாவை அறிந்த யோகிகளுக்கும், சுலபமாக கிடைக்காத என்னை, உள்ளன்பினால் மட்டுமே உணர்ந்து கொள்வார்கள் என் பக்தர்கள். அவர்களைப் போலவே என் அருளை தாயன்பினால் அடைந்தாள்.
யசோதை வீட்டு வேலைகளைக் கவனிக்க சென்ற பின், ஸ்ரீ க்ருஷ்ணன், இரண்டு அர்ஜுன மரங்களைக் கண்டான். முன்பு அவர்கள் குபேரனின் புதல்வர்களாக இருந்தவர்கள். நாரதரின் சாபத்தால் மரங்களானவர்கள். நல கூபர, மணீக்ரீவன் என்று பெயர் பெற்றவர்கள். செல்வந்தர்கள்.
இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், கோபி ப்ரசாதம் என்ற ஒன்பதாவது அத்யாயம். ஸ்லோகங்கள்-23
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய
அத்யாயம்-10
அரசன் பரீக்ஷித் கேட்டான்: பகவன்! ஏன் அவர்கள் சபிக்கப் பட்டனர். அது பற்றிச் சொல்லுங்கள். அப்படி என்ன தவறு செய்தார்கள், தேவ ரிஷி நாரதர் கோபிக்கும் படி? அந்த கதையைச் சொல்லுங்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: பகவான் ருத்ரனுடைய அனுக்கச் சேவகர்களாக இருந்த தனதன்-குபேரனுடைய புதல்வர்கள் செல்வத்தால் கர்வம் அடைந்தனர். கைலாச உபவனம் மிக அழகானது. மந்தாகினீ நதி மிகவும் ப்ரசித்தமானது. இவர்கள் இருவரும் வருணி என்ற மதுவைக் குடித்து விட்டு, கண்கள் அந்த மதுவினால் சிவந்திருக்க, பெண்கள் கூட்டத்துடன், வனத்தில் சுற்றினர். அந்த காடே பூத்து குலுங்கியது. கங்கையில் இறங்கி அதிலும் அம்போஜம்- தாமரை மலர்கள் பூத்திருந்தன, நீரினுள் யானைகள் போல மதாந்தமாக விளையாடி களித்தனர். கௌரவனே! யதேச்சையாக தேவ ரிஷி நாரதர் அங்கு சென்றார். பெண்கள் அவசரம் அவசரமாக ஆடைகளை அணிந்து கொண்டு விட்டனர். இந்த இருவரும் மட்டும் அலட்சியமாக இருந்தனர். நாரதர் பரிதாபப் பட்டார். தேவ குமார்கள், அதீதமான செல்வத்தால் கர்வம் தலைக்கேற, மதாந்தமாக, மதுவைக் குடித்து புத்தி மழுங்கி இருக்கின்றனர். அவர்களுக்கு அனுக்ரஹம் செய்யவே சாபம் கொடுத்தார். நாரதர் சொன்னார்’ விஷயங்களை அனுபவிக்கும் மனிதர்களின் புத்தியை மழுங்கச் செய்வது நல்ல குடி பிறப்போ, கல்வியோ அல்ல. அளவுக்கு மீறிய தனமே அதிகமாக புத்தியை கெடுத்து, நியதியை மீறி, தவறான செயல்களைச் செய்ய வழி வகுக்கிறது. ரஜோ குணமான காம க்ரோதாதிகளை விட செல்வத்தால் வரும் மதம் கெடுதலை விளவிக்கிறது. எதையெல்லாம் தவிர்க்க வேண்டுமோ, அவைகளை செல்வம் கொண்டு சேர்க்கிறது. மது பானம், கெட்ட சகவாசம், ஸூதாட்டம், விதிகளை மீறல் இவைகளுக்கு தயாராக்குகிறது. , அதனால் தான் தயை யின்றி பசுக்களை கொல்கிறார்கள். இவர்கள் தங்கள் உடல் முதுமை அடையாது, மரணம் சம்பவிக்காது என்று நம்புகிறார்கள். யாராலும் அழிக்க முடியாது என்ற கர்வம் தலைக்கேறுகிறது. தேவ, அன்ன தாத்தா என்று பணியாளர்களும் வறியவர்களும் அழைப்பதை உண்மையாக நம்புகிறார்கள். யார் அன்ன தாதா, எவராயினும் ஒரு நாள், மண்ணில் புதைந்தோ, நெருப்பில் எரிந்தோ அழியும் உடலைத் தான் கொண்டுள்ளனர். மனிதன் தன் தாய், தந்தை என்றோ, ஒருவன் பலசாலி என்றோ, யாகம் செய்தவரோ, மதிப்புக்குரிய இந்த உயிர்களுக்கும் சாதாரண பிராணிகள் நாய் போன்றவைகளுக்கும் அந்திம காலம் ஒன்றே
அறிவில்லாதவன் செல்வ மதத்தால், ஏழைகளை மட்டமாக நினைக்கிறான். தன்னளவு செல்வம் இல்லாதவன் தனக்கு சேவை செய்ய வேண்டும் என்று எதிர் பார்க்கிறான். அவனுக்கு முள் குத்தினாலோ, அடி பட்டாலோ, அவனுக்கு வலிக்குமே என்று எண்ணுவதில்லை. தரித்ரனுக்கு தான் என்ற கர்வம் கொள்ள வழியில்லை. ஒரு விதத்தில் இது அவர்களுக்கு தவம் செய்து கிடைக்கும் சமபுத்தியை கொடுத்து விடுகிறது. நித்யம் ஒரு வேளை உணவே கிடைப்பது சிரமமாக இருக்கும் பொழுது மற்ற இந்திரியங்கள் துள்ளுவதில்லை. அதனால் ஜீவ ஹிம்சை செய்வது என்பதும் பெருமளவில் குறைகிறது. சாதுக்கள் மனம் இவர்களை மட்டமாகவோ, தாழ்வாகவோ நினைப்பதில்லை. தனம் உள்ள காரணத்தால் மரக் கட்டை போல பிறர் துன்பம் அறியாமல் அசத்தாக இருப்பவர்கள் இந்த குபேரனின் புத்திரர்கள். இவர்களின் கர்வத்தை அடக்குகிறேன். வாருணி மதுவை குடித்து, மதாந்தமாக அதுவே வாழ்க்கை என்று இருப்பவர்களைத் திருத்த வேண்டும். லோக பாலனின் புத்திரர்கள், இப்படி மதம் கொண்டு எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று இருந்தால், அவர்கள் தண்டனை பெற்றால் தான் சமுகத்தில் மற்றவர்களுக்கும் கடமையுணர்ச்சி வரும். அதனால் இவர்களை மரமாக தாவரமாக இருக்கச் செய்கிறேன். நினைவு இருக்கும். என் அருளால் உள்ளுணர்வு இருக்கும். வாசுதேவனின் சாந்நித்யம்- அருகாமையில் இருந்து சாப விமோசனம் பெற்று பழையபடி சுவர்கம் அடையட்டும். அதற்குள் திருந்தி பகவானிடம் பக்தியும் வந்து விடும்.
இவ்வாறு சாபமிட்டவர் நேராக நாரயணாஸ்ரமம் சென்றார். அவரிடம் சொல்லி அவ்விருவரையும் ஜோடி அர்ஜுன மரங்களாக ஆக்க வேண்டினார். பகவானுக்கு பிரியமான தேவ ரிஷி நாரதர். அவர் சொல்லைக் காக்க வேண்டும் என்று நினைத்து பகவான், ஸ்ரீ ஹரி, இந்த அவதாரத்தில், குழந்தை க்ருஷ்ணனாக, மெள்ள அர்ஜுன மரங்கள் இரட்டையாக வளர்ந்திருந்த இடம் சென்றார். அருகில் சென்று பார்த்தவர் தேவ ரிஷி சொன்னதால் மரங்களாக நிற்கும் இவர்களுக்கு விமோசனம் தர இதுவே சமயம் என்று எண்ணினாரோ, அந்த மரங்களுக்கு இடையில் உரலையும் இழுத்துக் கொண்டு நுழைந்தார். மரங்களுக்கு இடைப்பட்ட குறுகலான இடத்தில் நுழையாத உரலை கீழே தள்ளி குறுக்காக வைத்து இழுத்தார். அந்த பெரிய உரல் அவர் ஆணைக்கு கட்டுபட்டதோ எனும்படி, குறுக்காக விழுந்தது.
மரத்தின் இடுக்கில் நுழைந்து மறுபக்கம் சென்ற தாமோதரன்- இடுப்பில் கயிற்றால் கட்டப் பட்டவன், தாம – கயிறு உதரம்- வயிறு- வலுவாக அந்த உரலை தன் பக்கம் இழுக்க, கால்களால் பற்றிக் கொண்டு கைகளால் பலம் கொண்ட மட்டும் இழுத்தான். தடாலேன்ற சத்தம் அந்த இடத்தையே அதிர வைத்தது. அந்த மரங்கள் பெரிய, கிளைகள், சிறிய துளிர்த்திருந்த நுனிகளோடு, கை கால்களை பரப்பிக் கொண்டு ஏதோ ஒரு அசுரன் விழுந்தது போல விழுந்து கிடந்தது. அந்த லக்ஷ்மீகரமான பாதங்கள் படவும் இரு மரங்களும் உயிர் பெற்றன. இருவரும் சித்தர்கள் , வேதங்கள் அறிந்த ரிஷிகள் போன்றவர்களாக வெளி வந்தனர்.
இருவரும் துதி செய்தனர்: க்ருஷ்ண, க்ருஷ்ண மகாயோகின்! நீயே முதல் முதலான பரம புருஷன். வெளிப்படையாக தெரிந்தும் தெரியாமலும் உள்ள அனைத்தும் உள்ள இந்த உலகமே உன் ரூபம் தான் என்று விஷயம் அறிந்தவர்கள் சொல்வார்கள். நீ ஒருவனே, சர்வ பூதங்களுக்கும், தேக, ஆத்ம இந்திரியங்களுக்கும் ஈஸ்வரன். காலனும் நீயே, அழிவில்லாத ஈஸ்வரன், எங்கும் பரவியுள்ள மகாவிஷ்ணு. மிகப் பெரியதாக ப்ரக்ருதியாகவும் இருப்பாய், ஸூக்ஷ்மமானதும் நீயே. . தலைவனானவனும் நீயே, அனைத்து க்ஷேத்ரங்களுக்கும், அதன் வளர்ச்சி, மாறுதல்களுக்கு காரணமாக இருப்பாய். பிடிக்க கூடியவைகளில் நீ அக்ராஹ்யன்- பிடிக்கவே முடியாதவன். சாதாரண இயல்பான குணங்கள் மட்டும் உள்ளவர்களால், உன்னை எப்படி அறிய முடியும். முன் கூட்டியே இது இப்படித்தான் என்று வரையறுத்து வைத்தவனும் நீயே தானே. அப்படிப்பட்ட உனக்கு நமஸ்காரம். பகவதே வாசுதேவாய வேதஸே- தனக்கு மட்டுமே தெரியும் படி வைத்துக் கொண்டு மற்றவர்கள் அறிய முடியாத மகிமைகள் உள்ள பர ப்ரும்மமே, உனக்கு நமஸ்காரம்.
நீ பல அவதாரங்கள் எடுத்துள்ளாய். உனக்கென்று ஒரு சரீரம் இல்லாதவன் போல, அந்தந்த சரீரத்தின் குண தோஷங்களை ஏற்றுக் கொள்கிறாய். வீர்யமோ, தேக அமைப்போ, பொருத்தமே இல்லாத பல ரூபங்கள். பகவானே! சர்வ லோகத்தின் இருப்பிற்கும், மேன்மை பெறவும், அம்ச பாகமாக அவதாரம் செய்வாய் என்று அறிவோம். தற்சமயம் இந்த அவதாரம். பரம கல்யாணமானவனே நமஸ்காரம். பரம மங்களமானவனே நமஸ்காரம். வாசுதேவாய சாந்தாய, யது பதிக்கு நமஸ்காரம்.
எங்களுக்கு விடை கொடுங்கள். உங்கள் அனுசர கிங்கரர்களாக இருந்தவர்கள் நாங்கள் இருவரும். பகவானின் தர்சனம் ரிஷியின் அனுக்ரஹத்தால் கிடைத்தது. எங்கள் வாக்கு உங்கள் குணங்களைப் பாடவே என்று இருக்கட்டும். காதுகள் உங்கள் கதைகளை கேட்கவே, கைகள் உங்களுக்கு பணிவிடை செய்யவே, மனம் உங்களையே நினைத்து உங்களுடையதாகவே இருக்கட்டும். எங்கள் கண்கள் நல்லவர்களைக் காணவே, எங்கள் சரீரமும் உங்கள் வசமே ஆகட்டும்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: பகவான் சொன்னார். எனக்கு முன்பே தெரியும் தேவ ரிஷி நாரதர் சொன்னார். அவர் கருணை மிக்கவர். மிக அளவுக்கு மீறிய செல்வத்தினால் கர்வம் கொண்டவர்களை நல் வார்த்தை சொல்லியே குணப்படுத்துபவர் அவர். அவருடைய அனுக்ரஹம் தான் நீங்கள் திருந்தியதும். சாதுக்கள், சம சித்தம் உடைய பெரியவர்கள், பகவானை நம்பியவர்கள், இவர்கள் தரிசனத்தால், பந்தம் விடுபடும். இருட்டில் எதையும் காண முடியாத மனிதர்களின் கண்களுக்கு பொருட்களைத் ஸூரிய ஒளி தெளிவாக தெரிய வைப்பது போல. இப்பொழுது நீங்கள் இருவரும் கிளம்புங்கள். நளகூபர, மணிக்ரீவ, பழையபடி என் பரிவாரங்களுடன், என் நினைவோடு, நற்குணம் பெற்றவர்களாக, உங்கள் விருப்பப்படி வேண்டியதை அடைவீர்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு அவ்விருவரும் பகவானின் அனுமதி பெற்று அவரை ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, திரும்பத் திரும்ப வணங்கி, இன்னமும் உரலில் கட்டு பட்டிருந்தவரிடம் விடை பெற்று வட திசை நோக்கிச் சென்றனர்.
இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியின் நாரத சாபம் என்ற பத்தாவது அத்யாயம். ஸ்லோகங்கள்- 43
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய
அத்யாயம்-11
நந்தனும் மற்ற கோபர்களும், இந்த மரங்கள் விழுந்த சத்தத்தைக் கேட்டனர். ஏதோ அசம்பாவிதம் என்று புரிந்து கொண்டவர்களாக அங்கு ஓடி வந்து கூடினர். தரையில் விழுந்து கிடந்த இரட்டை அர்ஜுன மரங்கள் எந்த காரணமும் இன்றி எப்படி விழும் என்று ப்ரமித்தனர். இடையில் இருந்த உரலையும், அதில் கட்டப் பட்டிருந்த பாலகனையும் கண்டனர். இது என்ன ஆச்சர்யம், யார் செய்திருக்க முடியும் என்று பயந்தனர். சிறுவர்கள் அங்கு வந்து இவன் தான் என்று பாலகனான க்ருஷ்ணனைக் காட்டினர். இவன் தான் உரலை கவிழ்த்து குறுக்காக மரத்தினிடையில் கொண்டு சென்றான் என்றனர். பெரியவர்கள் நம்பவில்லை. அது எப்படி இவனால் செய்திருக்க முடியும், பெரிய உரல் பெரியவர்களுக்கே இயலாது என்றனர். சிறுவன் இவன் தள்ளி பெரிய மரங்கள் விழவாவது என்று சந்தேகப் பட்டனர். உரலுடன் கயிற்றால் கட்டப் பட்டிருந்த மகனைப் பார்த்து சிரித்துக் கொண்டே நந்தன் கட்டுகளை அவிழ்த்து அவனைத் தூக்கிக் கொண்டான்.
கோபிகா பெண்களுடன் சில சமயம் சிறுவனாக விளையாடினான். சில சமயம் அவர்களுடன் நடமாடினான்.சில சமயம் அனைவரும் சேர்ந்து பாடினர். சில சமயம் விளையாட்டாக ஒருவரை ஒருவர் முதுகில் சுமந்து செல்வர். கைகளால் தள்ளி தங்கள் பலத்தைக் காட்டும் விதமாக மல்யுத்தம் செய்வர். . கூட்டமாக நின்று மற்ற சிறுவர்களும் சில சமயம் பெரியவர்களும் கூட ரசிப்பர். பாலனாக அவன் செய்தது எதுவானாலும் மற்றவர்களுக்கு பிடித்தமாகவே இருந்தது.
ஒரு சமயம் பழம் வாங்கலையோ என்ற குரல் கேட்டு வெளியில் வந்த அச்யுதன், பழ வியாபாரியைக் கண்டான். தானியத்தைக் கொடுத்து பழங்களை வாங்கிக் கொண்டான். சர்வபலப்ரதன் எல்லா விதமான பலன்களையும் தருபவன் என்று புகழ் பெற்ற மாதவன் சாதாரண பழ வியாபாரியிடம் பழம் வாங்கிக் கொண்டால் அதன் பலன் இல்லாமல் போகுமா. அந்த பெண் வியாபாரி, சின்னம் சிறு கையில் கொண்டு வந்த தான்யத்தை ஏற்றுக் கொண்டு, அவன் கைகளில் பழங்களை நிரப்பினாள். பதிலுக்கு அவள் பழக் கூடையை ரத்னங்களால் நிரப்பி விட்டான்.
அர்ஜுன மரங்கள் விழுந்த சம்பவத்தை சாதாரணமாக எண்ணி ஒதுக்க முடியவில்லை. காரணமின்றி மனதில் சங்கடம் தோன்றவும், யசோதா யமுனை தீரத்தில் விளையாடிக் கொண்டிருந்த ராமனையும் சகாக்களையும் அழைத்துவர ரோஹிணியை அனுப்பினாள். அவள் அழைத்தும் அவர்கள் வராமல் விளையாட்டு மும்முரத்தில் வரவில்லை. சற்று பொறுத்து யசோதா தானே சென்றாள். அனைவருமாக விளையாடிக் கொண்டு இருந்தனர். ராமனையும் க்ருஷ்ணனையும் பலமுறை அழைத்து பார்த்தாள். க்ருஷ்ணா, வா, பசிக்குமே, வா வந்து பாலைக் குடி, ஹே!ராமா, வா, மகனே வா, உன் இளையவனையும் கூட்டிக் கொண்டு வா, வா கண்ணா, குல நந்தனா, வா பரிந்து அழைத்தாள். காலையில் சாப்பிட்டது, பசிக்கும், இருவரும் வாருங்கள். அப்பா உங்களுக்காக எதிர் பார்த்து காத்திருக்கிறார். வ்ரஜாதிபன், அவருக்கு வேறு வேலைகள் இருக்கும், வாருங்கள், பாலகர்களே, உங்களின் வரவை எதிர் பார்த்திருக்கும் வீட்டுப் பெண்கள், பெரியவர்கள் அனைவருக்கும் கவலையாக இருக்கிறது. வந்து அவர்களுக்கு மன அமைதியை கொடுங்கள்.
பையன்களே, உடல் பூரா தூசி. ஆடையெல்லாம் மண் ஒட்டி கிடக்கிறது. வந்து குளித்து சுத்தமாகி, உன் ஜன்ம நக்ஷத்திரம் இன்று,. வா, அந்தணர்களுக்கு பசுக்களை தானம் செய். இதோ பார், உன் விளையாட்டுத் தோழர்கள் அனைவரும் அவரவர் தாய் மார்களுடன் வீட்டிற்கு சென்று குளித்து நல்ல ஆடை அணிந்து அலங்காரம் செய்து கொண்டு தாய் மார் கொடுத்த உணவையும் பக்ஷணங்களையும் சாப்பிடுகிறார்கள். நீங்களும் அதே போல வந்து குளித்து ஆகாரத்தை சாப்பிடுங்கள். அவர்களைப் போலவே ஆடை அலங்காரங்களுடன் வந்து தொடர்ந்து விளையாடலாம். இவ்வாறு பலவிதமாக சொல்லி அவர்களை அழைத்துக் கொண்டு யசோதா வீடு வந்தாள். பாலகர்கள் இருவரையும் கைகளைப் பிடித்து தங்கள் குழந்தைகள் என்ற பாசம் மட்டுமாக அவன் யார் என்றோ பகவான் அசேஷ சேகரன் என்றோ நினைக்கவில்லை.
அந்த குலத்தில் மூத்தவர்கள் இது வரை அமைதியாக இருந்த வ்ரஜ தேசம், இதில் அடுத்தடுத்து வந்த ஆபத்துகள், இவைகளை எண்ணி வ்ரஜ காரியங்களை விவாதிக்க கூடியிருந்த கூட்டத்தில் தங்கள் கவலையைத் தெரிவித்தனர். உப நந்தன் என்ற வயதானவர், பழுத்த அனுபவசாலி, அறிவுடையர், தேச கால அர்த்தம் என்ற விவரங்களையும், உயர்ந்த தத்துவங்களையும் அறிந்தவர் ராம, க்ருஷ்ணரிடம் மிகுந்த அன்புடையவர், பேசினார்.
கோகுலத்தின் நன்மைக்காக நாம் இந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டும். பலவிதமான ஆபத்துகள் நம் குழந்தைகளை நாசம் செய்யவே வந்தது போல பார்த்து விட்டோம். எப்படியோ தப்பி பிழைத்தோம். அந்த ராக்ஷஸி, பிறந்த சிசுக்களை கொல்வதே அவள் விளையாட்டாம். பகவானுடைய கருணையால் அந்த சக்கரம் குழந்தை மேல் படவில்லை. பயங்கர சுழல் காற்று வீசியதே, தைத்யன் வானத்துக்கே தூக்கிச் சென்று விட்டான். அங்கிருந்து தானும் சேர்ந்து விழுந்தான். கல் மேல் விழுந்த சமயம் நல்ல வேளையாக தேவர்கள், மற்ற தெய்வங்கள் தான் காப்பாற்றின. மரங்கள் எப்படி விழுந்தன. சிறுவன் உரலை இழுந்துக் கொண்டு போய் இடித்ததால் மட்டுமா விழுந்திருக்கும். இதுவும் பகவான் அச்யுதன் அருள் தான். நம் மகன் காப்பாற்றப் பட்டான். இதை விட பெரிய ஆபத்து வருமுன், இந்த இடத்தை விட்டு அனைவருமாக வேறு இடம் செல்வோம். அருகில் வ்ருந்தாவனம் என்ற காடு இருக்கிறது. நம் பசுக்களுக்கு மேய்ச்சல் நிலமும், அடர்ந்த காடும், நம் கோகுலத்து பெண்கள், பெரியவர்கள், சிறுவர்கள் அனைவருக்கும் பிடிக்கும் மலைப் ப்ரதேசம். ஒரு குன்று உள்ளது. மரங்களும், செடி கொடிகளும் நிரம்பி இருக்கும் இடம். இன்றைக்கே கிளம்புவோம். ஏற்பாடுகளைச் செய்யுங்கள். வண்டிகளை தயார் செய்யுங்கள். கோதனங்கள் முன்னால் போகட்டும். நாம் பின் தொடர்வோம், உங்களுக்கு சம்மதமானால் உடனே ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.
இதைக் கேட்டு அனைவரும் ஏக மனதாக சாது சாது என்று சொல்லி தங்கள் தங்கள் குடும்பங்களை, வீட்டு சாமான்களை சேகரித்து வண்டிகளில் ஏற்றுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டனர்.
வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் இவர்களை அவசியமான உபகரணங்களோடு, வண்டிகளில் ஏற்றி விட்டு கோபாலர்கள் கையில் ஆயுதங்கள், கம்புகளுடன் காவலாக உடன் நடந்தனர். முன்னால் பசுக்களும் கன்றுகளும் மற்ற வளர்ப்பு பிராணிகளும் சென்றன. கொம்புள்ளவைகளை அடக்கி நடத்திச் செல்வோரும், புரோஹிதர்களும் சென்றனர். துர்ய கோஷம் – மங்கள வாத்யங்கள் முன்னால் செல்ல வண்டிகள் பின்னால் சென்றன. கோபிகள் பாடிக் கொண்டேவந்தனர். வளமான குரல் உள்ளவர்கள் க்ருஷ்ண லீலையைப் பாடினர். க்ருஷ்ணனும் ராமனும் யசோதா மடியில் அமர்ந்த படி சுவாரஸ்யமான கதைகளை கேட்டனர்.
ப்ருந்தாவனம் வந்தது. அனைவரும் ஊரைச் சுற்றிப் பார்த்தனர். மகிழ்ச்சியுடன் அந்த இடத்தில் வசிக்க தீர்மானித்தனர். எல்ல வசதிகளும் உள்ள இடம் என்றனர். வண்டிகளை பாதி நிலா வடிவில் நிறுத்தி வைத்து விட்டு, வீடுகளைக் கட்ட முனைந்தனர். சிறுவர்கள் உத்சாகமாக பங்கேற்றனர். ப்ருந்தாவனம், கோவர்தனம், யமுனைக் கரை என்று எல்லா இடங்களையும் பார்த்து மிகவும் மகிழ்ந்தனர். ராமனும் க்ருஷ்ணனும் சிறுவர்கள் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர். விளையாட்டாக பேசியும், ஒருவருக்கொருவர் கல கலவென்று பேசிக்கொண்டும் ஊரை நிர்மாணிக்க உதவிகள் செய்தனர். சிலர் வாத்யங்களை வாசித்தனர், க்ருஷ்ணன் வேணுவை வாசித்தான். சிலர் நடனமாடினர். கால்களில் கட்டிய கிங்கிணீ மணிகள் சீராக ஓசையிட நடந்தனர். மண்ணில் பசுக்களையும் ருஷபங்களையும் உண்டாக்கினர். சில சமயம் சண்டையிட்டு கட்டிப் புரண்ட சிறுவர்களை மற்றவர்கள் சமாதானப்படுத்தினர். ஒவ்வொன்றும் அவர்களுக்கு புதிதாக வினோதமாகவே இருந்தன. பறக்கும் பூச்சிகளையும், ஓடும் சிறு ஜந்துக்களையும் பின் தொடர்ந்து விளையாடினர்.
ஒரு சமயம் இவர்கள் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது, ஒரு தைத்யன் ராம க்ருஷ்ணர்களை கண்டு கொண்டான். தானும் ஒரு கன்று ரூபம் எடுத்துக் கொண்டு பசுக்களின் கூட்டத்தின் ஊடே சென்றான். அதையறிந்த க்ருஷ்ணன் பலராமனுக்கு மட்டும் அதைக் காட்டினான். மற்றவர்களுடன், நடந்து கொண்டே அந்த கன்றை பின் கால்களைப் பிடித்து, வாலையும் சேர்த்து கட்டி வீசினான். காராம் பசுக்களின் நடுவில் அது பொத்தென்று விழுந்த சத்தம் கேட்டு, மற்ற சிறுவர்கள் ஓடி வந்து பார்த்து ஆச்சர்யம் அடைந்தனர். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். அதன் பின் எதுவும் நடக்காதது போல பசுக்களையும் கன்றுகளையும் மேய்க்கும் இடையர்களாக வளைய வந்தனர். சர்வ லோக பாலகர்கள் காலையிலிருந்து மாலை வரை பசுக்களை மேய்ப்பதே தொழிலாக சுற்றி வந்து ஊர் ஜனங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்தனர்.
ஒவ்வொரு குடும்பத்தின் பசுக்களையும் அந்தந்த வீட்டுச் சிறுவர்கள் பார்த்துக் கொண்டனர். ஒரு நாள் தாகம் என்று அந்த குளத்தில் நீரை பருக இறங்கினர். ஒரு கொக்கு அங்கு மிகப் பெரியதாக நிற்க கண்டனர். மலையின் சிகரம் போல அதன் நீண்ட கழுத்தும், அசாதாரணமான உருவமும் பயத்தை விளைவித்தது. . அது பகன் என்ற மகாசுரன் என்று தெரிந்து கொண்டார்கள். திடுமென வேகமாக வந்து க்ருஷ்ணனை பிடித்துக் கொண்டது. பலராமனும் மற்ற சிறுவர்களும் செய்வதறியாது திகைத்தனர். ப்ராணன் இல்லாத உடல் அவயவங்கள் போல நின்றனர்.
ஜகத்குரு, உலகையே படைத்தவன், கோபால புத்திரனாக வந்தவன் என்பதை அது அறியுமா? நெருப்பைக் கக்கும் வாய், தன் அலகினால் ஸ்ரீ க்ருஷ்ணனை கொத்தியது. அதன் வளைந்த கழுத்தையே, தன் மேல் விழுமுன் பிடித்த க்ருஷ்ணன், கம்ச சகா, என்பதை தெரிந்து கொண்டு சிறுவர்கள் ஆரவாரிக்க அலகையே இரண்டு கைகளாலும் பற்றி கிழித்தான். சுர லோக வாசிகள்- தேவர்கள் இதைக் கண்டனர். மல்லிகை முதலிய பூக்களை இரைத்தனர். துதிகள் செய்யலாயினர். பெரிய தாள வாத்யம்- ஆனகம் என்பதை, சங்கம், இவைகளை வாசித்தனர். அவர்கள் செய்த ஸ்தோத்திரங்களைக் கேட்டு கோபால சிறுவர்கள் விழித்தனர். பல ராமனும் மற்ற சிறுவர்களும் சரியான சமயத்தில் வந்து தங்களை காப்பாற்றியவன் என்று க்ருஷ்ணனிடம் அதிக மதிப்பு கொண்டனர். அன்புடன் க்ருஷ்ணனிடம், சரியான சமயத்தில் நீ வந்ததால் எங்கள் பிராணன் திரும்பி வந்தது என்றனர். அனைவருமாக பேசிக் கொண்டே, பசுக்களுடன் வீடு வந்து சேர்ந்தனர்.
தாய் மார்களிடம் நடந்ததை சொல்லிச் சொல்லி சிறுவர்கள், அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினர். கண்களில் நீர் வழிய அவர்கள் குழந்தைகள் உயிர் தப்பியதையே பேசிக் கொண்டிருந்தனர். இந்த சிறுவனுக்கு என்று எவ்வளவு ஆபத்துக்கள், இந்த இடத்திலும் தொடர்ந்து வருகின்றன. ஆனால் அவர்கள் விகாரமாகவும் வரவில்லை. தானாக வந்து அக்னியில் விழும் விட்டில் பூச்சிகள் போல மரிக்கின்றனர்.
ப்ரும்மவித்தான கர்கர் சொன்னாரே, அவர் வாக்கு சத்யமானதே. பகவான் கர்கர் எப்படி வரும் காலத்தை ஊகித்துச் சொன்னாரோ, அதே நடக்கிறது. இவ்வாறு நந்தனும் மற்ற கோபர்களும் பேசிக் கொண்டனர். க்ருஷ்ணனும் பலராமனும் செய்யும் சேஷ்டைகளை பேசி மகிழ்ந்தனர், வேறு எந்த வித உலக வாழ்க்கையின் இடையூறும் அவர்களுக்கு இருக்கவில்லை.
வளர்ந்து கௌமாரம் என்ற பருவத்தை அடைந்தனர். வித விதமான விளையாட்டுகள். குரங்குகள் போல குதிப்பது, என்ற அந்த பருவத்துக்குரிய பொழுது போக்குகளுடன் வ்ரஜ ஜனங்களுடன் இருந்தனர்.
இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பாகத்தில், வத்ஸ, பக வதம் என்ற பதினோராவது அத்யாயம். ஸ்லோகங்கள்-59
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய
அத்யாயம்-12
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஒரு சமயம் வன போஜனம் செய்யும் பொருட்டு, விடியற்காலையில் எழுந்து, ஒத்த வயதினரான நண்பர்கள், மாடு கன்றுகள், ஸ்ரீ ஹரி, க்ருஷ்ணன் அனைவருக்கும் முன்னால் கன்றுகளை ஓட்டிக் கொண்டு என்று கூட்டமாகச் சென்றனர். அவர்களுடன், ஊர் ஜனங்கள் தனித் தனியாகவும் வந்தனர். ஆயிரக்கணக்காக அவர்கள் நன்மையை நாடுபவர்கள் கைகளில் கம்பு, கொம்புகள், வேணு- மூங்கில்கள், வைத்திருந்தனர். ஆயிரம் பேர் கொண்ட குழுக்களாக அமைத்துக் கொண்டு காவல் காக்க உடன் வந்தனர். கன்றுகளை சந்தோஷமாக ஓட்டியபடி வந்தனர். க்ருஷ்ணனுடைய குழுவிலும் பசுக்கள் கன்றுகளுடன் இருக்கும் படி வைத்து, மேய்ச்சல் நிலங்களில் அவைகள் மேயும் போது கண் காணித்தபடி, தாங்களும் தங்கள் தோழர்களுடன் சிறு விளையாட்டுகளில் சந்தோஷமாக நேரத்தை கழித்தனர்.
பழம், இளம் துளிர்கள், பூச்செண்டுகள், இறகுகள், தாதுக்கள், காக்கைப் பொன், குஞ்சா மணி இவைகளைக் கொண்டு தங்கள் தங்க நகைகளுக்கு மேல் அணிந்தனர். கம்பங்களை சுழட்டி சற்றே பெரியவர்கள் போட்டிகளில் ஈடுபட்டனர். அந்த இடங்களில் வசிப்பவர்களூம், தள்ளி இருந்தவர்களும் கூட வந்து கலந்து கொண்டனர். என்ன விளையாடினாலும் க்ருஷ்ணனை பின் தொடர்ந்து அணுக்கமாக இருப்பதிலேயே அனைவரும் ஆர்வம் காட்டினர். நான் நான் முதல் என்று அருகில் சென்று தொடவும் விரும்பினர்.
ஒரு சிலர் வேணுவை வாசித்தனர். சிலர் கூட்டமாக பாடினர். சிலர் தாள வாத்யங்களை, சிலர் கொம்புகளை ஊதினர். கோகிலம்- குயிலைப் போல சிலர் கூவினர். நிழலைக் கண்டால் ஓடிச் சென்று இளைப்பாறுவர். சாதுவான ஹம்சங்கள், கொக்குகள் மேல் அமர்ந்து சென்றனர். மயில்களுடன் நடனமாடினர். குரங்கு குட்டிகளுடன் போட்டியிட்டனர். தவளைகள் போல கத்தி மகிழ்ந்தனர்.
ஒருவர் முதுகில் ஏறி மரத்தில் ஏறி, பழங்களைப் பறித்து கீழே உள்ளவர்களுக்கு வீசினர். சிறு ஓடைகள், நதிகளில் குதித்து நீச்சல் அடித்தனர். ஒருவர் நிழலைப் பார்த்து பின்னால் வருபவர் ஏதோ சொல்லி சிரிப்பர். காடுகளில் எதிரொலி கேட்டு மலைத்தனர். இவ்வாறு ப்ரும்ம சுகம் என்பதற்கு இணையான சுகத்தை பரதேவதையே தாஸ்யனாக வந்த சமயம் அந்த இடையர் குலச் சிறுவர்களும் மற்றவர்களும் அனுபவித்தனர். மாயையால் தன்னை மனித சிறுவனாக காட்டிக் கொண்டு அவர்களுக்கு சமமாக விளாயாடி களிக்க என்ன புண்யம் செய்தனரோ. அளவற்ற புண்யங்கள் நிறைய செய்தவர்கள் அவர்கள்.
அந்த வ்ரஜ குலத்தினரின் அதிர்ஷ்டத்தை – நல் வினைப் பயன்- எப்படி வர்ணிப்பேன். எவருடைய பாத தூளி பல பிறவிகளில் செய்த நல் வினையால் மட்டுமே பெறப் படுமோ, மனதை அடக்கி சாதனைகள் செய்தவர்களுக்கு மட்டுமே கிடைக்குமோ, யோகிகளுக்கு கூட எளிதில் எட்டாத பரம் பொருள் எதுவோ, அது, கண் முன்னால் தானாக வந்து நிற்கிறான். வாக்கினால் சொல்லப் படுமோ அந்த பாக்கியத்தின் பெருமையை.
அதன் பின் அகன் என்ற ஒரு அசுரன் வந்து சேர்ந்தான். இவர்கள் சுகமாக விளையாடி மகிழ்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். அம்ருதத்தை பருகிய தேவர்கள் கூட, சில சமயம் தங்கள் ஜீவிதமே கஷ்டத்தில் இருக்கும் சமயம் மனமார வேண்டி காத்திருப்பார்களோ, அந்த பர வாசு தேவனை இந்த அகாசுரனும் கண்டான்.
கம்சனின் அடியாள் அவன். பகி-பூதனா, பகன் என்பவர்களின் உடன் பிறந்தவன். என் உடன் பிறந்த இருவரையும் நாசம் செய்தவன் இவன் தான் என்று க்ருஷ்ணனைப் பார்த்து வெகுண்டான். இன்று நான் இவனை கொல்கிறேன். இவன் மட்டுமல்ல இவன் கூட்டத்தையும் அழிக்கிறேன் என்று மனதினுள் கறுவினான். இந்த வ்ரஜ குலம் இதோ நஷ்டமாகப் போகிறது. என் குலம் ஆனது போல. இவ்வாறு நினத்து மிகப் பெரிய உருவத்துடன், மலை போல எதிரில் நின்றான். அத்புதமான குகை, பெரிய நாகம் வாயை பிளந்து கொண்டு இருப்பதைப் போல வழியில் கிடந்தான். கீழ் உதடுகள் பூமியிலும், மேல் உதடுகள் வானத்திலுமாக , வட திசையில் கூடும் மேகம் போன்றும், ஆழமான பள்ளம் போன்ற உட்பகுதி, மலையின் சிகரம் போன்ற பற்கள், நாக்கு முடிவில்லாத பாதை போல் நீண்டு நீண்டு சென்றது, பயங்கரமான காற்று உள்ளும் புறமும் வீசுவதே மூச்சாக, தாவாக்னி போன்ற உஷ்ணமான கண்கள் – இப்படி ஒரு விசேஷம் இந்த வ்ருந்தாவனத்தில் உண்டு போலும் என்று நினைத்த சிறுவர்கள், அஜகர- விஷமுடைய பாம்பு, அதை எட்டி எட்டி பார்த்தனர். வேடிக்கையாக நினைத்தனர். எனவே மித்ரர்களை அழைத்தனர். இதோ பாருங்கள், ஏதோ ஒரு அதிசய ஜந்து நம் முன்னால் நிற்கிறது. நம்மை பிடித்து விழுங்கவே நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு காத்திருக்கிறது. இது என்ன என்று ஊகிக்க முடிகிறா பாருங்கள், என்றனர். ஒவ்வொருவரும் தோன்றியதை சொன்னார்கள். கடைசியில் இது ஏதோ குகை போலும் சூரியனின் துண்டு என்றான் ஒருவன், பாதாளம் போல வாய் என்று சொல்லி மலைத்தபடி சுற்றி வந்து எட்டிப் பார்த்து, ஆ மாமிசம் போல ஏதோ கெட்ட நாற்றம் என்று ஒருவன் சொல்ல, உள்ளே போய்த் தான் பார்க்கலாமே என்று ஒருவன் சொல்ல அனைவரும் உள்ளே செல்ல முயன்றனர்.
சர்வ ஜீவன்களிலும் அந்தர்யாமியாக இருக்கும் பகவான் அறியாததா? தன் சுற்றத்தாரை தடுக்க முயன்றார். அதற்குள் அந்த அகாசுரன் சிறுவர்களையும் கன்றுகளையும் ஒட்டு மொத்தமாக தன் வாயினுள் இழுத்துக் கொண்டான். கண் முன்னே அனைத்து சிறுவர்களும், கன்றுகளும் அதனுள் மறைந்ததைக் கண்டவுடன், தன்னைத்தவிர வேறொரு தலைவன் இல்லாத எளிய இடையர் சிறுவர்கள், அனாதைகளாக, தீனர்களாகஅந்த குகைக்குள், தன் கையை விட்டு நழுவி அந்த ம்ருத்யுவின் வாயில் சென்று கொண்டிருந்தவர்களைப் பார்த்து அஹோ கஷ்டம் என்றார். எப்படி இவர்களை காப்பாற்றி, அந்த அரக்கனையும் வதைக்க வேண்டும் என்று யோசித்தவர் போல க்ஷண நேரம் யோசித்தவர் தானும் அவர்களுடன் நுழைந்தார்.
இதைக் கண்டு தேவர்கள் அலறினர். பயந்தனர். அகாசுரனின் பந்துக்கள், கம்சன் அடியாட்கள் மகிழ்ந்தனர். இதைக் கேட்டபடியே, க்ருஷ்ணன் அந்த ஜீவனின் கழுத்தில் தன்னை நிறுத்திக் கொண்டு வேகமாக வளர்ந்தார். அந்த ப்ரும்மாண்ட சரீரத்தின் மூச்சுக் குழல் தடை பட்டது. உள் மூச்சு வெளியே வர முடியாமல் உள்ளேயே நிறைந்தது. படாரென்று தலையை பிளந்து கொண்டு ப்ராணன் வெளியேறியது. அந்த வழியாகவே அனைவரும் வெளி வந்தனர். நடந்ததையறியாமல் கன்றுகளுடன் உயிருடன் அனைவரும் தப்பினர்.
அதன் பின் அதன் தலையிலிருந்து விடுபட்ட ப்ராணனும் ப்ரகாசமாக இருக்கக் கண்டு தேவர்கள் ஆச்சர்யம் அடைந்தனர். எங்கும் வியாபித்து இருக்கும் பரப்ரும்மே ஜீவனின் உள்ளும் இருப்பதும். பகவான் தானாகவே அந்த அஜகரனின் ப்ராணனும் ஜோதி ஸ்வரூபமாக ஆனதை தெரிவித்தாரோ, க்ருஷ்ணனின் ஸ்பரிசத்தால் தூய்மையாகி, அவனும் பாகவதர்களுள். ஒருவனாக ஆகி விட்டான் போலும் என்று தேவர்கள் சமாதானமானார்கள். மிக்க மகிழ்ச்சியுடன் பூமாரி பொழிந்தனர். அப்சரர்கள் நடனமாடினர். எங்கும் பாடல்களை பாடுபவரும், வாத்யங்கள் இசைப்பவர்களும், துதிகளை சொல்பவர்களும் ஜய ஜய என்று கோஷிப்பவர்களுமாக அந்த அத்புதமான செயலை கொண்டாடினார்கள். இது என்ன கோலாஹலம் என்று மஹேசனும் வெளியில் வந்து நடந்ததையறிந்து ஆச்சர்யம் அடைந்தார்.
அரசனே! அந்த கொடிய அஜகரனுடைய -தோல் வற்றி உலர்ந்து வெகு காலம் வ்ருந்தாவனத்தில் கிடந்தது. சிறுவர்கள் அதை விளையாட பயன்படுத்தினர். குமாரனாக இருந்த க்ருஷ்ணனின் அத்புத செயலைக் கேட்டு சிறுவர்களின் பெற்றோரும் முதியவர்களும் அச்சமும் மகிழ்ச்சியும் ஒரு சேர அனுபவித்தனர். மரணத்தின் வாயில் இருந்து தங்கள் வம்சத்தினரைக் காத்த க்ருஷ்ணனை துதி செய்தனர். சிறுவர்கள் தாங்களே முதியவர்களாக ஆன பின்னும் இந்த வரலாற்றை மறக்காமல் மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்டார்கள்.
மனிதன் முதல் ப்ரும்மாண்டத்தில் உள்ள சகலரையும் படைத்துக் காக்கும் பராவர, பரமன், வேதஸன் எனும் பகவான், அகனும் அவருடைய பாத ஸ்பர்சத்தால் தூய்மையாகி துர்லபமான நல்கதியை அடைந்தான் என்ற வரலாறு, எப்படி அவனே அறியாமல் அவருடைய அங்க ஸ்பரிசம் கிடைத்தவனுக்கு மனோ மயமான நல்கதியை பகவான் கொடுத்து விட்டார். மாயை விலகி அவனும் நித்யாத்ம சுகம் அடைந்திருப்பான்.
ஸுதர் சொன்னார்: யாதவ தேவதத்தன்- பரீக்ஷித் , விசித்ரமான இந்த வரலாற்றைக் கேட்டபின், ஆவலுடன் வியாசரைப் பார்த்து மேலும் சொல்லும்படி வேண்டினான்.
ப்ரும்மன்! சிறுவர்களாக இருந்தவர்கள், தங்கள் முதுமையிலும் இந்த வரலாற்றை பாடியும் பேசியதும் எப்படி, ?குமாரர்களாக இருந்த சமயம் நடந்தது அவர்கள் முதிய வயதில் நினைவில் வருமா? இதுவும் ஹரியின் மாயையே. மஹா யோகின்! இல்லையெனில் இது சாத்யமேயில்லையே. அதையறிய ஆவலுடன் கேட்கிறேன், சொல்லுங்கள். க்ருஷ்ண கதாம்ருதம் உங்கள் வாயால் கேட்பதே புண்யம். நாங்கள் தன்யதமா: – மிகவும் பாக்யம் செய்தவர்கள்.
சூதர் சொன்னார்: இவ்வாறு அவன் கேட்கவும், வியாச பகவான், அரசனை பாராட்டி, மேலும் தன் மனதில் இருந்த வரலாறுகளை மனதில் தியானித்து சொல்லானார்.
இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தம் முதல் பாகத்தில், பன்னிரெண்டாவது அத்யாயம். ஸ்லோகங்கள்-44
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய
அத்யாயம்-13
ஸ்ரீ சுகர் சொன்னார்: பாகவதோத்தமரே, நல்ல கேள்வி. மேலும் கேட்கவே உத்சாகமாக இருப்பது மகிழ்ச்சி.
எந்த விஷயமானாலும் முழுமையாக அறிந்து கொள்ள விரும்புபவர்கள் கேட்கும் சொல்லின் பொருள், உச்சரிப்பு, உட்பொருள் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். அச்யுதனுடைய கதை ஒவ்வொரு க்ஷணமும் புதுமையானது. பெண் பித்து பிடித்த விடர்கள் புதுப் புது பெண்ணை விரும்புவது போல.
ராஜன்! கேள். நெருங்கிய பிரிய சிஷ்யனுக்கு ரகஸ்யமானாலும் சொல்லத்தான் வேண்டும். இடையர் குல சிறுவர்களை அக என்ற அசுரனிடமிருந்து காத்து, பின் நதிக்கரையின் மணைலில் அமர்ந்துப்
பேசிக் கொண்டிருந்தனர். க்ருஷ்ணன் ஆஹா என்ன அழகான காட்சி இது பாருங்கள், தோழர்களே, மெண்மையான இந்த மணல். இந்த நதியின் மலர்ந்த மலர்களின் வாசனையைத் தேடி வண்டுகள் மொய்க்கின்றன. எதிரொலி கேட்கும் படி அடர்ந்து உயர்ந்த மரங்கள். இங்கு நாம் அமர்ந்து, கையில் கொண்டு வந்த உணவை உண்போம். தோழர்களே, பசியுடன் இருப்பதாக தெரிகிறது. சாப்பிட்டவுடன் இந்த நதியின் நீரைக் குடித்து விட்டு புல் தரையில் காலார நடப்போம். சிறுவர்கள் அவ்வாறே அந்த இடத்தில் அமர்ந்து மூட்டைகளைப் பிரித்து, பகவானுடன் சமமாக அமர்ந்து கண்கள் விரிய மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டெ சாப்பிட ஆரம்பித்தனர். விஸ்வ புருஷன் என்பதை அறியாமல், அவர்கள் செய்த நல்வினைப் பயன், உடன் அமர்ந்து போஜனம் செய்யும் வாய்ப்பு பெற்றிருந்தனர். வட்டமாக அமர்ந்தனர். அனைவருக்கும் க்ருஷ்ணனை பார்த்தபடியே இருக்க ஆசை. ஒரு சிலர் இலைகளை பறித்துக் கொண்டு வந்தனர். பூ, இளம் தளிர், சிறு மொட்டுக்கள், பழங்கள் என்று வழியில் சேகரித்துக் கொண்டு வந்தவை அனைத்தையும் பகிர்ந்து கொண்டனர். ஒருவரையொருவர் பார்க்கும்படி வசதியாக அமர்ந்தனர். தனித் தனியாக தங்கள் வீட்டு உணவு பதார்த்தங்களை திறந்து பகிர்ந்து கொண்டும், சிரித்தும், சிரிக்க வைத்தும், மன நிறைவோடு ஈஸ்வரனோடு உணவை ரசித்தனர்.
தன் வேணுவை இடையில் சொருகிக் கொண்டு, கொம்பாலான தடியை கையிடுக்கில் வைத்தபடி, உள்ளங்கையில் கலவையான அனைத்து உணவுகளின் ஒரு கவளத்தை வைத்தபடி, விரல்களின் இடுக்குகளில் பழத்துண்டோ, ஏதோ ஒரு பண்டமோ வைத்தபடி வேடிக்கையாக அவர்களுடன் வார்த்தையாடி மகிழ்வித்தபடி இருந்த சமயம், பசுக்கள் மேய்ந்து கொண்டே வெகு தூரம் சென்றதை கவனிக்கவில்லை. பசும் புல்லைக் கண்ட பசுக்கள் திடுமென அலறின. க்ருஷ்ணன் அவர்களைப் பார்த்து, நீங்கள் இங்கேயே இருங்கள், நான் போய் அழைத்து வருகிறேன் என்று குரல் வந்த திசையை நோக்கி வேகமாகச் சென்றான்.
மலையின் குகையில் பசுக்களும் கன்றுகளும் இருந்ததைக் கண்டு, இன்னமும் கையில் இருந்த கவளத்துடனேயே சென்றான். இந்த இடைவெளியில், அம்போ ஜன்ம- ப்ரும்மா க்ருஷ்ணனின் மாயையை வெளிப் படுத்தவோ, இந்த பசுக்களையும், அவைகளை பாலித்த சிறுவர்களையும், வேறு இடத்திற்கு கொண்டு சென்று விட்டார். அகாசுரனை வதம் செய்ததை வேடிக்கைப் பார்த்தபடி தங்களுக்குள் விமரிசித்துக் கொண்டே திரும்பிக் கொண்டிருந்த தேவர்கள் இது என்ன என்று ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.
அதன் பின் பசுக்களையும் காணவில்லை, திரும்பி பார்த்தால் மணலில் இருந்த இடைச்
சிறுவர்களையும் காணவில்லை எப்படி மாயமாக அனைவரும் மறைந்து விட முடியும் என்று யோசித்தவன், வீடு திரும்பினால் அந்த தாய்மார்களுக்கு என்ன பதில் சொல்வோம், என்ற கவலை வர, அனைத்தும் விதி என்ற ப்ரும்மாவின் வேலை என்பதை புரிந்து கொண்டார். விஸ்வகர்த்தாவான பகவான் தன்னையே அனைத்து சிறுவர்களாகவும், பசுக்களாகவும் ஆக்கிக் கொண்டார்.
எந்த உருவத்தில் எந்த சிறுவன் இருந்தானோ, உடலமைப்பு வஸ்திரம், நடையுடை பாவனைகள் அதே போல இருக்க, எந்த பசு எந்த உருவம் அதன் உடலமைப்பு, கொம்புகள், நிறம் நடைகள். இவற்றுடன் சற்றும் சந்தேகமே வராதபடி அந்தந்த தாய் மார்கள் கூட கண்டுபிடிக்க முடியாத ஒற்றுமையுடன் தானாகி நின்றான். சர்வம் விஷ்ணு மயம் என்பதற்கேற்ப, சர்வ ஸ்வரூபனாகினான். அந்த பசுக்களின் பசு பாலக சிறுவர்களின் அந்தராத்மாவாக இருந்தவன், வெளிப் பார்வைக்கும் அதே போல ஆனான். அந்தந்த வீடுகளுக்கு பசுக்களை ஓட்டிக் கொண்டு அந்தந்த வீட்டுச் சிறுவர்கள் சென்றனர்.
வேணு நாதம் கேட்டு வீட்டுப் பெண்கள் அவர்களை அழைத்துச் செல்ல வந்தனர். தங்கள் குழந்தைகளை அணைத்து, உச்சி முகர்ந்து, கொண்டாடி, வெகு நேரம் காணாததால் ஆவலுடன் அழைத்துச் சென்றனர். பர ப்ரும்மனை தங்கள் மகனாக காணும் பேறு பெற்றவர்கள். தங்கள் குழந்தைகள் என்பதால் நீராட்டி, புது ஆடையுடுத்தி உணவளித்து உபசரித்தனர். பசுக்கள் தங்கள் கொட்டிலில் நுழைந்தும் ஹூங்காரம் செய்தும் தங்கள் வரவைத் தெரியப் படுத்தின. அதனதன் கன்றுகளை நாக்கால் நக்கி தங்கள் அன்பை வெளிப் படுத்தின. வழக்கம் போல கறக்க வந்த வீட்டு பெரியவர்கள் பாலைக் கறந்து சென்றனர்.
இடையர் குலப் பெரியவர்களும் தாய்மார்களும் அதிகப் படியான எந்த வித பாவமும், அனுபவமும் இன்றி வழக்கம் போலவே உணர்ந்தனர். ஹரியின் மாயை- யாரால் அறிய முடியும். இது போலவே ஒரு ஆண்டு நிறைந்தது. அதே வன கோஷ்டி, அதே விளையாட்டுகள், தானே அனைத்துமாக இருந்து ஸ்ரீ க்ருஷ்ணன் விளையாடிய விளையாட்டு இது.
ஒரு நாள் ராமனும் உடன் வர பசுக்களை மேய்க்கச் சென்றனர். தூரத்தில் மேய்ந்து கொண்டிருந்த பசுக்கள், கோவர்தன மலையுச்சியில், பசும் புல்லைக் கண்டன. வழி நேராக இல்லை, மேலே செல்வது கடினம் என்பதைக் கூட லட்சியம் செய்யாமல் அந்த பசுக்கள் பசும் புல்லின் அவலுடன், கழுத்தை வளைத்து மேல் நோக்கியபடி, வால் பறக்க, ஹூங்காரமிட்டபடி மலை மேல் வேகமாக ஏறி விட்டன. கன்றுகளுக்கு ஊட்ட வேண்டிய நேரம் வந்ததும் அங்கிருந்து வெகு தூரத்தில் தங்கள் கன்றுகளைக் கண்டு தாய் பசுக்கள் குரல் கொடுத்தன. அந்த அழைப்பைக் கேட்டு இடைக் குலத்து ஜனங்கள், ஏதோ அசம்பாவிதம் என்று அறிந்து ஓடி வந்தனர். அந்த மலை மேல் கஷ்டப் பட்டு ஏறி அங்கு நின்றிருந்த தங்கள் புதல்வர்களையும் பசுக்களையும் கண்டனர். தங்கள் புதல்வர்களையும், பசுக்களையும் கண்ட நிம்மதி ஒரு பக்கம் அந்த செல்ல முடியாத இடம் வரை சென்ற சிறுவர்களின்மேல் கோபமும் வர, அவர்களை வசை பாடிக் கொண்டே, அவர்களை அணைத்தபடி இறங்கினர்.
பார்த்துக் கொண்டிருந்த பலராமன் யோசித்தான். வ்ரஜ குலம் தங்கள் பசுக்களையும் மக்களையும் எப்பொழுதும் பிரியமாக அணைப்பதைக் கண்டவன் தான். ஆனாலும் இன்று ஏதோ வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தான். வாசுதேவன் அகிலாத்மா உடன் வாழும் அவர்கள் நாள் தோறும் புது அனுபவங்களைப் பெறுகிறார்கள் போலும்.
யார் இவன், எங்கிருந்து வந்தான், தேவனா, அசுரனா. மாயா மயமான இவன் செயல்கள் என்னையே ஆச்சர்யத்தில் ஆழ்த்துகின்றன. இவ்வாறு எண்ணி தாசார்ஹன், தன் வயதொத்த குமாரர்கள், என்றாலும் தன் திவ்ய த்ருஷ்டியால் அவர்களை வைகுண்ட வாசிகளாக கண்டான். என்ன இது, உன் வேலையா இது. இவர்கள் தேவர்களும் அல்ல, ரிஷிகளும் அல்ல, உன்னைப் போலவே தெரிகிறார்கள், விவரமாகச் சொல்லு என்ன நடந்தது, ஒளிக்காமல் அனைத்தையும் சொல் என்று க்ருஷ்ணனை வினவினான்.
நடந்த விவரங்கள் அனைத்தையும் உள்ளபடி சொல்லிக் கொண்டிருக்கையிலேயே ப்ரும்மா தான் கொண்டு சென்ற இடையர் குல சிறுவர்களையும், பசுக்களையும் திரும்பக் கொண்டு வந்தார். வந்தவன் இங்கு இருந்த சிறுவர்களும் பசுக்களும் வைகுண்ட வாசிகளாகத் தெரிய திகைத்தார். சகலமும் ஸ்ரீ ஹரியே. முன் போலவே விளையாடிக் கொண்டு இயல்பாக இருப்பதைக் கண்டார். இவர்கள் அனைவரும் நான் கொண்டு சென்ற பின் தூங்கியவர்கள், இன்னமும் கண் விழிக்கவில்லை. இவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? மற்றவர்களை மாயையால் மோஹிக்கச் செய்து இந்த ஆண்டு முழுவதும் விளையாடியபடி, இவர்கள் வைகுண்ட வாசியான விஷ்ணுவுக்கு சமமாக அருகில் இருந்து வந்திருக்கிறார்கள். இவர்களிடையே எப்படி வித்யாசம் கண்டு பிடிப்பது என்று குழப்பம் அடைந்தவராக, எவன் நிஜ இடையன், எவன் மற்றவன் என்று யோசித்து அறிந்து கொள்ள முடியாமல், பட்டப் பகலில் மின் மினி பூச்சியின் வெளிச்சம் கண்ணுக்கு தெரியாதது போல அவர்களிடையே எந்த மாறுதலைக் கொண்டும் பிரித்து அறிய முடியாமல் திகைத்தார். அவர் குழப்பத்தைத் தீர்ப்பது போல மாயா மயமான இடையர்கள் கரு மேகம் போன்ற சியாமள நிறத்தினராக, , பீதாம்பர தாரிகளாக நான்கு கைகளும், சங்க சக்ர கதா தாரிகளாக, கிரீடமும் குண்டலமும் பிரகாசிக்க, வன மாலையணிந்து, ஸ்ரீவத்ஸமும், அங்கத வளையங்களும், ரத்னங்கள் ஒளி விசும் கங்கணங்களுமாக கால் விரல்களிலிருந்து தலைவரை புத்தம் புது கோமளமான துளசிமாலை, உடல் முழுவதும் புண்யமே உருவானதைப் போல ஒளியுமாக, சந்திரனை பழிக்கும் மென்மையான புன்னகையும், கண்களில் சிறிதே சிவந்த அபாங்க வீக்ஷணமும், -கடைக் கண் பார்வையும்- தன்னைச் சார்ந்தவர்கள் என்பதற்காக ராஜஸ சத்வ குணங்களுடன் தானே ஸ்ருஷ்டி செய்த தோழர்களுடன், தன்னைப் போல இருந்தவர்கள் தனித் தனியாக பெற்றோர்களால் லாலனம்- கொண்டாடி உபசரிக்கப் பட்டு, அணிமா முதலான இருபத்து நாலு ஸ்ருஷ்டி தத்வங்கள், காலம், ஸ்வபாவம். ஸம்ஸ்காரங்கள், என்ற குணங்கள், உப நிஷத்துக்கள் பாடும் உருவத்துடன், ப்ரும்மா புரிந்து கொண்டார். சத்ய ஞான மூர்த்தி, ஆனந்தமே உருவானவன், தன்னைப் போலவே அவர்களையும் ஆக்கி விட்டிருக்கிறான். இவனுடைய ப்ரபாவம் தானே உலகெங்கிலும்.
இப்படி அவர் திகைத்து நிற்கையில், தன் மாயையை விலக்கினார். தூங்கி எழுந்தது போல சிறுவர்கள் கண்களை சிரமப் பட்டு திறப்பது போல பார்த்தனர். எதிரில் பழகிய வ்ருந்தாவனம். அதே மரங்கள், புல் வெளி, அதே மனிதர்கள், சிரித்துக் கொண்டே அதே போல பசியும் தாகமும் தங்கள் சகாவைப் பார்த்து ஏன் இன்னமும் இந்த கவளத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கிறாய் என்று வினவினர்.
ப்ரும்மா, கனமான தண்டம் மேலிருந்து விழுவது போல க்ருஷ்ணனின் பாதங்களில் விழுந்து வணங்கினார். திரும்பத் திரும்ப பாதங்களைப் பற்றி தன் கண்ணீரால் அபிஷேகம் செய்தார். அதன் பின் கண்களை துடைத்துக் கொண்டு துதி செய்தார்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பாகத்தில், பதின் மூன்றாவது அத்யாயம்.)
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய
அத்யாயம்-14
ப்ரும்மா செய்த துதி:
இடையர் குல பெண்ணிண் மகனாக விளங்குபவனே! எங்கள் வணக்கத்துக்குரியவன். வானமே உன் உடல். மின்னலே உன் ஆடை. பூக்களின் இடையில் மலர்ந்து தெரியும் மயிற்பீலி அணிந்தவனே! காட்டுப் பூக்களை மாலையாக அணிந்திருக்கிறாய். உணவு கவளம் உள்ளங்கையில் ஏந்தியபடி, வேணுவை இடையில் செருகி, பசுக்களை மேய்க்க கொம்பினால் ஆன தடியை ஒரு கையில் வைத்தவனாக, இந்த வேடத்திலும் ஸ்ரீ லக்ஷ்மியின் ஸ்ரீ ப்ரகாசம் தெரிய இருப்பவன், ம்ருதுவான பாதங்கள் தேய வ்ரஜ தேசத்தில் நடக்கிறாய்.
தேவனே! உன் விருப்பமே எங்களுக்கு ஆணை. என்னை அனுக்ரஹம் செய்யவே, இந்த அவதாரம், மனிதனாக வந்துள்ளாய். சர்வ பூதங்களும் உயிரினங்களுமானவன் உன்னைத் தவிர வேறு யார் இருக்க முடியும். பகவானே, மனப் பூர்வமாக துதிக்கிறேன். பூமியில் வசிப்பதும், இவர்களுக்கு இணையாக சுக துக்கங்களை பகிர்ந்து கொள்வதும் என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. நீயோ ஆத்ம சுகானுபூதன்- தன்னிலேயே லயித்து ஆனந்தமாக இருப்பவன்.
அஜித! யாராலும் தோற்கடிக்க முடியாத பராக்ரமசாலியே! உன்னை ஞானிகள் உபாசித்து வணங்குகிறார்கள். உன் வார்த்தைகளை கேட்டபடி வாழ்கிறார்கள். வேத சாஸ்திரங்கள் சொல்லும் வழியில் நடப்பவர்கள், தங்கள் உடல்,மனம்,வாக்கு இவைகளால் பூரணமாக உன்னை எண்ணி ஆராதிக்கிறார்கள். சில சமயம் இவர்களுடைய மெய்யன்பால் உன்னை ஜயித்தும் விடுகிறார்கள்.
விபோ! நல்வழி, நல் வாக்கு பக்தி. அதை விட அதிகமாக செயல்களை சாதனைகளை நம்பி உடல் வருந்த தவம் செய்கிறார்கள். அதுவும் உன்னை அடையவே. இந்த கஷ்டங்களே அவர்களுக்கு உபதேசமாக ஆகின்றன. ஸ்தூலமான தானியம் உரலில் அடிபட்டு உமி விலகி தானியம் தெரிவது போல எனலாம்.
அச்யுதா! இந்த பூமியில் பல ஞானிகள் உன்னிடமே தங்களை அர்ப்பித்தவர்களாக, தன் வினைப் பயனாக பெற்ற சரீரம் என்று உணர்ந்து, பக்தியே ப்ரதானமாக, உன் கதைகளைக் கேட்டு, சாஸ்வதமான கதியை, பரமகதியை அடைகிறார்கள். அவர்களும், உன் மகிமைகளை முழுவதுமாக அறிந்ததாக நினைப்பதில்லை. நிர்மலமான அந்தராத்ம சுத்தமாக, கர்ம பந்தங்களை அறவே துறந்து, அனுபவங்கள் வாயிலாக ஆராய்ந்து அறிவார்கள், அதைத் தவிர சுலமான வழி எதுவும் இல்லை.
அவர்களாகவே, தாங்கள் உயர்ந்த குணங்கள் என்று நினைப்பதை உன்னிடம் காண்பதாகச் சொல்வார்கள். நீ குணங்களுக்கு அப்பாற்பட்டவன். தங்கள் வினைப் பயன்களை அனுபவிப்பவர்கள் அவர்கள். உன் கருணையை வேண்டுகிறார்கள். உன்னையே சரணம் என்று ஹ்ருதயத்தால், வாக்கால், உடலால் நமஸ்கரிக்கிறார்கள். முக்தி பதம் தருபவன் நீயே என்பதால் அதற்கு அருகதை உள்ளவர்களாக தாங்கள் ஆக வேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோள்.
ஈசனே! இதோ பார். நான் பொதுவான நாகரீகம் கூட இல்லாமல் ஆதி புருஷணான உன்னிடம் தவறாக நடந்து கொண்டு விட்டிருக்கிறேன். உன் மாயை நான் அறியாததா? பராத்மா என்றும் அறிவேன். உன் ஆத்ம வைபவம் என்பதை காணவே, உன் மாயையின் எல்லையை அறியவே செய்ததாக கொள்வாய். அக்னியின் பொறிகள் தனக்கு ஆதாரமான அக்னியை சோதிப்பது போல இந்த செயல். அதனால் க்ஷமஸ்வ. என்னை மன்னித்து விடு. அச்யுதா! என் ராஜஸ குணம். தெரியாதவன் போல், நீ ஏதோ அன்ய ஈஸ்வரன் போல நினத்து, கண் தெரியாதவனை மற்றொரு பிறவிக் குருடன் வழி நடத்திச் செல்வது போல எதையோ எண்ணி இந்த செயலை செய்து விட்டேன். என் தலைவன் நீ, என்னிடம் கருணை காட்டு.
நான் எங்கே, தாமசமான மஹத் அஹங்காரங்கள் ஸூரியன், அக்னி, வாயு, பூமி இவை சூழ்ந்த பூ மண்டலம், ஏழு தீவுகளாக உள்ள பூமி, இதற்குள் அடங்கினவன், நீயோ, இந்த பூமண்டலங்களைத் தாண்டி, ப்ரும்மாண்டத்தையும் உள்ளடக்கியவன் எங்கே. எண்ணற்ற பரமாணு, வாயு, ஆகாயம் இவைகளை உன் ரோமங்களில் வைத்திருப்பவன், உன் மகத்வம்- பேராண்மைக்கு முன் நான் எம்மாத்திரம்?
அதோக்ஷஜா! உன்னிடத்தில் பிறந்தவன் நான், தன் மகன் சிறு கால்களால் உதைப்பதை தாயார் பெருமையாக ஏற்பதில்லையா, அது போல என் செயலை நினைப்பாயாக. குற்றம் தான். உன் வயிற்றில் அஸ்தி, நாஸ்தி- உண்டு இல்லை என்ற வாதங்கள், உன்னிடமிருந்தே பிறப்பவை, உண்மையை நிலை நாட்டவே மேலும் பல உள்ளனவே.
ஈஸ்வரா! ப்ரளய காலத்தில் நீரில் மூழ்கிய ப்ரும்மாண்டத்தை நாராயணனாக உன் வயிற்றில் வைத்திருந்தாய். அதிலிருந்து தோன்றிய தண்டில் நான் தோன்றினேன். அஜன்- பிறவியில்லாதவன், என்று பெயர் பெற்றேன். அது தவறான சொல்லுமல்ல. ஆனால், ஈஸ்வரனே உன்னில் தோன்றியவனே நான். நாராயணத்வம் என்பது அனைத்து உயிரினங்களிலும் ஆத்மாவாக உறைவது. லோகாதீசன், உலக நாயகன், அகில லோகத்துக்கும் சாக்ஷியாக இருப்பவன், நாராயணனின் அங்கமாக, பூமியில் மனிதனாக, நீர் வாழ் இனங்கள், என்று உயிர்கள் உடலுடன் தோன்றின. அதுவும் உன் மாயையே.
நீரில் மூழ்கி இருந்த உன் உருவத்தைக் கண்டவன் நான். சத்தான உலகமே உன் உடல். நான் காணாதது எதுவுமே இல்லை, பகவானே, என் ஹ்ருதயத்தில் படிந்த அந்த உருவத்தை எனக்கு காட்டு. இப்பொழுதே.
இங்கேயே, இந்த அவதாரத்தில், இந்த ப்ரபஞ்சத்தில் உன் ப்ரும்மாண்ட உருவத்தை வெளிப்படையாக காட்டும் அவதாரம் இது. இதே அவதாரத்தில் தாய் வயிற்றில் உருவான கருவாகவும் உன்னைக் காட்டிக் கொள்கிறாய். இது தான் உன் மாயா ப்ரபாவம். எவனுடைய வயிற்றில் உலகம் முழுவதும் கர்பத்தில் இருந்தனவோ, அவனே கர்ப வாசம் செய்தது அதிசயமல்லவா. உன் மாயை அன்றி வேறு என்ன சொல்வோம்.
இன்றே, நீ இல்லாமல் இது போன்ற ஒரு காட்சியை காட்டியிருக்க முடியுமா? நீதான் முதல்வன். அதன் பின் வ்ரஜ சிறுவர்களின் தோழனாக அனைவருமாக வந்தாய். அனைவரும் சதுர்புஜங்கள், அத்துடன் உன் அலங்காரங்கள் அணைத்தும் தரித்தவர்களாக, நான் கண்டேன். அது வரை அமிதமான ப்ரும்மத்வம் என்று காட்டி விட்டாய். அதனால் ப்ரும்மா என்று இருவர் என்பதையும் சொல்லாமல் சொல்லி விட்டாய்.
உன் உயர்ந்த ஸ்தானத்தை அறியாதவர்கள் தான், ஆத்மாவை ஆத்மாவால் விளங்கச் செய்கிறாய் என்று அறிவர். உலகை என்னைக் கொண்டு படைக்கச் செய்தாய். த்ரி நேத்ரனால் இந்த உலகை அழிக்கவும் செய்தாய். தேவர்களில், ரிஷிகளில். மேலும் மனிதர்களில், குறுக்காக நடக்கும் விலங்குகளில், நீர் வாழ் ஜீவன் களில், பிறவியே இல்லாத உன் அவதாரம் நிகழ்ந்தது. துர்மதிகளான சிலரை அடக்க ப்ரபோ! விதாதா என்ற எனக்கு பரமானுக்ரஹம் செய்திருக்கிறாய்.
யாருக்கு முழுவதுமாக உன் மகிமை தெரியும். பகவன்! பராத்மன்! யோகேஸ்வரன் நீ, மூவுலகிலும் யாராக, எப்பொழுது, எந்த இடத்தில், எவ்வளவு முறை, தோன்றி விளையாடியிருக்கிறாய்.
அதனால் இதை ஜகம் முழுவதும் உள்ள அசத் ஸ்வரூபம், கனவு போன்றது, அறிவில்லாத, மனித இயல்பான துக்கத்தின் துக்கம். அனந்தனான உன்னிடம் லயித்தால் தான், நித்ய சுகம் என்பதைக் காண முடியும். உன் உண்மையான ஸ்வரூபத்தை காண முடியும். மற்றவை வெறும் மாயையினால் உண்டான தோற்றமே.
நீ ஒருவன் தான் புராண புருஷன் எனப்படுபவன். சத்யமானவன். உன்னுடைய ஜோதியே
ஆதியும் அந்தமுமாகும். நித்யன், அக்ஷரன், அளவில்லாத சுக ஸ்வரூபன், நிரஞ்ஜனன், (மாசில்லாதவன்) பூர்ணன், மற்றொன்று உனக்கு நிகராக சொல்ல முடியாத முக்தன், சுதந்திரமானவன், அம்ருதன் என்ற பட்டம் உனக்கே தகும்.
இப்படிப்பட்ட உன்னை சகல ஆத்மாவானாலும், உன் தனித் தன்மையையும் நிலை நிறுத்திக் கொள்கிறாய். குரு ஜனங்கள், ஆசாரியர்கள் மூலம் உபனிஷத் என்ற கண்களால் எவர் காண்கிறார்களோ அவர்களே பவம் எனும் இந்த சாகரத்தை தாண்டுகிறார்கள்.
தங்களையே பூர்ணமாக இன்னமும் அறியாதவர்களால் உலகம் நிரம்பியுள்ளது. அவர்கள் தான் கயிற்றினால் கட்டியது போல கட்டுப் படுகிறார்கள்.
அறியாத அக்ஞானி அவர்கள். பவ பந்த மோக்ஷம் என்பதையும் இரட்டைகளான சுக துக்கங்கள் தவிர வேறு எதையும் அறியாமல், உண்மையும் அதே என நம்புபவர்கள். இந்த அறிவற்றவர்களை எப்படி கரையேற்றுவது? உன்னையே, வெளியில் தேடுகிறார்கள். ஆனாலும் தேவ, உன் பதாம்புஜ த்வயம்- உன் பாதங்கள் இரண்டையும், ஓரளவு அருள் இருப்பதால் சிலர் பற்றுகிறார்கள். உன் மகிமையையும், உன் தத்வத்தையும் அறிவார்கள். தானாக எவரும் உணருவது என்பது இயலாது.
அதனால் நாத! எனக்கு உன் பரி பூர்ணமான அருள் கிடைக்க வேண்டும். இந்த ஜன்மத்திலோ, விலங்காக பிறந்து அடுத்த பிறவியிலோ, நான் ஒருவனே என்று ஆனாலும், உலகில் இருந்து உன்னை சேவிப்பேன். அஹோ, இந்த வ்ரஜ தேசத்து சிறுவர்கள் அதி தன்யா:. மிகவும் புண்யம் செய்தவர்கள். இங்குள்ள பெண்கள் அனைவருமே. அவர்கள் பாலூட்டி மகிழ்ந்தனரே. இவர்கள் அனைவருக்கும் நீ அவர்களின் பெற்ற குழந்தையாக, சிறுவர்களாக, மகனாக இருந்திருக்கிறாய். அவர்கள் தாயன்பை பொழிந்திருக்கிறார்கள். எந்த அளவு யாகங்கள் செய்தாலும் அந்த திருப்தி கிடைக்குமா?
அஹோ பாக்யம்! அஹோ பாக்யம்! நந்த கோபனுடைய இந்த தேசம், இந்த தேசத்தில் வசிப்பவர்கள். பரமானந்தமான பூர்ணனை தங்கள் தோழனாக, கிடைக்கப் பெற்றவர்கள். இவர்களுடைய பாக்யம் அச்யுதா! அது ஒரு பக்கம் இருக்க, நாங்களும் ஓரளவு பாக்யம் செய்தவர்களே ஆவோம். பெரும் பாக்யம் செய்தது இந்த அரண்யம். கோகுலமும் இங்கும் உன் பாதங்கள் இங்கு நடந்து நடந்து புண்ய க்ஷேத்ரமாக்கி விட்டன. வேதங்கள் தேடும் உன் பாத தூளிகள், முகுந்தனே தங்கள் ஜிவிதம் என எண்ணி வாழும் புண்யாத்மாக்கள் நிறைந்த பூமி இது.
அச்யுத! இவர்களுடைய கொட்டில்களில் வாழும் பசுக்கள் அறியுமா? உன்னை பகவான் என்றா நினைக்கும். நம்மை காப்பவன் என நினைக்குமா? உன்னையன்றி வேறு எதையும் அறியாத எளிய ஜீவன்கள். த்வேஷத்துடன் வந்த பூதனா கூட அவள் குலத்தோடு சேர்த்து உன்னால் தேவதையாக்கப் பட்டாள். அவள் ப்ராணனை நீ எடுத்தாலும், உனக்காக உயிரை விட்டவள்.
உன்னிடம் பாசம் இல்லாதவர்களுக்கு வீடே சிறை. உன்னை பணியாத வரை மோகம் அவர்களை விட்டு விலகாது. உன் ஜனங்களே ப்ரபஞ்சம். பூமியிலேயே அந்த ப்ரபஞ்சத்தையும், அதைத் தாண்டி நிஷ்ப்ரபஞ்சம் என்பதையும் காண்கிறார்கள். சரணடைந்தவர்களை காப்பதே உன் குணம். அதுவே ஆனந்தம். எனக்கும் அந்த நிலையை அருள்வாய்.
அதிகம் சொல்வானேன்? புரிந்து கொள்பவர் புரிந்து கொள்ளட்டும். ப்ரபோ! என் உள்ளத்திற்கு, என் உடலுக்கு, வாக்குக்கு, உன் வைபவம் தெரிகிறது. எனக்கு விடை கொடுங்கள். க்ருஷ்ணா! நீங்கள் அறியாததும் உண்டா? எங்கும் உங்கள் பார்வை செல்லும். நீங்களே உலகின் நாதன்- தலைவன். இந்த ஜகத் உங்களுக்கே அர்ப்பிக்கப் பட்டது.
ஸ்ரீ க்ருஷ்ணா! வ்ருஷ்ணி குல புஷ்கரம் என்ற குளத்துக்கு உயிர் கொடுப்பவன். பூமி, அருவிகள், பறவைகள், பசுக்கள், இவைகளை வ்ருத்தி செய்பவன். தர்மத்தை உத்தாரணம் செய்ய வந்தவன். பூமியில் துஷ்டர்களை அழித்து நல்லவர்களுக்கு நன்மை உண்டாக செய்வாய். பகவானே! நமஸ்தே.
ஸ்ரீ சுகர்: இவ்வாறு புகழ்ந்து துதி செய்து விட்டு, மும்முறை ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து காலில் விழுந்து வணங்கி, உலகை படைத்தவனான ப்ரும்மா, தன் இருப்பிடம் சென்றார். பகவானும் முன் போலவே மணல் திட்டில் சிறுவர்களுடன் அமர்ந்தார். ஒரு வருடம் ஆன பின்னும் தன் மனதுக்குகந்த தோழர்கள், இதை எதையும் அறியாமல் அரை நிமிடம் சென்றது போல உணர்ந்தார்கள். மாயையால் மோகிக்கச் செய்த செயலால் எதை தான் மறக்க மாட்டார்கள். அவர்கள் பரிவுடன் க்ருஷ்ணனிடம், நீ ஒருவன் தான் இன்னமும் சாப்பிடாமல் கவளத்தை கையில் வைத்திருக்கிறாய். நாங்கள் அனைவரும் உண்டு முடித்து விட்டோமே என்றனர். இங்கு வா என்று ஒவ்வொருவரும் அழைத்தனர்.
அதன் பின் சிரித்த படியே அவர்கள் இடையில் அமர்ந்து அந்த சிறுவர்களுடன் புல்லில் நடந்து அஜகரனின் தோல் கிடப்பதைக் காட்டி விட்டு, வீடு திரும்பினர். பூக்களின் மகரந்தங்கள் உடைகளில், உடலில் அப்பியிருக்க, விசித்ரமான மூங்கில் காட்டில் அலைந்ததால், அதன் இலைகள் ஆடைகளில் தென்பட, சிறுவர்கள் வேணுவின் நாதத்தோடு இணைந்து பாடியபடி எதிர் நோக்கியிருந்த இடையர் குல பெண்களிடையே தங்கள் வீடுகளுக்குச் சென்றனர். இன்று ஒரு மிகப் பெரிய பாம்பு, யசோதா நந்தனால் அடித்து கொல்லப் பட்டது. எங்களை அதன் வாயிலிருந்து காப்பாற்றினான் என்று வ்ரஜ தேசம் முழுவதும் கதையாக பரப்பினர்.
அரசன் கேட்டான்: ப்ரும்மன்! இந்த வ்ரஜ வாசிகளுக்கு க்ருஷ்ணனிடம் இந்த அளவு அன்பும் பாசமும் எப்படி ஏற்பட்டது? அது புதிதாக இல்லையா? முன் பிறந்தவனில்லை, தன் உடன் பிறந்தவர்களிடம் கூட இந்த அளவு ஒட்டுதல் இருப்பதில்லையே.
ஸ்ரீ சுகர் சொன்னார்: அனைத்து ஜீவன்களுக்கும் தன்னை, தன்னைச் சார்ந்தவைகளை பிடிக்கும். தன் தனயன், செல்வம், இவைகளிடம் பற்றுதல் தோன்றுவது இதனால் தான். ராஜேந்த்ரா! இது தான் இயல்பு. தேகம் படைத்தவர்களுக்கு தனது, தான் என்ற ஸ்னேகம் இருப்பதும், தன் மகன், தன் செல்வம் என்ற எண்ணமும் வருகிறது. தேகாத்ம வாதிகளான மனிதர்களுக்கும், ராஜன்! எந்த அளவு தன் தேகம் பிரியமோ, அந்த அளவு வேறு எதுவும் இருப்பதில்லை. ஜீவித்திருக்கும் ஆசை பலமானது. இந்த சுற்றத்தார், தனது செல்வம் வீடு இவைகளும் கூட அதற்கு பின் தான். உலகம், சராசரமும் இந்த தன்னலமான தான் தனது தேகம் என்பதைச் சுற்றியே உள்ளது, இந்த க்ருஷ்ணனை இப்படிப் பார். அகிலாத்மாவுக்கும் அந்தர் யாமியான ஆத்மா. உலக நன்மைக்காக உடல் எடுத்து, அவதரித்து வந்தவன் எனப் பார். உண்மையில் இந்த க்ருஷ்ணன் ஸ்தாஸ்னு என்ற நிரந்தரமானவன். மற்றவைகளை செயல் படுத்துபவன். பகவத் ரூபமே அனைத்தும்.
அனைத்து வஸ்துக்களிலும், பாவம்- உட்பொருளானவன். க்ருஷ்ணனைத் தவிர மற்றொரு வஸ்து என்பதே இல்லை. முராரி அவன். அவன் பதங்களை அண்டியவர்களுக்கு பவாம்புதி என்ற இந்த சம்சாரக் கடலை தாண்டுவது எளிது. புண்யமான புகழ் வாய்த்தவன் அவனே. அவன் பக்தர்களுக்கு எந்த விபத்தும் நேராது.
இவையனைத்தையும் உனக்கு சொல்லி விட்டேன். நீ கேட்டபடியே சொன்னேன். உனக்கு சூழ்நிலையும் அமைந்தது. சிறு வயதில் ஸ்ரீ ஹரி செய்த செயல்களை, சிறுவர்களாக விளையாடி செய்தவை, இவைகளைச் சொல்லி கேட்டாய்.
அகன் என்ற அசுரனை அழித்ததையும், தோழர்களான சிறுவர்களுடன் நடந்து சென்றதையும், புல் வெளியில் அமர்ந்து போஜனம் செய்ததையும், அசையாத மரங்களும், மலைகளும் கூட அவனிடம் பரிவுடன் இருந்ததை பாடிக் கேட்பவர்கள் பெரும் பலன்களைப் பெறுவார்கள். இதே போல குமார வயதில், வ்ரஜ தேசத்தில் வாழ்ந்த சமயமும் அந்த வயதுக்குரிய விளையாட்டுகளையும் , குரங்கு போல தாவுவது போன்ற சாகசங்களையும் செய்து மகிழ்ந்தனர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், முதல் பிரிவில், ப்ரும்மஸ்துதி என்ற பதின் நான்காவது அத்யாயம்)
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய
அத்யாயம்-15
ஸ்ரீ சுகர் சொன்னார்: அதன் பின் குமார வயதில் வ்ரஜ தேசத்தில் அனைவருமாக பசுக்களை மேய்க்கச் சென்றனர். வ்ருந்தாவனத்தில் ஒரு இடம் விடாமல் அலைந்து திரிந்தனர். மாதவன் வேணு என்ற குழலை வாசிக்க தோழர்கள் மெய் மறந்து கேட்டு ஸ்லாகித்தனர். அதுவே அவர்கள் மத்தியில் க்ருஷ்ணனுக்கு ஒரு உயர்ந்த ஸ்தானம் கொடுத்தது போல் ஆயிற்று. பசுக்களை முன்னிட்டுக் கொண்டு பசுமையான இடங்களைத் தேடி போவதான வியாஜத்தால் மலைகள், அடர்ந்த காடுகளின் உட் புறமும் காட்டு மலர்களின் மணத்தை அனுபவித்தபடி சென்றனர். புதர்களில் மண்டிக் கிடக்கும் வண்டுகளின் ரீங்காரம் கூட அவர்களுக்கு மனோஹரமாக இருந்தது. சதபத்ர என்ற மரத்தின் இலைகளே நறுமணம் கொண்டிருந்தன. காற்று அவர்களுக்கு அந்த மணத்தின் மூலம் அதன் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்தது போல் வீசியது. புத்தம் புது துளிர்கள் சிவந்த நிறத்தில் மென்மையாக இருப்பதை ரசித்தனர். சில பழ மரங்கள் பழுத்து தொங்கும் பழங்களுடன் வணங்கி நிற்பதைக் கண்டனர். வானளாவ உயர்ந்த மரங்கள் ஆச்சர்யப் படுத்தின. அவைகளைக் காட்டி பலராமனிடம் க்ருஷ்ணன் சொன்னார்:
ஆஹோ! இவைகளைப் பாருங்கள் தேவர்கள் பூஜிக்கும் மரம் இது. நமது களைப்பை நீக்க என்றே இந்த மரங்களின் தோற்றமோ எனும்படி பூக்களும், பழங்களும் நமக்காக வளைந்து கொடுக்கின்றன. என்னே இந்த மரங்களின் மகத்தான பிறவி. ( பரோபகாராய பலந்தி தரவ: – பரோபகாரத்திற்காகவே மரங்கள் பழுக்கின்றன.)
இந்த காற்றும் எதோ பாடுகிறது. உலகின் தீர்த்தம்- சுத்தமாக்கும் வேலை இதனுடையது. ஆதி புருஷனுடைய புகழை பாடுகின்றன. உங்களைப் போன்ற முனி ஜனங்கள், இந்த வனத்தில் சஞ்சரிக்கும் பொழுதும் தங்கள் வழிபாடுகளை நிறுத்துவதில்லை.
இந்த மயில்களைப் பாருங்கள்- அழகாக ஆடுகின்றன. ஹரிணி-பெண் மான்கள், இடையர் குல இளம் பெண்கள் போல மருண்டு உங்களை நோக்குகின்றன. அவர்களைப் போலவே உங்களிடம் அன்பு கொண்டுள்ளன போலும். கோகிலங்கள் ஏதோ சூக்தங்கள் சொல்வது போல ஒரே குரலில் வீட்டிற்கு வந்த அதிதி (உங்களை) வரவேற்கின்றன. ஆஹா இந்த காட்டு வாசிகளின் இனிய பண்பு, இவைகளைப் பார்த்தே நல்ல குணம் உடையவர்கள் தெரிந்து கொண்டார்களோ. இந்த தேசம் தன்யம்- புண்யம் செய்தது. புல்வெளிகள், சிறு செடிகள், பாதங்கள் நோகாமல் ம்ருதுவாக நடக்க ஏதுவாக இருக்கின்றன. மரங்களில் சுற்றிக் கொண்டிருக்கும் கொடிகள், தங்கள் கரங்களால்,விரல்களால் அதைப் பற்றிக் கொண்டிருப்பது போல இருக்கிறது. நதிகள், மலைகள், பறவைகள், சிறு, பெரிய விலங்குகள், இவைகளும் பார்வையிலேயே தயை எனும் உயர் குணத்தை வெளிப்படுத்துகின்றன. கோகுலத்து ஸ்த்ரீகளின் ம்ருதுவான அணைப்பை நினைவு படுத்துகின்றன.
ஸ்ரீ சுகர் சொன்னார்: வ்ருந்தாவனத்தில் ஸ்ரீ க்ருஷ்ணன் மிகவும் ரசித்து மகிழ்ந்தபடி பசுக்களை மேய்க்க கொண்டு செல்வதும், நதியில் மெண் மணலில் சஞ்சரித்தும், மலைகளில் ஏறி இறங்கியும் தன் வயதொத்த தோழர்களுடன் அனுபவித்தார். சில சமயம் அனைவருமாக பாடுவர். ஒருவர் பாடுவதை மற்றவர் தொடர்ந்து அனுசரித்து பாடுவர். உடன் பாடுவது போல வண்டுகளின் ரீங்காரம் கேட்கும். காட்டு மலர்களை மாலையாகத் தொடுத்து அணிந்து கொள்வர். சங்கர்ஷணன்- பலராமனும் உடன் இருப்பான். கிளிகள் பேசுவதைப் போல பேசியும், அந்த வயதுக்குரிய சுதந்திரங்களும், கல்பனைகளுமாக நாட்கள் சென்றன.
சில சமயம் கல ஹம்ஸங்கள் கூவுவதைக் கேட்டு திருப்பி தாங்களும் அது போல கூவுவர். மயில்கள் ஆடுவது போல ஆடுவர். தான் சிரித்தும் மற்றவர்களை சிரிக்க வைத்தும் உல்லாசமாக இருந்தனர். வெகு தூரம் விலகிச் சென்று விட்ட பசுக்களை பலமாக போட்டி போட்டுக் கொண்டு அழைப்பர். யார் குரல் இடி ஓசை போல இருக்கிறது என்று நிரூபிக்க விரும்புவது போல. எந்த பறவையையும் விடவில்லை. சகோர, க்ரௌஞ்ச, சக்ரவாக, பாரத்வாஜ , மயில்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான குரல், நடை, இவற்றை கவனித்து பார்த்து தாங்களும் அதே போல கூவியும், நடந்தும், ஆடியும் பொழுது போக்கினர். புலி உறுமினாலோ, சிங்கம் கர்ஜித்தாலோ பயந்தது போல நடிப்பர்.
இடையிடையில் தங்கள் கூட்டத்தில் ஒருவன் களைத்தவன் போல இருந்தால் தூக்கிச் செல்வர். பசுக்களை மேய விட்டு, கைகளை கோத்துக் கொண்டு நடனமாடுவர். ஒருவரையொருவர் பரிகாசமோ, பாராட்டோ எதுவுமே ரசிக்கும் படியாகவே இருந்தன. அனைவரும் ஒன்றாகவே இருப்பதை விரும்பினர். விளையாட்டாக மல் யுத்தம் செய்வர். புல் தரையில் படுத்து ஓய்வெடுப்பர். அல்லது மரங்களின் நிழலில் படுத்து தூங்குவர். இருவராக கைகளில் க்ருஷ்ணனையோ, பலராமனையோ தாங்கிச் செல்வர். விசிறிகளால் வீசுவர். அது போன்ற பணிவிடைகள் செய்ய கொடுத்து வைத்தவர்கள். தூய நட்பே ப்ரதானமாக அவர்கள் இருவரையும் விட்டகலாமல் அன்பினால் திக்கு முக்காடச் செய்வர்.
இப்படி தன் ஸ்வரூபத்தை வெளிக் காட்டாமல் இடையர் குல சிறுவனாகவே அவர்களுடன் ஒன்றி கலந்து வாழ்ந்த பகவானின் பாத பல்லவங்கள், ரமா என்ற லக்ஷ்மி தேவி என்றும் பணிவிடைகள் செய்த பாதங்கள், கிடைத்ததால் அந்த கிராமத்து சிறுவர்கள் நட்பினால் தோன்றிய பற்றுதல், பாசம் இவையே ப்ரதானமாக பகவானின் அருகாமையையும் அவரது அருளையும் பெற்றனர்.
ஸ்ரீதாமா என்ற இடையச் சிறுவன், பலராமன், கேசவன் இவர்களுடைய சகா சுபலன், இவர்கள் க்ருஷ்ணனிடம் கேட்டனர். ராம, ராம மஹாபாஹோ, க்ருஷ்ணா! சிறிது தூரத்தில் பெரிய வனம் உள்ளது. அதில் தாள பழங்கள் பழுத்து தொங்குகின்றன. பறிப்பார் இன்றி தரையில் விழுந்து வீணாகின்றன. தேணுகன் என்ற ஒருவன் அதை தன் வசப் படுத்திக் கொண்டு யாரும் அருகில் வராமல் தடுக்கிறான். நீங்கள் துஷ்டர்களை அடக்க சாமர்த்யம் உள்ளவர்கள் தானே. கர- கழுதை ரூபத்தில் பயமுறுத்துகிறான். பலசாலி. தனக்கு சம மான அவன் பரிவாரங்களையும் உடன் வைத்திருக்கிறான். மனிதர்களை விழுங்குகிறான். அதனால் யாருமே அருகில் செல்வதில்லை. பசுக்களோ, பக்ஷிகளோ கூட அந்த இடத்தை தவிர்க்கின்றன. அந்த பழங்களை நாங்கள் ருசித்து பார்த்ததே இல்லை. வாசனையால் அறிவோம். விஷம் உள்ளதோ என் சந்தேகப் படுகிறோம்.
க்ருஷ்ணா! வந்து பார். அந்த வாசனையால் கவரப் பட்டே எப்படியிருக்கும் என்று அறிய ஆவல் கொண்டுள்ளோம். என்னதான் என்று பார்த்து விடலாமே. ராமா, உங்கள் இருவருக்கும் சம்மதமானால் அங்கு போய் பார்க்கலாம் என்றனர். இப்படி வினயமாக அவர்கள் கேட்டுக் கொண்டதும் சிரித்துக் கொண்டெ, பலராமனும் சம்மதித்து அந்த இடையர் குல தோழர்கள் புடை ஸூழ தாள வனம் சென்றனர்.
தன் புஜங்களால் மரத்தை உலுக்கி பழங்களை பலராமன் பூமியில் விழச் செய்தார். யானை தன் துதிக்கையால் ஆட்டியது போல மரம் ஆடியது. சத்தம் கேட்டு கழுதை உருவத்தில் இருந்த அசுரன் வேகமாக வந்தான். அவனுடைய காலடியால் பூமி நடுங்கியது. மரங்கள் ஆடின. பலமாக கோரமான குரலில் கத்திக் கொண்டு அருகில் வந்தான். அருகில் வரவும் பலராமன் அவனை தூக்கிச் சுழற்றி வீசினார். வெகு தூரத்தில் போய் விழுந்த அசுரன் அலறினான். அவனைச் சார்ந்தவர்களும் தாக்க வர பலராமன் ஒவ்வொருவரையும் எதிர்த்து போராடி துரத்தி விட்டான். சிலர் ஓடித் தப்ப முயன்றனர். அவர்களும் வெகு தூரம் ஓடி விழுந்தனர். பெரும் புயல் வீசி ஓய்ந்தது போல இருந்தது. தாள மரங்கள் அந்த புயலில் அலை பாய்ந்து பழங்களை உதிர்த்து விட்டன போல பழங்கள் தரையில் சிதறின.
ஜகதீஸ்வரனுக்கு இது பெரிய காரியமா? அனந்தனான பகவானுக்கு இந்த செயல்கள் இயல்பாக வருவன. எப்படி துணி நெய்பவன், ஊடும் பாவுமாக நூலைக் கொண்டு நெய்கிறானோ அது போல உலகை படைத்தவன் அவனே அல்லவோ. தேணுகனின் உறவினரும் ஸ்ரீ க்ருஷ்ண, ராமனின் பாதங்களில் பணிந்தனர். கண் முன்னே அவர்கள் கூட்டத்தினர் பட்ட பாடு, வேகமாக அந்த இடத்தை விட்டகன்றனர்.
தைத்யர்கள் அகன்றதும் அந்த பூமியே சாந்தமாகி விட்டது. வானத்தில் தெரியும் தாரகைகள் போல தரையில் தாள பழங்கள் கிடந்தன. தேவர்கள் பூமாரி பொழிந்தனர். அருகில் வசித்த மனிதர்களும் வந்து பழங்களை எடுத்துச் சென்றனர். இதுவரை அசுரனிடம் பயத்தால் நெருங்காமல் இருந்தவர்கள். பசுக்களும் வந்து மேய்ந்தன. தேணுகன்- பசுவின் ஒரு பெயர், இங்கு அசுரன் ஹதமான பின் பசுக்கள் அருகில் வந்தன.
தோழர்களும், பலராமனும், க்ருஷ்ணனுடன் வ்ரஜ தேசம் வந்து சேர்ந்தனர்.
பசுக்கள் கிளப்பிய புழுதியால் மண்டிய தேகம், தலையில் சூடிய மயில் இறகு, காட்டுப் பூக்களைத் தொடுத்து கட்டிய மாலை, தன் இனிய பார்வை, மற்றும் மென் சிரிப்பினாலேயே அவர்களை கட்டிப் போட்டவராக , வேணுவை வாசித்தபடி முன் சென்றார். அதைத் தொடர்ந்து அவர்கள் பாடியும், ஆடியும் வருவதைக் கண்டு மற்ற இடையர் குல பெண்களும் பெரியவர்களும் அதிசயித்தனர்.
முகுந்தனை கண்களாலேயே பருகுபவர்கள் போல பார்த்தனர். முகுந்தனின் முகமே அவர்கள் தாபத்தை தீர்க்க போதுமானதாக இருந்தது. அவர்களையும் நோக்கி புன்னகையை வீசி விட்டு, தன் இருப்பிடம் சென்றான். அந்த அளவு தங்களை நோக்கி புன்னகையே தங்களுக்கு கிடைத்த வெகுமானமாக எண்ணி, வெட்கத்துடனும், வினயத்துடனும், தொடர்ந்து நோக்கியபடி இருந்தனர்.
யசோதையும், ரோஹிணியும் தங்கள் புத்ர வாத்சல்யத்துடன் அந்தந்த காலங்களில் ஏற்ற ஆசிகளை வழங்கினர். வெகு தூரம் அத்வான காட்டில் அலைந்து விட்டு வந்தவர்கள் களைத்திருப்பர்கள் என்று பரிவுடன் அழைத்துச் சென்று நீராட்டி, புத்தாடைகள், அணிகள் அணிவித்து வாசனை திரவியங்கள் பூசி களைப்பை நீக்கினர். தாய்மார்கள் கொண்டு வந்து கொடுத்த அன்னத்தை ருசித்து சாப்பிட்டனர். அவர்கள் இருவரும் அருகில் அமர்ந்து விசிறியும் உபசரித்தும் விருப்பத்துடன் உண்ண வைத்தனர். பின் உயர்ந்த படுக்கையில் படுத்து உறங்கினர்.
இவ்வாறு பகவான் க்ருஷ்ணன் வ்ருந்தாவனசாரியாக, ஒரு சமயம் பலராமன் இன்றி தான் மட்டுமாக மாடு மேய்க்கும் மற்றவர்களுடன் காலிந்தி நதிக் கரைக்குச் சென்றார். அங்கு பசுக்களும், சிறுவர்களும், பருவ கால வெப்பத்தினால் தாகம் எடுக்க காலிந்தி நதி நீரை குடித்தனர். அது விஷமானது என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை. கரையிலேயே அவர்கள் நீரில் மயங்கி விழுந்தனர். உயிரற்றவர்கள் போல கிடந்தவர்களைப் குளத்தின் ஆழத்திலிருந்து மீட்டுக் கொண்டு வந்து, தன் அம்ருத மயமான பார்வையாலேயே உயிர்ப்பித்தார். யோகேஸ்வரன் க்ருஷ்ணனால் நினைவு கிடைக்கப் பெற்றவர்கள் தங்களையே ஒருவருக்கொருவர் பார்த்து அதிசயித்தனர். தாங்கள் விஷ ஜலத்தை குடித்ததையும் மயங்கி விழுந்ததையும் எண்ணிப் பார்த்தனர். கோவிந்தனின் அனுக்ரஹத்தால் புனர் ஜன்மம் பெற்றோம் என மகிழ்ந்தனர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவத த்தில், பத்தாவது ஸ்கந்தம், முதல் பகுதியில், தேணுக வதம் என்ற பதினைந்தாவது அத்யாயம்.)
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய
அத்யாயம்-16
ஸ்ரீ சுகர் சொன்னார்: சற்று நேரம் காளிந்தி நதியை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த க்ருஷ்ணன், அதில் குடியிருந்த கொடிய விஷ நாகம்- அதை வெளிக் கொணர்ந்தார்.
அரசன் வினவினான்: எப்படி, ஜலத்தின் அடியில் ஆழத்தில் கிடந்த சர்ப்பத்தை பகவான் தூக்க முடிந்தது? பல யுக காலமாக அங்கு வசித்து வந்ததாக கேள்வி. அதைப் பற்றிச் சொல்லுங்கள். ப்ரும்மன்! அந்த இடையர் சிறுவர்களைக் காப்பாற்ற அந்த விஷ ஜலத்தில் தானே இறங்கினாரா?
ஸ்ரீ சுகர் சொன்னார்: காளிந்தி நதியின் கரையில் ஒரு குளம் ஏதோ விஷமுடைய அக்னியால் உண்டாகி விட்டது. அதன் மேல் பறவைகள் பறப்பதில்லை. அதன் மேல் பறந்தாலே அந்த விஷத்தின் தாக்குதலால் விழுந்து விடும். காட்டு மிருகங்கள் அதன் அருகில் செல்வதில்லை. அந்த விஷ வாயு மேலே பட்டாலே அவை மடிந்தன. எனவே விலங்குகள் தள்ளியே இருந்தன. வெகு காலமாக வசிக்கும் காட்டு மிருகங்களுக்கு அது தெரிந்திருந்தது. துஷ்டன் யாரானாலும் அடக்கவே எடுத்த அவதாரம் ஆனதால் க்ருஷ்ணன் சண்ட வேகமாக வீசிய விஷ வாயுவை கணித்துக் கொண்டு, அருகில் இருந்த மிகப் பெரிய மரத்தின் உச்சியில் ஏறி நீரினுள் தடாலென்று குதித்தார்.
சர்ப்பஹ்ரதம், சர்ப்பங்கள் இருந்த குளம், புருஷ சாரமான க்ருஷ்ணனின் உடல் பாரத்தால் தாங்க முடியாத அவஸ்தையும் சேர, ரோஷத்துடன் அலை பாய்ந்தன. க்ருஷ்ணனை சுற்றி வளைத்து விஷ கஷாயமாக இருந்த ஜலத்தில் வேகமாக பரவிய அலைகளால் அடித்தன. அனந்த அளவில்லாத பலசாலியான பகவானுக்கு அது ஒரு பொருட்டா? தன் புஜ பலத்தால், யானையின் துதிக்கைப் போல மகா பலத்துடன் அதிலிருந்து விடுவித்துக் கொண்டு நின்றவரை கண்களே காதுகளாக – சக்ஷு:ஸ்ரவா: – சர்ப்பத்தின் பெயர்- பொறுக்க மாட்டாமல் மேன் மேலும் தாக்கின.
ஸ்ரீ க்ருஷ்ணன் தன் சுய ரூபத்தை எடுத்துக் கொண்டார். கண்களுக்கு விருந்தான சுகுமாரனான ரூபம், கனமான குழல் கற்றைகள் ஸ்ரீவத்ஸமும், பீதாம்பரமும், மென் முறுவலுடன் கூடிய வதனம், பயமின்றி அந்த சர்ப்பங்களோடு விளையாடுவது போல ஆடிக் கொண்டிருந்தவரை அவைகள் மார்பிலேயே கொத்தின. குளத்தில் குதித்தவன் வெகு நேரமாக காணவில்லை, எட்டிப் பார்க்க சர்ப்பங்கள் சூழ்ந்திருப்பதைக் கண்ட பிரிய சகாக்கள், மிகவும் வருத்தத்துடன் செய்வதறியாமல் பூமியில் விழுந்து அரற்றினர். துக்கம், பயம், சோகம், எதை செய்தால் சரி என்று தெரியாத கையறு நிலை, பசுக்களும், காளைகளும் கன்றுகளும் கூட ஏதோ அசந்தர்பம், கஷ்டம் என்ற வரை உணர்ந்து அழுவது போல ஓலமிட்டன.
வ்ரஜ தேசத்தில் அபசகுனங்கள் தென் பட்டன. மகா பயங்கரமான நிமித்தங்கள், எதோ பயங்கரமாக விழுந்தது போன்ற தோற்றம், அவர்கள் க்ருஷ்ணனிடமே மனதை செலுத்தியவர்கள், அவரையே ப்ராணனாக மதித்தவர்கள், துக்கமும் சோகமும் பயமும் ஆட்டுவிக்க மேய்ச்சல் நிலத்தை நோக்கி ஓடி வந்தனர். பலராமன் உடன் செல்லவில்லை என்ற செய்தி கவலையை அதிகமாக்கியது. குழந்தைகளிலிருந்து வ்ருத்தர்கள் பெண்கள் அனைவரும், அரசனே! அவர்கள் பசுவே வாழ்வு என்று இருப்பவர்கள் கவலை கொள்வதில் வியப்பென்ன. தாங்களாக காலிந்தி நதியை நோக்கி ஓடி வரலாயினர். விஷயம் அறிந்த பலராமன் தன் தம்பியின் ஆற்றலை அறிந்தவன் ஆனதால் பெரிதாக வருந்தவில்லை. எதுவும் சொல்லாமல் உடன் வந்தான்
காலடிகளைக் கொண்டு தேடிக் கொண்டே வந்தவர்களை, வழியிலேயே சந்தித்த சிறுவர்கள், அருகில் வந்தனர். மற்ற சிறுவர்களும் பசுக்களும் ஓலமிட்டபடி குளத்தை சுற்றியே தவிப்பதைக் கண்டனர். இளம் பெண்கள் க்ருஷ்ணனிடம் மனதைச் செலுத்தி மனதார பிரியமாக இருந்தவர்கள், சர்ப்பங்கள் நிறைந்த குளத்தில் இறங்கி விட்டிருக்கிறான் என்ற செய்தியை தாங்கவே முடியாதவர்களாக தவித்தனர். உலகமே சூன்யமாக இருப்பதாக உணர்ந்தனர். க்ருஷ்ணனின் தாயாரை சமாதானப் படுத்த மூத்த ஸ்த்ரீகள் அவள் அருகிலேயே இருந்தனர். என்ன கெட்ட செய்தி வருமோ என்ற பீதியே எங்கும் நிறைந்திருந்தது. நந்தன் முதலான வ்ரஜ தேச வாசிகள் அனைவரும் தாங்களும் குளத்தில் இறங்க முயற்சித்ததை பலராமன் தடுத்தான்.
க்ருஷ்ணனை உள்ளும் புறமும் அறிந்தவன் ஆதலால் அவன் பயப்படாமல் காத்திருந்தான். இவ்வாறு கோகுல வாசிகள் அனைவரும் திரண்டு நதிக் கரையில் கூடி விட்டதையறித்த பகவான், தனக்காக வந்துள்ள ஸ்த்ரீ ஜனங்கள், குமாரர்கள், பெரியவர்கள் தனக்காக மிகுந்த துக்கத்துடன் இருப்பதையறிந்து தன் மனித தேகத்துடன் அந்த சர்ப்பம் தன் வால் நுனிகளால் கட்டிய தளையை அறுத்துக் கொண்டு மேலே எழுந்து வந்தார். புஜங்கங்கள்-சர்ப்பங்கள், தங்கள் படத்தை விரித்துக் கொண்டு சீறியபடி தொடர்ந்து மேலெழுந்தன. அவைகளில் சீற்றமும், முகத்திலிருந்து வெளிப்பட்ட உஷ்ணமான விஷ வாயுவும், அதற்கிடையில் தெரிந்த ஸ்ரீ ஹரி முகத்தையும் கண்டவர்கள் அலறினர். சர்ப்பங்கள் தங்கள் நாக்குகளால் நக்கின. கண்கள் கோரமான விஷத்தை தெளிக்கும் அக்னி குண்டங்கள் போல இருந்தன. கருடன் பாம்புகளுடன் விளையாடுவது போல பகவானின் கால்கள் அவைகளின் தலை மேல் சரியான சமயத்திற்காக காத்திருப்பது போல க்ருஷ்ணனின் கால்கள் வெளியில் தெரிந்தன.
ஒவ்வொரு தலையிலும் ஒரு முறை தன் கால்களால் அழுத்தியும், அடுத்து தலை தூக்கிய அடுத்த சர்ப்பத்தின் மேல் அழுத்தியும் நடனமாடுவது போல ஸ்ரீ ஹரி வதைக்கவும், அதன் தலையில் இருந்த ரத்னங்கள், உயர் மணிகளின் ப்ரகாசத்தில் ஸ்ரீ ஹரியின் பாதங்கள் சிவந்து தெரிந்தன. தனக்குள் தீர்மானித்துக் கொண்டது போல அந்த பாம்புகளின் சிரஸில் மாற்றி மாறி கால்களை வைத்து நடனமாடியவரைக் காண கந்தர்வ சித்த சாரணர்கள், தேவர்கள், தேவ லோகத்து பெண்களும், அந்த நடனத்துக்கு இசைய ம்ருதங்க பணவ வாத்யங்களை இசைக்க, வந்து கூடினர். பலர் பாடினர். புஷ்பங்களை உபஹாரமாக கொண்டு வந்தனர். திடுமென அந்த இடமே கண் கொள்ளா காட்சியாயிற்று.
சர்ப்பத்தின் எந்த தலை வணங்கவில்லையோ அதன் மேல் ஸ்ரீ ஹரி தன் பாதத்தால் அழுத்தினார். அதுவோ நூற்று ஒரு தலைகள் கொண்டது. அந்தந்த தலைகளின் மேல் பாதத்தை வைத்து ஆடிய சமயம் அதைத் தாங்க முடியாமல் அவை பெரு மூச்சால் தங்கள் சிரமத்தை வெளிப் படுத்தின. விஷ வாயு சிறிது சிறிதாக வெளிப்பட்டு அதன் வீர்யம் குறைய, வாய் களில் இருந்து நிணமும் ரத்தமும் பெருக உயிருக்கு மன்றாடிய மஹா சர்ப்பம் தவித்தது. அதன் கண்களிலிருந்து விஷம் வெளிவந்து தலையில் பரவின. வணங்காத தலை ஸ்ரீஹரியின் காலால் மிதிபட்டு மூச்சு விட திணறியது. வணங்காத சர்ப்பத்தின் தலையை வணங்கச் செய்து நடனமாடிய பகவான் புராண புருஷன் புஷ்பங்களால் அர்ச்சிக்கப் பட்டவன் போல இருந்தான்.
விசித்ரமான அந்த தாண்டவ நடனம். சர்ப்பத்தின் குடை போன்ற படங்கள் ரத்தம் வழிந்து, உடல் வாடியது. அப்பொழுது தான் அந்த சர்ப்பத்திற்கு, சரா சர குருவான புராண புருஷன் ஸ்ரீமன் நாராயண ஸ்மரணம் வரவும் மனதார வேண்டியது. .
உலகையே தன் கர்பத்தில் தாங்கிய பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனின் பாரத்தால் நாலாபுறமும் வதைக்கப்பட்ட சர்ப்ப சரீரம், எந்த நிமிஷமும் விழுந்து விடும் என்ற நிலையில் அதன் பத்னிகள் வந்தனர். மிகுந்த வருத்தத்துடன், தங்கள் கேசம் கலைய பூஷணங்கள் அறுந்து தொங்க வேகமாக வந்தனர். தங்கள் குழந்தைகளை முன் நிறுத்திக் கொண்டு பகவானை பிரார்த்தித்தனர். உடல் பூமியில் பட விழுந்து வணங்கினர். கைகளை கூப்பி அஞ்சலி செய்தபடி அந்த சாதுவான பெண் நாகங்கள், தங்கள் கணவனின் உயிரைக் காக்க பகவானை சரணமடைந்தனர்.
நாகபத்னிகள் சொன்னார்கள்: பகவானே! தவறு செய்தவனுக்கு தண்டம் அளிப்பது நியாயமே. உன் அவதாரமே துஷ்டர்களை அடக்க என்று அறிவோம். எதிரியின் மகன் என்றாலும் அவன் தவற்றை நீக்கி நல்வழி படுத்த வேண்டும் என்பதே உன் கொள்கை. யாரானாலும் உனக்கு சமமே.
இதுவும் உனது அனுக்ரஹமே. தவறு செய்தவன் அதற்கான தண்டனை பெற்று அனுபவிப்பது அவன் நன்மைக்கே. அதன் தவற்றின் பலன்களிலிருந்து விடுபடுகிறான். இந்த தந்தசூகன்- பல்லில் விஷம் கொண்ட இந்த பிறவிகளுக்கு, உன் கோபமும் அனுக்ரஹமே. நாங்கள் இந்த தண்டனையை ஏற்கிறோம். (கால்கள் இல்லாததால் நாகங்கள் பல்லில் விஷத்தை தற்காப்புக்காக பெற்றதாக முன் அத்யாயங்களில் சொல்லப் பட்டுள்ளது)
இவன் முன் காலத்தில் நிறைய தவம் செய்திருக்க வேண்டும். அந்த நல்வினையின் பலன் தான் இன்று உன் கையால் அடக்கப் பட்டான். தர்மமோ, அல்லது தர்ம வழியில் இருப்பவர்களிடம் உள்ள தயையோ, எது செய்தாலும் பொதுவாக ஜீவன்களுக்கு நலம் பயப்பதாகவே அமைகின்றன. அனைத்து உயிரினங்களிலும் இருப்பவன் நீயே. நீ மகிழ்ந்தால் உலகமே மகிழும்.
தேவ! என்ன பாக்யம் செய்ததன் பலனோ, இன்று தங்கள் பாதங்கள் இவன் சிரசில் பட்டு, பாத தூளிகளால் முழுக்காட்டப் பட்டுள்ளான். அதை விரும்பி எவ்வளவு பேர் தவம் செய்கிறார்கள். ஸ்ரீ தேவி கைகளால் வருடிய திவ்ய பாதங்கள், அதில் தங்கள் தலையை வைத்து தன்யனாகவே, ஆகாரத்தைத் துறந்து, தூங்காமல் இருந்து, விரதங்களை அனுசரித்து என்று பாடு படும் யோகிகளுக்கு கூட எளிதில் கிடைக்காத பாதம்.
அவர்கள் வேண்டுவதே இது தான். எங்களுக்கு சுவர்கம் வேண்டாம். சார்வபௌம என்ற சக்ரவர்த்தி என்ற பதவிகள் வேண்டாம். மற்றவர்கள் இடையில் உயர்ந்த பதவி வேண்டாம். யோக சித்தியும் வேண்டாம், பிறவியற்ற மோக்ஷமும் வேண்டாம் என்று அனைத்தையும் துச்சமாக நினைக்கும் மனப் பக்குவம் பெறுகிறார்கள்.
அதனால் நாதனே! க்ரோதம் உடையவனானாலும், இந்த நாக பிறவிகளான எங்கள் தலைவன். சம்சார சக்ரத்தில் சுழலும் எங்கள் தேவைகள் நிறைவேற அனுக்ரஹிக்க வேண்டும். சமஸ்த விபவங்களும் நாங்கள் உன் அருளால் பெற வேண்டும்.
நமஸ்துப்யம் பகவதே புருஷாய மஹாத்மனே| பூதாவாசாய பூதாய பராய பரமாத்மனே||ஞான விக்ஞான நிதயே ப்ரும்மணே அணந்த சக்தயே |அகுணாய அவிகாராய நமஸ்தே ப்ராக்ருதாய ச ||
காலாய கால நாபாய காலாவயவ ஸாக்ஷிணே |விஸ்வாய ததுபத்ரஷ்டே தத்கர்த்ரே விஸ்வ ஹேதவே || விஸ்வத்தை படைத்தவன். அதன் பின் அதன் செயல்களையும் நீயே வழி நடத்துகிறாய். அழிந்தாலும் பின் தோன்றவும் நீயே காரணமாக இருக்கிறாய்.
பிறந்த நிமிடத்திலிருந்து ப்ராணிகளின் புலன்கள் வேலை செய்ய ப்ராணன், மனம், புத்தி இவைகளில் இருந்து இயக்குபவனே! முக்குணங்களும், அபிமானமும் – அஹங்காரம் அல்லது தன்னியல்பு- உன் ஆத்மாவின் அம்சமாக பிறவிகளின் உள்ளிருந்து அனுபவங்கள் அடையச் செய்கிறாய்.
அனந்தனான உனக்கு நமஸ்காரம். சூக்ஷ்மமானவன், வெளிப்பட தெரியாதவன், அனைத்தும் அறிந்தவன், உன் இருப்பை நிரூபிக்க பலவிதமான வாதங்கள் செய்வர். அந்த வாசகமும், அதைச் சொல்லவே சக்தி கொடுப்பவனும் நீயே.
நம:ப்ரமாண மூலாய, கவயே, ஸாஸ்த்ர யோனயே, ப்ரவ்ருத்தாய, நிவ்ருத்தாய, நிகமாய நமோ நம||
நம: க்ருஷ்ணாய ராமாய வசுதேவ சுதாய ச | ப்ரத்யும்னாய அனிருத்தாய சாத்வதாம் பதயே நம: ||
உன் விளையாட்டுகளை யாரால் அறிய முடியும். யாரானாலும் அவர்கள் எடுத்த காரியம், செய்யும் செயல்கள் நிறைவடைய நீயே உதவுகிறாய். ஹ்ருஷீகேசா! நமோ அஸ்து.
பராவர கதியை அறிந்தவன். அர்வாத்யக்ஷன். விஸ்வத்தின் இருப்பும் இல்லாமையும் அதைக் காப்பதுமாக இருக்கும் உனக்கு நமஸ்காரம். ப்ரபோ! எங்களுக்கு ப்ரதி போதனம்- நல்லறிவை தா. நாங்களும் உன் தனயர்களே. மூவுலகிலும் அமைதியான, அமைதியற்ற, மூடர்களாக, என்று பிறவிகள் பல. அதில் அமைதியாக இருப்பவர்களை நீ விரும்புவதும் நியாயமே. நடுநிலையில் இருந்து தர்மத்திற்கு விரோதம் இல்லாமல் காக்கிறாய். எங்கள் தலைவனின் அபராதங்களை மன்னித்து விடு. உன் ப்ரஜைகளில் அவனும் அடக்கம் தானே. சாந்தமானவனே! மூடன்- அறிவற்றவன் என்றாலும் உன் மகன். பகவானே, இவன் ப்ராணன் போனால் இவன் மனைவிகள் நாங்கள், எங்களுக்கு இவனே தெய்வம். அதனால் இவன் ப்ராணனை வேண்டுகிறோம். கிங்கரிகளான எங்களுக்கு அருள் செய். உன் கட்டளைப்படி சிரத்தையுடன் நடந்து, பயமின்றி நாங்கள் வாழ அருள்வாயாக.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இப்படி நாகபத்னிகள் இறைஞ்சி வேண்டிக் கொண்டவுடன் தலை உடைந்து மூர்ச்சித்து கிடந்த நாகராஜனை உயிப்பித்தார். தன் கால்களை விலக்கிக் கொண்டார். காலியனும் திரும்பக் கிடைத்த தன் ப்ராணன், இந்திரியங்கள் இவைகளுடன் மெள்ள உணர்வு பெற்று க்ருஷ்ணனை வணங்கினான்.
பகவானே, எங்களை தாமச குணம் மேலோங்கியவர்களாகப் படைத்தாய். அதனால் துஷ்டர்கள் என்று உலகில் தூற்றப் படுகிறோம். பெரும் கோபமும் எங்கள் குணம். இது பிறவியுடன் வந்தது. அதை கை விட நினத்தாலும் முடியாது. நாதா! உலகில் நல்லதும் தீயதும் இணைந்தே இருக்கும்படி தானே படைத்திருக்கிறாய். நீ ஸ்ருஷ்டி செய்த இந்த உலகில் பல விதமான யோனிகள். பலவிதமான பிறவிகள். ஒவ்வொன்றும் ஒரு விதமான குண விசேஷங்களுடன் உள்ளன. எங்களை நீதான் சர்ப்பமாக ஊர்வன வாக படைத்தாய். எங்கள் தற்காப்புக்காகவே கடும் கோபம் எங்கள் குணமாக அவசியமாயிற்று. அதை விட முடியாது. ஜகதீஸ்வரா! விஸ்வ ஸ்ருஷ்டிக்கே காரணமானவனே! அனுக்ரஹமோ, நிக்ரஹமோ உன் விருப்பம். எது சரியோ அதையே செய்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஒரு விசேஷமான காரியத்தை முன்னிட்டு மனிதனாக அவதரித்திருந்த பகவான், பதில் சொன்னார். உன் குணம் அப்படியே இருக்கும். இந்த இடத்தில் இருக்காதே. உன் குடும்பத்தோடு, மனைவி மக்களோடு சமுத்திரம் செல்வாய். இந்த நதி பசுக்கள் குடிக்கவும், இங்கு வசிக்கும் மனிதர்களுக்கும் தேவையாக உள்ளது. என்னை நினைப்பவர்களை துன்புறுத்தாதே. இந்த ஜலத்தில் மனிதர்கள் தர்ப்பணம் செய்து நீராடும் பொழுது உன்னை நினைத்தால் சர்வ பாபங்களிலிருந்தும் விடுபடுவார்கள். ரமணகம் என்ற தீவு, எந்த கருடனின் பயத்தால் இங்கு அடைக்கலமாக வந்தாயோ, அவன் உன்னை துன்புறுத்தாமல் இருக்கச் செய்கிறேன்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு சொல்லி பகவான், க்ருஷ்ணன் அனுக்ரஹம் செய்யவும், அவரை பூஜித்து, நாக பத்னிகள் தங்களிடம் இருந்த ரத்னங்களை அவருக்கு அளித்தனர். அத்புதமான பூஷணங்களையும் சமர்ப்பித்தனர். உத்பல மாலைகள், வாசனைப் பொருட்கள், இவைகளையும் கொடுத்தார்கள். ஜகன்நாதனை பூஜித்து கருடத்வஜனான அவர் அருள் பெற்று கருடனிடம் பயமும் அகன்றதால் மகிழ்ச்சியுடன் ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து விடை பெற்றனர். காளியன் தன் மனைவி, புதல்வர்கள், மற்றும் உறவினர்களோடு, யமுனை நதியை-காலிந்தி, விட்டு வெளியேறியதும், தண்ணீர் நிர்மலமாக ஆயிற்று.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், முதல் பகுதியில், காளிய மோக்ஷணம் என்ற பதினாராவது அத்யாயம்)
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய
அத்யாயம்-17
அரசன் வினவினான்: நாகங்களின் இருப்பிடமான ரமணகம் என்பதை விட்டு காளியன் ஏன் வந்தான்? சுபர்ணனுக்கும் அவனுக்கும் என்ன தகராறு? அந்த இடத்தை விட்டே ஓடி வரும் அளவு த்வேஷமா?
ஸ்ரீ சுகர் சொன்னார்: வெகு காலமாக நாகங்கள் கருடன் முதலிய பறவைகளுக்கு மாதம் தோறும் உபஹாரம் -அன்பளிப்பு என்று கொடுத்து வந்தனர். தங்களால் இயன்றதை நாகங்கள் அந்தந்த பருவங்களில் தங்களை பாதுகாக்க என்று சுபர்ணனுக்கு கொடுத்தன. மஹாத்மா சுபர்ணனும் நாகங்களின் பாது காப்பை தன் பொறுப்பாக செய்து வந்தான். விஷ வீர்யம் அதிகமாக ஆக காளியன் மதம் கொண்டான். கத்ருவின் மகன் அவன். தெரிந்தே கருடனுக்கு கொடுக்காமல் தானே சாப்பிட்டான். பகவானுக்கு பிரியமான கருடன் அதையறிந்து கோபித்தான். வேகமாக வந்து காளியனைத் தாக்கினான். அதற்கு பதிலடி கொடுக்க தன் எண்ணற்ற தலைகளால் தடுத்து, தன் ஆயுதமான பற்களால் கடித்த காளியன், கண்கள் சிவக்க, நாக்கினால் விஷத்தை பெருக்கினான். தார்க்ஷ்யபுத்ரன், கருடன் அதை எதிர் கொண்டு, மிக வேகமாக தன் இடது இறக்கையால் அடித்தான். பகவானின் வாகனம் என்ற பெருமை தொனிக்க, பொன் நிறத்தில் ப்ரகாசித்த இறக்கைகள்.
சுபர்ணனின் இறக்கைகளால் அடிபட்ட காளியன், நிலை தடுமாறினான். இந்த குளத்தில் தஞ்சம் அடைந்தான். இந்த இடத்திற்கு கருடன் வர மாட்டான் என்பதால் கவலையின்றி இருந்தான். ஒரு சமயம் நீர் வாழ் ஜந்துக்களின் தலைவனான ஒன்றை சௌபரி என்ற முனிவர் தடுத்தும் கேட்காமல் அபஹரித்துச் சென்றான். தனக்கு பசி என்றான். மீன் கூட்டங்கள் திகைத்து பரிதாபமாக தங்கள் தலைவனை கருடன் அபகரித்ததால் வருந்துவதை பார்த்த சௌபரி என்ற முனிவர், அவர்களின் நன்மைக்காக கருடனை அங்கு வர விடாமல் சபித்தார். இங்கு வந்து இந்த மீன்களை துன்புறுத்தினால், உன் உயிர் போகும் என்றார். அதை காளியன் அறிந்திருந்தான். அதனால் தான் இந்த இடத்துக்கு வந்தவன், ஸ்ரீ க்ருஷ்ணனால் அடக்கப் பட்டான்.
க்ருஷ்ணன் அந்த குளத்திலிருந்து வெளியில் வந்ததும், திவ்யமான வாசனை மிகுந்த மாலைகள் அணிந்து, மஹாமணிகள் உடல் முழுவதும் ப்ரகாசிக்க, நல்ல ஆடையும், பொன்னால் வேலைபாடுகள் செய்த மேலாடையுடன் வந்தவனைப் பார்த்து, அனைவரும் அப்பொழுதான் உயிர் வந்தவர்கள் போல ஒரே சமயத்தில் எழுந்தனர். ஆனந்தத்தால் திக்கு முக்காடினர். ஓடி அருகில் வந்தனர். யசோதா, நந்தன், கோபிகள், கோபர்கள், கௌரவ ராஜனே! ஸ்ரீ க்ருஷ்ணனின் அருகில் சூழ்ந்து கொண்டு நீர் நிறைந்த கண்களால் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
பலராமன் அச்யுதனை ஆலிங்கணம் செய்து விஷயம் அறிந்தவனாக சிரித்தான். மரங்கள் கூட சந்தோஷமாக கிளைகளை அசைத்தன. பசுக்கள், ரிஷபங்கள், கன்றுகளுடன் மிக்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. நந்தனை அந்தணர்கள் குடும்பத்துடன் வந்து சந்தித்தனர். குரு ஜனங்களும் வந்து ஆசீர்வதித்தனர். நல்லவேளை, காளியனிடம் இருந்த உன் மகன் பிழைத்து வந்தான் என்றனர். ஸ்ரீ க்ருஷ்ணன் நலமாக வந்ததை ஒட்டி பூஜைகள்செய். தெய்வங்கள் ஆசிர்வாதம் செய்து உன் மகனை காப்பாற்றியிருக்கின்றன . அனைவரும் ஏதோ ஒரு விதத்தில் நிலைமையின் கடுமையை உணர்ந்து பிழைத்தான் என்று ஆசுவாசம் அடைந்தனர்.
நந்தன் சந்தோஷமாக பசுக்கள், பொருள் என்று தேவையானவர்களுக்கு தானம் செய்தான்.
யசோதா பிழைத்ததே புனர் ஜன்மம் என்று கண்களில் கண்ணீர் வழிய மகனை அணைத்து மடியில் இருத்திக் கொண்டாள்.
அன்று இரவு, நல்ல பசி, தாகம், பகலில் நடந்தவைகளால் உடல் வருத்தம், இவற்றுடன் யாரும் கவனியாமல் விட்டதால் யமுனை நதிக் கரையில் பசுக்கள் தூங்கி விட்டன. சுசி வனம் என்ற இடத்தில் தாவாக்னி- கோடையில் தோன்றும் நெருப்பு- அந்த வ்ரஜ கூட்டத்தை நாலா புறமும் சூழ்ந்து கொண்டன. இரவு நேரம். அனைவரும் உறங்கிக் கொண்டிருக்கையில் பசுக்களை வாட்டின. திடுமென வந்த ஆபத்தால் நடுங்கிய வ்ரஜ தேச வாசிகள், ஸ்ரீ க்ருஷ்ணனை தஞ்சம் அடைந்தனர். இதற்குள் இவன் சாதாரண மனிதன் அல்ல- ஈஸ்வரனின்மாயையே மனித உருவில் வந்துள்ளான். – என்பதை அவர்கள் உணர்ந்து கொண்டு விட்டனர்.
க்ருஷ்ணா, க்ருஷ்ணா, ஹே ராமா, பலசாலியே, இதோ பாருங்கள், கோரமான தீ விபத்து. நம் இடையர்களின் சொத்தான பசுக்களை சூழ்ந்துள்ளது என்று அலறினர். ப்ரபோ! மிக் கடுமையான காளிந்தி விஷத்திலிருந்து காப்பாற்றினாய். அதற்குள் அடுத்த விபத்து. நாங்கள் யாரிடம் போவோம். நீங்கள் இங்கு இருப்பதால் பயமின்றி வாழ்கிறோம். இவ்வாறு தன்னைச் சார்ந்தவர்கள், வருந்துவதை கண்ட ஜகதீஸ்வரன், அக்னியை அணைக்க ஓடி வந்தான். அவசரம்- அதனால், தானே அந்த அக்னியை விழுங்கி விட்டான். அவன் அனந்தன், அந்த சக்தி உள்ளவன் தானே.
(இதுவரை ஸ்ரீ மத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தத்தின் முதல் பாகத்தில் தாவாக்னி மோசனம் என்ற பதினேழாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்-25
அத்யாயம்-18
ஸ்ரீசுகர் சொன்னார்: இந்த நிகழ்ச்சிக்குப் பின் உறவினர்களும், ஊர் ஜனங்களும்,நண்பர்களும் சதா ஸ்ரீ க்ருஷ்ணன் அருகிலேயே இருக்கலாயினர். அவர்களும் மகிழ்ந்து பின் தொடர்ந்தனர், ஸ்ரீ க்ருஷ்ணனும் அவர்களுடன் மகிழ்ச்சியுடன் நடந்து விரஜ தேசத்தின் கோகுலத்துக்கு வந்தனர். பசுக்களும் கன்றுகளும் நிறைந்த இடம் அது. தன்னை இடைய சிறுவனாக காட்டிக் கொண்டு, அரிய செயல்களை அனாயாசமாக செய்த ஸ்ரீ க்ருஷ்ணன் அருகில் இருப்பதையே அனைவரும் விரும்பினர்.
வேணிற்காலம் மிக கடுமையாக தகித்தது. உயிரினங்கள் தவித்தன. பலராமனும் க்ருஷ்ணனும் இருக்குமிடம் அவர்கள் குணத்தால் வசந்த காலம் என்று மற்றவர்கள் அவர்களை சூழ்ந்து இருப்பதையே விரும்பினர். குளுமையான, இடங்களைத் தேடிச் சென்றனர். அருவிகள் இருந்த இடத்தில் நீரின் ஓசையே ரமணீயமாக இருக்க, எப்பொழுதும் குளுமையாக இருக்கும்படி இலைகளும் கிளைகளும் நிரம்பிய மரங்கள் நிழல் தர, அவைகளைச் சுற்றி படர்ந்திருந்த கொடிகள், மரங்களையே மறைக்கும் அளவு படர்ந்து பசுமையாகவே காட்சியளிக்க, நதியின், மற்றும் குளங்களின் அலைகள் காற்றுடன் சேர்ந்து மென்மையாக நீரை தெளிக்க, அந்த காற்று வெண் தாமரைகள், செந்நிற பத்மங்கள் உத்பலங்கள் இவைகளின் மகரந்தங்களை கொண்டு வந்து வீசி சிதற அடித்ததால் எங்கும் சுகந்தமான மணம் மகிழ்விக்க, கொட்டிலில் இருந்த பசுக்கள் மற்றும் வளர்ப்பு மிருகங்கள் அனைத்தும் அங்கு சுகமாக பச்சை பசேலென்றிருந்த புல் வெளிகளில் மேய்வதும் அமர்ந்தும் ரசித்தபடி இருந்தன.
அங்கு ஒரு குளம் ஆழமாக இருந்தது. கரைகளைத் தொட்டு தொட்டு விலகும் அலைகளால் மண்கள் அரிக்கப் படுவதும் பின் இயல்பாக தானே மணல் நிறைவதுமாக இயற்கையின் விளையாட்டு அது. ஸூரியனின் தகிக்கும் கிரணங்கள் அங்கு விழுவது இல்லை , விஷத்தைக் கக்கிய ஜீவன்களும் இல்லை, பூமியின் ரஸம், பசுமையான தாவரங்களாகவே பரிணமித்திருந்தன.
பூக்களும் தங்கள் பங்குக்கு அந்த வனத்தை நிறைத்திருந்தன. அதனால், சித்ர ம்ருகங்களும், யானைகளும் அங்கு வந்தன. மயூரங்கள் ஆட, அதற்கு இசைவாக பாடுவது போல ப்ரமரங்கள் ரீங்காரமிட்டன. கோகிலங்கள் இனிமையாக கூவினால், சாரஸங்கள் அதற்கு இணையாக பதில் சொல்வது போல கூவின.
பலராமனும் க்ருஷ்ணனும் மற்றவர்களுடன் அந்த இடத்தில் விளையாட வந்தார். வேணுவின் இசையால், பசுக்களும், கோபிகளும் ஆகர்ஷிக்கப் பட்டனர். அதனால் அந்த இடமே நிரம்பி வழிந்தது. பவழங்கள், இறகுகள், பூச் செண்டுகள், மாலைகள், வாசன மிகுந்த தாதுக்கள் இவைகளைக் கொண்டு அலங்கரித்துக் கொண்டனர். ராம க்ருஷ்ணர்கள் அவர்களுடன் நடனமாடினர், யுத்தம் செய்தனர், பாடினர்.
க்ருஷ்ணன் ஆடும் பொழுது சிலர் பாடுவர், சிலர் வாத்யங்கள் வாசிப்பர், கொம்பு வாத்யங்கள், வேணுவை சிலர், மற்றவர்கள் கை தட்டி பாராட்டுவர்.
இடையர்களாக வந்தது அனைவருமே தேவர்கள் தான். இடையர் குலத்தில் பிறந்து தாங்களும் இடையர்களாக தங்களை காட்டிக் கொண்டு பிறந்தவர்கள். க்ருஷ்ணனும் ராமனும் அவர்களை நட்டுவனார் போல நாட்யம் ஆடச் செய்தனர். சுற்றி சுற்றி வருவதும், குதித்து தாவுவதும், கைகளால் தட்டியும், தோள் தட்டி அறை கூவுவதும், தோன்றியபடி சிரித்தும் விளையாட்டு யுத்தம், என்று விளையாடினர். சிறுவர்கள் இப்பொழுது வளர்ந்து காக பக்ஷம் என்ற முன் குடுமியை வைத்துக் கொண்டிருந்தனர்.
சிலர் ஆடும் சமயம் பாடுபவர்களும், வாத்யங்கள் வாசிப்பவர்களும் தாங்களே சாது சாது என்று சொல்வர். -அடுத்து வருவது நாட்ய முத்திரைகள்: பில்வம், கும்பம், ஆமலகம், முஷ்டி, கண்களை கைகளால் மூடிக் கொள்வது, மிருகம், பறவைகளை அபினயத்தால் காட்டுவது, என்று கிரமமாக நடன, நாட்யங்களை அறிந்து கொண்டனர். பயமின்றி வனத்தில் ஒரு இடம் விடாமல் சுற்றினர். நதி, சிறு குன்று, புதர்கள், அடர்ந்த காடுகள், சிறு குளங்கள், அவர்கள் கால் படாத இடமே இல்லையெனும் படி நடந்தனர்.
அவர்களுக்கிடையில் அதே போல வேஷத்துடன் இடையர் குல சிறுவனாக ப்ரலம்பன் என்ற அசுரன் நுழைந்து கொண்டான். அவர்களை கொல்லும் எண்ணத்துடன் உள் வந்தவனை தெரிந்து கொண்டு விட்ட பகவான், மனதிற்குள் அவனுடைய வதம் எப்படி செய்வது என்பதை தீர்மானித்துக் கொண்டு விட்டார், சர்வ தர்சனன்-அனைத்தையும் காண்பவன் அவன் அல்லவா, அவனிடம் எப்படி மறைக்க முடியும். சகாவாக வந்தவனை வரவேற்று மற்றவர்களை ஒன்று கூட்டி, என்ன விளையாடலாம் என்று கேட்டு தானே இரட்டையர் விளையாட்டு விளையாடலாம் என்றான். இருவர் இருவராக சேர்ந்து கொள்ளுங்கள். பலராமன் ஒரு ஜோடியிலும், க்ருஷ்ணன் மற்றதிலுமாக விளையாட்டின் நியமங்களைச் சொன்னார். வாஹ்ய-வாஹக – ஒருவர் தோளில் மற்றவரை தூக்க வேண்டும். தன் மேல் ஏறியவனை தூக்குபவன் ஜயித்தவன். மற்றவன் தோற்றவனாவான். இந்த விளையாட்டும் நீடித்தது. பசு கன்றுகளையும் மேய்பதும் இடையிடையே கவனித்தபடி பாண்டீரகம் என்ற மரத்தில் அடியில் சென்று அமர்ந்தனர். க்ருஷ்ணன் முன் சென்று ராமன், ஸ்ரீதாமன், வ்ருஷபன் இவர்களுடன் இருந்தான். க்ருஷ்ணன் தான் தோற்றவர் போல ஸ்ரீதாமனை தன் முதுகில் தூக்கினார். வ்ருஷபம் என்பவனை பத்ர சேனன் என்பவன், ப்ரலம்பன் ரோஹிணி மகனான பலராமனை தூக்குவது என்று நிச்சயம் செய்தனர். க்ருஷ்ணனை பலமற்றவன் என் நினைத்து பலராமனை தூக்கிக் கொண்டு ப்ரலம்பன் வேகமாக ஓடினான். அவன் மேல் இருந்த பல ராமன் தன்னுடைய தரணிதர – பூமியை தாங்கும் கௌரவம்- சக்தியை எடுத்துக் கொண்டார். மகாசுரன் அந்த பாரத்தை தூக்கிக் கோண்டு ஓட முடியவில்லை.
அந்த சரீரத்தைப் பார்த்து தானும் தன் அசுர ரூபத்தை எடுத்துக் கொண்டான். நீல மேகம் போல் உடலும், இடையில் மின்னல் வெட்டுவது போல பொன் நகைகளும், நிஜமான ஆகாயம் போலவே இருந்தான். ஆகாயத்தில் சூரிய சந்திரர்கள், மேகங்கள் இருப்பது போலவே இருந்தான். பலபத்ரன் வேகமாக அவன் தலையில் ஒரு அடி அடிக்கவும், வஜ்ரம் போன்ற முஷ்டியால், சுரேந்திரன் கிரியை அடக்கியது போல அடித்தான். உடனே அந்த அடி தாங்காமல் தலை பிளந்து வாயிலிருந்து ரத்தமும் நினமுமாக கொட்ட, தடாலென்று விழுந்தான்.
கோகுலத்து சிறுவர்களும், கோபிகளும் திகைத்தனர். ப்ரலம்பன், பலபத்ரனை தூக்கிச் சென்றது தான் தெரியும். பின் நடந்ததை பலபத்ரன் வந்து சொல்லிக் கேட்டு ஆச்சர்யம் அடைந்தனர். சாது சாது என்றனர். பெரியவர்கள் ஆசீர்வதிக்க, நண்பர்கள் ஆலிங்கணம் செய்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். பாபி ப்ரலம்பன் என்று தேவர்களும் மகிழ்ந்து பூமாரி பெய்தனர். புகழ்ந்து பாடினர்.
(இதுவரை ஸ்ரீமத் பகவதத்தில், பத்தாவது ஸ்கந்தத்தின் முதல் பாகம், அத்யாயம் 18 ), ஸ்லோகங்கள்-32
அத்யாயம்-19
இவர்கள் அனைவரும் மும்முரமாக விளையாடிக் கொண்டு இருக்கையில் பசுக்கள் மேய்ந்து கொண்டெ வெகு தூரம் சென்று விட்டன. பசுமையான புல்லைக் கண்டதும் ஆசையுடன் வேகமாக மேய்ந்தன. ஆடுகள், பசுக்கள், மகிஷங்கள், ஒரு காட்டிலிருந்து மற்றொரு காட்டிற்கு தடுப்பார் இன்றி சென்று கொண்டே இருந்தன. இஷீகாடவீம் என்ற காட்டினுள் நுழைந்தன. திடுமென காட்டுத் தீ பரவவும் அலறின. அந்த சப்தம் கேட்டு இடையர்கள் அப்பொழுது தான் உணர்ந்தனர் பசுக் கூட்டம் வெகு தூரம் சென்று விட்டதை. உடனே தேடக் கிளம்பினர். புல்வெளியில் அவைகளின் குளம்புகளைக் கண்டு பிடித்து,அதே வழியில் சென்றனர். பசுவும் கன்றுகளும், மகிஷங்களுமே அவர்கள் செல்வம். அவைகளைக் காணாமல் களைத்தும் தாக மிகுதியால் வருந்தினாலும் தேடிக் கொண்டே சென்றனர். எங்கிருந்தோ, பகவான் தன் இடி முழக்கம் போன்ற குரலில் தங்களை பெயர் சொல்லி அழைப்பதைக் கேட்டு திகைத்தன. அனைவரும் மகிழ்ச்சியுடன் பதில் குரல் கொடுத்தனர். திடுமென காடுகளில் வரும் வன தூம கேது வந்து சேர்ந்தது. காடுகளின் பசுமையை கெடுத்துக் கொண்டு பெரும் காற்று வீசியது. ஏற்கனவே இருந்த தாவாக்னி, காற்று வீசி அதை மேலும் வளர்த்தது. தீயின் நாக்குகள் ஜங்கம- அசையாத மரங்களின் மேல் நக்குவது போல் அவைகளின் மேல் படர்ந்தன. அதைக் கண்ட கோகுல வாசிகள் அலறினர். பசுக் கூட்டமும் பயந்து ஓலமிட்டன. இது என்ன கஷ்டம்? அனைவரும் பயத்துடன் ஹே க்ருஷ்ணா, ஹே பலபத்ரா என்று அழைத்தும், ஸ்ரீ ஹரியும் அந்த தீயில் அகப்பட்டுக் கோண்டு விட்டாரோ என்று பயமும் சேர திகிலடைந்தனர். சொல்லொணா துயரம் மண்டிய குரலில் வேண்டினர். க்ருஷ்ண க்ருஷ்ணா, மஹாவீர! ஹே ராமா, அமித விக்ரமா! தாவாக்னியால் தவிக்கும் எங்களை காக்க உங்களை சரணடைகிறோம். க்ருஷ்ணா! நாங்கள் உன் பந்துக்கள் இல்லையா? எங்களை இப்படி தவிக்க விடலாமா? எங்களுக்கு வேறு எதுவும் தெரியாது. நீதான் சர்வ தர்மக்ஞன்- சகல தர்மங்களையும் அறிந்தவன். எங்களுக்குத் தெரிந்ததெல்லாம், எங்களுக்கு தலைவன் நீ, உன் பொறுப்பில் நாங்கள் கவலையின்றி இருக்கிறோம். எங்களை கை விடாதே என்று அரற்றினர்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: தன் பந்துக்கள், தீனமாக இவ்வாறு வேண்டிக் கொள்வதைப் பார்த்து, பகவான் ஸ்ரீ ஹரி, அவர்களை சமாதானப் படுத்த, கண்களை மூடிக் கொள்ளுங்கள். பயப்பட வேண்டாம். எனவும், அவர்கள் கண்களை மூடிக் கொண்டனர். அவர்கள் அனைவரும் கண் மூடி இருந்த க்ஷணத்திலேயே பகவான் யோகாதீசன் ஸ்ரீ க்ருஷ்ணன் கடுமையான தாவாக்னியை விழுங்கி அவர்களை விடுவித்து விட்டார். கண் விழித்தவர்கள் தாங்கள் அதே பாண்டீர மரத்தின் அடியில் இருப்பதை அறிந்தனர். சுற்று முற்றும் பார்த்தவர்கள் தங்கள் பசுக்களும் மற்ற வளர்ப்பு பிராணிகளும் நலமாக இருப்பதைக் கண்டனர்.
ஸ்ரீ க்ருஷ்ணனின் யோக வீர்யம், அவருடைய யோக மாயா, அதன் சக்தி, தாவாக்னியை அணைத்து நமக்கு க்ஷேமத்தை கொடுத்திருக்கிறது என்று மகிழ்ந்தனர். எதுவுமே நடக்காதது போல மாலை அவர்கள் கூட்டமாக கோகுலம் வந்தனர். ஸ்ரீ க்ருஷ்ணன் வேணுவை இசைத்தபடி வர, மற்றவர்கள் உடன் பாட, வீடு வந்து கொட்டில்களில் மாடு கன்றுகளை விட்டு, வீட்டினுள் சென்றனர். கோபிகள் காலையில் போனவர்கள் அவ்வளவு நேரம் ஆன பின்னும் வராததால், கவலையுடன் இருந்தவர்கள் சமாதானமானார்கள். அவர்களை அதுவரை காணாமல் இருந்ததே கோகுலத்து பெண்களுக்கு ஒரு க்ஷணம் யுக சதமாக கழிந்தது என்று பாகவதம்.
(இதுவரை ஸ்ரீ மத் பாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தத்தின் முதல் பகுதியில், பத்தொன்பதாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்-16
அத்யாயம்- 20
ஸ்ரீ சுகர் சொன்னார்: இருவருமாக தங்களை தாவாக்னியிலிருந்து காத்தனர் என்பது அந்த கோகுலத்தில் ப்ரசித்தமான பேசு பொருளாயிற்று. ப்ரலம்ப வதமும் அந்த சிறுவர்களும் சிறுமிகளும் சொல்லிக் கேட்ட வயது முதிர்ந்தவர்கள், ஆச்சர்யம் அடைந்தனர். க்ருஷ்ண, ராமன் இருவருமே தேவ குமாரர்கள் ஏதோ காரணமாக நமது வ்ரஜ தேசம் வந்துள்ளார்கள் என்பதில் சந்தேகமேயில்லை என்றனர்.
அதன் பின் மழைகாலம் ஆரம்பித்தது. அனைத்து உயிரினங்கள், அசையா தாவரங்கள் அனைத்துக்கும் உயிர் ஊட்டுவது போல மழை பொழியலாயிற்று. வானம் இருண்டது இடையில் மின்னல்கள் பளிச்சிட்டன. கரு மேகங்கள் வானம் முழுவதும் பரவின. இடியும், மின்னலும் வான வெளியில் ஒளியை மறைத்து வைத்தன. தெளிவாக தெரியாத பகல் பொழுதுகள், ப்ரும்ம தத்வம் உருவமாக தெரிந்தும் தெரியாமலும் இருப்பது போல.
எட்டு மாதங்களாக பூமியின் நீர் வளம் என்ற செல்வத்தை, தங்கள் கிரணங்களால் நிரம்ப குடித்ததை, ஸூரியனின் கட்டளையால், காலம் வந்ததும், நியாயமாக பூமியிடம் திருப்பி தருவது போல மகா மேகங்கள், சுவாசக் காற்றே, சண்ட மாருதமாகி அலைந்ததால் வியர்வை பெருகி வழிவது போல, தங்கள் கடமையை சரியாகச் செய்தன. கருணையுடன் தவிக்கும் உயிரினங்களுக்கு வேண்டிய அளவு பொழிந்தன. பூமியில் தவத்தால் இளைத்த சரீரம் உடைய தபஸ்விகள் போல தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் மகிழ்ச்சியும், திருப்தியும் அடைவது போல வேணிற் காலத்தில் வெப்பத்தால் வாடிய பூமி நனைந்தாள். இரவுகளில் நக்ஷத்திரங்கள் மின்மினி பூச்சிகள் அளவே ஒளியை கொண்டிருந்தன. க்ரஹங்கள் இருந்த இடம் தெரியவில்லை. அனைத்தும் ஒரே இருட்டு. கலி யுகத்தில் பாகண்டர்கள் வேத விரோதமாக பேசுபவர்களே அதிகமாக இருப்பார்கள் – தாமஸமான குணம், வான வெளியில் இருட்டு.
மேகம் இடிப்பதை தவளைகள் தாங்களும் தங்கள் குரலில் ஒத்து ஊதின. அதுவரை நியமத்தை அனுசரித்து கிரமமாக படித்த மாணவர்கள், பாடம் முடிந்ததும் இரைச்சலாக வகுப்பறையை விட்டு கிளம்புவது போல இருக்குமிடம் தெரியாமல் இருந்த தவளைகள், துள்ளி குதித்து நதிக்கரையின் குட்டைகளில் குதித்தன. அமைதியாக இருப்பதும், குதிப்பதும், .நீரை கலக்குவதே செயலாக ஆயின. சிறு நதிகளில் நீர் பெருகி நிரம்பி வழிந்தன. உத்பத-उथ्पत – தவளைகள் குதிப்பது, சிறு நதிகளில் ப்ரவாகம் தூக்கி அடிப்பது. சுய தொழில் செய்பவர்கள் சில சமயம் நல்ல வருவாயும், மற்றும் சில சமயம் குறைவாகவும் அடைவது போல இந்த க்ஷுத்ர நதிகள், மழை வந்தால் பெருகி ஓடுவதும் மற்ற காலங்களில் வற்றியும் காணப் படும் என்பது உவமை
பசுமையான புல்வெளி இந்தர நீல வர்ணத்திலும், மின்னல் ஒளியில் செந்நிறமாகவும், பளீரென ஆயின.
விவசாயிகள், ஏர் பிடிப்பவர்கள், மகிழ்ந்தனர். தெய்வ செயல் என்பதை அறியாத செல்வந்தர்கள் செல்வம் நிறைய, நன்றாக இருக்கும் காலத்தில் புஷ்டியாகவும், அபிமானத்துடனும் இருப்பவர்கள். செல்வம் குறைந்தால் , வருந்துவதும் போல.
நீரிலும் நிலத்திலும் வாழும் ஜீவன்கள், அனைத்தும் புது நீரில் நனைந்து உடல் பொலிவை பெற்றன. ஸ்ரீ ஹரியை சேவிப்பவர்கள் பெறுவது போல. இங்கு ஹரித- பசுமையான புல் கிடைத்ததால்.
மேலும் மேலும் நதிகள் வந்து சேர்ந்ததால், சிந்து- சமுத்திரத்தின் உடல் விம்மியது, ( அதிகம் உண்டால் வரும் பெருமூச்சு) அதை தன் அலைக் கரங்களால் வெளிப்படுத்தின. சாதனைகள் செய்து வரும் இன்னமும்
பக்குவம் அடையாத யோகிகள், தங்கள் இச்சைகளை கட்டுபடுத்த முடியாத மனதுடன் தடுமாறுவது போல
மலைகளின் மேல் வர்ஷ தாரா கொட்டினாலும் அவை சலனமின்றி இருந்தன. அதோக்ஷஜனை சததம் நினைப்பவர்கள் மன உறுதியுடன் இருப்பது போல. வழிகள் குழப்பமாக ஆயின. செப்பனிடப் படாமல், புல் கண்டபடி முளைத்து பயன் படுத்த முடியாதபடி ஆனது. ஸ்ருதிகளைக் கற்றவன் அப்யாசம்- பயிற்சியை விடாமல் செய்யாத அறிஞர்களின் அறிவு நாளடைவில் பயன் படாமல் போவது போல.
மேகங்கள் லோக பந்துக்கள். மின்னல் போல நிரந்தரமில்லாத க்ஷண நேர நட்புடைய காமினிகள், நல்ல குணமுடைய கணவனிடமும் நிரந்தரமான ஒட்டுதல் இன்றி இருப்பது போல அவை மேகத்துடன் உறவாடின.
வானத்தில் மகேந்திரனின் வில். குணமற்றவனையும் குண சாலிகளாக காட்டியது. அந்த வானவில் தெளிவாக தெரிவது குணம் நிறைந்தவனுக்கும், மறைவது குணத்தை இழந்தவனுக்கும் உவமையாகியது.
தாரகைகளின் தலைவன் சந்திரன் பிரகாசமாக உதயமாகவில்லை. மேகங்களில் மறைந்து கொண்டு விளையாடுவது போல – அஹம் ப்ரும்மாஸ்மி- நானே அதுவும்- என்ற அறிவை பெற்ற சாதகன் தானாக தன்னை ப்ரகடனப் படுத்திக் கொள்ள தேவையில்லாதது போல.
மயில்கள் மேகத்தின் வரவால் மகிழ்ந்தன. பெரிய சிகையை விரித்துக் கொண்டு உத்சவம் போல ஆடிக் களித்தன. அச்யுத பக்தர்களான பாகவதர்கள் வரவால் சம்சாரிகள் மகிழ்வது போல.
மரங்கள் வேண்டிய அளவு மழை ஜலத்தை குடித்தன. தங்கள் பாதங்களால், வேரால் நீரை உறிஞ்சி கிளைகள் இலைகளுக்கு அளிக்கும் மரங்கள் தேவையான பொழுது தேடிச் சென்று பெற முடியாத காரணத்தால் கிடைத்த பொழுதே குடித்தன.
அமைதியான குளங்களில் சாரஸங்கள், உடல் அசைவது தெரியாத படி மிதக்கும். கிராமத்து ஜனங்கள் பொதுவாக சாந்தமாக இருப்பவர்கள், ஏதோ அமைதியின்றி நடந்து விட்ட செயலால் தங்கள் நிம்மதியை இழப்பது போல வேகமாக சுழித்து ஓடும் நீரில் வயல்களில் வரப்புகள் அழிந்தன. பாகண்டிகள் தவறான வாதங்களால் கலி யுகத்தில் வேத மார்கத்தை அழிப்பது போல
மழை மேகங்களை வாயு தள்ளிச் செல்ல , பூவுலகில் அம்ருத்தை வர்ஷித்து விட்ட திருப்தியுடன் ஆசீர்வதித்தன. முழுவதும் பொழிந்து விட்டு நகர்ந்தன. வீடுகளில் வைதீகர்கள் பூஜைகள் முதலியவைகளை முடிக்கும் சமயம் ஆசீர்வதிப்பது போல
அந்த வனம் நல்ல மழையைப் பெற்று, ஜம்பு, கர்ஜூரம் முதலிய பழங்கள் நிரம்பி இருந்தன. மழை நின்றதும் சகாக்களுடன் ஸ்ரீ ஹரியும் வெளியில் வந்தார். தேனுக்கள், மடி நிரம்பி இருந்த காரணத்தால் மெள்ள நடந்தன.பகவான் கூப்பிட்டவுடன் அருகில் வந்தன. காட்டு மிருகங்கள், குதூகலமாக மரங்களிலும் , அருவிகளிலும், மலைக் குகைகளிலும் சுற்றி மகிழ்ந்தன. ஒரு சில மலைக் குகைகளில் மழைநீர் படாமல் உலர்ந்து இருந்தன. பழங்கள், கிழங்குகள் இவற்றை சேகரித்துக் கொண்டு அந்த குகைகளில் பகவான் மற்றவர்களுடன் அமர்ந்தார். கொண்டு வந்த தயிர் சாதத்தை, பலராமனும் உடன் வர அனைவருமாக உண்டனர். பசும் புல்லில் அமர்ந்த பசுக்கள்,கன்றுகள்,ருஷபங்கள் களைத்து இருந்தாலும், திருப்தியாக, கண் மூடி உறங்கின.
அனைத்து உயிரினங்களுக்கும் மழை வர ப்ரசாதமே. எங்கும் சுகமான சூழ்நிலையே காணப்பட்டது. அவரவர் குல வழக்கபடி பகவானை பூஜித்தனர்.
இவ்வாறு ராம கேசவர்கள் அந்த வ்ரஜ தேசத்தில் வசித்தனர். அடுத்து சரத் காலம் ஆரம்பித்தது. மழைநீரால் கலங்கியிருந்த குளங்கள் குட்டைகள், நதிகள் தெளிவாக சுத்தமாக அமைதியாக ஆயின. காற்றும் இதமாக வீசலாயிற்று. நீரில் பூக்கும் மலர்கள் நிறைந்தன. சற்று கலங்கியிருந்த யோக சாதனையாளர்கள், மனது தெளிந்து திரும்ப யோகத்தில் ஈடுபடுவது போல. தன்னிடமிருந்த அனைத்தையும் கொடுத்துவிட்ட மேகங்கள் கடமை முடிந்த திருப்தியுடன் விலகின. ஆசைகள் விலகிய சாந்தமான முனிவர்கள் மனதில் களங்கமின்றி ஆவது போல.
மலைகள் நீரை அருவிகளாக பெருகச் செய்தன. சில இடங்களில் அதுவும் இராது. ஞானிகள் ஞானாம்ருத்தை தன் மனம் போல தந்தாலும் தரலாம், தராமலும் போகலாம் என்பது போல.
நீரின் அளவு குறையும் என்பதை ஆழத்தில் வாழும் நீர்வாழ் ஜந்துக்கள் உணரவேயில்லை. மூடர்களான சம்சாரிகள் அனுதினம் ஆயுள் குறைந்து வருவதை உணராதவர்கள் போல.
ஆழ்கடலில் வாழும் ஜந்துக்கள், தாபம்- வேணிற் காலத்து ஸூரியனின் வெப்பத்தையே அறியாதவர்கள். இந்த சரத் காலத்தை உஷ்ணமாக உணர்ந்தன. ஏழை, அதிலும் செலவழிக்க மணமில்லாத க்ருபணன், குடும்பி, தன்னளவில் புலனடக்கமும் இல்லாதவன் சிறிது கஷ்டம் என்றாலும் திணறுவது போல.
மெள்ள மெள்ள நீர் பெருகி இருந்த இடங்கள் சேறாகின. தரை சுட்டது. யாமங்கள் நீண்டன. நான், எனது என்பவை, தீரர்களாக, ஆத்ம ஞானம் பெற்றவர்களின் சரீரத்தை விட்டு விலகுவது போல.
சரத் காலம் வரவும் சமுத்திரம் அமைதியாகியது. ஆத்ம ஞானம் அடைந்த முனிவர்கள் போல.
மழையில் கரைந்திருந்த வரப்புகளை உழவர்கள் சீர் செய்தனர். காம லோபத்தால் விடுபடும் யோக சாதனைகளை திரும்ப பெற நல் உபதேசங்களைக் கேட்டு சபலங்களுக்கு அணை போடும் யோகிகளைப் போல் – இங்கு வரப்பு, ஞானிகளின் புலடக்கத்துக்கு நல்ல உபதேசங்களை கேட்பது உவமையாக சொல்லப் பட்டிருக்கிறது. பகலில் ஸூரியனின் வெப்பம் அதிகமாக இருக்கும். அதை இரவில் சந்திரனின் குளுமையான ஒளி போக்கி விடும். எப்படியெனில், உதாஹரணம்:
ஸ்ரீ க்ருஷ்ணனின் தூண்டுதலால் உத்தவர்,அக்ரூரர் போன்றவர் கோபிகா ஸ்த்ரீகளுக்கு ஞானோபதேசம் செய்தனர். அதனால் அவர்கள் தங்கள் தேகாபிமானம், அதனால் அனுபவித்த தாபம் இவைகளை விட முடிந்தது.
வானம் மேகம் இன்றி சுத்தமாக இருந்தது. சரத் காலத்தில் நக்ஷத்திரங்கள், தாரகைகள் பிரகாசமாக தெரியும். சப்த ப்ரும்மாவின் அர்த்தம் சத்வமானது. அந்த தரிசனம் பெற்றவர்கள் போல தாரகைகள்.
சந்திரனுக்கு தன் தாரகைகளுடன் அகண்டமான ஆகாயமும் இடமாயிற்று. வானளாவ தன் ப்ரகாசத்தை காட்ட முடிந்தது. உதாஹரணம்: யது பதியான ஸ்ரீ க்ருஷ்ணன் வ்ருஷ்ணி குலத்தவர் சூழ பூமியில் இருப்பது போல.
பூக்களும் சம சீதோஷ்ணத்தால் பகலில் பூக்கும் தாமரை முதலியவைகளும், இரவில் மலரும் குமுதங்களும் பெண்களுக்கு இதமாக இருந்தன. பசுக்களும், பெண்களும், பறவைகளும், விலங்குகளும் பூக்க உதவும் காலம் சரத் காலம். அரசர்களால் பிரஜைகள் நிம்மதியாக இருந்தனர், திருடர்கள் இல்லாமல் இருந்ததால் அரசர்கள் நிம்மதியாக இருப்பது போல. ஊர்கள் உத்ஸவங்கள் நிறைந்து எங்கும் ஜன நடமாட்டமும் கொண்டாட்டமுமாக ஆயிற்று. வயல் வெளிகளில் பயிர்கள் செழித்தன. ஸ்ரீ ஹரி கலைகளில் ஈடுபாடு கொள்வது போல.
வணிகனோ, முனியோ, அரசனோ, தங்கள் அளவில் நன்றாக குளித்து, உடுத்திக் கொண்டு வெளியில் சென்று தங்கள் தொழில்களைச் செய்தும் செல்வம் சேர்த்தனர். மழையினால் தடை பட்டிருந்த சாதனைகளை யோகிகள் சித்தர்கள் சரியான காலம் வந்ததும் செய்வது போல..
இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், ப்ராவ்ருட், சரத் வர்ணனம் என்ற இருபதாவது அத்யாயம். ஸ்லோகங்கள்-49
அத்யாயம்-21
இவ்வாறு சரத் காலம் முடிந்து குளங்களில் தாமரை மலர்கள் மலர்ந்தன. அதன் சிறப்பான மணம் காற்றில் மிதந்து வர, அதை, கோகுலத்தில் அனைவருமாக ரசித்தனர். அந்த வனத்தில் யானைகள் கூட்டம் கூட்டமாக செல்வதும், குளம் குட்டைகளில் இறங்கி நீரை கலக்குவதும், மரங்களும் இலைகளும் பூக்களுமாக கண்ணுக்கு விருந்தாக இருக்க, மதுபதி-ஸ்ரீ க்ருஷ்ணன் வேணுவை வாசித்தபடி, பசுக்களையும் கன்றுகளையும் ஓட்டிக் கொண்டு ஒத்த வயதினர் அனைவரும் தொடர குதூகலமாக சுற்றினார்.
வேணு கானம் கேட்டு வ்ரஜ தேசத்து பெண்கள் மயங்கினர். ஒருவரையொருவர் ரகசியமாக பேசிக் கொள்ளும் பொழுது ஸ்ரீ க்ருஷ்ணனை பற்றியே பேசினர்.
அந்த ஈடுபாட்டில், க்ருஷ்ணன் அதைச் செய்தான், இதை செய்தான் என்று தங்களுக்குள் பேசிக் கொள்ளும் பொழுது தங்கள் மனதில் அவனுடைய எண்ணமே கிளப்பும் காமத்தின் ஆவலை அடக்க முடியாமல் மனம் கலங்குவர்.
சிறந்த நடன கலைஞன் போன்ற உடல் அழகும், மயில் இறகு தலையில் சூடி, காதுகளில் கர்ணிகாரம் என்ற மலர், பொன் நிறமான ஆடை, வைஜயந்தி மாலா, வேணுவின் துவாரங்களில் விளையாடும் விரல்கள் மூலம் வரும் நாதம் அவனுடைய உதடுகளில் இருந்து வருவதாலேயே மதுரமாக இருக்க, வனம் அந்த நாதத்தை எதிரொலிக்க, விருந்தாவனத்து அரண்யமே, அந்த கீதத்தால் புகழ் பெற்றது. என்று கோபிகள் சொன்னார்கள்:
கண்கள் புண்யம் செய்ததால் பெற்ற பலன் என்று தான் சொல்ல வேண்டும். பசுக்களுடன் உடன் செல்லும் இடையர் குலத்தவர், அருகிலேயே இருந்து அனவரதமும் ஸ்ரீ க்ருஷ்ணனை காணும் பாக்யம் பெற்றவர்கள் ஆனார்கள். மேடையில் ப்ரதான கலைஞனை அனுசரித்து ஆடும் மற்றவர்கள் போல இந்த பசுபால- மாடு மேய்க்கும் குலத்தினர் சூழ்ந்து சிலர் பாடவும் மற்றும் சிலர் ஆமோதிப்பவருமாக அந்த ஸூழலையே மனோ ஹரமாக்கி உள்ளனர். மாவிலை, பவளம், இறகுகள், பூங்கொத்துக்கள். தாமரை மலர்கள் இவைகளைக் கொண்டு விசித்ரமான அலங்காரங்கள் செய்து கொண்டவர்களாக அருகிலேயே இருக்கின்றனர்.
இந்த கோபிகள் என்னதான் செய்தார்கள், இந்த அளவு சௌக்யத்தை அடைய? தாமோதரன் வாசிப்பதைக் கேட்கவும், அம்ருதம் போன்ற கீதம் அதை இடை விடாது பருகுகிறார்கள். அவனுடன் இருந்து தாங்களும் மனதார அனுபவிக்கிறார்கள், குணமுள்ளவர்கள், மனம் மகிழ்ந்து, உடல் புல்லரிக்க, கண்களில் தாரை தாரையாக நீர் பெருக்குகிறார்கள்.
வ்ருந்தாவனம், தேவகி சுதன் ஸ்ரீ க்ருஷ்ணனின் பத்ம பாதங்கள் பட, பாக்யம் செய்துள்ளது. லக்ஷ்மீகரமான பாதங்கள் இந்த தேசம் முழுவதும் நடமாடி அனுக்ரஹித்திருக்கின்றன.. கோவிந்தனின் வேணு நாதமும், மயூரங்களின் நடனமும், பார்த்த அசையா ஜீவன்களான மலைகளும், புல் வெளிகளும் இந்த வ்ருந்தாவனத்து அனைத்து சராசரமும் புண்யம் செய்தவை. தேவகியின் மகனால் வ்ருந்தாவனம் புகழ் பெறும்.
நாம் அனைவருமே பாக்யசாலிகள். இந்த புள்ளி மான்கள் தளர்ந்த நடையுடன் நந்த நந்தனின் அருகிலேயே சுற்றுகின்றன. வேணு கானத்தைக் கேட்டு கூடவே க்ருஷ்ண – கருமையான் நிறம்- சாரா: என்ற கூட்டாளிகளையும் அழைத்துக் கொண்டு வந்து ரசிக்கின்றன. தங்கள் கண்களாலேயே பூஜைகள் செய்வது போல அன்பை தெரிவிக்கின்றன.
ஸ்ரீ க்ருஷ்ணனை பெண்கள் எப்பொழுதும் உத்ஸவத்தில் இருப்பது போல ஆடை அலங்காரங்களுடன் இருப்பதை காண்கிறார்கள். வாயில் வைத்து வாசிக்கும் வேணு நாதத்தை கேட்டு மகிழ்கிறார்கள். வானத்தில் விமானத்தில் செல்லும் தேவ ஸ்த்ரீகள், தங்கள் பூ மாலைகள். தலை அலங்காரங்கள் நழுவி விழுவதை கூட அறிவதில்லை. பிரமித்தபடி கானத்தை கேட்கின்றனர்.
பசுக்கள் அந்த கீதம் ஸ்ரீ க்ருஷ்ணன் முகத்திலிருந்து வருகிறது என நம்பி அவன் முகத்தையே நோக்கி தங்கள் காதுகளை விரித்துக் கொண்டு கேட்கின்றன. பாலைக் குடித்துக் கொண்டிருந்த கன்றுகள் தாய் பசு மெய் மறந்து வேணு நாதத்தை கேட்பது புரியாமல் பாதியில் தங்களை விட்டு விலகிச் செல்வதைப் பார்த்து கண்களில் நீருடன் கோவிந்தனை முட்டி தெரிவிக்கின்றன.
அம்மா, முன்னால் இந்த இந்த வனத்தில், முனிவர்கள் இருந்தார்கள். பறவைகள், ஸ்ரீ க்ருஷ்ணனின் கல வேணு கீதம் கேட்பதற்காக இந்த மரத்தில் கிளைகளை நிரப்பிக் கொண்டு அமர்ந்திருந்தனவா? கண்களை மூடி மற்ற எதிலும் கவனமே இல்லதவர்களாக இருந்ததை,
நதிகள் ஸ்ரீ க்ருஷ்ணனின் கீதம் கேட்டவுடன், தங்கள் வேகத்தை குறைத்து சுழன்று திரும்பி மனம் லயித்து இருப்பதை,
பூமி ஆலிங்கணம் செய்வது போல ஸ்ரீ க்ருஷ்ணனின் கால்களில் கமலங்களை கொன்டுவந்து உபகாரமாக சேர்ப்பிப்பதை, கண்டிருக்கிறீர்களா?
நல்ல வெய்யில் நேரம். வ்ரஜ பசுக்கள், பலராமனுடனும் மற்ற இடையர்களுடனும், சஞ்சரித்து கொண்டிருருக்கும் சமயம், வேணு நாதம் கேட்டவுடன், மிக்க அன்புடன், துள்ளி குதித்து, பூக்களை சிதறச் செய்தபடி சூழ்ந்து நின்று அவனுக்கு வெய்யில் தெரியாமல் இருக்க குடை போல காக்கின்றன.
பூர்ணமான மணல் வெளிகள். பசுக்களின் குளம்படிகள் என்பதே குங்குமமாக, பெண்கள் தங்கள் மார்பில் சந்தனம் அணிவது போல, அவர்களை நக்கிப் பார்ப்பது போல அவர்கள் முகம், மார்பகங்கள் மேல் பரவி நிற்கின்றன.
ஆ, இந்த மலைக் குன்று, சின்ன பெண் போல பசுமையை போர்த்திக் கொண்டு, ராம , க்ருஷ்ணர்கள் வருவார்கள், அவர்கள் பாதம் நோகாமல் இருக்க வேண்டுமே என்று நினைப்பவள் போல, உள்ளூற அவர்களின் பாத ஸ்பர்சத்தால் மகிழ்ந்து, அதே காரணமாக பசுக்களின் கூட்டத்தையும், உபசரிக்கிறது. ஆங்காங்கு குடி நீர், மேய்ச்சல் நிலம், ஓய்வெடுக்க குகைகள். பழங்களும் கிழங்குகளும் என்று நிரப்பி வைத்து காத்திருக்கிறது போலும்.
பசுக்கள், இடையர்கள் அழைத்துச் செல்லும் போது எந்த விதமான எதிர்ப்பும் இன்றி, வேணு நாதம் கேட்கிறதா என்று மட்டும் கவனமாக இருப்பது போல, நடந்து செல்லும் ஜீவன்களின் மயிர்க் கூச்சலையும், அசையாத மரங்களில் சுகமாக வீசும் காற்றிலும் தங்கள் பாசத்தை காட்டுவதாக அறிந்து கொள்கின்றன.
கோபிகள் இவ்வாறு தாங்கள் கண்டதையும், கேட்டதையும் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனுடன் இணைத்தே வர்ணித்தும், விளையாட்டு தான் என்றாலும் ஸ்ரீ க்ருஷ்ணனே உள்ளூற வியாபித்து இருப்பதை வெளிப் படுத்தினார்கள்.
இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், வேணு கீதம் என்ற இருபத்தி ஓராவது அத்யாயம். ஸ்லோகங்கள்-20
அத்யாயம்-22
ஸ்ரீ சுகர் சொன்னார்: அடுத்து ஹேமந்த ருது வந்தது. நந்த வ்ரஜத்து இளம் பெண்கள் இந்த பருவத்தின் முதல் மாதத்தில், காத்யாயனி என்ற விரதம் அனுஷ்டிக்க ஆரம்பித்தனர். ஹவிஷ்யம்- பகவானுக்கு நிவேதனம் செய்யப் பட்ட உணவை உண்டு காத்யாயனியை அர்ச்சிக்கும் விரதம் அது. பொழுது புலரும் முன் காளிந்தி நதியில் மூழ்கி குளித்து, அருணனின் முதல் கிரணம் தெரிந்தவுடன் தேவியின் உருவை மணலில் செய்து, வழிபாடுகள் செய்தனர். சந்தணம் பூசி, மாலைகள் அணிவித்து, தூப தீபங்கள் காட்டி, ருசியான உணவை நிவேதனம் செய்து, மற்றும் அனைத்து உபசாரங்களையும் செய்து, பழங்கள், சிறந்த தானியங்கள் இவைகளைக் கொண்டு உபஹாரம் என்பதை செய்து, பின் கண்டவாறு பிரார்த்தித்தனர்.
कात्यायिनि महामाये, महायोगिन्यधीश्वरि- नन्दगोप सुतम् देवि पतिम्मे कुरु ते नम: ||
இந்த மந்திரத்தை ஜபித்தபடி அந்த இளம் பெண்கள் பூஜைகள் செய்தனர். மாதம் முழுவதும் இவ்வாறு விரதமும் பூஜையும் செய்தனர். ஸ்ரீ க்ருஷ்ணனையே தியானித்து,பத்ரகாளி-காத்யாயனியை சிறப்பாக பூஜை செய்தனர். அனைவருக்கும் ஒரே குறிக்கோள் நந்தன் மகன் தங்களுக்கு மணாளனாக வர வேண்டும் என்பதே.,
விடியற்காலை -உஷத் காலத்திலேயே எழுந்திருந்து தங்கள் வயது ஒத்த தோழிகள் தோளில் கை போட்டுக் கொண்டு, பலமாக ஸ்ரீ க்ருஷ்ணனை பாடிக் கொண்டு, நதி நீரில் மூழ்கி மகிழ்ச்சியுடன் நீராடினர்.
பகவான் அவர்கள் அபிப்பிராயத்தை அறிந்தார். யோகேஸ்வரன் அல்லவா. தானும் தன் வயது நண்பர்களுடன் அங்கு வந்து சேர்ந்தார். அவர்கள் வேண்டியது நிறைவேறட்டும் என்று மனதில் நினைத்தபடி வந்தார்.
என்ன தோன்றியதோ, திடுமென அவர்களுடைய வஸ்திரங்கள் கரையில் வைத்திருந்தை எடுத்துக் கொண்டு நீப மரத்தின் மேல் ஏறி, மற்ற பாலகர்கள் சிரிக்க, பரிஹாஸமாக சொன்னார். பெண்களே, இங்கு வந்து உங்கள் வஸ்திரங்களை பார்த்து உங்களுடையதை எடுத்துக் கொள்ளுங்கள். விரதம் செய்து களைத்த உங்களிடம் நான் சத்யமாக சொல்கிறேன். இதில் ஸுது ஒன்றுமில்லை. எந்த நிலையிலும் நான் சத்யமல்லாததை சொல்ல மாட்டேன். பொய் என நினைக்க வேண்டாம். ஒவ்வொருவராக வாருங்கள், உங்கள் ஆடையை எடுத்து உடுத்திக் கொள்ளுங்கள். அனவருமே சுமத்யமா:- இடை சிறுத்தவர்கள், எனவே, பார்த்து.
இது என்ன விபரீதம் என்று நினைத்தாலும், மனதில் இருந்த அன்பு ஒரு புறம் வெட்கம் ஒரு புறம், ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு யாரும் முன் வரவில்லை. கழுத்து வரை குளிர்ந்த நீர். நடுக்கி எடுத்தது. கோவிந்தனின் விளையாட்டு புத்தியும் சீண்டுவதும் தெரிந்தவர்கள். அவனிடமே சொன்னார்கள்;
போ:! இது நியாயமல்ல. நந்தகோபனின் மகன் என்பதால் உன்னுடன் பிரியமாக இருந்து வந்திருக்கிறோம். வ்ரஜ தேசத்தில் ஸ்லாக்யமானவன், மதிப்புகுரியவன் என்று அறிவோம். குளிரில் நடுங்குகிறோம், எங்கள் வஸ்திரங்களைக் கொடு.
சியாம சுந்தர! நாங்கள் உன் தாசிகள். நீ சொல்வதை செய்கிறோம். தர்மம் அறிந்தவனே, எங்கள் ஆடைகளை கொடு. இல்லையெனின் அரசனிடம் சொல்வோம்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: என் தாசிகள் என்றால் நான் சொல்லியபடி செய்யுங்கள். இங்கு வந்து உங்கள் ஆடைகளை சிரித்தபடிவாங்கிச் செல்லுங்கள். வேறு வழியின்றி நதி நீரிலிருந்து அனைவரும் நடு நடுங்கிக்கொண்டு, குளிரில் விரைத்தபடி, தங்கள் கைகளால் உடலை மறைத்துக் கொண்டு அருகில் வந்தனர்.
அவர்களின் எளிமையான சுத்தமான நம்பிக்கையால் மகிழ்ந்து, ஆடைகளை தன் தோளில் வைத்துக் கொண்டுநீங்கள் அனைவரும் விரதம் பூண்டவர்கள். நீரில் வஸ்திரம் இன்றி மூழ்கியது தெய்வ விரோதம். கைகளை கூப்பி தலையில் வைத்துக் கொண்டு வணங்கி பிரார்த்தனை செய்யுங்கள். வந்து வாங்கிக்கொள்ளுங்கள்.
அச்யுதன் இவ்வாறு சொல்லவும், வ்ரஜ தேச இளம் பெண்கள், வஸ்திரம் இன்றி நீரில் மூழ்கி வ்ரதம் செய்வதில் தவறு தான் அதனால் தங்கள் பிரார்த்தனை பலிக்காமல் போய் விடப் போகிறதே என்று அதிகம் பயந்தவர்களாக, ஒரு மாதமாக செய்த விரதம் அந்த பலன் தான் முக்கியம் என நினைத்து அப்படியே வணங்கினர். தேவகி சுதன் அதை பார்த்து கருணையுடன் அவர்கள் ஆடைகளை திருப்பிக் கொடுத்தான்.
இப்படி ஏமாற்றினானே, வெட்கமின்றி நம்மை அவன் விருப்பத்துக்கு ஆட வைத்தானே, விளையாட்டு பொம்மை என்று நினைத்தானா, ஆடைகளை அபகரித்துக் கொண்டு வேடிக்கை பார்த்தான் என்றெல்லாம் கோபம் வந்தாலும், அவனை அருகில் கண்டதால், உள்ளம் பூரித்து மகிழ, அவையனைத்தையும் மறந்தனர்.
தங்கள் ஆடைகளை எடுத்து உடுத்திக் கொண்டு கிளம்பியவர்கள் சுய உணர்வடைந்து, மிகுந்த வெட்கமும், அதை விட அதிக வருத்தமும் அடைந்தனர். கண்களை தாழ்த்தியபடி வீடு திரும்பினர். பகவான் அவர்கள் விரும்பியது தன் பாதங்களை தொட்டு வணங்குவதே, அவர்கள் விரதத்தின் நோக்கம் , அதைத் தானே விரத ஆரம்பத்தில் சங்கல்பம் செய்தார்கள், எளிய சிறுமிகள் என்று நினைவு வர, அவர்களைப் பார்த்துச் சொன்னார்: சாது பெண்களே! உங்கள் விரதம் பூர்த்தியாயிற்று. என்னை அர்ச்சனை செய்து நீங்கள் வேண்டியது சீக்கிரமே நடக்கும். என்னை அண்டியவர்கள் மனதில் காமம் இராது. வறுத்து, இடித்து பக்குவம் செய்யப் பட்ட தானியங்கள் விதையாகாது. நீங்கள் அனைவரும் இளம் வயதினர். எதை உத்தேசித்து இந்த விரதம், இவ்வளவு நியமங்களுடன் செய்தீர்களோ அதை இன்று இரவு அடைவீர்கள். நல்ல எண்ணத்துடன் செய்தது வீணாகாது.
ஸ்ரீ சுகர் சொன்னார்: குமாரிகள், பகவானின் சொல்லைக் கேட்டு தங்கள் விருப்பம் நிறைவேறியதாக கண்டு ஸ்ரீ க்ருஷ்ண பதாம்போஜத்தையே தியானம் செய்தவர்களாக வீடு திரும்பினர்.
மற்ற இடையர் சிறுவர்களுடன் தேவகி மகன் வெகு தூரம் மாடு கன்றுகளை மேய்த்துக் கொண்டு பலராமனுடன் சென்றார். அந்த கடுமையான வெய்யிலில், நிழல் தருவதே தங்கள் தர்மமாக விசிறியால் விசிறுவது போலவும் குடை பிடித்து வெய்யிலின் உக்ரம் தாக்காமல் காப்பது போலவும் அசையாது நிற்கும் மரங்கள். தன் சகாக்களை அழைத்து சொன்னார்: ஹே ஸ்தோக, க்ருஷ்ணா, அம்ச, ஸ்ரீதாமன், சுபலார்ஜுன, விசால வ்ருஷப, தேஜஸ்வின், தேவப்ரஸ்த, வரூதப ( இவைகள் மரங்களின் பெயர்களும் ஆகும்) இவைகளைப் பாருங்கள். மஹா பாகர்கள். இவர்கள் வாழ்வே மற்றவர்களுக்காகத் தான். வறுத்தும் கோடையோ, மழையோ, தாங்கள் சகித்துக் கொண்டு நமக்கு அவை பாதிக்காமல் காக்கின்றன. அஹோ! இவர்கள் பிறவி பயனுள்ளது. அனைத்து உயிரினங்களும் ஜீவிக்க உதவுகின்றன. யார் வந்தாலும் இவை நிழல் கொடுக்க மறுப்பதில்லை. பத்ர, புஷ்ப, பழம், நிழல், வேர்கள், ஆடைகள் தயாரித்துக் கொள்ளவும், விறகாகவும் , வாசனை த்ரவ்யங்களும், எரித்தாலும் பஸ்மம், இதன் நரம்புகள், நார்கள் அனைத்தையும் மற்ற ஜீவன்கள் பயன் படுத்திக் கொள்கின்றன. இது தான் ஜன்ம சாபல்யம் என்பது. பிறவி பெற்றதன் பலன். மனிதர்களும் இப்படித்தான் இருக்க வேண்டும். ப்ராணன், தனம், தன் திறமை அல்லது புத்தி, வாக்கு, சௌக்யங்கள், இவைகளை இப்படி பயன்படுத்த வேண்டும். இப்படி உபயோகமாக இருந்தும் தான் வணங்கி இருக்கும் இந்த தாவரங்கள், அவைகளிடமிருந்த இளம் தளிர்கள், குச்சிகள், பழங்கள், பூக்கள், இலைகள் இவற்றை சேகரித்துக் கொண்டு அந்த மரங்களுக்கிடையில் நடந்து யமுனைக் கரையை அடைந்தனர்.
குளிர்ந்த சீதளமான சுத்தமான ஜலத்தில் பசு கன்றுகளை ஆஸ்வாசப் படுத்தி குடிக்க வைத்து, அவைகள் களைப்பு நீங்கி ஓய்வு எடுக்க விட்டு, மற்றவர்களும் திருப்தியாக அந்த இனிமையான ஜலத்தை குடித்து மகிழ்ந்தனர். அந்த உபவனத்தில் பசுக்களை கட்டின்றி மேய்ந்து செல்ல அனுமதித்தனர். க்ருஷ்ண, ராமனைப் பார்த்து இடைச் சிறுவர்களும் தங்களுக்கும் பசிப்பதைச் சொன்னார்கள்.
இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், கோபீ வஸ்த்ராபஹரணம் என்ற இருபத்திரண்டாவது அத்யாயம். ஸ்லோகங்கள்-38
அத்யாயம்-23
இடைச் சிறுவர்கள் ராம, ராம, நீ மஹா வீர்யன். க்ருஷ்ணா நீயும் துஷ்டர்களை அடக்குபவன். எங்களை தற்சமயம் வருத்துவது பசியே. அதை கொஞ்சம் அடக்குங்களேன் என்றனர்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவர்கள் இப்படி வேடிக்கையாக வேண்டிக் கொண்டதைக் கேட்டு, பகவான் சிரித்துக் கொண்டே, அந்தணர்களின் மனைவிகள், அவர்களும் தன் பக்தர்களே, அவர்களை அனுக்ரஹிக்க வேண்டும் என்று நினைத்தார். இதோ பாருங்கள், தேவர்களை குறித்து யாகம் செய்கிறார்கள். ப்ரும்ம வித்தை அறிந்த அந்தணர்கள். ஆங்கிரசம் என்ற சத்ரம்- யாகத்தைச் செய்கின்றனர். சுவர்கம் வேண்டி இந்த யாகத்தை ஆரம்பித்துள்ளார்கள். அங்கு போங்கள். நம் அனைவருக்குமாக அன்னத்தை யாசித்து பெறுங்கள். பகவான் பெயரைச் சொல்லி என் பெயரையும் சொல்லிக் கேளுங்கள்.
பகவான் சொன்னபடியே, அவர்கள் அங்கு சென்று யாகம் செய்து கொண்டிருந்தவர்களிடம் யாசித்தனர். நாங்கள் இடையர்கள். எங்களுடன் பலரானும், க்ருஷ்ணனும் வந்திருக்கிறார்கள். அவர்கள் சொல்லித் தான் வந்தோம். பசுக்களை மேய்த்துக் கொண்டு வெகு தூரம் வந்து விட்டோம் என்று சொல்லி தரையில் உடல் பட வணங்கி அவர்களிடம் கை கூப்பி வேண்டினர். ஹே பூமி தேவா:! கேளுங்கள். ஸ்ரீ க்ருஷ்ணன். கட்டளைப் படி வந்துள்ளோம் என்பதை அறிக. அவர்களும் பசியுடன் இருக்கின்றனர். அந்தணோத்தமர்களே, அன்னத்தை யாசிக்கிறோம். உங்களுக்கு சம்மதமானால் தாருங்கள். தர்மம் அறிந்தவர்கள் நீங்கள். தீக்ஷை எடுத்துக் கொண்டு, நியமமாக யாகம் செய்கிறீர்கள். பசித்தவர்களுக்கு யாராயினும் உணவை தானம் செய்வது தவறல்ல என்று சொல்லச் சொன்னான்.
இவ்வாறு பகவானே யாசித்தும், கேட்டுக் கொண்டிருந்த போதிலும் கேட்காதவர்கள் போல சிறுவர்கள், நாம் செய்வது எவ்வளவு பெரிய காரியம், எவ்வளவு நியமங்கள் என்று தெரியாமல் பசியினால் யாசிக்கிறார்கள் என்று அலட்சியமாக இருந்தனர். வயதானவர்கள், விவரம் அறிந்தவர்கள் என்று தங்களை நினைத்துக் கொண்டவர்கள். தேசம் காலம் தனித் தனியாக த்ரவ்யங்கள் அதற்கான , மந்த்ர தந்திரங்கள், ருத்விக், அக்னி, தேவதைகள், யஜமான். யாக தர்மம் இவையனைத்தும், அந்த பர ப்ரும்மமே சாக்ஷாத். அதோக்ஷஜனான பகவானை மனித புத்தி, ஞானம் இருந்தும் பயனின்றி, மனிதனுள்ளும் அந்த பரமாத்மாவின் அம்சமே என்பது தெரிந்தும் செயலில் மூழ்கி அதையே தவறு இல்லாமல் செய்வதே பெரிது என்று நினைப்பவர்கள். ஓம் என்று சொல்லி யாகத்தை ஆரம்பித்தவர்கள், இல்லையென்றும் சொல்லாமல் நேரம் கடத்தவும், நிராசையுடன் கோகுல வாசிகளான சிறுவர்கள் ராம, க்ருஷ்ணர்கள் இருந்த இடம் வந்தனர். அதைக் கேட்டு ஜகதீஸ்வரன் பகவான் சிரித்தார். உலக வழக்கை யோசித்து திரும்பவும் அவர்களை திரும்பவும் போய் தீக்ஷிதர்களின் மனைவிமாரை யாசிக்கச் சொன்னான். என் பெயரை சொல்லுங்கள். சங்கர்ஷணன்- பலராமன் வந்திருப்பதாகச் சொல்லுங்கள். அவர்கள் இளகிய மனம் உடையவர்கள். கண்டிப்பாக தருவார்கள். என்னை அறிவார்கள் ஆதலால் தயங்காமல் போய் கேளுங்கள் என்று அனுப்பினான்.
அந்த சிறுவர்கள் திரும்பவும் போய் தீக்ஷிதர்களின் மனைவிகள் இருக்கும் இடத்தை தேடியபடி சென்றார்கள். அங்கு நல்ல ஆடை ஆபரணங்கள் அணிந்து அமர்ந்திருந்தவர்களிடம் தயக்கத்துடன் தாங்கள் வந்த காரியத்தைச் சொன்னார்கள். அந்தணர்களின் மனைவிகளே! வணக்கம். நாங்கள் சொல்வதை தயவு செய்து கேளுங்கள். இதோ சற்று தூரத்தில், ஸ்ரீ க்ருஷ்ணனுடன் மாடு கன்றுகளை மேய்த்துக் கொண்டு உடன் வந்தோம். பசுக்களை மேய்த்தபடி பலராமனுடன் வெகு தூரம் வந்து விட்டோம். அனைவருக்கும் நல்ல பசி. அவர்கள் இருவருக்கும், கூட வந்த எங்களுக்கும் சேர்த்து அன்னத்தை யாசிக்கிறோம். தந்து உதவ வேண்டும்.
அச்யுதன் வந்திருக்கிறான் என்று கேட்டதுமே அவர்கள் பரபரப்புடன் நித்யம் தரிசிக்க விரும்பியிருந்தவர்கள், தானே வந்து நிற்கிறான் என்றதும், நான்கு விதமான உணவு பண்டங்களையும், நிறைய பெரிய பாத்திரங்களில் எடுத்துக் கொண்டு வேக வேகமாக ஓடி வந்தனர். அனைவரும் சமுத்திரத்தை தேடி ஓடி வரும் நதிகள் போல விரைந்து வந்தனர். அவர்களின் பதிகள் தடுத்ததையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் தங்கள் சகோதர்கள், புதல்வர்கள், யாகத்தில் ஈடுபட்டிருந்த அனைவரும் சொல்லியும் கேட்காமல், உத்தமஸ்லோகன் என புகழ் பெற்ற பகவானை தரிசிக்கும் ஆவலுடன், வெகு நாட்களாக கேள்விப் பட்டு மனதினுள் காண வேண்டும் அன்ற ஆவலை வளர்த்து கொண்டிருந்ததால், யமுனையின் உபவனம் வந்து சேர்ந்தனர். அசோக மரங்கள் மண்டியிருந்த வனத்தில் கோகுல வாசிகளுடன் நடந்து கொண்டிருந்த, சகோதரனுடன் கூடிய ஸ்ரீ க்ருஷ்ணனைக் கண்டனர். அந்த பெண்கள், நீல மேக ஸ்யாமளனை, பொன் நிற வஸ்திரம் அணிந்து, வன மாலையும், மயில் இறகும் தரித்து, பல விதமான மணம் நிறைந்த தாதுக்கள் பூசி, இளம் துளிர்களும், நடனம் ஆடுபவன் போல மற்றவன் மேல் ஒரு கையும், மற்றொன்றில் தாமரையை சுழற்றியபடி, கர்ணங்களில் உத்பல, அலக, கன்னங்களில் குமிழ் சிரிப்புமாக நின்ற தோற்றத்தைக் கண்டனர்.
பலவிதமாக தாங்கள் கேட்டிருந்த கதைகளால் பிரியமாக ஆனவனை, நினைத்து நினைத்து மனதில் உருவேறியிருந்த அவன் லீலைகளை மனம் கொள்ளாமல் தியானித்து இருந்ததை கண்கள் இமைக்காமல் நேரில் கண்டு பரவசமானார்கள். அவர்கள் மனதினுள் ஊடுருவி, மிக அதிகமான தாபத்தை கிளறியவனாக உணர்ந்தார்கள். ப்ராக்ஞன் என்று அவனை நம்பியவர்கள் பாடுகிறார்கள், நரேந்திரா! தெரியும் அல்லவா?
தங்கள் உள்ளுணர்வால் மட்டுமே அறிந்து அனைத்தையும் உதறி விட்டு வந்தவர்கள். பகவானும் அதைத் தெரிந்து கொண்டு, அகிலத்தையும் காண்பவன், சிரித்துக் கொண்டே சொன்னான்: மகா பாக்யசாலிகளே! உங்கள் வரவு நல் வரவாகுக. அமருங்கள், நாங்கள் என்ன செய்ய வேண்டும்? எங்களைக் காண இவ்வளவு சிரமப்பட்டு வந்துள்ளீர்கள். உங்கள் விருப்பம் நியாயமானதே. ப்ரதி பலனை எதிர் பார்க்காமல் உங்களுக்கு பிரியமானவர்களிடம் அன்பு செலுத்துவது போலவே பக்தியுடன் வந்திருக்கிறீர்கள். உங்களை மணந்தவர்கள் உங்கள் கணவன்மார்கள், தங்கள் ப்ராணன், புத்தி, மனம், தன் மனைவி, தன் மகன் என்ற அன்பு, தங்கள் செல்வம் ஈட்டுவதும் தன் குடும்பத்தினருக்காகவே என்று உங்களுக்கு பிரியமானவர்களாக இருக்கிறார்கள். அது உலக வழக்கு. அதனால் திரும்பி போங்கள். அவர்கள் செய்யும் தேவ யாகத்தில் பங்கு கொள்ளுங்கள். பத்னியுடன் தான் யாகங்களை செய்ய வேண்டும் என்பது த்விஜாதி – இரு முறை பிறப்பவர்கள், உபாகர்மா எனப்படும் பூணல் அணிவிப்பது இரண்டாவது பிறவி- எனப்படும் அந்தணர்கள் யாகம் நீங்களும் பங்கேற்று தான் முடிக்க வேண்டும். குடும்ப வாழ்க்க்கையில் எந்த செயலானாலும் பத்னி இல்லாமல் நிறைவேறாது.
பத்னிகள் சொன்னார்கள்: விபோ! இவ்வளவு கடுமையாக எங்களை நிந்திக்காதே. உண்மையை சொல். வேதம் உன் பாத மூலம். நாங்கள் வந்தது துளசி தளத்தால் அர்ச்சிக்கப்பட்ட பாதங்களில் தலை பட வணங்கும் பேறு பெறுவோம் என்ற ஆசை மட்டுமே, அதற்காக சமஸ்த பந்துக்களையும் விரோதித்துக் கொண்டு வந்துள்ளோம். அரிந்தம! உன் பாதங்களில் விழுந்து வணங்கும் எங்களை புறக்கணித்தால் நாங்கள் திரும்ப அங்கே போய் என்ன சொல்வோம். எங்கள் பதிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள், தந்தையோ மகன் களோ ஆதரவு தர மாட்டார்கள், சகோதரர்களொ, உறவினர்களோ, நண்பர்களோ யாரும் அருகில் கூட வர மாட்டார்கள். மற்றவர்களைப் பற்றி என்ன சொல்ல. தெரிந்து கொள்.
பகவான் சொன்னார்: பயப்படாதீர்கள். உங்கள் பதிகள் உங்களை கை விட மாட்டார்கள். தந்தை மாரோ, சகோதரனோ, மகனோ மற்றும் உலகத்தினர் எவருமே என் வசத்தில் இருக்கும் தேவர்களோ எதுவும் சொல்ல மாட்டார்கள். மனிதர்களுக்குள் உறவு, அங்க சங்கத்தால் வருவது, என் மகன் என் சகோதரன் என்ற ப்ரீதி ரத்த சம்பந்தம். குடும்ப வாழ்க்கையில் அவை நடை முறையில் உள்ளவையே. அதனால் மனதில் என்னை வணங்கி வந்தாலே என்னை அடைவீர்கள், சந்தேகமேயில்லை.
( ஸ்ரவணம்- கேள்வி, தர்சனம், தியானம் இவைகளால் என்னை பாடுவது இந்த வழிகளை பின் பற்றுங்கள். அதனால் இப்பொழுது அவர்கள் அருகிலேயே இருங்கள், வீடுகளுக்கு திரும்பிச் செல்லுங்கள் )
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு சொல்லி அவர்களை திருப்பி அனுப்பினார். அவர்களும் யாக சாலைக்கே சென்றனர். அவர் சொன்னபடியே பதிகளோ, சகோதரர்களோ, தந்தையோ அவர்களை விரட்டவில்லை. தாங்கள் செய்ய வேண்டியதை தங்கள் பத்னிகள் செய்தனர் என்று திருப்தியே அடைந்தனர். அதன் பின் அவர்களும் உடன் இருக்க யாக காரியங்களை முடித்தனர். அதில் ஒருவன் மட்டும் மனைவியை ஏற்க மறுத்தான். அவள் குளத்தில் வீழ்ந்து உயிரை மாய்த்துக் கொண்டாள்.
அந்த உணவுகளை ஸ்ரீ க்ருஷ்ணன் மற்ற கோகுல வாசிகளோடு சேர்ந்து அமர்ந்து உண்டார். நால் வகையான அன்னங்கள், கடித்து உண்பது, விழுங்குவது, மெல்ல சுவைப்பது, குடிப்பது என உண்பது நால் வகைக்குள் அடங்கும்.
யாக காரியங்களை நியமம் தவறாமல் முடித்து விட்டு தீக்ஷிதர்கள் தங்கள் மனதில் வருந்தினர். விஸ்வேஸ்வர்கள் வந்து கேட்டும் மறுத்தோமே, கர்ம காண்டத்தின் கடினமான நியமங்கள் தங்களை கட்டிப் போட்டது என்று வருந்தினர். இந்த ஸ்த்ரீகள் பகவானிடத்தில் எந்த பலனும் எதிர்பாராமல் பக்தி செலுத்த முடிந்ததே, உலக இயல்பாக எதையுமே வேண்டாமல், ஆசையின்றி பக்தியே ப்ரதானமாக தர்சனம் செய்து விட்டு வந்தார்கள். நமக்கு அந்த பக்குவம் இல்லையே என்று தங்களைத் தாங்களே நிந்தித்துக் கொண்டனர். நம் பிறவியே திக், வீண். வேதங்கள் அத்யயனம் பண்ணியதும் வீண். விரதம் என்றும், நல்ல குலத்தில் பிறப்பு என்று எண்ணி இருமாந்ததும், பலவிதமாக கற்று அறிவை வளர்த்துக் கொண்டதும் வீண், செயலே முக்கியம் என்று நம்பி அதை தீவிரமாக நியமம் தவறாமல் அனுசரித்ததும் வீண் தானோ. அதோக்ஷஜன் கண் முன்னே வந்தும் அதைக் கண்டு கொள்ளத் தெரியாத மூடர்களா நாம். இதுவும் பகவானின் மாயை தான் என்பது நிச்சயம். யோகிகளையே திசை திருப்பும் மாயை. நாம் குருவாக மனிதர்களுக்கு உபதேசிக்கிறோம், அவர்கள் அறிவை வளர்க்கிறோம், கடைசியில் அனைத்தும் தன்னலம் கருதி தானா? அஹோ! இதோ பாருங்கள், நம் மனைவிகள், ஜகத் குரு ஸ்ரீ க்ருஷ்ணனை கண்டு கொண்டார்கள். எந்த ப்ரதி பலனும் எதிர் பாராமல் இதன் விளைவு ம்ருத்யுவாக கூட இருக்கலாம் என்று தெரிந்தும் வீடு வாசல்களை இழக்க நேரிடலாம் என்று பயமோ, இல்லாமல் சென்றனர். நமக்கு த்விஜாதி என்ற அந்தண ஸம்ஸ்காரங்களோ, குருவிடம் வாசம் செய்து கற்றதோ, தவம் செய்ததும், ஆத்மா, மீமாம்ஸ என்று வாதங்கள் செய்ததும், ஒழுக்கமே பெரிது என்று வாழ்ந்ததோ, பெரிய பெரிய சுப காரியங்களை பொறுப்பேற்று நடத்தியதோ, உதவவில்லையா. சம்ஸ்காரங்கள் பெரிது தான். நாம் மனதார பகவானை நம்பியிருந்தால் ஸ்ரீ க்ருஷ்ணனின் தரிசனம் கிடைத்திருக்கும். எதை பெரிதாக நினைத்தோம், வீடு வாசல்களையா? அஹோ! அவர் நமக்கு நினைவூட்டவே வந்திருக்கிறார். கோகுல வாசிகளோடு வந்து ஆசீர்வதிக்கவே வந்திருக்கிறார். அது தான் சான்றோர், நன்மக்களின் வழி. அதுவன்றி அவருக்கு என்ன அவசியம். பூர்ணகாமன். கைவல்யம் என்ற உயர் பதவியையே தரக் கூடியவர், நம்மிடம் யாசிக்கவா வந்தார்? இது எப்பேற்பட்ட முரண்? இதை ஏன் நாம் உணரவில்லை.
அனைவரையும் தள்ளிவிட்டு ஸ்ரீ லக்ஷ்மி தேவி அவர் பாதங்களை பூஜிக்கிறாள். அதைத்தானே அவள் பெரிதாக யாசித்தாள். ஜகன் மோஹிணி, ஜகன் மாதா அவள் அறியாததா? தேசம், காலம் தனித்தனியாக த்ரவ்யம் அதற்கான மந்திரம், தந்திரம், ருத் விக், அக்னிகள், தேவதா, யஜ மானன் என்ற பொறுப்புகள், யாகம், அதன் தர்மம், அனைத்தும் மட்டுமே நாம் அறிந்தது. சாக்ஷாத் பகவான் இருக்குமிடம் செல்வோம். யது குலத்து வாசிகளோடு ஒருவனாக தன்னை உலகுக்கு அறிவித்துக் கொண்டு இருக்கும் விஸ்வேஸ்வரன், யோக யோகேஸ்வரன், அவனை இப்பொழுதும் நாம் சென்று சேவிக்காவிட்டால், நமது அறியாமைக்கு எல்லையே இல்லை. அஹோ! இதன் மத்தியிலும் நாம் தன்யதமா:- திறந்த பாக்யம் செய்தவர்கள். நமது பத்னிகள். அவர்கள் மனதில் உறைத்ததே. ஸ்ரீ ஹரியிடம் அசையாத பக்தி பாவமே கொண்டவர்கள்.
பகவானே, நமஸ்துப்யம். க்ருஷ்ணாய அகுண்ட மேதஸே- ஞானம் என்பதனைத்துக்கும் இருப்பிடமானவனே. அவரை மாயையால் மறைக்கப்பட்டு புத்தியில்லாமல் அறிந்து கொள்ளாமல் விட்டோம். செயல் மார்கத்தில் ஈடு பட்டவர்களாக இருந்து விட்டோம். அவர் தான் ஆதி புருஷன். தன்னை மறைத்துக் கொண்டு நம் அனைவரிலும் ஆத்மாவாக உறைபவன். பகவானே, உன்னை அறியாமல், செய்த தவறை மன்னித்து எங்களை அனுக்ரஹியுங்கள். இவ்வாறு தங்கள் தவற்றை உணர்ந்து ஸ்ரீ க்ருஷ்ணனை அவமதித்து விட்டோமோ என்ற அறிவு வந்தும், கம்சனிடம் இருந்த பயத்தால் அந்த இடத்தை விட்டு அசையவில்லை.
இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியின், இருபத்து மூன்றாவது அத்யாயம். ஸ்லோகங்கள்- 52
அத்யாயம்- 24
ஸ்ரீ சுகர் சொன்னார்: கோகுலத்தில் வசித்த சமயம் பலராமனும், க்ருஷ்ணனும் ஒரு நாள் அனைவரும் பரபரப்பாக இந்திர யாகம் செய்ய ஏற்பாடுகள் செய்வதைக் கண்டனர். தெரியாதவன் போல பகவான், தந்தையிடம் வணக்கத்துடன் வினவினான். முதிய நந்தபுர வாசிகளும் அங்கு இருந்தனர். ஸ்ரீ க்ருஷ்ணன்’ தந்தையே! எதற்கு இந்த ஏற்பாடுகள்? மிகப் பெரிய உத்சவம் போல யாகம் செய்ய போகிறீர்களா? யாரை உத்தேசித்து, என்ன பலன்? யாரெல்லாம் இதைச் செய்வார்கள்? நானும் உதவட்டுமா? எனக்கும் இதில் பங்கு கொண்டு வேலைகள் செய்ய ஆசையாக இருக்கிறது. சொல்லுங்கள்? ரகசியம் எதுவும் இல்லையே ‘ என்றான்.
தனக்கு ஆப்த நண்பர்களாக இருப்பவர்களிடம் சிலவற்றைச் சொல்லாம். அதுவே உதாசீனமாக நெருக்கமாக இல்லாதவர்களிடம் மறைக்கவும் வேண்டும். அவர்களிடம் கவனமாகவே நடந்து கொள்ள வேண்டும். எதிரிகளிடம் இருப்பது போல. தெரிந்தோ தெரியாமலோ இந்த கோகுல வாசிகள் அனைவரும் ஈடுபாட்டுடன் செய்கிறார்கள். இவர்களுக்கும் அறிந்து செய்யும் வித்வான்களுக்கும் ஒரே பலனா கிடைக்கும்? இது என்ன கார்யம். வைதீகமான செயலா? லௌகீகமானது தான் என்றால் எனக்கும் சொல்லுங்கள்.
நந்தன் பதில் சொன்னார்: நமக்கு மழை மிக அவசியம். மழைக்கு அதிபதி இந்திரன். மேகங்கள் அவன் ஆத்மார்த்தமான பணியாட்கள். அவைகள் தானே மழையை பொழிகின்றன. प्राणिनां जीवनं पय: – உயிரினங்களுக்கு ஜீவனம் தண்ணீர் என்பது தெரியும் அல்லவா. நாம் இந்திரனை மேகங்களுக்கு தலைவன், அந்த நீரால் பொருட்களை தயாரித்து யாகங்களில் பயன்படுத்துகிறோம். யாக மீதியால் உலகத்தார் மூவகையான பலன்களையும் பெறுகிறார்கள். மனிதர்களுக்கு மழை பலன்களைத் தருகிறது. மழையின்றி விவசாயம் நடக்காது என்பதால். பரம்பரையாக வந்த வழக்கம் இந்திரனை பூஜிப்பது , அதை நிறுத்த வேண்டாம்.
வேறு ஏதோ ஆசை, அல்லது லோபம் அல்லது பயம் என்பதால் விடக் கூடாது.
( கம்சனிடம் பயத்தால் யாக காரியங்கள் செய்வதை கூட ரகசியமாக செய்து வந்தனர் )
ஸ்ரீ சுகர் சொன்னார்: இதைக் கேட்டு மற்ற வ்ரஜ வாசிகளும் அமோதித்தனர். இந்திரன் கோபம் கொள்ள விடக் கூடாது என்று அவர்களும் சொல்லவும், கேசவன் தந்தையிடம் சொன்னான்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: தன் வினைப் பயனாக பிறவிகள் தோன்றுகின்றன. அதே வினைப் பயனால் மறைகின்றன. சுகமோ, துக்கமோ, பயம், க்ஷேமம், கர்ம பலனே. நல்வினை செய்தவன் நன்மை அடைகிறான், அப்படி செய்யாதவன் அதன் பலனை அனுபவிக்கிறான். அதுவன்றி, ஏதோ ஒரு ஈஸ்வரன் நன்மைகளைச் செய்வான் என்றாலும் அந்த வினைப் பயனைத்தான் கர்த்தா- செயலை செய்பவன் அடைவான். அதை மீறி புதிதாக பலன் பெறவே முடியாது என்று கர்ம வாதிகள் சொல்வார்கள். இதில் தேவதையின் அதிகாரம் அவ்வளவு தான் என்றால், விசேஷமாக ஜீவன்கள் பெறும் ஆதாயம் என்ன? இந்திரன் என்ன செய்வான்? தான் செய்த நல்வினை, தீ வினைகளாலேயே மனிதனது சுக துக்கங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன என்றால், இதில் இந்திரன் செய்வது என்ன? வினைப் பயனை மாற்ற அதிகாரம் இந்திரனுக்கும் இல்லை. பிறவிகள் இயல்பாக பெறும் அறிவாலும், அனுபவத்தாலும் வாழ்கின்றன. தேவர்களோ, அசுரர்களோ, மனிதர்களோ தங்கள் பிறவியால் பெற்ற குண தோஷங்களைத்தான் அனுபவிக்கிறார்கள் என்றால், இதை மாற்ற இந்திரனுக்கு அதிகாரம் உண்டா? இல்லை.
எந்த உடல் ஒவ்வொரு பிறவிக்கும் கிடைக்கிறது என்பதே வினைப் பலன் என்று கொண்டால் அவரவர் தங்கள் செய்கைக்கான பலனை தானே அடைகிறார்கள், பிற உதவியோ, எதிர்ப்போ இன்றி என்பது சித்தமாகிறது.
தனக்கு அமைந்த அந்த பிறவியில் தான் வாழ்ந்து, அதே பிறவிகளை தன் சந்ததிகளாக பிறப்பித்து மறைகிறது என்பது ஒரு வட்டம். இதில் சத்ரு,மித்ர, உதாசீனன் – வெறும் பரிச்சயம் மட்டுமே, என்று அமைவதும் அதே வினைப் பயனே எனில், தன் வினையே தான் தனக்கு பலன் தரும் ஈஸ்வரன் என்றாகிறது. தன் இயல்பில் வாழ்ந்து, அந்த பிறவியின் இயல்பை அனுசரித்து வாழ்வதே அவனுக்கு தேவ பூஜை. வாழும் விதம் பிறவியிலேயே அமைகிறது. அதை அனுசரிப்பதே நியாயம். தன் தர்மத்தை விட்டு பிறதர்மத்தை ஏற்பது, தன் கணவனை விட்டு பிறரிடம் மக்களைப் பெறுவதற்கு சமம். அந்தணர்கள் அந்தணர்களாக, அரசன் க்ஷத்திரியனாக ரக்ஷிப்பவனாக, வியாபாரத்தால் வைஸ்யன், இவர்களுக்கு சேவை செய்து ஸூத்ரன், தன் வாழ்க்கை முறையாக, வ்ருத்தி- தொழில்.
விவசாயம், வாணிபம், பசு மற்றும் வீட்டு மிருகங்களை வளர்ப்பது செல்வத்தை பெருக்கி பாதுகாப்பது என்று நால்வகை ஜீவனோபாயங்களில் நாம் ஏற்றுக் கொண்டுள்ளது கோ ரக்ஷா- பசு பாலனம். சத்வ,ரஜஸ் தமஸ் என்ற குணங்கள் ஸ்திதி, உத்பத்தி, அந்த்யம் என்பதை நிர்ணயிக்கின்றன. ரஜஸால் உலகம் தோன்றியது. பலவிதமான அசையும் அசையா சராசரமும் அதில் மேகங்களும் அடக்கம். மேகத்தின் தோற்றமும் மழை பொழியவே என அதன் செயல் நிர்ணயமாகி விட்டது. எல்லா இடங்களிலும் நீரை கொண்டு செல்வது அதன் காரியம். ப்ரஜைகள் அதைப் பெற்று பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதில் இந்திரனின் பொறுப்பு என்ன? நமக்கு என்ன இருக்கிறது அப்பா, அதே வனத்தை சார்ந்த வாழ்க்கை. நமக்கென்று நகரங்களோ, ஜனபதமோ-சிற்றூர், கிராமங்களோ, வீடுகளா எதுவும் இல்லை. வனத்தையும், மலையையும் நம்பி வாழ்கிறோம். அதனால் பசுக்களையும், அந்தணர்களையும் வாழ்விக்கும் இந்த மலையை பூஜிப்போம். யாகமும் பூஜையும் இதற்கு செய்வோம். இந்திர யாகம் என்பதற்காக செய்த ஏற்பாடுகளால் இந்த கிரியை பூஜை செய்வோம். வித விதமான பக்ஷணங்கள் செய்யுங்கள். வடைகள், பாயசம், கோதுமையால் தயாரித்த உணவுகள், பச்சை காய்கறிகள், கறந்த பால் வகைகள், தயார் செய்யுங்கள். அக்னியை நன்றாக மூட்டுங்கள். ப்ரும்ம வாதிகளான ப்ராம்மணர்கள் வரட்டும். அவர்களுக்கேற்ற பலவகையான அன்னம் தயார் செய்து கொடுங்கள். பசுக்களும் தக்ஷிணைகளும் கொடுங்கள். மற்றவர்களுக்கும், சண்டாளனலிருந்து, பதிதன் என அனைத்து அவரவர்களுக்கு பிடித்தமான உணவு, கோதுமையோ, பசுக்களோ கொடுத்து, இந்த மலைக்கு நாம் நன்றி தெரிவிக்கும் விதமான யாகங்களைச் செய்வோம். நன்கு அலங்கரித்துக் கொண்டு, வயிராற உண்டு, தங்கள் விருப்பம் போல வாசனை திரவியங்கள் பூசிக் கொண்டு, நல்ல ஆடை அணிந்து, இந்த மலையை ப்ரதக்ஷிணம் செய்வோம். பசுக்கள், அந்தணர்கள் முன் செல்ல, அக்னியை ஏந்தி, சுற்றி வருவோம். அப்பா! இது தான் என் எண்ணம், விருப்பம். உங்களுக்கு சம்மதமானால் இந்த முறையில் நமது நன்றியை தெரிவிப்போம். இது பசுக்கள், அந்தணர்கள் மட்டுமல்ல எனக்கும் செய்யும் மரியாதை.
ஸ்ரீ சுகர் சொன்னார்: காலமே அவனிடத்தில் அடக்கம், காலாத்மா எனப்படுபவன். அவன் ஏதோ காரணத்திற்காக இந்திரனை கோபமூட்ட நினைக்கிறான். அதனால் தான் இப்படிப் பேசுகிறான் என்று நந்தன் முதலானோர் புரிந்து கொண்டு மறுப்பு ஏதுமின்றி ஏற்றுக் கொண்டனர். மதுஸூதனன் சொன்னபடியே ஸ்வஸ்த்யயனம் – செயலை ஆரம்பிக்கும் முன் செய்யும் வாழ்த்து- முதலியவற்றைச் செய்து முன்னர் தயாரித்திருந்த பொருட்களைக் கொண்டே மலைக்கு உபசாரங்களை செய்யலாயினர். செய்ய வேண்டிய பலிகளைச் செய்து, கோதுமையையும், பசுக்களையும், கோதனம் இவைகளுடன் கிரியை ப்ரதக்ஷிணம் செய்தனர்,
மலையின் மேல் ஏறி ஊர் ஜனங்கள், ஸ்த்ரீகள் ஸ்ரீ க்ருஷ்ணனின் சாகஸங்களை பாட்டாக பாடிக் கொண்டே வந்தனர். அந்தணர்கள் அவர்களை அசீர்வதித்தனர். நானே தான் இந்த சைலம்-மலை என்று சொல்லி அவர்கள் அளித்த நிவேதன பொருட்களை ஸ்ரீ க்ருஷ்ணன், தன்னுடைய ப்ரும்மாண்ட ரூபத்துடன் ஏற்றுக் கொண்டான். அவனுக்கு நமஸ்காரம். வ்ரஜ ஜனங்களுடன் அவர்களுல் ஒருவனாக, தன்னை வெளிப்படுத்திக் கொண்டும் மறைத்தும், அஹோ! இந்த மலையைப் பாருங்கள். மலையே தானாக இருந்து எங்கள் அன்பளிப்பை எற்றுக் கொண்ட பகவான் நமக்கு அருள் புரியட்டும். இந்த பகவானை மனிதர்களால் அறிந்து கொள்ள முடியாது. காட்டு ஜீவன்களிடம் இருந்து நம்மை காக்கவும் செய்வான். நமக்காக சில துஷ்ட மிருகங்களை, பாம்புகளைக் கொன்றான். நம் பசு கன்றுகளின் க்ஷேமத்திற்காக வணங்கி வேண்டிக் கொள்கிறோம். இவ்வாறாக, அத்ரிகோத்விஜ மகம்- அத்ரி-மலை, கோ-பசு – அந்தணர் இவர்களுக்கு செய்த யாகம் வாசுதேவனின் அனுக்ரஹத்தால், அவன் தூண்டுதலால் நல்ல படி நடந்தது என்று மகிழ்ந்து இடையர்கள் க்ருஷ்ணனும் உடன் வர தங்கள் வீடுகளுக்குச் சென்றனர்.
இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில் இருபத்து நாலாவது அத்யாயம். ஸ்லோகங்கள்- 38
அத்யாயம்-25
ஸ்ரீ சுகர் சொன்னார்: இந்திரன் நடந்ததை அறிந்தான். தனக்கு கிடைக்க வேண்டிய மரியாதைகளை நிறுத்திய கோகுலத்து வாசிகளை, ஸ்ரீ க்ருஷ்ணனே எல்லாம் என்று இருப்பவர்களை, அவன் சொல்வதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளும் நந்தன் முதலானோர் என்று அனைவரிடமும் கோபம் கொண்டான். சாம்வர்த்தகம் என்ற மேக கூட்டங்களை அனுப்பினான். அழிக்கும் தன்மையுடைய கடுமையான மழை பொழியும் மேகங்கள். மகா கோபத்துடன் அவைகளை அனுப்பும் முன் கட்டளையிட்டான். ‘அஹோ! செல்வம் இருப்பதால் வரும் மதம்-கர்வம். காட்டு வாசிகள் இந்த இடையர்கள், இவர்களுடன் சாதாரண மனிதனாக அவர்களுடன் வாழும் இந்த க்ருஷ்ணனின் பேச்சைக் கேட்டு, இவர்கள் தேவராஜனான என்னை அவமதிக்கிறார்கள். திடமான நியமங்களுடன் செய்யும் யாகங்கள், கர்ம மயமான -வேதத்தில் விதிக்கப் பட்ட செயல்கள்- ஆன்வீக்ஷிகி- விளக்கங்களுடன் கூடிய வித்யா- அதை செய்து சம்சாரக் கடலைத் தாண்டுவார்கள். இவன் வாய் துடுக்கு சிறுவன், அறியாத மூடன், மந்த புத்தி தன்னை பண்டிதனாக நினைத்து இந்த க்ருஷ்ணன் மனிதனாக பிறந்து இடையர்களை எனக்கு எதிராக தூண்டி விட்டிருக்கிறான். லக்ஷ்மீ கடாக்ஷம் கிடைத்த கர்வத்தில் தன்னை மறந்து, க்ருஷ்ணன் இவர்களை தன் வசமாக்கிக் கொண்டிருக்கிறான். அவர்கள் கர்வத்தை அடக்குங்கள். பசுக்களை அழியுங்கள். நானும் ஐராவத யானையின் மேல் ஏறி விரஜ தேசம் வருகிறேன். மருத் கணங்கள், வாயுவின் பல அமைப்புகள், அவர்கள் பலம் மிக அதிகம் , நந்த கோஷ்டம், நந்தனின் நகரம்- அதை அடக்கி ஒடுக்குவோம்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு இந்திரன், கட்டளையிட்டு, எந்த வித கட்டுப் பாடும் இன்றி மேகங்கள், நந்தனின் கோகுல ப்ரதேசத்தை, பலமாக பொழிந்து நிலை குலையச் செய்தன. மின்னல்கள் வழி காட்டின. இடிகள் முழங்கின. தீவிரமாக வாயு வீசி அவர்களுக்கு உதவி செய்தது. கம்பங்கள் போல திடமான மழை சாரல்கள் பூமியை மறைத்தன. வெட்டவெளியில் கட்டப் பட்டிருந்த பசுக்கள் தவித்தன. வீடுகளுக்குள் இருந்த இடையர்களையும் பாதிக்க வேண்டும் என்பது போல, மேலும் கடுமையாக மழை பொழியலாயிற்று. அனைத்து வ்ரஜ வாசிகளும் ஸ்ரீ க்ருஷ்ணனை சரணடைந்தனர்.
க்ருஷ்ண, க்ருஷ்ணா! மஹாபாகோ! கோகுலம் படும் பாட்டை பார். உன்னையே தலைவனாக கொண்ட நாங்கள் செய்வதறியாது தவிக்கிறோம். எங்களை காப்பாற்று. இந்த தேவன் கோபித்து கொண்டிருக்கிறான் போலும். நீ பக்த வத்சலன் அல்லவா? கற்கள் விழுவது போல மழை தாரைகள் வதைக்கின்றன. அசேதனமான தாவரங்களும் வருந்துகின்றன. ஸ்ரீ ஹரி பார்த்து புரிந்து கொண்டார். இது இந்திரன் தன் கோபத்தை காட்டும் வேலை. பருவ காலம் இல்லாத சமயம், கற்களை வீசுவதைப் போல மழையை ஏவி விட்டு, காற்றையும் வீசி அடிக்கச் செய்திருக்கிறான். தனக்கு யாகம் செய்யவில்லை என்பதால் நாசம் செய்ய வந்திருக்கிறான். என் யோக மாயையால் அதற்கு பரிகாரம் செய்கிறேன். தன்னை லோகேசன் என்று நினைத்தானா? அவன் கர்வத்தை அடக்குகிறேன்.
தேவர்கள் சாத்விகர்கள் என்பர். பகவானை அறிந்தவர்கள் தானே. எப்படி இந்த கோபமும் எதிர்ப்பும் காட்ட துணிந்தார்கள் என்றால், தான் தேவர்களில் தலைவன் என்ற கர்வம். அதைத் தலைக்கேற விடக் கூடாது. இந்திரன் தன் பொறுப்பை உணர செய்ய வேண்டும். அதற்காக தண்டிப்பதும் அவசியமே. அதனால் தண்டனையும் அனுக்ரஹமே. பின்னால் உலகில் அவன் பொறுப்பை சரியாக செய்ய வேண்டும் அதனால் அழிக்காமல் தண்டிக்கிறேன். என்னை சரணடைந்த இந்த ஊர் ஜனங்கள். இவர்களையும் காப்பாற்ற நான் உறுதியுடன் இருக்கிறேன். ஒரு கையால் திடுமென, கோவர்தன மலையை சட்டென தூக்கினார். குடை போல அதனடியில் வ்ரஜ வாசிகளை அந்த பாலகன் ஸ்ரீ க்ருஷ்ணன் வரவழைத்தார். அவர்களை நோக்கி’ ஹே அம்மா, அப்பா, வ்ரஜ வாசிகளே, உங்கள் கோதனங்களை அழைத்துக் கொண்டு இந்த மலையடிக்கு வாருங்கள். இங்கு பயமில்லை. என் கையிலிருந்து மலை விழுந்து விடுமோ என்றும் பயப்பட வேண்டாம். காற்று பலமாக வீசுவதைக் கண்டு அஞ்ச வேண்டாம். மழையினால் வருந்த வேண்டாம். அவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன். அதன்படியே வ்ரஜ வாசிகள், ஸ்ரீ க்ருஷ்ணனின் சமாதான வார்த்தைகளால் நம்பிக்கையுடன் கிடைத்த நேரத்தில் தங்கள் உற்றார் உறவினர், பாதுகாக்க வேண்டிய செல்வங்கள், அண்டி வாழும் பசு கன்றுகள், அனைத்துடனும் அங்கு வந்து சேர்ந்தனர். பசி தாகம் என்று எதையும் எண்ணாமல், சுகமாக இருக்குமா என்ற சிந்தனையும் இன்றி, அந்த மலையின் அடியில் நின்றனர். கண்ணெதிரில் பாலகன் ஸ்ரீ க்ருஷ்ணன் மலையை தாங்கி பிடித்திருப்பதையே பார்த்தபடி இருந்தனர். ஏழு நாட்கள் ஒரு அடி கூட நகரவில்லை. ஸ்ரீ க்ருஷ்ணனின் யோக மாயையை அறிந்திருந்தும் இந்திரன் மிகவும் அதிசயித்தான். தூண் போல அசையாமல் நின்றான். தன் சங்கல்பம் நிறைவேறாததால் தன் மேகங்களை திருப்பி அழைத்துக் கொண்டான்.
வானம் வெளுத்தது. ஸூரியனின் வெளிச்சமும் ப்ரகாசமாக ஆயிற்று. பயங்கரமான மழை நின்றது என்று அறிந்ததும், கோவர்தன மலையைத் தாங்கி நின்றவன் அவர்களைப் பார்த்துச் சொன்னான். கோகுல வாசிகளே, இனி பயம் இல்லை. கிளம்புங்கள். குழந்தைகள், பெண்கள், கோதனம் அனைத்தையும் பத்திரமாக கொண்டு சேர்த்து விடுங்கள். மழை நின்று விட்டது. அருவிகள், நதிகள் நிரம்பி விட்டன. என்றார். அவர்கள் அனைவரும் வெளியேறும் வரை காத்திருந்து பின், பகவானும் மலையை அதன் இடத்தில் வைத்தார். கோகுல வாசிகளும் மெதுவாக வண்டிகளைக் கொண்டு வந்து சிறு குழந்தைகளையும், முதியவர்களையும் ஏற்றிக் கொண்டு கிளம்பிச் சென்றனர்.
கோகுல வாசிகள் இச்செயலால் மிகவும் மனம் நெகிழ்ந்தனர். பெரியவர்கள் ஆசிகள் சொன்னார்கள். வயது ஒத்தவர்கள் அணைத்து மகிழ்ச்சியை தெரிவித்தனர். கோப ஸ்த்ரீகள் தங்கள் வீடுகளில் பூஜைகள் செய்து வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
யசோதாவும், ரோஹிணியும், நந்தனும், பல ராமனும் க்ருஷ்ணனை ஆலிங்கணம் செய்து குரல் தழ தழக்க ஆசீர்வதித்தனர். தேவ கணங்கள், சாதுக்கள், சித்த கந்தர்வர்கள், சாரணர்கள், மிகவும் மகிழ்ச்சியுடன் பூமாரி பெய்தனர். சங்க துந்துபிகள் முழங்கின. கந்தர்வர்களில் தும்புரு முதலான பாடகர்கள் பாடினர். தன்னிடம் மிகவும் ஒட்டுதலுடன் கூட வந்த வ்ரஜ வாசிகளுடன் ஸ்ரீ க்ருஷ்ணன், பலராமனும் உடன் வர கோ சாலைக்குச் சென்றார். கோகுலத்து பெண்கள் தங்கள் அனுபவங்களை பாடலாக பாடினர்.
இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தின் பத்தாவது ஸ்கந்தம்- முதல் பாகத்தில், பதினைந்தாவது அத்யாயம்.
ஸ்லோகங்கள்-33
அத்யாயம்- 26
ஸ்ரீ சுகர் சொன்னார்: கோகுலத்தில் அனைவருக்கும் இதே பேச்சு. ஒருவரையொருவர் சந்தித்தால், ஆச்சர்யத்துடன் ஸ்ரீக்ருஷ்ணனுடன் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கொள்வார்கள். இந்த பாலகன் செய்யும் செயல்களோ அத்புதமாக இருக்கின்றன. இவன் எப்படி இந்த க்ராமத்தில் நமது இடையர்களிடையில் பிறந்தான்? ஏழு வயது பாலகன் இவன். விளையாட்டாக ஒரு கையால் மலையை தூக்கிப் பிடித்தான். யானை குளத்திலிருந்த தாமரை மலரை பறித்து தூக்கி காட்டுவது போல சுலபமாக செய்து விட்டான்.
கண்களை பாதி மூடி பூதனாவின் ஸ்தன பாலை குடிப்பது போல பாவனை செய்தான். அவள் உயிரையும் சேர்த்து குடித்து விட்டான். சின்னஞ்சிறு பாதங்களால் உதைத்து அழுவதைத் தான் கேட்டோம். அந்த சக்கரம் ஒடிந்து விழுந்தது. ஒரு மாலை பொழுதில் காற்றடித்து தூக்கிச் சென்றதே, அந்த தைத்யனின் கழுத்தை இறுகப் பற்றிக் கொண்டு விட்டான். தைத்யன் இவனுடைய கனம் தாங்காமல் விழுந்து உயிரை விட்டான். ஒரு சமயம் அவன் தாயார் உரலில் கட்டினாளே. அதையும் இழுத்துக் கொண்டு அர்ஜுன மரங்களின் நடுவில் சென்று அவைகளை விழச் செய்தான். கொல்லும் எண்ணத்துடன் உடன் கன்றுகளோடு வேஷம் போட்டுக் கொண்டு வந்த தைத்யனை, ஏதோ மரத்தை உலுக்கி பழங்களை விழச் செய்வது போல வதைத்தான். ராஸப தைத்யனை அவன் பந்துக்களோடு பலராமனுடன் சேர்ந்து, அழித்து தாள வனத்தை தைத்யர்கள் இன்றி நமக்கு நிம்மதியாக பயன்படுத்த கொடுத்தான். ப்ரலம்பனை கொன்றான். அந்த சமயம் நம் பசுக்கள் மேய்ந்து கொண்டே சென்று காட்டுத் தீயில் அகப்பட்டு அலறின. அவைகள் நலமாக திரும்பும்படி அந்த தீயை அணைத்தான். குளத்தை ஆக்ரமித்திருந்த விஷ ஜந்து, காளியன் என்ற பாம்பு, யமுனையை கலங்கச் செய்திருந்ததே. அதை விரட்டி நமக்கு நல்ல குடிநீர் கிடைக்கச் செய்தான். இயல்பாக துஷ்டர்களும் இவனிடத்தில் பிரியமாக இருக்கின்றனர். நந்தா! உன் மகன் நம்மிடம் வந்து பிறந்தது நமது புண்ய பலனே.
நந்தன் பதில் சொன்னான்: கோகுல வாசிகளே, நான் சொல்வதைக் கேளுங்கள். சிறுவன் இவன். இவனிடம் சந்தேகப் பட வேண்டாம். கர்கர் சொன்னதைச் சொல்கிறேன். மூன்று யுகங்களிலும் இவன் மூன்று வர்ணங்களில் பிறந்தான். முதலில் வெண்மை, சிவப்பு, மஞ்சள் என்ற வர்ணங்கள் தற்சமயம் கருமையை ஏற்றுக் கொண்டிருக்கிறான். அதனால் க்ருஷ்ணன். ஒரு சமயம் வசு தேவருடைய மகனாக பிறந்து ஸ்ரீமான் வாசுதேவன் என்ற பெயருடன் இருந்தான். இவனுக்கு பல பெயர்கள். பல விதமான ரூபங்கள். உன் மகன் குணங்கள், கர்மா அனு ரூபமான செயல்கள் இவைகளை எவரும் அறிய மாட்டார்கள். இவனால் நமக்கு பல நன்மைகள் வரும். எந்த விதமான கஷ்டமானாலும் சுலபமாக கடந்து செல்வீர்கள். இவன் வ்ரஜ பதத்தில் இருந்த சாதுக்கள் திருடர்களால் துன்பம் அடைந்த பொழுது அவர்களைக் காக்க திருடர்களை விரட்டி, அராஜகமான அந்த அரசை மாற்றி திருடர் பயமின்றிச் செய்தான். அதனால் மனிதர்கள் மிகவும் ப்ரியமாக ஆனார்கள். அசுரர்கள் விஷ்ணு பக்ஷத்தினரைக் கண்டு பயப்படுவது போல எதிரி என்று எவனும் இந்த க்ருஷ்ணன் முன்னால் வர மாட்டாரன். இவன் நந்த குமரன். ஆயினும், ஸ்ரீமன் நாராயணனுக்கு சமமான குணங்களை கொண்டவன். ஸ்ரீ, கீர்த்தி, அனுபாவம் இவற்றால் இவன் செயல்கள் ஆச்சர்யமல்ல. கர்கர் இவ்வளவும் சொல்லி விட்டு சென்று விட்டார். அதன் பின் நான் இவனை ஸ்ரீமன் நாரயண அம்சமாகவே கருதுகிறேன்.
இதைகேட்ட கோகுல வாசிகள், ஸ்ரீ க்ருஷ்ணனின் அமானுஷ்யமான சக்தியை கண்டதாலும் கேட்டதாலும் மிக்க மதிப்புடன் ஆமோதித்தனர். இந்த சரித்திரத்தை கேட்பவர்கள் இருக்கும் இடங்களில் தேவன் காலத்தில் வர்ஷிப்பான், யாகங்கள் தடையின்றி நடக்கும், அதீதமான மழையோ, காற்றோ நஷ்டப் படுத்தாமல் இருக்க ஒரு கையால் மலையை தூக்கி கோகுல வாசிகளை காத்த க்ருஷ்ணன் காப்பாற்றுவான்.
இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தின், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், இருபத்தாறாவது அத்யாயம். ஸ்லோகங்கள்- 25
அத்யாயம்: 27
கோவர்தன மலையை தாங்கி ஸ்ரீ க்ருஷ்ணன் கோகுலத்தை காத்த செய்தியால் சுரபி- காமதேனு மகிழ்ந்தாள். இந்திரன் அவளையும் உடன் அழைத்துக் கொண்டு கோகுலம் வந்தான். தன் கிரீடம் அவர் பாதங்களில் பட வணங்கினான். ஸ்ரீ க்ருஷ்ணனை அறிந்திருந்தும் தான் கர்வத்துடன் நடந்து கொண்டதை நினைத்து வெட்கமும் வருத்தமும் தெரிய அவரிடம் வேண்டினான்.
விசுத்தசத்வம்- பகவானே! நீ இருக்கும் இடம் சுத்த சத்வமானது. சாந்தமானது, தவமயம், இங்கு ரஜஸ் தமோ குணங்கள் அருகில் கூட வராது. மாயாமயமான இந்த உலகிலும் உன் செயல்களில் நற்குணங்களே நிறைந்துள்ளன. சர்வக்ஞன்- அனைத்தையும் அறிந்தவன், அக்ஞான சம்பந்தமே இல்லாதவன்.
மனித சரீரத்துடன் வரும் க்ரோதம் லோபம் போன்றவை உனக்கு ஏது? யாரும் உணர முடியாத பரம் பொருள், தர்மத்தைக் காக்க துஷ்டர்களை தண்டிக்க என்று அவதரித்தவன். உன் கையால் தண்டம்- தண்டித்தல் என்பதும் அனுக்ரஹமே. மூவுலகுக்கும் பிதா, குரு, ஜகதீசன், அருகில் நெருங்க முடியாதவன், காலனாக தண்டிப்பவன், என்று அறிவேன். தேவலோக தலைவன் எனும் என் கர்வத்தை அடக்கத் தான் இந்த தண்டனை, விருப்பு வெறுப்பின்றி உலக நன்மைக்காக என்பதை புரிந்து கொண்டேன். துஷ்டர்கள் என்பவர்களும் வேறல்ல, என்போன்ற பொறுப்பில் உள்ளவர்கள், தங்களை ஜகதீசனாக நினைத்துக் கொண்டு, அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் செய்தாலும் சரியான காலத்தில் உன்னிடம் அபயம்- சரணடைவார்கள். இதுவே துஷ்டர்களுக்கும் அனுக்ரஹம் செய்யும் உன் வழி. ஐஸ்வர்ய மதம் என்னை மதியிழக்கச் செய்தது, உன் ப்ரபாவம் அந்த சமயம் மனதில் உறைக்காமல் மறந்து போக தவறு செய்து விட்டேன். என்னை மன்னித்து விடு. இது போல மற்றொரு முறை செய்ய மாட்டேன் என்று உறுதியளிக்கிறேன். மூடன், புத்தியில்லாதவன் என எண்ணி எனக்கு அருள வேண்டுகிறேன்.
தேவனே! அதோக்ஷஜா! இந்த அவதாரம் சம்சாரிகளின் பாரத்தைக் குறைக்க, ஏராளமான படை பலங்களோடு சாமான்ய ஜனங்களை துன்புறுத்தும் அறிவிலிகளை அழிக்கவும், உன் சரணங்களை அண்டியவர்களுக்கு நன்மை செய்யவும் என்பதற்காகவே.
மஹாத்மாவான பரம புருஷன், பகவானே உனக்கு நமஸ்காரம். வாசுதேவாய, க்ருஷ்ணாய, நல்வழியில் செல்லும் சாதகர்களுக்கு தலைவன் என்று வணங்குகிறேன். விருப்பத்துடன் ஏற்றுக் கொண்ட சரீரம் இது. ஏனெனில் விசுத்த- தெளிவான ஞானமே உருவானவன். சர்வஸ்வன், அனைத்திலும் உள்ளிருப்பவன். சர்வ பீஜன், பஞ்ச பூதங்களோடு அனைத்து இயற்கை தத்வங்களுக்கும் காரணமானவன், உனக்கு நமஸ்காரம்.
என் அனாவசிய கோபத்தால், தீவிரமான மழையும், வாயுவை பயன்படுத்தி கோகுலத்து வாசிகளையும் தங்களையும் அலைக்கழித்ததும், யாகத்தை நடக்க விடாமல் செய்ததும், என் அபிமானமே காரணம். ஈசனே! உன்னால் அனுக்ரஹிக்கப் பட்டேன். என் முயற்சி பலனின்றி போனது. குரு, என் ஆத்மாவான ஈஸ்வரன் என்று சரணடைகிறேன்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இந்திரன் தானே வந்து தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்கவும், பகவான் கம்பீரமான தன் குரலில் சிரித்து, பதில் சொன்னார். இந்திரஸ்ரீ- இந்திர பதவி மோகம் கண்களை மறைக்க, யாகத்தை தடுத்தாய். இந்த பதவியை அளித்தவனே நான் என்று நன்றாகத் தெரிந்தும் யாகத்தை நடக்க விடாமல் செய்தாய். என் கையில் தண்டம் வைத்திருப்பதால் தண்டபாணி என்றும் எனக்கு ஒரு பெயர். அதை ஏன் மறந்தாய். நான் நினைத்தால் செல்வத்தை பறித்து பதவியை இழக்கச் செய்வேன், அதுவே அவற்றை ஒருவருக்கு கிடைக்கவும் என் அனுக்ரஹம் தேவை.
சக்ரனே, போய் வா. நலம் உண்டாகட்டும். உனக்கு அளித்த கடமைகளை சரிவரச் செய். உன் அதிகாரங்கள் உன்னிடமே இருக்கும். அதன் பின் சுரபி வந்து வணங்கினாள். பசுக்கள் அவள் சந்ததிகள். ஈஸ்வரனாக பசுக்களை காக்க வந்தவனை துதி செய்தாள். க்ருஷ்ண, க்ருஷ்ண மகா யோகின்! விஸ்வதமன்! விஸ்வ சம்பவ! நீ லோக நாதனாக இருப்பதால் நாங்கள் நலமாக இருக்கிறோம். அச்யுத! முதல் தெய்வம் நீயே. இந்திரன் அல்ல. பசு, அந்தணர், தேவர்கள் சாதுக்கள் அனைவருக்கும் நன்மை செய்பவன். பூ பாரத்தை குறைக்க அவதரித்திருக்கிறாய்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இந்திரன், சுரபியின் பாலால், ஐராவதம் தன் கைகளால் ஆகாய கங்கையை கொண்டு வர, ஸ்ரீ க்ருஷ்ணனை அபிஷேகம் செய்தான். தேவர்களும் ரிஷிகளும், தேவலோக தாய்மார்களும், வந்து அபிஷேகம் செய்தனர். கோவிந்தன் என்ற பெயரும் நிலைத்தது. அங்கு வந்த தும்புரு நாரதர் முதலானோர், கந்தர்வ வித்யாதர, சாரணர்கள், கோவிந்தனின் புகழைப் பாடினர். தேவ பெண்கள் நடனமாடினர். பூமாரி பொழிந்தனர். பசுக்கள் தங்கள் பாலைப் பெருக்கி பூமியை நனைத்தன. நீர் நிலைகள், சிற்றாறுகள், மரங்கள், மற்ற தாவரங்கள் இவைகளும் தங்கள் பங்குக்கு பசுமையான இளம் துளிர்களையும், தேன் முதலியவைகளையும் எதெது அவைகளிடம் சிறப்போ அதைத் தந்தன. மலைகளும் மணிகளைத் தந்தன.
குரு நந்தனா! ஸ்ரீ க்ருஷ்ணனை கோவிந்தனாக அபிஷேகம் செய்ததில் தங்கள் மகிஷ்ச்சியை அசேதனமான தாவரங்கள், மலைகளும், பசுக்கள் கூட்டமும் சேர்ந்து கொண்டதை பார்த்த இயல்பிலேயே க்ரூரமான ஜீவன்களும் வைராக்யத்தை அடைந்தன. இவ்வாறு கோவிந்தனாக அபிஷேகம் செய்து விட்டு இந்திரன் தன் கூட்டத்தாரோடு தேவலோகம் சென்றான்.
இது வரை ஸ்ரீ மத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், இந்திரனின் துதி என்ற இருபத்தேழாவது அத்யாயம். ஸ்லோகங்கள்- 28
அத்யாயம்-28
ஒரு சமயம் ஏகாதசி விரதத்தை முற்றிலும் ஆகாரமின்றி நிறைவு செய்து விட்டு, ஜனார்தனனை பூஜை செய்து, நந்தன் காலிந்தி நதியில் ஸ்னானம் செய்யச் சென்றார். நீரில் மூழ்கி எழுந்த சமயம், அவரை பிடித்து வருணன் என்ற லோகபாலனின் ஆட்கள் தங்கள் தலைவனிடம் கொண்டு வந்தனர். இவர் ஆசுர-அசுரர்களின் சமயத்தில் நீரில் மூழ்கி – இரவில் – நதியில் ஸ்னானம் செய்தார், அது தவறு என்பதால் பிடித்துக் கொண்டு வந்தோம் என்றனர்.
அவரைக் காணாமல் கோகுலவாசிகள், க்ருஷ்ணா, ராமா என்று அலறினர். பகவான் ஓடி வந்தார். வருணனின் ஆட்கள் அபகரித்துக் கொண்டு போனதை அறிந்து, தன் மக்களை ஆசுவாசப் படுத்தி விட்டு வருணனின் இருப்பிடம் சென்றார். அவரே வந்து இருப்பதைக் கேட்டு லோக பாலனான வருணன் தானே வந்து வரவேற்று உபசரித்தான். தங்களைக் கண்டதே மகோத்ஸவம் என மகிழ்ந்தான்.
வருணன் துதி: இன்று என் வாழ்வில் மிக முக்கியமான தினம். என் பிறவிப் பயனைப் பெற்றவன் ஆனேன். அத்வானத்தைக் கடந்து வந்து நீங்கள் வந்தது என் பாக்கியம். உங்கள் பாத தர்சனம் கிடைக்கப் பெற்றேன். நமஸ்துப்யம் பகவதே பரமாத்மனே. இந்த இடத்தில் உங்கள் மாயாமயமான லோக சிருஷ்டி பற்றி யாரும் அறிந்தவரில்லை. கல்பனை கூட செய்தது இல்லை. உங்கள் மகிமை தெரியாமல் மூடர்கள் என் பணியாட்கள் உங்கள் தந்தையை கொண்டு வந்து விட்டனர். மன்னித்து அருள வேண்டும். க்ருஷ்ணா, எனக்கு அனுக்ரஹம் செய்ய வேண்டுகிறேன். உங்களுக்குத் தெரியாததா? கோவிந்தா! உங்கள் தந்தையிடம் அன்புள்ளவர், அவரை அழைத்துச் செல்லுங்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு வருணன் பணிந்து அவர் தந்தையை ஒப்படைத்தவுடன், ஈஸ்வரனுக்கும் ஈஸ்வரனான பகவான் தந்தையை அழைத்து வரவும், நந்தனின் நண்பர்களான கோகுல வாசிகள் மகிழ்ந்தனர்.
நந்தன் தான் கண்ட காட்சியை, லோகபாலனை நேரில் கண்டதை, க்ருஷ்ணனை மதிப்புடன் நடத்தியதை ப்ரமிப்புடன் தன் பந்துக்களுக்கு விவரித்தார். அவர்களும் உத்சாகமாக கேட்டு, ஸ்ரீ க்ருஷ்ணன் ஈஸ்வரனே என்றும், மிக ஸூக்ஷ்மமாக தன் நடவடிக்கைகளை வைத்துக் கொண்டிருக்கிறார் என்றனர். இப்படி எண்ணிய தன் மக்களிடம் தன் சங்கல்பம் நிறைவேறவும், அவர்கள் ப்ரமிப்பை நீக்கவும் அவர்களிடம் சமாதானமாக பேசினார். மகா காருணயம் உடைய பகவான் அவர்களுக்கு தன் லோகத்தைக் காட்டினார். தமஸ் – இருள் அல்லது அறியாமை- அண்ட முடியாத வைகுண்ட லோகம். சத்யம் ஞானம் அனந்தம் என்ற சனாதனமான எந்த ப்ரும்ம ஜோதியை சாதனைகள் செய்து, முனிவர்கள் காண்கிறார்களோ, அந்த ஜோதியை கோகுல வாசிகள் கண்டனர். ப்ரும்ம தேஜஸில் குளத்தில் மூழ்கி எழுந்தவர்கள் போல திணறியவர்களை அவரே கை தூக்கி விட்டார். ஒரு சமயம் அக்ரூரர் கண்ட இடம். ப்ரும்ம லோக தரிசனம் கிடைக்கப் பெற்றனர். அங்கு ஸ்ரீ க்ருஷ்ணனை வேதங்களே துதி செய்து கொண்டிருப்பதை கண்டு பரமானந்தம் அடைந்தனர். ஆச்சர்யத்தால் திக்கு முக்காடினர்.
இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தின் பத்தாவது ஸ்கந்தம், முதல் பாகத்தில், இருபத்தெட்டாவது அத்யாயம். ஸ்லோகங்கள்-17
அத்யாயம்- 29
அன்று இரவு சரத் காலத்தின் விசேஷமான மல்லிகை மலர்கள் மலர்ந்து, மிக அழகாக இருக்கவும் ஸ்ரீ க்ருஷ்ணன் தன் யோக மாயையால் அதை உல்லாசமாக செலவழிக்க திருவுள்ளம் கொண்டார். தாரா நாயகனான சந்திரன், வெகு காலம் பிரிந்திருந்த தன் பிரிய மனைவியை காண உத்சாகமாக, முகம் சிவக்க வருவது போல கிழக்கு திசையில் அருண வர்ணனாக உதித்தான். எங்கும் குமுத மலர்கள், சந்திரனின் ஒளியால் மலரும் மலர்கள் லக்ஷ்மி தேவியின் சோபையை ஏற்றுக் கொண்டாற் போல, அருண வர்ணமாக இருந்த சந்திரனின் கிரணங்களைப் பார்த்து மகிழ்ச்சியுடன் பாடலானார். மனோகரமான இனிய கீதத்தை விரும்புபவர்கள் அதில் மயங்கினர்.
மன்மதனின் தூண்டுதல் போல ஒலித்த இனிய கீதத்தைக் கேட்டு வ்ரஜ தேசத்து பெண்கள், மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல், தாங்களாகவே வேக வேகமாக அங்கு வந்து சேர்ந்தனர். வெகு காலமாக அவர்கள் மனதில் இருந்த ஈடுபாடும் அன்பும் இழுத்து வந்தது போல. ஒருவர் மற்றொருவரை ஏறெடுத்தும் பாராமல் வந்தனர். ஒவ்வொருவரும் தங்கள் காந்தனை எண்ணியபடி காதில் அணிந்த குண்டலங்கள் சப்திக்க வந்தனர். ஏற்கனவே ஸ்ரீ க்ருஷ்ணனிடம் மனதை பறி கொடுத்தவர்கள், அல்லது யோக மாயையால் பகவானே அவர்கள் மனதை தன் வயப் படுத்தி கொண்டதால் என்று உரை.
பால் கறந்து கொண்டிருந்தவர்கள் பாதியில் அப்படியே விட்டு விட்டு ஓடி வந்தனர். கோதுமை அன்னம் தயாரித்துக் கொண்டிருந்தவள், கரண்டியை அப்படியே போட்டு விட்டு வந்து விட்டாள். உணவை பரிமாறிக் கொண்டிருந்தவள், முழுவதும் அவள் குடும்பத்தினர் சாப்பிடும் முன் ஏதோ ஒரு சக்தி பிடித்து இழுத்து வருவது போல வந்து விட்டாள். சிறு குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டிருந்தவள், கணவனுக்கு ஏதோ பணிவிடை செய்து கொண்டிருந்தவள், தானே பாதி சாப்பிட்டுக் கொண்டிருந்தவள், அந்த உணவின் நினைவே இன்றி கீதத்தினால் ஆகர்ஷிக்கப் பட்டவளாக வந்தாள். ஒரு சிலர் ஸ்ரீ க்ருஷ்ணனைக் காணப் போகிறோம் என்று குதூகலமாக நகைகளை அணிந்து கொள்ள முயன்றவர்கள் கவனமின்றி தாறு மாறாக அணிந்தனர். அழகிய ஆடைகளை அணிந்தவர்களாக கிளம்பியவர்களை சிலரை பதிகள் தடுத்தனர். சிலரை தந்தைமார் தடுத்தனர். ஒரு சிலரை புத்ரர்களே தடுத்தனர். ஆனாலும் கோவிந்தன் அவர்கள் மனதை தன் பால் இழுத்த வேகத்தில் எதையும் பொருட்படுத்தவில்லை. அப்படியும் ஒரு சிலர் அவர்களை மீறி வரமுடியாமல் தங்கள் அறைக்குள், இதே நினைவாக கண்களை மூடி தியானித்தனர்.
தாங்க முடியாத உணர்ச்சி வேகம், தங்களை மறந்த உள்ளுணர்வின் தாக்கம், ஸ்ரீ க்ருஷ்ணனே சகலமும் என்று நம்பியவர்கள், சாதாரண வாழ்க்கையில் இப்படி ஒரு உத்வேகம் என்றுமே இருந்தில்லை, தன் கணவன், தந்தை மகன் என்ற பாசங்கள் அற்று விழ, உலகியலில் தவறு என்ற செயல் என்றோ, எதுவுமே மனதில் உறைக்காத நிலையில், தேகம் என்ற பற்றுதல் அடியோடு விடுபட, ப்ரும்மத்தை அடைய முனைப்புடன் தவம் செய்யும் யோகசாதகன் போல ஒரே எண்ணம் கொண்டவர்கள் ஆனார்கள்.
அரசன் கேட்டான்: அது எப்படி? க்ருஷ்ணனை அறிந்தவர்கள், நல்ல குல பிறப்பும், குடும்ப பற்றுடனும் இருந்தவர்கள் எவ்வாறு திடுமென க்ருஷ்ணன் தங்கள் மணாளன் என்பது போல நினைக்க முடிந்தது? அப்படி தீவிரமாக நினைக்க கூட நல்ல குணவதிகளாக இருந்த பெண்களால் முடியுமா?
ஸ்ரீ சுகர் சொன்னார்: முன்னால் சொன்னேனே, சேதி அரசன், க்ருஷ்ணனை அடியோடு வெறுத்தவன், அவனுக்கு சித்தியை அளித்தவர், அவரிடம் அன்புடன் வேண்டும் இந்த எளிய இடையர் குல பெண்கள் தங்கள் உயிருக்குயிராய் நேசிக்கும் பொழுது மறுப்பாரா? அவ்யயன், அப்ரமேயன் தனக்கான எதுவுமே தேவையில்லாதவன் நல்ல குணமே உருவாக இருப்பவன் பகவான், மனிதர்களை உய்விக்கவே வந்தவன் காமம், க்ரோதம், பயம், ஸ்னேகம், ஒட்டுதல், நட்பு, இவைகளை ஸ்ரீஹரியிடம் பெற முடிந்தவர்கள், தானும் அவனாகவே ஆகிறார்கள். இதில் ஆச்சர்யம் எதுவும் இல்லை. பகவானின் செயல். யோகேஸ்வர்களுக்கும் யோகேஸ்வரன். எப்படி எது முக்தி அடையும் என்று சொல்ல யாரால் முடியும்? அவர்கள் வேகமாக வந்து சேர்ந்ததைப் பார்த்து பகவான் அவர்கள் அருகில் தானே வந்தார். அவர்களிடம் உள்ளன்புடன் பரிவுடன் பேசினார்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: மாகாபாகா:- பாக்கியம் செய்த பெண்களே, உங்களுக்கு பிரியமாக நான் என்ன செய்ய வேண்டும்? வ்ரஜ தேசத்தில் அனைத்தும் நலம் தானே, வியாதியோ, ஆபத்தோ எதுவும் இல்லையே. எதற்கு வந்தீர்கள், சொல்லுங்கள். என்றார். இருட்டு வேளை, துஷ்ட மிருகங்கள் சஞ்சரிக்கும் நேரம். பெண்கள் இங்கு நிற்பது உசிதமல்ல. திரும்பி போங்கள். அனைவரும் அழகிய உடலும் ஆபரணங்களுடனும் தாய். தந்தை, புத்திரர்கள், சகோதர்கள், தவிர உங்கள் கணவன்மார்கள் துணையின்றி வந்து விட்டீர்கள். அவர்கள் தேடுவார்கள். பந்துக்களை ஆத்திரப் பட செய்யாதீர்கள். வனம் அழகாக பூக்கள் மலர்ந்து இருப்பதை பார்த்து விட்டீர்கள் அல்லவா? கிளம்புங்கள். தாரா நாயகன் ஒளி வீசி அழகுற செய்திருக்கிறான். யமுனை நதியில் காற்று மெள்ள வீசி அலைகளின் சுகமான குளிர்ந்த நீரை அள்ளித் தெறிக்கிறது. மரங்களில் இளம் துளிர்கள் பள பளக்கின்றன. பார்த்து ரசித்து விட்டு கிளம்புங்கள், நேரமாக்க வேண்டாம். ஊரில் கொட்டில்களில் பசுக்களும் கன்றுகளும் தேடும். கணவன்மார்கள் உங்கள் பணிவிடைக்காக காத்திருப்பார்கள்.சிறு குழந்தைகள், கன்றுக் குட்டிகளுடன் போட்டி போட்டுக் கொண்டு அழும் குரல் கேட்கிறது. அவர்களுக்கு உங்கள் அருகாமையும் சேவையும் தேவை. போய் பாருங்கள். அல்லது, என்னிடம் கொண்ட நேசத்தால் உங்கள் ஸ்னேகத்தால் ஆட்டுவிக்கப் பட்டு வந்திருந்தால், உங்கள் வரவு நல்வரவாகுக. என்னிடம் அனைத்து ஜந்துக்களும் பிரியமாகவே உள்ளன. அல்லது எனக்கு அனைத்து ஜந்துக்களும் பிரியமானவைகளே.
பெண்களுக்கு கணவனுக்கு பணிவிடை செய்வதே முதல் கடமை. அது தான் பந்துக்களுக்கும் நன்மை. ப்ரஜைகளும் வளர்ந்து திடமாக ஆக உதவும். சீலம் இல்லாதவன், செல்வம் இல்லாதவன், வயதானவன், ஜடம், ரோகி, என்றாலும் பதியை பெண்கள் தியாகம் செய்யக் கூடாது. உலகியலில் அது மகா பாதகம். அது சுவர்கம் தராது. புகழை வளர்க்காது. கடினமானது, பயங்கரமானதும் கூட. அறுவறுக்கத் தக்கது என்பர். குல ஸ்த்ரீகள் நீங்கள் உங்களுக்கு அது ஏற்றதல்ல. என்னை தியானம் செய்து, தரிசனம் செய்தும், என்னைப் பற்றி கேட்டும், அனைவரும் கூடி என்னை நினத்து பாடியும், நீங்கள் பெறும் நன்மைகள் அருகில் இருப்பதால் மட்டுமே அடைய முடியாது. அதனால் திரும்பி உங்கள் வீடுகளுக்கு போங்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு தாங்கள் எதை எண்ணி வந்தோமோ அதற்கு விபரீதமாக கோவிந்தன் பேசவும் மிக்க வருத்தத்துடன் தங்கள் நம்பிக்கை தூள் தூளாக, மிக வேதனையை அடைந்தனர். முகம் வாடி, துயரம் மண்ட, பெரு மூச்சு விட்டபடி, உடல் குறுக, உதடுகள் துடிக்க, கால்களால் பூமியில் கோலம் போட்டவர்களாக, கண்களில் நீர் பெருக, கண்ணின் மை வழிந்து புடவைகளை நனைத்து குங்குமங்களை கரைக்க , மிகவும் துக்கத்துடன் அங்கிருந்து ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல், பேசாமல் நின்றனர்.
மற்ற சமயங்களில் அன்புக்கு பாத்திரமானவன், அத்யந்த பிரியமானவன் போல பேசுபவன், க்ருஷ்ணனையே, அனைத்தும் என்பதைத் தவிர மாற்று எண்ணமே இல்லாமல், வந்தவர்கள், கண்களைத் துடைத்துக் கொண்டு, சிரமப் பட்டு ஓரளவு அழுகையை நிறுத்தி, தழ தழத்த குரலில் வேண்டினார்கள்.
விபோ! அப்படி சொல்லாதே. இது போன்ற கடுமையான வார்த்தைகள் உன் வாயிலிருந்து வரலாமா? அனைத்தையும் தியாகம் செய்து விட்டு உன் திருவடிகளே சரணம் என்று வந்துள்ளோம். உன் பக்தர்கள் என்று எங்களைப் பார். எங்களை தியாகம் செய்யாதே. மோக்ஷம் வேண்டி தேவர்கள் எப்படி ஆதி புருஷணை பஜிக்கிறார்களோ, அதே போல நாங்களும் தஞ்சம் என்று வந்து நிற்கிறோம்.
எங்கள் கணவன்மார்கள், நாங்கள் பெற்ற பிள்ளைகள், உடன் இருக்கும் உறவினர்களும், நண்பர்களும், இவர்களுக்கு சேவை செய்வது தான் எங்கள் தர்மம் என்று சொன்னாய். நீ தர்மம் அறிந்தவன் அதனால் அப்படியே ஏற்றுக் கொள்கிறோம். அது இருக்கட்டும் நீ உபதேசம் செய்வதில் சமர்த்தன். நீயே சொன்னது தான், உடல் உடைய அனைத்து ஜீவன்களிலும் உள் உறையும் ஆத்மா நானே என்று.
உன்னிடத்தில் ஈடுபாட்டுடன் அறிஞர்கள் தங்கள் ஆத்மாவே என்று எண்ணி பிரியமாக இருக்கிறார்கள். நித்யம் உடன் இருக்கும் கணவன், குழந்தைகளால் என்ன தர முடியும், மேன் மேலும் வேலையும், துன்பமும் தான். அதனால் பரமேஸ்வரா! தயை செய். எங்கள் நம்பிக்கையை உடைக்காதே. உன்னிடத்தில் நேசம் வைத்தோம். அரவிந்த நேத்ரா! பலகாலமாக நாங்கள் திடமான நம்பிக்கையுடன் உன் திருவடியை பணிந்து வந்திருக்கிறோம். .
வீடுகளில் வேலைகளை செய்யும் பொழுதும் உன் நினைவே. எங்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவன் நீ. கைகள் தான் வேலைகளைச் செய்யும். பாதங்கள் நடக்கும் பொழுது உன் திருவடிகளை அடைவதே நோக்கமாக நகரும். எப்படி திரும்பிப் போவோம். வ்ரஜ தேசம் இல்லையெனின் வேறு எங்கு போவோம்?
அங்க! எங்களை உன் அதரங்களின் அம்ருதம் நனைக்கட்டும். உன் சிரிப்பும் கடைக் கண் பார்வையும், கல கலவென பாடும் ஓசையும், எங்கள் ஆசை எனும் அக்னியை நனைக்கட்டும். அப்படி இல்லையெனில், எங்கள் நிறைவேறாத ஆசை, அனுபவமே, எங்கள் தேகத்தை பொசுக்கி விடும். அந்த நிலையிலும், ஹே சகே! உன்னையே தியானம் செய்து உன் பத நீழலை அடையவே முயலுவோம்.
ஒருவேளை அம்புஜாக்ஷனே! ரமா வசிக்கும் இடம் உன் பாதங்கள், ஒரு க்ஷணம் கண்டாலே போதும்.
ஸ்ரீ உன் பாதங்களில் பூஜிக்கப் பட்ட துளசியை கண்டு கூட பொறாமை படுவாள். ஆனால் அவளே, உன் அடியார் ஒருவர் மார்பில் மிதித்ததை கூட பாராட்டாமல் அங்கு வசிக்கிறாள். அவள் தங்கள் பக்கம் திரும்பி பார்த்து கடாக்ஷத்தால் அனுக்ரஹிக்க வேண்டி தேவர்கள் கூட்டம் வந்து காத்திருக்கிறது. அது போல நாங்களும் உன் பாத தூளி மேலே படாதா என்று வேண்டி நிற்கிறோம்.
அதனால் எங்கள் மேல் கருணை காட்டு. வ்ரஜ தேச ஜனங்களின் பல கஷ்டங்களை தீர்த்தவன் நீ. அவர்கள் ஓடோடி வந்து உன்னையே தஞ்சம் என்று விழுகிறார்கள். தங்கள் வீடுகளில் மற்ற இருப்பிடங்களில் கூட அவர்களுக்கு நிம்மதி இருப்பதில்லை என்பர். அதுவல்ல காரணம். உன்னை எந்த விதத்திலாவது அருகில் இருந்து காண வேண்டும் என்பதே முக்கியமான நோக்கம். அழகாக நீ சிரிப்பதைக் காண துடிக்கிறார்கள். தங்கள் ஆத்மாவின் பூஷணமாக, ஆபரணம் போன்ற உன் அருகில் இருந்தால் எந்த தாபமும் தெரியாது என்பர். புருஷபூஷணா! எங்களுக்கும் உன் அடியார்களாக இருக்க அனுமதி கொடு.
சுருள் சுருளான உன் கேசங்கள் முகத்தை மறைக்க, குண்டலங்களின் ஒளி கன்னங்களில் பட்டு ப்ரகாசிக்க, சிரிக்கும் பொழுது தெரியும் அதரங்களின் அழகும், அபய கரங்களும், தண்டம் ஏந்திய புஜங்களும், ஸ்ரீ தேவி வசிக்கும் மார்பையும் கண்டு ரசித்தபடி உனக்கு பணி செய்யும் அடியாருக்கும் அடியார்களாக எங்களை ஏற்றுக் கொள்.
நீ வ்ரஜ தேசத்தின் துன்பங்களை நீக்கவே பிறந்தாய் என்பது வெளிப்படை. தேவன் நீ, அதிலும் ஆதி புருஷன், முதலில் தோன்றியவன், தேவலோகத்தை பாதுகாப்பவன், என்று அறிவோம். அதனால் எங்களுக்கும் உன் கைகளாகிய பத்மங்களால் ஆசிர்வதிப்பாய். ஆர்த்தன்- மிகவும் கஷ்ட நிலையில் உள்ளவன் என்றால் ஓடோடி காப்பாற்றும் பந்து நீ. எங்கள் தலை மேல் கை வைத்து எங்கள் தாபத்தை நீக்குவாய்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு அவர்கள் இரைந்து வேண்டிக் கொண்டதைக் கேட்டு பகவான் பலமாக சிரித்து, கோகுல ஸ்த்ரீகளுக்கு அவர்கள் விரும்பியதை அளித்தார்.
அவர்களுடன் சேர்ந்து மிகவும் பெருந்தன்மையுடன், அழகிய கண்களும், மலர்ந்த முகங்களுடனும் இருந்த அவர்களிடம் தானும் தன் ப்ரகாசமான பற்கள் தெரிய சிரித்து பேசியும், தாரகைகளுடன் கூடிய சந்திரன் போல இருந்தார்.
அவர்களுடன் சேர்ந்து பாடினார். இளம் பனியின் காற்று சுகமாக வீச, புல்வெளிகளில், குமுதங்கள் மணத்தை வாரி இறைத்த காற்றை ரசித்தபடி, புஜங்களை அணைத்தும், கண்களால் பேசி அவர்களை மகிழ்வித்தும், வ்ரஜ தேசத்து சுந்தரிகள் விரும்பிய படி , ரதி பதியாக அனுபவித்தார்.
இவ்வாறு பகவான் ஸ்ரீ க்ருஷ்ணனின் அருகாமையால் பெற்ற மகத்தான குதூகலத்தால் அந்த பெண்கள், தங்களை மற்ற பெண்களை விட அதிக பாக்கியம் செய்தவர்களாக எண்ணினர். அதையறிந்த பகவான் அந்த க்ஷணமே அந்த இடத்தை விட்டு அகன்றார்.
(இது வரை ஸ்ரீமத் பாகவதத்தின், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில் ராசக்ரீடா வர்ணனம் என்ற இருபத்தொன்பதாவது அத்யாயம். ஸ்லோகங்கள்- 48
அத்யாயம்- 30
பகவான் திடுமென மறைந்ததும் கோகுல ஸ்த்ரீகள் திகைத்தனர். பெண் யானைகள் தங்கள் கூட்டத் தலைவனைக் காணாமல் தவிப்பது போல தவித்தனர். ரமாவல்லபன் தங்களுடன் பேசியதை, உடன் நடந்ததை, அன்புடன் பேசியதை, சிரித்து மனோ ரஞ்சகமாக விளையாடியதை, தங்கள் மனதை பறி கொடுத்த அந்த பெண்கள், என்ன செய்வது என்று தெரியாமல் செயலற்று நின்றனர். ஒவ்வொருவரும் தங்கள் அருகில் இருந்த பெண், ஸ்ரீ க்ருஷ்ணனைப் போலவே நடப்பதாகவோ, பேசுவதாகவோ, தோன்ற தாங்களே ஸ்ரீ க்ருஷ்ணமயமாக இருப்பதைக் கண்டனர். ஸ்ரீக்ருஷ்ணனின் ப்ரியா மற்ற அனைவருக்கும் பிரியமானவளே. நடந்து கொண்டே தேடினர். வனத்திலிருந்து வனம் ஸ்ரீ க்ருஷ்ணனை பாடிக் கொண்டே அலைந்தனர். எதிரில் தென்பட்ட மரம் செடி கொடிகள், ஆகாயம் போல அனைத்திலும் உள்ளும் புறமுமாக இருப்பவன் தாவரங்களில்கூட ஒளிந்திருக்கலாம் என்று நினத்தனர் போலும்.
அஸ்வத்த மரமே, நீ கண்டாயா? ப்லக்ஷ, ந்யக்ரோத நீங்கள் பார்த்தீர்களா? எங்கள் இதயத்தை நந்தன் மகன் அபகரித்துக் கொண்டு போய் விட்டான். ஏன் விட்டீர்கள் என்றால், அவன் ப்ரேமையுடன் சிரித்து பேசினான். அதை தவிர அவன் கண்களை ஏரெடுத்து பார்த்தே மயங்கி விட்டோம்.
குரபக, அசோக மலர்களே, நாக புன்னாக சம்பக கொடிகளே, பலராமனை தெரியுமா? அவன் சகோதரன், நாங்கள் ஏதோ பேசி சிரித்தோம், எங்களுக்கு கர்வம் என்று நினைத்தான் போலும்,
துளசி ஒருவேளை உன்னிடம் வந்தானா? கல்யாணி, கோவிந்த சரணங்களில் எப்பொழுதும் இருப்பாயே, உனக்கு அச்யுதன் மிகவும் பிரியமானவன். உன்னைச் சுற்றி இருக்கும் வண்டுகள் போன்றே அவன் கண்களும் இருக்குமே. மாலதி, நீ பார்த்தாயா? மல்லிகே, ஜாதி மலரே, நீங்கள் ஒருவேளை அவன் செல்லும் வழியில் இருந்தீர்களா. கைகளால் எங்களை தொட்டதிலேயே நாங்கள் அவனுடையவர்கள் என எண்ணி விட்டோம்.
மாமரமே, ப்ரியாள, பனஸ, அசன, கோவிதார, ஜம்பூ, அர்க்க,பில்வ, பகுள, ஆம்ர, கதம்ப நீப மரங்களே, யமுனைக் கரையில் இருக்கும் மற்ற மரங்கள், செடி கொடிகளில் யாரேனும் அவனைக் கண்டீர்களா? எங்கள் ஆத்மாவே எங்களிடம் இல்லை. எதிரில் வந்தால் சொல்லுங்கள்.
பூமித் தாயே! என்ன தவம் செய்தாய்? சொல்லு, கேசவனின் பாதங்கள் உன் மேல் நடந்து நடந்து புனிதமாக்கி இருக்கிறான். பசுமையாக உன் வயிற்றில் பிறந்தவர்கள்- தாவரங்கள் மட்டுமல்ல மற்ற ஜீவன்கள் அனைத்தும்- செழிப்பாக இருக்க காண்கிறாய். வராஹ சரீரத்துடன் உன்னை தூக்கி வந்த விசேஷமா? அல்லது அவன் பாத தூளி பட்டதால், தானாக வந்த செல்வமா? பெண் மான்களே, உங்கள் கண்களை அச்யுதனுக்கு கொடுத்து விட்டீர்களா? இந்த காற்றில் அவன் உடலில் பூசியிருந்த வாசனை திரவியங்கள், பூ மாலைகள் இவைகளின் மணத்தை, இன்னமும் எங்கள் நாசிகள் கண்டு கொள்கின்றனவே. ஒரு கையால் அணைத்தபடி பறித்த பத்மங்கள், பலராமனின் தம்பி, அவன் துளசி மாலையில் சிக்கிய வண்டுகள் மயங்குவது போல நாங்கள் மயங்கினோம். மரங்களே நீங்களே சாட்சி. அவன் யாருடனோ இந்த வழியில் சென்றானா?
இந்த கொடிகளைக் கேட்போம். மரங்களைச் சுற்றி தழுவியபடி இருக்கிறீர்களே, நீங்கள் அறியாததா? அந்த மரங்கள் கரங்களால் உங்களை அணைத்தபடி இருக்கின்றன. அதனால் தானா, புளகாங்கிதம் அடைந்து மலர்களாக வெளிப்படுகின்றனவோ? இவ்வாறு உன்மத்தம் பிடித்தவர்கள் போல கோகுல பெண்கள், க்ருஷ்ணனைத் தேடி, அலைந்து காணாமல் தவித்து, பழைய சம்பவங்களை எண்ணி அவைகளால் ஸ்ரீ க்ருஷ்ணனுக்கும் அபாயம் வந்திருக்குமோ என்று பயந்தனர்.
திரும்ப பூதனா வந்து விட்டாளோ? காலால் உதைத்த சகடாசுரன் உயிருடன் வந்து விட்டானோ? தங்களுக்குள்ளேயே ஒருவள் தைத்யனாகவும், க்ருஷ்ண பலராம இருவராலும் வதைக்கப் பட்டதாக நடித்து பார்த்தனர். கன்றுகளாகவும், பகாசுரனாகவும் தங்களுக்குள் அபினயம் செய்து, பார்த்தனர்.
பயப்படாதே என்று சொல்லி மலையை தூக்கி மழையிலிருந்து காத்தவன் என்று ஒவ்வொரு நிகழ்வையும் நினைவில் கொண்டு வந்து பேசித் தீர்த்தனர்.
சற்று நேரம் இவ்வாறு புலம்பியபடி இருந்தவர்கள், ஸ்ரீ க்ருஷ்ணனின் காலடி தடங்களைக் கண்டு கொண்டனர். இது நிச்சயமாக நந்தன் மகனின் காலடி தடங்களே, பாதங்களின் வஜ்ர அங்குச சின்னங்கள் பதிந்திருக்கின்றன.
அதைத் தொடர்ந்து மேலும் நடந்தனர். கூடவே பெண் காலடியையும் கண்டு யாராக இருக்கும் என்று யோசித்தபடியே சற்று வருத்தமும் அடைந்தனர். நம் அனைவரையும் விட்டு யாருடன் போனான். யார் என்று அறிய முடியவில்லை. இவள் ஒருவள் பகவானை தன்னுடன் அழைத்துச் சென்று விட்டாள் போலும். ரகசியமாக அவளுடன் சென்றவள். பகவானின் கால் பட்டு இந்த பூமி புனிதமாயிற்று. ப்ரும்ம, ஈசன், முதல் ரமா தேவி வரை அந்த பாத தூளியை தலையில் தாங்குவர். யாராக இருக்கும்? புல் மறைக்கிறது அவள் காலடி தெரியவில்லியே. தாங்களாகவே கற்பனையாக அந்த பெண்ணும், ஸ்ரீ க்ருஷ்ணனும் இங்கு அமர்ந்த்திருப்பார்கள், பிறகு மேலும் நடந்திருப்பார்கள், பூக்கள் சிதறிக் கிடப்பதை பார்த்து பெரு மூச்சு விட்டனர். அவள் யாரோ, நம் அனைவரையும் விட அதிக பிரியமானவள், இப்படி பேசிக் கொண்டே போனவர்கள் தங்கள் சகி ஒருவள் தனித்து இருப்பதைக் கண்டனர். அழுது கொண்டே அவளும் திடுமென தன்னை விட்டு விட்டு க்ருஷ்ணன் மறைந்து விட்டான் என்றாள். அதைக் கேட்டு சற்று தெளிந்து சந்திரன் ஓளியில் பளபளத்த மணல் மேட்டிலேயே அமர்ந்தனர். அனைவருக்கும் ஒரே எண்ணம், ஒரே விதமான எதிர்பார்ப்பு, திரும்பவும் தாங்கள் அறிந்த க்ருஷ்ண கதைகளையே பாடிக் கொண்டு வந்தாலும் வருவான் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். சற்று பொழுதில் சந்திரன் அஸ்தனமாகி விட்டால் இருள் சூழும் என்பதையோ, வீடு, தங்கள் பொறுப்புகள் எதையும் எண்ணாமல் அமர்ந்திருந்தனர்.
( இது வரை ஸ்ரீ மத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், ராச க்ரீடாயாம் க்ருஷ்ணான்வேஷணம் என்ற முப்பதாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்- 45
அத்யாயம்-31
கோபிகள் பாடினர்:
ஹே, தயித! க்ருஷ்ணா! ஜய ஜய. எங்களுடன் வ்ரஜ குலத்தில் பிறந்தவன். அதனாலேயே ஸ்ரீ தேவி இங்கு நிரந்தரமாக தங்கி விட்டாள். உன்னையே உயிர் மூச்சாக கொண்டவர்கள் உன்னைத் தேடுகின்றனர்.
(मच्चित्ता: मद्गत प्राणा: -மச்சித்தா மத்கத ப்ராணா:- என்றபடி)
என்னை ஏன் தேடுகிறீர்கள் என்று கேட்பாயோ, சரத் காலத்தில் மலர்ந்த தாமரையின் சோபையை கொண்ட உன் கண்கள், எங்கள் ப்ராணனை அபகரித்துக் கொண்டு விட்டன. எங்கள் வேண்டுதலை நிறை வேற்றுவதாக சொன்ன வாக்கை நம்பி வந்தோம். செலவில்லாத தாசிகள். எங்களுக்கு செல்வமோ, மற்ற எதுவும் சுல்கமாக- கூலியாக கேட்கவில்லை. ஆயுதங்களால் செய்வது தான் வதமா? உன் கண்களால் எங்களை மறுத்தாலும் வேறு வழி எங்களுக்கு இல்லையென்பதால் ( வேதாத்யயனம் செய்தோ, யோக சாதனைகளோ அறியாத எளிய இடையர் குல பெண்கள், எங்களுக்கு பக்தி மார்கம் தான் எளியது என்பதால்) அதுவும் வதமே.
பலமுறை எங்களை மரணத்திலிருந்து காப்பாற்றி இருக்கிறாய். விஷ ஜலம் குடித்து சாக இருந்தோம். அந்த காளியனை வதைத்தாய். அகாசுரனிடமிருந்து, காட்டுத் தீயில் வெந்து மடியாமல் காப்பாற்றினாய். இந்திரன் அனுப்பிய மழை, காற்றாக வந்த த்ருணாவர்த்தன், மயன் மகன் ருஷபமாக வந்தான், இவைகளைலிருந்து காத்தாய். அதனால் உலகில் பயமின்றி சஞ்சரித்தோம்.
நீ வெறும் கோபிகா வயிற்றில் பிறந்தவன் அல்ல என்று அறிவோம். அகில உலகையும் உன் அந்தராத்மா அறியும். ஏன் யசோதா மகனாக வந்தாய்? ப்ரும்மா உன்னை வேண்டிக் கொண்டார். உலகை காப்பாற்ற என்று ஹே சகே! சாதுக்களான எங்கள் குலத்தில் வந்தாய்.
எங்களுக்கு அபயம் அளித்தாய். சம்சாரம் என்ற பந்தத்திலிருந்து விடுதலை அளிப்பதாக வாக்கு கொடுத்தாய். வ்ருஷ்ணி குலம் விளங்க அதன் முதன்மையான ப்ரஜையாக வந்தாய். எங்கள் தலையில் கை வைத்து எங்களுக்கு வேண்டியதைக் கொடு. தாமரை மலர் போன்ற உன் கைகளே அதைத் தர வல்லவை. ஸ்ரீ தேவி வசிக்கும் வலது கையை எங்கள் தலையில் வை.
எளிய வ்ரஜ ஜனங்கள். உன்னிடம் அன்பைத் தவிர எதையும் யாசிக்கவும் இல்லை. உன் சிரிப்பில் கபடம் எதுவும் தெரியவில்லை. ஏதோ நாங்கள் கர்வம் கொண்டுவிட்டதாக போக்கு காட்டி எங்களை விட்டு மறைந்தாய். உன் முக பத்மத்தை -ஜலருஹானனம்- எங்களுக்கு காட்டு.
எந்த ஆசையும் இன்றி உனக்காகவே உன்னை வணங்கும் எங்கள் சரீரம். புல்லை மேயும் மாடு கன்றுகளுக்குப் பின்னால் போனாலும் உன் தரிசனம் பாபங்களைப் போக்கும். ஸ்ரீ தேவி வசிக்கும் இடம். ஆதி சேஷன் தாங்கும் பாதங்கள். அந்த பாத பத்மங்களை எங்கள் மார்பிலும் வை. அதனால் என்ன பயன்? எங்கள் மனத்தில் உள்ள காமத்தை போக்கு.
புஷ்கரேக்ஷணா! குளத்தில் பூத்த தாமரை போன்றது உன் கண் பார்வையின் குளுமை, உன் மதுரமான வார்த்தைகள், அதை புரிந்து கொள்ளும் அறிஞர்கள் ரசிக்கிறார்கள். பலவித பொருள் தொனிக்கும் அழகிய சொற்களால் அவர்களை மகிழ்விக்கிறய். நாங்கள் உன் கட்டளையை அதன்படியே செய்யும் பணியாட்கள் அவ்வளவே. அவ்வளவு தான் நாங்கள் அறிந்தது. எங்களை உன் அதர ரஸத்தால் உயிர் கொடுத்து வாழ்வளிப்பாய்-முழுக்காட்டு. (உன் உபதேசங்களையோ, அழகிய வார்த்தைகளையோ புரிந்து கொள்ள முடியாதவர்கள் நாங்கள் என்பதாக)
உன் கதையை கேட்பதே உலகியலில் தவிக்கும் ஜீவன்களுக்கு அம்ருதமாகும். சிறந்த கவிகள் எழுதியும் சொல்லியும் அறிவோம் அது மனதில் கெட்ட எண்ணங்களையே இல்லாமல் ஆக்கிவிடும். கேட்ட மாத்திரத்திலேயே மங்களத்தை தரும், ஸ்ரீமான்களான பெரியவர்கள் சொன்னது. எனவே பூமியில் பலர் அதை ஏற்றுக் கொள்கின்றனர்.
நாங்கள் அறிந்ததோ, வாய் விட்டு நீ சிரிப்பதை, பிரியத்துடன் எங்களைப் பார்ப்பதை, எங்களுடன் நடந்தும், விளையாடியதும் இவைகளை நினத்தலே எங்களுக்கு மங்களம். ரகசியத்தில் நாங்கள் எங்கள் உள்ளத்தில் திரும்பத் திரும்ப நினைத்துப் பார்த்து எங்கள் மனதிலேயே இருத்திக் கொள்கிறோம். அவை எங்கள் மனதை நோக அடிக்கிறது என்று தெரியாமல் மறைந்திருக்கிறாய்.
வ்ரஜ தேசத்திலிருந்து பசுக்களை மேய்க்கும் சாக்கில் மற்றவர்களுடன் நீ கிளம்பி போனால், நாங்கள் உன் பாதத்தைக் கண்டு வியப்போம். நளின சுந்தரம் என்போம். ஆ இந்த மென்மையான பாதம் கல், முள் குத்தி வருந்துமோ என்று கவலைப் படுவோம். எங்கள் மனம் படும்பாடு, காந்தன் இதோ போகிறானே, வழியில் இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் என எங்கள் மனம் அலை பாயும்.
தினம் முடிந்து நீல கேசம் கலைந்து முகம் வாடி இருக்கும். வியர்வை வடியும். அதைக் கண்டு எங்கள் மனதில் அதிகமான மன்மத வேதனையை தருவாய்.
வணங்கி வேண்டியவர்களுக்கு வேண்டியதைத் தருபவன் நீ. பத்மஜன் -ப்ரும்மா உன்னை அர்ச்சிக்கிறான். பூமிக்கு அலங்காரமாக இருப்பவன். கஷ்டம் என்றால் உடனே உன் நினைவு தான் வரவேண்டும். பங்கஜம் போன்ற சரணங்கள். யாராயிருந்தாலும் ஆறுதல் அளிக்கும். ரமணா! அந்த பாத தீக்ஷை எங்களுக்கும் கொடு.
சோகத்தை போக்கும், ஆவலை தூண்டும், உன் வேணு கானம். அதை உன் உதட்டில் வைத்து சதா முத்தமிடுகிறாய் – வாசிக்கிறாய். ராகம்- பாடலின் ராகம், மற்றது ஆசை, இவைகளை மனிதர்கள் உன் கானத்தைக் கேட்டு மறப்பார்கள். அந்த வேணுவின் இடமான அதரங்களின் அனுபவத்தை எங்களுக்கும் கொடு.
ஸ்ரீ முகன் நீ. காடுகளில் அலைகிறாய் என்று தெரிந்தால் எங்களுக்கு ஒரு நிமிடம் யுகமாகத் தெரியும். உன்னைக் காணாத நேரமே வீண் என் நினைப்போம். முகத்தில் வழியும் கூந்தல் குழைகள், உன்னைக் கண்டு கொண்டிருக்கும் சமயங்களில் ப்ரும்மா எதற்கு இமைகளை வைத்தார், நடுவில் கண்களை மறைக்கிறதே என்று வருந்துவோம்.
பதி, மகன், தன் குலத்தினர், சகோதரன், உறவினர் இவைகளை அனைவரையும் ஒதுக்கித் தள்ளி நீயே கதி என்று வந்துள்ளோம். வழி எப்படி தெரிந்தது ? உன் கீதமே வழி காட்டியது. அந்த கீதத்தை கேட்டு மயங்கி எங்களையறியாமலே உன்னிடம் வந்து விட்டோம். இரவு நேரமோ, நாம் பெண்கள் என்ற பயமோ இல்லை. எங்களை தியாகம் செய்யாதே.
சிரிப்புடன் கூடிய முகத்தையும், அன்பு பொங்கும் கண்களால் எங்களை காண்பதையும் நினைக்கும் பொழுதே மனம் நிறைகிறது. இந்த பெண்கள் உன்னை நேரில் கண்டதால் மேலும் மேலும் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.
நீயும் எங்களுடன் காட்டு வாசிகளான வ்ரஜ வாசிகளுள் ஒருவன். துன்பங்களைத் தீர்ப்பவன், உலகத்துக்கே மங்களமானவன். ஒரு துளி கூட சந்தேகமின்றி எங்களை ஏற்றுக் கொள். உன்னிடமே மனதை பறி கொடுத்தவர்கள் நாங்கள். தன் மக்கள் என்று பார். அவர்களின் மனத்துயரத்தை நீக்குவாய்.
உன் சரணாம்புஜத்தை, வலிக்கப் போகிறதே என்று ம்ருதுவாக பற்றுகிறோம். கரடு முரடான காட்டுப் பகுதியில் அலைபவன், அதனால் வலிக்கவில்லையா? தீர்காயுளுடன் இருக்கவேண்டும் என்று எப்பொழுதும் பிரார்த்திகிறோம்.
( இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தம் முதற்பகுதியில், ராஸக்ரீடாயாம் கோபிகா கீதம் என்ற முப்பத்து ஒன்றாவது அத்யாயம். ) ஸ்லோகங்கள்- 19
அத்யாயம்-32
ஸ்ரீ சுகர் சொன்னார்: இப்படி பாடிக் கொண்டும், புலம்பிக் கொண்டும் இருந்த கோகுல பெண்கள், ஒரு நிலையில் தாங்க மாட்டாமல் பெரும் குரலெடுத்து அழ ஆரம்பித்தனர். ஸ்ரீ க்ருஷ்ணனைக் காண வேண்டும் என்ற ஆவலால். திடுமென அவர்களிடையே சௌரி- ஸ்ரீ க்ருஷ்ணன், பீதாம்பரமும், மாலைகளும் அணிந்து சாக்ஷாத் மன்மத மன்மதனாக வந்து தோன்றினார். ப்ராணனே திரும்பி வந்தது போல மகிழ்ந்து கண்கள் விரிய நோக்கியபடி ஒரே சமயத்தில் எழுந்து நின்றனர். அனைவரும் தங்கள் மனதுக்குகந்தவன் வந்து விட்டான் என மகிழ்ந்தனர். ஒரு பெண் அஞ்சலி செய்தபடி வந்து அவன் கைகளைப் பற்றினாள். ஒருவள் புஜங்களை தாங்கிக் கொண்டவள் அதன் சந்தன வாசனையை முகர்ந்தாள். கால்களில் விழுந்து ஒருவள் வணங்கினாள். பிரியமாகவும், கோபம் கொண்டது போலவும், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் தங்கள் அன்பைத் தெரிவித்தனர். கண் கொட்டாமல் பார்த்து ஒருவள் ரசித்தாள், ஒருவள் விழுங்குவது போல என்று எவ்வளவு பார்த்தாலும் அவர்களுக்கு த்ருப்தி வரவில்லை. புளகாங்கிதமாக ஒருவள் யோகிகள் ஆனந்த நிலையை அடைவது போல இருந்தாள். கேசவனை அணு அணுவாக ரசித்து நல்ல ஞானியை அடைந்த சாதாரண ஜனங்கள் தங்கள் தாபம் தீர்ந்து அமைதியடைவது போல ஆனார்கள்.
அவர்கள் சமாதானமடைந்து சுய நினைவு பெற்றதும், பகவானை சுற்றி நின்றனர். சக்தியுடன் கூடிய பரம புருஷன் போல, நடந்து காலிந்தி நதியின் மணல் பகுதியை அடைந்தனர். மல்லிகை மலரும் நேரம் அதனால் அதன் வாசனை எங்கும் பரவியிருந்தது. மந்தார புஷ்பங்களும் மலர தேனீக்கள் அதை தேடி வந்தன. சரத் கால சந்திரனின் ஒளியால் எங்கும் தூய்மையும், மங்களமான அமைதியும் நிறைந்தது. யமுனை நதியின் அலைகளின் ஓசை கூட துல்லியமாக கேட்டது. அந்த சூழ்நிலையே மனதுக்கு இதமாக இருந்தது. மனதின் காயங்கள் தீர ஸ்ருதிகள்-வேதங்கள் சொல்லும் மனோரதங்களின் முடிவு என்ற நிலை- பற்றுகள் நீங்கிய உயர் மன நிலையை அவர்கள் அடைந்தனர். தங்கள் உத்தரீயம் என்ற மேல் ஆடைகளால் மணல் மேல் விரிப்புகள் போட்டு அமர்ந்தனர். அவர்களுடன் அமர்ந்த ஸ்ரீ க்ருஷ்ணன் யோகேஸ்வரனான ஈஸ்வரன், ஒவ்வொரு கோகுல பெண்ணின் ஹ்ருதயத்திலும் வாசம் செய்தவன், மூவுலகும் ஒன்றான தன் சரீரத்தை எடுத்துக் கொண்டார்.
மன்மதனின் தூண்டுதலை வெளிபடுத்தும் சிரிப்பும், லீலைகளும் கண்களின், புருவங்களின் அசைவுகளாலும், அந்த பெண்கள் சற்றே கோபத்துடன் சொன்னார்கள்; ஒருவனுக்கு ஒருவள் என்பது தானே நியாயம். எங்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் எப்படி திருப்தி படுத்துவாய் என்ற சந்தேகத்தை கிளப்பினார்கள்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: தன் சுய நலத்துக்காக செய்பவன், தனக்கு மட்டுமே நன்மையை நினைத்து செய்கிறான். உபகாரம் செய்பவனுக்கு ப்ரத்யுகாரம் செய்வது பொது தர்மம். அது உலகியலில் தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பது. தனக்கு எந்த உபகாரமும் செய்யாதவன், அவனே கேட்காமலும் செய்வது சாதுக்கள் செய்வது. பெண்களே, நான் அழைக்காமல் தாங்களாக என்னிடம் வந்தவர்கள். அது எந்த உபகாரமும் செய்யாதவனுக்கு உபகாரம் செய்யும் சாதுக்கள் செயல். ப்ரதி உபகாரமே கூட செய்யாமல் விடுபவர்கள் மத்தியில் கேளாமலே உதவி செய்பவன் உத்தமன். ஆத்மாராமன், ஆப்த காமன், அக்ருதக்ஞன், குருத்ரோஹி என்று நால்வகை மனிதர்கள். தன்னை அறிந்து தங்களுக்குளே மூழ்கியவன், தன் விருப்பம் பூர்த்தியாகி வேறு எதையும் விரும்பாதவன், செய் நன்றி மறப்பவன், கடைசியில் குரு த்ரோஹி, பெரும் துரோகி- தனக்கு நன்மை செய்தவர்களுக்கும் துரோகம் செய்பவன். ஸகிகளே, சில சமயம் நான் என் பக்தர்களையும் சோதிப்பேன். அந்த பஜனையோ, பக்த பாவமோ நீடிக்கட்டும் என நினைப்பேன். வறியவன் ஒருவனுக்கு எதேச்சையாக தனம் கிடைத்தால் மகிழ்வான். அதுவே திரும்ப தொலைந்தால் அதைத் தவிர வேறு சிந்தனையே இராது. உணவும், உடுப்பதும் கூட மகிழ்ச்சி தராது, இழந்த செல்வமே அவனை வாட்டும்.
லோக அபவாதம் என்றோ, தன் மக்கள் கை விடுவார்கள் என்றோ பயமின்றி நீங்கள் என்னை தொடர்ந்து வந்துள்ளீர்கள். அதனாலேயே நான் விலகி உங்கள் கண்களிலிருந்து மறைந்தேன். ஆனால் நீங்கள் என்னை கோபிக்கவில்லை. தேடி வந்தீர்கள். உங்கள் உளமார்ந்த அன்பை நான் உணர்கிறேன், அதனால் என் பிரியமானவர்களே, உங்களை கைவிட மாட்டேன். உங்கள் பக்தியை ஏற்கிறேன்.
(இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், முதல் பகுதியில், ராச க்ரீடாயாம் கோபீ சாந்த்வனம் என்ற முப்பத்திரண்டாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்- 22
அத்யாயம்-33
ஸ்ரீ சுகர் சொன்னார்: பகவானின் இதமான வார்த்தைகளைக் கேட்ட கோபியர், விரகம்- நடுவில் அவர் மறைந்ததால் ஏற்பட்ட வருத்தம்- அதை மறந்தனர். அவருடன் உடல் உரச நடந்தவர்கள் பெரும் ஆசிகள் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தனர்.
எதிர்பாராமல் கோவிந்தன் ராஸ க்ரீடா என்பதை ஆரம்பித்தான். ஒரு வித நடனம் – பலர் கூடி கைகளை கோர்த்து ஆடுவது- ஒருவரோடொருவராக கைகளைக் கோர்த்துக் கொண்டு அந்த உத்சவம் ஆரம்பித்தது. கோகுலத்துப் பெண்கள் தங்களுக்கிடையில் ஸ்ரீ க்ருஷ்ணன் இருவரில் ஒருவராக இருப்பதைக் கண்டனர். தோள் மேல் தோள் பட அவர்கள் இணைந்து ஆடலாயினர். ஒவ்வொரு பெண்ணும் ஒரு க்ருஷ்ணனுடன் என்று ஜோடி ஜோடியாக இருந்தனர்.
இதைக் கண்ட தேவர்கள் நூற்றுக் கணக்காக தங்கள் விமானங்களில் மனைவிகளுடன் ஆச்சர்யம் தாங்க மாட்டாமல் வந்து கூடினர். துந்துபிகள் முழங்கின. பூமாரி பொழிந்தது. கந்தர்வ பதிகள் பாடினர். அவர்களின் பெண்களும் உடன் பாடலாயினர். நிர்மலமான ஸ்ரீ க்ருஷ்ணனின் சரித்திரம், புகழ் வாய்ந்தது உடனடியாக அனைவருமாக ஒருமித்து பாடலாயினர்.
கோகுல பெண்கள் உடலில் வளையங்களும் நூபுரங்களும், கை வளையல்களும் வந்து சேர்ந்தன. அதன் நாதமும் பாடலுக்கு இசைவாக ஒலிக்கலாயிற்று.
அவர்கள் இடையில் பகவான் தேவகி மகன் அத்யந்த அழகுடன் விளங்கினான். பொன் நகைகளின் நடுவில் பதித்த மகா மரகதம் போல ஜொலித்தான்.
பாதங்களின் நடைகள், புஜங்களின் அபிநயங்கள், மென்மையான முறுவலுடன் புருவங்களின் அசைவுகள், காதுகளின் குண்டலங்கள் ஆடி, கன்னங்களில் ஒளி வீச, உயர்தர மேலாடைகள், கேசத்தை பலவிதமாக அழகுற கட்டி,அனைவரும் க்ருஷ்ணனின் பிரியமானவர்களாக, தாங்களும் உடன் பாடினர். மேகங்களின் இடையில் மின்னல் போல பள பளத்தனர்.
ஆடிக் கொண்டே பலமான குரல் தெரிய உச்ச ஸ்தாயியில் பாடினர். ரதி ப்ரியர்கள், உரக்க பாடியதில் கழுத்து சிவக்க ஸ்ரீ க்ருஷ்ணன் தங்கள் இடையில் இருப்பதை பெரும் பாக்கியமாக எண்ணி மகிழ்ச்சி தெரிய தங்கள் கீதத்தில் பாடினர்.
ஒருவள் ஸ்ரீ க்ருஷ்ணனின் குரலோடு சமமான ஸ்வரத்தில் பாடினாள். அதை சாது சாது என்று மற்றவர் பாராட்டினர். அதன் காரணமாக அவள் அனைவராலும் மதிக்கப் பட்டாள். ஒருவள் களைத்து கையில் கட்டியிருந்த மல்லிகை மாலை நழுவி விழ, அருகில் இருந்த கதா தாரியான க்ருஷ்ணனின் தோளைப் பற்றிக் கொண்டாள். க்ருஷ்ணனின் உத்பல மலர் மாலைகளிலிருந்து வந்த மணத்தை முகர்ந்தவள், முத்தமிட்டாள்.
ஒருவள் நடன வேகத்தில் விழுந்த தன் குண்டலத்தை கீழே விழாமல் தடுக்கும் விதமாக கழுத்தால் அதை தடுத்தவள், அதன் மணியின் ஒளியில் பள பளத்த அருகில் இருந்த க்ருஷ்ணனின் கன்னத்துடன் தன் கன்னத்தை வைத்து அவன் வாயிலிருந்து வந்த தாம்பூல மணத்தை உணர்ந்தாள்.
நூபுரங்கள், இடையில் இருந்த அணி இவைகளின் இனிய நாதத்தோடு ஒத்துப் போகும்படி நாட்டியமாடியும் பாடியும் வந்தவள், அருகிலிருந்த க்ருஷ்ணனின் கைகளை எடுத்து தன் மார்பில் வைத்துக் கொள்டாள்.
கோகுல பெண்கள், எதிர் பாராமல் கிடைத்த தங்கள் மனதுக்குகந்த மணாளனாக எண்ணிவந்தவன் தங்கள் இடையில் இருப்பதை ரசித்து மகிழ்ந்தனர். நடன அசைவுகளிலேயே அவனை அணைத்தும், கழுத்தில் கைகளை சுற்றி வளைப்பதுமாக மெய் மறந்து ஆடினர்.
நடனம் சற்று வேகம் கொள்ள, காதுகளில் ஸூடியிருந்த உத்பல மலர்கள், காற்றில் அசைந்தாடும் குழல்கள் முன் நெற்றியை மறைக்க, அவைகளையும் மீறி முகத்தின் லக்ஷ்மீ கடாக்ஷம் தெரிய, பகவானுக்கு சமமாக ஆட முயல, அவர்கள் கேசம் ஒருபக்கம் , ஆடைகள் ஒரு பக்கம் கலைந்தன. பாடுபவர்களுக்கு இணையாக வண்டுகளும் ரீங்காரம் செய்தபடி அந்த கோஷ்டியில் சேர்ந்து கொண்டது போல ஆயிற்று.
இவ்வாறு அணைத்தும், கைகளோடு கை கோர்த்தும், கண்களால் அன்பு பொங்க பார்த்தும், மகிழ்ச்சியுடன் பலமாக சிரித்தும், வ்ரஜ சுந்தரிகளுடன் ரமா காந்தன் ரசித்து ஆடினான். சிறு குழந்தை தன் ப்ரதி பிம்பத்தைப் பார்த்து ப்ரமிப்பது போல.
ஸ்ரீக்ருஷ்ணனின் அருகாமையை வேண்டிய பெண்களுக்கு அவர்கள் விரும்பியபடி தன்னை கொடுத்த சமயம் அவர்கள் வேறு எதையுமே நினைக்கவேயில்லை என்பது, நழுவி விழுந்த மாலைகளையோ, மேலாடைகளையோ எடுத்து அணியக் கூட மனம் இல்லாமல் நடனத்தில் பங்கு கொண்டதில் தெரிந்தது.
வானத்தில் வந்து கூடிய தேவ கணங்கள் ஸ்ரீ க்ருஷ்ணனின் இந்த அத்புதமான நடவடிக்கையை பார்த்து நம்ப முடியாமல் திகைத்தனர். தாங்களும் அதே போல ஆடவும் உடன் இருக்கவும் விரும்பினர். சசாங்கன்- சந்திரன் தன் தாரா கணங்களோடு ஆச்சர்யத்துடன் பார்த்தபடி இருந்தான்.
அவர்களால் முடிந்தவரை நடனத்தை ஆடி அவர்கள் களைத்துப் போனதும் தன் கடாக்ஷத்தாலும், அவர்களை கைகளால் மெள்ள தடவிக் கொடுத்தும் களைப்பை நீக்கினான். கோகுல ஸ்த்ரீகள் மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்றனர். அந்த செயலையும் தங்கள் பாடல்களில் பாடினர்.
அதன் பின் அனைவரும் அருகில் இருந்த குளத்தில் நீராடினர். பெண் யானைகளுடன் யானைகளின் தலைவன் கரையை உடைத்துக் கொண்டு நீராடுவது போல. வானத்திலிருந்து தேவர்கள் வர்ஷித்த பூமாரி அவர்களை மூடியது. அதன் பின் க்ருஷ்ண உபவனத்தில், சமவெளியிலும், நீரிலும் சந்திரனின் ஒளியில் சத்ய காமனான பகவான் தன்னை நம்பி வந்த கோகுல பெண்களுக்கு அவர்களின் விருப்பப்படி தன்னையே அளித்தான். சரத் காலத்தை வர்ணிக்கும் கவிகளுக்கு வர்ணிக்க தகுந்த விஷயமாக காலம் சென்றது.
அரசன் கேட்டான்: அது எப்படி? தர்மத்தை நிலை நிறுத்தவே அவதரிக்கிறேன் என்பவன், அம்சமாக வந்த ஜகதீஸ்வரன், அதர்மத்தை அழிப்பேன் என்று உறுதி பூண்டவன், தர்மத்தின் எல்லைகளை தானே வகுத்தவன், அதை பாலனம் செய்வதும் அவனே, என்று இருக்கும் பொழுத்து பர தாரா- மாற்றான் மனைவி என்று தெரிந்தும் அவர்களுடன் சல்லாபமாக நடந்து கொண்டது என்ன நியாயம்? சுவ்ரத! முனிவரே, நீங்கள் விரதங்களை முறையாக நடத்திக் காட்டியவர், ஆப்த காமன்- தனக்கு பிரியமானவர்களுக்கு வேண்டியவன், யது பதியானவன், செய்த இந்த செயல் சரியா? அருவறுப்பாக நான் உணர்கிறேனே, என் சதேகத்தை தீர்க்க வேண்டும்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: தர்மத்திற்கு முரணானது என்று சொல்கிறாய். அவர்கள் சாகசமாக செய்வதும் முரண் தான். தீயின் நாக்குகள் போன்றவர்கள் தேஜஸ் உடையவர்கள். அதனால் தோஷம் இல்லை. இந்த செயலைச் செய்ய சாதாரண ஜனங்கள் செய்ய ஒரு போதும் மனசால் கூட நினைக்கக் கூடாது. ஸ்ரீ ருத்ரன் பாற்கடல் விஷத்தை அருந்தியதை தானும் அனுசரிப்பேன் என்று ஒருவன் நினைப்பானா? இதுவும் அதற்கு சமமானதே. ஈஸ்வரனின் வாக்கு சத்யம். அதே போல நடந்து கொள்வதும் அவசியம். புத்திமான் தன் மனதுக்கு இசைந்த வாக்கை ஏற்றுக் கொள்வான். குசலமான செயல்களில் சுய நலம் இல்லை. அதனால் விபரீதமாக எதுவும் ஆகாது. அனைத்து உயிரினங்களுக்கும் விலங்குகள், மனிதர்கள், வானத்தில் பறக்கும் பறவைகள், தேவர்கள் நன்மை, தீமைகளை தன் வசத்தில் வைத்திருப்பவன் நினைப்பதை நாம் அறியவா முடியும்?
அவருடைய பத்ம பாத தூளியே போதும் என்று நினைத்தவர்கள், யோக சாதனைகளால் அகில கர்ம பந்தங்களிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டவர்கள், தங்கள் எண்ணம் போல நடந்து கொள்ளும் முனிவர்கள், இவர்களும் நல்லது, தீயது என்ற பேதம் பார்ப்பதில்லை. அப்படி இருக்க, தன் விருப்பத்தால் ஏற்றுக் கொண்ட மனித உடல், அவனுக்கு பந்தம் ஏது?
கோகுல பெண்கள் அவர்கள் பதிகள், என்று அனைத்து உடல் படைத்த உயிரினங்களின் உள்ளும் சஞ்சரிப்பவன் அவன் தலைமையில் அவன் விளையாடுகிறான். இதில் சாதாரண மனிதன் எப்படி விமர்சிக்க முடியும். அனுக்ரஹம் செய்யவே மனித உடலை எடுத்தவன். அவன் அதே போல விளையாடுகிறான், எதை மனிதர்கள் ரசிப்பார்களோ, அதனால் ஸ்ரீ க்ருஷ்ணனை தூற்ற வேண்டாம். அவன் மாயை. அதில் மயங்கியவர்கள், தன் அருகில் இருப்பவனோ,இருப்பவளோ தன்னுடையவர் என மோகிக்கின்றனர். அந்த ப்ரும்ம ராத்திரி முடிந்தவுடன், வாசுதேவன் அனுமதித்து கோகுல ஸ்த்ரீகள் வீடு திரும்பினர்.
வ்ரஜ குலத்து பெண்களுடன் ஸ்ரீக்ருஷ்ணன் இவ்வாறு விளையாடியதை அசூயை இன்றி, சிரத்தையுடன் கேளுங்கள். அதன் பின் வர்ணித்துச் சொல்லுங்கள். பகவானிடத்தில் முற்றிலும் நம்பிக்கையுடன் ஏற்படும் பக்தி, தங்கள் இஷ்டங்களை பூர்த்தி செய்ய வல்லது. மனதில் அமைதி கிடைக்கச் செய்யும். விரைவில் தீரனாக ஆவான்.
( இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், ராஸ க்ரீடா வர்ணனம் என்ற முப்பத்து மூன்றாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்- 40
அத்யாயம்: 34
ஒரு சமயம் தேவ யாத்திரை என்று கோகுலத்து மக்கள் அனைவரும் சக்கர வண்டிகளில் ஏறிக் கொண்டு அம்பிகா வனம் என்ற இடம் சென்றனர். சரஸ்வதி நதியில் ஸ்னானம் செய்து, விபுவான பசுபதியை வணங்கி, பூஜைகள், அர்ச்சனைகள் செய்து பக்தியுடன் வணங்கினர். அம்பிகையையும் அதே போல பூஜித்தனர். பூஜைகளைச் செய்த அந்தணர்களுக்கு, பசுக்கள், பொன், ஆடைகள், மது, இனிப்பு அன்னம், இவைகளை கொடுத்தனர். சரஸ்வதி நதிக் கரையில் சில காலம் வசித்தனர். விரதங்களை ஏற்று, சரஸ்வதி நதி ஜலத்தை குடித்துக் கொண்டு நந்தன்,சுனந்தன் முதலானோர் இரவைக் கழித்தனர். ஏதோ ஒரு மிகப் பெரிய சர்ப்பம் பசியுடன் உணவைத் தேடி அலைந்து கொண்டு அங்கு வந்தது. தூங்கிக் கொண்டிருந்த நந்தனை பிடித்துக் கொண்டது. அதை உணர்ந்த நந்தன் அலறினான். க்ருஷ்ண, க்ருஷ்ணா, இதோ பார், மிகப் பெரிய சர்ப்பம், என்னை பிடித்துக் கொண்டுள்ளது. என்னை விடுவி, என்றார். அதைக் கேட்டு, மற்ற எல்லா கோபாலர்களும், விழித்துக் கொண்டு பெரிய சர்ப்பத்தைக் கண்டு திகைத்தனர். தீ பந்தங்களால் அதை விரட்ட முயற்சித்தனர். தீயின் நாக்குகளால் சூழப்பட்ட போது கூட அது தன் பிடியை விடவில்லை. பகவான் தானே வந்து தன் பாதங்களால் அதை அழுத்திக் கொண்டு நின்றார், எந்த உயிரானாலும் அவர் அதன் தலைவர் தானே. அவர் பாத ஸ்பரிசம் பட்டதும் அந்த நல்ல பாம்பு, தன் சுய ரூபமான வித்யாதரனாக எதிரில் நின்றது. பொன் நகைகள் மின்ன எதிரில் நின்றவனை பகவான் விசாரித்தார். ‘யர் நீ? அத்புதமான உருவமும் அலங்காரமும், லக்ஷணமாக இருக்கிறாய். இப்படி ஒரு தேகத்தை எப்படி அடைந்தாய்? உன் வசம் இல்லாத உடல், இதில் எப்படி பிறந்தாய்?
சர்ப்பம் பதில் சொல்லிற்று: நான் சுதர்சனன் என்ற வித்யா தரன். செல்வ சம்பத்துடன் விமானத்தில் உலகைச் சுற்றி வந்தேன். அங்கிரஸ் முனிவர்கள் சிலரை அவர்கள் அழகில்லாத உருவை ஏளனம் செய்தேன். என் அழகான உருவத்தில் எனக்கு இருந்த கர்வம். அவர்கள் சாபத்தால் இந்த பிறவியை அடைந்தேன். இப்பொழுது அந்த சாபமும் எனக்கு அனுக்ரஹமே என நினைக்கிறேன். லோக குருவான உங்கள் பாத ஸ்பர்ஸம் கிடைக்கப் பெற்றேன். என் சாபமும் நீங்கியது. அண்டியவர்களுக்கு அபயம் தரும் உன்னால், இந்த சாபத்திலிருந்து விமோசனம் வேண்டுகிறேன். உலக வாழ்வில் கஷ்டங்களை அனுபவித்து விடுபட நினக்கும் அன்பர்களுக்கு நீ மோக்ஷம் அளிப்பவன் அல்லவா?
மஹாபாகோ! சரணம் அடைகிறேன். மஹா யோகியே, மஹா புருஷ, சத்பதி, என்னை அனுமதியுங்கள். உங்களால் தான் முடியும். சர்வ லோக லோகேஸ்வரன் தாங்களே. உங்கள் தரிசனத்தால் ப்ரும்ம தண்ட சாபத்திலிருந்து விடுபட்டேன். உங்களுக்கு உள்ள பல பெயர்களால் சதா தியானித்து அர்ச்சனை செய்பவர்கள் அல்லது பிறர் சொல்லிக் கேட்பவர்கள், உடனடியாக புனிதம் ஆகிறார்கள் அப்படி இருக்க உங்கள் பாதங்கள் என் மேல் பட்டதே நான் செய்த பாக்கியம். இவ்வாறு பிரார்த்தனை செய்து வணங்கி, ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து சுதர்சனன் தேவ லோகம் சென்றான். நந்தனும் நலமானார்.
ஸ்ரீ க்ருஷ்ணனின் இந்த லீலையைக் கேட்டு அனைவரும் ஆச்சர்யப் பட்டனர். நியமங்களை முடித்து திரும்ப வ்ரஜ தேசம் வந்தனர். ராமனும் க்ருஷ்ணனும் ஒரு இரவில் கோகுல பெண்களுடன் வனம் சென்றனர். நளினமாக பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் பொழுதை கழித்தனர். நல்ல ஆடை ஆபரணங்களுடனும் வாசனை பூச்சுகளுடனும் மாலைகளை அணிந்து நிலா வெளிச்சத்தில் அது மறையும் வரை, மல்லிகை மலர்கள் மலர்ந்து, குமுதங்களும் மணம் வீச வந்த சுகமான காற்றை அனுபவித்தபடி சர்வ ஜீவன்களுக்கும் மங்களம் தரும், கேட்டாலே மனம் அமைதியுறும் கீதங்கள், தங்கள் கற்பனையில் தோன்றிய படி பாடினர். ஸ்வரம், லயம் தவறாமல் மூர்ச்சனைகள் என்ற சங்கீத சாஸ்திரங்கள் நழுவாமல் பாடினர். அதில் மயங்கிய கோகுல ஸ்த்ரீகள் தங்களை மறந்தனர். அவர்கள் உணர்வில் மாலைகள் நழுவியதோ, ஆடை நழுவியதோ உறைக்கவேயில்லை. இவர்கள் இப்படி ஆடிப் பாடிக் கொண்டிருந்த சமயம் சங்க சூடன் என்ற தனதனின் அடியாள், வந்து சேர்ந்தான். அவர்களை பார்த்துக் கொண்டிருந்தவன் திடுமென கோகுல பெண்களை அபகரித்துக் கொண்டு ஓடினான். அவர்கள் கிழக்கு திசையிலிருந்து அலறியது கேட்டது. க்ருஷ்ணா, ராமா என்ற குரலைக் கேட்டு பசுவை ஏதோ திருடன் அபகரித்துக் கொண்டு போவது போல ஒலிக்க இருவரும் ஓடினர். பயப்படவேண்டாம் என்று சொல்லியபடி வேகமாக கிடைத்த ஆயுதத்தை எடுத்துக் கொண்டு ஓடி அவர்களை விடுவித்தனர். திருட்டுத் தனமாக அங்கு வந்த அதமன் அகப்பட்டான். கால ம்ருத்யு போல இருந்த அவர்கள் இருவரையும் கண்டதும் பெண்களை விட்டு விட்டு தன் உயிரை காத்துக் கொள்ள ஓடினான். அவன் ஓடும் இடங்களை பின் தொடர்ந்து சென்ற கோவிந்தன்,
பலராமனை பெண்களுக்கு காவலாக வைத்து விட்டு, துரத்திசென்று அவனுடைய தலையில் இருந்த ஸூடாமணி ரத்னத்துடன் முஷ்டியால் ஓங்கி அடித்து, வதைத்தான். சங்கசூடனை வதைத்து அவன் தலையில் அணிந்திருந்த ஒளி மிக்க ரத்னத்தை தன் சகோதரன் பலராமனுக்கு கொடுத்தான். பெண்கள் அனைவரும் அதை அன்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவத்தில் பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், சங்க சூட வதம் என்ற முப்பத்து நான்காவது அத்யாயம். ) ஸ்லோகங்கள் -32
அத்யாயம்- 35
ஸ்ரீ சுகர் சொன்னார்: கோகுல பெண்கள் மனதில் சதா ஸ்ரீ க்ருஷ்ணனின் சிந்தனை தான். வனத்துக்குச் சென்று திரும்பும் வரை பகல் பொழுதுகளில் க்ருஷ்ண லீலைகளையே பாடிக் கழித்தனர்.
கோகுல பெண்கள் இடது கன்னத்தை இடது கைகளால் தாங்கியபடி வேணுவை வாசித்தபடி செல்லும் முகுந்தனை மனதால் பின் தொடர்ந்தனர். வானத்தில் சஞ்சரிக்கும் சித்தர்களின் பெண்கள், இதைப் பார்த்து சற்று வெட்கத்துடனே இப்படி கூட உண்டா என்று அதிசயித்தபடி சென்றனர். பாவம், இந்த பெண்கள், கேளுங்கள் இவர்கள் பாடுவதை, நந்தன் மகன் இந்த எளிய பெண்களின் மனதைச் கவர்ந்து கொண்டு சென்று விட்டான். அவனுடைய வேணு கானமே இவர்கள் இதயத்தை துளைக்கிறது போலும் என்று மற்றவர்களிடம் சொன்னார்கள்.
வ்ருந்தாவனத்து, மாடுகளும், மிருகங்களும், பசுக்களும் , இந்த வேணு நாதத்தைக் கேட்டு மெய் மறந்து நிற்கின்றன. பாதி கடித்த கவளங்கள், காதுகளை நாதம் வரும் திசையில் வைத்து, வரைந்து வைத்த சித்திரம் போல ஆடாது அசையாது நிற்கின்றன, தூங்குவது போல அரைக் கண் மூடியபடி.
மயில் இறகுகள் பூங்கொத்தாக, பலாச தாதுக்கள், இவைகளால் அலங்கரிக்கப் பட்டவைகள், கன்றுகளுடனும், பசுக்கள் மற்ற கோகுல வாசிகளுடனும் முகுந்தனை அழைக்கின்றன.
நதிகள் தங்கள் பாதையை மறந்து குதித்து குதித்து செல்வதைப் பார்க்க, காற்றின் உதவியுடன் ஸ்ரீ க்ருஷ்ணனின் பாத தூளிகளை நனைத்துக் கொண்டு செல்ல விரும்புவது போல இருக்கிறது. நாம் தான் அந்த அளவு புண்யம் செய்யவில்லை போலும். அந்த நதி ஜலம் ப்ரேமையுடன் கைகளால் அளைந்து கொண்டு துள்ளிக் கொண்டு செல்வது போல இருக்கிறதை பாருங்கள்.
ஆதி புருஷனை அவன் அனுசரர்கள்- பின் பற்றுபவர்கள், அசலம் என்ற மலை மேல் செல்லும் வன விலங்குகள், அல்லது மலை வாசிகள், அவன் வேணு கானம் கேட்கும் விதமாகவே செல்கின்றன, செல்கின்றனர். அவன் இருப்பிடத்தை பசுக்கள் அந்த கீதம் மூலமாகவே அறிந்து கொள்கின்றன.
வனத்து மரங்கள், கொடிகள், தங்களுக்குள் ஸ்ரீ விஷ்ணுவை அறிந்து கொண்டதைப் போல முழுவதும் புஷ்பங்களால் மூடியவைகளாக இருக்கின்றன. தன் பாரத்தையே தாங்க முடியாத அளவு பெரிதான தேன் கூடுகள், ப்ரேமையால் மனம் நிறைந்து தேனை வழிய விடுகின்றன போலும்.
கண்ணுக்கு விருந்தாகும் திலகம், வன மாலை, திவ்ய கந்தமுடைய துளசி, மதம் கொண்டவைகள் போல தொடரும் வண்டுகள், தங்களுக்கு இணையாக தாளத்துடன் அந்த கானம் ஒலிப்பதாக நினத்தோ, வேணுவை தொடருகின்றன.
குளங்களில் சாரஸ, ஹம்ஸ பறவைகள், இந்த மனோ ரஞ்சகமான கீதத்தைக் கேட்டு ஹரியின் அருகில் வந்து நிற்கின்றன. ஆஹா! கண் மூடி, மௌனமாக ரசிக்கின்றன.
பலராமனுடன், உல்லாசமாக செல்பவனைக் கண்டு, மலைச் சாரலில் வ்ரஜ தேசத்து வனதேவதைகள், மகிழ்ந்து வேணு நாதத்தால் ஆகர்ஷிக்கப் பட்டு பூ லோகத்துக்கே வந்து நிறைகின்றனர்.
மேகம் அதிகமாக கர்ஜித்து விட்டால், தடையாகுமோ என்று மெள்ள மெள்ள அதிருகிறது. தங்கள் நண்பனான மலையை மெண்மையாக வர்ஷித்து, அவை தங்கள் இலைகளால் நல்ல நிழல் அளிக்கச் செய்கிறது.
வித விதமான பாத தடங்கள், கோகுலத்து இடையர்கள் ஸ்ரீ க்ருஷ்ணனுடன் நடந்து வேணு கீதத்தை ரசித்தபடி செல்கின்றனர். ஹே யசோதா! உன் மகன் வேணுவை வாசிப்பதிலும் நிபுணன். தானே தனக்கு குருவாக கற்றுக் கொண்டு விட்டான். ஸ்வரம் ஜாதி என்ற சங்கீத சாஸ்திரங்களையும் விடவில்லை. பூர்ணமாக கற்று தேர்ந்தவன் போல் பிசகு இல்லாமல் வாசிக்கிறான். மந்தர, மத்யம தார என்ற ஸ்தாயிகளில் வாசிக்கும் பொழுது தலை குனிந்து கேட்கும் அறிஞர்களும் தங்களை மறந்து ரசிக்கிறார்கள். இதுவரை சிறந்த பாடகர்கள் என்று பெயர் பெற்றிருந்த வித்வான்கள் கூட தங்கள் அபிமானம் விலக, வணங்கி இருந்து கேட்கின்றனர்.
உன் மகனின் பாதங்கள் படும் இடங்களில் பாதங்களின் அடியில் உள்ள அடையாளங்கள் தெளிவாக தெரிகின்றன. த்வஜம், வஜ்ரம், நீரஜா- தாமரை மலர், அங்குசம் என்று பலவிதமான சின்னங்கள் தெரிகின்றன. அவைகளின் மேல் நம் காலை வைத்து நடப்போம் என்று எண்ணினால் அந்த வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை.
மணிமாலை எதற்கு அணிந்திருக்கிறான், பசுக்களை தவற விடாமல் அனைத்தும் சரியாக இருக்கிறதா என்று சோதிக்க மாலையின் மணிகளால் எண்ணிப் பார்ப்பானா? ஏற்கனவே துளசி மாலை இருக்கிறது. அதன் மேல் இந்த மணிமாலையும். வீடுகளில் இருந்தபடியே கை வேலைகளுக்கிடையில் வேணு நாதத்தையே கேட்டுக் கொண்டிருக்கும் பெண்களைப் போலவே வனத்தில் பெண் மான்களும் தொடர்ந்து வந்து அந்த வேணு கீதத்தைக் கேட்டு அசையாமல் நிற்கின்றன.
ஹே யசோதா, மாலையில் திரும்பும் பொழுதும் சோர்வில்லாமல் வனத்தில் கிடைக்கும் மல்லிகை பூக்களைக் கொண்டு மாலைகளை அணிந்து மாடுகள் விடுபடாமல் அவைகளை ஒருங்கிணைத்து ஓட்டி வருகிறான் உன் மகன். சிலர் யசோதையின் மைந்தன் என்பர், சிலர் நந்த சூனு- நந்தன் மகன் என்பர்.
மலையின் இதமான காற்று மலய மாருதம் சுகமாக சந்தண மணத்தை ஏந்தி வரும். குளுமையான அந்த காற்று உடலில் பட்டாலே இதமாக இருக்கும். இந்த மலய மருதம் தென் பகுதியிலிருந்து வரும். உன் மகனின் உடலில் பூசியிருக்கும் சந்தணம் மணம் அதிக குளிர்ச்சியா அல்லது தன் காற்று அதிக குளிர்ச்சியா என்றறிய சந்தணத்தை தொட்டு பார்ப்பது போல இருக்கிறது. அரச சபைகளில் பாடுவதே தொழிலாக இருக்கும் வந்தி என்பவர்களை போல கந்தர்வ வித்யாதரர்கள், பூமாரி பொழிந்தும், வாத்யங்களை வாசித்தபடியும் உடன் வருகிறார்கள்.
தூரத்திலிருந்தே வ்ரஜ வாசிகள், பசுக்களை வாத்சல்யத்தோடு பார்க்கின்றனர். முதியோர்கள் கூட கோவர்தன மலையைத் தாங்கி பிடித்து தங்களை காத்த உன் மகனையும் வாத்சல்யத்தோடு பார்க்கின்றனர். ப்ரும்மா முதலான பெரியவர்களும் வணங்கும் பாதம். மேய்ந்தபின் வரும் பசுக்கள் ஆவலுடன் கொட்டில்களுக்கு திரும்புகின்றன. அவைகளின் கண்களில் மகிழ்ச்சியும், வேகமான நடையில் மிதிபட்டு பூமாலைகள் குளம்புகளில் மாட்டிக் கொள்ளும். தேவகி மைந்தன் நமது நண்பன் என்று சந்திரனும் தன் கிரணங்களுடன் ஒளி விசிக் கொண்டு வந்து சேருவான்.
நாள் முழுவதும் வனத்தில் அலைந்து பதரி- இலந்தை பழம் போல முகம் வாடி வீடு திரும்பி தன் மக்களை காண விழையும் இடையர்கள் கூட்டத்தில் தானும் அதே அளவு ஓய்ந்து போய் இருந்தாலும் கஜ ராஜன் போல உத்சாகமாக மற்றவர்களுடன் சிரித்து பேசியபடி உன் மகன் வ்ரஜ ப்ரதேசத்தில் நுழைந்ததும் தங்கள் மனோரதங்கள் பூர்த்தியானது போல வ்ரஜ தேசத்தினர் மனம் மகிழ்வார்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: அரசனே! அனவரதமும் ஸ்ரீ க்ருஷ்ண தியானமாகவே வ்ரஜ தேசத்து பெண்களும் மற்றவர்களும் தங்கள் வேலைகளினூடே பொழுதைக் கழித்தனர். தன் வரவினாலேயே அவர்கள் தாபத்தை போக்கியவராக ஸ்ரீக்ருஷ்ணர் வருவார்.
(இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில் வ்ருந்தாவன க்ரீடாயாம்கோபிகா யுகள கீதம் என்ற முப்பத்தைந்தாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்-25
பத்தாவது அத்யாயம்- முதல் பகுதி
அத்யாயம் -36
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஒரு நாள் திடுமெனஒரு அசுரன் ரிஷப ரூபத்தில் வந்தான். பசுக்களின் கொட்டில்கள் இருந்த இடத்தில் தன் பெரிய திமில்களுடன், மிகப் பெரிய உருவத்துடன், தன் குளம்புகளால் மிதித்து பூமியை பிளந்து விடுவது போல ஓசை எழுப்பினான். கடுமையான குரலில் குரலெழுப்பி. பாதங்களால் மாறி மாறி தரையை மிதித்து வாளை தூக்கி, குனிந்து கொம்பின் நுனியால் கிடைத்ததை குதறியது. அடிக்கடி சிறுநீர் கழித்தும், கண்கள் குத்திட்டு நிற்க, நிஷ்டூரமாக அங்கிருந்த பசுக்கள் மற்றும் காளைகள் கன்றுகளை பயமுறுத்தியது. சினை கொண்டிருந்த பசுக்கள் அகாலத்தில் கன்றுகளை ஈன்றன. பயத்தால் நடுங்கின. அகாலமாக பூமி அதிர்ந்து, மலை போல ஏதோ தங்கள் மேல் விழுந்து விட்டதாக நினைத்து அலறின.
கோகுலத்து ஆண்களும் பெண்களும் ஓடி வந்தனர். பசுக்கள் பயந்து தாறு மாறாக ஓடின. அனைவரும் க்ருஷ்ண. க்ருஷ்ணா என்று அழைத்தனர். கோவிந்தா வந்து பார் என்றனர். ஓடி வந்தவர், அவர்கள் பயத்தால் நடுங்கி கொண்டிருப்பதைக் கண்டனர். பயப்படாதீர்கள் என்று சொல்லி அவர்களை சமாதானப் படுத்தி விட்டு, விருஷாசுரன்- ரிஷப-காளை ரூபத்தில் வந்த அசுரனை அழைத்தார். அசட்டுத் தனமாக ஏன் இந்த சாது ஜீவன்களை மிரட்டுகிறாய். மந்த புத்தியுடையவன் நீ. உன் பலத்தால் வந்த கர்வம் இது. துராத்மாக்கள் இப்படித்தான், தன் பலத்தில் கர்வம் கொண்டு பலமில்லாதவர்களிடம் தங்கள் வீரத்தைக் காட்டுவார்கள். சொல்லிக் கொண்ட கைகளை பலமாக தட்டியபடி எதிரியாக வந்த ரிஷபத்தை- காளையை அணுகினார். அதுவும் பாய்ந்து முட்ட வந்தது. கொம்பை தாழ்த்திக் கொண்டு மூர்கமாக, இந்திரனின் வஜ்ரம் விழுவது போல எதிர்த்த காளையை நெருங்கி அதன் கொம்புகளை அழுந்த பற்றிக் கொண்டார். பதினெட்டு அடிகள் பின் புறமாக நடந்து, யானை, தன்னை எதிர்க்கும் மற்ற யானையை அடக்குவது போல அடக்கி விட்டார். அதுவோ, உடனே எழுந்து, உடல் க்ரோதத்தால் துடிக்க, பெரு மூச்சு விட்டது. கொம்புகளை விடாமல், அது தன் மேல் வந்து விழுவதையும் தடுத்தபடி, பாதங்களால் இடறி விட்டு பூமியில் விழச் செய்தார். அதன் மேல் நின்று, அதன் கொம்புகளாலேயே குத்தி வதைத்தார். அதுவும் பூமியில் விழுந்தது.
வாயிலிருந்து ரத்தமாக வெளியில் வர, சிறுநீர் கழித்தபடி தலையும் உடலும் தரையில் கிடக்க, உயிரை விட்டது. தேவர்கள் வந்து ஸ்ரீ ஹரியை துதித்து பூமாரி பொழிந்தார்கள்.
இப்படி பெரிய திமில் கொண்ட ரிஷப அசுரனை வதம் செய்தபின் ஸ்ரீக்ருஷ்ணனுடன் மற்றவர்களும் கோகுலத்திற்கு திரும்பினர். இந்த சம்பவத்தை நாரதர் கம்சனிடம் சொன்னார். யசோதை பெற்ற கன்யா, தேவகியின் க்ருஷ்ணன், ராமன் ரோஹிணி புத்ரனாக வளருவது என்ற விஷயங்கள் உன்னிடம் பயந்த வசுதேவனால் தன் மித்ரனான நந்தனிடத்தில் நியாசமாக- பாதுகாப்பாக வைக்கப் பட்டது என்பதையும் சொன்னார். போஜ ராஜன் அதைக் கேட்டு கண்கள் சிவக்க உடல் துடிக்க ஆத்திரப்பட்டான். கூர்மையான வாள்களை கொண்டு வாருங்கள் வசுதேவனை வதைக்க என்றான்.
நாரதர் தடுத்தார். யாரும் அந்த கட்டளையை ஏற்கவில்லை, தங்களுக்கே அதனால் ஆபத்து என்று வாளாவிருந்தனர். நாரதர் அகன்றதும், இரும்பு சங்கிலிகளால் வசுதேவரை மனைவியுடன் சேர்த்து கட்டி, சிறையிலிட்ட பின், கேசினீ என்ற தன் அடியாளை அழைத்தான். ராமன், கேசவன் இருவரையும் கொன்று வா என்று அனுப்பினான். அது போதாது என்று முஷ்டிகன், சாணூரன் என்ற மல்லர்களை அனுப்பினான். சல, தோசல என்ற மல்லர்களும் உடன் சென்றனர். மந்திரிகள், ஹஸ்தி பாதன், முதலானவர்களைக் கூப்பிட்டு, ஹே! கேளுங்கள். இந்த வீரர்கள், சாணூர முஷ்டிகர்கள், நந்தனுடைய வ்ரஜ தேசம் சென்றனர். ஆனக துந்துபி என அழைக்கபடும் நந்தன், அவன் வீட்டில், எந்த குமாரர்களால் எனக்கு ம்ருத்யு என்று கேட்டோமோ, அவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் அனைவரும் உடன் இருந்து இந்த மல்லர்கள் அச்சிறுவர்களை கொல்லும்படி செய்யுங்கள் என்றான். பெரிய அரங்குகள் ஏற்பாடு செய்யுங்கள். ஒருவரோடு ஒருவராக செய்யும் மல் யுத்தம் விமரிசையான ஏற்பாடுகளுடன் நடக்கட்டும். பொது ஜனங்களை அழைத்து கூட்டமாக அனைவரும் பார்க்கும் படி இந்த மல்யுத்தம் நடக்க வேண்டும். மஹாமாத்ர! முதன் மந்திரியே, குவலயா பீடம் என்ற அந்த மதம் பிடித்த யானையை அரங்கத்தின் வாயிலில் நிறுத்துங்கள். அதைக் கொண்டு அந்த சிறுவர்களை மிதிக்கச் செய்யுங்கள்.
தனுர் யாகம் என்ற பெயரில் உத்சவங்கள் ஆரம்பியுங்கள். நியமமாக யாகம் செய்ய என்ன செய்வீர்களோ அனைத்தும் குறைவற செய்யுங்கள். சதுர்தசியன்று பகவான் பூதபதியான பரமேஸ்வரன் பேரில் யாகம் நடப்பதாக காட்டிக் கொள்ள வேண்டும். தேவையான சாமான்களை பலரும் காண சேமித்து வையுங்கள். இப்படி அவர்களுக்கு ஆணையிட்டு விட்டு, தந்திரமாக அக்ரூரரை அழைத்துச் சொன்னான். ஹே! தானபதே! எனக்கு உங்களால் ஒரு வேலை ஆக வேண்டும். என் ஆப்த நண்பனாக அதைச் செய்து கொடுங்கள். உங்களை விட மேலான என் நலம் விரும்பி இருக்க முடியாது. போஜர்களிலும் சரி, வ்ருஷ்ணிகளிலும் சரி, வேறு யாரையும் உங்களை விட தகுதியான நபராக நான் நினைக்கவில்லை. ஆகவே, உங்களை வேண்டிக் கொள்கிறேன். சௌம்ய! காரியம் அவ்வளவு கம்பீரமானது. இந்திரன் பகவான் விஷ்ணுவிடம் சென்று தன் காரியங்களை சாதித்துக் கொள்வான் அல்லவா, அது போல எண்ணிக் கொள்ளுங்கள்.
நந்தனின் வ்ரஜ தேசம் போங்கள். அங்கு ஆனக துந்துபியின் புத்திரர்கள் இருப்பார்கள். அவர்களை உங்கள் ரதத்தில் ஏற்றிக் கொண்டு உடனடியாக திரும்பி வாருங்கள். அவர்கள் தேவகியின் வயிற்றில் பிறந்தவர்கள். எனக்கு ம்ருத்யுவாக இருப்பார்கள் என்று சொல்லப்பட்டது தெரியும் அல்லவா? மற்ற கோகுலத்து பெரியவர்கள், நந்தன் போன்றவர்களுக்கு நிறைய பரிசுகள் கொண்டு செல்லுங்கள்.
இனியும் பொறுக்க முடியாது. நான் ஏற்பாடுகள் செய்து விட்டேன் இருவரையும் காலன் போன்ற யானை காலில் மிதிபட செய்வேன். அதிலிருந்து தப்பினால், மல் யுத்த வீரர்கள் அவர்களை மல் யுத்தம் செய்ய அழைத்து கொல்வார்கள். அவர்கள் இருவரும் மின்னல் போல மல் யுத்தம் செய்பவர்கள். அவர்கள் பலசாலிகள். நிச்சயம் இந்த செயலை செய்து முடிப்பார்கள். அதன் பின் வசுதேவன் அவன் அடியாட்கள், அவனைச் சார்ந்தவர்கள் அனைவரையும் கொல்வேன். வ்ருஷ்ணி, போஜ, தாசார்ஹ என்ற யது குலத்தினர் ஒருவரும் மிஞ்ச விட மாட்டேன். தந்தை உக்ர சேனன், முதியவன், இன்னமும் ராஜ்யத்தை ஆள விரும்புகிறான். அவன் தம்பி தேவகன், மற்றும் யாரெல்லாம் என்னை எதிர்க்கிறார்களோ அனைவரையும் கொல்வேன். மித்ரனே! அதன் பின் இந்த பூமி என்னுடையதே. எந்த வித இடையூறும் இன்றி அரசனாவேன். ஜராசந்தன் என் குரு. த்விவிதன் என் நெருங்கிய சகா. சம்பரன், நரகன், பாணன், இவர்கள் என்னிடம் நட்பு கொண்டவர்கள். அவர்களுடன் நான் தேவ பக்ஷத்திலிருந்து யார் எதிர்த்து வந்தாலும் போரில் வெல்வேன். அகண்டமான ராஜ்யத்தை ஏக போகமாக நான் ஆள்வேன். சகே! இதெல்லாம் நினைவில் கொள்வாயாக. சீக்கிரம் அந்த சிறுவர்களை அழைத்து வா. ராமன், க்ருஷ்ணன் என்ற இருவர். தனுர் யாகம் என்று அழைத்த தாகச் சொல்லுங்கள். யது புரத்தில் செல்வ செழிப்பையும் அழகையும் பார்க்கலாம் என்று சொல்லுங்கள்.
அக்ரூரர் சொன்னார்: ராஜன்! உங்கள் மரணத்துக்கு காரணமானவர்கள் என்று நினைப்பவர்களை ஒழிக்க நினைப்பது நியாயமே. இதில் பலன் இருக்கலாம், இல்லாமலும் போகலாம். தெய்வ சங்கல்பம் இருக்க வேண்டும். செயல்களின் பலனை நிர்ணயிப்பது அதுவே. மனிதர்கள் மனக் கோட்டைகள் கட்டலாம். வானளாவ ஆசைகள் இருக்கலாம். தெய்வம் என்ன செய்யும் என்று பேசுபவர்கள் கூட சோகமோ, மகிழ்ச்சியோ அடைய தகுதி உடையவர்களே. அதனால் உங்கள் ஆணைப் படி செய்கிறேன்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு அக்ரூரரை நியமித்து விட்டு, மந்திரிகளையும் கட்டளையிட்டு அனுப்பி விட்டு, கம்சன் தன் மாளிகை சென்றான், அக்ரூரரும் தன் வீட்டிற்குச் சென்றார்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், அக்ரூர சம்ப்ரேஷணம் என்ற முப்பத்து ஆறாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்- 40
அத்யாயம்-37
ஸ்ரீ சுகர் சொன்னார்: கேசி என்பவன் கம்சனால் அனுப்பட்டான். பெரிய குதிரை வடிவம் கொண்டவன் அவன். வாயு வேகத்தில் வந்தான். அவன் குளம்பின் அடியில் பூமி நழுவியது போலிருந்தது. பிடரி மயிர் பின் பக்கமாக கொடி போல வீசியது. ஆகாயமே அந்த வேகத்தால் பயந்து நடுங்கியது. அகில உலகமும் ஆட்டம் கண்டது. விசாலமான கண்களும், முகத்தின் குகை போன்ற உள் புறமும், மிகப் பெரிய கழுத்தும், அதுவே நீல வானம் போல பரந்து இருந்ததோ, கம்சனுக்கு பிரியமானதை செய்வதே குறிக் கோளாக, நந்தனின் வ்ரஜ தேசம் வந்தான். வ்ரஜ தேசத்தை பய முறுத்தியபடி வந்தவனைப் பார்த்து பகவான் இது யார் நம் கோகுலத்தை தாக்குவது என்று வெகுண்டார். தன் முன் ரூபமான ம்ருகேந்திரன்- சிங்க ரூபத்தை எடுத்துக் கொண்டார். தன் எதிரின் நின்ற பகவானை பாதங்களால் முட்டினான் கேசி. சண்ட மாருத வேகத்தில் வந்தவன், எதிர்க்க முடியாது என்ற இறுமாப்புடன் நின்றான். அதோக்ஷஜன் இருகைகளாலும் அதன் தோள்களைப் பற்றி தன் கால்களின் இடையில் வைத்துக் கொண்டு தன் வில் நுனியால் கருடன் பாம்பை தூக்குவது போல தூக்கினார். மயங்கிய நிலையில் இருந்த கேசி கிடைத்த இடைவெளியில் விழித்துக் கொண்டான். பகவானும் அவன் வாயினுள், தன் புஜம் வரை நுழைத்தார், பள்ளத்துக்குள் பாம்பை தள்ளுவது போல இருந்தது. அவன் பற்கள் உடைந்து விழுந்தன. கேசி தன் வாயினுள் நுழைந்த பகவானின் புஜங்களால் பெரிதும் பாதிக்கப் பட்டான். மகாத்மாக்களே ஆனாலும் வியாதிகள் கவனிக்காமல் விட்டால் தீர்வே வழி இல்லாமல் போவது போல. மூச்சுக் காற்று தடைப் பட்டதாலும், பாதங்களை உதைத்துக் கொண்டு தடாலென விழுந்தான். அவன் உடலில் இருந்து தன் புஜங்களை விடுவித்துக் கொண்ட பகவான், அவைகளை உதறி சுத்தம் செய்து கொண்டார். பூமாரி பொழிந்தது.
தேவ ரிஷி வந்து மற்ற பாகவர்களுடன் வந்து க்ருஷ்ணனிடம் ரகசியமாக ஒரு விஷயத்தைச் சொன்னார். க்ருஷ்ணா, நீ ஜகதீஸ்வரன்.யோகேசன். வாசுதேவன், அகில உலகமே உன் இருப்பிடம். ப்ரபோ, நல்லவர்கள் வணங்கும் நீயே தான் அனைத்து உயிரினங்களிலும் ஆத்மாவாக இருக்கிறாய். ஒரே ஜோதி நீயே. ரகசியமானவன், மகா புருஷன், ஈஸ்வரன். நீ தன்னிலேயே லயிக்கும் சர்வ லோகாஸ்ரயன். உன் மாயையால் குணங்களை தோற்றுவித்தாய், பின் சத்ய சங்கல்பனாக ஸ்ருஷ்டி,ஸ்திதி,லயம் என்று நடத்திக் கொண்டிருக்கிறாய். இப்படிப் பட்ட நீ, பூவுலகில் அவதரித்தாய். கர்வம் கொண்ட தைத்யர்களை அடக்கவும், நல்லவர்களை ரக்ஷிக்கவும் என்று வந்தாய். இந்த குதிரை வடிவில் வந்த அசுரனையும் நல்ல வேளையாக வதைத்து விட்டாய். இந்த குதிரை கணைக்கும் சத்தமே தேவலோகத்தை நடுங்க வைத்தது. கம்சன் இன்னமும் சிலரை அனுப்பியிருக்கிறான். சாணூரன், முஷ்டிகன் என்ற மல் யுத்த வீர்கள் தங்கள் அடியாட்களுடன் வருகிறார்கள். நாளை மறுநாள் நீ கம்சனையும் வதம் செய்வாய் என எனக்குத் தோன்றுகிறது.
இன்னும் நீ செய்ய வேண்டியது நிறைய உள்ளது. பூமியிலும், உரக,நரகத்திலும் பாரிஜாத மரத்தை அபகரித்து இந்திரனை தோற்கடித்த, வீர கன்யா ஸ்த்ரீகளை, வீர்ய சுல்கம் என்ற பெயரில் அபகரித்தவனை கொல்லவேண்டும். ந்ருக அரசனுக்கு விமோக்ஷணம் தர வேண்டும். த்வாரகாவில் ஜகத்பதே, ஸ்யமந்தக மணியை பெற வேண்டும் அத்துடன் உன் மனைவியையும் பெறுவாய். குருவான அந்தணனின் இறந்த குழந்தைகளை மீட்டுத் தர வேண்டும். பௌண்ட்ரக வதம், அதன் பின் காசி புரியை முற்றுகையிட்டு வெற்றி கொள்ள வேண்டும், தந்த வக்த்ரன் வதம், சேதி அரசனை பெரும் யாகத்தில் வதைக்க வேண்டும், இன்னும் பல வீர செயல்களைச் செய்வாய் என்று நான் நம்புகிறேன். த்வாரகாவாசியாக உன்னை பலரும் பாடுவதைக் கேட்பேன். அதன் பின் கால ரூபனாக பெரும் எண்ணிக்கையில் யுத்தமும், அதில் பெரும் நாசமும், அர்ஜுன சாரதியாக உன்னைக் காண்கிறேன்.
மிக சுத்தமான ஞான ரூபியாக, வேண்டுபவர்களுக்கு வேண்டியதைக் கொடுப்பவனாக, குண ப்ரவாகமாக உன்னை கண்டு வணங்குகிறேன். பகவானே நீ ஈஸ்வரன், உன் ஆத்ம மாயையால், தனித்வமான கல்பனையால், உன் விளையாட்டு வினோதம் காரணமாக மனித உருவம் எடுத்து வந்துள்ளாய். இந்த வ்ருஷ்ணி தேசம் புண்யம் செய்தது. அதை வணங்குகிறேன்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு யது பதியான ஸ்ரீ க்ருஷ்ணனை பாகவதர்களுல் முக்கியமாக கருதப் படும் நாரதர் வணங்கி அனுமதி பெற்று விடை பெற்றார். பகவானும் கேசி வதம் ஆன பின், எதுவும் காட்டிக் கொள்ளாமல் வழக்கம் போல பசுக்களை மேய்க்கச் சென்றார். மற்ற இடையர் குல தோழர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் உடன் வந்தனர். மலைச் சாரலில் பசுக்கள் மேய்ந்து கொண்டிருக்கும் சமயம் திருடன், காவலன் விளையாட்டில் ஈடுபட்டனர். சிலர் திருடர்களாகவும், மற்றும் சிலர் ஆடுகளாகவும், -மேஷங்களாகவும்- வேடமிட்டுக் கொண்டனர். பயமின்றி விளையாட்டு தொடர்ந்த து.
அந்த சமயம் மய புத்ரன்- மயன் என்ற அசுரன் மகன்- வ்யோமன் என்பவன் கோபாலனாக உருவம் எடுத்துக் கொண்டு மேஷமாக நின்ற சிறுவர்களை தூக்கிச் சென்றான். ஒவ்வொருவராக தூக்கிச் சென்று மலை சாரலில் குகையில் ஒளித்து விட்டு திரும்பி வருவான். இன்னமும் நாலைந்து பேர் தான் பாக்கி என்ற நிலையில் குகை வாசலை அடைத்து விட்டான். இதையறிந்ததும் க்ருஷ்ணன் ஓனாயை சிங்கம் கௌவிப் பிடிப்பது போல பிடித்து, திணறடித்தார். வ்யோமன், தன் மலை போன்ற ரூபத்தை எடுத்துக் கொண்டவன் தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் அந்த பிடியில் வருந்தினான். அவனை அப்படியே பூமியில் விழச் செய்து தேவர்களின் எதிரிலேயே வதைத்தார். பின் தேடிச் சென்று குகையில் அடைபட்டிருந்த தோழர்களை வெளியில் கொண்டு வந்து, எல்லோருமாக கோகுலம் வந்தடைந்தனர். தேவர்கள் துதி செய்தனர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், வ்யோமாசுர வதம் என்ற முப்பத்து ஏழாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்-34
அத்யாயம் -38
ஸ்ரீ சுகர் சொன்னார்: அன்றிரவு மதுராவில் இருந்து விட்டு, விடிந்ததும் அக்ரூரர் ரதத்தில் கோகுலம் வந்தார். போகும் வழியெல்லாம் அவருக்கு பகவானின் கமலம் போன்ற கண்களே மனதில் இருந்தது. மனதில் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் பக்தி உடையவர், யோசித்தார்.
என்ன செய்ய துணிந்து விட்டோம்? இதுவரை நான் செய்த தவம், விரதங்கள், செய்த தான தர்மங்கள் கை கொடுக்குமா? எந்த விதத்திலாவது அச்யுதனை காப்பாற்ற முடியுமா? கேசவனை காப்பாற்ற என்ன செய்யலாம்? எனக்கு அந்த உத்தம ஸ்லோகனுடைய தரிசனம் கிடைப்பதே துர்லபம். உலகியலில் மூழ்கியவனுக்கு ப்ரும்ம தரிசனம் கிடைக்குமா? ப்ரும்ம ஞானம் கிடைத்து பாடுவானா? அது போலத்தான். நானும் இப்பொழுது அதமனே. அச்யுதனை கண்டிப்பாக பார்க்கப் போகிறேன். ஓடும் நதியின் ப்ரவாகத்தில் அடித்துச் செல்லப் பட்டாலும் சில பொருட்கள் கரையேறுவதும் உண்டு. அது போல கால நதியில் நானும் மிதந்து வந்தவன், இதோ கேசவனைக் காணப் போகிறேன். இதுவரை எப்படி இருந்தேனோ இனி எனக்கு அமங்களம் என்பதே இல்லை. என் வருங்காலம் யோகிகளுக்கு தியான விஷயமாக இருக்கும் பகவான் தர்சனம் கிடைக்கப் பெற்று உய்யப் போகிறது.
கம்சன் சொன்னது வேறு காரணத்திற்காக. இருந்தாலும் எனக்கு அது அனுக்ரஹமே. ஸ்ரீ ஹரியிடம் என்னை அனுப்ப அவனுக்குத் தோன்றியதே, அதுவே என் பாக்யம். இருளில் மூழ்கிய உலகை அவன் பாத நகங்களின் ஒளியே ப்ரகாசமாக்கிவிடும். இந்த கோகுலத்தில் அவதரித்தவன் அந்த பகவானே தான்.
ப்ரும்ம வாதிகள் எனும் சாதகர்கள் யாரை அர்ச்சித்தார்களோ, தேவர்களும், ஸ்ரீ லக்ஷ்மி தேவியும் எவரை பூஜிக்கிறார்களோ, முனிகள் இடை விடாது தியானிக்கிறார்களோ, அந்த திவ்ய பாதங்கள், கோகுலத்தில் பசுக்களை மேய்த்துக் கொண்டு பூமியில் நடமாடுகிறது. கோகுல ஸ்த்ரீகள் வணங்கும் பொழுது அவர்கள் குங்குமம் பட்டு அந்த பாதங்கள் சிவந்திருக்கும். கண்டிப்பாக நான் பார்க்கத்தான் போகிறேன். அழகிய கன்னங்களும் எடுப்பான மூக்கும், மென் முறுவலுடன் கூடிய பார்வையும், தாமரை போன்ற கண்களும், முகுந்தனை சுற்றி வரும் மிருகங்கள் கூட ப்ரதக்ஷிணம் செய்து பலனடைகின்றனவே.
இன்று எனக்கு காணக் கிடைக்குமா? ஸ்ரீ விஷ்ணு மனிதனாக எடுத்த அவதாரம். பெரும் பாரத்தை சுமந்து தன் சங்கல்பத்தால் எடுத்து வந்துள்ள அவதாரம். அழகே உருவானவன். அனைவருக்கும் சரணம் தருபவன். என் கண்ணில் பட்டாலே எனக்கு பாக்யம். முழுவதுமாக கண்ணால் காணக் கிடைக்கப் போகிறது. தான் என்ற கர்வம் இல்லாதவன், சத்- குணவானோ, அசத்- குணமற்றவனோ, யாரானாலும், தன் தேஜஸால், அவர்களுடைய குணக் குறைவை நீக்கி விடுவான். அவன் மாயை, அதுவே வலிமை கொண்டது. அதன் சக்தியால் குணமில்லாதவனின் இயல்பை கூட மாற்றி விடுவான், அதாவது அவர்களுடைய மன ஓட்டமே, எண்ணங்களே மாறி, நல்ல எண்ணங்கள் மனதில் நிரம்பும், அதனால் லௌகிகமான வசதிகளைக் கூட பெறுவான்.
எவருடைய சுமங்களமான மறை பொருளுடைய வார்த்தைகளால், குணம், செயல், பிறவி இவைகளால், உலகில் ஜீவன்கள், பிறக்கின்றன, மறைகின்றன பின் திரும்பவும் பிறக்கின்றன. அதை மறுத்து பேசுபவர்கள் நம்பிக்கையின்றி இருப்பவர்கள், உயிரோடு இருந்தாலும் உயிரற்ற பிம்பங்களே. வ்ரஜ தேசத்து பெருமையை கூட்ட இங்கு அவதரித்திருக்கிறான். மிகவும் எளிய சாதுக்களான மக்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையில் பாலம் போல. இந்த வ்ரஜ தேச மக்கள் ஈஸ்வரனாக அறிந்து கொண்டு பாடுகிறார்கள், இதைப் பார்த்து தேவர்களும் அசேஷ மங்களங்களையும் ஆசீர்வதிக்கிறார்கள்.
இன்று கண்டிப்பாக நான் பார்க்கத்தான் போகிறேன். மகான்கள் தங்கள் குருவாகவும், தங்கள் சாதனைகளின் பலனாகவும் எண்ணும் பகவான். மூவுலகையும் வசீகரிக்கும் தன்மையுடையவனை காண்பதே கண் படைத்த பலனாக நினைப்பார்கள். ஸ்ரீ லக்ஷ்மி தேவிக்கு தன்னில் இருப்பிடம் கொடுத்தவன், அவனை உஷத் காலத்தில் விடிந்தும் விடியாமலும் இருக்கும் காலை நேரத்தில் காணும் பாக்யம் பெறுவேன். அதுவே சுதர்சனம்- பகவானைக் காண நல்ல நேரம்.
அதன் பின் ரதத்திலிருந்து இறங்கி, மனதில் ராம, க்ருஷ்ணர்களையும், அவர்களின் சகிகளான கோகுலத்து பெண்களையும் நினைத்து வணங்கியபடி, மற்ற கோகுல வாசிகளையும் மானசீகமாக வணங்கினார். நான் போய் காலில் விழுந்து நமஸ்கரித்தால் ஏற்றுக் கொள்வாரா? தன் கைகளால் தூக்கி ஆசீர்வதிப்பாரா? அவரை சரணடைந்தவர்களை தன் புஜ பராக்ரமத்தால் ரக்ஷிப்பவர் என்னை கை விட மாட்டார். மகா பலி தானம் கொடுத்து மூவுலகுக்கும் இந்திரனாகும் தகுதியை அடைந்தான். கௌசிகனான இந்திரன் அர்க்யம் சமர்ப்பித்து வணங்கி இந்திர பதவியை அடைந்தான். ஆஹா, இந்த பூமி பாக்யம் செய்தது. இங்கு தான் கோகுலத்து பெண்களுடன் இருந்து அவர்கள் சிரமத்தை தன் ஸ்பர்சத்தால் போக்கினான். என்னையும் அவ்வாறு வந்து அணைப்பானா? கம்சனின் தூதன் என்று விலகி நிற்பானா? உலகத்தை அவன் காணும் விதமே வேறு. உள்ளும் புறமும் பார்த்தவுடன் தெரிந்து கொள்வான். எதையும் அவனிடம் மறைக்க முடியாது. அவன் க்ஷேத்ரஞன். சரீரத்தில் உள்ள ஆத்மா அவன் அம்சமே. நம் மன நிலையை கண்டதுமே அறிந்து கொள்ளக் கூடியவன். என்ன தான் வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருந்தாலும் தவறான எண்ணத்துடன் அவனை அணுகவே முடியாது. தோழர்களுக்குள் சிறந்த தோழன். அதோடு எனக்கு தாயாதி. மற்றொரு தெய்வம் எனக்கில்லை என்பதையும் அறிந்தவன். அதனால் என்னை இரு கைகளாலும் அணைத்து வரவேற்பான். அதன் பின் என் ஆத்மாவே பரிசுத்தமாகி விடும். என் வினைப் பயன்கள் அனைத்தும் மறைந்து விடும். அவன் சரீரத்துடன் எனக்கு ஆலிங்கணம் செய்து கொள்ள வாய்ப்பு கிடைக்குமா? கை கூப்பி வணங்கியபடி செல்வேன். என் கைகளைப் பற்றி அக்ரூரா வா என்றழைப்பான். இந்த பிறவி பெற்ற பயனை அடைவேன்.
அவனுக்குத் தான் தன்னைச் சார்ந்தவன் பிறன் என்ற வேறு பாடே கிடையாதே. அவனுக்கு யார் எதிரியாக எதிரில் நிற்க முடியும். யாரையுமே அலட்சியம் செய்பவன் அல்ல. இருந்தாலும் பக்தியுடன் பஜிப்பவர்களை கற்பக மரம் போல காப்பான். அந்த மரம் யார் அதனிடம் வந்து நிற்கிறார்கள் என்று பார்த்தா பலன் தரும்? அவன் முன் பிறந்தவன் உடன் இருப்பானே. அவனையும் வணங்குவேன். மெல்ல நகைத்தபடி அருகில் வருவான். என் கூப்பிய கரங்களை பிடித்து அணைத்து, வீட்டினுள் அழைத்துச் செல்வான். வீட்டிற்கு வந்தவர்களுக்குச் செய்யும் உபசாரங்களைச் செய்வான். கம்சன் தன் பந்துக்களுக்கு என்ன செய்தான் என்று விசாரிப்பான்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு மனதில் ஸ்ரீ க்ருஷ்ணனையே நினைத்தபடி ரதத்தில் சென்றார். கோகுலம் சென்றடையும் சமயம் ஸூரியனும் மலை வாயில் விழுந்தான். கோகுலத்து மண்ணில் அவர்கள் பாதங்கள் நடந்த தடயங்களைக் கண்டார். பசுக்கள் இருக்கும் கொட்டில்கள், பகவானின் பாதங்களின் தாமரை, அங்குசம் போன்ற சின்னங்கள் பதிந்த மணல் வெளியைக் கண்டார். அதை கண்டதுமே மனதில் மகிழ்ச்சி பொங்கியது. பரபரப்புடன், மயிர் கூச்சலெரிய , கண்களில் நீர் பெருக ரதத்தில் இருந்து இறங்கி அதில் கைகளால் அளைந்தார். ஆ, இவை ப்ரபு நடந்து சென்ற இடம் அல்லவா, அவனுடைய பாதம் பட்ட இடம், மனிதனாக எடுத்த பிறவி பெறும் மிகப் பெரிய பாக்யம். எந்த கஷ்டமானாலும் மறந்து போகும். தம்பம், பயம், கவலை எதுவும் இராது. என்ன சொல்ல வந்தோம் என்பதும் மறந்து ஸ்ரீ ஹரியின் பாதம் பட்ட மணலையே வணங்கினார்.
அதே சமயம் மாட்டுக் கொட்டிலில் இருந்து பால் கறக்கச் சென்ற ராம, க்ருஷ்ணர்கள் திரும்பி வந்தனர். ஒருவன் பொன்னிற ஆடையுடன், மற்றவன் நீல நிற ஆடையுடன். சரத் கால மலர்கள் போல மலர்ந்த மனம் கவரும் கண்களுடன், இருவருமே கிசோர, எனும் பருவத்தினர். ஒருவன் மேக சியாமளன், மற்றவன் வெண்ணிறம். லக்ஷ்மீ தேவி வசிக்கும் அழகுடையவர்கள். பெரிய புஜங்களும், சுமுகமான சுந்தர வதனம் உடைய வீரர்கள், யானை போன்ற விக்ரமம் உடையவர்கள். கொடியும், வஜ்ராங்குசம், அம்போஜ-கமல மலர்கள் அவர்கள் பாதங்களில் அடையாளமாக தெரிய, வ்ரஜ தேசமே அதனால் அலங்கரிக்கப் பட்டதாக ஆயிற்று. இருவருமே மகாத்மாக்கள். கண்களின் பார்வையிலேயே கருணையை பொழிபவர்கள்.
உல்லாசமாக விளையாடி, மாலைகள் தரித்து, வன மாலையும், புஷ்பங்களின் மணம் நிறைந்த உடல் வாகையும் உடையவர்கள், ஸ்னானம் செய்து தூய்மையான ஆடைகளுடன் வந்து கொண்டிருந்தனர். இருவருமே ப்ரதான புருஷர்கள். ஆதி புருஷர்கள். உலகம் தோன்றக் காரணமாக இருந்தவர்கள். மூவுலக நாயகர்கள். பூமியை உத்தாரணம் செய்யவே அவதரித்த பலராம, கேசவன் என்ற பெயர்களில் ஸ்ரீ விஷ்ணுவின் அம்சமாக அவதரித்தவர்கள்.
ராஜன்! அவர்கள் வரவினால் திசைகளே ப்ரகாசமாகி விட்டன. அவர்கள் ப்ரகாசம் எப்படி மரகத மலை, வெள்ளியாலும் தங்கத்தாலும் அலங்கரிக்கப் பட்டால் விளங்குமோ அதே போல இருந்தது.
அக்ரூரர், அன்புடன் அவர்களை நெருங்கி, ஆவலுடன், மனம் கொள்ளாத பர பரப்புடன், அவர்கள் எதிரில் தண்டம் போல விழுந்து நமஸ்கரித்தார். பகவானை தரிசித்து விட்ட ஆனந்தம் கண்களில் நீராக பெருகியது. பேச்சு எழமுடியாமல் குரல் தழ தழத்தது, தான் எதற்காக வந்தோமோ என்பதை சொல்லவும் மறந்தார்.
பகவான் தானே அதை எதிர் பார்த்தவர் போல அருகில் வந்தவுடன், ரதத்தில் ஒரு கையை வைத்தபடி, இறங்கியவரை அணைத்துக் கொண்டார். சங்கர்ஷணனும் அருகில் வந்து அதே போல வணங்கிய அக்ரூரை கையை பிடித்து அழைத்துச் சென்றார். ஸ்வாகதம் சொல்லி வரவேற்று, ஆசனங்கள் கொடுத்து உபசரித்து, பாதங்களில் நீர் விட்டு முறைப்படி அலம்பி, மது பர்க்கம் கொண்டு வந்தார்கள். அதிதி சத்காரங்கள் செய்தனர். அவரை ஓய்வெடுக்கும் படி செய்தனர். பலவிதமான அன்னங்கள், உணவுகளை சிரத்தையுடன் கொண்டு வந்து தந்தனர். நன்றாக உணவருந்தியபின், வாசனை மிக்க தாம்பூலங்கள் கொடுத்தனர். நந்தன் வந்து குசலம் விசாரித்தார். கம்சன் அரசாட்சியில் எப்படி வசிக்கிறார்கள். அவனுக்கு கருணையே கிடையாதே. அவன் கூட்டத்தை சேர்ந்த தாசார்ஹன், சௌபாலா போன்றவர்கள் அவனுக்கு கைகள் போன்றவர்கள். அவர்கள் தானே சகோதரி குழந்தைகளையே கொன்றவர்கள். ரத்த தாகம் உடைய அரக்கர்கள். அவனுடைய ப்ரஜைகள் நலமா? இவ்வாறு அவர்கள் அனைவரும் சகஜமாக பேசி அக்ரூரரின் பயண களைப்பை போக்கினர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில் அக்ரூராகமனம் என்ற முப்பத்தெட்டாவது அத்யாயம். ) ஸ்லோகங்கள் 43
அத்யாயம்- 39
அதன் பின் வசதியாக கட்டிலில் அமர்ந்து, ராமனும் க்ருஷ்ணனும் உபசரிக்க, வரும் வழியில் தன் மனதில் தோன்றிய வினாக்களுக்கு விடை கிடைக்கப் பெற்றார். எது தான் கைக்கு எட்டாமல் போகும், பகவான் ப்ரசன்னமாக இருக்கும் பொழுது? ஸ்ரீ லக்ஷ்மி தேவியே அவனிடம் உறைகிறாள். இருந்தும் பகவானை நம்புபவர்கள் அவரிடம் எதுவும் வேண்டுவதில்லை. மாலை உணவு முடிந்தவுடன் தேவகியின் மைந்தன் வந்து கம்சனைப் பற்றி விசாரித்தான்.
ஸ்ரீ பகவான் சொன்னான்: அண்ணலே, தங்கள் வரவு நல் வரவாகுக. எங்களுக்கு நன்மைகள் வர இருக்கின்றன போலும். நமது பங்காளிகள், பந்துக்கள் எல்லோரும் நலமா? மாமா கம்சன் குலத்துக்கே கெடுதல் செய்பவனாக இருப்பதால் ப்ரஜைகளுக்கும், நம் குலத்தினருக்கும் துன்பம் இழைக்காமல் இருக்கிறானா? அஹோ! நமது பெற்றோர்கள், அதற்கும் முந்தைய தலைமுறையினரும் சேர்ந்து மிகப் பெரிய குடும்பமாக உள்ளோம். பெரியவர்கள் வருந்தும் படியாக பிறந்த சிசுக்கள் மரணமும், அதன் பெற்றோர் சிறையில் கட்டுபட்டு இருப்பதும் அவர்களுக்கு தாங்க முடியாத துக்கமாக இருக்குமே. எங்கள் குலத்தினர் நீங்கள் வந்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. சொல்லுங்கள், வந்த காரணம் என்னவோ?
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு மாதவன் கேட்டதும் அவரும் விவரமாகச் சொன்னார். யது குலத்தினரிடம் கம்சன் விரோதம் பாராட்டுதையும், வசுதேவரை வதம் செய்ய முனைந்ததையும் சொன்னார். அதன் பின் என்னை தூதனாக அனுப்பிய காரணமே நாரதர் வந்த சமயம் அவனிடம் நீங்கள் இருவரும் ஆனக துந்துபியின் மகனாக வளருவதை சொன்னதை கேட்ட பின்னர் தான்.
அக்ரூரர் சொன்னதைக் கேட்டு, ஸ்ரீ க்ருஷ்ணனும், பல ராமனும் பலமாக சிரித்தனர். தந்தை நந்தனிடம் அரசன் சொல்லியனுப்பியதைச் சொன்னார்கள். மற்ற கோகுல வாசிகளிடம், வண்டிகளை கட்டிக் கொண்டு அரசனுக்கு பரிசுப் பொருள்களையும் தயாரித்து எடுத்துக் கொண்டு கிளம்பச் சொன்னார். நாம் அனைவரும் போவோம். மதுரா புரி சென்று அரசனிடம் கப்பம் தர வேண்டியதைக் கொடுப்போம். மதுரா புரியில் ஊரார் கோலாஹலமாக கொண்டாடிக் கொண்டு இருப்பார்கள். இவ்வாறு சொல்லி நந்தகோபர் அவர்கள் அனைவரையும் வரச் சொல்லி உத்தரவிட்டார்.
கோகுல பெண்கள் இதைக் கேட்டு மிகவும் வருந்தினர். அக்ரூரன் ராம க்ருஷ்ணர்களை தன் ஊருக்கு அழைத்துச் செல்ல வந்திருக்கும் விஷயம் வேகமாக அனைவருக்கும் தெரிய வர அவர்கள் ஒன்று கூடி புலம்பினர். சிலர் இதயத்தில் பெருகிய தாபம் தெரிய முகம் வாடி நின்றனர். சிலர் தங்கள் ஆடை ஆபரணங்கள் நழுவி விழ, கேசம் கலைந்து தொங்க ஓடி வந்தனர். கை காரியங்களை அப்படி அப்படியே போட்டுவிட்டு வந்து விவரங்களை தெரிந்து கொண்டனர். என்ன இது, இது எப்படி நடக்கலாம், இந்த உலகத்தில் தானா, பர லோகம் சென்று விட்டோமா எனும் அளவு துக்கித்தனர். சௌரியுடன் பேசியதை, தங்களுக்கு அருளியதை நினத்து வாய் திறந்து பேசவும் இயலாமல் மயங்கி விழுந்தனர். கூட நடமாடியது, நகைத்தது, தங்களுடன் சமமாக விளையாடி மகிழ்ந்தது என்று ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டனர். அவர்கள் கோகுலத்தை விட்டுப் போவார்கள் என்பதை மனது ஏற்க மறுத்தது. அனைவரும் ஒரே குரலில் பேச ஆரம்பித்தனர்.
அஹோ! விதாதா! கடவுளே, உனக்கு தயை இல்லையா? எங்களுடன் நட்புடன் இருந்து, அன்புடன் பேசி, சிறு குழந்தையாக இருந்ததிலிருந்து எங்கள் அபிமானத்துக்கு பாத்திரமானவன், எங்களுடன் வளர்ந்தது, கேசம் முன் நெற்றியை மறைக்க, முகத்தில் எப்பொழுதும் மந்த ஹாசத்துடன் இருந்த உங்களிருவரையும் கண்ணால் கண்டாலே எங்கள் துயரம் தீரும். எங்களை விட்டு கண் காணாத தேசம் போக போகிறீர்களா? இது அடுக்குமா? என்றனர்.
அக்ரூரா உன் பெயர் தான் அக்ரூரன். க்ரூரன் நீ. எங்கள் கண்களையே பிடுங்கிக் கொண்டு போவது போல இந்த க்ரூரமான செயலை செய்யத் தான் வந்தாயா? சாது போல நிற்கிறாயே. நாங்கள் மதுரா அரசனை வெறுப்பவர்கள். ஒரேயடியாக இதுவரை நாங்கள் அனுபவித்த சுகம் அனைத்தையும் இல்லாமலாக்கி விட்டாய். நந்தன் மகன் தோழமை ஏதோ வினாடி இருந்து மறைவது அல்ல. எங்கள் அனைவரையும் பார். எப்படி தவிக்கிறோம். வீடுகளை துறந்து, தன் மக்கள், பிள்ளைகள், பதி, உற்றார்கள் அனைவரையும் துறந்து அவனுக்கு பணி செய்யும் அடித் தொண்டர்களாக இருந்தோம். விடிவதே அவனைக் காணத்தான். இரவு வருவதே எங்களுக்கு ஆசீர்வாதம். நகரத்துப் பெண்கள் புண்யம் செய்தவர்கள். எங்கள் கண்ணனை காணப் போகிறார்கள்.
அவர்கள் தேனோழுக பேசுவார்கள். அவனுக்கு இசைவாக நடந்து கொள்வார்கள். அதன் பின் எங்களை நினைத்து கூட பார்க்க மாட்டான். கிராமத்து ஜனங்கள், தங்கள் அன்பை கூட தயங்கி வெட்கத்துடனே காட்டிக் கொள்பவர்கள். அங்கு தாசார்ஹ, போஜ, அந்தக, வ்ருஷ்ணி வம்சத்தினர், மஹோத்ஸவமாக கண் குளிர கண்டிப்பாக பார்த்து மகிழ்வார்கள். ஸ்ரீ ரமணன், நல்ல குணங்களுக்கு இருப்பிடமானவன். வழியில் தேவகி மகனை கண்டவன் கூட பரவசத்துடன் பார்ப்பான்.
இவ்வளவு கருணையில்லாத உனக்கு இந்த பெயர் அக்ரூரன் —அக்ரூரரே! இது மிக கொடிது. கருணையே இல்லையா? எங்களுக்கு பிரியமானவனை அழைத்துச் செல்ல வந்திருக்கிறாயே. எங்களிடம் சமாதானமாக பேசி விடை பெறவோ, நாங்களும் அனுமதி கொடுத்து அனுப்பவோ கூட நேரமில்லாமல் அவசரமாக வெகு தூர அத்வானத்துக்கு அழைத்துச் செல்கிறாய். பெரிய ரதத்தை கொண்டு வந்திருக்கிறாய். எங்கள் உணர்வுகளை சற்றும் மதிக்காமல் அவர்களை ஏற்றிக் கொண்டு செல்லவா வந்தாய். இந்த கோகுல வாசிகள், அவர்கள் தோழர்கள் அவர்களும் கிளம்புகிறார்கள், வண்டி கட்டிக் கொண்டு, தெய்வம் எங்களை சோதிக்கிறது. யாரை நோவோம்? நாங்கள் அனைவரும் சேர்ந்து தடுப்போமா, குல முதியவர்கள் பந்துக்கள் இவர்களும் உடன் செல்ல துணிந்து விட்டார்களே, முகுந்தனை விட்டு க்ஷணம் கூட இருக்க மாட்டோம் என்று இருந்த எங்கள் நிலை என்னாகும்? என்ன சொல்லி என்ன பயன், தெய்வமே எங்களை கை விட்டு விட்டதே, மனமுடைந்து கதறுவது தவிர என்ன செய்வோம்?
இனி எங்கள் வாழ்க்கையில் என்ன சுகம் இருக்கும். எங்களிடம் கொண்ட அனுராகம் தெரிய முகத்தில் சிரிப்புடன் வளைய வருவான். கோஷ்டியாக ராஸ நடனம் செய்தோம். நாட்கள் க்ஷணம் போல சென்றது. அவர்கள் இல்லாமல் இந்த கோகுலம் எப்படி இருக்கும்? மாலை வந்தாலே குதூகலமாக நாங்கள் காத்திருப்போம்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: அந்த எளிய கோகுல பெண்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் அந்த தேசத்தை விட்டு மதுரா புரி போகிறான் என்பதை தாங்க முடியாத வேதனையை அனுபவித்தனர். சிலர் வெட்கத்தை விட்டு அழுதனர். கோவிந்த, தாமோதர, மாதவா என்று அரற்றினர். இரவு முழுவதும் அவர்கள் வருந்தியபடி இருந்தனர். விடிந்தது. ஸூரியன் உதயமானதும், அக்ரூரர் அவர்களை கிளம்ப துரிதப் படுத்தினார். வண்டிகளை தயார் செய்து கொண்டிருந்த கோகுல வாசிகளையும் துரிதப் படுத்தினர். பரிசு பொருட்களை ஏராளமாக எடுத்துக் கொண்டார்கள். குடம் குடமாக பாலும், தயிரும் வெண்ணெயும் என்று பசுவின் பாலால் செய்த பொருட்கள்.
போகும் முன் தங்களிடம் விடை பெற வருவான் என்ற நம்பிக்கையுடன் கோகுல பெண்கள் காத்திருந்தனர். யது குலத்தின் நாயகனாக இருந்த ஸ்ரீ க்ருஷ்ணனும் அவர்களை சமாதானப் படுத்தினான். தூதன் வந்து சொன்னதை மறுக்க முடியாது. இதோ திரும்பி வந்து விடுவேன் என்று அன்புடன் சொன்னான்.
வண்டிகளின் கொடி தங்கள் பார்வையிருந்து மறையும் வரை, அவை கிளப்பிய புழுதி மறையும் வரை அந்த பெண்கள் பதுமைகள் போல அங்கிருந்து பார்த்தபடி இருந்தனர். அதன் பின் நிராசையுடன் வீடு திரும்பினர். தங்களுக்கு ப்ரியமாக இருந்த ஸ்ரீ க்ருஷ்ணனைப் பற்றி பாடியபடி பொழுதை கழித்தனர்.
பகவானும், பலராமன், அக்ரூரருடன் ரதத்தில் வேகமாக காலிந்தீ நதிக் கரையை அடைந்தனர். பளிங்கு போல வெண்மையாக சுத்தமாக இருந்த அந்த நதி நீரை கைகளால் எடுத்து பருகினர். குமாரர்கள் இருவரும் மரத்தடியில் நிறுத்தியிருந்த ரதத்தில் அமர்ந்தனர். அக்ரூரர் மட்டும் அருகில் இருந்த காளிந்தியின் படித்துறையில் ஸ்னானம் செய்யச் சென்றார். ஸ்னான விதிகளை அனுசரித்தபடி, மூழ்கி எழுந்தார். சனாதனமான ப்ரும்ம ஸ்வரூபத்தை நினைத்து ஜபம் செய்தார். அந்த நீரில் அதே ஆனக துந்துபியின் மைந்தர்கள், பலராமனையும், ஸ்ரீ க்ருஷ்ணனையும் ரதத்தில் அமர்ந்து இருப்பதைக் கண்டார். இங்கு இருந்தால், ரதத்தில் இல்லையா? என்ற கேள்வி எழ நிமிர்ந்து பார்த்தார். திரும்பவும் நீரில் மூழ்கினார், அதே காட்சி, இருவரும் நீரினுள்ளும் இருந்தனர். மேலும் கூர்ந்து பார்க்க, சித்த சாரணர்கள் வணங்கி நிற்க, கந்தர்வ, அசுரர்களும், தலை குனிந்து வணங்கியபடி இருக்க, சஹஸ்ர சிரஸம்- ஆயிரம் தலையுடைய ஆதி சேஷன் படுக்கையில், தானும் ஆயிரம் தலைகளுடன், நீல ஆடையும், தாமரைத் தண்டு போல வெண்ணிறமான அதன் படங்கள்- ஸ்ருங்கம்- மலையுச்சி- இங்கு பாம்புகளின் தலைகள்- கைலாஸ மலையை நினைவூட்ட, அதனுள் குண்டலி போன்று உடலை சுருக்கிக் கொண்டு படுத்திருந்த ஆதி சேஷனின் மேல், (அடுத்த 11 ஸ்லோகங்களும் தொடர்ந்து வர்ணனை.)
அதன் மடியில், அடர்ந்த கரு மேகம் போன்ற வண்ணமும், பொன் நிற பட்டாடையும், சதுர்புஜனான பரம புருஷனை, சாந்தமாக, தாமரை இலை போன்ற அகன்ற கண்களும், அழகிய ப்ரசன்னமான முகமும், மென் முறுவலுடன் கண்களால் கடாக்ஷித்துக் கொண்டு, உயர்ந்த புருவங்களும், அழகிய காதுகளும், அழகிய கன்னங்கள், அருண வர்ணமான அதரங்கள், நீண்ட திரண்டு உருண்ட புஜங்கள், சற்றே உயர்ந்து தெரிந்த , மார்பும், அதில் வாசம் செய்த ஸ்ரீ தேவி லக்ஷ்மியும், சங்கு போன்ற கழுத்தும், அடங்கிய நாபி, வரிசையாக அமைந்த வளையங்களும், இளம் தளிர் போன்ற வயிறும், அகன்ற இடுப்பும், அதில் யானையின் தும்பிக்கை போன்ற துடை பகுதிகளும், அழகிய முழங்கால்கள் இரண்டும், மேடிட்டு இருந்த கால் மேல் பகுதிகளும் நகங்கள் அருண நிறத்தில் ஒளி வீசிக் கொண்டிருக்க, விரல்களும் கட்டை விரலும், சேர்ந்த பத்ம பாதங்கள் , மணிகள் பதித்த உயர்ந்த கிரீடம், கடகம், அங்கதம் என்ற ஆபரணங்கள், இடுப்பில் அணிந்த பொன் சூத்ரமும், ப்ரும்ம சூத்ரமும், ஹாரமும் நூபுர குண்டலங்களும், ப்ரகாசித்துக் கொண்டிருந்த பத்மம், சங்கம், சக்ரம், கதைகள் நான்கு கைகளிலும் ப்ரகாசமாகத் தெரிய, ஸ்ரீவத்ஸம் விளங்கும் மார்பும், கௌஸ்துப மணியும் வன மாலையும், சுநந்த, நந்தன் முதலானோர், மற்றும் அணுக்கத் தொண்டர்கள் சூழ்ந்து நிற்க, சனகாதிகள், மற்றும் தேவர்கள், ப்ரும்ம ருத்ரர்கள், ஒன்பது உத்தமமான தேவ ரிஷிகள், ப்ரஹ்லாதன், நாரத,வசுக்கள், உத்தம மான பாகவதர்கள் அனைவரும் துதி செய்த படி இருக்க, ஒவ்வொருவரும் தனித் தனியான பாவனைகள், வார்த்தைகளால் பாடிக் கொண்டிருக்க, ஸ்ரீ, புஷ்டி,வாக்கு-கிரா- காந்தி, கீர்த்தி, துஷ்டி, ஏலா என்ற அஷ்ட லக்ஷ்மிகளும் ஜய, விஜய, அவித்யா, சக்தி, மாயா இவர்களும் சூழ்ந்திருக்க, வைகுண்ட வாசியான ஸ்ரீமான் பகவானே சாக்ஷாத்தாக காட்சி அளிக்க, திக்கு முக்காடியவராக, அதீத மகிழ்ச்சியுடன், பக்தியுடன் உடல் முழுவதும் புல்லரிக்க, உணர்ச்சி மேலிட , கண்கள் செருக, தழ தழத்த குரலில் துதி செய்யலானார். சத்வமே உருவான பகவானை வணங்கி, தலை குனிந்து கைகளை கூப்பியபடி, மெள்ள சமாளித்துக் கொண்டு அழகிய வாக்கினால் துதி செய்தார்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தத்தில், அக்ரூர ப்ரதி ப்ரயாணே என்ற முப்பத்தொன்பதாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்- 58
அத்யாயம்-40
அக்ரூரர் துதி: ஆதி புருஷன் அழிவற்ற நாராயணன் நீயென்று அறிந்து கொண்டேன். உலகம் தோன்றக் காரணமானவன். உலகை படைக்க ப்ரும்மாவை உன் நாபி கமலத்தில் தோன்றச் செய்தவனும் நீயே. அவரால் இந்த உலகம் படைக்கப்பட்டது. உன்னை நமஸ்கரிக்கிறேன்.
நிலம், நீர், அக்னி, வாயு, ஆகாயம் என்றவை, மனம் இந்திரியங்கள், அவைகளின் செயல்பாடு, அறிவு என்பதன் பல விதங்கள், இவைகள் உன் படைப்பான உலகின் பகுதிகளாக ஆயின.
இந்த உன் ஸ்வரூபத்தை யார் அறிவார்? அஜன்-ப்ரும்மா முதலானவர்கள் அனாத்மா எனப் படுகிறார்கள். சுயமான சக்தி அற்றவர்களாக தோன்றினார்கள். படைப்புத் தொழிலைச் செய்ய நியமங்களான குணங்கள் தவிர, குணங்களுக்கும் பரமான உன் ஸ்வரூபத்தை அறிய மாட்டார்கள்.
யோகிகள் மகா புருஷன் என்று வணங்குகிறார்கள். ஈஸ்வரன், மகா புருஷன் தான் ஆத்மா- முதல் ஆத்மாவுடன் கூடியவன், साधि भूतम् சாதி பூதம்- பஞ்ச பூதங்களுடன் , साधिदैवम् சாதி தெய்வம்- தேவர்களுடன் என்று சாதுக்கள் சொல்வர். (साधि-உடன். சாதி தெய்வம்- தெய்வத்துடன்)
த்ரயீ என்ற வேத சாஸ்திரமே நீதான் என்று அறியும் சில அந்தணர்கள் வைதானிகர்கள் எனப்படுவர். அவர்கள் பலவிதமான யாகங்களை செய்வார்கள். பல பெயர்களுடன், அமரர்களைக் குறித்து யாகங்கள் செய்வார்கள்.
ஞானிகள் உன் ஒருவனிடமே தங்களை ஒப்படைத்து, தன் செயல்களின் பலனையும் உனக்கே அர்ப்பித்து சாந்தமாக ஞான ரூபியாக ஞான யாகம் செய்து பூஜிக்கிறார்கள்.
மற்றும் சிலர் தங்களை மேம்படுத்திக் கொண்டு, சாதகர்களாக, நீயே பல மூர்த்திகளாகவும், ஒருவனாக இருப்பவனாகவும் தியானித்து உன்னில் ஐக்யமாவதையே குறிக் கோளாக கொண்டு பூஜிக்கிறார்கள்.
சிவரூபியாக தியானித்து, ஸ்ரீ பரம சிவன் சொன்ன மார்கத்தில், பல ஆசார்யர்கள் சொன்ன விதிகளின் படி, பகவானே! நன்றாக பூஜிக்கிறார்கள்.
அனைவரும் நீ சர்வ தேவ மயனான ஈஸ்வரன் என்பதை அறிவார்கள். மற்ற தேவதைகளிடம் பக்தி உள்ளவர்கள் கூட, அறிவு சார்ந்த மாற்று கொள்கை உடையவர்களுக்கும் இது சம்மதமே.
ப்ரபோ! எப்படி மலையில் உத்பத்தியாகும் நதிகள், மழையினால் பெற்ற ஏராளமான நீரை எடுத்துக் கொண்டு சமுத்திரம் நோக்கி ப்ரவஹிக்கின்றனவோ, அதே போல உன்னையே வந்தடைவார்கள்.
ப்ரக்ருதியின் குணங்கள் சத்வம், ரஜஸ், தமஸ் என்பவை. ப்ரக்ருதி-இயற்கை, உன்னுள் அடக்கம். அதனால் தான் ப்ரும்மா முதல் உயிரினங்கள், தாவரங்கள் வரை ப்ராக்ருதா: எனப் பெயர் பெற்றார்கள். உனக்கு நமஸ்காரம். உன் பார்வையே அலாதி. சர்வாத்மா நீ, சர்வ அறிவு சார்ந்த விஷயங்களுக்கும் சாக்ஷியாக இருப்பவன். குண ப்ரவாஹம் எனப்படுவதும் அறியாமையால் தோன்றுவதே போலும். ஏனெனில் உன் மாயை தான் தேவ, மனிதன், விலங்குகள் என்று ஜீவன்களின் பல விதமான குணமும், செயலுமாக தெரிகிறது.
உன் முகமே அக்னி. மரங்கள் மற்ற தாவரங்கள் கேசம், மேகங்கள், உன் அஸ்தி எனும் எலும்புகள். நகங்கள் மலைகள், உன் கண் சிமிட்டல் இரவும் பகலும், ப்ரஜாபதி உன் ஜனன உறுப்பு, மழை உனது வீர்யம்.
அழிவற்ற ஆத்மா நீயே. பரம புருஷனாக வந்து உன்னிடத்தில் நீயே தோற்றுவித்தாய். இந்த உலகங்கள், லோக பாலர்கள், பலவிதமான ஜீவராசிகள் கலந்து, குழம்பிய நீரில் நீர் வாழ் ஜந்துக்கள் அலை பாயுமோ, அது போலவும், ஆகாயத்தில் சிறு பறவை-பூச்சிகள் வட்டமிடுமோ, அது போலவும், உன் மனதில் தோன்றியபடி படைத்தாய்.
உன் விளையாட்டுக்காக, மனோரஞ்சமாக உருவங்கள், நீயும் எடுத்துக் கொள்கிறாய். அந்த உருவங்களில் ஆகர்ஷிக்கப் பட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் உன் புகழை போற்றி பாடுகிறார்கள்.
காரணமத்ஸ்யன்- காரணத்திற்காக எடுத்துக் கொண்ட மகா மீன ரூபம். ப்ரளய சமுத்திரத்தில் அலைந்தாய்.ஹயசீர்ஷனாக- குதிரை முகனாக வந்தாய். உனக்கு நமஸ்காரம். மது கைடப வதம் செய்த உனக்கு நமஸ்காரம்.
மிகப் பெரிய உடலுடன் மந்தர மலையைத் தாங்கி, பாற்கடலை கடைய உதவினாய். பூமியை ப்ரளயத்தில் மூழ்காமல் தூக்கி கொண்டு வந்த சூகர அவதாரம் செய்தவனான உனக்கு நமஸ்காரம்.
அத்புதமான சிங்க உருவம் – சாது ஜனங்கள் பயப்படும்படியான நரசிங்கனே, நமஸ்காரம். வாமனனாக வந்து மூவுலகையும் அளந்தவனான உனக்கு நமஸ்காரம்.
ப்ருகுகளின் தலைவனே நமஸ்காரம். கர்வம் கொண்ட க்ஷத்திரிய குலத்தை அழிக்க வந்தவனே நமஸ்காரம். ரகு வரனாக வந்து ராவணனை சம்ஹாரம் செய்தவனே நமஸ்காரம். வாசுதேவனே நமஸ்காரம். சங்கர்ஷணனும் நீயே, நமஸ்காரம். ப்ரத்யும்னாய, அனிருத்தாய சாத்வதாம் பதயே நமஸ்காரம்.
புத்தனாக, சுத்தனாக தைத்ய தானவர்களின் மோகத்தை அழித்தவனே, உனக்கு நமஸ்காரம். ம்லேச்சன் போன்ற க்ஷத்திரியர்களை அழிக்க வந்த கல்கியாக உன்னை வணங்குகிறேன்.
பகவன்! உன் மாயையால் இந்த ஜீவ லோகம் மோகத்தில் ஆழ்த்தப் பட்டுள்ளது. நான், என்னுடையது என்று அசட்டுத் தனமாக சுற்றுகிறார்கள். வினைப் பயனை அனுபவிக்கிறோம் என்பது தெரியாமல் மயங்குகிறார்கள்.
நானும் அந்த கூட்டத்தை சேர்ந்தவன் தானே. என் புதல்வர்கள், வீடு, மனைவி மக்கள், ஸ்வ ஜாதியினர், நானே செய்து கொண்ட கட்டுப்பாடுகள், அதற்குள் மாட்டிக் கொண்டவனாக ப்ரமிக்கிறேன். உண்மையாக சொல்கிறேன், விபோ! அது என் அறியாமையே.
உன்னை என் ப்ரியமான பந்து என்று தமோ குணத்தால் சூழப் பட்டு, என் அறிவு மழுங்கி விட்டது போலும். நித்யமில்லாத அல்ப சுக துக்கங்களால், அலைக்கழிக்கப்படுகிறேன். உன்னை நான் அறியவே இல்லை. என் ப்ரியமானவனே!
அறியாத சிறு குழந்தை நீரில் கையால் கலக்கி அதில் தோன்றும் பல அசைவுகளை மகிழ்ச்சியுடன் பார்க்குமோ அது போலவும், தாகமெடுத்தவன் ம்ருக த்ருஷ்ணாம்- கானல் நீரைக் கண்டு ஓடுவது போலவும், நான் கண்டும் காணாதவன் போல உன் உண்மை ஸ்வரூபத்தை அறியவே இல்லை.
கஞ்சன் போல நான், காமத்தாலும், வினைப் பயனாலும் அடிபட்டவனாக, வேடன் பிடித்துக் கொண்டு போகும் மிருகம் போல என்னை காத்துக் கொள்ளவோ, விடுவித்துக் கொள்ளவோ முடியாமல் இங்கும் அங்குமாக திரிகிறேன்.
இது தான் என் நிலை. உன் பாதங்களை சரணடைகிறேன். சாதாரண மக்களுக்கு கிடைக்காத உன் அருள் பாதங்கள். ஈசனே, இதுவும் உன் அனுக்ரஹமே. நல்ல உபாசனைகள் செய்து மகா புருஷர்கள் அடையும் கதியை, அப்ஜனாப! உன் அருளால் அத்தகைய மன நிலை எனக்கு அருள வேண்டும்.
நமோ விக்ஞான மாத்ராய, சர்வ ப்ரத்யய காரணமானவனே, புருஷ, ஈஸ்வர்களில் ப்ரதானமானவனே, ப்ரும்மனே, எல்லையற்ற சக்தியுடையவனே. நமஸ்தே, வாசுதேவாய, சர்வ பூத க்ஷயாய, ஹ்ருஷீகேச நமஸ்துப்யம், ப்ரபன்னம் பாஹி மாம் ப்ரபோ!
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், அக்ரூர ஸ்துதி என்ற நாற்பதாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்- 30
அத்யாயம்- 41
ஸ்ரீ சுகர் சொன்னார்: நீரினுள் ஸ்வரூபத்தைக் காட்டிய பகவான் அவர் போற்றி வணங்கி துதிகள் செய்ததை கேட்டபின், தன் மாயையால் அதை தன்னுள் மறைத்துக் கொண்டார். அரங்கத்தில் நாட்டியம் ஆடியவன் பின் தன் இயல்புக்கு திரும்புவது போல.
அவர் மறைந்ததைக் கண்டு தன் மனதினுள் அதையே எண்ணியபடி மூழ்கி எழுந்தார். வியப்பின் எல்லையில் இருந்தவர், வேகமாக ரதம் இருந்த இடத்தை நோக்கி வந்தார். ஹ்ருஷீகேசன், அவரிடம் இவ்வளவு உத்சாகமாக இருக்கிறீர்களே, அத்புதமாக எதையாவது நீரினுள் கண்டீரா? என்றான். பூமியிலா, ஆகாயத்திலா, நீரிலா? கனவு கண்டவர் போல தெரிகிறீர் என்றான்.
அக்ரூரர் சொன்னார்: அத்புதம் என்று என்னவெல்லாம் உண்டோ, பூமியிலோ, ஆகாயத்திலோ, நீரின் உள்ளோ, விஸ்வாத்மகனான உன் அருகில் இருக்கும் பொழுது, உனக்கு தெரியாத அத்புதமா? ப்ரும்மன், நான் அத்புதமாக எதைக் கண்டேன் என்பதும் அறிந்தவன் தானே நீ.
காந்தினீ மகன், அக்ரூரர், ரதத்தை பூட்டி ராமனையும் க்ருஷ்ணனையும் மாலையில் மதுரா புரிக்கு கொண்டு வந்து சேர்த்தார். வழி முழுவதும் கிராமத்து ஜனங்கள் ஆங்காங்கே கூடி நின்று வசுதேவ சுதனைப் பார்த்த கண்களை திருப்ப முடியால் பார்த்துக் கொண்டிருந்தனர். அதற்குள் நந்தன் முதலான கோகுல வாசிகளும் வந்து சேர்ந்தனர். நகரின் வெளியில் நந்த வனத்தில் காத்திருந்தனர். அவர்கள் அருகில் போய் பகவான் அக்ரூரரிடம் கைகளைப் பற்றி, சிரித்துக் கொண்டே, நீங்கள் ரதத்தில் முன்னால் போங்கள். நாங்கள் இருவரும் சற்று ஊர் சுற்றி பார்த்து விட்டு வருகிறோம், என்றான்.
அக்ரூரர் பயந்தார். ப்ரபோ! நீங்கள் இல்லாமல் நான் தனியே நகருக்குள் ப்ரவேசித்து அரசனிடம் என்ன சொல்வேன்? என்னைத் தனியாக அந்த கம்சனிடம் மாட்டி விடாதீர்கள், ப்ரபோ!, பக்த வத்சலன் என்று புகழ் பெற்றவன், என்னை கை விடாதீர்கள், என் வீட்டிற்கு போகலாம், பலராமனுடனும், கோகுல வாசிகள் அனைவருடனும் என் இல்லத்தை அனுக்ரஹிக்க வேண்டும் என்றார். உங்கள் புனிதமான பாதம் பட்டு, அதன் தூசியால் எங்கள் க்ருஹம் நலம் பெறட்டும். வீட்டில் உள்ள மற்ற உறவினர்களும் குடும்பஸ்தர்கள் இருப்பார்கள். உங்கள் வரவால் என் குல முன்னோர்களும் மகிழ்வார்கள். என் நித்ய நியமங்கள், அக்னி காரியங்கள் போன்றவை கூட மேன்மை பெறும்.
மகா பலிக்கு அனுக்ரஹம் செய்த சமயம், பூமி, ஆகாயம், உங்கள் பாதம் பட்டு புனிதமாயின. மகா பலி மகான். அடைய முடியாத ஐஸ்வர்யம் அடைந்தான், உங்கள் பாதம் தன் சிரஸில் தாங்கி. வேறு யாருக்கும் கிடைக்காத பெரும் பாக்கியம், தனிமையில் தவம் செய்யும் முனிவர்களுக்கு கூட கிடைத்ததில்லை. உன் பாதத்தில் மகா பலி பாத்யம் விட்ட நீரை, உன் பாதத்தில் பட்டதனாலேயே புனிதமான நீர் என்று மூவுலகையும் புனிதமாக்கி விட்டது. உன் பாதங்களில் பிறந்த கங்கை, அதை பரம சிவன் தன் தலையில் தாங்கியிருக்கிறார். சகர புத்திரர்கள் அதனால் மூழ்கடிக்கப் பட்டு ஸ்வர்கம் சென்றனர்.
தேவ தேவ! ஜகன்னாதா! புண்ய ஸ்ரவண கீர்த்தனா! உத்தம ஸ்லோகன் என்ற ஸ்ரீமன் நாராயணா! உனக்கு நமஸ்காரம்.
ஸ்ரீ பகவான் பதிலிறுத்தார். கண்டிப்பாக உங்கள் வீட்டிற்கு வருகிறேன். யது வம்ச எதிரியை அழித்து விட்டு பிரியமான நண்பன் உங்கள் வீட்டிற்கு வருவேன்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: பகவான் சொன்னதைக் கேட்டு, அரை மனதோடு, நகரத்தினுள் நுழைந்து கம்சனை சந்தித்தார். அவரிடம் தன் கடமையை செய்து விட்டதாகச் சொல்லி விட்டு வீடு சென்றார்.
அன்று பிற்பகல், பகவான், க்ருஷ்ணனும், பலராமனும் மதுரா நகரை வலம் வந்தனர். சில கோகுல வாசிகளும் ஊரை பார்க்க விரும்பி உடன் வந்தனர். அழகிய மதுரா நகரம். ஸ்படிகம் போன்ற வெண்மையான உயர்ந்த கோபுரங்கள் சூழ, வீடுகளில் தழ்ப்பாள்கள் கூட பொன் நிறத்தில் மின்ன, தோரணங்கள் ஆட, தாம்ர வர்ண கோஷ்டங்கள்,- வீடுகள், வெளிச் சுற்றில் எளிதில் கடக்க முடியாத கோட்டைகள், நன்றாக பராமரிக்கப் பட்ட உத்யான வனங்கள், பொன்னால் ஆன மேல் கோபுரங்களும், விசாலமான சபா மண்டபங்கள், அதன் அருகே மாளிகைகள், மிக நேர்த்தியாக திட்டமிடப் பட்டு கட்டியவை, நவ ரத்னங்களும், வைடூரியம், வைரம், அமலமான நீல மணிகள், பவளங்கள், முத்துக்கள், மாணிக்கம் என பயன் படுத்தி கட்டியவை.
ஜன்னல்களின் வழியே பல வித பறவைகள் இருந்த ஒரு இடம். மயில்கள் ஆட, பாராவத என்ற பறவைகள் கூக்குரலிட அந்த வழியே சென்றவர்களின் மனதை ஆகர்ஷித்தன. பெரிய ரத வீதிகள். பலவிதமான கடைகள், நாற்சந்திகள், கடைகளில் வியாபாரிகள் குவித்து வைத்திருந்த தானியங்கள், பூக்கள் விற்கும் கடைகள், முளைகள், மாலைகள் என செல்வ செழிப்பு முதல் பார்வையிலேயே தெரிந்தது.
வழிய வழிய கும்பங்களில், தயிரும், சந்தனமும், பூக்கள் சுற்றி விளக்குகளும், இலைகளில் வரிசையாக வைத்த தீபங்களும், வாசல்களில் கொடிகள் கட்டி, வாழை மரம் கட்டி, அலங்கரித்து பட்டி என்ற நுழை வாசல் அலங்காரம் செய்திருந்தனர்.
ப்ரமிப்புடன் அந்த ஊரில் சம வயது தோழர்களுடன் நடந்த இருவரும், விரைவில் அந்த ஊர் பெண்களின் பார்வையில் பட்டனர். மாளிகையின் மாடிகளில் நின்று உத்சாகமாக வரவேற்றனர். அவசரம் அவசரமாக தங்களை அலங்கரித்துக் கொண்டு, நல்ல ஆடைகளும் ஆபரணங்களும் அணிந்து வந்தனர். பாதி உண்ட உணவை அப்படியே போட்டு விட்டு வந்தனர். தூங்கிக் கொண்டிருந்தவர்களையும் எழுப்பி அழைத்து வந்தனர். கைக் குழந்தையை அதன் படுக்கையில் விட்டு விட்டு தாய் மார்கள் ஓடி வந்தனர். ஒருவர் சொல்லி மற்றவர் விவரம் அறிந்து அரவிந்த லோசனன், மென் முறுவலுடன் பார்க்கவே அழகாகத் தெரிகிறான், மதம் பிடித்த யானை போல நடக்கிறான் என்று ஊருக்குள் வர்ணனைகள் பரவின.
கேட்டது ஒன்றுமில்லை என்பது போல ஓடி வந்து பார்த்தவர்கள் வைத்த விழி அகலாமல் பார்த்தபடி இருந்தனர். கண்களின் வழியே அம்ருதம் பாய்ந்ததோ என ஆனந்தமாக நின்றனர். அவர்களும் அனந்தன், அரிந்தமன், முதன் முதலான் என பாடினர். மாடியின் மேல் ஏறி பூமாரி பொழிந்தனர். பல ராமனும் கேசவனும் பூர்ண கும்பம், தத்யக்ஷதைகள், பூ மாலைகள் மற்றும் பரிசுப் பொருட்கள் இவைகளால் மலர்ந்த முகத்தோடு ஊர் அந்தண ஜனங்களால் வரவேற்கப் பட்டனர்.
அஹோ! கோகுல பெண்கள்! என்ன தவம் செய்தனரோ. இவ்வளவு நாட்களாக அருகில் இருந்து ரசித்து மகிழ்ந்து இருந்திருக்கிறார்கள். இந்த குமாரர்களை காண்பதே மஹோத்ஸவம் என்றனர்.
ஒரு வண்ணான் அவ்வழியே சென்றான். நல்ல உயர்ந்த உடைகள் சுத்தமாக இருந்ததைக் கண்டு தங்களுக்கு அளவான உடைகள் தரும்படி கேட்டனர். எங்களுக்கு கொடுத்தால் நல்ல கதியை அடைவாய், சந்தேகமேயில்லை என்றனர். அவன் அரச சேவகன், பகவான் என்பதையறியாமல், கோபம் கொண்டான். காட்டு வாசிகள், இது போன்ற ஆடைகளா அணிவீர்கள்? அரச உடைகளை யாசிக்க வந்து விட்டீர்கள் என்று விரட்டினான். அறிவிலிகளே, விலகுங்கள் என்று அதட்டினான். உயிருடன் இருக்க வேண்டுமானால் இந்த ஆசையை விடுங்கள், இல்லா விட்டால், ராஜ சேவகர்கள் வந்து கட்டி வைத்து, அடிப்பார்கள், அவர்கள் மிகவும் கர்வத்துடன் நடமாடுகிறார்கள் என்றான். மேலும் மேலும் இவ்வாறு பொருளின்றி பேசுவதைக் கேட்டு, தேவகி மகன் கோபம் கொண்டான். கையால் தட்டியே அவன் தலையை கொய்தார். அதன் பின் அந்த ஆடைகளை உடன் வந்த கோகுல வாசிகள் அனைவரும் அணிந்து கொண்டு உல்லாசமாக கிளம்பினர். தங்களுக்கு பிடித்த ஆடைகளை க்ருஷ்ணனும் ,பல ராமனும் எடுத்துக் கொண்டனர். மீதியை பூமியில் வீசினர்.
அதன் பின் ஒரு வாசனை திரவியங்கள் விற்பவன் எதிர்ப் பட்டான். தானாகவே நல்ல வாசனை திரவியங்களைக் கொடுத்தான். வண்ணான் தந்த ஆடைகளை அணிந்து பல ராமனும், க்ருஷ்ணனும் நாகரீகமாக தெரிந்தனர். அதனால் மகிழ்ந்து ஸ்ரீ க்ருஷ்ணன் சாரூப்யம் என்ற சதா தன் அருகில் இருக்கும் பதவியை கொடுத்தார். இகலோகத்திலும் செல்வமும் பல நன்மைகளையும் பலராமன் கொடுத்தான்.
இளம் யானைகள் போன்று இருவரும் நடந்தனர். சுதாமன் என்ற மாலாகாரன் எதிர்பட்டான். இவர்களைக் கண்டதுமே எழுந்து வணங்கி நின்றான். அவர்களுக்கு ஆசனம் அளித்து, பாத்யம் முதலான உபசாரங்களைச் செய்து, நல்ல மாலைகள், தாம்பூலம், உடலில் பூசிக் கொள்ளும் வாசனை திரவியங்கள் இவைகளை அளித்தான். ப்ரபோ! தங்கள் வரவால் என் குலம் பெருமையடைந்தது. என் பிறவியும் பயனுடையதாயிற்று. என் முன்னோர்கள், நான் வணங்கும் தெய்வங்கள் ரிஷிகள் மகிழ்வார்கள். நீங்கள் இருவரும் உலகம் தோன்றவே காரணமாக இருந்தவர்கள். உலக நன்மைக்காகவும், அது பலகாலம் நீடித்து இருக்கவும் தங்கள் உண்மை ஸ்வரூபத்தின் அம்சமாக அவதரித்துள்ளீர்கள். தோழனோ, மற்றவனோ என்று உங்களுக்கு வேறு பாடு கிடையாது. ஜகதாத்மா நீங்கள். சர்வ ஜீவன்களுக்கும் வணங்கி பூஜிப்பவர்களுக்கு அனுக்ரஹிப்பவர்.
எனவே, ஆணையிடுங்கள். நான் என்ன செய்ய வேண்டும்? உங்களிடம் சேவை செய்வதே புண்ய பலன். இவ்வாறு சொல்லிக் கொண்டே நல்ல மணம் மிகுந்த மலர்களைக் கொண்டு அழகான மாலைகளை கட்டி அவர்களுக்கு அளித்தான். அவைகளை அணிந்து அலங்காரமாக இருந்த இருவரும் அவனுக்கு நல்ல வரங்களைக் கொடுத்தனர். அவனும் அவர்களிடம் திடமான பக்தியுடன், பாகவதர்களிடம் நட்பும், மற்ற உயிரினங்களில் அன்பும் கொண்டான். வரம் அளித்தோடு நில்லாமல் வம்சம் வளரவும், லக்ஷ்மீ கடாக்ஷமும், பலம், ஆயுள், புகழ், மதிப்பு இவைகளையும் ஆசீர்வதித்து நகர்ந்தனர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், முதல் பகுதியில், புர ப்ரவேஸோ என்ற நாற்பத்தி ஒன்றாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்- 52
அத்யாயம்-42
ஸ்ரீ சுகர் சொன்னார்: அதன் பின் ராஜ மார்கத்தில் மாதவன் நடந்து ஒரு வாசனை பொருட்கள் விற்கும் பெண் வ்யாபாரியை கண்டான். கூனல் விழுந்த முதுகுடன், அவள், வருவதைப் பார்த்து, அவள் உடலை சரியாக நிமிர்ந்து நிற்கச் செய்தார். யாரம்மா நீ? உன் இருப்பிடம் எது? எங்களுக்கு நல்ல வாசனை பொடிகளைக் கொடு நன்றாக, நீண்ட காலம் வாழ்வாய், என்றார்.
சைரந்திரி என்ற அந்த பெண் ‘ இதோ தருகிறேன். சுந்தரா! கம்சன் அனுமதி அளித்து இந்த வியாபாரம் செய்கிறேன். என்னை என் கூனலை வைத்து த்ரிவக்ரா என்றே அழைப்பர். என் தயாரிப்புகள் போஜ ராஜாவுக்கு மிகவும் பிடித்தமானவை. உங்கள் இருவரைத் தவிர வேறு எவருக்கும் இவை பொருந்தாது. என்று சொல்லிபடியே அவள் சுகந்தமான வாசனை பூச்சுக்களை அவர்கள் இருவருக்கும் செய்து விட்டாள். அந்த அங்கராகம் எனப்படும் உடலில் பூசிக் கொள்ளும் திரவியங்களால், தங்கள் இயல்பான நிறமே மாறி விட்டதாக சிரித்துக் கொண்டே, மகிழ்ச்சியுடன் அந்த கூனியான த்ரிவக்ரா என்பவளை செல்வம் நிறைந்தவளாக ஆக்க நினைத்து, அவள் உடலை சீராக்கினார். முகுந்தனின் கை பட்ட வேளை அவள் அழகிய பெண்ணாக மாறினாள். அவர்களை தன் வீட்டிற்கு அழைத்தாள். உங்களை பார்த்த பின் விட்டுப் பிரியவே ,மனதில்லை எனவும், அவளைப் பார்த்து, வருகிறேன், வந்த காரியம் முடியட்டும், வேறு வீடும் எங்களுக்கு இந்த ஊரில் இல்லையே என்று சொல்லி விடை பெற்றனர்.
அதன் பின் எதிர்ப் பட்ட வியாபாரிகள் ஒவ்வொருவரும் அவரவர் பொருட்களை தாம்பூலமோ, பூ மாலையோ, எதுவானாலும் அன்புடன் கொண்டு வந்து கொடுத்து, வணங்கிச் சென்றனர். பெண்கள் தங்கள் வீட்டு மாடிகளில் இருந்து இவையனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தனர். மற்ற நகர வாசிகளும் தரிசிக்க வந்தனர். அவர்களிடம் தனுர் யாகம் என்று கேள்விப் பட்டோமே, எங்கு நடக்கிறது விசாரித்தனர்.
இந்திர தனுஷ், அத்புதமாக இருந்தது. பல வீரர்கள் அதை கவனமாக பாதுகாத்துக் கொண்டிருந்தனர். மற்றவர்கள் தடுத்தும் கேளாமல், ஸ்ரீ க்ருஷ்ணன் அதை தூக்கி எடுத்தார். இடது கையால் லாகவமாக தூக்கி நிறுத்தி, கூடியிருந்தவர்கள் கண் எதிரிலேயே நாணை பூட்டி மத்தியில் உடைத்தார். ஏதோ ஒரு யானை கரும்பை உடைப்பது போல நிமிஷ நேரத்தில் உடைத்து விட்டார். பெரிய வில் உடைந்த சத்தம் வானத்தில் எதிரொலித்தது. திசைகளில் பரவியது. அந்த சத்தம் காதில் விழவுமே கம்சன் பயந்தான்.
காவலர்கள் ஓடி வந்தனர். பிடி, அடி, உதை என்று கத்திக் கொண்டு, கோபத்துடன் வந்தனர். அவர்கள் கையில் அகப்படாமல் இருவரும் உடைந்த வில்லின் பாகங்களை வைத்துக் கொண்டு திருப்பி அடித்தனர். கம்சனின் சேனையே வந்தது போல காவலர்கள் கூட்டம். அனைவரையும் நையப் புடைத்து விட்டு,வேகமாக நடந்து மறைந்தனர். நகர வாசிகள் பார்த்தவர்கள் திகைத்து நிற்க, வந்து விசாரித்தவர்களிடம் மகிழ்ச்சியுடன் நடந்ததை விவரித்தனர். தேஜஸ், சாமர்த்யம் , நல்ல உடல் வாகு என்று பார்த்தவர்கள் வியந்து விமரிசித்தனர். சூரியனும் ஆஸ்தமனம் ஆயிற்று. பலராமனும், க்ருஷ்ணனும் கோகுலவாசிகள் தங்கியிருந்த இடம் சென்றனர்.
கோகுல பெண்கள் கிளம்பும் முன் செய்த நல் வாழ்த்துக்களை நினைத்தனர். அத்துடன் கோகுலத்தில் அவர்களுடன் வாழ்ந்ததும் நினைவு வந்தது. மதுரா நகரிலும், நகரத்தார் வியந்து பேசிக் கொண்டனர். ஸ்ரீ லக்ஷ்மீ தேவியே, மற்ற தேவலோக அழகுகள் அனைத்தையும் இவர்களிடம் கொண்டு வந்து சேர்த்து விட்டாளா, என்ன அழகு, என்ன கம்பீர்யம், என்ன வசீகரிக்கும் மென் முறுவல் என்று பேசிக் கொண்டனர். இரவு, இருவரும் பாலுடன் ஆகாரத்தை உண்டு, தூங்கினர்.
கம்சன், ராம, கோவிந்தர்கள் தனுசை உடைத்த செய்தியைக் கேட்திலிருந்து உறக்கம் கொள்ளாமல் தவித்தான். தன் படை வீரர்களும் அடிபட்டு திரும்பியது மேலும் கவலையளித்தது. கோவிந்த, பல ராம வரவினால் தன் ம்ருத்யு வந்து விடுமோ என்ற கவலை மனதை அரிக்க, நெடு நேரம் விழித்திருந்தவன் துர் நிமித்தங்களைக் கண்டான். மனதில் பயம் காரணமாக தூது அனுப்பியதிலிருந்து பலவிதமாக நடந்த விஷயங்களையே அசை போட்டுக் கொண்டிருந்தான். கண்ணாடியில் தன் பிம்பத்தைக் கண்டே பயந்தான். ஜோதிடர்கள் சொல்வது போல இரண்டாவது என்பது இல்லை. தன் நிழலைக் கண்டே பயந்தான். தான் மூச்சு விடும் சத்தமே அவனை தூக்கி வாரிப் போடச் செய்தது. மரங்களை நோக்கினால் அதன் அடி பாகம் தெரியாமல் அந்தரத்தில் நிற்பது போல இருந்தன. கனவிலோ, ப்ரேதங்களும், ஓனாய்கள் ஊளையிடுவதும், திகம்பரனாக தைலம் பூசிக்கொண்டு ஓடுவது போலவும் இருந்தன. மரண பயம் ஆட்டுவித்த காரணத்தால், கவலையே நிறைந்து, தூங்கவே முடியாமல் இரவு முழுவதும் தவித்தபடி இருந்தான். விடிந்ததும், சூரியன் ப்ரகாசமாக தெரிந்தவுடன், மல்ல யுத்தம் என்று அறிவித்தான்.
அரங்கம் அலங்கரிக்கப் பட்டு, மக்கள் கூடி நின்றனர். துர்ய பேரி வாத்யங்கள் முழங்கின. அரங்கத்தில் மாலைகளும் தோரணங்களும், கொடிகளும் கட்டப் பட்டன. ஜனபத, அருகே இருந்த சிற்றூர்கள், நகர வாசிகள், அந்தணர்கள், க்ஷத்திரியர்கள் முதலானோர் அவரவருக்கான ஆசனங்களில் அமர்ந்தனர். அரசனுக்கு கப்பம் கட்டி வந்த அரசர்கள் வந்தனர். அவர்களுக்கான ஆசனங்கள் தயாராயின. கம்சனும் தன் மந்திரிகள் சூழ ரங்க மஞ்சம் வந்து சேர்ந்தான். மண்டலேஸ்வரன், மத்யஸ்தன் என்றவர்களும் மனதினுள் நடுக்கத்துடனே வந்தனர்.
வாத்யங்கள் உச்சஸ்தாயியில் வாசிக்கப் பட, மல்லர்களுக்கான தாளங்கள் முழங்க, மல்லர்கள் நன்றாக அலங்கரித்துக் கொண்டு திமிருடன் உபாத்யாயர்களுடன் ப்ரவேசித்தனர், சாணூரன், முஷ்டிகன், கூடன், சள, அசள என்பவர்களும் வந்தனர். அவர்களுக்கான இடத்தில் வாத்யங்கள் ஒலிக்க பெருமிதத்தோடு அமர்ந்தனர்.
போஜ ராஜனின் அழைப்பிற்கிணங்க நந்த கோபர் முதலானோர், பரிசுப் பொருள்களை சமர்ப்பித்து விட்டு தங்கள் ஆசனங்களில் அமர்ந்தனர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பாகத்தில், மல்ல ரங்கோபவர்ணனம் என்ற நாற்பத்து இரண்டாவது அத்யாயம். ) ஸ்லோகங்கள்-38
அத்யாயம்-43
ஸ்ரீ சுகர் சொன்னார்: பலராமனும் க்ருஷ்ணனும் காலை கடன்களை முடித்துக் கொண்டு, வெளியில் வந்த சமயம் மல்லர்களின் அறை கூவலைக் கேட்டனர். அந்த அரங்கத்தை நோக்கி நடந்தனர். அரங்கத்தின் வாயிலில் பெரிய யானையைக் கண்டனர். குவலயாபீடம் என்ற அந்த யானையை அதன் பாகன் ஏதோ சொல்லி தூண்டி விடுவது தெரிந்தது. சௌரி-க்ருஷ்ணன், பெரும் குரலில், அந்த பாகனைப் பார்த்து அம்பஷ்ட, அம்பஷ்ட, எங்களுக்கு வழி விடு. நகரு, இல்லையெனில் உன் யானையோடு உன்னையும் யம லோகத்துக்கு அனுப்பி விடுவேன் எனவும், அம்பஷ்டன் என்ற அந்த யானைப் பாகன் கோபத்துடன், யானையையும் தூண்டி விட்டு க்ருஷ்ணனை தாக்க வந்தான். அந்த யானையே காலாந்தகன் போல இருந்தது.
கண் மூடி திறப்பதற்குள், அந்த யானையின் மஸ்தகத்தில் ஏறி, கைகளால் பற்றிக் கொண்டு, முஷ்டியால் ஓங்கி அடித்தார். வாலை பிடுங்கி வீசியதில் குவலயாபீடம் வெல வெலத்து வீழ்ந்தது. முன் பக்கம் முகத்தை நோக்கி நின்று அடித்து விழச் செய்தார். பூமியில் வீழ்ந்த பின்னும் எழ முயன்ற யானையை தந்தத்தை பூமியில் குத்தி தன் விக்ரமம் பலிக்காமல் போனதால் கோபம் கொண்ட பாகன் விரட்டினான். கீழே விழுந்த மகா யானையின் மேல் ஏறி நின்று, பாகனையும் வீழ்த்தினார். மிகப் பெரிய தந்தமும் உடலும் கொண்ட யானை கீழே கிடந்ததைப் பார்த்து பரிதாப பட்டு, கோகுல வாசிகள், பலராமன் முதலானோர் அதைச் சுற்றி நின்றனர்.
அனைவருமாக அரங்கத்தில் நுழைந்தனர். க்ருஷ்ணன் கையில் யானையின் தந்தங்களையே பெரிய ஆயுதமாக எடுத்துக் கொண்டார். மல்லர்களுக்கு பெரும் பாறை போலவும், அரசர்களுக்கு மகா ராஜனாகவும், பெண்களுக்கு மன்மதனே உருக் கொண்டவன் போலவும், கோகுல வாசிகளுக்கு தன்னைச் சார்ந்தவன் என்ற அபிமானம் உடையவனும், அறிவில்லாத அரசர்களுக்கு ஆணயிடுபவனாகவும், தன் பெற்றோருக்கு இன்னமும் சிறு பாலகனாகவும், போஜ ராஜனுக்கு ம்ருத்யுவாகவும், வித்வான்களுக்கு விராட் புருஷனாகவும், யோகிகளுக்கு பர தத்வமாகவும், வ்ருஷ்ணி குலத்தவர்க்கு, பர தேவதை என்றும் விளங்கிய பகவான் அரங்கத்தினுள் சகோதரனுடன் நுழைந்தார்.
குவலயாபீடம் அழிந்தது என்று கேட்டது, அவர்களும் தோல்வியே காணாத வீர்கள் என்றும் அறிந்த கம்சன் மனதில் கவலையால் வலியும், மிகப் பெரிய குழப்பமும் சூழ்ந்தது.
இருவரும் பெரும் புஜங்களையுடைய வீரர்கள். விசித்ரமான உடைகள் பள பளக்க அணிந்தவர்கள். ஆபரணங்களும், மலர் மாலைகளும் அணிந்தவர்கள். நாடகத்தில் வரும் நடிகர்கள் போல அட்டகாசமாக வளைய வந்தவர்கள் காண்பவர்களை கவர்ந்தனர். பார்த்த ஜனங்கள், அரங்கத்தில் நின்ற மகா புருஷர்கள், நகரத்து, ராஜ்யத்தின் ப்ரமுகர்கள், மகிழ்ச்சியுடனும் உத்ஸாகமாகவும் அவர்களைப் பார்த்து கண்களாலேயே பருகுபவர்கள் போல பார்த்தபடி இருந்தனர், திரும்பத் திரும்ப பார்த்தும் திருப்தியடையாதவர்கள் போல. நாக்கினால் நக்கி விடுபவர் போல, மூக்கினால் நுகர்ந்து அனுபவிப்பவர்கள் போல, கைகளால் அணைத்துக் கொள்ள விரும்பியவர்கள் போலவும் இருந்தனர்.
தங்களுக்குள் பேசிக் கொண்டனர். நாம் கேள்விப் பட்டதெல்லாம் உண்மையே. அந்த ரூப, குண, மாதுர்யங்கள், ப்ரபலங்கள் பற்றி நினைவில் கொண்டு வந்தனர். வசுதேவன் வீட்டில் சாக்ஷாத் பகவான் நாராயணனே தன் அம்சமாக பிறந்தான் என்பதை அறிந்தவர்கள் அவர்கள். தேவகியிடம் பிறந்தவன் இவனே. கோகுலம் கொண்டு செல்லப் பட்டான். இதுவரை மற்றவர்கள் அறியாமல் வளர்ந்தனர். நந்தன் வீட்டில் அவன் மகனாக வளர்ந்திருக்கிறான்.
பூதனா, சகடாசுரன், காற்றாக வந்த அசுரன், அர்ஜுன மரங்கள், கேசி, தேனுகன் மற்றும் பலரையும் பற்றி கேள்விப் பட்டிருந்தனர். பசுக்களை மேய்த்துக் கொண்டு போனதும், தாவாக்னியிலிருந்து காத்து, காளியனை அடக்கி, சர்ப்பமாக வந்த அசுரனிடம் இருந்து மீட்டு, இந்திரனின் கர்வத்தை அடக்கி கோவர்தன மலையை தூக்கியது, அனைத்தும் அறிந்தவர்கள். கோகுலத்தை மேம்படுத்தியவன். கோபிகள் அனைவரும் அவனிடம் சந்தோஷமாக இருந்தனர், யது வம்சம் இவர்களால் பல சிறப்புகளைப் பெற்றது என்று கேட்டிருந்தனர். செல்வம் நிறைந்தது. புகழும், பெருமையும் அடைந்தது. முன் பிறந்தவனும் கமல லோசனனாக, ப்ரலம்பனை அழித்தான். பகன் போன்றவர்களை அழித்தான்.
இப்படி நடந்த கதைகளை மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டனர். சாணுரன் அவர்களைப் பார்த்து, ஹே! நந்தசூனோ!, ஹே ராம! பலசாலிகளாக இருப்பவர்களை வீரர்கள் என்றும் மதிப்பார்கள். அரசன் அழைத்திருக்கிறான் என்று வந்து விட்டீர்கள். இத்துடன் உங்கள் சுகமான வாழ்க்கை முடிந்தது என்று தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் என்ன மறுக்கவா முடியும்? அரசனுக்கு பிரியமானதைச் செய்வது தான் ப்ரஜைகளின் கடமை. மனம் வாக்கு காயம் இவைகளால் அரசனை மகிழ்விப்பது உங்கள் கடமை, அதைச் செய்யத் தவறினால் தண்டனை என்பது தெரிந்து வேறு வழியின்றி வந்து விட்டீர்கள் போலும். காட்டில் பசுக்களை மேய்ப்பவர்கள் குலத்தினர், மல்ல யுத்தம் பற்றி என்ன அறிவர்? விளையாட்டாக விளையாடுவது போல இல்லை இந்த அரங்கத்தில் மல்யுத்தம். ஆகவே, அரசனுக்கு பிரியமானதை, இந்த அரங்கத்தினர் கண்டு களிக்க, நாம் மல் யுத்தம் செய்வோம். பஞ்ச பூதங்கள் நமக்கு அருளட்டும், சர்வ பூதமயனே அரசன்.
இப்படி பேசியதைக் கேட்ட க்ருஷ்ணன், அந்த சமயத்துக்கு தகுந்த சொற்களால் பதில் இறுத்தான். எங்களுக்கு சம்மதம். நீங்கள் சிறந்த வீரர்கள் என்று பாராட்டினார். போஜ ராஜனுக்கு நாங்களும் ப்ரஜைகளே. காட்டில் வசித்தாலும் அவருக்கு பிரியமானதைச் செய்யவே வந்தோம். அதுவே எங்களுக்கு பெரிய அனுக்ரஹம். சிறுவர்கள் நாங்கள், எங்கள் வயதொத்த, சம பலமுடைய சிறுவர்களிடம், உசிதமான நியமங்களுடனும் தர்மத்தை மீறாமலும் மல் யுத்தம் செய்திருக்கிறோம். இந்த சபையிலும் அதர்மம், மல்யுத்த விதி முறைகளை மீறுவது என்பவை இருக்கக் கூடாது.
சாணூரன் சொன்னான்: நீ பாலனும் அல்ல, கிசோர என்ற குமரனும் அல்ல. பலராமனும் பலசாலிகளுள் சிறந்தவன். லீலையாக குவலயா பீட யானையை அடித்ததிலேயே தெரிந்து கொண்டோம். அந்த யானை ஆயிரம் யானைகளுக்கு சமமான பலமுடையது. அதனால் எங்களுக்கு சமமான வீரர்களோடு மோதுகிறோம் என்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றான்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், முதல் பகுதியில், குவலயாபீட வதம் என்ற நாற்பத்து மூன்றாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்- 43
அத்யாயம்- 44
இவ்வாறு பூர்வ பீடிகைகள் ஆன பின் பகவான் மது சூதனன் சாணூரனை எதிர் கொண்டான். முஷ்டிகணை ரோஹிணி மைந்தன் பலராமன் எதிர் கொண்டான். கைகளால் கைகளை, பாதங்களால் பாதங்களில், சுற்றி வளைத்துக் கொண்டு இரு பக்கமும் வெற்றியே இலக்காக மல் யுத்தம் ஆரம்பமாயிற்று. முழங்கால்களால், முழங்கால்கள், தலைகளோடு தலை, என்று அன்யோன்யம் முட்டிக் கொண்டன. சுற்றி வந்து வீசி அடித்து, கீழே தள்ளி, மேலெழுந்தும் கீழே விழச் செய்தும் மல் யுத்தம் வளர்ந்தது. அதற்கான நியமங்கள், பல பரீக்ஷைகள், என்று யுத்தம் செய்வதை காண வந்திருந்த ஊர் மக்கள் கவலைப் பட்டனர். இது அதர்மம். வஜ்ரம் போன்ற உடல் கொண்ட இந்த வீர்கள் மலை போன்ற சரீரம் உடையார்கள் எங்கே, அதி சுகுமாரமான தேகம் உடைய குமார்கள் இவர்களுடன் போரிடுகிறார்கள். இன்னமும் யௌவனம் அடையாத இளம் பருவத்தினர். தர்ம விரோதமான இந்த செயலின் பலன் சமாஜத்தில் ஏதோ கேடு விளைவிப்பதாக வெளிப்படும். அதர்மமான இந்த இடத்தில் நாமும் இருக்க கூடாது. இது போன்ற சபையில் விஷயம் அறிந்தவர்கள் ப்ரவேசிக்க கூடாது. சபை தோஷம் என்பர்- அதர்மத்தை ஒத்துக் கொள்வது போல என்பர். சில சமயம் பேச வேண்டிய இடத்தில் பேசாமல் இருந்தாலும் மனிதன் தண்டனை அடைகிறான்.
காண வந்தவர்கள், சிரமத்தினால் பத்மம் போன்ற க்ருஷ்ணனின் முகம் மழையால் அடிபட்டது போல வாடி விட்டது என்று அங்கலாய்த்தனர். பலராமன் முகத்தை பாருங்கள், தாமிர வர்ணமாக ஆகி விட்டது. முஷ்டிகனோடு சிரித்துக் கொண்டு தான் எதிர்க்கிறான். இருந்தாலும் வாட்டம் தெரிகிறது என்றனர்.
வ்ரஜ தேசம் புண்யம் செய்தது. இவர்கள் இருவரும் மனித வேடத்தில் வந்த புராண புருஷர்கள். காட்டுப் பூக்களை தொடுத்து மாலையாக போட்டுக் கொண்டிருக்கின்றனர். பசுக்களை மேய்த்து, வேணுவை வாசித்தும், மலை சரிவுகளில் விளையாட்டாக ஏறி இறங்கி இவர்கள் பாதங்களால் புனிதமாக்கி இருக்கிறார்கள். கோகுல பெண்கள் என்ன தவம் செய்தனரோ? இந்த ரூப லாவண்ய சாரமான இவர்களை கண்களால் பருகுவது போல கண்டிருக்கிறார்கள். கிடைக்க அரிதான இவர்களுடைய அண்மை. ஏகாந்தமாக உடன் இருந்திருக்கிறார்கள், லக்ஷ்மி தேவி வாசம் செய்யும் ஈஸ்வரன் இவன்.
பால் கறக்கும் சமயங்களில், அதை பக்குவப் படுத்தி கடைந்து வெண்ணெய் எடுப்பதும், கொட்டில்களை சுத்தம் செய்வதும், கன்றுகளை சமாதானப் படுத்தி அழைத்துச் செல்வதுமாக இருந்ததை பாடுகிறார்கள். பாடும் குரல் தழ தழக்கிறது. அவ்வளவு அன்பும் ஈடுபாடும் இவர்களிடத்தில். தன்யர்கள், வ்ரஜ குலத்தில் பிறந்த பெண்கள். எளிய பெண்கள், கபடமில்லாத மனதுடன் சேவை செய்து அதே த்யானமாக இருந்து வந்திருக்கின்றனர். காலையில் வ்ரஜ தேசத்திலிருந்து கிளம்பி மாடு கன்றுகளை மேய்த்துக் கொண்டு காடுகளுக்குச் சென்றால் மாலையில் மாடுகள் கத்தும் குரலுடன் (ரம்பா- பசுவின் குரல்) தானும் வேணுவை வாசித்துக் கொண்டு வருவார்கள். வேணு நாதம் கேட்டவுடனேயே அந்த பெண்கள், வழியில் எதிர்கொண்டு அன்புடன் மெல்ல சிரித்துக் கொண்டு களைத்து வருபவர்களிடம் கருணையுடன் பார்த்து பேசி உடன் வருவார்கள். இவ்வாறு அவரவர் கேள்விப்பட்டதை பகிர்ந்து கொண்டு அந்த நகரத்து பெண்கள், மல் யுத்தம் செய்யும் வீரர்களையும் சிறுவர்களையும் பதைப்புடன் பார்த்தபடி இருந்தனர்.
யோகேஸ்வரனான ஸ்ரீ ஹரி, சத்ருவை வதைக்கத்தான் வேண்டும் என்று தீர்மானித்தார். சபையில் இருந்த தாய் மார்கள், தங்கள் மகன் போல நினைத்து, வாத்சல்யத்துடன், கவலை படுவதையும், கனிவாக பேசிக் கொண்டிருந்ததையும், தந்தைமார், அதே போல தங்கள் இன்னமும் உடலும் மனமும் முதிராத சிறு புதல்வர்கள் போல அவர்களை எண்ணி தவிப்புடன், செய்வதறியாது நிலை கொள்ளாமல் நிற்பதையும் பார்த்தார்.
மல் யுத்த விதிகளை சற்றும் மீறாமல் அச்யுதனும், சாணூரனும் தொடர்ந்து யுத்தம் செய்தனர். பலராமனும் முஷ்டிகனும் அதே போல மல் யுத்தம் செய்தனர். இனி கொல்வது என்று தீர்மானித்த பின் சாணூரனால் ஈடு கொடுக்க முடியவில்லை. ஸ்ரீ ஹரியின் ஒவ்வொரு அடிக்கும் உடல் தளர்ந்து களைத்தான். அடிக்கடி வலி தாங்க மாட்டாமல் தவித்தான். சமாளித்துக் கொண்டு கழுகு போன்ற வேகத்துடன், முஷ்டியினால் ஸ்ரீ ஹரியின் மார்பில் குத்தினான். அந்த கைகளையே பிடித்துக் கொண்டு வேகமாக சுழற்றி மேலே வீச, அதே வேகத்தில் பூமியில் விழுந்த சாணூரன், அந்த க்ஷணமே உயிரை விட்டான்.
பலராமன் சிறந்த மல் யுத்த வீரன். முஷ்டிகன் முஷ்டியால் குத்தப் போக அந்த கைகளையே பிடித்து , இடது கையாலேயே பலராமன் சுழற்றி வீசவும், அவனும் மடிந்தான்.
இருவரும் மடிந்தபின், சல, தோசல என்ற வீரர்களும் போரிட்டு மடிந்தனர். அவர்களுடன் வந்த மல் யுத்த வீரர்கள் உயிரை காத்துக் கொள்ள ஓட்டம் பிடித்தனர்.
கோகுலத்து வாசிகள், அனைவரும் வந்து வாழ்த்தினர். ஒத்த வயதினர் கண்களில் நீருடன் அணைத்து வாழ்த்தினர். வாத்யங்களை வாசித்தும், நடனம் ஆடியும் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். வந்திருந்த ஜனங்களும் மகிழ்ந்தனர். கம்சனைத் தவிர இந்த இளைஞர்களின் வெற்றியை ஊர் மக்களும் கொண்டாடினர். அந்தணர்கள் சாது சாது என்றனர். நன்மக்கள் அனைவரும் சாது சாது என்றனர்.
தோற்றவர்களும் ஓடி விட, மல்லர்களை வெற்றி கொண்டதை தெரிவிக்க வாத்யங்கள் முழங்குவதை நிறுத்தச் சொல்லி கம்சன் ஆணையிட்டான். அந்த வசு தேவ குமாரர்களை ஊரை விட்டு விரட்டுங்கள். கோகுலத்திலிருந்து வந்தவர்களின் செல்வத்தை கொள்ளையிடுங்கள். துர்மதி நந்தனை பிடித்துக் கட்டுங்கள் என்று உத்தரவிட்டான். வசுதேவரை உடனே கொல்லுங்கள். என் தந்தை உக்ர சேனன் அவர்கள் பக்ஷபாதி. அவனையும் அவன் உடன் பிறந்தார்களையும் கொல்லுங்கள் என்றான். இப்படி தன் மனதின் ஆற்றாமையால் சொல்லிக் கொண்டே போக, அவனறியாமல் தன் லகிமா என்ற சக்தியால் அவன் படுக்கையின் அருகிலேயே ஸ்ரீ ஹரி வந்து நின்றார். படுக்கையின் மேலேயே ஏற முயன்ற ஸ்ரீ ஹரியை தன் ம்ருத்யு என்றே பார்த்த கம்சன் அவசரமாக எழுந்து தன் உடை வாளை எடுத்தான்.
கையில் வாளுடன் நின்றவனை, நடு வானத்தில் பறக்கும் கழுகு எப்படி வேகமாக வந்து விஷ நாகத்தை தூக்கிக் கொண்டு போகுமோ, அந்த அளவு உக்ர தேஜசுடன், கம்சனை இறுக பிடித்தார். அவன் கிரீடம் அசைந்து விழ, மஞ்சத்திலிருந்து விழச் செய்து அவன்மேல் ஏறி நின்றார். அனைவரும் பார்த்திருக்கையிலேயே, விஸ்வாஸ்ரயனான ஸ்ரீ ஹரி, கம்சனை பூமியில் வீசி, யானையை சிங்கம் தாக்குவது போல, தாக்கினார். ஜனங்கள் ஹா ஹா என்று அலறினர். கண் முன்னால் நடப்பதை நம்ப முடியாமல் திகைத்தபடி நோக்கினர்.
அந்த கம்சனோ, சதா அந்த ஈஸ்வரனையே நினைத்து பயந்தவன், அவனே நினைக்காவிட்டாலும், மனம் முழுவதும் ஹரி ஸ்மரனையே, பேசும் பொழுதும், பருகும் பொழுதும், நடக்கும் பொழுதும், தூங்கும் பொழுதும், மூச்சு விடுவதே ஹரி ஸ்மரனையோடு, இருந்தவன் சக்ராயுதத்துடன் எதிரில் காணக் கிடைக்காத அந்த காட்சியைக் கண்டான்.
அவனுடைய சகோதரி, எட்டு தம்பிகள், கங்கண், ந்யக்ரோத என்பவர்கள், ஓடி வந்தனர். மிகுந்த கோபத்துடன் தங்கள் மூத்தவனின் ஆணையை சிரமேற் கொண்டு வாழ்ந்தவர்கள், பரபரப்புடன் வந்தனர். அவர்களை நெருங்க விடாமல் ரோஹிணி மகன், பலராமன் தன் பரிகத்தாலேயே வதைத்தார். ம்ருகேந்திரன்- சிங்கம், மற்ற மிருகங்களை வதைப்பது போல.
வானத்தில் துந்துபிகள் முழங்கின. ப்ரும்மா முதலானோர், பூ மாரி பொழிந்தனர். பல பெண்கள் பாடினர், ஆடினர்.
கம்சனின் மனைவிமார்கள், மற்றும் அவனைச் சார்ந்தவர்கள் அவனிடம் ஒத்து வாழ்ந்தவர்கள், தலையில் அடித்துக் கொண்டு அழுதனர். அவனுடன் வீர சய்யா என்ற படுக்கையில் படுத்தவர்கள் வருந்தினர். ஹா நாதா! என்றும் பிரியமானவனே என்றும் தர்மக்ஞன் என்று சொல்லி கருணா நாதன்! வத்சலா! என்று அழுதனர். உன்னை வதைத்த பின் எங்களுக்கு யார் கதி? உன் குடும்பத்தோடும் ப்ரஜைகளோடு அழிவோம். இந்த ஊரும் நாதனான உன் பிரிவால் வாடுகிறது பார். எங்களைப் போலவே அவையும் சோபையிழந்து காணப் படுகின்றன. இனி உத்சவங்கள் ஏது? குற்றமற்றவன் நீ, உன்னை ஏன் வதைத்தனர். உன்னைக் கொன்றதால் பஞ்ச பூதங்களுக்கும், ஜீவன்களுக்கும் த்ரோஹம் செய்து விட்டனர். அவர்கள் எப்படி நலமாக வாழ்வார்கள்? இந்த ஸ்ரீ ஹரிதான் சர்வ உயிரினங்களுக்கும் காக்கும் தெய்வம் என்பர். அவன் எப்படி இந்த செயலைச் செய்யலாம் என்றனர்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இப்படி பெண்கள் வருந்துவதைக் கண்ட ஸ்ரீ ஹரி அவர்களை சமாதானப் படுத்தினார். அவர்களை உலகியலில் இறந்தவர்களுக்குச் செய்யும் அபர காரியங்களைச் மறைந்த கம்சனுக்கு செய்யச் சொன்னார்.
தன் தாய் தந்தையரை சிறையிலிருந்து விடுவித்து விட்டு, அவர்களை பாதம் தொட்டு வணங்கினர். தேவகியும், வசுதேவரும் அறிந்ததே, தங்கள் மகன் ஜகதீஸ்வரன் என்று. அவர்களும் புதல்வர்களை அப்படியே நினைத்து பதில் வந்தனம் செய்தனர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், முதல் பகுதியில், கம்ச வதோ என்ற நாற்பத்து நான்காவது அத்யாயம்) ஸ்லோகங்கள்- 51
அத்யாயம்-45
ஸ்ரீ சுகர் சொன்னார்: தாய் தந்தையர் இருவரும் தங்கள் செல்வத்தை திரும்ப பெற்றனர் என்பதையறிந்து புருஷோத்தமன், தன் மாயையால் எடுத்த மல்ல ரூபத்தை விட்டு, ஜனங்களை வசீகரிக்கும் சுய ரூபத்தை அடைந்தான்.
அவர்களை முன் பிறந்தோனான பலராமனுடன் சென்று தரிசித்தான். சத் குணங்களே நிரம்பியவனாக, மிகவும் அன்புடன் வணங்கி, மகிழ்வித்து, அம்மா, அப்பா என்றழைத்தான். அவர்கள், மகனே உங்கள் இருவரையும் சிசுவாக கண்டதோடு சரி. அதன் பின் பால்யம், கிசோர, குமார என்ற நிலைகளைக் கண்டு மகிழும் பாக்கியம் கிடைக்கவேயில்லை. அதற்காக ஒவ்வொரு நாளும் எவ்வளவு தவித்தோம் என்றனர்.
எங்களுக்கு தெய்வம் அந்த மகிழ்ச்சியை அளிக்கவேயில்லை. சாதாரணமாக பெற்றோர் குழந்தைகள் வளரும் சமயம் , கொஞ்சி குலாவி, அனுபவிக்கும் ஆனந்தம் எங்களுக்கு கிடைக்கவில்லை. தனக்கு பிறந்த குழந்தைகள், அவைகளை போஷித்து வளர்ப்பது பெற்றவர்களுக்கு நூறு முறை பிறப்பதற்கு சமம்.
உடல் நலம் , செல்வம் மற்ற வசதிகள் இருந்தும் தன் குழந்தைகளுக்கு சரீரத்தாலும், செல்வத்தாலும் செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டால் அது மிக பெரியத் தவறாகும். வசதியுடையவன், தாய் தந்தையரை, முதியவரை, சாத்வீ – நல்ல குணமுள்ள மனைவியை, மகனை, சிசுவை, குருவை, அந்தணரை, அடைக்கலம் கேட்டு நிற்பவனை, காப்பாற்றாமல் விட்டால் மூச்சு இருந்தாலும் மரணமடைந்தவனாகவே கொள்ள வேண்டும்.
ஆனால் எங்களுக்கு வசதியோ, உடல் நலமோ இல்லாமல் இல்லை. கம்சனிடத்தில் தினம் நடுங்கிக் கொண்டிருந்தோம். இப்பொழுது தான் அந்த பயம் நீங்கியது. எனவே, குழந்தைகளே எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள். எங்கள் பொறுப்பை தட்டிக் கழித்ததாகவோ, அன்பில்லாமல் விரட்டியதாகவோ எண்ண வேண்டாம். எங்கள் கை கட்டப் பட்டிருந்தது. எங்கள் வசத்தில் எதுவும் இல்லை. உங்களுக்கு நாங்கள் செய்ய வேண்டியதைச் செய்யவில்லை என்று மனத் தாங்கல் வேண்டாம். என்றனர்.
ஸ்ரீ ஸுகர் சொன்னார்: மாயா மனுஷ்யன், விஸ்வாத்மன், ஸ்ரீ ஹரி என்று அறிந்தோ அறியாமலோ, தாய் தந்தை என்ற பாசத்தால் இவ்வாறு சொல்லி மடியில் இருத்தி அனைத்துக் மகிழ்ந்தனர். கண்ணீர் ஆறாக பெருக, எதுவும் பேச முடியாமல் தொண்டை அடைக்க விசும்பியபடி இருந்தனர். அவர்களை சமாதானப் படுத்தி விட்டு பகவான், தாய் வழி பாட்டனார், உக்ர சேனரை விடுவித்து யது வம்சத்து அரசனாக நியமித்தார். அவர் சொன்னார், ப்ரஜைகளிடமும் சொல். யது வம்சத்தினர் அரசாஸனத்தில் அமரக் கூடாது என்ற யயாதியின் சாபம் உண்டு. அவர்கள் சம்மதிக்காவிட்டால், அரசு பணிகளில் உள்ளவர்கள் எனக்கு அடங்க மாட்டார்கள். வரி வசூலிப்பதை எடுத்துக் கொள்வார்கள். மற்ற சிற்றரசர்கள் என்ன செய்வார்களோ, இதுவரை எல்லா தாயாதிகளும், பங்காளிகளும் கம்சனிடம் பயந்து வாய் மூடி இருந்தனர். யது, வ்ருஷ்ணி, அந்தக, மது, தாஸார்ஹ, குகரா என்று மற்ற குடித் தலைவர்கள் போட்டியிடலாம். பாகம் பிரித்து கொடுத்து, சமாதானம் செய்து. அவர்களை தங்கள் வீடுகளில் வசிக்கச் செய். தாராளமாக தனம் கொடுத்து அவர்கள் வாழ்க்கை வளம் பெறச் செய். இது வரை நகரங்களில் நுழையாமல் வருந்தி ஜீவனம் செய்து வந்திருக்கிறார்கள்.
க்ருஷ்ண, ராமர்கள் அவ்வாறே செய்து அவர்கள் தங்கள் வீடுகளில் குடியேறி, திருப்தியாக, தங்களுக்கு வேண்டியதை கிடைக்கப் பெற்றவர்களாக, அவர்கள் இருவரிடம் மிகவும் அன்யோன்யமாக ஆனார்கள். அவர்களை பார்த்தே மகிழ்ந்தனர். தினமும் மலர்ந்த முகத்துடன், லக்ஷ்மீகரமாக , மென் முறுவலோடு அவர்கள் கண் பார்வை தங்கள் மேல் பட்டாலே பாக்யம் என்று நினைத்தனர். அந்த குலத்து இளைஞர்கள் அனைவரும் க்ருஷ்ண, பல ராம பக்ஷத்தினர் ஆயினர்.
தேவகி சுதனான பகவான், பலராமனும் உடன் வர, நந்தனிடம் சென்றார். அவரை பரிவுடன் அணைத்து ‘தந்தையே, நீங்கள் எங்களை மிகவும் அன்புடன் போஷித்து வளர்த்தீர்கள். பெற்றோரை விட அதிகமாக உங்கள் இருவரிடமும் நாங்கள் பாசத்துடன் வளர்ந்தோம். எவர் தன் மகனை விட அதிகமாக வளர்க்கும் குழந்தையிடம் பாசமாக இருக்கிறாரோ, அவர்கள் தான் ஜனனீ, அவர் தான் தந்தை. சந்தர்ப வசத்தால், தங்களுக்கு பிறந்த குழந்தையை தாங்களே வளர்க்க முடியாமல் பந்துக்களிடம் விட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். தந்தையே! இப்பொழுது வ்ரஜ தேசம் செல்லுங்கள். நாங்கள் பின்னால் வருகிறோம். எங்கள் பிரிய சகாக்களை சந்திக்கவும், தாய்மார்களை காணவும் வருவோம். மற்ற பந்துக்கள் அனைவரிடம் துக்கப்பட வேண்டாம் என்று சொல்லுங்கள்.
இவ்வாறு நந்தனை சமாதானப் படுத்தி அவர்கள் உடன் வந்த கோகுல வாசிகளோடு, அனைவருக்கும் நல்ல ஆடைகள், அலங்கார பொருட்கள் இவைகளை அளித்து அனுப்பி வைத்தார். நந்தனும் பரிவுடன் அணைத்து, கண்களில் நீர் ஆறாக பெருக ஆசீர்வதித்து விட்டு கோகுலம் சென்றார்.
அதன் பின் ஸூரசேனன் அரசனாகி, தன் புதல்வர்களுடன், மந்திரிகளை நியமித்து, புரோஹிதர் என்ற குருவுடன், அந்தணர்களுக்கு தகுந்த பதவிகளையும், தக்ஷிணைகளும் கொடுத்து, நியமங்களுடன் அரசாட்சியை ஆரம்பித்தார். பசுக்கள், மாலைகளால் அலங்கரிக்கப் பட்டு, கன்றுகளுடன், தானம் செய்தார். ஸ்ரீ க்ருஷ்ணன், பலராமன் பிறந்த தினத்தில், அந்த சமயம் செய்யாமல் விட்ட, தானங்களை, அரச குலத்து சம்ஸ்காரங்களை செய்தனர். அவை கம்சனால் அதர்மமாக நிறுத்தப்பட்டிருந்தன.
அதன் பின் முறையாக உபனயனம் செய்வித்தார். கர்கர் என்ற யது குல ஆசார்யரிடம் காயத்ரி மந்த்ரோபதேசம் பெற்றனர். கல்வியும், ஞானமும் பெற குருகுலம் சென்றனர். காசி நகரத்தில், அவந்தி புர வாசியான ஸாந்தீபினீம் என்ற குருகுலத்தில் வசிக்கலாயினர்.
அவர்கள் இருவரும் இயல்பாகவே சிறந்த ஒழுக்கமும், கல்வியை கவனமாக கேட்டுத் தெரிந்து கொள்ளும் ஆர்வமும் கொண்டவர்கள் ஆனதால், அவர் சொல்வதைக் கேட்டு உடனடியாக க்ரஹித்துக் கொண்டனர். ரிஷிகளிடம் தேவர்கள் கற்பது போல. எனவே, அவரிடம் அந்த அந்தண ஸ்ரேஷ்டர் மகிழ்ச்சியடைந்தார். கற்றதை சுத்தமான பாவத்துடன் திருப்பி சொல்வர். வேத சாஸ்திரங்கள் அனைத்தையும் சாங்கோபாங்கமாக கற்றுக் கொடுத்தார். ரகஸ்யமான தனுர்வேதம், தர்ம நியாயங்கள், அதன் பல பிரிவுகள், அத்துடன் ஆன்வீக்ஷிகீம் என்ற வித்யா (ஆராய்ச்சி) ராஜ நீதி, இதிலும் ஆறு பிரிவுகள், இவையனைத்தையும் அவர் சொன்ன மாத்திரத்தில் மனதில் வாங்கி உருவேற்றிக் கொண்டது போல சகல வித்தைகளையும் கற்றுத் தேர்ந்தனர். அறுபத்து நான்கு கலைகளையும் இரவும் பகலுமாக படித்து, கற்ற பின் குருவிடம் ஆசார்ய தக்ஷிணையாக என்ன தருவது என்று வினவினர்.
குரு அவர்களின் இந்த மகிமையை அறிந்தவர், அமானுஷ்யமான சக்தியுடையவர்கள் என்பதையும் எண்ணி, தன் மனைவியுடன் ஆலோசித்து, பெரும் கடலில் மூழ்கி இறந்த தங்கள் பாலகனை மீட்டு வர வேண்டினார். உடனே சம்மதித்து, பெரிய ரதத்தில் ஏறி, வேகமாக சென்றனர். சமுத்திர கரையை அடைந்ததும் ஒரு க்ஷணம் நின்றனர். சமுத்திர ராஜன் அதையறிந்து வந்து வணங்கினான். அவரிடம் ஸ்ரீ க்ருஷ்ணன், எங்கள் குரு புத்திரனை கண்டு பிடித்து தாருங்கள் என்றான். அவன் இந்த சமுத்திரத்தில் பாலகனாக இருந்த பொழுது மூழ்கி அலைகளால் அடித்துச் செல்லப் பட்டானாம்.
சமுத்திரம் சொல்லியது: ஹே க்ருஷ்ணா! நான் அந்த செயலைச் செய்யவில்லை. இந்த சமுத்திரத்தின் ஆழத்தில் ஐந்து அசுரர்கள் சங்க ரூபத்தில் நடமாடுகிறார்கள். அவர்கள் கவர்ந்து கொண்டு போயிருக்கலாம் எனவும், பகவான் ஜலத்தில் குதித்து தேடினார். பாலகன் அகப்படவில்லை. கடல் ஆழத்தில் இருந்து தனக்கு பிடித்த சங்கத்தை எடுத்துக் கொண்டு திரும்பி வந்தார். அதன் பின் சம்யமனீம் என்ற யம புரியை அடைந்தனர். அங்கு சென்றவுடன் ஜனார்தனனாக தன் சங்கத்தை பலமாக ஊதினார். சங்க நாதம் கேட்டு குழப்பத்துடன் யமராஜன் வந்தான். அவனுடைய கடமையே ப்ரஜைகளை கொண்டு செல்வது தானே. நேரில் கண்டவுடன் இருவரையும் உபசாரம் செய்து அழைத்துச் சென்றான். ஹே விஷ்ணோ! லீலை – விளயாட்டாக மனித உருவம் எடுத்து அவதரித்தவர்கள், உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்? என்று பணிவாக வேண்டினான்.
ஸ்ரீ க்ருஷ்ணன் ‘உங்கள் கடமை என்பதால் எங்கள் குரு புத்திரனை இங்கு கொண்டு வந்து விட்டீர்கள். அது சரியே. மகாராஜா! அவனை கொண்டு வந்து கொடுங்கள். என் கட்டளை என்று கொள்ளுங்கள். சரியென்று யம ராஜனும், குரு புத்திரனை கொண்டு வந்து தர, திரும்பி வந்து குருவிடம் ஒப்படைத்து விட்டு, மேலும் எதுவானாலும் கேளுங்கள் என்று பணிவுடன் சொன்னார்கள்.
குரு சொன்னார்: குழந்தைகளே! நன்று செய்தீர்கள். நீங்கள் இருவரும் குருவுக்கு தக்ஷிணையாக மிகப் பெரிய உபகாரம் செய்து விட்டீர்கள். உங்களை மாணாக்கர்களாக பெற்ற குருவிற்கு வேறு தேவைகளும் இருக்குமா என்ன? வீரர்களே! உங்கள் வீடு செல்லுங்கள். உங்களுக்கு நல்ல கீர்த்தியும், இகத்திலும் பரத்திலும் பாவனமாக நன்மைகளே கிடைக்கட்டும். கற்ற வேத வித்தைகளை மறக்காமல் அத்யயனம் செய்யுங்கள். குரு இவ்வாறு அனுமதித்து விடை கொடுத்தவுடன், இருவரும் ரதத்தில் ஏறிக் கொண்டு வேகமாக தங்கள் இருப்பிடம் வந்து சேர்ந்தனர். இருவரையும் கண்டு நகர ஜனங்கள் மகிழ்ந்தனர். வெகு நாட்களாக காணாமல் இருந்தவர்களை கண்டதே, தொலைந்து போன செல்வத்தை திரும்பப் பெற்றது போல மகிழ்ந்தனர்.
( இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், குருபுத்ரானயனம் என்ற நாற்பத்தி ஐந்தாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்- 50
அத்யாயம்-46
ஸ்ரீ சுகர் சொன்னார்: வ்ருஷ்ணி குலத்து முக்ய மந்திரி ஸ்ரீ க்ருஷ்ணனின் அன்யோன்யமான சகா. ப்ருஹஸ்பதியின் சிஷ்யர் அவர். சாக்ஷாத் உத்தவர் என்ற பெயருடையவர், சிறந்த புத்திசாலி. ஸ்ரீ க்ருஷ்ணனிடம் மிகுந்த பக்தியுடையவர்.
பகவான் அவரிடம் தனிமையில் தன் கைகளில் அவர் கையை ஏந்தியபடி ஒரு விஷயம் சொன்னார். உத்தவா! வ்ரஜ தேசம் செல். சௌம்யனே! என் பெற்றோர்களைக் கண்டு அன்புடன் நலம் விசாரி. கூடவே கோகுல பெண்களிடம், அவர்கள் என் பிரிவால் வாடுகிறார்கள், அவர்களுக்கு என் அன்பை தெரிவித்து அவர்களை சமாதானப் படுத்து. அவர்கள் என்னையே மனதில் நினைத்தவர்கள். எனக்கு ப்ராணன் போன்றவர்கள். என் காரணமாக தங்கள் தேகத்தில் பற்றையே விட்டவர்கள். என்னையே பிரியமான வாழ்க்கை துணையாக மனதில் வரித்தவர்கள். அதன் காரணமாக உலகியல் தர்மத்தைக் கூட விட்டு விட்டவர்கள். என் மனதில் அவர்களை நான் என்றும் நினைவில் வைத்திருப்பேன்.
என்னிடத்தில் அவர்கள் வைத்திருக்கும் ப்ரேமை அளவிட முடியாதது. எங்கோ தூரத்தில் வ்ரஜ தேசத்தில் இருந்தாலும் என்னையே நம்பி நினைத்திருக்கிறார்கள். என் பிரிவினால் வாடி, நினைவிழந்து போகிறார்கள். குரல் கமற தவிக்கிறார்கள். எப்படியோ கஷ்டப் பட்டு நான் திரும்பி அவர்களிடம் திரும்பி வருவேன் என்ற நம்பிக்கையுடன் உயிரை கையில் பிடித்துக் கொண்டு வாழ்கிறார்கள். அவர்கள் என் ஆத்மாவே ஆவர்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ராஜன்! இதைக் கேட்டு உத்தவர், தன் தலைவனின் கட்டளையை சிரமேற் கொண்டு ரதத்தில் ஏறி, நந்த கோகுலம் சென்றார். அங்கு சூரியன் மறையும் அஸ்தமன வேளையில் சென்றவர் ரதத்திலிருந்தபடியே பசுக்கள் திரும்பி வரும் சமயம் அவைகள் காலடியால் தூசி பறக்க, வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார்.
தங்கள் தொழுவங்களை அடையாளம் கண்டு கொண்ட பசுக்கள் உரக்க குரல் கொடுத்து மகிழ்ச்சியைத் தெரிவித்தன. காளைகள் ஓடி வந்தன. சிறு கன்றுகள் உடைய தாய் பசுக்கள் மடியின் கனம் தாங்காமல், தங்கள் கன்றுகளைத் தேடின. இங்கும் அங்குமாக அவைகளின் கன்றுகள் தங்கள் தாய்மார்களை கண்டு ஓடி வந்தன. ஒரு பக்கம் பசுக்களை அதன் இடையர்கள் பால் கறக்கும் சத்தமும் கேட்டது. இடையில் வேணு நாதமும் கேட்டது.
கோகுல வாசிகள் ஆண்களும் பெண்களும் பல ராம, க்ருஷ்ணன் இவ்விருவருடைய வீரச் செயல்களை பாடலாக பாடிக் கொண்டிருந்தனர். கோகுலத்து பெண்கள் நன்றாக அலங்கரித்துக் கொண்டு வளைய வந்தனர். ஊருக்குள், அக்னி,ஸுரியன் இவர்களை உபாசிப்பவர்கள் அதன் நியமத்தோடு செய்து கொண்டிருந்தனர். அதிதி, பசுக்கள், அந்தணர்கள், இவர்களுக்கான கவனிப்பும், பித்ருக்களுக்கான பூஜைகளும், தேதைகளை அர்ச்சனை செய்து தூப தீபங்கள் மாலைகள் இவற்றுடன் பூஜை செய்தவர்கள், என்று ஊரில் அனைவரும் சுறு சுறுப்பாக இருந்தது காணவே மனதிற்கு ரம்யமாக இருந்தது. எங்கும் வனங்கள் பூக்களைச் சொரிந்த மரங்கள், பறவைகள், வண்டுகள் நாதம், ஹம்ஸ காரண்டவ பக்ஷிகள் நிரம்பிய தாமரைக் குளங்கள், என்று உத்தவர் ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்தார்.
அவர் வந்திருப்பதையறிந்து நந்தன் வந்து வரவேற்றார். க்ருஷ்ணனுக்கு பிரியமான தோழன், என்பதால் மகிழ்ச்சியுடன் ஆலிங்கணம் செய்து வரவேற்று, வாசுதேவனையே கண்டது போல உபசாரம் செய்தார். பரமான்னம் அதனுடன் மற்ற உணவு வகைகள் என்று உண்ணச் செய்தார். அவர் ஓய்வு எடுத்துக் கொண்டபின் மதுரா நகரின் நிலவரங்களைப் பற்றிக் கேட்டார்.
மஹாபாக, எங்களுடைய சகா, ஸுரனின்மகன் வசுதேவன் குசலமா? தன் புதல்வர்களை அடைந்து சந்தோஷமாக இருக்கிறானா? கம்சன் துன்புறுத்தியதிலிருந்து விடுபட்டான். நலம் விரும்பும் நண்பர்கள், தோழர்களுடன் மகிழ்ந்து இருக்கிறானா? நல்ல வேளை, கம்சன் மறைந்தான். பாபி, அவன் உடன் பிறந்தானும் அதை விட துஷ்டன், தன் தகாத வினைகளாலேயே கெட்டனர். சாதுக்களை, தர்ம சீலர்களாக இருந்த யது குலத்தோரை சதா துன்புறுத்தினான்.
க்ருஷ்ணன் எங்களை நினைக்கிறானா? தாயார் யசோதையை, ரோஹிணியை, தன் தோழர்களை, சகிகளை, கோகுல வாசிகளை, வ்ரஜ தேசத்தை, அவனையே தலைவனாக எண்ணி பின் தொடர்ந்த பசுக்கள், கன்றுகள், வ்ருந்தாவனத்தை, கோவர்தன கிரியை நினைவில் வைத்திருக்கிறானா?
வருவானா? இந்த கோகுல வாசிகளை சற்று பார்த்து விட்டுப் போகலாம் என்று வருவானா? வந்தால் எங்கள் பாக்யம். அந்த அழகிய மென் முறுவலோடு கூடிய முகத்தை காண்போம். கண்களின் கடாக்ஷத்தை பெறுவோம். பலசமயங்களின் அவன் எங்களை காப்பாற்றி இருக்கிறான். காட்டுத்தீயிலிருந்து மீட்டதை, அடை மழை விடாது பெய்தது, கோவர்தன மலையை தாங்கி அதனடியில் கோகுலம் பூராவும் இருந்தோம். காளையாக, சர்ப்பமாக, வந்த அசுர்களிடமிருந்து காத்தான். மரண வாயிலில் நின்றோம். மகாத்மா க்ருஷ்ணன் அவன் தான் எங்களைக் காப்பாற்றினான்.
நாங்கள் நினைக்காத நாளில்லை. அவர்களின் வீர்யத்தைப் பற்றிப் பேசுவோம். விளையாட்டாக வேடிக்கையாக பேசும் பொழுது கூட கடைக் கண் அழகில் மயங்குவோம். அவன் சிரித்தது, பேசியது, இவற்றை நினைத்து நினைத்து நம்ப முடியாமல் திகைக்கிறோம். ஏனெனில் ஒவ்வொன்றும் மிக அரிதான செயல்கள். நதி, மலை, மலை சரிவுகள் இவைகளில் முகுந்தனின் பாதம் படாத இடமே இல்லையெனும் படி சுற்றியிருக்கிறான். அந்த இடங்களை இப்பொழுது நாங்கள் கடக்கும் போது உணர்ச்சி மேலிட அவனாகவே ஆகி விடுகிறோம்.
பலராமனும், க்ருஷ்ணனும் ஏதோ உயர்ந்த தேவ குலத்தவர் என்று எண்ணினோம். இங்கு நம்மிடை வந்து சேர்ந்திருக்கிறார்கள். ஏதோ மிகப் பெரிய தேவ கார்யம், கர்கர் அப்படித்தான் சொன்னார். கம்ச வதம், குவலயா பீடம் என்ற மத யானை, மல்லர்கள் இருவர், அவர்களை ம்ருகேந்திரன் சிங்கம் சாதாரண பசுவை வதைப்பது போல விளையாட்டாக வதைத்து விட்டான். யானை சிறிய குச்சியை உடைப்பது போல தனுர் யாகத்தில் வைத்திருந்த வில்லை முறித்தான். ஒரு கையால் தூக்கி நடுவில் முறித்தான். அதை விட பெரிய செயல், ஏழு நாட்கள் கோவர்தன மலையை கைகளில் தாங்கி நின்றது. எவ்வளவு அரக்கர்கர்கள், அவனைக் கொல்லவே கம்சனால் அனுப்பப் பட்டவர்கள், ப்ரலம்பன், தேனுகன், அரிஷ்ட நேமி, த்ருணாவர்த்தன், பகன் முதலானோர், தேவர்களை, அசுர்களை கூட ஜயித்தவர்கள், அவர்களை விளையாட்டாக முறியடித்தான்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு நினைத்து நினைத்து, க்ருஷ்ணனையே அன்புடன் எண்ணி உளமார பாசத்துடன் வளர்த்தவர், உணர்ச்சியால் தொண்டை அடைக்க, பேச முடியாமல் குரல் தழ தழக்க நிலை கொள்ளாமல் தவித்தார். யசோதா தன் மகனைப் பற்றி அவர் சொன்னதை கேட்டபடி கண்ணீர் பெருக கண்ணனையே நினைத்து முலைப் பால் பெருகி உடையை நனைக்க எதுவும் பேசாமல் கேட்டிருந்தாள்.
நந்தனும் யசோதையும் கண்ணனிடம் கொண்டிருந்த அளவில்லாத பாசத்தைக் கண்டு உத்தவர் அவர்களுக்கு சமாதானமாக ஏதோ சொல்ல முயன்றார். நண்பனே! நீங்கள் இருவரும் உத்தமமானவர்கள். அன்பை பொழிபவர்கள். தன்னலமே இல்லாத தூய அன்பு உங்களுடையது. அகில குருவான ஸ்ரீமன் நாராயணனிடம் இப்படி ஒரு ஈடுபாடு உங்களுக்கு வாய்த்தது உங்கள் பாக்யமே.
பலராமனும் க்ருஷ்ணனும் உலகையே படைத்தவரான புராண புருஷர்கள். பல ராமனும் முகுந்தனும், சகல ஜீவன்களையும், அவர்களின் பலவிதமான குணங்களையும், நடவடிக்கைகளையும் அறிந்தவர்கள். அவர்களிடத்தில் யாரானாலும் ஒரு க்ஷண நேரம் சுத்தமான மனதுடன் ப்ராணன் போகும் சமயம் நினத்தாலும், அவன் வினைப் பயன்கள் தீரும். அவன் மிகச் சிறந்த கதியை அடைவான். ப்ரும்ம மாகவே, ஸுரியனுடைய தேஜஸுடன் விளங்குவான். அவனிடத்தில் நீங்கள் இருவரும், அகிலாத்ம தேஹன் என்று அறிந்தோ அறியாமலோ, ஏதோ காரணமாக மனித உடல் எடுத்து வந்த பரமாத்மாவானவனிடம் தூய்மையான அன்பே கொண்டவர்களாக சகல நல்லெண்ணங்களும் பாவனைகளுமாக வளர்க்கும் பாக்யம் பெற்றவர்கள். இன்னும் என்ன வேண்டும்? உங்கள் சுக்ருதம் – என்ன புண்யம் செய்தீர்களோ.
சீக்கிரமே வருவான். வ்ரஜ தேசத்தைக் காணவும், பிரியமான தாய் தந்தையர்களான உங்களையும், மகிழ்ச்சியில் ஆழ்த்துவான். அவன் நற்குணங்களுக்கு இருப்பிடமானவன். செய் நன்றி மறவாதவன். கம்சனை அரங்கத்திலேயே வதைத்தான். க்ருஷ்ணன் வருவான் கண்டிப்பாக, என்று எங்களுக்கு பெரியவர்கள் சொல்லி இருந்தார்கள்.
மஹாபாஹோ! நீங்கள் இருவரும் வருந்த வேண்டாம். ஸ்ரீ க்ருஷ்ணனை விரைவில் காண்பீர்கள். அருகில் வந்து உங்கள் கவலையைத் தீர்ப்பான். உள்ளும் புறமுமாக அனைத்து உயிரினங்களிலும் உறைபவன், இருட்டில் விளக்கு வெளிச்சம் போல, அவர்களின் இதயத்தில் உறைந்தவன்.
மிக அதிக பிரியமானவன் என்றோ, விரோதி என்றோ அவனுக்கு யாருமே இல்லை. யாரையும் அவன் உத்தமன் என்றோ அதமன் என்றோ பார பக்ஷம் பார்த்ததில்லை. தனக்கு சம மானவன், என்றோ, தகுதியில் தரக் குறைவானவன் என்றோ நினைக்க மாட்டான். அவனுக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை, மனைவி மக்களோ இல்லை. தன்னைச் சார்ந்தவன், மாற்றான் என்றும் யாரும் இல்லை. அவனுக்கு என்று ஒரு உடலோ, பிறவியோ இல்லை. அவன் வினைகளைக் கடந்தவன். நல்லது, பொல்லாது, இரண்டும் கலந்த ஒன்று, என்று புது புது உடல்களில் பிறப்பது எதுவுமே அவனுக்கு இல்லை. பின் ஏன் அவதாரம் செய்கிறான் என்றால், அதுவும் அவனுக்கு விளையாட்டே. நல்லவர்களை காக்கவே பிறவி எடுக்கிறான்.
சத்வ, ரஜஸ், தமஸ் என்ற குணங்களைத் தாண்டிய நிர்குணன். அவைகளைக் கடந்து உலகை படைத்து, காத்து, அழிக்கிறான். அவன் பிறப்பில்லாத அஜன் என்பவன். எப்படி வண்டுகள், பார்வையால், உலகை அறிந்து சுற்றுகிறதோ, அதே போல உடலின் உள் சித்தமாக இருந்து செயலையும், ஆத்மாவாக செய்பவனாகவும் அஹங்காரமாகவும் அவனைச் சொல்வார்கள்.
உங்கள் ஆத்மஜன்- மகன். உங்களுக்கு மட்டுமல்ல, ஸ்ரீ ஹரி, அனைவருக்கும் ஆத்மஜன்- மகனே. ஆத்மாவானவன். தந்தை தாயும், ஈஸ்வரனும் அவனே.
கண்டதும், கேட்டதும், நடந்த, நடக்கின்ற, இனி நடக்கும் செயல்கள், அஸ்னு, சரிஷ்ணு,? – மகத்தானவை, அல்பமானவை, எனப்படும் வஸ்து, அச்யுதன் அல்லாமல் எதுவும் இருக்க முடியாது. ஒரு சொல் கூட இருக்க முடியாது. அவனே சகல பரமாத்மபூதனான தெய்வம்.
இப்படி பேசிக் கொண்டே இரவு நகர்ந்தது. நந்தனும் உத்தவரும் பேசிக் கொண்டிருக்கையிலேயே, கோகுல பெண்கள் எழுந்து, விளக்குகளை ஏற்றி, வீட்டு வாஸ்து (கோலம்) முதலான காரியங்களைச் செய்யத் தொடங்கி விட்டனர். தயிர் கடையும் ஓசையும் எழலாயிற்று. ஒளிரும் தீபங்கள், மணிகளால் அலங்கரிக்கப் பட்ட தீபங்களில் பட்டு ப்ரகாசமாக தெரிந்தன. அந்த விடியலில் பெண்கள் தயிரைக் கடையும் கயிறுகளில் கங்கணங்கள் மாலைகள் உரச, அங்கும் இங்குமாக நடக்கும் போது இடையிலும், கழுத்திலும் அணிந்த நகைகள் அசைய, குண்டலங்களின் ஒளி கன்னங்களை அருண வர்ணமாக காட்ட தீவிரமாக காலை வேளை வேலைகளில் ஈடு பட்டிருந்தனர்.
ஒரு சிலர் அரவிந்த லோசனனை பாடினர். அந்த சப்தம் வானத்தை எட்டியது. தயிர் கடையும் ஓசை அத்துடன் போட்டியிட்டது போல கலந்து கேட்டது. அவை சுற்றுபுறத்தை மங்களமாக்கின.
பகவான் ஸூரியன் உதிக்கையிலேயே, நந்தனுடைய வீட்டு வாசலில் கோகுல வாசிகள் கூடினர். ரதத்தைப் பார்த்து யார் என்று விசாரிக்க வந்தனர். அக்ரூரர் வந்தார், கம்சனுடைய தூதாக. மதுரா புரிக்கு க்ருஷ்ணனை அழைத்து சென்று விட்டார். இவர் எதற்கு வந்திருக்கிறார் ? பெண்கள் ஆவலுடனும், நிராசையுடனும் பேசிக் கொள்வதும் உத்தவர் காதில் விழுந்தது. அவரும் எழுந்து நித்ய காரியங்களை செய்யலானார்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில் பத்தாவது ஸ்கந்தம், முதல் பகுதியில், நந்த சோகாபநயனம் என்ற நாற்பத்தாறாவது அத்யாய ஸ்லோகங்கள்- 49
அத்யாயம்-47
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஸ்ரீ க்ருஷ்ணனின் நெருங்கிய நண்பன் என்றறிந்து கோகுலத்து பெண்கள் வந்து உத்தவரை வணங்கினர். அவரும் நீண்ட கைகளும், புது மலர் போல மலர்ந்த கண்களும், பீதாம்பரமும், நெருக்கி தொடுத்த பூமாலையும், மென் முறுவலோடு கூடிய தாமரை போன்ற முகமும் அவர்களுக்கு ஸ்ரீ க்ருஷ்ணனையே நினைவூட்டியது. மென்முறுவலோடு அவரை தங்களுக்குள் விமரிசித்தனர். யார் இது? எங்கிருந்து வந்திருக்கிறார்? அச்யுதன் போலவே வேஷ பூஷணங்கள். நம்மைப் போலவே உத்தம ஸ்லோகனான ஸ்ரீ க்ருஷ்ண பக்தன் போலும் என்று சுற்றி சூழ்ந்து நின்றனர். ஸ்னேகத்துடன் வணங்கி, மென்மையான வார்த்தைகளால், அவர் ஆசனத்தில் அமர்ந்த பின் என்ன சந்தேசம், தூது என்று விசாரித்தனர்.
பெரியவரே! யது பதியின் நெருங்கிய சகா என்ற வரை எங்களுக்கு தெரிகிறது. யாரோ அனுப்பி வந்திருப்பதாகச் சொன்னார்கள். தாயாதியா? உங்கள் பெற்றோர்கள் அனுப்பி வந்தீர்களா? ஏதோ நல்ல செய்தியா? அப்படி இல்லையெனில், கோகுலத்தில் அவர் நலமா என்று விசாரிக்க வந்தீர்களா? மனதில் அன்பு கொண்ட உறவினர்கள் எங்கு இருந்தாலும் போய் பார்ப்பது தானே வழக்கம்? முனிவர்களுக்கு கூட அப்படி நெருங்கிய பந்துக்களை விட முடியாதே. பொருள் சம்பந்தமான ஸ்னேகம், செல்வத்தின் வரவும், செலவும், அதன் இருப்பையும் அடிப்படையாக கொண்டு இருக்கும். புருஷர்கள் பெண்களிடம் கொள்ளும் ஸ்னேகம், எது வரை பூக்களை வண்டுகள் நாடுகிறதோ அதே அளவு தான் நிலைக்கும். செல்வமில்லாதவனை கணிகா ஸ்த்ரீகள் தியாகம் செய்வர். ப்ரஜைகள் திறமையற்ற அரசனை தியாகம் செய்வார்கள், கல்வி கற்று தேர்ந்தபின் ஆசார்யர்களை கூட விட்டுப் பிரிவதுண்டு. ருத்விக்குகள் யாகம் முடிந்து தக்ஷிணை பெற்ற பின் அந்த யாகம் செய்தவரை மறக்கலாம். பறவைகள் பழம் இல்லாத மரங்களையும், அதிதியாக வந்தவன் உபசாரம் செய்த குடும்பஸ்தனை மறந்து போவான். காட்டுத் தீ அழித்த வனத்தை விலங்குகள் தானாக விட்டு விலகும். ஜாரபுருஷன் ஏதோ ஒரு பெண்னை அனுபவித்தபின் துறந்து விடுவான். இவ்வாறு கோகுலத்து ஸ்த்ரீகள் ஸ்ரீ க்ருஷ்ணனை மறக்க முடியாத தங்கள் மன நிலையை அவன் தூதனாக வந்த உத்தவரிடம் உலகியல் வழக்கம் அன்னிய ஆடவரிடம் பெண்கள் மனம் திறந்து பேசுவதில்லை என்ற வழக்கத்தையும் மீறி தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்தினர். திரும்ப திரும்ப ஸ்ரீ க்ருஷ்ணனுடன் கழித்த பால்ய கால நினைவுகளை சொல்லியும், பாடியும் சிலர் அழுதும், தயக்கமில்லாமல் உத்தவரிடம் பேசினர்.
வெட்கத்துடன் நேரடியாக பார்க்காமல், ஹே மதுப! எதிரில் பறந்த வண்டை அழைத்து அதனுடன் பேசுவது போல,
வண்டே, நீயும் தான் சொன்ன சொல்லை மறப்பவர்களின் பந்து. எங்கள் சபத்னிகளிடம் போய் விடாதே, அவர்களைத் தொட்டு விடாதே. மது பதி- மதுரா நகர பதியாகி விட்டவன், அந்த நகர பெண்களிடம் சரசமாக விளையாடிக் கொண்டிருப்பான். யது சதசில் என்ன இடையூறு, இங்கு தூது அனுப்பியிருக்கிறான், என்று நீயும் மெனக்கெட்டு இங்கு எங்களிடம் வந்திருக்கிறாய்? அவனும் உன்னைப் போலத்தான். பூவின் மதுவை ஒரு நிமிஷம் உறிஞ்சி ருசி கண்டு விட்டு, அடுத்த பூவிடம் போவாய். எங்களை அப்படித்தான் தியாகம் பண்ணிவிட்டு நகரம் போய் விட்டான். பத்மா, லக்ஷ்மி தேவி எப்படி இன்னமும் அவன் பாதங்களை வணங்கி பரிசாரகம் செய்கிறாள்? அவளும் அந்த உத்தம ஸ்லோகன் பேச்சில் மயங்கியிருப்பாள், பின் அவன் நடத்தையறிந்து மனம் உடைந்து தான் போயிருப்பாள்.
ஆறு கால்கள் உடையவனே! என்ன பாடுகிறாய்? யது குல பதி இங்கு இல்லாத சமயம் அவனைப் பற்றி எங்களிடமே கதை விடுகிறாய்? வெற்றி பெற்று உங்கள் ஊரில் இருக்கிறானே, அங்கு போய் அவனை புகழ்ந்து பாடு. அவர்கள் தான் இப்பொழுது அவனுக்கு பிரியமானவர்கள்.
தேவ லோகத்து பெண்கள், பூமியில் உள்ளவர்கள் இவர்களில் அவனுக்கு யார் தான் அடைய முடியாதவர்கள்? அவனுடைய கபடமும், அழகிய சிரிப்பும், புருவத்தால் காட்டும் எண்ணற்ற ஜாலங்களும், கண்ட பெண்கள் யார் தான் காலடியில் விழத் தயாராக மாட்டார்கள். அவர்களுக்கு முன் நாங்கள் எம்மாத்திரம். உத்தம ஸ்லோகன் என்ற சப்தமே எங்களுக்கு பெரிய விஷயம். க்ருபண பக்ஷே! ?(வண்டு- மிக சிறிய இறக்கை உள்ளது என்று பதார்த்தம்)
முகுந்தனின் தூதன் என்று வந்து விட்டாய். அவனுக்கு தெரியாதா சமாதான வார்த்தைகளைச் சொல்ல. சாமர்த்யமாக மனதை மாற்ற பேசத் தெரிந்தவன். எங்கள் தியாகம் அவனுக்குத் தெரியுமா? பெற்ற பிள்ளைகள், கணவன், மற்ற உறவினர்கள் அனைவரையும் பகைத்துக் கொண்டு அவனை நம்பினோம். சற்றும் மனதில் ஈரம் இன்றி எங்களை விட்டுப் போனவன் என்ன தூது சொல்லி அனுப்பியிருக்கிறான்.
வாலி வதம், ஸூர்பனகாவை விரூபமாக்கியது பலியை வாமனனாக வந்து பலி கடாவாக்கி, மூவுலகையும் அளந்தது, இவைகளை குறிப்பிட்டு போதும் அவன் கதைகள், அவனுடன் எங்கள் நட்பையும் தனக்கு சாதகமாகவே பயன் படுத்திக் கொண்டான் என்றனர். நாங்கள் அவன் சொல்வதை உண்மை என்றே நம்பினோம். ஸ்ரத்தையுடன் கேட்டோம். அவன் கட்டளைகளை சிரமேற் கொண்டோம்.
க்ருஷ்ணனின் வதுக்களாக, கரும் பெண் மான் போல பின் தொடர்ந்தோம். அடிக்கடி அவனை பார்த்துக் கொண்டிருந்தோம், அவன் நகத்தின் ஸ்பர்சம் பட்டாலே, மகிழ்ந்தோம், உப மந்திரியே! வேறு ஏதாவது விஷயம் இருந்தால் சொல்லுங்கள். பிரியமான சகாவே! எங்கள் மனம் கவர்ந்தவன், எங்களைப் பார்க்கவா அனுப்பினான்? ஏ வண்டே! சொல். உன்னை நாங்கள் கௌரவமாகவே நினைக்கிறோம். ஏன் தயங்குகிறாய்? எங்களை அவனிடம் அழைத்து போகவா வந்தாய்? சௌம்ய! அவன் மார்பில் தான் அவன் மனைவி ஸ்ரீ லக்ஷ்மி சதா இருக்கிறாளே. அவளும் அவனிடம் ப்ரேமையுடையவளே.
அது சரி, இதை சொல். மதுரா நகரத்தில் எங்கள் ஆர்யபுத்ரன் எப்படி வசிக்கிறான். இந்த பெற்றோர்களுடன் இருந்ததை நினைக்கிறானா? சௌம்ய, கோகுல வாசிகள் அவனுக்கு பந்துக்கள் என்று நினைக்கிறானா? அவன் பின்னால் ஏவியதை செய்து கொண்டு சென்றோமே, எங்களை எண்ணி பார்க்கிறானா? அவன் சந்தனமும், அகருவும் பூசியதால் வாசனையில் திளைக்கும் புஜங்களை எங்கள் தலை மேல் எப்பொழுதாவது வைப்பானா?
ஸ்ரீ சுகர் சொன்னார்: உத்தவர் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் எதிர் பார்க்கவேயில்லை, இந்த கோகுல பெண்கள் இந்த அளவு ஸ்ரீ க்ருஷ்ணனிடம் ப்ரேமை கொண்டிருப்பர்கள் என்றோ, அதே நினைவாக வாழ்ந்து கொண்டிருப்பார்கள் என்பதையும். நேரில் கண்டபின் அவரும் பிரியமாகவே பேசி அவர்களை சமாதானப் படுத்த முனைந்தார்.
உத்தவர்: அஹோ! நீங்கள் மிகுந்த பாக்யம் செய்தவர்கள். உங்கள் ஜன்ம சாபல்யம் – வாழ்க்கையே பூர்ணமாக ஆயிற்று. இனி எதுவுமே தேவையில்லை என்பது போல அனுக்ரஹம் பெற்றுள்ளீர்கள். உலகமே உங்களை பூஜிக்கும். பகவான் வாசுதேவனிடத்தில் மனதை அர்ப்பித்து இந்த அளவு பக்தியுடன் இருக்கிறீர்கள்.
தான, விரதம், தவம் ஹோமம், ஜபம், ஸ்வாத்யாயம், தன்னடக்கம், போன்றவை பல நன்மைகளைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. இவையனைத்தையும் ஸ்ரீ க்ருஷ்ணனிடத்தில் பக்தி சாதித்து விடும். பகவான் உத்தம ஸ்லோகன் என்றால் நீங்கள் அதை விட அதிகம், அனுத்தமர்கள், தன்னலமே இல்லாத பக்தர்கள். இந்த அளவு பக்தி முனிவர்களிடம் கூட துர்லபமானதே. உங்கள் பாக்கியம், பெற்ற பிள்ளைகள், கணவன், தங்கள் உடலில் அபிமானம், தன் மக்கள், வீடு வாசல்கள், அவையனைத்தையும் துச்சமாக நினைத்து நீங்கள் ஸ்ரீ க்ருஷ்ணன் என்ற பரம புருஷனிடம் சர்வாத்ம பாவம்- அனைத்தும் அவனே என்ற உணர்வை அடைந்துள்ளீர்கள். அதோக்ஷஜனிடம் நீங்கள் காட்டும் பரிவு, அவன் எதிரில் இல்லாத பொழுதும் அதே அளவு பக்தியுடைய நீங்கள் அவன் பிரிவால் வாடுவது என் மனதை தொடுகிறது. இந்த பக்தியைக் கண்டு நான் பெரும் பேறு பெற்றவனானேன். என்ன சொன்னான் என்பதை கேளுங்கள். பிரியமான சந்தேசம்-செய்தி. உங்களுக்கு மன அமைதி தரும். நான் அவன் நெருங்கிய நண்பன். அவனுடைய அணுக்கத் தொண்டன். பத்ரா! மங்களமான பெண்களே! அதனால் தான் இந்த செய்தியை என்னிடம் சொல்லி, அனுப்பி இருக்கிறான். கேளுங்கள்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: உங்கள் பிரிவால் நான் அனுபவிக்கும் இந்த வேதனையை எப்பொழுதுமே அனுபவித்ததில்லை. சர்வாத்மா நான். உலகில் உயிரினங்கள் பஞ்ச பூதங்களான ஆகாயம், வாயு, அக்னி, நீர், நிலம் இவைகளால் பாதிக்கப் படுவது போலவே, நானும் இவைகளுடன் மனம், ப்ராணன், பஞ்ச பூதங்கள், இந்திரியங்கள், குணங்கள் இவைகளால் இப்பொழுது பாதிக்கப் படுகிறேன்.
என் ஆத்மாவிலிருந்தே ஆத்மாக்களை ஸ்ருஷ்டி செய்கிறேன், காக்கிறேன், பின் அழிக்கிறேன். என் மாயையின் பலத்தால், பஞ்ச பூதங்கள் இந்திரிய , குணங்கள் இவைகளின் சேர்க்கையால் செய்கிறேன்..
ஆத்மா ஞானமயமானது. சுத்தமானது. இதில் எதிர் விளைவாக குணமற்றதாக உள்ளவை. சுஷுப்தி என்ற தூக்கம் கலைந்து விழிக்காமல் இருக்கும் நிலை, கனவு, விழிப்பு இவைகளும் என் மாயையால் தான் தோன்றுகின்றன. தூங்கி விழித்தவுடன் கண்டது கனவு என்று எப்படி மறந்து விடுகிறீர்களோ, அதே போல தூங்காமல் விழிந்திருக்கும் பொழுதும் எது உண்மை எது தோற்றம் என்பதை ஞானிகள் உணர்ந்து கொள்கிறார்கள். இது தான் முடிவான அறிதல். யோகிகள், ஞானிகள், இந்த முடிவை உணர்வது தான் சாங்க்யம் எனும் சாஸ்திரம். தியாகம், தவம், தன்னடக்கம், சத்யம், இவை நதிகள் சமுத்திரத்தை அடைவது போல, சாதகர்கள் வழிகள் வேறானாலும் முடிவில் கண்டறிவது இந்த ஞானமே.
உங்களிடமிருந்து நான் வெகு தூரத்தில் வசிக்கிறேன் என்பதும், கண் எதிரில் இல்லை என்றாலும், மனதின் அருகிலேயே இருக்கிறேன். என்னைக் காண என்னை த்யானம் செய்தாலே போதுமானது, நான் மிக அருகிலேயே உங்கள் உள்ளத்தில் உறைகிறேன் என்பதை உணர்வீர்கள். உங்கள் கணவன்மார், வெளியூர் சென்றால், அதே நினைவாக நீங்கள் இருப்பது போலவே, அருகில், கண்ணெதிரில் இருந்தால் தான் நினைவில் நிற்கும் என்பது பெண்களுக்கு தேவையில்லை.
என்னிடத்தில் மனதை முழுமையாகச் செலுத்தி விட்ட பின் மற்ற விஷயங்கள் ஒரு பொருட்டாக நினையாமல், இருக்கும் நீங்கள் சீக்கிரமே என்னை அடைவீர்கள். வ்ரஜ தேசத்தில் நான் உங்களுடன் இரவுகளில் விளையாடி களித்ததும், கிடைக்க முடியாத ராஸ அனுபவமும், கல்யாணிகளே! இதற்கு முன் எனது வீர்யத்தால் கிடைத்ததில்லை.
ஸ்ரீ சுகர் சொன்னார்: வ்ரஜ தேசத்துப் பெண்கள், தங்கள் மனதுக்குகந்தவன் பிரியமானவன் சொன்ன சொல்லை உத்தவர் சொல்லக் கேட்டு, மிகவும் மகிழ்ந்தனர். தூது செய்தியைக் கொண்டு வந்த உத்தவரிடம் நம்பிக்கையுடன் பேசலாயினர்.
கோகுல பெண்கள்: நல்ல வேளை கம்சன் அழிந்தான். யது குலத்தினரை தன் சகோதரனுடன் வறுத்து எடுத்தான். நல்ல காலமாக, தன் ஆப்தர்களுடன், செல்வங்கள் திரும்பப் பெற்று அச்யுதன் நலமாக இருக்கிறான். சௌம்ய! கதாக்ரஜன்- பலராமன் நலமா? அவனும் நகர மாதர்களுடன் சந்தோஷமாக பொழுதை கழிக்கிறானா? வெட்கத்துடன் நாங்கள் அவன் சிரிப்பதை ஏறிட்டுப் பார்ப்போம். வேடிக்கையாக பேசுவதை ரசிப்போம். பெண்களை பேச்சினால் கவரத் தெரிந்தவன் அந்த பெண்களுக்கும் பிரியமானவனாகவே இருப்பான். யார் தான் அவன் பேச்சில் மயங்க மாட்டார்கள்.
சாதோ! எங்களை நினைக்கிறானா? நீங்கள் கிளம்பும்பொழுது எங்கு இருந்தார். நகரத்து பெண்கள் நாகரீகமாக இருப்பார்கள். அவர்கள் நடுவில் எங்களைப் பற்றி என்ன சொல்வான். கிராமத்து எளிய பெண்கள் என்பானா?
எங்களுடன் வ்ருந்தாவனத்தில் மல்லியும், குமுதமும் மணக்க, நிலவும் ரம்யமாக இருக்க செலவழித்த நாட்களை அவன் மறக்காமல் இருக்கிறானா? எங்களுடன் நூபுரங்கள் ஒலிக்க ஆடிய நடனங்கள், கோஷ்டியாக நாங்கள் கதைகள் பேசிக் கொண்டு நடந்தது பற்றி, ஒரு சமயம் இல்லாவிட்டால் ஒரு சமயம் சொல்வானா?
வருவானா? ஆனால் எப்படி வருவான். இப்பொழுது ராஜ்யம் கிடைத்து, எதிரிகளை வென்று, ஏதோ ஒரு ராஜ குமாரியை மணந்து, நண்பர்கள் சூழ இருப்பான். லக்ஷ்மீ கடாக்ஷம் பெற்றவன், அவனுக்கு என்ன குறை, வேண்டியதை வேண்டியபடி கிடைக்கப் பெற்றவன், எங்களைப் போன்ற காட்டு வாசிகளுடன் என்ன செய்வான்? இவ்வளவும் தெரிந்தும் எங்கள் நிராசை இப்படி கேட்க வைக்கிறது. க்ருஷ்ணனை அறிவோம். ஆயினும் ஆசைக்கு அளவு ஏது? நாங்கள் அவனுடன் நிறைய இந்த நதிக் கரைகளில், மலைச் சரிவுகளில், காடுகளில் பசுக்களை மேய்த்துக் கொண்டு போகும் பொழுதும், வேணு கானம் கேட்டும் சங்கர்ஷணன் உடன் வர அலைந்து திரிந்திருக்கிறோம். எனவே, அந்த இடங்களை பார்த்தாலே திரும்பத் திரும்ப அந்த நினைவுகள் எங்களை சூழ்ந்து நிற்கின்றன. மதுரமான குரலில் பேசி எங்கள் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டவன், எப்படி மறப்போம். ஹே நாத! ஹே ரமா நாத! வ்ரஜ ஜனங்களின் துயரை நீக்கியவனே, கோவிந்தா எங்களை காப்பாற்று.
ஸ்ரீ சுகர் சொன்னார்: உத்தவர் மூலம் பகவான் சொல்லி அனுப்பிய சந்தேசம் அவர்களை தன் நிலைக்கு கொண்டு வந்தது. உத்தவரை உபசாரம் செய்தனர். அதோக்ஷஜனின் ஆத்மா போன்றவர் என எண்ணி வணங்கினர். அவரும் சில மாதங்கள் அங்கேயே தங்கி, தன் நித்ய நியமங்களை முடித்துக் கொண்டு அவர்களுக்கு பகவத் கதைகளைச் சொல்லி கோகுலத்தில் பழைய உத்சாகம் வரச் செய்தார். அவர் இருந்தவரை வ்ரஜ தேச வாசிகளுக்கு நேரம் போனதே தெரியவில்லை. க்ருஷ்ணனைப் பற்றியே பேசினார் என்பதால் ஈடுபாட்டுடன் கேட்டனர். பழையபடி மரங்களில் பூக்கள் மலர்ந்தன, நதிகள், வனம், மலை சிகரங்கள், இவை க்ருஷ்ணனையே நினைவுறுத்தியதால், அவற்றுடன் ஸ்னேகமாகவே இருந்தனர்.
அவர்கள் தங்கள் இயல்புக்கு திரும்பும் வரை உத்தவர் அவர்களிடம் வணக்கத்துடன் சொன்னார்.’ கோகுல பெண்களே! இது தான் உலகியல். கோவிந்தன் ஒருவனே அனைத்து உயிர்களிலும் ஊடுறுவி இருக்கிறான். சம்சார பந்தம் நீங்க வேண்டும் என்று பிரார்த்திப்பவர்கள், முனிவர்கள், நாங்கள், அது மட்டுமா, ப்ரும்மா முதல் சகலரும் அனந்தனின் கதையை விரும்பி கேட்பவர்களே.
வனங்களில் வசிக்கும் எளிய வாழ்க்கை முறைகளைக் கொண்ட நீங்கள், பரமாத்மா என்று அறியாமலே ஸ்ரீ க்ருஷ்ணனிடம் ஆழ்ந்த அன்பை வைத்தீர்கள். ஈஸ்வரனை நம்ப வித்வானாக இருக்கத் தேவையில்லை. அவர்களும் நன்மையே பெறுவார்கள். மருந்தை அறியாமல் உண்டாலும், வியாதி தீருவது போல.
இது போல அண்மையும், ப்ரேமையும், ஸ்ரீ லக்ஷ்மி தேவி, தேவ லோகத்து பெண்கள், மற்ற உயர் குல பெண்கள் அனைவரும், ராஸ உத்சவத்தில், தோளோடு தோள் கோர்த்துக் கொண்டு உங்களை அசீர்வதித்தது போல, ஸ்ரீ க்ருஷ்ணனின் அருள் கிடைத்ததை வியந்து பாடுகிறார்கள். என்னே வ்ரஜ வல்லவிகளின் பாக்யம் என்று பேசிக் கொள்கிறார்கள்
கோகுல பெண்களின் கால் தூசியாக ஆக மாட்டோமா, வ்ருந்தாவனத்தில் ஏதோ ஒரு புதராகவோ, கொடியாகவோ, ஏதோ ஒரு தாவரமாகவோ இருக்க மாட்டோமா, வ்ருந்தாவனத்து அசையும் அசையாத அனைத்தும் முகுந்தனின் ஸ்பரிசம் பெற பாக்யம் செய்தவைகளே. இது யாருக்கு கிடைக்கும்? தன் ஜனங்கள், உயர் குலத்து நடைமுறை வழக்கங்கள் அனைத்தையும் ஒன்றுமில்லாத ஒன்றாக ஆக்கி, வேதங்கள் தேடும் பாத மலரை அவர்கள் அடைந்திருக்கிறார்களே.
அஜன் என்ற ப்ரும்மா முதல் அர்ச்சித்த பாதங்கள், தங்கள் விருப்பங்கள் நிறைவேறிய யோகீஸ்வரர்கள், இவர்களும் தங்கள் மனதில் ராஸ கோஷ்டியுடன் கலந்து கொண்டனர். க்ருஷ்ண பதாம்புஜத்தை தங்கள் மார்பில் தாங்கிக் கொள்ள விழைந்தனர். தாபத்தை தீர்த்துக் கொண்டனர்.
நந்தனின் இந்த புண்ய பூமியை வணங்குகிறேன். இந்த தேசத்து பெண்களின் பாத தூளியை சிரமேற் கொள்கிறேன். மூவுலகிலும் ஹரி கதை விளங்கும். இவர்களின் அன்பும் அதை புனிதமாக்கும்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: அதன் பின் அவர்களிடம், நந்தன், யசோதா இவர்களிடமும் அனுமதி பெற்று, கோகுலத்து மற்ற க்ருஷ்ண தோழர்களையும் அழைத்து விடை பெற்றுக் கொண்டு தாசார்ஹரான உத்தவர், ரதத்தில் ஏறினார். அவர் கிளம்பியதையறிந்து அனைவரும் பலவிதமான பரிசுப் பொருட்களை கொண்டு வந்து சில நாட்களிலேயே அன்யோன்யமாகி விட்டவரை, கண்ணீர் பெருக வழியனுப்பினர்.
அவர்களிடம் உத்தவர், ஸ்ரீ க்ருஷ்ணனை ஆஸ்ரயித்தவர்க்கு வேறு மன சிந்தனையோ, செயலோ இராது. புது வார்த்தைகள் பெயர் சொல்லி அழைக்க மட்டுமே, சரீரம் அவனை வணங்க மட்டுமே இருக்கும் என்றார்.
கர்ம மார்கத்தில் தீவிரமாக ஈடு பட்டவர்களும், எதோ ஒரு சமயம் ஈஸ்வரனின் விருப்பத்தால், மங்களமான காரியங்களை செய்தும், தானங்கள் கொடுத்தும் அதுவே எல்லாம் என்று இருப்பவர்களுக்கும் ஸ்ரீ க்ருஷ்ணனிடம் அன்பு தானாக வந்து சேரும். அரசனே! இப்படி பரஸ்பரம் பேசிக் கொண்டு க்ருஷ்ண பக்தியே ப்ரதானமாக இருக்க, உத்தவர் மதுரா வந்து சேர்ந்தார். இப்பொழுது ஸ்ரீ க்ருஷ்ணரால் ஆளப் படும் மதுரா நகரம்
க்ருஷ்ணனிடம் வந்து கோகுலத்தில் தான் கண்டதை உணர்ச்சி பொங்க விவரித்தார், வசு தேவருக்கும், பலராமனுக்கும், அரசனுக்கும் பரிசுப் பொருட்களைக் கொடுத்தார்,
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், உத்தவ ப்ரதியானம் என்ற நாற்பத்து ஏழாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்- 69
அத்யாயம்-48
ஸ்ரீ சுகர் சொன்ணார்: பகவான் சைரந்த்ரி என்ற கூனிக்கு அருள் புரிந்து அவளை நேராக்கிய சமயம் அவள் வேண்டினாளே என்பதை நினைவு கூர்ந்து அவள் வீடு சென்றார். அனைத்தையும் காண்பவர், தானே சர்வாத்மாவானவர்.
அவள் வீடு மிக அழகாக அலங்கரிக்கப் பட்டிருந்தது. விலையுயர்ந்த பொருட்கள் மனதை கவரும் வண்ணம் வைக்கப் பட்டிருந்தன. முத்துக்கள் ஒளி வீச, கொடிகள் பறக்க, அமரவும், படுக்கவும் ஆசனங்கள் போடப் பட்டிருந்தன. மணம் வீசும் தூபங்களும், ஒளி வீசும் தீபங்களும், வாசனை மிகுந்த பூக்களால் மாலைகள் அலங்கரிக்க, அந்த வீட்டை சற்று தூரத்திலிருந்தே காண முடிந்தது.
அவர் வருவதை பார்த்து சைரந்த்ரி, தன் ஆசனத்திலிருந்து இறங்கி வந்து பர பரப்புடன் வரவேற்றாள். சகிகளிடம் அறிமுகப் படுத்தி, அழகிய ஆசனத்தில் அமரச் செய்தாள். உத்தவர் தரையில் அமர்வதையே விரும்பினார். க்ருஷ்ணன் மட்டும் உள் வரை சென்று வீட்டின் பிற பாகங்களைப் பார்த்தார். சைரந்திரி தன் தொழிலான வாசனை பொருட்களை அவருக்கும் பூசி விட்டு, சுகந்தமான தாம்பூலங்களைக் கொடுத்து உபசரித்தாள். அவளுடைய படுக்கையில் அமர்ந்தவர், அவள் விரும்பியபடி அணைத்து மகிழ்ந்தார். அவளோ, சில நாட்கள் அந்த வீட்டில் தங்கி இருக்கச் சொன்னாள். பிரியவே மனமில்லை, என்றாள். ஆனால், அவள் விரும்பியபடி காம வரம் கொடுத்து, அவளுடன் உறவு கொண்டு விட்டு, உத்தவருடன் தன் இருப்பிடம் சென்றார்.
சாதாரண பெண்மணி, சர்வேஸ்வரனான விஷ்ணு என்பதையறியாமலே, அன்புடன் உபசாரங்கள் செய்தவள். இருந்தும் அவள் விருப்பத்தையும் பூர்த்தி செய்தார் பகவான். அதன் பின் அக்ரூரர் இருப்பிடம் சென்றனர். பலராமனும் உத்தவரும் கூடவே வந்தனர். அவர்களை பார்த்து அக்ரூரர், மனிதருள் மாணிக்கமான அவர்கள் தன் இருப்பிடம் தேடி வந்ததால் மகிழ்ச்சியில் திக்கு முக்காடினார். பந்துக்கள் தான் என்றாலும் இப்பொழுது அரசன். எழுந்து வந்து, அணைத்து வரவேற்றார். க்ருஷ்ணனையும், பல ராமனையும் வணங்கினார். அவர்களும் திரும்பி வணங்கினர். ஆசனங்கள் அளித்து, நியமம் தவறாமல் அதிதி பூஜைகளைச் செய்தார். அவர்கள் பாதங்களில் நீர் விட்டு அதை தலையில் தெளித்துக் கொண்டார். பாதங்களை கைகளால் துடைத்து, வணக்கத்துடன் அவர்களிடம் குசலம் விசாரித்தார்.
நல்லவேளை கம்சன் அழிந்தான். அவன் சகோதரனும் உடன் அழிந்தான். நம் குலம் பிழைத்தது. நீங்கள் இருவரும் வேகமாக செயல்பட்டு இந்த அவசியமான, சிரம சாத்யமான செயலைச் செய்து விட்டீர்கள். நீங்கள் இருவரும் புராண புருஷர்கள். உலகம் தோன்றவே காரணமானவர்கள், ஜகமே நீங்கள் தான், உங்களுக்கு சம மாகவோ, மேலாகவோ எவரும் இல்லை. தானே தோற்றுவித்த உலகில் தன் சக்தியால் நாலாபுறமும் சூழ்ந்து நின்று காப்பது போல காப்பவர்கள். வேதங்கள் தேடும் மெய்ப் பொருள், கண்ணெதிரில் நிற்கிறீர்கள். என்னை படைத்தவரும், உலகில் பலவிதமான உயிரினங்களை படைத்தவரும் தாங்களே என்றும் அதனால் ஆத்மயோனி என்று சொல்லப் படுபவர் நீங்கள் ஒருவரே, ஒவ்வொரு ஜீவனிலும் அதே போல ஆத்மாவாக இருப்பவர். ஸ்ருஷ்டி செய்து, காத்து அதன் பின் மறைத்து உலகின் சுழற்சியை நிலை நிறுத்துகிறீர்கள் என்றும் அறிவேன். முக்குணங்கள் ஞானாத்மாவான தங்களை பாதிப்பதில்லை. இச்செயல்களால் உங்களுக்கு கட்டும் இல்லை அதிலிருந்து விடுபடுதல் என்பதும் இல்லை. உலக நன்மைக்காக வேதங்கள், சாஸ்திரங்கள் உங்களிடமே தோன்றின. நம்பாதவர்கள் பாதிக்கப் படட்டும். என்றுமே சத்வமே உங்கள் குணம்.
ப்ரபோ! தற்சமயம் வசுதேவரின் குலத்தில் தோன்றியுள்ளீர்கள். பூமியின் பாரத்தை குறைப்பதற்காக நூறு அக்ஷௌஹிணி ஜனங்களை வதம் செய்து தேவ எதிரிகளை அழித்து, நம் குலத்தை காப்பாற்றுவதே உங்கள் சங்கல்பம். ஜகத் குரு! நம் குலம் பாவனமடைந்தது. எங்கள் வாழ்வில் நிம்மதியும், சர்வ, தேவ, பித்ரு காரியங்களைச் செய்வோம். உங்கள் பாதங்களில் பட்ட நீரே மூவுலகையும் புனிதமாக்கும் என்பதை அறிவோம். அதோக்ஷஜா! உங்களையன்றி வேறு எவரை சரணடைவோம். பக்த பிரியன், தன்னை நம்பியவர்களுக்கு நன்மையை அளிப்பவன், நட்புடன் எங்களிடம் இருந்து காக்க வேண்டும். ஜனார்த்னா! எங்கள் நல்ல காலம், இங்கு வந்து எங்களை கௌரவித்துள்ளீர்கள். தேவர்களுக்கு கூட கிடைக்காத யோகேஸ்வரன உங்கள் தர்சனம். என் புத்ர பௌத்ராதிகளோடு என் குலத்தை வாழ்த்துங்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: பகவான் இதைக் கேட்டு மெல்ல சிரித்தபடி, அக்ரூரரே, நீங்கள் எங்கள் உறவினர். நாங்கள் உங்களை பாதுகாக்கவும், போஷிக்கவும் கடமைப் பட்டவர்களே. அரசர்கள் உங்களைப் போன்ற திறமைசாலிகளை ஆதரிக்க வேண்டியது அவசியம். தீர்த்தங்களோ, தேவாலய மூர்த்திகளோ, தரும் நன்மைகளை விட சாதுக்களின் தரிசனம் மேலானது. எங்கள் நலம் விரும்பும் நண்பனாக இப்பொழுது கஜாஹ்வயம் என்ற இடத்தில் இருக்கும் பாண்டவர்களை சந்தித்து விவரங்களை அறிந்து கொள்ளுங்கள். தந்தை இறந்த பின் குழந்தைகள் சிறுவர்களோடு, தாயுடன் இருக்கிறார்கள். அரசன் அவர்களை நகரத்துக்குள் அழைத்து வந்து விட்டதாக கேள்வி. தம்பி குழந்தைகள் என்று அரசனோ, அவனைச் சார்ந்தவர்களோ பார பக்ஷத்துடன் இருக்கலாம். அம்பிகா புத்ரன்- த்ருதராஷ்டிரன், தானாக இல்லாவிட்டாலும் அவன் மகன் துஷ்டன். அவன் ஆட்டுவிக்கிறான். கண் தெரியாதவன் என்ன செய்வான்? அங்கு போய் தற்கால நிலவரங்களைத் தெரிந்து கொண்டு வாருங்கள். நல்லதோ, கெடுதலோ, தெரிந்த பின் நம்மால் என்ன செய்ய முடியும் என்று ஆலோசிப்போம். இவ்வாறு அக்ரூரரை ஆணையிட்டு அனுப்பி விட்டு, ஸ்ரீ ஹரி, உத்தவருடனும், சங்கர்ஷணுடனும் தன் பவனம் வந்து சேர்ந்தார்.
(இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம் முதல் பகுதியில், நாற்பத்தெட்டாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்- 36
அத்யாயம்-49
அக்ரூரரும் அஸ்தின புரம் சென்றார். பீஷ்மர், விதுரருடன் இருந்த அரசன் அம்பிகாபுத்ரனைக் கண்டார். பின் குந்தியையும் சந்தித்தார். மகனுடன் இருந்த பால்ஹீகரையும், பாரத்வஜரான த்ரோணர், கௌதமர் க்ருபர், கர்ணன், சுயோதனன், த்ரோண புத்ரன் அஸ்வத்தாமா, பாண்டவர்கள் மற்றும் பலரையும் சந்தித்தார்.
காந்தீனீசுதன் – அக்ரூரர், பந்துக்கள் அனைவரையும் நலம் விசாரித்தார், அவர்களும் மதுராபுரியில் உள்ளவர்களைப் பற்றி விசாரித்து நடந்தவைகளைத் தெரிந்து கொண்டனர். சில மாதங்கள் அரசு விருந்தாளியாக இருந்தார். குணமில்லாத மகனால் அரசனின் சுயமாக செயலாற்ற முடியாத நிலையை புரிந்து கொண்டார். அவர்களும் துர் குணனான ஒருவரின் ஆதிக்கத்தில் இருந்தனர்.
அரசனிடம் ப்ரஜைகள் எதிர்பார்ப்பது தேஜஸ், ஆற்றல், பலம், வீர்யம், அரவணத்துச் செல்லும் குணம் ப்ரஜைகளிடம் அன்பு, இவைகளே. இவை அரசன் த்ருதராஷ்டிரனிடம் இருந்தன. ஆனால் மகன் சுயோதனன் முதலானோர் விஷம் கொடுத்தது போன்ற செயல்களை, குந்தியும், விதுரரும் அவரிடம் சொன்னார்கள். குந்தி, சகோதரனான அக்ரூரரை, கண்களின் கண்ணீர் வழிய, தன் பிறந்த வீட்டினரின் நலன்களை விசாரித்தாள்.
சௌம்யனே! என் சகோதரர்களும், தந்தையும் என்னை நினைக்கிறார்களா? சகோதரிகள், சகோதரனின் புதல்வர்கள், நம் குல பெண்களை மணந்தவர்கள், சகிகள் என்று ஒவ்வொருவராக பெயர் சொல்லி நலம் விசாரித்தாள். என் சகோதர்களுக்குள் க்ருஷ்ணன் என்னிடம் அதிக அன்புடையவன். சர்வ லோக சரண்யனான பகவான் பக்த வத்சலன் என்று அறிகிறேன். பலராமனும் அதே போல விசாலமான கண்களுடையவன், பலசாலி என்னை நினைக்கிறார்களா? நான் அவர்களுக்கு தந்தை வழி உறவினள். அத்தை மகள்.
என் நிலையைப் பார். சக்களத்தி மத்தியில், ஓநாய்களிடம் அகப்பட்ட பெண் மான் போல இருக்கிறேன். தந்தையை இழந்த என் புதல்வர்கள் தான் என்னை சமாதானப் படுத்துகிறார்கள். திடுமென அழ ஆரம்பித்தாள். க்ருஷ்ண, க்ருஷ்ண, கோவிந்தா! மஹா யோகி நீ. விஸ்வாத்மன், விஸ்வமே நீதான். உன்னை சரணடைகிறேன். என்னை காப்பாற்று என்றாள். என் குழந்தைகளோடு நான் தவிக்கிறேன். உன்னைத்தவிர, எனக்கு புகலிடம் வேறு இல்லை. சாதாரண மனிதர்களும், மரண பயத்திலிருந்து விடுபட, இகத்திலும் பரத்திலும் நன்மை பெற உன்னை சரணடைவதையே செய்கிறார்கள்.
நம: க்ருஷ்ணாய சுத்தாய, ப்ரும்மணே, பரமாத்மனே, யோகேஸ்வராய, யோகாய, உன்னையே சரணம் அடைகிறேன்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ராஜன்! உங்களுடைய ப்ரபிதாமஹி, தந்தை வழியில் மூத்தவள், மனம் உடைந்து ஜகதீஸ்வரனான க்ருஷ்ணனை நினைத்து வேண்டினாள். அக்ரூரரும், விதுரரும் அவள் அழுவதைக் கண்டு வருந்தி அனுதாபத்துடன், அழாதே, உன் புதல்வர்களால் நன்மை பெறுவாய் என்று சொல்லி சமாதானப் படுத்தினர்.
அதன் பின் அரசனைச் காணச் சென்றார்.
அக்ரூரர்: விசித்ர வீர்யனின் மகனே! குரு வம்சத்து புகழை வளர்க்க வந்தவன் நீ. பாண்டு போன பின் அவன் குடும்பத்துக்கு ஆதரவு அளித்திருக்கிறாய். தர்ம வழியில் பூமியை ஆண்டு வருகிறாய். ப்ரஜைகள் நல்ல சீலத்துடன் உன் ஆட்சியில் நிம்மதியாக உள்ளனர். உன் உறவினர்களுடன் சமமாக நடந்து கொண்டு நல்ல கீர்த்தியை அடைவாய். தன்னைச் சார்ந்தவர்களை கவனியாமல் விட்டாலும் தவறாகும். அதனால் பாண்டவர்களையும், உன் புதல்வர்களையும் சமமாக நினை. அவர்களுக்கும் தந்தை ஸ்தானத்தில் இருக்கிறாய்.
உலகில் அவரவர் வினைப் பயனை அவரவரே அனுபவிக்கிறார்கள். ஒருவன் சுகப் படுவதும், மற்றவன் சிரமப் படுவதும் அவன் வினையே. தன் சரீரம், தன் மனைவி, புத்திரர்கள், என்று பக்ஷ பாதம் இருந்தாலும் ஒருவனுடைய பிறவி சுக துக்கத்தை யாரும் பகிர்ந்து கொள்ள முடியாது. ஜீவன் தனியாக பிறக்கிறது தனியாகவே மறைகிறது. செல்வத்தை சேர்த்து வைத்தாலும் தொலைந்து போகலாம். நீர் வாழ் ஜந்துக்கள், நிறைய நீரைக் குடித்தே உயிரை விடுவது போல. ராஜன்! இந்த உலகமே கனவு போலத் தான். மாயையே. ஆத்மனா ஆத்மானம்- உள்ளுணர்வால் உன்னையே அறிந்து கொண்டு சாந்தமாக இருப்பாய். ப்ரபோ! தர்ம வழியில் நிற்பாய் – அதில் இடையூறுகள் வந்தாலும் முடிவில் நன்மையே என்றார்.
த்ருதராஷ்டிரன்: தானபதே! நன்றாகச் சொன்னாய். இதை இன்னமும் கேட்கவே விழைகிறேன். அம்ருதம் கிடைத்தவன் அதில் திருப்தியடைவது இல்லை. மேலும் மேலும் பருகவே ஆசைப் படுவது போல. ஆனால், சௌம்யனே, நல்ல உபதேசங்கள் மனதில் நிலைத்து நிற்பதில்லை. தன் புத்திரர்களிடம் அபிமானம் அதைக் கலைத்து விடும். இந்த அறிவு க்ஷண நேரம் ப்ரகாசித்து மறையும் மின்னலைப் போன்றது. ஈஸ்வரனுடைய விதி, இதில் யார் என்ன மாறுதலைச் செய்ய முடியும்? யது குலத்தில் பூ பாரத்தை குறைப்பதற்காக அவதரித்திருக்கிறானே, அவன் மாயை. அதைப் பற்றி விமர்சனம் செய்ய நாம் யார்? அவனே படைத்தான், அவனே அழிக்கிறான். அவனுக்கு நமஸ்காரம். அவன் செயல்கள் நம்மால் புரிந்து கொள்ளவும் முடியாது. சம்சார சக்கரத்தை சுழற்றுபவன். பரமேஸ்வரன், அவனுக்கு நமஸ்காரம்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: யாதவரான அக்ரூரர், அரசனின் மனதை புரிந்து கொண்டார். அனைவரிடமும் விடை பெற்று திரும்ப வந்தார். பலராம, க்ருஷ்ணன் இருவரிடமும் த்ருதராஷ்டிரனின் வணக்கத்தை தெரிவித்தார். பாண்டவர்கள் பற்றியும் சொன்னார், அவர்களுக்காகத் தானே தூதுவனாக சென்றது.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், பத்தாவது ஸ்கந்தம், முதல் பகுதியில், நாற்பத்தொன்பதாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-31
(பத்தாவது ஸ்கந்தம் முதல் பாகம் நிறைவுறுகிறது. க்ருஷ்ணார்பணமஸ்து. )
ஒன்பதாவது ஸ்கந்தம்
|| ஓம் நமோ பகவதே வாசு தேவாய ||
அத்யாயம்-1
அரசன் வினவினான்: மன்வந்தரங்கள் அனைத்தும் பற்றி கேட்டோம். ஸ்ரீ ஹரியின் அனந்தமான வீர செயல்களைச் சொல்லிக் கேட்டோம். இந்த சத்ய வ்ரதன் என்ற திராவிட தேசத்து அரசன் எப்படி கல்ப முடிவில் பரம புருஷனை உபாசித்து ஞானம் அடைந்தான் என்று அறிந்தோம்.
விவஸ்வானின் மகன், மனுவாக இருந்தான் என்பதும் தெரிந்து கொண்டோம்.. அவருடைய புதல்வர்கள் இக்ஷ்வாகு முதலானோர், அவர்கள் வம்சம் பற்றியும் அறிந்தோம். புண்யகீர்த்தி என்று புகழ் பெற்ற- செயற்கரியன செய்தவர்கள் என்பதால் புகழ் பெற்றவர்கள், யார் யார் இருந்தனர், இன்னும் வரப் போகும் யுகங்களில் யார் யார் இருப்பார்கள் என்பதையும் சொல்லுங்கள்.
பரீக்ஷித் ராஜா சபையில் இவ்வாறு கேட்டவுடன் ஸ்ரீ சுகர் தானாகவே முன் வந்து சொல்ல ஆரம்பித்தார்.
மனுவின் வம்சம் பற்றி சுருக்கமாகச் சொல்கிறேன், கேளுங்கள். இக லோகத்திலும் பர லோகத்திலும் உயிரினங்களின் ஆத்மாவாக இருப்பவர் ஒருவரே. ஒவ்வொரு கல்பத்திலும் அவர், தானே இந்த விஸ்வமாக இருப்பார். வேறு யாருமில்லை. அவருடைய நாபியில் தோன்றிய பத்மகோசம், (விதைகள் அடங்கிய பத்மம்), ஹிரண்மயனாக வந்த சமயம் நான்முகனாக ஸ்வயம்பூ வை சிருஷ்டி செய்தார். அதன் பின் மனு, ஸ்ரார்த தேவன் என்ற பெயரில் வந்தான். ஸ்ரத்தா என்பவளிடம் பத்து பிள்ளைகளைப் பெற்றான். இக்ஷ்வாகு, ந்ருக, சர்யாதி, திஷ்ட, த்ருஷ்ட, கரூஷன், நரிஷ்யந்தன், ப்ருஷத்ரன், நபகன், என்பவர்கள்,
மனு முதலில் புத்திரன் இல்லாமல் இருந்த சமயம் குல குரு வசிஷ்டர், மித்ரா வருண என்ற யாகத்தைச் செய்ய சங்கல்பம் செய்து கொண்டிருந்தார். மனுவின் மனைவி ஸ்ரத்தா, பயோவிரதம் என்ற விரதத்தை அனுஷ்டித்து வந்தவள், எதேச்சையாக அங்கு வந்தாள். அவர்களை வணங்கி தனக்கு பெண் மகவு வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தாள். அத்வர்யு என்ற முக்கியமாக புரோஹிதர் கவனம் சிதற, ஹவிசில் வஷட்காரம் என்ற மந்திரம் சொல்லி ஹோமம் செய்வதில் தவறு நேர்ந்து விட்டது. அந்த சிறு மாறுதலால் பிறந்தது பெண் மகவாக இருந்து. இலா என்ற பெயர். மனு அந்த பெண் குழந்தையைப் பார்த்து மகிழ்ச்சியடையவில்லை.
யாகத்தைச் செய்த குரு ஜனங்களிடம் ‘பகவன் இது என்ன? எப்படி இவ்வாறு விபரீதமாக விடலாம்? நீங்கள் அனைவரும் ப்ரும்ம வாதிகள். கற்றலும், அதன் பின் சாதனைகளும் செய்த பெரியவர்கள். மந்திரங்கள் அறிந்தவர்கள், தவம் செய்து மாசின்றி இருப்பவர். சங்கல்பம் தவறி விட்டது என்று சொல்வது சரியா? சிறந்த ஞானி அசத்யம் செய்வது போல. இவ்வாறு பேசிக் கொண்டே போனவனை முப்பாட்டனார், ப்ரும்மா தடுத்தார். பிரஜை இல்லை என்றவனுக்கு இப்பொழுது பிரஜை பெண்ணானால் என்ன, இதுவும் பகவானின் சங்கல்பமே. நல்ல மகவை பெற்றிருக்கிறாய். தன் தேஜஸால் உன் பெண் மகவையே மாற்றித்தருகிறேன் என்று சொல்லி, ஆதி புருஷனை வேண்டினார். ஈஸ்வரனான ஹரியும் இலாவை வலிமை மிக்க புருஷனாக மாற்றி விட்டார். சுத்யும்னன் என்ற பெயருடன் வளர்ந்தான்.
ஒரு சமயம் காட்டில் வேட்டையாடச் சென்றான். பல மந்திரிகள், பணியாட்கள் இவர்களுடன், சைந்தவம் என்ற குதிரையில் ஏறி பெரிய வில் , அத்புதமான அம்புகள், இவைகளுடன் கண்ணுக்குத் தென்பட்ட ஒவ்வொரு மிருகத்தையும் அடித்துக் கொண்டே வெகு தூரம் சென்று விட்டான். வட திசையில் மேரு மலையின் அடிவாரத்தில் குமார வனம் என்னும் இடம் வந்தான். அங்கு சர்வன் शर्व:- உமையுடன் ஏகாந்தமாக ரமித்துக் கொண்டிருந்த இடம் அது. அந்த இடத்தில் நுழைந்துமே சுத்யும்னன் தான் பெண்ணாக மாறியதை உணர்ந்தான். சைந்தவம் என்ற அந்த குதிரையும் வடவா என ஆயிற்று. அவனைப் பின் தொடர்ந்து வந்தவர்கள், அனைவரும் தங்கள் உடல்களில் ஆண்கள், பெண்ணாக மாற்றங்களைக் கண்டனர். அதில் மிகுந்த மன வருத்தம் அடைந்தனர். ஒருவரையொருவர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
அரசன் வினவினான்: அது எப்படி? அப்படி என்ன அந்த தேசத்தின் விசேஷம்? பகவன்! யார் இப்படி செய்தது?
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஒரு சமயம் சில ரிஷிகள் கிரீசனைக் காண அந்த இடத்துக்கு வந்தனர். அவர்கள் வரவால், அவர்களின் தவ வலிமையால் அந்த இடம் பிரகாசமாக ஆயிற்று. அந்த சமயம் அம்பிகையும் பெருமானும் கூடி இருந்ததால், குறைவான ஆடைகளுடன் இருந்த தேவி வெட்கத்துடன் மறைந்தாள். ரிஷிகள் முன் அறிவிப்பின்றி வந்த தங்கள் செய்கைக்காக வருந்தி, தம்பதிகளை இடையூறு செய்து விட்டோம் என்பதை உணர்ந்து திரும்பி நர நாராயணன் இருக்கும் மலைக்குச் சென்று விட்டனர். அதன் பின் தன் பிரிய மனைவியை சமாதானப் படுத்த பகவான் கிரீசன், இனி இந்த இடம் யார் வந்தாலும் பெண்களாக ஆவர் என்று உறுதியளித்தார். அதன் பின் அந்த இடத்துக்கு ஆண்கள் போவதில்லை.
அந்த பெண்களின் கூட்டம், அந்த வனத்திலேயே அலைந்து கொண்டிருந்தனர். வனம் வனமாக சென்று கொண்டிருந்தவர்களை புத பகவான் பார்த்தார். சோம ராஜனின் மகன் புதன். பெண்ணாக மாறிய சுத்யும்னனும் அவனிடம் மயங்கினாள். அவர்களுக்கு புரூரவசன் என்ற மகன் பிறந்தான்.
சில காலம் சென்றது. பெண்ணாக மாறிய தன் நிலையைக் கண்டு தானே இரங்கி குல குரு வசிஷ்டரை நினைத்தான். அவரும் வந்து அவனை நிலையைப் பார்த்து வருந்தினார். தானே பகவான் சங்கரரைக் குறித்து தியானம் செய்தார். ப்ரத்யக்ஷமான பகவான் சங்கரரிடம் விண்ணப்பித்துக் கொண்டார். அரசகுமாரன், அரசை ஆள வேண்டியவன், என்று மன்றாடினார். அந்த இடத்தின் தன்மையால் பெண் ஆனவன், ஒரு மாதம் ஆண் மகனாக ராஜ்ய காரியங்களை செய்யட்டும், ஒரு மாதம் சாபத்துக்கு உட்பட்டு பெண்ணாக இருக்கட்டும் என்று இருவரும் சம்மதித்தனர். ஆசார்யரின் அனுக்ரஹத்தால் தன் இயல்பையடைந்த சுத்யும்னன் ராஜ்யத்தை பாலனம் செய்தான். மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. அவன் புதல்வர்கள் தென் நாட்டில் அரசர்களாக ஆனார்கள்.வயதானதும் தன் மகன் புரூரவசிடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு வனம் சென்றான். |
அத்யாயம்-2
ஸ்ரீ சுகர் சொன்னார்: சுத்யும்னன் வனம் சென்றபின் மனு பலகாலம் யமுனைக் கரையில் தவம் செய்தார். அதன் பலனாக ஸ்ரீஹரியைக் கண்டார். அவரை வேண்டி, தனக்கு சமமான புதல்வர்களைப் பெற்றார். இக்ஷ்வாகு முதலானவர்கள் அவர்களே.
ப்ருஷத்ரதன் என்பவனை அவன் குரு, கோபாலனாக, பசுக்களை காப்பவனாக நியமித்தார். இரவில் அவன் வீராசனம் என்பதில் அமர்ந்து விரதம் மேற்கொண்டான். ஒரு நாள் மழை வலுத்தது. சார்தூலம் என்ற புலி பசுக்களின் கொட்டகையில் மழைக்கு ஒதுங்கி நுழைந்து விட்டது. பயந்த பசுக்கள் அலறின. பதறி இங்கும் அங்குமாக ஓடின. புலி ஒரு பசுவை பிடித்துக் கொண்டது. அந்த பசுவின் அலறல் கேட்டு காவல் இருந்த ப்ருஷத்ரதன் ஓடி வந்தான். சார்தூல-புலி என்று நினைத்து அந்த உருவத்தை தன் வாளால் அடித்தான். உண்மையில் அது பப்ரூ என்ற ரிஷி. बभ्रु- இரவு நேரம், மழையால் வானத்தில் நக்ஷத்திரங்களும் இல்லை, அறியாமல் அந்த உருவில் வந்த பப்ரு- கபிலர் என்ற முனிவரை அடித்து விட்டிருந்தான். மறு நாள் விடிந்தவுடன் தேடிச் சென்று தான் அடித்த புலி உண்மையில் பப்ரு என்ற ரிஷி என்று அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தான். ஆனால், குலாசார்யனான வசிஷ்டர் சபித்தார். க்ஷத்திரியன் நீ, யோசிக்காமல் அடித்து விட்டாய், இது போல அடிப்பது ஸூத்ர குணம், நீயும் ஸூத்ரனாக போ என்று சபித்தார்.
அவர் கால்களை பிடித்துக் கொண்டு கதறினான். பின், குருவின் சாபத்தை ஏற்றுக் கொண்டு தன் சாதனையைத் தொடர்ந்தான்.
இரவில் விரதம் அனுஷ்டித்தான். ஊர்த்வரேதஸ் எனும் கடுமையான தவத்தை சாதனை செய்தான். முனிவர்களுக்கு அது பிரியமானது. சர்வ லோக சுஹ்ருத்- நண்பனாக இருக்கும் வாசுதேவனிடத்தில் மனதை வைத்து, சர்வாத்மாவான அவரின் அமலமான பதத்தையே தியானித்து ஏகாந்தமாக பக்தியுடன் விரதம் இருந்தான். தவம் செய்யும் முறை தவறாமல், சங்கத்தை தவிர்த்து, சாந்தனாக, புலன்களை அடக்கி, எதையும் எவரிடமும் பெறாமல், யதேச்சையாக கிடைத்தவைகளையே உண்டு, இந்த விரதத்தை அனுஷ்டித்தான். தன் ஆத்மாவில் அந்த பரமாத்மாவை நிலை நிறுத்தி, ஞானம் பெறவேண்டும் என்பதே குறிக் கோளாக அந்த வனத்தில் சஞ்சரித்தான். ஜடம் போல, குருடன் போல, செவிடன் போல தன் தேகத்தை அடக்கிக் கொண்டு, வாழ்ந்தான். ஒரு சமயம் வனத்தில் தாவாக்னி என்ற பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அதில் தன் தேகத்தை தியாகம் செய்து விட்டான்.
இளையவன் கவி என்பவன், சிறு வயதிலேயே உலக வாழ்க்கையில் நாட்டமின்றி, ஒத்த மனமுடைய உறவினர்களோடு வனம் சென்றான். அங்கு தவம் செய்தான். குமாரனாக இருந்த சமயமே, பர லோகம் சென்று விட்டான்.
கரூஷான் என்ற மானவர்கள்- மனு புத்திரர்கள்- மனிதர்கள் , க்ஷத்திரியர்களாக, உத்தர தேசத்தை ஆண்டனர். அவர்கள் தர்ம வத்சலர்களாக, அந்தணர்களை ஆதரிப்பவர்களாக இருந்தனர்.
த்ருஷ்டன் என்பவன் வம்சம் தார்ஷ்ட்ரம் என வளர்ந்தது. க்ஷத்திரிய தர்மத்தை பாலனம் செய்தனர்.
ந்ருகன் என்பவன் வம்சத்தில் சுமதி, பூத ஜோதி, வசு என்பவர்கள். வசுவின் மகன் ப்ரதீகன். அவன் மகன் ஓகவான். ஒரு பெண் ஓகவதி என்பவள், அவளை சுதர்சனன் மணந்தான். சித்ரசேனன் என்பவன் நரிஷ்யந்தனின் மகன். அவன் மகன் அக்ஷன். அதன் பின் மீட்வாம்சன், கூர்ச, அவன் மகன் இந்த்ரசேனன் என்பவன். இந்திர சேனனின் மகன் வீதி ஹோத்ரன். அவனுக்கு சத்யஸ்ரவா, அவன் மகன் ஸ்ருஸ்ரவா:, அவன் மகன் தேவதத்தன் அதன் பின் அக்னிவேசன் என்ற மகன் பகவான் அக்னியே தான். கானீன என்று பெயர் பெற்றான். ஜாதூகர்ண்யன் என்ற பெரிய ரிஷியானான். அதன் பின் அக்னிவேசன் மூலம் ப்ரும்ம குலம் வந்தது. இது வரை நரிஷ்யந்தன், அவன் வம்சம்.
அடுத்தது திஷ்ட என்பவனின் வம்சம். நபாகன் என்பவன் திஷ்டனின் மகன். செயலால் வைஸ்யன் ஆனான். அவன் மகன் பலந்தனன் – அவன் மகன் வம்சப்ரீதி. அவன் மகன் ப்ராம்சு என்பவன், அவன் மகன் ப்ரமதி என்பவன். அவனுக்கு கனிநேத்ரன், சாக்ஷுசோ, விவிம்சதி: என்ற புதல்வர்கள். விவிம்சதி மகன் ரம்பன். அவனுக்கு கனி நேத்ரன், கரந்தமன் என்ற புதல்வர்கள்.ஆவீக்ஷி என்பவனின் மகன் மருத், அவன் சக்ரவர்த்தி ஆனான். பல காலம் யாகங்கள் செய்தான். அவனுக்கு மகா யோகியான ஆங்கிரஸ் என்பவர் மகனாக பிறந்தார். மருதன் செய்த யாகத்துக்கு இணையாக வேறு எவரும் செய்ததில்லை என்பர். அனைத்தும் பொன் மயமாக இருந்தது. இந்திரன் சோம ரசத்தில் மூழ்கினான். அந்தணர்கள் தக்ஷிணைகளால் மூழ்கடிக்கப் பெற்றனர். காற்று இதமாக வீசியதே சாமரம் போல ஆயிற்று. விஸ்வே தேவா: சபையை நிறைத்தனர். மருதனுக்கு மகன் தமன் பிறந்தான். அவனையடுத்து ராஜ்ய வர்தனன், சுத்ருதி, அதன் பின் சௌத்ருதிகள் என்று வம்சம் வளர்ந்தது. அவன் மகன் கேவலன், அவன் மகன் பந்துமான், வேகவான் என்பவர்கள், பந்துவின் மகன் த்ருண பிந்து அரசன் ஆனான். சிறந்த அப்சர ஸ்த்ரீயான அலம்புஷா அவர்களுக்கு மனைவியானாள். இட,விடா என சந்ததி. அவளிடம் விஸ்ரவா தனதன் என்ற மகனைப் பெற்றார். அவன் பரம யோகேஸ்வர் ஆன தந்தையிடம், நல்ல கல்வி கேள்விகளைப் பெற்றான். விசாலன், சூன்ய பந்து, தூம்ர கேது, என்று அவன் புதல்வர்கள். விசாலன், வம்சம் வளர்ந்தது. வைசாலி என்ற ஊரை நிர்மாணித்தான். ஹேமசந்திரன் என்பவன் அவன் மகன். தூம்ராக்ஷன் என்பவன் அவன் மகன். அவன் மகன் சம்யமன், அவனுக்கு க்ருசாஸ்வன், சஹ தேவன் என்பவர்கள். க்ருசாஸ்வனுக்கு சோமதத்தன் மகன். அவன் அஸ்வ மேத யாகங்கள் செய்தான். சோமதத்தன் பேரன் சுமதி அவன் மகன் ஜனமேஜயன். இவர்கள் வைசால தேச அரசர்கள். த்ருணபிந்துவின் புகழை வளர்த்தனர்.
(இதுவரை மகா புராணமான ஸ்ரீமத் பாகவதத்தில் ஒன்பதாவது ஸ்கந்தத்தில், இரண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம். ) ஸ்லோகங்கள்-36
அத்யாயம்-3
ஸ்ரீ சுகர் சொன்னார்: மனுவின் மகன் சர்யாதி என்பவர் ப்ரும்ம நிஷ்டன் என்று பெயர் பெற்றவர்.. ஆங்கிரஸ் முனிவரின் யாகத்தில் இரண்டாம் இடத்தில் இருப்பவர். அவருக்கு சுகன்யா என்ற அழகிய மகள் இருந்தாள். கமல லோசனா. அவளுடன் வனத்தில் ஸ்யவனர் என்பவரின் ஆஸ்ரமம் சென்றார். உடன் வந்த சகிகளுடன் தேடி பிடித்து விளையாடும் பொழுது, ஒரு புற்றின் மேல் பள பள வென்று நக்ஷத்திரம் போல ஏதோ தெரிந்தது. அவளுடைய போதாத வேளை, அந்த பள பளப்பான பொருளை ஒரு முள்ளால் குத்திப் பார்த்தாள். எதிர்பாராத விதமாக அந்த பொருளில் இருந்து ரத்தம் சொட்டியது. திடுமென உடன் வந்த சேனை வீரர்கள் சிறுநீர் வெளிவராமல் அடைபட்டு. திணறினர். ராஜ ரிஷி இது என்ன என்று குழம்பினார். வீரர்களிடம் கேட்டார், வீரர்களே, இது பார்கவரின் ஆசிரமம். ஏதாவது தவறு நடந்து விட்டதா? யாரோ ஆசிரமத்திற்கு கெடுதலாக ஒரு செயலை செய்திருக்க வேண்டும். சுகன்யா நடுங்கிக் கொண்ட தந்தையிடம் சொன்னாள். புற்றின் மேல் எதோ ஜோதி தெரிந்தது கையால் தொடாமல் முள்ளால் தொட்டேன். அதைக் கேட்டு சர்யாதி , புற்றின் உள்ளே யாரோ தவம் செய்து கொண்டிருந்ததை ஊகித்து, மெதுவாக சமாதானம் செய்ய விழைந்தார். அவர் கேட்டபடி தன் மகளை அவருக்கு கொடுத்தார். மகளைப் பிரியும் வேதனை மேலிட, வேறு வழியின்றி நகரம் திரும்பினார்.
மகா கோபம் உடைய அந்த முனிவரிடம் பொறுமையாக நடந்து கொண்டாள். எந்த தவறும் வராமல், அமைதியாக இருந்தாள். ஒரு சமயம் ஆசிரமத்திற்கு வந்த அஸ்வினி குமாரர்களிடம் ஸ்யவன முனிவர் வேண்டினார். நான் இல்லறம் திரும்ப விரும்புகிறேன். இளம் மனைவி. அவள் மனதுக்கு இசைந்த கணவனாக இருக்க விரும்புகிறேன். அதற்கு தேவையான இளம் வயதும் ரூபமும் எனக்கு அருள வேண்டும்.
அவர்களும் சம்மதித்து அருகில் இருந்த, சித்தர்கள் ஏற்படுத்தியதால் விசேஷ குணங்கள் கொண்ட ஒரு குளம் – அதில் மூழ்கி எழுந்திருக்கச் சொன்னார்கள். தவம் செய்து மெலிந்து உயிரை கையில் வைத்திருப்பது போல முதுமையின் பிடியில் இருந்த முனிவர் அவ்வாறே குளத்தில் மூழ்கி ஸ்னானம் செய்தார். அவருடன் அஸ்வினி குமாரர்களும் மூழ்கினர். அதன் பின் மூவரும் ஒரே விதமான உருவ ஒற்றுமைகளுடன் பலசாலிகளாக வெளி வந்தனர். மூவரும் பெண்கள் மோகிக்கும் அழகிய உருவமும், பத்மங்களை மாலையாக அணிந்து கொண்டு, குண்டலங்களும் அழகிய வஸ்திரங்களும், ஒரே விதமாக, ஸூரியன் ஒளியோ எனும் பிரகாசத்துடன் இருந்தவர்களைப் பார்த்து, இதில் எது தன் கணவன் என்பதை நிர்ணயிக்க முடியாமல், அஸ்வினி குமாரர்களையே சரணம் அடைந்தாள். தானே தன் பதியை தெரிந்து கொள்ள அவளுக்கு அவர்கள் உதவினர். இருவரையும் ஆசீர்வதித்து, சுகன்யாவின் பொறுமையையும், முனிவரின் அபிலாஷையையும் பாராட்டி விடை பெற்றனர்.
சர்யாதி சோம யாகம் செய்ய முணைந்தார். ஸ்யவனரின் ஆசிரமம் வந்தார். தன் மகளின் அருகில் தேஜஸ்வியான ஒரு இளம் வயது ஆண் மகன் இருப்பதைக் கண்டு குழம்பினார். காலில் விழுந்து வணங்கிய மகளை ஆசீர்வாதம் செய்யக் கூட மறந்தார். மகளிடம், என்னம்மா இது, உலகமே வணங்கும் ஸ்யவன முனிவர் உன் பதி. முதியவர் என்று அவரை விட்டு விலகி விட்டாயா? இது யார்? என்றார். ஏதோ நாடோடி போல இருக்கிறான் என்றார். நல்ல குலத்தில் பிறந்தவள், குலத்தையே தலை குனிவு ஏற்படும் ஒரு செயலை செய்து விட்டாயே என்று புலம்பினார்.
சுகன்யா சிரித்துக் கொண்டே, தந்தையே!, இது யாரோ அல்ல, உங்கள் மாப்பிள்ளை ப்ருகு நந்தனர் தான், என்றவள், நடந்த விஷயங்களை அவரிடம் விவரமாகச் சொன்னாள். அதைக் கேட்டு மகிழ்ந்த தந்தை சர்யாதி மகளை அன்புடன் அணைத்துக் கொண்டார். சோம யாகம் நிறைய செய்தவர் ஸ்யவனர், சோம க்ரஹத்தை அடைந்தார்.
சோம யாகத்தில் அஸ்வினி குமாரர்களுக்கு மற்ற தேவர்கள் பெறும் சோம பானம் மறுக்கப் பட்டிருந்தது. தன் தேஜஸால், அஸ்வினி குமாரர்களுக்கும் அந்த யாக முடிவில் சோம பானம் கிடைக்கச் செய்தார். யாகத்தில் சோம பானம் பெறுவது ஒரு தகுதியாக கருதப்பட்ட காலம். அதைக் கண்டு கோபித்த இந்திரன் வஜ்ராயுதத்தை எடுத்துக் கொண்டு கொல்ல வந்தான். பார்கவர் இந்திரன் தங்களை நெருங்கும் முன் வரும் வழியிலேயே, வஜ்ரத்தை கையில் வைத்தபடி ஸ்தம்பித்து செயலிழந்து நிற்கச் செய்தார். வைத்யர்கள் என்பதால் அவர்களுக்கு சோம பானம் கிடையாது என்று இந்திரன் முதலானோர் செய்த ஏற்பாடு. ஸ்யவனரின் குறுக்கீட்டால் தேவர்கள் சம்மதித்து அஸ்வினி குமாரர்களுக்கு சோம பானம் வழங்க ஒத்துக் கொண்டனர்.
அரசன் சர்யாதிக்கு, உத்தான பர்ஹிஷ், ஆனர்தோ, பூரிஷேணன் என்று மூன்று புதல்வர்கள். ஆனர்த்தன் மகன் ரேவதன். சமுத்திரத்தின் அடியில் குசஸ்தலீம் என்ற நகரை நிர்மாணித்துக் கொண்டு, சுகமாக வாழ்ந்தான். அவனுக்கு நூறு பிள்ளைகள் பிறந்தனர். ககுத்பித் என்பவன் மூத்தவன். தன் மகள் ரேவதியை அழைத்துக் கொண்டு அவளுக்கு ஏற்ற மணவாளனைத் தேடிச் கொண்டு ப்ரும்ம லோகம் சென்றான். கோலாஹலமாக பாட்டும் நடனமும் நிறைந்து இருந்த ப்ரும்மாவின் சபையில் காத்திருந்தவரை ப்ரும்மா வந்து குசலம் விசாரித்தார். நீ மனதில் நினைத்து வந்த காலம், அந்த சமயம் வசித்தவர்கள் அனைத்தும் மாறி விட்டன, அன்று இருந்தவர்கள், அவர்கள் புதல்வர்கள் அவர்கள் வம்சம் என்று மாறி யார் என்ன கோத்ரம் என்பது கூட மறந்து விட்டது என்று சிரித்தபடியே சொன்னார். மூன்று ஒன்பது- இருபத்தேழு, சதுர் யுகங்கள் கடந்து விட்டன. அதனால் தேவ தேவனின் அம்சமான பல தேவன் மகா பலசாலி, உன் கன்யா ரத்னத்தை அவனுக்கு கொடு என்றார். உன் மகள் கன்யா ரத்னம். அவன் மனிதர்களில் ரத்னம். அவனுக்கு கொடு. பூமியில் பாரம் அதிகரித்து விட்டது, அதைக் குறைக்க பகவான் அவதரிக்கப் போகிறார். தன் மகளுடன் ஊர் திரும்பிய பின் தன் மகளை பலனுக்கு மணம் செய்து கொடுத்து விட்டு தான் பதரிகாஸ்ரமம் சென்று விட்டான்.
(இதுவரை மகா புராணமான ஸ்ரீமத் பாகவதத்தில் ஒன்பதாவது ஸ்கந்தத்தில்,மூன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம். ) ஸ்லோகங்கள்-36
அத்யாயம்-4
ஸ்ரீ சுகர் சொன்னார்: நபகன் என்பவனுடைய மகன் நாபாகன். நிறைய புத்திரர்கள். அவர்களில் இளையவன், கவி என்ற மகன் ப்ரும்மசாரியாக வனம் சென்றவன் திரும்பி வந்தான். சகோதரர்கள் அதற்குள் ராஜ்யத்தை தங்களுக்குள் பிரித்துக் கொண்டு விட்டிருந்தனர். என் பங்கு எங்கே என்றவனிடம் தந்தையை நீ வைத்துக் கொள் என்றனர். வயதானவர். தந்தையிடம் சென்ற அந்த மகன், தந்தையே, உன்னை எனக்கு தந்தனர், என்றான். அவர் மகனே, கவலைப் படாதே, உனக்கு ஜீவனோபாயம் நான் சொல்லித் தருகிறேன் என்றார். இதோ அங்கிரசின் வம்சத்தினர் யாகம் செய்கின்றனர். கற்றவர்கள் தான் என்றாலும், மிகப் பெரிய யாகம், பலவித நியமங்கள் கொண்டது. ஆறு நாட்களுக்கு முன் செய்ய ஆரம்பித்தனர். என்ன செய்வது என்று தெரியாமல் திகைக்கிறார்கள். அங்கு போய், இந்த சூக்தங்கள் இரண்டையும் அவர்களுக்கு சொல்லிக் கொடு. வைவஸ்வதேவ யாகம் அது. அவர்கள் யாகத்தை முடித்து விட்டு ஸ்வர்கம் போகும் பொழுது, யாகத்துக்காக சேமித்த பொருட்களை, யாகத்தில் செலவழித்தது போக மீதியை உனக்கு அளிப்பர். அதே போல கவி என்ற அந்த மகன் யாக சாலைக்குச் சென்றான். அவர்களிடம் தந்தை சொல்லிக் கொடுத்த சூக்தங்களைச் சொல்லி யாகம் செவ்வனே முடியச் செய்தான். அவர்களும் யாக பரிசிஷ்டம்- யாகத்தில் மீந்ததை அவனுக்கு கொடுத்து விட்டுச் சென்றனர். அவைகளை சேகரித்துக் கொண்டிருந்த சமயம் கருமையான உடலுடன் ஒருவன் வந்து இவை என்னுடையவை என்றான். வாஸ்துகம்- யாக பூமியில் கொண்டு வைத்த பொருட்கள் இவை எனக்கு விதிக்கப் பட்டவை என்றான். கவி, எனக்கு கொடுத்தனரே என்றான். உன் தந்தையிடமே போகலாம் அவருக்குத் தெரியும் என்றான். எனவே இருவருமாக அவரிடம் சென்றனர். அவர் சொன்னார் யாக பூமியில் மீந்தவை ருத்ரனுக்குரியதே. தக்ஷ யாக சமயம் இந்த உடன்பாடு செய்யப்பட்டது. இந்த தேவன் ருத்ரனுக்கு அனைத்தையுமே கொடுக்கலாம், இந்த மீதியான பொருட்கள் எம்மாத்திரம் என்றார்.
நாபாகன் (கவி என்ற மகன்) வந்தவனை வணங்கி ஐயா, இவைகள் உங்களுக்கே என்றான். அவன் சொன்னான்: தந்தையைப் போலவே நீயும் சத்ய சந்தனாக இருக்கிறாய். மந்திரன் அறிந்த உனக்கு சனாதனமான ஞானத்தை தருகிறேன். இந்த செல்வத்தையும் எடுத்துக் கொள். ஞானோபதேசம் செய்தபின் பகவான் ஸ்ரீ ருத்ரனாகவே காட்சி தந்து மறைந்தார்.
கவி என்ற நாபாகனின் இந்த சரித்திரம் எப்பொழுதும் ஸ்மரிக்கத் தக்கது. நாபாகன் என்ற கவியின் மகன் அம்பரீஷன். அவனும் மகா பாகவதனாக இருந்தான். ப்ரம்ம தண்டம் கூட அவனை எதுவும் செய்யவில்லை.
ராஜா பரீக்ஷித் ‘அது கதையைச் சொல்லுங்கள், கேட்டிருக்கிறேன், அவர் ராஜ ரிஷி, புத்திமான், அவர் மேல் பிரயோகித்த ப்ரும்ம தண்டம் திரும்ப பெறப் பட்டது என்று.
ஸ்ரீ சுகர் சொன்னார்: அம்பரீஷன் பெருந்தன்மை வாய்ந்தவன். சப்த த்வீபம்- ஏழு தீவுகள் கொண்ட பூமியை முழுவதுமாக ஆண்டான். நிறைந்த செல்வமும் மதிப்பும் மரியாதையும் பெற்று வாழ்ந்தான். அத்துடன் செல்வம் நிலையானதல்ல. மனித வாழ்க்கையே கனவு போல என்று அறிந்தவன். பகவான் வாசுதேவனிடத்தில் பக்தி செலுத்தி வந்தான். பக்தர்கள், சாதுக்கள் கூடிய சபையில் இருப்பான். பாகவதர்கள் சொல்வது போல மனம்- ஸ்ரீ க்ருஷ்ணனின் பதாரவிந்தத்தில், வாய் வைகுண்ட வர்ணனைக்கே, கைகள் ஸ்ரீ ஹரி ஆலயங்களை பெருக்கவே, காதுகள் அச்யுதனின் சத் கதையைக் கேட்கவே, முகுந்தனின் விக்ரஹங்களைக் காணவே கண்கள், பகவானின் அடித் தொண்டர்களாக உள்ளவர்களையே எங்கள் சரீரத்தை தொட அனுமதிப்போம், எங்கள் நாசி அவன் பாத தாமரையில் அர்ச்சனை செய்த துளசியையே உணரட்டும், நாக்கும் அப்படியே, பாதங்கள், ஸ்ரீ ஹரியின் க்ஷேத்ரங்களுக்கு செல்லவே, தலை ஹ்ருஷீகேசனை வணங்கவே, தாசனாக சேவை செய்வதில் தான் காமம்-ஆசை, உத்தம ஸ்லோகன் என்ற பகவானிடம் பக்தி உடைய மக்களிடையே தான் எங்கள் நடவடிக்கைகளும். இப்படியே உள்ளம் நிறைந்த பக்தியுடன் ராஜ்யத்தை செவ்வனே ஆண்டான். அஸ்வ மேத யாகங்கள் செய்தான். வசிஷ்டர் கௌதமர் முதலிய ரிஷிகளைக் கொண்டு யாக காரியங்கள் நடந்தன. தாராளமாக தானங்கள் கொடுத்தான். அந்த யாகத்திற்கு வந்த தேவர்களும், ருத்விக்குகள் என்பவர்களும்,(யாக காரியங்களைச் செய்பவர்கள்) ஒரே போல உயர்ந்த ஆடைகள் முதலியவைகளில் வித்தியாசமின்றி இருந்தனர். தேவர்களை கண் இமைக்காததை வைத்தே அறிய முடிந்தது. இப்படி பகவத் காரியங்களில் நேரத்தை செலவழித்தவன், வீடு வாசலோ, மனைவி மக்களோ, பந்துக்களோ, செல்வம், ஆபரணங்கள், வாகனங்கள் என்ற பற்றுதலே இல்லாமல் வாழ்ந்தான். அதைக் கண்டு ஸ்ரீ ஹரி தானாகவே தன் சக்கரத்தை பாதுகாப்புக்காக அளித்திருந்தார்.
ஸ்ரீ ஹரியை துதிக்கவும் விசேஷ ஆராதனைகள் செய்யவும் மனைவியுடன் ஒரு வருஷம் த்வாதசி விரதம் இருந்தான். கார்த்திகை மாதம் விரதம் முடியும் சமயம், மூன்று இரவுகள் விரதம் இருந்து காலிந்தி நதியில் ஸ்னானம் செய்து மது வனத்தில் ஸ்ரீ ஹரியை உபாசித்தான். மஹா அபிஷேக விதிகளை அனுசரித்து, அனைத்து பொருட்களையும் கொண்டு அபிஷேகம் செய்வித்தான். வரிசையாக வஸ்த்ர, ஆபரணங்கள், கந்த மாலைகள், தூப தீபம், நைவேத்யம், ஆரத்தி என்று கவனமாக பூஜை செய்தான். அந்தணர்களை அழைத்து அவர்களுக்கும் வஸ்திரங்கள், பசுக்கள் வெள்ளி, பொன் முதலியவியவைகளைத் தானமாக கொடுத்து அறுசுவை உணவு படைத்தான். அவர்களும் விரும்பியது கிடைக்கப் பெற்று மகிழ்ச்சியாக ஆசிர்வதித்து அரசனை பாராயணம் (விரதம் முடித்தல்- உணவு ஏற்றல்) செய்ய அனுமதித்தனர். அந்த சமயம் அதிதியாக சாக்ஷாத் துர்வாச முனிவர் வந்து சேர்ந்தார்.
அவரை வரவேற்று ஆஸனங்கள் கொடுத்து, வணங்கினான். அவர் துவாதசி விரதம் முடிக்க இருக்கிறான் என்று அறிந்து பாராட்டி, தானும் ஸ்னானம் செய்து விட்டு வந்து கலந்து கொள்வதாகச் சொல்லி காலிந்தி நதிக் கரை சென்றார். இன்னம் ஒரு முஹூர்த்தமே பாக்கி விரதத்தை முடிக்க குறித்த நேரம். அரசனும் உடன் இருந்த மற்ற அந்தணர்கள், அரச உத்யோகஸ்தர்கள், கவலைப் பட்டனர். விரதமும் முடிய வேண்டும், வந்த அதிதியை விட்டு நான் முன்னதாக உண்டால் ஏற்படும் அதர்மமும் என்னை பாதிக்க கூடாது என்று, யோசித்து, பசித்து இருக்கும் மற்றவர்களுக்காக நீர் மட்டும் அருந்தி பாரணையை முடித்தான். துர்வாச முனிவரும் வருவதை எதிர் நோக்கி காத்திருந்தான்.
காலிந்தீ நதியில் சாவகாசமாக குளித்த பின் தன் நித்ய கர்மாக்களையும் செய்து விட்டு திரும்பிய துர்வாசர் தன் ஞான த்ருஷ்டியால் அரசன் நீரைக் குடித்து பாரணையை முடித்ததை அறிந்தார். மகா கோபத்துடன், என்னை நிமந்த்ரணம்- அழைத்துவிட்டு, நீ முன்னால் உண்டால் அதர்மம் என்பது தெரியாதா? அதற்கான பலனை அனுபவி என்று சொல்லியபடியே தன் ஜடையை அவிழ்த்து விரித்து அதிலிருந்து க்ருத்தி என்ற துர்தேவதையை வரவழைத்தார். அவளோ காலானலம்-ஊழித் தீ- போல இருந்தாள். அவள் அட்டகாசமாக கையில் வாளையும் வைத்துக் கொண்டு பூமி நடுங்க எதிரில் நின்ற பொழுதும் அரசன் அசையவில்லை. ஆனால், பகவான் முன்னால் என் பக்தனை காப்பாற்று என்று சொல்லி அனுப்பியிருந்த ஸ்ரீ சக்கரம் அவளைத் துரத்தியது. தானே அறியாமல் தீயில் விழுந்த பாம்பு போல மறைந்தாள். சக்கரம் துர்வாச முனிவரை துரத்தலாயிற்று.
தன் முயற்சி பலிக்காததைக் கண்ட முனிவர் ஓடினார். ஓடி மேரு மலையின் அடியில் ஒளிந்து கொண்டார். பகவானின் கையில் இருந்த ஆயுதம் அங்கும் துரத்தியது. நாலா திசைகளும் ஓடினார், வானம் பூமி, குகைகள், சமுத்திரங்கள், என்று கடந்து லோகாந்தரமும் ஓடினார். அவர் ஓடும் இடமெல்லாம் சுதர்சன சக்கரமும் தொடர்ந்தது. வேறு வழியின்றி ப்ரும்மாவிடம் தஞ்சம் புகுந்தார். அவர் சொன்னார் ‘ என்னுடைய ஸ்தானம் பகவான் கொடுத்தது. இந்த உலகில் இரவும் பகலுமாக, விளையாட்டின் முடிவில், தன் புருவ அசைவினால், காலாத்மாவான பகவான் க்ஷணத்தில் அழித்து விடுவான். நான் யார் அவன் ஆயுதத்தை தடுக்க? தக்ஷ, ப்ருகு முதலானவர்களோ, பவன், நான், ப்ரஜேசன், பூதேசன் சுரேசன் என்ற அனைவருமே நியமத்துக்கு கட்டுபட்டவர்கள். எங்களுக்கு விதிக்கப் பட்ட கடமையை தலையால் தாங்கிச் செய்கிறோம். அவ்வளவே என்று மறுத்த பின், துர்வாசன், சர்வன் – शर्व:-சர்வன் என்ற மகேஸ்வரனிடம் சென்றார். ஸ்ரீ ருத்ரன் ‘ மகனே எங்களுக்கு பூமியில் அதிகாரம் கிடையாது. அதைத் தாண்டி அஜன்- பிறவியில்லாத பகவானின் ஜீவ கோசம் என்பவை இவை அனைத்தும். காலம் என்பது இறுதியான நிலை. அதன் முன் நாங்கள் செயலிழந்தவர்களே. நாங்கள், நான், சனத் குமாரன், நாரதர், அஜனான பகவான், கபிலர், அடுத்து வந்த தேவலன், ஆசுர தர்மம், மரீசி முதலானவர்கள், மற்றும் சித்தர்கள், தொலை நோக்குடைய தபஸ்விகள், எவருமே, அந்த மாயையை மீற முடிந்ததில்லை. மாயை எங்களை சுற்றிச் ஸூழ்ந்து கட்டியது போல அந்த கால சக்கரத்தில் சுழன்று கொண்டிருக்கிறோம். அந்த விஸ்வேஸ்வரனுடைய ஸ்ரீ சக்கரம், எங்கள் சக்திக்கு அப்பாற்பட்டது. காலாத்மாவான பகவானையே சரணடை ‘ என்றார். .
நிராசையுடன் துர்வாச முனிவர் பகவானிடம் வந்தார். வைகுண்டம் என்ற இடம் ஸ்ரீ நிவாசனாக வாசம் செய்யும் இடம். அச்யுதா என்று அலறியபடி சக்கரத்தின் வெப்பத்தால் தகிக்கப் பட்டவர், தவறு செய்து விட்டேன், என்னை காப்பாற்று என்று அவர் காலடியில் விழுந்தார். அச்யுதா, அனந்தா, வேண்டியவர்களுக்கு வேண்டியதைத் தரும் பெருமானே, விஸ்வ பாவன, என்னை காப்பாத்து. உன் மகிமை அறியாமல் உன் பக்தனுக்கு தீங்கு செய்து விட்டேன். உன் நாம உச்சாரணமே, நரகத்திலிருந்து மீட்கும் என்பார்களே.
ஸ்ரீ பகவான் சொன்னார்: அந்தண உத்தமரே! நான் பக்த பராதீனன். அவர்களுக்கு முன் சுதந்திரம் இல்லாதவன், பக்த ஜன ப்ரியன், சாதுக்கள் என்னை ஹ்ருதயத்தில் வைத்து பூஜிக்கின்றனர். என்னை நம்பியவர்களுக்கு சரணம் அளிப்பேன். செல்வம், மனைவி மக்கள் என்று அனைத்தையும் தியாகம் செய்து நீயே கதி என்று இருக்கும் என் அன்பர்களை கை விட மாட்டேன். சாதுக்களின் ஹ்ருதயம் என்னிடம் என்றால், என் ஹ்ருதயமும் அவர்களிடத்தில் உள்ளது. எப்படி அவர்கள் உன்னைத்தவிர வேறு யாரும் இல்லை என்று நினைக்கிறார்களோ, அதே போல எனக்கும் அவர்களன்றி எதுவும் இல்லை. ஒரு உபாயம் சொல்கிறேன். இது நீயே ஏற்றுக் கொண்ட அபிசாரம்- துன்பம். சாதுக்களின் மேல் பிரயோகித்தால் அது திரும்பி ஏவினவனையே தொடரும் என்பது தெரியாதா? நல்ல வித்தை, நிறைந்த தவ வலிமை இவை கூட வினயம் இல்லாவிட்டால், கெடுதலாக பிரயோகித்தால் தன்னையே சுடும் என்பதற்கு இந்த நிகழ்ச்சியே உதாஹரணமாக இருக்கட்டும்.
ப்ரும்மன்! பத்ரம் தே! நாபாக தனயனை (அம்பரீஷனை) சமாதானப் படுத்து. சாந்தியடைவாய் – என்றார்.
அத்யாயம்-5
ஸ்ரீ சுகர் சொன்னார்: பகவானே இவ்வாறு சொன்னபிறகு, துர்வாசர், அம்பரீஷனைத் தேடி வந்து காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். தன் காலைத் தொட்டதால் கூச்சம் அடைந்த அரசன், ஸ்ரீ சக்கரத்தைப் பார்த்து பிரார்த்தித்தான்.
அம்பரீஷன்: நீயே அக்னி பகவான். ஸூரியனும் சோமனும் நீயே. நீராக, பூமியாக, வாயுவாக, உயிரினங்களின் இந்திரியங்களாக இருக்கிறாய், சுதர்சனா! உன்னை வணங்குகிறேன். ஆயிரம் ஆரங்களுடன் கூடியவனே, அச்யுதனுக்கு பிரியமானவன் நீ. அனைத்து அஸ்திரங்களையும் பொடிப் பொடியாக்குவாய். தேவா! உனக்கு ஸ்வஸ்தி உண்டாகட்டும்.
தர்மமும், ருதம், சத்யம் என்ற குணங்களும் நீயே. யாகமாகவே இருந்து யாகத்தை உண்பவனும் நீயே. சர்வாத்மா, லோக பாலனும் நீயே. தேஜஸாக பரம புருஷத்வம் நீ என்றும் அறிவோம்.
சுநாபா! வணக்கம். அகில தர்ம சேதுவானவனே, அதர்ம சீலர்களான அசுர குலத்துக்கு தூம கேதுவானவன். மூவுலகையும் ரக்ஷிப்பவன், விசுத்தமான தேஜஸ் உடையவன், மனோ வேகத்தில் செல்லக்கூடிய அத்புத கர்மா உனது, உன்னை வணங்குகிறேன்.
தர்ம மயமான உன் தேஜஸால் தமஸ் எனும் இருட்டு, ப்ரகாசம், இரண்டையும் நிர்வஹிக்கிறாய். உன் மகிமை அளவிட முடியாதது. गिरां கிராம் பதே! வாக்பதே, இந்த உன் ரூபம் சத் அசத் என்பவைகளைக் கடந்தது. உன்னை தைத்ய தானவர்கள் மேல் பிரயோகித்தால், அவர்கள் அழிந்தார்கள் என்பது நிச்சயம். கதையை ஏந்திய மஹா விஷ்ணுவின் அருகில் இருப்பவன். ஜகத்தை காக்க துர்ஜனங்களை தண்டிப்பது அவர் வழக்கம். இந்த அந்தணருக்கும், என் குல தெய்வத்துக்கும் நன்மையைச் செய். அதுவே எங்களுக்கு அனுக்ரஹம். எங்கள் குலத்தினர் அந்தணர்களை மதித்து பூஜித்து வந்துள்ளனர். யாகமும், தானங்களும், என் தர்மத்தை அனுஷ்டித்து நான் செய்ததை எண்ணியோ, சர்வ குணாஸ்ரயனான பகவான், சர்வ பூதங்களிலும் ஆத்மாவாக உறைபவன், அவருடைய சர்வாத்ம பாவத்தில் இவர் மட்டும் விலக்கல்ல என்று எண்ணியோ, என்னிடத்தில் சதா பரிவுடையவன் என்பதை எண்ணியோ இவரை விடுவித்து விடு. இந்த தாபம் நீங்கி அவர் சொஸ்தமாகட்டும்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு விஷ்ணு சக்ரமான சுதர்சனத்தை ஸ்தோத்திரம் செய்யவும், தன் ராஜஸ கோபத்தால் தகித்த துர்வாச முனிவர் தாபம் நீங்கி நலம் பெற்றார். தன் கஷ்டம் நீங்கியதும் அரசனை ஆசீர்வதித்து, பெருந்தன்மையாக நடந்து கொண்டதை புகழ்ந்து பாராட்டினார். அஹோ! அனந்த தாஸர்களின் மகிமையை இன்று தெரிந்து கொண்டேன். அரசனே, என் மேல் தவறு இருந்தும் என்னை காப்பாற்றினாய். சாதுக்களுக்கு எது தான் கஷ்டம், மஹாத்மாவாக இருப்பவர்கள் எதைத் தான் தியாகம் செய்ய தயங்குவார்கள், சத் பாவங்களே உருவான ஸ்ரீ ஹரி, சாதுக்களின் நடுவில் ரிஷபமாக தனித்து காணப்படுபவன், எவனுடைய நாமத்தை சொன்னாலே மனிதர்கள் புனிதமாக ஆவார்களோ, அவருடைய தீர்த்த பாதங்களை நம்பியவன் எதைத்தான் அடைய மாட்டான். ராஜன்! அனுக்ரஹிக்கப் பட்டேன். அதி கருணையான உள்ளம் படைத்த உன்னால் என் மிகப் பெரிய தவறும் பின் தள்ளப் பட்டது. என் உயிரை காத்திருக்கிறாய்.
அரசன் அவரும் இன்னமும் உணவருந்தவில்லை என்பதை எண்ணி, தானும் அவருக்காக காத்திருந்து, அவருக்கு விருந்தினருக்கு செய்ய வேண்டிய உபசாரங்களைச் செய்து போஜனம் செய்வித்தான். அவர் திருப்தியாக, நிறைந்த மனதுடன் அன்புடன் அரசனே! புஜ்யதாம்-சாப்பிடு என்று பணித்தார். மிகவும் பரிவுடன் உபசரித்தாய். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உன்னைப் போன்ற உத்தமமான பாகவதர்களை காண்பதும் நன்று, அன்புடன் பேசி, விருந்தும் அளித்தாய் என்றார்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: அரசனை அசீர்வத்தித்து, புகழ்ந்து பேசி துர்வாசர் விடை பெற்றார். வான வழியில் ப்ரும்ம லோகம் சென்றார். ஒரு வருஷம் சாப்பிடாமல் காத்திருந்த அரசன் அம்பரீஷன், தன்னுடன் காத்திருந்த அந்தணர்களையும், அரசு அதிகாரிகளையும் ஊர் ப்ரமுகர்களையும் அழைத்து உணவருந்தச் செய்தான். மகரிஷி துர்வாசர், அவருக்கு ஏற்பட்ட துன்பத்தையும், அதிலிருந்து விடுபட்டதையும் கதையாக பேசிக் கொண்டனர்.
அதன் பின் தனயர்களிடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு தான் வனம் சென்று, பஜனைகளில் காலத்தை கழித்தான். ஜனங்களும் பக்தனான தங்கள் அரசன் செயலைப் பாராட்டி தாங்களும் அவ்வாறே பாகவதர்களானார்கள்.
அம்பரீஷ சரித்திரத்தின் பல ஸ்ருதியாக, இதை பக்தியுடன் கேட்பவர்கள் விஷ்ணுவின் ப்ரசாதத்தால் முக்தி அடைவர்.
இது வரை ஸ்ரீமத் பாகவத்தில் ஒன்பதாவது ஸ்கந்தத்தில் துர்வாசோபாக்யனம் என்ற ஐந்தாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-27
அத்யாயம்-6
ஸ்ரீ சுகர் சொன்னார்: விரூபன், கேதுமான், சம்பு, என்று அம்பரீஷணின் தனயர்கள் மூவர். விரூபாக்ஷனுக்கு, ப்ருஷதஸ்வன் என்ற மகன், அவன் மகன் ரதீதரன். ரதீதரனுக்கு ப்ரஜைகள் இல்லாததால், அவன் மனைவி மிகவும் வற்புறுத்தியதால் அங்கிரஸ முனிவரிடம் ப்ரும்ம வர்சஸான மகன்களைப் பெற்றான். க்ஷேத்ரமாக மட்டுமே அவன் மனைவி இருந்ததால், ஆங்கிரஸ் என்றே அறியப் பட்டனர். ரதீதரன் க்ஷத்திரியன் ஆனாலும் அவன் மக்கள் அந்தணர்களானார்கள்.
க்ஷுவதன் என்பவன் மனுவின் மகன். இக்ஷ்வாகு மனுவின் மூக்கிலிருந்து பிறந்தான். அவனுக்கு நூறு பிள்ளைகள். விகுக்ஷி நிமி, தண்டகர்கள். ஆர்யாவர்த்தம் என்ற இந்த தேசத்தை, ஒரு பக்கம் இருபத்தைந்து அரசர்கள் ஆண்டார்கள். பின்னால் மூவர், மத்தியில் மற்றவர்கள்.
ஒரு சமயம் எட்டு பேருடன் ஸ்ரார்தம் செய்ய, இக்ஷ்வாகு விகுக்ஷி என்ற மகனிடம், சீக்கிரமாக போய் மாமிசம் மேத்யத்திற்காக கொண்டு வா என்றான். அவனும் அவ்வாறே தேடி அந்த செயலுக்குத் தகுதியான சில மிருகங்களை வேட்டையாடி களைத்தவன் பசி பொறுக்க மாட்டாமல் ஒரு சிறு முயலை தான் உண்டு விட்டான். அது தவறு என்பது நினைவில் வரவில்லை. மீதியைக் கொண்டு வந்து தந்தையிடம் கொடுத்தான். அவர்களுடைய குரு சிரார்த்த கர்மாவில் நிவேதனம் (நீரை மந்திரத்துடன் உணவில் தெளிப்பது) செய்ய கையில் நீரை எடுத்து தெளிக்கும் முன் எப்படியோ அறிந்து, இது தப்பு, செய்யக் கூடாத செயல், என்றார். குருவின் வார்த்தை நிஜம் தான் என்பதை மகனிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட தந்தை. மகா கோபத்துடன் மகனை நாட்டை விட்டே துரத்தி விட்டார். விதிகளை மீறுவதாவது. அதன் பின் அந்தணர்களுக்கு செய்ய வேண்டியதை செய்து விட்டு, சில காலம் சென்றபின் தேகத் தியாகம் செய்து நல் கதியை அடைந்து விட்டார்.
அதன்பின் விகுக்ஷி திரும்பி வந்து அரசனானான். நியாயமாக ராஜ்ய பரிபாலனம் செய்தவன் ஸ்ரீ ஹரியை தியானம் செய்து யாகங்கள் செய்தான் என்று கேள்வி. புரஞ்ஜயன் என்பவன் அவன் மகன். அவனுக்கு இந்த்ரவகன் என்ற மகன். தன் செயல்களால் ககுத்ஸ்தன் என்றும் பெயர் பெற்றான்-
க்ருத யுக முடிவில் தேவ, தானவர்களுக்கிடையில் பெரும் யுத்தம் மூண்டது. வீரனான இவனை தங்கள் பக்கம் இருந்து போர் செய்ய தேவர்கள் அழைத்தனர். அதுவரை தானவ-தைத்யர்களிடம் தோற்ற படி இருந்தனர். தேவ தேவனான மகா விஷ்ணு, வாகனமாக இந்திரனே மகா ரிஷபமாக இருக்க வேண்டும் என்றார். அதன்படி இந்திரன் விருஷபமாக வர, அவனுடைய ககுத்- திமில்- என்ற பாகத்தில் நின்றபடி தன் ஆயுதங்கள், வில், அம்புகள் இவைகளுடன் அதன் மேல் நின்றபடியே போரிட்டான்.
விஷ்ணுவின் தேஜஸ் அவனைச் சூழ்ந்து இருந்து காத்தது. அதனால் மேற்கு திசையில் தைத்யர்களின் கோட்டையை தேவர்கள் அவன் தலைமையில் ஆக்ரமித்தனர். அவனுடைய வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள் தைத்யர்களை த்வம்சம் செய்து யம லோகத்துக்கு அனுப்பியது. அக்னியின் ஜ்வாலை போன்ற அந்த சரங்களால் தாக்கப் பட்ட தைத்யர்கள் ஓடி மறைந்தனர். அந்த நகரை ஜயித்து, புரம், தனம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களை வஜ்ர பாணியான இந்திரனுக்கு கொடுத்தான். ராஜரிஷி என்ற பெயர் பெற்றான். புரஞ்ஜயனின் மகன் அனேனன் . அவன் மகன் ப்ருது. விஸ்வகந்தி, சந்திரன், யுவனாஸ்வன் என்று வம்சம் வளர்ந்தது. ஸ்ராவன் என்பவன் அவன் மகன். அவன் ஸ்ராவஸ்தி என்ற நகரத்தை நிர்மானித்தான். ப்ருஹதஸ்வன் என்பவன் ஸ்ராவஸ்தி மகன். அதன் பின் குவலயாஸ்வாகன். அவன் உதங்கர் என்பவர் விரும்பியபடி, துந்து என்ற பெயருடைய பலசாலியான அசுரனை, அவன் இருபத்தோரு ஆயிரம் மகன் களோடு வதைத்தான். அதனால் துந்துமாரன் என்றே புகழ் பெற்றான். துந்துவின் முகத்திலிருந்து கிளம்பிய தீ ஜ்வாலைகளில் அவனும் அவன் மகன்களும் சாம்பலாயினர். மூவரே மிஞ்சினர். த்ருடாஸ்வன், கபிலாஸ்வன், பத்ரா என்ற மூவர். த்ருடாஸ்வ புத்ரன் ஹர்யஸ்வன், அவன் மகன் நிகும்பன் எனப்படுபவன்.
பர்ஹணாஸ்வன், நிகும்பன் மகன். க்ருஸாஸ்வன், அதையடுத்து சேனஜித் என்பவன். யுவனாஸ்வன் அவன் மகன். அவன் தனக்கு குழந்தை இல்லை என்பதால் வனம் சென்றான். நூறு மனைவிகளுடன் க்ருபாலவன் என்ற முனிவரைக் குருவாக கொண்டு, யாகம் செய்தான். ஐந்த்ரீம் என்ற அந்த யாகத்தை மிகவும் கவனமாக, சிரத்தையுடன் செய்தான். அரசன் இரவில் தாகத்தால் தவித்தவன் யாக சாலையில் நுழைந்தான். அனைவரும் உறங்கிக் கொண்டிருந்தனர். மந்த்ரஜலம் என்று வைத்திருந்ததை எடுத்து குடித்தான். அந்த யாக சாலையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் விழித்துக் கொண்டு கலசம் காலியாக இருக்கவும், யார் குடித்தது என்று விசாரித்தனர். பும்ஸவனம் ஜலம்- பிள்ளை வரம் அளிக்கும் மந்திரத்தால் மந்திரித்த ஜலம் அது. அரசன் குடித்தான் என்றவுடன் தெய்வ சங்கல்பம் , வேறு என்ன சொல்ல, அஹோ! தைவ பலம் பலம் என்று சொல்லி ஈஸ்வரனை நமஸ்கரித்தனர்.
அதன் பின் காலம் கனிந்த பின், யுவனாஸ்வனின் வயிற்றை இடது பக்கமாக கிழித்து, அவன் மகனை வெளிக் கொணர்ந்தனர். அவன் பிற்காலத்தில் சக்ரவர்த்தியாக ஆனான். யார் இவனுக்கு தாய் பால் கொடுப்பாள் என்ற பேச்சு எழுந்த சமயம், அதுவோ, பசியினால் அழ ஆரம்பித்து விட்டது. மாம் தாதா வத்ஸ- குழந்தாய் நான் தருகிறேன் , அழாதே என்று சொல்லி இந்திரன் அம்ருதத்தை தொட்ட சுட்டு விரலை அதன் வாயில் வைத்தான். அந்தணோத்தமர்களின் அருளால் யுவனாஸ்வன் உயிருக்கு ஆபத்து இல்லாமல் தப்பித்தான். அதன் பின் அவன் வனம் சென்று தவம் செய்து சித்தியடைந்தான். குழந்தையின் பெயர் த்ரஸத் தஸ்யு என வைத்தனர். ராவணன் போன்ற அசுரர்கள், எவரைக் கண்டு பயப்படுகிறார்களோ என்ற பொருளில். ஆனால் மாந்தாதா என்ற பெயரே நிலைத்தது. பூமி முழுவதையும் ஆண்டான். சக்ரவர்த்தி என பெயர் பெற்றான். பகவானின் அம்சமே எனக் கருதப் பட்டான். ஏழு தீவுகள் கொண்ட பூவுலகை அச்யுதனின் தேஜஸால் தான் ஒருவனே ஆண்டான்.
அறிஞர்களைக் கொண்டு யாகங்கள் செய்வித்தான். நிறைய தக்ஷிணைகள் கொடுத்து சர்வ தேவ மயமான தேவனை, சர்வாத்மகன், அதீந்திரியன் என்று போற்றப் படும் பகவானை குறித்து செய்யப் பட்ட யாகம். த்ரவ்யம், மந்த்ரம், விதி, யாக, யஜமானன், ருத்விக்குகள் தர்மம் , தேசம், காலம், இவையனைத்தும் பகவானின் ஆத்மாவே. ஸூரியன் தான் உதித்த இடத்திலிருந்து அஸ்தமனமாகும்வரை உலகில் உலவும் இடமெல்லாம் யுவனாஸ்வனின் ஆட்சிக்கு கீழ் வந்தவையே. மாந்தாதுவின் க்ஷேத்ரம் என்றே அழைத்தனர்.
சபிந்து என்பவரின் மகன் பிந்துமதி என்பவளை மணந்தான். புருகுத்சன், அம்பரீஷன், முசுகுந்தன் என்ற யோகி, அவர்கள் சகோதரிகள் ஐம்பது பெண்கள், அவர்களை சௌபரீ என்பவர் மணந்தார்.
சௌபரீ என்ற அந்த அந்தணர், யமுனை நதி ஜலத்தில் மூழ்கி இருந்து தவம் செய்தவர். மீன அரசன் தாம்பத்யத்தாலேயே நிவ்ருத்திம் என்ற நிலையை அடைந்து விட்டிருக்கிறான் என்பதைக் கண்டு தானும் தாம்பத்யத்தில் ஆசை கொண்டார். அரசனிடம் வந்து ஒரு மகளை கன்யா தானமாகத் தரும்படி வேண்டினார். அரசன் அந்த இக்கட்டான நிலையை சமாளிக்க, ‘ப்ரும்மன்! சுயம்வரத்தில் ஐம்பது பெண்களில் உங்களை விரும்பும் ஒருவளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்’ என்று சொல்லி விட்டார். தன் பெண்கள் தவம் செய்து வற்றிய உடலுடன், நரைத்த மயிரும் காணவே அழகில்லாத அந்த தபஸ்வியை விரும்ப மாட்டார்கள் என்பதால் இந்த ஏற்பாடு செய்தான். ,முனிவரும் காவலர்கள் அழைத்துச் செல்ல அந்த:புரத்தில் ப்ரவேசித்தார். மனதினுள் வேண்டிக் கொண்டார். என்னை மணக்க சம்மதித்த பெண்ணை தேவ மகளிர் போல காப்பேன் என.
அந்த:புரம் அழகிலும் ஆடம்பரத்திலும் கண்களைக் கவர்ந்தது. அந்த எளிய தபஸ்வியை ஐம்பது பெண்களும் ஏற்றுக் கொண்டனர். பெண்களிடையே கலஹம் கூட தோன்றியது. யார் முதல் என்பதில். அந்த ஏராளமான வேத சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தவர், தன் தவ வலிமையால் வீடுகளும், பலவிதமான உபவனங்கள், தெள்ளிய நீரை உடைய குளங்கள், சௌகந்தம் நிறைந்த வனப் ப்ரதேசங்கள் என்றும், விலையுயர்ந்த சயனாசனங்கள், ஆடைகள், அலங்கார வஸ்துக்கள், நீராடவும், மேல் பூச்சுக்குமான வாசனை திரவியங்களும், என்று அவர்கள் விரும்பக் கூடிய பல பொருட்களுடனும் ரமித்து இருந்தார். இவருடைய இல்லறம் நல்லறமாக விளங்கியதைக் கண்டு சப்த தீவுகளின் பதியான அரசன் வியந்தான். பல நாட்கள், அனுபவித்து மகிழ்ந்தபின் சௌபரி என்ற அந்த முனிவர், ஒரு நாள் நினைத்துப் பார்த்தார். அடடா! ஒரு மீன் தன் அறிவுக்கு இசைந்த வாழ்க்கையை வாழ்வதைப் பார்த்து நான் ஏன் ஆசைப் பட்டேன். என் தகுதி என்னவாக இருந்தது. ஒழுக்க சீலனாக, நன்நடத்தை உள்ளவனாக, தவம் செய்தவன். நதி ஜலத்தில் நீர்வாழ் ஜீவனின் வாழ்க்கையைப் பார்த்து பிறவிப் பயனாக பெற்ற அனைத்தையும் தொலைத்தேன். அதனால் தான் முமுக்ஷு எனும் மோக்ஷம் விரும்புவோர் இல்லறத்தானை அருகில் இருக்க விடக் கூடாது என்பர் போலும். ஐம்பது பெண்களை மணந்து ஐயாயிரமாக பெருக்கி, இதற்கு முடிவு ஏது? என் மதியை ஏதோ மாயை தான் மாற்றி விட்டது போலும். இப்படி நினைத்து சில காலம் விரக்தனாக வாழ்ந்த பின், வனம் சென்றார். அந்த பத்னிகளும் உடன் சென்றனர். தீவிரமாக தவம் செய்து, ஆத்ம தரிசனம் கண்டு கொண்டவராக, அக்னியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு விட்டார். மனைவிகளும் தொடர்ந்தனர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தம், சௌபரி ஆக்யானம் என்ற ஆறாவது அத்யாயம். ) ஸ்லோகங்கள்-55
அத்யாயம்-7
ஸ்ரீ சுகர் சொன்னார்: மாந்தாதாவின் புதல்வர்களுல் சிறந்தவன் அம்பரீஷன் என்பான். பாட்டனாரான யுவனாஸ்வனின் மற்றொரு மகன் யௌவனாஸ்வன் என்பவனின் மகன் ஹாரீதன், அவன் மகன் இவர்களும் மாந்தாதாவின் வம்சத்தினரே.
நாகர்களான சகோதரர்கள் நர்மதா என்பவளை புருகுத்சன் என்பவனுக்கும் மணம் செய்வித்தனர். புஜகேந்திரன் -பாம்புகளின் தலைவன் அவளை பாதாள லோகத்துக்கு அழைத்துச் சென்றான். மகா சக்தியின் அம்சமானதால், வதம் செய்ய தகுதியான சில கந்தர்வர்களை அழித்தான். நாகங்கள்-பாம்புகள் மகிழ்ந்து வரம் கொடுத்தன. சர்ப்பங்களால் பயமின்றி இருக்கலாம் என்று அபயம் அளித்தன. த்ரசத் தஸ்யு –(மாந்தாதா), பௌரகுத்சோ, அனரண்யன் என்பவனின் தனயர்கள், சர்யஸ்வன் என்பவன் அவன் மகன்,அவனிடம் அருணன் மற்றும் த்ரிபந்தனன். சத்யவ்ரதனின் மகன் த்ரிசங்கு என்று பெயர் பெற்றான். சாபத்தினால் சண்டாளன் ஆகி, கௌசிகருடைய தேஜஸால் சரீரத்துடனேயே ஸ்வர்கம் சென்றான். இன்றளவும் வானத்தில் காணலாம். தலை கீழாக தேவர்களால் தள்ளப் பட்டவனை கௌசிக முனிவர் அங்கேயே நிலையாக நிற்க வைத்து விட்டார்.
த்ரிசங்குவின் மகன் ஹரிச் சந்திரன். விஸ்வாமித்ர வசிஷ்டர் இடையில் வாக்குவாதம் காரணமாக பல காலம் யுத்தம் நடந்து கொண்டிருந்த சமயம். தனக்கு மகன் இல்லையே என்று நாரதரிடம் வருத்தத்துடன் சொன்னதும், அவர் சொல்படி, வருணனை சரணம் அடைந்து தனக்கு மகன் வேண்டும் என்று வேண்டினான். அவன் வீரனாக பிறந்தால், அவனைக் கொண்டே உனக்கு யாக பாகம் தருகிறேன் என்றான். அப்படியே என்று வருணனும் அருள, ரோஹிதன் என்ற மகன் பிறந்தான்.
மகன் பிறந்து விட்டானே, எனக்கு யாக பலியாக கொடு என்று கேட்டுக் கொண்டு வந்து விட்டான் வருணன். பல் இல்லாத பசுவை தானம் அளிக்கலாகாது, பல் முளைக்கட்டும் என்று அரசன் தட்டிக் கழித்தான். பல் வந்து விட்டதே என்று வருணன் கேட்க, பால் பல் விழுந்து விடும், புது பல் முளைக்கட்டும், எனவும், புது பல் முளைத்தவுடன் வருணன் வந்தான். விழுந்த பல் முளைத்து விட்டதே, இப்பொழுது கொடு எனவும், அரச குமாரன் ஆயுத பயிற்சி பெறட்டும் அப்பொழுதுதான் தகுதியாவான் என்று இப்படியே மகனைப் பிரிய மனமின்றி அரசன் தட்டிக் கழித்தபடியே இருந்தான். ரோஹிதன் வளர்ந்து விட்டான். தந்தையின் தர்ம சங்கடத்தை உணர்ந்து தானாகவே, தன் வில் அம்புகளுடன் அரண்யம் சென்று விட்டான்.
வருணன் அப்படியும் விடாமல் ஹரிசந்திரனின் உடலில் மகோதரம் என்ற வியாதியை அளித்து விட்டான். ரோஹிதன் தன் ராஜ்யத்துக்கு வர கிளம்பியவனை இந்திரன் தடுத்தான். பூமியில் க்ஷேத்ராடனம் போ, அதுவும் காட்டில் வசிப்பதுக்கு சமமே, புண்யமானது என்று உபதேசித்தான். இவ்வாறு அடுத்த முறை கிளம்பியவனை, மூன்றாவது, நாலாவது, ஐந்தாவது முறையும் தடுத்தான். ஆறாவது முறை ரோஹிதன் இந்திரன் வரும் முன் பார்கவரான அஜீகர்த்தர் என்பவரின் மூன்று மகன்களில் மத்ய மகனை விலை கொடுத்து வாங்கினான், யாக பலியாக வருணனுக்கு கொடுக்க. சுன:ஸேஃபன் என்ற அந்த சிறுவனை பலியாக யூபஸ்தம்பத்தில் கட்டி யாகம் ஆரம்பித்தது. புருஷ மேதம்- மனிதனை யாக பலியாக வைத்து- ஹரிசந்திரன் யாகம் செய்யலானான். அதன் பின் வருணன் மகிழ்ந்தான், அவன் மகோதரம் விலகியது என்று செய்தி.
அந்த யாகத்தில் ஹோதாவாக அத்வர்யு- யாகத்தின் முக்கிய அதிகாரி- விஸ்வாமித்திரர், ஜமதக்னி ப்ரும்மாவாக,, வசிஷ்டர் சாம கானம் செய்பவர், – இந்த சுன:ஸேபன் பற்றி மேலும் பின்னால் சொல்கிறேன், விஸ்வாமித்திரர் அந்த சிறுவனை பலியாகாமல் தடுத்து ஞானோபதேசம் செய்தார். அவர் சொன்னபடியே துதி செய்ததால் இந்திரன் மகிழ்ந்து அவனை காப்பாற்றி பொன் மயமான ரதம் பரிசாக அளித்தான். விஸ்வாமித்திரர் கருணையுடன் சிறுவனுக்கு உலகியலின் நிலையாமையை சொல்லி, நிர்வாணம் என்ற முக்தி தரும் ஞானம் அளித்து காப்பாற்றி விட்டு தன் வழி சென்றார்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தின், ஒன்பதாவது ஸ்கந்தம், ஹரிச்சந்த்ரோபாக்யானம் என்ற ஏழாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-27
அத்யாயம்-8
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஹரிதன் என்பவன் ரோஹிதனின் மகன். சம்பா என்ற நகரத்தை நிர்மாணித்தான். சுதேவன், விஜயன் என்று அவன் புதல்வர்கள். பரூகன் என்று அவன் மகன், அவனுக்கு வ்ருகன், அதன் பின் பாஹுகன். அவன் எதிரிகளால் தோற்கடிக்கப்பட்டு, ராஜ்யத்தை இழந்து மனைவிகளுடன் வனம் சென்றான். வயதான காலத்தில், அவன் கால கதியடைந்த சமயம் அவன் மனைவி உடன் கட்டை ஏற முயன்றாள். கர்பவதியான அவளை மற்றவர்கள் தடுத்தனர். அவள் கருவுற்றிருப்பதையறிந்து மற்ற மனைவிகள் பொறாமையால் விஷத்தை கொடுத்து விட்டனர். ஆனால் அந்த மகன் விஷத்துடனே பிறந்தான். गरम्-விஷம் सगर-சகரன் எனப் பட்டான். சகரன் பெரும் புகழ் பெற்ற சக்ரவர்த்தியானான். அவன் புதல்வர்கள் சாகரம் என்ற சமுத்திரத்தை உண்டாக்கினர். தன் புதல்வர்களுடன் தாள ஜங்கான், யவன, சகரர்கள், இவர்களுடன் ஹைஹயர்கள், பர்பர என்ற ப்ரஜைகளுக்கு தொல்லை கொடுத்த எதிரிகளை அழித்தான். குரு சொன்னதால், மீசை உடையவர்கள், தலை வழுக்கையானவர்கள், அல்லது தலை விரி கோலமாகவோ, பாதி கேசம் மட்டுமே உள்ளவர்களையோ வதைக்காமல் அங்கஹீனம் மட்டும் செய்தான். அரை குறையாக ஆடை அணிந்தவர்கள் நாடோடிகளாக திரிந்தவர்களையும் வதைக்காமல் விட்டான். ஔர்வ என்ற தன் குரு சொன்னபடி யாகம் செய்தான். ஈஸ்வரனான ஸ்ரீ ஹரியை தன் ஆத்மாவாக அறிந்து முழு மனதுடன் யாகத்தில் ஈடுபட்டான். யாக பசுவான குதிரையை இந்திரன் அபகரித்தான். சுமதி என அவன் மனைவியின் புதல்வர்கள் தந்தையின் ஆணைப்படி அதைத் தேடிக் கொண்டு சென்றனர். பூமியை குடைந்து கொண்டே சென்றனர். முதலில் கிழக்கில், சென்றவர்கள் கபிலரின் ஆசிரமத்தில் குதிரையைக் கண்டனர். கண் மூடி தவம் செய்து கொண்டு இருந்த முனிவரை திருடன் திருடன் என்று கத்தியபடி கொல்ல முயன்றனர். ஆறாயிரம் பேர், தங்கள் ஆயுதங்களுடன் அவரைத் தாக்கினர். அவர் மகேந்திரன் தான் அவர்கள் மனதில் அந்த தவறான எண்ணத்தை தோற்றுவித்திருந்தான் என்பதை அறிந்தார். தவம் செய்து செய்து தகித்த அவரது உடல் வெம்மையிலேயே அனைவரும் க்ஷண நேரத்தில் பஸ்மமாகினர்.
முனி கோபத்தால் தகித்தார் என்பது தவறு. அவரோ தவம் செய்வதில் புலனடக்கி, காம க்ரோதங்களை வென்று ஒரே தியானமாக சத்வ குணமே உருவாக இருந்தவர். தாமசமான ரோஷம் அவரிடம் இல்லை. உலகையே புனிதமாக்கும் ஆத்மாவாக இருந்தவர். பூமியில் தான் புழுதி. வானத்தில் ஏது?
அவரோ ஞான மயமான சாங்க்ய யோகத்தை அனுஷ்டித்தவர். கடினமான அந்த மார்கத்தை மோக்ஷம் விரும்பி சாதனைகள் செய்பவர் கூட சுலபமாக ஏற்க மாட்டார்கள். பவார்ணவம் என்ற சம்சாரக் கடல் இதைக் கடக்க உதவும் பிறவி மரணமற்ற அபவர்கம் என்பதை எண்ணி தவம் செய்பவர், வேறு விதமாக எண்ணக் கூட முடியுமா?
கேசினி என்ற மனவியிடம் பிறந்தவர்கள், அசமஞ்ஜர்கள். அவன் மகன் அம்சுமான். அவன் தன் பாட்டனாரைப் போல குணங்கள் கொண்டிருந்தான். அசமஞ்சன் அவன் பெயருக்கு ஏற்ப குணம் இல்லாத அசடனாக இருந்தான். முன் பிறவியில் யோகியாக சாதனைகள் செய்து பாதியில் விட்டவன் போல இருந்தான். உலகில் பொதுவில் மனிதர்கள் அருவருக்கும் செயல்களைச் செய்தான். சரயு நதிக் கரையில் விளையாடும் பாலகர்களை பிடித்து வீசி எறிவான். தந்தை அவனை நாடு கடத்தி விட்டார். யோக பலத்தால் அந்த பாலகர்களை காட்டி விட்டு மறைந்தான். அவன் மகன் அம்சுமான்.
அயோத்யா வாசிகள் தங்கள் பாலகர்கள் திரும்பி வந்ததால் மகிழ்ந்தனர். அம்சுமான், சகரன் சொல்லி, தன் முன்னோர்களைத் தேடிக் கொண்டு சென்றான். பஸ்மம் தென்பட்ட அடையாளங்களை தொடர்ந்து சென்று முனிவரின் ஆசிரமத்தை அடைந்தான். அங்கு அதோக்ஷஜனான கபிலரைக் கண்டு வணங்கினான்.
அம்சுமான் சொன்னான்: பரமாத்மா! எங்கள் உறவினர்கள் அறியாமல் செய்து விட்டனர். இன்றளவும் சமாதி யோகம் என்ற முறையில் தவம் செய்து கொண்டிருப்பவர் தாங்கள், இன்னமும் அதே யோக நிலையில் இருக்கிறீர்கள். வேறு யாராக இருக்க முடியும். மனம்,உடல்,புத்தி இவைகளை ஆட்டுவிப்பவனே தாங்கள். நாங்கள் இன்னமும் உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ளவில்லையே.
உங்கள் சக்தி வெளியில் தெரியாமல் மறைந்து இருக்கிறது. மாயை அவர்களை மோகத்தில் ஆழ்த்தி விட்டது. மனித பிறவி எடுத்த சாதாரண ஜீவன்கள், முக்குணங்களை ப்ரதானமாக கொண்டவர்கள், எதை அறிவார்கள்? தாமசமா, ராஜசமா, சத்வமா என்பதை?
தாங்கள் ஞானமே உருவானவர். உங்களை எந்த மாயையும், குண பேதங்களூம் மோகத்தில் ஆழ்த்த முடியாது.நான் எப்படி அறிவேன்? அந்த அளவு அறிவோ, மன பக்குவமோ எனக்கு இல்லையே. மிகவும் அமைதியான பற்றுதல்கள் அறவே அற்ற, குண கர்ம,உருவங்கள் தவிர இது தான் என பெயரிட்டு அழைக்க முடியாத சத்-அசத் என்ற வரையறைக்குள்ளும் அடங்காதவர், ஞான உபதேசத்துக்காகவே எடுத்த சரீரம், உங்களை நாங்கள் வணங்குகிறோம், தாங்களே பரம புருஷன், புராணன்- முன் தோன்றியவன் என்று வணங்குகிறோம்.
பகவானே! நீங்கள் விளையாட்டாக இந்த உலகை ஸ்ருஷ்டி செய்தீர்கள். இங்கு ஆசைகளும், செயல்களும், புலன்களின் அனுபவங்களுமே, எங்களை கட்டியுள்ளன. இப்பொழுது உங்கள் தரிசனத்தால் அந்த மோக பாசம்- கட்டு அவிழ்ந்தது.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு பாடலாக உணர்ச்சி பொங்க அவன் பாடியதைக் கேட்ட கபில முனிவர், அம்சுமானை அனுக்ரஹித்தார்.
ஸ்ரீ பகவான்- இதோ அந்த குதிரை, அழைத்துச் செல். குழந்தாய், உன் பாட்டனாரின் குதிரை இது. இதோ இங்கு தான் உன் தந்தைமார் பஸ்மமானார்கள். கங்கை நீர் தான் இவர்களை கரையேற்றும். வேறு எதுவும் பலனளிக்காது. இதைக் கேட்டு அம்சுமான், அவரை ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, யாக பசுவான அந்த குதிரையை மீட்டு வந்து தர, சகரன் ஆரம்பித்து, நின்று போன யாகத்தையும் முடித்தான். அம்சுமானை ராஜ்யத்தில் அமர்த்தி விட்டு தான் குரு ஔர்வ என்பவரின் வழி காட்டலில் நல்ல கதியடைந்தான்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தம், சகரோபாக்யானம் என்ற எட்டாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-31
அத்யாயம்-9
ஸ்ரீ சுகர் சொன்னார்: அம்சுமானும் கங்கையை கொண்டு வர தவம் செய்ய ஆரம்பித்தான். பல காலம் சென்ற பின்னும் எதுவும் நடக்கவில்லை. அவன் காலமும் முடிந்தது. அவன் மகன் திலீபன் அந்த செயலைத் தானும் தொடர்ந்து, தவம் செய்து கங்கையை வேண்டினான். அவனாலும் கங்கையை கொண்டு வர முடியவில்லை. கால கதி அடைந்தான். அதன் பின் பகீரதன் அரசனானான். இதே நினைவாக பெரும் தவம் செய்தான். அவனுக்கு கங்கா தேவி ப்ரசன்னமானாள். வரம் தர வந்திருக்கிறேன், என்ன வரமோ கேள் எனவும், தலை வணங்கி தன் விருப்பத்தை தெரிவித்தான். அவள் சொன்னாள்: என் வேகத்தை யார் தாங்குவார்கள். வேகமாக நான் பூமியில் விழுந்தால், அதை பூமி தாங்க மாட்டாள். அவளைத் துளைத்துக் கொண்டு நான் ரசாதளம் சென்று விடுவேனே என்றாள். அது தவிர நான் பூமியில் வந்தால் ஜனங்கள் என்னிடத்தில் தங்கள் பாபங்களை கரைக்க வருவார்கள். அந்த பாபத்தை அந்த சுமையை நான் எங்கு கரைப்பேன், ராஜன்! அதற்கும் ஒரு வழி கண்டு பிடி என்றாள்.
பகீரதன் சொன்னான்: நியாயமாக உள்ள சாதுக்கள் , சாந்தமாக, ப்ரும்ம வழியில் செல்பவர்கள் லோக பாவனர்கள் எனப்படுவர். அவர்கள் உன்னிடம் சேரும் பாபங்களை அகற்றி உன்னை தூய்மையாக்கி விடுவார்கள். பகவான் ஸ்ரீ ருத்ரனை வேண்டிக் கொள்கிறேன். அவர் உன் வேகத்தைத் தாங்குவார் என்றான். உடல் படைத்தவர்களின் ஆத்மானவர், அவர் தானே இந்த உலகத்தை, நூல்களை துணியாக்கும் தறி போல ஊடும் பாவுமாக தயாரிக்கிறார்.
இவ்வாறு சொல்லி அந்த அரசன், ஸ்ரீ ருத்ர தேவனை குறித்து தவம் செய்யலானான். அல்ப சந்தோஷி என்று பெயர் பெற்ற அவர் வெகு சீக்கிரமே அருள் பாலித்தார். நான் தாங்குகிறேன் என்ற சொல்லி, ஸ்ரீ விஷ்ணுவின் பாதத்தில் பெருகிய கங்கையைத் தாங்கினார். பகீரதனும் தன் முன்னோர்கள் பஸ்மமாகிக் கிடந்த இடத்துக்குச் சென்றான். வாயு வேகத்தில் ரதத்தில் செல்பவனை அதே வேகத்தில் கங்கை பின் தொடர்ந்தாள். போகும் இடங்களையெல்லாம் புனிதமாக்கியபடி, சகர புத்திரர்கள் எரிந்து சாம்பலாக கிடந்த இடத்தை நனைத்தாள். அந்த ஜல ஸ்பர்சம் மட்டுமே அவர்களை உடல் நலம் பெறச் செய்தது. அவர்களும் சுவர்கம் சென்றனர். கங்கா தேவியை சிரத்தையாக பூஜிப்பவர் என்ன தான் அடைய மாட்டார்கள்.
இதில் ஆச்சர்யம் எதுவுமில்லை. சுவர்க லோக நதியாக பகவானின் காலில் இருந்து ப்ரவகித்து சுவர்கத்தை வளமாக்கியவள், உலகில் பவ சாகரம் என்பதை கடக்க உதவுவாள். அவளிடம் தூய்மையான உள்ளத்துடன் ஸ்ரத்தையுடன் பூஜிக்கும் சிறந்த அறிஞர்களான முனிவர்கள், முக்குணங்களையும் கடப்பர். சிரம சாத்யமானது எனும் சாதனைகளைச் செய்து சீக்கிரமே தன்னையறிந்து இறைவனடி சேருவார்.
பகீரதனுக்கு நாபன் பிறந்ததாக கேள்வி. அவன் காலத்தில் சிந்து த்வீபம் என்று அழைக்கப் பட்ட இந்த தேசம் விரிவடைந்து பல ஆயிரம் மடங்கு விஸ்தீர்ணம் பெற்றது. ருது பர்ணன் என்பவன் நள ராஜாவின் சகா. நளன் அக்னி தேவனிடம் அஸ்வ வித்தை என்பதை கற்று அதில் தேர்ச்சி பெற்றிருந்தான். அக்ஷ ஹ்ருதயம் என்பதையும் அக்னி தேவன் கொடுத்தார். சர்வ காமன் என்பவன் அவன் மகன். அதன் பின் சுதாஸன், அவன் மகனின் மனைவி மதயந்தி. அவன் அரசனானான். அவன் கல்மஷாங்க்ரி – கறுத்த காலுடையவன்- என்று பெயர் பெற்றான் என்று சிலர் சொல்வர். வசிஷ்ட சாபத்தினால் ராக்ஷசனாக புத்ர பாக்யம் பெறாமலே தன் வினைப் பயனை அனுபவித்தான்.
அரசன் கேட்டான்: ஏன் என்ன காரணம்? குரு சாபம் பெறும்படி சௌதாசனின் மகன் என்ன செய்தான்? அதைச் சொல்லுங்கள். தெரிந்து கொள்ள விரும்புகிறேன், என்றான்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: சௌதாசன் வேட்டையாடச் சென்றவன் தவறுதலாக ஒரு ராக்ஷஸனை வதைத்து விட்டான். அவனுடன் இருந்த ராக்ஷஸனை அவர் சகோதரன் என்பதால் தோன்றிய பரிவு காரணமாக உயிருடன் விட்டு விட்டான். அவனோ அதைக் க்ரோதமாக மனதில் வைத்துக் கொண்டு சமையற்காரனாக சௌதாசனிடமே வந்து சேர்ந்தான். ஒரு சமயம் குரு வசிஷ்டருக்கு போஜனம் செய்து வைக்க அவன் செய்த சமையலில் நர மாமிசத்தைக் கலந்து விட்டான். பரிஷேசனம் செய்யும் முன், இலையைப் பார்த்த பகவான் வசிஷ்டர், அதைக் கண்டு கொண்டார். அரசன் தனக்கு உண்ணத் தகாத உணவை படைத்து விட்டதாக கோபித்து ராக்ஷஸனாக ஆகும்படி அரசனை சபித்து விட்டார். சௌதாஸன் எப்படி இந்த தவறு நேர்ந்தது என்பதை ஆராய்ந்து பார்த்தவுடன், அனாவசியமாக என்னை ஏன் சபிக்க வேண்டும் என்று ப்ரதி சாபம் கொடுக்க ஜலத்தைக் கையில் எடுத்தான், அது தவறு, குருவுக்கு சாபம் கொடுப்பதாவது, அது அதர்மம் என்று அவன் மனைவி மதயந்தி அதைத் தடுத்தாள். அந்த ஜலம் அவன் காலில் விழுந்தது. அதன் பலனாக கால்கள் கருகின.
திசைகள், வானம், பூமி அனைத்தையும் பார்த்து தான் உயிருடன் ராக்ஷஸனாக இருப்பதையறிந்தான். ஒரு சமயம் வனத்தில் காட்டுத் தம்பதிகளைக் கண்டான். பசிக்கிறது என்று அந்தணனனை அபகரித்துக் கொண்டான்.
அந்த அந்தணனின் பத்னி, அவனைப் பார்த்து, ராக்ஷஸன் அல்ல நீ, இக்ஷ்வாகு அரசன், மகா ரதி என்று பெயர் பெற்றவன், ஏன் என் பதியை அபகரித்து என்னை நிராதரவாக ஆக்க நினைக்கிறாய். இளம் தம்பதிகள் நாங்கள், இன்னமும் எங்களுக்கு சந்ததி இல்லை, எனக்கு மகன் வேண்டும் என் பதியை திருப்பித் தா என்றாள். ராஜன்! இந்த தேகம் தான் வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்றத் தேவை. அதை வதம் செய்தால் எல்லா விதமான அர்த்த காமங்களையும் அழித்தவனாக ஆவாய். இந்த ப்ராம்மணன் வித்வான், தவசீலன். நல்ல குணவான். ப்ரும்மனை ஆராதித்து மகா புருஷனை சர்வ பூதாத்ம பாவத்துடன் வணங்கி வந்தவன். தன் குணத்தால் அனைத்து உயிரினங்களிலும் அந்தராத்மாவாக இருக்கும் பகவானைக் கண்டு கொண்டவர். இந்த ப்ரும்ம ரிஷிகளிலும் சிறந்தவரான இவரைக் கொன்று, விபோ! மதயந்தியின் பதி நீ ,தர்மம் அறிந்தவன் என்று புகழ் பெற்றிருந்தவன் எப்படி விமோசனம் பெறுவாய். தந்தையே தனயனைக் கொல்வது போல அல்லவா இது.
எந்த விதமான பாபமும் அண்டாதவன். ப்ரும்மவாதி- வேத சாஸ்திரங்களை அறிந்தவன் சாது இவர். உனக்கு பசிக்கிறது, அதனால் உணவு தேவை என்றால் என்னை உண்பாயாக. பரம்பரையாக ப்ரும்ம வாதிகளாக இருந்த வம்சத்தில் பிறந்த இவரைக் கொன்று நீ என்ன சுகம் பேறு பெறுவாய். இவரை விட்டு தனியாக நான் வாழவும் வழியில்லை. நானும் உடன் மரிப்பேன் என்று இவ்வாறு மிகுந்த தீனமாக அந்த மனைவி அழுத போதும் பசித்த புலி மிருகத்தை அடிப்பது போல சௌதாஸன் அந்த ப்ரும்ம வாதியான அந்தணனை விழுங்கி விட்டான். ப்ரும்ம சாபம் தான் காரணம்.
அந்தணனின் மனைவி திகைத்தாள். கோபத்துடன் நரனை விழுங்கும் அதமனா நீ, என்று திட்டியதோடு சபித்தாள். என் கணவனை கொன்று விட்டாய். அவரிடம் நான் என் குழந்தைகளைப் பெற விரும்பி ஆவலுடன் இருந்தேன். இதே காரணமாக, காமத்துடன் பதியை நேசித்த என்னை பரிதவிக்க விட்டு விட்டாயே, நீயும் இதே போல பரிதவிப்பாய். அதனாலேயே உன் மரணமும் நிகழும். மூடனே, என்று மித்ர சஹன் என்ற சௌதாஸனை சபித்து விட்டு, தன் பதியின் அஸ்திகளை பொறுக்கி அக்னியில் போட்டு அந்த சிதையிலேயே தானும் விழுந்து மரித்தாள்.
பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின் சாப விமோசனம் பெற்று சுய உருவை அடைந்த சௌதாஸன், மனைவியை நெருங்கிய பொழுது அவள் இந்த சாபத்தை நினைவூட்டி, அவன் ஆசைக்கு இசைய மறுத்தாள். அதன் பின் பெண் சுகம் என்பதே அறவே இல்லாமல், தன் வினை காரணமாகவே சந்ததியும் இல்லாமல், போகவே அவன் அனுமதித்து வசிஷ்டர் மூலம் மதயந்திக்கு ப்ரஜை உண்டாயிற்று. அவள் ஏழு மடங்கு கர்ப காலத்தை தாங்கி, பெற்றதால் கல் வயிறு உடையவள் என்றும், அவள் மகன் அஸ்மகன்- கல்லில் பிறந்தவன் என்றும் அழைக்கப் பட்டனர்.
அஸ்மகன் மகன் மூலகன், அவன் அந்த: புரத்தில் பெண்களால் வளர்க்கப் பட்டான். அதனால் நாரீ கவசன் என பெயர் பெற்றான். க்ஷத்திரியனுக்குரிய குணங்கள் இல்லாமல் வளர்ந்தான். (பரசு ராமர் நி:க்ஷத்திரிய -அரச குலங்களை அழித்து வந்த சமயம் ஆதலால்). அவனுக்குப் பின் தசரதன், அவன் மகன் ஏடவித்,அதன் பின் ராஜாவான விஸ்வ சஹன், அவனுக்கு பிறந்த கட்வாங்கன் சக்ரவர்த்தியானான். அவன் தேவர்கள் வேண்டிக் கொண்டதால் தைத்யர்களுடன் போரிட்டு அவர்களை வதைத்தான். யுத்தத்தில் தோல்வியே காணாதவனாக இருந்தவன், நாளடைவில் விரக்தியடைந்தான். முஹூர்த நேரமே மனிதனின் வாழ்வு என்ற எண்ணத்துடன் திரும்பி தன் ராஜ்யத்துக்கே வந்தான். ப்ரும்ம குலத்தின் ப்ராணன்- இயல்பான ஞானமும் இல்லை, குல தெய்வங்களின் ஆசி இல்லாததால் சந்ததியும் இல்லை, செல்வமும் இல்லை, பூமியும் இல்லை, மனைவிகளும் அதிக பிரியத்துடன் இல்லை, நினைவில் கொள்ளும் படியான இள வயது அனுபவங்களும் இல்லை. ஒரு பொழுதும் அதர்மத்தில் என் மனம் சென்றதில்லை. உத்தம ஸ்லோகனான பகவானைத் தவிர மற்ற வஸ்து எதுவும் இல்லை. தேவர்கள் எனக்கு காம வரம் தந்தனர். அதையும் வேண்டேன். பூத பாவனன் பாவமே என் மனதில் உள்ளது. தேவர்களுக்கு இது போன்ற இந்திரிய சுகங்கள் கிடையாது. தன் மனதில் பிரியம் என்ற உணர்வே இல்லாதவர்கள். அவர்கள் என்ன வரம் கொடுப்பது?
ஆகையால், ஈஸ்வரனையே பஜிக்கிறேன். தன் மாயையால் தோற்றுவித்த பந்தங்கள், குணங்கள், கந்தர்வ புரம் போன்றவைகள். எதுவுமே வேண்டாம். என் இயல்பான குணம் விஸ்வ கர்த்தாவான பகவானை உள்ளூற அறிந்து கொண்டு விட்டேன். அவரையே சரணடைகிறேன். எந்த பகவானை வாசுதேவன் என்று சாதுக்கள் நம்பி வணங்குகிறார்களோ, சூக்ஷ்மானது. அசூன்யம், ஸுன்யம் போல காணக் கிடைக்காதது, அந்த ப்ரும்ம ரூபத்தை, அக்ஞானத்தை விலக்கி, மாற்று சிந்தனையின்றி அவரையே சரணடைகிறேன்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தம், ஸுர்ய வம்ச அனுவர்ணனே என்ற ஒன்பதாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-41
அத்யாயம்-10
ஸ்ரீ சுகர் சொன்னார்: கட்வாங்கனுக்கு தீர பாஹு எனப் புகழ் பெற்ற ரகு என்பவன் மகன், ரகுவின் மகன் ப்ருதுஸ்ரவா: என்பவன். அவனுக்கு அஜன் பிறந்தான். மகா ராஜாவாக இருந்தான். அவனுக்கு தசரத ராஜா, அதன் பின் பகவான் தானே ப்ரும்ம மயமான ஸ்ரீ ஹரியின் அம்சங்களாக நான்கு மகன்களாக அவதாரம் செய்தார். தேவர்கள் பிரார்த்தித்தனர் என்பதால் எடுத்த அவதாரம். ராம, லக்ஷ்மண, பரத , சத்ருக்ன என்ற பெயர்கள்.
|| ஜானகீ காந்த ஸ்மரணம் ஜய ஜய ராம ராம ||
அவர் சரித்திரத்தை தத்வ தரிசிகளான ரிஷிகள் பாடியிருக்கிறார்கள். சீதா பதியின் வரலாற்றை நீயும் கேட்டிருப்பாய். குருவான தந்தை சொன்னதால் ராஜ்யத்தை தியாகம் செய்தவர். பத்ம பாதா- தாமரை மலர் போன்ற மென்மையான பாதங்களையுடைய சீதா தேவி அவனை பின் தொடர்ந்தாள். கை பட்டாலே வாடி விடுமோ எனும் அளவு மென்மையான பாதங்கள், அவளுடன் வனத்துக்கு வனம் அலைந்தார். சூர்பணகையின் வரவும், அவளை விரூபமாக்கியதும், பிரியமான மனைவியை விட்டுப் பிரிந்த துக்கத்துடன் தேடிச் சென்ற சமயம் வானரத் தலைவன், சுக்ரீவன் மற்றும் தன் சகோதரனுடன் வசித்தார். புருவத்தை நெரித்து ரோஷம் தெரிய சமுத்திரத்தை தாண்ட சேது கட்டினவர், துஷ்டர்களை அடக்கி லங்கையை எரித்தவர், அந்த கோஸலேந்திரன் நம்மை காக்கட்டும்.
விஸ்வாமித்திரரின் யாக சாலை. மாரீசன் மற்றும் அவன் உடன் வந்த அரக்கர்களைக் கண்டு பயங்கர நிசா சரர்கள் என்று உலகத்தினர் பயந்தனர். அவர்கள் நிசா சரர்கள்- இரவில் சஞ்சரிக்கும் அரக்கர்கள் – யாகத்துக்கு இடையூறு செய்ய வந்தனர். அவர்களை, லக்ஷ்மணன் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அழித்து முனிவரின் யாகத்தை நிறைவாக செய்ய உதவினார்.
சீதா ஸ்வயம்வர மண்டபத்தில், அவர், உலகத்து வீரர்கள் அனைவரும் கூடியிருந்த சபையில், உக்ரமான மகேஸ்வரனுடைய வில்லை தூக்கி நிறுத்தினார். அதை சபைக்கு கொண்டு வரவே முன்னூறு பேர் வேண்டியிருந்தது. சிறப்பாக பூஜித்து அலங்கரிக்கப் பட்ட பெரிய வில். இளம் யானை கரும்பை தூக்குவது போன்ற லாகவத்துடன் தூக்கி வளைக்கவும், அது நடுவில் உடைந்து விழுந்தது.
குண, சீல, வயது, அங்க லாவண்யம் இவைகளுடன் அனுரூபமாக இருந்த சீதா தேவியை, சாக்ஷாத் லக்ஷ்மி தேவியை அடைந்தார். ஸ்ரீ தேவியே, முன் தன் மார்பில் ஏந்தி இருந்தவளே அவள். ஊர் திரும்பும் வழியில் பார்கவ ராமனை சந்தித்து, அவர் கர்வத்தை அடக்கும் விதமாக அவர் வில்லை கையில் எடுத்து நாணேற்றி, அவர் காட்டிய இடத்தில் எய்தார்.
தந்தையின் சத்யத்தைக் காக்கவே, பெண் வார்த்தை என்று தள்ளாமல், அரச மகிஷியான கைகேயியின் சொல்லை மதித்து, மனைவியுடன் ராஜ்யத்தை துறந்தார். ராஜ்யம், செல்வங்கள், உடன் இருந்த அன்பர்கள், தோழர்கள், வீடு வாசல் அனைத்தையும் துறந்து வனம் சென்றார். சங்கத்தை துறந்த சாதகர்கள் எளிதாக உயிர் மூச்சை விடுவதைப் போல.
ராக்ஷஸனின் சகோதரியின் அறிவில்லாத நடத்தையால், அவளை விரூபம் செய்து விரட்ட வேண்டியிருந்தது. அவள் சொல்லைக் கேட்டு போருக்கு வந்த கர, த்ரிசிரஸ் தூஷணன் முதலிய ராக்ஷஸர்களை பந்துக்களுடன் தான் ஒருவனாக எதிர்த்தார். பதினான்கு ஆயிரம் அரக்கர்கள், கோதண்ட பாணியாக அவர்களை ஒடுக்கினார்.
சீதாவைப் பற்றி சொல்லக் கேட்ட தசக்ரீவன் மனதில் ஆசை வளர்ந்தது. அது தீயாக அவனை சூழ்ந்து சுட்டது. அடக்க மாட்டாமல், பலவிதமாக யோசித்து, தவறான எண்ணத்துடன், அத்புதமான ஒரு மானாக மாரீசன் என்ற நண்பனை அனுப்பி, அவளை மோகிக்கச் செய்து அபகரித்தான். மாரீசன் கூர்மையான ராமருடைய பாணத்தால் அடிபட்டு உயிரை விட்டான்.
ராக்ஷஸ அதமன், ஓனாய் போன்று நடுக் காட்டில், ஒருவரும் அறியாமல் வைதேஹ ராஜனின் மகளை, கடத்திச் சென்றதை அறியாமல் காட்டில் சகோதரர்கள் இருவரும் அவளைத் தேடி அலைந்தனர். இது தான் உலகியல், பெண்ணுடன் வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் எனக் காட்டவே என்பது போல.
கபந்தனை கண்டனர். தானே தன் தவற்றால் அடைந்த கோர ரூபம் அவனுடையது. அவனை வதைத்து, அவன் விருப்பம் போல தஹனம் செய்த பின், அவன் காட்டிய வழியில் வானர ராஜனைக் காணச் சென்றார்கள். கபந்தன் வானர ராஜனைப் பற்றிச் சொல்லி, அவனுக்குத் தெரியும் சீதையை யார் கொண்டு சென்றார்கள் என்பதை, அவனுடன் சக்யம் செய்து கொள் என்று அறிவுறுத்தினான். வாலியை வதைத்த பின், நாலா திசைகளிலும் சீதையின் நிலையை அறிந்து வர வானர சேனை சென்றது. தென் திசையில் சென்ற ப்லவகேந்திரன்- அனுமன் மூலம் விவரம் அறிந்து சமுத்திர கரை வந்து சேர்ந்தார்கள்.
அவருடைய ரோஷத்தைக் கண்டு சமுத்திர ராஜன் நடுங்கி விட்டான். முதலைகளும் ஆமைகளும் பயந்து அலை பாய்ந்தன. சமுந்திர ராஜன் தலை மேல் கை கூப்பியபடி ஸ்ரீ ராமனின் பாதங்களில் வணங்கினான். பகவானே! ப்ரபோ! எங்கள் அறிவுக்கு எட்டாத விஷயம் இது, ஜகதாத்மா, அந்தர்யாமியாக இருப்பவன், ஆதி புருஷன் என்பது எல்லாம் உடனடியாக புத்தியில் உறைப்பதில்லை. சத்வ குணங்களுடன் தேவர்கள், ராஜஸ குணத்துடன் பூமியில் அரசர்கள், உங்கள் மன்யு-கோபமே பூத பதியான மகேஸ்வரன் என்ற வரை அறிவோம். குணங்களின் தலைவன் தாங்கள். தங்கள் விருப்பப்படி செல்லுங்கள். விஸ்ரவஸ புத்திரன்- ராவணனை போரில் முறியடியுங்கள், உலகத்திற்கே ராவணனாக – உபத்ரவம் செய்பவனாக இருப்பவன் அவனை வென்று உங்கள் மனைவியை திரும்ப பெறுங்கள். அதற்கு வசதியாக, சேதுவை கட்டிக் கொள்ளுங்கள். அது என்றும் நிலைத்து நிற்கட்டும். திக்விஜயம் செய்பவர்களுக்கு அது வரப் பிரசாதமாக இருக்கும்.
அதன் பின் பலவிதமான கற்களைக் கொண்டு, மலைகளில் இருந்து கொண்டு வந்து வானர ராஜனின் ஆணைப்படி அனைத்து வானரங்களும் கைகளால் முடிந்த வரை கற்களைக் கொண்டுவந்து சேர்த்தன. அவைகளின் நடமாட்டத்தால் பூமியே நடுங்கியது போல ஆயிற்று. சுக்ரீவன், நீலன், ஹனுமான் மற்றும் பலர் உழைத்தனர். அதன் பின் விபீஷணன் வந்து சேரவும் அவன் சரணாகதியை ஏற்று சேர்த்துக் கொண்டு, முன்பே ஒரு முறை தீக்கு இரையான லங்கையை அடைந்தார்கள்.
வானரேந்திரனின் படை வீரர்களான வானரங்கள் நகரம் முழுவதும் விஹாரங்களிலும், கோபுரங்களிலும் பயமின்றி சஞ்சரித்து, கிடைத்ததை உடைத்தும், ப்ரதான கோட்டையை அடைந்து த்வஜத்தை கீழே தள்ளி, பொற் கலசங்களை சாய்த்து, அழகிய ஸ்ருங்கார வனங்களைத் த்வம்சம் செய்தும், யானை இறங்கிய குளம் போல களேபரமாக ஆக்கி விட்டன.
ராக்ஷஸ ராஜன் அதைக் கண்டு கோபத்துடன், நிகும்பன், கும்பன், தூம்ராக்ஷன், துர்முகன், சுராந்தக , நராந்தகன் முதலிய வீரர்களையும், ப்ரஹஸ்த புத்திரன்,அதிகாயன், விகம்பன் முதலியவர்களையும், தன் பரிவாரம் முழுவதுமே ஒவ்வொருவராக எதிர்த்து நிற்க அனுப்பி, பலனில்லாமல் கும்பகர்ணனை அணுகினான்.
அவனும், யாது தானர்களுக்கே உரிதான பயங்கர ஆயுதங்கள், ப்ராஸம், தோமரம், சக்தி, இஷ்டி, சர-அம்புகள், தோமர, வாள், துர்கம் என்ற ஆயுதம் இவைகளுடன் போர்களத்துக்கு வந்தான். சுக்ரீவனும், லக்ஷ்மணனும், மருத் சுதனான ஹனுமானும், கந்த மாதனன், நீலன், அங்கதன், ருக்ஷ பதி- கரடி ராஜன், பனஸன், இவர்கள் அவனுடன் மோதினர். அவர்கள் ரகு பதியின் சேனைத் தலைவர்கள். த்வந்த்வம்- நேரடியாக இருவர் மோதுவது, படை வீரர்கள் எதிர் தர்ப்பு படை வீரர்களுடன், யானை, குதிரை, ரதங்கள் இவைகளிலும் கால் நடையாக வந்த வீரர்களுடன், வானரங்கள் தங்கள் கைகளில் மரங்கள், மலையிலிருந்து கொண்டுவந்த கற்கள்,பெரும் பாறைகள், கதை, வில், இவைகளைக் கொண்டு, திருப்பி அடித்தனர். சீதையை கவர்ந்து வந்த செயலாலேயே ராவண படையினரின் மங்களமே அழிந்து விட்டது போல இருந்தது.
ராக்ஷஸ ராஜன், தன் பலம் அனைத்தும் இழந்த பின்னும் ரோஷம் அடங்காமல், ரதத்தில் ஏறி ஸ்ரீ ராமனை முற்றுகையிட்டான். மாதலி கொண்டு வந்த தன் ஸுரியனுக்கு ஒப்பான ப்ரகாசமுடைய ரதத்தில் ஏறி கூர்மையான அஸ்திரங்களை பிரயோகித்தார். அவனை நேருக்கு நேர் பார்த்து ராமர் சொன்னார்: புருஷாதமா! காட்டில் திரியும் சிறு நாய் போல ஒளிந்திருந்து வந்து என் மனைவியை அபகரித்தாய். வெட்கமின்றி செய்த செயல். மா பெரும் வீரன், மகா ராஜா என்ற உன் பதவிக்கும், தகுதிக்கும் அந்த செயல் ஏற்புடையதே அல்ல. அருவருக்கத் தகுந்த அந்த செயலுக்குத் தான் நான் பதில் தரப் போகிறேன். காலனே போல வந்துள்ள என்னை மீற முடியாத என் வீர சாகசங்களைப் பார், என்றார். சொன்ன வண்ணமே தன் வில்லில் உயர்ந்த பாணங்களை வைத்து வஜ்ரம் போல அவன் மேல் விழும்படி இடை விடாது அடித்தார். ராவணனுடைய ஹ்ருதயத்தை அவை பிளந்தன. ராவண ராஜா ரத்தம் சொட்ட பத்து முகங்களுடனும், விமானத்திலிருந்து விழுந்தான். ஹா ஹா என்ற ஓலம் எழுந்தது. சுக்ருதி- நல் வினைகள் செய்தவன் போல உயிரிழந்தான்.
யாது தானர்களின் மனைவிகள் ஆயிரக் கணக்கானவர்கள் லங்கையிலிருந்து வந்தனர். மந்தோதரியுடன் அனைவருமே ஓலமிட்டு அழுதனர். லக்ஷ்மணனில் பாணத்தால் அடிபட்டு உயிரிழந்த தன் பந்துக்கள் என்று சிலர், அந்த உடல்களைத் தேடி அடையாளம் கண்டு ஓவென்று அழுதனர். ஹா ஹதாஸ்ம என்று ராவண பத்னிகள் லோக ராவணனாக இருந்தாய், வீரனே, நீ இல்லாமல் இந்த லங்கையில் எப்படி வாழ்வோம், மகானாக, உனக்கு என்ன குறை இருந்தது, அனாவசியமாக சீதையிடம் மையல் கொள்ள, அப்படி ஒரு காம வசம் ஆனாய். அதன் பலன் தான். சீதையின் காரணமாகவே இந்த நிலைக்குத் தள்ளப் பட்டாய். இதோ பார், இந்த லங்கையே இப்பொழுது தலைவன் இன்றி அமங்களமான கோலம் கொண்டுள்ளது. குல நந்தனா! உன் வீரர்களின் உடல்கள் கழுகுகளுக்கு ஆகாரமாக ஆகி விட்டன பார், அவர்கள் ஆத்மாவுக்கு நரகம் தான்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: கோஸலேந்திரன் அனுமதி அளித்தவுடன் விபீஷணன் தந்தைக்கு செய்வது போல அண்ணனான ராவண ராஜாவுக்கு அபர காரியங்களைச் செய்தான். அதன் பின் அசோக வனிகா என்ற ஆஸ்ரமத்தில், இளைத்து சிம்சுபா மரத்தடியில் வீற்றிருந்த சீதையை கண்டார். பிரியமான மனைவியைக் கண்டு மிகவும் வருந்தினார். தன்னைக் கண்டதும் மகிழ்ந்து முகம் மலர இருந்தவளைக் கண்டார். அவளை விமானத்தில் ஏற்றிக் கொண்டு, சகோதரர்களுடன், ஹனுமன் முதலானாரோடு கிளம்பினார். விபீஷணனுக்கு லங்கா ராஜ்யத்தைக் கொடுத்து, லங்கையுடன் கல்பாந்தம் ஆயுள், இவற்றையும் கொடுத்தார்.
தன் விரதம் முடிந்த நிலையில் நகரத்துக்குத் திரும்பினார். ஜனங்கள், பூக்களை வாரியிறைத்து கோலாஹலமாக வரவேற்றனர். சத த்ருதி முதலானவர்கள் முன்னின்று பாராட்டி பாடல்களாக பாடுவதைக் கேட்டபடி, வல்கலை தரித்து விரதம் இருந்த பரதனைக் காணச் சென்றார். அவன் புல்லைப் பரப்பி அதன் மேல் அமர்ந்தவனாக, உடலால் தீனமாக இருந்த போதிலும், மந்திரிகளை அழைத்து, ஊர் ப்ரமுகர்களையும் வரவழைத்து, ஸ்ரீ ராமர் வந்து விட்டார் என்று, பாதுகைகளை சிரசில் வைத்தபடி எதிர் கொண்டழைக்க வந்தான். நந்தி க்ராமத்திலிருந்து கீதங்கள் வாத்யங்கள், முழங்க, ப்ரும்ம கோஷமும், அடுத்து அடுத்து பாடிக் கொண்டே வேத விற்பன்னர்கள் வர, சுவர்ண கொடிகள், பதாகைகள் இவைகளுடன் விசித்ரமான அலங்காரங்களுடன் ரதங்களையும் உயர் ஜாதி குதிரைகளைப் பூட்டி, பொன்நிற சீருடைகள் அணிந்த காவலர்கள், போர் வீர்கள் அணி வகுக்க, நடந்து வந்த அணுக்கத் தொண்டர்கள், மிக உயர்ந்த தின்பண்டங்கள், நிறைய எடுத்துக் கொண்டு, எதிர் கொள்ள வந்தவன் அவரைக் கண்டதும் பாதங்களில் விழுந்தான்.
கண்களில் நீர் மல்க, பாதுகையை முன் வைத்து அவர் அதில் ஏறிய பின், இறுக அணைத்து வெகு நேரம் தோளோடு தோளாக, கண்ணீராலேயே நீராட்டுவான் போல இருந்தான். அதன் பின், லக்ஷ்மணனை வணங்கினான். சீதா தேவியையும் மற்ற வேத விற்பன்னர்களான அந்தணர்களையும், தகுதி வாய்ந்த பெரியார்களையும் வணங்கினான். அங்கு கூடியிருந்த அயோத்யா வாசிகள் பரதனை வணங்கினர்.
உத்தர கோசலை நகரத்து மக்களும் தங்கள் அரசன் திரும்பி வந்ததைக் கொண்டாடினார்கள். ஆடியும் பாடியும் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். பாதுகை அதுவரை பரதன் தன் இடத்தில் அடைக்கலமாக வைத்து சாமர, வ்யஜனங்களோடு அரசனுக்குரிய மரியாதையுடன் நடத்தப் பட்டு வந்திருந்தது. அதை சத்ர சாமர, மற்றும் வெண் குடையுடன் சுக்ரீவனும், விபீஷணனும், அனுமானுமாக ஏந்தி வந்தனர். வில்லையும் அம்புறாதூணியையும் சத்ருக்னனும், தீர்த்த கலசத்தை சீதையும் எடுத்துக் கொண்டனர். அங்கதன் பொன்னாலான பிடியுடன், தோல் உறையில் இருந்த வாளை எடுத்துக் கொண்டு பின் தொடர, கைகளில் பூக்கள் நிறைந்த தாளங்கலோடு, பெண்களும் வந்திகள் எனும் பாடகர்களும் தொடர்ந்தனர். க்ரஹங்கள் சூழ சந்திரன் உலா வருவது போல பகவான் வந்தார். சகோதரர்கள் நால்வருமாக உத்சாகமாக நகருள் நுழைந்தனர். வைதேஹியும் லக்ஷ்மணனும் உடன் வர, ஸ்ரீ ராமன் தாய் மார்களை வணங்கினார். அவர்களும் தங்கள் தங்கள் மகன் களை ஆசீர்வதித்து அணைத்து மகிழ்ந்தனர்.
ஜடைகளைக் களைந்து விதி முறைகளின் படி குல குரு, மூத்தவர்கள், ரிஷிகள் அனைவருமாக நான்கு திசையிலிருந்தும் கடல் ஜலம் கொண்டு வந்து அபிஷேகம் செய்தனர். தலை முழுகி சுத்தமான ஆடைகளை அணிந்து, அரசனுக்குரிய அலங்காரங்களுடன் சிம்ஹாஸனத்தில் சீதையுடனும் சகோதர்களுடனும் அமர்ந்தார். தன் இளையவன் மரியாதையுடன் வணங்கி, அதுவரை பாதுகாத்து வைத்திருந்த ராஜ்ய பாரத்தை, தமையனிடம் கொடுத்த விவரம் அறிந்த அனைவரும் மிகவும் மகிழ்த்து கொண்டாடினர்.
ஸ்ரீ ராமனுடைய ஆட்சியில் ப்ரஜைகள் தர்மத்தை அறிந்து அனுசரிப்பவர்களாக இருந்தனர். வர்ணாஸ்ரமத்தை அதன் குறிகோள்களுடன் அறிந்து கை பிடித்தனர். தந்தையாக இருந்து ராமன் ராஜ்யத்து ப்ரஜைகளை பாலனம் செய்தான், ப்ரஜைகளும் தந்தையாகவே அவரை உணர்ந்தனர். த்ரேதா யுகம் போலவே காலம் அமைதியாகச் சென்றது. தர்மவானான ராஜா ராமன். பிரஜைகளும் சுகமாக இருந்தனர். வனங்கள், நதிகள், மலைகள், மழை பொழிவது, தீவுகள் , பெருங்கடல்கள், அணைத்தும் வேண்டியதைத் தருபவைகளாக இருந்தன. பரத வழித் தோன்றலே! பரீக்ஷித்!, ராம ராஜ்யத்தில், உடல் வியாதிகள், மனோ வியாதிகள் தென்படவில்லை. முதுமை நரை, என்று மனிதர்கள் துக்கமோ, பயமோ உடல் வருத்தமோ அனுபவிக்கவில்லை. ம்ருத்யுவும், எதிர்பாராத இடத்தில், அகாலமாக யாரையும் அண்டவில்லை. ஏக பத்னி-ஒரே மனைவி என்ற கொள்கையுடன் வாழ்ந்தனர். ராஜ ரிஷியாக இருந்த அரசனைப் போலவே ஒழுக்கத்தில் சிறந்தவர்கள். ஸ்வ தர்மம், இல்லற தர்மம் என்பதை தாங்களே அறிந்து கொண்டவர்களாக இருந்தனர்.
சீதா தன் அன்பினால், பணிவிடைகளால், தன் சீலம், பரிவு, அடக்கம், பயம், வெட்கம், இவைகளுடன், கணவனின் குறிப்பறிந்து ராமனின் மனம் கோணாமல் நடந்து கொண்டு அவன் அன்புக்கு பாத்திரமானாள்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தம், ராம சரிதம் என்ற பத்தாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்-56
அத்யாயம்-11
ஸ்ரீ சுகர் சொன்னார்: பகவான் தானே ஆத்மாவாக இருந்தும், தன்னை ராமன் எனும் மனிதனாகக் கருதியே சர்வ தேவ மயமான தேவனை தன் குரு ஜனங்களுடன் யாகங்கள் செய்தார். யாகத்தில் ஹோத்ரு- என்ற முதன்மையான குருவிற்கு கிழக்கு திசையையும், ப்ரும்மாவாக அமர்ந்தவருக்கு தென் திசையையும், அத்வர்யு என்பவருக்கு மேற்கு திசையையும், சாம கானம் செய்தவருக்கு வடக்கு திசையையும் அளித்தான். ஆசார்யருக்கு மீதியை அளித்தார். மீதி இருந்த நிலத்தை அவருக்கு அளித்தார். அவை ஆசைகளற்ற அந்தணர்களுக்கு உரியது என எண்ணினார். ஆடை அலங்காரங்கள் என்று மீதியிருந்தவர்கள் கிடைக்கப் பெற்றனர். மகா ராணியான சீதா தன் மங்கள ஆபரணங்கள் மட்டுமே கொண்டிருந்தாள்.
அவர்கள், ப்ரும்மண்ய தேவர்கள் என பெருமை வாய்ந்த பேரறிஞர்கள், அரசனது மதிப்பை ஏற்று மற்ற பொருட்களை திருப்பி கொடுத்து விட்டனர். பகவன், புவனேஸ்வர! எங்கள் மனதில் அறியாமை எனும் இருட்டை அகற்றி உன் ப்ரகாசத்தால் ஒளி கூட்டி விட்டாய். அதுவே பெரும் பரிசு, உலகியல் பொருட்களால் நாங்கள் என்ன செய்வோம். உன்னிடமே இருக்கட்டும் என்றனர். துதிகள் செய்தனர்.
நமோ ப்ரும்மண்ய தேவாய, ராமாயாகுண்ட மேதஸே| உத்தம ஸ்லோக துர்யாய, ந்யஸ்த தண்டார்பித்தாங்க்ரயே||
ஒருசமயம், இரவில் ராஜ்யத்தில் நடப்பதை தெரிந்து கொள்ள ஊருக்குள் நடமாடிக் கொண்டிருந்தார். யாரோ தன் மனைவியைப் பற்றி பேசுவதைக் கேட்டார். ‘ துஷ்டை நீ, உன்னை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். மாற்றான் வீட்டில் இருந்திருக்கிறாய். ராமன் சீதையை ஏற்றுக் கொண்டிருப்பான், ஸ்த்ரீலோபி, அவன் ஏற்பான். நான் மாட்டேன்’
இப்படி எவ்வளவு பேர் பேசுகிறார்கள், தெரியவில்லையே என்று அவர் மனம் யோசித்தது. இது எதில் கொண்டு விடுமோ என்ற பயம் தோன்ற மனைவியைத் தியாகம் செய்தார். அவள் வால்மீகியின் ஆசிரமத்தில் வந்து சேர்ந்தாள். கருவை சுமந்தவள், யார் என்று அறியாமலே, ஆசிரமத்து பெண்கள் அவளை பாதுகாத்தனர். இரட்டையாக மகன்களை ப்ரசவித்தாள். முனிவர் அறிந்தார் அந்த சிசுக்கள் அரசனுடைய வாரிசு என்பதை. லவன், குசன் எனப் பெயரிட்டு வளர்த்தார்.
லக்ஷ்மணனுடைய புதல்வர்கள், அங்கதன், சித்ர கேது எனப்படுவர். தக்ஷன் तक्षन् , புஷ்கலன் என்று பரதனின் மற்றும் சுபாஹு, ஸ்ருத சேனன் என்று சத்ருக்னனின் புதல்வர்கள். பரதன் திக்விஜயம் செய்து பல கந்தர்வர்களை வென்றான். அந்த வெற்றியில் பெற்ற செல்வங்களைக் கொண்டுவந்து பொக்கிஷத்தில் சேர்த்தான். சத்ருக்னன் மது என்ற அரக்கனின் மகனை லவணன் என்பவனை அழித்து, மது வனம் என்ற இடத்தில் மதுரா என்ற நகரை ஸ்தாபித்தான்.
சீதை தன் புதல்வர்களை முனிவரின் பொறுப்பில் விட்டு விட்டு, ஸ்ரீ ராமரையே தியானம் செய்தவளாக பூமியினுள் நுழைந்து விட்டாள். பகவான் ராமர் அவளை மனதார நேசித்தவர், குற்றமற்றவள் என்று தெரிந்தும், கை விட்டவர், இதைக் கேட்டு அவள் குணங்களை ஸ்லாகித்து அழுகையை அடக்க மாட்டாமல் திணறினார்.
ஆண் பெண் உறவு இப்படித்தான், எங்கும் எதிலிருந்தும் அபாயம் வரலாம், பிரியமானவர்களை பிரிய நேரிடலாம், செல்வந்தர்கள் கதியே இப்படி என்றால் சாதாரண ப்ரஜைகள் என்ன செய்வர்? அதன் பின் தன் பிரிய மனவியைத் தவிர எதையும் எண்ணாமல் ப்ரும்ம சாரியாக வாழ்ந்தார். பல ஆண்டுகள், முப்பதாயிரம் ஆண்டுகள், அக்னி ஹோத்ரம் இடை விடாது செய்பவராக, தண்டகா வனத்து முட்கள் குத்திக் கிழித்த தன் பாதங்களை வணங்குபவரின் மனதில் ஆத்ம ஜோதியாக நிலைத்து நிற்பவராக ஆனார்.
தேவர்கள் வேண்டிக் கொண்டதால், அவர்கள் குறை தீர்க்க மனிதனாக அவதாரம் செய்தவர். அவரிடம் இல்லாத திறமைகளா, ராக்ஷஸனை வதம் செய்யவும், சமுத்திரத்தின் குறுக்கே அணை கட்டவும் வானர சேனையின் உதவியை நாடினார் என்பது அவருக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை. அவருடைய புகழை இன்றளவும் சபைகளில் பாடுகிறார்கள். ரிஷிகள் அதைக் கேட்பதே மனிதர்களின் பாபங்களை போக்கும் என்று சொல்கின்றனர். திக்கஜங்கள், நாகபாலன், வசுபாலன். என்பவர்களும் வந்து தங்கள் கிரீடம் அவர் பாதங்களில் பட வணங்குகிறார்கள். அப்படிப்பட்ட ரகுபதியை சரணடைவோம்.
கோசல ராஜ்ய வாசிகள், அவர் சரீரத்தை தொட்டதாலோ, அருகில் இருந்து குரலைக் கேட்டதாலோ, பின் தொடர்ந்து நடந்ததாலோ பெரும் யோகிகளுக்கு கூட கிடைக்காத நல் கதியை அடைந்தனர். மனிதர்கள் ராம சரித்திரத்தை கேட்டு மனதில் இருத்திக் கொள்வதால், தாங்களே மற்ற ஜீவன்களிடத்தில் பரிவு மிக்கவர்களாக ஆகி விடுவர். இயல்பாக கர்ம பந்தம் அவர்களை விட்டு விலகும்.
அரசன் பரீக்ஷித் கேட்டான்: பகவான் ராமனை, அவர் சகோதரர்கள் அனுசரித்து வந்தனர் என்பது சரி. ப்ரஜைகள், ஊர் ஜனங்கள் அனைவரும் ஈஸ்வரனாக எப்படி தெரிந்து கொண்டு அனுசரித்தார்கள்?
ஸ்ரீ சுகர் சொன்னார்: தன் சகோதரர்களுடன் திக்விஜயம் செய்தார். புவனேஸ்வரனான தான், புர ஜனங்களிடையில் தானே சென்றார். சென்ற இடங்களில் எல்லாம் மார்கங்களில், நீர் தெளித்து, வாசனை திரவியங்கள் தூவி, மத ஜலம் பெருக யானைகளின் அணி வகுப்புடன், ஊர் ஜனங்கள் வரவேற்றனர். தங்கள் மகிழ்ச்சியைக் காட்ட, ப்ராகார, மாளிகைகள் கோபுரங்கள், சபைகள், ஓய்வு எடுக்கும் சைத்ய க்ருஹங்கள், என்று அனைத்து இடங்களிலும் பொற்குடங்களில் நீர் வைத்துக் கொண்டு வரவேற்றனர். பதாகைகளும், பாக்கு, வாழை மரங்கள் கட்டியும், அலங்கார பட்டிகளாலும், சுபமான வாசஸ்தலங்களை அலங்கரித்து, மலர் மாலைகளும், தோரணங்களுமாக தங்கள் குதூகலத்தைக் காட்டினர்.
ஆங்காங்கு ஊர் ஜனங்கள் எதிர் கொண்டழைத்து, அர்க்யம் முதலிய சத்காரங்களை ஏந்தியபடி, வணங்கியபடி அவர் ஆசிகளைப் பெற்றனர். பல நாட்களுக்குப் பிறகு கண்டதால், தங்கள் அரசனை வீடுகளிலிருந்து வெளி வந்து பெண்களும் ஆண்களும், சிறுவர் சிறுமிகளும், வணங்கினர். பலர் வீட்டின் மாளிகையின் உப்பரிகைகளிலிருந்து மலர் தூவி வரவேற்றனர். கண்கள் இமைக்காமல் கண்டும் திருப்தியில்லாமல் பார்த்தபடி இருந்தனர்.
இப்படி ராஜ்யம் முழுவதும் சென்று மக்களைப் பார்த்துப் பேசி பரிச்சயம் செய்து கொண்டதால் அவர்களின் நம்பிக்கைக்கும், அன்புக்கும் பாத்திரமானார். தன் முன்னோர்கள் அரசு செலுத்தி வாழ்ந்த அரண்மனைக்குத் திரும்பியதும் பொக்கிஷம், விலையுயர்ந்த பொருட்கள் இவைகளைப் பார்வையிட்டார். பவழங்கள் பதித்த வாசல்கள், உதும்பர – உயர்தரமான மரங்களால் ஆன- நுழை வாயில்கள், வைதூர்யத்தால் ஆன ஸ்தம்பங்கள் வரிசையாக, தரைகள் மரகதங்கள் பதிக்கப் பெற்று, சுத்தமாக இருக்க, சுவர்கள் ஸ்படிகம் போல இருந்தன.
விசித்ரமான மலர் மாலைகள், தோரணங்கள், இனிய ஓசையிடும் மணிகள் கோர்த்து தொங்க விடப் பட்ட வளையங்கள், மனதைக் கவரும் வண்ணம் அலங்காரமாக இருந்த அரண்மனை. தூபங்களும் தீபங்களும், ஆண்களும் பெண்களுமாக வளைய வர, மலர்களின் மணமும், பூஷணங்களின் ஒலியும் தேவ லோகத்துக்கு இணையாக இருந்தது.
அதில் தன் பிரியமான மனைவியுடன் பகவான் ராமன் சுகமாக சந்தோஷமாக இருந்தார். சீதையுடன் பலகாலம் தீரர்களுக்குள் ரிஷபம் போன்றவன் ரமித்து இருந்தான். உலகில் தர்மத்தை வாழ்ந்து காட்டுபவனாக வருங்காலத்திலும் நினைவில் கொள்ளும் படியான அரசாட்சியை கோசல ராஜ்ய மக்கள் பெற்றனர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தம், ஸ்ரீ ராமோபாக்யானம் என்ற பதினோராவது அத்யாயம்) ஸ்லோகங்கள்- 36
அத்யாயம்-12
ஸ்ரீ சுகர் சொன்னார்: குசன் என்ற அரசனுக்கு அதிதி, அவனுக்கு நிஷதன், அவன் மகன் நபன், அவனுக்கு புண்டரீகன் அவன் மகன் க்ஷேம தன்வா என்று வம்சம் வளர்ந்தது. தேவானீகன் அவனுக்கு பின் பாரியாத்ரன், அவனுக்குப் பின் பலஸ்தன், அவனுக்கு வ்ரஜனாபன் என்பவன் ஸூரியனின் மகனாக பிறந்தான்.
க(ख्)கணன் அவன் மகன். அவனிடம் வித்ருதி, அதன் பின் ஹிரண்ய நாபன் என்பவன் ஜைமினி என்ற யோகாசார்யரிடம் மாணவனாக இருந்தான். கௌசல்ய சிஷ்யனாக அத்யாத்மம் என்பதையும், யாக்ஞவல்க்யரிடம் யோகத்தையும் கற்றான். யோக முறைகளிலேயே மகோதயம் எனப்படும், சிறந்த முறை அது, ரிஷிகளின் ஹ்ருதய க்ரந்தி (முடிச்சு) யை பிளக்க வல்ல யோக முறை.
புஷ்யன் என்பவன் ஹிரண்யனாபனின் மகன். அவனுக்கு த்ருவ சந்தி, சுதர்சனன், அதன் பின் அக்னிவர்ணன், சீக்ரன் என்பவன், அவன் மகன் மரு: எனப்பட்டான். இவனும் யோக சித்தி அடைந்தான். கலாப க்ராமம் என்பதை ஆஸ்ரயித்தான். கலியின் முடிவில் ஸூர்யவம்சம் நஷ்டமாகும் என்பதை அறிந்திருந்தான். அவன் மகன் ப்ர சுஸ்ருதன், அவனுக்கு சந்தி, அவனுக்கு அமர்ஷணன்,மஹஸ்வான், அவனிடம் விஸ்வசாஹ்யோ என்பவனும் பிறந்தனர். அவனுக்கு ப்ரஸேன ஜித், அவனுக்கு तक्षकन्- தக்ஷகன், அதன் ப்ருஹத்பலன் என்பவன் இவனைத் தான் உன் தந்தை யுத்தத்தில் வதைத்தார்.
இவர்கள் இக்ஷ்வாகு வம்சத்து அரசர்கள். இவர்களில் கடைசியாக வந்த ப்ருஹத்பலனின் மகன் ப்ருஹத்ரணன் எனப்படுவான். அவனுக்கு உருக்ரியன், வத்ஸவிருத்தன் என்ற மகன்கள். அடுத்து அந்த வம்சம் ப்ரதிவ்யோமன், பானு, திவாகன், வாஹிணீபதி, சஹதேவன், அவனுடைய மகன் வீரனான ப்ருஹதஸ்வன், பானுமான், ப்ரதீகன், அவன் மகன் சுப்ரதீகன் , மருதேவன், சுனக்ஷத்திரன், புஷ்கரன், அந்தரிக்ஷன், சுதபன் அதன் பின் அமித்ரஜித் என்று வம்சம் தொடர்ந்தது. ப்ருஹத்ராஜன் அவன் பின் பர்ஹி, க்ருதஞ்சயன், ரணஞ்ஜயன், சஞ்சயன் என்று வரிசைக் கிரமாக சந்ததிகள். அவனுக்கு छाक्यन्- சாக்யன் என்றும், சுத்தோதன் என்றும் மகன் கள், லாங்கலன் என்பவன், அதன் பின் ப்ரஸேனஜித், அவனுக்கு க்ஷுத்ரகன், என்று அந்த வம்சம் வளரும். ரணகன் என்பவன் தோன்றுவான். அவனுக்கு சுரதன் சுமித்ரோ நிஷ்டாந்தா என்ற இவர்கள் பார்ஹத்பலரின் வம்சத்தினர். இக்ஷ்வாகு வம்சம் சுமித்ரன் வரை வந்த பின் மறையும். அதன் பின் கலியுக அரசர்கள் வருவார்கள்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தம், பன்னிரண்டாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-16
அத்யாயம்-13
ஸ்ரீ சுகர் சொன்னார்: நிமி என்பவன் இக்ஷ்வாகுவின் மற்றொரு மகன். வசிஷ்டரை அழைத்து யாகம் செய்ய முனைந்தான். வசிஷ்டர் சொன்னார்: ஏற்கனவே இந்திரனுக்கு வாக்கு கொடுத்து விட்டேன். அவன் யாகத்தை நான் முன்னின்று நடத்த வேண்டும், அதை முடித்து விட்டு வருகிறேன். அது வரை காத்திரு என்றார். நிமி எதுவும் பதில் சொல்லவில்லை. அவரும் இந்திரன் யாகத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.
நிமி தானே வித்வான். மற்ற ருத்விக்குகளுடன் யாகத்தை ஆரம்பித்து விட்டான். பாதி யாகத்தில் குரு வசிஷ்டர் திரும்பி வந்து விட்டார். தான் வருவதற்குள் தானாக யாகம் செய்யத் துணிந்தவன், தன்னை பண்டிதனாக நினைத்தவன் என்று சொல்லி நிமி யை சபித்தார். உன் சரீரம் விழட்டும் என்றார். நிமி அதற்கு ப்ரதியாக தானும் வசிஷ்டருக்கு ஒரு சாபத்தை அளித்தான். உன் சரீரமும் போகட்டும், லோபி, இந்திரனுக்கு சேவகம் செய்ய சென்றது அதர்மம் என்றான். நிமி அத்யாத்ம கோவிதன்- அத்யாத்மத்தில் சிறந்த அறிவுடையவன் என்பதால் தன் சரீரத்தை தியாகம் செய்தான். பிதாமஹரான வசிஷ்டரும் மித்ராவருண -ஊர்வசி தம்பதிகளிடம் பிறந்தார். (ஊர்வசியைக் கண்ட மாத்திரத்தில் மித்ராவருணரிடம் உண்டாகி, கும்பத்தில் பிறந்ததாக கதை)
நிமியின் சரீரத்தை வாசனை தைலங்களில் மூழ்கி இருக்கச் செய்து விட்டு அவன் ஆரம்பித்த யாகத்தை மற்றவர்கள் முடித்தனர். யாகம் முடிந்த பின், தேவர்கள் யாகத்தில் பங்கு பெற வந்தவர்களிடம், அரசன் நிமி உடல் தியாகம் செய்து விட்டதைச் சொல்லி, உங்களால் செய்ய முடியுமானால், அரசன் உடல் இது, இதை உயிர்ப்பித்துக் கொடுங்கள் என்றனர். அவர்கள் பதில் சொல்லும் முன் நிமி மறுமுறை தேக பந்தத்தில் மாட்டிக் கொள்ள மறுத்து விட்டான். இந்த தேகம் நிரந்தரமல்ல என்பதால் யோகிகள் பிறவியையே வேண்டுவதில்லை. ஸ்ரீ ஹரி சரணாம்போஜத்தையே முனிவர்கள் பஜித்து மறு பிறவியற்ற நிலையை வேண்டுகின்றனர். அதனால் எனக்கு தேகம் வேண்டாம். நீர் வாழ் ஜந்துக்கள் மீன் முதலியவை பூமிக்கு வந்தால் மரிப்பது போலத் தான் சரீரம்.
தேவர்கள் சொன்னார்கள்; விதேஹ – தேகமில்லாதவனே, சரீரம் உடைய பிறவிகளிலின் கண்களில் வசிப்பாயாக. உன்மேஷ-நிமேஷ என (கண்களை இமைப்பது, மூடி திறப்பது) என்ற இமைகளில் செயலில் அத்யாத்ம தத்வம் இருப்பதால், உன் விருப்பம் போல உலகியல் அல்லாத அத்யாத்ம தத்வமே உன் இருப்பிடம் என்றாகும்.
அராஜகம்- அரசரின்மை- தலைமை இல்லாமல் போனால் நாட்டில் குழப்பங்கள் ஏற்படும் என்பதால். மஹரிஷிகள் சேர்ந்து நிமியின் உடலைக் கடைந்தனர். ஒரு குமாரன் பிறந்தான். ஜன்மனா ஜனக: – விதேஹனின் மகன் வைதேஹன், மிதில- கடைதல் என்ற செயலால் தோன்றியவன் என்பதால் அந்த அரசன் தான் நிர்மாணித்த நகருக்கு மிதிலா எனப் பெயரிட்டான்.
மிதிலையின் அரசனான ஜனகனுக்கு உதாவசு என்ற மகன். அவன் மகன் நந்திவர்தனன். அதன் பின் சுகேது, அவன் மகன் தேவராதன். தேவராதன் மகன் ப்ருஷத்ரதன், அவனுக்கு மஹாவீர்யன், சுத்ருத்பிதா. சுத்ருதின் மகன் த்ருஷ்டகேது, அவன் மகன் ஹர்யஸ்வனும் மருத் என்பவனும். மருவின் மகன் ப்ரதீபகன், அவனிடம் க்ருத ரதோ அவன் மகன் தேவமீடன், அவன் மகன் விஸ்ருதன் மற்றும் மஹாத்ருதி: . க்ருதிராதன், மஹாரோமன், வர்ணரோமா, ஹ்ரஸ்வரோம என்று அவன் புதல்வர்கள். அதன் பின் வந்தவன் சீரத்வஜன் என்பவன். சீரத்வஜன் யாகத்திற்காக பூமியை தோண்டிய சமயம் சீதா- கலப்பை, அதன் நுனியில் அகப்பட்ட பெண் மகவு, அவளுக்கு சீதை என்றே பெயரிட்டான். அரசனும் சீரத்வஜன் என்றே புகழ் பெற்றான்.
குஸத்வஜன் என்பவன் அவன் மகன். தர்மத்வஜன் அவன் மகன். தர்மத்வஜனுக்கு இரு புதல்வர்கள். க்ருத்வஜ, அமிதத்வ்ஜ என்பர். க்ருத்வஜனுக்கு கேசித்வஜன், மித த்வஜன் மகன் खाण्दिक्यन्- காண்டிக்யன். கேசித்வஜன் ஆத்மா வித்யா விசாரதனாக இருந்தான். காண்டிக்யன் கர்ம தத்வக்ஞன் என புகழ் பெற்றான். மற்றவன் பீதன். கேசித்வனின் மற்றொரு மகன் த்ருதன். அவன் மகன் பானுமான். சத த்யும்னன் அவன் மகன். சுசி என்ற மகனிடம் சனத்வாஜன் என்பவன் பிறந்தான். ஊர்த்வ கேது சனத்வஜன் மகன், அடுத்து புருஜித். அரிஷ்டனேமி அவன் மகன் ஸ்ருதாயு சுபார்ஸ்வக: என்று அவன் மகன் கள், அதன் பின் சித்ரதன் , அதன் பின் க்ஷேம தீ என்பவன் மிதிலாதிபன் ஆனான். அவன் மகன் சம ரதன், அவனுக்கு சத்யரதன். அவன் உப குருவாக – உதவி ஆசிரியர்- அவனிடம் பிறந்த உபகுப்தன் அக்னியில் தோன்றியவன். வஸ்வனந்தோ அவன் மகன். யுயுதோ என்ற மகன் அழகாக பேசக் கூடியவன் என்று கேள்வி. அவனுக்கு ஜயன், விஜயன் த்ருதன் என்று மக்கள்.
சுனகன் என்று அவன் மகன். வீத ஹவ்யன், த்ருதி, பஹுலாஸ்வன், த்ருதியின் மகன், அவன் மகன் மகாவசீ. இவர்கள் தான் மிதிலா ராஜ வம்சம். அனைவருமே ஆத்ம வித்யா விசாரதர்கள் என்பர். யோகேஸ்வரனின் அருளால், இல்லறத்தில் இருந்தாலும் சுக துக்கம் என்ற இரட்டைகளால் பாதிக்கப் படாமல் இருந்தனர்.
( இது வரை ஸ்ரீமத் பாகவத த்தில், ஒன்பதாவது ஸ்கந்தம், நிமி வம்சானுவர்ணனம் என்ற பதின்மூன்றாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-27
அத்யாயம்-14
ஸ்ரீ சுகர் சொன்னார்: அரசனே, சோம வம்சத்து அரசர்கள் பற்றிச் சொல்கிறேன். அதில் நளன் முதலிய ப்ரசித்தி பெற்ற அரசர்கள் இருந்தனர். சஹஸ்ரசிரஸ் என்று போற்றப்படும் பகவானின் நாபியில் தோன்றிய பத்மத்தில் பிறந்தவன் தான் தாதா-ப்ரும்மா, ப்ரும்மாவின் மகன் அத்ரி – முதல் ரிஷி.
அந்த ப்ரும்மாவின் கண்களில் தோன்றியவன், சோமன், அம்ருதமயன் என்பர். விப்ர – அந்தணர்கள், ஔஷதி, உடு கணங்கள் என்ற தாரகைகள் நக்ஷத்திர கூட்டங்கள் இவைகளின் தலைவனாக ப்ரும்மாவால் நியமிக்கப் பட்டான். சோமன் ராஜ சூயம் என்ற யாகம் செய்தான். மூவுலகையும் வெற்றி கொண்டவன். அதில் தோன்றிய தர்ப்பம்- கர்வம், அதனால் ப்ருஹஸ்பதியின் மனைவி தாராவை அபகரித்தான். தேவ குரு வினயமாக திருப்பித் தரும்படி பல முறை இறைஞ்சியும் தரவில்லை. அதுவே சுர -தானவர், தேவர்களுக்கும் அசுர்களுக்கும் இடையில் பெரும் பகை ஏற்படக் காரணமாயிற்று.
சுக்ராசார்யர் ப்ருஹஸ்பதியிடம் இருந்த த்வேஷத்தால், அசுரர்களுடன் சோமனை தன் பக்கம் இழுத்துக் கொண்டார். ஹரன் என்ற மகேஸ்வரன், அங்கிரஸ் என்ற முனிவரின் மகனான ப்ருஹஸ்பதியை ஆதரித்து பூத கணங்களுடன் வந்து விட்டார். இந்திரன் தன் பரிவாரங்களோடு அவருடன் இணைந்தான். பெரும் யுத்தம் மூளக் கூடும் என்பதால் ப்ரும்மா தலையிட்டு சோமனை தாராவை திருப்பித் தரும்படி வற்புறுத்தினார். வேறு வழியின்றி தாராவை ப்ருஹஸ்பதியிடம் ஒப்படைத்தான். திரும்பி வந்த தன் மனைவி கர்பவதியாக இருப்பதையறிந்து தேவ குருவான ப்ரஹஸ்பதி வெகுண்டார்.
என் மனைவி என்பதால் என் வம்சத்தை விளங்க வைக்க சந்ததிகளை நீ பெற்றுத் தருவாய் என்பதால் உன்னை தகிக்காமல் விடுகிறேன். எனக்கு க்ஷேத்ரமாக இருக்க வேண்டியவள், யாரிடமோ பெற்ற கர்பத்தை கலைத்து விடு என்றார். அதை த்யஜ- விலக்கு என்றார். அவள் எதுவும் பேசாமல் இருந்தாள். கோபத்தால் தகித்து விடக் கூடியவரே என்பதால் பயந்தாள். ப்ரசவ காலம் வந்ததும் குழந்தை பிறந்தது.
யார் தந்தை என்ற குழப்பம் நீடிக்கவும், அவளும் வாய் பேசாமல் இருக்கவும் பிறந்த குழந்தையே பேசிற்று. அஸத் வ்ருத்தே! என்று அழைத்து கோபத்துடன் ஏன் சொல்லாமல் மறுக்கிறாய், எதற்கு பொய்யாக வெட்கப் படுவது போல நடிக்கிறாய்? என்னிடமாவது சொல் என்றது. ப்ரும்மா தனிமையில் அவளைச் சந்தித்து விசாரித்தார். அவள் சோமனுடையது என ஒப்புக் கொண்டாள். பிறந்த குழந்தை சோமனைப் போல பொன் நிறமாக இருந்தது. ப்ரும்மாவிடம் அவள் சொன்னதை அறியாமல், அழகிய சிசுவைக் கண்டதும் ஆங்கிரஸ்-ப்ருஹஸ்பதி அதனிடம் பற்றுதல் கொண்டார். சோமனும் போட்டிக்கு வந்தான். தன் மகன் என்று அந்த சிசுவை எடுத்துக் கொண்டு புதன் என்று பெயரிட்டான். கம்பீரமாக, புத்திசாலியான மகன் என்று கொண்டாடி மகிழ்ந்தான்.
புதன், இலா என்ற மனைவியிடம் புரூரவா: என்ற புதல்வனைப் பெற்றான். அவனைப் போலவே அழகிய உருவமும், கம்பீரமும், கவர்ச்சியுமாக இருந்த புரூரவனைப் பற்றி அனைவரும் புகழ்ந்து பேசினர். ஊர்வசி இந்திரனுடைய வீட்டில் இருந்தவளும் அந்த புகழ்ச்சிகளைக் கேட்டாள். அதே சமயம் மித்ர வருணன் என்பவரின் சாபத்தால் பூலோகம் வர நேர்ந்தது. ஏற்கனவே புரூரவனைப் பற்றி கேட்டு அவனிடம் மையல் கொண்டிருந்தவள் அவன் இருக்கும் இடம் தேடித் தானே வந்தாள். கந்தர்ப்பன்- மன்மதம் போல ரூபமுடையவனைக் காணும் ஆவலுடன் அவன் எதிரில் நடமாடினாள். யதேச்சையாக அவளைக் கண்ட புரு அவள் அழகில் மயங்கி உடல் புல்லரிக்க மகிழ்ச்சியுடன் யார் என்று விசாரித்தான்.
அரசன் புரு: வராரோஹே! அழகிய உடல் அமைப்பு கொண்டவளே! ஸ்வாகதம். உன் வரவு நல்வரவாகுக . உட்கார். என்ன வேண்டும்? நாங்கள் என்ன உதவி செய்ய வேண்டும்,சொல். உன்னைக் கண்டதுமே என் மனதில் உன்னை அடைய வேண்டும் என்ற ஆசை பெருகுகிறது. என்னுடன் இருந்து நீயும் மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்.
ஊர்வசி: சுந்தர! எந்த பெண் தான் உன் தோற்றத்தைக் கண்டு மயங்காதிருப்பர்? மனதுக்கும், கண்ணுக்கும் விருந்தாக இருக்கிறாய். நான் சம்மதிக்கிறேன். இந்த ஆடுகளை (மேஷங்களை) பாதுகாத்து வைப்பாயாக. நல்ல வரன் வந்தால் பெண்கள் ஏன் மறுக்கப் போகிறார்கள். நெய் மட்டும் தான் என் உணவு. நாம் கூடியிருக்கும் நேரம் தவிர மற்ற சமயங்களில் உன்னை ஆடையின்றி கண்ணால் கூட காண மாட்டேன். சரி என்று அரசனும் ஒத்துக் கொண்டான். அஹோ ரூபம், அஹோ பாவோ, மனித பிறவியில் யாரானாலும் மயங்காமல் இருக்க மாட்டார்கள். தேவி, என் நல்ல காலம் தான் தானாக என்னிடம் வந்து இருக்கிறாய் என்று மகிழ்ந்தான். அவளுடன் அந்த அரசன், சாதாரண ஆண்கள் போல அவளுடன் ரமித்துக் கொண்டிருந்தான். அனைத்தையும் மறந்தவனாக, அவளுடன் தேவ உத்யான வனங்களில், சைத்ர ரதங்களில் என்று விருப்பம் போல சுற்றினர். பல ஆண்டுகள் இவ்வாறு கழிந்தன.
ஊர்வசியை தேவ லோகத்தில் காணாமல் இந்திரன் அவளைத் தேட ஆணையிட்டான். என் அரச சபை ஊர்வசி இல்லாமல் சோபையே இழந்து விட்டதே என்று அங்கலாய்த்தான். அவன் பரிவாரங்கள் ஊர்வசியைத் தேடி வந்தவர்கள் மேஷங்களைக் கண்டதும் அவைகளை அபகரித்துச் சென்று விட்டனர். அரசனிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப் பட்டவை அவை. ஊர்வசி அந்த மேஷ ரூபத்தில் இருந்த தன் புதல்வர்கள் கதறுவதைக் கேட்டு அலறினாள். வீரன் என்று நினைத்தேனே, நீ எதற்கும் உதவாதவன், நாதனாக நம்பினேன் கெடுத்து விட்டாயே என்று பழிச் சொன்னாள். நான் நாசமானேன், என் செய்வேன்? என் புதல்வர்களைக் காணோம் என்று புலம்பினாள். நம்பி உன்னிடம் ஒப்படைத்தேன். அதை திருடர்கள் கொண்டு சென்று விட்டனர். ஊர்வசி அரசன் புருவை வாய்க்கு வந்தபடி திட்டலானாள். பகலின் வீரனாக வேஷம் போடுகிறாய், இரவில் பெண் பிள்ளை போல தூங்குகிறாய் என்றாள். அங்குசத்தால் குத்தப் பட்ட யானை போல அரசன் வேதனையுடன் விழித்துக் கொண்டு,நடந்ததை அறிந்து, மேஷங்களைத் தேடியபடி ஆடையை கூட அணியாமல், இருட்டில் சென்றான். கந்தர்வர்கள் இதற்குள் ஊர்வசியின் இருப்பிடம் தெரிந்து விட்டதால் அவைகளை விட்டு, தாங்கள் ப்ரகாசமாக மின்னல் போல ஆனார்கள். அந்த வெளிச்சத்தில் மேஷங்களை பிடித்துக் கொண்டு திரும்பி வந்த அரசனை ஆடையின்றி பார்த்தாள், அவர்கள் உடன் பாட்டின்படி மறைந்து விட்டாள்.
அவன் மனைவி இலா தன் கணவனைக் காணாமல் பித்து பிடித்தவள் போல அலைய ஆரம்பித்தாள். குருக்ஷேத்ரம் என்ற இடத்தில் அவளையும் ஐந்து சகிகள் உடன் இருக்க, சரஸ்வதி நதிக் கரையில், கண்ட புரூரவன் சொன்னான். (உடல் இல்லாமல் அலைந்து கொண்டிருந்தவன்- அசரீரியாக பரிவுடன் )- அவர்கள் முகத்தைப் பார்த்ததுமே மகிழ்ந்தான். அவள் நதியில் மூழ்கி விடுபவள் போல இருப்பதையறிந்து அதை தடுக்கும் விதமாக புரூரவன் ‘நில், நில், ப்ராணனை விடாதே, நான் உன்னை விட்டு விலகவில்லை. இந்த தேகம் உன்னிடமிருந்து அபகரிக்கப் பட்டு வெகு தூரம் கொண்டு செல்லப் பட்டு விட்டது. பூமியில் விழுந்தால் இதை ஓனாய்கள் சாப்பிடும். கழுகுகள் கொத்தும். உன் அன்புக்கு ஏற்கும் நிலையில் நான் இல்லை. (ஓனாய்கள், கழுகுகள், இந்திரியங்கள், மனிதனை வாட்டுபவை) ஊர்வசி இதை கேட்டு பதில் சொன்னதாக ‘நீ செய்த ப்ரதிக்ஞை- எனக்கு கொடுத்த வாக்கு – அதை மீறினாய். பயப்படாதே, உன்னை ஓனாய்களோ, கழுகுகளோ எதுவும் செய்யாது. தீரனாக இரு. இனி எந்த அறியாத பெண்ணிடமும் போகாதே. கவனமாக இரு. பொதுவாக உலகில் பெண்கள் கருணையற்றவர்கள். க்ரூரர்கள், கட்டுக் கடங்காத கோபம் உடையவர்கள், பிரியமாக இருப்பது போல சாகஸம் செய்வார்கள். சிறிய காரணத்திற்காக கூட கொல்வார்கள். நம்பிய கணவனோ, சகோதரனோ கூட பொருட்டல்ல. பொய்யாக ஒரு பாசம் தன்னிடம் நம்பிக்கை கொள்ள. அறிவற்றவர்களை சிறிதும் கவனிக்க மாட்டார்கள். புதுப் புது பொருட்கள் வேண்டுவார்கள் என்று சொல்வார்கள்.
ஓராண்டு இப்படி வெளியில் தென்படாமல் இருப்பாய். பின் நான் வந்து உன் உடலையும், மனைவி மேலும் குழந்தைகளையும் பெறச் செய்கிறேன். ஊர்வசி தன் கர்பத்தை தாங்குவதாக இதன் மூலம் அறிந்து கொண்ட புரூரவன் தன் ஊர் திரும்பினான்.
ஆண்டு முடிவில் ஊர்வசி வந்தாள். அவளுடன் ஓரிரவு வாழ்ந்தான். கந்தர்வர்களை வேண்டிக் கொள். அவ்வாறே அவனும் அவர்களை வணங்கி வேண்டிக் கொள்ள அக்னிஸ்தாலி ( தீயை காக்கும் பாத்திர விசேஷம்) -என்பதைக் கொடுத்தாள். அதுவே ஊர்வசி என மனதில் ஏற்றுக் கொண்டு வனத்தில் அதை வைத்து விட்டு, தன் வீடு, குடும்பம் இவற்றை நினைத்தபடி திரும்பினான். த்ரேதா யுக முடிவில், திடுமென நினைவு வந்தது. அக்னிஸ்தாலியை வைத்த இடத்தை தேடிக் கொண்டு வனத்திற்கு வந்தான். அது இருந்த இடத்தில் ஒரு மரம் வளர்ந்து நின்றது. அஸ்வத்தம் என்ற அந்த மரம் , நெருப்பை உள்ளடக்கியது என்று அறிந்தான். அதிலிருந்து இரண்டு கட்டைகளை எடுத்து யக்ஞ ஈசன்- எனப்படும் பகவான் ஸ்ரீமன் நாராயணனை நினைத்து யாக சாலையை அமைத்துக் கொண்டு, சர்வ தேவ மயனான ஸ்ரீ ஹரியை தியானம் செய்தான். இரண்டு அரணிக் கட்டைகளை எடுத்து ஒன்றின் மேல் ஒன்றாக வைத்து, ஒன்றை தானாகவும், மற்றொன்றை ஊர்வசியாகவும் தானாக ஆவாஹனம் செய்து கடைந்தான். அதிலிருந்து ஜாதவேதம் என்ற நெருப்பு உண்டாயிற்று. புத்ரனை வேண்டும் மந்திரங்களைச் சொல்லி கடைந்தான். மூன்று விதமான வேதங்கள் அவன் மகனாக கல்பித்துக் கொண்டான். जातम् वेदो धनम् भोग्यम् यस्मात्- மூன்று வித்யைகளால் ஆதான आधान- கர்பத்தை தாங்கும் – சீமந்த காலத்தில் சொல்லும் மந்திரங்கள்-பும்ஸவன – மந்திரங்கள் – புத்ரன் இருந்தால் தான் புண்ய லோகங்கள் போக முடியும் என்பதால். அதுவரை ப்ரணவம் மட்டுமே வேத ரூபமாக இருந்ததை, த்ரேதா யுக முடியும் சமயம், புரூரவனால் மூன்று வேதமாக வளர்ந்தது என்பது பொருள். அக்னியின் அருளால் புத்திரர்களைப் பெற்று, காந்தவர்வ லோகம் சென்றான்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஓன்பதாவது ஸ்கந்தம், ஏலோபாக்யானம் என்ற பதினான்காவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-49)
அத்யாயம்-15
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஊர்வசியிடம் ஆறு குழந்தைகள் பிறந்தன. ஆயு, ஸ்ருதாயு, சத்யாயு, ரயன், விஜயன், ஜயன் என்று பெயர்கள். ஸ்ருதாயுவுக்கு வசுமான், சத்யாயுவுக்கு சுதஞ்ஜயன், ரயனுக்கு ஏகன், ஜயனுக்கு அமிதன், விஜயனுக்கு பீமன், பீமனுக்கு காஞ்சனன், அவனுக்கு ஹோத்ரகன் , அவனுக்கு ஜஹ்னு என்ற மகன். இந்த ஜஹ்னு தான் கங்கையை குடித்து விட்டவர். ஜஹ்னுவின் மகன் புரு, அவனுக்கு பலாகன், அவனுக்கு அஜகன் என்பவன். அஜன் மகன் குசன், குசனுக்கு குசாம்பு. அவன் மகன் வசு, குசனாபனுக்கு நால்வர் காதி என்ற விஸ்வாமித்திர் இவன் மகன். சத்யவதி என்ற மகள், ருசீகர் என்ற ரிஷி மணந்தார். அந்த வரன் (ருசீகன்-ரிஷி) தன் சகோதரிக்கு ஏற்ற வரன் அல்ல என்று காதி வாதிட்டார். குசிகர்கள் நாங்கள், கன்யா சுல்கமாக, கறுமையான காதுகளுடன் சந்திரன் போன்ற நிறத்தில் ஆயிரம் குதிரைகள் கொடுத்தால் தான் மகளைத் தருவோம் என்றனர்.
ப்ருகு வம்சத்து ரிஷி புரிந்து கொண்டார். வருணனிடம் சென்று அவர்கள் சொன்னபடியே குதிரைகளை யாசித்து பெற்றார். அவைகளைக் கொடுத்து கன்யாவான சத்யவதியை மணந்தார். சத்யவதியின் தாயாரும், மனைவி இருவருமே சந்ததி வேண்டுமென்று சொன்னதால், மந்திர ஜபம் செய்து, க்ஷத்திரிய, ப்ராஹ்மண என்ற இரண்டு குல குணங்களும் இருக்கும்படி பாயசத்தை தயார் செய்து வைத்து விட்டு நீராடச் சென்றார். தாயாரும் அந்த பாயசத்தில் ஒரு பகுதியை விரும்பியதால் சத்யவதி பாதியை அவளுக்கு கொடுத்து விட்டு மீதியைத் தான் உண்டாள். விவரம் அறிந்த ரிஷி, அடடா,என்ன காரியம் செய்து விட்டாய், உன் சகோதரன் கோரமான தண்டிப்பவனாக பிறப்பான் என்றார். பார்கவரின் மகன் ப்ரும்ம வித்தாக, அறிஞனாக, ஆனால் பயங்கரமாக தண்டிப்பவனாக இருப்பான் என்றார். சத்யவதி பயந்து, அதை தடுக்க முடியாதா என்று கேட்டாள். அவள் தவற்றை உணர்ந்து வருந்துவதைப் பார்த்து ருசீகர், ஒரு பரம்பரை தாண்டி அடுத்த பிறவியில் அதாவது பார்கவரின் பேரனாக பிறக்கட்டும். ஜமதக்னி சுதனாக பெயர் பெறுவான் என்றார்.
பின்னால், இந்த சத்யவதி தான் கௌசிகீ என்ற புண்ய நதியாக பிரவஹித்தாள். ரேணூ என்பவரின் மகள் ரேணுகாவை ஜமதக்னி மணந்தார். அவளிடம் வசுமதன் முதலிய மூவர், கடைசியாக ராமர் என்று பெயரிட்டார். இவரை வாசுதேவாம்சம் என்பர். ஹைஹய என்ற குலத்தை இவர் அழித்தார். இருபத்தோரு முறை பாரத வர்ஷம் முழுவதும் சுற்றிச் சுற்றி க்ஷத்திரியர்களை அழித்தார். துஷ்ட க்ஷத்திரியர்கள், ப்ரும்ம குலத்தை மதிக்காமல் தான் தோன்றித் தனமாக ராஜ்ய சாஸனம் செய்ததை பொறுக்காமல் இவர்கள் பூமிக்கு பாரம் என்றார். ராஜஸ, தாமஸ குணங்களே ஓங்கியிருக்க அல்ப அதர்மம் தென்பட்டாலும் பொறுக்காதவராக தண்டித்தார்.
அரசன் வினவினான்: எதற்காக? அரசர்கள் ரிஷிகளைப் போல தன்னடக்கம் பயிலுவதில்லையே. அதிகாரம் தான் அரசன் குணம். அவனை ஏன் தண்டிக்க வேணும்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஹைஹய ராஜா, கார்த்த வீர்யார்ஜுனன் சக்ரவர்த்தியாக இருந்தான். அவனுடைய பணிகள், சேவைகளைப் பார்த்து நாராயணன் தன் அம்சமாக அனுமதித்தார். பத்து நூறு- ஆயிரம் கைகள் வேண்டினான். அதைத் தவிர அமரர்களிடம் அடி படக் கூடாது என்றும், செல்வமும், அழியாத புகழும், ஆரோக்யமும்,பலமும் வேண்டிப் பெற்றான். யோகேஸ்வரனாக ஆனான். அணிமாதி சக்திகள், அளவில்லா ஐஸ்வர்யம் இவையும் தானே வந்து சேர்ந்தன. தடையின்றி உலகங்கள் முழுவதும் சுற்றுவான். வாயுவுக்கு இணையாக சுற்றி வரும் சமயம் கண்களில் தென்பட்ட அழகிய பெண்களைக் கவர்ந்து வருவான். ஒரு சமயம் அந்த பெண்களுடன் ரேவா என்ற நதி ஜலத்தில் நீராடிக் கொண்டு இருந்த சமயம்,வைஜயந்தீ என்ற மாலையை அணிந்து கொண்டு, கைகளால் நதி ஜலத்தை தடுத்து தாங்கள் அனைவருமாக நீராட வகை செய்து கொண்டான்.
தசானனன்- ராவணன் அந்த சமயம் தன் குடிலில் இருந்தவன் எதிர்த்து வந்த நதி ஜலத்தால் தன் குடில் அடித்துச் செல்லப்படுவதை பொறுக்க மாட்டாதவனாக, எதிர்த்து போரிட வந்தான். ஸ்த்ரீகளுக்கு முன்னால் தன்னிடம் போரிட வந்தான் என்பதை ஹைஹய அர்ஜுனன் காரணமாகச் சொல்லி அவனை கட்டி மாஹிஷ்மதி என்ற தன் நகரில் சிறையிட்டான். அதன் பின் வாலி என்ற கபி:-வானரம் வந்து விடுவித்தான்.
ஒரு சமயம் வேட்டையாடச் சென்றவன் ஜமதக்னியின் ஆசிரமத்தினுள் நுழைந்து விட்டான். சேனையுடன் வந்த அவனுக்கு ஜமதக்னி அதிதி சத்காரம் செய்தார். தபோதனரான அவர், தன்னிடம் இருந்த ஹவிஷ்மதீ என்ற பசுவின் உதவியால் அனைவருக்கும் உணவு படைத்தார். அதை அறிந்த ஹைஹயன் ஆச்சர்யத்துடன் முனிவரின் ஆத்ம சக்தியை பாராட்டியவன், கூடவே தன் அபிலாஷையையும் தெரிவித்தான். அந்த பசுவைத் தனக்கு தருமாறு வேண்டினான். முனிவர் தனக்கு ஹோம காரியங்களுக்கு பசுவின் பால் முதலியவை தேவை என்றும், அதனால் தர முடியாது என்று வினயமாகவே சொல்லி மறுத்து விட்டார். அவர்கள் கிளம்பி விட்டனர். ஆனால் அரசனின் உடன் இருந்தவர்கள் கர்வத்தால், அந்த பசுவை கடத்திச் செல்ல விரும்பினர். அரசன் எதுவும் சொல்லவில்லை. கதறக் கதற அந்த பசுவையும் அதன் கன்றையும் மாஹிஷ்மதிக்கு கொண்டு சென்றனர்.
அரசன் அகன்றதும், பரசுராமர் ஆசிரமம் வந்தார். நடந்ததைக் கேள்விப்பட்டு என்ன துஷ்டத்தனம் அந்த அரசனுக்கு என்று வெகுண்டவராக, கோரமான பரசுவை அத்துடன் வில், அம்புகள் வைக்கும் தூணி அனைத்தையும் எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டார். அடக்க முடியாத கோபம். ம்ருகேந்திரன் இரையை பிடிக்க ஓடுவது போல சென்றார்.
ப்ருகுவர்யன்- பார்கவ குலத்தவன், வேகமாக வருவதை பார்த்து, கையில் வில்லும் அம்புகளும், பாணங்களும் பரஸ்வதங்களும், மான் தோல் ஆடை உடுத்தியவனாக, ஸூரியன் போன்ற ப்ரகாசத்துடன், ஜடை பறக்க, ஊருக்குள் நுழைந்தவனைக் கண்டனர்.
அவர்களும் கஜ,துரக, பதாதி என்று அனைத்து விதமான படை வீரர்களையும் கொண்ட சேனைகளுடன் எதிர்த்தனர். யானை மேல் ஏறி வந்தனர். பதினேழு அக்ஷௌஹிணி பாணங்கள், ஈட்டிகளுடன், சதக்னீ, சக்திகளுடன் பயங்கரமான உருவத்துடன் வீரர்கள் வந்தனர். பரசுராமன் ஒருவனே எதிரில் நின்றார். பரஸ்வதம் என்ற ஆயுதத்தில் இருந்து மனோ வேகமோ, வாயு வேகமோ எனும்படி அவரிடம் இருந்து வெளிப்பட்ட அஸ்திரங்களால் கை கால் உடைந்து விழுந்தனர் பலர், வாகனங்கள் உடைய, சாரதிகளை இழந்து ரதங்கள் கை விடப் பட்டன, சைன்யமே ரத்த விளாறாக தரையில் கிடந்தது.
அதைக் கண்ட ஹைஹயன் தானே வந்தான். நேரில் கண்டவன் திடுக்கிட்டான். மான் தோல் ஆடையில், கைகளில் வில்லுடன் கம்பீரமாக நின்றவனைப் பார்த்து அசந்தான். இருந்தாலும் கை மீறிப் போன சூழ்நிலை தானும் வில் அம்புகளுடன் வந்து போரிட்டான். பெரிய கைகளால் மலைகளின் நுனிகளைப் போன்ற கற்களை வீசினான். பரசுராமரின் பாணங்களால் கை உடைந்து, மலை சிகரம் போன்ற தலையும் அறுந்து விழுந்தது. அவனுடைய புதல்வர்கள் பயந்து ஓடி விட்டனர். அக்னி ஹோத்ரீ- அக்னி ஹோத்ரத்துக்கு உதவும் பசுவை அதன் கன்றுடன் அழைத்துக் கொண்டு ஆசிரமத்துக்கு வந்து, பசுவை இழந்து வருந்திக் கொண்டிருந்த தந்தையிடம் கொடுத்தான். தான் போர் செய்ததை, எதிரிகள் பயந்து ஓடியதை அவர்களிடம் விவரித்தான்.
ஜமதக்னி மகனிடம், ராம ராம, நீ செய்தது சரியல்ல. அரசன் தேவனுக்கு சமமானவன். அவனை வீணாக கொன்று விட்டாய். நாம் ப்ரும்ம வழியில் செல்லும் அந்தணர்கள். பொறுமையால் தான் நமக்கு பெருமை. லோக குருவான தேவன், பாரமேஷ்ட்யம்- மிக சிறந்த பதவியை அடைந்தான். க்ஷமம்-பொறுமை தான் நமக்கு பூஷணம். பொறுமையே ப்ராஹ்மி, பொறுமையே லக்ஷ்மி தேவி விரும்புவதும், ஸுரியனுடைய சௌரி, ப்ரபா இவர்கள் அனைவரும் பொறுமையாக இருந்து நன்மை அடைந்தவர்கள்., பொறுத்தவர்கள், பொறுமையாக இருப்பவர்களை ஸ்ரீ ஹரியும் விரும்புவார். தலையில் நீர் விட்டு அபிஷேகம் செய்யப் பட்ட அரசன், அவனை வதம் செய்வது ப்ராம்மணனை வதம் செய்வதற்கு சமமாகச் சொல்லப் படுகிறது. தீர்தாடனம் செய். உன் தவற்றுக்கு பிராயச்சித்தம் செய். என்றார்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தம், பதினைந்தாவது அத்யாயம். )
அத்யாயம்-16
தந்தை இவ்வாறு சொல்லவும் பரசு ராமன் அதை ஏற்றுக் கொண்டு தீர்த்தாடனம் செய்யக் கிளம்பினார். ஓராண்டு பாரத தேசம் முழுவதும் உள்ள புண்ய தீர்த்தங்களில் நீராடினார். அதன் பின் ஆசிரமத்திற்கு வந்தார்.
ஒரு சமயம் ரேணுகா கங்கையின் ஜலத்தில் பூக்களின் இடையில் அப்சர ஸ்த்ரீகளிடம் விளையாடிக் கொண்டிருந்த கந்தர்வ ராஜனைக் கண்டாள். அந்த காட்சியில் மனதை பறி கொடுத்தவள் சற்று நேரம் பார்த்தபடி இருந்தவள், சட்டென்று நினைவு வர நீரை கலசத்தில் நிரப்பலானாள். அந்த சித்ர ரதமே மனதில் நிற்க, ஹோம வேளை வந்திருக்குமே என்று பரபரப்புடன் நீரை நிரப்பிக் கொண்டு ஆசிரமம் திரும்பினாள். தாமதமாக வந்தது முனிவருக்கு கோபத்தை உண்டு பண்ணியது. நடந்ததை, அறிந்த முனிவர், இவள் யாரோ பர புருஷனைப் பார்த்து விட்டு வந்திருக்கிறாள், இவளை கொல்லுங்கள் என்று புதல்வர்களுக்கு ஆணையிட்டார். ஒருவரும் முன் வரவில்லை. சற்று யோசித்து பரசுராமன் முன் வந்து தந்தை சொன்னபடியே தன் தாய், சகோதரர்கள் அனைவரையும் வதைத்தான்.
சத்யவதியின் மகன் – ஜமதக்னி மகிழ்ந்து அவனுக்கு வரங்கள் கொடுத்தார். அதைக் கொண்டு தன் தாய் சகோதர்களை உயிர்ப்பிக்கவும், நடந்தது அவர்கள் நினைவில் தங்காமல் இருக்க வேண்டும் என்றும் வேண்டினார். அதன் படியே தூங்கி எழுந்தது போல அவர்கள் எழுந்தனர். அதை எண்ணி அர்ஜுனனின் புதல்வர்கள், உடனே எதிர்த்து போராட தயங்கினர்.
பரசு ராமனும் சகோதரர்களும் ஏதோ காரியமாக வனம் சென்றிருந்த பொழுது, இது சரியான சமயம் என்றெண்ணி, ஆசிரமத்திற்கு வந்தனர். அக்னி காரியம் செய்து கொண்டிருந்த முனிவர் அதே தியானமாக இருந்த பொழுது கொன்று விட்டனர். ரேணுகா மிக துக்கத்துடன் யாசித்தாள். அதை பொருட்படுத்தாமல் தங்கள் பாப புத்தியால் அவர் தலையை கொய்து எடுத்துச் சென்று விட்டனர். ராம ராம என்றும், குழந்தைகளே என்றும் அவள் அலறுவதைக் கேட்ட நால்வரும் ஓடி வந்தனர். தந்தை கொலை செய்யப் பட்டிருப்பதைக் கண்டனர். பெரிதும் துக்கத்துடன் அரற்றினர். ஹே சாதோ! தர்மிஷ்ட என்று கதறினர். அழுது கொண்டிருந்த சகோதர்களிடம் தந்தையின் தேகத்தை ஒப்படைத்து விட்டு பரசுராமன் மாஹிஷ்மதி நகரம் சென்றார். சோபை இழந்து கிடந்த நகரத்தில் அந்த புதல்வர்களை, ப்ரும்ம ரூபமாக தியானத்தில் இருந்த தந்தையைக் கொன்றவர்களை தேடித் தேடி அவர்கள் தலைகளால் பெரும் குவியலாக மலை போல கிடக்கச் செய்து விட்டார். அதுவே காரணமாக க்ஷத்திரியர்கள், அந்தணர்களை அவமானப் படுத்துபவர்களை ஒழிப்பேன் என்று சபதம் செய்தவராக, இருபத்தோரு முறை பூமியைச் சுற்றி, க்ஷத்திரிய வம்சமே இல்லாமல் போகும்படி செய்தார். .
சமந்த பஞ்சகம் என்ற இடத்தில் அந்த உதிரத்தை நிரப்பி, தந்தையின் தலையை திரும்ப கொண்டு வந்து உடலோடு சேர்த்து வைத்து, அவர் செய்து கொண்டிருந்த யாகத்தை தொடர்ந்து செய்யச் செய்தார். கிழக்கு திசையை ஹோத்ரு என்பவருக்கும், தென் திசையை ப்ரும்மாவாக வந்தவருக்கும், மேற்கு திசையை அத்வர்யு என்றவருக்கும், வடக்கு திசையை உத்காத்ர என்பவருக்கும் கொடுத்தார். அவாந்தர திசைகளில் மற்றவர்களுக்கும் கஸ்யபருக்கு மத்தியில் உள்ள நிலப் பகுதியையும், ஆர்யாவர்த்தம் என்பதை உபத்ரஷ்டா என்பவருக்கும் மீதி இருந்ததை சபையில் இருந்த மற்றவர்களுக்கும் தானம் செய்தார். அதன் பின் அவப்ருத ஸ்னானம் செய்து விட்டு சரஸ்வதி நதிக் கரையில் ஆகாயத்தில் அம்சுமான் எனும் சூரியன் இருப்பது போல இருந்தார்.
தன் தேகம் கிடைக்கப் பெற்ற ஜமதக்னி ரிஷிகள் மண்டலத்தில் ஏழாவது ரிஷியாக ஆனார். ஜாமதக்னி வரும் நாட்களில் மேலும் பல வீர செயல்களைச் செய்வார். சித்த கந்தர்வ சாரணர்கள் புகழ்ந்து பாடினர். இவ்வாறு ப்ருகு குலத்தில் விஸ்வாத்மாவான ஸ்ரீ ஹரி, ஈஸ்வரன், அவதாரம் செய்து பூமியின் பாரத்தைக் குறைக்க பல அரசர்களை தண்டித்தார். இன்றளவும், மகேந்திர மலையின் தண்டத்தை கை விட்டு, சாந்தமாக சித்த கந்தர்வ சாரணர்களுடன் இருக்கிறார்.
गाधि யின் மகனாக நெருப்பு போல் தூய்மையானவராக தவம் செய்து தன் க்ஷத்திரிய குலத்தைத் துறந்து அந்தணராக ஆனவர் விஸ்வாமித்திரர். (ஜமதக்னியின் புத்ரனை வேண்டிப் பெற்ற பாயசத்தின் பலனாக பிறந்த வம்சத்தினர் ஆனதால் அவருக்கு ப்ரும்மத்வம் கிடைத்தது என்று உரையாசிரியர்) விஸ்வாமித்திரருக்கும் நூறு புதல்வர்கள் பிறந்தனர். மத்தியில் இருந்தவன் மதுசந்தன் என்பவன். ஹரிச்சந்திரனின் மகன், அஜீகர்த்தர் என்ற அந்தணரிடமிருந்து ஒரு மகனை யாசித்து தனக்கு பதிலாக யாக பசுவாக இருக்க வேண்டினான். ( புத்ர வரமளித்த வருணனுக்கு தன் மகனைத் தருவதாக சொல்லி, கொடுக்க மனமில்லாமல் தட்டிக் கழித்துக் கொண்டிருந்தார். மகன் பெரியவனாகி விவரம் அறிந்தவனாக ஆன பின், தந்தையின் வாக்கை காக்கவும் அதே சமயம் தான் பிழைக்கவும், மற்றொருவர் மகனை விலைக்கு வாங்கி யாகம் செய்ய முயன்றான். அஜீகர்த்தர், மூத்தவனை தந்தை தர மறுக்க, இளையவனை தாயார் தர மறுக்கவும், இடையில் இருந்த சுன:ஸேபன் தன்னை விற்று விட்டதாக சொல்லி தானே கிளம்பி வந்தான் என்று ஸ்ரீமத் ராமாயணம்)
அந்த யாகத்தில் சுன:ஸேபன் (शुन:शेप:) யாகத்தின் யூப ஸ்தம்பத்தில் கட்டப்பட்டான் யாக பசுவாக. விஸ்வாமித்திரர் அந்த யாகத்தில் பங்கேற்க வந்தவர், அதைக் கண்டு வருந்தினார். பார்கவனான சுன:ஸேபனைக் காப்பாற்ற தன் மூத்த மகனாக வரித்துக் கொண்டார். அதனால் அவன் குசிக கோத்ரனாக ஆனான். இளையவர்கள் என்ற தகுதியில் தன் புதல்வர்களை யாக பசுவாக வர ஆணையிட்டார். தந்தையின் சொல்லை அவர்கள் மறுத்ததால் கோபம் கொண்டு தன் புதல்வர்களையே ம்லேச்சர்கள்-சண்டாளர்களாக சபித்து விட்டார். இந்திரனைக் குறித்த இரண்டு துதிகளைச் சொல்லிக் கொடுத்து இந்திரனிடம் சொல்லி அவனை பலியாகாமல் தடுத்தார். தேவ யாகத்தில் காதி-விஸ்வாமித்திரால் காப்பாற்றப் பட்டவன் என்ற பொருளில் சுன:ஸேபன் தேவராதன் எனப்பட்டான்.
மதுச்சந்தனுடன் ஐம்பது பேரும் தந்தையிடம் நீங்கள் சொல்வது தான், எங்களை மூத்தவனாகவோ, இளையவனாகவோ அங்கீகரிப்பது உங்கள் விருப்பம் என அடி பணியவும் அவர்களை வீர புத்திரர்களைப் பெறுவீர்களாக என்று அசீர்வதித்தார். கௌசிக கோத்ரத்தினர்களாக அவர்கள் புகழ் பெறுவார்கள் என்றார். அவர்களும் தேவராதனை மூத்தவனாக ஏற்றுக் கொண்டனர். இதன் பின் பார்கவ கோத்திரத்தில் பிறந்தாலும் தேவராதன் குசிக கோத்திரனாக ஆனான்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தத்தில், பதினாறாவது அத்யாயம் )
அத்யாயம்-17
ஸ்ரீ சுகர் சொன்னார்: புரூரவசின் மற்றொரு மகன் ஆயு, அவன் மகன் நகுஷன் என்பவன். அவனுக்கு க்ஷத்ர விருத்தன், ரஜீ, ரம்பன், அனேனா என்று புதல்வர்கள். க்ஷத்ர வ்ருத்தனுக்கு சுஹோத்ரன், அவன் மகன் அஜன், அவனுக்கு மூவர். காஸ்யன், குசோ,க்ருசமத என்பவர்கள். க்ருத்ஸமதனுக்கு ஸுனக:, ஸுனகனின் மகன் ஸௌனகன் என்பவன் ப்ரும்ம வர்சஸ் ஆனவன். காஸ்யபனுடைய மகன் காசி, காசிக்கு ராஷ்ட்ரன் என்பவன் அவனுக்கு தீர்க தமன், தன்வந்தரி, என்ற ஆயுர்வேத ப்ரவர்த்தகர் அவன் மகன். வாசுதேவாம்சம் கொண்டவன். அவனை நினைத்த மாத்திரத்தில் துன்பம் போகும். அவன் மகன் கேதுமான். அவனுக்கு பீமரதன் மகன். திவோதாசன் த்யுமான், த்யுமானுக்கு ப்ரதர்தன. அவன் சத்ருக்களை வென்று ருதத்வஜன் என்று புகழ் பெற்றான். (என்றும் கீழிறங்காத கொடியுடையவன்) அவனுக்கு குவலாஸ்வன். அலர்க்கன் என்பான் அவன் மகன். இவன் நீண்ட காலம் – அறுபது ஆயிரம் வருஷங்கள் – ஆட்சி செய்தான். அலர்க்கனுடைய சந்ததி, சுனீதி, சுகேதன என்பவர்கள். சுகேதன மகன் தர்ம கேது, அவனுக்கு சத்ய கேது. அவன் மகன் த்ருஷ்ட கேது, சக்ரவர்த்தியானான். வீதி ஹோத்ரன் பார்க பூமி என்ற தேசத்தின் அரசன் ஆனான்.
அனேனன் வம்சம் பற்றி சொல்கிறேன் கேள். இவன் வம்சத்தில் ப்ரும்மா பிறந்தார். சுத்தன், சுசி, த்ரிககுத் என்பார்கள். ரஜன் என்பவனுக்கு ஐம்பது புதல்வர்கள். இவர்கள் சாந்தமாக நியாயமாக ஆட்சி செய்தனர். தேவர்கள் யாசித்ததால், ரஜன் இந்திரனுக்கு சகாயம் செய்தான். ப்ரஹ்லாதன் எதிர்க்கக் கூடும் என்று இந்திரன் பயந்து கொண்டிருந்தான். ரஜனுக்கு பிறகு அவன் புதல்வர்கள் இந்திரன் அழைத்தும் உடன் செல்ல மறுத்து விட்டனர். த்ரிவிஷ்டபம் என்ற மகேந்திரனுக்கு தர வேண்டிய யாக பாகத்தை தராமல் தாங்களே அனுபவித்தனர். அதனால் அனைவரும் குருவினால் சபிக்கப் பட்டனர்.
அதன் பின் ஹர்யவன என்பவன் அரசன் ஆனான். அவன் மகன் சஹதேவன், அதன் பின் ஹீநன் என்பவன், ஜய சேனன் அவன் மகன். அவனுக்கு சங்க்ருதி. க்ஷத்ர த்ர்மா என்பவன் மஹா ரதீ எனப் பட்டான். இனி நகுஷ வம்சம்
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தத்தில், பதினேழாவது அத்யாயம்)
அத்யாயம்-18
ஸ்ரீ சுகர் சொன்னார்: யதி, யயாதி, சம்யாதி, ஆயதி, வியதி, க்ருதி, என்ற அறுவர், நகுஷனுடைய புதல்வர்கள். தந்தையே அளித்தும் யதி ராஜ்யத்தை விரும்பவில்லை. அதனால் ஏற்க வேண்டிய பொறுப்புகளையும், கஷ்ட நஷ்டங்களையும் அறிந்தவன். அரசு பொறுப்பை ஏற்றவன் தன்னை அறிவதில்லை. ( தந்தை நகுஷன் இந்திர பதவியை அடைந்தான். பதவி தந்த மமதையால் இந்திராணியை அடைய நினைத்ததும், அவள் சபித்தாள்.அதனால் சர்ப்பமாக பூமியில் விழுந்தான்)
அதனால் யயாதி அரசன் ஆனான். நால்வரை நான்கு திசைகளிலும் அவரவர் மனைவிகளுடன், ராஜ்ய பாலனம் செய்ய அனுப்பினான். தானும் சுக்ராசார்யார் மகளையும், வ்ருஷ பர்வண என்ற தானவேந்திரனின் மகளையும் மணந்தான்.
அரசன் வினவினான்: சுக்ராசார்யர் ப்ரும்ம ரிஷி. க்ஷத்ர பந்து – தானவ குல அரசன் வ்ருஷ பர்வணன் – ராஜ குலத்தில் பிறந்தவன் அந்தணரின் மகளை எப்படி மணந்தான். ப்ரதி லோமம் என்பார்களே.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஒரு சமயம் தானவ அரசனுடைய மகள் சர்மிஷ்டா என்ற பெண், தன் ஆயிரம் சகிகளுடன் , குரு புத்ரியான தேவயானியுடன் நகரத்தில் இருந்த உத்யான வனத்தில் பொழுது போக்காக விளையாடி மகிழச் சென்றாள். பாட்டு பாடியும், புஷ்பங்களைப் பார்த்து மகிழ்ந்தும், மணல் வெளியில் அமர்ந்தும் களித்தனர். கடைசியில் ஒரு நீர் நிலையில் நீராடச் சென்றார்கள். கரையில் ஆடைகளை வைத்து விட்டு நீரில் இறங்கினர். திடுமென வ்ருஷ கிரீசன், தேவியுடன் ஆகாய மார்கமாக செல்வதைக் கண்டனர். உடனே அவர்கள் அவசரமாக அவரவர் உடையை எடுத்து அணிந்து கொண்டனர். சர்மிஷ்டா கையில் கிடைத்த ஆடையை கவனிக்காமல் தனது என்று எண்ணி அணிந்து கொண்டாள். அது குரு புத்ரியான தேவயானியுடையது. தேவயானி வெகுண்டாள்: அஹோ! இந்த தாசியின் சேஷ்டையை பார்த்தீர்களா? நான் அணிய வேண்டியதை எடுத்து அணிந்து கொண்டிருக்கிறாள். யாக பாகத்தை நாய் நக்குவது போல, என்றாள். ப்ருகு, என் தந்தை, மற்றும் பல தவ சீலர்களின் பலத்தால் ப்ரும்ம குலம் பரம புருஷனுடைய முகத்தில் தோன்றியது. அவர்கள் தான் நலம் தரும் வைதிக மார்கங்களை நடை முறையில் லோக க்ஷேமத்திற்காக அனுசரிக்கிறார்கள். தேவர்கள் தலைவன், லோக நாதர்கள் என்பவர்களும் ப்ராம்மணர்களை மதித்து வணங்குவார்கள். அவ்வளவு ஏன், ஸ்ரீ தேவியை மார்பில் தரித்த ஸ்ரீநிவாசனே, விஸ்வாத்மா, பகவானாக இருந்தும் இவர்களை வணங்குவார். அதிலும் ப்ருகு வம்சத்தினர் நாங்கள். இந்த சர்மிஷ்டா அசுர குலத்தில் வந்தவள். எங்கள் சிஷ்யர் கூட இல்லை. இந்த அறிவில்லாதவள், வேண்டுமென்றே, என் வஸ்திரத்தை எடுத்து உடுத்திக் கொள்டிருக்கிறாள். வேத சாஸ்திரங்களை அறிய அருகதையே இல்லாத நாலாம் வர்ணத்தினர் போல.
சர்மிஷ்டாவும் இந்த மமதையை கண்டு ஆத்திரம் அடைந்தாள். அடி பட்ட நாகம் போல பெருமூச்சு விட்டவளாக, ஏ பிக்ஷுகீ! ஏய் யாசிப்பவளே! உன் குலத்தைப் பற்றி இவ்வளவு பெருமை பேசுகிறாயே, என் தந்தை போன்றோரை அன்னத்திற்காக வட்டமிடும் காகம் போலவும், நாய் போலவும் அரச குலத்தை அண்டி தானே வாழ்கிறீர்கள். அவர்கள் போடும் பிச்சை தானே உங்கள் வாழ்க்கை என்றாள். சண்டை முற்றியது. சர்மிஷ்டா கோபத்துடன் குரு புத்ரியை ஒரு கிணற்றில் தள்ளி விட்டு விட்டு சகிகளுடன் புறப்பட்டு போய் விட்டாள்.
அவள் வீடு போய் சேர்ந்த பின், யதேச்சையாக அரசன் யயாதி வேட்டையாட வந்தவன், தேவயானியைக் கண்டான். அவளுக்கு தன்னுடைய உத்தரீயத்தை அளித்து, கை கொடுத்து மேலே தூக்கி விட்டான். மேலே வந்த தேவயானி, வீரனான அவனிடம் ராஜன்! என் கைகளை பிடித்தவன் நீ, அதனால் நான் உனக்குரியவள் என்றாகிறது. தெய்வச் செயல் தான் இது. வீரனே! நமது சம்பந்தம் அமைய வேண்டும் என்பது நாம் எண்ணி செய்ததில்லை. நான் இந்த கிணற்றில் கிடப்பதும், யதேச்சையாக நீங்கள் வந்து மீட்பதும் உங்களை நான் சந்திக்கவே என்பது போல அமைந்துள்ளது. ப்ராம்மணப் பெண்ணான என்னை மணக்க மனதால் கூட நினைத்திருக்க மாட்டீர்கள் என்பது நிச்சயம். பார்ஹஸ்பதியான கசனால் முன் சபிக்கப் பட்டவள். அதனால் என்னை ப்ராம்மண குலத்தில் ஏற்க மாட்டார்கள். யயாதியும் இது தெய்வ செயலே என்று அவளை ஏற்றுக் கொண்டான். அரசன் அகன்றதும் அவள் தன் தந்தையிடம் அழுது கொண்டே சர்மிஷ்டா செய்த துஷ்ட செயலை விவரித்தாள். (கசன் சுக்ராசார்யரிடம் சஞ்சீவனி மந்திரத்தை கற்க வந்த பொழுது, தேவயானி அவனை விரும்பினாள். குரு புத்ரி எனக்கு மரியாதைக்குரியவள், என்று சொல்லி மறுத்து விட்டான். நீ கற்ற கல்வி பலிக்காமல் போகட்டும் என்று இவள் சபிக்க, அவனும் பதிலுக்கு உன்னை எந்த அந்தணனும் மணக்காமல் போகட்டும் என்று பதில் சாபம் கொடுத்தான் )
ஸுக்ராசாரியர் இதைக் கேட்டு மிகவும் வருத்தம் அடைந்தார். இது என்ன வாழ்க்கை. புரோஹிதம் என்பது மதிப்புகுரியது என்று நினைத்தோம், உணவை யாசிப்பவர்களா நாம் என்று வருந்தினர். இந்த தொழிலே வேண்டாம் என்று மகளுடன் ராஜ்யத்தை விட்டே விலகி விட்டார்.
வ்ருஷ பர்வண ராஜா இதையறிந்து அவரிடம் தலை வணங்கி விண்ணப்பித்து, அவரும் கோபம் தணிந்து, தனியாக இவளை விட்டு வர முடியாதே, என்றார். அந்த சமயம் தேவயானி தன் மனோரதத்தை வெளிப்படுத்தினாள். யயாதியை விரும்புவதாகவும், காட்டில் நடந்த விஷயங்களையும் சொன்னாள். ஏற்கனவே ராஜ புத்ரி சர்மிஷ்டாவை மணந்திருந்தான். அவளிடம் மகனையும் பெற்ற அரசன் யயாதி. அரசன் இந்த விஷயத்தைச் சொன்ன பின்னும் தேவயானி பிடிவாதமாக இருந்தாள். விவாகம் ஆனதும் மற்ற யாருடனும் தாம்பத்யம் செய்யக் கூடாது என்ற நிபந்தனையோடு அவரும் சம்மதித்தார். அதே கவனமாக சர்மிஷ்டாவை அரசன் சந்திக்கவே விடவில்லை. காலம் சென்றது.
தேவயானி கர்பமுற்றதும், சர்மிஷ்டா தானும் தாயாக வேண்டும் என வேண்டியதும், அதுவும் நியாயம் தானே என்று எண்ணியவனாக அரசன் ரகசியமாக அவளுடன் கூடி மகிழ்ந்தான். சுக்ராசாரியார் முன்னமே எச்சரித்திருந்தை மறந்து விட்டிருந்தான்.
யது துர்வசு என்று இரு மகன் களை தேவயானி பெற்றாள். த்ருஹ்யம், அனும், புரு என்பவர்கள் சர்மிஷ்டாவின் புதல்வர்கள். அவளுக்கும் புதல்வர்கள் பிறந்தனர் என்ற செய்தியை கணவனே சொல்லக் கேட்ட தேவயானி கொதித்து எழுந்தாள், கோபத்துடன் தந்தையிடம் சென்றாள். அரசன் சமாதானம் செய்தது எடுபடவில்லை. சுக்ரர் இதையறித்து அரசனை கோபித்து ‘சொன்ன சொல்லை மறந்து விட்டாயே, அனார்ய, உன்னை ஜரா என்ற முதுமை வந்து சேரட்டும். மந்த புத்தியே, முதுமை வந்தால் உன் ரூபம் என்ன ஆகும் தெரியுமா? ‘ என்று சபித்தார். அதன் பின் அதன் பின் விளைவை எண்ணியோ, தன் மகள் பற்றி நினைத்தோ, பரிகாரமாக யாரிடமாவது முடிந்தால் அதைக் கொடுத்து இளமையை வாங்கிக் கொள், என்றார்.
யயாதி சொன்னான்: ப்ரும்மன்! உங்கள் மகளிடம் என் மனம் ஈடுபடவில்லை. பொருந்தாத திருமணம். என் தாம்பத்யத்தில் திருப்தியில்லை. எனவே நீங்கள் சொன்னபடி முதுமையை ஏற்கிறேன். எப்படியிருந்தாலும் காலம் செல்லச் செல்ல அனுபவிக்கப் போவது தானே’ என்றான். ஆனால் உண்மையில் அந்த சாபம் பலித்தபின் தான் வாழ்க்கையில் இழந்த இளமை அவனை வருத்தியது. அதனால் தேவயானியின் மகனிடம் உன் தாய் வழி பாட்டனார் சபித்து விட்டார். மகனே! இந்த முதுமையை நீ ஏற்றுக் கொண்டு உன் இளமையைத் தா. சில காலம் அனுபவித்து விட்டு திரும்பவும் பழையடி ஆகி விடுவோம் என்றான். உன் தாயுடன் திருப்தியாக வாழவும் இல்லை என்றான்.
யது: எனக்கு சம்மதமில்லை. நடு வயதில் உங்களுக்கு வந்த முதுமையை இளைஞனான நான் ஏன் ஏற்க வேண்டும். அறிவு இல்லாமல் க்ராம்ய சுகத்தில் வாழ்ந்து விட்டு, இப்பொழுது தவிக்கிறீர்கள், என்றான். அதன் பின் துர்வசு என்ற இளயவனிடம் சென்றான். அவனும், அடுத்து த்ருஹ்யனும், அனுவும் மறுத்து விட, புரூ வயதில் சிறியவனானாலும், அதிக குணவான், குழந்தாய் நீயும் உன் மூத்த சகோதரர்களைப் போலவே மறுத்து விடுவாயோ என்று சந்தேகத்துடனேயே கேட்டான்.
புரூ: மனுஷ்யேந்திர! தந்தை தன் ஆத்மாவாக தனயனை வளர்க்கிறார். அவருடைய அன்புக்கு ப்ரதிகாரம் செய்பவன் எவனோ அவனே நல்கதியை அடைகிறான். இவ்வாறு சொல்லி மனதார தன் இளமையை அவருக்கு கொடுக்க சம்மதித்தான். சப்த தீவுகளின் பதியாக, தன் ப்ரஜைகளை தந்தை போல பாலித்து விட்டு தான் அனுபவிக்காமல் விட்ட சுகங்களை அனுபவித்து விட்டு, தன் விருப்பம் நிறைவேறியவனாக ஆனான்.
தேவ யானியும் தினமும் தன் மனோ, வாக், தேகம் இவைகளால் ப்ரேமையுடன் ஒத்து வாழ்ந்தாள். பல யாகங்களைச் செய்து யாக புருஷன் எனும் பகவானை பூஜித்தான். நிறைய தக்ஷிணைகள் கொடுத்து சர்வ தேவ மயமான தேவனை சர்வ வேத மயமான ஸ்ரீ ஹரியை திருப்தி செய்தான்.
வானத்தில் தோன்றும் நீர்துளிகள் இருப்பது போலவும் இல்லாதது போலவும் காணப் படுகிறதோ, அதே விதமாக கனவும் நனவுமான மாயா மனோரதங்கள். அதனால் அதன் நிலையாமையை எண்ணி மனதை வாசுதேவனிடத்தில் செலுத்தி ப்ரபுவை, ஆசைகளைக் கடந்தவனாக பூஜித்தான். பல வருஷங்கள் (ஆயிரம் வருஷங்கள்) மனம் கொண்ட மட்டும் மனதுடன் ஆறான இந்திரிய சுகங்களை அனுபவித்து விட்டு திருப்தி அடையாத அந்த சக்ரவர்த்தி, யோசித்தான்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தத்தில், பதினெட்டாவது அத்யாயம்)
அத்யாயம் 19
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஒரு நாள், தன் வாழ் நாள் பெண் சுகத்திலேயே கழித்து விட்டோமே என்ற பச்சாதாபம் தோன்ற மனைவியிடம் சொன்னான். பார்கவி! கேள். என்னைப் போன்றவர்களின் நிலையை சொல்வதாக அமைந்த இந்த பாட்டைக் கேள். எங்களைப் பார்த்து தீரர்களாக உள்ள அறிஞர்கள் பச்சாதாபப்பட்டு பாடியது.
பாவம், ஒரு வெள்ளாடு வனத்தில் திரிந்துகொண்டிருந்த சமயம், தன் வினைப் பயனால் கிணற்றில் விழுந்த பெண் ஆட்டைக் கண்டது. அதை தூக்கி விட உபாயம் யோசித்து, தன் கொம்பினால் தூக்கி மேலே கொண்டு வந்தது. குடிக்கத் தண்ணீர் கொடுத்து ஆஸ்வாசப் படுத்தியது. அதுவோ அந்த ஆட்டையே விரும்பியது. அதைப் பார்த்த பல பெண் ஆடுகள் காமத்தால் தவித்துக் கொண்டிருந்தவைகள், தகுந்த துணை கிடைக்காத இதனிடமே மோகித்து, கொழுத்து, மீசையுடன், கவர்ச்சியாக இருந்த அதையே அனைத்து பெண் ஆடுகளும் மோகித்தன, ,அதுவும் ஏராளமான ஆடுகளுடன் ரமித்துக் கொண்டு காலம் சென்றதையே அறியாமல் தன்னையே அறிந்து கொள்ளவில்லை. அவை அணைத்து ஆடுகளுடனும் ரமித்துக் கொண்டிருந்தை, தன்னை உயர்வாக நினைத்துக் கொண்டிருந்த கிணற்றில் விழுந்த முதல் பெண் ஆடு பொறுக்கவில்லை. பொறாமை கொண்டது. அந்த வெள்ளாடு தனக்கு துரோகம் செய்து விட்டதாக பொறுமியது. சிற்றின்ப பிரியன், எளிதில் மாறும் குணம் உள்ளவன் என்றெல்லாம் ஏசியது. தன் எஜமானனிடம் வருத்தத்துடன் சென்று புலம்பியது. அந்த உரிமையாளன் அதை சமாதானப் படுத்த வெள்ளாட்டை தண்டிக்க நினைத்து அதன் ஆண் உறுப்பைச் சிதைத்து விட்டான். பின் யோசித்து இதனால் அந்த பெண் ஆடும் தன் பிரியமான வாழ்க்கையை இழக்குமே என்ற நினைவு வந்து வெள்ளாட்டை தன் உறுப்புடன் இணைத்து கொடுத்தது.
இவ்வாறு தண்டனை பெற்று திரும்ப அந்த கிணற்றில் விழுந்த ஆட்டிடமே பல காலம் வாழ்ந்த வெள்ளாடு தன் காமம் தீராமல் இன்று வரை திரிகிறது. அந்த வெள்ளாட்டுக்கும் எனக்கும் என்ன வேறு பாடு. நானும் காமியாக வாழ் நாள் முழுவதும் காமத்திலேயே மூழ்கி என்ன அறிய வேண்டும், என்னறிவை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற நினைவே இல்லாமல் கழித்து விட்டேன். உன் மோகத்தில் மூழ்கி பரிதாபமான என்னை நானே நொந்து கொள்கிறேன். உலகில் தானிய விதைகள், பொன், பசுக்கள், பெண்கள் மனிதனுக்கு மனதுக்கு இதமாக இருப்பவை. உன்னைப் போன்றவர்களிடம் அளவு மீறிய காமம் கொண்ட மனிதன் அழிவைத்தான் அடைவான்.
ஒருபொழுதும் சிற்றின்பங்கள் அனுபவித்து தீராது. ஹோமத் தீயில் விட்ட நெய் போல மேலும் மேலும் பெருகும். சர்வ ஜீவன்களுக்கும் அமங்களமான இதை கட்டுக்குள் வைத்திருப்பவன் தான் உலக நன்மைக்காக எதையும் செய்ய முடியும். இதிலிருந்து விடுபட மனிதனாக பிறந்தவன் அனைத்து உயிரினங்களையும் சமமாக பாவித்தால், எல்லா திசைகளிலும் தன் மதிப்பைப் பெறுவான். ஆனால், இந்த காமத்தை துறப்பதும் எளிதல்ல. தான் ஆட்டுவிக்கும் மனிதனை, உயிருள்ள ஜீவன்களை உருக்குலைக்கும், , தான் அழியாது. தாய், சகோதரி, தன் மகள், இவர்களிடம் கூட தள்ளியே இருக்க வேண்டும். வித்வானாக இருப்பவனைக் கூட அந்த ஆசை விடாது. நூறு வருஷம் வாழ்ந்தவன் கூட, திருப்தியடைந்ததாக சொல்ல மாட்டான். அதனால், ப்ரும்ம தியானத்தில் மனதைச் செலுத்தியபடி இந்த வாழ்க்கையை பயனுடையதாகச் செய்கிறேன். அதனால் அனைத்தையும் துறந்து வனம் செல்வேன். காட்டு மிருகங்களோடு அகங்காரம் இன்றி அமைதியாக தவம் செய்யப் போகிறேன்.
இதுவரை நான் கண்டதும், கேட்டதும், அறிந்ததும் என் அருகில் கூட வர விட மாட்டேன். ஆத்மாவை நாசம் செய்யும் உலக வாழ்க்கையை அடியோடு துறப்பேன். இப்படிச் சொல்லி விட்டு, தன் மனைவி, நகரம், ராஜ்யம் அனைத்தையும் புரூவின் பொறுப்பில் விட்டு விட்டு சற்றும் பற்றின்றி பகவானை தியானம் செய்ய வட திசையில் சென்று விட்டான். புரூவிடம் பூமண்டலம் அனைத்தையும் அளித்து அபிஷேகம் செய்வித்தான். தான் பெற்ற இளமையை அவனிடம் திருப்பிக் கொடுத்து ஆசீர்வதித்தான்.
பல வருஷங்கள் சிற்றின்பம் அனுபவித்து, ஆறு விதமான புலனின்பங்களையும், லௌகிகமான சௌகர்யங்களையும் சுகங்களையும் அனுபவித்தவன் க்ஷண நேரத்தில் அனைத்தையும் துறந்தான். பறவைக் குஞ்சு இறக்கை முளைத்தவுடன் பறந்து விடுவது போல. வனத்தில் தனிமையில், ஆத்மானு பூதியை அடைந்து, பர ப்ரும்மமான வாசுதேவனித்தில் அடங்கினான். பாகவதர்கள் அடையும் நல் கதியை அடைந்தான்.
அருவி கொட்டுவது போல வேகமாக சென்ற வாழ்க்கை. அதுவும் ப்ரபுவின் மாயையால் தோன்றியதே. கனவும், விழிப்பும் போலவே என்று பார்கவி, தேவயானையும் உணர்ந்தாள். ஸ்ரீ க்ருஷ்ணனிடம் பக்தி செலுத்தி அமைதியாக வாழ்ந்தாள். நாளடைவில் தானும் மறைந்தாள்.
நமஸ்துப்யம் பகவதே வாசுதேவாய வேதஸே | சர்வ பூதாதிவாஸாய சாந்தாய ப்ருஹதே நம: ||
( இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தத்தில். பத்தொன்பதாவது அத்யாயம்)
அத்யாயம்- 20
ஸ்ரீ சுகர் சொன்னார்: புரூ வுடைய வம்சம் பற்றிச் சொல்கிறேன். பாரதா! நீ அந்த வம்சத்தினன். அதில் பல ராஜரிஷிகள், ப்ரும்ம ரிஷிகள் பிறந்தனர்.
ஜனமேயஜன் என்பவன் புரூவின் மகன். அவனுக்கு ப்ரசின்வான் என்பவன். ப்ரவீரன், நமஸ்யு, அவனுக்கு, சாருபதன் என்பவன் பிறந்தான். அவனுக்கு சுத்யு, அவனுக்கு பஹுகவன் , சம்யாதி, அவனுக்கு ஹம்யாதி, அவன் மகன் ரௌத்ராஸ்வன் என்பவன். க்ரத்யு என்பவன், அவனுக்கு கக்ஷேயு:, ஸ்தண்டிலேயு:, க்ருதேயுகன், ஜலேயு:, சந்ததேயு:, தர்ம, சத்யவ்ரத, யவன் என்ற பத்து பேர். இவர்கள் அப்சரசின் மகன்கள். வனேயு என்பவன் கடைசி. க்ருதாசீ என்பவளிடம், ஜகதாத்மாவின் படைப்பில் உள்ள இந்திரியங்கள் போன்றவர்கள் அவன் மகன்கள். ருதேயன் என்பவனுக்கு ரந்தி பாரன் பகன், மற்றும் மூன்று பெண் மகவுகள். சுமதி, த்ருவோ, அப்ரதிரத:. அப்ரதிரத: என்பவளிடம் கண்வர் பிறந்தார். இவர் பின் நாளில் மகரிஷியானர். கண்வரின் மகன் மேதாதிதி, அவனுக்கு ப்ரஸ்கண்வன் முதலானோர், இவர்கள் த்விஜாதி என்ற அந்தணர்கள். சுமதியின் மகன் ரைப்யன் என்பவன், துஷ்யந்தன் அவன் மகன். துஷ்யந்தன் வேட்டையாடச் சென்ற சமயம், கண்வாஸ்ரமம் சென்றான். அங்கு வசித்த ஒரு பெண், தேவ மாயா போன்றும், தன் அழகால், ப்ரகாசத்தால் அந்த ப்ரதேசத்தையே அழகுறச் செய்தவளாகத் தோன்றினாள். கண்டவுடன் அவளிடம் மயங்கினான். படர்கள்- காவல் வீரர்கள் சூழ்ந்து நின்றிருந்தனர். அவளிடம் பேச்சுக் கொடுத்து, யாரென்று தெரிந்து கொண்டான்.
அவளைக் கண்டதாலேயே, தன் களைப்பு நீங்கி, புத்துணர்வு பெற்றதாக உணர்ந்தான். காமனால் தூண்டப்பட்டவனாக அவளிடம் ஆவலுடன் உரையாடினான்.
‘யார் நீ, கமல பத்ராக்ஷி? உன் பெற்றோர் யாவர்? என் மனதை கவருகிறாய். நிர்ஜனமான வனம் இங்கு ஏன் தங்கியிருக்கிறாய்.? ஏதோ அரச குமாரி என்று உன் தோற்றம் சொல்கிறது. புரு வம்சத்தில் வந்தவன் நான். என் மனம் அதர்மத்தில் செல்லாது.
சகுந்தலா சொன்னாள்: விஸ்வாமித்திருடைய மகள். நான். மேனகா என் தாய். என்னை வனத்தில் கண்வ ரிஷி கண்டெடுத்து வளர்த்தார். சொல்லுங்கள், எங்களிடத்துக்கு வந்த அதிதி. உங்கள் தேவை என்ன? உட்காருங்கள். இதோ அர்ஹணம். இங்கு தானியங்கள், பழங்கள் இவையே உணவு. சாப்பிடுங்கள். விரும்பினால் இங்கு தங்கலாம். மகரிஷி கண்வர் இதோ வந்து விடுவார்.
துஷ்யந்தன் சொன்னான்: குசிகரான விஸ்வாமித்திரர் மகள் இப்படித்தான் இருப்பாள் என்பது போல மதுரமாக பேசினாய். ராஜ குமாரி நீ, நான் உன்னை எனக்கு ஏற்றவளாக நினைக்கிறேன். சம்மதித்தால், இப்பொழுதே ஓம் என்று சொல்லி காந்தர்வ விவாஹம் செய்து கொள்வேன். அப்படியே அவளும் சம்மதிக்க, காந்தர்வ விதியால் ராஜா அந்த தேச காலத்தின் விதி முறைகளை அறிந்தவனாக அவளை மணந்தான். அமோக வீர்யம் உடையவன். அவளும் தகுதியான மஹிஷி. அன்றே அவள் கருத்தரித்தாள். மறுநாள், துஷ்யந்தன் தன் நகரம் சென்றவன் நடந்ததை மறந்து விட்டான். சகுந்தலை காலம் செல்லவும், ஒரு மகனைப் பெற்றாள்.
கண்வர் வனத்தில் அந்த மகனுக்கு தேவையான சம்ஸ்காரங்களைச் செய்தார். அவன் சிங்கங்களுடன் விளையாடினான். அவன் விக்ரமம், தாங்க முடியாததாக இருந்தது. ஸ்ரீ ஹரியின் அம்சாம்சமாக பிறந்தவன் என்பது அனைவருக்கும் தெரிந்தது. அவனை அழைத்துக் கொண்டு ராஜ க்ருஹம் சென்றாள். அவன் அவளை மனைவியாகவோ, மகனை தனது என்றோ ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டான். ராஜ க்ருஹத்தில் இருந்தவர்கள் அசரீரியாக ஒரு வாக்கை கேட்டனர். ‘ தாய் தாங்குவாள், மகன் எந்த புருஷனிடம் தோன்றினானோ அவன் தான் தந்தை. துஷ்யந்தா! உன் மகன் தான், ஏற்றுக் கொள், சகுந்தலையை தவறாக நினைக்காதே, அது அவளுக்கு அவமானம். காலம் சென்ற உன் வம்சத்து முன்னோர்கள் ஆசியால் புத்திரர்கள் பிறக்கின்றனர். நீ தான் அவளுக்கு கர்பத்தை அளித்தவன். சகுந்தலா சொன்னது சத்யமே”
அதன் பின் துஷ்யந்தன் மகனை ஏற்றுக் கொண்டான். தந்தைக்கு பின் பரதன் அரசனாக, சக்ரவர்த்தியாக ஆனான். அவன் புகழ் உலகில் பரவியது. ஹரியின் அம்சம் என்றனர். அவன் வலது கையில் சக்கரமும், பத்ம கோசம் அவன் பாதங்களிலும் இருக்கக் கண்டனர். ப்ரஜைகளும் மந்திரிகளுமாக அவனுக்கு பட்டாபிஷேகம் விமரிசையாக செய்வித்தனர். ஐந்து ஐநூறு- குதிரைகளுடன் அஸ்வ மேத யாகம் கங்கைக் கரையில், அதே போல யமுனைக் கரையில் என்று பல யாகங்கள் செய்தான். மேலும் பல சப்ததி மேத்ய என்ற அஸ்வங்கள் வசு என்ற தேவன் கொடுத்தான். அவைகளையும் பசுக்களையும் தேவையானவர்களுக்கு, அந்தணர்களுக்கு தானமாக கொடுத்தான்.
மற்ற அரசர்கள் அதிசயமாக எண்ணும்படி, மேலும் பல அஸ்வங்களை வெற்றி பெற்றுக் கொண்டு வந்தான். தேவ மாயை என்றனர். துஷ்யந்தன் மகன் மாயை அறிந்தவன், மிகப் பெரிய அதிசயங்களை செய்வான், வீரன் அவன் என்று பலவாறாக மக்களால் போற்றப் பட்டான். எதிரிகளை ஜயித்து, அவர்களிடம் கைப் பற்றிய வெண்மையான பற்களையுடைய மிருகங்கள், கருப்பு மான்கள், இவைகளை தானம் செய்தான். அவன் புஜ பலத்தை வியந்தனர். இதுவரை இப்படி எந்த அரசனும் இருந்ததில்லை, எவரும் பிறக்கப் போவதுமில்லை என்றனர். கிராதர்கள், ஹூனர்கள், யவனர்கள், ஆந்த்ரான், கங்கான், खशान् கசான் ,च्छ्का:, म्लेच्छार्, अब्रह्मण्यान्, ப்ராம்மணர்களை வெறுத்தவன், இவர்களை திக் விஜயம் செய்து போரிட்டு தோற்கடித்து, முழுவதுமாக அவர்களை தன் நாட்டிலிருந்து விரட்டி விட்டான். முன் ஒரு சமயம் அசுரர்கள் தேவர்களை தோற்கடித்து, தேவ ஸ்த்ரீகளை பாதாளத்தில் அடைந்து வைத்திருந்தனர். அவர்களை திரும்ப கொண்டு வந்து தேவர்களிடம் சேர்ப்பித்தான். அவன் ஆட்சியில் ப்ரஜைகள் வேண்டியதைப் பெற்றனர். இருபத்தேழாயிரம் ஆண்டுகள் பூமியில் திசைகள் தோறும் சுற்றி வந்தான். சக்ரவர்த்தியாக, லோக பாலனாக ஐஸ்வர்யம் நிரம்பியவனாக, தன் பதம்-கொள்கையிலிருந்து நழுவாதவனாக இருந்தான்.
விதர்ப ராஜனின் மூன்று பெண்கள் அவன் மனைவியரானார்கள். ஒவ்வொருவரும் தாங்கள் பெற்ற குழந்தைகளை அவனுக்கு சமமாக இல்லையென்பதால், தாங்களே அழித்து விட்டனர். (தன்னைப் போல இல்லை என்று அவன் மறுத்து விடுவானோ என்பதால்) இவ்வாறு வம்சமே இல்லாமல் போகவும் அவன் மருத், சோமன் இவர்களை குறித்து புத்ரனை வேண்டி யாகம் செய்தான்.
முன் ஒரு சமயம் ப்ருஹஸ்பதிக்கு ஒரு மகன் பிறந்தான். கண் தெரியாத குழந்தையாக பிறந்ததால் அந்த தமஸ் என்றனர். அதை தாயார் தியாகம் செய்து விட்டு போய் விட்டாள். மருத் கணங்கள் அதை வளர்த்தனர்.
தாயால் கைவிடப் பட்ட குழந்தை என்பதால், குழந்தையில்லாத பரதனுக்கு மருத் கணங்கள் கொடுத்தனர். விததன் என்று பெயரிட்டு தன் மகனாக ஏற்றுக் கொண்டான். பரத்வாஜர் எனவும் அழைக்கப் பட்டான்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தத்தில், இருபதாவது அத்யாயம்.)
அத்யாயம்-21
ஸ்ரீ சுகர் சொன்னார்: விததன் என்பவனுக்கு மன்யு, ப்ருஹத்க்ஷத்ரன், ஜயன் அதன் பின் மகா வீரனான நரன், கர்கன், சங்க்ருதி என்பவன் நரனுடைய மகன். குரு, ரந்தி தேவன், சங்க்ருதியின் புதல்வர்கள். ரந்தி தேவன் உலகில் புகழ் வாய்ந்தவனாக இருந்தான். ஏராளமான தனம், அதை தானம் செய்தே கரைத்தான். பசியோடு யார் வந்தாலும் இல்லையெனாமல் அன்னம் அளித்தான். கடைசியில் எதுவும் மீதியின்றி தானும் தன் குடும்பத்தினரும் வறுமையில் வாடும் படி செல்வம் அனைத்தும் கரைந்தது. நாற்பத்தெட்டு நாள் முழு பட்டினி. நீர் கூட குடிக்காமல் வாடினர். ஒரு நாள் காலை நெய் , கோதுமை கலந்து செய்த பாயசம் , குடிக்கத் தண்ணீர் இவை கிடைத்தன. குடும்பத்தோடு அமர்ந்து வெகு நாட்களுக்குப் பின் உணவைக் கண்டதால் ஆவலுடன் உண்ணத் தயாராக ஆயினர். அந்த சமயம் ஒரு ப்ராம்மணன் அங்கு வந்து சேர்ந்தான். அவனும் உணவை வேண்டியே வந்திருந்தான். தன்னிடம் இருந்த அன்னத்தை பகிர்ந்து அவனுக்கு ஒரு பங்கை ரந்தி தேவன் கொடுத்தான். அவனும் ஸ்ரீ ஹரியை தியானம் செய்து விட்டு அதை விரும்பிச் சாப்பிட்டான். அவன் அகன்றதும் ஒரு சூத்ரன் வந்தான். அவனும் கையேந்தி உணவை வேண்டினான். நேற்றிலிருந்து எதுவுமே கிடைக்கவில்லை என்றான். ராஜன்! எனக்கும் அன்னத்தைக் கொடுங்கள், என் வீட்டாரும் பசியோடு இருக்கிறார்கள் என்றான். மிதி இருந்த பாயசத்தை அவனுக்கு கொடுத்து விட்டான்.
அதன் பின் ஒரு நாயுடன் சைவன் ஒருவன் வந்தான். பசி என்று வந்தவன் ,ஸ்வப்ய: ஸ்வபதயே ஸ்ரீ ருத்ரம் – என்ற விபுவாக நினைத்து கொடுத்தான். (Svaanam- dog ) குடி நீர் மட்டும் தான் பாக்கி. அதையும் வந்தவன் கேட்டு வாங்கிக் கொண்டான். அவன் கெஞ்சி கேட்டதை கொடுத்த பின்னும் ரந்தி தேவன் இன்னமும் நிறைய கொடுக்கவில்லையே என்பது போல மனம் வருந்தி ஒரு பாடலைச் சொன்னான். ‘ஈஸ்வரனுக்கு சம மான அந்தஸ்து எனக்கு வேண்டாம். அஷ்ட லக்ஷ்மி எனும் எட்டு வித செல்வங்களும் சேர்ந்து அனுபவிக்க கிடைக்க வேண்டாம். மறு பிறவியில்லாத மோக்ஷமும் வேண்டாம். என்னிடம் கஷ்டம் என்று வருபவர்களின் கஷ்டத்தைத் தீர்க்க என்னிடம் வசதி இருக்க வேண்டும். என்னிடம் வந்து யாசித்து, கிடைக்காமல் வருத்தத்துடன் யாரும் திரும்பி போகக் கூடாது.
பசி தாகம், உடல் களைப்பு, சிரமம், தீனமான நிலை, கஷ்டங்கள், மேலும் மேலும் சோகமும், வருத்தமுமே இருந்து, மோகத்தாலும் வாடிய ஜீவனின் ஒரு எளிய ஜந்து இன்று என் கையால் நீர் பெற்று தாகம் தீரப் பெறட்டும். பாவம், இவன் தாகத்தால் உயிரை விட்டு விடுபவன் போல இருக்கிறான் என்று சொல்லி அந்த வேடனுக்கு தன்னிடம் இருந்த தண்ணீரை கொடுத்து விட்டான். உடனே பகவான் விஷ்ணுவின் மாயையால் மூவுலகத்துக்கும் தலைவர்களான, வரமளிக்கும் தெய்வங்கள், தங்களை வெளிப்படுத்திக் கொண்டனர். என்ன வரம் வேண்டுமோ கேள், என்றனர். அவனும் அவர்களை நமஸ்கரித்தான். பகவான் வாசுதேவனிடத்தில் பக்தியே வேண்டினான். என் மனம் என்றும் இப்படியே பர ப்ரும்மத்தில் லயிக்க வேண்டும் என்றான். இது போன்ற பசி தாகம் என்னை விட்டு விலகி விட்டன, இனி ஒரு பொழுதும் நான் உலக வாழ்க்கையில் வருந்த மாட்டேன். அதே போல என்னிடம் வருபவர்கள் பிணியையும் நான் தீர்க்க வேண்டும் என்றான்.
கனவு போன்ற வாழ்க்கை, என்று தெளிந்தவன் ஆனதால் பெரிதாக எதையும் கேட்டுப் பெறவும் இல்லை. அவனை அண்டியவர்களும் யோகிகளாக ஆனார்கள். நாராயண பராயணர்களாக வாழ்ந்தார்கள்.
கர்கர் என்பவருக்கு, சினி, அதன் பின் கார்க்யர் க்ஷத்திய தர்மத்தை விட்டு ப்ரும்மகுலம், அந்தணராக ஆனார். அவருக்கு துரித க்ஷயன், மஹா வீர்யன், அவனுக்கு த்ரய்யாருணி, கவி, புஷ்கராருணி என்ற இவர்களும் ப்ராம்மணர்களாக ஆனார்கள். ப்ருஹத் க்ஷத்ரஸ்ய மகன் ஹஸ்தி என்பவன். இவன் ஹஸ்தினாபுரம் என்ற நகரத்தை நிர்மாணித்தான். அஜமீடன், த்விமீடன், புருமீடன் , என்பவர்கள் ஹஸ்தியின் புதல்வர்கள். அஜமீடனின் வம்சத்தினர் ப்ரிய மேதா என்பவர்களும் அந்தணர்கள் ஆனார்கள். அஜமீடனின் மகன் ப்ருஹதிஷு, அவனுக்கு ப்ருஹத் தனு என்ற மகன். ப்ருஹத் காயன் என்பவன் அடுத்து, அவன் மகன் ஜயத்ரதன். ஜயத்ரதன் மகன் விசதன் என்பவன். அவனுக்கு சேனஜித் என்பவன் மகன். ருசிராஸ்வன், த்ருட ஹனு:, காஸ்யன் என்பார்கள் அவன் புதல்வர்கள். ருசிரன் மகன் அஸ்வசுதன், பாரன், ப்ருது சேனன் என்று அவன் மகன்.
பாரனுடைய தனயன் நீபன். அவனுக்கு நூறு புதல்வர்கள். அவன் க்ருத்வீ என்ற சுக கன்யாவிடம் ப்ரும்ம தத்தன் என்பவனை பெற்றான். அவனும் யோகியாக இருந்து கவி என்ற மனைவியிடம் விஷ்வக்சேனன் என்ற மகனைப் பெற்றான். இந்த விஷ்வக் சேனர் தான், ஜைகீஷருடைய உபதேசம் பெற்று, யோக தந்த்ரம் என்பதை செய்தார். உதக் ஸ்வனன் என்ற மகன், அவனுக்கு பல்லாதோ என்ற பார்ஹதீஷர்கள்.
யவீனரன் என்பவன் த்விமீடன் மகன், அவனுக்கு க்ருதிமான், அவன் மகன் சத்ய த்ருதி என்று புகழ் பெற்றான். அவனுக்கு த்ருட நேமி , சுபார்ஸ்வ க்ருத் என்று புதல்வர்கள். சுபார்ஸ்வனுடைய மகன் சுமதி, அவனுக்கு சன்னதிமான் என்பவன், க்ருதி, ஹிரண்ய நாபனிடமே, (பகவானிடமே) ஆறு வேதங்களையும் கற்றான். பரம யோகியானான். அத்யயனம் செய்ய விரும்புபவர்களுக்கு கற்றுக் கொடுத்தான். க்ருதியின் மகன் உக்ராயுதன். க்ஷம்யன் என்ற மகன், அவனுக்கு ரிபுஞ்ஜயன் மகன்.
அதன் பின் பஹுரதன் என்ற புர மீடனுக்கு சந்ததி இல்லை. நளினி என்பவளிடம் அஜமீடனுக்கு நீலன், சாந்தி என்று புதல்வர்கள். சாந்திக்கு சுசாந்தி, அவன் மகன் புருஜன், அதன் பின் அர்க்கன். அவன் மகன் பர்ம்யாஸ்வன் எனப்பட்டான். அவனுக்கு ஐவர் முத்கலர் என்பவர்கள். யவீனரன், ப்ருஹதிஷு, காம்பில்யன், சஞ்சயன் என்பவர்கள். அலம், இது போதும், இந்த ஐந்து மகன்களே போதும்- என்றதால் பஞ்சாலர்கள் எனப்பட்டனர்.
முத்கலன் என்பவனிடம் இருந்து ஒரு கோத்ரம் துவங்கியது மௌத்கல்யம் என்பர். மிதுன் முத்கலன் மகன், பர்ம்யாஸ்வன் மகன் திவோதாஸன், அவன் மகள் தான் அஹல்யா, கௌதமர் அவளை மணந்தார். அவர்களுக்கு சதானந்தர் பிறந்தார். சதானந்தரின் மகன் சத்ய த்ருதி, தனுர் வேத விசாரதன் என புகழப் பட்டான். அவன் மகன் சரத்வாம்சன். அவன் தான் நேரில் ஊர்வசியைக் கண்டவுடன், உணர்ச்சி மேலிட அவன் விந்து புல் படுக்கையில் விழுந்தது. அதில் ஒரு ஜோடி குழந்தைகள் பிறந்தன. அந்த வழியில் சென்ற சந்தனு, கருணையுடன் குழந்தைகளை எடுத்து வளர்த்தார். க்ருபன் என்று குமாரன், க்ருபி என்று கன்யா. இந்த க்ருபி தான் த்ரோணரை மணந்தாள்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தத்தில், இருபத்தோராவது அத்யாயம். )
அத்யாயம் – 22
மித்ரேயு திவோ தாசனின் மகன். அவன் மகன் ச்யவனன். அவனுக்கு சுதாஸ:, சஹதேவன், சோமகன், ஜந்து ஜன்ம க்ருத் என்பவர்கள் புதல்வர்கள். அவனுக்கு நூறு பிள்ளைகள். கடைசியாக மகன் ப்ருஷதன், இவன் மகன் தான் த்ருபதன். ப்ருஷதன் நிறைந்த சம்பத்துக்கள் உடையவனாக இருந்தான். த்ருபதன் மகள் த்ரௌபதி, த்ருஷ்த்யும்னன் என்ற மகன். த்ருஷ்த்யும்னன் மகன் த்ருஷ்டகேது, இவர்கள் பாஞ்சாலகர்கள் எனப்பட்டனர். அஜமீடனின் மகன். மற்ற மகன் ருக்ஷன், அவன் மகன் சர்வரணன். தபதி மகள் ஸூர்ய கன்யா என்பவளை மணந்தான். அவர்கள் மகன் குரு. அவன் தான் பின்னால் குருக்ஷேத்ர பதியானான். பரீக்ஷித், சுதனு, ஜஹ்னு,நிஷதாஸ்வ: என்று குருவின் புதல்வர்கள்.
சுதனு என்பவனின் மகன் சுஹோத்ரன். அடுத்து ச்யவனன். அதன் பின் மகள் க்ருதீ. வசு, அடுத்து, ப்ருஷ்ரதன் முதலானவர்கள். குஸாம்ப, மத்ஸ்ய,ப்ரத்யக்ர, சேதிபன் இவர்கள் சேதிபர்கள் எனப்பட்டனர். ப்ருஹத்ரதனுக்கு குஸாக்ரன், அவனுக்கு ருஷபன். சத்ய ஹிதனுக்கு புஷ்பவான், அவன் மகன் ஜஹ்னு. ப்ருஹத்ரதனின் மற்றொரு மனைவியிடம் பிறந்த குழந்தை இரு துண்டுகளாக நடுவில் பிளந்தது போலவும் தலை கீழாக இருப்பதைக் கண்டு, தாயார் அதை வீசி எறியவும், ஜரா என்பவள் அதை எடுத்து, சேர்த்து வைத்து ஜீவ,ஜீவ, பிழைத்துக் கொள் என்று சொல்லி, அதற்கு உயிர் வரச் செய்தாள். ஜராசந்தன் எனப் பெயர் வந்தது.
அதன் பின் சஹதேவன். சோமாபி, அவனிடம் ஸ்ருத ஸ்ரவா: என்பவர்கள். பரீக்ஷித்துக்கு சந்ததி இல்லை. சுரதன் மகன் ஜாஹ்னவன். அதன் பின் விதூரன் அவனுக்கு சார்வபௌமன் , ஜயஸேனன், அவன் மகன் ராதிகன், மற்றும் அயுதன். அடுத்து க்ரோதன், அவனுக்கு தேவாதிதி, ருஷ்யன் இருவர். ருஷ்யனுக்கு திலீபன், ப்ரதீபன் அவன் மகன்.
சந்தனு, பாஹ்லீக என்று இருவர். தேவாபி தந்தையின் ராஜ்யத்தில் விருப்பமில்லாதவனாக வனம் சென்றான். சந்தனு அரசன் ஆனான். அவன் முந்தைய ஜன்மத்தில் மஹாபிஷ எனப்பட்டான். எதைத் தொட்டாலும் வயது முதிர்ந்தவை இளமையாகும் என்பது அவனுடைய சிறப்பாக இருந்தது. அவன் ராஜ்யத்தில் தொடர்ந்து பன்னிரண்டு வருஷங்கள் மழை பெய்யவில்லை. சந்தனு பட்டத்துக்கு வந்ததும் மழை பொழிந்தது. எந்த ப்ரச்னையானாலும் அவன் பொறுமையாக தீர்த்து வைத்தான் என்பதால் சந்தனு எனப் பெயர். ப்ராம்மணர்களிடம் இந்த வறட்சி ஏன் வந்தது எனக் கேட்கவும் அவர்கள் உன் தமையன் வேத சாஸ்திரங்களில் நம்பிக்கை இல்லாமல் தன் போக்கில் இருந்தான். தவிர, தமையனிடம் அனுமதி பெறாமல் ராஜ்யத்தை ஏற்றுக் கொண்டாய், ஒரு விதத்தில் அது அபகரணம் என்ற குற்றம். வனத்தில் அவனை சந்தித்து அழைத்து வா என்றனர். தேவாபியோ, தன் போக்கில் இருந்தான். சந்தனு வனம் சென்று அழைத்த சமயம் அவன் யோக மார்கத்தில் ஈடுபட்டு கலாப க்ராமத்தில் இருந்தான். கலி முடிவில் ஸோம வம்சத்தில் திரும்ப க்ருத யுகம் ஆரம்பிக்கும்.
பால்ஹீகன் மகன் சோமதத்தன். அவனுக்கு, பூரி, பூரிஸ்ரவஸ் என்று மகன்கள். ஸலன், என்பவன் சந்தனுவுக்கு கங்கையில் பிறந்தவன், பின்னால் பீஷ்மர் ஆனார். சர்வ தர்மங்களும் அறிந்தவராக, மகா பாகவதனாக ஆனார். வீரன், படைத் தலைவர், பலராமனும் அவரை போற்றினான். சந்தனுவுக்கு சித்ராங்கதன் என்று ஒரு மகன். விசித்ர வீர்யன் என்பவன் இளையவன். சித்ராங்கதன் வினோதமான முறையில் கொல்லப் பட்டான். விசித்ர வீர்யனுக்கு பராசரர் மூலம் ஹரியின் அம்சமாக பிறந்த வேத குப்தன் க்ருஷ்ண த்வைபாயனன் என்று அழைக்கப்பட்டவர். பகவான் பாதராயணர் -வியாசர் என்பர். வேதத்தை வரிசைப் படுத்தி காத்தவன் என்பதால் சாக்ஷாத் பகவானின் அம்சம் என்பர். சர்வ வேத இதிஹாச சார பூதமான இந்த பாகவதத்தை படைத்து தன் மகனான எனக்கு கற்பித்தார். சாந்தமாக நான் இருந்ததும் விசேஷமான இந்த புராணத்தை நான் புரிந்து கொள்வேன் என்று நினைத்தாரோ.
விசித்ர வீர்யன், காசி ராஜாவின் புதல்விகள் இருவரை, சுயம்வரத்தில் அபகரித்துக் கொண்டு வந்து மணந்தான். அம்பிகா, அம்பாலிகா என்ற இருவர். அவர்களிடம் ஆசையுடன் இருந்தவன் தன் வியாதியால் மறைந்தான். ப்ரஜைகள் இல்லாத அரச வம்சத்தைக் காப்பாற்ற, அந்த அரச குமாரிகள் க்ஷேத்ரமாக இருக்க பாதராயணி த்ருதராஷ்ட்ரன், பாண்டு, விதுரன் என்ற மூவரையும் பிறக்கச் செய்தார். காந்தாரியிடம் த்ருத ராஷ்டிரன் நூறு புதல்வர்களை பெற்றாள், துரியோதனன் மூத்தவன். து:சலா என்ற ஒருபெண் மகவு.
சாபத்தினால் தாம்பத்யம் மறுக்கப் பட்ட பாண்டுவுக்கு, குந்தியிடம் மஹாரதிகளான புதல்வர்கள், தர்ம, வாயு, இந்திரன் இவர்களிடம் யுதிஷ்டிரன், முதலான மூவர். நகுல சகதேவர்கள் மாத்ரி புதல்வர்கள். த்ரௌபதியிடம் யுதிஷ்டிரனுக்கு ப்ரதி வந்த்யன், ஸ்ருதசேனன் வ்ருகோதரனுக்கு, ஸ்ருத கீர்தி அர்ஜுனன் மகன், சதானீகன் என்பவன் நகுலனுக்கும், சஹ தேவன் மகன் ஸ்ருத கர்மா என்பவன். யுதிஷ்டிரனுக்கு பௌரவி என்பவளிடம் தேவகன், பீமன் இடும்பி தம்பதிக்கு கடோத்கஜன், சஹதேவன்-விஜயா இவர்களுக்கு சுஹோத்ரன், பார்வதி, நகுலன்-கரேணுமதி இவர்களுக்கு நரமித்ரன், அர்ஜுனன்- உலுபி – இவர்களுக்கு இராவதன், பப்ரு வாஹனன், மணிபூர தேசத்தில் பிறந்தான். உன் தந்தை அபிமன்யு சுபத்ரா விடம் பிறந்தவன். அவன் அதிரதன் எனப் புகழ் பெற்றான். அபிமன்யு-உத்தரா தம்பதிகள் தான் உன் பெற்றோர்.
குரு வீரர்கள் தோற்ற பின், துரோணர் மகன் ப்ரும்மாஸ்திரத்தால் அடித்த பொழுது உன்னை ஸ்ரீ க்ருஷ்ணன் காப்பாற்றினார். உன் தனயன் ஜனமேஜயன் முதலானோர், ஸ்ருத சேன, பீமசேன, உக்ரசேன, இவர்களும் வீரர்கள். தக்ஷகன் கடித்து உன் மரணம் சம்பவிக்கும். அதை நினைத்து அவர் சர்ப்ப யக்ஞம் செய்வான். ப்ரும்மா அவனுக்கு நல் புத்தி சொல்லி தடுத்து அஸ்வ மேத யாகம் செய்ய வைப்பார். அவன் உலகங்களை ஜயித்து பல யாகங்கள் செய்வான். அவன் மகன் சதானீகன், யாக்ஞ வல்க்யரிடம் வேதங்கள் அத்யயனம் செய்து, அஸ்த்ரங்கள் மற்றும் க்ரியா பற்றிய ஞானம் சௌனகரிடம் பெறுவான்.
அவன் மகன் சஹஸ்ராணிகன், அஸ்வமேதம் செய்து பிறப்பான். அசீம க்ருஷ்ணன், நேமி சக்ரன் என்ற புதல்வர்களைப் பெறுவான். கஜாஹ்வயம் என்ற இடத்தில், கௌசாம்பி நதிக் கரையில், வசிப்பார்கள். சித்ர ரதன், அவனுக்கு கவிரதன் என்று புதல்வர்கள் என்று கேள்வி. அவனுக்கு வ்ருஷ்டிமான், சுஷேணன் என்பவன் மஹீபதியாவான். சுனீதன் என்று அவன் மகன் அடுத்து ந்ருசக்ஷு என்பவன். அவன் மகன் பரிப்லானன், அவனுக்கு மேதாவி, சுனயன், ந்ருபஞ்சயன் என புதல்வர்கள், அதன் பின் அவனுக்கு தூர்வஸ்திமி பிறப்பான்.
திமி என்பவனுக்கு ப்ருஹத்ரதன், அவனுக்கு சதானீகன், சுதாஸ மகன், சதானீகனுக்கு துர்தமன், அவன் மகன் மஹீனரன். தண்டபாணி, நிமி என புதல்வர்கள். அவனுக்கு க்ஷேமகன். ப்ருஹ்ம க்ஷத்ரனுக்கு தேவ ரிஷியின் ஆசியால் வம்சம் வளரும். க்ஷேமகனை அடைந்து கலி காலத்தில் , ராஜ வம்சம் நிலை பெறும்.
அதன் பின் மகத வம்சத்தினர், ஆள்வார்கள். அது பற்றிச் சொல்கிறேன். சஹதேவனுக்கு, மார்ஜாரியிடம் ஸ்ருத ஸ்ரவன் முதலானோர். அயுதாயுதன், அவனுக்கு நிரமித்ரன், அவனுக்கு சுனக்ஷத்ர:, அவனுக்கு ப்ருஷத் சேனன், அவனுக்கு கர்மஜித், சுதஞ்சயன் என்பவனுக்கு விப்ரன், சுசி என்பவர்கள் தோன்றுவார்கள். க்ஷேமன் என்பவனுக்கு சுவ்ரதன், அவனுக்கு தர்மசூத்ரன், சமன் என்பவர்கள். த்யுமத்சேனன், சுமதி, சுபலன் என்று புதல்வர்கள் பிறப்பார்கள். சுனீதன், சத்ஜித், விஸ்வஜித், ரிபுஞ்சயன், பார்ஹத்ரதன், இவர்கள் அரசர்களாக பல ஆயிரம் வருடங்கள் ஆட்சி செய்வார்கள்.
இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தத்தில், இருபத்திரண்டாவது அத்யாயம்)
அத்யாயம்-23
ஸ்ரீ சுகர் சொன்னார்: அனோ என்பவனுக்கு சபா நரன், சக்ஷு, பரோக்ஷன் என்று மூவர். சபா நரனுக்கு கால நரன், ஸ்ருஞ்ஜயன் அவன் மகன். அவன் மகன் ஜனமே ஜயன், அவன் மகன் மஹா சீலன், மகா மனா:- பெருந்தன்மையானவன் எனப் பட்டான். அவனுக்கு உஸீனரன், திதிக்ஷு, என்று இரண்டு புதல்வர்கள். சிபி:, வனன், ஸமி, தக்ஷன் என அவன் புதல்வர்கள் நால்வர். ஊசீனரனின் மகன் கள், வ்ருஷாதர்பன், சுவீரன், மத்ரன், கைகய என்று அவன் புதல்வர்கள்.
சிபிக்கும் புதல்வர்கள் நால்வர், திதிக்ஷுவுக்கு ருஷத்ரதன், ஹேமன், சுதபா, எனப்படுவர். சுதபஸ் என்பவனின் மகன் பலி. அங்க வங்க கலிங்க, சுத்ம, புண்ட்ர, ஆந்த்ர என்ற பெயருடன் தீர்க தமஸ் புதல்வர்கள் பலியின் க்ஷேத்ரத்தில் அரசர்கள் ஆனார்கள். அவர்கள் பெயரே இந்த ஆறு ராஜ்யங்களின் பெயரும் ஆயிற்று. தங்கள் ராஜ்யங்களை ஆள்பவர்களாக கிழக்கு திசையில் இருந்தனர். கனபானன் அங்கதன் என்பவனை பெற்றான். அவனுக்கு த்விரதன், அவன் மகன் தர்மரதன், அவன் மகன் சித்ர ரதன், இவனுக்கு ப்ரஜைகள் இல்லை. ரோம பாதன் என்ற பெயர் பெற்ற அரசன், தசரதனுடைய சகா. சாந்தா என்ற தன் மகளை, ருஷ்யஸ்ருங்கருக்கு கொடுத்தான். தேவர்கள் மழை பொழியாமல் விட்ட பொழுது, அவள் அவரை அழைத்து வந்தாள். ஹரிணி சுதன் என்று அவருக்கு மற்றொரு பெயர். நாட்டியம், சங்கீதம் வாத்யங்கள், அணைத்து உபசாரங்கள் செய்தும் ஊருக்குள் அழைத்து வந்தனர். அவர் ஊருக்குள் நுழைந்ததுமே மழை கொட்டியது. மருத் என்ற தேவனைக் குறித்து யாகம் செய்து புத்திரன் இல்லாத அரசன் தசரதனுக்கு புதல்வர்கள் கிடைக்கச் செய்தார்.
ரோமபாதருடைய மகன் சதுரங்கன். ப்ருதுலாக்ஷன் அவன் மகன். ப்ருஹத்ரதன், ப்ருஹத்கர்மா, ப்ருஹத்பானு என்று அவன் புதல்வர்கள். ஆதியில் ப்ருஹத்மான் என்ற பெயருடன் ஜயத்ரதன் பற்றிச் சொன்னோம். விஜயன் தனது சம்பீதி என்ற மனைவியிடம் த்ருதி என்ற மகனைப் பெற்றான். த்ருத வர்மா, அவனுக்கு சத்கர்மா, அதிரதன். இந்த அதிரதன் தான் கங்கைக் கரையில் புதருக்குள் கிடந்த குந்தியின் புத்திரனை தன் மகனாக வளர்த்தான். அவனுக்கு ப்ரஜைகள் இல்லை. கர்ணன் என்று ஜகத்பதியானான். அவன் மகன் வ்ருஷ சேனன்.
த்ருஹ்யனின் தனயன் பப்ரு என்பவன். அவன் மகன் சேது, ஆரப்தன் என்பவன் அவன் மகன். காந்தாரன் அவன் மகன். தர்மன், த்ருதன் என்று அடுத்து வந்தவர்கள். த்ருதனுக்கு துர்மதன். அவனுக்கு ப்ரசேதஸ். ப்ராசேதர்கள் நூறு பேர். ம்லேச்சாதிபதிகள் என்று வடக்கு திசையை ஆக்ரமித்து கொண்டனர். துர்வசு மகன் வஹ்னி. அவன் மகன் பர்கன், பானுமான் என்பவர்கள். த்ரிபானு என்பவன் அவன் மகன். அவன் மகன் கரந்தமன் என்பவன் உதார குணம் படைத்தவன். அவன் மகன் மருதன், அவனுக்கு சந்ததி இல்லை. துஷ்யந்தனை அவன் பௌரவன் – புரு வம்சத்தினன் என்பதால் தத்து எடுத்துக் கொண்டான். துஷ்யந்தன் என்ற அந்த மகன் மூலம் அவன் ராஜ்யம் வளர்ந்தது. யயாதியின் ஜ்யேஷ்ட புத்ரன் யது, அவன் வம்சம் பற்றிச் சொல்கிறேன். அந்த வம்சம் பகவான் அவதரித்ததால் பெருமை பெற்றது.
யதுவின் புதல்வர்கள் நால்வர். சஹஸ்ரஜித், க்ரோஷ்டா, நேத்ரன், நலன், ரிபு என்றழைக்கப் பட்டனர். சஹஸ்ர ஜித்தின் மகன்கள், சத்ஜித் முதல்வன், மஹாஹயன், வேணுஹயன், ஹைஹயன் என்பர். தர்மன் என்பவன் ஹைஹயனின் மகன். நேத்ரனின் மகன் குந்தன். சோஹஞ்ஜி என்பவன் குந்தனின் மகன், மற்றும் மஹிஷ்மான், பத்ர சேனகன். துர்மதன் பத்ர சேனனின் மகன், க்ருத வீர்யனின் மகன் தனகன். க்ரிதாக்னி, க்ருத வர்மா, க்ருதௌஜா தனகனின் புதல்வர்கள். க்ருதவீர்யனுடைய மகன் அர்ஜுனன். அவன் சப்த த்வீபத்துக்கும் அதிபதியானான். ஸ்ரீ ஹரியின் அம்சமான தத்தாத்ரேயரின் அனுக்ரஹம் பெற்றவன். யோகங்கள் அறிந்தவன். குணவானாக இருந்தவன். அவனைப் போல எந்த அரசனும் யாகங்கள் செய்தோ, தானங்களோ, தவமோ, யோகமோ, செய்ததில்லை. மற்ற ஸ்ருத வீர்யர்கள் யாராலும் அந்த அளவு புகழ் பெறவில்லை. எண்பத்து ஐந்து ஆயிரம் ஹவ்யம் – யாகத்தில் தேவர்களுக்கு தருவது- கொடுத்து அளவற்ற பலம் பெற்றான். அவன் செல்வம் குறையவே குறையாது என்பது போல என்றும் நிரம்பியிருந்தது. ஆறு விதமான போகங்களையும் குறைவற அனுபவித்தான். அவனுக்கு ஆயிரம் புதல்வர்கள். அவர்களில் ஐந்து பேர் ஜயத்வஜ: ஸூர சேனன், வ்ருஷபன், மது, ஊர்ஜித: மட்டுமே பிழைத்தனர். பார்கவ ராமனால் மற்றவர்கள் உயிரிழந்தார்கள் என்பதாக.
ஜயத்வஜன் மகன் தாள ஜங்கன், அவனுக்கு நூறு புதல்வர்கள். க்ஷத்ர தர்மம், இவர்களின் வரவால் புத்துயிர் பெற்றது. அவர்களில் மூத்தவன் வீதி ஹோத்ரன், வ்ருஷ்ணி மதுவின் மகன். இவனுக்கும் நூறு புதல்வர்கள். இவர்களின் கோத்ரம் வ்ருஷ்ணியில் தொடங்கியது. மாதவர்கள்-மதுவின் வம்சத்தினரும் வ்ருஷ்ணிகளே. யாதவர்கள் என்றும் சொல்லப் படுவர். க்ரோஷ்டன் என்பவனின்மகன் வ்ருஜினவான் எனப்பட்டான்.
ஸ்வாஹி, ருஸிகு, சித்ரரதன், சஸ பிந்து, மஹாயோகி, மஹாபோஜன் – இவர்களில் மகா போஜன் ப்ரசித்தி பெற்றான். பதினான்கு மஹா ரத்னங்கள் உடையவனாக சக்ரவர்த்தியானான். (கஜ,வாஜி, ரத,ஸ்த்ரீ,புருஷன், நிதி, மாலாம்பர த்ருமா:, சக்தி, பாச, மணி,சத்ர, விமானம்)ஆயிரம் பத்னிகள். பத்து பேர் மட்டுமே ஏராளமான புதல்வர்களைப் பெற்றனர். அவர்களில் ஆறு பேர் ப்ரதானமாக இருந்தனர். ப்ருதுஸ்ரவஸன் என்பவனின் வம்சம்.
தர்மன் என்பவனுக்கு உசனா , அவன் நூறு ஹயமேதங்கள் செய்தான். அவன் மகன் ருசகன். அவனுக்கு அறுபத்தைந்து புதல்வர்கள். புருஜித், ருக்ம என்பவர்கள் ப்ரதானமாக இருந்தனர். அவர்களின் ஜ்யாமகன் என்பவனுக்கு ப்ரஜைகள் இல்லை. அதனால் போஜ கன்யாவை தத்து எடுத்துக் கொண்டு வந்தான். ரதத்தில் அவளைப் பார்த்த மற்றொரு மனைவி சைப்யா என்பவள், கோபத்துடன் யார் இது, என் ஸ்தானத்தில் கொண்டு வந்திருக்கிறாய் என்று அதட்டவும் சமயோசிதமாக உனக்கு மருமகளாக இருப்பாள் என்று சமாளித்தான். அது எப்படி, நானோ மலடி, சபத்னியும் இல்லை, எனக்கு எப்படி மருமகள் வருவாள் என்றாள். அரசன், ராணியே, உனக்கும் மகன் பிறப்பான். என்றான். அவனுக்கு இவள் மனைவியாவாள். விஸ்வே தேவர்கள் அந்த நேரத்தில் அவன் சொன்னதை அனுமோதித்தார்கள். அதனால் சைப்யா கர்பம் தரித்து, மகனைப் பெற்றாள். அவன் விதர்பன் எனப்பட்டான். அவன் போஜ கன்யாவை மணந்து தந்தையின் வாக்கு படி மருமகளாக ஆக்கினான்.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தத்தில், இருபத்து மூன்றாவது அத்யாயம்.)
அத்யாயம்-24
ஸ்ரீ சுகர் சொன்னார்: அந்த பெண்ணிடம் விதர்பன் இரு புதல்வர்களைப் பெற்றான். குசன்.க்ரது எனப்படுவர். மூன்றாவதாக ரோம பாதன். இவன் விதர்ப குல நந்தனனாக ஆனான். ரோமபாதனின் மகன் பப்ரூ. பப்ருவுக்கு க்ருதி என்ற மகன். அவன் மகன் உசிகன். அவனிடம் சேதி, அவன் வம்சத்தினர் சைத்யா: எனப்பட்டனர்.
க்ரது என்பவனுக்கு குந்தி, மகன் த்ருஷ்டி, அவனுக்கு நிர்வ்ருத்தி. அதன் பின் தசார்ஹன், அவனுக்கு வ்யோமன் என்பவன் மகன். மற்றும் ஜீமூதன், அவனுக்கு விக்ருதி, விக்ருதி மகன் பீமரதன். கரம்பி என்பவன் சகுனியின் மகன். தேவராதன் அவன் மகன். தேவ க்ஷத்ரன் அவன் மகன். அவனுடைய மகன் மது:, குருவசன் என்பவனின் மகன் அனு:. புருஹோத்ரன் என்பவன் அணு என்பவனின் மகன். அவனுக்கு ஆயு, சாத்வதன், பஜமானன், பஜி, திவ்யன், வ்ருஷ்ணி, தேவாவ்ருதனுக்கு அந்தகன். (अन्धक:)
சாத்வதனின் மகன் கள்: ஏழு பேர். மஹா போஜனுக்கு மாரிஷன், பஜமனுக்கு நிம்லோசி:, கிங்கின, த்ருஷ்டி. என்பவர்கள். இது ஒரு மனைவியிடம். மற்றொரு மனைவியிடம் மூவர். சதாஜித், சஹஸ்ராஜித், அயுதாஜித் என்பர்.
பப்ரு தேவாவ்ருதனின் மகன். இவர்களைப் பற்றி ஒரு சொல்லாடல் உண்டு. ‘ தூரத்தில் இருந்து எப்படி கேட்கிறோமோ, அதே போல அருகிலும் காண்போம்’ என்பதாக. பப்ரு மனிதர்களில் ஸ்ரேஷ்டன் எனப் பெயர் பெற்றான். தேவாவ்ருதன், தேவர்களுக்கு சமமாக இருந்தான். இவர்கள் வம்சத்தினர் அறுபத்தைந்துஆயிரம், அதன் பின்னும் ஆறாயிரம் அம்ருதத்வம்- மரணமில்லாத தன்மையை அடைந்தனர்.
மஹாபோஜன் தர்மாத்மா. அவன் வம்சத்தினர் போஜா எனப்பட்டனர். விஷ்ணுவின் மகன் சுமித்ரன், யுதாஜித் யுதாஜித் மகன் சினி, அவனுக்கு அனமித்ரன், அவனுக்கு நிம்னன். சத்ராஜித்துக்கு ப்ரசேனன், நிம்னனுக்கு ஆப்யாயசது:. அனமிதனின் மற்றொரு மகன் சினி, அவனுக்கு சத்யகன். யுயுதான:, சத்யகி அவன் மகன் சாத்யகி. அவனுக்கு ஜயன், அவனுக்கு குணி, யுகந்தரன், அனமிதனின் மகன், விஷ்ணி; என்ற மற்றொரு மகன்.
ஸ்வாபல்கன், சித்ர ரதன், காந்தினீ என்பவளிடம் பிறந்தனர். அக்ரூரர் முதலான பன்னிரண்டு பேர் புகழ் பெற்றனர். ஆசங்கன், சாரமேயன், ம்ருதுரன், ம்ருதுவித்கிரி, தர்மவ்ருத்தன், சுகர்மா, க்ஷேத்ர, உபேக்ஷோ அரி மர்தனன். சத்ருக்னன், கந்தமாதன், ப்ரதிபாஹு என்று பன்னிரெண்டு பேர். அவர்கள் சகோதரி சுசீரா என்பவள். அக்ரூரருக்கு தேவவான், உபதேவன் எனபவர்கள் சித்ர ரதாவின் மகன்கள். ப்ருது, விதூரதன் ஆத்யா என்று வ்ருஷ்ணி வம்சத்தினர் பலர். குகரன், பஜமானன், சுசி, கம்பல பர்ஹி என்பவன் மக்கள். குகரன் மகன் வஹ்னி. அவன் தனயன் விலோமன். கபோதரோமா என்பவனுக்கு அனு: அவன் தும்புருவின் சகா. அந்தகனுக்கு துந்துபி.அவனுக்கு அவித்யோதன், புனர்வசு என்பவர்கள். அவனுக்கு ஆஹுகீ என்ற மகள். வைவாஹுகா , தேவகன், உக்ரசேனன், என்று நால்வர் தேவகன் மக்கள்.
தேவன், உபதேவன், சுதேவன், தேவ வர்தனன், அவர்களுக்கு ஏழு சகோதரிகள். த்ருததேவா, சாந்தி தேவா, உப தேவா, ஸ்ரீ தேவா, தேவ ரக்ஷிதா, சஹதேவா, தேவகீ முதலானோர். தேவகியை வசுதேவர் மணந்தார்.
கம்சன், சுனாமன், ந்யக்ரோத:, கங்கன், சங்கு, சுஹூ, ராஷ்டபாலன், ஸ்ருஷ்டி, துஷி, மானா, உக்ர சேனர் புதல்வர்கள். கம்சா, கம்சவதி, கங்கா, ஸுர்பூ, ராஷ்ட்ரபாலிகா, உக்ரசேனரின் பெண்கள், வசுதேவருடைய சகோதரிகள்.
ஸூரன், விதூரதன் மகன். அவனுக்கு பஜமான என்ற மகன். அவனுக்கு சினி, அவனுக்கு போஜனே மகனாக ஹ்ருதீகன் அவன் மகன் என்பர். தேவ பாஹு, சத தனு:. க்ருத வர்மா என்று அவன் மக்கள். தேவமீடனின் மகன் ஸரன் என்பவனுக்கு மரீஷா என்பவள் பத்னியானாள். அவளிடம் பத்து பிள்ளைகள். அனைவரும் குணவான்களாக இருந்தனர். வசு தேவன் தேவ பாகம், தேவ ஸ்ரவ, சமானக, ஸ்ருன்ஞ்சய ஸ்யாமக, கங்க, ஸமீக, வத்சக, வ்ருக, என்பவர்கள். வசுதேவன் பிறந்த பொழுது தேவதுந்துபி முழங்கியது என்பதால் வசுதேவர் ஆனக துந்துபி எனப்பட்டார்.
ஆனக துந்துபியான வசுதேவர் ஸ்ரீ ஹரியின் ஸ்தானமாக சொல்வர். ப்ருதா, ஸ்ருத தேவா, ஸ்ருத கீர்தி, ஸ்ருத ஸ்ரவா: ராஜாதி தேவீ, என்று சகோதரிகள் ஐவர். குந்தனின் சகாவின் சிறிய தந்தை ஸூரன், அவனுக்கு சந்ததி இல்லை என்பதால் ப்ருதாவை தத்து கொடுத்தார்.
துர்வாசர் ஒருசமயம் அவளிடம் மகிழ்ந்து பரிசாக தேவஹூதீ -தேவனை அழைக்கும் மந்திரம்- என்ற வித்யையை கொடுத்தார். அதனுடைய வீர்யத்தை பரீக்ஷை செய்ய முயன்றவள், ஸூரியனைப் பார்த்து வா என்றழைத்தாள். உடனே வந்து விட்ட தேவனைக் கண்டு அதிசயித்தவள், எனக்கு நம்பிக்கை வர ப்ரயோகித்தேன், மன்னித்து விடுங்கள் தயவு செய்து போங்கள் எனவும், என் தரிசனம் அமோகமானது தேவி. உன்னிடத்தில் என் மகனை ஸ்தாபிக்கிறேன். உன் யோனியும் அதனால் களங்கமாகாது. நான் பொறுப்பு, சுமத்யமே! அழகிய பெண்ணே! பயப்படாதே என்று சொல்லி அவள் உடலில் கர்பத்தைக் கொடுத்து விட்டு ஸூரியன் தேவ லோகம் சென்று விட்டான். உடனேயே ஸுரியனுக்கு சமமான ப்ரகாசமான மகனும் பிறந்து விட்டான்.
லோகாபவாதத்துக்கு பயந்து அந்த குழந்தையை நதி தீரத்தில் விட்டு விட்டாள். உன் பாட்டனார் பாண்டு அவளை மணந்தார்.
ஸ்ருததேவன் என்பவன் காரூஷன் மகளான வ்ருத்த சர்மா, என்பவளை மணந்தார். அவளுக்கு தந்தவக்த்ரன் பிறந்தான். அவன் திதியின் மகன், ரிஷியினால் சபிக்கப் பட்ட வைகுண்ட காவலரில் ஒருவன்.
கைகேயனுக்கு த்ருத கேது, அவனுக்கு ஸ்ருத கீர்த்தி, சந்தர்தநா என்ற இருவர். சந்தர்தனா என்பவளிடம் பிறந்த ஐவர், கைகயா: எனப்பட்டனர்.
ராஜாதிதேவி என்பவளிடம் அவந்தி ராஜனிடம் ஜயசேனன், அஜனிஷ்ட என்பவர்கள் பிறந்தனர். தமகோஷன் என்ற சேதி ராஜன் ஸ்ருத ஸ்ரவஸா என்பவளிடம் சிசுபாலனைப் பெற்றான். தேவ பாகன் கம்சா என்பவளிடம் , சித்ரகேதுவிடம் ப்ருஹத்பல என்பவர்களையும் கம்சவதி என்பவளிடம் தேவ ஸ்ரவஸ் சுவீர, இஷுமான் என்ற புதல்வர்கள். கங்கா (कन्ङ्गा) என்பவளிடம் ஆனகருக்கு பிறத்தவன் சத்ய ஜித், புருஜித் இருவரும்.
ராஷ்ட்ர பாலீ என்பவளிடம் ஸ்ருன்ஞ்சயன், வ்ருஷ, துர்மர்ஷ்ண, ஹரி கேச, ஹிரண்யாக்ஷ என்பவர்கள், ஸூரபூமி என்பவளிடம் ஸ்யாமகன். மிஸ்ர கேசி என்ற அப்சரசிடம், வ்ருக முதலானோர், வத்சகன் என்பவர்கள், தக்ஷ, புஷ்கர ஸாலா என்பவர்கள், துர்வார்க்ஷீ என்பவளிடம் வ்ருகனுக்கு பிறந்தனர்.
சுமித்ரா, அர்ஜுன பாலன் இருவர்களையும் ஸமீகா என்பவளிடம், சுதாமினீ கங்க இருவரும் கர்ணிகாவிடம் ருத தாம, ஜயா இருவரும். பௌரவீ, ரோஹிணீ, பத்ரா, மதிரா, ரோசனா, இலா, தேவகீ முதலானவர்கள், ஆனக துந்துபியின் மனைவிகள். பலம், கதம், சாரணம் , துர்மதம், விபுலம், த்ருவம் இவர்கள் வசுதேவருக்கு ரோஹிணியிடம் பிறந்தனர். மற்றும் க்ருத முதலானோர்.
சுபத்ரோ, பத்ர வாஹன், துர்மதன், பத்ரன், பௌரவ்யா என்பவளின் தனயர்கள். பூதாதி முதலான பன்னிரண்டு பேர்.
நந்த, உப நந்த, க்ருதக. ஸூரன் முதலானோர், மதிராவின் புதல்வர்கள். கோசல தேசத்து பத்ரா – கௌசல்யா என்ற வசுதேவரின் மனைவி குல நந்தனனாக கேசீ என்ற ஒரே ஒரு மகனைப் பெற்றாள்.
ரோசனா என்பவளிடம் ஹஸ்த ஹேமாங்கதன் முதலானோர். இளா என்பவளிடம் உரு வல்க முதலானோர், இவர்கள் அனைவரும் யது குலத்தில் முக்கியமானவர்கள்.
விப்ருஷ்டன் த்ருத தேவா என்பவளிடம், ஆனக துந்துபி சாந்திதேவா என்பவளிடமும், ஸ்ருத ப்ரதிசுத முதலானோர்.
அரசர்கள், கல்மவர்ஷ முதலானோர், உப தேவன் என்பவனின் மக்கள் பத்து பேர். வசுஹம்ஸ, சுவம்ஸன் முதலானோர், ஸ்ரீதேவா என்பவளிடம் ஆறு புதல்வர்கள்.
தேவ ரக்ஷிதா என்பவளிடம் ஒன்பது, கगदन्தன் முதலானோர், சஹதேவா என்பவளிடம் எட்டு குழந்தைகள்.
புரு விஸ்ருத முக்ய என்பவர்கள் வசுக்கள் போல சாக்ஷாத் தர்மமே உருவாக இருப்பது போல இருந்தனர்.
வசுதேவர், தேவகியிடம் எட்டு குழந்தைகளைப் பெற்றார். கீர்த்திமான், சுஷேணன், பத்ர சேநன், உதாரதீ:, ருஜு, சம்மர்தனன், பத்ரன், சங்கர்ஷணன்- இவனும் பகவானின் அம்சமாக பிறந்தவன். எட்டாவது மகனாக ஸ்ரீ ஹரி தானே அவதரித்தான். சுபத்ரா, உன் தந்தை வழி உறவினள், அத்தை அவளும் ஸ்ரீஹரியின் அம்சமே.
யதா யதா இஹ தர்மஸ்ய க்ஷயோ, வ்ருத்திஸ்ச பாப்மன: | ததா து பகவானீஸ, ஆத்மானம் ஸ்ருஜதே ஹரி: ||
இவருடைய அவதாரத்துக்கு காரணம் தேவையில்லை. இவர் செயல்களுக்கும் அதே போல எதுவும் காரணமல்ல. ஆத்ம மாயா என்பது தவிர, பகவானின், தன்னையறிந்த அறிஞர்களும் அவரிடம் எதையும் காண்பதில்லை. அவருடைய எந்த மாயை மனிதனை ஆட்டுவிக்கிறதோ, ஸ்திதி, உத்பத்தி, லயம் என்பதை சூழ்ந்து நிற்கிறதோ அதுவே அவர் அனுக்ரஹம். தன் விருப்பம் போல தன் மாயையால் ஆட்டுவிக்கிறார்.
அக்ஷௌஹிணீ கணக்கில் சேனைகள் உள்ள மாபெரும் அசுரர்கள், பூமி முழுவதையும் ஆக்ரமித்துக் கொண்டு, பாரம் மிகுந்ததாக செய்து கொண்டிருந்தனர். தேவர்கள் வேண்டிக் கொண்டதால், பல விதமான காரியங்களைச் செய்தார். சங்கர்ஷணனும் பகவான் மதுசூதனனே. கலி காலத்தில் பிறக்கப் போகும் துக்கம், சோகம் தாமசமான அறிவு இவற்றை அழிக்கவும், அனுக்ரஹம் செய்யவும் பக்தர்களுடைய நல்வினைப் பயனாக அவதரித்து புகழ் எய்தினார். எவருடைய காதுகளில், இவருடைய சரித்திரம் என்ற அம்ருதம் ஒரு முறை நிரம்பினாலும் , கைகள் அஞ்சலி செய்து, அவருடைய சரித்திரம் என்ற தீர்த்தத்தை ஸ்பர்சித்தாலும், வினைப் பயன்கள் அடியோடு நீங்கப் பெறுவர்.
போஜ, வ்ருஷ்ணி, அந்தக, மது, ஸூரசேன, தசார்ஹகர்கள், பாராட்டுக்குரியவர்கள் எப்பொழுதும் குரு, ஸ்ருன்ஞ்சய பாண்டு முதலானோர். பரிவுடன் மென் முறுவலுடன், கண்களால் கடாக்ஷித்தும், உதார வாக்யங்களால் விக்ரம லீலைகளால், மனித உலகில் ரசிக்கும் படி, மனம் மகிழ்ந்து இருக்கும் படி, தன் ஸ்வரூபத்தால், சர்வாங்கமும் அழகிய மூர்த்தியால் சுற்றி உள்ளவர்கள் ஆனந்தமாகவே இருக்கச் செய்தார்.
எவருடைய முகம் அழகிய கர்ண ஆபரணமான , மகர குண்டலங்களின் ஒளி கன்னங்களில் ப்ரதி பலிக்க,, அழகிய மனம் கவரும் மென் சிரிப்பு, நித்யோத்ஸ்வமாக காண்பவர்கள் கண்களால் பருகுவது போல கண்டும் திருப்தியே அடைவதில்லையோ, நாரிகளும், நரர்களும், மகிழ்ச்சியுடன் , தங்கள் இமைகளைத்தான் குற்றம் சொல்வர், இடை இடையே மறைக்கிறது என்பதால்.
பிறந்தவுடனேயே தந்தையின் இருப்பிடத்திலிருந்து வ்ரஜ தேசம் சென்றார். அங்கும் எதிரிகளை அழித்து, நூறு மகன்களையும், அனுகூலமான மனைவிகளையும் அவர்களைக் கொண்டு புருஷ க்ரது- யாகங்களைச் செய்வித்து, தன்னையும் தன் நிகமங்களையும் உலக மக்களிடையே ப்ரசித்தமாக பரவும் படி செய்தார்.
பூமியின் தாங்க முடியாத பெரும் பாரம், அதைக் குறைத்தார். குரு வம்சத்தில் கிளம்பிய கலியின் காரணமாக பெரும் யுத்தமும், அரசர்கள் கூட்டம் கூட்டமாக மடிவதையும், தன் அகக் கண்ணால் முன் கூட்டியே கண்டவர் போல, விஜயனுக்கு ஜயம் என்ற ஞானோபதேசம் செய்து, உத்தவருக்கு அருள் உபதேசம் செய்து தன் வைகுண்ட தாமம் திரும்ப வந்து சேர்ந்தார்.
( இதுவரை ஸ்ரீமத பாகவதத்தில், ஒன்பதாவது ஸ்கந்தத்தின் ஸ்ரீ ஸுர்ய, சோம,அனுவம்ச கீர்த்தனம் என்ற இருபத்து நான்காவது அத்யாயம்.)
|| ஒன்பதாவது ஸ்கந்தம் இத்துடன் நிறைவுறுகிறது ||
|| ஓம் தத் சத் ||
|| ஸ்ரீமத் பாகவதம் – மன்வந்தராதி சரிதம் என்ற எட்டாவது ஸ்கந்தம். ||
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||
அத்யாயம்-1
அரசன்பரீக்ஷித் வினவினான்: குரோ! இதுவரை ஸ்வாயம்புவ மனுவின் வம்சம் பற்றிச் சொன்னீர்கள். மற்ற மனு என்பவர்களும் உலகில் ஸ்ருஷ்டியை விஸ்தரிக்கவே வந்தவர்கள். அவர்களைப் பற்றிச் சொல்லுங்கள். ஸ்ரீ ஹரி தானே அவதாரம் செய்து பிறந்தான் என்றெல்லாம், கவிகள் பாடுகிறார்கள். ப்ரும்மன்! படைத்தவன் தானே ஏன் பிறக்கிறான்? என்ன இடைவெளியில் கடந்த காலத்தில் தோன்றினார்? தற்சமயம் ஸ்ரீ க்ருஷ்ணனாக வந்தது போல, வரும் காலத்திலும் பிறப்பாரா?
ரிஷி பதிலளித்தார்: ஸ்வயம்பு மனு தோன்றி பல பல காலம் ஆகி விட்டன. ஆறு கல்பங்கள் கடந்து வந்திருக்கிறோம். இது வரை நான் சொன்னது முதன் முதலில் தேவர்கள் பிறந்த சமயம் நடந்தவை. கபிலராக தர்ம, ஞான உபதேசம் செய்யப் பகவான் பிறந்தார். அது பற்றி சொல்லியிருக்கிறேன். ஸ்வாயம்புவ மனு தன் மனைவி ஆகூதியுடன் வனம் சென்றார். விரக்தியடைந்தவராக பல காலம் ஒற்றைக் காலில் நின்று தவம் செய்தார். அதைப் பற்றி பின்னால் சொல்கிறேன்.
மனு சொன்னார்: விஸ்வம்- உலகம் முழுவதையும் செயல் பட வைப்பவன் தூங்குவது போல விழித்திருக்கிறான். இதை உலகம் அறிவதில்லை. அறிந்தாலும் அவனை எழுப்ப முயலவில்லை, முயன்றாலும் அதன் சக்திக்கு அப்பாற்பட்டது. அவனை மீறி பூமியில் யாரும் எதையும் தானே உண்டாக்கவோ, உண்ணவோ முடியாது. அவனாக அளித்தால் மட்டுமே – எனவே ஈஸ்வரார்ப்பணம் என்று எண்ணி அனுபவியுங்கள். எங்கும் பரவியிருப்பவன் என்றால் ஏன் கண்களுக்கு புலப்படுவதில்லை? கண் பார்த்தாலும் அறிவுக்கு எட்டுவதில்லை. அறிவின் சக்தியை அளிப்பவனும் அவனே. ஸுரியனின் ஒளி கூட காட்டுவதில்லை. எனவே கருடாரூடனான அந்த பகவானை வணங்குவோம்.
ஆதி, மத்யம், அந்தம் என்று தானே வியாபித்து இருப்பவன், உள்ளோ, வெளியோ, விஸ்வத்தின் ரூபம் என்று நாம் நினைப்பதை, அவரிடமிருந்து வந்ததே என்பதை அறிவோம். விஸ்வமே சரீரமாக உடையவன். புரூஹூதன் எனும் ஈஸ்வரன். சத்யமானவன், ஸ்வயம் ஜோதி ஸ்வரூபமானவன், பிறவி என்பதே இல்லாத புராண புருஷன். ப்ரும்மாவை தன் சக்தியால் படைத்து, அந்த உ ருவத்துக்கு கல்வியை – வேதங்களை- அளித்து, செயல் பட விட்டு, தான் தள்ளி நிற்கிறான். அதன் பின் ரிஷிகள் கர்மாக்களை விவரித்தனர். இவ்வாறு ஒரு ஏற்பாட்டை செய்து விட்டு தானே ராம, க்ருஷ்ண முதலான அவதாரங்களில் நடத்தியும் காட்டும் பர ப்ரும்மத்தை வணங்குவோம்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இப்படி உபனிஷத் மந்த்ரங்களைச் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுதே, யாது தானர்கள் மற்றும் அசுரர்கள், அவரை அழிக்க வேகமாக வந்தனர். யக்ஞ ஸ்வரூபியான பகவான் அவர்களை அழித்து சுவர்கத்தோடு தேவ லோகத்தைக் காத்தார்.
ஸ்வாரோசிஷம் என்ற இரண்டாவது யுகத்தில், அக்னியின் மகனாக மனு தோன்றினார். த்யும முதலானவர்கள் அவருடைய புத்திரர்கள். அந்த மன்வந்தரத்தில் யாக புத்திரன் ரோசனன் இந்திரனானான். அவனுக்கு துபிதாதிகள் புத்திர்கள் தோஷ, ப்ரதோஷ, சந்தோஷ, பத்ர, சாந்தி, இடஸ்பதி என்ற பெயர்கள்.
ஊர்ஜஸ்தம்பன் முதலான ஏழு ரிஷிகள். ப்ரும்மவாதிகள் என்ற தவசிகள். வேதசிரஸ் என்பவருக்கு மட்டும் துஷிதா என்ற மனைவி இருந்தாள். அவர்களுக்கு ஒரு மகன் விபு எனப்பட்டான். என்பத் தெட்டு ஆயிரம் முனிவர்கள் இருந்தனர். அந்த விபு என்ற சிறுவனுக்கு இவர்கள் அவசியமான விரதங்கள் பற்றி கற்பித்தனர்.
மூன்றாமவன் உத்தமன், ப்ரியவ்ரதன் மகன், மனுவானான். அவனுக்கும் பவனன், ஸ்ருஞ்சயன், யக்ஞ ஹோத்ரு என்று மகன்கள். வசிஷ்டருக்கு ஏழு மகன்கள். அனைவரும் ரிஷிகளானார்கள். ப்ரமதன், சத்யன், வேத்ஸ்ருதா, பத்ரா, தேவன், இந்திரன், சத்யஜித் என்பர்.
தர்ம தேவதைக்கு, சுன்ருதா என்ற மனைவி. பகவான் புருஷோத்தமனே மகனாக பிறந்து சத்யசேனன் ,சத்யவ்ரதன் என இருவர். அவர் அசத்வ்ரதன் (ஸத்யவ்ரதனுக்கு எதிர்பதம்) அசத்தாக சில யக்ஷ, ராக்ஷஸர்கள் உயிரினங்களை காரணமின்றி துன்புறுத்தினர். சத்யசேனன் ,சத்யவ்ரதன் உதவியோடு அவர்களை அழித்தார்.
அடுத்து உத்தம சகோதரன், மனு என்ற பெயரில் , ப்ருது, க்யாதி, நரகேது, என்று பத்து புதல்வர்கள். சத்யகா, ஹரய: வீரன், தேவா:, த்ரிசிகன், ஈஸ்வரன், ஜ்யோதிர்தாமன், என்று ஏழு ரிஷிகள். வித்ருதி என்பவரின் புதல்வர்கள் கால கதியடைந்தனர். இவர்கள் தான் தங்கள் திறமையால் வேதங்களை தொகுத்தனர். அங்கும் பகவான் ஹரி மேதஸ்-ஹரினீ தம்பதிகளுக்கு மகனாக பிறந்து ஹரி என்று பெயர் பெற்றார். இந்த ஹரி நாமம் தான் கஜேந்திரனை மகரம் -முதலையிலிருந்து காத்தது.
பரீக்ஷித் ராஜா, பாதராயனரே! அந்த சரித்திரத்தைச் சொல்லுங்கள். ஹரி எவ்வாறு கஜ ராஜனை, முதலையின் வாயிலிருந்து காப்பாற்றினார் ? அது மிகவும் புண்யமான சரித்திரம் என்று அறிவோம். தன்யம், மங்களத்தை தரும், சுபமானது, என்றும் எங்கெல்லாம் உத்தம ஸ்லோகனான ஹரியை பஜனை செய்து பாடுகிறார்களோ, அங்கெல்லாம் பிரசித்தமான கதை.
சூதர் சொன்னார்: வியாசர், பரீக்ஷித் இவ்வாறு கேட்கவும், அங்கிருந்த மற்றவர்களும், உத்சாகமாக கேட்கத் தயாராயினர்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், முதல் அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 33
அத்யாயம்-2
த்ரிகூட என்று புகழ் வாய்ந்த மிகப் பெரிய ஒரு மலை இருந்தது. அதைச் சுற்றிலும் பால் போன்ற நீர் பல யோஜனைகள் பரவி இருந்தது. அந்த நீர் நிலையைச் சுற்றி மூன்று சிகரங்களுடன் மிகப் பெரிய மலை திசைகளை ஆக்ரமித்து வானளாவி நின்றது, அதன் சாரலில் வெள்ளி, இரும்பு, தங்கம் என்று உயர்ந்த தாதுக்கள் நிறைந்திருந்தது. மிக அரிய மரங்கள், ரத்னங்கள், தவிர விசித்திரமான தாதுக்கள், பல விதமான மரங்கள், கொடிகள், புதர்கள், இவைகளுடன் இரைச்சலாக விழும் பல அருவிகளையும் உடையதாக இருந்தது. அந்த நீர் வளத்தால், மலையடிவாரத்தில், மரகத பச்சை வண்ண புல் வெளி செழித்து வளர்ந்து இருந்தது. கண்ணுக்கு விருந்தான அந்த இடம் கின்னர, அப்ஸர, சித்த, சாரண, கந்தர்வ வித்யாதர, மஹோரக எனும் பலருக்கும் விளையாட்டு மைதானமாக விளங்கியது. அவர்கள் வருகையால் இனிய சங்கீத நாதம், அங்குள்ள குகைகளில் எதிரொலித்து, கர்ஜனை செய்யும் வனராஜனான சிங்கங்களுக்கு திகைப்பை மூட்டின. தனக்கு போட்டியாக மற்றொரு சிங்க ராஜாவா என்று எண்ணின போலும். காடுகள், பலவித மிருகங்களுக்கு அடைக்கலமாக இருந்தன. ஆங்காங்கு தேனீக்கள் கூடுகள் அலங்காரமாக தென்பட்டன. இனிய குரலில் பாடும் பறவைகள் தங்கள் வண்ண மயமான தோற்றத்தாலும், வித விதமான கூச்சல்களாலும் வனத்தையே நிறைத்தன.
நதிகள், ஏரிகள், சிறிய குட்டைகள், மணல் வெளிகள், தேவ ஸ்த்ரீகள் வந்து ஸ்னானம் செய்வதால் நீரில் கலந்த வாசனை திரவியங்களும் காற்றில் மிதந்து வந்தன. அந்த மலைச் சரிவில், பகவான் வருணன் ஒரு உத்யானத்தை , ருது என்ற பெயரில், தேவ மங்கைகளின் விளையாட்டுக்காக வளர்த்தான். திவ்யமான புஷ்பங்களாலும், பழ மரங்களாலும், மந்தார, பாரிஜாத, பாடல, அசோக, சம்பக புஷ்பங்கள் நிறைந்தும்,
மாமரம், ப்ரியாலம், பனசம்- பலா மரம், ஆம்ர, ஆம்ராதகை என்ற பழ மரங்களும், க்ரமுக, நாரிகேள, கர்ஜூரம்- பேரீச்சம் பழம், பீஜ பூரகங்களும். (விதைகள் நிறைந்த பழங்கள்,கொய்யா, மாதுளை, விளாம்பழம் போன்றவை) மதூக ( ஒரு வகை மரம் இதில் தேன் கிடைக்கும் என்பர்) சால, தால மரங்கள், தமால, ரஸனா அர்ஜுன மரங்கள், அரிஷ்ட, உதும்பர, ப்லக்ஷ, வட (ஆலமரம்) கிம்சுக, சந்தன மரங்கள்) பிசுமந்தம், கோவிதார: (எளிதில் உடையாது, சுவர்கத்தில் உள்ளது என்பர்) சரள, சுர தாரு, த்ராக்ஷா, இக்ஷு ரம்பா, ஜம்பூ, பதரி,அக்ஷபய, நெல்லி, பில்வம், கபித்த, ஜம்பீர, இவைகளைச் சூழ்ந்து பல்லாதகா எனும் கொடிகள், இவை, அந்த தடாகத்தை சுற்றிலும் இருக்க, அதனுள் பொன்னிற தாமரை மலர்கள் மலர்ந்து நிரம்பியிருந்தன. குமுத மலர்களும் கல்ஹார எனும் வெண் தாமரைகளும், சதபத்ர, முதலியவை லக்ஷ்மீகரமாக இருந்தன. மலர்கள் இருக்கும் இடத்தில் வண்டுகள் ரீங்காரம் செய்வது இயல்பே. இங்கும் மதம் கொண்டு பாடுவது போல ரீங்காரமும், சகுந்த பக்ஷிகளின் கூக்குரலும் இணைந்து கேட்டன. ஹம்சங்களும் காரண்டவ எனும் பக்ஷிகளும், சக்ரவாகங்களும், சாரஸ பக்ஷிகளும், ஜல குக்குடம் எனும் நீர் வாழ் கோழிகள், கோயஷ்டி, தாத்யூஹ, எனும் பறவைகள் கூட்டம் கூட்டமாக கூவிய படி சென்றன. மீன்களும் ஆமைகளும், சஞ்சரித்து பத்மங்களின் அடியில் நீரை சல சலக்க வைத்தன. கதம்பம், வேதஸ, நல நீப, வஞ்சுள, எனும் மலர்கள், மல்லிகை, குரபக, அசோக, சிரீஷம், குடஜம், இங்குதீ, குப்ஜகம், ஸ்வர்ணயூதீ, நாக, புன்னாக, ஜாதி புஷ்பங்கள், மல்லிகை, சத்பத்ரம், மாதவீ, ஜால்காதி இவை தரையில் பரவி கிடந்தன. சில அருகில் இருந்த மரங்களில் படர்ந்தன.
அங்கு ஒரு சமயம், அந்த மலைச் சரிவின் காடுகளில் வசிக்கும் யானைக் கூட்டம், அதன் தலைவன் முன்னால் வந்து, வழியில் இடறிய மரக் கிளைகளை உடைத்தும், முள்ளுடன் மூங்கில் மரங்களையும், விசாலமாக கிளை விரித்து படர்ந்து வளர்ந்திருந்த பெரிய மரங்களையும் ஒடித்தும் தாக்கியும், வழி அமைத்து கொடுக்க, விரைந்து வந்தது. அதன் வாசனையைக் கண்டே மரங்களில் இருந்த வானரங்கள், புலி முதலிய வன விலங்குகள், ஓனாய்கள், மான்கள், பெரு நாகங்கள், பயந்து ஓடி விலகின. வெண்மையான, மற்றும் க்ருஷ்ண சர்ப்பங்கள் சமரீ எனும் சிறு மிருகங்கள், நரிகள், வராஹங்கள், மஹிஷம், ருக்ஷசல்யா எனும் கரடிகள். பசு வால் கொண்ட கழுதை ஜாதி வன விலங்குகள், மர்கடங்கள், மற்றும் பல சிறிய வன விலங்குகள், சாதுவான ஹரிண எனும் மான்கள், முயல் இவைகள் மட்டும் பயமின்றி சஞ்சரித்தன.
கோடை காலத்து உஷ்ணத்தால் தாகத்தால் தவித்த யானைகள், ஆண்களும் பெண்களுமாக மத நீர் வழிய வேகமாக மலையைச் சுற்றி வந்ததில் வேர்த்து விறுவிறுக்க, மத நீரைச் சுற்றி வந்த வண்டுகளின் ஆக்ரமத்தையும் பொறுக்க மாட்டாமல், தடாகத்தின் குளிர்ந்த நீரையும், பங்கஜங்களின் நாளங்களையும் வெகு தூரத்திலிருந்தே வாசனையால் அறிந்து கொண்ட அந்த கூட்டம், யானைத் தலைவன் வழி காட்ட பாய்ந்து வந்து தண்ணீரில் இறங்கின. தாகம், நடந்து வந்த களைப்பு தீர நீரில் மூழ்கி மகிழ்ந்தன. அமுதம் போன்ற அந்த தெளிந்த நீர் பொன் நிற அரவிந்தங்கள், உத்பலங்கள் இவைகளின் வாசனை மேலிட்டிருந்ததை வேண்டுமளவு திருப்தியாக குடித்தன. வேரோடு பிடுங்கிய மலர்களைக் கொண்டு அந்த தடாகத்தில் வீசியும், தண்ணீரை தங்கள் மேல் தெளித்துக் கொண்டும் களைப்பு தீர விளையாடின.
தன் வீட்டிற்கு வந்த அதிதிகளை, தன் வீட்டுத் தோட்டத்து பூக்களைக் கொடுத்தும், ஸ்னான வசதிகளை செய்து கொடுத்தும், குடும்பத் தலைவன் உபசரிப்பது போல அந்த தடாகம், இந்த மதம் கொண்ட யானைக் கூட்டத்தின் அட்டகாசங்களை தடுக்காமல் அனுமதித்தது. அதுவும் பகவானின் மாயையே.
அரசனே! அங்கு விதி வசத்தால், ஒரு முதலை கோபத்துடன் வந்து, தன் வாய்க்கு சுலபமாக கிடைத்த தலைவனான யானையின் கால்களைப் பற்றியது. அந்த யானையும் தன்னால் முடித்த வரை போராடியது. கால்களை விடுவித்துக் கொள்ள திணறியது. முதலையின் பிடி விடவில்லை. மிகவும் வருந்தி ஓலமிட்ட தலைவனைக் கண்டு மற்ற பெண் யானைகள், குட்டியானைகள் அலறின. மற்ற ஆண் யானைகள் தாங்களும் முயன்று முடியாமல் வருந்தி ஓலமிட்டன. இரு பக்கமும் இரு யானைகள் பிடித்து இழுத்துப் பார்த்தன. யுத்தம் போலவே இருந்தது. இரு பக்கமும் பலமான பிடி, நக்ரம்- முதலையும் விடவில்லை, நீருக்குள்ளும் வெளியிலுமாக இரண்டும் சளைக்காமல் போராடின. முதலையின் பிடி விடுவதாயில்லை. உயிருடன் இரண்டும் பலகாலம் (ஆயிரம் ஆண்டுகள்) போராடியதைக் கண்டு தேவர்களே அதிசயித்தனர்.
நாளடைவில், கஜேந்திரன், தன் மன பலத்தை இழந்தது. தடாகத்தைக் கலக்கியதில் அதில் வாழ்ந்த ஜீவ ராசிகள் பெரிதும் பாதிக்கப் பட்டன. ப்ராண சங்கடம் என்ற நிலையில் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த சமயம் எதேச்சையாக, தன் சரீரத்தில் இருந்த பிடிப்பை விட்டு, ஆத்ம மோக்ஷம் என்பது பற்றிய சிந்தனை எழுந்தது. சுய புத்தியும் தீவிரமான போராட்டத்தில் இருந்த தன் கூட்டத்தாரிடம் இரக்கமும் எழுந்தது. தன்னை முதலையின் பிடியிலிருந்து விடுவிக்க அவர்களின் படும் துயரம் வாட்டியது. பொறி தட்டினாற்போல ஒரு எண்ணம், இந்த முதலையை பகவானே தான் அனுப்பியிருக்கிறான், சம்சாரம் பந்தம் என்று உழன்று கொண்டிருக்கும் என்னை விடுவிக்க – இந்த எண்ணம் வந்ததும் பரம் பராயணம் – பர ப்ரும்மம் இன்னுமா அவனை சரணடையாமல் இருக்கிறேன் என்று தன்னையே நொந்து கொண்டது.
அந்தகன் எனும் ம்ருத்யு அருகில் வந்தவுடனேயே, அவன் பிடியில் அகப்படாமல் தப்ப, பெரும் பாம்பின் வாயில் விழுந்தவன் போல அலறி அடித்துக் கொண்டு ஓடும் ஜீவனை, என்னதான் பலசாலியாக இருந்தாலும் பயம் ஆட்கொள்ள, காப்பாற்று என்று அலறியபடி சரணம் அடைந்தவனை காப்பாற்றுபவன், எவனிடம் அந்த அந்தகனே பயந்து தான் பீடித்த ஜீவனை விட்டு விட்டு தான் ஓட்டம் எடுப்பானோ, அந்த பராத்மாவை வணங்குகிறேன்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், இரண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 33
அத்யாயம்-3
ஸ்ரீ சுகர் சொன்னார்: இந்த புத்தி வந்த உடன், மனம் சமாதானமாகி, யோக சாதனையில் மனதை ஹ்ருதயத்தில் வைத்து, ஜபம் செய்யலாயிற்று. கஜேந்திரன் தன் முந்தைய பிறவிகளில் பெற்ற அறிவு, பெரியோர்களால் சிக்ஷிக்கப் பட்டு அனுசரித்த ஜப தபங்கள், கை கொடுத்தன. மிகச் சிறந்த ஜபம், அந்த பராத்மாவை ஜபிப்பதே.
கஜேந்திரன் துதி: ॐ नमो भगवते तस्मै यत एतच्चिदात्मकम् । पुरुषायादिबीजाय परेशायाभिधीमहि ॥ २॥
ஸ்வயம் புவன்- தானாக தோன்றியவன், எவனிடத்தில் தோன்றியது என்றோ, எப்படி இது தோன்றியது என்றோ, எதற்காக என்றோ, தான் மட்டுமே அறியும் பரமாத்மா, இந்த பூமியிலிருந்தும், இதை தாண்டி ப்ரும்மாண்டத்திலும், அவனே பரம் பொருள், என்று சரணடைகிறேன்.
பராத்பரன் அவனே. தன் மாயையால் என்னுள்ளும் இருப்பவன். சில சமயம் தெரியும்படியும், மற்றொரு சமயம் மறைந்தும் கண்ணுக்கு புலப்படாமல் சாக்ஷியாக மட்டுமே இருப்பவன், ஜீவன்களின் கண்களுக்கு கண்ணாக இருப்பவன் அவன் என்னை காக்கட்டும்.
தோன்றியது அனைத்தும் மறையும் என்பது நியதி. மனிதர்களாக பிறந்தவர்கள் நான்கு பால்ய, யௌவன, க்ருகஸ்த, சன்யாச என்ற ஆசிரமங்களை கடந்த பின் ஐந்தாவது மரணம் என்பது காலத்தின் கட்டாயம். காலன் எங்கே கொண்டு செல்வான் ? இருட்டாக இருக்கும். அந்த தமசம் – என்று சொல்வார்கள். அதன் முடிவில் விபு:- பகவான் ப்ரகாசமாக தெரிவான் என்பது வேத வாக்யம். “ஆதித்ய வர்ணம் தமச: பரஸ்தாத்” आदित्यवर्णं तमस: परस्तात्” தேவர்களும் அந்த ரூபத்தைக் கண்டவரில்லை.
ரிஷிகளும், தேவர்களும் அறியாத பரம் பொருள் என்ற பின், பூவுலகில் பிறந்த ஒரு ஜந்து எப்படி அறியவோ, உணரவோ முடியும்? நாடகத்தில் கதா பாத்திரமாக நடிக்கும் நடன் போல அந்த சமயத்திகேற்ற நடை உடை பாவனைகளை ஏற்கிறான். சுய ரூபத்தில் அந்த நடன் யார் என்றோ என்ன தொழில் என்றோ என்ன அறிவோம்? அவ்வளவே அவதாரங்களை காணும் நாமும் அதை மட்டுமே அறிவோம். சுய ரூபனான அவதார புருஷன், பகவான் என்னை காக்கட்டும்.
எவருடைய சுமங்களமான பதத்தை, கண்களால் காணவே, சங்கத்தை தவிர்த்த சாதுக்கள், முனிவர்கள், வனங்களில் கடினமாக விரதங்களை ஏற்று தவம் செய்கிறார்களோ, அவர்கள் எந்த ஸ்வரூபத்தை காண்கிறார்களோ, அந்த பதம் எனக்கும் கிடைக்கட்டும்.
எவருக்கு கர்ம பந்தமோ, ஜன்மமோ இல்லையோ, பெயரோ, ரூபமோ, குண தோஷமோ ( முக்குணங்களால்-சத்வ,ரஜஸ்,தமஸ்- இவைகளால் பாதிப்பு) இல்லையோ, அப்படி இருந்தும், அவர் உலகை ஸ்ருஷ்டி செய்வதிலும், அதன் செயல்களை நடத்திச் செல்வதிலும் ஒவ்வொரு யுகத்திலும் தன் மாயையால் ப்ரளய காலத்தில் உடன் இருந்து அடுத்த யுகத்தை தோற்றுவிப்பதிலும் கவனமாக இருக்கிறார். அவர் என்னை காக்கட்டும்.
பரப்ரும்மம், மகேஸ்வரன், அனந்தன் –என்று பல பெயர்கள். அளவில்லா சக்தியுடையவன், உருவமே இல்லாமலும் இருப்பான், விசித்ரமான ரூபத்தோடும் வருவான், இப்படி ஆச்சர்யமான செயல்களை செய்பவனுக்கு நமஸ்காரம்.
ஸ்வயம் ப்ரகாசமானவன், உயிரினங்களின் ஆத்ம ப்ரகாசத்துக்கு சாக்ஷியாக இருப்பவன், அவனே பரமாத்மா.வாக்குக்கு எட்டாதவன். மனசால் உணர முடியாதவன். சேதஸ் என்ற புத்தியால் கண்டறிய முடியாதவன். (யதோ வாசா நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ- यतो वाचा निवर्तन्ते अप्राप्य मनसा सह – ஸ்ருதி வாக்யம்) அவருக்கு நமஸ்காரம்.
சுத்த சத்வா: என்று பெயர் பெற்ற தபஸ்விகளுக்கு காணக் கிடைப்பவன். அந்த தபஸ்விகளான ரிஷிகள், தங்கள் சாதனைகளால் கர்ம பந்தனம் என்பதிலிருந்து விடுபட்டவர்கள். இவர்கள் மோக்ஷம் என்பதையும் தாண்டி ப்ரும்ம நிர்வாணம் என்பதை அடைவதே நோக்கமாக இருப்பவர்கள். (பகவானுடன் ஐக்யமாவது) அவர்களுக்கு நமஸ்காரம்.
சாந்தமானவன், சமயத்துக்கு ஏற்ப கோர ருபங்களையும் ஏற்பவன், ஞானமே தனமாக இருப்பவன் ஆதலால், , உலகியலில் முக்குணங்களின் தர்மங்களையும் ஒரே விதமாக ஏற்றத் தாழ்வின்றி அரவணைத்துச் செல்கிறான். அவனுக்கு நமஸ்காரம்.
(பிறவிகள் பலவிதமாக இருக்கின்றன. – அதன் தேவைகளுக்கு சத்வ, ரஜஸ், தமோ குணங்கள் அமையும். மனிதர்களில் மட்டுமல்ல சகல ஜீவன்களிலும் சாதுவாக சில, பரபரப்பாக சில, ஆக்ரோஷமாக சில – தாமசமாக சில என்று இருப்பதால் அனைத்து ஜீவன்களையும் சமமாக பார்க்கும் பகவான், இவைகளில் தார தம்யம் காண்பதில்லை. அந்தந்த பிறவியின் தேவைகளை நிறைவேற்ற ஞானம் இயல்பாக அமையும். ஒரு பறவை செய்வதை, மற்றொரு மிருகமோ, மனிதனோ செய்ய முடியாது என்பது போல. மழை, பூகம்பம் முதலிவைகளை சிறு பிராணிகள் அறிந்து கொள்வதை போல மனிதன் அறிவதில்லை என்று பல உதாரணங்கள் ) அவனுக்கு நமஸ்காரம்.
க்ஷேத்ரக்ஞன் – பரமாத்மாவின் ஒரு பெயர். சரீரம், ஆத்மா என்ற தத்வங்களை அறிந்தவன் என்பது பொருள். அவனுக்கு நமஸ்காரம். அந்தர் யாமியான சர்வாத்மன்- உள்ளுறை பரம் பொருளான அவனுக்கு நமஸ்காரம்.
சாக்ஷியாக இருப்பவன், புருஷன் எனப்படுபவன். பழமையானவன்- முதன் முதலில் தோன்றியவன். (சரீரத்தின் அனைத்து பாகங்களும் உருவாகி, இந்திரியங்கள் இயங்க கண் காது முதலியவைகள் தோன்றிய பின்னும் அது வெறும் பிம்பமாக மட்டுமே இருந்தது. படைத்த ப்ரும்மா திகைத்தார். அதனுள் உணர்வை நிரப்பியவன் பரமாத்மா- பூரயதி இதி புருஷ: என்பது பதம். पूरयति इति पुरुष:நிரப்புபவன், ஜடமாக இருந்த உடலில் உணர்வை நிரப்பி அதை செயல் படச் செய்தவன் என்ற பொருளில், அதைத் தவிர முதன் முதலில் பிறந்தவன் -ஆதி புருஷன் என்பதாக பகவானைச் சொல்வர். மத்த: ஸ்ம்ருதிர்ஞானமபோஹனம் ச – मत्त: स्मृतिर् ज्ञानमपोहनम् च – என்று கீதை. அதன்படி என்னிலிருந்து உணர்வு, அறிவு தோன்றுகின்றன. அது மறைவதற்கும் நானே காரணம்.) ஆதி மூலம், மூல ப்ரக்ருதி என்ற பதங்களால் சொல்லப் படும் முழு முதற் கடவுளுக்கு நமஸ்காரம்.
இந்திரியங்களின் செயலை அதன் குண தோஷங்களை பார்த்துக் கொண்டிருப்பவர்- சப்தம் – அதற்கான இந்திரியம் காது, கேள்வி என்பது செயல் – இப்படி ஒவ்வொரு இந்திரியமும் இயல்பாக செயல்பட சாக்ஷியாக இருப்பவன். (வெளிப்படையாக விவரிக்காமல் மண் பானை, குயவன் பானையாக்கும் முன் மண்ணாக இருந்தது என்று அறிவது போல சாயையாக – ஊகித்துச் சொல்வது என்பது நியாய சாஸ்திரம். அது போல இந்திரியங்களின் செயல்களை பானையாகவும், அது செய்யப்பட்டது குயவனால் – பகவானால் என்பதை ஊகத்தால் அறிகிறோம்.)
நமோ நமஸ்தே, அகில காரணாய – உலகம் தோறவே காரணமானவன் என்று வணங்குகிறேன்.
அவனே காரணமின்றியும், சில சமயம் நாம் அறியாத அத்புத செயலுக்கு காரணமாகவும் இருப்பவன் என்று வணங்குகிறேன். ஆகம, வேதங்கள் என்ற பெரும் கடலாக இருப்பவன் (வேத ஸ்வரூபி) , அபவர்க பராயணன், படைத்தல் முதலிய செயல்களைச் செய்தாலும், தனித்த தன் இருப்பை – உலகியலுக்கு அப்பாற் பட்ட தன் உயர்ந்த நிலையை உடையவன் – அவனை வணங்குகிறேன்.
முக்குணங்களே அரண்யம், அது சூழ்ந்து இருப்பதால், மறைந்து இருக்கும் ஞானம் என்ற அக்னி, என்று இருக்க, அந்த அரண்யத்தை ஒடுக்கி, ஞானத்தை ப்ரகாசிக்க செய்ய வேண்டும். அந்த ஞானமே தன் ப்ரகாசமாக இருப்பவனை வணங்குகிறேன்.
என்னைப் போன்றவர்கள் சரணடையும் பொழுது, பசு பாசம் என்ற பந்தங்களிலிருந்து விடுவிப்பவன், மிகுந்த கருணையுடையவன், தனக்கு என்று எந்த பந்தமும் இல்லாதவன், என்றும் உள்ள அந்த பகவானுக்கு நமஸ்காரம். தன்னுடைய அம்சத்தை சகல உயிரினங்களுக்குள்ளும் வைத்து அவைகளின் மனதில் உணர்வை அளித்த பெருந்தன்மைக்கு நமஸ்காரம்
ஞானாத்மாவான ஈஸ்வரனுக்கு நமஸ்காரம். தன் ஆத்மா, தன்னுடைய சுற்றத்தார் என்றும் வீடு வாசல், தனம் என்றும் அதிலேயே மூழ்கி இருப்பவர்களுக்கு எட்டாத தூரத்திலும், சாதனைகள் மூலம், சங்கத்தை, ஆசைகளை விட்ட, தங்கள் உள்ளத்தில் சதா நினைத்திருக்கும் முக்தர்களுக்கு அருகிலும் இருக்கும் பகவானே!
தர்ம, அர்த்த, காமங்களிலிருந்து விடுபட நினைக்கும் சாதகர்கள், பஜித்து தாங்கள் விரும்பும் நல்கதியை அடைகிறார்கள். அவர்களைப் போலவே எனக்கும் விமோசனம் என்பதை அருள வேண்டுகிறேன். பகவானை நம்பி சரணாகதி செய்பவர்கள் கூட அவரிடம் எதையும் பிரார்த்திப்பது இல்லை. அவர்கள் ஆனந்தமாக அவரை பாடி அதிலேயே மகிழ்ந்து இருக்கிறார்கள்.
அக்ஷரமான அந்த ப்ரும்மம், பர ஈஸ்வரன்- முழு முதல் தலைவன் , இது தான் இந்த ப்ரப்ரும்மம் என்று வரையறுக்க முடியாதவன், அத்யாத்மிக சாதகர்களான யோகிகள் மட்டுமே அறியத் தகுந்தவன், ஸூக்ஷ்மத்திலும் ஸூக்ஷ்மானவன், (அணோரணீயான் – अणोरणीयान्- அணுவிலும் அணுவானவன்) எட்டாத தூரத்தில் இருக்கும் ஸூக்ஷ்மமான பொருள். (தத் தூரே ததந்திகே- तद्दूरे तदन्तिके) எனவே மனிதனின் கண்களால் காணவோ, காதுகளால் கேட்கவோ, மற்றும் புலன்களால் உணரவோ முடியாதவன். முதல்வன்- ஆத்யம், அனந்தன்- முடிவில்லாதவன், பரிபூர்ணன்-நிறைவானவன், அவனை வணங்குகிறேன். (பூர்ணஸ்ய பூர்ணன்)
ப்ரும்மா முதலானவர்கள் லவ லேசம் – மிக குறைந்த அளவு- அறிந்துள்ளார்கள். சராசரத்தில் உள்ள தேவர்கள், மனிதர்கள் உன் பெயர்களையும், ரூபங்களையும் அதன் பேதங்களையும் கேட்டிருக்கிறார்கள்.
ஸூரியனின் கதிர்கள் வெப்பத்தை அளிப்பதையும், அவை திரும்ப ஸூரியனிடமே லயமாவது போலவும், தீயின் ஜ்வாலையில் அதன் பொறிகள் லயமாவது போலவும், உலகில் சப்தம் முதலான தன்மாத்ரைகள், சத்வ,ரஜஸ், தமஸ் என்ற குணங்கள், புத்தி, மனம், மற்ற உடலின் செயல்கள் அனைத்தும் அந்த ப்ரும்மத்திடமே அடங்கி விடுகின்றன.
இது அல்ல, இது அல்ல என்று ஒவ்வொன்றையும் நிராகரித்து (नेति नेति) எது ப்ரும்மம் என்று உபனிஷதங்கள் தேடுகின்றன. தேவனோ, அசுரனோ, மனிதனோ அல்ல, பெண்ணோ, அலியோ, ஆணோ, வெறும் ஜந்துவோ அல்ல, இந்த செயலோ, நல்லதோ கெட்டதோ அல்ல, மறுப்போ, ஏற்போ அல்ல, அசேஷன் – மீதியில்லாத அனைத்தும் என இருப்பவனை வணங்குகிறேன்.
பகவானே! நான் உயிர் வாழ விரும்பவில்லை. இந்த முதலையின் பிடியிருந்து விடுபட்டு திரும்பவும் உலகில் வாழ்வது வேண்டாம். என்னை சூழ்ந்திருக்கும் அறியாமை விலக வேண்டும். அதிலிருந்து விடுபட வேண்டும். அந்த விடுதலை காலத்தால் அழியாது. எனக்கு ஞானத்தைக் கொடுங்கள். உலக வாழ்க்கை இந்த யானை பிறவியோடு முடியட்டும். மோக்ஷம் வேண்டுகிறேன்.
விஸ்வத்தை படைத்தவன், ( सर्वं खल्विदं ब्रह्म ) விஸ்வமே – உருவானவன். அனைத்து உலகங்களும் அவனே. விஸ்வம், அவிஸ்வம் – விஸ்வாத்மா, அஜன்- ஸ்வயமாக தோன்றியவன், ப்ரும்மா என அந்த பரமபத்தை வணங்குகிறேன்.
வாழ் நாள் முழுவதும் யோக சாதனைகளே செய்து, மனதில் யோகம் அன்றி வேறு சிந்தனை இல்லாமல், யோகமார்கத்தில் தேறி வந்து, யோகிகள் காணும் யோகேசனை வணங்குகிறேன்.
நமோ நமஸ்துப்யம்- உனக்கு அனேக நமஸ்காரங்கள். அளவில்லாத வேகமும், சக்திகளும் நிறைந்தவன். உன் சக்தி அல்லது உன் மாயை என்பதை பலர் அறிவதில்லை. ஆத்மாவாக இருந்து நீ அருளுவதை, புத்தியின் அஹங்காரம் மறைக்கிறது. உன் ஸ்வரூபத்தை தெரிந்து கொள்ள முயலுவதும் இல்லை. அகில உலகங்களின் சப்த ரூபமானவன், ஜீவன்களின் புத்தி ஞானம் இவை வெளிப்பட காரணமானவன், உன் எல்லையில்லா மாகாத்ம்யத்தை சாமான்யர்களால் அறியவா முடியும? உன் பதத்தில் வந்து வணங்கியவனை காப்பவன், என உன்னையே சரணடைகிறேன
ஸ்ரீ சுகர் சொன்னர்: இவ்வாறு கஜேந்திரன் செய்த துதியைக் கேட்டு ப்ரும்மா முதலான தேவர்களும் அதிசயித்தனர். நிர்விசேஷம் என்றும், பரப்ரும்மம் என்றும் கஜேந்திரன் வர்ணித்ததை பாராட்டினர். தங்கள் ரூபம், பதவி இவைகளில் அபிமானம் உள்ளவர்கள், இவர்கள் ஏன் முதலில் வரவில்லை? நிகிலாத்மகன் என அழைத்த ஸ்ரீ ஹரிக்குள் அந்த அமர கூட்டமே அடக்கம் தானே. அச்சமயம் அவரே அங்கு தோன்றினார். மிகவும் வருந்திய நிலையில் இருந்தவன் செய்த துதியினால் அக மகிழ்ந்தவராக. வேதமயன் எனும் கருடனின் மேல் ஏறி சக்ராயுதத்துடன் ஜகன்நிவாசன்- கஜேந்திரன் அருகில் வந்தார். தடாகத்தின் ஆழத்தில், முதலை வாயில் அகப்பட்டு கால்களை விடுவிக்க முடியாமல் தவித்த கஜேந்திரன், அந்த நிலையிலும், தன் துயரை மறந்து, கையில் சக்ரத்துடன், கருடன் மேல் ஆரோஹித்து வந்த ஸ்ரீ ஹரியைப் பார்த்து, ஒரு தாமரை மலரை வேரோடு பிடுங்கி துதிக்கையில் வைத்துக் கொண்டு மிக சிரமப் பட்டு இந்த வார்த்தையை சொல்லிற்று ‘நாரயணா! அகில குரோ பகவன் நமஸ்தே” नारायणा अखिल गुरो! भगवन्नमस्ते ”
உடனே, ஸ்ரீ ஹரி, கருடன் மேலிருந்து இறங்கி, பரபரப்புடன் அருகில் வந்தவர், முதலையுடன் சேர்த்து கஜேந்திரனை நீரிலிருந்து வெளியே கொண்டு வந்தார். அனைவரும் அதிசயத்துடன் பார்த்து இருக்கையில், முதலையின் தலையை சக்ரத்தால் துண்டித்து கஜேந்திரனை விடுவித்தார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், மூன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 33
அத்யாயம்-4
அதன் பின் தேவ, ரிஷிகள், கந்தர்வர்கள், ப்ரும்மா, ஈசன் முதலானோர், ஸ்ரீ ஹரியின் செயலை ஸ்லாகித்து, பூமாரி பெய்தனர். துந்துபிகள் முழங்கின. கந்தர்வர்கள் நடனமாடினர். சிலர் பாடினர். புருஷோத்தமா, நன்று, என்று சொல்லி, ரிஷிகளும் சாரணர்களும், சித்தர்களும் மகிழ்ந்தனர்.
அந்த முதலையோவெனில், திடுமென ஆச்சர்யமான ரூபத்தில் வந்து நின்றது. தேவலன் என்பவருடைய சாபத்திலிருந்து விடுபட்டேன், நான் ஹூஹூ என்ற கந்தர்வன் என்றது. உத்தமஸ்லோகன் எனப் படும் ஸ்ரீஹரியை வணங்கி அவரை துதி செய்தபின், அவரை பிரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து, அனைவரும் பார்த்து நிற்கையிலேயே, தன் தவறும் அதனால் பெற்ற சாபமும் நீங்கியது என்று கந்தர்வனாக தன் இருப்பிடம் சென்றான்.
கஜேந்திரனும், பகவானின் ஸ்பர்சித்தால், தன் உலகியல் அறியாமை நீங்கப் பெற்று, அவருடைய அணுக்கத் தொண்டனாக, வைகுண்டத்தில் அவர் அருகில் உள்ளோர் போலவே, பகவானின் ருபத்தை பெற்று பீதாம்பரமும் சதுர்புஜமுமாக ஆனான்.
கஜேந்திரன் யார் என்று அனைவருக்கும் தெரிந்து கொள்ள ஆவல் மேலிட்டது. முன் பிறவியில் பாண்டிய ராஜாவாக, பாரதத்தின் தென் பகுதியில் த்ரவிட என்ற பகுதியின் அரசனாக புகழ் வாய்ந்தவன். மஹா விஷ்ணுவை சிரத்தையுடன் வணங்கி வந்தான். ஒருசமயம், ஆராதன காலத்தில், மௌன விரதம் ஏற்றுக் கொண்டு, ஸ்ரீ ஹரியை, தவம் செய்வோர் போல ஜடா தரனாக, குலாசல ஆசிரமத்தில் இருந்து பூஜை செய்து கொண்டிருந்தான். எதேச்சையாக புகழ்பெற்ற ஒரு முனிவர், சிஷ்ய கணங்களோடு, நடந்த களைப்புடன், வந்து சேர்ந்தார். அவரை பார்த்தும் விரத நியமங்களை பெரிதாக நினைத்து அவருக்கு உரிய அதிதி சத்காரங்களைச் செய்யாமல் தன் இடத்தில் மறைந்தே இருந்து பூஜையை தொடர்ந்ததை, அவர் தனக்கிழைத்த அவமானமாக எடுத்துக் கொண்டார். அதனால் சபித்தார். இவன் சாது இல்லை. துராத்மா. புத்தியில்லாதவன். இன்று அதிதியாக வந்த ரிஷியை அவமதித்து விட்டான். பூமியில் பிறக்கட்டும். தாமச குணத்துடன் கண்டும் காணாமல் இருப்பவன், மந்த புத்தியான யானை போல இருப்பவன், அதே போன்ற யானையாக பிறக்கட்டும்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இப்படி சபித்து விட்டு அகஸ்தியர் என்ற அந்த முனிவர் சென்று விட்டார். இந்த்ரத்யும்னன் சாபத்தால் தன் நிஜ உருவை இழந்தான். தன் பூர்வ ஜன்ம வாசனையை இல்லாமல் ஆக்கும் ஒரு யானையின் வயிற்றில் ஜனித்தான். இருந்தும், முன் பிறவியில் ஸ்ரீ ஹரி யை பஜித்து வந்திருந்த பலத்தால் உடல் யானையாக இருந்தும் உள் உணர்வில் ஸ்ரீ ஹரியின் நினைவு எஞ்சியிருந்தது.
பத்மனாபனான ஸ்ரீ ஹரி, கஜேந்திரனை விடுவித்து, தன் அணுக்கத் தொண்டர்கள் கூட்டத்தில் சேர்ந்து விட்டதை உறுதி செய்து கொண்டு, கருடனின் மேல் ஏறி தன் இருப்பிடம் சென்றார். கந்தர்வர்கள், சித்தர்கள் என்று அனைவரும் இந்த அத்புதமான செயலை பாடினார்கள். மஹாராஜா! இது தான் கஜேந்திர மோக்ஷம்- கஜ ராஜ மோக்ஷணம் என்றும் சொல்லப் படும் கதை. இதைக் கேட்டாலே, சுவர்கம் தரும், புகழ் வரும், கலி கல்மஷம் போகும், து:ஸ்வப்னம் வராது என்று சொல்வார்கள்.
அதனால் இதை பலரும் அந்தணர்கள் உள்பட, நன்மையை விரும்பி விடியற்காலையில், கெட்ட ஸ்வப்னங்களுக்கு பரிகாரமாக படிக்கிறார்கள். ஸ்ரீ ஹரியே கஜேந்திரனிடம் இதைச் சொன்னார், அனைவரும் சூழ்ந்திருக்கையில், அனைவரும் கேட்கச் சொன்னார்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: என்னையும் உன்னையும், இந்த மலையை இதன் காடுகளையும்,
வேத்ர, கீசக வேணு மரங்கள் அடர்ந்திருப்பதை மற்றும் பல தேவலோக மரங்கள் நிரம்பிய இந்த மலையின் சிகரங்களில், உள்ள க்ஷீரோதம் என்ற இந்த புண்யமான இடத்தையும்,
ஸ்வேத த்வீபம் – வெண் நிற தீவு என்ற இந்த இடத்தில் ப்ரும்மாவை, என்னை , மகேஸ்வரனை, நினைத்து, இந்த க்ஷீரோதம் என்ற புண்யமான இடத்தையும், வெண் நிறத் தீவு என்று ப்ரகாசமாக இருக்கும் இடத்தையும்,
ஸ்ரீ வஸ்துபம், கௌஸ்துப மாலைகள், கதை, கௌமோதகியுடன் என்னை நினைத்து,
என் பாஞ்சஜன்யம், சுதர்சனம், பறவைகளின் அரசனான கருடன், மற்றும், சேஷன், மிக ஸூக்ஷ்மான என் கலை, (பகுதி) என்னை ஆஸ்ரயித்த தேவி ஸ்ரீ லக்ஷ்மியுடன் நினைத்து,
ப்ரும்ம ரிஷி நாரதர், மகேவரன், ப்ரஹ்லாதன், முதலிய பக்தர்களையும்,
மத்ஸ்ய, கூர்ம, வராக அவதாரங்களில் என்னுடைய செயல்களை கேட்டும் பாடியும்,
சூரியன், சந்திரன் , அக்னி, ப்ரணவம், சத்யமான வெளியில் தெரியும், பசுக்கள், அந்தணர்கள், இவர்கள், வெளியில் தெரியாத அழிவில்லாத தர்மம் என்பதையும்,
தாக்ஷாயணியை, சோம, கஸ்யபருடைய (ரிஷிகள்) இவர்களின் தர்ம பத்னிகள்,
கங்கா, சரஸ்வதி, நந்தா, காலிந்தீ, சித வாரணம், துருவன் சப்த ரிஷிகள், புண்ய ஸ்லோகர்கள் உலகில் நற்செயல்களைச் செய்த பெரியவர்கள், இவர்களை, பின் இரவில் எழுந்து, நினைப்பவர்கள் எல்லா பாபங்களிலிருந்தும் விடுபடுவார்கள். இரவு முடியும் வேளையில், விடியற்காலையில் இந்த சரித்திரத்தைச் சொல்லி என்னை வணங்குபவர்களுக்கு மரணத் தறுவாயில் நல்ல எண்ணம் வரச் செய்கிறேன்.
இவ்வாறு சொல்லி ஹ்ருஷீகேசன், அந்த தடாக ஜலத்தை கையால் எடுத்து அனைவரையும் ஆசீர்வதித்து விட்டு, தன் கருட வாகனத்தில் ஏறினார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், கஜேந்திர மோக்ஷணம் என்ற நாலாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்-26
அத்யாயம்-5
ஸ்ரீ சுகர் சொன்னார்: அரசனே. கஜேந்திர மோக்ஷணம் என்ற பாவனமான சரித்திரத்தைக் கேட்டாய். அடுத்த மன்வந்தரம் ரைவதம் என்பது. அடுத்த மனுவாக வந்தவர் -ஐந்தாவது மனு ரைவதர் என்பவர் காலத்தில் நடந்தது. அவர் தாமசத்தின் சகோதரர். அர்ஜுனன், பலி, விந்த்யா என புதல்வர்கள் . விபு என்பவன் இந்திரனாக இருந்தான். சப்த ரிஷிகள் ஹிரண்ய ரோமா, வேத சிரா, ஊர்த்வ பாஹு என்று அழைக்கப் பட்டனர். சுப்ரனுடைய மனைவி விகுண்டா. அவர்களும் தேவர்களே. தாயின் பெயரில் வைகுண்டர்கள் என்றே அழைக்கப் பட்டனர். அவர்களுடன், தானும் உடனிருந்து வைகுண்டத்தை ரமா விரும்பினாள் என்பதற்காக பகவான் அமைத்தார். பலவிதமாக வைகுண்டம் உயர்வாக வர்ணிக்கப் படுகிறது.
ஆறாவது மனு, சக்ஷு என்பவர். அவர் புதல்வர்கள் சாக்ஷுசர்கள் எனப்படுவர். புரு, புருஷ, சுத்யும்ன முதலானவர்கள். சாக்ஷுசனின் புதல்வர்கள். இந்திரன், மத்ரத்ருமன், என்ற தேவர்கள், ஆப்யாத கணம் எனப்பட்டனர். அதில் முனிவர்கள், ஹவிஷ்மத், வீரகன் முதலானோர். அங்கும் ஒரு தேவன், சம்பூதி என்பவளிடம் அஜிதன் என்ற மகன் பிறந்தான். அவன் பகவானின் ஒரு சம்சமே.
பாற்கடலைக் கடைந்து தேவர்களுக்கு அம்ருதம் கிடைக்கச் செய்தார். பாற்கடல் உள்ளே சுழன்ற மந்தர மலையைத் கூர்மமாக- ஆமை – கீழிருந்து தாங்கி நின்றார்.
அரசன் கேட்டான்: எப்பொழுது இது நடந்தது ? பகவான் பாற்கடலை எதற்காக கடைந்தார் ? மலையை ஏன் தாங்கி நிற்க வேண்டும்? நீர் வாழ் ஜந்துவாக தோன்றியது எதற்காக? தேவர்களுக்கு அம்ருதம் கிடைத்ததா? அம்ருதம் மட்டுமா? வேறு பொருட்களும் வந்தனவா? கேட்கவே அத்புதமாக இருக்கிறது. பகவானின் இந்த செயல். மேலும் சொல்லுங்கள். நீங்கள் சொல்லும் பொழுது மேலும் அதிகமாக ரசிக்கும்படி இருக்கிறது. என் மனம் மகிழ பகவானின் மகிமையை விவரித்துச் சொல்லுங்கள்.
ஸுதர் சொன்னார்: கூடியிருந்த மற்ற ரிஷிகளும் சந்தோஷமாக கேட்கத் தயாரானார்கள். இதுவும் ஹரியினுடைய லீலையே என்றனர்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: யுத்தம் என்று வந்தால் அசுரர்களிடம் தேவர்கள் தோற்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் கூர்மையான ஆயுதங்களால் வெகுவாக பாதிக்கப் பட்டார்கள். அனேக சமயங்களில் உயிர் இழந்தவர்கள் போலவே விழுந்தபடி கிடந்து வெகு நாட்கள் எழுந்திருக்கவே முடியாமல் இருந்திருக்கிறார்கள்.
துர்வாசருடைய சாபத்தால், இந்திரனும் மற்றும் மூவுலகிலும் இருந்த தேவர்கள் லக்ஷ்மீ கடாக்ஷமே அற்றவர்கள் போல், உடல் சக்தியை இழந்தது போல தினசரி அக்னி காரியங்களைக் கூட செய்ய இயலாதவர்களாக ஆனார்கள். மகேந்திர வருணன் முதலானோரும் தங்கள் சக்திக்கு மீறிய சங்கடம் என்பதால் மேரு மலையில் ப்ரும்ம சபா நடப்பதைக் கேள்விப் பட்டு அங்கு சென்றனர். அங்கு அனைவருமாக பகவானிடம் முறையிட்டனர். உயிர் இல்லாத உடல் போலவும், சாரமில்லாத மரக்கட்டை போலவும் தங்கள் இயல்பான உடல் தேஜஸும் இல்லாமல், உலகில் அமங்களமாக நினைக்கப்படும் விதத்தில் இருந்த அவர்களின் தோற்றத்தைக் கண்டு விதாதா, மனதை அடக்கி பரம புருஷனை தியானம் செய்தார். சிறிது நேரம் சென்றபின், ஏதோ உபாயம் கிடைத்தது போல மலர்ந்த முகத்துடன் தேவர்களைப் பார்த்துச் சொன்னார். கேளுங்கள், நான், பவன்-ஈஸ்வரன், நீங்கள் அனைவரும் மற்றும் மனித, திர்யக்- விலங்குகள், தாவரங்கள், மற்ற பிறவிகள் அனைத்தும் எவருடைய அவதார அம்சமாக தோன்றினோமோ, அவரையே சரணடைவோம். அவருக்கு எவரையும் வதம் செய்யவோ, ரக்ஷிக்கவோ தேவையில்லை, இரு பக்ஷமும் அவரைப் பொறுத்த மட்டில் ஒன்றே. இருந்தாலும் படைத்தல், காத்தல், கலைத்தல் என்ற செயல்களை முக்குணங்களைக் கொண்டு நடத்துகிறாரோ, இதுவும் அவருடைய ஸ்திதி பாலனம் என்ற வகையில் தேவர்களான உங்களை காப்பதும் அவர் பொறுப்பே. அவரிடமே செல்வோம், அவர் என்ன சொன்னாலும் செய்வோம், எதை நமக்கு அருளுகிறாரோ அதுவே நமக்கு மங்களம், என்றவர், தானும் அவர்களுடன் அஜிதன் என்ற பெயரில் அவதரித்திருந்த பகவானிடமே சென்றார்.
இது வரை கேட்டது தான், அவருடைய ஸ்வரூபத்தைக் கண்டதில்லை. எனவே அழகான வார்த்தைகளைக் கொண்டு மனப் பூர்வமாக துதி செய்தனர்.
ப்ரும்மா சொன்னார்: அவிக்ரியம், சத்யம், அனந்தமாத்யம், குஹாசயம், நிஷ்கலம், அப்ரதக்யம், மனோக்ரயானம்-வார்த்தைகளால் இதுவரை சொல்லிக் கேட்டதில்லை, சிறந்த தேவர், அவரை வணங்குகிறேன்.
ப்ராணன், மனம், புத்தி, ஆத்மா மற்றும் இந்திரியங்கள் இவைகளை செயல் படச்செய்பவன். தூக்கம், உடல் காயங்கள் இவைகளால் பாதிக்கப்பட மாட்டான். குடை போல நிழல் தருபவன், எந்த இடத்தில் கருடனின் பக்ஷம் எட்டாதோ அங்கெல்லாம், வானமே அவன்தான், மூன்று யுகங்களிலும் அக்ஷரமானவன் அவனை வணங்குகிறேன்.
பிறவியில்லாத – ஆதியும் அந்தமும் இல்லாத- சக்கரம், மனோமயமானது. பதினைந்து ஆரங்கள் கொண்டது. வேகமாக செல்லும். மின்னல் போல வேகமானது, அஷ்ட நேமி, இதை அக்ஷமென்பர், சத்யமான அதை சரணடைகிறேன்.
தாமசம் என்பதே இல்லாத ஒரே வர்ணன், லௌகிகமானது அல்ல -தெளிவாக தெரியாதது. அனந்தம் அபாரம் என்பர். யோக ரதத்தில் கருடாரூடனான அவனை தீரர்கள் பஜிக்கின்றனர். அவருடையை மாயையை எவராலும் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது. ஜனங்கள் திகைக்கிறார்கள், அதன் பொருளையும் அறிய முடிவதில்லை. அவரை, தன் ஆத்மாவை அறிந்த , பரமேஸ்வரனான அவனை வணங்குகிறேன். பஞ்ச பூதங்களில் சஞ்சரிப்பவன் என்று வணங்குகிறேன்.
இதோ நாங்கள் இந்த சரீரம் பெற்றது அவரருளால். சத்வ குணம் மட்டுமே அதிகமாக இருக்க எங்களைப் படைத்தார். இந்த ஸூக்ஷ்மமான கதியை யாரும் அறிந்திலர். ரிஷிகளே அறியவில்லையெனில் அசுரர்கள் எவ்விதம் அறிவர்.
தானே செய்து கொண்ட ஏற்பாடு. பாதங்கள் தான் பூமி. இங்கு நான்கு விதமான பிறவிகள். (நடப்பன, பறப்பன, ஊர்வன, நீர் வாழ்வன) மஹாபுருஷனான அவன் தயை செய்ய வேண்டும். ப்ரும்மா அவனே, பெரும் விபூதியுடையவன்.
தண்ணிர் அவனது ரேதஸ். உதார வீர்யம் என்று அதைச் சொல்வர், ஏனெனில் தண்ணீரால் தான் உலகில் உயிரினங்கள் தோன்றுகின்றன. சோமோ, சந்திரனாக இருந்து, தாவரங்களுக்கு உணவையும், ஆயுளையும் தருகிறான். ப்ரஜன என்று புகழ்ந்து சொல்வர்- அளவிட முடியாத இந்த உதவியைச் செய்பவன் எங்களுக்கும் அருளட்டும். அக்னி அவனது முகம். அதிலிருந்து தான் ஜாத வேதர்கள் என்பவர்கள் தோன்றினர். வேதங்களின் கர்ம காண்டங்களை வகைப் படுத்துவதே அவர்கள் பிறப்பின் நோக்கமாக இருந்தது. சமுத்திரத்தின் அடியில் (ஸமுத்திரத்தின் வடவாக்னி தன் தாதுக்களை உணவுக்காகும் பொருட்களாக சமைத்து தருகிறான் என்பது பொருள்) தாதுக்களைக் கொண்டு உணவு தயார் செய்வது அக்னியின் ஒரு வேலை.
அந்த மகா விபூதிக்கு உரியவன் எங்களை காப்பாற்றட்டும். ஆதித்யன் அவன் கண்கள். தேவயானம் – அர்சி முதலியவைகளின் வழி காட்டும் தேவதை. ப்ரும்ம ஞானிகளின் உபாசன ஸ்தானம். ஆதித்யனின் உள் இருப்பது ஹிரண்மயமான மஹா புருஷன் என்பது ஸ்ருதி. தேவயானம் முக்திக்கு வாசல். அம்ருதம் புண்ய லோகம். ம்ருது காலாத்மகன், அந்த மகா விபூதிமான் எங்களைக் காக்கட்டும்.
வாயு சராசரங்களின் ப்ராணன். எந்த பர புருஷனின் ப்ராணத்திலிருந்து தோன்றியதோ, அது தான் உயிரினங்களின் மனதின் உத்சாகம், சாரீரம்- குரல் வளம் இவைகளை நிர்வகிக்கிறது. வாயுவின் பலம் ஓஜஸ். அது தான் இந்திரியங்களாகும். அவரை பின் பற்றுபவர்கள் நாம். அரசனைத் தொடர்ந்து செல்லும் பிரஜைகள் போல. அந்த மகா விபூதிமான் எங்களை அனுக்ரஹிக்கட்டும்.
பர புருஷனின் காதுகள் திசைகள். அவரின் காதுகளிலிருந்து அண்டத்தில் தடாகங்கள், பள்ளங்கள்,குகைகள் தோன்றின. மனிதனின் நாபி, உடலில் உள்ள துவாரங்கள், ஐந்து விதமான இந்திரியங்களின் செயல்கள், ப்ராணேந்திரியம்,என்று உலகில் ஜீவன்களில் என்று வகைப் படுத்தி வைத்த அந்த மகா விபூதிமான் அனுக்ரஹிக்கட்டும்.
இவருடைய பலத்திலிருந்து இந்திரன், ப்ரசாதம் -மகிழ்ச்சி, என்பதால் த்ரிதசா: எனப்படும் தேவர்கள், கோபத்திலிருந்து கிரீசன், புத்தியில் இருந்து விரிஞ்ச்சி, உடல் துவாரங்களிலிருந்து வேதங்கள், காயத்ரி முதலானவை, மற்றும் ரிஷிகள், ஜனன உறுப்பிலிருந்து ப்ரும்மா தோன்றினரோ, அந்த மகா விபூதிமான் எங்களை காக்கட்டும்.
அவருடைய மார்பிலிருந்து ஸ்ரீ- லக்ஷ்மி, நிழலில் இருந்து பித்ருக்கள், ஸ்தனத்திலிருந்து தர்மம், மற்றவர்கள் முதுகிலிருந்து, வானமே இவரது தலை, அப்சரஸ்கள், விளையாட்டினால் – அந்த மகா விபூதிமான் எங்களைக் காக்கட்டும்.
அவரது முகத்திலிருந்து அந்தணன், ப்ரும்மா அவருடைய ஜனன உறுப்பு. ராஜாக்கள் அவருடைய புஜங்கள், துடைகளில் வைஸ்யர்கள், பாதங்களில் -ஸூத்ரர்கள் வந்தனர். அந்த மகா விபூதிமான் எங்களைக் காக்கட்டும்.
அவருடைய கீழ் உதடுகளிலிருந்து லோபம், ப்ரீதி மேல் உதடுகள், மூக்கிலிருந்து பசுக்கள், ஸ்பர்சத்தால் காமம், புருவத்திலிருந்து-யமன், இமைகளிலிருந்து காலம், வெளி வந்தன. அந்த மகா விபூதிமான் எங்களைக் காக்கட்டும்.
த்ரவ்யம்-மூலப்பொருள்-தாது, ஆயுள், செயல்கள், குண விசேஷங்கள், இவைகளை யோக மாயா அளித்ததாகச் சொல்வர். அந்த மகா விபூதிமான் எங்களைக் காக்கட்டும்.
அந்த அமைதியான சக்திக்கு நமஸ்காரம். எங்களுக்கு ராஜ்யம் போன்றவை கிடைக்க அருளிய மகாத்மாவுக்கு , தான் உண்டாக்கிய மாயை, அதன் செயல்களால் தானே பாதிக்கப் படாமல் இருப்பவர். நபஸ்வான்- வாயு, அதுவும் அவரது லீலையே
அத்தகைய தயாளன், நீ எங்களுக்கு தரிசனம் தர வேண்டுகிறோம். உன்னை சரணடைந்தோம். புன்னகையோடு கூடிய உன் முகாம்புஜத்தை காண விரும்புகிறோம். உன் விருப்பம் போல ரூபம் எடுத்து, அந்தந்த காலத்தில், விபோ! எங்களால் நினைத்து கூட பார்க்க முடியாத செயல்களை பகவானே! நீ செய்கிறாய். க்லேசங்கள்-கஷ்டங்களே நிறைந்த, அதிலும் பயனற்ற செயல்களே , மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். விஷயங்களில் ஈடுபட்டு வருந்துகின்றனர். அவைகளையும் உனக்கே அர்ப்பிக்கிறோம். மிக அல்பமேயானாலும் ஈஸ்வரார்ப்பிதம் என்ற பின் அது மனிதனின் நன்மைக்கே. எப்படி மரத்தின் உடலும், கிளைகளும் தழைக்க, அதன் வேரில் நீரை விடுகிறோமோ, அதே போல மஹா விஷ்ணுவின் ஆராதனம், தனக்கும், மற்ற அனைவருக்கும் நலன் தருவதாக அமைகிறது.
அனந்தனான உனக்கு நமஸ்காரம். உன் செயல்களை விவரிக்கவோ, விமர்சிக்கவோ, நாங்கள் யார்? நிர்குணம், மஹேசன் , சத்வம் உள்ள இத்தில் இருப்பவன் என்றும் சொல்லி வணங்குகிறோம்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், அம்ருத மதனம் என்ற ஐந்தாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்-50
அத்யாயம்-6
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு தேவர்கள் அனைவருமாக துதி செய்யவும் ஸ்ரீ ஹரி அங்கு தோன்றினார் (ஆவிரபூத்) திடுமென அந்த இடம் ஆயிரம் ஸூரியன்கள் ஒன்றாக உதித்தது போல பிரகாசமாக ஆயிற்று.. அந்த ஒளியினால் பார்வையே மறைக்கப்பட்டது போல தேவர்கள் திகைத்தனர். வானம், திசைகள், சுற்றிலும், தங்களுக்குள்ளேயே தேடினர். எங்கே? விபு வந்தாரே, எங்கே ? விரிஞ்சியும் மஹேஸ்வரனும் முதலில் கண்டு கொண்டனர். சுத்தமான மரகத பச்சை நிறத்தில். தாமரை மலர் போன்ற சிவந்த கண்கள். புடமிட்ட பொன் நிறத்தில், பீதாம்பரம் சல சலக்க, ப்ரசன்னமான அழகிய உடலும், சுமுகன், சுந்தரமான புருவங்களும், மகாமணி ஒளி விசும் கிரீடமும், கேயூரமும் அலங்கரிக்க, காதுகளின் ஆபரணம், கன்னத்தில் பள பளக்க, அழகிய லக்ஷ்மீகரமான முகம். இடுப்பின் காஞ்சீ, கலாபம், என்ற வளையங்கள், ஹாரமும், நூபுரமும், அழகூட்டின. கௌஸ்துபாபரணமும், ஸ்ரீ லக்ஷ்மியும், வனமாலையும் என மார்பில் அலங்கரிக்க,
சுதர்சனம் முதலான தன் அஸ்திரங்கள், அவைகள் உருவெடுத்து வந்து வணங்கி நிற்பது போல தெரிய, கண் முன் கண்ட தேவர்கள் மகிழ்ந்தனர். அனவருமாக, தேவர்கள் பரம புருஷனை காண கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தனர்.
ப்ரும்மா சொன்னார்: பிறவி, வாழ்தல், பின் மறைதல் என்ற சாதாரண ஜீவன்கள் போல அல்லாத, ஆதி புருஷனை, நிர்வாண குணமுடையவனை, சமுத்திரம் போல எல்லையில்லாத சுகமே உருவானவனை, அணுவிலும் அணுவாகவும், எண்ணி முடியாத ஆற்றலும் உடையவனை, மஹானுபாவன் என்ற சொல்லுக்கு உரித்தானவனை வணங்குகிறேன். நமோ நமஸ்தே.
புருஷர்ஷபா! இந்த உன் ரூபம், நன்மையை நாடும் அனைவருக்கும் போற்றத் தகுந்தது. வைதிகமோ, தாந்த்ரீகமோ, யோகமோ, ப்ரும்மாவே, மூவுலகையும் உன் மூர்த்தியில் காண்கிறேன். நீ முதலில் தோன்றினாய். மத்யத்திலும், பின் முடிவிலும் நீயே உன் ஆத்ம தந்திரம் என்பதுடன் விளங்குகிறாய். இந்த உலகங்களின் ஆதியும் அந்தமும், மத்யமாகவும், மண் பானையின் மண் போல பரத்திலும் பரமாக இருக்கிறாய். உன் மாயையால் நீயே, உன் அம்சமாக ஆத்மாவாக, அதன் ஆஸ்ரய ஸ்தானமாகவும், ஏற்படுத்தி, விஸ்வத்தின் உள் நுழைந்துள்ளாய். அறிவுடையோர் உன்னை அடையாளம் காண்கின்றனர். மனதினால் ஊகித்து அறிகின்றனர். ஏராளமான குணங்களின் நடுவில் நிர்குணமான உன்னை பிரித்து சாஸ்திரம் அறிந்தவர்களால் தெரிந்து கொள்ள முடிகிறது. எவ்வாறு மரக் கட்டையில் அக்னி (கடைவதால்), அம்ருதமான ஆஜ்யம்-நெய்- பசுவை கறந்து கிடைக்கும் பாலில் இருந்து (பாலை கறப்பது என்ற செயல்) பூமியில் அன்னம் விதைகளை விதைத்தும் மற்றும் பல செயல்களைச் செய்தும் கிடைக்கிறது, நீர் பூமியில் தோண்டி (கிணறுகள் வெட்டி) கிடைக்கிறது, முயற்சியாலும் உழைப்பாலும், வியாபாரம் முதலிய வாழ்க்கைக்கான தொழில் பலனளிக்கிறது. உழைப்பால், நீர் (அதற்கான கயிறு,ராட்டினம் போன்ற உபகரணங்கள் தேவையோ) உபாயங்களால், யோகிகள், மனிதர்கள் பலன் பெறுவது போல கவிகள், தங்கள் புத்தியால் உன்னை அறிந்து போற்றுகிறார்கள். சரோஜ நாப! கடுமையான தவத்தாலும், நீண்ட நாட்கள் உபாசனை செய்தும் உன்னை காண்பது அரிது என்று இருக்க நேரில் காணப் பெற்றோம். எங்கள் தாபம் தீர்ந்து நம்பிக்கை எனும் ஓளி கிடைக்கப் பெற்றோம். அதற்கு முன் தாவாக்னி நடுவில் நிற்பது போல உணர்ந்தோம்.. என்ன செய்ய வேண்டும் என்று கேட்டால், பகவானே, நீயே அந்தராத்மா, அசேஷ சாக்ஷி, நீ அறியாததா? நாங்கள் சொல்லித் தான் தெரிய வேண்டுமா? நீங்களே பரிகாரம் செய்து கொள்ளுங்களேன் என்றால், நாங்கள் உன் சக்தியின் துகள்கள், அக்னியின் பொறிகள் போல உன்னில் தோன்றி உன்னிலேயே ஐக்யம் ஆகும் அல்பர்கள். எது எங்களுக்கு நன்மை செய்யும் அல்லது தீமையே என்பதை கூட எங்களால் உணர்ந்து அறிய முடியாது. பகவானே, நீயே, தேவர்களுக்கும், அந்தணர்களுக்கும் நன்மையை செய்வாயாக. இதைச் செய் என்று கட்டளையிடுங்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு விரிஞ்சி முதலானோர் வேண்டிக் கொண்டதைக் கேட்ட பின். அவர்கள் வேண்டுவது என்ன என்பதை உள்ளபடி புரிந்து கொண்ட பகவான், மேக நாதம் போன்ற தன் குரலில் கை கூப்பி நின்றிருந்தவர்களைப் பார்த்து பதிலளித்தார். தேவர்கள் நலனுக்காக சமுத்ர மதனம்- பாற் கடலைக் கடைவது- என்பதைச் சொன்னார். ப்ரும்மன்! சம்போ! ஹே தேவா:! கேளுங்கள். கவனமாக கேளுங்கள். அனைவருக்கும் ஸ்ரேயஸ்- நன்மை என்பதால் தேவர்களே! தைத்யேயர்களிடம் சமாதானமாக பேசி ஒரு உடன்படிக்கை செய்து கொள்ளுங்கள். காலத்தால் அனுக்ரஹிக்கப் பட்டவர்கள் அவர்கள் உங்களிடம் அனுகூலமாக இருக்கும்படி பேசுங்கள். சில சமயம் எதிரிகள் என்பவர்களும் அரவனைத்துக் கொண்டு போக வேண்டியுள்ளது. அரிய செயல் நடக்க அனைவரும் ஒற்றுமையாக இருந்தால் தான் முடியும். எலியும் பாம்புமாக இருக்கும் நீங்கள் தற்சமயம் சிரமத்திலும் அவர்கள் பதவியும் ஐஸ்வர்யமுமாக வாழ்கிறார்கள்.
அம்ருதம் என்பதை உண்டாக்க வேண்டும். அதற்கான பிரயத்னங்கள் கடுமையானவை. இதில் மேலும் தாமதிக்காமல் செயல்படுங்கள். அம்ருதம் கிடைத்தால் அதை அருந்தி எந்த ஜந்துவானாலும் மரண பயமின்றி அமரனாக ஆகலாம். பாற்கடலில் எல்லோருமாக புல், கொடிகள், ஔஷதிகள் இவைகளைப் போட்டு, மந்தர மலையை மத்தாகப் போட்டு, கயிறாக வாசுகியை சுற்றி, என் உதவியுடன் நீங்கள் அனைவருமாக பாற்கடலைக் கடையுங்கள். சற்றும் தளராமல் இதைச் செய்யுங்கள். பலசாலிகளான தைத்யர்களும் உழைப்பால் உடன் இருப்பார்கள். உங்களுக்கும் பலன் கிடைக்கும். தைத்யர்களும் சம்மதித்தால், இதைச் செய்யுங்கள். எப்பொழுதும் போரிட்டு வெல்வது தான் வழி என்று இல்லை. சமாதானமாகவும் சில செயல்களை முடிக்க முடியும். பயப்பட வேண்டாம். சமுத்திரத்தைக் கடையும் சமயம் காளகூட விஷம் வந்தாலும் வரும். லோபமோ, கோபமோ வேண்டாம். கிடைக்கும் வஸ்து மிக உயர்வானது. அதற்கான சில கடினமான எதிர் விளைவுகளைத் தாங்கித் தான் ஆக வேண்டும்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இப்படிச் சொல்லி விட்டு புருஷோத்தமரான பகவான் மறைந்தார். சுதந்திரமான போக்கு உடையவர் தோன்றுவதும் மறைவதும் அவருடைய சங்கல்பமே.
பிதாமகர் முதலானோர் அவரை வணங்கி தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்றனர். தேவர்கள் வேறு வழியின்றி செல்வ செழிப்பும், அடங்காத உடல் வலிமையும், தங்களே நாயகர்களாக மூவுலகையும் வசப் படுத்திக் கொண்டு இருந்தவர்களிடம் சந்தி-உடன்பாடு செய்து கொள்வதைப் பற்றிப் பேசினர். தயங்கியபடியே, அசுர வீரர்கள் புடை சூழ இருந்த வைரோசனி- விரோசனின் மகன், தன் அரியணையில் அமர்ந்து இருந்த சமயம் காணச் சென்றனர். செல்வ செழிப்பும், உலகத்தையே தங்கள் ஆளுமைக்குள் கொண்டுவந்த கர்வமும், அவர்கள் நிமிர்ந்து நின்றதிலேயே வெளிப்படியாக தெரிவதைக் கண்டனர். புருஷோத்தமன் சொன்ன சொற்களை மனதில் திரும்பத் திரும்ப நினைத்து உருவேற்றிக் கொண்டவன் போல மகேந்திரன் குழைவாக சாந்தமாக பேசினான். அதை தைத்யேஸ்வரன் மட்டுமல்ல, உடன் இருந்த அவனுடைய மந்திரிகள், மற்ற அசுர பதிகளும் கேட்டனர். த்ரிபுர வாசிகளான சம்பரனும், அரிஷ்ட நேமியும் கூட அங்கு இருந்தனர். முடிவில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையில் ஒரு உடன்படிக்கை தயாரானது. கடினமான செயலைச் செய்து அம்ருதம் பெறுவதை அனைவருமே ஏற்றுக் கொண்டனர்.
மந்தர கிரியை அவர்கள் தங்கள் பலத்தால் பெயர்த்து எடுத்து ஆடிப் பாடிக் கொண்டு பாற்கடலுக்கு கொண்டு வந்தனர். அடி மரம் போல புஜங்கள் உடைய வீரர்கள். வெகு தூரம் அதைக் கொண்டு வந்ததில் இரு பக்கத்தினரும் வெகுவாக களைத்தனர். இந்திரனும் அவனைச் சேர்ந்தவர்களும், வைரோசனனைச் சேர்ந்தவர்களும் தாங்க முடியாமல், பாதி வழியில், தவற விட்டனர். அதன் பலனாக, மந்தர கிரி விழுந்த வேகத்தில் அதன் அடியில் பல தேவர்களும் அசுரர்களும் நசுக்கப் பட்டனர்.
கனகாசலம் – மந்தர மலையில் மற்றொரு பெயர்- தன் பாரத்தால் அவர்களை தூள் தூளாக்கி விட்டது. மனம் உடைந்து கைகால்கள் உடைந்து, பகவானை பிரார்த்தித்தனர். கருட த்வஜனானான பகவான் அங்கு வந்தார். மலையில் அடியில் விழுந்து நொறுங்கிய கை கால்களுடன் இருந்த இரு பக்ஷத்தினரையும் தன் அருள் பார்வையால் பிழைப்பித்தார். அவர்களும் அடி பட்ட சுவடு கூட இல்லாமல் புத்துயிர் பெற்றவர்களானார்கள். மலையை அனாயாசமாக ஒரு கையால் எடுத்து கருடனின் மேல் வைத்தவர், தானும் அதில் ஏறிக் கொண்டு பாற்கடலை நோக்கிச் சென்றார். அனைவரும் கூட்டமாக பின் தொடர்ந்தனர். தன் தோளிலிருந்து மலையை இறக்கி, கடலில் ஆழத்தில் அதை நிலை நிறுத்திய பின் கருடன் பகவானிடம் அனுமதி பெற்று திரும்பியது.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், அம்ருத மதனம் என்ற ஆறாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்-39
அத்யாயம்-7
அதன் பின், நாக ராஜனான வாசுகியை அழைத்தனர். கிடைக்கப் போகும் அம்ருதத்தில் பங்கு தருவதாகச் சொல்லி நாகராஜனை சம்மதிக்க வைத்தனர். வாசுகியை மந்தர மலையைச் சுற்றி கயிராக சுற்றிக் கட்டி மகிழ்ச்சியுடன் கடைதலுக்கு தயாரானார்கள்.
முதலில் ஸ்ரீ ஹரி நாகத்தின் முக பாகத்தில் அதைத் பிடித்துக் கொண்டதும் மற்ற தேவர்களும் அவரை பின் பற்றினர். அதில் தைத்யர்களுக்கு சந்தேகம் வரவும் மகா புருஷன் செய்வதால் ஏதோ காரணம் இருக்கும் என்றெண்ணியோ, நாங்கள் வால் பாகத்தை பிடித்துக் கொள்ள மாட்டோம் என்று மறுத்தனர். பாம்பின் வால் அமங்களம் என்றனர். அவர்களும் ஸ்வாத்யாயம், ஸ்ருதி என்ற வேத பாடம் கற்றவர்கள், ஜன்ம கர்மங்களால் பெரும் புகழ் பெற்றவர்கள், வீம்புடன் வாளா இருக்கவும், புருஷோத்தமன், சிரித்துக் கொண்டே, முன் பாகத்தை விட்டு வால் பாகத்தை பிடித்துக் கொண்டார். அமரர்களும் அதே போல வால் பாகத்துக்கு வந்தனர்.
இவ்வாறு ஸ்தானம் தீர்மானம் ஆன பின் கஸ்யப குலத்தினர் கடைய ஆரம்பித்தனர். மிகுந்த பிரயாசையுடன் அம்ருதம் கிடைக்கப் போவதை நினைத்து மகிழ்ந்தவர்களாக பாற்கடலைக் கடைந்தனர். வேகமாக கடையவும் ஆதாரம் இல்லாமல் நடுக் கடலில் நின்ற மந்தர மலை, பலி முதலானவர்கள் இறுக்கி பிடித்தும், அதன் கனம் காரணமாக வேகமாக விழுந்தது.
அனைவருக்கும் முகம் வாடியது. செய்வதறியாது திகைத்தனர். தங்கள் ஆற்றல் அனைத்தும் விதியினால் வீணானதைக் கண்டு நம்மை மீறிய தெய்வபலம்- நாம் அழிந்தோம் என்று மிக வருந்தினர். பெரிய செயலை செய்ய முனையும் பொழுது விக்னம் வருவது இயற்கை. மிக வேகமாக செயல்படும் வீரனான பகவான், தான் ஆரம்பித்து வைத்த உடன்பாடும், உழைப்பும் வீ ணாக விடாமல், சட்டென்று, அதிசயமான ஆமை -கூர்ம வடிவம் எடுத்து நீரினுள் பாய்ந்தார். ஆழம் வரை நுழைந்து மலையை தூக்கிப் பிடித்தார்.
திடுமென குலாசல மலை தானே எழுந்து வந்ததைக் கண்ட தேவர்களும், அசுரர்களும் திகைத்தாலும் மகிழ்ச்சியுடன் மறுபடி கடைய முனைந்தனர். அந்த மலையோ பெரும் தீவு போல தென்பட்டது. லக்ஷ யோஜனை விஸ்தாரணம் உள்ள பூமி பாகமோ என அதிசயப் பட வைத்தது.
இரு பக்ஷத்தினரின் புஜ வீர்யமும் சோதனைக்குள்ளாகியது. சுழலும் மலையின் ஒரு பகுதியை தாங்கியவாறே, அதனுடைய சுழற்சியை தாங்கிய ஆதி கச்சபம் என்ற முதல் ஆமை தன் முதுகில் எவரோ கைகளால் பிறாண்டுவது போல தவித்தது.
இரு பக்கத்தினரும் களைத்த நிலையில் பகவான் அசுரர்களின் உடலில் அசுரனாக, தேவர்களின் உடலில் தேவனாக தானே ப்ரவேசித்தார். அவர்களும் புத்துணர்வும் புது பலமும் பெற்றவர்களாக நாக ராஜனை திரும்பப் பற்றினர். தன் மேல் மலையரசனை தாங்கியபடி, தன் மற்றொரு கையால் அதன் முடி பாகத்தையும் பற்றியதைக் கண்ட ப்ரும்மாவும், பவனும் பூமாரி பொழிந்தனர். அவரே ஸஹஸ்ர பாஹு – ஆயிரம் கைகளுடன் உள்ளவர் தானே.
மலையின் மேல் பாகத்தை ஒரு கையால் அழுத்தி பிடித்தபடி, முதுகில் அதைத் தாங்கியபடியும், வாசுகிக்கு நித்ரையை கொடுத்து அது திமிராமல் இருக்கச் செய்தும், இரு பக்ஷத்தினரின் உடலிலும் ப்ரவேசித்து பலத்தை அளித்தும், வேகமாக மந்தர மலையை சுழற்றி அதற்கு ஈடாக ஆமை வேகமாக சுழலும் படி செய்தும் பகவான் உடன் இருந்து பாற்கடலை கடையச் செய்தார்.
விழித்துக் கொண்ட நாக ராஜனின் ஆயிரம் முகங்களிலிருந்தும், அதன் சுவாசக் காற்று, அக்னியும் புகையும் கலந்து வீசுவது போல தாக்கவும் அசுரர்கள் தவித்தனர். பௌலோம, காலேய, பலி, இல்வல என்ற அசுரர்கள் தாவாக்னியில் அடிபட்டது போல வாடினர். தேவர்களும் அந்த சுவாசக் காற்றைத் தாங்க முடியாமல், அழகிய உடை, ஆபரணங்கள் நிலை குலைய முகம் வாடியதைக் கண்ட பகவான், மேகங்கள் தூறலாக மழை பொழியவும், காற்று சமுத்திர ஜலத்தின் குளுமையுடன் சுகமாக வீசவும் செய்தார்.
கடைதல் தொடர்ந்தது. தேவ, அசுரர்கள், கூட்டம் கூட்டமாக அம்ருதம் இதோ வரும் வரும் என்று எதிர்பார்த்து ஆவலுடன் இடைவிடாது கடைந்தனர், பகவானும் அந்த கடைதலில் சேர்ந்து கொண்டார்.
மேக ஸ்யாமளன், கனக-பொன் நிற ஆடை அணிந்தவன், காதுகளில் பளீரென்று ஒளிவிசிய குண்டலங்கள் மின்னலாக கன்னங்களில் பட்டு ஒளி வீச, தலையில் கேசம் கலைந்து ஆட, மாலைகளையும், அணிகளையும் அணிந்தவர், இயல்பிலேயே சிவந்த கண்கள் மேலும் சிவக்க, தோள்பட்டையின் இரு பக்கமும் உலகுக்கு அபயம் தரும் தந்த சூகம் (दन्द शूकम् -பாம்பு) என்பதை தாங்கியபடி, மலை ரூபமான மத்தை வைத்து கடையும் சமயம் அதற்கு இணையான மற்றொரு கிரி போலவே விளங்கினார்.
வேகமாக கடைந்தவர்கள் பாற்கடலில் இருந்து வரும் விஷத்தைக் கண்டனர். மகா பயங்கரம். ஹால ஹாலம் என அழைக்கப் படும் கடும் விஷம். சமுத்திரத்தின் வாழும் மீன்களும், மகரங்களும், சிறு ஜீவன்களும், கடல் வாழ் யானைகளும், ஆமைகளும், முதலைகள், திமிங்கிலங்கள் அனைத்தும் பதறி அலை பாய்ந்தன. இங்கும் அங்குமாக ஆகுலமாக ஓடின. உக்ர வேகமாக பெருகி வரும் விஷம் திசைகள் தோறும் பரவி, மேன் மேலும் நாகராஜன் முகத்திலிருந்து வெளி வந்தபடி இருந்த விஷத்தைக் கண்டு பயந்து ஓடினர். ப்ரஜைகள், தேவர்கள் , தலைவர்கள் என்ற பாகுபாடின்றி, யார் காப்பாற்றுவார் என்று தெரியாத நிலையில் சதாசிவனை சரணடைந்தனர். அவரோ தவத்தில் ஆழ்ந்திருந்தார். தன் கைலாச மலையில் தேவியின் ப்ரியன், முனிவர்களின் முதல் குரு, மூவுலகிற்கும் தந்தை ஸ்தானத்தில் உள்ளவர், உலக நன்மைக்காக தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டனர். தவத்தை கலைக்க அனைவருமாக துதி செய்தனர்.
ப்ரஜாபதிகள்: தேவ தேவா! மஹாதேவா! பூதாத்மன்! பூத பாவன! த்ராஹி- எங்களை காப்பாற்றுங்கள். மூவுலகையும் எரித்து அழிக்கக் கூடிய மகா விஷம் பெருகி வருகிறது. உங்களை சரணடைகிறோம், காப்பாற்றுங்கள். பிறப்பு எடுத்த ஜீவன்களின் பந்த மோக்ஷத்துக்கு நீங்கள் ஒருவரே ஈஸ்வரன். நல்ல நிலைமையில் இருப்பவரும் அண்டியவனை காப்பவர் என்றும் தங்கள் குரு என்றும் உங்களை போற்றுகின்றனர். மூவராக ரூபம் எடுத்தாலும், ப்ரும்மா, சிவன், விஷ்ணு, என்று அழைக்கப் பட்டாலும் நீங்கள் ஒருவரே என்று அறிவோம். கண்கள் சதா சுழன்று, உலகை காணும். விபோ, முக்குணங்கள் , ஸ்வ சக்தி இவைகளைக் கொண்டு உலகம் தோன்றுவதையும், நிலை பெறுத்தலையும், மறைவதையும் நீங்கள் நிர்வஹிக்கிறீர்கள்.
நீங்களே ப்ரும்மா. பர ரகசியமானவர். சத்தும் அஸத்தும் உங்களால் ஆளப்படுகின்றன. பல வித சக்திகளுடைய ஜகதீஸ்வரன். வெளியில் தெரியாமல் உயிரினங்களின் உள் ஆத்மாவாக இருப்பவர். நாதங்களுக்கு, சப்தங்களுக்கு, அதாவது வேதங்களுக்கு ஆதாரம் நீங்களே. அதனால் ஞானம் தானே உங்களை வந்தடைந்தது. உலகங்களின் ஜகத் முதலானவைகளின் மஹத் தத்வம்- ஆத்மா வாக இருப்பவர், ப்ரணேந்திரிய, த்ரவ்யம் (மூலப் பொருள்) இவைகளின் (முக்)குணங்களின் காரண பூதன், ஸ்வபாவம்- தன்னியல்பு என்பது தாங்களே. அங்கு க்ரது: சங்கல்பம், காலன், யாக ரூபி, சத்யம், உண்மை என்ற தர்மமே வடிவானவன், என்றும் உங்களை அழிவற்ற த்ரிவித் – முக்குணங்களின் ரூபமாக எந்த அக்ஷரம் ப்ரதானமோ, அதுவே உங்களை ஆஸ்ரயித்து உள்ளது. மூன்றெழுத்துக்களின் கூட்டான ப்ரணவம் என்ற அக்ஷரம் உங்களால் ப்ரகாசம் (பெருமை) அடைகிறது.
அகில தேவதாத்மா ! உங்கள் முகமே அக்னி. தங்களுடைய பாத பத்மங்களே பூமி. லோக பவ! காலம் உங்கள் கதி-நடை. அகில தேவதாத்மாவான உங்கள் காதுகளே திசைகள். நாக்கு ஜலேசம்- நீருக்கு அதிபதியான வருணன். நாபி- வானம், மூச்சுக் காற்று வாயு, கண்களே ஸூரியன், தண்ணீர் ரேதஸ், பர அவர என்ற ஆத்மாக்கள் உங்களுடைய ஆத்மா, சோமன் எனும் சந்திரன் மனம், ஆகாயம் பகவானே, உங்கள் சிரஸ். வயிறு சமுத்திரங்கள், மலைகள் எலும்புகள், ரோமங்கள் அனைத்து தாவரங்களும், வளர்வன அனைத்தும், சந்தஸ் எனும் வேத மந்திரங்கள் சப்த தாதுக்கள், த்ரயீ – மூன்று வேதங்களுமே உருவான உங்கள் ஹ்ருதயம் சர்வ தர்மங்களுமாக, ஐந்து முகங்களும் பஞ்ச உபனிஷதங்கள், ஈசனே! அதிலிருந்து தோன்றியவையே முன்னூற்று எட்டு மந்திர வர்கங்கள், சிவன் என்ற பரமார்த்த தத்வம், உங்களுடைய ஜோதியே உங்கள் இருப்பிடம். நிழல் அதர்மம், அதன் தம்ப லோபாதிகள் சம்ஹாரம், ப்ரபஞ்ச ஸ்ருஷ்டி உங்களுடைய மூன்று கண்கள், சாங்க்யம்- ஞானம். சாஸ்திரங்களை செய்தவர்களின் ஞானம் உங்கள் பார்வை, சந்தஸ்- காயத்ரி முதலான சந்தஸ் உங்கள் ரூபம், புராணமான ரிஷி- ஆதி ரிஷி. அகில லோக பால, கிரித்ர! பரம் ஜோதி ஸ்வரூபன், உங்கள் இருப்பிடம், விரிஞ்சி வைகுண்ட சுரேந்த்ர வாசிகளுக்கும் எட்டாதது. சத்வமான அந்த பர ப்ரும்மமே, பேத பாவங்களை வென்றவர்களே உங்களைக் காண முடியும்.
தங்கள் நெற்றிக்கண் என்ற அக்னி, அதன் பொறியினால், ஸ்ருஷ்டியை பஸ்மமாக்கியதை அறியாதவர்கள் தான், காமனை எரித்ததை, தக்ஷ யாகத்தை நிறுத்தியதை, மற்றும் பல சிறிய செயல்களை உயர்வாக சொல்வர். ஏனெனில் ஸ்ருஷ்டியின் அந்தம் யாருக்குத் தெரியும்? ஆத்மாராமர்களான ஞானிகளுக்கு, ரிஷிகளுக்கும் குருவாக இருப்பவர், உமையுடன் தவம் செய்வதையும் முடிவில் ஸ்மசானத்தில் உக்ரபுருஷனாக இருப்பதையும் எல்லோராலும் அறிந்து கொள்ளவா முடியும்?
சத் அசத் என்பவைகளுக்கு அப்பாற்பட்ட, பர புருஷன், உங்களை துதி செய்ய கூட எங்களுக்கு சக்தியில்லை. மஹேஸ்வரா! லோகத்தை காக்க வந்தவன், எங்கள் அறிவுக்கு அப்பாற்பட்டவன் என்று மட்டுமே உணர்ந்து வேண்டுகிறோம்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: அவர்களின் துயரம் வெளிப்படையாகத் தெரியவும், அனைத்து ஜீவன்களுக்கும் நண்பனான மஹேஸ்வரன், சதியைப் பார்த்து சொன்னார்:
ஸ்ரீ சிவ பெருமான் சொன்னார்: அஹோ! பவானி, இதைப் பார். ப்ரஜைகளின் கஷ்டம் – பாற்கடலை கடைய ஆரம்பித்தனர், கால கூட விஷம் பெருகி வந்து விட்டதாம். பயந்து விட்டார்கள். உயிர் போகும் நிலையில் இருப்பது போல வருந்துகிறார்களே, இவர்களுக்கு அபயம் அளிக்கிறேன். தீனனான யார் வந்து உதவி என்று கேட்டாலும் செய்ய வேண்டியதைச் செய்ய வேண்டியது என் போன்றோர்களின் கடமை அல்லவா? சாதுக்கள் தங்கள் உயிரை பணயம் வைத்தாவது ப்ராணாபத்தில் இருக்கும் மற்றொரு உயிரை காக்கிறார்கள். க்ஷணபங்குரன்- நீர் குமிழ் போன்றது, ப்ராணன் உடலில் தங்குவது நம் கையில் இல்லை என்று உபதேசமா செய்வர் ? தீவிரமான விரோதம் என்றாலும், மோகத்தில் ஆழ்ந்த ஜீவன்கள் என்றாலும், அந்த சமயத்தில் இவைகளை கவனிப்பதில்லை. மற்றொரு மனிதனுக்கு உதவி செய்தால் சர்வாத்மாவான ஸ்ரீ ஹரி ப்ரீதி அடைகிறார். ஸ்ரீ ஹரி மகிழ்ந்தால், உலகமே மகிழும். அதனால், இந்த விஷத்தை நான் உண்கிறேன். எல்லா ப்ரஜைகளுக்கும் நன்மை உண்டாகட்டும்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: பவானியிடம் விடை பெற்று வந்த மகேஸ்வரன், விஸ்வ பாவனன், உலக நன்மைக்காக அந்த விஷத்தை விழுங்க தீர்மானித்தார். அவர் ப்ரபாவத்தை அறிந்திருந்த ஸ்ரீ ஹரி அதை அனுமதித்தார். அதன் பின் பரவிக் கொண்டிருந்த ஹாலாஹல விஷத்தை தன் கைகளில் ஏந்தினார். அப்படியே வாயில் இட்டு விழுங்கினார். க்ருபையே உருவானவர். பூத பாவன: அனைத்து உயிரினங்களையும் நேசிப்பவர்.
(ஹர ஹர , நம: பார்வதீ பதயே! ஹர ஹர மஹா தேவ! )
ஜல கல்மஷம்- நீரின் களங்கம் – அவரிடமும் தன் சக்தியை காட்டியது. அவர் கழுத்தை நீலமாக்கியது. சாதுவான பரமேஸ்வரனுக்கு அதுவே அலங்காரமும் ஆயிற்று. உலகத்தார் தவித்தால் சாதுவான பெரியவர்கள், தாங்களும் வருந்துவர். அகிலாத்மாவான அவர் விஷத்தையும் தனக்கு நிவேதனமாக ஆக்கிக் கொண்டு விட்டார். அதைக் கேட்டு பிரஜைகள், அவர் மனைவி தாக்ஷாயணி, ப்ரும்மா, வைகுண்டமே ஸ்தம்பித்தது. மீடுஷ: – அனவருக்கும் அவரவர் விரும்பியதைக் கொடுப்பவர், என்று புகழ் பெற்றிருந்த மஹேஸ்வரனின் இந்த செயலை புகழ்ந்து பாடலானார்கள். அவருடைய விரல்களின் நடுவிலிருந்து நழுவிய விஷத்தை பருகிய ஜந்துக்கள், தேள், பாம்பு, முதலிய விஷ ஜந்துக்கள், சில மருந்துகள் விஷத்தைக் கொண்டு தயாரிக்கபடுவதும் தோன்றின. (தந்த சூகா: பல்லில் விஷம் உடையவை)
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், அம்ருத மதனம் என்ற ஏழாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்-46
அத்யாயம்-8
ஸ்ரீ சுகர் சொன்னர்: ஸ்ரீ ருத்ரன் வந்து இவ்வாறு விஷத்தை தானே அருந்தியபின், தடை நீங்கிய நிம்மதியுடன் அமர தானவர்கள் திரும்பவும் பாற்கடலைக் கடையலானார்கள். சற்று நேரத்தில் (ஹவிர்தானி) காமதேனு பசு அதிலிருந்து வந்தது. அதை அக்னி ஹோத்ரிகளான ரிஷிகள், ப்ரும்ம வாதிகள் எடுத்துக் கொண்டனர். அவர்கள் ப்ரும்ம லோகம் செல்ல வழி வகுக்கும் யாகங்களை செய்பவர்கள், தங்கள் யாகங்களில் ஹோமம் செய்யவும், பவித்ரமான ஹவிஸ் என்பதை செய்ய நெய் மற்றும் பொருட்களை அதன் மூலம் பெற்றனர்.
அதன் பின் உச்சைஸ்ரவஸ் என்ற வெண்ணிற குதிரை சந்திரன் போன்ற நிறத்துடன் வந்தது. தைத்ய ராஜாவான பலி அதை விரும்பினான். இரு பக்கத்தினரும் இணைந்து செய்த செயல், ஆரம்பித்திலேயே, பகவான் இருவருக்கும் பொதுவானது என்று சொல்லி இருந்ததால் இந்திரன் பேசாமல் இருந்தான். அதன் பின் ஐராவதம் என்ற கஜ ராஜன், பரமேஸ்வரனின் கைலாச மலையின் வெண் சிகரங்கள் போன்ற நான்கு தந்தங்கள், பிரகாசிக்க வந்தது. ( ஐராவத்துடன் வந்த எட்டு யானைகளும் திக்கஜங்களாயின)
அதன் பின் கௌஸ்துபம் என்ற ரத்னம் பெரும் கடலில் இருந்து வெளி வந்தது. பத்மராகம் என்ப்டும் அதை ஸ்ரீ ஹரி விரும்பினார், அவர் மார்பில் அது அலங்காரமாக ஆயிற்று. அதன் பின் பாரிஜாதம் வந்தது. தேவலோகத்துக்கு பூஷணமாயிற்று. அரசனே! அதுவும் உன்னைப் போல, எப்படியென்றால் யார் வந்து எதை வேண்டினாலும் நிறைவேற்றும் தன்மையுடையது.
அதன் பின் அப்சரஸ் நல்ல குரல் வளம் உள்ள அழகிய ஆடைகளை அணிந்த ரமணிகள் என்ற பெண்கள் வந்தனர். அவர்கள் ஸ்வர்க வாசிகளை தங்கள் நடை உடை பாவனைகளால் கவர்ந்தனர். .
அதன் பின் சாக்ஷாத் ஸ்ரீ லக்ஷ்மி ஆவிர்பவித்தாள். ரமா, பகவானுக்கு பிரியமானவள். மின்னலின் ஒளி சௌதாமினி- ஸ்படிக மலைகள் மீது பட்டால் திசைகள் ப்ரகாசமாவது போல, ஒளி வீசுவது போல ப்ரகாசமாக வந்தாள். அவளை சுர அசுரர்கள், மனிதர்கள் அனைவரும் விரும்பினர். அவள் ரூபம், அழகு இவற்றால் ஆகர்ஷிக்கப் பட்டனர். மகேந்திரன் அவளுக்கு ஆசனம் கொண்டு வந்து கொடுத்தான். நதிகள் உருவம் எடுத்து வந்து பொற்குடங்களில் சுத்தமான ஜலத்தைக் கொண்டு வந்தனர். அபிஷேகம் செய்வதற்கான பொருட்களை சகல ஔஷதிகளும் கொண்டு வந்தன. பசுக்கள் பஞ்ச கவ்யம் என்ற பவித்ரமான பொருள்களை, வசந்தன் மது மாத்வம் என்பவைகளை, ரிஷிகள், முறைப்படி அவளுக்கு அபிஷேகம் செய்வித்தனர்
கந்தர்வர்கள் மங்களம் பாடினர், நடனம் அறிந்தவர்கள் பாடிக் கொண்டே ஆடினர். மேகங்கள் ம்ருதங்கம், பணவம் முரசு, ஆனக, கோ முகான் என்ற தாள வாத்யங்களை முழங்கின. சிலர் சங்கங்களை, மற்றும் சிலர் வேணு, வீணை முதலிய வாத்யங்களை இசைத்தனர். பத்ம கராம், சதீ எனப்படும் ஸ்ரீ தேவியை, திக்கஜங்கள் பூர்ண கலசங்களைக் கொண்டு அபிஷேகம் செய்ய, அந்தணர்களும் மற்றவர்களும் சூக்த வாக்யங்களைச் சொல்லிக் கொண்டே உடன் வந்தனர். சமுத்திரம் பொன் நிற பட்டாடையைக் கொண்டு வந்தது. வருணன் நல் வாசனை வீசும் வைஜயந்தீ என்ற பூ மாலையை வண்டுகள் மொய்க்க கொண்டு வந்தான். ப்ரஜாபதியான விஸ்வகர்மா விசித்ரமான பூஷணங்களைக் கொண்டு வந்தார். சரஸ்வதி ஹாரத்தையும், ப்ரும்மா பத்மத்தையும், நாகங்கள் குண்டலங்களையும் கொண்டு வந்தன.
பெரியவர்கள் ஆசீர்வாதங்கள் செய்தனர். அதன் பின் , அழகிய உத்பல பூக்களால் ஆன மாலையைக் கையிலேந்தி குண்டலங்கள் கன்னத்தில் ஒளி வீச, வெட்கத்துடன் மெல்ல சிரித்தபடி வந்தாள். சமமான ஸ்தனங்கள், அதி க்ருசமான இடை, சதா சந்தனமும் குங்குமமும் பூச்சுகள் பூசப் பட்ட, நூபுரம் மெல்ல ஓசை செய்ய, பொற் கொடி ஒன்று ஆடி வருவது போல வந்தாள். தன் பாதங்களையே பார்த்தவளாக தலை குனிந்து யக்ஷ,கந்தர்வ,அசுர, சித்த கணங்கள் சுவர்க வாசிகள் இவர்களைக் கடந்து முன் சென்றாள்.
ஒவ்வொருவரை அணுகும் பொழுதும், அவர்களின் குண நலன்களை ஒப்பிட்டு மனதினுள் நிராகரித்துக் கொண்டே நடந்தாள். தவம் செய்பவர்களில் துர்வாசர் போல கோபத்தை ஜயிக்காதவர்கள் உண்டு. குரு சுக்ரன் போன்றவர்களும் விதி விலக்கல்ல. ப்ரும்ம, சோமன் போல காமத்தை வெல்லாதவர்கள், இந்திரன் போல பிறர் பொருளுக்கு ஆசைப் படுவோர், பரசு ராமர் போல, அனைத்து ஜீவன்களிடமும் நட்பு பாராட்டத் தெரியாதவர்கள், சிபி போல, முக்தி தராத தியாகிகள், கார்த்த வீர்யார்ஜுனன் போல வீர்யம் இருந்தாலும் நிரந்தரமல்ல. சனகாதி முனிவர்கள் போல சமாதி நிஷ்டை என்று இருப்பவர்கள், மார்க்கண்டேயன் போல, தவ சீலர்கள், ஹிரண்ய கசிபு போல ஆயுளும் வீர்யமும் இருந்தாலும் பகவத் த்வேஷி, ஸ்ரீ ருத்ரன் தோஷம் எதுவும் இல்லாவிட்டாலும் ஸ்மசான வாசி, அமங்களம், கடைசியாக ஸ்ரீ முகுந்தன் அருகில் வந்ததும் நின்றாள்.
ஆத்மாராமன், சுமங்களம் தான், பக்ஷபாதம் இல்லாதவன், சற்று யோசித்தாள். ஒரு தீர்மானத்திற்கு வந்தவளாக, இதுவரை பார்த்தவர்களில் சர்வோத்தமன் என்று மாலையுடன் அருகில் சென்று நின்றாள்.
சில இடங்களில் தர்மம் இருக்கும், ஆனால் நட்பு இருக்காது, சக ஜீவன்களிடம் ஒட்டுதல் இருக்காது. சில இடங்களில் த்யாகம் இருக்கும், சரியான காரணம் இல்லாமல் தியாகம் ஏற்புடையதல்ல. மனிதர்களில் வீர்யம் இருக்கும், ப்ரும்மாவின் கைப் பாவைகள், நிரந்தரமல்ல, குண சங்கம் இல்லாத மற்றொருவர் இல்லை. நீண்ட ஆயுள், ஆனாலும் சீலம் இல்லை, சீலம் மட்டும் இருந்தாலும் ஆயுஷ் இல்லை, இரண்டும் உள்ளவர், தானே அமங்களமாக இருக்கிறார். நான் விரும்புவது சுமங்களமான ரூபவானையே. இப்படி நினைத்தபடியே, ரமா முகுந்தனை வரித்தாள். அவருடைய தோளில் கையிலிருந்த புது தாமரை மலை மாலையை அணிவித்தாள். நாணத்துடன் கண்கள் சிரிக்க, மலர்ந்த முகத்தோடு, அவர் அருகில் சென்று நின்றாள்.
மூவுலகிற்கும் தாயான ஸ்ரீ லக்ஷ்மி தேவியை, ஜகத்ஜனகன், தன் மார்பில் ஏற்றுக் கொண்டார். ஸ்ரீ லக்ஷ்மி தேவி, தன் ப்ரஜைகளை கருணை நிறைந்த விழிகளால் ஆட் கொள்ள, பதியுடன் கூடி மூவுலகத்தாரையும் காண வசதியாக அவருடைய மார்பில் அமர்ந்தாள். அதே சமயம் சங்கம், துர்யம், மிருதங்க வாத்யங்கள் பெரும் சப்தத்துடன் முழங்க உடன் தேவ ஸ்த்ரீகள் பாடுவதும் கேட்டது. பலர் உடன் நடனம் ஆடினர். ப்ரும்ம, ருத்ர ஆங்கிரச போன்றவர்கள், புஷ்பங்களுடன் அதற்கான தகுந்த மந்திரங்களை சொல்லி ஆசீர்வதித்தனர். பின் ஸ்ரீ தேவியின் அருட் கண் பார்வை கிடைக்கப் பெற்ற ப்ரஜாபதியுடன் மற்ற ப்ரஜைகளும் நிம்மதி அடைந்தனர். சீலம் நிறைந்த குணவான்களான பலருக்கும் லக்ஷ்மி கல்யாணம் மன மகிழ்ச்சியை அளித்தது. தைத்ய தானவர்கள் ஏமாற்றத்துடன் நடப்பவைகளை பார்த்து எதுவும் பேசாமலும் செய்யாமலும் நின்றனர்.
அதன் பின் வாருணி தேவி என்பவள் வந்தாள். கமல லோசனா – பெயர் அல்லது கமலம் போன்ற கண்கள் உடையவள். அசுரர்கள் அவளை ஏற்றுக் கொண்டனர். அதை ஸ்ரீ ஹரி சம்மதித்தார். திரும்பவும் கடலைக் கடைந்தனர். காஸ்யபர் முதலியவர் அம்ருதம் வேண்டும் என்ற விருப்பத்துடன் கடையும் சமயம் ப்ரும்மாண்டமாக ஒரு புருஷன் வந்தான். நீண்ட உருண்டு திரண்ட புஜங்கள், சங்கு போன்ற கழுத்தும், சிவந்த கண்களும், ஸ்யாமளன், மாலையுடன், சர்வாபரணங்களும் அணிந்து, பீதாம்பரமும் , விரிந்த மார்பில் ஏராளமான மணி குண்டலங்கள், அலை அலையான கூந்தல், சிங்கம் போன்ற விக்ரமம் தெரிய,, அம்ருத கலசத்தை ஏந்தியவராக, ஏந்திய கைகளில் வளையங்கள் அலங்கரிக்க, பகவானின் சாக்ஷாத் அம்ச பூதன், தன்வந்திரி என்று பெயர் பெற்றவர், ஆயுர் வேதத்தில் கரை கண்டவர், யாகத்தில் பங்கு பெறும் தகுதியுடையவர், யில் அம்ருத கலசத்தோடு தோன்றினார்.
அம்ருத கலசத்தைக் கண்டவுடன் அசுரர்கள் போட்டது போட்டபடி விட்டு விட்டு கலசத்தை அபகரித்துக் கொண்டு சென்று விட்டனர். தேவர்கள் திகைத்தனர். அம்ருதம் இருவருக்கும் என்று இதுவரை உடன் இருந்தவர்கள், ஸ்ரீ ஹரியை சரணடைந்தனர். பகவானும் சமாதானம் செய்தார். வருந்த வேண்டாம். ஏதாவது செய்கிறேன் என்றார்.
அசுர்களிடையே கடும் போட்டி. நான் முதலில், நான் முதலில் என்று கலகம் மூண்டது. சில தேவர்கள் அவர்களிடம் எங்களுக்கும் இதில் பங்கு உண்டு என்று சொல்ல முயன்றதை லட்சியமே செய்யவில்லை. பலசாலிகள், மற்றவர்களை முஷ்டியினால் தள்ளினர்.
இதற்கிடையில் விஷ்ணு பகவான், உபாயங்களை யோசித்து, அழகிய பெண்ணாக உருக் கொண்டார். பரம அத்புதமான ரூபம். கண் கொள்ள அழகு. அழகிய உடல் அங்கங்கள், முகத்தை மலராக நினைத்தோ, கேசத்தில் சூடியிருந்த மலர்களை நாடியோ, வட்டமிடும் வண்டுகளின் ரீங்காரம், அழகிய கழுத்தை ஆபரணம் அலங்கரிக்க, புஜங்களில் அங்கத பூஷணங்கள், நல்ல உடையும், காஞ்சி எனும் இடையாபரணத்தால் உடலழகு மேலும் பிரகாசிக்க, நடக்கையில் நூபுரங்களின் ஓசை செவிக்கு இனிமையாக ஒலிக்க, சற்றே வெட்கத்துடன் சிரிப்பும், அதனால் புருவம் நெரிந்தும், கண்கள் பார்வையும், தைத்ய வீரர்களின் மனதை மயக்கியது. அவர்கள் உள்ளத்தில் காமத்தைக் கிளப்பியது.
. (இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், அம்ருத மதனம் என்ற எட்டாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்-46
அத்யாயம்-9
அம்ருத கலசத்தை அபகரித்துக் கொண்டு வந்த அசுரர்கள், தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயம் அங்கு வந்த ஒர் அழகிய பெண்ணை பார்த்தனர். ஆஹா, என்ன ரூபம், என்ன அழகு இளமையின் கவர்ச்சியுடன் இருந்த அவளைப் பார்த்து மயங்கினர். யார் நீ, கமல பத்ரம் போன்ற கண்களையுடையவளே என்று பேச்சுக் கொடுத்தனர். யாருடைய மனைவி அல்லது மகள் நீ, எங்கள் மனதைக் கவர வந்து நிற்கிறாய் என்றனர். நாங்கள் அறிந்தவரை, நீ தேவர்களில் ஒருவளோ, அல்லது சித்த கந்தர்வர்களிலும் இல்லை. யாரும் உன்னை இதுவரை விரலால் கூட தொட்டது இல்லை என்று தெரிகிறது. விதிதான் அனுப்பியிருக்கிறது. உன்னைக் கண்டதுமே மனதில் மகிழ்ச்சி நிரம்பி விட்டது. சுமத்யமே! எங்களுக்குள் எதற்கு போட்டியும் வைரமும். தாயாதிகள் நாங்கள், எங்களுக்குள் சண்டை – அதை தீர்த்து வை. எங்களுக்கு நன்மையை செய்வாயாக. நாங்கள் அனைவருமே கஸ்யப குலத்தினர். எங்களுக்குள் இந்த அம்ருதத்தை நியாயமாக பகிர்ந்து அளிப்பாயாக. இவ்வாறு அவர்கள் கேட்டதும், மாயாவியான ஸ்ரீ ஹரி, அழகிய கண்களால் அவர்களை நோட்டம் விட்டபடி சிரித்துக் கொண்டே பதில் சொன்னார்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: கஸ்யப தாயாதிகள், முன் பின் அறியாத என்னிடம் எப்படி நம்பிக்கை வைத்து இப்படி சொல்கிறீர்கள்? சாதாரணமாக பண்டிதர்கள், விவரம் அறிந்தவர்கள், அப்படி செய்வதில்லையே. சில பிறவிகள், மனிதரிலும், விலங்குகளிலும், திருப்தியே இல்லாதவைகள், மேலும் மேலும் ஆசை, புதுப் புது விஷயங்களில் மோஹம் கொண்டவர்கள். நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள் அல்ல. இதைக் கேட்டும் அசுரர்கள், அவளிடம் நம்பிக்கை வைத்து அம்ருத கலசத்தை கொடுத்தனர். அதை வாங்கிக் கொண்டு உங்களுக்குள் பேதம் இல்லை என்றால் நான் பகிர்ந்து அளிக்கிறேன் என்று சொல்லி கலசத்தை வாங்கிக் கொண்டாள். ஆனால் என்னை கேள்வி கேட்கக் கூடாது. முழுவதும் என் பொறுப்பிலேயே விட வேண்டும். சம்மதமா ? அசுர வீர்கள், மனம் மயங்கி இருந்த நிலையில், எந்த வித சந்தேகமும் இல்லாமல் ஒத்துக் கொண்டனர்.
அசுரர்கள் சந்தோஷமாக ஸ்னானம் செய்து புது வஸ்திரங்களை உடுத்திக் கொண்டு, அக்னி காரியங்களை செய்து, நித்ய கர்மாக்களான பசு, அந்தணன், பஞ்ச பூதங்கள் இவைகளுக்கு தானங்கள் செய்தும் வணங்கியும் அவர்கள் உடன் இருந்த அந்தணர்கள் வழக்கமான மங்கள வாக்கியங்களைச் சொல்லி ஆசிர்வதித்த பின், விருப்பமான ஆடை அணிகளை அணிந்து அம்ருதத்தை உண்ண ஆசனங்களில் அமர்ந்தனர். தேவர்களும் அதே போல தயாராக வந்து அமர்ந்தனர். அந்த சபை மாலைகளாலும் தூப தீபங்களாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது.
அந்த பெண்ணும் நல்ல பட்டாடைகளை அணிந்து நூபுரங்களும் மற்ற அணிகளும் ஒலிக்க, கையில் கலசத்துடன் நுழைந்தாள். அவளைப் பார்த்த மாத்திரத்தில் தேவ அசுரர்கள் அனைவரும் செயலிழந்தனர். ஸ்ரீ சகி, பொன்னாலான குண்டலங்களும் கூடிய அழகிய முகம். காதுகளும், மூக்கும், கன்னமும் ஒன்றுடனொன்று மிஞ்சும் அழகுடன் பரதேவதா என்பவள், அனைவரையும் பார்த்து முறுவலித்தவாறு, கண்களால் பார்த்தே அனைவரையும் மோகம் கொள்ளச் செய்தபடி, நடந்து வந்தாள்.
அசுரர்களுக்கு அம்ருதம் கொடுப்பது சர்ப்பத்துக்கு கொடுப்பது போல என்று நினைத்து பிறவியிலேயே கொடும் குணம் கொண்டவர்கள் அவர்கள் என்பதால் அச்யுதன் அவர்களுக்கு அம்ருதத்தை தரவில்லை. இரு தரப்பினரையும் இரு வரிசையாக அமரச் செய்த பின் கலசத்தை அவர்களிடம் இருந்து வாங்கிக் கொண்டு பரிமாற ஆரம்பித்தாள். முதுமையையும், மரணத்தையும் தவிர்க்கும் குணம் உள்ள அம்தருத்தை தள்ளி அமர்ந்திருந்த தேவர்களுக்கு மட்டுமே கொடுத்தாள். அசுரர்கள் அந்த பெண்ணிடம் பேசுவதையே பரமானந்தமாக எண்ணி இதைக் கண்டு கொள்ளவேயில்லை. தங்களுக்கு செய்யப்பட்ட துரோகம் என்று உணரும் நிலையில் இல்லை. அவள் அவர்களிடம் மிக அன்புடனும், ஆவலுடனும் பேசியதில் அவர்கள் தங்களிடம் அவள் உண்மையாக இல்லை என்றும் உணரவில்லை. இடை மறித்தால் அவள் தங்கள் அருகில் வருவதையே நிறுத்தி விட்டால் என்ற தயக்கமே மேலோங்கி நின்றது. தவிர, அவளிடம் கண்டவுடன் ஏற்பட்ட மரியாதை.
ஸ்வர்பானு என்பவன் மட்டும் தேவர்கள் கூட்டத்தில் மறைந்து இருந்து அம்ருதத்தை கைகளில் வாங்கி அருந்தும் முன், சந்திரனும் ஸூரியனும் கண்டு கொண்டு மோஹினியிடம் காட்டிக் கொடுத்தனர். கூர்மையான ஆரங்கள் உள்ள தன் சக்கரத்தால், வாயில் இட்ட கவளத்துடனேயே அவன் தலையை கொய்தார். அவனோ தலை வேறு உடல் வேறு என்று கபந்தனாக அம்ருதத்தால் குளிப்பாட்டப் பட்டவன் போல விழுந்தான். அம்ருதம் குடித்த தலை அமரத்வம் பெற்றது. ப்ரும்மா அதை க்ரஹங்களில் ஒன்றாக அங்கீகரித்தார். அதுவே ராஹு. உடல் பாகம் சாயாக்ரஹம் என்று பெயர் பெற்றது- அதுவே கேது. இதனால் ஏற்பட்ட விரோதத்தால், ஸுரிய சந்திரர்களை பருவ காலங்களில் துரத்தி வருகிறது.
அனைத்து தேவர்களும் அம்ருதம் உண்ட பின், ஸ்ரீ ஹரி, தன்னை வெளிப் படுத்திக் கொண்டார். அசுரர்களும், தேவர்களும் இருந்த அந்த சபையில் அவர்கள் எதிரில் தன் சுய ரூபத்தில் நின்றார்.
இப்படித்தான் சுர, அசுரர்கள், சமமான காரணம், தேசம், காலம். உழைப்பு என்று இருந்தும் இறுதியில் ஒருவருக்கு அதன் பலனும், மற்றவருக்கு ஏமாற்றமுமே அமைந்தது. இந்த விகல்பம்- வித்தியாசம் எப்படி விவரிக்கபடுகிறது. ஏன் அமரர்கள் உயர்வு, அசுரர்கள் அவர்கள் உழைப்புக்கான பலனைப் பெறாமல் போனார்கள்? ஒரே ஒரு சமாதானம் அவர்கள் என்றும் பகவானின் அடியார்களாக இருந்தனர். அசுரர்கள் எதிர்த்தனர். எவரானாலும், தன் உயிர், செல்வம், செயல்கள், மனம், வாக்கு, உடல் இவைகளை தன்னலம் இன்றி மற்றவர்களுக்காக செலவழிக்கிறானோ, அவர்களால் தான் உலகில் நன்மைகள் ஏற்படுகின்றன. பகவானை நம்பி அவருக்கே தங்களை அர்பணித்து விட்டால், மரத்தின் வேரில் விட்ட நீர், கிளைகளைக் காப்பது போல அவரே காக்கிறார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், அம்ருத மதனம் என்ற எட்டாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்-46
அத்யாயம்-10
தானவ தைத்யர்கள், தங்களுக்கு அம்ருதம் கியைக்கவில்லை என்பதை உணர்ந்தனர். இணைந்து அம்ருத மதனம் என்ற செயலைச் செய்த பின்னும் அம்ருதம் அவர்களுக்கு கிடைக்காமல் போனது ஏன்? வாசுதேவனை வெறுப்பவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். பகவானோ தன் பக்தர்களுக்கு மட்டும் அம்ருதத்தை அளித்து விட்டு அவர்கள் கண் எதிரிலேயே மறைந்து விட்டார். சபத்னி மக்கள், தாயாதிகள் அவர்களே அதர்மமாக நடந்து கொண்டதில் வெகுண்ட திதியின் மைந்தர்கள், பொறுக்க மாட்டாமல் தேவர்கள் மேல் தங்கள் ஆயுதங்களுடன் பாய்ந்து அடித்து நொறுக்கினர். அம்ருதம் உண்ட பலத்தில் தேவர்களும் எதிர்த்து நின்றனர். தேவாசுர யுத்தம் பயங்கரமாக நடந்தது. சமுத்திரத்தின் (பாற்கடலின்) கரையின் நடந்த இந்த யுத்தம் அத்புதமாக, பார்ப்பவர்களுக்கு ரோமாஞ்சனம் உண்டுபண்ணுவதாக இருந்தது. பலவிதமான ஆயுதங்கள், இரு தரப்பினரிடமும் இருந்தன. சங்க துர்ய மிருதங்க வாத்யங்கள், பெரிய பேரி டமரு, குதிரைகள், யானைகள், ரதங்கள் அனைத்து யுத்த தளவாடங்களும் வந்து போரிட்டன. கழுகுகளும், அதன் ஜாதியைச் சேர்ந்த பல பறவைகளும் வட்டமிட்டன. (க்ருத்ரம்,ஸ்யேனம், பாச) கடல் வாழ் ஜீவன்களிலும் மிகப் பெரிய ஜந்துக்கள், சரபங்கள், திமிங்கிலங்கள், மற்றும் மஹிஷங்கள், பசு, எருமைகளின் பல வகைகள், குள்ளநரிகள் (ஸிவா:) எலிகள், க்ருகலா என்ற சிறு விலங்கு, முயல்கள், க்ருஷ்ண சாரம் என்ற விலங்கு, தவிர, ஹம்சம் போன்ற நீர் வாழ் பறவைகள், பன்றிகள், நீர்வாழ், நிலம் வாழ் பறக்கும் என்ற அனைத்து வகை உயிரினங்களும், இரு பக்கத்து சேனைகளிலும் வந்து சேர்ந்து கொண்டன. வித விதமான கொடிகள் பறக்க, வஜ்ர தண்டங்கள், பல வர்ணங்களில் குடைகள், சாமரங்கள், மயில் இறக்கைகள் காற்றில் அசைந்தபடி தெரிந்தன. இவைகளின் இடையில் ஸூர்யனின் ஒளியைப் போன்ற கூர்மையான சஸ்திரங்கள், இரு பக்கமும் இருந்தன. தேவ தானவர்களில் ரதத்தின் கொடிகள் சமுத்திரத்தின் அலை போல பலவாறாக இருந்தன.
அசுரர்களின் தலைவனாக பலி, விருப்பம் போல இயங்கும் வைஹாயஸம்- ஆகாயத்தில் செல்லும் வாகனத்தில் முன் நின்றான். அந்த வாகனம் மயனால் நிர்மாணிக்கப் பட்டது. இது வரை கண்டிராத அளவில் போர் தளவாடங்கள், நேர்த்தியான ஆயுதங்களுடன் ஆச்சர்யமான யுத்தம், ஒப்பில்லாத ஏற்பாடுகள். அந்த வாகனத்தில் அசுர வீரர்கள் தங்கள் உடை, ஆயுதங்கள் அனைத்தும் ஒளிவிட வந்தனர். சந்திரன் உதித்தது போல. நமுசியும் சம்பரனும் தங்கள் பட்டத்து யனை மேல் வந்தனர். பாணன், விப்ரசித்தி, அயோமுகன் ,த்வி மூர்தா, காலனாபன், ப்ரஹேதி, ஹேதி, இல்வலன், சகுனி, பூத சந்தாபன், வஜ்ர தம்ஷ்ட்ரன், விரோசனன், ஹயக்ரீவன், சங்கு சிர: கபிலன், மேக துந்துபி, தாரகன், சக்ரத்ருக், சும்ப சிசும்பர்கள், ஜம்பன், உத்கலன், அரிஷ்டன், அரிஷ்டனேமி, மயன், த்ரிபுராதிபன், இவர்கள் தவிர, பௌலோமி, காலேயன், நிவாத கவசன் என்போர், அம்ருத பங்கு கிடைக்காத உழைப்பில் மட்டும் பங்கு பெற்ற அனைவரும் போர் முனையின் ஒன்று கூடினர். தேவர்களை எதிர் கொண்டனர்.
சிம்ஹ நாதமும், சங்க முழக்கங்களும், பெரும் ஓசையாக வானத்தை நிறைத்தன.
இதைக் கண்ட இந்திரனும் தன் ஐராவதம், மற்றும் திக்கஜங்களுடன் போருக்கு வந்தான். அனைத்து தேவர்களும் தங்கள் வாகனங்களில் கூரிய ஆயுதங்களுடன், லோக பாலர்களும் சேர்ந்து கொள்ள பெரும் படை, அத்துடன் வாயு, அக்னி வருணன் முதலானோர், யுத்த பூமியில் ஒருவரையொருவர், வசை பாடியும், முழக்கமிட்டும் போரை துவக்கினர்.
பலி இந்திரனுடன் மோதினான். தாரகனை குஹன் அடித்தார். வருணன் ஹேதியை, மித்ரன், ப்ரஹேதியுடன் மோதினான். யமன் கால நாபனுடன், விஸ்வகர்மா மயனுடன், சம்பரன் த்வஷ்ட்ரா வுடன், சவிதாவை விரோசனன், அபராஜிதனுடன் நமுசி, அஸ்வினி குமாரர்கள் வ்ருஷபர்வாவுடன், ஸூரியனுடன் பலியின் புதல்வர்கள், பாணன், அவன் நூறு புதல்வர்களுடன், ராகுவுடன், சோமன், புலோமா என்பவனுடன் அக்னி, நிசும்ப சும்பர்களுடன் சக்தி தேவி பத்ரகாளி, வ்ருஷாகபி என்பவன் ஜம்பன் என்ற அசுரனை, மஹிஷனுடன் விபாவசு, இல்வலனை வாதாபியுடன் ப்ரும்ம புத்திரர்கள், காமதேவனுடன் துர்மர்ஷன், உத்களன் மாத்ருக்களுடன், ப்ருஹஸ்பதி உசனஸ முனிவருடன், நரகனுடன் சனைச்சரன். மருதன் நிவாத கவச (காற்று நுழையாத கவசம் உடையவர்கள்) என்றவர்களுடன், காலேயன் என்பவர்களுடன் வசுக்கள் என்ற தேவர்கள், விஸ்வதேவர்கள் பௌலோம என்பவரின் வம்சத்தினரிடம், ருத்ரர்கள் க்ரோத வசா: என்பவர்களுடன், போர் நீடித்தது. ஒருவருக்கொருவர் சளைக்காமல் த்வந்த யுத்தம், சில சமயம் கூர்மையான ஆயுதங்கள், என்று வெற்றியே குறியாக போரிட்டபடி இருந்தனர். வித விதமான ஆயுதங்கள், புசுண்டி, கதை, சக்கரம், பட்டசம் முதலானவை.
யானைகளும், குதிரைகளும், ரதங்களும், பாதசாரிகளான வீரர்களும், பலவிதமாக அடித்தும் அடிபட்டும் கிழிந்த த்வஜங்களும், உடைந்த கவசங்களும், தெரித்து விழுந்த ஆபரணங்களும், புஜங்களிலும், தலையிலும் அணிந்திருந்த கவசங்கள், கிரீடங்கள் காணாமல் போக, அவர்கள் காலடியில் உடைந்த ரதங்கள் பொடிப் பொடியாக, போரில் இருந்து சரீர பாகங்கள் இரைந்து மற்றும் அங்கு எழுந்த புழுதி படலம் த்யுமணி எனும் ஸூரியனையே மறைத்தன.
தலையை அலங்கரித்த கிரீடமோ, குண்டலங்களோ, தென்படவில்லை. கண்களின் பார்வையே கோணலாகி விட்டது போலவும், தானே பற்களால் உதட்டைக் கிழித்து விட்டது போல தொங்கிய உதடுகளும், பெரிய புஜங்கள் மட்டும் இன்னமும் ஆபரணங்களோடு, அதில் மாட்டிய ஆயுதங்களுடனும், கபந்தங்கள் நடமாடுவது போல ரண பூமி காட்சியளித்தது. ஆங்காங்கு அவை ஓடி மேலும் பயங்கரமாக தோற்றமளித்தன.
பலி இந்திரனை, பத்து சரங்களாலும், ஐராவதத்தை மூன்று சரங்களாலும், நான்கு சரங்களால் அவன் வாகனத்தையும், அடித்தான். இருவரும் பலவிதமாக சண்டையிட்டனர். திடுமென அசுரர்களின் கைவசமான மாயா யுத்தம் செய்யலாயினர். தாங்கள் மறைந்து நின்றபடி ஆயுதங்களை மழையாக பொழிந்தனர். பெரிய மலைகளே தேவ சேனையின் மேல் விழுந்தது. மரங்கள் எரிந்தன. தாவாக்னி எனும் கொடும் அக்னி ஜ்வாலை சுட்டெரித்தது. அவர்களுடைய பலம் தாங்காமல் மலைச் சிகரங்கள் பொடிப் பொடியாக உதிர்ந்தன. பெரும் நாகங்கள் எங்கிருந்தோ வந்தன. பற்களில் விஷமுடைய நாகங்கள், தேள்கள் போன்றவை பெருகின. சிம்ஹ, வராஹ, வ்யாக்ரங்கள்-புலிகள் பெரும் யானைகளுடன் மோதின. யாது தானர்கள் என்ற அசுர வீரர்கள் பெரும் குரலில் அட்டகாசமாக ஓலமிட்டபடி வானத்தை நிறைத்தனர். காற்று வீசுவதே நெருப்புப் பொறி பறப்பது போல இருந்தது. தைத்யன், பெரும் அக்னியை மூட்டி விட்டு விட்டது போலவும், அதற்கு வாயுவே சாரதியாக இருப்பது போலவும், ஊழிக் காலம் போல மேகங்கள் உடைந்து விட்டது போலவும் பயங்கர ஓசையுடன் உக்ரமான ஒலி பரவியது. சமுத்திரம் அலைகள் பெருகி கொந்தளிப்பது போல இருந்தது. சண்ட ப்ரசண்டமாக வீசிய காற்றின் உதவியுடன் அலைகளை மேலே வீசி விளையாடுவது போலவும், திரும்பி விழும் அதே அலைகள் பெரும் ஓசையுடன் வேகமாக விழுவதும் காணவே பயங்கரமாகவும் இருந்தன.
இவ்வாறு தைத்யர்களின் மகா மாயை இன்னதுதான் செய்கிறது என்று புலப்படாமல், மேன் மேலும் பெருகி வந்த மாயா யுத்தம், தேவர்கள் தவித்தனர். தங்கள் புஜ பலமோ, சேனை பலமோ உதவாது என்ற நிலையில் பகவானை நினைத்தனர். பகவானும் கருடாரூடனாக வந்து சேர்ந்தார். வழக்கமான, பீதாம்பரமும், வெளியில் தெரியாத அஷ்ட ஆயுதங்களும், ஒளி வீசிய கௌஸ்துபமும், லக்ஷ்மி தேவியும், புது மலர் பொன்ற கண்கள் பிரகாசிக்க வந்தவுடனேயே, அசுரர்களின் மாயா யுத்தம் நின்றது. கனவில் கண்ட விபத்து ஹரியைக் கண்டதும் விலகியது போல ஆயிற்று.
கருடன் காலநேமியை வாகனத்தோடு தூக்கி வீசியது. பகவானின் சக்கரம் மாலி சுமாலி போன்றவர்களை விரட்டியது. அசுர வீரர்கள் அலறி அடித்துக் கோண்டு ஓடினர்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், அம்ருத மதனம் என்ற பத்தாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்-57
அத்யாயம்-11
ஸ்ரீ சுகர் சொன்னார்: பகவானின் அருளால், அது வரை அசுரர்களின் தாக்குதலை எதிர்க்க முடியாமல் திணறிய தேவ வீரர்கள், சற்று ஆஸ்வாசப் படுத்திக் கொண்டார்கள். திரும்பவும் போரிட ஆயத்தமானார்கள்.
இந்திரன் வஜ்ராயுதத்தை விரோசன் மகன் வைரோசனி- பலியின் மேல் பிரயோகிக்க எடுத்த பொழுது உலகில் அனைவரும் ஹா ஹா என்று அலறினர். இந்திரன் அவர்களை மாயா யுத்தம் செய்ததை தூஷித்தான். ஆனால் பலி அமைதியாக பதில் சொன்னான். யுத்தம் என்று வந்தால் வெற்றி தோல்வி நிச்சயமில்லை. காலத்தின் அதீனத்தில் இருப்பவை இவை. கீர்த்தியோ, ஜயம், அபஜயமோ, ம்ருத்யுவோ மாறி மாறி வருவது தானே. இதில் நான் ஜயித்தேன் என்று பெருமைப் படவோ, தோற்றேன் என்று வருந்தவோ என்ன இருக்கிறது. அறிவுள்ளவர்கள், இப்படி வெற்றி என்று சந்தோஷமும் மற்றவனை தோற்றவன் என்று தாழ்வாக நினைக்கவும் மாட்டார்கள். அறிவு இருந்தால் தானே. நீங்கள் அனாவசியமாக பெருமையுடன் கொண்டாட – காலத்தின் செயல் – உன் சொல்லை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பொருளற்ற வீண் தம்பம்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: பலி மேலும் கடுமையான வார்த்தைகளால் சாடினான். அவன் சொன்னதில் உண்மை இருப்பதை அறிந்தும், இந்திரன் தன் தவறை உணராமல் அங்குசத்தால் குத்தப் பட்ட யானை போல வெகுண்டான். தன் குலிசம் என்ற ஆயுதத்தை பிரயோகித்து விட்டான். பெரும் மலை ஒன்று இறக்கைகள் அறுபட்டு விழுவது போல பலி பூமியில் விழுந்தான். பலியின் சகாவான ஜம்பன் பொறுக்க மாட்டாமல், இந்திரனை எதிர்த்தான். சிம்ஹ வாகனத்தில் வந்தான். கதையால் இந்திரனின் தாடையில் ஓங்கி அடித்தான். அவன் வாகனமான யானையையும் அடித்தான். அந்த அடி தாங்காமல் யானை சுருண்டது, பூமியில் விழுந்து அலறியது. அதன் பின், மாதலி ரதத்தில் ஏராளமான குதிரைகளைப் பூட்டி கொண்டு வந்தான். தன் வலியை பொருட்படுத்தாமல் ரதத்தில் ஏறி, ஜம்பனை வஜ்ரத்தால் அடித்தான். நடந்து கொண்டிருக்கும் யுத்தம் பற்றி நாரதரிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட ஜம்பனுடைய உறவினர்கள் நமுசி முதலானோரும் போர் நடக்கும் இடம் வந்தனர். இந்திரனை பலமாக தாக்கினர். சமமான பல வீர்யம் உள்ளவர்கள், சமமான அஸ்திரங்கள் இருவரிடமும் இருந்தன, யுத்தம் பயங்கரமாக நடந்த து. தேவ சேனை வசமாக மாட்டிக் கொண்டன. சத்ருக்கள் அதிக பலசாலிகள். இதை எதிர்பாராத தேவ சைன்யத்து வீரர்கள் ஓலமிட்டனர். நடுக்கடலில் வணிகனின் பொருட்கள் நிரம்பிய படகு உடைந்து விழுந்தாற் போல திகைத்தனர். சந்திரன், தன்னை மறைத்த மேக கூட்டத்தில் இருந்து வெளிவருவது போல இந்திரன் தன் மேல் விழுந்த அம்புகளீல் இருந்து வெளி வந்தான். நமுசியின் தலைமையில் யுத்தம் தொடர்ந்தது. தன் வஜ்ராயுதமே அந்த அசுரர்களிடம் பலனளிக்கவில்லை என்பதைக் கண்டு இந்திரன் திகைத்தான், பெரிய மலை போன்ற ஸூலத்தை எடுத்துக் கொண்டு அழிந்தாய் நீ என்று சொல்லியபடி நமுசி வருவதைக் காண மிருக ராஜன் போலவே இருந்தது. தன் வஜ்ரம் அவன் உடலின் தோலைக் கூட பாதிக்கவில்லை என்பதை இந்திரன் கண்டான். வ்ருத்திரனை வீழ்த்திய வஜ்ர ஆயுதம், அதற்கும் முன் மலைகளின் இறக்கைகளை துண்டித்தது இந்த அல்ப அசுரர்களிடம் ஏன் பலனளிக்கவில்லை என்று யோசித்தான். அந்த சமயம் அசரீரியாக ப்ரும்மா சொன்னார். நான் கொடுத்த வரம் நமுசிக்கு – ஈரமும் உலர்ந்தும் உள்ள பொருளால் அடித்தால் தான் அழிவான்- இதைக் கேட்டு பலவிதமாக யோசித்து -ஃபேனம்- சமுத்திரத்தின் நுரை – இந்த இரு விதமாகவும் உள்ளதாக இருக்க அதை எடுத்து நமுசியை அடித்தான். தேவர்கள் உத்சாகம் பெற்றனர். மற்றவர்களையும் முடிந்தவரை வெற்றி கொண்டனர்.
அந்த சமயம் நாரதர் வந்தார். பகவான் உடன் இருந்து அவர் அருளால் அம்ருதம் கிடைக்கப் பெற்றீர்கள். போதும். அத்துடன் திருப்தியாக இருங்கள். சண்டையை நிறுத்து. எனவும், இந்திரன் ஏற்றுக் கொண்டான். அடி பட்டு விழுந்த பலியை எடுத்துச் சென்றனர். யுத்தத்தில் அங்க ஹீனம் ஆனவர்களை உசனஸ் என்ற ரிஷி மந்திர சக்தியால் வைத்யம் செய்தார். அவர்களுடன் பலியும் தன் காயங்கள் நீங்கப் பெற்றான். யுத்த முடிவு பற்றி அவன் வருந்தவில்லை. தத்துவ ஞானம் உள்ளவன் ஆதலால் தன் உடல் நேரானதில் மகிழ்ச்சியே அடைந்தான்.
. (இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், அம்ருத மதனம் என்ற பத்தாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்-57
அத்யாயம்-12
ஸ்ரீ பாதராயனர் சொன்னார்: பெண் வடிவத்தில் தானவர்களை மோகம் கொள்ளச் செய்து தேவர்களுக்கு அம்ருதத்தை ஸ்ரீஹரி கொடுத்தார் என்ற செய்தியை வ்ருஷத்வஜன்- மகேஸ்வரன் அறிந்தார். தன் ரிஷப வாகனத்தில் தேவியுடன் மது சூதனனைக் காணச் சென்றார். அவரும் அவர்களை வரவேற்று உத்சாகமாக பேசிக்கொண்டிருந்தார்.
மஹாதேவர் கேட்டார்: ஜகத்வ்யாபி- உலகம் முழுவதும் பரவி இருக்கும் தேவ தேவர் நீங்கள். எல்லா உணர்வுகளுக்கும் ஆத்மாவும், காரணமும் ஆன ஈஸ்வரன். ஆதி அந்தமும், மத்யமுமானவர். உள்ளும் புறமும் ஆன அழிவற்ற சித்ரூபி. ஏற்கனவே பற்று அற்றவர்கள், சங்கத்தை தவிர்த்து தவம் செய்பவர்களான முனிவர்கள் உங்களை உபாசிக்கிறார்கள். பூர்ணன், அம்ருத ரூபி, முக்குணங்களுக்கும் அப்பாற்பட்டவன், ஆனந்தமே உருவானவன், எனவே சோகம் உங்களை அண்டாது விஸ்வத்தின் காரணமானவர். த்வயமும் அத்வயமும் தாங்களே. இவை செய்யப் படும் நகைக்கு ஏற்ப உருவம் கொள்ளும் பொன் போன்றவை. இவ்வாறு பலவாறாக துதி செய்தபின் கேட்டார். உங்கள் அவதார கதைகளை அறிவேன். எதற்காக தைத்யர்களை மோகம் கொள்ளச் செய்து தேவர்களுக்கு அம்ருதம் அளிக்க பெண் வடிவம் எடுத்துக் கொண்டீர்கள்? நான் அந்த சமயம் பார்க்கவில்லையே. அந்த ரூபத்தை எனக்கு காட்ட வேண்டும். என்றார்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: என் வேஷத்தைக் கண்ட தைத்யர்கள் குதூகலம் அடைந்தனர். தேவ காரியம் என்பதால் அம்ருதம் என்பதை பகிர்ந்து அளித்தேன். அந்த ரூபம் தானே, காட்டுகிறேன் என்று சொல்லிக் கொண்டே அந்தர்தானம் ஆனார். உபவனத்தில் அழகிய பெண், மலர்களால் அலங்கரித்துக் கொண்டு, பட்டாடை அணிந்து கையில் மலர் பந்தை வைத்துக் கொண்டு, நிற்பதைக் மகேஸ்வரன் கண்டார். கனமான ஹாரங்கள் அவளது நடையில் ஒவ்வொரு அடிக்கும் சப்தமிட , அதற்கு இணையாக தாளம் தப்பாமல் உடல் அங்கங்கள் ஆட, ஆடிக் கொண்டே வருபவளைப் பார்த்தார்.
பந்தை வீசி அதைப் பிடிக்கும் பாவனையில் கண்களும் அபினயம் காட்ட, குண்டலங்கள் ஆட, அதன் ஒளியில் கன்னங்கள் மின்ன வந்தவளைப் பார்த்தார்.
தன் மாயையால், அனாயாசமாக நழுவும் மேலாடையை இடது கையால் சரி செய்தபடி, வலது கையால் பந்தை வீசும் ஜகன் மோஹன ரூபத்தைக் கண்டார்.
அதைக் கண்ட ஈஸ்வரன், அது பெண் வேஷமிட்ட தேவன் என்பதையோ, தான் யார் என்பதையோ, அருகில் இருக்கும் உமையையோ, தன்னுடன் வந்த கணங்களையோ அருகில் இருப்பதையே மறந்தார். பெண்னைக் கண்ட சாதாரண ஆண் மகனாக ஆனார். அழகிய பெண், மனோரமா- மனதை கவர்ந்திழுக்கும், கண்களின் அழகில் சொக்கியவராக பவானி பார்த்துக் கொண்டிருக்கையிலேயே வெட்கம் இன்றி அந்த பெண்ணைத் தொடர்ந்தார். அவளோ அவர் வருவதைப் பார்த்து மரங்கள் பின்னால் ஒளிந்து கொண்டாள். பெண் யானையை தொடரும் மத்த கஜம் போல அவளைத் தொடர்ந்து ஓடினார். ஆங்காங்கு அவருடைய வியர்வை ஜலம் விழுந்தன. பூமியில் விழுந்தவை வெள்ளியாகவும், தங்கமாகவும் ஆயின. பிடி படாமல் பல இடங்களிலும் அலைந்து திரிந்து கடைசியில் அருகில் சென்ற சமயம் தன் புருஷ உருவத்தை எடுத்துக் கொண்டு பகவான் சிரித்துக் கொண்டே,இதுவும் என் மாயையே. உங்கள் வீர்யம் வெளிப்பட்டது. பெண் மோகத்தை ஜயித்தவர் யார்? இது உங்களை பாதிக்காது. மாயா மயமான இந்த ஸ்ருஷ்டியில் தாங்களும் பாகம் வகிப்பவரே.
அதன் பின் தன் இருப்பிடம் வந்து பவானியிடமும், மற்ற ரிஷிகளிடமும் தான் மோகம் அடைந்து பகவானின் மோஹினி ரூபத்தை பின் தொடர்ந்து சென்றதை சொன்னவர், இது அவன் மாயை என்று அறிந்து பின்னால் ஓடினேன், பவானி பார்த்துக் கொண்டிருக்க, மற்ற புருஷர்கள் இருந்த சபையில் தன் வசமின்றி சென்றது நான் தானா என்று வியக்கிறேன். மனதை கட்டுப் படுத்தியவன் என்று என்னை சொல்வர். நானே இப்படி மோகித்தால் சாதாரண ஜனங்கள் எம்மாத்திரம் என்றார்..
ஸ்ரீ சுகர் சொன்னார்: அரசனே இது தான் சார்ங்கதன்வன் என்று அழைக்கப் படும் பகவானின் விக்ரமம். பாற்கடலைக் கடைய தன் முதுகில் பெரும் மலையைத் தாங்கினார். இந்த சரித்திரம் பெரிய செயல்களைச் செய்பவர்களுக்கு உத்வேகம் கொடுக்கும். சம்சார பரிஸ்ரமம்- உலக வாழ்க்கையின் சிரமங்களுக்கு பரிஹாரமாக அல்லது முன்னுதாரணமாக இருக்கும். எதற்கு இந்த சிரமம், பாற்கடலை கடைவது என்ற மிக அரிய செயல். அப்படியாவது தன்னை நம்பிய தேவர்களுக்கு அம்ருதம் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்காக, பெண் வேஷம் போட்டு, எதிரிகளான அசுர்களுக்கு கிடைக்காமல் செய்த அரிய செயல், அவருக்கு நமஸ்காரம், என்றார் ஸ்ரீ சுகர். .
. (இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், அம்ருத மதனம் என்ற பதினொன்றாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்- 48
அத்யாயம்-13
ஸ்ரீ சுகர் சொன்னார். விவஸ்வத மனுவின் ஏழாவது மகன் ஸ்ரார்த தேவன் அவன் வம்சத்தினர் பற்றிச் சொல்கிறேன் கேள்.
இக்ஷ்வாகு, நபகன், த்ருஷ்டன், சர்யாதி, நரிஷ்யந்தன், நாபாக:, மற்றும் ஏழாவதாக திஷ்டன் கரூஷன், ப்ருஷத்ரன், வசுமான் என்றவர்களையும் சேர்த்து பத்து பிள்ளைகள். ஆதித்யன், வசவோ, ருத்ரா. விஸ்வேதேவா மருத்கணங்கள், அஸ்வினி தேவர்கள் என்ற இரட்டையர், புரந்தரன் என்பவன் இந்திரன் ஆனான்.
கஸ்யபர், அத்ரி, வசிஷ்டர், விஸ்வாமித்திரர், கௌதமர், ஜமதக்னி, பரத்வாஜர் என்று ஏழு ரிஷிகள். இந்த யுகத்திலும் பகவான் கஸ்யபருடைய மகனாக பிறந்தார். ஆதித்யர்களின் கடைசியாக வாமனனாக பிறப்பார்.
ஏழு மன்வந்தரங்கள் பற்றி சுருக்கமாகச் சொன்னேன். தற்சமயம், விஷ்ணுவின் சக்தியுடன் கூடிய விவரங்களோடு, சொல்கிறேன்..
விவஸ்வானுக்கு இரு மனைவிகள், விஸ்வகர்மாவின் மகள் கள். சங்ஞா, சாயா என்பவர்கள். இது முன்னாலேயே உனக்குத் தெரியும். மூன்றாவதாக வடவா என்று ஒருவள். சங்ஞாவின் புதல்வர்கள் மூவர்- யமன், யமீ, ஸ்ரார்த தேவன்- எனப்படுவர். சாயா புதல்வர்கள்- சாவர்ணி, தபதீ என்ற பெண் சம்வரணன் மனைவியானாள். மூன்றாவது சனைச்சரன்- அஸ்வினி குமாரர்கள் வடவா புதல்வர்கள்.
எட்டாவது மன்வந்தரத்தில் சாவர்ணி மனுவாவாக கடும் தவம் செய்து தேவலோகம் செல்வான். . விரஜன், நிர்மோகன் என்று அவன் புதல்வர்கள். இவர்கள் கடும் தவம் செய்து தேவர்கள் ஆவார்கள். விரஜா விரோசன சுதன் பலி இந்திரனாவான். பலி தன்னிடம் யாசித்த விஷ்ணுவிற்கு மூன்று அடி நிலம் தானமாக கொடுப்பான். இந்திரபதவியை மறுத்து விட்டு சித்தியடைவான். இவனை பகவான் சுதலம் என்ற உலகில் இருக்கச் செய்வார். அங்கு தற்சமயம் சுவர்கத்தை விட அதிக சுக போகங்களுடன் வாழச் செய்வார். இந்திரனுக்கு சமமான அந்தஸ்துடன் மகிழ்ச்சியுடன் இருப்பான்.
ராஜன்! இந்த மன்வந்தரத்தில் காலவ என்ற சப்த ரிஷிகள் தோன்றுவர். பல ராம:, பரசுராம: த்ரோண புத்ர: அஸ்வத்தாமா, கிருபர், ருஷ்ய ஸ்ருங்க:, மற்றும் எங்கள் தந்தை பாதராயணர். இவர்கள் தங்கள் யோக ப்ரபாவத்தால் தங்களுக்கென்று தனி ஆஸ்ரம மண்டலங்களில் இருப்பர்.
தேவ குஹ்யம் என்று சரஸ்வதி நதிக் கரையில் சார்வபௌம என்ற அரசனாக அவதரித்து, புரந்தரனிடமிருந்து இந்திர பதவியை பலிக்கு அளிப்பார். ஆறாவது மன்வந்தரத்தில், துர்வாசரின் சாபத்தால், தன் சக்தியையும், செல்வத்தையும் இழந்த இந்திரன், பகவானின் உதவியால் அம்ருதம் உண்டு, பலியை வெற்றி கொண்டு, தன் பழைய அந்தஸ்தைப் பெற்று தேவர்களுடன் இந்திர பதவியை தக்கவைத்துக் கொண்ட கதையை நினைவு கொள். பார்கவரால் பலம் கிடைக்கப் பெற்ற பலி அந்த இந்திரனை தள்ளி விட்டு, மூவுலகிலிலும் சாம்ராஜத்தை நிறுவி ஏக சக்ரவர்த்தியானான். அதன் பின் ஆதித்யர்களில் கடைசி மகனாக பிறந்து பகவான் பலியிடம் யாசிப்பார். பத த்ரயம் – மூன்றடி என்ற வியாஜத்தால் மூவுலகையும் பலியிடம் பெற்று பழையபடி புரந்தரன் -இந்திரனை தன் இடத்தில் ஸ்தாபித்து பலியை அனுக்ரஹித்தார். ‘உனக்கு இந்திர பதவியை விட மேலான யாருக்கும் கிடைக்காத, பதவியைத் தருகிறேன். சாவர்ணிக்கு பிறகு இந்திரனாவாய். அதுவரை சுதளத்தில் இரு. விஸ்வகர்மா உனக்கு தேவையான ராஜதானியை நிர்மாணித்து தருவான். ‘ என்றார். எட்டாவது மன்வந்தரத்தில் நீ இந்திரனாவாய்.
ஒன்பதாவது மன்வந்தரத்தில் வருணனின் புத்திரன் தக்ஷசாவர்ணி என்பவன், ஒன்பதாவது மனு ஆவார். அரசனே! பூதகேது, தீப்த கேது என்று அவர் வம்சம் தொடரும். அந்த மன்வந்தரத்து தேவர்கள், பரா, மரீசி புதல்வர்கள், த்யுதிமான் முதலான ஏழு ரிஷிகள், தோன்றுவார்கள்.
ஆயுஷ்மான்-அம்புதாரா என்ற தம்பதிகளுக்கு பகவானின் அம்சமாக ருஷபன் மூவுலகையும் ஜயித்து ஆளுவான்.
பத்தாவது ப்ரும்மா சாவர்ணி, உபஸ்லோக சுதன், மாஹானாக இருப்பான். அவன் மகள் பூரிஷேணா, ஹவிஷ்மத் என்பவர். ஹவிஷ்மான், சுக்ருதி, சத்யன், ஜயன், மூர்தி, த்விஜா: சுவாசன, விருதா என்ற தேவர்கள். சம்பு: சுரேஸ்வரன். விஸ்வஜித் என்பவரின் க்ருஹத்தில், விஷ்வக்சேனன் என்ற பகவானின் அம்சாவதாரமாக விஷூசி என்பவளிடம் பிறந்து இந்திரனான சம்புவிடம் நட்பாக இருப்பார்.
தர்மசாவர்ணி என்பவர் பதினொன்றாவது மனுவாக வருவார். அவர் புதல்வர்கள், சத்யதர்மன் முதலானோர். விஹங்கமன், காமகமன், நிர்வாண ருசி என்று தேவர்கள், இந்திரனாக, வைத்ருதன், அருணன் முதலானோர் ரிஷிகள். ஆர்யகர் என்பவருடைய மகன், தர்ம சேது என்பவன், வைத்ருதா என்பவளிடம் ஹரியின் அம்சமாக மூவுலகையும் காப்பார். ருத்ர சாவர்ணி என்பவர் பன்னிரண்டாவது மன்வந்தர மனு. தேவன், உப தேவன் என்பவர்கள் தேவர்கள், ஸ்ரேஷ்டன் முதலானோர் புத்திரர்கள். ருத தாமா என்பவர் இந்திரனாவார். ஹரிதர் முதலானோர் தேவர்கள். தபோ மூர்த்தி ஆக்னீந்த்ரகர் முதலானோர் ரிஷிகள். ஸ்வதாமோ என்பவர் ஹரியின் அம்சமாக பிறந்து மனுவாவார். அதன் பின் சத்ய சஹஜன் சுன்ருதா என்பவளிடம் பிறப்பார்.
பதின்மூன்றாவது மனு தேவ சாவர்ணி என்பவர். இவர் ஆத்மவான் எனப் பெயர் பெறுவார். சித்ர சேன, விசித்ர முதலானோர் தேவ சாவர்ணி புதல்வர்கள். சுகர்ம சுத்ராம என்பவர்கள், திவஸ்பதி: இந்திரன், நிர்மோக தத்வ தர்சி என்பவர்கள் ரிஷிகளாகத் தோன்றுவர். தேவ ஹோத்ரனுடைய மகன் உபஹர்தா. திவஸ்பதி-இந்திரன். யோகேஸ்வரன் என்பவராக ஹரியின் அம்சமாக ப்ருஹதீ என்பவரிடம் தோன்றுவார். இந்த்ர சாவர்ணி என்பவர் பதினான்காவது மனுவாவர். உரூ, கம்பீர புத்தி என்பவர்கள் இந்திர சாவர்ணியின் மகன்கள்.
பவித்ரா முதலானவர் தேவர்கள், சுசி என்ற பெயரில் இந்திரன் வருவான். அக்னிவாஹர், முதலான ஏழு ரிஷிகள் தோன்றுவர். ஆக்னீந்த்ர:, காஸ்பன், பௌலஸ்த்யன், மாகதன், பார்கவோ, அக்னிபாஹு, சுசி, ஆங்கிரஸ், முக்தன் ஆத்ரேயனான சுத்த வாசிஷ்டன் – எனப் படுவர்.
சத்ராயண-விதானா தம்பதிகளின் தனயனாக ப்ருஹத்பானு என்ற பெயரில் ஸ்ரீ ஹரி சந்ததியை விஸ்தரிப்பார்.
அரசனே! இந்த பதினான்கும் மூன்று காலங்களுடையவை. இவைகளுடன், . ஆயிரம் யுகங்கள் சேர்ந்து கல்பம் எனப்படும்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், மன்வந்தரானுவர்ணனம் என்ற பதின் மூன்றாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்- 36
அத்யாயம்-14
மன்வந்தரங்கள் என்றும், , ஒவ்வொரு மன்வந்தரத்துக்கும் மனு என்றும் விவரித்து சொன்னீர்கள். அவர்களுக்கு என்ன வேலை, யார் நியமிப்பார் ? என்று அரசன் பரீக்ஷித் கேட்டான்.
ரிஷி சொன்னார்: மனு என்பவர்கள் மனுவின் வழி வந்த அவர் புதல்வர்கள், மற்றும் முனிகள். இந்த்ரனாக நியமிக்கப் பட்டவர்கள், அசுர-தேவ கணங்கள் அனைத்துமே பர புருஷனுடைய ஆட்சியில் அடங்குவர். இவைகளை நியமிப்பவர் அவரே.
யாகங்கள் பற்றி சொன்னேனே, மனிதர்கள் உலக வாழ்க்கையை சீராக நடத்திச் செல்ல யாகங்கள் அவசியம். பர புருஷனுடைய தனயர்கள் -புதல்வர்கள் இந்த யாக காரியங்கள் நடக்க உதவுவார்கள். நான்கு யுகங்கள் என்ற கால கட்டம். அதில் ஸ்ருதி கணங்கள், என்பவைகளை கண்டறிந்த ரிஷிகள் சொன்னது தான் தர்மம். அழிவில்லாத சனாதனமான தர்மம். நான்கு பகுதிகளாக தர்மம் என்பதை ஸ்ரீ ஹரி சொன்னார். அவைகளை தாங்களும் அனுசரித்து, ப்ரசாரம் செய்து மக்களிடையே அந்தந்த காலங்களுக்கு பூமியில் நிலை நிறுத்தியவர்கள் இவர்கள்.
ப்ரஜாபாலர்கள் என்பர். ஒவ்வொருவரும் ஒரு பிரிவின் தலைவராவார். அந்த அதிகாரத்தை முறையாக பயன்படுத்தி உலகில் மனிதர்கள் மட்டுமல்ல அனைத்து உயிரினங்களையும் வழி நடத்துகின்றனர். யாகங்களில் பெறும் ஹவிஸ் என்பதை உணவாகக் கொண்டு தேவர்கள் வாழ்கிறார்கள். இந்த மனு முதலானோரும் அவர்களை அனுசரித்தவர்கள்.
இந்திரன் பகவான் கொடுத்த மூவுலக தலைமை என்ற பதவியில் இருந்து பெறும் செல்வங்களைக் கொண்டு மூவுலகையும் ஆளுகிறான். பெரும்பகுதி இந்த உலகில் செலவழிகிறது.
ஒவ்வொரு யுகத்திலும் ஸ்ரீ ஹரி ஞானோபதேசம் செய்கிறார். அதற்கேற்ப உருவங்களை எடுத்துக் கொள்கிறார். ரிஷியாக உருவம் கொண்ட பொழுது, கர்ம காண்டத்தை பிரசாரம் செய்கிறார். யோகேசனாக வரும் சமயம் யோகத்தை. ப்ரஜேசன்- ப்ரஜைகளுக்கு ஈஸ்வரன் என்ற உருவத்தில், யுகங்கள் பற்றி காலத்தின் சக்தி பற்றி சொல்வார். இந்திரனாக திருடர்கள், அதர்மிகளை கண்டிப்பார். காலனாகவே வந்து அனைத்தையும், இல்லாமல் செய்வது வேறு.
ஜனங்கள் பலவிதமாக துதிகள் செய்கின்றனர். அவர் மாயையால் எடுத்துக் கொண்ட ரூபங்கள், அந்தந்த சமயம் செய்த செயல்கள், அந்தந்த காலத்தில் ஏற்றுக் கொண்ட பெயர்கள், இவைகளை புகழ்ந்து பாடுவர். இந்த அவதாரங்களில் பலவித நிகழ்ச்சிகள், உபதேசங்கள் இவைகளை அறிந்து கொள்வர். ஆயினும் அவரைக் கண்டதில்லை. கல்பம், விகல்பம் என்பது கால அளவு. ஒவ்வொரு கல்பத்துக்கும் இவ்வளவு உலக நாட்கள் என்பதும் சொல்லப் பட்டுள்ளது. இவைகளில் வசதிக்காக மன்வந்தரங்கள் என்ற உட் பிரிவை விவரங்கள் அறிந்தவர்கள் செய்தார்கள். அவை பதினான்கு என்று பார்த்தோம்.
. (இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், மன்வந்தரானுவர்ணனம் என்ற பதி நான்காவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்- 36
அத்யாயம்-15
பலியிடம் யாசித்து பெற்ற மூன்றடி பூமியில், மூவுலகையும் திரும்ப பெற்றார் என்று சொன்னீர்கள். .அதைப் பற்றிச் சொல்லுங்கள். யாகம் செய்து முடித்து நிறைவாக இருந்த பலியை கட்டியது எதற்காக? அவன் குற்றம் எதுவும் செய்யவில்லையே.
அவன் யுத்தத்தில் தோற்று உயிர் போகும் நிலையில் பார்கவர் உயிர்ப்பித்தார். அவரை அவன் மிகவும் மதித்தான். பெரும் பொருள் கொடுத்தும், வசதிகள் செய்து கொடுத்தும் மிக மரியாதையாக நடந்து கொண்டான். அதனால் பார்கவ குலத்தினர் அனைவரும் விஸ்வஜித் என்ற யாகத்தை செய்ய பலியை ஊக்குவித்தனர். மஹானுபாவர்கள்- அவனிடம் அவர்கள் ஈடுபாட்டை காட்ட, முவுலகையும் வெற்றி கொண்டவனை மஹாபிஷேகம் செய்வித்து மகிழ்ந்தனர். அதன் பின் பொன்னால் ஆன ரதத்தில் பல வர்ணங்களில் குதிரைகளும், சிம்மக் கொடியும், ப்ரகாசிக்க திக்விஜயம் செய்து பின் யாகம் செய்தான். அவனுக்கு பிதாமகர் திவ்யமான பொன் கவசமிட்ட தனுஷைக் கொடுத்தார். என்றும் குறையாத அம்புகளைக் கொண்ட தூணுர – அம்புகளை வைக்கும் உறை – என்பதையும் கொடுத்தார். திவ்யமான கவசத்தையும் கொடுத்தார். பாட்டனாரான ப்ரஹ்லாதன் என்றும் வாடாத புஷ்ப மாலையை கொடுத்தார். சுக்ராசாரியர் நீரில் விளைந்த சங்கு கொடுத்தார். கூடியிருந்த அந்தணர்களும் மற்றவர்களும் மங்களாசாஸனம் செய்தனர். பலி அவர்களை ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்த பின், பாட்டனார் ப்ரஹ்லாதரிடம் அனுமதியுடன், விடை பெற்று, ஆயிரக் கணக்கான போர் வீர்களுடன் புறப்பட்டான். குரு சுக்ராசார்யர் தந்த சங்கத்தை ஊதி தன் திக்விஜயத்தை ஆரம்பித்தான். திவ்யமான பூ மாலைகளும் வரமாக கிடைத்த ஆயுதங்களுடன், ப்ரகாசமாக மகர குண்டலங்கள் ஆட, சுவர்க லோகத்தில் இருப்பவன் போலவே விளங்கினான்.
தன்னை ஒத்த அசுர வீரர்கள் புடை ஸூழ இந்திர புரியை அடைந்தான். அவர்கள் செல்கையில் பூமியே நடுக்கம் கண்டது போல ஆயிற்று. இந்திரபுரி ரம்யமாக இருந்த து. லக்ஷ்மீகரமான உபவனங்கள். அங்கு கூச்சலிடும் பறவைகள். மதுரமாக பாடும் குயில் வகைகள். பவளம் போன்ற நிறத்தில் புஷ்பங்களைத் தாங்கிய மரங்கள், அந்த மரங்களையே மறைத்து அடர்ந்து பூத்திருந்தன. ஹம்ஸ சாரஸ சக்ரவாக காரண்டவ மலர்கள் பூத்த குளங்கள் நாட்டியம் ஆடுவது போல இடை இடையே தெரிந்த தாமரை மலர்கள், தேவி ஆகாய கங்கை கோட்டை போல அந்த நகரை அணைத்தபடி ஸூழ்ந்து ஓடியது. கோட்டை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்வது போல உயர்ந்த வெள்ளியாலும் தங்கத்தாலும் இழைத்த சுவர்கள், கோபுரங்கள், ரத வீதிகள், அனைத்தும் விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப் பட்டவை. பெண்களும் நித்ய யௌவனர்களாக, அலங்கார பூஷிதைகளாக வளைய வந்தனர். அந்த பெண்களின் தலையிலிருந்து விழுந்த மலர்களின் வாசனையைத் தாங்கி வாயு மெள்ள இதமாக வீசியது போல இருந்தது.
முத்துக்களும், நவரத்னங்களும் பதிக்கப் பட்ட கொடிகள் வரிசையாக இருந்தன. மிருதங்கமும், சங்குகளும் துந்துபிகளும் ஏக காலத்தில் ஒலித்தன. ஆங்காங்கு நடனங்கள் அதற்கான வாத்யங்களுடன் நடந்து கொண்டிருந்தன. அதர்மிகளோ, துஷ்டர்களோ, அறிவில்லாத மூடர்களோ, பர ஹிம்சை செய்பவர்களோ, காமிகளோ, பேராசை, லோபம் கொண்டவர்களோ அந்த நகரில் நுழையவே முடியாது. அந்த தேவ ராஜதானியை தன் படையுடன் பலி மகாராஜா அடைந்தான்.
இந்திரன் தன் முக்ய பரிவாரங்களோடு வந்து குருவான ப்ருஹஸ்பதியிடம் வந்து முறையிட்டான். பகவன்! முன் நம் விரோதியாக இருந்த மகாபலி, மிகவும் பலசாலியாக தேஜசுடன் வளர்ந்து நம்மை தாக்க வருகிறான். அவனை எதிர்க்க முடியாது என்று நினைக்கிறேன். எந்த இடத்திலும் எப்படியும் இந்த மிகப் பெரிய சேனையை சமாளித்து ஜயிக்க முடியாது. திசைகளை விழுங்கி விடுவது போலவும், பத்து திசைகளையும் எரித்து விடுவது போலவும், கண்களிலேயே சம்வர்த்தாக்னியை கொண்டது போலவும் அவன் வீரர்கள் தெரிகிறார்கள். பகவானே! என்ன செய்வது எப்படி சமாளிப்பது, சொல்லுங்கள்.
குரு சொன்னார்: மகவன்! நான் அறிவேன். உன் சத்ருவின் இந்த மேன்மைக்கு காரணம், ப்ரும்மவாதியான சுக்ராசார்யரின், மற்றும் அவருடன் உள்ள ஞானிகள், சிஷ்யனான பலியை அங்கீகரித்து ஆசீர்வதித்து இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார்கள். ஓஜஸ்வி- மிகுந்த ஆற்றலுடைய இந்த பலியை வெற்றி கொள்ள உன்னால் முடியாது. உன்னால் மட்டுமல்ல, யாராலுமே முடியாது. சாதாரண மனிதன் க்ருதாந்தன்- யம தேவனை எதிர் கொள்வது போல ஆகும். அதனால் நீங்கள் உங்கள் உங்கள் இருப்பிடத்தை விட்டு விலகி, மகாபலியின் கண்ணில் படாமல் இருங்கள். அது தான் ஒரே வழி. இவன் குருவின் ஆசீர்வாதத்தால் நிமிர்ந்து நிற்கிறான். அவர்களிடம் எந்த சமயம் முரண் படுகிறானோ, அவர் சொல்வதைக் கேட்காமல் தானாக எதோ செய்ய முயலுகிறானோ, அது தான் அவனை அடக்க ஏற்ற சமயம். காத்திருங்கள். இதைக் கேட்டு இந்திரன் தன் பரிவாரங்களோடு நகர் நீங்கினான்.
தேவர்கள் அந்த நகரிலிருந்து வெளியேறி விட்டதை அறிந்த மகாபலி தேவ லோகத்தை தன் வசமாக்கிக் கொண்டான். மூவுலகும் அவன் ஆட்சியில் வந்தது. மூன்று உலகங்களையும் வெற்றிக் கொண்ட தங்கள் சிஷ்யனிடம் பேரன்பு கொண்டிருந்த குரு சுக்ராசாரியாரும், ப்ருகு குலத்து பெரியவர்களும் நூறு அஸ்வமேத யாகங்கள் ( சதமேத யாகம் ) என்பதைச் செய்ய வலியுறுத்தினார்கள். நூறு யாகம் செய்தவன் இந்திரனாவான் என்பதால். அதனால், விஸ்வஜித் என்று பெயர் பெற்ற மகாபலி, தன் வலிமையை மேலும் நிலை நாட்ட அந்த நூறு அஸ்வமேதம் என்ற செயலை ஏற்று சிறப்பாகச் செய்ய, மஹாமனா: நல்ல மனதுடையவனாக தீர்கமான சங்கல்பத்தைச் செய்து கொண்டான். ஏராளமான செல்வம் சேர்ந்தது. த்விஜர்கள்- அந்தணர்கள் மற்றும் பலர் ஆசிர்வதிக்க, யாகங்கள் சிறப்பாக நடந்தன. தான் க்ருத க்ருத்யனாக ஆனதாக உணர்ந்தான்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின், மன்வந்தரானுவர்ணனம் என்ற பதினைந்தாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்- 35
அத்யாயம்-16
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு தன் புதல்வர்கள் அனைவரும் காணாமல் போகவும் அவர்களின் தாயான அதிதி தனித்து விடப்பட்டவளாக வருந்தினாள். தைத்யர்கள்- திதியின் மைந்தர்கள் தான் காரணம் என்பதை அறிந்தாள். ஒரு சமயம் கஸ்யபர் அங்கு வந்தார். (திதி,அதிதி இருவருமே அவர் மனைவிகள்) வெகு காலம் எதுவும் பேசாமல், எந்த உணர்வும் இன்றி சமாதி என்ற நிலையில் இருந்து வந்திருக்கிறார். மனைவியின் வாடிய முகத்தைக் கண்டு, தன் ஆசனத்தில் அமர்ந்தவாறே, என்ன விஷயம் என்று வினவினார். அவள் சொன்னதைக் கேட்டு நடந்ததை ஊகித்துக் கொண்டவராக அவளிடம் சமாதானமாக சொன்னார்.
பத்ரே! இது அந்தணர்களுக்கு நல்லதல்ல. தர்மத்திற்கும், உலக மக்களுக்கும் நல்லதல்ல. மனித உலகத்தினர் ம்ருத்யுவின் கால கணக்கில் வாழ்பவர்கள். நம் வீட்டின் நிலை என்ன? க்ருஹமேதினீ! – வீட்டை நிர்வஹிப்பவள் – தர்ம,அர்த்த,காம எனும் குடும்பத்திற்கு தேவையான அனைத்தும் சரியாக இருக்கின்றனவா? இது குடும்பஸ்தனின் யோகம். அவர்களுக்கு வேறு யோகம் தேவையில்லையே. அதிதிகளுக்கு நல்ல விதமாக உணவு உடை அளித்து உபசாரம் செய்கிறாயா? வீட்டிற்கு வந்த அதிதியை தண்ணீர் கூட குடிக்காமல் வெளியேற்றினால் அந்த வீடு ஓனாய் வசிக்கும் குகை போல ஆகும். வேளை தவறாமல் அக்னி காரியங்கள் செய்தாயா, ஹவிஸ் அளித்து ஹோமம் செய்தாயா? நான் வீட்டில் இல்லாத பொழுது உன் மனமும் சஞ்சலமாக இருப்பதால் கேட்கிறேன். இவைகளை ஒழுங்காக செய்வதால் க்ருஹஸ்தன் – இல்லறத்தான், நல்ல கதியை அடைகிறான். அக்னியும் அந்தணனும் சர்வ தேவாத்மனான பகவானுடைய முகமாகும். உன் புதல்வர்கள் குசலமா? உன்னைப் பார்த்தால் ஏதோ தவறு என்று என் மனம் சொல்கிறது.
ப்ரும்மன்! பசுக்களும் அந்தணர்களும் நலமாக இருக்கிறார்கள். தர்மத்திற்கும், இங்குள்ள ஜனங்களுக்கும் எந்த குறைவுமில்லை. மூன்று யுகத்திலும் சிறப்புடைய க்ஷேத்ரம் இது. இங்குள்ள வீடுகளும், அதில் வசிப்பவர்களும் நலமே. அக்னி காரியமோ, அதிதிகளோ, பணியாட்களோ, யாசகர்களோ, தேவை என்று வரும் இரவலர்களோ, உங்களுடைய அனுத்யானத்தால், குறைவின்றி நடக்கின்றன. பகவன்! உங்கள் அருளால் எனக்கு எந்த குறைவுமில்லை. ப்ரஜாபதி நீங்கள், தர்மத்தை அறிந்தவர் மற்றும் மற்றவர்களுக்கும் சொல்பவர். மாரீச! (மரீசி முனிவரின் மகன்) உங்கள் மானச, சாரீர ப்ரஜைகள் தான் இந்த உலகம் முழுவதும். சத்வ ரஜ,தமோ குணத்தால் உருவானவர்கள். நீங்கள் சுர, அசுரர்களிடம் சமமாகவே இருப்பவர். ஆயினும் பக்தனை மகேஸ்வரன் அதிகமாக நேசிக்கிறார். அதனால் உங்களை வேண்டி கேட்கிறேன். என் ஸ்ரேயஸை நினைத்து பாருங்கள். சபத்னி புத்திரர்களால் என் புதல்வர்கள் பதவியிலிருந்து நீக்கப் பட்டார்கள். எங்களை காப்பாற்றுங்கள். ஐஸ்வர்யம், லக்ஷ்மி கடாக்ஷம், மதிப்பு, அந்தஸ்து அனைத்தும் எங்களிடமிருந்து பலவந்தமாக பிடுங்கப்பட்டன, ப்ரபோ. அதனால் சோக கடலில் மூழ்கி இருக்கிறேன். என் வயிற்றில் பிறந்த என் மகன் கள், இழந்த ராஜ்யம், பதவிகளை திரும்ப பெற என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: கஸ்யபர் சற்று யோசித்து சிரித்துக் கொண்டே பதில் சொன்னார். அஹோ! விஷ்ணுவின் மாயா பலம். அவருடைய அன்பிற்கு கட்டுப்பட்டது இந்த ஜகத் முழுவதும்.
தேஹம் என்பது என்ன? பௌதிகமான இந்த உலகில் ஆத்மாவை அறியாதவன், இயற்கை விதிகளுக்கு மேலான ஆத்மா என்பதும் தெரிந்தால், யார் உன் பதி, எவர் உன் புதல்வர்கள், அனைத்தும் மோகமே. இந்த அறியாமை தான் காரணம். எழுந்திரு, பகவானை, ஜனார்தனனை, நினை. அனைத்து உயிரினங்களிலும் உறையும் பர புருஷனை ஜகத்குருவான வாசுதேவனை வேண்டிக் கொள். அவர் தான் உன் குறைகளை நீக்கி வேண்டியதை அளிக்க வல்லவர். தீனர்கள் எனும் எளியவர்களிடம் கருணை உடையவர். , பகவத் பக்தியை விட வல்லமை உடையது வேறு எதுவுமில்லை என்பது தான் என் கருத்து.
அதிதி கேட்டாள்:
ப்ரும்மன்! நான் எந்த விதமாக பகவானை வேண்டி சங்கல்பம் செய்வேன், என் சங்கல்பம் நிறைவேறும் படி ஜகத்பதியான பகவானை துதிக்கிறேன். த்விஜஸ்ரேஷ்ட- அந்தணோத்தமரே! எனக்கு அந்த விதி முறைகளைச் சொல்லித் தாருங்கள். என் புதல்வர்களும் நானும் சங்கடம் தீர்ந்து நன்மை பெறும்படி பகவானை நான் வேண்டுகிறேன்.
கஸ்யபர் சொன்னார்: முன் ஒரு சமயம் பத்மத்தில் ஜனித்த ப்ரும்மா என்னிடம் கேட்டார். அவர் ஸ்ருஷ்டி செய்வதில் முனைந்திருந்த சமயம். கேசவனான பகவானை சந்தோஷப் படுத்தும் விரதத்தை அவருக்கு சொன்னது போலவே உனக்கும் சொல்கிறேன். பால்குண மாதத்து சுக்ல பக்ஷத்தில், பன்னிரண்டு நாட்கள் பயோ விரதம் எனும் விரதம் மேற்கொண்டு பக்தியுடன் அரவிந்தாக்ஷனை ஆராதிக்க வேண்டும். அமாவாசையன்று புற்று மண் கொண்டு உடலில் தேய்த்து ஸ்னானம் செய்ய வேண்டும். நதிக்கரையில் நின்று இந்த மந்திரத்தைச் சொல்.
ஆதி வராஹமாக வந்து பூ தேவியின் துயர் தீர்த்து, அவளுக்குரிய ஸ்தானத்தை கொடுத்தாய். ஆழ்கடலில் இருந்து பூமியை தூக்கி நிறுத்திய பகவான் நீ, என் துயரையும் தீர்ப்பாயாக. தினசரி ஸ்னானம் முதலியவைகளை முடித்துக் கொண்டு தேவையான தானியங்கள், பூஜை சாமான்களை சேகரித்துக் கொண்டு சுத்தமான இடத்தில் அமர்ந்து இந்த விரதத்தை செய்வாயாக. தியானம்-*
இந்த துதிகளைச் சொல்லி அர்ச்சனை செய். நமஸ்துப்யம் முதலான எட்டு ஸ்லோகங்கள். அதன் பின் கந்தம், புஷ்பம் பால், இவைகளால் அபிஷேகம், வஸ்திரங்கள் அணிவித்து, ஆபரணங்கள் முதலான உபசாரங்களைச் செய். தூபம் , தீபம் காட்டி பன்னிரண்டு அக்ஷரங்களைச் சொல்லி பூஜையை முடி. பாலில் வெந்த அன்னம், தனியாக சாதம், வெல்லம் கலந்து செய்த சாதம், இவைகளை மூல மந்திரம் சொல்லி நிவேதனம் செய். பக்தர்களுக்கு அந்த நிவேதன அன்னத்தை பகிர்ந்து அளித்த பின், ஆசமனம் செய்து தாம்பூலம் கொடு. அஷ்டோத்தர சதம் -108 முறை நாம ஜபம் பண்ணு. ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள், தண்டவத் நமஸ்காரம் என்ற வழக்கமான முறையில் செய்து, தேவனை யதாஸ்தானத்தில் வை. விருந்தினர்களுக்கு அளித்தபின் மீதியானதை சாப்பிடு. மறு நாளும் அதே போல என்று ஒரு பக்ஷம், இந்த விரதத்தை செய். தினமும் பூஜை முடிந்தபின் முடிந்தவரை சிறுவர்களுக்கும், அந்தணர்களுக்கும் அன்னமிட வேண்டும், பன்னிரண்டு நாள் இந்த விரதம் செய்து முடித்து, – ப்ரதமையில் இருந்து த்ரயோதசி வரை- விரத சமயம் சுத்தமாகவும், அசத்தான கதைகள் பேசுவதை தவிர்த்தும், வாசுதேவ பாராயணமே நினைவாக எந்த ஜீவ ஹிம்சையும் செய்யாமல் த்ரயோதசியில் சாஸ்திர முறைப்படி விஷ்ணுவுக்கு ஸ்னானம் முதலான உபசாரங்கள், பூஜைகள் செய்து வா. விவரம் அறிந்த பெரியவர்களை உதவிக்கு வைத்துக் கொள். ப்ரும்மா, பரம சிவ ரூபங்களையும் தியானம் செய்து கிரமமாக பூஜைகளைச் செய்யவும். ஆசார்யனாக வந்து உதவிகள் செய்த ஞானியான குருவுக்கு நல்ல ஆடைகள், ஆபரணங்கள், நல்ல உணவு இவைகளால் திருப்தி படுத்த வேண்டும், அதன் பின் முடிந்தவரை தானங்கள் அளித்து, நல்ல உணவளித்து வந்தவர்களை மரியாதை செய்து அனுப்ப வேண்டும். அதன் பின் ந்ருத்தம், வாத்யங்கள், கீதம் ஸ்வஸ்தி வாசகங்கள் என்ற பதினாறு உபசாரங்களை செய்து விரதத்தை முடிக்க வேண்டும். இது தான் பயோ விரதம் என்ற முறையில் பகவானை பூஜிப்பது. ப்ரும்மாவுக்குச் சொன்னது போலவே உனக்கும் விவரமாக சொல்லியிருக்கிறேன்.
மஹாபாகே! ஆத்ம சுத்தியோடு இந்த விரதம் செய்து பகவானை பூஜை செய். அவர் தவம், தானம், விரதம், யாகங்கள் இவைகளில் மிக மகிழ்ச்சியடைவார். பத்ரே! சிரத்தையுடன் செய், அவர் அருளால் உன் துன்பம் விலகும்.
नमस्तुभ्यं भगवते पुरुषाय महीयसे ।सर्वभूतनिवासाय वासुदेवाय साक्षिणे ॥ २९॥
नमोऽव्यक्ताय सूक्ष्माय प्रधानपुरुषाय च ।चतुर्विंशद्गुणज्ञाय गुणसङ्ख्यानहेतवे ॥ ३०॥
नमो द्विशीर्ष्णे त्रिपदे चतुःशृङ्गाय तन्तवे ।सप्तहस्ताय यज्ञाय त्रयीविद्यात्मने नमः ॥ ३१॥
नमः शिवाय रुद्राय नमः शक्तिधराय च ।सर्वविद्याधिपतये भूतानां पतये नमः ॥ ३२॥
नमो हिरण्यगर्भाय प्राणाय जगदात्मने ।योगैश्वर्यशरीराय नमस्ते योगहेतवे ॥ ३३॥
नमस्त आदिदेवाय साक्षीभूताय ते नमः ।नारायणाय ऋषये नराय हरये नमः ॥ ३४॥
नमो मरकतश्यामवपुषेऽधिगतश्रिये ।केशवाय नमस्तुभ्यं नमस्ते पीतवाससे ॥ ३५॥
त्वं सर्ववरदः पुंसां वरेण्य वरदर्षभ ।अतस्ते श्रेयसे धीराः पादरेणुमुपासते ॥ ३६॥
अन्ववर्तन्त यं देवाः श्रीश्च तत्पादपद्मयोः ।स्पृहयन्त इवामोदं भगवान् मे प्रसीदताम् ॥ ३७॥
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின் அதிதி பயோ விரத வர்ணனம் என்ற பதினாறாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்- 63
அத்யாயம்-17
ஸ்ரீ சுகர் சொன்னார்: ராஜன்! அந்த தாயாரும், கணவன் சொன்னபடியே பயோவ்ரதம் என்பதை முறையாகச் செய்தாள். பன்னிரண்டு நாட்கள் கடந்தன.பகவானை அனவரதமும் மனதில் நினைத்தபடி வேறு சிந்தனையோ, இடையூறோ இன்றி புத்தியினால் மனதை கட்டுக்குள் வைத்தவளாக தவம் போலவே செய்தாள். அவளிடம் ஆதி புருஷனான பகவானே வந்தான்.. சங்க சக்ர கதா தாரியாக, நான்கு புஜங்களுடன் நின்றவரைப் பார்த்து அதிதி பரபரப்புடன் எழுந்து நின்றாள். முழு உடலும் நிலத்தில் பட விழுந்து நமஸ்கரித்தாள். மகிழ்ச்சியில் திக்கு முக்காடினாள். எழுந்து கை கூப்பியவாறு பேச வாயெழாமல் கண்களில் ஆனந்த பாஷ்பம் பெருக, உடல் புல்லரிக்க, பார்த்தபடியே பேசாமல் நின்றாள். அன்புடன் ஸ்ரீ ஹரியை, ரமாபதி, யக்ஞபதி, ஜகத்பதி என்பவரை துதித்தாள்.
யக்ஞேச, யக்ஞ புருஷா. அச்யுதா! தீர்தபாதா, தீர்த்த-நீரில் ஆஸ்ரயம்-இருப்பிடம் கொண்டவனே, உன்னை அண்டியவர்களின் இகலோக துன்பங்களை விரட்டியடிப்பவனே, தீன நாதா, எங்களுக்கும் நன்மையை செய்வாயாக.
விஸ்வமே நீ, உலகத்தின் தோற்றம், நிலை பெறுதல், மறைதல் என்ற செயல்களைச் செய்பவன், பூமியின் புரு -உருவாக்கும் சக்தியை ஏற்றுக் கொண்டாய், பூர்ண போதன் நீ, என்றும் சீரான உடல் நிலை உள்ளவன், தானே எடுத்துக் கொண்டு தாமச விருத்தியும், உடைய ஸ்ரீ ஹரியே நமஸ்காரம்.
உடல் உள்ள ஜீவன் களுக்கு வாழ்நாள் மிக அவசியம். லக்ஷ்மீ கடாக்ஷம் அளவில்லாமல் இருக்க வேண்டுவர். சகல யோக குணம் உள்ள அனந்தன், அனைத்தும் உன்னுள் அடக்கம் என்று சொல்லும் ஞானியர் உன் தரிசனமே ஆனந்தம் என்று சொல்வர். உன்னிடம் என்ன யாசிப்பேன்? சபத்னியின் மக்களை வெற்றி கொள்ள வேண்டும் என்று எண்ணியது தற்சமயம் தேவையே யில்லை.
அனைத்து ஜீவன் களிலும் உள்ளுறை பகவான் – க்ஷேத்ரக்ஞன்- சொன்னார்.:
தேவ மாதா! நீ வேண்டிக் கொண்டாய். வெகு நாட்களாக மனதில் இருந்த குறை உன் புதல்வர்கள் சக்களத்தி மக்களிடம் செல்வத்தை இழந்து தங்கள் பதவியையும் இழந்தனர். எங்கோ மறைவிடத்தில் இருக்கிறார்கள் என்பது உன் கவலை. அவர்களை வென்று திரும்பவும் உன் புதல்வர்கள் ஜயஸ்ரீயை -வெற்றி லக்ஷ்மியை பெற வேண்டும் என்பது தானே உன் விருப்பம். உன் மக்கள் வெற்றி பெறவும், அவர்கள் வீட்டுப் பெண்கள் துக்கத்துடன் கண்ணீர் விடுவதையும் பார்க்க விரும்புகிறாய். உன் புதல்வர்கள் தேவ லோகத்தில் செல்வ செழிப்பில், திரும்பப் பெற்ற பதவி, பெருமைகளுடன் தேவலோகத்தில் விளையாடி களிக்க வேண்டும் என்று விரும்புகிறாய். அனேகமாக அந்த அசுர படையின் தலைவன், அவனைக் கடந்து செல்ல முடியாது என்பது என் கருத்து, தேவி. அவர்களுக்கு தெய்வ பலமும், அந்தணர்களான குரு க்ருபையும் தான் அவன் உயர்வுக்கு காரணம். உடல் பலம் விக்ரமம் மட்டும் அவனளவு சுகங்களை பெற முடியாது. உன் விரத பலன் என்பதை எதைத் தருவது என்று யோசித்தபின் நான் ஒரு தீர்மானத்துக்கு வந்தேன். என்னை பூஜித்து செய்த விரதம் வீணாகக் கூடாது. அதற்கான பலன் கிடைத்தே ஆக வேண்டும். சிரத்தைக்கு ஏற்ற பலன் என்பது நியதி.
நீ என்னை அர்ச்சித்தது உன் புதல்வர்களின் நன்மைக்காக. பயோ வ்ரதம் உடனடியாக பலன் தரும். காஸ்யபரும் தவத்தில் ஈடுபட்டுள்ளார். அவருக்கும் உனக்கும், என்னுடைய அம்சத்துடன் மகனாக பிறக்கிறேன். உடனடியாக உன் கணவரிடம் செல் பத்ரே!! நேர்மையே உருவானவர் அவர். என்னைக் கண்டதையும், இந்த ரூபத்தையும் சொல். இதற்கு மேல் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. எல்லாம் நல்லபடியாக நடக்கும், இது தேவ ரகசியம் என்றவர் அவள் கண் முன் மறைந்து விட்டார்.
அவளும் உடனே தன் கணவன் இருக்குமிடம் ஓடிச் சென்றாள். மிகுந்த பக்தியுடனும், தன் விரதம் பலித்த திருப்தியுடனும், சமாதி யோகத்தில் இருந்தவரை எழுப்பி விஷயத்தைச் சொன்னாள். அவரும் சம்மதித்து வெகு நாட்களாக தவத்தில் இருந்ததால் மரத்தில் மறைந்திருக்கும் அக்னி போல பாது காத்திருந்த தன் வீர்யத்தை அவளுக்கு அளித்தார்.
அதிதியின் வயிற்றில் கரு வளரத் தொடங்கியதும், ப்ரும்மா அதை அறிந்து சனாதனன் பகவான் தான் அவதரிக்கப் போகிறார் என்பதால் ரகசியமான பெயர்களால் அவரை துதித்தார்.
ப்ரும்மா சொன்னார்: ஜய உருகாய- பலவிதமாக புகழ் பெற்ற உனக்கு ஜயம். மஹா பராக்ரமம் உடையவன் நீ, உனக்கு நமஸ்காரம். அதிதியிடம் முன்பு ப்ருஸ்னி என்ற பெயரில் இருந்த சமயமும் வேதங்களை காப்பாற்றினாய். உலகில் மனிதனாக அவதாரம் செய்யத் துணிந்த உனக்கு நமஸ்காரம். அது உனக்கு புதிதல்ல, உன் பெயரே, விஷ்ணு- எங்கும் வியாபித்து இருப்பவன் என்பதே. வேத கர்பன், வேதமே நீ தான், என்றும், உன் ரூபங்கள் -பத்ம நாபன், சிபிவிஷ்டன் என்ற மகேஸ்வரன் என்றும் ஆன மகாவிஷ்ணு. – ஆதி புருஷன், ப்ரளய காலத்தில் அனைத்தையும் உன்னுள் வத்திருந்து அடுத்த யுகத்தில் பிறக்கச் செய்கிறாய் என்றும் அறிவோம். நீயே கால ரூபன். நதி வெள்ளத்தில் தன்னுடன் இலை தழைகளையும் அடித்துச் செல்வது போல மூவுலகையும் உன் கால சக்தி, ப்ரளயத்தை உருவாக்கி அனைத்தையும் அடித்துச் செல்கிறது, கடலில் மூழ்குபவனுக்கு கிடைத்த படகு போல நீ தற்சமயம் அனைத்தையும் இழந்து தவிக்கும் தேவ சமூகத்துக்கு பிடிமானமாக ஆவாய்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின் வாமன ப்ராதுர்பாவம் என்ற பதினேழாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்- 28
அத்யாயம்-18
இவ்வாறு ப்ரும்மாவே துதி செய்த பின், அதிதியின் மகனாக, அவதரித்தார். சங்க, சக்ர, கதை,பத்மம் தாங்கிய சதுர்புஜங்கள், பீதாம்பரனாக, நளினம்-தாமரை போன்ற அகன்ற கண்கள் , மேக ஸ்யாமளன், மகர குண்டலங்கள், அதன் ஒளியில் பிரகாசிக்கும் கன்னங்கள், ஸ்ரீவத்சம் விளங்கும் மார்பும், அங்கதங்களும், வளையங்களும் அலங்கரிக்க, கிரீடமும், இடையில் காஞ்சி, கால்களில் நூபுரமும், வனமாலையும், ஸ்ரீ ஹரி தன் இயல்பான மந்த ஹாஸமான முகத்துடன் தரிசனம் அளித்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த கௌஸ்துபம் கூட தன் ஒளியை இழந்தது போல அந்த சிரிப்பு தெரிந்தது.
திசைகள் பிரகாசமாக ஆயின. சமுத்திரங்கள் பொங்கி மகிழ்ச்சியை வெளிப் படுத்தின. ப்ரஜைகள் மகிழ்ந்தனர். அந்த சமயத்து பருவ நிலை மனோகரமாக ஆயிற்று. வானம், அந்தரிக்ஷம், பூமி, அக்னி ஜிஹ்வா- யாகங்கள்,பசுக்கள், அந்தணர்கள், மிகவும் மகிழ்ந்தனர். மலைகளும் கூட மகிழ்ந்தவையாக காட்சி தந்தன.
ஸ்ராவண மாதத்து (ஆவணி) ஸ்ரவண- திருவோண நக்ஷத்திரத்தில், அபிஜித் முஹூர்தத்தில் ப்ரபு, அவதரித்த சமயம், மற்ற நக்ஷத்திர, தாரா கணங்கள், அவருடைய பிறப்பை கொண்டாடின. த்வாதசி வரவும், சூரியன் மத்யான்ன வேளையில் இருந்த சமயம், விஜயா எனப்படும். பகவான் அவதரித்த காலம்.
சங்க துந்துபிகள் முழங்கின. ம்ருதங்க பணவ அக கோமுக என்ற தாள வாத்யங்கள் வாசிக்கப் பட்டன. விசித்ரமான பல வாத்யங்கள் சேர்ந்து ஒரே சமயத்தில் வாசிப்பது போல நாதம் இனிமையாக கேட்டது.
அன்புடன் அப்சரஸ்கள் நடனம் ஆடினர். கந்தர்வ முக்கியஸ்தர்கள் பாடினர். முனிவர்கள், தேவர்கள், மனிதர்கள், பித்ருக்கள், அக்னிகள், அனைவரும் குதூகலமாக வளைய வந்தனர். சித்த வித்யாதர கணங்கள், சகிம்புருஷ, கின்னரர்கள், சாரணர்கள், யக்ஷ, ரக்ஷர்கள், சுபர்ணன்- கருடன் முதலான பறவைகள், புஜகோத்தமா:- சிறந்த நாகங்கள், அனைவரும் பாடிக் கோண்டோ, புகழ்ச்சியாக ஏதாவது சொல்லிக் கொண்டோ, ஆடிக் கொண்டோ, பலரும் பின் தொடர, அதிதியின் ஆஸ்ரமபதம் வந்து பூக்களை வாரி இறைத்தனர்.
தன் வயிற்றில் பிறந்த பாலகனை, பரம புருஷன் என் தெரிந்து கொண்டு சந்தோஷம் அடைந்தாள். கஸ்யபரும் ஜய ஜய என்று சொன்னார். அந்த சிறிய உருவத்துக்கு ஏற்ற ஆபரணங்களை விபு தரித்துக் கொண்டார். அவைகளுடன் வாமனனாக வளர்ந்தார். நாடகத்தில் ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, சிறுவன், பெரியவனாக ஆவது போல,சற்று நேரத்திலேயே அத்யயனம் செய்யும் மாணவன் போல தோற்றம் அளித்தார்.
மஹரிஷிகள் அதைக் கண்டு திகைத்தாலும், செய்ய வேண்டிய சம்ஸ்காரங்களை ப்ரஜாபதி கஸ்பருடன் சேர்ந்து செய்தனர். காயத்ரி மந்திரத்தை உபதேசிக்கும் உபனயனம் என்ற சம்ஸ்காரத்தை செய்தனர்.
காயத்ரி மந்திர அதிகாரியான சவிதா தானே வந்தாள். ப்ருஹஸ்பதி ப்ரும்ம சூத்ரம் அளித்தார். கஸ்யபர் மேகலை என்பதை அணிவித்தார். பூமி க்ருஷ்ணாஜினம் என்ற கறுப்பு மானின் தோலைக் கொடுத்தாள். சந்திரன் தண்டம், வனஸ்பதிகள் கௌபீனம் எனும் உடையை, தாயார் தேவலோகத்து குடையைக் கொடுத்தாள். அவரே ஜகத்பதி, தேவலோகத்து சத்ரம் என்பது என்ன உயர்வு ? கமண்டலுவை வேத கர்பன் கொடுத்தார். தர்பை எனும் புல் கட்டுகளை சப்த ரிஷிகள் கொடுத்தனர். சரஸ்வதி தேவி தன்னுடைய அழியாத அக்ஷமாலை என்பதைக் கொடுத்தாள். யக்ஷ ராஜா ஒரு பாத்திரத்தைக் கொடுத்தான். பிக்ஷாம் தேஹி எனவும், சாக்ஷாத் ஜகதம்பா சதீ, பிக்ஷை அளித்தாள். ப்ரும்மவர்சஸ் நிரம்பிய- தவம்,யோகம், அனுபவம் இவைகளால் மேம்பட்ட அறிஞர்கள், ப்ரும்ம ஞானம் அடைந்தவர்கள், ஆசீர்வதித்து அந்த உபனயனம் ஆன ப்ரும்ம சாரியை, தந்தையான மாரிஷன்- மரீசியின் புதல்வன், காஸ்பர் தானும் அன்புடன் ஆசீர்வதித்தார்.
பலி சக்ரவர்த்தியின் யாகத்தில் அனைவருமாக அக்னியை மூட்டி, சமித் முதலிய யாகத்திற்கு தேவையான பொருட்களைக் கொண்டு வந்து மிகப் பெரிய யாகம் செய்தனர். அஸ்வமேத யாகம் செய்து வரும் பலி யஜமானனாக இருக்க, பார்கவர் சுக்ரசாரியார் மற்றும் அவர் வழி வந்தவர்கள் முறைபடி வேத வித்துக்களுடன் யாகத்தை செய்தனர்.
இந்த தேவ பக்கத்தில் இருந்த கஸ்யபரின் ரிஷிகளும், மற்றவர்களும் கூட்டமாக அந்த யாகத்தைக் காணச் சென்றனர். பூமியே அதிர்ந்தது அவர்களின் பாரத்தால். நர்மதை நதியின் வடக்கு பகுதியில் பலியும், ப்ருகு, கச்ச என்பவர்கள், (ப்ருகு வம்சத்தினர்) உத்தமமான யாகத்தை விதி முறைகள் தவறாமல், செய்தனர். ஸூரியனே இறங்கி வந்து விட்டாரோ எனும்படி அவர்கள் தங்கள் தேஜஸால் சபையை நிரப்பியிருந்தனர்.
அவர்களையும் மீறி இந்த வாமனனுடைய தேஜஸ் அனைவரையும் திரும்பிப் பார்க்கச் செய்தது. சூரியனே இறங்கி வந்து விட்டதா, விபாவசுவா, சனத் குமாரர்களார என்ற சந்தேகம் அனைவருக்கும் வந்தது. அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கையிலேயே, சிறுவன் வாமனன் கையில் தண்டம், குடை, ஜலம் நிரம்பிய கமண்டலு, இவைகளுடன் அஸ்வமேத யாக சபையில் ப்ரவேசித்தான்.
மௌஞ்சி எனும் புல்லால் இடையில் கட்டிய மேகலை, மான் தோல் ஆடைக்கு மேல் தெரிந்த புது உபவீதம் (பூணூல்) மாயா மாணவனான ஸ்ரீ ஹரியை ஏதோ வாமனன் (பதத்தின் பொருள்- உயரம் குறைந்தவன்) என்று தள்ள முடியவில்லை. பிரவேசித்தவுடன் ரிஷிகளும் அவர்களின் சீடர்களும், கையில் யாக அக்னி, மற்றும் பாதி யாகத்தில் எப்படி இருந்தார்களோ அதே போல எழுந்து நின்று சிறுவனின் தேஜஸால் கவரப் பட்டவர்களாக ஆச்சர்யம் வெளிப் பட மனோரமம், கண்களுக்கு விருந்தாக இருந்த அழகிய ரூபம், என்ன அனுரூபமான உடல் வாகு என்று வியந்தவர்களாக வாமன ப்ரும்மசாரிக்கு ஆசனத்தை அளித்தனர்.
அங்கு இருந்த பலி சக்ரவர்த்தி, யஜமானன் என்பதால் தானே வந்து ஸ்வாகதம் சொல்லி வரவேற்று குனிந்து அவர் பாதங்களில் நீர் விட்டு அந்த நீரை தலையில் தெளித்துக் கொண்டார். பகவானுடைய பாதத்தில் பட்ட நீர் ஜனங்களின் பாபங்களை போக்கும். சுமங்களமான எந்த நீரை (கங்கை பகவானின் பாதத்தில் தோன்றியதாக வரலாறு) தேவ தேவனான கிரீசன் சந்த்ரமௌலி தன் தலையில் பக்தியுடன் தரித்துக் கொண்டிருக்கிறாரோ, அதே போல விவரம் அறிந்த தர்மவான் பலி சக்ரவர்த்தியும் பக்தியுடன் பாத ஜலத்தை தலையில் தெளித்துக் கொண்டார். அதன் பின் அந்த வாமன ப்ரும்மசாரியைப் பார்த்து, ப்ரும்மன்!, நல்வரவாகுக. , ஸ்வாகதம் , நமஸ்துப்யம்- வணக்கம். நான் என்ன செய்ய வேண்டும்? பார்த்த உடனேயே சாக்ஷாத் ப்ரும்ம ரிஷி என்று தெரிந்து கொண்டேன். இன்று என் குலம் தழைத்தது. என் முன்னோர்கள் திருப்தி அடைந்தனர். எங்கள் குலம் பவித்ரமாகியது. இந்த யாகம் கௌரவிக்கப் பட்டது. பகவானான தங்களே தேடி வந்து விட்டீர்கள். எங்கள் இல்லங்கள் பாவனமாகின. இன்று நாங்கள் செய்த வேள்வியின் அக்னிகள் நல்ல விதிப்படி ஹோமம் செய்யப்பட்டு அந்தண சிறுவனே, தங்கள் பாதங்களை வணங்கிய ஜனங்களுடன் எங்கள் குறைகள் தீர்ந்தன, இந்த பூமியே புனிதமானது உங்கள் பாதம் பட்டதால்.
ப்ரும்மசாரி சிறுவனே, எது வேண்டுமானாலும் கேள். எதையெல்லாம் விரும்புகிறாயோ, கேள். நீ யாசகன் அல்ல, அந்தண சிறுவன். பூமியா, பொன்னா, நல்ல உணவா, அன்னம் பலவிதமாக ருசியாக தயாராக உள்ளன, மணம் செய்து கொள்ள பெண் வேண்டுமா? நிறைவான கிராமங்கள், எல்லா வசதிகளுடன், குதிரைகள், யானைகள் நிரம்பியுள்ளன, அவை வேண்டுமா? தகுதியான அதிதி உன்னை விட வேறு யார் இருக்க முடியும், ரதங்களா, எது வேண்டுமானாலும், கேள். – என்றான்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்துஅளித்த மன்வந்தர சரித்த்ரம் என்ற எட்டாவது ஸ்கந்தத்தின் பலி வாமன சம்வாதோ என்ற பதினெட்டாவது அத்யாயம் ) ஸ்லோகங்கள்- 32
அத்யாயம்-19
ஸ்ரீ சுகர் சொன்னார்: வைரோசனி- விரோசனன் மகன் – சொன்னதைக் கேட்ட பகவான், அழகாக தர்மம் நிறைந்த சொற்கள் என்று மிகவும் மகிழ்ந்தார். பலி சக்ரவர்த்தியை பாராட்டி பின் வருமாறு சொன்னார்:
ஸ்ரீ பகவான் சொன்னார்: இந்த உன் வார்த்தைகள் மிகவும் சிறப்பானவை. அழகாக பேசினாய். ஜனதேவ-அரசனே! உன் குலத்துக்கு ஏற்றது. தர்ம சாஸ்திரம் சொல்வதை அனுசரித்தது. உன் புகழை வளர்க்கும். இதற்கு ப்ரமாணம் ப்ருகு குலத்தினர், சுக்ராசாரியார் அவரது சிஷ்யர்கள், மற்றும் அவரைச் சார்ந்தவர்களும். பாட்டனார் குல மூத்தவர் ப்ரஹ்லாதன் பரலோக விவகாரங்களில் ப்ரமாணம். அதனால் இன்றும் தாரா கணங்களின் இடையில் சந்திரனாக புகழ் வாய்ந்தவனாக இருக்கிறான். அந்த குலத்தில் பிறந்தவன் அறிவும் ஆற்றலும் இல்லாமல் இருப்பது அரிது. லோபியாகவோ, கருமியாகவோ தருவதாகச் சொல்லி மாற்றுச் சொல் சொல்பவர்களும் அல்ல. அதுவும் அந்தணர்களுக்கு வாக்கு கொடுத்தால் மாற மாட்டார்கள். மனிதர்கள் தீர்த ஸ்தானங்களில் யாசகர்களிடம் பாராதது போல செல்வதுண்டு. யுத்தத்திலும், தைர்யம் இல்லாத அரசர்கள் கண்டு கொள்ளாது செல்வதும் உண்டு. உன் குலத்தில் அது போல யாரும் இல்லை. அதற்கும் முன் ஹிரண்யாக்ஷன் தன் கதையே ஆயுதமாக, தன் பலமே ஸகாயமாக உலகம் முழுவதும் தேடியும் சமமாக அவனுடன் போரிட யாரும் இல்லை. பூமியை சுருட்டி எடுத்துக் கொண்டு ப்ரதி பக்ஷன்- எதிர் நின்று போர் செய்யும் வல்லமை உடையவன் கிடைக்கவில்லை. போரிடுபவனைத் தேடி அலைந்தான். வராக அவதாரத்தையும், பூமியை உத்தரணம் செய்ததையும் ஹிரண்யாக்ஷனுடன் யுத்தம் செய்து ஜயித்தாலும் பகவான் அதை ஜயமாக நினைக்கவில்லை என்பதை சுட்டிக் காட்டினார். சம மான வீரன். போரில் வெற்றி தோல்வி நிச்சயம் இல்லை என்பதால். தன் சகோதரன் போரில் மடிந்தான் என்று ஹிரண்யகசிபு அறிந்தவுடன், சகோதரனைக் கொன்ற விஷ்ணுவை முறியடிப்பேன் என்று தீவிரமாக விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டமே சென்றான். க்ருதாந்தன்- யமன் போல ஸூலத்தோடு வந்து கொண்டிருந்த ஹிரண்ய கசிபுவை பார்த்து, அந்த சந்தர்பத்துக்கு ஏற்றபடி என்ன செய்வது என்று யோசித்தார். காலம் அறிந்தவர், அவனுடைய முடிவு அதற்கான காலத்தில் தான் வரும் என்பதை அறிந்தவர்.
நான் எங்கே சென்றாலும் இவன் ம்ருத்யு போல தொடர்ந்து வருவான். இவன் காண முடியாத இடம் இவன் ஹ்ருதயமே. அதனால் அவன் ஹ்ருதயத்துள் ப்ரவேசிக்கிறேன் என்று தீர்மானித்தார். ஸூக்ஷ்ம தேகம் எடுத்துக் கொண்டு, வேகமாக எதிர்த்து கொல்ல ஓடி வரும் எதிரியின் ப்ராண ரந்த்ரத்தில் (மூச்சுக் குழல்) ப்ரவேசித்து விட்டார். அந்த வீரன் சூன்யமாக இருந்த வைகுண்டத்தைப் பார்த்து கோபம் கொண்டான். பெரும் குரலில் அழைத்துப் பார்த்தான். பூமி, வானம், குகைகள் அந்தரிக்ஷம், என்று எல்லா இடங்களிலும் தேடித் தேடி விஷ்ணுவைக் காணாமல், என் சகோதரனைக் கொன்றவனை உலகம் முழுவதும் தேடி விட்டேன், ஓடியவன் திரும்பி வந்து தானே ஆக வேண்டும், என் உயிர் உள்ளவரை இந்த விரோதம் போகாது என்றான். வைரம் என்ற விரோதம் ஒருவன் மனதை விட்டு அகலாது, அறியாமையில் விளைவது, நான் என்ற தன் நம்பிக்கையில் வளருவது, மன்யு என்று இதை மிக கொடியவனாக சொல்வார்கள். அவன் மகன் ப்ரஹ்லாதன் உன் தந்தை, வித்வான், குரு, அந்தணர்களிடம் பிரியமாக இருப்பவன், தன் வாழ் நாள் முழுவதும் யாசிப்பவர் யாராக இருந்தாலும் வேண்டியதைக் கொடுத்தான். தேவர்கள் கூட அவனுடன் நட்பாக இருந்தனர். நீ அவர் குணங்களைக் கொண்டு பிறந்திருக்கிறாய். க்ருஹஸ்தர்கள் ஆசரிக்கும் தர்மங்களை அறிந்திருக்கிறாய். உனக்கு முன் பிறந்தவர்கள் ஸூரர்களாக புகழ் வாய்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள்.
அதனால் ஒரு சிறு துண்டு நிலம் உன்னிடம் யாசிக்கிறேன். நீ வரதன்- அளவின்றி கொடுப்பவன், தானி -வள்ளல் என்பவர்களில் சிறந்தவன். தைத்யேந்த்ரா! மூன்றடி நிலம் என் காலால் அளந்து தர வேண்டுகிறேன். ராஜன்! வேறு எதுவும் வேண்டேன். ஜகதீஸ்வரன், எல்லையின்றி கொடுக்கும் வள்ளல், என்பது தெரிந்தே, எனக்கு தேவை என்பதை மட்டுமே கேட்கிறேன். அது தான் பெரியவர்கள் சொல்வது- தேவையானதை மட்டுமே தானமாக பெறுவதால் ப்ரதிக்ரஹம்,யாசிப்பது என்ற பாபம் அண்டாது என்பர்.
பலி சக்ரவர்த்தி இதைக் கேட்டு அஹோ! அந்தண சிறுவனே, நீ சொல்வது வயதான அந்தணர்களுக்கு சரி. நீ சிறுவன், உலகம் அறியாதவன். உன் தேவை என்ன என்பதைக் கூட அறியாதவன். இவ்வளவு நேரம் பேசி விட்டு, மூவுலக நாயகனாக இருக்கும் என்னிடம் மூவடி நிலம் கேட்கிறாய். ஜம்புத்வீபத்தையே கேட்டாலும் தருகிறேன். என்னிடம் தானம் பெற்றவன், மற்றொருவரித்தில் தானம் பெற நிற்கக் கூடாது. அதனால் ப்ரும்மசாரி சிறுவனே! மேலும் மேலும் விருத்தி அடையச் செய்யும், பூமியை தானமாக தருகிறேன்.
ஸ்ரீ பகவான் சொன்னார். மூவுலகிலும் பிரியமான வஸ்துக்கள் நிறைய தானம் செய்திருப்பாய். தன் அடக்கம் இல்லாதவனுக்கு எவ்வளவு கொடுத்தாலும் போதாது தான். அதுவே ஆத்மாவை அறிந்தவன், ஜிதேந்திரியன் இவைகளை பொருட்டாகவே நினைக்க மாட்டான். மூன்று அடி நிலத்தில் சந்தோஷம் அடையாதவன், சப்த த்வீபங்களையும் கொடுத்தால் கூட மன நிறைவை அடைய மாட்டான். சப்த த்வீப – ஏழு தீவுகளையும் ஆளும் சக்ரவர்த்தி பதவி கிடைத்தால் கூட த்ருஷ்ணா – பேராசையுடையவன் போதும் என நினைக்க மாட்டான். எதேச்சையாக தனக்கு கிடைத்த செல்வம், சுகம் இவைகளில் திருப்தியடைபவன் சந்தோஷமாக இருப்பான்.
அர்த்த காமங்களில் நிறைவு அடையாத மனிதன் மீண்டும் மீண்டும் திருப்தியில்லாத ஜீவனாகவே இருப்பான். ஆசைகளை விட்டவன் தான் முக்தன்-விடுபட்டவன். அவன் தேஜஸ் வளரும். அது போல தன்னடக்கம் உள்ளவனுடைய அசந்தோஷம் அல்லது அத்ருப்தி அவனுடைய சாதகமே தீர்த்து விடும். அக்னியை தண்ணீர் அணைத்து விடுவது போல. அதனால் நான் வேண்டுவது எனக்கு மூன்றடி நிலம் மட்டுமே. அதிலேயே நான் மகிழ்வேன். உபயோகமான பொருள் இருந்தாலே போதும் என நினைப்பவன்.
ஸ்ரீ சுகர் சொல்கிறார், இப்படி கேட்டவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே பலி சக்ரவர்த்தி தனது இடது கையால் ஜல பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, கேட்ட அளவு மூவடி நிலம் தர சித்தமாக, வாங்கிக் கொள் என்றான். அதைக் கண்ட சுக்ராசாரியார், அசுர ராஜனைப் பார்த்து, ஏதோ சூது, விஷ்ணுவின் உண்மையான எண்ணம் வேறு என்று சந்தேகம் கொண்டவராக சிஷ்யனை தடுத்த படி, ‘விரோசனன் மகனே! பொறு. இவன் சாதாரண மனிதனல்ல. சாக்ஷாத் விஷ்ணுவே. கஸ்பருடைய மகனாக அதிதியின் வயிற்றில் பிறந்தவன். தேவர்களின் காரியத்தை செய்து தருவதற்காக வந்திருக்கிறான். இவனுக்கு நீ தருவதாக வாக்களித்திருக்கிறாயே, அனர்த்தம் என்பதை அறியாமல், இது நல்லதல்ல, என் மனதில் சந்தேகம் வருகிறது, தைத்யர்களுக்கு பெரும் கெடுதல் சம்பவிக்கும் என நினைக்கிறேன். மாயையால் மாணவன் போல வந்து நிற்கிறான். ஸ்ரீ ஹரியே இவன். உன்னிடமிருந்து ஐஸ்வர்யம், லக்ஷ்மி கடாக்ஷம், தேஜஸ், புகழ், நீ கற்ற கல்வி அனைத்தையும் பிடுங்கி சக்ரனுக்கு- இந்திரனுக்கு தரப் போகிறான். மூன்றடி நிலத்தால் லோகங்களை அளந்து விட விஸ்வகாயம்- விஸ்வரூபம் எடுத்துக் கொள்ளலாம். அதன் பின் மூடா! எப்படி வாழ்வாய்? பூமி, தேவலோகம் இவைகளை அளக்க இரண்டியானால், மூன்றாவது எங்கே வைப்பான்? மகனே! வாக்கு கொடுத்து விட்டேன் என தானம் செய்ய முனைந்து நிற்கிறாய். தகுதியில்லாத பாத்திரத்தில் தானம் இடுவது கூட பாபமே, நரகம் போகும் வழி அது. தன்னை மீறி தன்னையே அழித்துக் கொள்ளும் தானத்தை புகழ்ந்து சொல்வதில்லை. தானம், யக்ஞம், தவம், செயல் இவை உலகின் வாழும் வழிகள். தர்மத்திற்கு ஒரு பங்கு, தன் புகழை வளர்க்க ஒரு பங்கு, செல்வம் சேர்க்க ஒரு பங்கு, காமத்தின் செலவு ஒரு பங்கு, தன் மக்களுக்கு ஒரு பங்கு என்று ஐந்தாக பிரித்து செலவழிக்க வேண்டும். அதுதான் இந்த உலகிலும், பர லோகத்திலும் சுகம் தரும்.
அசுரோத்தமா! இன்னும் கேள். இது போன்ற சங்கடம் வரும் காலத்தில் நம் சாஸ்திரங்கள் என்ன அனுமதிக்கின்றன என்று சொல்கிறேன். ஓம் என்று சொல்லி விட்டால் அது சத்யமே. அதை மறுத்தால் அசத்யம் என்பது பொது விதி. மரத்தின் வேருக்கு நீர் விட்டால் அது புஷ்பங்களையும் பழங்களையும் தரும் என்பது உண்மை. ஆனால் அந்த மரமே சாய்ந்து விட்டால் நீ வேரில் விடுவது என்னாகும்? மரம் உயிரின்றி பட்டுப் போன பின் வேரில் ஜலம் விடுவது எப்படி பலன் இல்லையோ, அதே போல,
நீ அசத்யம் என்று நினைப்பதும் – உன்னையே அழித்து விடும். சந்தேகமேயில்லை. அதனால் இதற்கு ஒரு விதி விலக்கும் தரப் பட்டிருக்கிறது. கவனம் இன்றி ஓம் என்று சொன்னாலோ, பெண்ணை மகிழ்விக்க, வதூ வரர்களின் தகுதியை உயர்வாக சொல்வதில், ப்ராண சங்கடத்தில், தொழில் முறையில் தன் விருத்தியை-ஜீவனோபாயமாக உள்ள செயலை காத்துக் கொள்ள, பசுக்களை, அந்தணர்களை காப்பாற்ற, அநியாயமாக ஏதோ ஒரு உயிர் வதைக்கப் படுகிறது, அது ஹிம்சை என்று தெரிந்தால் அதை தடுக்க சத்யம் என்பது அந்த சமயத்திற்கேற்ப பொருள் மாறும். தன்னைக் காத்துக் கொள்ள அசத்யமும் சத்யமே.
( இது வரை மஹா புராணமான ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த எட்டாவது அத்தியாயத்தில் வாமன ப்ராதுர்பாவம் என்ற பத்தொன்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம்- ஸ்லோகங்கள்-43)
அத்யாயம்-20
ஸ்ரீ சுகர் சொன்னார்: குல ஆசாரியன் இவ்வாறு சொல்லவும், பலி சக்ரவர்த்தி சற்று யோசித்து நிதானமாக குரு சொன்னதை மனதில் வாங்கிக் கொண்டு பதில் சொன்னான்.
பகவான் சொன்னது சரியே. குடும்பஸ்தர்களுக்கு இந்த தர்மமும், விதி விலக்கும் தேவையே. இதனால் அர்த்தம், காமம், புகழ், வ்ருத்தி-தொழில் இவைகள் பாதிக்கப் படாமல் இருக்கும். ஆனால் நான் செல்வத்தின் ஆசையால் இந்த அந்தண சிறுவனுக்கு தர மறுப்பது சரியா? ப்ரஹ்லாதன் மகன் தருவதாகச் சொல்லி பின் தரவில்லை என்பது அபகீர்த்தி இல்லையா? கிதவ- வேண்டும் என்றே அசத்யமாக நடப்பவன், போல. நீங்கள் தற்சமயம் சொன்னதற்கு மேல் வேறு தர்மம் இல்லை என அறிவேன். எதானாலும் விளைவை நான் பொறுத்துக் கொள்கிறேன். வாக்கு மீறினான் என்ற அதர்மத்தை விட என் கஷ்டம் பெரிதல்ல. எனக்கு பயம் இல்லை. நரகம் வாய்க்கும் என்றோ, செல்வம் முழுவதும் போகும் என்றோ, இதுவரை அனுபவித்த சுகங்கள் இனி இராது என்றோ, இந்த பதவி போகும் என்றோ, இந்த சிறுவனுக்கு கொடுப்பதால் என் ம்ருத்யு நிச்சயம் என்றோ நான் வருந்தவில்லை. உலகில் செல்வத்தை சேர்த்து வைத்த செல்வம் உடன் வருவதுமில்லை அதை இப்பொழுதே இந்த அந்தண சிறுவன் பொருட்டு தானம் செய்தால் அவனாவது மகிழ்வான். பல சாதுக்கள் மற்றவர்கள் பொருட்டு உயிரையே தந்திருக்கிறார்கள். ததீசி, சிபி போன்றவர்கள், இதில் நிலத்தைக் கொடுப்பதால் என்ன நஷ்டம். பகவன்! எனக்கு முன் பிறந்தவர்களும் யுத்தபூமியில் புற முதுகு காட்டாதவர்கள். பூமியை வெகு காலம் அனுபவித்தார்கள். காலம் அவர்கள் பூமியை, போகங்களை அழித்தது. ஆனால் அவர்களடைந்த புகழை எதுவும் செய்யவில்லை. அந்தணோத்தமரே! உலகில் உயிரை கூட விடுவார்கள், தனம் – செல்வத்தை விட தயங்குவார்கள். தகுதியான ஒரு யாசகனுக்கு வேண்டியதைத் தருபவர் குறைவு. எனவே அந்த கடினமான செயலை நான் செய்யப் போகிறேன். மனஸ்வி- நல்ல மனம். நல்ல மனமும், கருணையும் உள்ளவன், வேண்டுபவனுக்கு வேண்டியதை தருவதினால் தனக்கு நஷ்டம் என நினைப்பது இல்லை. உங்களைப் போன்ற ப்ரும்மவாதிகள் பற்றி கேட்பானேன். எனவே இந்த சிறுவனுக்கு அவன் கேட்டதைத் தருகிறேன்.
நீங்கள் வேத சாஸ்திரங்களை நன்கு அறிந்தவர்கள். யாக காரியங்களில் சதா ஈடுபட்டவர். வந்தவர் விஷ்ணுவாகவே இருக்கட்டும். அல்லது வேறு யாரோ என்றாலும் சரி. முனிவரே! அவர் விரும்பி கேட்ட நிலத்தை கொடுக்கிறேன். ஒருவேளை, நீங்கள் சொல்வது போல குற்றமற்ற என்னை அதர்மமாக கட்டினாலும், நான் அவனை பதிலுக்கு தாக்க மாட்டேன். பயந்தவன், ப்ரும்மசாரியாக தோற்றம் எடுத்துக் கொண்டு வந்தவன் எதிரியே ஆனாலும் இது தான் என் முடிவு. உத்தமஸ்லோகன் என்று பெயர் பெற்ற விஷ்ணு, இது போல வாமனனாக வந்து என்னை வீழ்த்த திட்டமிட்டால் அவர் புகழ் தான் அழியும். யாசித்து நான் தராவிட்டால், வா போருக்கு என்றாலும் என்னால் அவரை ஜயிக்கவா முடியும்? அதனால் தானம் செய்வதே மேல்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: தன் சிஷ்யன் சொல்வதில் நியாயம் இருப்பதை உணர்ந்தாலும் ஏனோ, சுக்ராசாரியர் கோபம் கொண்டார். பகவானின் சங்கல்பம் தான் அவரை அந்த உத்தம சிஷ்யனை சபிக்கத் தூண்டியிருக்க வேண்டும். சபித்தார். சத்யசந்தன், பெருந்தன்மை உடையவன் தனக்கு உண்மையாக இருந்த சிஷ்யன் என்ற யோசனைகள் இல்லாமல், ‘தன்னை பண்டிதனாக எண்ணிக்கொண்டு என்னை அலட்சியம் செய்கிறாயா? புத்தி இல்லாதவனே! என் சொல்லைக் கேட்காதவன், உன் செல்வங்கள் அழியும் நாள் வெகு தூரத்தில் இல்லை’ என்றார்.
அதைக் கேட்டும், சத்ய சந்தனான பலி சக்ரவர்த்தி கலங்கவில்லை. வாமனனாக வந்த சிறுவனுக்கு, முறைப்படி நீர் வார்த்து தானம் செய்ய தயாரானான். மனைவி விந்த்யாவலி அந்த சமயம் பொன் கலசத்தில் நீருடன் வந்து சேர்ந்தாள். அவள் நீர் வார்க்க, யஜமானன் தானே ஸ்ரீமத் பாதங்களை அலம்பி அந்த பாவனமான நீரை தலையில் தெளித்துக் கொண்டார். விஸ்வ பாவனமான ஜலம் அல்லவா?
பார்த்துக் கொண்டிருந்த தேவ கணங்கள், கந்தர்வ வித்யாதர கணங்கள், சித்த சாரணர்கள் அந்த நேர்மையான செயலை சிலாகித்து பூமாரி பொழிந்தனர். புகழ்ந்து பேசினர். மகிழ்ச்சியுடன் துந்துபிகளை முழங்கினர். ஆயிரக் கணக்கான கந்தர்வ கிம்புருஷர்கள் பாடினர். இவனுடையை பெருந்தன்மை தான் என்னே என்று, மிக கடினமான செயலை அனாயாசமாக செய்து விட்டான், வந்தவன் எதிரி என்று தெரிந்தும் தன் வாக்கை நிறைவேற்றி விட்டான் என்றனர். மூவுலகையும் தானமாக கொடுத்து விட்டான்.
உடனே அந்த வாமன ரூபம் வளர ஆரம்பித்தது. அத்புதமாக அனந்தனான ஸ்ரீ ஹரியின் முக்குணங்களால் ஆன விஸ்வரூபம். பூமி, வானம், திர்யங் ந்ரு தேவா: -குறுக்காகவும், நெடிலுமாக, தேவலோகம் உட்பட ப்ரம்மாண்டம்- ரிஷிகள் அங்கு வசித்தனர். அந்த விஸ்வரூப சரீரத்தை, பலி சக்ரவர்த்தியும், கூடியிருந்த ஆசார்ய, ருத்விக்குகள், சபையினர் அனைவருமாக பார்த்தனர். உலகம் முழுவதும், முக்குணங்களால் ஆனது, அந்த குணங்களுக்கு அதிபதியான தேவனிடம் கண்டனர். பஞ்ச பூதங்கள், இந்திரியங்கள் அதன் விவரங்களோடு உயிருடையதாக கண்டனர். பாதாளத்தில் வைத்த ஒரு பாதம், பூமி அதன் கணுக்கால் அளவே ஆனது. மலைகள் அந்த மகா உருவத்தின் முழங்கால் அளவே வந்தன. பறவைகள் பறக்கும் வானத்தில் இடுப்பு பாகம், துடைகளில் மாருத கணங்கள், இவற்றைக் கண்டனர். பெரும் உருவம் எடுத்த பகவானின் பீதாம்பரம் அதன் நிறத்தால் சந்த்யாவாக தெரிந்தது. குஹ்யம் என்ற பகுதியில் பிரஜாபதிகள், ஜகனம் எனும் பின் பாகத்தில் அவரைச் சார்ந்தவர்கள், நாபியில் வானம், வயிற்றில் ஏழு கடல்களும், மார்பில் நக்ஷத்திர கூட்டங்களை மாலையாக கண்டனர். ஹ்ருதயத்தில் தர்மம், முராரியின் ஸ்தனங்களில் ருதம் (சரியான உச்சரிப்புடன் வாக்கு), சத்யம் (உண்மை) என்பவர், மனதில் சந்திரன், மார்பில் லக்ஷ்மி தேவி கையில் அரவிந்த மலருடன், கழுத்தில் சாமம் முதலிய வேதங்கள். சமஸ்த ரேஃபான்- रेफान्- இது ஒரு இலக்கண சங்கேதம். ‘அ’ முதலான அனைத்து அக்ஷரங்களையும் குறிக்கும்.
புஜங்களில் இந்திரனை முன்னிட்ட அமரர்கள், காதுகளில் திசைகள். அண்டாண்டம் உச்சம்தலையில், கேசங்களில் மேகங்கள், நாசி துவாவரங்களில் ப்ராண வாயு, கண்களில் ஸூரியன், முகத்தில் அக்னி.
வாக்கில் சந்தஸ் எனும் வேத அங்கங்கள், நாக்கில் ஜலநிதியான சமுத்திரம். புருவங்களில் ப்ரவ்ருத்தி, நிவ்ருத்தி என்ற சாஸ்திரங்கள், இமைகளில் இரவு-பகல், பரம புருஷனின் நெற்றியில் மன்யு என்ற க்ரோதம். அதரங்களில் லோபம். தொடு உணர்வுக்கான தோலில் காமம், ரேதஸில் ஜலம், நகங்களில் சிலா: பாறைகள், புத்தியில் அஜன் என்ற ப்ரும்மா, தேவ கணங்கள் ரிஷிகள் இவர்களை தன் ப்ராணனில், இந்திரியங்கள், மற்றும் உடலில் சராசராத்மகத்தில் உள்ள பிறவிகள், அசையும் அசையா பொருட்கள் அனைத்தும், ஒன்றுக் கொன்று வித்தியாசமானவைகளும் இருக்கக் கண்டனர்.
உலகத்தையே வியாபித்து நின்ற அந்த விஸ்வரூபத்தைக் கண்டு அசுரர்கள் மலைத்தனர். ஆச்சர்யமும் துக்கமும் ஒன்று சேர அவர்களை ஆட்கொன்டன.
அந்த விஸ்வரூபத்தில் பகவானின் சுதர்சன சக்ரம் முதலிய ஆயுதங்கள் கண்கள் கூசும் அளவு பிரகாசமாக, சார்ங்கம் என்ற தனுஷ்(வில்) மேக நாதம் போல, ஜலத்தில் தோன்றிய சங்கம் கொட்டும் மழை போன்ற ஓசையுடன், வேகமாக சுழலும் கௌமோதகீ என்ற கதாயுதம், நந்தக என்றும் வித்யாதர என்றும் சொல்லப் படும் வாள், அதன் உறையில் சந்திராகாரமான அடையாளங்கள், எடுக்க எடுக்க குறையாத அம்புகளையுடைய தூணீ- அம்புகளை வைக்கும் பை – இவைகள் வந்து சேர்ந்தன. சுனந்தன் தலைமையில் ஸ்ரீ ஹரியின் பார்ஷதர்கள் அணுக்கத் தொண்டர்கள், அவர்களுடன் லோக பாலர்கள், அவரருகில் தங்கள் ஸ்தானங்களில் நின்று கொண்டனர். ராஜன்! அந்த சமயம் பகவான் கிரீடம் பள பளக்க, தேன் சிந்தும் மலர்களால் ஆன மாலை ஊசலாட, கௌஸ்துப, ஸ்ரீவத்ஸ, வனமாலை இவைகளுடன் தென்பட்டார். ஒரு காலால் பலியின் பூமியை ஆக்ரமித்தார் -அளந்தார். ஆகாயத்தை சரீரத்தால், திசைகளை புஜங்களால்.
இரண்டாவது அடியால் தேவலோகத்தை அளந்தார். மூன்றாவது அடிக்கு அங்கு இடம் தேடித் தேடி மேலும் மேலும் நீண்ட அடியை மஹர் லோகம், தபஸ்விகளின் இடம், சத்ய லோகம் வரை வரை நீட்டினார்.
(இது வரை மஹா புராணமான ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த எட்டாவது ஸ்கந்த்தின் விஸ்வரூப தரிசனம் என்ற இருபதாவது அத்யாயத்தின் தமிழாக்கம்- ஸ்லோகங்கள் 34)
அத்யாயம்-21
ஸ்ரீ சுகர் சொன்னார்: சத்ய லோகத்தில், அப்ஜபவன்- தாமரைப் பூவில் உதித்தவன், ப்ரும்மா , திடுமென ஒரு பாதமும் அதன் நகங்களின் ஒளி சந்திரனின் ஒளி போல இருக்க, தன் உலகத்தின் பிரகாசமே அதன் முன் குறைவதைக் கண்டு, நடப்பதை அறிய ஆவலுடன் வெளி வந்தார். அதே போல மற்றவர்களும் அச்சர்யத்துடன், மரீசி, மற்றும் பல ரிஷிகள் நீண்ட நாட்களாக விரதங்களை அனுஷ்டித்த சனந்தன் முதலியவர்கள் நர தேவ, யோகிகள், அனைவரும் பகவானின் பாதத்தை போற்றித் துதித்தனர்.
அவர்கள் வேதங்கள் உபவேதங்கள் – இவைகளைக் கற்றறிந்தவர்கள், நியமங்களை அனுஷ்டிப்பவர்கள், யம நியம என்ற யோக சாதனைகள் செய்தவர்கள், தர்க்க, இதிஹாஸ, புராண சம்ஹிதைகளை அறிந்தவர்கள், சிலர், யோகம் என்ற காற்று வீசி பிரகாசமாக்கிய ஞானம் என்ற அக்னியின் பலத்தால் வினைப் பயன்களை முற்றாகத் தாண்டியவர்கள், அனைவரும், அகர்மகன்- ப்ரும்மாவிடம் வந்து சேர்ந்தனர். ப்ரும்மா, தன் கமண்டலு ஜலத்தால் சத்ய லோகத்தில் தென்பட்ட பகவானின் பாதத்தை மரியாதையுடன் அலம்பினார். பவித்திரமான அந்த ஜலம் சராசரங்களிலும் விழுந்து அங்குள்ளோர்களை பவித்ரமாக்கியதோடு, பகவானின் கீர்த்தியையும் எடுத்துச் சொல்வது போல ஆயிற்று.. புஷ்பங்கள், திவ்ய கந்தங்களால் பூஜித்து, தூப தீபங்கள், காட்டி, பொரி, அக்ஷதை,பழங்கள், நிவேதனம் செய்து, துதிகளால் பாடியும், ஜய கோஷம் செய்தும் அவருடைய வீர்யத்தைச் சொல்லி, நடனமும், வாத்யங்களும் பாடல்களுமாக சங்க துந்துபி கோஷங்களொடு, கரடி ராஜனான ஜாம்பவான் பேரியை முழக்கிக் கொண்டு, திசைகள் தோறும் வேகமாகச் சென்று விவரம் சொன்னார். மஹோத்சவமாக கொண்டாடினர்.
அசுரர்கள் வெகுண்டனர். மூவடி என்று சொல்லி, பூமி முழுவதையும் சுருட்டிக் கொண்டு விட்டாதாக புலம்பினர். தங்கள் அரசனை நம்ப வைத்து ஏமாற்றிய விஷ்ணுவை திட்டினர். ப்ரும்ம பந்து- இது ஒரு வசைச் சொல். மாயாவி, அந்தண வேஷத்தில் ஒளிந்து கொண்டு வந்து, மனதில் கல்மஷத்தோடு, கெட்ட எண்ணத்துடன் , தேவர்களுக்கு சாதகமாக செய்து விட்டான் என்றனர். இந்த யாசகன் வந்து கை நீட்டி வாங்கிக் கொண்டு நமக்கு நாசத்தை செய்திருக்கிறான். குருவிடம் பயிலும் மாணவனாக தன்னைக் காட்டிக் கொண்டானே. நம் அரசன் எந்த நிலையிலும் சத்யமே பேசுபவன், தயாளு. அதுவும், யாக தீக்ஷையில் இருந்த சமயம் ப்ராஹ்மணனான சிறுவனிடம் தருவதாகச் சொன்னதை மறுத்துச் சொல்லவில்லை. அதனால் இவனை வதம் செய்வோம். நம் அரசனைக் காப்போம் என்று ஆயுதங்களை எடுத்துக் கொண்டு வந்தனர். பெரும் கோபத்துடன், ஸூலம்,பட்டிசம் என்ற பயங்கரமான ஆயுதங்களுடன் தாக்க வந்தனர். விஷ்ணு பக்கத்தைச் சேர்ந்தவர்கள் பதிலுக்கு எதிர்த்து வந்தனர், அவர்கள் பலம் அதிகம், வீணாக போரிட வேண்டாம் என்று பலி சக்ரவர்த்தி தன் பக்கத்து வீரர்களை சமாதானப் படுத்தினார். சுக்ராசார்யருடைய சாபத்தை நினைத்து சர்வ நாசம் ஆவதை தடுக்கும் பொருட்டு, ஒவ்வொருவராக பெயரிட்டு அழைத்து, யுத்தம் வேண்டாம் திரும்பி வாருங்கள் என்று அழைத்தான். ஹே விப்ரசித்தோ!, ஹே ராஹோ! நாம் யுத்தம் செய்ய ஏற்ற நேரம் அதுவல்ல. திரும்பி வாருங்கள், என்றான். இந்த அரசன் நமக்கு ஐஸ்வர்யம் கிடைக்கவும், பதவிகள் கிடைக்கச் செய்து, தேவர்களை ஜயித்து நமக்கு நன்மையைச் செய்தான். இப்பொழுது காலம் நமக்கு சாதகமாக இல்லை. பலியின் மந்திரிகளும், கடினமான மந்திரங்கள், ஔஷதிகள், சாம முதலான உபாயங்களால் இந்து நமக்கு நல்ல காலமல்ல என்று அவர்களுக்கு தெளிவாக புரிய வைத்தனர். நாம் திரும்பவும் இவர்களை வெற்றி கொள்வோம். தைவ பலம் நமக்கும் கிடைக்கும். அதனால் காத்திருங்கள். நமக்கு நல்ல காலம் வரும் வரை பொறுத்திருங்கள் என்றார். வீணாக அணுக்கத் தொண்டர்களிடம் அடிபட வேண்டாம் என்று சொன்னதன் பேரில், அவர்களும் பாதாள லோகம் சென்று விட்டனர். விராட் ரூபத்தில் இருந்த பகவான் அனுமதியுடன் கருடன் வந்து பலி சக்ரவர்த்தியை வருண பாசத்தால் கட்டினான். அன்றைய தினம் யாகத்தை முடித்து, சோமபானம் எனும் செயலை செய்து நிறைவு செய்திருக்க வேண்டிய நாள். திசைகள் ஜனங்களின் ஹா ஹா சப்தத்தால் நிறைந்தது.
பலி சக்ரவர்த்தியைப் பார்த்து, பகவான் சொன்னார், அரசனே, நீ கொடுத்த மூவடியில், இரண்டு அடி பூமியையும் வானத்தையும் அளக்க போதுமாக இருந்தது. மூன்றாவது அடியை எங்கே வைப்பது என்றார்.
ஸுரியன் உலகை தபிக்கும் வரையிலும், சந்திரன் தன் நக்ஷத்திர கூட்டங்களோடு சஞ்சரிக்கும் வரையிலும், மேகங்கள் மழை பொழியும் வரையிலும் இந்த பூமி உன்னுடையதே. அதை நான் இரண்டு கால்களால் அளந்து எடுத்துக் கொண்டேன். மூன்றாவது அடி வைக்க இடம் தரா விட்டால் உனக்கு சத்யத்தை மீறியவன் என்பதால் ஸ்வர்க வாசம் கிடைக்காது. நரகத்தில் உழலுவாய், என்றார்.
அத்யாயம்-22
ஸ்ரீ சுகர் சொன்னார்: பகவானே இவ்வாறு சொன்னதைக் கேட்டு பலி சக்ரவர்த்தி அனைத்தையும் இழந்த நிலையிலும் மனம் தளராமல் தெளிவான சொற்களால் பதில் சொன்னான்.
உத்தம ஸ்லோகன் என்று உங்களைச் சொல்வார்கள். தேவர்களின் தலைவனே, . வாக்குத் தவறுவேன் என்றா நினைத்தீர்கள். என் சொல் தவறாது. மூன்றாவது அடியை இதோ என் தலையில் வையுங்கள் – நான் நரகம் என்று பயப்படவில்லை. பதவி போனதற்காக வருந்தவில்லை. இதோ இப்படி கட்டிப் போட்டதற்காக துக்கமும் இல்லை. செல்வம் பறி போனது பெரிதில்லை. உங்களிடம் வாக்கு தவற மாட்டேன். என்னை தரக் குறைவாக பேசி என்னைக் கோபம் கொள்ளச் செய்ய நினைத்திருந்தால் அது நடக்காது.
மனிதர்களுக்கு தகுதி வாய்ந்த பெரியவர்களிடம் தண்டமும் ஸ்லாக்யமே. என்னை தாய் தந்தையோ, சகோதரனோ, நண்பர்களோ இதுவரை ஆனையிட்டு எதுவும் சொன்னதிலை. நீ எப்பொழுதும் அசுரர்களுக்கு பாரபக்ஷமாக இருப்பவன் போல் வெளியில் தெரிந்தாலும் அவர்களுக்கும் நீயே பரம குரு. இதோ என்னை தண்டிப்பதே எனக்கு பரம அனுக்ரஹம் என்று எடுத்துக் கொள்கிறேன். இதில் எனக்கு தலை குனிவும் இல்லை, துக்கமும் இல்லை. தாங்களே குருவாக இருப்பதால் அது சரியே. அது கூட என் பாட்டனார் பக்தனான ப்ரஹ்லாதனின் பேரன் என்பதால் செய்த அனுக்ரஹமாகவே இருக்கலாம். வைரம்- விரோதம் என்ற முறையிலேயே, அசுரர்களை தண்டித்து பின் அணைத்து நல் கதி அடைய செய்வதே உங்கள் நோக்கம். மதாந்தமாக வழி தவறிச் செல்பவர்களை வழி காட்டி திருப்ப இது ஒரு ஆயுதம். எங்கள் முன்னோர்களுக்கும், விரோதம் என்ற அணுகு முறையே அவர்களுக்கு நல்ல கதியை அளித்திருக்கிறது. ஊகித்து அறிய முடியாத அளவு பராக்ரமும் செய் திறனும் உடையவர் நீங்கள். தற்சமயம் என்னை வருண பாசத்தால் கட்டியதற்காக எனக்கு லஜ்ஜையும் இல்லை, வருத்தமும் இல்லை. உங்களை எதிர்த்த என் குல மூத்தவர் ஹிரண்யகசிபு அடி பட்டார். அவருக்கும் மோக்ஷம். பக்தியுடன் அவர் மகன் ப்ரஹ்லாதன் அடி பணிந்தார்.
இந்த உலகில் வாழ் நாளில் புத்திரர்கள் பந்துக்கள் வளைய வருவதும், அதே சமயம் மரணத்திற்குப் பின் மறந்து போவதும், சகஜம். ஒரு விதத்தில் இவர்களும் திருடர்களே, தந்தையின் செல்வத்தையும், அவர் உடல் உழைப்பையும் கொண்டு வளர்ந்தவர்கள் தானே. கூடவே இருந்து உலக வாழ்கைக்குத் துணையாக இருக்கும் மனைவியால் மட்டும் ஆத்மாவுக்கு என்ன பலன்? சிரமப் பட்டு சேர்த்த வீடு வாசல் இவைகளும் ஆயுள் முடிந்த பின் என்ன பயன்? இவ்வாறு நினைத்து என் பாட்டனார் உங்கள் நினைவாகவே, தியானம் செய்தார், சரணடைந்தார். அவருடைய பேரன் என்பதாலேயே, அவருடைய பஜனை ஆத்ம சமர்ப்பணம் இவைகளின் பிரபாவத்தால் இன்று எனக்கு தங்கள் அருகில் இருக்கவும் அடி பணியவும் கிடைத்தது. என் குலத்துக்கு விரோதியாக வெளியில் தெரிந்தாலும், உண்மையில் அசுரர்களின் ஸ்தூல ஸூக்ஷ்ம தேகங்களுக்குதான் எதிரி. மோக்ஷம் தரவே ஏதோ காரணம் சொல்லி அருகில் வந்து தன் பக்கம் இழுத்துக் கொள்வது உங்கள் வழி. என்னிடமும் பலவந்தமாக என் செல்வத்தை நீக்கி, எந்த செல்வத்தால் மனம் தடுமாறி, ம்ருத்யு இதோ அருகில் தான், இந்த வாழ் நாள் நிரந்தரமல்ல என்றே நினைக்க விடாமல் புத்தியை மழுங்கச் செய்கிறதோ, அந்த செல்வம் என்னை விட்டு நீங்கியது.
அந்த சமயம், ஹே குரு ஸ்ரேஷ்ட! (பரீக்ஷித் ராஜனே!) பூர்ண சந்திரன் உதித்தது போல பிரகாசமாக பகவானின் பிரியமான பக்தன் ப்ரஹ்லாதன் அங்கு வந்தார். லக்ஷ்மீ கடாக்ஷமே இரு கண்களாக இருப்பது போல நீண்ட கண்களும், பீதாம்பரமும், ஸ்யாமள வர்ணமும், நீண்ட ஆஜானுபாஹுவான புஜங்களும், கட்டான உடலமைப்பும், கொண்ட தன் பாட்டனாரைப் பார்த்து பலி சக்ரவர்த்தி கூர்ந்து பார்த்தான். அடுத்த இந்திர பதவியை வகிக்க தகுதி பெற்ற பலி சக்ரவர்த்தி. தலை வணங்கினான்.
பகவானைப் பார்த்து ப்ரஹ்லாதன் : தாங்களே கொடுத்த உயர்ந்ததான இந்திர பதவி. தாங்களே அதை இன்று பறித்துக் கொள்கிறீர்கள். அது சோபனம்- அழகு தான். இவனுக்கு நீங்கள் செய்ததும் அனுக்ரஹம் என்றே எடுத்துக் கொள்கிறேன். தன் செல்வம், தன் பெருமை என்ற மோஹம் அவன் மனதிலிருந்து அகற்றப் பட்டு விட்டது. இந்த செல்வ மோஹம் வித்வான்களையும் விடுவதில்லை. உங்கள் செயலை யார் தான் அனுமானிக்க முடியும். அதனால் நஸ்காரம். ஜகதீஸ்வரனான நாரயணனுக்கு நமஸ்காரம். அகில லோக சாக்ஷியாக இருப்பவனுக்கு நமஸ்காரம்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ராஜன்! ப்ரஹ்லாதன் கை கூப்பி அஞ்சலி செய்தபடி சொன்னதைக் கவனமாகக் கேட்ட ஹிரண்யகர்பனான அனைவரும் கேட்டனர். தன் கணவன் கட்டப் பட்டு கிடப்பதைப் பார்த்து விந்த்யாவலி, அவன் மனைவி பயந்து நடுங்கிக் கொண்டிருந்தாள். குனிந்த தலை நிமிராமல், கை கூப்பியபடி பகவானிடம் சொன்னாள்:
விந்த்யாவலி: பகவானே, இது உங்களுக்கு விளையாட்டு. மூவுகையும் படைத்து உங்கள் தலைமையில் சிலரை ஆங்காங்கு பதவியில் அமர்த்தியுள்ளீர்கள். நீங்கள் நேரில் வந்து கேட்டிருந்தால் தந்திருக்க மாட்டாரா? உன்னுடையது, நீயே எடுத்துக் கொள் என்று சொல்லியிருப்பார். மூன்று அடி என்று கேட்டு, அவரை அனாவசியமாக பேச வைத்து விட்டீர்கள். மற்றொரு இடத்தில் போய் தேஹி என்று நிற்கக் கூடாது என்று சொன்னது அதிகம் என்று கட்டுப் பட்டாரா? உலகம் இயங்க சிலரை நீங்களே தலைவர்களாக நியமித்து விட்டு, அவர்கள் தாங்கள் தன்னிச்சைபடி செய்யத் துணிந்தால், செயல்- கர்த்ரு வாதம் – என்பது என்ன? கொடுத்த கடமையை சரிவரச் செய் என்பது தானே கர்த்ரு வாதம்.
ப்ரும்மா இடை மறித்தார். பூத பாவன, பூதேச, இவனை விடுவியுங்கள். இவனிடமிருந்த அனைத்தையும் பறித்தாயிற்று. இவனுக்கு இந்த தண்டனை நியாயமல்ல. அனைத்தையும் தானமாக கொடுத்தான். பூ லோகங்கள் அவன் சுயமாக சம்பாதித்தது. அனைத்தையும் நிவேதனமாக கொடுத்தான், சற்றும் மனதில் கல்மஷம் இல்லாமல் தானே கொடுத்தான். எந்த பாதங்களில் மூடன், நீர் விட்டு அலம்பி, தூர்வாங்குர – அருகம் புல் துளிர்களைக் கொண்டு அர்ச்சித்து, மனைவியும் உடன் இருக்க, தானம் செய்தானோ, அந்த பாதங்களின் குணமே அவனுக்கு உத்தமமான கதியை அளித்திருக்க வேண்டும். மூவுலகையும் சற்றும் யோசியாமல் தங்களுக்கு அளித்தவன், எப்படி துன்பப்படலாம்?
பகவான் சொன்னார்: ப்ரும்மன்! நான் ஒருவரை தேர்ந்தெடுத்து அனுக்ரஹம் செய்ய நினைத்தால், முதலில் தன் ஐஸ்வர்யங்களை எண்ணி அவன் மனதில் உள்ள அகங்காரத்தை நீக்குவேன். இவன் குரு சபித்த பொழுது கூட தான் கொடுத்த வாக்கை மீற மாட்டேன் என்று உறுதியாக இருந்தான். நான் என்னை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் தர்ம உபதேசம் செய்தேன். அதன் பின்னும் தன் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. அதனால் இவனுக்கு அமரர்களுக்கு கூட கிடைக்க முடியாத ஸ்தானம் அளிக்கப் போகிறேன். இந்த யுக முடிவில் இவன் இந்திரனாவான். அதுவரை இவன் சுதலத்தில், விஸ்வகர்மாவால் நிர்மாணிக்கப்பட்ட நகரில், அங்கு ஆதி வியாதிகள் இருக்காது. உடல் வருத்தமோ, தந்திரங்களோ-(சோம்பலோ) , அவமானமோ, இராது. என் பராமரிப்பில் இருப்பதால், அங்குள்ளோர் நிரந்தரமாக உபத்ரவம் இன்றி பயமின்றி இருப்பர்.
தானே, பலி சக்ரவர்த்தியைப் பார்த்து, இந்த்ரசேன, மஹாராஜா, எழுந்திரு. உன் உறவினர்கள் பந்து ஜனங்களோடு, சுதலம் செல்வாய். அந்த இடம் ஸ்வர்க வாசிகள் கூட விரும்பும் இடம் . யாரும் இடையூறாக இருக்க மாட்டார்கள். உன் சாஸனத்தை எவரேனும் மீறினால் என் சக்கரத்தால் தண்டிப்பேன். எப்பொழுதும் என் கவனத்தில் இருப்பாய், உன்னை ரக்ஷிப்பது என் பொறுப்பு. எப்பொழுதும் நான் அருகில் இருப்பதாக உணர்வாய். அசுர குலத்தில் பிறந்தவன் அதன் பாதிப்பு இருந்தாலும், என் அருகாமையும், என் ஈடுபாடும் அந்த குல குணத்திலிருந்து உன்னை விடுவிக்கும்.
(இது வரை மஹா புராணமான ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த எட்டாவது ஸ்கந்தத்தின் விஸ்வரூப தரிசனம் என்ற இருபத்து ஒன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம்- ஸ்லோகங்கள் 36)
அத்யாயம்-23
பகவான் தானே இவ்வாறு சொல்லவும், பலிசக்ரவர்த்தி, நாத் தழ தழக்க, உலகில் சாதுக்கள் வணங்கும் மஹானுபாவன், கை கூப்பியவாறு பதிலுரைத்தான்.
பலி சொன்னான்: லோக பாலர்கள், தேவர்கள், சத்வ ப்ரதானமன ரிஷிகள் இவர்களுக்கு கூட கிடைக்காத பெருமை அசுர குலத்தில் பிறந்த எனக்கு கிடைத்தது, என் பாக்கியம். இவ்வாறு சொல்லி ஸ்ரீ ஹரியிடம் விடை பெற்று ப்ரும்மாவை வணங்கி விட்டு சுதலம் சென்றான் பலி சக்ரவர்த்தி. இவ்வாறு அதிதியின் வேண்டுதலுக்கு இணங்க தேவர்களிடம் த்ரிவிஷ்டபம் என்ற தேவலோகத்தை கொடுத்தார். ப்ரஹ்லாதன் தன் பேரனை விடுவித்ததற்காக தன் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார். என்னுடைய வம்சத்தில் வந்தவன் பலி, உண்மையில் பகவானால் ஆட்கொள்ளப் பட்டான். இந்த ப்ரசாதம் விரிஞ்சி என்ற ப்ரும்மாவுக்கோ, ஸ்ரீ தேவிக்கோ, சிவ பெருமானுக்கோ கூட கிடைத்தில்லை, மற்றவர்கள் பற்றி என்ன சொல்ல. அசுரர்களான எங்களுக்கும் நீயே தான் ரக்ஷகன்.
அப்படி உலகம் முழுவதும் வணங்கும் பாதத்தை என் குலத்து பலியின் தலையில் வைத்தாய். (பாத தீக்ஷை) . ப்ரும்மா முதலானோர் சரணம் என்று வந்தால் அவர்களுக்கு விபூதி – ஐஸ்வர்யங்களை, வேண்டியதை வர்ஷிப்பாய் என்று கேட்டிருக்கிறோம். பிறவியால் நாங்கள் அவர்களை விட தாழ்ந்தவர்கள் என்று உலகில் சொல்வார்கள். உன் தாக்ஷிண்யம் நிறைந்த கடாக்ஷம் எங்களுக்கு உலகில் ஒரு அந்தஸ்தை கிடைக்கச் செய்துள்ளது. உன் மாயையால் தோன்றிய உலகம், கல்பதரு போல வணங்கியவர்கள் யாரானாலும் உன்னருள் பெறுவது உறுதி எனும் பொழுதே, ஒரு ஒவ்வாமையும் உள்ளது. கல்பதரு கேட்டால் தான் கொடுக்கும் நீயோ பக்த ப்ரியன், கேட்காமலே நன்மையை செய்வாய்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: மகனே! ப்ரஹ்லாதா! பத்ரம் தே, உனக்கு நன்மை உண்டாகட்டும். நீயும் சுதலாதலம் போ. உன் பௌத்ரர்கள், மற்றும் பந்து ஜனங்களுடன் சந்தோஷமாக இரு. நித்யம் கதா பாணியாக நான் காவல் இருப்பதை உணர்ந்து அறிவாய். என் தரிசனம் கிட்டியதாலேயே, உன் வினைப் பயன்கள் அடி பட்டுப் போய் விட்டன.
ஸ்ரீ சுகர் சொன்னார்: பகவானின் கட்டளையை ஏற்று நல்லறிவு மிக்க ப்ரஹ்லாதன் பலி சக்ரவர்த்தியுடன் கூட சரி என்று சொல்லி தலை வணங்கி விடை பெற்றார். ஆதி புருஷனை, அசுர குலத் தலைவன், வணங்கி விடை பெற்று சுதலம் சென்றான்.
சுக்ராசாரியார் யாக சாலையில் செய்வதறியாது வருத்தத்துடன் அமர்ந்திருந்தார். அவருடன் மற்ற ருத்விக்குகள் என்ற யாக செயலில் ஈடுபட்டிருந்த அந்தணர்களும் இருந்தனர். அவரை பார்த்து, பகவான் சொன்னார்: ப்ரும்மன்! ஆரம்பித்த இந்த யாகத்தை முடித்து வையுங்கள். யஜமானன் பலி இல்லையே என்று யோசிக்க வேண்டாம். உங்கள் சிஷ்யன் செயலில் குறை இருந்தால் அதை நிவர்த்தி செய்ய உங்களுக்கு அதிகாரம் உள்ளது. ப்ரும்ம த்ருஷ்டம்- ப்ராம்மணர்களால் இது வரை உடனிருந்து செய்த யாகம் பாதியில் நிறுத்த வேண்டாம். கர்மா- யாக கர்மாவுக்கு பலன் தருபவன் யக்ஞேசன் என்ற ஈஸ்வரனே. யக்ஞமயன் புருஷன்.
சுக்ராசாரியர் சொன்னார்: யாக காரியத்தில் குறைபாடு எங்கிருந்து வந்தது? அவனுடைய செயலுக்கு பலனளிப்பவரே தாங்கள் தான். உங்களை அவன் மனப் பூர்வமாக, உள்ளன்புடன் பூஜித்தான். வந்தது யார் என்று தெரியாத நிலையிலும் யக்ஞேசன், யக்ஞபுருஷன் உங்களை மனதார பூஜித்தான். மந்திர, தந்திர, குறைகள், தேச காலத்தால் வரும் இடையூறுகள், நாம சங்கீர்த்தனத்தால் தீரும். இருந்தாலும், நீங்கள் சொல்வதால் செய்கிறேன். இதில் அனைவருக்கும் ஸ்ரேயஸ் என்பதோடு, பரம புருஷனான உங்கள் ஆணையை நிறைவேற்றினேன் என்பதும் எனக்கு திருப்தி.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஸ்ரீ ஹரியின் ஆணையை பாராட்டி சிலாகித்து, அவரே குறைவடைந்த யாகத்தை பூர்த்தி செய்தார். பலி ஆரம்பித்த யாகம், அறிவிற் சிறந்த அந்தணர்கள் உடனிருக்க செய்து முடித்தார்.
ராஜன்! இது தான் நடந்தது. பலியிடம் பூமியை யாசித்து வாங்கிக் கொண்டு, தன் உடன் பிறந்த மஹேந்திரனுக்கு அவன் இழந்த தேவ லோகத்தை மீட்டுக் கொடுத்தார். ப்ரஜாபதியின் பதி- ப்ரும்மா, தேவ ரிஷி பித்ரு, பூமியில் அரசர்கள், தக்ஷ, ப்ருகு, ஆங்கிர என்ற ரிஷிகள், குமாரனும் பவனும், கஸ்யப – அதிதி தம்பதிகளின் ப்ரீதியால், உலக நன்மைக்காக, உலக மக்கள், லோக பாலர்கள் அனைவருக்கும் நன்மை என்பதால் தானே வாமனனாக வந்த பகவானே தலைவர் என்று ஏற்றுக் கொண்டனர். அவரே, வேதங்களுக்கும், சர்வ வேதங்களின் தர்ம த்திற்கும், புகழும், செல்வமும், மங்களமும், விரதங்களின் பலனும், கல்ப முடிவில் சுவர்கம், அபவர்க என்ற அனைத்தையும் நிர்வஹிக்க, அவர் ஆணையின் கீழ், உபேந்திரனை நியமித்தார். உலகத்தில் உயிரினங்கள் அமைதியுடன் சம்மதித்தன. பகவான் தன் இருப்பிடம் சென்று ஸ்ரீ தேவியுடன் மிக்க மகிழ்ச்சியுடன் கவலையின்றி இருந்தார்.
யாகத்துக்கு வந்திருந்த மற்றவர்கள், ப்ரும்மா முதலானவர்கள் தங்கள் தங்கள் விமானங்களில் கிளம்பி விட்டனர். வெகு காலம் வரை பகவானின் மிகப் பெரிய செயல் வாமனனாக வந்து வளர்ந்து உலகளந்த அத்புத அனுபவத்தைப் பற்றி பேசி மகிழ்ந்தனர்.
குல நந்தனா! அரிய செயல். கேட்பவர்களுக்கும் குறை தீரும். அதிசயமான இந்த செயலால் பகவானிடம் ஜீவன்களுக்கு நம்பிக்கை அதிகரித்து, இயல்பாக தங்களுக்கிருந்த, தான், தன்னுடைய என்ற எண்ணங்கள் குறையும் என்று அங்கு இருந்த மந்திர தரிசிகளான ரிஷிகள் வாழ்த்தினர். பித்ருக்கள் காரியத்திலோ, தேவ காரியங்களின் நடுவிலோ இந்த சரித்திரத்தை கேட்பதும் நன்மை பயக்கும் என்றனர்.
(இது வரை மஹா புராணமான ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த எட்டாவது ஸ்கந்தத்தின் விஸ்வரூப தரிசனம் என்ற இருபத்து மூன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம்- ஸ்லோகங்கள் 31)
அத்யாயம்-24
அரசன் கேட்டான்: பகவன்! ஸ்ரீ ஹரியின் அத்புதமான செயல்களை மேலும் கேட்க விரும்புகிறேன். முதல் அவதாரமான மாய மத்ஸ்யன்- மீனாக பிறந்த கதையைச் சொல்லுங்கள். எதற்காக மீன் ரூபம் எடுத்துக் கொண்டார். தாமசமான ஜீவன் அல்லவா மீன்? ஏதோ பெரிய செயல் செய்தாக வேண்டும் என்பது போல ஈஸ்வரன் மீனாக பிறப்பானேன்? எவ்வளவு கேட்டாலும் உத்தம ஸ்லோகன் கதை சர்வ லோகத்துக்கும் சுகத்தைக் கொடுப்பது. அதனால் சொல்லுங்கள்.
ஸூதர் சொன்னார்: பாதராயணி- வியாசர் சம்மதித்து, அந்த சரித்திரத்தைச் சொல்லலானார். பசுக்கள், அந்தணர்கள் சாதுக்கள் மற்றும் வேதங்கள் இவைகளை நான் என்றும் காப்பாற்றுவேன், இவைகளுக்கு ஏதோ தீங்கு நேரிட்டால் நான் சரீரம் எடுத்து பூமியில் பிறப்பேன், தர்மத்தையும் செல்வத்தையும் காக்க வேண்டும் என்பதற்காக. அதற்காக அந்தந்த சமயத்தில் சரீரம் எப்படி தேவையோ அந்த ஜீவனின் சரீரம் மட்டுமே அவருடையது. வாயு சரீரத்தில் நுழைந்து வெளி வருவது போல, எதுவும் வாயுவில் ஒட்டுவதில்லை என்பது போலவே, பகவானும் பஞ்ச பூதங்களால் ஆன சரீரங்களில் அவதரித்திருக்கிறார். ஆனால் அந்த அவதாரத்தில் செயல் முடிந்தபின் திரும்ப வரும் சமயம் தன் இயல்பான ரூபத்திலேயே திரும்பி விடுகிறார். நிர்குணன்- குணங்களின் பாதிப்பு அவருக்கு கிடையாது என்பதால் அவதார சரீரத்தின் பாதிப்பு அவருக்கு வராது.
கால சக்ரம் ஒரு முறை சுழன்ற பின் ஒவ்வொரு கல்ப முடிவிலும் ப்ரளயம் என்பது நியதி. அந்த ப்ரளயம் ஒரு முறை ப்ரும்மா உறங்கிக் கொண்டிருந்த சமயம் வந்தது. மழையோ வேறு ஏதோ காரணமோ இன்றி பெரும் ப்ரளயம் வரும் என்பது பகவானே செய்த ஏற்பாடு. அந்த ப்ரளயத்தில் பூமி முதலான மூவுலகமும் சமுத்திரத்தில் மூழ்கி மறையும் என்பதால் அதை நைமித்திக ப்ரளயம் என்பர். தூங்கும் ப்ரும்மாவின் முகத்திலிருந்து வேதங்கள் நழுவி விழுந்தன. அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஹயக்ரீவன் என்ற அசுரன் தன் யோக பலத்தால் அவைகளை எடுத்துக் கொண்டு ஓடி விட்டான்.
ப்ரளய ஜலம் சூழ்ந்து இருந்த சமயம், நீரினுள் சுலபமாக சஞ்சரிக்க மீன் ரூபமே ஏற்றது, வேதங்களை ரக்ஷிக்க வேண்டிய ப்ரும்மா அவைகளைத் திரும்பப் பெற, பகவான் ப்ரளய ஜலத்தில் ஹயக்ரீவாசுரனை தேடினார்.
அங்கு ஒரு ராஜ ரிஷி சத்யவ்ரதன் என்பவன் நாராயண பக்தன், தவம் செய்து கொண்டிருந்தான். ஜலமே ஆகாரம்.அந்த மஹா கல்பத்தில், விவஸ்வானின் மகனாக ஸ்ரார்த்த தேவன் என்ற பெயருடன் ஸ்ரீ ஹரியினால் மனுவாக நியமிக்கப் பட்டவர்.
ஒரு சமயம் க்ருதமாலா- வைகை நதியில் ஜல தர்ப்பணம் செய்து கொண்டிருந்த சமயம், கையில் ஏந்திய ஜலத்தில், அஞ்சலிக்குள் ஒரு சிறு மீன் தோன்றியது. த்ரவிட ராஜா, அந்த மீனை கையின் ஜலத்தோடு நதி நீரில் விட்டார். அந்த குட்டி மீன் பேசியது. தீனமான குரலில், தீன வத்சல, என் தாயாதிகள் சமுத்திரத்தில் நிறைய இருக்கிறார்கள். இப்படி நீரில் என்னை அனாதரவாக விட்டால் அவர்களால் எனக்கு கெடுதல் வரும் என்று பயப்படுகிறேன். என்னை காப்பாற்று என்றது. அரசனுக்கு ஒரே ஆச்சர்யம், மீன் பேசுவதைக் கேட்டு அதனிடமே கேட்டான், உன்னை ஜலத்தை விட்டு வெளிக் கொணரவும் முடியாதே, என்ன செய்வேன்? என்று சொல்லியபடியே தன் கலச ஜலத்தில் திரும்ப எடுத்துக் கொண்டு தன் ஆசிரமம் சென்றான். ஓரிரவில் அது வளர்ந்து கமண்டலு ஜலத்துக்கு மேல் பெரிதாக ஆனது. திரும்பவும் அரசனிடம், அரசனே! இந்த கமண்டலு ஜலத்தில் என்னால் வசிக்க முடியாது. அரசனும் அதை மிகப் பெரிய பாத்திரத்தில் விட்டான். சிலர் கிணற்றில் விட்டதாகச் சொல்வர். முஹூர்த்த நேரத்தில் அது மூன்று முழம் வளர்ந்து விட்டது. அரசன் திரும்பவும் அதை எடுத்துக் கொண்டு போய் குளத்தில் விட்டான். அரசன் கண் முன்னே அந்த மீன் குளத்து அளவு வளர்ந்து விட்டது. அது போதவில்லை என அந்த மீன் சொன்னதால் அதை விட பெரிய குளம் அதையும் விட பெரிய குளம் என்று கொண்டு போய் விடவும் அது அதற்கும் மேலாக பெரிதாக காட்சியளிக்கவும் வேறு வழியின்றி சமுத்திர ஜலத்தில் கொண்டு விட்டான். அப்பொழுது அந்த மீன் அரசனிடம், வீரனே, என்னை இங்குள்ள மகரம் போன்ற நீர் வாழ் ஜந்துக்கள் விழுங்கி விடுமே என்று பரிதாபமாக சொன்னது. என்னை இங்கு விட்டு ப் போகாதே. சற்றே யோசித்த அரசன் கேட்டான்- யார் நீங்கள்? இப்படி மீன் வடிவத்தில் வந்து என்னை தடுமாறச் செய்கிறீர்கள்? நீர் வாழும் ஜந்து பேசிக் கேட்டதில்லை. அதற்கும் மேல் வளர்ந்து அந்த பெரிய குளத்தில், ஒரே நாளில் நூறு யோஜனை வளர்ந்த விதம் சாதாரணமில்லை. பகவன்! இது நிச்சயம் உங்கள் மாயை தான். சாக்ஷாத் ஹரி நாராயணனே. உலகை உய்விக்க இப்படி நீர் வாழ் அல்ப ஜந்துவாக வந்து அவதரித்து ஜீவன்களுக்கு அனுக்ரஹம் செய்யவே வந்து உள்ளதாக நினைக்கிறேன்.
புருஷ ச்ரேஷ்ட நமஸ்காரம். ஸ்திதி, உத்பத்தி, முடிவு என்று மூன்று விதமாக உங்கள் செயல் என்பதை அறிவேன். பக்தர்களுக்கு, எங்களைப் போல நீயே கதியென்று சரணடைந்தவர்களுக்கும் ஒரே கதி நீங்களே. அனைத்தும் உங்கள் லீலா அவதாரமே. பிறவியெடுத்த ஜீவனங்களுக்கு நன்மை செய்யவே, என்பது தெரிந்தாலும், இந்த ரூபத்தை ஏன் எடுத்துள்ளீர்கள் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறேன்.
அரவிந்தாக்ஷ! உங்களைத் தவிர மற்ற எவரிடமும் சரணாகதி அடைவதில் பலனில்லை. தேக, ஆத்ம அபிமானிகள் தான் மற்றவர்கள். எங்களுக்கு அத்புதமான இந்த ரூபத்தை காட்டிக் கொடுத்து விட்டீர்கள்..
ஸ்ரீ சுகர் சொன்னார்: இப்படி பேசும் அரசனைப் பார்த்து, ஜகத்பதி, சத்யவ்ரதனை எச்சரிப்பது போலவும், அரசனின் நன்மையை விரும்பியும், சத்யவ்ரத! இன்றிலிருந்து ஏழாவது நாள் பூ:,புவ:,சுவ: என்ற மூன்றுலகமும் சமுத்திரத்தில் மூழ்கப் போகிறது. அப்படி மூவுலகமும் ப்ரளய ஜலத்தில் மூழ்கும் சமயம் உன்னிடம் மிகப் பெரிய படகை ஒப்படைக்கிறேன். நீ என்ன செய்ய வேண்டும் என்றால், அனைத்து ஔஷதிகள்- தாவரங்கள், அவைகளின் பீஜங்கள், சப்த ரிஷிகளுடன், எல்லா விதமான பொருட்கள், உயிருள்ளவை அனைத்தும், எடுத்துக் கொண்டு இந்த பெரிய படகில், ரிஷிகளின் தேஜஸால் நீரில் விழாமல் காக்கப் படுவாய்- காற்று பலமாக வீசும், அதனால் படகு ஆட்டம் காணும். அந்த படகை மஹாஹி, பெரும் பாம்பான ஆதி சேஷனால் (அதை கயிறாக பயன் படுத்தி) என் கொம்பில் கட்டி விடு. ரிஷிகளுடன் உன்னையும், இந்த படகையும் இழுத்துக் கொண்டு ப்ரும்மாவின் இரவு முடிந்து விடியல் வரை செல்வேன். என் மகிமையைத் தான் ப்ரும்மா என்றேன். நீயும் ஏதோ என்று மலைக்காதே. உன்னை அனுக்ரஹிக்கவே, இந்த செயல். உன் கேள்விக்கு பதில் கிடைத்ததா? சொல்லிக் கொண்டே இருந்தாற் போல பகவான் அந்தர்தானமானார். சத்ய விரத அரசன் காலத்தை எதிர் நோக்கி இருந்தான். மத்ஸ்ய- மீன் ரூபத்தில் பகவானை தியானம் செய்த படி தவம் செய்யலானான். தர்பையை பரப்பி, மேற்கு நோக்கி அமர்ந்து, தவத்தில் ஈடுபட்டான்.
திடுமென சமுத்திரம் கொந்தளித்தது. பூமியை மூழ்கடித்துக் கொண்டு மேலும் மேலும் அட்டகாசமாக பெருகிறது. ஆகாயத்தில் மகா மேகங்கள் பரவி நின்று மழை பொழிவது போல இருந்தது. அதனிடையில் பெரிய படகு வருவதைப் பார்த்தான். பகவான் சொல்லிய படி, ஔஷதிகள்- தாவர வர்கங்கள், ஏழு ரிஷிகள் இவர்களுடன் படகில் ஏறினான். தாங்களும் பகவானை வேண்டியபடி இருந்த முனிவர்கள் அரசனிடமும் “இந்த சங்கடம் தீர பகவான் தான் துணை. நீயும் பகவானை தியானம் செய்து வேண்டிக் கொள் ‘என்றனர். அதேசமயம் அரசன், சமுத்திரத்தில் ஒற்றைக் கொம்புடன் ஒரு ப்ரும்மாண்டமான மீன் பொன்னிறமாக, பல யோஜனை தூரம் நீண்டதாக, எழுந்து வருவதைப் பார்த்தான். அது அருகில் வந்தவுடன் பகவான் சொன்னபடி, பெரிய பாம்பை-ஆதி சேஷனை, கயிறாகக் கொண்டு படகை அதனுடைய கொம்பில் இணைத்தான்.
ஆதி முதல் தொடர்ந்து வரும் அவித்யா- அறியாமை சூழ்ந்து உள்ள ஆத்மா இந்த சம்சாரத்தில் உழலும் ஜீவன்கள். அறியாமை காரணமாகவே சம்சாரத்தில் பலவித கஷ்ட நஷ்டங்களை அனுபவிப்பார்கள் என்று தெரிந்தே, பூ உலகில் பிறக்கச் செய்தாய். தங்கள் வினைப் பயனாக சுகத்தை தேத் தேடி அலைவார்கள், ஆனால், துக்கமே அடைவார்கள். அத்தகைய தோல்வி எங்களை பாதிக்க கூடாது. ஒரு சில சாதகர்கள் உன்னை பஜித்து உன்னை வந்தடைந்தார்கள், அதுவும் உன் சங்கல்பமே. எங்கள் குருவாக சாக்ஷாத் நீங்களே தான் இந்த முடிச்சை- பிறவி எனும் பந்தத்திலிருந்து எங்களை விடுவிக்க வேண்டும். அக்னியில் புடம் போட்டால் தான் தங்கம் ஒளி விடுகிறது. ப்ரகாசமாக ஆகிறது. மற்றபடி நீரால் கழுவினால் மட்டும் அதன்மேல் படிந்த அழுக்கு நீங்குவதில்லை. அது போல யாகங்கள், வைதிக கர்மாக்கள் செய்வதால் ஓரளவு மனம் தூய்மையாகிறது. ஆனாலும் முழுவதும் விடுதலைப் பெற உன் சேவை, உன்னை பஜித்தல் இவையே வழி
மற்ற தேவர்கள், குரு ஜனங்கள், தன்னைச் சார்ந்த நலம் விரும்பிகள், ஒன்று கூடி, மனித லோகத்தின் ஜீவன்களுக்கு உதவி செய்கிறார்கள் எனில் அது லக்ஷத்தில் ஒரு பாகம், உன் கருணையின் எதிரில் தூசு போல ஆகும். அவர்களும் ஈஸ்வரனான தேவன், உன்னையே பஜிக்கிறார்கள். அப்படிப் பட்ட உனக்கு நமஸ்காரம்.
கண்களில்லாதவனுக்கு அவனைப் போலவே மற்றொரு கண் இல்லாதவன் வழி காட்டுவது போல தன் மாணவனின் அறியாமையை போக்க திறமையில்லாத ஏதோ ஒரு அபுத்தி- புத்தியில்லாதவனை குருவாக ஏற்றுக் கொண்ட உன் பக்தனையும் நல்லகதியை அடையச் செய்வாய். எப்படியெனில், நீயே ஸூரியனைப் போல அனைத்தையும் காண்பவன், கண்டதை அலசி ஆராய்ந்து பார்க்கும் தன்மையுடையவன், உன்னையே அடைய வேண்டும் என்ற எண்ணம் உடைய பக்தர்களுக்கு நீயே குருவாகவே ஆகி வந்து விடுவாய்.
உலகில் உலகாயதமாக பெற வேண்டியவைகளைப் பெற வழி காட்டிகளாக சிலர் வருவார்கள். அவர்கள் செய்யும் உபதேமும் அதே போல உலக வாழ்க்கையை செவ்வனே செய்ய மட்டுமே பயன் படும். ஆனால் உன்னை நம்பினோர் பெறுவது, அழிவில்லாத ஞானம். அமோகமான உன் அருளை உடனடியாக தந்து விடும். சர்வ லோகத்துக்கும் நண்பன் நீயே. அனைவருக்கும் பிரியமான ஈஸ்வரன். உள்ளுறை ஆத்மா நீயே. குருவும் நீயே. ஞானத்தை அளிப்பவன். வேண்டியதை வேண்டியபடி தருபவன். சித்தியைத் தருபவன். இருந்தாலும், மந்த புத்தி உள்ள பூ உலகத்தார் உன்னை அறிவதில்லை. உன் மாயை- அவன் மனதில் நிறைந்து இருக்கும் ஆசைகள் மறைக்கின்றன. . தேவர்களில் சிறந்தவனான உன்னை சரணடைகிறோம். எங்கள் புத்தியில் இருக்கும் பொருளே பெரிது என்று இருக்கும் தவறான எண்ணத்தை அறுத்து எறி. இந்த பந்தனம் அவிழ்க்க முடியாத முடிச்சுகள் கொண்டது. உன் வார்த்தைகள் கூரிய கத்தியாக இருந்து இதிலிருந்து எங்களை விடுவிக்க வேண்டுகிறேன்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஆதி புருஷனான பகவான், மீன் உருவத்தில் சமுத்திர ஜலத்தின் அலைகளால் அலைக்கழிக்கப்பட்டு நகர்ந்தும் அருகில் வந்தும் பதில் சொன்னார். அந்த அரசனுக்கு, புராண சம்ஹிதம் என்ற திவ்யமான ஞான நூல். யோக க்ரியை பற்றிய விவரங்கள் அனைத்தும் அதில் உள்ளன. சத்ய வ்ரத அரசனுக்கு, அதை முழுவதுமாக, தன் ஹ்ருதயத்தில் இருந்த விதமே, உபதேசித்தார். அரசனும் மற்ற ரிஷிகளும் அதைக் கேட்டனர். ஆத்ம தத்வம் என்பதை ஒன்று விடாமல் முழுவதையும் கவனமாக கேட்டு தங்கள் உள்ளத்தில் இருத்திக் கொண்டனர். சனாதனமான ப்ரும்ம தத்வம் அது.
அதன் பின் ப்ரளய பயம் சற்று குறையவும், தூங்கிக் கொண்டிருந்த ப்ரும்மாவும் எழுந்து வந்தார். ஹயக்ரீவ அசுரனை வதைத்து, அவரிடம் வேதங்களை திருப்பிக் கொடுத்தார் ஸ்ரீ ஹரி.
சத்ய வ்ரதன் என்ற அந்த அரசன், ஞானம், அதற்கும் மேல் விக்ஞானம் என்று நன்கு அறிந்தவனாக ஆனான். ஸ்ரீ விஷ்ணுவின் ப்ரசாதத்தால், இந்த கல்பத்தில் வைவஸ்வத மனு ஆனான்.
ராஜரிஷியான சத்யவ்ரதன், சார்ங்க தன்வீ என்று புகழ் பெற்றவன் தன் மாயையால் தானே எடுத்துக் கொண்ட மத்ஸ்ய அவதாரம், இவைகளிடையே நடந்த உரையாடல்கள், இவைகளை கேட்டாலே மனம் தூய்மை அடைவார்கள்.
இதுவும் ஸ்ரீ ஹரியின் ஒரு அவதாரம். அவருடைய சங்கல்பம். அவரே இதைச் சொல்லி கீர்த்தனை செய்பவர்களைக் காப்பார்.
ப்ரளய பயோதி- ப்ரளய ஜலம், தூங்கிக் கொண்டிருந்த ப்ரும்மாவின் முகத்திலிருந்து வேதங்கள் நழுவ, அதை அபகரித்த தைத்யனிடம் இருந்து மீட்டு அவரிடம் திருப்பிக் கொடுத்த வரலாறு இது. சத்யவ்ரதன் ப்ரும்ம சத்யனிடம், கேட்டபடியே, அகில லோக காரண பூதனான பகவான் எடுத்துக் கொண்ட வளைந்த மீன் உருவத்தை வணங்குகிறேன்.
(இது வரை ஸ்ரீ வியாசர் அருளிய மஹா புராணமான ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த எட்டாவது ஸ்கந்தத்தின் மத்ஸ்யாவதார சரிதானுவர்ணனம் என்ற இருபத்து நான்காவது அத்யாயத்தின் தமிழாக்கம்- ஸ்லோகங்கள் 61)
||இத்துடன் எட்டாவது ஸ்கந்தம் நிறைவுறுகிறது. ||
||ஓம் தத்சத் ||
மூன்றாவது ஸ்கந்தம்- கபிலரின் உபதேசம்
அத்யாயம்–25
ஆத்ம ஞானம் என்பதை உலகுக்கு தெரிவிக்க தானே தன் மாயையால், கபிலராக பிறந்தார் என்பது தெரியும். அவருடைய உபதேசம் என்ன என்பதைச் சொல்லுங்கள், சூதரே என்று சௌனகர் வினவினார். சூதரும் தொடர்ந்தார்.
தந்தை வனம் சென்றதும், பிந்து சரஸ் என்ற அந்த இடத்தில் தாயுடன் கபிலர் இருந்தார். தத்வ மார்கத்தை பிரசாரம் செய்வதாகச் சொன்ன மகனிடம் தேவஹூதி கவலையுடன் சொன்னாள். ப்ரும்மாவின், பகவானே உன் மகனாக பிறப்பான் என்ற வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. நீ சாக்ஷாத் பகவானே என்று அறிவேன். தமோ குணத்தால் அறிவு என்ற கண் பார்வை மறைக்கப்பட்ட மனிதர்களுக்கு நீ சூரியன் போல ஒளியை அருள்வாய். அதனால் என் மோகத்தையும் தீர்த்து வை. என் வாழ்க்கையில் இதுவரை நான் உலகியலைத் தவிர எதையும் அறியவில்லை. நான், என்னுடையது என்பது மட்டுமே எனது அறிவின் எல்லை. அதனால் உன்னை சரணடைகிறேன். உன் அடியார்களின் சம்சாரம் என்ற பெரிய மரத்தை அடியோடு சாய்க்கும் கோடாலி நீ. நான் இப்பொழுது என் போன்றே அறியாதவர்களின் சார்பாக உன்னை வணங்கி ஞானத்தை யாசிக்கிறேன்.
மைத்ரேயர் விவரித்தார். தன் தாயார் இவ்வாறு சொல்லவும், சிரித்துக் கொண்டே பதில் சொன்னார். அவரே அபவர்க வர்தனன் என்று சொல்லப் படுபவர்- முன் ரிஷிகளுக்குச் சொன்ன அதே விஷயம் தான். யோகம் உடல் அங்கங்களுக்கு நல்லதைச் செய்யும். பந்தத்தில் ஆழ்வது மனதின் காரணமாகவே. மூன்று குணங்கள், சத்வ ரஜஸ் தமஸ் என்பவை மனதை ஆட்டுவிக்கின்றன. நான், என்னுடைய என்ற அபிமானம். காமம் லோபம் முதலானவைகளுக்கு அடிப்படை. மனம் சுத்தமானால் சுகமும் துக்கமும் சமமாக ஆகும். ப்ரக்ருதி அல்லது இயற்கை என்பதற்கும் மேலான ஆத்மா நிரந்தரமானது. ஸ்வயம் ஜோதி ரூபமானது. அணுவைப் போல பிளக்க முடியாதது. ஞானம், வைராக்யம் இவைகளுடன் பக்தியும் சேர்ந்து தன்னிலிருந்து வேறாக உலகியலை தானே பார்த்துக் கொண்டிருக்கிறது. தூண்டுகோலாக ஆத்மா இல்லாதவரை ப்ரக்ருதி தானாக எதையும் செய்வதில்லை. அகிலாத்மாவான பகவானிடத்தில் பக்தி இல்லாத இடத்தில், ப்ரும்ம சித்தியை அடைய வேறு வழி கிடையாது.
ஆத்மாவை மூப்பில்லாதது, அழியாதது, என்று கவிகள் அறிவார்கள். அதனால் ஆத்மாவை அறிவதே முக்திக்கு வழி என்று அவர்கள் வகுத்தார்கள். அப்படி முக்தி பெற விரும்புபவர்கள் தயை உடையவர்கள். அனைத்து உயிரினங்களிடமும் நட்பாக இருப்பவர்கள். இவர்களுக்கு சத்ரு என்று எவரும் இல்லை. சாந்தமாக, சாதுவாக இருப்பவர்கள். இந்த சாதுவான அமைதியான குணமே ஆபரணமாக இருப்பார்கள்.
மாற்று எண்ணம் இன்றி என்னையே திடமாக நம்பி பக்தி செய்பவர்கள், என் காரணமாக தன் செயல்கள், பந்து ஜனங்கள் இவர்களைக் கூட தியாகம் செய்பவர்கள். என்னையே ஆசிரயித்து, என் கதைகளில் மகிழ்ந்து, தானும் சொல்லி, சொல்பவர்களிடம் கேட்டும், பலவிதமாக விரதங்களைச் செய்து, என்னையே நம்பி இருப்பவர்கள் எந்த தாபத்தையும்- கஷ்டத்தையும் அடைவதில்லை. இவர்கள் தனித்து இருப்பார்கள். அப்படி கூட இருப்பவர்களையும் தங்கள் நல்ல குணத்தால் குற்றம் இல்லாதவர்களாகச் செய்து விடுவர். அவர்களையும் ஞான மார்கத்தில் கொண்டு வந்து விடுவர். புலன்களின் வசம் ஆவதில்லை. கண் பார்த்தும், செவி கேட்டும் உணர்வது என் செயல் என இருப்பர். யோக மார்கத்தில் மனதை செலுத்துவர். ஞான வைரக்யம் நிரம்பிய குணம், என்னிடம் அர்ப்பித்த யோகம், அதனுடன் பக்தியும் சேர்ந்து என் போலவே ஆவார்கள்.
தேவஹூதி கேட்டாள்: எந்த விதமான பக்தி? என் கண்களுக்கு தெரிந்த அல்லது நான் அறிந்து அனுசரிக்க கூடிய பக்தி மார்கம் எது? எந்த விதத்தில் நான் நீ சொல்லும் முக்தி என்பதை அடைய முடியும்? யோகம் என்பது என்ன? நிர்வாணம் அல்லது முக்தி என்று நீ எதைச் சொல்கிறாய்? அதன் தன்மை என்ன? அதன் பகுதிகள் என்ன என்ன? தத்வ அவபோதம்- உண்மையை அறிதல் என்று சொன்னாய்- அந்த உண்மைப் பொருள் எது? மந்த புத்தி நான். எனக்கு புரியும்படி சொல்லு. ஹே ஹரே! கடினமான இந்த ஞான மார்கம் உன் அனுக்ரஹத்தால் நான் சுலபமாக அறிந்து கொள்ளும் படி சொல்லு.
மகனிடம் தாய் இவ்வாறு சொன்னதும், அன்புடன் திரும்பச் சொல்ல ஆரம்பித்தார். சாங்க்யம் அல்லது ஞான மார்கம் என்பது என்ன என்று இன்னமும் தெளிவாக சொல்லலானார். பக்தியுடன் இணைந்த யோகம் என்று வேதங்களில் சொல்லியிருப்பதை விவரமாக சொல்லானார்.
தேவர்கள் இயல்பாகவே சத்வ குணம் மிக்கவர்கள். அவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளை செய்பவர்கள். உண்மையான நம்பிக்கையும் அளவில்லாத பக்தியும் சித்திகள் என்பனவற்றை விட சிறந்தவை. ஜடராக்னி- வயிற்றில் உள்ள நெருப்பு உண்ட உணவை விழுங்குவது போல, சேர்ந்து வரும் பந்த பாசங்களால் அடைந்த சரீரம் என்ற உருவை ஞானம் உடனடியாக அழித்து விடும். ஆத்மாவை அறிந்த ஞானிகளை பந்த பாசங்கள் பாதிப்பதில்லை. என் பாதங்களை சேவித்தவர்கள். தங்களுக்குள் என் பக்தர்கள் பேசி விமரிசித்துக் கொள்வார்கள். சாயுஜ்யம், மோக்ஷம் என்பது பற்றி கூட ஆசைப் படுவதில்லை. என்னைப் பற்றி என்ன சொல்வார்கள் தெரியுமா அம்மா? ப்ரசன்னமான முகம், அருணன் போல சிவந்த கண்கள், அழகான உருவம், கைகள் வரம் கொடுப்பதே காரியமாக இருப்பவை, என் பேச்சு ரசிக்கத் தகுந்ததாக இருப்பதாகச் சொல்வார்கள். அவர்கள் என் அவயவங்கள் காணத் தகுந்தவை என்பர். கண்களால் சிரிப்பதாக, நகைப்பும், உல்லாசமும் நிறைந்த சொற்களால் விளையாட்டாக பேசி விரும்பாதவர்களையும் என் பால் கொண்டுவந்து விடுவதாக சொல்வர். என் மாயையால் ஐஸ்வர்யம், அஷ்டாங்கம்- எட்டு விதமான செல்வங்களையும் அடைவர். சிறந்த செல்வம் என்று பாகவதர்களையே விரும்புவர். ஒரு போதும் என் நினைவின்றி இருக்க மாட்டார்கள். நான் அவர்களுக்கு பிரியமான ஆத்மா, மகன், சகா, குரு, நண்பன், இஷ்ட தெய்வமும் ஆவேன்.
இந்த உலகம், அதே போல பரலோகம் இரண்டிலும் ஒரே விதமாக பற்றின்றி இருப்பர். சரீரத்தில் பற்றில்லாததால், இந்த தனம், தன் வீடு, பசுக்கள் என்ற சாதாரண விஷயங்களில் ஈடுபாடு இருக்காது. இவ்வாறு என்னையே சகலமும் என்று நம்பி இருப்பவர்களை நான் ம்ருத்யு பயத்திலிருந்து காப்பேன். மறு பிறவி அவர்களுக்கு கிடையாது. பயம் அவர்களை அண்டாது. என்னிடம் உள்ள மரியாதையால் அவர்களை காற்று அலைக்கழிக்காது. சூரியன் தபிக்காது. இந்திரன் தவறாது வர்ஷிப்பான். அக்னி தஹிக்காது. மரணமும் அண்டாது. ஞான வைராக்யம் இவற்றுடன் பக்தியும் சேர்ந்து இருப்பதே பக்தி யோகம் என்பது. இவர்கள் என்றும் க்ஷேமமாக, எதிலும் பயம் என்பதே இல்லாமல், என் பாத மூலம் அடைகிறார்கள். இது போன்ற மனிதர்கள் தான் திடமான நம்பிக்கையால் இந்த உலகில் நன்மைகளை கொண்டு வருவார்கள்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம் – என்ற மூன்றாவது ஸ்கந்தத்தின், இருபத்து ஐந்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-44
அத்யாயம்-26
பகவான் தொடர்ந்தார். இப்பொழுது இன்னமும் ஆழ்ந்த தத்வங்கள் என்ற விஷயங்களைச் சொல்கிறேன். தனித் தனியாக விவரிக்கிறேன். இதை அறிந்தவர்கள், உலகியல், இயற்கையாக உள்ள பல விஷயங்களை பற்றி தெளிவாக இருப்பார்கள். வேதம் சொல்லும் மூன்று மார்கங்கள், ஞானம், யோகம், பக்தி என்பவை. மனிதனின் ஆத்ம தரிசனம் ஞானம். இது பற்றி முதலில் சொல்கிறேன். அஹங்காரம் என்பதை அழிக்கும் ஞானம் ஆத்ம தரிசனத்திற்கு வழி வகுக்கும்.
ஆத்மா அழிவற்றது. புருஷன் என்பவன் (பரமாத்மா) குணங்களால் பாதிக்கப் படாதவன். (உடல் தன் அவயவங்கள் அனைத்தும் சரியாக இருந்தாலும் அதை இயக்க பரமாத்மாவின் அம்சமாக ஆத்மா வேண்டும். பூரயதி இதி புருஷ: – வெற்றிடத்தை நிரப்பி இயக்குவதால் புருஷன் என்பது பொருள்) அந்த பரமாத்மா தனக்கென்று ஒரு பிரகாசம் உடையவன், தனக்கென்று இருப்பிடம் உள்ளவன், தானே ஒளியாக உலகில் பரவியிருப்பவர். எதேச்சையாக தானே வந்து சேர்ந்த இயற்கை தத்வங்களை (பஞ்ச பூதம் -ஆகாயம்,வாயு முதலானவை)விளையாட்டாக ஏற்றுக் கொண்டார். இவை சூக்ஷ்மமானவை, இவை உண்டானது பகவானிடத்திலிருந்து என்பதால் தெய்வீகம். குணங்கள் என்பவைகளும் பகவானிடமிருந்து தோன்றியவையே. விசித்ரமாக குணங்களுடன் பஞ்ச பூதங்களுடனும் சேர்ந்து ஒரு நிலையில் பிரஜைகள் உருவங்களோடு வெளிப்பட்டார்கள். அதில் ஏற்பட்ட குதூகலத்தால், மேலும் அறிந்து கொள்ள விழைந்தார். இயற்கை தத்துவங்களைக் கொண்டு பலவிதமாக மாற்றி மாற்றி அமைத்து பார்த்தார்.
மனிதன் தன்னிலும் வேறாக இயற்கை தானாகவே செய்வதையும் தான் செய்வதாக எண்ணுகிறான். அதனாலேயே சம்சார பந்தம், அதன் விளைவாக அதிலேயே கட்டுப்படுகிறான். ஈஸ்வரனின் செயல் என்று ஞானிகள் விலகி இருப்பர். கார்யம்-செயல், காரணம்-இயற்கை, கர்த்ருத்வம்- செய்பவன், இந்த மூன்றில் காரணம் என்பது ப்ரக்ருதி. சுக துக்கங்களின் அனுபவம் என்பதில் புருஷன் என்றபரமாத்மா, ப்ரக்ருதி என்ற இயற்கை தத்வங்களுக்குள் வருவதில்லை. அந்த அனுபவங்கள் பரமாத்மாவுக்கு இல்லை.
தேவஹூதி கேட்டாள்: ப்ரக்ருதி, புருஷன் இரண்டையும் பற்றி விவரமாகச் சொல்லு, புருஷோத்தமா!. என்ன காரணம் ? எதனால், நல்லது, நல்லதல்ல என்று அறியப் படுகிறது. இரண்டுமே ஒரே பகவானிடம் தானே தோன்றியவை என்றாய்.
மூன்று குணங்கள், இவை கண்களால் காண முடியாத உணர்வுகள். இயற்கையை ஸ்தூலம் என்றும், ப்ரதானம் என்ற பகவானின் அம்சத்தை , சூக்ஷ்மம் என்றும் சொல்வர். இருபத்து நாலு தத்வங்கள். பஞ்ச பூதங்கள் ஐந்து, நிலம்,நீர்,அக்னி,வாயு,ஆகாசம் என்ற ஐந்து – தன் மாத்ரைகள், கந்த-வாசனை ரசம்-ருசி, ரூபம், ஸ்பர்ஸ-தொடு உணர்வு, சப்தம் என்பன. – செவி,கண் முதலிய 5, கை,கால் முதலிய அவயவங்கள் பத்து, கண்,காது,நாசி,வாய், சருமம், கைகல்-2,கால்கள்2, வாய், மேட்ரம்,பாயு என்ற கர்மேந்திரியங்கள் பத்து, மனம், புத்தி, அஹங்காரம்,சித்தம் என்ற ஐந்தும் அந்தராத்மா வில் அடங்கும். இவர் நான்கு விதமாக அதன் செயல்கள், லக்ஷணங்கள், ரூபம் என்ற அடிப்படையில் பிரிக்கப் பட்டுள்ளது. இவ்வளவு தான் கணக்கு, ப்ரும்மாவுடையதும், குணங்களுடன் உள்ள மனிதர்களுக்கும். இருபத்தைந்து விதமான காலங்கள். சன்னிவேசம் எனப்படும்.
ப்ரபாவம், பௌருஷம் என்பவை ஒரு காலன் – அதுவும் இயற்கை தான் என்றாலும் மனிதனின் அறிவின்மை, அவனிடத்தில் பயம். உள்ளே புருஷ ரூபம், வெளியில் காலன் இதை பகவான் தன் திறமையால் சமமாக நிர்வகித்து வருகிறான். காலன் என்ற இந்த தேவனும் பகவானின் ஸ்ருஷ்டியே. தன்னுள்ளேயே விஸ்வம் என்பதை யோசித்து தயார் செய்து கொண்டு தான் பகவான் உலகின் பீஜமாக இருந்து தன் தேஜசால், சத்வம் என்ற தெளிவான, சாந்தமான சத்வ குணத்தால் வாசுதேவன் என்ற பெயருடைய சித்தம் என்பதுடன் மஹத் என்பதை ஸ்ருஷ்டி செய்தார். தெளிந்த நீரைப் போல மிகத் தெளிவானது, மாறாதது, சாந்தமாக இருப்பது என்பவை புத்தியின் செயலுக்கு லக்ஷணமாக சொல்லப்படுகிறது.
இந்த மஹத் என்ற தத்துவத்தை பகவானுடைய வீர்யமும் சேர்ந்து க்ரியா சக்தி, அஹங்காரம் (தன்னியல்பு) மூன்று விதமான தோன்றின. அதன் பின் மேலும் தாமசத்துடன் சேர்ந்து மனம் இந்திரியங்கள், பஞ்ச பூதங்கள் இவை உண்டாயின.
ஆயிரம் தலைகளுடன் அனந்தன் என்று சொல்லப் படுபவர், சங்கர்ஷணர் என்பவர், பஞ்ச பூதங்கள்,மனம், இந்திரியங்கள் இவைகளுடன் சேர்ந்த பரம புருஷன். அஹங்காரம் என்பதன் விளைவுகள், செயல்களை (கர்தா-செய்பவன்) செய்தல், செயலுக்கு காரணமாக இருத்தல், (கரணத்வம்)., செயல் (கார்யத்வம்) என்பவை. சாந்தம், கோரம், விமூடம் (மூடத்தன்மை) வைகாரிகம் என்ற மாற்றத்தால், மனம் என்ற தத்வம் வந்தது. இதனுடைய சங்கல்பம், விகல்பம் என்பவைகளால் காமம் என்பது உண்டாயிற்று. இதை அனிருத்தன் என்பர். நீல மேக ஸ்யாமளனாக அனிருத்தனை யோகிகள் சொல்வர்.
{ஸங்கர்ஷணர் என்ற ஹரி சூக்ஷ்மமான அஹங்காரம். ஸ்தூலமான அஹங்காரம் ப்ரத்யும்னன். அனிருத் என்பவன் மனத்தை நிர்வஹிக்கும் ஹரி ரூபம். }
தேஜஸ் (அக்னி) என்பதன் திரிபினால், புத்தி என்பது உண்டாயிற்று. த்ரவ்யம், உணர்ச்சி, விக்ஞானம் என்பவை- பொருள்களை அடையாளம் காணுதல், தானாக உணருதல், மேம்பட்ட அறிவுத்திறன், அதாவது தானாகவே புது விஷயங்களை கண்டறிவது என்பன புத்தியின் செயல்.
சந்தேகம் என்பது ஒரு பொருளை பலவிதமாக காணுதல். அதுவும் மனதின் வேலையே. பொதுவான அறிவு வேறு விதமாகவும் நினைக்கும். தூங்கும் போதும் புத்தி செயல்படும் (நன்றாக தூங்கினேன் என்பது சாதாரணமாக நாம் சொல்வது) தேஜஸ் இந்திரியங்களோடு சேர்ந்து செயல், அறிவு, என்ற இரண்டு விதம். ப்ராணன் -க்ரியா சக்தி, புத்தி- தானே உணரும் சக்தி என்பதாக.
தாமஸ குணத்தோடு பகவானின் வீர்யமும் சேர்ந்து சப்தம் உண்டாயிற்று. அதனுடன் ஆகாயம் (ஓலியை பரப்புவதாக), காது சப்தத்தைக் கேட்கும் அவயவமாக, உண்டாயின. அர்த்தம் சப்தத்தின் அடிப்படை. கண் பார்வைக்கு உருவம். தன்மாத்ரம் (ஓலி) என்பது ஆகாயத்தின் அடையாளம் என்று அறிஞர்கள் சொல்வார்கள்.
பஞ்ச பூதங்களின் சேர்க்கை பலவிதமாக (அளவில்) ஏற்படுத்துவதால், உள்ளும் புறமும் ப்ராண, இந்திரிய, ஆத்ம சக்தி என்பவை ஆகாயத்தின் செயல்கள். ஆகாயத்தின் சப்தம் என்ற தன்மாத்ரம் கால கதியில் பட்டு மாறுபடுவதால், ஸ்பர்ஸம் என்பது ஏற்பட்டது. ஸ்பர்ஸம் வாயுவின் குணம். சருமம் என்பது வாயுவின் இடம். ஸ்பரிசம்- தொடுகை என்ற உணர்வை அறிவது உயிரினங்களின் சருமத்தாலேயே. ம்ருதுவோ, கடினமோ,குளுமை, உஷ்ணம் என்பதை உணர்வது தொடுகை உணர்வால், அதை நிர்வகிப்பது ஆகாயத்தின் தன்மாத்ரம்- உட்பொருள்.
சலனம், அசைவது போன்ற இந்திரியங்களின் செய்கைகள் வாயுவின் அடையாளம். வாயுவின் தொடுகை என்ற தன்மாத்ரம்,
ரூபம் என்ற ஒரு தத்துவம் தெய்வ தொடர்பால் புதியதாக தோன்றியது. கண் என்ற அவயவம் ருபத்தைக் காண்பதாக தோன்றியது.
தேஜஸ் என்ற அக்னியின் குணமும் சேர்ந்து உருவம் என்பதின் பல செயல்களை செய்யலாயின. நான்கு விதமான உண்ணும் வழக்கம், மெல்லுதல், கடித்தல், குடித்தல், விழுங்குதல் – என்பவை இவை அக்னியின் காரியங்கள். இவைகளின் பலன் பசி தாகம் முதலியன. உருவம் என்ற தன்மாத்திரையோடு, சேர்ந்து மாறுதல் அடைந்து, அக்னியும், தெய்வ சங்கல்பமும் சேர்ந்து, ரஸம் என்ற தன்மாத்திரை உண்டாயிற்று. அதிலிருந்து நீர் என்பது வந்தது.
நாக்கு ரஸத்தை அறியும் அவயவமாயிற்று. கஷாயம் (கடுப்பு), மதுரம், புளிப்பு, கட்வம்ல- கடுமையான புளிப்பும் கசப்பும் சேர்ந்தது பல ருசிகள், பௌதிகமான மாறுதல்களால் ரஸம் என்பது பலவகைப் படும். மேலும் பல நீரின் செயல்கள்.
ரஸம் என்ற தன்மாத்திரையோடு செய்வ சங்கல்பமும் சேர்ந்து கந்தம்-வாசனை என்ற புதிய தத்வம் உண்டாயிற்று. இதன் இருப்பிடம் பூமி, மூக்கு என்ற அவயவம் வாசனையை நுகர்வதாக ஆயிற்று. வித விதமான வாசனகள், தீவிரமாக, சுகமாக என்ற வேறு பாடுகளை முக்கு அல்லது நாசி என்ற அவயவம் உணரும்.ஸ்தானம், தாரணம் -தாங்குதல், என்பவை விசேஷ குணங்கள். சத்வ குணங்களின் பல பேதங்கள், ப்ருதுவீ என்ற பூமியின் அடையாளங்கள்.
நபோ-ஆகாயம் என்பதன் விசேஷமான பொருள் ஸ்ரோத்ரம்- கேள்வி என்பது போல வாயுவின் விசேஷமான பொருள் ஸ்பரிசம் என்றும், அக்னி-தேஜஸ் என்பதன் விசேஷமான பொருள் பார்வை -கண் என்பதும், நீரின் விசேஷமான பொருள் ரசனம்- நாக்கு என்பதும், பூமியின் விசேஷமான பொருள் நுகர்தல், அதன் அவயவம் நாசி, நுகருதல் என்பதும், விளங்குகிறது. மஹத் எனும் ஏழு தத்வங்களும் கால,கர்ம,குண எனும் மூன்று தத்வங்களுடன் இணைந்தும் பிரிந்தும் உலகங்கள் என்ற ரூபத்தை அடைந்தன.அசேதனமான அந்த அண்டத்தில் இருந்த (நித்ரையில் இருந்த) பகவான் எழுந்தார். அது தான் விராட் ஸ்வரூபம். அண்டம் என்ற இந்த விசேஷ பொருளை, கிரமமாக தண்ணீரால் சூழ்ந்து இருந்ததை,பிளந்து, பிரதான புருஷனான ஸ்ரீ ஹரி தன் சங்கல்பத்தால் லோகங்களை உண்டாக்கினார்.பொன் மயமான அந்த அண்டகோசத்திலிருந்து எழுந்து நீரிலிருந்து அதை வெளிக் கொணர பிளந்தார். அப்படி பிளந்த பொழுது ஏற்பட்ட சப்தத்தால் (வாணி), முகம் (வாய்) தோன்றியது. வாணியிடமிருந்து அக்னி வந்தது. அதன் பின் நாசியில் பிராணன் என்பதும் தோன்றின. அதன் அவயவமாக மூக்கு எழுந்தது. நாசி-க்ராணம் என்பதிலிருந்து வாயுவின் தாக்கத்தால் இரண்டு கண்கள் தோன்றின. அதில் சூரியன் நுழைந்து அதன் தாக்கத்தால், காதுகள், ஸ்ரோத்ரம்-கேட்கும் அவயவம், அதன் பின் திசைகள் என்று வரிசையாக வந்தன.இவ்வாறு த்வக்-சருமம், ரோமம்-மேல் தோலில் மயிர்கால்கள், மீசை முதலியன தோன்றின. அதன் பின் ஜனன உறுப்புகளும் உடல் நீர்களும் வந்தன. ரேதஸ் என்பதில் தண்ணீர் இருந்தது. குதம், அதிலிருந்து அபான வாயு, இது ம்ருத்யு எனப்படும். பிராணன் பிறப்பு -ஆரம்பம்- இது முடிவு
கைகளை இணைத்தார். அவைகளில் பலம் என்பதை கூட்டினார். சுயம்பூ-ஸ்வராட் -என்ற பகவான் கால்களை இணைத்தார். அவைகளுக்கு கதி-நடை என்பதை குணமாக கூட்டினார். பின் நாடிகள், அவைகளில் லோஹிதம் என்ற ரத்தம்- இது அம்ருதம் எனப்பட்டது -இதைக் கூட்டினார். வெளியுலகில் நதிகள் தோன்றின. மனித உடலில் உதரம் என்ற வயிற்று பாகம், வெளி உலகில் சமுத்திரம். பசி தாகம் இவை தோன்றின.
அதன் பின் ஹ்ருதயம் என்ற அவயவம். அவருடைய ஹ்ருதயத்திலிருந்து மனம் என்பதும் உண்டாயிற்று. மனதில் இருந்து சந்த்ரமா வந்தான். புத்தியும், புத்திக்கு அதிபதியாக வாக்பதி என்ற ப்ரும்மா. அஹங்காரம் என்பது ருத்ரனாக, சித்தம் அதனுடன் வந்தது. இவ்வளவும் வந்த பின்னும் தேவர்களால் இதை எழுப்ப முடியவில்லை. தாங்களே பொறுப்பு ஏற்றுக் கொண்டு ஒவ்வொரு அவயவத்தையும் அசைக்க முயன்றனர்.
அக்னி முகத்தில் சொல் என்பதாக, முகத்தில் குடியேறியது. விராட் ஸ்வரூபம் அசையவில்லை.
வாயு நாசியில் அமர்ந்தது. விராட் ஸ்வரூபம் அசையவில்லை.
இரண்டு கண்களிலும் சூரியன் நுழைந்தான், விராட் ஸ்வரூபம் அசையவில்லை.
கேள்வி என்பதன் காதுகளில் திசைகள் நுழைந்தன, விராட் ஸ்வரூபம் அசையவில்லை.
சருமத்தில், ரோமங்களில் ஓஷதிகள் நுழைந்தன, விராட் ஸ்வரூபம் அசையவில்லை.
ரேதஸ் என்ற பீஜ ஸ்தானத்தில் ஆப: என்ற நீர் இடம் கொண்டது, விராட் ஸ்வரூபம் அசையவில்லை. குதத்தில் அபான வாயு ம்ருத்யுவாக இடம் கொண்டது, விராட் ஸ்வரூபம் அசையவில்லை.,
இந்திரன் கைகளில் பலம் என்பதாக வந்தான், விராட் ஸ்வரூபம் அசையவில்லை.
விஷ்ணு தானே கதியாக பாதங்களில் வந்தார், விராட் ஸ்வரூபம் அசையவில்லை,
நாடிகளில் நதிகள் ரத்தமாக ஓடின, விராட் ஸ்வரூபம் அசையவில்லை,
பசி, தாகம் என்று உதரத்தை சமுத்திரம் ஆட்கொண்டது, விராட் ஸ்வரூபம் அசையவில்லை,
சந்திரன் மனம் என்பதாக ஹ்ருதயத்தில் வந்தமர்ந்தான். விராட் ஸ்வரூபம் அசையவில்லை,
ப்ரும்மாவும் ஹ்ருதயத்தில் புத்தியாக வந்தமர்ந்தார். விராட் ஸ்வரூபம் அசையவில்லை,
அபிமானம் அல்லது அஹங்காரம் (தன்னியல்பு) என்பதாக ருத்ரன் வந்து அதே ஹ்ருதய்த்தில் இடம் பிடித்தார், விராட் ஸ்வரூபம் அசையவில்லை,
சித்தத்தில் மனசாட்சி என்பது குடியேறியது. விராட் ஸ்வரூபம் அசையவில்லை.
அச்சமயம் விராட் புருஷன் சூழ்ந்திருந்த தண்ணீரிலிருந்து எழுந்தார்.
மனிதன் தூங்கி விழிப்பது போல இருந்தது. அவரே ப்ராணன், இந்திரிய, மனம்,புத்தி -அவர் இல்லாமல் வேறு யாரால் விராட் புருஷனை எழுப்ப முடியும்? ஆத்மானம் -தன்னுடையதே ஆன யோக முறையால் பக்தி, விரக்தி, ஞானம் என்பவைகளைக் கொண்டு யோசித்தார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம் – என்ற மூன்றாவது ஸ்கந்தத்தின், இருபத்து ஆறாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -72
அத்யாயம்-27
ஸ்ரீ பகவான் சொன்னார்.
ப்ரக்ருதி என்ற உலகியலில் இருந்தாலும் புருஷ என்ற பரமாத்மா, உலகியல் இயல்புகளை ஏற்றுக் கொள்வதில்லை. குளத்து நீரில் சூரியனின் பிம்பம் தெரிவது போல – குளத்து நீரில் பிம்பம் அசைவது உண்மையில் சூரியனின் அசைவு இல்லை என்பதை நாம் அறிவோம். அதே போல நீரின் குணமான குளுமை அந்த சூரியனை பாதிக்காது.
அதே போலத்தான் பரமாத்மா உயிரினங்களில் இருப்பதும்- மாறுதல்கள் அதற்கு இல்லை. செயல்களும் அதற்கு இல்லை. அதற்கு தனியாக ஒரு குணம், அதாவது அடையாளம் என்பதும் இல்லை. உடலுக்கு ஏற்படும் சுக துக்கங்கள் அதை பாதிப்பதும் இல்லை. ஆனால் மனிதன் பரமாத்மாவின் அனுக்ரஹத்தை உணராமல் நான் செய்கிறேன் என்று சொல்வது அபத்தம். பின், ஏன் சம்சார பந்தத்தில் ஈடுபடவேண்டும்? பரமாத்மா இன்றி இயக்கமே இல்லை. அவனன்றி அணுவும் அசையாது என்பது ஆன்றோர் வாக்கு. உயிரினங்களின் உடலை இயக்குவது இந்திரியங்கள் மட்டுமாக செய்வதில்லை, ஆத்ம சக்தி என்பது பகவானின் அம்சம். அதை மனிதன் உணர வேண்டுமானால் முன் சொன்ன பக்தியோ, ஞானமோ, கர்ம யோகமோ (வேதோக்தமான யாகாதிகள் செய்வது) செய்து சாதனகள் செய்யவேண்டும்.
தேவஹூதி கேட்டாள். ப்ரக்ருதியும் புருஷனும் அன்யோன்யமாக இருந்து தான் உலகமே வந்தது. இரண்டும் நித்யமானதே, ஒன்றையொன்று சார்ந்து இருப்பதே என்று சொன்னாய். பூமிக்கு கந்தம், நீருக்கு ரஸம் என்பது போல புத்திக்கு பரமாத்மா என்ற புருஷன் என்ற வகையில் சுக துக்கங்கள், மற்ற செயல்களின் விளைவுகள் ப்ரக்ருதிக்கு மட்டுமே, நான் சம்பந்தப் படவில்லை என்று புருஷன் எப்படி விலகி இருக்க முடியும்? அப்படி சம்சாரம் என்ற உலகியலில் மூழ்கி இருக்கும் ஜீவன்கள், கைவல்யம் என்று எப்படி அறிவார்கள்? அதை அடைவது என்பது என்ன? ஏதோ காரணத்தால், குணம் பற்றிய விவரங்கள் அறியாததால், இயற்கையின் தாக்கத்தால் பயம்-ஆபத்து ஏற்பட்டால், எப்படி மீள்வது?
பகவான் சொன்னார்: கனவில் காண்பதை நிஜம் என்று எண்ணி பயப்படுவதோ, கலங்குவதோ போலத் தான் சம்சாரமும். புத்திமானாக இருப்பவன் என்னை நம்புகிறான். பக்தி மார்கத்தில் ஈடுபடுவான். ஞானம் உள்ளவன் மனோ பலத்தால் வைராக்யத்தால், தவத்தால், என்னை அடைவான். யோக மார்கம் ஆத்ம சமாதி போன்ற நியமங்களால் என்னை அடைய வழி வகுக்கிறது. இவ்வகையில் தன்னையே உயர்த்திக் கொள்ள உள்ள வழிகள் பயத்தைப் போக்கும். ஈஸ்வர சகாயம் அவர்களை நல்ல கதியில் சேர்க்கும். தானாக விழித்துக் கொள்ளாத மனிதனை எழுப்புவது சுலபமல்ல. அதே சமயம் விழித்துக் கொண்டிருக்கும் மனிதனை மோகமும் அண்டாது. இவ்வாறே, உண்மையை உணர்ந்தவன் இயற்கை என்பதையும், அதில் என் பங்கையும் தெரிந்து கொள்வான். அத்யாத்மம் என்பதில் லயித்தவர்கள், பல ஜன்மங்களில் தொடர்ந்து சாதனைகளைச் செய்து ப்ரும்ம பதத்தையே அடைவார்கள். பக்தி செய்பவன் என் அருளால் என் இருப்பிடமான கைவல்ய பதவியை அடைவான். ஞானியோ தானே பல விஷயங்களை கண்டும் கேட்டும் தெரிந்து கொண்டு அனுபவ பூர்வமாக என்னை அடைவான். இது போன்ற எந்த முயற்சியிலும் மனதை செலுத்தாமல், மாயையான உலகையே சாஸ்வதமாக நம்புபவன் அவனும் காரணமின்றியே, ம்ருத்யு பயம் இல்லாத நிலையை கடைசியாக அடைவான்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம் – என்ற மூன்றாவது ஸ்கந்தத்தின், இருபத்து ஏழாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -30
அத்யாயம்-28
ஸ்ரீ பகவான் சொன்னார்: யோகத்தின் லக்ஷணம் என்பதைச் சொல்கிறேன். அதன் பீஜங்களோடு விவரிக்கிறேன். அதன் மூலம் மனிதன் நல் கதியை அடைவான்.
தன் தர்மத்தை கடை பிடித்தலும், பர தர்மத்திலிருந்து விலகி இருப்பதும் முதல் படி. தெய்வ அனுக்ரஹத்தால் கிடைத்ததில் சந்தோஷமாக இருப்பது அடுத்தது. அவரிடம் பக்தியுடன் இருப்பது. உலக வாழ்க்கையில் அதிகம் உழலாமல், மோக்ஷம் என்பதை அறிந்து கொள்ளுதல். அதை அடைய மிதமான ஆகாராதிகள், மற்ற உலகியல் அனுபவங்கள் அந்தந்த தேவைகளுக்கு மட்டுமாக, இதற்கு மேல் ஒரு விஷயம் உள்ளது என்பதை சதா நினைவில் இருத்திக் கொள்ளுதல்.
அஹிம்சை, சத்யம், திருடாமை, தன் செல்வம் தானே ஈட்டியது போதும் என்று இருப்பது, ப்ரும்ம சர்யம், தவம், ஒழுக்கம், உடலும் மனமும் சுத்தமாக இருத்தல், தன் கல்வி, அறிவை மேம்படுத்திக் கொள்ளுதல், பகவானை வணங்குதல்- இவையே தினசரியையாக இருக்க வேண்டும். .அளவாக பேசுவதும் மௌனம் என்பதும் நல்லது. ப்ராணாயாமம் செய்வதும், (ப்ராணாயாம், ப்ரத்யாஹாரம் என்ற இரண்டும்) மனதை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அனாவசிய சபலங்கள் அலைக்கழிக்காது. இவ்வாறு மெள்ள மெள்ள யோக சாதனையைச் செய்து வந்தால் சில நாட்களில் தியானம் செய்வது சுலபமாகும். சுத்தமான இடத்தில், சுகாசனத்தில் அமர்ந்து ப்ராணனை பூரக, கும்பகம், ரேசகம் என்ற முறைகளில் தன் வயப் படுத்திக் கொண்டு, தியானம் செய்து வர, மனம் சீக்கிரமே தன் வசப் படும். இவ்வாறு சுவாசத்தை ஜயித்தவர்கள் தான் யோகிகள். காற்றையும் அக்னியையும் கொண்டு லோஹம்-இரும்பை சுத்தம் செய்வது போல இது.
ப்ராணாயாமத்தால், உடல் சுத்தமாவது போலவே, தாரணை என்பதும் ப்ரத்யாஹாரம் என்பதும் பயிற்சிகள். ஈஸ்வரனை நினைத்து தியானம் செய்யும் பொழுது, ப்ரத்யாஹாரத்தால், சம்சர்கம்- பற்றுதல் என்பது விலகும். இந்த நிலை வந்தபின், உடலை கட்டையாக நிலையாக வைத்துக் கொண்டு நாசி யில் கண் பார்வையை ஸ்திரமாக வைத்து, யோக சாதனையை செய்வது அடுத்த படி. ப்ரசன்ன வதனன், பத்ம கர்பன், அருண லோசனம், நீலோத்பலதள ஸ்யாமளன், சங்க சக்ர தா தாரியான பகவானை, பங்கஜ த்தின் மகரந்தத்தின் நிறத்தில் ,பீதாம்பர தாரியாக, ஸ்ரீவத்ஸ, கௌஸ்துப மணிகள் பிரகாசிக்க, வனமாலை, உயர்ந்த ஹாரம், அங்கத வளையங்கள், கிரீட, நூபுரங்கள் காஞ்சி முதலிய ஆபரணங்களுடன் அவரது உருவையே த்யானம் செய்து வேறு எந்த நினைவும் இல்லாமல் சர்வ லோகமும் வணங்கும் குழந்தையாக, அவரது முழு உருவையும் நினைத்து மனம் சிறிதும் சிதறாமல் ஒரே நிலையில் இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டும். அண்டியவர்களை காக்கும் அவர் அருளால் தானாகவே அந்த நினவு உடல் முழுதும் வியாபித்து விடும். நடப்பதாகவோ, அமர்ந்து இருப்பதாகவோ, சயனித்த கோலமோ, நின்ற கோலத்தில் பாத பத்மங்களோ, த்யானிக்கலாம்.
மேலும் விவரமாக ஒவ்வொரு அங்கமாக சொல்லி, மனதில் நிறுத்திக் கொண்டு முழுமையாக பகவானின் உருவத்தை மனதில் உருவாக்கிக் கொண்டு, த்யானம் செய்வதைச் சொல்கிறார்.
பாதங்கள்: வஜ்ர, அங்குசம்,த்வஜம், சரோருஹ என்ற சின்னங்களுடன் இருக்கும். நகங்கள்-சற்றே உயர்ந்து அதன் ஒளியால், மனதின் அறியாமை என்ற அந்தகாரத்தை நீக்கும். அதில் பாவனமான கங்கையை தியானம் செய்ய வேண்டும். இந்த பாதத்திலிருந்து தோன்றிய கங்கை நீரை பரமேசனும் தலையில் தெளித்துக் கொள்வார்.
ஜானுத்வயம் – இரண்டு முழங்கால்கள்: ஜலஜ லோசனா- பத்மம் போன்ற கண்களுடைய ஜகஜ் ஜனனி, அனைத்து தேவர்களும் வணங்கி நிற்க, லக்ஷ்மி தேவி, அவர்கள் பார்த்து இருக்கையிலேயே இந்த முழங்கால்களில் கால் வைத்து ஏறி பகவானின் மார்பில் அமர்ந்தாள்.
கருடனின் புஜங்களில் பதிந்த தொடைகள். அதசீ குஸுமம் என்ற மலர்-(க்ருஷ்ண வர்ணம்) போல பிரகாசமாக விளங்கும், பீதாம்பரம் மறைக்க காஞ்சி எனும் இடையாபரணம் மறைந்து, இருக்கும்.
நாபி பிரதேசம். இதில் புவனகோசமே அடங்கும் லோக பத்மத்தை ஆத்ம யோனியாக இருந்து, ப்ருமாண்டத்தின் அனைத்து சர அசர எனும் ஜீவ ராசிகளின் விதைகளை, பத்மத்தின் மகரந்தம் போல வைத்துள்ள ப்ரதேசமாக தியானிக்க வேண்டும்.
வக்ஷஸ் என்ற மார்பு பிரதேசம். இங்கு வ்ருஷபாரூடனாக பகவானை தியானிக்க வேண்டும்.
கழுத்து கௌஸ்துப மணியின் இடம். அகில உலகும் வணங்கும் தேவனாக தியானம் செய்து வணங்க வேண்டும். அடுத்து புஜங்கள். மந்தர மலையைத் தாங்கிய பொழுது மலை அசைந்து அசைந்து வடுக்களை தோற்றுவித்ததே வளையங்கள் என்ற ஆபரணங்கள் எனத் தியானிக்க வேண்டும்.
ஆயிரம் ஆரங்களுடைய சக்கரமும், சங்கமும் தாங்கிய கரங்கள், கௌமோதகி என்ற ஆயுதமும், எதிரிகளை விரட்டிய சமயம் அவர்களின் ரத்தம் தோய்ந்து கறையானதோ எனும் படி இருக்கும்.
வனமாலை – விசேஷமான அவரது மணியும், மலர்களாலும் ஆன மாலை, தன் அடியார்களை அரவணத்துச் செல்லும் அவர் குணத்தை எண்ணி தியானிக்க வேண்டும்.
மகர குண்டலங்கள் பளிச்சிட முகம் என்ற தாமரை மலரை தியானிக்க வேண்டும். குண்டலங்களால் ஒளியூட்டப் பட்ட கன்னங்களும், நிமிர்ந்த நாசியும், லக்ஷ்மீ கரமான கேச சுருள்கள், அதில் மலர்கள் நிறைந்து முகத்தை சுற்றி இருப்பதாக எண்ணி தியானம் செய்ய வேண்டும்.
இரண்டு மீன்களோ, இரண்டு பத்மங்களோ எனும் படி உள்ள கண்கள். உல்லாசமான மனோ மயன் (மன்மதன்) தோன்றும் இடம் புருவங்கள். கண்கள் அதை விட்டு விலகவே விலகாது. தாப த்ரயம் என்பதிலிருந்து விமோசனம் அளிக்க வேண்டி புருவ ப்ரதேசத்தை தியானம் செய்ய வேண்டும். கருணையுடன் மென் முறுவலோடு கூடிய வதனத்தை வெகு நேரம் தியானித்து மன குகையில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
இவருடைய முறுவல் வணங்கும் ஜீவன்களின் தாபத்தை உடனடியாக போக்கி விடும். தன் மாயையால் அடியோடு மோகத்தில் ஆழ்த்தும் இந்த மோகன ரூபம், மகர த்வஜன் என்ற மன்மதனின் உதவிக்காக உள்ளதோ எனும்படி உள்ளவை.புருவத்திலிருந்து முகம் முழுவதும் பரவும் முறுவல்.
அதரங்களும், இடையில் பளிச்சிடும் முல்லை மலர் போன்ற பல் வரிசையும், தன் இதய குகையில் ஸ்தாபித்துக் கொண்ட விஷ்ணுவின் ரூபத்துடன் சேர்த்து தியானிக்க வேண்டும்.
இவ்வாறு ஸ்ரீ ஹரியின் முழு உருவத்தையும் மன குகையில் வைத்துக் கொண்டு பக்தியுடன் மனம் ஒன்றி, கசிந்த கண்களுடன் உடல் புல்லரிக்க, தொண்டை உணர்ச்சி வசத்தால் அடைபட, மெள்ள மெள்ள தன் இதயத்தில் நமஸ்கரித்து தெளிவை அடைவார்கள்.
இப்படி மனதில் பகவானை நிலை நிறுத்திக் கொண்ட சாதகன் திடுமென தன்னை ஏதோ ஒளி சூழ்ந்ததாக உணர்வான். முடிவான இந்த மன ஓட்டம் அடங்கியவனாக, அவருடைய மஹிமை என்பதில் மூழ்கி உலகியலான சுக துக்கங்களை அறவே மறந்தவனாக , கட்டையாக யோக சித்தியை அடைவான்.
தன் தேகத்தையே வெளியிலிருந்து அன்னியனாக பார்க்கும் நிலை வந்து சேரும். தெய்வ வசமாக வந்த தேகம், தெய்வத்தாலேயே மறைக்கப் பட்டு விட்டது. மதுவை குடித்தவன் தன் உடையை துச்சமாக எண்ணுவது போல இந்த நிலையை அடைந்த பின் தேகமும் பொருளற்றதாக ஆகும். செயல்களுக்கான கருவியே காயம் என்ற இந்த உடல். தன்னையே அறிந்த பின், தன் தோற்றத்துக்கான காரணமான ப்ரும்ம ஸ்வரூபத்தையே அறிந்த பின், அதை கனவில் கண்டது போல உணர்கிறான்.
தன் புத்ரனே ஆனாலும் தன் உடல் வேறு, மகன் உடல் வேறு என்று பொதுவான அறிவு அனைவருக்கும் உண்டு. அதுவே செல்வம், மற்ற விஷயங்கள் வேறு என்ற எண்ணமும் அதில் தனது என்ற பற்றும் விலகும்.
தீயிலிருந்து வெளிப்படும் தீப்பொறிகள், புகை இவைகளை தீ உரிமை கொண்டாடுமா, அது போல தனது என்ற அபிமானம் விலகும்.
பஞ்ச பூதங்கள், புலன்கள்,அந்த:கரணங்கள் இவை சேர்ந்து உயிரினம் -ஜீவன் என்பது உருவாயிற்று. இதில் ஆத்மா என்ற ப்ரும்மா தள்ளியிருந்து பார்த்துக் கொண்டிருக்கும் அவ்வளவே.
அனைத்து ஜீவன்களிலும் தன்னையும், தானும் அவைகளை தன்னில் காண்பதாகவும் சொல்வதாக பகவானை சொல்வர்.
(सर्व भूतेषु चात्मानम्, सर्व भूतानि च आत्मनि – ) சம பாவம் என்பதை காண்கிறார். பல விதமான பிறவிகள். அவைகள் தோன்றும் இடத்தைப் பொறுத்து உருவமும் குணமும் மாறுவதே அன்றி ஒரே பகவானின் அம்சமாக தோன்றியவையே.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம் – என்ற மூன்றாவது ஸ்கந்தத்தின், இருபத்து எட்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் – 44
அத்யாயம்-29
தேவஹூதி கேட்டாள்: மஹத் முதலானவைகளின் லக்ஷணம், ப்ரக்ருதி, பரம புருஷன் என்று விவரித்தாயே, அதில் பாரமார்த்திகம் எங்கே எப்படி வரும்? ஞான யோகம் என்று சொன்னாய். அதன் பின் பக்தி யோகம் என்றாய். அதையே விஸ்தாரமாகச் சொல்லு. விராகம்- பற்றின்மை என்பது உலக வாழ்க்கையில் எப்படி சாத்யம்? எதை தெரிந்து கொண்டால் சாதாரண ஜனங்களுக்கு சௌக்யமோ அதைச் சொல்லு. பகவானே! நீ தோன்றியதன் காரணமே, உலகில் மக்கள் தவறான அறிவுடன் , கண்கள் இருந்தும் தூக்கத்திலேயே பொழுதை கழிக்கிறார்களே, எதை நம்பலாம், எதை நம்பக்கூடாது என்ற விவேகம் இல்லாமல், ஓய்ந்து போய் இருக்கிறார்களே, அந்த ஜனங்களுக்கு நல்லதைச் சொல்லவே. யோக பாஸ்கரனாக நீ வந்தாய்.
தாயார் இவ்வாறு கேட்டதும், அவளுக்கு புரியும்படியாக, அவளுக்கு பிடித்த விஷயங்களையே சொல்ல ஆரம்பித்தார். பக்தி யோகம் பலவிதமாக, அவரவர் ஸ்வபாவம், குணம், அவரவர்களுக்கு பிடித்த மார்கம் என்று மாறும். பொதுவாக, ஹிம்சையில் நாட்டம், அடம்பரம் , பொறாமை . பரபரக்கும் தன்மை, இத்துடன் பக்தி செய்கிறேன் என்றால் அது தாமசமானது. தன் புலன் இன்பத்திற்காக, புகழோ, ஐஸ்வர்யமோ கிடைக்கும் என்பதால் பகவானின் மூர்த்திகளை வைத்து பூஜைகள் செய்பவன், ராஜஸன். பரம புருஷனிடமே மனதை அர்ப்பித்து, யாக காரியங்களை செய்பவன் சாத்விகன். என்னைப் பற்றி கேட்பதும், அனைத்து உயிரினங்களிலும் அந்தர்யாமியாக இருப்பவன் என்ற பாவனையோடு, மனத் தடுமாற்றம் இன்றி கங்கை நீர் கடலில் சேருவது போல, தொடர்ந்து ஒரே கதியில் செல்லும் மனோ பாவம் – பக்தி யோகத்தின் லக்ஷணம்.
காரணமேயின்றி புருஷோத்தமனிடத்தில் பக்தி என்பதே உயர்வு. சாலோக்யம், சாமீப்யம், சாரூப்யம், அல்லது பகவானுடன் ஒன்றாக ஆதல், இவைகளைக் கூட உயர்வாக எண்ண மாட்டார்கள். முக்குணங்களையும் கடந்து என் பாவமே பெரியதாக உணருவார்கள். ஸ்வ தர்மத்தை விடாமல் செய்து கொண்டு இருப்பார்கள். சுலபமான கர்ம யோகம்- யாக காரியங்கள் அல்லது சாஸ்திரங்களில் விதிக்கப் பட்ட காரியங்கள் மட்டுமே. அதிலும் அளவுக்கு மிஞ்சி போகாமலும், உடல் வருத்திக் கொள்வதும் இல்லாமல், நித்யமும் என் தியானம், தர்சனம், ஸ்பர்ச, பூஜா விதிகள், துதி, வந்தனைகள், சகல உயிர்களிடமும் என்னையே காண்பது, சத் சங்கம் இவற்றுடன், பெரியவர்களிடம் மரியாதை, சிறியோர்களிடம் பரிவு, சமமானவர்களிடம் நட்பு, மற்றும் யம நியமங்கள், என்று இருப்பார்கள். ஆத்யாத்மிக சொற்பொழிவுகளைக் கேட்கலாம், நாம சங்கீர்த்தனைகளில் கலந்து கொள்ளலாம், நேர்மையாக உள்ள மக்களுடன் இணைந்து செயலாற்றலாம், தான் செய்கிறேன், தனது என எண்ணாமல் பொது வேலைகளில் ஈடுபடலாம், இவைகள் என் தர்மத்தைப் பேசுபவை, என் நாமத்தை கேட்டுக்கொண்டிருந்தாலே இந்த குணங்கள் வந்து சேரும். எங்கோ காற்றில் கலந்த மணத்தை நம் நாசி இழுத்துக் கொள்வது போலத்தான். யோகத்தில் கவனம் உள்ள மனம் தன் ஆத்மாவை அறிந்து கொள்ளும். நான் எல்லா உயிரினங்களிலும் எப்பொழுதும் இருப்பவன். இதை அறிந்த மனிதர்கள் என்னை அர்ச்சா வடிவில் வணங்குகிறார்கள். அனைத்து உயிரினங்களிலும் உள்ள என்னை அர்ச்சா (சிலை, படங்கள்) என்று பார்ப்பதும் ஒரு வழி.. மனதில் தனக்கும் மற்றவர்களுக்கும் தாரதம்யம் பார்க்காமல் இருப்பவன் நல்ல கதியடைவான். எல்லா ஜீவன்களுமே ஸ்ரேஷ்டர்கள்- சிறந்தவர்கள் தான். அதில் சித்தம்-மனம் புத்தி இருப்பவன் சற்றே மேலானவன். அதிலும் ஸ்பர்ஸ வேதி களைவிட, ரஸம் அறிந்தவர்கள் மேல். அதை விட கந்தம் நுகர முடிந்தவர்கள் மேல். அதை விட சப்தம் அறிந்தவர்கள் மேல். ரூப பேதங்களை அறிபவர்கள் சிறந்தவர்கள். நிறைய பாதங்களை உடைய ஜீவன்களை விட, நான்கு கால்களுடைய ஜீவன்கள் மேல்., அதை விட மேல் இரு கால்கள் உடைய மனிதன்.
அதே போல வர்ணங்கள் நான்கு. அதில் ப்ராம்மணன் முதல், அவர்களிலும் வேதம் அறிந்தவன், அதை விடவும் அதன் பொருளை உணர்ந்தவன் மேல். பொருள் அறிந்தவர்களிலும் சந்தேகங்களை சரியாக விவரித்து தகுந்த பதில் சொல்ல அறிந்தவன் மேல். அதைவிட தானே தன் வேலையைச் அல்லது தொழிலைச் செய்பவன். கூட்டம் சேர்க்காமல் தானே தர்மத்தை உணர்ந்து செய்பவன் அதிக பலன் பெறுவான்.
பகவான் ஒரு அம்சமாக என்னுள் உள்ளது போலவே அனைத்து உயிரினங்களிலும் இருக்கிறான் என்பதை திடமாக உணர்பவன் தான் சிறந்தவன். பக்தி யோகம், கர்ம யோக மார்கம் இரண்டுமே மனிதர்களுக்கு உகந்தது. ஏதோ ஒன்றில் நம்பிக்கை வைத்து அனுசரித்து வந்தாலே பகவானை அடையலாம்.
ப்ரும்மன் என்றும் பரமாத்மா என்றும் ப்ரதானம் என்றும், புருஷன், என்றும் சொல்லப்படுபவன். தைவம் என்பது கர்மா அல்லது செயலை குறிக்கும். ரூப பேதங்கள் அடிப்படையில் தெய்வம், காலம் எனப்படும்.
பஞ்ச பூதங்கள், மஹத் முதலானவை, இவையும் பகவானால் படைக்கப் பட்டவையே. யாரும் தன்னைச் சார்ந்தவன் என்றோ, த்வேஷி என்றோ , எளியவன் என்றோ, பலவான் என்றோ பேதங்கள் பகவானுக்கு இல்லை.
அவரிடம் பயந்து வாயு வீசுகிறது, சூரியன் தபிக்கிறான், மழை காலத்தில் பொழிகிறது, நக்ஷத்திர கூட்டங்கள் பிரகாசிக்கின்றன. காட்டில் மரங்கள் வளருகின்றன, லதா, செடி கொடிகள், புதர்கள் ஔஷதிகள் தங்கள் பருவ காலங்களில் தவறாமல் பூக்கின்றன, பழுக்கின்றன.
அவருடைய கண்காணிப்பில் ஆறுகளில் நீர் ப்ரவஹிக்கிறது. சமுத்திரம் தன் எல்லையை கடக்காமல் இருக்கிறது. அக்னி எரிபொருளில் மறைந்தே இருக்கிறது. மலைகளையும், மரங்களையும் தாங்கும் நிலம் மூழ்குவதில்லை. ஆகாயம் மூச்சு விடும் உயிர்களுக்கு தன் உடலைத் தருகிறது. – பிராணிகள் விடும் உள்மூச்சு வெளி மூச்சு ஆகாசத்தில் கலக்கிறது. அகங்காரத்துடன் கூடிய மஹத் தத்வம் ப்ரும்மாண்டத்தில் ஏழு ஆவரணங்களுடன் விஸ்தரிக்க இடம் கொடுக்கிறது.
காலம் என்ற நியமத்தால், விஷ்ணு முதல் படைப்புத் தொழிலில் உள்ள அனைவரும், சராசரங்களில், ஜகத் ரசனா- உலகை உருவாக்குதல் என்ற காரியத்தை செய்ய முடிகிறது. மற்றவர்களுக்கு தடை விதித்தும், முடித்தும் வைக்கும் காலன் ஸ்வயம் அனாதி எனப்படுகிறான். (ஓரு ஜீவனின் காலத்தை முடிக்கும் பொழுதே மற்றொன்று பிறக்கச் செய்கிறான்- தந்தையிடமிருந்து புத்திரனை உத்பத்தி செய்கிறான் என்பதாக) தன்னுடைய சம்ஹார சக்தி – ம்ருத்யு என்பதை கொண்டு, யமராஜன் முதல் அனைவருக்கும் முடிவைத் தர வல்லான்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம் – என்ற மூன்றாவது ஸ்கந்தத்தின், இருபத்து ஒன்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் – 45)
அத்யாயம்-30
கபிலர் சொன்னார்: பொதுவாக ஜனங்கள் காலத்தின் சக்தியை உணருவதில்லை. மேகத்தை வாயு அலைக்கழிக்கிறது. அதன் சக்தியை அறியாத மேகம், காற்றினால் தான் தள்ளப் படுவதை உணருவதில்லை. அது போலத் தான். பின்னால் சுகமாக இருக்க இப்பொழுது உழைக்கிறார்கள். தன் தேகம் சுற்றத்தார் அனைவரும் சாஸ்வதம்- அழிவில்லாமல் இப்படியே இருப்போம் என்ற எண்ணம். வீடு, நிலம், செல்வம் எல்லாமே நிலை பெற்று என்றும் இருக்கும் என அறிவில்லாமல் நம்புகிறார்கள். எந்த விதமான உடலோ, ஜீவன் அதிலேயே லயித்து வாழ்கிறது. மிக வருத்தமான சூழ்நிலையிலும் உடலைத் தியாகம் செய்ய முன் வருவதில்லை. தான், தன் மனைவி, மகன்,வீடு, பசுக்கள், செல்வம், உறவினர் இவர்களிடம் பற்றுதல் -அதன் காரணமாக தன்னை பெரியதாக எண்ணிக் கொள்கிறான். சிறு குழந்தையின் கல கலவென்ற பேச்சு , பெண்களின் சகவாசம் தரும் சுகம், வீட்டின் துக்கம் தரும் செயல்களையும் சுகமாகவே நினைக்கிறான். செல்வத்தை நிறைய சேர்த்தால் சுகம் என்று நம்புகிறான். வெட்டி பேச்சு, காரணமின்றி மற்றவர்களிடம் பொறாமை, குடும்ப பொறுப்பு, அதைச் சார்ந்த வேலைகளால் ஓய்ச்சல், செலவு அதிகம், வரவு குறைவு, பற்றாக்குறை, அதனால் கவலை. இப்படி உலக வாழ்க்கையில் தான் தன்னைச் சேர்ந்தவர்களை காப்பாற்றவே திணறுகிறான். அப்படி செய்தாலும் வயதான காலத்தில் தன் உடலும் சக்தி இழந்து, அவர்களிடமும் மதிப்பு இல்லாமல் போகிறது. வயதான பசு போல. தவிர, முதுமை பலவிதத்திலும் சிரமத்தையே தருகிறது. மரணத்தை எதிர் நோக்கி, பயத்துடனே வாழ வேண்டியிருக்கிறது. வியாதி காத்திருக்கிறது. கபம், ஆயாசம், இருமல் என்று பல வித தொல்லைகள். யம தூதர்கள் வருவார்கள். ராஜ சேவகர்கள் போல, கட்டி இழுத்துச் செல்ல வருவார்கள். நரகமா, அந்ததாமிஸ்ரம் என்ற இருட்டு குகையா, எங்கு செல்லப் போகிறோம் என்பது தெரியாது. எங்கு செல்வோம் எப்படி இருப்போம் எந்த உறவினர்கள் உடன் வருவார்கள், எதுவுமே தெரியாது. இந்த ஜன்மத்திலேயே நரகம் போன்ற துக்கத்தையும் ஸ்வர்கம் போல சுகங்களையும் அனுபவித்து விடுகிறார்கள். குடும்பத்தை நிர்வக்கிக்கவும், தன் உதர நிமித்தமோ செய்த செயல்களை, சேமித்தவைகளை விட்டுப் போகும் ஜீவன் இந்த ஜன்மத்தின் கர்ம பலனை அனுபவிக்கிறான். அதர்மமாக தனக்கு, தன் சுற்றத்தார்களுக்கு மட்டுமாக செய்த செயல்களின் பலன் அந்ததாமிஸ்ரம் என்ற மிக தாமசமான இடத்தையடைகிறான். இந்த லோகத்துக்கு கீழே நரகம் இன்னமும் கடுமயான அந்த் தாமிஸ்ரம் என்ற நிலைகள், இவைகளில் யாதனைகள்- தண்டனைகளை அனுபவித்து விட்டு மீண்டும் பிறக்கிறான்.
மேலும் விவரமாக கர்ம பலனாக நரகத்தை அடைவதை சொல்கிறார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம் – என்ற மூன்றாவது ஸ்கந்தத்தின், முப்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் – 34)
அத்யாயம்-31
வினைப் பயனை அனுபவித்து முடிந்தவுடன் புது உடலுடன் பிறப்பதை சொல்கிறார். முன் சொன்னபடி, பிறப்பும் இறப்பும் தெய்வ சங்கல்பம் . அதன் படி, புருஷ ஜீவனின் ரேதஸ், ஒரு துளி, ஸ்த்ரீ தேகத்தில் புகுந்து புது ஜீவனை உருவாக்குகிறது. ஆரம்பத்தில் இரண்டும் சேர்ந்து ஐந்து இரவுகளில் உருண்டையான சேறு போல குழம்பி இருக்கும். அதன் பின் பத்து நாட்களில் இலந்தை பழம் (பதரீ) அளவு வளரும். இந்த சமயம் கடினமாக உருவம் பெறும். ஒரு மாதத்தில் தலை, இரண்டாவது மாதம் கைகள், மூன்றாம் மாதம் நகம், ரோமம், அஸ்தி (எலும்புகள்) மேல் தோல், ஆண், பெண் குறி, நாலாவது மாதம் தாதுக்கள், (ஏழு) ஐந்தாவது மாதம் பசி தாகம், ஆறாவது மாதம் உயிர் வருவதால் இடது பக்க வயிற்றினுள் வளைய வரும். தாயின் உண்ணும் உணவில் அந்தந்த பிறவியின் இயல்புக்கு ஏற்ப, பிறக்கும் புது ஜீவன் தன் உணவைப் பெறும். ஆயனீ என்ற நாடியால் தாயின் நாபியுடன் இணக்கப்படும்.
இந்த நிலையில் உணர்வுகள் பசி, தாகம் தவிர, புத்தி (மூளை) செயல்படுவது, பல முன் பிறவிகளின் நினைவுகள், அதனால் கூண்டில் அடைபட்ட பறவை போல தவிக்கும். ஏழாவது மாதத்தில் மேலும் அறிவு வளரும். பூர்வ ஜன்ம வாசனை இருந்தால் பகவானை துதிக்கும். கர்பத்தில் தங்குவதற்காக ஏழு விதமான பந்தங்களால் கட்டுபட்டிருக்கும் ஜீவன் ஆவலுடன் கர்பாவாசம் முடிந்து பூமியில் பிறப்பதை எதிர் நோக்கி இருக்கும். தாயின் ஒவ்வொரு அசைவினாலும் பாதிக்கப் படும் ஜீவன் வருந்தி அழும். ஸ்ரீ க்ருஷ்ணரை வணங்கி இனி பிறவியே வேண்டாம் என்று வேண்டிக் கொள்ளும்.
ஜந்து வேண்டுதல்: பல சரீரங்களில் இருந்து புறப்பட்டு வந்த பின்னும், இந்த ஜகத்தில் பிறக்க ஆசைப்பட்டேனே. இனி பிறவியே வேண்டாம் , உன்னையே சரணடைகிறேன். என் வினைகளே தான் தற்சமயம் இந்த தளைகள் என்று அறிந்து கொண்டேன். இந்த மாயா மயமான சரீரத்திலும் நீ என் ஹ்ருத்யத்தில் வசிக்கிறாய். உன்னை வணங்குகிறேன். பஞ்ச பூதங்களால் ஆன இந்த சரீரத்தில் மறைந்திருக்கும் அளவற்ற மகிமையுடைய ப்ரக்ருதி புருஷன் என்ற இரண்டு விஷயங்களுக்கும் மேலான பர புருஷனை வணங்குகிறேன். இவ்வாறு பலவாறாக துதிக்கும். பிறந்த பின் தன் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற பயம் ,மற்றொரு முறை இந்த கர்ப வாசம் வேண்டவே வேண்டாம் பகவானே என்று கதறி அழும்.
பத்து மாதம் ஆனவுடன், சூதி மாருத:- ப்ரசவத்தை நடத்தி வைக்கும் வாயு வந்து கீழே தள்ளிவிடும். திடுமென பிறப்பு – வாக்கும் இன்றி, கவலையுடன் கஷ்டப்பட்டு- மூச்சு விட கூட சிரமத்துடன் மெள்ள நகரும். இதுவரை இருந்த ஞானம் எங்கே போயிற்று? மல மூத்திரங்களின் இடையில் மனதில் நினைப்பதை வெளியில் சொல்ல முடியாமல் வாய் மூடி கிடக்கும். தூங்கப் பண்ணுவார்கள். படுக்கை பிடிக்காது. ஏதேதோ, வேர்வை முதலான பழக்கமில்லாத நெடி இது ஒரு வாதனை. சற்றே வளர்ந்த பின் வேறு விதமாக அவஸ்தைகள். கேட்டது கிடைக்காது. அறியாமை, சம்பந்தமில்லாத கோபம், ஆத்திரம். வருத்தம். காம க்ரோத லோபங்களுடனேயே வளரும் மனித ஜீவன். பஞ்ச பூதங்களாலான சரீரம் என்பதெல்லாம் மறந்து, நான் எனது என்றே நினைத்திருக்கும். திரும்பவும் வினைப் பயங்கள், புதிய கர்ம பந்தனங்கள், யாருடன் நட்பு, எது கூடா நட்பு என்பது தெரியாது. உடல் உபாதைகள், இதற்கிடையில் சிறிய சிறிய சந்தோஷங்கள், முன் போலவே வாழும். சத்யம், தயா, மௌனம், ஒழுக்கம், புத்தி, ஸ்ரீ, ஹ்ரீ, புகழ், பொறுமை, சம தமம், பகம் என்ற ஆறு குணங்கள் இவைகள் அசத் சங்கத்தால் கெடும்.
இவ்வாறு உலக வாழ்க்கையின் கஷ்ட நஷ்டங்களையும், சங்கத்தால் உயர்வதும் தாழ்வதும், காம க்ரோதாதிகளை அடக்க முடியாமல் தவிப்பதுமான உலக வாழ்கையை விவரித்து, பின் சமாதானமாக சொல்கிறார். புத்தியால், நல்ல விஷயங்களை அறிந்து, இது தான் ஜீவ கதி என்று தெரிந்தபின் முக்தியை அடையும் வழியில் மனதை செலுத்தி யோக வைராக்யங்களுடன் ,மாயையால் பாதிக்கப்படாமல் இந்த உலகில் வாழ்ந்து பரகதியை அடையலாம். அதனால் கவலையோ, பயமோ, பதட்டமோ வேண்டாம். என்றார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம் என்ற மூன்றாவது ஸ்கந்தத்தின், முப்பதாவது ஒன்றாவதுஅத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் – 34)
அத்யாயம்-32
மனிதனாக பிறந்தவன் வளர வளர, பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறான். குடும்ப வாழ்க்கை, குழந்தைகள், முதியவர்கள், சுற்றத்தார் என்று பலருக்கும் அவன் உதவி செய்வதும் அந்தந்த வயதுக்கான தர்மத்தை பாலனம் செய்வதும் இயல்பாக அமைகிறது. பொருள் ஈட்டவும், பல செயல்களைச் செய்யும் பொழுதும், நல்லதும் நன்மை அல்லாததுமான இருவிதமான வினைகள் தொடருகின்றன. பகவத் பக்தி மட்டுமே என்றிருந்த நிலை மாறி, யாக காரியங்கள், தேவ காரியங்கள், பித்ரு காரியங்கள் என்று அவனுடைய கவனம் சிதறுகிறது. குடும்பஸ்தனுக்கு இவை தேவையே. இதில் ஏற்படும் சிரத்தை பகவானிடத்தில் மனம் ஒன்றி பக்தி செய்யும் நேரத்தையும், ஈடுபாட்டையும் குறைக்கிறது. அதனால் இந்த பிறவி முடிவில் மரணித்த பின் சாந்த்ரமஸம் என்ற லோகம் செல்கிறான். இந்த இடத்திற்கு சென்றவர்கள் வினைப் பயனுக்கு ஏற்ப சுகமாக இருந்துவிட்டு திரும்ப பிறப்பார்கள். பாம்பணையில் துயிலும் பகவான் போல இந்த குடும்பஸ்தர்களுக்கு இக வாழ்க்கை முடிகிறது. தீரர்களாக இருப்பவர்கள், காமார்தங்களில் மூழ்காமல், தர்மம் மட்டுமே என்று இருப்பவர்கள், இவர்கள் சுத்தமான மனதுடன் தனிமையில் சாந்தமாக யோக சாதனைகளோ, தியானங்களோ செய்வர்.
ஞான மார்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள், தான், தனது என்ற மமதை இல்லாமல், தன் தர்மத்தை செய்வதிலும் சாத்விகமாக சுத்தமான மனதுடன் செய்வார்கள். இவர்கள் சூரியனின் வழியில் மேலுலகை அடைகிறார்கள். அனந்தனான பகவானிடத்தில் சென்று. அழியாத தன்மையை அடைவார்கள். மறு பிறப்பு இவர்களுக்கு இல்லை. தன் இக லோக வாழ்க்கையில் பற்றின்றி இருந்ததன் பலனாக, நிலம்,நீர்,காற்று,தீ,காற்று, வானம் எனும் ஐந்தும் மனம் இந்திரியங்கள் என்பவைகளும் சேர்ந்து உண்டாகும் அழியும் தன்மையுடைய பூத உடல் இவர்களுக்கு வராது. வைகுண்ட லோகம் எனும் பரமாத்மாவின் உலகிலேயே சாஸ்வதமாக பகவானின் பணியில், ஈடுபட்டவர்களாக இருப்பர்.
தாயே! அந்த சர்வ ஜீவன்களின் ஹ்ருதயத்திலும் வசிக்கும் நாம் கேட்டு அறிந்த பகவானையே சரணம் அடைவாயாக. இவர் ஆதி – முதல் முதல்வர். வேத கர்ப:- வேதத்தை அறிந்த ரிஷிகளுடன் இருப்பார். யோகேஸ்வர்கள். குமாரர்கள், சித்தர்கள், யோக சாதனையில் வென்றவர்கள் இவரை சூழ்ந்து இருப்பர்.
அபிமானம் முதலான தன் பிறர் என்ற உணர்வு இல்லாமல் தனித்து சாதனைகள செய்ய, சகுணமாக -உருவத்துடன் புருஷோத்தமன் ப்ருஷர்ஷபன்- என்றெல்லாம் அழைக்கபடும் ப்ரும்ம தத்வம் இவற்றைஅந்த ஈஸ்வர மூர்த்தியில் கண்டு, வழிபடுவதும் ஒரு முறை. இவர்களுக்கும் மறு பிறவி உண்டு.
தர்ம வழியில் உழைத்து சேர்த்த செல்வம், அதையும் தர்ம வழியிலேயே பலருக்கும் உதவுமாறு செலவழித்த நன் மக்களும் மறு பிறவியடைவார்கள். யாக கரியங்களை செய்பவர், கர்ம யோகிகள், இவர்கள் செய்யும் செயலில் ஈடுபாட்டுடன் செய்வதுடன், பலனை எதிர் பாராமல் செய்கிறார்கள். சிரத்தை – செய்யும் தொழிலில் நம்பிக்கையும், திறனும் தான் செய்கிறோம் என்ற எண்ணம் இல்லாமல் செய்வது- இவர்கள் குறைகளுக்கு அப்பாற்பட்டவர்கள். பொது மக்களுக்கு அனுகூலமாக இருப்பவர்கள். இவர்களுக்கும் மறு பிறவி உண்டு.
ராஜஸ குணமே மேலோங்கி இருப்பவர்கள். இந்திரியங்களை அடக்க முடியாதவர்கள், காமமே பெரிதென்று வாழ்பவர்கள். இவர்கள் பித்ரு லோகத்தை அடைகிறார்கள். அதன் பின்னும் தன் குடும்பத்தாரை நேசிப்பார்கள்.
ஹரியை எதிர்ப்பவர்கள், அவரை வணங்காத பலர் தெய்வ நிந்தனை செய்பவர்களாக, அச்யுத கதையின் ருசி தெரியாதவர்களாக, வேண்டாத கதைகளை கேட்பவர்களாக, விஷத்துக்கு சமமான மட்டமான ஆகாரங்களை உண்பவர்கள், தென் திசை நோக்கிச் செல்வர். பித்ரு லோகம் செல்வர். இவர்கள் திரும்ப பிறந்து, இறந்து என்று, மரணம் வரையிலான வாழ்க்கையையே திரும்ப வாழ்வர். இவர்கள் செய்த சுக்ருதங்கள், நல்ல காரியங்களின் பலன் தீரும் வரை, தேவ லோகமோ, பித்ரு லோகமோ அதில் இருந்து, புண்யம் தீர்ந்தவுடன் , மறுபடியும் பூமியில் விழுவார்கள்.
அதனால், பரமேஷ்டி என்ற பகவானை மனம் ஒன்றி பூஜை செய். அவருடைய அருளால் நல்ல கதியை அடைவாய். வாசுதேவன் தான் பகவான். அவனிடத்தில் செய்வது தான் பக்தி யோகம். அதை செய்யும் பொழுது சீக்கிரமே வைராக்யம் கை கூடும். ப்ரும்ம தர்சனம் என்ற ஞானம் வரும். தனக்கு பிரியமானவன், மற்றவன் வேறு என்ற எண்ணம் மாறும். அனைவரையும் சமமாக பார்க்கும் , தள்ளத் தகுந்தது, இது ஏற்கத் தகுந்தது என்ற பாகுபாடுகள் அவனிடத்தில் இல்லை. மாறு பட்ட கொள்கையுடையவன் என்பதால் ஒருவனை வெறுக்காத அவன் பதம் தான் நமக்குத் துணை. பர ப்ரும்மம் – ஞானமே உருவானவன்- அறிவே அவன். பரமேஸ்வர:- பலவிதமான பாவனைகளுடன் பார்த்தாலும் பகவான் ஒருவனே.
இந்த நிர்குணமான ப்ரும்மத்தையே, சிலர் அர்த்த ரூபத்தில் காண்பர். மகானான இவன் ரூபம், மூன்று விதமாக விரியும். ஐந்து விதமாக விரிந்து ஸ்வராட்- , பதினோறு விதமாக விரிந்து ப்ரும்மாண்டம் என்று பார்த்தோம். இதை சிரத்தையுடனும், பக்தியுடனும் தியானம் செய்.
இது தான் ப்ரும்ம தரிசனம் – இந்த பிறவியில் நாம் பெறக் கூடிய பெரிய அறிவு, செல்வம் எல்லாம். ப்ரக்ருதி, புருஷன் என்ற தத்வங்கள். முடிவாக நாம் அறிவது, ஞானமோ, கர்மமோ, யோகமோ, அதனதன் சிறப்புகளையுடையதே. , சகுணமோ, நிர்குணமோ, தன்னையறிதல் என்பதோ ஆத்ம தத்வம் என்பதை காலக்ரமத்தில் தெரிந்து கொள்ள உதவும். பலவிதமான வழிகள், ஜீவனின் கதிகள், எந்த உடலில் பிரவேசித்து உயிர் வாழ்கிறதோ. ஆத்மாவை அறிய மனிதனுக்குத் தான் வழிகள் உள்ளன. இந்த உண்மையை வினயம் இல்லாதவன் நிம்பிக்கையில்லாதவன் புரிந்து கொள்ள முடியாது. அசடானவன், முற்றிலும் மாறான எண்ணம் உடையவனும் புரிந்து கொள்ள முடியாது. அவர்களுக்கு இவற்றைச் சொல்லவே வேண்டாம், லோபம் உடையவனுக்கும், என்னை எதிர்க்கும் மூடர்களுக்கும் சொல்ல வேண்டாம். தெரிந்து கொள்ள விரும்புபவன், உண்மையான அறிவு தாகம் உடையவனுக்கு சொல்லுங்கள். அவன் தன்னை மேம்படுத்திக் கொள்ள உதவும். பொறுமையாக கேட்க விரும்பும் தன் ஒழுக்கத்துடன் இருப்பவனுக்குச் சொல்லுங்கள். வெளி வேஷம் போடுபவனிடம் விழிப்புடன் இருங்கள். அவனால் கெடுதலே.
தாயே! இதை கேட்பவனுக்கும் நன்மைகள் வந்து சேரும். சிரத்தையுடன் கேட்பவன் என் அருளைப் பெறுவான்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம் என்ற மூன்றாவது ஸ்கந்தத்தின், முப்பதாவது இரண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் – 43)
அத்யாயம்-31
மைத்ரேயர் சொன்னார்: கபிலர் இதுவரை சொன்ன விஷயங்களக் கேட்ட பின் தாயான தேவஹூதி, கர்தம தர்ம பத்னி, தன் மோகம் விலகியதாக உணர்ந்தாள். கபிலரை வணங்கினாள். மகனிடம் சொன்னாள். நீயே தான் அந்த அஜன். பூமியில் பிரஜைகள், மற்றும் சகல உயிரினங்களின் நன்மைக்காக பிரளய ஜலத்தில் உறங்கிய ஆத்ம மயமான உருவம். குணங்களே ப்ரவாஹமாக உள்ளவன். அனைத்து உயிரினங்களுக்கும் பீஜமாக இருப்பவன் என் வயிற்றில் பிறந்தாய்.
ஆத்மேஸ்வரன், ஆயிரக் கணக்கான சக்திகளை உடையவன். உலகுக்கே தந்தையாக இருப்பவன் என் வயிற்றில் பிறந்தாய். என்ன பாக்கியம் செய்தது என் வயிறு. யுக முடிவில் வடபத்ர சாயியாக இருப்பவன் என் மகனாக, விரலை சூப்பிக் கொண்டு தூங்கினாய். இந்த தேகமே நீ அளித்தது. ஸூகரன் முதலான அவதாரங்கள் உன் அடியார்களை உய்விக்கவே. இந்த அவதாரமோ, உன்னை அடையும் வழியைச் சொல்ல மட்டுமே. எவருடைய நாம ஸ்ரவணம்- பெயர்களை கேட்பதும், தானும் சொல்வதும், வணங்கி, சதா மனதில் எண்ணி இருப்பதும் உடனடியாக பலனளிக்க கூடியதோ.அதைச் சொன்னாய். கண்ணெதிரில் கண்டவர்களின் பாக்கியத்திற்கு அளவேது? உன்னை நமஸ்கரிக்கிறேன். நீயே பரப்ரும்மம் , உன் தேஜஸால் முக்குணங்களையும் ஆள்பவன், நீயே வேதத்தை தன்னுள் வைத்திருக்கும் அந்த மஹா விஷ்ணு, கபிலனாக வந்துள்ளாய்,
கபிலர் தாயை சமாதானப் படுத்தினார். தாயே! என்னுடைய உபதேசங்கள் அனைவருக்கும் ஆனாலும், உனக்கு நல்ல கதியைத் தரவே. இந்த கொள்கை ப்ரும்ம வாதிகளுக்கானது. அவர்கள் விரும்பியபடி உடலை தியாகம் செய்யக் கூடியவர்கள். நீயும் இதில் நம்பிக்கை வத்து சிரத்தையாக அனுசரி. அதற்காகவே தான் நான் அவதாரம் செய்ததும். இப்பொழுது எனக்கு விடை கொடு.
தாயாரிடம் அனுமதி பெற்று கபிலர் வட திசையில் மறைந்தார். அவளும் சரஸ்வதி நதி தீரத்தில் தவம் செய்து, யோக சாதனைகளை முறையாக செய்து, தீவிரமாக தவத்தில் ஈடுபட்டாள். ப்ரஜாபதி கர்தமருடன், தனது இக லோக குடும்ப வாழ்க்கையை நினைத்து பெருமை பட்டாள். அவருடன் விமானத்தில் சென்றதும், ஒப்புவமை இல்லாத இல்லறம். கர்தமருடைய அன்பும், தன் தேஜஸால் விமானத்தில் அழைத்துச் சென்றதும். அதில் இருந்த வசதிகளையும் நினைத்துப் பார்த்தாள். மகன் சொன்ன வழியிலேயே தற்சமயம் தன் தேவைகளைக் குறைத்து, பகவத் தியானமாகவே இருந்து சித்தர்கள் அடையும் உயர் பதவியை அடைந்தாள்.
இந்த கதையை கேட்பவர்களும் நல்ல அறிவை அடைவார்கள்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம் என்ற மூன்றாவது ஸ்கந்தத்தின், முப்பத்து மூன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் – 37
மூன்றாவது ஸ்கந்தம் நிறைவுற்றது.
|| ஸ்ரீமத் பாகவதத்தில் காபிலோபாக்யானம் என்ற மூன்றாவது ஸ்கந்தம் நிறைவுற்றது ||
ஓம் தத் சத் ||
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||
அத்யாயம்-1
பரீக்ஷித் ராஜா வினவினான்: ப்ரும்மன்! நீங்களே பகவான், அனைவரிடமும் சமமாக நடந்து கொள்வார். அனைவருக்கும் நண்பனாக பிரியமாக இருப்பவர். என்று சொன்னீர்கள். இந்திரனுக்கு சாதகமாக தைத்யர்களை கொன்றார் என்றும் கதை சொன்னீர்கள். அது ஏன்? சுரகணங்கள் எந்த விதத்தில் உயர்வு. அசுர்கள் மட்டுமே தண்டிக்கப் படுகிறார்கள். குணமில்லாத தேவர்கள் கூட அவருடைய கோபத்துக்கு ஆளாவதில்லையே. நாராயண குணங்களை சொல்லிக் கேட்டபின் இந்த சந்தேகமும் வருகிறது. தாங்கள் தான் இதற்கு சமாதானம் சொல்ல வல்லவர்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: மஹாராஜா! நல்ல கேள்வி. ஸ்ரீ ஹரியின் சரித்திரம், பாகவத மாஹாத்ம்யம் பக்தியை வளர்க்கும் அத்புதமான சரித்திரம். நாரதர் முதலிய ரிஷிகள் பாடி பரவச் செய்த புண்ய கதை. ஸ்ரீ க்ருஷ்ணனை வணங்கி மேலும் ஹரியின் கதையை சொல்கிறேன். பாரபக்ஷம் இல்லாமல் நாம் அறிந்த இயற்கையின் நன்மை தீமைகளைக் கடந்தவர். பிறவியற்றவன். நம்மால் அவருடைய செய்கைகளை விமரிசிக்க முடியாது. முக்குணங்கள் சத்வ, ரஜஸ் தமஸ் என்பவை உயர்வும் தாழ்வும் நாம் அதில் காண்பது தான். ஸ்ரீஹரி அதற்கு அப்பாற் பட்டவர், அதனால் வருத்தமோ, மகிழ்ச்சியோ அவருக்கு இல்லை. பிறவியில் சத்வம் மேலோங்கி இருந்த பொழுது தேவ ரிஷிகள் தோன்றினர். ரஜஸ் மேலோங்கி இருந்த சமயம் அசுரர்கள் தோன்றினர். தாமசம் மேலோங்கி இருந்த சமயம் யக்ஷ, ராக்ஷஸர்கள் தோன்றினர்.
ஆதித்யனிடம் வெளிச்சம், கட்டைகளில் நெருப்பு, பாத்திரங்களில் நீர், கடத்திலும் வெளியிலும் ஆகாசம், வாசனை மூலம் காற்று என்று சுட்டிக் காட்டுவது போல பகவானை சுட்டிக் காட்டவழியில்லை. கவிகள், அறிஞர்கள் தாங்கள் அனுபவத்தால் கண்டறிந்து சொன்னார்கள். அசுர்களிடம் பக்ஷபாதம் காட்டி வதம் செய்வதாக நினைப்பது தவறு. ப்ரும்ம சாபத்தால் அசுர குலத்தில் பிறக்க நேரிட்ட ஜீவன்களை, மீட்கவே வதம் செய்தார்.
ராஜன்! முன் ஒரு சமயம் அஜாத சத்ரு என்று பெயர் பெற்ற தர்ம புத்திரர், யாகம் செய்த பொழுது நடந்த சம்பவம். சேதி ராஜன் என்ற சிசுபாலனுக்கு வாசுதேவன் சாயுஜ்யம் எனும் தன் அருகிலேயே வாசம் செய்யும்படியான அனுக்ரஹத்தை அளித்தார். தர்மபுத்திரர் ஆச்சர்யப் பட்டார். அந்த யாக சபையில் கூடியிருந்த ரிஷி முனிவர்களை கேட்டார். ‘அஹோ! அத்புதம். தனிமையில் தவம் செய்பவர்களுக்குக் கூட கிடைக்காத நல்ல கதி. வாசுதேவன் என்ற பர தத்வத்தில் இந்த சேதி ராஜா சேர்ந்து விட்டான். வாசுதேவனை சதா நிந்தித்துக் கொண்டே இருந்தவன். பகவானை நிந்தித்த வேன ராஜா, தண்டனையை அடைந்தான். இந்த தமகோஷ சுதன்- சிசுபாலன், நிந்திக்கும் வார்த்தைகளையே பேசினான். தந்த வ்க்த்ரனும் கோவிந்தனிடம் அவன் மேன்மையை பொறுக்க மாட்டாமல் சபித்துக் கொண்டே இருந்தான். ப்ரும்மரூபன் பரம் பொருள், அழிவில்லாதவன் என்று நாம் போற்றும் க்ருஷ்ணனை வாய்க்கு வந்தபடி தூஷணைகளையே செய்தான். இப்படி பொது இடத்தில் அனைவரும் காண தவறாக பேசியவனைக் கூட பகவான் பொறுத்துக் கொண்டது மட்டுமல்ல தன்னிடமே சேர்த்துக் கொண்டார் என்பது நம்மால் நினைக்க கூட முடியவில்லை. பகவன்! இதற்கு என்ன காரணம்? தயவு செய்து சொல்லுங்கள்’ என்றார்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: நாரதர் பதில் சொன்னார். இது நிந்தனை, இது புகழ்ச்சி, இது நல்லது, இது கெட்டது என்று மனிதர்கள் கல்பித்துக் கொண்டவையே. சிலரை உயர்ந்தவர், என்றும் மற்றவர் தாழ்ந்தவர் என்றும் தங்களுக்குள்ளேயே பேதம் பார்ப்பதும் ,ஹிம்சையும், அபிமானத்தால் தண்டிப்பதும், கடுமையாக பேசுவதும், ஜீவன்களுக்குள் நம்மவர் பிறர் என்று பிரித்து வித்தியாசம் பார்ப்பதும் இவர்கள் அறியாமையே. அகில லோகமும் பரமாத்மாவில் அடக்கம். எனவே அவர் ஜீவன்களில் தாரதம்யம் பார்ப்பதுமில்லை. தண்டிப்பதும் அந்த ஜீவனின் நன்மைக்காகவே. பயத்துடன் அணுகுபவரும், அன்புடன் நெருங்குபவரும், காமத்துடன் – தன் தேவையை முன்னிட்டுக் கொண்டு வேண்டுபவரும், எப்படியோ அதே போலவே விரோதமாக நினைத்து வருபவரும், அவர் அருகில் சென்றபின் தனித் தனியாக நினைப்பதேயில்லை. ஒருவர் பக்தி யோகத்தால் அனவரதமும் நினைப்பது போலவே, விரோதியாக நினைப்பவனும் அனவரதமும் அதே நினைவாக இருக்கிறான். குளவி ஒரு புழுவை கொண்டு வந்து தன் கூட்டில் வைத்து தன் போல ஆக்குமாம். அந்த சிறு ஜீவன் குளவியையே பார்த்து பார்த்து தானும் அதுபோல ஆகுமாம், அது போல பகவானும் தன்னை விரோதிப்பவனையும் அருகில் தன் நினைவோடு இருக்கும்படி வைத்துக் கொள்கிறார். நாளடைவில் விரோதியும் பக்தனாவான் என்பதாக சொல்கிறார். இவ்வாறு மாயையால் மனிதனாக வந்த ஈஸ்வரன், ஸ்ரீ க்ருஷ்ணன், விரோதியையும் தன்னை நினைக்கச் செய்து அவன் பாபங்களைத் தீர்க்கிறார்.
காமத்தால், த்வேஷத்தால், பயத்தினால் ஸ்னேகத்தால், பக்தியால் என்று பலவிதமாக மனித மனதில் ஏற்றி, அவனை பாபங்களிலிருந்து விடுவிக்கிறார். கோபிகள் காமத்தால், கம்சன் பயத்தினால், சேதி அரசன் போன்றவர்கள் துவேஷத்தால், வ்ருஷ்ணி குலத்தவர் சம்பந்தம் செய்து கொண்டதால், உங்களைப் போன்றவர்கள் நட்பினால், பக்தியினால் நாங்கள் . வேனன் போன்றவர்கள் கடைசி நிலையில் உள்ளவர்கள். ஏதோ ஒரு உபாயத்தால் அவனையும் ஸ்ரீ க்ருஷ்ணனிடத்தில் மனம் லயிக்கச் செய்யவேண்டும்.
பாண்டவா! தாய் வழி உறவினன் சேதி அரசனும், தந்த வக்த்ரனும். இவர்கள் இருவரும் மஹா விஷ்ணுவின் அணுக்க தொண்டர்கள், வாசல் காவலர்கள். சாபத்தினால் அந்த பதத்திலிருந்து தள்ளப் பட்டனர்.
யுதிஷ்டிர் கேட்டார்: எப்படி சாபம் வந்தது? யார் சாபம் கொடுத்தது? ஸ்ரீ ஹரியின் அருகிலேயே இருந்தவர்கள் என்ன செய்து சாபத்துக்கு ஆளானார்கள். வைகுண்ட புர வாசிகள், தேக சம்பந்தமான தொடர்பே இல்லாதவர்கள் என்று கேட்டிருக்கிறோம்.
நாரதர் சொன்னார்: ஒரு சமயம், ப்ரும்மாவின் புதல்வர்கள் சனகன் முதலானோர் மூவுலகையும் சுற்றிக் கொண்டு வரும் வழியில் வைகுண்டம் சென்றார்கள். முன்னோர்களுக்கும் முன்னோர்கள். அவதூதர்கள், ஆறு ஏழு வயது வளர்த்தியிலேயே இருந்தனர். குழந்தைகள் என்று எண்ணி துவாரபாலகர்கள் தடுத்தனர். அவர்களை இந்த வைகுண்ட வாசத்துக்கு ஏற்றவர்கள் அல்ல, ரஜஸ் தமஸ் இல்லாத இந்த இடத்தில் யாரென்று கூட வினவாமல் கடுமையாக பேசுகிறீர்கள். உங்களுக்கு ஏற்ற அசுர குலத்தில் பிறக்கக் கடவீர் என்று சபித்தனர். ஆனாலும், கருணயுடன் மூன்று ஜன்மங்கள் அங்கு இருங்கள், பின் ஸ்ரீ ஹரியின் பாத சேவையில் திரும்பி வந்து சேருங்கள் என்றனர். அப்படி வந்தவர்கள், மூத்தவன் ஹிரண்ய கசிபு, ஹிரண்யாக்ஷன் இளையவன்; ஹிரண்ய கசிபுவை சிம்ஹ ரூபம் எடுத்து வதம் செய்தார். ஹிரண்யாக்ஷனை வராகமாக வந்து வதம் செய்தார். ஹிரண்ய கசிபு தன் மகன் ப்ரஹ்லாதன், கேசவ பிரியன் என்பதற்காகவே, மகன் என்றும் பாராமல் கொல்லத் துணிந்தான். பலவிதமாக முயன்றும், தர்ம பிரியனான ப்ரஹ்லாதன் பகவத் பக்தன், அமைதியானவன். சம தர்சனம் – அனைவரையும் ஒரே போல காணும் குணம் அவனுக்கு சர்பூதாத்ம பூதனான பகவான் அருளால் வாய்த்திருந்தது.
அடுத்ததாக கேசினீ என்பவளுக்கு விஸ்ரவஸர் மகனிடம் ராவண கும்பகர்ணர்களாக பிறந்தனர். ராமர் கையால் ராவணன் மாண்டான். ராம வீர்யம் பற்றி உனக்கு மார்க்கண்டேயர் சொல்வார். அவர்களே தற்சமயம் க்ஷத்திரியர்களாக, தாய் வழி உறவினர்களாக வந்து ஸ்ரீ க்ருஷ்ணரின் சக்ரத்தால் வதம் செய்யப் பட்டு நல் கதியடைந்து விட்டனர். விஷ்ணு பார்ஷதர்கள் என்ற துவார பாலகர்கள், திரும்பவும் தங்கள் பதவியை அடைந்தனர்.
யுதிஷ்டிரர் திரும்பவும் கேட்டார்: தன் மகனிடமே எப்படி அந்த அளவு துவேஷம் வந்தது? பகவன்! ப்ரஹ்லாதன் கதையைச் சொல்லுங்கள்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், முதல் அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-47
அத்யாயம்-2
நாரதர் சொல்லானார்:
தன் தம்பி ஹிரண்யாக்ஷனை வதம் செய்து விட்டார் என்று அறிந்து ஹிரண்யகசிபு அதிக கோபமும் வருத்தமும் அடைந்தான். கண்கள் சிவக்க, பல்லை கடித்தபடி, க 3தையை உயரத் தூக்கி தன் பக்கத்து தானவ தைத்தேயர்களை அழைத்தான். ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்து, பங்காளி வந்து என் சகோதரனை கொன்று விட்டான். மாயாவி, காட்டு மிருகம் போல க்ரூரமாக, சற்றும் குணமின்றி, சிறு பிள்ளைத் தனமாக செய்த செயலுக்கு அவனை என் ஸூலத்தால் பிளந்து கொட்டும் உதிரத்தை வைத்து என் தம்பிக்கு தர்ப்பணம் செய்யப் போகிறேன். வேரோடு குலத்தையே அழிக்கிறேன். அதன் பின் தேவலோகத்தவர், விஷ்ணு ப்ராணர்கள் – விஷ்ணுவே அவர்களின் மூச்சு- என்று சொல்லிக் கொள்கிறார்களே அவர்கள் ஒட்டு மொத்தமாக அழிவார்கள். நீங்களும் தவம் ஸ்வாத்யாயம் என்று செய்து உங்கள் பலத்தை பெருக்கிக் கொள்ளுங்கள். ஏனெனில் விஷ்ணு, அந்தணர்கள் செய்யும் யாகத்தால் வளருகிறான். யாகம் தர்ம மயமான பரம புருஷனே. தேவ, ரிஷி, பித்ருக்கள் அனைவரும் தர்மத்தை அறிந்து அதன் படி நடப்பவர்களே. எங்கெல்லாம், அந்தணர்கள், பசுக்கள், வேத பாராயணம் , வர்ணாஸ்ரம காரியங்கள் நடக்கின்றனவோ, அங்கெல்லாம் சென்று தீயிட்டு கொளுத்துங்கள். அதைக் கேட்டு சுயமாகவே கலவரத்தை விரும்பும் அவனுடைய அடியாட்கள், சென்ற இடம் எல்லாம் கலஹம் செய்தனர் தீ மூட்டினர், மக்களை பயமுறுத்தினர். புரங்களை, கிராமங்களை உத்யானவனங்கள், க்ஷேத்ரங்கள், ஓய்வு எடுக்கும் இடங்கள், மாட்டுக் கொட்டில்கள், குதிரை லாயங்கள், சேனை தங்குமிடம் எதையும் விடவில்லை தீக்கிரையாக்கினார்கள். பாலங்கள், ப்ராகாரங்கள், கோபுரங்கள் இவைகளை சுத்தியலால் தாக்கினர். நெடுங்காலமாக வளர்ந்த மரங்களை சிலர் கோடாலிகளால் வெட்டினர். இவர்கள் படுத்திய பாட்டில், தேவர்கள் தேவலோகத்தை விட்டு வெளியேறினர்.
ஹிரண்ய கசிபு, இனி இங்கு தைத்யர்களின் ஆதிக்கம் தான். நானே அழிவில்லாத ஆத்மா, சுத்தன், எங்கும் வியாபித்து இருப்பவன், என்றவன், மேலும் பல நல்ல குணங்களை தன்னிடம் இருப்பதாக சொல்லிக் கொண்டு, திரிந்தான். வேகமாக செல்லும் நதியின் நீரில், மரங்களும் உடன் செல்வது போல தோற்றம் தருவது போல, பூமியே தன் இஷ்டத்துக்கு ஆடுவது போல உணர்ந்தான். தன்னிடம் இல்லாத தெய்வத் தன்மையை தானே தன்னிடம் இருப்பதாக பறை சாற்றிக் கொண்டு உலவினான்.
தன் தாயிடமும், பெண் உறவினர்க்ளிடமும், புதல்வர்களையும் கவலைப் படாதீர்கள். சண்டைக்கு பயப்படவேண்டாம். எதிரியின் கையால் அடிபட்டு மாய்வது சிறப்பான மரணம் என்றான். வழிப் போக்கர்களுக்காக தண்ணீர் பந்தல் வைத்திருப்பர். அங்கு வருபவர்கள் தாகம் தீர தண்ணீரை குடித்துவிட்டு போவர். அவர்களுக்கும், அந்த தண்ணீர் பந்தலுக்கும் என்ன உறவு- சில நிமிடங்கள். தாகம் தீரும் வரையே-அதே போலத் தான் ஜீவன்கள் உலகில் வாழும் வாழ்க்கையுடன் தொடர்பும். நித்யமான ஆத்மா அழிவில்லாதது. சுத்தமானது, எங்கும் பரவி இருப்பது, அனைத்துக்கும் மேலானது. இந்த ஆத்மா ஒரு உடலில் தங்கி அந்த உடலுக்குரிய ஜீவனின் குணங்களை ஏற்றுக் கொள்கிறது. நதிக் கரையின் மரங்கள் அதன் ஓட்டத்தோடு இயைந்து நகருவது போல தோற்றம் தருவது போலவே, கண்களால் பார்த்து பூமி நகருவதாக நினைக்கிறார்கள். இந்த ஓட்டத்தோடு ஓடினாலும், தன்னையறிந்தவன், மனதில் கல்மஷம் இல்லாதவன், தானும் அந்த பரமாத்மாவுக்கு இணையாக ஆகிறான். நிரந்தரம் இல்லாத உடலை தனது என்று நினைப்பதும், உறவினர் அன்புடையவர், மற்றவர் என்று பிரித்து சொல்வதும், அவர்கள் பிரிவுக்கு வாடுவதும் வினைப் பயன்.
ஒரு செயல் நடப்பதும், அது முடிவதும், சோகமும், விவேகமும் அவிவேகமும், கவலையும் மறதியும் நிறைந்த இந்த கதையை யமராஜனின் பந்துக்கள் பேசிக் கோள்வதை வைத்து சொல்கிறேன் கேள்.
உசீனரன் என்ற இடத்தில் ஒரு அரசன், சுயக்ஞன் என்பவன், தன் தாயாதிகளுடன் யுத்தத்தில் கொல்லப் பட்டான். அவனை யுத்த களத்தில் பார்த்தவர்கள் மிகவும் வருந்தினர். ரத்ன கவசம் உடைந்து, ஆபரணங்கள் சிதறி எங்கும் இறைந்து கிடந்தன. ஹ்ருதயம் அம்புகளால் துளைக்கப் பட்டு, தரையில் கிடந்தான். பத்னிகள் இந்த நிலையில் கணவனை பார்த்து ஹா நாதா! என்று மிகவும் வருந்தி அழுதனர், பெரும் குரலில் அழுது, அஹோ, விதாதா! படைத்தவனே, கருணையில்லையா, எங்கள் பிரபு உசீனர எனும் ராஜத்தின் ப்ரஜைகளுக்கு வாழ்வின் ஆதாரமாக இருந்தவன், இப்பொழுது அவர்களுக்கு துக்கத்தை அளிப்பவனாக மாற்றி விட்டீர்கள். எங்கள் அரசன், எங்கள் கணவன் இல்லாமல் எப்படி வாழ்வோம்? எங்களையும் அவனுடன் சேர்த்து அழைத்துச் செல்லுங்கள் என்று முறையிட்டனர். சூரியனும் மறைந்தான்.
விடிந்த பின் சிறு பையனாக வேடம் தரித்து யம ராஜா அவர்களிடம் வந்தார். ‘அஹோ! இது உலக நியதி தான் என்று அறிந்தும் இப்படி பரிதவிக்கிறீர்களே. எங்கிருந்து வந்தார்களோ, அங்கேயே திரும்பிச் செல்வது தான் மனித தர்மம். அதை மறந்து இறந்தவனுக்காக எவ்வளவு துக்கம், அழுகை, ப்ரலாபம். நாம் எப்படி வந்தோம் இந்த பூவுலகத்துக்கு. நம் முன்னோர்கள் நம்மை நினைக்கிறார்கள். மற்ற ஓநாய் போன்ற மிருகங்கள் விழுங்கிவிடாதபடி கர்பத்தில் வைத்து தாய் காக்கிறாள். பிறந்த குழந்தையை அழிவில்லாத பகவான் காப்பாற்றுகிறார். தண்டித்தும் அரவணைத்தும் தந்தையாக வளர்க்கிறார். வழியில் விழுந்து அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைக்கிறது. வீட்டில் பாதுகாத்து வைத்திருப்பது அழிந்தும் போகிறது. விதியால் காப்பாற்றப் பட்டு, அநாதையாக காட்டில் திரியும் ஜீவனும் உயிர் வாழ்கிறது. உயிரினங்கள் தாங்கள் பிறக்க காரணமான உடல்- பிறவியை அனுசரிக்கின்றன. ஒரே விதமான வினைப்பயன் என்பது எப்பொழுதும் இருப்பதில்லை. சரீரம் பரம புருஷனின் மனதில் தோன்றியது. ஜீவனுக்கு சில காலம் தங்க ஒரு இடம்- வாடகை வீடு போல. காலம் தான் வாழ்வை நிர்ணயிக்கிறது. நீரும், ஸூரியனின் தாபமும் சேர்ந்து வளரும் தாவரங்கள் நாளடைவில் முற்றி உருவழிந்து தானே மறைகின்றன. மரத்தினுள் நெருப்பு மறைந்திருப்பது போல காற்று ஜீவன்களின் உள் உறைகிறது, ஆகாயம் எங்கும் பரவி இருப்பது தெரிவதேயில்லை அதே போல பரம புருஷன் நம் அறிவுக்கு புலனாவதில்லை. இந்த சுயக்ஞன் தூங்குவது போல கிடக்கிறான், இவனை எண்ணி வருந்த வேண்டாம். உடல் இருக்கும் வரை ஜீவன் அதற்கான வேலைகளை செய்து தான் ஆக வேண்டும். வாழ்க்கையே மனதின் கற்பனை போலவோ, கனவில் வருவது போலவோ, ஒரு தோற்றமே. அது நிச்சயமல்ல என்று விழித்தவுடன் நாம் உணர்வது போல என்று விஷயம் அறிந்தவர்கள் சொல்வார்கள். எனவே வருந்த வேண்டாம்.
ஒரு வேடன், ஆங்காங்கு வலை விரித்து காத்திருந்தான். பக்ஷிகள் தானாக அதில் சிக்க ஆசை காட்டுவது போல அதில் தானியங்களை இறைத்திருந்தான். குருவி தம்பதிகள், அதைக் கண்டன. பெண் குருவி அதில் மாட்டிக் கொண்டது. ஆண் குருவி மிகவும் வருந்தியது. கடவுளே, கருணையில்லையா? இந்த பெண் குருவி தனித்து எப்படி வாழும், வேடனே என்னையும் ஏற்றுக் கொள், எங்கள் கூட்டில் இன்னும் இறக்கை முளைக்காத குஞ்சுகள் உள்ளன. இந்த தாய் குருவி இல்லாமல் அவைகளை நான் எப்படி போஷிப்பேன். என்னை எடுத்துக் கொள். அவளை விட்டு விடு- குஞ்சுகள் தாயார் இல்லாமல் பரிதவிக்கும். என்றது. இதைக் கேட்ட பின்னும் அந்த வேடன் அந்த குருவியையும் தன் அம்பால் அடித்து வீழ்த்தி விட்டான். அது அவனுக்கு உணவு, எனவே, அந்த செயல் தவறல்ல. இயற்கை நியதி. இது உங்களுக்கும் பொருந்தும். உங்கள் அரசன், உறவினன் என்று பரிதவிக்கிறீர்கள், இதே நிலை தான் உங்களுக்கும் காத்திருக்கிறது, காலத்துக்கும் ஏதோ ஒரு காரணம் கிடைக்கும், மரணம் அனைவருக்கும் பொதுவானதே. நூறு ஆண்டுகள் அழுது புரண்டாலும் இறந்த மன்னன் திரும்பி வரமாட்டான்.
ஹிரண்யகசிபு சொன்னான்: அந்த சிறுவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் வியந்தனர். தாயாதிகள், உறவினர்கள், உலக வாழ்க்கையே அனித்யம் தானே என்று உணர்ந்து சமாதானம் அடைந்து திரும்பினர்.
நாரதர் தொடர்ந்தார்: தைத்ய ராஜன் சொன்னதைக் கேட்டு, திதி தன் மருமகளுடன் திரும்பிச் சென்றாள். புத்ர சோகம் விலகி மனம் அடங்கியது.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், இரண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-61
அத்யாயம்-3
நாரதர் சொன்னார். ஹிரண்யகசிபு தன்னை யாரும் வெற்றி பெற முடியாதவனாக, முதுமையோ, மரணமோ அண்ட முடியாதவனாக, தன்னிகரற்ற வீரனாக, தன் ராஜ்யத்தை ஆள தீர்மானித்தான். மந்தர மலையை அடைந்து கடுமையாக தவம் செய்தான். கைகளை உயர தூக்கி, பாதங்களின் கட்டை விரல் பலத்தில் நின்று கொண்டு ஜடை முடி தரித்தவனாக பல காலம் அசையாமல் தவம் செய்தான். ஸுரியன் தன் கிரணங்களுடன் தகிப்பது போல அவன் தலையிலிருந்து புகை கிளம்பலாயிற்று. மேல், கீழ், இடை பாகம் என்று மூவுலகையும் தகிக்கலாயிற்று. திசைகள் அந்த வெப்பத்தால் பள பளத்தன. தாரகைகளும் க்ரஹங்களும் விழுந்தன. பூமியே நடுங்கியது. அந்த நிலை தேவலோகத்திலும் பரவியதும், தேவர்கள் ப்ரும்மாவை சரணடைந்தார்கள். தேவதேவா! தைத்யன் தவம் செய்கிறான். எங்களால் தேவலோகத்தில் இருக்க முடியவில்லை தகிக்கிறது. உலகமே அழியும் முன் பகவானே, காப்பாற்றுங்கள் என்றனர். அவனுக்கு என்ன தேவை? எதற்காக தவம் செய்கிறான்? அவனுடைய சங்கல்பம், சராசரத்தையும் ஜயித்து நானே தலைவனாவேன். பரமேஷ்டி (அதிக யாகங்கள் செய்தவன்) என்று என் சிம்மாசனத்தை அடைவேன். காலத்தை என் ஆதீனத்தில் கொள்வேன். கல்பங்கள், வைஷ்ணவ சக்திகள் இவைகளை ஒழிப்பேன். நானே மூன்று உலக நாயகனாக த்ரிபுவனேஸ்வரன் என்று கொண்டாடப் படுவேன் என்பது. உங்கள் பதவிக்கே ஆபத்து என நினைக்கிறோம். அதனால் விண்ணப்பிக்கிறோம்.
ப்ரும்மாவும் ப்ருகு முனிவர், தக்ஷன் முதலானோரோடு தைத்ய ராஜனின் இருப்பிடம் சென்றார். தவம் செய்வதில் கவனமாக ஒரே நினைவுடன் இருந்த அசுரனை எறும்பு, கரையான், பூச்சிகள் சூழ்ந்திருந்தன. உலகில் ஸூரிய ஒளி பரவி இருப்பது போல அசுரனைச் சுற்றி ஒரு ஒளி படர்ந்திருந்தது. ப்ரும்மா வியந்தார்.
காஸ்யபா! எழுந்திரு. எழுந்திரு. உன் தவம் சித்தியாயிற்று. வரம் அளிக்க நான் வந்திருக்கிறேன். என்ன விருப்பமோ, கேள். உன் தவத்தை மெச்சினேன். அத்புதமான மன அடக்கம். பூச்சிகள், எறும்புகள் உண்ட சரீரத்தில் உயிர் எலும்புகளில் மட்டுமே தங்கி உள்ளன. இது போல யாரும் இதுவரை தவம் செய்ததும் இல்லை, இனி செய்யப் போவதும் இல்லை. கடினமான இந்த தவத்தால் நீ என்னை பிரமிக்கச் செய்து விட்டாய். திதி நந்தன! என் ஆசிகள்.
நாரதர் சொன்னார்: இவ்வாறு சொல்லி, ப்ரும்மா தன் கமண்டலு ஜலத்தை தெளித்து, எறும்பு முதலானவை அரித்து இருந்த உடல் பாகங்கள் பழைய படி ஆகச் செய்தார். முன்னிலும் அதிக பலசாலியாக, இளைஞனாக புடமிட்ட பொன் போன்ற வர்ணத்தினனாக, ஹுரண்ய கசிபு எழுந்தான். வானத்தில் ஹம்ஸ வாகனத்தில் நின்ற ப்ரும்மாவைப் பார்த்து வணங்கினான். நால் திசைகளையும் பார்த்து கண்களில் நீர் பள பளக்க தழதழத்த குரலில் வேண்டினான்.
ஹிரண்ய கசிபு: கல்ப முடிவில் கால சிருஷ்டி இருட்டில் கண் தெரியாதவன் போல இருக்கிறேன். என் முன்னால் ஸ்வயம் ஜோதி ஸ்வரூபமான நீங்கள் உங்கள் காந்தியால் உலகைக் காணச் செய்து விட்டீர்கள். மூவுலகை படைத்து, காத்து, பின் கலைக்கும் உங்களுக்கு நமஸ்காரம். சத்வ,ரஜஸ் தமஸ் என்ற முக்குணங்களே இருப்பிடமாக உள்ள மஹான் உங்களுக்கு நமஸ்காரம். ஆதியான, பீஜமான, ஞான விக்ஞான மூர்த்தி, ப்ராண, இந்திரிய, மனம், புத்தி, இவைகளை பலவிதமாக பயன் படுத்தி உயிர்களின் உருவங்களை படைத்தவர், உங்களை வணங்குகிறேன். ப்ரஜைகளுக்கு ப்ராணனாக, உலகை படைத்து அதை இயக்குபவர், சித்தம் என்பதன் சித்தம், மனம், இந்திரியங்கள், இவைகளை ஆட்டுவிப்பவர், பஞ்ச பூதங்களுக்கும் தலைவன் உங்களை வணங்குகிறேன். மூன்று வேதங்கள் ஸ்வரூபியான நீங்களே, ஏழு விதமான அக்னி ஹோத்ரம் முதலான யாகங்கள், இவைகளில் நான்கு ஹோதாக்கள், (யாகத்தில் நான்கு பக்கமும் அமர்ந்து யாகத்தை செய்பவர்கள்) சாதுர் ஹோத்ரம் என்ற வித்யை விதிப்படி, செய்விக்கிறீர்கள். அதே சமயம், உயிரினங்கள் அனைத்திலும் உறையும், ஒரே ஆத்மாவான உங்களை, அந்தராத்மா என்றும் கவி என்றும் அனந்தன் என்றும் போற்றுகிறார்கள்.
ஜீவ லோகத்தின் ஜீவன், அவர்களின் ஆயுள், – கால ரூபன்- ஒவ்வொரு நொடியாக கணக்கிட்டு இறுதியில் ஜீவனின் ஆயுளை முடிப்பதும் நீங்களே. ஆத்மா, ஞான ரூபி, பரமேஷ்டி- பரமேஸ்வரனிடத்தில் உதித்தவன், பிறவியற்றவன், மஹான் என்றும் உள்ள ஹிரண்யகர்பன் நீங்களே.
உலகில் உங்களை மிஞ்சி ஒரு சக்தி என்பது எதுவும் இல்லை. எதிர்ப்பதும் எதுவும் இல்லை. கல்வி, கலைகள், உயிர்களின் உடல், என்று அனைத்தும் உங்களுள் அடக்கம்- ஹிரண்யகர்பன் – மற்ற அனைத்தும் உங்களுக்கு பிறகே. இந்த ஸ்தூலமான ப்ரும்மாண்ட சரீரம், அழிவில்லாத ஆதி புருஷன் – அவ்யக்தன். வ்யக்தன் சித் அசித் என்ற எதிர்மறைகளும் உங்கள் ஆதிக்கத்துக்கு உட்பட்டவையே. பகவானே, நமஸ்காரம். வரதோத்தமா! எனக்கு வரம் தருவதானால், பஞ்ச பூதங்களால் ஆன இந்த ஸ்ருஷ்டியில் எனக்கு மரணம் வராமல் இருக்கும்படி வரம் அருள வேண்டும். உள்ளேயோ, வெளியிலோ, பகலும் கூடாது, இரவும் கூடாது, ஆயுதங்கள் எதுவும் என்னைக் கொல்லக் கூடாது. பூமியிலோ, அம்பரம்- ஆகாயத்திலோ என் மரணம் சம்பவிக்க கூடாது. மனிதனாலோ, மிருகத்தாலோ எனக்கு மரணம் வரக் கூடாது. உயிரற்ற, கல் போன்றவைகளோ, ப்ராணன் உள்ள முதலைகள் முதலிய பிராணிகளாலோ, மரணம் வரக் கூடாது. தேவர்களோ, அசுர்களோ, என்னை எதிர்த்து த்வந்த யுத்தம் செய்ய எவருமே இருக்க கூடாது. லோகபாலர்களுக்கு சமமாக இருக்க வேண்டும்.
மொத்தத்தில், அமரனாக, மரணம் அற்றவனாக இருக்கவே வரம் வேண்டுகிறேன்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ஹிரண்ய கசிபு வர யாசனம் என்ற மூன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-38
அத்யாயம்-4
ஹிரண்ய கசிபுவின் தவத்தால் மகிழ்ந்திருந்த ப்ரும்மா அவ்வாறே வரங்களை அளித்தார். மகனே, இவை மிகவும் அரிய வேண்டுகோள்கள். என்னிடம் வரம் என்று கேட்டு விட்டாய். அதனால் துர்லபமானவை என்று அறிந்தே சம்மதிக்கிறேன். இவ்வாறாக ப்ரும்மா அசுரனை அனுக்ரஹம் செய்து விட்டு மறைந்தார்.
வர பலத்தினால், அசுரன் பொன் மயமான சரீரத்தை அடைந்தான். மனதினுள், பகவானிடம் த்வேஷத்தை வளர்த்துக் கொண்டான். தன் தம்பியை கொன்றவர் என்று அவரை வெறுத்தான். மூன்று உலகிலும் திக்விஜயம் செய்து தன் வசம் ஆக்கிக் கொண்டான். தேவாசுர, மனிதர்கள், இந்திர லோகத்தினர், கந்தர்வ, கருட, பாம்பு தலைவர்கள், சித்த சாரணர்கள், வித்யாதர, ரிஷிகள், பித்ருக்கள், மனு முதலானோர், யக்ஷ, ரக்ஷ, பிசாச, ப்ரேத பூதங்கள், யாரையும் விடவில்லை. இப்படி வெற்றி கொண்ட பின், லோக பாலர்களின் ஸ்தலங்களையும் கைப் பற்றினான். விஸ்வகர்மாவினால் கட்டப் பட்ட தேவர்களின் அழகிய உத்யான வனங்கள் சூழ்ந்த த்ரிவிஷ்டபம் என்ற மகேந்திரனின் பவனம் ,மரகத பச்சை வர்ணத்தில் இலைகளுடன் மரங்கள், ஆங்காங்கே வரிசையாக ஸ்படிக தூண்கள், அழகிய வேலைப்பாடமைந்த விரிப்புகளுடன் ஆசனங்கள், தேவலோகத்து ஸ்த்ரீகள், அங்கும் இங்குமாக நடமாடிக்கொண்டிருக்கும் சமயம், அவர்களின் நிழல் தரையில் தெரிவதை காண முடியும், அதை கைப்பற்றினான். குபேர பவனத்தையும் தனதாக்கிக் கொண்டான்.
அதன் பின் தன் ராஜ்யத்தை செவ்வனே நிர்வகித்தான். யாகங்கள் செய்து யாகத்தில் அமர்ந்து செய்யும் அந்தணர்களுக்கும், பங்கேற்ற மற்றவர்களுக்கும் நிறைய தக்ஷிணைகள் கொடுத்தான். அந்த ஹவிர் பாகங்களை தேவர்களுக்கு கொடுக்காமல் தானே ஏற்றுக் கொண்டான். சப்தத்வீபவதி- ஏழு தீவுகளைக் கொண்டவள் என்று பெயர் பெற்ற பூமி உழவு, நடவு என்ற செயல்கள் இல்லாமலேயே விளைந்தது. வானம் தேவையானதை அளித்தது. ரத்னாகாரம் என்று அழைக்கப் படும் சமுத்திரம், உப்புக் கடல், சுரா என்ற மது (கள்) நிறைந்த கடல், நெய் நிறந்த கடல், பாற்கடல், தயிர் நிறைந்த கடல், கரும்பு ரஸம் நிரம்பிய கடல், சுத்தமான நீர் உடைய கடல் என்றவை தவிர அவைகளின் மனைவிகளான நதிகளும் ரத்னங்களை தன் அலைகள் மூலமே கொண்டு வந்து கொடுத்தன. மலைகள், மலைச் சரிவுகள், அழகிய மலை வாசஸ்தலங்கள், எல்லா பருவகாலங்களிலும் பழங்கள், புஷ்பங்கள் இவைகளைத் தந்தன. தான் ஒருவனாக, இந்திரன் முதலான தேவர்களின் செயல்களான, மழை பொழிதல், ஸுரியனின் வெப்பம், வாயுவின் சலனம் என்றவைகளை நிர்வகித்தான். எட்டு திசைகளையும் ஆக்ரமித்து அதிகாரம் செலுத்தி வந்தவன், தன் போகங்களையும் இஷ்டப்படி அனுபவித்தான். அதர்மாக செய்த பல காரியங்களால், உலகில் வருந்திய மக்களைக் கண்டு, சனகாதி முனிவர்கள் அவனை சபித்தனர். அவன் ஆட்சியும் அக்ரமங்களும் நீடித்தன.
காலம் செல்லச் செல்ல ஐஸ்வர்ய மதம் அவன் தலைக்கேறவும், தாங்க முடியாமல் தேவர்கள் பகவான் ஸ்ரீ ஹரியை சரணடைந்தார்கள். சாந்தமான அமலமான சன்யாசிகள் அந்த இடத்திற்கு சென்றவர்கள் திரும்புவதில்லை. அவர்களுக்கு அசரீரியாக ஒரு வாக்கு கேட்டது. மேகம் இடி இடிப்பது போல கம்பீரமான குரல். பயப்படாதீர்கள், எல்லோருக்கும் நன்மையே உண்டாகட்டும். என் தரிசனம் உங்களுக்கு எல்லா ஸ்ரேயஸ்களையும் தரட்டும். இந்த தைத்யனின் அத்து மீறிய செய்கைகளை அறிவோம். சரியான காலம் வர காத்திருங்கள். இவனுடைய செயல்கள் எப்பொழுது, தேவர்களுக்கு எதிராக, வேதங்களை தூஷிப்பதாக, பசுக்களையும் அந்தணர்களையும், சாதுக்களையும் துன்புறுத்துவதாக ஆகிறதோ,தர்மத்தையும் என்னையும் துவேஷிக்கிறானோ, உடனே அழிவான். அவன் மகன் ப்ரஹ்லாதன் சாந்தமாக, அனைவருடனும் நட்பும் நல்ல குணமுமாக அவனை விரோதிப்பான். அந்த சமயம் தான் ஏற்றது, அவனை தண்டிக்க.
இவ்வாறு லோக குருவான ஸ்ரீ ஹரி சொன்னதும், தேவர்கள், திரும்பி தங்கள் இருப்பிடம் சென்றனர். அசுரனின் அழிவு அதிக தூரத்தில் இல்லை என்ற நம்பிக்கை பிறந்தது.
அசுரனுக்கு நான்கு புதல்வர்கள் பிறந்தனர். ப்ரஹ்லாதன், அவர்களுள் குண சாலியாக இருந்தான். ப்ரும்ம நம்பிக்கை உள்ளவனாக, சீலம் உடையவனாக, இருந்தான். சத்யசந்தன், ஜிதேந்திரியன், தன்னையறிந்தவன், அனைத்து உயிர்களிலும் உறையும் ஒரே ஆத்மா என்பதை அறிந்து அனைவரிடமும் சமமாக நடந்து கொண்டான். என்றும் பிரியமான நண்பனாக இருந்தான். தந்தையிடம் பெரு மதிப்பு வைத்து அவரிடம் தாஸனாக இருந்தான். ஒரு தந்தையை போல தீன வத்சலன், சகோதரன் போல அருகில் இருப்பவன், குருவை ஈஸ்வரனாக மதித்தான், கல்விகள் அவனைத் தானே வந்தடைந்தன பல பிறவிகளில் கற்றது போல, இருந்தும் கர்வமோ, தான் உயர்ந்தவன் என்ற உணர்வோ இல்லாதவன் என்றனர். எப்பொழுதும் உத்சாகமாக இருப்பான். வேதங்கள், தர்சனம் என்ற தத்வங்கள், இவைகளைக் கற்றுத் தேர்ந்தான். அவன் சாந்தமும், புத்தியும், திருப்தியும், அசுரனுக்கு பிறந்தவனா எனும் படி இருந்தன. கவிகள் சொல்லும் நல்ல குணங்கள் ஒருமித்து அவனிடம் இருந்தன. அது போல குணங்களின் சங்கமம் பகவானிடம் மட்டுமே இருக்க முடியும் என்று பேசிக் கொண்டனர். சபைகளில் எதிரிகள் கூட அவனை புகழ்ந்தே பேசினர். வாசுதேவனிடத்தில் பிறவியிலேயே ஈடுபாடு தோன்றி விட்டது தான் இவை அனைத்துக்கும் சிகரமாக ஆயிற்று.
விளையாட்டுப் பருவத்திலேயே, விளையாட பொருட்களை நாடவில்லை. மனதில் கோவிந்த எண்ணத்துடனேயே, அமர்ந்தான், நடமாடினான், உண்டான், தூங்கினான், குடித்தான், பேசினான்
வைகுண்டவாசியை பஜித்து வந்தான், பாகவதர்கள் போலவே, சிரிப்பான், ஆனந்தமாக பாடுவான், நடனம் ஆடுவான், தன்மயமாக அவரை நினைத்து தியானத்திலும் இருப்பான். உத்தம ஸ்லோகன் எனும் ஸ்ரீ ஹரியின் பதாரவிந்தங்களில் திடமான நம்பிக்கையுடன், மன அடக்கம் வரப் பெற்றவனாக இருந்தான். இதையறிந்த ஹிரண்யகசிபு திகைத்தான். ப்ரஹ்லாதனை குற்றவாளியாக அறிவித்தான்.
யுதிஷ்டிர் கேட்டார். தன் மகன் தானே – குணவானாக இருந்தால் தந்தை மகிழ்வது தானே வழக்கம். குற்றம் காண்பது எதற்காக? தன் சொல்லை மீறிய புதல்வர்களையும் ஏதோ ஒரு வகையில் தண்டித்தோ, வசைச் சொற்கள் சொல்லியோ திருத்தவே முயலுவார்கள். துவேஷம் வருமா? குற்றமே ஆனாலும் மரண தண்டனை வரை செல்வார்களா? எனக்கு தோன்றவில்லை. ப்ரும்மன், விவரமாக சொல்லுங்கள்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், நான்காவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-46
அத்யாயம்-5
அசுர ராஜன், ஹிரண்யகசிபு, அசுர் குல குருவான சுக்ராசார்யரை தன் அரச புரோஹிதராக நியமித்தான். அவருடைய புதல்வர்கள், ஷண்டன், அர்கன் என்ற இருவரும் அருகிலேயே வசித்தனர். அவ்விருவரும் அரசன் அழைத்து வந்து சேர்த்த மாணாக்கனான ப்ரஹ்லாதனுக்கு கற்பிக்கலாயினர். மற்றும் சில அசுர பாலகர்களும் அங்கு வந்து சேர்ந்தனர். ப்ரஹ்லாதன், ஆசிரியர் சொன்னதை கேட்டு திரும்பச் சொல்லி நல்ல மாணவனாகவே இருந்தான். ஒரு சமயம் அசுர ராஜன் வந்து, தன் மகனை மடியில் அமர்த்திக் கொண்டு என்ன கற்றுக் கொண்டாய்? உனக்கு பிடித்ததைச் சொல்லு என்று கேட்கவும், ப்ரஹ்லாதன் பதில் சொன்னான். அசுரவர்ய! மனிதர்கள் அசத்தான விஷயங்களை விலக்கி, மனதில் ஹரியை தியானித்து வனம் சென்று தன் பாபங்களை போக்கி கொள்ள வேண்டும்.
நாரதர் சொன்னார்: மகன் சொன்னதைக் கேட்டு பலமாக சிரித்தான். பின் ஆசிரியர்களைப் பார்த்து இது என்ன என் கொள்கைகளுக்கு எதிராக இவன் ஏதோ சொல்கிறான். சரியாக சொல்லிக் கொடுங்கள். விஷ்ணு பக்ஷத்திலிருந்து யாராவது இங்கு வந்து விட்டீர்களா?
தைத்யனின் புரோஹிதர்கள், வீட்டிற்கு அழைத்து வந்து அவனிடம் நயமாக விசாரித்தனர். குழந்தாய், ப்ரஹ்லாதா, உண்மையைச் சொல், பயப்படாதே, சின்னஞ் சிறுவன் உனக்கு இந்த விபரீதமான புத்தி எப்படி வந்தது? யாரது உன்னிடம் பலவந்தமாக இப்படி ஒரு எண்ணத்தை விளைவித்தது?நீயாகவே சொல்கிறாயா? எதுவானாலும் சொல் குழந்தாய், பெரியவர்கள் கேட்கிறோம்.
நீ எங்கள் குலநந்தனன் அல்லவா?
ப்ரஹ்லாதன் சொன்னான்: தான், மற்றவன் என்று மனிதர்கள் தவறாக நினைக்கிறார்கள். அதுவே பகவானின் மாயை தான். இப்படி மனித மனதை ஆட்டுவிக்கும் பகவானுக்கு நமஸ்காரம். மனிதர்கள், மிருகங்கள், இவைகளுக்கிடையில் புத்தியில் வித்தியாசம் வைத்தவன் அவனே. இவர் வேறு.நான் வேறு என்று பேதம் காண்பது அறியாமை. வேதம் அறிந்தவர்கள், பல விதமாக நிரூபிக்க முயன்றிருக்கிறார்கள். காந்தத்தின் முன் இரும்பு தானாகவே ஆகர்ஷிக்கப் படுவது போல என் மனம் சக்ரபாணியின் சன்னிதியில் தானாகவே இழுக்கப் படுகிறது. எப்படி நான் மட்டும் அந்த சன்னிதிக்கு அருகில் சென்றேன், அதுவோ, தவம் விரதம் இவைகளை பல காலம் அனுஷ்டித்து அடையும் தகுதி அது என்பது உண்மையே. ஏதோ காரணத்தால், எதேச்சையாக நான் அடைந்துள்ளேன்.
இதைக் கேட்டு, ராஜ சேவகர்கள், அரசனால் நியமிக்கப் பட்ட ஆசிரியர்கள் திகைத்தனர். கோபித்தனர். எங்கள் பெயரைக் கெடுக்கிறான், இந்த குலத்துக்கு அங்காரம் போல (சிறு நெருப்பு பொறி) போல வந்து வாய்த்திருக்கிறான். நான்காவது தான் இவனிடம் பிரயோகிக்க வேண்டும் (ஸாம, தான், பேத, தண்டம் என்பதில் தண்டம் ) என்று சேவகர்களைக் கொண்டு கசையால் அடித்தனர். இவன், அசுர ராஜன் என்ற சந்தன வனத்தில் முள் செடி போல வந்து பிறந்திருக்கிறான். வேரோடு பிடுங்கக் கூடிய விஷ்ணுவின் பரசு – கோடாலி
யாக இந்த இளம் பாலகன் பேச்சு இருக்கிறதே. இவ்வாறாக நினைத்து அவனைத் திருத்த, பலவிதமாக உபாயங்களை முயன்றனர். பயமுறுத்தி, தங்கள் வழிக்கு கொண்டு வர முயன்றனர். அப்படியும் ப்ரஹ்லாதனை தங்கள் வழிக்கு கொண்டு வர முடியாமல், அவன் தாயாரிடம் கொண்டு விட்டனர். ஸ்னானம் செய்வித்து அலங்கரித்து மகனை தந்தையின் முன் கொண்டு நிறுத்தினர். தன் காலில் விழுந்து நமஸ்கரித்த மகனை ஆவலுடன் ஹிரண்ய கசிபு தூக்கி மடியில் இருத்தி, உச்சி முகர்ந்து, மகன் என்று பாசத்தினால் கண்கள் பனிக்க, கண்ணீரால் அவனை மகிழ்ச்சியுடன் நனைத்தவனாக, முகம் மலர, ப்ரசன்னமானவனாக, ஹே ப்ரஹ்லாதா! என்றழைத்தான். மகனே, நீண்ட ஆயுளுடன் இரு என்று ஆசிர்வதித்தான். மகனே, சுக்ராசார்யாரின் புதல்வர்களிடம் என்ன கற்றுக் கொண்டாய்? என்றான்.ப்ரஹ்லாதன் சொன்னான்:
श्रवणं कीर्तनं विष्णोः स्मरणं पादसेवनम् ।अर्चनं वन्दनं दास्यं सख्यमात्मनिवेदनम्
கேள்வி, பாடுதல், விஷ்ணுவை மனதார நினைத்தல், பாதங்களில் வணங்குதல், பூஜை, வந்தனம், அடியாள் போல சேவை செய்தல், சகாவாக இருத்தல், ஆத்ம நிவேதனம்.
மனிதர்கள் இந்த பத்து விதமாக விஷ்ணு பகவானிடம் பக்தியை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த விதமாக பகவானிடம் தன்னை சமர்ப்பிக்கும் ஒன்பது வழிகளை அறிவது தான் உத்தமமான கல்வி என்று நினைக்கிறேன். இதைக் கேட்ட ஹிரண்ய கசிபு குரு புத்திரர்களிடம் வெகுண்டான். பற்களைக் கடித்தவாறு, ப்ரும்மபந்தோ! – (இது ஒரு வசைச் சொல்) என்ன இது இப்படி விபரீதமாக எதிரியை புகழும் படி கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள். என்னையே மதிக்காமல் சாரமில்லாத எதையோ என்னிடமே என் மகன் சொல்கிறான். துர்மதி. சாதுக்கள் அல்லாத பலர் இருக்கிறார்கள். வஞ்சனையாக நண்பன் போல அருகில் வந்து பேசுபவர்கள் என்றான். குரு புத்திரர்கள், ‘ இந்த்ரசத்ரோ! நீ இந்திரனுக்கு சத்ரு. உன் மகன் சொல்வது நாங்கள் கற்பித்தது அல்ல. தானாக சொல்கிறான். பிறவியிலேயே இவனுக்கு இந்த குணம் வந்துள்ளது. எங்களை கோபிக்காதீர்கள். எங்கள் குற்றம் அல்ல. ஹிரண்யகசிபு மகனிடம் திரும்பினான். குரு இவர்கள் சொல்லவில்லையெனில் எப்படி உனக்குத் தெரியும்?
ப்ரஹ்லாதன் சொன்னான்: தந்தையே, உலக வாழ்க்கையே நிரந்தரம் என்று நினைத்து தினசரி உணவும், மற்ற தேவைகளுமே முக்கியமானவை என்று உழைக்கும் சாதாரண மக்கள் க்ருஷ்ண பரமாகவோ, தன் மேன்மை பற்றியோ நினைக்கவே முடிவதில்லை. குருடனால் வழி காட்டப் படும் மற்றொரு குருடன் போல ஒரே ரீதியில் வாழ்க்கையை நடத்திச் செல்கின்றனர். ஒரே அச்சில் கட்டப் பட்ட கயிற்றின் நீளத்தை பொறுத்து அவர்களின் வாழ்க்கையின் செயல்கள் நிர்ணயிக்கப் படுகின்றன. இவர்கள் இதிலிருந்து மீள வேண்டுமானால் அறிவு மிக்க பெரியவர்களின் அருகில் இருந்து உபதேசம் பெற வேண்டும்.
ஹிரண்யகசிபு தன் கோபத்தை அடக்க மாட்டாமல், மகனை தன் மடியிலிருந்து வீசியெறிந்தான். கண்கள் சிவக்க உத்தரவிட்டான். அசுர்களே, இந்த சிறுவனை கட்டுங்கள். இவன் என் சகோதரனைக் கொன்றவனை உயர்வாகச் சொல்கிறான். அவன் காலில் விழுகிறான். ஐந்து வயது சிறுவன். எந்த தந்தை இப்படி ஒரு மகனை தியாகம் செய்வான். தன்னை சாராத யாரோ ஒருவனுடைய மகன் கூட மருந்துகள் நோயை தீர்ப்பது போல ஹிதம் செய்யலாம். உடன் பிறந்த நோய் தனக்கு பிறந்தவனே கூட அஹிதமாக இருக்கலாம். நோய் முற்றினால் அந்த அங்கத்தை வெட்டி விடுவதே மேல். மற்ற அங்கங்கள் பாதிக்கப் படாதவரை சுகமாக இருக்கலாம். எல்லா விதமான உபாயங்களையும் பயன் படுத்தி இப்படி உடன் பிறந்தே கொல்லும் வியாதியை ஒழிக்கத் தான் வேண்டும். கூடவே அமர்ந்து விருந்துண்ணும், ஆசனங்களில் சமமாக அமர்ந்தும், நல்ல நண்பன் போல காட்டிக் கொண்டே துரோகம் செய்யும் சத்ரு அழிக்கப் பட வேண்டும். சாதகனுக்கு இந்திரியங்களே துஷ்டர்களாக ஆவது போல.
இவ்வாறு அரசனே அனுமதித்தபின் அசுரர்கள் கூட்டமாக, ஆயுதங்களோடு, வெட்டு, கொல் என்று பயங்கரமக கோஷமிட்டுக் கொண்டு வந்தனர். காணவே பெரிய பற்களும், தாமிர நிற கேசமும், மீசை, உடல் ரோமங்களோடு பயங்கரமாக இருந்தவர்கள், ஆட்டமும் பாட்டமுமாக, அமர்ந்திருந்த ப்ரஹ்லாதனை ஸூலங்களால் அடித்தனர். பரப்ரும்மத்தில் மனம் லயித்திருக்க, அசையாது தியானத்தில் இருந்த சிறுவனை அவை அசைக்க முடியவில்லை. பலனின்றி போயிற்று. கடவுள் நம்பிக்கை இல்லாதவன் என்னதான் சத் காரியங்கள் செய்தாலும் எடுபடாமல் போவது போல. இந்த வீரர்களின் முயற்சி பலிக்காமல் போனதும், ஹிரண்யகசிபு யோசித்தான். பல விதமாக யோசித்து பின், திக் கஜங்களை, விஷ நாகங்களை ஏவினான். அபிசாரம் என்ற தந்த்ரம் அறிந்தவர்களை அழைத்தான். மலையிலிருந்து தள்ளச் செய்தான். பல விதமான மாயா ப்ரயோகங்களைச் செய்தும் உணவே இல்லாமல் பட்டினி போட்டும், விஷம் கொடுத்தும் பலனில்லை. பனிக்கட்டி சூழ வைத்தும், தண்ணீரில் மூழ்க வைத்தும், வாயு, அக்னி, இவைகளால் சீண்டியும் சிறுவனை எதுவும் பாதிக்கவில்லை. பாறைகளை புரட்டி விழச் செய்தான். ஒரு நிலையில், தானே தன்னை நொந்து கொண்டான். இது என்ன நான் செய்வது சரியல்லவே. கண் எதிரில் இருக்கும் என் மகன், விஸ்வாமித்ர முனிவர் காப்பாற்றிய சுன:ஸேபன் (शुन:शेप:) போல திடமாக நிற்கிறான். இவன் அளவில்லாத அனுபாவம் உள்ளவன். பயமே இல்லை. அமரன்- மரணமே இல்லாதவன் போலும். இவனை விரோதித்துக் கொள்வதால் எனக்கு ஆபத்தே. எனக்கே அழிவைத் தந்தாலும் தரும். என்று யோசித்தான். சற்றே வாடிய முகத்துடன், குழம்பி இருந்தவனிடம் குருபுத்திர்களான, ஷண்டன், அர்கன் என்ற இருவரும் சமாதானமாக சொன்னார்கள். ‘அரசே! மூவுலகையும் புஜ பலத்தால் ஜயித்தவர் நீங்கள். உங்கள் குரலைக் கேட்டே நடுங்கினர் அனைத்து வீரர்கள் குழாமும். உங்கள் மகன், இளம் சிறுவன் இவனுடைய குண தோஷங்களை பெரிது படுத்த வேண்டாம். வருண பாசத்தால் கட்டி, எங்கும் ஓடி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். குரு பார்கவர்(ஸுக்ராசார்யர்) வரும்வரை பெரியவர்கள் சிலர் அவனுக்கு நல்ல புத்தி சொல்லட்டும். அசுரனும் சரி என்று அந்த உபாயத்தை ஏற்றுக் கொண்டான். தானே மகனுக்கு, தர்மம், அர்த்தம் (பொருளாதாரம்), காமம் என்ற உலகியல் விஷயங்களை உபதேசித்தான். ஆரம்பத்திலிருந்து பாடம் கற்பித்தான். ப்ர்ஹ்லாதன் வணக்கத்துடன் அமர்ந்து கவனமாக கேட்டுக் கொண்டான். தனக்கு குரு உபதேசித்த பரமார்த்தமான விஷயங்களை சொல்லும் முன் பாலகர்கள் அழைக்கவும் ப்ரஹ்லாதன் விளையாட ஓடி விட்டான். அசுர அரசன் அந்த குழந்தைகளிடம் பிரியமாக பேசி, அவர்களையும் அருகில் அமரச் செய்தான். அரசன் என்ற மதிப்பினால் அமர்ந்திருந்த சிறுவர்கள், சுக துக்கம் என்ற இரட்டைகளான துன்பங்கள், என்ற அறிவுரையை கண் கொட்டாமல் அரசனைப் பார்த்தபடியே கேட்டுக் கொண்டிருந்தனர். சிறுவர்களிடம் பாகவதனான அசுர சிறுவன் கருணையுடன் சொன்னதையே மனதில் நினைத்துக் கொண்டிருந்தனர்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ஐந்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-57
அத்யாயம்-6
ப்ரஹ்லாதன் சொன்னான்: குமாரர்களாக உள்ள வயதில் தர்மம் என்பது பாகவதர்கள்- பகவானிடம் ஈடுபாடு கொண்ட அறிவுடையோர், அனுசரிப்பதே. மனித பிறவியே அரிதானது. அதுவும் நிரந்தரமல்ல. மனித பிறவி மட்டுமே நன்மை பயப்பதுமில்லை. ஸ்ரீ விஷ்ணுவின் பாதங்களில் மனதை செலுத்தி சரணடைய வேண்டும். அவர் தான் நண்பனாக, பிரியமானவனாக இருப்பவர். சர்வ ஜீவன் களுக்கும் ஆத்மேஸ்வரன்- ஆத்மாவில் உறையும் ஈஸ்வரன். தைத்யர்களுக்கு உடல் சுகமே சுகம். அதற்கு மேல் சிந்திப்பதில்லை. அதற்கு உழைக்கிறார்கள். ஆனால் ஒரு ப்ரயத்னமுமின்றி துக்கம் வந்து சேருகிறது. அதனால் ஆயுள் முழுவதும் பயனின்றி போகிறது. அதில் எந்த க்ஷேமும் இல்லை. முகுந்த சரணாம்புஜ சேவையே முக்தியைத் தரும். உடல் நலத்தை பேணுவதிலேயே பயத்துடன் செயல்களை செய்ய வேண்டாம். மனித சரீரம் நூறு ஆண்டுகளே நீடிக்கும். அதில் பாதி ஐம்பது ஆண்டுகள் தூக்கத்தில் போகும். இளம் வயதில், பாலகனாக விளையாடி இருபது ஆண்டுகள் போகும். பின்னால் முதுமை வந்து உடல் தளர்ந்த பின், இருபது ஆண்டுகள். உடல் பலத்தை பெருக்குவதிலும், காமத்திலும், மோஹத்திலும், குடும்ப பொறுப்புகளிலும், பல காலம் செலவழியும். குடும்பஸ்தனுக்கு உறவுகள், பாசம், அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் இவை பாரமாக கவனத்தை ஈர்க்கும். இதில் செல்வத்திலும், அதைச் சேர்ப்பதிலும் உயிரை விட அதிக ஆசை. அதற்காக சேவகனாக, வியாபாரியாக, சில சமயம் திருடனாக கூட மாறுவான். அன்புடைய மனைவி, தன்னிடம் மிகுந்த பாசம் உடையவள், அவளைச் சார்ந்தவர்கள், தங்கள் வம்சத்தில் வரும் குழந்தைகள் என்று அந்த பந்தம் வளரும். புதல்வர்கள், புதல்விகள், சகோதர்கள், தந்தையர், மற்ற உறவினர்கள், அழகான வீடு, பணியாட்கள், நல்ல தொழில், பசு பக்ஷி வர்கங்கள் என்று பகிர்ந்து கொள்ள நிறைய வந்து சேரும். செல்வம் சேர்க்கும் ஆசையால் லோபம், திருப்தியின்மை, தன் வீட்டைக் கட்டும் பூச்சி, தான் வெளிவர கூட முடியாதபடி வாசலை அடைத்து விடுவது போல ஆவர். தன் மனைவி, குடும்பம் இவற்றை காப்பாற்ற ஆயுள் முழுவதும் உழைக்கிறார்கள். செல்வம் எவ்வளவு தான் சேர்த்தாலும் பற்றாக்குறை. குடும்பஸ்தன் சதா கவலையுடனே இருக்கிறான். இது மட்டுமே உலகம் என்று நினைக்க வேண்டாம் அசுர குழந்தைகளே. அதைத் தாண்டி பரமார்த்தமாக ஒரு இடம்- எந்த இடத்தில் யாரும், எங்கிருந்தாலும், தீனனாக உணரமாட்டான். சக்தியுடையவனாக தன் ஆத்ம பலத்தை அறிந்து கொள்வான். கட்டுப்படாமல் சுதந்திரமாக இருங்கள். ஆதி தேவனான ஸ்ரீமன் நாராயணனை பரம் பொருளை அறிந்து கொள்ள அதிக சிரமம் கூட தேவையில்லை. அவரே நம் ஆத்மாவிலும் இருப்பவர். எங்கும் பரவி இருப்பவர். பஞ்ச பூதங்களிலும், ப்ரும்மாண்டத்தில் உள்ள அனைத்து இயற்கை சாதனங்களிலும். மிகச் சிறியதிலிருந்து மிகப் பெரியவைகளிலும் இருப்பவர். அவர் தான் அழிவில்லாத பரமேஸ்வரன். ஆத்ம ஸ்வரூபம், அனுபவத்தால் காணக்கிடைக்கும். ஆனந்தமே உருவானவர். தன் மாயையால், உலகில் பரவியும் விலகியும் இருப்பார். அதனால், குழந்தைகளே, இந்த அசுர குணம் வேண்டாம். அனைவரிடமும் நட்பாக இருங்கள், அதிலேயே அதோக்ஷஜன் மகிழ்வார். அவர் மனம் குளிர்ந்தால் எது தான் கிடைக்காது. குணங்களின் வேறு பட்ட சேர்க்கையால் தர்மம் என்றும் அதர்மம் என்றும் சொல்வர். இவைகளினால் அடையும் பலன்களும் நமக்குத் தேவையில்லை. ஆத்யன், அனந்தன் என்று அந்த பெயர்களை மறக்காமல் அவரடி பணிவோம். தர்மம், அர்த்தம், காமம் என்ற மூன்று தேவைகள். தர்க்க சாஸ்திரம், வேதங்கள், நயதம- என்ற தண்ட நீதி- அரசர்கள் அனுஷ்டிக்க வேண்டியவை இவை அனைத்தும் சத்யமே. இவற்றை விவரிக்கும் பலவிதமான விளக்கவுரைகள். இவைகள் சொல்வதும் கடைசியில் ஸ்வாத்மார்ப்பணம்- தன்னையே பர புருஷன் பாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றே வலியுறுத்துகின்றன. நாராயணன் நரசகன்- ஸ்ரீமன் நாராயணன் மனிதர்களுக்கு சகா போன்றவன் என்பதை அவர் நாரதருக்கு உபதேசம் செய்ததில் இருந்து அறியலாம். மிக உயர்வாக சொல்லப்படும் ஞானம் எளிதில் கை வராது. சகலத்தையும் துறந்து, தனிமையாக, பகவானையே நினைத்து தவம் செய்பவர்கள் அடைவதை அதே பகவானின் பாதம் பணிந்து அவர் தம் பாதங்களின் தூளியை தலையில் தரித்தவர்களும் அடைவர். இந்த விஷயங்களை முன் ஒரு சமயம் நாரதர் வாயிலாக கேட்டறிந்தேன். சுத்தமான பாகவதம் என்ற தர்மம் ஞானம் அதை விட மேலான விக்ஞானம் என்பதை அவரிடம் அறிந்தேன்.
மற்ற சிறுவர்கள் சொன்னார்கள்; ப்ரஹ்லாதா, நம் குருவையன்றி வேறு யாரையும் நாமறியோம். அந்த:புரத்து வாசியான உனக்கு கிடைத்த பெரியவர்களுடனான உபதேசமும், அனுபவமும் எங்களுக்கு எப்படி எட்டும்? அதனால் நீயே சொல், எங்கள் சந்தேகத்தை தீர்த்து வை. என்றனர்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ஆறாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 30
அத்யாயம்-7
குருகுல சிறுவர்கள் வேண்டிக் கொண்டபடி ப்ரஹ்லாதன் அவர்களுக்கு உபதேசம் செய்தான். நாரதரிடம் தான் கற்றதை அப்படியே சொன்னான்.
என் தந்தை தவம் செய்ய மந்த்ராசலம் சென்றபின், பெரும் போர் மூண்டது. தானவர்களுக்கும் மற்றவர்களுக்கும் வாசவன் முதலான தேவர்களுக்கும் இடையே பல பரீக்ஷையாக அந்த யுத்தம் அமைந்தது. தேவ சைன்யத்துக்கு எதிராக நிற்க முடியாமல் அசுரர்கள் பல திசைகளிலும் ஓடி மறைந்தனர். மனைவி மக்கள், மித்ரர்கள், ஆப்தர்களானவர்கள், வீடு வாசல், பசுக்கள், பணியாட்கள் அனைத்தையும் விட்டு உயிரைக் காப்பாற்றிக் கொள்ளவே ஓடினர். தந்தையின் அரண்மனையை அவர்கள் ஸூரையாடிய பொழுது இந்திரன் என் தாயாரை பிடித்து விட்டான். அழ அழ அவளை தூக்கிக் கொண்டு போகும் சமயம் நாரதர் எதிரில் வந்தார். சுரபதே! வேண்டாம். இவள் என்ன தவறு செய்தாள். மாற்றான் மனைவி, சதி, அவளை விடு. விட்டு விடு. இந்திரன் உடனே கேட்கவில்லை. இவள் வயிற்றில் அசுரனின் குழந்தை வளருகிறது அதுவும் தேவர்களின் எதிரி தானே. பிரசவம் ஆகும் வரை இருக்கட்டும், பிறக்கும் மகனை கொன்று விட்டு விட்டு விடுகிறேன் என்றான்.
வயிற்றில் வளரும் சிசு என்ன கண்டது ? நல்லதா, பொல்லாதா என்ன அறியும். களங்கமில்லாத பாலகன். அவன் பரம பாகவதனாக இருப்பான். அனந்தனை பஜிப்பவனாக வளருவான். உன்னை எதிர்க்க மாட்டான். கவலைப் படாதே என்று நாரதர் சொன்னார். இந்திரனும் சம்மதித்து அவளை விட்டு விட்டு தன் இருப்பிடம் சென்றான். ரிஷி என் தாயாரை, தன் ஆசிரமத்திற்கு அழைத்து வந்தார். மகளே! உன் கணவன் வரும் வரை இங்கு நிம்மதியாக இரு என்று அபயம் அளித்தார். அவளும் தேவேந்திர பயம் இல்லாமல் அங்கு வசித்தாள். ரிஷிக்கு வேண்டிய பணிவிடைகளை செய்தாள். தன் கர்பத்தில் உள்ள சிசுவின் நன்மைக்காக அல்லும் பகலும் பகவானை வேண்டிக்கொண்டபடி நாட்களை கடத்தினாள். ரிஷி கருணை மிக்கவர். அவளுக்கு தர்மம், தத்வம், ஞானம் முதலியவைகளை உபதேசித்தார். என்னையும் உத்தேசித்தே சொன்னார். அவள் நினைவில் இருக்கிறதோ இல்லையோ, நான் மறக்கவில்லை. அதைத் தான் சிரத்தையுடன் கேட்கும் உங்களுக்கு சொல்லப் போகிறேன்.
பிறப்பிலிருந்து ஆறு உணர்வுகள் தேகம் உடைய ஜீவன்களுக்கு சொல்லப் படுகின்றன. ஆத்மா தனி. பருவகாலம் வந்தால் மட்டுமே பழுக்கும் பழம் போல ஈஸ்வரனின் செயல். ஆத்மா, உடலின் உள் உறைகிறது. இந்த ஆத்மா நித்யமானது, அழிவில்லாதது. சுத்தமானது. க்ஷேத்ரக்ஞன் என்ற பகவானின் அம்சம். தானாக எதுவும் செய்யாது, அதை காணவும் முடியாது. பரவி இருக்கும் – எதனாலும் மறைக்கவும் முடியாது. இந்த பன்னிரண்டு லக்ஷணங்களால் ஆத்மாவை அறியலாம். எங்கும் இருப்பது ஒரே ஆத்மா தான் என்பதால், நான், என்னுடையது, மற்றவன் அவனுடையது என்ற எண்ணங்கள் பொருளற்றவை. இது தன் உடலில் தனக்கு ஏற்படும் மோகமே. அந்த எண்ணத்தை தவிர்க்க வேண்டும். தங்க சுரங்கத்தில் மண் மூடி கிடக்கும் ஸ்வர்ண துகள்களைப் பிரித்து ஸ்வர்ணகாரன் என்ற ஆசாரி (பொன் நகை செய்பவண்) முழுமையான நகையாக செய்வதைப் போல அத்யாத்மம் அறிய யோக சாதனைகள் உள்ளன. க்ஷேத்ரம் என்ற இந்த உடல், இதில் ஆத்மவித் என்ற ப்ரும்ம ஞானத்தை அறிந்து கொள்ள வேண்டும். எட்டு விதமான ப்ரக்ருதிகள்- இயற்கை சாதனங்கள். மூன்று குணங்கள். இவை ஒன்றோடொன்று இணைவதால் பதினாறு விதமாகும். இப்படி உருவான உடலில், ஒன்றேயான பரபுருஷன் தன் அம்சத்தை இட்டு நிரப்பி உடல் செயல் பட செய்கிறான். இவ்வாறு இயற்கையும், குணங்களும் சேர்ந்து உருவானாவை, அசையும், அசையாதவை என்று இருவகைப் படும். தாவரங்களுக்கும் உயிர் உண்டு ஆனால் இடம் விட்டு இடம் செல்வதில்லை. பிராணிகளும் நடமாடினாலும் புத்தி ஓரளவே. மனிதர்களுக்குத் தான் யோசித்தல், தானே கண்டு கொள்ளுதல் என்பது சாத்யம். இவர்கள் ஆத்மாவை இது அல்ல, இது அல்ல என்று ஒவ்வொன்றையும் ஆராய்ந்து (வாசனையா, ருசியா, எது உடலில் உறையும் ஆத்மா ) என்று தேடுவர். விவேகமும், ஆராய்ந்து அறியும் திறமையும் இருப்பதால், மனிதர்கள் பலவித சித்தாந்தங்களை, வேத வாக்யங்களை, என்று பலவிதமாக தேடிக் கண்டு கொள்வர். புத்தியும் மூன்றுஅவஸ்தைகள்-நிலைகளில் செயல்படும். விழிப்பு, கனவு (தூக்கம்), இடைபட்ட தூங்கி விழிக்கும் முன் முழுவதுமாக நினைவு வராத இடைபட்ட நிலை- சுஷுப்தி – எனப்படும். புத்தியின் ப்ரயோகத்தால், தன் செயல்களின் பலனாக நடப்பதை கொண்டும், ஆராய்ந்து, வாயுவின் வாசனையை வைத்தே எங்கிருந்து வருகிறது என்று கண்டு கொள்வது போல ஆத்மாவை அறிவர். இவைகளின் முதல்படி சம்சாரம் என்ற இந்த பூமியில் வாழ்வு. இது குணங்கள் வினைப் பயன்கள் இவற்றால் கட்டுண்டு இருக்கின்றன. அறியாமை இதன் அடிப்படை. கனவு போல என்று தெரிந்தாலும் உலகியல் மனிதர்களுக்கு விருப்பமானதாகவே உள்ளது.
நீங்கள் செய்யக் கூடியது, இந்த அடிப்படை அறியாமையை களைந்து ஞானம் பெற யோக சாதனைகளைச் செய்ய வேண்டும். பல உபாயங்கள், ஆயிரக் கணக்காக இருக்கின்றன. அதில் பகவானே (கீதையில்) சொன்னது, (யத்கரோஷி -யதஸ்னாசி, யஜ்ஜுஹோஷி, என்ற ஸ்லோகம்) உன் செயல்களை யாவையும் எனக்கு அர்ப்பணமாக செய்து விடு ) குருவுக்கு பணிவிடை செய்தும், பக்தியாலும், கிடைத்ததை அர்ப்பணம் செய்தும், சாது ஜனங்களின் சங்கத்தில் இருந்து அறிந்து கொண்டும், ஈஸ்வர ஆராதனை, பூஜை முதலியவைகளை செய்தும், சிரத்தையுடன் பகவானின் கதைகளைக் கேட்டும், பாடியும், தியானம், மூர்த்தி பூஜைகள், ஸ்ரீ ஹரி எல்லா ஜீவன் களிடமும் சமமாக இருக்கிறான் என்பதை திடமாக நம்பி இருப்பதும் அவசியம். உலகியலில் நாட்டம் குறைந்து, வாசுதேவனான பகவானிடம் பக்தி செய்து வந்தாலே, போதுமானது. பாடல்களை அனுபவித்து பாடும் பொழுதே, பகவானின் லீலைகளை மனதில் நினைக்கலாம். ஆடியும் பாடியும், ஏதோ நேரில் கண்டது போல உத்வேகத்துடன் நடந்து கொள்வதும் பக்தர்களின் செயல் பாடுகள். ஹரே! ஜகத்பதே நாராயணா! என்று பஜனை செய்வர். இப்படிச் செய்ய கூச்சமடைய மாட்டார்கள். இந்த நிலையில் பக்தியாலேயே அதோக்ஷஜனை அடைகிறார்கள்.
அவரை நினைப்பது சீக்கிரமே, இந்த சம்சார சக்கரத்திலிருந்து விடுபடச் செய்யும். ப்ரும்ம நிர்வாணம் என்ற நிலை என்று அறிந்தவர்கள் சொல்வார்கள். எனவே மனதில் ஸ்ரீ ஹரியை நினைத்து பஜனை செய்யுங்கள். பாலகர்களே! இதில் அதிக கஷ்டம் இல்லை. பகவான் எங்கோ தூரத்தில் இல்லை. நம் ஹ்ருதயத்திலேயே வசிக்கிறான். நம் சகாவாக சமயத்தில் சரியான வழியைக் காட்டுவான். அரச பதவி, மனைவி, மக்கள், பசுக்கள், பூமி, நிறைந்த பொக்கிஷம், அனைத்தும் பொருளாதாரம், காமம் என்பவைகளே. க்ஷணத்தில் விழக் கூடியவையே. மனிதனுக்கு என்னதான் இவைகளில் பற்று இருந்தாலும், சமயத்தில் உதவாது. மகா யாகங்கள் செய்வர். அதிசயமான செயல்களைச் செய்வர். நம்மால் எந்த வித்திலும் குறை சொல்ல முடியாத, நாம் கண்டதில்லை, கேட்டது தான் என்ற பரமாத்மாவான ஸ்ரீ ஹரியை பக்தியுடன் ஆராதிப்போம். சுகத்திற்காகவும், துக்கத்திலிருந்து விடுபடவும், சங்கல்பம் செய்து கொண்டும் வேதம் விதித்த செயல்களைச் செய்யும் கர்ம மார்கிகள், கர்ம பலனை தியாகம் செய்வதால் சுகம் அடைவார்கள். பலனை எண்ணியே செய்பவர்கள் பந்தத்தில் சிக்கிக் கொள்வர்.
பொருள்களில் ஆசை, மற்றவர்களால் விரும்பப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு, நிரந்தரமில்லாத இந்த உடலில் பற்றுதல் இவைகளால் அலைக்கழிக்கப் படுகிறார்கள். தன் உடலுடனே அழியக் கூடிய இந்த விஷயங்களுக்காக இந்த சிரமம் படுவானேன்? அசுரா:! இதில் தன்னலம் அன்றி வேறு ஏதாவது தெரிகிறதா?
உடலை வருத்தி சுகம் என்று தேடி அதைக் காண முடிந்திருக்கிறதா?
அனைத்து ஜீவன்களுக்கும் ஸ்ரீ ஹரியே, பிரியமான ஆத்மேஸ்வரன். மஹத் முதலான பஞ்ச பூதங்கள், இவற்றால் பெற்ற உடல், தேவர்களோ, அசுரர்களோ, மனிதர்களோ, யக்ஷ, கந்தர்வர்களோ, ஸ்ரீ முகுந்தனை பஜனை செய்து நற்கதி பெற முடியும். அசுராத்மஜா:! ஹே அசுர புதல்வர்களே, இந்த தேவன், அசுரன், ரிஷிகள் என்று மட்டும் ஸ்ரீ ஹரியை திருப்தி படுத்த முடியாது. நன்னடத்தை, நிரம்ப அறிவு, தானங்கள், தவம், யாகங்கள், ஒழுக்கம், விரதங்கள், இவை அனைத்தையும் விட திடமான பக்தி பெரியது. எனவே, ஹரியிடம் பக்தியுடன் பஜனை செய்யுங்கள். தன்னைப் போலவே உலகில் அனைவரையும் மதிக்க தெரிந்து கொள்ளுங்கள். கோவிந்தனிடத்தில் ஏகாந்த பக்தியே உய்வடைய வழி, அதையே செய்யுங்கள்.
இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ஏழாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 30
அத்யாயம்-8
அசுர சிறுவர்கள், ப்ரஹ்லாதனின் அறிவுரையைக் கேட்டு, குருவிடம் கற்ற பாடங்களை விட அதுவே உயர்வாக இருப்பதாக உணர்ந்தனர். இவர்கள் தனியாக அமர்ந்து பேசிக் கொண்டிருப்பதைக் கண்ட குரு புத்திரர்கள், ஏதோ தவறு என்று பயந்து அரசனிடம் தெரிவித்தனர். தன் மகனே தனக்கு அனுகூலமாக இல்லை என்ற செய்தியால் வெகுண்ட கோபவேசத்தால் உடல் நடுங்க, உடனடியாக மகனை கொல்லும் எண்ணத்துடன் விரைந்து வந்தான். ப்ரஹ்லாதனை கடுமையாக திட்டினான். கண்கள் சிவக்க,கைகூப்பி வணங்கி நின்றவனை, இயல்பாகவே கடுமையானவன், காலால் மிதிபட்ட சர்ப்பம் போல சீறியபடி, ஹே! துர்விநீத! வினயம் இல்லாதவனே, மந்த புத்தி, குல நாசகனாக வந்த அதமன், என் ஆட்சியை குறை கூறும் உன்னை இதோ யமலோகம் அனுப்புகிறேன் என்று பலத்த குரலில் அதட்டியவன், சிறுவன் நீ, என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய். என் சொல்லை மீறினால் என்ன தண்டனை தெரியுமா? நான் வெகுண்டால் மூவுலகும் நடுங்கும். மூவுலக தலைவர்களும் நடுங்குவர். பயமின்றி, ஹே! மூடா! என் கட்டளையை ஏன் மீறினாய்?
ப்ரஹ்லாதன் சொன்னான்: ராஜன்! எனக்கு மட்டுமல்ல, அது தான் பலம். பலசாலி என்று உள்ள அனைவருக்கும் அது தான் பலம். கடந்த, நிகழ்,வரும் காலங்களிலும் சராசர -அசையும் அசையா பொருட்கள் அனைத்தும், ப்ரும்மா முதலானவர்களையும் தன் வசம் வைத்திருப்பவர், அவர் தான் பலம்.
அந்த ஈஸ்வரன் மஹா ப்ராக்ரமம் உடைய காலன், அவனே உயிரினங்களில் புலன்களுடன் உள்ள வடிவம் செயல் பட செய்பவன். அதன் மனதின் சக்தி, தைர்யம், பலம். தேக சக்தி, இந்திரியங்களுடன் அவர்களின் ஆத்மா. அவன் தான் பரம ஸ்ரேஷ்டன். முக்குணங்களையும் ஆளுபவன். அத்துடன் மற்ற தத்வங்களுடன், உலகை படைத்தும், காத்தும், பின் கலைக்கிறான். தந்தையே, இந்த அசுர குணத்தை விடுங்கள். மனதை சாந்தமாக வைத்துக் கொள்ளுங்கள், எதற்கு மற்றவரிடத்தில் துவேஷம்? அனைவரையும் சமமாக பாருங்கள். மன அடக்கம் இல்லாத இடத்தில் தான் துவேஷம் போன்ற கெட்ட எண்ணங்கள் வரும். அனைத்து ஜீவன்களையும் சமமாக எண்ணுவதே பகவானுக்கு செய்யும் பெரிய ஆராதனை. தன் இந்திரியங்களே தான் ஒருவனுக்கு சத்ரு. அது திருடன் போல ஐஸ்வர்யம், செல்வம் இவைகளை மற்றவர்களிடமிருந்து அபகரித்து தான் வெற்றி பெற்றதாக எண்ண வைக்கிறது. பத்து திசைகளையும் தானே வென்றதாக பெருமை பேச வைக்கிறது. இந்த அபிமானம் கண்களை மறைக்கிறது. இன்னமும் எதிரிகள் இல்லாமல் இல்லை. சரீரம் தான் வெவ்வேறு, ஆத்மா ஒன்றே என்ற அறிந்த பெரியவர்கள், சமதர்சிகள். அனவரும் ஒன்றே என்று தெரிந்ததால் எவரையும் எதிரியாக சொல்வதில்லை.
ஹிரண்ய கசிபு பதிலுக்கு ஆத்திரத்துடன், நிச்சயம் நீ மரணத்தை எதிர் கொண்டு நிற்கிறாய். அளவுக்கு மிஞ்சி உளறுகிறாய். மந்த புத்தியே! என்னையன்றி ஜகதீஸ்வரனாக ஒருவன் இருக்கிறான் என்றால், எங்கே இருக்கிறான், இந்த கம்பத்திலா? காணவில்லையே என்றான். இதோ நான் அதிகப்ரசங்கித் தனமாக பேத்தும் உன்னை தலை வேறு உடல் வேறு என்று ஆக்குகிறேன், உன் பகவான் வந்து காப்பாற்றுகிறானா பார்க்கலாம் என்று சொல்லியபடி, தன் சிம்மாசனத்திலிருந்து இறங்கி, கையில் வாளுடன் வந்தவன் அந்த கம்பத்தை ஓங்கி அடித்தான். அந்த கம்பத்திலிருந்து பயங்கரமான சப்தம் எழுந்தது. அண்டங்கள் நடுங்கின. கட கடவென்ற சப்தம் ப்ரும்மா முதலான தேவர்கள் தங்கள் முடிவு வந்து விட்டதாகவே பயந்தனர். புத்திரனை கொல்ல கிளம்பியவன், முன் கேட்டறியாத பயங்கரமான ஓசை, அத்துடன் அத்புதமான அபூர்வமான ஒன்றை சபை நடுவில் கண்டான். தேவர்களின் எதிரிகளான அசுரர்களை அலறச் செய்தவன்.
सत्यं विधातुं निजभृत्यभाषितं व्याप्तिं च भूतेष्वखिलेषु चात्मनः ।अदृश्यतात्यद्भुतरूपमुद्वहन् स्तम्भे सभायां न मृगं न मानुषम् ॥
தன் பக்தன் சொன்னதை நிரூபிப்பதற்காக, அனைத்து உயிர்களிலும் ஆத்மாவாக இருப்பவன், முன் கண்டிராத அத்புதமான ரூபத்தை எடுத்துக் கொண்டவனாக, சபையின் கம்பத்தில் மனிதனுமல்ல, மிருகமுமல்ல என்பது போன்ற உருவம் எடுத்துக் கொண்டு வெளிப்பட்டான்.
திகைத்து, இது என்ன உருவம் என்று பார்த்தபடி இருந்த ஹிரண்யகசிபுவின் முன்னால் ஸ்ரீ ஹரி, நரசிங்கமாக தோன்றினார். பயங்கரமான ரூபம் என்று வர்ணிக்கிறார். தகிக்கும் நெருப்பில் புடமிட போட்ட தங்கம் போல பள பளத்த சிவந்த கண்கள், சிங்கத்தின் பிடரி பயிர், ஜடையுடன் முகத்தை மறைக்க, பயங்கரமான பற்கள், சிங்கத்தின் கத்தி போன்ற கூர்மையான நாக்கு, அடர்ந்த புருவங்கள், சங்கு போன்ற மேல் நோக்கி உயர்ந்த காதுகள், மலை குகை போல ஆழமான வாயும், மூக்கும், கன்னங்களும் முகவாயும் பயங்கரமாக காது வரை நீண்டிருக்க, வானளாவிய சரீரம், அடங்கிய கழுத்து, அதனடியில் விசாலமான மார்பு பிரதேசம், சிறுத்த இடைகள், சந்திரனின் கிரணம் போன்ற வெளுத்த கூர்மையான ரோமங்கள், நாலு திசைகளிலும் பரவி நின்ற எண்ணற்ற புஜங்கள், நூற்றுக் கணக்கான நகங்கள், இவைகளே ஆயுதமாக, தன்னுடைய இயல்பான ஆயுதங்கள் எதுவும் இன்றி, இருந்தவரைப் பார்த்து ஹிரண்யகசிபு இதுவும் ஸ்ரீஹரியின் மாயா தோற்றமே, என்னைக் கொல்ல வந்திருக்கிறான் என்று சொல்லியபடி, தன் கதாயுதத்துடன் போருக்குத் தயாராக
சிங்கத்தின் முன் குட்டி யானை போல எதிர்த்தான். பதங்க:- விட்டில் பூச்சி தானாகவே வந்து நெருப்பில் வீழ்ந்து உயிரை விடுவது போல ந்ருசிங்கத்தின் ஆற்றலின் முன் விழுந்தான்.
அதில் என்ன ஆச்சர்யம். சத்வ ப்ரகாசமான ஸ்ரீ ஹரியிடத்தில் தாமசமான இருள் மறைவது இயல்பானதே.
ஸ்ரீ ஹரியோ, முன் தாமசமான ப்ரளய கால இருட்டையே தான் விழுங்கியவர் தானே. அசுரன் கதையால் அடிப்பதைப் பார்த்த தேவர்கள் திகைத்தனர். அசுரனால் அவர்களுடைய இருப்பிடமும் அக்ரமிக்கப் பட்டு விட்டதால், மேகக் கூட்டங்களில் மறைந்து நின்றபடி திகிலுடன் பார்த்தபடி இருந்தனர். அசுரன் கையிலிருந்து விடுபட்ட ந்ருஹரியைக் கண்டதும் ஆஸ்வாசமடைந்தனர். ஆஹா, என்னிடம் பயந்து விட்டான் என்று ஆர்பரித்தபடி, தன் வாளை அதன் உறையிலிருந்து உருவி எடுத்துக் கொண்டு, அசுரன் கழுகின் வேகத்துடன். முன்னேறினான். ஸ்ரீ ஹரியின் அட்டஹாஸமும், தேஜசும் அவன் கண்களைக் கூசச் செய்தன. புலி பதுங்கி இருந்து மூஷிகத்தை பிடிப்பது போல, அல்லது பாம்பை கருடன் கொத்திக் கொண்டு போவது போலவும், உலகை நாலா திக்குகளிலும் ஆக்ரமிக்கும் க்ரஹம் போல, அசுரனை மடக்கி பிடித்தார். சபையின் சபா த்வாரத்தின் உள்ளும் அல்ல, புறமும் அல்ல, பூமியிலும் அல்ல, வானத்திலும் அல்ல என்பது போல தன் தொடையில் போட்டுக் கொண்டு, நகங்களால், உயிரை எடுக்கும் ஆயுதங்களும் அல்ல, இரவும் அல்ல, பகலும் அல்ல என்ற சந்த்யா காலத்தில், தன் நீண்ட நாக்கினால் அவன் உயிரை எடுத்தார். ரத்தம் தோய்ந்த சிங்க முகம் எதிர்த்து நின்ற யானையை த்வம்சம் செய்தபின் இருப்பது போலவே இருந்தது.
தன் நகத்தின் நுனியால், ஹிரண்யாசுரனின் ஹ்ருதய கமலத்தை கிழித்து எடுத்தார். அதை விட்டு விட்டு, மற்ற அசுர வீரர்களை நோக்கி திரும்பினார். ஆயிரக் கணக்காக ஓடி வந்த அசுர வீரர்களையும் நகத்தாலேயே தாக்கி, மடியச் செய்தார்.
வானளாவி நின்றதால் அவருடைய மூச்சுக் காற்றுப் பட்டு மேகங்கள் பாதிக்கப்பட்டன. திக் கஜங்கள் பயந்து அலறின. ஆகாயத்தில் சென்று கொண்டிருந்த விமானங்கள், ஆட்டம் கண்டன. ந்ருஹரியின் பாதங்களால் மிதிக்கப் பட்ட பூமி திணறினாள். அவருடைய வேகத்தில் மலைகள் தூக்கி வீசப் பட்டன. ந்ருஹரியின் தேஜஸின் முன் வானமோ, திசைகளோ, அடுத்து அண்டாண்டங்களோ இருப்பதே தெரியவில்லை. சபையில் சிம்ஹாஸனத்தில் அமர்ந்தவரை யாரும் நெருங்கவே பயந்தனர். சர்வ லோகத்துக்கும் தலைவலியாக இருந்த ஹிரண்ய கசிபு அந்த முதல் தைத்யன் ந்ருஹரியால் யுத்தத்தில் ஹதம் செய்யப் பட்டதையறிந்து அனைவரும் மகிழ்ந்தனர். மகிழ்ச்சியில் தேவர்கள், தேவ ஸ்த்ரீகள் அனைவரும் முக மலர்ச்சியுடன் புஷ்பங்களை வர்ஷித்தனர். வானம் அவர்களின் வாகனங்களால் நிரம்பியது. வாத்யங்களின் வாத்யம் குதூகலமாக எங்கும் கேட்டது. கந்தர்வர்களின் ஆட்டமும், அந்த ஸ்த்ரீகளின் பாட்டும் பரவியது. சற்று நேரம் பயந்து ஒதுங்கி இருந்த ருத்ரன், ப்ரும்மா முதலியோர்கள் தைரியமாக அருகில் வந்தனர். தலை யில் வைத்த அஞ்சலியுடன் ஒவ்வொருவராக வந்து துதி செய்தனர். ரிஷிகளும் பித்ருக்களும், சித்தர்களும், வித்யாதர, மஹோரகர்களும் , ப்ரஜாபதியும், கந்தர்வ அப்சரஸ் சாரணர்கள், யக்ஷ, கிம் புருஷர்களும் வேதாளங்களும், சித்த கின்னர்களும், விஷ்ணு பார்ஷதர்கள் அனைவரும், சுனந்த குமுதன் முதலியோரும், அதே போல தலைக்கு மேல் கைகூப்பி வணங்கியபடி தீவிர தேஜசுடன் அமர்ந்திருந்த நரசிம்மரை அதிகம் நெருங்காமலே வணங்கினர்.
ப்ரும்மா சொன்னார்: வணங்குகிறேன். அனந்தன், அளவில்லாத சக்தியுடையவன், விசித்ர வீர்யன், பவித்ர கர்மாவை செய்பவன், விஸ்வத்தின் யுகம் தோறும் காத்தும் , பின் லயமாகச் செய்தும் தன் குணங்களால், லீலையால், சேர்த்து இயங்கச் செய்யும் அழிவற்ற உங்களுக்கு நமஸ்காரம்.
ஸ்ரீ ருத்ரன் சொன்னார்: யுகாந்தத்தில் வெளிப்படும் உங்கள் கோபம் தற்சமயம் இந்த அசுரனை அழிக்க வந்துள்ளது. அவன் மகனை காப்பாற்றுங்கள். பக்த வத்சல! அவன் உங்கள் பக்தனே.
இந்திரன் சொன்னான்: எங்களுக்கு உரித்தான யாக பாகங்கள் திரும்ப பெற்றோம். இந்த தைத்யன் தானே இந்திரனாகவும் மற்ற தேவர்களுமாக தோன்றி யாக ஹவிசை அபகரித்துக் கொண்டு விட்டான். அதனால் எங்கள் ஹ்ருதய கமலம் – உள்ளத்தை உங்களிடமே ஒளித்து வைத்து இருந்தோம். இப்பொழுது அசுரன் அழிந்தான், எங்கள் பயமும் நீங்கியது. நரசிங்கனாக வந்த உன் செயலால் எங்கள் இயல்பான உரிமைகளைப் பெற்றோம்,
ரிஷிகள் சொன்னார்கள்: நீ தான் எங்கள் தவத்தின் பலன். பரமன், ஆதி புருஷன், ஆத்ம தேஜஸால் ஸ்ருஷ்டிக்கிறாய். ஆதி அந்தம் இல்லாத சரணடைந்தவர்களைக் காப்பவனே, இந்த அசுரனால் சேதமான இந்த மூவுலகையும் புனருத்தாரணம் செய்ய வேண்டும். அதற்காகவே இப்படி ஒரு ரூபம் எடுத்து வந்தாயா?
பித்ருக்கள் – எங்கள் வம்சத்தினர் செய்யும் ஸ்ரார்தங்கள் எங்களுக்கு வந்து சேரவில்லை. அவர்கள் அளித்த எள்ளும் நீரும் இந்த அசுரனின் வயிற்றில் இருந்ததோ, அதை உன் நகங்களால் கிழித்து காட்டினாயோ, ந்ருஹரே! அகில தர்ம பாலனான உனக்கு நமஸ்காரம்.
சித்தர்கள்: எங்களுக்கு நீயே தான் கதி. யோக சித்திகளை இந்த அசாது –(ஸாது எதிர்பதம் அசாது) தன் தவ வலிமையால் அபகரித்துக் கொண்டான். அந்த துஷ்ட காரியத்தைத் தான் உன் நகங்களால் கீறி, அழித்தாயா, ந்ருசிம்ஹ, உன்னை வணங்குகிறோம்.
வித்யாதரர்கள்: எங்கள் வித்யைகளை இடை மறித்தான். பல காலமாக நாங்கள் தாரணை என்ற முறையில் கற்றுத் தேர்ந்த கலைகள், வித்தைகள், இவைகளை, பலம் வீர்யம் இவைகளால் கர்வம் கொண்டவனாக அவைகளை தடுத்தான். யுத்தம் செய்து துஷ்ட மிருகத்தைக் கொல்வது போல அழித்தாய், எங்கள் வித்தைகள் காப்பாற்றப் பட்டன, ந்ருசிம்ஹ, வணங்குகிறோம்.
நாகர்கள்: பாபி இவன். எங்கள் ரத்னங்களை, அத்துடன் ஸ்த்ரீ ரத்னங்களையும் அபகரித்தான். இவனை என்ன செய்தால் என்ன என்று தவித்தோம். அவன் மார்பை பிளந்தது எங்களுக்கு மிக்க மிகிழ்ச்சியே. உனக்கு நமஸ்காரம்.
மனுக்கள்: நாங்கள் மனுக்கள். உங்கள் கட்டளைப் படி நடப்பவர்கள். திதி மகனான இவனால் அவமானப் பட்டோம். அந்த துஷ்டனை அடக்கி விட்டீர்கள் ப்ரபோ! எப்படி உங்களுக்கு கைம்மாறு செய்வோம், உங்கள் கிங்கரர்கள் நாங்கள், கட்டளையிடுங்கள்.
ப்ரஜாபதிகள்: ப்ரஜாபதிகள் நாங்கள். உங்களால் ப்ரஜா பாலனத்திற்காகவே ஸ்ருஷ்டிக்கப் பட்டோம். இது வரை தடை பட்ட எங்கள் செயல்களை செய்வோம். இதோ உங்களால் மார்பு உடைக்கப் பட்டு கிடக்கிறானே, இனி ஜகத்துக்கே மங்களம் தான். சத்வ மூர்த்தே, நன்று இந்த அவதாரம்.
கந்தர்வர்கள்: ப்ரபோ! நாங்கள் நட,நாட்ய காயகா: – நாடகம்- அபிநயம் செய்பவர்கள், நாட்யமாடுபவர்கள், பாடுபவர்கள். தன் பலம் அதிகாரம் இவைகளைக் கொண்டு அதிகாரம் செய்தான். இவன் இந்த தசையை அடைந்து கிடக்கிறானே, அது எங்கள் நன்மைக்கே.
சாரணர்கள்: உலக வாழ்க்கை தொடர வேண்டாம், என்றும், அபவர்கம் எனும் உன் பாத சேவையையே வேண்டும் என்று உன் பாதங்களை ஆஸ்ரயித்த சாரணர்கள் நாங்கள். நன்றே செய்தாய். இந்த அசுரன் ஹ்ருதயம் பிளந்து விழுந்தான்.
யக்ஷர்கள்: நாங்கள் உன் அணுக்கத் தொண்டர்கள். உன் அருகில் இருந்து மனதுக்கு பிடித்த செயல்களை செய்து வந்தோம். அந்த திதி சுதன் எங்களை பல்லக்கு தூக்கிகளாக ஆக்கி விட்டான். ஜனங்களுக்கு சொல்லொணா தாபத்தைக் கொடுத்த இந்த அசுரன் உன்னால் பஞ்சதாம்- மரணத்தை அடைந்தான்.
கிம்புருஷர்கள்: நாங்கள் கிம் புருஷர்கள். தாங்களோ மஹா புருஷன் எனும் ஈஸ்வரன். எங்களை அலட்சியம் செய்தான். இந்த மட்டமான மனிதன் மரித்தான்.
வைதாளிகர்கள்: எங்கள் குலத்தினர், சபைகளில், யாகங்களில், உங்களூடைய அமலமான புகழை பாடுவோம். அதனால் மக்களிடையே பெரும் மதிப்பை பெற்றோம். இந்த துர் ஜன்மா அதை ஒட்டு மொத்தமாக நிறுத்தச் செய்து விட்டான். எங்கள் நல்ல காலம், உன்னால் ஹதம் செய்யப் பட்டான். பகவன்! வியாதி நிவாரணமானால் பத்ரம்- நிம்மதி வருமே அது போல நாங்கள் துயர் நீங்கினோம்.
கின்னர்கள்: உங்கள் அனுசரர்கள், உடன் வரும் கின்னர கூட்டத்தினர். இந்த தைத்யன் எங்களுக்கு ஊதியம் எதுவும் தராமலே வேலை வாங்கினான். ஹரே! இந்த பாபாத்மா உன்னால் அழிந்தான். ஹரே! நரசிம்ஹ நாதா! எங்களுக்கு நன்மையை செய்.
விஷ்ணு பார்ஷதர்கள்: அத்புதமான உங்கள் நரஹரி ரூபத்தை பார்த்து வியக்கிறோம். சரணம் அடைந்தவர்களை காப்பதைக் கண்டிருக்கிறோம். இது இவர் விதி ஈசனே! விப்ர- அந்தணனால் சபிக்கப் பட்டவன். இந்த மரணமே இவனுக்கு அனுக்ரஹம் என்று அறிகிறோம்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், எட்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 56
அத்யாயம்-9
இவ்வாறு ப்ரும்மா, ருத்ரன் முதல் அனைத்து தேவர்களும் வந்து வணங்கியும் நரசிங்கருடைய ஆச்சர்யமான கோபத்தை குறைக்க முடியவில்லை. தேவர்கள் லக்ஷ்மி தேவியையே அனுப்பினார்கள். அத்புதமான ரூபம், அந்த காணக் கிடைக்காத மிகப் பெரிய உருவத்தை லக்ஷ்மி தேவி சமாதனப் படுத்த முடியும் என்று நினைத்தனர். அவள் முன் கண்டறியாத, கேட்டறியாத உருவம் என்பதால் சந்தேகம் கொண்டு மறுத்து விட்டாள். ப்ரஹ்லாதனையே அனுப்பினர். அருகில் ப்ரும்மா உதவிக்கு நின்றார். மகனே! உன் தந்தையிடம் கோபித்துக் கொண்டு இருப்பவரை நீயே போய் சமாதனம் செய் என்றனர். சம்மதித்த ப்ரஹ்லாதன் அருகில் சென்று வணங்கினான். தன் காலில் விழுந்த சிறுவனைப் பார்த்து தேவன் கருணையுடன் எழுப்பி, அவன் தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார். காலடியில் சர்ப்பத்தைக் கண்டு பயந்தவர்களுக்கு அபயம் அளிப்பது போல. அந்த கை மேலே பட்டவுடனே தன்னை ஸூழ்ந்திருந்த அசுபங்கள் விலகி விட்டதாக ப்ரஹ்லாதன் உணர்ந்தான். பரிசுத்தமான மனதுடன் அவர் பாத பத்மங்களை தன் மனதில் இருத்திக் கொண்டான். கண்களில் நீர்பெருகியது. மனதின் மகிழ்ச்சி உடலில் தெரிந்தது. ஆழ்ந்த தியானத்தால் தன் மனதை ஒருமுகப் படுத்திக் கொண்டான். வாயில் வார்த்தைகள் வெளி வராமல் குரல் தழ தழத்தது. அவரையே பார்த்தபடி துதி செய்தான்.
ப்ரஹ்லாதன் சொன்னான்: ப்ரும்மா முதலான தேவர்கள், முனிவர்களும் சித்தர்களும், ஒரே குரலில் மனப் பூர்வமாக சொற்களின் ப்ரவாகமாக ஆராதித்தனர். பகவானை பூஜை செய்ய, உயர் குல பிறப்போ, தனம் நிறைந்த உறவினர் கூட்டமோ, தவ சீலர்களோ, தேஜஸால் வரும் ப்ரபாவமோ, பலம் பௌருஷம் புத்தி, இவைகள் இணைந்து இருப்பதோ, பர புருஷனுக்கு ஆராதனையாக முடியாது. பக்தியால் பகவான் சந்தோஷப் படுகிறார். கஜேந்திரனுக்கு அருளியதே சாட்சி. பன்னிரண்டு குணங்கள் அந்தணர்களுக்கு விதிக்கப் பட்டதாகச் சொல்வர். (தர்மம், சத்வம், தமம், தவம், சங்கோசம், அஸூயை இல்லாமை, அறிதலில் ஆர்வம், யாகம், தானம், உறுதி, வேத ஞானம், விரதங்கள்) இந்த குணங்கள் இருந்தும் அரவிந்த நாபன் என்ற பகவான் விஷ்ணுவிடம் துவேஷம் இருந்தால் என்ன பலன்? சுய கர்வம் உள்ள ஒருவர் என்னதான் அறிவாளியானாலும் அவரால் மற்றவர்களுக்கு நன்மை இல்லை. முகத்தில் இட்ட திலகம் ப்ரதி பிம்பத்தில் தானே காண முடியும்.
பகவான் பக்தியினால் மட்டுமே மகிழ்ச்சியடைகிறார். இந்த குலத்தில் பிறந்தேன் என்பதால் நான் அசுரன். எனக்கு தெரிந்த வரை பகவானை துதிக்கிறேன். விதியின் வசம் தான் பிறப்பும், நல்ல குலத்திலோ, மற்றதிலோ அதை மாற்ற முடியாது. இந்த க்ரோதமும் உங்கள் அவதாரமும் உலக க்ஷேமத்திற்காக, எவரையும் பயப்படுத்த இல்லை என்று அறிகிறேன். அதனால் ப்ரபோ! இந்த ரூபத்தை மாற்றிக் கொள்ளுங்கள். உலகை ஹிம்சித்த அசுரன் மடிந்தான். இந்த க்ரோதத்தை விட்டு உங்களுடைய சௌம்யமான ரூபத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றவர்களுக்கு உபத்ரவமே செய்யும் தேள் போன்ற ஜந்துக்கள் போன்ற சில பிறவிகள். இவைகளை வதம் தான் செய்ய வேண்டும். சாதுக்கள், சாதாரண ஜனங்கள் உங்களை இந்த ரூபத்தில் கண்டதில்லை எனவே, அவர்களுக்காக இந்த பயங்கர உருவத்தை விடுங்கள். . அவதார காரியம் அசுரன் மடிந்ததில் ஆகி விட்டது. உலகமே நிம்மதியடைந்துள்ளது. ந்ருசிம்ஹ, இந்த ரூபத்தை உலக நன்மைக்கானது என்பதை என்றும் நினைத்திருப்பார்கள்.
நான் பயப்படவில்லை. இந்த பயங்கரமான தோற்றம்- சிங்க முகமும், நீண்ட நாக்கும், தீயின் ஜ்வாலை போல சிவந்த கண்களும், புருவங்களும், உக்ரமான பற்களும், அசுரனின் குடலை மாலையாக தரித்திருப்பதும், ரத்தம் தோய்ந்த சிங்கத்தின் பிடரி மயிர்களும், சங்கு போன்ற நீண்ட காதுகளும், அட்டகாசமான சிரிப்பால் பயந்த திக் கஜங்கள், வாளின் கூர்மையுடன் நகங்கள், இவைகளைக் கண்டு நான் பயப்படவில்லை. , எளியவர்களுக்கு இரங்கும் குணவானே! உலகியலில் உள்ள துன்பங்களைக் கண்டு பயப்படுகிறேன். உன் சரண கமலங்களில் என்னை ஏற்றுக் கொள். இந்த பிறவி, மறு பிறவி என்ற சுழலில் திரும்ப திரும்ப புதுப் புது ஜீவன்களின் கர்பத்தில் பிறப்பதை, பிரியமானது அப்ரியமானது என்ற உறவுகள், அவைகளின் அருகாமை சுகம் என்றால் பிரிவு மிக துன்பம், என்று சோகம் அக்னியாக தகிக்கும் இந்த சம்சார பந்தம் வேண்டாம். இப்படி அலையாமல் எனக்கு உன்னடி நிழலைத் தர வேண்டுகிறேன்.
ந்ருசிம்ஹ! ப்ரும்மா முதலானோர் புகழ்ந்து பாடும் உன் அவதார லீலைகளை கேட்டபடி, உங்களருகில் சேவகனாக இருக்க வரம் தர வேண்டும். இந்த பாலகனுக்கு வேறு அடைக்கலம் இல்லை. வியாதியுடையவனுக்கு ஔஷதம்- மருந்தே சரணம். கடலில் மூழ்கியவனுக்கு கிட்டிய படகே சரணம்.
என் தந்தையும் தாயும் நீங்களே. ஒரு வேளை, இது போன்ற கஷ்டமான சமயங்களில், எப்படியோ, யாராலோ, ஏதோ ஒரு சமயத்தில், முன் பின் அறியாத ஒருவன் உதவிக்கு வருவான் என்பது நியதி என்று வைத்துக் கொண்டாலும் அந்த ரக்ஷகன் நீங்களே தானாக இருப்பீர்கள். சந்தர்பத்துக்கு தகுந்த வேடத்தில் வந்து சேருவாய். எப்படி தீர்மானமாகச் சொல்கிறாய் என்றால், உலகில் தாய் தந்தையை, அதையும் விட மேலான ப்ரும்மா போன்றவர்கள், அவரவர் செயல்களை குறைவற செய்ய முடிவதும் உன் அனுக்ரஹத்தலேயே. அடிப்படையான சக்தி நீயே. அதனால் எந்த சமயத்தில், என்ன காரணத்தால், எந்த கருவியினால், எவரை தூண்டி விட்டு, அந்தசூழ்நிலைக்கு ஏற்ற சாதனங்களையும், யாருக்கு தர வேண்டும் என்பதும், தன்னைச் சார்ந்தவர்களொ, மற்றவர்களோ, அவர்களைக் கொண்டு செய்விக்கிறாய். யாரானாலும் சமயத்தில் உதவி செய்பவன் உன் ஸ்வரூபமே, நீயே.
மற்றவர்களுக்கு உதவி செய்வது பொதுவாக மனித குணமே இல்லை என்ற விதிப்படி, எனக்கு ரக்ஷகன் நீயே. உன் அனுக்ரஹத்தால், மாயை மனத்தை ஆட்டுவிக்கிறது. காலத்தால் தூண்டப்பட்டு செயல்களைச் செய்ய தூண்டுகிறது. வேத சாரமான பதினாறு ஆரங்கள் உடைய சம்சார சக்ரம். இதை யார் தவிர்க்க முடியும். நீயே தன் ஆற்றலால் ஆத்ம குணங்களை வென்றவனாக, காலத்தை தன் ஆளுமைக்குள் வைத்திருப்பவன், அணைக்கவும், தண்டிக்கவும் சக்தியுடையவன், ப்ரும்மாவினால் இந்த சக்ரத்தில் தள்ளப் பட்ட உன் தாஸன் என்னை காப்பற்றுங்கள் பிரபோ!.
உலகில் மனிதர்கள், ஆயுள், செல்வம், பதவி இவைகளைத் தான் அதிகமாக வேண்டுகிறார்கள் என்பதைக் கண்டிருக்கிறேன். இவையனைத்தையும் நிரம்ப பெற்றிருந்த என் தந்தை உங்கள் அட்டகாசமான சிரிப்பு, புருவங்களின் நெரிசல் இவைகளால் ஹதம் செய்யப் பட்டதை நேரில் கண்டேன். எனவே அனித்யமான போகங்கள், தேவலோகமே ஆனாலும் எனக்கு வேண்டாம். என்னை உங்கள் அருகில் பணிவிடை செய்யும் தாஸனாக வைத்துக் கொள்ளுங்கள்.
வேத வாக்யங்களால் சொல்லும் ஆசிகள் கானல் நீரைப் போன்றதே. அனைத்து நோய்களுக்கும் இடம் கொடுக்கும் இந்த சரீரம், இதையறியாத மனிதர்கள் நெருப்பின் ஜ்வாலையை தேன் துளிகளால் அணைக்க முயலுவது போல அல்ப சுகங்களில், காமத்தை திருப்தி செய்ய பாடு படுகிறார்கள்.
தாமசமே அதிகமான இந்த அசுர குலத்தில் பிறந்த எனக்கு, ப்ரும்மா முதலானவர்களுக்கு கூட கிடைக்காத உங்கள் சரீர ஸ்பரிசம், என் தலையில் உங்கள் பத்ம கரத்தை வைத்து அனுக்ரஹித்தீர்கள். என்னே உங்கள் அனுகம்பம்- பரிவு. பிறவிகளில் உயர்வு தாழ்வு என்று மற்றவர்கள் நினைக்கலாம். தாங்கள் அனைவருக்கும் நண்பனானவன். சிருஷ்டியில் ஏற்றத் தாழ்வு காண்பது அறியாமை. பல விதமாக சாதனைகள் செய்து உங்கள் அனுக்ரஹத்தை அடைய முயற்சிகள், தவம் விரதங்கள் செய்கின்றனர். அங்கும் அவர்களின் சாதனைகளுக்கு ஏற்ற பலன்களே கிடைக்கின்றன. வேண்டியதை கொடுக்கும் கல்ப தரு கூட வேண்டியதைத் தான் தரும். அதற்கு மேல் தராது.
எதுவுமில்லாத எனக்கு உங்கள் அனுக்ரஹம் கிடைத்தது என் குரு ஸ்ரீ நாரதரின் அருளால் என்று நினைக்கிறேன். உங்கள் பக்தன் நாரதர் முதலில் எனக்கு தரிசனம் தந்து உபதேசம் செய்தார். அவர் கிணற்றில் விழுந்தவனை தூக்கி விடுவது போல எதுவுமறியாத என்னை ஞானோபதேசம் செய்து தூக்கி விட்டார். அவரோ உங்கள் பக்தன், தாசன், எனவே எனக்கு கிடைத்த இந்த அனுக்ரஹம் அவர் காரணமாக கிடைத்தது என்பதில் சந்தேகம் இல்லை.
அனந்த! என் தந்தையின் வதமும், என் ப்ராண ரக்ஷணமும், உங்கள் பக்தனான ரிஷியின் வார்த்தையை சத்யமாக்கவே. வாளைத் தூக்கிக் கொண்டு என்னிடம், என்னை தவிர வேறு யார் ஈஸ்வரன்? என்று அசட்டுத் தனமாக கொல்வேன், என்று வந்த என் தந்தையிடமிருந்து என் உயிரை காத்தவர் நீங்கள். ஆதி அந்தம் மத்யம் என்று எங்கும் பரவி இருப்பவர், தன் மாயையால் குணங்களின் வேறு பட்ட பிரயோகங்களால் பல விதமாக ஸ்ருஷ்டி செய்த பின், தானே அவைகளின் உள் உறைபவர். இந்த அசுர அரசனின் நிதனம் காலத்தினால் நிர்ணயிக்கப் பட்டது. மரத்திற்கு காரணம் விதை என்றும், பூமி அதன் இருப்பிடம் மட்டுமே, அந்த விதையை மரமாக்குவது பூமியே என்றாலும், காரணங்கள் இரண்டு வகையாக – ஒன்று வெளியில் தெரிவதாக, விதை போல சூக்ஷ்மம் பூமி போல மறைந்திருந்து வளர்ப்பது – இந்த இரண்டு வகையாகவும் உலகங்களை நீங்களே பூத, ஸூக்ஷ்ம என்ற இரண்டுமாக இருந்து இயங்கச் செய்கிறீர்கள். ப்ரளய ஜலத்தில் தூங்குவது போல தெரிந்தாலும், யோக முறையில், கண்களை மூடி தன்னைத் தானே பரமானந்தமாக அனுபவித்துக் கொண்டு தாமசமோ, குணங்களோ இல்லாத நான் காவது நிலையில் விழித்துக் கொண்டு தான் இருக்கிறீர்கள்.
உங்கள் சரீரம் நீரில் மூழ்கி அனந்த சயனத்தில் ஆத்மாராமனாக செயலற்று கிடந்ததால் கால சக்தி இயற்கை தர்மங்கள் மூலம் எழுப்பினாள். சமாதி நிலை கலைந்து உங்கள் நாபியில் ஆல மரத்து மிக சூக்ஷ்மமான விதையிலிருந்து பெரிய ஆல மரம் வளர்வதைப் போல , மகா பத்மம் தோன்றியது. அது போலவே ஒரு காரணம் காட்டி இந்த பத்மத்திலிருந்து சுத்த சத்வமான ப்ரும்மா பிறக்கச் செய்தீர்கள். அதிலிருந்து பீஜம்-விதை தான் காரணம் என்று உலகில் காட்டி உங்கள் உள்ளேயே பரவியிருந்த சத்வ குணத்தை காட்டிக் கொள்ளவேயில்லை. துளிரைக் கண்டதும் அதனடியில் விதை இருந்திருக்கும் என்று மனிதர்களை ஊகிக்க வழி வகுத்தது. கடுமையான தியானத்தாலும், தவம் செய்தும் அந்த ப்ரும்மா தனக்குள்ளேயே உங்களைக் கண்டு கொண்டார். உபாதானம் என்ற அதி ஸூக்ஷ்மமான தரிசனம் அவருக்கு கிடைத்தது. விவேகியானவன் பூமியில் வாசனையைக் கொண்டு அதன் காரணத்தை கண்டு கொள்வது போல. பகவானாக ஆயிரக் கணக்கான முகங்கள், கரங்கள், பாதங்களோடு அவருக்கு தரிசனமாயிற்று. அதனால் மிக்க மகிழ்ச்சியடைந்தார். அவருக்கு தாங்கள் ஹயசிரன்- குதிரை முகம் கொண்டவனாக வேதங்களை எதிர்த்த பலசாலிகளான மது கைடப என்பவர்களை வதம் செய்து, ஸ்ருதி கணங்களை காத்த உங்களை சதா,ரஜஸ்,தமஸ் சேர்ந்த ரூபமாக சொல்கிறார்கள்.
இது போல ஒவ்வொரு யுகத்திலும் அரசனாக,மிருகமாக, தேவனாக, நீர் வாழ் ஜந்துவாக, அவதாரங்கள் செய்து உலகில் ப்ரதி கூலமாக- எதிராக செயல்படும் அசுரர்கள் போன்றவர்களை அழித்து, தர்மத்தை நிலை நிறுத்துவதை வழக்கமாக கொண்ட நீங்கள் கலி யுகத்தில் மறைந்து இருப்பீர்கள். வைகுண்ட நாதனே! உங்கள் கதைகளை கேட்டு மனம் மகிழ்ச்சியடைகிறது. ஹர்ஷ, சோக,பயம் என்ற உணர்ச்சிகளால் நிறைந்த கதைகள், இவற்றை கேட்டபின் என் தீனமான நிலையை எப்படி விமரிச்சிப்பேன். உங்களை துதி செய்ய மனம் விழைகிறது. உடல் இந்திரியம் காமத்தை நாடுகிறது. புலன்களின் சபலம் என்னை மட்டுமல்ல அனைத்து மனிதர்களையும் தடுமாற வைக்கிறது. இப்படி தன் செயல்களால், தன்னை கட்டுப் படுத்த முடியாமல் அடுத்தடுத்து பிறப்பு இறப்பு. வைதரணியில் யாத்திரை என்று தவிக்கும் ஜனங்கள் இன்னமும், தான், மற்றவன், மித்ரன், விரோதி என்ற வித்தியாசங்களை விடவில்லையே.
அகில குரோ! ஆர்த்த பந்தோ! – எளிய மக்களின் துன்பங்களை துடைக்கும் உறவினன் நீயே- மறு பிறவி வேண்டாம் என்று ப்ரார்த்திக்க கூடத் தெரியாத எளிய ஜனங்கள், அவர்களுக்கு அனுக்ரஹம் செய். தேவா! முனிவர்கள் சாதாரணமாக தங்கள் முக்தியை வேண்டுவார்கள். அவர்களால் மௌனம் காக்கவும், நிர்ஜனமான இடத்தில் தனித்து இருந்து யோக சாதனைகளைச் செய்யவும், புலனடக்கி தவம் செய்யவும் முடிகிறது. அந்த சுய கட்டுபாடு இல்லாத பொது ஜனங்கள் வாழ்க்கையில் எதுவும் சாதிக்க முடியாத அறியாமை சூழ்ந்தவர்கள் தான் பெரும்பாலோர். இவர்களுக்கு சரணாகதி பற்றி என்ன தெரியும்? நீ சரணடைந்தவர்களை காப்பாய் என்பதும் தெரியாது. வெற்று வாழ்க்கை நடத்தி மடிந்து போக ஒரு பிறவியா, உங்களைத் தவிர வேறு யார் அவர்களின் நிலையை அறிவர், அவர்களை நல் வழிப் படுத்து. உங்களால் மட்டுமே இதைச் செய்ய முடியும்.
வாயுவாக, அக்னியாக, அவனி-நிலமாக, வானமாக, நீராக இருப்பவன், ப்ராண இந்திரியங்களை ஆட்டுவிப்பவன், ஹ்ருதயம், சித்தம் அனுக்ரஹம்- இவையனைத்தும் உங்கள் குணங்கள். சகுணமாகவும், விகுணமாகவும் இருப்பவர். அதற்கும் மேல், மனம் வாக்கு இவைகளுக்கும் எட்டாத பரப்ரும்மம். பூரணமாக உங்களின் பெருமையை அறிந்தவர் யாருமில்லை. மூன்று குணங்களோ, மஹத் முதலானவைகளோ, மனதின் செயல்பாடுகளோ, தேவர்களோ, மனிதர்களோ, ஆதியும் அந்தமும் இல்லாத உங்களை விமரிசிக்க துவங்கினாலும் போதுமான வார்த்தைகள் இல்லை, வாய் விட்டுச் சொல்ல சக்தி இல்லை, என்று அறிவுடைய பெரியோர்களே நிறுத்திக் கொள்கின்றனர். அதனால், அர்ஹத்தம- இந்த அளவு அனைத்துமாக விளங்கும் பெருமைக்கு உரியவன் நீங்களே- உங்களுக்கு நமஸ்காரம். துதிகள், பூஜா காரியங்கள், நினைவில் இருத்தி தியானங்கள், பாத சேவனம் எனும் விழுந்து வணங்குதல், கதைகளைக் கேட்டல் முடிந்தவரை சேவைகள், என்று ஷடங்க பூஜைகள், பக்தி செய்பவர்களுக்கும் பரம ஹம்ஸ கதியை கொடுங்கள். பக்தி இல்லாமல் மோக்ஷம் இல்லை.
நாரதர் சொன்னார்: இப்படி வர்ணித்து வணங்கிய ப்ரஹ்லாதனை, பிரியமுடன், தானே வருவித்துக் கொண்ட கோபம் உடையவரான நரசிங்க ரூப பகவான் பதில் சொன்னார்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: ப்ரஹ்லாத, பத்ரம் தே! ப்ரஹ்லாதா, உனக்கு நன்மை உண்டாகட்டும். அசுரோத்தமன் நீ. வேண்டும் வரம் கேள் என்றார். ஆயுஷ்மன்! துர்லபமான என் தரிசனம் கிடைக்கப் பெற்றாய். என்னைக் கண்ணால் கண்டபின் துயரம் என்பதே இராது. சாதுக்கள் பல விதமாக சாதனைகள் செய்கிறார்கள். ஸ்ரேயஸ் – நன்மையை அடைந்து மற்றவர்களுக்கும் உதாரணமாக இருக்கிறார்கள். பகவானே இப்படி சொன்ன பின்னும் ப்ரஹ்லாதன் வேறு எதையும் வேண்டவில்லை. பகவானிடத்தில் ஆழ்ந்த பக்தியுடையவன். அசுரர்களில் சிறந்தவன்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ‘பகவத் ஸ்தவோ ‘என்ற ஒன்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 55
அத்யாயம்-10
நாரதர் சொன்னார்: பக்தி யோகமே அனைத்து விதமான யோகங்களுக்கும் அடிப்படைஎன்று நம்பிய சிறுவன், மேலும் ஹ்ருஷீகேசனைப் பார்த்து பேசினான். ‘எனக்கு ஆசை காட்டாதீர்கள். வரம் கிடைத்த தரியத்தில், காமமும், மோகமும் அதிகமாகும். எனக்கு மோக்ஷம் தான் வேண்டும். உங்களையே ஆஸ்ரயித்து இருக்கும் நான் வேண்டுவது அதுவே. உலகியல் சங்கமே எனக்கு பயத்தை தருகிறது. உங்கள் அடியார்கள் பற்றி தெரிந்து கொள்ளவே ஆசைப் படுகிறேன். அகில குரோ! கருணை நிறைந்த உங்கள் ஆசிகளையே வேண்டுகிறேன். பதிலுக்கு எதையும் எதிர்பார்த்து வேண்டுபவன் வணிகன். வியாபாரத்தில் பண்டமாற்று செய்யும் வணிகன் போல ஆவேன். பணிவிடை செய்பவன் பலனை ஆசீர்வதமேயானாலும், எதிர்பார்த்தால் அவன் அணுக்கத் தொண்டன் அல்ல. அவனிடம் தனக்கு ஏதோ செயல் நடக்க வேண்டும் என்று ஆசீர்வதிப்பவன் ஸ்வாமியும் அல்லன். எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லை. உங்கள் பக்தன். அரசனும் சேவகனும் போல அல்ல நாம் இருவரும். நமக்குள் தேவைகள் என்று எதுவும் இல்லை. இந்த இருவருக்கும் இடையில் பொருள், தேவை என்பவைகள் உண்டு. நமக்குள் நான் பக்தன், நீங்கள் ஸ்வாமி. உங்களிடம் அடைக்கலமானான். எனக்கென்று எந்த ஆசையும் இல்லை. எந்த நிலையிலும் என் மனதில் காமாதிகள் வர விடாமல் காப்பதையே வரமாக கேட்கிறேன். இந்திரியங்கள்,மனம், ப்ராணன், ஆத்மா, தர்மம், த்ருதி, மதி, ஹ்ரீ: ஸ்ரீ, தேஜஸ், ஸ்ம்ருதி: சத்யம் இவை அனைத்தையும் தொடர்ந்து வரும் பிறவி சக்கரத்தில் அழிகிறது.
மனிதன் தன மனதிலிருந்து எப்பொழுது முழுமையாக காமத்திலிருந்து விடுபடுகிறானோ, அப்பொழுது தான் பகவானுக்கு சமமானவனாக ஆகிறான்.
ओं नमो भगवते तुभ्यं पुरुषाय महात्मने ।हरयेऽद्भुतसिंहाय ब्रह्मणे परमात्मने ॥
பகவான் சொன்னார்: நீ சொல்வது போல ஞானிகள் என்னிடம் எதையும் எதிர் பார்ப்பது இல்லை. ஆனாலும் இந்த மன்வந்தரம் தைத்ய குல அரசர்களுக்கானது. அதனால் அதன் சுகங்களை நன்மைகளை அனுபவி. என்னைப் பற்றி பாடுபவர்கள், பிரியமானவர்கள் இவர்களுடன் சேர்ந்து இரு. நல்ல மனிதனாக அனைத்து ஜீவன்களிடமும் பிரியமானவனாக இரு. அதியக்ஞம் என்ற யாகத்தைச் செய். விதிகளை அனுசரித்து அந்த யாகத்தை செய். போகங்களை அனுபவித்து உன் புண்யங்களையும், பாபங்களையும் தொலைத்து விட்டு காலக்ரமத்தில் பவித்ரமான தேவலோகம் பாடும் பந்தங்களில் இருந்து விடுபட்டவனாக என்னை வந்தடைவாய். இந்த சரித்திரத்தை, உன்னையும் என்னையும் நினைத்தே, கர்ம பந்தத்திலிருந்து விடுபடுவார்கள்.
ப்ரஹ்லாதன், மகேசனே! ஒரு வரம் கேட்கிறேன். என்னையும் உங்களையும் நிந்தித்த என் தந்தை தான் செய்த பாபங்களீல் இருந்து விடுபட வேண்டும். குற்றம் செய்தவர் தான், கோபத்தால் கடுமையாக சொன்ன வார்த்தைகள், உங்களை என் தம்பியைக் கொன்றவன் என்று ஏசினதையும், என்னிடம் வெறுப்பும், ஆத்திரமுமாக பேசியதையும் பொருட்படுத்தாமல், அவரை இந்த தவறுகளிலிருந்து விடுவித்து புனிதமானவராக ஏற்றுக் கொள்ள வேண்டுகிறேன்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: இந்த குடும்பத்தில், உன் பிறப்பால் உன் தந்தை அவரது இருபத்து ஏழு தலை முறையினர் பாவனமாகி விட்டனர். சாதோ! நீயே உன் குலத்தை விளங்க வைத்து விட்டாய். எங்கெல்லாம் என் பக்தர்கள் அமைதியாக, சம நோக்கு உடையவர்களாக, நல்ல ஆசாரம் உடையவர்களாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவர்களின் வாகனங்கள் குதிரை முதலியவை கூட பாவனமாகிவிடும். என்னிடமே மனதை வைத்தவர்கள் எந்த ஏற்றத் தாழ்விலும் கலங்க மாட்டார்கள். எந்த சிறு ஜீவனையும் கொல்ல மாட்டார்கள். அவர்களுக்கு அல்ப ஆசைகள் எதுவுமே இராது. என் பக்தர்கள் உலகத்தில் நிரம்பி இருக்கின்றனர். நீ அவர்களுக்கு உதாரணமாக இரு.
உடனடியாக உன் தந்தைக்கு அபர காரியங்களைச் செய். என் சரீர ஸ்பரிசம் பெற்றவன், அவன் நல்ல கதியை அடைவான் என்று நம்பிக்கையோடு செய். தயங்கவே வேண்டாம். உன் தந்தையின் பதவியை அடைவாய். ப்ரும்ம வாதிகளான அரசியல் ஆலோசகர்கள், மந்திரிகள் சொல்வதைக் கேட்டு நட. அரச காரியத்தை கவனமாக செய்வதையே என் நினைவோடு செய்.
நாரதர் சொன்னார்: ப்ரஹ்லாதன் அதன் படியே செய்தான். பகவான் கட்டளைப் படியே, அந்தணர்களால் அபிஷேகம் செய்யப் பட்டு சிம்மாசனத்தில் அமர்ந்தான்.
தனது பயங்கரமான அவதார ரூபத்தை விட்டு சௌம்யமாக ஆன பகவான் நரஹரியை அனைவரும் துதி செய்தனர்.
ப்ரும்மா: தேவ தேவ!, அகிலத்துக்கே தலைமை தாங்குபவனே. தானே பஞ்ச பூதங்களாகவும் இருப்பவன், ஆதி மனிதன், நல்ல வேளையாக உலகை துன்புறுத்திய அசுரனை அழித்து உலகை காத்தீர்கள். என்னிடம் வரம் பெற்றவன். என் ஸ்ருஷ்டியில் வந்த யாராலும் மரணம் கூடாது என்று வரம் வேண்டினான். தவம் செய்து பெற்ற பலம், அது அவனுக்கு கர்வத்தை தான் தந்தது. வேதங்களை தடுத்தான். நம் நல்ல காலம் அவன் மகனே, சாதுவாக, பாகவதனாகவே பிறந்த குழந்தை, அவன் கொல்லப்படாமல் . காப்பதற்காகவே எடுத்த இந்த அவதாரம். இதனால் நாங்கள் அனைவருமே பிழைத்தோம். தற்சமயம் உங்களைக் காணும் பேறு பெற்றோம். இந்த அவதார சரீரம், பகவானே, யார் நினைவில் வந்தாலும் தவறு செய்யாமல் திருந்தச் செய்யும். வெளியில் தெரியாத ஒரு தூண்டுதல் கிடைக்கும்.
நரசிங்கர் சொன்னார்: பத்ம சம்பவ! இது போன்ற வரங்களை யாருக்கும் கொடுக்காதே. அதுவும் இயல்பாக க்ரூரமான குணம் உடையவர்களுக்கு பாம்புக்கு அம்ருதமே கொடுத்தது போல ஆகும்.
இப்படி சொல்லிவிட்டு பகவான் அந்தர்தானமானார்.
ப்ரஹ்லாதன் அனைவரையும் வணங்கினான். அசுர குல குருவான சுக்ராசாரியார், அவனை தைத்யர்களுக்கும் தானவர்களுக்கும் அதிபதியாக நியமித்தார். தேவர்கள் பாராட்டி ஆசிர்வதித்தனர். ப்ரும்மா முதலானோர் முறையாக வழி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இவ்வாறாக திதி புத்திரர்களான விஷ்ணு பார்ஷதர்கள், அணுக்கத் தொண்டர்களாக இருந்த சமயம் பெற்ற சாபத்தால் ஸ்ரீ ஹரியிடமே விரோதம் கொண்டு அவராலேயே அழிக்கப் பட்டனர்.
அவர்களை அந்தண சாபம் தொடரும். அடுத்து கும்பகர்ண ராவணனாக பிறப்பர்.
ராமரின் அம்புகளால் யுத்த களத்தில் உயிரை விடுவர். யுதிஷ்டிரா! அதன் பின் சிசுபால தந்த வக்த்ரனாக வந்து ஸ்ரீ ஹரியிடம் விரோதம் கொண்டு உன் கண் முன்னே மடிந்தனர். அதைக் கண்ட பின் க்ருஷ்ண விரோதிகளான அரசர்கள் குளவிகள் மாறுவது போல, சிசுபாலனின் வதத்தைக் கண்டு தங்கள் துவேஷத்தை மாற்றிக் கொண்டனர்.
நீ கேட்டபடி எனக்குத் தெரிந்த இந்த சரித்திரங்களை விவரமாக சொல்லி விட்டேன். தர்மா! இது தான் மஹாத்மாவான ஸ்ரீ க்ருஷ்ணனின் அவதார சரித்திரம். ஆதி தைத்யர்களை உத்தாரணம் செய்யவே எடுத்த அவதாரம். ப்ரஹ்லாதனுடைய சரித்திரமும், மஹா பாகவதர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை சொல்கிறது. பக்தியும் வைராக்யமும் ஹரியின் வர்ணனையும் யுகாந்த காலத்தில் உலகை காக்கவே முனைந்து இருப்பதையும், காலத்தின் பிடியில் எந்த உயர்ந்த பதவியில் இருப்பவரும் ஒரு நாள் மறைவதையும் சொல்கிறது. விஷ்ணுவின் வீர்யத்தைச் சொல்லும் பொழுதே, அத்யாத்மிகம் என்பதை வலியுறுத்துகிறது. சிரத்தையுடன் பாடுங்கள். வினைப் பயன் விலகும்.
இது தான் ஆதி புருஷனின் ம்ருகேந்திர – வன விலங்குகளின் அரசன்- லீலை. இரு தைத்யர்களையும் வதம் செய்தும், அவன் மகன் நல்ல குணவான்களில் முக்யமாக ஆனதையும் கேட்டு பயம் விலகி லோகம் நிம்மதியடைந்ததையும், கேளுங்கள். பூலோகத்தில் பிறந்த நீங்கள் பாக்யசாலிகள். தர்மராஜா! உனக்கு மாமன் மகனாக வீட்டிற்குள்ளேயே வளைய வந்தவன். அவனே கைவல்யம் எனும் பரம பதத்தை தரும் பர ப்ரும்மா.
த்ரிபுரங்களை எரித்த பகவான் ஸ்ரீ ருத்ரன் அறிவார், இவருடைய மகிமைகளை.
தர்மபுத்திரர் வினவினார். எதற்காக மயன் என்ன செய்தான் என்று வதம் செய்யப் பட்டான்?
நாரதர் சொன்னார்: ஒரு சமயம் அசுரர்கள் தேவர்களுடன் விடாது போரிட்டுக் கொண்டிருந்தனர். அவர்களை வெற்றி கொள்ள மயன் என்ற தேவ சில்பியை அணுகினர். அவரும் மூன்று புரங்களை, ஒன்று பொன்னால், இரண்டாவது வெள்ளியால், மூன்றாவது இரும்பால் என்று மூன்று கோட்டைகளைக் கட்டிக் கொடுத்தார். , உள்ளே நகரம்-புரம் என்ற வசிக்கும் இடமும் யாராலும் நுழைய முடியாதபடி, பாதுகாப்பாக இருந்தன. அசுரர்கள் நிம்மதியாக இருக்காமல், பழைய வைரத்தை நினைத்து ஊரோடு சஞ்சரித்து தேவர்களுக்கு இடையூறு செய்தனர். தேவர்கள் பகவானிடம் முறையிட்டனர். (புரம் என்பதே ஆயுதமாக) பகவானும் பயப்படாதே என்று அனுக்ரஹித்தார். தன் வில்லில் அம்பை பூட்டி புரங்களின் மேல் எய்தார். அக்னி வர்ணமான அம்புகள் ஸூர்ய மண்டலத்திலிருந்து விழுந்தன. அதன் எண்ணிக்கையில் புரங்களே மறைந்தன. அம்புகள் பட்டு விழுந்த அசுர்களை மயன் அம்ருதம் நிறைந்த கிணற்றில் தள்ளி காப்பாற்றி விட்டான். அதிலிருந்தது சித்தாம்ருத ரஸம் என்பதால் வஜ்ரம் போன்று மகா பலசாலிகளாக எழுந்து வந்தனர். மேகங்கள் பரவி இடியும் மின்னலுமாக தோன்றுவது போல கணக்கில்லாத அசுரர்கள் எழுந்தனர். வ்ருஷத்வஜன் இதை கண்டு திகைத்தார். அந்த சமயம் பகவான் தான் பசு ரூபம் எடுத்து கிணற்றினுள் புகுந்து சித்தாம்ருத ரஸம் முழுவதையும் குடித்து விட்டார். கன்றாக உடன் ப்ரும்மா சென்றார். பசுவையும் கன்றையும் அசுரர்கள் தடுக்கவில்லை. ஆனால் இது பகவானின் செயல் என்பதை மயன் அறிந்தான். அசுரர்களைப் பார்த்து, யாரானாலும், தேவனோ, அசுரனோ, மனித மற்ற பிறவிகளோ, பகவானின் சங்கல்பத்தை மீற முடியாது என்று சொன்னான். அதன் பின் பகவான் தன் சக்திகளையும் அளித்து சம்புவை- மஹேஸ்வரனை முன் நிறுத்தினார்.அவரும், தர்மம், ஞானம், விரக்தி, ருத்தி, தவம், வித்யா, க்ரியா இவைகளுடன், ரதம், சாரதி, த்வஜம், வாகர்கள் (தூக்கும் பணியாட்கள்) தனுஷ், அஸ்திரங்கள், சரங்கள் இவைகளுடன் தயாராக ரதத்தில் அமர்ந்து அபிஜித் முஹூர்த்தில், சரத்தை வில்லில் பூட்டி அந்த புரங்களின் மேல் எய்தார். குறி தவறாத அந்த சரங்கள், புரங்களை எரித்தன. மூன்று புரங்களும் சாம்பலாகின. உடனே தேவலோகத்தில் துந்துபிகள் முழங்கின. கூட்டம் கூட்டமாக தங்கள் விமானத்தில் தேவர்கள் ஜய ஜய என்றபடி ஆரவாரமாக வந்தனர். தேவர்களும், ரிஷிகளும் சித்தர்களும் பித்ரு தேவதைகளும் புஷ்பங்களை வர்ஷித்தனர். அப்சர கணங்கள் மகிழ்ச்சியுடன் பாடினர். புராரி என்று புகழ்ந்தனர். ப்ரும்மா முதலானோர் துதி செய்தனர். அவரும் தன் இருப்பிடம் சென்றார்.
இவ்வாறாக ஸ்ரீ ஹரி தன் மாயையால் மூவுலகையும் காக்கும் பொறுப்பை நிறைவேற்றுகிறார். எனவே ஜகத் குரு என்று ரிஷிகள் போற்றுகின்றனர்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ‘பகவத் ஸ்தவோ ‘என்ற பத்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 71
அத்யாயம்-11
யுதிஷ்டிர் மேலும் வினவினார். பகவன்! மனிதனுக்கு எது தர்மம் என்றும் அதை மீறக் கூடாது என்றும் விதிகள் சொல்லப் படுகிறது. ஆசாரம், வர்ணாஸ்ரம தர்மம் என்பவை முக்கியமானவை என்று அறிவேன்.பிரஜாபதியின் புதல்வர், தவம் யோகம் சமாதி என்ற சாதனைகளைச் செய்தவர் என்ற முறையில், சொல்லுங்கள். எல்லோரும் சாதுக்களாக நல்லவர்களாக இருப்பதில்லை. உங்களைப் போல ஒரு சிலர் இருக்கலாம். அந்தணர்கள், ஸ்ரீமன் நாராயணனை துதிப்பதே பரம தர்மம் என்பர்.
நாரதர் சொன்னார்: சனாதன தர்மம் ஸ்ரீ மன் நாரயணன் தானே சொல்லிக் கேட்டதைச் சொல்கிறேன். உலக நன்மைக்காக சில நியமங்கள் தர்மம் என்று அறிவோம். அவரையே வணங்கி ஆரம்பிக்கிறேன். அவர் தன் அம்ச அவதாரமாக தாக்ஷாயணியிடம் பிறந்தார். இன்னமும் உலக க்ஷேமத்திற்காக பதரிகாஸ்ரமத்தில் தவம் செய்து கொண்டு இருக்கிறார். பகவான் தான் தர்மத்தின் பிறப்பிடம். ஸ்ரீ ஹரி தான் வேத மயமானவன். என்று இவர்களை ஸ்மரித்தாலே, மனதுக்கு இதமாக இருக்கும். சத்யம், தயா, தவம், சுத்தம்-ஒழுக்கம்- அறிந்து கொள்ளும் ஆவல், சமம், தமம் , அஹிம்சா, ப்ரும்ம சர்யம், த்யாகம், ஸ்வாத்யாயம், ஆர்ஜவம்- நேர்மை.
சமமாக காணும் குணம் உள்ள மகான்களை மதித்து சேவை செய்தல், க்ராம்யமான உலகியல் விஷயங்களில் நாட்டமின்மை, (இவைகளால் மனிதன் பெறும் சாஸ்வத நன்மை எதுவுமில்லை என்பதால்) மௌனம், தன்னையே விமரிசனம் செய்து கொள்ளல், பகிர்ந்து உண்ணுதல், மற்ற ஜீவன் களிடம், சக மனிதர்களிடம் தயை, இது தவிர, பெரியவர்கள் எப்படி ப்ரச்னைகளை கையாண்டனர் என்பதை பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளலாம். இவை பொதுவான தர்மம் எனும் முப்பது தர்மங்கள். அனைவருக்கும், பொதுவானது என்றாலும் அரசனுக்கு அவசியமானவை. ப்ரும்மா அந்தணர்களுக்கு விதித்த தர்மங்கள்: யாகம் செய்தல், அத்யயனம்- கற்றல். ஜன்ம கர்மாவிலிருந்து கடைசி வரை செய்யவேண்டிய கர்மாக்கள் செய்தல், செய்வித்தல். இரண்டும். க்ஷத்திரியர் தானம் செய்ய வேண்டும் வாங்கிக் கொள்ள கூடாது, அரசனுக்கு: ப்ரஜைகளைக் காப்பது. அந்தணனைத் தவிர மற்றவர்களிடம் வரி வசூலிக்க வேண்டும். வைஸ்யனுக்கு வியாபாரம், அந்தணனை அனுசரித்து நடக்க வேண்டும். ஸுத்ரனுக்கு, மற்ற மூன்று வர்ணத்தாருக்கும் உதவுவது. அந்தணன் தன் சுய தேவைக்காக மட்டுமே பொருள் தேட வேண்டும். யாசிக்காமல் தானாக மற்றவர் தரும் பொருள், கற்பித்து குரு தக்ஷிணை என்று பெறலாம், பொது இடங்களில் உள்ள உதிர்ந்த தானியங்களையும், பழம் முதலியவைகளையும் பெறலாம். ஆபத்து காலத்தில் அரசனின் பொறுப்பை அனைவரும் ஏற்க வேண்டும். சத்யம், பொய் சொல்லாமை, வியாபாரம், ஏவிய வேலைகளைச் செய்யும் சேவகன் எனும் வேலைகள், அரசனுக்கும் அந்தணனுக்கும் ஏற்றதல்ல. சர்வ வேத மயன் அந்தணன், சர்வ தேவ மயன் அரசன்.
சமம், தமம், தவம், சௌசம், சந்தோஷம், க்ஷாந்தி, ஆர்ஜவம் என்ற நேர்மை, ஞானம், தயை, அழியாத ஆத்ம சக்தி, சத்யம் இவை ப்ரும்ம லக்ஷணம். சௌர்யம், வீர்யம், த்ருதி- உறுதி, தேஜஸ், த்யாகம், ஆத்மஜயம், பொறுமை, ப்ரும்மண்யதா, ப்ரசாதம் , காப்பாற்றுதல், இவை க்ஷத்ர லக்ஷணம்.
தேவ, குரு,அச்யுதன் இவர்களிடத்தில் பக்தி , மற்ற மூன்று வர்கத்தினரையும் பரிபோஷணம், அவர்கள் தேவைகளை நிறைவேற்றுதல், கடவுள் நம்பிக்கை, உத்யமோ- ஏதோ ஒரு தொழில், உழைப்பு, நிபுணத்வம்-திறமை, இவை வைஸ்ய லக்ஷணம்.
ஸூத்ரன் பணிவாக இருப்பது, சௌசம், சேவை செய்தல், ஸ்வாமியிடம் நம்பிக்கை, யாகங்கள் மந்த்ரம் இன்றி செய்யலாம், திருட்டு குணம் இல்லாமை, உண்மையாக இருப்பது, பசுவையும் அந்தணர்களையும் ரக்ஷிப்பது என்பவை லக்ஷணங்கள்.
பெண்கள், கணவன், அவன் தேவைகளை அறிந்து செய்தல், அனுகூலமாக இருத்தல், அவன் பந்துக்களிடம் அன்பாக இருத்தல், விரதங்களை அனுஷ்டித்தல். தன்னையும் வீட்டையும், சுற்றுப் புரத்தையும் அலங்கரித்து வைத்து கொள்வதும், அன்புடனும் சமயோசிதமாகவும் பேசி, கணவனின் செயல்களில் உதவ வேண்டும். ஹரி என்ற பாவத்துடன் கணவனை மதித்து, தானும் மகிழ்ச்சியாக, சுற்றத்தாரையும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். பலவிதத்திலும் குடும்பத்தை கட்டிக் காப்பது தன் கடமையாக நினைத்து செய்ய வேண்டும்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரஹ்லாத சரித்ரோபக்ரமம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், சதாசா நிர்ணயோ என்ற பத்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 35.
அத்யாயம்-12
நாரதர் மேலும் சொன்னார்: ப்ரும்மசாரியாக குருகுலத்தில் படிப்பவன், குருவிடம் உள்ளார்ந்த அன்புடனும் மதிப்புடனும் அவருக்கு தாஸனாக இருந்து கல்வியைக் கற்க வேண்டும். அவருடனேயே வசித்து அடக்கம் உடையவனாக, குருவின் நன்மைக்கானதை செய்பவனாக இருக்க வேண்டும். காலையும் மாலையும் அவருடன் அக்னி உபாசனைகளைச் செய்து வருவதும், இரு சந்த்யா காலங்களிலும் அவர் சொல்லிக் கொடுத்த ஜபங்களைச் செய்வதும், வேத மந்திரங்களை சொல்லிச் சொல்லி மனதில் உருவேற்றிக் கொள்வதிலும், கூப்பிட்ட குரலுக்கு ஏன் கேட்கும் மாணவனாக, சிறு உதவிகளைச் செய்வதும், பாடம் ஆரம்பிக்கும் சமயமும், முடிவிலும் விழுந்து நமஸ்கரிப்பதும் அவனது கடமைகள். மேகலை, மரவுரி ஆடைகள், ஜடை, தண்டம், கமண்டலு, உபவீதம் இவைகளை தரித்துக் கொண்டு, விடியற்காலையில் தர்பையை கையில் வைத்துக் கொண்டு, காலையிலும் மாலையும் பிக்ஷைக்கு போக வேண்டும். அவர் அனுமதித்த பின் தான் உண்ண வேண்டும். உபவாசங்கள் இருக்க பழக வேண்டும். நல்ல சீலனாக, மிதமாக உண்டும், சிரத்தையுடன் கேட்டும் கல்வியை கற்க வேண்டும். அவசியம் இன்றி பெண்களுடன் பேசுவதையும், அவர்களுடன் இருப்பதையும் தவிர்க்க வேண்டும். இல்லற தர்மத்தை ஏற்கும் வரை, அவர்களுடன் பாடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ஆசை இழுத்துச் செல்லும். கடமையிலிருந்து நழுவச் செய்யும். பெண்களை நெய் நிரம்பிய குடமாகச் சொல்வார்கள். எளிதில் பற்றிக் கொள்ளும். ஈஸ்வர ஸ்ருஷ்டி தான், அவர் படைத்த பெண்களே ஆனாலும் அளவோடு இருத்தல் நலம்.
இது இல்லறத்தில் உள்ளவர்களுக்கும், யதிகளுக்கும் சொல்லும் உபதேசமே. குரு குலத்தில் இருக்கும் வரை முடிந்தவரை கற்பதிலேயே கவனமாக இருந்து வேதங்களை அதன் அங்கங்களுடன், பொருள் அறிந்து முடிந்தவரை கற்றுத் தேற வேண்டும். அவரிடம் கற்று முடிந்த பின் அவரே அனுமதித்த பின்னர் வீடுகளுக்கு செல்லலாம் அல்லது அங்கேயே இருந்து மேலும் அறிவை பெருக்கும் செயல்களைச் செய்யலாம். அக்னி காரியங்கள், குரு, பஞ்ச பூதங்கள், ஸ்ரீ ஹரி, இவைகளுக்கான தினசரி பூஜைகளை செய்ய வேண்டும். இது ப்ரும்ம சாரியாக இருந்த பழக்கம், பின்னால் வான ப்ரஸ்தனாக, (இடையில் குடும்பஸ்தனாக இருந்து காலம் சென்ற பின்) விக்ஞானம் என்ற மேம்பட்டு ஞானத்தை பெற சாதனைகள் செய்யலாம். பரம் ப்ரும்மா என்ற பதவியை அடைவான்.
வான ப்ரஸ்த நியமங்கள்: உணவு கட்டுபாடுகள், நிறைய சொல்கிறார். ஒவ்வொரு நாளும் தானே தயாரித்து புது அன்னத்தை மட்டுமே ஏற்க வேண்டும். வசிப்பதற்கு மலை குகைகளோ, குடிசைகளோ போதுமானது. கமண்டலு, மான் தோல் ஆடை, தண்டம், வல்கலைகள், அக்னி இவை மட்டுமே அவனுக்கு தேவையாக இருக்கும். ஓராண்டு அல்லது பதினெட்டு மாதங்கள் ஓரிடத்தில் தங்காமல் பயணித்த படி இருக்கையில் உடல் நலம் குறைந்தாலோ, வியாதி வந்தாலோ அன்றி ஓரிடத்தில் தங்க கூடாது. அது ஓரு நிலையில் மட்டுமே மேற் கொண்டு படிக்கும் அல்லது கற்பிக்கும் செயல்களை ஏற்று குரு குலத்தில் தங்கலாம்.
படைப்புக்கு உதவிய பஞ்ச பூதங்களை அதே க்ரமத்தில் விடுவித்து, அக்னி அக்னியுடன் வாயு வாயுவுடன் என்ற முறையில் யோக முறையை பயின்று அத போல தேகத் தியாகமும் செய்யவேண்டும்.
( இது வரை ஸ்ரீமத் பாகவத த்தில், ஏழாவது ஸ்கந்தத்தில், சதாசார நிர்ணயம் என்ற பன்னிரெண்டாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள்-31
அத்யாயம்-13
மேலும் கடுமையான நியமங்களுடன் ஒரு கிராமத்தில் ஒரு இரவு மட்டுமே தங்குவதாக உறுதி பூண்டு சுற்றிக் கொண்டே யிருக்க வேண்டும். தனியாக, எல்லா உயிரினங்களிடமும் அன்புடன், நாராயண பரமாகவே பார்த்து எதையும் அதிகமாக வெறுக்கவும் வெறுக்காமல், புகழ்ந்தும் சொல்லாமல் தன் வழி செல்வான்.
அஜகரன் என்ற முனிவருடன் ப்ரஹ்லாதன் செய்த சம்பாஷணயைச் சொல்கிறார். தன் மந்திரிகளுடன் சென்று கொண்டிருந்த ப்ரஹ்லாதன், காவேரி ப்ரவஹிக்கும் சஹ்யாசலம் என்ற மலைச் சாரலில் தரையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த ஒரு முனிவரை, யார் என்று அறிய விரும்பி விசாரித்தான். இருவரும் ஒருவரையொருவர் அறிந்தவரில்லை.
அசுரனானாலும் பாகவதனான ப்ரஹ்லாதன் அந்த மனிதரை வணங்கி விசாரித்தான். பகவன்! யார் நீங்கள். பருத்த உடலுடன், போகமே ப்ரதானமாக இருந்தவர் போல காணப் படுகிறீர்கள். உழைப்பு மனிதனுக்கு செல்வத்தை அளிக்கிறது. செல்வம் அவனை போகத்தில் ஈடுபடச் செய்கிறது. போகங்கள் உடலை பருக்க வைக்கின்றன. வேறு விதத்தில் உடல் பருமனாவதில்லை. ஒரு உடலுழைப்பும் இன்றி தூங்கிக் கோண்டிருக்கிறீர்கள் போல தெரிகிறது. ப்ரும்மன்! இதில் என்ன பயன்? இந்த நிலையில் செல்வமும் இல்லை, போகமும் இல்லை. என்ன காரணத்திற்காக, ஏன் இப்படி தரையில் விழுந்து கிடக்கிறீர்கள். ப்ரும்மா, கல்பங்கள், நிபுணர்களின் அறிவு, சித்ரங்கள், ப்ரிய கதைகள், இப்படி உலகில் பல உள்ளன என்று அறிவீர்களா? கண்ணால் கண்டிருக்கிறீர்களா? செயல்கள், அதன் பலன்கள் என்பவையாவது அறிவீர்களா?
நாரதர் சொன்னார்: மகா முனியான அந்த மனிதன், தைத்யராஜனுக்கு பதில் சொன்னார்.
ப்ராம்மணர் சொன்னார்: அசுர ஸ்ரேஷ்டனே! அறிவேன். நீ உத்தமான அரசன், மதிக்கத் தகுந்தவன்,இங்கு உள்ள அரசர்களில் சிறந்தவன் என்பதை என்னுடைய அத்யாத்ம கண்களால் கண்டு அறிந்து கொண்டேன். எவனுக்கு பகவான் நாராயணன் ஹ்ருதயத்தில் இருக்கிறானோ, அவனுடைய பக்தியால், ஸூரியன் இருட்டை அழிப்பது போல அறியாமை விலகி நல்ல ஞானியாக ஆவான் என்பது நீயும் அறிந்ததே. ஆனாலும் சொல்கிறேன், கேள்.
அரசனே! பல கேள்விகளைக் கேட்டாய். அனைத்துக்கும் பதில் சொல்ல வேண்டியது என் கடமை. கேட்டபடி சொல்கிறேன். என் தூய்மையை, என் தற்போதைய நிலையை நானே தான் விளக்கிச் சொல்ல வேண்டும்.
ஆசை. அது உலகை சதா சுற்றி சுற்றி ஓட வைக்கிறது. பவ வாஹிணி- ப்ரவாஹமாக ஒடும் நதி போல உலகியலை சென்று கொண்டே – செயல் பட வைத்து- அலைக்கழிக்கும் சக்தி. நானும் பலவிதமான செயல்களைச் செய்து வினைப் பயனாக பல பிறவிகளை அடைந்தவன். எதேச்சையாக இந்த உலகில், இந்த இடத்தில் பிறவி பெற்றேன். சுவர்கம் வரைச் சென்று, வினைப் பயன் தீர, மறு முறை மறுமுறை என்று விலங்குகள் என்று பல பிறவிகள்- நல் வினைப் பயனாக ஒரு தம்பதிகளின், ஆசை தீர மகனாக பிறந்தேன்.
இங்கும் ஒரு துக்கம் தீர்ந்தால் மற்றொன்று என்று கண்டபின் வெறுத்து போனேன். சுகம் என்பது வருமா என்ற சிந்தனையே மனதில் நிறைந்தது. யோசிக்க யோசிக்க என் ஸ்வரூபமே தான் சுக ஸ்வரூபம் என்று புரிந்து கொண்டேன். எல்லா விதமான எதிர் பார்ப்புகள், அதற்கான செயல்கள், ஆசைகள் இவைகள் மனிதனின் உடலுக்கே. அதே சமயம் உடல் இல்லையெனின் சுகமாவது துக்கமாவது எதுவும் எப்படி அனுபவிக்க முடியும். போகங்கள் இயல்பானவை, அதை அறிவது மனமே. ஸ்பர்சத்தால், மனதின் கல்பனையால் மனம் சுகமோ, துக்கமோ அடைகிறது. க்ஷண பங்குரான்- நீர் குமிழி போல வினாடியில் உடையக் கூடியது, என்று அறிவு சொன்னாலும் மனது கேட்பதில்லை. இது நிலைத்து நிற்காது என்று தெரிந்தும், உண்கிறேன், உறங்குகிறேன். வித்ருஷ்ணா- ஆசை என்ற உத்வேகம் இன்றி, கிடக்கிறேன் இதுவே என் உடல் பருக்க காரணம். அப்படியானால் இதையறிந்தவர்கள் ஏன் உங்களை பின்பற்றி கிடப்பதில்லை என்ற வினாவிற்கு பதில் அளிப்பது போல மேலும் சொன்னார்.
அவரவர் விருப்பங்கள், சுகம் என்று துக்கம் என்றும் அறியும் உணர்வுகள், வெவ்வேறாக இருப்பது தான் காரணம். தண்ணீர்- நாம் கான்பதும், அந்த ஜலத்தில் தோன்றிய புல் பூண்டுகளில் இருப்பதும் அதுவே என்பது போல ஆத்ம சுகம் என்பது உள்ளூற இருப்பதே. அதை அறிந்தவர்கள் மிக சிலரே. யதேச்சையாக தோன்றும் அந்த சிலர், அத்யாத்மிகர்கள், உள்ளுறை பொருளை அறிந்தவர்கள் ஆவர். இரட்டைகளான சுக துக்கங்கள் பாதிக்காமல் இருப்பர். தான், தன் செல்வம், தன் உலகம் என்று அதிக ஈடுபாட்டுடன் இருப்பவர்களுக்குத் தான் ப்ராண பயம். செல்வந்தர்கள் அதிக மனக் க்லேசத்துடன் வாடுகிறார்கள். பேராசை, பயம், அதனால் தொலைத்த தூக்கம், அனைவரிடமும் அவனம்பிக்கை. அரசனுக்கு திருடர்கள், சத்ரு, தன் ஜனங்களிடமே பயம். யாசிப்பவர்களிடம் கூட பயம். காலம் செல்லச் செல்ல தன் உறவினர்களிடம் இருந்தே தன் ப்ராணனை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் என்று இடர்கள். சாதாரணமாக மனிதர்கள், தேனீயைக் கண்டு கூட பயப்படுவர். மகா சர்ப்பம் என்றால் கேட்கவே வேண்டாம். இப்படி நான் தூங்குவதே இது போன்ற பயங்கள் எனக்கு இல்லாமையால் தான். ஆசையோ, தேவைகளோ இல்லாமையால் கிடைத்ததை உண்கிறேன், பல நாட்கள் அஜகர சர்ப்பம் போல கிடக்கிறேன். சில சமயம் சிரத்தையுடன் யாராவது ருசியான உணவு வகைகளை தருவதையும், சாரமில்லாத உணவைப் போலவே ஏற்றுக் கொள்கிறேன். இரவோ, பகலோ, பட்டாடையோ, மான் தோலோ, என் மனம் நிறைந்து வாழ்கிறேன்.
தரையில், புல் வெளியில், சில சமயம் அரண்மனையில் படுக்கையில், படுத்தாலும் பொருட்படுத்துவதில்லை. விகல்பம் என்ற மாற்றம் மனதிற்கு மட்டுமே என்று சொன்னேனே அது தான் தற்போதைய என் நிலைக்கு காரணம். உனக்கு தெரியாததா? பாகவதன் தானே நீ.
நாரதர் சொன்னார்: பரமார்த்தமான தர்மம், பாரமஹம்ஸ்யம் என்பர்- இதைக் கேட்டு அசுர ராஜன் ப்ரஹ்லாதன் மேற்கொண்டு எதுவும் பேசாமல் அவரை நமஸ்கரித்து விட்டு தன் வழி சென்றான்.
(இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஏழாவது ஸ்கந்தத்தில், பதின் மூன்றாவது அத்யாயம்) ஸ்லோகங்கள்-43
அத்யாயம்-14
யுதிஷ்டிரர் கேட்டார்: என் போன்ற சாதாரண பிறவிகள், அதிக அறிவு இல்லாத இல்லறத்தார்கள், இது போன்ற ப்ரும்ம நிலையை எப்படி அடைவர்?
நாரதர் சொன்னார்: இல்லறத்தில் இருப்பவனுக்கு தன் குடும்பத்தைப் பேணுவதும், அதன் கடமைகளைச் செய்வதுமே போதுமானது. வாசுதேவார்ப்பணம் என்று சொல்லி மஹா முனிகள் கூட வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். பாகவத கதைகளை கேட்கவும், அம்ருத மயமான பாடல்களாக பாடியும் வரலாம். சிரத்தையுடன் பெரியவர்கள் செய்யும் ப்ரவசனகளைக் கேட்கலாம். உடன் இருப்பவர்கள் அதே குணம் உள்ளவர்களாக இருந்தால் நல்லது. குடும்பத்தில் தன் கடமைகளைச் செய்த பின் , மனைவி மக்களிடம் பொறுப்பை ஒப்படைத்து தன்னை மேம்படுத்திக் கொள்ள வகை செய்து கொள்ளலாம். தூங்கி எழுந்தவன் போல புது வழி இது.
தேவைக்கு செல்வம் சேமிப்பது அவசியம். தன் உடலுக்கும், வீட்டில் மற்றவர்களுக்கும் வேண்டிய அளவு பொருள் சேர்த்த பின் மேலும் மேலும் ஆசைப் பட வேண்டாம். பகவானைப் பற்றிய அறிவை, ஏதோ ஒரு கலையை வளர்த்துக் கொள்ளலாம். உறவுகள், பந்துக்கள், தனயர்கள், நண்பர்கள் இவர்களுக்கு தேவையானதை செய்து கொடுத்த பின் நகர்ந்து விடுவது நல்லது. தேவ, பூலோக,அந்தரிக்ஷம் என்பது பகவானின் ஏற்பாடு. அது போலவே செல்வமும். அவை அனைத்தும் பூவுலக வாசிகளின் நன்மைக்கே.
பசி அடங்க உண்பதே உணவு. அதிகமானால் அதுவே உபத்ரவம். ஒரு விதத்தில் அதிகம் உண்பவன் திருடன் போல என்கிறார். தண்டிக்கப் பட வேண்டியவன்.
வளர்ப்பு மிருகங்கள், மற்றும் மான்,ஒட்டகம், கழுதை,குரங்கு பாம்புகள் வானத்தில் ப்றக்கும் பறவைகள் அனைத்தும் பகவானின் ஸ்ருஷ்டியே என்று உணர பழக வேண்டும்.
செல்வத்துக்காக குடும்ப உறுப்பினர்கள் யாரானாலும் அதிக ஆசைப் பட்டாலும் அதற்காக நெருக்கடி கொடுத்தாலும் பொருட் படுத்த வேண்டாம். தன் கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். யாகம், பூஜைகள் செய்து நிவேதனமாக மீதியை சாப்பிடுவதே போதும். சேமித்த செல்வத்துக்கு தகுந்தபடி விருந்தினர்களை, தேவ, பித்ருக்களை எண்ணி செய்யும் செயல்களை செய்யவும். முடிந்த வரை அக்னி ஹோத்ரம், வைதானிகம் என்ற விதியில் செய்வதே போதும். பெருமளவில் செய்ய முடியாமைக்காக வருந்த வேண்டாம். அதை முடிந்தவர்கள் செய்யட்டும். பகவான் சர்வ யக்ஞபுக் எனப்படுகிறார். அக்னியில் ஹவிஸ் அளித்து, அந்தணர்களுடன் வேத கோஷங்களோடு செய்வது உயர்ந்தது. முடிந்தவரை அந்தணர்களுக்கு தேவையானதை கொடு.
பித்ருக்களுக்கு சிரார்தம் ப்ரோஷ்டபதம்( புரட்டாசி மாதம்) செய்ய வேண்டும் பந்து மித்திரர்களுடன் உணவளித்து செய்யலாம்.
விஷு காலத்தில் கிரஹண சமயங்களில், த்வாதசியும் ஸ்ராவணமும் வரும் நாளில், சுக்ல பக்ஷத்து த்ருதீயை, நவமி, கார்த்திகை, அஷ்டமி ஹேம்ந்த, சிசிர மாதங்களிலும், மாக வளர் பிறை சப்தமி, என்று
அனுஷமும் த்வாதசி திதியும் சேர்ந்த நாட்கள், ஸ்ராவண திருதீயை, பங்குனி உத்தரா , ஏகாதசி, இவை நன்மை தரும் நாட்கள். ஜாத கர்மா, போன்ற நற்காரியங்களை செய்ய ஏற்றவை. ஆயுளை தரும்.
ஸ்னானம் , ஜபம், ஹோம், விரதம், தேவ, அந்தணர்களுக்கு செய்யும் மரியாதைகள், இவை நீடித்து பலன் தருபவை. முற்பகலில் செய்வது நலம்.
தர்மாதி ஸ்ரேயஸ் எனப்படும் தேசங்கள் பற்றிச் சொல்கிறேன். பகவானுடைய சன்னிதி இருக்கும் இடங்கள், தவமும், கல்வியும் நிறைந்த இடங்கள், கங்கை போன்ற நதிகள் ப்ரவஹிக்கும் ப்ரதேசங்கள், குளங்களோ, ஏரிகளோ நிறைந்துள்ள இடங்கள், குரு க்ஷேத்ரம், கஜாஹ்வயம், ப்ரயாகை, புலஹாஸ்ரமம், நைமிஷம், பால்குணம், சேது, ப்ரபாஸம், குசஸ்தலீ, வாரணாசி, மது புரி, பம்பா, பிந்து சரஸ், நாராயணாஸ்ரம், நந்தா, சீதாராமாஸ்ரமம், குலாசல ப்ரதேசம் முழுவதும், மஹேந்திர, மலய மலைகள், இவை புண்ய தம- மிக சிறந்த புண்ய ஸ்தலங்கள் ஆகும். இந்த இடங்களில் வசிப்பது சிறந்தது.
தகுதியான பாத்ரம் என்பது கவிகள் சொல்வதில்லை. ஹரியின் சந்ததிகளே சராசரமும் என்பது ஒரு காரணம். எந்த மனிதன் அக்ர பூஜைக்கு ஏற்றவன் என்பது அவனுக்கும் மற்ற மனிதர்களுக்கும் இடையில் உள்ள சம்பந்தத்தை பொறுத்தே அமையும். தகுதியை அவரவர் தானே வளர்த்துக் கொள்ளவேண்டும்.
இவையெல்லாம் பழைய ரிஷிகள் சொல்லி அனுசரிக்கப் பட்டு வருபவை. தாரதம்யம் தோன்றுவது இயல்பே. மனிதர்கள் தங்களுக்குள் நடந்து கொள்வதை பொறுத்து மதிப்பை பெறுவார்கள். வித்யை, ஒழுக்கம் தவம் உள்ள அந்தணனை நல்ல பாத்ரம் என்பர். ஸ்ரீ க்ருஷ்ணனை வணங்கும் யாரானாலும் சத்பாத்ரமே.
(இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஏழாவது ஸ்கந்தத்தில், சதாசார நிர்ணய என்ற பதிநான்காவது அத்யாயம்.)
அத்யாயம்-15
நாரதர் சொன்னார்: அந்தணர்கள், த்விஜா:- இரண்டு பிறவியுடையவர் , சிலர் கர்ம மர்கத்தை அனுஷ்டிப்பவர், மற்றவர்கள் தவம் செய்வர். மற்ரும் சிலர் ஸ்வாத்யாயம் எனும் தான் கற்ற கல்வியை மேம்படுத்திக் கொள்வர், ப்ரவசங்கள் செய்வர், ஒரு சிலர் ஞான மார்கத்தில் செல்வர்.
ஞானம் பெறுவதையே கொள்கையாக எண்ணி அதில் ஈடுபடுபவர்களுக்கு தருவது கவ்யம். அது தவிர அவர்கள் வேறு எதையும் எதிர் பார்க்க மாட்டார்கள். (ஹோமத்தில் இடுவது ஹவ்யம், இது கவ்யம்)
தெய்வ சன்னிதிகளில் , தகுதி வாய்ந்த நபர்களுக்கு கொடுக்கலாம்.
தேவ காரியங்களில் இருவர், பித்ரு கார்யங்களில் மூவர், என்று உணவளிக்க வேண்டும். செல்வந்தராக இருந்தாலும் சிரார்தத்தில் விஸ்தாரம் செய்யக் கூடாது. தேச காலங்களை அனுசரித்து சிரார்தங்கள் செய்வதும், அதற்கான திரவியம்-பொருள், பாத்ரங்கள் இவை தகுதியானவைகளாக இருந்தால் நன்றாக நடக்கும். இவை இல்லாத பக்ஷத்தில், தன் மக்களுடனேயே செய்தால் போதுமானது.
தேவ, ரிஷி,பித்ரு, பூதங்கள், தனக்கு, தன் உறவினர் பந்துக்களுக்கு, அன்னத்தை பகிர்ந்து அளிக்க வேண்டும் அனைத்தும் பகவானுக்கே அர்ப்பணமாகும். சிரார்த்த காரியங்களில் மாமிசம் கூடாது. பசு ஹிம்சை செய்வதை விட தானியங்களை சமைத்து அளிப்பது அவர்களுக்கும் மகிழ்ச்சியைத் தரும். சத் தர்மம் என விரும்பி செய்பவர்களுக்கு தண்டத்தை தவிர்ப்பது – எவரையும் நோகும்படி அடிக்காமல் இருத்தல்- சிறந்த து. மனம், வாக்கு, காயம் இவைகளால் அனைத்து உயிரினங்களையும் பகவானின் ஸ்ருஷ்டியாக பார்ப்பது நலம் தரும்.
கர்ம காண்டத்தின் முக்யமான ஒன்று யாகங்கள் செய்வது. அதையறிந்த ஞானிகள், அந்த செயல்களில் திடமான அனுபவம் உள்ளவர்கள், இயல்பாக தன்னடக்கம் அடைவர். ஞான ஒளியில் ப்ரகாசிப்பர்.
த்ரவ்ய யக்ஞம்- எதையோ விரும்பி வேண்டிக் கொண்டு செய்யும் யாகங்கள், இவைகளிலும் ஹிம்சை இல்லாமல் அன்னமே அளித்து செய்வதால் பஞ்ச பூதங்கள் மகிழ்கின்றன.
நித்ய, நைமித்திக காரியங்களில் தானியங்கள், தாவரங்களில் கிடைக்கும் பொருட்களிலேயே திருப்தி அடைய வேண்டும்.
தர்ம பாதம் – தன்னுடைய தர்மத்திற்கு மாறானது விதர்மம் எனப் படும். மற்றவர்கள் தலையிட்டு மாற்றுவது பரதர்மம். அதர்மம் – பாகண்டம் எனப்படும். அதில் தம்பமும், வெற்று வார்த்தைகளுமே, ஏமாற்றும்.
தானே விரும்பி தன் ஆசிரம வாழ்க்கையை தேர்ந்தெடுத்த பின், அந்த (க்ருஹஸ்தாஸ்ரம ம், வானப்ரஸ்தமோ, சன்யாசமோ) அந்த தர்மத்தை அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். அவரவர் ஸ்வபாவத்துக்கு ஏற்றதாக வர்ணாஸ்ரமம் அமையும்.
யாத்திரைகள் போக செல்வமில்லாதவனுக்கு தனம் தருவது தர்மமாகாது. மஹா சர்ப்பத்துக்கு தருவது போல என்கிறார். எந்த எதிrபார்ப்பும் இன்றி தன்னிடம் உள்ளதில் திருப்தியாக இருப்பவன் எந்த சுகத்தை காண்கிறானோ, அது தனத்துக்காக பல இடங்களில் கை ஏந்தி பெற்று நாலா திசைகளிலும் அலைவது ஒரு பலனையும் தராது. திருப்தியுடையவன் வெறும் தண்ணீர் மட்டும் குடித்து கூட வாழ்வான். சுலபமாக கிடைப்பதை வைத்து தன் இல்லறத்தில் மற்றவர்களையும் சந்தோஷமாக வைத்திருப்பான்.
என்ன தான் தவம், தேஜஸ், வித்யா தவம், புகழ் எல்லாம் இருந்தாலும் மனதில் போதும் என்ற எண்ணமும், திருப்தியும் இல்லையெனில் அவை அனைத்தும் வீணே.
பசி தாகம், காம, க்ரோதங்கள் லோபம் இவைகளை அடக்கத் தெரிந்தவனே வெற்றி பெறுவான். ராஜன்! பண்டிதர்கள் பலர் இருப்பர். பல வித கல்விகளை கற்றவர்கள், வெற்றியடையாமல் போக இந்த போதும் என்ற மன அடக்கம் இல்லாமையாலே தான். காமத்தை சங்கல்பத்தால் ஜயிக்கலாம். க்ரோதத்தை காமத்தை அடக்கி ஜயிக்கலாம். பொருள் மேல் ஆசைகளை உழைத்து பொருள் ஈட்டி ஜயிக்கலாம். லோபத்தையும் பயத்தையும் அடக்க தத்வ விமரிசனம் செய்து ஜயிக்கலாம்.
கற்றதை நினைவில் இருத்தி மேலும் அதை மேம்படுத்திக் கொள்வது ஆன்வீக்ஷிகி எனப்படும். இதனால் சோகமும் மோகமும் அழியும். தம்பம் பகவானை உபாசனை செய்வதால் அடங்கும். யோகமும், மௌனமும் உடலை சீராக வைக்கவும், ஹிம்சையில் மனம் போகாமல் தடுக்கும். ரஜஸ் தமஸ் அறிவு வளர்ந்தால் மறையும். தன்னடக்கம் சத்வ குணத்தை தரும். இவையனைத்தும் குருவிடம் வணங்கி அன்புடன் இருந்தாலே பெறலாம். குரு என்பவர் அறிவை தருபவர். ஞானம் என்ற ஓளி வீசும் தீபமாக இருப்பவர். அவரிடம் மரியாதை இன்றி கல்வி மட்டும் கற்றவன் யானை குளித்து விட்டு வந்து மண்ணை அள்ளி மேலே போட்டுக் கொள்வது போல, பயனின்றி போகும். இவ்வாறு மேலும் பல தர்மங்களை விவரித்து விட்டு,
தேகம் என்பது ரதம், இந்திரியங்கள் குதிரைகள், மனம் அதன் தலைவன், செயல்கள் யாத்திரை, புத்தி தான் சாரதி, சத்வம் நெருங்கிய பந்து, என்பது ஈசனின் ஸ்ருஷ்டி.
அக்ஷம் என்பது பத்து. தர்ம அதர்மங்கள் சக்ரங்கள், அபிமானம் ரதத்தை உடையவனின் ஜீவன், வில் தான் அதன் ப்ரணவம், ஸரங்கள் பரமார்த்தமே லக்ஷ்யம். ராகமும் த்வேஷமும், லோபமும், சோக மோகமும் பயம், மதம், மான அவமானகளும் அஸுயை, மாயா ஹிம்ஸா மத்சரம், ரஜஸ், மறதி, பசி நித்ரை சத்ருக்கள், இவை அனைத்தும் இடர்களே. ரத எஜமானன் போல, தன் வசத்தில் வைத்துக் கொண்டு ஞானம் என்ற வாளும், அச்யுதன் சகாயமும் கொண்டவன் தன் ராஜ்யத்தில் திருப்தியாக இருக்க இந்த இடர்களை களைய வேண்டும்.
மேலும் தர்மத்தை அனுசரிப்பது பற்றி விவரங்கள் சொன்ன பின் தேவ ரிஷி விடை பெற்றார். அவருக்கு உரிய சத்காரங்கள் செய்து விடை கொடுத்து அனுப்பினார். அவர் சென்ற பின்னும் அவர் சொன்ன விஷயங்களை தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர்.
இது தாக்ஷாயணீ என்பவர்களின் தனி வம்சத்தின் சரித்திரம். தேவா சுரம், மனுஷ்யர்கள் இருக்கும் சராசரங்களிலும், பரவி இருப்பவர்கள் இவர்களே.
( இது வரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஏழாவது ஸ்கந்தத்தில், யுதிஷ்டிர நாரத சம்வாதம் என்ற பதினைந்தாவது அத்யாயம்.) ஸ்லோகங்கள் -80
|| இத்துடன் ஏழாவது ஸ்கந்தம் நிறைவுறுகிறது ||
|| ஓம் தத் சத் ||
ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||
அத்யாயம்-1
அரசன் வினவினான்: நிவ்ருத்தி மார்கம் என்ற ஆத்யாத்மிகம் – பரலோகம் பற்றிய விஷயங்களை விவரமாக வரிசை கிரமமாக ப்ரும்மா சொன்னபடியே விவரித்து சொன்னீர்கள். இகலோக வாழ்க்கையின் பொருள், எப்படி வாழ வேண்டும் என்பதிலிருந்து, முக்குணங்கள், இவற்றைச் சொல்லுங்கள். உயிரினங்கள் பிறப்பதும் இறப்பதும், மறுபடி பிறப்பதும் தானே கண்ணெதிரே காண்கிறோம். அதர்மம், நரகம் மன்வந்தரம் இவற்றைக் கேட்டு அறிந்து கொண்டோம். முதல் ஸ்வயம்புவ மனுவைப் பற்றி, பிரியவ்ரத, உத்தான பாத சரித்திரங்கள், தீவுகள், வர்ஷங்கள், சமுத்திரம் மலை நதி உத்யானங்கள், தாவரங்கள் பற்றியும் தரா என்று பூமியின் மண்டலம், அது எப்படி நிலை நிற்கிறது, மேலும் ஜோதிட சாஸ்திரம் பற்றியும், இவைகளை பகவானே ஸ்ருஷ்டித்தார் என்பதை சொல்லிக் கேட்டோம். அடுத்து, நரக வேதனை இல்லாமல் மனிதன் வாழ்வது பற்றிச் சொல்லுங்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இகவாழ்வில் தான் தவறு செய்து விட்டோம் அல்லது அதர்மமாக அறிந்தோ அறியாமலோ செய்து விட்டோம் என்று தோன்றினால் உடல் நலத்துடன் இருக்கும் பொழுதே ப்ராயச்சித்தம் செய்யலாம். உடனடியாக செய்வது நலம். வியாதி முற்ற முற்ற மருந்தும் அதிகமாக தேவைப் படுவது போல நாட்களைக் கடத்தக் கடத்த பிராயச் சித்தம் செய்வதும் அதிகம் தேவைப் படும். இந்த பிறவியில் மனோ, வாக்கு, காயம்- மனம், சொல், உடல் இவற்றால் செய்யும் பாபங்கள் விலக, மனு முதலிய தர்ம சாஸ்திரங்களில் விதித்துள்ள பரிகாரங்களைச் செய்யலாம். வயதாக ஆக உடல் நலிவினால், நற்காரியங்களை விட அதிகமாக தவறுதல்களே அதிகமாக போக வாய்ப்புள்ளது.
அரசன் வினவினான். தவறு என்று தெரிந்தும், சூழ்நிலையின் நிர்பந்தங்கள், தன் சக்திக்கு மீறிய சில செயல்கள்,.செய்ய நேர்ந்து விட்டால், அதற்கு பரிகாரம் என்ன செய்ய வேண்டும்? நடந்து விட்டதை திருப்ப முடியுமா? தனக்கு சம்மதமில்லை, இது தவறு என்று தெரிந்த பின்னும் அதர்மத்தைச் செய்வது யானை குளித்து விட்டு வந்து தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதை போல அல்லவா?
ஸ்ரீ சுகர் சொன்னார்: சாப்பிடாதவனுக்கு அன்னமே வைத்யம். மருந்தாக இருப்பது நித்யம் உண்ணும் உணவே என்பது தன் செயல்களை சாஸ்திரப் படி செய்பவன் தவறு செய்தால் அவனுக்கு பரிகாரம் எளிது. அறிவுடையவன் தவம், தன்னடக்கம், ஒழுக்கம், சத்யம், நியமங்களை அனுசரித்தல் இவற்றால் தன் உடல், சொல், புத்தி இவற்றால் தவறுகள் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். அப்படியும் தவறு என்று தோன்றினால் தைரியமாக அதற்கான பரிகாரமும் செய்து கொள்ளவும் முடியும். மூங்கில் காட்டை அக்னி அழிப்பது போல தன் பாபங்களை போக்கிக் கொள்வான்.
ஒரு சிலர் வாசுதேவனை பக்தியுடன் ஆராதித்து தன் பாபங்களை போக்கிக் கொள்வர். வாசுதேவனிடத்தில் பக்தி சூரியன் பனித்துளியை விரட்டுவது போல பாபத்தை விலக்கும் என்பது நம்பிக்கை. இந்த சிறிய காரியத்திற்கு இவ்வளவு பெரிய சகாயம் வேண்டுமா என்று கேட்கலாம். முடிந்தவரை தவம் அனுசரிக்கலாம். அல்லது ஸ்ரீ க்ருஷ்ணனிடத்தில் மனப் பூர்வமாக பக்தி செய்யலாம். நாராயண பராயணராக ஆசார சீலராகவும் உள்ள சாதுக்கள் பிராயச்சித்தம் என்பதை ஏற்பதில்லை. பரிகாரம் பலிப்பதும் பகவானின் அருளால் என்பது இவர்கள் கருத்து. அரசனே, ஒரு கதை சொல்கிறேன். விஷ்ணு படர்களும், யம படர்களும் விவாதிக்கிறார்கள். கேள்.
கான்யகுப்ஜம் என்ற இடத்தில் ஒரு அந்தணன். அஜாமிளன். அவன் சந்தர்ப வசத்தால் நன்னடத்தை இல்லாத ஒரு பெண்ணுடன் வாழ்ந்தான்.. விலை மாது என்பர். அவளுடன் இருந்ததாலேயே, அதுவரை கௌரவமாக இருந்த அஜாமிளன் தன் பெயரையும், ஒழுக்கத்தையும் இழந்தவனாக அறியப் பட்டான். அவளுடன் வாழ்ந்ததால் குலமே அவனை எதிர்த்தது. அதை பொருட்படுத்தாமல் அஜாமிளன் அவளிடம் புதல்வர்களைப் பெற்றான். காலம் சென்றது. அஜாமிளன் தன் பத்து புதல்வர்களில் மிகவும் பிரியமான கடைசி புதல்வனான நாராயணன் என்பவனை மிகவும் கொண்டாடி வளர்த்தான். அவனுடைய மழலையை விரும்பி கேட்டான். உண்ணும் சமயம் அருகில் இருந்து பார்த்து ஊட்டி, விரும்பியதை வாங்கி கொடுத்து சதா நாரயணா, நாராயணா என்றே நினைப்பதும் வாய் உச்சரிப்பதும் ஆனது. அறிவில்லாதவன். மரணத் தறுவாயிலும், அதை உணராமல் நாராயணா என்று அழைத்தபடி இருந்தான். பாசத்துடன் வந்த பார்வைக்கே பயங்கரமாக இருந்த மூன்று புருஷர்களைப் பார்த்து பலமாக நாராயணா என்று அழைத்தான். பாலகன் சற்று தொலைவில் தன் விளையாட்டில் ஈடு பட்டிருந்தான். ஹரி கீர்த்தனம், அதுவும் மரணத் தறுவாயில் கேட்டதும் யம படர்கள் குழம்பினர். என்ன செய்வது? தன் யஜமானிடம் சென்றார்கள். என்ன செய்வது? ஹரி நாமத்தை ஆத்மார்தமாக சொல்வதை கேட்ட விஷ்ணு தூதர்கள், அங்கு வந்தனர். யம கிங்கரர்களைத் தடுத்தனர். வைவஸ்வத புரஸ் சரா:-யமனுடைய சேவகர்கள், கேட்டனர், எங்களை ஏன் தடுக்கிறீர்கள்? தர்ம ராஜனின் சாஸனம் இது என்பது தெரியாதா உங்களுக்கு? யாருடைய சேவகர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன காரணத்தால் தடுக்கிறீர்கள்? தேவர்களா? உப தேவர்களா? சிறந்த சித்தர்களா? நீங்கள் யாவர்? அனைவரும் பத்மத்தின் இலை போன்ற விரிந்த கண்களுடன், பீதாம்பரம் தரித்து, கிரீடமும் குண்டலமும் பள பளக்க, அழகிய பூமாலை அணிந்தவர்களாக, இளம் வயதினர், அழகிய சதுர் புஜங்கள், அதில் வில், அம்பு, வாள், கதை, சங்க சம்ர, அம்புஜம் என்று ஆயுதங்களும், ஆபரணங்களும், திசைகளை வெளிச்சமாக காட்டும் ஆபரணங்கள் பிரகாசிக்க இங்கு வந்து தர்மபாலரின் கிங்கரர்கள் நாங்கள், எங்களை தடுக்க என்ன காரணம்?
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு சொன்ன யமதூதர்களைப் பார்த்து வாசுதேவனின் சொல்படி ஏவல் செய்பவர்கள், கம்பீரமான குரலில், மென்னகையோடு பதில் அளித்தனர்.
விஷ்ணு தூதர்கள் சொன்னார்கள்: நீங்கள் தர்மராஜனுடைய ஆணையை மேற் கொண்டு வந்துள்ளீர்கள் என்பதை அறிவோம். சொல்லுங்கள், தர்மம் எது? அதன் தத்வம் என்ன? தர்மத்தின் லக்ஷணம் என்ன ? எப்படி தண்டத்தை சுழற்றிக் கொண்டு வருவீர்கள். இந்த தண்டத்தை பயன் படுத்த ஏற்ற இடம் எதுவென்று எப்படி அறிவீர்கள்? தண்டிக்கப் படுபவர்கள் என்ன செய்ததால் தண்டிக்கப் பெறுவார்கள்? அல்லது அரச ஆணை என்ற மாத்திரத்தில் அணைவரும் தண்டிக்கப் படுவார்களா?
யமதூதர்கள் சொன்னார்கள்: வேதத்தில் சொல்லப் பட்டது தான் தர்மம். அதற்கு எதிரானது அதர்மம். வேதம் சாக்ஷாத் நாரயணனே. ஸ்வயம்பூ என்று கேட்டிருக்கிறோம். அவர் தன்னுள் ரஜஸ், சத்வம், தமஸ் என்ற குணங்களையும், தனக்கென்று குணம், பெயர், ஒரு செயல் என்று பிரித்து தானே அதற்கு ஏற்ப நடப்பவர்.
ஸூரியன், அக்னி, வானம், காற்று, பூமி, சந்திரன், சந்த்யா, நாட்கள், திசைகள் , பூமி, நீர் இவை தவிர, தானே தர்மம் என்றும் இருப்பவர். இந்த தேஹி – தேகமுடையவன், உயிரினம் அதற்கு சாக்ஷி.
இவர்களுக்கு அதர்மம் எது என்று தெரியும். எது தண்டிக்க தகுந்த இடம் என்று தெரியும். தங்கள் வினைகளுக்கு ஏற்ப அனைவருமே தண்டத்துக்கு தகுதியானவர்களே. சில சமயம் நல்லவர்களும், அதற்கு விபரீதமாக தீயவர்களும் சேர்ந்து தான் உலகம். காரியம் செய்யாமல் எந்த பிறவியும் இருப்பதில்லை. இவர்கள் குணத்துக்கு ஏற்ற வாறுதான் உடன் வசிக்கும் உற்றார் உறவினர் அமைவர். யாரால், எந்த அளவு, எப்படி -அதர்மமோ, தர்மமோ, என்பது பொருட்டல்ல-. அதன் பலனை அனுபவித்தே ஆக வேண்டும். இந்த உலகிலோ. பரலோகத்திலோ. ஸூரியனே பிறவிகளின் வினைகளுக்கு சாக்ஷி. அதை பிரமாணமாகக் கொண்டு தான் தண்டனையும். தேவர்களில் சிறந்தவர்கள், அறிஞர்கள், நிகழ் காலத்தில் ஒருவனது நடவடிக்கைகளை வைத்து அவன் தார்மிகனா, அதர்மியா என்பதையும், அவனது முக்காலத்தையும் கணிக்கிறார்கள். நிகழ் காலத்தில் பூர்வ ஜன்ம தொடர்பு வெளிப்படுவதாக குணங்களை வைத்து நிர்ணயிக்கிறார்கள். அதே போல மறு பிறவியையும் எதிர்பார்த்து ஊகித்து சொல்கிறார்கள். இதற்கு உதாரணமாக வசந்த காலத்தைச் சொல்கிறார். வசந்த காலத்தில் பூக்கள் பூக்கும் என்பதும், பருவ காலங்களையொட்டி பழங்கள் கிடைப்பதையும் நினைவில் வைத்து இருப்பது போல பிறவிகளின் செயல்பாடுகளும் ஒரு ஒழுங்கில் இருப்பதாகவும், கால நிலை மாறுதல்களை வைத்து அடுத்த சில மாதங்களில் பூக்கும் அல்லது துளிர்க்கும் என்பதை அந்த தொழிலில் உள்ளவர்கள் அறிவது போல என்கிறார். இவர்கள் மனதால் பூர்வ ஜன்மத்தை அறிகிறார்கள். மற்றதை அதே அளவு கோலால் அனுமானிக்கிறார்கள். கனவில் கண்டதை அறிவில்லாதவன் உண்மையாக நினைப்பான். அதே உறக்கம் கலைந்து எழுந்தவுடன் மறப்பான். பிறவிகளும் அவ்வாறே. நிகழ் காலம் இந்த பிறவி முடிந்தவுடன் மறந்து போகிறது.
ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், சப்தம் முதலிய ஐந்து, இவற்றுடன் மனமும் சேர்ந்து பதினாறு இதனுடன் அந்த பிறவியில் அடைந்த சரீரம், ஆக மொத்தம் பதினேழு. இவைகளால் சுகம், துக்கம், இரண்டும் சமமாக இருக்கும் மத்யமம் சமநிலை என்ற மூன்று, மகிழ்ச்சி, வருத்தம், பயம் போன்ற உணர்வுகள், இவை தவிர உருவமாக இருந்து உடல் அனுபவிப்பது என்று விரியும். எனவே உணர்வுகள் இல்லாத மற்ற பிறவிகளுக்கு தேகமே அனைத்தும். இந்த பதினாறும் சக்தி த்ரயம் என்ற முக்குணங்களால் மாறுதலுக்கு உள்ளாகும். இந்த குணங்களின் பாதிப்பால், தேஹி-தேகம் உடைய ஜீவன் தான் விரும்பாவிட்டாலும் சில செயல்களை தர்மமோ, அதர்மமோ செய்கிறான். பட்டுப் பூச்சி போல தன்னைத் தானே வலைக்குள் சிறைப் படுத்திக் கொள்கிறான். வினைப்பயன் வலையாக அவனை சூழ்ந்து கொள்கிறது. யாருமே, எந்த ஒரு சமயத்திலும் செயலின்றி இருப்பதில்லை. “ ந ஹி கஸ்சித் க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத் | கார்யதே ஹ்வஸ: கர்ம குணை: ஸ்வபாவிகைர் பலாத்||”
न हि कश्चित्क्षणमपि जातु तिष्ठत्यकर्मकृत् । कार्यते ह्यवशः कर्म गुणैः स्वाभाविकैर्बलात् ॥
வினைப் பயனால் சரீரம் அமைகிறது. என்ன சரீரம் என்பது முன் கூட்டியே தெரியாமல் போனாலும், பிறந்தபின் அந்த சரீரத்தின் குண தோஷங்கள் தான் அந்த ஜீவனுக்கு கிடைக்கிறது. ஸ்தூலமோ, ஸூக்ஷ்மமோ, எந்த விதமான பிறவி என்பதோ, தாய் தந்தைகளிடம் பெறும் குண தோஷங்கள், அறிவோ, மற்றதோ, பிறவிக் குணமாக ஹிம்சையோ, சௌம்யமான குணமோ வந்து சேருகிறது. இதில் ஜீவனின் விருப்பு வெறுப்புக்கு இடம் இல்லை.
பூமியில் பிறந்த பின் ஜீவனின் சுற்றுப் புறம், இயற்கையின் தாக்கம் இவற்றால் அதன் குணமும் உடல் வளர்ச்சியும் கூடவே புத்தியும் வளருவதால் நல்லது கெட்டதை தானே அறிந்து கொள்கிறது. ஈசனின் சம்பந்தம் குறைகிறது.
அஜாமிளன் பற்றி சொல்கிறார். அஜாமிளன் என்ற இந்த அந்தணன் சீல சம்பன்னனாக – நற்குணம், நல்ல நடத்தை உள்ளவனாக, வேத சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்து, சதாசாரமும், நல்ல குணங்களுமாக பொறுமை முதலிய குணங்களுக்கு இருப்பிடமாக வாழ்ந்தான். குரு, அக்னி, அதிதி, மூத்தோர், முதியவர் அனைவருக்கும் சேவை செய்தவன். தான் என்ற எண்ணமின்றி அனைவருக்கும் உரிய நண்பனாக மிதமாக மென்மையாக பேசுபவனாக, அசூயை இல்லாமல் இருந்தான். ஒருசமயம், தந்தையின் தூண்டுதலால் வனம் சென்றவன், பழங்கள், புஷ்பம், சமித் என்று சேகரித்துக் கொண்டு வரும் சமயம், காமினியான இந்த பெண், மதுவை குடித்து மயங்கிய நிலையில் இருப்பவளைக் கண்டான். தன்னிலை மறந்து, ஆடை கலைந்து, வெட்கத்தை தொலைத்தவளாக, மிதமிஞ்சிய மது பானத்தால், பித்து பிடித்தவள் போல பிதற்றிக் கொண்டிருந்தாள். ஏனோ, அவளை காப்பாற்றப் போனவன் அவள் வசம் வீழ்ந்தான். தன்னைத் தானே விடுவித்துக் கொள்ள முயன்றான். ஆயினும் அவளிடம் ஈடுபாடு கொண்ட மனம் மதனனால் ஆட்கொள்ளப் பட்டு விடுவித்துக் கொள்ள முடியாமல் அவளையே விரும்பினான். அவளே சகலமும் என்று ஆனான். தன் வீடு, எதற்கு வந்தோம் என்பது, தன் புத்தி, தர்மம் அனைத்தும் விலகின. அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதே தன் தர்மம் என்று நினைத்தான். தந்தை வழி வந்த சொத்து முழுவதும் அவளுக்கே செலவழித்தான். அவளுக்காக தன் நிலையிலிருந்து இறங்கி சாதாரண அறிவில்லாத மனிதனாக அவளுடன் நாட்களைச் செலவழித்தான். தன் பிரிய மனைவி, நல்ல குலத்தில் பிறந்தவள், தன் குறிப்பறிந்து சேவை செய்தவளை கை விட்டான். இதுவரை சேர்த்த செல்வம் கரைந்தது. தவறு என்று தெரிந்தும் மோகத்தால் பல காலம் இருந்து முதியவனாக, இறுதி காலம் அடைந்தவனை, நாங்கள் யம படர்கள், கொண்டு செல்கிறோம். இவன் உரிய தண்டனையைப் பெற்றால் தான் இவனுடைய வினைப் பலன் விடுபடும். சுத்தமாவான்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்த்தின், முதல் அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-68
அத்யாயம்-2
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு யம படர்கள், தங்கள் பக்கத்து நியாயத்தை சொன்னதும், நயமாக பேசத் தெரிந்த விஷ்ணு படர்கள் தங்கள் தரப்பு வாதங்களைச் சொன்னார்கள்.
விஷ்ணு தூதர்கள் சொன்னார்கள்: அஹோ! கஷ்டம். தர்மம் என்ற பெயரில் அதர்மம் உயர்வாக சொல்லப் படுகிறது. தண்டனைக்கு உரியவன் அல்லாத ஒருவனை அநியாயமாக தண்டிப்பதை நியாயப் படுத்துகிறார்கள். பிரஜைகளுக்கு பிதாவாக இருந்து பாலனம் செய்ய வேண்டியவனே தண்டித்தால் பிரஜைகள் யாரிடம் சரணமடைவார்கள். தலைமை பதவியில் இருப்பவர்கள் செய்வதை மற்றவர்களும் பின்பற்றுவார்கள். அதையே எடுத்துக் காட்டாக சொல்வர். எவருடைய மடியில் தலை வைத்து கவலையின்றி இருக்கிறார்களோ, அந்த பிரஜைகள், தர்மம் அதர்மம் என்று எதையும் அறியார். அந்த தலைவன், அரசனோ, குடும்பத் தலைவனோ, காப்பாற்றுவான் என்று இருப்பர். பசுக்கள் இருப்பது போல. அப்படி தன்னையே ஒப்படைத்து விட்டது அந்த பசு இடையனை நம்புவது போல, பகவானை நம்பும் ஒருவனை தண்டிப்பதில் தீவிரமாக முனைந்து இருப்பது நியாயமா? இந்த மனிதனும் அப்படி பகவானை நம்பி இருப்பவன். கோடி ஜன்மத்து பாபத்தையும் கரைத்து விடும் அளவு நாம ஜபம் செய்தவன் என்பது தன் நினைவு இன்றி மரணத் தறுவாயிலும் பகவானின் பெயரைச் சொல்கிறான். இதிலிருந்தே, இவன் குற்றமற்றவன் என்று ஊகிக்க முடியவில்லையா? நாராயணாய என்று அஷ்ட அக்ஷர மந்திரத்தை உச்சரித்திருக்கிறான். பாபம் செய்பவர்கள் என்ற பட்டியலில், திருடன், மதுவை குடித்து மயங்குபவன், நண்பனை துரோகம் செய்தவன், ப்ராம்மணனைக் கொன்றவன், குருவிற்கு துரோகம் செய்பவன் (குரு மனைவியை அபகரிப்பவன்) பெண்களை, அரசனை, தந்தையை, பசுவைக் கொல்பவன், இவர்கள் தான் வருகிறார்கள். இந்த மனிதன், உண்ணும் போதும் ஹே நாராயணா என்று சொல்லிய பின் உண்டவன். ஹரி நாம சங்கீர்த்தனம் பாபத்தை போக்கும், என்பது வெறும் வெற்று வாதமல்ல. அனுபவம் மிக்க ஞானிகளின் வாக்கு அது. எப்படி விரதங்கள் உடலை தூய்மையாக்குமோ, அதே போல மனதை தூய்மையாக்குவது ஹரி கீர்த்தனம் என்பது பலரும் அனுபவித்து சொல்லியிருக்கிறார்கள். உத்தமஸ்லோகன் (உயர்ந்த அறிவாளி) என்பதற்கான ஆதாரம்.
இப்படி சொல்வதால், காகம் உட்கார பனம் பழம் விழுந்தது என்ற நியாயம் போல எதேச்சையாக அமைவது அல்ல. குற்றம் செய்தவன் ஒருமுறை நாராயணா என்று சொல்லி விட்டு திரும்ப அதே குற்றத்தைச் செய்ய ஒப்புதல் கொடுப்பது போல ஆகாதா என்று கேட்கலாம். இந்த மனிதன் விஷயத்தில் அப்படியல்ல. வாழ் நாள் முழுவதும் பக்தி பாவம் தான் இவன் மனதில் இருந்திருக்கிறது. உயிர் போகும் தறுவாயில் ஹரி நாமம் வாயில் வருவதற்கு அது தான் பின் பலம். எனவே, இவனை அழைத்துச் செல்லாதீர்கள். குற்றம் செய்தவன் என்று நீங்கள் கருதினாலும் ஹரி நாமத்தைச் சொன்னதால் அந்த பாபத்திலிருந்து விடுபட்டு விட்டான். சந்தர்ப வசமோ, பரிகாசமாக சொன்னதோ, காரியார்த்தமாக, பாடலை பூர்த்தி செய்ய ஹரி நாமத்தை போட்டாலும், ஏளனம் செய்வதே ஆனாலும், வைகுண்ட நாமத்தைச் சொல்வது பாபத்தை போக்கும் என்று சொல்வர். கீழே கால் தடுக்கி விழுந்தவன், அடிபட்டு உடல் பாகம் இழந்தவன், விஷ ஜந்துக்களால் கடிக்கப் பட்டவன், நெருப்பில் காயப் பட்டவன், அடி பட்டவன், ஹரி என்று சொன்னால் அந்த மனிதன் அதிக கஷ்டப் பட மாட்டான். அபராதம் எப்படிப் பட்டது என்பதை பொறுத்து, பெரிய தவறுக்கு, பெரிய பரிகாரம், சிறியதானால் அதற்கேற்ப சிறிய பரிகாரம் போதும் என்பது மஹரிஷிகளின் வாக்கு. இவர்களுக்கு அந்த பாபங்கள் போக தவம், தானம், ஜபம் என்பன பரிகாரமாக சொல்லப் பட்டன. பகவானை நம்பியவனின் இதயம் அதர்மத்தில் செல்லாது. தெரிந்தோ, தெரியாமலோ, உத்தம ஸ்லோகன் என்ற பகவானின் பெயரை சொன்னால், மனிதர்களுடைய பாபத்தை போக்கும். எரி பொருள்-விறகு போன்றவை அருகில் இருந்தால் அக்னி தகித்து விடுவது போல. வியாதியஸ்தன், நெடு நாட்களாக வருந்தியவன், அறியாமல் ஔஷதம்- அதற்கான மருந்தை தெரியாமல் உட்கொண்டால் கூட மருந்து அவனை குணப்படுத்துவது போல, மந்திரமும் அதே போல சக்தி வாய்ந்தது என்று சொல்கிறார்கள்.
ஸ்ரீ சுகர் சொல்கிறார்: இவ்வாறு பாகவதன்- பகவானை நம்பியவன் – என்பதன் தர்மம் என்பதை சொல்லி, அரசனே! அந்த யம படர்களிடமிருந்து அந்தணனை மீட்டனர். இவ்வாறு திருப்பி அனுப்பட்ட யம தூதர்கள் தங்கள் தலைவனிடம் போய் முறையிட்டார்கள். நடந்ததை நடந்தபடி சொன்னார்கள்.
யமபாசத்திலிருந்து விடுபட்ட அந்தணன், பயம் தெளிந்து, நினைவு வரப் பெற்றான். விஷ்ணு கிங்கரர்களையும், பகவான் விஷ்ணுவையும் வணங்கினான். திடுமென விஷ்ணு பார்ஷதர்கள் மறைந்தனர். அஜாமிளன் கேட்டுக் கொண்டிருந்த சம்பாஷனைகளை நினைவு கூர்ந்தான். யம படர்களும், நாராயண சேவகர்களும் பேசியதை, தார்மிகமான ,சுத்தமான, மூன்று வேதங்களையும், தன் முந்தைய சாந்தமான வாழ்க்கையையும் நினைத்தான். பக்திமானாக, ஹரி மாஹாத்ம்யம் கேட்டதால் வந்த புது அறிவுடன், தன் வழி தடுமாறலை நினைத்து வருந்தினான். என்ன காரியம் செய்தேன், அந்தணனாக பிறந்து அதே நியமங்களுடன் வாழ்ந்தவன் என் கடமைகளிலிருந்து நழுவி விழுந்தேனே. எனக்கு நல்ல இள வயது மனைவி அன்புடையவளாக இருந்தாள். அவளைத் துறந்து சென்றது என்ன நியாயம். வயது முதிர்ந்த தந்தை, தாய் இருவரும். வேறு பந்துக்களும் இல்லை. நன்றி மறந்தவன் நான். அவர்களைத் தவிக்க விட்டேன். நீசன் நான். எனக்கு நரகம் தான் சரி. அதுவும் பயங்கரமான நரகம். தர்மத்தை மீறியவர்கள், காமமே பெரிதென்று நினைப்பவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை அனுபவிக்கப் போகிறேன். ஆ, இது கனவா? உண்மையாக நேரில் கண்டேனா? அத்புதம். பாசங்களை கையில் வைத்துக் கொண்டு வந்த யம படர்கள் எங்கு சென்றார்கள்? அழகிய தோற்றம் கொண்ட சித்தர்கள், என்னை பாசக் கயிற்றிலிருந்து விடுவித்தவர்கள் எங்கு சென்றார்கள்? என்னதான் நான் தகுதியற்றவன் என்றாலும் அந்த உத்தம புருஷர்களைச் சந்தித்தது வீண் போகாது. மங்களமே நடக்கும். என் மனம் மகிழும்படி ஏதோ நன்மைகளே பெறுவேன். இல்லாவிடில், முன் பின் அறியாத அந்த காட்டு வாசியான பெண்ணிடம் வாழ்ந்தவனின் நாக்கில் வைகுண்ட பதி ஸ்ரீமன் நாராயணன் பெயர் வருமா?
மஹா மட்டமானவன் நான். பாபி. ப்ரும்ம குலத்தில் பிறந்தவன் என்று சொல்லிக் கொள்ளவே அருகதையற்றவன். வெட்கம் அறியாதவன். இப்படிபட்ட எனக்கும் மங்களமான ஸ்ரீமன் நாரயணனின் பெயர் சரியான சமயத்தில் வழி காட்டவே நினைவு வந்ததோ. இனி நான் திருந்தியவனாக குல வழக்கப் படி நடப்பேன். புலன்களை அடக்கி வாழவே முயல்வேன். இனியும் என் மனதில் தாமஸமான எண்ணங்கள் வர விட மாட்டேன். அவை இருட்டில் மூழ்கடிக்கும் என அறிந்து கொண்டு விட்டேன். இந்த பந்தத்திலிருந்து என்னை விலக்கிக் கொள்வேன். எதுவும் அறியாத அக்ஞானி போல காமம் என்னை ஆட்டுவிக்க விட மாட்டேன். இனி என் வாழ்க்கை அனைத்து பிறவிகளையும் நேசிக்கும், நண்பனாக உதவும், சாந்தமானவனாக, கருணையுடன் ஆத்மாவை உணர்ந்தவனுடையதாக இருக்கும். மிருகத் தனமான இச்சையுடன் அதமனாக வாழ்ந்த வாழ்வைத் தொலைத்து மூழ்கி விட்டேன். நான், என் உடல், என் சுகம் என்ற நினைவுகள் என்னை விட்டு அகலட்டும். பொய்யான பொருள் ஆசை விலகட்டும். நல்ல புத்தி வரட்டும். என் மனதை பகவத் தியானத்தில், அவனுடைய கீர்த்தனத்தில் செலுத்தி பவித்ரமானவனாக ஆவேன்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு தன்னையே நொந்து கொண்டு, எஞ்சிய நாட்களைக் கழிக்க, சாதுக்களுடன் கங்கைக் கரையை அடைந்தான். அனைத்து பந்தங்களையும் துறந்தவனாக வாழ்ந்தான். அங்கு யோகங்களைக் கற்று, சாதனைகளைச் செய்தான். தன்னையே அறிவது என்ற பெரும் நிலையை அடைந்தான். காலம் வந்ததும் இயற்கை எய்தினான். ப்ரும்மானுபவத்தை அடைந்தான். அங்கு முன்பு கண்ட விஷ்ணுவின் சேவகர்களை அடையாளம் கண்டு வணங்கினான். ஸ்ரீயின் பதியான ஸ்ரீமன் நாராயணனின் வைகுண்ட லோகத்தில் கிங்கர்களோடு சேர்ந்தான்.
இவ்வாறு தன் தர்மத்தை விட்டு, கடமையை மறந்தவனாக வாழ்ந்தவன் கூட, பகவானின் நாமத்தை சொன்னதால், தன்னுணர்வை அடைந்து மேலும் பாபத்தை செய்வதில் இருந்து மீண்டான். அதை விட கர்ம பந்தனத்தை விலக்க ஏற்ற சாதனம் வேறு எது உள்ளது? திரும்பவும் உலக வாழ்க்கையின் ரஜோ, தமோ குணங்களுடன் குழம்பிய நீரில் நிற்பது போன்ற நிலை வராமல் அந்த நாம ஸ்மரணமே உதவியது.
இதிகாசம் இது. நடந்த கதை. ஸ்ரத்தையுடன் கேளுங்கள். மனதின் சஞ்சலம் நீங்கும். பக்தியுடன் பாடுங்கள். யம கிங்கரர்கள் நரகத்துக்கு அழைத்துச் செல்ல அருகில் கூட வர மாட்டார்கள். இறக்கும் தறுவாயில் ஹரி நாமத்தை, புத்ரனை நினைத்து சொன்னதே, அஜாமிளனுக்கு நல்வழி காட்டியது எனும் பொழுது, சிரத்தையுடன் அன்புடன் சொல்பவர்கள் பற்றி சொல்வானேன்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், இரண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-49.
அத்யாயம்-3
பரீக்ஷித் ராஜா வினவினான். இவ்வாறு திரும்பி வந்த யம தூதர்களை யம தர்மராஜன் எப்படி எதிர் கொண்டான். ஆணையை மீறியதற்காக தண்டிக்கவில்லையா? அவர்கள் வர்ணித்த முராரியின் அணுக்கத் தொண்டர்கள் அவர்கள் வசத்தில் அந்தணனை எடுத்துக் கொண்டதை ஒத்துக் கொண்டானா? யமதேவன் நியாயமாக அளித்த தண்டம் அதை மீறுவது என்பது கேட்டதேயில்லையே. உலகில் அனைவருக்கும் இந்த சந்தேகம் வரும். ரிஷியே, உங்களையன்றி இதற்கு யார் பதில் சொல்ல முடியும் ?
ஸ்ரீ சுகர் சொன்னார்: யம தூதர்கள், தங்கள் தலைவனான யம ராஜனிடம் நடந்ததைச் சொன்னார்கள். சம்யமனீ என்ற திக்கின் பதி யமன். ப்ரபோ! ஜீவ லோகத்தில் ஆணயிடக் கூடியவர்கள் பலர் இருக்கிறார்கள்? த்ரிவித்யா என்ற வேத மார்கத்தை பயிலுபவர்கள் மனிதனின் வினைப் பயன்கள் தொடரும், அதை தவிர்க்க முடியாது என்று அறியாதவர்களா? இப்படி பலர் ஆணையிட முனைந்தால், மரணமோ, மரணமற்ற நிரந்தரம் எனும் நிலையோ, யாருக்கு, எப்படி, எதனால் அளிக்கப் படுகிறது என்பதே கேள்விக்குரியதாகாதா? சாஸ்திரம் என்பது உண்மையில் சக்தியின்றி, பேச்சளவில் இருக்குமா? தாங்கள் தான் மனிதர்களின், தேவர்களின், பூதங்களின் அதீஸ்வரர் என்ற பதவியில் திடமாக நின்று அனைத்து ஜீவ ராசிகளின் சுப, அசுப செயல்களை கணித்து தண்டனை வழங்குபவர். ஆணையிடுபவர். யமதண்டம் யாராலும் மீற முடியாது என்பது தான் இதுவரை நடந்து வந்திருக்கிறது. இந்த நான்கு விஷ்ணு சேவகர்களால் மீறப்பட்டது. அவர்கள் அத்புதமாக, சித்தர்களாக இருந்தனர். நயமாக பேசி, எங்கள் கைகளிலிருந்து, உங்கள் ஆணையின் பேரில் யாதனா க்ருஹம் என்ற இடத்திற்கு அழைத்துச் செல்லப் பட இருந்த, தவறு செய்த பிரஜையை பலவந்தமாக பாசக்கயிற்றிலிருந்து விடுவித்து விட்டார்கள். எங்கள் மேல் தவறு இல்லை என்று நீங்களும் நினைத்தால் விவரமாக சொல்லுங்கள். ‘நாராயணா” என்று சொன்னவுடன், பயப்படாதே என்று காப்பாற்ற ஓடி வந்து விட்டார்கள்.
ஸ்ரீசுகர் சொன்னார்: ப்ரஜைகளை சம்யமனம் – பிறவித் தளையிலிருந்து விடுவிப்பவன் என்ற பெயரில், உலகில் பிறப்பு இறப்புகளை கட்டுக்குள் வைத்திருப்பவன் என்ற பதவியில் நியமிக்கப் பட்ட யமராஜன் பதில் சொன்னார்: எனக்கும் மேல் ஒருவன் உலகை நடத்திச் செல்பவன் இருக்கிறான். என் வேலை அசையும் உயிரினங்களில் மட்டுமே. அதிலும் மனிதர்கள் தான் பிரதானம். அதிலும் பாபம் செய்தவர்களை தண்டிக்க மட்டுமே எனக்கு அதிகாரம் உள்ளது. சர்வேஸ்வரன் என்பவன் யார் தெரியுமா? ஊடும் பாவுமாக நெய்து வைத்த வஸ்திரத்தால் சுற்றி வைத்தது போல தானே அனைத்து உலகங்களுக்கும் ஒரே வஸ்திரமாக முழுவதுமாக பரவி நிற்கிறான். அதன் ஒரு பகுதி பிறப்பும், இறப்பும். அவன் வசத்தில் இருப்பது தான் உலகம். கம்பத்தில் கட்டி வைத்த பசுக்கள் போல ஜனங்களை தன் வசத்தில் ஆட வைக்கிறான். வாயால் அவன் புகழை பாடுபவர்கள், அவனைச் சுற்றியே வளைய வருகிறார்கள். நான், இந்திரன், நிர்ருதி, ப்ரசேதஸ் என்பவர்கள், சந்திரன், அக்னி, ஈசன், பவன், ஸூரியன், விரிஞ்சி, ஆதித்யன், உலகில் வசுக்கள், மற்றும் சாத்யர்கள், மருத் கணங்கள், ருத்ர கணங்கள் சித்தர்கள், விஸ்வத்தை படைத்தவன், அமரேசன், ப்ருகு முதலான ரிஷிகள்- இவர்களை தமஸ், ரஜஸ் என்ற குணங்கள் நெருங்க கூட முடியாது அந்த அளவு சத்வமே உருவானவர்கள், இவர்கள் அனைவரும் சத்வ ப்ரதானமாக இருந்தும், பகவானின் மாயைக்கு அடங்கியவர்களே. எப்பொழுது, எதை, எந்த விதமாக செய்யப் போகிறார் என்பதை அறிய மாட்டார்கள். மற்றவர்களைப் பற்றி சொல்வானேன். அந்த:கரணத்தில் சாக்ஷியாக இருப்பவன், பரமாத்மா. எந்த ஜீவனும் இதுவரை கண்டதில்லை, கேட்டதும் இல்லை. மனம், ப்ராணன், ஹ்ருதயம் அல்லது குரலில் எதிலுமே காட்டிக் கொள்ளாமல் இருக்கிறான் அந்த ப்ரபு. சுதந்திரமானவன். அந்த மயாவியின் தூதர்கள் அவரைப் போலவே வேஷ தாரணங்கள், உருவம் இவற்றுடன் இருப்பர். இவர்களைக் காண்பதே கூட துர்லபம். இவர்கள் தான் பக்தர்கள் படும் கஷ்டங்களைத் தீர்க்க ஓடோடி வருவார்கள். பகவானே தான் தர்மம் என்பதை வரையறுத்தார். நானும் அவர் ஆணைக்கு உட்பட்டவனே. பாகவத தர்மம் என்று அவரே சொல்கிறார். அது என்ன என்று எங்களில் யாருக்கும் தெரியாது. அதை அறிந்தவர்கள் பகவான் அருகில் இருப்பவர்கள் மற்றும் ப்ரும்மா, நாரதர், பகவான் சங்கரன், சனத்குமாரன், கபிலர், ஸ்வாயம்புவ மனு, ப்ரஹ்லாதன், ஜனகர், பீஷ்ம பிதாமஹர், பலி, சுகதேவர் இவர்களுடன் நான்.
பக்தியோகம் தான் உலகில் சிறந்த தர்மம் என்பர். ஹரியின் நாம உச்சாரணமே ம்ருத்யு பாசத்தை விட மேலானது என்று அஜாமிளன் சரித்திரம் சொல்கிறது. போதும். அஜாமிளன் எந்த விதத்தில் உயர்வு இந்த தகுதியைப் பெற என்றால், எதுவுமில்லை. அவன் மரணத் தறுவாயில் ஹரி நாமத்தை நினைத்தான் என்பது ஒன்றே. அதனால் தூதர்களே! ஹரி சங்கீர்த்தனம் இருக்கும் இடத்தில் பார்த்து கவனமாக நடந்து கொள்ளுங்கள். அவர்கள் பக்தர்கள் என்றால் கவசமாக பகவானின் க3தை இருக்கும். என் தண்டம் அதற்கு முன் ஒன்றுமேயில்லை.
குணமில்லாதவர்கள், முகுந்த பாதாரவிந்தத்தை தவிர்த்து தன் விருப்பம் போல செய்பவர், எவருடைய வாய் பகவானுடைய புகழை பாடவில்லையோ, எவருடைய மனம் அவர் சரணாரவிந்தத்தை நினைப்பதில்லையோ, க்ருஷ்ணா என்று சொல்லி எந்த தலைகள் வணங்குவதில்லையோ, அவர்களை அழைத்து வாருங்கள்.
அதனால் விஷ்ணு தூதர்கள் தடுத்தார்கள் என்பதை மன்னித்து விடுங்கள். புராண புருஷன் ஸ்ரீமன் நாராயணன், தானே தன் ஏவலர்களைக் கொண்டு இப்படி ஒரு செயலை செய்வித்திருக்கிறான். நாம் கை கூப்பி வணங்கி விட்டு நம் வழியே செல்வோம், அதுவே நன்மை.
ஜகன்மங்களம் என்பது விஷ்ணுவின் கீர்த்தனமே. குருவம்சத்து அரசனே, அதுவே அனைத்து பலன்களையும் தரும். அந்த அளவு விரதம் முதலியவைகள் கூட மனிதனை பவித்ரமாக்குவதில்லை, ஹரி கீர்த்தனமோ, கேட்பதோ, பக்தியுடன் நினைப்பதோ அதை விட மேல். க்ருஷ்ண பாத பத்மத்தில் மனப் பூர்வமாக வணங்கினாலேயே காம, மோகங்கள் விலகும். இவ்வாறு தங்கள் தலைவன் சொன்னதைக் கேட்டு யம தூதர்கள் வியந்தபடி, அதன் பின் அச்யுதனை ஆஸ்ரயித்த ஜனங்கள் உள்ள இடங்களில் தங்கள் வேகத்தைக் காட்டாமல் பார்த்து நடந்து கொள்ளலாயினர்.
அரசனே! இந்த கதையை அகஸ்தியர் மலய மலையில் ஒரு நாள் பூஜை முடிந்து அமர்ந்திருந்த பொழுது சொன்னார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், மூன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-35.
அத்யாயம்-4
அரசன் பரீக்ஷித் வினவினான். பகவன்! ஸ்வாயம்புவ ஆட்சியில் தேவாசுர சர்கம், நாகங்கள், மிருகங்கள், பக்ஷிகள் இவற்றைப் பற்றியும் சொன்னீர்கள். அதையே மேலும் கேட்க விரும்புகிறேன். மனிதனுக்கு அடுத்த நிலையில் இவைகள் எப்படி எந்த சக்தியால் எப்படி பகவான் படைத்தார்?
சூதர் சொன்னார்: இப்படி கேட்கும் அரசனைப் பார்த்து வியாச பகவான் அவனை பாராட்டி விட்டு, விவரமாக சொல்கிறேன் என்று ஆரம்பித்தார்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ப்ராசீன பர்ஹிஷரின் பத்து பிள்ளைகள், நீருக்குள் இருந்தபடி தவம் செய்தார்கள். அங்கிருந்தபடியே, பூமியை காண முடியாமல் மரங்களே நிறைந்திருக்கக் கண்டனர். பார்வையை மறைத்தன என்று மரங்களை வெறுத்தனர். தவம் செய்து வந்ததால் அடங்கியிருந்த கோபம் வெடித்து எழுந்தது போல அவர்கள் வாயிலிருந்து தீயும், வாயுவும் வெளிப்பட்டன. மரங்களை எரித்தது அந்த தீ ஜ்வாலைகள். அதைக் கண்ட சோமன்- சந்திரன் திகைத்து அவர்களை சமாதானப் படுத்தினான். (தாவரங்கள் சந்திரனின் பொறுப்பில் என்பதால்) பெரியவர்களே! உங்கள் கோபத்தை இந்த மரங்களிடம் காட்ட வேண்டாம். பாவம், அவைகள் என்ன செய்தன. நீங்கள் பிரஜைகளை பெருக்குவதற்காக தோன்றியவர்கள். அஹோ! ப்ரஜாபதி பகவான் ஹரி இப்படி ஆகும் என்று நினைத்திருக்க மாட்டார். காட்டு மரங்களும் ஔஷதிகளும் ஜீவன்களின் களின் நன்மைக்காக அவர் உருவாக்கி கொடுத்தார். மனிதர்களுக்கு அன்னம், அசைய முடியாத, பாதம் இல்லாத இவைகள் பாதங்களுடன் நடமாடும் பிறவிகளுக்கு உணவு. கைகள் இல்லாத இந்த தாவரங்கள் கைகளுடன் உள்ள மனிதர்களுக்கும், இரண்டு கால் பிராணிகளுக்கும், நான்கு கால் பிராணிகளுக்கும் உதவ என்றே படைக்கப் பட்டன. நீங்கள் உங்கள் பெற்றோரால் ப்ரஜைகளை பெருக்குங்கள் என்று ஆணையிடப் பெற்றவர்கள். இந்த மரங்களை ஏன் தகிக்கிறீர்கள் ? நல்லவர்களின் வழியில் செல்லுங்கள். கோபத்தை அடக்கிக் கொண்டு, உங்கள் தந்தை, பாட்டனார், முப்பாட்டனார் சொன்னதையும், செய்ததையும் அனுசரியுங்கள். குழந்தைகளை பந்துவானவன் பாதுகாப்பது கடமை. ஞானியானவன் அறிவு உள்ளவனை ஆதரித்து கண்களை இமைகள் காப்பது போல காக்க வேண்டும். மனைவியை கணவன் பாதுகாக்க வேண்டும் பிரஜைகளை அரசன் பாதுகாக்க வேண்டும். துறவிகளை, யாசிப்பவர்களை குடும்பஸ்தன் காக்க வேண்டும். இவ்வாறு பிற ஜீவன்களிடம் தயையுடன் இருக்க வேண்டும் என்பது தான் பகவானின் நோக்கம் என்பது உங்களுக்கு நினைவில்லையா? பிற ஜீவன்களை துன்புறுத்துவது பகவானையே துன்புறுத்துவதற்கு சமம். போதும் மரங்களை எரித்தது. வார்க்ஷீ அல்லது மரீஷா என்ற இந்த பெண் கண்டு ரிஷியின் மகள். ப்ரமலோசனி என்ற அப்சரஸ் தாய். மரங்களில் வளர்ந்தவள். இவளை மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள். சோமன் சொன்னதால், ப்ராசீன பர்ஹிஷின் பத்து புதல்வர்களும் அவளை ஏற்றுக் கொண்டனர். அவர்களிடம் அவள் பிரஜைகளை பெருக்குவதே நோக்கமாக கொண்ட ப்ராசேதஸர்களை பெற்றாள். இவர்களின் வம்சம் வளர்ந்து உலகை நிரப்பியது.
2)
தக்ஷ பிரஜாபதி தன் புத்ரிகளை மிகவும் நேசித்தான். தக்ஷன், இயல்பாக பெற்ற சந்ததிகள் தவிர, மனதால், பலரை ஸ்ருஷ்டித்தான். அதைக் கேள். மனதால் சங்கல்பம் செய்தே தேவர்கள், அசுர்கள், மனிதர்கள் என்று ஸ்ருஷ்டியைச் செய்தான். அப்படியும் திருப்தி இல்லை என்று விந்த்ய மலைக்குச் சென்று தவம் செய்யலானான். அங்கு அகமர்ஷணம் என்று தீர்த்தம் இருந்தது. பாபங்களைப் போக்கும் பரம பவித்ரமான நதி. அங்கு தங்கி தினமும் அதில் ஸ்னானங்களை செய்தபடி தவம் செய்து ஹரியை மகிழ்வித்தான்.. அவர் சொன்ன துதிகளைச் சொல்கிறேன் கேள்.
“ நம: பராய – என்று ஆரம்பித்து, தஸ்மை மஹேஸாய நமஸ்கரோமி மகேசனுக்கு நமஸ்காரம். உடன் இருக்கும் ஆப்தமான சகா போல இருப்பவன். இதை நற்குணம் குணங்கள் நிறைந்த சாதகர்கள் தான் அறிவர். நண்பனுக்கு நண்பனாக விளங்கும் அந்த மகேசனுக்கு நமஸ்காரம். ,
தன்னில் பரமாத்மாவை அறிந்தவன் தான் அறிவாளி. அவனும் சர்வக்ஞன் என்ற பகவானை முழுமையாக அறிந்தவனா, சந்தேகமே. அனைத்தும் அறிந்த பரம புருஷனான பகவானை வணங்குகிறேன்.
மரத்தில் அக்னி போல உயிரினங்களின் இதயத்தில் இருப்பவன். அவனே சர்வ நாமா- எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் அவனையே குறிக்கும் – விஸ்வ ரூபன், தயை செய்ய வேண்டும்.
வேதங்கள் பரம் பொருளைப் பற்றி நிரூபிக்க முயன்றிருக்கின்றன. எங்கு, எங்கிருந்து வந்தது, யாரால் அறியப்பட்டது, எதில் நாம் காணலாம், என்ன உருவம் இது தான் என்று எப்படி அறிவோம், என்ன செயல் செய்கிறது, செய்விக்கிறது, என்று கேள்விகள் தானே கேட்டு, நாமென்ன அறிவோம், அந்த பரம் பொருளின் சித்தம், பரத்திற்கும் பரமானது, அதுவே ப்ரும்மம், அதுவே தேகங்கள் தோன்ற காரணம், இது தான் அதன் சக்தி என்று விவாதிப்பவர்கள், எல்லையில்லாமல் விவாதித்து முடிவே காண முடியாத பரம் பொருள், இதோ கண்டு கொண்டேன் என்று சொல்லி முடிக்கும் முன் அவர்கள் தங்கள் விவாதம் ஒர் பலனையும் தரவில்லை என்பதை உணர்வார்கள். ஒரு முஹூர்த்த மோகமே.
அஸ்தி என்று சிலரும், நாஸ்தி-இல்லை என்று சிலரும் சொல்வர். வித விதமான தர்மங்கள் பற்றி பேசுவர். சங்க்யம், கர்யோகம், என்று பெயர்கள் சொல்வர். கண்டவர் எவருமில்லை.
என்னையும் ஒரு கடமையைக் கொடுத்து உலகில் பிறக்கச் செய்தவன் என்னை காக்கட்டும். பாமரனான கிராம வாசி உலக வாழ்க்கையில் எதை அறிவான். அனைத்தும் தேகமே, உடல் சம்பந்தப் பட்டதே என்று இருப்பான். பகவானே, எதை நான் செய்யவேண்டுமோ, அதற்கான மனோ பலத்தைக் கொடுங்கள். “
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு துதி செய்யவும், மனம் மகிழ்ந்து பக்த வத்ஸலனான பகவான் எதிர்ப்பட்டார். பாதம் சுபர்ணனின் மேல் இருக்க, நீளமான அஷ்ட புஜங்களும், சக்ர, சங்க, வாள், தனுஷ், பாணம், க3தை இவற்றை ஏந்தியவராக , பீதாம்பரமும், கரு மேகம் போன்ற நிறமும், ப்ரஸன்னமான கண்களும், முகமும், வனமாலையும், ஸ்ரீ வத்ஸம், கௌஸ்துப மணிகள் பிரகாசிக்க, பெரிய கிரீடமும், கடகமும், மகர குண்டலங்களின் ஒளிச் சிதற, இடையில் காஞ்சி, விரல்களின் வளையங்கள், நூபுரம்,அங்கதம் என்ற பூஷணங்களும் அலங்கரிக்க, மூவுலகிலும் ப்ரசித்தமான மோகன ரூபனாக, புவனேஸ்வரன், நாரதர், நந்தன் முதலானோருடனும், உடன் இருக்கும் ஏவலர்களுடனும் தேவர்கள் கூட்டத்தோடும், துதி செய்வோர் பாட, மற்றவர் உடன் பாடும் கோஷ்டியாக,திடுமென வரவும் சித்த கந்தர்வ சாரணர்கள், ஆச்சர்யமான அந்த ரூபத்தைப் பார்த்து மனம் மகிழ்ந்து நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினர். ப்ரஜாபதி தக்ஷன் எதுவும் பேசக் கூட முடியாதபடி மகிழ்ச்சியில் திக்கு முக்காடினார். அருவியிலிருந்த நீர் வேகமாக வந்து விழுந்து நிரம்பிய தடாகம் போல மனம் நிறைந்தது. ப்ரஜைகளை பெருக்குவது தான் அவருடைய விருப்பம் என்பதை அறிந்திருந்த பகவான் ஜனார்தனன் பேசலானார்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: என்னிடம் மனப் பூர்வமான ஈடுபாடு, கவனம் இவற்றுடன் ப்ராசேதஸ! உன் தவத்தை முறையாக சரியாக செய்து முடித்து விட்டாய். அதில் எனக்கு மகிழ்ச்சியே. நீ விரும்பியபடி ப்ரஜைகள் பெருகட்டும். எனக்கும் அது சம்மதமே. ஏனெனில், ப்ரும்மா, பவன், நீங்கள், மனு, என் அம்சமே ஆவீர்கள். உலகத்தில் வளம் நிறையட்டும்.
ப்ரும்மன்! தவம் எனது ஹ்ருதயம், வித்யா என் உடல். காரியங்கள் என் உடல் வாகு. அங்கங்கள் க்ருதுக்கள் என்ற யாகங்கள். தர்மமே என் ஆத்மா.. என் உடலில் உள்ள திரவங்கள் சுரா: தேவர்கள். உலகில் ச்ருஷ்டி ஆரம்பத்தில் நான் மட்டுமே இருந்தேன். சைதன்யம் ( உள்ளுணர்வு) மாத்திரமாக வெளியில் தெரியாத உருவுடன் பரவி இருந்தேன். என்னிடம் ஸ்வயம்பூ அனந்தமான குணங்களின் சேர்க்கையால் தோன்றினார். அவரே அஜன். மஹாதேவனும் என் வீர்யத்தில் தோன்றினார். ஒன்பது புதல்வர்களை அவர் படைத்தார். அதில் ஒருவரான நீங்களும் அஸிக்னீ என்ற பராஜாபதியின் மகளை மணந்து கொண்டு தம்பதிகளாக தர்ம வழியில் பிரஜைகளை பெருக்குவீர்களாக. உங்களுக்குப் பின் உலகில் தாம்பத்யம் தான் ப்ரஜோத்பத்திக்கு காரணம் என்பது நிலைக்கட்டும். என் மாயையும் உதவும்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இப்படி சொல்லி விட்டு அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மறைந்தார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், நான்காவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-54
அத்யாயம்-5
பஞ்சஜனன் என்ற பிரஜாபதியின் மகள் பாஞ்சஜன்யா- அவளை தக்ஷன் மணந்தார். ஹர்யஸ்வன் முதலான பிரஜைகள் பிறந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சீலம் உடையவர்கள். தந்தையின் சொல்படி மேற்கு திசை நோக்கிச் சென்றனர். சிந்து சமுத்திரங்கள் சேரும் இடத்தில் நாராயண ஸரஸ் எனும் குளம் அருகில் பல முனிவர்களும் சித்தர்களும் வசித்து வந்தனர். அந்த ஜலத்தை தொட்டவுடனே புத்துணர்ச்சி பெற்றவர்களாக ஆயினர். தர்மத்திலும் பரம ஹம்ஸ எனும் ஆன்மீக தேடலில் மனம் லயித்தது. அந்த இடத்தில் தவம் செய்ய முனைந்தனர். தேவரிஷி நாரதர் அவர்களைக் கண்டார்.. ஹர்யஸ்வா:! (ஹர்யஸ்வன் முதலானவர்கள்) பிரஜைகளை உத்பத்தி செய்ய தவம் செய்ய முனைந்தீர்கள். நல்லது. ஆனால் நீங்கள் இன்னும் உலகையே பார்க்கவில்லையே. ஜீவ ஆத்மா போன்ற தத்வங்களை அறியாமல், ஈஸ்வரனின் ஆதிக்கத்தில் தான் ராஜ்யங்கள், தேசங்கள் உருவாயின என்ற விவரங்கள் தெரியாமல், அறியாமையை விலக்கும் உபதேங்களைக் கேளாமல், ஹ்ருதய பிலத்தில் ஈஸ்வரனைக் காணாமல், பெண்களின் ஆகர்ஷணம், அந்த சபலத்திலிருந்து விடுபடாமல், இரு பக்கமும் ஓடும் நதி போல ஐந்தாக ஐந்தாக தத்வங்கள், தவிர சிருஷ்டியின் மாயை சூழ்ந்துள்ள உடலைப் பற்றி அறிந்து கொள்ளாமல் நீங்கள் என்ன செய்யப் போகிறிர்கள்? கால சக்கரம் கூரான ஆரங்களுடன் வேகமாக சுழலும் தன்மையுடையது.
நன்மை தீமை எதையும் அறியாமல் என்ன செய்வீர்கள் சொல்லி விட்டு போய் விட்டார்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: தந்தை வாக்கை நிறைவேற்றுவதாக எண்ணி ஊரை விட்டு வெளியேறிய போதும் என்ன செய்ய வேண்டும் எப்படி என்று எதுவும் அறியாத அந்த தக்ஷனின் புதல்வர்கள் நாரதரின் வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியாமல் யோசித்தனர். தங்களுக்குள் விவாதித்தனர்.
பூ:- நிலம் பூமி, அனாதி – இந்த பதம் மனித சரீரம் நிலையற்றது என்று சொல்கிறாரா? எப்படி சரீரம் உண்டாயிற்று என்று தெரிந்து கொள்ளாமல் மோக்ஷம் பற்றி யோசிக்கிறோம். அதையறியாமல் செய்யும் தவம் முதலியவை பலனற்றது.
ஒன்று தான் என்றார். சாக்ஷியாக இருப்பது பகவான் ஒருவரே. அவர் சுதந்திரமானவர். அவரை அறியாமல் நாம் செய்யும் செயல்கள் பொருளற்றவை.
பில ஸ்வர்கம் என்றார்- பள்ளத்தில் உள்ள சுவர்கம். பாதாள சுவர்கம் அதிலிருந்து மீளவே முடியாது. நல்ல வினைப் பயனால் சுவர்கம் போகலாம் என்று எண்ணி யாக காரியங்கள் செய்பவர்கள், உண்மையில் பெறுவது என்ன? சுவர்க வாசம், வினைப் பயன் தீர்ந்த பின் தன் வினைக்கேற்ப மனிதனோ, மற்றதோ ஒரு பிறவி. இந்த பிறவிச் சுழலில் இருந்து விடுபடவே முடியாது. எனவே, அதை விட பிறவியைத் தீர்க்கும் ப்ரும்மவிதர்கள் என்ற ப்ரும்ம ஞானிகள் சொல்லும் சாஸ்வதமான நிலையை அடையத் தான் நாம் முயற்சிக்க வேண்டும்.
பெண் மோகம் பற்றிச் சொன்னார். பெண்களின் சங்கத்தால் சுகம், துக்கம் இரண்டும் உண்டு. மோகத்தால் தன்னையிழக்காமல் இருக்கும் வரை நல்லது. புத்தியை குண சம்பன்னமான பெண்ணாகச் சொன்னார். புத்தி நன்மையும் செய்யும். தவறான வழியையும் காட்டும். குணமில்லாத பெண் போல, அந்த புத்தியே தவறான சங்கத்தால் கெடும். புத்தியை சரியாக பயன்படுத்த தெரியாதவரை அந்த புத்தியால் என்ன பலன்?
ஸ்ருஷ்டி என்பது நதி சமுத்திரத்தை அடையும் போது இரு விதமான வேகம், ஒன்று நதியின் சமுத்திரத்தைஅடையும் வேகம், மற்றொன்று ஆழ் கடல் அந்த நீரை இழுக்கும் வேகம் – இது போலத்தான் ஆத்மா உடலில் அலை பாயும் என்றார். புது யுகம் அல்லது புது படைப்பு எனும் சமயம், பழைய தத்வங்களை விலக்குவதும் புதியனவற்றைச் சேர்ப்பதுமான செயல் என்றார். அதைத் தான் மனிதனின் ஜனனமும் மரணமும் இருபக்கமும் பாயும் நதியாக சொன்னாரா?
இருபத்து ஐந்து தத்வங்கள் உடைய புருஷன் அத்புத தரிசனம் என்றார். இவை பகவானால் உண்டாக்கப் பட்டவையே. இவைகளால் பிரபஞ்சம் உண்டாயிற்று பிறிவிகள் தோன்றின. அவரை நாம் எப்படி காண்போம். அத்புதம் என்கிறார். நம் ஆத்மாவிலேயே இருப்பவர், அவரை அறிய தன் ஆத்மாவை அவருக்கு சமர்ப்பித்து விடு என்கிறார். முக்தி தரும் என்று நினைத்து செய்வதை ஹரியை நினைத்தே செய், தன்னையே அறிந்து கொள் என்கிறார். “வேதை: சர்வைரஹமேவ வேத்ய:” கீதை. கற்று அறிவதில் சாரபூதமான பரமாத்ம வஸ்து என்று அறிவதே பரமானந்தம்.
சாஸ்திரங்கள் தருவது ஐஸ்வர்யம், சுக ஜீவனத்துக்கானவை. சாஸ்திரங்கள் வழி காட்டுவன. அவை தாய் போல ரக்ஷிக்கும். புராணங்கள் கதைகளாக ஞானம் பெறச் செய்கின்றன. இவைகளை கற்றுத் தேர்ந்து தன் வழி நடப்பதும், அனுபவத்தால் அதன் சார பூதமான ஹம்ஸம் சாரமான பாலை மட்டும் பிரித்து எடுத்துக் கொள்வதைப் போல தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.
கால சக்கரம் பற்றிச் சொன்னார். காலம் தன் வழிச் செல்லும் மிகவும் சுதந்திரமானது, யாராலும் கட்டுபடுத்த முடியாது. பன்னிரண்டு மாதங்கள், வருஷங்கள் என்பது அதனை அறியும் வழி அவ்வளவே.
சாஸ்திரங்கள் தந்தை போல ஆணையிடும். அதுவும் ஜீவனுக்கு எது நன்மை என்பதையே சொல்கிறது. அதை முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.
ராஜன்! அந்த தக்ஷ புதல்வர்கள் தங்களுக்குள் விவாதித்து நிரந்தரமான தீர்வைத் தரும் வழி எது என்பதைப் பற்றி யோசித்தனர்.
நாரதரை ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று வினவினர். ஸ்ரீ ஹரியை நினைத்து யோக மார்கத்தில் ப்ரும்மத்தை அறியலாம், என்று சொல்லி தான் உபாசிக்கும் நாராயண மந்திரத்தை உபதேசித்தார். பின் சப்த ப்ரும்மமாக சங்கீதம் மூலம் ஆராதிக்கும் நாரதர் தன் வாத்யத்தை மீட்டிகொண்டு தன் வழி சென்றார்.
தக்ஷன் இதைகேட்டு மிக வருந்தினார். ப்ரஜா வ்ருத்தி வேண்டும் என்று என் புதல்வர்களிடம் சொல்லியிருந்தேன், இந்த நாரதர் உபதேசம் செய்து அவர்கள் மனதை மாற்றி விட்டாரே. திரும்ப குடும்ப வாழ்க்கையில் அவர்கள் நாட்டம் செல்லாது. என் வம்சம் எப்படி வளரும்? ப்ரும்மா சமாதானப் படுத்தினார். திரும்பவும் பாஞ்சஜன்யா என்ற மனைவியிடம் ஸபலாஸ்வான் என்ற பெயரில், நிறைய புதல்வர்களைப் பெற்றார். அவர்களும் தந்தையின் ஆணையை ஏற்று நாராயண ஸரஸ் என்ற தங்கள் முன் பிறந்தோர் சென்ற இடத்துக்கே சென்றனர். அவர்களும் அந்த பவித்ரமான நீரைத் தொட்டதுமே சாந்தமான குணமும் தங்கள் மன அழுக்கெல்லாம் விலகி பவித்ரமாக ஆகி விட்டதாகவும் உணர்ந்தனர். பர ப்ரும்மத்தை குறித்து தவம் செய்யலானார்கள். தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு சில மாதங்கள், வாயுவை உணவாகக் கொண்டு சில மாதங்கள், தவம் செய்தனர். நாராயண மந்திரத்தை ஜபித்தபடி-
ओं नमो नारायणाय पुरुषाय महात्मने । विशुद्धसत्त्वधिष्ण्याय महाहंसाय धीमहिநாரதர் திரும்பவும் அதே இடத்துக்கு வந்தார். தாக்ஷாயணர்களே! கேளுங்கள். உங்கள் சகோதர்களைத் தேடி வந்தீர்களா? சகோதரர்கள் தன் முன் பிறந்தோர்களை பின் பற்றி தர்மத்தை அறிந்து கொள்வதே சிறந்தது. அவர்கள் தான் புண்ய பந்துக்கள். சொல்லிவிட்டு நாரதர் சென்று விட்டார்.
சபலாஸ்வர்கள் என்ற அந்த தக்ஷணின் புதல்வர்களும் தவம் செய்யலாயினர். முன் பிறந்தோர்களைப் போலவே ப்ரும்ம தத்வம் என்பதை அறிவது என்ற ஆன்மீக வழிலேயே சென்றனர். மேற்கு திசையில் சென்றவர்கள் அஸ்தமித்த பின் காண முடியாத சூரியன் போல தென் படாதவர்களாக மறைந்த பின் தக்ஷன் செய்வதறியாது தவித்தான். பழையபடி நாரதர் அவர்களுக்கு உபதேசம் செய்தார் என்றறிந்து மிக கோபம் கொண்டான். இந்த சமயம் நாட்டில் பல கெட்ட நிமித்தங்கள் தோன்றின.
மிகுந்த கோபத்துடன் நாரதரைத் தேடிக் கண்டவர் உதடுகள் துடிக்க அஹோ அசாதோ! சாது வேஷம் போட்டு என் புதல்வர்களுக்கு, பிக்ஷு வாழ்க்கையை உயர்ந்ததாகச் சொல்லி கெடுத்து விட்டீர் என் புதல்வர்கள் எனக்கும் என் முன்னோர்களுக்கும் பித்ரு காரியங்களை செய்ய வேண்டியவர்கள், அவர்களைத் தடுத்து விட்டீர்கள் என்று குற்றம் சாட்டினான். இரக்கம் இல்லாதவர் நீங்கள், சிறு பிள்ளைகளை தவறாக தூண்டி கெடுத்து விட்டு ஸ்ரீஹரியின் அணுக்கத் தொண்டர்களுடன் திரிகிறீர். வெட்கம் இல்லயா? அவருடைய புகழுக்கே இழுக்கு. சாதாரணமாக பாகவதர்கள் ஜீவன்களின் நன்மைக்காக உபதேசிப்பார்கள். நீங்கள் எனக்கும் என் புதல்வர்களுக்கும் இடையில் பகையை கிளப்பி விட்டு என்ன அடைந்தீர்கள்? உங்களைப் போல இருவரிடையே இருக்கும் பாசத்தை நல்லெண்னத்தைக் கெடுப்பவரை கண்டதில்லை. என் புதல்வர்கள் என் வார்த்தையை மீறும்படி செய்து விட்டு உலகில் என்ன சாதிக்கப் போகிறீர்கள். குடும்பம் தன் மக்கள் என்று வாழும் க்ருஹஸ்தர்கள் நாங்கள். சாஸ்திர சம்மதமான கர்ம மார்கிகள். யாகம் முதலான கர்மங்களை செய்பவர். அமைதியாக எங்கள் வழியில் நல்லதையே செய்கிறோம். நீங்கள் செய்வது சாதுக்களாக, க்ருஹஸ்த தர்மத்தை பாலனம் செய்யும் என் போன்றோர்களுக்கு நன்மையைச் செய்யவில்லை. சந்ததியை தடைபடாமல் காக்கவே புதல்வர்களைப் பெறுகிறோம். அதைக் கெடுக்க வந்த மூடனே! உலகில் ஒரு இடத்திலும் உன் பாதங்கள் நிலைக்காமல் போகட்டும். சுற்றிக் கொண்டே இரு”
ஸ்ரீ சுகர் சொன்னார்: நல்லது என்று தலை குனிந்து அந்த சாபத்தை நாரதர் ஏற்றுக் கொண்டார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ஐந்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-44
அத்யாயம்-6
அதன் பின் தக்ஷ பிரஜாபதி ஸ்வயம்பூ சொன்னதன் பேரில் அசிக்னி என்பவளிடம் அறுபது பெண்களைப் பெற்றார். அவர்களும் தந்தையிடம் பாசத்துடன் இருந்தனர். பத்து பெண்களை தர்ம தேவதைக்கும், பதிமூன்று பெண்களை காஸ்யபருக்கும், சந்திரனுக்கு இருபத்து ஏழு பெண்களை, க்ருத்திகா, ரோஹிணி என்ற தாரகைகள், பூத, ஆங்கிரஸ,க்ருஸாஸ்வ என்பவர்களுக்கு தலா இரண்டு இரண்டு பெண்கள், நான்கு பெண்களை தார்க்ஷ்யர் என்பவருக்கும் கொடுத்தார். இவர்கள் மூலம் உலகில் பலவிதமான பிறவிகள் தோன்றின என்பதால் விவரமாக சொல்கிறேன், கேள்.
தர்மன் – பாநு, லம்பா , ககுபு, ஜாமி, விஸ்வா,சாத்யா, மருத்வதீ, வசு, முஹூர்தா, சங்கல்பா
பானு மகன் தேவருஷபன், இந்த்ரஸேனன்; லம்பாவின் புத்திரர்கள்- வித்யோதன், மேக கூட்டம் என்ற பொருளில் ஸ்தனயித்ன என்பவர்கள் (மின்னலும், இடியும்) ககுபா என்பவளின் மகன் சங்கடன், அவன் வழியில் கீகட்- சிறு பூச்சிகள், , அவன் மகன் உலகில் உள்ள அனைத்து துர்கம்-கிலம் என்பதன் அதிபதிகள். ஜாமியின் மகன் ஸ்வர்கன். அவன் மகன் நந்தி; விஸ்வாவிடம் விஸ்வதேவன் என்பவன் அவனுக்கு சந்ததி இல்லை. ஸ்ந்த்யா என்பவளின் மகன் சாத்யகணன் என்பவன், அவன் மகன் அர்த சித்தி; மருத்வதி என்பவளுக்கு இருவர் மருத்வான், ஜயந்தன் என்போர். ஜயந்தன் உபேந்திரன் என்றும் சொல்லப் படுவான், பகவானின் அம்சம் உள்ளவன்.
முஹூர்தா என்ற பத்னியிடம் மௌஹர்திகா என்ற தேவ கணங்கள் பிறந்தன. இவைகள் தான் ஜீவன் களின் தங்கள் பிறந்த கால பலன் அளிப்பவர்கள். (பிறந்த சமயத்தை வைத்து அதன் அனுபங்கள் – ஜோதிடம்)
சங்கல்பா என்பவளிடம்- சங்கல்பம், காமன் இவள் மகன். ( மற்றொரு யுகத்தில்)
வசு என்பவளிடம் எட்டு புத்திரர்கள்- த்ரோண, ப்ராணன், த்ருவன், அர்கன், அக்னி, தோஷோ, வசு, மற்றும் விபாவசு. த்ரோண அபிமதி என்ற மனைவியிடம், – ஹர்ஷ, சோக, பயம் என்ற மூவர். (தரா என்ற மனைவி- ( யுகம் வேறு) ப்ராண புத்திரர்கள்- ஊர்ஜஸ்வதி என்ற மனைவி, ஆயுள், புரோஜவன், ; த்ருவனுடைய மனைவி தரணி, பல புரங்கள் (நகரங்கள்) ; அர்கனுக்கு வாசனா என்ற மனைவி. அக்னி மனைவி வசோர்தாரா த்ரவிணகர்கள் புதல்வர்கள். ஸ்கந்தன் க்ருத்திகா புத்ரன். விசாகா முதலானோர். தோஷன் என்பவன் மனைவி ஸர்வரீ புத்ர: சிசுமாரன் என்ற ஹரியின் அம்சமாக பிறந்தான். வசு என்பவனின் மனைவி ஆங்கிரசின் புத்ரி. ஆக்ருதீ, விஸ்வகர்மா, சாக்ஷுஸன் என்பவனிடம், மனுவும், மனுவிற்கு விஸ்வன், சாத்யன் என்ற புதல்வர்கள்; விபாவசு மனைவி உஷா, வ்யுஷ்டன், ரோசிஷன், ஆதபன், பஞ்சயாமன் என்பவர்கள். இவர்களால் ஜீவன்கள் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.
சரூபா பூதனின் மனைவி ருத்ர்களை கோடி கணக்காக பெற்றாள். ரைவதன், பவன்,பீமன், வாமன், உக்ரன், வ்ருஷாகபி என்பவர்கள் தவிர ருத்ரனின் அணுக்கத் தொண்டர்கள். (பார்ஷதர்கள்)
ஆங்கிரஸ ப்ரஜாபதியின் பத்னி ஸ்வதா. அதர்வா மகன் வேதன் க்ருசாஸ்வோ, அர்சி என்பவளிடம் தூம்ரகேசம், திஷணா என்பவளிடம் வேதசிரோ, தேவலம், வயுனம் மனு,
தார்க்ஷ்யன் (மரீசி) இவருக்கு நான்கு மனைவிகள். மனைவி வினதா கத்ரூ, பதங்கீ, யாமினீ என்பவர்கள். பதங்கீ- பக்ஷிகளை, யாமினீ பூச்சிகளை, சுபர்ணா கருடன், ( பகவானின் வாகனம்), கத்ரூ- நாகங்கள்.
க்ருத்திகா முதலான நக்ஷத்திரங்கள் சந்திரனின் மனைவிகள். தக்ஷனின் சாபத்தால் சந்ததி இல்லை.
கஸ்யபரின் மனைவிகள் லோக மாதா எனப்படுவர்.
திமி என்பவளிடம், நீர் வாழ் ஜீவன்கள். சரமா என்பவளிடம் நால்கால் புலி, பூனை போன்ற மிருகங்கள் (நான்கு நகங்கள்) ; சுரபி என்பவளிடம் மகிஷம், பசு போன்றவை; தாம்ரா என்பவளிடம், கழுகு, க்ருத்ரம்; முனி என்பவளிடம் அப்சர கணங்கள்; தந்தசூ என்பவளிடம் சர்ப்பங்கள், க்ரோதவசா என்பவளிடம் கந்தர்வர்கள், இலா என்பவளிடம் மரங்கள், எல்லா யாதுதானர்களும் சௌரஸா என்பவளிடம், அரிஷ்டா என்பவளிடம் கந்தர்வர்கள், காஷ்டா என்பவளிடம் வீட்டு மிருகங்களில், மகிஷம்,பசு தவிர மற்றவைகள்; தனு என்பவளிடம் பலர். த்விமூர்தா, சம்பரன், அரிஷ்டன், ஹயக்ரீவன், விபாவசு, அயோமுகன், சங்குசிரன், ஸ்வர்பானு,(ராகு அல்ல) கபிலன், அருணன். முக்கியமானவர்கள். இவர்களில் வ்ருஷபர்வன் என்பவனின் மகள் சர்மிஷ்டா என்பவளை நகுஷனின் மகன் யயாதி மணந்தான்.
வைஸ்வானரனின் பெண்கள் நால்வர் அழகிகள். உபதானவி என்பவள் ஹிரண்யாக்ஷனின் மனைவியானாள். க்ருது என்பவள் ஹயக்ரீவனின், புலோமா என்பவளும் காலகா என்பவளும், ப்ரும்ம புத்திரரான கஸ்யபரின் பத்னிகள் ஆனார்கள்: பௌலோமா, காலகேயா: என்று அழைக்கப்பட்ட இவர்கள் புதல்வர்கள் யுத்தம் செய்வதில் நாட்டம் உடையவர்கள்.
விப்ரசித்தி என்பவர் சிம்ஹிகா என்பவளிடம் நூற்றி ஒன்று புதல்வர்களைப் பெற்றார். மூத்தவன் ராகு, கேது என்பவர்கள் க்ரஹங்கள் ஆனார்கள்.
அதிதியின் வம்சம் பற்றிச் சொல்கிறேன். இதில் பகவான் நாராயணன் தன்னுடைய அம்சமாக அவதரித்தார். விவஸ்வான், அர்யமா, பூஷா, த்வஷ்டா, சவிதா, பக:. தாதா, விதாதா, வருணன், மித்ரன், சக்ர, உருக்ரமன் என்பவர். இந்த பன்னிருவரும் ஆதித்யர்கள் எனப்படுவர்.
விவஸ்வான் மனைவி சங்க்ஞா ஸ்ரார்த தேவன் என்ற மனுவையும், யமதேவனையும் யமுனா என்ற மகளையும் இரட்டையர்களாகப் பெற்றாள். இந்த சங்ஞா என்பவள் பின்னால் அஸ்வினீ என்பவளாக அஸ்வினி குமார்களைப் ஈன்றாள். சாயா என்பவள் சனைச்சரம் என்ற க்ரஹத்தையும், சாவர்ணி மனு, தபதீ என்ற கன்யா இவர்களை ஈன்றாள். அர்யமா என்பவர், மனைவி மாத்ருகா என்பவளிடம், கர்ம சீலர்களான புல்வர்களைப் பெற்றார். இதன் பின் மனித இனம் ப்ரும்மாவால் படைக்கப் பட்டது.
பூஷனுக்கு சந்ததி இல்லை. தக்ஷ யக்ஞத்தில் பல் உடைந்தவர் இவர் தான். த்வஷ்டாவின் மனைவி தைத்யர்களின் சகோதரியான ரசனா. இவர்கள் மகன் விஸ்வரூபன். இந்திரன் ஒருமுறை தேவ குரு ப்ருஹஸ்பதியை அவமதித்ததால் அவர் விலகிய பொழுது தேவர்கள் சேர்ந்து இந்த விஸ்வரூபனை இந்திரனாக நியமித்தனர். தைத்யர்களிடம் பகை இருந்தாலும் சகோதரி, அவள் மகன் என்பதால்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ஐந்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-45
அத்யாயம்-7
பரீக்ஷித் அரசன் வினவினான்: ஆசார்யர் ஏன் தேவர்களை விட்டு விலகினார். சிஷ்யர்களை விட்டு குரு விலகுவது என்பது நியாயமாக இல்லையே? சொல்லுங்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இந்திரன் மூவுலகிலும் ஐஸ்வர்யம் பெற்று மகோன்னதமாக இருந்த சமயம். தேவர்கள், சித்த சாரணர்கள் என்று அனைவரும் அவனை போற்றி புகழ்ந்தனர். வெண் சாமரமும் குடையும் மற்றும் சாமரங்கள் என்று அரச மரியாதைகளுடன் பௌலோமி என்ற மனைவியுடன் மகிழ்ந்து அமர்ந்திருந்த சமயம் தேவ குரு சபையில் நுழைந்தார். அவரைக் கண்டதும் காணாதது போல எழுந்திருக்கவோ, வணங்கவோ இல்லை. அவர் முனிகளுள் சிறந்தவர். வாசஸ்பதி, நல் வாக்கு உடையவர் என்று புகழப் படுபவர். தேவர்கள் அசுரர்கள் அனைவருமே அவரிடம் மரியாதையாக நடந்து கொள்வர். கண்ணால் பார்த்த பின்னும், அவர் வந்ததைக் கண்டு கொள்ளவில்லை என்பதை அவர் மரியாதைக் குறைவாக எடுத்துக் கொண்டார். எதுவும் பேசவில்லை. மௌனமாக தன் வீட்டிற்கு திரும்பி விட்டார்.
அதன் பின் இந்திரனுக்கு உறைத்தது. சபையிலேயே தன்னையே நொந்து கொண்டான். அஹோ! தப்பு செய்து விட்டேனே. அரச சபையில் குருவை அவமதித்து விட்டேனே வீட்டுக்கு வந்த லக்ஷ்மியை விரட்டியது போல தர்மத்தை மறந்தவனாக, குருவை வரவேற்று உபசரிப்பது என் கடமையாக இருக்க, காணாதது போல் இருந்து விட்டேன். தவறு என்று அறிந்து செய்பவன், பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப் படும் கூழாங்கற்கள் போல வலிமையற்றவன் ஆவான். எனவே, ஆசார்யரை இப்பொழுதே சென்று அவர் சரணங்களில் தலை பட வணங்கி மன்னிப்பு கேட்கிறேன் என்று கிளம்பினான். ஆனால் அவர் தன் வீட்டிலும் இல்லை. எங்கு சென்றார் என்பதை யாரும் அறியவுமில்லை. அத்யாத்ம மாயை என்ற வழியில் அவர் தன்னை கண்களுக்கு புலனாகாதவராக மாற்றிக் கொண்டு விட்டார். இதனால் மேலும் அதிகமாக இந்திரன் மனம் கலங்கினான். தேவர்கள் அனைவருமாக என்ன செய்வது என்று யோசித்தனர்.
இதையறிந்த அசுரர்கள் குருவான சுக்ராசாரியரின் அனுமதி பெற்று இது தான் சமயம் என்று படையெடுத்து வந்தனர். அவர்களின் நுண்ணிய அஸ்திரங்களால் அடிபட்டு கை கால்கள் முறிந்தவர்களாக ப்ரும்மாவை சரணடைந்தனர். அவர்களின் துன்பத்தை சகிக்க முடியாதவராக, ப்ரும்மா சமாதானப் படுத்தி, விவரங்களை கேட்டறிந்தார். என்ன காரியம் செய்தீர்கள்? ப்ரும்ம நிஷ்டரான உங்கள் குரு ப்ருஹஸ்பதி சாந்தமானவர். அவரை அவமதிக்க காரணம் ஐஸ்வர்யத்தால் வந்த மதம் தவிர வேறு என்ன இருக்க முடியும்? வெளியிலிருந்து உங்களைத் தாக்க காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இதுவே சரியான சமயம். இந்திரனே, அசுரர்கள் முதலில் ஆசார்யரான சுக்ரரிடம் அனுமதி பெற்று தாக்கி இருக்கிறார்கள். ப்ருகு போன்றவர்கள் மந்த்ர சித்தி அடைந்தவர்கள், இவர்களை நானும் வணங்குகிறேன். அதனால் தற்சமயம் செய்ய வேண்டியது என்ன பார்ப்போம். விஸ்வரூபன் தவம் செய்து பலம் பெற்றவன். த்வஷ்டாவின் மகன். அவன் அசுரன் மகனே என்று யோசிக்காதே. வெகுமதிகள் கொடுத்தும் மரியாதைகள் செய்தும் வேண்டினால் மறுக்க மாட்டான்.
அவர்களும் அவ்வாறே விஸ்வகர்மாவை வணங்கி வேண்டினர். உங்களின் அதிதியாக வந்துள்ளோம். புதல்வர்களுக்கு பித்ருக்களை பூஜிப்பது முக்கியம். அதே அளவு ஆசார்யனையும், குருவையும் பூஜிக்க வேண்டும். பிதாவை ப்ரஜாபதியாக, சகோதரனை மருத்பதியாக, தாயை பூ மாதாவாக, சகோதரியை தயையே உருவானவளாக, அதிதியாக வந்தவனை தர்ம ரூபனாக காண வேண்டும். அனைத்து உயிரினங்களும் பகவானின் அம்சங்களே. நாங்கள் தற்சமயம் மிகவும் சங்கடத்தில் இருக்கிறோம். உறவினர்களான எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று பிரார்த்தித்தனர். உங்களை எங்கள் ஆசார்யனாக ஏற்றுக் கொள்கிறோம். ப்ரும்ம நிஷ்டரான நீங்கள் எங்களை வழி நடத்தக் கூடிய தகுதியுடையவர், எங்கள் குருவாக வந்து ஆசிர்வதிக்க வேண்டும் என்று பவ்யமாக வேண்டினர். வயதில் சிறியவன் ஆயினும் அறிவிலும் அனுபவத்திலும் சிறந்தவன். வயது மட்டும் மூத்தவனாக்குவதில்லை.
ரிஷி சொன்னார்: இவ்வாறு வேண்டிக் கொண்டதைக் கேட்டு, விஸ்வரூபன் யோசித்து பதில் சொன்னார். இந்த பதவியை ஏற்பதால் என் தவ பலன் குறையும் என்பது ஒரு பக்கம் இருக்க, தர்ம சீலம் அறிந்த லோகேசன் என்ற பதவியில் இருப்பவர், சொல்வதால் ஏற்றுக் கொள்கிறேன். வேதம் அறிந்தவர்கள் புரோஹிதம் என்ற இந்த பதவியை உயர்வாக எண்ணுவதில்லை. இதை வயலில் வேலை செய்பவர்களுக்கு உதிர்ந்த தானிய மணிகளை கொடுப்பது போல சொல்வார்கள். ஆயினும் பெரியவர்கள், நீங்கள் வேண்டிக் கொண்டதால் ஏற்கிறேன். மனப் பூர்வமாக என் கடமையைச் செய்வேன் என்று வாக்களிக்கிறேன்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: விஸ்வரூபன் தேவ குருவாக இருக்க சம்மதித்து மிகவும் நேர்மையாக தன் பதவியை நிர்வகித்தான். இதுவரை சுக்ராசார்யருடைய மாணவனாக இருந்து அறிந்த வித்தைகள், அவரிடம் கற்ற நாராயண கவசம் இவற்றை மகேந்திரனுக்கு கொடுத்தான். மிகவும் அரியதான இந்த நாராயண கவசத்தை அடைந்த இந்திரன் அசுர படையை வென்றான். இழந்த தன் செல்வத்தை அடைந்தான்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ஏழாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-40
அத்யாயம்-8
அரசன் நாராயண கவசம் பற்றி விவரமாக சொல்ல வேண்டினான். இதனால் இந்திரன் தான் இழந்த செல்வத்தைப் பெற்றான் என்று சொன்னீர்கள். அவன் சைன்யங்கள், வாகனங்கள் கூட அவனிடம் வந்து சேர்ந்தன, விளையாட்டாக போரில் வெற்றி பெற்று மூவுலக சாம்ராஜ்யத்தை அடைந்தான் என்று கேட்டேன். அந்த நாராயண கவசத்தை எனக்கும் உபதேசியுங்கள். ஒருவருக்கொருவர் தாயாதிகளாக (பங்காளிகள்) சண்டையிட்டுக் கொண்டவர்கள் – இந்த நாராயண கவசம் மூலம் இந்திரன் தன் பங்காளிகளையும் வென்றான் என்பது ஆச்சர்யம், என்றான்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: புரோஹிதன் என்ற பதவியை ஏற்றுக் கொண்ட த்வஷ்டாவின் மகனான விஸ்வரூபன் தான் ஏற்றுக் கொண்ட பதவி பிரமாணத்திற்கு ஏற்ப பங்காளியானாலும் இந்திரனுக்கு நாராயண கவசம் என்ற மந்திரத்தை உபதேசித்தான். அதைச் சொல்கிறேன், கேள்.
விஸ்வரூபன் சொன்னார்: கைகால்களை சுத்தமாக கழுவிக் கொண்டு, ஆசமனம் செய்து பவித்திரனாக கிழக்கு நோக்கி அமர்ந்து தன் கை,உடல், வாய் இவைகளை மந்திரங்களால், தொட்டு, தூய்மையாகி, வாக்கினால் நாராயண மயமான இந்த வர்மம் என்பதை ந்யாசம் என்பதை செய்து கொள்ள வேண்டும். அஷ்டாக்ஷரம் என்பதை ப்ரணவத்துடன் ஒவ்வொரு அக்ஷரமாகச் சொல்லி வலது கட்டை விரலில் தொடங்கி ஜபம் செய்ய வேண்டும். ஓம் நமோ நாராயணாய – என்பது மந்திரம். பன்னிரண்டு அக்ஷரம் உள்ள, ஓம் நமோ பகவதே வாசுதேவாய- என்ற மந்திரத்தால் ப்ரணவத்துடன் கர ந்யாசம் என்பதையும், ஹ்ருத்யத்தில் ஓங்காரம், என்ற ஹ்ருத்யாதி ந்யாசம் என்பதையும் செய்து கொள்ள வேண்டும். ஓம் விஷ்ணவே நம என்ற மந்திரம். ஆறு சக்திகளுடன் ஆத்மாவை தியானம் செய்து வித்யா, தவம், தேஜோ மயமான இந்த மந்திரத்தை சொல்லி ஜபம் செய்ய வேண்டும்.
தன்னையே – ஆறு சக்திகள் கொண்ட தன் ஆத்மாவையே – வித்யாவித்யா, தேஜஸ், தபோ மூர்த்தி என்று பரமாத்மாவை தியானம் செய்து மந்திர ஜபம் செய்ய வேண்டும்.
ओं हरिर्विदध्यान्मम सर्वरक्षां न्यस्ताङ्घ्रिपद्मः पतगेन्द्रपृष्ठे । கருட வகனத்தில் பகவான் காக்கட்டும்.
दरारिचर्मासिगदेषुचाप- पाशान् दधानोऽष्टगुणोऽष्टबाहुः ॥ १२॥ வாள், முதலிய எட்டு ஆயுதங்களுடன், எட்டு புஜங்களுடன் இருப்பவர்.
जलेषु मां रक्षतु मत्स्यमूर्ति-र्यादोगणेभ्यो वरुणस्य पाशात् । நீரில் மத்ஸ்த்ய -மீனாகி வந்து வருணனின் பாசத்திலிருந்தும், கடல் வாழ் பிராணிகளிடம் இருந்தும் காக்கட்டும்.
स्थलेषु मायावटुवामनोऽव्या-त्त्रिविक्रमः खेऽवतु विश्वरूपः ॥ १३॥ பூமீயில் வாமனனாக வந்து த்ரிவிக்ரமனாக
दुर्गेष्वटव्याजिमुखादिषु प्रभुः पायान्नृसिंहोऽसुरयूथपारिः । – வளர்ந்த பகவான் காக்கட்டும். வானத்தில்
विमुञ्चतो यस्य महाट्टहासं दिशो विनेदुर्न्यपतंश्च गर्भाः ॥ १४॥ விஸ்வரூபனும், கோட்டைகளில், காடுகளில்
அட்டஹாஸமாக கர்ஜனை செய்த நரசிம்மனாக, காக்கட்டும்.
रामोऽद्रिकूटेष्वथ विप्रवासे सलक्ष्मणोऽव्याद्भरताग्रजोऽस्मान् ॥ १५॥ மலை குகைகளில், விட்டிற்கு வெளியே பிரயாணம் செய்யும் சமயம் லக்ஷ்மணனோடு பரதனின் முன் பிறந்த ஸ்ரீ ராமன் காக்கட்டும்.
रक्षत्वसौ माध्वनि यज्ञकल्पःस्वदंष्ट्रयोन्नीतधरो वराहः ।- அத்வானமான இடங்களில் நீண்ட பற்களுடன் வராக மூர்த்தி காக்கட்டும்.
मामुग्रधर्मादखिलात्प्रमादा-न्नारायणः पातु नरश्च हासात् । கடுமையான தர்மானுஷ்டானங்களில் ஸ்ரீமன் நாராயணனன், நரன் என்பவர்களாக காக்கட்டும்.
दत्तस्त्वयोगादथ योगनाथः-पायाद्गुणेशः कपिलः कर्मबन्धात् ॥ १६॥ தத்தாசார்யன், தவறான சகவாசம் வராமல் காக்கட்டும். கபிலாவதார பகவான் கர்ம பந்தங்களை விலக்கட்டும்.
सनत्कुमारोऽवतु कामदेवा-द्धयशीर्षा मां पथि देवहेलनात् । சனத் குமாரன் காம தேவனிடமிருந்தும்,
ஹயக்ரீவன் அவமானம் தலை குனிவுகள் வரமலும் காக்கட்டும்.
देवर्षिवर्यः पुरुषार्चनान्तरा-त्कूर्मो हरिर्मां निरयादशेषात् ॥ १७॥ உயர்ந்த ஞானிகளான ரிஷிகள் மாற்றுமதங்களிலிருந்து காக்கட்டும். கூர்மமாக வந்த பகவான் ஹரி, செல்வமோ, மற்றதோ இழப்புகளில் இருந்து காக்கட்டும்.
धन्वन्तरिर्भगवान् पात्वपथ्या-द्द्वन्द्वाद्भयादृषभो निर्जितात्मा । பகவான் தன்வந்திரி அபத்யங்கள் – ஒவ்வாத உணவுகள் – உடலைத் தாக்காமல் காக்கட்டும்.
यज्ञश्च लोकादवताज्जनान्ता-द्बलो गणात्क्रोधवशादहीन्द्रः ॥ १८॥ வேற்று ஜனங்கள் யாக கர்மாக்களில் நம்பிக்கை இல்லாதவர்களிடமிருந்து ய்க்ஞ வராக ரூபியான பகவான் காக்கட்டும்.
द्वैपायनो भगवानप्रबोधा-द्बुद्धस्तु पाखण्डगणप्रमादात् । வியாச பகவான் அறியாமையை விலக்கட்டும். புத்தர் வீண் விவாதம் செய்யும் ப்ரமையான கொள்கைகளில் இருந்து காக்கட்டும்.
कल्किः कलेः कालमलात्प्रपातु – धर्मावनायोरुकृतावतारः ॥ १९॥ கல்கி அவதாரத்தில் கலியின் காலத்தால் வரும் அசம்பாவிதங்களைத் தடுக்கட்டும். இந்த அவதாரம் தர்மத்தை நிலை நாட்டவே என்பதால்.
मां केशवो गदया प्रातरव्या- கதையுடன் கேசவனாக என்னை விடியலில், காக்கட்டும்
द्गोविन्द आसङ्गवमात्तवेणुः ।- கோவிந்தனாக வேணுவை ஏந்தி மாலை வரை காக்கட்டும்.
नारायणः प्राह्ण उदात्तशक्ति- நாராயணனாக பிராணனில் சக்தியை கூட்டட்டும்.
र्मध्यन्दिने विष्णुररीन्द्रपाणिः ॥ २०॥– மத்யான வேளையில் விஷ்ணுவாக அரிந்த்ரன்- வாளை ஏந்தியவன்
देवोऽपराह्णे मधुहोग्रधन्वा – பிற் பகலில் மதுவை வென்ற தேவன், உக்ரமான தண்டத்தால் காக்கட்டும்.
सायं त्रिधामावतु माधवो माम् । மாலையில் த்ரிதாமன் – மாதவன் காக்கட்டும்.
दोषे हृषीकेश उतार्धरात्रे -निशीथ एकोऽवतु पद्मनाभः ॥ २१॥ தோஷங்கள் தாக்காமல் இரவு ஆரம்பத்தில் ஹ்ருஷீகேசன் காக்கட்டும்- நடு இரவில் பத்மனாபனாக காக்கட்டும்.
श्रीवत्सधामापररात्र ईशः- பின் இரவில் ஒளிர்விடும் ஸ்ரீவத்ஸம் அணிந்த ஸ்ரீவத்ஸ தாமன், ஈசன் காக்கட்டும்
प्रत्यूष ईशोऽसिधरो जनार्दनः । இளம் காலையில் கையில் வாளேந்திய ஈசன், ஜனார்தனன் காக்கட்டும்
दामोदरोऽव्यादनुसन्ध्यं प्रभाते – இரு சந்த்யா காலங்களில் தாமோதரன் காக்கட்டும்.विश्वेश्वरो भगवान् कालमूर्तिः ॥ २२॥விடியலில் கால மூர்த்தியான பகவான் விஸ்வேஸ்வரன் காக்கட்டும்.
चक्रं युगान्तानलतिग्मनेमि -भ्रमत्समन्ताद्भगवत्प्रयुक्तम् । யுகாந்த காலங்களில் சுழற்றும் அவர் கை சக்ரம்
दन्दग्धि दन्दग्ध्यरिसैन्यमाशु- எதிரி சைன்யங்களை பொசுக்கி அழிக்கட்டும்.
कक्षं यथा वातसखो हुताशः ॥ २३॥ வீடுகளை வாயு உதவியுடன் நெருப்பு அழிப்பது போல.
गदेऽशनिस्पर्शनविस्फुलिङ्गे- கதையை வீசும் போது தீப்பொறிகள் பறக்குமே, அது போல.
निष्पिण्ढि निष्पिण्ढ्यजितप्रियासि ।- மண்ணை மிதித்து பிசைவது போல கூழாக்கி விடு. உன்னை யாரால் ஜயிக்க முடியும்?
कूष्माण्डवैनायकयक्षरक्षो- भूतग्रहांश्चूर्णय चूर्णयारीन् ॥ २४॥- கூஷ்மாண்டம், வைனாயக என்ற யாகங்கள், இவைகளை ரக்ஷிப்பவன் நீ, இவைகளைத் தாக்கும் எதிரிகளை பூத க்ரஹங்களை பொடிப் பொடியாக்கி விடு.
त्वं यातुधानप्रमथप्रेतमातृ-पिशाचविप्रग्रहघोरदृष्टीन् ।
दरेन्द्र विद्रावय कृष्णपूरितो भीमस्वनोऽरेर्हृदयानि कम्पयन् ॥ २५॥ யாது தானர்கள், ப்ரமத்த, ப்ரேத, மாத்ரூ, பிசாச, விப்ரக்ரஹ-ப்ராம்மணனை தாக்குபவன், காணத் தகாத கொடிய உருவம் உடையவன் இவர்களை, தரேந்திர, வாளேந்திய க்ருஷ்ணனே, பெரும் நாதத்தால் எதிரிகளின் இதயத்தை துளைத்து ஆட்டம் காணச் செய்.
त्वं तिग्मधारासिवरारिसैन्य- मीशप्रयुक्तो मम छिन्धि छिन्धि । ஈசனே! கூர்மையான உன் வாளினால் என் எதிரிகளை தூள் தூளாக்கு
चक्षूंषि चर्मञ्छतचन्द्र छादय – द्विषामघोनां हर पापचक्षुषाम् ॥ २६॥ – கண்களின் மேல் இமையாக பாதுகாக்கும் சந்திரனே! என் எதிரிகள் கண்ணில் படாமல் முழுவதுமாக மூடி வைத்துக் கொள்.
यन्नो भयं ग्रहेभ्योऽभूत्केतुभ्यो नृभ्य एव च ।सरीसृपेभ्यो दंष्ट्रिभ्यो भूतेभ्योंऽहोभ्य एव वा ॥ २७॥ எங்களுக்கு யாரிடமெல்லாம் பயமோ, க்ரஹங்கள், பூதங்கள், கேது (கொடிகள்) அரசர்கள், ஊர்வன, பற்களால் கடிக்கக் கூடிய பிராணிகள், பெரிய நாகங்கள் இவைகளிடமிருந்தும்
सर्वाण्येतानि भगवन् नामरूपास्त्रकीर्तनात् ।प्रयान्तु सङ्क्षयं सद्यो ये नः श्रेयःप्रतीपकाः ॥ २८॥ இவைகளின் பெயரைச் சொன்னாலே பயம். எங்கள் நலனை கெடுக்கும் எதுவானாலும்- அவைகளிடமிருந்து காப்பாய்.
गरुडो भगवान् स्तोत्रस्तोभश्छन्दोमयः प्रभुः ।रक्षत्वशेषकृच्छ्रेभ्यो विष्वक्सेनः स्वनामभिः ॥ २९॥ கருடன் மஹான். வேத, சாஸ்திரங்கள், ஸ்தோத்ரங்கள் இவைகளே உருவானவன். அவர் எங்களை காக்கட்டும். விஷ்வக்சேனர், தன் பெயரை உச்சரித்தாலே காப்பவர், அவர் காக்கட்டும்.
सर्वापद्भ्यो हरेर्नामरूपयानायुधानि नः ।बुद्धीन्द्रियमनःप्राणान् पान्तु पार्षदभूषणाः ॥ ३०॥ ஹரி நாமமே ஆபரணமாக உடைய உன் வாகனங்கள், ஆயுதங்கள், எல்லா ஆபத்துக்களிலிருந்தும் எங்களைக் காக்கட்டும். உன் அணுக்கத் தொண்டர்கள் எங்கள் புத்தி, இந்திரிய , மனம், ப்ராணன் இவைகளைக் காக்கட்டும்.
यथा हि भगवानेव वस्तुतः सदसच्च यत् ।सत्येनानेन नः सर्वे यान्तु नाशमुपद्रवाः ॥ ३१॥ அனைத்து நல்லதும், நல்லது அல்லாதவைகள் எல்லாமே பகவானே தான் என்பது சத்யம். ஆகவே உபத்ரவம் செய்யும் அனைத்தும் தானாகவே விலகிச் செல்லட்டும்.
यथैकात्म्यानुभावानां विकल्परहितः स्वयम् ।भूषणायुधलिङ्गाख्या धत्ते शक्तीः स्वमायया ॥ ३२॥ ஏகாத்ம்யபாவம்- ஆத்மா பரமாத்மா என்ற இவைகளின் நிலைப் பாட்டை தெரிந்து கொண்ட பெரியவர்களிடம் தானே விகல்பமின்றி தன் பூஷணங்கள், ஆயுதங்கள், உருவங்கள் மூலம் தன் மாயையால் சக்தியை அளிக்கிறாய்.
तेनैव सत्यमानेन सर्वज्ञो भगवान् हरिः ।पातु सर्वैः स्वरूपैर्नः सदा सर्वत्र सर्वगः ॥ ३३॥ அதனால் தான் உன்னை சர்வக்ஞன், எல்லாம் அறிந்தவன், பகவான் ஹரி: என்பர். எங்கும் நிறைந்த உன் ஸ்வரூபங்கள் எங்களை எப்பொழுதும் எல்லா இடங்களிலும், காக்கட்டும்.
विदिक्षु दिक्षूर्ध्वमधः समन्ता-दन्तबर्हिर्भगवान् नारसिंहः ।
प्रहापयँल्लोकभयं स्वनेन स्वतेजसा ग्रस्तसमस्ततेजाः ॥ ३४॥ எப்படி பகவான் நரசிம்ஹாவதாரத்தில், திசைகள் அதிரும் படி, அட்டஹாசம் செய்தாரோ, அந்த த்வனி காக்கட்டும். அந்த சமயம் வெளியில் நீண்டு தெரிந்த பெரிய பற்கள், காக்கட்டும். அதைக் கண்டு அனைவருக்கும் தோன்றிய பயம் காக்கட்டும். உலகம் முழுவதும் பரவிய அவரது தேஜஸ் காக்கட்டும்.
இந்திரனே!, இது நாராயண கவசம் என்ற மந்திரம். இதை ஜபித்து பலம் பெறுவாய். அசுர படைகளை ஜயிப்பாய். இதை ஜபித்து சித்தி அடைந்தவர்கள், கண்களால் ஒருவரைப் பர்த்தாலும், சரீரம் பட்டாலும் அவர் முக்தியடைவார். இந்த வித்யையை அறிந்த பின் எதிலும் பயம் தோன்றாது. யோக தாரணையால் தானே தன் சரீரத்தை விடும் அளவு சக்தி பெறுவர்.
இந்த வித்தையை முன்பொரு காலத்தில் கௌசிகரான ஒரு முனிவர் இவ்வாறு தன் தேகத்தியாகம் செய்வதை சித்ர ரதர் என்பவர், தன் மனைவி மார்களுடன் ஆகாயத்தில் சென்று கொண்டிருந்தவர், கண்டார். திடுக்கிட்டு விமானத்துடன் பூமியில் விழுந்து விட்டார். அதன் பின் அங்கிருந்த மாணவர்கள் சொல்லி தெரிந்துகொண்டு, அந்த ரிஷியின் அஸ்தியை மரியாதையுடன் சரஸ்வதி நதியில் கரைத்து விட்டு தன் இருப்பிடம் சென்றார்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இதை நன்றாக கற்று, ஜபித்து பலன் அடைவீர்களாக. இதைக் கற்றவர்களையே பயம் தெளிய நமஸ்கரிப்பார்கள்.
சதக்ரது என்ற இந்திரன் இந்த மந்திரத்தைக் கற்றுக் கொண்டு யுத்தத்தில் அசுர்களை ஜயித்து மூவுலக சாம்ராஜ்யத்தை திரும்ப பெற்றான்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ஏழாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-40
அத்யாயம்-9
ஸ்ரீ சுகர் சொன்னார்: விஸ்வரூபனுக்கு மூன்று தலைகள் இருந்தன என்பர். சோமபீதம், சுராபீதம், அன்னத்தை சாப்பிடும் அன்னாதம் என்பன. யாகங்களில் இந்த்ராய இதம் – இது இந்திரனுக்கு என்பது போலவே, அசுர்களுக்கும் யாக பலன் கிடைக்குமாறு செய்து வந்தான். தாமதமாக இதையறிந்த தேவர்களும் பித்ருக்களும் கவலையடைந்தனர். விஸ்வரூபன் யஜமானனாக யாகம் செய்யும் சமயம் அவன் தன் தாய் வழி மாமன் போன்ற உறவினர்களுக்கு செய்வதை தடுக்கவும் இயலாது என்பதால் பயந்தனர். தேவர்களுக்கு அவமானம், தர்மத்தை மீறிய செயல் என்று தேவராஜன் இந்திரன் அவன் தலைகளை வெட்டி விட்டான். சோம பீதம் என்ற தலை கபிஞ்சலம் என்ற பக்ஷி ஆயிற்று. சுராபீதம் என்ற தலை கலவிங்க என்ற பக்ஷி யாகவும், அன்னதம் என்ற தலை தித்திரி என்ற பறவையாகவும் ஆயின. இந்த செயலால் இந்திரன் ப்ரும்மஹத்தி என்ற தோஷத்தையடைந்தான். ஓராண்டுகாலம் ஆன பின் தன்னை சுத்தப் படுத்திக் கொள்ள அந்த தோஷத்தை நான்கு பாகமாக நால்வருக்கு கொடுத்து விட்டான். பூமிக்கு தோஷம் உவர் நிலமாக ஆகும். அதற்கு பரிகாரமாக வெட்டினாலும் பள்ளம் நிரம்பும் பூமி சமமாக ஆகும் தன்மையை வரமாக அளித்தான். மரங்களுக்கு வெட்டுப்பட்ட இடங்களில் பால் வடிவது தோஷம், வெட்டினாலும் வளரும் தன்மையை வரம். பெண்களிடம் தோஷம் மாதவிலக்காக தோன்றுவது தோஷத்தின் பலன், கர்பம் தரித்திருக்கும் காலத்திலும் தாம்பத்யம் தடைபடாமல் இருப்பது வரமாகவும், கடலில் நுரை தோஷத்தின் பலன், அருவிகள் மூலம் இடைவிடாது நீர் வரவு கடலுக்கு வரம்.
தன் மகனை இந்திரன் கொன்றதை பொறுக்க மாட்டாமல் விஸ்வரூபனுடைய தந்தை த்வஷ்டா இந்திரசத்ரோ! வர்தஸ்வ என்று தன் மகனை உயிர்ப்பித்தார். கோரமான உருவத்துடன் நிமிஷத்திற்கு நிமிஷம் வளர்ந்து மலை போல நின்ற அந்த அசுரன், மூன்று தலைகளையும் சூலத்தில் ஏந்திக் கொண்டு, நடனமாடினான். க்ருதாந்தன் யுக முடிவில் ஆடுவது போல. தீ பிரகாசமாக ஜ்வாலை மலையளவு வளர்ந்தாற்போல வளர்ந்தான். சந்த்யா கால வானம் போல உடல் வர்ணம் புடமிட்ட தாம்ரம் போல கேசமும், மீசையும், நடுப்பகல் சூரியன் தகிப்பது போல் சிவந்த கண்கள், பூமியையே புரட்டிப் போடுவது போன்ற நடை, கம்பீரமான முகத்தால் வானத்தையே வளைத்து வாயில் போட்டுக் கொண்டும், க்ரஹ நக்ஷத்திரங்களை நாக்காலேயே நக்கியும், மூவுலகையும் வாயிலிட்டு சுவைத்தும் , அடிக்கடி வாயால் பயங்கரமாக எக்காளமிட்டபடியும் திரிந்தான். உலகில் உயிரினங்கள் நடுங்கி இலக்கின்றி ஓடின. த்வஷ்டாவின் மகன் அவனை விருத்திரன் என்றனர். ஒரு நிலையில் அவன் தவிர உலகில் எதுவுமே மீதி இராது என்பது போல பயந்தனர். பயங்கரமான உருவம் நடுங்கச் செய்தது. கொல்வதற்காக, கூட்டம் கூட்டமாக திவ்யாஸ்திரங்களை எடுத்துக் கொண்டு சக்தியுள்ள ரிஷிகளும் மற்றவர்களும் முயன்றனர். எதற்கும் பலனில்லாமல் போகவே பகவானை சரணடைந்தனர்.
தேவர்கள் துதி செய்தனர்: இவன் அந்தகனே தானோ என்று பயப்படுகிறோம். வானம், வாயு மண்டலம், அக்னி, பூமி, நீர் அனைத்தையும் தன் வசம் ஆக்கிக் கொண்டு விட்டான், எங்களால் இவனை ஜயிக்க முடியாது. அதனால் பகவானே சரணம். பரிபூர்ண காமனாக எதையும் எதிபார்க்காதவனாக, மிகவும் சாந்தமாக இருப்பவனை ஆசை காட்டி தன் வசப் படுத்த வழியில்லை. எதிர்த்து போரிடுவது குட்டி நாய் தன் வாலால் சமுத்திரத்தை ஆழம் பார்ப்பது போலத் தான். பகவானே, நீங்கள், பல்லின் நுனியில் பூமியைத் படகாக்கி பிரளய காலத்தில் காத்தவர். மஹா மீனமாக வந்து அண்டியவர்களை காத்தீர்கள். தற்சமயம் அதே நிலையில் த்வஷ்டாவின் மகனிடம் பயந்து நடுங்குகிறோம். ப்ரளய காலத்தில் பயங்கரமான அலைகள் முட்டி மோதின. அதன் வேகத்தில் ஸ்வயம்பூ தான் அமர்ந்திருந்த பத்மம் ஆட, விழப் பார்த்தார். அந்த சமயம் பகவானே, நீங்கள் தான் காப்பற்றினீர்கள். அதே கருணையோடு தற்சமயம் எங்களையும் காக்க வர வேணும். நீங்கள் தான் எங்களை படைத்து எங்களுக்கு பொறுப்புகளையும் கொடுத்தீர்கள். உங்கள் அனுக்ரஹ பலத்தால் உலகத்தை சிருஷ்டி செய்ய முனைந்திருக்கிறோம். உங்களைக் காணாமல் தவிக்கிறோம், பகவானே! எதோ ஒரு அவதார ரூபத்தில் எங்கள் எதிரில் தரிசனம் தர வேண்டுகிறோம். (உபேந்திர, பரசுராம, ராம, மத்ஸ்ய, பல ராம என்ற உருவங்கள்)
பகவானே, எங்கள் பங்காளிகள் உபத்ரவம் செய்த போதெல்லாம், தேவ, ரிஷி, கால் நடைகள்,மனிதன் என்று அவதாரங்கள் செய்து உங்கள் மாயையால் ஒவ்வொரு யுகத்திலும் காப்பாற்றியது போலவே இப்பொழுதும் எங்கள் ஆத்ம தெய்வமான உங்களிடம் பிரார்த்திக்கிறோம். வேறு யாரிடம் சரணடைவோம். சரணம், சரணம், எங்களுக்கு நன்மையைச் செய்யும் மகாத்மாவே!
ஸ்ரீ சுகர் சொன்னார்: இப்படி தேவர்கள் வந்து வேண்டிய பொழுது, மேற்கு திசையில் பகவான் சங்க, சக்ர, கதா சமேதமாக ப்ரசன்னமானார். தன்னைப் போன்றே தோற்றம் உடைய பதினாறு அனுக்கத் தொண்டர்கள், ஸ்ரீவத்ஸ கௌஸ்துபம் மட்டும் இல்லாமல், உடன் வர, அப்பொழுதே மலர்ந்த சரத் கால தாமரை மலர் போன்ற கண்களுடன் காட்சி தந்தார். கண்டவுடன் அனைவரும் தண்டம் விழுவது போல தடாலென்று விழுந்து நமஸ்கரித்தனர். மெள்ள எழுந்து துதி செய்தனர்.
தேவர்கள் துதி: யக்ஞ வீர்யனான உனக்கு நமஸ்காரம். கையில் சக்கரத்துடன் விளங்கும் புரூஹூதனே, நமஸ்காரம். முக்குணங்களையும் அடக்கி ஆளும் உன் பரம பதத்தை முழுமையாக அறிந்தவர் எவருமில்லை. உனக்கு நமஸ்காரம். இதன் பின் பகவானின் பல நாமங்களையும் சொல்லி பாடுகின்றனர்.
ओं नमस्तेऽस्तु भगवन् नारायण वासुदेवाऽऽदिपुरुष महापुरुष महानुभाव परममङ्गल परमकल्याण परमकारुणिक केवल जगदाधार लोकैकनाथ सर्वेश्वर लक्ष्मीनाथ परमहंसपरिव्राजकैः परमेणात्मयोगसमाधिना परिभावित-परिस्फुटपारमहंस्यधर्मेणोद्घाटिततमः-कपाटद्वारे चित्तेऽपावृत आत्मलोके स्वयमुपलब्धनिजसुखानुभवो भवान् ॥ ३३॥
உன் மாயை, விளையாட்டாக நீ செய்வதை புரிந்து கொள்ள சக்தியில்லை, சரணடைகிறோம், காப்பாற்று..
நீயே தான் படைத்தாய். நீயே தான் எங்களை காக்கவும் வேண்டும். உனக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது. உன் அடியார்களுக்குள்ளேயே, சிஷ்டன்-நல்லவன், துஷ்டன்- கெட்டவன் என்ற பாகுபாடு செய்வது ஏன்? அனைத்திலும் வஸ்து ஸ்வரூபமாக இருப்பவன் நீயே. சர்வேஸ்வரன், ஜகத் காரண பூதன். நீ அறியாததா?
வீடு கட்ட வரும் கொத்தனார் அறிவார். எது, எந்த அளவு, எந்த சமயம் வேண்டும் என்பதை. ப்ரும்ம ஸ்வரூபனான நீ, உன் அவதார காலத்தில் மூவுலகின் தேவைகளையும், அதற்கான பரிகாரங்களையும் அறிவாய். அனுக்ரஹம், நிக்ரஹம் இவைகளை உன் மாயா பலத்தால் அந்தந்த சமயம் நீ ஒருவனே செய்து விடுகிறாய். சாதாரண மனித மனம் கயிற்றில் பாம்பைக் கண்டால் நடுங்குவதும், பின் உண்மையை உணர்ந்துகொள்வதும் போலவும் உன் மாயாமயமான ஆற்றலில் வெளிப் படுவதை எளிதில் தெரிந்து கொள்வதில்லை. ஆகவே, பரமேஸ்வரா! உன்னிடம் பக்தியுடன் சரணடைவதே எங்களால் முடிந்தது. அம்ருத மதனம் செய்ததை நினைவு கூர்கிறோம். தேவர்கள், அசுரர்களும் அனைவரும் ஒன்றாக உன் தலைமையில் கடைந்தனர். அவரவர் சுயநலம் காரணமாகத் தான் கூடினர். இருந்தாலும் அனைவரையும் ஒன்றாக கூட்டி வைத்து பெரிய செயலை நடத்த உன்னையன்றி வேறு எவராலும் முடியாது என்று அறிவோம்.
த்ரிபுவனாத்மபவன், த்ரிவிக்ரம, த்ரி நயன, த்ரிலோக மனோஹரானுபாவ, உன்னுடைய விபூதிகளே, திதி மைந்தர்களான தேவர்கள், தனு மைந்தர்களான தானவர்கள், (முன் செய்தது போலவே) இப்பொழுதும் த்வஷ்டாவின் மகனை அடக்கு. உன் அவதார காலத்தில் தரித்த ஆயுதங்களை தரித்து எங்களுக்கு அனுக்ரஹி, ஏனெனில் நாங்கள் தாவகா:- உன்னைச் சார்ந்தவர்கள். (முதல் உரிமை எங்களுக்கு)
உங்களை வணங்கி வந்து நிற்கும் எங்கள் மேல் கருணை செய். எங்கள் தாபத்தை தீர்த்து வை. எந்த நேரமும் உன் நினைவாகவே இருந்து, உன் புகழையே பாடுவதும், உன் குணங்களையே கேட்பதுமாக இருக்கிறோம்.
பகவன்! தவாஸ்மி- உன்னையே சரணடைகிறோம். தேச காலங்களை அறிந்தவன். ஆகாசமே சரீரமாக உடையவன். சாக்ஷாத் பரப்ரும்மன். ஹே பரமாத்மா! இதைத் தவிர, வேறு என்ன கேட்போம். ஒளி மயமான உன்னிடம், சிறு நெருப்பின் தீச் சுடரை யாசிப்பது போல இருக்கும் எது கேட்டாலும்.
பரமகுரோ! நீயே தீர்மானித்துக் கொள். எங்கள் தேவை என்ன என்பதை கூட யாமறியோம். உன் பாத நிழலை அண்டி வந்து நிற்கிறோம். நூறு நூறு பலாச மரங்கள் தரும் சாயை போன்ற குளிர்ந்த பாதங்கள். சம்சார சாகரத்தில் உழலும் பலவிதமான ஜீவன்களின், சார்பாக இங்கு வந்து வேண்டுகிறோம்.
எனவே, ஈசா! த்வஷ்டாவின் மகனை வதம் செய். அவன் மூவுலகத்தையும் ஆக்ரமிக்கிறான். க்ருஷ்ணா! ஏற்கனவெ, எங்கள் அஸ்திரங்களை, எங்கள் ஆயுதங்களை, எங்கள் தேஜஸை க்ரஹித்துக் கொண்டு விட்டான்.
எங்கள் இதய கமலத்தில் விளங்கும் ஹம்ஸம் நீ, க்ருஷ்ணா, உன்னை காணவா முடியும்? உன் எல்லையற்ற புகழ் ஒன்றே நாங்கள் அறிந்தது, சத்யத்தை க்ரஹிக்கும் (ஹம்ஸம் போல) சம்சார பாதையைக் கடந்து மீள முடியாமல் ஓய்ந்து உன்னை அண்டியவர்களுக்கு ஆப்தமானவனே! சாயுஜ்யம், சாலோக்யம் என்ற பதவிகளைத் தருபவனே, ஹே ஹரே! நமஸ்தே.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்விதம் வேண்டியதைக் கேட்டு, எழுந்து வந்து ஆதரவுடன் பார்த்து ஸ்ரீ ஹரி பதில் சொன்னார்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: சுரஸ்ரேஷ்டர்களே! பக்தியுடன் இங்கு வந்து சரணடைகிறோம் என்று சொன்னதை ஏற்கிறேன். இங்கு வந்ததே உங்கள் நிலைமையையும், தேவைகளையும் தெரிவித்து விட்டன. ரோகம் இல்லாதவன் ஏன் மருந்தை நாடிப் போகிறான். மகவன்! தைரியமாக போய் வா, சுத்தமான, ப்ரும்ம ஞானம் அறிந்த ஒருவரைத் தேடிக் கண்டு பிடி. நாராயண கவசம் த்வஷ்டாவின் மகன் உனக்கு கொடுத்திருக்கிறான். அவனிடமும் அந்த கவசம் இருக்கிறது. எனவே, மந்திரங்கள் சொல்லி உருவேற்றிய சரீரம் உடைய ஒரு ரிஷியின் சரீர அஸ்தியை யாசித்து பெறுங்கள். அதைக் கொண்டு விஸ்வகர்மா ஆயுதம் தயாரித்துக் கொடுப்பார். நீ வ்ருத்திரனின் தலைகளைக் கொய்தாய் அல்லவா? அதற்கு ஈடான ஆயுதம் வேண்டும்.
(ஞானியும், வேதமறிந்தவனும், நன்னத்தையுடையவனுமான விஸ்வரூபனை, கொன்றதற்கு பரிஹாரம் அதே போல ஞானியும், வேத விற்பன்னரும், நடத்தைகளும் உடைய முனிவரால் மட்டுமே இயலும் என்பதாக )
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ஒன்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-55
அத்யாயம்-10
ஸ்ரீ சுகர் சொன்னார்: இந்திரனுக்கு இவ்வாறு உத்தரவிட்டு விட்டு பகவான் அந்தர்தானமானார். தேவர்களும் ஆதர்வண என்ற ரிஷியை சந்தித்து வேண்டினர். கூட்டமாக பகவான் சொன்னார் என்பதற்காக யாசிக்க வந்துள்ளீர்கள். உலக வாழ்க்கை, சரீரம், அதன் முடிவான மரண பயம் இவற்றை நீங்கள் அறிய மாட்டீர்கள். ஜீவன்கள் வாழவே விரும்புபவர்கள். ஆத்மா வேறு என்று உணர்ந்தாலும் தன் சரீரத்தில் பற்று உடையவர்களே. சரீரத்யாகம் செய்ய எளிதில் சம்மதிக்க மாட்டார்கள். யாசிப்பது ஸ்ரீ விஷ்ணு பகவானே என்றாலும்.
தேவர்கள் சொன்னார்கள்: ப்ரும்மன், நீங்கள் உலகில் அனைத்து உயிர்களிடமும் அனுதாபம் உள்ள மகான் புண்யஸ்லோகனை எண்ணி கர்ம மார்கத்தில் ஈடுபட்டவர். உங்களால் முடியாதது என்று எதுவும் இல்லை. சுயனலமே பெரிதாக எண்ணுபவர் உலகில் பிறர் கஷ்டத்தை உணர மாட்டார்கள். நீங்கள் அப்படி அல்லவே. அறியாமல் உங்களை யாசியுங்கள் என்று பகவான் சொல்வாரா?
ரிஷி சொன்னார்: உங்களுக்கு நன்மை என்பதால் நான் தேகதியாகத்தைச் செய்கிறேன். பூத தயை – பிற உயிர்களிடம் அன்பு உள்ள மனிதன் தானே தன் ஆத்மாவுக்கு நாதனாகிறான். ஸ்வதந்திரன் ஆவான். தர்மமோ, புகழோ அந்த சுதந்திரத்தைத் தராது. தாவரங்களைப் பாருங்கள். தன்னை அழித்தவனுக்கும் நன்மையையே செய்யும். அது தான் அழியாத தர்மம். பகவான் தானே அனுசரித்த தர்மம். எவனுடைய மனம் மற்ற ஜீவன்களின் துக்கத்தில் தானும் துக்கமடையுமோ, அவர்கள் சுகத்தில் தானும் பங்கேற்கிறானோ, அவனே அழிவற்றவன். அஹோ! என்ன கஷ்டம். என்ன தீனமான நிலை. தங்கள் பங்காளிகளிடையே தோன்றியுள்ள இந்த பயம்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு தர்மத்தை உபதேசித்து விட்டு, தத்யங்க் – அதர்வணர்- என்ற அந்த ரிஷி, (ததீசி) பரம் பொருளான பகவானிடத்தில் தன் ஆத்மாவை வைத்தவராக உடலைத் தியாகம் செய்தார். யோக மார்கத்தில், தன் வசப்படுத்தியிருந்த இந்திரியங்கள், ப்ராணன் முதலான வாயுக்கள், மனம், புத்தி இவற்றை உதறி விட்டவர், தேகத்தை விட்டு வெளியேறும் கடைசியான யோக நிலையை அடைந்தபின் தேகம் தானே கழண்டு விழுந்து, அதைச் சற்றும் அறியாதவராக பரமனடி சேர்ந்தார்.
அதன் பின் இந்திரன் விஸ்வகர்மாவைக் கொண்டு ரிஷியின் அஸ்தியிலிருந்து வஜ்ராயுதம் தயாரிக்கச் செய்து பகவானின் ஆசியைப் பெற்று, தேவகணங்கள் சூழ, தன் பட்டத்து யானை மேலேறி உடன் வந்த தேவ கணங்கள் வாழ்த்த மூவுலகையும் மகிழ்விப்பவன் போல கிளம்பினான். அசுர்களின் பாசறை சென்றவன். வ்ருத்திரனை போருக்கு அழைத்தான். ருத்ரன் கோபத்துடன் அழைப்பது போல இருந்தது.
அதன் பின் சுர, அசுர்களிடையேயான யுத்தம் நர்மதா நதிக் கரையில், த்ரேதா யுகத்தில் பயங்கரமாக நடந்தது. கையில் வஜ்ராயுத்துடன், ருத்ர கணங்கள், வசு, ஆதித்ய கணங்கள், அஸ்வினி குமார்கள், பித்ருக்கள், அக்னி, மருத்துகள், ரிஷிகள் சாத்யர்கள், விஸ்வே தேவர்கள், மருத்பதி என்று அனைவரும் புடை சூழ போருக்கு அழைத்தவனை வ்ருத்திரனும் எதிர்கொண்டான். அவனுக்கு சகாயமாக நமுசி, சம்பரன், அனர்வா, த்விமூர்தா, ருஷபன் என்ற அசுரன், ஹயக்ரீவன், சங்கு சிரஸ், விப்ரசித்தி, அயோ முகன், புலோமா, விருஷபர்வா, ப்ரஹேதி, ஹேதி, உத்கலன், தைத்ய தானவர்கள், யக்ஷ ரக்ஷர்கள், ஆயிரக் கணக்கானவர்கள், சுமாலி, மாலி முதலியோர், கார்த்த்ஸ்வர வம்சத்தினர், தாங்களே ம்ருத்யு போல இந்திரனின் சேனையை எதிர்கொண்டனர்.
சற்றும் தயக்கமின்றி சிம்ஹ நாதம் செய்தபடி, மதம் கொண்ட யானைகளுடன், அளவில்லாத அம்புகள், ப்ராஸங்கள், முத்கர, தோமரங்கள், சூலங்கள், பரஸ்வதங்கள், கட்கம் எனும் வாள், சத்க்னீ, புசுண்டீ முதலியன,
அந்த பிரதேசமே, இவ்வாறான ஆயுதங்கள் இரைந்து காணப்பட்டன. கூர்மையான சரங்கள், ஆகாயத்திலிருந்து ஜோதி கணங்களே விழுந்து விட்டாற் போல பிரகாசமாக நிறைந்து காணப் பட்டது.
சுர சைன்யத்தினர் ஆசுர அஸ்த்ர., சஸ்திரங்களின் தாக்குதலை தாங்க முடியாமல் சிதறினர். கை கால் உடைந்து ஆங்காங்கு விழுந்தனர். இதற்குள் அஸ்திர சஸ்திரங்கள் தீர்ந்து போனதாலோ, மலை முகடுகளையும், பாறைகளையும், அடி மரங்களையும் அசுரர்கள் அவர்கள் மேல் வர்ஷித்தனர். அதன் பின்னும் அதிக சேதம் இல்லையென்பதை அறிந்து, வ்ருத்திரனின் ஆட்கள், மேன் மேலும் மரங்களையும், கற்களையும் வீசினர். யுத்தமுடிவு என்ன ஆனாலும் சரி, இனி நம்மால் தாக்கு பிடிக்க முடியாது என்று தோன்றியதாலோ, அசுர சைனிகர்கள் ஓட்டம் பிடித்தனர். வ்ருத்திரன் அவர்களை பெயர் சொல்லி அழைத்து, வீரர்களே, பிறந்தவன், இறப்பது நிச்சயம் என்பதை அறியாதவர்களா? ஓடாதீர்கள் என்று அழைத்தான். இதுவே எளிய வழி ம்ருத்யுவை எதிர்கொள்ள. யுத்த பூமியில் விழுந்தால் ஸ்வர்கம் செல்வீர்கள். அதிர்ஷ்டவசமாக நம்மை ம்ருத்யு தேடி வருகிறான். ரண பூமியில் மரணம், ப்ரும்ம யோகத்தால் மரணம் இரண்டும் ஒன்றே என்றான்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், பத்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-33
அத்யாயம்-11
ஸ்ரீ சுகர் சொன்னார்: இது தான் தர்மம்- நம் கடமை என்று தலைவன் சொன்னதைக் கேட்டாலும், பயத்தால் நடுங்கிய சேனை வீர்கள் ஓடி விட்டனர். யுத்தபூமியில் புற முதுகிட்டு ஓடுபவர்களை அழைத்தும் அவர்கள் வராததை வ்ருத்திரன் கண்டான். ஆயினும் கலங்கவில்லை. வ்ருத்திரனின் பயங்கரமான கர்ஜனை போன்ற போர் அறைகூவலிலேயே, தேவ சைன்ய வீர்கள் பாறைகளால் அடிபட்டது போல விழுந்தனர். கோபத்துடன் கையில் சூலத்துடன் பாதங்களால் ரணபூமியை மிதித்தபடி, அட்டகாசமாக முன்னேறியவன், இந்திரனை, தன் இடது கையால் பிடித்தான். தன் கதையால் இந்திரனின் ஐராவதத்தை தாக்கினான். அதன் முகத்தில் ஓங்கிஅடித்தான். பார்த்தவர்கள் அனைவரும் திகைத்தனர். ஐராவதம் ஏழு வில் தூரம் பின்னடைந்தது. இந்திரனை நேருக்கு நேர் நின்று வசை பாடினான். உன் கையில் வஜ்ராயுதமும் சாதாரண கதை போலவே செயல் இழக்கும். உன் பராக்ரமத்தாலா அதை அடைந்தாய், முனிவர் சந்தோஷமாக தன் உடலையே தந்தது. அவருடைய தவமும், நேர்மையும் யோகமும் நீ எப்படி அறிவாய். சகோதரன், உனக்கு சமயத்தில் உதவியவன் என்பதை மறந்து கொல்ல வந்து நிற்கிறாய். அற்பனே! என்ன சாதிக்கப் போகிறாய். கருமியின் கையில் கிடைத்த தனம் பயனின்றி போவது போல வஜ்ராயுதத்தின் அருமை தெரியாத உன் கையில் பயனின்றி போகக் கூடாது. பிரயோகி இந்த வஜ்ராயுதம் ஸ்ரீ ஹரியின் தேஜஸால், ததீசியின் தவத்தினால் வந்த தேஜசும் கூடியது. அமோகமான ஆயுதம் இது. ஸ்ரீ ஹரி இருக்குமிடத்தில் நிச்சயம் வெற்றி இருக்கும் என்ற நியதி படி நீ வெற்றி பெறலாம். உன் சாமர்த்யத்தால் அல்ல. வஜ்ராயுதத்தை பிரயோகி. சங்கர்ஷ்ண மூர்த்தியான பகவானிடம் நான் மனதால் அடைந்து விட்டேன். இந்த அஸ்திரம் என்ற வியாஜத்தால் புனிதமாகி நல்ல கதியடைவேன். – என்றான். அதன் பின் நேரடியாக துதி செய்யலானான்.
ஹரே! நான் உன் பாதங்களை சரணடைகிறேன். முன் போலவே உன் தாஸானுதாஸனாக சேவை செய்வதையே வேண்டுகிறேன். என் மனம், வாக்கு, உடல் அனைத்தும் உன் சேவையிலேயே ஈடுபடட்டும்.
சுவர்கமோ, பாரமேஷ்டி என்ற நிலையோ, ராஜாதி ராஜன் எனவோ, பாதாள உலகங்களின் அதிபன் என்றோ, யோக சித்தியோ, பிறவியில்லாத தன்மையோ, வேண்டேன். சற்றும் உன்னை விட்டு விலகாத இடத்தையே வேண்டுகிறேன்.
அரவிந்தாக்ஷ! எப்படி, இறக்கை முளைக்காத பறவைகள் தாயை எதிபார்த்து பசியுடன் காத்திருக்குமோ, வெளியில் சென்ற கணவன் திரும்பி வருவதை மனைவி எப்படி எதிர்பார்த்து காத்திருப்பாளோ, அதே போல என் மனம் உன்னைக் காணவே தவிக்கிறது.
சம்சார சக்ரத்தில் தன் வீடு, மனைவி என்று உழலாமல், நல்ல நடத்தையுள்ள பாகவதர்கள் நட்பு வேண்டும், அதுவே நான் வேண்டுவது.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், இந்திரனுக்கு வ்ருத்ஹிரனின் உபதேசம் என்ற பதினொன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-27
அத்யாயம்-12
ரிஷி சொன்னார்: அசுர உடலைத் தியாகம் செய்த பின், யுத்தத்தில் வெற்றி பெறுவதை விட மரணமே மேல் என்று எண்ணிய வ்ருத்திரன், இந்திரனை க 3தையால் அடித்தான். முன் ஒரு முறை கடலுக்குள் கைடபன் , மகா புருஷனை அடித்தது போல. அழிந்தான் இந்திரன் என்று சொல்லி அட்டகாசமாகச் சிரித்தான். அடி எதிர்பாராமல் படவும் இந்திரன் கால் இடறி தலகீழாக எரிந்து கொண்டிருக்கும் க்ரஹம் விழுந்தது போல குப்புற விழுந்தான். வஜ்ரம் வ்ருத்திரனின் கையை துண்டித்த படி கீழே விழும் முன் விருத்திரன் தன் பரிகத்தால் (परिघम्) எடுத்துக் கொண்டு அதாலேயே இந்திரனை தாடையில் அடித்தான். சுராசுரர்கள் திகைத்து ஹா ஹா காரம் செய்தனர். விருத்திரனை சிலாகித்தனர். வெட்கம் மேலிட இந்திரன் தன் கையிலிருந்து விழுந்த வஜ்ரத்தை திரும்ப எடுக்கவில்லை. விருத்திரன், மூடனே, ஹரியே தயாரித்துக் கொடுத்த வஜ்ரம் அதை ஏன் பிரயோகிக்க தயங்குகிறாய் என்றான். பார்க்கப் போனால், உத்பத்தி ஸ்திதி லயம் என்று தன் வசத்தில் வைத்திருக்கும் சனாதனமான புருஷனின் சங்கல்பம் அன்றி, ஜயமோ பராஜயமோ, யுத்தகளத்தில் போரிடும் இருவரிடையில் முடிவாக வெளிப்படாது. இறுக்கி முடித்த சிகை போல காலனின் வசத்தில் ஜீவன்களில் காலம் கட்டுபட்டுள்ளது. தன் சரீரம், பலம், ப்ராணன், அம்ருதம், ம்ருயு இவைகளுக்கு தானே பொறுப்பு என்று நினைப்பவன் அக்ஞானி – அறிவற்றவன். மரத்தில் யந்த்ரம் சுயமாகவா உண்டாகும்? பெண் பதுமை தானாகவா வரும் இவைகளை செய்யும் சிற்பியின் கை வண்ணம் என்பது எப்படி நிதர்சனமோ அதே போலத் தான் உலகில் ஜீவன் களின் தோற்றமும். சத்வ,ரஜஸ், தமஸ் என்ற குணங்களும் ஆத்மா வின் அதீனத்தில் இல்லை. அது சாக்ஷி மட்டுமே.
இந்திரனே! என்னையே உதாரணமாக எடுத்துக் கொள். என் சூலம், கை இரண்டையும் இழந்தபின்னும் உன் உயிரை எடுக்கும் அதே உத்வேகத்தோடு போர் முனையில் நிற்கிறேன். ஜயிக்க முடியுமானால் மட்டுமே போரில் ஈடுபடுவேன் என்பது சூதாட்டமாக சொல்வர். பணயமாக யானை. குதிரைகளை வைத்து ஆடுவது போல.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இருவரும் அன்யோன்யமாக நண்பர்கள் போலவே மதித்தனர். இந்திரன் பதில் சொன்னான்: அஹோ, தானவ, சித்தோ(அ )ஸி. பிறப்பில் தானவனாலும் விருத்திரனே, நீ உன் புத்தியால் ஜகதீஸ்வரனை பக்தியால் உணர்ந்த சித்தனாகவே இருக்கிறாய். எல்லா உயிர்களுக்கும் நண்பனாக உள்ள பகவானைப் போலவே நீயும் நண்பனே. வைஷ்ணவீ மாயையும் அறிந்தவன். அசுரன் அல்ல மஹாபுருஷனே. அசுர குணம் ரஜஸ் பிரதானமானது என்பது உலக வழக்கு. ஆனால் நீ வாசுதேவனித்தில் திடமான அன்பை உடையவனாக இருக்கிறாய். அம்ருதமயமான சமுத்திரத்தில் விளையாடும் உனக்கு , பள்ளத்தில் தங்கிய குட்டை ஜலம் எதற்கு?
இருவரும் ஒருவரையொருவர் தர்மத்தை அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு பேசிக் கொண்டபின், யுத்தத்தை தொடர்ந்தனர். வ்ருத்திரன் தன் பரிகத்தை எடுத்துக் கொண்டான். இடது கையால் அதை இந்திரனை நோக்கி வீசினான். அவனும் வஜ்ராயுத்தால், விருத்திரனின் கையை தாக்கினான். இரு கைகளும் இல்லாத நிலையில் பிரவாகமாக ரத்தம் சொட்ட, இறக்கைகளை இழந்த பறவை ஆகாயத்திலிருந்து விழுவது போல விருத்திரன் விழுந்தான். அதன் பின்னும் தாடையின் ஒரு பகுதி பீமியிலும், மேல்பகுதி சுவர்கத்திலுமாக வளர்ந்து, அதன்
பலத்தில் வானளாவி இருந்த தன் வாய், நாக்கினால் கிடைத்தவரை, பூமி, மலைகள் என்று மூவுலகையும் இழுத்து பயங்கரமான பற்களால் கடித்து, வஜ்ரதாரியான இந்திரனையும். அவன் வாகனங்கள், ஆயுதங்களோடு, உடன் இழுத்து முழுங்குபவன் போல வாயில் போட்டுக் கொண்டான். மஹாப்ராணன், மஹாபலம் உடையவன், மஹாவீர்யோ, மஹா ப்ரபாவ: என்று கண்டவர் வியந்தனர். அஜகரம் எனும் மலைப் பாம்பு, யானையை விழுங்குவது போல இருந்தது. அசுரனின் பெரிய வயிற்றுக்குள் விழுந்த இந்திரன் யோக மாயா பலத்தால், (நாராயண கவசம் சொல்லி உருவேறியிருந்ததால்) வஜ்ரத்தால் அவன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளி வந்தான். மலையின் சிகரம் போல இருந்த அவன் தலையை வஜ்ரத்தால் அடித்தான். சட்டென்று திரும்பிய விருத்திரன் இந்திரனின் தோள்களைப் பற்றிக் கொண்டான். பலமாக இந்திரனின் தோள்களைத் தாக்கியபடியே வேகமாக சுழன்றான். சூரியனின் கதியில் உத்தராயண, தக்ஷிணாயனங்கள் மாறி வருவது போல இருவரும் அந்தரிக்ஷத்தில் சுழன்றனர். உயிர் பிரிந்த விருத்திரனின் உடல் விழுந்ததும் தேவர்கள் துந்துபியை முழங்கினர். தேவ கந்தர்வ, சித்தர்கள், புஷ்பங்களை வர்ஷித்தனர். விருத்ரனின் ப்ராணன் அனைவரும் காண ஜ்யோதி மயமாக அகார பொருளான வாசுதேவனின் வைகுண்டம் சென்றடைந்தது.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், விருத்திர வதம் என்ற பன்னிரண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-35
அத்யாயம்-13
ஸ்ரீ சுகர் சொன்னார்: விருத்திரனின் வதம் ஆனதில் லோகபாலர்கள், தேவ, ரிஷி, பித்ருக்கள், தேவர்கள் பக்ஷத்தில் இருந்த அனைவரும் மகிழ்ந்தனர். இந்திரனைக் காணவில்லை என்பதை கூட பெரிதாக நினைக்கவில்லை.
அரசன் பரீக்ஷித் கேட்டான்: முனிவரே! இந்திரன் ஏன் மறைந்தான். வெற்றி பெற்றவன் மகிழ்ச்சியாக இருந்திருக்க வேண்டுமே.
ஸ்ரீ சுகர் சொன்னார்: விருத்திரனின் வளர்ச்சியால் தனக்கு ஆபத்து வரலாம் என்று பயந்த இந்திரன் அவன் தலையைத் துண்டித்தான். அந்த தோஷத்தை உலகில் நால்வரிடம் பகிர்ந்து அளித்தான். தற்சமயம் அவனைக் கொன்றதால் ஏற்பட்ட ப்ரும்மஹத்தி, குருத்ரோஹம் என்ற தோஷங்கள் இவற்றை எப்படி பரிகாரம் செய்வேன் என்று வருந்தினான். ரிஷிகளிடம் விசாரித்தான். அவர்களும் யாகம் செய். அஸ்வமேத யாகம் செய்து பகவானை திருப்தி செய். பகவான் ஸ்ரீமன் நாராயணனை வேண்டிக் கொள். எந்த பாபமும் அவரால் தான் போக்க முடியும் என்றனர்.
ரிஷிகள் சமாதானமாகச் சொன்னாலும், ப்ரும்மஹத்யா என்ற தோஷம் உருவெடுத்து ஒரு பெண்ணாக இந்திரனைத் துரத்தியது. சண்டாளி போல வெளிறிய உடலும், க்ஷயரோகத்தால் பீடிக்கப் பட்ட நோயாளி போன்ற தோற்றமும் கலைந்த நரைத்த கூந்தலும், சிவப்பு வஸ்திரமும் வாயிலிருந்து அழுகிய மீன் வசனையும் கொண்ட பெண் உருவம். அவள் பின் தொடர தொடர இந்திரன் ஓடினான். அவள் சென்ற இடமெல்லாம் துர்கந்தம் வீசியது. கிழக்கில் ஆறம்பித்து உலகம் முழுவதும் சுற்றியபின் வடக்கு திசையில் தப்பிக்க மானஸ சரோவரத்தில் தாமரைத் தண்டில் ஒளிந்து கொண்டான். பல காலம், ஆயிரம் வருஷங்கள் அதில் இருந்தபடி அன்ன ஆகாரம் இன்றி இருந்தான். ஹவ்ய வாஹநன் என்ற அக்னி தான் அவனுக்கு உணவு அளிப்பவன். அவன் குளத்தின் உள் வர இயலாமல் உணவும் இல்லை. மனதினுள் தியானம் செய்தபடி இருந்தான். விஷ்ணு பத்னியான மஹாலக்ஷ்மியின் அருளால் உயிர் வாழ்ந்தான்.
இந்திரன் காணவில்லை என்றதும், நகுஷன் வித்யாதி பலத்தால், தேவலோகத்தை ஆளத் தகுதியானவனாக இருந்ததால், இந்திர பதவியை அடைந்தான். தானே இந்திரன் என்ற மதம் கண்களை மறைக்க, இந்திராணி என்னை ஏற்க வேண்டும் என்று உரிமை கொண்டாடினான். இந்திராணி அகஸ்திய முனிவரின் சாபம் என்ற வியாஜத்தால் அவனை தேவலோகத்திலிருந்து சர்ப்ப ரூபத்தில் பூமியில் விழ வைத்தாள்.
அந்த சமயம் தான் ரிஷிகள், இந்திரன் இருக்குமிடம் அறிந்து அவன் இருக்குமிடம் வந்து அஸ்வமேத யாகம் செய்யச் சொல்லி உபதேசித்தனர். பல காலம் செய்த தவத்தினால் சுத்தமாகி விட்டாய், இந்திர பதவியை திரும்பப் பெறுவாய் என்றனர்.
இந்திரனின் விருத்திர வதமும், அதன் பின் அவன் அனுபவித்த கஷ்டங்களும் லக்ஷ்மீ கடாக்ஷத்தால் மீண்டதும் பற்றிய இந்த சரித்திரம் படிப்பவர்களுக்கு நன்மைகளைத் தரும் என்று பலஸ்ருதி சொல்லி முடிக்கிறார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், இந்திர விஜயம் என்ற பதின்மூன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-23
அத்யாயம்-14
பரீக்ஷித் ராஜா வினவினான். வ்ருத்திரன் ராஜஸ தாமஸ குணங்கள் நிறைந்த குலத்தில் பிறந்தவன். அவனுக்கு ஸ்ரீமன் நாராயண ஸ்மரணம் இருந்தது எப்படி? தேவர்கள், சாதுக்கள், நிர்மலமான மனதுடைய ரிஷிகள் தான் சாதாரணமாக முகுந்த பாதங்களில் பக்தி செய்வதை அறிந்திருக்கிறோம். மனிதர்களில் சிலர் தான் மோக்ஷம் வேண்டி சாதனைகள் செய்வர், அவர்களிலும் சிலரே சித்தியடைவர். அந்த சித்தர்களிலும், ஸ்ரீமன் நாராயண பராயணர்களாக இருந்து, அமைதியான குணமும் உடையவர்கள் கோடியில் ஒருவர் இருந்தால் அதிகம். வ்ருத்திரன் எப்படி பாபி என்றானான். க்ருஷ்ணனிடத்தில் திடமான பக்தியுடையவன், நியாயமாக போர் புரிந்தான், தன் ஆற்றலால் சஹஸ்ராக்ஷன் என்ற இந்திரனை மகிழ்ச்சியுடன் எதிர் கொண்டான். இந்திரன் அவன் நல்ல குணத்தை அறிந்து கொண்டு தனக்கு சமமாக மதித்தான்.
ஸ்ரீசுகர் சொன்னார்: ராஜன்! இந்த கதையைக் கேள். வியாசர் சொல்லி, நாரதர் கேட்டார். ஸூரசேன வம்சத்தில் ஒரு சக்ரவர்த்தியான அரசன் இருந்தான். சித்ரகேது என்பது அவன் பெயர். அவன் ஆட்சியில் பூமியில் பொன் விளைந்தது. நிறைய மனைவிகள். ஆயினும் சந்ததி இல்லை என்று வருந்தினான். அனைவரும் ருபம், குணம், நற்குடி பிறப்பு, வித்யை, ஐஸ்வர்யம் என்று எல்லா விதமான செல்வமும் நிறைந்தவர்கள். அவர்கள் சக்ரவர்த்தினிகள் சந்தோஷமாகவே இருந்தனர். ஒருசமயம் யதேச்சையாக ஆங்கிரச முனிவர் தன் பரிவாரங்களோடு வந்தார். அரசனும் அவரை பூஜித்து, விருந்தினராக வந்த அவருக்கு வேண்டிய உதவிகளை குறைவில்லாமல் செய்தான். மகரிஷி தானே அரசனிடம் வினவினார்.
அரசனே! நலமாக இருக்கிறாயா? உன் பிரஜைகள் நலமா? அரச காரியங்கள், நல்லபடியாக நடக்கின்றனவா? அரசன் எப்பொழுதும் ஏழு ரகசியமான உளவாளிகளை வைத்திருக்க வேண்டும் என்பது ஒரு நியதி. ஜனங்களுடைய கஷ்ட நஷ்டங்கள் அரசனுக்கு தெரிந்திருக்க வேண்டும். அரசன் தங்களுக்கு தேவையானதை செய்வான் என்ற நம்பும் பிரஜைகள் உள்ள அரசன் உயர்ந்தவன். உன் மனைவிகள், மந்திரிகள், ஏவலர்கள், சேனை வீர்கள், ஊர் மக்கள், ஜனபத தலைவர்கள், உன் பிள்ளைகள், உனக்கு அடங்கி இருக்கிறார்களா? இவர்கள் உன்னை அனுசரித்து இருந்தால் தான் ஆட்சியை சரிவர செய்ய முடியும். அரசன் சற்று நேரம் பதில் சொல்ல யோசித்து விட்டு மெதுவாக சொன்னான். முனிவரே, உங்களுக்கு தெரியாததா? எனக்கு சந்ததி இல்லை என்பது மட்டுமே மனக் குறை என்றான். என்னைச் சுற்றி உள்ளவர்கள் அனைவரும் என்னிடம் அனுசரித்து இருக்கிறார்கள். உலகில் லோகபாலனோ, சாம்ராஜ்ய அதிபதியோ முக்கியமல்ல. புத்ர பௌத்ரர்கள் உள்ளவன் அதிகம் மதிக்கப் படுகிறான். சந்ததி இல்லாதவன் என்று என்னிடம் இவர்களுக்கு மனத்தாங்கல் உள்ளது என்பதை அறிவேன். அதனால் முனிவரே! என் முன்னோர்களை கரையேற்ற எனக்கு பிரஜை வேண்டும்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: முனிவர் கருணையுடன் தன் அறிவாலும், தவ வலிமையாலும் த்வஷ்ட்ரு என்ற தேவதையை ஆராதித்து சரூ என்ற பாயசத்தை வரழைத்து அரசனுக்கு கொடுத்தார். அரசனும் முதல் மனைவியும் பட்ட மகிஷியுமான க்ருத த்யுதி என்பவளுக்கு அந்த பாயசத்தைக் கொடுத்தான். முனிவரும் உன் மகன் பிறப்பான், நலமாக இரு என்று ஆசிர்வதித்துச் சென்றார். க்ருத த்யுதி என்ற அரசியும் க்ருத்திகா தேவதை அக்னியை தாங்கியது போல அரசரின் கர்பத்தை தாங்கினாள். நாள் ஒரு மேனி என்று நாட்கள் செல்லச் செல்ல அந்த குழந்தை நன்றாக வளர்ந்து, சூரசேன குலத்தோருக்கு மன மகிழ்ச்சியைத் தரும் சுகுமாரனாக பிறந்தான். அரசன் மகிழ்ந்து, குழந்தைக்கு ஸ்னானம் செய்வித்து, அலங்கரித்து, அந்தணர்களைக் கொண்டு ஆசிகள் பெற வைத்து, ஜாதகர்மா என்பதையும் செய்தான். அந்தணர்களுக்கு தங்கம், வெள்ளி, ஆடைகள் ஆபரணங்கள் என்று நிறைய தானமாக கொடுத்தான். பலருக்கு நிலங்கள், க்ராமங்கள், குதிரை, யானை என்றும் கணக்கில்லாத பசுக்களையும் தானம் கொடுத்தான். அவர்களும் ஆசிர்வதித்தனர். தன்யம், புகழ், ஆயுஷ் என்று மந்திரங்கள் சொல்லி மனப் பூர்வமாக ஆசிகளை பொழிந்தனர்.
தவமிருந்து பெற்ற மகன், அரசன் தினமும் பெரும் பகுதியை மகனுடனேயே செலவழித்தான். செல்வமற்றவன் பாடு பட்டு சேர்த்த தனத்தை பாதுகாப்பது போல பாதுகாத்தான். தாயாரும் அவ்வாறே, புத்திரனிடத்தில் அதிக பாசத்துடன், அருகிலேயே இருந்தாள். க்ருத த்யுதியின் சபத்னிகளுக்கு தங்களுக்கு மகன் இல்லாதது பொறாமையை கிளப்பி விட்டது. சித்ரகேது தன் மகனின் தாய் என்று க்ருத த்யுதியிடம் அதிக அன்புடன் நடந்து கொள்வதையும், குழந்தையை கொஞ்சுவதையும் கண்டவர்கள் பொறாமையால் தவித்தனர். சந்ததி இல்லை என்பதை விட அரசனின் பராமுகம் அவர்களை கோபமடையச் செய்தது. தாசிகள் கூட அவர்களை மதிக்காமல் க்ருத த்யுதியிடம் அதிகமாக செவை செய்தனர். அவர்களின் தாபம் தலைக்கேறிய நிலையில் குழந்தைக்கு யாருமறியாமல் விஷத்தைக் கொடுத்து விட்டனர். இதையறியாத க்ருத த்யுதி தூங்குவதாக நினைத்து வீட்டுக்குள் நடமாடிக் கொண்டிருந்தாள். நெடு நேரமாக தூங்குவதைக் கண்டு சந்தேகம் வர குழந்தையைக் கொண்டு வரச் சொல்லி தாத்ரி என்ற பணிமகளிடம் சொன்னாள். அந்த பெண் கையில் எடுத்தவள், பிராணன் இல்லாததைப் பார்த்தவள் ஹா ஹதாஸ்மி என்று அலறியபடி மயங்கி விழுந்து விட்டாள். அந்த கதறலைக் கேட்டு ஓடி வந்த ராணி தன் மகனின் சடலத்தை கண்டாள். அவளும் மயங்கி விழுந்தாள். இந்த விவரம் அந்த:புர வாசிகள் அழும் குரலைக் கெட்டு விசாரிக்க வந்தவர்கள், ஓடிச் சென்று அரசனுக்கும் சபையினருக்கும் தெரிவித்தனர்.
இந்த துஷ்ட காரியத்தைச் செய்த மற்ற மனைவிமார்களும் பொய்யாக அழுதனர். அரசனால் தாங்கவே முடியவில்லை. பாலனின் காலடியில் கதறியவன் பேசக் கூட முடியாமல் தொண்டையடைக்க வருந்தினான்.ராணி மூர்ச்சை தெளிந்து எழுந்தவள், அரசனை என்ன சொல்லி சமாதனப் படுத்துவாள்? ஓவென்று கதறியழுதாள். கண்ணிரால் உடல் நனைய, ஹே விதாதா! உனக்கு கண் இல்லையா? சிருஷ்டியை செய்பவன் நீ என்பார்களே, ஒருவன் ஜீவிப்பதும், மற்றவனுக்கு ம்ருத்யும் தருவதா உன் கருணை? மனிதனின் பிறப்பும் இறப்பும் ஒரு ஒழுங்கில் இல்லையேன்றால், எதற்கு தன் மகன் என்று பாசமும் பந்தமும். என் குலம் வளர வேண்டும் என்ற ஆசை ஏன்? மகனே! இதோ பார், உன் தந்தை தவிக்கிறார். பிள்ளையில்லை என்ற துக்கத்தை விட இந்த துக்கம் கொடிது. யம லோகம் போக உனக்கு ஏன் இந்த அவசரம்? மகனே, எழுந்திரு, இன்னும் எதையுமே அனுபவிக்கவில்லையே. உன் வயது குழந்தைகள் வருவார்கள். உன்னுடன் விளையாட – என்று இவ்வாறு பலவாறாக புலம்பி அழுதுதாள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: அவளாவது அழுது அரற்றினாள். அரசனுக்கு குரலே எழும்பவில்லை. பிரமித்தவன் போல பேச்சின்றி இருந்தவன், நினைவு வந்தவன் போல ஓவென்று கதறி அழுதான். மற்றவர்கள் செய்வதறியாமல் திகைத்தனர். பெற்ற மகனை இழக்கும் துக்கம் என்ன என்பதை உணர்ந்தவர்கள் போல் அழுதனர். இதையறிந்த ஆங்கிரஸ முனிவர் நாரதரோடு அங்கு வந்தார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், சித்ரகேது விலாபோ என்ற பதி நான்காவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-61
அத்யாயம்-15
இறந்த மகன் அருகில் தானும் இறந்தவன் போல விழுந்து கிடந்த அரசனை இருவருமாக சமாதானப் படுத்தினர். ராஜேந்திரனே! உன் மகன் யார்? அவனுக்கு இது ஒரு ஜன்மம். தன் வினைப் பயனை கழிக்க உன் பிள்ளையாக வந்தானோ? பெருகி ஓடும் நீரில் அடித்துச் செல்லப் படும் சருகுகள் போலத்தான் பிறவியும். காலம் தான் மனிதர்களை பிராணிகளை ஆட்டுவிக்கிறது. சேர்த்து வைப்பதும், பின் பிரிப்பதும் அதன் விளையாட்டு. தானியங்கள் விதையாகி முளைக்கும் – வேறு தானியங்கள் வரும் – சில தானியங்கள் விதையாவதில்லை. அதே போலத் தான் மனிதர்களிலும் சிலருக்கு சந்ததிகள் தோன்றுவதில்லை. ஈசனுடைய சங்கல்பம் என்பதைத் தவிர வேறு காரணமேயில்லை. நீயும், நாங்களும் தற்காலத்தில் இருக்கிறோம். முன் ஜன்மத்தில் எப்படி இருந்தோம், மறு பிறவியில் எப்படி இருக்கப் போகிறோம் என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லை. ஈஸ்வரனும் தன் மாயையால் ஸ்ருஷ்டியைச் செய்தான். தன் மகன் என்ற பாசம் நியாயமானதே. பிறந்த குழந்தை தன் பேச்சாலும், விளையாட்டாலும் பெற்றோரை மகிழ்விக்கிறான், அதற்கு ஈடே இல்லை. தந்தையிலிருந்து மகன் என்று வம்சம் வளருகிறது. பீஜத்திலிருந்து பீஜம் என்பது போல. தாயார் தேஹத்திலிருந்து பிறப்பது அந்த வம்சத்தின் பீஜமே. அப்படி பார்க்கப் போனால் தேஹி, தேஹமுடையவன் அழிவதேயில்லை.
ஸ்ரீ சுகர் சொன்னார்: மேலும் பலவிதமாக சமாதானப் படுத்துகிறார். அழுது சிவந்த கண்களையும், முகத்தையும்,துடைத்துக் கொண்டு சித்ரகேது முனிவரிடம் கேட்டான்.
யார் நீங்கள்? துறவி வேஷத்தில் இருக்கிறீர்கள், அறிவுடைய ஞானிகள், ரகசியமாக இங்கு எப்படி வந்தீர்கள்? பூமியில் பலர் பாகவதர்கள் என்றும் அந்தணர்கள் என்றும் உலவுகிறார்கள். என் போன்ற மந்த புத்திகளுக்கு உபதேசம் செய்ய வருவார்கள். குமாரன், நாரதர், அங்கிரஸ், தேவலன், அசிதன், எல்லையில்லாத பெருமை உடைய வியாசர், மார்கண்டேயன், கௌதமர், வசிஷ்டர், பகவான் ராமன், கபிலோ, பாதராயணி, துர்வாசர், யாக்ஞவல்க்யர், ஜாது கர்ணி, ஆருணி, ரோமஸ:. ச்யவனோ, தத்த, ஆசுரி, பதஞ்சலி, ரிஷி வேத கிரா என்பவர், போத்ய:, பஞ்சசிரஸ் என்பவர், ஹிரண்ய நாப:, கௌசல்ய:, ஸ்ருத தேவ, ருதத்வஜ:, இன்னும் பல சித்தர்கள் உலகில் சஞ்சரிக்கின்றனர். ஞானிகள், இவர்களில் நீங்கள் யார்? என் துக்கம் பெரிது தாமஸமான இருட்டில் மூழ்கியவன் போல, பாமரனாக இருக்கிறேன். எனக்கு அறிவு என்ற ஒளியைத் தாருங்கள்.
அங்கிரஸ் சொன்னார். பிள்ளையில்லை என்று தவித்த உனக்கு புத்திரனைத் தந்த அங்கிரஸ் நான். இவர் ப்ரும்மாவின் மகன் நாரதர். நீ புத்ர சோகத்தில் வாடுவதை பார்த்து உன்னை சமாதானப் படுத்த வந்தோம். சாமர்த்யசாலியான நல்ல அரசன். மற்றவர்கள் கண்களுக்கு புலனாகாமல் உன்னைக் காண வந்தோம். உனக்கு அனுக்ரஹம் செய்யவே வந்தோம். நீ பகவானின் பக்தன், ப்ரும்ம மார்கத்தில் செல்பவன், இவ்வாறு வருந்துவது அழகல்ல. மற்ற செல்வங்கள் நிறைந்தவன், அனைத்துக்கும் மேல் புத்திரனை வேண்டுகிறானே என்று புத்திரனை தந்தோம். அதனால் மிகுந்த தாபத்தை அனுபவிக்க நேர்ந்து விட்டது ராஜன், இதே போலத்தான் மற்ற மனைவி, ராஜ்யம்,., வீடு என்று நீ ஐஸ்வர்யமாக நினைக்கும் அனைத்தும் பிரிவினால் துன்பத்தையே தரும். சப்தம் முதலான உணர்வுகள், ராஜ்ய பரிபாலனம் தரும் நிறைவு, நிரம்பியுள்ள பொக்கிஷம், நண்பர்கள், மந்திரிகள், அனைவருமே ஸுரசேனா! கனவில் வருவது போன்ற பாத்திரங்களே. எனவே சோகத்தை விடு. சந்தாபம் தரும் இவை மனிதர்களின் உடலைச் சார்ந்தவை, மனதால் அறிபவை மட்டுமே. இவை சாஸ்வதமல்ல. ஆரோக்யமான சிந்தனைகள் உன் மனதில் நிறையட்டும். சமாதானப் படுத்திக் கொள். எவருடைய பாதங்களை ஆஸ்ரயித்து மஹாதேவன் முதலானோர், நிலையான பலன்களை அடைந்தனரோ அந்த வழியில் நீயும் நற்கதி அடைவாயாக.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், சித்ரகேது சாந்த்வனம் என்ற பதினைந்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-28
அத்யாயம்-16
தேவரிஷி நாரதர் அரசனுடைய இறந்த மகனைக் காண செய்தார். அந்த ஜீவனிடம் நாரதர், ஜீவாத்மன்! இதோ பார், உன் தந்தை, தாய், உறவினர்கள், அனைவரும் உன் பிரிவால் வருந்துகிறார்கள். திரும்பவும் இந்த சரீரத்தில் நுழைந்து போகங்களையும், அரச பதவியையும் அனுபவிப்பாய் என்றார்.
அந்த ஜீவன் கேட்டது: எந்த ஜன்மத்தில் இவர்கள் என் தாய் தந்தையராக இருந்தனர். விணைபயனால் நான் தேவனாக, மிருகமாக, மனிதனாக என்று பல வித பிறவிகள். பந்துக்கள், பங்காளிகள், நண்பர்கள், கண்டு கொள்ளாத மற்றவர்கள், பலர் இருந்தனர். கடைகளில் விற்கப் படும் தங்கம் போன்ற பொருட்கள் கை மாறிக் கொண்டே இருப்பது போல ஜீவன்கள் தாய்மார்களின் கர்பத்தில் தோன்றி பிறந்து இறந்து மறுபடி எங்கோ பிறக்கின்றன. அந்த பொருள்களின் சம்பந்தம் வாங்குபவர், விற்பவர் இடையே இருப்பது போலவே மனித உறவுகளும் அனித்யமானவையே. தன் கையில் இருக்கும் வரை விலை மதிப்பற்றதாக இருக்கும் ஆபரணம் போல. உறவும் ஒட்டுதலும் அவ்வளவே. நித்யமானது இந்த உலகை ஸ்ருஷ்டி செய்த பகவான் ஒருவரே. அவருக்கு எவரும் மிக பிரியமானவர் என்றோ, பிரியமே இல்லாதவன் என்றோ பாகுபாடு கிடையாது. தன் பிறர் என்று எண்ணாமல் மனிதனின் காரியங்களில் குண தோஷங்களை மட்டுமே பார்க்கிறார். ஆத்மாவுக்கு குணம் தோஷம் க்ரியையின் பலன் என்பது இல்லை. அது சாக்ஷி மாத்திரமே.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு சொல்லிவிட்டு அந்த ஜீவன் மறைந்து விட்டது. அரசன் ஆச்சர்யத்துடன் இதைக் கேட்டு தன் மனதை சமாதானப் படுத்திக் கொண்டான். பித்ரு காரியங்களைச் செய்து விட்டு, தன் ராஜ்ய காரியங்களை கவனிக்கச் சென்று விட்டான்.
குழந்தையை கொன்றவர்கள் வெட்கம் தாளாமல், பிராயச் சித்தங்கள் செய்தனர். யமுனை நதிக் கரையில் அந்தணர்களைக் கொண்டு தானங்கள் செய்வித்தனர். சித்ரகேதுவும் தன் மனச் சிறையிலிருந்து யானை குளத்தின் சேற்றில் மாட்டிக் கொண்டு தவித்தது வெளி வந்தது போல இருந்தான். காலிந்தீ நதிக் கரையில் விதிகளை அனுசரித்து ஸ்னானம் முதலானவைகளைச் செய்து முனிவர்களை வணங்கினான். நாரதர் அவருக்கு உபதேசம் செய்தார்.
ओं नमस्तुभ्यं भगवते वासुदेवाय धीमहि ।प्रद्युम्नायानिरुद्धाय नमः सङ्कर्षणाय च ॥ १८॥
नमो विज्ञानमात्राय परमानन्दमूर्तये ।आत्मारामाय शान्ताय निवृत्तद्वैतदृष्टये ॥ १९॥
आत्मानन्दानुभूत्यैव न्यस्तशक्त्यूर्मये नमः ।हृषीकेशाय महते नमस्ते विश्वमूर्तये ॥ २०॥
वचस्युपरतेऽप्राप्य य एको मनसा सह ।अनामरूपश्चिन्मात्रः सोऽव्यान्नः सदसत्परः ॥ यस्मिन्निदं यतश्चेदं तिष्ठत्यप्येति जायते । मृण्मयेष्विव मृज्जातिस्तस्मै ते ब्रह्मणे नमः
यन्न स्पृशन्ति न विदुर्मनोबुद्धीन्द्रियासवः ।अन्तर्बहिश्च विततं व्योमवत्तन्नतोऽस्म्यहम् ॥ देहेन्द्रियप्राणमनोधियोऽमी यदंशविद्धाःप्रचरन्ति कर्मसु। नैवान्यदा लोहमिवाप्रतप्तं स्थानेषु तद्द्रष्ट्रपदेशमेति
ओं नमो भगवते महापुरुषाय महानुभावाय महाविभूतिपतये, सकलसात्वतपरिवृढ-निकरकरकमलकुड्मलोपलालितचरणा-रविन्दयुगल परम परमेष्ठिन् नमस्ते ॥
நாரதரின் உபதேச மந்திரம் தவிர அவர் சொன்ன விஷயங்களை புரிந்து கொண்டு ஏழு நாட்கள் நீரை மட்டும் குடிப்பவனாக தவம் இருந்தான். வித்யாதர பதி என்ற பதவியை அடைந்தான். அதன் பின் தாமரைத் தண்டு போல வெண்மையான, நீல வஸ்திரம் தரித்த கிரீடம் முதலிய ஆபரணங்களுடன், ப்ரஸன்ன முகமாக இருந்த பிரபுவை சித்தர்கள் சூழ இருந்தவராக கண்டான். வாயால் எதையும் சொல்ல முடியாமல் தவித்தவன், சமாளித்துக் கொண்டு துதி செய்தான்.
நீ மற்றவர்களிடம் அஜிதனாக- தோல்வியறியாதவனாக இருந்தாலும், சாதுக்களாலும், பக்தர்களாலும் தோற்கடிக்கப் படுகிறாய். ஏனெனில் நீ கருணை மிக்கவன். பகவன் ! உன்னுடைய விபவம் படைப்பதும், காப்பதும், பின் கலைப்பதும், அவர்களுக்கும் ஆசையே இல்லையென்றாலும் நீ உன் ஆத்மாவையே தருகிறாய். உன் அம்சம் அவர்களிடத்திலும் காணக் கிடைக்கிறது. பரமாணு, பரம மஹத் ஆனவன் நீ, வேத ரூபி, பொருள்களின் ஆதி அந்தம் நடுவில் எது சாஸ்வதமோ அதுவும் நீயே. பூமி முதலானவைகளை சூழ்ந்து இருப்பது ஏழு, அதே போல பத்து மடங்கு பெரிதான ப்ரும்மாண்டம் என்ற அண்ட கோசம்- இதில் அணு அளவு உன் கடாக்ஷம் விழுவதே, கோடி கோடி அண்டங்களுக்கு சமம். மனிதர்கள் இன்பங்களை நுகர்வதில் ஆசை மிக்கவர்கள். உன்னை உபாசிப்பதில் நாட்டம் கொள்வதில்லை. ராஜ குலத்தில் நம்பிக்கை வைத்தவர்கள், வசதிகள் பெற்றவர்கள், அந்த குலம் அழிந்தால் தாங்களும் அழிவார்கள். பலனை வேண்டி உன்னை பஜித்தவர்கள் அந்த பலனைப் பெறுவதோடு, உன்னிடம் பக்தியும் வளர்த்து கொள்கிறார்கள்.
எனவே, பகவன்! தேவ ரிஷி நாரதர் உபதேசம் பெற்ற பின், உங்கள் தரிசனமும் கிடைக்கப் பெற்று பரிசுத்தமானேன். வேறு விதமாக எப்படி இருக்க முடியும்?
இங்கு நடந்ததும் தாங்கள் அறிந்திருப்பீர்கள். பரமகுரோ ! எது தேவையென்று பிரார்த்திப்பேன். ஞானம் என்ற ஸூரியனே கிடைத்தபிறகு, தாரகைகள் எதற்கு. நமஸ்துப்யம் பகவதே! பரம ஹம்ஸாய நம: – துரவசித ஆத்ம கதயே நம:, சகல ஜகதீசாய நம:.
பூ மண்டலத்தை தாங்கி நிற்கும் ஆயிரமாயிரம் தலைகளுக்கு நமஸ்காரம்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு துதி செய்தபின், பகவானும் ஆசிர்வதித்தார். நாரதன், ஆங்கிரஸ் உபதேசத்தால் சித்தனானாய். ராஜன்! நல்ல வித்யை கிடைக்கப் பெற்றாய். என் தரிசனமும். நானே சகல பூதாத்மா. பூத பாவனன். சப்த ப்ரும்மும் நானே. பர ப்ரும்மம் என்ற சாஸ்வதமானவனும் நானே. என் ஆத்மாவை லோகத்திலும் என்னிடத்தில் லோகத்தையும் காணலாம். பாதி கனவில் விழிப்பது போலத்தான் வாழ்க்கையில் நடப்பதும் நடந்ததும். இளமை, முதுமை என்ற அவஸ்தைகள் வரும். பற்றின்றி இவைகளைக் கடந்து ப்ரும்ம ஞானத்தை அடைவாய். ராஜன்! இந்த விஷயங்களை சிரத்தையாக மனதில் கொண்டு, நல்ல ஞானம், மேலும் மேலும் அதை வளர்த்துக் கொண்டு விக்ஞானியாக ஆவாய். இவ்வாறு பகவான், சித்ரகேதுவை சமாதானம் செய்து விட்டு மறைந்தார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், சித்ரகேதுவின் பரமார்த்த தரிசனம் என்ற பதினைந்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-65
அத்யாயம்-17
அதன் பின் வித்யாதரன் என்ற ஆகாயத்தில் சஞ்சரிக்கும் நிலைக்கு உயர்ந்த சித்ரகேது பகவான் இருந்த திக்கை நோக்கி வணங்கி விட்டு ஆகாயத்தில் சஞ்சரிக்கலானான். முனிவர்கள், சித்த சாரணர்களைக் கண்டும், குலாவியும், அவர்களுடன் பல லக்ஷ வருஷங்கள், குறைவில்லாத பலத்துடன் பல க்ஷேத்ரங்களை தரிசித்தான். குலாசலம், என்ற மலையின் சரிவுகளில், ஹரி பஜனையை வித்யாதர ஸ்த்ரீகளுடன் சேர்ந்து பாடியபடி அனுபவித்தான். இந்த இடம் பலவிதமான சங்கல்பங்களை நிறைவேற்றும் என்பது ப்ரசித்தம். ஒரு முறை பகவானே கொடுத்த ப்ரகாசமான விமானத்தில், பகவான் கிரீசனை தரிசித்தான். உடன் சித்த சாரணர்களும் இருந்தனர். தன் சரீரத்தில் ஒரு பாகமாக அங்கீகரித்த தேவியை அணத்தபடி முனிவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவரைப் பார்த்து தேவி பார்த்திருக்கையிலேயே பலமாக சிரித்தான்.
சித்ரகேது சொன்னான்: இவர் லோக குரு. மனிதர்களுக்கு தர்மத்தை உபதேசிப்பவர். இந்த முக்யமான சபையில் மனைவியுடன் தம்பதியாக அணைத்தபடி, ஜடாதாரி, தீவிரமான தவம் செய்தவர், பாமரன் போல வெட்கம் இன்றி மனைவியுடன் பொது இடத்தில் இருக்கிறாரே, பாமரன் கூட யாருமறியாமல் தான் பெண்ணுடன் கூடுவான். மஹா வ்ரத தரன் என்று பெயர் பெற்றவன், சபையில் பெண்ணை மடியில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்றான்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: பகவானும் அதைக் கேட்டு மெல்ல சிரித்து விட்டு பேசாமல் இருந்தார். சபையினரும் எதுவும் சொல்லவில்லை. அசோபனமான இந்த வார்த்தைகளைக் கேட்டு, தேவி வெகுண்டாள். வீர்ய விதுஷி எனப்படும் அவள், தன் எல்லையைக் கடந்த த்ருஷ்டன்- தன்னைப் பற்றி உயர்வாக எண்ணுபவன்- அவனைப் பார்த்து கோபத்துடன், யார் இவன், உலகில் தண்டிக்கும் தகுதி பெற்ற ப்ரபுவோ? இவனைப் போன்ற துஷ்டர்கள், விபரீதமாக அடக்கமின்றி பேசும் வீணர்கள் எதையும் அறியாமல் பிதற்றுகிறார்கள். பத்மயோனியான ப்ரும்மாவுக்கு ஏதாவது தெரியுமா? ப்ரும்ம புத்திரரான நாரதர், ப்ருகு போன்றவர்கள் தான் அறிவார்களா? குமாரர்கள், கபிலர், மனு இவர்கள் தான் ஏதாவது அறிவார்களா? இவர்கள் ஹரன் செய்வது அநியாயம் என்று ஏன் தடுக்கவில்லை? இவர்கள் ஹரனின் பாதங்களை ஜகத்குரு என்று வணங்குபவர்கள். ஹரன் தானே மங்கள மங்களமானவன் என்பதை அறிந்தவர்கள். இந்த க்ஷத்ரபந்து (வசைச் சொல்) த்ருஷ்டன் சொல்கிறான் – இவனே தண்டிக்கப் பட வேண்டியவன். இவன் வைகுண்ட பதவியை அடைய தகுதியுடையவன் அல்லன். மதிப்புக்குரிய ஒரு பெரியவரை அவமதித்த இவன் பாபம் செய்தவர்கள் அடையும் ஒரு அசுர குலத்தில் பிறக்கட்டும். மகனே, துர்மதியுடையவனே, போ, மேலும் ஏதாவது தவறாக செய்யும் முன் விலகு என்றாள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு சபிக்கப் பட்ட சித்ரகேது தன் தவற்றை உணர்ந்தவனாக, விமானத்திலிருந்து இறங்கி தேவியிடம் மன்னிப்பு கேட்டான். விழுந்து வணங்கினான். அம்பிகே, தங்கள் சாபத்தை ஏற்றுக் கொள்கிறேன். என் அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன். மனிதர்களுக்காக சொன்னதை அறியாமல் மோகத்தால் சொல்லி விட்டேன். சுக துக்கங்களுக்கு ஆத்மா காரணமல்ல. அதை மீறிய பரமாத்மாவின் செயல்களில் சாபம் என்ன, அனுக்ரஹம் என்ன இரண்டுமே ஒன்றுதான். சுத்த சத்வனான பகவான் ஆத்ம மாயையால் ஜீவன்களை ஸ்ருஷ்டிக்கிறார். பந்தமோ, மோக்ஷமோ, சுகமோ, துக்கமோ, நிரஞ்சனான அவர் செயலில் ஆசையோ, ரோஷமோ ஏது? அதனால் தேவி, நான் சாப விமோசனம் கேட்கவில்லை. என் தவறு, அதற்கான தண்டனையை அனுபவிக்கிறேன். தேவி, என் செயலை மன்னித்து அருள வேண்டும்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: சித்ரகேது தன் விமானத்தில் புறப்பட்டு சென்றபின், கிரீசன், தேவியிடம் இந்த சித்ர கேது ஹரி பக்தன், அவருடைய உயர்ந்த குணம் அவனடியார்களிடமும் தென்படுகிறது. நாரயணனை நம்பியவன் யாரிடமும் எதற்கும் பயப்படுவதில்லை. சுவர்கம், நரகம் இரண்டையுமே சமமாக எண்ணத் தெரிகிறது. கனவில் காணும் கயிற்றில் பாம்பு போல மனித மனம் உண்மையை உணர்ந்த பின் சமாதானம் அடையும்.
தேவியின் சாபத்தை ஏற்று, சித்ரகேது தானவனான த்வஷ்டாவின் மகனாக பிறந்தான். நீ கேட்டாயே, விருத்திரன் எப்படி அசுரன் ஆனான், அவனுக்கு ஹரி ஸ்மரணம் வர என்ன காரணம் என்று, அந்த வரலாறு தான் இது. ஹரி பக்தனாக இருப்பவன் நன்மையே அடைவான் என்பதற்கு இந்த இதிகாசம் ஒரு சான்று.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், சித்ரகேது அடைந்த சாபம் என்ற பதினேழாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-41
அத்யாயம்-18
தக்ஷனின் மகளான ப்ருஸ்னீ என்பவள் ஸூரியனின் மனைவியானாள். சாவித்ரி, வ்யாஹ்ருதி, த்ரயீ, அக்னிஹோத்ரம், பசு, சோமன், சாதுர்மாஸ்யம், மஹா மகான் (பெரிய யாகங்கள்) சித்தி என்பவள் பகனின் மனைவி, அங்க மஹிமானம், ஆசிஷம் என்ற பெண் மகவும், பெற்றாள்.
ப்ரும்மாவுக்கு, குஹோ, சினீவாலி, ராகா, அனுமதி, சாயம், தர்சம், ப்ராத:, பூர்ணமாஸம் அனுக்ரம படி,
அக்னிகளை புரீஷ்யான் என்பவர்களுக்கும், சர்ஷணீ வருணனுக்கும், இவளிடம் ப்ருகு திரும்பவும் பிறந்தார்.
வால்மீகி மஹா முனிவர் வல்மீகம் என்ற புற்றிலிருந்து தோன்றினார். அகஸ்தியரும், வசிஷ்டரும் மித்ர வருண என்பவர்களிடம் தோன்றினர். (இவர்கள் ஒரு சமயம் ஊர்வசியை கண்டதுமே வீர்யம் வெளிப்பட அதை கடம்- மண் பானையில் வைத்ததாகவும், அதிலிருந்து வசிஷ்டரும், அகஸ்தியரும் தோன்றியதாக வரலாறு) இந்திரன் தன் மனைவி பௌலோமி என்ற சசியிடம் ஜயந்தன், ருஷபன், மீடுஷன் என்றவர்களை பெற்றான் என்பர். மாயா வாமன ரூபம் எடுத்த பகவான், கீர்தி என்ற பத்னியிடம் ப்ருஹஸ்லோகன் என்பவனையும் அவனுக்கு சௌபகா என்ற சிலரும் பிறந்தனர். காஸ்யபருடைய சரித்திரத்தை பின்னால் சொல்கிறேன். கஸ்யப தாயாதிகள், திதி புத்திரர்கள் கதையைச் சொல்கிறேன். இதில் பாகவதனான ஸ்ரீமான் ப்ரஹ்லாதன், பலி என்பவர்கள் தோன்றினர்.
திதி புத்திரர்கள் இருவர், ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்று பெயர்கள். ஹிரண்யகசிபுவின் மனைவி கயாது என்ற தானவி. ஜம்பனுடைய மகள். அவளுக்கு நான்கு குமாரர்கள். சம்ஹ்லாதம், அனுஹ்லாதம், ஹ்லாதம், ப்ரஹ்லாதம் என்பது அவர்கள் பெயர்கள். அவர்கள் சகோதர் சிம்ஹிகா ராஹுவை பிடித்தாள். ராஹுவின் தலையை ஹரி, அம்ருதத்தை குடித்துக் கொண்டிருக்கும் சமயம் தன் சக்ரத்தால் துண்டித்தார். சம்ஹ்லாதன் மனைவி க்ருதி பஞ்சஜனம் என்பவனையும், ஹ்லாதனின் மனைவி தமனி வாதாபி இல்வலன் என்பவர்களையும், இவர்கள் இருவரும் அகஸ்தியர் அதிதியாக வந்த சமயம் அவரால் வயிற்றில் ஜீரணிக்கப் பட்டனர். அனுஹ்லாதன் மனைவி ஸூர்மி- பாஷ்கலன், மஹிஷன் என்பவர்களையும், விரோசனன் ப்ரஹ்லாதன் மகன், அவன் மகன் பலி.
பாணன் நூறு பிள்ளைகளை அஸ்னா என்பவளிடம் பெற்றான். பாணன் கிரீசனை ஆராதித்து, அவர் கணங்களின் தலைவனாக ஆனான். சாக்ஷாத் பகவான் கிரீசன் அவருடைய நகர பாலகனாக இருந்தார்.
திதியின் மற்ற புத்திரர்கள்: மருத் என்பவர்கள் நாற்பத்து ஒன்பது பேர். இவர்கள் இந்திரனுக்கு சமானமாக இருந்தாலும் இவர்களுக்கு வாரிசு இல்லை.
பரீக்ஷித் ராஜா வினவினான்: ஏன்? எதனால் அசுரத்வம் என்பதாலா? இந்திரனுக்கு சமமாக எப்படி ஆனார்கள்? முனிவரே! மற்றவர்களும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். அந்த சரித்திரத்தைச் சொல்லுங்கள். அவரும் சொல்ல தயாரானார்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: திதியின் மகனை, இந்திரனுடன் அருகில் இருந்து பகவான் விஷ்ணு வதைத்தார். கோபமும் வருத்தமும் மேலிட திதி என்ன செய்வது என்று யோசித்தாள். சகோதரனைக் கொன்றவன் இந்திரன். சற்றும் இரக்கம் இல்லாமல், கொன்றதுமல்லாமல், பச்சாதாபமும் இல்லாமல் தன் சுகமே பெரிதாக இருக்கிறான். மரணமடைந்த உடலை கிருமிகள் தின்று தீர்த்தால், க்ருமய என்றும், நாய் போன்ற பிராணிகள் அழித்தால் விஷ்டய என்றும், நெருப்பில் தகித்தால், பஸ்மம் என்றும் சொல்லப்படும் தன் தேக சுகத்துக்காக, மற்ற ஜீவன்களிடம் விரோதம் பாராட்டுகிறான், அழிக்கிறான். அவன் தன்னலம் தவிர வேறு என்ன அறிவான், (தானும் அதே போன்ற தேஹி- உடலையுடையவன் தானே, இதே கதி தானே நமக்கும்வரும் – என்பதாக ) இந்த இந்திரனுடைய மதம்- கர்வம் இதை அடக்கக் கூடிய புத்திரன் எனக்கு வேண்டும் என்று கணவன் காஸ்யபரை நச்சரித்தாள். அவரும் சம்மதித்தார். மனதுக்கு இசைந்த மனைவி, கேட்பதை பொதுவாக கணவன்மார் மறுப்பதில்லை. என்ன வரம் வேண்டுமோ கேள் என்றவரிடம், இந்திரனைக் கொல்லும் மகன் வேண்டும் என்று திதி யாசித்தாள். என் இரு பிள்ளைகளயும் கொன்றவன் அவன். இதைகேட்ட காஸ்யபர் திடுக்கிட்டார், என்ன வேண்டும் கேள், என்று வாக்கு கொடுத்தபின் மீறவும் முடியாது. இந்திரனும் பிழைக்க வேண்டும் – என்ன செய்யலாம் என்று யோசித்து, அவளிடம் ‘ அப்படியே ஆகட்டும். உன் விருப்பப்படியே மகன் பிறப்பான். ஒரு வருஷம் விரதம் மேற்கொள். அவளும் சம்மதித்து, விரத நியமங்களை முழுவதுமாக கேட்டுத் தெரிந்து கொண்டாள்.
காஸ்யபர் சொன்னார்: எந்த பிராணியையும் ஹிம்சிக்க கூடாது. யாரையும் சபிக்க கூடாது. பொய் சொல்லக் கூடாது. நகங்களை, ரோமங்களை வெட்டக் கூடாது. அமங்களமான பொருட்களைத் தொடக் கூடாது. நீரில் மூழ்கி ஸ்னானம் செய்யக் கூடாது. துர்ஜனங்களேயானாலும் அவர்களை கோபிக்க கூடாது, பேசவும் வேண்டாம். மீந்து போன பழைய உணவை சாப்பிடக் கூடாது. மாமிசமோ, சாதாரணமாக நல்லதல்ல என்று சொல்லப் படும் பொருட்களை சாப்பிடாதே. அஞ்சலியால் தண்ணீர் குடிப்பது, சந்த்யா காலங்களில் விரித்த கேசத்துடன் வெளியில் நடமாடாதே, கால்களை அலம்பாமல் தூங்கப் போகாதே, சந்த்யா காலங்களில் தூங்காதே, விடியுமுன் எழுந்து தினசரி நியமங்களை, ப்ராம்மணர்கள், பசு, லக்ஷ்மீ, ஸ்ரீமன் நாராயண பூஜை முதலிய பூஜைகளை விடாமல் செய். இவ்வாறு ஒரு ஆண்டு முழுவதும் ஸ்ரத்தையுடன் செய், உன் விருப்பப் படி மகன் பிறப்பான் என்று சொல்லி, அவளுக்கு கர்பாதானம் என்பதை செய்து விட்டு, புறப்பட்டு போனார். இந்திரனும் அவர் எண்ணத்தை புரிந்து கொண்டவனாக ஆஸ்ரமத்தில் திதிக்கு பணிவிடைகள் செய்து வந்தான்.
தினமும் வனத்திலிருந்து பூவோ, பழங்களோ, சமித், குசம் முதலிவைகளோ, இலைகளோ, நீரோ, அந்தந்த சமயம் தேவையறிந்து கொண்டு வந்து கொடுத்தான். எந்த விதத்திலாவது அவள் தன் விரதத்தில் தவறு செய்வதையே எதிர் நோக்கி காத்திருந்தான். வேட்டையாடுபவன் வஞ்சனையாக மிருகத்தை தொடருபவன் போல பரிசாரகனாக நாடகமாடினான். ஒருநாள், களைத்தவளாக, சந்த்யா காலத்தில் தூங்கி விட்டாள். கால்களை அலம்பாமல் தூங்குவதைக் கண்ட இந்திரன் யோக மாயையால் பரகாய ப்ரவேசம் எனும் – வேற்று உடலில் பிரவேசிப்பது எனும் செயலை செய்து அவள் உதரத்தில் புகுந்தான். பொன் போல பிரகாசமாக இருந்த சிசுவை தன் வஜ்ராயுத்தால் ஏழாக சிதைத்து விட்டான். சிதைக்கப் பட்ட பின்னும் , அம்மா என்று அழுத குழந்தைகளை சமாதானப் படுத்துபவன் போல ஒவ்வொன்றையும் ஏழு ஏழாக சிதைத்தான். அதன் பின்னும் அந்த சிசுக்கள், இந்திரனிடம் சொல்லிற்று. ஹே இந்த்ர! நாங்கள் மருத்- காற்றின் சகோதர்கள். ஏன் பயப்படுகிறாய் என்றன. அதைக் கேட்ட இந்திரன், அடிப்பதை நிறுத்தினான். நீங்கள் என் சகோதரர்கள், என்னுடனேயே இருங்கள் என்று மருத் கணங்கள் என்று அவர்களை ஏற்றுக் கொண்டான். அதுவும் பகவான் ஸ்ரீநிவாசனின் கருணையே. த்ரோண புத்திரனின் அஸ்திரத்திலிருந்து நீ பிழைத்தது போலவே அந்த சிசுக்களும் பிழைத்தன. அவைகளும் நாற்பத்தொன்பது மருத் கணங்களாக இந்திரனுக்கு சமமான அந்தஸ்தை பெற்றன. ஓராண்டுக்கு சிறிதே குறைவான நாட்கள் திதி ஸ்ரீ ஹரியை ஆராதித்து வந்ததன் பலன் அவள் குழந்தைகள் பிழைத்தன.
விழித்து எழுந்த திதி இந்திரனிடம் வினவினாள். கடினமான விரதத்தை அனுசரித்து ஒரு மகனை பெற நினைத்தேன். இந்த குழந்தைகள் எப்படி வந்தன? இந்திரன் தான் செய்ததைச் சொல்லி ‘தாயே உன் சங்கல்பம் எனக்கு எதிரான மகன் என்று இருந்ததால் நான் அருகிலேயே இருந்து உன் விரதத்தை கெடுக்கவே முயன்றேன். சந்த்யா காலத்தில் தூங்கிய சமயம் விரத பங்கமானதைக் கண்டு கர்பத்தைக் கலைத்தேன். தர்மம் அல்ல – புத்தியில்லாமல் நான் செய்த செயல். ஏழாக சிதைத்த பின்னும் அவை அம்மா என்று அழுதன. திரும்பவும் ஏழாக துண்டித்தேன். பகவானை நீங்கள் ஆராதித்து வந்தது வீணாகுமா? அவைகள் அழியவில்லை. ஸ்ரீ ஹரியின் க்ருபையால் எனக்கு சமமான அந்தஸ்துடன் மருத் கணங்களாக இருப்பார்கள். தாயே! என்னை மன்னித்து விடுங்கள். சுய நலமே பெரிதாக எண்ணி அல்பனாக நான் செய்த செயல். நல்ல வேளையாக இந்த சிசுக்கள் உயிருடன் இருக்கின்றன. திதியும் அனுமதித்து விடை கொடுக்க இந்திரன் கிளம்பிச் சென்றான்.
இது தான் அரசனே! மங்களமான மருத் கணங்கள் பிறந்த கதை.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், மருதுத்பத்தி கதனம் என்ற பதினெட்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-78
அத்யாயம்-19
பரீக்ஷித் ராஜா வினவினான். ப்ரும்மன்! பும்சவனம் என்ற விரதம் பற்றிச் சொல்லுங்கள். இந்த விரதம் ஸ்ரீ விஷ்ணு பகவானின் அனுக்ரஹத்தை தரும் என்பதால் அதை நன்றாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: மார்கழி மாதம் சுக்ல பக்ஷத்தில் பெண்கள் கணவன் அனுமதி பெற்று, இந்த விரதத்தைச் செய்யலாம். விரும்பிய வரம் அளிக்கும். இந்த மருத் கணங்கள் பிறந்த கதையை கேட்டுவிட்டு, பல் துலக்கி, குளித்து, வெண் நிற ஆடையணிந்து அலங்கரிக்கப் பட்ட மண்டபத்தில் ஸ்ரீ தேவியுடன் பகவான் விஷ்ணுவை ஆராதிக்க வேண்டும்.
अलं ते निरपेक्षाय पूर्णकाम नमोऽस्तु ते । महाविभूतिपतये नमः सकलसिद्धये ॥ ४॥
यथा त्वं कृपया भूत्या तेजसा महिमौजसा ।-जुष्ट ईश गुणैः सर्वैस्ततोऽसि भगवान् प्रभुः ॥ ५॥
विष्णुपत्नि महामाये महापुरुषलक्षणे ।प्रीयेथा मे महाभागे लोकमातर्नमोऽस्तु ते ॥ ६॥
ओं नमो भगवते महापुरुषाय महानुभावाय-महाविभूतिपतये सह महाविभूतिभिर्बलिमुप-
हराणीति अनेनाहरहर्मन्त्रेण विष्णोरावाहना-र्घ्यपाद्योपस्पर्शनस्नानवासौपवीतविभूषण-
गन्धपुष्पधूपदीपोपहाराद्युपचारांश्च-समाहितोपाहरेत् ॥ ७॥
அதன் பின் பன்னிரண்டு ஆஹுதி இந்த மந்திரங்களுடன் சொல்ல வேண்டும்.
ओं नमो भगवते महापुरुषाय महाविभूतिपतये स्वाहेति ॥
வேண்டும் வரங்களை நினைத்துக் கொண்டு ஸ்ரீ தேவி, பகவான், இருவரையும், பக்தியுடன் பூஜிக்க வேண்டும். விழுந்து நமஸ்கரித்து பத்து முறை இந்த மந்திரத்தைச் சொல்லி, துதிகளையும் சொல்லவேண்டும்.
நீயே விஸ்வம் உண்டாக காரணமான விபு. இந்த ப்ரக்ருதி, இயற்கை உன் மாயையே. இதை மீற முடியாது. இதன் அதீஸ்வரன் நீயே. பர புருஷனான நீ தான் யாக மூர்த்தி என்று வணங்குகிறேன். செய்பவனும் நீயே, செயலின் பலனும் உனதே. தேவி, நீயே சரீரத்தில் ஆத்மாவாக நிறைந்துள்ளாய். இருவருமாக உலகில் வரம் அருளும் பரமேஷ்டி எனப்படுகிறீர்கள். எனவே, எனக்கு உங்கள் ஆசிகள் பரிபூர்ணமாக கிடைக்கட்டும்.
இவ்வாறு ஸ்ரீநிவாசனை தேவியுடன் சேர்த்து பூஜித்து, உபசாரங்கள் செய்து ஆசமனீயம் செய்து முடிக்க வேண்டும். தெரிந்த துதிகளைச் சொல்லி, இருவருமாக பூஜித்தல் நலம். இது ஒரு விரதம் விஷ்ணுவை வேண்டி செய்வது. இந்த பூஜையை பன்னிரண்டு மாதங்கள் அனுசரிக்க வேண்டும். கார்த்திகை மாதத்தின் கடைசி நாள் முடிக்க வேண்டும். மறுநாள் புனர் பூஜை செய்து பாயசம் நைவேத்யம் செய்து பந்துக்களுடன் விருந்துண்ண வேண்டும். மீதியான பாயசத்தை கணவன் மனைவிக்கு கொடுத்து இருவருமாக நல்ல புத்திரனை வேண்டி சாப்பிட வேண்டும்.
விதிகளுடன் இந்த பூஜையை செய்து விரும்பியதை அடையலாம். பெண்கள் இந்த விரதத்தை அனுசரித்து, நல்ல கணவன், செல்வம், நீண்ட ஆயுள், புகழ், வீடு வாசல்கள் என்பவைகளைப் பெறலாம். கன்யா பெண்கள் நல்ல பதியை வேண்டியும், அழகிய லக்ஷணம் வேண்டியும், மகன் நீண்ட ஆயுளுடன் இருக்கவும், தன தான்யங்கள் நிறைந்த சுகமான வாழ்க்கையையும் பெறலாம். ப்ரசன்னமாக ஆன ஸ்ரீதேவி யுடன் கூடிய பகவான் எல்லா நன்மைகளையும் அருளுவார்கள். அரசனே! இது தான் திதி செய்த விரதம்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், பும்சவன விரத கதனம் என்ற பத்தொன்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-18
இத்துடன் ஆறாவது ஸ்கந்தம் முடிவடைகிறது.
||ஓம் தத் ஸத் ||
ஸ்ரீமத் பாகவதம் –
ப்ரிய வ்ரத விஜயம் என்ற ஐந்தாவது ஸ்கந்தம் || ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||
அத்யாயம்-1
ராஜா பரீக்ஷித் தன் சந்தேகத்தைச் சொன்னார்: ப்ரியவ்ரதன், ஆத்மாராமன்- இல்லற வாழ்கையை துறந்தவன் என்று கேள்வி. குடும்பஸ்தனாக, கர்ம பந்தனாக மாறியது எப்படி? அது அவருக்கு தலை குனிவு இல்லையா? துறவி என்று ஆனபின், திரும்ப குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொள்வது முடியுமா? அவர்கள் வழியே வேறு. மனம் ஒன்றி குடும்பத்தில் ஈடுபடுமா?
சந்தேகம் தான். மனைவி குழந்தைகள் வீடு என்று பற்றுடன் இருப்பவர்கள் அதிலிருந்து விடுபட்டு ஸ்ரீ ஹரியிடம் பக்தி செய்து மனம் மாறியது கேட்டிருக்கிறோம்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: சரியான கேள்வி. உத்தமஸ்லோகன் என்று வர்ணிக்கப் படும் பகவானின் சரணாரவிந்தங்களில் முழுமையாக ஈடுபட்டவர்கள், வேறு எதையும் விரும்ப மாட்டார்கள். அந்த ராஜகுமாரன் ப்ரியவ்ரதன், பரம பாகவதரான நாரதரிடம் பயின்றவன். பரமார்த்த தத்வத்தை உள்ளபடி அறிந்தவன். ப்ரும்மசத்ரம்- என்ற ஒரு யாகம், அதைச் செய்ய தீக்ஷை எடுத்துக் கொண்டான். பூமியை ஆள தேவையான எல்லா குண நலன்களையும் குறைவற பெற்றவன். தன் தகப்பனார் சொன்னதின் பேரில், பகவான் வாசுதேவனிடம் அனைத்தையும் சமர்ப்பித்தவனாக, அவரை முன்னிட்டு, அல்லது அவரது வழிகாட்டலில், தன் அனைத்து ராஜ காரியங்களையும் செய்து வந்தான். தனக்கு தலை குனிவு என்று நினைக்கவில்லை. வாசுதேவனின் கட்டளை என்று எடுத்துக் கொண்டான்.
ஆதி தேவனான பகவான் ஸ்வாயம்புவ மனு ஏன் இந்த மாறுதலுக்கு அனுமதித்தார், என்றால், உலக அபிப்பிராயம் அது போல இருந்தது. ஒரு சமயம் அவர் தன் பரிவாரங்கள், நிகமங்கள் ஸூழ தன் வாசஸ்தலத்திலிருந்து தான் ஸ்ருஷ்டித்த உலகங்களை காண வந்தார்.
ஆங்காங்கு வானவெளியில் பறவை ராஜன் போல வரிசை வரிசையாக விமானங்களில் மற்றவர்களும் உடன் வர பவனி வந்தார். வழியில் சித்த, கந்தர்வ,சாதுக்களான முனிவர்கள் வந்து புகழ் பாட கேட்டு ரசித்தபடி, கந்தமாதன மலை சிகரத்தில் இறங்கினார்.
அங்கு,அவரை தேவ ரிஷிகள், ஹம்ஸ வாகனத்தில், உலக தந்தையான பகவானை ஹிரண்ய கர்பன் என்று போற்றப் படும் அவரை வரவேற்க தந்தையும் தனயனுமாக பரபரப்புடன் கை கூப்பியபடி வந்தனர்.
அவரும் அந்த உபசரிப்பை ஏற்றுக் கொண்டார். அரசவை பாடகர்கள் துதி செய்து பாடியதைக் கேட்டவர் தயையுடன் ப்ரியவ்ரதனைப் பார்த்து, சிரித்தபடி சொன்னார்.
ஸ்வாயம்புவ மனு சொன்னார்: மகனே, நான் சொல்வதை கேள். இது உலகில் நடைமுறையில் உள்ள சத்யமான சொல். புவியில் பிறந்த பின் நமக்கு நம் வாழ்வின் போக்கு எப்படியிருக்கும் என்பது முன்பே தெரிவதில்லை. அந்தவகையில் மனிதர்கள் பராதீனர்கள் தான். அதற்காக தெய்வத்தை நிந்திக்கவும் வேண்டாம். மஹரிஷிகள் முதல் நாங்களும் முன்னமே விதிக்கப் பட்டதைத்தான் அனுபவிக்கிறோம். உடல் எடுத்தவன்,(மனிதன்) தனக்கு பிடிக்கவில்லை என்று உதறவும் முடியாது. தவமோ, வித்யை என்ற கல்வியோ, யோகமோ, புத்தியோ, அர்த்த தர்மம்- பொருளைக் கொடுத்தோ, மற்றவர் உதவியாலோ மாற்ற முடியாது. தேகம் அமைந்த விதம், அது வளரும், அழியும், செயல்களைச் செய்யவும், சோகம், மோஹம், சதா பயம், என்றும், சுகம், துக்கம் என்றும், எது எந்த விதத்தில் வரும், அதை அனுபவிக்க மட்டுமே முடியும், முன்னெச்சரிக்கையாக தடுக்கவோ, நல்லதானால் அனுபவிக்கத் தயாராகவோ முடியாது. மகனே, நமது, உடல், வாக்கு, இவற்றால் கண்களுக்குத் தெரியாத கயிற்றால் கட்டப் பட்டிருக்கிறோம். கால் நடைகளில் மூக்கின் வழியாக கட்டப்படும் கயிறு-மூக்கணாங்கயிறு- அது நம் வசதிபடி உடன் வரவேண்டும் என்று கட்டுகிறோமோ, அதே போலத்தான் இந்த வேத சாஸ்திரம், மற்றும் சத்வம் முதலான குணங்கள் என்ற கயிற்றினால் கட்டப் பட்டு .ஈஸ்வரனுடைய பலி கடாவாக இருக்கிறோம். கண்ணால் பார்க்க முடிந்தவன் கண்ணில்லாத ஒருவனை அழைத்துச் செல்வதைப் போல. ஈஸ்வரனால் ஸ்ருஷ்டிக்கப் பட்டதை, சுகமோ, துக்கமோ, அந்தந்த காலத்தில் அனுபவிக்கிறோம். தூங்கி விழித்தவன் போல, முன் தினத்தை முற்றிலும் மறந்தவனாக, உண்டு உடுத்து நாளைக் கழிக்கிறோம். பயந்தவனுக்கு அரண்யத்திலும் பயம் தான். ஆறு குணங்கள், இவைகளுடன் பிறந்தவன், அதை கட்டுக்குள் வைக்கத் தெரிந்தவன் வீட்டில் இருந்தால் என்ன? வனத்தில் இருந்தால் என்ன? (பிறப்பு, இறப்பு, பயம்,சோகம்,காம,மோகம் என்றவை) நீ பத்மநாபனுடைய சரணாரவிதங்களை ஆஸ்ரயித்தவன், இந்த ஆறு உடன் பிறந்த குணங்களை ஜயித்தவன், மனிதனுக்கு விதிக்கப்பட்ட போகங்களை அனுபவி. பற்றின்றி இயல்பாக வாழ்கையை நடத்து. இவ்வாறு மூவுகத்திற்கும் குரு எனப்படும் குல மூத்தவரான பகவான் சொன்னதை சரியென்று ஏற்றுக் கொண்டான்.
மனு பகவானும், நல்ல முறையில் தனது உபதேசங்களை ஏற்றுக் கொண்டதால் மகிழ்ந்து, ப்ரியவ்ரத நாரதர் இருவரையும் ஆசீர்வதித்து, அவரவருக்கு உரிய வாழ்க்கை முறைகளை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை அடைந்தார். சுர ரிஷிகளில் சிறந்தவரான நாரதரை, தன் வம்சத்தினான ப்ரியவ்ரதனுக்கு ராஜ காரியங்களில் உதவ ஏற்பாடு செய்தார். இல்லறம், போக வாழ்க்கை என்பவைகள் விஷ ஜலம் நிரம்பிய தடாகம் போன்றது என்று தோன்றினாலும், நாரதர் சரியான குருவாக இருந்து வழி நடத்துவார் என்று நம்பினார்.
ப்ரியவ்ரதனும், ஜகதீபதி- மஹா ராஜா என்ற பெரிய ராஜ்யாதிபதியானான். ஈஸ்வரன் விட்ட வழி என்று தன் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். பகவான் ஆதி புருஷன், அவர் பாத சேவைகளை விடாமல் செய்து வந்ததால், தெளிவான மனதுடன், எந்த ஸூழ்நிலையிலும் தன் கொள்கைகளை கை விடாமல் அந்த பெரிய ராஜ்யத்தை ஆண்டு வந்தான்.
ப்ரஜாபதி விஸ்வகர்மா என்பவரின் மகள் பர்ஹிஷ்மதி என்பவளை மணந்து தனக்கு சமமான குணம், சீலம், செயல் திறம், ரூபம், வீர்யம் உதார குணம் இவைகளுடன் பத்து பிள்ளைகளும், இளையவளாக உர்ஜஸ்வதி என்ற பெயருடன், மகளையும் பெற்றார். ஆக்னீந்த்ரன், இத்ம ஜிஹ்வன்,யக்ஞ பாஹு, மகாவீர,ஹிரண்யரேதஸ், க்ருத ப்ருஷ்ட, சவனமேத, அதிதி, வீதி ஹோத்ர, கவய என்று அனைத்தும் அக்னியின் பெயர்களே.
இவர்களில், கவி, மஹாவீரன்,சவனன் என்ற மூவரும் பாரமஹம்ஸ்யம் எனும் துறவு வாழ்க்கையே ஏற்றனர்.
அவர்கள் சாந்தமாக பரம ரிஷிகளுக்கு சமமான வாழ்கையை வாழ்ந்தனர்.
பயந்தவர்களுக்கு அபயம் அளிக்கும் வாசுதேவனையே அனவரதமும் தியானிப்பவராக ப்ரியவ்ரதன் பொது மக்களின் நன்மையே நினைத்து அரச காரியங்களை கவனமாக செய்தார். மற்றொரு மனைவியிடம் மூன்று புத்திரர்கள் உத்தம, தாமசோ, ரைவத என்ற பெயர்கள். அவர்கள் மன்வந்தராதி பதிகள் ஆனார்கள்.
பல ஆண்டுகள் இவ்வாறு இல்லறத்தை நல்லறமாக வாழ்ந்து வந்த அரசன் சிறிதும் பாதிக்கப்படாத தன் குண நலன்களால் குறைவற்ற நிறைந்த செல்வம், வளமான பூமி, தர்மம் தவறாத ஆட்சி, பர்ஹிஷ்மதியுடன் இனிய தாம்பத்யம், என்று சந்தோஷமாக இருந்தான்.
ஸூரியன் எவ்வாறு சுர கிரியைச் சுற்றி வந்து பாதி உலகை தபிப்பவனாகவும், பாதி உலகை மூடி இருட்டாக்குபவனாகவும் உலகில் அறியப் படுகிறானோ, அதே போல பகவதுபாசனா பலத்தால், சீரான ஒரே வேகம் கொண்ட பிரகாசமான ரதத்தில் ராஜ்யத்தில் சுற்றி வந்து இரவையும் பகலாக்குவேன் என்று முனைந்தான்.
அந்த ரத சக்ரத்தில் ஏழு சமுத்திரங்களும் ஆரமாக இருந்தன. ஜம்பூ, ப்லக்ஷ, சால்மலீ, குச, க்ரௌஞ்ச,சாக, புஷ்கர என்ற பெயருடைய தீவுகள். இவை கிழக்கின் கிழக்கிலும், வடக்கின் வடக்கிலும் இரண்டு மடங்காகிக் கொண்டே சென்றன. க்ஷாரோத (உப்புக் கடல்), இக்ஷு ரஸ கரும்பு ரசம் நிறைந்த கடல்) , சுர (மது) ரசம்,(மது-தேன்) க்ருதோத (நெய்), க்ஷீரோத (பால்) ததி மண்டோத (தயிர்) சுத்தோத (சுத்தமான நீர்) என்று ஏழு கடல்கள், அந்த ஏழு தீவுகளைச் ஸூழ்ந்து அமைந்திருந்தன. தன் மகன் அக்னீந்திரன் முதலானவர்களை ஒவ்வொரு தீவுக்கும் அதிபதியாக்கினார். ஊர்ஜஸ்வதி என்ற மகளை உசனஸ் (சுக்ராசார்யர்) என்ற முனிவருக்கு கொடுத்தார். தேவயானி என்ற அவர் மகள் ப்ரசித்தமானாள்.
இவ்வளவும் செய்தபின் ப்ரியவ்ரதன் மனம் கலங்கினான். இது என் இயல்பு இல்லை என்று உணர்ந்தான். புலனடக்கி அத்யாத்ம வாழ்க்கை வாழ நினைத்தவன் தன் புத்திரர்கள், மனைவி என்று வாழ்ந்தது சரியா என்று சந்தேகம் வந்தது. நாரதரிடமே சரணடைந்தான்.
ஸ்லோகங்கள்:
பகவான் அருள் இல்லாமல் ப்ரியவ்ரதனால் இவைகளை செய்திருக்க முடியுமா? சமுத்திரங்கள் முன்பே பகவானால் தோற்றுவிக்கப் பட்டன. ப்ரியவ்ரதன் அந்த தீவுகளில் தன் புத்திரர்களை அரசர்களாக்கி அங்கு நகரங்கள், உயிரினங்கள், மனிதன் உட்பட வாழ வகை செய்தனர். ஒவ்வொரு தீவும், நதிகளும் , மலைகள், காடுகள் இவைகளுடன் எல்லைக்கு உட்பட்டு இருந்தன. பூமியை இவ்வாறு வசதிகள் நிறைந்ததாகச் செய்தவன் என்று பாராட்டப் பட்டான்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரியவ்ரத விஜயம் என்ற ஐந்தாவது ஸ்கந்தத்தில், முதல் அத்யாயத்தின் தமிழாக்கம் ) வசன நடையில் உள்ளது.
அத்யாயம்-2
இவ்வாறு தந்தையால் நியமிக்கப் பட்ட ஆக்னீந்திரன் ஜம்பூ த்வீப தீவில் ப்ரஜைகளை தங்கள் சொந்த மகன்கள் போல பாலித்தான். தர்மம் தவறாமல் ஆட்சியைச் செய்தான். புத்ரனை விரும்பி தவம் செய்ய தேவ லோக பெண்கள் நடமாடும் மலையின் சிகரத்தில், பூஜைக்கான த்ரவ்யங்களோடு வந்து சேர்ந்தான். மனம் ஒன்றி தான் செய்யப் போகும் தவம் பலன் தர வேண்டும் என்று பகவானை வேண்டியபடி பூஜைகளைச் செய்த பின் தியானத்தில் ஆழ்ந்தான். அதை அறிந்த பகவான் ஆதி புருஷன், தன் சபையில் பாடிக் கொண்டிருந்த பூர்வசிதி என்ற அப்சர ஸ்த்ரீயை அழைத்து, அங்கு செல்ல பணித்தார். அவளும் அழகான அந்த ஆசிரமத்தில், பலவிதமான மரங்கள், சிறு தாவரங்கள் நிறைந்த இடத்தில், கொடிகள் ஸூழ்ந்து மண்டபமாக இருந்த இடத்தில், பறவைகள் ஜோடியாக இருப்பதையும், அவைகள் கூக்குரலே வேத மந்திரம் போல ஒலிப்பதையும் ரசித்தவளாக, அருகில் நீர் நிலையில் நீர் கோழிகள், காரண்டவ, கல ஹம்ஸ, இவைகள் வளைய வரும் தாமரைத் தடாகத்தை பார்த்தாள். மென்மையான, நடையுடன், அவள் அங்கு சுற்றி வந்த சமயம் கால்களின் நூபுரம் கண கண வென்று ஒலி எழுப்பியது. அந்த ஓசையால் கவரப் பட்டு நர தேவ குமார:- ராஜ குமாரன், சமாதி யோகம் கலைய, கண்களை சிறிதே திறந்து நோக்கினான்.
சற்று தூரத்தில், பூக்களை முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவளைக் கண்டான். தேவதையா, மனித பெண்ணா மனதை கவரும் அழகுடன் இருக்கிறாள் என்று எண்ணினான். வெட்கமும் வினயமுமாக அவள் அங்கு நடந்து செல்வதைக் கண்டவன் மனதில் மன்மதனின் அம்புகள் ஆழப் பதிந்தன. மென் முறுவலோடு அவள் பேச ஆரம்பித்ததும், தன்னையே மறந்தான். மதுவில் மயங்கிய தேன் வண்டைப் போல வேகமாக நடந்து அருகில் சென்றான். அவளின் மயில் தோகையை ஒத்த கேசத்திலிருந்து, ஒவ்வொரு அங்கமாக பார்த்து வியந்தான். அவள் திரும்பி பார்த்த சமயம், பகவான் மகரத்வஜன்- மன்மதன் வலையில் வகையாக அகப்பட்டவனாக ஆனான், ஜடம் போல தன்னை மறந்து பேசலானான்.
யார் நீ? என்ன வேண்டும்? இது சிறந்த முனிவர்கள் வசிக்கும் மலை. பரதேவதையின் மாயையே உருவெடுத்து வந்தவளா? கையில் எதற்கு வில்? இங்குள்ள சாது மிருகங்களை வேட்டையாடவா? பகவானின் பாணங்கள்- நூறு இலைகள் வடிவில் உள்ள ஆயுதம், இவை. உன் பற்களா? யாரைத் தேடுகிறாய்? சாதுவான என் புத்திக்கு எட்டவில்லை. உன் விக்ரமம் எங்கள் நன்மைக்கே என்று இருக்கட்டும். இங்கு பல பெண் மாணவிகள் படிக்கின்றனர். ரகசியத்துடன் கூடிய அஜஸ்ரன்- ஈஸ்வரனை மகிழ்விக்க சாம கானம் பாடுகிறார்கள். உன் கேசத்திலிருந்து விழும் பூக்கள், வேத சாகைகள் பகவானை அர்ச்சிப்பது போல இருக்கின்றன. தித்திரி- கௌதாரி என்ற பறவை கொஞ்சுவது போல உன் வாக்கை கேட்க விரும்புகிறேன். கதம்ப புஷ்பம் போன்ற அங்கங்கள். செதுக்காத சிலை போன்ற உடல், இதில் ரிஷிகளின் வல்கலம் பொருந்துமா? எந்த ஆஸ்ரமத்தை நீ ஒளி பெற செய்கிறாய்? இந்த இரண்டு மலைகளின் நடுவில், சிறுத்த இடம் இதில், எதைக் காண வந்தாய்? அருணனின் நிற இந்த பத்மம் போன்ற கண்கள் எந்த ஆசிரம விளக்கை ஒளி பெற செய்கின்றன. உன் இருப்பிடத்தைக் காட்டு, நண்பனே! (அல்லது உன்னையே காட்டு) உன் எழில் நிறைந்த ரூபத்தை நான் முழுதும் காணும் படி நீயும் உன் சம்மதத்தை கண்களால் தெரிவிப்பதாக உணருகிறேன். . அத்புதம். சரஸமான ராஸம் என்ற மது நிரம்பிய உன் முகம்.
அங்கம் அங்கமாக வர்ணிக்கிறான். தபோதன! இவைகளை என்ன தவம் செய்து கிடைக்கப் பெற்றாய்? என்னுடம் தவம் செய்ய வருகிறாயா? எனக்கு அனுக்ரஹம் செய். தெய்வமே அனுப்பியது போல வந்திருக்கிறாய். உன்னை விட மாட்டேன். உன்னைக் கண்ட என் கண்கள் அகலவேயில்லை. அழகிய ஸ்தனங்களை உடைய பெண்ணே! நீ என்னுடன் இணை பிரியாமல் இரு. என் தவமும் பலிக்கட்டும். ப்ரும்மா அனுக்ரஹிக்கட்டும்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு பெண்னை சம்மத்திக்க வைக்கத் தெரிந்த சாதாரண பொது ஜன பரிபாஷைகளால் பேசியே அந்த உயர் குலமான அப்சர ஸ்த்ரீயை தன் வசப் படுத்திக் கொண்டான். அவளும் அந்த வீரனான ராஜகுமாரன், புத்தி.சீலம், சம வயது, செல்வம், உதார குணம் இவைகளால் மனம் மகிழ்ந்து பலகாலம் அவனுடன் பூவுலகின் போகங்களை குறைவற அனுபவித்தாள்.ஒன்பது பிள்ளைகளைப் பெற்றாள்.
நாபி, கிம்புருஷ, ஹரிவர்ஷ,இலாவ்ருத,ரம்யக,ஹிரண்மய,குரு, ப்த்ராஸ்வ, கேது மால என்று பெயர்கள். இவர்களைப் பெற்ற பின், அந்த அப்சரஸ்த்ரீ தன் இருப்பிடம் சென்று விட்டாள்.
ஆக்ரீந்திரனின் பிள்ளைகள் தாயின் தொடர்பாலேயே, மிகுந்த பலமும், தந்தை பகிந்து அளித்த ஜம்பு தீபத்தின் பகுதிகளை பல வருஷங்கள் ஆண்டனர்.
ஆக்னீந்திரன் மனைவியை மறக்க முடியாமல் தவித்தான். சீக்கிரமே அவன் காலம் முடிந்தது. அதன் பின் ஒன்பது சகோதரர்களும் மேருதுஹித்ரு, மேரு தேவீம், ப்ரதிரூபா,உக்ரதம்ஷ்ட்ரீம், லதா, ரம்யா, ஸ்யாமா, நாரீ, பத்ரா தேவவதீ என்று ஒன்பது பெண்களைப் மணந்தனர்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரியவ்ரத விஜயம் என்ற ஐந்தாவது ஸ்கந்தத்தில், இரண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) வசன நடையில் உள்ளது.
அத்யாயம்-3
ஸ்ரீ சுகர் சொன்னார்: நாபி , மேரு தேவியை மணந்து, பிரஜைகள் இல்லாமையால், புத்ர வரம் வேண்டி யக்ஞ புருஷன் எனும் பகவானை வேண்டினான். சிரத்தையுடன், உள்ளன்புடன் வேண்டுதல்களை செய்தான். அரிதான த்ரவ்யங்கள், சரியான தேச காலங்களை அறிந்து, மந்த்ரங்கள், ருத்விக் தக்ஷிணைகள் என்று சாஸ்திரங்களில் சொல்லியபடி செய்தான். அதனால், சாதாரணமாக மனிதனின் மனம் வாக்குக்கு எட்டாத பகவான், மகிழ்ந்து, தன்னை நம்பியவர்களை எப்பொழுதும் காப்பவன் எனும் தன் வார்த்தையை நிறைவேற்றுபவன் போல, அவனுக்கு பார்த்த மாத்திரத்தில் மனதை கவரும் அழகிய அங்கங்களுடன் மகனாக பிறந்தார். நான்கு புஜங்களும், நாவல் நிற, பட்டு வஸ்திரமும், மார்பில் பிரகாசமான ஸ்ரீவத்ஸம் எனும் மணியும், வன மாலையும், கதையும், கிரீடமும், குண்டலமுமாக, தக தகக்க, கைகளில் கடகமும், இடையாபரணமும், ஹார கேயூரங்களும் நூபுரம் முதலிய மற்ற பூஷணங்களும் பிரகாசிக்க, ரிஷிகள், அரச சபையினர், குடும்பஸ்தர்கள், கௌரவம் மிக்க அதிகாரிகள், அனைவருமே, பரம ஏழை மிகப் பெரிய செல்வத்தை அடைந்தது போல மகிழ்ந்தனர். தலை குனிந்து வணங்கியபடி காண வந்தனர்.
ரித்விக்குகள் சொன்னார்கள்: உங்களுடைய அடியார்கள் நாங்கள். எங்கள் வணக்கம் உங்களுக்கு உரியதாகுக. நல் உபதேசம் பெற்றவர்கள் கூட உலக வாழ்கையில் மூழ்கி இருப்பவர்கள் ஈசன், ஈசன் அல்லாதவன் , இவைகளுக்கும் மேம்பட்ட புருஷன், தன் வசத்தில் இயற்கையை வைத்திருப்பவன், தன் விருப்பப்படி படைப்புத் தொழிலைச் செய்பவன், இருந்தும் ப்ரக்ருதி, புருஷன் என்ற இரண்டிற்கும் அப்பாற்பட்டவன் ஆயிரக் கணக்கான பெயர்களில் துதி செய்யப் படுபவன், என்றுள்ள உங்கள் ரூபத்தை முழுமையாக எடுத்துச் சொல்லவா முடியும்?
உடன் இருப்பவர்கள் அன்புடன் புகழ் பாடுவார்கள். அதனுடன் இணைந்து துளசி தளங்கள். மணம் வீச பலவிதமான பூக்களும் , துளிர்களும் கொண்டு பூஜை செய்வர். இதில் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறீர்கள். அதை விட அதிகமாக கடினமான யாக காரியங்கள் செய்து, உங்கள் அருள் செல்வத்தை அடைகிறோம். தங்களைப் போலவே, ஒவ்வொரு யாகத்திலும், அனாயாசமாக பல மாறுதல்கள், மேம்பாடுகள் செய்து, அனேக புருஷார்தங்கள் என்ற நன்மைகளை அடைகிறோம். உங்கள் ஆசிகளும், நல் வாழ்த்துக்களும் எங்களுக்கு பூரணமாக இருக்க வேண்டும்.
அறியாமயால் சிலர் தன் நலனுக்காக வரம் வேண்டுபவர்களாக இருக்கலாம். விஷயம் அறிந்தவர்கள், பரம புருஷனை அறிந்தவர்கள். அவர் கருணையை உணர்ந்தவர்கள் ஆதலால் அபவர்கம் என்ற மிகச் சிறந்த வரத்தை அவராகவே அளிக்கும் சமயம், வேறு எதையும் யாசிக்க மாட்டார்கள். ஆகையால், அர்ஹத்தம- மகானான தாங்கள் தரிசனம் கிடைத்த பின் வேறு என்ன வேண்டும்? நன்மைகள் தானே வந்து சேரும். எனவே, பர்ஹிஷ ராஜ ரிஷிக்கு, வரத ரிஷபனான உங்கள் தர்சனமே பரம மங்களம். தீயில் பொசுக்கியது போல எங்கள் குணக் குறைவு லவ லேசமும் மீதியில்லாமல் பொசுக்கி விட்டது. தூய்மையானவர் தாங்கள். முனிவர்கள் அனவரதமும் மனதில் எண்ணி துதிக்கும் மரம மங்களமான சரித்திரங்கள் உடையவர்.எதோ விதத்தில் கவனக் குறைவோ, பசி, தாகம் இவற்றாலோ, உடல் உபாதையாலோ, தவறு நேர்ந்தாலும் , ஜுரம், மரண தசையால் செய்யாமல் விட்டாலும் எங்கள் ஸ்மரணம் தவறாமல் இருக்க வேண்டும். உங்கள் நாமங்கள் மறக்காமலும், பெரியவர்களின் பஜனைகள் காதுகளில் ஒலித்துக் கொண்டும் இருக்க வரம் வேண்டும்.
அது தவிர, இந்த ராஜ ரிஷி மகனை வேண்டுகிறான். ப்ரஜைகளை ஆளும் தகுதியுடன் இவனுடைய சந்ததியினர் பிரஜைகளுக்கு தேவையானவைகளை செய்யவும் தனதன் போல செல்வ செழிப்புடன் இவன் பிரஜைகளும் இருக்க வேண்டும், உங்களுடைய ஆசிகளும், அனுக்ரஹமும் ஸ்வர்க ப்ராப்தியை விட மேலானது.
யார்தான் மீற முடியாத உங்கள் மாயையை தாண்டி, உலகியல் இன்ப துன்பங்களை கடந்து உங்கள் சரணத்தை நினைப்பார்கள். பொருளையே உயர்வாக நினைக்கும் மந்த மதிகள், அறியாமல் செய்த சிறு குறைகளையும் மன்னித்து ஏற்றுக் கொள்ள வேண்டுகிறோம்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இந்த துதிகளைக் கேட்டு தேவர்கள் தலைவனான (அனிமிஷ ருஷபோ- தேவர்கள் கண்கள் இமைப்பதில்லை என்பதால் அனிமிஷ – அவர்கள் தலைவன்) வர்ஷ தரன்- மழை பொழிபவன் -இந்திரன்- அவனால் வணங்கப் பட்ட சரணங்கள் உடையவர் தயையுடன் சொன்னார்: அஹோ! ரிஷிகளே, சொல்லுங்கள். நீங்கள் தெளிவான உங்கள் சொற்களால், கஷ்டமான வரங்களை யாசித்திருந்தாலும், என் வம்சத்தினன் எனக்கு சமமாக ஆவான் கைவல்யம் என்ற ப்ரும்ம பதவியை தரக் குறைவாக எண்ணக் கூடாது. என் முகத்திலிருந்து வந்தது தானே, அந்தணர்கள், தேவர்கள் குலமும். ஆக்னீந்த்ரனின் மகனுக்கு மகனாக நானே அவதரிக்கிறேன்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு வரமளித்து விட்டு மறைந்து விட்டார்.
விஷ்ணு தத்தன் என்ற பெயருடன், மகிழ்ச்சியுடன் நாபி என்ற அந்த அரசனுக்கு பிரியமாக எதாவது செய்ய நினைத்தவர், மேரு தேவியிடம் பிறவியிலேயே யோக சாதனைகளைச் செய்யும் ரிஷிகளைப் போல அவதரித்தார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில் இரண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) வசன ஸ்லோகங்கள்-22
அத்யாயம்-4
பகவானுடைய அவதாரம் என்பது பிறந்த பொழுதே பார்த்தவர்களுக்கு தெளிவாக தெரிந்தது. பகவானுடைய சிறப்பான குணங்கள், அமைதி, அடக்கம், வைராக்யம், ஐஸ்வர்யம், மஹா விபூதி இவைகளைக் கண்ட பொது மக்கள் வியந்தனர். தேவதைகளும் பூமியில் இறங்கி வந்தது போலவும், அந்தணர்களுடன் பிரஜைகளும் பிறந்த சிசுவை துதி செய்தனர். இப்படி பிறவியிலேயே அதிசயமாக இருந்த குழந்தைக்கு தந்தை ரிஷபன் என்று பெயர் ஸூட்டினார். பகவானுக்கு சமமான காந்தியுடன், பலம், ஸ்ரீ, கண்டவர் பாராட்டினர். இதைக் கண்டு இந்திரன் பொறாமை கொண்டு அந்த ஆண்டு மழையை வர்ஷிக்கவில்லை. யோகேஸ்வரர் ரிஷப தேவர் சிரித்தார். தன் யோக சாதன பலத்தால் அஜ நாபம் என்ற அந்த தேசம் முழுவதும் மழை பொழியச் செய்து விட்டார்.
அரசன் நாபியின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. சுபுத்ரனை வேண்டியதில் பகவானே வந்ததில் நா தழதழக்க பகவானை துதித்தார். அழகான சொற்களால், உடனே நரலோகம் வந்த புராண புருஷனின் கருணையை தன் மகனை கொஞ்சி குலாவுவதில் வெளிப் படுத்தினார். மகனே என்றும், தந்தையே என்றும் அன்புடன் அழைத்தார். மகனை குலாவுவதில் அதிக இன்பம் அடைந்தார்.
உரிய வயது வந்ததும், நாபி ராஜா, பிரஜைகளும் சம்மதிக்க, ருஷபரை ராஜ்யத்தில் அமர்த்தினார். தன் நம்பிக்கைக்கு உகந்த அந்தணர்களை உதவியாக நியமித்து விட்டு மேரு தேவியுடன் விசாலா என்ற இடத்தில் தவம் செய்ய சென்று விட்டார். நர நாராயணன் எனும் பகவான் வாசுதேவனை ஆராதித்தார். காலம் வரவும் அவர் பதம் அடைந்தார்.
பாண்டவர்கள், நாபி என்ற அந்த அரசனின் செயல்களை உதாகரணமாக சொல்வர். அப்படி என்ன விசேஷம் என்றால், அந்த அரசன் சத்புத்திரனை பெற்றான், தூய்மையான மனதுடன் செயல்களைச் செய்தான், அந்தணனர்களை கௌரவித்தான், தன் தவ வலிமையால் அவர்களும் யோகேசனான பகவானை தரிசிக்க வழி செய்தான் என்பர்.
அதன் பின் ருஷப தேவர், இந்த பூமி கர்ம க்ஷேத்ரம் என்பதை அறிந்து, குருகுல வாசம் செய்தார். வயது வந்ததும் குரு ஜனங்கள் அனுமதி பெற்று, இந்திரன் தன் மகளான ஜயந்தியை அளிக்க, அவளை மணந்து குடும்ப வாழ்க்கையை ஏற்றுக் கொண்டார். தன் குடும்ப நலன், தேச நலன், தேவதைகள், பித்ருக்களுக்கு செய்ய வேண்டியவை இவற்றை குறைவற செய்தார். தன் குலம் விளங்க தனக்கு சமமான நூறு பிள்ளைகளையும் பெற்றார்.
இவர்களுள் மகா யோகியான பரதன் முதல்வன். ஸ்ரேஷ்ட குணங்கள் நிரம்பியவன். அவனால் இந்த தேசமே பாரதம் என்று பெயர் பெற்றது.
குசாவர்தன், இலாவர்தன், ப்ரும்மாவர்தன், மலயகேது, பத்ரசேன, இந்த்ரஸ்ப்ருக், விதர்பன், கீகட என்று மற்ற ஒன்பது பேர் பிரதானமானவர்கள். கவி, ஹரி, அந்தரிக்ஷன்,ப்ரபுத்தன், பிப்பலாயன், ஆவிர்ஹோத்ரோ, த்ருமிலன், சமச:, கரபாஜனன், என்பவர்கள் பாகவதர்களாக, பாகவத தர்மத்தை ப்ரசாரம் செய்பவர்களாக ஆனார்கள். வாசுதேவ நாரத உரையாடலாக அதை பின்னால் வர்ணித்துச் சொல்கிறேன். ஜயந்தியின் மற்ற பிள்ளைகளும், தந்தையை அனுசரித்து நடந்தனர். இயல்பாகவே பெற்ற சிறந்த சீலம் , நல்ல கல்வி, வேத அறிவு, யாகங்களை செய்யும் திறன், செயல்களை ஆற்றலுடன் செய்து முடிப்பவர்கள், இவை தவிர ப்ரும்ம ஞானம் உள்ளவர்களாகவும் ஆனார்கள்.
ருஷப என்ற பெயருடன் பகவான், தானும், புவியில் மற்ற ஜீவன்கள் படும் சிரமங்களை தவிர்த்து, கேவலானந்தம் என்பதே பிரதானமாக, ஈஸ்வரன் தான் என்பதை உணர்த்த, காலத்தை அனுசரித்து வேத கர்மாக்களை, ஊக்குவித்தார். தர்மத்தை செய்வதில் தேவையான மாறுதல்கள் செய்தார். அறிஞர்களுடன் சமமாக நட்புடன் தர்மார்த, புகழ், ப்ரஜைகளின் நன்மை க்ருஹஸ்தாஸ்ரமத்தின் சிறப்பை வெளி படுத்துபவராக வாழ்ந்தார். எதை தலைவன் செய்கிறானோ, அதை பொது மக்கள் அனுசரிப்பார்கள். அதனால் தான் அறிந்த எல்லா தர்மங்களையும், ரகசியமானவை, ப்ரும்ம மார்கத்தில் செல்பவர் காட்டிய வழிகள், சமாதி என்ற வழிகளில் ராஜ்யத்தை ஆண்டான்.
த்ரவ்யம், தேச கால, வயது, ஸ்ரத்தா. இவற்றுடன் ருத்விக் எனும் பெரியவர்கள் உபதேசித்தபடி நூறு யாகங்களை செய்தான்.
ருஷப ராஜாவால் பரிபாலிக்கப் பட்ட இந்த தேசத்தில், யாருமே, தேவை என்பதை உணரவில்லை. கிடைக்காது என்று எந்த பொருளும் இல்லை. எப்பொழுதும், எதுவானாலும் எதோ விதத்தில் கிடைத்தது. அரசனின் யாகங்களில் அன்புடன் கலந்து கொண்டனர்.
ஒரு சமயம் ப்ரும்மாவர்தம் என்ற இடம் சென்ற சமயம் தன்னிச்சையாக சுற்றிக் கொண்டிருந்த பொழுது, ப்ரும்மரிஷிகள் நிறைந்த சபையில் ப்ரஜைகள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த தன் புத்திரர்களை கண்டான். மிகுந்த ஆஸ்ரய- அடைக்கலம் தரும் குணம் உடையவர்களாக, விநயம் நிறைந்த கட்டுப்பாடான ஏற்பாடுகளை செய்து வருபவர்களாகவும் இருப்பதை பார்த்து மகிழ்ந்தான். தானும் உபதேசங்கள் செய்தான்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில் நான்காவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) வசன ஸ்லோகங்கள்-19
அத்யாயம்-5
தன் புதல்வர்களைப் பார்த்து ரிஷபர் என்ற ராஜ ரிஷி, சில உபதேசங்களைச் செய்தார். உலக வாழ்க்கையில் தான், தன் குடும்பம் அதன் சௌக்யங்களே ப்ரதானம் என்று இருக்க வேண்டாம். ஆத்மார்த்தமாக அறிவு வளர வேண்டும். ப்ரும்ம ஞானம் தான் சௌக்யம் என்றும் சொல்கிறார். இதற்கு முதல் படி பெரியவர்களை, அறிவிற் சிறந்தவர்களை அண்டி சேவை செய்வது தான். சம சித்தமாக, அமைதியாக, கோபம் இல்லாத சாதுக்களின் நட்பு வேண்டும். பகவானிடத்தில் ஈடுபாடு கொண்டவர்களும், வீட்டு நிர்வாகத்தில், மனைவி மக்களிடத்தில் ப்ரீதியுடனும், அதற்கான பொருள் ஈட்டுவதும் அவர்கள் கடமை என்பதால் அனுமதிக்கப்பட்டதே. அது அவர்கள் தன்னடக்கம் இன்றி அது மட்டுமே என்று, பரமார்த்த அறிவு இன்றி இருப்பது தான் கெடுதல். அவமானம் என்று எண்ணுவது கூட அறியாமையே. ஆத்ம தத்வம் அறிந்தவர்கள், தான் மனதை கட்டுக்குள் வைக்கத் தெரிந்தவர்கள். கோப தாபங்கள் அவர்களிடம் நெருங்காது, அதன் எல்லை உடல் அளவிலேயே, மனதை பாதிக்க விடக் கூடாது. லௌகிகமான செயல்கள் சரீர தேவைகளை தீர்க்க செய்ய வேண்டியதும் அவசியமே. வாசுதேவனிடத்தில் ப்ரீதியுடையவனாக இருப்பது தான் முக்கியம். அவித்யா-அறியாமை அகலும். அதனால் விவேகம் வளரும், மன்யு என்ற கோபம் விலகி விடும். மனதை கெடுக்கும் முதல் எதிரி மன்யு தான். அடுத்தது சுயநலம், இது கண்களை மறைக்கும். நினைவையே மழுங்கச் செய்து விடும். மற்றவர்களிடம் குறையே தெரியும், அதனால் மனக்லேசம் என்று இதன் பாதிப்புகள் விரியும். சாஸ்திரங்கள் சொல்லும் நித்ய கர்மாகளைக் கூட செய்யவிடாமல் தடுக்கும்.
தாம்பத்யமும், மிதுனீ பாவம் என்ற ஆண் பெண் உறவு ஒருவருக்கொருவர் அன்புடன் இருப்பதை இயற்கை என்று ஏற்றுக் கொள்கிறோம். இதன் நீட்சியாக, க்ருஹம், நில புலங்கள், புதல்வர்கள் பெறுதல், அதற்கான பொறுப்புகள், என்று தொடர்ச்சியாக கவனம் செல்வதால், ப்ரஜைகளில், தான் தனது என்ற எண்ணத்தை விளைவிக்கிறது. இது உலகியலில் தவிர்க்க முடியாத பந்தம்.
தகுந்த குரு, ஜனங்களின் கஷ்டங்களை தீர்க்க எப்பொழுதும் எங்கும் மன அமைதிக்கு தவத்தையே உபாயமாக சொல்வார்கள். யோக சாதனைகள், பகவத் பக்தி இவைகளே இல் வாழ்ழ்கையில் அமைதி சேர்க்கும். இவ்வாறு, பக்தியையும், யோக சாதனைகளையும் உயர்வாக சொல்கிறார்.
தேஹம் தேஹி – உடல், அதனுள் உள்ள ஆத்மா இரண்டும் வெவ்வேறு – உடல் பௌதிகமானது, அழியக் கூடியது. ஆத்மா அதை இயக்குவது, அழியாதது என்ற அறிவு அத்யாத்ம யோகத்தால் வரும். இதை குருவை ஆசிரயித்து உடன் இருந்து சேவை செய்வதால் பெறலாம். ப்ராணாயாமம் செய்து மூச்சு பயிற்சிகளை விடாமல் செய்து வருவதும், சிரத்தையுடனும், நன்னத்தையுடனும், -உடல், உள்ளம் இரண்டும் சுத்தமாக இருக்கச் செய்து கொள்ளுதல்- தவிர வார்த்தைகளை அளந்து பேசுதல், சொல்லடக்கம் என்பது மிகச் சிறந்த குணம். இதை பகவானைப் பற்றிய உள்ளுணர்வு இருந்தால் மேம்பட்ட ஞானமாகும் (விக்ஞானம்). யோக சாதனைகளால் ஆற்றல் பெருகும். த்ருதி என்ற வைராக்யம், சத்வம் என்ற நல்ல குணம் இவை வளரும். நான் என்ற அஹம்பாவம் விலகும்.
கர்ம மார்கிகள், கற்றதால் வரும் பெருமிதத்தால் தவறு செய்யலாம். அவர்களும் யோக சாதனைகள் மூலம் தன்னையறியலாம். புதல்வர்களோ, சிஷ்யர்களோ, அரசனே! குருவேயானாலும், பகவானின் அனுக்ரஹம் வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள், முதல் காரியமாக, தன்னை திருத்திக் கொள்வார்கள். மன்யு என்ற கோபம் அண்ட விடாமல், சிஷ்யர்களிடம் பரிவுடன், ‘தத்’ என்ற உயரிய ஞானத்துடன் கர்ம மார்கங்களில் ஈடுபட செய்வார்கள். ஏனெனில் கர்ம மார்கத்தில் வரும் யாக காரியங்கள் உலக நன்மைக்காக ஏற்பட்டவையே. இப்படி உணர்ந்து செய்யாதவர்கள் தான் வீழ்வார்கள். இவ்வளவும் அறிந்தும் ஏதோ சுய நலத்துக்காக, பொறாமையாலோ, செய்பவன் கண் இருந்தும் குருடனாவான்.
மோக்ஷம் என்ற பிறவியிருந்து விடுபடும் அறிவைப் பற்றி சொல்லாத, குரு குருவல்ல. தன் உறவினர் என்றாலும் உறவே இல்லை. தந்தையோ, தாயோ கூட இல்லை. பதியோ, பத்னியோ கூட இல்லை. ம்ருத்யு பயம் என்பதை போக்காத தெய்வமும் இல்லை.
இந்த சரீரம் எனக்கு அமைந்து விட்டது, இதை தவிர்க்க முடியாது. என் ஹ்ருதயம் சத்வமயமாக இருக்கிறது, தர்மம் இதில் குடி கொண்டிருக்கிறது. அதர்மத்தை பின் தள்ளி விட்டதால் என்னை ருஷபன்- உயர்ந்தவன் என்கிறார்கள். உங்கள் அனைவரையும் என் ஹ்ருதயத்தால் பெற்றேன். எல்லோருமே மகான்களாக வளர்ந்து விட்டீர்கள், இந்த நாபனும் தான். பரதனை (பாரத) புத்தி பூர்வமாக பார்த்து, அதை ஆளுவதும், ப்ரஜைகளை காப்பதையும் செய்யுங்கள்.
பஞ்சபூதங்களின் சேர்க்கையால் உண்டான படைப்பில் மரங்கள், தாவரங்களில் உயர்வு. அசையும் பொருட்களில் புழு பூச்சிகளைவிட சிறிது ஞானம் உள்ள பசுக்கள், அவற்றைவிட மனிதன் மேலானவன், மனிதர்களை விட ப்ரமத கணங்கள், அடுத்து கந்தர்வர்கள்,சித்தர்கள், கின்னர்கள் என்ற தேவர்களில் அனுயாயி அதாவது பரிவாரங்கள், என்று அந்த வரிசை செல்லும். மற்றும் அசுரர்களை விட தேவர்கள் சிறந்தவர்கள். இந்திரன் அவர்களிலும் மேன்மையானவன். இந்திரனை விட ப்ரம்ம புத்திரர்களான தக்ஷ பிரஜாபதிகள், அவர்களிலும் ருத்ரன் அனைவரிலும் மேலானவன், ஆனாலும் இவர்கள் அனைவரும் வணங்கும் பகவான் சர்வ வல்லமையுள்ளவன். வேத சாஸ்திரங்களை கற்ற ப்ராம்மணன் வேத ரூபமான பகவானை நிலை நிறுத்துகிறான். எட்டு நல்ல குணங்களும் உடைய ப்ராம்மணன் ஸ்ரேஷ்டன் எனப்படுவான். (ஸம, தம,சத்ய, தயா, தவம், கல்வி, ஞானம் )
பகவான் அறியாத பொருள் இல்லை. பக்தி உள்ளவனுக்கு பொருள் பொருட்டல்ல. அசையும் அசையா பொருட்கள், புதல்வர்கள், நிரந்தரம் என்று நினைக்கும் பொருட்கள், சம்பாவிதானி- பின்னால் என்றோ நடக்க கூடும் எனும் உத்தேசங்கள், இவைகளை விக்ஞானிகள் சிறிது சிறிதாக விசேஷமான கண்கள் அதாவது சாதனைகளால் கண்டு கொள்ளக் கூடும். இவர்கள் மனம், வாக்கு, கண், அந்த:கரண சுத்தமாக என் அம்சமாக இருப்பவர்கள்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு தன் வம்சத்து புதல்வர்கள், மற்றும் இளையவர்களுக்கு உபதேசம் செய்தார். தன்னுடன் இருந்து ராஜ்யம் ஆளுவதை அறிந்திருந்தாலும், உலகை அனுசாஸனம் ஆளும் கலையை, அவர்களுக்கு விவரித்தார். தானே மஹானுபாவன் எனும் ருஷபன் என்ற பெயரில் பகவதம்சமாக தோன்றியவர், மகா முனிவர்கள் கூட மதிக்கும் பரதனை தன் நூறு புத்திர்களிலும் ஸ்ரேஷ்டன் பரம பாகவதன் என்று அறிவித்து அவனுக்கு முடி ஸூட்டி, தான் ப்ரும்மா வர்த்தத்திலிருந்து கிளம்பி விட்டார். அதன் பின் உன்மத்தனாக, ஆடைகளை கூட துறந்து, விரித்த கேசமும், அவதூதர் என்ற நிலையில் அனைத்தையும் துறந்தவராக பேச்சையும் நிறுத்தி, தன்னிடம் பேசுபவர்களுக்கும் எந்த பதிலும் சொல்லாமல், மௌன விரதம் பூண்டவராக ஆனார். போகும் வழியில், புரங்கள், கிராமங்களில் அறியாத இடங்களில் மதிக்கப் படாமல் ஈயை விரட்டுவது போல விரட்டினாலும் எதிர் விணையின்றி அந்த இடத்திலிருந்து அகன்று விடுவார். வனங்களில் துஷ்ட மிருகங்கள் அவரை பயமுறுத்தவில்லை. வன கஜங்கள் எதிரில் வந்தாலும் நடுங்கவில்லை. எந்த ஜீவனும் அவரை துன்புறுத்தவில்லை. எதிலும் கவனம் செலுத்தாமல் தன்னிச்சையாக நடந்து கொண்டேயிருந்தார்.
அதி சுகுமாரனாக வளர்ந்தவர். இயல்பிலேயே அழகியவர். தேவ லோக பெண்கள் கூட மயங்கும்படியான தோற்றம் கொண்டவர். இப்பொழுது புழுதி படிந்து ஏதோ க்ரஹ கோளாறினால் துர் தேவதைகள் ஆட்கொண்டுவிட்டதோ எனும்படி இருந்தார். உலகமே துச்சம் என்றேண்ணி எதற்கும் பர்தி க்ரியா- பதில் வினையாற்றாமல், விழுந்து கிடக்கும் மலைப் பாம்பு போல, படுத்தபடியே சாப்பிட்டு, குடித்து, மற்ற உடல் இயக்கங்களும் படுத்தபடியே அந்த அஜகரம்- மலைப் பாம்பு போலவே கிடந்தார். அந்த நிலையிலும் தன் யோக சாதனைகளைச் செய்தார். அவர் அறியாத யோகமே இல்லை. வைஹாச,-ஆகாயத்தில் சஞ்சரிப்பது, மனோஜவ – வாயு வேகத்தில் செல்வது, , அந்தர்தானம் திடுமென மறைவது, பரகாய ப்ரவேச- வேறு சரீரத்தில் ப்ரவேசிப்பது, தேசாந்தரத்தில் உள்ள பொருட்களை எடுப்பது, தூரத்தில் உள்ளதை எடுப்பது, என்ற பல சாதனைகள் அவருக்கு அனாயாசமாக கை வந்தன.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில் ஐந்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) வசன ஸ்லோகங்கள்-19
அத்யாயம்-6
பரீக்ஷித் ராஜா இதுவரை கேட்ட நிவிருத்தி மார்கம் பற்றிய உபதேசங்களை கேட்ட பின் ஸ்ரீ சுகரிடம் “பகவன்! க்ரமமாக யோக சாதனைகளச் செய்த நீங்கள் ப்ரும்மம் பற்றியும் உலக வாழ்க்கைக்கு அப்பால் உள்ள விஷயங்களையும் சொன்னதைக் கேட்டு தெரிந்து கொண்டேன். ப்ருவ்ருத்தியின் லக்ஷணங்கள், முக்குணங்கள், அவைகளின் ஆளுமை இவை யுகம் தோறும் தொடர்ந்து வருபவை. அதர்ம லக்ஷணங்களும் சொன்னீர்கள். நரகம், மன்வந்தரம் பற்றி ஆதி ஸ்வயம்பூ முதல் விவரமாக கேட்டறிந்தேன். ப்ரிய வ்ரத உத்தான பாத சரித்திரங்கள், தீவுகள், மழை, சமுத்திரங்கள் , மலைகள், நதி, உத்யான, உப வனங்கள் காட்டு மரங்கள் – எவ்வளவு விஷயம் – உலகில் இந்த அளவு விவரங்கள் உள்ளன என்பதையே இப்பொழுது தான் அறிந்தேன்.பூமி, பூ மண்டலம் இவைகளின் இருப்பு, ஜோதிடம் பற்றி, ப்ரபு இவ்வாளவு ஸ்ருஷ்டி செய்திருக்கிறார் என்று மலைப்பு தோன்றுகின்றது. பகவானே, நரக யாத்திரையைப் பற்றி மேலும் சொல்லுங்கள்.
அதர்மம் என்று தெரிந்தும் அதை செய்ய நேரிட்டால், அதற்கான ப்ராயச்சித்தம் செய்யலாம். பகவானை ஸ்மரித்து வேண்டிக் கொள்ளலாம். எப்பேர்பட்ட பாபமானாலும். தவற்றை உணர்ந்து பகவானிடம் மன்னிப்பு கேட்கலாம். திரும்பத் திரும்ப பாகவதர்களுடன் சேர்ந்து நாம ஸ்மரனைகள், பஜனைகள் செய்வதாலும், கைங்கர்யங்கள் செய்வதாலும் கதைகளை கேட்பதாலும் நாளடைவில் பக்தி பாவம் மனதில் வேறூன்றும். அதுவே தவறு செய்யாமல் காக்கும். விரதங்களை முறையாக செய்வதும், எண்ணங்களின் போக்கை நேராக்கும். இது போல நெறி முறையை வழக்கப் படுத்திக் கொண்டு விட்டால், பகவானை அன்றி வேறு எவரையும் உயர்வாக எண்ணாமல், தன்னை மேம்படுத்திக் கொள்ள வழி பிறக்கும். இதை விட்டு, புலன்கள் போன வழியே வாழ்ந்து கெட்ட பின், பிராயச்சித்தம் என்று செய்தால் அதற்கு பலனும் அதற்கு தகுந்த படி தான் இருக்கும். கர்ம பலன் குறைந்தாலும் வாசனை விடாது. வைத்யர் உடலின் நோயின் தன்மையை கணித்து அதிகமாகவோ, குறைவாகவோ மருந்துகளைத் தருவது போல செய்த குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப நரக வாசமும் அமையும். பகவானே அவனை திருத்தினால் கூட, யானை குளித்துவிட்டு வந்து சேற்றை பூசிக் கொள்வது போல அவனுடைய கர்ம வாசனை திரும்பவும் அதே தவறுகளை செய்யத் தூண்டும்.
அத்யாயம்-6
பரீக்ஷித் ராஜா வினவினான்: பகவன்! ஆத்மாராமன் என்றும், சாதனைகள் செய்து யோக மார்கத்தில் பல படிகளை கடந்தவர்கள், ஞானிகள் என்றும், அதன் மூலம் வினைப் பயன்கள் இவர்களை பாதிக்காது என்ற நிலையில், இவர்களுக்கு எதிர்பாராமல் தானாக வந்து சேரும் யோக ஐஸ்வர்யங்கள் இடையூறாக இருக்காது தானே.
ரிஷி சொன்னார்: உண்மைதான். அதற்குத் தான் மனப் பூர்வமாக இல்லாமல் யாரிடமும் நட்பு பாராட்டக் கூடாது. வியாபார நோக்கத்தோடு பிராணிகளை வேட்டையாடும் வேடன் போல என்று சொல்வார்கள். (வேடனானாலும் தன் உணவுக்கு மட்டுமே பிராணிகளைக் கொல்லலாம் என்பது நியதி) ஒரு சிறிய இடம் (இடுக்கு) இருந்தாலும் காமம் சௌபரி போன்ற ரிஷிகளையே ஆட்டி வைத்து விட்டது போலாகும். வெகு காலமாக தவம் செய்தவர், காமத்தை ஜயித்து விட்டோம் என்று அவர் மனம் நம்பியது. மனம் யோகிகளைக் கூட கைவிடுகிறது. காமம் என்ற ஆயுதம் அவ்வளவு கொடியது. மனதை வென்றவர்கள் தானே, இந்த யோகிகள் என்று கேட்பாயோ, சக்கரத்தின் ஆரங்கள் நடுவில் உள்ள இடைவெளி போலவும் அதில் ஊடுருவி செல்லும் ஒளி போலவும் காமம் நுழைந்து விடும்.
காமம் மன்யு, மதம், லோபம், சோக, மோஹம், பயம் தவிர வினைப் பயன், இவை தான் அடிப்படையில் மனதைக் கெடுக்கும்.
விட்ட இடத்திலிருந்து ருஷபரின் கதையைச் சொல்கிறார். இவ்வாறு லோகபாலனாக, பிரஜைகள் விரும்பும் சக்ர வர்த்தியாக நாடாண்ட ருஷப ராஜன், ஏதோ காரணத்தால், ஜடம் போல, அவதூத வேஷமும், தொடர்பில்லாத பேச்சும், பார்த்தவர் நகைக்கும் படியான நடத்தையும் , அவர் பகவானுடைய அம்சமாக பிறந்தவர், மிகச் சிறந்த பிரபாவம் (ஆற்றல்) உடையவர் என்பதை வெளிக்காட்டாத தோற்றமுமாக யோகிகளின் சம்ப்ரதாயங்களை மீறி தன் உடலைத் தியாகம் செய்தார். குயவனுடைய சக்கரம் போல சுழலும் ஜீவனின் வாழ்க்கை. யோகிகள் உ.டல் தியாகம் செய்ய பல வழிகள், அதில் ஒன்று உன்மாதனாக திரிவதும்.
இவ்வாறு தான், தன் உடல் என்ற பற்று நீங்கிய பகவான் ருஷபருடைய யோக மாயா முடிவில், இந்த உலகில் ஏற்றுக் கொண்ட தேகத்தை துறக்க, இந்த உலகில் அபிமானம் இல்லாமல் தான்தோன்றியாக அலைந்த சமயம், கொங்க, வேங்க, குடகான், தக்ஷிண கர்னாடக தேசங்களை யதேச்சையாக சென்றடைந்தார். குடகாசல உபவனத்தில், சின்னஞ்சிறு பாலகன் மண்னை வாயில் போட்டுக் கொள்வதைப் போல. ஆகாரம் என்ற கவலையின்றி, கிடைத்ததை உணவாக நினைத்து, கேசம் காற்றில் பறக்க, நடந்து கொண்டே இருந்தார். அச்சமயம் காற்றின் வேகத்தில் மூங்கில் காட்டில், மூங்கில்கள் உரசுவதால் ஏற்பட்ட தீ, காட்டுத்தீயாக பரவி அவரையும் விழுங்கியது.
இவரைப் பற்றி கேள்வியுற்ற அர்ஹன் என்ற பெயருடைய கொங்க, வெங்க,குடக தேசங்களின் அரசன், ப்ரும்ம, யக்ஞ புருஷன், என்பவைகளை ஏற்றுக் கொள்ளாத சிலர், கலியின் ப்ரபாவத்தால், தேவ மாயை புத்தியை மறைக்க, ஸ்னானம் முதலிய சௌசம்- சுத்தம் உடல் ஆடைகள் நடத்தை இவைகள் தூய்மையாக இருக்க வேண்டிய அவசியத்தைச் சொல்லும் செயல்களை நிராகரித்தும் கேசத்தை மழித்துக் கொள்வதையும், அபவ்ரதானி- தர்ம சம்ஸ்காரங்கள் கூடாது என்று சொன்ன விஷயங்கள் மட்டுமே ப்ரதானமாக ஒரு மதம் தோன்ற காரணமாக இருந்தான். வேத சாஸ்திரங்களை நம்பாத இவர்களின் கூட்டம் தன்னிச்சையாக, கலி காலத்தை அதர்மம் நிறைந்ததாக செய்வார்கள். கண்ணில்லாத கபோதிகள் ஒருவரை ஒருவர் வழி நடத்துவது போல இவர்களும் தமஸ்- அந்தகாரத்தில் வாழ்ந்திருந்து, அந்தகாரத்திலேயே மறைவார்கள்.
இந்த அவதாரம், ரஜோ குணத்தால் ஆட்கொள்ளப்பட்டவர்களுக்கும் கைவல்யம் என்பதை சொல்ல ஏற்பட்டது.
ஏழு சமுத்திரங்களையுடைய இந்த பூலோகம், ஏழு தீவுகளையும் உடையது. இதன் மத்தியில் பாரத தேசம் மிக புண்யமானது. இங்கு ஜன ங்கள் முராரியை பாடுகிறார்கள். அவருடைய அவதாரங்கள் இங்கு தான் போற்றப்படுகிறது. ப்ரியவர்தனுடைய வம்சத்தில் புராணபுருஷன் அவதரித்தான். அவன் முதன் முதலாக வேத சாஸ்திரம் சொல்லும் கர்மத்தை (யாகாதி கர்மாக்களைச் செய்யும்) நிராகரித்த ஒரு மதம்-தர்மம் – என்பதை ஸ்தாபித்தான். சிறந்த யோகியானவன், தன்னிச்சையாக உன்மத்தனானான் அவனை எவர், ஏன் பின் பற்றுகிறார்கள்? மகா யோகியானவர் அதைத் துறந்தார் என்றால், யோக மார்கத்தில் எப்படி நம்பிக்கை வரும்? உன்மத்த நிலையில் அவரை கண்டவர்கள் அவரை பின் பற்றத் துணிவார்களா? அந்த வேத, யோக மார்கத்தில் செல்ல சக்தியற்றவர்கள், சம்சாரத்தின் கட்டாயங்களிலிருந்து விடுபட முடியாதவர்கள், தங்களுக்கு முன்னுதாரணமாக ஒருவராக இவரை அங்கீகரித்தார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதுவும் வாசுதேவனின் அவதாரமே.
பல ஸ்ருதியோடு இந்த அவதார கதையை முடிக்கிறார்.
எவர் மாற்று தர்மங்கள் பற்றி யோசிக்கிறார்களோ, அவர்களுக்கு இதுவும் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமே என்ற ஆறுதல்.
அரசனே! யது குலத்தில் வந்த வாசுதேவன் தான் உங்களுக்கு வழிகாட்டி, தெய்வம் எல்லாம். ஒரு அவதாரம் ருஷப யோகீஸ்வரராக. சம்சாரத்தின் கஷ்ட நஷ்டங்களுக்கு யாகம் , யோகம் முதலியவைகள் பரிஹாரமாக சொன்னது பரபுருஷார்த்தம்- பகவானிடம் சேர்க்கும் என்ற ஒரு கொள்கை. இது வேறு வழி ஆயினும் பகவத் தியானமே பரமார்த்தம் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.
உங்கள் குல தெய்வம் வாசுதேவனே. யதுகுல தேவன், பிரியமான குலபதி. நாம் அவர் கிங்கரர்கள்-ஏவலர்கள். கருணையுடன் அபயம் அளிப்பவர். “ நமோ பகவதே ருஷபாய தஸ்மை “
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில் ஆறாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) வசன ஸ்லோகங்கள்-16
அத்யாயம்-7
ஸ்ரீ சுகர் சொன்னார்: அடுத்து வந்த பரதனும் மஹா பாகவதன் என்று புகழ் பெற்றான். பகவானால் பூமியை ஆள நியமிக்கப் பட்டிருக்கிறேன், அதனால் ராஜய பரிபாலனத்தை நேர்மையாக செய்வதில் கவனமாக இருப்பேன் என்று எண்ணினான். அவன் மனைவி பஞ்சஜனீ, விஸ்வரூபன் என்பவரின் குமாரி. அவர்களுக்கு அனுரூபமான பஞ்ச பூதங்கள் போல ஐவர், சுமதி, ராஷ்ட்ரப்ருத், சுதர்சன், ஆவரணன், தூம்ரகேது என பெயர்கள். அதுவரை அஜனாபம் என்று இருந்த தேசத்தின் பெயர் இந்த பரதனின் ஆட்சிக்கு பின் பாரதம் என்று ஆனது.
மாகாராஜாவாக இருந்த பரதன் பல கலைகளையும் அறிந்தவன். தங்கள் குலத் தொழிலோ, கலையோ, அந்தந்த துறையில் ஈடுபட்டிருந்த பிரஜைகள் அரசனின் நேரடி கண்காணிப்பையும் ஆதரவையும் பெற்றனர்.
யக்ஞ புருஷன் பகவானை எண்ணி பல யாகங்களை சிரத்தையுடன் செய்து வந்தான். உச்சாவசு, அக்னிஹோத்ர, தர்சபூர்ணமாச, சாதுர்மாஸ்ய. விரதங்கள், பசு சோம என்ற ஒவ்வொரு யாகத்தையும் சாதுர்ஹோத்ர விதிகள் படிமுறையாகச் செய்தான்.
பிரபலமான யாகங்கள் தவிர, தர்ம பலன்களை உத்தேசித்து செய்யும் யாகங்களையும் அதன் அங்கங்களுடன் அர்த்த நியமங்களுடன் பரபுருஷனான யக்ஞ நாராயணனே சர்வ தேவதா என்று சொல்லும் மந்திரங்களையும் பொருள் உணர்ந்து சொல்வதால் சாக்ஷாத்தாக வந்து பகவான் வாசுதேவனே அனுக்ரஹித்ததால் தானே தன் திறமையினால் அத்வர்யூ என்ற ஸ்தானத்தை ஏற்று, யஜமானனாக, தேவர்களை திருப்தி செய்தான். (ஸ்ருஷ்டி காலத்தில் எவ்வாறு பரம புருஷனின் அவயவத்தில் தோன்றினார்களோ அதே க்ரமத்தில் த்யானம் செய்து)
இவ்வாறு சிறப்பாக செய்த யாகத்தால், பரிசுத்தமான மனிதனின் ஹ்ருதயத்தில் வசிக்கும் ப்ரும்மம் வாசுதேவனிடத்தில் மஹா புருஷன் என்ற உபலக்ஷணம் உள்ளவர் என்பவரை ஸ்ரீவத்ஸ, கௌஸ்துப, வனமாலை சகிதமாக வாள், கதை முதலிய ஆயுதங்களுடனும், தன் மனதில் எழுதி வைத்தது போல கண்டான். அனுதினமும் பக்தி பாவத்துடன் வணங்கி வந்தான்.
இவ்வாறு பல காலம் ஆண்ட பின், தன் புத்திர்களுக்கு ராஜ்யத்தை பிரித்து கொடுத்து விட்டு புலஹாஸ்ரமம் என்ற இடத்துக்குச் சென்று விட்டார்.
அந்த இடத்தில் பகவான் வாத்சல்யத்துடன் தன்னை அண்டியவர்களுக்கு அவர்கள் விரும்பும் விதத்தில் காட்சியளிப்பதாக சொல்வார்கள். பாறைகளின் இடையிலிருந்து பெருகி சக்ர நதி என்ற பெயரில் நதி அசிரமத்தை இருபுறமும் அணைத்தவாறு செல்லும். தனித்து வாழும் ரிஷி, முனிவர்கள் ஆசைகளைத் துறந்து எளிமையாக வாழ்கிறார்கள். சாந்தமாக பூஜை, தங்கள் யோக சாதனைகள் என்று இருப்பவர்கள் தாங்களும் சுத்தமாக இருந்து அந்த இடத்தையும் சுத்தமாக வைத்திருப்பர். புலஹாஸ்ரமம் என்ற அந்த இடத்தின் உபவனம் பலவிதமான பூக்கள், துளிர் இலைகள் துளசி போன்ற சிறு செடிகள், கந்த மூல பலம் – கிழங்குகள், கீரைகள், பழங்கள் இவைகளுடன் நிரம்பி இருந்தது. அது அவர்கள் உணவு தேவையை நிறைவு செய்தது. நன்றாக வாழ்ந்து அனுபவித்தவர்களே அங்கு இருந்தனர். அதனால் உபசமம் – தானாகவே அடங்கி விட்ட ஆசைகள் – உடையவர்களாக இருந்தார்கள். அந்த பவித்ரமான நதியில் ஸ்னானம் செய்து பகவானைத் தியானமோ, மலர்களால் அர்ச்சனையோ செய்வதிலேயே திருப்தி அடைந்தவர்களாக இருந்தனர். ஸூரியோதயத்திலேயே ஸூரியனை வேத மந்திரங்களால் துதித்தனர். இந்த மந்திரத்தை காயத்ரி சகோதரன் என்பர். “த்யேய: சதா சவித்ரு மத்யவர்தீ நாராயண: சரஜிசாஸன சன்னிவிஷ்ட: | கேயூரவான் மகர குண்டலவான் கிரீடீ ஹாரீ ஹிரண்மய வபு: த்ருத சங்க சக்ர: “ |
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில் ஏழாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) வசன ஸ்லோகங்கள்-14
அத்யாயம்-8
ஒரு சமயம் மகா நதியில் ஸ்னானம் செய்த பின், அதன் பின் செய்ய வேண்டிய ஜப தபங்களை, ப்ரும்மாக்ஷரத்துடன் சேர்த்து செய்து கொண்டு மூன்று நாழிகள் (ஓரு முஹூர்த்த காலம் ) நதிக் கரையில் அமர்ந்திருந்தார். அந்த சமயம் ஒரு மான் தாகத்தால் தண்ணீரை குடிக்க அங்கு வந்தது. பாதி குடிக்கும் பொழுது எங்கோ தூரத்தில் ம்ருகபதியான சிங்கம் பலமாக கர்ஜனை செய்வது கேட்டது.
அதைக் கேட்டு அந்த பெண் மிருகம் இயல்பாகவே பயந்த குணம், சிங்கத்திடம் பயம், பர பரப்பில் கண்கள் மயங்க, ஹ்ருதயம் துடிக்க, தாகம் தணியாமலே தண்ணீரை விட்டு வெளியேற முயன்றது. கர்பத்தை தாங்கியிருந்த அந்த பெண் மான் குதித்து ஏறுகையில் அதன் வயிற்றிலிருந்த சிசு வெளி வந்து தண்ணீரில் விழுந்தது. ஏற்கனவே பயம், பிரசவ வேதனை சேர்ந்து கொண்டது, நீரில் விழுந்த குட்டியை பற்றிய தாயின் கவலை, க்ருஷ்ண சார என்ற ஜாதியைச் சேர்ந்த பெண் மான், அதன் கூட்டத்தார் யாரும் அருகில் இல்லாமல் தனித்து விடப் பட்ட நிலையில் அந்த க்ஷணத்திலேயே உயிரை விட்டது.
மான் குட்டி, நதியில் விழுந்து தவித்தது. கரையில் ஜபம் செய்து கொண்டிருந்த ராஜ ரிஷி பரதன் பரிவுடன் அதை காப்பாற்றி, தாய் இல்லாத குட்டி என்ற நிலையில் ஆசிரமத்திற்கே கொண்டு வந்தார். அதனிடம் அவருக்கு தன் குழந்தையிடம் தோன்றுவது போன்ற பாசம் மிகுந்தது. அதை ஆஹாரம் கொடுத்து, தூக்கி வைத்துக் கொண்டு, கொஞ்சியும், விளையாடியும் பாலனம் செய்தார். ஒவ்வொருவராக அருகில் உடன் இருந்த தபஸ்விகள் சிலர் காலம் முடிந்தும், மற்றவர்கள் வேற்றிடமும் சென்று விட்டனர். மான் கூட்டங்களும் இந்த குட்டி மானை ஏற்றுக் கொள்ளவில்லை. தனித்து விடப் பட்ட குட்டி மானை பார்த்து “அடடா, இதற்கு யாருமேயில்லை. என்னையே தாய் தந்தையாக எண்ணுகிறது என்று பூரித்து போனார். இதற்கு உடன் பிறந்தார்களோ, உறவினர்களோ எல்லாமே நான் தான் என்று அதனிடம் மிகுந்த வாத்சல்யத்துடன் வளர்த்தார். அதுவும் அவரிடம் ஒட்டிக் கொண்டது.
இவ்வாறு அதனிடம் அன்பு கொண்டு அதிலேயே தன் நேரம் முழுவதும் செலுத்தியபடி இருந்தவர், கண் மூடித் தனமான பாசத்தால் தன்னுடன் தவம் செய்த ஆசிரம வாசிகளைக் கூட மறந்தார். அதனுடன் நடந்து, அதற்கான தேவைகளை பார்த்து பார்த்து செய்து வந்தவர் மனம் முழுவதும் இந்த மான் குட்டியே நிறைந்தது. புல்லைத் தேடி போனால் கரடிகள் அடித்து விடுமோ, தானே விழுந்து விடுமோ என்ற பயத்தால் வளர்ந்த பின்னும் அதனுடன் சுற்றினார். தோளில் தூக்கிக் கொண்டு நடப்பார். மார்பில் போட்டு தூங்க வைப்பார். இதில் என்றுமில்லாத சந்தோஷமும் அடைந்தார். தன் செயல்களின் நடுவில் அது என்ன செய்கிறது என்ற கவலையுடன் எழுந்து வருவார். இயல்பாக இளகிய மனதுடையவர், அதன் நலனில் அளவுக்கு மீறி கவலைப் பட்டதும், தன் புதல்வனுக்கு செய்வது போல் நன்றாக இரு என்று ஆசீர்வதிப்பதுமாக காலம் சென்றது. கண் மூடி ஜபம் செய்யக் கூட பயம். அந்த சமயம் துஷ்ட மிருகங்கள் வந்து அடித்து விடுமோ, செல்வமே குறியான லோபி, தன் சேமிப்பான தனத்தை பாதுகாப்பது போல பாது காத்தார். தன் தவம், ஜப தபங்கள் பற்றி சில சமயம் நினைத்தாலும், ஒத்திப் போட்டுக் கொண்டே வந்தார். ஒருநாள் அதைக் காணவில்லை.
பரதன் என்ற அந்த ராஜரிஷி பரிதவித்தார். இந்த பிரிவை அவரால் தாங்கவே முடியவில்லை. தேடினார். புல் வெளிகளில், தினமும் செல்லும் வழியில், எங்கும் அதைக் காணவில்லை. தேடி அலைந்த சமயம் எண்ணம் முழுவதும் அந்த குட்டி மானே இருந்தால், அவருடைய நித்ய சாதனைகள், செயல்கள் எதிலுமே கவனம் இல்லாமல் ஆயிற்று. தான் ஆரம்பித்த தவம், யோகம், பகவதாராதனம், எதுவுமே நினைவில் இல்லை. வளர்ப்பு மிருகம் , தன் பிறவிக்கும், வாழ்க்கைக்கும், சாதனைகளுக்கும் சம்பந்தமே இல்லாத ஒட்டுதல், அதன் பிரிவால் தன்னையே மறந்தவராக தன் தகுதிக்கு சற்றும் பொருந்தாத ஒரு மனக்லேசத்தை அடைந்தார். முன்னால் தானே முனைந்து கைவிட்ட ஆசைகள், காம, மோஹங்கள் இவைகளே அவர் மனதில் நிறைந்தது. தனது, தான் என்ற எண்ணங்கள் அழிவை கொடுக்கும் என்று அறியாதவரா? எலி வளைக்குள் புகுந்த பாம்பு போல இந்த பரிவும், மோகமும் அவரை துளைத்தெடுத்து விட்டன. காலன் வந்தான். அப்பொழுதும் அருகில் இருந்த பாசம் மிகுந்த தன் மக்களை, புதல்வர்களை விட்டு வளர்ப்பு மானையே நினைத்து உடலை விட்டார். அதன் பலனாக மிருக பிறவியை அடைந்தார். மறு பிறவியில் மானாகவே பிறந்தார்.
அஹோ கஷ்டம், நான் நிலையழிந்தேன். ஆத்ம ஞானம் அடையவே வாழ் நாள் முழுவதும் பாடு பட்டேன், சத் சங்கத்திலேயே இருந்தேன், பலவிதமான நன்மைகளைத் தருபவனும், சரணம் என்று வந்தவர்களைக் காப்பவனுமான வாசுதேவனிடத்தில் அனவரதமும் பக்தி செய்து வந்திருக்கிறேன். அனுஸ்ரவணம், மனனம், சங்கீர்த்தனம்,ஆராதனம்,அனுஸ்மரணம் என்ற பக்தி மார்கத்தில் சொல்லியுள்ள அனைத்தையும் கடை பிடித்தேன். மனதை துடைத்தது போல சுத்தமாக வைத்திருந்தேன். \அதனுள் நுழைந்து என்னை அறிவில்லாதவனாக ஆக்கி, மான் குட்டியைக் காட்டி தடுமாற வைத்தது விதி என்று புலம்பினார். பூர்வ ஜன்ம நினைவு இருந்ததால் மான் தாயை விட்டு ரிஷிகளின் ஆசிரமங்களின் அருகிலேயே சுற்றி வந்து ஒரு நாள் உயிரை விட்டார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில் ஆறாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) வசன ஸ்லோகங்கள்-31
அத்யாயம்-9
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஆங்கிரஸ கோத்ரத்தில் பிறந்த ஒரு அந்தணன் தன் நித்ய கர்மாகளை சிரத்தையாக செய்து வந்தவன். சமம், தபம்,ஸ்வாத்யாய, அத்யனம் இவைகளில் சந்தோஷமாக இருந்து வந்தவன் அஸூயை இல்லாமல் தன் வித்யையும். ஞானமே பிரதானமாக உள்ள விஷயங்களைக் கேட்பதிலும், மற்றவர்களுக்குச் சொல்வதிலும் காலம் கழித்து வந்தார். ஒன்பது புதல்வர்கள் அவரைப் போலவே குணம், சீலம் உடையவர்களாக பிறந்தனர். இளைய மனைவியிடம் இரட்டையர். அவளும் பிறந்த சிசுக்களை விட்டு பரலோகம் சென்றாள்.
பரம பாகவதரான ராஜ ரிஷி பரதனே ம்ருக சரீரத்தை விட்டபின் அந்தணனாக பிறந்தார் என்பர்.
இந்த பிறவியிலும் தனித்து இருப்பதிலும், பகவானின் நினைவிலும், தன் முந்தைய கர்ம பந்தங்களை முற்றிலும் அழிக்க உதவும் ஸ்ரவண, ஸ்மரண என்ற வழிகளையே அனுசரித்து வந்தார். முன் பிறவி வாசனையால் தன்னை ஜடமாகவும், செவிடனாகவுமே மக்கள் மத்தியில் வெளிப் படுத்திக் கொண்டு வாழ்ந்தார். அந்தணரோ, ஏன் தன் மகன் இப்படி இருக்கிறான் என்று கவலை கொண்டார். அவனுக்கு உரிய சம்ஸ்காரங்களை செய்வித்தார். உபநயனம், காலம் காலமாக வந்த நியமங்கள், அவன் அதில் நாட்டம் கொள்ளாவிடினும் உபதேசித்தார். அனுஷ்டானங்கள் அவனை தெளிவாக்கும் பின்னால் அவன் தந்தையாகும் பொழுது உதவும் என்று நம்பினார். அவனும் அவர் எதிரில் அவைகளை சிரத்தையாகச் செய்தான். வேதங்களை முறையாக கற்றான். ப்ரணவத்துடன் த்ரிபதி என்ற காயத்ரி மந்திரத்தை ஜபம் செய்தான். வேணிற்காலம், வசந்தம் என்று பருவ காலங்களில் கற்க வேண்டியவைகளை க்ரஹித்துக் கொண்டான்.
தந்தை இறந்த பின் சகோதரர்கள் வேத அத்யனம் செய்வதில் மட்டுமே ஈடுபாடும் மற்ற எதுவுமே அறியாதவன் போல ஜடமாக இருந்த இளையவனை கைவிட்டனர். அவனும் இயல்பாக பசுக்களிடம் அதிக நேரம் செலவழித்தான். அவைகளைப் போலவே மந்த மதி, நடவடிக்கைகள் என்று மற்றவர் ஏளனம் செய்தனர். பொருள் ஈட்டவோ, மற்றவர்களுக்கு சமமாக உடையோ, உணவோ வேண்டாமல் கிடைத்ததை, மீந்த உணவு எதைக் கொடுத்தாலும் உண்டு வாழ்ந்தான். தனக்குள் பூர்வ ஜன்ம வாசனையால் அமைந்த சித்தியும் திருப்தியுமாக ஆனந்தமாகவே இருந்தான். சுகமோ, துக்கமோ எதுவுமே பாதிக்காமல், தேஹ அபிமானமே இல்லாமல் வாழ்ந்தான். மற்றவர்கள் அவனை சீண்டினர். காளை மாடு போல குளிரோ, வெய்யிலோ உறைக்காத உடல் வாகு, கொழுத்த உடலும், புல்லில் படுத்தாலும் , புழுதியில் படுத்தாலும் யாரும் கவனிக்கவில்லை. மறைந்திருந்த ப்ரும்ம வர்சஸ்- சாதனைகளின் பலனான தேஜஸ் மஹாமணி போல அழுக்கு வஸ்திரத்திலும், உபவீதத்தினால் மட்டுமே அந்தணன் என்று தெரியும்படியாக இருந்தவனை ப்ரும்மபந்து (வசைச் சொல்) என்று பழித்தனர். அந்த அவமானங்களை பொருட்படுத்தாமல் வளைய வந்தான். வயலில் வேலை செய்யச் செய்தனர். அதையும் செய்தான். அங்கு காளைகளுக்கு கொடுப்பது போலவே பிண்ணாக்கு போன்றவைகளை உண்ணக் கொடுத்தனர். அதையும் எந்தவித உணர்வும் இன்றி உண்டான். ஒரு சமயம் ஏதோ ஒரு சமையல் வேலை செய்பவன், தனக்கு குழந்தை வேண்டும் என்று வேண்டி பத்ரகாளிக்கு பலி கொடுக்க நினைத்தான். பசுவை தேடி வந்தவனை பசுக்களின் உரிமையாளர்கள் விரட்டினர். இரவில் திருடிக் கொண்டு செல்ல வந்தவன், வயற்காட்டு வளர்ப்பு மிருகங்களின் இடையில் ஆனந்தமாக தூங்கிக் கொண்டிருந்த அந்தண மகனைக் கண்டான். அவனை பலி கொடுக்க ஏற்றவனாக நினைத்து கயிற்றால் கட்டி சண்டிகா கோவிலுக்கு கொண்டு சென்றான். சரியான பலி என்று மகிழ்ந்தான். தங்கள் குல விதிப் படி அவனை பசுவாக நினைத்து முழுக்காட்டி, நல்ல வஸ்திரங்கள் அணிவித்து, பூஷணங்கள் வாசனை திரவியங்கள் பூசி, திலகம் இட்டு, உணவுக்குப் பின் தூப தீபங்கள் காட்டி, இலைகள் பழங்கள் கொடுத்தும் ம்ருதங்க பணவ வாத்யங்கள் வாசித்து புருஷ பசு என்று பத்ரகாளியின் முன் நிறுத்தினர். அந்த சமையல்கர்களின் தலைவன் புருஷ பசுவை வெட்டி தேவிக்கு சமர்ப்பிக்க, அதற்கான மந்த்ரங்களை சொல்லி, கொடூரமான ஒரு வாளைத் தூக்கினான். ஏராளமான தனம், அதனால் விளைந்த மதம், ராஜஸ் என்ற குணமே பிரதானமான கூட்டம், ஹிம்சையே பழகிப் போனதால் இதை பயங்கரமாக எண்ணவே முடியாத மனோபாவம், ப்ரும்ம தேஜஸ் கண்ணில் படவில்லை, தங்கள் தேவை நல்ல ஜாதி பசு, அது கிடைத்தது என்று எண்ணி மகிழ்ந்தனர்..
சர்வ பூதங்களையும் சமமாக நட்புடன் பார்க்கும், ஸூன்யமான இடத்திலும் தன்னுள் லயித்து ஆனந்தமாக இருப்பவன், மிக அரிதாக சாதனைகள் மூலம் அடைந்த ப்ரும்ம ஞானம், சரீரத்தின் காந்தியே நெருப்பாக சுடர் விட இருந்தவனைக் கண்ட பத்ரகாளி திடுமேன வெகுண்டெழுந்தாள்.
பெரும் கோபத்துடன் ஆவேசமாக பேசலானாள். புருவங்கள் நெரிய, பற்களை நற நறவென கடித்த படி, கண்கள் பயங்கரமாக சிவக்க, அட்டஹாச ஆர்பாட்டங்களுடன் கொல்லத் தயாராக இருந்த கொலையாளிகளை அதே வாளால் வெட்டித் தள்ளி, தன் பரிவாரங்களுடன் ஆடிப் பாடி, வெட்டிய தலையை பந்து போல உருட்டி விட்டு மறைந்தாள்.
விஷ்ணு தத்தா !(பரீக்ஷித்) தலையை வெட்ட கூட அனுமதித்து சிறிதும் கவலைபடாமல் ஆயத்தமாக இருந்த போதிலும், அந்தந்த சமயத்திற்கு ஏற்ப ரூபம் எடுத்து வரும் பகவான் பத்ரகாளியாக வந்து தன் பக்தனை ரக்ஷித்தான்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில் ஒன்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) வசன ஸ்லோகங்கள்-20
அத்யாயம்-10
ஸ்ரீ சுகர் சொன்னார்: சிந்து சௌவீர நாட்டு அரசன் ரகூகணன் என்பவன் இக்ஷுமதி நதிக் கரையோரமாக சென்று கொண்டிருந்தான். அவனது சிவிகையை தூக்க ஆட்களைத் தேடிக் கொண்டிருந்தவர்களின் பார்வையில் இந்த அந்தணன் பட்டான். தெய்வமே அனுப்பியது போல தடிமனான இளைஞன், பாரத்தை தூக்க சரியான ஆள் என்று எண்ணி அவனை அழைத்து சிவிகையை தங்களுடன் சேர்ந்து தூக்க செய்தனர். பாரத்தை தூக்குவது அந்த இளைஞனுக்கு பழக்கம் இல்லாததால் சிறிது தூரம் செல்லும் முன் சிவிகை ஆடுவதையும், சீராக தூக்காததால் சரிந்து விழுவதையும் அறிந்த ரஹோகணன், சிவிகை தூக்கிகளை திட்டினான். என்ன ஆயிற்று உங்களுக்கு, என்றவன் புது மனிதனைப் பார்த்து ஏய், சரியாக தூக்கு என்று அதட்டினான். எஜமானன் திட்டும்படியாயிற்றே என்று பழைய சிவிகை தூக்கிகள், அவரிடம் காரணம் இவன் தான் என்று சுட்டிக் காட்டினர். அரசனே! நாங்கள் வழக்கமாக சிவிகைத் தூக்கிகள் சரியாகத் தான் தூக்குகிறோம், இவன் புதியவன், இப்பொழுது தான் நியமித்தோம், வேகமாக போகிறான், எங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை என்றனர்.
பலர் இணைந்து செய்யும் தொழிலில் ஒருவனின் தவறு அனைவரையும் பாதிப்பது தெரிந்தது தானே. ராஜா ரஹோகணன் விசாரிக்க பல்லக்கிலிருந்து இறங்கினார். வயதானவர் ஆனதால் கோபத்தை அடக்கிக் கொண்டு புழுதி மூடிய ப்ரும்ம தேஜஸன், ஜாதவேதன் என்ற வேதம் அறிந்தவன், என்பதெல்லாம் அந்த தோற்றத்தில் தெரியவில்லை. அவனை பார்த்து கேட்டார்.
சகோதரனே! அஹோ, கஷ்டம். இது கடினமான தொழில், உடல் உழைப்பைக் கோருவது. அத்வான வழியில் வெகு தூரம் செல்ல வேண்டும். சகே! நீ பலசாலியாக, திடகாத்திரனாக தெரிகிறாய். இளைஞன் தான், உடல் ஊனம் எதுவும் இல்லை. ஏன் இவ்வாறு ஒத்துழைக்காமல் நடந்து கொள்கிறாய்? பாராட்டுவது போல வார்த்தைகள், அதில் தொனித்த அவமதிப்பு புரிந்தாலும், பதில் சொல்லாமல் முன் போலவே சிவிகையை தூக்க முனைந்தான். ஆத்ம தத்வம்அறியாதவன் கடைசி காலத்தில் பஞ்ச பூதங்களும், இந்திரியங்களும், புண்ய பாபங்களும், அந்த: கரணமும் தான் பிறவிக்கு காரணம் என்பதை அறியாதவன். தண்டபாணியான யமன் போல தன் மக்களை ஆளுகிறான். நர தேவன் என்ற அபிமானம். என்னை ஜடம் என்று நினைக்கிறான் போலும் என நகைத்தவாறு சென்றான்.
திரும்பவும் ஆட்டம் கண்ட தன் சிவிகையிலிருந்து இறங்கிய ரகூகணன் ஏகமாக கோபத்துடன் கத்தினான்.
என்ன இது, நீ உயிருடன் இருக்க வேண்டுமா, இல்லையா? என்னை தவிக்க விட்டு,அரச ஆணையை மீறுகிறாய். மூடன், மன நலம் இல்லாதவன் உனக்கு தண்டபாணி, யமன் போல தண்டனை கொடுக்கிறேன். நான் யார் என்று தெரிந்து கொள், என்றான்.
நாட்டை ஆளும் தகுதியால் எல்லாம் அறிந்தவன் போல பேசுகிறான். அபிமானம்- கர்வம் பேச வைக்கிறது. ராஜஸமும், தாமஸ குணமும் மேலோங்கி இருந்தால் இப்படித்தான் பேசுவார்கள். தானே பண்டிதன் என்பர். பகவானைக் கூட துச்சமாக நினைப்பர். சர்வ பூத சுஹ்ருதன், அனைவரிடமும் நட்பாக இருப்பவன் என்று புகழப் படும் பகவான், யோகேஸ்வரனின் செயல்களை அதிகமாக அறிந்திராத அரசனிடம், நகைப்பது போலவும் அதை வெளிக் காட்டாமல் அடக்கிக் கொள்வது போலவுமான குரலில் பதில் சொன்னார்.
அந்தணர் சொன்னார்: அரசனே, நீ சொன்னது சரியே. நான் ஆள்பவன், நீ எளிய ஏவலன் என்றாய். உன் சொல்லை மதிக்காமல் அவமதித்து விட்டேன் என்கிறாய்.
நீ ஞானி. அதில் சந்தேகமில்லை. ஹே வீர! பாரம் என்பது உடலுக்குத்தான், உயிரினங்களில் அந்தர்யாமியாக இருக்கும், சித்ரூபமான பகவானுக்கு இல்லை. அதனால் என்னால் சுமக்க முடியாது என்ற சொல்லில் பொருள் இல்லை. வெகு தூர பயணம் என்கிறாய். வாஸ்தவம் தான். என்னை ஸ்தூல சரீரி- கொழுத்த உடல் உடையவன் என்றாய். அதுவும் சரியே. ஸ்தூலம், க்ருசம், ஆதி வியாதி, பசி தாகம், ஆசை மோஹம், முதுமை, நித்ரை, ரதி, கோபம், மதம் இவை தேஹிகளுக்குத் தான். ப்ரும்ம ஸ்வரூபனான எனக்கு என் உடலில் தேவையில்லாத வஸ்து எதுவுமே இல்லை. உயிர் உள்ளவனா இல்லையா என்பது ஆதி அந்தம் உள்ள பிராணிகளுக்குத் தான். ஸ்வ,ஸ்வாம்ய – தானும் பரமனும்- என்ற திடமான கொள்கை உள்ளவனுக்கு தேவைகளும் இல்லை.
விதி வசத்தால் சிவிகையை தூக்குதல் என்ற செயல் எனக்கு அதுவும் யோகமே. என்ன செய்கிறேன் பார் என்றாய். ராஜஸ குணம் மிகுந்த க்ஷத்திரியன் நீ. இப்பொழுது நான் கேட்கிறேன்? யார் ஈஸ்வரன் , அதாவது ஆணையிட யோக்யதை உள்ளவன்? உன் உடலாலும், வாக்கினாலும், தண்டத்தாலும் இதுவரை என்ன சாதித்து இருக்கிறாய்? பிசைந்த மாவை மேலும் பிசைந்தால் என்ன மாறுதல் இருக்கும்? அது போல ப்ரமத்தன் என்றாய்-மூளை பிசகியவன்- அவனை தண்டித்தால் அவனிடம் என்ன எதிர் பார்க்க முடியும், மேலும் ப்ரமத்தனாவான். ராஜன்! ஞான உபதேசம் பெற கபிலாஸ்ரமம் செல்பவன் வழியில் எதற்கு ஒரு அந்தணனை சிவிகை தூக்கியாக வைத்திருக்கிறாய்? அவனுக்கு அது குறைவில்லை. ப்ராரப்த கர்மாவை குறைக்க பாரம் தூக்குதல் ஒரு வழி. பாண்டவனே! உன் மூதாதையர் வனத்தில் வசிக்கின்றனர். (அரசனாக இருந்து மான் பிறவி எடுத்து, தற்சமயம் உன் முன் அந்தணனாக இருப்பவன் என்று என்னை அறிவாயா?) இந்த ப்ரமத்தன் என்ன கண்டான், தத்துவ அறிவு வேண்டும் என்று நினைக்க கூட முடியுமா? நான்கு வித சாதனைகள் என்ன என்று தெரியுமா? வேதாந்தம் அறிவானா? என்று தானே நினைக்கிறாய்? எல்லா பாத சுவடுகளும் யானையின் காலடி சுவட்டில் மறையும் என்று ஒரு விதி- அதன் படி, சிரத்தையுடன் செய்வதே பலன் தரும் சிரத்தையில்லாமல் செய்யும் யாகமோ, தானமோ பலன் தராது என்பது நியதி. சிரத்தை உள்ளவனுக்கு ஞானம் பெற தகுதி வருகிறது. (ஸ்ரத்தாவான் லபதே ஞானம் -கீதை) அதன் பின் மற்றவையும் தொடரும்.
அரசன் திகைத்தான். பாண்டவ வம்சத்தின், சிந்து ரஹோகண ராஜ்யாதிபதி தான் ஆத்ம தத்வம் அறிய விரும்பியதை அதை ஏற்கனவே அடைந்தவனாக அந்த அந்தணன் பேசியதை கேட்டபின் வேகமாக இறங்கி வந்தான். தலையால் அவர் பாதத்தில் வணங்கி, மன்னிப்பு கேட்டான்.
தாங்கள் யார்? உங்கள் தகுதியை மறைத்துக் கொண்டு சேவகனாக வந்துள்ளீர்கள். எந்த ரிஷியின் வழித் தோன்றல்? எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கள் நன்மைக்காக, எங்கள் மனதில் தெளிவை அளிக்க வேண்டும். தேவேந்திரனின் வஜ்ரம் ஒரு பொருட்டல்ல. முக்கண்ணனின் ஸூலத்திற்கும் பயப்படமாட்டோம். யமனுடைய தண்டமும் அக்னி, ஸூரியன், சந்திரன், வாயு, நீர் இவைகளிடமும் பயமில்லை, அந்தணர்களின் குலத்தை அவமதிக்க பயப்படுவோம். எனவே ப்ரும்மசங்க! ஜடம் போல வெளித் தோற்றம். உங்கள் விக் ஞானம்- தெளிவான ஞானம் – அதை மறைத்து நடமாடுகிறீர்கள். அதனால் உங்களைத் தெரியவில்லை. சாதோ! மனதால் கூட எங்களை கோபிக்காதீர்கள். மன்னிக்க வேண்டுகிறேன். நான் இந்த யாத்திரையை துவங்கியதே, பரம குரு, முனிவர்களின் தலைவன். அவரிடம் பாடம் கேட்கவே. சாக்ஷாத் ஹரியைப் பற்றி அவருடைய ஞான உபதேசம் பற்றி, அவர் அவதரித்த கதையைக் கேட்க கிளம்பினேன். உலகை சுற்றி பார்க்க வந்தீர்களா, யோகேஸ்வரர் நீங்கள். உங்களைப் போன்ற யோகேஸ்வரர்களின் போக்கு சாதாரண உலகியலில் உள்ள எங்களால் எப்படி ஊகிக்க முடியும்? பாரம் தூக்குவதின் சிரமத்தை அறிவேன். உடல் நோக வேலை செய்பவன் படும் பாடு எனக்கு புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் வேறு வழி இல்லை. இது உலகத்தின் நடை முறை. ஸ்தூலத்வம்-உடல் பருமன்- ஸ்தூலமான பாத்திரத்தை அடுப்பில் வத்து நீரை விட்டு கீழே அக்னியை மூட்டினால், அக்னியின் ஸூடு பாண்டத்தில் உள்ள தண்ணீரை சுடவைக்கிறது, அது அதில் இருக்கும் தான்யத்தை வேக வைத்து உணவாக்குகிறது. மனித சரீரம் ஸ்தூலமானால் இந்திரியங்களின் செயல்களில் ப்ரதி பலிக்கும், உள்ளிருக்கும் புருஷனின் அனுரோதம்- தூண்டுதலால் என்பது ஒரு நியதி. சாஸ்தா, அபிகோப்தா – சாஸனம் செய்பவன், பரி பாலனம் செய்பவன் என்பது அரசன் பெயர். அவன் கடமை. ஒரு விதத்தில் அவன் பிரஜைகளின் கிங்கரனே-அடியாளே. பிசைந்த மாவை பிசைவது- செய்த காரியத்தையே செய்வது ராஜாவாக என் குலதர்மம். அச்யுதனின் கட்டளையாக நினைத்து செய்யும் பொழுது தவிர்க்க முடியாமல் செய்யும் குற்றங்கள், பாபங்கள் தானே கரைந்து விடும்.
அதனால், தாங்கள் என்னிடத்தில் நரதேவ அபிமானம்-கர்வம் , அதனால் உங்களை பொருட்டாக நினைக்கவில்லை என்று சொன்னதில் பொருள் இல்லை.. ஆர்த பந்தோ! (கஷ்டத்தில் இருப்பவனுக்கு பந்துவாக இருந்து உதவுபவர்) என்னை நட்புடன் பாருங்கள். உலகத்துக்கே சகாவாக இருக்கும் ப்ரும்ம ஸ்வரூபனுக்கு அது ஏற்றதே. ஸூலபாணியை போல அறியாமையால் செய்த என் தவறை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில் பத்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) வசன ஸ்லோகங்கள்-25
அத்யாயம்-11
அந்தணன் சொன்னான். அரசனே! நீ அறிந்ததைச் சொன்னாய். அது போதாது, அறிந்து கொள்ள வேண்டியது இன்னமும் நிறைய உள்ளன. க்ருஹஸ்தன், தன் குடும்பம், தன் நாடு, பிரஜைகள் என்பதை நல்ல முறையில் நிர்வஹிக்க வேண்டிய நிலையில் உள்ளவன், இந்த பிரச்னைகளே உன் மனதை ஆக்ரமித்து இருக்கிறது. அதனால் நீ என் கேள்விக்கு பதில் அந்த நிலையிலேயே சொன்னாய். அது சாதாரண மனிதனுக்கு சரி. .வேதங்களில் கூட தத்துவ வாதம் என்பதை சாதுக்கள் சரியென்று சொல்வதில்லை. தத்துவங்களை புரிந்து கொள்ள சாதாரண சொற்கள் போதும். கனவில் கண்ட சுகமான காட்சிகளை விழிப்பு வந்த நிலையில் நாம் அது வெறும் தோற்றமே என்பதை அறிவதில்லையா ? மனம் ராஜஸ குணத்தால் நிரம்பியிருக்கும் சமயம் அங்குசத்தால் கட்டுபடுத்த முடியாத யானையின் மதம் போன்று மற்ற சத்வ, தாமஸ குணங்களுக்கு இடமளிக்காது. அவனுடைய புர்வ ஜன்ம வாசனை விஷயங்களில் – உலகியல் சுக துக்கங்களிலேயே இருக்கும். மாயையே உண்மை என்றேண்ணி மாற்று கருத்தின்றி தேகத்தையே நிரந்தரமாக எண்ண வைக்கும்.
பலவிதமான பெயர்களுடன் பதினாறு விதமாக ஆத்மா தன்னை வெளிப் படுத்திக் கொள்ளும். பூர்வ ஜன்ம வாசனையின் பலனாக விருப்பு வெறுப்புகள் வரும். க்ஷேத்ரக்ஞன் – பரமாத்மா சக்ஷியாக இருப்பான். பருமனான உடலோ, மிகவும் சிறிய உடலோ, நான் தேவன் அல்லது மனிதன் என்ற பேதமோ, உடல் சம்பந்தப்பட்டது, வெளியில் தெரிவது. மனம் குணங்கள் (ஸத்வ,ரஜோ,தாமஸ) ஆட்டுவித்தபடி ஆடுகிறது. -அதனால் பந்த மோக்ஷத்திற்கு அதுவே காரணமாகிறது. பொருள்களில் நல்லது தீயது என்றும், விரும்புவது, வேண்டாதது என்று அது காட்டும் சித்திரமே அல்லது உருவமே. . ஞானம் உதயமானால் உண்மை தெரியும்.
மனதை தான் விரும்பியபடி செய்யச் செய்யும் குணங்கள் துன்பத்தையே தரும். ஆகவே மனதை அடக்கி தன் வசம் ஆக்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் பஞ்சால் ஆன திரி நெய்யை தான் உள் வாங்கி, அக்னியின் உதவியோடு தீபமாக ஒளி விடுவது போல மனமும் புத்தியும் நிர்குணம் என்ற ப்ரும்மத்தை அறிந்து கொண்டு சத்புத்தியாக சுடர் விடும்.
பதினோரு செயல்கள். உடல் செய்யும் வேலைகள், இந்திரியங்கள் செய்பவை, ஞானம் மற்றும் அபிமானம். வாசனை முதலான விஷயங்கள் நுகர் பொருட்கள். அகூதி- ரூபம். கர்மேந்தியங்கள் செய்யும் ஐந்து விஷயங்கள். நடப்பது முதலியவை
ரஹூ கணனுக்கு ஞான உபதேசம்
முன் சொன்ன பல ஆத்ம விசாரங்களை விவரமாகச் சொல்லி முடிக்கிறார். …….மேலும் பல ஸ்லோகங்கள்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரிய வ்ரத விஜயம் என்ற ஐந்தாவது ஸ்கந்தத்தில் பதினொன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) வசன ஸ்லோகங்கள்- 17
அத்யாயம்-12
ரகூ கண ராஜா துதி செய்தார்;
நமோ நம: காரண விக்ரஹாய, ஸ்வரூப துச்ச்சீ க்ருத விக்ரஹாய. அவதூதனான அந்தணனாக வந்து ரகசியமான அரிய தத்வங்களை எனக்கு விளக்கிச் சொன்ன நித்யானந்த ரூபமாக விளங்கும் உங்களுக்கு நமஸ்காரம். வெப்ப நோயால் தவிக்கும் நோயாளிக்கு குளுமையான பனிக் கட்டி நிறைந்த நீரால் உடலை நீராட்டியது போலவும், தவறான தான் தனது என்ற அபிமானம் என்ற பாம்பின் விஷம் தாக்கி, மயங்கி , இருண்ட கண் பார்வையுடன் இருந்த எனக்கு ப்ரும்மன்! உங்கள் வாக்கு அம்ருதம் போலவும் விஷத்தை முறியடிக்கும் மருந்தாவும் அமைந்து விட்டது. ஆகவே, உங்களை, என் சந்தேகங்களை நீக்கும் பொருட்டு வணங்குகிறேன். அதன் பின், நல்ல அறிவும், அத்யாத்ம யோகம் பற்றியும் விவரமாக சொல்லுங்கள். என் மனம் தற்சமயம் அதை மிக மகிழ்ச்சியுடன் கேட்க விழைகிறது. யோகேஸ்வர! தாங்கள் சொன்னீர்கள். கண் முன் தெரியும் நற் பலன்கள் முன் செய்த வினைகளின் பலனே. எதிர்பாராமல் வந்தது அல்ல. இதன் விவரங்களை அலைபாயும் என் மனதிற்கு விளங்கும்படி சொல்லுங்கள்.
அந்தணர் சொன்னார்: இந்த ஜனங்கள் என்பதும், இவர்களுக்கு அரசன் என்றும் சொல்வது எதை குறிக்கிறது? யார் யாருக்கு என்ன காரனத்தால் இந்த பெயர் அல்லது பதவி வருகிறது. அந்த அரசனுக்கும் மற்றவர்களைப் போலவே தான், கால்கள், கனுக்கால்கள், முழங்கால்கள், மார்பு மத்ய பகுதி, தலை என்ற அமைப்பு உள்ளது. தானாக நடக்க கால்கள் இருந்தும் என்ன காரணத்தினால் உன்னை சிவிகையில் வைத்து வேறு சிலர் தூக்கிச் செல்கிறார்கள். சௌவீர ராஜன் என்ற பெயர் அத்துடன் நான் இந்த ஜனங்களை ஆளுகிறேன் என்ற உன் எண்ணம் உன் பதவியுடன் சேர்ந்து வந்தது. இந்த பூமி என்பது சிறு மணல் துகள்கள், சிறு கல் முதலியவைகளின் சேர்க்கையே. இவைகளை பிரித்தால் என்ன தேறும்? அணு, பரமாணு எனும் சின்னஞ்சிறு துகள் தானே. எந்த பரமாணு உன்னுடையது? மனம் தான் காரணம் இவைகளைக் கூட்டி வைத்து பூமி என்று பெயரிட்டு அதற்கு நாயகன் என்று உன்னை அழைத்து எதனால் அல்லது எது செய்கிறது? இதில் எந்த துகள் ஸ்தூலம்,(பருமன்) எது க்ருசம் (மெலிந்தது) என்று பிரித்தறிய முடியுமா? அணு அல்லது ப்ரும்மாண்டம் எது? சத் அசத் , நல்லது, அல்லாதது எவை? எதற்கு உயிர் , எதற்கு இல்லை என்று இந்த துகள்களில் எப்படி அறிவாய்? இதை செய்தது அஜன்- என்ற ஆதி அந்தமில்லாத, பிறப்பு இறப்பு இல்லாத முதல் புருஷன் -அவன் தான் செய்தான் என்பதை உணர்ந்து கொள்.
பரமார்த்தமான ஞானம்- நாம் அறியாத ஒரு பரம் பொருள் உலகை இயக்கும் சக்தி அதை அறிவது தான் உண்மையான அறிவு. சத்யமான ப்ரும்மா ஒன்றாக பலவாக, உள்ளும் வெளியுமாக பரவியிருக்கும் அதன் பெயர் தான் பகவான். கண் எதிரில் பார்க்கும் பொழுது ப்ரசாந்தனாக, அமைதியாக இருக்கும். அதை கவிகள் வாசுதேவன் என்பர். ரஹூ கணா! அதை தவம் செய்து மட்டும் அறிய முடியாது. வீட்டைத் துறந்து, மற்ற வசதிகளை அழித்துக் கொண்டால் மட்டும் கண்ணுக்கு புலப்படாது. வேத பாராயணத்தை முழுமையாக செய்தவனும் அறிந்ததாக தெரியவில்லை. தனித்தனியாக நீரை, அக்னியை.ஸூர்ய சந்திரர்களை , பூஜித்து தெரிந்து கொள்ள முடியாது. (நாயமாத்மா ப்ரவசனேன லப்யோ, ந மேதஸா, ந பஹுனா ஸ்ருதேன- கீதை)
வாசுதேவனை அறிய வேண்டுமானால் அவனை அறியவே சாதனைகள், பஜனைகள் செய்பவர்களுடன் இணைந்து இருப்பது பலன் தரும். கேட்பதும்,நினைப்பதும் வாசுதேவன் என்ற பெயர், அதுவே பகவான், பூஜ்ய: என்ற சம்பந்தமாகவே ஆகும்.
நான் முன்பு பரதன் என்ற அரசனாக இருந்தேன். வயதானதும் பகவானின் ஆராதனம், முழுமையாக செய்ய எண்ணி, துறவியாகி வனம் வந்தேன். மானின் மேல் வைத்த பற்றினால் ம்ருகமாக ஒரு ஜன்மம் எடுத்தேன். அந்த பிறவியிலும் என் நினைவு ஸ்ரீ க்ருஷ்ணன் அருளால் அழியவில்லை. மனிதனாக இந்த என் பிறவியில் என் மனம் ஜனங்களின் நடுவில் அமைதியாக இல்லை. அதனால் தனித்து தோன்றியபடி அலைகிறேன். எனவே, பல விதமான அனுபவங்களின் பலனாக விரக்தனாக அத்வானமான இடங்களில் செல்கிறேன். என் மனதில் மோஹம் இல்லை. ஞானம் என்ற வாளினால் என் மோகம் என்ற குணத்தை அடியோடு வெட்டி வீழ்த்தி விட்டேன். நான் முன்பு கேட்டு என் நினைவில் உள்ள ஸ்ரீ ஹரியின் கதைகள், அத்வானமான இடங்களிலும் எனக்கு துணையாக உள்ளன.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரிய வ்ரத விஜயம் என்ற ஐந்தாவது ஸ்கந்தத்தில் பன்னிரண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) வசன ஸ்லோகங்கள்-12
அத்யாயம்-13
அந்தணர் (பரத முனி) சொன்னார்: கடினமான வழி இது. இதில் நுழைந்தவன் இருட்டும், ரஜஸ், தமஸ், சத்வம் இவைகளின் பலனாக பிறவி பெற்று செயல் ஆற்றுபவன். இதில் தனமே முக்யமானதாக நினைத்து அலைகிறான், சிரமப்பட்டு தனத்தை சேர்கிறான். பலன் அவன் விரும்பியபடி அமைவதில்லை. இருந்தாலும் விடாமல் உழைக்கிறான்.
மனிதனுக்கு உடன் பிறந்த பத்து திருடர்கள் (இந்திரியங்களே திருடர்கள் போல துன்பம் விளைவிக்கும் என்பதால்). கோமாயு, ஓனாய்கள் போல அவனிடம் இருந்து பிடுங்குதிலேயே குறியாக இருப்பவை. ஆனாலும் சில சமயம் கந்தர்வ புரம் என்பதை காண்கிறான். ரசிக்கிறான். பலவிதமான இன்னல்கள் கொசு கடிப்பது போல இருந்தாலும், சில சமயம் கிடைத்த நன்மையை நினைத்து தொடர்ந்து உழைக்கிறான்.
வீடு வேண்டும், குடிக்க நீர், செல்வம், இவைகளை தன் புத்தியால் சம்பாதிக்கிறான். காட்டில் அலந்து திரிவது போல இதற்கும் பல இடங்களில் அலைந்து திரிகிறான். பலமான காற்று வீனாலும், புழுதி மண்டினாலும், திசை தெரியாமல் திணறினாலும் கண்களை மறைக்கும் புழுதி, பூச்சிகள் சப்தமிடுவதைக் கேட்டும், ஆந்தை அலறுவதைக் கேட்டும் திசையறிந்து கொண்டு பசித்தாலும், பாலைவனத்தின் கானலைக் கண்டு மயங்கி அதன் பின் ஓடினாலும், வேறு வழியின்றி தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறான். வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்ற.
எதிர்பாராமல் ஒரு நீர் நிலையை அல்லது நதியைக் கண்டால் ஆஹா என்று மகிழ்வான். தாவாக்னி எதிர்ப்படுவது போல உடலை வதைக்கும் இடங்கள். யக்ஷர்கள் வந்து அடிப்பார்களோ என்ற பயம். இந்த நிலையில் சேமித்ததையும், பிடுங்கி திருடிக் கொண்டு போக பலசாலிகளான திருடர்கள் எதிர் படலாம். சிரமப்பட்டு சேமித்த செல்வம் பறி போக பல வழிகள். இதனிடையில் முஹூர்த்த நேரம் கந்தர்வ நகரம் எதிப்பட்டால், மனம் மகிழ மாட்டானா? வழி நடையில் முள் குத்திய வலி அவனுக்குத் தானே தெரியும். நகங்களில் பட்டு வலி தெறிக்கும். சற்றும் அமர்ந்த்து விட்டு பின் தொடர்ந்து செல்வான். குடும்பஸ்தனுடைய கஷ்டம் அவனுக்குத் தான் தெரியும்.
அதைவிட கஷ்டம், வழியில் மலைப் பாம்புகள் இருந்து விழுங்கி விட்டால் என்று பயம். தந்த சூகம் என்ற அந்த ஜீவன்களில் பல்லில் விஷம். குருடன் இருண்ட பாழும் கிணற்றில் விழுவது போல. அந்த சமயம் சிறிதளவு தேனீக்களின் கூட்டில் இருந்து வழியும் தேன் நாக்கில் படுமானால் மகிழ்ச்சி அடைவதும் இயல்பே. அனைத்து துன்பங்களையும் ஒரு வினாடி நேரம் மறக்கச் செய்யும் சுகானுபவம்.
மழை, கடும் குளிர் அல்லது கோடை வெய்யில் என்று பருவ காலங்களினால் உடல் வருத்தம் வரும். சூதாடி நண்பர்களோடு விளையாடி தொலைப்பது போன்ற தாங்களே அறிவின்மையால் வகுத்துக் கொண்ட நஷ்டங்கள். தனம் இல்லை, அல்லது போதவில்லை என்றால் தூக்கத்தை தொலைப்பான். யாசித்து ஏதோ சிறிது பெற்றாலும் தொடர்ந்து யாசித்தால் அவமானம் தான் மிஞ்சும். அதனாலும் வைரம், நன்பர்களே விரோதிகள் ஆவார்கள். இப்படி துன்பம் வரும் என்று முன் யோசனை வராது.
இதை எண்ணித்தான் பெரியவர்கள், மனதை அடக்கு என்றார்கள். தன்னை அறிந்து கொள். ஆசை படாதே என்ற அறிவுரைகள். பல விதமாக மனித வாழ்க்கையின் நிரந்தமின்மையைச் சொல்லி விட்டு, ரஹூ கணா! நீயும் இந்த அனுபவங்களை பெற்றிருக்கலாம். நட்பும், வைரமும் தெரிந்திருக்கும். அதனால் தான் ஞானம் பெற உபதேசம் பெற கிளம்பி இருக்கிறாய். ஹரி சேவையால் நன்மை அடைவாய். தாண்ட முடியாத இந்த சம்சாரம் என்ற தளையை நீக்கி வெளி வர அது தான் வழி. ஞானம் பெறுவாய்.
அரசன் ரஹூ கணன் பதில் சொன்னான். அஹோ! அந்தணரே நீங்கள் பாக்யசாலி. ஹ்ருஷீகேசனிடம் மனதை செலுத்தி மஹாத்மாவாக ஆனவர். க்ருதாத்மானம், மாஹாத்மானம் என்று உங்களை வணங்குகிறேன். உங்களை சந்தித்தால் என் வாழ்வே பயனுடையதாக ஆயிற்று. உங்களை வணங்கி அமலமான அதோக்ஷஜனை வணங்கிய பலனுக்கு சம மான நன்மையை அடைந்து விட்டேன். தர்க்கம் செய்த எனக்கு விவேகம் கிடைக்கச் செய்து விட்டீர்கள்.
மஹானான உங்களுக்கு வணக்கம். இந்த அறிவு உடையவன் யாரானாலும், குழந்தையோ, யுவனோ, மாணவனோ, படித்து முடித்த அறிவாளியான அந்தணனோ, அனைவருக்கும் வணக்கம். பேதமின்றி அந்த அறிவை வணங்குகிறேன். இப்படி ஓரிடத்தில் நில்லாமல் சுற்றும் மாபெரும் அறிவாளிகளால் அரசர்கள் பெருமை நிலைக்கிறது.
ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு பதில் சொன்ன அரசனுக்கு ரிஷி பரதன் ஆத்ம தத்வம் என்ற உபதேசம் செய்தார். சிந்து தேச அரசனுக்கு கருணையுடன், அன்யோன்யமாக அன்புடன் ப்ரும்மரிஷியின் மகன் உபதேசிக்கவும் அந்த அரசன் மேன் மேலும் பணிவுடன் வணங்கியும், மகிழ்ச்சி கடலில் திக்கு முக்காடியவன் போல உணர்ந்தான். உடல் தரையில் பட அவரை விழுந்து வணங்கினான். அரசன் என்ற பெருமிதமும், உடலே பிரதானம் என்ற எண்ணமும், விலகின. இப்படித்தான் பகவானை நம்பி அதே நினைவாக வாழும் பெரியவர்களை அடைந்தால், அவர்கள் அருளுக்கு பாத்திரமாகி தாங்களும் நல் கதி அடைவர்.
மஹா பாகவதரே! பரமார்த்தமான விஷயங்களை புரியும்படி சொல்லி எனக்கு அறிவை புகட்டி விட்டீர்கள். என் கண் திறந்து கொண்டது போல தெளிவாக உலகியலை காண்கிறேன். ஆர்யா! புத்திமானான தாங்கள் எனக்கு அளித்த அறிவு, சாதாரணமாக எளிதில் கிடைக்காது. மேலும் சொல்லுங்கள். நான் உய்யும் வழியை காட்டுங்கள், என்று வேண்டினான்.
இதுவரை ஐந்தாவது ஸ்கந்தத்தின், பதின் மூன்றாவது அத்தியாயம்.
அத்யாயம்-14
அவர் மேலும் உபதேசித்தார்: வசன நடையில் அலங்காரமான சொற்களுடன் அழகாக அமைந்த இந்த பகுதியில், தான், தன் தேகம் , தன்னுடைய என்ற குணங்களே பிரதானமாக வாழ வேண்டாம், பகவானை நினைத்து அவர் பாதார விந்தங்களில் சரணடைவாயாக. அவரே, குரு, அவரே உலகியல் தாபங்களை தீர்க்க கூடியவர் என்று சொல்கிறார்.
இந்த ஐந்து புலன்களும் திருடன்கள் போல- எப்படி என்றால், சிரமப் பட்டு ஈட்டிய செல்வத்தை விரயமாக்கும் வழிகளில் மனதைச் செலுத்தும். தர்மத்தைச் செய்ய எண்ணினாலும், கண் பார்த்தும், செவிகள் கேட்டும், நாக்கு ருசித்தும், தொடு உணர்ச்சியால் கவரப் பட்டும், பகவானை ஆராதிக்க விடாமல் இழுத்து வழி மாற்றி இழுத்துச் செல்லும். அதனால் மனதை அலை பாயாமல் திடமாக வைத்துக் கொள்.
இல்லறத்தில் இருப்பவனுக்கு, மனைவி மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் மிக அதிகம். அவர்கள் அனு கூலமாக இல்லையென்றால் நாய்களும், குள்ள நரிகளும் அபகரிப்பது போல செல்வம் கரையும். அதைத் தவிர எந்த நன்மையும் இல்லை.
ஆண்டு தோறும் உழுது பயிரிட்ட விளை நிலம், ஒரு காலத்திற்குப் பின் வறண்டு போகும் அபாயம் உள்ளது. அந்த சமயம் விதைகள் உலர்ந்து முளைக்காமல் போகும். இதையறியாமல் விதைத்து விட்டு வருந்துவது அறியாமையே. அது போலத்தான் இல்லறமும். தொடர்ந்து போஷித்துக் கொண்டு உறவினரை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும். காலம் செல்லச் செல்ல உறவுகளின் நெருக்கம் குறையும், தேவைகள் அதிகமாகும், அதனால் மனம் வருந்த நேரிடும்.
விட்டில் பூச்சி, சகுந்த என்ற பறவை, எலிகள், இவைகள் பயிரை நாசம் செய்வது போலவே, அறிவில்லாத மனிதர்கள், மற்றவர்களால் பாதிக்கப் படுவர். கந்தர்வ நகரம் என்று தாங்கள் வாழும் இடத்தை ரசிப்பதும் காலம் செல்லச் செல்ல அதுவும் மன பிரமையே என்று உணருவர்.
பானங்கள், நல்ல உணவுகள் என்று தேடி தேடிச் செல்வார்கள். வெகு தூரத்தில் கோடைக் காலத்து கானல் நீர் போன்று எதையோ நம்பி ஏமாறுவர். வெளி வேஷம், தோற்றங்கள் பொன் போலவும், உண்மை போலவும் கண்களை மயக்கும். அதனால் தான் சம்சாரத்தை அடவி, காடு என்றனர். அலைந்து திரிந்தாலும் வேண்டி வந்த பொருள் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்.
பலவிதமான அவமானங்கள் தன் மனிதர்களிடமே அடைய நேரிட்டால் அதிக துக்கம். ஆனால் அதை மறந்து அவர்களையே நம்புவது தான் மனித இயல்பு. முன் செய்த நல்வினையால், நல்ல பொருளும், சுகங்களும் நிறைய இருந்து விட்டால், சுற்றத்தார், உறவினர் அது தீரும் வரை உடனிருப்பர். எதேச்சையாக நல்ல உபதேசம் பெற்று மனம் மாறி வந்தால், மன நிலை சரியில்லாதவன் என்பர். ஒரு அளவுக்கு மேல், செல்வத்தில் உள்ள ஆசையால் தந்தை மகனுக்கிடையில் கூட மன வேற்றுமை வரும்.
இவ்வாறே, நரை, திரை, மரண பயம் என்று இல்லறத்தில் வரக் கூடிய துன்பங்களைச் சொல்லி, எச்சரிக்கிறார்.
ஈஸ்வரனான பகவான் அருளால், நல்ல எண்ணங்களும், வாழ்க்கையை வீணே செலவழிக்காமல், பரமாணு முதலான பகவானின் ரூபங்களை தெரிந்து கொண்டு தானே தன்னை உய்வித்துக் கொள்ளவும் முடியும். ப்ரும்மத்திலிருந்து, புல் பூண்டுகள் வரை பகவானின் அம்ச பூதமே என்ற அறிவும், கால சக்கரம் என்ற தன் ஆயுத த்தால், யக்ஞ புருஷனான பகவான் நம்மை காக்கிறான் என்ற ஞானம் பெறலாம். மிக கவனமாக இருந்து கழுகு போலும், ஆந்தை போலும், கவடன் போலும் கலைக்க வரும் கும்பல்கள் ஆத்ம ஞானம் அடைவதை தடுக்கவே வரும் என்பதையும் அறிந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் வேதங்களும், சாஸ்திரங்களும் சொல்வதை மறுப்பார்கள். தங்கள் கடமைகள், ஒழுக்கங்களை, தர்ம சாஸ்திரங்களை மறுத்து பேசுவது தவிர தாங்களும் எந்த நன்மையும் அடைவதில்லை. பகவானை நம்பி ஆராதனை செய்து சாஸ்திர கர்மாக்களை சரிவர செய்து வருபவன், உயர்வு அடைவதால், அவர்களைப் பார்த்து பொறாமை மட்டுமே அவர்கள் செயலுக்கு காரணமாகும்.
வானரங்கள் போல வாழ்வார்கள். தன்னிஷ்டம் போல சுற்றும் விலங்குகள் போல உண்பதும், வம்சத்தை பெருக்குவதும் மட்டுமே வாழ்க்கை. தன் மகன், மனைவி இவர்களை காப்பது என்ற செயல் கூட இராது. எந்த விதம் செல்வத்தை சேர்ப்பது என்று மட்டுமே அறிவை பயன்படுத்தும் இது போன்ற மக்களிடம் விலகியே இருக்க வேண்டும்.
எனவே தான், யோக முறையில் சாதனைகள் செய்யும் பெரியவர்களை உயர்வாக சொல்கிறோம். முனிவர்கள் என்ற இவர்களால் மற்றவர்களுக்கு இடையூறோ, துக்கமோ இல்லை. மாறாக அமைதியான அவர்கள் குணமும் நடத்தையுமே அண்டியவர்களுக்கு ஆறுதல் தரும். ராஜ ரிஷிகள், திக்குகளை ஜயித்து, வெற்றி வலம் வந்தவர்கள் கூட, யாகங்கள் செய்தும், தானங்கள் கொடுத்தும் தன் ப்ரஜைகளை சுகமாக இருக்கச் செய்வார்கள். கர்ம காண்டம் என்பதும் முக்கியமான ஒரு விதி. அதனால் சாஸ்திர விதிகளின் படி நடப்பர்.
ராஜரிஷியே! இது பெரியவர்கள், சாதித்தவர்கள் சொல்லும் அறிவுரை. மகன், மனைவி, உற்றார் உறவினர் அனைவரையும் அனவணைத்துச் செல்லும் இல்லற வாழ்க்கையிலும், தன் மனக் கட்டுப்பாடும், தன்னை உயர்த்திக் கொள்ளும் முணைப்பும் இருக்க வேண்டும். பகவான் ஸ்ரீமன் நாராயணனே யாக புருஷன். தர்மத்தின் அதிபதி. விதி என்ற வேதங்களில் நிபுணன். சாங்க்யம் என்ற ஞான மார்கத்தை அருளியவன். யோகம் என்பதையும் சொல்லும், இயற்கையின் ஈஸ்வரனான நாராயணனை நமஸ்கரிப்போம். உலகை காக்க மிருகமாக கூட அவதரித்தவன்.
இவ்வாறு பரத ரிஷி, ஏற்கனவே பாகவதனாக, அறிவுத் தாகம் உடையவனாக இருந்ததால் அரசன் ரஹூ கணனை ஆசீர்வதித்து, , ஆயுள், செல்வம், புகழ், சுவர்க பதவிகள் கிடைக்கவும் வாழ்த்தி அருளினார்.
இதை கேட்பவர்களுக்கும் நல்ல பகுத்தறிவும் – இது காஞ்சனம் இது தோற்றமே என்று பிரித்து அறிந்து கொள்ளும் திறமை- வரும் என்று பலன் சொல்லி முடிக்கிறார்.
(இதுவரை ஸ்ரீமத் பாகவத்தின் ஐந்தாவது ஸ்கந்தத்தில், பதி நான்காவது அத்யாயம்.)
அத்யாயம்-15
ஸ்ரீ சுகர் சொன்னார்: பரதனுடைய மகன் சுமதி என்பவனை, ஒரு சில நாஸ்திகர்கள், ருஷப ராஜனை அனுசரிப்பதாக சொல்லிக் கொண்டு வேத சம்ப்ரதாயத்திற்கு மாறான ஒரு வழியை தங்கள் புத்திக்கு எட்டியவரை புதிதாக ஒரு சம்ப்ரதாயத்தை ஆரம்பிப்பார்கள்.
சுமதிக்கு விருத்த சேனா என்பவளிடம் தேவதாஜித் என்ற பெயரில் ஒரு மகன் பிறந்தான். ஆசுர குணம் கொண்ட அந்த மகன் அசுர ஜாதி பெண்ணிடம் தேவத்யும்னன் என்ற மகனை பெற்றான். அந்த வம்சம், தேனுமதி மகன் பரமேஷ்டி, அவன் மகன் ப்ரதீஹ என்பவன் என்ற வரை வளர்ந்தது.
ப்ரதீஹன் ஆத்ம வித்யையை கற்றான். தானும் பரி சுத்தமாக இருந்து மஹா புருஷர்களை அனுசரித்து நடந்து கொண்டான். சுவர்சலா அவன் மனைவி. அந்த வம்சம் வளர்ந்தது.
அத்யாயம்-16
அரசன் வினவினான். பூமண்டலம் பற்றிச் சொன்னீர்கள். ஆதித்யனின் வெப்பம் உலகில் உயிர்களை வாழ வைக்கிறது. சந்திரனுடனும், தாரகைகளுடனும் இருப்பதை ஜோசியம் என்ற அறிவியல் உடன் இருந்து உலகின் நன்மை தீமைகளை உறுதி செய்வதாக சொல்வர். அது பற்றிச் சொல்லுங்கள்.
அதிலும், ப்ரிய விரதன் தன் ரதத்தில் ஏழு கடல்களை தாண்டினான் என்று சொன்னீர்கள். அதை விவரித்துச் சொல்லுங்கள். சப்த த்வீபம்- ஏழு தீவுகள் என்பவை யாவை? அவைகளின் தனித் தன்மை என்ன? அவைகளின் இருப்பையும், பயனையும் விவரமாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன், என்றான். அதிலும், பிரியவ்ரதனின் ரதம் சென்ற வழியில் ஏழு கடல்கள் ஸூழ இருந்தன என்ற பூ பாகங்கள் பற்றிச் சொல்லுங்கள். விரிவாக இவைகளின் இருப்பு, இவைகளின் சிறப்புகள் இவற்றைச் சொல்லுங்கள்.
பகவன்! நீங்கள் பொதுவாக அதன் வெளி உருவத்தை மட்டும் சொன்னால் போதாது. நீங்கள் மனதை அடக்கியவர்கள். மனதின் ஆற்றலை சூக்ஷ்ம மான ஆத்மஜோதி என்பதில், அதுவே பர ப்ரும்மான பகவான் வாசுதேவன், அவரிடம் முழுமையாக ஈடுபாட்டுடன் வைக்கத் தெரிந்தவர், அதனால் குரோ! இவைகளை விளக்கிச் சொல்ல உங்களால் தான் முடியும்.
ரிஷி சொன்னார்: மகாராஜ! பகவானின் மாயா குணங்கள் அளவற்றவை அல்லவா. முழுவதும் அறிவது மனித யத்தினத்தில் முடியுமா? ஓரளவு, வாக்கு, மனம், உடல் இவைகளால் தெரிந்து கொண்டோமானால் அதுவே போதுமானது. மிகச் சிறந்த அறிவாளிகள் அறிந்து சொன்ன விவரங்களையே, முக்யமான பூகோளத்தின் அமைப்பு, அதன் சிறப்பு, பெயர்கள், அடையாளங்கள் இவற்றைச் சொல்கிறேன்.
இவைகளின் மத்தியில், இளாவ்ருத்தம் என்ற பூப் பகுதி, ப்ரும்மாண்டமே உருவானால் அதன் நாபி-மத்ய ப்ரதேசத்தில் இருப்பது போல அமைந்துள்ளது. குல கிரி எனப்படும் மலையரசன், பொன் நிறத்தினனாய், இத்தீவின் காதுகளில் வைத்த கர்ணிகாரம் பளீரென்று தெரிவது போல பரவி நிற்கிறான். குவலய கமலம் – இந்த பூப் பகுதி, அதன் உச்சி, தலை போன்ற பாகத்தில், முப்பத்து இரண்டு ஆயிரம் யோஜனை தூரம், அடிப் பகுதி, பதினாறு ஆயிரம் வரை பூமிக்குள் வேரூன்றியவனாக இருக்கிறான்.
வடக்குக்கும் வடக்காக, இளா விருத்தம் நீலன், ஸ்வேதன், ஸ்ருங்கவான் (நீல மலை, வெண் மலை, சிகரம் உடையவன்) என்று முன்று விதமானவை ரம்யக, ஹிரண்மய, குரூ என்ற பூமிகளின் பாதுகாப்பு அரண்களாக, எல்லைகளாக உள்ளன. இரு புறமும், பாற்கடல், இரண்டாயிரம் ப்ருதவ- பூ பாகங்கள், ஒவ்வொன்றும் கிழக்கு, அதற்கும் கிழக்கில், வடக்கிலிருந்து வடக்காக பத்திற்கும் மேலான பகுதிகளாக நீண்டு செல்கிறது.
தென் பகுதியில் இளா வ்ருத்தம் நிஷத, ஹேமகூட, ஹிமாலய என்று சிறப்பு பெயர்களால் அழைக்கப் படும். முன் சொன்ன நீலம் முதலானவை இரண்டு யோஜனை தூரம் இடைவெளிகளில் ஹரிவம்சம், கிம்புருஷ, பாரதம் என்று கிரமமாக பெயர் பெற்றவை.
அதே போல, மற்ற திசையில், மால்யவான், கந்த மாதனன், அவானீல, நிஷாயதன் என்பவைகள் இரண்டாயிரம் பூப்ரதது: சற்றே சிறிய பூ ப்ரதேசங்கள், கேதுமால, பத்ராஸ்வ இவைகளின் எல்லைகளாக இருக்கின்றன.
மந்தரம், மேரு மந்தரம், சுபார்ஸ்வ:, குமுத என்று இவைகளும் இரண்டாயிரம் இடைவேளிகளில் விஸ்தாரமாக உயர்ந்து மேருவின் நால் திசைகளுக்கும் பாதுகாவலாக நிற்கின்றன.
இந்த நான்கிலும், சூத-மா, ஜம்பூக-நாவல், கதம்ப, ந்யக்ரோத, என்ற நால் விதமான மரங்கள் ப்ரசித்தம். மலையின் உச்சியில் கட்டப் பட்ட கொடிகள் போல, கிட்டத்தட்ட ஆயிர யோஜனைகள் உயர்ந்து மரங்களின் அடர்த்தியால் நூறு யோஜனை தூரம் பரவி உள்ளன.
பரதர்ஷபா! இதில் நான்கு குளங்கள், பயோம, (பால் நிறைந்த), இக்ஷுரஸ (கரும்பின் ரசம்), இவைகளின் ருசியுடன் நீர் நிறைந்தவை. இதைத் தொட்ட மாத்திரத்தில் தேவர்களின் உபதேவ கணங்கள், சாதகர்கள், யோக ஐஸ்வர்யங்களை சுலபமாக பெறுவர்.
தேவ உத்யான வனங்களும் உள்ளன. அவையாவன- நந்தனம், சைத்ர ரதம், வைப்ராஜகம், சர்வதோ பத்ரன் என்பவை.
இவைகளில் தேவர்களின் கூட்டம் மற்றும் தேவ லோக பெண்கள், சேனைத் தலைவர்கள், உபதேவ கணங்கள், பாடிக் கொண்டு மகிழ்ச்சியாக வலம் வருவர்.
மந்தர மலையின் சாரல்களில், பதினோரு நூறு – ஆயிரத்து ஒன்று யோஜனை உயரங்களில் தேவ சூத, தேவ லோக மாமரம், மலைகளின் சிகரங்களுக்கு இணையாக வளர்ந்து பழங்கள் நிரம்பி, அடர்த்தியாக இருக்கும்.
அவைகளின் அதி மதுரமான பழங்களின் மணம், அருண வர்ணத்தில் நிரம்பி வழியும் ரஸம், ப்ரவாகமாக ஓடும் அருணோதா என்ற நதியில் விழ, மந்தர கிரியின் சிகரத்திலிருந்து பாய்ந்து விழுவது போல கிழக்கு திசையாக ஓடி இளா விருத்தம் என்ற பகுதியை வளமாக்கும்.
பவானியின் அனுக்கத் தோழிகள், இந்த நீரில் நீராடி, இந்த மணத்தையும் தங்கள் உடலில் பரவப் பெற்று செல்லும் இடங்களில் எல்லாம் முகர்ந்து மகிழ்வர்.
இவ்வாறு ஜம்பூ பழங்களின் மரங்கள் உயரமாக வளரும் தன்மையவை. உயரத்திலிருந்து விழும் பழங்கள், பரவலாக இரண்டாயிரம் யோஜனைகள் நிலப்பரப்பில் விழுந்து, அங்கு ப்ரவஹிக்கும் ஜம்பூ என்ற நதியில் அதன் மணம் நிறைந்திருக்கும் படி செய்கின்றன. மேரு மந்தர சிகரத்திலிருந்து வேகமாக இரண்டு யோஜனை தூரம் பூமியில் விழுவது போல அருவியாக வருபவள், தென் பகுதியிருந்து இளா விருத்த பூ பிரதேசத்தை நனைக்கிறாள். 19
இந்த நதிகளின் இடையில் சேரும் வண்டல் மண், அதனுடன் வாயுவும், அர்க்க எனும் ஸுரியனின் வெப்பமும் சேர அமரர்களும் என்றும் விரும்பும் பொன் என்ற தாதுவாக பரிணமிக்கிறது. ஜாம்பூனதம் எனும் உயர்ந்த வகை பொன் சுவர்ணம் என்றும் அழைக்கப் படுகிறது. இதை விவரம் அறிந்தவர்கள், பெண்களுக்கான கடகம், இடையில் அணியும் ஒட்டியானம், கழுத்தில் அணியும் மாலைகள் என்ற ஆபரங்களைச் செய்ய அறிவர்.
மகா கதம்பம் சுபார்ஸ்வ என்ற மலை சிகரத்திலிருந்து தோன்றி அருவியாக விழுந்தவை அருகில் இருக்கும் குகைகளுக்குள் நுழைந்து ஐந்து விதமான மது தாரைகளாக, பெருகி வந்து இளா விருத்தம் என்ற இந்த பூமியை வளமாக்குகின்றன. அதன் மணத்தை காற்று பல நூறு யோஜனைகளுக்கு எடுத்துச் சென்று அந்த இடத்தையே சுகந்தமாக்குகிறது.
அதே போல, குமுத சிகரத்திலிருந்து விழும் சதவல்ஸோ என்ற மரத்தின் கிளைகளின் அடியில் பெருகி சுற்றி வந்து, பால் கடலாக, மது, நெய், வெல்லம் கலந்த அன்னம் மற்றும் ஆடைகளுக்கான, படுக்கை, ஆசனங்களுக்கான, ஆபரணங்களூக்கான எல்லா விதமான தேவைகளையும் நிறை வேற்ற பயனுள்ள பொருட்களை நதியாக, நதா: (நதியின் ஆண்பால், மேற்கிலிருந்து கிழக்காக பாய்பவை) குமுத சிகரத்திலிருந்து அருவியாக வடக்கு பகுதியிலிருந்து இளா விருத்த தேசத்தை வளமாக்குகிறது.
இவைகளை பயன் படுத்தும் ப்ரஜைகள், ஒரு பொழுதும், நரை, திரை, சோர்வு, வியர்வை பெருகி துர்கந்தம் வீசுதல், வயது முதிரும் சமயம் தோன்றும் மாறுதல்கள், வியாதிகள், அதனால் ம்ருத்யு, சீதோஷ்ணம் – குளிர், வெப்பம் என்பவைகளால் உடல் வர்ணத்தை இழத்தல், உபசர்கம் என்ற துன்பங்கள் வரா. இவை பெயர்களாக கேட்டவைகளாக மட்டுமே இருக்கும். உயிர் உள்ள வரை சுகமாக இருப்பர். இது ஒரு நிரந்தரமான அதிசயமே.
இவை தவிர, இருபது மலைச் சிகரங்கள், மேருவின் இருபக்கமும், மலையை ஒட்டியே அணைப்பது போல் ஒட்டியே நிலைத்து நிற்கின்றன. அவையாவன: குரங்க, குரர, குசும்பவ, ஏக, கங்க, த்ரிகூட, சிசிர, பதங்க, ருசக, நிஷத, சினீவாச, கபில, சங்க2, , வைதூர்ய, ஜாருதி, ஹம்ஸ, ருஷப, நாக காலஞ்ஜர,நாரத என்பவை.
தேவகூட என்பதன் மத்திய பகுதியில், மேருவை கிழக்கிலிருந்து பதினெட்டு ஆயிரம் யோஜனைகள், இரண்டாயிரம் பெரிய சிகரங்கள், சூழ்ந்து, தனித் தனி சிகரங்களாகவே, இருந்து மற்றொரு விதமான காற்றும், தென் திசையிலிருந்து கைலாஸ, கரவீர என்பவை, பாடல் பெற்ற ஸ்தலங்கள், அதே போல வடக்காக த்ரிஸ்ருங்க, மகராவஷ்ட என்பவைகளுடன் சுற்றிலும் அக்னி ஸூழ்ந்தது போல கஞ்சன கிரி என்ற பெயரில் பொன் வண்ணமாகவே பிரகாசமாக விளங்குகின்றன.
மேருவின் உச்சியில், ஆத்மயோனி என்படும் பகவானின் நகரம், இரண்டாயிரம் யோஜனைகள் அதன் நால் சதுர மடங்கு தூரம் பரவி ஸாதகும்பம் என அழைக்கப்படுகிறது.
அதைச்சுற்றிலும் லோக பாலர்கள் எட்டு பேர், திசைகளுக்கு அதிபதிகளாக எட்டு திசைகளையும் ஒரே விதமான ரூபம், நகரத்தை எட்டு திக்கிலும் நிலைத்து நின்று பாலிக்கிறார்கள்.
(இது வரை ஸ்ரீமத் பாகவதத்தின் ஐந்தாவது ஸ்கந்தத்தில், பதினாறாவது அத்யாயம்)
அத்யாயம்-17
ஸ்ரீ சுகர் தொடர்ந்தார்: பகவானின் யாக ஸ்வருபத்தில் விஷ்ணுவின் இடது பாத நகத்தின் வழியாக ப்ரவாஹமாக வந்த நீர், ப்ரும்மாண்டத்தில் மேல் பகுதியில் விழுந்தது. அதன் பின் எங்கோ மறைந்தவள், பின் நதியாக உற்பத்தியாகி அவருடைய சரணங்களின் காந்தியுடன் கூடிய அருண வர்ணமாக ப்ரவஹித்தாள். அவளே கங்கை. அகில ஜகத்தையும் பரிசுத்தமாக்கும் தன்மையுடன் அமலா சாக்ஷாத் பகவதி – பகவானின் பாதத்தில் பிறந்தவள்- காலம் காலமாக ஆயிரம் யுகங்களுக்கும் மேலாக தென்படாமல் பெயரளவில் அறிந்தவளாக இருந்தவள் மேரு மலையில் இறங்கினாள். அதுவே கங்கை நதியானது. அவள் வெளிப்பட்ட இடம் விஷ்ணு பாதம் என்று போற்றப் படுகிறது. உத்தானபாதரின் வம்சத்தில் வந்த பரம பாகவதர்களான எங்கள் முன்னோர் அவளை குல தேவதை என்று வணங்கினர். பகவானின் பாதத்தில் தோன்றியவள் புண்யமான நீர் என்று யாகங்களில் பயன் படுத்துவோம். அவளை என் முன்னோர்கள் மிக்க மரியாதையுடன் தலையில் தெளித்துக் கொள்வர்.
அதன் பின் ஏழு ரிஷிகளும் அதன் பிரவாஹத்தில் மூழ்கி எழுவதை புண்யமாக நினைத்து தவம் செய்வதை அவள் கரைகளிலேயே மேற்கொண்டனர். வாசுதேவனிடத்தில் இருந்த பக்தி விசேஷத்தால் கங்கை நதியை அவர் அனுக்ரஹம் பெற்றவள் என்று இன்றளவும் முக்தியை வேண்டுபவர் பகுமானத்தோடு பார்க்கின்றனர். அதன் பின் பல சஹஸ்ர கோடி விமானங்களில் வந்த தேவர்களுடன், சந்திர மண்டலத்தைச் சுற்றி வந்து, ப்ரும்ம சதனம் என்ற இடத்தை அடைந்தாள். இங்கு நான்காக பிரிந்து சீதா, அலகநந்தா, சக்ஷு:, பத்ரா என்ற பெயர்களுடன் நான்கு திசைகளிலும் பரவி நத, நதீ பதி எனும் சமுத்திரத்தை சென்றடைகிறாள். சீதா என்ற நதி ப்ரும்ம சதனத்திலிருந்து கேஸர முதலிய சிகரங்களில் இருந்து கீழ் நோக்கி ஓடி, கந்தமாதன பர்வதத்தின் முடியில் இறங்கி, பத்ராஸ்வ வர்ஷம் என்ற இடத்தில் நுழைந்து கிழக்கு நோக்கி பிரவஹித்து உப்பு சமுத்திரத்தை அடைகிறாள். அதே போல சக்ஷு: என்பவள் மால்யவானின் சிகரத்தில் இறங்கி, கேது மாலா என்ற சிகரத்தை தழுவிக் கொண்டு இறங்கி உவமிக்க முடியாஹ வேகத்துடன் ஓடி, மேற்கு திசையில் சமுத்திரத்தில் கலக்கிறாள். பத்ரா மேரு சிகரத்தில் இறங்கியவள், நீல கிரி மலையின்,ஸ்வேத கிரி என்று சிகரத்திற்கு சிகரம் தாண்டி பிரவகிக்கிறாள். ஒவ்வொரு சிகரத்தின் உச்சியிலும் இருந்து விழுபவளாக குரு க்ஷேத்ரத்தை சுற்றி வளைத்து ஓடி வந்து வடக்கு திசையில் ஹேமகூட மலைகளின் நடுவில் புகுந்து புறப்பட்டு சமுத்திரத்தில் கலக்கிறாள். அதே போல அலகநந்தா தென் திசையில் ப்ரும்மசதனத்திலிருந்து கிளம்பி பல விதமான மலை சிகரங்களைக் கடந்து ஹேம கூடத்திலிருந்து வெகு வெகமாக பிரவஹித்து ஓடி, பாரத வர்ஷத்தின் நில பகுதி வழியாக தக்ஷிண சமுத்திரத்தை அடைகிறாள். இங்கு ஸ்னானம் செய்ய வருபவர்கள், வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அஸ்வமேத, ராஜஸூய யாகங்கள் செய்த பலனுக்கு குறையாத நற்பலனை அடைகிறார்கள்.
இவை தவிர நதிகள், (கிழக்காக ஓடி சமுத்திரத்தில் கலப்பவை) நதங்கள் (மேற்காக ஓடி சமுத்திரத்தில் கலப்பவை) மேரு மலையின் பெண்களாக நூற்றுக் கணக்காக பாரத வர்ஷத்தின் ஒவ்வொரு பகுதியையும் வளமாக்குகின்றன. பாரத வர்ஷம்- பாரத தேசம் தான் கர்ம பூமி. மற்ற எட்டு கண்டங்கள், ஸ்வர்கத்தில் வசிப்பவர்களின் புண்ய சேஷம்- அனுபவித்தது போக மீதியான புண்யங்களை அனுபவிக்க போக பூமிகள்.
(திவ்ய, பௌம,பில- தேவ, பூமி,பாதாளம் என்று ஸ்வர்க போக பூமிகள்.) நீண்ட ஆயுள், திடமான உடல் வாகு, சமமான மனைவியிடம் முதல் ஆண்டிலேயே பெறும் சந்ததியுடையவர்கள், த்ரேதாயுகத்தினர். க்ருத யுகத்தினர் தியான நிஷ்டர்கள். த்வாபரம் முதல் அதிக துக்கம். தேவ பதிகள் உல்லாசமாக வனங்களையும், நதிக் கரைகளிலும், சுற்றுபவர்களாக அனுபவிப்பதே நோக்கமாக கொண்ட தம்பதிகள்.
ஒன்பது கண்டங்களிலும் பகவான் நாராயணன், மனிதர்களை தன் அனுக்ரத்தால் காக்கிறார். அவர்கள் சுக சௌக்யங்களை அனுபவிக்க வசதியாக தானே கவனமாக கண்காணிக்கிறார்.
இலா விருத்தம் எனும் இடத்தில் பகவான் பவன் மட்டுமே புருஷன், பவானி மட்டுமே ஸ்த்ரீ. வேறு எந்த புருஷன் அங்கு வந்தாலும் பவானியின் சாபத்தால் பெண் ஆவார்கள். அது பற்றி பின்னால் சொல்கிறேன். ஏராளமான பெண்கள் அவரை தெய்வமாக துதித்து வணங்கி இருந்தாலும் பவன் தன் தியானத்திலேயே மூழ்கி இருப்பார்.
ஸ்ரீ பகவான் சொன்னார்:
’ ஓம் நமோ பகவதே மஹாபுருஷாய சர்வ குண சங்க்யாய, அனந்தாய, அவ்யக்தாய நம:’
அனைத்து குணங்களும் எவரிடமிருந்து பிரகாசமாக வெளிப் படுகின்றனவோ, அறியமுடியாத அரிய பொருள் எவரோ, போற்றத்தகுந்த மாஹாபுருஷனான அவருக்கு நமஸ்காரம்.
வணங்கத் தகுந்தவர் அவரே. முக்தி அளிப்பவர். பக்தர்களுக்கு போதும் போதும் எனுமளவு அனுக்ரஹம் செய்யும் பூத பாவனன். பவம் என்ற சம்சாரத்திலிருந்து விடுதலை அளிப்பவர். ஈஸ்வரனான உன்னை வணங்குகிறேன். உன் லீலைகளை மாயா குண சரித்திரங்களை பக்தர்கள் கண் கொட்டாமல் பார்ப்பர். உன் கோபம் கூட அவர்களுக்கு ரசிக்கத் தகுந்ததே. தன்னை அறிய விரும்பும் அடியார்களுக்கு நீயே கதி. மற்றவர்களிடமிருந்து வேறு பட்டவனாக உன்னைக் காணும் பக்தர்கள் உன்னை ஸூழ்ந்து இருக்கும், மற்ற நாகம் முதலியவைகளைக் கண்டு பயப்படுவதில்லை.
உலகத்தில் ஸ்திதி, சம்ரக்ஷணம், சம்ஹாரம் என்பதில் சம்ஹார மூர்த்தியான உன்னை பிறப்பு இறப்பு என்ற தொடரை நிலை நிறுத்துபவனாக வணங்குகிறார்கள். ஆயினும் இந்த செயல்களுக்கும் அப்பாற் பட்டவன் நீ. சித்தார்த்தனாக- ஞானமே உருவானவனாக உன்னை சிலரே அறிவர். ஆயிரக்கணக்கான பூமண்டலங்களைத் தலையால் தாங்குபவன். மஹான் என்றும், விக்ஞானி- அனைத்து அறிவுகளுக்கும், கலைகளுக்கும் இருப்பிடம் என்றும், ஆதி அந்தம் இல்லாதவன் என்றும், தன் தேஜஸால் உலகை சிருஷ்டிக்கும் சக்தியை உடையவன் என்றும், உன் புகழ் பாடுகிறார்கள். பறவைகள் கூடு கட்டுவது போல ஸ்ருஷ்டியை ஒரு ஒழுங்காக செய்பவன். மிகப் பெரிய காரியம் அது. மஹத்,(இயற்கை) குணங்கள்- சத்வ ரஜஸ் தாமஸ குணங்கள்) இந்திரியங்கள் இவைகள் சரடாக ஊடும் பாவுமாக ஊடுருவி இருக்க, உங்கள் அனுக்ரகத்தால் படைப்புத் தொழிலை செய்கிறோம்.
கர்ம பந்தனத்திலிருந்து காப்பவன் என்று அறிந்தாலும், உன் மாயையை நீ நிர்வகிக்கும் விதத்தை உணர முடியாத சாதாரண ஜனங்கள், உன்னிடமே அனைத்தையும் ஒப்படைத்தவர்களாக பரமேஸ்வரன் என்று வணங்கினாலே போதும் என்று திருப்தியடைகிறார்கள். அப்படிப் பட்ட உனக்கு நமஸ்காரம்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரிய வ்ரத விஜயம் என்ற ஐந்தாவது ஸ்கந்தத்தில் பதினேழாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-24
ஸ்ரீமத் பாகவதம் – ப்ரிய வ்ரத விஜயம் என்ற ஐந்தாவது ஸ்கந்தம் || ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||
அத்யாயம்-18
ஸ்ரீ சுகர் சொன்னார்: அதன் பின் பத்ரஸ்ரவா என்ற தர்மனின் புதல்வர்கள், அந்த குலத்தின் மூத்தோர்களுடன், பத்ராஸ்வ வர்ஷம்- பத்ராஸ்வம் என்ற நாட்டில், சாக்ஷாத் பகவான் வாசுதேவனின் ஹயக்ரீவ என்ற அவதார வடிவை வணங்கினர். ஹயக்ரீவனே தர்ம மயமானவன் என்ற கொள்கையுடன் அவரை மிக அன்புடன், பற்றுதலுடன் ஏற்றுக் கொண்டவர்கள் அவர்கள்.
பத்ரஸ்ரவஸன் என்பவன் சொல்லலானார்: ‘ஓம் நமோ பகவதே! தர்மாய ஆத்மவிசோதனாய நம:’
அஹோ! விசித்ரம் பகவானுடைய செயல்கள். இந்த ஜனங்கள் கொல்கிறார்கள். அவர்களை கண்டும் காணாமல் இருக்கிறான். தந்தை வாழ பிள்ளையை பலி கொடுக்கிறார்கள். அசத் – நன்மையில்லாதது என்று நாம் சொல்வதையே தியானமாக, வேண்டாத வேலைகளே முக்கியமாக நினைத்து, வயதான தந்தைக்காக மகனை கொல்கிறார்கள். அதை தவறாகவே எண்ணுவதில்லை.
கவிகள் உலகை அழியக் கூடியது எங்கிறார்கள். அத்யாத்ம வழியில் செல்பவர் விவரித்து சொல்லியும் இவர்கள் மோஹம் போகவில்லை. அஜ! பிறப்பற்றவனே! உன் மாயை தான் இதுவும். உன் செயல்கள் ஆச்சர்யமானவை. உனக்கு நமஸ்காரம்.
உன் செயல் விஸ்வ ஸ்ருஷ்டி, அதில் ஒன்றுக்கொன்று முரணான பல வித மாற்றங்கள் இருப்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கிறோம். அதுவும் உன் மாயையே. உனக்கு நமஸ்காரம். ந்ரு துரங்க- மனிதனும் அஸ்வம் என்ற மிருகமுமாக (ஹய க்ரீவன்) நீ யுகாந்தத்தில் வந்தாய். தாமஸ புத்தியால் வேதங்களை திரஸ்காரம் செய்த சிலரால் பாதாளத்தில் மறைத்து வைக்கப் பட்ட ஸ்ருதி-வேதங்களை மீட்டுத் தருமாறு கவிகள் வேண்டினர். அவர்கள் வேண்டுதலை ஏற்று வேதங்களை மீட்டுத் தந்தாய். அமோகமான அந்த செயலைச் செய்த உனக்கு நமஸ்காரம். (மது என்ற அரக்கன் வேதங்களை பாதாளத்தில் ஒளித்து வைத்து விட்டான். அதை மீட்ட கதை)
ஹரி வர்ஷத்திலும் பகவான் நரஹரி ரூபனாக வந்தான். அந்த ரூபத்தை எடுத்த கதையை சொல்கிறேன். மிகவும் விரும்பத்தக்க ரூபம். மஹா புருஷ குணங்கள் உடைய பாகவதர்கள் தைத்ய தானவ குலம் இரண்டையும் பவித்ரமாக்கிய சரித்திரம். ப்ரஹ்லாதன் என்பவன் தூய பக்தியால் பகவானை வேண்டினான் என்பதை இந்த தேச பக்தர்கள் சிலாகித்து சொல்கிறார்கள்.
ஓம் நமோ பகவதே நரசிம்ஹாய, நமஸ்தேஜஸ்தேஜஸே, ஆவிராவிர்பவ வஜ்ரநக, வஜ்ர தம்ஷ்ட்ர, கர்மாஸயான். ரந்தய ரந்தய தமோ க்ரஸ க்ரஸ ஓம் ஸ்வாஹா – அபயமபயம் ஆத்மனி பூயிஷ்டா ஓம் க்ஷ்ரௌம்
ஸ்வஸ்த்யஸ்து விஸ்வஸ்ய – உலகில் நன்மை விளங்கட்டும். அறிவில்லாத கொடியவர்களும் சந்தோஷமாக இருக்கட்டும். ஜீவ ஜனங்கள் தியானம் செய்யட்டும். புத்தியில் மங்களமான எண்ணங்களே நிறையட்டும். மனம் தூயதாக விளங்கட்டும். அதோக்ஷஜனான பகவானை துதிக்கட்டும். எந்த எதிர்பார்ப்பும் இன்றி பகவானிடத்தில் எங்கள் மனம் ஈடுபடட்டும். வீடு வாசல், தாரம், புதல்வர்கள், உறவினர் என்று எப்பொழுதும் நினைத்துக் கொண்டிராமல், அறிவும் பக்தியும் உள்ள பெரியவர்கள் அருகாமையில் இருக்க வேண்டும். சத் சங்கத்தில் தான் நல்ல விஷயங்களை அறிந்து கொள்ள முடியும். உன் வீர தீர கதைகளை கேட்கலாம். மனம் தெளிவடையும். திரும்பத் திரும்ப நினைப்பதும், ஹரி தியானமும் மனதில் காம வாசனையை அழிக்கும். யார் தான் அந்த முகுந்தனின் விக்ரமத்தை விரும்பாதவர்கள்?
ஒரு சிறிதளவு பகவானிடத்தில் பக்தி இருந்தால், மற்ற தேவர்கள் பல நல்ல குணங்களையும் அங்கு கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள். ஹரியிடம் பக்தி இல்லாதவர்களுக்கு உயர் குணங்கள் எப்படி வரும்? அவர்கள் மனம் வேண்டாத விஷய போகங்களை நோக்கியே ஓடும். சாக்ஷாத் பகவான் ஹரியே. நீர் வாழ் ஜந்துக்களுக்கு இன்றியமையாத நீர் போல உடல் தரித்த மனித குலத்துக்கு ஆத்மாவானவன். அவ்வாறின்றி தன் வீடு, குடும்பம் என்றே இருப்பவன் சுகமாக இல்லையா என்றால், அதுவும் தான், தம்பதிகள் சேர்ந்து வாழ்ந்து வயதாகி முதியவர்கள் ஆவது தான் இயற்கை. அதில் ஆசை, அனுராகம் , வருத்தம், கோபம், மான அவமானங்கள், ஏதோ ஒன்றில் அதிக பற்று, பயம், தீனமான தன்மை, மனோ வியாதி இவைதான் அதிகமாக இருக்கும். இந்த சக்ரத்தை விட்டு வெளி வந்து ந்ருசிம்ஹ பாதத்தை சேவியுங்கள். பயமின்றி இருக்கலாம்.
கேதுமாலா என்ற தேசத்தில், பகவான், காம தேவ ஸ்வரூபனாக லக்ஷ்மியின் விருப்பத்தை நிறைவேற்ற, அந்த தேச அரசர்களான ப்ரஜாபதியின் பெண்களின் புதல்வர்களை அவர்களுக்கு புருஷாயுஷ் என்ற நீண்ட ஆயுளை அளித்தார். அதுவும் பகவானின் மாயா மயமான ரூபம்.
ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஓம் நமோ பகவதே ஹ்ருஷீகேஸாய, சர்வ குண விசேஷைர் விலசிதாத்மனே,ஆகூதீனாம் சித்தீனாம், சேதஸாம், விசேஷாணாம் சாதிபதயே, ஷோடஸ கலாய சந்தோ மயாய அன்ன மயாய, அம்ருத மயாய சர்வமயாய சஹஸே, ஓஜஸே, பலாய காந்தாய காமாய நமஸ்தே உபயத்ர பூயாத்.
பெண்கள் ஹ்ருஷீகேசனான உன்னை தாங்களே ஆராதித்து, நல்ல பதியை அடைகிறார்கள். அவர்களிடம் நல்ல புதல்வர்களைப் பெறுகிறார்கள். அன்பான பந்துக்கள், தனம், ஆயுள் இவைகளை அடைகிறார்கள். அவர்களின் பதியும் பயமின்றி, தானே மற்றவர்களை காக்கவும் ஆற்றல் பெறுகின்றனர். பிறர் நலனும் தன் பொறுப்பே என்பது போல நினைப்பார்கள் அதனால் பொறாமை படுவதில்லை.
பகவானுடைய பாத சரோருஹம் அதிலேயே லயித்தவன், மற்ற அல்பமான உலகியல் இன்பங்களை நாடுவதில்லை. விரும்பியது கிடைக்கவில்லை என்ற வருத்தமும் வாட்டாது. அஜன், ஈசன் இவர்களும் என்னைப் பூஜிக்கின்றனர். மனப் பூர்வமாக பஜித்தாலே போதுமானது. என்னையடைய உக்ரமான தவங்கள் விரதங்கள் தேவையில்லை.
ஆகவே, அச்யுதா! வணங்கியவர்களுக்கு அபயம் அளிக்கும் உன் கரங்களை என் தலையில் வைத்து ஆசீர்வதி. உன் அருளின்றி நான் விபு என்றும் ஈஸ்வரன் என்றும் உன்னை அறிந்து கொள்ளவா முடியும்?
ரம்யக தேசத்தில் பகவானுடைய மத்ஸ்ய அவதார ரூபத்தை அந்த தேச புருஷன் ஓரளவு காட்டியதை இன்றளவும் மிக பக்தியுடன் ஆராதித்து வருகிறார்கள். ‘ஓம் நமோ பகவதே முக்யதமாய நம: சத்வாய ப்ராணாயௌஜஸே சஹஸே பலாய மஹாமத்ஸ்யாய நம “ இதி
உள்ளூம் புறமும் அகில லோக பாலகர்கள் கண்ட ரூபம். மத்ஸரம்- பொறாமை போல மற்றொரு ஜுரம் இல்லை. முயற்சி செய்பவர்கள் கூட இதனால் பாதிக்கப்பட்டு, கால் நடைகளோ, மனிதர்களோ, ஊர்வன, அசையாத ஜங்கம பொருட்கள் அனைத்திலும் உன்னைக் காணலாம் என்பதை மறந்து விடுகிறார்கள். தாங்கள் அலை வீசும் யுகாந்தார்ணவ – யுக முடிவிலான ப்ரளய ஜலத்தில், படகு ரூபத்தை எடுத்துக் கொண்டு, ஔஷதிகள்-தாவரங்கள் அனைத்தையும் காப்பாற்றி தன்னிடம் வைத்துக் கொண்டு, உன் ஓஜஸ் என்ற சக்தியால் உலகை காத்தாய். அந்த ஜகத்ப்ராண கணாத்மனே நம: வணக்கம்.
ஹிரண்மய தேசத்தில் பகவான் கூர்ம -ஆமை உருவம் எடுத்து வந்தார். அது அவருடைய மிக பிரியமான உருவம். ஸூரியன் முதலான வர்ஷ புருஷர்கள், பித்ரு கணங்கள், இந்த மந்த்ரத்தை ஜபிக்கிறார்கள். ‘ ஓம் நமோ பகவதே அகூபாராய சர்வ சத்வ குண விசேஷணாய அனுபலக்ஷித ஸ்தானாய நமோ வர்ஷ்மணே நமோ பூம்னே நமோ நமோ அவஸ்தானாய நமஸ்தே’ இந்த ரூபம் உன் மாயையால் தானே ஏற்றுக் கொண்ட ரூபம். அர்த ஸ்வரூபம் – பொருள் மிக்கது. கணக்கிலாத சத்வ குணம் ஞானாந்தம் என்று பலவிதமாக புகழப்படுகிறது. உண்மையான உன் உருவம் அல்ல, மாயையால் நீ ஏற்றுக் கொண்டது என்றும் சுத்த சத்வ மூர்த்தி, மஹாப்ராணன் என்றும் போற்றுகின்றனர். (வைகுணடவாசியான நீ, மஹா சமுத்திரத்தின் அடியில் கூர்மமாக வந்து உலகை காத்தது உன் அருள்) இந்த சராசரத்தில் வித விதமான உயிரினங்கள், வியர்வையில் பிறக்கும் ஜீவன்கள், முட்டையிட்டு பொரிக்கும் சில, தேவ ரிஷி, பித்ரு பூதம், இந்திரியங்கள், ப்ரும்மாண்டம் , வானம், பூமி, மலைகள், நதிகள், சமுத்திரங்கள், தீவுகள், க்ரஹ, ருக்ஷ என்று சொல்லப் படுவது எல்லாம் ஒன்றே, இப்படி கணக்கில்லாத விசேஷ நாமங்களைக் கொண்ட உருவமாக கவிகள் காண்கின்றனர். அந்த ஞான ரூபியான உனக்கு நமஸ்காரம்.
வட குருக்ஷேத்ரத்தில் பகவான் யக்ஞ புருஷன், வராகனாக அவதரித்தார். அங்கு பூமியே தேவி. உபனிஷதங்கள் அவள் பக்தியை வர்ணிக்கின்றன. ‘ஓம் நமோ பகவதே மந்த்ர தத்வ லிங்காய யக்ஞ க்ரதவே மஹாத்வராவயவாய மஹா புருஷாய நம: கர்ம சுக்லாய த்ரியுகாய நமஸ்தே’ எவருடைய ஸ்வரூபத்தை பலவித ரசிகர்களான கவிகள், மரத்தினுள் மறைந்திருக்கும் ஜாதவேதஸ் என்று வர்ணிக்கிறார்களோ, மனதால் மத்தால் கடைந்தது காண முயலுகிறார்களோ. மிக அரிதான அந்த காட்சியை காணவும், ப்ரகாசமாக வெளிப்பட்ட அந்த பரமாத்மாவை வணங்குகிறேன்.
இந்திரியங்களில் செயல், தேவதைகள் அதன் காரணம், தேகம் தான் ஈசன், காலம் செய்பவன், அஹங்காரம் இவை மாயா குணங்கள். இவைகளை கார்ய ரூபமாக, தனித்தன்மையுடன், வஸ்துவாக காண்பது ஆத்மா. அதற்கு நமஸ்காரம். அன்வீக்ஷிகீ- விசாரித்து ஆராய்ந்து அறிந்து கொள்வது, அங்கம்- சாதனைகள், ஆத்ம புத்தி, தன்னுடைய புத்தியை பயன்படுத்தி அறிதல், என்ற பல விதங்களில் அறியத் தகுந்த உனக்கு நமஸ்காரம். விஸ்வத்தை தோற்றுவித்து, நடத்திச் செல்வது உன் விருப்பம். சாதாரணமாக காணும் பொழுது உன் மாயை சுற்றி சுழன்று வருவதை அறிய முடியாது. குண கர்ம சாக்ஷியான உனக்கு நமஸ்காரம்.
தைத்யனை வீழ்த்தி, உன் மூக்கின் நுனியில் பூமியைத் தாங்கியபடி மிகப் பெரிய யானை போல நீரிலிருந்து வெளிப்பட்ட ஆதி ஸூகரன் உனக்கு நமஸ்காரம்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில் பதினெட்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 39
ஸ்ரீமத் பாகவதம் – ப்ரிய வ்ரத விஜயம் என்ற ஐந்தாவது ஸ்கந்தம் || ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||
அத்யாயம்-19
ஸ்ரீ சுகர் சொன்னார்: கிம்புருஷ வர்ஷம்- கிம்புருஷ தேசத்தில் பகவானான ஆதி புருஷன், லக்ஷ்மணனின் மூத்த சகோதரன், சீதாபிராமம் ராமம், அவன் அருகில் இருப்பதையே புண்யமாக நினைத்தவர், பரம பாகவதரான அனுமான், இவர்கள் மற்ற கிம்புருஷர்களுடன் ராம பக்தியை பரப்பினார். தன் இனத்து முக்கியமான அறிவுடைய பெரியோர்களுடன் சேர்ந்து ராமர் புகழை பாடினர். ‘ஓம் நமோ பகவதே உத்தம ஸ்லோகாய நம ஆர்ய லக்ஷண சீல வ்ரதாய நம உப சிக்ஷிதாத்மன உபாசித லோகாய நம: சாது வாத நிகஷணாய நமோ ப்ரும்மண்ய தேவாய மஹா புருஷாய மஹா ராஜாய நம இதி’
யத்தத் விசுத்தானுபவ மாத்ரமேகம் ஸ்வ தேஜஸா த்வஸ்த குண வ்யவஸ்தம் ப்ரத்யக் ப்ரஸாந்தம் சுதியோபலம்பனம் ஹ்னாமரூபம் நிரஹம் ப்ரபத்யே ||
மனிதனாக பிறந்த இந்த அவதாரம், மனிதனுக்கு உபதேசிக்கவே. ராக்ஷஸனின் வதம் நிமித்த மாத்ரமே. அப்படியானால், சீதா விரஹத்தால் வருந்தியது எப்படி ஆத்மாராமன், ஜிதேந்திரியன் – தன்னடக்கம் உடையவன், என்ற உயர் நிலையில் இருந்ததாகச் சொல்லப்படும் ஸ்ரீ ராமனுக்கு பொருந்தும்?
(ஆத்மவான் என்றும், ஞானிகளின் நண்பன் என்றும் போற்றப்படும் பகவான் வாசுதேவன், ஒரு பெண்ணுக்காக மனம் உடைந்து போனதாகவோ, உடன் பிறந்த சகோதரன் லக்ஷ்மணனைத் துறந்ததையோ, ஏற்றுக் கொள்ள முடியவில்லையே என்ற கேள்விக்கு பதிலாக, உலகியலில் மனிதனாக சம்சாரத்தில் இருந்தால், இது போன்ற இடர்களும் தவிர்க்க முடியாது என்பதைக் காட்டவே என்று உரையாசிரியர்கள் கருத்து. )
லக்ஷ்மணனின் மூத்தவன், ஸ்ரீ ராமன், குலமோ, பெருந்தன்மையோ, செல்வச் செழிப்போ நல்ல வாக்கோ, நல்ல புத்தியோ, செயற்கரியன செய்து காட்டியதாகவோ உயர்வாக சொல்ல முடியாத ஒரு காட்டு வாசிகள், வானரங்கள் அவர்களுடன் சக்யம் செய்து கொண்டான். எதற்காக, (சுமித்திரையின் மகன், உடன் பிறந்தான் லக்ஷ்மணன் தாஸனாக இருக்க,) இந்த வானரத்தோடு சக்யம் செய்து கொண்டான். தேவனோ, அசுரனோ, வானரமோ, மனிதனோ, எவன் மனப் பூர்வமாக நல்லதைச் செய்கிறான் என்றால், அவன் ஸ்ரீ ராமனுக்கு உகந்தவனாகிறான். மனித ரூபத்தில் வந்த ஸ்ரீ ஹரி, கோஸல வாசிகள் அனைவருக்கும் மோக்ஷத்தைக் கொடுத்தார். அனைவரையும் தன்னுடன் வைகுண்டத்துக்கு கூட்டிசென்றார்.
பாரத வர்ஷத்தில், பகவான் நர நாராயணனாக வந்து, அந்த கல்பம் முடியும் வரையில், தர்மத்தை உபதேசித்து, ஞான வைராக்ய, ஐஸ்வர்ய, உபசமம் மற்றும் பரமாத்மாவின் அனுக்ரஹம் பெற விரும்பி தவம் செய்யும் சாதகர்களிடம் இரங்கி, மறைந்திருந்து அருளினார்.
அந்த சமயம் பகவான் நாரதர் வந்தார். பாரதத்தில் வர்ணாஸ்ரமம் நடை முறையில் இருந்த காலம் அது. பகவானே உபதேசித்த சாங்க்யம்- என்ற ஞான மார்கம் அனைவருக்கும் பொதுவானது, இதில் வர்ண பேதம் இல்லை என்பதை தெளிவாக்கி, பரம பக்தி என்பதன் மேன்மையை எடுத்துச் சொன்னார். அவருடைய உபதே மந்திரம்:- ஓம் நமோ பகவதே உபஸம சீலாய, உபரதானாத்ம்யாய நமோ, அகிஞ்சன வித்தாய ரிஷி ருஷபாய, நர நாராயணாய பரம ஹம்ஸ பரம குரவே ஆத்மாராமாதிபதயே நமோ நம இதி.
பாட்டாகவும் பாடினார். உலகின் கர்த்தா – உலகை படைத்தவன்,. இவன் எதிலும் கட்டுப்படுவதில்லை, யாரையும் வதைப்பதில்லை, தேகத்தில் இருந்தாலும், தேகம் இல்லாதவர்களுக்கும் (தேவர்கள்) தரிசனம் கொடுப்பவன், இவருடைய பார்வையில் ஏற்றத் தாழ்வு இல்லை, அந்த தேவனுக்கு நமஸ்காரம். உலக வாழ்வில் பற்றுதல் உள்ளவன், பற்றைத் துறந்தவன் என்ற அனவருக்கும் சாக்ஷியாக இருப்பவன், அவனுக்கு நமஸ்காரம்.
இது தான் யோகேஸ்வரனுடைய யோக நிபுணத்வம். ஹிரண்ய கர்பனான பகவான் சொன்னது. ஆயுள் முடியும் நேரத்தில் நிர்குணமான உன்னிடத்தில் எவனுடைய மனம் பக்தியுடன் நினைக்கிறதோ, அவனை அது வரை வாழ்ந்த வாழ்வையோ தாழ்வையோ கணக்கில் கொள்ளாமல் கை தூக்கி விடுகிறான். ஒருவன், வித்வானாக இருந்த போதிலும், செயல் வீரனாக வாழ்ந்திருந்தாலும், இந்த உலக வாழ்வின் முடிவில் இறக்கும் தறுவாயிலும், மகன், மனைவி, தனம், என்று நினைத்தபடியே இருந்தால், என்ன பயன்? வெறும் சிரமம் மட்டுமே. அதனால் ப்ரபோ! இந்த சரீரம் எடுத்ததும் உன் மாயையால், நான், எனது என்ற பற்றுதல்கள் தானாக வந்து சேர்ந்தவை, அதோக்ஷஜ, இதிலிருந்து என்னை விடுவித்து விடு. மிக கஷ்டமான செயல் இது. தன்னைத்தானே உயர்த்திக் கொள்வது சாதாரண மனிதர்களுக்கு இயலாத செயல். பக்தி யோகம் என்பதை எங்களுக்கு அருள்வாய். உன்னருளால் தான் உங்களை வணங்குவதையும் மனதால் உணர்ந்து செய்ய முடியும்.
இந்த பாரதத்தில், நதிகள், மலைகள் நிறைய உள்ளன. பல மலய மங்கள ப்ரஸ்தங்கள். – மென்மையான காற்றுடன் மங்களமாக விளங்கும் இடங்கள். மைனாகம், த்ரிகூட,ருஷப, கூடகம், கொல்லகம், சஹ்யோ, தேவகிரி, ருஷ்யமூக: ஸ்ரீசைலம், வேங்கட, மஹேந்திர, வாரிதார, விந்த்ய, ஸுக்திமான், ருக்ஷகிரி,பாரியாத்ர, த்ரோண, சித்ரகூட, கோவர்தன, ரைவதகம், ககுபம், நீலம், கோகாமுகம், இந்த்ரகீல:, காமகிரி என்றும் மேலும் பல நூறு ஆயிரம் மலைகள், அதன் மடியிலிருந்து இறங்கும் ஏராளமான நதிகள், நதங்கள் இவைகளை கணக்கிடவே முடியாது.
பாரத நாட்டு மக்கள், இவைகளை புண்ய நதிகளாக நினைக்கின்றனர். இதன் பெயர்களை மரியாதையுடன் உச்சரிக்கின்றனர்.
இவையாவன: சந்த்ரவஸா, தாம்ரபர்ணி, அவடோதா, க்ருதமாலா, வைஹாயஸீ, காவேரி, வேணி, பயஸ்வினீ, சர்கராவர்த்தா, துங்கபத்ரா, க்ருஷ்ணா, வேண்யா, பீமரதீ, கோதாவரி, நிர்விந்த்யா, பயோஷ்ணீ, தாபி (தபதி) ரேவா, சுரஸா, நர்மதா, சர்மண்வதீ, சிந்துரந்த:, சோணா, என்ற நதிகள்.
நதங்களாவன: மஹானதி, வேதஸ்ம்ருதி, ருஷிகுல்யா, த்ரிஸாமா, கௌஸிகீ, மண்தாகினீ, யமுனா, சரஸ்வதீ, ருஷத்வதீ, கோமதி, சரயூ, ரோதவதீ, சப்தவதீ, சுஷோமா, ஸதஸ்சந்த்ர பாகா, மருத்வ்ருதா, விதஸ்தா, அஸிக்னீ, விஸ்வா என்ற மஹா நதிகள். (மேற்கிலிருந்து, கிழக்கு நோக்கி பாய்பவை நதங்கள்.)
இந்த பாரத வர்ஷத்தில் தான் பிறந்தவர்கள், வெண்மை, லோஹிதம் என்ற வர்ணம் (இளம் சென்னிறம்) க்ருஷ்ண வர்ணம், தன் வினைகளுக்கு ஏற்ப, திவ்ய, மானுஷ, நாரக கதிகளுடன், பலர் தங்கள் முன்னோர்கள் காட்டிய வழியிலேயே நம்பிக்கையுடன் குல தர்ம அனுஷ்டானங்கள் செய்தே நற்கதி அடைகின்றனர். இவர்கள் பரமாத்மா, சர்வ பூதங்களுக்கும் ஆத்மாவானவன் என்று பகவான் வாசுதேவனை கொண்டாடுகிறார்கள். அதனால் மாற்று எண்ணமின்றி பகவானிடம் பக்தி செலுத்துகின்றனர். பக்தி யோக லக்ஷணமும் அதுவே. பலவிதமான தொழில்கள், கல்வி முறைகள், வாழ்க்கை நியதிகள் என்று தினசரி வாழ்க்கை முறைகள், எதுவானாலும் மஹா புருஷன் எனும் பகவானிடத்தில் ஈடுபாடு அவர்களை இணைக்கிறது. இதை தேவர்களும் பாடுகின்றனர். “அஹோ! இவர்கள் என்ன பாக்கியம் செய்தனர்! இவர்களிடம் ஸ்ரீ ஹரி ப்ரஸன்னமாக இருக்கிறான். பாரத தேசத்தில் ஜன்மம் எடுத்தவர்கள் புண்யம் செய்தவர்கள். முகுந்த சேவை இவர்களுக்கு பிறவியிலேயே அமைந்து விடுகிறது. நாங்கள் சிரமப்பட்டு யாகங்கள் செய்தும், தவம் விரதம் அனுசரித்தும், தானங்கள் கொடுத்தும் ஸூதாட்டதில் ஜயித்தும் அடைவதை மிக அதிகமான போக உத்ஸவங்கள், ஸ்ரீமன் நாரயணனின் நினைவு இல்லாமல் செய்வதால் வீணாகிறது. கல்ப ஆயுள் எங்களுக்கு. அதோடு ஒப்பிட்டால் மறு பிறப்பு என்பதால் மனிதர்களுக்கு க்ஷணம் தான் ஆயுள். பாரத பூமியின் வரம், அந்த க்ஷண நேர வாழ்வில் மனிதர்கள் செய்வதும் பெறுவதும் ஹரி பதத்தில் திடமான நம்பிக்கை வைத்து அபயம் என்பதை பயமற்ற தன்மையை பெறுகிறார்கள்.
எந்த இடத்தில் வைகுண்ட கதை என்ற அம்ருதம் நதியாக ப்ரவஹித்து ஓடவில்லையோ, பாகவதர்கள் எந்த இடத்தில் உண்மையான பக்தியுடன் வழிபடுவது இல்லையோ, எந்த இடத்தில் யாகங்கள், மஹோத்ஸவமாக நடக்கவில்லையோ, அந்த இடம் தேவலோகமே ஆனாலும் அதனால் எந்த நன்மையும் இல்லை.
இங்கு அரச பதவி அடைந்தவர்கள், அல்லது ஏதோ ஒரு சாதாரண பிறவி, ஞானம், கர்ம யோகம், செல்வ செழிப்பு இவை இருந்தும் மறு பிறப்பு இல்லாமல் போகும்படி நடந்து கொள்ள வேண்டியதும் அவசியம். இல்லையெனில், திரும்பவும் வன வாசிகளான கால்நடைகள் போல் பிறப்பு எடுப்பர். திரும்ப அதே ஸூழல், பிறவி, மறு பிறவி என்று பந்தனம்.
ஸ்ரத்தையுடன் மந்திர, மற்ற விதிகளை மீறாமல் செய்யப் படும் யாகங்களில் பங்கு கொண்டு அதன் பிரஸாதங்களை உண்டு, தன்னால் முடிந்த அளவு உதவிகளையும் செய்து வருகிறானோ, அவன் பூர்ணமான ஆசிகளைப் பெறுகிறான். அரசர்களுக்கு செல்வத்தை, வேண்டாமலே தன் பக்தர்களுக்கு தேவையானதை ஸ்ரீ ஹரி ஆசிர்வதிக்கிறான். சுவர்க சுகம் என்று பிரமாதமாக வர்ணிப்பதை அஜனாப வர்ஷத்தில் (பாரத நாட்டில்) ஸ்ம்ருதி, மனப் பூர்வமாக நினைப்பதாலேயே, ஸ்ரீ ஹரி அவர்களுக்கு கிடைக்கச் செய்கிறான்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஜம்பூத்வீபம், எட்டு உப தீவுகள் உடையது. சகர புதல்வர்கள், அஸ்வத்தை தேடித் தேடி நிலத்தை வெட்டிக் கொண்டு சென்ற பொழுது இவ்வாறு பிரிந்தன. அவையாவன: ஸ்வர்ண ப்ரஸ்தம், சந்த்ர சுக்ல ஆவர்தனோ, ரமணக, மந்தர, ஹரிண:, பாஞ்ச ஜன்ய: சிம்ஹள: லங்கை என்பன.
பாரத வம்சத்தவனே! இதில் இதுவரை நாம் வர்ணித்தவை பாரத வர்ஷம்-ஜம்பூத்வீபம் என்பது மட்டுமே.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில் பத்தொன்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-31
ஸ்ரீமத் பாகவதம் – ப்ரிய வ்ரத விஜயம் என்ற ஐந்தாவது ஸ்கந்தம் || ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||
அத்யாயம்-20
ஸ்ரீ சுகர் சொன்னார்: அடுத்ததாக, ஜம்பூத்வீபத்தைத் தாண்டியும் உள்ள நிலப் பரப்புகளைப் பற்றி விவரமாகச் சொல்கிறேன். இந்த ஜம்பூத்வீபம் எவ்வளவு விஸ்தீர்ணம், உப்பு சமுத்திரத்தால் ஸூழப் பட்டதோ, மேரு மலை இங்கு உள்ளதோ, அதே போல இரண்டு மடங்கு விஸ்தாரமான உப்பு சமுத்திரம் ஸூழ்ந்து உள்ள பிரதேசங்கள், கோட்டைகளும், வெளிப் புரத்தில் உபவனங்களும், இந்த ஜம்புத்வீபம் போலவே அதே அளவு விஸ்தீர்ணம் உள்ள பொன் நிற, ஏழு நாக்குகள் உள்ள அக்னியை உபாசிக்கிறார்களோ, அதன் அதிபதி ப்ரிய வ்ரதன் மகன் இத்மஜிஹ்வன் , தன் நிலத்தை ஏழாக பிரித்து ஏழு பெயர்களுடன் தன் புதல்வர்களுக்கு கொடுத்து விட்டு தான் ஆத்ம யோகம் செய்வதில் ஈடுபட்டான்.
அவர்கள் பெயர்கள்: சிவன், யவஸன், சுபத்ரன், சாந்தன், க்ஷேமன், அம்ருதன், அபயன் – ஏழு தீவுகளிலும் நிலப்பரப்பும் நதிகளும், மலைகளும், ஏழு ஏழாகவே இருந்தன.
மணி கூடோ, வஜ்ரகூட்ட, இந்த்ரசேனோ, ஜ்யோதிஷ்மான், சுபர்ணோ, ஹிரண்யஷ்டீவோ, மேக மால என்று மலைகள் அரண்களாக இருந்தன. அருணா, ந்ரும்ணா , ஆங்கிரஸி, சாவித்ரி, சுப்ரபாதா, ருதம்பரா, சத்யம்பரா என்று மகா நதிகள். இதன் நீரை தொட்ட மாத்திரத்தில் தவறான எண்ணங்கள் விலகி ஓடும். ஹம்ஸங்கள், உயர பறக்கும் சத்யாங்க, முதலிய நான்கு பிரிவுகளுள்ள ஆயிரம் ஆண்டுகள் வாழ் நாள் உடைய தேவர்கள் போல தோற்றம் உடைய ஜனங்கள், சுவர்க த்வாரத்தை அடைய வேத வித்யா அறிவினால், பகவானான வேத புருஷனாக, ஸூர்யனை தங்கள் தெய்வமாக பூஜிக்கிறார்கள். அவர்கள் ஜபிக்கும் மந்திரம்:
‘ ப்ரத்னஸ்ய விஷ்ணோ ரூபம் யத் சத்யர்தஸ்ய ப்ரஹ்மண:| அம்ருதஸ்ய ச ம்ருத்யோஸ்ச ஸூர்யமாத்மானமீமஹீதி ||” – ப்ரத்ன- விஷ்ணு. சத்யம், உண்மை, ப்ரும்மம், அம்ருதம்,ம்ருத்யு, இவைகளின் அதிகாரியாக இருக்கும் ஸூரியனை வணங்குகிறேன்”
ப்லக்ஷாதி ஐந்து தேசங்களில்புருஷர்களின் ஆயுள், இந்திரியம், ஆற்றல்,பலத்துடன் புத்தி, விக்ரமம் இவை பிறவியிலேயே சிறப்பாக அமைந்து விடுகின்றன. அதற்கு சமமான கரும்பு ரஸம் நிறைந்த கடல் இந்த தேசத்தை ஸூழ்ந்துள்ளது. இதைப் போல இரண்டு மடங்கு விசாலமான த்வீபம் சால்மலீ. அதைச் ஸூழ்ந்து மது நிறைந்த கடல் உள்ளது. சால்மலீ ப்லக்ஷ தேசத்தின் அங்கமாக சொல்வதும் உண்டு. இது பக்ஷி ராஜனான கருடனின் ப்ரதேசம். அந்த தீவின் அதிபதி, ப்ரியவ்ரதனின் மகன் யக்ஞபாஹு என்பவன். தன் ஏழு புதல்வர்களுடன் வசித்து வந்தான். அவர்களுக்கு அந்த ராஜ்யத்தை பிரித்து கொடுத்து விட்டான். சுரோசனம், சௌமனஸ்யன், ரமணகன், தேவர்ஷன், பாரிபத்ரன், ஆப்யாயனன், அவிக்ஞாதன் என்று பெயர்கள்.
அந்த தேசங்களில் மலைகள், நதிகள், ஏழு. ஸ்வரஸ:, சதஸ்ருங்கோ, வாமதேவன், குந்தன், முகுந்தன், புஷ்பவர்ஷன், சஹஸ்ரஸ்ருதி, என்ற மலைகள், அனுமதி, நினீவாலீ, சரஸ்வதி, குஹூ, ரஜனீ, ந்தா, ராகா என்பவை. அந்த தேசத்து ஜனங்கள், ஸ்ருத தர, வீர்யதர, வசுந்தர, இஷுந்தர – என்ற நான்கு வேத பிரிவுகளுடன் அறியப் படும் பகவானை ஆராதிக்கிறார்கள். சந்திரனை வேத மந்திரங்களால் ஆராதிக்கின்றனர். சந்திர தேவன் சுக்ல, க்ருஷ்ண பக்ஷங்கள் மூலம் தன் கிரணங்களால், கால நிர்ணயம் செய்கிறான். தேவதா, பித்ருக்கள், தவிர அனைத்து உயிரினங்களுக்கும் அன்னம் அளிக்கிறான். – தாவரங்கள் வளரச் செய்வதால். எனவே சந்திரன் எங்கள் அரசன். – லோக பரிபாலனம் என்ற அரசனின் கடமையை செய்ய உதவுவதால். இந்த மது நிறைந்த கடலுக்கும் அப்பால் அதே போல இரண்டு மடங்கு விஸ்தீர்ணமுள்ள குச த்வீபம் உள்ளது. (புல் வெளி) இதைச் ஸூழ்ந்து இருப்பது நெய் நிறைந்த கடல். இங்கு ப்ரும்மாவால் நிர்மாணிக்கப் பட்ட குசஸ்தம்பம் உள்ளது. இது மிக பிரகாசமாக இருப்பதால் மற்றொரு அக்னி எனப்படுகிறது. கோமளமான இந்த குசம் என்ற புல் பத்து திசைகளையும் ப்ரகாசமாக்கும். இந்த தீவின் அரசன் ஹிரண்ய ரேதன் என்ற ப்ரியவ்ரதனின் மகன். இவனும் தன் ஏழு புதல்வர்களுக்கு ராஜ்யத்தை பிரித்துக் கொடுத்து விட்டு வனம் சென்றான். வசு, வசுதான, த்ருடருசி,நாபிகுப்த, ஸ்துத்ய வ்ரத, விவிக்த, வாமதேவன் என்பர்.
இந்த தேசங்களுக்கு மலைகளே அரண்கள். நதிகள் ஒவ்வொன்றிலும் ஏழு ஏழாகவே உள்ளன. சக்ர, சதுஸ்ருங்க:, கபில, சித்ரகூடோ, தேவானீக, ஊர்த்வரோமா, த்ரவிண என்பன. ரஸ்குல்யா, மதுகுல்யா, முத்ரவிந்தா, ஸ்ருதவிந்தா, தேவகர்பா, க்ருத ச்யுதா, மந்த்ரமாலா என்பன. இவைகளில் நீர், குஸத்வீபவாசிகள் சௌக்யமாக, நல்ல ஆறிவுடையவர்களாக, குலகன் என்ற பெயரில் பகவானை ஜாதவேதஸ்ன்- அக்னி என்ற ரூபத்தில் கர்ம கௌசலம்,- செய் நேர்ந்தி – சிறந்த கை வேலைகள்- இவற்றுடன் பூஜிக்கின்றனர்.
பர ப்ரும்மாவுக்கு இணையான ஜாதாவேதன் என்றும் ஹவ்ய வாட்- ஹவிஸை கொண்டு செல்பவன் என்றும் சொல்லப் படும் அக்னி, பரம புருஷனின் அங்கமான தேவர்களுக்கு ஹவிஸை கொண்டு சேர்க்கிறான் என்பதால் யாகங்கள் செய்து பகவானை ஆராதிக்கிறார்கள்.
அதே போல நெய் கடலுக்கு அப்பால், க்ரௌஞ்சத்வீபம்- அதன் விஸ்தீர்ணத்தின் இரண்டு பங்கு அதிகமான க்ஷீரோதம்- பாற்கடல் ஸூழ்ந்துள்ளது. க்ரௌஞ்ச என்ற பக்ஷி ராஜனின் இடம் அது. இந்த மலையைத் தான் குஹன்- முருக பெருமான், பிளந்ததார். அதில் இருந்த அசுரனை வதைத்தார். அதன் பின் பாற்கடலின் வளத்தால் வருண பகவானின் உதவியாலும், பக்ஷி ராஜன் பயமின்றி வாழ்கின்றான். அதை தனக்குரிய பங்காக பெற்ற ப்ரியவ்ரதனின் புதல்வன், க்ருதப்ருஷ்டோ என்பவன், தன் ராஜ்யத்தை ஏழாக பிரித்து சந்ததிகள் சொத்தின் பாகத்தை பெறுகிறார்கள் என்ற நியாயப் படி கொடுத்து விட்டான். அதன் பின் தன் எஞ்சிய நாட்கள் பரம கல்யாணன் என்றும், சர்வ ஆத்ம பூதன் என்றும் ஸ்ரீ ஹரியை பாடியபடி சரணத்தை பஜித்தபடி சென்றது.
க்ருதப்ருஷ்ட அரசனின் புதல்வர்களுக்கு ஆமோ, மதுருஹோ, மேகப்ருஷ்ட:, சுதாமோ, ப்ராஜிஷ்டோ, லோஹிதார்ணோ, வனஸ்பதி என்ற பெயர்கள். அவர்களுக்கும் ராஜய்த்தில் ஏழு ஏழு மலைகள், நதிகள் இருந்தன. சுக்ல, வர்தமான, போஜன, உப பர்ஹிணோ, ந்தோ, ந்தன:, சர்வதோ பத்ர என்று மலைகளும், அபயா, அம்ருதௌகா, ஆர்யகா, தீர்தவதீ, ரூபவதீ, பவித்ரவதீ சுக்லா என்பன நதிகள்.. இந்த நதிகளின் நீர், பவித்ரமானது. இதை பயன்படுத்தும் ப்ருஷ ருஷபர், த்ரவிண தேவக என்பவர்கள், பகவானை ஆபோமயன்- ஜல ரூபமாக எண்ணி, கை நிறைய ஜலம் எடுத்து, அஞ்ஜலி செய்து வழிபடுகிறார்கள். ஜலம் மனிதனை சுத்தமாக்கும். “ ஆப: புருஷவீர்யா:ஸ்த புனந்தீர் பூர் புவ: சுவ: | தா ந: புனீதாமீவ க்னீ: ஸ்ப்ருஸதாம் ஆத்மன புவ இதி||” – ஹே ஆப: ஹே தண்ணீரே! நீங்கள் பரமபுருஷனின் வீர்யமாக இருக்கிறீர்கள். சக்தி ரூபமாக இருப்பவர்கள். அவருடைய சரீரத்தில் நிரந்தரமாக இருப்பவர்கள். பூர்பூவ:ஸ்வ:- பூ முதலிய மூவுலகையும் பவித்ரமாக்குபவர்கள். எனவே, உங்களை தொடுபவர்கள் பாபங்கள் நீங்கி பவித்ரமாகிறார்கள்”
இவ்வாறு முன் புறம் க்ஷீரோதம்- பாற்கடலால் ஸூழப் பட்ட சாகத்வீபோ- கறி காய்கள் நிறைந்த தீவு- முப்பத்திரண்டு லக்ஷ யோஜனை தூரம் பரவியிருந்தது. அதற்கு சமமான தயிர் போன்ற ஜலம் ஸூழ்ந்திருக்க அதில் சாகோ (शाको) என்ற மரம் தன் பூமியின் அடையாளமாக , மஹாசுரபி – மிகச்சிறந்த வாசனையை தீவு முழுவதும் பரப்புவதாக அமந்துள்ளது.
அந்த தீவும் ப்ரியவ்ரதனின் புதல்வன் மேதாதிதி என்பவனின் ஆளுமையில் இருந்தது.. முதுமையில் தன் புதல்வர்களுக்கு ஏழு ஏழாக பிரித்து கொடுத்து விட்டு தான் பகவானின் சேவையில் காலம் கழிக்கச் சென்று விட்டான். புதல்வர்கள் பெயர்களாவன: புரோஜவ, மனோஜவ, பவமான , தூம்ரானீக, சித்ர ரேப, பஹு ரூப, விஸ்வதார என்பன. இவர்களுக்கு தேசம் என்பதற்கான மலைகள், நதிகள் ஏழு ஏழாக இருந்தன. ஈஸான, உருஸ்ருங்க, பலபத்ர, ஸதகேஸர:, சஹஸ்ர ஸ்ரோதோ, தேவபாலோ, மஹானஸ என்ற மலைகள். அனகா, ஆயுர்ட்கா, உபயஸ்ப்ருஷ்டி, அபராஜிதா. பஞ்சபதீ, சஹஸ்ரஸ்ருதி, நிஜத்ருதி என்பன நதிகள். அந்த தேசத்து ஜனங்கள், பகவானை, ருதவ்ரதன், சத்யவ்ரதன், தானவ்ரதன், அனுவ்ரதன் என்று பகவானை வாயு ரூபமாக ப்ராணாயாமம் செய்து சுத்தமான மனமும் உடலுமாக, பரம சமாதி என்ற சாதனகளால் பூஜிக்கின்றனர்.
“ஆந்த்: ப்ரவிஸ்ய பூதானி யோ பிபர்த்யாத்மகேதுபி: அந்த்ர்யாமீஸ்வர: சாக்ஷாத்பாது நோ யத்வஸே ஸ்புடம்”
உயிரினங்களின் உள்ளே புகுந்து தன் வசம் ஆக்கிக் கொண்டுள்ளானோ, அந்தர்யாமியாக உள்ள அந்த ஈஸ்வரன் எங்களை எப்பொழுதும் காக்கட்டும்”
ததி மண்டலத்துக்கு அப்பால், புஷ்கரத்வீபம் உள்ளது. அதன் விஸ்தீர்ணம் போல இரண்டு மடங்கு அதிகமான விஸ்தீர்ணம் உள்ள தேசத்தை, சுத்தமான் ருசியுடன் கூடிய ஜலம் நிறைந்த சமுத்திரம் ஸூழ்ந்திருக்கிற்து. இங்கு உள்ள மிகப் பெரிய புஷ்கரம்- குளம் இதில் தான் தீயின் ஜ்வாலை போல ஜ்வலிக்கும், பொன் மயமான இலைகளுடன் பகவானுடைய கமலாஸனம் அமைந்துள்ளது.
அந்த தீவின் மத்தியில், மானஸோத்தர என்ற பெயரில், (மானஸ ஏரிக்கு வடக்கில்) அர்வாசீன, பராசீன, என்ற தேசங்கள். மர்யாதாசல இரண்டு யோஜனை தூரம் உள்ள இடம் நான்கு திசைகளிலும் நான்கு பழமையான இந்த்ராதி லோக பாலர்கள், இவர்களுக்கும் மேல் ஸூர்ய ரதம் மேருவை சுற்றி வரும் சம்வத்ஸர என்ற பெயருடைய சக்ரம், தேவர்களுக்கு இரவு பகல் என்பதை தெரிவிக்கிறது.
அந்த தீவின் அதிபதி ப்ரியவ்ரதனின் ஒரு புதல்வன் வீதீஹோத்ரோ என்பவன். அவன் புதல்வர்கள், ரமணக, தாதகி என்பவர்கள்- இவர்களி ராஜ்யத்தில் நியமித்து விட்டு தன் மூத்த சகோதரர்கள் போலவே பகவானின் சேவையில் ஈடுபட்டான். அந்த தேசத்து ஜனங்கள், ப்ரும்ம ரூபியான பகவானை சகர்மகம்- கர்ம மார்கத்துக்கு அதிகாரியாகவும் எண்ணி, ஆராதிக்கின்றனர். அவர்கள் துதி:
“யத் தத் கர்ம மயம் லிங்கம் ப்ரும்மலிங்கம் ஜனோ அர்சயேத், ஏகாந்தம் அத்வயம், ஸாந்தம், தஸ்மை பகவதே நம இதி” கர்ம மயமான ரூபம் ப்ரும்ம லிங்கம். இதை ஜனங்கள் அர்ச்சிக்க வேண்டும். ஏகாந்தமானது. அத்வயம், சாந்தம், அந்த பகவானுக்கு நமஸ்காரம்.
ரிஷி சொன்னார்: அதன் பின் பூவுலகம் தவிர மற்ற உலகங்களும் அதன் மலைகள், இயற்கை பற்றியும், லோகங்களுக்கு இடயிலான பல விஷயங்களைப் பற்றியும் விவரித்தார்.
மானஸ ஏரியின் வடக்கு பகுதி வரை உள்ள பூமி பொன் நிறமானது. அதை எல்லையாகக் கொண்ட பூ பிரதேசம் ஏழரை லக்ஷம், ஏழரை கோடி பரிமாணம் உள்ள சுத்த ஜலம் நிரம்பிய கடலுக்கு அப்பால் உள்ளது.
மேரு மலையிலிருந்து மானஸ ஏரியின் வட பகுதி வரை எந்த அளவு பூமியின் விஸ்தீர்ணம் உள்ளதோ, அதே அளவு விஸ்தீர்ணம் காஞ்சன -பொன் நிறமான- பூமி கண்ணடி போன்று தெளிவான சுத்த உதகம் உள்ள சமுத்திரம் வரை. . அதில் விழுந்த பொருள்கள் திரும்பக் கிடைப்பதில்லை என்பதால் பொது ஜனங்கள், கால் நடைகள் அங்கு போவதை தவிர்ப்பார்கள்.
(ஏழரை லக்ஷத்து பதினைதாயிரம் கோடி யோஜனை தூரம் என்றும் அதுவே மானஸ மத்தியிலிருந்து, சுத்த ஜல சமுத்திரம் வரையில் அறுபத்து ஒன்பது லக்ஷ யோஜனை தூரம், அதன் பின் காஞ்சன பூமி – ஏழரை லக்ஷத்து பதினைதாயிரம் கோடி யோஜனை தூரம் பரவியுள்ளதாக உரையாசிரியர் சொல்கிறார்.)
லோகாலோகம் என்று சொல்லப் படுவது இந்த மலையிலிருந்து மற்ற லோகங்களின் இருப்பிடத்தை வைத்து நிர்ணயிக்கப் படுகிறது. லோக த்ரயம் என்று ஈஸ்வரனால் சொல்லப் பட்டதும் ஸூரியன், துருவ நக்ஷத்திரம் , மற்ற க்ருஹங்கள், நக்ஷத்திர கூட்டங்கள் – ஜ்யோதிர்கணங்கள் – ஒளி வீசும் தாரகைகள்- கபஸ்திகள், அர்வாசீன என்ற மூன்று உலகங்கள்.
இது வரை லோகங்கள் பற்றிச் சொல்லிய பின், லக்ஷண, அனுமானம் , இயற்கை நிலையில் அதன் ஸ்திதி இவைகளைக் கோண்டு கவிகள், பூ கோளத்தை ஐம்பது கோடி யோஜனை என்று கணித்து அதன் கடைசி கால் பாகம் லோகாலோக அசலம் என்று கணிக்கிறார்கள். அதற்கு அப்பால், நான்கு திசைகளிலும் ஆத்ம யோனி- அகில ஜகத் குரு ப்ரும்மாவினால், பெரிய யானைத் தலைவன், ருஷப:, புஷ்கர ஸூடோ, வாமனோ, அபராஜித என்று சகல லோகத்தின் இருப்பை நிர்ணயிக்கின்றன. தன் ஆற்றலால் லோக பாலர்களுக்கு பலவித சக்திகளை அடைய வசதியாக, பகவான், பரம மஹா புருஷன், மஹா விபூதிபதி, அந்தர்யாமியாக இருக்கும் ஆத்மாவின் மிக விசேஷமான சத்வம் – (பொருள்) , தர்ம, ஞான, வைராக்ய, ஐஸ்வர்ய முதலிய எட்டு மஹா சித்தி களுக்கு உதாஹரணமாக விஷ்வக் சேனர் முதலான தன் பார்ஷத –(bodyguard) முதன்மை பாதுகாலர்களால் ஸூழப்பட்டவராக, நிஜ தன்னுடைய புஜங்களில் சிறப்பான ஆயுதங்களுடன் அந்த உயர்ந்த கிரியில், உலக நன்மைக்காக எப்பொழுதும் சித்தமாக இருக்கிறார்.
ஒரு கல்பம் முடியும் வரை இந்த ரூபத்தில் இந்த பகவான் தன் யோக மாயையால், பல வித லோக யாத்திரைகளை மேற் கொள்கிறார்.
இப்படி லோகங்களுக்கு இடையிலான தூரம், பரிமாணம் இவைகளை விவரித்திருப்பது, பூவுலகுக்கு அப்பால் உள்ள லோகாசலம் என்பதிலிருந்து கணக்கிடப் பட்டுள்ளது. அதன் பின் யோகேஸ்வரனின் கதியை தெளிவாக சொல்கிறார். அண்த்தின் மத்தியில் உள்ளடு ஸூரியன். வானத்திற்கும் பூமிக்கும் உள்ள இடைவெளி. ஸூரியன் அண்ட கோளத்தின் மத்தியில் இருக்கிறான். மேரு மலை பூமியின் மத்தியில் இருப்பது போல. ஸூரியனுக்கும் அண்ட கோளத்தின் வடக்கு, அல்லது மேல் பகுதி, தேகு அல்லது கீழ் பகுதி இரண்டுமே, இருபத்தைந்து கோடி யோஜனைகள் தூரம். நிலையில்லாத பூகோளம், அதில் இருப்பதால் – நிரந்தரமில்லாத ம்ருத அண்டம் – ம்ருதாண்டம் – அதன் மத்தியில் இருப்பவன் மார்த்தாண்டன் என்று ஸூரியனுக்கு ஒரு பெயர். ஹிரண்ய கர்பன் என்று மற்றொரு பெயர். ஹிரண்ய- பொன் மயமான கோளத்தில் உண்டானவன் என்பதால்.
ஸூரியனிடமிருந்து தான் திசைகள் கணக்கிடப்படுகின்றன. அவ்வாறே. அண்ட வெளி, வானம், பூமி, தவிர ஸ்வர்க அபவர்கங்கள். நரகம், ரஸௌகா -பாதாளம் என்ற லோகங்களும் அறியப் படுகின்றன. தேவர்கள், கால் நடைகள், மனிதர்கள், ஊர்வன, வேர்களுடைய மரங்கள், தாவரங்கள் என்று அனைத்து உயிரினங்களுக்கும் ஆத்மாவாக இருப்பது ஸூரியனே.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில் இருபதாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-46
ஸ்ரீமத் பாகவதம் – ப்ரிய வ்ரத விஜயம் என்ற ஐந்தாவது ஸ்கந்தம் || ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||
அத்யாயம்-21
ஸ்ரீ சுகர் சொன்னார்: இதே போல பூமியைச் சுற்றி உ ள்ளவையும் ப்ரமாண லக்ஷணங்களால் அறிந்து சொல்லப் படுகிறது.
தேவ மண்டலம் இரண்டு பாகமாக வர்ணிக்கப் படுகிறது. பூ மண்டலத்தின் இருப்பும், ஸூர்யனின் கதியையும் வைத்து அதன் விஸ்தீர்ணம் ஐம்பது கோடி யோஜனை என்று சொல்லியதை போலவே, அதே கணக்கில் தேவ லோகம் பற்றியும் கணக்கிட்டுள்ளார்கள். எப்படி என்றால், கோதுமை போன்ற தானியங்களை மூடியிருக்கும் தோலை (உமி) அதைப் பிளந்து ஒன்றை அளந்தால் மற்றொன்றும் அதே அளவு தான் இருக்கும் என்பது எப்படி நிச்சயமோ, அந்த நியாயத்தின் அடிப்படையில், பூலோகத்தின் அளவே தேவலோகமும் கணக்கிடப் படுகிறது. இரண்டுக்கும் இடையில் அந்தரிக்ஷம் என்ற உலகம். இது பூலோகத்தையும், தேவலோகத்தையும் இணைக்கிறது. இந்த பகுதியில் க்ரஹங்கள், நக்ஷத்திரங்கள், உள்ளன. ஸூரிய பகவான் வெப்பமும், பிரகாசமும் அளித்து மூவுலகையும் காக்கிறார். உத்தராயணம், தக்ஷிணாயனம் என்ற பிரிவுகள், ஸூரிய பகவானுடைய கதியின் அளவைக் கொண்டு, மந்த,சீக்ர, சமான என்ற கதிகளின் வேகத்தை வைத்து பிரிக்கப்பட்டுள்ளன. மகரம் முதலிய ராசிகளில், மேலும் கீழுமாக மற்றும் நேராக ரதம் செல்லும் சமயம் பகலும் இரவும், அதிகமாகவோ, குறைவாகவோ அல்லது சீராகவோ இருப்பது போலத் தெரியும். ஸூரிய பகவான் மேஷம் அல்லது துலா ராசிக்கு வரும் சமயம், தினமும், இரவும் சமமாக இருக்கும். வ்ருஷப முதலான ஐந்து ராசிகளில் செல்லும் சமயம், ஒவ்வொரு மாதமும் இரவு நேரம் ஒவ்வொரு மணிநேரம் குறைந்து கொண்டே வரும். அதே அளவு பகல் கூடும். வ்ருச்சிகம் முதலான ஐந்து மாதங்கள், இரவு பகல் விகிதம் நேர் மாறாக இருக்கும். இரவு அதிகமாகவும், பகல் குறைவாகவும் இருக்கும்.
இவ்வாறு ஸூரியனின் சஞ்சாரம் ஒன்பது கோடி ஐம்பத்து ஒன்று லக்ஷம் யோஜனைகள் மானஸ கிரியின் சுற்றுப் புறத்தில் அமையும். இதில் ஐந்த்ரீபுரி- இந்திரனின் நகரம் மேருவின் கிழக்கில் தேவதானி என்ற பெயரில், தென் திசையில் யமனுடைய ஸம்யமனி என்ற பெயரில், மேற்கில் வருணனின் நிம்லோசனீ என்ற பெயரில், வடக்கில் சௌம்யமான விபாவரீ என்ற பெயர்- இவைகளில் உதய, மத்யான்ன, அஸ்தமய இரவு என்பவை உயிரினங்கள் தங்கள் நடவடிக்கைகளுக்கான சமயத்தை சரியாக அறிந்து கொள்ள முடிவதால். மேருவின் நான்கு முகங்களாக சொல்லப் படுகின்றன. இங்குள்ளவர்கள் தினம் நடுப்பகல் வரை ஸூரியன் தபிக்கிறான் என்றும் பின் மேருவின் பின் மறைந்ததாகவும், இரவு என்றும் நினைப்பது, மற்றொரு பாகத்தில் விடியலாகவும் புதிய ஒரு தினம் காலை. நடுப்பகல் என்று விரிவதாகவும் அறியப்படுகிறது. பூ கோளத்தின் மேற்கு திசையில், நிம்லோசனி என்ற யமனின் நகரத்தில், தன் ரதத்தில் செல்லும் சமயம் முற்றிலும் மறைந்து விடுகிறான்.
எந்த நகரத்தில் ஸூரிய பகவானின் உதயம் ஆகிறதோ, அதற்கு நேர் எதிர் பாகத்து நகரில் அஸ்தமனம் ஆகியிருக்கும். ஒரு பக்கம் உயிரினங்கள் ஸூரியனின் தாபம் தாங்காமல் தவிப்பர். அதே சமயம், எதிர் பக்கத்தில் இரவாகி தூங்கிக் கொண்டிருப்பர். ஒரு சிலர் மத்யான்னம் என்ற நடுப்பகல், ஸூரியனை கண்ணால் காண்பர். அதே சமயம் சௌம்ய திசையில் ஸூரியனை காண முடியாது. இந்திர புரியிலிருந்து யம ராஜனின் நகர் நோக்கி ஸூரியனின் ரதம் செல்லும் சமயம், பதினைந்து கடி घडि நேரத்தில், இரண்டேகால் கோடி பன்னிரண்டரை லக்ஷ யோஜனைகளை விட இருபத்தைந்து யோஜனை தூரம் அதிகமாக செல்வார். அதே க்ரமத்தில் வருணன், சந்திரன் நகரங்களைக் கடந்து இந்திரனின் நகரம் வந்து சேருவார். இதே போல சந்திரனின், நக்ஷத்திரங்களின் உதயமும், அஸ்தமனமும் நடந்து கொண்டேயிருக்கும். வேதமயமான ஸூரிய பகவானின் ரதம் ஒரு முஹூர்த்த நேரத்தில், முப்பத்து லக்ஷத்து எண்ணூறு யோஜனை என்ற வேகத்தில் நாலு திக்கிலும் உள்ள நகரங்களைக் கடந்தபடி சுற்றி வருகிறது.
சம்வத்சரம் என்பது ஒரு ஆண்டு. அதை ஒரு சக்கரமாக சொல்கிறார். அதற்கு மாதங்கள் என்பன பன்னிரெண்டு ஆரங்கள். பருவங்கள் ஆறும் நேமி (नेमि) நான்கு மாதங்களாக மூன்று பிரிவுகள். இதை ஆங்கன் (आंगन्) என்பர். (சக்கரத்தின் உள் வட்டம்) இந்த ரதத்தின் மேல் பகுதியின் ஒரு சிகரம் மேரு பர்வதத்தின் உச்சியில் உள்ளது. மற்றொன்று மானஸத்திற்கு வடக்கில் உள்ள ஒரு மலையில் உள்ளது. இதன் மேல் அமைந்த சக்கரம் எண்ணெய் எடுக்கும் செக்கின் சக்கரம் போல் சுற்றும். இரண்டு மலைகளும் வாணியன் (கடுகு,எள் போன்ற தானியங்களிலிருந்து எண்ணெய் எடுப்பவன்) சக்கரத்தின் நடு பாகம் போல இணைந்து இருக்கும் (சக்கரத்தின் அச்சு) மற்றொரு அச்சு உயரமாக, இதைபோல நான்கு மடங்கு இருக்கும். அது எண்ணெய் செக்கின் நடுவில் உள்ள தண்டு போல நீண்டு த்ருவ மண்டலத்தை எட்டும். இந்த ரதத்தில் அமரும் இடம் முப்பத்தாறு லக்ஷம் யோஜனை நீளமும், ஒன்பது லக்ஷ யோஜனை அகலமும் உள்ளது. जुवा என்ற பகுதியும் முப்பாத்தாறு லக்ஷம் யோஜனை தூரமேயாகும். அதில் அருணன் என்ற சாரதி, காயத்ரி முதலான பெயர்களுடன்- வேத மந்திரங்கள் போன்ற பெயர்களுடன் – ஏழு குதிரைகளை பூட்டி வைத்திருக்கிறான். இந்த ரதத்தில் அமர்ந்து ஸூரிய தேவன் பவனி வருகிறான். அவர் எதிரில் அவருடைய முகத்தை பார்த்தபடி அமர்ந்து அருணன் சாரத்யம் செய்கிறான். அவருக்கும் முன்னால் ஸ்வஸ்தி வாசகங்களை சொல்லிய படி, பாலகில்யர்கள் என்ற ஆறாயிரம் ரிஷிகள், -இவர்கள் கட்டை விரல் அளவே உள்ளவர்கள்) (பௌருவ?) செல்கின்றனர். இவர்கள் தவிர, ரிஷிகள், கந்தர்வர்கள், அப்சரா, நாக, யக்ஷ, ராக்ஷஸ, மற்றும் தேவர்கள், பதினான்கு பேரும் தங்கள் துணைவர்களுடன் பின் தொடருகின்றனர். ஜோடியாக இருப்பதால் ஏழு கணங்கள் எனப்படுவர். மாதந்தோறும் இவர்களுக்கு சில செயல்கள் உண்டு. இருவருமாக சேர்ந்து செய்வர். அந்த சமயம் இவர்கள் பெயர்களும் மாறும். (ஏழு நாட்கள்) இப்படியாக ஒரு க்ஷணத்துக்கு இரண்டாயிரத்து இரண்டு யோஜனை தூரத்தை கடந்து விடும் வேகத்தில், ஒன்பது கோடி, ஐம்பத்தோரு லக்ஷ யோஜனை உள்ள பூ மண்டலத்தின் சுற்றளவை ஸூரிய பகவான் கடக்கிறார்.
இவ்வாறு ஸூரியனின் கிரணங்களுக்கு மேல் லக்ஷ யோஜனை தூரம் வேகமாக செல்லும் சந்திரன், ஸூரியனுடைய வர்ஷம் என்ற காலத்தை பக்ஷங்கள், வளர் தேய் பிறைகளாலும், மாதம் கால் (நான்கில் ஒரு பாகம்) ருக்ஷம் என்ற கணக்கிலும், பக்ஷம் என்பதை ஒரு தினமாகவும் அடைகிறான். இந்த இரண்டு வளர், தேய் பிறைகளுக்கும் இடைப்பட்ட கலைகளால் அமரர்கள் என்ற தேவர்களுக்கும், குறைந்து கொண்டு வரும் கிரணங்களால் பித்ருக்களையும், இரவு பகல், பூர்வ பக்ஷம் அபர பக்ஷம் என்பவைகளால் நிர்வகிக்கிறான். அந்த விதமாக அனைத்து உயிரினங்களையும் காத்து, முப்பது முஹூர்தங்களாக ஒவ்வொரு நக்ஷத்திரத்தையும் பிரித்து ஆள்கிறான். பதினாறு கலைகள் உடைய பகவான் சந்திரன், மனோ மய, அன்னமய , அம்ருத மயன், தேவ பித்ரு மனுஷ்ய மற்ற பிறவிகள், பசு, பக்ஷி, ஊர்வன, பறவைகளுக்கும் ப்ராணனை தருவதால் சர்வமயன் என்று வர்ணிக்கப் படுகிறான்.
இதற்கும் மேல், மூன்று லக்ஷ யோஜனைகள் தூரத்தில், நக்ஷத்திரங்கள், மேருவை வலது புறமாக கால அயனங்கள் பகவானே செய்த வகையறை, அபிஜித் என்பதோடு சேர்த்து இருபத்தியெட்டு என்பர்.
அதற்கும் மேல் உசனா என்ற ரிஷி இரண்டு லக்ஷண யோஜனை தூரத்தில் காணக் கிடைக்கிறார். கிழக்கு, மேற்கில், சில சமயம் சேர்ந்தும் ஸூரியனோடு பயணம் செய்கிறார். அவருடன் வேகமாகவும், மந்தமாகவும், சமமாகவும் ஸூரியன் போலவே சஞ்சரிக்கிறார். உலக மக்களுக்கு எப்பொழுதும் அனுகூலமாக மழை வரச் செய்வதும், தன் ஏவலர்களுடன் மழையின் அளவு, மழையை தடுப்பது, தவிர கிரஹங்களின் போக்கையும் கண்காணிக்கிறார்.
உஸனஸ் ரிஷிக்கும் பிறகு புதன் பற்றி சொல்கிறார். உஸனஸ் க்கும் மேல், இரண்டு லக்ஷ யோஜனைகள் ( பூமியிலிருந்து ஒன்பது லக்ஷ தூரத்தில், ) புத க்ரஹம் – பொதுவாக சுபமானது. சில சமயம் ஸூரிய கதியின் இடையில் வரும் சமயம் அசுபமாகவும் செயல்படும். அந்த சமயம் அதிக காற்று, அதிக மழை என்று பூமியில் இடர்கள் தோன்றும். அதற்கும் மேல் இரண்டு லக்ஷ யோஜனை, பூமியிலிருந்து பதினோறு -11- லக்ஷ யோஜனை தூரத்தில் அங்காரகன். பொதுவாக கெடுதல் விளைவிப்பவன் என்று சொன்னாலும், நன்மையும் உண்டு. “தசமே அங்காரகோ யஸ்ய ஸ ஜாத: குல தீபக:- எவனுடைய ஜாதகத்தில் பத்தாவது இடத்தில் அங்காரகன் இருக்கிறானோ, அவன் குல தீபகனாவான்” என்ற படி. வக்ரனாக சஞ்சரிக்கும் சமயம் ஒரே இடத்தில் பல காலம் இருப்பான் என்றும் சொல்லப் படுகிறது. அங்காரகன் தன் வக்ர கதியில் செல்லும் சமயம் அந்த ஸ்தான விசேஷத்தால், தீங்கு விளையும் என்பது நம்பிக்கை.
அங்காரகனைவிட இரண்டு லக்ஷம், பூமியிலிருந்து பதின்மூன்று-13- லக்ஷ தூரம் ப்ருஹஸ்பதி. ஒவ்வொரு ராசியிலும் மூன்று மூன்று பக்ஷங்கள் பரிவத்ஸரம் பரிவத்ஸரமாக கடப்பதாக சொல்லப் படுகிறது. பொதுவாக ப்ராம்மண குலத்துக்கு அனுகூலமானவன். பொதுவாக சாந்தியை தருபவன்.
அதற்கும் மேல், இரண்டு லக்ஷ யோஜனைகள் தாண்டி சனைச்சரன் என்ற பெயரில் ஒவ்வொரு ராசிக்கும் மூன்று மாதங்கள் பதின்மூன்று மாதங்கள் மெதுவாக செல்வதால் சனைச்சரன் என்று பெயர்.
அதற்கும் வடக்கில், பதினைந்து லக்ஷ தூரத்தில், பூமியிலிருந்து 11-பதினொன்று லக்ஷ தூரத்தில் இருப்பது உலகத்தின் சம நிளையை நிலை நிறுத்தும் விஷ்ணு பதம். அதை ப்ரதக்ஷிணமாக கடப்பர்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில் இருபத்தொன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-17
ஸ்ரீமத் பாகவதம் – ப்ரிய வ்ரத விஜயம் என்ற ஐந்தாவது ஸ்கந்தம் || ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||
அத்யாயம்-22
அரசன் வினவினான். பகவன்! ஆதித்யன், மேருவையும், துருவ நக்ஷத்திரத்தையும் ப்ரதக்ஷிணமாக சுற்றி வருவதும், ராசிகளின் திசைகளில் பார்வை படும் படி, வருவதும், அதன் பின் அப்ரதிக்ஷணம் – மறு திசையில் சுழன்று செல்வதாகவும் வர்ணித்தீர்கள். அதை நாங்கள் காண முடியுமா? எப்படி?
அவர் பதில் சொன்னார்: குயவனின் சக்கரம் சுழலும் சமயம் அத்துடன் சில எறும்புகள் வேறு இலக்கை நோக்கிச் செல்கின்றன. அதே திசையிலோ, எதிர் திசையிலோ கூட அதன் கதி இருக்கலாம். அது போல நக்ஷத்திர மண்டலம் கால சக்கரத்தில் உடன் வந்தாலும், அவை துருவனை, மேருவை ப்ரதக்ஷிணமாக சுற்றும் சமயம் உடன் அதே போல ப்ரதக்ஷிணமாக வந்தாலும் அவைகளின் கதி வேறே. நக்ஷத்திரங்களுக்கும், ராசிகளுக்கும் இடையில் உள்ள சம்பந்தத்தால் மாறும் தன்மையுடையன.
ஆதி புருஷனான பகவான் நாராயணனே, தன்னுடைய வேதங்களில் சொன்ன கர்ம விதிகளை சிறப்பாக நடைமுறைக்கு கொண்டு வர, ப்ரும்மா முதலானவர்களும் சேர்ந்து வேத்தை நன்றாக அறிந்தவர்கள் மேலும் அதன் பொருளை விவரமாக ஆராய்ந்து, பன்னிரெண்டாக பிரித்து ஆறு வசந்தம் முதலான பருவகாலங்கள் (ருதுக்கள்) அவை அந்தந்த சமயங்களில் எப்படி இருக்கும் என்பதையும் விளக்கி உள்ளார்கள்.
அதையே மனிதர்கள் வேத அறிவினால், வர்ணாஸ்ரம விதிகள், அதே போல கர்ம மார்கத்தை அனுசரித்தும், யோக மார்கத்தை சாதனைகள் செய்தும், சிரத்தையுடன் யாகங்கள் செய்து, அல்லது பயிற்சிகள் செய்து, முடிவாக எது நன்மை என்பதை அறிந்து கொள்வார்கள்.
எனவே, இந்த ஆத்மா வானத்துக்கும், பூமிக்கும் இடையில் வானத்தின் வட்டத்தில், கால சக்கரம் செல்லும் சமயம், பன்னிரெண்டு மாதங்கள் என்று அறிந்தார்கள். ராசிகளின் எண்ணிக்கையை ஒரு ஆண்டின் பகுதிகளாக மாதம், அதில் இரண்டு பக்ஷங்கள், (வளர் பிறை, தேய் பிறை) , இரவு, பகல் பாதி ருக்ஷம் என்பதன் இரண்டாக சொன்னார்கள். அதனால் ஆறு பகுதிகளாக ருதுக்களின் எண்ணிக்கை வந்தது. இவை ஆண்டு என்பதன் அவயவங்கள்- பாகங்கள்.
வான வெளியில் பாதி வரை ஸுரியனின் கதி செல்லும் காலம் அயனம் எனப்படும். அதனால் எதுவரை ஸுரியனின் கதி வானத்திற்கும் பூமிக்கும் இடையில் மண்டலமாக, வளையமாக முழு சுற்று முடித்தால் அது சம்வத்ஸரம்- ஆண்டு, பரி வத்ஸரம், இடா வத்ஸரம், அனு வத்ஸரம், வத்ஸரம் என்று பானுவின் தாக்கம், அதிகமாக, மந்தமாக, சம மான கதிகள் இவற்றை அனுசரித்து பெயர்கள் ஸூட்டினர். .
இவ்வாறு சந்த்ரமா அர்க்கனின்- ஸூரியனின் கிரணங்களால் மேலாக லக்ஷ யோஜனை தூரத்தில் இருப்பதால், சூரியனுடைய கதியை வைத்து சொன்ன சம்வத்சரங்கள், தான் வளர் பிறை, தேய்பிறை என்பதால் இரண்டும் ஒரு முறை கடந்தால் மாதம் என்றும், மாதங்கள் என்பதையும் நாட்களாக பிரித்தும், பாதி பாதியாக பிரித்த ஒரு நாளின் இரவு பகலை, தன் பிரயாண காலத்தை கணக்கிட்டுக் கொண்டு முன்னும் பின்னுமாக, செல்லும் வேகத்தையும் அமைத்துக் கொள்ளும்.
அதன் பின் வளரும் வளர் கலைகள், அமரர்களின், தேய் பிறை கலைகள் பித்ருக்களின் காலம் என்றனர். இரவும் பகலும் பூர்வ பக்ஷ-வளர் பிறை, அபர பக்ஷ -தேய் பிறை என்பதன் காரணமாக உலகில் ஒட்டு மொத்த ஜீவன்களின் ப்ராணன் , ஜீவனின் ப்ராணன் ஒரு நக்ஷத்திரம் என்று முப்பதாக முஹூர்த்தங்களாக பிரிக்கப் பட்டன.
அது பதினாறு கலைகள் கொண்ட பகவான் மனோ மயன், அன்ன மயன், அம்ருத மயன், தேவ, பித்ருக்கள், மனுஷ்ய, பூத, பசு, பக்ஷி,சரீ ஸ்ருப ஊர்வன, வீருத-பறப்பன என்பவைகளின் ப்ராணங்களால் ஸூழப் பட்டு இருப்பதால், அவைகளின் தாக்கமும் சேர்ந்து, சர்வமய என்று வர்ணிக்கின்றனர்.
அதன் பின், மேற் கொண்டுமூன்று லக்ஷ யோஜனைகள் நக்ஷத்திரங்கள் மேருவை தக்ஷிண கால – தக்ஷிணாயனம் என்ற காலத்தில், ஈஸ்வரனால் ஒருங்கிணைக்கப்பட்டு அபிஜித் என்பதையும் சேர்த்து இருபத்தெட்டு.
மேலும், உசனா- சுக்ரன் என்பது இரண்டு லக்ஷ யோஜனை தூரத்தில் காணப் படும். முன்னாலும், பின்னாலும் ஸூரியனுடைய வேகம் அதிகமாவதும், மந்தமாவதையும், சமமாக இருப்பதையும் வைத்து ஸூரியனுடன் சேர்ந்தே செல்கின்றன, உலகங்களுக்கு எப்பொழுதும் அனுகூலமாக இருப்பதே ப்ரதானமாக இருந்து, காலங்களில் மழை பொழிவதும், பயிர்கள் செழிப்பதும், மழை குறைவதும் இந்த க்ரஹங்களின் செயல்.
சுக்ரனின் இருப்பிடத்திலிருந்து மேல் இரண்டு லக்ஷ யோஜனைகளுக்கு அப்பால் சோமசுதன்- சந்திரனின் மகனான புதன் இருப்பதாக சொல்கின்றனர். புதன் பொதுவாக சுப க்ரஹம். எந்த சமயங்களில் ஸுரியனுடன் முரண் படுகிறானோ, அந்த சமயங்களில் வாத- காற்றின் போக்கு,, வானம் இவைகளின் கதியில் இடறி, அதிக மழை போன்ற ஆபத்துக்கள் நேரும் என்று கணிக்கிறார்கள்.
அதற்கும் மேல் இருப்பது அங்காரகன். இரண்டு லக்ஷ யோஜனைகளுக்கு அப்பால் இருந்து கொண்டு, மூன்று மூன்றாக பாதங்கள்-பக்ஷங்கள் (15 நாட்கள் – ஒரு பக்ஷம் ) ஒவ்வொரு ராசியையும் பன்னிரண்டு ராசிகளையும் ஆளுகிறான். வக்ரமாகச் செல்லும் காலத்தில், பொதுவாக, அசுபம்- நன்மையல்லாத க்ரஹம் என்று கணிப்பு.
அங்காரனுக்கும் மேல் இரண்டு லக்ஷ யோஜனைகளுக்குள், பகவான் ப்ரஹஸ்பதியின் ஸ்தானம். ஒவ்வொரு ராசியிலும் பரிவத்சரம், பரிவத்சரம் இருந்து தன் பிரயாணத்தை செய்வார். வக்ரமாக கதி இருந்தாலும் அந்தணர்களுக்கு அனுகூலமாகவே இருப்பார்.
அதற்கும் மேல், இரண்டு லக்ஷ யோஜனைகளில் காணப்படும் சனைச்சரன், ஒவ்வொரு ராசியிலும் முப்பது மாதங்கள் தங்குபவனாக, அனைவரையும் பின் தொடர்ந்த்து செல்வான். அவர்களுடன் அனு வத்சரங்களில் பொதுவாக அனைவருக்கும் அசாந்தி- கெடுதலைச் செய்பவன்.
வடக்கில், ரிஷிகள் பதினோரு லக்ஷ யோஜனைகள் தூர இடைவெளிக்குள், இருப்பர். இவர்கள் உலக நன்மையை எண்ணி செயல் படுபவர். பகவான் விஷ்ணுவின் பரம பதம் என்பதை ப்ரதக்ஷிணமாக சுற்றி வருவர்.
(இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஐந்தாவது ஸ்கந்தத்தின், இருபத்து இரண்டாவது அத்யாயம்)
அத்யாயம்-23
ஸ்ரீ சுகர் சொல்கிறார். அதற்கும் அப்பால், பதின் மூன்று-13- லக்ஷ யோஜனைகளுக்குள், விஷ்ணுவின் பதம் என்று சொல்வார்கள் அங்கு தான் மஹா பாகவதனான துருவன் அக்னி, இந்திரன், கஸ்யப ப்ரஜாபதி, தர்மன் முதலிய சமகாலத்தினருடன் கௌரவமாக கல்ப ஜீவிகளுக்கு ஜீவனோபாயமாக கருணையுடன் இருப்பதாக சொல்வர். அதை வர்ணிக்கிறேன்.
துருவன் தான் எல்லா ஜோதி ரூபமான க்ரஹ நக்ஷத்திரங்கள், சிமிட்டாத ஒளி வீசும் தாரகைகள், பகவான் காலத்தின் ஆதிக்கத்தில் செல்லும் அனைத்தின் இடையில் அசையாது ஸ்திரமாக நிற்கும்படி பகவானால் ஸ்தாபிக்கப்பட்டவன், அதை அதே விதமாக செயல் படுத்துகிறான்.
நீளமான கயிற்றால் கட்டப்பட்டு ஸ்திரமான ஒரு தூணில் கட்டபட்ட மாடுகள் சுதந்திரமாக நடமாடுவது போல இருந்தாலும், அந்த கயிற்றின் அளவே அவைகள் செல்லும் தூரம் என்பது போல கீழும் மேலும், பக்கங்களில் என்று சுழலும் கிரஹ நக்ஷத்திரங்கள் அசையாத ஸ்தம்பமாக இருக்கும் பகவானின் ஆணையால் ஒரே சீராக அவைகளுக்கு விதிக்கப்பட்ட பாதைகளில் செல்கின்றன, அதை விட்டு விலகுவதில்லை. வானத்தில் சஞ்சரிக்கும் க்ரஹங்கள் இதே போல உள்ளும் புறமும் செல்வது கால சக்கரத்தின் சக்தியும் துருவ நக்ஷத்திரத்தின் ஆளுமைக்கு உட்பட்டதே. அதே போல வான மண்டலத்தில் வாயுவால் அலைக்கழிக்கப் படும் மேகங்கள், கல்பம் முடியும் வரை சுற்றி வந்து கொண்டிருப்பதும் துருவனின் ஆகர்ஷணத்தாலேயே. கழுகு முதலிய பறவைகள் வாயுவின் உதவியால் உயர உயர பறக்கும். அதே காற்றின் அதீதமான வேகத்தால் விழாமல் தடுப்பதும், ஜோதிர்கணங்கள், ஓளியுடன் (கண்) சிமிட்டும், சிமிட்டாத தாரகைகள், இவை இயற்கையும், இறைவனும் சேர்ந்து அனுக்ரஹிக்கப்பட்டவை, தங்களுக்கு விதிக்கப் பட்ட பாதையில் மட்டுமே சஞ்சரிப்பதும் பூமியில் விழாமல் இருப்பதும் துருவனின் ஆகர்ஷணத்தினால் தான். சில தாரகைகள் திமிங்கிலம் –(dolphin) உருவில் உள்ளவை, இவை பகவானின் யோக தாரணையை அனுசரிக்கின்றன. இவைகளின் தலைகீழாக, உடலை சுருட்டிக் கொண்ட வடிவில், வால் போன்ற பகுதியின் ஆரம்பத்தில் துருவன் வசிப்பதாக சொல்வர். அந்த வால் பகுதியில் ப்ரஜாபதி, அக்னி, இந்திரன், தர்மன் இருப்பர். வால் நுனியில் தாதா, விதாதா (धाता,विधाता) இடுப்பு பகுதியில், சப்த ரிஷிகள் அதன் வலது பக்கம் வளைந்த குண்டலீயான (சக்கர வடிவ) சரீரத்தின் தென்பகுதியின் கீழ் சில நக்ஷத்திரங்கள் (அபிஜித், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, அஸ்வினி, பரணி, காரித்திகை, ரோஹிணி, மிருகசீர்ஷம், திருவாதிரை, புனர்வசு இவை உதக யானானி எனப்படும்) பதினான்கு நக்ஷத்திரங்களும், இடது புறத்தில், புஷ்யம், ஆஸ்லேஷம்(ஆயில்யம்), மகம், பூர்வ பால்குனி(பூரம்,) உத்தர பால்குனி(உத்திரம், )ஹஸ்த, சித்திரை, ஸ்வாதி, விசாகம், அனுராதா (அனுஷம்) ஜ்யேஷ்டா (கேட்டை) மூலம், பூர்வாஷாட, உத்திராஷாட (பூராட, உத்திராட) இவை தக்ஷிணாயன நக்ஷத்திரங்கள், பதினான்கும், திமிங்கில வடிவின் இரு பக்கமும், அவயவங்களாக அறிஞர்கள் விவரிக்கிறார்கள். திமிங்கிலத்தின் வயிற்று பாகத்தில் ஆகாச வீதி என்றும் அதில் ஆகாச கங்கா என்றும் இருப்பிடங்களை சொல்கிறார்கள்.
புனர்வசு, உத்தராயனத்தின் முடிவாகவும், புஷ்ய நக்ஷத்திரம் , தக்ஷிணாயனத்தின் ஆரம்பமாகவும் இருப்பதாக சொல்கின்றனர். சிசுமார- திமிங்கில வடிவின் உடல் பாகங்களில் இருபத்தெட்டு (அபிஜித் உட்பட) நகத்திரங்களின் ஸ்தானம் விவரமாக சொல்லப்பட்டுள்ளது. அதன்,
வலது பக்கம் -கிழக்கு – இடது பக்கம்- மேற்கு.
வலது பாதம் – திருவாதிரை,ஆயில்யம், – அபிஜித் – உத்திரட்டாதி,
மூக்கு- திருவோணம், பூராடம்
கண்கள்- சதயம், மூலம்
காதுகள்- மகம் முதலிய எட்டு நக்ஷத்திரங்கள்.
இடது பாதம்- மிருகசீர்ஷம் முதலான எட்டு
சதயம், கேட்டை தோள்கள்,
மேல் பாகத்தில் அகஸ்திய தாரகை, கீழே யமன், வாயில் அங்காரகன் (பௌம)தாரகை, ஜனன உறுப்பில் சனி, ககுத்-திமில் (விலங்குகளில் முதுகில் ஒரு பாகம்) என்ற பகுதியில் ப்ருஹஸ்பதி, மார்பில் ஆதித்யன், ஹ்ருதயத்தில் நாராயணன், மனதில் சந்திரன், நாபியில் உசனா, சுக்ர தாரகைகள், ஸ்தனங்களில் அஸ்வினி, தாரகைகளான அஸ்வினி குமாரர்கள், ப்ராண அபான வாயுக்களின் இடத்தில் புதன், கழுத்தில் ராஹு, மீதி உள்ள எல்லா இடங்களிலும், கேது, ரோமங்களில் மற்ற தாரகைகள் என்று அறியவும்.
பகவான் விஷ்ணுவின் சர்வ தேவதாமயமான ரூபம். தினந்தோறும் கண்களால் பார்த்து, வணங்க,” நமோ ஜ்யோதிர் லோகாய, கால, அயன அனிமிஷ பதயே மஹா புருஷாய அபிதீமஹி “ என்ற வாசகம். க்ரஹ, ருக்ஷ, தாராமயமான தெய்வீகமான பாபத்தை போக்கும், மந்திரம். இதை மூன்று வேளையும் நினைப்பதால், உடனடியாக பாபங்கள் விலகும்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில் இருபத்து மூன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) வசன ஸ்லோகங்கள்-9
அத்யாயம்-24
ஸ்ரீ சுகர் சொன்னார்: ஸூரியனின் கீழ் பாகத்தில், ஒரு யோஜனை தூரத்தில், ஸ்வர்பானு நக்ஷத்திரம் போலவே செல்லும் ஒரு க்ரஹம் உள்ளது என்று சிலர் சொல்கிறார்கள். அது ஒரே சமயத்தில் அமரத்வம்-நிரந்தரமான நிலையையும், க்ரஹமாகவும் மதிக்கப் படுகிறது. தகுதியின்றி இருந்தாலும், பகவானுடைய அருளால், உண்மையில் அசுரன். சிம்ஹிகா புதல்வன். தாரா மண்டலத்திலிருந்து தாபம் தாங்காமல், ஒரு யோஜனை தூரம் விழுந்தவன். சந்திரனிடமிருந்து. இருபத்திரண்டு ஆயிரம், பதின்மூன்றாயிரம் ராஹுவிடமிருந்தும் விலகி இருக்கும். ஒரு பருவ காலத்தில் ஸூரிய சந்திரர்களை பின் தொடர்ந்து மறைத்தது. அதைக் கேட்ட பகவான் தன் சக்கரத்தை அனுப்ப, அதன் வேகத்தை தாங்க முடியாமல், ஒரு முஹூர்த்தம் மட்டுமே ஆன நிலையில் ஸுரியனுடைய ஒளி வட்டத்திலிருந்தே விலகி விடும் என்பர்.
அதற்கும் கீழ் சித்த சாரணர்களின் இருப்பிடம். அதற்கும் கீழ் யக்ஷ ரக்ஷ ப்ரேத பூத கணங்களின் நடமாட்டம் உள்ள அந்தரிக்ஷம் – இங்கு வாயு வீசும், மேகங்கள் உலவும். அதற்கும் கீழே, நூறு யோஜனை தூரத்தில், இந்த பூமி – இங்கு ஹம்ஸங்கள், பாஸ, கழுகு, சுபர்ணன் என்ற கருடன் முதலிய பறவைகள் பறக்கும் இடம். பூமிக்கும் கீழே, ஏழு நிலங்கள் இரண்டு யோஜனை தூர இடைவெளியில், விஸ்தாரமாக வர்ணிக்கப் படும், அதலம், விதலம், சுதலம், தலாதலம்,மஹா தலம், ரஸாதலம், பாதாளம் என்பவை. பூமியின் அடியில் பள்ளம் போல இருந்தாலும், ஸ்வர்க்கத்தை விட அதிகமான போக ஐஸ்வர்யங்கள், ஆனந்தங்கள், மற்றும் விபூதிகள் நிறைந்த பவனங்கள், உத்யான வனங்கள், க்ரீடா விஹாரங்கள், இவற்றுடன் தைத்ய தானவ வம்சத்தினர், மனைவி மக்கள், புத்ர பௌத்ர்கள் என்று க்ருஹஸ்த ஜீவனத்தை சுகமாக தொடர்ந்து வருவதாக சொல்லப் படுகிறது. இவர்கள், ஈஸ்வர பக்தி, மாயா விநோதங்கள் இவைகளிலும் ஈடுபாடு உடையார்களாக உள்ளார்கள்.
அரசனே! இங்கு மாயாவியான மயனால் கட்டப் பட்ட நகரம். பலவிதமான உயர் மணிகள் அழகுற பதிக்கப் பெற்ற பவனங்கள். ப்ராகாரங்கள், கோபுரங்கள். சபைகள், சிறு உத்யான வனங்கள். நாற்கால் மண்டபங்கள். நாகாசுர்கள், இரட்டையர்களாக சஞ்சரிப்பர். உத்யான வனங்கள் அமர லோகம் போலவே அழகுடன் பராமரிக்கப் படுகின்றன. பழங்கள், கொத்து கொத்தாக மலர்களும், தனி மலர்களும், தளிர்களுமாக, தலை வணங்கி நிற்பது போன்ற மரங்கள், அவைகளை சுற்றிப் படர்ந்து இருக்கும் கொடிகள், இவைகளுடன் அழகிய காட்சியளிக்கும். அருகில் குளங்கள், நீர் நிலைகள். எப்பொழுதும் இணைபிரியாத இரட்டையர்களாக சக்ரவாகங்கள், அந்த சுத்தமான நீரில் மிதந்தபடி இருக்கும். துள்ளும் மீன் கூட்டங்களும் மற்ற நீர்வாழ் ஜந்துக்களும் விளையாடும். நீரில் மலரும் பூக்கள், அனேக நிறங்களில் கமலங்கள் நிறைந்த இடங்கள். அந்த பூக்களிடையில் வசிக்கும் சிறு பறவைகளும், பூச்சிகளும் ஆர்பரிக்கும் சத்தம் மதுரமாக கேட்கும். அனைத்துமே லக்ஷ்மீ கடாக்ஷம் பெற்றவை, பகலா இரவா என்று கூட தெரியாதபடி உல்லாசமான வாழ்க்கையை வாழ்பவர்கள். பெரும் நாகங்கள் தலையில் உள்ள மணிகளின் பிரகாசம் இருட்டை விரட்டி விடும்.
இங்கு வசிப்பவர்கள் திவ்யமான ஔஷதி ரஸம், அன்ன பானாதிகள், ஸ்னானம் முதலியவைகள், மனோவியாதி, உடல் வியாதி, முதுமையால் தேஹ வர்ணம் இழந்து, துர்கந்தம், வியர்வை, அலுப்பு, ஓய்ச்சல் என்று பலவிதமன இடர்களையும் அனுபவிப்பதில்லை. இவர்கள் எப்பொழுதும் நன்மைகள், அழகிய பலசாலியான உடல் இவற்றுடன் வாழ்கின்றனர். பகவானுடைய சக்கரம் அன்றி வேறு எதனாலும் மரணம் இல்லை என்பது இவர்கள் பெற்ற வரம். அதனால் சுதர்ஸன சக்கரத்தைக் கண்டாலே அசுர பெண்மணிகளின் கர்பம் கலையும், அவர்கள் பயத்தால் அழிவர். அசுர நகரில் மயன் என்ற தானவனின் மகன் பல என்பவன் வசிக்கிறான். தொன்னூற்று ஆறு விதமான மாயைகளை அறிவான். அவற்றில் சில இன்றளவும் மாயை என்ற கண்கட்டி வித்தை செய்பவர் அறிவர். ஒரு சமயம் கொட்டாவி விட்ட சமயம் மூன்று விதமான பெண்கள் வெளி வந்தனர். சுவர்ண வர்ணமான, காமினி, பும்ச்சலி என்பவர்கள். ஹாடக எனும் மதுவினால் மயக்கி இங்குள்ள ஆண்களுடன் காலம் கழிப்பர். அந்த மதுவினால் மயங்கி அவர்களும் நானே கடவுள், நானே சித்தன் என்று பிதற்றுவர்.
அதற்கும் கீழ், விதலம் எனும் இடத்தில், பகவான் ஹாடகேஸ்வரர் என்ற பெயரில் மகேஸ்வரன், பவானி எனும் தன் பத்னியுடன் வசிக்கிறார். உடன். பார்ஷதர்கள் எனும் ஏவலர்கள் பூத கணங்கள், இவர்களுடன் ஹாடகீ என்ற நதிக் கரையில் ப்ரும்மாவின் வேலையான பிரஜைகளை பெருக்குவது என்பதை ஊக்குவிக்கிறார். பவனும் பவானியும் இணைந்தே இருப்பர். இந்த நதியின் நீரிலிருந்து பொன் விளைகிறது. பெண்கள் யாரானாலும், தேவ, மானிட, ஆசுர ஜனங்கள் விருப்பமுடன் பொன்னை விரும்பி, நகைகளாக அணிகின்றனர்.
இதையும் அடுத்து சுதலம். இதில் விரோசனன் என்பவரின் மகனாக பலி என்ற அசுர ராஜன் குணசாலியாக, உத்தம ஸ்லோகன் என்று அறியப் பட்டார். மகேந்திரனின் வேண்டுகோளுக்கு இரங்கி பகவான், வாமனனாக அதிதி மகனாக பிறந்தார். பலியிடம் மூவடி நிலம் தானமாக பெற்று, ஓங்கி உயர்ந்து வளர்ந்து மூவடியால் மூவுலகையும் அளந்து கொண்டார். அதன் பின் பகவானின் அருளாலேயே, இந்திரன் முதலான தேவர்களுக்கும் கிடைக்காத செல்வத்தை லக்ஷ்மீ கடாக்ஷத்தினால் ராஜா பலி கிடைக்கப் பெற்றான். அதன் பின் தன் இயல்பான குணம் சற்றும் மாறாமல், இன்றளவும் வாழ்கிறான். சுதல லோக ஐஸ்வர்யம் அரசனான அவனிடம் இருந்தது. அதை பூமியுடன் தானம் செய்ததன் பலனாக என்றும் அழியாத ஐஸ்வர்யமாக மோக்ஷ ப்ராப்தி அடைந்தான்,
யதேச்சையாக, , கீழே விழும் போதோ, வேறு ஏதோ ஆபத்தோ எனும் பொழுது தன்னையறியாமல் கூட பகவன் நாமாவை சொல்பவர் நல்ல கதியை அடைவர். தன் பூர்வ ஜன்ம வினைப்பயன் நீங்கப் பெறுவர் என்கிறார். அவரே தன் பக்தர்களின் ஆத்மாவில் ஆத்மாவாக இருப்பவர். அவரே, இப்படி பலியின் நல்ல எண்ணத்துடன் அளித்த மூன்றடி நிலத்தை மூவுலகமாக ஏற்றுக் கொண்டது நியாயமா ? என்ற கேள்வியும் -பலியின் பக்திக்கே பகவான் தண்டனை கொடுத்தார் என்பது போன்ற சந்தேகங்களும் வருவது இயல்பே. பலியின் தந்தை வழி தாத்தா ப்ரஹ்லாதனின் தந்தை மோக்ஷத்தை கூட வேண்டவில்லை. பகவானின் அருகில் இருக்கும் நிலையையே வேண்டினார். பலி எதையும் கேட்கவில்லை. அதனால் பகவான் பலியின் ராஜ்யத்தில், தன் கதையை கையில் ஏந்தி காவலாக நின்றார். ராவண ராஜா சுதலம் வந்தபொழுது அவனை விரட்டியடித்தார் என்பது வரலாறு என்கிறார், ஸ்ரீ சுகர்.
பொருளே பெரிதென்றி எண்ணிய இந்திரன் என்ன செய்தான்? இந்திரனின் மந்திரி ப்ருஹஸ்பதி. அவரையே அவமதித்தான். பகவானிடம் இந்திரலோக சௌக்யங்களையே வேண்டினான். இந்த இந்திர பதவியும் ஒரு மன்வந்தரமே – சாஸ்வதமான பகவானின் அருகாமையை விட இந்த பதவிகள் துச்சம், ப்ரஹ்லாதன் ஹிரண்யகசிபு வதத்தின் பின் அகண்டமான ராஜ்யத்தை பகவானே கொடுத்த பொழுது கூட ஏற்கவில்லை. பகவானின் அருகாமையே வேண்டினான். மஹானுபாவன் ப்ரஹ்லாதன். பலிக்கும் அவர் அனுக்ரஹமே செய்தார். அவருடைய மனம் தயையால் நிறைந்தது. இவைகளைப் பற்றி நான் பின்னால் விவரமாக விளக்கம் அளிக்கிறேன்.
சுதலத்தின் கீழ் இருப்பது தளாதளம். அங்கு தானவ ராஜன் மயன் வசிக்கிறான். அங்கு தான் பகவான் ஸ்ரீ சங்கரன் உலக நன்மைக்காக மூன்று புரங்களையும் எரித்தார். அதன் பின் மயன் அவருடைய அருளால் இந்த இடத்தில் வசிக்கிறான். மயன் என்பவன் மாயாவிகளின் பரம குரு. இங்கு உள்ள மயனின் பிரஜைகளுக்கு சுதர்ஸன சக்கரத்திடம் கூட பயம் இல்லை. ஏனெனில் பகவான் மஹாதேவனின் ஆசியால் மயன் காக்கப் படுகிறான்.
அதற்கும் கீழ் காத்ரவேயர்கள் என்ற சர்ப்பங்களின் நகரம். பல தலைகள் உள்ள, நாகங்களின் கூட்டம், குஹக, தக்ஷக, காலிய, சுசேஷணன் முதலிய பெரிய சர்ப்பங்கள், பகவானின் கருட வாகனத்தைக் கண்டு அசூயை உடையவர்கள், இந்த இடத்தில் தன் நண்பர்கள், மனைவி மக்களுடன் குடும்பமாக சந்தோஷமாக வாழ்கின்றனர்.
இதற்கும் கீழே, ரஸாதளம் எனும் இத்தில் திதி புதல்வர்கள் தைத்ய தானவர்கள், பணய என்பவர்கள், காற்று புகாத கவசங்களுடன், மகா சாகஹ பிரியர்கள், பிலங்களில் வசிப்பவர்கள், இந்திரனிடம் பயந்து வாழ்கின்றனர்.
அதற்கும் கீழ், நாக லோகம். வாசுகி முதலானோர் வசிக்கும் இடம். சங்க, குலிக, மஹா சங்க, ஸ்வேத, தனஞ்ஜய, த்ருதராஷ்டிர, சங்கசூட, கம்பல, அஸ்வதர, தேவதத்தன் என்பவர்கள், கடும் கோப குணம் கொண்ட நாகங்கள். ஐந்து ஏழு, பத்து, நூறு, ஆயிரம் என்ற அளவில் தலைகளும், படம் எடுக்கும் வல்லமையும் உள்ள நாகங்கள். அவர்களின் தலையின் நடுவே உள்ள படத்தில் மாணிக்கம் என்ற உயர் மணி பிரகாசிப்பதால், அந்த லோகமே இருளின்றி ஒளி மயமாக இருக்கும்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில் இருபத்து நான்காவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) வசன ஸ்லோகங்கள்-31
அத்யாயம்-24
ஸ்ரீ சுகர் சொன்னார்: அதன் பின், பதின்மூன்று ஆயிரம் யோஜனைகள் தூரத்தில், இருப்பது பகவானுடைய தாமஸமான கலை. சாத்வீக – சத்வ குணம் நிரம்பிய சமயம் ஸ்ருஷ்டியில் வந்தவர்கள் சங்கர்ஷணன் என்று பகவானை சொல்வதை, இவர்கள் நாங்கள் தான் சாங்கர்ஷணர்கள் – சங்கர்ஷணிடம் தோன்றியவர்கள் என்று சொல்லிக் கொள்வர். இங்குள்ள அனந்தன் எனும் நாகம், பூ மண்டலத்தை தன் தலையில் தாங்குவதாக சொல்லப் படுகிறது. பகவான் ஆதி புருஷன், சங்கர்ஷணன். ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் தெளிவாக தெரிந்த தெரியாத தத்வங்களை இணைத்ததால் வந்த பெயர். அவர் புருவம் கோபத்தால் நெரிந்த சமயம் உண்டானவர் ருத்ரன். அவரே சாங்கர்ஷணர். பதினொன்று வித ரூபங்கள், மூன்று கண்கள், மூன்று தலைகள், சூலத்தை ஏந்தியபடி வந்தார். அவருடைய பாத கமலங்கள், அதன் நகங்கள், மின்னும் பலவித மணிகளை விட அதிக ஓளியுடையவை.. பாதாள லோக தலைவர்கள், பல ரிஷிகளுடன் ஏகாந்தமான பக்தி யோகத்தால் இவரை வணங்குகின்றனர். அப்படி வணங்கும் சமயம் இந்த நகங்களின் ஒளி தங்கள் முகங்களில் படுவதே மனோஹரமாக இருப்பதாக மகிழ்ந்து நோக்குகின்றனர். நாகராஜ குமாரிகள் வெட்கத்துடன் அவரை அங்கம் அங்கமாக ரசிக்கின்றனர். அங்குள்ள வெள்ளியிலான ஸ்தம்பங்களில் ப்ரதி பலிக்கும் ஒளியில் ருத்ரனின் புஜங்களில் அணிந்துள்ள வலயம் எனும் ஆபரணம் மேலும் ஒளி கூடியதாக ஆகிறது. சந்தனம், அகரு, குங்குமம், முதலிய வாசனை திரவியங்கள் மணத்தால் அந்த இடமே நிரம்பியுள்ளது போல மயங்குகின்றனர். அதற்கும் மேல் மகரத்வஜன் (திமிங்கிலம் அல்லது ஏதோ ஒரு கடல் வாழ் பிராணியை தன் கொடியில் உடையவன்) சிரிப்பில், மற்றும் அவருடைய கருணை நிரம்பிய பார்வையில் மயங்குகிறார்கள்.
பகவான் அனந்தன், ஆதி தேவனாக அனைத்தையும் தன்னுள் நிரப்பி வைத்துக் கொண்டிருந்த ஆதி புருஷன், லோக அமைதி ஒன்றே குறியாக இருந்தார். சுரர்கள், அசுரர்கள், உரக, சித்த, கந்தர்வ வித்யாதர, முனி கணங்கள் அனவரதமும் தொழுத பொழுதும், சற்றும் மாறாத புன்னகையுடனே ஆசீர்வதித்தார். அச்சமயம் அங்கு வந்த நாரதர் பகவானை வர்ணித்து துதி செய்தார்.
உத்பத்தி, ஸ்திதி, லயம் என்ற செயல்களை தன் பார்வையாலேயே நடத்திச் செல்லும் சங்கர்ஷணன் தான் தனியாகவே இந்த பரந்த உலகை பாலிக்கிறார். இந்த சங்கர்ஷணன் என்பதையே சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாது. மிருகபதியான சிங்கம் இவருடைய பராக்ரமத்தை தானும் பெற முயற்சிக்கிறது. சேஷன் தவிர மற்றவர்களால் இவருடைய கருணையை, சத்வ குணத்தை பாட முடியாது. எதேச்சையாக கேட்டாலே இவருடைய மகிமையை உணர்ந்து சஹஸ்ர சீர்ஷா புருஷன் என்று வணங்கி நலம் பெறுவர். மலைகள், நதிகள், சமுத்திரங்கள் நிறைந்த சம்பூர்ண மண்டலம் இவர் சிரசில் ஒரு துகளாக தெரியும். அதனாலேயே அனந்தன். எனவே இவருடைய பராக்ரமத்தைச் சொல்ல யாராலும் ஆகாது. தங்கள் விருப்பங்கள் நிறைவேற பொது ஜனங்கள் , அரசர்கள் அனைவருமே வேண்டிக் கொள்கிறார்கள். அது இயல்பே. இது, இவருக்கு, இவ்வளவு என்று விதிக்கும் வினைப் பயனையும் இவரது அருள் மாற்றியமைக்கும் என்ற நம்பிக்கை.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில் இருபத்து நான்காவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) வசன ஸ்லோகங்கள்-15
அத்யாயம்-25
பரீக்ஷித் அரசன் கேட்டான்: மஹரிஷியே, உலகத்தில் ஏன் இந்த வேறு பாடுகள்?
ரிஷி சொன்னார்: முன்று குணங்கள். செய்பவனின் ஈடுபாடு, அறிவு இவற்றின் பலனாக பல வழிகள். அனைத்துமே தனிதனியானவை. அனவருக்கும் பொதுவாக ஒன்று சாத்யமில்லை. அதனால் தார தம்யங்கள் – வேறு பாடுகள் தோன்றுகின்றன. ப்ரதிஷித்தம்- செய்யாதே என்று அறிவுறுத்தினாலும், அதர்ம காரியங்களை சிலர் செய்கிறார்கள். ஈடுபாட்டுடன் செய்வதிலும், அவரவர் மனப் பான்மைக்கு ஏற்ப அதிகம், மிதம், மிக குறைவு என்று பாகுபாடு தானாகவே வந்து விடுகிறது. அறியாமலோ, விவரம் தெரியாமல் அவித்யை காரணமாகவோ, அவரவர் அறிவுக்கு ஏற்ப செய்யும் செயலின் தன்மையும் மாறுபடுகிறது. ஸ்ரூதய:? सृतयःபல தோன்றி விட்டன.
ரிஷி சொன்னார்: மூவுலகுக்கும் தென் திசையில், பூமியை சூழ்ந்து ஜலம், அக்னி வாயு இவை இருக்கும் இடத்தில் யோகம், சாதனகள் என்று நியாயமாக வாழ்ந்தவர்கள் தங்கள் முன்னோர்கள் உடன் இருப்பார்கள்.
வைவஸ்வதன் என்ற பித்ருராஜன், தன்னிடம் வந்து சேர்ந்த அந்த உயிரினங்களின், கர்மாவசேஷம், வினைபலன் எந்த அளவில் மீதமுள்ளது என்பதை தன் ஏவலர்கள் உதவியால், கவனிக்கிறார். தோஷம் இருந்தாலும், சட்டத்தை மீறாதவரை அனுமதிக்கிறார்.
இதன் பின் நரக வர்ணனை. ஐந்தாவது ஸ்கந்தம் இத்துடன் முடிவடைகிறது.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில் இருபத்து ஐந்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) வசன ஸ்லோகங்கள்-15
|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||
தக்ஷ சாபோ என்ற நான்காவது ஸ்கந்தம்
அத்யாயம்-1
மைத்ரேயர் சொன்னார்: மனுவிற்கு சதரூபாவிடம், ப்ரியவ்ரத, உத்தானபாத என்ற இரு மகன்கள் தவிர ஆகூதி,தேவஹூதி, ப்ரசூதி என்ற மூன்று பெண்களும் பிறந்தனர்.
ஆகூதி என்பவளை ருசி என்பவருக்கு மணம் செய்து கொடுத்தனர், (உறவு முறையால் சகோதரன் என்றாலும் எல்லோருடைய சம்மதத்துடனும் மணம் செய்து கொடுத்தனர்) தவபலம் நிறைந்தவர் அவர். அவர்களுக்கு யக்ஞஸ்வரூபியான பகவானே மகனாகவும், தக்ஷிணா என்பவள் மகளாகவும் பிறந்தனர். அவர்களுக்கு பன்னிரண்டு குழந்தைகள். தோஷ, ப்ரதோஷ, சந்தோஷ, பத்ரன், சாந்தி, இடஸ்பதி, இத்ம: கவி, உசஸ்வன:, சுதேவோ, ரோசனோ த்விஷட். தீஷிதா என்ற தேவர்களாக ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில் இருந்தனர்.
கர்தம புத்ரிகளை ஒன்பது ரிஷிகளுக்கு மணம் செய்து கொடுத்ததை முன்பே சொன்னேன். அதில் ப்ரசூதியின் குழந்தைகள் பற்றி சொல்கிறேன், கேள். மரீசியின் மனைவி கலா, கஸ்யபர் என்ற முனிவரையும், பூர்ணிமானம் என்பவரையும் பெற்றாள். பூர்ணிமான் , விரஜ, விஸ்வக என்ற பிள்ளைகளையும், தேவகுல்யா என்ற மகளையும் பெற்றார். இந்த தேவகுல்யா என்ற மகள் தான் அடுத்த ஜன்மத்தில் ஹரியினுடைய பாதங்களை அலம்பிய ஜலமாக உலகை பாவனம் செய்யும் நதி கங்கையாக ப்ரவஹித்தாள்.
அத்ரியின் மனைவி அனசூயா, மூன்று பிள்ளைகளைப் பெற்றாள். மூவருமே ப்ரசித்தமானவர்களாக ஆனார்கள். தத்த, துர்வாஸர், சோமன். ஈசனின், விஷ்ணுவின், ப்ரும்மாவின் தேஜசுடன் பிறந்தனர்.
விதுரர் கேட்டார். குருவே, அத்ரியின் வீட்டிற்கு, மூன்று தேவர்களும், ஸ்திதி, உத்பத்தி, லயம் எனும் செயல்களுக்கு பொறுப்பானவர்கள், ஏதோ உத்தேசத்துடன் சென்றார்களே, அந்த கதையை சொல்லுங்கள்.
அத்ரி முனிவர், நான் முகனான ப்ரும்மா முதன் முதல் ஸ்ருஷ்டி செய்த முனிவர்களுல் ஒருவர். அவர் மனைவி அனசூயாவுடன் குலாசலம் (ருக்ஷாசலம்) என்ற இடத்தில் தவம் செய்து வந்தார். அந்த இடம் விந்த்ய மலையடிவாரத்தில் மிக ரமணீயமாக இருந்தது. கொத்து கொத்தாக மலர்ந்த பலவித மலர்கள், பலாச, அசோக போன்ற மரங்கள், நீர் நிறைந்த குளங்கள், நதி, என்று தவம் செய்ய அமைதியான இடம். ப்ராணாயாமம் செய்து பலவருஷங்கள் மனம் உடல் இரண்டையும் தன் வசப் படுத்திக் கொண்ட முனிவர் ஒரு பாதத்தில் நின்று தவம் செய்தார். காற்றே போஜனம்.ஜகதீஸ்வரனை வணங்குகிறேன். தனக்கு சமமான மகனை எனக்கு அருள வேண்டும் என்று பிரார்த்தித்தார். அவரது தீவிரமான தவம் அவரது மஸ்தகத்திலிருந்து வெப்பமான புகையாக வெளி வந்து மூவுலகையும் தகிக்கலாயிற்று. அப்சர, கந்தர்வ, முனி ஜனங்கள் அவரது ஆசிரமத்தில் வந்து கூடினர். அவர்களைப் பார்த்த முனிவர், ருஷபம்,ஹம்ஸ,சுபர்ண என்ற வாகனங்களில் வந்த மும்மூர்த்திகளையும் வணங்கினார். கண்களைத் திறந்து அவர்களை வணங்கி துதித்தார்.
அத்ரி சொன்னார்: விஸ்வ உத்பத்தி, ரக்ஷணம், லயம் என்று உலகில் ஒவ்வொரு யுகத்திலும் மாயா குணத்தால் தேகம் தரிக்கும் மூவரும் இந்த இடத்திற்கு வந்த காரணம் என்னவோ? ப்ரும்மா என்னை பிரஜைகளை ஸ்ருஷ்டி செய் என்று ஆணையிட்டார். சாதாரண மனிதர்களின் மனதால் கூட அண்ட முடியாத தூரத்தில் இருப்பவர்கள், ஒன்றாக வந்தது எனக்கு ஆச்சர்யமே. தயவு செய்து சொல்லுங்கள்.
தேவர்கள் சொன்னார்கள்; நீ என்ன காரணத்திற்காக தவம் செய்கிறாயோ, அது கண்டிப்பாக நடக்கும். எங்களை இங்க வரவழைத்தது அந்த சத்சங்கல்பமே. ப்ரும்மன், அதனால், எங்கள் அம்ச பூதமாக புகழுடன் உலகில் உன் பெருமையை பறை சாற்றியபடி வாழ்வார்கள் உன் மகன்கள். இவ்வாறு வரம் கொடுத்தவர்கள் உடனே மறைந்தனர்.
அத்ரி-அனசூயா தம்பதிக்கு, ப்ரும்மாவின் அம்சமாக சோமன் (சந்திரன்) பிறந்தான். விஷ்ணுவின் அம்சமாக தத்தன் எனும் தத்ராத்ரேயர், சங்கரனின் அம்சமாக துர்வாசரும் பிறந்தனர்.
ஆங்கிரஸ் என்றமுனிவரின் மனைவி ஸ்ரத்தா. நான்கு புத்திரிகளைப் பெற்றாள். சினீவாலி, குஹூ, ராகா, அனுமதி என்பவர்கள். வசிஷ்டரும், ப்ருஹஸ்பதியும் மகன்கள்.
புலஸ்தியர் என்ற ரிஷி, ஹவிர்பூ என்ற மனைவியிடம், அகஸ்தியர் என்பவரை பெற்றார். அடுத்த பிறவியில், ஜடராக்னி,விஸ்ரவா என்ற மகன்கள். மற்றொரு ,மனைவி கேசினி என்பவளின் மகன்கள் ராவண, கும்பகர்ண,விபீஷணன் என்பர். யக்ஷபதியான குபேரன், இட்விடா என்பவளின் மகன்.
புலஹருடைய மனைவி கதி என்பவளுக்கு. கர்மச்ரேஷ்டன், வரீயாம்சன், சஹிஷ்ணு என்ற மூன்று மகன்கள்.
க்ரது என்பவரின் மனைவி க்ரியா வாலகில்யான் என்ற ஆறாயிரம் ப்ரும்ம தேஜஸால் பிரகாசித்த ரிஷிகளைப் பெற்றாள்.
வசிஷ்டர் ஊர்ஜா என்பவளிடம் சித்ரகேது முதலான ஏழு ரிஷிகளைப் பெற்றாள். சித்ரகேது, சுரோசி, விரஜா, மித்ரன், உல்பனோ, வசுப்ருத், த்யுமான், சக்தி என்பவர்கள்.
அதர்வண ரிஷி சித்தி என்பவளிடம், த்ருதவ்ரதன் என்பவனைப் பெற்றாள்.
தத்யஞ்சமன், அஸ்வசிரஸ் – இவர்கள் ப்ருகு வம்சத்தினர். க்யாதி என்ற மனைவியிடம் ப்ருகு தாதாரன், விதாதாரன்,ஸ்ரீ -இவள் பகவானின் பத்னியானாள்),ஆயதி, நியதி என்ற பெண்கள் -இவர்கள் மேருவை மணந்தனர். அவர்களுக்கு ம்ருகண்டு, ப்ராணன் என்று மகன்கள். மார்கண்டேயன் ம்ருகண்டு மகன். ப்ராணன் மகன் வேதசிரஸ். கவி என்ற ப்ருகு புத்திரனுக்கு பகவானே உசனா என்ற முனிவராக பிறந்தார். சுக்ராசார்யர் இவரே.
இந்த முனிவர்கள், தாங்களும் நல்லவர்களாக இருந்து, பிரஜைகளையும் வளர்த்தார்கள். கர்தமருடைய மகள் வயிற்று சந்ததிகள், பற்றிச் சொன்னேன். ப்ரும்மாவின் மகனான தக்ஷன் ப்ரசூதி, மானவி என்பவர்களை மணந்தான். அவர்களிடம் அழகிய கண்களுடைய பதினாறு பெண்களைப் பெற்றான். பதிமூன்று பெண்களை தர்மனுக்கு கொடுத்தான். அக்னிக்கு ஒன்று, மற்றவளை பவனுக்கு கொடுத்தான். தர்மனுடைய பத்னிகள்: ஸ்ரத்தா, மைத்ரீ, தயா, சாந்தி, துஷ்டி:, புஷ்டி:, க்ரியா, உன்னதி:, யுத்வித், மேதா, திதிக்ஷா, ஹ்ரீ, மூர்த்தி என்பவர்கள்.
ஸ்ரத்தாவின் மகன்கள்: சுபன் மைத்ரீ, ப்ரஸாதன், அபயன், தயா,சாந்தி, சுகம், முதன்,ட துஷ்டி: ஸ்மயம்,புஷ்டி
புத்தி என்பவள், யோகம், க்ரியா, உன்னதி, தர்பம்,அர்த்தம், இவர்களையும்,
மேதா என்பவள், ஸ்ம்ருதி, திதிக்ஷா, க்ஷேமம், ஹ்ரீ:, ப்ரஸ்ரயன் என்ற மகனையும்,
மூர்த்தி என்பவளுக்கு, நர நாராயண என்ற ரிஷிகள். இவர்கள் பிறந்ததால், உலகமே மகிழ்ந்த து. அனைவரும் மகிழ்ந்தார்கள். திவ்ய வாத்யங்களை இசைத்தும், பூ மாரி பொழிந்தும் தேவர்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். தேவர்கள் துதித்தனர்.
இருவரும் அதன் பின் கந்தமாதனம் எனும் இடத்தையடைந்தனர். பின் ஒரு காலத்தில் இவர்கள் இருவரும் பூவுலகத்தில் அவதரித்த காரணமே, பூ பாரத்தை குறைப்பதே. க்ருஷ்ணனாக, பலராமனாக வந்தனர்.
ஸ்வாஹா, அபிமானி என்ற அக்னியின் குழந்தைகள், மூன்று பெண்களைப் பெற்றனர். பாவகம், பவமானம், சுசி,- இவர்களை ஹுத போஜனர்கள் என்பர். இவர்கள் மூலம் நாற்பது நான்கு அதன் பின் மேலும் ஐந்து விதமான அக்னிகள் தோன்றின. மொத்தம் நாற்பத்து ஒன்பது விதமான அக்னிகள். வைதானிய கர்மாக்களில், அக்னியுடன் செய்யும் யாகங்களில் இவர்கள் இருப்பர்.
பவனுடைய மனைவி சதீ பவன் என்ற தேவனை மணந்தாள். தங்களுக்கு சமமான புத்திரனைப் பெறவில்லை. ஒரு சமயம் தந்தை அழைக்காததால் பவன் வரவில்லை என்ற விஷயத்தில் ஏற்பட்ட கோபத்தில், தன்னையே யோக மார்கத்தில் எரித்துக் கொண்டாள்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷ சாபோ – என்ற நான்காவது ஸ்கந்தத்தின், முதல் அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -66
அத்யாயம்–2
பவன் எனும் மகேஸ்வரன் நல்ல சீலமுடையவர், ஸ்ரேஷ்டன் என்று அறிவோம். தக்ஷனும் தன் மகளிடம் அன்புடையவர். எதனால் விரோதம் சொந்த மருமகனிடம்? தன் மகள் சதீயையே அலட்சியம் செய்யும் அளவு கோபம் வரக் காரணம்? சராசர குரு, அவருக்கு விரோதிகளே கிடையாது, சாந்த மூர்த்தி, ஆத்மாராமன் என்று உலகமே மதிக்கும் ஒருவரிடம் அதுவும் அவர் தன் மகளை மணந்தவர் என்ற உறவும் சேர்ந்து இருக்க, அவரை அலட்சியம் செய்யலாமா? அதுவும் மகள் தன் உயிரையே தியாகம் செய்யும் அளவிற்கு விரோதமா? சொல்லுங்கள் என்று விதுரர் கேட்டார்.
மைத்ரேயர் சொன்னார்: ஒரு சமயம், விஸ்வஸ்ருட் என்ற ப்ரும்மாவின் யாகத்தில் சிறந்த ரிஷிகள், தேவதா கணங்கள் என்று அனைவரும் கூடியிருந்தனர். அந்த சபையில் தக்ஷன் நுழைந்த பொழுது, ப்ரும்மாவையும், சங்கரனையும் தவிர அக்னி முதலான தேவர்களும், மற்றவர்களும் எழுந்து மரியாதை செய்தனர். முன்னாலேயே அமர்ந்து விட்ட சங்கரனைக் கண்டதும் தக்ஷனுக்கு தன்னை அவமரியாதை செய்து விட்டதாக கோபம் வந்த து. இவன் என் மகளை மணந்தவன் எனக்கு சிஷ்யனாவான். மரியாதையே அறியாத மூடன். தரம் அறியாது என் மகளை இவனுக்கு கொடுத்து விட்டேனே – வானரம் போன்ற கண்கள் இவனுக்கு – என் மகள் அழகிய மான் விழியாள், எழுந்து நின்று எனக்கு மரியாதை செய்ய வேண்டியதிருக்க, வாய் மூடி மௌனியாக அமர்ந்திருக்கிறான். விரித்த சடையும், உடலில் பூசிய பஸ்மமும் – எனக்கு பிடிக்கவேயில்லை. இருந்தும் என் மகளை தாரை வார்த்து கொடுத்தேன். மரியாதை தெரியாதவன், சூத்ரனுக்கு வேத மந்திரங்களை கற்றுத் தருவது போல. பூத கணங்கள் சூழ வலம் வருபவன். கோரமான ப்ரேதங்கள் இவைகளுடன் சிரித்துக் கொண்டும் ஆடிக் கொண்டும் திரிபவன். உடல் முழுவதும் பஸ்மம் , அசிவன்- மங்களமே இல்லாதவன் சிவன் -மங்களன் என்று பெயர். மதம் கொண்ட ஜனங்களுக்குத் தான் இவனை பிடிக்கும். ப்ரமத பூதங்களின் தலைவன். தமோ குணமே உருவானவன். இந்த மன நோயாளிக்கு என் மகளைக் கொடுத்து விட்டேன், ப்ரும்மா சொன்னார் என்பதற்காக. என்றிவ்வாறு கிரீசனை பலவிதமாக நிந்தனை செய்து கொண்டே போனார். கையில் நீரை எடுத்துக் கொண்டு சபிக்கவும் தயாரானார். மற்றவர்கள் தடுத்தும் கேளாமல், இந்த பவன், தேவர்களின் யாகங்களில் மற்ற தேவர்களுடன் தன் பாகத்தை பெறாமல் போகட்டும் என்று சபித்தார். (சாபம் உண்மையில் பவன் மற்ற தேவர்களுக்கு முன்னால் தன் பாகத்தைப் பெறட்டும் என்றோ, மற்ற தேவர்கள் தங்கள் பாகத்தை பெற்ற பின் பெறட்டும். ஏனெனில் இவர் போஷகர் என்ற ஸ்தானத்தில் இருப்பவர், கொடுப்பது தான் இவரது செயல், தான் முன்னதாக பாகத்தை பெற மாட்டார் என்பதாகவோ பொருள் கொள்ளப்பட்டது) சபித்து விட்டு தக்ஷன் வேகமாக வெளியேறி விட்டார்.
கேட்டுக் கொண்டிருந்த நந்திதேவர், பொறுக்காமல், தக்ஷனுக்கு சாபம் கொடுத்தார். சங்கர த்ரோஹியான தக்ஷனும், சாபம் கொடுப்பதை அனுமோதித்த ப்ராம்மணர்களும் தத்வ ஞானம் என்பதை பெறாமலே, சம்சாரம் என்ற பந்தத்திலேயே உழலட்டும். அறிவு சார்ந்த எதுவும் இல்லாத பசு அந்த தக்ஷனுடைய முகம் ஆட்டு முகமாக ஆகட்டும். இவனை ஆதரித்த ப்ராம்மணர்கள், செல்வம் இன்றி, யாசகர்களாக வாழட்டும்.
ஒட்டு மொத்தமாக ப்ராம்மண குலத்தை சபிக்கத் துணிந்த நந்தியை ப்ருகு முனிவர் தடுத்தார். தன் ப்ரும்ம தண்டத்தின் மேல் ஆணையிட்டு ப்ரதி சாபம் – நந்தியின் சாபத்திற்கு எதிர் சாபம் கொடுத்தார். இந்த பவனை நம்புபவரும், அவனை அனுசரிப்பவர்களும் பாகண்டினர் (ஆசாரம் இல்லாதவர்கள்) ஆகட்டும். அசுத்தமாக, மந்த புத்தியாக, ஜடையும் பஸ்மமும் தரித்தவர்களாக, சிவதீக்ஷை எடுத்துக் கொண்டும் அலையட்டும். ப்ரும்மத்தையும், ப்ராம்மணர்களையும் நிந்திக்கும் நீங்கள், மனித குலத்துக்கே கெடுதல் செய்தவர்கள். சனாதனமான நேர் வழி, ஜனார்தனனை ஆராதித்து நற்கதியடைந்தார்களே, அதுவே பிரமாணம். ப்ரும்மம் தான் பரமம்.தூய்மையானது. நல்லவர்களின் வழி அதுவே. இந்த பூத கணங்கள் சூழச் செல்லும் பாகண்ட தேவனை பின் பற்றிச் செல்லுங்கள், என்றார்.
மைத்ரேயர் சொன்னார்: ப்ருகு சாபம் கொடுத்ததை கண்டு கொள்ளாமல் பவனும் வெளியேறினார். அவரை தொடர்ந்து அவருடைய பரிவாரங்களும் வெளியேறின. விஸ்வஸ்ருஜ யாகம், அது பகவான் ஹரியை குறித்து செய்யபடும் யாகம் பல வருஷங்கள் நீடிக்கும். குறையாக நிறுத்தக் கூடாது என்பதற்காக நடந்த சம்பவங்களால் அதில் உத்சாகம் குறைந்தாலும், பெயருக்கு யாகத்தை முடித்து கங்கை யமுனை நதிகளில் அவப்ருத ஸ்னானம் செய்து அனைவரும் தங்கள் இருப்பிடம் சென்றனர்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் இரண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -35
அத்யாயம்–3
காலம் கடந்தும் மருமகன், மாமனார் இடையில் துவேஷம் குறையவே இல்லை. தக்ஷனை ப்ரும்மா ப்ராஜபதிகள் அனைவருக்கும் தலைவனாக நியமித்தார். ப்ருஹஸ்பதி யாகம் என்று ஆரம்பித்து வசிஷ்டர் முதலான ரிஷிகள் அனைவரையும் அழைத்து மிக விமரிசையாக செய்ய ஆரம்பித்தான் தக்ஷன். ப்ரும்ம ரிஷிகள் தேவ ரிஷிகள், பித்ரு தேவதைகள் என்று அனைவரும் மனைவிகளுடனும் வந்தனர். அவர்களை முகமன் சொல்லி வரவேற்று, ஆசனங்களில் அமரச் செய்து தக்ஷன் உபசாரம் செய்தான். இதைப் பற்றி வானத்தில் சஞ்சரிக்கும் சிலர் பேசிக் கொள்வதைக் கேட்டு சதீ தாக்ஷாயணி விசாரித்தாள். தந்தை வீட்டில் மகோத்ஸவம் நடப்பதும், அனைத்து திக்குகளிலிருந்தும் உப தேவ பெண்களும், ஆகாயத்தில் விமானத்தில் பலரும், அலங்கரித்துக் கொண்டு செல்வதைப் பார்த்தாள். வீட்டு வாசலில் நின்று அவர்களின் குண்டலங்களையும், உடைகளையும் பார்த்து வியந்தவள், பூதபதியான கணவனிடம் வந்து சொன்னாள்.
உங்கள் மாமனார் ப்ரஜாபதி ஏதோ யாகம், மஹோத்ஸவமாக செய்கிறார் போலும். எல்லோரும் போகிறார்கள். என் சகோதரிகளும் தங்கள் கணவர்மாருடன் நிச்சயம் போவார்கள். உறவினர், சினேகிதர்களைப் பார்க்கலாம், நாமும் போய் கலந்து கொள்ளலாமா? கொடியேற்றி விட்டார்கள் போல. என் தாயாரை பார்க்கலாம். மற்ற சகோதரிகளின் புகுந்த வீட்டு உறவினர்கள் வந்திருப்பார்கள். பாருங்கள், மற்ற பெண்கள் எல்லோரும் அலங்கரித்துக் கொண்டு கணவன் மாருடன், கூட்டம் கூட்டமாக போகிறார்கள். பிறந்த வீட்டு விசேஷம் என்றால் எந்த பெண் தான் போக ஆசைப் பட மாட்டாள்? கணவன், குரு, தந்தை வீடுகளுக்கு அழையாமலே போகலாம் என்பது தானே வழக்கம். அதனால், தயவு செய்து, என்னை அழைத்து போங்கள். உங்களில் பாதி தானே நான். என் வேண்டுகோளை நிறைவேற்றுங்கள், என்று கெஞ்சினாள்.
ரிஷி சொன்னார்: இவ்வாறாக ப்ரியாவான மனைவி கேட்டதும், கிரீசன் சிரித்தார். ப்ரும்மா இருந்த சபையில் மட்டமான வார்த்தைகளால் அவமதித்ததை, நினைத்து தயங்கினார். அவளை சமாதனப் படுத்தும் விதமாக மெதுவாக சொன்னார். சோபனே! அழையாத விருந்தாளியாக கூட பந்துக்கள் வீடுகளுக்குப் போகலாம் தான். அவர்கள் உண்மையாக நம்மிடம் அக்கறையுடன் இருந்தால் போகலாம். நம்மிடம் குற்றம் குறை சொல்லாமல் கோபம் கொள்ளாமல் இருந்தால் போகலாம் தான். வித்யா, தவம், செல்வம்,உடல் வாகு, சம வயது, குலம், இந்த ஆறு குணங்களும் நல்லவர்களிடம் இருந்தால் பிரகாசிக்கும், அதுவே துஷ்டர்களானால் அவர்களது , கர்வத்தைத் அதிகரிக்கும். யாருக்கும் எந்த பயனும் இல்லை. இவர்களை தன் உறவினன் என்றெண்ணி நெருங்குவது யோசிக்க வேண்டிய விஷயம். இவர்கள் பார்வையே கோணல். எதிலும் குற்றமே தெரியும். க்ரோதம் வெளிப்படையாக தெரிந்தால், சொந்தமேயானாலும் எப்படி பொறுக்க முடியும்? அதனால் நம்மை வெறுப்பவர்கள், எதிரிகளே. அவர்கள் வெறுப்புடன் அவச்சொல் சொன்னால் நம் மனது தாங்குமா? ராத்திரியும் பகலும் அந்த சொல்லே குடையும். மேன்மேலும் உயர் பதவிகளை வகிக்கும் உன் தந்தை முக்கியமான ப்ரஜாபதி என்பது வாஸ்தவம். நீ அவருடைய ப்ரியமான மகள் என்பதும் வாஸ்தவம். ஆனால் என்னை மணந்த பின் அதே போல எதிர் பார்க்க முடியாது. அசுரர்கள் ஹரியை எதிர்ப்பது போல அவர் என்னை எதிர்க்கிறார். நீ ஏன் அப்பா வந்த பொழுது மரியாதை செய்யவில்லை என்று கேட்கிறாயா? என்னைப் போன்றோர் ஹ்ருதயத்தில் இருக்கும் பரம புருஷனான வாசுதேனுக்கு மட்டும் தான் மரியாதை செலுத்துவோம், அபிமானியான மனிதர்களுக்கு அல்ல. அந்த:கரணம் சுத்தமாக இருந்தால் தான் வாசுதேவன் தெரிவான். ப்ரியே! உனக்கு பெற்ற தந்தை. ஆயினும் என் பத்னியாக ஆன பின் அவரையோ, அவரை பின் பற்றும் மற்றவர்களையோ நீ சொந்தமாக நினைக்க வேண்டியதில்லை. அதையும் மீறி நீ போவாயானால் உனக்கு நல்லதல்ல. அவமானப்படுவாய். வேண்டாம், உன்னால் தாங்க முடியாது.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் மூன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -25)
அத்யாயம்–4
மைத்ரேயர் தொடர்ந்தார்: இவ்வளவு சொன்னபின் சங்கரர் சிந்தனையில் ஆழ்ந்தார். நடக்கப் போவதை அறிந்தவர் போல, தன் மனைவியின் விருப்பத்தையும், அதன் விளைவுகளையும் நினைத்தோ, கவலையில் ஆழ்ந்தார். அவள் கிளம்புவதை பார்த்துகொண்டு வாளா இருந்தார். தன் கணவன் சாதாரணமனவன் அல்ல,பரமபுருஷன் என்பதையும் மறந்தவளாக பிறந்த வீட்டு உத்சவத்திற்கு போக விடாமல் தடுக்கும் கணவனாக மட்டுமே நினைத்து கண்கள் குளமாக கோபத்துடன் ஏறிட்டாள். வருத்தமும், ரோஷமும் அவளை அலைக்கழிக்க கிளம்பினாள். பவனின் ஏவலாட்கள் பலர் அவளை பின் தொடர்ந்தனர். ஆயிரக் கணக்கான யக்ஷர்கள், மற்றும் வீரர்கள் பாதுகாவலாக பரபரப்புடன் பின் தொடர்ந்தனர். ரிஷப வாகனம், முன்னால் நந்திகேஸ்வரர், மற்றும் வெளியில் செல்லும் பொழுது செய்யும் ஏற்பாடுகள், முன்னும் பின்னும் வழக்கமான பரிவாரங்கள், மங்கள பொருள்களை ஏந்திச் செல்பவர், நல்ல சகுனங்கள் முதலியவைகளையும் சோதித்து உடன் சென்றனர். (நடக்கப் போவது நன்மையாக இருக்காது என்று ஊகித்தவர்கள் போல)
யாக சாலையிருந்து ப்ரும்ம கோஷம் கேட்டது. ப்ராம்மணர்களும், ரிஷிகளும் நிரம்பியிருந்தனர். மண் பாண்டங்கள் முதல் தங்கத்தாலான பாத்திரங்கள், மற்றும் யாகத்துக்கு தேவையான பொருள்கள் தென்பட்டன. யாகசாலையில் நுழைந்தனர். உள்ளே நுழைந்தவளை யாருமே வரவேற்கவில்லை. அவள் முகம் வாடியதைக் கூட கண்டு கொள்ளாமல் யாகம் செய்பவரின் கோபத்தை நினைத்து பேசாமல் இருந்தனர். அவள் தாயும், சகோதரிகளும் ஆதரவுடன் அனைத்தனர். அவர்கள் கண்களில் நீருடன் பேசியதோ, தாயார் அவளுக்கு உயர்ந்த ஆசனத்தைக் கொடுத்ததோ சதிக்கு நிறைவைத் தரவில்லை. தந்தையின் பராமுகம் வருத்தமாக இருந்தது.
ருத்ரனுக்கான பாகம் அளிக்கப்படாமலேயே யாக காரியங்கள் நடந்தன. தந்தையின் வெளிப்படையான துவேஷம், அதைக் கண்டிக்க வேண்டிய பெரியவர்கள் அந்த சபையில் பேசாமல் இருந்தது, அந்த யாகத்துக்கே தலைவியாக அமர்ந்திருக்க வேண்டிய சதி, கோபத்தால் கொதித்தாள். சிவபெருமான் இல்லாத இந்த யாகம் வெறும் புகையை கிளப்பும் அக்னி என்று வசை பாடினாள். பூத கணங்களை தடுத்து, தானே பேசலானாள்.
சதி “ அனைவரையும் அரவனைத்துக் கொண்டு செல்லும் ஸ்ரீ ருத்ரன், அவரையே எதிர்த்து விரோதம் பாராட்டும் ஹே, ப்ராம்மணர்களே, எது சரி, அல்லது தவறு என்று சொல்ல வேண்டிய நீங்களே சிவ நிந்தைக்கு துணை போவது போல கூடியிருக்கிறீர்கள். எவருடைய பெயரைச் சொன்னாலே மனிதனுடைய பாவங்களே மறையுமோ, அவரையே தூஷித்துக் கொண்டு என்ன சாதிக்கப் போகிறீர்கள்? மங்களமான சிவனை அலட்சியம் செய்யும் அமங்களமான உங்கள் செய்கை. ப்ரும்ம ஞானம் வேண்டுவோர் வணங்கும் பாத பத்மம், உலகில் வேண்டுபவர்க்கு ஆசிகளை வர்ஷிக்கும் விஸ்வ பந்து, அவரிடமா விரோதம் ? சிவ தூஷனையை கேட்காமல் காதுகளை மூடிக் கொண்டு விலக வேண்டியிருக்க யாகத்தில் பங்கு கொள்ள வந்துள்ள உங்கள் நாக்கிலிருந்து தர்மம் தானே விலகி ஓடிவிடும். சிதிகண்டனை தூஷிக்கும் உன்னிடம் உண்டான இந்த சரீரம், நான் தரித்திருக்க மாட்டேன். ஒவ்வாத உணவை உண்டவன் அதை வெளியேற்றினால் தான் உடல் நிலை சரியாகும் என்பது போல இந்த சரீரத்தை விடுவேன்.
உன் கோத்ரம், அதனால் தாக்ஷாயணி என்று விருஷத்வஜன் அழைப்பார். அந்த என் பெயரை விடுகிறேன். இப்படி அந்த யாக சாலையில் தக்ஷனை நேருக்கு நேர் நின்று சொல்லி விட்டு, கிழக்கு நோக்கி அமர்ந்து,ஆசமனீயம் செய்து, மங்களமான மஞ்சள் நிற உடையில், கண்களை மூடி யோகத்தில் ஆழ்ந்தாள். ப்ராணனை சமன் செய்யும் ப்ராணாயாமம் செய்து, நாபி சக்ரத்திலிருந்து சக்தியை கிளப்பி, மெதுவாக கொண்டு சென்று, கழுத்திலிருந்து புருவ மத்தியில் நிறுத்தினாள். அன்புடன் தன் தேகத்தை பகிர்ந்து கொண்ட மகேசனை நினைத்து, தக்ஷனிடம் கொண்ட கோபத்தால் அதை விடுவித்துக் கொண்டு மனஸ்வினி, தன் உடலில் அந்த யோகத்தால் விளைந்த அக்னியை ஏற்றுக் கொண்டாள். தன் கணவனின் பாத ஸ்மரணம் மட்டுமே மனதில், தானே தன் தேகம் எரிவதை பார்த்தாள்.
பூ உலகிலும், தேவ லோகத்திலும் அனைவரும் இந்த அத்புதத்தைப் பார்த்து திகைத்தனர். ஆ, சதீ, தன் கணவனிடம் உள்ள அன்பினால் என்ன காரியம் செய்து விட்டாள் என்று அலறினர். ஆஹா, என்ன சொல்வோம், ப்ராஜாபதியின் மகள், உலகமே அவன் ப்ரஜைகள், அவனிடம் கோபம், மனஸ்வினீ, தன் தன்மானமே பெரிது என்று எண்ணி விட்டாள். தக்ஷ பிராபதி என்ன செய்யப் போகிறார். அவருக்கு வரப் போகும் அளவில்லாத அபகீர்த்தியை எப்படி தாங்குவார். ஜனங்கள் பலவிதமாக பேசி விமரிசனம் செய்து கொண்டனர். ஆனாலும் ஒரு பெண், தந்தைக்கு எதிராக, தன் கணவனுக்காக பரிந்து பேசி உயிர்த் தியாகம் செய்து கொள்வாளா என்று அதிசயித்தனர்.
இதற்குள் சதியின் கூட வந்த பரிவாரங்கள், ஆயுதங்களை எடுத்துக் கொண்டு தாக்க வந்தனர். கூட்டத்தில் இருந்த ப்ருகு முனிவர், யாக அக்னியை அணைய விடாமல் தடுத்து, சோம மந்த்ரம் என்பதால் ருபவோ என்ற தேவதைகளை வரவழைத்து, பூத கணங்களை துரத்தினார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் நான்காவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -34)
அத்யாயம்–5
நடந்த விஷயங்களை நாரதர் சொல்லி பவன் தெரிந்து கொண்டார். பவானி தானே தன்னை மாய்த்துக் கொண்டதையும், உடன் சென்ற பரிவாரங்களை ப்ருகு முனிவர் விரட்டியதையும் கேட்டு கோபம் கொண்டார். அக்னியே மழையாக பொழிகிறதோ என்று ஐயப்படும் வகையில் விரித்த சடையும், கம்பீர நாதமும் சிரிப்புமாக, தன் உடலை ஆகாயத்திற்கும் பூமிக்குமாக வளர்த்துக் கொண்டு, ஆயிரம் கைகளுடன், மூன்று சூரியன் எழுந்தாற்போல கபால மாலையும் மற்ற ஆயுதங்களுடனும் கிளம்பினார். பூதகண தலைவன் அவனை என்ன செய்ய என்று கேட்க, தக்ஷனை அவனுடைய யாக பூமியோடு சேர்த்து அழி என்று உத்தரவிட்டார்.
அவரும், ருத்ரனின் பரிவாரங்கள் சூழ, சூலத்தை ஏந்திக் கொண்டு உலகை முடிவுக்கு கொண்டு செல்லும் (ஜகதந்தகாந்தகம்) பலமாக கூச்சலிட்டுக் கொண்டு தாக்கினர். அந்த யாகத்தின் யஜமானன், கூடியிருந்தோர், மேற்கு திசையில் ஏராளமாக புழுதி பறந்ததைக் கண்டு என்ன இது என்று திகைத்தனர். எங்கிருந்து இந்த அளவு புழுதி வருகிறது என்று அனைவரும், யாகத்தில் பங்கு கொண்ட ப்ராம்மணர்களும், மற்றும் கூடியிருந்த ஆண்களும் பெண்களுமாக இருந்த சபை கவலையடைந்தது.
புயல் காற்று வீசவில்லை. திருடர்கள் கூட்டம் போலவும் இல்லை, உச்சி வெய்யில் தகிக்கிறது, பசுக்களும் அலையவில்லை. எங்கிருந்து புழுதி ? பிரளய ஆரம்பமோ என்று நடுங்கினர். ப்ரசூதியும் மற்ற பெண்டிரும் உணர்ந்தனர். இது ப்ரஜாபதியின் செயலுக்கு எதிர் விளைவே. மற்ற சகோதரிகள் கண் முன்னாலேயே, சதீ மறைந்ததை தந்தையாக இருந்தும் பார்த்துக் கொண்டு வாளா இருந்தாரே, அவள் கணவர் யார் என்று தெரியாதா? யுக முடிவில் ஜடையை விரித்து போட்டுக்கொண்டு, கையில் சூலத்தை ஏந்தி திக் கஜங்களை விரட்டிக்கொண்டும், ஆடுபவன். அட்டாட்ட ஹாஸத்தினாலேயே குலை நடுங்கச் செய்பவன். கேட்கும் நிறை மாத கர்பிணிகள், அந்த க்ஷணமே ப்ரசவித்து விடுவர். தாமஸ தேஜஸ் அவருடையது. அதை கிளப்பி விட்டு, அவரை ஆத்திரமூட்டியதும் இவரே. இவருடைய புருவ நெரிப்பில், பயங்கரமான பற்களை நெரிப்பதில், சூரிய சந்திரர்களே ஒளியிழப்பர். இந்த ப்ரும்மா எதற்கு அவரை கோபமூட்ட வேண்டும்?
இவ்வாறு பேசிக் கொண்டிருக்கையிலேயே, மேலிருந்து ஏதோ விழுவது போல ஆயிரக் கணக்கில் ஹரனின் பரிவாரங்கள் பயங்கரமான தோற்றத்துடன் விண்ணளாவிய உடலினராக யாக பூமியை நிறைத்தனர். எதிர் பட்டதையெல்லாம் த்வம்சம் செய்து கொண்டு முன்னேறினர். யாகத்திற்கான ப்ரும்மாண்டமான ஏற்பாடுகள் நொறுங்கின. யாக பாத்திரங்களா, அக்னி குண்டங்களா, வேதி வளையங்களா எது என்ன என்று யோசிக்க கூட இல்லை. அக்னியை அணைத்தனர். முனி பத்னிகளை விரட்டி அனுப்பி விட்டு, வந்திருந்த சில தேவர்களை பிடித்துக் கொண்டனர்.
மணிமான் எனும் வீரபத்ரன், ப்ருகு ப்ரஜாபதியை கட்டி வைத்தான். சண்டேசன் என்பவன் பூஷணம் என்ற முனிவரை, நந்தீஸ்வரர் பகன் என்பவரை பிடித்து கட்டினார். கூடியிருந்த ருத்விக் எனும் யாக அதிகாரிகளும், காண வந்திருந்த பிரஜைகளும், தேவர்களும் ஓட்டம் எடுத்தனர். ப்ருகுவின் மீசையை பிடுங்கினர், பகனுடை கண்களை குத்தினர், பூஷணனின் பற்கள் விழுந்தன, பல்லைக் காட்டி சிரித்தார் சதியின் கோபத்தைக் கண்டு என்பதால், தக்ஷனுடைய மார்பில் ஏறி நின்று தன் சூலத்தால் குத்தினர். தக்ஷனுடைய தடித்த தோலில் அவை இறங்காததைக் கண்டு ஆச்சர்யம் அடைந்தனர். அவர் யோக சக்தியை அறிந்து யஜமான பசு என்று அவன் தலையை கொய்தனர். எங்கும் ஆஹா என்ற சப்தம் நிறைந்தது. அந்த தேவ யாகத்தை எரித்து ஊழித்தீ போல நின்றவர், பின் தன் இருப்பிடம் சென்றார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் ஐந்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -26)
அத்யாயம்–6
ஸ்ரீ ருத்ரனின் பரிவாரங்களின் சூல, பட்டிச, நிஸ்த்ரிம்ச, கதை என்ற ஆயுதங்களால் தாக்கப் பட்டு தோல்வியடைந்த தேவர்கள் உடல் முழுதும் காயங்கள் அல்லது உடல் அங்க முறிவு என்று தவித்தார்கள். மிகவும் வேதனையுடன் ப்ரும்மாவிடம் முறையிட்டார்கள். நீங்களோ, அல்லது பகவான் நாராயணனே தலையிட்டோ இந்த யாக காரியத்தை முழுமையாக நிறைவேற்றுங்கள். விபு சொன்னார். க்ஷேமத்தை தரும் தேஜஸ்வி, வணங்கத் தக்கவள், அவளிடம் தவறு செய்திருக்கிறான். நீங்களும் தவறு செய்தீர்கள். அவனுடன் சேர்ந்து இந்த காரியத்தில் அமர்ந்து நீங்களும் உடந்தையாக இருந்திருக்கிறீர்கள். போய் அவரிடமே மன்றாடுங்கள். அவர் எளிதில் அருளக் கூடியவர். சமாதானப் படுத்துங்கள். யாகம் பாதியில் நிற்கக் கூடாது என்று விரும்பினால், லோகபாலர்கள் எல்லோருமாக, பிரியமான மனைவியை இழந்த துக்கத்திலும், அவமானகரமான வார்த்தைகளை பேசி ஏசியவரிடம் கோபித்துக் கொண்டும் உள்ளவரிடம் போய் யாசியுங்கள். மன்னிப்பு கேளுங்கள்.
நானோ, இந்த யாகமோ, நீங்களோ அல்லது ஏதோ ஒரு உடல் தரித்த ஜீவனோ, முனிவர்களோ, ஞானிகளோ, பலசாலிகள், வீர்யம் உள்ளவர்கள் என்றோ பெருமை பட்டுக் கொள்ளும் எவரும், அவருடைய ஆத்ம சக்தியை உணர்ந்தவர்கள் இல்லை. இவ்வாறு சொல்லி, ப்ரும்மா, தானும் தேவர்கள், ப்ரஜாபதிகள், பித்ருக்கள், இவர்களுடன் கைலாசம் சென்றார். அந்த உயர்ந்த மலை ப்ரபுவுக்கு பிடித்தமான இடம். ஔஷதிகள் பெற, தவம் செய்ய, மந்திரங்கள் பலன் அளிக்க சாதனைகள் செய்ய,ஏற்ற இடம். சித்தர்களும், மனிதரல்லாத பலரும் அங்கு பிறந்தவர்கள். கின்னர கந்தர்வ அப்சரஸ்கள் என்றும் கூடியிருக்கும் இடம். உயர்ந்த சிகரங்கள், சிகரங்களின் மேல் பாகம் மணிமயமாக காட்சியளிக்கும். விசித்திரமான தாதுக்கள் நிறைந்த மலை அது. பலவிதமான மரங்கள், செடி கொடிகள், பலவிதமான மான்கள் போன்ற மிருகங்கள் வளைய வரும் இடம். நிர்மலமான ஜலத்துடன் அருவிகள், பலவிதமான குகைகள், மலைச் சாரல்கள், அங்கு வரும் பயணிகள் உல்லாசமாக உணர ஏற்ற இடம். சித்தர்கள் மனைவிமாருடன் உலவும் இடம். மயில்கள், கோகிலங்கள், கிளிகள் மற்றும் பல பறைவகளுக்கு இணையாக வண்டுகள் தேனைப் பருகி மயங்கி ரீங்காரம் செய்யும் இடங்களும்,
இந்த இடத்துக்கு வாருங்கள், என்று அழைப்பது போல இந்த பறவைகளின் கூச்சலும், அவர்கள் விரும்பும் பழங்களுடைய மரங்கள் நிறைந்த இடம். யானைகள் சாவகாசமாக நடந்து அருவிகளைத் தேடிப் போகும். மந்தார, பாரிஜாத, தமால, சாலதாலங்கள், கோவிதார, அர்ஜுன மாமரங்கள் போன்ற புஷ்பங்கள் மணம் வீசும். பெரிய மரங்கள், கதம்ப, நீப மரங்கள், நாக புன்னாக சம்பக பூ மரங்கள், பாடல, அசோக , பகுள மரங்கள், குந்த புஷ்பம்- மல்லிகை- குரவகம் , ஸ்வர்ணார்ண, சத பத்ர மரங்கள், சிறந்த ரேணுக ஜாதி மரங்கள், குப்ஜம், மல்லிகை, மாதவீ கொடிகளும் மண்டி கிடக்கும். பனசம், உதும்பர, அஸ்வத்த, ப்ளக்ஷ, ந்யக்ரோத, ஹிங்கு மற்றும் பூர்ஜம், ஔஷதிகள், பூகம், ராஜ பூகம், நாவல் போன்ற மரங்களும், கர்ஜூர-பேரீச்சம் பழம், மாம்பழம்,ப்ரியால, மதுக, இங்குதி மரங்கள், மூங்கில் காடுகள்- உள்ள இடம் – இவைகளிலிருந்து வேணு கானம் கேட்கும்.
நீர் நிலைகளில், குமுதம், உத்பலம் கல்ஹார, சத பத்ர போன்றவை, மற்றும் நளினீ, கல ஹம்ஸம், கூவும் பறவைக் கூட்டங்கள், இவைகளுடன், அழகூட்டும். மான்களும், வானரங்களும், வளர்ப்பு மிருகங்களும், மிருகேந்திரனும், கரடி, குள்ள நரிகள், பசு போன்ற சில மிருகங்கள், சரபம், வ்யாக்ரம் எனும் புலி, ருரு எனும் மிருகம், எருமை மாடுகள், முதலியன. தவிர காது வரை நீண்ட வாய் உடைய வ்ருகனாபி – கஸ்தூரி மான்கள், என்பவைகளும், மற்றும் தாமரை தடாகங்களும் நிறைந்த இடம்.
அந்த இடத்தில் கங்கை நதி சூழ்ந்து பவானி ஸ்நானம் செய்ததால் பவித்ரமான ஜலம், நறு மணத்துடன் அழகாக இருந்தது. அங்கு அலகா என்ற நகரைக் கண்டனர். சௌகந்திகம் என்ற வனத்தையும், அங்கிருந்த குளத்தில் பங்கஜ மலரின் மணத்தை வைத்து அந்த காட்டிற்கே சௌகந்திகம் என்று பெயர் வந்ததாகச் சொல்வர். கங்கையும் அலகநந்தா என்ற நதியும் வெளிப்புறத்தில் ஊரைச் சூழ்ந்து சென்றன. தீர்த பாதர் என்ற பவனுடைய பாத தூளியால் பாவனமான நதிகள் அவை. தேவ லோகத்து பெண்கள் அந்த நதிகளில் மூழ்கி பதி பத்னிகள் ஒருவர் மேல் ஒருவர் நீரை வாரியடித்து விளையாடி மகிழ்வர். அவர்கள் குளித்தபின் குங்கும வண்ணமாக சுழித்து ஓடும் நீரில் யானை கூட்டம் தாகம் இல்லாவிட்டாலும் தண்ணீரைக் குடிக்க வரும்.
பொன், வெள்ளி நிறங்களில் மணி மயமான விமானங்களில் நூற்றுக் கணக்காக அந்த நகரின் மேல் பறப்பதைக் கண்டனர். குபேரனுடைய நகரம். செல்வ செழிப்புக்கு கேட்க வேண்டுமா? சௌகந்திக வனத்தில் பலவிதமான பழ மரங்கள், கிளிகளும், மற்ற பறவைகளும், கூச்சலிட, இணயாக வண்டுகளின் ரீங்காரமும் இனிமையான நாதம், கல ஹம்ஸங்கள் உலவும் நீர் நிலைகள், அடர்ந்த காட்டின் ஊடே வெளிவரும் காற்று சுகமான மணங்களை ஏந்தி வந்தது மனதை கவர்ந்தது. கிணறுகளில் கீழிறங்க படிகள் வைடூரியமென மின்னின. உள்ளே உத்பல பூக்கள் தொடுத்து வைத்த மாலை போல நிறைந்து இருந்ததை கிம்புருஷர்கள் பார்த்து வணங்கினர். நூறு யோஜனை தூரம் பரவிய வெட்டவெளி, மலையின் நிழலில் குளுமையாக, வெய்யிலின் தாபம் தெரியாமல் இதமாக இருந்தது. அந்த இடத்தில் மோக்ஷத்தை விரும்பி சாதனை செய்ய ஏற்றதாக, மஹா யோகமயமாக இருந்த இடத்தில் தேவர்கள், சாந்தமாக அமர்ந்திருந்த பரமசிவனைக் கண்டனர்.
(ஹர ஹர நம: பார்வதீ பதயே ஹர ஹர மஹா தேவ)
சாந்தமான சனந்தனன் முதலிய மஹா சித்த புருஷர்களும், குபேரனும், அவன் பரிவாரங்களும் வணங்கினர். மஹாதேவன் பரம சாந்தமாக இருக்கக் கண்டனர்.
வித்யா தவம் யோகம் என்ற வழிகளில் காண கிடைக்கும் அதீஸ்வரன், விஸ்வ சுஹ்ருதன்- உலகங்களில் உள்ள அனைவருக்கும் நண்பன். வாத்சல்யன்- பரிவுடையவன், லோக மங்களன், மங்களமானவன்,
தவம் செய்பவர்களுக்கு பிடித்தமான உருவம் உடையவன், பஸ்மம், தண்டம் ஜடை இவை அடையாளங்கள். சந்த்யாகாலம் போன்ற கண்களைக் கவரும் நிறம், சந்திர கலையை தரித்தவன், அந்த
சனாதனமான ப்ரும்மனை தர்ப்ப ஆசனத்தில் அமர்ந்திருக்க கண்டனர். நாரதர் ஏதோ கேட்க பதில் சொல்லிக் கொண்டிருந்தார். சின்முத்ரை (கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் சேர்த்து) அக்ஷமாலை கையிலுமாக இருந்தவரை லோகபாலர்களுடன்,கிரீசனை முனிவர்களும், மனு என்பவர்களில் முதலான ஆதி மனுவானரை, கை கூப்பி வணங்கினர்.
அவரோ, அங்கு வந்திருந்த விஷ்ணு,ப்ரும்மா முதலியவர்களைக் கண்டதும் ஆசனத்திலிருந்து எழுந்து வணங்கி வரவேற்றார். சித்தர்களும், மகரிஷிகளும், எதிரில் நீல லோஹிதன்- பரம சிவன், அவரை நமஸ்கரித்து, துதி செய்தனர்.
ப்ரும்மா சொன்னார்: ஜகத் ப்ரும்மா தாங்கள் தான் என்பதை அறிவேன். விஸ்வ ஈசன், விஸ்வம் – அனைத்து உலகங்களுக்கும் தலைவர் நீங்கள். ஜகத் காரணர்- உலகம் தோன்றவே காரணமான பீஜம் நீங்கள். சக்தி
என்றும், சிவன் என்றும் நாங்கள் அறிந்தவர்களை விட மேலான அழியாத ப்ரும்மம்
பகவன்! சிவ சக்தி என்று நீங்களே ஏற்றுக் கொண்ட ரூபங்கள். ஸ்ருஷ்டிக்கவும், காக்கவும், கலைக்கவும் -இது உங்கள் விளையாட்டு. சிலந்தி தானாக வலையை கட்டி பின் கலைப்பது போல.
தர்மார்த்தங்கள் முதலியவைகளை மதிக்காத தக்ஷனை யாகம் செய்ய வைத்தீர்கள். நீங்கள் ஏற்படுத்திய வேதத்தின் வழிகள் தான், அதையே சாஸ்திரங்களை அறிந்த ப்ராம்மணர்கள் சிரத்தையுடன் அனுசரிக்கிறார்கள்.
வேத மார்கம் அதாவது கர்ம மார்கம் அதை அனுசரிப்பவர்களுக்கு மங்கள மங்களமானவன். உடல் எடுத்த ஜீவன், தன் பிறர் என்று அறியும் உணர்வை தந்தவரே தாங்கள் தான். அமங்களமான தாமசமானவைகளுக்கு நெருப்பு போன்றவர். உங்களின் அடியார்கள் மனதில் உறைபவர் தாங்கள். அவர்கள் உலகில் அனைத்தையும் உங்கள் ஸ்வரூபமாகவே காண்கிறார்கள். ஒவ்வொரு உயிரினத்தையும் உங்கள் ஆத்மாவின் அம்சமாக இருக்க, யாருக்கு யாரிடம் த்வேஷம் ? யார் அயல், யார் தன்னை சார்ந்தவன்? ஜீவன்கள் தான் பசுக்கள், நீங்கள் பசுபதி அல்லவா?
கர்ம மார்கம், யாகாதி வேதம் விதித்த கர்மாக்களை செய்பவர்கள் பலர். மற்றவர் உயர்ந்தால் அசூயை படுபவர். மனம் முழுதும் ரோஷமே ஆனவர்களும் இருப்பர். வார்த்தைகளாலேயே உத்வேகம் கொள்வர். அவர்களை தயவு செய்து அழிக்காதீர்கள், பிரபுவே.
இதுவும் நாபியில் புஷ்பத்தை ஏந்திய பரம் பொருளின் மாயையே. ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமான புத்தி, பார்வை, அனுமானம் என்று பல விதமாக செயல் பட வைக்கிறது. அது தெய்வ செயல். அதை பரிவுடனும் தயையுடனும், பாருங்கள்.
அத்வரம்- யாகம் அதை அழியவிடாமல் நிலை நிறுத்துங்கள் ப்ரபோ! முடியாத ப்ரஜாபதியின் யாகம் நல்லபடியாக முடியட்டும். உங்கள் பாகத்தை தராமல் நிறுத்த அவர்களுக்கு அதிகாரமும் இல்லை, அவசியமும் இல்லை. விவரம் அறியாத அல்பர்களின் செயல்.
யாக யஜமானன் (தக்ஷன்) பிழைக்கட்டும். பகன் என்ற முனிவரின் கண்கள் நேராகட்டும். ப்ருகு முனிவரின் மீசை முளைக்கட்டும். பூஷணரின் பற்கள் முன் போல ஆகட்டும். உடல் ஊனம் அடைந்த தேவர்களின் உடல்கள் நேராகட்டும். ருத்விக்குகளின் தூசி மண்டிய உபகரணங்கள் சுத்தமாகட்டும். உங்கள் அனுக்ரஹத்தால் அனைவருக்கும் கோப தாபங்கள் மறையட்டும். ருத்ரனாக உங்களுக்கு உரிமையான உங்கள் பங்கை அவர்கள் தானாகவே தரட்டும். யாகத்தை கெடுத்தவர்கள் மனம் திருந்தட்டும்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் ஆறாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -53)
அத்யாயம்–7
மைத்ரேயர் சொன்னார்: இவ்வாறு ப்ரும்மா சமாதானம் செய்யவும் பவனும் சமாதானமாகி, கேளுங்கள் என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.
ப்ரும்மாவே! சிறுவர்களின் செயலை நான் பெரிதாக நினைக்கவில்லை. அவர்கள் தேவமாயை என்பதால் கட்டுப் பட்டிருந்தார்கள். அதற்குரிய தண்டனையைத் தான் அனுபவிக்கிறார்கள். தலை துண்டிக்கப் பட்ட தக்ஷ ப்ரஜாபதியின் தலை ஆட்டு முகமாக இருக்கட்டும். மித்ரன் கண்கள் சரியாகட்டும், பூஷன் யாகம் செய்பவருடைய பல்லில் அமரட்டும். மீந்ததை சாப்பிடுபவனாக. தேவர்கள் இதுவரை தங்கள் யாகங்களை முறையாக செய்தவர்கள், அவர்களுடைய அங்கங்களில் அஸ்வினி தேவர்களின் புஜங்களும், பூஷ்ணனின் கைகளும் யாகத்தின் அத்வர்யூ என்ற இடத்தில் இருக்கும் சமயம் உதவும். (யாகத்தை செய்பவர்) ப்ருகு முனிவருக்கும் ஆட்டு மீசையும், தாடியும் வளரட்டும்.
மைத்ரேயன் சொன்னார்: மீடுஷ்டமன் என்று அழைக்கப் படும் மஹாதேவன், சொல்லியதைக் கேட்டு அனைவரும் திருப்தியடைந்தனர். தேவர்களும், மகரிஷிகளும், பாதியில் நிறுத்தியிருந்த யாகத்தை முடித்தனர். பகவான் சொன்னபடியே யாகத்தின் பசு ஆட்டின் தலையை தக்ஷனுக்கு பொருத்தினர். தூங்கி எழுந்தது போல தக்ஷனும் எழுந்து நேரில் வ்ருஷத்வஜன் என்ற சிவபெருமானைப் பார்த்து, சாந்தமாக பேசினான். துதி செய்ய முயன்றாலும், மகளின் நினைவில் உணர்ச்சி தொண்டையை அடைக்க எதுவும் சொல்ல முடியவில்லை. தன்னை சமாளித்துக் கொண்டு பேசலானான்.
“ஆஹோ! எனக்கு நிறைய அனுக்ரஹம் செய்து விட்டீர்கள் ப்ரபோ! ஏற்றுக் கொள்கிறேன். ப்ரும்மார்த்த தத்வத்தை போதிப்பவர் தாங்கள். அதனால் ப்ராம்மணர்களை பசுவை காக்கும் இடையன் போல கையில் தண்டத்துடன் காக்க வேண்டுகிறேன். தவறு செய்யாமல் இருக்க தண்டனை தேவைதான். சபையில் உங்களை அவமதித்து கண்டபடி பேசியதையும் மறந்து மன்னிக்க வேண்டுகிறேன்.
மைத்ரேயர் சொன்னார்: அதன் பின் ப்ரும்மா அனுமதித்து எல்லா ப்ராம்மணர்களும் கலந்து கொண்டு யாகத்தை முடித்தனர். பாதியில் நிறுத்தியதற்கான மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொண்டனர். சங்கரனின் தண்டனையாக பெற்ற ஆட்டு தலையுடனேயே தக்ஷ பிரஜாபதி இருந்தார். விஷ்ணு பகவான், தன் கருட வாகனத்தில் வந்து பாகத்தை ஏற்றுக் கோண்டார். வழக்கம் போல சங்க, சக்ர, கதா தாரியாக, வனமாலை, கௌஸ்துபம் முதலிய ஆபரணங்களுடனும் வந்தார். அனைவரும் அவரை வரவேற்று விழுந்து வணங்கினர். அவருடைய தேஜஸால் வாயடைத்து கூப்பிய கரங்களுடனும் அவரை பார்த்தபடியே திகைத்து நின்றனர். தக்ஷன் தன் சுய உணர்வை பெற்று துதி செய்தான். சபையில் இருந்த மற்றவர்களும் உன் சரணம் தான் எங்களை காப்பாற்றி வருகிறது எங்கள், பிழைகளை பொறுத்தருள வேண்டும் என்று பணிந்து வணங்கினர்.
ப்ருகு சொன்னார். இதுவும் உன் மாயையே. எங்கள் அறிவை மறைத்து, திரை போட்டது போல இருட்டில் தூங்குவது போல உன்னை நினைக்காமலும், உன் தத்வங்களை உணராமலும் இருந்து விட்டோம். பகவானே, பொறுத்தருள வேண்டும். வணங்குகிறோம்,
ப்ரும்மா சொன்னார்: நீ முக்குணங்களுக்கும் அப்பாற் பட்டவன். சாதாரண ஜீவன்களிடம் பேத பாவம் பார்ப்பதில்லை. ஞானி என்றோ, செல்வந்தன் என்றோ, குணமுடையவன் என்றோ உன்னை நீ அண்டியவர்களை எடை போடுவதில்லை. உனக்குத் தெரியும்.
இந்திரன் சொன்னான்: அச்யுதா! இது கூட உன் லீலையே. மனதை ஆளத் தெரிந்தவர்களுக்கு ஆனந்தரூபன், விஸ்வ பாவனன் அதே சமயம், உன் அஷ்ட புஜங்களிலும் புத்தியின்றி த்வேஷம் பாராட்டுபவர்களுக்கு எச்சரிக்கை விடுவது போலவே ஆயுதங்கள் தரித்திருக்கின்றன.
மனைவிமார் சொன்னார்கள்: இந்த யாகம் என்பது யாரால் உண்டாக்கப் பட்டது? நல்ல காலம், பசுபதியின் கோபத்திலிருந்து தப்பினோம். இந்த யாகசாலை பலரும் விழுந்து அழுது அபவித்ரமாகி விட்டது. தயாளுவான நீ உன் அருள் பார்வையால் புனிதமாக்கு. நீயே தானே யக்ஞாத்மா
ரிஷிகள் சொன்னார்கள்: பகவன், உன் செயலை நாங்கள் கணிக்கவா முடியும்? உன் மனம் போல் செய்கிறாய். செல்வம் வேண்டும் என்று தனியாக லக்ஷ்மி தேவியை வேண்டுகிறோம், அவளோ உன்னை பின் தொடர்ந்து தான் வருகிறாள்.
சித்தர்கள் சொன்னார்கள்: உன் கதையை அம்ருதமாக நினைத்து பருகி, மத யானை போல மனதை அடக்க முடியாதவர்கள் ஆகி விட்டார்கள். க்லேசம் என்ற தாவாக்னி அவர்களை தகிக்கிறது. தாகம் என்று கதாம்ருதம் என்ற குளத்தில் இறங்கியவர்கள் தவிக்கிறார்கள். வெளி வர முடியவில்லை. ப்ரும்ம ஞானம் உள்ளவர்களால் அது முடிகிறது. எங்களால் முடியவில்லை.
யாகத்தின் யஜமானர்கள் சொன்னார்கள்: ஸ்ரீனிவாசா! உனக்கு ஸ்வாகதம். உன் காந்தாவான ஸ்ரீ யுடன் எங்களை காப்பாற்று. நீங்கள் இல்லாமல் இந்த யாகம் சோபிக்கவில்லை, நீங்கள் தான் தலைவர். தலை இல்லாத மனிதன் எப்படி இருப்பான்?
லோக பாலர்கள் சொன்னார்கள்: உங்களுக்கு தெரியாததா? நேர் எதிரில் பார்த்தால் தானா, உங்கள் உள்மனம் காணாததா? உங்கள் மாயையே. நீங்களே ஆறு, எட்டு என்று உலகை இயக்கும் பூதங்களுடன் விளையாடுகிறீர்கள்.
யோகேஸ்வரர்கள் சொன்னார்கள்: ப்ரபோ! நாங்கள் வேறு யாரிடம் போய் கேட்போம். எங்களை வேறாக எண்ணாமல், பக்தியை தவிர வேறு எதுவும் தெரியாத எங்களுக்கும் அனுக்ரஹம் செய்ய வேண்டும்.
ப்ரும்மா சொன்னார்: வணங்குகிறேன். சத்வ குணமே ப்ரதானமாக இருப்பவர், தர்மம் முதலானவற்றை தன்னிடம் வைத்திருப்பவர், நிர்குணன், இவரைப் போல மற்றொருவரை நானறியேன்.
அக்னி சொன்னார்:எவருடைய தேஜசால் ஆஜ்யத்தில் முக்கிய ஹவ்யம் என்பதை நான் கொண்டு செல்கிறேனோ, அவர் ஐந்து விதமான யாகங்களின் ஐந்து விதமான பரிமாணங்களுக்கு அதிகாரி. அந்த யக்ஞ பூதமானவரை வணங்குகிறேன்.
தேவர்கள் சொன்னார்கள்: முன்பு கல்பம் அபாயத்தில் இருந்த சமயம், தன் வயிற்றில் அனைத்தையும் வைத்துக் கொண்டு நீங்கள் தான் தண்ணீரில், பாம்பு படுக்கையில் கிடந்தீர்கள். பரம புருஷன் நீங்களே. சித்தர்களின் ஹ்ருதயத்தில் பலவிதமாக அத்யாத்ம விசாரங்களை செய்வார்கள். அதே பரம புருஷன் இன்று எங்கள் கண்களுக்கு எதிரில் வந்து நிற்கிறான். அடியாட்கள் நாங்கள், பகவானே, உங்கள் ஏவலர்களாக எங்களை பாருங்கள்.
கந்தர்வர்கள், வித்யாதரர்கள், ப்ராம்மணர்கள், அனைவரும் வரிசையாக வந்து வணங்கி துதி செய்தார்கள். பகவானும் தக்ஷனைப் பார்த்து, நானே ப்ரும்மா, பரமசிவனும் நானே. உலகம் தோன்ற காரணமாக இருந்தவன். அத்யாத்மேஸ்வரன், – பிராணிகளின் உள் ஆத்மாவாக அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பவன், எனக்கு என்று எதுவும் விசேஷமாக இல்லை.
என் மாயையால், நான் முக்குணங்களைக் கொண்டு இந்த ஸ்ருஷ்டி, ஸ்திதி, லயம் என்ற செயல்களை செய்கிறேன். அதற்கு தகுந்தாற் போல என் பெயரும் அடையாளமும் மாறும். அதனால் ப்ரும்மா என்ற அத்வைதமான ஒன்றை, ப்ரும்ம,ருத்ரன்,விஷ்ணு என்று பேதப் படுத்தி அறிகிறார்கள். அது எப்படி இருக்கிறது என்றால், மனிதன் தன் தலையிலிருந்து கால் வரை பேத புத்தியோடு பார்ப்பது போலத் தான். எங்களுக்குள் பேதம் இல்லை. உயிரினங்களில் ஆத்மாவாக இருந்து ரக்ஷிப்பது எங்கள் செயல். ருத்ரனுக்கு அவருக்கு உரிய பாகத்தை கொடுங்கள். யாக கார்யம் முடிந்தவுடன், அவப்ருத ஸ்னானம் செய்து ருத்விக்குகளை கௌரவியுங்கள். போகும் முன் பொதுவாக தர்மம் என்பதை கடைபிடியுங்கள், என்று சொல்லி சென்று விட்டனர்.
இப்படித்தான் தாக்ஷாயணி தன் பழைய உடலை விட்டாலும், ஈஸ்வரனையே பதியாக அடைய வேண்டும் என்று ஹிமவானின் புத்ரியாக மேனா என்பவளிடம் பிறந்தாள் என்பது வரலாறு. அதே தியானமாக இருந்தாள் என்பர், அவளைப் பொறுத்தவரை அவள் கணவன் என்றுமே அவளைப் பிரியாதவன்., .
பகவான் சம்பு செய்ததையும், தக்ஷ யாகத்தில் நடந்த விஷயங்களையும் சிஷ்யரான உத்தவரிடமும் என் தந்தை கேட்டு எனக்குச் சொன்னார். இதை பக்தியுடன் கேட்பவர் நற்கதியடைவர் என்றும் சொன்னார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் ஏழாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -60)
அத்யாயம்–8
மைத்ரேயர் சொன்னார்: சனகர்களும், நாரதரும் இல்லறத்தில் ஈடுபாடு இல்லாததால் மணம் செய்து கொள்ளவில்லை. இவர்களும் ப்ரும்மாவின் புத்திரர்களே. ஞான மார்கத்தை ஏற்றுக் கொண்டவர்கள். அதனால் அவர்களை விடுவோம், அடுத்த வம்சத்தைப் பற்றிச் சொல்கிறேன்.
ப்ரியவ்ரத, உத்தானபாதன் என்பவர்கள், ஸ்வாயம்புவ மனுவின் புத்திரர்கள். இந்த ஸ்வயம்புவ மனு ஹரியின் ஓர் அம்சத்தைக் கொண்டவர். சதரூபா அவர் மனைவி. அவர்களின் மகன்கள். அரசர்களாக இருந்தனர். உத்தான பாதருக்கு இரு மனைவிகள், சுருசி, சுநீதி என்று. இருவரில் சுருசி அரசனுக்கு பிரியமானவள், சுநீதியின் மகன் துருவன். ஒரு சமயம் சுருசியின் மகன் உத்தமனை மடியில் வைத்து கொஞ்சிக் கொண்டிருந்த அரசன், துருவனிடம் அலட்சியமாக இருந்தார். தானும் தந்தை மடியில் அமர விரும்பிய துருவனை சுருசி தடுத்தாள். அரசன் எதிரிலேயே அவனை கண்டித்தாள். மகனே உனக்கு அரசனின் மடியில் அமர தகுதி இல்லை. என் வயிற்றில் பிறந்த மகன் தான் அரசனுக்கு வாரிசு, நீ என் குழந்தை அல்லவே, இதுபோல அனாவசிய ஆசைகள் படாதே. தவம் செய்து பகவானை வேண்டி என் மகனாக பிறந்து வா. அரசனின் அன்புக்கு பாத்திரமாகி, அரியணையில் அமரலாம் என்று நிஷ்டூரமாகச் சொன்னாள்.
தாயின் சபத்னி- இவ்வளவு கொடூரமாக பேசியவுடன் தடியால் அடிபட்ட நாகம் போல, மனம் வாடி சுருண்டு தந்தை பார்த்துக் கொண்டிருக்கையிலேயே அந்த இடத்தை விட்டகன்று, தாயிடம் சென்றான். உதடுகள் துடிக்க, பெருமூச்சு விட்டபடி அழும் குழந்தையை அனைத்து மடியில் இருத்தி சுநீதி என்ன நடந்தது என்று கேட்டறிந்தாள். சக்களத்தியின் நடத்தையால் மனம் உடைந்து அழுதாள். தன்னை சமாளித்துக் கொண்டு, தவிர்க்க முடியாத இடர் இது என்று அறிந்து, குழந்தாய், அழாதே. மற்றவர்களை துன்புறுத்தி யாரும் வாழ்ந்ததில்லை. சுருசி சொன்னது ஒரு விதத்தில் சரியே. அரசனின் அன்பை பெறாத மனைவி நான். என் வயிற்றில் பிறந்து நான் பாலூட்டி வளர்த்ததால் தானே உனக்கு இந்த அவமானம். உத்தமனைப் போல மதிப்புடன் வாழ விரும்பினால் அதோக்ஷஜன்- பகவானை ஆராதித்து வா. கோப தாபங்கள், அசூயை இல்லாமல் அவருடைய பாத பத்மங்களை ஆராதித்து வா. அவர் அருளால் உத்தமமான குணங்களையும் உயர்வான பதவிகளையும் அடைவாய். வருத்தப் படாதே. உனக்கும் மனு தான் பிதாமஹர் (தந்தையின் தந்தை). அவரும் முழு மனதோடு பகவானை ஆராதித்து, யாகங்கள் செய்து, பூலோகத்தில் மற்றவர்கள் நினைத்து கூட பார்க்க முடியாத நன்மைகளை அடைந்தார். அந்த பகவானையே துதி மகனே. அவர் தன் பக்தர்களிடம் வாத்சல்யம் உடையவர். மோக்ஷம் விரும்பும் சாதகர்களும் அவரை வணங்கி வேண்டியதை பெறுவர். வேறு எதையும் யோசிக்காதே. இவருடைய சரணங்களே துணை என்று ஏகமனதாக தியானம் செய். அவருடைய கண்கள் பத்மம் போன்று இருக்கும். அதுவே உன் துக்கத்தை போக்கும். கையில் தாமரை பூவை வைத்துக் கொண்டிருப்பவர், அவருடைய பத்னியான ஸ்ரீயுடன் இருப்பார்.
இவ்வாறு தாயாரால் சமாதானமாக சொன்ன வார்த்தைகளின் பொருளை சிறுவன் துருவன் உணர்ந்தான். தன்னைத் தானே அறிந்து கொள்ள, தந்தையின் ஊரை விட்டே விலகிச் சென்றான்.
நாரதருக்கு இந்த சிறுவன் வீட்டைத் துறந்து சென்றது தெரிய வந்ததும் அவனிடம் வந்தார். துருவனை அணைத்து தலையில் தூய்மையாக்கும் நீரை தெளித்து உபதேசம் செய்தார். அஹோ! என்ன தன்மானம் இந்த அரச குமாரனுக்கு. ஒரு சொல் பொறுக்க முடியாத ரோஷம்.பாலன் இவன். இவனுக்கு மாற்றாந்தாயின் அவச் சொல் மனதை காயப் படுத்தி விட்டது.
புத்ரக! குழந்தாய், இனி மானமோ, அவமானமோ உன்னை வாட்டாது. விளையாட்டுச் சிறுவன், நீ. வேற்றுமைகள் இருக்கலாம், ஆனால் அதனால் துயரப் படக் கூடாது. தன் வினையை அனுசரித்து மனிதர்கள் உலகில் மோகத்தினால், வேறுபடுகிறார்கள். கிடைத்ததில் திருப்தி அடைவது தான் புத்திசாலித்தனம். உன் தாய் சொன்னது சரியே. அவள் உபதேசித்தபடியே யோக சாதனைகளைச் செய். மனிதர்களுக்கு அந்த பரபுருஷனின் ப்ரசாதம் தான் முக்யம் என்று சொல்வேன். பிறர் உதவியின்றி, தானே தீவிரமாக தவம் செய்து, யோகசமாதிகளின் மூலம் தன்னறிவை வளர்த்துக் கொண்டு, தேடித் தேடி தான் கண்டு கொள்ள வேண்டும். அதனால், இந்த அல்பமான ஆசையை விட்டு விலகி வா. அதில் எதுவும் உயர்வு இல்லை. உனக்கு கிடைத்த வாய்ப்பு, முயற்சி செய். காலம் வரும் பொழுது நன்மைகளை அடைவாய். யாருக்கு எது என்பது, தெய்வத்தின் கையில், சுகமோ, துக்கமோ, மனிதர்கள் அனுபவித்து தான் ஆக வேண்டும். அதற்காக பல பிறவிகள் எடுக்க வேண்டி வந்தாலும் வரலாம். தாமசமான உடல் சம்பந்தமான ஆசையை விடு. ஆத்மாவின் நல்கதியைப் பற்றி சிந்தனை செய். நல்ல குணங்களை வளர்த்துக் கொள். அதனால் உனக்கும் மகிழ்ச்சி. குணம் இல்லாதவர்களிடம் நட்பும் தேவையில்லை. சமமானவர்களிடம் தேடிச் சென்று நட்பாக இரு. தாபம் உன்னை வாட்டாது.
துருவன் சொன்னான்: தங்கள் அன்பான உபதேசத்தால் சுகம் துக்கம் இரண்டையும் சமமாக பாவிக்கும் शमम् – மனப்பாங்கு- என்பதை அடைந்தேன். எங்களைப் போன்றவர்கள் தாங்களாக அறிந்து கொள்வது இயலாது. ஆயினும் எனக்கு இன்னமும் வினயம் என்பது வரவில்லை. அவ்வளவு கோபம் அடைவானேன். சுருசி சொன்னதும் ஊசி குத்தினாற் போல என் இதயத்தில் வலிப்பானேன். வார்த்தை தானே, ஏதோ பாணத்தால் அடிபட்டது போல ஏன் வருந்தினேன். இந்த லௌகிகமான சுகம் வேண்டாம். மூவுலகிலும் உத்க்ருஷ்டமான பதவியைத் தரும், முனிவர்களின் சாதுவான வழிகளைச் சொல்லுங்கள். என் தந்தையோ, அவரை சார்ந்தவர்களோ இதுவரை அறியாத வழி அது. அதை சொல்லுங்கள் ப்ரும்மன்.! நீங்கள் நிச்சயம் பகவானின் அங்கத்தில் பிறந்தவர். வீணையை மீட்டிக் கொண்டு உலக நன்மைக்காக சூரியன் உலகை சுற்றுவது போல போல சுற்றி வருகிறீர்கள். (ப்ரதி பலன் கருதாமல்)
நாரதர் விவரமாக பதில் சொன்னார். உன் தாய் சொன்ன வழி தான் உனக்கு நன்மை தரும். பகவான் வாசுதேவனை நம்பிக்கையுடன் வணங்கு, தனக்கு தர்மம், அர்த்தம், காமம்,மோக்ஷம் – இந்த நாலும் தான் உலகில் மக்களுக்கு வேண்டியவை, என்று விரும்புபவர் ஹரியின் பத சேவையை மனதார செய்ய வேண்டும். அதனால், யமுனைக் கரையில் மதுவனம் என்ற இடம் உள்ளது. அந்த இடத்தில் ஹரி நித்யவாசம் செய்கிறார். அங்கு ஓடும் நதியின் பெயர் காலிந்தீ. அதில் மூழ்கி ஸ்னானம் செய். உனக்கு ஏற்ற இடத்தை தேர்வு செய்து கொண்டு நீயே ஒரு ஆசனத்தை தயார் செய்து கொள். மூன்று முறை ப்ராணாயாமம் செய்து ப்ராண, இந்த்ரிய, மனோ பலம் இவைகளைக் கூட்டிக் கொள். மெள்ள தியானம் செய். குருவுக்கு குருவானவர், அவர் எப்படி இருப்பார், பார்த்ததில்லையே என்கிறாயா? கருணை ததும்பும் முகம், கண்களும் முகமும், காண்பவர் மனம் மகிழும் படி எப்பொழுதும் ப்ரசன்னமாகவே இருக்கும். அழகான நாசி, சீரான புருவங்கள், அழகிய தலை, தெய்வீகமான அழகு. கச்சிதமான வாலிப உடல் வாகு, கண்களும் உதடுகளும் அருணனின் கிரணங்கள் போல சிவந்திருக்கும், கருணையே உருவானவர், தன்னை அண்டியவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பவர்,
ஸ்ரீவத்ஸம் என்ற மணியை அணிந்திருப்பார், மேகம் போன்ற நீல நிறத்தினன், வன மாலையை அணிந்திருப்பார், கைகளில் சங்க சக்ர கதா பத்மம் இவைகளை வைத்திருப்பார், கேயுரம், வலயங்கள் அணிந்த நான்கு புஜங்கள். கிரீடமும் குண்டலமும், கௌஸ்துப மணி அலங்கரிக்கும் கழுத்தும், பீதாம்பரமும், இடுப்பில் காஞ்சி என்ற ஆபரணமும், நூபுரம் எனும் காலணிகளும், சாந்தமான காணத் தகுந்த உருவம் மனதுக்கும் கண்களுக்கும் இதமான உருவம் இப்படி தியானம் செய்து கொள். அவருடைய கால் நகங்களில் உயர் மணி போன்ற ஒளி காலில் வணங்கி நிற்பவர்களை ஆசீர்வதிப்பது போல இருக்கும். ஒவ்வொரு அங்கமாக மனதில் பதிந்து கொண்டு ஒரே உருவமாக மென் முறுவலோடு இருப்பவராக தியானம் செய். இப்படி பகவானின் உருவத்தை நினைத்து நினைத்து அவனையன்றி வேறு எதுவுமே மனதில் இல்லாமல் செய்து கொள். சுபத்ரம்- மிகவும் சுபமான உருவம்- பரம ஞானி, எங்கும் நிறைந்தவர் நிவ்ருத்தி என்ற மேலான மார்கத்திற்கு இட்டுச் செல்பவர் இவரை ஜபம் செய். ஏழு இரவுகள் ஜபம் பண்ணி மனிதர்கள் வான வெளியில் செல்லும் தேவ கணங்களை காணுவர். அந்த மந்திரம் “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” இதை ஜபித்து வா. இந்த மந்திரத்தை உருவேற்றிக் கொண்டு, பல விதமான பொருள்களை அர்ப்பணம் செய். கிடைத்ததை, சுத்தமான நீர், பூ மாலைகள், காட்டில் கிடைக்கும் பழங்கள், கிழங்குகள், பச்சை காய்கறிகள், சில தளிர்கள், துளசி தளம் இவைகளால் அர்ச்சனை செய். பூமியில் அல்லது ஜலத்தில் அர்ச்சனையை செய்யலாம். மிதமாக உண்டு சாந்தமாக ஜபம் செய். தன் விருப்பம் போல பூமியில் அவதாரம் செய்பவர், ஏதோ ஒரு அவதாரத்தை நினைத்துக் கொள். பரிசாரகம் என்ற அர்க்யம் தருதல், மலர் தூவி அர்ச்சனை செய்வது இப்படி உடலால் செய்வதை மானசிகமாகவும் செய்யலாம். மந்திரத்தை சொல்லி மனதினுள் உருவாக்கிக் கொண்ட பகவத் ஸ்வரூபத்திற்கு மானசிகமாக செய்யலாம். உடல், வாக்கு, மனம் இவற்றால் பக்தி பூர்வமாக செய்வது உகந்தது.
மனிதர்கள் மமதையில்லாமல், உணர்ந்து செய்யும் பூஜைகள், அவர்களுக்கு எல்லா நன்மைகளையும் செய்யும். வேண்டியதை வேண்டியவாறு கொடுக்கும். மனிதர்கள், காம,அர்த்த,ஞானம், மோக்ஷம் -இதில் எதை விரும்பினாலும் இந்த பக்தியால் அடைவர்கள். மற்றொரு வழி, விரக்தி-துறவு. நிரந்தரமாக பாவ பூர்வமாக செய்யும் மானசிக பூஜையால் முக்தியடைவர். துருவனும் அவரை வணங்கி மதுவனம் சென்றான். ஸ்ரீஹரி வாழ்ந்து கால் தடம் பதிந்த இடம் என்பதால் பாவனமான இடம்.
அவன் தபோ வனம் சென்றபின் நாரதர் அரசரை சந்தித்து அவர் மரியாதையுடன் அளித்த சுகமான ஆசனத்தில் அமர்ந்தார். ராஜன்! ஏன் முகன் வாடியிருக்கிறது? என்ன வருத்தம்? அரச காரியங்களில் எதுவும் கஷ்டம் இல்லையே, செல்வமோ, தர்மமோ, காமமோ குறைவின்றி உள்ளனவா ? அரசன் சொன்னான்: ப்ரும்மன்! என் மகன், சிறுவன்,என் மனைவி எதோ சொன்னாள் என்பதற்காக என் எதிரிலேயே, வீட்டைத் துறந்து சென்று விட்டான். ஐந்து வயது பாலகன். அவன் தாயும் எங்கோ சென்று விட்டாள். அனாதையாக காட்டில் உடல் ஓய்ந்து,பசியுடன் களைத்து தூங்கும் பொழுது ஓனாய்கள் தின்று விடாமல் இருக்க வேண்டும் அவனுடைய சாந்தமான முகம், வருந்தி, வாடியதே, கண் முன்னால் நிற்கிறது. அஹோ! என்ன துர்பாக்கியம், மனைவி சொன்னால் என்ன, நான் ஏன் செயலற்று நின்றிருக்க வேண்டும். பாலகன் என் மடியில் அமர வேண்டும் என்பதைத் தானே கேட்டான், ஏன் வாளா இருந்தேன், வடி கட்டிய மூடன் நான்.” என்று சொல்லி கதறிய அரசனைப் பார்த்து நாரதர் சொன்னார். நடந்ததை நினைத்து வருந்தாதே. உன் மகன் சாதாரண பிறவி இல்லை. பகவானின் அருள் பெற்றவன். உலகில் பெரும் புகழை அடைவான். அவனுடைய ப்ரபாவம் தெரியாமல் மனம் வருந்துகிறாய். உன் மகன் மிக கடினமான செயலைச் செய்து முடித்து, சீக்கிரமே லோக பாலர்களுக்கும் தலைவனாக உயர்வான். உன் புகழையும் பரப்புவான்.
தேவ ரிஷி நாரதர் இவ்வாறு சொல்லவும், அரசன் சமாதானமானாலும், அரச வாழ்க்கையை துறந்து மகனையே அனவரதமும் நினைத்து வருந்தியபடி இருந்தார். நாரதர் அவருக்கும் உபதேசம் செய்து, அரசன் கடமையை விடக் கூடாது , நீயும் விரதங்கள் அனுசரி, பூஜைகளைச் செய் என்றார்.
வனத்தில் துருவன் அவர் சொன்னபடியே, மூன்று இரவுகள் முடிவில், நாவல் பழம் அல்லது அந்த நிறத்து பதரி – இலந்தை பழம் – மட்டும் உண்டு ஒரு மாதம் விரதம் இருந்தான். அடுத்த மாதம், ஆறு ஆறு இரவுகளின் முடிவில் புல், இலைகள் மட்டும் உண்டு ப்ரபுவை நினைத்து தியானம் செய்தான். மூன்றாவது மாதம் ஒன்பது இரவுகளின் முடிவில் நீரை மட்டும் அருந்தினான். அதன் பின் சமாதியில் ஆழ்ந்து விட்டான். நாலாவது மாதம் பன்னிரண்டு நாட்களுக்கு ஒருமுறை, வாயுவை மட்டுமே உண்பவனாக ஆனான். தன் சுவாச கதிகளை தன் வயப் படுத்திக் கொண்டு தேவனை ஆராதித்தான். ஐந்தாவது மாதம் அந்த சுவாச பயிற்சியால், கட்டையாக ஸ்தாணுவை போல், அசையாது ஒரு காலில் நின்றான். மனதின் அலைச்சல்களை முற்றிலும் நிறுத்தி பகவானுடைய ரூபத்தை நாரதர் சொன்னபடியே நினைத்து, வெளி உலகில் எதையுமே காணாதவன் ஆனான். மஹத் என்ற இயற்கைகளுக்கும் ஆதாரமான புருஷேஸ்வரன், ப்ரும்ம ஸ்வரூபம் மட்டுமே அவன் மனதில் என்று ஆன சமயம் உலகமே நடுங்கியது.
அந்த அரசகுமாரன் ஒரு காலில் நின்ற சமயம், அவன் கட்டை விரல் பட்ட பூமி, திசைகளைத் தாங்கும் யானைகளின் அரசன் நடனமாடுவது போல இடதும் வலதுமாக ஆடியது. தன் உயிர் மூச்சையே தடுத்து நிறுத்தி, விஸ்வாத்மன் என்ற பகவானை தியானம் செய்த பொழுது, மூவுலகிலும் உயிரினங்கள் தாங்க முடியாத மூச்சு திணறலை அனுபவித்தனர். லோக பாலர்கள் ஸ்ரீ ஹரியிடம் ஓடினர்.
தேவர்கள்” பகவன்! நாங்கள் மூச்சு விட முடியாமல் தவிக்கிறோம். சராசரத்திலும் ப்ராணிகளின் ப்ராணன் தடைபடுகிறது. எங்களை காப்பாற்று. இந்த கஷ்டம் தாங்க முடியவில்லை. அடைக்கலம் நீயே” என்றனர்.
பகவான் சொன்னார்: பயப்பட வேண்டாம். கடுமையான விரதங்களுடன் பாலன் ஒருவன் தவம் செய்கிறான். நான் கவனிக்கிறேன். நீங்கள் உங்கள் இருப்பிடம் திரும்பிச் செல்லுங்கள். உத்தான பாதரின் மகன், ப்ராணனை நிறுத்தி தவத்தில் இருக்கிறான். என்னையடையவே விரும்பிகிறான்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் எட்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் – 82)
அத்யாயம்-9
மைத்ரேயர் சொன்னார்: பயம் விலகி லோகபாலர்கள் வணங்கி விடை பெற்றனர். பகவானும் கருட வாகனத்தில் மது வனம் சென்றார். மனதினுள் யோக நிலயில் மின்னல் போல ஒளி வீசிக் கொண்டிருந்த பகவத் ஸ்வரூபம் மறைந்தது போல இருக்க சட்டென்று கண் விழித்த துருவன் எதிரில் அவர் நேரில் தெரியக் கண்டான். திடுமென எதிரில் வந்து நின்றவரை திகைப்புடன் பார்த்தவன், கீழே விழுந்து வணங்கினான். என்ன செய்வது தெரியவில்லை. கண்களால் பருகுபவன் போல பார்த்தான். புஜங்களால் அணைத்து உச்சி முகர்வது போல இருந்தது. அப்படி திகைத்து நின்றவனின் கன்னத்தில் ப்ரும்ம மயமான சங்கால் தடவினார். அதன் மூலம் வாய் பேசும் சக்தியை திரும்ப பெற்றவன் போலவும், தெய்வீகமான பர தத்வத்தை அறிந்தவன் போலவும், பக்தி பாவம் நிரம்பப் பெற்றவன் போலவும், தன்னுணர்வுடன் பேசலானான்.
துருவன் சொன்னான்: நமோ பகவதே புருஷாய துப்யம் – பரம புருஷனான பகவானே, உனக்கு நமஸ்காரம். என்னுள் நிறைந்து உறங்கிக் கொண்டிருந்த என் வாக்கு -என் பேசும் சக்தியை திருப்பிக் கொடுத்தாய். உன் பெருந்தன்மையால், அனைத்து சக்திகளையும் தர வல்லவன் நீ. என் மற்ற அவயவங்களையும் கை கால்கள், காது, சருமம், மற்றும் பிராணங்களையும் தட்டி எழுப்பும் பரம புருஷனான பகவானே உனக்கு நமஸ்காரம்.
உன் ஆத்ம சக்தியால், மாயை என்பதையும், முக்குணங்களையும் மஹத் முதலானவைகளையும் ஸ்ருஷ்டி செய்த பின் அதனுள் நீயே ப்ரவேசித்தாய்.
ஆர்த்த பந்தோ! வருந்தும் அடியார்களுக்கு உடனே உதவ விரைந்து வரும் உற்ற உறவினனே!- உன் அன்பர்கள் யாருமே கஷ்டம் என்று தவிக்க மாட்டார்கள். நீ கொடுத்த அறிவு, அதனால் உலகம் தூங்கி எழுந்தவன் போல எழுந்தது. உன் பாதம் தான் சரணம் என்பதை யார் தான் மறக்க முடியும். அப்படி மறந்தவன் யாராவது இருந்தாலும் அதுவும் உன் மாயையே. கல்ப தருவான உன்னிடம் தவிட்டை யாசிப்பது போல உலக இன்பத்தை யாசிக்கிறார்கள். உன்னிடம் என் பக்தி பெருகட்டும். மஹாத்மாக்கள் சங்கத்தில் நானும் இருக்க வேண்டும். சம்சார பந்தம் என்னை வாட்டாமல் இருக்கட்டும். உன்னை பஜனை செய்து பாடுபவர்கள் மத்தியில் நானும் இருக்க வேண்டும். மனிதன் அறிவை பெறவே உன்னை வணங்குகிறான். உன் பாத த்யானத்தாலோ. உன் அடியார்களுடன் இருந்து அவர்கள் சொல்லும் உன் சரித்திரத்தைக் கேட்டோ, பெறுவது ப்ரும்ம லோகத்தில் கூட கிடைக்காது. என்னுள் உன்னிடம் பக்தி பெருகட்டும். உன் பக்தர்கள் போலவே நானும் குடும்பம், புத்ர தார எனும் சம்சார சூழலில் மூழ்காமல் இருக்க வேண்டும். கல்ப முடிவில் உலகம் முழுவதும் உன் வயிற்றில் வைத்து காப்பாற்றி, அனந்த சயனத்தில் உறங்கினாய். உன் நாபியிலிருந்து பொன்மயமான பத்மம் மூலம் உலகை தோற்றுவித்தாய். அப்படிப்பட்ட உனக்கு நமஸ்காரம். நீ பரிசுத்தமான நித்ய முக்தன். உயிரினங்களில் உள்ளும் மறைந்து இருக்கும் ஆத்மா. அதியக்ஞன்- யக்ஞ புருஷன் என்று உன்னைச் சொல்வார்கள். நீ தனித்து தெரிகிறாய். உன்னிடம் த்வேஷம் பாராட்டுபவர் தோற்பர். வித்யை , பலவிதமான சக்திகள், வரிசை கிரமாக உன்னிடம் தோன்றியவையே. அந்த ப்ரும்ம, விஸ்வபவன், ஏகனாக- ஒருவனாகவே இருக்கும், அனந்தன்- தோற்றம் – முடிவு என்ற சுழற்சி இல்லாத ஆனந்தமே உருவான உன்னை வணங்குகிறேன்.
என்று இவ்வாறு துதி செய்தவனைப் பார்த்து சந்தோஷமாக பகவான் பதில் சொன்னார். “அரச குமாரனே! நீ எதை விரும்பி தவம் செய்ய வந்தாய் என்பதை நான் அறிவேன். அரிதான வேறு ஒன்றைத் தருகிறேன். யாராலும் எட்ட முடியாத உயர் பதவி. அதை தருகிறேன். க்ரஹ நக்ஷத்திர ஜோதிகளின் மத்தியில், அசையாது நிற்கும் துருவம் என்ற நக்ஷத்திரமாக ஒளி விசிக் கொண்டு இருப்பாய். அச்சில் சுழலும் சக்கரம் போல நக்ஷத்திர க்ரஹ மண்டலங்கள் சுழலுகின்றன. ஒரு சிலர் அதைத் தாண்டி ஸ்திரமாக இருக்கின்றனர். தர்மம், அக்னி, கஸ்யபர், சுக்ரன், முனிகள், இவர்கள் அந்த வட்டத்தில் நித்யமாக வசிக்கின்றனர். தென்திசை நோக்கி நக்ஷத்திரங்களுடன் சேர்ந்து செல்கின்றனர்.
உன் தந்தை ராஜ்யத்தை உன்னிடம் ராஜ்யத்தைக் கொடுத்துவிட்டு வனம் செல்வார். நீண்ட காலம் நீ ராஜ்யம் செய்வாய். உன் சகோதரன் உத்தமன் அகால மரணம் அடைவான், அவன் தாயும் காட்டுத் தீயில் மாய்வாள். அது தவிர்க்க முடியாதது. அவர்கள் வினைப் பயன். யாகங்கள் செய்து நாட்டை சுபிக்ஷமாக வைத்திருப்பாய். பின் சங்கல்பம் செய்து தான தர்மங்கள் நிறைய செய்வாய். சாதாரண மக்களுக்கு பல ஜன்மங்களில் அடைவதை நீ இந்த ஜன்மத்திலேயே பூர்த்தி செய்து என்னை அடைவாய். அதன் பின் பிறப்பற்ற நிலையில் த்ருவ நக்ஷத்திரமாக வானில் தெரிவாய், என்று சொன்ன பகவான் தன் கருட வாகனத்தோடு திடுமென மறைந்தார்.
துருவனும் அவ்வாறே நகரம் திரும்பி, ராஜ்யத்தை ஏற்று, நல்லபடியாக வாழ்ந்து, பக்தனாகவே இருந்து மறைந்தான். விதுரர் ஆச்சர்யப் பட்டார். அரியதான பதவியை அடைந்தான் துருவன். கிடைத்த ராஜ்யத்தையும் பற்றின்றி ஏற்றான். எப்படி ஊரார் அவனை எதிர்கொண்டனர்.?
மைத்ரேயர் சொன்னார்: அது மட்டுமல்ல, மாற்றாந்தாயும், அவள் மகனும் அகால மரணமடைந்ததால், நல்ல கதி கிடைக்காமல் போகுமே என்றும் கவலைப் பட்டான். சனந்தன் முதலானோர், பல காலம் சமாதியில் இருந்து அடைந்ததை ஆறு மாதங்களில் அடைந்தேன். மந்த புத்தி நான், உன்னிடம் அல்பமாக எதையோ யாசித்தேன். என் மனதை கலைத்தது எது? நாரதர் சொன்னதை முழுவதுமாக என் மனம் அறியவில்லை போலும். இப்பொழுதும் சகோதரனின் கதியை நினைத்து வருந்துகிறேன். உயிர் போன பின் சிகித்சை செய்வது போல, இப்பொழுது ராஜ்யம் எனக்கு தருகிறாய். வேண்டாம். ஜகதாத்மாவான உன்னை ஸ்மரித்து ராஜ்யத்தையா கேட்பேன். தனம் இல்லாதவன் பகவானை நேரில் கண்ட பொழுதும் அல்பமான சிறு பொருளை யாசிப்பது போல.
மைத்ரேயர் சொன்னார்: துருவன் வனம் சென்றபின் அரசன் உத்தானபாதன் ராஜ்யத்திலோ, மற்ற சுக போகங்களிலோ நாட்டமில்லாதவனாக நாரதர் சொன்னபடி ஏராளமாக தனம் தானம் செய்து விட்டு நம்பிக்கையான ப்ராம்மணர்களிடமும், மந்திரிகளிடமும் ராஜ்ய நிர்வாகத்தை ஒப்படைத்து விட்டு .குதிரையில் ஏறி, யாத்திரை கிளம்பினான். சங்க துந்துபி நாதங்கள், ப்ரும்ம கோஷம் இவைகளுடன் வழியனுப்பப் பட்டான். சுநீதியும், சுருசியும் கூட தங்கள் நகைகளை அணிந்து உடன் சென்றனர். உபவனத்தின் அருகில் மகனைப் பார்த்து மகிழ்ந்தவராக, ரதத்திலிருந்து இறங்கி மகனை அணைத்து கதறினார். கடந்த சில நாட்களாக நாரதர் உபதேசித்த படி, விஷ்வக் சேனரை ஆராதித்து,வந்திருந்ததால் அவருடைய குணமும் மேன்மையடைந்திருந்தது. கண்ணீராலேயே மகனை அபிஷேகம் செய்தார். துருவனும் தந்தையை வணங்கி அவருடைய ஆசிகளை பெற்றான். தாய் மார்களையும் வணங்கி அவர்களுடன் நகரம் சென்றான். சுருசியும் தன் காலில் விழுந்து வணங்கிய துருவனை அணைத்து உச்சி முகர்ந்து நீண்ட ஆயுளுடன் ஆரோக்யமாக இரு என்று நாத்தழதழக்க வாழ்த்தினாள். உத்தமனும் சகோதரனை அன்புடன் அணைத்து வரவேற்றான். தாயார் சுநீதி புத்துயிர் பெற்றதாக உணர்ந்தாள். கண்களில் நீர் வழிய அவனை ஆசீர்வதித்தாள். மகனே, நீண்ட காலம் சுகமாக இருப்பாய். அண்டியவரைக் காக்கும் பகவான் உனக்கு நல்லதையே செய்வார். ம்ருத்யுவை ஜயித்து வந்துள்ளாய், என்றாள். இவ்வாறு அனைவராலும் வரவேற்கப்பட்டு நகரம் வந்தான். பூர்ண கும்பமும், பலவிதமான மலர் மாலைகளாலும் நகரமும், அரண்மனை வாசலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது. வழியெங்கும் சந்தனம் தெளித்து, மங்கள அக்ஷதைகள் வீசி, பூவிதழ்களும், மங்களப் பொருட்களும் நிறைத்து பெண்கள் ஆரத்தி எடுத்து, அன்புடன் ஆசிகள் அளிக்க, பலவிதமான வாத்ய இசைகள் முழங்க, மந்திர கோஷங்களுடனும் அரண்மனையில் நுழைந்தான். தந்தையின் வீட்டில் ராஜ போகமாக இருந்த பல சௌக்யங்களுடன் தேவன் போல நடத்தப் பட்டான். கடல் நுரை போன்ற படுக்கைகள், பொன் மயமான ஆசனங்கள், ஸ்படிகமும், மஹா மரகதமும், மணிகளின் ஒளி சிதற இருந்த மாளிகை. பெண் பணியாட்கள் கூட மனம் கவரும் வண்ணம் ஆடை அணிகளுடன் இருந்தனர். அழகான உத்யான வனம். பறவைகளின் இனிய கூக்குரலும் ஜோடி ஜோடியாக தென்பட்ட பறவைகளும், மிருகங்களும்,கூடவே பறக்கும் வண்டின் ரீங்காரமும் ரம்யமாக இருந்த உபவனம். கிணறுகளும் அழகான படிக்கட்டுகளுடன், உத்பல, தாமரை மலர்களுடன், சக்ரவாஹம், சாரஸம் என்ற பறவைகளும் நிரம்பி இருந்தன. உத்தானபாதர் ராஜரிஷி என்று அழைக்கப் பட்டார். தனயனுடை ப்ரபாவம் அவனே நடந்ததைச் சொல்லக் கேட்டு ஆச்சர்யம் அடைந்தார். வயதான காரணத்தாலும், பிரஜைகளும் சம்மதித்ததாலும்,, ப்ரஜைகளுக்கு இதற்குள் துருவனிடம் ஏற்பட்ட ஒட்டுதலாலும் துருவனை ராஜ பதவியில் அமர்த்தினார்.
தானும் வயதான காரணத்தால், அந்த நாளைய வழக்கப்படி வனம் சென்றார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் ஒன்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் – 67)
அத்யாயம்-10
மைத்ரேயர் தொடர்ந்தார்: ப்ரஜாபதியின் மற்றொரு மகன் சிசுமாரன் என்பவருடைய மகள் ப்ரமி என்பவளை துருவன் மணந்தான். அவளிடம் கல்பன், வத்சரன் என்று மகன்கள். இலா என்ற வாயுவின் மகளிடம், புஷ்கலன் என்ற மகனும் ஒரு மகளுமாக அவன் சந்ததி வளர்ந்தது. உத்தமன் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஒரு சமயம் காட்டில் வேட்டையாடச் சென்றவன், ஒரு யக்ஷனால் கொல்லப் பட்டான். மகனைத் தேடிச் சென்ற சுருசியும் அதே போல மறைந்தாள். ( உத்தமனைத் தேடிச் சென்ற சமயம் தாவாக்னி எனும் காட்டுத் தீயில் விழுந்தாள் என்பர்) சகோதரன் இறந்த செய்தி கேட்டு துருவன் யக்ஷனுடன் போரிடச் சென்றான். கிழக்கு நோக்கிச் சென்றவன் ருத்ரனின் பரிவாரங்கள் நடமாடிக் கொண்டிருப்பதைக் கண்டான். ஹிமயமலையின் அடிவாரத்தில் அழகான அலகா நகரம் தென்பட்டது. தன் சங்கத்தை எடுத்து ஊதினான். அமைதியான அந்த இடத்தில் அந்த சங்கின் சப்தம் மிகப் பெரியதாக கேட்டதால் யக்ஷ ஸ்த்ரீகள் பயந்தனர். ஆயுதங்களோடு யக்ஷ வீரர்கள் ஓடி வந்தனர், த்ருவன் போரைத் துவங்கினான். பெரும் பாலான யக்ஷ வீரர்கள் காயமடைந்தனர். இரு தரப்பிலும் ஆயுதங்கள் சத்தமும், சங்க நாதமும் அட்டஹாஸமாக நடந்த யுத்தம் திடுமென ஓசையின்றி அமைதியாகியது. துருவன், அவன் சாரதி சித்ர ரதனுடன் எதிரில் யாருமே இல்லாத யுத்தகளத்தில் செய்வதறியாது திகைத்தான். அதன் பின் எங்கிருந்தோ மண்னை வாரியடிப்பது போலவும், சிவந்த மழைநீர் மழையாக பொழிவதே ரத்தமாகத் தெரிய, கல் மழை போலவும் விழவும், மாயா யுத்தம் செய்கிறார்கள் என்பது புரிந்தது.துருவனின் சேனை வீரர்கள் படு காயமடைந்தனர். துருவனும் இந்த தாக்குதலை எதிர்க்கத் தெரியாமல் திகைத்தான். அங்கு வந்த முனிவர்கள் துருவனிடம், சார்ங்க தன்வனான பகவானை வேண்டிக் கொள் என்றனர். அவர் தான் உன்னை காப்பாற்ற முடியும் என்றனர்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் பத்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -30 )
அத்யாயம்-11
ரிஷி முனிவர்கள் சொன்னபடி, துருவனும், தன் வில்லை எடுத்து, பகவான் நாராயணனை நினைத்து, அவரால் தயாரிக்கப் பட்ட அஸ்திரத்தால் அடிக்கத் துவங்கும் முன்பே, யக்ஷர்களின் மாயா மறைந்தது. ஞானம் வந்தவுடன் சாதகனின் க்லேசங்கள் மறைவது போல மறைந்தன. பொன் மயமான இறக்கைகளுடன் கல ஹம்ஸங்களில் வசிக்கும் குளத்திலிருந்து பக்ஷிகள் பறப்பது போல, துருவனின் சரங்களும் அவர்களைத் தாக்கின. மயூரங்கள் அலறுவது போல ஓசை எழுந்தது. அதை முறியடிக்க நாகங்கள் போல தன் அஸ்திரங்களை எடுத்து துருவன் அடித்தான். (கவியின் வார்த்தை ஜாலம்) அவை ஸூரிய மண்டலத்தை துளைத்துக் கொண்டு சென்றது.
அதே சமயம் மனு பிதாமகர் அங்கு வந்து துருவனை அழைத்து, போதும், குழந்தாய், சகோதரனுக்காக ஆரம்பித்த இந்த போரை நிறுத்து. குற்றம் செய்யாதவர்களை அடிக்க கூடாது என்று துருவனை தடுத்தார். உபதேவதைகளான இவர்கள் எந்த குற்றமும் செய்யவில்லை. இவர்களை எதிர்த்து போர் செய்வது தகாது. நம் குலத்திற்கு பெருமை சேர்க்காது. உன் சகோதரன் உனக்கு ப்ரியமானவன் தான். யாரோ ஒருவன் அவனுக்கு கெடுதல் செய்தான் என்பதற்காக இவ்வளவு பேரை காயப் படுத்தி என்ன காரியம் இது? இந்த இடம் சாந்தமானது. தன்னை உயர்த்திக் கொள்ளும் பொருட்டு குறைந்த வசதிகளுடன், ஹ்ருஷீகேசனை தியானித்து சாதனைகள் செய்து வரும் அவருடைய அனுசரர்கள், அவரை பின்பற்றும் சாதுக்களின் மார்கம். சர்வ பூதங்களிலும் இருக்கும் பகவான், கண்களால் காணவும், மனதால் அறியவும் முடியாத துராராத்யன் எனும் பகவானின் பரமபதம். அவருடைய பரிவாரங்கள், சாதுக்களின் வழியில் செல்லும் இவர்களை எப்படி வதம் செய்ய துணிந்தாய்? சர்வாத்மாவான பகவானுக்கு அவனுடைய படைப்பில் அனைவரும் ஒன்றே. அவருடைய கருணையும், நட்பும் அனைவரிடத்திலும் ஒரே விதத்தில் தான் வெளிப்படுகிறது. பகவான் ப்ரசன்னமாக இருந்தால் மனிதர்கள் அல்பமான தாமச குணங்களிலிருந்து விடுபடுவார்கள். இங்குள்ளவர்கள் ஜீவன் முக்தர்கள். ப்ரும்ம லோகம் செல்லவும், நிர்வாணம் எனும் உயர் நிலையை அடைவதுமே இவர்களது இலக்கு. பஞ்ச பூதங்களில், யோஷித்- பெண்பால், புருஷனாக, அவர்களின் முயற்சியால், அல்லது உழைப்பால், யோஷித்புருஷர்கள் தோன்றினர். ராஜன்! உனக்கு தெரிந்திருக்காது. பகவானின் மாயையால், முதன் முதலில், குணங்களையும் மஹத் என்ற இயற்கை தத்துவங்களையும் கொண்டு உலகை படைத்தல் என்பதை ஆரம்பித்த சமயம், ஒன்றுடன் ஒன்று இணைத்து புது புது பிரஜைகளை, உயிரினங்களை தோற்றுவித்தார். அதனால், கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் இந்த உலகம் ஏதோ (அயஸ்காந்தம்) காந்தத்தின் சக்தியால், இரும்பால் ஆன பொருள் அசைவது போல அவர் எதிரில் சுற்றிக் கொண்டிருக்கிறது, இதன் பின்னால். நிமித்த மாத்திரமாக பகவான் இருந்தார் (உலகை சுழல விட்டு, இயற்கையில் தானாக ஏற்படும் மாறுதல்கள் புது உயிரினங்களை, பொருள்களை தோற்றுவிப்பதைக் கண்டு கொண்டிருந்தார் ) கால சக்தியும் குணங்களின் பல சேர்க்கைகள், மூலம் அவரது வீர்யம்-சக்தி அல்லது அம்சம் பிரிபட்டு, அவைகளை செயல் திறம் உடையதாக செய்கின்றது, தான் எதுவுமே செய்யாமல் இருப்பது போல காட்டிக் கொண்டே, உள் நின்று இயங்கச் செய்கிறார். பகவானின் இச்செயலுக்கு காரணம் யாருக்குத் தெரியும். அவருடைய விருப்பம் – {சாதுர் வர்ண்யம் மயா ஸ்ருஷ்டம், கர்தாரம் அகர்தாரம் அபி மாம் வித்தி – என்ற கீதா வாக்யம், ஹந்தா- அடிப்பவன், என்று நினைத்தால் அவன் ஹந்தா, ஹத: அடிபட்டவன் என்று நினைத்தால் ஹத:– கடைசியில் யாரும் அடிபடவுமில்லை, அடிக்கவும் இல்லை இருவருக்குமே தெரியாத விஷயம், இருவருமே அடிபடவும் இல்லை, அடிக்கவும் இல்லை -அடி உடலுக்குத் தான், ஆத்மா அழிவில்லாதது போன்ற உபதேசங்கள் }
உன்னைச் சார்ந்தவர்கள், மற்றவர்கள் என்று நினைத்து அடித்தாலும், இறப்பது அல்லது அழிவது பகவானின் ஸ்ருஷ்டி. ஓடுபவனை துரத்தி அடித்து,புழுதி துகள்களை காற்று தள்ளிச் செல்வது போல, அந்த துகள் இடம் தான் மாறும், இங்கிருந்து சற்று தூரம் செல்லும், அவ்வளவே. ஒரு ஜந்துவின் ஆயுசை குறைப்பது பிரபுவின் செயலை குறை சொல்வது ஆகும். இதை சிலர் வினை என்பர் சிலர் ஸ்வபாவம் என்பர். உன் சகோதரனை ஒரு யக்ஷன் கொன்றதாக நீ சொல்கிறாய். ஜீவனின் பிறப்பும் இறப்பும் அவன் தோன்றும் பொழுதே நிச்சயமாகிறது. இந்த யக்ஷன் அடிக்காவிட்டாலும் கூட உன் சகோதரன் ஆயுள் முடிந்திருக்கும். மூன்று செயல்களையும் ஸ்ருஷ்டி,ஸ்திதி,லயம் என்பதைச் செய்யும் பகவான் அவன் தான் ஜகத் என்பதில் நடக்கும் அனைத்து செயல்களுக்கும் காரணம். அவனை வணங்கு. பசுக்கள் கயிற்றினால் ஒரு தண்டத்தில் கட்டப் பட்டால் அது கயிறு எட்டிய தூரம் மட்டுமே செல்வது போல ஜீவன்கள். அவன் அனுமதித்த அளவு தான் வாழ்வும் தாழ்வும்.
உன்னையே எடுத்துக் கொள். ஐந்து வயது பாலகன், மாற்றந்தாயின் சுடுசொல் பொறுக்காமல் வனம் சென்றாய், பகவானின் அருளால் எட்டாத உயரம் சென்றாய். அவருடைய அனுக்ரஹத்தால் நல்ல நிலமையில் அரசனாக வாழ்கிறாய். நிர்குணமான, அழிவற்ற அந்த பரமாத்மாவை நினை. தன் சக்தியை வெளிக் காட்டாமல் ஆனந்தமே உருவாக இருப்பவனை பக்தி செய். சரியான மருந்தால் ரோகம் விலகுவது போல மெள்ள மெள்ள இந்த அறியாமையிலிருந்து விடுபடுவாய். தான் தனது என்ற மோகம் அகலும்.
தவிர, தனதன்-குபேரன், கிரீசனின் சகோதரன். அவனை அவமதித்து விட்டாய். குழந்தாய்! அவர் தான் புண்ய ஜனங்கள் என்று அழைக்கப்படும் இந்த யக்ஷர்களை தோற்றுவித்தார். அவரை சமாதானப் படுத்து. அவரிடம் போய் வினயமாக, உன் தவற்றை உணர்ந்தவனாக, உண்மையான பச்சாதாபத்துடன் பேசு. அவருடைய மகத்தான குலம் மேலும் வளர வேண்டும், அது தான் நமக்கும் நல்லது.
இவ்வாறு பிதாமகரான மனு தன் வம்சத்தில் அந்த சிறுவனுக்கு உபதேசம் செய்து விட்டு அகன்றார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் பதினொன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் -35 )
அத்யாயம்-12
துருவன் போரை நிறுத்தியதை அறிந்த தனதன், -குபேரன், சாரணர்களுடனும், யக்ஷ கின்னரர்களுடனும் வந்து அவனை சந்தித்தான்.
குபேரன்: “ அரசகுமாரனே! பிதாமஹர் சொன்னதன் பேரில் போரை நிறுத்தியது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நல்லது. நீயும் யக்ஷர்களை அழிக்கவில்லை, எந்த யக்ஷனும் உன் சகோதரனைக் கொல்லவில்லை. காலம் செய்யும் வேலை. உயிரினங்களின் வாழ்நாளை நிச்சயிப்பது காலன் தான் – அந்த செயலுக்கு அவன் தான் ப்ரபு, தலைவன். நீ, நான் என்று பேதங்கள் தீவிரமாக ஞான மார்கத்தில் இருப்பவர் எண்ணுவதில்லை. உலக வாழ்க்கை என்பதே ஜீவன்கள் உறக்கத்தில் காணும் கனவு போல – விழித்ததும் கலைந்து போகும். அது போலத்தான் உறவுகளும். அதனால், துருவா! பத்ரமாக போய் வா. நல்லதே நடக்கட்டும். உன் வழி பகவான் அதோக்ஷஜனை வழி படுவது தானே. அதையே செய். அனைத்து ஜீவன்களின் உள்ளும் உறைபவன், அசையும், அசையா பொருட்கள் யாவையும் அவனே. அவனையே பூஜித்து வா. வணங்கத் தகுந்தவன், நமது இவ்வுலக நன்மைக்கும், மறுபிறவி என்பதை இல்லாமல் செய்ய பரலோக சாதனமும் அந்த பகவானே. அவரது ஆத்ம மாயை- தன்னிச்சையான செயல், இணைப்பதும், பிரிப்பதும், அவருடைய மேற்பார்வையில் முக்குணங்களும் சக்தி பெறுகின்றன.
உத்தான பாதரின் மகன் நீ, எது வேண்டுமோ கேள். விரும்பியதை தயங்காமல் கேள். நீ அம்புஜ நாபனின் வரம் பெற்றவன் என்பது தெரியும். அதை விட மேலாக வேறு என்ன வேண்டும். எங்கள் நன்மைக்காக ஏதாவது தர விரும்புகிறேன். துருவனும் தன் தவறை உணர்ந்து, அவருடைய பெருந்தன்மையை மதித்து, பகவானிடத்தில் அசையாத பக்தியையே வேண்டினான். ஒரு பொழுதும் தான் அதிலிருந்து விலகாமல் இருக்க வேண்டும் என்றான். குபேரனும் மகிழ்ந்து அந்த வரங்களை கொடுத்து விட்டு மறைந்தார், துருவனும் நாடு திரும்பினான்.
ஊர் திரும்பியவன் யாக யக்ஞங்கள் செய்தான். தாராளமாக தானங்கள், யாகத்தை நடத்திக் கொடுத்தவர்களுக்கு சன்மானங்கள், தேவதா ப்ரீதிகள் என்பதையும் குறைவற செய்தான். தனதனின் உபதேசங்கள் அவனை அனைத்து ஜீவன்களையும் சமமாக எண்ணும் உயர்ந்த குணத்தை அளித்திருந்தது.பல ஆண்டுகள் நியாயமாக ராஜ்யத்தை ஆண்டான். பிரஜைகள் அவனிடம் அன்புடன் இருந்தனர். காலம் வந்ததும் தன் சந்ததியிடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு சமாதியில் மூழ்கி உயிர் துறந்தான். அவனை அழைத்துச் செல்ல வானத்திலிருந்து விமானம் வந்தது. வானத்து நக்ஷத்திர கூட்டங்களைப் பார்த்து வியந்தான். சந்திரன் போல தானும் பிரகாசமாக இருப்பதை உணர்ந்தான். அங்கு நான்கு கைகளுடனும், ஸ்யாமள வர்ணமும், கொண்ட சிறுவர்கள், விரிந்த தாமரை போன்ற கண்களுடனும் கைகளில் கதையுடன், நல்ல ஆடைகளுடனும், கதை , கிரீடம், அங்கத குண்டலங்களுடனும் சேவை செய்ய இருந்தனர். பரிவாரங்களின் தலைவன் வந்து வணங்கி தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான். சுனந்த,நந்த என்பவர்கள் புன்னகையுடன் வரவேற்றனர். “ராஜன்! நல்வரவாகுக. தாங்கள் ஐந்து வயதில் செய்த தவம் எங்கள் பகவானை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்து விட்டது. எங்களுடைய தேவன், சார்ங்க தன்வன் என்ற பெயருடைய பகவானின் பார்ஷதர்கள், பரிவாரங்கள் நாங்கள் இருவரும். பகவானின் விஷ்ணுபதம் என்ற இடத்திற்கு உங்களை அழைத்துப் போக வந்தோம் என்றனர். இந்த விமானத்தில் ஏறிக் கொள்ளுங்கள். மற்றவர்களால் எண்ணிக் கூட பார்க்க முடியாத விஷ்ணுவின் இருப்பிடம் அழைத்து வர எங்களுக்கு உத்தரவு என்றனர். “
மைத்ரேயர் சொன்னார்: வைகுண்ட சேவகர்களின் தலைவன், மதுரமாக சொன்னதைக் கேட்டு, துருவன் மகிழ்ந்து, ஸ்னானம் செய்து மங்களமாக முனிவர்களை வணங்கி விமானத்தில் ஏற தயாராகும் போது தானும் ஸ்வர்ண மயமாக இருப்பதை அறிந்தான். அந்தகன் வந்ததைக் கண்டு, சேவகர்கள் சொன்னபடி அவர் தலையில் காலை வைத்து விமானத்தில் ஏறினான். துந்துபிகள் முழங்கின. ம்ருதங்க, பணவம் என்ற வாத்யங்கள் இசைக்கப் பட்டன. கந்தர்வர்கள் பாடினர். புஷ்ப வ்ருஷ்டி உண்டாயிற்று. ஸ்வர்லோகத்தில், தன் தாய் சுநீதியைக் கண்டான். தாயை விட்டுச் செல்வதா என்று தயங்கியவனிடம் சேவகர்கள் அவள் முன்னால் வாகனத்தில் செல்வதைக் காட்டினர். மூவுலகையும் சுற்றி வந்து முனிவர்களையும், மற்றவர்களையும் பார்த்தபடி விஷ்ணு பதமான வைகுண்டம் வந்து சேர்ந்தான். வைகுண்டத்தின் அழகை வியந்தபடி சாந்தமே உருவாக இருந்த அச்யுத ப்ரிய பாந்தவர்களையும், ஆத்ம தத்துவங்களை அறிந்த தஸ்விகளையும் கண்டான்
இவ்வாறாக உத்தான பாதரின் மகனாக பிறந்த துருவன் மூவுலகிலும் சூடாமணி போல பிரகாசிக்கும் கம்பீர வேகமும், நிமிஷம் விடாமல் சுழலும் சக்கரத்தில், ஜோதிட சாஸ்திரங்களில் சொல்லியபடி, சக்கரத்தின் மேட்ரம் எனப்படும் தண்டம் – சக்கரத்தின் நடுவில் திடமாக நடப்படும் அச்சில் – கட்டப்பட்ட மாடுகள் போல வளையவரும் வானத்து நக்ஷத்திர கூட்டங்களின் நடுவில், த்ருவனாக, அசையாதவனாக பதவியை அடைந்தான்.
நாரதர் இதைக் கண்டு மிக மகிழ்ந்தார். சுநீதியின் மகன், அவள் செய்த தவப் பயன். வேதம் அறிந்தவர்களும் மற்ற சாதகர்களும் நினைத்து கூட பார்க்க முடியாத நன்மை அவளுடைய நல் எண்ணத்தால், மகனால் கிடைக்கப் பெற்றாள். ஐந்து வயது மகனுக்கு பக்தியை உபதேசித்தாள். யதேச்சையாக அங்கு சென்ற நானும் வாசுதேவ மந்திரத்தை உபதேசித்தேன், சிரத்தையாக அதை ஏற்று தவம் செய்து நல் கதியடைந்தான் என்று பெருமையுடன் சொன்னார்.
மைத்ரேயர் சொன்னார்: குரு வம்சத்து பெரியவரே (விதுரர்) நீங்கள் கேட்டபடி துருவனின் கதையைச் சொன்னேன். விளையாட்டுச் சிறுவன், தாயார் உபதேசத்தால் விஷ்ணுவின் சரணத்தையடைந்தான் என்ற இந்த கதை கேட்பவர்களுக்கும், சொல்பவர்களுக்கும் நன்மையைத் தரும்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் பன்னிரெண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் 52)
அத்யாயம்-13
விதுரர் துருவன் கதையைக் கேட்டு சற்று நேரம் அதிலேயே லயித்து இருந்தார். மைத்ரேய முனிவரிடம் கேட்டார். ப்ரசேதஸ் என்பவர்கள் யாவர்? அவர்கள் வம்சத்தில் வந்தவர்கள் யாவர்? எந்த விதத்தில், என்ன செய்ததால் புகழ் பெற்றார்கள் ¿ யாக காரியங்களை எந்த இடத்தில் இருந்து செய்தார்கள்? மகாபாகவதம் என்பது மிகப் பெரிய நூல். பகவானையே கண்ட நாரதர் அவர் எப்படி கர்மயோகம், பணிவிடை செய்வது போன்ற விஷயங்களைத் தெரிந்து கொண்டார்? பகவான் யாக புருஷன். தர்ம சீலரான ஜனங்களால் வேதம் சொன்னபடி யாக காரியங்களைச் செய்வர். பக்தி என்பதை நாரதர் தானே பரப்பினார். தேவரிஷி நாரதர். பகவத் கதை என்பது எப்படி வந்தது. அவர் வர்ணித்து சொன்னபடியே, முனிவரே! எனக்கும் சொல்லுங்கள், என்றார்.
மைத்ரேயர் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார். த்ருவன் மகன் உத்கலன் ஏனோ அரசு பதவியையும், புகழையும் விரும்பவில்லை. பிறவியிலேயே சாந்தமானவன், தந்தை வழியில் அனைத்து உயிரினங்களையும் சமமாக காணும் குணத்தை அடைந்தான். ஆத்ம தத்வம்- பகவானின் அம்சமாக உலகம், உலகம் அவருள் அடக்கம் என்பது அவனுக்கு இயல்பாக புரிந்திருந்தது. யோக சாதனைகளில் தீவிரமாக ஈடுபட்டான். எதிலும் பற்றில்லாத அவனை உலகத்தார், ஜடம் என்றும் உன்மத்தன் என்றும் ப்ரமியின் மகன் தானே என்றனர். (ப்ரமம் என்பது உலக வழக்கில் அறியாமை சார்ந்ததாக கருதப் படுகிறது) அவனுக்கும் ஆறு பிள்ளைகள் பிறந்தனர். புஷ்பார்ணன் என்பவன் மனைவி ப்ரபா,தோஷா என்ற இருவர். ப்ராத:, மத்யம்தினம், சாயம் என்று அவர்கள் பிள்ளைகள். தோஷாவின் மூன்று பெண்கள்: ப்ரதோஷோ, நிசீதோ,வ்யுஷ்ட என்று அவர்கள் பெயர்கள். அந்த வம்சத்தில் வந்தவன் மனு, அவன் வம்சத்தில் அங்கன் என்பவனின் மகன் வேனன். இந்த வேனன் என்பவன் அதி துஷ்டனாக இருந்தான். ப்ரஜைகள் மிகவும் வருந்தினார்கள். அங்க ராஜா அவனை திருத்தவும் முடியாமல் தானே ஊரை விட்டு வெளியேறினான். வேனனை முனிவர்கள் சபித்தனர். உயிர் பிரிந்த உடலில் அவன் வலது கையில் கடைந்தனர். வேனனின் அராஜகமான ராஜ்யத்தில், திருடர்கள் அதிகரித்தனர். மேலும் பலவிதமாக மக்கள் வருந்திய சமயம் ஸ்ரீமன் நாராயணனின் அம்சமாக ப்ருது பிறந்தான். அரசனான்.
விதுரர் சொன்னார்: நல்ல சீலம் உடையவர் என்றும் சாது, மஹாத்மா என்பர். அவருடைய காலத்தில் எப்படி துஷ்டர்கள், வந்தனர், ஜனங்கள் வருந்தும் படியாக. வேனனின் கையில் ப்ரும்ம தண்டத்தால் கடைந்ததாகச் சொன்னீர்கள்? அரசன் துறவு மேற்கொண்டபின், தர்மம் அறிந்த முனிவர்கள் ஏன் அவனை தண்டித்தனர். சாதாரணமாக அரச குலத்தைச் சேர்ந்தவர்களை குற்றம் செய்திருந்தாலும் கொல்வதில்லை.
மைத்ரேயர் சொன்னார். அங்க ராஜன் அஸ்வமேத யாகம் செய்தான். பெரிய யாகம். தேவதைகளை அழைத்த பொழுது யாரும் வரவில்லை. ருத்விக்குகள் திகைத்து, அரசனிடம் சொன்னார்கள். ராஜன், நாங்கள் சிரத்தையாக சாஸ்திரத்தில் சொன்னபடி தான் யாக காரியங்கள் செய்து வருகிறோம். பொருள்களையும் சுத்தமாக தேடி கொண்டு வந்திருக்கிறோம். சந்தஸ் என்ற வேதத்தை அத்யனம் செய்த, விரதங்களை அனுஷ்டிக்கும் வேத விற்பன்னர்களை அழைத்து வந்திருக்கிறோம். தேவர்களை கர்மசாக்ஷிகள் என்பர். அவர்கள் வராமல் ஏன் எங்களை அவமதிக்கிறார்கள் ?
இதைக் கேட்டு யாகத்தின் யஜமானானஅங்க ராஜா மிக வருந்தினான். சபையைக் கூட்டி தன் மந்திரிகளை விசாரித்தான். அழைத்தும் தேவர்கள் வரவில்லை. சபையோர்களே, சொல்லுங்கள்,நான் செய்த தவறு என்ன?
அரசவையின் மந்திரிகள் சொன்னார்கள்: நரதேவா! இதில் நீங்கள் எதுவும் தவறு செய்யவில்லை. குற்றம் என்று சொல்ல வேண்டுமானால், உங்களுக்கு மகன் என்ற சந்ததி இல்லை. புத்ரகாமனான நீங்கள் புத்ரகாமேஷ்டி என்ற யாகத்தை செய்யுங்கள். அதன் பின் தேவர்கள் உங்கள் யாகத்தில் பங்கு ஏற்பார்கள். அங்கராஜனும் அவ்வாறே ஹரியை தியானம் செய்து வேண்டினான். யாகத்தை நடத்திய ப்ராம்மணர்களும் விஷ்ணுவை குறித்த யாகத்தைச் செய்தனர். அந்த யாக குண்டத்திலிருந்து பொன்னால் ஆன ஆடையும், கைகளில் பொன்னால் ஆன பாத்திரத்தில் பாயசம் என்பதையும் வைத்துக் கொண்டு ஒரு திவ்ய புருஷன் எழுந்தான். அந்த ப்ராம்மணர்கள் அனுமதியுடன் தானும் தன் பத்னிகளுமாக பாயசத்தை அருந்தினான்.
அரசி கர்பம் தரித்து சரியான காலத்தில் மகனைப் பெற்றாள். அவன் தன் தாய் வழி பாட்டனார் அதர்மத்தில் வளரும் ம்ருத்யு. அவர் வழியில் இந்த மகனும் அதர்மமே உருவானான். வளர வளர, அவனது மூர்க்கம் அதிகமாயிற்று. வேட்டையாடச் சென்றால் சாதுவான மிருகங்களையும் முனிவர்களையும் அடிப்பான். வேனன் என்றே அழைக்கப் பட்டான். விளையாடும் சிறுவர்களை இளம் வயதினரை பிடித்து, கொடூரமாக அடிப்பான். துஷ்டனான இந்த மகனை பலவிதமாக திருத்த முயன்றும் பலனில்லை. ப்ரஜைகள் இல்லாத குடும்பஸ்தர்கள், தேவனை வேண்டி மகனைப் பெறலாம். ஆனால் அதே மகனால் துன்பப்படும் பொழுது, யாரை வேண்டுவது? துஷ்டனான மகனால் ஜனங்கள் பெற்றவரை தூற்றுகிறார்கள். எல்லோரிடமும் அந்த மகனால் விரோதம் வருகிறது. இதைத்தான் மோஹம் என்றும் பந்தனம் என்றும் சொன்னார்கள். சம்சாரம் க்லேசம் தருவதே என்று பண்டிதர்கள் சொல்வார்கள். மகன் பிறப்பது, தன் மகன், தன் குலம் வளர்ப்பவன் என்பதால் வரம் என்று நினைத்தோம். நல் வழியில் செல்லாத மகன் குடும்பத்தில் துன்பத்தைத் தான் தருகிறான். வீடே வசிக்க முடியாததாக ஆகிறது. என்று இப்படி பலவாறாக நினைத்து குழம்பியவன் விடியற் காலையில் வீட்டைத் துறந்து வெளியேறினான்.
அரசன் வெளியேறியதை அறிந்த ஊர் மக்களும், மந்திரிகளும் தேடக் கிளம்பினர். எங்கும் தேடியும் கிடைக்காமல் திரும்பிவந்து யாக சாலையில் இருந்த ரிஷிகளிடம் சொன்னார்கள்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் பதின்மூன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் 41)
அத்யாயம்-14
ப்ருகு முதலான முனிவர்கள் லோக க்ஷேமத்தை நினைத்து, நாடு அரசன் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதால், சுநீதீ யை அழைத்து ப்ரஜைகளுக்கு சம்மதம் இல்லையென தெரிந்தே வேனனை ராஜ்யத்தில் அரசனாக அமர்த்தினர், திருடர்கள் சர்பத்தால் கடிபட்ட மூஞ்சூறு போல ஓடி விட்டனர். அவன் உக்ரமாக தண்டனை கொடுப்பவன் என்று பயந்தனர். உடனே,தன்னை மிக சக்திசாலியாக கல்பித்துக் கொண்டு அஷ்ட விபூதிகளும் தன்னை வந்தடைந்து விட்டது என்றும் தன்னைத் தானே பெருமையாக நினைத்துக் கொண்டான். அங்குசம் இல்லாத மதயானை போல கட்டுக்கடங்காதவன் ஆனான். ரதத்தில் ஏறி ஊரைச் சுற்றினான். பூமி நடுங்கியது.
யாக யக்ஞங்கள், தானம், ஹோமம் எதுவும் செய்யக் கூடாது என்று ஆணையிட்டான். பேரீ வாதங்களுடன் எப்பொழுதும் அட்டஹாஸமாக வலம் வந்தான். யாகம் செய்பவர்களும், முனிவர்களும், துஷ்டத்தனம் அளவு மீறி போகிறதே என்று வருந்தி தங்களுக்குள் பேசிக் கொண்டனர். விறகின் இரு பக்கமும் தீ வைத்தது போல குணமில்லாத அரசனால் துன்பமே என்றனர். அராஜக பயம் என்று இவனை அரசனாக்கினோம். தகுதியில்லாதவன், இவன் அரசன் ஆனதாலேயே அதிக பயம் என்றாகி விட்டது. இப்பொழுது மக்களுக்கு என்ன பதில் சொல்வோம். பாம்புக்கு பால் வார்த்து வளர்த்தால் அது வளர்த்தவனே என்று கடிக்காமலா இருக்கும். சுபாவமாகவே வேனன் துஷ்டன். அதை நிரூபித்து விட்டான். ப்ரஜைகளை கொல்லுகிறான்.
சுனீதீ யின் வம்சத்தினன் என்பதால் அரசனாக்கினோம். சொல்லி பார்க்கலாம். சமாதானமாக சொன்னால் ஒருவேளை சம்மதிக்கலாம். திருந்தலாம். அப்படி நமது சொல்லை ஏற்காவிட்டால், லோக நன்மைக்காக நாம் நமது தேஜஸாலேயே தகித்து விடுவோம். சாது மிரண்டால் என்பது போல, தங்களை அடக்கி பழகிய முனிவர்களுக்கு கோபமும் அடங்கியே இருக்கும். எல்லோருமாகச் சென்று வேனனிடம் சமாதானமாக பேசிப் பார்த்தனர்.
“அரசகுமாரனே! உன்னிடம் உள்ளதை எடுத்துச் சொல்கிறோம். உன் ஆயுள், ஸ்ரீ, கீர்த்தி இவை வளரட்டும்.வாக்கு,மனம், உடல்,புத்தி இவைகளால் தர்மத்தை அனுசரிப்பதால் மனிதர்கள் சோகமில்லாமல் வாழ்வார்கள். இவற்றை மறுத்தால் அடைவது எல்லையில்லாத சோகம் மட்டுமே. பிரஜைகளுக்கு க்ஷேமம் என்று செய்வதை மறுக்காதே, தடுக்காதே. இவை நஷ்டமானால், அரசன் ஐஸ்வர்யம் இழப்பான், பதவியிலிருந்து இறங்குவான்.
ராஜன்! உன் மந்திரிகள் யாருமே உனக்கு நன்மையைச் சொல்லும் நிலையில் இல்லை. அவர்களே துஷ்டர்கள். உன் செல்வத்தை அனுபவிக்கவே உன்னை சூழ்ந்து நிற்கிறார்கள். எந்த ராஜ்யத்தில், பகவான் யாக புருஷன், என்று எண்ணி மக்களால் தங்கள் குல வழக்கப்படி பூஜிக்கப் படுகிறாரோ, அங்கு அவர் சந்தோஷப் படுகிறார். விஸ்வாத்மா அவர். தன் சாஸனம்- தன் ஆளுமை மதிக்கப் படுகிறது என்பது அவருக்கு திருப்தியைத் தரும். அவர் திருப்தியடைந்தால் எது தான் கிடைக்காது. வரி வசூல் செய்யும் அரசர்கள், லோகபாலர்கள். அவர்கள் கடமை அதை மக்கள் நன்மைக்காக செலவழிப்பது. அவர்கள் உலகம் முழுவதும் யாக யக்ஞங்கள் செய்வது, மூன்று வேதங்களும் அவனே, தவமே உருவானவன் அவனிடத்தில் மூவுலகத்து செல்வங்களும் உள்ளன என்பர். உன் தேசத்தினர் செய்யக் கூடாது என்று தடை விதிக்காதே. ப்ராம்மணர்களைக் கொண்டு யாகம் யக்ஞம் செய்விப்பதால், பகவானின் அம்ச பூதமான தேவர்கள் மகிழ்கிறார்கள். அவர்கள் உலகுக்கு நன்மையே செய்வார்கள். அதை அவமரியாதை செய்யாதே.
வேனன் சொன்னான்: அறிவிலிகளே! நீங்கள் தான் அதர்மத்தை தர்மமாகச் சொல்கிறீர்கள். அரசனை கடவுளாக மதிக்க வேண்டியது இருக்க, தன் பதியை விட்டு ஜார பதியை விரும்பும் பெண் போல பேசுகிறீர்கள். யார் இந்த யக்ஞ புருஷன்? விஷ்ணு,விரிஞ்ச்சி,கிரீசன், இந்திரன், வாயு, யமோ, சூரியன், மழை, சந்திரன், குபேரன் பூமி, அக்னி வருணன், யாவரும் மேலும் பலரும் அரசனின் சரீரத்தில் இருக்கிறார்கள். வரமோ, சாபமோ தருவது அரசனே. சர்வதேவமயன் அரசன். யாக யக்ஞங்கள் எதுவும் வேண்டாம், பலி என்று தருவதை என்னிடம் கொடுங்கள். என்னை விட உயர்ந்தவன் யாருண்டு?
புத்தி கெட்டவன், இவனுக்கு புத்தி சொல்ல வந்தோமே என்று ரிஷி முனிவர்கள் வருந்தினர். தன்னை பண்டிதனாக எண்ணி கர்வத்தின் உச்சியில் இருக்கும் இவனுக்கு சமாதானமாக நாம் பேசுவது உகந்ததல்ல. ஹன்யதாம், கொல்லுங்கள், ஹன்யதாம், இவன் பிறவி துஷ்டன் இவனைக் கொல்லுங்கள். கொடியவன் உயிருடன் இருந்தால் உலகை சீக்கிரமே பஸ்மமாக ஆக்கி விடுவான் என்றனர்.
ஹரி நிந்தையை செய்பவன் இவன். இவன் அரசனின் வராசனம் என்பதில் அமர தகுதியில்லாதவன். நரதேவன் என்று அரசர்களைச் சொல்லுவோம். வெட்கம் இன்றி விஷ்ணுவை யக்ஞபதி என்றால் நிந்திக்கிறான். ஒரு குணமுமில்லாத வேனன்- உலகையே நாசமாக்குவான். இந்த ஐஸ்வர்யத்தைப் பெற்று நியாயமாக இருப்பவனுக்கு அனுக்ரஹம் செய்வது போல அநியாயமாக இருப்பவனுக்கு தண்டனையும் தரத்தான் வேண்டும். இவ்வாறு எண்ணிய ரிஷிகள், ஹூங்காரத்தாலேயே அவனை தகித்து விட்டனர். அச்யுதனை நிந்தை செய்து வாழவா முடியும்?
ரிஷிகள் திரும்பிச் சென்றவுடன் தாயான சுநீதா, வித்யா யோகம் என்ற ஒரு முறையால் அவன் உடலை காப்பாற்றி வந்தாள். ஒரு சமயம், முனிவர்கள் சரஸ்வதி நதியில் ஸ்னானம் செய்து விட்டு கரையில் தங்கள் நித்ய அக்னி காரியங்களை செய்து விட்டு பேசிக் கொண்டிருந்தனர். ஏதோ கெடுதல் வரும் போலத் தெரிகிறது. பயங்கரமான உத்பாதம் வர இருக்கிறது. பூமி திருடர்களால் கெடுதல் செய்யப் படுவாள். இப்படி பேசிக் கொண்டிருக்கையிலேயே, திருடர்கள் புழுதிப் படலம் வீச ஓடுவதைக் கண்டனர். செல்வத்தை சுரண்டுவதே காரியமாக இவர்கள் அலைவதைக் கண்டு வருந்தினர். தலைவன் இல்லாமையால் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்வதைக் கண்டனர். அராஜகம். நல்லதே இல்லையென்றாகி விட்டது. தடுக்க யாரும் இல்லை.
பாத்திரம் ஓட்டையானால், அதில் விடும் பாலும் ஒழுகுவது போல ப்ராம்மணர்களின் வீர்யமும் குறைந்தது.
அங்க ராஜன் ராஜ ரிஷியாக இருந்தவன். அவன் வம்சமே வீணாவதா ? இந்த வம்சத்து அரசர்கள் அனைவரும் நன்றாகத் தான் ஆண்டார்கள். இவ்வாறு யோசித்து, ரிஷிகள் இறந்த அரசனின் துடையை கடைந்தனர். அதிலிருந்து பாஹுகன் என்ற நரன் வந்தான். காகம் போன்று கரு நிறத்துடன், சிறு உருவமாக, சிறுத்த புஜங்கள், பெரிய கூனல் முதுகில், வளைந்த நாசியும், ரத்தம் போல சிவந்த கண்களுடன், முடி தாமிர நிறமாக குச்சி குச்சியாகவும் இருக்க, வணங்கி நின்றவன், நான் என்ன செய்யவேண்டும் என்று தீனமாக கேட்டான். நிஷீதத- உட்காரு என்று என்றனர். பின்னர் அவன் வம்சமே நிஷாதர்கள் எனப்பட்டனர். மலைகளிலும் காடுகளில் மட்டுமே தென்படுபவர்களாக இருந்தனர்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் பதிநான்காவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள் 46)
அத்யாயம்-15
மைத்ரேயர் சொன்னார்: மறு முறை அரசனுக்கு சந்ததியை உருவாக்க ரிஷிகள் முயன்றனர். புஜங்களில் அதே போல கடையவும் ஒரு ஜோடி வந்தனர். ரிஷிகள் மகிழ்ந்தனர். பகவானுடைய சங்கல்பம் என்றனர். இது விஷ்ணுவின் கலை-ஒரு பகுதி. உலகை காக்கவே வந்துள்ளது. ஸ்ரீ தேவியான லக்ஷ்மியின் கடாக்ஷமே. என்றும் அருகில் இருக்கும் மஹா விஷ்ணுவின் பத்னி ஸ்ரீ தேவி. இவன் அரசர்களில் முதல்வன் என்று பெயர் பெறுவான். உலகெங்கும் இவன் புகழ் பரவும் ப்ருது என்றே அழைப்போம். (ப்ருதுஸ்ரவஸ்-எங்கும் பரவிய புகழ்) இவளும் சுததி (ஆழகிய பற்களையுடையவள்) அர்சி என்ற பெயருடன் ப்ருதுவுடனேயே வந்தவள். இவளும் லக்ஷ்மி தேவியின் அம்சமே.
மைத்ரேயர் சொன்னார்: அந்த ரிஷிகள் சந்தோஷமாக இருவரையும் பாராட்டினர். கந்தர்வர்கள் பாடினர். புஷ்பவ்ருஷ்டி உண்டாயிற்று. சித்தர்கள் தங்கள் ஸ்த்ரீகளுடன் நடனம் ஆடினர். சங்கம், துர்யம், ம்ருதங்கம் முதலிய வாத்யங்கள் முழங்கின. தேவர்கள், ரிஷிகள், பித்ரு கணங்கள் எல்லோரும் அந்த காட்சியைக் காண வந்து சேர்ந்தனர். ப்ரும்மா பார்த்தவுடன், வேனனின் வலது கையில் கதையுடன், பாதத்தில் அரவிந்தம், இவைகளைப் பார்த்து வியந்து நிச்சயமாக இது ஸ்ரீ ஹரியின் அம்சமே என்றார். பரமாத்மாவின் அழிவில்லாத சக்கரம் -அதன் அம்சம் என்றார்.
அதன் பின் அபிஷேக ஏற்பாடுகள் ஆரம்பித்தன. பல இடங்களிலிருந்தும் ஜனங்கள் தேவையான பொருட்களைக் கொண்டு வந்து சேர்த்தனர். ஆறுகள், நதிகள், மலைகள், கிராமங்கள், பறவைகள், மிருகங்கள், வானம், பூமி என்று அனைவரும் எதோ ஒரு பொருளைக் கொண்டு வந்தனர். ப்ருது அரசனாக அபிஷேகம் செய்யப் பட்டான். பத்னி அர்சியும் அலங்கரிக்கப்பட்டு உடன் இருந்தாள். உயர்ந்த ஆடைகள், ஆபரணங்கள் என்று பலவும் அவர்களுக்கு தனதனால் அளிக்கப் பட்டன. பொன்னாலான ஆசனத்தையும் தனதன் அளித்தான். வருணன் வெண் குடையை, வாயு சாமரங்களை, தர்மன் புகழ் வாய்ந்த கீர்திமதி என்ற மாலையை,இந்திரன் உயர்ந்த கிரீடத்தை, யமன் சம்யமனம் என்ற தண்டம், ப்ரும்மா ப்ரும்ம மயமான கவசம், பாரதி அழகான ஹாரம், ஹரி சுதர்ஸன சக்கரம், அவர் மனைவி குறைவில்லாத செல்வ செழிப்பு, ருத்ரன் தச சந்த்ரம் என்ற வாள், நூறு சந்த்ரம் என்ற வாளை அம்பிகா. சோமன் அம்ருத மயமான குதிரைகள், த்வஷ்டா அழகிய வேலைப் பாடமைந்த ரதம், அக்னி, ஆஜவகம் என்ற வில், சூர்யன் ஒளி வீசும் அம்புகள், பூமி யோக மயமான பாதுகை, வானம் புஷ்பங்களின் மாலைகள் என்று பரிசளித்தனர். வானத்தில் சஞ்சரிக்கும் தேவ கன்னிகைகள் நாட்யம், சுஸ்வரமான கீதம், வாத்யங்கள், இவைகளைக் கொடுத்தனர். அந்தர்தானம் என்பதை வானத்தில் சஞ்சரிக்கும் பறவைகள், ரிஷிகள் ஆசிர்வாதங்களை, சமுத்திரம் தன்னிடத்தில் தோன்றும் சங்கு, கடல்கள், பர்வதங்கள், நதிகள், ரத வீதிகளை கொடுத்தனர். சூதர்கள், மாகதர்கள், வந்தீ என்று பலர் அரசவையில் பாடவும், ( துதிப் பாடல்கள், கட்டியம் கூறுதல் போன்ற வேலைகள் செய்பவர்) வந்தனர். அரசனின் வம்சாவளியை சொல்லும் வழக்கப்படி, வேனன் மகன் என்றே சொன்னார்கள்.
அபிஷேகம் முடிந்து ப்ருது பேசலானான்: அனைவருக்கும் வணக்கம், சூதர்களே, மாகதர்களே, வந்தி எனும் துதி பாடுபவர்களே, உலகில் நான் இன்னும் அறியாதவன், அறியப் படாதவனே. உங்கள் புகழ் பாடல்களை எப்படி ஏற்றுக் கொள்வேன்? எதுவுமே நான் செய்ய ஆரம்பிக்கவில்லையே. எனவே, உங்கள் வார்த்தைகள் பொருளற்றவை. சபையோர்களே, உள்ளபடி சொல்லுங்கள். உத்தம புருஷர்களாக இருந்த பெரியவர்களின் குணங்களை நினைத்து பாடாதீர்கள். மஹத்தான குணங்களையுடைய பகவான், அவனை போற்றும் பாடல்கள் சாதாரண ஜனங்களுக்கு ஏற்புடையது அல்ல. இன்னமும் நான் நீங்கள்போற்றும் படி எதுவும் செய்யவில்லை. செய்த பின் பாராட்டுங்கள். இப்பொழுது புகழ்ந்து சொல்லி நானும் ஏற்றுக் கொண்டால் பிற் காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் அது எனக்கு தர்ம சங்கடத்தையே உண்டு பண்ணுகிறது.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் பதினைந்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-26
அத்யாயம்-16
மைத்ரேயர் சொன்னார்: இப்படிச் சொன்ன அரசனைப் பார்த்து அரச சபையில் பாடுவதை கௌரவமாக நினைத்திருந்த பாடகர்கள், மகிழ்ந்தனர். எங்கள் பாடலை விட தற்சமயம் நீங்கள் பேசியது அம்ருதமாக இருக்கிறது, அரசே. நாங்கள் பாடியதும் வெற்று வார்த்தையல்ல. பகவான் தன் மாயையால் அவதரித்து இருப்பதை அறிவோம். வேனனின் அங்கஜாதன் (மகன்), நல்ல வீரமும், ஆண்மையுடனும் வருவாய். வாசஸ்பதி கூட நினைத்து பார்க்க முடியாத ஆற்றலுடன் வளருவாய். எங்கள் திருப்திக்காக பாடுகிறோம். தற்சமயம் ப்ருதுவாக வந்திருப்பது ஹரியே என்றே முனிவர்கள் சொன்னார்கள். சிலாக்யமான செயல்கள் செய்வான் என்றனர். இந்த அரசன் தர்மத்தைக் காப்பான். நல்ல முறையில் ஆட்சி செய்வான், வரப் போகும் அரசர்களுக்கும் முன்னோடியாக இருப்பான் என்றனர். இவன் ஒருவனே, லோகபாலர்கள் அனைவரையும் தன்னுள் வைத்தவன். அந்தந்த காலங்களில் இரு லோகத்திற்கும் நன்மையானதை குறைவின்றி செய்வான் என்றனர்.
சூரியன் போல அனுகூலமாக இருப்பான். எட்டு மாதங்கள் சூரியன் பூமியிலிருந்து ஜலத்தை உறிஞ்சி, பின், மழை காலத்தில் மழையாக பொழிவது போல. வசூல் செய்வதும் காலத்தை அனுசரித்து, மக்கள் சிரமப்படாமல் இருக்கும்படி, அதிகமாக விளையும் சமயம் அதிகமாகவும், மற்ற நாட்களில் முடிந்தவரையும் வசூலிப்பான். பூமியைப் போல பொறுமையாக இருப்பான். இந்திரனைப் போல ரக்ஷிப்பான். காலத்தில் இந்திரன் வர்ஷிப்பது போல இவனும் குடி மக்களை ரக்ஷிப்பான். அனுகூலமாக பேசி, அன்புடன் நோக்கி, மென் முறுவலுடன் குறைகளைக் கேட்டறிந்து ஆட்சி செய்வான். ஆடம்பரமாக தன்னை வெளிப் படுத்திக் கொள்ளாமல் அவசியமான செயல்களை முன் கூட்டியே செய்து விடுவான். அருகில் இருப்பது போலவே இருந்தாலும் எவரும் மிக நெருங்கி அவனது கொள்கைகளில் தலையிட விடாமல் தள்ளியிருப்பான். வேன- மூங்கில் – மூங்கில் காட்டில் தீ தோன்றுவது போல நெருங்க முடியாதவனாகவும் இருப்பான்.
சாரணர்களைக் கொண்டு மக்களை உள்ளும் புறமும் எடை போட்டு வைத்திருப்பான். தலைமை பொறுப்பை அலட்சியமாக ஏற்று நடத்துவான். வாயுவும் ஆத்மாவும் உடலில் இருந்து செயல் படுவது போல. தண்டனை கொடுப்பதில் நியாயமாக இருப்பான். எதிரியானாலும் அவன் மகனை தண்டிக்க மாட்டான். தன் மகனேயானாலும் குற்றவாளி எனத்தெரிந்தால் தண்டிப்பான். இவனுடைய தர்மசக்கரம் தடையின்றி மானஸாசலம் வரை செல்லும். பகவான் சூரியன் உள்ளவரை இவனது புகழும் இருக்கும். இவர் தான் அரசன் என்று மக்கள் மகிழ்ந்து கொண்டாடும் வகையில் இருப்பான்.
திடமான விரதங்கள் உடையவன். , சத்யசந்தன், ப்ரும்ம தேவர்களான ப்ராம்மணர்களுக்கு ஆதரவாக இருப்பான். முதியவர்களிடம் மரியாதையாக இருப்பான். அடைக்கலம் அளிப்பவன். அனைவரையும் மதிக்கத் தெரிந்தவன். தீனர்களை அன்புடன் காப்பான். தன் மனைவியை தன்னில் பாதியாக மதிக்கத் தெரிந்தவன், பிற பெண்களைத் தாயாக காண்பான். பிரஜைகளிடம் தந்தை போல இருப்பான். ப்ரும்ம வாதிகளான ரிஷிகளிடம் கிங்கரன் போல சேவை செய்வான். மனிதர்களை தன்னைப் போலவே எண்ணி நடத்துவான். நண்பர்களிடம் ஆனந்தமாக இருப்பான். கூட்டங்களில் தெளிவாக பேசுவான். துஷ்டன் என்றால் தண்டிக்கத் தயங்க மாட்டான். த்ரயீ என்ற வேத புருஷனின் அவதாரம் இவன். உள்ளுறை ஆத்மாவே இவன். பரமாத்வானின் ஒரு பகுதியாக அவதரித்தவன். உலகை ஆள வந்தவன். ஆதலால் பலவிதமான பொருளற்ற புகழுரைகள் இவனுக்கு தேவையேயில்லை.
அரசர்களின் தலைவன். சூரியன் போல கைகளில் அம்பு வில் இவற்றுடன் தென் திசை நோக்கி யாத்திரை செல்வான். ஆங்காங்கு இருந்த சிற்றரசர்கள், தாங்களாகவே வரி செலுத்த வந்தனர். ஆதி ராஜன் சக்ராயுதம் வைத்திருப்பவன் என்று அனைவரும் மதிப்பும் மரியாதையுமாக எண்ணினர்.
நூறு அஸ்வமேத யாகங்கள் சரஸ்வதி நதிக் கரையில் செய்வான். அங்கு இவனது குதிரையை தேவேந்திரன் அபகரிப்பான். சனத் குமாரரை தன் மாளிகையில் சந்தித்து ஞானோபதேசம் பெறுவான். யாராலும் எதிர்க்க முடியாத பராக்ரமத்தோடு ராஜ்ய பாலனம் செய்பவனை விமரிசிக்க பயப்படுவார்கள். தடையின்றி உலகை சுற்றி வரும் பொழுது தன் தேஜஸால் அனைவரிடமும் சுமுகமாக இருப்பான். அதனால் தேவர்கள் மட்டுமல்ல, அசுரர்களும் புகழும்படி இருப்பான்
இவ்வாறு அரச சபையில் பாடும் வந்திகள்- பாடகர்கள். சொன்னார்கள்.
அதே போல ப்ருது என்ற அந்த அரசன் பிரஜைகள் போற்றும் படி இருந்தான். நாளடைவில் பூமியை சீராக்கி, பயிர்கள் நன்கு வளர தேவையானவைகளை விவசாயம் செய்பவர்களுக்கு கொடுத்து, மேலும் பல உதவிகளைச் செய்தான். பயிர் செழித்ததால் ராஜ்யத்தில் மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர். . மேட்டு நிலங்களை தன் வில்லால் பிளந்து சமமாக்கித் தந்தான். பாறைகளை அகற்ற உதவினான். ஆஜகவம் என்ற வில், அதை மீட்டி நாதம் வரச் செய்வான். வில்லை தோளில் தரித்தபடி செல்லும் சமயம், வாலை தூக்கிக் கொண்டு ம்ருகேந்திரனே உலாவுவது போல இருக்கும். பல சமயங்களில் தானே நிலத்தை உழுது சமன் செய்து விடுவான்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் பதினாறாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-26
அத்யாயம்-17
மைத்ரேயர் தொடர்ந்தார்: இவ்வாறு அந்த வேனன் மகன், தன் குணங்களாலேயே பிரசித்தி பெற்றான். வேண்டியவர்களுக்கு, தேவையானதைக் கொடுத்து, மரியாதைக்குரியவர்களை மதித்து வணங்கியும், முக்கியமான ப்ராம்மணர்களை , மற்ற வர்ணத்தினர், தன்னிடம் ஏவிய வேலைகளை செய்யும் பணியாளர்கள், முதல் மந்திரிகள், அரண்மனை ஆலோசகர்கள், ஊர் ப்ரமுகர்கள், ஜான பத தலைவர்கள், அவர்கள் வரிசைக் கிரமப் படி மதித்து நடந்து கொண்டான்.
விதுரர் கேட்டார்: பூமி பசு ரூபம் எடுத்தது ஏன்? பல விதமான ரூபம் உடையவள் தரித்ரீ என்ற பூ தேவி. அவளிடம் ப்ருது ராஜா என்ன கிடைக்கப் பெற்றான், கறந்தான் என்று சொன்னீர்கள். எதை கறந்தான்? எது கன்றாக இருந்தது? கறக்கப் பட்டது என்ன? இயற்கையிலேயே மேடும் பள்ளமுமாக இருந்தவள் பூ தேவி, அவளை எப்படி சமமாக்கினான்? அரசனுடைய யாக குதிரையை தேவர்கள் எதற்காக அபஹரித்தார்கள்?
ப்ரும்மன்! நீங்கள் ப்ரும்ம வித் – ப்ரும்மத்தை அறிந்தவர்களில் சிறந்த சனத் குமாரன் என்பவரிடம் கற்றவர்கள். ஞானம் விக்ஞானத்துடன் அறிந்தீர்கள். ராஜ ரிஷியாக இருந்த ப்ருது என்ன கதியடைந்தான்?
அதுவும், மற்றும் ஸ்ரீ க்ருஷ்ணர் சம்பந்தப் பட்ட பாகவத கதைகளையும் சொல்லுங்கள். நல்ல முறையில் சுவாரஸ்யமாக சொல்பவரிடம் கேட்பதே உயர்வு. விருப்பமுடன் கேட்கும் பக்தன் நான். உங்களுடைய, மற்றும் அதோக்ஷஜனுடைய கதைகளைச் சொல்லுங்கள். வேனன் மகனாக வந்த பகவான் பசுவை கறந்தான் என்பது பற்றி சொல்லுங்கள்.
மைத்ரேயர் சொன்னார்: ப்ருது அங்க ராஜ்யத்தில் அரச சபையில் முக்கியஸ்தர்களான ப்ராம்மணர்களால், அரசனாக அபிஷேகம் செய்து வைக்கப் பட்டான். ஜனங்களும் ஏற்றுக் கொண்டார்கள். ப்ருது ராஜ்யத்தை ஏற்றுக் கொண்ட சமயம், நாட்டில், பயங்கர பஞ்சம் வந்தது. பிரஜைகள், பசி, ஆகாரம் இல்லாமை, முதலியவற்றால் உடல் இளைத்து, அவரிடம் முறையிட்டனர்.
“அரசனே! நாங்கள் பசி கொடுமையால் மிகவும் தவிக்கிறோம். மரத்தின் உள்ளே அக்னி தகிப்பது போல. உங்களை சரணடைகிறோம். எங்களுக்கு உதவும் பதியாக எண்ணி எங்கள் கஷ்டங்களைச் சொல்கிறோம்.முதலில் எங்களுக்கு அன்னம் வேண்டும். பசி தாங்கவில்லை. எங்கள் உடலில் உயிர் வர, சக்தியை அளியுங்கள். லோகபாலன் நீங்கள்” என்றனர். ப்ருது திகைத்தான். பிரஜைகளின் இந்த நிலையை எப்படி சரி செய்வது? என்று சம்பந்தப் பட்டவர்களிடம் வினவினான். கலந்து ஆலோசித்து கையில் வில்லை எடுத்து பூமியை துளைக்க முயன்றான். அவன் கை வில்லை பார்த்து நடு நடுங்கி பூ தேவி துரத்தப் பட்ட மான் போல ஓடினாள். அவளை அரசன் துரத்திச் சென்றான். அவளைக் கண்டவர்கள் ம்ருத்யுவைக் கண்டது போல பயந்தனர். நானா திசைகளிலும் ஓடி யாரும் உதவ முன் வராததால், அரசனிடமே முறையிட்டாள். அவளும் தர்மம் அறிந்தவள் தானே. அதனால் “அரசனே உன் ப்ரஜைகளைக் காக்க என்னை அடிக்க வருகிறாய். என் குறையையும் கேள். என்னையும் நீ பாலிக்க வேண்டியவனே” என்றாள். நான் என்ன குற்றம் செய்தேன் என்று அடிக்க வருகிறாய்? தீனமான பெண் என்றும் பாராமல் கொல்லத் துணிகிறாய்? உன்னை தர்மம் அறிந்தவன் என்று சொல்கிறார்களே , அதற்கு தகுந்தவன் தானா? குற்றமே செய்திருந்தாலும், உடனடியாக பெண்களை துன்புறுத்த மாட்டார்கள். தீன வத்ஸலன் என்று பெயர் பெற்றவன், இப்படி செய்யலாமா? என்ன நினைத்து என்னை துளைக்க முயன்றாய்? என்னை துண்டாக்கி என்ன செய்யப் போகிறாய்? என்னை என்றும் அழியாத நாவம்- படகு, அதன் மேல் விஸ்வம்-உலகம் நிலைத்திருக்கிறது என்பர். மஹா பிரளய நீரின் மேல் நிலையாக நிறுவப் பட்டிருக்கிறது என்பதை அறியாதவனா? என்னை அழித்தால், உன்னுடன், உன் பிரஜைகளையும் அலை மோதும் நீரில் தான் தள்ளப் போகிறாயா?
ப்ருது சொன்னான்: வசுதே! என் சாஸனத்தில் உள்ளவள், என் உத்தரவை மீறுபவர்களை தண்டிப்பது என்ற முறையில் உன்னை தண்டிக்க வந்தேன். பூ லோக உயிரினங்களுக்கு உணவைத் தருவது உன் செயல். வசு- செல்வம் உன்னிடம் தான் இருக்கின்றன. தினமும் புல்லைத் தின்கிறாய், பால் தருவதில்லை. அதனால் துஷ்டை- அத்து மீறியவள் தண்டனைக்குரியவள். ஸ்வயம்பூ, அனைத்து ஔஷதிகளின் (தாவரங்கள்) விதைகளையும் உன்னிடம் ஒப்படைத்தார். நீ அதை வளர விடாமல் வைத்திருக்கிறாய். இதோ பார், இவர்கள் உணவு இல்லாமல் வாடி வதங்கி இருக்கிறார்கள். இவர்கள் கஷ்டத்தை போக்க நான் என்ன செய்வேன். அதனால் உன்னிடம் ஒளித்து வைத்திருப்பதை என் பாணங்களால் வெளிக் கொணரப் போகிறேன். பெண் என்று சொல்கிறாய். யாராயிருந்தாலும் மற்றவர்களிடம் இரக்கம் இல்லாமல் நடந்து கொண்டால், என் போன்றவர்கள் வதைக்கத்தான் செய்வார்கள். பசு வேடம் போட்டுக் கொண்டு வந்திருக்கிறாய். உன் மாயையை அறிவேன். என் பிரஜைகளை காப்பாற்ற உன்னை துளைத்து எடுக்கப் போகிறேன்.
ஆத்திரத்துடன் க்ருதாந்தன் -யமன்- போல பேசும் அரசனை விட்டு பூமி பகவானை துதி செய்தாள்.
‘நம: பரஸ்மை புருஷாய ‘ முதல் தேவனான பரம புருஷனை வணங்குகிறேன். உன் மாயையால் பலவித உருவங்கள் எடுத்துக் கொள்கிறாய். குணமயமானவன் நீ. உன் ஸ்வரூத்துக்கு ஏற்றபடி செல்வமோ, செயலோ, செய்வித்தலோ, மாற்றுவதோ உன் வழக்கம்.
உன்னால் நான் நியமிக்கப் பட்டேன். ப்ரும்மாவால் என்னிடத்தில் பொருள்கள் சேமித்து வைக்கப் பட்டன. இந்த அரசன் வில்லும் கையுமாக வந்து மிரட்டுகிறான். உன்னையன்றி வேறு யாரிடம் சரணடைவேன்?
முன்னொரு சமயம், உலக ஸ்ருஷ்டிக்காக, சராசரத்தையும் தன் மாயையால் என்னிடம் ரகசியமாக வைத்து பாதுகாக்கச் சொல்லி ஆணையிட்டாய். அதைத் தான் நான் செய்கிறேன். தர்ம பரமாக நான் செய்வதை இந்த அரசன் அழிக்கப் பார்க்கிறான்.
ஈசன் தாங்கள் சேமித்த செல்வம் தானே இது.. விவரம் தெரியாத இந்த ஜனங்கள் ஜயிக்க முடியாத உன் மாயையை அறியாமல், நீதான் செய்கிறாய், செய்விக்கிறாய், நீயே ஏகன், நீயே அனேகன் மேலான பரமேஸ்வரன் என்பதை தெரிந்து கொள்ளாமல், என்னை குற்றம் சொல்கிறார்கள்.
யுகங்கள் தோறும் ஸ்ருஷ்டிக்காக திரும்பவும் தேவையானவற்றை என்னிடம் பாதுகாப்பாக வைத்திருந்து, உன் சக்தியால், த்ரவ்ய, க்ரியா, காரக, சேதன, ஆத்மா இவைகளைக் கொண்டு பழையபடி உலகை உருவாக்குகிறாய். அந்த அளவற்ற சக்திக்கு நமஸ்காரம். அந்த பர புருஷனான வேத ரூபமான உனக்கு நமஸ்காரம்.
விபோ! தாங்களே நிர்மாணித்த இந்த உலகம் பூத,இந்திரிய, அந்த:கரண இவைகளின் கூட்டால் அமைந்தது. என்னை ரஸாதளத்திலிருந்து காப்பாற்றி கொண்டு வந்து ப்ரளய ஜலத்தில் ஸ்தாபித்தாய். ஆதி வராகனாக வந்த உனக்கு நமஸ்காரம். ஜலத்தில் தடுமாறிய என்னை நிலை நிறுத்திய தாங்கள் தான் என்னை தற்சமயம் காக்கவும் வேண்டும். அதே வீர மூர்த்தி இப்பொழுது ராஜ்ய பாலகனாக உக்ர மூர்த்தியாக கொடிய அம்புகளல் அடிக்கத் தயாராக நிற்கிறாய்.
புகழ் பெற்ற வீரர்கள், உன் குணங்களை பாடுபவர்கள், ஈஸ்வரனாக வணங்குபவர்கள், என்னைப் போலவே மனம் கலங்கி நிற்பார்கள். இந்த யுகத்தின் மாயை இது என்பதா. அந்த வீரர்களுக்கு நமஸ்காரம்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் பதினேழாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-36
அத்யாயம்-18
இவ்வாறு பகவானை துதி செய்த பின் பூதேவி, பயம் நீங்காதவளாக தன்னை சமாளித்துக் கொண்டு மேலும் ப்ருதுவைப் பார்த்து சொன்னாள்: உன் கோபத்தை அடக்கிக் கொள். நான் சொன்னதை யோசித்துப் பார். தேன் வண்டு போல நல்லதை மட்டுமே எடுத்துக் கொள்வது தான் பெரியோர்களுக்கு அழகு. இந்த உலகில், அல்லது பரலோகத்தில், தத்வ தரிசிகளான முனிவர்கள் மனிதர்கள் நன்மை பெற யோகம் என்பதே சிறந்த வழி என்று சொன்னார்கள். முன் சென்றவர்கள் காட்டிய வழி, அதில் தனக்கு பயன்படும் உபாயங்களை கண்டு கொள்ளலாம். சிலர் சிரத்தையுடன் தாங்களே முனைந்து எது நல்லது என்று அறிந்து கொள்கிறார்கள். இவைகளைக் கண்டு கொள்ளாமல் தானாக தான்தோன்றித் தனமாக செய்ய ஆரம்பிப்பவர்கள் திரும்பத் திரும்ப ஆரம்பித்து முடிவைக் காணாமல் பாதியில் நிறுத்தி, நேரமும் பொருளும் நஷ்டமாகும்,
அரசனே! முன் ப்ரும்மா ஔஷதிகள் (பச்சிலையுடைய செடி கொடிகள்) உணவிற்காக ஏற்படுத்தினார். அதை சில மூடர்கள் முறையின்றி பயன் படுத்தி அழித்தார்கள். நான் அதை பார்த்தேன். அனாவசியமாக திருடப் படுகிறது, முக்கியமான சில செடி கொடிகள், விளை பொருள்கள், யாக காரியத்தில் முக்கியமாக கருதப் படுபவை, உங்களைப் போன்ற லோக பாலகர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அரசர்கள் கண்டு கொள்ளவேயில்லை. காலப் போக்கில் அந்த விதைகள் க்ஷீணமடைந்து விட்டன. பல நாட்களாக நானும் அதை காக்கவே முயன்று வந்துள்ளேன். நீயே பார். எனக்கு ஒரு கன்றைக் கொடு. கன்றிடம் வாத்ஸல்யம் உடைய பசு நான். நான் பாலாக உன் தேவைகளைத் தருகிறேன். அனுரூபமான தோஹனம்- கறந்த பாலை வைக்கத் தகுந்த பாத்திரம். அதையும் கொடு. கறப்பவனாக பகவானே இருக்கட்டும். பூவுலகில் அடைக்கலம் தருபவனாக விளங்கும் பகவான் விரும்பினால், வேண்டிய அளவு அன்னம், கறந்து கொள். தேவர்கள் மழை பொழியாமல் விட்டாலும் என்னிடம் நீர் இருக்கவேண்டும். தண்ணீர் தங்க வேண்டுமானால் நிலம் சமமாக இருக்க வேண்டும். . அதனால் நிலத்தை சமமாக்கு. அதற்கு சமமாக என்னிடம் பாலையும் பெறுவாய்.
அரசனும் அவ்வாறே ஸ்வாயம்புவ மனுவை கன்றாக வைத்து, தன் கைகளாலேயே கறந்து ஔஷதிகள்- தாவரங்கள், செடி கொடிகள் முதலியவைகளைப் பெற்றான். (நிலத்தை சமன் செய்து, தண்ணீரையும் பெருமளவில் தங்கச் செய்து செடி கொடிகளையும், தாவரங்களையும் வளரச் செய்தான் என்பது உட்பொருள் தன் கைகளே பாத்திரமாக, -தன் புஜ வலிமையே மூல தனமான பூமியை வளப்படுத்தினதாக )
மற்றும் சில அறிஞர்கள், ப்ருது கறந்து கொண்டபின் , தங்களுக்கு வேண்டிய அளவு கறந்து கொண்டார்கள்.
ரிஷிகள், ப்ருஹஸ்பதியை கன்றாக வைத்து, சந்தோ மயமான (வேத மயமான) சுத்தமான பாலைக் கறந்து கொண்டார்கள். ( அராஜகமான வேன ராஜ்யத்தில் வேத பரமான யாகங்கள் எதுவும் செய்ய முடியாமல் இருந்ததை இதன் பின் தொடர்ந்தனர்)
தேவர்கள், இந்திரனை கன்றாக வைத்து பொன் மயமான பாத்திரத்தில் சோமம், வீர்யம், ஓஜஸ் என்ற பலம், இவைகளை பாலாக கறந்து கொண்டார்கள்.
தைத்யர்கள்- திதி புத்திர்கள், தானவர்கள், ப்ரஹ்லாதனை கன்றாக வைத்து, இரும்பு பாத்திரத்தில் தேவ மதுவை பாலாக கறந்து கொண்டனர். (ஓவ்வொரு யுகத்திலும் ப்ரஹ்லாதன் பிறப்பான் என்றபடி தங்கள் வம்ச நன்மையை விரும்பினர்)
கந்தர்வ அப்சரஸ் என்பவர்கள், விஸ்வாவசு என்பவரை கன்றாக வைத்து பத்ம மயமான பாத்திரத்தில், மது சௌபகம் காந்தர்வம் (கந்தர்வர்களுக்கு உரியதான மது சௌபகம்) என்ற பாலை கறந்து கொண்டனர்.
சிரார்த தேவதைகள் என்பவர்கள், மகா பாக்கியசாலிகளான சிலர், . பித்ருக்கள் சிரத்தையுடன் சூரியனை கன்றாக வைத்து மண் பாத்திரத்தில் கவ்யம் (कव्यम्) என்ற பாலை கறந்து கொண்டனர்.
சித்தர்கள் கபிலரை கன்றாக வைத்து, சங்கல்பமே பிரதானமான சித்திகளை, வான சாஸ்திர வித்தைகளை அவர்களும், வித்யாதரர்களும் பெற்றனர்.
மற்றும் சிலர் மாயா என்பதை மாயையை விரும்பும் மாயாவிகள், அந்தர்தானம், அத்புதம், இவைகளை செய்து காட்டும் அறிவை மயனை கன்றாக வைத்து தாரணையே (கற்றதை பலமுறை செய்து செய்து பார்த்தல்) பிரதானமாக உள்ளவைகளை கறந்தனர்.
யக்ஷ ராக்ஷஸர்கள் பூதங்கள் பிசாசங்கள், இரவில் நடமாடும் சிலர், பூதேசன்- சிவன் அன்பர்கள் கபாலம், ரக்தம் இவற்றை கறந்து கொண்டனர்.
பாம்புகள் சர்ப்பங்கள், நாகங்கள், தக்ஷகனை கன்றாக வைத்து விஷத்தை பில (பள்ளம்) பாத்திரத்தில் கறந்து கொண்டனர்.
பசுக்கள், காளையை கன்றாக்கி புல்லை,, பெரிய பற்களையுடைய ம்ருகேந்திரன் அரண்யமே பாத்ரமாக பற்கள் உடைய மிருகங்களை கறந்து கொண்டனர்.
மாமிசம் உண்ணும் ப்ராணிகள், மாமிசத்திற்கு ஏற்றவைகளை, சுபர்ணனை கன்றாக வைத்து பறவைகள் அசையும் அசையா பொருட்களுடன் சராசரத்தை விரும்பின.
வட வ்ருக்ஷம் என்ற ஆல மரத்தை கன்றாக வைத்து காட்டு மரங்கள், தனித் தனி விதமான பாலை பெற்றன. மலைகள் ஹிமவானை கன்றாக வைத்து, பலவிதமான தாதுக்கள் தங்கள் மலைச் சாரல்களில் பெற்றன.
இவ்வாறு ஒருவருவரும், தாங்கள் உயர்வாக எண்ணுவதை வைத்து, பூ தேவியின் பால் (உதவியால்) தங்களுக்கு ஏற்ற பாத்திரங்களில் சகல விருப்பங்களையும் தரும் பூதேவியின் அருளால் பெற்றனர். இதனால் மகிழ்ந்த ப்ருது அரசன், அன்புடன் பூதேயை தன் மகளாக ஏற்றுக் கொண்டான். அவள் சொன்னபடியே முடிந்தவரை மேடு பள்ளங்களை சீராக்கி தண்ணீர் தேங்கும்படி குளங்களை வெட்டி, கிராமங்களை, சற்று பெரிய நகரங்களை நிர்மாணித்தான். கோட்டைகளை, தானியங்கள் சேகரிக்கும் இடங்கள், கோசாலைகள், வ்ரஜ எனும் கால் நடைகளை வளர்க்கும் இடங்கள், போர் வீரர்களுக்கான கூடாரங்கள், வேட்டையாடுபவர்களுக்கான கேடம்(खेट्म्) என்ற இடங்கள், வியாபாரிகளுக்கான தனி இடங்கள், முதலியவற்றை நிர்மாணித்தான். இது வரை இது போல பொதுமக்கள் நலத்துக்கான இடங்கள் இருந்திருக்கவில்லை என்பதால் ப்ருது முதல் அரசன் புரம்- நகரம் என்பதை நிர்மாணித்தான். மக்கள் பயமின்றி வாழ்ந்தனர்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் பதினெட்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-32
அத்யாயம்-19
அதன் பின் ப்ருது, அரசனாக பல யாகங்களை செய்தான். மனுவின் ப்ரும்மாவர்தம் என்ற இடத்தில், கிழக்கு திசையில் சரஸ்வதி நதிக் கரையில், நூறு யாகங்கள் செய்தான். அதைப் பார்த்து, தன்னுடைய தனி சிறப்பு அது என்பதால் நூறு யாகங்கள் செய்தவன் என்று சிறப்பு பெயராக ‘சதக்ரது’ என்ற அழைக்கப் பட்ட இந்திரன் பொறாமை கொண்டான். யாக குண்டத்தில் தானே சாக்ஷாத் பகவான் ஸ்ரீ ஹரி, ஈஸ்வரன், தோன்றினான். ப்ரபு தானே சர்வ லோக குரு.
இந்திரனுடன், ப்ரும்மா, முதல் லோகபாலர்கள், கந்தர்வர்கள் பாடிக் கொண்டு வர, முனிகளும் அப்சரர்களும், சித்தர்கள், வித்யாதரர்கள், தைத்ய தானவர்கள், பகவானின் பார்ஷதர்கள் (பிரதான காவலர்கள்) சுனந்த நந்தன் என்பவர்களும், மற்றும் முக்கிய அனுசரர்கள், (பணியாட்கள்) கபிலர், நாரதர், தத்தர், யோகேசர்கள், சனகன் முதலானோர், அனைவரும் வந்தனர். பாகவதர்கள் இவர்களைப் பார்த்து உத்சாகமாக உடன் வந்தனர்.
ப்ருதுவின் ராஜ்யத்தில் பூமி சகல சௌக்யங்களையும், செல்வங்களையும் தருபவளாக இருப்பதைக் காணவே வந்தனர். எஜமானான அரசன் வேண்டிக் கொண்டான் என்று, செல்வங்களை பூ தேவி பாலாக வர்ஷிக்கிறாள், என்பது ஆச்சர்யம். நதிகள் அனைத்து ரஸங்களையும் – பால், தயிர், அன்னம், முதலியவைகளின் ருசியுடன், மரங்கள் பழங்கள் பெருமளவு தேன் வடியும் ருசியுடன் பழங்களுடன், என்று இருப்பதைக் கண்டனர். சமுத்திரங்கள், ரத்னங்களின் பெட்டகம் போலவும், மலைகள் நான்கு விதமான ஆகாரங்களைத் தருவதாகவும், பொது மக்களின் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய அதிகாரிகள் இருப்பதையும் கண்டு அதிசயித்தனர்.
இதைக் கண்டு, இந்திரனின் அசூயை வளர்ந்தது அதோக்ஷஜன் தானே ப்ருதுவாக வந்திருக்கிறான் என்பது கூட நினைவில்லை. யாகத்தை தடுக்கவே முயன்றான். சத மேத என்ற அஸ்வமேத யாகத்தின் யக்ஞ பசு எனப்படும் நூறாவதான கடைசி அஸ்வம், அதை திருடிக் கொண்டு அந்தர்தானமானான்.
வேகமாக கிளம்பிச் சென்றவனை அத்ரி மகரிஷி பார்த்தார். இது என்ன அக்ரமம் என்று நினைத்தார். தர்மம் அறியாதவனா, ஏன் இப்படி அதர்மத்தை அவிழ்த்து விட்டது போல செய்கிறான் என்று நினைத்தார்.
அத்ரி மகரிஷி ப்ருதுவின் மகனிடம் இந்த விஷயத்தைச் சொன்னதும் அவன் நில் நில் என்று கத்தியபடியே இந்திரனை பின் தொடர்ந்தான். ஆனால் அவனுடைய தார்மிகமான உருவத்தை பார்த்து தயங்கினான். ரிஷிகள் போன்ற உருவம், உடல் முழுவதும் பஸ்ம-விபூதி தரித்த கோலம், பாணத்தை பிரயோகிக்க யோசித்தான். திரும்பி வந்தவனைப் பார்த்து அத்ரி சொன்னார்: மகனே! யாராயிருந்தாலும் யாகத்தை, அது நடந்து கொண்டிருக்கும் சமயம் தடுப்பவன் மஹா அதமன். அவனை வதைக்கத் தான் வேண்டும். மஹேந்திரன் தான் ஆனாலும் இது பெரிய குற்றம். ராவணன் ஜடாயுவை அடித்தது போல, ப்ருது புத்திரன், இந்திரனை தொடர்ந்து சென்று தாக்கினான். இந்திரனை கொல்லாமல் சாமர்த்யமாக வென்று, யாக பசுவை- அஸ்வத்தை கவர்ந்து கொண்டு யாக சாலைக்குத் திரும்பினான். அத்ரி மகரிஷி மகிழ்ந்து அவனுக்கு விஜிதாஸ்வ – என்று பெயர் சூட்டினார்.
ப்ருதுவும் இந்திரனின் மாயா ரூபத்தை அடிக்க தன் வில்லை எடுத்தான். கூடியிருந்த ரிஷிகள் தடுத்தனர். யாகத்தை முடிக்காமல் யுத்தம் செய்ய வேண்டாம். ஏகோன சத க்ரது: – ஒன்று குறைய நூறு யாகம் செய்தவன் என்று இருக்கட்டுமே. நீயோ மோக்ஷம் அடைவதையே விரும்புவாய், விடு, என்று சமாதானப்படுத்தினர். பகவானின் அம்சம் உடையவன் இந்திரன். அவனுக்கு சில பொறுப்புகள் பகவானே கொடுத்திருக்கிறார். இருவருமே உலக நன்மைக்காக செய்ய வேண்டியவை பல உள்ளன. நீயும் உத்தம ஸ்லோகன் – புகழ் வாய்த்தவன். அரசனே! இதை நினைத்து வருந்தாதே. நாங்கள் சொல்வதைக் கேள் என்றனர். இவ்வாறு நம்மை மீறி வரும் தடைகளை தெய்வ சங்கல்பம், என்று அத்துடன் விட்டு விடு. அதிக ஆத்திரம் மனதை குழப்பும். இந்த யாகத்தை இத்துடன் முடிப்போம். இந்திரன் தான் பாஷாண்டியாக – அதர்மியாக செய்தால், நாமும் அதே போல அவனைத் தண்டித்து அதர்மத்தை செய்ய வேண்டாம். தர்மத்தை காக்க வந்தவன் நீ. தர்மம் அந்தந்த நேரத்தை பொறுத்தது. வேனனின் அக்கிரமத்தால் உலகம் கஷ்டப் படுவதைத் தடுக்க அவதரித்தாய், அவன் மகனே ஆனாலும் விஷ்ணுவின் பகுதியாக இந்த அவதாரம் என்பதை அறிவோம்.
மைத்ரேயர் சொன்னார்: இவ்வாறு லோக குரு சொல்லி அரசனை அவப்ருத ஸ்னானம் என்பதை செய்து யாகத்தை முடிக்க வைத்தார். வந்திருந்த அறிஞர்களும் அதை ஏற்றுக் கொண்டனர். அரசனுக்கு ஏராளமான ஆசிகளை அளித்தனர். அவர்களை கௌரவித்து, தானங்களை தாராளமாக செய்து அரசனும் அவர்களை சந்தோஷமாக அனுப்பி வைத்தான். பித்ருக்கள், தேவர்கள், ரிஷி, பொது ஜனங்கள் என்று அனைவருக்கும் செய்ய வேண்டியவைகளை குறைவறச் செய்தான்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் பத்தொன்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-42
அத்யாயம்-20
வைகுண்டத்திலிருந்து பகவான் இந்திரனுடன் ப்ருது ராஜனை சந்திக்க வந்தார். நூறு யாகம் செய்ய முயன்றதையும் பாராட்டினார். யாக பதி யான பகவான் , ஒன்று குறைந்தாலும் நான் மகிழ்ந்தேன் என்றார். இந்த இந்திரன் அஸ்வத்தை கவர்ந்து சென்று யாக காரியத்தை நிறுத்தி விட்டான் என்று அறிந்தேன். அவனை மன்னித்து விடு.
மனிதர்களின் அரசன் குடி மக்களுக்கு தேவ சமானமானவன். உத்தமர்கள் எனப்படும் நல்ல மனிதர்கள் பொறாமைக்கு இடம் கொடுப்பதில்லை. ஏனெனில் ஆத்மா வேறு, உடல் வேறு என்று அறிந்தவர்கள் தான். உன் போன்ற பதவியில் இருப்பார்கள் இப்படி பொறாமைக்கு இடம் கொடுத்தால் இதுவரை செய்த நல்ல காரியங்கள் மறந்து போகும். வித்வானாக இருப்பவன் பற்றின்றி இருப்பான். தன் குழந்தைகள், செல்வம், இவைகளை தனது என்று ஒரு போதும் எப்படி நினைக்க மாட்டான். சுத்தமான ஸ்வயம் ஜோதி ஒன்றே. அது நிர்குணமானது. மறு பக்கம் குணங்களே நிரம்பியது. எதையும் தள்ளி நின்று சாக்ஷியாக மட்டுமே இருந்து பார்க்கும் பரமாத்மா. ஆத்மாவை விட மேம் பட்டது. உயிரினங்களின் ஹ்ருதயத்தில் இருந்தும், பார்வையாளனாக இருக்கும் பரமாத்மாவை அறிந்தவர்கள் கூட, என் உள்ளத்தில் பரமாத்மா இருந்து என்னை இயக்குகிறான், ஆனாலும் என் செயல்கள் அவனை பாதிப்பதில்லை என்பதை அறிவார்கள். தன் குல வழக்கப் படி தினமும் என்னை சிரத்தையுடன் பஜிப்பவன் நாளடைவில் சந்தோஷமாக இருப்பான். பர தத்வத்தை உள்ளபடி அறிவான். அவனது எண்ணங்கள் பரவலாகும். உலகில் அனைத்தும் ஒன்றேயான பர தத்வத்தின் பல ரூபங்கள் என்பதை உணர்வான். அதனால் எந்த பற்றுதலும் இன்றி இருக்கும் உள்ளத்தில் சாந்தியே நிரம்பியிருக்கும். ப்ரும்ம கைவல்யம் அடைவான். (மறு பிறவி இராது) செல்வம், ஞானம், க்ரியா இவைகள் இந்த நிலையில் அவனை பாதிப்பதில்லை. உள்ளிருக்கும் ஆத்மாவை அறிந்தவன் நல்ல கதியை அடைவான் என்பதில் சந்தேகமில்லை. மற்றவர்களின் மேன்மையான குணங்களோ, சம்பத்துக்களோ, கண் எதிரே தெரியும் அவர்களின் சுக துக்கங்களோ, உன் போன்ற ஸூரிகள் – பெரும் பதவிகளில் இருப்பவர்கள், பொருட்படுத்தக் கூடாது. வீரனே! உன் கடமையை செய். லோக ரக்ஷணம் என்பது தான் உனக்கு விதிக்கப் பட்ட கடமை. உனக்கு சமமாகவோ, உயர்வாகவோ, மட்டமாகவோ யார் எப்படி இருந்தாலும் அரசனுக்கு தன் பிரஜை என்ற ஒரே அளவு கோல் தான் . அதன்படி சம மான பொறுப்புடன் அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பு அவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. பிரஜா பாலனம் அவன் தொழில்.
செழிப்பான காலத்தில் லாபத்தில் ஆறு அம்சம்(6%) வரி வசூலிக்க வேண்டும். மற்ற பிரஜைகளின் நன்மைக்காக இதை செய்ய வேண்டும். பிரஜைகளின் புண்யத்தில் அரசனுக்கான பங்கை பெறுகிறான். அதனால், அவர்களை ரக்ஷிக்காமல் விட்டால் பாபத்திலும் பங்கை பெறுவான். அதனால் வரி வசூலிப்பது நாட்டிற்காகவே. அது போலவே தன் குணத்தால் செயலால் உயர்வான். செய்தால் பாராட்டுவதை விட, செய்யாமல் விட்டால் அதிகமாக தூஷிக்கப் படுவான். அவனுக்கு விதிக்கப் பட்ட செயல்களை, ப்ராம்மணர்கள், ஊர் முக்யஸ்தர்கள், தர்மம் அறிந்தவர்கள், இவர்களின் வழி காட்டுதலில், தன் கொள்கையையும் நிலை நிறுத்த வேண்டிய பொறுப்பில் இருப்பவன். அரசனே, என்னிடம் வேண்டும் வரம் கேள். உன் குண சீலம் இவற்றால் நான் மகிழ்ந்தேன். யாகமோ, தவமோ, யோகமோ இவைகளால் மட்டும் என்னை சுலபமாக அடைய முடியாது. சம சித்தன்- எந்த நிலையிலும் தன் சமமான-நியாயமான உணர்வை மீறாதவன் எனக்கு அருகில் இருக்கிறான்.
இவ்வாறு லோக குருவான பகவானால் அறிவுறுத்தப் பட்ட அரசன் ப்ருது, தலை வணங்கி அதை ஏற்றுக் கொண்டான். ஆணையிடுங்கள், நான் என்ன செய்ய வேண்டும் என்றான். மகேந்திரன், வெட்கி தலை குனிந்து நின்றிருந்தான். அவனை அணைத்து சமாதானப் படுத்தி அவனை விரோதியாக எண்ணியதை விட்டு, விட்டான்.
அதன் பின் ப்ருது ராஜா செய்த மரியாதைகளையும், பக்தியுடன் சரணங்களில் செய்த அர்ச்சனைகளையும் ஏற்றுக் கொண்டார். உடனே கிளம்பாமல் சற்று நேரம் அங்கு இருந்தார். கண்களில் நீர் வழிய ஆதி ராஜன் எதிரில் நின்ற ஸ்ரீ ஹரியை கை கூப்பியபடி பார்த்தபடி இருந்தான். எதுவும் பேச முடியாமல் குரல் தழ தழத்தது. உண்மை தானா, ஹ்ருதய குகையில் இருப்பதாக சொல்லப் படும் பகவான் எதிரிலா நிற்கிறேன் என்று நம்ப முடியாமல் திகைத்தவன் போல இருந்தான்.
ப்ருது “ ப்ரபோ! தங்களோ வேண்டிய வரங்களை தருபவர். உங்களிடம் என்ன யாசிப்பேன்? இந்த மனித உலகின் போகங்களைக் கேட்பேனா? தன்னை வசப் படுத்திக் கொண்டவனுக்கு இவைகளால் என்ன லாபம்? ஸ்வர்கம் வேண்டும் என்பேனா? இங்கு பல அறிஞர்கள் கூடி பகவானின் பதாம்போஜத்தில் பக்தியுடன் பாடியும் பேசியும் அனுபவிக்கிறார்களே , எதேச்சையாக கேட்டவர்கள் கூட நன்மைகளை அடைகிறார்களே, அந்த சுகம் அங்கு இல்லையே, அதனால் அதுவும் எனக்கு உயர்வாக படவில்லை. அதனால் எனக்கு உன்னிடம் அசையாத பக்தியைக் கொடு. இந்த பூ உலகில் பூஜை செய்தும், உங்கள் அருளை எண்ணி பாடியும், பேசியும், மற்றவர்களிடம் கேட்டும் என் வாழ்வை நிறைவாக்கிக் கொள்வேன். லக்ஷ்மி தேவியைப் போல அனவரதமும் தங்கள் அருகிலேயே இருக்க வேண்டும். எந்த இடத்தில் சாதுக்கள், உன்னை பூஜிக்கிறார்களோ அங்கு லக்ஷ்மி தேவி கண்டிப்பாக இருப்பாள், அது போன்ற நிலையை எனக்கும் கொடு. ஜகஜ்ஜனனீ என்று அவளைப் போற்றுகிறோம். எந்த செயலும் செய்யும் முன் அவளை வேண்டி ஆரம்பிக்கிறோம். தீன வத்ஸலன் நீ உன்னை வணங்கினாலே அவள் அருளும் கிடைத்துவிடும். தந்தை தனயனுக்கு செய்வது போல என்றும் உங்கள் அருளும் ஆசியும் வேண்டுகிறேன்.
மைத்ரேயர் சொன்னார்: இப்படி ஆதி ராஜன் துதி செய்ததும், பகவான் அப்படியே ஆகட்டும். நல்ல காலம், உனக்கு இது போன்ற மெய்யறிவு அமைந்துள்ளது. நாளடைவில் என் மாயையான இந்த பிறவி பெரும்கடலை கடப்பாய். ப்ரஜாபதே! நான் சொன்ன அறிவுரைகளின் படி ஆண்டு வருவாய். நல்லதே நடக்கும். என்றார்.
இவ்வாறு ராஜரிஷியான ப்ருதுவுக்கு ஆசீர்வாதம் செய்து விட்டு பகவான் கிளம்பினார். தேவரிஷிகளும், பித்ருக்களும், கந்தர்வ, சித்த சாரணர்களும், மற்றும் உலகில் பலரும், யக்ஞேஸ்வரனின் சம்பாஷனையைக் கேட்க வந்தவர்கள் உடன் திரும்பிச் சென்றனர். அவர் கண்களிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டு இருந்துவிட்டு அரசனும் அவனது மந்திரிகள், ஆசிரியர்கள் திரும்பிச் சென்றனர்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் இருபதாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-38
அத்யாயம்-21
பகவானின் அருள் வாக்கை பெற்றவன் என்று ஜனங்கள் ப்ருது அரசனை மிகவும் மதித்து மகிழ்ந்து வரவேற்றனர். ஆங்காங்கு வரவேற்பு அலங்கார வளைவுகள், தோரணங்கள், பூக்கள், பூ மாலைகள், சுவர்ண தோரணங்கள் என்று ஊர் முழுவதும் அலங்கரித்து விட்டனர். சந்தன, அகரு,வாசனை கலந்த நீர் தெளித்து தெருக்களும், ராஜ வீதிகளும் மணத்தன. உதிரி புஷ்பங்கள், அக்ஷதை, பொரி முதலியவைகளைக் கொண்டு வழியெங்கும் மங்களமாக செய்திருந்தனர். தூண்களில் வாழைக் குலைகளுடன் வாழை மரங்கள் கட்டப் பட்டிருந்தன, பூக (பாக்கு) மரங்களின் சிறு செடிகள் நடப்பட்டன. வரிசையாக விளக்குகள் ஏற்றி, சிறுவர் முதல் பல வயதிலும் உள்ள பெண்கள் ஆரத்தியுடன் தயாராக நின்றனர். சங்க, துந்துபி வாத்யங்கள் முழங்கின.
வேத கோஷம் செய்யும் பெரியவர்கள் முன் செல்ல அரசன் ப்ருது தன் நகரில் நுழைந்தான். அனைவரும் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். பல துறைகளிலும் முன்னோடியாக இருந்து புகழ் பெற்ற பெரியவர்கள் வந்து ஆசீர்வதித்தனர். கிரமங்களிலிருந்தும், பெரிய நகரங்களிலிருந்தும் வந்திருந்த ஊர் மக்கள் முகத்தில் மகிழ்ச்சி தெரிய வந்தனர். செயற்கரிய செய்தவன் என்று கொண்டாடினார்கள். பல ஆண்டுகள் நல்லபடியாக ராஜ்யத்தை ஆண்டபின் பரம பதம் சென்றான்.
சூதர் சொன்னார்: ஆதி ராஜன் என்று பெயர் பெற்ற ப்ருதுவின் கதையைக் கேட்டபின்னும் விதுரர் மேலும் வினவினார். குணவான் அதனால் புகழ் பெற்றான். அது மட்டுமல்ல. ஜனங்களின் அன்பையும் பெற்றான். முனிவரே! பூதேவியால்அனுக்ரஹிக்கப் பட்டான். வைஷ்ணவ தேஜஸ் உடையவன் , பூதேவியிடம் வேண்டிய பொருள்களைப் பெற்றான் என்று தெரிந்து கொண்டேன். என்ன பொருள்கள், எப்படி அவனுக்கு கிடைத்தன? அதையும் சொல்லுங்கள் என்றார். பின்னால் வந்த அரசர்களுக்கு முன்னுதாரணமாக இருந்திருக்கிறான். எப்படி ராஜ்ய பரிபாலனம் செய்வது என்பதை அவன் சரித்திரம் சொல்கிறது. இன்று வரை எல்லா அரசர்களும் ப்ருதுவின் பாதையில் தடங்கலின்றி செல்கிறார்கள்.
மைத்ரேயர் சொன்னார்: கங்கை யமுனை நதிகளின் இடைப் பட்ட நிலத்தை ஆண்டவன். ஏழுதீவுகள் உள்ள பூமியில் ஒருவனே சாசகனாக, செங்கோல் செலுத்தினான். ப்ராம்மணர்கள், அச்யுத கோத்ரர்கள், மற்றும் பலரும் அவன் ஆணையை ஏற்றுக் கொண்டனர்.
ஒரு சமயம் பல அறிஞர்கள், ரிஷிகள், சாதுக்கள்,நிறைந்த சபையைக் கூட்டி அவர்கள் அபிப்ராயத்தைக் கேட்டான். “சபையோர்களே! கேளுங்கள். கேட்டபின் உங்கள் எண்ணத்தை சொல்லுங்கள். எதுவானாலும், அந்தந்த துறையில் உள்ளவர்கள் அனுபவம் மிக்கவர்களின் சொல் ஏற்க வேண்டியதே. அறிந்து கொள்ளத்தான் கேட்கிறேன், அரசனாக ஆணையிடவில்லை. மிகுந்த பிரயாசைகளுடன் என்னை வேனன் வம்சத்தினனாக ஏற்று அரசனாக்கினீர்கள். அதனால் என் கடமைகளும் ஏராளமாக இருந்தன. துஷ்ட நிக்ரஹம் என்று சிலரை தண்டித்தேன். தன் தர்மத்தை அனுசரித்து அமைதியாக வாழ விரும்பும் பிரஜைகளுக்கு அவ்வாறே வேண்டியவைகள் குறைவற கிடைக்கும்படி செய்துள்ளேன். தொழில் செய்யும் மக்களுக்கு அதற்கான சாதனங்களை, வசதிகளை செய்து கொடுத்தேன். அரசன் நியாயமாக செய்யவேண்டியதைச் செய்தால் பகவான் திருப்தியடைவான் என்று வேதம் அறிந்த பெரியவர்கள் சொல்வார்கள். மக்களிடம் வரியை வசூலித்துக் கொண்டு ப்ரதி பலனாக அவர்களுக்கு செய்ய வேண்டியதை செய்யாமல் விட்டால், அரசன் அந்த மக்களுடைய பாப கர்மாக்களின் பலனையும் ஏற்க வேண்டியிருக்கும் என்றும் சொன்னார்கள். பொது ஜனங்கள் தங்கள் குல தர்மப் படி தங்கள் செயல்களை செய்து வந்தாலே அரசனுக்கு நன்மை. அதுவே அவர்கள் தங்கள் குல தர்மத்தை செய்ய முடியாமல் சிரமப்பட்டால், அதன் பலன் எனக்கு தீமையாக முடியும்.ஹே! ப்ரஜா:! பிரஜைகளே நீங்கள் உங்கள் சுய நலத்திற்காக, குடும்ப நலனுக்காக செய்யும் நல்ல காரியங்களில் எனக்கும் பங்கு உண்டு என்பதால், உங்கள் குல தர்மானுஷ்டானங்களை குறைவற செய்யுங்கள் என்று வேண்டிக் கொள்கிறேன்.
என் குல மூத்தோர்கள், மனுவிலிருந்து ஆரம்பித்து, உத்தானபாத, துருவ, ராஜ ரிஷி ப்ரியவ்ரதன், என் தாத்தா, அங்க ராஜா வரை, மற்றும் ப்ரும்மா, மகேஸ்வரன், ப்ரஹ்லாதன், பலி என்ற பலரும் , நான்கு வித புருஷார்த்தங்களும் (தர்மார்த காம,மோக்ஷம்) பகவான் அருளால் மட்டுமே சாத்யம் என்று நம்பினர். கர்மம் தானாக பலன் தராது. இதில் மாற்று கருத்து இல்லை. ஒரு சிலரே, ம்ருத்யுவின் பெண் வயிற்று பேரன், வேனன் போன்றோர், உண்மையை அறியாத மூடர்கள் தான் மறுப்பார்கள். நாம் அதை பொருட்படுத்த வேண்டியதில்லை. நாம் நம்மை படைத்து, கங்கா ப்ரவாஹம் போல நன்மைகளை அளித்து வரும் பகவானையே நம்புவோம். குல வழக்கப்படி அத்யயனம் செய்யுங்கள், குலத் தொழில் செய்யுங்கள் எதுவானாலும் பகவத் தியானத்தோடு செய்யுங்கள். பின்னின்று இயக்குபவன் அவனே என்ற நினைவோடு மனதால், சொற்களால், உடலால் செய்வதை அதே தியானமகச் செய்யுங்கள். நிச்சயம் பலன் பெறுவீர்கள்,
பகவான் தானே யக்ஞ ரூபனாக இருக்கிறான். “यज्ञो वै विष्णु:” என்பது வேத வாக்யம். பலவிதமான பொருள்கள் யாகத்தில் பயன் படுத்தப் படுகின்றன. உலக நன்மைக்கான சங்கல்ப மந்திரங்கள் அனைத்து உயிரினங்களுக்கும் நன்மை செய்யும். பொது மக்களுக்கு பல வித தானங்கள் செய்யப்படும். இதை விவரமாக நல்ல அறிஞர்களைக் கொண்டு செய்யப் போகிறோம். பகவானே யாகரூபியாக இருப்பதால் அவரை மகிழ்விக்கும் வகையில் தான் யாகங்களை செய்ய நிறைய த்ரவ்யம், உபகரணங்கள் இவைகளை பயன் படுத்துவோம். பரமானந்த ஸ்வரூபியான பகவான் மரத்தினுள் அக்னி போல உயிரினங்களின் உள்ளும் உறைந்து இருப்பவர். அதனால் என்னுடன் இணைந்து இந்த யாக காரியங்களில் ஈடுபடுங்கள். பிரஜைகள், ப்ராம்மணர்கள் தங்கள் கல்வி, பயிற்சி இவைகளால் நாட்டுக்கு நன்மையை பயப்பதான இந்த யாகத்தை திறம்பட செய்யட்டும். மற்றவர்கள் அவர்களை மதிப்புடன் நடத்துங்கள். ப்ரும்ம நித்யம்- அழிவிலாத ப்ரும்மம் – அதை சிரத்தை, தவம், மௌனம் , சம்யமம் , சமாதி – இவை அந்த ப்ரும்மத்தை அடைய சாதனைகள். இதை செய்யும் தவ சீலர்கள் – இவர்களை நான் தலையின் அவர்கள் பாதத் தூளி பட வணங்குகிறேன். ப்ரும்ம குலம், பசுக்கள். என்னை அனுசரிப்பவர்கள், எல்லோரையும் ஜனார்தனன் மகிழ்ந்து ஆசீர்வதிக்கட்டும்.
மைத்ரேயர் சொன்னார்: இவ்வாறு சொல்லும் அரசனை சாதுக்கள், பித்ரு தேவதைகள், அந்தணர்கள், மகிழ்ந்து சாது, சாது என்று சொல்லி தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர். புத்ரேன ஜயதி-மகனால் நன்மை அடைவான்- என்பது உண்மையான வார்த்தை. ப்ரும்ம தண்டத்தால் வேனன் அடிபட்டான். தாமசமான குணமே பிரதானமாக பாபியாக இருந்தான். ஹிரண்ய கசிபு கூட பகவானை நிந்தித்து பாபத்தை சம்பாதித்தான். மகன் ப்ரஹ்லாதனால் நல்ல கதியடைந்தான். சர்வ லோகத்துக்கும் ஒரே பாதுகாவலானாக இருக்கும் ஸ்ரீ ஹரியிடம் பக்தியால், தங்கள் புத்திரர்களால் இந்த தந்தைகள் இருவரும் நல்ல கதியை அடைந்தனர். அஹோ! இன்று உன்னுடன் நாங்களும் ப்ரும்மண்ய தேவன், கதையை கேட்டு ரசித்தோம். அரசனே! உன் ஆட்சியில் இது அதிசயமில்லை. சிரஞ்ஜீவ- நீடுழி வாழ்க. பிரஜைகளிடம் அன்புடன் இருப்பவன். நாங்களும் எங்களை மேம்படுத்திக் கொள்ள உன் வார்த்தைகள் தூண்டுகோலாக இருக்கின்றன. உண்மையான பக்தன் தான் மற்றவர்களிடம் இது போன்ற மாற்றத்தை உண்டு பண்ண முடியும்.
नमो विवृद्धसत्त्वाय पुरुषाय महीयसे ।यो ब्रह्म क्षत्रमाविश्य बिभर्तीदं स्वतेजसा ॥
தன் தேஜஸால், ப்ரும்ம ஸ்வரூபியான பரம புருஷனே, க்ஷத்திரியனுடைய செயலையும் நடத்துகிறான். அந்த மகானான பலவிதமான ஆற்றல்களை உடைய பகவானை வணங்குகிறேன்.
((இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் இருபத்து ஒன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-53
அத்யாயம்-22
ஜனங்கள் ப்ருதுவின் அரிய செயல்களால் மகிழ்ந்து, தங்கள் அரசனை வாழ்த்தி வரவேற்றுக் கொண்டிருக்கும் பொழுது, குமாரர்களான நான்கு முனிவர்களும் வந்தனர். சித்தர்களான அவர்களை சூரியனே இறங்கி வந்தது போன்ற தேஜசுடன் இவர்கள் வருகை, அதைக் கண்டவர்களின் பாபம் என்ற இருட்டை போக்கி விடுவார்கள் என்பது போல இருந்தது. தன் சபையினருடன் அவரை வரவேற்க எழுந்தான். சபையினரும் மிக்க மரியாதையுடன் தலை குனிந்து வணங்கியபடி அரசனைத் தொடர்ந்தனர். அர்க்யம் முதலியன கொடுத்து ஆசனங்களில் அமரச் செய்தனர். பாதத்தில் விட்ட நீரை புனிதமாக எண்ணி தலையில் தெளித்துக் கொண்டனர். பொன் மயமான தன் அரியனையிலேயே அவர்களை அமரச்செய்தான். சிரத்தை, அடக்கம் இவைகளுடன் அன்புடனும் அவர்களை குசலம் விசாரித்தான்,
ப்ருது” அஹோ! என்ன பாக்கியம் செய்தேன். உங்கள் காலடி பட்ட என் தேசம் பாவனமாயிற்று. உங்களை காண்பதே முனிவர்களுக்கும் அரிது என்பர். குமாரர்கள் அனுக்ரஹம் செய்த என் ராஜ்யத்தில் வேறு எது தான் இவ்வுலகிலோ, பர லோகத்திலோ அடைய முடியாதது? உங்கள் அருள் கிடைத்தாலே, சிவன் விஷ்ணு மற்றும் தேவதைகள் தாங்களே ஆசீர்வதிப்பார்கள். உலகை சுற்றி சுற்றி வரும் நீங்கள் உலகியலில் எதையும் லட்சியம் செய்வதில்லை என்றும் அறிந்திருக்கிறோம். அனைத்தையும் கண்டும் அறிந்தும் ஆத்மாவாக உள்ளுறையும் பகவானே காரணம். செல்வம் இல்லாதவர்கள் கூட குடும்பஸ்தர்கள் பாக்கியசாலிகள். ஏனெனில் இவர்களுடைய வீடுகள், உள்ள பூமி, இங்குள்ள தண்ணீர், புல் பூண்டுகள், அனைத்தும் உங்கள் வரவால் பாவனமாகிவிட்டன. சாதுக்கள் (விருந்தினர்கள்) , பலரும் வந்து இருந்து அனைவருமாக அனுபவிப்பது வீட்டுக்கு அழகு. அந்தண ச்ரேஷ்டர்களே, உங்கள் வரவு நல்வரவாகுக. வயதான பின் மோக்ஷம் விரும்பி சிரத்தையுடன் செய்யும் பல சாதனைகளை நீங்கள் பால பருவத்திலேயே செய்தவர்கள். எங்கள் இந்திரியங்கள், இகலோக காரியங்களிலேயே மூழ்கி உள்ளன. துக்கமோ சுகமோ அனுபவிக்கிறோம். அதைத் தவிர வேறு எண்ணமே இல்லை. ஆத்மா ராமர்கள்- தன்னிறைவு பெற்றவர்கள், சிறந்த ஞானிகள்,என்பதால் குசலம் விசாரிப்பதில் அர்த்தமில்லை. நாம் ஒருவருக்கொருவர் நலம் விரும்பும் நண்பர்கள் ஆதலால், கேட்கிறேன். என்ன காரியமாக வந்தீர்கள்? எங்களுக்கு அனுக்ரஹம் செய்யவே வந்துள்ளீர்கள் என்பது வரை தெளிவாக தெரிகிறது. உருவம் தான் சித்தர்கள், ப்ரும்மாவே தாங்கள் என்று அறிவோம்.
மைத்ரேயர் சொன்னார். இனிமையாக சுருக்கமாக சொன்னாலும் தன் எண்ணத்தை அழகாக சொல்லி முடித்த ப்ருதுவைப் பார்த்து, மெல்ல சிரித்தபடி, குமாரர் பதில் சொன்னார்..
சனத்குமாரர் சொன்னார். நன்றாக கேட்டீர்கள் மகாராஜனே! அறிவுடையவர்கள். உங்களைப் போன்றவர்கள் இப்படித்தான் எண்ணுவார்கள், பேசுவார்கள். பொது ஜனங்களின் நன்மையே உங்கள் முதல் பொறுப்பாக நினைப்பது தெரிகிறது. கூடிப் பேசுவது இருவருக்கும் நல்லது. சம்பாஷனைகள், ஒருவருக்கொருவர் ப்ரச்னைகளை கேட்டுக் கொள்வதும் பரஸ்பரம் தீர்வாக கூட அமையும். ராஜன்! மதுவை வென்ற மாதவனின் பாதாரவிந்தங்களில் மனதை செலுத்துபவர், அவருடைய குண கதைகளில் ஈடுபாடு உள்ளவர் என்பதால், இயல்பாகவே உங்கள் மனத்தில் களங்கம் என்பதே இல்லாமல் தூய்மையாகி விட்டது.
சாஸ்திரங்கள் சொல்வதும் இவ்வளவே. தன் பிரஜைகளின் க்ஷேமம் தான் அரசனின் முதல் கடமை. தன், தன்னுடைய என்ற எண்ணம் நிர்குணமான ப்ரும்மாவை நம்புவதால் அருகிலேயே வராது. நித்யம் யோகேஸ்வரனை உபாசித்து, தனிப்பட்ட சாதனைகளாலும், மேலும் மேலும் தன் அறிவை வளர்த்துக் கொள்வதில் மற்ற பெரியோர்களின் வரலாறும் வழி காட்டக் கூடும். தன்னைச் சுற்றி பலர் இருப்பதில் பெருமை கொள்வதற்கில்லை. அவர்களும் ஒத்த குணமுடையவர்களாக பகவானிடம் நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பது அவசியம்.
அஹிம்சை, பரமஹம்ஸ (யோகிகள்) பற்றிய வரலாறுகள், நிணைவாற்றல், எது செய்ய வேண்டியது எது தேவையில்லாதது என்ற பாகுபாடுகளை தெரிந்து கொள்ள வேண்டும். இயல்பாகவே ப்ரும்மத்தில் விருப்பம் உள்ளவன், நல்ல குருவிடம் ஞான மார்கத்தை கற்றுத் தேர்ந்து, ஆசைகளைத் துறந்து ஐந்தாக உள்ள வீர்யமற்ற ஜீவ கோசம் என்பதை எரித்து விடுவான். அக்னி மூட்டப்பட்டால் கிடைத்ததை விழுங்கி எரிப்பது போல. (பஞ்ச பூதங்களால் சூழப்பட்ட ஜீவ கோசம்- ஹ்ருதயம், அதை சாதனைகளால் கட்டுக்குள் வைக்க, ஞானம், அதைப் பெற குரு உபதேசம் இவை தேவை. இவை இரண்டையும் பெற்றாலும் சுபாவமாக ஈச்வர பக்தியுள்ளவன் தான் முழுமையாக பயன் பெறுவான். அவித்யை எனும் மனித பிறவியின் குணத்தை ஞானத்தால் எரித்து விடுவான்.) சுகம் துக்கம் என்ற இரட்டைகளால் பாதிக்கப்படாமல் உள்ளும் புறமுமாக சாந்தனாக பர தத்வத்தை அவன் தெளிவாக காண்பான். இக லோக வாழ்கை என்பதை கனவில் காண்பது போல காண்பதும், பின் அதை மறப்பதும், அது ஒரு தோற்றமே உண்மையல்ல என்று உணருவதும் அவனுக்கு சாத்தியமாகும். இல்வாழ்கை அவனுக்கு ஒரு சத்யமான மார்கமே. இக பர லோகத்திற்கான சாதனமே. அவ்வளவுதான். நீரிலேயே இருந்தாலும் நாணல் போன்ற தாவரங்கள், அந்த நீரில் மூழ்காமல் தன் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்வது போல – ஆகவே, யாருடன் நாம் உரையாடுகிறோம், உடன் வசிக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். நான்கு வித புருஷார்த்தங்களில் மோக்ஷம் தான் இலக்கு, மற்ற மூன்றும் ஓரளவு தான், அவை உள்ளூற யம பயத்தையே கொண்டது- ஒரு நாள் அழியும் தன்மையது. அதனால், நரேந்திரா! இந்த பூமியில் உள்ளவரை, பலவிதமான மக்கள் சூழ இருக்கத்தான் வேண்டும். சிலர் தேஹமே அனைத்தும் என்ற கொள்கையுடையவர், ஒரு சிலர் அது அழியக் கூடியதே என்ற உணர்வு உள்ளவர்கள், எப்படி இருந்தாலும் உன் கொள்கையில் மாற்றம் இல்லாமல் அவர்களுடன் அனுசரித்துக் கொள். அனைவரும் பகவான் ஸ்ருஷ்டியே. “ஸோऽஸ்மி” என்ற ப்ரும்ம வாக்கியம் அது தான் தாரக மந்திரம். இவ்வாறு பலவிதமாக உபதேசித்தார்.
மைத்ரேயர் சொன்னார்: இவ்வாறு சிறந்த ஞானியான குமாரர் உபதேசிக்கவும், ஆத்மகதி என்பதை காட்டி,நன்றாக விவரித்தும் சொன்னதைக் கேட்டு அரசன் பதில் உரைத்தான்.
“ எனக்கு உங்கள் அனுக்ரஹம் கிடைத்தது என் பாக்கியம். முன் பகவானே உபதேசித்தார். அதைத் தொடர்ந்து
நீங்களும் வந்துள்ளீர்கள். என் உள்ளத்தில் நன்றாக வேரூன்றி நிலைத்து நிற்கும்படி நன்றாக சொன்னீர்கள். வேறு என்ன வேண்டும், என் ப்ராணனோ, தாரம்-மனைவி, புத்திரர்கள், ப்ரும்மன்! வீடு வாசல், பரிவாரங்கள், ராஜ்யம், பலம், பூமி, பொக்கிஷம் எல்லாமே இந்த உபதேசங்களுக்கு முன் ஒரு பொருட்டும் இல்லை. சேனாபதி என்றும், ராஜ்யம் என்றும், தண்டம், தலைமை என்பவைகளாலும், சர்வ லோக அதிபதி என்றும் சொல்லப் படுபவைகளுக்கு வேத சாஸ்திரம் அறிந்தவனும் தகுதியுடையவனே. அந்தணன் தன் உழைப்பில் கிடைப்பதை தானே அனுபவிக்கிறான். அன்னமோ, வஸ்திரம், தனம் என்பவை க்ஷத்திரியன் முதலானவர்கள், அந்தணனின் ஆசியினால் பெறுகிறார்கள். தானம் செய்வதில் சுதந்திரம் க்ஷத்திரியனுக்கு இல்லை. நிகமம் – வேத சாஸ்திரங்களின் பொருளை சொல்லி, எங்களுக்கு பகவானைப் பற்றியும் சொல்லி, எதை செய்தால் மேன்மை என்பதை சொல்லி, அதிலேயே திருப்தி அடையும், அந்தண உத்தமரே, உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்ய முடியும்?
மைத்ரேயர் சொன்னர்: இவ்வாறு சொல்லி மகா ராஜா ப்ருது அவர்களுக்கு செய்ய வேண்டிய மரியாதைகளைச் செய்தான். அவர்களும் அரசனை ஆசிர்வதித்து கண் முடி திறக்கும் முன் மறைந்தனர். மகாராஜா வைன்யன்-ப்ருது, பூமியை நல்ல படியாக ஆண்டான். அத்யாத்ம சிக்ஷா- ஆத்ம தத்வம்- ஆத்மா, பரமாத்மா என்ற விஷயங்கள் பற்றி அறிந்து கொண்டது அவனுக்கு மகிழ்ச்சியளித்தது.. அந்தணர்களை மதித்து அவர்கள் ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டான். தன் செயல்களை திட்டமிட்டு, கால, தேசம், தன் சக்தி, இவற்றுடன் எது உசிதமோ, எந்த அளவு செலவழிக்க முடியுமோ, என்பதையும் யோசித்தே செய்தான். எது செய்தாலும் அதை ப்ரும்மார்ப்பணம் என்று சொல்லி, தான் அந்த செயலை செய்ய நியமிக்கப் பட்டவன் மட்டுமே என்பது போல தன் பிரஜைகளின் பிரதி நிதியாகவே எண்ணி நடந்து கொண்டான். மனதளவில் பற்றின்றி, வீட்டில் இருந்தாலும், சாம்ராஜ்ய லக்ஷ்மி அவனிடம் இருந்தாலும், போகங்களில் ஈடுபடாமல், சூரியன் போல பாரபக்ஷம் இன்றி அனைவருக்கும் உகந்தவனாக இருந்தான். தனக்கு அனுகூலமான ஐந்து பிள்ளைகளைப் பெற்றான். விஜிதாஸ்வன், தூம்ரகேசன், ஹர்யக்ஷன், த்ரவிணன், வ்ருகம் என்று பெயர்கள்.
தன் காலத்தில், சோம ராஜன் போலவும், சூரியன் போல கொடுத்தும், தான் பெற்றும், எப்படி பூமியிலிருந்து நீரை உறிஞ்சி, மழையாக திருப்பி தருகிறதோ, அது போல வரி வசூலித்தும், வசதிகள் செய்து கொடுத்தும், சமயங்களில் உறுதியாக தண்டித்தும், பூமியின் செல்வத்தை பெருக்கினான். எதிர்க்க முடியாத பராக்ரமம் உடையவனாக, மகேந்திரன் போல இருந்தான். வானம் பொழிவது போல மக்களுக்கு தராளமாக கொடுத்தான். சமுத்திரம் போல ஆழ்ந்த குணம், தன் சக்தியை வெளிக் காட்டாமல் அடக்கம், தன் கொள்கைகளில் மலை போல உறுதி, தண்டிப்பதில் தர்ம ராஜன், ஹிமவான் போல அளவிட முடியாத ஆச்சர்யங்கள் நிறைந்தவனாக, குபேரன் போல நிறைந்த பொக்கிஷம் உடையவனாக, வருணன் போல மற்றவர்களால் கணிக்க முடியாதவனாக, மாதரிஸ்வா போன்று அனைத்து இடங்களிலும் பரவலாக அறிந்தவனாக, பகவான் பூத நாதன் போல எதிர்க்க முடியாத பலசாலி, மன்மதன் போன்ற உடலும், கம்பீரத்தில் சிங்கம், வாத்சல்யம் மனு போலவே, ப்ரபுத்வம் என்பதில் ப்ரும்மாவே எனும்படியும் ப்ரும்ம வாதம் செய்வதில் ப்ருஹஸ்பதி, தன்னையறிவதில் தானே ஸ்ரீ ஹரி, குரு, பக்தியில் விஷ்வக்சேனர், மற்ற தன் முயற்சி, லஜ்ஜை, சீலம் இவைகளில் தனக்கு ஈடு தானே என்றும் இருந்தான். அவன் புகழை கேட்டவர்கள் மயங்கினர். குணவான்களில் ஸ்ரீ ராமர் போலவும் இருந்தான்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் இருபத்து இரண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-63
அத்யாயம்-23
ஒரு சமயம் திடுமென நினைத்துக் கொண்டாற் போல தனக்கு வயது ஆகி விட்டது என்பதை உணர்ந்தார். தன் மகன்களிடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு அந் நாட்களில் பெரியவர்கள் வயதான காலத்தில் வீடு வாசல்களைத் துறந்து வனம் செல்லும் வழக்கத்தையொட்டி தானும் வனம் செல்ல நினைத்தார். அந்த நினைவு வந்ததே ஈஸ்வரனுடைய கட்டளை என்று நம்பினார். மகளை மகன்களிடம் ஒப்படைத்து விட்டு, மனைவியுடன் கிளம்பி விட்டார். வைகானஸ என்ற முறைபடி உக்ர தவத்தில் ஈடுபட்டார். சில சமயம் பழங்கள், கிழங்குகள் என்று ஆகாரம், அதன் பின் உலர்ந்த இலைகள், அதன் பின் நீர் மட்டுமே,அதன் பின் வாயு மட்டுமே என்று ஆகாரத்தைக் குறைத்துக் கொண்டே வந்தார். வேணிற் காலத்தில் பஞ்ச தபஸ், ஐந்து விதமான வெப்பம், குளிர் காலத்தில் கழுத்து வரை நீரில் அமிழ்ந்து இருந்து என்று அதன் நியமங்களை அனுசரித்தார். ப்ராண வாயுவை அடக்கி பேச்சையும் குறைத்து, ஸ்ரீ க்ருஷ்ண தியானம் மட்டுமே என்று தவம் செய்தார். ப்ராணாயாமம் தொடர்ந்து செய்து ஆறு வித பிராணன் களையும் தன் வசம் செய்து யோக சாதனையின் முடிவில் கமலாசனம் – என்பதில் நிறுத்தினார். சனத் குமாரர் உபதேசித்த படியே யோக சாதனைகளைச் செய்து ஆத்யாத்மிகம் என்ற உயர் நிலையில் பகவானை ஆராதித்தார். சாதுக்கள் பகவானையே நம்பி இருப்பவர்கள், சிரத்தையுடன் சாதனைகளைச் செய்து மனதை தன் வசம் வைத்துக் கொள்வார்கள். தன் இக லோக கடமைகளை செய்து முடித்து விட்ட திருப்தியுடன் பர லோக சாதனமான தவம், சுய கட்டுப்பாடு என்பதியும் குறைவற செய்து ஞானம், விரக்தி இவைகளுடன் தன் ஜீவகோசம் என்பதை பிளந்தார். இந்த நிலையை அடைய, யோக சாதனைகளும் தவமும் மட்டும் போதாது, பகவானிடம் அசலமான- முறையாத நம்பிக்கையும் வேண்டும். இவ்வாறு வீரனான அந்த அரசன், தன் ஆத்மாவை பரமாத்மாவில் ஐக்யபடுத்தி, ப்ரும்மமாகவே ஆனார். சரீரத்தையும த்யாகம் செய்தார். . குண்டலினி யோக முறைப்படி, வாயுவை குதத்திலிருந்து மேலேற்றி, மெள்ள மெள்ள நாபி,ஹ்ருத் கண்ட , புருவ மத்தி, உச்சந்தலை கொண்டு சென்று வாயுவை வாயுவுடன், பூ என்ற மண் அம்சமான உடலை (உடலின் கடினமான பகுதிகளை)நிலத்துடன், தேஜஸ் என்ற அம்சத்தை அதன் மூலப் பொருளுடன், ஆகாசத்தில் உயிர் தத்வத்தை, த்ரவம் என்பதை (சரீரத்தின் ருதிரம் முதலான திரவங்கள்) , நீரில் அதனுடைய அம்சமாக மனித உடலில் இருந்ததை நீருடன் என்று பிரித்து வெளியேற்றி விட்டார். க்ஷிதி-பூ தத்வம் (மண் அல்லது நிலம்) இதை நீருடன், அதை தேஜஸை -அக்னியுடன், அக்னியை வாயுவுடன், வாயு ஆகாசத்தில் என்று முதலில் தோன்றிய கிரமத்திலேயே அவரிடமிருந்து விடுபட்டன. மற்றும் இந்திரியங்கள், உடல் இயங்க காரணமாக இருந்தவை மனம், தன்மாத்ரைகள் இவைகளை பௌதிகமான பஞ்ச பூதங்கள் விலகியபின், மஹத் என்ற தத்வத்துடன் இணைந்து கொண்டன.
மாயாமயமான உலகில் வாழ்ந்த காலத்திலும் தன் குணங்களுடன் எப்படி வாழ வேண்டும் என்று காட்டுவது போலவே வாழ்ந்து, பின் ஞான வைராக்ய மார்கங்களை அனுசரித்து ப்ரபு தன் லீலையை முடித்து தன் இருப்பிடம் சென்று விட்டார்.
அர்சி என்ற மஹாராணி, அவருடன் வனம் வந்த அவருடைய பத்னி, கோமளமான சரீரம் உடையவள், கால்கள் பூமியை ஸ்பர்சித்தாலே வாடும் என்பது போன்ற உடல் வாகுடையவள், அவள் அறிந்தெல்லாம், தன் பதியின் சேவையே, அவருடைய தேவைகளை பூர்த்தி செய்வதே என்று வாழ்ந்தவள், அவர் பிரிவினால் பாதிக்கப் பட்டாலும், தன் துக்கத்தை வெளிக் காட்டவில்லை, அவருக்கு உதக க்ரியா – நீர் வார்த்தல் என்ற அபர கார்யத்தை தானே செய்து விட்டு, முப்பத்து மூன்று தேவதைகளையும் , மூன்று முறை ப்ரதக்ஷிணம் செய்து வணங்கி கணவனையே நினைத்தபடி தானும் சிதையில் வீழ்ந்தாள்.
தேவர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர். பூமாரி பொழிந்தனர். பதியுடன் மரணத்திலும் கலந்த அவர் மனைவியைக் கொண்டாடினர். ஆஹா, இந்த பெண் தன்யா- பாக்யம் செய்தவள் என்றனர். புகழ் பெற்ற அரசனின் பத்னியாக வாழ்ந்தாள். யக்ஞ மூர்த்தியான பகவானுக்கு ஸ்ரீ தேவி போல . – நம் கண்ணெதிரிலேயே அவள் பர லோகத்திலும் ப்ருது மகா ராஜனை அடைந்து விட்டாள் என்று போற்றினர். அவருடைய சீலத்திற்கும், பகவானிடத்தில் பக்திக்கும் இது ஏற்றதே என்றும் பலவாறாக பேசிக் கொண்டனர்.
மைத்ரேயர் சொன்னார்: ஆத்ம ஞானம் பெற்ற ப்ருது ராஜா தனக்குரிய கீர்த்தியை அடைந்தான். உடன் அவன் மனைவியும் உடன் சென்றாள், என்ற இந்த கதையை படிப்பவர்களூம், கேட்பவர்களும் ப்ருது போலவே புகழை அடைவார்கள். பலவிதமான பலஸ்ருதிகளைச் சொல்லி முடித்தார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் இருபத்து மூன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-39
அத்யாயம்-24
மைத்ரேயர் தொடர்ந்தார்: ப்ருதுவின் மகன் விஜிதாஸ்வன் பட்டத்துக்கு வந்தான். தன் இளையவர்களையும் தனக்கு சமமான பதவிகளில் அமர்த்தினான். ஹர்யக்ஷனுக்கு கிழக்கு, தூம்ரகேசனுக்கு தெற்கு, வ்ருகனுக்கு மேற்கு, துர்யோ என்பவனுக்கு வடக்கு என்று பிரித்து கொடுத்தான். சிகண்டி என்ற மனைவியிடம் மூன்று குழந்தைகள் பிறந்தன. முன் ஒரு சமயம் வசிஷ்டர் சாபத்தால் மறைந்திருந்த பாவக, பவமான, சுசி என்ற மூன்று அக்னிகளும் உயிர் பெற்றன. ராஜ்ய காரியங்களான வரி வசூலித்தல் முதலியவைகளை மற்றவர்களிடம் விட்டு விட்டு தான் நீண்ட யாகம் செய்ய முனைந்தான். அதை வெற்றிகரமாக முடித்து சமாதி நிலையில் நற்கதியடைந்தான்.
அந்த வம்சம் ஹவிர்தானன் என்பவன் மூலம் வளர்ந்தது. ஹவிர்தானனுக்கு ஏழு பிள்ளைகள். பர்ஹிஷ்பதன், கயன், சுக்லன், க்ருஷ்ணன், சத்யன், ஜிதவ்ரதன் என்பவர். இவர்களில் பர்ஹிஷ்பதன் வேத்தில் சொன்ன கர்ம காண்டத்தையும், யோக மார்கத்தையும் ஒரு சேர அனுசரித்தான். விடாது யாகம் செய்து வந்தவன் ராஜ்யத்தில் கிழக்கு பகுதி யாகத்தில் பயன்படும் குசம் என்ற புல் மூடிய ப்ரதேசமாக ஆகி விட்டது. பின்னால் அவன் பெயரே, ப்ராசீன பர்ஹிஷி என்று மாறியது. சமுத்திரத்தின் மகளான சதத்ருதிம் என்பவளை மணந்து பத்து பிள்ளைகள் பிறந்தன.
அதிக அளவில் பிரஜைகளை உத்பத்தி செய்யச் சொல்லி தந்தை சொன்னதைக் கேட்டு, அவர்களும் சமுத்திரத்தில் இருந்து தவம் செய்தனர். எதேச்சையாக பகவான் கிரீசனை வழியில் சந்தித்தனர். அவரை மகிழ்வித்து ஜபம், பூஜைகள் செய்தனர்.
விதுரருக்கு ஆச்சர்யம். அது எப்படி பகவான் கிரீசனை வழியில் சந்தித்தனர். அவரும் அனுக்ரஹம் செய்தாரா? அவரை எப்படி ப்ரசேதசர்களூக்கு அனுக்ரஹம் செய்தார். முனிவரே, விவரமாக சொல்லுங்கள். மனித பிறவியில் அவரை காண்பது முனிவர்களுக்கே சிரம சாத்யமம். ஆத்மாராமர் தான். ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் ப்ரும்மாவினால் ருத்ரன் என்று பெயரிடப் பெற்றார். சக்தியுடன் தான் எப்பொழுதும் சஞ்சரிப்பார். பகவான் பவன் என்று அறிந்திருக்கிறோம்.
மைத்ரேயர் சொன்னார்: ப்ரசேதஸ் ப்ருது மகாராஜாவின் மகன். தந்தை சொல்லை ஏற்று கிழக்கு திசையில் பொறுப்பு ஏற்றுக் கொண்டான். தவம் செய்வது தான் அவன் எண்ணமாக இருந்தது. எல்லையற்ற பரந்து விரிந்து இருந்த சமுத்திரத்தைக் கண்டு அதிசயித்தான். பலவித வர்ணங்களில் தாமரைகளும், நீல நிற உத்பல புஷ்பங்களும் கண்களைக் கவர்ந்தன., கல்ஹார, இந்தீவர புஷ்பங்கள். ஹம்சங்களும், சாரஸ. சக்ரவாக, காரண்டவ என்ற பக்ஷிகளும் கூச்சலிட்டுக் கொண்டிருந்தன. ப்ரமரங்கள்-வண்டுகள், சுருதி பிசகாமல் ரீங்காரம் செய்வதாக எண்ணினான். பலவித கடலில் வளரும் தாவரங்கள். பத்மங்கள் காற்றில் ஆடும் பொழுது விசிறிய மகரந்த மணம் எங்கும் நிறைந்து இருந்தது. காற்று அதனுடன் விளையாடுவது போல இருந்தது. கந்தர்வர்கள் பாடுவது கேட்டது. பணவம், ம்ருதங்கம் என்ற வாத்யங்கள் இசைப்பதை முதல் முறையாக கேட்டனர்.
இவ்வாறு மெய் மறந்து ரசித்துக் கொண்டிருக்கும் சமயம் ஒரு தேவ புருஷன் தன் பரிவாரங்களோடு சமுத்திர ஜலத்திலிருந்து வருவதை ப்ரசேதஸும், அவன் உடன் இருந்த மற்றவரும் கண்டனர். புடமிட்ட பொன் போன்ற நிறம். சிதிகண்டம்.மூன்று கண்கள். பார்க்க பார்க்கத் தெவிட்டாத சுமுகமான முகமும் உருவமும். மரியாதையும் மகிழ்ச்சியும் மேலிட விழுந்து வணங்கினார்கள். அவர் தான் ப்ரணதார்திஹரன் என்று புகழ் பெற்ற (தன்னை வணங்கும் பக்தர்களின் தாபத்தைத் தீர்ப்பவன்) பகவானான, தீன வத்ஸலன். இவர்களைப் பார்த்து தர்மம் அறிந்தவர்கள், நேர்மையான குணம் உடையவர்கள் என்று முன்னமே அறிந்தது போல அன்புடன் வினவினார்.
ருத்ரன் சொன்னார்: நீங்கள் யாரென்று அறிவேன். நீங்கள் நினைப்பதையும் தெரிந்து கொண்டே, அனுக்ரஹம் செய்யத்தான் வந்தேன் என்றார். வாசுதேவன் எனக்கு பிரியமானவன். உங்கள் தந்தை வாசுதேவன் பக்தன். அதனால் எனக்கும் பிரியமானவர்களே. நூறு ஜன்மங்களில் தன் குல வழக்கப் படி தர்ம காரியங்களைச் செய்து வருபவன் , விரிஞ்சி என்ற ப்ரும்ம பத்தை அடைவான். அதன் பின் உலக வாழ்க்கையின் முடிவில் என்னைக் காண்பார்கள். பகவான் விஷ்ணுவின் பதமான வைகுண்டம் தான் பாகவதர்களின் இலக்கு. பாகவதர்கள் எனக்கும் பிரியமானவர்கள். என்னை வணங்குபவரோ, விஷ்ணு பக்தரோ என்பதில் பேதமில்லை.
உங்களுக்கு ஒரு மங்களமான ஜபத்தை சொல்லித் தருகிறேன். பவித்திரமான இந்த மந்திரத்தை குறைவில்லாத செல்வம் பெற கேட்டுக் கொள்ளுங்கள்.
மைத்ரேயர் சொன்னார்: இவ்வாறு மனம் கனிந்து பகவான் பரம சிவன் அவர்களுக்கு உப்தேசித்தார். கைகளைக் கூப்பி நின்றிருந்த ராஜ குமாரர்களுக்கு பகவான் நாராயண பரமான சொல்லை அருளினார்.
ருத்ரன் சொன்னார்: नमः पङ्कजनाभाय भूतसूक्ष्मेन्द्रियात्मने ।वासुदेवाय शान्ताय कूटस्थाय स्वरोचिषे- பங்கஜ நாபன், அணுவிலும் அணுவானவன், மகத்திலும் மகத்தானவன், பெரியவன், இருளாகவும், ஒளியாகவும் இருக்கும் வாசுதேவனுக்கு நமஸ்காரம். என்று ஆரம்பித்து பல ஸ்லோகங்களில் வாசுதேவனை துதித்தார்.
சங்கர்ஷணன், சூக்ஷ்மமானவன், மனிதர்களின் வாழ்வை நிறைவு செய்யும் அந்தகன் அவனே, தான் முடிவில்லதவன். உலகையே முதலில், உணர்வு கொள்ளச் செய்த அந்தராத்மாவான ப்ரத்யும்னன் என்ற பெயரில் அறியப்பட்டவன்.
நமோ நம: அனிருத்தாய, : ஹ்ருஷீகேசாய இந்திரியாத்மனே,; நம: பரம ஹம்ஸாய, பூர்ணாய, நிப்ருதாத்மனே||
மேலும் பலவாறாக துதி செய்கிறார். இளைஞர்களான அரச குமாரர்களுக்கு, தகுந்த உபதேசம் செய்தார். கடமையை செய்யும் பொழுதே பகவத் தியானமும், நல்ல குணமும் அவசியம் என்று வலியுறுத்தினார். பிரஜைகளை பெருக்குங்கள். அதுவும் பகவானின் கட்டளையே என்றார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் இருபத்து நான்காவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-79
அத்யாயம்-25
மைத்ரேயர் சொன்னார்: இவ்வாறு சொல்லி பகவானை, பார்ஹிஷதர்கள் பூஜித்தனர். அவரும் கண் முடி திறக்கும் முன் மறைந்தார். ருத்ர கீதம் என்ற இந்த துதி மிக ப்ரபலமானது. பகவான் விஷ்ணுவை துதி செய்து மகேஸ்வரன் செய்தது. நியமத்துடன் அதை அந்த ராஜகுமார்கள் ஜபித்தும், பலகாலம் தவம் செய்தும் வந்தனர். ப்ராசீனபர்ஹிஷன் என்ற அந்த ராஜ குமாரன், கர்ம மார்கத்தையே பெரிதாக எண்ணி இருந்தான். ஒரு சமயம் நாரதர் வந்தார். இதுவும் சரிதான் ராஜன்!. துக்கம் விலகும், சுகமாக இருக்க வழி கோலும். ஆயினும் இது அனைத்திலும் ஸ்ரேயஸ்- உயர்வு என்று சொல்ல முடியாது.
ராஜா கேட்டான்: மஹாபாக! பெரியவரே, எனக்கு இது தவிர வேறு மார்கம் தெரியவில்லையே. இதற்கும் மேலான ஒன்று இருக்கிறதா? அதை எனக்குச் சொல்லுங்கள், என்றான்.
சம்சாரி, வீட்டில் புத்ர தாராதிகள், அவர்களுக்கு தேவைகள், அதற்கான செல்வம் சம்பாதிப்பது என்றே என் பொழுது செல்கிறது.
நாரதர் சொன்னார்: ப்ரஜாபதியான அரசனே! இதுவும் தான் வாழ்க்கை. ஒரு கதை சொல்கிறேன் கேள். ஒரு சமயம் புரஞ்சனன் என்று ஒரு அரசன் இருந்தான். அவனுக்கு ஒரு சகா. அவன் உலகை சுற்றி யாத்திரை செய்தான். எதைத் தேடி அலைந்தானோ அது கிடைக்கவில்லை. அவனுக்கே தான் எதைத் தேடுகிறோம் என்பதை சொல்லத் தெரியவில்லை போலும். பல ஊர்களைச் சுற்றியவன், எங்கும் நன்மையே தான் அவன் கண்ணில் பட்டது. ஒரு சமயம் இமய மலையின் தென் பக்கத்து சரிவில் ஒரு ஊர். அதற்கு ஒன்பது வாசல்கள்.
ப்ராகாரங்கள், உபவனங்கள், மாடி வீடுகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட வீதிகள், பொன்னும், வெள்ளியும் வீடுகளின் மேற் பகுதிகளில் அலங்காரமாக பயன் படுத்தப் பட்டிருந்தன. போகவதி என்ற நகரம் போல நீல மணிகளும் , வைடூர்ய,ஸ்படிக , முத்துக்கள், மரகதம், சிவந்த மணிகள் இவைகளாலும் மாளிகைகள் பிரகாசித்தன. நான்கு வழி வீதிகள், ரத வீதிகள், விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடைகள், சிறு உபவனங்கள், கொடிகள் கட்டப் பெற்ற யாக சாலைகள்., புரங்களின் வெளியே பலவித மரங்கள், செடி, கொடிகள் நிறைந்த உபவனம், மிருங்கங்கள் துள்ளி விளையாடின, கோலாஹலமான நீர் நிலைகள், பனித் துளிகள் அருவியாக பெருகி இருக்க, ஒருபுறம், பூக்களின் மணத்தை சுமந்து வந்த வாயு, ஆங்காங்கு பாத்திகளில் சிறு செடிகளும், நளினி எனும் நீரில் மலரும் பூக்களும், காட்டு ம்ருகங்கள் நிறைந்து இருந்தாலும் அவைகளால் பாதிக்கப் படாத முனி விரதர்கள், கோகிலங்களின் கூவலைக் கேட்டு தங்களை கூப்பிடுகிறதோ என்று எண்ணி வழிப் போக்கர்கள் தங்களாகவே வந்து பார்த்துச் செல்வர். அங்கு சுற்றி வந்த பொழுது ஒரு பெண்ணைப் பார்த்தான். தன்னுடன் பணியாட்களும், தவிர ஏவலர்களுமாக பல பேருடன் வந்து கொண்டிருந்தாள். ஐந்து தலை நாகம் ஒன்று பாதுகாவலாக உடன் வந்தது.
தனக்கு அனுகூலமான பதியைத் தேடுபவள் போல இருந்தாள். அழகிய நிறமும், விசாலமான கண்களும், எடுப்பான நாசியும், வரிசையான பற்களுமாக கவர்ச்சிகரமாக இருந்தாள். குண்டலங்கள் காதுகளை அலங்கரித்தன. தேவதை போல இருந்தாள். கால்களில் நூபுரங்கள் சப்தமிட்டன. இளம் வயதினள் என்பது உடல் வளர்ச்சியில் தெரிந்தது. வெட்கத்துடன் வஸ்திரத்தால் தன்னை மறைத்துக் கொண்டவளைப் பார்த்து புரஞ்சனன் சகா மயங்கினான். மிகுந்த ப்ரேமையுடன், யார் நீ, பத்ம பலாசம் போன்ற கண்கள், யாருடையவள் நீ, எங்கு வசிக்கிறாய், இந்த வெளிப் புறத்தில் என்ன தேடுகிறாய்? சொல் என்றான். யார் இவர்கள். பதினோரு போர் வீரர்கள் உன்னைத் தொடர்ந்து வருகிறார்கள். இந்த பெண்கள் யாவர்? எதற்கு இந்த ஐந்து தலை நாகம் உன்னை முன் சென்று வழி காட்டுகிறது? நீ ஹ்ரீ, பவானீ அல்லது ரமாவா? பதியைத் தேடுகிறாயா? உன்னைப் பார்த்தால் செல்வ செழிப்பில் இருப்பவள் என்று தோன்றுகிறது. கமலா தேவியா? கையில் இருந்த பத்மங்கள் விழுந்துவிட்டன என்று தேடுகிறயா? சுபகே! பாக்கியசாலியான பெண்ணே, இந்த தேவ மகளிரில் நீ ஒருவளாகத் தெரியவில்லை. பூமியில் பாதங்கள் இருப்பதால் மனிதப் பெண்தான் என்று ஊகிக்கிறேன்.
பகவான் விஷ்ணுவின் லக்ஷ்மி தேவி போல நீயும் என் மனைவியாகி இந்த ராஜ்யத்தை அலங்கரிப்பாய். சோபனே! என்னை ஏற்றுக் கொள். உன்னைக் கண்டதிலிருந்து மன்மதனால் வாட்டப் படுகிறேன் உன் முகம், அழகிய புருவம், கண்கள், கருங்கூந்தல், நிமிர்ந்து என்னைப் பார், அழகிய உன் வாயால் ஒரு சொல் சொல்வாயாக. வெட்கத்தினால் என்னைப் பார்ப்பதை தவிர்க்கிறாய் போலும்.
நாரதர் சொன்னார்: இவ்வாறு யாசிக்கும் புரஞ்சன சகா வை பார்த்து சிரித்துக் கொண்டே அவள் பதில் சொன்னாள். “என் பெற்றோர் யார் என்பது தெரியாது. என்ன குலம் என்பதும் தெரியாது. இந்த ஊரில் இருக்கிறேன். இதை நிர்மாணித்தவன் தான் எனக்கு சரணம். இந்த சகிகள் தான் எனக்கு துணை, , உதவி செய்பவர்கள். இந்த நாகம் என் பாதுகாப்புக்காக என்னுடன் வருகிறது. இந்த நாட்டையும் காவல் காக்கிறது.அதிர்ஷ்டவசமாக வந்துள்ளாய். பத்ரம் தே- உனக்கு நன்மை உண்டாகட்டும். உலகியலான வாழ்க்கையை விரும்புகிறாய். நான் சம்மதிக்கிறேன். இந்த நகரையும் பாலனம் செய்வாய். இது ஒன்பது முகம் கொண்டது. வேறு எவரை நான் மனம் விரும்பி ஏற்றுக் கொள்வேன் – புத்தியோ, ரசிகனோ இல்லாத ஒரு மனிதன், பசு போன்றான். சம்ப்ரயங்களை அறியாதவன் எனக்கு ஈடு ஆவானா?
( விளக்கம்- ஓன்பது வாசல்கள் உள்ள கோட்டை- மனிதனின் உடல். குலம்- நான், எனது என்ற புத்தி- வரும் காலம்- ஈஸ்வர ஞானம் – அதுவும் தெரியாது. வினைப் பயன் என்னை எவ்வாறு ஆட்டுவிக்கப் போகிறது என்பதும் தெரியாது. பந்துக்கள்- இந்திரியங்கள். மனித ஆயுள் நூறு என்பது சங்கேதம். புத்தி மனிதனின் சிறப்பு. அதனால் பசுக்களுக்கு இக- பர லோக சாதனைகள் என்பது கிடையாது. புத்தி மனிதனை ஆஸ்ரயித்து இருப்பது, ஈஸ்வரனை அடைய வழி சொல்கிறது. பரமாத்மாவை அறியாத மனிதர்களும் அகோவிதா: அறிவு இல்லாதவர்கள். ஆத்மரதி- ஆத்ம திருப்தன் அல்லது தான் யார் என்று அறிந்தவன்- மனித பிறவியில் தான் இது சாத்யம்- ஞானம் மோக்ஷத்துக்கு வழி காட்டும்- தர்மாதி அனுஷ்டானம், புத்ர சுகம் இவைகளுடன் இல்லற வாழ்க்கையே சிறந்தது. )
அதன் பின் இருவரும் தம்பதிகளாக அந்த நகரத்தில் பல காலம் வாழ்ந்தனர். ஆடலும் பாடலுமாக அவர்கள் வாழ்க்கை இனிதே சென்றது. மேல் வாசல்கள் ஏழு, கீழே இரண்டு – ஒவ்வொன்றும் ஒரு வித செயலுக்கானது.
மனித சரீரமும் அதன் பாகங்களும், செய்யும் செயல்களுமே அந்த நகரத்தின் கோட்டைகளாகவும், அதன் பெயர்களாகவும் அமைக்கப்பட்டிருந்தன.
ஒன்றாக உண்டும், குடித்தும், உறங்கியும் ஒன்றாக காலம் கழித்தனர். சில சமயம் பாடினாள். சிரித்தாள். சில சமயம் அழவும் செய்தாள். ஜல்பம் என்ற வேண்டாத பேச்சிலும் காலம் சென்றது. தூக்கத்திலும், பேச்சிலும் காலம் சென்றதே தெரியவில்லை. அதிலேயே முழ்கி இருந்தவன் மிருகம் போல தன் கடமைகளை மறந்தவனாக ஆனான். தான் செய்து வந்த யாகங்கள், தினசரியைகளை கூ ட மறந்தான்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில்இருபத்து ஐந்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-62
அத்யாயம்-26
ஒரு சமயம் வேகமாக செல்லக் கூடிய ஐந்து குதிரகள் பூட்டிய ரதத்தில் கிளம்பினான். கையில் பொன் அம்புகள், ப்தினோரு போர் வீர்கள் கொண்ட சேனைத் தலைவனாக, வனம் சென்றான். என்ன நினைத்தோ, வனத்தில் மிருகங்களை கண்டபடி அடித்தான். வேட்டைக்குச் செல்பவர்கள் சில நியதிகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பது வழக்கில் உள்ள சட்டம். அசுரன் போல கருணையின்றி பேராசையுடன் வேட்டையாடுபவன் தண்டிக்கப் பட வேண்டியவன். குணமில்லாதவன் அறிவிழந்தவன் என்று அவர்களை குற்றம் சாட்டுவர். முயல்கள், பன்றிகள். எருமைகள், பசுவால் கொண்ட மிருகங்கள், ருரூ, சல்யன் எனும் சிறு மிருகங்கள், இவைகள் சில இறந்தன, பல அடிபட்டு உடல் அங்கம் இழந்தவைகளாக துடித்தன. அரசன் தானும் களைத்து சோர்ந்து விட்டான். பசி தாகம் வாட்டினாலும், சாப்பிடாமல், குளித்து முடித்து நேரே படுக்கைக்குச் சென்றான். தூபங்கள், வாசனைப் பொருட்களால் அலங்கரித்து கொண்டு மனைவியைத் தேடினான். வீட்டில் தாயாரோ, மனைவியோ இல்லையெனில் சூன்யமாக தெரிவது இயல்பே. எங்கே போனாள் என்று துக்கத்தில் ஆழ்ந்தான். பணிப் பெண்கள் “அரசனே! ஏன் வருந்துகிறாள் என்பது தெரியவில்லை. பூமியில் படுக்கையின்றி படுத்து கிடக்கிறாள்” என்றனர். புரஞ்ஜனன் அவளை சமாதானப் படுத்த முனைந்தான். வழக்கம் போல அவள் இயல்பாக இல்லை. எந்த சமாதானமும் எடுபடாமல் போகவே, கால்களில் விழுந்தான். என்ன தண்டனை கொடுப்பாயோ, ஏற்றுக் கொள்கிறேன், ஆனால் இப்படி பாராமுகமாக இருக்காதே என்று கெஞ்சினான். நல்ல ஆடையோ, ஆபரணமோ இன்றி நீ கிடப்பதை என்னால் சகிக்க முடியவில்லை என்று அரற்றினான். எதற்கும் அவள் அசையவில்லை.
( மனித சரீரமும், அதன் அங்கங்களும் கோட்டையாகவும் வனமாகவும் குணங்களாகவும் இந்த பகுதி முழுவதும் உருவகப்பட்டுள்ளன)
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில்இருபத்து ஆறாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-26 ||
அத்யாயம்-27
நாரதர் சொன்னார்: இவ்வாறு முழுமையாக அவள் வசம் ஆனவனாக ஆகி விட்ட புரஞ்சனன், இரவு பகல் எதையும் உணரவில்லை. ஒருநாள் ஸ்னானம் செய்து விட்டு வந்தவளை அணைத்து சரஸமாக பேசிக் கொண்டிருந்தான். அவளும் அதை ரசித்தபடி திருப்தியாக இருந்தாள். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விரும்பி உடல் சுகமே பெரிதாக காலம் கழித்தனர். உயர் தரமான படுக்கை, மற்ற வசதிகளுடன் அருகில் மனைவியும் அவளும் விரும்பி தன்னை அர்ப்பணித்தவளாக இருக்கையில் வாழ்க்கையின் பொருளே அது தான் என்பது போல காலம் சென்றது. அந்த நேரத்தில் எது நல்லது, எது உண்மை எது மற்றது என்று எண்ணமே எழவில்லை. இளமை ஒரு நொடியாக அகன்றது. நூற்று பதினோரு புத்திரர்கள் பிறந்தனர். ஆயுளில் பாதியும் நிறைந்தது. புரஞ்சன பிரஜாபதியின் மகள்கள் அதே போல நூற்று பத்து பேர், அழகும், சீலமும், ராஜ குமாரிகள், என்பதற்கேற்ப உதார குணமுள்ளவர்களாகவும் இருந்தனர். அந்த பாஞ்சால அரசன், சரியான வரன் களைப் பார்த்து பெண்களுக்கு மணமுடித்தான். புத்திரர்களும் அதே போல குடும்ப வாழ்கையில் ஈடுபட்டு நிறைய புத்திர புத்ரிகளைப் பெற்றனர். புரஞ்சன வம்சம் பாஞ்சால தேசத்தில் பல்கி பெருகியது. வீட்டுச் சொத்திலேயே வாழ்ந்து வளர்ந்தவர்கள், பொறுப்பில்லாமல் திரிந்தனர். மமதையும், உழைப்பை அறியாத சுக வாழ்க்கையும் கண்டபடி செலவழித்தனர். யாகங்கள், ஏராளமான பலிகள் கொடுத்து,கோரமான தீக்ஷைகள், தேவர்கள், பித்ருக்கள், பூத பதிகள் இவர்களிடம் வேண்டுதல்கள் என்று பலவிதமாக. செலவழித்தனர். நாளடைவில் அவன் பிரிய மனைவிகளுக்கே அவனிடம் வெறுப்பு வந்தது.
சண்ட வேகன் என்று கந்தர்வ ராஜா. அவனிடம் மிகப் பெரிய படை இருந்தது. ஆறாயிரத்துக்கும் மேல் பலசாலிகளான சிறந்த வீர்கள். அவர்கள் புரஞ்சன நகரை ஆக்ரமித்தனர். கூட்டம் கூட்டமாக புரஞ்ஜனனின் படை வீர்கள் போரில் ஈடுபடுத்தப் பட்டனர். போரில் தோல்வியை எதிர் பார்த்து பந்துக்கள் கவலைப் பட்டனர். உடல் பலம் தளர்ந்தது. உடன் மன வலிமையும் குறைந்தது (வயதானதால் பந்துக்களாக இருந்த புலன்களே ஒத்துழைக்கவில்லை) காலத்தின் மகள் நரை – வந்து ஆக்ரமித்தாள். முதுமையின் முதல் அடையாளம். முதல் முறையாக ம்ருத்யு பயம் வந்தது. இதுவரை உல்லாசமாக மனைவியே எல்லாம் என்ரு இருந்தவனுக்கு தாங்க முடியாத முதுமை தவிர்க்க முடியாதது. காலத்தின் மகள் ஒருசமயம் என்னையும் தாக்க வந்தாள். அந்த சமயம் யதேச்சையாக நான் பூ லோகம் சென்றிருந்தேன். நான் நைஷ்டிக ப்ரும்மசாரி, விரதங்கள் செய்பவன் ஜரா மரணங்கள் எனக்கு கிடையாது என்று வரம் பெற்றவன் என்பதையறியாமல். வேறு யாரும் அவளை ஏற்றுக் கொள்ளவில்லை. என்னிடம் அவள் விரும்பியது நடக்கவில்லை என்பதால் பெரிய சாபம் கொடுத்தாள். என் ஆசையை மதிக்காத நீ ஒரு இடத்திலும் நிலைத்து இருக்க மாட்டாய், அலைந்து கொண்டேயிருப்பாய் என்று சாபமிட்டாள். அதன் பின் அவள் யவன ராஜா (-சுக்ர பகவானால் சபிக்கப் பட்ட யயாதியை சென்றடைந்தாள். பயம் – என்பதை (நரை கண்டவுடன் மனதில் தோன்றுவது பயம் என்பது பொருள்)
(சாபத்தால் முதுமை அடைந்தவன் ராஜரிஷி யயாதியிடம் பயம் இருந்ததால், அங்கு அடைக்கலம் பெற்றாள். )
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் இருபத்து ஏழாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-30
அத்யாயம்-28
யயாதியின் சைன்யம் பயம் என்பது .ப்ரஜ்வரம், கால கன்யா -ஜரா (நரை )- இவ்விருவருடனும் உலகை ஆக்ரமித்தான். ஒரு சமயம் புரஞ்சனனின் போகமே பிரதானமக இருந்த நகரை ஆக்ரமித்தனர். வயதான நாகங்களால் சூழப்பட்ட நகரம். கால கன்யா சந்தோஷமாக அந்த நகரை தன் வசப் படுத்திக் கொண்டாள். அவள் ஆளுமையில் ஊர் மக்கள் சாரமில்லாமல் துவண்டு போனார்கள். அவளின் பசிக்கு ஈடு கொடுக்கமுடியாமால் யவன தேசத்தவர். நாலா புறமும் சிதறி ஓடினர். அவள் வெற்றி நடை போட்டாள். வீட்டு வாசல் வழியாகவே தைரியமாக சென்றாள். ஊருக்குள் தடுப்பவர் எவருமில்லை. இதுவரை நினைத்தே பார்த்திராத தாக்குதல். வளர்ந்து விட்ட பெரிய குடும்பம் – தான், தன் என்பதே நினைவாக இருந்தவன். நிலை குலைந்து போனான். ராஜ்யம் தொலைந்தது. காலத்தின் மகள் நாலாபுறமும் சூழ்ந்து அவனது பலத்தை அழித்தாள். கந்தர்வர்களும் யவனர்களும் சூறையாடினர். மனைவி முன் போல அன்புடன் இல்லை. புத்ர பௌத்ரர்களும் எதிர்த்தனர். மந்திரிகள் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர். தனித்து விடப் பட்டவன், ஜரையால் பலம் இழந்தவன், பாஞ்சால ராஜன், எதிரிகளால் வேட்டையாடப் பட்டவன், சிந்தனை வயப் பட்டான். என்ன செய்வது என்று யோசித்தான். இன்னமும் மனதில் காமம் அடங்கவில்லை. மனைவியோ பெற்ற பிள்ளைகளோ கூட மறுத்த போது கூட அவர்களையே விரும்பினான். சீக்கிரமே கந்தர்வ வசம் ஆனது ராஜ்யம். முதுமை மேலும் வாட்டியது. ஊரை விட்டு வெளியேற முயன்றான். அதற்குள், பயம் என்ற மூத்தவன் வழிகாட்ட, ப்ரஜ்வார: அந்த நகரை எரித்தான். எரியும் ஊரில், தன் சந்ததிகளோடு, மனைவி மக்களோடு அழிந்தான். மரத்தின் பொந்துகளில் வாழும் நாகங்கள், மரம் காட்டுத் தீயால் பாதிக்கப் பட்ட சமயம் வெளியே திணறுவது போல திணறினான். அழுதான். எரியும் வீட்டில் அகப்பட்டது லாபம் என்று கந்தர்வர்கள் மற்ற எதிரிகள் பிடுங்கிக் கொண்டனர்.
வாழ்நாள் பூராவும் சுய நலமே பெரிதாக வாழ்ந்தவன், இப்பொழும் பரலோகம் சென்று விட்ட என் மனைவி எப்படி வாழ்வாள் என்று கவாலைப் பட்டான். தன் புத்ர, பௌத்ரர்களை பற்றி எண்ணி கவலைப் பட்டான்.
பெண் நினைவாகவே உயிரை விட்டவன், விதர்ப தேச அரசனின் மகளாகப் பிறந்தான். அந்த பெண் விவாக வயதடைந்தவுடன், சுயம் வரம் நிச்சயித்தான். பராக்ரமியான அரசனுக்குத் தான் என் மகள் என்று கோஷித்தான். அந்த நாட்களில் பிரசித்த அரசனான பாண்ட்ய ராஜா போட்டியில் அனைத்து அரசர்களையும் ஜயித்து அந்த பெண்ணை மணந்தான். மலயத்வஜ ராஜாவுக்கு, மிக அழகான ஸ்யாமள நிற கண்களுடன் புத்ரியும் ஏழு புத்திரர்களும் பிறந்தனர். அவர்கள் தன் நாட்டின் பிரதான அரசர்களாக ஆட்சி புரிந்தனர். நாளடைவில் அவர்கள் வம்சம் புத்திரர்கள், பௌத்திரர்கள் என்று பெருகியது.
அகஸ்தியர் அந்த குடும்பத்து பெண் ஒருவளை மணந்தார். அவர் புத்திரர்கள், த்ருடஸ்யுதன், இத்மவாஹன் என்று இருவர். மலயத்வஜன் தன் மகன்களிடம் ராஜ்யத்தை ஒப்படைத்து விட்டு குலாசலம் சென்று விட்டான். ராஜ ரிஷியாக இருந்த அவனுடன் அவன் மனைவி வைதர்பி என்பவளும் சென்றாள். தாம்ரபர்ணி, சந்த்ரவஸா என்ற நதிகளில் ஸ்னானம் செய்து உடலும் உள்ளமும் தூய்மையாக இருவரும் பகவத் தியானத்தில் நாட்களை கழித்தனர். தவம் செய்வதன் நியமங்களை அனுசரித்து, பழங்கள், பச்சை காய்கறிகள், என்று மிதமாக உண்டு, தவம் செய்தனர். யோக சாதனைகளை மேற்கொண்டு ப்ரும்மத்தில் மனம் ஒன்றி, பற்றின்றி ஸ்தாணுவைப் போல ஸ்திரமாக வாசுதேவனை துதி செய்தனர். மலயத்வஜன் உயிர் போன பின் செய்வதறியாது தவித்து புலம்பி, தானும் தீயில் விழ யத்தனித்தவளை, ஒரு காலத்தில் குடும்ப சகாவாக இருந்த ஒரு ப்ராம்மணன் கண்டான். அவளைத் தடுத்து அன்புடன் பேசி, அவளிடம் சமாதானப் படுத்தி, அழாதே, என்று சொல்லி உலகியலைச் சொன்னான்.” பெண்ணே! யார் நீ, யாருடையவள், இதோ தூங்குவது போல கிடக்கிறானே, இவன் யார்? இவனுக்காக நீ ஏன் வருந்துகிறாய்? , என்னைத் தெரிகிறதா? நான் உங்கள் குடும்பத்தின் நண்பன், முன் பல காலம் உங்களுக்கு ஆலோசகனாக இருந்திருக்கிறேன். நினைவு இருக்கிறதா? அதன் பின் பல பிறவிகள். மனம் போனபடி வாழ்ந்தீர்கள். உலக சுகமே நிரந்தரம் என்று நம்பி இருந்தீர்கள். நான் அவிக்ஞாத சகா. புரஞ்சனன் என்ற அரசனாகவும், அவன் மனைவியுமாக ஒரு பிறவி. புருஷன், மனைவி என்ற பந்தமே பகவானால் ஸ்ருஷ்டிக்கப் பட்டது. பிரஜைகள் பெருக வேண்டும் என்பதற்காக. என்று பலவிதமாக தத்வ உபதேசங்கள் செய்தான். ஒன்றே இரண்டாகி முதன் முதலில் பர புருஷன் ஸ்ருஷ்டியை ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து உலகம் இயங்கி வருவதைச் சொல்லி, மானசமான ஹம்ஸம், மற்றொரு பரமாத்மான ஹம்ஸத்தால் தட்டி எழுப்ப பட்டது போல இருந்தது. அவளும் உண்மையை உணர்ந்து, சோகம் நீங்கி தன் உணர்வை அடைந்தாள்.
பர்ஹிஷ்மான் என்ற இந்த சரித்திரம், அத்யாத்மம் என்ற விஷயத்தை, கதை ரூபமாக, ஒருவனின் வாழ்க்கையாக சொல்லப் பட்டிருக்கிறது. இப்படியும் கற்பனையாக சொன்னது சிலருக்கு பிடிக்கும் என்று பாகவதம் சொல்கிறது. .
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் இருபத்து எட்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-65
அத்யாயம்-29
நாரதரிடம் கதை கேட்ட ப்ராசீன பர்ஹிஷ், பகவன், நீங்கள் சொன்ன கதை எனக்கு புரியவில்லை. நாங்கள் கர்ம மார்கத்தை அனுசரித்தாலும் அதுவே எல்லாம் என்று நினைக்கவில்லை. கவிகள், அறிவுடையோர் அறிவார்கள்.
நாரதர் விவரித்தார். எல்லா உயிரினங்களுக்கும் தன் தேகத்தை போஷித்துக் கொள்ள அறிவு இருக்கிறது. அது போல மனிதனும் தன்னை போஷித்துக் கொள்ள அறிவுடன், ப்ரக்ஞா- என்ற மேம்பட்ட அறிவையும் உடையவன். அதிலும் அரசனாக இருப்பவனுக்கு பொறுப்புகள் அதிகம். மனித பிறவி அடைந்தவன், இக லோகத்தை விட்டு பரலோகம் அடைய வேண்டும். மறு பிறவி, மறுபடியும் அதே வாழ்க்கை என்று இருக்காமல் பகவானை நினைக்க வேண்டும். …….
அத்யாயம்-30
விதுரர் சொன்னார். ப்ரும்மன்! ப்ராசீன பர்ஹிஷனின் பிள்ளைகள் ருத்ர கீதம் பாடினார்கள். அது ஹரியை குறித்த துதி என்பது வரை புரிகிறது. என்ன பலன் அடைந்தார்கள். எதேச்சையாக பகவான் கிரீசனைக் கண்டு அனுக்ரஹம் பெற்றார்கள் என்று சொன்னீர்கள். அது பற்றி விவரமாகச் சொல்லுங்கள்.
ப்ரசேதஸ் தந்தை சொன்னபடி, தவம் செய்ய முனைந்தனர். இடையூறின்றி, சமுத்திரத்தின் உள்ளே ருத்ர கீதத்தை ஜப யக்ஞம் என்பதாகச் செய்யலானார்கள். புரஞ்சனனும் மகிழ்ந்தான். பல காலம் இவ்வாறு சென்ற பின், பகவான் சனாதனான பரம புருஷன், அவர்கள் எதிரில் கருட வாகனத்தில் வந்தார். மேருவின் சிகரம் போல கருடனின் உருவம்ஆகாயத்தில் பரவி நின்றது. மணி ஒளி வீசும் கழுத்தும், பீதாம்பரமும் திசைகளில் தக தகத்தன. இருளை அகற்றும் அருணனின் கிரணங்கள் போல அவருடைய பொன் ஆபரணங்கள் ஜொலித்தன. கிரீடம், அஷ்ட ஆயுதங்கள், உடன் வந்த பரிசாரகர்கள், முனிவர்கள், சுரேந்திரன் இவர்கள் கூட்டமும், எட்டு புஜங்களின் மத்தியில் ஸ்ரீ தேவியும், வனமாலையும், கண் கொள்ளா காட்சியாக இருந்தன. வணங்கி நின்ற பர்சிஷத புத்திர்களிடம் இடி முழக்கம் போன்ற குரலில் பேசலானார்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: என்ன வரம் வேண்டுமோ, கேளுங்கள். பத்ரம் தே – உங்களுக்கு நன்மை உண்டாகட்டும். அரச குமாரர்களே, உங்கள் தவத்தை மெச்சினேன். என்றார். சந்த்யா காலத்தில் உங்களை நினைப்பவர்கள் உங்கள் சகோதரர்களுக்கு இணையாக ஆவார்கள். ருத்ர கீதத்தை காலையும் மாலையும் ஜபித்து வந்தீர்கள். உங்களுக்கு வேண்டிய வரங்களைத் தருகிறேன். நல்ல அறிவையும் அருளுகிறேன். என்றார். தந்தை சொல்லை மதித்து தவம் செய்ய முனைந்தீர்களே அது சாலவும் நன்று. அதுவே உங்கள் குணத்துக்கு சான்று, குலத்துக்கு பெருமை. தந்தையின் மற்றொரு ஆணை பிரஜைகளை பெருக்குங்கள் என்பது. அது அவர் பெருமையை உலகில் பரவச் செய்யும் என்றார். என்ன வரம் கேட்பது ?. என்று அறியாமல் அவர்கள் தயங்க, அவரே மேலும் சொன்னார்.
கண்டு என்பவரின், ப்ரம்லோசா என்ற பெண்னிடம் பிறந்த பெண் கமல லோசனா,
(கண்டு என்ற முனிவரின் தவத்தைக் கலைக்க இந்திரன் ப்ரம்லோசா என்ற பெண்னை அனுப்பினான். அவளுடன் முனியர் பல காலம் கழித்தார். பின் சுவர்கம் செல்லும் முன் தன் கர்பத்தை மரங்களுக்கு கொடுத்து விட்டு அந்த பெண் சென்றாள். பெண் மகவு பிறந்தது. கண்டு முனிவரன் ப்ரும்ம தேஜசுடன் பிறந்த பெண் அழகியாக இருந்தாள். மரங்களின் அரசன், சோமன்- சந்திரன். பிறந்த குழந்தையின் பசிக்கு எதைக் கொடுப்பது என்று யோசித்து தன் சுட்டு விரலை அதன் வாயில் கொடுத்து சூப்ப வைத்தான். மரங்களின் கனி அம்ருதமாக இருப்பது அவன் செயலால் என்பதால் அது அம்ருதம். அதை குடித்து வளர்ந்த அப்சர ஸ்த்ரீயின் பெண். பல விதத்திலும் உங்கள் வம்சம் வளர உதவுவாள் என்றார். ஒரு பெண், எல்லோருக்கும் எப்படி மனைவி ஆவாள் என்ற கேள்விக்கு, அவள் அனுசரித்து நடந்து கொள்வாள். பல காலம் சந்தோஷமாக வாழ்ந்து பல தனயர்களைப் பெற்ற பின் என்னை வந்தடைவீர்கள் என்று அனுக்ரஹித்தார். ருத்ர கீதம் பாடி தவம் செய்த உங்களை இந்த இக லோக வினைகள் தொடராது. என்றார்.
இதைக் கேட்டு ப்ரசேதஸர்கள் திகைத்தனர். துதி செய்தனர்.
உங்கள் உதார குணம் வேண்டுபவரின் க்லேசத்தை போக்கக் கூடியது. மனம், வாக்கு, இவைகளை விட வேகமாக செல்லக் கூடிய உங்கள் கருணை கடாக்ஷம் பெரும் பாலை நிலத்தையும் கடக்கச் செய்து விடும். உங்களுக்கு நமஸ்காரம். தூய்மையே உருவானவர், சாந்தன்- அமைதியானவர் என்று வணங்குகிறோம். எங்கள் ஹ்ருதயத்தில், மனிதன் அல்லாத ஆத்மாவாக உள் உறைந்து காப்பவர் என்று வணங்குகிறோம்.
உலகை படைத்து, காத்து, கலைக்கும் உங்கள் மாயை. அதை வைத்து ஆட்டுவிக்கும் குணத்துக்கு நமோ நம:- பல நமஸ்காரங்கள்..
விசுத்த சத்வர், ஹரி, ஹரிமேதஸ், வாசுதேவன் , க்ருஷ்ணன் என்று பல பெயர்கள். எப்பொழுதும், அனைவருக்கும் நன்மையே செய்பவர். பத்மனாபனான உங்களை நமஸ்கரிக்கிறோம். கமல மாலையை தரித்தவர், கமலம் போன்ற பாதங்கள், கண்களும் கமலம் போன்றவையே- உங்களை நமஸ்கரிக்கிறோம். கமலத்தின் மகரந்தம் போன்ற மஞ்சள் நிற வஸ்திரம் தரித்தவர், பீதாம்பர தாரி, அனைத்து பூதங்களிலும் இருப்பவர், ஆயுளை தரும் உங்களுக்கு நமஸ்காரம்.
எங்களுக்கு வேறு என்ன வேண்டும்? மானிட ஜன்மத்தில் கண்களால் காண அரிதான உங்களுடைய இந்த ரூபத்தைப் பார்த்த பின் எதுவுமே தேவையில்லையே. இந்த தரிசனமே எல்லா கஷ்டங்களையும் நீக்கி விடும். தீன வத்ஸலன் நீங்கள். பெரியோர்கள் விரும்புவது கூட இந்த அளவே, இதற்காக தவம் செய்கிறார்கள், அனுதினமும் ஸ்மரிக்கிறார்கள், நன்மையல்லாததை எங்கள் அருகில் கூட வராமல் காப்பவர் நீங்கள். சின்னஞ்சிறு ஜீவன் முதல் மிகப் பெரிய ஜீவன்கள் வரை உள்ளிருந்து இயக்குபவர் உங்களுக்கு தெரியதா எங்களுக்கு எது நன்மை என்று, எதுவானாலும் ஏற்றுக் கொள்கிறோம். ஜகத்பதே! நாங்கள் வேண்டுவது இது தான். பகவான் ப்ரஸன்னமாக இருந்து எது பரகதிக்கு நல்லதோ அந்த வழியைக் காட்டுங்கள். பாரிஜாதம் தாராளமாக கிடைக்கும் பொழுது அதன் ருசியில் திளைக்கும் வண்டுகள் அருகிலேயே இருந்தாலும் மற்ற மரங்களை நாடிச் செல்வதில்லை. அது போல அனந்தனான உங்கள் தரிசனம் கிடைத்தபின், எங்களுக்கு வேறு எதிலும் நாட்டமிலை. இந்த பிறவியில் மட்டுமல்ல, வினைப் பயனாக வரும் பிறவிகளிலும் பாகவதர்களான உங்கள் பக்தர்களுடன் எங்கள் வாழ்க்கை அமையட்டும். சுவர்கம் கூட இதற்கு பின் தான். ஏனெனில் கூடி பாடுவதும், கதைகள் கேட்பதும், பஜனைகள் செய்வதும் தரும் ஆனந்தம் அங்கு இருக்காது என்கிறார்கள்.
சாக்ஷாத் பகவான் பவனை- சங்கரனை, க்ஷண நேரம் கண்டாலும், சிறந்த வைத்யனான அவர் உபதேசித்த கீதம்,எங்களுக்கு இந்த உயர்வை தந்துள்ளது. குரு ஜனங்களின் அருளால் கற்றதும், தங்கள் நடத்தைகள் மூலமே சிக்ஷித்த பெரியவர்களும், அந்தணர்களும், எங்கள் நண்பர்களும், அனசூயாவை போலவே அசூயை இல்லாதவர்கள். என்ன தவம் செய்தோம்? கடல் நீரில் மூழ்கி, அன்ன ஆகாரமின்றி நாங்கள் பல காலம் செய்த தவத்தின் பலன், இந்த அனைவரும் உங்களுடைய அனுக்ரஹத்திற்கு பாத்திரமாக வேண்டும் என்று வேண்டுகிறோம். மனு, ஸ்வயம்பூ, பகவான், பவன், என்று தவம் ஞானம் உடைய விசுத்த சத்வா: தூய்மையானவர்கள், எல்லையில்லாத தங்கள் மகிமையை துதிக்கிறார்கள், அவர்களுடன் சேர்ந்து வணங்குகிறோம்.
नमः समाय शुद्धाय पुरुषाय पराय च ।-वासुदेवाय सत्त्वाय तुभ्यं भगवते नमः ॥ ४२॥
மைத்ரேயர் சொன்னார்: இவ்வாறு துதி செய்யவும் மகிழ்ந்த ஸ்ரீ ஹரி, ப்ரீதியுடன் அனுக்ரஹித்து விட்டு, தன் இருப்பிடம் சென்றார்.
கடல் நீரின் ஆழத்திலிருந்து ஊர் திரும்ப நினைத்து கடல் மட்டத்திற்கு வந்தவர்கள், மரங்களே நிறைந்து ஊரே தெரியாமல் இருந்ததைக் கண்டார்கள். அதனால் கோபம் கொண்டு மரங்களை விலக்க எண்ணி தங்கள் வாயால் ப்ரசண்ட மாருதம் என்ற காற்றை வரவழைத்து அழித்தனர். பிதாமகர் ஓடி வந்தார். பேரன்களான பர்ஹிஷ்மதி ராஜ குமாரர்களை சமாதானப் படுத்தினார். மீதி இருந்த மரங்கள் பயந்தன. பயந்து தங்களுடன் ஒண்டி கொண்டிருந்த ரிஷியின் மகளை கொண்டு வந்து ஒப்படைத்தனர். அவளை ஸ்வயம்பூ அவர்களுக்கு மணம் செய்வித்தார். அபூர்வமான பிறவி அவள். மாரீஷா- மரங்களில் பிறந்தவள்.
அந்த யுகம் காலத்தின் வசம் ஆகி முடிந்த பின், நாலாவது யுகம் ஆரம்பித்தது. அந்த யுகத்தில் தெய்வ சங்கல்பத்தால் ப்ரும்ம புத்ரனாக தக்ஷன் தோன்றினார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் இருபத்து ஒன்பது, முப்பதாவது அத்யாயங்களின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-51
அத்யாயம்- 31
ப்ராசேதஸர்கள், முதுமை அடைந்தனர். மனைவியை பிள்ளைகளிடம் விட்டு தாங்கள் மட்டும் வனம் சென்றனர். ப்ரும்ம தீக்ஷை எடுத்துக் கொண்டு மேற்கு திசையில் யோக சாதனைகளில் ஈடு பட்டனர். அங்கு நாரதர் வந்தார். எழுந்து நின்று அவரை வரவேற்று உபசரித்த பின் ப்ராசேதஸர்கள் வினவினர்.
“ஸ்வாகதம் முனிவரே! சுர ரிஷியே, உங்களக் கண்டது எங்கள் பாக்கியம். எங்கும் சுற்றிக் கொண்டிருப்பவர், சூரியன் போலவே லோகத்தில் அபயம் அருளுபவராக நீங்களும் சுற்றி வருகிறீர்கள். நீங்கள் சொல்லியபடியும், ஸ்ரீ பரமேஸ்வரன் சொல்லியபடியும் நடத்திய என் வாழ்க்கை அனேகமாக முடியும் தறுவாயில் இருக்கிறது, ப்ரபோ! அத்யாத்ம ஞானமும், தத்வார்த தரிசனமும் என்னை அனாயாசமாக இந்த பவ சாகரத்திலிருந்து கரையேற உதவியுள்ளது.
மைத்ரேயர் சொன்னார்: இவ்வாறு ப்ரசேதஸ் சொன்னதைக் கேட்டு நாரதர் சொன்னார். அவர்கள் அனைவரையும் பார்த்து பதில் சொன்னார். நான் யார் உபதேசம் செய்ய- பகவான் ஸ்ரீஹரி செயல்- உலகில் அரசர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று சொன்னாரோ அதே போல வாழ்ந்து காட்டியிருக்கிறீர்கள். நல் குடி பிறப்பு, நேர்மையான செயல்கள், நீண்ட வாழ்நாள் (அல்லது உடல் நலம்), மனப் போக்கு, ஆளுமையோடு கூடிய சொல் -இவைகள் அரசனுக்கு இருக்க வேண்டிய குணங்கள் என்றார். தாய் வயிற்றில் பிறப்பது ஒரு பிறப்பு, பின் உபனயனம் அல்லது ப்ரும்மோபதேசம் பெறுவது இரண்டாவது பிறப்பு, யாகங்கள் செய்து வேத கர்மாக்களை விதிப்படி செய்வது மூன்றாவது பிறப்பு. கல்வி கற்றலும், தவம் செய்வதும் – பயிற்சிகளை விடாமல் செய்வதும், வார்த்தைகளை பொருள் பட சொல்வதும், நல்ல மனப் போக்கும், புத்தி, நிபுணத்வம்- திறமை, நல்ல பலம், புலனடக்கம் இவையனைத்தும் இருந்தாலும் விஸ்வாத்மா ஸ்ரீ ஹரியின் அனுக்ரஹம் இல்லாமல் பிரகாசிக்காது.
ஜீவன்கள் நன்மைகள் என்று கருதுவது தன் நலம் (தன் ஆத்ம க்ஷேமம்) வரை தான். ஸ்ரீ ஹரிதான் அனைவருக்கும் விரும்பும் பலனைத் தரும் பிரிய பந்து. மரத்தின் வேருக்கு நீர் பாய்ச்சினாலேயே மரத்தின் கிளைகள், தண்டுகள், துளிர்கள் வரை மகிழ்ச்சியடைகின்றனவோ, அது போலத்தான். இந்திரியங்களுக்கு ப்ராணன் – உயிர், தருவது போல ஸ்ரீ ஹரியின் சேவை ஒன்றே போதும். சூரியனிடமிருந்து நாட்களை கணக்கிடுகிறோம், வாரங்கள், மாதங்கள் என்று காலக் கணக்கு. பூமியில் ஜனித்த, அசையும் அசையா பொருட்கள் அனைத்தும் பூமியில் சங்கமம் ஆகின்றன. குணங்கள் அனைத்தும் ஸ்ரீஹரியிடம் சங்கமம் ஆகின்றன. ஜகதாத்மா ஸ்ரீ ஹரியின் இடம் என்பது சூரியன் பிரபை தூங்கிய உயிர்களை எழுப்புவது போல். த்ரவ்ய (மூலப் பொருள்), க்ரியா, ஞானம் என்ற வேறுபாடுகளுடன் சுழலுகிறது. ஒரு சூரியன் வானம் முழுவதும் வெளிச்சம் தருவது போல, பூமியில் வாழும் அனைத்தும் தங்கள் முயற்சியின்றியே, ப்ரும்மத்திடம் சக்தியைப் பெறுகின்றன. ரஜஸ், தமஸ், சத்வம் என்ற பேதங்கள். (மூன்று அளவு கோல்கள்) கொண்டவையாக. உயிரினத்தின் ஒரே ஆத்மா, அனைத்திலும் பரவியிருக்கும் ப்ரதான புருஷன், தன் தேஜஸால் குணங்களை இந்த அளவு கோலால் பகிர்ந்து அளித்து அதனதன் தனித் தன்மையை நிலை நிறுத்துகிறான். அவனது தயையோ, திருப்தியோ, என்று ஏதோ ஒன்று, அசையும் அசையா உலகை காக்கிறது. அனைத்து ஜீவன்களின் நன்மையில் தானும் மகிழ்ச்சியடைகிறான். அதனால் தான் ஜனார்தனன். பாரபக்ஷம் இல்லாமல் இருப்பதாக தெரிந்தாலும், தன்னிடம் பக்தி கொண்ட, தன் செயல்களில் நேர்மையாக இருப்பவன், தனம், உடல் பலம் இவை இல்லாதவன் என்றாலும் இவர்களுக்கு அதிக அனுக்ரஹம் செய்கிறான். தன் குலம், தனம் என்று கர்வத்துடன் செய்யும் செயல்களுக்கு பலனும் அதற்கு தகுந்த அளவிலேயே அமையும். ஸ்ரீ தேவி ஹரியினுடனேயே அனுசரித்து இருப்பவள். அவளைத் தனியாக வேண்டுவதே தேவையில்லை.
மைத்ரேயர் சொன்னார்: நாரதர் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அரசர்களை ஆசீர்வதித்து தன் இருப்பிடம் சென்றார். அவர்களும் தங்கள் சாதனைகளைத் தொடர்ந்து செய்பவர்களாக, காலம் வந்த பின் நல்ல கதியை அடைந்தனர். பெரியவரே, இது தான் நீங்கள் கேட்க விரும்பிய நாரத-ப்ரசேதஸ கதை.
ஸ்ரீ சுகர் சொன்னார்: விதுரர் அதன் பின் அவரை வணங்கி விடைபெற்றார். கஜஸாஹ்வயம் என்ற இடத்தில், தன் உறவினர்களின், சுற்றத்தார்களை காண கிளம்பினார். இந்த கதையை கேட்பதின் பலனாக, ஆயுள், தனம், சௌக்யம், ஈஸ்வர பக்தி இவை அமையும் என்று பலஸ்ருதி சொல்லி முடிக்கிறார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த தக்ஷசாபோ என்ற நான்காவது ஸ்கந்தத்தில் முப்பத்து ஒன்றாவது அத்யாயங்களின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-39
இத்துடன் நான்காவது ஸ்கந்தம் நிறைவுற்றது
|| ஹரி: ஓம் தத்சத்||
Subscribe to continue reading
Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.
||ஓம் நமோ பகவதே வாசுதேவாய || -ஸ்ரீ சுகர் சொல்கிறார்
அத்யாயம்-1
அரசனே! நல்ல கேள்வி. உலகத்திற்கே நன்மை பயக்கும் விஷயம், தன்னைத் தானே விரும்புவது போல ஜனங்களுக்கு மிக பிடித்தமான, சம்மதமான மேலும் கேட்கத்தகுந்த விஷயம் வேறு என்ன இருக்க முடியும்?
கேட்பதற்கு விஷயங்கள் பல உண்டு. ராஜன்! அதுவும் அரசனுக்கு பல விஷயங்கள் தெரிந்து கொள்ள கேள்வி அவசியம். ஆயிரக் கணக்காக உள்ளன. ஆனால் சாதாரண மக்கள், தான், தன் குடும்பம் என்று இருக்கும் பொது அந்த ஜனங்கள், ஆத்ம தத்வம் பற்றி எதுவுமே தெரியாதவர்கள். அவர்கள் வாழ்க்கை எப்படி போகிறது. பாதி நாளை, நித்ரை அபகரிக்கிறது. வேலை, நாளில் பெரும் பகுதியை, சம்பாதிக்க வேண்டும் என்றும், வயதுக்கேற்ப, குடும்பத்தைக் காப்பாற்ற என்றும் சென்று விடுகிறது. தன் உடலை, தன் குழந்தைகள், பரிவாரங்கள், அரசனானாலால் சேனை, தேவையற்ற பல செலவினங்கள், கூடவே நகர்ந்து வரும் ம்ருத்யு கண்ணுக்கு புலப்படுவதில்லை. ஆதலால், பாரதா! சர்வாத்மாவான பகவான் தான் ஈஸ்வரன், ஹரி என்று அழைக்கப் படுகிறான். அபயம் வேண்டுமானால், அவனைத் தான் கேட்கவேண்டும், அவன் புகழைத் தான் பாட வேண்டும், நினைவில் இருத்தி வைத்து தியானம் செய்ய வேண்டும். ஞான யோகம் அதைத் தான் சொல்கிறது. தன் தர்மத்தை அனுஷ்டி. ஜன்ம லாபம் என்பது மனிதனாக பிறந்தவர்களுக்கு கடைசியில் நாராயண தியானம் தான். முனிவர்கள் ஹரி கதையில் லயித்து இருப்பது அவர்கள் பிறவி விசேஷமே. இந்த பாகவதம் என்ற புராணம் ப்ரும்மாவிடமிருந்து கேட்டு என் தந்தை எழுதியது. அவரிடம் நான் பாடம் கேட்டேன். முக்குணங்களை த்யாகம் செய்த துறவி நான். ராஜரிஷியே! உத்தம ஸ்லோகன் எனும் ஹரி கதையில் என் மனம் ஈடுபடுகிறது. நீ மகாபுருஷன்- பரந்த மனமுடைய அரசன். சிரத்தையுடன் கேட்பதால், நான் கற்ற படியே சொல்கிறேன். உன் மனம் எளிதில் முகுந்தனின் பாதத்தில் லயிக்கும். யோகிகளும் இதைக் கேட்டு பலனடைவர். யார் யார் ஹரி நாமத்தைக் கேட்டு பலனடைந்தார் என்பதில் ஏன் நேரத்தை வீணடிக்கிறோம். நல்லது செய்ய நினத்த நேரமே நல்ல முஹூர்த்தம் தான்.
கட்வாங்கன் என்ற ராஜ ரிஷி. (இந்த கதை பின்னால் வரும்.) ஒரு முஹூர்தமே வாழ் நாள் என்று அறிந்தான். உடனே அனைத்தையும் துறந்து, ஸ்ரீ ஹரியே சரணம் என்று வெளியேறினான். எது சம்ப்ரதாயம் என்பதை தெரிந்து கொள். அந்திம காலம் வரும் பொழுது அறிவுள்ளவர்கள், அசங்க சஸ்திரம்- சகவாசம் என்பதே ஒரு சஸ்திரம்- ஆயுதம். அதைக் கொண்டு ஆசைகளை ஒழித்து, வீட்டை விட்டு வெளியேறி, ஒரு புண்ய தீர்த்த கரையில் விதிப்படி சுத்தமான ஆசனத்தில் அமர்ந்து ஏகாக்ஷரம் என்றும் ப்ரும்ம பீஜம் என்றும் சொல்லப்படும் ஓங்காரத்தை ஜபித்த படி, ( புண்ய தீர்த்த ஸ்னானம் தேகம் ஆத்ம சுத்தி தரும். ப்ராணாயாமம்- வாயுவை கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பர். இதன் பின் பாதத்தில் ஆரம்பித்து மனதை கட்டுபடுத்தும் யோக முறையை விவரிக்கிறார்.) விவரமாக, அண்ட கோசம் எனும் இந்த சரீரம் -நீர்,நிலம்,அக்னி,வாயு, ஆகாசம், மனம், புத்தி என்று ஏழு கோட்டைகள். (ஆவரணங்கள்- சுற்றுக்கள்)
யோக முறையில் தன் சரீரத்தில் முழுமையாக ஹரி த்யானமே என்று ஆன பின், அவரது உருவத்தை தன்னுள் ஸ்தாபித்துக் கொண்டான்.
பக்ஷிகள் போல அண்டம்- (முட்டையின் உள் பறவை இருப்பது போல) பகவானின் விராட் ஸ்வரூபம் – சர்வ ஸ்ருஷ்டியும் அவருடைய பிரதி பிம்பமாக கிரமமாக உலகில் தோன்றுகிறது. )அது அவருடைய விராட் ஸ்வரூபம். இந்த பரிணாமத்தால் வரும் விஸ்வம் விராட் என்ற பதத்தால் குறிப்பிடப் படுகிறது. பறவை போல என்றாலும், விராட் புருஷனுடைய அண்டத்தில் தோன்றுவது ஒரு இலையுடன் வரும் சிறு செடி போல வளரும் தன்மையது. மேலும் சர்ப்ப – பாம்பின் சரீரத்திலிருந்து பஞ்சு (அதன் சட்டை) வருவது போல, நீர், நிலம் என்ற பஞ்ச பூதங்களும், ஏழு ஆவரணங்களும் உத்பவிக்கின்றன. ப்ரும்மாண்டத்தைப் போலவே மனித சரீரத்திலும் இதே வரிசைக் கிரமம் தான். இந்த ஏழு ஆவரணங்களுடன் பிறந்த ஜீவன், அந்தர்யாமியாக ஈஸ்வரனும் இருக்கிறான். பகவான் தாரணாஸ்ரய: உருவம் வந்தாலும் உயிர் தருவது பகவானே. .
விராட் புருஷணின் அவயவங்களும் அதன் பெயர்களும்:
இந்த விராட் புருஷனின் பாதம் பாதாளம், சிலர் ரஸாதலம் என்பர். இரண்டு முழங்கால்களும் சுதலம். துடைகள் இரண்டிலும் கீழ் பாகம் விதலம், மேல் பாகம் அதலம்.
ஜகனம் என்ற பின்பகுதி மஹீ தலம். நபஸ்தலம் – (ஆகாயத்துடன் ) பூ லோகம். நாபி பகுதி – நீர் நிலைகள்.
மார்பு பகுதி ஜ்யோதி, ஜோதிகள் அனைத்தும்- ஸ்வர்கம்.
மஹர் லோகம் என்பது கழுத்து பகுதி. தபோ லோகம் என்பது நெற்றி. சத்ய லோகம் தலை.
தேவர்கள் கைகள்.
விராட் ஸ்வரூபத்தின் காதுகளின் உள் பாகம், திசைகள், காது என்ற அவயவத்தின் மற்ற செயல்பாடுகள் சப்தம் த்வனி, உச்சரிப்பு முதலியன. வாயு அதன் அதிபதி.
அதே போல மூக்கு இதில் அஸ்வினி குமாரர்கள் அதிபதிகள். வாசனை. எப்படியிருந்தாலும், அதிகமோ, குறைவோ, அது மூக்கு என்ற அவயவத்தின் செயல் பாடு.
அக்னி முகம். ஆகாசம் கண்கள். இதில் கண்கள் என்ற புலன், அதன் அதிபதி சூரியன். விராட் ஸ்வரூபமான பகவானின் கண்கள் பகலும் இரவும் ஆகும்.
விராட் ஸ்வரூபத்தின் புருவம் நான்கு முகமுடைய ப்ரும்மாவின் ஸ்தானம்.
விராட் ரூபத்தின் முகவாய் தண்ணீர், அதன் அதிபதி வருணன். விராட் பதியின் நாக்கு ரஸம்.
சந்தஸ், சந்த ப்ரதானா: வேதா: செய்யுள் என்பதன் கட்டுப் பாடுகள். எதுகை, மோனை என்று தமிழில். இந்த வகையில் வேதம் சந்தஸ் ப்ரதானமாக, அதாவது சந்தஸ் என்ற சாஸ்திரம் வேதத்துக்கு மிக முக்கியம். ஓரெழுத்து கூட கூடவோ குறையவோ கூடாது என்ற நியமம். செய்யுளாக அமைந்ததால் வேதத்துக்கு சந்தஸ் என்றே பெயர். கேட்டு, திருப்பி சொல்லியே வேதத்தை கற்றதால் சப்தமும், உச்சரிப்பும் மிக முக்கியம். சந்தஸ் என்பது மொழிக்கு இலக்கணம் போல செய்யுளின் அமைப்பை வரையறுக்கும் சாஸ்திரம். வேதத்தின் ஆறு அங்கங்களுள் ஒன்று.
விராட் புருஷனின் தலை. ப்ரும்ம ரந்த்ரம் என்ற பகுதி ஆசா பாசங்கள். மகன் முதலான பற்றுதல்கள். உலகம் அனைத்தும் செயல் படுவது அவருடைய கடாக்ஷத்தால்.
ஒவ்வொரு அவயவத்துக்கும் ஒரு அதிபதி, அதன் வேலைகள் என்று விஸ்தாரமாக சொல்கிறார்.
நதிகள் விராட் புருஷனுடைய நாடிகள். உடலில் உள்ள ரோமங்கள் மரங்கள். மூச்சுக் காற்று மாதரிஸ்வா என்ற காற்று. அவரது நடை சென்று கொண்டேயிருக்கும் காலம், வயது. அவரது குண ப்ரவாஹ: -, சத்வம் ரஜஸ் தமஸ் என்ற மூன்று குணங்கள். கர்ம – காரியம் என்பது உலகில் ஜீவன்களின் நடமாட்டம்.
பகவானின் கேசம் நீரை சுமந்து செல்லும் ,மேகங்கள். சந்த்யா காலங்கள் அவரது உடை. அவரது ஹ்ருதயம் – மிக முக்கியமான அங்கம். அது சந்திரன்- மனம்
சூர்ய சந்திரர்கள் – இரண்டு பற்களில் தோன்றியதாக சொல்கிறார்கள். மற்ற பற்களில் நக்ஷத்திரங்கள்.
ஞான ரூபமான பகவானின் சக்தி மனிதனின் சித்தம். பூமியிலிருந்த மஹத் என்ற தத்வங்கள். (நீர்,நிலம்.அக்னி,வாயு,ஆகாசம்,மனம்,புத்தி என்பன). அந்த:கரணம்- மன சாட்சி -இதிலிருந்து அஹங்காரம்- தன்னியல்பு (எந்த செடி என்பது விதைக்குள்ளும், எந்த பறவை என்பது பறவையின் முட்டைக்குள்ளும் இருப்பது – ஹம்ஸங்கள் வெண்மையாக, கிளிகள் பச்சையாக, மயில்கள் விசித்ரமாக வர்ண கலவையாக என்பது மாறாமல் வர பயன்படும் தத்வம் ) வாக்கிலிருந்து ஸ்ரீ ருத்ரம்.
எல்லா உயிரினங்களிலும் புத்தி, வாழ்க்கையின் தேவைகள் அனைத்தும் கிடைக்குமாறு செய்யும் அந்த பரமாத்மா ஒருவனே அந்தராத்மா – உள் உறையும் செய்வம்- அதுவே சத்யம் என்று பஜிக்க வேண்டும்.
நான் கற்ற படியே சொல்கிறேன்.
((இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின், முதல் அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-39
||ஓம் நமோ பகவதே வாசுதேவாய || இரண்டாவது ஸ்கந்தம் -ஸ்ரீ சுகர் சொல்கிறார்
அத்யாயம்-2
ஆத்ம யோனி – ப்ரும்மா – ப்ரளயத்திற்கு பிறகு ஸ்ருஷ்டியை ஆரம்பித்தார். அதற்கு முன் இருந்த பூவுலகை நினைவில் கொண்டு அதே போல உயிரினங்கள், தாவரங்கள், இயற்கை வளங்கள் என்று ஸ்ருஷ்டி செய்தார்.
(ஓரு யுகத்தின் முடிவில் மஹா பிரளயம் என்பதும், ஜீவ ராசிகளின் அடுத்த சிருஷ்டிக்கான அடிப்படை தத்துவங்கள், விதை முதலியன மட்டும் பாதுகாக்கப் படும் என்பதும் பாகவத்தின் பிற்பகுதியில் விவரமாக சொல்லப் படுகிறது)
சப்த ப்ரும்மம் என்ற வேதம் நிரந்தரமாக இருக்கும். தூங்கி எழுந்தவுடன் முன் தின நினைவுகள் உடன் வருவது போல, ப்ரும்மா தன் தொடர்பை அறிந்தார்.
நெல் முதலான தானியங்கள் உமியை நீக்கி விட்டு அரிசியை எடுத்துக் கொள்வது போல கற்பவர்கள்,சார பூதமான பகவானை அறிந்து கொள்ளவேண்டும் இகலோக வாழ்க்கைக்கான தேவைகளை பூர்த்தி செய்ய தனம் அவசியம். அதை சம்பாதிக்க உழைக்கும் போது பகவானை மறந்து விடுவதும் இயல்பே. அவர்கள் ஸ்வர்கம், மறு பிறப்பு என்பதை அதிகமாக, மேலானதாக அறிகிறார்கள். இது ஒரு நிலை. மாயாமயமான இந்த உலகில் கனவில் வாழ்வது போல அவர்களது வாழ்க்கை, விழித்தவுடன் மறையும்.
அடுத்த நிலையில், உலகியலே துச்சம் என்று கருதுவது. இது மிக சிலரே அறிந்து கடை பிடிக்கவும் செய்கிறார்கள். அவர்களுக்கு தேவைகள் குறைவு. பூமி இருக்கும் பொழுது, கட்டில், படுக்கை என்பது எதற்கு? கைகள் இருக்கும் பொழுது தலையணை எதற்கு ? கைகளை குவித்தல், அஞ்சலி இருக்க தனியாக பாத்திரம் எதற்கு தண்ணீர் குடிக்க, மரவுரி இருக்க பட்டு ஸ்திரங்கள் எதற்கு என்பது அவர்களுடைய கொள்கை. துறவிகள், இவர்கள் தன் சித்தத்தில் தானே ரமிப்பவர்கள். சம்சார வாழ்க்கையில் சாரமில்லை என்பார்கள். அனந்தனான பகவானை பஜிப்பார்கள். பொதுவாக வாழ்வின் பொருள் என்ன? எதற்காக பிறப்பு, அதன் முடிவு என்று அலசுவார்கள். தங்கள் தேடலில் ஒரு சிலரே தன்னுள் வசிக்கும் பரமாத்மாவை அறிகிறார்கள்.
பகவான் விஷ்ணுவை வர்ணிக்கிறார்.
நான்கு கைகள், அவைகளில் முறையே, தாமரை மலர், சங்கு சக்ரம், கதை என்று உள்ள உருவை தியானிக்கிறார்கள். ப்ரசன்னமான முகம். தாமரை போன்ற கண்கள். கதம்ப புஷ்பத்தின் தளிர் போல மஞ்சள் நிற ஆடை- பீதாம்பரம், மகாரத்னங்கள் பதித்த பொன்னாலான அங்கதம், அதே போல ப்ரகாசிக்கும் ரத்ன மயமான கிரீடமும், குண்டலங்களும், ஹ்ருதய தாமரையில், யோகேஸ்வரர்கள் ஸ்தாபித பாத பல்லவம் (ப்ருகு முனிவரின் பாதங்கள்) ஸ்ரீ வாசம் செய்யும் மார்பு, கௌஸ்துப ரத்ன மாலை, என்றும் வாடாத வனமாலை, இடையில் மேகலை,கை விரல்களில் மோதிரங்கள், கைகளில் கங்கணங்கள், கால்களில் நூபுரங்கள், சுருள் சுருளான கேசம் மறைக்க மென் முறுவலோடு விளங்கும் முகம், தன் லீலையைத் தானே ரசிப்பது போல சிரிக்கும் கண்கள், தன்னுடைய அளவில்லாத அனுக்ரஹத்தை தெரிவிக்கும் புருவங்கள், மனம் கொண்டவரை இந்த உருவத்தை தியானிக்க வேண்டும். மனம் லயிக்கும் வரை திரும்பத் திரும்ப கண்டு ரசிக்க வேண்டும்.
ஒவ்வொரு அங்கமும் பார்த்து தியானிப்பதை சொல்கிறார். முதலில் பாதம். கதையை கையில் வைத்து இருப்பது வெற்றி கொள்வதற்காக. மனதை சுத்தம் செய்யும் ( இந்த இடங்களில் பாகவத ஸ்லோகங்கள் மிக அழகான பதங்கள், பொருள் புரியாமல் படித்தால் கூட ரசிக்கத் தகுந்தவை)
இந்த விஸ்வேஸ்வரனை பார்த்தவுடன் மனதில் பக்தியோகம் வருவது நிச்சயம். யதி- துறவியானாலும் கூட, சரீரத்தை போஷிக்காமல் இருந்தாலும், தேஹத் த்யாகம் தானாக செய்து கொள்வதில்லை. தேகம் என்ற பற்றுதல் இல்லாமல் இந்த உடலிலும் உள்ள இறைவன் அம்சத்தை மனதாலும், வெளி உலகில் மற்ற ஜீவன் களிலும் உள்ள இறையம்சத்தைக் காண்கிறார்கள்.
க்ஷேத்ரக்ஞன் – பகவானின் ஒரு பெயர். நிர்மலமான மனம் புத்தி இவற்றால் தன்னுள் இருப்பது ஆத்மா , பரமாத்மாவின் அம்சமும் என் ஆத்மாவில் உள்ளது என்ற அறிவை அடைபவன் தீரன். அவனுக்கு நல்ல சாந்தமான குணமும் அமையும். அவன் இக பரமான செயல்களை விடுவதால் எதையும் இழப்பதில்லை. பரம் பதம் வைஷ்ணவம் – விஷ்ணுவே பரம் பொருள் என்று நிரூபிக்க மற்ற தன் தத்துவங்களை, (நேதி நேதி-) ஒவ்வொன்றாக ஆராய்ந்து இது இல்லை, இது இல்லை என்று அவைகளைத் தவிர்த்து, “विज्ञानं ब्रह्म என்ற நியாயம் படி, அறிவில் சிறந்த, அனுபவம் வாய்ந்த முனிவர்கள் கண்டு கொண்டது இதுவே.
அஷ்டாங்க யோகம் என்பதை விவரிக்கிறார். ப்ராண வாயுவை ப்ராணாயாம பலத்தால் மூலாதாரத்தை தட்டி எழுப்பி, நாபி முதலிய இடங்களில் உள்ள ஆறு சக்கரங்களை யோக முறையால் கடந்து புருவ மத்தியை அடைய வேண்டும். புருவ மத்தியில் உள்ளது ஆக்ஞா சக்கரம். புலன் களை அடக்கி அதையும் தாண்டி உச்சந்தலையில் ப்ரும்ம ரந்த்ரம் என்ற சக்கரத்தை பிளந்து தன் தேகத்தையும் , புலன் களையும் விட்டு விட வேண்டும்
(இந்த யோக முறை பல இடங்களில், ஸ்லோகங்களில் விவரிக்கப்பட்டுள்ளது. குண்டலினி யோகம் – இதை குரு இல்லாமல் செய்ய முயற்சி செய்ய வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டிருக்கிறது).
இது யோக சாதனைகளைச் செய்யும் சாதகர்களுக்கு. உள்ளும் வெளியிலும் அண்டத்தில் பவனன்- காற்று புகுவது போல ஆத்ம தத்வத்தை அறிந்தவர்கள். இவர்கள், வித்யா, தவம், யோகம், சமாதி என்று இருப்பவர்கள்.
கர்ம யோகிகள், வேதம் விதித்த யாக காரியங்களை செய்பவர்கள். இவர்கள் மறு பிறவி எடுக்கிறார்கள். விஷ்ணுவின் அருளால், ப்ரும்ம ஸ்ருஷ்டியில் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இவர்களும் ஞானிகளே. அனுபவத்தால் அறிவார்கள். அனந்தனின் முகத்திலிருந்து வரும் உஷ்ண வாயுவால் விஸ்வம்-பூவுலகம் எரிகிறது- உஷ்ணமாக உயிரினங்கள் வாழ ஏதுவாக இருக்கிறது என்பதை அறிகிறார்கள். சித்தேஸ்வரர்கள்.
மிகவும் அரிதான யோக சாதனைகளைச் சொல்கிறார். முடிவாக, பகவான் சர்வ பூதங்களிலும் எப்பொழுதும் இருக்கிறார். அதனால், ராஜன்! ஹரி எல்லா இடங்களிலும் எப்பொழுதும் பூஜிக்கப் பட வேண்டும். கேட்டு, தானும் உடன் பாடி, மனதால் நினைத்து மனிதர்கள் நல்ல கதியை அடைவார்கள்.
அறிந்தவர்கள், பக்தர்கள் சொல்ல, பகவத் கதையை கேட்பவர்கள், அவருடைய சரணாரவிந்தங்களை அடைவார்கள்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்துள்ள மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின், இரண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-39
அத்யாயம்-3
அரசனே ! உன் கேள்விக்கு பதில் சொன்னேன். என்றோ ஒருநாள் காலகதியடையப் போகும் மனிதர்கள் மத்தியில் புத்திமானான அரசன் நீ.
ப்ரும்ம வர்சசான (வேத சாஸ்திரங்களை கற்று வித்வானான )மகன் வேண்டும் என்று விரும்பும் பெண், ப்ரும்ம ஞானம் பெற்ற பதியை அடைய வேண்டும் என்பது உலக நியதி. ப்ரஜைகள் வேண்டும் என்றால், ப்ரும்மாவை பூஜிக்க வேண்டும். அனுபவிக்க வேண்டும் என்றால் இந்திரனை பூஜிக்க வேண்டும்
ஐஸ்வர்யம் வேண்டும் என்பவர்கள் மாயாவான தேவியை பூஜிக்கவேண்டும். தேஜஸோடு மகன் வேண்டினால் அக்னியை, தனம் வேண்டுபவர் வசுக்களை, வீர்யம், ப்ரபாவம் வேண்டுபவர் ஸ்ரீ ருத்ரனை பூஜிக்க வேண்டும்.
போஜன பிரியன் என்றால் உணவு பண்டங்களை, ஸ்வர்கம் விரும்புபவன் அதிதியின் பன்னிரண்டு ஆதித்யர்களை பூஜிக்க வேண்டும். ராஜ்யம் வேண்டும் என்பவன் விஸ்வ தேவர்களை பூஜிக்க வேண்டும், அரசன், பிரஜைகளை தன் வசம் இருக்கச். செய்ய திக் பதிகளை பூஜிக்க வேண்டும்.
ஆயுள் வேண்டுபவன் அஸ்வினி தேவதைகளையும், உடல் புஷ்டியாக இருக்க இளா தேவி எனப்படும் பூ தேவியையையும், பிரதிஷ்டா- நிலைத்து இருக்க, லோக தாய் தந்தையர் எனப்படும் ஜீவாதாரமாக இருப்பவர்களான ரோதஸீ, வானமும் பூமியும் சேர்ந்த -த்யாவாப்ருதுவீ யை வணங்க வேண்டும்.
அழகிய ரூபம் வேண்டுவோர், கந்தர்வர்களான விஸ்வாவசு முதலியோரையும், மனைவி சுந்தரியாக வேண்டும் என்பவர்கள் அப்சர ரூபத்தில் ஊர்வசியை யாசிக்க வேண்டும். ஆதிபத்யம்- தலைமை பதவியை விரும்புபவர், பரமேஷ்டி என்றும் சர்வேஸ்வரன் என்றும் சொல்லப் படும் ப்ரும்மாவை வணங்க வேண்டும்.
புகழ் வேண்டுபவன், யக்ஞ புருஷனான விஷ்ணுவை வணங்க வேண்டும். பொக்கிஷங்கள், ஏராளமான பொருள் விரும்புபவன் ப்ரசேதஸ் என்ற வருணனை யாசிக்க வேண்டும். வித்யா-கல்வியை வேண்டுபவன் கிரீசனான சம்புவை வணங்க வேண்டும். தம்பதிகளிடம் அன்யோன்யம் வேண்டுமானால் உமாவை, மஹாதேவ பத்னியாக வணங்க வேண்டும்.
தர்மத்தை விரும்புபவன் உத்தம ஸ்லோகனான விஷ்ணுவை யாசிக்க வேண்டும். தன் வம்சம் வளர புத்ராதிகள் வேண்டுவோர், பித்ருக்களை , பாது காப்பு வேண்டுபவன், யக்ஷர்களை, பலம், மதிப்பு வேண்டுபவன், மருத் கணங்களையும் தேவ கணங்களையும் யாசிக்க வேண்டும்.
ராஜாவாக வேண்டும் என்பவர்கள், மனு தேவர்களை, மன்வந்தர பாலகர்களை வணங்க வேண்டும்.
அகாமன் எந்த தேவையும் இல்லாதவன், பூர்ண புருஷனான பகவானை பூஜிக்க தன்னைப் போன்ற பக்தர்களுடன் ஹரி கதையில் ஈடுபடுவான். எப்படியிருந்தாலும், எந்த விதமான பலனை விரும்பினாலும் கடைசியில் மோக்ஷம் வேண்டும் என்று வேண்டுபவன் உதார தீ: – பெருந்தன்மையுடையவன் என்கிறார்.
(‘யோ யோ யாம் யாம் தனும் பக்த:” என்று கீதையில் சொல்லியபடி, யார், யார், எந்த எந்த வித உருவத்தில் துதித்தாலும் அந்தந்த பலங்களை தருபவன் நானே. என்றபடி பரம புருஷனே முக்தியைத் தருகிறான் என்பது அபிப்ராயம். பகவானிடத்தில் திடமான பக்தியைத் த்ருவது பாகவத சங்கமே.)
ஞானம் பெற தனிமையில் தவம் செய்ய வேண்டும் என்பது போல மோக்ஷம் விரும்புபவர்கள் பக்தியோகத்தில் ஈடுபட வேண்டும். துறவியானாலும் ஹரி கதையை விரும்பாமலா இருப்பான்.
சௌனகர் கேட்டார்:
இப்படி சொன்னதைக் கேட்டு ராஜ ரிஷியான பரீக்ஷித், வியாசர் மகனிடம் வேறு என்ன கேட்டான்? வித்வான் சூதரே! இன்னும் கேட்கவே விரும்பும் எங்களுக்குச் சொல்லுங்கள். இந்த சபையில் எல்லோருமே ஒத்த மனத்தினரே. அரசன் பாகவதன் – பகவத் பக்தி உடையவனே. குழந்தை பருவத்திலேயே, மற்ற பாலகர்களோடு க்ருஷ்ணன் பற்றிய விளையாட்டுகளை விளையாடியவன். வியாசர் மகனும் வாசுதேவ பராயணன். நல்ல குணவான். அவன் பெருந்தன்மையை பலரும் பாடுவார்கள். சூரியோதயம், அஸ்தமனம் என்று. நாட்கள் ஓடுகின்றன. ஆயுள் குறைகிறது. உத்தம ஸ்லோகனை நினைத்து பேசும் பேச்சுக்களே பொருளுடையது.
மரங்கள் ஜீவிக்க வில்லையா? ரோமம் அடர்ந்த மிருகங்கள் சுவாசிக்க வில்லையா? கிராம பசுக்கள், உண்பதில்லையா, ? அது போல மாந்தர்கள் இருக்கலாமா? (உண்பதும் உறங்குவதும் மட்டுமா வாழ்க்கை?)
முகுந்தனை வணங்காத தலையில் கிரீடமும், அபிஷேக காலத்தில் கட்டிய பட்டும் வெறும் பாரமே. விஷ்ணு புகழை பாடாதவர்கள் கண்கள் மயில் இறகில் இருக்கும் கண்கள் போல பொருளற்றவையே. பாதங்கள் ஹரி இருக்கும் க்ஷேத்ரங்களுக்கு நடக்காதவரை, பெரிய மரங்களின் அடி பாகம், பாதங்கள் போல அசையாதவை. பகவானின் பாத தூளியை பெறாதவனும், பூஜை செய்த மலர்களின் மணத்தை உணராதவனும் மனிதனாக இருப்பதே வீண். பாடல்களை கேட்டு மயிர் கூச்சல் வராதவனும், கண்களில் நீர் துளிக்க ரசிக்காதவனும் அசையாத கல்லைப் போன்றவர்களே. எனவே, சூதரே, மேலும் சொல்லுங்கள். பாகவதர்களைப் பற்றி சொல்கிறீர்கள். எங்கள் மனதுக்கு இசைவாக உள்ளது. வியாசர் மகன், ஆத்ம வித்யா விசாரதன். சாதுவான அரசன் கேள்விக்கு என்ன பதில் சொன்னான்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின், மூன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-25
அத்யாயம்-4
ஸ்ரீ சுகர் சொன்னதை கேட்டு, பரீக்ஷித் ராஜா, ஸ்ரீ க்ருஷ்ணரை மனப் பூர்வமாக தியானித்தான். தன் மனைவி மக்களை, வீடு, உறவினர்களை, பரந்த ராஜ்யத்தை, முற்றிலும் மறந்தான். என்னிடம் நீங்கள் தற்சமயம் கேட்கும் விஷயங்களையே தன்னுள் விசாரித்து, வாசுதேவ பகவானிடம் முழு மனதையும் செலுத்தினான். சுகரைப் பார்த்து “ப்ரும்மன்! சகலமும் அறிந்த தங்கள் வார்த்தைகளைக் கேட்டு என் உள்ளம் நிர்மலமாகியது. திரும்பவும் பகவானின் மாயை, இந்த பூவுலகை ஸ்ருஷ்டி செய்தது பற்றியே அறிய விரும்புகிறேன். தானே மறைக்கிறான், பின் தானே திரும்பத் தருகிறான், எந்த சக்தியால் இது சாத்யமாகிறது. தானே விளையாடியும், விளையாட வைத்தும், அத்புதமான செயல். கண்கட்டி வித்தை போல கண் முன்னே காட்டி மறைக்கிறானா? ப்ரக்ருதி-இயல்பான குணங்கள். சத்வ,ரஜஸ்,தமஸ்- இவைகள் அவன் கைபாவைகளாக இருக்க, உயிரினங்களில் தனித் தனியாகவோ, கூட்டாகவோ, இந்த குணங்கள் வெளிப் படச் செய்வதும் அவனே. நீங்கள் சப்த ப்ரும்மம் என்ற வேத சாஸ்திரத்தில் கரை கண்டவர். அதற்கும் மேல், வேதாந்தங்களையும் அறிந்தவர். “
இப்படி கேட்டவனைப் பார்த்து ஸ்ரீ சுகர், பரஸ்மை புருஷாய வணக்கம் என்று ஆரம்பித்து துதி செய்கிறார்.
மூன்று வித சக்திகளால், உலகில் தோன்றுதல், நிலையாக இருத்தல், பின் மறைதல் என்ற செயல்களை செய்வது அவனது லீலை. உள்ளும் புறமும் பரவி இருப்பவனை வணங்குகிறேன்.
திரும்பத் திரும்ப வணங்குகிறேன். பந்த பாசங்களில் இருந்து விடுவிப்பவன், அகில சத்வ மூர்த்தி, ஒரே ஹரி, வாசுதேவன் முதலிய அவதாரங்கள் எடுத்து, ஸ்ருஷ்டி முதலிய செய்ய, சத்வம், ரஜஸ், தமஸ் என்ற குணங்களை தனி தனியாகவோ, கூட்டாகவோ பயன்படுத்திக் கொள்கிறான்.
சாதுக்களை பாலனம் செய்பவன். துஷ்டர்கள் அவனிடம் விலகியே இருப்பார்கள். தன் ஐஸ்வர்யம், தன் இடம் என்று தனித்தே இருப்பவன். ப்ரும்ம ஸ்வரூபமான தன் ஸ்வரூபத்திலேயே ஆழ்ந்து இருப்பவன்.
கீர்த்தனம்- பகவானை துதித்து பாடுவது, ஸ்மரணம்-மனதில் தியானிப்பது, கண்களால் காண்பது-ஈக்ஷணம், வந்தனம்- வணங்குவது, ஸ்ரவணம் – பகவத் கதைகளை கேட்பது- இவை உடனடியாக மனதில் கெட்ட எண்ணங்களை அழித்து விடும். அந்த மங்களமான கீர்த்தி உடையவனை,
விவேகிகள் இவருடைய சரணங்களை சேவித்து, பந்தங்களை விட்டு, சிரமம் இன்றி ப்ரும்ம பதம் அடைகிறார்கள். அவர்களுக்கு இரண்டு வகையிலும், இக பர சுகத்தை தரும் அந்த மங்களமான கீர்த்தி உடையவனை நமஸ்கரிக்கிறேன்.
தபஸ்விகள், தானம் செய்பவர்கள், புகழ் உடையோர், மனஸ்வி எனும் அறிஞர்கள், மந்திரங்களை அறிந்தவர்கள், சுமங்களம் -சதாசார பரர்கள்- ஆசார சீலர்கள், என்றாலும் எவரிடம் சரணடையாமல் க்ஷேமம் அடைய முடியாதோ, அந்த மங்களமான கீர்த்தி உடையவனை நமஸ்கரிக்கிறேன்.
கிராதர்கள்- காட்டு வாசிகள், வேட்டையாடுபவர்கள், குலத்தை மீறி மணம் செய்து கொண்டு பிறக்கும் குழந்தைகள் (ப்ராம்மண வைச்ய தம்பதிகளின் சந்ததி- அதே போல மற்ற குலங்களின் சேர்க்கையால் பிறக்கும் சந்ததிகள் குலமிலி – இவர்கள் எந்த குலத்திலும் சேர்க்காமல் வேறு பெயர்களில் அழைக்கிறார். சமூகத்தில் இவர்களுக்கு அந்தஸ்தோ, மதிப்போ கிடைப்பதில்லை.) இது போன்றவர்களும் கூட, எந்த பகவானை ஆஸ்ரயித்து நன்மை அடைகிறார்களோ, ப்ரபவிஷ்ணுவான அவனை வணங்குகிறேன்.
இந்த பகவான் தான் ஆத்மாவிலும் அம்சமாக இருப்பவன். வேதசாரன், தர்ம மயன், தபோமயன், பரிசுத்தமானவன், ப்ரும்மா, மகேஸ்வரர்களால் போற்றப்படுபவன், அவன் நம்மை காக்கட்டும்.
ஸ்ரீ பதி,யாகத் தலைவன், பரஜாபதி, ஞானத்தின் அதிகாரி, லோக பதி, பூபதி. அனைவருக்கும் யமாதி தேவர்கள், யாதவர்கள், மற்றும் சாதுக்களின் பதி அனைவருக்கும் பதி. அவன் நம்மை காக்கட்டும்.
கவிகள் எவன் அருளால் உயர்ந்த தத்வங்களை புரிந்து கொள்கிறார்களோ, அந்த முகுந்த பகவான் நம்மை காக்கட்டும்.
नमस्तस्मै भगवते वासुदेवाय वेधसे ।
पपुर्ज्ञानमयं सौम्या यन्मुखाम्बुरुहासवम्
அரசனே, இதைத் தான், ப்ரும்மா நாரதருக்கு உபதேசித்தார். வேதங்களின் உறைவிடமான ஹரி முதலில் ப்ரும்மாவுக்கு போதித்தார். ப்ரும்மா நாரதருக்கு, நாரதர் வியாசருக்கு, வியாசர் எனக்கு, அதை தற்சமயம் நான் உனக்கு சொல்கிறேன்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின், 4வது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-25
அத்யாயம்-5
நாரதர் ப்ரும்மாவிடம் சில கேள்விகளைக் கேட்டார். தேவ தேவனே, உலகில் முதல் மனிதன் தாங்கள், அதனால் அனைவருக்கும் மூத்தவர். ஆத்ம தத்வம் என்ற ஞானம் பெற்றவர். இந்த உலகை சிருஷ்டிக்க தங்களுக்கு உதவியது எது? என்ன ரூபம்? எது ஆதாரம்? எங்கிருந்து சிருஷ்டியை ஆரம்பித்தீர்கள்? அதன் அடிப்படை லயம் அல்லது கட்டுபாடு யாரிடம் தெரிந்து கொண்டீர்கள்?
உள்ளங்கை நெல்லிக் கனி போல அனைத்தையும் அறிவீர்கள். இறந்த காலம், நிகழ் காலம், வரும் காலம் என்பதையும் தங்களைத் தவிர வேறு யார் அறிவார்கள்? இந்த உலகை விக்ஞான பூர்வமாக, அதாவது ஒரு ஒழுங்குடன் ஸ்ருஷ்டிக்க எது உதவியது? என்ன ஆதாரம்? எது வெளியிலிருந்து தெரிந்து கொண்டது எது உங்கள் சுய அறிவினால், ஒருவராக ஸ்ருஷ்டி செய்தீர்களா, பஞ்ச பூதங்கள் மட்டுமா, உங்கள் மாயையுமா? ஊர்ண நாபி (வயிற்றில் நூலைக் கொண்டது என்ற பொருள்) சிலந்தி போல தாங்களே யார் உதவியும், வெளி உபகரணங்களும் இல்லாமல் படைப்புத் தொழிலைச் செய்தீர்களா?
உங்களுக்கு சமமாக சொல்ல வேறு யாருமே இல்லை. நீங்கள் செய்த அளவு தவம் வேறு யாரும் செய்ததாக எனக்குத் தெரியவில்லை. சகலேஸ்வரா! உங்கள் சிஷ்யன், இது வரை நான் அறிந்ததெல்லாம் தங்களிடம் கற்றதே. தானாக ஊகித்து அறிய என்னால் முடியவில்லை.
ப்ரும்மா சொன்னார். குழந்தாய்! நல்ல கேள்வி. தெரிந்து கொள்ள ஆசைப் படுவது அவசியம். உன் காரணமாக பகவானுடைய எல்லையற்ற ஆற்றலை எண்ணியும், உனக்குச் சொல்லவும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதனால் எனக்கு மகிழ்ச்சியே. உன் அறிவுத் தாகத்தால் நீ கேட்டாலும், எனக்கும் உபகாரமே செய்திருக்கிறாய்.
நானாக செய்ததாக நினைக்கிறாய். என்னை பகவான் என்று நினைத்தாயா? முற்றிலும் தவறு என்றும் இல்லை. இந்த படைப்புத் தொழிலைச் செய்ய என்னால் முடியும் தான். ஆனால், எனக்கு மேல் உள்ள ஈஸ்வரனை அறியாமல் சொல்கிறாய். நானாக சூர்ய சந்திர தாரகைகளை உண்டாக்க முடியுமா என்ன? பகவான் மனதில் உருவானவை, அதை நான் செயல் படுத்தினேன். அதற்கு முன்
न तत्र सूर्यो भाति न चन्द्र तारकम्, नेमा विद्धुतो भान्ति कुथोऽयमग्नि: | तमेव भान्तमनुभाति सर्वं तस्य भासा सर्वमिदं विभाति|| (kata.u.5-15)
கடோபனிஷத் சொல்வது : அதற்கு முன் சூரியனோ, சந்திரனோ, தாரகைகளோ இருக்கவில்லை. அக்னி எங்கிருந்து வரும்? இந்த ஒளியை தன்னுள் வாங்கி அக்னி ஒளிர்கிறது. அனைத்துமே அந்த பகவானின் ப்ரகாசத்தால் பிரகாசிக்கின்றன. (ஸுர்ய சந்திரர்களும் பகவானின் அருளால், ஒளியை பெறுகின்றன)
तस्मै नमो भगवते वासुदेवाय धीमहि ।
यन्मायया दुर्जयया मां ब्रुवन्ति जगद्गुरुम् || அந்த வாசுதேவனை வணங்குகிறேன். அவனுடைய மாயையால் என்னை ஜகத்குரு என்கிறார்கள். அதுவே எனக்கு லஜ்ஜையாக இருக்கிறது. அறியாமல் ஜனங்கள் பேசுகிறார்கள். நான், எனது என்று தம்பட்டம் அடித்துக் கொள்வது அவர்களது அறியாமையே.
உலகில், எந்த உருவத்திற்கும் அடிப்படையான மூலப் பொருட்கள், த்ரவ்யம் எனப்படும். அதை உருவாக்க தேவையான செயல்கள் (கர்ம) சரியான காலம், அதற்கான ப்ரத்யேக குணங்கள், அதன் ஆயுள், இவையெல்லாமே வாசுதேவனால் நிர்ணயிக்கப் படுகிறது. அதை மீறி யாராலும் எதையுமே செய்ய முடியாது.
नारायणपरा वेदा देवा नारायणाङ्गजाः ।नारायणपरा लोका नारायणपरा मखाः ॥ १५॥
नारायणपरो योगो नारायणपरं तपः ।नारायणपरं ज्ञानं नारायणपरा गतिः ॥ १६॥
நாராயணனே வேதங்களுக்கு ஆதாரம். தேவர்கள் நாரயணனின் சரீரத்தில் தோன்றியவர்கள். உலகமே நாரயணனால் இயங்குகிறது. யாகங்கள் நாராயணனுக்காகவே. யோகமும், தவமும் நாராயணனை குறித்தே செய்யப் படுகிறது. ஞானம் நாராயணனை அறிவதே. உலகியல் செயல் படுவதே நராயணனின் அருளால்.
அந்த ஈஸ்வரனின் கண்காணிப்பில், படைப்புத் தொழிலைச் செய்கிறேன். அகிலாத்மாவான அவன் ரகசியமாக உள்ளிருந்து என்னை நடத்திச் செல்வதாக உணர்கிறேன். அவருடைய கண் அசைவில் எனக்கான உத்தரவை பெறுகிறேன். குணங்கள் அவனுக்கு இல்லை. எனினும் சத்வம், ரஜஸ், தமஸ் என்ற குணங்கள், இவை உலகில் பிறந்த மனிதர்களின் பாப புண்யங்களை நிர்வகிக்கின்றன , அதாவது சத்வ குணம் மனதையும், ரஜோ குணம் புலன்களையும், தமோ குணம் உடலால் செய்யும் செயல்களையும் நிர்வகிக்கின்றன என்பதால். அவைகளையும் தன்னுள் வைத்திருக்கிறான். உலகில் மனிதனை உடலை வருத்தி செய்யும் செயல்களும், புலன்களால் அறிந்து செய்யும் செயல்கள், கண் முதலான இந்திரியங்கள், அறிந்து செய்யும் செயல்களும், மனதால் அல்லது புத்தியால் அறிந்து செய்யும் செயல்களும் , ஜீவன் களின் அன்றாடத் தேவைகளான, மூல பொருட்கள், அறிவு, உடல் உழைப்பு இவற்றை நிர்வகிக்கின்றன என்பதால் இன்றியமையாதனவை. இவ்வகையில் பகவான் தன்னால் படைக்கப் பட்ட உலகின் அசையும் அசையாத பொருட்களின் ஈஸ்வரனாக இருக்கிறான்.
காலம், கர்ம, ஸ்வபாவம் இவைகளை தன் மாயையால் தன் வசத்திலேயே வைத்திருக்கிறான். காலம் பிறப்பு -அது ஜீவனின் அதீனத்தில் இல்லை. கர்ம- செயல் என்பது தானாக அமைவது,அவனுடைய அத்ருஷ்டம் எனலாம். ஸ்வபாவ: பிறந்த பிறப்பின் இயல்பான ஸ்வபாவம் இதையும் தன்னிடத்தில் வைத்துக் கொண்டிருக்கிறான். குணம் மாறுவதாலும், பரிணாமத்தால் தன் இயல்பு மாறுவதும் கர்ம – தன் செயலால் மறு பிறப்பும் அமைகிறது.
அடுத்து இதே வரிசையில் அஹங்காரம்- தன்னியல்பு – என்பதையும் மூன்றாக, சத்வ, ரஜஸ் தமஸ் என்று சொல்கிறார். த்ரவ்ய சக்தி, க்ரியாசக்தி,ஞான சக்தி என்பதாக.
பஞ்ச பூதங்களில் முதலானது ஆகாசம். ஆகாசத்திலிருந்து,வாயு, வாயுவிலிருந்து அக்னி, அக்னியிலிருந்து நீர், நீரிலிருந்து பூமி என்பது ப்ரசித்தம்.
தாமஸ அஹங்காரம் அதன் பிறப்பிடம். சப்தம் சூக்ஷ்ம ரூபம். விரைவில் பரவும் தன்மையுடையது – அதன் மூலம் ஆகாசம் உதயமாகியது.
சப்தம் வாயுவின் குணம். ஸ்பரிசம், சப்தம் இவை அனுகுணங்கள். ஸ்பரிசம் -தொடுதல் – உடலில் படும் பொழுது உணருகிறோம். தொடுகையால் வரும் சப்தம் நபோ -ஆகாயத்தின் குணம்.
தேஜஸ். -சூடு, அக்னியின் குணம். ரூபமுடையது. இதற்கும் தொடுகையும், சப்தமும் உண்டு.
நீர். ரசம்-ருசி, இதற்கு முந்தைய மூன்றும் அக்னி, வாயு, ஆகாசம் இவைகளின் தொடர்பும் உள்ளதால் அதன் குணங்களான, தொடுகை, சப்தம்,ரூபம் இவையும் உண்டு.
பூமிக்கு ருசி, கந்தம்- வாசனை இவை பிரதான குணங்கள். ரூபம், தொடுகை, சப்தம் இவை அனுகுணங்கள்.
இன்னும் விவரமாக நிறைய சொல்லப்பட்டிருக்கிறது.
இதன் விளைவாக மனம் அதன் அதிஷ்டானமான சந்திரனும் தோன்றின. கூடவே பத்து தேவதைகள். திசை, காற்று, சூரியன், ப்ரசேதர்கள், அஸ்வினி என்ற இரட்டையர். இந்த ஐந்தும் முறையே, காது, தோல்,கண், நாக்கு,மூக்கு இவைகளின் ஆதாரமாக இருக்கிறார்கள். வஹ்னி, இந்திரன்,உபேந்திரன், மித்ரன், ப்ராஜாபதி -ப்ரும்மா. முறையே, வாக்கு, கைகள், பாதங்கள், குதம், ஜனன உறுப்பு இவைகளின் செயலுக்கு ஆதாரமாக இருக்கிறார்கள்.
இவை ஒன்றுடன் ஒன்று சேர்ந்து பகவானின் சங்கல்பத்தால், சத் என்றும் அசத் என்றும் உருவாகின்றன.
ப்ரளய காலம் முடிந்தவுடன், பரம புருஷனான பகவான், ஜீவன் இல்லாத, உணர்வு இல்லாத, நீரில் மிதந்த அண்டம் என்பதை உயிரூட்டினார். நீரில் மிதந்த என்பதால் அதற்கு முன் அண்டம் நீரில் மிதந்தது என்பதன் மூலம், கர்பத்திலிருந்து பிறப்பது என்பது அறியப் படுகிறது. நான்கு முகமுடைய புருஷனாக பரம புருஷன், அண்டத்தை பிளந்து, அதின் உள்ளிருந்து ஆயிரம் முகம், ஆயிரம் கண்கள், ஆயிரம் கைகள் ஆயிரம் பாதங்கள் இவற்றுடன் வெளி வந்தார். “சஹஸ்ர சீர்ஷா புருஷ: சஹஸ்ராக்ஷ: சஹஸ்ரபாத் (புருஷ சூக்தம்)”
सहस्र शीर्षा; पुरुष: सहस्राक्ष: सहस्रपात् “
புருஷன் என்று சொல்லப்படும் மஹாவிஷ்ணுவின் அவயவங்களிலிருந்து பதினான்கு உலகங்களும் தோன்றின. பதினைந்து கோடி விஸ்தீர்ணமுள்ள ப்ரும்மாண்டத்தில் நீள வாக்கில் (ஆயாமதோ) விஸ்தாரமான அண்டத்திலிருந்து சிதறியவை அந்த புருஷனின் அவயவங்களோடு நிமித்த காரணங்களால் அறிஞர்களான முன்னோர்கள் இணைத்து பதினான்கு லோகங்கள் உண்டாயின என்கிறார்கள்.
இடுப்பிலிருந்து மேல் ஐந்து, இடுப்பிற்கு கீழ் ஐந்து அவயவங்களிலிருந்து மற்றவை என்று பிரித்திருக்கிறார்கள்.
புருஷனுடைய முகத்திலிருந்து,ப்ரும்ம, இரு புஜங்களிலிருந்து க்ஷத்ர, துடைகளிலிருந்து வைஸ்ய, பாதங்களிலிருந்து சூத்ரன் தோன்றினர்.
பூலோகம் பாதங்களிலிருந்து. நாபியிலிருந்து புவர்லோகம். ஹ்ருதயத்திலிருந்து சுவர்கம், மார்பிலிருந்து மஹர் லோகம். கழுத்திலிருந்து ஜன லோகம், ஸ்தனங்களிலிருந்து தபோ லோகம், தலையிலிருந்து சத்ய லோகம். சத்ய லோகம் தான் ப்ரும்மலோகம் சனாதனமானது.
இடுப்பிலிருந்து அதலம், இரண்டு துடைகளிலிருந்தும் விதலம், முழங்கால்களிலிருந்து சுத்தமான சுதலம், பின் பகுதிகளிலிருந்து தலாதலம், குல்பத்திலிருந்து- முன் கால்களிலிருந்து ரஸாதலம், பாதத்திலிருந்து பாதாளம் என்று தானே லோக மயமாக ஆனான்.
ஒரு சிலர், பாதங்களிலிருந்து பூலோகம், நாபியிலிருந்து புவர்லோகம், தலையிலிருந்து ஸ்வர்லோகம் என்பர்.
இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின், 5வது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-42
அத்யாயம்-6
ப்ரும்மா தொடர்ந்தார். இவ்வாறு ஆரம்பித்த ஸ்ருஷ்டியில், மஹத் என்ற நிலையான இயற்கை தத்துவங்களான ஆகாசம்,வாயு, அக்னி,நீர், நிலம் என்று வரிசை , புருஷ சூக்தம் -என்பதில் ஓரளவு, அதன் தொடர்ச்சியாக விராட் புருஷனுடைய மற்ற ரூபங்களைப் பற்றி விவரிக்கிறார்.
வாக் என்ற நமது புலனுக்கு அதிஷ்டாதா அல்லது அதிகாரி வஹ்னி- தீ – அதற்கான இடம் க்ஷேத்ரம். முகம்-வாய். சந்தஸ் என்பது ஏழு -காயத்ரி, உஷ்ணிக்,ப்ருஹதீ, பங்க்தி,ஜகதீ, த்ரிஷ்டுப்,அனுஷ்டுப் என்பது ப்ரதானமானவை. த்வக் முதலான ஏழு தாதுக்கள்- இது வார்த்தைகளின் அடிப்படை உருவம் ,தாது என்பது சுருக்கமான வடிவம், அதன் விரிவாக்கமே வார்த்தையாகும். இது இலக்கணம். வாயின் மற்றொரு செயலான உணவு- தேவர்களுக்கு தருவது ஹவ்யம், பித்ருக்களுக்கு- கவ்யம், இந்த இரண்டின் மீதி அம்ருதம் எனப்படும். மனிதர்கள் ஆறு விதமான ருசிகளை அறிய உதவும் இந்திரியம்- புலன் நாக்கு, இதன் அதிஷ்டாத்தா அதாவது அதிகாரி வருணன்.
பிராணவாயு முதல், வாயுவின் இடம் மூக்கின் உள்பகுதி. தாவரங்கள்- தானியங்கள், காய்,பழங்கள் அனைத்தும் அஸ்வினி தேவைதைகளின் ஆதீனம். உணவின் மணத்தை அனுபவிப்பது மூக்கு என்ற இந்த்ரியம். நல்லது, கெட்டது இரண்டுமே. தன் புத்தியினால் நல்லதோ, கெட்டதோ ஜீவன்கள் உணருகின்றன.
கண் என்ற இந்திரியத்தின் வேலை, உருவத்தைப் பார்ப்பது. வெண்மை முதலான வர்ணங்களை அறிவது, ப்ரகாசம் முதலியவற்றை உணருவது கண். சூரியன் கண்ணின் மணிகளின் ஸ்தானம். திசைகள்., தீர்த்தங்கள் இவைகளை காது என்ற அவயவம் அறியும். காதின் உள் பகுதி, குகை போன்ற இடம், அதன் இருப்பிடம். கேட்கும் செயல், சப்தம் இவைகளுக்கு மடல் போன்ற காதின் வெளிப் பகுதி என்ற அவயவம் இருப்பிடம். ஆகாசம் அதிகாரி.
இவ்வாறு இந்திரியங்கள் செயல்பட அதை உணர்ந்து கொள்ள என்று இருப்பது ஜீவன்களின் உடல்.
ஸ்பரிசம், வாயு இவைகளுக்கு, தோல் இருப்பிடம். அனைத்து யாகங்கள், செயல்கள் – மரங்கள் போன்ற அசையாத ஆனால் உயிருள்ளவைகளும் வளருதல் முதலான செயல்களுக்கும், விராட் புருஷனின் ரோமங்கள் இருப்பிடம்.
ஹரியின் கேசம் மேகமாகவும், அவருடைய மீசை முதலியன மின்னலாகவும், (மின்னல் உருவம் உடையது, மாறிக் கொண்டே இருக்கும் என்பதால் வளரும் நகங்கள் அதன் ஆதீனம்).
மூன்றுலகமும், பூ:புவ:ஸ்வ: – என்பவை, ஹரியினுடைய விக்ரமம், பாதங்களின் செயல்பாடு. பாதம் , க்ஷேமத்தையும், மங்களத்தையும் தரும் என்பதாலும், சரணம் அதாவது அடைக்கலம் அளிக்கும் என்பதாலும், மோக்ஷம் முதலான வரங்களைத் தரும், வேண்டினவற்றை வேண்டியவாறே தரும் என்பதும் அவரது குணம். சர்வ காம ப்ரத:, என்றவாறு தானம் என்பது அவருடைய பாதங்களின் இயல்பு. மோக்ஷம் என்பதே அவரது பாத மூலம் என்பது வசனம்.
தண்ணீர்- ரேதஸ், உலக ஸ்ருஷ்டிக்கு காரணமானவை. மழை, தக்ஷ ப்ராஜாபதியின் ஆதீனத்தில் உள்ளன. பிறப்புறுப்பு, ப்ரஜாபதி என்ற ப்ரும்மா, மைதுனம் அதன் சம்பந்தமான அனைத்தும் ஹரியின் ரகசிய உறுப்புக்கள். அவரே பீஜப்ரதா என்பது தாத்பர்யம்.
மற்ற இரண்டு மல மூத்திரங்களை விசர்ஜனம் செய்யும் அவயவங்கள், யமன் தேவதை. அபானத்வாரம் இருப்பிடம். நிர்ருதி என்ற அசுரன் ஆதீனம். ம்ருத்யு என்ற தேவதை, உயிர் பிரியவும், நரகத்திற்கும் இருப்பிடம் என்று சொல்லப்படுகிறது.
தமஸ் என்ற அறிவின்மை, ப்ருஷ்டம் , நத நதிகள் நாடிகளில், மலைகள் அந்த விராட் புருஷனின் எலும்புகளிலிருந்து தோன்றுகின்றன.
வெளியில் தெரியாத, அன்னம் முதலிய உணவுகளின் ரசம், கடல்கள், சமுத்திரங்கள், ஜீவன்கள் முதலானவைகள் தோன்றுவதும், மறைவதும் ஆன செயல்களுக்கு அவரது வயிற்று பாகம் இருப்பிடம். அனைத்து ஜீவன்களின் மனம் அவரது ஹ்ருதயத்தில் இருப்பதாக சொல்லப் படுகிறது.
தர்மத்தின், நான்முகனான என், உன், குமாரர்கள் சனகாதிகள், பவ, ருத்ரன் இவர்கள், முந்தைய முனிவர்கள், சுர, அசுரர்கள், நாகங்கள், பறவைகள், ஊர்வன, மிருகங்கள், கந்தர்வ, அப்சரஸ்கள், யக்ஷ ராக்ஷஸர்கள், பூத கணங்கள், உரகங்கள், பசுக்கள், பித்ருக்கள், சித்தர்கள், வித்யாதரர்கள், சாரணர்கள், மரங்கள், தாவரங்கள், மற்றும் பல ஜீவன்கள், நீரில் வாழ்பவை, நிலத்தில், ஆகாயத்தில் இருக்கும் க்ரஹ, நக்ஷத்திர, ருக்ஷ -உபக்ரஹம், உதிரும் நக்ஷத்திரங்கள், மின்னல், மற்றும் பாலூட்டிகள் இவையனைத்தும் விராட் புருஷனே. (அம்சமே) ப்ரும்மாண்டத்தை சூழ்ந்து இருப்பது அவனே. . “ச பூமிம் விஸ்வதோ வ்ருத்வா” – அவன், பூமியையும் அதன் வெளிப் பகுதியான ப்ரும்மாண்டத்தையும் சூழ்ந்து – “
விக்ஞானம் -மேலான அறிவு என்ற தத்வம், மஹத் என்ற பஞ்ச பூதங்களுக்கும் மேலான பகவானின் ஆத்ம- தன் அந்த:கரணம்- மனசாட்சி என்பது ஸ்ரேஷ்டமான, சிறந்த இருப்பிடம்.
இவ்வாறு புல் பூண்டு முதல் நம் வரை இருந்தும், இருப்பதும், வருவதுமான அனைத்தும், விராட் புருஷனின் அதீனமே – “புருஷ ஏவேதம் சர்வம், யத்பூதம் யச்ச பவ்யம்” என்றபடி உள்ளும் புறமும்,நடந்ததையும், வருவதையும், அவன் பார்க்கிறான், அறிந்து ரக்ஷிக்கிறான் .
அபயம்- பயத்தை போக்குதல், பயத்தை போக்குவதோடு மோக்ஷத்தை தருகிறான். என்ன காரணத்தால் அழியக் கூடிய அன்னம் (கர்ம பலன்) தருகிறானோ, அதே காரணத்தால் பிறப்பு, இறப்பு என்ற பயங்கள் இல்லாத அழியாத மோக்ஷத்தையும், தருகிறான். பரமானந்தம் எனும் மோக்ஷத்திற்கும் அவனே ஈஸ்வரன். அதனால் ப்ரும்மன்! நாரத! அந்த பரம புருஷனுடைய மஹிமை அளவிட முடியாதது, யாராலும் அதை மீற முடியாது.
பூ:புவ:ஸ்வ: என்ற மூவுலகமும் க்ருஹஸ்தர்கள் என்ற குடும்பஸ்தர்களுக்கானது. இவற்றின் தலை என்ற அவயவமாக மஹர் லோகம், அதற்கு மேல் ஜன, தப,சத்ய என்ற பெயருடைய லோகங்கள் வரிசையாக, அம்ருதம்-மரணமின்மை, க்ஷேமம்-வியாதிகள் இல்லாமலிருத்தல், அபயம்- பயமின்மை இவைகளை கொண்டுள்ளன.
இந்த மூன்று உலகமும், ஜன, தப,சத்ய லோகங்கள், முதல் மூன்றின் (பூ,புவ:ஸ்வ) புற வெளியில் இருப்பவை. க்ருஹஸ்தர்கள் அல்லாத, ப்ரும்மசாரி, வானப்ரஸ்தம் என்ற வயதானவர்கள், இவர்களுக்கானவை.
வித்யா- இரண்டு வகைப்படும். பரம புருஷன் என்ற க்ஷேத்ரக்ஞன் – ஞானி
साशनन – अनशनन –
சாஸனன் -ஜீவன், – -கர்ம பலனை அனுபவிக்க கூடியது. அனசனன் -கர்ம பலன் இல்லாதது -தேவன்.
பரமேஸ்வரனிடமிருந்து அண்டம் ப்ரும்மாண்டம் தோன்றியது என்பதால், அதிலிருந்து, பஞ்ச பூதங்கள், இந்திரியங்கள் என்ற புலன்கள், சப்தம் முதலான ஐந்து தன்மாத்திரைகள். இவைகளால் ஆன பூவுலகம் பிறந்தது. அதன் உள்ளிருந்தாலும் சூரியன் தன் கிரணங்களால் உலகில் பரவி இருப்பதை போல விஸ்வம் என்ற உலகை பிரகாசிக்கச் செய்வதோடு, ஒரே சமயத்தில் தான் ப்ரும்மாண்டத்தில் இருப்பவனாகவும் அதை தாண்டி, ப்ரும்மாண்டத்திலிருந்து வேறு பட்டவனாகவும் இருக்கிறான் என்பது தாத்பர்யம்.
நான் அவருடைய நாபி பிரதேசத்திலிருந்து உண்டானவன். அந்த சமயம் எதையுமே அறியாதவனாக பரம புருஷனின் அவயவம் மட்டுமே என்று இருந்தேன். உலகியலில் லோகம் என்றோ, யாகம் செய்வது என்பதோ எதுவும் தெரியாதவனாக. பின்னால் அக்னிஷ்டோமம், பசுக்கள், ஆடு முதலியன, தாவரங்கள், அஸ்வத்தம் போன்றவை, கடைந்து அக்னியை உண்டாக்குவது போன்றவற்றை அறிந்தேன். தேவ யாகம், யாக பூமி. வசந்தம் முதலான காலங்கள். அதன் மாறுதல்கள். தர்மம் முதலானவைகளை அறிந்து கொண்டேன்.
காஞ்சனம்-தங்கம் முதலிய வஸ்துக்கள், ஓஷதிகள்- செடி கொடிகள், பல விதமான விதைகள், எண்ணெய், நெய் போன்ற வஸ்துக்கள், ரஸம்- பால், வெல்லம் போன்றவைகளின் ருசி, இரும்பு முதலிய தாதுக்கள், மண், புற்று, ஜலம், கங்கை முதலான நதி ஜலங்கள், பாதங்களாக பிரித்து ஓதும் வேத மந்திரங்கள், கட்டுப்பாடில்லாத சந்தம்- வசன நடையில் இருந்தவை, விதி முறைகளுடன் யஜுர் வேதம், கான ப்ரதானமான சாம வேதம், நான்கு அத்வர்யூ -வேத விற்பன்னர்களுடன் செய்யப்படும் சாதுர்ஹோத்ரம் என்ற விசேஷமான யாகங்கள், இவைகளை அறிந்து கொண்டேன்.
அக்னி ஹோத்ரம் முதலானவைகளை அதன் சாஸ்த்ர சம்ப்ரதாயங்களோடு கற்றுக் கொண்டேன். மந்திரங்கள் இரண்டு வகைப் படும். பீஜ மந்த்ரம், மாலா மந்த்ரம் என்பன. (இருபது எழுத்துக்களில் வாக் பீஜ மந்த்ரங்கள். அதை விட அதிகமான மாலா மந்த்ரங்கள். ) ஜபம் செய்ய தேவையானவை. தக்ஷிணை- யாக காரியங்களில் உடன் ஈடுபடுபவர்களுக்கு தர வேண்டிய சம்பாவனைகள். ப்ரும்மசர்யம் போன்ற நியமங்கள். மந்த்ர தேவதைகள், அவர்களின் தாரதம்யம் – முதல், அடுத்தது என்ற வரிசை கிரமம்- போதாயனம் முதலிய கல்ப விதிகள், சங்கல்பம்- இதைச் செய்கிறேன் என்று ஆரம்பத்தில் எடுத்துக் கொள்ளும் மனம், வாக்கு, ஸ்மரண, கீர்த்தனைகள் இன்ன சூத்ரம் என்ற விதிகள் இவைகளை அறிந்து கொண்டேன்.
செய்யும் செயலுக்கான பலன்கள் எவை, சுவர்கம் முதல் பல வகை பலன்கள், பல விதமான அபிப்பிராயங்கள், சிரத்தை என்பதன் அத்யாவசியம், இது நமது நன்மைக்கே என்ற நம்பிக்கையால் வருவது சிரத்தை. பிராயச்சித்தம்- எதிர்பாராத இடையூறுகள், தவறுகளுக்கு மன்னிப்பு கோருதல், ப்ரும்ம சமர்ப்பணம் வரையிலான விதிகள்.
“யக்ஞேன யக்ஞம் அயஜந்த தேவா: “ என்று புருஷ சூக்த மந்த்ரம்.
இவ்வாறு யாக சாதனங்களை அறிந்து கொண்ட நான் அந்த விதிகளின் படியே யாகம் செய்ய ஆரம்பித்தேன். நாராயணனின் நாபியில் உதித்தவன் என்பதால், அனைத்துமே நாராயண சரீர சம்பந்தமுள்ளவையே என்பதை அறிந்தேன். பகவானுக்கு சமர்ப்பணம் செய்வது என்ற நோக்கமே முக்கியமானதாக செய்யப் படுவதால் அந்த செயல் யக்ஞம் எனப்படுகிறது. பஸ்யந்தீ இதி பஸவ: என்பதன் பொருள் மனிதர்களின் மனம் அல்லது உணர்வு – பாணிபாதம் என்பது யூபம்- யாக மண்டபத்தின் தூண்- யக்ஞ பூமி மானவ தேகம், பாத்திரங்கள் தலை முதலான அவயவங்கள், நர ரூபத்தில் நாராயணன் தன் சரீரத்தையே, விஸ்வ மானவ ஜீவன ஆதாரமான, பழம், காய்கறிகள் முதலான ஔஷதிகள், (பச்சிலை முதலான தாவரங்கள்- மனித உணவுக்கானவை) வளரவும், உபயோகமாகவும் யாகத்தில் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தார். (புருஷ சூக்தம் )
மரீசி முதலான ஒன்பது ப்ரஜாபதிகள் தோன்றினர். பின் மனிதர்களில் முனிவர்கள், பித்ருக்கள், சுயமாக அறிவுடைய பெரியவர்கள், தேவர்கள், தைத்யர்கள், மனிதர்கள், யாகங்கள் செய்தனர். மனு முதலானவர்கள், தங்களுக்கு எதையும் வேண்டாமல் நாராயண ஸ்வரூபமே. உலகம் என்ற எண்ணத்துடன் யாகங்கள் செய்தனர்.
இவ்வகையில் ஓரளவு தெரிந்து கொண்ட நான், பகவான் நாராயணன் அருளால், அவர் அனுமதியுடன், அவரது வழிகாட்டலில் இந்த ஸ்ருஷ்டி என்பதை ஆரம்பித்தேன். தற்சமயம் காணப்படும் விஸ்வம் என்பது உதயமாகியது. பகவானின் அதீனத்தில், ஹரன், ருத்ரனாக உலகை சம்ஹரதி- அழிக்கிறான், பின் தோற்றுவிக்கிறான். விஷ்ணு ரூபமாக, உலகை காக்கிறான், தானே ரக்ஷிக்கிறான். அவ்வாறே ரஜோ குண பிரதானமாக ஸ்ருஷ்டியைச் செய்ய ப்ரும்மாவாக, சத்வம் பிரதானமாக கொண்டு காக்கும் தொழிலையும், தமோ குண பிரதானமாக சம்ஹாரம் என்பதையும் செய்கிறான்.
குழந்தாய்! நீ கேட்ட கேள்விக்கு பதில் சொன்னேன். பகவான் அன்றி எதுவும் தோன்றாது. நல்லதோ, அல்லதோ, அவன் அன்றி அணுவும் அசையாது என்பதே சத்யம். உண்மை.
என் மனதில் வியாபித்திருக்கும் நாராயணன் சாட்சியாக, நான் சொல்லும் சொல் எதுவும் தவறாகாது. என் மனம் எதையும் தவறாக எண்ணாது. என் இந்திரியங்கள் எந்த காலத்திலும் அசத்தான- தவறான வழியில் செல்லாது.
பகவானின் நாபி கமலத்தில் தோன்றியதால், நானே வேத மயமாக, தவம் என்பதன் உருவமாக, அல்லது தவம் செய்வதில் நாட்டமுடையவனாக, கஸ்யபர் புதலான பிரஜாபதிகளால் வணங்கப் படும் தலைவனாக, இருக்கிறேன். யோக சாதனையை அதன் விதி முறைகளோடு செய்து என் தகுதியை, சுய கட்டுப்பாட்டுடன் வளர்த்துக் கொள்கிறேன். பரம புருஷனால் என் தோற்றம் வந்தது என்பதால் என் பொறுப்புகளும் அதிகம்.
அந்த பகவானை நமஸ்கரிக்கிறேன். எவரது அருளால், பவம் என்ற ஜனன மரணம் என்ற வட்டத்துள் சுழலும் சம்சாரிகள், இந்த உலகில் மனைவி,மக்கள், வீடு வாசல், முதலான வசதிகளை அனுபவிக்கிறார்கள். அவரை சரணமடைந்து பர லோகத்திலும், பரமானந்தம் அடைகிறார்கள். ஆகாயம் போன்று எல்லையற்ற மாயா விலாசங்களை கொண்டவர் பகவான். அவரை நமஸ்கரிக்கிறேன்.
அவரது சுய ரூபம் யாராலும் அறிய முடியாதது. ப்ரும்மாவாக நானோ, நாரத, சனகாதிகளான நீங்களோ, வாம தேவனோ, மஹேஸ்வரனோ கூட அறிந்து கொள்ள முடியாது. மற்றவர்கள் எம்மாத்திரம்?
அவருடைய அவதார கதைகளை பாடும் ஜனங்கள், நானும், என் போன்ற பிரஜாபதிகளும் கூட, அவருடைய உள் மனம், உத்தேசம் என்ன என்பதை அறிந்தவர்கள் இல்லை. அந்த பகவானை நமஸ்கரிக்கிறேன்.
அவர் தான் ஆதி புருஷன். தான் பிறவியற்றவனாக இருந்தும், கல்பம் தோறும் பிறவி எடுக்கிறான், ஆத்மாவை ஆத்மாவில், ஆத்மாவால் ஆத்மாவை தருகிறான், காப்பாற்றுகிறான். (தன் பொறுப்பில், அவதார காலத்தில், உபகரணமான தன் ஆத்மாவையே, கர்த்தாவான தானே ஸ்ருஷ்டித்துக் கொள்கிறான், தன்னையே தருகிறான் பிறகு மறைக்கிறான்)
நாரத ரிஷியே! அவரை, விசுத்தம்-விசேஷமாக தூய்மையானவன், அதனால் அவனைப் போல மற்றொன்று இல்லாமை. அத்விதீயன் என்றும், கேவலம் ஞானம்- ஞானமே உருவானவன் என்றும், ஸ்திரமானவன் என்றும், சத்யம் – துக்க தோஷமில்லாத ஆனந்த ஸ்வரூபன் என்றும், தேசத்தாலும், காலத்தாலும் மாறாத பூர்ண ஸ்வரூபன் என்றும், அனாத்யந்தம் – ஆதியும் அந்தமும் இல்லாதவன் என்றும், நிர்குணன், அத்வயன் என்றும் முனிவர்கள் துதிக்கிறார்கள்.
பகவானின் முதல் அவதாரம்- புருஷ சூக்தத்தில் விவரிக்கப் பட்ட சஹஸ்ர சீர்ஷ – ஆயிரம் தலைகளுடன் செய்த அவதாரம். தசாங்குல: தசம் பத்து என்பதில் உள்ள முதல் ஒன்று என்ற எண்ணிக்கை -ஒருவனே சர்வாந்தர்யாமி என்பதையும், அடுத்து வரும் பூஜ்யம் ப்ரக்ருதி என்பதையும்- பஞ்ச பூதங்கள், மனம், புத்தி அஹங்காரம், மாயா, பரம புருஷன் என்ற பத்து. த்ரவ்ய-மூலப்பொருள், சக்தி, உணர்வு, என்பவைகளுடன் உலகை வியாபித்து நின்ற பகவானின் பத்து அங்குலங்கள் பத்தின் வர்கமான ஆயிரமாக, ஆயிரம் சீர்ஷம்- தலையாக பரிணமித்தது என்பது விளக்கம்.
காலம், ஸ்வபாவம், கார்ய காரணம், ப்ரக்ருதியின் மூன்று சக்திகள், வைணவ கொள்கையில் ஸ்ரீ,பூ,நீலா என்றும், சாக்த கொள்கையில் இச்சா, ஞான, க்ரியா என்றும் ப்ரக்ருதியின் மூன்று சக்திகள் சொல்லப் படுகின்றன.
தக்ஷன் முத்லான ஒன்பது ப்ரஜாபதிகள் ஒன்பது எண்களின் அதி தேவதைகள்.
எண்களின் முதல் எண், அதன் தொடர்ச்சியாக இரண்டு மூன்று என்று எண்கள் பிறப்பதால், அதற்கான
சாமர்த்த்யம் . (தக்ஷத்வம்) உள்ளதால் அந்த பிரஜாபதிக்கு தக்ஷன் என்றே பெயர்.
நாரத, சனக, சனந்தன,சனத்குமார, சனத்சுஜாத , ப்ரும்மாவின் மானஸ புத்திரர்கள். மனதில் உதித்தவர்கள். ஞானமே உருவானவர்கள், பக்தி யோகத்தை பரப்புகிறார்கள்.
லோக பாலர்கள் என்பவர்கள் இந்த்ராதி தேவதைகள். செயலுக்கு ஏற்ப பலன் என்பதாக, சத் காரியங்கள் செய்பவர்களுக்கு சௌக்யம் முதலான பலன்களைத் தந்து நல்ல காரியங்களில் மக்களின் மனதை ஈடுபடச் செய்வார்கள்.
ஆகாயத்தில் சஞ்சரிக்கும் கருடன் போன்றவர்கள், மண்டல சாரிகள் எனப்படுவர். பானு மண்டலம், க்ரஹங்களின் சஞ்சாரம், பூமியின் சுழற்சி, சூரிய குடும்பத்தின் பரிவர்த்தனம்- சலனம் என்பதில் உதவியாக இருக்கின்றனர். அவர்களில் இரவு பகல் என்ற இரண்டு பக்ஷங்கள், இறக்கைகள் உள்ள, ப்ரும்மாண்ட ஸ்திதிக்கு காரணமாக விளங்கும் வைனதேயன், சுபர்ணன், அக்ஷயன், கருத்மான், அகண்டமான கால ஸ்வரூபன். அதனால் தான், காலத்தைக் குறிக்கும் சூரியனுடைய முன் தோன்றலான அருணன், கருத்மதக்ரஜ -கருத்மானின் முன் பிறந்தோன் என்ற பொருளில் தினம் என்பதின் முன் பகுதி மட்டுமான பாதி சரீரி என்ற பொருளில், அனூரு என்ற பெயரும் பெற்றான். மேலும் பூமி ஆகாச மத்திய ரேகாவாக கருட மாதா வினதா சொல்லப் படுகிறாள்.
நரலோக பாலகர்கள் சூர்ய சந்த்ர முகமாக, பூமியில் அவதரிக்கும், மனு, மாந்தாதா என்பவர்கள்.
பாதாளம் முதலிய கீழுலகம், பூவுலகில் உத்தர துருவத்திலிருந்து, தக்ஷிண துருவம் வரையில் வியாபித்து இருக்கும் சர்ப்பம் போன்ற உருவம் உடைய குண்டலினி, பூமியின் ஸ்திர தன்மைக்கு காரணமாக இருப்பதால், அனந்த சக்தியுடையவன், அனந்தன், ஆதி சேஷன் என்று அறியப் படுகிறான். அதனாலேயே, அனந்தன் பூ பாரத்தை தாங்குகிறான் என்று புராணங்களில் வர்ணிக்கப் படுகிறான். வாசுகி என்ற மற்ற மூவரும் க்ரஹங்களுக்கு மத்தியில் பரஸ்பர ஆகர்ஷண சக்தி மார்க்கங்களை நிர்வஹிக்கிறார்கள். பூமியில் நதிகளின் ப்ரவாகத்தை, பிராணிகளின் சரீரத்தில் ரத்த நாளங்கள் தோன்றுவதில் உதவியாக இருக்கிறார்கள்.
கானம், வித்யா என இருப்பவர்கள் கந்தர்வர்கள். அவர்கள் ஜீவன்களின் கைகளில் உள்மூச்சு, வெளி மூச்சு இவைகளின் போக்கு, ஹ்ருதய துடிப்பு, இவற்றை நிர்வஹிக்கிறார்கள். வித்யாதரர்கள் என்பவர்கள், செல்வத்தை சம்பாதிக்க சாதனங்கள், மந்திர தந்திரங்கள், – இவர்கள் தான் ஜீவன்களின் கார்யசித்தி, பிராணிகளின் நடமாட்டம், கண்களில் தென்படும் ப்ரபஞ்சத்தின் பலவிதமான பொருட்களின் தீர்கத்வம் நீண்ட ஆயுள், வைசால்யம்-பரப்பு, கனதா- அடர்த்தி, பரிமாண கோணங்கள் இவைகளின் விதிகள் இவற்றை நிர்வஹிக்கின்றனர்.
யக்ஷா: என்பவர்கள் மனித உடல் இன்றி, பர்வதங்களின் சாரலில், பெரிய மரங்களில், குகைகளில், பல தேசங்களிலும் பாறைகளின் அமைப்பிலும், இருக்கும், விஷய அறிவு உடையவர்கள்.இவர்களின் ஆகாரம், மரங்களில் கிருமி, கீடக முதலியவை. தன் ஸ்திதியை இடையூறு செய்யும் மனிதர்களை பயமுறுத்துவார்கள். அதே சமயம் தன்னுடன் இணங்கி இருப்பவர்களுக்கு பாரத்தை தூக்குவது போன்ற காரியங்களில் உதவியாக இருப்பார்கள்.
ராக்ஷஸர்கள் சரீர நிர்மாண காரணமாகும் பிதாவின் வீர்யம், பிந்து இவைகளையும், ஜீவன் களின் எலும்புகளையும், ஸ்தூல சரீரம், கோசம் இவற்றின் அதி தேவதைகளாக இருப்பார்கள். ஊர்வன, உரக, நாகர்கள் என்பவர்கள், சாதாரணமாக கரு உருவாவதை நிர்வஹிப்பார்கள். பீஜம், துளிர் என்பவற்றை பித்ருக்கள் என்பவர்கள் நிர்வகிக்கிறார்கள்.
திதியின் மைந்தர்கள் தைத்யர்கள். இவர்களிலிருந்து சற்றே மாறுபட்டவர்கள் தானவர்கள். தேகம் இல்லாமல் உயிர் உள்ள ஜீவன்கள் ப்ரேதர்கள். மாமிச பக்ஷிணர்கள் பிசாசர்கள். உடல் இல்லாமல் ப்ரக்ருதி சக்தியுள்ளவை பூதங்கள். கூஷ்மாண்டவர்கள் இந்த ஜாதியினர்.
இவையனைத்தும் மிகச் சிறிய அளவிலாவது பகவானின் அம்சம் உடையவர்களே. பகவானின் ஐஸ்வர்யம், மஹத் என்பதிலிருந்து, தேஜஸிலிருந்து, ஓஜஸ் என்ற சக்தியிலிருந்து, உத்ஸாகம், சகிப்புத் தன்மை, மற்றும், வேகம், தைர்யம், பலம், தாரணா என்ற பொறுத்துக் கொள்ளும் சக்தி (stamina) பொறுமை, சஹனம்- ஏற்றுக் கொள்ளும் குணம், ஸ்ரீ – சோபை-அழகு, ஹ்ரீ:-லஜ்ஜா, விபூதி நியாம என்பவை, ஆத்மா, புத்தி, யுக்தமான சொல், அத்புதமான சப்தங்கள், இவையனைத்தும் ரூபமாக வரும் சமயம், போற்றத்தகுந்தவையே. தன் இச்சையால் எடுத்துக் கொண்ட, திவ்ய மங்கள ரூபமான பகவானின் விராட் புருஷனின், தனதேயான (SELF) விபூதியே இந்த ரூபங்களின் அடிப்படை என்பது தாத்பர்யம்.
அவதாரங்கள் அனேகம். அவைகளில் பிரசித்தமானவற்றை வர்ணிக்கிறேன். ப்ராதான்யமாக, முக்யமாக ரிஷி முனிவர்கள் சொல்லும் லீலாவதாரங்கள் – இவைகளை கேட்டு உன்னை புனிதப் படுத்திக் கொள்வாயாக.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின், ஆறாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-45
||ஓம் நமோ பகவதே வாசுதேவாய || இரண்டாவது ஸ்கந்தம் -ஸ்ரீ சுகர் சொல்கிறார்
அத்யாயம்-7
ப்ரும்மா தொடர்ந்தார். பூமி ஒரு சமயம் ஒரு அசுரனால் மறைத்து வைக்கப் பட்டாள். அதை மீட்க பகவான் வராகமாக அவதரித்தார். அந்த அவதாரம் யக்ஞாவதாரம் எனப்படும்.
ருசி என்ற பிரஜாபதி, அவர் மனைவி ஆகூதி. இவர்களுக்கு ஒரு மகன் சுயக்ஞன் – அவன் மனைவி தக்ஷிணா – அவர்களுக்கு பிறந்த குழந்தைகள் சுய என்ற தேவர்கள் ஆனார்கள். சுயக்ஞன் தேவேந்திரன் ஆனான். தாய் வழி பாட்டனார் அவனை ஹரி என்றே அழைத்தார். தேவனாக ஆனதும், உலகை தன் இஷ்டப்படி ஆட்டுவித்தான்.
அடுத்தது கபிலாவதாரம். கர்தமர் என்ற பிரஜாபதி. தேவஹூதி அவர் மனைவி. ஒன்பது சகோதரிகளுக்கு பின் மகனாக பிறந்தார். தன் தாயாருக்கு ஆத்ம தத்வம் என்ற ப்ரும்ம வித்யாவை உபதேசித்தார். அதனால் அவள் இந்த ஜன்மத்திலேயே முக்தியை அடைந்தாள்.
தத்தாத்ரேய அவதாரம்: அத்ரி மஹரிஷி புத்ரன் வேண்டும் என்று வேண்டியதால் மகிழ்ந்த பகவான், என்னையே தந்தேன் என்று அவருக்கு மகனாக பிறந்தார். தந்தேன் என்ற பொருள் பட தத்த- கொடுக்கப் பட்டவன் – என்றே இந்த அவதார பெயராகியது. பக்தனுக்கு வேண்டியதை தருபவன் என்ற பகவானின் குணம் இதில் அறிகிறோம். அவரை பக்தி செய்த யது, ஹேஹயன் போன்றவர்களும் உலகிலும் பல நன்மைகளை அடைந்தனர், பின்னர் அவரது பாத பங்கஜ பூஜா பலனாக மோக்ஷத்தையும் அடைந்தனர். யது வம்சத்தில் வந்தவன் தான் யயாதி.
குமார அவதாரம்: ஒரு யுகம் முடிந்து ப்ரளயத்தில் நஷ்டமான பல விஷயங்களில் ஒன்று ஆத்ம தத்வம் என்ற சம்ப்ரதாயம். ஆரம்பத்தில் ப்ரும்மாவாக செய்த தவங்கள், தானே செய்த தவங்கள் இதன் பலனாக ப்ரும்மாவின் புத்திரர்களாக நான்கு குமாரர்கள் பிறந்தனர். சனம்- தவம் – தவத்தின் பலனாக பிறந்தவர்கள் என்ற பொருளில் சனத் குமாரர்கள் முறையே சனத்குமாரன், சனகன், சனந்தனன், சனத் சுஜாதன் – என்று பெயர்கள். இவர்கள் பிறவி ஞானிகள். உலக வாழ்க்கையில் ஈடுபடாமல், ஞான மார்கத்தையே ஏற்றுக் கொண்டவர்கள். ஆத்ம தத்வம் என்ற சம்ப்ரதாயம் மறு மலர்ச்சி பெறச் செய்தார்கள்.
நர நாராயண அவதாரம்: தர்ம என்ற பெயருடைய ப்ரஜாபதி. அவர் மனைவி தக்ஷன் மகளான மூர்த்தி என்பவள். அவர்களுக்கு நாராயணன், நர என்று இரட்டையர்களாக பிறந்தார். இந்த கதை பின்னால் சொல்லப் படுகிறது. அனங்கன் என்ற மன்மதன் தேவ காரியமாக, தவம் செய்து கொண்டிருந்த பகவானின் தவத்தைக் கலைக்க பெண்களை அனுப்பினான். ஊர்வசியை சிருஷ்டித்து அவர்கள் முன் நிறுத்தி, அவர்களை திருப்பி அனுப்பினார் என்பது கதை.
துருவன்: உத்தான பாதன் என்ற அரசன். அவன் மனைவிகள் இருவர். சுருசி, சுநீதி என்று பெயர்கள். . அரசன் சுருசியிடம் அதிக பிரியமாக இருந்தான். அதனால் அவள் கர்வம் கொண்டாள். சுநீதி மகன் துருவன். ஒருநாள் அவள் சொன்ன கடுமையான சொல்லைத் தாளாமல் துருவன் அரண்மனையை விட்டு வெளியேறி, தவம் செய்தான். பாலகனான அவனுக்கு பகவான் அருள் புரிந்ததும் துருவன் என்ற நக்ஷத்திரமாக ஆனதும் பின்னால் சொல்லப்படுகிறது.
வேனன் என்ற அரசகுமாரன் துஷ்டனாக இருந்தும் மந்திரி மற்றும் பிரஜைகளால் அரியணையில் அமர்த்தப் பட்டான். ஆயினும் அவன் துன்புருத்தலால் மக்கள் அவதியுற்றனர். அவன் அகாலமாக மடிந்தான். ரிஷிகளின் வேண்டுதலின் மேல், அவனுக்கு புத்திரனாக ப்ருது என்ற பெயரில் பிறந்தார். அவன் பூமியை நல்ல முறையில் பாதுகாத்து விளைச்சல், பசுக்கள், இவற்றை வ்ருத்தி செய்தான் என்ற சரித்திரம் பின்னால் சொல்லப் படுகிறது.
நாபி என்பவரிடம் ருஷப என்பவராக பிறந்தார். சுதேவி என்று தாயார் பெயர். ஜடயோகம் என்பதை அனுசரித்தார். பரமஹம்ஸர்கள் – ஸோஹம் – அதுவே நான் என்ற மந்திரமே ஹம்ஸ மந்திரம் – அதை ஜபித்து உயர் நிலையை அடைந்தவர்கள் பரம ஹம்ஸர்கள். இவர்கள் துறவிகள். ஹம்ஸ மந்திரமே ஸ்வாசத்தால் பாடப்படும் சாமவேதம். அதனுடன் தொண்டையிலிருந்து உச்சரிக்கப் படும் நாதமே ருஷப என்பது. இந்த நிலையில் ஓங்கார தியானம் செய்யும் பொழுது ரிக் வேதத்தின் தர்சன சித்தி அடைவர். – எனவே ருஷபர், ரிக்வேத மூர்த்தியான ஹரி என்று ஆகிறது. நாபியிலிருந்து நாதம் வருவது, தந்தையின் பெயரான நாபி என்பதாகவும், வாக்தேவியை நினைவு படுத்துவதாக தாயாரின் பெயர் சுதேவி என்பதாலும், ருஷபர் என்பது அவர் பெயராகவும் அமைந்துள்ளது.
என் (ப்ரும்மாவின்) யாகத்தில் வேத மயமான, பகவான் ஹயக்ரீவனாகத் தோன்றினார். அந்த குதிரை முகத்திலிருந்து, அழகிய வேத வாக்யங்கள் வெளி வந்தன. பொன்னிறமாக, வேத மயன், யாகமயன், அகில தேவதாத்மா என்று துதி செய்தோம். ஹல் என்பது ஒரு சங்கேதம். அகாரத்திலிருந்து ஹ காரம் வரை உயிர், மெய் எழுத்துகள் அனைத்தும் குறிக்கும் இலக்கண பரி பாஷை. வாக் தேவியின் உடலில் தோன்றியவை. “அக்ஷராணாமகாரோ அஸ்மி” என்ற கீதா வாக்கின் படி பரமாத்ம சங்கேத மான ‘அ’ காரம் – அதில் ஆரம்பித்து மற்ற அக்ஷரங்கள், அதன் பின் சொற்கள், பதங்கள், வாக்கியங்கள் என்று விரியும் மொழி. அதாவது அகில வித்யா பூதமான ‘ஹ’ என்ற சப்தம். ( அ காரம் என்பதில் ஆரம்பித்து என்று சொல்ல ‘ஹ’ உச்சரிப்பு வசதிக்காக ‘அ’ ஹ என்று துவங்கும். அதே போல கடைசி எழுத்துடன் சேர்த்து ‘ஹல் என்று ஆகும். பாணினியின் வியாகரண மாகேஸ்வர சூத்ரங்கள் அ இ உண் என்று ஆரம்பிக்கும்.)
மேலும் தலை எல்லா அக்ஷர, ப்ரபஞ்ச அபிவ்யக்தி தோற்றத்திற்குமான ஸ்தானம் என்பதால் க்ரீவம்- கழுத்திற்கு மேல் உள்ள தலை, ஹயமாக, அகாரத்தில் ஆரம்பித்து ஹ வில் முடியும் அக்ஷரங்களாக ஆவதால், ஹய – என்பது வித்யா ஸ்தானம். ‘ஹய’ ஸ்தூலமான பொருள், வெளியில் தெரியும் குதிரை முகம் என்பது அக்ஷர மயமான வாக் தேவதா என்பதும், ஆத்மா என்பது தேஹ. ப்ராண இரண்டும் சேர்ந்த பின் உள்ள உடலில் இருப்பதாக கொள்வதாலும், நிர்மலமான ஞானானந்த மயமான, சர்வ வித்யா ஆதாரமான பரமாத்மாவின் விக்ஞானமயமான் ப்ரும்ம யக்ஞத்தில் ஹயசீர்ஷ: குதிரை முகன் அல்லது வாக்கின் தேவதா ஸ்வரூபம் ஹயஃக்ரீவ: என்று பொருள். (தலையையும் உடலையும் சேர்ப்பது க்ரீவம் என்ற கழுத்து) தவிர ஸ்வாஸ நிஸ்வாஸ- மூச்சை உள் வாங்குவதும் வெளி விடுவதுமான செயல் ‘சோஹம் ‘ என்ற மந்திர த்தின் மற்றொரு பெயரான ப்ரணவாகாரம், ப்ரணவம் சந்தஸ் என்ற வேதத்தின் சாரபூதம் – அதன் சாரமானது என்று சொல்வது போல, ஹயக்ரீவனின் மூக்கின் வழி வெளி வரும் மந்திரம் -உலக ஸ்ருஷ்டிக்கு ஆதாரமான வேத வாக்கியங்களின் உத்பத்தி ஸ்தானமாகவும், (ப்ரணவமாகவும்) இணைத்து சொல்லப் படுகிறது. மேலும் ஹய என்ற சப்தம் உலக வழக்கில் குதிரை என்ற பிராணி என்பதாக ஆனதால், பகவானுடைய உருவம் அஸ்வம் என்ற குதிரை முகமாக ஆகி விட்டது. “ ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதீம், ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவமுபாஸ்மஹே “ என்ற பிரசித்தமான ஸ்லோகம் சொல்வது ஞான மயமான, வித்யா ஸ்வரூபமான யக்ஞ புருஷணான பகவானைச் சொல்கிறது.
யுக முடிவில், ஒரு சமயம் ஸ்வாயம்புவ மனு ப்ரளய ஜலத்தில் (நதியில்) நின்றவாறு இரு கைகளை குவித்து அஞ்சலி செய்து கொண்டிருக்கும் பொழுது, உலகத்தின் அனைத்து உயிரினங்களின் இருப்பிடமான பூமியின் வடிவத்தில், மீனாக பகவான் காணப்பட்டார். அந்த ப்ரளய ஜலத்தில், அவரது வாயில் வேதங்கள், அதன் சாகைகளோடு பிடித்துக் கொண்டிருந்தார். யுகாந்தம் என்பதால், ஸ்தூலமான உலகம் காணப்படவில்லை. மீன் உருவம் சகல உயிரினங்களுக்கும் பீஜ ரூபம் (முதல் வடிவம்) என்று அறியப் படுகிறது. உருவமற்ற உலகம். எங்கும் தண்ணீர், அதில் மூழ்காமல் வேத சாகைகள் அடுத்த யுகம் தோன்றும் சமயம் வேண்டியிருக்கும் என்பது போல், அவற்றை கெட்டியாக பிடித்துக் கொண்டு நீரில் விளையாடுவது போல பகவான் சஞ்சரித்ததாக பாகவதம் வர்ணிக்கிறது. திரும்பவும் ஸ்ருஷ்டியை ஆரம்பிக்க தேவையாக இருக்கும் என்று நினைத்தோ, அவரிடம் சமர்ப்பித்தது போல புது உலகை நிர்மாணிக்கத் தயாரான பஞ்ச பூதங்கள் முதலியன, ஸ்ருஷ்டி ரகசியம் அடங்கிய வேத சாகைகளை அவரிடம் கொண்டு சேர்த்து விட்டன. இது தான் வேதோத்தாரணம் என்று கவிகள் சொன்னது. (“வேதான் உத்தரதே” என்று அஷ்டபதி ஆரம்பம்.)
கூர்மாவதாரம்: பாற்கடலில், தேவர்களும், அசுரர்களும் சேர்ந்து அம்ருதம் பெற கடைய நினைத்த பொழுது மத்தாக மந்தர மலையை கடலில் போட்டனர். அதை மூழ்காமல் பாதுகாக்க பகவான் கூர்மமாக ஆமையாக அவதாரம் செய்து தன் முதுகில் மலையைத் தாங்கினார். மலை கடையப் படும் பொழுது கடலைக் கலக்கி சேறாக்கியது. பின் அத்தியாயங்களில் விவரமாக சொல்லப்படுகிறது.
நரசிம்ஹாவதாரம்: தேவர்களை பயமுறுத்தி ஆட்டுவித்த அசுரன், ஹிரண்யகசிபு. அவனை சம்ஹாரம் செய்ய பயங்கரமான பற்கள், நகங்கள் இவற்றுடன் நர சிங்கமாக அவதரித்தார். கையில் கதையுடன் அடிக்க வந்த ஹிரண்ய கசிபுவை தன் மடியில் இருத்தி, நகங்களால் வேகமாக கிழித்தார்.
கஜேந்த்ர மோக்ஷம்: குளத்தில் இறங்கிய கஜேந்திரனை, ஒரு பெரிய முதலை, காலைப் பிடித்து இழுத்தது.அதிலிருந்து விடுபட முடியாமல் தன் யானைக் கூட்டத் தலைவனான கஜேந்திரன், கையில் அந்த சமயம் பறித்த தாமரை மலரோடு, “ஹே! ஆதி மூலமே! அகில லோக நாதா! தீர்த்தங்களில் இருப்பவனே! பாவன கீர்த்தே! காப்பாற்று என்ற கதறல் கேட்டவுடனே ஓடி வரும் நாராயணனே! என்னை காப்பாற்று என்று அலறியது. உடனே, சக்கரத்தை எடுத்துக் கொண்டு, கருடன் மேல் ஏறி, அங்கு வந்து கையை பிடித்து மேலே இழுத்து காப்பாற்றினார். சக்கரத்தால் முதலையை வீழ்த்தினார்.
வாமனாவதாரம்: அதிதிக்கு பன்னிரெண்டு மகன்கள். ஆதித்யர்கள் எனப்படுவர். கடைசி மகன் யக்ஞாதிபதியான பகவான். இளையவன் என்றாலும் குணங்களால் ஸ்ரேஷ்டன். அவரே வாமனன். ஏனெனில் தன் சிறு பாதங்களால் உலகனைத்தையும் ஆக்ரமித்து விட்டான். பலியிடம் ஏன் யாசிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு யாசிக்காமல், தர்ம மார்கத்தில் இருப்பவனுடைய செல்வத்தை யாராலும் அசைக்க முடியாது என்று சொல்கிறது பாகவதம். பகவான் யாசித்த மூன்றடி நிலத்தை தருவதாக சொல்லி, உடனேயே தானம் செய்தான் பலி என்ற அந்த அரசன். அதனால் அவனுக்கு நஷ்டம் எதுவுமில்லை. விபுதாதி பதி, – மூவுலகிற்கும் அதிபதியான பகவான், தன் பாத கமலங்களை அவன் சிரசில் வைத்தார். ஓங்கி உலகளந்த பகவானின் பாத கமலங்களை ப்ரும்மாதி தேவர்கள் செய்த பாத ப்ரக்ஷாலனம்- கால்களில் விட்ட நீரும் அவன் தலையில் விழுந்தது.
(போக மயமான அரச வாழ்க்கை, எவ்வளவு நன்மை செய்தாலும், ஏதோ ஒரிடத்தில் ஒரு ஜீவன் துன்பப்படுவதை தவிர்க்க முடியாது என்பதால், அந்த பிறவியில் அனுபவிக்கும் சுக சௌக்யங்கள் மட்டுமே என்று ஆகும். தியாகமே கொள்கையாக எளிய வாழ்க்கை வாழ்பவர்கள் சாஸ்வதமான வைஷ்ணவ பதங்களை அடைவார்கள் என்று பொருள்.- உரையாசிரியர்கள்)
நாரதரே! உங்களுக்கும் பகவான் யோக சாஸ்திரம் சொல்லிக் கொடுத்தார். மிகவும் மகிழ்ச்சியுடன் ஞானம், பாகவதம் என்ற இந்த ஆத்ம தத்வ தீபம் என்பதையும் அளித்தார். வாசுதேவனே சகலமும் என்று நம்பும் பக்தர்கள் இதை மிக உயர்வாக எண்ணுகிறார்கள்.
மனு வம்சத்தில் ஒவ்வொரு மன்வந்தரத்திலும் பகவான் அவதரிக்கிறார். பத்து திக்குகளிலும் தன் தேஜஸை பரவ விடுகிறார். அதுவே சக்ரமாக உலகை பாதுகாக்கிறது. அவருடைய சரித்திரம் மூன்று உலகிலும் பிரசித்தமானது. துஷ்டர்களான அரசர்களிடம் தண்டம்- தண்டனையையும் தருகிறார். தர்மம் தழைக்கவும், அதர்மம் அழியவும் அவதரிக்கிறார்.
தன்வந்திரி அவதாரம்: ஜனங்கள் வியாதிகளால் அவதிப் படுவதை குணப்படுத்தும் ஔஷதிகளை வைத்துக் கொண்டு, தன்வந்திரி பாற்கடலில் அவதரித்தார். ரோகி- வியாதியஸ்தனை காப்பற்றுகிறார். ஆயுளை வளர்க்கும் ஆயுர்வேதம் என்ற சாஸ்திரத்தையும் அனுக்ரஹித்தார்.
பரசுராம அவதாரம்: ப்ராம்மணர்களை துன்புறுத்தினால் வேத அத்யனமும், ஆசாரங்களும் வீணாகும் என்பதை உணர்த்த ப்ராம்மண விரோதிகளாக இருந்த அரச குலத்தை பகவான் பரசு என்ற கோடாலியை ஆயுதமாக கொண்டு அழித்தார். மூன்று ஏழு முறை- இருபத்தோரு முறை உலகை சுற்றி எங்கெல்லாம் வேத பாரயணமும், சிஷ்டாசாரமும் குறைந்ததோ, அங்கெல்லாம் தன் பரசுவால் அரச குலத்தை அழித்தார் என்பதால் பரசுராமன் என்று பெயர் பெற்றார்.
ராமாவதாரம்: ராம அவதாரம் அனைவருக்கும் பிடித்த அவதாரம். இக்ஷ்வாகு வம்சத்தில் சகோதரர்களுடன் பிறந்து, தந்தையின் கட்டளையை ஏற்று, மனைவி சீதையுடனும், லக்ஷ்மணனுடனும் வன வாசத்தை மேற்கொண்டார். அனுகூலமான சுமுகன். சகல குணங்களும் உடைய, அதிகமாக மக்களுக்கு இசைந்த அவதாரம். இவரிடம் விரோதித்துக் கொண்டு ராவணன் அழிந்தான். இவரிடம் சமுத்திரம் பயந்தது. எதிரியான ராவண ராஜதானி செல்ல வழி விட்டது. இந்த செயலால் ராமன் தன் சேனையுடன் இலங்கை, செல்லவும், அவன் வானர சேனை, இலங்கையை ஒரு கலக்கு கலக்கி, போரிட்டு, ஹரன் செய்தது போல ஊரையும் தீக்கு இரையாக்க வழி வகுத்தது. என்னைப் போல யாருண்டு? என்று கர்வத்துடன் நிமிர்ந்த ராவணன், செய்த சீதாபஹரணம் என்ற மிகப் பெரிய தவற்றினால், பகவான் ராமனின் கோபத்திற்கு ஆளானான். தன் தனுஷ்- வில் அம்பு மட்டுமே ஆயுதமாக அவனை போரில் வென்றார்.
க்ருஷ்ணாவதாரம்: பூமியில் அசுரர்கள், அசுர குணங்களுடன் அரசர்களாக ஆதிக்கம் செலுத்தவும், பலமில்லாத சாதாரண குடி மக்களை துன்புறுத்துவதும் அதிகமாகியது. பூமி இவர்களின் பாரத்தால் திணறினாள். இந்த காரணத்தால், பகவான் அவதாரம் செய்தார், இருவராக- கருமையான கேசம் உடைய ஸ்ரீ க்ருஷ்ணர், வெண்மையான கேசத்துடன் பலராமன்.
குழந்தையாக இருந்த பொழுதே பூதனா, மூன்று மாதத்தில் சகடாசுர வதம், உரலில் கட்டப்பட்டு தளர் நடையாக நடந்து அர்ஜுன மரங்களை கீழே தள்ளியது போன்ற சாகஸ செயல்களை செய்தார்.
வ்ரஜ தேசத்தில் விஷமான நீரை குடித்து மயங்கிய கோபால சிறுவர்களை காப்பாற்ற, காளிங்கன் மேல் நடனம் செய்தது – அந்த செயல் அசாதாரணமானது, மனித யத்தினத்தால் செய்ய முடியாத தேவ கார்யம் என்று போற்றினர். தன் மகன் வாயில் ப்ரும்மாண்டத்தைக் கண்டு திகைத்த தாயான யசோதா, வருண பாசத்திலிருந்து நந்த கோபனை மீட்டது, கோபர்களை குகையிலிருந்து மீட்டு வந்தது என்ற செயல்களால் கோகுலத்தையே வைகுண்டமாக்கிய அவதாரம்.
க்ருஷ்ணாவதார கதைகளை சுருக்கமாக சொல்லி முடிக்கிறார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின், ஏழாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-53
||ஓம் நமோ பகவதே வாசுதேவாய || இரண்டாவது ஸ்கந்தம் -ஸ்ரீ சுகர் சொல்கிறார்
அத்யாயம்-8
பரீக்ஷித் மகாராஜா, மேலும் கேட்க விரும்பியதால் ஸ்ரீ சுகர் தொடர்ந்து சொல்கிறார்.
ஹரியின் சரித்திரம் மங்களகரமானது என்று தெரிந்து கொண்டே.ன். நாரதர் இன்னும் என்ன சொன்னார்?
மஹாபாகோ! என் உடலை தியாகம் செய்யும் முன் ஸ்ரீ க்ருஷ்ணரிடம் என் மனம் லயிக்கும் படி காதால் கேட்கிறேன். சிரத்தையுடன் கேட்கிறேன். என் மனதில் வேறு எண்ணமின்றி அவரே என் மனதில் நிறையட்டும். சரத் காலம் வந்தால் குளங்களில் வண்டல் அடியில் படிந்து நீர் தெளிந்து இருக்கும். அது போல என் மனதின் குழப்பங்கள் தீர்ந்து நான் ஹரியை நினைக்கச் செய்ய பரிசுத்தமான உங்கள் சொற்களால் தான் முடியும்
மனிதன் என்னதான் உலகில் சுற்றினாலும், தன் வீட்டிற்கு திரும்பி வருவது போல, பக்குவமான மன நிலை உள்ளவன் வித விதமான சாஸ்திரங்களைப் படித்தாலும் ஸ்ரீ க்ருஷ்ண பாதத்தை விடுவதில்லை.
பஞ்ச பூதங்களால் ஆன சரீரம் என்று சொன்னீர்கள். ப்ரும்மன்! எப்படி ஆரம்பித்தது? என்ன காரணத்தால் முதல் ஜீவன் உண்டானான். ஈஸ்வரன் இந்த பஞ்ச பூத சம்பந்தம் இல்லாதவன். ஈஸ்வரனின் ப்ரக்ருதி முதலான உபாதானங்கள்- கருவிகள் எங்கிருந்து வந்தன. அவருடைய இச்சா மாத்ரம்- அவருடைய விருப்பம் மட்டுமே காரணமா அல்லது வேறு நிமித்தங்கள் உண்டா? உங்களுக்குத் தெரிந்திருக்கும்
பூதாத்மா, அஜன், (ப்ரும்மா) விஷ்ணுவிடம் பிறந்தார். அந்த பலத்தில் பஞ்ச பூதங்கள், அஹங்காரம் முதலிவைகள், மேலும் தேவையான தத்வங்களைச் சிருஷ்டி செய்து கொண்டார். அவருடைய அனுமதியில், சுதந்திரமாக படைக்கும் தொழிலைச் செய்தார். நாபியில் இருந்து பிறந்ததால், பகவானின் ரூபத்தை நேரடியாக கண்டவர். அதே அவயவங்களோடு படைத்தார்.
விஸ்வ ஸ்ருஷ்டிக்கு, அதன் இருப்புக்கு காரணமானாலும் அழியாத தன்மையுடையவர். (அவ்யய:) மாயாதீசன், (மாயை என்பவதை நிர்வஹிப்பவர்) தன் மாயையை விட்டு, யோக நித்ரையில் – தூங்குவதாக சொன்னீர்கள். எங்கு?
தன் அவயவங்களிலிருந்து இந்திரன் முதலான லோக பாலர்கள், பாதாளம் முதலான லோகங்களை ஸ்ருஷ்டித்தார் என்று உங்களிடமிருந்துஅறிந்தோம். கல்பம், மஹா கல்பம், இடைப்பட்ட கல்பம் என்பதன் கால அளவு என்ன? இறந்த காலம், நிகழ் காலம், வரும் காலம் என்பவைகளை எந்த விதத்தில் கணக்கிடுவோம்? தேவ, பித்ரு, மனுஷ்யர்களுடைய ஆயுள் என்பது எவ்வளவு? அதை கணக்கிடும் விகிதம் என்ன?
யோகி சுகரே! அணு, கண் கொட்டும் நேரம் என்பவை மிகச் சிறிய கால அளவு. சம்வத்ஸரம், யுகம் முதலியன மிகப் பெரியவை. காலத்தை எப்படி அளப்பது? கர்ம பலனாக பிறவிகள் அமையும் என்பதானால், அவை என்ன? அதன் பெயர் என்ன? எப்படி எது உயர்வு, தாழ்வு என்று தீர்மானிப்போம். இதற்கு அளவுகோல் எது?
குணங்களில் சத்வம் என்பதை தீர்மானிப்பது எது? தேவ பதவி அடைய நினைக்கும் மனிதர்களில் எந்த செயல்கள் புண்ய பாபங்களை , அவற்றின் கூட்டு அல்லது பல செயல்களின் பரிணாமம் என்பது, யாரால், எப்படி, எந்த செயலால், கர்மங்கள் அளவில்லாதது எனும் பொழுது, இதில் தேர்வு செய்ய யார் அதிகாரி? எவர் இவ்வகையில் தேவ பதவியை அடைந்துள்ளார்கள்?
பூமி, பாதாளம், திசைகள், ஆகாயம், பெரு வெளி, க்ரஹங்கள், நக்ஷத்ர, மரங்கள், பர்வதங்கள், இவைகள், சிறிய ஆறு முதல் சமுத்திரங்கள், தீவுகள், வரை ஜீவன்களின் பிறப்பு நேரலாம் எனில், அதில் ஆகாய, பாதாளம் முதலிய இடங்களில் பிறந்தவர்களின் வாழ்க்கை முறை எப்படியிருக்கும்?
அண்டத்தின் வெளியில், என்ன வஸ்துக்கள், அதைச் சுற்றியுள்ள இடங்கள் பாகவதர்கள் என்ற பெரியவர்கள், வாழ்வது எப்படி? அங்கும் வர்ணாஸ்ரம, நியமங்கள் இருக்குமா? ஆச்சர்யமான ஒரு விஷயம், ஹரி ஒவ்வொரு யுகத்திலும் அவதரித்து அந்தந்த யுக தர்மத்தை அனுஷ்டிக்கிறார் என்பது.
வர்ணாஸ்ரம தர்மம்: தன் திறமைகளுக்கேற்ப பொருள் ஈட்ட தொழில்களில் ஈடுபடுகிறார்கள். அதன் அடிப்படையில் வர்ணாஸ்ரமங்கள் தோன்றின. அதை கடைபிடிப்பது தர்மம் . ராஜ தர்மம் எந்த காலத்திலும் பிரஜைகள் சுகமாக இருக்க வேண்டியவற்றைச் செய்வது. ஆபத்தில் காப்பாற்றுவது.
இந்த ஈஸ்வரன், இவரும் உலகில் உள்ள மனிதர்கள் போலவே உடல் மற்ற அவயவங்கள் உள்ளவனாக சித்தரிக்கப் படுகிறார்.அதனால் இவரிடம் விசேஷமாக, சிறப்பாக வேறு என்ன இருக்கிறது? இவரை பஜிப்பதால் ஒவ்வொரு பதத்திற்கும் மோக்ஷம் என்று சொல்லப் படுகிறது. விவரமாக சொல்லுங்கள். இவரிடமிருந்து உலகங்கள் வந்தன. ஜகதாகாரம்- உலகத்தின் அளவு, (வடிவம் மற்றும் கொள்ளலவு) அவரிடமிருந்து தோன்றிய பத்மம் ப்ரும்மாண்டம் போலவே இருந்ததாகச் சொன்னீர்கள். மூன்று உலக அளவில் ஒரு பத்மம் ஒருவரின் வயிற்றில் இருந்து வர வேண்டுமானால், அவருடைய மற்ற அவயவங்கள் எப்படி இருந்திருக்கும்? சாதாரண புருஷனின் அளவு அவயவங்கள் உடையவராக சொல்லப் படுகிறார் (தன் ஸ்ருஷ்டியில் உண்டான் ஜீவன் அளவு அந்த ஜலத்திலிருந்து “) என்ற வாக்கியத்திலிருந்து அறிகிறோம். அப்படியானால், ஜீவனை விட, பரம புருஷனுக்கு என்ன விசேஷம் என்பதைச் சொல்லுங்கள்.
யோகத்தை சாதகம் செய்த யோகீஸ்வரர்கள் அணிமாதி அஷ்ட சித்தியை அடைகிறார்கள். வேத, ரிக் வேதம் முதலியவை, உபவேதங்கள்- ஆயுர்வேதம் முதலியவை, , தர்ம ஸாஸ்திரங்களை, இதிஹாஸ புராணங்கள்-முன் நடந்த சரித்திரங்கள், இவைகளை கற்றவர்கள், அவைகளில் சொல்லப் படும் தர்ம, அர்த்த, காமங்கள் அதனால் பெறும் பலன்கள் பற்றியும்,
ப்ரளயமும், பின் புதிதாக தோன்றுவதும், யாக கர்மாக்கள், வைதிகமானவை, பூர்தம், ஸ்ம்ருதிகளை ஆதாரமாக கொண்டவை, தர்ம, அர்த்த, காமங்கள் – இதன் விதி முறைகளும், பூர்த்தம்-தடாகம்,கிணறு,ஆலயங்கள், அன்ன தானம் செய்வது இவைகளை நிர்மானிக்கும் பொது ஜனங்களுக்குக்கான செயல்கள்,
புண்ய பாபங்கள், கர்ம வாசனைகள் உள்ளவர்கள், இவர்களுக்கான நன்மை தீமைகளும், வேத மார்கத்தை நிராகரித்து பாகண்டர்கள் எனப்படும் மக்களின் வாழ்க்கை முறை என்ன? மோக்ஷம் பெற இவர்களின் தராதரத்தை அளப்பது எப்படி?
சுதந்திரமானவன் பகவான். தன் மாயையால் அதாவது தன் சக்தியால் விளையாடுகிறான், செயல் படுகிறான். மாயையை விட்டு விலகி, எந்த சமயத்திலாவது தான் சாட்சியாக இருந்து உலகை காண்கிறானா?
யோகீஸ்வரரே, சுகரே! உங்களை சரணம் அடைந்துள்ள நான் இதுவரை கேட்டதில் உண்டான எனது சந்தேகங்கள் இவை. அனைத்தையும் வரிசையாக, விவரமாக எனக்கு புரியும்படி சொல்ல வேண்டுகிறேன்.
உங்கள் சொல் தான் ப்ரமாணம். ஆத்மபூ: என்ற ப்ரும்மா. ப்ரும்ம ரிஷியின் கோபத்துக்கு ஆளாகி உயிர் போகும் நிலையில் உள்ள எனக்கு அச்யுதன் கதை என்ற அம்ருதம் தான் மருந்து.
சூதர் சொல்கிறார்: இப்படி கேட்டவனிடம் ப்ரும்மராதன் என்ற ஸ்ரீ சுகர் விஷ்ணு ராதன் என்ற அரசனிடம் சொல்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் சொன்னார். கூடியிருந்த அனைவரும் கேட்கத் தயாராகினர்.
பாகவதம் என்ற புராணத்தை சொல்ல ஆரம்பித்தார். ப்ரும்மாவுக்கு பகவானே சொன்னது. ப்ரீக்ஷித் ராஜா என்ன என்ன கேள்விகளைக் கேட்டானோ, அதற்கெல்லாம் தகுந்த பதில்களைச் சொல்லலானார்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின், எட்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-29
||ஓம் நமோ பகவதே வாசுதேவாய || இரண்டாவது ஸ்கந்தம் -ஸ்ரீ சுகர் சொல்கிறார்
அத்யாயம்-9
ஞானாத்மாவான ஹரியினுடைய விருப்பம் இல்லாமல், அவருடைய சத்வாதி குணங்கள் இல்லாமல், சுயமாக சரீரம் இல்லாத புதிய உயிர், ஒரு சரீரத்தை பெற முடியாது. கனவில் யானை, குதிரைகளை பார்க்கும் மனிதன், அவைகளை அடையாளம் கண்டு கொள்வது எப்படி சாத்யமாகிறது? நினைவில் அவைகளை கண்டும் தெரிந்தும் கொண்டது உள் மனதில் நினைவாக பதிந்து போய் உள்ளது. இதே போல வாசனா என்ற பகவானின் விருப்பத்தால் மட்டுமே இயங்கும் மற்ற ரஜோ, தமோ குணங்கள். இவை இல்லாமல் இதுவரை சரீரம் இல்லாத, உலகில் பிறவி எடுக்கத் தயாராகும் ஜீவன் ஏதோ ஒரு சரீரத்தை பெறுவதே ஈஸ்வரனின் அனுக்ரஹத்தாலேயே என்பது முதல் காரணம். பலரூபங்கள் – தேவ, அசுர, மனித, ம்ருக பக்ஷிகள் என்று பலவிதமான ரூபங்களில், இது நான் என்று உணருவது ‘அஹம் பாவம்’ தன்னியல்பு. இது ஜீவனின் தேஹ ஆரம்பம்.
புருஷ- ப்ரக்ருதி என்ற முதல் இரண்டு பாகங்கள் ஒன்று மஹத் – மாறாத ஆகாயம், வாயு முதலான ஸ்திரமான தத்வங்கள். ப்ரக்ருதி – மாறும் தன்மையுடைய கர்மேந்திரிய – கை கால் முதலானவை, ஞானேந்திரியங்கள்-கண் காது என்றவை, தன்மாத்திரைகள் என்ற பார்வை, கேள்வி என்ற அதன் செயல்கள், தவிர மனம், புத்தி, அஹங்காரம் – இதில் ப்ரக்ருதி என்ற ஜீவன்கள், நான், என்னுடைய என்ற பாவனைகள், மற்றும் மூன்று குணங்களாலும் (சத்வ,ரஜஸ் தமஸ் ) மோகம் அடைகிறார்கள். நான் என்னுடைய என்ற எண்ணத்தைக் கடந்த சாதகர்கள் சிறந்தவர்கள், மற்றவர்கள், மாயையில் கட்டுண்டு இருந்தாலும் பக்தி என்ற சாதனத்தால் உய்யக் கூடும் – நற்கதியை அடைவார்கள்.
ஆத்ம தத்வம் என்பதை விவரித்து பகவானே சொன்னது தான் நமக்கு பிரமாணம். அது தான் சத்யம். அது என்ன? அது தான் தவம் செய்தல், தன்னை பஜித்தல் – என்று ப்ரும்மாவுக்கு சொன்னார். பக்தி என்பதை முதலில் உபதேசித்தவரே பகவான் தான்.
ஆதி தேவன் அவர் தான் ஜகத்தின் குரு ப்ரும்மா. பகவானின் நாபி கமலத்தில் தோன்றிய சமயம், தானே உலகை ஸ்ருஷ்டி செய்ய நினைத்தார். அப்படி புதிதாக உலகை ஸ்ருஷ்டிக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்திருக்கவில்லை. தப- தவம் செய் என்று யாரோ சொல்வதை கேட்டார். இரு முறை தப தப – தவம் செய் தவம் செய் என்று கேட்டபின், யாரது, குரலுக்கு உடையவரை காண விரும்பி நாலா பக்கமும் பார்த்தார். எதுவும் தென்படவில்லை. தவம் செய்வதில் முனைந்தார். தான் அறிந்தவரை மூச்சை அடக்கி வசம் செய்து கொண்டு, கர்மேந்திரியங்கள், ஞானேந்தியங்கள் இவைகளையும் அடக்கி, த்யானத்தில் ஆழ்ந்தார். பல காலம் தவம் செய்தபின், அவருக்கு தன் உலகமான வைகுண்டத்தை பகவான் காட்டினார்.
எந்த இடத்தில் க்லேசம்- வருத்தம் என்பது இல்லையோ, மோகமோ மற்ற தயக்கமோ இல்லையோ அதைக் கண்ட பேரறிஞர்கள் போற்றிய இடம். ராஜஸமோ, தாமஸமோ இரண்டும் சேர்ந்தோ அந்த இடத்தில் காண முடியாது. பகவானின் தொண்டர்கள் மட்டுமே புழங்கும் இடம். காலமோ, மாயையோ அங்கு இராது. நிர்மலமான ஞானம் சத்வ மயமானது.
இந்த்ர நீல மணி போல ஸ்யாம வர்ணத்தினர். சுகுமார சரீரம், தேக காந்தியும், கமல பத்ரம் போன்ற கண்களும், நான்கு கைகளுடனும், பீதாம்பரதாரிகளாக, மார்பில் அலங்காரமாக மாலைகளுமாக அவரைப் போலவே அவருடைய பார்ஷதர்கள் என்ற பலர் இருந்தனர். அனைவருடைய நீல நிற உடலும், பீதாம்பரமும் சேர்ந்து, மின்னல்களுடன் ஆகாயம் போல இருந்தது. அங்கு லக்ஷ்மி தேவி தன் காந்தியை எங்கும் பரவ விட்டவளாக, தன் தோழிகளுடன் பாடிக் கொண்டிருந்தாள். ப்ரும்மா அங்கு நன்மைகளின் நாயகனாக, ஸ்ரீய:பதி, லக்ஷ்மி தேவியின் மணாளன், யக்ஞபதி, ஜகத்பதி என்று இருந்தவரைக் கண்டார். தன் அடியார்களிடமும் அன்புடன் பேசும் அவருடைய முகம், கிரீடம், குண்டலம், சதுர்புஜம், பீதாம்பரம், மார்பில் ஸ்ரீ தேவி, மிக உயர்ந்த ஆசனம், இவை தவிர, சூழ்ந்து இருந்தவை, மஹத் அஹங்காரம் என்ற அனைத்து சக்திகளும், நற்குணங்கள், இவற்றுடன் சந்தோஷமாக இருந்த பகவானைக் கண்டார்.
அவரை கண்ட ஆனந்தத்தில் மூழ்கி திக்கு முக்காடியவர், அவரை வணங்கினார். பரமஹம்ஸர் என்ற சொல்லுக்கு பொருளானவர். அவரைப் பார்த்து, உயிரினங்களை ஸ்ருஷ்டி செய்ய தன் ஆணைப்படி செய்யத் தகுந்தவன் என்பது போல சற்றே சிரித்தபடி, கைகளை பிடித்துக் கொண்டு பேசினார்.
ஸ்ரீ பகவான் சொன்னார்: வேத கர்பமான உலகை படைக்கத் தகுந்தவன் நீ என்பதில் நான் சந்தோஷம் அடைகிறேன். வெகு காலமாக செய்த தவத்தால் மகிழ்ந்தேன். என்ன வரம் வேண்டுமோ, கேள் என்றார். மிகப் பெரிய வரம் என்பது என் தரிசனமே. கடினமான தவங்கள் செய்தாலும், புத்தியுள்ளவர்கள் என் தரிசனத்தையே பெரிதாக எண்ணுவார்கள். என் வைகுண்ட லோகத்தை காண விரும்புவார்கள், தவம் என் ஹ்ருதயம். தவத்தின் ஆத்மா நானே. என் தொழில்கள், படைத்தலும் காத்தலும் என் தவத்தாலே.
ப்ரும்மா சொன்னார்: பகவன்! நானும் என் விருப்பத்தை அறிந்து கொண்டேன். அனைத்து ஜீவன்களிலும் உள் மனம் என்ற குகையில் இருக்கும் உங்களை கண்டு கொண்டேன். இருந்தாலும், யாசிக்கிறேன். ஸ்தூல சூக்ஷ்மங்களை நான் அறிய வேண்டும். அனுக்ரஹிக்க வேண்டுகிறேன். விளையாட்டாக, படைப்பு, காத்தல், அழித்தல் என்ற மூன்றையும் செய்யும் உங்களுடைய சக்தியை எனக்கும் அருள வேண்டுகிறேன். சிலந்தி தானாக தன் வலையை கட்டிக் கொள்வது போல யாருடைய உதவியும் இன்றி இந்த செயல்களைச் செய்கிறீர்கள். எனக்கு அந்த கலையை அருள வேண்டும், மாதவா!. பகவானே எனக்கு கற்றுக் கொடுத்தார் என்ற தைர்யத்துடன் நான் செய்கிறேன். சற்றும் குறைவின்றி, ப்ரஜோத்பத்தி என்ற செயலை, உங்கள் அனுக்ரத்துடன் செய்கிறேன். பகவான் என் கைகளைப் பற்றி (சம மாக நினைத்து) இந்த பொறுப்பை ஒப்படைத்தார் என்பதால் , எனக்குள் கர்வம் வராமலிருக்கட்டும். ஒரு நண்பன் தன் நண்பனை அறிவுறுத்துவது போல, என்னை இந்த செயலில் அமர்த்தியிருக்கிறீர்கள், இதை முழு மனதுடன் பொறுப்பாக செய்கிறேன்.
ஸ்ரீ பகவான் சொன்னார். மிக முக்கியமான ஞானம் என்பதை, விக்ஞானம்- அதை விட மேம்பட்ட அறிவுரைகள், அதன் நுணுக்கங்கள், அதன் சம்பந்தமான மற்ற விஷயங்கள், இதோ பெற்றுக் கொள், தந்தேன் என்றார்.
என்னைப் போலவே ரூபம், குணங்கள், செயல்கள் உனக்கும் அமையட்டும் என்று அனுக்ரஹிக்கிறேன். படைப்பது நான் மட்டுமே என்று இருந்தது. இந்த விஸ்வமே நான் தான். ப்ரளய காலத்திற்கு பிறகும் மீதம் இருப்பது நானே. சூர்ய சந்திரன் முதலிய பஞ்ச பூதங்கள், எப்படி உலகில் ஊடுருவி இருந்து அவைகளின் வளர்ச்சிக்கு உதவினாலும் வெளியே தெரியாமல், தான் தன் பூரணமான தன்மையை தக்க வைத்துக் கொள்கிறதோ, அது போல நான் அனைத்து ஸ்தாவர ஜங்கம பொருள்களிலும் இருக்கிறேன்.
இவ்வளவு தான் தெரிந்து கொள்ள வேண்டியது. அன்வய:- காரணத்தை தெரிந்து கொண்டு செயல்களில் ப்ரவேசி- இறங்கு. (எண்ணித் துணிக கர்மம்) அதில் நன்மை தீமைகளை அலசி ஆராய்ந்து கொள். பின்னால் எதிர் மறையாக ஏதேனும் வரக் கூடுமா என்பதை யோசித்து அதற்கான மாற்று என்ன என்பதையும் தயாராக வைத்துக்கொள்.
எந்த பிரச்னையும் உன்னை பாதிக்காது. த்யானம், சமாதி முதலான யோக பலத்தால், திடமாக இருந்து என் வழியில் நட. கல்பங்கள் அதன் பகுதிகள் எதிலும் நீ தடுமாற மாட்டாய்.
ஸ்ரீ சுகர் சொன்னார்: தனக்குவமை இல்லாதான், பிறவியற்றவன், உலகில் தோன்றப் போகின்ற உயிரினங்களுக்கு பொறுப்பை ஏற்ற ப்ரும்மாவுக்கு, உபதேசங்கள் செய்துவிட்டு அவர் கண் முன்னே மறைந்தார்.
அனைவரது ஹ்ருதயத்திலும் நிறைந்து இருக்கும், ஹரியை நமஸ்கரித்து, அவர் உபதேசித்த வழியில் ப்ரும்மா ஸ்ருஷ்டி- படைப்புத் தொழிலை ஆரம்பித்தார்.
அவர் சொன்ன படியே த்யானம், யமம் முதிலிய யோக சாதனைகள் இவற்றை செய்தார். தன்னுள் ஒரு திட்டத்தை வகுத்துக் கொண்டார். எதைச் செய்தால் பிரஜைகளுக்கு நன்மை உண்டாகும் என்பதை யோசித்து ஸ்தூலமாக ஒரு வரை படம் போல செய்து கொண்டார். அவருக்கு உதவி செய்ய, ஏவிய வேலைகளைச் செய்பவராக அவருடைய மானச புத்திரன் நாரதர் வந்து சேர்ந்தார். தந்தைக்கு மகன் ஆற்றும் கடமை என்பது போல உடன் இருந்தார். அன்புடனும், தன்னடக்கத்துடனும், உதவிகளைச் செய்தார்.
பகவான் தன்னிடம் சொன்ன பாகவத கதையை ப்ரும்மா நாரதருக்கு உபதேசித்தார். அவர், சரஸ்வதி நதி தீரத்தில் தவம் செய்து கொண்டிருந்த வியாசருக்கு அதை உபதேசித்தார். நீ கேட்ட கேள்விகளுக்கு பதிலும், மேலும் பல விஷயங்களையும் சொல்கிறேன்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின், ஒன்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-54
||ஓம் நமோ பகவதே வாசுதேவாய || இரண்டாவது ஸ்கந்தம் -ஸ்ரீ சுகர் சொல்கிறார்
அத்யாயம்-10
பத்து விஷயங்கள் – சர்கம், விசர்கம்,ஸ்தானம், போஷணம், ஊதய, மன்வந்தர, ஈசானுகதா:, நிரோத: முக்தி, ஆஸ்ரய: என்று சொல்கிறார்.
மாறாத இயற்கை சக்திகளான ஆகாசம் முதலியன, சர்கம் என்றும், மனித யத்னத்தில் உள்ளவை, அசையும் அசையா ஜீவன்கள் விசர்கம் என்றும் சொல்லப்படுகிறது.
பகவானுடைய இருப்பிடமான வைகுண்டம் ஸ்தானம் எனப்படும். அவருடைய அனுக்ரஹம், சாது ஜனங்களை அனுக்ரஹிப்பது முதலானவை போஷணம்.
பகவான் அனுக்ரஹித்த நல்லவர்கள் நடத்தை-ஆசார நியமங்கள், மன்வந்தர: என்றும், ஜீவன் செய்த நல்ல, கெட்ட செயல்களின் பலனாக தொடரும் கர்ம வாசனா என்பவை ஊதய: எனப்படும்.
ஹரியின் அவதார கதைகள், அவரை அனுசரிக்கும் சாதுக்களின் கதைகள், மற்றும் பல இதிகாசங்கள் ஈசானுகதா: எனப்படும்.
யுக முடிவில் யோக நித்ரையில் இருக்கும் பகவானிடத்தில் அனைத்து உயிரினங்களும், சக்திகளும், தத்துவங்களும் அவருள் ஐக்யமாவது நிரோதம் எனப்படும். இக லோக வாழ்க்கையை துறந்து, சிதானந்தமான பரம் பொருளை தியானித்து நற்கதியை அடைவது மோக்ஷம் எனப்படும்.
உலகம் தோன்றியதிலிருந்து யுக முடிவில் லயம் அடைவது வரை, அடைக்கலம் தரும் பகவான் ஸ்ரீமன் நாராயணனே ஆஸ்ரய: என்ற சொல்லால் குறிக்கப் படுகிறார்.
பரமாத்மா, அந்தர்யாமி என்று அழைக்கப்படும் இவர், இயற்கை எனும் மஹத் தத்வங்கள், சூரிய சந்திரர்கள், அக்னி வாயு முதலான மாறாத தத்வங்கள், இவற்றை இயங்க செய்யும் பொழுது ஆதி தைவிகர்-
கண்கள் முதலிய இடங்களில் அதை இயக்கும் சக்தியாக இருக்கிறார். கண் முதலிய உறுப்புகளுடன் இருக்கும் உருவங்களில் இருப்பவர் ஆதி பௌதிகர். பார்வை, பார்க்கப்படும் பொருள்,பார்ப்பவன் இவை இருந்தும், அந்தர்யாமியாக பகவான் இல்லாதவரை இம்மூன்றும் மட்டும் இருந்தும் பயனில்லை. எனவே, உள்ளுறை பகவான் ஸ்வாஸ்ரயன்,- சுயமாக செயல்பட முடிந்தவன், ஜீவன் அன்யாஸ்ரய:.-தானாக எதையும் செய்ய முடியாதவன்.
பரம புருஷனாக, அண்டத்தை பிளந்து வெளி வந்த சமயம், தனக்கு படுக்க ஒரு இடம் தேடினார். தெளிவாக இருந்த நீரைப் பார்த்தார். அதை தன் இருப்பிடமாகக் கொண்டு அதில் சயனித்தார். அதனால் நாராயணன் எனப்படுகிறார்.
ஜீவன் தன் கர்ம பலனைப் பொறுத்து சுபமோ அசுபமோ அனுபவிக்கிறான். மஹத், பஞ்ச பூதங்கள் என்பவை ஜீவனுக்கு உதவும், ஆனால் காண முடியாதவை காலம் – சென்று கொண்டேயிருப்பதால் மாறுதல் அல்லது வளர்ச்சிக்கு காரணமாகிறது. அனுபவிப்பவன் ஜீவன். இவைகளும் ஸ்ரீமன் நாரயணனின் அனுக்ரஹத்தால் செயல் திறன் உடையதாக ஆகின்றன. இவருடைய அனுக்ரஹம் இல்லையெனில் அவைகளின் இருப்பே இல்லை.
ஒன்றாக இருந்த தேவன் பலவாக விரும்பி தன் யோக சயனத்திலிருந்து எழுந்தார். ப்ரகாசமாக ஹிரண்மயம்- பொன் மயமாக இருந்த வீர்யத்தினால், கர்ப ரூபமான சரீரத்தை அதி தைவம், அத்யாத்மம், அதிபூதம் என்று மூன்றாக பிரித்துக் கொண்டார். ஒரே பௌருஷம்- புருஷ சம்பந்தமான வீர்யம் மூன்றாக வெளிவந்தது. அந்த புருஷனின் க்ரியா சக்தியால், ஆகாயத்திலிருந்து இந்திர சக்தி, (ஓஜ:) மனஸ் சக்தி (ஸஹ:} தேக சக்தி {பலம்} என்பதும் பிறந்தன. இந்த மூன்று சக்திகளும் சேர்ந்து சூக்ஷ்மமான அஸு: – ப்ராணன், உயிர் – { இதை சூத்ரம் என்றனர்} பிறந்தன.
ப்ராணந்தம்- எல்லா உயிர்களிலும் இயங்கும் ப்ராண: , அதை அரசர்களை பணியாளர்கள் பின் தொடர்வது போல, அனு ப்ராணா: என்ற மற்றவை அனுசரித்து தொடர்கின்றன.
அவருடைய முகத்திலிருந்து . முகம்- வாய் என்ற அவயவம் அமைந்தது. தாலு- முகவாய் அதை தாங்குவதாக அமைந்தது. தாலுவின் உதவிக்கு நாக்கு என்ற அவயவம்- ருசியை அறிய அமைந்தது.
அபானன் என்ற பெயரில், கீழ் நோக்கி ப்ராணன் வயிற்றின் மத்தியில் இயங்கி, பசி தாகம், தோன்றுகின்றன. பசித்தவனுக்கும், தாக சாந்திக்கும் முகத்திலிருந்து நாக்கு ருசியை அறிவதாகவும், அந்த ஜிஹ்வா- நாக்கு என்ற இந்திரியத்திற்கு உதவியாகவும் அமைந்தது. இதற்கு வருணன் தேவதையானான். தொடர்ந்து பலவிதமான ருசிகளும் வந்தன.
பரம புருஷன் நுகர விரும்பும் போது, நாஸிக- மூக்கு என்ற அவயவம் தோன்றியது. அதன் செயல், ஆகாயத்தில் சஞ்சரிக்கும் ப்ராணவாயுவை சுத்தம் செய்வது. அதற்கு உதவும் விதமாகவும், அந்த அவயவம் ஸ்திரமாக நிற்கவும், வாயு என்ற தேவதை, கந்த வஹன்- வாசனையை சுமந்து செல்பவன் என்ற பொருள்-பெயருடையவன் தேவதையாகவும், மூக்கு என்ற இந்திரியம் வாசனையை அறிவதாகவும் அமைந்தது.
ப்ரகாசம் இல்லாமல் சூன்யமாக இருந்த சமயம் தான் பார்க்க வசதியாக கண் என்ற அவயவத்தை உண்டாக்கினார். கண்கள் அதன் இடம். ஜோதி தேவதை. கண் என்பது இந்திரியம். ரூபம் என்பதை க்ரஹித்துக் கொள்ளும் தன்மை அதன் குணம்.
ரிஷிகள் வேதங்களை அறிந்த பொழுது, தானும் அவற்றை கிரஹித்துக் கொள்ள, காதுகள் என்ற அவயவங்களை தோற்றுவித்தார். இவைகளுக்கு திசைகள் என்பவை தேவதைகள். ஸ்ரோத்ரம்- காது என்ற இந்திரியம். சப்தத்தை க்ரஹித்துக் கொள்வது என்பது அதன் செயல்
பொருள்களின் மென்மை, கடினம், உருவம் சிறியன, பெரியவை, சூடு, அதிக சூடு, குறைவான சூடு என்றும், குளிர்ந்து இருப்பதை உணரும் அவயவம் தோல். தொடுதல் – என்ற இந்த செயலுக்கு அவயவம் தோல்.அதில் முளைக்கும் ரோமங்கள், தேவர்கள். தொட்டவுடன் அது கனமா, லேசானதா என்று அறிவது த்வக் என்ற இந்திரியத்தின் செயல். அதன் உள்ளும் வெளியும் வாயு சஞ்சரிக்கிறது. எப்படியெனில், ஸ்பர்சம் என்ற பெயரில். இது த்வக் என்ற இந்திரியத்தின் மற்றொரு குணம் அதாவது செயல். வாத என்ற காற்று தேவதை.
செயல்களை செய்ய பகவானின் விருப்பப் படி கைகள் முளைத்தன. இந்திரன் அவைகளின் அதிஷ்டான தேவதையானான்.
தன்னிஷ்டப்படி நடந்து செல்ல பாதங்கள் முளைத்தன.
ப்ரும்மா கண் பார்வை வேண்டி அதன் கண்களில் வட்ட வடிவமான கண் மணிகளை வைத்தார். ஜோதியுடன் சூர்யனும் அதி தேவதையானான். ரூபம், குணம், இவற்றை கண் அறிந்து கொள்வதாக கண் என்ற இந்திரியமும், அதன் வெளி பக்க உருவங்களும் தோன்றின.
ப்ரஜைகளை உத்பத்தி செய்ய ஜனன இந்திரியங்கள், ஆண் பெண் சம்பந்தம் இவைகளுக்கு ப்ரஜாபதியான ப்ரும்மாவே அதி தேவதையானார். .
உண்ட உணவு உடலில் ஜீரணித்த பின் மீதியானது வெளியேற குதம்,பாயு என்ற உறுப்புகள் உருவாகின.
நாபி ப்ராண அபான என்ற வாயுக்களை கட்டுபடுத்துகிறது. அபானம் தான் ம்ருத்யுவுக்கு காரணம்.
அன்ன பானம் இவைகளின் சாரத்தை க்ரஹிக்க வயிற்றைச் சுற்றியும் நாடிகள் உண்டாயின. குக்ஷி என்ற வயிறு தான் இருப்பிடம்.
अन्त्र नाडी -intestinal track –
என்பவை அன்னத்தையும், நாடிகள் பானங்கள், நீரையும் சங்க்ரஹிக்கின்றன. – உறுஞ்சுகின்றன. இந்த அன்த்ர, நாடி என்பவைகளுக்கு நதிகளும் கடல்கள், சமுத்திரங்களும் தேவதைகள். வயிறு நிரம்பினால் துஷ்டி, ரஸம் அதிகமாகவோ குறைந்தாலோ உடல் பருமன்-புஷ்டி,
சிந்திப்பவர்களுக்கு, ஹ்ருதயம், மனம், சந்திரன், சங்கல்பம் இவை அதி தேவதைகள்.
ஆண் பெண் உறவு, அதன் பலனாக புத்ர புத்ரிகள் பிறப்பதும், அதன் இந்திரியங்கள் செயல்பாடு. அதனால் பெறும் சுகத்திற்கு இரு பாலாருடைய இந்திரிய தேவதா அதி தேவதை.
ஜீவன்களின் உடலின் மேல் பாகமான தோல் -இரண்டு வகைப் படும். ஸ்தூலமான எலும்புகளை மூடிய மேல் பாகம். மற்றொன்று சூக்ஷ்மமானது. தோலின் அமைப்பில் பஞ்ச பூதங்களில் நிலம், நீர்,அக்னி இவைகளும் இருந்தாலும் வாயுவும் ஆகாசமும் அதி தேவதைகள். ஸ்பர்சம் என்ற உணர்வு.
மாமிசம், ருதிரம்,கொழுப்பு, தசை, எலும்பு மஜ்ஜை- (எலும்புகளுக்கு இடையில் இருப்பவை) இவை அனைத்திலும் ஏழு தாதுக்களும் உள்ளன. இந்த தாதுக்கள் என்பன நிலம், நீர், அக்னி, இவைகளின் சேர்க்கை. பஞ்ச பூதங்களில் இவை சரீரத்தில் செயல்படுபவை.
பிராணன் ஆகாசம், ஜலம், வாயு இவைகளின் சேர்க்கையால் பிறக்கின்றது.
ஜீவனின் கண் முதலான புலன்கள் தனித் தனியாக சில குணங்கள்- உணர்வுகளை கொண்டுள்ளன. ( கண்-பார்வை, செவி-கேள்வி, மூக்கு-நுகர்தல்,நாக்கு-ருசி, உடல்- ஸ்பர்சம் என்பன) அஹங்காரம்- தன்னியல்பு என்பது ஜீவனின் உருவம் வந்தபின் தோன்றுவது. மனம் காம க்ரோதாதிகளின் பிறப்பிடம். ஆத்மா ஸ்வரூபம். புத்தியினால் பலவிதமான அறிவுகளைப் பெறவும், அவைகளை வளர்த்துக் கொள்ளவும், தானாக புதிய விஷயங்களைக் கண்டு கொள்ளவும் முடியும்.
பஞ்சபூதங்களுடன்,மனம், புத்தி, அஹங்கார, என்ற எட்டு மாறாத இயற்கை தத்துவங்கள், இவை வெளி கோட்டையாக உள்ள பகவானின் ஸ்தூல ரூபம். சூக்ஷ்ம ரூபமானது, கண்களுக்கோ, மனதுக்கோ புலப்படாத, வார்த்தைகளால் விவரிக்க முடியாத, ஆதி அந்தமில்லாத, ரூபம். “அணோரணீயான், மஹதோ மஹீயான்” என்ற வேத வாக்யம் பகவானை அணுவிலும் சிறியவன், பெரும் அண்டத்தை விட பெரியவன் என்று சொல்கிறது. சங்க சக்கர, கதா தாரியாக காணுபவன் அதே போல காணலாம். ஆதி மத்யம்,அந்தம் இல்லாத பரம் பொருளாக மனதால் தியானிக்கலாம்.
ப்ரஜாபதிகள், மனு, தேவர்கள்,ரிஷிகள், பித்ரு கணங்கள், தவிர, சித்த சாரணர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள்,என்று பல ரூபங்கள். கின்னர, அப்சர, நாக, ஸ்ர்ப்பம், கிம்புருஷ என்ற வகையினர், ராக்ஷஸர்கள், பிசாச, ப்ரேத,பூதங்கள் என்றும் பசுக்கள், பக்ஷிகள், மரங்கள், மலைகள் ஊர்வன , நிலம் நீர் இரண்டிலும் வாழ்பவை, நிலம்,ஆகாயம் இரண்டிலும் வாழ்பவை என்று பலவிதமாக உயிரினங்கள்.
சத்வ ரஜஸ் தமஸ் என்ற குணங்கள், தேவ, மனித, அசுரர்கள், என்றாலும் ஒவ்வொருவருக்கும் தனித் தனியான நடையுடை பாவனைகள், உணவு முதலிய பழக்க வழக்கங்கள். இந்த பகவான் தான் தர்ம ரூபம். உலகை நிலை நிறுத்தி, உலகில், கால் நடைகள்,மனிதன், தேவர்கள் இவர்களை காக்கிறான். பின், காலாக்னி என்ற ரூபத்தில் தானே ஸ்ருஷ்டி செய்த இந்த உலகை காலத்தால் காற்று, மேகத்தை கலைப்பது போல கலைத்து விடுகிறான்.
இது தான் பகவானின் இயல்பு. இது தான், இப்படித்தான் இருப்பான் என்று யாராலும் அனுமானிக்க முடியாது. ப்ரும்ம கல்பம் என்ற இதைப் பற்றி பொதுவாக சொன்னேன். அடுத்து பத்ம கல்பம் என்பதை பின்னால் சொல்கிறேன்.
சௌனகர் இடை மறித்தார்.
சூதரே, விதுரர் என்ன ஆனார்? தீர்த்த யாத்திரை போனவர் திரும்பி வந்தாரா? பந்துக்களை துறந்தது ஏன்?
பரீக்ஷித் ராஜாவுக்கு மஹா முனி சொன்ன வரலாற்றை சொன்னபின் வரிசைக் கிரமமாக சொல்கிறேன், என்றார் சூதர்.
(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் இரண்டாவது ஸ்கந்தத்தின், பத்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-51
|| இத்துடன் இரண்டாவது ஸ்கந்தம் நிறைவுற்றது ||
||ஓம் தத்ஸத் ||
அவதாரங்களைப் பற்றி ப்ரும்மா சொல்வதாக பாகவத சரித்திரத்திலிருந்து.:-
என் (ப்ரும்மாவின்) யாகத்தில் வேத மயமான, பகவான் ஹயக்ரீவனாகத் தோன்றினார். அந்த குதிரை முகத்திலிருந்து, அழகிய வேத வாக்யங்கள் வெளி வந்தன. பொன்னிறமாக, வேத மயன், யாகமயன், அகில தேவதாத்மா என்று துதி செய்தோம். ஹல் என்பது ஒரு சங்கேதம். அகாரத்திலிருந்து ஹ காரம் வரை உயிர், மெய் எழுத்துகள் அனைத்தும் குறிக்கும் இலக்கண பரி பாஷை. வாக் தேவியின் உடலில் தோன்றியவை. “அக்ஷராணாமகாரோ அஸ்மி” என்ற கீதா வாக்கின் படி பரமாத்ம சங்கேத மான ‘அ’ காரம் – அதில் ஆரம்பித்து மற்ற அக்ஷரங்கள், அதன் பின் சொற்கள், பதங்கள், வாக்கியங்கள் என்று விரியும் மொழி. அதாவது அகில வித்யா பூதமான ‘ஹ’ என்ற சப்தம். ( அ காரம் என்பதில் ஆரம்பித்து என்று சொல்ல ‘ஹ’ உச்சரிப்பு வசதிக்காக ‘அ’ ஹ என்று துவங்கும். அதே போல கடைசி எழுத்துடன் சேர்த்து ‘ஹல் என்று ஆகும். பாணினியின் வியாகரண மாகேஸ்வர சூத்ரங்கள் அ இ உண் என்று ஆரம்பிக்கும்.)
மேலும் தலை எல்லா அக்ஷர, ப்ரபஞ்ச அபிவ்யக்தி தோற்றத்திற்குமான ஸ்தானம் என்பதால் க்ரீவம்- கழுத்திற்கு மேல் உள்ள தலை, ஹயமாக, அகாரத்தில் ஆரம்பித்து ஹ வில் முடியும் அக்ஷரங்களாக ஆவதால், ஹய – என்பது வித்யா ஸ்தானம். ‘ஹய’ ஸ்தூலமான பொருள், வெளியில் தெரியும் குதிரை முகம் என்பது அக்ஷர மயமான வாக் தேவதா என்பதும், ஆத்மா என்பது தேஹ. ப்ராண இரண்டும் சேர்ந்த பின் உள்ள உடலில் இருப்பதாக கொள்வதாலும், நிர்மலமான ஞானானந்த மயமான, சர்வ வித்யா ஆதாரமான பரமாத்மாவின் விக்ஞானமயமான் ப்ரும்ம யக்ஞத்தில் ஹயசீர்ஷ: குதிரை முகன் அல்லது வாக்கின் தேவதா ஸ்வரூபம் ஹயஃக்ரீவ: என்று பொருள். (தலையையும் உடலையும் சேர்ப்பது க்ரீவம் என்ற கழுத்து) தவிர ஸ்வாஸ நிஸ்வாஸ- மூச்சை உள் வாங்குவதும் வெளி விடுவதுமான செயல் ‘சோஹம் ‘ என்ற மந்திர த்தின் மற்றொரு பெயரான ப்ரணவாகாரம், ப்ரணவம் சந்தஸ் என்ற வேதத்தின் சாரபூதம் – அதன் சாரமானது என்று சொல்வது போல, ஹயக்ரீவனின் மூக்கின் வழி வெளி வரும் மந்திரம் -உலக ஸ்ருஷ்டிக்கு ஆதாரமான வேத வாக்கியங்களின் உத்பத்தி ஸ்தானமாகவும், (ப்ரணவமாகவும்) இணைத்து சொல்லப் படுகிறது. மேலும் ஹய என்ற சப்தம் உலக வழக்கில் குதிரை என்ற பிராணி என்பதாக ஆனதால், பகவானுடைய உருவம் அஸ்வம் என்ற குதிரை முகமாக ஆகி விட்டது. “ ஞானானந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதீம், ஆதாரம் சர்வ வித்யானாம் ஹயக்ரீவமுபாஸ்மஹே “ என்ற பிரசித்தமான ஸ்லோகம் சொல்வது ஞான மயமான, வித்யா ஸ்வரூபமான யக்ஞ புருஷணான பகவானைச் சொல்கிறது.
*********